தமிழ் அரங்கம்

Thursday, December 22, 2005

கற்பு, கருத்துச் சுதந்திரம்:மாயையும் உண்மையும்

கற்பு, கருத்துச் சுதந்திரம்:மாயையும் உண்மையும்
நன்றி : புதியகலாச்சாரம்

தீபாவளியோ, சுனாமியோ, சுதந்திர நாளோ, குடியரசு நாளோ, மகிழ்ச்சியோ, எழவோ எதுவாயினும் அவை பற்றிக் கருத்துக் கூறும் உரிமையும், வாய்ப்பும் பெற்றவர்கள் சினிமா உலகினர்தான். தமிழ் மக்களின் நேரம் சினிமா நேரம் என்றாகிவிட்ட நிலையில் கலவி பற்றி குஷ்பு கூறிய கருத்தும், பின்பு அதைக் கொம்பு சீவிவிட்ட சுகாசினியும், இவர்களுக்கு ஏற்பட்ட எதிர்ப்பும் மொத்தத்தில் இந்த நாடகம் இந்தியா டுடே போட்ட பாதையில் பீடு நடை போட்டு வருகிறது.

கற்பின் ஆதரவும், கலவியின் எதிர்ப்பும், கருத்துச் சுதந்திரத்திற்கு வேட்டு வைப்பதாகவும், சகிப்புத் தன்மையற்ற பாசிசச் சமூகமாக மாறுவதன் அடையாளமென்றும் ஓநாய் போல வருத்தப்படும் இந்தியா டுடே, இந்து போன்ற பத்திரிக்கைகள் தமக்கு ஆதரவாக அமீர்கான், நரேன் கார்த்திகேயன், சானியா மிர்சா முதலான அகில இந்திய நட்சத்திரங்களைக் களத்தில் இறக்கி விட்டிருக்கின்றனர்.

இதையே சற்று "அறிவார்ந்த' தளத்தில் ஆதரிக்கும் வேலையினை அ.மார்க்ஸ், ஞாநி, கனிமொழி மற்றும் சிறு பத்திரிக்கைகள் செய்ய, செயல் தளத்தில் சற்று தாமதமாகவும், தயக்கத்துடனும் த.மு.எ.ச. கோமாளிகள் பேசி வருகின்றனர். முன்னெப்போதும் இல்லாதபடி, தங்களது பெயர்கள் ஊடகத்தில் தொடர்ந்து அடிபடுவதைக் கண்ட பா.ம.க.வும், விடுதலைச் சிறுத்தைகளும் உடனடி லாட்டரியில் கிடைத்த திடீர் பரிசின் மகிழ்ச்சியோடு ஆர்ப்பாட்டங்களையும், வழக்குப் போடுதலையும் தொடர்கின்றனர்.

இது போக தமிழில் வெளியாகும் செய்திகளில் இரண்டு உண்மைகள் சன் டி.வி. உண்மை, ஜெயா டி.வி. உண்மை உண்டென நிறுவி வரும் மேற்படி சானல்கள் குஷ்புசுகாசினியை எதிர்ப்பதையும், ஆதரிப்பதையும் பரபரப்புத் தளத்தில் செய்து வருகின்றனர். உறுதியாக "இன உணர்வு அற்றுப்போன தமிழ்ப் பாலைவனத்தின்' கதகதப்பில் சோர்ந்து சுருண்டிருக்கும் இனவாதப் பூனை, தமிழினம் தனது மரபு, கற்பு, பண்பாடு குறித்து சிறுத்தை போல சீறுவதாகக் கற்பித்துக் கொள்கிறது. ஒரு பகற்கனவுக்காரனின் இன்பத்தைத் துரத்தி மகிழ்கிறது தமிழ்தேசப் பொதுவுடைமைக் கட்சி.

எது கருத்துச் சுதந்திரம்யாருக்குக் கருத்துச் சுதந்திரம்?

இந்தப் பிரச்சினை கருத்திலும், காட்சியிலும் பரபரப்பாய் இருக்குமளவுக்கு அதன் உண்மை சூட்சுமமாய் மறைக்கப்பட்டிருக்கின்றது. மேட்டுக்குடியின் நனவுப் பத்திரிகையான இந்தியா டுடேயின் தலைமையில் குஷ்புவின் ஆதரவாளர்கள் கருத்துச் சுதந்திரத்திற்கு ஆபத்து ஏற்பட்டு விட்டதாய் அலறுவது அதிலொன்று.

முதலாளித்துவ ஜனநாயகத்தின் தந்திரமான இருப்பே அது எல்லோருக்குமான நலனுக்காக இருப்பதாகக் காட்டிக் கொள்வதில்தான் அடங்கியிருக்கிறது. இதில் முதலாளிகளின் நலன் பாதிக்கப்படும் போதெல்லாம் எல்லோரின் நலன் பாதிக்கப்படுவதாக கூக்குரல் எழுப்பப்படும். ஜனநாயகத்தின் கதி இதுதானென்றால் கருத்துச் சுதந்திரத்தின் கதியும் அதுதான். சட்டத்தின் ஆசியுடன், தண்டனையின் கண்காணிப்பில் போதிக்கப்படும் ஜனநாயகத்தின் மேன்மை போன்றே அனைவருக்கும் சமமான கருத்துச் சுதந்திரம் என்பதும் ஒரு மூடநம்பிக்கைதான்.

உண்மையில் கருத்துச் சுதந்திரம் என்று ஒன்று இல்லை. அப்படி இருக்கவும் முடியாது. பலரும் பல கருத்துக்களை பேசி, எழுதி, விவாதிக்கலாம். ஆனால் அவை அமலாக்கப்படும்போதோ, முடிவெடுக்கப்படும் போதோ ஆளும் வர்க்க நலனுக்குரியவை மட்டும்தான் தேர்வாகும். மற்றவை மறுக்கப்படும். எனவே எல்லாக் கருத்துக்களும் கருத்தளவில் உலவலாமே ஒழிய, பௌதீக ரீதியான செயலாக ஒருபோதும் மாற முடியாது. ஆக அரசும் ஜனநாயகமும் அதிகாரமும் ஒரு வர்க்கத்தின் நலனுக்காக மட்டுமே இருக்க முடியும் என்ற விதி கருத்துக்களின் உரிமைக்கும் பொருந்தும்.

குஷ்பு கூறிய சுதந்திரப் பாலுறவு பற்றிய பிரச்சினை மேற்கண்ட விதியுடன் நேரிட்டுப் புரிந்து கொள்ள முடியாத ஒரு பண்பாட்டுப் பிரச்சினை என்ற போதிலும் அந்த வேலையை இந்தியா டுடே சிறப்பாகச் செய்து வருகிறது. குஷ்பு, சுகாசினி கொடும்பாவிகள் எரிக்கப்படுவதைக் கண்டிக்கும் சாக்கில் அழகுப் போட்டிக்கு ஆபத்து, பேஷன் ஷோவிற்குத் தடை, ஆங்கிலப் பெயர்ப் பலகைகள் நொறுக்கப்படும் அராஜகம் போன்றவற்றையும் சேர்த்துக் கொண்டு கண்டிக்கிறது.

இதிலெல்லாம் கருத்துச் சுதந்திரத்திற்கு ஆபத்துள்ளது என்று அலறும் இந்தியா டுடே, வைகோ உள்ளிட்ட தமிழின ஆர்வலர்கள் பொடாவில் அநீதியாகச் சிறை வைக்கப்பட்டது குறித்து வாய் திறக்கவில்லை. ஏன்? ஈழப்போராட்டத்தை வெறும் மேடைப் பேச்சில் கூட ஆதரிப்பதற்குச் சுதந்திரமில்லையா? குஷ்பு, சுகாசினியை ஆதரித்து ஞாயிறு மலர் வெளியிடும் இந்துப் பத்திரிக்கை தனது சக பத்திரிக்கையாளரான நக்கீரன் கோபாலை ஜெயா அரசு பொடாவில் வாட்டி எடுத்தது குறித்து மூச்சு விடவில்லை.
எழுத்தாளர் சுந்தரராமசாமி மறைவையொட்டி பக்கம் பக்கமாக அழுது, அரற்றி, புலம்பித் தீர்க்கும் காலச்சுவடு, உயிர்மை முதலான சிறுபத்திரிக்கைகளும், போலிக் கம்யூனிஸ்டுகளின் கலைப்பிரிவான த.மு.எ.ச.வும், தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகளென ஆந்திரத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் வரவரராவும் கல்யாண் ராவும் கைது செய்யப்பட்டதை ஒரு செய்தி என்ற அளவில் கூடக் கண்டு கொள்ளவில்லை. ஆனால் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் 60 ஆண்டுகளுக்கு முந்தைய ஸ்டாலினின் சோவியத் யூனியனில் மக்கள் கூட்டம் கூட்டமாகக் கொலை செய்யப்பட்டதான புனைவை பொய்யை இவர்கள் நினைவு கூறுவதற்கு தவறுவதில்லை.

சாதியின் பெயரால் மக்களைத் தன் பின்னே திரட்டி வைத்துக் கொண்டு பா.ம.க.வும், விடுதலைச் சிறுத்தைகளும் நடத்திவரும் பிழைப்புவாத, காரியவாத, சந்தர்ப்பவாத அரசியலையும், அதன் வழி அச்சாதிகளைச் சேர்ந்த மக்கள், சந்தர்ப்பவாதத்திற்குப் பயிற்றுவிக்கப்படுவதையும் பற்றிக் கவலைப்படாமல் உண்மையில் அவற்றை அங்கீகரித்துக் கொண்டு குஷ்பு எதிர்ப்பில் இவர்களது பாசிச மனோபாவத்தைக் கண்டுபிடித்துக் கவலைப்படுவது நகைப்பிற்குரியது; அருவறுப்பானது.

உலகமயமாக்கத்தின் விளைவால் விரிந்து செல்லும் மேட்டுக்குடியின் அலங்கார வாழ்வை மட்டுமே அங்கீகரிக்க முயலும் இந்தியா டுடே, இந்து பத்திரிக்கைகள் சுதந்திரப் பாலுறவு குறித்த சர்ச்சையில் எடுக்கும் நிலைப்பாடும், கவலைப்படும் விதமும் ஆச்சரியமானதல்ல.
உண்மையில் குஷ்பு, சுகாசினிக்கு ஆதரவாய் பிரபலங்களை நேர்காணல் செய்வதும், ஒத்த கருத்துள்ளவர்களை வைத்து "விவாதம்' நடத்திச் செய்தி வெளியிடும் இப்பத்திரிக்கைகளின் கருத்துச் சுதந்திரத்தில் யார் தலையிட்டார்கள், இல்லை, யார்தான் தலையிட முடியும்? விடுதலைச் சிறுத்தைகளோ, பா.ம.க.வினரோ தமக்கு எதிராக இப்பத்திரிக்கைகள் எப்படிச் செய்தி வெளியிட முடியும் என்று கேட்டதில்லையே. மேலும், அப்படிக் கேட்கத்தான் முடியுமா?

இதனால் இந்தியா டுடேயில் திருமாவளவனின் விருந்தினர் பக்கம் கிழிபடும் என்பதல்ல, இப்பத்திரிக்கைகளை எதிர்க்க நினைப்பது இந்திய அரசையே எதிர்ப்பது போல ஆகுமென்பது அவர்களுக்கு நிச்சயம் தெரியும். எனவே நிச்சயமின்மையில் மாட்டிக் கொள்ளும் அளவுக்கு அவர்கள் பாமரர்கள் அல்ல. கூட்டணியிலும், ஆட்சியிலும் சிறிய பங்கைப் பெற்றிருக்கும் அவர்களுக்கு தங்களது ஆட்டத்தை எந்த எல்லைவரை கொண்டு செல்லலாம் என்பதும் நன்கு தெரியும்.எனவேதான் குஷ்புவுக்கு எதிராக ஆத்திரம் கொள்ளும் இச்சூரப்புலிகள் பார்ப்பனப் பத்திரிக்கைகள் தங்களைத் தவறாகச் சித்தரிப்பதாக வருத்தம் வெளியிடுகிறார்கள். திருமாவளவன் ஒருபடி மேலே போய் "துடைப்பம் தூக்கிய எங்காட்களுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை' என்று விலகிக் கொள்கிறார்.

இவ்வாறு பார்ப்பன ஊடகங்களின் கருத்துச் சுதந்திரத்தை இவர்கள் பணிவுடன் அங்கீகரிக்கிறார்கள். விளக்குமாறு, செருப்பு, மட்டுமல்ல மறியல், ஊர்வலம், ஆர்ப்பாட்டம் ஆகிய அனைத்துமே சமூகத்தின் கருத்துரிமைக்கு எதிரான பாசிச நடவடிக்கைகள் என்று நிலைநாட்டுவதுதான் குஷ்பு விவகாரத்தின் மூலம் பார்ப்பன ஊடகங்கள் செய்ய விரும்பும் சதி.
மக்கள் தமது கோரிக்கைகளை மனுக் கொடுத்தும் பயனில்லை என்பதால் மறியல் செய்து போராடுகிறார்கள். நாக்பூரில் கோவுர் இனப் பழங்குடி மக்கள் மந்திரியைப் பார்த்து மனுக் கொடுக்கச் சென்று போலீசின் தடியடி நெரிசலில் 150 பேரைப் பலி கொடுத்தனர். நெல்லையில் மாவட்ட ஆட்சியரைப் பார்த்து மனுக் கொடுக்கச் சென்ற மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள் 18 பேர் போலீசால் கொல்லப்பட்டனர்.

கேவலம் மனுக் கொடுப்பதற்குக் கூட உரிமையோ, சுதந்திரமோ, அனுதாபமோ இல்லாத இந்த நாட்டில் தான் குஷ்புவுக்குக் கருத்துச் சுதந்திரம் இல்லையென்று கண்ணீர் விடுகிறார்கள். தமது கருத்துக்களை வெளியிடுவதற்கு வழியே இல்லை என்பதால்தான் சுவரொட்டியாய், சுவரெழுத்தாய், ஊர்வலமாய், மறியலாய் மக்கள் தங்களது கோரிக்கைகளை வெளியிடுகிறார்கள். இந்தியாடுடே, இந்து போன்ற பத்திரிக்கைகள் கையில் இருந்தால் போலீசிடம் அடிபட்டு ஏன் சாகவேண்டும்? எனவே, கருத்துக்களை வெளியிடும் சுதந்திரம் கூட மக்களுக்கு இல்லை, முதலாளிகளுக்கு மட்டும்தான்.

அம்பானியின் குடும்பச் சண்டையை தேசியப் பிரச்சினையாக்கிய தேசியப் பத்திரிக்கைகள் அதைத் தீர்த்து வைப்பதற்குக் காட்டிய முனைப்பும், சகாரா முதலாளி சுபத்ரா ராய் தலைமறைவானது குறித்து அவை காட்டிய கவலையும், பாரிசில் உலக இரும்பு இந்திய முதலாளி லட்சுமி மிட்டல் உலகமே வியக்கும்படி நடத்திய திருமணம் குறித்த பெருமிதமும், மக்களுக்கு கருத்துக்களை வெளிப்படுத்தும் சுதந்திரம் இல்லை என்பதும் வேறுவேறல்ல.
தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் அடங்கிய செய்தி ஊடகத்தை கையில் வைத்திருப்பவர்கள் ஊடக முதலாளிகள். செய்தி ஊடகங்களின் முக்கிய வருவாயான விளம்பரத்தை அளிப்பவர்கள் அரசு, தொழில் துறை மற்றும் சேவைத் துறை முதலாளிகள். இந்நிலையில் ஆளும் வர்க்க நலனுக்கு உகந்தவை என்று முடிவு செய்யப்படுபவை மட்டுமே செய்தியாக, கட்டுரையாக, நிகழ்வாக, ஆய்வாக, அறிவாக முன்னிறுத்தப்படும். மற்றவை கிள்ளுக் கீரையாக மறுக்கப்படும்.

"மனம் போல தினம் ஜமாய்' என்று கோக்கை குடிக்குமாறு அமீர்கான், விவேக், விக்ரம் வலியுறுத்துவதற்கு இருக்கும் சுதந்திரம் கோக்கை மறுப்பதற்கு இல்லை. நெல்லையில் "அமெரிக்க கோக்கை அடித்து விரட்டுவோம்' என்ற எமது இயக்கத்தின் சுவரெழுத்துப் பிரச்சாரத்திற்காகவே, பிணையில் வர இயலாத வழக்கு காவல் துறையால் போடப்பட்டது. இன்றும் கிராமப்புறங்களில் பிரச்சாரம் செய்யும் எமது தோழர்களை தொடர்ந்து தடுக்கும் போலீசு மக்களையும் மிரட்டி வருகிறது.

""கங்கை கொண்டான் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த மக்கள் கொக்கோகோலாவுக்கு ஆதரவாக இருப்பதால் நீங்கள் நடத்தும் எதிர்ப்புப் பிரச்சாரம் பொது அமைதியைச் சீர்குலைத்து விடும்'' என்று எழுத்துப்பூர்வமாகவே கருத்துரிமையை மறுக்கிறது நெல்லைப் போலீசு. குஷ்புவின் கருத்துரிமைக்காகக் குமுறி வெடிக்கும் சென்னை உயர்நீதி மன்றம், நெல்லைப் போலீசு அதிகாரிகளை வேலை நீக்கமா செய்யப் போகிறது?

குஷ்பு, சுகாசினி எதிர்ப்பை தமிழ் ஊடகங்கள் செய்தியாக்குவதன் காரணம், அதன் சினிமா பரபரப்பைக் காசாக்குவதுதானேயொழிய வேறு எதுவுமில்லை. அதனால்தான் குஷ்புவை ஆதரித்து ஆங்கில ஊடகங்கள் வெளியிடும் செய்தியின் "தரம்' தமிழில் இல்லை. குஷ்பு பிரச்சினை குறித்த விவாதமொன்றில் சினிமா தயாரிப்பாளர் பழ.கருப்பையா குஷ்புவை அவள் இவள் என்று பேசியதைக் கண்டிக்கிறார்கள். கண்டிப்பாக இது பழ.கருப்பையாவின் ஆணாதிக்கம்தான். ஒத்துக் கொள்வோம். ஆனால் நக்சலைட்டுகளையும், காசுமீர் போராளிகளையும் அவன், இவன் என்று எழுதுவதும், தீ.கம்யூனிஸ்டுகள், தீவிரவாதிகள் என்று அவதூறு செய்வதும் என்ன வகை ஆதிக்கம்?

பழ.கருப்பையாவது அவள், இவளென்று நிறுத்திக் கொண்டார். பெண்கள் விசயத்தில் சங்கராச்சாரி என்ன பேசினார், எப்படி நடந்து கொண்டார் என்பது நிர்வாணமான நிலையில் எந்தப் பத்திரிகையும் சங்கராச்சாரியைப் பொறுக்கி என்று எழுதவில்லை. எழுதவில்லை என்பது மட்டுமல்ல தீபாவளித் திருநாளில் நள்ளிரவில் அவர் கைது செய்யப்பட்டதை வைத்து, அடிப்படை ஜனநாயக உரிமை பறிபோனதாக ஒரு பாட்டம் அழுது தீர்க்கவும் செய்தார்கள். ஆனால் அப்துல் கலாமை அரசவைக் கோமாளி என்று ஒரு உலகறிந்த உண்மையை எழுதியதற்காக தருமபுரியில் எமது தோழர்கள் 55 நாட்கள் சிறையில் இருந்தனர்.

ஆக, இந்தியத் திருநாட்டில் ஒருநபரை எப்படி அழைக்கலாம், அழைக்கக் கூடாது என்பதில் கூட கருத்துச் சுதந்திரம் கடுகளவும் இல்லை. எப்போதெல்லாம் ஆளும் வர்க்க நலன் இலேசாக உரசப்படுகிறதோ உடனே கருத்துச் சுதந்திரமும் பாதிக்கப்படுவதாகக் கூக்குரல் எழுகிறது.

கலாச்சாரப் போலீசைக் கண்டிக்கும் சட்டம் ஒழுங்கு போலீசு!

குஷ்புவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான வன்முறை என்றும், இவர்களைக் கலாச்சாரப் போலீசு என்றும் சித்திரிக்கும் பார்ப்பன ஊடகங்களும், போலி கம்யூனிஸ்டுகளும், அறிஞர் பெருமக்களும் இக்கருத்தை வெளியிடும்போது சட்டம் ஒழுங்கு போலீசின் குரலில் பேசுகிறார்கள். அதுமட்டுமல்ல ஏற்கெனவே ஜனநாயகமும், கருத்துரிமையும் சட்டப்படி நிலவி வருவதைப் போன்ற பிரமையையும் உருவாக்குகிறார்கள். பாசிசத்தை ஜனநாயகம் என்று அங்கீகரிக்கும் இவர்கள் "கற்பை' பிற்போக்குத்தனம் என்று சாடுவது நல்ல நகைச்சுவை.

கற்பை ஆதரிக்கும் கருத்துப் பிரச்சாரம் செய்யலாமாம். ஆனால் அதைக் கண்ணியமான முறையில் செய்ய வேண்டுமாம். துடைப்பம், செருப்பு, கொடும்பாவி ஆகியவை கூடாதாம். செருப்பு, துடைப்பம் வைத்து ஆர்ப்பாட்டம் செய்வதோ, வழக்குப் போடுவதோ உலகெங்கும் உள்ள ஏற்றுக் கொள்ளப்பட்ட ஜனநாயக முறைகள்தானே, இதில் எங்கே வன்முறை உள்ளது? உண்மையில் இத்தகைய ஆர்ப்பாட்ட முறைகளின் மீது நடுத்தர வர்க்கத்திற்கு உள்ள வெறுப்பையே இந்து பத்திரிகை முதல் ஷங்கர் படம்வரை வெளிப்படுத்துகிறார்கள். இந்த வெறுப்பே நீதிமன்றங்கள் மூலம் பல விதங்களில் சட்டமாகியிருக்கின்றது.

அடுத்து குஷ்பு, சுகாசினியை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு போடுவதைப் பாசிசம் என்கிறார்கள். இதை எப்படிப் பாசிசம் என்று சொல்ல முடியும்? லட்சக்கணக்கான மக்கள் ஒன்றுமில்லாத வழக்குகளுக்காகவும், வாய்தாக்களுக்காகவும் அலைந்து கொண்டிருக்கும்போது, குஷ்பு மேட்டூர் நீதிமன்றத்தில் படியேறியது குறித்துக் கண்ணீர் விடுகிறார்கள். உண்மையில் இது "நாங்கள் நீதிமன்றம், வழக்கு, விசாரணைக்கு அப்பாற்பட்டவர்கள்' என்ற மேட்டிமைத்தனமே அன்றி வேறல்ல. சென்னை உயர்நீதி மன்றமும் குஷ்பு மீது வழக்குகள் போடுவதைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறது.
ஆளும் வர்க்க நலன் பாதிக்கப்படும் போது மட்டும் எல்லோருக்குமான சட்டம் ஒழுங்கு "எங்களுக்கில்லை' என்ற மனோபாவம்தான் இவர்கள் பேசும் ஜனநாயகத்தின் உண்மையான இலக்கணம். கோவை குண்டு வெடிப்பில் கைதான அப்பாவி முசுலீம்கள், பல ஆண்டுகளாகச் சிறையில் வாடும் விசாரணைக் கைதிகள் போன்றோர் உயர்நீதி மன்றத்தின் அநீதிக் கண்களுக்குத் தெரிவதில்லை. குஷ்புவின் கருத்தை எதிர்க்கும் கற்பு ஆதரவாளர்கள் தமிழ்ப் பிற்போக்காகவே இருக்கட்டும். அவர்கள் போடும் வழக்கை சட்டபூர்வமாக எதிர்கொண்டு நிரபராதி என்று நிரூபிப்பதில் என்ன பிரச்சினை?

பாசிசத்தின் பாதந்தாங்கியாகக்கருத்துச் சுதந்திரம்!

ஒரு கருத்தை கருத்தால் சந்திக்காமல், துடைப்பத்தை எடுப்பது வன்முறை என்றால் தங்கர்பச்சான் நடிகைகளைப் பற்றி தெரிவித்த கருத்துக்காக அவரை மன்னிப்புக் கேட்க நிர்ப்பந்தித்ததும் வன்முறைதான் என்று ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கும். காசுக்காக தனது கருத்தையும், கலைத் திறமையையும், உடலையும் விற்பனை செய்கின்ற விபச்சாரர்கள் நிரம்பிய திரையுலகத்தில் விபச்சாரிகளை மட்டுமே சாடிய தங்கர்பச்சானின் ஆணாதிக்க மனோபாவத்தைக் கண்டிப்பதற்கு மேல் அதில் என்ன இருக்கிறது?
கருத்துச் சுதந்திரக்காரர்களின் இந்த இரட்டை வேடம் தவிர்க்க இயலாமல் அவர்களைப் படுகுழியில் இறக்குகிறது. ""பாபர் மசூதியை இடித்தது குற்றம்தான், ஆனால் "மசூதி இருந்த இடத்தில் ஏற்கெனவே கோவில் இருந்தது' என்று கூறுவதற்கும், "அங்கே கோவில் கட்டுவோம்' என்று கருத்து தெரிவிப்பதற்கும் இந்துத்துவவாதிகளுக்கு கருத்துரிமை உண்டு'' என்று கூறுகிறார் அ.மார்க்ஸ். அரை அம்மண நடனங்கள், ஏகாதிபத்திய நுகர்வு வெறிக் களியாட்டங்கள் இவற்றின் அடிப்படையில் அமைந்த தனிநபரின் பாலியல் உரிமைகள் ஆகியவற்றை ஆதரிக்கும் பொருட்டு பாசிசத்தின் கருத்துரிமையையும் ஆதரிக்க வேண்டியிருக்கிறது. குஷ்புவின் கருத்துரிமைக்காக முசுலீம்களின் வாழ்வுரிமையையும், வழிபாட்டுரிமையையும் காவு கொடுக்கிறார் அ.மார்க்ஸ்.

முற்போக்குக் கலைஞரான பிரளயனோ தனியாருக்குச் சொந்தமான டிஸ்கோத்தே அரங்கிற்குள் போலீசு எப்படி அத்துமீறி நுழையலாம் என்று நட்சத்திர ஓட்டல் முதலாளியைப் போல இடி முழக்கம் செய்கிறார். இந்த வாதத்தின்படி தனிச்சொத்துடைமையின் பெயரால் சாதி தீண்டாமையையும், கருத்துரிமையையும் அங்கீகரிக்க வேண்டியிருக்கும்.

எல்லா கருத்துக்களுக்கும் சமஉரிமை என்ற கருத்தே ஒரு பித்தலாட்டம். சாதி தீண்டாமையும், இந்து மதவெறிப் பாசிசமும், கற்பும், முல்லாக்களின் பத்வாக்களும், உழைக்கும் மக்களுக்கெதிரான கருத்துக்கள் என்பதை ஏற்றுக் கொள்கின்ற யாரும் அவர்களுடைய கருத்துச் சுதந்திரத்திற்காகக் குரல் கொடுக்க முடியாது. அவற்றை அங்கீகரிக்கவும் முடியாது.

பெண்ணடிமைத்தனத்தைவளர்க்கும் பாலுறவு சர்வேக்கள்

இந்தியா டுடேயின் செக்ஸ் சர்வேயிலோ, குஷ்பு கூறிய கருத்திலோ ஆணாதிக்கம் குறித்து ஒரு வெங்காயம் கூடக் கிடையாது. மாறாக, மாநகர மேட்டுக்குடி இளம் பெண்களிடம் விதவிதமான பாலியல் ருசிகளை அறிமுகப்படுத்துவதற்காகவே அந்த செக்ஸ் சர்வே எடுக்கப்பட்டது. அந்த சர்வேயில் கேட்கப்பட்ட கேள்விகளைப் பார்த்தால் இனிமேல் சரோஜாதேவிப் புத்தகங்களுக்குத் தேவையில்லை என்று தோன்றும். நடுத்தர வர்க்கம் மற்றும் மேட்டுக்குடியை விழுங்கி வரும் நுகர்வுக் கலாச்சாரத்தின் ஓர் அங்கம்தான் இந்த சர்வே.

உலகமயம், தாராளமயம், தனியார்மயம் உருவாக்கி வரும் நுகர்வுப் பண்பாடு, சமூகம் சூழ வாழும் ஒரு தனிநபரை பொருட்கள், ஆசைகள் சூழப்பட்ட நபராக மாற்றுகிறது. இந்த நபர் மேலும் மேலும் தனிமனிதனாக மாறி சகிப்புத் தன்மையற்ற நபராக மாறி, தனது ஆசைகளை நிறைவேற்றுவதற்காக ஏனைய மனித உறவுகளை ரத்து செய்கிறார். பாலுறவிலும் நுழையும் இந்தக் கண்ணோட்டம் எந்த அளவுக்குப் பரவுகிறதோ அந்த அளவுக்கு ஆணாதிக்கத்தை எதிர்த்தோ, பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்தோ, பெண்ணடிமைத்தனத்தை எதிர்த்தோ உள்ள மங்கலான போராட்ட உணர்வைக் கூட பெண்களிடமிருந்து துடைத்தெறிந்துவிடும். இது தனது ஆசை, தேவைகளுக்காக எல்லா விழுமியங்களையும் துறந்து தேர்ந்த காரியவாதியாக மாறுவதைப் பயிற்றுவிக்கிறது.

இந்தியா டுடேயின் சர்வே கேள்விகளில் ஒன்றான "வேலை கிடைப்பதற்காக உடலை விற்பீர்களா?' என்ற கேள்வி அவர்களின் நோக்கத்தைத் தெளிவுபடுத்தி விடுகிறது. அது மாறும் சூழ்நிலைக்கேற்ப "அட்ஜஸ்ட்மெண்ட்' செய்து கொள்ளுமாறு நவீன காலப் பெண்களைப் பச்சையாகக் கேட்கிறது. கற்பு குறித்த பிற்போக்குத்தனத்தை, செத்த பாம்பை அடிக்கும் இவர்கள் தங்கள் சர்வேயில் பாலியல் வன்கொடுமை பற்றியோ, சமூகத்தில் விரவியிருக்கும் ஆணாதிக்கம் குறித்தோ ஒரு கேள்விகூடக் கேட்கவில்லை.
குஷ்புவும் கூட தனது கருத்தில் திருமணத்துக்கு முந்தைய பாலுறவில் "பாதுகாப்பாக விளையாடுமாறு' கவலை கொள்கிறார். இங்கும் சுதந்திரப் பாலுறவின் பெயரால் பெண்ணுடலை நுகர் பொருளாக்கும் ஆணாதிக்கம் குறித்து எந்தக் கேள்வியுமில்லை. அதனால்தான் இவர்கள் கற்பை பிற்போக்கு என்று தெளிவாக வரையறுப்பதுபோல, பெண்களுக்கான முற்போக்கு எது என்பதை தெளிவாக வரையறுக்க முடியவில்லை. அதற்கு மாறாக பெண்ணுடலை வெறும் காமப் பொருளாக உறிஞ்சக் கொடுக்கும் அடிமைத்தனத்தை அட்ஜஸ்ட்மெண்ட் என்ற பெயரில் சிபாரிசு செய்கிறார்கள். இதுவும் கற்பு என்ற பிற்போக்குத்தனத்திற்கு கடுகளவும் குறையாத பிற்போக்கத்தனம்தான்.

சுதந்திரப் பாலுறவு என்ற கோட்பாடு நடைமுறையில் ஆணின் பொறுக்கித்தனத்திற்கும், பெண்ணின் அடிமைத்தனத்திற்கும் உதவுமேயன்றி அதில் வேறு எந்த தத்துவ ஆராய்ச்சிக்கும், மயிர் பிளக்கும் விவாதத்திற்கும் இடமில்லை. அவ்வகையில் விடுதலைச் சிறுத்தைகள் பா.ம.க.வினரின் மலிவான பரபரப்பு அரசியலை விட இந்தியா டுடேயின் பாலுறவு அரசியல் அபாயகரமானது.

ஐ.டி. (ஐ.கூ) எனப்படும் தகவல் தொழில்நுட்பத்துறை குறித்து ஆகா, ஓகோ என்று புகழ்பாடும் இந்தியா டுடே அதில் பெண்கள் படும் துயரம் குறித்து இதுவரை எந்த சர்வேயும் எடுத்ததில்லை. இத்துறைப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு அதிகமாக ஆளாகிறார்கள், பணிநிரந்தரம் பாதுகாப்பு இல்லை, தொழிற்சங்க உரிமை இல்லை, வரையறுக்கப்பட்ட பணி நேரம் இல்லை. மேலும், வார இறுதிக் கேளிக்கைகளுக்கு கட்டாயமாக வரவழைக்கப்படுகிறார்கள். இதற்கு மறுப்பவர்கள் இத்துறையிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள் அல்லது பழமைவாதி என்று கேலி செய்யப்படுகிறார்கள். அந்தப் பழமைவாதிகளை ஜாலியான அடிமைகளாகப் பழக்கப்படுத்துவதுதான் இந்தியா டுடேயின் வேலை. மாறாக, அந்த நவீனப் பெண்ணடிமைகளை விடுதலை செய்வதற்கல்ல.

இந்தியா டுடேயின் "புதிய முற்போக்கு'

கற்பு எனும் நிலவுடைமைப் பிற்போக்கைச் சாடும் சாக்கில் இந்தியா டுடே உலகமயமாக்கத்தின் கேடுகளை நைசாக முற்போக்கு என்று சேர்த்து விடுகிறது. பழைய தொழிற்சங்கச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் இது முற்போக்கு, தொழிற்சங்கம் வேண்டுமெனச் சொல்வது, வேலை நிறுத்தம் செய்வது இவை பிற்போக்கு. பேஷன் ஷோ, அழகிப் போட்டி முற்போக்கு. புகைபிடிக்கும் காட்சிகளைத் தடைசெய்வது, கடைகளின் பெயரைத் தமிழில் எழுதுவது பிற்போக்கு. இறுதியில் இந்த "முற்போக்கை' மறுத்து "பிற்போக்கை' ஆதரிப்பவர்களை தாலிபான்கள் என்று முத்திரையும் குத்தி விடுகிறது இந்தியா டுடே. காலாவதியாகும் கற்பை வைத்து உலகமயமாக்கத்தின் கேடுகளை ஏற்கச் செய்யும் இந்தச் சதித்தனம் எத்தனை பேருக்குப் புரியும்.
முன்னேறிக் கொண்டிருக்கும் சமூகத்தை குஷ்புவை ஆதரிப்பவர்கள் பின்னுக்கு இழுப்பதாக ஒரு சிறப்புக் கூட்டம் போட்டுப் புலம்பிய த.மு.எ.ச. அறிவாளிகளை ஏன் கோமாளிகள் என்று அழைத்தோம் என்பது இப்போது புரிந்திருக்கும். ஆனால் தொழிற்சங்கம் கூடாது என்ற "முற்போக்கை' மே.வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா ஏற்றுக் கொண்டுள்ள படியால் அவர்களை முற்றிலும் ஏமாந்த கோமாளிகள் என்றும் சொல்லிவிட முடியாது.

கருத்துச் சுதந்திரத்திற்காக மார்தட்டும் இந்தியா டுடே தொழிற்சங்கம் வேண்டுமா வேண்டாமா என்பது குறித்தும், தாராளமயத்தால் தற்கொலை செய்யும் விவசாயிகள் குறித்தும், அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள் குறித்தும் ஏன் சர்வே எடுக்க முன் வரவில்லை? ஆனால் பாலியல் குறித்து மூன்று மாதத்திற்கொரு முறை சர்வே எடுக்கும் வேகமென்ன, குஷ்புவுக்கு ஆதரவாக ஒதுக்கப்படும் பக்கங்களென்ன, சமூகம் "முன்னேறி'ப் போவதன் இலட்சணம் இதுதான். குஷ்புவை எதிர்ப்பதில் தீவிரம் காட்டும் பா.ம.க.வும், விடுதலைச் சிறுத்தைகளும் கூட இத்தகைய சமூக முன்னேற்றத்தோடு கருத்து வேறுபாடு கொண்டவர்களல்லர். அவ்வகையில் அவர்களது சண்டை அட்டைக் கத்திகளோடுதான்.

எய்ட்ஸ் நோயின் ஊற்றுக் கண்ணான விபச்சாரத்தையும், மக்களைக் காமவெறி பிடித்த விலங்குகளாக மாற்றும் திரைப்படங்களையும் தடை செய்வது குறித்து மூச்சுவிடாமல், நாடெங்கும் ஆணுறை எந்திரங்களை வழங்குவதன் மூலம் ஆண்களுக்குப் "பாதுகாப்பை' வழங்குகிறார் அமைச்சர் அன்புமணி. பெண்களுக்கு கற்புக் கவசம் அணிவித்து ஆண்களிடமிருந்து "பாதுகாக்கிறார்' அப்பா இராமதாசு. சிகரெட் உற்பத்திக்குத் தடை இல்லை; சினிமா நிழலுக்குத் தடை. சில்லறை விற்பனையில் பன்னாட்டு நிறுவனங்களை நுழைத்து தமிழ் வணிகர்களை ஒழிக்க டெல்லியிலிருந்து திட்டம். அழியவிருக்கும் சிறுவியாபாரிகள் தமிழில் போர்டு வைத்த பின்தான் அழியவேண்டும் என்பதற்குத் தமிழ்நாட்டில் போராட்டம்.

குஷ்பு, சுகாசினிமேட்டுக்குடியின் மனச்சாட்சி!

பா.ம.க.வும், விடுதலைச் சிறுத்தைகளும் எப்படி தமிழினத்தின் பிரதிநிதிகள் இல்லையோ அதேபோல குஷ்புவும் பெண்ணினத்தின் பிரதிநிதியல்ல.
குஷ்பு தின்று தினவெடுத்த வர்க்கத்தின் பிரதிநிதியாக இருந்து, சுதந்திரப் பாலுறவு குறித்துப் பேசுகிறார். அவரை தேர்ந்த சமூகவியலாளரைப் போலப் பேசுவதாகக் குறிப்பிடுவது நகைப்பிற்குரியது. அப்படிப் பேசியிருந்தால் ஒரு நடிகையாக கோடீசுவரியாக தான் நிலைபெறுவதற்குச் செய்த "தியாகங்களை' குறைந்தபட்சம் ஒரு மேலோட்டமான சுயவிமர்சனமாகக் கூடச் சொல்லியிருப்பார். ஆனால் அவரைப் போன்ற பெண்கள் தம்மை இழப்பது குறித்தல்ல, பெறுவது குறித்தே கவலைப்படுகிறார்கள். அதையே ஒரு வாழ்க்கை முறையாக மற்றவர்களுக்கும் பரிந்துரை செய்கிறார்கள்.
குஷ்புவிடம் கேட்கப்பட்ட கேள்வியை ஏழ்மையினால் விபச்சாரியாக்கப்பட்ட பெண்ணிடம் கேட்டால் என்ன பதில் வரும்? நிச்சயமாக "அட்ஜஸ்ட்மெண்ட்' செய்து வாழுவதைச் சரியெனக் கூறமாட்டார். காரணம், இங்கே இழப்பினால் நடிகைகளுக்கு கிடைக்கும் ஆடம்பர வாழ்வு கிடைக்காது. அவலம்தான் கிடைக்கும். நல்ல கணவன், குழந்தைகள், கல்வி, குடும்பம் என்ற சராசரிப் பெண்ணின் ஏக்கம்தான் அந்த விபச்சாரியிடம் வெளிப்படும். குஷ்புவிடம் இல்லாத ஆணாதிக்கக் கொடுமையின் மீதான கோபமும், வெறுப்பும் இந்தப் பெண்களிடம் கண்டிப்பாக இருக்கும்.

சுகாசினி, குஷ்பு போலத்தான் என்றாலும் கூடுதலாக பார்ப்பன மேட்டிமைத்தனம் கலந்த கலவை எனலாம். தமிழின வெறுப்பும், இந்துத்துவ ஆதரவும், மேட்டுக்குடியின் போலியான தேசபக்தியும் கொண்ட, "தேசியப் படங்களை' எடுத்த மணிரத்தினத்தின் மனைவி என்ற தகுதியை அவர் சரியாகக் கொண்டிருக்கிறார்.

மணிரத்தினத்தின் வீட்டில் குண்டு வெடித்ததை வைத்து, ரஜினியிடம் சமூக உணர்வு பொங்கியதைப் போல, குஷ்புவிற்கு ஏற்பட்ட நிலைமை குறித்து சுகாசினியிடம் கோபம் கொம்பு போல சட்டென்று வெளிப்படுகிறது. மற்றபடி சராசரி தமிழ்ப் பெண்களின் வேதனை, அவலம் குறித்து அவரிடம் ஏதும், எப்போதும் வெளிப்பட்டதில்லை. பிரச்சினைகளை மேட்டிமைத்தனமாகப் பேசும் மேட்டுக்குடிப் பெண்கள், பெண்ணினத்தின் போராளியாகச் சித்தரிக்கப்படுவது, பெண்ணினத்தின் சாபக்கேடேயன்றி, பெருமைக்குரியதல்ல.
பிழைப்புவாதத்தைப் பாதுகாக்கும்"தமிழ் ஆணுறை'!

தமிழக அரசியல் பொதுக்கூட்டங்களில் பேசும் பேச்சாளர்கள், அதிலும் தீப்பொறி, வெற்றிகொண்டான், நடராசன் போன்றோர் தலைவர்கள் பெண்டாளுவதைப் பெருமையாகவும், தலைவிகள் சோரம் போனதைத் தரக்குறைவாகவும் பேசுவது ஒரு நீண்ட மரபு. அவ்வகையில் திராவிட இயக்க அரசியலில் ஆணாதிக்கத் திமிரும், பெண்களைக் கேவலமாகப் பேசுவதும் இரத்தத்தோடு கலந்து விட்ட ஒன்று.

பா.ம.க.வும், விடுதலைச் சிறுத்தைகளும் இந்தப் பொது நீரோட்டத்தோடு கூட்டணி வைத்துக் கலந்தவர்கள்தான். இரண்டு பிரபலமான பெண்கள் பேசியதை வைத்து, தமிழ்ப் பண்பாடு, மரபு, பெருமைக்குப் போராடுபவர்களாகக் காட்டிக் கொள்ள நினைக்கும் இவர்கள், தமிழ்க் கற்பு குறித்துக் கதைப்பது வெறும் பம்மாத்தே. தமிழ்ப் பெண்களின் வாழ்வைச் சூறையாடும் தாராளமயக் கொள்கையர்களின் ஆட்சியில் பங்குதாரராக இருந்து கொண்டே தமிழ்க் கற்பு பற்றிக் கதைக்கின்றனர்.

எத்தனை மேன்மைமிக்கதாக இருந்த போதிலும் கற்பு என்பது நடைமுறையில் ஒரு தனிநபரின் பாலியல் ஒழுக்கம் சார்ந்த விசயம் மட்டும்தான். ஆனால் பொது வாழ்வில் ஒழுக்கம் என்ற சொல்லை தமது அகராதியிலிருந்தே நீக்கிய கனவான்கள் தமிழ்ப் பெண்களின் கற்பு நெறி குறித்தும், மக்களின் உணர்வு புண்படுவது குறித்தும் அலட்டிக் கொள்வது அருவெறுக்கத்தக்கது; கேலிக்குரியது.

குஜராத் இனப்படுகொலை நடந்தபோது கண்ணை மூடிக் கொண்டு பா.ஜ.க. வழங்கிய பதவிச் சுகத்தை அனுபவித்து இன்பம் கண்ட கருணாநிதி, இராமதாசின் அரசியல் ஒழுக்கத்திற்கு விளக்கம் தேவையில்லை. "தலித் விடுதலை'க்காக மூப்பனார், பெர்ணாண்டஸ், சங்கராச்சாரி, ஜெயலலிதா, கருணாநிதி, சிதம்பரம் கோவில் தீட்சிதர் உள்ளிட்ட யாருடனும் கூட்டு சேர தயங்காத திருமாவளவனின் அரசியல் ஒழுக்கமோ "அப்பழுக்கற்றது'.
வாழ்க்கையை விருப்பம்போல அனுபவிக்கவும், முன்னேறவும் விரும்பும் பெண்களுக்கு குஷ்பு சிபாரிசு செய்யும் பாதுகாப்புக் கவசம் "ஆணுறை'. பதவி சுகத்திற்காக அரசியல் விபச்சாரத்தில் ஈடுபடும் இவர்களுக்கு "கொள்கை பாதுகாப்பு' வழங்கும் ஆணுறை "தமிழ்'.

தாராளமயக் கொள்கைக்கு இசைவாகச் சுதந்திரப் பாலுறவையும் உள்ளடக்கிய புதிய பார்ப்பனப் பாரதக் கலாச்சாரத்தை உருவாக்க விரும்பும் இந்து, இந்தியா டுடே அடங்கிய பழைய பார்ப்பனக் கும்பல்; தாராளமயக் கொள்கையினூடாகவும் தமிழ் மக்கள் மீது பழைய பார்ப்பனக் கற்பை நிலைநாட்டப் போராடும் கருணாநிதி, இராமதாசு, திருமாவளவன் ஆகியோர் அடங்கிய புதிய பார்ப்பன வேளாளக் கும்பல்!

இந்தத் திருடன் போலீசு விளையாட்டை ஊதிப் பெருக்கி தேசியப் பிரச்சினையாக்கி அதனூடாகத் தமிழ் தொழிற்போட்டியை நடத்திக் கொள்ளும் சன் டி.வி, ஜெயா டி.வி! இதுவரை கற்பு என்ற கருத்தை வைத்து எந்தத் தமிழ்ச் சினிமாவும் சம்பாதிக்க முடியாத பணத்தையும், ஈர்க்க முடியாத கவனத்தையும் இந்த நாடகம் பெற்று விட்டது.

தி.மு.க. கூட்டணியில் இருக்கும் பா.ம.க.வையும், பா.ம.க.வுடன் கூட்டணி வைத்திருக்கும் விடுதலைச் சிறுத்தைகளை அ.தி.மு.க. கவர இருக்கும் நிலையில், அவர்களை தி.மு.க. கூட்டணியில் வைத்திருப்பதற்காகவே, ஜெயா டி.வி. சார்பான குஷ்புவை எதிர்க்கும் இவர்களது நாடகத்தை சன் டி.வி., தமிழ் முரசு ஊதிப் பெருக்குவதாகச் சிலர் சொல்வதில் உண்மை இல்லாமலில்லை. ஆனால் கற்பை விட எம்.எல்.ஏ. சீட்டு பருண்மையானது. நாளையே ஜெயா அதிக சீட்டு கொடுத்து இவர்களைக் கவர்ந்திழுக்கலாம்.

பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகளால் ஆதரிக்கப்பட்ட தமிழ்ப் பெண்களும், ஜெயாவால் ஆதரிக்கப்பட்ட குஷ்புவும் இரு தரப்பினராலும் கைவிடப்பட்டு அரசியல் கற்புக்குப் புது விளக்கங்கள் வழங்கப்படலாம். இந்தியா டுடேயும் மாறிவரும் செக்ஸ் விருப்பங்கள் குறித்து புதியதொரு சர்வேயை வெளியிடலாம்.

மு இளநம்பி

பெண் விடுதலையின் பெயரில் ஆணாதிக்க விபச்சாரம்

பெண் விடுதலையின் பெயரில் ஆணாதிக்க விபச்சாரம்

"சாராம்சத்தில் விமர்சனக் கண்கொண்டு பார்ப்பவை புரட்சிகரமானவை" என்றார் கால்மார்க்ஸ். ஆனால் ஆணாதிக்க சமூக ஒழுக்கக்கேட்டை நியாயப்படுத்தும் வாதங்கள். சுதந்திரத்தின் பெயரில், பால் இச்சையின் பெயரில், பெண்ணின் பெயரில் கூட ஆணின் ஒழுக்கக்கேட்டை மடடுமல்ல, அதன் பாதையில் பின்தொடரும் பெண்ணின் ஒழுக்கக்கேட்டையும் கூட நியாயப்படுத்துவது நிகழ்கின்றது. ஒழுக்கக்கேடு என்பது இவர்களின் வாழ்வியல் கண்ணோட்டத்தில் எதுவும் கிடையாது. அப்படி எதாவது உண்டு என்றால், தாம் அடக்கியாளும் வர்க்கத்தின் போராட்டங்களைத் தான்.

நான் எழுதிய "ஆணாதிக்க ஒழுக்கக் கேட்டை கோருவதா பெண்ணியம்?" என்ற கட்டுரைக்கு தமிழ்மணம் விவாதத்தளத்தில் இரண்டு முரணிலையான ஏகாதிபத்திய ஆணாதிக்க ஆதரவு (டோண்டு, மற்றது உண்மை) கருத்துகள் போடப்பட்டடு இருந்தன. அவை இக் கட்டுரையில் முழுமையாக தரப்படுகின்றன. உலகமயமாதல் விபச்சார பெண்ணியத்தின் வாழ்வியலை போற்றும் இந்த இரண்டு பதிவுகளும், தனது சொந்த முகத்துடன் வெளிவந்துள்ளது. கால்மார்க்ஸ் குறிப்பிட்டது போல் "மனித சமூக சாரம் என்பது, ஒவ்வொரு தனி மனிதனிடமும் இயல்பாக உள்ளர்ந்திருக்கும் சாரம் என்பதல்ல, அதன் எதார்த்தத்தில், அது சமூக உறவுகளின் முழுத் தோற்றம் ஆகும்" அதையே இந்த பதிவுகள் மீண்டும் பதிவு செய்துள்ளன.

இவர்கள் என்னவகையான சமூக உறவுகளை கொண்டு இருக்கின்றனரே, அதை அப்படியே வாந்தியெடுக்கின்றனர். ஏகாதிபத்திய ஆணாதிக்க அமைப்பின் முழுத் தோற்றத்துடன், அதன் விபச்சாரத்தனத்தை நியாயப்படுத்த முன்வைக்கும் வாதமே முதலாளித்துவத்தின் உள்ளடக்கம் தான். தனிப்பட்ட சுதந்திரம், பெண்ணின் தனிப்பட்ட விடையம், பாலியல் ஒரு உடல் சார்ந்த உணர்வு இன்னும் பலவாக கூறி தப்பிக்க நீக்கல் தேடுகின்றனர்.

நான் எழுதிய கட்டுரையில் இருந்து டோண்டு என்பவர் "கேவலமான ஆணாதிக்க சமூக அமைப்பில் ஆண் எதையெல்லாம் செய்ய முடிகின்றதோ, அதையெல்லாம் பெண் செய்யும் உரிமையைத்தான் பெண்ணியமாக கருதுகின்ற வக்கிரம் அரங்கேறுகின்றது." என்று நான் எழுதியதற்கு, அவர் எப்படி பதிலளிக்கின்றார் எனப் பார்ப்போம்.

"ஏன், செய்தால் என்னவாம்? இதில் என்ன வக்கிரம்? உடல் இச்சை என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது. அதை தணித்துக் கொள்ள ஆண்களுக்கு எந்தத் தடையும் இல்லை. பல பெண்களிடமும் அவன் உறவு கொள்வதைக் கண்டிக்கும் மற்ற ஆண்களும் முக்கால்வாசித் தருணங்களில் தங்களுக்கும் அந்த வாய்ப்பு கிட்டவில்லையே எரிச்சலின் காரணமாகத்தான் அந்த நிலையை எடுக்கின்றனர். பல காரணங்களால் பெண்களுக்கு அந்த வாய்ப்பு கிட்டுவதில்லை. அது ஏன் என்பது எல்லோருக்குமே தெரியும். அதற்குள் இப்போது போய் ஒன்றும் ஆகப் போவதில்லை. உடல் இச்சை என்பதும் பசி, தாகம் போன்ற அடிப்படை உணர்வே. அதைத் தணித்துக் கொள்ள சில பெண்கள் முன்படும்போது மட்டும் ஒழுக்கக் கேடு என்றெல்லாம் ஏன் கூற வேண்டும்? அதை சம்பந்தப்பட்டப் பெண்ணே பார்த்துக் கொள்வார்"

இப்படித் தான் அவரால் வாதிட முடிகின்றது. இங்கு ஆணாதிக்கம் பற்றி எந்த அக்கறையும் இவருக்கு இருக்கவில்லை.

மாறாக வெளிப்படுத்துவது நுகர்வு வெறி. சந்தையில் பொருளை வாங்கும் கண்ணோட்டத்தில், அதையே பாலியலுக்குரிய உரிமை என்கின்றனர். இச்சை என்கின்றார். சில ஆண்கள் எரிச்சலால் புகைவதாக கூறகின்றார். இது ஒரு சமூக ஆய்வா? இல்லை தனிப்பட்ட மனிதனின் சொந்த உலகு நோக்கில் இருந்து கூறும் சொந்த சீரழிவு தான். இதைத் தான் குஷ்புவும் செய்தார். இதில் இருந்து சமூகம் வேறானது. தனிமனித சொத்துரிமை சார்ந்து வெளிப்படுத்தும் கருத்து எப்போதும் வேறானது, அதையெல்லாம் இழந்த சமூகம் வெளிப்படுத்தும் கருத்து வேறானது. வாழ்க்கை முறை முற்றிலும் வேறானது. அவை நேர் எதிர் தன்மை கொண்டவை. உதாரணமாக பார்ப்பானின் உலகம் வேறானது. பள்ளர்களினதும் பறையர்களினதும் உலகம் வேறானது. பார்ப்பான் தனிமனித நலன் சார்ந்து உலகை சூறையாடும் மனித விரோதியாக இருக்கின்றான். பள்ளர் பறையர் சமூக உயிரியாக உலகை சூறையாடுவதற்கு எதிராக இருக்கின்றான்;. கருத்தின் தளம் வேறுபடுகின்றன. பெண்ணை இதில் இருந்து ஒவ்வொருவரும் பார்க்கும் பார்வை வேறுபடுகின்றது.

"ஏன், செய்தால் என்னவாம்? இதில் என்ன வக்கிரம்? உடல் இச்சை என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது. அதை தணித்துக் கொள்ள ஆண்களுக்கு எந்தத் தடையும் இல்லை." என்ற வாதமே அடிப்படையில் விபச்சாரத்தைக் குறிக்கின்றது. இங்கு ஆணும் பெண்ணும் உறவு கொள்வதுபற்றி பிரச்சனையல்ல. அது இயற்கையானது. ஆனால் அதை இந்த ஆணாதிக்க சமூக பொருளாதா அமைப்பில் உறவு கொள்ளும் வடிவம், அதை துண்டம் சமூக காரணிகள் தொடர்பானதே இங்கு பிரச்சனையாகும். யாரும் இந்த சமூக பொருளாதார அமைப்புக்கு வெளியில் சுயமாக இயங்குவதில்லை. எந்த முடிவுகளும் இந்த சமூக பொருளாதாரத்துக்கு வெளியில் யாரும் எடுப்பதில்லை. நாம் இந்த சமூக பொருளாதார அமைப்பின் சிறைக் கைதிகள். சிறைக்குள் இருப்பவன், சிறையின் எல்லைக்குள் உட்பட்டே, அவன் தனது சொந்த முடிவுகளை எடுக்கின்றான். இங்கு சொந்தமாக முடிவு எடுப்பது, அவன் சுதந்திரமாக தோந்தவையாக அல்ல.

உலகம் ஆணாதிக்க சமூக அமைப்பிலானது. ஒரு பக்கம் நிலப்பிரபுத்துவ ஆணாதிக்கம். மறுபக்கம் உலகமயாதல் என்ற ஆணாதிக்கம். நிலபிரபுத்துவம் பெண்ணை அடிமையாக இருக்க கோருகின்றது. உலகமயமாதல் பெண்ணை விபச்சாரியாக இருக்க கோருகின்றது. இது தவறு என்றால் இதைப்பற்றி முதலில் விவாதியுங்கள். இதை இரண்டையும் எதிர்த்து நாம் போராடக் கோருகின்றோம். இப்படித் தான் சமூகம் எங்கும் பெண்கள் போராடுகின்றனர்.

ஆணும் பெண்ணும் இயற்கை சார்ந்த பாலியல் தேவையை பூர்த்திசெய்ய, நிலப்பிரபுத்துவ சமுதாயத்திலும் சரி, உலகமயமாதல் அமைப்பிலும் சரி பாலியல் ரீதியாக உறவைக் கொள்ளமல் வாழவில்லை. இதை யாரும் மறுக்கவுமில்லை? இந்த சமூக பொருளாதார ஆணாதிக்க அமைப்பு, இதை எப்படிச் உறவு கொள்ளல் வேண்டும் என்று வழிகாட்டுகின்து. இந்த சீரழிவுக்குள் நின்று பொது விபச்சாரமா அல்லது அடிமைத்தனமா என இரண்டில் ஒன்றை சமூகத்தின் தனி அலகுகள் தேர்ந்தெடுக்கின்றனர். இது அக்கம் பக்க்கமாகவே உள்ள போது, பலமான அமைப்பு வடிவம் சார்ந்து மோதல் வெடிக்கின்றது. இந்த இரண்டையும் எதிர்த்த போராட்டத்தில் சமூகம் உள்ள போது, அதை பலமான சமூக பொருளாதார அமைப்பு, இதை எதிர்நிலைக்கு முத்திரை குத்தி தூற்ற முனைகின்றனர்.

"பல பெண்களிடமும் அவன் உறவு கொள்வதைக் கண்டிக்கும் மற்ற ஆண்களும் முக்கால்வாசித் தருணங்களில் தங்களுக்கும் அந்த வாய்ப்பு கிட்டவில்லையே என்ற எரிச்சலின் காரணமாகத்தான் அந்த நிலையை எடுக்கின்றனர். பல காரணங்களால் பெண்களுக்கு அந்த வாய்ப்பு கிட்டுவதில்லை." என்ற வாதம் முதலாளித்துவ அற்பவாதியின் கண்டுபிடிப்புத்தான். விவாதத்தின் உள்ளடகத்துக்கு பதிலளிக்க முடியாதபோது, இப்படி கூறி தப்பிக்க முன்வைக்கும் குதர்க்கமாகும். உலகின் வறுமைக்கு தங்களுடைய சுரண்டலே காரணம் என்பதை மறைக்க, ஏகாதிபத்தியம் சனத்தொகை பெருக்கம் யுத்தங்கள் என்று தமது சொந்த சூறையாடலை மறைக்க வைக்கும் வாதம் போன்றதே இது. ஒரு முதலாளித்துவவாதி மட்டும்தான், வாய்ப்பு கிட்டவில்லையே எரிச்சலின் விளைவு என்று, தனது தனிச்சொத்துரிமை உலக நோக்கில் நின்று கூறமுடியும். அவனின் சொந்த மனிதவிரோத அர்ப்பத்தனங்கள், சமூக இயக்கத்தின் நோக்கில் எதையும் ஆராய்வதில்லை. இதை சந்தர்ப்பங்கள், சூழல்கள், வாய்ப்புகள் என்று புலம்பத் தொடங்குகின்றான். இதை தனிமனித எரிச்சல் என்று, எந்த ஒரு சமூக ஆய்வாளனும் கூறமாட்டான். தனிமனித சமூக அமைப்பினால் உச்ச நன்மை பெறும் அற்பவாதிகள் மட்டும், இப்படி கூறுதை வரலாறு முழுக்க நாம் காணமுடியும். இந்த கனவான்கள் சமூகத்தில் காணப்படும் சமூக ஒடுக்குமுறைகள் பற்றி வாய்திறப்பதேயில்லை. எப்போதும் தனிமனித விருப்பங்கள் மீதான சமூகத்தின் எதிர்வினையை பற்றி மட்டும் பேசுபவர்கள்.

"உடல் இச்சை என்பதும் பசி, தாகம் போன்ற அடிப்படை உணர்வே. அதைத் தணித்துக் கொள்ள சில பெண்கள் முன்படும்போது மட்டும் ஒழுக்கக் கேடு என்றெல்லாம் ஏன் கூற வேண்டும்? அதை சம்பந்தப்பட்டப் பெண்ணே பார்த்துக் கொள்வார். " என்ற வரிகள், இயற்கையான உடல் சார்ந்த உணர்வை பற்றி பேசவில்லை. மாறாக இந்த இயற்கையான உடல் சார்ந்த உணர்வை தீர்மானிப்பவனின் உலக கண்ணோட்டத்தைப் பாதுகாப்பது பற்றியே பேசமுற்படுகின்றார். இயற்கையான உணர்வு சார்ந்த பசி, தாகம் போன்ற அடிப்படையான தேவையை இந்த உலகமயாதல் சமூகத்தில் கோடானுகோடி மக்களுக்கு கிடைப்பதேயில்லை. அதை கிடைக்கவிடாமல் பண்ணுபவர்கள் யார். இவர்களைப் போன்ற அற்பவாதிகள் தான். இதை சம்பந்தப்பட்டவரின் விடையமாக குறுக்கி காட்டிவிடுவர். மாடிவீட்டில் இருந்து குடிசை பார்த்து ஏப்பமிடுபவர்கள் யார். தாழ்ந்த சாதியை உருவாக்கி அதில் உயர்ந்தவர்கள் பார்ப்பனர்கள். இதையெல்லாம் அவன் அவன் தனிப்பட்ட தெரிவாக கூறுவதும், தனிப்பட்ட உணர்வு சார்ந்தாக கூறுவதும், இதை சுதந்திரமாக இந்த சமூக அமைப்பில் பெற்றுக் கொள்ள எந்த தடையும் இல்லை என்று கூற முற்படுவன் ஒரு அற்ப வாதியாகத்தான் இருக்கமுடியும். ஒரு உடல் இச்சையைக் கூட, ஆணாதிக்க ஒழுக்ககேட்டுக்கு வெளியில் ஆணோ பெண்ணோ யாரும் பெறமுடியாது. இவை அனைத்தையும் சுவீகரித்து வைத்திருக்கின்ற சிலர் சமூக அமைப்பில், இதை துணிச்சலாக உபதேசிப்பதற்கு யாரால் முடியும் என்றால், இதை எல்லாம் சுதந்திரமாக கூறும் அற்பவாதியால் மட்டும்தான் முடியும். மற்றவனுக்கு சுதந்திரத்தை மறுப்பதால் கிடைக்கும் அற்பத்தனத்தில் இருந்து இது வெளிப்படுகின்றது.

பசிக்கு கையேந்த வைத்து, குடிக்கும் தண்ணீரையே பணமாக்கும் உலகில் நாம் வாழ்கின்றோம். இந்த நிலையில் இதை போல் தான் உடல் இச்சை (பாலியலும்) என்று கூறும் போது உடல் இச்சை விபச்சாரத்தை தாண்டி எதுவுமல்ல. தாம் அனுபவிக்கும் ஆணாதிக்க சுகத்தைத் இப்படித்தான் இவரால் கூற முடிகின்றது. உலகில் பசி எப்படி கோடிக்கணக்கில் மக்களை கொல்கின்றதோ, குடிக்க நீர் இன்றி உலகில் கோடிக் கணக்கில் மக்கள் கொல்கின்றதோ அப்படித் தான் உடல் இச்சை சார்ந்த பாலியலும்; உள்ளது. உணவு இன்மையால், சுத்தமான நீh இன்மையால் வருடம் 10 கோடி மக்கள் உலகில் உயிருடன் இறந்து போகின்றனர். அதையே கண்டு கொள்ளது வெறும் உணர்வாக கூறும் இவர்கள், இதை மற்றவனுக்கு மறுத்து தாராளமாக நுகருகின்றான். இதேபோல் தான் உடல் இச்சை சார்ந்த பாலியலுக்கும் நடக்கின்றது. சிலர் கோடானுகோடி மக்களின் உணவை பறித்து உண்டு கொழுப்பதும், மற்றவனின் குடிநீரையே அபகரித்து நீச்சல் தடாகங்களில் வாழ்வது போல், பெண்ணின் உடலை சுதந்திரமாக வரைமுறையின்றி அனுபவிக்க வைக்கும் வாதங்கள்; தான் இவைகள். இதுவே உலகமயமாதல் ஒழுக்கம். ஆண் விரும்பும் வரைமுறையற்ற பாலியல் சுதந்திரம் என்னும் விபச்சாரத்தைத் தான், பெண்ணின் உரிமை என்ற கூற முற்படுகின்றனர்.

இதே போன்ற தான் உண்மை கருத்திடுகின்றார். அவர் மற்றொரு வாலில் தொங்கிக் கொண்டு "பெண்ணடிமை மறுபடியும் மலர அடிக்கல் நாட்ட முயலுகிறீர்கள்." என்கின்றார். இது தான் அவரின் அனைத்து ஆணாதிக்க வாதத்தையும் காட்டிவிடுகின்றது. சமூகம் பெண்விடுதலையை ஏற்கனவே அடைந்து விட்டதாகவும், மீண்டும் பழையபடி பெண்ணடிமைத்தனத்தை கொண்டு வர முயல்வதாகவும் கூற முனைகின்றார். இவர் அடைந்த பெண்விடுதலை என்பது ஆணாதிக்க உலகமயாதல் விபச்சாரத்தைத் தான்;. இதே போன்று தான் ஒடுக்கப்பட்ட சாதிகள் போராடும் போதும், சாதியை மீண்டும் கொண்டு வர முயல்வதாக ஒடுக்கும் சாதிகள் கூறுவது வழமை. அதேவாதம் இங்கும் வெளிப்படுகின்றது. சொந்த ஆணாதிக்க சமுகம் அம்பலமாகும் போது, இப்படி புலம்புவது நிகழ்கின்றது.

இப்படி கட்டுரையை முடிப்பவரின் பதிவைப் முழுக்கப் பார்ப்போம்.
"முதலில், இது போன்ற சமூக ஒழுக்ககேட்டை சார்ந்த பதிவுகளைப் போடுவதில் ஒழுக்கத்தை கடைபிடிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகளிலேயே உங்களைப் பற்றி தெரிந்துவிடும். குஷ்புவை பெண்ணியவாதியாக காட்டியது நீங்கள். அவர் பாட்டுக்கு, தான் உண்டு தன் வேலை உண்டென்று இருக்க அவர் கூறிய கருத்தை ஒரு சமூக ஆர்வலரின் கருத்துக்கு இணையாக முக்கியத்துவம் கொடுத்து அவரை பெரிய ஆளாக்கிவிட்டது நீங்கள். தன் கருத்தைக் கூறினார் என்ற ஒரே காரணத்திற்காக, கேவலமாக நடத்தியது ஆண்களாகிய நீங்கள்.

ஆண்களின் ஒழுங்கீனங்களை பெண்களும் செய்ய அனுமதியுங்கள் என்று கேட்கவில்லை, பெண்ணின் ஒழுக்கம் என்பதை வரையறுக்க நீங்கள் யார் என்றுதான் கேட்கிறோம். ஒழுக்கமாயிரு என்று சொல்வதற்கு ஒரு தகுதி வேண்டும். பாலியல் விவகாரம் என்பது ஒரு எடுத்துக்காட்டு. ஆண்கள் உங்கள் மனப்போக்கிற்கு வாழவேண்டும், ஆனால் நீங்கள் கட்டிக்காக்கும் போலி கலாசாரத்திற்கும் ஒழுக்கத்திற்கும் , பெண் உயிரை விடவேண்டும். எந்த ஊர் நியதி இது. தினம் ஒருவனுடன் படுப்பதற்கும், உடல் இச்சைகளைப் பற்றி பேசுவதையும் உரிமையாகக் கேட்கவில்லை. அது உங்கள் உலகம். ஆனால், யாருடன் படுப்பது, என்ன பேசலாம் என்பதற்கும் தடை விதிக்க நீங்கள் யார்? உங்கள் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் கட்டிக் காப்பதற்காக இத்தனை நாள் நீங்கள் கொடுத்த தியாகச்சுடர் என்ற பட்டம் எங்களுக்கு தேவையில்லை. பெண்கள் தன் விருப்பத்தை, தனக்கென்று ஒரு வாழ்க்கை தன் விருப்பம் போல் அமைத்துக்கொள்ளும் அளவுக்கு முன்னேறியதில், எங்கே நீங்கள் இது நாள் கட்டிக்காத்துவந்த பெயர் போய்விடுமோ என்ற பயம் ஆண் வர்க்கத்தைப் பீடித்துக்கொண்டுள்ளது. இது நாள் வரை உங்கள் இனத்தின் பெருமையைக் காக்க நீங்கள் பயன் படுத்தி வந்த பெண்குலம், தனக்கென்று ஓர் உலகம் அமைத்துக்கொள்வதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதன் வெளிப்பாடாய், இதுபோன்ற விஷயங்களைப் பெரிதாக்கி அதன் மூலம் உங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டுகிறீர்கள். பெண்ணடிமை மறுபடியும் மலர அடிக்கல் நாட்ட முயலுகிறீர்கள்."
என்கின்றார்.

ஆணாதிக்க உலமயமாதல் பெண்ணியம் என்ற பெயரில் வழங்கும் விபச்சார உலகில் அதை பெண்விடுதலையாக காண்பதால் தான் "பெண்ணடிமை மறுபடியும் மலர அடிக்கல் நாட்ட முயலுகிறீர்கள்." என்கின்றார். உலகமயாதல் ஒரு ஆணாதிக்க அமைப்பு அல்ல என்றே, இவர் வாதாட முற்படுகின்றார். பெண்ணடிமைத் தனம் ஒழிந்துவிட்ட அமைப்பில், வாழும் ஒரு கற்பனை பெண்ணின் ஆணாதிக்க புலம்பல் இது.

கொள்கை ரீதியாகவே நாங்களும் நீங்களும் இரண்டு வேறுபட்ட துருவங்கள். நாங்கள் இந்த சமூக அமைப்பபை ஆணாதிக்க அமைப்பு என்கின்றோம்;. நீங்கள் இல்லையில்லை என்று கூறி பெண் விடுதலை அடைந்த அமைப்பு என்கின்றீர்கள். உங்கள் வாதங்கள் அனைத்துமே ஆணாதிக்கம் சார்ந்ததென நாங்கள் கூற முற்படுகின்றோம்.

நிலபிரபுத்துவ அமைப்பு மட்டும் ஆணாதிக்கமானதல்ல. நீங்கள் விசுவாசிக்கும் நம்பும் உலகமயமாதல் கூட ஆணாதிக்க அமைப்புத் தான். ஆணாதிக்க விபச்சார உலகில் கற்பனைகளுடன் வாழும் போது, நாம் அதை ஆணாதிக்க விபச்சார அமைப்பு என்று கூறும் போது துடித்து பதைத்து குமுறிக் கொட்டுவது இயல்பே. இக்கட்டுரையை கண்டு கொதிக்கும் போது "முதலில், இது போன்ற சமூக ஒழுக்ககேட்டை சார்ந்த பதிவுகளைப் போடுவதில் ஒழுக்கத்தை கடைபிடிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகளிலேயே உங்களைப் பற்றி தெரிந்துவிடும். " என்று தான் உங்களால் எழுத முடிகின்றது. உலகமயமாதல் சமூக ஒழுக்கக்கேட்டை நாம் மறுதலிப்பவர்கள். கோடானுகோடி மக்களின் உள்ளக்குமுறலின் குரலாக நாம் இருப்பவர்கள். எங்கெல்லாம் உலகில் நீங்கள் மக்களை அடக்கியபடி கூடி கூத்தடிக்கின்றீர்களோ, அங்கெல்லாம் உங்களின் மக்கள் விரோத கோமளித்தனத்தை அம்பலப்படுத்துபவர்கள் நாங்கள்.

விவாதத்தில் இருந்து தப்பவே, உடனே பெண் என்ற அடையாளத்தை தூக்கிகொண்டு ஒடி வருகின்றீகள். "குஷ்புவை பெண்ணியவாதியாக காட்டியது நீங்கள். அவர் பாட்டுக்கு, தான் உண்டு தன் வேலை உண்டென்று இருக்க அவர் கூறிய கருத்தை ஒரு சமூக ஆர்வலரின் கருத்துக்கு இணையாக முக்கியத்துவம் கொடுத்து அவரை பெரிய ஆளாக்கிவிட்டது நீங்கள். தன் கருத்தைக் கூறினார் என்ற ஒரே காரணத்திற்காக, கேவலமாக நடத்தியது ஆண்களாகிய நீங்கள்." என்று கூறிய பின்பும் கூட, குஷ்புவுக்காக வக்காலத்து வாங்குகின்றீர்கள். இங்கு பெண் என்ற அடையாளத்தைக் கொண்டு, எதிராளிக்கு முத்திரை குத்தி தப்பிவிட முனைகின்றீர்கள். விவாதத்துக்கு பதில் குறித்த அடையாங்களில் தஞ்சமடைந்து தப்பித்துக் கொள்ளுதல் இங்கு அரங்கேறுகின்றது. இதுவே சமூக இயக்கம் எங்கும் காணமுடியும்.

பள்ளன், பறையன் என்று அடையாளம் இட்டு பார்ப்பான் அவர்களை சுரண்டியது உயர் நிலை அடைந்தது போல், கறுப்பன் என்று இழிவுபடுத்தி வெள்ளையன் அடக்கியாண்டு கொள்ளையிட்டது போல், தமிழன் என்று கூறி சிங்களவன் அடக்கியது போல், அடையாளங்களின் மீது நின்று தற்காப்பை பெறுவது அபத்தம். முடிந்தால் கருத்தை கருத்தாக எதிர்கொண்டு விவாதியுங்கள். ஆண்கள் எல்லோரையும் பெண்ணுக்கு எதிராக நிறுத்தும் ஆணாதிக்க உத்தி, பார்ப்பனிய தந்திரம் தான். ஆணாதிக்க அமைப்பில், ஆண் பெண் இருவருமே ஆணாதிக்க வாதிகள் தான். இங்கு ஆண் எதிர் பெண் அல்ல. ஆணும் பெண்ணுமற்ற எந்த சமுதாயமும் கிடையாது. ஆணாதிக்க அமைப்புக்கு மாற்று பெண்ணாதிக்கமல்ல. ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் வாழ்க்கை தான். இதை நிலப்பிரபுத்துவ அமைப்பிலும் பெற முடியாது உலகமயமாதல் அமைப்பிலும் பெறமுடியாது.

ஆண்கள் தான் குஷ்பு விவாகரத்தை முன்னிலைப்படுத்தியதாக கூறுவது, சமூக ஆய்வு முறையல்ல. ஆணாதிக்க அமைப்பு தான் அதை முன்னிலைப்படுத்தியது. இதில் நிலப்பிரபுத்துவ ஆணாதிக்கமும், உலகமயதாதல் ஆணாதிக்கமும் தனது எதிர்நிலை பண்பாட்டின் மீது நின்று குரைத்தனர். இந்த இரண்டடையும் எதிர்த்தே நாம் போராடுகின்றோம். எனது முழுக்கட்டுரையும் இதை தெளிவாக துல்லியமாகவும் எடுத்துக் காட்டுகின்து.

"பெண்ணின் ஒழுக்கம் என்பதை வரையறுக்க நீங்கள் யார் என்றுதான் கேட்கிறோம்." இதைச் சொல்ல உங்களுக்கு யார் அதிகாரம் தந்தது. நீங்கள் பெண்கள் என்றால், அதை ஆணாதிக்கத்தை எதிர்க்கும் ஆண்களும் பெண்களும் அங்கீகரிக்கவில்லை. நாங்கள் ஆண்கள் உள்ளடங்கி ஆண் பெண் சமூகத்தை ஆணாதிக்க சமூகம் என்றே கூறுகின்றோம். அடுத்து நீங்கள் கூறுகிறீர்கள் "ஆனால், யாருடன் படுப்பது, என்ன பேசலாம் என்பதற்கும் தடை விதிக்க நீங்கள் யார்?" நாங்கள் தடுக்கவில்லை. தாராளமாக செய்யுங்கள். நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க அமைப்பில் அடிமையாக இருக்கும் உரிமையையும், உலகமயமாதல் அமைப்பில் விபச்சாரியாக வாழ விரும்பும் உரிமையை நாங்கள் ஒரு நாளுமே மறுக்கவில்லை. தனிமனித சுதந்திரத்தின் பெயரில், இவை இந்த அமைப்பில் அவர்களின் சொந்த தெரிவாகவே உள்ளது. ஆனால் நாங்கள் இந்த இரண்டடையும் எதிர்த்து ஒரு சமூக உயிரியாய், போராடும் ஆண் பெண் சமூகத்தையே கோரி நிற்கின்றோம். அடிமைத்தனத்தையும், விபச்சாரத்தையும் எதிர்த்து நாம் போராடுவதை யாரும் தடுக்கவே முடியாது. அது எங்கள் சமூகத்தின் உரிமை.

மார்க்ஸ் கூறியது போல் "கண்டனத்துக்குரிய சமுதாயத்தின் ஏறுவரிசையில் ஓர் உயர்ந்த இடத்தைப் பிடிக்கிறவன் தான்" உலகத்தின் உண்மைகளையும, சமுதாயத்தை மாற்றி அமைக்கும் ஒரு சிறந்த பணியை செய்ய முடிகின்றது. அதை நாம் செய்ய முனைகிறோம்.

பி.இரயாகரன்
21.12.2005

Sunday, December 18, 2005

ஆணாதிக்க ஒழுக்கக்கேட்டை கோருவதா பெண்ணியம்?

ஆணாதிக்க ஒழுக்கக்கேட்டை கோருவதா பெண்ணியம்?

பகுதி 1

பகுதி 2

பகுதி 3

பகுதி 4

பகுதி 5

மற்றும் இதைப் புரிந்த கொள்ள

1.பொருளாதார மறுசீரமைப்பைக் கோரும் ஆணாதிக்கமும் தலித் ஆணாதிக்கத்தை எதிர்க்காத பெண்ணியமும்

2.பெண்ணின் போராடும் உரிமை பெண்ணின் உயிரைக் காட்டிலும் அடிப்படையானது.

3.பெண்ணின் கட்டற்ற சுதந்திரமும், காதல் சுதந்திரமும் ஒரு விபச்சாரமே!

4.பெண் கோருவது வரைமுறையற்ற புணர்ச்சியை அல்ல! பெண் கோருவது வாழும் உரிமை மீதான சுயநிர்ணயத்தையே!

5.பெண்ணின் கற்புரிமையை பாதுகாக்கும் போராட்டத்தில், உருவகமான ஆணாதிக்க ~~கற்பு என்ற அடித்தளத்தை தகர்ப்பது எப்படி?

6.பொழுது போக்கு ஊடகம் வழியில் ஆணாதிக்கம்

7.பெண்ணின் கற்புரிமையை ஏமாற்றி நுகர்வது

8.பாலியல் தெரிவுகளும் வாழ்க்கையும்

9.இயல்பான புணர்ச்சித் தெரிவுகள்

10.இலக்கியமும் பாலியலும்

1000 பக்கங்கள் கொண்ட 70 தலைப்பிலான பெண் சார்ந்த பல கட்டுரைகள் நூல் பகுதியில் உள்ளது. இதைவிட உலகமயமாதல் பற்றிய கட்டுரைகளும் உள்ளன.

ஆணாதிக்க ஒழுக்கக்கேட்டை கோருவதா பெண்ணியம்? பகுதி 5

குஷ்புவை குதறும் பார்ப்பானிய தலித் ஆண்டைகள்

குஷ்பு கூறிய உலகமயமாதல் ஆணாதிக்க நுகர்வுக் கருத்தை, நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க ஆண்டைகள் கண்ணோட்டத்தில் எதிர்க்கும் பார்ப்பானியமயமாதல் அரங்கேறியது. திருமாவளவனின் தலித் விடுதலைச் சிறுத்தைகளும், பாட்டாளி மக்கள் கட்சியும் பார்ப்பானிய கண்ணோட்டத்தில், இதையே தமது சொந்த அரசியலாக்கினர். படுபிற்போக்கான நிலப்பிரபுத்துவத்தின் ஆணாதிக்க சமூகக் கூறுகளை தோண்டியெடுத்து, உசுப்பிவிட்டதன் மூலம், பார்ப்பானிய மயமாக்கலை தமது அணிக்குள் வேகம் கொள்ளவைத்தனர். இதை கடந்தகாலத்தில் மார்க்சியம் தெளிவாக அம்பலப்படுத்தி வந்தது.

தலித்துகள் என்றும், பிற்படுத்தப்பட்ட சாதிகளாக உள்ள இந்த சமூக பிரிவுகளிடையே நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க பார்ப்பானிய கூறுகள், ஆதிக்கம் பெற்ற ஒன்றாக கடந்த வரலாற்றில் இருந்ததல்ல. அங்கு தாம் சொந்தமாக உழைத்து வாழும் ஆணும் பெண்ணும், சுயமான தெரிவுடன் கூடிய அதிகமான சுதந்திரத்தையே தக்கவைத்திருந்தனர். இதையே தகர்க்கும் போராட்டம் தான், இந்த எதிர்ப்பின் அரசியல் சாராம்சமாகும். இவர்களின் பாலியல் சுதந்திரம் என்பது, குஷ்பு வகையறாக்களின் நுகர்வு உடல் சுதந்திரமல்ல. மாறாக இயல்பாக இணைந்து வாழும் சுதந்திரம்.

இந்த நிலையில் தமது சொந்த குறுகிய தலித் சாதி அரசியல் முட்டுச் சந்தியில் திணறும் போது, குறுகிய வக்கிரங்களை எப்போதும் அரங்கேற்றுகின்றனர். உண்மையில் தலித்துகளின் மீதான சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக போராடப் போவதாக கூறி சாதிய ரீதியில் அணிதிரண்ட போது, சாதிய எதிர்ப்பு முதன்மை பெற்ற ஒரு அம்சமாக இருந்தபோது, போர்க்குணமிக்க சாதியெதிhப்பு போராட்டங்களை நடத்தினர். ஆனால் சாதிய எதிர்ப்பு போராட்டம் காட்டிக் கொடுக்கப்பட்டு, தனக்கு கீழ்பட்ட சாதிகளை ஒடுக்கும் ஒடுக்குமுறை அதிகரித்த போது, குறுகிய அரசியலில் ஒடுங்கி சாதிய அரசியலில் சங்கமித்து விடுகின்றது. பார்ப்பானிய சாதி அரசியல் எதைச் செய்ததோ, அதைத்தான் விடுதலைச் சிறுத்தைகள் செய்கின்றனர்.

பாராளுமன்ற சாக்கடைக்குரிய கதிரைப் போராட்டத்தை நடத்தும் அளவுக்கு சிதைந்தபோது, தலித்தின் பெயரில் சிலர் மக்களை ஏமாற்றி வாழ்தல் என்பது அரங்கேறுகின்றது. குறிப்பாக இதைக் காட்டித் தம்மைப் பாதுகாக்க, பார்ப்பானியமயமாதல் அவசியமாகிவிடுகின்றது. இந்த சமூக அமைப்பில் ஆளுமையுள்ள ஒரு சமூக நிறுவனமாக, பார்ப்பானிய கோட்பாடு உள்ளது. இதையே தலித்துகள் என்று கூறிக் கொள்ளும் இவர்கள் தமதாக்குகின்றனர். தனக்கு கீழ்ப்பட்ட சாதிகளை ஒடுக்குவதன் மூலம், தான் உயர்ந்த நிலையை அடைதல் என்ற பார்ப்பானிய கோட்பாடே தலித்தியமாகி, அதுவே இன்று கொலுவேறுகின்றது. பார்ப்பானிய ஆணாதிக்க நிலப்பிரபுத்துவ சமூகக் கூறுகளை, தமது சொந்த சாதியின் வாழ்க்கை முறையாக ஏற்க வைப்பதன் மூலம் தான், தனது சமூகத்தை குறுகிய தமது சொந்த பிற்போக்கு தளத்தில் தக்கவைக்க முடியும் என்ற பார்ப்பானிய நரித்தந்திரத்தை தலித்துகள் என்று கூறிக் கொள்வோர் தமதாக்கியுள்ளனர். இதை தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உத்திரபிரதேச மாயவாதி வரை நாம் காணமுடியும்.

உலகமயமாதல் அமைப்பில் பார்ப்பனியம், தன்னை அதன் அதிகார பிரிவின் உறுப்பாக்கி வருகின்றது. உலகமயமாதலில் அதிகாரம் தனியார் சொத்துரிமை என்ற அமைப்பு நோக்கி முழுமையாக நகருவதால், அரசு கட்டமைப்புகளில் பார்ப்பான் வகித்த ஆதிக்கம் படிப்படியாக குறைகின்றது. மாற்றம் என்பது அரசு உலகமயமாதலின் எடுபிடிக் கருவியாகின்றது. பார்ப்பான் உலகமயமாதல் தனியார் அமைப்புகளின் உச்சத்தில் அமர்ந்து, நாட்டை ஆளத் தொடங்கியுள்ளான். இந்த நிலையில் அரசு அதிகார மையங்களில் இருந்த இடைநிலைப் பதவிகள் காலியாகின. இதை இடைப்பட்ட சாதிகள் தமக்கு இடையில் நிரப்பும் போட்டியில் தான், தலித் எழுச்சிகள் நடந்தன. அது பூர்த்தியான நிலையில், தலித் அரசியல் முட்டுச் சந்தியில் வந்து தேங்குகின்றது.

இதே போன்று கிராமப்புறங்களில் நிலத்திலும் கூட, புதிய நிலப்பிரபுத்துவம் இடைப்பட்ட சாதிகளின் வடிவில் ஏற்படுகின்றது. அதிகாரத்தை பெற்ற புதிய தனிச்சொத்துரிமை சாதியப் பிரிவுகளின் எழுச்சி, இறுதியாக பார்ப்பனிய மயமாகின்றது. இதனால் பார்ப்பானியம் விட்டுச் சென்ற சில பார்ப்பானிய கடமைளை அதே சாதி ஒழுங்கில் பேண, இடைப்பட்ட சாதிகளின் பிரதிநிதிகள் பொறுப்பேற்கின்றனர். இதனால் அவை சாதிய அரசியல் மூலம் ஆதிக்கம் பெறுகின்றனர். சொந்தச் சாதியை முதலில் பார்ப்பானியமயமாக்கி, அடிமட்ட சாதிகளை பார்ப்பானிய உள்ளடகத்தில் ஒடுக்கத் தொடங்குகின்றனர்.

குஷ்பு விவகாரத்தில் இந்த பார்ப்பானிய சிந்தாந்தம் பிரதிபலிப்பது என்பது ஆச்சரியமானதல்ல. இந்த தலித் அரசியல் பார்ப்பானியமயமாதல் எப்போதோ நடந்துவிட்டது. இதை மார்க்சியவாதிகள் தொடர்ச்சியான விமர்சனம் மூலம், அம்பலப்படுத்தி வந்துள்னனர். இதை ஆதரித்தவர்கள், அதில் பங்கு வகித்தவர்கள் திடீரென இதைக் கண்டு புலம்புவதும், திடீரென கொப்புவிட்டு பாய்ந்து குஷ்புவின் பின்னால் கும்மியடிப்பதும் பார்ப்பானியத்தின் மற்றொரு பக்கம்தான். இது ஆணாதிக்கம் கூட. இந்தியாவில் இருந்து பாரிஸ் வந்த மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ரஜனி பாரிஸ் இலக்கியச் சந்திபில் துல்லியமாக பாய்விரிக்கும் தரகு விபச்சாரத்தை இப்படித் தான் அரங்கேற்றினார்.

பாரிஸ் இலக்கிய சந்திப்பு, உலகமயமாதலின் ஒழுக்கக்கேட்டுக்கு பாய்விரித்தது.

பாரிஸ் இலக்கியச் சந்திப்பு மக்கள் விரோத சந்திப்பு தான் என்பதை, ரஜனியின் உலகமயாதலை ஆதரித்து ஆற்றிய விபச்சார கருத்துரையாடல் மீண்டும் அம்பலமாக்கியது. இதன் போது ஏகாதிபத்திய உலகமயமாதலுக்காக, தரகு கும்பலாக சீரழிந்து தனது கடைகோடியில் நின்றே ரஜனி வக்காலத்து வாங்கினார்.

வழக்கறிஞர் ரஜனி வழக்கறிஞர் என்பதாலோ என்னவோ, பொய்யை உண்மையாகவும் உண்மையை பொய்யாகவும் உருட்டிப் பிரட்டிய ஒரு பொய்யைப் போல், இலக்கியத்தையே அரசியலையே புரட்டிக் காட்டினார். கேட்டுக் கொண்டு இருந்தவர்கள் தமது வழக்கை அவரிடம் ஒப்படைத்த திருப்தியில், வாய்பிளந்து எதிர்பின்றி கேட்டுக் கொண்டிருந்தனர். நாம் அதில் கலந்துகொள்ளாத போதும் கூட, இது எமது கற்பனையல்ல. அதுவே அங்கு நிகழ்ந்தது. இதை யாரும் எந்தக்கொம்பனாலும் மறுக்க முடியாது. அரசியல் ரீதியாக சமூகத்தைப் புரிந்து கொள்ள வக்கற்றுப் போன, புலம்பெயர் இலக்கியவாதிகள், இதற்கும் தரம்தாழ்ந்து சோரம் போவது இயல்பானது தான்;. உலகமயமாதலின் விசுவாசிகளாக அவர்கள் மாறியதில் ஆச்சரியம் எதுவுமில்லை. இது நாம் முன்கூட்டியே இவர்களைப் பற்றி கடந்தகாலத்தில் கூறி வந்ததுதான். புலியெதிர்ப்பு அரசியல் ஏகாதிபத்தியத்தின் எடுபிடிகளாக எப்படி சிதைந்து சீரழிந்து பலம்பெற்று வருகின்றதோ, அப்படித்தான் பெண்ணியம் தலித்தியம், இலக்கியம் என எங்கும் அரங்கேறுகின்றது.

வழக்கறிஞர் என்ற சமூகத் தகுதியுடன், தலித் என்ற கொம்புடன், பெண் என்ற உடல் அடையாளத்துடன் தான், தனது தொழில்முறை உத்தியை இலக்கியச் சந்திப்பில் கையாண்டார். இந்த வழக்கில் ஒரு உண்மையைத் திரித்தபடியே, அரசியல் விபச்சாரத்தை அரற்கேற்றினார். இந்தியாரூடே கருத்துக் கணிப்பைக் கூட திரித்து, அதன் மேல் பொய்யை கூறிய போது அரங்கத்தின் அறிவின்மை எந்த சலசலப்பையும் கூட ஏற்படுத்தவில்லை.

1.இந்த ஆய்வு பணக்கார மேட்டுக்குடி பெண்களிடம் எடுக்கப்பட்டது என்ற உண்மை திரிக்கப்பட்டது. அதில் இருந்து தனது உலகமயமாதல் கருத்துகளை தெளித்தார்.

2.மேட்டுக்குடி பெண்களிடமே எடுக்கப்பட்ட புள்ளிவிபரத் தரவுகள் மீது துணிச்சலாகவே பாரிஸ் இலக்கிய ஜாம்பவான்களின் அறிவின்மை மீது, ஒரு பொய்யை உமிழ்ந்தார். மேட்டுக்குடி நகர்புற பெண்களே, திருமணத்துக்கு முன் உறவு கொள்வது தவறு என்று 71 சதவீகித பெண்களும், கன்னித் தன்மையுடன் வாழவேண்டும் என்று 66 சதவீகிதமான பெண்களும் கருத்துகளை வெளியிட்டு இருந்தனர். இதில் சென்னையில் 82 சதவீகிதமான மேட்டுக்குடி பெண்கள் கன்னித் தன்மையுடன் வாழவேண்டும் என்று கூறி இருந்தனர். (புதிய ஜனநாயகம் நவம்பர் இதழைப் பார்க்க ) இதை வழக்கறிஞர் தனது வழக்காடும் பொய்யுடன், திருப்பி மறுபக்கமாக கூறியே தமது முழு ஆய்வுரையையும் நியாயப்படுத்தினார். இதையே ரி.பி.சி ஆய்வாளர் சிவலிங்கம் 15.12.2005 ரி.பி.சியில், குஷ்புக்கு ஆதரவாக அரசியல் விவாதத்தின் போது புகுத்தினார்.

ரஜனி உலகமயமாதல் அமைப்பை ஆதரிப்பது பெண்களின் கடமை, தலித்துகளின் கொள்கையாக இருக்க வேண்டும் என்றார். தலித்துகள் தமிழ் படிக்க கூடாது, ஆங்கிலம் படிக்க வேண்டும் என்றார். நான் டில்லியில் தமிழிலா வழக்காட முடியும் என்றார். தலித்துகள் உலகமயமாதலை ஆதரிப்பதன் மூலம் தான், சாதியை ஒழிக்க முடியும் என்றார். தமிழ் என்பதும், தேசியம் என்பதும் பாசிசம் என்றார். அது இந்துப் பண்பாடு என்றார். இப்படி உலகமயமாதலுக்காக தரகராக வாலாட்டி குரைத்தார்.

மேலும் அவர் உலகமயமாதல் உடல் சார்ந்த பாலியலே பெண்ணியம் என்றார். பெண் விடுதலைக்குரியதே உலகமயமாதல் என்றார். இதன் சாராம்சத்தில் தான் குஷ்புக்கு ஆதரவாக கும்மியடித்து, தலித் பெண்ணியம் பற்றி அனைத்து வக்கிரமும் அரங்கேறியது.

தலித் மக்களின் சாதிய துயரங்களையும், பெண்களின் மேலான ஆணாதிக்க கொடூரங்களைச் சொல்லி தனது உலகமயமாதல் அரசியலை அரங்கேற்றினார். உதாரணமாக புலிகள் பேரினவாத சிறிலங்கா அரசின் கொடூரத்தை சொல்லி, தமது பாசிச அரசியலைச் செய்வது போல் உலகமயமாதலுக்காக வரிந்து நின்றார். உலகமயமாதல் செய்யும் சமூக விரோதக் கொடூரங்களை பற்றி எதையும் சொல்லவில்லை. அப்படி எதுவும் இல்லை என்பதே அவர் முன்வைக்கும் கருத்தின் சாரமாகும்.

உலகமயமாதலை ஆதரித்த தனது தர்க்க நியாயவாதத்தில் உலகமயமாதல் வந்ததால் தானே 500 ரூபாவுக்கு கைத்தொலைபேசி வந்தது என்கின்றார். 10000 ரூபாவுக்கு கம்யூட்டர் வந்தது என்கின்றார். ஆகவே தாராளமயத்தை நாம் ஆதரிக்க வேண்டுமென்கின்றார். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தனியார் மயமாகமல் தொலைபேசி இருந்து இருந்தால், இது சாத்தியமில்லை என்கின்றார். மக்களின் உழைப்பில் உருவான அரசு சொத்துகளை, தனியார் மயமாக்க முனையும் போது அரசுதுறை நட்டத்தில் இயங்குகின்றது, திறமையின்மை, சேவைக்குறைபாடு, அதிகார வர்க்கத்தின் கெடுபிடி என்று பலவாக கூறும் உலகமயமாதல் சதியாளர்களின் வழியில் இவர், சந்தை மலிவை படம்பிடித்துக் காட்டுகின்றார்.

ஏழை எளிய மத்தியதர வர்க்கம் இதனால் தான் இதைப் பெறமுடிகின்றது என்றார். எதார்த்தத்தின் மீதான திரிபும், முன்னால் இருப்பவர்கள் செம்மறிகள் என்பதால் துணிச்சலுடன் கூடிய வக்கிரம் வெளிப்பட்டது. வழக்காடும் வழக்கறிஞரே மலிவான கம்யூட்டர், மலிவான கைத்தொலைபேசி பற்றி பேசி உலகமயமாதலை ஆதரிக்கும் வக்கிரத்தை நீங்கள் அரங்கேற்றுகின்றீர்கள். வழக்கறிஞரே நீங்கள் ஆதரிக்கும் உலகமயமாதலால் மலிவாக தலித்துக்கு ஒரு நேர உணவைக் கூட வழங்க முடியுமா? இந்த உலகமயமாதலால் சுத்தமான நீரை, தேவையான உணவை, வாழ்வதற்கு ஏற்ற ஒரு குடியிருப்பை வழங்க முடியுமா?. ஒரு நாளுமே முடியாது. இருப்பதையே புடுங்குகின்றது இந்த உலகமயாதல். இதை சுட்டிக்காட்டி தலித்துக்காக, பெண்ணியத்துக்காக போராட வேண்டிய ஒருவர், உலகமயமாதலுக்காக பாய்விரித்து தரகு தொழில் செய்ய நினைத்ததே இலக்கியச் சந்திப்பில் அரங்கேறியது. தலித் வாழ்வுடனும், ஆணாதிக்க பெண்ணுடனும் தொடர்பற்ற தொலைபேசியைப் பற்றியும், கம்யூட்டரைப் பற்றியும் முன்னாள் இருப்பவன் முட்டாள் என்பதால், பாலசிங்கத்தின் மாவீரர் உரையைப் போல் புதிர்விட முடிகின்றது.
தலித் அல்லது பெண் கம்யூட்டரை வாங்கி அதை கரைத்தா குடிகின்றது. தொலைபேசியை வாங்கி பார்ப்பனருடன் தலித்துகள் விவாதம் செய்ய பயன்படுத்துவதா? அல்லது இந்திய பெண்களின் சீதனம் போல், அவற்றை வைத்து புலம்புவதா? பயன்பாடு கடந்த எதுவும், பொருள் என்ற அடிப்படையில் அனைத்தும் குப்பைதான். தலித்துக்கு, இந்திய ஆணாதிக்க பெண்ணுக்கு கம்யூட்டரும், கைதொலைபேசியும் குப்பை தான். ஆனால் தரகுத் தொழில் பார்க்கும் உங்களுக்கு அப்படி அல்ல.

இந்தியத் தலித்துக்கும் இந்தியப் பெண்ணுக்கும் அவர்கள் வாழும் நிலையில், இவை அவசியமற்றவை. பயன்பாடற்ற அனைத்தும், உலகெங்கும் இது பொருந்தும். இதைவிட தேவைகள் வேறானவை. நீங்கள் கூறிய மேட்டுக்குடி பெண்ணியல்வாதிகளின் நுனிநாக்கு ஆங்கிலம் போல், கம்யூட்டரும் தொலைபேசியும் அவர்களுக்கு மட்டும் பயன்படக் கூடியவை.
மறுபக்கத்தில மலிவான கம்யூட்டர், மலிவான தொலைபேசிக்கு பின்னால் மனிதனின் உருத்தெரியாது அழித்து செல்லும், மற்றொரு மனித வரலாறு உண்டு. எப்படி மலிவாக முன்பைவிட அதிக லாபத்துடன் சாத்தியமாகின்றது. இதை உற்பத்தி செய்யும் உழைப்பின் கூலிக் குறைப்புத்தான் இதற்கான காரணம். கடந்த காலத்தில் தொழிலாளி வர்க்கம் பெற்றவற்றை இழக்கின்ற போது, சந்தையில் உங்களைப் போன்றவர்கள் நுகரும் பொருட்கள் மலிகின்றது. மலிவான வரைமுறையற்ற பாலியல் நுகர்வை இதுவே கோரத் தொடங்குகின்றது.

இன்றைய பொருட்களின் மலிவின் பின்னால் சீனத் தொழிலாளி வர்க்கம், தனது வாழ்க்கையை இழந்து இதை உற்பத்தி செய்கின்றது. ஐரோப்பிய தொழிலாளர் வர்க்கம் தனது வேலைகளை இழந்து வீதிக்கு வருவதன் மூலம் இது சாத்தியமாகியுள்ளது. நவீன தொழில் நுட்பம் சார்ந்த இலத்திரனியல் சார்ந்த உற்பத்தியில், 70 சதவீகிதத்துக்கு அதிகமான உற்பத்தியை சீனத் தொழிலாளி வர்க்கம் உற்பத்தி செய்கின்றது. ஆனால் சீனத் தொழிலாளர் வர்க்கத்தின் அடிமைத்தனம், இந்தியத் தொழிலாளி வர்க்கத்தை விட மிக மோசமாகி வருகின்றது. இதனால் உங்களுக்கு சந்தையில் அவை மலிவாக கிடைக்கின்றது. பார்ப்பானியம் தலித்தைக் கொண்டு எப்படி சுகபோகமாக வாழ்ந்தனரோ, அப்படித்தான் உங்களைப் போன்ற உலகமயமாதல் அருவடிகளுக்கு இது உதவுகின்றது.

இந்த மலிவான கதையின் பின்னால் நுகர்வுக் கலாச்சாரத்தை திணித்து, பணம் அறிவிடும் உலகமயாதல் கத்துவட்டி முறை கிராமப்புற கத்துவட்டியை விட விடக்கொடூரமாக அரங்கேறுகின்றது. 500 ரூபா தொலைபேசியின் பின்னால் இதற்குள் ஒரு கதை அடங்கியுள்ளது.
அடுத்து உலகமயமாதல் எப்படி தலித்துக்கு சாதகமானது. உலகில் வறிய ஏழை மக்கள் என்ற பிரிவில் இந்தியாவில் உள்ள 25 கோடிக்கு மேற்பட்ட தலித்துகளும் அடங்குவர். ஆபிரிக்க ஏழைகளின் நிலையில் தலித்துகள் உள்ளனர். உலகமயமாதல் என்பது செல்வத்தைப் பகிர்வதில்லை. மாறாக இருப்பதையும் புடுங்குவதுதான். இது மேட்டுக்குடிகளிடம் மட்டுமின்றி, அடிமட்ட ஏழைகளையும் கூட புடுங்குகின்றது. ஏழை என்பவன் நாட்டில் உள்ளவனிடம் தொழில் செய்து பிழைக்கின்றான். அவனை உலகமயமாதல் அழிக்கும் போது, அவனிடம் தொழில் செய்பவன் கஞ்சிக்கே வழியில்லாது போகின்றான். உலகமயமாதல் கம்யூட்டரைத்தான் உற்பத்தி செய்யும். சந்தையில் வாங்கும் திறனுள்ளவனுக்கே உற்பத்தி செய்யும். வாங்க வழியற்ற ஒருவனுக்கு ஒருநாளுமே உற்பத்தி செய்யாது. ஒரு டொலரைக் கூட ஒருநாள் பெற முடியாதவனுக்கு எதையும் உற்பத்தி செய்வதில்லை. இது சந்தை விதி. இது நுகர்வின் விதி. ஒரு டொலரை பெற முடியாத தலித், பெண்கள் மற்றும் குழந்தைகளின் கதியையிட்டு இந்த தரகு வழக்கறிஞர் ரஜனிக்கு எந்த சமூக அக்கறையும் கிடையவே கிடையாது.

உலகமயமாதல் ஏழையிடம் இருப்பதையும் புடுங்கவே செய்கின்றது. உதாரணமாக 1989-1999 க்கும் இடையில், ஒரு நபருக்கு 1.5 முதல் 1.8 சதவீகிதம் என்ற அளவில் உலகில் உற்பத்தி அதிகரித்தது. ஆனால் இந்த பத்து வருடத்தில் 80 க்கு மேற்பட்ட நாடுகளில் இருந்ததை விட குறைந்து வந்துள்ளது. 50 நாடுகளில் ஒவ்வொரு வருடமும் குறைந்து வருகின்றது. இது யாரைத் தாக்கும். ஏழை எளிய மக்களைத் தான். இதில் தலித் விதிவிலக்கல்ல. பெண்கள் விதிவிலக்கல்ல. வறுமையில் ஏழைகள், தலித்துகள், பெண்கள், குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதுவே உண்மை.

ஏழைகள், தலித், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இன்னுமொரு புள்ளிவிபரத்தைப் பார்ப்போம். ஏகாதிபத்தியங்கள் 1960இல் இருந்து 1989 க்கும் இடையிலான காலத்தில் தனது பங்கை 70.2 சதவீகிதத்தில் இருந்து 82.7 சதவீகிதமாக அதிகரிக்கும் வண்ணம் பெரும் சூறையாடலை மூன்றாம் உலக நாடுகள் மீது நடத்தியது. இதே காலப் பகுதியில் 20 சதவீகிதம் தான் மிக வறிய (ஏழைகளைக் கொண்ட) நாடுகள், உலக வருமானத்தை தாம் பெற்ற 2.3 சதவீகிதத்தை இழந்து 1.4 சதவீகிதமாக குறைந்து போனது. மனித அவலமே ஜனநாயகமாகி, சமூகத் தேவையைக் கூட பூர்த்திசெய்ய முடியாத எல்லைக்குள் கையேந்தி பிழைக்கவே உலகமயமாதல் மனித இனத்தை வழிகாட்டியது. இப்படி பல புள்ளிவிபரம் உள்ளது. பொய்யை உண்மையாக காட்டி, உண்மையை பொய்யாக கூறி வாழ்க்கையை ஒட்டும் தொழில்முறை ரஜனி, சமூகம் பற்றி வழிகாட்டுவது முரணிலையில் தான்.

இதில் இருந்து தான் தேசிய எதிர்ப்பு முன்வைக்கப்பட்டது. தேசியம் என்பது பாசிசம் என்று கூறியபடி, புலியையும் ராதாஸ் வகையறாக்களையும் காட்டி பினாற்றியே இவற்றை அரங்கேற்றினார். தேசியம் என்பது ஜனநாயகம் என்பதே அதன் சரியான அரசியல் உள்ளடக்கம். இதை திரித்து தேசியத்தை நிலப்பிரபுத்துவ மற்றும் உலகமயமாதல் எல்லைவரை எடுத்துச் சென்று, வக்காலத்து வாங்குவது நிகழ்ந்தது. தேசியத்தை பாசிசக் கூறு என்பவர்கள், உலகமயமாதலை பாசிசக் கூறு அல்ல என்கின்றனர். உண்மையில் இதனை நிறுவ தமிழ் பண்பாடு என்பது, இந்து பண்பாடு என்கின்றார். பார்ப்பானியம் எதைச் சொல்லுகின்றதோ, அதை இவர்கள் கிளிப்பிள்ளை போல் சொல்ல முனைகின்றனர். பெரியார் எதை வேறுபடுத்த போராடினாரோ, அதை ஒன்றாக்கிவிட முனைகின்றார். அதாவது பெரியாரை மறுவாசிப்பின் பெயரில், தமது உலகமயமாதல் நோக்கில் திரித்து புரட்டவே முனைகின்றனர். இந்து பண்பாடு வேறு, தமிழ் பண்பாடு வேறு. இதை மறுத்து உலகமயமாதல் பண்பாட்டை மாற்றாக வைக்கின்றனர்.

பெரியாரைச் சொல்லியே தமது உலகமயமாதல் ஆணாதிக்க பாலியல் வக்கிரத்தை அரங்கேற்ற முனைகின்றனர். பெரியார் நிலபிரபுத்துவ ஆணாதிக்க வாதங்களுக்கு பதிலடியாகவே, சமூகத்தை அதிர்ச்சிகுள்ளாக்கும் வகையில் இவற்றை எதிர்மறையில் பயன்படுத்தியவை தான் பாலியல் பற்றிய அவரின் வாதங்கள். அதை அவர் சமூக வாழ்வியல் முறையாக கொள்ளும்படி பெண்களுக்கு கூறவில்லை. ஆணின் ஆணாதிக்க சமூக நடத்தை நெறியை மறுதலித்தே, அதை கிண்டல் செய்தே முன்வைத்தவரே ஒழிய அதை ஆதரித்தல்ல. அதே ஆணாதிக்கத்தை பெண்ணை கைக்கொள்ளும்படி கோரவில்லை. ஆணின் ஆணாதிக்க வாதத்தை எதிர்நிலையில் அதிர்ச்சிக்குள்ளாக்கிய வாதங்கள் தான். கடவுள்களின் ஆண் பெண் பாலியல் வக்கிரங்களையும், அவர்களின பலதார மண முறைகளையும், ஆண் பெண் கடவுள் வேறுபாடின்றி அதை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் அதன் வரலாற்றின் வேரில் இருந்து எள்ளிநகையாடியவர்.

இதை திரித்து உலகமயமாதல் பெண்ணிய வக்கிரத்துக்கு திரித்து காட்டுவதில் முனைப்பு பெறுவதே பொதுவாக நிகழ்கின்றது. பெரியார் உலகமயமாதல் ஆணாதிக்கத்துக்கு பெண் சரிந்து செல்லும் சீரழிவை நியாயப்படுத்தும் எந்த கோட்பாட்டை அவர் முன்வைக்கவில்லை. அத்துடன் பெரியார் மார்க்சியவாதியல்ல. சமூக முரண்நிலையுடன் ஒரு ஜனநாயகவாதி என்ற எல்லைக்குள் தான் கருத்துரைத்தவர்.

அடுத்த ஒரு தர்க்கம் முன்வைக்கப்பட்டது. திருமணத்துக்கு முன்னம் பெண்கள் பாலியல் உறவு கொள்வதில்லையா? அப்படி தன்னிடம் உறவு கொண்ட பெண்கள் வழக்காட வருகின்றனர். இது உலகமயமாதல் பெண் சீரழிவை எப்படி நியாயப்படுத்த, எந்த வகையில் தர்க்க ரீதியாக சரியானது. கணிசமான பெண்களை திருமணத்துக்கு முன் பாலியல் ரீதியாக உறவு கொள்ளும் வகையில், அனைத்தையும் பாலியலாக அல்லவா உலகமயமாதல் புகட்டுகின்றது. வீதியில் செல்லும் பெண்ணை புணரக் கோரும் சினிமா முதல் காட்சி வகைப்பட்ட உளவியலும், எழுத்துவகைப்பட்ட துண்டுதல்கள் என எங்கும் எதிலும் இதுவே உள்ளடகமாக உள்ளது. இப்படி உருவாகிவிட்ட, பெண் திருமணத்தின் முன் பாலியல் உறவு கொள்கின்றாள் என்று அடித்து வைத்து வாதிடுவது அபத்தம். முதலில் இந்த சூழல் ஏன் உருவாக்கப்படுகின்றது. இரண்டாவது உறவு கொள்ளும் பெண்கள் யாருடன், எந்த நிலையில் உறவு கொள்கின்றனர். இதன் பின்னனி என்ன? ஏன் பின்னால் நீதிமன்றம் வருகின்றாள். ஏன் கருவை அழிக்கச் செல்லுகின்றனர். ஏன் தற்கொலை செய்கின்றனர்? ஏன் வாழ்வை இழந்து நடைப் பிணம் ஆகின்றனர்? இப்படி பல கேள்விகள் உண்டு.

பாலியல் ரீதியான அத்துமீறிய நடத்தை நெறிகள் பெண் விடுதலையல்ல. அதாவது திருமணத்தின் முன் உறவு கொள்வது, கன்னித் தன்மை தேவையற்றது என்ற வாதங்கள் எவையும் பெண்விடுதலையல்ல. இது நாகரீகமான கமூக்கமான விபச்சாரத்தை உருவாக்குகின்றது. பல பெண்கள் இதை நம்பி தமது சொந்த வாழ்வை ஆணாதிக்கத்திடம் இழக்கின்றனர்.
அடுத்து தரகு பார்க்கும் வாதத்துக்கு ஏற்ப, பாலியலை விரும்பியவாறு யாருடனும் உறவு கொள்வது சரியென்றார். இதற்கு தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் உள்ள பாலியல் உறவுமுறையையே திரித்துக் காட்டினார். அதன் போது இதை மிகக்; கொச்சையாக கேவலமாக திரித்து வருணித்தார்.

தாழ்த்தப்பட்ட பெண்கள் தன்னுடன் வாழும் ஆணின் நடத்தைகள், வாழ்வியல் முறைகள் பிடிக்கவில்லை என்றால் சுதந்திரமாக அதைக் கைவிட்டு வாழும் சுதந்திர முறையை திரித்தார். வேறு ஒருவனுடன் படுக்கும் சுதந்திரம் கொண்ட, உடல் பாலியல் வாழ்வை நடைமுறையில் வாழ்க்கையில் கொண்டிருப்பதாகவே பினாற்றினர். சமூகத்தில் உள்ள ஜனநாயகக் கூறை, கொச்சைத்தனமாக தமது சொந்த உலகமயமாதல் நோக்குக்கு ஏற்ப திரித்து, அந்த சொந்த வக்கிரத்தையே பெண்ணிய புரட்சியாக காட்டினார். இப்படி பற்பல.

உலகமயமாதல் நோக்கில் மார்க்சியத்தையே சேறடிக்க முனைந்தார். மார்க்சியத்தை கொச்சைப்படுத்த, மார்க்சியத்தை கைவிட்ட முதலாளித்துவமாக சிதைந்த சீரழிந்துள்ளவர்களின் நடத்தை மீது தன்னை வக்கிரப்படுத்தினார். மார்க்சியத்துக்கு சேறு அப்பிய படி வாழ்க உலகமயமாதல் என்றார். கொக்கக்கோலாவை தலித் மக்கள் குடிப்பதன் மூலம் தான், சாதி ஒழியும் என்றார். இப்படி பல.

அவர் இதற்கு எல்லாம் ஆதாரமாக கொண்டது, உலகமயமாதலை திருப்பிப் பெறமுடியாது என்ற எடுகோள்தான். இந்த அடிப்படையான அரசியல் வாதமே பார்ப்பனிய அரசியல் தான். சாதியத்தை இந்திய சமூக அமைப்பில் இருந்து திருப்பிப் பெறமுடியாது என்ற பார்ப்பானிய வாதம் எப்படியோ, அப்படித் தான் இந்த உலகமயமாதல் பற்றிய வாதமும். இது போல்தான் ஆணாதிக்கமும் திருப்பிபெற முடியாதவையல்ல. இங்கு திரும்பிச் சொல்லுதல் என்பதல்ல, அதைத்தையும் தலைகீழாக மாற்றி அமைத்தல் என்பதே புரட்சி. ஏகாதிபத்திய உலகமயமாதல் ஆதரவு தரகு பினாமிக்கு இது தெரியவில்லை. மக்கள் ஒரு புரட்சியை செய்தால், புரட்சி செய்த மக்கள் தமக்கு தேவையான பொருளாதார அமைப்பை அமைத்தே தீருவர். இது தான் புரட்சி. இது தான் பெண்ணியம். இதைத் திருப்பி பெறமுடியாது என்ற வரட்டு வாதங்களால், எவையும் தீர்மானிக்கப்படுவதல்ல.

பின்குறிப்பு : இப்படி பற்பல நீண்ட தரகுப் புலம்பல்கள். கட்டுரையின் விரிவு அஞ்சி இத்துடன் இதை நிறுத்திக் கொள்கின்றேன். நீங்கள் இதைபற்றி எழுதி விவாதித்தால், மேலும் விவாதத்ததை நாம் நடத்தமுடியும்.

மற்றும் இதைப் புரிந்த கொள்ள

1.பொருளாதார மறுசீரமைப்பைக் கோரும் ஆணாதிக்கமும் தலித் ஆணாதிக்கத்தை எதிர்க்காத பெண்ணியமும்

2.பெண்ணின் போராடும் உரிமை பெண்ணின் உயிரைக் காட்டிலும் அடிப்படையானது.

3.பெண்ணின் கட்டற்ற சுதந்திரமும், காதல் சுதந்திரமும் ஒரு விபச்சாரமே!

4.பெண் கோருவது வரைமுறையற்ற புணர்ச்சியை அல்ல! பெண் கோருவது வாழும் உரிமை மீதான சுயநிர்ணயத்தையே!

5.பெண்ணின் கற்புரிமையை பாதுகாக்கும் போராட்டத்தில், உருவகமான ஆணாதிக்க ~~கற்பு என்ற அடித்தளத்தை தகர்ப்பது எப்படி?

6.பொழுது போக்கு ஊடகம் வழியில் ஆணாதிக்கம்

7.பெண்ணின் கற்புரிமையை ஏமாற்றி நுகர்வது

8.பாலியல் தெரிவுகளும் வாழ்க்கையும்

9.இயல்பான புணர்ச்சித் தெரிவுகள்

10.இலக்கியமும் பாலியலும்

1000 பக்கங்கள் கொண்ட 70 தலைப்பிலான பெண் சார்ந்த பல கட்டுரைகள் நூல் பகுதியில் உள்ளது. இதைவிட உலகமயமாதல் பற்றிய கட்டுரைகளும் உள்ளன.

ஆணாதிக்க ஒழுக்கக்கேட்டை கோருவதா பெண்ணியம்? பகுதி 4

ஆணாதிக்க சமூக பொருளாதார பண்பாடே ஒழுக்கக்கேடான பாலியலாகின்றது.

ஆணின் பாலியல் தேவைகளின் வரையறுகளே, பெண்ணின் மீதான பாலியல் கோட்பாடுகளாக இருந்தன, இருக்கின்றன. இதில் இருந்தே பெண்ணின் பாலியல் என்பது வரையறுக்கப்பட்டது. இந்த வகையில் பாலியல் என்பது, நிலபிரபுத்துவ அமைப்பின் பெண்ணின் ஒழுக்கமாகவும், பெண்ணின் கற்பாகவும் கூட மாறியது. ஆண் இதில் இருந்து விதிவிலக்கு பெற்றவனாக, அதுவே சமூக அங்கீகாரம் பெற்ற ஒரு பண்பாடாகவும் மாறியது.
ஆனால் நிலப்பிரபுத்துவ பொருளாதாரத்தில் ஏற்படும் தகர்வு இதையும் மாற்றி அமைக்கின்றது. பெண்ணை ஆண் விரும்பியவாறு நுகரும் வகையில் சமூகத்தை மாற்றிவருகின்றது. இங்கு கடந்தகாலத்தில் நிலவிய சமூக கூட்டுறவாக்கம் அவசியமற்ற ஒன்றாகிவிட்டது. பெண்ணை சந்தையில் வாங்கும் ஒரு சரக்காக கருதும் வண்ணம், சமூகப் பொருளாதார கூறு ஆண் பெண் உறவையே சிதைத்துள்ளது. முதலாளித்துவம் ஒரு சமூக பொருளாதார உறவாக மாறிய போது, கூலிகளை சந்தையில் பெற்ற போது சமூக உறவுகள் எப்படிச் சிதைந்ததோ, அதே போன்ற ஆண்கள் பெண்களை சந்தையில் பெற்று நுகரும் நிலைக்கு உலகமயமாதல் பெண்களை இட்டுச் செல்லுகின்றது. பெண் மேலும் பாலியல் பண்டமாகவே அடிமையாகின்றாள். இதையே சிலர் பெண் விடுதலை என்கின்றனர்.

இந்த நிலையில் நிலப்பிரபுத்துவ பெண்ணை அப்படியே நுகர்வது என்பது முரண்பாடாகின்றது. பெண் சுயேட்சையாக பாலியல் நுகர்வுக்கு தானாக இணங்கிப் போகும் பெண்ணின் உலகக் கண்ணோட்டம் மட்டும் தான், ஆணின் இன்றைய தேவையை பூர்த்திசெய்யும். இதைத்தான் ஆதிக்கம் பெற்றுவரும் உலகமயமாதல் ஆணாதிக்கம், பெண்ணுக்குரிய பெண் விடுதலை என்கின்றது. இதற்கு எடுபட்டுப் போகும் பெண், இதை பெண் விடுதலையாக கருதும் போக்கையே தீவிர பெண்ணியமாக பிதற்றுகின்றனர். சமூகம பற்றிய புரிதல் இன்றி இது கொலுவேறுகின்றது. இயல்பாக உலகமயமாதல் சமூக பொருளாதார அமைப்பு உருவாக்கிவரும் நவீன ஆணாதிக்கத்தை, சமூக இயக்கத்துடன் தொடர்பற்ற அறிவுயீவிகள் தான் பெண்ணியமாக தத்துவார்த்த அடிப்படையை திணிக்கின்றனர்.

உண்மையில் இது பெண் தானாக கண்டுபிடித்தவையல்ல. மாறாக ஆணாதிக்க உலகமயமாதல் பெண்ணின் மீது திணித்தவை. இதற்கு சமூகத்தில் மாறிவரும் சமூக பொருளாதாரக் கட்டமைப்பு உருவாக்கும் நுகர்வு வெறி, பெண்ணை விபச்சார நிலையில் வழி காட்டுகின்றது. ஒழுக்கக்கேடான இந்த பண்பாடின் கட்டமைப்பே, உலகமயமாதல் தான். உலகமயமாதல் சந்தையில் பொருட்களை குவித்து அதை வரைமுறையற்ற வகையில் எப்படி நுகரத் தூண்டுகின்தோ, அப்படித் தான் பெண்ணையும் நுகரத் தூண்டுகின்றது. பெண் உலகச் சந்தையின் கூண்டில் விடப்பட்ட விளம்பரப் பொம்மை போல், கவர்ச்சியான பாலியல் பொருள் தான். இது உடல் சார்ந்தது.

ஆனால் ஒரு மாற்றம். சந்தையில் எப்படி ஆண் நுகர முடியுமோ, அப்படி பெண்ணும் நுகர முடியும். இரண்டு உயிரிகள் என்ற வகையில், நுகர்வு பரஸ்பர நுகர்வின்றி சாத்தியமில்லை. சந்தையில் கூலியை வாங்கும் மூலதனம் போன்று, பெண்ணை நுகரும் ஆணாதிக்கம் செயல்படுகின்றது. இந்த ஆணாதிக்க நுகர்வு ஒழுக்கத்தையே, பெண் விடுதலை என்கின்றனர். இன்று பெண்ணியம் பேசும் பலரும், இதன் தீவிரமான ஆதரவாளர்கள். இவர்கள் எடுத்துக் கொள்ளும் பல்வேறு கருத்துகளின் நடத்தைகளில், இந்தக் கூறுகளை சரியாகவே இனம் காணமுடியும்.

இதை நாம் சமூக வெறுப்பூட்டல்களில் சரியாகவே இனம் காணமுடியும்;. நிலப்பிரபுத்துவம் ஆணாதிக்க பெண்ணின் கடமையாக வரையறுக்கப்பட்ட அனைத்தையும், பெண் வெறுக்க வேண்டும் என்று இந்த பெண்ணியம் புகட்டுகின்றது. மாறாக ஒரு ஆண் எப்படி சமூக மறுப்பாளனாக வாழ்கின்றானோ, அப்படி பெணணும் வாழ்வதே பெண்ணியம் என்கின்றது. இது எப்படி பெண்ணியமாகும். இது நிச்சயமாக இந்த ஆணாதிக்க அமைப்பில், ஆணாதிக்கமயமாதல் தான். சந்தை நிலப்பிரபுத்துவ பெண்ணின் கடமைகளை சிதைக்கும் போது, சந்தைக்கு அது அதிக லாபம் தருகின்றது. உதாரணமாக பெண் சமைக்க மறுத்தால் மிகப் பெரிய பன்னாட்டு உணவுவிடுதிகள் அதிக லாபம் அடைகின்றது. குழந்தைக்கு சொந்த பாலைக் கொடுக்க மறுத்தால், பன்னாட்டு குழந்தை உணவு விநியோகஸ்தர்கள் அதிக லாபம் அடைகின்றனர். இப்படி பற்பல. உண்மையில் பெண் தான் தக்கவைத்திருந்த பல அறிவியலை ஆணாதிக்க அமைப்பிடம் இழந்து போகின்றாள். அதை ஆணாதிக்க சந்தை கைப்பற்றுகின்றது. சமூகத்தில் சிறியளவில் பண்பாடு சார்ந்து மரபாக பாதுகாத்த பலவிதமான உணவு சார்ந்த பழக்கவழக்கங்கள் பெண்ணுக்கு நுகர்வுச் சுதந்திரத்தை பரிசளித்து விட்டு, அவளிடம் இருந்து அறிவியல் உண்மைகள் பறிக்கப்படுகின்றது அல்லது அழிக்கப்படுகின்றது. உலகமயமாதல் குறிப்பாக இதில் கவனம் எடுத்துச் செய்கின்றது. இப்படி பற்பல.

இதன் சமூக விளைவு என்ன. பன்னாட்டு நிறுவனங்கள் சுதந்திரமான தேர்வை மறுத்து தரும் ஒரு சிலவற்றை, மக்கள் மந்தையைப் போல் உண்ணப் பழக்கப்படுகின்றனர். இங்கு பெண் சுதந்திரமாக பல தேர்வுகளை கொண்டிருந்தாள் என்ற அரசியல் உண்மையைக் கூட, பெண்ணியத்தால் கண்டுகொள்ள முடியாத அவலம் எற்படுகின்றது. இதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்கள் பன்மையான சமூகத் தேவையை மறுத்து, பெரும்பாலானவற்றை அழித்து மிகுதியை தனது கண்டுபிடிப்பாக்குகின்றது. உண்மையில் பெண் இவற்றை இழந்து போகின்றாள்.

மறுபக்கத்தில் பெண் தன்னிடம் இருந்த அறிவியல் கூறை இழக்க, ஆண்களே மிகச் சிறந்த சமையல்காரனாக மாறுகின்றான். இன்று உணவு சார்ந்த கலை, படிப்படியாக ஆணின் ஆதிக்கத்துக்கு வந்துள்ளது. இப்படி பெண் தான் கண்டுபிடித்த பல அறிவியல் உண்மைகளை இழந்தாளோ, அப்படி தன்னிடம் எஞ்சி இருக்கும் அறிவியல் கூறுகளை இழப்பது உலகமயமாதலில் வேகம் பெற்றுள்ளது. இதையே தீவிர பெண்ணியம் பெண்ணியம் என்கின்றது.
நிலப்பிரபுத்துவ அமைப்பில் பெண் ஆணின் கருவியாகி, ஆணாதிக்கத்தை எப்படி பாதுகாக்கின்றாளோ, அப்படித்தான் உலகமயமாதல் சமூக அமைப்பில் ஆணாதிக்கத்தைப் பாதுகாக்கும் கருவியாகின்றாள்.

நிலப்பிரபுத்துவ காட்டுமிராண்டித்தனமான ஆணாதிக்கக் கூறுகளை மறுத்து, ஏகாதிபத்திய பாலியல் நுகர்வுப் பெண்ணாக மாறுவது பெண்விடுதலையல்ல.

உதாரணமாக
1.தீவிரவாதப் பெண்கள் என்று தம்மைத்தாம் கூறிக் கொள்ளும் உலகமயமாதல் பண்பாட்டின் கும்மியடிகள், பெரும்பாலானோர் குழந்தை வளர்ப்பை வெறுக்கின்றனர். குழந்தை வளர்ப்பு என்பதை நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க சமூகம் பெண்ணின் கடமையாக வரையறுத்தது என்பது உண்மை. ஆணால் அதை மறுதலித்து குழந்தை வளர்ப்பை நிராகரிக்கும் உலகமயமாதல் ஒழுங்கு பெண்ணியமல்ல. இதில் சனத்தொகை குறைப்பு என்ற உலகமயமாதல் சதியும், இந்த பெண்ணிய கும்மியடிகள் மூலம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. குழந்தை வளர்ப்பு என்பது ஒரு சமூக நடவடிக்கை. பெண்ணிடம் அது காணப்பட்ட போது, சமூக நோக்கில் மிக உயர்ந்த, ஆணாதிக்கத்திடம் இல்லாத ஒரு பண்பாகும். சமூக நோக்கங்களையும், சமூகக் கூறுகளை மறுத்து உருவான ஆணாதிக்க சமூக அமைப்பில், பெண் கடந்து வந்த சமூகக் கூறுகளை தன்னிடம் எச்சமாக வைத்திருந்தாள். இதை ஆணாதிக்கத்தின் இழிவான சமூகக் கூறுகளில் இருந்து அகற்றி, அதை சமூகத்தின் பெருமைக்குரியதாக மாற்றிப் போராட வேண்டிய பெண்ணியம், அதற்கு எதிராக ஆணாதிக்கத்தை நோக்கி தன்னைச் சிதைப்பதையே பெண்ணியமாக காட்டுகின்றனர். உண்மையில் இதன் சமூகக் கூறுகள், தனிமனித சமூகவிரோத ஆணாதிக்க கூறுகளாக சிதைந்துவிடுகின்றது.

2.கர்ப்பப்பையை வெட்டியெறிவோம் என்று பெண்ணியப் புலம்பல்கள், எதைத்தான் சொல்ல முனைகின்றது. பெண்ணின் பெருமைகளை சிறுமைப்படுத்துவதில் முடிகின்றது. ஆணாதிக்க சமூகத்துக்கு முந்தைய பெண்ணின் பெருமைகள், இந்த கருப்பையில் குழந்தையை சுமப்பதில் காணப்பட்டது. தனிச்சொத்துரிமை ஆணாதிக்கம் இதைச் சிறுமைப்படுத்தியது. இதன் வழியில் பெண் தனது சொந்தக் கருப்பையையே சிறுமைப்படுத்துவது அதைவிடக் கேவலமானது. ஆணாதிக்கத்தின் வழியில் அதை மேலும் இழிவாக்குகின்றது. நிலப்பிரபுத்துவ ஆணாதிக்கம் கருப்பையை சிறுமைப்படுத்தி, அதை தனது வாரிசுக்குள் சிறைப்படுத்தியது. உலகமயமாதல் ஆணாதிக்கம் கருப்பையை நுகருவதற்கு இடைஞ்சலாகவே கருதுகின்றது. கருவைத் தாங்கும் ஒரு பெண் தனது நுகர்வுக்கு தடையாக இருக்கின்றாள் என்பதை, நுகர்வு ஆணாதிக்கம் புகட்டுகின்றது. இதையே கவ்விக் கொண்டு, கருப்பையை அறுத்தெறிவோம் என்கின்றனர். இப்படி புலம்புவோர் தமது நுகர்வு வெறியை தக்கவைப்பதில் மட்டும் கவனமாக உள்ளனர். நுட்பமாக பார்த்தால், ஆணுடன் பாலியல் உறவை கொள்வதை மட்டும் இது மறுதலிக்கவில்லை. இங்கு உடல் சார்ந்த பாலியல் நுகர்வு முதன்மை பெறுகின்றது. இதனால் தான் பெண் உறுப்பை அழிப்பதைப் பற்றி இவர்கள் யாரும் பேசுவதில்லை.

3.வரைமுறையற்ற பாலியல் சுதந்திரத்தை கோருவதே பெண்ணியம் என்கின்றனர். இது பழைய காட்டுமிராண்டி சமூகத்தின் நிலைக்கு சரிந்து செல்வதை குறிக்கின்றது. பழைய காட்டுமிராண்டிச் சமூகத்தில் இருந்த பாலியல் என்பது, பெண்ணை பாலியல் சார்ந்த ஒரு உடல் பண்டமாக கருதி ஒரு நுகர்வு வெறியுடன் இருக்கவில்லை. விரும்பி இணையும் ஒரு இயற்கையான ஒரு சமூக நிகழ்வாக இருந்தது. அந்த வகையில் இன்று இருப்பதில்லை. சந்தையில் உள்ள ஒரு பொருளை அடங்காவெறியுடன், தேவையைக் கடந்து நுகரும் வெறியுடன் தான் மேட்டுக்குடிகள் நுகருகின்றனர். அதே உள்ளடகத்தில் தான் ஆணாதிக்க உலகமயமாதல் பெண்ணை பாலியல் ரீதியாகவும் நுகருகின்றது. இதையே பெண்ணையும் நுகரக் கோருவதால், இதைப் பெண்ணியம் என்கின்றனர்.

மனிதன் தான் இயல்பாக விரும்பிய இயற்கையுடன் இணைந்து வாழ்ந்த போது அங்கு பாலியலில் வக்கிரம் இருக்கவில்லை. தனியுடமை சமூகம் உருவான போது, தனிப்பட்ட ஆண்களின் சொத்துடமை ஆதிக்கம் வளர்ச்சியுற்ற போது, பாலியல் கூறும் திரிபடைந்தது. ஆண் பெண்ணை தனது தனிமனித சொத்துடமை கண்ணோட்டத்தில் நோக்கி, தான் மட்டும் நுகரும் சமூக அமைப்பை படைத்தபோது, பெண்ணை அவன் ஒரு பாலியல் கருவியாக கருதத் தொடங்கினான். தனிமனித சமூக அமைப்புக்கு ஏற்ப அனைத்து செல்வத்தையும் தனதாக்கும் குறிக்கோளுடன் சமூகத்தைச் சுரண்டியதைப் போல், பெண்ணையும் தனது பாலியல் நுகர்வுக்குள் உள்ளடக்கி வரைமுறையற்ற வகையில் சுரண்டத் தொடங்கினான்.

பெண்ணின் சுயேட்சையான தேர்வு என்பது, ஆணின் தனிமனித சொத்துரிமைக்கு முன்னால் மறுதலிக்கப்படத் தொடங்கியது. பெண் மீதான ஆண்களின் வரைமுறையற்ற பாலியல் நுகர்வுச் சுதந்திரம், காட்டுமிராண்டித்தனமானதாக மாறியது.

இதில் இருந்து பெண் தப்பிக்கவேண்டிய ஒரு நிலை பெண்ணுக்கு ஏற்பட்டது. பெண் ஒரு பலமான ஆணின் துணையை நாட நிர்ப்பந்திக்கப்பட்டாள். இதன் மூலம் தனது சொந்தத் தெரிவை பாதுகாக்க முடிந்தது.

இதுவே தனிச்சொத்துரிமை அமைப்பில் பெண் படிப்படியாக தான் தேர்ந்தெடுத்த ஒரு கற்பு நெறியாகியது. தான் விரும்பும் ஆணுடன் வாழும் உரிமையை இது பாதுகாக்கும் அடிப்படையில், பெண் இந்த வழியை தேர்ந்தெடுக்க முடிந்தது. இது உருவாகி வந்த தனிமனித சொத்துடைமை சமூக அமைப்புக்கு ஏற்றதாகவும் மாறியது.

ஆனால் இதுவும் பின்னால் திரிபடைந்தது. பெண் தான் தேர்ந்தெடுத்து வாழும் கற்பு என்ற சுயம் சார்ந்த உள்ளடகத்தை, தனிச் சொத்துரிமை வாரிசு ஆண் தனக்கு இசைவாக்கி தன்னுடன் மட்டும் வாழும் ஒழுக்கமாக்கினான். இதுவே பல கட்டங்களை கடந்தும், வாழ்க்கை பூராவும் குறித்த பெண் கற்புடன் குறித்த ஆணுடன் வாழ நிர்ப்பந்திக்கும் வகையில் கற்பு திரிபடைந்தது.

இன்று தீவிர பெண்ணியல்வாதிகள் கற்பு என்பதை நிராகரிப்பதாக பிரகடனம் செய்கின்றனர். இதன் மூலம் பெண்ணின் தேர்வு இந்த ஆணாதிக்க அமைப்பில் மீண்டும் மறுக்கப்படுகின்றது. மாறாக நுகர்வு என்ற உலகமயாதலின் கோட்பாட்டில், பெண் உடல் சார்ந்த ஒரு பண்டமாக மாற்றப்பட்டு விபச்சாரியாக்கப்படுகின்றாள். உலகமயமாதலில் பெண் ஆண்களின் தேவையை ப+ர்த்தி செய்யும், நுகர்வு பண்டமாகவே மாற்றப்படுகின்றாள். இப்படி விரிவாக நாம் பலவற்றை ஆராய முடியும்.

ஆணாதிக்க ஒழுக்கக்கேட்டை கோருவதா பெண்ணியம்? பகுதி 3

ஏகாதிபத்திய பாலியல் சுதந்திரத்தை முன்வைத்த குஷ்பு விவகாரம்

குஷ்பு போன்ற ஏகாதிபத்திய அன்னக்காவடிகளே, சமூகத்தின் உயர்குடிகளாக உள்ளனர். இவர்களின் அலட்டல் அலட்டலாகவே அப்படியே ஒரு வழமையான சினிமா வசனம் போல் போய் இருக்க வேண்டியது. ஆனால் அதை நிலப்பிரபுத்துவ பார்ப்பனிய அரசியலுக்கும், தலித்துக்களின் சாதி அரசியலுக்கும், குறுந்தேசிய பாசிசக் கூறுக்கும் இசைவாக பயன்படுத்திய போது சர்ச்சைக்குள்ளாகியது. இதற்கு கோட்பாட்டு ரீதியாக வழக்கறிஞர் ரஜனி, அ.மார்க்ஸ்… போன்றோர் தமது உலகமயமாதல் கோட்பாட்டுக்கு இணங்க விளக்கி அதை முற்போக்காக காட்டமுனைந்தனர்.

முதலில் குஷ்பு என்ன சொன்னார் என்பதைப் பார்ப்போம். ~~பெண்கள் திருமணமாகும் போது கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்பது போன்ற எண்ணங்களில் இருந்து நமது சமூகம் விடுதலையாக வேண்டும். கல்வி பெற்ற எந்த ஆண்மகனும் தான் திருமணம் செய்யப் போகிறவள் கன்னித் தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான். ஆனால் திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்ளும் போது கர்ப்பமாகாமலும், பால்வினை நோய்கள் வராமலும் பெண் தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டும். என்றார். இதை ~~தமிழ்ப் பெண்கள் கற்பு இல்லாதவர்களா? என்ற கருணாநிதியின் தமிழ்முரசு இதை அரசியலாக்கிய போது, மீண்டும் குஷ்பு தினத்தந்தியில் ~~திருமணத்திற்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்ளாத ஆண்-பெண் எத்தனை பேர் இருக்கின்றார்கள்? என்றார்.

இப்படி சர்ச்சை உருவானது. பார்ப்பனியமயமாகும் தலித் சாதி அரசியல் இதை ஒருபுறம் காலில் கீழ் போட்டு உடைக்க, மறுதளத்தில் இதை பெண்ணியமாக சித்தரித்து தலையில் தூக்கி வைத்துக் கூத்தாடினர். மற்றொரு பிரிவு குஷ்புவை ஆதரிக்கும் அதேநேரம், பார்ப்பனியத்துடன் பகைக்க விரும்பாத மற்றொரு கும்பல் ஒன்று, கருத்துச் சுதந்திரம் பற்றி கேள்வி கேட்டு குஷ்புக்கு சாமரை வீசினர்.

இங்கு குஷ்பு கூறியதே தமது பெண்ணியம் என்பதே இலக்கியச் சந்திப்பு மற்றும் பெண்கள் சந்திப்பின் தீர்மானகரமான முடிவாகும்;. இந்த குஷ்பு வகையறாக்களின் பெண்ணியம் தான், தமது பெண்ணியம் என்ற நிலைப்பாட்டை தீர்மானமாக்கினர். முன்பு எந்த முடிவுகளையும் எடுக்காது கூடி குடித்து கும்மாளம் அடித்து கலையும் இலக்கியச் சந்திப்பு, முதன்முதலாக ஏகாதிபத்திய சார்பு முடிவுகளை உள்ளடக்கிய வகையில் சில முடிவுகளை எடுத்துள்ளது.

குஷ்பு வைத்தது பெண்ணியமா? இல்லை. மாறாக ஏகாதிபத்திய ஆணாதிக்க உலகமயமாதல் அமைப்பில் வெம்பிப் போகும் பெண்ணின், சொந்த சுயபுராணம். இதை சமூகத்துக்கும் பொருத்திக் காட்ட முனைந்தார். இன்றைய உலகமயமாதல் என்ற ஏகாதிபத்திய ஆணாதிக்க சமூக அமைப்பில் நுகரும் பெண்ணின் நிலையில் இருந்து, நிலப்பிரபுத்துவ அமைப்புக்கு விடுத்த வக்கிரம் தான் குஷ்புவின் கூற்று.

இந்த சமூக முரண்பாடு இந்தியாவில் ஆழமாக ஊடுரூவி வரும் ஏகாதிபத்திய உலகமயமாதல் என்ற நுகர்வுப் பண்பாட்டில் இருந்து, நிலப்பிரபுத்துவ கட்டுக்கோப்பான பொருளாதார சமூக அமைப்புக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுதான் இது. இது பொருளாதார துறையில் மட்டுமல்ல பாலியல் துறையிலும் கூட, ஏன் பண்பாட்டு கலாச்சாரத் துறையிலும் கூட ஏற்படுகின்றது. உலகமயமாதல் என்ற பண்பாட்டு சமூக அமைப்புக்கும், கடும்போக்கான பண்பாட்டு நிலப்பிரத்துவ அமைப்புக்கும் இடையில் எங்கும் எதிலும் முரண்பாடு உள்ளது. இதன் எதிர்நிலைத் தன்மை சார்ந்த முரண்பாட்டின் மீது ஆதரவு அல்லது எதிர்ப்புகள் தான் குஷ்பு விவகாரத்திலும் ஆளுமை பெற்ற ஒன்றாக உள்ளது. இந்த பொருளாதார அமைப்பு இரண்டும் மக்களுக்கு எதிரானது என்ற அடிப்படையிலும், இந்த பொருளாதார அமைப்பு இரண்டும் ஆணாதிக்கம் சார்ந்தது என்ற அடிப்படையிலும், இந்த விவகாரத்தில் மக்கள் நலன் சார்ந்த கருத்துகள் இருட்டடிப்பு செய்யப்பட்டன.

குஷ்பு போன்ற மேட்டுக்குடி பணக்கார நடிகைகளின் சொந்த வாழ்க்கை சார்ந்த உலக கண்ணோட்டத்தை தான், இந்த சமூகம் பின்பற்ற வேண்டும் என்ற திமிரில் இருந்தே குஷ்புவின் கருத்து கொப்பளிக்கின்றது. திமிர் பிடித்த பணக்கார நடிகைகளாக உள்ள இவர்கள், அடிமட்ட சமூகங்களையே இழிவாக எப்போதும் காண்பவர்கள். சினிமாவில் மட்டும் அதையே தமக்கு ஏற்ப திரித்து நடிப்பவர்கள். இவர்களின் வாழ்க்கையில் பிரதிபலிப்பது வக்கிரமும் பாசிசமும் தான். சமூகத்தின் அடிமட்ட மக்களுடன் தொடர்பற்றவர்கள் தான் இவர்கள். மனித வாழ்க்கையே புரிந்து கொள்ளாதவர்கள். இன்று ஏகாதிபத்திய நுகர்வை மட்டுமே, வாழ்க்கையின் அடிப்படையாக கொள்பவர்கள். இது வெறுமனே நடிகைகள் மட்டுமல்ல, பணக்காரக் கும்பலின் பொது வக்கிரமாகும். இவர்களின் வாழ்க்கைக்குள் பூதக் கண்ணாடி கொண்டு மனிதத்துவத்தை தேடவே முடியாது. ஆனால் தேட முடியும் என்று தேடி தீர்மானங்களையும்;, அறிக்கைளையும், கோட்பாடுகளையும் வெளியிடுகின்றனர்.
மக்களை ஏமாற்றிச் சுரண்டிய இந்தப் பணக்காரக் கும்பல் உலகமயமாதலை விசுவாசமாக வாலாட்டி ஆதரிப்பவர்கள். உலகமயமாதலின் நுகர்வுப்பண்பாட்டை, அந்தக் கலாச்சாரத்தை விரும்பி வலிந்து தேர்ந்து எடுப்பவர்கள்தான்;. இவர்களுக்கு என்று தனியான ஒரு கருத்தற்றவர்கள். ஏகாதிபத்திய உலகமயமாதல் நடைமுறை வாழ்வு சார்ந்த கோட்பாட்டை, கிளிப்பிள்ளை போல் மீள ஒப்புவிப்பவர்கள். அப்படியே வாழ்ந்து காட்ட முற்படுபவர்கள்.

வரைமுறையற்ற நுகர்வே இவர்களின் மையமான கோட்பாடு. பாலியலைக் கூட இந்த வகையில் தான் இவர்களால் புரிந்துகொள்ள முடிகின்றது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் உறவை வெறும் பாலியலாக மட்டும் உடல் சார்ந்ததாக குறுக்கி நுகர்பவர்கள். உறவு ஒரு சமூக உயிரிக்கு இடையிலானது என்பதையே மறுக்கின்றனர். இதனடிப்படையில் பாலியலை நுகர்வு என்ற விபச்சாரம் வரை புரிந்து, அதை உள்வாங்கிக் கொள்ளுகின்றனர். இந்த வகையில் குஷ்பு போன்றவர்கள் கருத்துரைக்கின்றனர். பாலியலை வெறும் சந்தைக்குரிய ஒரு நுகர்வாக மட்டும் சிறுமைப்படுத்தி, அதைக் கொப்பளித்து துப்பியுள்ளனர். நிலவும் நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க ஒழுக்க கோட்பாடு, தமது நுகர்வு கலாச்சாரத்துக்கு சவாலாக இருப்பதைக் கண்டு பொறுக்க முடியாது புலம்பும் போது, மொத்த சமூகத்தையும் கேவலமாக வசைபாடுகின்றனர். ~~தமிழ்நாட்டில் பிறந்தவர்களுக்கு இரண்டு கொம்பா முளைத்து இருக்கிறது?. என்ற மற்றொரு முன்னாள் நடிகை சுபாஷனியும் தனது மேட்டுக்குடி பார்ப்பானியத் திமிருடன் வக்காளத்து வாங்குகின்றார். தாங்கள் தமிழருடன் சம்பந்தமில்லாத அன்னியர் என்பதை இந்த நடிகை தனது கூற்றிலும் கூறிவிடுகின்றார். குஷ்புவோ ~~திருமணத்திற்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்ளாத ஆண்-பெண் எத்தனை பேர் இருக்கின்றார்கள்? என்ற தனது சொந்த வாழ்க்;கை சார்ந்த மேட்டுக்குடி விபச்சார அனுபவத்தில் இருந்த இப்படி சொல்லுகின்றார். இவர்களின் பாலியல் சார்ந்த நுகர்வு வெறிதான், இப்படி ஒரு சமூகத்தையே கொச்சைப்படுத்த வைத்தது.
பணத்துக்கு விபச்சாரம் செய்வது எப்படியோ அப்படித்தான் இந்த மேட்டுக் குடிகளின் பாலியல் நுகர்வு உள்ளது. பணத்துக்கு விபச்சாரம் செய்தலில் ஆண் மட்டும் நுகருகின்றான். ஆண் விபச்சாரர்களிடம் பெண் மட்டும் நுகருகின்றாள். பணத்துக்கு விபச்சாரம் செய்பவர்கள் இந்த சமூக அமைப்பின் வறுமை, மற்றும் ஆணாதிக்க கொடூரங்களினால் விபச்சாரியாக வாழ்க்கையில் தள்ளப்பபட்டவர்கள்.

இதில் இருந்து மாறுபட்ட மேட்டுக்குடி வாழ்க்கை சார்ந்த பாலியல் உறவு விபச்சாரமாகவே உள்ளது. எந்த மனித சமூக உறவும் இந்த பாலியல் உறவில் இருப்பதில்லை. விலையுயர்ந்த அன்பளிப்புகள், நடிப்பு சார்ந்த பாலியல் கவர்ச்சி, சினிமா பாணி காதல் நுகர்வு இப்படித் தான் இவர்களுக்கு இடையில் உறவு ஒரு விபச்சாரமாக மலருகின்றது. இங்கு நுகர்வு என்பது ஆண் அல்லது பெண் ஏதோ ஒரு பகுதிக்கு அவர்களின் தேர்வு சார்ந்து ஏற்படுகின்றது.

இந்த மே(மோ)ட்டுக்குடிகள் சொந்த வாழ்க்கை சார்ந்த கவர்ச்சியான நடிப்பு அனுபவத்தையே உலகமாக காண்பது இயல்பானது. சமூகத்தை தன்னளவில் மட்டும் புரிந்து வைத்திருக்கும் போது, மொத்த சமூகத்தையே இப்படித் தான் இருக்கின்றது என்று நம்புகின்றது. தமது குறுகிய வாழ்க்கை வட்டம், தமது குறுகிய நுகர்வு வெறி, தமது குறுகிய பண்பாடு என அனைத்தும் சேர்ந்து, இப்படித் தான் நாய் வேஷம் போட்டு குலைக்கவைக்கின்றது. சமூகக் கண்ணோட்டத்தையே அது மறுதலிக்கின்றது. குறிப்பாக அதே இந்திய ரூடேயின் தரவுகள் மேட்டுக்குடி பெண்களிடமே எடுக்கப்பட்டது. அப்படி இருந்தும் மேட்டுக்குடி நகர்புற பெண்களே, திருமணத்துக்கு முன் உறவு கொள்வது தவறு என்று 71 சதவீகிதப் பெண்களும், கன்னித் தன்மையுடன் வாழவேண்டும் என்று 66 சதவீகிதமான பெண்கள் கருத்துகளை வெளியிட்டு இருந்தனர். சென்னையில் 82 சதவீகிதமான பெண்கள் கன்னித் தன்மையுடன் வாழவேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால் குஷ்பு அதையும் மீறி கருத்துரைக்கின்றார். சொந்த மேட்டுக்குடி பெண்களே இப்படி கூறும் போது, சமூக ரீதியாக சீரழிந்து போன வாழ்க்கை அதையே நடிப்பாக தொலைத்த கும்பலின் குரல்கள் வக்கிரமாக வெளிப்படுகின்றன. ~~திருமணத்திற்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்ளாத ஆண்-பெண் எத்தனை பேர் இருக்கின்றார்கள்? என்று குஷ்பு கேட்கின்ற போது, சொந்த மேடடுக்குடி வர்க்கப் பெண்களையே கொச்சைப்படுத்தி கேவலப்படுத்திவிடுகின்றது. சொந்த சமூகத்துடன் கூட ஒட்டோ உறவோ கிடையாது. ஏன் இந்தியாரூடே எடுத்த தரவு சார்ந்த கருத்தைக் கூட, உள்வாங்கி கொள்ள முடியாது, சொந்த வாழ்க்கை சார்ந்த வக்கிரத்தை வெளிப்படுத்துகின்றனர். இதை பெண்ணியம் என்ற அ.மார்க்ஸ், வழக்கறிஞர் ரஜனி போன்றோர் ஏகாதிபத்திய விசுவாசத்துடன், அந்த சமூக ஒழுக்கக்கேட்டை நியாயப்படுத்தி குரைக்கின்றனர்.

இங்கு குஷ்பு பாலியலை திருமணத்துக்கு முன்னம் கொண்டிருக்கலாம் என்று கூறிய போது, ஒழுக்கக்கேடே முதன்மை பெறுகின்றது. இங்கு பாலியல் நுகர்வாக்கி, அதை யாருடனும் எப்படியும் என்ற விடையம் வந்துவிடுகினறது. இங்கு கற்பம் அடையாமல் இருந்தால் போதும். பால் நோய் வராமல் இருந்தால் போதும். இதைப் பெண் புரிந்து கொண்டால் சரி என்கின்றனர். இதை;தான் பெண்ணியம் என்று சிலர் கூறுகின்றனர். உலகமயமாதல் என்ற சமூக பொருளாதார ஆணாதிக்கம் வழங்கும் பெண்ணின் ஒழுக்கக் கேட்டை மூடிமறைக்கும் வழியைக்காட்டுகின்றனர். நுகர்வதை ஊக்குவித்து அதை இரகசியமாக இந்திய சமூக அமைப்பில் பாதுகாக்க வழி கூறுகின்றார்.
இதில் எங்கே பெண்ணியம் உள்ளது. இங்கு பாலியல் நுகர்வு முன்மொழியப்படுகின்றது. எப்படியும் நுகரலாம் என்று பெண்ணுக்கு புகட்டப்படுகிறது. சமூகத் தன்மையற்ற சந்தை நுகர்வு, இங்கு கொலுவேற்று நிற்கின்றது. சந்தை மனித இனத்தின் மீது எதை செய்ய விரும்புகின்றதோ, அதை நீ உனது ஒழுக்கமாக கொள் என்பது பொருளாதாரத்தின் ஒழுக்க விதி. இந்த ஒழுக்கக்கேட்டையே குஷ்பு வகையறாக்கள் மேதாவிகள் போல் உள்வாங்கி சொந்த மேட்டுக்குடி வாழ்பனுபவங்களுடன் அதையே பேட்டியளிக்கின்றனர்.

மனித இனத்தின் விடுதலைக்காக வழிகாட்ட வக்கற்றவர்கள், தம்மைத் தாம் முற்போக்குகள் என்று கூறிக்கொள்ளும் வகையறாக்கள், இதற்காக காவடி எடுக்கின்றனர். இதுவெல்லோ பெண்ணியம் என்கின்றனர். பெரியாரை இழுத்து வைத்து புணர்ந்து காட்டுகின்றனர். குஷ்புவின் வாழக்கை சார்ந்த ஒழுக்கக்கேட்டை ஆதரித்து அ.மார்க்ஸ். ~~குஷ்பு இந்தியாடுடேவுக்குத் தெரிவித்துள்ள ஒவ்வொரு வரியிலும் எனக்கு உடன்பாடு உண்டு. அவர் தமிழ்ப் பெண்களுக்கு எதிராக எதுவும் சொல்லவில்லை. ஒரு தேர்ந்த சமூகவியலாளரைப் போல அவர் கருத்துக் கூறியிருக்கிறார். மாறிவரும் சமூகப் போக்கினை குஷ்பு புரிந்து கொண்ட அளவுக்கு கூட நமது அரசியல் தலைவர்கள் கொள்ளவில்லை என்பது அபத்தமாக இருக்கிறது." அ.மார்க்சின் சமூக ஆய்வுத் தளம் எப்படி உள்ளது என்பதைத் தான் இது காட்டுகின்றது. குஷ்புவின் இந்த கூற்றின் பின் உள்ள சமூக பொருளாதார அடிப்படை தான் என்ன. அது உலகமயமாதல் என்ற ஏகாதிபத்திய பொருளாதார உள்ளடகத்தின் கொப்பளிப்பு அல்லவா.

குஷ்பு இந்த நுகர்வுச் சந்தை விதிக்கு அமைய புலம்பும் போது, கவர்ச்சியைக் காட்டி சமூகத்துக்கு முன் தன்னை நிலைநிறுத்திய அதே திமிருடன் தான், கொப்பளித்து கருத்துரைக்க முடிகின்றது. இதைத் தான் அ.மார்க்ஸ் ஒவ்வொரு வரியிலும் உடன்பாடு உண்டு என்று கூறி, இந்த ஆணாதிக்க உலகமயமாதல் உருவாக்கும் ஒழுக்கக்கேடான மேட்டுக்குடி பெண்ணின் வாழ்வின் முறையை ஆதரிக்கின்றார். இதையே அடிமட்டத்தில் உள்ள அனைத்துப் பெண்களும் தமது சொந்த வாழ்வியல் முறையாக கொள்ளவேண்டும் என்று உளறுகின்றார். இதைத்தான் இந்தக் கும்பல் பெண்ணியம் என்கின்றது.

வழக்கறிஞர் ரஜினி. ~~ஆண்களைத் தலைவர்களாகக் கொண்ட அரசியல் அமைப்புகள் தங்களது சொந்த ஆதாயத்திற்காக குஷ்பு என்கிற பெண்ணுக்கு எதிராக பெண்களையே தூண்டிவிடுகிறார்கள்" என்கிறார். அடிப்படையில் குஷ்பு ஒரு பெண் என்ற வகையிலும், குஷ்புவை எதிர்த்தவர்களின் கட்சி தலைவர்கள் ஆண்கள் என்ற வகையிலும் இதை குறுக்கி, குஷ்புவுக்கு வக்காலத்து வாங்குகின்றார். ரஜனி குறித்த கட்சிகளிள் நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க கூறை எதிர்ப்பதாக காட்டிக் கொண்டு, குஷ்புவின் ஆடம்பரமான உலகமயமாதல் ஆணாதிக்கம் வழங்கும் நுகர்வு விபச்சாரத்தை சமூகமே கைக்கொள்ளவேண்டும் என்று வழக்காடுகின்றார். இவர் பாரிஸ் இலக்கிய சந்திப்பில் உலகமயமாதல் பெண்ணின் விபச்சாரத்தனத்தை, ஆதரித்து, அதன் அடிப்படையில் குஷ்புவின் ஒழுக்கக்கேட்டை ஆதரித்தார். இதை நாம் தனியாக கீழே விரிவாகப் பார்ப்போம்.

அடுத்த தலித் ஆய்வாளரும் ஏகாதிபத்திய உலகமயமாதலின் எடுபிடியுமான ரவிக்குமார் ~~சர்வேயின் முடிவுகளின்படி கிடைத்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் சொல்லப்பட்ட கருத்து அது. அதை இந்த அளவு பிரச்சனையாக்கியிருக்கத் தேவையில்லை" என்று கூறி விடையத்தை முடக்கி தப்பிவிடவே முனைகின்றார். இதை அரசியலாக்கி மோதுவது அவர் தாங்கி நிற்கும் தலித்துகள். உலகமயமாதலை ஆதரித்து நிற்கும் மோதல் தரப்புகள், இரண்டும் சமூக பொருளாதார ஆணாதிக்கம் சார்ந்து அரசியல் ரீதியாக அம்பலமாவதை கண்டு அதில் இருந்து தப்பிவிடவே முனைகின்றார்.

ஆணாதிக்க ஒழுக்கக்கேட்டை கோருவதா பெண்ணியம்? பகுதி 2

பெண் விடுதலை என்பது பாலியல் சுதந்திரம் அல்ல

பெண் விடுதலையைப் பற்றி பேசமுற்படுபவர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும். சூக்குமமாக சந்தர்ப்பத்துக்கும் நிலைமைக்கும் ஏற்ப கூத்தடிப்பது பெண்ணியமல்ல. முதலில் தெளிவாக இன்றைய ஆணாதிக்க உலகைப்பற்றிய கருத்துகளை சமூகத்தின் முன் வைக்கவேண்டும். ஆணாதிக்க உலகை எப்படி மாற்றினால், அது பெண்ணியமாக இருக்கும் என்பதை முரணற்ற வகையில் தெளிவாக்க வேண்டும். அதாவது ஆணாதிக்கமற்ற சமூகமாக, ஆணும் பெண்ணும் இணைந்து வாழும் ஒரு சமூகம் எப்படி இருக்கும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். அங்கும் இங்குமாக ஒழிந்து நின்று கொண்டு, கருத்துரைக்க முடியாது. பெண்ணியத்தை சூக்குமமாக இருண்டவெளியில் வைத்து சமூகத்தை கொச்சைப்படுத்த முடியாது. இங்கு தனிப்பட்ட ஒரு பெண், தனது சொந்த வாழ்வியல் துயரத்தை போக்க போராடுவதற்கு, இது எந்தவிதத்திலும் தடையானதல்ல. சமூகத்துக்கு கருத்துரைப்பவர்கள், இப்படித் தான் பெண்கள் வாழவேண்டும் என்று கூற முற்படுபவர்கள், நிச்சயமாக தெளிவான வகையில் பெண்ணியத்தை விளக்கியாகவேண்டும். நாம் குறிப்பாக இன்றைய சமூக பொருளாதார அமைப்பு சார்ந்த ஆணாதிக்கத்தில் இருந்து தம்மை வேறுபடுத்திக் காட்டவேண்டும்.

இன்றைய அனைத்து சமூக பொருளாதார அமைப்பும், அது சார்ந்த சித்தாந்தங்களும், மனித கோட்பாடுகள், இது உருவாக்கும் வாழ்கை முறைகள் அனைத்தும் ஆணாதிக்கம் சார்ந்தது. இதில் இருந்து பெண்ணியம் எப்படி வேறுபடுகின்றது என்பதே, அடிப்படையான பெண்ணியம் பற்றிய புரிதலாகும், விவாதமாகும். குஷ்புவின் ஒழுக்கக்கேடான சமூகவிரோதக் கூற்றுகள் கூட, இந்த ஆணாதிக்க அமைப்பில் இருந்தே வருகின்றது.

ஆணாதிக்க வடிவங்களினுள் சோரம் போகும் பெண்ணியம்

இன்றைய ஆணாதிக்க சமூக பொருளாதார அமைப்பில், அனைத்தும் ஆணாதிக்க வடிவங்கள் தான். எந்த ஆணாதிக்க ஒழுக்கமும், இருக்கும் சமூக அமைப்பில் மறுக்கப்படும் போது அவையும் ஆணாதிக்கம் தான். அதாவது இருக்கும் சமூக அமைப்பை மறுக்கும் போது தான், ஆணாதிக்கமற்ற நிலை உருவாகின்றது. இன்று இருக்கும் ஆணாதிக்க சமூகப் பொருளாதார அமைப்பு என்ன எனப்பார்ப்போம்.

1. உலகமயமாதல் என்ற ஏகாதிபத்திய சமூக பொருளாதார ஆணாதிக்க அமைப்பு, பெண்ணைப் பற்றி முன்வைக்கும் பார்வை என்ன என்பதையே எந்தப் பெண்ணியமும் முதலில் தெளிவாக்க வேண்டும். குஷ்புவின் கருத்துக்கு ஆதரவாக பதிலளிக்க முன், இது தெளிவாக்கப்பட வேண்டும். இதில் இருந்துதான், நாம் சமூகத்தில் வெளிவரும் கருத்துகளை பெண்ணிய நோக்கில் பகுத்தாயமுடியும். இல்லையென்றால் தத்துவ வறுமையில், ஒழுக்ககேடான விபச்சாரத்தை பெண்ணியமாக சித்தரிப்பது நிகழும். இதுவும் ஆணாதிக்கம் சார்ந்தது.

2.நிலப்பிரபுத்துவ சமூக பொருளாதார ஆணாதிக்க அமைப்பு முன்வைக்கும் பெண் பற்றிய பார்வை என்ன என்பதையும், பெண்ணியம் முதலில் முன்வைக்க வேண்டும். இதை தெளிவுபடுத்தாவிட்டால், தத்துவ வறுமை உலகமயமாதல் பெண்ணின் ஒழுக்கக்கேடான வாழ்வை பெண்ணியமாக சித்தரிப்பது நிகழும்.

3.இதே போன்று முதலாளித்துவ சமூக பொருளாதார அமைப்பு முன்வைக்கும் பெண் பற்றிய பார்வையையும் தெளிவாக முன்னிறுத்த வேண்டும். இந்த முதலாளித்துவ சமூக பொருளாதார அமைப்பு கோரமாக இழிந்து மனிதவிரோதத் தன்மை கொண்டதாக மாறும் போதுதான், உலகமயமாதல் என்ற பொருளாதார கட்டமைப்பு உருவானது. இங்கு பெண்பற்றிய பார்வை இக்காலத்தில் வெவ்வேறானதாகவே அமைந்தன. இதைப் பற்றிய வரலாற்று வளர்ச்சியை பெண்ணியம் கோட்பாட்டு ரீதியாக தெளிவாக்க வேண்டும்.

ஆனால் பெண்ணியம் பற்றி பேசுபவர்கள் யாரும் இதைச் செய்வதில்லை. சொந்த தத்துவ வறுமையில் நின்று, சந்தர்ப்பத்துக்கும் நேரத்துக்கும் ஏற்ப, உலகமயமாதல் ஆணாதிக்கம் வழங்கும் பெண் பற்றிய வாழ்வியல் ஒழுங்கை பெண்ணியமாக கருதுவது நிகழ்கின்றது. நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பில் அடிமைப் பெண்ணாக பெண்ணை உருவாக்கிய எமது அமைப்பில், உலகமயமாதல் அமைப்பு உருவாக்கும் மாற்றத்தை பெண்ணியமாக கருதுவதும் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிப்பதும் இயல்பாக ஏற்பட்டு விடுகின்றது. இதை ஒரு பெண்ணின் புரட்சியாக நம்புவதும் கூட நிகழுகின்றது.

மேல் குறிப்பிட்ட இந்த மூன்று ஆணாதிக்க சமூக அமைப்பு சார்ந்து, பெண் பற்றி மூன்று விதமான பொதுப்போக்கு காணப்பட்டது, காணப்படுகின்றது. இந்த மூன்றும் ஆணாதிக்க சமூக பொருளாதார அமைப்பு சார்ந்தது. நிலப்பிரபுத்துவ சமூக அமைப்புக்கும், உலகமயமாதல் என்ற சமூக அமைப்புக்கும் இடையில் பெண்பற்றி ஆணாதிக்கப் பார்வை, முரண்பட்ட எதிர்நிலைத் தன்மை கொண்ட போக்காக காணப்படுகின்றது. இதுவே இன்று முரண்பாடாக, கூக்குரலாகவும் கூட வெளிப்படுகின்றது. இன்று ஒரு பெண் பற்றிய ஆணின் பார்வை சரி, பெண்ணின் பார்வை சரி, இந்த சமூக பொருளாதார கூறுகளுக்கு வெளியில் எதையும் கொண்டிருப்பதில்லை.

உண்மையில் பண்பாட்டு கலாச்சாரத்துறையில் இவர்களுக்கு இடையில் காணப்படும் முரண்பாடு, பொருளாதார துறையில் காணப்படுவதில்லை. பண்பாட்டு, கலாச்சாரத் துறையில் முரண்பட்டு எதிர்நிலையில் மோதும் இவர்கள், பொருளாதாரத் துறையில் உலகமயமாதலை ஆதரிப்பவர்களாக ஐக்கியப்பட்டு உள்ளனர். குஷ்பு விவகாரத்தில் மோதும் இரு தரப்பும், உலகமயமாதலை ஆதரிப்பதில், அந்த சமூக பொருளாதார கோட்பாட்டை முன்னெடுப்பதில் ஒன்றுபடுகின்றனர். பாரிஸ் இலக்கியச் சந்திப்பில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ரஜனி, இந்த அரசியல் விபச்சார தரகுவேலையை சிறப்பாகவே செய்தார். இதில் எதிரெதிராக களத்தில் நிற்பவர்கள் தலித்துகள், பெண்ணியல் வாதிகள் என்று கூறிக்கொள்பவர்கள்! ஆனால் இருதரப்பும், உலகமயமாதலை விசுவாசமாக ஆதரிக்கின்றனர். ஒரு விசித்திரமான, ஆனால் மக்கள் விரோதத் தன்மை கொண்ட ஒரு உண்மையாகும்.

பெண்ணின் மீதான ஆணாதிக்க அடக்குமுறையை ஆணாதிக்க சமூக பொருளாதார உள்ளடக்கத்தில் புரிந்து விளக்காத அனைத்தும், இந்த ஆணாதிக்கத்தில் ஏதோ ஒரு சார்புத் தன்மை கொண்டதாகவே அமைகின்றது. இந்த ஆணாதிக்க சமூக பொருளாதாரத்தில் பெண் ஆணின் பாலியல் நுகர்வுப் பொருளாக இருப்பதால், இந்த பொருளாதார அமைப்பில் பெண் விடுதலை அடைதல் என்பது கற்பனையிலும் சாத்தியமற்றது. மாறாக இந்த சமூகப் பொருளாதார அமைப்பின் மீதான ஒட்டுமொத்த மறுதலிப்பின்றி, எந்த பெண்ணும் இந்த ஆணாதிக்க சமூக பொருளாதார கூறுகளில் இருந்து விடுதலையடைய முடியாது. இதை மறுதலிக்கும் எந்தப் பெண்ணியக் கோட்பாடும், நிலவும் ஆணாதிக்க சமூக பொருளாதாரம் சார்ந்து ஆணாதிக்கமாகவே நீடிக்கும். சுற்றி சுற்றி இந்த ஆணாதிக்க அமைப்பில் சறுக்கி வீழ்வதே நிகழும்.

நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க சமூகப் பொருளாதார பெண்ணை, ஆண் தனது தனிப்பட்ட நுகர்வுக்குரிய ஒரு சொத்தாகவே கருதினான், கருதுகின்றான். இதன் ஒரு அங்கமாக சொத்துரிமை சார்ந்து, வளர்ச்சியுற்றதுதான் குடும்பம் என்ற அலகு. இது பெண்ணின் நோக்கில் ஒரு திரிபுதான். பெண் ஒருதார மணத்தை, தனிச்சொத்துடமை அமைப்பில் ஆணின் வரைமுறையற்ற காட்டுமிராண்டித் தனமான புணர்ச்சியில் இருந்து தப்பிப்பிழைக்கவே, தனது சொந்தத் தேர்வாகவே தெரிவு செய்தாள். ஆனால் ஆணாதிக்க சமூக அமைப்பின் வளர்ச்சியில் அவள் விரும்பி தேர்ந்த வடிவம் கூட திரிபடைந்தது. கடந்த 2000 வருடங்கள் பல மாறுதலை அது கண்டுவந்த போதும் கூட, பெண்ணின் மீதான நிலப்பிரபுத்துவ ஆணின் அதிகாரம் சொத்துரிமையின் அடிப்படையிலேயே காணப்பட்டது. பெண்ணின் உழைப்பை சுரண்டவும், பெண்ணின் மீதான பாலியல் நுகர்வை அடையவும், இதனடிப்படையிலான குடும்ப அலகு ஒரு இறுக்கமான வடிவத்தில் காணப்பட்டது. இதைப் பாதுகாப்பதில் மதமே மிகமுக்கியமாக ஆணாதிக்க சமூக கோட்பாட்டுக்குரிய பங்கை வகித்தது.

சமூக பொருளாதார கட்டமைபில் ஏற்பட்ட முரண்பாட்டால் உருவான உலகமயமாதல் என்ற சமூக கட்டமைப்பு, எப்படி நிலப்பிரபுத்துவ சமூக கட்டமைப்பை மறுத்ததோ அப்படி கடந்தகால நிலப்பிரபுத்துவ குடும்ப அலகு சார்ந்த ஆணாதிக்க பெண்ணையும் மறுதலிக்கின்றது. இதை இன்று பெரும்பாலான பெண்ணியல் வாதிகள் புரிந்து கொண்டதில்லை. மாறாக உலகமயமாதல் ஆணாதிக்கத்தையே, பெண்ணியமாக விளக்குவதே இன்று தீவிர பெண்ணியமாக காட்டப்படுகின்றது. இதுதான் உண்மை. இதை அவர்கள் யாரும் மறுக்க முடியாது.

இன்று உலகமயமாதல் என்ற ஆணாதிக்க பொருளாதாரக் கட்டமைப்பு பெண் பற்றி கொண்டுள்ள கொள்கை என்பது, ஒரு பெண்ணை வெறும் நுகர்வுச் சரக்காக மட்டும் காண்கின்றது. இன்றைய விளம்பரங்கள் அனைத்தும் இந்த வகையில் தான், பெண்ணைச் சித்தரிக்கின்றது. சினிமா முதல் ஒலி, ஒளி நிகழ்ச்சி வரை, ஏன் பெண் அறிமுகப்படுத்தப்படும் அனைத்து தளத்திலும், பெண் ஒரு நுகர்வுக்குரிய கவர்ச்சிகரமான பெண்ணாகவே இன்று உலகமயமாதல் காட்டுகின்றது. இது பழைய நிலப்பிரபுத்துவ பெண்ணின் ஆணாதிக்கக் கட்டுக்கோப்பையே கிண்டல் செய்கின்றது. அதை ஜனநாயக மீறல் என்கின்றது. அதை அநாகரிகமானதாகவும், மனித உரிமை மீறலாகவும் கூட காட்டுகின்றது. இதன் போதே தீவிர பெண்ணியல் வாதிகள் என்போர் (இங்கு ஆண் பெண்) வேப்பிலைக்கட்டிக் கொண்டு, இதற்கு அரோகரா போட்டு கும்மியடிக்கின்றனர்.

உலகமயமாதல் என்ற சமூக பொருளாதார ஆணாதிக்க அமைப்பு பெண்ணை நுகர்வுக்குரிய ஒரு பாலியல் பண்டமாகவே கருதுகின்றது. உலகமயமாதல் உலகில் சொத்துரிமையை சமூக அலகில் இருந்து பிரித்து, அதை தனிப்பட்ட சொத்தாக குடும்பத்தக்கு வெளியிலும் குவிக்கின்றது. குடும்பச் சொத்து என்ற நிலப்பிரபுத்துவ சொத்துரிமை கூறு கூட, தனக்கு தடையாக இருப்பதை உலகமயமாதல் அனுமதிக்கவில்லை. இதனால் இந்த சொத்துடமைக் குடும்பத்தையும் கூட உலகமயமாதல் சிதைக்கின்றது. நுகர்வு சார்ந்த பாலியல் நோக்கில், நிலப்பிரபுத்துவ குடும்ப அலகு என்பது சுதந்திரமான பாலியல் நுகர்வுக்கு தடையாக இருப்பதை உலகமயமாதல் காண்கின்றது. பெண்ணை பாலியலில் சுதந்திரமான தனிப்பட்ட பெண்ணாக, குடும்பத்துக்கு வெளியில் கவர்ச்சிகரமான பதுமையாக நிறுத்துகின்றது. அதேநேரம் பெண்ணின் உழைப்பை ஆணுக்கு ஊடாக அல்லாது, கூலி கொடுத்து வாங்கும் ஒரு உழைப்புக் கருவியாக சந்தையில் நிறுத்துகின்றது. ஆணின் உழைப்புக்கான கூலியைக் குறைத்து, ஆண் ஒரு குடும்பமாக பெண் அதில் தங்கி வாழமுடியாத நிலையை உருவாக்கி, பெண்ணை கூலிகளாக மூலதனம் சந்தைக்கு கொண்டு வந்தது.

இப்படி ஆணாதிக்க சுரண்டல் சமூக அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு இசைவாக, பெண்ணும் மாற்றப்படுகின்றாள். இவை பொதுவாக சமூக ஆதிக்கம் பெற்ற வர்க்கங்களின் பொது நிலைப்பாடாகவே இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் ஒரு பெண் அதை எப்படி உள்வாங்கி உணருகின்றாள் என்பதைப் பார்ப்போம்.

நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க சமூக அமைப்பில் ஒரு பெண், கட்டுக்கோப்பான தனது குடும்ப அலகை பராமரிப்பதே தனது கடமை என்று காண்கின்றாள். குடும்பத்தின் தேவையையும், ஆணின் தேவையையும் பூர்த்தி செய்து வாழ்வதே பெண்ணின் ஒழுக்கமாக காண்கின்றாள். தனிப்பட்ட ஆணுக்கான சேவை உழைப்பும், பாலியல் ரீதியாக குறித்த ஆணுடன் இணங்கி வாழ்ந்து மகிழ்ச்சி அடைவதே குடும்பமாக காண்கின்றாள். இதை அவள் மகிழ்ச்சிக்குரியதாக மாற்ற முனைந்தாள். இதில் இருந்தே ஆணாதிக்க பண்பாடுகளும், கலாச்சாரங்களும் பெண் சார்ந்து உருவாகின. தாய்மைக்குரிய சமூகப் பண்பு பெண்ணிடம் உயர்ந்து நின்றதால், காட்டுமிராண்டித்தனமான ஆணாதிக்க தனிச்சொத்துரிமை சமூக அமைப்பிலும் கூட, பெண் சமூக உயிரியாக இருந்ததால் மொத்த சமூகத் தன்மையையே உயிருள்ளதாக்கி வைத்திருந்தாள். இதனால் சமூகம் உயிருள்ளதாக இருந்தது. சமூகத் தன்மை குடும்பம் சார்ந்த போதும் கூட, சமூகத்தின் இயல்பான வாழ்வியல் இதுவே அடிப்படையாக இருந்தது.

ஆனால் இவை எல்லாம் உலகமயமாதல் அமைப்பில் முற்றாக தகர்ந்து போகின்றது. ஒவ்வொரு மனிதனும் ஒரு சமூக உயிரி என்பதை மறுப்பதே, உலகமயமாதலின் ஆதாரமான கொள்கை. ஆணோ பெண்ணோ அல்லது குழந்தையோ யாராக இருந்தாலும், அவாகள் ஒரு சமூக உயிரியாக இருக்க வேண்டியதில்லை. மாறாக தனிமனித நலனுடன் ஒருவரையொருவர் சார்ந்தல்ல, குழிபறித்து வாழ்வதை வழிகாட்டுகின்றது. பழைய குடும்ப அலகுக்கு பதில், சுயநலமாக ஆணைப் போல் பெண் மற்றும் குழந்தைகளும் சுயநலத்துடன் வாழ்தலையே சுதந்திரம், ஜனநாயகம் என்கின்றது. பழைய நிலபிரபுத்துவ குடும்ப அலகு என்பது, அதாவது ஆணின் சுயநலம் சார்ந்த இந்த அமைப்பு தகர்ந்து போகின்றது. இதையே தீவிர பெண்ணியல்வாதிகள் பெண்ணியம் என்கின்றனர். இது பெண்ணை ஆணில் இருந்து விடுவிக்கின்றது என்கின்றனர். பெண் பாலியல் ரீதியாக சுதந்திரம் அடைகின்றாள் என்கின்றனர். உண்மையில் நடப்பது ஒரு ஆணின் சொத்து சார்ந்து பெண் ஆணாதிக்க சமூகத்தில் வாழ்ந்த நிலை என்பது தகர்ந்து, பெண் நுகர்வுக்குரிய பாலியல் பொருளாகி ஆணாதிக்க சந்தைப் பொருளாகின்றாள். இதில் பெண்ணையும், பாலியல் ரீதியாக ஆணைப் போல் ஆணுக்கு சோரம் போய் பெண்ணை நுகரக் கோருகின்றது. இந்த ஆணாதிக்க உலகமயமாதல் உருவாக்கும் பெண்ணின் நிலையைத்தான், தீவிர பெண்ணியம் என்று கூறி கும்மியடிப்போர் பெண்ணியம் என்கின்றனர். இதை யாரும் இல்லை என்று நிறுவவே முடியாது.

முதலாளித்துவ சமூக அமைப்பு நிலப்பிரபுத்துவ சமூக அமைப்புக்கு மாற்றாக உருவான போது கூட, கடந்து வந்த குடும்ப அலகை முற்றாக சிதைத்துவிடவில்லை. இப்படி நீடித்த சமூக அமைப்பு, உலகமயமாதல் என்ற சமூக பொருளாதார அமைப்பில் குடும்பம் என்ற அலகு அவசியமற்றதாகின்றது. பாலியல் என்பது இங்கு நுகர்வு கண்ணோட்டத்தில், தனிமனிதனின் சுயநல எல்லைக்குள் சுருங்கிப் போனது. இது இயந்திரத் தன்மையானதாகவும், கவர்ச்சியை அடிப்படையாக கொண்டதாகவும், போலித்தனமான கூறுகளே, இந்த பாலியல் இணைப்பின் புள்ளியாகின்றது.

ஆண் நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பில் பெண்ணை கற்புள்ள ஒருதார மணத்தில் ஒழுக்கத்தைக் கோரிய போது கூட, ஒழுக்கத்தை தனக்கு விதிவிலக்காக்கி பொது விபச்சாரத்தை ஆண் தக்கவைத்துக் கொண்டான். இன்று உலகமயமாதல் பெண்ணின் கற்பு சார்ந்த ஒருதார மணத்தை தகர்த்து, அதனிடத்தில் பெண் பொது விபச்சாரியாக்கப்படுகின்றது. தனிச்சொத்துரிமை அமைப்பு உருவான போது, அது இயல்பில் பெண் மீதான ஆணின் காட்டுமிராண்டித்தனமான வரைமுறையற்ற பாலியல் அத்துமீறலைத் தடுக்க, பெண் ஒரு தலைபட்சமாக ஒருதாரமணத்தை தேர்ந்தெடுத்தாள். ஆனால் பின் அந்த ஒருதாரமணமே பெண்ணின் சிறைக்கூடமாகவும் மாறியது. ஆணால் ஆண் பலதார மணத்தில் வாழ, பொது விபச்சாரத்தை தக்கவைத்து இருந்தான். பெண் அன்று எதைத்தடுக்க ஒரு தாரமணத்தை தேர்ந்தாளோ, அதை தகர்த்து ஆண் மீண்டும் பொது விபச்சாரியாக்கி பெண் மீதான பாலியல் அதிகாரத்தைப் பெற்று விடுகின்றான். இங்கும் பெண்ணும் ஆணுக்கு நிகராக நுகரலாம் என்பது, தொழிலாளியும் முதலாளியாகலாம் என்ற கோட்பாட்டை அடிப்படையாக கொண்டது.

ஏனென்றால் இந்த சமூகப் பொருளாதார அமைப்பே ஆணாதிக்கமாக உள்ளதால், பெண்ணின் நிலை இயல்பாகவே பொது விபச்சார நிலையை அடைகின்றது. இதையே பெண் விடுதலை என்று ஏகாதிபத்தியமும் சொல்லுகின்றது. தீவிர பெண்ணியமும் இதைத் தான் வாந்தியெடுத்து சொல்லுகின்றது. பெண்ணின் சுயம் சார்ந்த ஒழுக்கம் (இது ஆணுக்கும் உண்டு)அவசியமற்றதாக்கி, பொதுவிபச்சாரமே ஒழுக்கமாகின்றது. நுகர்வை, செல்வத்தின் உச்சத்தில் உள்ளவர்கள் (பொதுவாக மேற்கத்தையவர்கள்) எப்படி நுகர்கின்றனரோ, அப்படித் தான் பெண்ணையும் பாலியல் ரீதியாகவும் நுகர்வதை உலகமயமாதல் வழிகாட்டுகின்றது. ஆண் பெண் பாலியல் உறவு என்பது, வெறும் உடல் சார்ந்த பாலியல் சரக்கு என்ற நிலையைத்தான் ஆண் பெண் உறவு வழிகாட்டுகின்றது. இங்கு எந்த சமூக உணர்வும், இவர்களுக்கு இடையில் உருவாவதை உலகமயமாதல் மறுக்கின்றது. உதாரணமாக பிரான்சில் டிஸ்கோ ஒன்றில் வேலை செய்யும் ஒருவரின் வேலைபற்றி ஒருவர் குறிப்பிட்டார். அவரின் வேலை ஆண் பெண் சோடியாக, அதாவது சோடியாக யார் மலசலகூடத்துக்குச் சென்றாவும் அவர்களை தடுப்பதுதான் அவரின் வேலை. நான் முன்பு வேலை செய்த ஒரு டிஸ்கோவில், மலசலக் கூடத்துக்கு முன்னால் ஆண் உறையைப் பெறும் தன்னியங்கி இயந்திரம் பூட்டப்பட்டு இருந்தது. உள்ளே கால் வைத்தால் சறுக்கும் வகையில் ஆண் உறைகள்.

இது டிஸ்கோவில் மட்டுமல்ல. பல தளத்தில் காணப்படுகின்றது. நுகர்வு என்ற உள்ளடக்கம், பணம் கொடுத்தும், பரஸ்பரம் நுகர்தல் என்ற எல்லைவரை விரிந்து காணப்படுகின்றது. இதைத்தான் பெண்ணியம் என்றால், இதைத் தான் பாலியல் சுதந்திரம் என்றால், இந்த கோட்பாட்டாளர்களின் நுகர்வு வெறியே வக்கிரப்பட்டு வெளி வருகின்றது. குஷ்பு போன்ற மேட்டுக் குடிகள் தமது சொந்த வாழ்வு சார்ந்து இப்படித் தான் வாழ்கின்றனர். அவர்களின் மேட்டுக்குடி வாழ்வில் சமூக நலன் சார்ந்து எந்தக் கூறும் இருப்பதில்லை. இது அவர்களின் பாலியல் கூறிலும் கூட இருக்கமுடியாது. இருப்பது நுகர்வு அடிப்படையிலான கண்ணோட்டம் தான். பாலியலிலும் கூட சமூகக் கூறு உள்ளது. இதை தீவிர பெண்ணியம் கண்டுகொள்வதேயில்லை. இதில் இருந்தே உலகமயமாதலில் பெண் தாய்மைப் பண்பை இழந்து, சமூகப் பண்பை இழந்து வெறும் பாலியல் சரக்காக உடல் சார்ந்த பண்டமாகி விடுகின்றாள். இந்த நிலையை ஆதரிப்பவர்கள் தான், தீவிர பெண்ணியம் என்ற பெயரில் கவர்ச்சியாக தம்மை சிங்காரித்துக் காட்டுகின்றனர். இதை ஆதரிக்கும் ஆண், அந்த நுகர்வுக்குரிய பெண்ணை அடையும் நோக்கில் அணுகுகின்றான். இந்த தத்துவ உலகில் இப்படி ஆண்களையும், பெண்களையும் கூட நாம் கண்டு வருகின்றோம்.

பெண் சமூக உயிரிக்குரிய இயற்கையாகவே அவளிடம் எஞ்சிக் கிடந்த தாய்மைப் பண்பை வலிந்து இழக்கும் போதே, குழந்தைக்கு பாலூட்ட மறுக்கின்றாள். குழந்தையின் பிறப்பையே இழிவாகப் பார்க்கின்றாள். கற்பப் பையை அறுத்து எறிவது பற்றி வீரவசனம் பேசுகின்றாள். தனது சொந்த குழந்தையையே கைவிடுகின்றாள். ஆனால் பாலியல் ரீதியாக ஆணுடன் உறவு கொள்வதை மட்டும் நுகர்வு அடிப்படையில் கைவிடுவதில்லை. ஒரு அராஜகப் பெண்ணாக தன்னைத்தான் சிங்காரித்து சீரழிகின்றாள். இதைத்தான் பெண்ணியமாக சித்தரிக்கின்றனர். இந்த ஆணாதிக்க சமூக பொருளாதார அமைப்பை மாற்றாத ஆணாதிக்கமே இன்று பெண்ணியமாக சித்தரிக்கப்படுகின்றது. பெண்ணியம் பேசும் இன்றைய இந்த சித்தாந்த வாதிகளின் கோட்பாடே இதுதான்.

உண்மையில் நிலப்பிரபுத்துவ சமூகப் பொருளாதார கட்டமைப்பில் இருந்து முதலாளித்துவ கட்டமைப்பின் ஊடாக வளர்ச்சியுற்ற உலகமயமாதல் என்ற கட்டமைப்பின், பல இடைகட்டங்களை பெண் பல வடிவங்களில் கடந்துவந்தாள். இப்படி மாறிவந்த சமூகப் போக்கு சார்ந்து, ஆதிக்கம் பெற்ற வர்க்கங்களிடையே தான் எப்போதும் ஆதிக்கம் பெற்ற ஆணாதிக்க ஒழுக்கம் அதிகார பூர்வமான பண்பாடாக நடைமுறையில் இருந்தது. ஆனால் ஆதிக்கம் பெற்ற சமூகப் பொருளாதார அமைப்பினால் ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவுகளில், இது அதிகார பூர்வமான பண்பாடாகவும் ஒழுக்கமாகவும் கூட ஒருநாளுமே இருக்கவில்லை. இந்த சமூகப் போக்குடன் முரண்பட்ட சமூகமும், குறிப்பாக பெண்களும் பொது ஆணாதிக்க ஒழுக்கத்துடன் முரண்பட்டு பலவேறு கூறுகளுடன் தான் அவள் வாழ்ந்தாள். ஆதிக்கம் பெற்ற சமூக போக்கு முரண்பாடாக, இங்கு பெண்கள் சுதந்திரமுள்ளவராக இருந்தனர்.

உதாரணமாக உயர்சாதி பார்ப்பனிய நிலப்பிரபுத்துவ பெண்ணின் ஒருதார மணமுறையை, தாழ்த்தப்பட்ட பெண்கள் தமது ஒழுக்கமாக கடைப்பிடிக்கவில்லை. இங்கு பெண்ணின் விருப்பார்ந்த தேர்வு சுதந்திரமானதாக இருந்தது. இது இன்று ஏகாதிபத்தியம் பெண்ணியம் கூறும் அடிப்படையில், அதாவது பாலியல் அடிப்படையில் நிகழவில்லை. மாறாக பாலியல் அல்லாத கூறுகளே, ஆண் பெண் உறவில் முதன்மை பெற்றதாக இருந்தது. இங்கு ஆண் பெண்ணுக்கு இடையில் பரஸ்பர விசுவாசம் அந்தக் குடும்பத்தின் மையக் கூறாக இருந்தது. பெண்ணின் பிரிவும் ஐக்கியமும் பாலியல் சார்நத்தாக இருக்கவில்லை. வாழ்வு சார்ந்ததாகவே இருந்தது.

இன்றைய பெண்ணியல் வாதிகளினதும், பெண் விடுதலையை பேசும் ஆண்களினதும் கருத்துகள் இதற்கே எதிரானது. கோட்பாட்டு ரீதியில் தீவிர பெண்ணியம் பற்றிய கோட்பாடுகள் செயல்பாடுகள், நடைமுறைகள் உலகமயமாதல் சமூக பொருளாதார விளைவின் சீரழிவாக உள்ளது. ஆனால் கிராமப்புற பெண்ணகளின் நிலைப்பாடுகள் ஜனநாயகக் கூறாக உள்ளது.

நிலப்பிரபுத்துவ அமைப்பின் பெண்ணின் ஒடுக்குமுறையை எதிர்க்கும் தீவிர பெண்ணியம் உலகமயமாதல் பெண்ணை சுதந்திரமாக காணும் போக்கு காணப்படுகின்றது. இதற்கு மாறாக உலகமயமாதல் சமூக அமைப்பில் பெண் வெறும் பாலியல் பண்டமாக இருப்பதை எதிர்த்து, நிலப்பிரபுத்துவ குடும்பப் பெண்ணை வலியுறுத்துவது காணப்படுகின்றது. இந்த வகையில் தான் இன்று புலம்பல்கள், தீர்மானங்கள், வாய் வீச்சுக்கள், போராட்டங்கள் எல்லாம் நடத்தப்படுகின்றன.

இந்த இரண்டும் மக்கள் விரோத ஆணாதிக்க சமூக பொருளாதார கூறாக இருப்பதை இவர்கள் காண்பதில்லை. ஒரு பெண்ணை இந்த நிலையில் வைத்திருக்கின்ற சமூக பொருளாதார கூறுகளை பற்றிய தெளிவான பார்வை இன்றி, அதை சமூகம் சார்ந்து புரட்சிகரமாக மாற்றுவதைப் பற்றிய அரசியல் சமூக பொருளாதார நடைமுறையின்றி, பெண்விடுதலை பற்றிய கருத்துகள் அனைத்தும் அபத்தமானவை. இவை அனைத்தும் இந்த ஆணாதிக்க சமூகப் பொருளாதார கட்டமைப்புக்குள், ஏதோ ஒரு வகையில் தன்னைத்தான் அடையாளம் காட்டிக் கொள்பவைதான். இந்த சமூக உண்மையை யாரும் மறுத்து நிறுவமுடியாது.