தமிழ் அரங்கம்

Saturday, May 20, 2006

"அருள்மிகு" ஜாதிகாத்த மாரியம்மன்"

"அருள்மிகு" ஜாதிகாத்த மாரியம்மன்"

"ன்னடா பசங்கல்லாம் தெருப்பக்கம் விடுவிடுன்னு ஓடுறானுவ. சாமி கௌம்பிடுச்சா?''


""இல்லியே. மாரியம்மன் கோயிலுட்ட வேட்டு சத்தத்தையும் காணோம், பூசாரியும் கத்தக் காணோம்.''


""பசங்க கூட்டமாகப் போறத பாத்தா சந்தேகமா இருக்கு, ஒருவேள கொறவன் கொறத்தி செட்டு போயிருக்குமோ!''. தங்கையன் குழப்பத்துக்கு மருந்து போல வாயில் இன்னும் கொஞ்சம் புகையிலையை அமுக்கினான்.


""ஏன் சுப்பய்யா, சாமி கௌம்பிடுச்சா?''


""இன்னும் பூசாரியே கௌம்புல, நீ வேற. உச்சவ நாளு சும்மாவா! மணி ஆறு, ஏழு வரைக்கும் அர்ச்சனைய காமிச்சு காமிச்சு தச்சனைய முடிச்சு போட்டு இன்னக்கி எம்புளிச்சம்பழத்த பூசாரி அறுத்து போடுறதுக்குள்ள அவன் அவன் என்ன கதெ கட்டி நிக்கப் போறானுவளோ? இந்த வருசமாவது சண்ட வம்பு இல்லாம சாமி தெரு சுத்தி வரணும்னு நாலு ஊரு சனமும் வேண்டிக்கிட்டு கெடக்கு. தங்கையா கொஞ்சம் வெத்தல கொடேன்.''


""ஒர்ரூவா வெத்தலக்கி ஒம்போது பேரு கௌம்பி வாங்கய்யா. சாமியும் கௌம்புலங்கிற, பின்ன ஏன்ய்யா தெருப்பக்கம் கூட்டமாக ஓடுறானுவ.''


""ஓ, அதக்கேக்குறியா, மார்மான் கோயிலுக்கு எவுத்தாப்ல மெத்தவூடு இருக்கு பாரு, அவுரு மவன், அமெரிக்காவுலருந்து வந்துருக்கார்யா. அவுரு, இந்தக் கையில வச்சுட்டு படம்புடிப்பாங்க பாரு, அத கண்ணுக்கிட்ட வச்சிட்டு ஊரையே படம் புடிக்கிறார்யா. நம்ம டீக்கட கலியனகூட டீ ஆத்துறப்ப புடிச்சார்யா. அப்புடியே சினிமாப் படம்போல தெரிதுங்கறேன். அர ட்ராயர போட்டுக்கிட்டு வயப்பக்கம் படம் புடிக்க போறாரு போல. இந்தப் பயலுவளும் சாமி தூக்குறத வுட்டுட்டு அந்தாளு பின்னால சாமி வந்தமாரி ஓடுறானுவங்கிறேன்!''


""ஊதாங்கொழ மாதிரி இத்துணூண்டு இருக்குது. அது என்னமாப் புடிக்குது. போயி ஆட்டக் கட்டிப் போட்டு வர்றேன்.'' சுப்பய்யனின் வெறும் ஒடம்பில் கொசு வெத்தலப்பாக்கு போடுவது போல குதப்ப ஆரம்பிக்க மாரடித்துக் கொண்டதுபோல "நச்'சென்று கொசுவை அடிக்க நெஞ்சில் அடித்துக் கொண்ட சுப்பய்யன் ""ஆத்தாளகட்ட! நடவுக்கு ஆள் சொன்ன மாரி சாயங்காலம் ஆனா கரெக்டா வருதுங்கறேன். எல்லாம் எரும மாட்டு கொசுவா இருக்குது.'' முனகிக் கொண்டே நகர்ந்து போனான்.


""யோவ் இந்தப் பசங்கல்லாம் எங்கய்யா போனானுவ, இரண்டு கழி வெட்டணும், தீக்குழிபக்கம் கயிறு கட்டணும், ஒரு வேலயும் ஆவுல, சாமி தூக்குற நேரத்துல இவனுவ பாட்டும் படம்புடிக்கிறவரு பின்னாடி ஓடிட்டானுவ. டேய் மாரியப்பா போய் சாடாப் பயலுவளயும் சாமி பெறப்பாடு ஆவனும்னு சொல்லி இழுத்துட்டு வாடா. யோவ் பூசாரி! எல்லா பூவயும் சாத்தி அலங்காரம் பண்ணு. இந்த வருசம் மாரியம்மா அலங்காரத்துல ஊரே தகதகங்கணும்.'' நாட்டாமைக்காரர் தேங்காப்பூத்துண்டை உதறி தோளில் போட்டபடி சொல்லிவிட்டு டீக்கடைப் பக்கம் போனார்.


அமெரிக்க கேமராவுக்குப் பின்னே இளவட்டமெல்லாம் ஓடிப் போய்விட்டதால், அருள்மிகு கீழ்மாத்தூர் மாரியம்மன், பவர் கம்மியானது போல் எரியும் குண்டு பல்புக்குக் கீழே, தூக்குபவர்களை எதிர்பார்த்து மங்கலாகக் குந்தியிருந்தது.


சுந்தரமூர்த்தி வீட்டின் முன்பு சுப்பய்யாவும், தங்கையனும் குடும்பத்துடன் நின்று கொண்டிருந்தனர். ""தே புள்ளய கொஞ்சிக்கிட்டு... அவுங்க வர்ராங்க, கிசுகிசுன்னு பேசாம இரு.'' வேகமாக மனைவியைக் கடிந்து கொண்ட சுப்பய்யன் சுந்தரமூர்த்தி வாசல் பக்கம் வந்தவுடன் ""ஒண்ணுமில்லய்யா... தம்பி அமெரிக்காவுலேந்து வந்துருக்குன்னு சொன்னாங்க. பாத்துட்டுப் போவலாம்னு...'' வார்த்தையை முடிக்காமல் ஓசையின்றிப் புன்னகைத்தான்.


பதிலுக்கு சுந்தரமூர்த்தியின் வாயிலிருந்து முதலில் எச்சில் வந்தது. பிறகுதான் வார்த்தை. வெற்றிலை பாக்கை அலட்சியமாகத் துப்பிவிட்டு ""தம்பி அசந்து தூங்குறான், இப்ப முடியாது அப்புறம் வாங்களேன். இதுக்கா படைதெரண்டு வந்தீங்க, என்ன தங்கையா உன் ஆடு பூரா நம்ம வயப்பக்கம் வருதுன்னு கேள்விப்பட்டேன்.''


""அட, அப்புடியெல்லாம் இல்லீங்க. மத்தியான சோறுகூட இல்லாம இவ ஆட்டோட கெடந்து காயிறா.''


""ஆமாங்க. அதெல்லாம் உட்ருவமா? வேண்டாத சனங்க சும்மா கௌப்பிவுடும். வரப்புல போறப்ப வர்றப்பவெல்லாம் அய்யா வூட்டு வயல கண்ணுபோல பாத்துக்கறோம். நல்லா சொல்லுது சனங்க!''


""சரி, சரி,. பொண்டுவ புள்ளைங்க ஏன் நின்னுகிட்டு கெடக்குறீங்க, போய் சோலிய பாருங்க.'' சுந்தரமூர்த்தியின் முகபாவம் அறிந்து கண்ணை இடுக்கிக் காட்டி பெண்களைப் போகச் செய்தனர்.


""அப்புறம் என்ன சுப்பய்யா ஊர்ல சேதி? நம்ம குழந்தசாமி கருப்பூரு பக்கம் ஏக்கரா கணக்குல நெலம் ஒப்புக் கொள்ளப் போறதா கேள்விப்பட்டேன். ஏதுய்யா அவனுக்கு இவ்ளோ வசதி, அவன் புள்ளகூட எங்கயோ திருப்பூர்லயோ, கோயமுத்தூர்லயோ வேல செய்றதால கேள்விப்பட்டேன்.''


""அத ஏன் கேக்குறீங்க. சும்மா அங்க இங்க சுத்தி வேலை பாத்துகிட்டு கெடந்தான் அவன் புள்ள குமாரு. ஒரு வருசமாச்சு, திடீர்னு ஏம்புள்ள அமரிக்காவுல வேலைல இருக்குன்னு சொல்றான். மாசமாசம் பந்தனூரு பேங்குக்கு அது என்னவோ செக்கோ சக்கோ வருதுங்குறாங்க. அமெரிக்காவுல வேலைன்னா சும்மாவா?''


""என்னது அமெரிக்காவுல வேலைல இருக்கானா?'' கேட்ட மாத்திரத்தில் மூட்டை நெல்லை தலையில் கொட்டியது போல திணறிப் போனார் சுந்தரமூர்த்தி. பதட்டத்தைத் தணித்துக் கொள்ள கையிலிருந்த சீவல் பொட்டலத்தை வெடுக்கெனக் கிழித்து பிடி சீவலை வாயில் போட்டுக் குதப்பிக் கொண்டு உள்ளங்கையை தொடையில் தட்டி கால்களை வேகமாக ஆட்டினார்.


""ஆமாங்க! அமெரிக்காவுல பெரிய வேலைல இருப்பான் போலிருக்கு. தெருவுலயே பெரிய மெத்தவூடா கட்ணும்னு கூட புள்ள சொன்னதா கொழந்தசாமி சொல்லிட்ருந்தான். ஆயிக்காரிக்கு பணமனுப்பி நகை செஞ்சு போட்ருக்கான். தரணி பக்கம் புதுசா தென்னந்தோப்பு வாங்கிப் போட்ருக்கான். நல்ல வேலைல இருப்பான் போலருக்குங்க. நம்ம தம்பியப் போல.''


உஷ்ணம் தலைக்கேறியது போல சுந்தரமூர்த்தி வெடுக்கென எழுந்து வேகமாகப் போய் எச்சிலைத் துப்ப, சுப்பயனுக்கும் தங்கையனுக்கும் ஆட்டம் கண்டு போனது.


""என்னடா தம்பியப் போல? தம்பி படிப்பென்ன, வேலை என்னான்னு தெரியுமா ஒனக்கு?'' தங்கையனுக்கு வெடவெடத்து குதிகால் வேர்க்க ஆரம்பித்து விட்டது.


""என்னமோ கம்ப்யூட்டரோ, ஏதோன்னு தம்பி சொல்ல கேட்ருக்கேன். நம்ப மண்டக்கி ஏறுமா அது! தம்பி என்னா படிப்பு, டவுன்ல போயி படிச்சது, பெங்களூர்ல படிச்சது, அவன் குமாரு சும்மா சுத்திக்கிட்டு கெடந்தானுங்க. யாரையாவது காக்கா புடிச்சு அமெரிக்கா போயிருப்பான்போல'' சுந்தரமூர்த்தியின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும்படி தங்கையன் தயங்கித் தயங்கி சமாளித்தான்.


""பெரிய அமெரிக்காவாம், சம்பாரிக்கிறானாம், ஒனக்கு ஊரத் தெரியுமா, உலகத்தத் தெரியுமா? அமெரிக்காவுல கக்கூசு கழுவுறவன் கூடத்தான் இருபத்தஞ்சாயிரம் ரூபா சம்பாதிப்பான். எங்கயாவது வீட்டு வேல, அது இதுன்னு புடிச்சு புகுந்துருப்பான்.''


மேற்கொண்டு வாயைத் திறக்காமல் தலையை அழுத்தமாக ஆட்டிக் கொண்டான் சுப்பய்யன்.


ஒரு மாதிரி நிதானத்துக்கு வந்த சுந்தரமூர்த்தி கழனி குடித்த மாடுபோல நாக்கை நீட்டி மடித்து உதடுமுழுக்க தடவிக் கொண்டே ""இருக்கட்டும், இருக்கட்டும், மனுசன்னா அப்படித்தான், கெடந்தமாதிரியே இருக்கக் கூடாது. படிப்படியா மேல வரணும், உங்களமாதிரியா பத்து ரூவா அதிகங் கெடச்சா ரூட்ட மாத்துறதும், ஆசைப்பட்டு ஆட்ட மாட்ட வாங்குறதும் அப்புறம் வழி இல்லேன்னா, அய்யா அஞ்சு குடு, பத்த குடுன்னு வந்து நிக்கறதும்.''


சுந்தரமூர்த்தி வேறு விதமாகப் பேச சுப்பய்யன் குழம்பிப் போய் தங்கய்யனைப் பார்த்தான். சற்று தளர்ந்து இருந்த தங்கய்யன் மீண்டும் குழம்பிப் போனவனாய் கைகட்டுவதுபோல விலாவைச் சொறிந்து கொண்டு தலையைச் சுற்றியதுபோல பாவணை செய்து பேசுவதை நிறுத்திக் கொண்டான். சுப்பய்யனும் வார்த்தை கொடுக்காமல் எச்சரிக்கையாய் தலையாட்டுவதில் சேர்ந்து கொண்டான்.


""சரி, குழந்தசாமியப் பாத்தா என்ன வந்து பாக்க சொல்லுங்க, என்ன? மறந்துராத. இந்தாப் பத்துரூவா, ஆளுக்கு அஞ்சி எடுத்துக்குங்க.'' இடுப்பில் கட்டியிருந்த வாரிலிருந்து சலவை நோட்டாய் பத்து ரூபாய்த் தாளை நீட்ட, இரண்டு கையையும் குவித்துப் பணிவாய் வாங்கி இரண்டு கண்ணிலும் ஒற்றிக் கொண்டான் சுப்பய்யா!


""ஒண்ணும் அவசரமில்ல, வேலையெல்லாம் முடிச்சுட்டு குழந்தசாமிய வரச்சொல்லு. நிலம் நீச்சுங்கறான், வீடுங்கறான், பாவம் பையன் அனுப்புற காச கண்ட மண்லயும் போட்டு பாழாக்கிடப் போறான். வரச்சொல்லு, பாத்து செஞ்சுடுறேன்'' சரிங்க என்று நடையை கட்டினர்.


""பெரிய மனுஷரு, பெரிய மனுஷருதான். இந்த கொழந்தசாமி நல்லது கெட்டதுக்கு அய்யாவ கலந்துகிட்டா என்ன? பணத்தப் பாத்தோன்னே ஏழூரு திமிருங்கறேன்!'' முனகிக் கொண்டே போனார்கள்.


திண்ணையிலிருந்து மாரியம்மன் கோயிலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் சுந்தரமூர்த்தி. கோயில் அடிபம்பில் வாளியை வைத்து தண்ணீர் அடித்துக் கொண்டிருந்த பூசாரி எதேச்சையாய் சுந்தரமூர்த்தியைப் பார்த்துவிட ""வர்றேன், வர்றேன், சேதி இருக்கு'' ஜாடை காண்பித்துவிட்டு நெருங்கி வந்தார்.


""திருவிழாவுக்கு முன்னால தெனம் தெனம் வந்த, இப்ப மடி கனத்துப் போச்சுல்ல. என்ன ஏய்யா தேடப்போற?''


""அய்யய்ய, அட என்னங்க நீங்க, மாரியம்மனுக்கு காப்ப பிரிக்கறதுக்குள்ள கணக்கு வழக்கு, மண்டகப்படின்னு ஆளுக்காளு என்னப் பிரிச்சி எடுத்துக்குடுவாங்க போலிருக்கு. அந்தாண்ட இந்தாண்ட நகர முடியல.''


""பாத்துய்யா. பூசாரி பழக்க வழக்கம் சரியல்ல, சேரித்தெரு ஆளுங்க எல்லாத்தையும் கொண்டாந்து கோயில் திண்ணையில ஏத்துறாருன்னு ஒரே கம்ப்ளயின்டா இருக்கு. நான்தான் பாத்துக்கலாம்யான்னு சொல்லி நாட்டாமையையும் ஊர்க்காரங்களையும் அனுப்பி வச்சேன். உனக்கு ஏன்யா இந்த வேல? பழக்க வழக்கத்த கோயிலுக்கு வெளியில வச்சுக்க. நாங்க ஒன்னும் தடுக்கல.''


""அப்புடியெல்லாம் ஒன்னுமில்லீங்க. சொன்னா கேக்குற மாரி ஊரு இல்ல. ஏற்கெனவே நீங்க ஐடியா பண்ணி, அடிபம்ப கோயிலுக்கு வெளியில் வச்சமாதிரி திண்ணைக்கும் ஒரு கேட்டை போட்டு வுட்ருங்க. பேருக்கு பேராவும் இருக்கும், ஊருக்கு ஊராவும் இருக்கும்.''


""சரி, அது கெடக்கட்டும், அந்த கொழந்தசாமி மவன்....''


சுந்தரமூர்த்தி முடிப்பதற்குள்ளேயே பூசாரி முந்திக் கொண்டு ""ஆமாங்க, ஆமாங்க, அத ஒங்ககிட்ட சொல்ல மறந்துட்டேன். அவன் புள்ள அமெரிக்காவுல ஒரு ஆளாயி அவன் வூட்ல கலர் டிவி என்ன? வயல்ல போரு கொட்டா என்ன? என்ன மந்திரம் பண்ணானோ, மாயம் பண்ணானோ, அந்த மாரியாத்தாளுக்குத்தான் வெளிச்சம். ஏதோ புதுசா வீடு கட்ட தளவரிச போடணும். அதுக்கு மாரியம்மன் உத்தரவு கேக்கணும்னு சொல்லிக்கிட்டிருந்தான். ஆள காணோம். யாரு மதிக்கிறா அவன் மதிக்க.''


""ஏன், நீந்தான் உத்தரவு கொடேன். அவன் மெத்தவீடு கட்டுவான், அப்புறம் அங்க ஒரு கோயில் கட்டுவான். காசு கெடய்க்கும்னு நீயும் தான் போயேன்'' எரிச்சலைக் கொட்டித் தீர்த்தார் சுந்தரமூர்த்தி.


""அதுக்காக அவன் பின்னாடி போக முடியுங்களா, இப்ப நீங்க இருக்கீங்கன்னா உங்க அப்பா காலத்துலேர்ந்து நிலம், கோயில்னு பரிபாலனம் பண்றீங்க. தம்பீங்கல்லாம் அமெரிக்கா போய் சம்பாரிச்சாலும் ஊரு வரமுறைய காவந்து பண்ணிகிட்டு இங்கே இருக்கிறீங்க. திடீர்னு அவன் புள்ள அமெரிக்கா போய் சம்பாரிச்சா எல்லாம் ஒண்ணாயிடுமா? தெருவுக்குள்ளேயே இவன் யாருக்கும் அஞ்சு காசு இழக்கிறதில்லயாம். அக்கம்பக்கம்லாம் ஒரே கிரீசலா இருக்குன்னு கேள்விப்பட்டேன்.''


""கேள்விப்பட்டது இருக்கட்டும்யா, புள்ள பேச்சக்கேட்டு ஊர்லேயே ஒரு பங்களா கட்டிக்கிட்டு தனியா பரிபாலனம் பண்ண ஆரம்பிச்சான்னு வச்சுக்க. ஊரே எங்களுதும்பானுக. அப்பறம் மாரியம்மன தூக்கி அவனுக கையில கொடுத்துட்டுப் நீயும் நானும் கொறவன் கொறத்திக்குப் பின்னாடி நிக்கவேண்டியதுதான். எனக்கு ஒண்ணுமில்ல. இப்பயே எம்புள்ளைங்க "எதுக்கு கிராமத்துல கெடந்துகிட்டு, ஒன்னு அமெரிக்கா வாங்க, இல்ல, மெட்ராஸ்ல மகாபலிபுரம் ரோட்ல பங்களா கட்டிக்கிட்டு இருங்க'ங்குது. நான்தான் பொறந்த ஊரவுட்டு போவக் கூடாதுன்னு இங்கேயே கெடக்குறேன்.''


""ஆ....மா நாளைக்கே நடக்கப் போவுது. நீங்க ஏன் கெடந்து மனசப் போட்டு கசக்கிக்கிட்டு. இவ்வளவு காலம் மணியாட்றேன். எனக்கு ராகம் புரியாது? எத எங்க வைக்கணும்னு எல்லாம் மாரியாத்தாளுக்குத் தெரியும். நாளைக்கு கோயிலுக்கு வருவான். பாத்துக்கலாம்.''


""நான் கூட கொழந்தசாமிய பாக்க வரச்சொல்லயிருந்தேன். அங்க வந்தான்னா கோயில்லியே ஆள நிப்பாட்டிக்கிட்டு எனக்கு ஆள் வுடு. நேர்ல பாத்துக்குவோம்.''


""வா கொழந்தசாமி, என்ன தட்டு தாம்பலம்னு பலமா இருக்கு.'' பூசாரி பூச்சரத்தை நிலைப்படியில் தேய்த்து அறுத்துக் கொண்டே விசாரித்தார். குழந்தைசாமி மனைவி சின்னப்பொண்ணுடனும், கொழுந்தியாளுடனும் கோயில் வாசலில் நின்றிருந்தார். ""அதான் சொன்னேனுங்களே பூசாரி அய்யா, பையன் வர்ற சித்திரையிலேயே வீட்டக் கட்டுங்க'ன்னு மாயாவரத்துல உள்ள பெரண்டு மூலமா பிளான வரைஞ்சி அனுப்பிட்டான். மார்மாங்கோயில்ல உத்தரவு வாங்கிட்டு மளமளன்னு வேலைய ஆரம்பிக்கலாம்னு பாக்குறேன். ஊர்லயும் விவரமான ஆளுங்ககிட்ட யோசனை கேட்டு செய்யினுட்டான். அதான் பொட்லம் போட்டுப் பார்த்து உத்தரவு வாங்கலாம்னு வந்தேன்.''


""எல்லாம் நம்பக் கையியலா இருக்கு. அந்தப் பாவாடைக்காரி கையில இருக்கு. நேத்திக்கிக் கூட பாரு, எம்புள்ளைக்கி சரியான காய்ச்சல். மாரியம்மா கையில பத்துப் பைசா இல்லயே, ஏற்கனவே கடன வாங்கி வீட்டுக்கு ஒலை வுட்டாச்சி. யாருக்கிட்டப் போயி நிக்கறதுன்னு யோசனை பண்ணிகிட்டு நிக்கிறேன். திடீர்னு நம்ம செருகுடி ராமமூர்த்தி வந்து பண்ணை ஊட்டுக்கு ஒரு அர்ச்சன பண்ணிட்டு வச்சுக்க இருபது ரூவான்னு குடுத்துட்டுப் போறாரு. யாரு நெனச்சா, பணம் கெடைக்கும்னு. தோ கெவுலி கூட சொல்லுது. வுட்டேன், வுட்டேன். சரி... சரி... அர்ச்சனையா, தட்டக் குடு, மவம் பேருக்குத்தானே'' கேட்டுக் கொண்டே பூசாரி உள்ளே போனார்.


விட்டத்திலிருந்த பல்லி தன் மேல் ஏதோ பழி விழுந்ததுபோல நெளிந்து வளைந்து பயந்து ஓடியது. மாரியம்மனுக்கு அர்ச்சனை செய்துவிட்டு இரண்டு பொட்டலத்தை குலுக்கிப் போட்ட பூசாரி திண்ணையில் நின்று கொண்டிருந்த சிறுமியைப் பார்த்து, ""தே மருதாயி வா, சாமிய வேண்டிக்கிட்டு ஒரு பொட்டலத்த எடுத்துக் குடு'' என்றார்.


திடீரென அழைத்ததால் லேசான பயத்துடன் போன மருதாயி மாறி மாறி பொட்டலத்தைப் பார்த்து நிற்க ""கஞ்சி வாங்கறதுன்னா குறுக்கப் பூந்து பத்து வாளிய நீட்டு, பொட்லத்த எடுன்னா முழிச்சுக்கிட்டு நிக்குற.'' பூசாரி போட்ட சத்தத்தில் வெடுக்கென்று ஒரு பொட்டலத்தை எடுத்தாள் மருதாயி. குழந்தைசாமியும் அவன் மனைவியும் கொக்கு போல கழுத்தைத் தூக்கி ஆவலுடன் எட்டிப் பார்த்தனர். பொட்டலத்தைப் பிரித்துக் கொண்டே, பூசாரி, ""டேய் சுப்ரமணி, போய் சொன்னதை செய்'' என்று தெருவில் நின்ற மகனுக்கு குரல் கொடுத்தார். பொட்டலத்தைப் பார்த்தவர் ஒரு நிமிடம் கண்களை மூடி புருவத்தைப் பிசைந்தபடி ""கொழந்தசாமி, அம்மா இன்னும் நாள் பாக்குறா போல இருக்கு. பாரு துன்னுத்துப் பொட்டலம். அது அதுக்கு நேரம் வரணும்ல.''


கூட இருந்த குழந்தசாமியின் மனைவி ""ஆமாம் ஆமாம் இதெல்லாம் அவசரப்படுற காரியமில்ல. நம்ம நினைக்கிறோம். அவ மனசில என்ன நெனச்சிருக்காளோ. நாங்க கிழிக்கிற கோட்ட பையன் தாண்டமாட்டான். பொறுத்து செய்வோம்'' பயபக்தியோடு கன்னத்தில் போட்டுக் கொண்டு பேசினாள்.


""தே, சுந்தரமூர்த்தி அய்யா வர்றாரு பாரு'' என்று மனைவியிடம் கிசுகிசுத்தார் குழந்தைசாமி. ""அய்யா நல்லாயிருக்கீங்களா. நான் பாத்தே நாளாகுது, பையன் விசயமா பொட்டலம் போட்டு பாக்க வந்தோம். கடகடவென விசாரணைக் கைதிபோல கொட்டினார்.


""ஆங், மாரியம்மனுக்கு மிஞ்சிதான் மத்ததெல்லாம். பையனுக்கு என்ன விசயம்?''


""அதான் குமாரு அமெரிக்காவுல இருக்கானுங்களே. அவன் வர்ற சித்திரையிலேயே மெத்த வூடு ஒன்னு கட்டுங்குறான். தெருவுலேயே ஒரு மனைக்கட்டு கெடக்கு. அது விசயமாத்தான் சாமிகிட்ட உத்தரவு வாங்கலாம்னு வந்தேன். பாத்தா இப்ப நமக்கு நேரம் பொருந்தி வல்லேன்னு தெரியுது. சுப்பய்யன் கூட அய்யா வரச்சொன்னீங்கன்னு சொன்னான். மரத்துரையில மவ வூட்டுக்கு போயிட்டேன். வரமுடியல. அய்யாகிட்டயும் இது விசயமா யோசனை கேக்கலாம்னுதான் இருந்தேன்.''


""கொழந்தசாமி உங்க ஆளுங்களுக்கு தெரியாத யோசனையில்ல. உம் புள்ள அமெரிக்காவுல இருக்கற விசயமே எனக்குத் தெரியாது. தெரிஞ்சா அமெரிக்காவுல இருக்குற நம்ம தம்பிய வுட்டே ஏதாவது ஹெல்ப் பண்ணியிருப்பேன், அது கெடக்கட்டும். எங்கயாவது நல்லாயிருந்தா சரி.'' வெடுக்கென முகத்தை திரும்பி மாரியம்மனிடம் பலமாக வேண்ட ஆரம்பித்தார்.


""அய்யா அப்படி நெனக்காதீங்க, தம்பி கூட கடுதாசி எழுதுனா ஒங்கள எல்லாம் விசாரிக்கும். ஒரு வருசமா மவ கல்யாணம், இவருக்கு ஆபரேசன்னு ஊருலேயே இருக்குறதுல்ல, அதாங்க.'' குழந்தைசாமியின் மனைவி பணிவுடன் ஒதுங்கி நின்று பேசினாள். ஆமோதிப்பது போல குழந்தைசாமியும் தலையாட்டியபடி ""ஐயா, எங்காளுக கெடக்கட்டும், நாங்க நல்லாருக்கறதப் பாத்து பக்கத்துல பொருமல் ஜாஸ்தி. பையனா, தெருவுலேயே மெத்தவூடு கட்லாம்ங்குறான். சாமியா பொறுத்திருங்குது. நீங்களே சொல்லுங்க. ஒங்களுக்குத் தெரியாத ஓசனையில்ல, என் நேரம், நல்லவேள அய்யா கோவில் பக்கம் வந்தீங்க.''


இதுதான் நேரமென்று காத்திருந்த சுந்தரமூர்த்தி, ""குழந்தசாமி நீ சொல்றதும் சரிதான். உன் தெருக்கார ஆளுங்க நீ ஓல மாத்துனதுக்கே மேலகீழ பாத்தாங்க. மெத்த வீடு கட்டுனேன்னு வச்சுக்க, அவனுங்க மூஞ்சி செத்தவீடு மாதிரி ஆயிடும். அவுங்கன்னு இல்லய்யா. ஒண்ணு தெரிஞ்சுக்க. நான் நல்லாருக்கறத பாத்து என் சொந்தக்காரனுவங்க வயிறு எரியறாங்க. ஒனக்கு இருக்காதா? இன்னொன்னு சொல்றேன். ஏதோ நீ இங்க பொறந்த, வாழ்ந்த, இருந்த, ஒன் தலைமுறை போயிடுச்சு. உன் புள்ள படிச்சு பெரியாளாயி அமெரிக்காவும் போயிட்டான். அவன் தலைமுறைக்கு இது இன்னமே ஒத்து வருமா? ஏன் இங்கேயே பூந்துகிட்டு. காலனிக்குள்ளே கெடந்துகிட்டு. பேசாமா குத்தாலம் ரோட்டுப் பக்கமா எடத்தை வாங்கிட்டு பங்களா மாறி வீட்ட கட்டிட்டு ஒரு மதிப்பா மரியாதையா முன்னேறுவியா, படிச்ச புள்ளைக்கி இது தெரியாதா? நீயாவது எடுத்துச் சொல்லி டவுனு பக்கம் போய் ஜாலியா இருப்பீங்களா, ஏன்ய்யா, இந்த பொச்சரிப்புல பூந்துக்கிட்டு?''


பூசாரியும் சேர்ந்துகொண்டான். ""ஆமாம் கொழந்தசாமி குத்தாலம் ரோட்டு மேல மளமளன்னு பிளாட்டு போயிட்டுருக்கு. அய்யாவுக்கு தெரிஞ்சவுருதான் அவரு. சொன்னேன்னு வச்சுக்க அய்யாவே ஒடனே முடிச்சுக் குடுப்பாரு.''


வேகமாக சுந்தரமூர்த்தி ""யோவ், யோவ் நீ பாட்டுக்கும் சொல்லிட்டுப் போற. கொழந்தசாமிக்கு மாயரத்துலேயே ஆளுருக்கு. நம்ப என்ன?'' என்று வெளுத்தாற்போல பேச, ""தே, நீ பாட்டுக்கும் சும்மா நிக்குற? அது மாயரத்துல தம்பி பெரண்டுங்க. நீங்க பாத்து நல்ல எடமா முடிச்சுக் குடுங்க. நல்ல ஓசனையா படுது. தம்பிக்கும் வந்து போனா வசதியா இருக்கும்'' குழந்தைசாமி மனைவி வேண்டினாள்.


கோயிலுக்குள் பூசாரியின் மகன் மணியடிக்க, ""பாரு மணி கூட அடிக்குது. நல்ல சகுனம், தேடிப்போன தெய்வம் கூடி வந்தமாரி! ஒந்நேரம் அய்யாவும் வந்தாரு. மாரியம்மா, எல்லாம் நல்லா நடக்கணும்'' கண்ணை மூடி வேகமாகப் பேசிய பூசாரி குழந்தசாமி கையில் துன்னூறைப் போட்டான். சுந்தரமூர்த்தியை வேண்டிக் கொள்வது போல பார்த்த குழந்தசாமி ""அய்யா, நாளைக்கி உங்கள வந்து பாக்கட்டுங்களா? செக்கு புக்கு வீட்லதான் இருக்கு. நைட்டு பையனுக்கு ஒரு போன போட்டுட்டு காலைல வேலைய முடிச்சுடுலாம்.''


கேட்டுக் கொண்டிருந்த பூசாரி திடீரென சாமி வந்ததுபோல ""நைட்டு என்னா நைட்டு, போயி ஒடனே போன போட்டு கேப்பியா, காலைல அவுங்களுக்கு பல ஜோலி இருக்கும். அவுங்களே வர்ரேங்கறப்ப நீ வேற லேட் பண்ணிகிட்டு'' என்று வேகப்படுத்தினான்.


""சரிதாங்க பேரன் இந்நேரம் காலேஜ் விட்டு வந்திருப்பான். தம்பிக்கி போன போட்டு விசயத்த சொல்லிட்டு ஒடனே வர்றேங்க. தே அய்யாகிட்ட சொல்லிட்டு சீக்கிரம் கௌம்பு.'' மூவரும் வேகமாக விடைபெற்றுக் கொண்டனர். ""நேரம் முட்டுனா சாமி சந்துலயும் வரும்பாங்க. அய்யா வந்தாரு பாரு'' குழந்தசாமி பழக்கப்பட்ட வழியில் பேசிக் கொண்டே விரைந்தார்.


""கொழந்தசாமி, பையனுக்கு புரியும்படி வெளரமா எடுத்து சொல்லு. பூசாரி மந்திரச் சொல் மாதிரி திரும்பத் திரும்பக் கத்தினான்.


இரண்டு மணி நேரம் கடந்தது. திண்ணையில் அமர்ந்திருந்த சுந்தரமூர்த்திக்குத் தவிப்புக் கூடிக் கொண்டே போனது. ""அவன் மவன் இருக்கானே, அப்பா பேச்சை மீறமாட்டான். அதவுட கொழந்தசாமி மாரியம்மன் உத்தரவ மீற மாட்டான். நல்லதுக்குத்தானே சொல்றோம். வீணாப்போவவா சொல்றோம்'' பூசாரி மாறி மாறிப் புலம்பிக் கொண்டிருந்தான்.


""தோ கொழந்தசாமி, பூசாரி வெடுக்கென எழுந்திருக்க சுந்தரமூர்த்தி பதட்டத்தை மறைத்துக் கொண்டு ஒரு வரட்டுப் புன்னகையுடன் வா குழந்தசாமி, என்ன முடிவு பண்ணுன?''


""முடிவு என்னங்க முடிவு, நீங்க சொல்றப்ப. பணத்த என்ன கீழ கொட்டவா சொல்றீங்க. எடம் மதிப்பும் கூடுது. புள்ளையும் நாளைக்கி டவுனு பக்கம் இருந்த மாரி இருக்கும். என்னடா யோசிக்கிறேன்னு ஒரு போடு போட்டேன் பாருங்க. சரி ஒங்க யோசனைப்படி செய்ங்கப்பான்ட்டான். அப்ப நாளைக்கி போயி முடிச்சுடலாம்ங்க. சரிங்களா.''


""என்னா? அண்டையா, அசலா உனக்காக வர்றேன், காலைல சீக்கிரமா வந்துரு. ஊரக் கூட்டாத. நீ மட்டும் வா'' என்று மெனக்கெட்டு வருவதுபோல பாவனை செய்தார் சுந்தரமூர்த்தி.


""மாடமேய வுட்ருந்தேன். அவுத்து கொட்டாயில கட்டணும். நீங்க சொன்ன மாதிரி காதும் காதும் வச்சமாதிரி முடிச்சுரலாம். பூசாரி அய்யா, அப்ப வரட்டுங்களா, ரொம்ப மெனக்கெட்டீங்க. சந்தோசங்க'' கையெடுத்து நன்றியுடன் கும்பிட்டுவிட்டு குழந்தசாமி நகர்ந்தார்.


சுந்தரமூர்த்தியை ஒருவிதப் புன்னகையுடன் பார்த்த பூசாரி, ""அப்பவே சொன்னன்ல. அவன் யோசிக்கலன்னாலும் அவன் மண்டைல பூந்து நம்ம சொல்படி யோசிக்கணும்னு வேண்டிக்கிட்டு ஆத்தாவுக்கு மண்ட வாங்கி வச்சேன்ல. நடக்காம போவுமா.''


""மாரியம்மனுக்கே நீ காப்பு போடற ஆளாச்சே!''


""மண்டையா, எப்படி இதெல்லாம் சத்தம் போடாம பண்ற?'' சுந்தரமூர்த்தி கேட்க வெடுக்கென பூசாரி ""நானா?'' என்று நமட்டுச் சிரிப்பு சிரிக்க வெடித்துக் கிளம்பிய சுந்தரமூர்த்தியின் சிரிப்பில் பக்கத்தில் மேய்ந்து கொண்டிருந்த கோழி தனது குஞ்சுகளைக் காப்பாற்றியபடி ஓடியது.


மு துரை. சண்முகம்

Thursday, May 18, 2006

சுத்திகரிப்பும், தூய்மையாக்கலும்

சுத்திகரிப்பும், தூய்மையாக்கலும்


பி.இரயாகரன்
18.05.2006



மது தேசிய வரலாறு என்பது இனத் தூய்மையாக்கலும், புலி சுத்திகரிப்பும் என்ற எல்லைக்குள்ளான கொலைகளால் ஆனவை. அன்றாட அரசியல் என்பதே கொலைகளின் நிகழ்ச்சி நிரலாகிவிட்டது. பேரினவாதிகளும் புலிகளும் கூட்டாகவே நடத்தும் இந்த கொலை வெறியாட்டத்தில், ஒரு இனத்தின் இருப்பே அழிகின்றது. இதன் முடிவு தான் என்ன? முடிவின்றி தொடரும் இந்த எதிர்நிலைப் படுகொலைகள், சிந்திக்கத் தெரிந்தஇ சமூகம் பற்றி அக்கறையுள்ள ஒவ்வொருவரிடமும் எழுப்பும் கேள்வியும் இதுதான்? கடந்த 30 வருடங்களாக இது முடிவின்றி தொடருகின்றதே ஏன்? சுத்திகரிப்பும் முடியவில்லை, தூய்மையாக்கலும் முடியவில்லை. மாறாக இது ஆயிரம் ஆயிரமாக அன்றாடம் புதிதாகவே உற்பத்தி செய்யப்படுகின்றது. இதற்கான ஒரு பட்டியலுடன், பெரும் தொகை பணத்துடன் கொலை செய்வதற்கென்றே ஒரு கூட்டம் நாயாக அலைகின்றனர். கொலைகளை ஒருதரப்பு ஆதரித்து பேசுவதே அன்றாட அரசியலாகிவிட்டது. இதற்கு வெளியில் அரசியல் பேசுவதற்கு என்று எதுவும் கிடையாது.



அன்றாடம் தாய்மை கருவறையுடன் குதறப்பட்டு, தேசியத்தின் தெருக்களில் ஒரு தொங்கலில் இருந்து மறுதொங்கல் வரை தொங்கவிடப்படுகின்றது. இந்த தெருவோர பிணங்களின் மேல் தொலைக்காட்சிகள், வானொலிகள், இணையங்கள், பிழைக்கத் தெரிந்த புத்திஜீவிகள், கொலை ஆதரவு கும்பல்கள், பணத்துக்காக பல்லிளிக்கும் கயவாளிக் கும்பல்கள் என அனைத்து வகையான புலி ஆதரவு புலி எதிர்ப்புக் கும்பல்களும் அரசியல் செய்கின்றனர். இது தான் இவர்களின் அரசியல் என்றாகிவிட்டது. தாம் தான் தமிழ் மக்களின் மீட்சிக்கான செங்கம்பளத்தை விரிப்பதாக கூட இவர்கள் மார்பு தட்டுகின்றனர். அரசியல் கோமாளித்தனத்தின் உச்சத்தில், மனிதம் இழிவாடப்பட்டு காட்டுமிராண்டிகளால் நரைவேட்டையாடப்படுகின்றது. இதை புசிக்கும் கும்பல் தான், இந்த கொலைகளால் மகிழ்ந்தபடி, உற்சகமாக வாயில் மனித எலும்புகளை கவ்வியபடி தேசிய வெறியாட்டம் ஆடுகின்றனர். மேலும் நரபலி கோரி கூச்சலிடுகின்றனர்.



அன்றாடம் நடக்கும் கொலைகளைப் பற்றி எழுதுவதற்கே கை கூசுகின்றது. இதுவே அரசியலாகிவிட்ட நிலையில், இதை விமர்சனம் செய்வதே சகிக்க முடியவில்லை. என்னத்தை எழுதி, என்ற அதிர்வு முள்ளந்தண்டு எலும்பையே உறையவைக்கிறது. சமூகம் பற்றிய எந்த அறிவுமற்ற பொறுக்கித் தின்னும் லும்பன்களை உருவாக்கி, அவர்களைக் கொண்டு நடத்தும் கூலிக் கொலைகள் மூலம் சிலர் மட்டுமே வாழ்கின்றனர். அவர்களின் இருப்பு அதற்குள் தான் இருக்கின்றது. இதனால் இது அரசியலாகின்றது. இதற்கு வெளியில் இந்தக் கொலைகள் முடிவாக எதையும் சாதிக்கப்போவதில்லை.



மனிதப் படுகொலை அமைதியின் பெயரில், சமாதானத்தின் பெயரில், அழுத்தத்தின் பெயரில், தூய்மையாக்கல் பெயரில், சுத்திகரிப்பின் பெயரில் தொடருகின்றது. இதைக் கண்காணிக்க ஒரு கண்காணிப்புக் குழு. சர்வதேச குழுக்களோ புறா வேடம் அணிந்து, சமாதான காவலராக இதைப்பற்றி அறிக்கை வெளியிடுகின்றனர். இதைபற்றி ஆய்வு அறிக்கை விடவும், கண்டனம் தெரிவிக்கவும் சர்வதேச அமைப்புகள் வேறு. உள்ளுரில் இதன் ஒரு பகுதியை மட்டும் கண்டிக்கும், பக்கச்சார்பான நிலைப்பாடுகளுடன் கூச்சலிடும் ஒப்பாரி வேறு.



மனிதம் அன்றாடம் செத்துக் கொண்டிருக்கின்றது. கண்டிப்பவர்களின், கண்காணிப்பவர்களின் ஆதரவுடன் தான் மனிதம் இழிவாடப்பட்டு குதறப்படுகின்றது. 'இனம் தெரியாத" கொலைகள், கொல்லப்பட்டது 'அப்பாவி பொது மக்கள்" என்று கொலைகள் பற்றி விதம்விதமாக கருத்துக் கூறுகின்றனர். இப்படி கூறுபவர்கள், கொலை செய்யப்பட்டவன் மீது ஏறியிருந்து மீண்டும் மீண்டும் தமது கைககளால் குத்தி மீள் கொலைகளையே நடத்துகின்றனர். அரசியல் என்பது இப்படி வக்கரித்து வரிந்து கட்டிய கோமணத்துடன் சந்தியில் நிற்கின்றது.



தேசியம் என்பது காணமல் போய் விட்ட நிலையில், அதைத் துருவித்துருவி தொலைத்த இடத்தில் பூதக்கண்ணாடி வைத்து தேடுகின்றனர். மறுபுறம் இனவழிப்பே தமிழ் தேசியம் என்ற அடிப்படையில் தொடங்கிய கொலையை, எதிரியும் போட்டி போட்டு செய்கின்றான். யார் தமிழ் மக்களை அதிகம் அழிப்பது என்பதில், இவர்களுக்கு இடையில் எண்ணிக்கை போட்டி வேறு. அதில் ஒருவிதமான குரூரமான மகிழ்ச்சி இவர்களுக்கு.



இந்த குரூரமான ரசிகர்கள் தனக்கு சார்பானவர் (மற்றொரு கொலையாளி அல்லது கொலைக்கு உடந்தையாளர்) கொல்லப்படும் போது மட்டும், ஐயோ கொலைகள் என்று மூக்கால் புலம்பிக் காட்டுகின்றனர். யார் கொல்லுகின்றனர் என்பதில் கூட பரஸ்பரக் குற்றச்சாட்டுகள் வேறு. ஏன் நாங்கள் செய்ய வேணடும் என்ற வினாக்களையும் கூட கோமளித்தனமாக தொடுக்கின்றனர். கொலைகளை காட்டியே மறுபுறம் வியாபாரம். தமிழன் என்று கண்ணீர் விட்டு நடிப்பதன் மூலம், தமது நாய் பிழைப்பையும் சாகசப் பிழைப்பையும் கூட நடத்துகின்றனர்.



மனிதநேயமற்ற மனிதாபிமானமற்ற காட்டுமிராண்டிகள், கொலையைக் காட்டியும் கொலையைப் பற்றி பேசியும், மக்களின் வயிற்றெரிச்சலையே கிளறுகின்றனர். சதா ஊளையிடலுக்கு அப்பால், கொலைகள் எப்படி பணம் சம்பாதிக்க உதவும் என்பதே சதா அவர்களின் அரசியல் கவலை.



மக்களின் இயல்புவாழ்வு சிதைந்து சின்னாபின்னமாகிப் போகின்றது. அச்சமும், பீதியும் கலந்து உறைந்து போகின்றது மனிதம். நாம் ஏன் எதற்காகக் கொல்லப்படுவோம் என்று தெரியாத பரிதவிப்பு. கொல்லப்பட்டவன் ஏன் கொல்லப்பட்டான் என்று கூற தெரியாத அரசியல் பீதி. பேயும் பிசாசுகளும் ஒன்றையொன்று எதிர்த்தபடி நடத்தும் நரை வேட்டையாடலில், நான் யாரால் ஏன் கொல்லப்பட்டேன் என்று தெரியாத ஆவிகள் நிறைந்த தேசியமாகிவிட்டது. தமிழ் மக்களை மீட்டு, இந்த ஆவிகளிடம் ஒப்படைப்பதாக தலைவர்கள் கூறிக் கொள்கின்றனர். மக்கள் எதுவும் செய்ய வழியற்று, எங்கும் எதிலும் அச்சமும் பீதியும் கலந்த மனித அவலங்களைக் கொண்ட வாழ்க்கை முறையே, வாழ்க்கையாகி விட்டது.



சிந்திக்கவும் செயலாற்றவும் முடியாத முடங்கிப் போகின்ற நிலைமையில், துப்பாக்கிகளின் ஆட்டம் நடக்கின்றது. மக்களை சுற்றிவர நிறுத்திய பின், அதை ரசிக்க கோருகின்றனர். ஒரு தரப்புக்கு ஆதரவாக கைதட்டக் கோருகின்றனர். மறுத்தால் மரணம், இதுவே எமது மக்களின் தலைவிதி. யாரும் இந்த மக்களுக்காக சிந்திப்பதில்லை. தமக்காக மட்டும், தமது வயிற்றைச் சுற்றி மட்டும் சிந்திக்கின்றனர். சாதாரண மக்கள் முதல் தம்மை அறிவாளிகளாகவும், சமூக அக்கறையாளராகவும் காட்டிக் கொள்ளும் அனைவரும் இந்த விதியை மீறிப் புலம்பவில்லை.



அமைதி சமாதானம், இயல்பு வாழ்வு என்று பேசிக் கொண்டே கொலைகள் அன்று முதல் இன்று வரை நடக்கின்றது. அமைதியின் பெயரிலான கடந்த நான்கு வருடங்களாக இவையின்றி நாட்கள் உருண்டதில்லை. ஒவ்வொரு நாளும் தமிழன், தமிழனாகவே தமிழன் என்பதற்காகவே கொல்லப்பட்டான்.



இந்தக் கொலைகள் பெருமளவில் புலிகளால் செய்யப்பட்டன. தங்களுடன் ஏதோ ஒரு விதத்தில் முரண்பட்டவர்களுக்கு, கொலைகளையே பரிசாக நாள்தோறும் வழங்கினர். இதைவிட சித்திரவதைக் கூடங்கள், 'இனம் தெரியாத" கடத்தல்கள், கொலைகளை அன்றாட நடத்தினர். இந்தப் பட்டியல் அனைவரும் அறிய சவப்பெட்டியில் புதைக்கப்படாது அறையப்பட்டு நடுவீதியில் கிடக்கினறது. அப்போது தமிழன் தமிழர்களால் சிங்கள பேரினவாதியின் துணையுடன் கொல்லப்படுவதை இட்டு, புலி மூச்சுக் கூட உறுமவில்லை. புலிகள் கோரிய இயல்பு வாழ்வில் அமைதியாக கொல்லப்பட்ட நிகழ்ச்சிகளை 'இனம்தெரியாத" கொலைகள் என்று ப+ச்சூட்டி அழகுபடுத்தி அதையும் சிங்காரித்துப் பார்த்தனர். இதை அவர்கள் அன்றாடம் தடைகளின்றி செய்வதைத் தான், அவர்கள் அரசியல் வேலை என்றனர்.



ஆனால் இந்தக் கொலைகளுடன் தாம் தொடர்புபடுத்தப் படுவதையே புலிகள் உறுமியபடி மறுத்தனர். அவர்கள் இதை மறுத்தால் இதை வசதியாக 'இனம் தெரியாத" கொலைகள் என, அனைவரும் கூறிக் கொண்டனர். கொலை செய்தவர் யாரென்று தெரியாது என்றனர். தாம் செய்யாத மற்றைய நேரங்களில், கொலையாளி யாரென்று இரத்தம் காயமுன்னமே, புலிகளும் அவர்களின் ஊதுகுழல்களும் கூறுவது தான் இதில் வேடிக்கை. கொல்லப்பட்டவர்கள் தமிழன் தான். ஆனால் தமிழன் கொல்லப்படுவதாக யாரும் மூச்சுக் கூடவிடவில்லை, ஏன் தமிழனுக்காக போராடுவதாக கூறுபவர்கள் கூட குரல் கொடுக்கவில்லை. உண்மையில் அந்த கொலைகளை அவர்கள் ஆதரித்தனர் அல்லது அதில் பங்காற்றினர்.



உண்மையில் இந்த மனித விரோத தமிழ் இனப் படுகொலைகளை இராணுவம் பேரினவாத உணர்வுடன் ஆதரித்தது. இராணுவத்தின் துணையுடன் அரசியல் செய்த புலிகள், அவர்களின் வழித்துணையுடன் கண்டுகொள்ளாத போக்குடன் இந்தக் கொலைகளை நடத்தினர். புலிகள் அரசியல் செய்வது என்பது, இந்த கொலைகளுடன் தொடர்புடையது. இது தான் அவர்களின் அரசியல். இதைவிட பண அறவீடு என்று பற்பல மனிதவிரோத செயல்கள்.



இந்த இனம் தெரியாத அரசியலுக்குள் ஏற்பட்ட நெருக்கடி கரணாமாக அது வாயைப் பிளந்த போது, கொலைகார அரசியல் பரிணாமம் பெற்று அகல வாயைத் திறந்துகொண்டது. கருணாவின் பிளவு அரங்கில் வந்தது. கருணா 'ஒழிந்தான்", அவன் வெறும் 'தனிமனிதன்", நாங்கள் அவனை 'ஒழித்துக் கட்டிவிட்டோம்" என்ற புலிகளால் மார்பு தட்டப்பட்ட விடையம், இன்று புலிகளின் அரசியல் இருப்பையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது. கருணா விவகாரத்தை புலிகள் கையாண்ட விதம், கொலையின் அரசியல் பங்கை ஒரு தரப்பிடமிருந்து பல தரப்பாக மாற்றிவிட்டது. கொலைகளை தாம் மட்டும் செய்ய உரித்துடையவர்கள் என்ற புலியின் ஏகபிரதிநிதித்துவக் கோட்பாடே, பேச்சுவார்த்தையில் பாரிய முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.



கருணாவும் பழிக்குப்பழி என்ற புலிகளின் வழியில், புலிகள் மேலான எதிர்தாக்குதலை நடத்திய போது, அதை எதிர்கொள்வதே புலிகளின் மைய அரசியலாகிவிட்டது. கருணா விடையத்தை இலகுவாக அரசியல் ரீதியாக அணுகி தீர்க்கக் கூடிய வழியிருந்தும், அதற்கு மாறாக புலிகள் கருணாவை பலாத்காரமாகவே எதிரி முகாமுக்குள் இட்டுச் சென்றனர். இது இயல்பாக இரண்டு கொலைகாரக் குழுவை சமகாலத்தில் உருவாக்கியது. என்னைக் கொன்றால், உன்னையும் அதே மாதிரி கொல்வேன் என்ற அடிப்படையில், ஒரே தலைமையிடம் ஒரேவிதமாக கற்ற அந்த கொலைகார அரசியலை ஆணையில் வைத்து கொலைகளை பரஸ்பரம் நடத்தினர், நடத்துகின்றனர். இத முடிவின்றி தொடருகின்றது, தொடரப்போகின்றது.



கருணா விவாகரத்தில் பேரினவாதிகள் தலையிடக் கூடாது என்று சொன்ன புலிகள், அதை தாமே அழிப்பதாக கூறியவர்கள், இராணுவத்தின் உதவியுடன் அதை அன்று செய்யத் தொடங்கினர். பாரிய ஒரு அரசியல் படுகொலை நடத்தப்பட்டு, கருணா குழு அகற்றப்பட்டது. ஆனால் அது உண்மையில் தன்னை தலைமறைவாக்கிக் கொண்டு, புலிக்கு தொல்லை தரும் குழுவாக மாறி புலிகளே அஞ்சும் அளவுக்கு புலிக்கு நிகராகவே அது ஆட்டம் போடுகின்றது.



அன்று புலிகள் அரசு அதில் தலையிடக் கூடாது என்று கூறி அழித்தவர்கள், இன்று அதை அழிக்க இலங்கை அரசை உதவக் கோருகின்றனர். இதையே பேச்சுவார்த்தையின் அரசியல் நிபந்தனையாக முன்வைக்கின்றனர். சமாதான பேச்சுவார்த்தையில் புலிகள் தமது அரசியலாக இதையே வைக்கின்றனர். இதை அரசு செய்ய மறுத்தால், இராணுவம் மீதான தாக்குதலை நடத்துவோம் என்பதே புலிகள் கொடுக்கும் அன்றாட அரசியல் செய்தி.



மறுபுறத்தில் அரசு இதை அமுல் நடத்தமுடியாத அளவுக்கு கருணா குழு கணிசமாக சுயாதீனமாகவும் இயங்குகின்றது. அத்துடன் இதன் பின்னணியில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் அனுசரணையும் உள்ளது. பேரினவாதம் இதை பயன்படுத்தி கிழக்கை புலிகளிடம் இருந்து உடனடியாக விடுவிக்க முனைகின்றது. வன்னி நோக்கிய படையெடுப்புக்கு, கருணாவின் உதவி கிடைத்தால் புலிகளுக்கு பாரிய பின்னடைவுகளும் ஏற்படும் என்ற உண்மையை அரசு கவனத்தில் கொண்டுள்ளது.



இவைகளே புலிகளை பாரிய யுத்தத்தை நோக்கி நகர்வதை தடுக்கும் தடைக்கல்லாக உள்ளது. புலியின் அரசியல் எதிர்காலத்தையே நிர்ணயம் செய்யும் நிலையில், கருணா என்ற அரஜாகவாதக் குழுவின் செயற்பாடுகள் உள்ளது. உண்மையில் மீட்சியற்ற பாதையில் புலிகள் சிக்கியுள்ளனர். யுத்தததுக்கு செல்ல முடியாத ஒருபக்க நிலை. மறுபக்கம் அரசு கருணா குழுவை கூட்டாக அழிக்கும் புலியின் கோரிக்கைக்கு இணங்கிப் போகமறுக்கின்றது. புலிகள் யுத்தத்துக்கு செல்லாது சமாதான வழியை தக்க வைத்திருப்பதன் மூலம், அரசுக்கு அழுத்ததைக் கொடுத்து கூட்டாக கருணா குழுவை தேடியளிக்கும் தந்திரோபாயத்தையே புலிகள் விரும்புகின்றனர். இதுவே பாரிய ஒரு யுத்தத்தை மீண்டும் மீண்டும் தடுத்து நிறுத்துகின்றது.



அரசு இதைக் கருத்தில் கொண்டு, இந்த அழித்தொழிப்புக்கு துணை நிற்க மறுக்கின்றது. மாறாக புலிகளின் பதிலடியை எதிர்கொண்டு, யுத்தம் வராது என்று துணிந்து பதிலடியை நடத்துகின்றனர். இது பண்பு மாற்றத்தை அடைந்து நிற்கின்றது. புலிகள் யுத்தத்தை நடத்தினாலும் தமக்குத்தான் இலாபம், நடத்தாவிட்டாலும் தமக்குத் தான் இலாபம் என்பது அரசின் தெளிவான நிலை. புலிகள் சண்டையைத் தொடங்கினால் மட்டக்களப்பு மட்டுமல்ல திருகோணமலையைக் கூட மீட்க முடியும் என்பது அரசின் சரியான கணிப்பீடு. அதைவிட வன்னிக்குள் பாரிய தாக்குதலை நடத்த முடியும் என்ற நிலை. சண்டை இல்லையென்றால் புலிகளை மேலும் அரசியல் நெருக்கடியில் சிக்கவைத்து, அவர்களை நிர்ப்பந்திக்கும் வழியில் சீரழிப்பது. சமாதான காலத்தில் புலிக்கு எதிரான சர்வதேச ரீதியான தடைகள், நெருக்கடிகள் பெருகினவே ஒழிய அவை குறையவில்லை. மேலும் மேலும் புலிகள் ஆழமாக குறுகி சிறுத்துப் போகின்றார்கள். எதிரி பலமடங்காகியுள்ளது. தமிழ் மக்கள் பலத்த சொந்த அனுபவத்தை புலியிடம் பெற்று, அவர்கள் புலிக்கு எதிராக மாறியுள்ளனர். புலிகள் ஆயுதம், படைப்பலம், பணம் மீதான நம்பிக்கை வைத்து உறுமுகின்றனர்.



பேரினவாதத்தின் யுத்ததந்திரம், புலிகளின் பாசிச கண்ணோட்டத்தின் நெகிழ்ச்சியற்ற தன்மையை பயன்படுத்தி நெளிவு சுழிவாக கையாளுகின்றது. அரசு பேச்சவார்த்தை மேசையில் புலிகளை சந்திக்க தயாரான நிலையில், தனது எதிரியை தனிமைப்படுத்துவதில் வெற்றி பெறுகின்றது. புலிகள் மேசைக்கு செல்ல முடியாத நிலையில் அதைக் கண்டே அஞ்சுகின்றனர். புலிகள் பேச்சுவார்த்தை மேசையில் வைக்க கூடிய உயர்ந்தபட்ச கோரிக்கை அன்றாட சம்பவங்களின் நீட்சியில் இருந்து வருவதால், புலிகளை இலகுவாக தனிமைப்படுத்தி அவர்களை மேலும் அம்பலமாக்க அரசால் இலகுவாக முடிகின்றது.



அரசு சந்திக்கும் நெருக்கடி என்பது, சமாதானம் பேசியபடி புலிகள் நடத்தும் எதிர் தாக்குதல்கள் தான். பேரினவாத இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் புலிகள் நடத்தும் தாக்குதல்களை தடுத்து நிறுத்தினால், புலிகளை மேலும் ஆழமான அரசியல் நெருக்கடியில் இட்டுச் செல்ல முடியும் என்பதே அரசின் நிலை. அதாவது தாக்குதல் அற்ற நிலையில், இராணுவத்தின் அதிருப்தியைச் சரிக்கட்டி ஒரு திடமான அமைதிநிலை பேணவே அரசு விரும்புகின்றது. புலிகள் எல்லை மீறிய பாரிய தாக்குதல்கள் மூலம், சர்வதேச ரீதியாக புலிகளை தனிமைப்படுத்துவது அரசின் யுத்த தந்திரமாகவுள்ளது. இதற்கு பதிலடியை கொடுக்கும் அங்கீகாரத்தை சர்வதேசத்திடம் பெறுவதில் கூட அரசு வெற்றியும் பெறுகின்றது.



தம்மீது தனது கட்டுப்பாட்டு பிரதேசத்தில் நடக்கும் தாக்குதலை தடுக்கும் உத்தியை, அரசு புலிகளிடம் இருந்து கற்று அதை அவர்களுக்கு எதிராக அதே வழியில் அமுல் செய்யத் தொடங்கியுள்ளது. இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தில் புலிகளின் செயற்திறனை, தாக்குதல் திறனை ஒழித்துக்கட்டுதல் என்பதே அரசின் மையமான குறிப்பான திட்டமிடலாகும். மிக குறுகிய காலத்தில் அதை நிறைவேற்றிய பின், ஒரு இயல்பு நிலையை உருவாக்குவது பேரினவாதத்தின் உடனடி செயற்திட்டமாகும்.



இந்தவகையில் புலிச் சுத்திகரிப்பை நடத்துகின்றனர். உள்ளே இருப்பவர்களையும், உள்ளே வருபவர்களையும் மிகவும் திட்டமிட்ட வகையில் இனம்கண்டு ஒழித்துக் கட்டுகின்றனர். படுகொலைகள், காணாமல் போதல் என்ற வகையில் ஒரு புலிச் சுத்திகரிப்பே நிகழ்கின்றது. இவை புலிகள் வழியில், இனம் தெரியாத கொலைகளாக்கப்படுகின்றது. நபர்கள் அடையாளமின்றி போய்விடுகின்றனர். புலிகள் பாணியில் அதற்கும் தமக்கும் தொடர்பு இல்லை என்கின்றனர். புலிக்கு உதபுவர்கள், அவர்களின் தீவிர ஆதரவாளர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு அச்சம் தரும் வகையில் படுகொலைகளை நடத்துகின்றனர். இதைவிட சந்தேகிக்கக் கூடியவர்களையும் கொன்றும் விடுகின்றனர். புலிகள் அச்சத்தை விதைக்க எந்த வழியை கையாளுகின்றனரோ, அதையே பேரினவாதிகள் புலிக்கு எதிராக செய்கின்றனர். யார் எதை ஏன் செய்கின்றனர் என்பதில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். 1988-1989-1990 களில் ஜே.வி.பி ஒழிப்பில் நடந்த கொலைகள் போல், கொலைகள் வகைபிரிக்க முடியாத வகையில் போய்விடுகின்றது.



இந்த வகையில் நடக்கும் புலி சுத்திகரிப்பு, புலியின் இனத் தூய்மையாக்கல் வழியில் நடக்கின்றது. இன்றும் ஆங்காங்கே இராணுவம் மீதான தாக்குதல்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்க, இந்தச் சுத்திகரிப்பு அதை படிப்படியாக குறைத்து அதை அறவே இல்லாததாக்கி வருகின்றது. இது படிப்படியாக புலிகளை இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தில் ஒழித்துக்கட்டிவிடும். இதன் பின்பாக சிங்கள பேரினவாத இராணுவம், அமைதியான நல்ல இராணுவமாக மாறிவிடும். இந்த உத்தியை பேரினவாதம் கையாளுகின்றது.



நடக்கும் ஒவ்வொரு கொலையையும் மக்கள் தெளிவாகவே புரிந்து கொள்கின்றனர். ஒவ்வொரு கொலையும் யார் ஏன் செய்தனர் என்தை மக்கள் தெளிவாகவே தெரிந்து கொள்கின்றனர். புத்திஜீவிகளும், பத்திரிகையும், உலக நாடுகளும் தெரிந்த கொள்ளாது, அடைமொழியில் அறிக்கைளையும் செய்திகளையும் தயாரிக்கும் போது, மக்கள் அதை தெரிந்தே உள்ளனர். மக்கள் இந்த நிலைமைக்கு ஈடுகொடுக்கும் வகையில் நெகிழ்சியடைகின்றனர். மக்கள் கொலைகள் மீதான தமது சொந்தக் கருத்தைக் கூட தெரிவிக்க முடியாத வகையில், இருதரப்பும் படுகொலைக் கண்ணோட்டத்தை திணித்துள்ளனர்



இந்தநிலையில் புலிகள் புதிய அரசியல் நெருக்கடியில் சிக்கிவருகின்றனர். மீள வழியற்ற சூறாவளிக்குள் சுழலுகின்றனர். வழமையாக அமைதி நிலவும் காலங்களில், புலிகள் தமது எதிர்வினைகளையும் பதிலடியையும், கிழக்கில் நடத்துவது வழக்கம். குறிப்பாக முஸ்லீம் மக்கள் மேல் அது நடத்தப்படுவதே இயல்பான ஒன்று. புலிகள் வரலாறு முழுக்க இது காணப்படுகின்றது. ஆனால் கருணாவின் பிளவைத் தொடர்ந்து அதைச் செய்யமுடியாத நிலை உருவாகியுள்ளது. அப்படி செய்தால் கிழக்கில் இருந்து மேலும் தனிமைப்பட்டு போகும் அபாயம். இந்த நிலையில் இந்த அரசியல் நெருக்கடியின் எதிர்வினை என்பது, பாரிய தாக்குதல் சார்ந்ததாகவும், பாரிய மக்கள் படுகொலைகள் நடக்கும் வாய்ப்பை தூண்டுகின்றது. சிங்கள கிராமங்கள் மீது படுகொலைகள் வடக்கில் இருந்து நடத்தப்படலாம். கடந்தகாலத்தில் கிழக்கில் இருந்த இந்த நிலைமை, வடக்கு நோக்கி நகர்வதற்கான சூழல் அதிகரித்துள்ளது. வடக்கு எல்லை ஒட்டிய சிங்கள கிராமங்கள் முதல், கொழும்பு போன்ற பிரதேசத்தில் மக்கள் மேலான குண்டுவெடிப்புகளாக மாறுகின்ற வாய்ப்பு அதிகரிக்கின்றது.



இனம் தெரியாத தாக்குதல் என்ற வழமையான காரணத்துடன் இதனையும் கூறிக் கொண்டாலும், சர்வதேச ரீதியான அழுத்தத்துடன் கூடிய தலையீடு மிக நெருக்கமாகவே அதிகரித்துள்ளது. அண்மையில் யப்பானிய பேச்சுவார்த்தையாளர் சர்வதேச அமைதிப்படை பற்றிய கூற்றும், இந்திய கடற்படைக் கப்பல் சிறிலங்கா இராணுவத்தைக் காப்பாற்றியதுடன் அன்றே விமானப்படை தலையிட இருந்தமையும், இதன் பின் இந்திய விமானப்படை விமானங்கள் இலங்கையில் தரையிறங்கிச் சென்ற நிலையில், எதுவும் எப்படியும் நடக்கலாம் என்ற நிலையை எதிர்வு கூறவைக்கின்றது. இதைவிட அமெரிக்காவின் புலிகளை ஐரோப்பா உடன் தடைசெய்ய வேண்டும் என்ற பகிரங்கமான வேண்டுகோள், சர்வதேச ரீதியான பண்பு மாற்றத்தையே காட்டுகின்றது.



தமிழ் மக்களுக்கு சாதகமான சூழல் எந்த தரப்பிடமும் இருந்து கிடையாது. புலிக்கு தமிழ் மக்களிடம் கூட ஆதரவு கிடையாது. தமிழ் மக்கள் தாங்கள் என்ன விரும்புகின்றோம் என்பதை பற்றி கூறுவதை கேட்பதற்கு கூட, இன்று உலகில் யாரும் கிடையாது. இனத்தின் அழிவில் குளிர்காய்வது மட்டும் இன்று ஏற்ற இறக்கத்துடன் சிக்கலுக்குள்ளாகி, அதுவே விபச்சாரத்தை செய்கின்றது. இதைக் கொண்டு நாலு காசு சம்பாதிக்கலாம் என்று நம்புபவன் அங்குமிங்கும் ஒட்டிக்கொண்டு விபச்சார தரகனாக, தமிழ் மக்களை விபச்சாரம் செய்ய அழைத்துச் செல்லுகின்றான். இதுவே ஆதிக்கம் பெற்ற அரசியலாக, தலைமையாக, செய்தியாக நிற்கின்றது. இதில் இருந்து நாம் மீள்வது, தமிழ் மக்களை மீட்க போராடுவது மட்டும் தான், இன்று எம்முன்னுள்ள வரலாற்றுக் கடமையாகும்.

Tuesday, May 16, 2006

நேபாளம்: இமயத்தின் மீது சிவப்பு நட்சத்திரம்!

நேபாளம்: இமயத்தின் மீது சிவப்பு நட்சத்திரம்!


நேபாளம் பற்றியெரிகிறது கபிலவாஸ்து. புத்தன் பிறந்த அதே மண்தான். அடிமைச் சமூகத்தின் கொடுங்கோன்மைக்கு எதிரான பண்டைப் பொதுவுடைமைச் சமூகத்தின் குரலாய், ஒரு சமத்துவச் சமுதாயத்தை விழையும் ஏக்கப் பெருமூச்சாய், பெருமைமிக்க பார்ப்பன
எதிர்ப்பு மரபின் வரலாற்றுச் சின்னமாய்த் திகழ்ந்த பவுத்தம் எந்த மண்ணில் பிறந்ததோ, அந்த மண் பற்றி எரிகிறது.



இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பவுத்தத்தை வீழ்த்திய பார்ப்பனக்
கொடுங்கோன்மையின் புதிய அவதாரத்தை எதிர்த்து இன்று களத்தில் நின்று
கொண்டிருப்பவர்கள் கம்யூனிஸ்டு புரட்சியாளர்கள் — நேபாளத்தின் மாவோயிஸ்டுகள். கபிலவாஸ்துவில் செங்கொடி. நேபாளத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களில் எங்கும்
மாவோயிஸ்டுகளின் செல்வாக்கு!



தனது அதிகாரத்தின் நாட்கள் எண்ணப்படுவதைப் புரிந்து கொண்ட நேபாளத்தின் ஆளும் வர்க்கம், தனக்கு அடிமையாக வாழச் சம்மதிக்காத மக்களை வேட்டையாடுகிறது. கபிலவாஸ்துவின் கிராமப்புறங்களில் மட்டும் 800 வீடுகள் எரிகின்றன. நூற்றுக்கணக்கான வீடுகள் இடித்துத் தள்ளப்பட்டிருக்கின்றன என்று அறிவிக்கிறார் மாவோயிஸ்டு மத்தியக்
கமிட்டியின் தகவல் தொடர்பாளர் கிருஷ்ணபகதூர்மகாரா.



கபிலவாஸ்து ஒரு உதாரணம். பிரதமர் நீக்கப்படுவதாகவும் அடுத்த 3
ஆண்டுகளுக்கு மன்னராட்சி அமல் செய்யப்படுவதாகவு ம் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதியன்று நேபாள மன்னர் ஞானேந்திரா தொலைக்காட்சியில் அறிவித்துக் கொண்டிருந்த அந்தக் கணமே வெளிப்படையான இராணுவ அடக்குமுறை தொடங்கிவிட்டது. நேபாளத்தின் எல்லாத் தொலைபேசிகளும், இணையத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. பத்திரிகைகள், வானொலிகள்,
தொலைக்காட்சிகள் அனைத்தும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டன.


பேச்சுரிமை, எழுத்துரிமை, அமைதியாகக் கூடும் உரிமை அனைத்தும் தடை செய்யப்பட்டன.


""மன்னரையும், இராணுவத்தையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ விமர்சிப்பவர்கள் இராணுவத்தால் கைது செய்யப்படுவர்; சொத்துக்கள் உடனே பறிமுதல் செய்யப்படும்''

என்கிறது மன்னரின் அவசரச் சட்டம்.



முன்னாள் பிரதமர்கள் 5 பேர் உள்ளிட்டு எல்லா கட்சித் தலைவர்களும், மனித உரிமை அமைப்பினரும், பத்திரிக்கையாளர் சங்கத் தலைவரும் கைது செய்யப்பட்டு விட்டனர்.



மாவோயிஸ்டுகள் மீதும் அவர்களை ஆதரிக்கின்ற மக்கள் மீதும் நேபாள இராணுவம் செலுத்தும் அடக்குமுறை புதியதல்ல; மாவோயிஸ்டுகளையும் அவர்களது ஆதரவாளர்களையும் கடத்திச் சென்று தடயம் ஏதுமின்றிக் கொன்றொழிப்பதை தனது செயல்தந்திரமாகக் கொண்டிருக்கிறது நேபாள இராணுவம்.



""இனி மன்னருக்கு எதிராகப் பேசுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள்
மாவோயிஸ்டுகள் என்று அழைக்கப்படுவார்கள்; அவ்வாறே நடத்தப்படுவார்கள்'' என்கிறது நியூயார்க் டைம்ஸ். எல்லா முதலாளித்துவக் கட்சிகளும் தடை செய்யப்பட்டிருப்பது இதற்கான சான்று. ""வர்க்க முரண்பாடுகள் கூர்மையடையும்போது இடைநிலை என்பது சாத்தியமற்றதாகும்'' என்ற வரலாற்று உண்மைக்கும் இது இன்னொரு நிரூபணம்.



ஜனநாயகத்தை உருவாக்க முடியாட்சி!



""மாவோயிஸ்டுகளுடன் மீண்டும் பேச்சு வார்த்தையைத் தொடங்குவதற்கு பிரதமர் தவறி விட்டார்; நிலைமையைக் கையாளும் திறமை அரசியல்வாதிகளுக்கு இல்லை'' என்பதுதான் இந்த மன்னராட்சிப் பிரகடனத்தை நியாயப்படுத்த மன்னர் ஞானேந்திரா முன்வைக்கும்
நியாயம்! ""அமைதியும் பாதுகாப்பும் இன்றி தேர்தல் நடத்த முடியாது; தேர்தல் நடத்தாமல் ஜனநாயக அரசை நிறுவ முடியாது; எனவே அமைதியை நிலைநாட்டத்தான் இந்த மன்னராட்சிப் பிரகடனம்'' என்று விளக்கம் தருகிறார் மன்னரால் நியமிக்கப்பட்ட வெளியுறவுத்துறை அமைச்சர் ரமேஷ் நாத் பாண்டே. அதாவது, ஜனநாயகத்தை நிலைநாட்டும் பொருட்டுதான் சர்வாதிகாரத்தைப் பிரகடனம் செய்திருக்கிறாராம் மன்னர்!



இரண்டாவது முறை அதிபராகப் பதவியேற்ற ஜார்ஜ் புஷ் தனது 21 நிமிட
தொலைக்காட்சி உரையில் 27 முறை "சுதந்திரம்' என்ற சொல்லை ஜெபித்தாராம். மன்னர் ஞானேந்திரா தனது தொலைக்காட்சி உரையில் "பலகட்சி ஜனநாயகம்' என்ற சொல்லை 11 முறை பயன்படுத்தி ஜனநாயகத்தின் பால் தான் கொண்டிருக்கும் விசுவாசத்தை உறுதி
செய்திருக்கிறார்.



நேபாளத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பித்து டெல்லி வந்திருக்கும்
சுஜாதா கொய்ராலாவோ (நேபாள காங்கிரசு கட்சித்தலைவர் கிரிஜா பிரசாத் கொய்ராலாவின் மகள்) ""நேபாள மன்னராட்சியை 60 ஆண்டுகளாக நாங்கள் பாதுகாத்தோம். எங்களுக்கு இந்தக் கதியா?'' என்று புலம்பியிருக்கிறார்.



ஜனநாயகத்தைக் கொண்டு வரத் "துடிக்கும்' மன்னர்! மன்னராட்சியைப்
பாதுகாத்ததாக வாக்குமூலம் தரும் "ஜனநாயக வாதி'! குடியரசுக்கும் முடியரசுக்கும் ஓர் எழுத்துதான் வேறுபாடு என்பதென்னவோ உண்மைதான். அதற்காக இப்படியா?



அப்படித்தான். நேபாள "ஜனநாயகத்தின்' வரலாறே அப்படித்தான். "அரசியல் நிர்ணய சபை' என்பது 1950இல் அன்றைய நேபாள மன்னர் திரிபுவன் ஷா மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி. 1990 வரை பலவிதமான பித்தலாட்டங்கள் மற்றும் அடக்குமுறை மூலம் நேபாளத்தின் நிலப்பிரபுத்துவச் சக்திகள் மன்னராட்சியைத் தக்கவைத்துக் கொண்டன. 1990 இல் கிளம்பிய ஜனநாயகத்துக்கான மக்கள் இயக்கம், சில சீர்திருத்தங்களுக்கு
இணங்குவதைத் தவிர வேறுவழியில்லை என்ற நிலையை மன்னர் பிரேந்திராவுக்கு உருவாக்கியது. அரசியல் நிர்ணய சபை தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஆனால், அரசியல் சட்டம் இயற்றப்பட்டது. மன்னராட்சி, "அரசியல் சட்டத்திற்குட்பட்ட மன்னராட்சி'யாக அவதாரம் எடுத்தது. தோற்றத்தில் இங்கிலாந்தின் அரசமைப்பை ஒத்திருந்த போதும் உள்ளடக்கத்தில் நாடாளுமன்றத்தை விஞ்சும் அதிகாரத்தை மன்னனுக்கு வழங்குவதாகவே இந்த அரசியல் சட்டம் அமைந்திருந்தது.



1990 அரசியல் சட்டத்தை இயற்றும் குழுவின் உறுப்பினராயிருந்த துங்கனாவின் சொற்களில் கூறுவதானால், ""ஓட்டைகளை அடைக்க நினைத்தோம்; ஆனால் அவை பெரிதாகிவிட்டன.''



முடியாட்சியின் கோவணமாக ஜனநாயகம்!



ஓட்டைகள் தம்மைத்தாமே பெரிதாக்கிக் கொள்வதில்லை. சமூகத்தில்
நிலப்பிரபுத்துவச் சுரண்டலும், சாதி ஆதிக்கமும் இம்மியளவும் மாறாமல் பாதுகாத்துக் கொண்டே, முடியாட்சிக் கொடுங்கோன்மையின் அம்மணத்தை மறைக்கும் கோவணத் துணியின் பாத்திரத்தைத்தான் நேபாள ஜனநாயகம் ஆற்றியிருக்கிறது.



1991 தேர்தலில் நேபாளத்தின் போலி கம்யூனிஸ்டு கட்சி பிரதான எதிர்க் கட்சியாக வந்தது. மாவோயிஸ்டுகளோ 9 தொகுதிகளில் வென்றிருந்தனர். ஆளும் கட்சியான நேபாள காங்கிரசை ஆதரித்துக் கொண்டே முடியரசுவாதக் கட்சியையும் ஊட்டி வளர்த்தார் மன்னர் பிரேந்திரா. மாவோயிஸ்டுகள் வென்ற தொகுதிகள் திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டன.



1994 தேர்தல் போலி கம்யூனிஸ்டுகள் தனிப்பெரும்பான்மை பெற்று விடுவார்கள் என்ற நிலையில் மன்னரும், நேபாளி காங்கிரசும் இணைந்து வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மை கிடைக்கவிடாமல் முடக்கினர். போலி கம்யூனிஸ்டுகள் அமைத்த கூட்டணி ஆட்சி ஒன்பதே மாதங்களில் கவிழ்க்கப்பட்டது.



1996இல் மாவோயிஸ்டுகள் இரு குறைந்தபட்சக் கோரிக்கைகளை முன்வைத்தனர். ""1. மன்னராட்சியை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் 2. நேபாளம் ஒரு இந்து தேசம் என்பதை மாற்றி "மதச்சார்பற்ற குடியரசு' என அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும்.'' இந்த இரு கோரிக்கைகளும் கூட ஏற்கப்படாத நிலையில் அவர்கள் ஆயுதப் போராட்டத்தை அறிவித்தனர்.



2001இல் மன்னர் பிரேந்திராவின் குடும்பம் முழுதும் மர்மமான முறையில்
படுகொலை செய்யப்பட்டபின் கொலைச் சதியில் சந்தேகிக்கப்பட்ட அவரது தம்பி ஞானேந்திரா அடுத்த மன்னரானார். அவருக்கு நற்சான்று வழங்கினார் நேபாளி காங்கிரஸ் தலைவர் கொய்ராலா. 2002இல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதிலிருந்து நான்கு பிரதமர்களைப் பந்தாடியிருக்கிறார் ஞானேந்திரா. இந்த வெட்கங்கெட்ட கேலிக் கூத்தில் பதவிக்காக முண்டியடித்த நாடாளுமன்றக் கட்சிகளின் தலைவர்கள் மாவோயிஸ்டுகளின் அறைகூவலை மட்டும் வேண்டுமென்றே புறக்கணித்தனர். முடியாட்சி ஒழிப்பு ஐக்கிய முன்னணியில் அவர்களுடன் இணைய மறுத்தனர். மாவோயிஸ்டு அபாயத்தை எதிர்கொள்ள, மன்னருடன் அனுசரித்துப் போகுமாறு அமெரிக்காவும் இந்தியாவும் வழங்கிய ஆலோசனையை சிரமேற்கொண்டு செயல்பட்டனர்.



பேச்சுவார்த்தையின் போது ""வட்டமேசை மாநாடு, இடைக்கால அரசு, அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல்'' ஆகிய கோரிக்கைகளை மாவோயிஸ்டுகள் முன்வைத்தனர். இந்த மையமான கோரிக்கைகளைப் பற்றிப் பேசவே கூடாது என்று தனது பிரதிநிதிகளுக்குத் தடை
விதித்ததன் மூலம் பேச்சுவார்த்தையை முறித்த ஞானேந்திரா, இப்போது தன்னால் நியமிக்கப்பட்ட பொம்மைகளான பிரதமர்களை "லாயக்கற்றவர்கள்' என்று குற்றம் சாட்டுகிறார்.



கிழிந்தது கோவணம்!



தனது கோரத் தோற்றத்தை மறைத்துக் கொள்ளத் தேவைப்பட்ட நாடாளுமன்ற ஜனநாயகக் கோவணம் கிழிந்து கந்தலாகிவிட்டதால் அதைக் கழற்றி வீசிவிட்டு அம்மணமாக நின்று மக்களை அச்சுறுத்துகிறது நேபாளத்தின் முடியாட்சி. மாவோயிஸ்டு கட்சித் தலைவர் தோழர் பிரசண்டாவின் வார்த்தைகளில் சொல்வதெனில், ""இது நிலப்பிரபுத்துவக் கும்பலின் கடைசிக் கிறுக்குத்தனம்.''



முடியாட்சியை ஒழித்து நேபாளத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதென்ற கோரிக்கையை இன்று உலகமே ஆதரிப்பது போலத்தான் தோன்றுகிறது. தோற்றம் உண்மையல்ல. ஜனநாயகத்தை நிலைநாட்டுவது என்பதன் உண்மையான பொருள் என்ன?



மன்னராட்சியையும் அதனைப் பதுகாக்கும் நிலப்பிரபுத்துவ சக்திகளையும்
ஒழிப்பது, நிலச்சீர்திருத்தத்தை அமல்படுத்துவது, முடியரசு வாதக் கட்சிகளைத் தடை செய்வது, மன்னரின் கட்டுப்பாட்டில் இயங்கும் ராயல் நேபாள இராணுவத்தைக் கலைப்பது, அதன் கொடிய அதிகாரிகளைத் தண்டிப்பது, நேபாளத்தை மதச்சார்பற்ற குடியரசாக அறிவித்து பார்ப்பன இந்துமதத்தின் மேலாதிக்க நிலையை ஒழிப்பது, நிலப்பிரபுத்துவ சாதிதீண்டாமை உறவுகளையும் ஆணாதிக்கக் கொடுமையையும் ஒழித்துக் கட்டுவது, சிறுபான்மை பழங்குடி மக்கள்மீது செலுத்தப்படும் ஒடுக்குமுறைகளைத் தடுத்து நேபாளி தேசிய உணர்வை உருவாக்குவது, தேசியப் பொருளாதாரத்தைக் கட்டியமைத்து ஏகாதிபத்தியங்கள் மற்றும் இந்திய ஆளும் வர்க்கங்களின் மேலாதிக்கத்தையும் சுரண்டலையும் ஒழிப்பது இவை நேபாள ஜனநாயகப் புரட்சியின் அடிப்படைக் கடமைகள்.



மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் தந்திரமாக ஜனநாயகம்!



இன்று நேபாளத்தில் ஜனநாயகத்தை "மீட்க' விரும்பும் நாடாளுமன்றக்
கட்சியெதுவும் மேற்கூறிய முறையில் அந்தச் சமூகத்தையும் அரசமைப்பையும் மாற்றியமைப்பதைத் தம் நோக்கமாகக் கொள்ளவில்லை. பேச்சுரிமை, எழுத்துரிமை, வாக்குரிமை, பல கட்சி ஜனநாயகம் என்ற முதலாளித்துவ ஜனநாயகத்தின் புறத்தோற்றத்தை அதன் ஜிகினா வேலைப்பாட்டை மீட்பதுதான் இவர்களது நோக்கம்.



ஜனநாயகம் என்பது சமூக, அரசியல் புரட்சிக்கான முழக்கமாக அல்லாமல்,
மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்கான நியாயவுரிமையை வழங்கும் தந்திரமாகவே நேபாளத்தின் "ஜனநாயக'க் கட்சிகளால் முன்வைக்கப்படுகிறது. ஒருபுறம் மன்னரின் இராணுவ ஒடுக்குமுறை; மறுபுறம் அதனை எதிர்த்துப் போர் நடத்தும் மாவோயிஸ்டுகள் என்று இருகூறாகப் பிரிந்து நிற்கும் நேபாளத்தில் இதேநிலை தொடர்ந்தால் தமது சமூக அடித்தளத்தை முற்றிலுமாக இழந்துவிடுவோமென்ற அச்சம் நாடாளுமன்றக் கட்சிகளை வாட்டுகிறது.



அதனால்தான் மாவோயிச "அபாயத்தையும்' மன்னராட்சிக் கொடுமையையும் சமமாகச் சித்தரிக்கிறார்கள். ""மாவோயிச அபாயத்திலிருந்து நாட்டைக் காக்க ஜனநாயகமே முன்நிபந்தனை'' என்று கதறுகிறார்கள். ஞானேந்திராவோ, ""மாவோயிஸ்டுகளை ஒழிப்பதுதான் "ஜனநாயகத்தை' அறிமுகப்படுத்துவதற்கான முன்நிபந்தனை'' என்கிறார். நோக்கத்தில் ஒற்றுமை! வழிமுறையில் வேற்றுமை!



மாவோயிஸ்டுகளை ஒழிப்பது என்பதன் பொருள் சில ஆயிரம் கட்சி ஊழியர்களைக் கொன்றொழிப்பது என்பது மட்டுமல்ல. நேபாளத்தின் ஆகப் பெரும்பான்மையான கிராமப்புறங்களில் நிலப்பிரபுக்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உழுபவனுக்கு மட்டுமே நிலம் என்ற விதி அமலாக்கப்பட்டுள்ளது. சாதி, தீண்டாமை,பெண்ணடிமைத்தனம், பழங்குடிகள் மீதான ஒடுக்குமுறை அனைத்தும் தண்டனைக்குரிய குற்றங்களாக்கப்பட்டு ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டிருக்கிறது. நிலப்பிரபுத்துவப் பஞ்சாயத்துகள் ஒழிக்கப்பட்டு "விவசாயிகளின் கமிட்டிகள்' அதிகாரம் செலுத்துகின்றன. இவை மாவோயிஸ்டுகளின் சாதனைகள்.



இந்த ஜனநாயகத்தை ஒழிப்பதைத்தான் "மாவோயிஸ்டுகளை ஒழிப்பது' என்று ஒளித்துப் பேசுகிறார்கள். ""சமூகத்தில், உடைமை உறவுகளில் நிலைநாட்டப்பட்டிருக்கும் இந்த ஜனநாயகத்தை ஒழிப்பதுதான் உங்களுக்கு அரசியல் ஜனநாயகம் வழங்குவதற்கான முன்நிபந்தனை'' என்று நாடாளுமன்றக் கட்சிகளிடம் வெளிப்படையாகச் சொல்கிறார் மன்னர். கட்சிகளோ, ""அரசியல் ஜனநாயகம் வழங்குங்கள்; மாவோயிஸ்டுகள் சமூகத்தில் நிறுவியிருக்கும் ஜனநாயகத்தை நாங்கள் ஒழித்துக் கட்டுகிறோம்'' என்று நாசூக்காகத் தெரிவிக்கிறார்கள்.



அலங்காரச் சொல்லாக ஜனநாயகம்!


ஒரு ஜனநாயகப் புரட்சியை தலைமையேற்று நடத்தி நிலப்பிரபுத்துவத்தை ஒழித்துக் கட்டும் தகுதியை முதலாளி வர்க்கம் வரலாற்று ரீதியில் ஏற்கெனவே இழந்துவிட்டது என்ற உண்மை நகைக்கத்தக்க முறையில் இன்னொரு முறை நிரூபிக்கப்படுகிறது.



ஜனநாயகம் என்ற கோரிக்கைக்காக ஒரு வர்க்கம் போராட வேண்டுமானால்,
நிலப்பிரபுத்துவ ஒழிப்பை அந்த வர்க்கத்தின் நலன் உண்மையிலேயே கோரவேண்டும்.



உள்நாட்டுத் தொழில்வளர்ச்சியே இல்லாத ஒரு நாட்டில், மன்னராட்சியுடன்
பல்வேறு இழைகளால் பிணைக்கப்பட்டிருக்கும் வணிகர்களும் வர்த்தகச் சூதாடிகளும் தரகர்களுமே முதலாளி வர்க்கமாக நிலவும் நாட்டில், நிலப்பிரபுத்துவக் கோமான்களே முதலாளிகளாகவும் அறிவுத்துறையினராகவும் முதலாளித்துவ அரசியல்வாதிகளாகவும்
மாறுவேடத்தில் தோன்றும் நாட்டில், மன்னர் குடும்பத்தின் ஒரு பிரிவுக்கு எதிராக இன்னொரு பிரிவிடம் தன்னை விற்றுக் கொள்வதையே "முடியாட்சி எதிர்ப்பு நடவடிக்கை' யாகக் காட்டிக் கொள்ளும் நாடாளுமன்றக் கட்சிகள் நிறைந்த நாட்டில் முதலாளித்துவ வர்க்கத்தைப் பொறுத்தவரை "ஜனநாயகம்' என்பது ஒரு அலங்காரச் சொல்லாக மட்டுமே இருக்க முடியும். அல்லது படித்த நடுத்தரவர்க்கத்தின் கருத்தியல் ரீதியான ஆவேசமாக மிதக்கத்தான் முடியும்.



ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசியம் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு ஜனநாயகம் என்ற
பிரிக்கவொண்ணாத இரண்டு இலட்சியங்களை எதிரெதிராக நிறுத்தி சித்து விளையாடுகின்றன நேபாள ஆளும் வர்க்கங்கள். ஏகாதிபத்தியத்தை நத்திப் பிழைக்கும் தரகு முதலாளித்துவ வர்க்கம் தன்னை மன்னருக்கெதிரான ஜனநாயக சக்தியாகச் சித்தரித்துக் கொள்கிறது. ஜனநாயகத்தை மறுக்கும் நிலப்பிரபுத்துவக் கும்பலோ தேசத்தின் இறையாண்மையைக் காப்பாற்றும் ஒரே நோக்கத்துக்காகத்தான் அரியணையில் அமர்ந்திருப்பதாகக் கூறிக் கொள்கிறது.



புரட்சிப் பாதையில் முன்னேறிவரும் மாவோயிஸ்டுகள் இந்த நாடகத்தை அதன் கடைசிக் காட்சிக்கு இழுத்து வந்துவிட்டார்கள். ""வட்டமேசை மாநாடு, இடைக்காலப் புரட்சிகரக் கவுன்சில், அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல்'' என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்து ஐக்கிய முன்னணிக்கு அறைகூவல் விடுத்திருக்கிறார்கள்.



"பழைய' ஜனநாயகம் இனி சாத்தியமா?



நாடெங்கும் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள இந்தக் கோரிக்கைகள், போலி
கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட நாடாளுமன்றக் கட்சிகளை நடுங்கச் செய்துள்ளன. பெரும்பான்மையான கிராமப்புறங்களில் நிலப்பிரபுத்துவ ஆதிக்கம் வீழ்த்தப்பட்டு, மக்கள் அதிகாரம் நிலைநாட்டப்பட்டுள்ள சூழலில், வர்க்க ரீதியாகவும் சாதி ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட விவசாயிகளும், பெண்களும் ஆயிரக்கணக்கில் ஆயுதமேந்தி நிற்கும் சூழலில்
உருவாக்கப்படும் ஜனநாயக அரசு பழைய வகைப்பட்ட ஜனநாயக அரசாக இருக்கவோ, நிலைக்கவோ முடியாது. அது ஆளும் வர்க்கங்களைத் தூக்கியெறியும் புதிய ஜனநாயகப் புரட்சியாக முன்னேறியே தீரும் என்ற உண்மை அந்தக் கட்சிகளை அச்சுறுத்துகிறது.



மன்னராட்சிக்கும் மாவோயிஸ்டு புரட்சிக்குமிடையில், கருதப்பட்ட
முதலாளித்துவ ஜனநாயகம் ஒரு கானல்நீர் என்பது இதோ, நிரூபணமாகி விட்டது.



மூன்று நூற்றாண்டுகள் முன்னரே முதலாளித்துவப் புரட்சியைத் தொடங்கி
மன்னராட்சியத் துடைத்தெறிந்த மேற்குலக நாடுகளிலேயே ஜனநாயகம் என்பது இன்று பாசிசமாகவும் மேன்மக்கள் ஆட்சியாகவும் நிலைமறுப்படைந்து வருகிறது.



வரலாற்றில் பின்தங்கிப்போய் மன்னராட்சி என்னும் மலத்தை இன்னமும் தலையில் சுமந்து கொண்டிருக்கும் நேபாளத்தின் நாடாளுமன்றக் கட்சிகளோ "ஜனநாயகம் ஜனநாயகம்' என்று இமயத்தின் மீது நின்று கூவுகிறார்கள்.



ஜனநாயகமா, காலனியாதிக்கமா?



புனித புஷ் அவர்களின் வேத வசனத்தில் ஜனநாயகம் என்ற சொல் காலனியாதிக்கம் என்பதற்கான இடக்கரடக்கல். ""மாவோயிஸ்டுகளுடன் கூட்டணி சேராதீர்கள். நேபாளத்தில் ஜனநாயகத்தை இறக்க வேண்டியது எங்கள் பொறுப்பு'' என்கிறது அமெரிக்கா.



""இறங்குமய்யா'' என்று விசுவாசிகள் யாரும் ஜெபிக்காதபோதிலும்,
காட்மண்டுவில் உடனே வந்து இறங்குகிறார் காலின் பாவெல். அமெரிக்க இராணுவ விமானங்களோ கடந்த இரண்டாண்டுகளாக நேபாளத்தில் தரையிறங்கிய வண்ணமுள்ளன. அதி நவீன ஆயுதங்கள் வந்திறங்குகின்றன. அமெரிக்கா 22 மில்லியன் டாலர், பிரிட்டன் 40 மில்லியன் டாலர் என்று மன்னருக்கு மொய் எழுதுகின்றனர். ஒரு டஜன் அமெரிக்க இராணுவ அதிகாரிகள் நேபாள மன்னரின் இராணுவத்திற்குப் பயிற்சியளிக்கின்றனர்; இராணுவத்தைக் களத்தில் நின்று வழி நடத்துகின்றனர்.



இரண்டாண்டுகளுக்கு முன் மாவோயிஸ்டுகளை நசுக்க முயன்று தோற்று, அவர்களை அழைத்து மன்னர் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போதே, ""உங்கள் சார்பில் நாங்களே பேச்சுவார்த்தை நடத்தித் தருகிறோமே; உங்கள் ஆட்களுக்குப் பேசத் தெரியவில்லை'' என்று பகிரங்கமாக அறிக்கை விட்டார் நேபாளத்துக்கான பிரிட்டிஷ் தூதர் ஜெஃப்ரி ஜேம்ஸ். ""பேச்சுவார்த்தை நடத்தாதே'' என்று மறைமுகமாக மிரட்டும் நோக்கில்
மாவோயிஸ்டுகளை ""சர்வதேச பயங்கரவாதிகள்'' என்று அறிவித்தது அமெரிக்க அரசு. அதைத் தொடர்ந்து அமெரிக்க நேபாள பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.



""நேபாளத்தில் கம்யூனிஸ்டு புரட்சியைத் தடுப்பது எப்படி?'' என்ற தலைப்பில் வாஷிங்டனில் மாநாடு நடத்துகிறது அமெரிக்க அரசு.



ஜனநாயகத்திற்காகக் கூப்பாடு போடும் நேபாளத்தின் நாடாளுமன்றக்
கட்சியெதுவும் இந்த அமெரிக்க, பிரிட்டிஷ் தலையீட்டை எதிர்க்கவில்லை. தமது உள்நாட்டு விவகாரத்தில் தலையிட்டு தேசத்தின் இறையாண்மையையும் கவுரவத்தையும் கேலிப் பொருளாக்கும் ஏகாதிபத்தியங்களைக் கண்டிக்கவில்லை.



நிலப்பிரபுத்துவக் கொடுங்கோன்மையை நிலைநாட்டுகின்ற முடியரசின்
அடியாட்படைக்கு நேபாள இராணுவத்திற்கு ஆயுதமும் பயிற்சியும் அளித்து
ஜனநாயகத்தை நசுக்குவதற்குத் துணை நிற்கும் அமெரிக்காவை எதிர்த்துப் போராடவில்லை. மாறாக, அமெரிக்கத் தூதருக்குத் தனது அலுவலகத்தில் வரவேற்பு கொடுத்திருக்கிறது நேபாளத்தின் நாடாளுமன்ற கம்யூனிஸ்டு கட்சியான சி.பி.என். (யு.எம்.எல்). மற்ற முதலாளித்துவக் கட்சிகளைப் பற்றி சொல்லத் தேவையில்லை.



இந்திய ஜனநாயகக் குருகுலம்!



நேபாளத்தின் இந்த நாடாளுமன்றக் கட்சிகளை ஜனநாயகக் கலையில் பயிற்றுவிக்கும் குருகுலம் இந்தியா. இந்திய ஓட்டுக்கட்சிகள்தான் அவர்களது குருநாதர்கள். ஏகாதிபத்திய அடிமைத்தனத்தையும் நிலப்பிரபுத்துவக் கும்பலுடன் நல்லிணக்கத்தையும் பேணிக் கொண்டே "ஜனநாயகம் பேசுவது' எப்படி என்ற கலையை இவர்கள் தில்லியிடமிருந்துதான் கற்றுக் கொள்கிறார்கள்.



பிப்ரவரி முதல் தேதியன்று மன்னர் ஞானேந்திராவின் இராணுவ ஆட்சி அறிவிப்பைத் தொடர்ந்து இந்திய அரசின் அதிகாரபூர்வ அறிக்கை கீழ்க்கண்டவாறு கூறியது:


""மன்னராட்சியும் ஜனநாயகமும் நேபாளத்தைத் தாங்கி நிற்கும் தூண்கள். எனவே ஜனநாயக உரிமைகளை மீண்டும் வழங்கவேண்டும்.''



இதன் பொருள் என்ன? ""மாவோயிஸ்டுகளின் தாக்குதலிலிருந்து மன்னராட்சியை அரசியல் ரீதியாகக் காப்பாற்றிக் கொண்டிருந்த இடிதாங்கிகளான நாடாளுமன்றக் கட்சிகளைத் தடை செய்ததன் மூலம் முதலுக்கே மோசமாகி விட்டதே'' என்ற கவலைதான் இந்த அறிக்கையின் உட்கிடக்கை.



""நேபாளத்தில் முடியாட்சி அகற்றப்பட்டு (பலகட்சி) ஜனநாயகம் நிறுவப்படுவதை இந்தியா ஆதரிக்கிறதா?'' என்ற கேள்விக்கு இந்திய அரசின் வெளியுறவுத்துறைச் செயலர் அளித்துள்ள பதில் இதனைத் தெளிவுபடுத்துகிறது. ""மன்னராட்சியா, ஜனநாயகமா என்பது
அவர்களுடைய உள்நாட்டு விவகாரம். ஜனநாயகத்தை யாரும் ஏற்றுமதி செய்ய முடியாது'' என்கிறார் வெளியுறவுத்துறைச் செயலர்.



முடியரசுக்கு ஆயுதம்
குடியரசுக்கு "ஆதரவு'!



ஆனால் ஆயுதங்களை ஏற்றுமதி செய்யலாமாம். நேபாள மன்னரின் இராணுவத்துக்கு 4 பில்லியன் டாலர் (சுமார் 20,000 கோடி ரூபாய்) மதிப்புள்ள அதிநவீன ஆயுதங்களை வழங்கியிருக்கிறது இந்திய அரசு (பிரண்ட்லைன், 20.6.03). நேபாள இராணுவமே இந்திய இராணுவத்தால்தான் பயிற்றுவிக்கப்படுகிறது. மாவோயிஸ்டுகளையும் இதர ஜனநாயக
சக்திகளையும் ஒடுக்குவதற்காகவே வழங்கப்படும் இந்த உதவி, ஞானேந்திராவின் முடியாட்சியைக் காப்பாற்றுவதற்காகச் செய்யப்படும் உதவியேயன்றி வேறென்ன?



நிராயுதபாணிகளான மக்களை ஆயிரக்கணக்கில் கொலை செய்தது, ஆள்கடத்தல், கற்பழிப்புகள் போன்ற நேபாள இராணுவத்தின் கிரிமினல் குற்றங்களை ஆதாரபூர்வமாகப் பட்டியலிட்டு ஜெனிவாவில் உள்ள மனித உரிமைக் கமிஷன், மார்ச் 2004இல் நேபாள அரசின்மீது கண்டனம் தெரிவிக்க முயன்றபோது, அதைத் தடுத்து நிறுத்திய நாடுகள் இந்தியாவும் அமெரிக்காவும்!



தனது மேலாதிக்கப் பிராந்தியத்துக்குள் அமெரிக்கா நேரடியாக நுழைவது இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு ஒரு உறுத்தலாக இருந்தபோதிலும் இதற்காக இந்திய அரசு அமெரிக்காவுடன் முரண்படப் போவதில்லை. "கம்யூனிச அபாயம்' அவர்களை ஒன்றுபடுத்தும்.



இதுதான் இந்திய அரசின் யோக்கியதை. தற்போது ஞானேந்திரா அரசுக்கான இராணுவ உதவிகளை நிறுத்தியிருப்பதாக இந்திய அரசு கொடுத்திருக்கும் அறிவிப்பும், ஜனநாயகத்திற்கு வழங்கப்படும் ஆதரவல்ல; தன்னுடைய ஆணைக்குக் கட்டுப்பட மறுக்கும் மன்னனுக்கு ஒரு பிராந்தியத் துணை வல்லரசு விடுக்கும் மிரட்டல் அவ்வளவுதான்.



இறையாண்மையும் தற்சார்பும் கொண்ட ஒரு ஜனநாயக நாடாக நேபாளம் மாறுவதை இந்திய ஆளும் வர்க்கங்கள் ஒருபோதும் சகித்துக் கொள்ளாது. 1990இல் நேபாளத்தில் நடந்த ஜனநாயகத்திற்கான இயக்கத்திற்கு இந்தியா வழங்கிய ஆதரவும், இன்று நேபாள நாடாளுமன்றக் கட்சிகளுக்கு வழங்கிவரும் ஆதரவும் அன்று ஈழப் போராளிகளுக்கு இந்தியா வழங்கிய "ஆதரவுக்கு' ஒப்பானது. நேபாள நாடாளுமன்றக் கட்சிகளிலேயே தனது கையாட்களை உருவாக்கிக் கொள்வதும், "ஜனநாயகக் கட்சிகளை'க் காட்டி முடியாட்சியை மிரட்டிப் பணியவைப்பதும்தான் இந்திய ஆளும் வர்க்கங்களின் நோக்கம்.



1950 இந்திய நேபாள நட்புறவு ஒப்பந்தம் என்பது அந்நாட்டின் நெற்றியில் இந்தியா பொறித்திருக்கும் அடிமைச்சாசனம். இந்த ஒப்பந்தத்தின்படி இரு நாடுகளுக்கும் இடையில் கடவுச்சீட்டு தேவையில்லையென்று இந்த ஒப்பந்தம் வழங்கும் "சுதந்திரம்', ஆயிரக்கணக்கான ஏழை நேபாளிப் பெண்களை பம்பாய் சிவப்பு விளக்குப் பகுதிக்குக் கடத்துவதற்குப் பயன்பட்டிருக்கிறது; நேபாள இளைஞர்களை இந்தியப் பணக்காரர்களின் வீட்டு வாயிலில் அற்பக்கூலிக்குக் காவல் காக்க வைத்திருக்கிறது.



"சுங்கவரி இல்லை' எனும் சுதந்திரமோ இந்தியத் தரகுமுதலாளிகள் நேபாளத்தின் சந்தை முழுவதையும் கைப்பற்றிக் கொண்டு அதை இந்தியாவின் இன்னொரு மாநிலமாகவே நடத்துவதற்கும், நேபாளத்தின் தொழில் வளர்ச்சியை நிரந்தரமாக முடக்குவதற்கும் பயன்பட்டு வருகிறது.



நேபாள மக்களைப் பொருத்தவரை இந்தியா, சிந்துபாத்தின் தோளில் ஏறிய கடற்கரைக் கிழவன். மூன்று புறமும் நேபாளத்தைச் சூழ்ந்திருக்கும் இந்திய நிலப்பரப்பையே தனது மேலாதிக்கக் கிடுக்கிப் பிடியாக மாற்றியிருக்கிறது இந்திய ஆளும் வர்க்கம்.



முடியாட்சிக்குப் பெண் கொடுத்த "ஜனநாயகம்'!



குவாலியர், மேவார் முதலான இந்திய அரச பரம்பரைகளுக்கும் நேபாள மன்னர் பரம்பரைக்கும் இடையிலான இரத்த உறவின் அடிப்படையில் பார்த்தால் இது ஒரு பாசப்பிணைப்பு. (செத்துப் போன இளவரசன் தீபேந்திராவுக்கும் குவாலியர் அரச வம்சத்தின் தேவயானிக்குமிடையிலான காதல், வாசகர் அறிந்ததே. தற்போதைய இளவரசன் பராஸ் ஷாவின் மனைவி ஹமானி, மேவார் இளவரசி.)



அரியணை இழந்த மேற்படி மன்னர்களையும் இளவரசிகளையும், முதல்வர்களாகவும் மத்திய அமைச்சர்களாகவும் வாழ வைத்திருக்கும் காங்கிரசு, பாரதிய ஜனதா போன்ற கட்சிகளுக்கும் நேபாள மன்னர் பரம்பரைக்குமிடையிலான உறவு — சம்பந்தி உறவு. (விஜயராஜே சிந்தியா, வசுந்தரா ராஜே சிந்தியா, மாதவராவ் சிந்தியா, இன்ன பிறர்; மற்றும்
குவாலியர் மன்னன் சோறு போட்டு வளர்த்த வாஜ்பாயி.)



சங்கரராமன் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சகோதரனின் குடும்பத்தையே கொன்றொழித்ததாகக் குற்றம் சாட்டப்படும் நேபாள மன்னன் "ஞானேந்திர சரஸ்வதி' சுவாமிகளிடம் தஞ்சம் புகத் திட்டமிட்டதைக் கணக்கில் கொண்டால் இது ஒரு ஆன்மீகப் பிணைப்பு! (அசோக் சிங்கால் நேபாளம் சென்று, உலகின் ஒரே ஹிந்து நாட்டை அழிக்கும் மாவோயிஸ்டுகளைக் கண்டித்துவிட்டு, மன்னர் ஞானேந்திராவுக்கு உலக ஹிந்துக்களின் ஆதரவைத் தெரிவித்துவிட்டு உயிரோடு திரும்பி விட்டார்.)



நேபாளத்துடன் இத்தகைய எண்ணிறந்த பிணைப்புகளைக் கொண்டிருக்கும் இந்திய ஆளும் வர்க்கம், இந்திய நேபாள பாட்டாளி வர்க்க அமைப்புகளுக்கிடையிலான பிணைப்பைக் கண்டு பதறுகிறது. மாவோயிஸ்டுகளின் வெற்றி நேபாள ஜனநாயகத்துக்கு மட்டுமல்ல, இந்திய ஜனநாயகத்துக்கே ஆபத்தானதென்று அலறுகிறது.



நேபாளத்தில் புரட்சி இந்திய ஜனநாயகத்துக்கு ஆபத்து!



வெறும் இரண்டேகால் கோடி மக்கள்தொகை கொண்ட
சின்னஞ்சிறு நாட்டில் முன்னேறும் புரட்சி, உலகிலேயே "மிகப் பெரிய ஜனநாயகத்தை அச்சுறுத்துகிறதாம்! விந்தை, எனினும் உண்மை.



இராணுவ உதவியை நிறுத்துவதாக இந்திய அரசு அறிவித்த மறுகணமே நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் அறிவித்தார், ""மன்னராட்சி அல்லது மாவேõயிஸ்டு புரட்சி இதுதான் நேபாளத்தின் நிலை'' என்றார். இது வீழ்ச்சியின் விளிம்பில் நிற்கும் மன்னராட்சியின் அலறல் மட்டுமல்ல; இந்தியாவுக்கும் உலக முதலாளித்துவ வர்க்கத்துக்கும் ஞானேந்திரா விடும் மிரட்டல்! உளுத்து உதிர்ந்து கொண்டிருக்கும் நேபாளத்தின் நிலப்பிரபுத்துவக் கும்பல் ஒரு ஏளனப் புன்னகையுடன் உலக முதலாளித்துவத்தைப் பார்த்துக் கேட்கிறது ""ஒரு கம்யூனிசப் புரட்சியைச் சகித்துக் கொள்ள நீங்கள் தயாரா?''



மாவோயிஸ்டுகளுக்கெதிராகத் தன்னுடைய கரத்தை ஏகாதிபத்தியங்கள்
வலுப்படுத்தியே தீரும் என்பது ஞானேந்திராவுக்குத் தெரியும். மாட்சிமை தங்கிய மன்னனின் இராணுவத்திடம் உதைவாங்கி ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருக்கும் நேபாளத்தின் நாடாளுமன்ற ஜனநாயகவாதிகளை அமெரிக்கா நாளை சொடக்குப் போட்டு அழைக்கலாம்; ""மன்னரின் பின்னால் அணிவகுத்து நின்று ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள்!'' என்று அவர்களுக்கு ஆணையிடலாம்; இந்திய அரசும் இதையே கொஞ்சம் பக்குவமாக எடுத்துச் சொல்லும். இப்படியாக, மன்னரால் கழற்றியெறியப்பட்ட "ஜனநாயகக் கோவணம்' தனக்குரிய இடத்தில் தானே வலியச்
சென்று ஒட்டிக் கொள்ளும்.



மாவோயிஸ்டுகளுடன் ஐக்கிய முன்னணியா மன்னரின் கூலிப்படையணியா என்பதை ஒவ்வொரு "ஜனநாயக'வாதியும் அங்கே முடிவு செய்துதான் ஆகவேண்டும். ""மூன்றாவது அணி, முற்போக்கு ஜனநாயகக் கூட்டணி'' போன்ற அரசியல் பித்தலாட்டங்களுக்கோ, ""தீர்ப்புகளைத் தள்ளிப் போடுதல், அதிருப்தியைப் பதிவு செய்தல், மையத்திலிருந்து தப்பியோடுதல்'' போன்ற தத்துவார்த்தச் சொல்விளையாட்டுகளுக்கோ அங்கே இடமுமில்லை; "வெளி'யுமில்லை.



நேபாளம் சிவப்பதை ஏகாதிபத்தியவாதிகளாலும், இந்திய ஆளும் வர்க்கங்களாலும் சகித்துக் கொள்ளவே முடியாது. தெற்காசிய மேலாதிக்கம், நேபாளத்தின் சந்தை போன்ற தனது உடனடி நலன்களை மாவோயிஸ்டுகளின் வெற்றியானது கேள்விக்குள்ளாக்கி விடும் என்ற அச்சத்தினால் மட்டுமல்ல, அத்தகைய வெற்றி இந்தியப் புரட்சிகர இயக்கத்திற்கு வழங்கக் கூடிய உந்துதலை எண்ணித்தான் இந்திய ஆளும் வர்க்கம் நடுங்குகிறது. நேபாளம், பீகார், ஒரிசா, ஆந்திரம் என்று ஒரு பிச்சுவாக்கத்தியைப் போல, தனது இதயத்தில் இறங்கும் சிவப்புப் பிராந்தியம் இந்திய அரசின் இரத்தத்தை உறையச் செய்கிறது.



தனியார்மயச் சுரண்டலால் வெடித்துக் கிளம்பும் வர்க்க முரண்பாடுகளின் மீது ஒரு அசட்டு இறுமாப்புடன் அமர்ந்திருக்கிறது சீனத்தின் போலி கம்யூனிச அதிகார வர்க்கம். சீனத்தின் இளந்தலைமுறையை மாவோ இன்னொருமுறை வென்றெடுத்து விடுவாரோ என்ற கவலை அவர்களைப் பிடித்தாட்டும்.



பாசிச இராணுவச் சர்வாதிகாரிகளின் படுகொலைகள் மூலமும், தன்னார்வக்
குழுக்களின் ஐந்தாம்படைச் சேவை மூலமும் லத்தீன் அமெரிக்க விடுதலை இயக்கங்களைக் கருக்கியும் நமத்துப் போகவும் வைத்த அமெரிக்கா, அடுத்த எரிமலை தெற்காசியாதான் என்பதை ஏற்கெனவே அடையாளம் கண்டிருக்கிறது. அதனைத் தணிக்க ஏராளமான தொண்டு நிறுவனங்களை ஏவியும் விட்டிருக்கிறது.



மீண்டும் கம்யூனிச பூதம்!


அதற்குப் பிறகும் வெடித்துக் கிளம்புகிறது நேபாளப் புரட்சி. இங்கே
இராக்கைப் போல எண்ணெய் வயல்களில்லை. ஆனால் அதனினும் எளிதில் தீப்பற்றக் கூடிய கம்யூனிசம் எனும் எரிபொருள் இருக்கிறது. உலகமயமாக்கத்தால் தீவிரமடைந்திருக்கும் வர்க்க முரண்பாடுகள் தன்னெழுச்சியான முதலாளித்துவ எதிர்ப்புப் போராட்டங்களாக
மேற்குலகமெங்கும் தலையெடுத்து வரும் வேளையில், கண்டம் விட்டுக் கண்டம் தாவக் கூடிய இந்தத் தீ அமெரிக்க மேலாதிக்கவாதிகளை அச்சம் கொள்ள வைக்கிறது.



என்ன செய்வார்கள் எதிரிகள்? இனவாத இயக்கங்களையோ, மதவாத இயக்கங்களையோ விலைக்கு வாங்குவதைப் போல மாவோயிஸ்டுகளை விலைக்கு வாங்க முடியாது. இராணுவத்தை அனுப்ப இந்தியா முனையலாம். ஆனால் அதற்கு முன் ஈழத்திலும் காசுமீரிலும் வாங்கிய அடியைக் கனவென்று கருதி மறக்கும் மனப்பக்குவம் இந்திய அரசுக்கு வேண்டும்.



""நேபாள அரசு, ஒரேயொரு மாவட்டத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்
கொள்வதற்கே நேபாளத்தின் மொத்த இராணுவமும் தேவைப்படும்'' என்கிறார் நேபாள மனித உரிமை அமைப்பின் சர்மா.



நேபாளத்தின் ஆகப் பெரும்பான்மையான பகுதி மாவட்டங்கள் மாவோயிஸ்டுகளின் செல்வாக்கில் இருக்கிறது என்கிறார் அண்டை நாடான பூடானின் மன்னர்.



""அரசியல் தீர்வுக்குப் பதிலாக இராணுவத் தீர்வுதான் என்று முடிவு
செய்துவிட்டால், மாவோயிஸ்டுகளைத் தோற்கடித்தாக வேண்டுமென்றால் ஒரு முழுமையான உள்நாட்டுப் போருக்கு நேபாளம் தயாராக வேண்டும்'' என்கிறார் நேபாளத்திற்கான முன்னாள் இந்தியத் தூதர் அர்விந்த் தியோ.



""மாவோயிஸ்டுகள் நேபாளத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றும் அபாயம் உண்மைதான்'' என்கிறது மார்ச் 3ஆம் தேதி வெளியிடப்பட்ட அமெரிக்க அரசின் அறிக்கை.



இந்த "அபாய அறிவிப்பு', தெற்காசியாவில் கால் வைக்கத் துடித்துக்
கொண்டிருக்கும் அமெரிக்காவின் ஒரு உபாயமும் கூட. வியத்நாமின் காடுகளுக்கும் இராக்கின் பாலைவனத்திற்கும் தீ வைத்த அமெரிக்கக் குண்டுகள் இமயத்தின் மீதும் இறங்கலாம். அதிநவீன ஆயுதங்கள், விதம் விதமான கூலிப்படைகள், மதுப்புட்டிகள், டாலர் நோட்டுகள், ஆணுறைகள் ஆகியவற்றின் துணையுடன் உலகின் ஒரே ஹிந்து தேசத்தைக் காப்பாற்ற புனித புஷ் காட்மண்டுவில் கால் வைக்கலாம்.



பத்துவிரல்களால் பத்து ஈக்களைப் பிடிக்க விரும்பும் அமெரிக்காவின் ஆசையை, மரணத்தை முத்தமிடத் துடிக்கும் அதன் இயல்பான உந்துணர்வை எந்த புத்தனால் தெளிவிக்க முடியும்?



தோண்டிப் புதைத்துவிட்டதாக இறுமாந்திருந்த தருணத்தில், கம்யூனிசப் பூதம்
எவரெஸ்டின் மீது ஏறி நின்று எக்காளம் செய்யும்போது ஏகாதிபத்தியவாதிகளால் அதை எங்ஙனம் சகித்துக் கொள்ள முடியும்?



எதையும் செய்வார்கள் எதிரிகள். நாம் என்ன செய்யப் போகிறோம்? இது ஏதோவொரு நாட்டின் மன்னனுக்கு எதிராக யாரோ நடத்திக் கொண்டிருக்கும் போராட்டமல்ல; போராடிக் கொண்டிருப்பது நமது வர்க்கம். தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள், பார்ப்பனியத்தால் ஒடுக்கப்படும் தலித் மக்கள், பழங்குடியினர், பெண்கள்! எதிரணியில் மன்னன், பர்ப்பன மதவெறியர்கள், இந்திய ஆளும் வர்க்கம், அமெரிக்க மேலாதிக்கம், இவர்களனைவரையும் நத்திப் பிழைக்கும் நாடாளுமன்றக் கட்சிகள்!



அமெரிக்க இராணுவமும் இந்திய ஆயுதமும் இறங்குவதைத் தடுக்காத தேசிய எல்லை நம்மை மட்டும் எப்படித் தடுக்க முடியும்? வெற்றியை நோக்கி நேபாள மக்கள் ஓரடி எடுத்து வைத்தால் ஒரு வர்க்கம் என்ற முறையில் உலகப் பாட்டாளி வர்க்கம் ஓரடி முன்னே செல்கிறது வெற்றியை நோக்கி.



ஜனநாயகம் என்பது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தகரப் பெட்டியில் இரகசியமாய்த் திணிக்கும் காகிதமாகவோ, அறிவாளிகளின் வாயில் உருளும் பொருள் விளங்கா உருண்டையாகவோ இல்லாமல் மக்கள் தம் சொந்தக் கரங்களில் ஏந்திச் சுழற்றும் அதிகாரமாக மாற வேண்டும்; நாம் மாற்ற வேண்டும்.



இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக நாம் தொடுக்கும் போராட்டம்,
இமயத்தின் உச்சியில் செங்கொடி உயர்வதற்கு நாம் செலுத்தும் பங்களிப்பு. எவரெஸ்டின் உச்சியில் செங்கொடி உயரும். உலகத்தின் கூரைமீது தம் பாதங்களைப் பதித்துப் பழகிய நேபாள மக்கள் இதுகாறும் அங்கே பலவண்ணக் கொடிகளையும் நட்டு வைத்திருக்கிறார்கள். இந்த முறை அங்கே செங்கொடியை நாட்டுவார்கள்.



உயர்ந்த செங்கொடி தாழாமல் தாங்கிப் பிடித்து நிறுத்த வேண்டியது உலகப்
பாட்டாளி வர்க்கத்தின் கடமை. நம் கடமை.


தலித் இளைஞர்களின் கையில் துப்பாக்கி!உழுபவனுக்கு மட்டுமே நிலம்!



சோமாலியாவுக்கு நிகரான வறுமை; எழுத்தறிவின்மையோ 50 சதவீதம்;
கிராமப்புறத்தில் சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளாகும் 25 சதவீத மக்கள் அவர்களில் தீண்டாமைக்கு ஆட்படுத்தப்படும் தலித்துகள் 7 சதவீதம்; 13 வயதில் சிறுமிகள் மணமுடித்துக் கொடுக்கப்படும் இளம்பருவத் திருமணக் கொடுமை; இவையன்றி சிறுபான்மை பழங்குடி மக்கள் மீதான ஒடுக்குமுறைகள் இதுதான் "உலகின் ஒரே இந்து அரசான' நேபாளத்தின் யோக்கியதை!



1990இல் இயற்றப்பட்ட அரசியல் சட்டம் தீண்டாமையை சட்டப்படிக் கூட குற்றமாக அறிவிக்கவில்லை. 205 பாராளுமன்ற உறுப்பினர்களில் சுவாஷ் தர்னால் மட்டும்தான் தலித். ""மாவோயிஸ்டுகள் தீண்டாமை மற்றும் எல்லாச் சாதி ஒடுக்குமுறைகளையும் தண்டனைக்குரிய குற்றமாக்கியிருக்கிறார்கள். சாதி ஒடுக்குமுறை செய்வோரை உண்மையிலேயே தண்டிக்கிறார்கள். தலித் மக்களுக்கு நிலம் வழங்கியிருக்கிறார்கள். அவர்களுடைய செல்வாக்கிற்குக் காரணம் இதுதான்'' என்கிறார் தர்னால்.



""நகரங்களில் மன்னரின் அரசு, மாவோயிஸ்டுகள் என இரண்டு அதிகார மையங்கள் உள்ளன. கிராமங்களில் மாவோயிஸ்டுகள் மட்டும்தான்'' என்கிறார் நேபாள் கஞ்ச் நகரின் ஒரு பத்திரிக்கையாளர். முதலாளித்துவ ஊடகங்களின் மதிப்பீட்டின்படியே மாவோயிஸ்டு படையின் எண்ணிக்கை 29,000. கிராமப்புறங்கள் முழுவதிலும் மக்கள் கமிட்டிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. பலதார மணம், சாராய உற்பத்தி, கந்துவட்டி, குத்தகை விவசாயம் ஆகிய அனைத்தும் ஒழிக்கப்பட்டு விட்டன. செம்படையின் வீரர்களில் கணிசமானோர் பெண்கள். கிராமங்கள் தலைகீழாகப் புரட்டிப் போடப்பட்டுவிட்டன.



""மாவோயிஸ்டு இராணுவத்தின் வீரர்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட
சாதியினர்தான். ஒரு தலித் இளைஞனின் கையில் துப்பாக்கி! கிராமப்புறத்தின் அதிகார உறவுகளில் இது ஏற்படுத்தும் மாற்றத்தைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை'' என்கிறார் தர்னால்.



""மாவோயிச எழுச்சி பழைய சமூகக் கட்டுமானங்கள் அனைத்தையும் தகர்த்து விட்டது. கிராமப்புறங்களில் இனி நிலப்பிரபுத்துவ அதிகாரம் திரும்பவே முடியாது'' என்கிறார், நாடாளுமன்ற கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த ஹரி ரோக்கா.



இதுதான் ஜனநாயகப் புரட்சி! இந்தப் புரட்சியை ஒழித்து "ஜனநாயகத்தை'
நிலைநாட்டத்தான் இந்தியாவும் அமெரிக்காவும் அரும்பாடுபடுகின்றன.



மருதையன்