தமிழ் அரங்கம்

Saturday, January 20, 2007

திப்புவுக்கு தோள் கொடுத்த வீரன்: தீரன் சின்னமலை


கீழ்த்தரமான கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியை அகற்ற பாளையக்காரர்கள் ஒன்றுபட்டு ஏற்படுத்தியிருந்த தீபகற்பக் கூட்டிணைவில் தெற்கே மருதுபாண்டியர், திண்டுக்கல்லில் கோபாலநாயக்கர் எனக் கூட்டிணைவை வழிநடத்தி வந்தனர். இதில் மலபாரையும், தமிழகத்தையும் தென்னிந்தியப் புரட்சிக் கண்ணியில் இணைப்பதற்கான இடமாக விளங்கியது கொங்கு மண்டலம். அதில் ஆங்கிலேயர்களுக்கு அடங்க மறுத்த பாளையக்காரர்களில் ஒருவர் சின்னமலை.


கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆதிக்கத்தைக் கருவறுக்க ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, திருநெல்வேலி எனப் பரந்து விரிந்த கூட்டிணைவை உருவாக்க மராட்டியப் போராளி "துந்தாஜிவாக்'கைச் சந்திக்கச் சென்ற மூன்று தூதுக்குழுவில் சின்னமலையின் பெருந்துறைப்பாளையமும் பங்கேற்றது. கொங்குப் பகுதி மைசூர் ஆட்சியின் கீழ் வரிவசூல் பகுதியாக இருந்தாலும் பொதுஎதிரியான கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியை வீழ்த்த நாம் ஒன்றுபட வேண்டும் என்ற திப்புவின் வேண்டுகோளை ஏற்று ஆங்கிலேயப் படைகளை திப்புவுடன் சேர்ந்து எதிர்த்துப் போராட 10,000 படை வீரர்களுடன் தன்னையும் இணைத்துக் கொண்டார் சின்னமலை. அங்கே ஜாக்கோபின் என்ற பிரெஞ்சு புரட்சி வீரர்களால் சின்னமலை படைக்குப் பயிற்சியும் அளிக்கப்பட்டு, சீரங்கப்பட்டினப் போரில் சிறப்பாக மாலவல்லி எனுமிடத்தில் ஆங்கிலேயப் படைக்குப் பெருத்த சேதத்தையும் விளைவிக்கிறது கொங்குப்படை.


மேலும் நெப்போலியனுக்கு திப்புவின் கோரிக்கையோடு பிரான்சுக்குத் தூதுசெல்லும் வேலையை தீரன் சின்னமலையின் வீரர் கருப்பச்சேர்வை செய்கிறார். திப்புவின் முடிவுக்குப் பிறகு கொங்கு மண்டலத்தைத் தவிர பிற பகுதிகள் கும்பினிப் படை வசமாகின்றன. அடங்க மறுக்கும் சின்னமலைக்கு ஆங்கிலேயப் படை குறி வைக்கிறது.


அறச்சலூர்ப் போரில் ஆங்கிலப்படையைத் துரத்தி அடிக்கிறார் சின்னமலை. காவிரிக்கரைப் போரில் 1801ல் கர்னல் மாக்ஸ்வெல் படையைத் துரத்துகிறார். அதே மாக்ஸ்வெல்லின் தலையை 1802இல் ஓடாநிலைப் போரில் வெட்டி வீசினார் சின்னமலை. வெறியோடு 1803இல் குதிரைப்படையுடன் சின்னமலையைக் கைது செய்ய வந்த ஜெனரல் ஹாரிஸின் படைகள்மீது எறிகுண்டை வீசித் துரத்தியடிக்கிறார் சின்னமலை. மீண்டும் பெரும்படையுடன் ஜெனரல் ஹாரிஸ் வருவதை அறிந்த சின்னமலை ஓடாநிலைக் கோட்டை வாசலில் பீரங்கியால் தாக்குவது போல வெறும் பீரங்கியை வைத்துவிட்டு கோட்டையிலிருந்து தலைமறைவாகி, காங்கேயம் சென்று அங்கிருந்து வாழை வியாபாரி போன்ற வேடத்தில் பழனி சென்று பிற பாளையக்காரர்களுடன் கும்பினிப் படையைத் தாக்கத் திட்டமிடுகிறார். எட்டப்பனைப் போல இங்கும் சமையல்காரன் நல்லப்பன் காட்டிக் கொடுக்க தீரன் சின்னமலை கும்பனிப் படையால் கைது செய்யப்படுகிறார்.


கும்பினி ஆதிக்கத்திற்குக் கட்டுப்பட்டால் விட்டுவிடுவதாக ஹாரிஸ் பேரம்பேசியும், சோரம் போகாத தீரனும் அவனது சகோதரர்கள் பெரியதம்பி, கிலேதர் ஆகியோருடன் மூவரையும் சங்ககிரி மலைக்கோட்டையில் ஆலமரத்தில் தூக்கிலிட்டுக் கொன்றது கும்பினி ஆட்சி. கல்லாய்ச் சமைந்த துயரம் என 1500 அடி உயர சங்ககிரி மலை நம் கண்முன்னே தீரன் சின்னமலையின் நாட்டுப்பற்றை உயர்த்திக் காட்டி நிற்கிறது. பன்னாட்டுக் கம்பெனிகளின் ஆதிக்கத்திற்கு இந்த மண் அடிபணியாது என்று கல்லும் மண்ணும் நம்மைப் பார்த்து நம்பிக் கொண்டிருக்கிறது. மறந்து விடவேண்டாம்!


சுடர்விழி

**********************************************************************



""ஆங்கிலக் கம்பெனியின் நற்பேறாலும் உங்களின் நற்பேறாலும் ஆங்கிலக் கம்பெனி அதிகாரிகளின் வீரத்தாலும் சிறந்த கொள்கைகளாலும் அந்தக் காட்டுநாய் சின்ன மருது அவனது சகோதரன் மற்றும் குடும்பத்தார் கைது செய்யப்பட்டு அவர்கள் இழைத்த சதிக்காகச் சாவின் மூலம் பலன் அடைந்தார்கள். மகாபிரபுவே! நான் வெகு காலமாகப் பார்த்து வந்ததில் பிரெஞ்சுக்காரர்கள், சந்தாசாகிபு, திப்பு சுல்தான் முதலியோர் ஆங்கிலேயரை எதிர்த்து வெற்றிபெற முடியவில்லை. அவர்கள் அழிக்கப் பட்டுள்ளார்கள். ஆனால் ஆங்கிலக் கம்பெனியை நம்பி வாழ்ந்தவர்கள் பேரும் புகழும் பெற்றிருக்கிறார்கள். அந்த அயோக்கியன் மருது எதை எதிர்பார்த்துக் கலகம் செய்தான் என்பது விளங்கவில்லை.''


25.10.1801ஆம் நாளன்று புதுக்கோட்டை மன்னன் விஜயரகுநாதத் தொண்டைமான் கம்பெனியின் சென்னை நிர்வாகத்துக்கு எழுதிய கடிதம்.


திப்பு சுல்தான் மற்றும் மருதுவின் வீரமும், நாட்டுப்பற்றும், தியாகமும் தொண்டைமானுக்கு விளங்காததில் வியப்பில்லை. வீரத்தைப் போலவே வரலாறு நெடுகிலும் அழுத்தமாகத் தடம் பதித்திருக்கும் துரோகம் எப்போதும் தன்னை உயர்வாகவே கருதிக் கொள்கிறது. கருங்காலித்தனம், காரியவாதம், சந்தர்ப்பவாதம், பிழைப்புவாதம் ஆகியவற்றையே புத்திசாலித்தனம் என்று கருதி தன்னை மெச்சிக்கொள்ளும் துரோகம், தான் பிழைத்திருப்பதையே புகழுக்குரியது என்பதற்கான ஆதாரமாய்க் காட்டுகிறது.


ஆயினும் வரலாறு எதிர்காலத்தில் தான் மதிப்பீடு செய்யப்படுகிறது. சுரண்டி வந்த ஆங்கிலேயரை அண்டிப்பிழைத்தும், போராளிகளைக் காட்டிக்கொடுத்தும் சுகபோகிகளாய் வாழ்ந்த தொண்டைமான்கள் மற்றும் எட்டப்பன்களை இன்றும் தமிழக மக்கள் தம் அன்றாட வழக்கில் அருவெறுப்புடன் துரோகத்தின் இலக்கணமாய் மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.



கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்ததால் மட்டும் விஜய ரகுநாதத் தொண்டை மானுக்கு இந்த அவப்பெயர் வந்து விடவில்லை. 18, 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த தொண்டை மான் பரம்பரையே துரோகத்தின் இழையொற்றித்தான் வாழ்ந்து வந்திருக்கிறது.


1751இல் ஆற்காட்டு நவாப் பதவிக்காக சந்தாசாகிப்பும் முகம்மது அலியும் மோதிக்கொண்டபோது, ஆங்கிலேயர்கள் முகம்மது அலிக்கு ஆதரவாகவும் பிரெஞ்சுக்காரர்கள் சந்தாசாகிப்பை ஆதரித்தும் களம் இறங்குகிறார்கள். இந்தப்போரிலேயே ஆங்கிலேயப்படைக்கு ஆதரவாக 400 குதிரைப்படையினர், 3000 காலாட் படையினரையும் தொண்டைமான் அனுப்புகின்றான். ""இனி இந்தியாவின் எதிர்காலம் ஆங்கிலேயர் வசம்தான்'' என்று தொண்டைமான் யூகித்திருக்கக் கூடும்.


வெள்ளையர்களும் தனது அடிவருடியைக் கண்டு கொண்டார்கள். 28.9.1755 அன்று சென்னையிலிருந்த கவர்னர் ஜார்ஜ் பகாட் தனது தலைமையகத்துக்கு எழுதிய கடிதமொன்றில் ""புதுக்கோட்டை தொண்டைமான் கம்பெனியின் நேசமான நண்பர். தற்போதும், இனிவரும் காலங்களிலும் தொண்டைமானின் பாதுகாப்புக்கு ஆங்கிலேயர்கள் உதவி செய்வார்கள். அதுபோல தொண்டைமானும் ஆங்கிலேயருக்கு உதவி செய்யவேண்டும். தொண்டை மானின் அந்தஸ்திற்கு ஏற்ப அவருக்குரிய மரியாதையையும் கௌரவத்தையும் ஆங்கில அரசு அளித்து வரும்'' என்று குறிப்பிடுகிறான்.


1759ல் சென்னைக் கோட்டையைக் கைப்பற்ற பிரெஞ்சுக்காரர்கள் முயன்ற போது ஆங்கிலேயரைக் காப்பாற்ற 200 குதிரைப்படையினர், 1500 காலாட் படையினர் மற்றும் 250 பணியாட் களையும் தொண்டைமான் அனுப்பினான். பூலித்தேவன் முதலான பாளையக்காரர் களை அடக்குவதற்குச் சென்ற கம்பெனியின் படையில் தொண்டைமானது வீரர்களும் இருந்தனர். 1772ல் இராமநாதபுரம், சிவகங்கை மீது படையெடுத்து முத்து வடுகநாதரைக் கொலை செய்த கம்பெனிப் படையில் தொண்டைமானது 5000 வீரர்களும் இருந்தனர்.


இக்காலத்தில் ஆங்கிலேயருக்குச் சிம்மசொப்பனமாக எழுந்த ஹைதர் அலி தனக்கு உதவுமாறு தொண்டை மானைக் கேட்கிறார். அவன் துரோகிக்கே உரிய ராஜ விசுவாசத்துடன் மறுக்கிறான். சினம் கொண்ட ஹைதரலி தஞ்சாவூரைக் கைப்பற்றிய பிறகு புதுக்கோட்டையின் மீதும் படையெடுக் கிறார். அப்போதும் ஆங்கிலேய விசுவாசத்தில் தொண்டைமான் உறுதியாக இருக்கிறான். நாயினும் மேலான இந்த நன்றிப் பெருக்கைக் கண்டு வெள்ளையர்களே சிலிர்த்திருக்கக் கூடும். இச்சமயத்தில்தான் கட்டபொம் மனைக் காட்டிக் கொடுத்த "வரலாற்றுச் சிறப்பு மிக்க' விஜய ரகுநாதத் தொண்டைமான் 1789ல் பட்டத்திற்கு வருகிறான். திப்பு கொலை செய்யப்பட்ட நான்காவது மைசூர் போரில் ஆங்கிலேயர்களுக்குப் பெரும் படையனுப்பி உதவவும் செய்கிறான்.


1799ஆம் ஆண்டு நடந்த முதல் பாஞ்சாலங்குறிச்சிப் போரில் தோற்ற கட்டபொம்மன் போரைத் தொடர்வதற்காக மருதிருவரைச் சந்திக்கச் செல்கிறார். கட்டபொம்மனைப் பிடிப்பதற்கு விழிப்புடன் கண்காணிக்கு மாறு திருநெல்வேலி கலெக்டர் லூஷிங்டன் தொண்டைமானுக்கு கடிதம் எழுதுகிறான். அதன்படி திருமயம் அருகே திருக்களம்பூர் காட்டிலிருந்த கட்டபொம்மனைப் பிடித்துக் கொடுத்து ஆணையை நிறைவேற்றுகிறான் தொண்டைமான். கட்டபொம்மனைத் தூக்கிலேற்றிய பிறகு, தொண்டைமானுக்கு விலையுயர்ந்த குதிரை மற்றும் அலங்கார வேலைப்பாடு மிகுந்த பட்டாடையை வெள்ளையர்கள் பரிசாக வழங்கினர்.


எட்டப்பனுக்கு கட்டபொம்மனது பாளையத்தின் 114 ஊர்களும், திப்புவின் அரண்மனையில் கொள்ளையடித்த தொட்டிப் பல்லக்கு, தங்கக்கலசம் வைத்த கூடாரம், குதிரைகள், போர்முரசு முதலான எலும்புத் துண்டுகளும் பரிசுகளாய்த் தரப்பட்டன. எட்டப்பனை விடத் தொண்டைமானுக்கு பரிசு குறைவுதான். எனினும் அதனால் தொண்டைமானின் பிரிட்டிஷ் விசுவாசம் கடுகளவும் குறைந்துவிடவில்லை.


மருது சகோதரர்களை ஒழிக்க காளையார் கோவில் மீது வெள்ளையர் கள் 1801ஆம் ஆண்டு படையெடுத்த போது 6667 வீரர்களையும், காட்டையழித்துச் சாலை போடுவதற்கு பணியாட்களையும் அனுப்பியதுடன் தனது திருமயம் கோட்டையையும் வெள்ளையர்களுக்குக் கொடுத்தான். வெல்லமுடியாமல் தளர்வுற்றிருந்த வெள்ளையர்களுக்கு ""தொண்டித் துறைமுகம் வழியாக மருதுவுக்கு வரும் பொருள், ஆயுத உதவிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும், மழைக்காலத்திற்கு முன் காளையார் கோவிலை மூன்று திசைகளிலிருந்தும் தாக்கினால்தான் வெல்லமுடியும்'' என ஆலோசனை கூறி வழிநடத்தினான். காடுகளில் தலைமறை வாயிருந்த மருதுவின் வீரர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோரைப் பிடித்துக் கொடுத்து அவர்களைத் தூக்கிலேற்ற வைத்தான் தொண்டைமான்.


விகாரமான இந்த துரோகத்துக்குப் பரிசாக, ஆங்கிலேயர்கள் இரண்டு ஐந்தடி தங்கச் செங்கோல்களைத் தொண்டைமானுக்குப் பரிசளித்தார்கள். ஆனால் தொண்டைமானோ, "மதிப்பு மிக்க' இந்தத் துரோகத்துக்கு "மகாராஜா பட்டம்' வேண்டுமென்று கேட்டான். வெள்ளையர்கள் மறுத்து விட்டனர். தனக்கு எடுபிடி வேலை பார்க்கும் ஒரு பாளையக்காரன், மகாராஜா பட்டத்துக்கு ஏங்குவதை எண்ணி ஆங்கிலேயர்கள் நகைத்திருக்கக் கூடும்.



பட்டம் தராவிட்டாலும் பரவாயில்லை. தென்னிந்தியா முழுதும் படையனுப்பித் தொண்டு செய்த தன் அடிமைக்கு செலவுக் காசைக்கூட வெள்ளையன் தரவில்லை. புதுக்கோட்டை எனும் வானம் பார்த்த பூமியின் வறிய விவசாயிகளைக் கசக்கிப் பிழிந்து பறிக்கப்பட்ட தொகையை வெள்ளையனுக்குப் படையனுப்ப செலவழித்து விட்டு, புதுக்கோட்டை சமஸ்தானத்துக்கு 60,400 பகோடா கடனும் வைத்துவிட்டு 1807இல் செத்தான் இந்தத் தொண்டைமான்.


அடுத்து பட்டத்துக்கு வந்த தொண்டைமான் (10 வயது) காலத்தில் ஆட்சி நேரடியாக கம்பெனியின் "ரெசிடென்ட்' கைக்குப் போய்விட்டது. மருதுவின் படையால் தஞ்சையில் தோற்கடிக்கப்பட்ட வில்லியம் பிளாக்பர்ன் என்ற அந்த அதிகாரியை "அப்பா' என்றுதான் அழைப்பானாம் சிறுவன் தொண்டைமான். இவர்களை "ஐரோப்பியனுக்குக் கூட்டிக் கொடுத்துப் பெற்ற பிள்ளைகள்' என்று தனது திருச்சி பிரகடனத்தில் சரியாகத்தான் குறிப்பிடு கிறார் மருது!


1833ல் தொண்டைமானுக்கு "ஹிஸ் எக்ஸலன்சி' விருது வழங்கப்பட்டது. 1857இல் இந்த விருது ரத்து செய்யப்பட்டது. கடனில் மூழ்கிய மன்னனுக்கு இந்த விருது வைத்துக் கொள்ள தகுதியில்லை என ஆங்கிலேய அரசு தெரிவித்துவிட்டது. விருதைத் திரும்பப் பெறுவதற்காக விவசாயிகளை மேலும் கசக்கிப் பிழிந்து வரி வசூலித்து கடனை அடைத்து, 1870இல் மறுபடியும் விருதைப் பெற்று "கவுரவத்தை' நிலைநாட்டிக் கொண்டான்.


1875ஆம் ஆண்டு மதுரை வந்த வேல்ஸ் இளவரசன் தொண்டைமானுக்கு ஏதோ ஒரு மெடலைக் குத்திவிட்டான். 1877ஆம் ஆண்டு விக்டோரியா ராணி, மகாராணியாக பட்டம் சூட்டிக்கொண்ட போது, புதுக்கோட்டையில் சிறப்பு தர்பார் கூட்டப்பட்டு கொண்டாடப் படுகிறது. 1911ஆம் ஆண்டு ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் பட்டம் சூட்டிக் கொள்ளும் போது (வ.உ.சி சிறையில் செக்கிழுத்துக் கொண்டிருந்தபோது) தொண்டைமான் லண்டன் சென்று அதில் கலந்து கொள்ளும் பாக்கியத்தையும் பெறுகிறான்.


அதே ஆண்டில் தில்லி வந்த ஐந்தாம் ஜார்ஜ், தொண்டைமானுக்கு "பிரிட்டிஷ் இந்தியப் பேரரசின் தளபதி' எனும் விருதை வழங்குகிறான்.


1914இல் முதல் உலகப்போர் துவங்கியபோது இந்தத் தளபதியிடம் உதவுவதற்குப் படை இல்லை. ஆகவே பிரிட்டனுக்கு 14,000 ரூபாய் மொய் எழுதுகிறான்; இரண்டாம் உலகப் போரின்போது 1,60,000 ரூபாய் மொய் எழுதுகிறான். 1915 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா சென்ற தொண்டைமான் அங்கு மோலி எனும் வெள்ளையினப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறான். 20 லட்ச ரூபாயை எடுத்துக் கொண்டு 1920 ஆம் ஆண்டு பாரிசில் குடியேறுகிறான். அவர்களுக்குப் பிறந்த மகனின் பெயர் சிட்னி மார்த்தாண்டன்.


"ராஜாதிராஜ ராஜகுலதிலக ராஜகம்பீர சிறீ சிறீ சிறீ' விஜயரகுநாதத் தொண்டைமானின் பரம்பரை தங்களுடைய துரோக வரலாற்றுக்காக கடுகளவும் கூச்சமோ, குற்றவுணர்வோ கொள்ளவில்லை. தொண்டைமான் என்ற பட்டத்துடன் கம்பீரமாகப் பவனி வந்துகொண்டிருக்கிறார், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருச்சி மாநகர மேயர் சாருபாலா.

···


துரோகிகளின் வரிசையில் அடுத்து வருபவன் ஆற்காட்டு நவாப். வணிகம் செய்து லாபமீட்டுவதற்குப் பதிலாக மக்களிடம் வரிவசூல் கொள்ளை நடத்தியே இலாபமீட்டலாம் என்பதற்கான வாய்ப்பை பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு உருவாக்கிக் கொடுத்து, இந்தியாவை ஆக்கிரமிப் பதற்கான கனவையும், அதற்குத் தேவையான களத்தையும் அவர்களுக்கு உருவாக்கித் தந்தவன் ஆற்காட்டு
நவாப்.



இன்றைய தமிழகப் பகுதிகளில் வரிவசூல் செய்வதற்காக மொகலாய மன்னர் ஒளரங்கசீப்பால் 1698இல் உருவாக்கப்பட்டதுதான் நவாப் எனும் பதவி. முதலில் மொகலாய வம்சாவழியினரான நேவாயெட்ஸ் எனப்படுவோரே நவாப்புக்களாக பதவியேற்கின்றனர். முகலாயப் பேரரசு நலிவுற்ற காலத்தில் வாலாஜா எனப்படும் வம்சா வழியினரும் பட்டத்திற்கு வருகின்றனர். இந்த இரு கோஷ்டிகளும் எல்லா வகையான அரண்மனைச் சதிகளிலும், கொலைகளிலும் ஈடுபடுகின்றனர். பதவிக்காக உடன் பிறந்தோரையும், ரத்த உறவுகளையும் கொலை செய்தே வளர்ந்த இந்த வம்சம், நாட்டையும் மக்களையும் ஆங்கிலேயருக்குக் கூட்டிக்கொடுத்ததில் வியப்பல்லை.


1750களில் நேவாயெட்ஸ் வம்சத்தைச் சேர்ந்த சந்தாசாகிப்பிற்கும், வாலாஜா வம்சத்தைச் சேர்ந்த முகம்மது அலிக்கும் நடந்த பதவிச் சண்டையில், சந்தாசாகிப் பிரெஞ்சுக்காரர்களையும், முகமது அலி ஆங்கிலேயர்களையும் அடியாள் படையாக அழைத்தனர். இரண்டு படைகளுமே (படை என்றால் ஆயிரம் இரண்டாயிரம் அல்ல, சில நூறு பேர்தான்) ஐரோப்பா செல்வதற்கான பருவகாலக் காற்றுக்காகக் (சீசன்) காத்திருந்தனர். சும்மாயிருக்கும் நேரத்தில் கைச்செலவுக்கு ஆகுமே என்று இரண்டு படைகளும் நடத்திய ஆஃப் சீசன் சண்டைதான் "கர்நாடகப் போர்'. இந்தக் கேலிக்கூத்தில் முகமது அலி வென்றான். கம்பெனி குமாஸ்தாவான ராபர்ட் கிளைவ் "மாவீரன்' ஆனான்.


ஒப்பீட்டளவில் முறையாகப் பயிற்றுவிக்கப்பட்ட எண்ணிக்கையில் குறைவான ஐரோப்பியப் படை, எண்ணிக்கையில் அதிகமான இந்தியப் படைகளைத் தோற்கடிக்க முடிகிறது என்பதைத் தம் அனுபவத்தில் உணர்ந்த ஆங்கிலேயர்களின் மனதில் ஆக்கிர மிப்புக் கனவு முளை விடத் தொடங்கியது.


நவாப்போ வேறு விதமாகக் கனவு காணத் தொடங்கினான். பிரிட்டிஷாரின் படையைப் பயன்படுத்தியே இலங்கை உள்ளிட்ட தென்னிந்தியாவின் சக்ரவர்த்தியாகி விடலாம் என்பது அவன் கனவு. எனவே, பாளையக்காரர் களுடன் வரிவசூல் தொடர்பாக எழும் பிரச்சினைகளில் தொடங்கி எல்லா விவகாரங்களுக்கும் கம்பெனியின் படைகளையே கூலிப்படையாகப் பயன்படுத்த ஆரம்பித்தான். காலப்போக்கில் கம்பெனியின் படைச் செலவுக்கு அடைக்கவேண்டிய தொகை கடனாய் ஏறி ஒரு கட்டத்தில் நவாப் திவால் அடையும் நிலைக்குச் சென்றான். இறுதியில் வேறுவழியின்றி தன் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளை ஒவ்வொன்றாய் வெள்ளையர்களுக்கு எழுதிக் கொடுக்கத் தொடங்கினான். ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்ட ஆரம்பித்தது.


இந்த அளவுக்கு அடி முட்டாளாயிருந்த நவாப் அதற்கேற்ற முறையில் நகைக்கத்தக்க வகையில் ஆட்சியிழந்தான். 1787 மற்றும் 1792 ஆம் ஆண்டுகளில் கம்பெனி இவனுடன் செய்து கொண்ட ஒப்பந்தப் படி பெரும்பான்மைப் பகுதிகளின் வரி வசூலிக்கும் உரிமையைப் பெற்றது. இறுதியில் ஆட்சியதிகாரம் மட்டும் மாற்றப்படவேண்டும் என்ற நிலையில் 1795ஆம் ஆண்டு முகம்மது அலி செத்துப் போனான்.


சாகும்போது தன் மகன் உம்தத் உல் உம்ராவை அழைத்து, ""மகனே 1792 ஆம் ஆண்டு ஒப்பந்தத்திலிருந்து மயிரளவேனும் மாறுபடும் எந்த ஒரு ஒப்பந்தத்திலும் கையெழுத்துப் போட்டு விடாதே. உன் நன்மைக்காகத் தான் என்று சொல்வார்கள். நம்பிவிடாதே.'' என்று சொல்லிவிட்டுக் கண்ணை மூடினான்.""தலை போய்விட்டது என்ற படியால் முடியாவது மிஞ்சட்டும்'' என்று அவன் நினைத்திருக்கக்கூடும்.


ஆனால் வெள்ளையர்கள் அப்படி நினைக்கவில்லை. அடுத்த ஒப்பந்தத்திற்கு ஆயத்தமானார்கள். உல் உம்ராவோ மன்றாடினான். திப்புவுக்கு எதிரான 1799 இறுதிப் போருக்கு படையும் உணவும் தந்து வெள்ளையருக்கு உதவி அவர்களுடைய நல்லெண்ணத்தைப் பெற முயன்றான். அனைத்தையும் வெள்ளையர்கள் பயன்படுத்திக் கொண்டனர். போர் முடிந்தபின் ""உனக்கும் திப்புவுக்கும் ரகசிய உறவு இருந்ததை நிரூபிக்கும் ஆவணங்களைக் கண்டுபிடித்து விட்டோம்'' என்று நவாபை மிரட்டினான் வெல்லெஸ்லி. ஆதாரமே இல்லாத இந்த வெற்று மிரட்டலைக் கேட்ட மாத்திரத்தில் நோயில் விழுந்து 1801ல் செத்துப் போனான் உம்தத் உல் உம்ரா.


அடுத்து அவனது மகன் அலி ஹுசைன் ஆற்காட்டு நவாப்பாக பதவியேற்கிறான். துரோகிகள் கொஞ்சம் கவுரவமாக நடத்தப்படுவதற்குக் கூட வீரர்கள் உயிர் வாழ்வது ஒரு முன் நிபந்தனையாக இருக்கிறது. திப்பு கொல்லப்பட்ட மறுகணமே தனக்கு இதுகாறும் உதவிவந்த தென்னிந்திய துரோகிகள் அனைவரையுமே செருப்புக்குச் சமமாக நடத்தத் தொடங்கினார்கள் வெள்ளையர்கள். ""அரசாளும் முழு உரிமையையும் எங்களுக்கு எழுதிக்கொடு'' என்று அலி ஹுசைனை மிரட்டியது கம்பெனி. அதை ஒப்புக்கொள்ளவும் முடியாமல், மறுக்கவும் தைரியம் இல்லாமல் அவன் திண்டாடுகிறான்.


""என்னை நவாப் ஆக்குங்கள். நான் எழுதிக் கொடுக்கிறேன்'' என்று வெள்ளையரிடம் பேரம் பேசுகிறான் முகமது அலியின் இரண்டாவது மகனும் அலி ஹூசைனின் சிறிய தந்தையுமான அசிம் உல் தௌலா. உடனே அசிமை நவாப் ஆக்குகிறார்கள் வெள்ளையர்கள். அலி ஹுசைன் விஷம் வைத்துக் கொல்லப்படுகிறான். நவாபின் நாடு முழுவதும் கம்பெனியின் நேரடி ஆட்சிக்குள் வருகிறது, அரண்மனையை மட்டும் சொந்தமாகக் கொண்ட நவாப்புக்கு வரி வசூலில் ஐந்தில் ஒரு பங்கு ஓய்வூதியமாகத் தரப்படுகிறது.


இப்படி பங்காளியை விஷம் வைத்துக் கொன்று பதவியைப் பிடித்த பரம்பரையில் வந்தவர்தான் இன்று சென்னை அமீர் மகாலில் குடியிருக்கும் ஆற்காடு "இளவரசர்'.


···-----------------------------------------------------------------------


முசுலீம்கள் என்றாலே தேசத் துரோகிகள் என்று கூறும் இந்து மதவெறியர்களுக்கு ஆற்காட்டு நவாப்புகளின் வரலாறு மகிழ்ச்சியைத் தந்திருக்கும். ஆனால் அந்த மகிழ்ச்சியில் மண்ணள்ளிப் போடுகிறார்கள் தஞ்சை மராத்திய மன்னர்கள். அதுவும் ஆர்.எஸ்.எஸ் கொண்டாடும் மராத்திய சிவாஜியின் வழி வந்த மன்னர்கள்!


பொதுவில் தஞ்சை மராத்திய மன்னர்களும் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்தனர். ஆனால் ஆற்காட்டு நவாபுக்கும் தஞ்சைக்கும் சிற்சில முரண்பாடுகள் இருந்தன. இந்தப் பின்னணியில் 1773ஆம் ஆண்டு ஆற்காட்டு நவாப் தஞ்சையின் மீது படையெடுப்பதற்குக் கம்பெனியின் உதவியைக் கோரினான். இரு படைகளும் தஞ்சையைத் தாக்கி அப்போது மன்னனாக இருந்த துளஜாஜியைச் சிறைப் பிடித்தன. ஆனால் 1776இல் கம்பெனி துளஜாஜியிடமே ஆட்சிப் பொறுப்பை மீண்டும் ஒப்படைத்தது.


ஹைதர் அலி, திப்பு சுல்தானை வெல்வதற்கு பூனாவை ஆண்டுவந்த மராத்திய பேஷ்வாக்களின் ஆதரவு கம்பெனிக்குத் தேவைப்பட்டதுதான் வெள்ளையர்களின் இந்த நியாய உணர்ச்சிக்குக் காரணம். இதனால் கைதி துளஜாஜி மீண்டும் மன்னனானான். கம்பெனிக்கு ஆண்டு தோறும் 12 லட்சம் ரூபாய் பாதுகாப்புக் கட்டணம் தருவதாகவும், தேவைப்படும் போது கோட்டை கொத்தளங்களைக் கம்பெனிக்கு அளிப்பதாகவும் ஒப்புக்கொண்டான். இப்படி கம்பெனி போட்ட பிச்சையில் உயிர் பிழைத்தது தஞ்சை மராத்திய வம்சம்.


இந்த "மராத்திய வீரன்' துளஜாஜி 1787ல் செத்துப் போனான். இவனது தத்துப் புத்திரன் சரபோஜிக்கும், துளஜாஜியின் காமக்கிழத்திகளில் ஒருத்தியின் மகனான அமர் சிங்குக்கும் பதவிச்சண்டை எழுந்தது. தீர்ப்பளிக்கும் பொறுப்பு "வேத சாஸ்திர வல்லுநர்களான' ஏழு பார்ப்பனப் பண்டிதர்களிடம் விடப்பட்டது. பண்டிதர்களை அமர் சிங் நன்றாக "கவனித்த'படியால் "சரபோஜியைத் தத்தெடுத்தது சாஸ்த்திரத்துக்கு விரோதமானது' என்று அவர்கள் அறிவித்தார்கள். அமர்சிங் 10 ஆண்டுகள் நாடாண்டான். இடையில் இந்த விவகாரத்தில் கம்பெனி நுழைந்தது. ""சரபோஜியை மன்னனாக்கினால் தஞ்சாவூர் அரசை சுலபமாக விழுங்கலாம்'' என்று கம்பெனி கருதியது. அதே ஏழு பண்டிதர்களைக் கூப்பிட்டது கம்பெனி. சாஸ்திரங்களை ஆராய்ந்த அந்தப் பார்ப்பனர்கள் சரபோஜியைத் தத்து எடுத்தது செல்லும் என்று இப்போது தீர்ப்பு கூறினார்கள். காலனியாதிக்கமும் பார்ப்பனியமும் தாங்கள் ஒன்றுபடும் புள்ளியைக் கண்டறிந்தன. மயிரிழையில் சரபோஜியும் மன்னனானான்.


இனி, தஞ்சையை கம்பெனி ஆட்சியின் கீழ்க் கொண்டுவர வேண்டியதுதான் பாக்கி. இருந்தாலும் திப்புவைத் தோற்கடிப்பதற்காக மராத்திய பேஷ்வாக்களின் ஆதரவு தேவைப்பட்டதால் வெள்ளையர்கள் கொஞ்சம் தயங்கினார்கள். ஆனால் சரபோஜி தயங்கவில்லை. ""தனக்கு ஆட்சி செய்து அனுபவமில்லை என்பதால் கம்பெனியின் அதிகாரிகள் ஓரிரு வருடங்கள் ஆண்டு காட்டினால் பிறகு நானே பார்த்துக்கொள்வேன்'' என்று கம்பெனியிடம் உதவி கேட்டான் சரபோஜி. கடைசியாக 1799ஆம் ஆண்டு திப்பு தோற்கடிக்கப்பட, கம்பெனி தயக்கம் நீங்கியது. சரபோஜியிடமிருந்து நிரந்தரமாகவே ஆட்சியுரிமையை எடுத்துக்கொண்டது. 1799 அக்டோபர் 25 ஒப்பந்தப்படி 4000 சதுரமைல் கொண்ட தஞ்சை அரசு ஆங்கிலேயர்களின் கீழ் வந்தது. மன்னனுக்குரிய நிதி, நிர்வாக, நீதி உரிமைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. சரபோஜிக்குப் பென்ஷன் பணமாக வருடத்திற்கு ஒரு லட்சம் ஸ்டார் பக்கோடாவும், வரி வசூலில் ஐந்தில் ஒரு பங்கு தருவதாகவும் உறுதியளிக்கப்பட்டது.


""கோட்டையில்லே கொடியும் இல்லே அப்பவும் நான் ராஜா'' என்று அவ்வப்போது மக்களுக்குத் தரிசனம் தருவதையும், தாசிகளைக் கொஞ்சுவதையும் தவிர வேறு வேலை இல்லாததால் பாட்டு, நடனம், ஓவியம், நூலகம் என்று கலை வாழ்க்கையில் காலம் தள்ள ஆரம்பித்தான் சரபோஜி. இன்றைக்கும் அரசியல்சமூக அக்கறையில்லாமல் கலைத்தவத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழ்நாட்டின் சிறுபத்திரிக்கை இலக்கியவாதிகளின் முன்னோடி என்று வேண்டுமானால் சரபோஜியைக் கூறலாம்.


இவ்வாறு கூறுவதனால் சரபோஜியை ஒரு மானமில்லாத கோமாளி என்று மட்டுமே கருதிவிடக்கூடாது. ஜூன் 1801இல் தீபகற்பக் கூட்டிணைவின் கிளர்ச்சி உச்சத்தில் இருந்தபோது கட்டபொம்மனின் தம்பி சிவத்தையா சரபோஜிக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அக்கடிதத்தில், கட்டபொம்மனைத் தூக்கிலிட்ட தொண்டைமானின் துரோகம், பாளையங்கோட்டை சிறையிலிருந்து தப்பி 60,000 பேரைத் திரட்டி ஆறே நாளில் பாஞ்சைக் கோட்டையைக் கட்டிய சாகசம், அந்தப் போரில் 4 ஆங்கிலேயத் தளபதிகளைப் பிடித்துத் தூக்கிலிட்ட வீரம், தற்போது நடத்தி வரும் கொரில்லாப் போரின் வீச்சு அனைத்தையும் விவரித்து, இந்தத் தருணத்தில் மட்டும் நீங்கள் ஆதரித்தால் வெள்ளையரை ஒரேயடியில் ஒழித்து விடலாம் என்று உருக்கமாகக் கோருகிறார். ""எங்களுக்கு எதிராகப் படை அனுப்புகிறீர்களே, இது நியாயமா?'' என்று முறையிடுகிறார். ""நீங்களும் தொண்டைமானும் உதவாவிட்டாலும் பரவாயில்லை, நடுநிலையாவது வகிக்கக் கூடாதா?'' என்று மன்றாடுகிறார்.



செவத்தையாவின் இந்தக் கடிதத்தையும் அதைக் கொண்டு வந்த தூதனையும் கைது செய்து வெள்ளை யனிடம் ஒப்படைக்கிறான் சரபோஜி. தன்னிடம் மிச்சமிருந்த படையையும் வெள்ளையனுக்கு ஆதரவாக அனுப்பி வைக்கிறான். அற்பன் போலத் தோற்றமளிக்கும் சரபோஜியின் உண்மையான கொடூர முகம் இந்த நடவடிக்கையில் வெளிப்படுகிறது.


தியாகிகளுடைய செயலை அவர்களது தன்மானம், நாட்டு நலன், மக்கள் நலன் போன்றவை தீர்மானித்தன. துரோகிகளோ தங்களது அரண்மனை ஆடம்பரத்தையும் சுகபோகத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்காக தன்மானம், அரசுரிமை, மக்கள் நலன் என எதை வேண்டுமானாலும் "தியாகம்' செய்யத் தயாராக இருந்தார்கள். துரோகத்திற்கோ, தியாகத்திற்கோ சாதி, மத, மொழிப் பிரிவினைகள் இல்லை. திப்புவும், ஆற்காட்டு நவாபும் முசுலீம்கள்; மருது சகோதரர்களும், தொண்டைமானும் தமிழர்கள்; கட்டபொம்மனும், எட்டப்பனும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள். எனினும், இந்த அடையாளங்களால் அவர்கள் வரலாற்றில் இணைக்கப்படவில்லை.


திருவிதாங்கூர் மன்னன், மைசூர் உடையார், ஐதராபாத் நிஜாம் ... என இந்தத் துரோகிகளின் பட்டியல் நீள்கிறது. 500க்கும் மேற்பட்ட இந்திய சமஸ்தானங்களில் ஆகப் பெரும்பான்மையானவர்கள் துரோகிகளே. இறுதிவரையில் இந்திய மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கு எதிராகவே செயல்பட்ட இவர்களுக்கு காங்கிரசு அரசு மானியம் வழங்கியது. அரண்மனை, மக்களைக் கொள்ளையிட்டு இவர்கள் சேர்த்த சொத்துக்களை வைத்துக் கொள்ளவும் அனுமதித்தது. துரோகிகளின் வாரிசுகள் தேசியக் கட்சிகளின் தலைவர்களாகவும் தொழிலதிபர்களாகவும் மாறி விட்டார்கள்.


மருதுவின் கோட்டை பாழடைந்து கிடக்கிறது. கோபால் நாயக்கரையும் தூந்தாஜி வாக்கையும் மக்களுக்கு யாரென்றே தெரியாது. இவர்களுக்கு வரலாற்று நூல்களிலும் இடம் கிடையாது. மைசூர் அரண்மனையில் ஆண்டுதோறும் தசரா நாளன்று, உடையார், தர்பார் நடத்துகிறார். தஞ்சைப் பெரிய கோயிலுக்கு சரபோஜியின் வாரிசுதான் பரம்பரை அறங்காவலர். சுதந்திர தினத்தன்று கவர்னர் மாளிகையின் முக்கிய விருந்தாளி ஆற்காட்டு இளவரசர்.


ஏனென்றால், இது துரோகிகளின் அரசு. விடுதலை வரலாற்றின் துரோகம் கம்பீரமாக அரியணையில் அமர்ந்திருக்க, தியாகம் புறக்கணிக்கப்படும் இந்த அவலம், தியாகிகளைக் கவுரவிக்கும் நினைவுச் சின்னங்களை எழுப்புவதால் மாறிவிடாது. காலனியாதிக்கத்திற்கு நினைவுச்சின்னம் எழுப்பப்படும் போதுதான் தியாகம் அதற்குரிய அரியணையில் கம்பீரமாக அமரும்.

இளநம்பி





""ஈனமான அந்நியன் கீழ்த் தொண்டுபுரியும் சுபேதார்கள், அவில்தார்கள், நாயக்குகள், சிப்பாய்கள் மற்றும் போர்க்கருவிகளைப் பயன்படுத்தும் அனைவரும் கீழ்க்கண்டவாறு தங்களது வீரத்தை வெளிப்படுத்த வேண்டும். ஐரோப்பியர்களாகிய இந்த ஈனர்களை எவ்விடத்தில் கண்டாலும் கண்ட இடத்தில் அவர்களை அழித்து விடவேண்டும்.''

1801ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சின்ன மருதுவின் திருச்சி
அறிக்கையில் இருந்து.


சின்ன மருது விடுத்த அறைகூவலை ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர்தான் தம் சொந்த அனுபவத்தில் உணர்ந்தார்கள், தென்னகத்தின் சிப்பாய்கள். 18001801 ஆம் ஆண்டுகளில் தென்னிந்திய அளவில் மருது சகோதரர்கள், தூந்தாஜி வாக், கோபால் நாயக்கர், கானி ஜ கான் முதலியோர் வெள்ளையர்களை எதிர்த்துப் போராடி தியாகிகளானார்கள். ""இனி எதிர்ப்பவர்கள் எவருமில்லை'' என்று ஆங்கிலேயர்கள் இறுமாந்திருந்த நேரம். அந்த இறுமாப்பை மின்னெலெனத் தோன்றிய ஒரு வாளினால் கிழித்துச் சென்றது 1806இல் வெடித்த வேலூர் சிப்பாய்க் கிளர்ச்சி.


""மீசையைக் குறைக்கவேண்டும், புதிய தலைப்பாகையொன்றை அணிய வேண்டும், கடுக்கன், காப்பு முதலான அணிகலன்கள் அணியக்கூடாது'' என்றெல்லாம் சிப்பாய்கள் மீது வெள்ளையர்கள் விதித்த நடை, உடை, பாவனை குறித்த கட்டுப்பாடுகளே வேலூர்க் கிளர்ச்சிக்குக் காரணமென்று கருதுவது அறிவீனம்.


ஒரு இராணுவத்தில் வீரர்கள் கலகம் செய்வதென்பது வெறும் ராணுவக் கட்டுப்பாட்டை மீறிய ஒழுங்கீனம் குறித்த பிரச்சினையல்ல. பாரிய சமூகக் காரணிகளின்றி, ஆளும் வர்க்கத்தின் படைப் பிரிவுக்குள்ளேயே ஒரு கலகம் தோன்றிவிடுவதில்லை. 1946 பம்பாய் கடற்படை வீரர்களின் எழுச்சி, சீக்கிய மக்கள் மீதான அரச பயங்கரவாதம் மற்றும் பொற்கே7õவில் இராணுவ நடவடிக்கைக்கையைத் தொடர்ந்து சீக்கிய ரெஜிமண்ட்டில் நடந்த கலகம், வியட்நாம் ஆக்கிரமிப்புப் போருக்கு எதிராக அமெக்க வீரர்களிடையே எழுந்த எதிர்ப்புணர்வு முதலிய "சிப்பாய்க் கலகங்கள்' இராணுவத் திற்குள் எழுந்த பிரச்சினைகளால் உருவானவை அல்ல; இராணுவத்திற்கு வெளியே சமூகத்தில் நிலவும் அரசியல் முரண்பாடுகளும் போராட்டங்களும் தோற்றுவிக்கும் உணர்வுதான் கலகம் செய்வதற்குரிய தார்மீக பலத்தையும் தைரியத்தையும் ஒரு சிப்பாய்க்கு வழங்குகின்றன.


1800 1801ஆம் முதல் இந்தியச் சுதந்திரப் போருக்குப் பின் தென்னிந்தியாவின் கணிசமான பகுதிகள் கம்பெனியின் பிடிக்குள் வந்துவிட்டன. அப்போது கம்பெனியின் இராணுவத்தில் சுமார் 50,000 இந்தியச் சிப்பாய்கள் இருந்தனர். இவர்களுக் கெல்லாம் வெள்ளையர்களை விடச் சம்பளம் குறைவு, சுபேதார் பதவிக்கு மேல் பதவி உயர்வும் இல்லை என்பதுடன் சிறு தவறுகளுக்குக்கூட மிகக்கடுமையாகத் தண்டிக்கப்பட்டார் கள். இத்தகைய பாகுபாடு குறித்த வெறுப்பு படைவீரர்களிடம் இருந்தது. வெற்றிகள் தந்த இறுமாப்பு வெள்ளையனிடம் சிப்பாய்களிடமோ அடிமைத்தனம் சுமத்திய அவமான உணர்ச்சி. இதுதான் கம்பெனியின் இந்திய இராணுவம். அதிலொரு பிரிவுதான் வேலூர்க் கோட்டை.


வேலூர்க் கோட்டையில் 1800 சிப்பாய்களும் 400 வெள்ளையர்களும் இருந்தனர். வேலூரில் இருந்த 23ஆவது ரெஜிமண்ட்டின் 2ஆவது பட்டாலியன் முழுவதிலும், முதல் பட்டாலியனின் 6 கம்பெனிகளிலும் திருநெல்வேலிச் சீமையிலிருந்து 1801ஆம் ஆண்டு சேர்க்கப்பட்ட வீரர்கள் நிறைய இருந்தனர். மற்ற பிரிவுகளில், தமது மன்னனின் தியாகத்தை இன்னமும் மறக்க இயலாத திப்புவின் இராணுவத்தைச் சேர்ந்த வீரர்களும் விரவியிருந்தனர்.


இந்த வீரர்கள் எவரும் கம்பெனி இராணுவத்தில் விரும்பிச் சேர்ந்தவர்கள் அல்லர். தெற்கத்திப் பாளையங்கள் கம்பெனியின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தவுடனேயே நிலவரி 100 சதம் உயர்த்தப்பட்டதால், விவசாயம் அழிந்து பஞ்சங்கள் தொடர்கதையாகி மக்களைத் துயரத்திலாழ்த்தின. இந்நிலையில் மக்கள் பலருக்கு அன்று கிடைத்த ஒரே வேலை வாய்ப்பு கம்பெனி ராணுவம்.


1801 ஆம் ஆண்டுதான் மருது சகோதரர்களும், ஊமைத்துரையும், சிவத்தையாவும் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டனர். அந்த மாபெரும் வீரர்களின் தியாகத்தையும், வெள்ளையர்களின் பயங்கரவாதத்துக்கு இலக்கான தங்களது உற்றார் உறவினர்களின் துயரத்தையும், நெல்லைச் சீமையிலிருந்து வந்த வீரர்கள் எப்படி மறந்திருக்க முடியும்? "மீசையை எடு' என்ற உத்தரவு எஞ்சியிருக்கும் அவர்களுடைய தன்மானத்தின் மீது தொடுக்கப்பட்ட இறுதித்தாக்குதல்.


திப்புவின் ஆறு மகன்களையும், எட்டு மகள்களையும் நூற்றுக்கணக்கான அவரது உறவினர்களையும் வேலூர்க் கோட்டையின் அரண்மனைகளில் சிறை வைத்திருந்தது கம்பெனி அரசு. சிறைப்பட்டிருந்த போதிலும் அரண்மனை வாழ்வு அவர்களைச் சுகபோகிகளாகவும், மந்தபுத்தி உடையவர்களாகவும் மாற்றி விடும் என்று எதிர்பார்த்தார்கள் வெள்ளையர்கள்.


ஆனால், திப்புவின் மூத்தமகன் ஃபத்தே ஹைதரும், மூன்றாவது மகன் மொஹியுதீனும், நான்காவது மகன் மொய்சுதீனும் சிறையிலிருந்தபடியே சிப்பாய்களின் ஆங்கிலேய எதிர்ப்புணர்ச்சியை அரசியல் ரீதியாகப் பட்டை தீட்டிக்கொண்டிருந்தனர். சிறை வைக்கப்பட்ட நாளிலிருந்தே தூந்தாஜி வாக்குடனும், மைசூரில் கிருஷ்ணப்பா நாயக் தலைமையில் வெள்ளையர்களை எதிர்த்துப் போராடிய பாளையக் காரர்களுடனும் தொடர்பு வைத்துக் கொண்டு, அவர்களது போராட்டத்தை ஊக்கப்படுத்தி வந்தார் ஃபத்தே ஹைதர்.


இதுபோக மைசூர்ப் பகுதியில் வெள்ளையர்களை எதிர்த்துப் போராடிய 3000 மக்கள் வேலூர்க் கோட்டையின் சுற்றுவட்டாரத்தில் குடியேறியிருந்தார்கள். திப்புவின் மைசூரைச் சேர்ந்த ஃபக்கீர்கள் எனப்படும் ஏழை இசுலாமியச் சாமியார்கள் வேலூர் வட்டாரங்களில் வெள்ளையர்களை எதிர்த்து "மீண்டும் திப்புவின் அரசை நிறுவுவோம்' என்று மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தும், பாடியும், பொம்மலாட்டம் நடத்தியும் வந்தனர். வேலூர்க் கோட்டை கிளர்ச்சியின் கொதிகலனாக மாறிக் கொண்டிருந்தது.


இந்நிலையில்தான் ஆங்கிலேயத் தளபதிகள் கிராடோக், அக்னியூ முதலியோர் "தலைப்பாகை, மீசை' குறித்த கட்டுப்பாடுகளைக் கொண்டு வருகின்றனர். இவை தம்மை ஐரோப்பிய அடிமைகளாக்கும் சதித்திட்டம் என சிப்பாய்கள் குமுறுகின்றனர்.


இந்த கர்னல் அக்னியூ என்பவன் தான் மருது சகோதரர்களையும், ஊமைத் துரையையும் நரவேட்டையாடியவன் என்பதால் இவன் மேல் சிப்பாய்கள் கூடுதலாக வெறுப்புக்கொண்டிருந்தனர். வேலூரிலும், வாலாஜாவிலும் இருந்த சிப்பாய்கள் வெள்ளையர்கள் அறிமுகப்படுத்திய தலைப்பாகைகளை அணிய மறுத்துக் கலகம் செய்கின்றனர். இதைத் தூண்டிவிட்ட சுபேதார் வேங்கடநாயர் (ஏற்கெனவே திப்புவிடம் பணிபுரிந்தவர்) கைது செய்யப்படுகிறார். மற்றவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். இரண்டு ஹவில்தார்களுக்கு 900 கசையடிகள் தரப்படுகின்றன. ஒரு தலைப்பாகை பற்றிய பிரச்சினைக்கு வெள்ளையர்கள் அளித்த இந்தக் கொடூர தண்டனைகள் சிப்பாய்களின் தன்மான உணர்ச்சியை மேலும் தூண்டி விடுகின்றன.


அந்தத் தன்மான உணர்ச்சி அரசியல் போராட்டமாக மாறுகிறது. "இனி, மீசையும் தலைப்பாகையும் பிரச்சினை யல்ல, கம்பெனி ஆட்சிக்கு முடிவு கட்டுவதுதான் பிரச்சினை' என்று மாறுகிறது சிப்பாய்களின் போராட்டம். ""வேலூர்க் கோட்டையைக் கைப்பற்றி எட்டு நாட்கள் வைத்திருந்தால் போதும், மீண்டும் திப்புவின் ஆட்சியை நிலைநாட்டலாம்'' என்று சிப்பாய்களும், திப்புவின் வாரிசுகளும் முடிவெடுக்கின்றனர். அதன் பின் சிப்பாய்களின் இரகசியக் கூட்டங்கள் நடக்கின்றன. சிப்பாய்கள் வாள் மற்றும் குர்ஆன் மீது சத்தியம் எடுத்துக்கொண்டு சபதத்தை நிறைவேற்றுவதாய் உறுதி எடுக்கின்றனர். இந்தச் செய்தி வேலூரில் மட்டுமல்ல, வாலாஜா, ஆற்காடு, சென்னை, ஜதராபாத் முதலிய இராணுவ முகாம்களில் இருக்கும் வீரர்களுக்கும் ரகசியமாக எடுத்துச் செல்லப்படுகிறது. ஏனைய முகாம்களில் இருக்கும் வீரர்கள் வேலூர்க்கோட்டையின் வெற்றியைத் தெரிந்து கொண்டதும் கிளர்ச்சி செய்ய வேண்டும் என முடிவு செய்யப் படுகிறது.


சுபேதார் ஷேக் ஆதமும், ஜமேதார் ஷேக் ஹுசைனும் சிப்பாய்களின் தலைவர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். 1806 ஜூன் 17 அன்று எழுச்சியைத் தொடங்க வேண்டும் என நாள் முடிவு செய்யப்படுகிறது. ஆனால் இந்தத் திட்டம் முஸ்தபா எனும் துரோகிச் சிப்பாயின் மூலம் வெள்ளையர் களுக்குக் கசிந்து விடுகிறது. வெள்ளையர்கள் அதை நம்பவில்லை. என்றாலும் பாதுகாப்பு கருதி கிளர்ச்சிச் தலைவர்கள் திட்டத்தை ஜூலை 10 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கிறார்கள். இந்தத் தள்ளி வைப்பு ஏனைய முகாம்களி லிருந்த வீரர்களுக்குத் தெரியாததால் ஜூன் 17 அன்று திட்டமிட்டபடி எழுச்சி தொடங்காதது அவர்களிடம் விரக்தி யையும் ஏற்படுத்தியிருந்தது.



இருப்பினும், ஜூலை 10 ஆம் தேதி கிளர்ச்சி வெடித்தது. 9ஆம் தேதி இரவு அமைதியாக இருந்ததால் படை முகாமைச் சுற்றிப்பார்க்கும் பொறுப்பை வெள்ளைத் தளபதிகள் இந்திய அதிகாரிகளிடமே ஒப்படைத்தனர். வேலூர்க் கிளர்ச்சியில் சிப்பாய்கள் மட்டுமல்ல, கம்பெனிப் படையின் இந்திய அதிகாரிகளும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆயுதக் கிடங்கைக் காவல் காத்துநின்ற வெள்ளைக்கார வீரர்களைக் கொன்று ஆயுதங்களைக் கைப்பற்றி அதிகாலை 2 மணிக்கு கிளர்ச்சியைத் தொடங்குகின்றனர் சிப்பாய்கள். பின்னர் வெள்ளையர்களின் குடியிருப்புக்களை நோக்கிச் சுடத் தொடங்குகின்றனர். அத்தகைய சூழ்நிலையிலும் பெண்கள், குழந்தைகளின் மீது சிப்பாய்களின் விரல் கூடப்படவில்லை. 14 அதிகாரிகள் உட்பட 150க்கும் மேற்பட்ட வெள்ளையர்கள் இந்தியச் சிப்பாய்களால் கொல்லப்பட்டனர். அவர்களில் வேலூர்க் கோட்டையின் ஆணை அதிகாரி கர்னல் பான்கோர்ட்டும், லெப்டினண்ட் கர்னல் கெராஸ்ஸூம் முக்கியமானவர்கள். மீதமிருந்த வெள்ளையர்களில் பலர் படுகாயமடைந்தனர். சிலர் கோட்டை யின் தடுப்புச் சுவரருகே பதுங்கிக் கொண்டனர்.


கிளர்ச்சி திட்டமிட்டபடி தொடங்கியவுடனே, வெள்ளையர் களின் கொடி இறக்கப்பட்டு திப்புவின் கொடி கோட்டையில் ஏற்றப்படுகிறது. வீரர்கள் திப்புவின் மகனை ""வாருங்கள் நவாப்! வாருங்கள், அச்சமின்றி அரியணை ஏறுங்கள்'' என்று அறைகூவினர். ஆனாலும் இந்தச் சுதந்திரப் பிரகடனம் நெடுநேரம் நீடிக்கவில்லை. அதிகாலை ஆறு மணிக்கே வேலூர் கிளர்ச்சி குறித்த செய்தி அருகில் 14 மைல் தொலைவில் இருந்த ஆற்காட்டை எட்டிவிட்டது. அங்கு ஆணை அதிகாரியாக இருந்த கர்னல் கில்லெஸ்பி பெரும் படையுடன் காலை எட்டு மணிக்கு வேலூர்க் கோட்டைக்குள் நுழைந்துவிட்டான். எதிர்த்தாக்குதல் இவ்வளவு சீக்கிரம் இருக்கும் என்பதைச் சிப்பாய்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் அணிதிரண்டு தயாராவதற்குள் கில்லெஸ்பியின் படைகள் பயங்கர வாதத்தைக் கட்டவிழ்த்துவிட ஆரம்பித்து விட்டன.


வேலூர்க் கோட்டையைப் பிடித்து எட்டு நாட்கள் வைத்திருக்கத் திட்டமிட்டிருந்த சிப்பாய்கள், அதனை எட்டு மணிநேரம் கைப்பற்றி வைத்திருப்பதற்கே தங்கள் இன்னுயிரைத் தரவேண்டியிருந்தது. சில சிப்பாய்கள் தங்கள் முதன்மை நோக்கத்தை மறந்து சூறையாடலில் ஈடுபட்ட போதும், சில சிப்பாய்கள் கோட்டையை விட்டு வெளியேறிய போதும், பல சிப்பாய்கள் சுதந்திர ஆவேசத்துடன் சாகும் வரையிலும் போரிட்டனர். அவர்களைச் சுட்டுக்கொன்றும், தூக்கிலேற்றியும், பீரங்கி வாயில் வைத்துச் சிதறடித்தும் மகிழ்ந்தன வெள்ளைப் படைகள்.


அந்தக் கொடூரத்தை ஆர்தர் சி.ஃபாக்ஸ் எனும் மாஜிஸ்திரேட் குதூகலத்துடன் பின்வருமாறு விவரிக்கிறான்:


""சிப்பாய்களைப் பீரங்கிகளால் சிதறடித்து மரண தண்டனையை நிறைவேற்றியது மிக ஆழமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. தண்டனை நிறைவேற்றும் இடத்திற்கு ஏராளமான பருந்துகள் வந்தன; அந்த ரத்தக் களறியான விருந்திற்காகவே ஆவலு டன் காத்திருந்ததுபோல் சிறகடித்துக் கிறீச்சிட்டன; பிறகு பெருத்த வெடியோசை எழுந்து அவர்களது உடல்கள் துணுக்குகளாகச் சிதற, அந்தத் துணுக்குகள் தரையைத் தொடுவதற்கு முன் பாய்ந்து கொத்திச் சென்றன, பல கழுகுகள். பணியில் இருந்த உள்நாட்டுத் துருப்புகளும் தண்டனையைப் பார்க்கத் திரண்டிருந்த கூட்டமும் இந்தக் காட்சியைப் பார்த்துப் பீதியில் அலறினார்கள்.''


இந்து, முசுலீம், தமிழன், தெலுங்கன், கன்னடியன், மலையாளி என்ற பேதமின்றி, "வெள்ளையர்களை வெளியேற்றவேண்டும்' என்ற உயரிய குறிக்கோளுக்காகக் களப்பலியான சுமார் 800 சிப்பாய்களின் குருதி வேலூர்க் கோட்டை அகழியில் கலந்தது. விடுதலைத் தாகத்திற்காகத் தமது குருதியைத் தாரை வார்த்த அந்த வீரர்களால் வேலூர்க் கோட்டை அதிர்ந்து சிவந்தது.



1799இல் கட்டபொம்மன் தூக்கில் தொடங்கி, 1800 1801ஆம் ஆண்டு களில் கிளர்ந்தெழுந்த தென்னிந்தியச் சுதந்திரப் போரின் இறுதி மூச்சு வேலூர்க் கோட்டையில் அடங்கியது. அணைவதற்கு முன் பிரகாசமாய் மூண்டெழுந்த அந்தத் தீ தணிந்தது. ஆயினும் அரை நூற்றாண்டுக்குப் பின் மீரட்டில் மூண்டெழுவதற்காக உள்ளே கனன்று கொண்டிருந்தது கங்கு.


சாத்தன்




Friday, January 19, 2007

சுதந்திரப் போரின் தமிழகக்களம்


""நானும் உழுது விதைக்கும்போது அவன்

தானும் உழவுக்கு வந்தானோ?

உழவு துறைக்கு வந்தானோ நம்மள்

உழவெருதுகள் மேய்த்தானோ?

களைமுளைகளெடுத்தானோ? இப்போ

கஞ்சித் தண்ணிக்குக் கொடுத்தானோ?

சனமோ? சாதியோ?

கும்பினியான்நம்மள்

சம்மந்தக்காரனோ கும்பினியான்

மனதுபோல நடப்பானோ? நம்மள்

மச்சானோ? தம்பி கிச்சானோ?"


கட்டபொம்மு வரலாறு' எனப்படும் கதைப் பாடலில் இருந்து.


1800ஆம் ஆண்டு. திப்பு தோற்கடிக்கப்பட்டு, கட்டபொம்மனும் தூக்கிலேற்றப்பட்டு விட்டார். திருநெல்வேலிச் சீமையில் அனைத்துப் பாளையங்களும் கலைக்கப்பட்டு விட்டன. நவாபை பொம்மையாக வைத்துக் கொண்டு வெள்ளையர்களின் இராணுவம் கொடூரமான அடக்கு முறைகளின் மூலம் நாடாண்ட காலம்.


நெல்லை வீழ்ந்த போதிலும், தென்னிந்தியாவில் பரவலாக கிளர்ச்சித் தீ முன்னிலும் தீவிரமாகக் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. கன்னட மராத்தியப் பகுதியில் தூந்தாஜி வாக், மேற்கு மைசூரில் கிருஷ்ணப்பா நாயக், மலபாரில் கேரளவர்மா, கோவை வட்டாரத்தில் கானி ஜ கான் மற்றும் தீரன் சின்னமலை, திண்டுக்கல்லில் கோபால நாயக்கர், இராமநாதபுரத்தில் மைலப்பன், சிவகங்கையில் சின்ன மருது, பாளைச்சிறையில் இருந்த ஊமைத்துரை மற்றும் சிவத்தையா ஆகிய தலைவர்கள் ஒன்றிணைந்த போராட்டத்தை துவக்கினார்கள். பழனியில் இத்தலைவர்களின் தூதர்கள் கோபால நாயக்கர் தலைமையில் கூடிப் பேசினார்கள். விருப்பாட்சியில் தெற்கத்திச் சீமையின் சுமார் 3000 கிராமங்களின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி வெள்ளையர்களை விரட்டுவதற்குச் சபதம் எடுத்தார்கள். இந்த அறைகூவல் கிராமங்கள் தோறும் பனையோலை மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. தீபகற்பக் கூட்டிணைவு உருவாகியது. மக்கள் திரள் பங்கேற்ற முதல் சுதந்திரப்போர் தொடங்கியது!


ஆங்கிலேயர்களின் கண்காணிப்பு அடக்குமுறையை மீறி தமிழகத்திலிருந்து தூதர்கள் பலர் மலபாருக்கும், மைசூருக்கும், மராத்தியத்திற்கும் சென்று வந்தார்கள். உண்மையில் அவை ஒவ்வொன்றும் வீரம் நிறைந்த சாகசப் பயணங்கள். காவிரியை மையப்படுத்தி தென்னிந்தியாவில் உருவான இந்தப் புரட்சி, தூந்தாஜி வாக் மூலம் மன்னன் சிந்தியாவையும் இணைத்துக் கொண்டு கங்கைக் கரையையும் தொட விழைந்தது. இவையெதுவும் கற்பனையோ மிகையோ அல்ல. அத்தனையும் ஆங்கிலேய இராணுவக் குறிப்புக்களில் பதிவாகி இருக்கின்றன.


தூந்தாஜி வாக்கும், சின்ன மருதுவும் போர்க்காலங்களில் வீரர்களையும், குதிரைப்படையையும் பரிமாறிக் கொள்ள முடிவு செய்கின்றனர். தூந்தாஜி வாக்கின் படையில் கணிசமான அளவு தமிழ் வீரர்கள் இருந்ததாக வெள்ளையர்களே பதிவு செய்திருக்கின்றனர். முதலில் தென்னிந்தியாவின் மையத்திலிருந்த கோயம்புத்தூர் கோட்டையை கைப்பற்றுவதெனவும், துங்கபத்திரைப் போரை முடித்துக் கொண்டு துந்தாஜி வாக் தமிழகத்தின் வட பகுதியில் வெள்ளையரைத் தாக்குவதென்றும், அதன் பிறகு எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் புரட்சியைத் தொடங்குவதெனவும் தீபகற்பக் கூட்டிணைவின் தலைவர்கள் முடிவு செய்கின்றனர்.


ஆனால் உளவாளிகள் மற்றும் துரோகிகள் மூலம் தகவல் அறிந்த ஆங்கிலேயர்கள் கோவைத் தாக்குதலை முறியடித்து 42 போராளிகளைத் தூக்கிலேற்றுகின்றனர். வடக்கே பல்லாயிரக்கணக்கில் மக்களை அணி திரட்டிப் போராடிய தூந்தாஜி செப் 1800 போரில் கொல்லப்படுகிறார். எனவே தமிழகத்தின் வீரர்கள் பெரிதும் எதிர்பார்த்த தூந்தாஜியின் புகழ் வாய்ந்த குதிரைப்படை தமிழகத்திற்கு வரமுடிய வில்லை. மலபாரில் கேரளவர்மாவின் தளபதிகள் மற்றும் ஏனைய தலைவர்களும் கொல்லப்படுகின்றனர்.


கிளர்ச்சியாளர்களின் கூட்டணி உடைந்து போனதாக வெள்ளையர்கள் எக்காளமிட்ட நேரம். அந்த எக்காளத்தை அடக்க சிங்கம் போல கர்ச்சித்து எழுந்தார்கள் மருது சகோதரர்கள். 18001801 ஆண்டுகளில் தமிழகத்தில் நடந்த அந்தச் சுதந்திரப் போரில்தான் வெள்ளையர்கள் அதுவரை காணாத உயிரிழப்பைச் சந்தித்தனர். 1857க்கு முந்தைய காலனியாதிக்க வரலாற்றில் இந்த அளவுக்கு வெள்ளை உயிர்கள் வேறெங்கேயும் பலியானதில்லை என்று பதிவு செய்திருக்கிறான் வெள்ளை ராணுவ அதிகாரி ஜேம்ஸ் வெல்ஷ்.


1801 பிப்ரவரி இரண்டாம் நாளன்று, பாளையங்கோட்டைச் சிறையிலிருந்து ஊமைத்துரையை விடுதலை செய்யும் சாகசத்திலிருந்து தொடங்குகிறது அந்த வீர வரலாறு.


முழுமையான கேட்கும் திறனோ, பேசுந்திறனோ அற்ற, கட்டபொம்மனின் தம்பி குமாரசாமிக்கு மக்கள் அன்புடன் சூட்டிய பெயர் ஊமைத்துரை. ஊமைத்துரையின் வீரத்தையும் போர்த்திறனையும் மக்களைத் திரட்டும் ஆற்றலையும் மக்களிடம் அவர் பெற்றிருந்த பெருமதிப்பையும் கண்டு வெள்ளையர்களே அதிசயித்திருக்கிறார்கள். சுமார் 24 சைகைகள் மூலமே தன் வீரர்களைப் போர்க்களத்தில் வழிநடத்திய ஊமைத்துரை அடிக்கடி வைக்கோலைப் பிரித்து ஊதுவாராம். வெள்ளையர்களையும் அப்படி ஊதவேண்டுமென்பது இதன் பொருள்.


பாளையங்கோட்டை சிறையிலிருந்த ஊமைத்துரையையும் கட்டபொம்மனது மற்றொரு தம்பியான சிவத்தையாவையும் விடுவிக்க மருது சகோதரர்கள் எடுத்த முயற்சியொன்று ஏற்கெனவே தோல்வியடைந்திருந்தது. விடுவிக்க வந்த சிவகங்கை வீரர்கள் பிடிபட்டுத் தூக்கிலேற்றப்பட்டனர். பாஞ்சாலங்குறிச்சி வீரர்களால் திட்டமிடப்பட்ட இந்த இரண்டாவது முயற்சியோ வெள்ளையருக்குத் தரப்பட்ட கவித்துவமான பதிலடி.



முதல் பாஞ்சாலங்குறிச்சி போரில், எந்த திருச்செந்தூர் திருவிழாவைப் பயன்படுத்திக் கொண்டு வெள்ளையர்கள் முற்றுகையிட்டார்களோ, அதே திருச்செந்தூரின் பக்தர்களாகவும், விறகு சுமப்போராகவும் வெற்றிலை, இலை விற்போராகவும் வேடமிட்ட வீரர்கள் கோட்டையைச் சுற்றி வந்தனர். கோட்டைக்குள் இருப்பவர்கள் இறந்தோருக்கு திதி கொடுக்க வேண்டுமெனச் சொல்லி அதிகாரிகளிடம் அனுமதி பெற்று "வியாபாரிகளையும்' உள்ளே அழைக்கின்றனர். பொருள்களின் கட்டுக்குள்ளே இருந்த ஆயுதங்கள் கைமாறுகின்றன. வெள்ளையதிகாரிகளைத் தாக்கிவிட்டுத் தப்புகிறார்கள் பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள்.


ஆங்கிலேயர்களால் தரைமட்டமாக்கப்பட்டு, உழுது, எருக்கு விதைக்கப்பட்ட பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை ஆறே நாட்களில் அதிசயம் போல் எழுந்து நின்றது. தலித் மக்கள், மீனவர்கள் என்று எல்லாப் பிரிவு உழைக்கும் மக்களையும் திரட்டி ஊமைத்துரையும், சிவத்தையாவும் மக்களோடு மக்களாய் மண் சுமந்து இரவும் பகலும் அந்தக் கோட்டையைக் கட்டினார்கள். வெள்ளையனுக்கு எதிராக மக்களைத் திரட்டும் கலையில் தம்பிகள் அண்ணனை விஞ்சினார்கள். சிவத்தையா பாஞ்சாலங்குறிச்சியின் அரசனாக அறிவிக்கப்பட்டார்.


கோட்டை கட்டிமுடிக்கப்பட்ட மறு கணமே வெள்ளையர்கள் மீது போர்ப் பிரகடனம் செய்யப்பட்டது. நெல்லைச் சீமையில் வெள்ளையர்களின் நேரடி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பாளையங்கள் பாஞ்சாலங்குறிச்சி வீரர்களால் மீண்டும் கைப்பற்றப்பட்டன. தூத்துக்குடித் துறைமுகமும் கைப்பற்றப்படுகிறது. அங்கிருந்த வெள்ளை அதிகாரி மேஜர் பானர்ட்டின் மனைவி உயிர்ப்பிச்சை கேட்டதால் யாரையும் கொலை செய்யாமல் மன்னித்து அனுப்புகிறார் ஊமைத்துரை. கிளர்ச்சியாளர்களின் குடிவழியையே அழித்து வந்த வெள்ளையர்களிடம் எக்காலத்திலும் காணக்கிடைக்காத பண்பு இது. கர்னல் மெக்காலே தலைமையில் பாஞ்சாலங்குறிச்சியை அழிக்க வந்த படையை குலசேகர நல்லூரில் மறித்துத் தாக்கி ஓடவைத்தார் ஊமைத்துரை. 50 நாட்கள் கழித்து கர்னல் அக்னியு தலைமையில் பெரும் படையும் பீரங்கிகளும் வந்த பிறகே அந்தக்கோட்டை தன் இறுதி மூச்சை விடநேர்ந்தது. கோட்டைக்குள்ளேயும் வெளியேயும் வேல் கம்பையும் வாளையும், துப்பாக்கியையும் பிடித்தவாறு 1500 பிணங்கள் கிடந்தததாகவும், பிணக்குவியலுக்குள்ளே இருந்தும் பாஞ்சை வீரர்கள் தங்களை வாட்களுடன் தாக்கியதாகவும் வெள்ளையர்கள் அச்சத்துடன் குறிப்பிடுகின்றனர்.


குற்றுயிராய்த் தப்பிய ஊமைத்துரையை மக்கள் காப்பாற்றுகின்றனர். எஞ்சிய வீரர்களுடன் ஊமைத்துரையும், சிவத்தையாவும் மே 28ஆம் தேதி கமுதிக்கு வந்து சேருகிறார்கள். சின்ன மருதுவும், பெரும் திரளான மக்களும் அவர்களை வரவேற்று சிறுவயலுக்கு அழைத்துச் செல்கின்றனர்.



மருது ""ஐரோப்பியர்களைக் கண்ட இடத்தில் அழித்து விடுங்கள்'' என்று மக்களுக்கும் ஆங்கில இராணுவத்தின் இந்தியச் சிப்பாய்களுக்கும் பின்னாளில் பகிரங்கமான பிரகடனத்தை வெளியிடும் சின்ன மருது ஊமைத்துரையை வரவேற்கிறார். இதன் விளைவாக வெள்ளையரோடு ஏற்பட இருக்கும் போரையும் மிகுந்த அலட்சியத்துடன் வரவேற்கிறார். மருதிருவரின் இந்த வீரத்திற்கு நீண்ட பாரம்பரியமே இருக்கிறது.


______________________________________________


மருதிருவர் என்று அழைக்கப்படும் மருது சகோதரர்கள் பரம்பரை ஆட்சியுரிமை பெற்ற பாளையக்காரர்கள் அல்லர். அவர்கள் திறமையாலும், உழைப்பாலும், போராட்டத்தாலும், மக்களின் அன்பினாலும் உருவெடுத்த உண்மையான மக்கள் தலைவர்கள். இராமநாதபுரம், நரிக்குடிக்கு அருகே முக்குளம் எனும் கிராமத்தில் மொக்கபழனியப்பன் சேர்வை எனும் சாதாரணப் படைவீரனுக்கும் பொன்னாத்தாள் எனும் எளிய பெண்மணிக்கும் பிறந்த மருது சகோதரர்களை அவர்களுடைய தந்தை சிவகங்கை அரசர் முத்து வடுகநாதரிடம் வேலைக்குச் சேர்த்து விடுகிறார். ஆரம்பத்தில் மன்னது குதிரைகளையும், வேட்டை நாய்களையும் பராமரிக்கும் எளியவேலைகளை மருதிருவர் செய்து வருகின்றனர்.


இந்நிலையில் தமிழகத்தில் கட்டாய வரி வசூல் கொள்ளை நடத்தி வந்த ஆடம்பர சுகபோகியான ஆற்காட்டு நவாப் வரி வசூலை ஆங்கிலேயருடன் பங்கிட்டுக் கொள்வதாக ஒப்பந்தம் செய்து கொண்டு அவர்களது இராணுவத்தைப் பயன்படுத்துகிறான். கொள்ளையில் தங்கள் பங்கை அதிகரிப்பதற்காக கிழக்கிந்தியக் கம்பெனிக்கான வரி பல இடங்களில் 100 சதவீதம் உயர்த்தப்படுகிறது.


இப்படித்தான் ஜோசப் ஸ்மித் தலைமையிலான கம்பெனிப்படை 1772இல் இராமநாதபுரத்தைக் கைப்பற்றுகிறது. அடுத்து சிவகங்கை. வெள்ளையன் தாக்குதலை எதிர்பாராத அரசர் முத்து வடுகநாதர் காளையார் கோவில் போரில் கொல்லப்படுகிறார். சிவகங்கைச் சீமையின் வீரவரலாற்றில் முதல் களப்பலியாகிறார். அவரது பட்டத்தரசி வேலுநாச்சியார், மகள் வெள்ளச்சி, அமைச்சர் தாண்டவராயன் பிள்ளை, மற்றும் மருதிருவரும் விருப்பாட்சிக்குத் தப்பிச் செல்கின்றனர்.


விருப்பாட்சியை உள்ளடக்கிய திண்டுக்கல் பகுதி அப்போது ஹைதரலியின் ஆட்சியில் இருந்தது. அமைச்சர் தாண்டவராயன் சிவகங்கையை மீட்பதற்கு ஹைதரிடம் உதவி கோருகிறார். சிவகங்கை மட்டுமல்ல ஏனைய பாளையங்களையும் விடுதலை செய்வதாக ஹைதரும் உறுதியளிக்கிறார். இதனிடையில் அமைச்சர் மரணமடைய பாளையத்தை மீட்கும் பொறுப்பு மருது சகோதரர்களிடம் வருகின்றது. இந்தப் போராட்டத்தினூடாகத்தான் இவர்கள் காலனியாதிக்க எதிர்ப்பில் உறுதியடைகின்றனர். நவாப்பின் ஆட்சியை எதிர்த்துக் கலகம் செய்ய சிவகங்கை மக்களைத் திரட்டுகிறார் சின்ன மருது.


இராமநாதபுரம், சிவகங்கை மக்கள் கிளர்ச்சி செய்கின்றனர். மருதிருவரின் தலைமை போராட்டத்தைத் தீவிரப்படுத்துகிறது. இதேகால கட்டத்தில், 1780ஆம் ஆண்டு வெள்ளையர்கள் மீது படையெடுக்கிறார் ஹைதர். ஹைதரின் திண்டுக்கல் படைத்தளபதி சையத் சாகிபு அளித்த சிறு படையின் உதவியுடன் மருதிருவரும் சிவகங்கையை மீட்க போர் தொடுக்கின்றனர். சிவகங்கை மீட்கப்படுகிறது. வெள்ளச்சி அரசியாகவும், பெரியமருது தளபதியாகவும், சின்ன மருது அமைச்சராகவும் பதவியேற்கின்றனர். மருதிருவரின் வீரம் மக்களிடையே புகழாகவும் செல்வாக்காகவும் பரவத் தொடங்குகிறது.


ஆத்திரம் கொண்ட நவாப் கம்பெனியின் உதவியுடன் சிவகங்கை மீது படையெடுக்கிறான். 1783இல் கர்னல் புல்லர்டன் தலைமையிலும், 1789இல் ஜேம்ஸ் ஸ்டூவர்ட் தலைமையிலும் கம்பெனிப் படைகள் சிவகங்கையை ஆக்கிரமிக்க முயன்றன. இத்தாக்குதல்களின் போது தற்காலிகமாகப் பின்வாங்கிய மருதிருவர் கம்பெனிப் படைகள் அகன்றதும் தமது பாளையத்தை மீண்டும் கைப்பற்றுகின்றனர். இறந்து போன மன்னர் முத்துவடுகநாதன் மகள் வெள்ளச்சியை, அவளது தந்தை வழி உறவினரான வெங்கம் பெரிய உடையத் தேவருக்கு மணம் செய்து கொடுத்து, அவரையே சிவகங்கையின் அரசராகவும் ஆக்குகின்றனர்.


இக்காலகட்டத்தில் மாவீரன் திப்புவை ஒழிப்பதற்குக் கவனம் செலுத்தி வந்த கம்பெனி சிவகங்கையோடு முரண்பாடுகளை வளர்த்துக் கொள்ள விரும்பவில்லை. மருதிருவரிடம் ஒத்துப் போகுமாறு நவாபையும் அறிவுறுத்தியது


இப்படி வெள்ளையர்கள் மற்றும் ஆற்காட்டு நவாபின் சூழ்ச்சிகள், படையெடுப்புக்களை முறியடித்து சிவகங்கையைக் காப்பாற்றிய மருதிருவர் 1790 முதல் அமைதியாக ஆட்சி புரிந்தனர்.


""சின்னமருது எளியவர்; செழிப்பான நாட்டின் உண்மையான மக்கள் தலைவர்; அனைவரிடமும் வேறுபாடின்றி பழகும் இயல்பினர்; அவரது தலையசைப்பையே சட்டமாகக் கருதி அதற்குக் கீழ்ப்படிய மக்கள் தயாராக இருந்தனர்; தனக்கென ஒரு மெய்க்காப்பாளனைக் கூட வைத்துக் கொள்ளாத அவரை 1795 இல் அவரது சிறுவயல் அரண்மனையில் சந்திக்கச் சென்றேன். எளிதில் மக்கள் சென்று வரும் வகையில் அமைந்திருந்தது அவ்வரண்மனை. அவருக்குக் கடவுளின் அருள் கிட்டவேண்டும் என மக்கள் வேண்டியதையும் கேட்டறிந்தேன்... மருதிருவர் நினைத்திருந்தால் வெள்ளையர்களுடன் சமரசமாகப் போயிருக்கலாம். அவர்களுக்கு நாங்கள் எந்தக்குறையும் வைக்கவில்லை, எதனால் அவர்கள் எங்கள் மீது சினங்கொண்டு போர் தொடுத்தார்கள் என்பதும் எனக்கு விளங்கவில்லை'' என்று ஆங்கிலேயத் தளபதி ஜேம்ஸ் வெல்ஷ் தனது நூலில் குறிப்பிடுகின்றான்.



1790களில் வெள்ளையர்களோடு சிவகங்கைப் பாளையத்துக்குத் தீவிரமான முரண்பாடுகள் இல்லையென்ற போதிலும், வெள்ளையர்களின் ஆக்கிரமிப்பு நாடெங்கும் அதிகரித்து வருவதை மருதிருவரால் சகித்துக் கொள்ள இயலவில்லை. கட்டபொம்மனைப் போராடத் தூண்டுகிறார் சின்ன மருது. 500 வீரர்களை அனுப்பி உதவுகிறார். தென் தமிழகத்தில் கூட்டணியை உருவாக்கப் பாடுபடுகிறார். இராமநாதபுரம் கூட்டிணைவிற்குத் தலைமையேற்றதோடு, கட்டபொம்மனைத் திருநெல்வேலிக் கூட்டிணைவுக்குத் தலைமை தாங்கவும் வைக்கிறார்கள் மருது சகோதரர்கள்.


1801 திப்பு சுல்தான், கட்டபொம்மன், தூந்தாஜி வாக் அனைவரும் கொல்லப்பட்டு விட்ட காலம். தீபகற்பக் கூட்டிணைவு பெரிதும் தளர்ந்து இருந்த நேரத்தில் மருதிருவர் கிளர்ச்சிக்குத் தலைமையேற்கின்றனர். இராமநாதபுரத்தில் வெள்ளையர்களை எதிர்த்துக் கிளர்ச்சி செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த மைலப்பன் அங்கிருந்து தப்பி மருதிருவரிடம் தஞ்சமடைகிறார். அதே போல பாஞ்சாலங்குறிச்சியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து மே28 அன்று ஊமைத்துரையும் சிவத்தையாவும் தம் வீரர்களுடன் சிவகங்கைக்கு வருகின்றனர்.


சிவகங்கையை மையமாகக் கொண்டு, தென் தமிழகமெங்கும் வெள்ளையருக்கெதிரான போராட்டத் தீ பரவத்தொடங்குகிறது. அஞ்சி நடுங்கிய துரோகி தொண்டைமான் கவர்னருக்குக் கடிதம் எழுதுகிறான்: ""சின்ன மருது இப்போது சிவத்தையாவுடன் கூட்டு சேர்ந்து கொண்டு நாட்டில் கலகத்தை விளைவித்துக் கொண்டிருக்கிறான். திருமாவலூர், நத்தம், மேலூர் முதலிய கோட்டைகளைக் கைப்பற்றியுள்ளான். ஆங்கில அரசுக்கு உரிமையான இராணுவக் கிடங்குகளைத் தாக்கித் தளவாடங்களைக் கொள்ளையடித்துள்ளான். மேலும் ஒரு கிளர்ச்சிப் படையை இராமநாதபுரத்துக்கு அனுப்பியுள்ளான். எங்கு நோக்கினும் கலகம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது.'' தொண்டைமான் இந்தக் கடிதத்தை எழுதிக் கொண்டிருந்த போதே சின்ன மருதுவின் மகன் சிவத்ததம்பி தலைமையிலான படை அறந்தாங்கியைக் கைப்பற்றுகிறது. புதுக்கோட்டையும் பறிபோய்விடுமோ என்ற பீதியில் அலறுகிறான் தொண்டைமான்.


ஆனால் ""துரோகிகளேயானாலும் நம் நாட்டவர்கள்'' என்று புதுக்கோட் டையை விட்டு விட்டு, கம்பெனியின் நேரடி ஆட்சிப் பகுதிகளை மட்டும் தாக்குகிறது கிளர்ச்சிப்படை. தஞ்சை மாவட்டத்தில் நுழைந்து நாகூர் வரை செல்கிறது.


வடக்கே சத்தியமங்கலம் முதல் தெற்கே நெல்லை மாவட்டம் களக்காடு வரை, இப்போர் நடைபெற்றது. ஊமைத்துரை, சிவத்தையா தலைமை யிலான படை மதுரை திண்டுக்கல் பகுதியிலும், மைலப்பன், மருதிருவரின் தலைமையிலான படைகள் இராமநாதபுரம், சிவகங்கைப் பகுதியிலும் போர் புரிந்தனர். வெள்ளையர்களிடமிருந்து பல பகுதிகள், கோட்டைகள் கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்டன. கிளர்ச்சியாளர்களின் கொரில்லாப் போர் முறையினால் வெள்ளையர்களின் படைவரிசை பல இடங்களில் துண்டிக்கப்பட்டது. "திப்புவையே வென்று விட்டோம்' என்ற ஆணவத்துடன் வந்த கம்பெனிப்படை பல தளபதிகளை இழந்து மூக்கறுபட்டது.


அடிபட்டுக் கந்தலாகி, தட்டுத் தடுமாறி இராமநாதபுரம் வந்து சேர்கிறது கம்பெனிப் படை. சிவகங்கைப் பாளையத்திலிருந்து ஒரு நாயின் ஆதரவைக்கூடப் பெறமுடியாது என்பதைப் புரிந்து கொண்ட கர்னல் அக்னியூ, நாயினும் கீழான பிறவிகளை தேடிக் கண்டுபிடிக்க ஒரு அறிக்கை விடுகிறான். ""சின்ன மருது பரம்பரைப் பாளையக்காரன் அல்ல; சிவகங்கை மன்னனிடம் அடிமையாக வேலைக்குச் சேர்ந்தவன்... எனவே, சிவகங்கைப் பட்டத்துக்கு உரிமை உண்டு என்று நினைப்பவர்கள் எவரும் என்னைச் சந்தித்தால், இந்தக் கிளர்ச்சி ஒடுக்கப்பட்ட பின் அவர்களுக்கு அரியணை வழங்கப்படும்.... மாறாக, மருதுவை யாரேனும் ஆதரித்தால் பாஞ்சாலங்குறிச்சி, விருப்பாட்சி போன்ற இடங்களில் மக்களுக்கு
நேர்ந்த கதிதான் ஏற்படும்'' என்று மிரட்டுகிறான்.


""உண்மையிலேயே அரியணைக்கு பாத்தியதை இருக்கவேண்டும் என்ற அவசியம் கூட இல்லை, அரியணைக்கு ஆசைப்படுகிறவன் யாராயிருந்தாலும் வா, பதவி தருகிறேன்'' என்கிறான் அக்னியூ. இப்படி ஆசைகாட்டி ஆள்பிடிக்க வேண்டிய அளவுக்கு மருதிருவருக்கு மக்கள் செல்வாக்கு இருந்ததை அக்னியூவின் அறிவிப்பு நிரூபிக்கிறது.


ஜூன் 12ம் தேதி இராமநாதபுரத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்புக்கு, தனது வரலாற்றுச் சிறப்பு மிக்க திருச்சி பிரகடனத்தின் மூலம் உடனே பதிலளிக்கிறார் சின்ன மருது.


--------------------------------------------------------------------



சின்னமருதுவின் திருச்சிப் பிரகடனம்


இதைக் காண்போர் அனைவரும் கவனத்துடன் படிக்கவும்


ம்பு தீபகற்பத்திலுள்ள ஜம்புத் தீவில் வாழும் அந்தணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள், முசல்மான்கள் முதலான அனைத்துச் சாதியார்க்கும் தெரியப்படுத்தும் அறிவிப்பு என்னவென்றால்,


மேன்மை தாங்கிய நவாபு முகமது அலி அவர்கள் முட்டாள்தனமாக ஐரோப்பியர்களுக்கு நம்மிடையே இடங்கொடுத்து விட்டதன் காரணமாக இப்போது அவர் ஒரு விதவைபோல் ஆகிவிட்டார். ஐரோப்பியர்களோ தங்களுடைய வாக்குறுதிகளை மீறி அவருடைய அரசாங்கத்தையே தங்களுடையதாக ஆக்கிக் கொண்டு நாட்டு மக்கள் அனைவரையும் நாய்களாகக் கருதி ஆட்சியதிகாரம் செய்து வருகிறார்கள். உங்களிடையே ஒற்றுமையும் நட்பும் இல்லாத காரணத்தினால், ஐரோப்பியரின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ள இயலாமல், உங்களுக்குள் ஒருவரை யொருவர் பழிதூற்றிக் கொண்டது மட்டுமின்றி, நாட்டையும் அந்நியரி டம் ஒப்படைத்து விட்டீர்கள். இந்த ஈனர்களால் இப்போது ஆளப்படும் பகுதிகளிலெல்லாம், மக்கள் பெரிதும் ஏழ்மையில் உழல்கிறார்கள்; சோற்றுக்குப் பதில் நீராகாரம்தான் உணவு என்று ஆகிவிட்டது. இப்படித் துன்பப்படுவது தெரிந்த போதிலும் எக்காரணங்களினால் இத்துன்பங்கள் ஏற்பட்டன என்பதைப் பகுத்தா ராயவும் புரிந்துகொள்ளவும் இயலாத நிலையில் மக்கள் இருக்கின்றனர்.


ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதாக இருந்தாலும் மனிதன் கடைசியில் செத்துத்தான் ஆகவேண்டும்... ஆதலால் பாளையங்களில் உள்ள ஒவ்வொருவரும் போர்க்கோலம் பூண்டு ஒன்றுபட வேண்டும். இந்த ஈனர்களின் பெயர்கள் கூட நாட்டில் மிஞ்சியிருக்காமல் செய்யவேண்டும். அப்போதுதான் ஏழைகளும் இல்லாக் கொடுமையால் அல்லல் படுவோரும் வாழ முடியும்.


அதே நேரத்தில் இந்த ஈனர்களுக்கு தொண்டூழியம் செய்து நாயைப் போல சுகவாழ்வு வாழ விரும்புகிறவன் எவனாவது இருந்தால் அத்தகைய பிறவிகள் ஒழித்துக் கட்டப்பட வேண்டும்...


ஆதலால்..... மீசை வைத்துக் கொண்டிருக்கும் நீங்கள் எல்லோரும், அதாவது இராணுவம் அல்லது மற்ற தொழில்களில் ஈடுபட்டிருக்கும் நீங்கள் அனைவரும் மற்றும் ஈனமான அந்நியன் கீழ்த் தொண்டு புரியும் சுபேதார்கள், அவில்தார்கள், நாயக்கர்கள், சிப்பாய்கள் மற்றும் போர்க் கருவிகளைப் பயன்படுத்தும் அனைவரும் உங்களுக்கு வீரமிருந்தால் அதைக் கீழ்க்கண்டவாறு நீங்கள் வெளிப்படுத்த வேண்டும்.


ஐரோப்பியர்களாகிய இந்த ஈனர்களை எவ்விடத்தில் கண்டாலும் கண்ட இடத்தில் அவர்களை அழித்து விடவேண்டும்... இந்த ஈனர்களுக்கு எவனொருவன் தொண்டூழியம் செய்கிறானோ அவனுக்கு இறந்தபின் மோட்சம் கிடையாது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன்... இதை ஏற்றுக் கொள்ளாதவன் வைத்திருக்கும் மீசை என்பது என்னுடைய அடி மயிருக்குச் சமமானது... இதனை ஏற்றுக் கொள்ளாதவனுடைய பிள்ளைகள் ஐரோப்பிய ஈனப்பிறவிகளுக்குத் தன்னுடைய மனைவியைக் கூட்டிக் கொடுத்தவன் பெற்ற பிள்ளைகள் ஆவார்கள். எனவே, உடம்பில் ஐரோப்பியனின் ரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள்!....


இதைப் படிப்பவர்களோ கேட்பவர்களோ இதில் கூறியிருப்பதைப் பரப்புங்கள்... எவனொருவன் இந்த அறிவிப்பை ஒட்டப்பட்ட சுவரிலிருந்து எடுக்கிறானோ அவன் பஞ்சமா பாதகங்களைச் செய்தவனாகக் கருதப்படுவான்... இப்படிக்கு,

மருது பாண்டியன்,


பேரரசர்களின் ஊழியன், ஐரோப்பிய ஈனர்களின் ஜென்ம விரோதி.

( 1801 ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் நாள் வெள்ளையர்களால் கைப்பற்றப் பட்ட இவ்வறிக்கை திருச்சிராப்பள்ளிக் கோட்டையில் ஒட்டப் பட்டிருந்தது. இங்கே மொழி பெயர்த்து சுருக்கித் தரப்பட்டுள்ளது).


------------------------------------------------------------------------------------------------


ஒரு பாளையத்தின் அரசுரிமைக்கு ஆசை காட்டுகிறான் அக்னியூ. மருதுவோ, தென்னிந்திய மக்கள் (ஜம்பு தீபகற்பம்), மற்றும் இந்துஸ்தானத்து மக்கள் (ஜம்புத் தீவு) அனைவரின் விடுதலைக்கு அறைகூவல் விடுகிறார். மக்களுக்குக் கொலை மிரட்டல் விடுக்கிறான் அக்னியூ. ""ஆயிரம் ஆண்டு வாழ்ந்தாலும் சாவு நிச்சயம், போராட வா'' என்று மக்களைத் தட்டி எழுப்புகிறார் மருது.


இந்திய வரலாற்றில் பிரிட்டிஷ் ஆட்சிக்கெதிராக மன்னர்களும் பாளையக்காரர்களும் நடத்திய காலனியாதிக்க எதிர்ப்பு விடுதலைப் போர்கள், தங்களது அரசுரிமையைப் பாதுகாத்துக் கொள்வது என்பதை மையப்படுத்தியே இருந்திருக்கிறது. முதன்முறையாக மருதுவின் அறிக்கை "நாட்டு விடுதலை' என்பதை மக்கள் நலனுடன் இணைத்துப் பேசுகிறது. சாதி,மத,மொழி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மக்களனைவரையும் காலனியாதிக்க எதிர்ப்புக்காக ஒன்றிணையக் கோரும் முதல் பிரகடனமும் இதுதான்.


மருது வெளியிட்ட தென்னிந்திய மக்களுக்கான பிரகடனம் அரசியல் மையமான திருச்சிக் கோட்டையிலுள்ள நவாப் அரண்மனையின் வாயிலிலும், இந்தியா முழுவதற்குமான பிரகடனம், நாடெங்கிலுமிருந்து பக்தர்கள் வந்து செல்லும் சிறீரங்கம் கோயிலின் மதிற்சுவரிலும் ஒட்டப்படுகின்றன. உண்மையில் இந்தப் பிரகடனம் தீபகற்பக் கூட்டிணைவு விடுத்த செயலுக்கான அறைகூவல். ""தீபகற்பக் கூட்டிணைவு ஆங்கிலேயப் பேரரசின் அமைதியையும் பாதுகாப்பையும் அழிக்கும் தன்மையுடையது; பேராபத்தினை விளைவிக்கக் கூடியது'' என்று குறிப்பிடுகிறது லண்டன் தலைமையகத்துக்கு இங்கிருந்து அனுப்பப்பட்ட பிரிட்டிஷ் இராணுவத்தின் ஆவணம்.


உண்மைதான். கிளர்ச்சி துவங்கிய பின் கிழக்குக் கடற்கரையின் எந்தத் துறைமுகத்திலும் கம்பெனியின் கப்பல்கள் சரக்குகளை இறக்க முடியாததால் அவை இலங்கைக்குத் திருப்பி விடப்பட்டன. வரிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட வளமான தஞ்சை மண்ணின் உழவர்களே கிளர்ச்சிப் படையுடன் இணைந்து கொண்டார்கள் எனும்போது, பிற பகுதி உழவர்கள் கிளர்ச்சிக்கு அளித்த ஆதரவைப் பற்றி விவரிக்கத் தேவையில்லை. ""கிளர்ச்சிக்காரர்களுடன் சேர்ந்து கொண்ட உழவர்களிடமிருந்து நெல்லைக் கொள்முதல் செய்யும் வியாபாரிகளுக்கு மரண தண்டனை'' என்று அறிவிக்கிறான் கும்பகோணம் கலெக்டர். பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தானியம் கொண்டு செல்வதைத் தடை செய்த கம்பெனி நிர்வாகம், அதிலும் கொள்ளை இலாபம் அடித்ததால், பஞ்சம் பாதித்த பகுதி மக்களும் திரள் திரளாகக் கிளர்ச்சியில் இணைந்தார்கள். வெறும் நாலரை லட்சம் மக்கட்தொகை கொண்ட சிவகங்கைப் பாளையத்திலிருந்து மட்டும் பல்லாயிரக் கணக்கான மக்கள் மருதுவின் படையில் இணைந்திருந்தார்கள். கம்பெனியின் உள்நாட்டுச் சிப்பாய்களும், நவாபின் சிப்பாய்களும் கிளர்ச்சிக்காரர்களை எதிர்த்துப் போரிட மறுத்ததால், மேலும் மேலும் வெள்ளைப் படைகளைக் குவிக்க வேண்டிய கட்டாயம் கம்பெனிக்கு ஏற்பட்டது.


அப்போது கர்னல் அக்னியூ மேலிடத்திற்கு எழுதிய கடிதங்களில் தோல்வி ஏற்படுத்திய சலிப்பும், விரக்தியும் தென்படுகின்றன. போரிட்டு வெல்லமுடியாத வெள்ளையர்கள் சூழ்ச்சியில் இறங்கினார்கள். போர் நடந்து கொண்டிருக்கும் போதே வேலுநாச்சியாரின் உறவினரான கௌரி வல்லப உடையத் தேவன் எனும் துரோகி சிவகங்கையின் புதிய அரசராக வெள்ளையர்களால் அறிவிக்கப்படுகின்றான். உணவையும், சாலை போடுவதற்கான பணியாட்களையும், ஏராளமான வீரர்களையும் அனுப்பி உதவுகிறான் தொண்டைமான். மருதிருவரின் போர்த் திட்டங்களை ஒற்றறிந்து துரோகிகள் வெள்ளையர்களுக்குச் சொல்கின்றனர். தொண்டித் துறைமுகம் வழியாக கிளர்ச்சியாளர்களுக்கு உணவும், வெடிமருந்தும் கிடைத்து வந்ததை அறிந்த வெள்ளையர்கள் அதனைத் தடுத்து நிறுத்துகின்றனர்.


இப்படி துரோகத்தாலும், சதியாலும் பலமடைந்த வெள்ளையர்கள் இறுதியில் தென்னிந்தியா முழுவதுமிருந்து தம் படைகளை ஒன்று குவித்து காளையார் கோவிலை மூன்று திசைகளிலிருந்து முற்றுகையிடுகின்றனர். சுமார் இரண்டு மாதங்கள் நீடித்த இந்த முற்றுகைக்குப் பின் மருதிருவர் மற்றும் சிவகங்கை மக்களின் வீரஞ்செறிந்த போர் முடிவுக்கு வருகிறது. சோழபுரம் காட்டில் சின்னமருதுவும், மதகுபட்டிக்காட்டில் பெரியமருதுவும், வத்தலக்குண்டில் ஊமைத்துரையும் சிவத்தையாவும் கைது செய்யப்பட்டனர்.


துரோகி கௌரி வல்லப உடையத்தேவன் மருதிருவரிடம் சமாதானம் பேசி வெள்ளையர்களிடம் மன்னிப்பு கேட்குமாறு கோருகிறான். உற்றார், சுற்றம் அனைவரையும் இழப்போமென்று தெரிந்த நிலையிலும் அந்தச் சிவகங்கைச் சிங்கங்கள் மண்டியிட மறுக்கின்றனர். இறுதியில் மருதிருவர் மற்றும் அவர்களது வாரிசுகள், உறவினர், ஏனைய கிளர்ச்சியாளர்கள் உட்பட சுமார் 500 வீரர்கள் திருப்பத்தூர் கோட்டையில் 1801ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் நாள் தூக்கிலிடப்படுகின்றனர். அவர்களில் மருதிருவரின் மகன்கள், பேரன்கள் உள்ளிட்டு ஒருவரையும் வெள்ளயர்கள் விட்டுவைக்கவில்லை. சின்ன மருதுவின் தலையை வெட்டி எடுத்து காளையார் கோவிலில் நட்டுவைத்தன வெள்ளை மிருகங்கள். ஊமைத்துரையும், சிவத்தையாவும் பாஞ்சாலங்குறிச்சி கொண்டு செல்லப்பட்டு அங்கே நவம்பர் மாதம் 16ஆம் தேதி தூக்கிலிடப்பட்டனர்.


சின்னமருதுவின் 15 வயது மகன் துரைச்சாமி, சிவகங்கை அரசர் வெங்கம் பெரிய உடையத்தேவர், பாஞ்சாலங்குறிச்சி தளபதி குமாரசாமி நாயக்கர் உள்ளிட்ட 73 கிளர்ச்சியாளர்கள் மலேசியாவில் இருக்கும் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவுக்கு 11.2.1802 அன்று நாடு கடத்தப்பட்டு, அங்கேயே இறந்தும் போயினர். மருதிருவருடைய வீரத்தின் சுவடுகூட மிச்சமிருக்கக் கூடாது என்று கருதிய வெள்ளையர்கள் அவர்களுடைய குடிவழியையே இல்லாதொழித்தனர்.


மக்களோ, மருதிருவரை குடி வழியெதுவும் தேவைப்படாத வழிபாட்டுக்குரிய தெய்வங்களாக்கி விட்டனர். மக்களுடைய அன்பின் வெளிப்பாடான இந்த நடுகல் மரபு, கல்லாய் இறுகிப்போன கையறு நிலையின் சாட்சியமாய் நம்முன்னே நிற்கிறது. எரிமலையாய்க் குமுறி வெடிக்கும் திருச்சி பிரகடனத்தின் சொற்கள் நம் செவிப்பறைகளில் வந்து மோதுகின்றன. சின்ன மருதுவின் ஆணை, வணங்கச் சொல்லவில்லை, வாளேந்தச் சொல்கிறது; பக்தியைக் கோரவில்லை, வீரத்தைக் கோருகிறது.
""ஆதலால் மீசை வைத்துக் கொண்டிருக்கின்ற நீங்கள் அனைவரும்...'' உங்களைத்தான் அழைக்கிறார் சின்ன மருது.



· வேல்ராசன்

Thursday, January 18, 2007

கிளர்ச்சிப் பாளையக்காரர்களின் முன்னோடி பூலித்தேவன்

கிளர்ச்சிப் பாளையக்காரர்களின் முன்னோடி

பூலித்தேவன்


தினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் வெள்ளையர்களின் வரி வசூல் கொடுமைகளுக்கு எதிராகப் போராடிய தென்னிந்தியப் பாளையக்காரர்களின் போராட்டத்திற்கு, நெற்கட்டுஞ்செவல் பாளையக்காரரான பூலித்தேவன் 1750களில் நடத்திய போராட்டம் முன்னோடியாக இருந்திருக்கிறது. சங்கரன் கோவில் அருகே இருக்கும் இந்தப் பாளையம் அன்று நெல்லைச் சீமையின் போராட்ட மையமாக இருந்தது.


நாயக்க மன்னர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் மதுரையை ஆள்வதற்குப் பல்வேறு மன்னர்கள் முயன்றனர். மதுரையைக் கைப்பற்றுவதன் மூலம் அதன் கீழ் இருந்த பாளையங்களின் பெரும் வரிவசூல் தொகையைக் குறி வைத்தே பலரும் போட்டியிட்டனர். ""தனக்கு வரவேண்டிய கப்பம் மற்றவர்களுக்குப் போவதா?'' என்று ஆத்திரமடைந்த ஆற்காட்டு நவாப் மதுரையைக் கைப்பற்ற தொடர்ந்து படையெடுத்தான். அதற்கு ஆங்கிலேயர்களின் இராணுவத்தையும் பயன்படுத்திக்கொண்டான். 1755இல் ஆற்காட்டு நவாபின் அண்ணன் மாபூஸ்கான் தலைமையில் கர்னல் கீரானின் ஆங்கிலேயப் படையும், கான்சாகிப் தலைமையில் உள்நாட்டுச் சிப்பாய்களடங்கிய படையும் பாளையக்காரர்களிடம் வரிவசூல் செய்யப் புறப்பட்டது.


எல்லாப் பாளையங்களையும் பணியவைத்த இந்தப்படை பூலித் தேவனை மட்டும் வெற்றிகொள்ள முடியவில்லை. இந்தப் போருக்குப் பின்னர்தான் பூலித்தேவனது புகழ் பரவத்தொடங்கிற்று. வெற்றியடைந்ந கையோடு ஏனையப் பாளையக்காரர்களை ஒன்றிணைக்க முயல்கிறார் பூலித்தேவன். பலர் பயந்து ஒதுங்க சிலர் மட்டும் ஆதரிக்கின்றனர்.


திருவிதாங்கூர் மன்னன் ஆரம்பத்தில் அவனது சுயநலத்திற்காக பூலித்தேவனை ஆதரித்து விட்டுப் பின் கம்பெனியை ஆதரிக்கின்றான். இத்தகைய சூழ்நிலையில் பூலித்தேவன் ஹைதரலியின் உதவியையும் கேட்டிருக்கிறார். வேறு போர் முனைகளில் வெள்ளையருடன் மோதிக் கொண்டிருந்ததால் ஹைதராலும் உதவ முடியவில்லை.


இந்நிலையில் நவீன ஆயுதங்கள் ஏதுமின்றி மரபு ரீதியான ஆயுதங்களை வைத்தே வீரத்துடன் போரிட்டார் பூலித்தேவன். தனது திறமையால் வெள்ளையர்களிடம் தலைமைத் தளபதி பொறுப்பேற்றிருந்தவனும் போர் வியூகத்திற்கும், கொடூரமான போர் முறைக்கும் பெயர் பெற்றவனுமாகிய கான்சாகிபுவால் கூட பூலித்தேவனை ஆரம்பத்தில் வெல்லமுடியவில்லை. சுமார் 10 ஆண்டுகள் போராடிய பூலித்தேவன் 176061ஆம் ஆண்டு களில் தோல்வியுற்றுத் தலைமறைவாகிறார். அதற்குப் பின் அவரைப் பற்றிய செய்திகளில்லை. பூலித்தேவனது காலம் முடிந்த பிறகுதான் காலனியாதிக்க எதிர்ப்பு தென்னகத்தில் பரவலாகக் கருக்கொள்ளத் தொடங்குகிறது.


அதேநேரத்தில், ஆற்காட்டு நவாப்பையும் அவனுடைய கூலிப் படையாக வந்த கம்பெனியின் படைகளையும் எதிர்த்துப் போட்ட அவரது வீரம் பின்னாளைய போராட்டங்களுக்கு ஊக்கமளிக்கும் முன்னுதாரணமாகியது.


பூலித்தேவனது போராட்ட வரலாறு இன்றைக்கும் அப்பகுதி மக்களிடையே கதைப்பாடலாகப் பாடப்பட்டு வருகிறது. ஒண்டிவீரன், வெண்ணிக்காலாடி முதலான தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தளபதிகள் பூலித்தேவனுக்காக வீரத்துடன் போரிட்டு மாண்டதை அப்பாடல்களின் மூலம் அறிகிறோம். பொது எதிரிக்கு எதிராக சாதிய வேறுபாடின்றி அணிதிரளும் போக்கு அன்றைக்கு உருவெடுத்திருந்ததையும் நாம் அறிய முடிகிறது. அதேசமயம் இன்றைக்கு நடராஜன் (சசிகலா) போன்ற அரசியல் தரகர்களும், செந்தில், கார்த்திக், விவேக் போன்ற சாதிவெறிக் கோமாளிகளும், திருநாவுக்கரசர், மதுரை ஆதீனம் போன்ற அரசியல் வாழ்வில் கேவலமான பண்புகளின் "சொந்தக்காரர் களும்' சாதியின் பெயரால் பூலித் தேவனுக்கு நினைவு விழா எடுக்கும் கொடுமையை என்னவென்று சொல்ல?




1799ஆம் ஆண்டு நான்காம் மைசூர்ப் போரில் திப்பு கொலை செய்யப்பட்டதால் இந்தியாவில் தங்களது முக்கியமான எதிரி ஒழிந்தான் என்று வெள்ளையர்கள் எக்காளமிட்ட நேரம், அந்த மகிழ்ச்சி நீண்டநேரம் நீடிக்கவில்லை. திப்புவின் தியாகமும் வீண் போகவில்லை. எழுந்து வந்தார் தூந்தாஜி வாக்.


கர்நாடகாவின் ஷிமோகாப் பகுதியைச் சேர்ந்த சென்னகியில் பிறந்த தூந்தாஜி வாக் 1780ஆம் ஆண்டு ஹைதர் அலியிடம் ஒரு சாதாரண குதிரைப்படை வீரனாகச் சேருகிறார். ஹைதர், திப்பு இருவர் தலைமையிலும் பல போர்க்களங்களில் பணியாற்று கிறார். திப்புவின் மறைவிற்குப் பிறகு அவரது இராணுவம் கலைக்கப்பட்ட பிறகு, அந்த வீரர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் தூந்தாஜி வாக். சுமார் 5000 குதிரைப்படை வீரர்களை அணிதிரட்டிய தூந்தாஜி கம்பெனியின் ஆட்சியில் இருந்த ஷிமோகாப் பகுதியைக் கைப்பற்றுகிறார். திப்புவின் ஆட்சியில் இருந்த மக்கள், குறிப்பாக, முசுலீம்கள் அவரை ஆதரிக்கின்றனர். வெள்ளையர்களின் ஆட்சியில் இருந்த கன்னடமராத்தியப் பகுதிகள் ஒவ்வொன்றாய் மீட்கப்படுகின்றன.


திப்புவைத் தோற்கடித்த கர்னல் ஆர்தர் வெல்லெஸ்லி ஒருமுறை வேட்டைக்குச் செல்வதாக இருந்தபோது அவனைக் கடத்துவதற்கு தூந்தாஜி திட்டம் போட்டார். ஆனால் ஒற்றர்களின் மூலம் இதை அறிந்த வெல்லெஸ்லி பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தப்பித்துக் கொண்டான்.


தூந்தாஜி வெள்ளையர்களை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் போதே அவரை தமிழகத்திலிருந்து மூன்று தூதுக் குழுக்கள் சென்று சந்தித்திருக்கின்றன. இக்குழுக்களில் தீரன் சின்னமலை, அப்பாஜி கவுண்டர், வெங்கட்ராமையா, தோமாட்சி முதலி, சா சாகிப் முதலியோர் சென்றிருக் கின்றனர். இவர்கள் சிவகங்கையின் சின்ன மருது, விருப்பாட்சியின் கோபால் நாயக்கர், கோவையின் கானி ஜ கான், மலபாரின் கேரள வர்மா ஆகியோருக்கான செய்திகளைக் கொண்டு சென்றனர். அதேபோல தூந்தாஜியின் தூதர்களும் தமிழகத்திற்கு வந்தனர். இதன் மூலம் தென்னிந்தியாவில் வெள்ளையர்களை எதிர்த்து வலுவான கூட்டணி அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டது. வடக்கே தூந்தாஜியையும், தெற்கே சின்னமருதுவையும் இந்தக் கூட்டணி தலைவர்களாக ஏற்றுக் கொண்டது. திண்டுக்கல் பகுதியின் கோபால் நாயக்கர் எல்லாப் பகுதிகளையும் இணைக்கும் மையமாகச் செயல்பட்டார். 1800 ஜனவரியில் தூந்தாஜியின் படையில் ஏராளமான தமிழ் வீரர்கள் இணைந்ததாக கம்பெனியின் உளவுத் துறை குறிப்பிடுகிறது. இப்படி தென்னிந்திய அளவில் கூட்டணி ஏற்பட்டது குறித்து வெள்ளையர்கள் அதிர்ச்சியடைகிறார்கள்.


அப்போது கன்னட மராத்தியப் பகுதியில் இருந்த கோலாப்பூர், ஷோலாப்பூர், ராய்துர்க், குவாலியர் சிந்தியா முதலான சிற்றரசர்கள் தூந்தாஜியை ஆதரித்தனர். இச் சிற்றரசர்கள் வெள்ளையர்களோடும், அவர்களை ஆதரித்த மராத்திய பேஷ்வாக்களோடும் முரண்பாடு கொண்டிருந்தனர். தங்களது ஆட்சி களையும் வெள்ளையர்கள் எதிர் காலத்தில் கைப்பற்றி விடுவார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரிந் திருந்தது. வேலூர்ச் சிறையில் இருந்த திப்புவின் மூத்தமகன் ஃபத்தே ஹைதர் ""என்னால் இப்போது இருக்கும் நிலையில் வேறு எந்த உதவியும் செய்ய முடியவில்லை என்றாலும் அல்லா உங்களை ஆசீர்வதிக்கட்டும்'' என்று தூந்தாஜிக்கு வாழ்த்துச் செய்தி அனுப்புகிறார்.


கம்பெனியின் உளவுச் செய்தியின் படி தூந்தாஜி வாக்கின் படையில் 50,000 வீரர்கள் இருந்தனர்; 30,000 குதிரைகள் இருந்தன. ஆங்கிலேய ஆட்சியில் துயரத்திலிருந்த மக்களுக்கு தூந்தாஜி ஒரு விடிவெள்ளியாகத் தோன்றினார். ஒரு கட்டத்தில் சுமார் 1,50,000 மக்கள் அவர் படையில் அணிதிரண்டனர். அவர்கள் முறையான போர்ப்பயிற்சி பெற்றவர்களோ, நவீன ஆயுதங்கள் ஏந்தியவர்களோ அல்லர். அது அவர்களது விடுதலைத்தாகம். ""திப்புவின் மறைவுக்குப் பிறகும் அவருடைய ஆட்சிப் பகுதியிலிருந்து சாதாரண வர்க்கங்களைச் சேர்ந்த மக்கள், குறிப்பாக முசுலிம்கள் யாரும் கம்பெனியின் படையில் சேர மறுக்கிறார்கள்'' என்று இந்த உண்மைக்கு ஆதாரம் தருகிறான் ஒரு வெள்ளை இராணுவ அதிகாரி.


இப்படி தூந்தாஜி பலமடைவ தையும், தென்னிந்திய அளவில் கிளர்ச்சிக்குத் திட்டமிடுவதையும் கண்ட ஆங்கிலேயர்கள் தென்னியந்தியப் புரட்சியை நசுக்கவேண்டுமென்றால் முதலில் தூந்தாஜியை ஒழிக்கவேண்டும் என்பதைப் புரிந்து கொண்டார்கள். பம்பாய், கோவா, வங்காளம், சென்னை, இலங்கை ஆகிய இடங்களிலிருந்து கம்பெனிப் படைகள் ஒன்று திரட்டப்பட்டன. மராத்திய பேஷ்வா, ஐதராபாத் நிஜாம், மைசூர் உடையார் முதலான துரோகிகளும் வெள்ளையர் களுக்கு உதவினர்.


கிருஷ்ணா நதியின் துணை நதிகளுக்கிடையில் முகாமிட்டிருந்த தூந்தாஜியின் படைகளை கர்னல் வெல்லெஸ்லியின் தலைமையிலான கம்பெனிப் படைகள் மூன்று திசைகளிலிருந்தும் தாக்கின. ஏறத்தாழ ஒன்றரை வருடங்கள் வெள்ளையர் களை எதிர்த்துப் போராடிய அந்த வீரமகன் இறுதியில் கோனகல் பகுதியில் 10.9.1800 நாளன்று நடந்த போரில் கொல்லப்பட்டார். போர்க்களத்தில் வீரமரணமடைந்தபோது தூந்தாஜியின் வயது அறுபது. தூந்தாஜியின் மறைவுக்குப் பிறகு தென்னிந்தியாவின் விடுதலைப் போர்க்களம் தென் தமிழகத்தில் மையம் கொள்கிறது.



தென்னிந்தியப் போரை
வழிநடத்திய கிழச்சிங்கம்:
விருப்பாட்சி கோபால் நாயக்கர்


தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் சுதந்திரப் போரின் மிக முக்கிய மானதொரு தலைவர் விருப்பாட்சி கோபால் நாயக்கர். பழனி, திண்டுக்கல் பகுதிக்கு அருகாமையில் அமைந்திருந்த இந்தப் பகுதி, தென் தமிழகத்தையும் மேற்குத் தமிழகத்தையும் அதன் வழியாகத் திப்புவின் மைசூரை யும் இணைக்கும் மிக முக்கியமான கண்ணியாகச் செயல்பட்டிருக்கிறது.


ஆங்கிலேயக் காலனி யாதிக்கத்துக்கு எதிரான கோபால் நாயக்கரின் போராட்டம் அவருடைய
53வது வயதில், 1783இல் தொடங்குகிறது. அப்போது திப்புவின் வசமிருந்த திண்டுக்கல் பகுதி மீது ஆங்கிலேயர் போர் தொடுத்த போது அதை எதிர்த்துப் போரிட்டன கோபால் நாயக் கரின் படைகள். 1792 ஒப்பந்தத்தின் கீழ் கார்ன்வாலிஸ் கைப்பற்றிய திப்புவின் பகுதிகளில் கோபால் நாயக்கரின் விருப்பாட்சியும் அடக்கம்.


நிலைமையைக் கணக்கில் கொண்டு ஆங்கிலேயருக்கு சந்தேகம் எழாதபடி வரியைச் செலுத்திக் கொண்டே, மற்ற பாளையக் காரர்களை ரகசியமாக ஒன்றிணைக்கத் தொடங்குகிறார் கோபால் நாயக்கர். மணப்பாறையிலிருந்து திருச்சி வரை பரவியிருக்கும் கள்ளர் நாடு மற்றும் கோவை, சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த பாளையங்களை ஒன்றுதிரட்டி மார்ச், 1797இல் "திண்டுக்கல் கூட்டிணைவை' உருவாக்குகிறார்.


இந்தக் கூட்டிணைவின் சார்பில் 2 பிரதிநிதிகளை திப்புவுக்குத் தூது அனுப்பி உதவி கேட்கிறார். உடனே, உதவிகளுடன் தனது தூதர்கள் நான்கு பேரை கோபால் நாயக்கரிடம் அனுப்புகிறார் திப்பு. காஜி கான் தலைமையிலான திப்புவின் படை திண்டுக்கல் கூட்டிணைவுக்கு உதவும் பொருட்டு மைசூர் அரசின் தென் எல்லையில் முகாமிடுகிறது.


1799 மார்ச்சில் திப்புவுக்கு எதிரான இறுதிப்போரை வெல்லெஸ்லி தொடங்கியவுடன், திண்டுக்கல் கூட்டிணைவின் படைகள் ஆங்கிலேயேர்களின் முகாம்களைத் தாக்கிச் சூறையாடுகின்றன.


போரில் திப்பு இறக்கிறார். ""கட்டபொம்மனுக்கு நேர்ந்த கதிதான் உனக்கும் நேரும்'' என்று மிரட்டுகிறான் கலெக்டர். அதை அலட்சியம் செய்து விட்டு, தமிழகம் தழுவிய கூட்டிணைவை ஒருங்கிணைக்கத் தொடங்குகிறார் கோபால் நாயக்கர்.


வேலூர் சிறையில் இருந்த திப்புவின் மகன் ஃபத்தே ஹைதர், தூந்தாஜி வாகிடமும் கோபால் நாயக்கரிடமும் சென்று சேர்ந்து கொள்ளுமாறு திப்புவின் (முன்னாள்) படைவீரர்களுக்கு வழிகாட்டுகிறார்.


ஏப்ரல், 1800இல் பழனி மலைக் காடுகளில் கோபால் நாயக்கர் தலைமையில் கூடுகிறார்கள் தென்னிந்தியப் போராளிகள். "பழனி சதித்திட்டம்' என்று வெள்ளையரால் அழைக்கப்படும் இந்தக் கூட்டம், கோவையிலுள்ள ஆங்கிலேயன் கோட்டையைத் தாக்குவதிலிருந்து தொடங்கி தென்னிந்திய அளவில் ஒரே நேரத்தில் எழுச்சியைத் தொடங்கத் திட்டமிடுகிறது. கோவைத் தாக்குதல் தோல்வியடைந்து அனைவரும் தூக்கிலிடப்படுகிறார்கள். செப், 1800இல் தூந்தாஜி வாக் கொல்லப் படுகிறார்.


அடுக்கடுக்கான தோல்விகளுக்குப் பின்னரும் கோபால் நாயக்கர் துவளவில்லை. தோல்வியடைந்த தூந்தாஜி வாகின் வீரர்களைத் தன்னுடன் இணைத்துக் கொள்கிறார்.


தன்னுடைய எதிரிகளை ஒவ்வொருவராக அழித்துக் கொண்டே வந்த ஆங்கிலேயர்கள் இறுதியாக மார்ச், 1801இல் கோபால் நாயக்கரின் மீது பலமுனைத் தாக்குதல் தொடுக்கிறார்கள். விருப்பாட்சி பகுதியின் பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள், கூட்டம் கூட்டமாக கோபால் நாயக்கருடன் சேர்ந்து ஆனைமலைக் காடுகளுக்குள் பின் வாங்கி போரைத் தொடர்கிறார்கள். ஏப்ரல் இறுதி வரை போர் தொடர்ந்தும் வெள்ளையர் களால் கோபால் நாயக்கரைப் பிடிக்க முடியவில்லை.


களைத்துப் போன ஆங்கிலேயர்கள் துரோகி களைத் தேடுகிறார்கள். கோபால் நாயக்கரைக் காட்டிக் கொடுத்தால் 2000 ரூபாய், மற்ற தலைவர்களின் தலைக்கு 500 ரூபாய் என்று விலை நிர்ணயிக்கப்படுகிறது. மே, 4ஆம் தேதியன்று கோபால் நாயக்கரும் பிற முன்னோடிகளும் வளைக்கப்படுகிறார் கள். சம்பிரதாயமான விசாரணை கூட நடத்தாமல் அனைவரையும் தூக்கிலிடுகிறது ஆங்கிலேயப் படை. தென்னிந்திய விடுதலைப் போரின் மையமாகவும், போராளிகளின் தளமாகவும் துடிப்புடன் இயங்கிய விருப்பாட்சி சூறையாடப்பட்டது. விடுதலைக்காக இறுதி வரை தளராமல் போராடிய அந்தக் கிழச்சிங்கம் தன்னுடைய 73வது வயதில் விடை பெற்றுக்கொண்டது.


· புதூர் இராசவேல்


Wednesday, January 17, 2007

கருணா தரப்பும் ஒழித்துக் கட்டப்படுவார்கள்.

கிழக்கில் இருந்து புலிகள் மட்டுமல்ல, கருணா தரப்பும் ஒழித்துக் கட்டப்படுவார்கள்.

பி.இரயாகரன்
16.01.2007


மிழ் தேசிய யாழ் மையவாதம் மட்டுமல்ல, கிழக்கு மையவாதமும் பேரினவாதத்தினால் அழிக்கப்படும். பேரினவாதம் மட்டும் தான், மீண்டும் வெற்றி பெறும் எதார்த்தம். இதை நோக்கிய அரசியல் எல்லைக்குள் தான், அனைத்தும் மையப்பட்டு செயல்படுகின்றது. தமிழ் மக்களின் அழிவும் சீரழிவும், புலிகளால் மட்டுமல்ல கருணா தரப்பாலும், அதற்கு அப்பால் புலியெதிர்ப்பு கும்பலாலும், கிழக்கு மையவாதிகளாலும் கூட நடக்கின்றது.


கிழக்கு வாழ் தமிழ் மொழி பேசும் மக்களின் தனித்துவமே திட்டமிட்ட வகையில் ஒழித்துக்கட்டப்படும். இதை நோக்கி ஒரு நிழல் யுத்தம் நடக்கின்றது. இதில் தமிழ், முஸ்லீம் என்று வேறுபாடுகள் எதுவும் இருக்கப் போவதில்லை. இந்த நிலைமையை குறைந்தபட்சம் புரிந்துகொள்ளக் கூடிய அரசியல் கூட, எந்த தரப்பிடமும் இன்று கிடையாது.


வரலாற்றில் நிகழப்போகும் நிகழ்ச்சிகளை எம்மால் முன்கூட்டியே நிச்சயமாக எதிர்வு கூறமுடிகின்றது. புலிகள் இந்த நிழல் யுத்தத்தை ஒருதரப்பாக வலிந்து தொடங்க முன், இந்த யுத்தத்தின் விளைவை நாம் முன் கூட்டியே கூறியிருந்தோம். மக்கள் பெயரில் யுத்தத்தை புலிகள் கோரிய போது, அந்த யுத்தம் தொடங்கினால் முதலில் கிழக்கில் இருந்து புலிகள் ஒழித்துக்கட்டப்படுவார்கள் என்பதை நாம் முன் கூட்டியே பலமுறை எழுதியிருந்தோம். எமது இந்த அரசியல் ரீதியான சரியான எதிர்வு கூறல் மீது, சிலர் அது சாத்தியமற்ற ஒன்றாகவே கருதினர். இப்படி பல சரியான அரசியல் அவதானங்கள், அதன் விளைவுகள் நாங்கள் வெளியிட்டது போன்று நிகழ்கின்றது. இதை நாம் இங்கு கூறுவதன் நோக்கம், எதிர்கால நிலைமைகள் மீதான எமது அரசியல் எதிர்வினையை, எமது சரியான அரசியல் பார்வையை உட்கிரகிக்க வேண்டிய வரலாற்றின் தேவையை இடித்துரைக்கவே.


எமது அரசியல் அனுமானங்கள், முடிவுகள் சரியாகவே நாம் விளக்கியபடி நிகழ்ந்து வருகின்றது. புலிகள் கிழக்கில் இருந்து கிட்டத்தட்ட முடக்கப்பட்ட ஒருநிலையில், கூனிக் குறுகி நிற்கின்றனர். இதில் இருந்து அவர்களால் மீளவே முடியாது. புலிகள் ஒரு தற்கொலைக்கு ஒப்பான பாரிய தாக்குதலை நடத்த முயன்றாலும், நிலைமை அவர்களுக்கு சாதகமாக மாறாது. மக்கள் மத்தியில் இருந்து புலிகள் அன்னியமாதல் என்பது, வரலாற்றில் அவர்கள் காணாத அளவில் நிகழ்ந்துள்ளது.


மறுபுறத்தில் பேரினவாதம் விரைவில் கிழக்கில் இருந்து புலிகள் முற்றாக ஒழித்துக்கட்டப்படுவர் என்கின்றது. புலிகளோ எந்த வீர சாகச சலசலப்புமின்றி நரிகளாக ஒடுங்கி மௌனமாகிவிட்ட நிலையில், ஒவ்வொரு முகமாக சந்தடியின்றி பேரினவாதத்தின் சூழ்ச்சியில் வீழ்ச்சியுறுகின்றது. தமிழ் மக்களின் தற்கொலைக்கு ஒப்பான குறுந்தேசிய இன வரலாறு, சொந்த பாசிசத்தால் தானாகவே மரணித்துக் கொண்டிருக்கின்றது.


இந்த நிகழ்ச்சிகள் புலிகளின் வரலாற்றில் தற்செயலானவையல்ல. புலிப் பாசிசம் தானாகவே வெம்பி வீங்கி, தானாகவே பொலபொலவென்று உதிர்கின்றது. இது கிழக்கில் தொடங்கிவிட்டது. வெம்பல் எந்த கறிக்கும் கூட உதவுவதில்லை என்பது போல், இந்தப் போராட்டம் எதையும் மக்களுக்காக சாதித்தது கிடையாது. மனித அழிவுகளையும் அவலங்களையும் தவிர, தமிழ் மக்கள் கண்டது இன்று எதுவுமில்லை.


தமது சீரழிவையே, தேசிய வீரமாக முன்கூட்டியே புலிகள் பிரகடனம் செய்தனர். ஆனால் இதன் விளைவை நாம் முன்பே சுட்டிக்காட்டி வந்தோம். கருணா விவகாரம் ஒரு அதிகாரப் போட்டியாக வந்தபோது, நாம் எழுதிய கட்டுரையில் மிகத் தெளிவாக இதன் விளைவை வலியுறுத்தினோம். தமக்கு இடையிலான அதிகார மோதலை, ஒரு பிரதேச மோதலாக புலிகள் பாணியில் கருணா தரப்பு காட்டியபோது, புலிகள் தமிழ் மக்கள் பெயரால் எதிர்வினையாற்றும் அதே பண்பு, இதற்கு இருக்கும் என்பதையும், இதை புலிப்பாசிசம் உணர மறுப்பதையும் நாம் சுட்டிக்காட்டினோம்.


அதன் விளைவாக ஒரு சமூகத்தை இராணுவ வன்முறைக்குள் அடக்கிவிடலாம் என்று நம்பிய யாழ் மையவாதம், நடுச்சந்தியில் நிர்வாணமாகி நிற்கின்றது. அன்று கருணா தரப்பை வெறும் கருணாவாக, அதை வெறும் குறியீடாக காட்டியதன் விளைவு, தமிழ் மக்களை ஈடுசெய்ய முடியாத வரலாற்று முடிவுக்கு இட்டுச் சென்றுள்ளது. இதன் இறுதி ஆணிகள் அடிக்கப்படுகின்றது.


இப்படி அதிகார போட்டியில் தனிக் குழுவான கருணா ஒன்றும் புலிகளின் நடத்தைகளில் இருந்து, அவர்களின் அரசியலில் இருந்து எந்த விதத்திலும் வேறுபட்டவர் அல்ல. புலிகள் தமிழ் மக்கள் மீது எதிர்வினையாற்றுவது போல், கருணா கிழக்கு மக்களின் மீது எதிர்வினையாற்றுகின்றார். மக்கள் பிரச்சனைகள் மீது புலிகள் போல் கருணா தரப்பும் செயல்படுவதுடன், இதற்கு மாறாக எந்த முன்முயற்சியும் எடுக்கவில்லை.


மக்களுக்கு எதிராக புலிகளைப் போல் செயல்பட்டபடி, தன்னை தற்பாதுகாத்துக் கொள்ள, இந்தியா இலங்கை அரசின் அரசியல் நோக்களுக்கு ஏற்ப ஒரு விசுவாசமுள்ள நாயாக சீரழிந்தார். இப்படி ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தின் அடிப்படை உரிமைகள் மறுத்து, மக்களை சார்ந்து நிற்கத் தவறினார்.


ஒட்டுமொத்தத்தில் அரசியல் களம் என்பது மக்களில் இருந்து அன்னியமான குழு நடவடிக்கையாகி, அக் குழுக்கள் இன்னமொரு கூலி இராணுவத்தினால் அழிக்கப்படுகின்றது. புலிகள் அழிக்கப்படும் வரை தான், கிழக்கில் கருணா குழுவின் ஆட்டமும் கூத்தும் நடக்கும். புலிகளை கிழக்கில் இருந்து முற்றாக துடைத்தொழிக்கப்படும் நாட்கள் எண்ணப்படும் இன்றைய நிலையில், கருணா குழுவின் அட்டகாசங்கள் ஓங்குகின்றது. உண்மையில் சொல்லப் போனால் பேரினவாதம் கருணா குழுவின் வடிவில் இயங்குகின்றது. உண்மையில் இந்த சூதாட்டம் புலியை ஒழித்துக்கட்டப்படும் வரையிலான, பேரினவாத சலுகையும் சூழ்ச்சியுமாகும்.


கிழக்கில் புலிகள் முடிவு தெளிவானவுடன், கருணா குழுவின் ஆட்டத்தை பேரினவாதம் முடிவுக்கு கொண்டு வரும். புலிகளை அழிக்கும் வெறும் கூலிக் குழுவாக இருக்க மட்டும் அனுமதிக்கும் எல்லைக்குள் தான், கருணா குழுவின் அரசியலை பேரினவாதம் அனுமதிக்கின்றது. இதை மீறும் போது கருணா குழுவும் அழிக்கப்படும். இந்த உண்மையை யாரும் நிராகரிக்க முடியாது. இதை கருணா குழு புலியை ஒழித்த பின் மீறமுடியும் என்று நம்புவது, புலிகள் தம்மைத்தாம் நம்பக் கோருவது போன்ற ஒரு கற்பனையான வெற்று நம்பிக்கை தான்.


பலரும் கண்ணை மூடிக்கொண்டு கனவு காணுகின்றனர். புலிகள் கிழக்கில் இருந்து ஒழித்துக்கட்டப்பட்ட பின், கருணா என்ற கூலிக் குழு சொர்க்கத்தின் வழியை காட்டுவார்கள் என்று நம்ப முனைகின்றனர். கிழக்கைச் சேர்ந்த, புலியெதிர்ப்பை அரசியலாக கொண்ட மக்கள் விரோத புல்லுருவிகள் இப்படி கொக்கரிக்கின்றனர். பேரினவாதம் கிழக்கு மக்களின் ஜனநாயகத்தை மீட்டு, அதன் தனித்துவத்தை உறுதி செய்யும் என்று இவர்களின் அற்ப அரசியல் புலம்பவைக்கின்றது. ஆனால் நடக்கப் போவது அந்த மக்களின் சுடுகாடுதான். மக்களின் பிரதான எதிரியான பேரினவாதம் தன் நோக்கில் எந்த எதிர்ப்புமின்றி, சலசலப்பின்றி செயல்படுகின்றது.


யாழ் மையவாதம், அதை பிரதிநித்துவம் செய்யும் புலிகள், புலிகள் அல்லாத தரப்பு மீது காட்டுகின்ற எந்தவிதமான கோட்பாடற்ற கிழக்கு மையவாத புலம்பல்கள் அனைத்தும் மக்களுக்கு எதிரானது. மக்கள் என்ற கோணத்தில், மக்கள் நலன்கள் என்ற அடிப்படையில், இவர்களிடம் எந்த அரசியல் முன்முயற்சியும் கிடையாது. மாறாக அகதி முகாம் நடத்த கிழக்கின் பெயரில் புலியைப் போல பணம் சேகரிப்பதில் மட்டும் தான் இவர்களின் அற்பத்தனமான அரசியல் உள்ளது.


உண்மையில் மக்களை பிளந்து அரசியல் செய்ய நினைப்பது, புலியின் அதே வலதுசாரிய அரசியல் தான். ஒடுக்கப்பட்ட மக்களை சார்ந்து நிற்கத் தவறுகின்ற கருத்துகள், செயல்பாடுகள், குறுகிய கிழக்கு மையவாதமாகின்றது. உண்மையில் சொன்னால் அதே யாழ் மையவாதம். இந்த குறுகிய போக்கின் பின், சில சமூக விரோத புல்லுருவிகளின் வாழ்க்கையில் மட்டும் மிதக்கின்றது. பிரதேசம், இனம், சாதி என்று எந்த சமூக ஒடுக்குமுறையையும் எதிர்கொள்ளும் போது, ஒடுக்கப்பட்ட மக்களை சார்ந்து நிற்கவும், அவர்களின் சமூக பொருளாதார கோரிக்கையுடன் இணைந்து நிற்கவும், மற்றய ஒடுக்கப்பட்ட மக்களுடன் ஒன்றுபட்டு நிற்கவும் தவறுகின்ற அரசியல் இழிவானது, கேவலமானது. இதை மீண்டும் எம் வரலாற்றில் அனுமதிக்க முடியாது. மனித விரோதத்தில் வக்கிரம் கொண்டது. குறுகிய எல்லைக்குள் இனம், பிரதேசம், சாதி என்று ஒன்றை முன்னிலைப்படுத்தி, ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களையும் அவர்கள் சார்ந்த சமூக பொருளாதார கோரிக்கை சார்ந்து நிற்க தவறுகின்ற அற்பத்தனம் தான், கடந்த எமது 30 வருட போராட்டத்தில் நடந்தது, அது தான் கிழக்கின் பெயரிலும் இன்றும் நடக்கின்றது. இன்று கிழக்கு மையவாதம் அதே பாதையில் தன்னை முன்னிலைப்படுத்தி, சில பொறுக்கிகள் குலைக்க முனைகின்றனர். யாழ் மையவாதம் இல்லாத கிழக்கு மக்களுக்கு, நீங்கள் எதைத்தான் மாற்றாக கொடுக்கப்போகின்றீர்கள். தேசிய விடுதலைப் போராட்டத்தை பயன்படுத்தி சிலர் கொழுத்தது போல், கிழக்கை மையப்படுத்தி சிலர் கொழுப்பர்.


மறுபக்கதில் பேரினவாதம் இதைப் பயன்படுத்தி, கிழக்கை பல முரண்பாட்டின் எல்லைக்குள் வதைத்தபடி, தனது பேரினவாத நலனை அடைகின்றது. அறுவடையை அவன் செய்யத் தொடங்கிவிட்டான். கிழக்கில் பேரினவாதம் கட்டமைத்துள்ள சிங்கள மயமாக்கல் என்ற அரசியல் சூழ்ச்சிக்குள், அந்த நிலம் விழுங்கப்படுகின்றது. அதை நோக்கி இட்டுச் செல்வதில் புலிகள் முதல் கருணா தரப்பு வரையும் உடந்தையாக இருக்கின்றது. இதற்கு அப்பால் கிழக்கு மையவாதத்தை உச்சரிக்கும் பலரின் அரசியல் வங்குரோத்தின் மீது ஏறி பேரினவாதம் சவாரி செய்கின்றது..


இதனடிப்படையில் சர்வதேச அழுத்தங்களுக்கு இடையில் முன்வைக்க முனைந்த, முனைகின்ற ஒரு அரசியல் தீர்வுத் திட்டத்தை இழுத்தடித்து வருகின்றது. கிழக்கில் தமிழர் தரப்பின் வலுவற்ற ஒரு நிலையை உருவாக்கவும், தமிழர் முஸ்லீம் தரப்பை மோதலின் உச்சத்துக்கு இட்டுச் சென்று, கிழக்கில் தமிழ் மொழி பேசும் மக்களுக்கு இடையிலான ஒற்றுமையை சிதைக்கும் ஒரு கால அவகாசத்தை எடுத்து வருகின்றது. கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களை எதிரெதிரான முகாமில் பிளந்து, அதில் பேரினவாதம் குளிர் காய்கின்றது.


பல முரண்பட்ட பிரிவுகளுக்கு இடையில், ஒரு வெற்றிடத்தில், கிழக்கு மக்களுக்கு ஒரு தீர்வை வைப்பதன் மூலம், பேரினவாத நலன்களை கிழக்கில் வெற்றிகரமாக பூர்த்தி செய்யமுடியும். இந்த வெற்றிடத்தில் அவர்களை மோத வைப்பதன் மூலம், கிழக்கு மக்களின் அபிலாசைகளை பிளந்து, பிரித்து அரசியல் இலாபத்தை அடைய பேரினவாதம் செய்யும் சதிதான், இன்று கிழக்கில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது.


இந்த நிலையில் கிழக்கு மக்களை சார்ந்து நிற்க தவறுகின்ற கிழக்கு மையவாதிகள், அந்த மக்களின் முதுகுகளில் சவாரி செய்தபடி, பேரினவாதத்தின் செருப்பாகி நிற்கின்றனர்.


Tuesday, January 16, 2007

விடுதலைப் போரின் வீர மரபு 3

விடுதலைப் போரின் வீர மரபு 3
வீர பாண்டிய கட்டபொம்மன்



நாள் : 17.10.1799.

இடம் : ஆங்கிலேயர்களின் கயத்தாறு இராணுவ முகாம்


""விசாரணையின் போது கூடியிருந்த பாளையக்காரர் அனைவர் முன்னிலையிலும் நின்ற கட்டபொம்மனது நடத்தை, வீரமும் பெருமிதமும் நிறைந்ததாயிருந்தது. அவன் தன்னைப் பிடித்துக் கொடுக்கத் தீவிரமாக முனைந்த எட்டயபுரம் பாளையக்காரன் மீதும், சிவகிரி பாளையக்காரன் மீதும் இகழ்ச்சியும் வெறுப்பும் நிறைந்த பார்வையை வீசிக் கொண்டிருந்தான். இருபுறமும் நின்றிருந்த பாளையக்காரர்களைக் கடுமை நிறைந்த வெறுப்புடன் பார்த்த வண்ணம் தூக்குமேடையை நோக்கிச் சென்ற அவனுடைய நடையில் உறுதியும் துணிவும் தெரிந்தது.''

""மரத்தின் கீழே நின்ற தருணத்தில் வாய்பேச முடியாத தன்னுடைய தம்பியைப் பற்றி மட்டும் அவன் சிறிது வருத்தப்பட்டானென்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. தூக்குமேடை ஏறியபோது, "இப்படிச் சாவதைவிட கோட்டையைப் பாதுகாப்பதற்காகப் போரிட்டுச் செத்திருக்கலாம்' என்று அவன் மனம் நொந்து கூறியிருக்கிறான்''.


— கட்டபொம்மன் திரைப்படத்தின் இறுதிக்காட்சியினை நினைவுபடுத்தும் இந்தச் சம்பவம் கற்பனையல்ல. கட்டபொம்மனைத் தூக்கிலேற்றிய ஆங்கிலேயத் தளபதி மேஜர் பானர்மென் தனது இராணுவ நிர்வாகக் கடிதமொன்றில் இப்படித்தான் குறிப்பிட்டிருக்கின்றான்.


அடுத்துவந்த சில ஆண்டுகளில் தென்னிந்திய அளவில் ஆங்கிலேயரை எதிர்த்து பாளையக்காரர்கள் நடத்திய வீரஞ்செறிந்த கிளர்ச்சிக்கு கட்டபொம்மனது தியாகம் ஒரு முன்னறிவிப்பாய் இருந்தது. தமிழகத்தில் தமது நேரடி ஆட்சியை நிறுவுவதற்குத் தடையாக இருந்த பாளையங்கள் எனும் நிர்வாக அமைப்பை ஒழிப்பதற்கு கட்டபொம்மனின் வீழ்ச்சியைப் பயன்படுத்திக் கொண்டார்கள் வெள்ளையர்கள்.


மதுரையை நாயக்க மன்னர்கள் கைப்பற்றிய 16ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தென்தமிழகத்தில் 72 பாளையங்கள் தோற்றுவிக்கப்பட்டன. உள்நாட்டுக் குழப்பங்களாலும், போர்களாலும் சீர்குலைந்த நாட்டுப்புறங்களில் இந்தப் பாளையங்கள் ஓரளவிற்கு அமைதியைக் கொண்டு வந்தன. பாளையக்காரர்கள் ஒரு சிற்றரசருக்குரிய உரிமைகளை அனுபவித்து வந்தனர். வரி தண்டும் உரிமை, காவல் உரிமை, நீதி வழங்கும் உரிமை முதலானவற்றை வாழையடி வாழையாகப் பெற்று வந்தனர். வசூலிக்கும் வரியில் மூன்றில் ஒரு பங்கு மன்னனுக்கும், ஒரு பங்கு படைவீரர்களைப் பராமரிப்பதற்கும், ஒரு பங்கு தனது செலவிற்கும் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர். தேவைப்படும் சமயங்களில் தனது படை வீரர்களை மன்னனது ஆணைக்கிணங்க அனுப்பவேண்டும். பாளையக்காரர்களை ஐரோப்பாவிலும், சீனாவிலும் இருந்த யுத்தப்பிரபுக்களோடும் ஒப்பிடலாம்.


18ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நாயக்க மன்னர்கள் வீழ்ச்சியடைய பாளையக்காரர்கள் தங்களது சுயேச்சைத்தன்மையை வளர்த்துக் கொண்டார்கள். இதற்கும் சற்று முன்பாகவே முகலாயப் பேரரசு தமிழகத்தைப் போரில் வென்று ஆற்காட்டு நவாப்பை தமிழகத்தின் கவர்னராக நியமித்தது. 1707இல் ஒளரங்கசீப்பின் மரணத்திற்குப் பின்னர் முகலாயப் பேரரசும் வீழ்ச்சியடைய நவாப்பு சுயேச்சையாக ஆள ஆரம்பித்தான். பாளையக்காரர்கள் அவனது கட்டுப்பாட்டின் கீழ் வந்தார்கள். பேரரசன் ஒளரங்கசீப்புக்கு முன்னதாகவே விவசாயிகள் மீதான முகலாயப் பேரரசின் வரிவிதிப்பு கட்டுக்கடங்காத நிலைக்குச் சென்றது.


இலட்சக்கணக்கில் பெருகிவிட்ட படைகளுக்கு வேலையும், கூலியும் கொடுக்க இயலாத நிலையில் வீரர்கள் நாட்டுப்புறங்களைக் கொள்ளையடித்து காலம் தள்ளினர். மறுபுறம் மையஅரசு கேட்கும் அதிக வரிக்காக நிலக்கிழார்கள் விவசாயிகளைக் கசக்கிப் பிழிந்தனர். விவசாயத்தை மையமாகக் கொண்ட நாட்டுப்புற மக்களுக்கு விளைச்சலில் மிஞ்சியது ஓரளவே. இத்துடன் பஞ்சங்களும் படாதபாடுபடுத்தின. இந்தப் பின்னணியில்தான் முகலாயர்களால் நியமிக்கப்பட்ட ஆற்காட்டு நவாப் பாளையக்காரர்களிடம் அதிகவரி வசூலிக்க ஆரம்பித்தான். எதிர்த்தவர்களை அடக்க கம்பெனியின் படையை வாடகை கொடுத்துப் பயன்படுத்த ஆரம்பித்தான்.


வணிகம் செய்ய வந்த கம்பெனியோ தனது பொருட்களுக்குரிய சந்தை குறுகிய அளவில் இருந்ததால் லாபம் பெறுவதற்கும் தனது வணிக ஆதிக்கத்தை நிறுவிக் கொள்வதற்கும் உள்நாட்டு மன்னர்களின் ஆட்சி விவகாரங்களில் நுழைய ஆரம்பித்தது. தனக்காகக் கம்பெனி செய்த போர்களுக்காகச் செலுத்தவேண்டிய பணத்தை அடைக்கமுடியாத நவாப் இறுதியில் வரிவசூலிக்கும் உரிமையை நேரடியாகக் கம்பெனிக்கே கொடுக்க ஆரம்பித்தான். 1792ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி தென்தமிழகத்தின் ஆட்சியுரிமை நேரடியாகக் கம்பெனிக்குச் சென்றது. இது ஒப்பந்தமல்ல. கம்பெனியின் நிபந்தனையை நவாப் ஏற்றுக் கொண்டான் என்பதே உண்மை.


ஏற்கெனவே பாளையக்காரர்கள் வசூலித்து வந்த வரியும் அதிகமாகத்தான் இருந்தது. எனினும் மக்களுடன் தொடர்பு கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இருந்ததால் அவர்கள் சற்று நெகிழ்வுத் தன்மையோடு நடந்து கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் கம்பெனி ஆட்சியில் விளைச்சல் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஆயுத பலங்கொண்டு கறாராக வரி வசூலிக்கப்பட்டது. நவாப் மற்றும் கம்பெனியின் இந்தக்கொடுமையினை எதிர்த்து 1750களில் பூலித்தேவன் தலைமையில் சில பாளையங்கள் போரிட்டன.


1772இல் சிவகங்கைச் சீமையின் முத்து வடுகநாதர் கம்பெனிப் படைகளை எதிர்த்துப் போரிட்டு மரணமடைந்தார். அதன் பின் விருப்பாட்சிக்குத் தப்பிச் செல்லும் வேலுநாச்சியாரும், மருது சகோதரர்களும் ஹைதரலியின் பாதுகாப்பில் 7 ஆண்டுகள் இருந்துவிட்டு அவரது உதவியுடன் சிவகங்கையை மீண்டும் கைப்பற்றி நவாப்பின் படையை வெளியேற்றுகிறார்கள். கட்டபொம்மனது தாத்தாவும், தந்தையும் கூட கட்டபொம்மனைப் போலப் போராடவில்லை என்றாலும் கப்பம் கட்ட இயலாமல் தலைமறைவாயிருந்திருக்கிறார்கள், கப்பம் கட்டும் வரை சில பணயக்கைதிகளையும் அளித்திருக்கிறார்கள். இப்படிப் பாளையக்காரர்கள் மட்டுமல்ல, மக்களும் கம்பெனியின் கொடூர ஆட்சி குறித்து வெறுப்படைய ஆரம்பித்தார்கள். கம்பெனி முன்னேறிய ராணுவத்தைக் வைத்திருந்த போதிலும் அவர்கள் வெல்லப்படமுடியாதவர்கள் அல்ல என்பதை ஹைதரலியும், திப்பு சுல்தானும் தென்னிந்திய மக்களுக்கு நிரூபித்துக் கொண்டிருந்த நேரம்.


இந்தச் சூழ்நிலையில்தான் 1791 ஆம் ஆண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் தனது முப்பதாவது வயதில் பாஞ்சாலங்குறிச்சியின் அரியணை ஏறுகிறார். இதே காலத்தில்தான் கம்பெனியின் நேரடி ஆட்சி திருநெல்வேலிச் சீமையிலும் ஏற்படுகிறது. வரிவசூலிப்பதற்காக கலெக்டர்கள் எனப்படும் ஆங்கிலேய நிர்வாகிகள் நியமிக்கப்படுகின்றனர். இன்றைக்கும் இருக்கும் மாவட்டக் கலெக்டர்கள் மற்றும் அதிகார வர்க்கத்தின் தோற்றுவாய் இதுதான். அன்று கம்பெனியின் நிர்வாகிகளிடையே நடந்த கடிதப் பரிமாற்றங்களைப் பார்க்கும் போது வரி வசூலிப்பதற்குப் பாளையக்காரர்களைத் தடைக் கற்களாகப் பார்த்ததும், அவர்களை ஒழிக்கவேண்டும் என்ற அணுகுமுறையும் தெரிகிறது. அதற்குத் தோதாக அடங்க மறுக்கும் பாளையக்காரர்களையும், அனுசரணையாகப் போகும் அடிவருடிகளையும் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொள்கின்றனர். அடிவருடிகளுக்கு எலும்புத் துண்டுகளும், கிளர்ச்சியாளர்களுக்குத் தண்டனையும் அதிகவரியும் விதிக்கப்படுகின்றது.


இப்படித்தான் கிளர்ச்சியாளரான கட்டபொம்மனது பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்தின் சில பகுதிகள் துரோகி எட்டப்பனுக்குத் தரப்படுகின்றன. அதேபோன்று வானம்பார்த்த புஞ்சைப் பூமியான பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்துக்கு ஓரளவு வருவாய் அளித்து வந்த திருவைகுண்டம், ஆழ்வார்திருநகர் போன்ற வளமான பகுதிகளைக் கம்பெனி தனது நேரடி ஆட்சியின் கீழ்க் கொண்டு வருகிறது. கட்டபொம்மன் முறையாகக் கப்பம் கட்டாததால் இந்த நடவடிக்கைகளை எடுத்ததாகக் கூறியது கம்பெனி. சினம் கொண்ட கட்டபொம்மன் இந்தப் பகுதிகளுக்குத் தனது படைகளை அனுப்பி வரி வசூல் செய்கிறார்.


தனது ஆட்சி நிறுவப்பட்ட இடங்களிலெல்லாம் வரிவசூல் என்ற பெயரில் வெளிப்படையான கொள்ளையை நடத்தி வந்த கம்பெனி, கட்டபொம்மனது இந்த நடவடிக்கையை "கொள்ளை' என்று குற்றம் சாட்டியது. இந்தக் காலகட்டத்தில் இராமநாதபுரம் திருநெல்வேலிப் பகுதிகளுக்கு ஜாக்சன் எனும் ரவுடி கலெக்டராக நியமிக்கப்படுகிறான். வணிகம் செய்து லாபமீட்டுவதைக் காட்டிலும் மக்களை நேரடியாகக் கொள்ளையடிப்பதையே தனது வணிகக் கொள்கையாக வைத்திருந்த கிழக்கிந்தியக் கம்பெனி, அதற்குப் பொருத்தமான நபர்களையே அதிகாரிகளாக இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது. வரிவசூல் இலக்கை வசூல் செய்து தர அதிகாரிகளை ஊக்கப்படுத்தும் பொருட்டு, அவர்கள் சொந்த முறையில் கொள்ளையடித்துச் சொத்து சேர்த்துக் கொள்ளவும் அனுமதித்தது.


தன்னுடைய அடாவடித்தனங்களுக்குப் பணிய மறுத்த கட்டபொம்மன் மீது உடனே படையெடுக்க வேண்டுமென்று ஜாக்சன் மேலிடத்திற்கு கடிதம் எழுதுகின்றான். திப்புவை ஒழிக்க தன் சக்திகள் அனைத்தையும் திரட்டிக் கொண்டிருந்த கம்பெனி நிர்வாகம், ஜாக்சனின் கோரிக்கையை வேறு வழியின்றி மறுத்தது. கட்டபொம்மனிடம் பேசித் தீர்க்குமாறு அறிவுறுத்தியது. உடனே, ஜாக்சன் அநாகரீகமான மொழியில் கட்டபொம்மனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறான். அதில் வரிபாக்கி நிறைய சேர்ந்து விட்டதென்றும், கட்டபொம்மனது நடவடிக்கைகள் கம்பெனிக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளதெனவும், அழிவைத் தேடிக்கொள்ள வேண்டாமென்றால் தன்னை இரண்டு நாட்களில் இராமநாதபுரத்தில் சந்திக்க வேண்டுமெனவும் குறிப்பிடுகின்றான்.


இச்சம்பவம் நடைபெற்ற 1798ஆம் ஆண்டு தென்மாவட்டங்கள் மழையின்றிப் பஞ்சத்தால் தவித்த காலம். வடமாவட்டங்களில் இருந்து மக்கள் உணவுத் தானியங்களைக் கொண்டு வருவதற்குக்கூட மாட்டு வண்டிகள் இல்லை. அத்தனையும் கம்பெனியின் மைசூர் படையெடுப்பிற்காகக் கொண்டு செல்லப்பட்டு விட்டன. சோற்றுக்கே வழியில்லாமல் தென்மாவட்ட மக்கள் மடிந்து கொண்டிருந்த சூழ்நிலையில் தான் கட்டபொம்மனது வரிபாக்கியை ஜாக்சன் ஈவிரக்கமின்றி வசூலிக்க முற்படுகிறான்.


இந்தச் சூழ்நிலை பாளையக்காரர்கள் மத்தியில் கம்பெனி எதிர்ப்புக் கிளர்ச்சிக்கு வித்திடுகிறது. எனினும் கிளர்ச்சிப் பாளையங்களின் ஒருங்கிணைவு உறுதியடையாதலால், தனியொரு பாளையமாய் வெள்ளையர்களை எதிர்ப்பதில் உள்ள சிக்கலை உணர்ந்த கட்டபொம்மன் ஜாக்சனை தன் படை பரிவாரங்களுடன் சந்திக்க முடிவு செய்கிறார். நாள் குறித்த ஜாக்சனோ கட்டபொம்மனை தன் சுற்றுப்பிரயாணத்தில் ஊர் ஊராகச் அலைக்கழித்து, 23 நாட்கள் கழித்து இராமநாதபுரத்தில் சந்திக்கிறான்.


பேசவந்த கட்டபொம்மன் மற்றும் அவரது மந்திரி தானாதிபதி சிவசுப்ரமணியபிள்ளை இருவரையும் நிற்கவைத்து மூன்று மணிநேரம் விசாரணை செய்கிறான். இறுதியில் கணக்கு பார்த்ததில் வரிபாக்கி அதிகமில்லை என்று தெரியவருகிறது. இருப்பினும் கட்டபொம்மனைக் கைது செய்ய ஜாக்சன் முற்படுகையில் அவர் தன் வீரர்களுடன் ஆங்கிலேய வீரர்களைத் தாக்கிவிட்டுத் தப்பிக்கிறார். பாஞ்சாலங்குறிச்சி திரும்பும் வழியில் பழிவாங்கும் நடவடிக்கையாக கம்பெனியின் ஊர்களைச் சூறையாடுகிறது கட்டபொம்மனின் படை. தானாதிபதிப்பிள்ளை மட்டும் வெள்ளையர்கள் கையில் சிக்குகிறார். அவரைச் சித்ரவதை செய்து திருச்சி சிறையில் அடைக்கிறார்கள்.


தன்னை அவமானப்படுத்திய ஜாக்சனுக்கு வீரத்துடன் பாடம் கற்பித்த கட்டபொம்மனை அடக்குவதற்கு அப்போதும் கம்பெனி தயங்கியது. காரணம், மைசூர்ப் போர் முடியவில்லை. எனவே, கட்டபொம்மனை சென்னை வந்து விளக்கமளிக்குமாறு கோரியது. அவரது நல்லெண்ணத்தைப் பெறும் வகையில் தானாதிபதியை சிறையில் இருந்து விடுவித்ததோடு, அடாவடி ஜாக்சனைப் பதவியிலிருந்தும் நீக்கியது. இதே ஜாக்சன் பின்னாளில் கம்பெனியாலேயே பொறுக்கமுடியாத அளவிற்கு ஊழல் செய்ததனால் வெளியேற்றப்படுகிறான். கட்டபொம்மனும் சென்னை சென்று சுயமரியாதையுடன் விளக்கமளித்துத் திரும்புகிறார்.


கம்பெனியின் ஒரு கலெக்டரையே மாற்றவைத்த கட்டபொம்மனது வீரம் ஏனைய பாளையக்காரர்களிடம் புகழாய்ப் பரவுகிறது. இந்நிலையில் புதிய கலெக்டராய் லூஷிங்டன் பதவியேற்கிறான். அதே சமயம் கம்பெனியுடனான கட்டபொம்மனது முரண்பாடு அரசியல் ரீதியில் கூர்மையடைகிறது.


1799ஆம் ஆண்டின் துவக்கத்தில் தான் ஆங்கிலேயர்களை எதிர்த்த பாளையக்காரர்கள் தென்னிந்திய அளவில் கூட்டணிகளை ஏற்படுத்த முயல்கின்றனர். இதில் திண்டுக்கல் சீமைக்கு கோபால நாயக்கரும் இராமநாதபுரம் சிவகங்கைச் சீமைக்கு மருது சகோதரர்களும், நெல்லைச் சீமைக்கு கட்டபொம்மனும் தலைமையேற்கிறார்கள். இவர்களுக்கிடையே நெருங்கிய தொடர்பு ஏற்படுகின்றது. சிவகங்கையுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளக்கூடாது என்ற லூஷிங்டனது எச்சரிக்கையை மீறி மருது சகோதரர்களின் தூதர்களை பழவனேரி எனும் இடத்தில் சந்தித்து அவர்கள் அனுப்பிய 500 வீரர்களுடன் கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சி திரும்புகிறார்.


நெல்லைச்சீமையில் இருக்கும் கோலார்பட்டி, காடல்குடி, குளத்தூர், நாகலாபுரம், ஏழாயிரம் பண்ணை முதலிய பாளையக்காரர்கள் கட்டபொம்மனுடன் அணிசேருகின்றனர். கட்டபொம்மனுக்கு ஆதரவளிப்பதாக அவரது தூதர்களிடம் கள்ளர் நாட்டைச்சேர்ந்த பாளையக்காரர்களும் உறுதியளிக்கின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்திலிருந்த சிவகிரிப் பாளையம் போர்த்தந்திர ரீதியில் முக்கியமான பகுதி. இதன் பாளையக்காரன், கம்பெனியை ஆதரித்த போதிலும் இவனது மகன் கட்டபொம்மனை ஆதரித்தார். எனவே இவரையே பாளையக்காரராக மாற்ற முயற்சிக்கிறார் கட்டபொம்மன். மேலும் கம்பெனியின் இராணுவ நடமாட்டத்தை ஒற்றறிய தானாதிபதிப் பிள்ளையின் சகோதரரையும் சென்னைக்கு அனுப்பி வைக்கிறார். கட்டபொம்மனது இத்தகைய அரசியல் நடவடிக்கைகளால் ஆத்திரமடைகின்றனர் கம்பெனிக்காரர்கள். இனியும் சகிக்கமுடியாது என்ற நிலைக்கு லூஷிங்டன் வருகிறான். பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு மாபெரும் சவாலாக விளங்கி வந்த திப்பு சுல்தான் மே 1799இல் வீரமரணம் எய்தவே, கம்பெனியின் பீரங்கிகள் கட்டபொம்மனை நோக்கித் திரும்புகின்றன.



உடனே தன்னை வந்து சந்திக்குமாறு கட்டபொம்மனுக்கு கட்டளையிடுகிறான் லூஷிங்டன். முறையான அழைப்பு (கவுல்) இன்றி சந்திக்க இயலாதென கட்டபொம்மன் மறுக்கிறார். போர்த் தயாரிப்புக்குப் போதிய அவகாசம் பெறும் நோக்கத்துடன் அப்போது நடந்த கடிதப்போக்குவரத்தில் கட்டபொம்மன் நிதானமான போக்கையே கடைப்பிடிக்கிறார். ஆனால் கம்பெனியோ அவரது நடவடிக்கைகளை மட்டும் வைத்து மதிப்பிடுகிறது.


இறுதியில் செப் 1,1799 அன்று பானர்மென் தலைமையில் ஆங்கிலேயப்படை பாஞ்சாலங்குறிச்சியை முற்றுகையிடுகிறது. இவ்வளவு சீக்கிரம் படையெடுப்பு இருக்கும் என்று கட்டபொம்மன் எதிர்பார்க்கவில்லை. பெருமளவு வீரர்களும், ஊமைத்துரையும், தானாதிபதியும் திருச்செந்தூரில் நடக்கும் ஆவணிமாதத் திருவிழாவுக்குச் சென்றிருந்த நேரமது. இராமலிங்க முதலியார் என்பவனைத் தூது அனுப்பி கட்டபொம்மனைச் சரணடையச் சொல்கிறான் பானர்மேன். சரணடைய மறுத்து கோட்டையிலிருந்த 1500 வீரர்களுடன் போரிடுகிறார் கட்டபொம்மன். தூது செல்லும் சாக்கில் கோட்டையின் பலவீனங்களை முதலியார் வேவு பார்த்துச் சொல்லியிருந்தும் பானர்மென்னால் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை.


முற்றுகையைப் பற்றிக் கேள்விப்பட்ட ஊமைத்துரையும், தானாதிபதிப்பிள்ளையும் சில வீரர்களும் வெள்ளையர்களின் அணிவகுப்பை உடைத்துக்கொண்டு கோட்டைக்குள் நுழைகிறார்கள். போர் தீவிரமடைகிறது. சுந்தரலிங்கம், வெள்ளையத்தேவன் முதலான வீரர்கள் வீரமரணம் அடைகிறார்கள். சில வெள்ளைத் தளபதிகளும் கொல்லப்படுகிறார்கள். இன்னும் பல இடங்களிலிருந்து வரும் கம்பெனியின் படைகளுக்காக பானர்மென் காத்திருக்கிறான். இனிமேலும் கோட்டையில் இருப்பது உசிதமல்ல என்று கட்டபொம்மனும் ஏனையோரும் முற்றுகையை உடைத்துக் கொண்டு தப்பிக்கின்றனர்.


தப்பிச் சென்றவர்களை கோலார் பட்டியில் எட்டப்பனின் படை எதிர் கொள்கிறது. அந்தச் சண்டையில் நாகலாபுரத்தின் சௌந்தரபாண்டியனும், தானாதிபதிப்பிள்ளையும் பிடிபடுகின்றனர். இருவரையும் பானர்மென் தூக்கிலிடுகிறான். தானாபதியின் தலையைத் துண்டித்து பாஞ்சாலங் குறிச்சியில் நட்டு வைக்கிறான். தனது மன்னனை விவேகத்துடன் வழிநடத்தி, அவனது துன்பங்களில் பங்கெடுத்த தானாதிபதி முதல் தியாகியானார். மருதிருவருடன் இணைந்து போரைத் தொடர்ந்து நடத்தும் நோக்கத்தில் கட்டபொம்மனும் அவரது இளவல்களும் சிவகங்கை நோக்கி விரைகின்றனர்.


இதனை எதிர்பார்த்து சிவகங்கை எல்லையில் காளாப்பூர் காட்டில் பதுங்கியிருந்த துரோகி தொண்டைமானின் படை அனைவரையும் கைது செய்கிறது. வெள்ளையனின் கையால் சாவதைவிட தற்கொலையே மேல் என்று கத்தியை எடுத்த கட்டபொம்மனின் கையை முறுக்கி கட்டி இழுத்துச் செல்கிறது தொண்டைமானின் படை.


கயத்தாறு தன் மீது சுமத்தப்பட்ட "குற்றங்களை' கட்டபொம்மன் மறுக்கவில்லை. உயிர்ப்பிச்சை கேட்கவுமில்லை. ஒரு தேசபக்தனுக்கேயுரிய கம்பீரத்தோடு ""ஆம். கம்பெனிக்கு எதிராக பாளையங்களைத் திரட்டினேன், போர் நடத்தினேன்'' என்று சுற்றி நின்ற பாளையக்காரர்கள் வெட்கித் தலை குனியும் வண்ணம் முழங்கியவாறு தூக்குமேடையேறினார் கட்டபொம்மன்.



கட்டபொம்மனின் இளவல்களான ஊமைத்துரை, சிவத்தையா ஆகியோருடன் பல உறவினர்களும் வீரர்களும் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டனர். கட்டபொம்மன் அணியிலிருந்த நாகலாபுரம், ஏழாயிரம் பண்ணைப் பாளையக்காரர்கள் சென்னைச் சிறையில் அடைக்கப்பட்டு அங்கேயே இறந்தனர். குளத்தூர் பாளையக்காரர் வயதானவர் என்பதாலும், கோலார்பட்டிப் பாளையக்காரர் கண் பார்வையற்ற இளைஞர் என்பதாலும் விடுவிக்கப்பட்டனர். கிளர்ச்சியாளர்களது பாளையங்கள் அனைத்தும் கலைக்கப்பட்டன. பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை இடித்து உழுதுவிட்டு ஊரின் பெயரையே கூட மாற்றினார்கள் வெள்ளையர்கள்.



தனது அடிவருடிப் பாளையங்களையும் வெள்ளையர்கள் விட்டு வைக்கவில்லை. அவர்களது கோட்டைகளும் இடிக்கப்பட்டன. பாளையக்காரர்கள் அனைவரும் வெறும் ஜமீன்தார்கள் ஆக்கப்பட்டனர். ""படை வைத்துக் கொள்ளக்கூடாது, அலங்காரத்துக்காகக் கூட இடுப்பில் வாள் இருக்கக்கூடாது, குடிமக்கள் கூட ஆயுதம் வைத்திருக்கக் கூடாது, மீறினால் மரணதண்டனை'' என்று அறிவித்தான் பானர்மேன்.


இரண்டே ஆண்டுகளில் மரணத்தை வென்றது பாஞ்சாலங்குறிச்சி. பாளையங்கோட்டை சிறையைத் தகர்த்துவிட்டு ஊமைத்துரையும், சிவத்தையாவும் கட்டபொம்மனது கோட்டையை மீண்டும் எழுப்பினார்கள். மருது சகோதரர்களுடன் சேர்ந்து மீண்டும் போர் தொடங்கினார்கள்.


கட்டபொம்மனது நினைவும் பாஞ்சாலங்குறிச்சியின் வீரவரலாறும் மக்கள் மனங்களில் இன்றளவும் நிலைத்து நிற்கின்றன. கட்டபொம்மன் வரலாறு 16க்கும் மேற்பட்ட கதைப் பாடல்களாய் பாடப்பட்டு வருகிறது. இன்றைக்கும் சித்திரைமாதம் அங்கே நடக்கும் சக்கதேவி திருவிழாவின் இரண்டாம் நாள் இரவில் விடிய விடிய நடக்கிறது கட்டபொம்மன் நாடகம்.


இதோ, வெள்ளி முளைக்கும் நேரத்தில் தொடங்குகிறது வெள்ளையத் தேவன் மனைவி வெள்ளையம்மாளின் ஒப்பாரி. அது ஆங்கிலேயர் காலக் கொடுமைகளை எண்ணி அழும் மக்களின் இயலாமை தோற்றுவிக்கும் சோகம். காலனியாதிக்க அடக்கு முறைக்கு எதிராகப் போராடி வீழ்ந்த வீரர்களின் காப்பியச் சோகம். இன்னும் சூரியன் உதிக்கவில்லை. அந்தக் கண்ணீரும் நிற்கவில்லை.


· பாலன்

Monday, January 15, 2007

விடுதலைப் போரின் வீர மரபு 2

விடுதலைப் போரின் வீர மரபு 2

விடுதலைப் போரின் விடிவெள்ளி திப்பு சுல்தான்




"கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்' திப்புவின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இது. """இந்தியாவில் கும்பினியாட்சி நீடிக்க முடியுமா?'' என்ற அச்சத்தை எதிரிகளின் மனதில் உருவாக்கியவர் திப்பு. தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் விடுதலைப் போரின் நாயகர்களான கட்டபொம்மன், மருது சகோதரர்கள், கோபால் நாயக்கர், தீரன் சின்னமலை, கேரள வர்மா, தூந்தாஜி வாக் போன்ற எண்ணற்ற போராளிகளுக்கு அன்று மிகப்பெரும் உந்து சக்தியாகத் திகழ்ந்தவர் திப்பு.



1782 டிசம்பரில் ஹைதர் இறந்த பின் அரசுரிமையைப் பெறும்போது திப்புவின் வயது 32. மேற்குக் கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களைத் துடைத்தெறிந்து விட வேண்டும் என்ற வேகத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு. திப்புவின் அணியில் போரிட்டுக் கொண்டிருந்தன இந்தியாவில் இருந்த பிரெஞ்சுப் படைகள். ஆனால் அன்று புரட்சியெனும் எரிமலையின் வாயிலில் அமர்ந்திருந்த பிரெஞ்சு மன்னன் 16ம் லூயி, பிரிட்டனுடன் சமரசம் செய்து கொண்டதால் திப்புவும் போரை நிறுத்த வேண்டியதாயிற்று.



1784இல் முடிவடைந்த இந்தப் போரில் ஆங்கிலப் படையின் தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவிடம் போர்க் கைதிகளாகப் பிடிபட்டு, பின்னர் அவரால் விடுவிக்கப்பட்டனர். இந்த அவமானம்தான் கும்பினியுடைய குலைநடுக்கத்தின் தொடக்கம்.



மூன்றாவது மைசூர்ப் போர் என்று அழைக்கப்படும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர் (179092) ஆங்கிலேயக் கைக்கூலியான திருவிதாங்கூர் மன்னனால் தூண்டிவிடப்பட்டது. தனது நட்பு நாடான திருவிதாங்கூரை ஆதரிப்பது என்ற பெயரில் கவர்னர் ஜெனரல் கார்ன்வாலிஸ், திப்புவுக்கு எதிராகக் களமிறங்கினான். திருவிதாங்கூர், ஐதராபாத் நிஜாம், மைசூர் அரசின் முன்னாள் பாளையக்காரர்கள், ஆற்காட்டு நவாப், தொண்டைமான் ஆகிய அனைவரும் ஆங்கிலேயன் பின்னால் அணிதிரண்டனர்.



எனவே எதிரிகளைத் தன்னந்தனியாக எதிர்கொண்டார் திப்பு. மைசூருக்கு அருகிலிருக்கும் சீரங்கப்பட்டினம் கோட்டை 30 நாட்களுக்கும் மேலாக எதிரிகளின் முற்றுகைக்கு இலக்கான போதிலும் எதிரிகளால் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை. ""30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தத் தீவையும் கோட்டையையும் தூரத்திலிருந்து தரிசிக்க மட்டுமே முடிந்தது'' என்று பின்னர் குறிப்பிட்டான் ஆங்கிலேய அதிகாரி மன்றோ.



பல போர் முனைகளில் ஆங்கிலேயரை வெற்றி கொண்டன திப்புவின் படைகள். எனினும் போரின் இறுதிக்கட்டத்தில் மராத்தாக்களின் பெரும் படையும் ஆங்கிலேயருடன் சேர்ந்து கொள்ளவே, உடன்படிக்கை செய்து கொள்ளவேண்டிய கட்டாயம் திப்புவுக்கு ஏற்பட்டது.



மைசூர் அரசின் பாதி நிலப்பரப்பை எதிரிகள் பங்கு போட்டுக்கொண்டனர். இழப்பீட்டுத் தொகையாக 3.3 கோடி ரூபாயை ஒரு ஆண்டுக்குள் செலுத்த வேண்டுமென்றும், அது வரை திப்புவின் இரு மகன்களை பணயக் கைதிகளாக ஒப்படைக்க வேண்டுமென்றும் நிபந்தனை விதித்தான் கார்ன்வாலிஸ். பணயத்தொகையை அடைத்து கும்பினிக் கொள்ளையர்களிடமிருந்து தன் மகன்களை மீட்டதுடன் ஆங்கிலேயருக்கு எதிரான அடுத்த போருக்கும் ஆயத்தம் செய்யத் தொடங்கினார் திப்பு. 1792 போரில் ஏற்பட்ட இழப்புகளைச் சரி செய்தது மட்டுமல்ல, முன்னிலும் வலிமையாகத் தனது பொருளாதாரத்தையும் இராணுவத்தையும் திப்பு கட்டியமைத்துவிட்டார்.



""ஆம். நான் அவனைக் கண்டு அஞ்சுகிறேன். அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களைப் போன்றவன் அல்ல. மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தைக் கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால் அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிருஷ்டம்'' என்று 1798இல் கும்பினித் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறான் அன்றைய கவர்னர் ஜெனரல் மார்க்வெஸ் வெல்லெஸ்லி.



திப்புவைப் போரிட்டு வெல்ல முடியாது என்ற முடிவுக்கு வந்த வெள்ளையர்கள், பிளாசிப் "போரில்' பயன்படுத்திய லஞ்சம் எனும் ஆயுதத்தையும் ஐந்தாம் படையையும் ஆயத்தப்படுத்தத் தொடங்கினார்கள். அடுத்த ஓராண்டிற்குள் திப்புவின் முதன்மையான அமைச்சர்களும் அதிகாரிகளும் தளபதிகளும் விலைக்கு வாங்கப்பட்டார்கள். இதைக் குறிப்பிட்டு, ""இப்போது நாம் "தைரியமாக' திப்புவின் மீது படையெடுக்கலாம்'' என்று 1799இல் கும்பினியின் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறான் வெல்லெஸ்லி.



இதுதான் திப்புவின் இறுதிப்போர். நாடு தழுவிய அளவில் ஒரு ஆங்கிலேய எதிர்ப்பு முன்னணியை உருவாக்க முயன்று தோற்று, பிரான்சிலிருந்து நெப்போலியனின் உதவியும் கிடைக்காத நிலையிலும், தன்னந்தனியாக ஆங்கிலேயரை எதிர்கொண்டார் திப்பு. 3வது போரின்போது ஆங்கிலேயனுக்குத் துணை நின்ற துரோகிகள் அனைவரும் இந்தப்போரிலும் திப்புவுக்கு எதிராக அணிவகுத்தனர். மராத்தியர்களோ, கண்டுகொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டனர்.



அனைத்துக்கும் மேலாக, திப்புவின் அமைச்சர்களான மீர் சதக்கும், பூர்ணய்யாவும் செய்த ஐந்தாம்படை வேலை காரணமாக சீரங்கப்பட்டினத் தின் கோட்டைக் கதவுகள் ஆங்கிலேயருக்குத் திறந்து விடப்பட்டன. தன்னுடன் போரிட்டு மடிந்த 11,000 வீரர்களுடன் தானும் ஒரு வீரனாகப் போர்க்களத்தில் உயிர் துறந்தார் மாவீரன் திப்பு. ஆங்கிலேயப் பேரரசின் காலனியாதிக்கத்துக்குத் தடையாகத் தென்னிந்தியாவிலிருந்து எழுந்து நின்ற அந்த மையம் வீழ்ந்தது.



திப்புவைக் கண்டு ஆங்கிலேயர்கள் அஞ்சி நடுங்கியதற்குக் காரணம் அவருடைய இராணுவ வல்லமையோ, போர்த்திறனோ மட்டுமல்ல; தன்னுடைய சாம்ராச்சியத்தைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டுமென்று மட்டும் சிந்திக்காமல், ஆங்கிலேயரை விரட்டவேண்டுமென்பதையே தன் வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருந்த ஒரு மன்னனை, கனவிலும் நனவிலும் அதே சிந்தனையாக வாழ்ந்த ஒரு மன்னனை அவர்கள் கண்டதில்லை.



ஆம். திப்புவின் 18 ஆண்டுகால ஆட்சி அதற்குச் சான்று கூறுகிறது. ஆங்கிலேயர்க்கெதிரான நாடு தழுவிய, உலகு தழுவிய முன்னணி ஒன்றை அமைப்பதற்காக திப்பு மேற்கொண்ட முயற்சிகள் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன. டில்லி பாதுஷா, நிஜாம், ஆற்காட்டு நவாப், மராத்தியர்கள் என எல்லோரிடமும் மன்றாடியிருக்கிறார் திப்பு.



துருக்கி, ஆப்கான், ஈரான் மன்னர்களுக்குத் தூது அனுப்பி வணிகரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் உலகளவிலான எதிர்ப்பு அணியை உருவாக்கவும் திப்பு முயன்றிருக்கிறார். ""திப்புவின் கோரிக்கையை ஏற்று ஜமன் ஷா வட இந்தியாவின் மீது படையெடுத்தால் அந்தக் கணமே தென்னிந்தியா திப்புவின் கைக்குப் பறிபோய் விடும்'' என்று 1798இல் பதறியிருக்கிறான் வெல்லெஸ்லி.



பிரான்சுடனான உறவில் ஒரு இளைய பங்காளியாக அவர் எப்போதும் நடந்து கொள்ளவில்லை. படையனுப்பக் கோரி பிரெஞ்சுக் குடியரசுக்கு அவர் எழுதிய கடிதத்தில், ""அந்தப் படை தன் தலைமையில் தான் போரிட வேண்டுமென்றும், நேச நாடான தன்னைக் கலந்து கொள்ளாமல் இனி ஆங்கிலேயர்களுடன் பிரான்சு எந்த உடன்படிக்கைக்கும் செல்லக் கூடாது'' என்றும் கூறுகிறார். இந்தக் கடிதத்தின் அடிப்படையில்தான், திப்புவின் இராணுவத்தில் சேருமாறு பிரெஞ்சு மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறார்கள் பிரெஞ்சுப் புரட்சியாளர்களான ஜாகோபின்கள்.



பிரெஞ்சுப் புரட்சிக்கு முன் லூயி மன்னனின் அரசுடன் உறவு வைத்திருந்த காலத்தில் கூட, பாண்டிச்சேரியிலிருந்து பிரெஞ்சு அரசால் விரட்டப்பட்ட ஜாகோபின்களுக்கு (மன்னராட்சியை எதிர்த்த பிரெஞ்சுப் புரட்சிக்காரர்கள்) மைசூரில் இடமளிக்க திப்பு தயங்கவில்லை. புரட்சி வெற்றி பெற்றபின் அதைக் கொண்டாடுமுகமாக முடியாட்சிச் சின்னங்களையெல்லாம் தீயிட்டு எரித்து மைசூரில் ஜாகோபின்கள் நடத்திய விழாவிலும் பங்கேற்று,"குடிமகன் திப்பு' என்று அவர்கள் அளித்த பட்டத்தையும் மகிழ்ச்சியுடன் ஏற்கிறார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற சொற்கள் இந்த நாட்டில் திப்புவின் மண்ணில்தான் முதன் முதலாக ஒலித்தன.



பிரெஞ்சுப் பத்திரிக்கையொன்றில் ஆங்கிலேயக் காலனியாதிக்கத்துக்கு எதிராக அமெரிக்கர்கள் நடத்திய போருக்கு நிதியுதவி கேட்டு பெஞ்சமின் ஃபிராங்க்ளின் வெளியிட்டிருந்த கோரிக்கையைப் படித்துவிட்டு "மைசூர் அரசின் சார்பாக' உடனே நிதியனுப்பிய திப்பு, அமெரிக்காவிலும் இந்தியாவிலும் நடக்கும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர்களின் ஒற்றுமையைக் குறிப்பிட்டு ""உலகின் கடைசி சர்வாதிகாரி இருக்கும் வரையில் நமது போராட்டம் தொடரட்டும்'' என்று செய்தியும் அனுப்புகிறார்.



ஒரு மன்னன் இவ்வாறெல்லாம் நடந்து கொண்டிருக்க முடியுமா என்று வாசகர்கள் வியப்படையலாம். வரலாற்றின் போக்கை உணர்ந்து சமூக மாற்றத்துக்கான நடவடிக்கைகளில் முன்கை எடுத்த மன்னர்கள் உலக வரலாற்றில் மிகச் சிலரே. அத்தகைய அறிவொளி பெற்ற மன்னர்களில் திப்பு ஒருவர். பரம்பரை அரச குடும்பம் எதையும் சாராத திப்புவின் சமூகப் பின்னணியும், "பென்சன் ராஜாக்கள்' என்று வெறுப்புடன் அவர் குறிப்பிட்ட ஆங்கிலேய அடிவருடி மன்னர்கள் மீது அவர் கொண்டிருந்த வெறுப்பும், பிரெஞ்சுப் புரட்சியின் இலக்கியங்களோடு அவர் கொண்டிருந்த பரிச்சயமும், அவருக்குள் அணையாமல் கனன்று கொண்டிருந்த காலனியாதிக்க எதிர்ப்புணர்வும், மாறிவரும் உலகைப் புரிந்து கொள்ளும் கணணோட்டத்தை அவருக்கு வழங்கியிருக்க வேண்டும்.



தனது அரசின் நிர்வாகம், வணிகம், விவசாயம், சமூகம், இராணுவம் போன்ற பல துறைகளில் அவர் அறிமுகப்படுத்த முனைந்த மாற்றங்களைப் பார்க்கும்போது, திப்பு என்ற ஆளுமையின் கம்பீரமும் செயல்துடிப்பும் நம்முன் ஓவியமாய் விரிகிறது.



காலனியாதிக்கத்தை எதிர்க்க வேண்டுமானால் ஒரு தொழில் முறையில் பயிற்றுவிக்கப்பட்ட, பெரிய, நவீன இராணுவத்தை உருவாக்கியாக வேண்டும் என்ற புறவயமான நிர்ப்பந்தம் திப்புவை நவீனமயமாக்கத்தை நோக்கி உந்தித் தள்ளுகிறது. ஆனால் அரசுக்கான வருவாயை விவசாயம்தான் வழங்கியாக வேண்டுமென்ற சூழ்நிலையைப் புரிந்து கொண்டு விவசாயிகளின் வளர்ச்சி குறித்து அவர் பெரிதும் அக்கறை காட்டுகிறார்.



""எந்தச் சாதி மதத்தைச் சேர்ந்தவரானாலும் சரி, உழுபவர்களுக்குத் தான் நிலம் சொந்தமாக இருக்கவேண்டும்'' என்று திப்பு பிரகடனம் செய்கிறார். இந்தப் பிரகடனத்தை நடைமுறையில் அமல் படுத்தியிருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே என்றாலும், ரயத்வாரி முறையை அமல்படுத்தியதுடன், பார்ப்பனர்களின் நிலங்களுக்கு வழங்கப்பட்ட வரிவிலக்கையும் திப்பு ரத்து செய்திருக்கிறார். இராணுவம் மற்றும் துணை இராணுவப் படையினர் 3 லட்சம் பேருக்கு நிலம் வழங்கியிருக்கிறார். சென்னை மாகாணத்தைப் போல அல்லாமல் மைசூர் அரசில் தலித் சாதியினருக்குப் பல இடங்களில் நிலஉடைமை இருந்ததாக எட்கர் தர்ஸ்டன் என்ற ஆய்வாளர் கூறுகிறார்.



""ஏழைகளையும், விவசாயிகளையும் சொல்லாலோ செயலாலோ துன்புறுத்த மாட்டோம்'' என்று வருவாய்த்துறை ஊழியர்கள் பதவி ஏற்கும்முன் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அதிகாரிகள் தம் நிலங்களில் விவசாயிகளைக் கூலியின்றி வேலை பார்க்கச் சொல்வது முதல் தம் குதிரைகளுக்கு இலவசமாகப் புல் அறுத்துக் கொள்வது வரை அனைத்தும் சட்டப்படி தண்டனைக்கு உரிய குற்றங்களாக்கப்பட்டிருந்தன. விவசாயிகளைக் கொடுமைப்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான சான்றுகளும் இருப்பதாகக் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள். 1792 போருக்குப்பின் திப்புவிடமிருந்து ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக் கொண்ட சேலம் மாவட்டம் வேலூர் தாலூக்காவிலிருந்து வரிக்கொடுமை தாளாமல் 4000 விவசாயிகள் திப்புவின் அரசுக்குக் குடி பெயர்ந்ததை 1796லேயே பதிவு செய்திருக்கிறான் ஆங்கிலேய அதிகாரி தாமஸ் மன்றோ.



1792 தோல்விக்குப் பிறகும் கூட ஆங்கிலேயரை தன் எல்லைக்குள் வணிகம் செய்ய திப்பு அனுமதிக்கவில்லை. மாறாக, உள்நாட்டு வணிகர்களை ஊக்குவித்திருக்கிறார். பணப்பயிர் உற்பத்தி, பெங்களூர் லால் பாக் என்ற தாவரவியல் பூங்கா, பட்டுப் பூச்சி வளர்ப்பு என விவசாயத்தை பிற உற்பத்தித் துறைகளுடன் இணைப்பதிலும், பாசன வளத்தைப் பெருக்கி விவசாயத்தை விரிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்தி இருக்கிறார் திப்பு. 1911இல் ஆங்கிலேயப் பொறியாளர்கள் கிருஷ்ணராஜ சாகர் அணையைக் கட்டுவதற்கான பணிகளைத் துவக்கிய போது அதே இடத்தில் அணைக்கட்டு கட்டுவதற்கு 1798இல் திப்பு நாட்டியிருந்த அடிக்கல்லையும், இந்த அணைநீரைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் புதிய விளைநிலங்களுக்கு வரிவிலக்கு அளிப்பது குறித்த திப்புவின் ஆணையையும் கண்டனர்.



""அன்றைய மைசூர் அரசின் மொத்த மக்கட்தொகையில் 17.5% பேர் விவசாயம் சாராத பிற உற்பத்தித் துறைகளில் ஈடுபட்டிருந்தனர்; இரும்பு, தங்கம், நெசவு போன்ற தொழில்களின் அடிப்படையிலான நகரங்கள் உருவாகியிருந்தன; உற்பத்தியின் அளவிலும் தரத்திலும் அவை ஐரோப்பியப் பொருட்களுக்கு நிகராக இருந்தன; முதலாளித்துவத் தொழிலுற்பத்தியின் வாயிலில் இருந்தது திப்புவின் மைசூர்'' என்று ஆங்கிலேய அதிகாரிகளின் ஆவணங்களையே ஆதாரம் காட்டி எழுதுகிறார் வரலாற்றாய்வாளர் தோழர்.சாகேத் ராமன். நகரங்களில் வளர்ந்திருந்த பட்டறைத் தொழில்கள் மற்றும் வணிகத்தின் காரணமாக சாதி அமைப்பு இளகத் தொடங்கியிருந்ததையும், நெசவு, சில்லறை வணிகம் முதலான தொழில்களில் தலித்துகள் ஈடுபட்டிருந்ததையும் தனது ஆய்வில் குறிப்பிடுகிறான் கும்பினி அதிகாரி புக்கானன்.



திப்புவிடம் இருந்த புதுமை நாட்டமும் கற்றுக்கொள்ளும் தாகமும் இந்த முன்னேற்றத்தில் பெரும்பங்காற்றியிருக்கின்றன.



பிரான்சுடனான அவரது உறவில் ஐரோப்பியத் தொழில் புரட்சியை அப்படியே இங்கு பெயர்த்துக் கொண்டு வந்து விடும் ஆர்வம் தெரிகிறது. 1787 இல், பல்துறை அறிவையும் வளர்த்துக் கொள்வதற்காக 70 பேரை பிரான்சுக்கு அனுப்பி வைக்கிறார். அது மட்டுமல்ல, தொழிற்புரட்சியின் உந்துவிசையான நீராவி எந்திரத்தை உடனே அனுப்பி வைக்குமாறு பிரெஞ்சுக் குடியரசிடம் கோருகிறார் திப்பு.



இவையெதுவும் ஒரு புத்தார்வவாதியின் ஆர்வக் கோளாறுகள் அல்ல. காலனியாதிக்க எதிர்ப்புணர்வால் உந்தப்பட்டு தொழிலையும் வணிகத் தையும் வளர்க்க விரும்பிய திப்பு, 1793இல் கிழக்கிந்தியக் கம்பெனிக்குப் போட்டியாக அரசு வணிகக் கம்பெனியைத் துவக்குகிறார். இந்துஸ்தானம் முழுதும் 14 இடங்களில் வணிக மையங்கள், 20 வணிகக் கப்பல்கள், 20 போர்க்கப்பல்கள், கான்ஸ்டான்டி நோபிளில் மைசூர் அரசின் கப்பல் துறை.. என்று விரிந்து செல்கிறது திப்புவின் திட்டம்.



அன்று கிழக்கிந்தியக் கம்பெனியை விஞ்சுமளவு வணிகம் செய்து கொண்டிருந்த பனியா, மார்வா, பார்ஸி வணிகர்கள் கும்பினியின் போர்களுக்கு நிதியுதவி செய்து கொண்டிருக்க, வணிகத்தையே ஒரு அரசியல் நடவடிக்கையாக, மக்களையும் ஈடுபடுத்தும் காலனியாதிக்க எதிர்ப்புப் போராக மாற்ற விழைந்திருக்கிறார் திப்பு.



அரசு கஜானாவுக்கு நிதியைத் திரட்டுவதற்காக மதுவிற்பனையை அனுமதித்த தனது நிதி அமைச்சரைக் கண்டித்து, ""மக்களின் ஆரோக்கியத் தையும் ஒழுக்கத்தையும் அவர்களது பொருளாதார நலனையும் காட்டிலும் நம் கஜானாவை நிரப்புவதுதான் முதன்மையானதா?'' என்று கேள்வி எழுப்புகிறார். கஞ்சா உற்பத்தியைத் தடை செய்கிறார். அவரது எதிரியான கும்பினியோ, கஞ்சா பயிரிடுமாறு வங்காள விவசாயிகளைத் துன்புறுத்தியது; கஞ்சா இறக்குமதியை எதிர்த்த சீனத்தின்மீது போர் தொடுத்தது; கஞ்சா விற்ற காசில் "சூரியன் அஸ்தமிக்காத சாம்ராச்சியத்தை' உருவாக்கியது.



அநாதைச் சிறுமிகளை கோயிலுக்கு தேவதாசியாக விற்பதையும், விபச்சாரத்தையும் தடை செய்தார் திப்பு. அதே காலகட்டத்தில் பூரி ஜகந்நாதர் கோயிலின் தேரில் விழுந்து சாகும் பக்தர்களின் மடமையிலும், அவ்வூரின் விபச்சாரத்திலும் காசு பார்த்தார்கள் கும்பினிக்காரர்கள்.



""எகிப்தியப் பிரமிடுகளும், சீனப் பெருஞ்சுவரும், கிரேக்க ரோமானியக் கட்டிடங்களும் அவற்றைக் கட்டுவதற்கு ஆணையிட்ட மன்னர்களின் புகழுக்குச் சான்று கூறவில்லை. கொடுங்கோல் மன்னர்களின் ஜம்பத்துக்காக ரத்தம் சிந்தி உயிர்நீத்த லட்சோப லட்சம் மக்களின் துயரம்தான் அவை கூறும் செய்தி'' என்று எழுதிய திப்பு தனது அரசில் அடிமை விற்பனையைத் தடை செய்தார். ""எந்த அரசாங்க வேலையானாலும் கூலி கொடுக்காமல் வேலை வாங்கக் கூடாது'' என்று தன் அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்தார்.



கும்பினிக்காரர்களோ திப்புவிடமிருந்து கைப்பற்றிய மலபார் பகுதியில் பின்னாளில் தம் எஸ்டேட்டு வேலைக்காக வாயில் துணி அடைத்துப் பிள்ளை பிடித்தனர்; முதல் விடுதலைப் போரில் தென்னிந்தியா தோற்றபின் தென் ஆப்பிரிக்கா முதல் மலேயா வரை எல்லா நாடுகளுக்கும் கொத்தடிமைகளாக மக்களைக் கப்பலேற்றினர்.



திப்புவின் ஜனநாயகப் பண்பு அவருடைய நிர்வாக ஆணைகள் அனைத்திலும் வெளிப்படுகிறது. ""விவசாயிகள் மீது கசையடி போன்ற தண்டனைகளை நிறுத்திவிட்டு, 2 மல்பெரி மரங்களை நட்டு 4 அடி உயரம் வளர்க்க வேண்டும்'' என்று தண்டனை முறையையே மாற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார். தவறிழைக்கும் சிப்பாய்கள் மீதும் உடல் ரீதியான தண்டனைகள் திப்புவின் இராணுவத்தில் நிறுத்தப்பட்டிருக்கின்றன.



""தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர்கள் ஆகலாம். ஆனால் தேசத்தை அது ஏழ்மையாக்கும்; மொத்த இராணுவத்தின் கவுரவத்தையும் குலைக்கும். போர்களை போர்க்களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களைக் கவுரவமாக நடத்துங்கள். அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்'' என்று தன் இராணுவத்துக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பிக்கிறார் திப்பு. ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளிடமிருந்து ஒரு பேச்சுக்குக் கூட இத்தகைய நாகரிகமான சிந்தனை அன்று வெளிப்பட்டதில்லை.



""ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் சந்திக்கும் முதன்மையான அபாயம் திப்புதான்'' என்று கும்பினி நிர்வாகத்துக்குப் புரியவைப்பதற்காக தாமஸ் மன்றோ லண்டனுக்கு எழுதிய நீண்ட கடிதத்தில் திப்புவின் அரசைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறான்: ""சிவில் நிர்வாகமாக இருக்கட்டும், இராணுவமாக இருக்கட்டும், உயர்குலத்தில் பிறந்தவர்கள் என்பதற்காக இங்கே சலுகை காட்டப்படுவதில்லை.. எல்லா வர்க்கத்தினர் மீதும் பாரபட்சமின்றி நீதி நிலைநாட்டப்படுகிறது.. அநேகமாக எல்லா வேலைவாய்ப்புகளும் பொறுப்புகளும் மிகச் சாதாரண மனிதர்களுக்கு வழங்கப்படுவதால், இந்தியாவில் வேறு எங்கும் காணமுடியாத அளவு செயல்துடிப்பை இந்த அரசில் பார்க்க முடிகிறது.''



1799இல் திப்பு வீழ்த்தப்பட்டபின் எழுதப்பட்ட கும்பினி அதிகாரிகளின் குறிப்புகள் கீழ்க்கண்டவாறு கூறுகின்றன: ""இறுதி நேரத்தில் நமது கையாட்களாக மாறிய இந்துக்கள் கூட திப்புவை கனிவான எசமானாகவே கருதுகிறார்கள்.'' ""தற்போது நாம் ஆட்சிக்கு வந்துவிட்டதால் திப்புவைப் பற்றிப் புகார் கூறினால் நாம் மகிழ்ச்சி அடைவோம் என்பதற்காகக் கூட மக்கள் யாரும் புகார் கூறவில்லை. இவர்கள் நம் ஆட்சியை வேறு வழியின்றிச் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் பழைய எசமானைத்தான் ஆதரிப்பார்கள்.'' — இவையனைத்தும் திப்புவைப் பற்றி எதிரிகள் வழங்கும் ஆதாரங்கள்.



மக்கள் மீது திப்பு பாராட்டிய நேசம், சம்பிரதாயமானதோ நோக்கமற்றதோ அல்ல. எதிரிகள் கண்டு அஞ்சுமளவுக்கு ஒரு பிரம்மாண்டமான இராணுவத்தைக் கட்டி அமைத்திருந்த போதிலும், தன்னுடைய நாடே ஒரு மனிதனாக எழுந்து நின்று ஆங்கிலேயரை எதிர்த்துப் போராட வேண்டும் என்று கனவு கண்டிருக்கிறார் திப்பு.



தன் அரண்மனையில் திப்பு பொறித்து வைத்துள்ள வாசகங்கள் இதற்குச் சாட்சி கூறுகின்றன.



""நம்முடைய குடிமக்களுடன் சச்சரவு செய்வதென்பது, நமக்கெதிராக நாமே போர் தொடுத்துக் கொள்வதற்குச் சமமானது. மக்கள்தான் நம் கவசம். நமக்கு அனைத்தையும் வழங்குபவர்கள் மக்கள்தான். நம்முடைய சாம்ராச்சியத்தின் வலிமையனைத்தையும், வெறுப்பனைத்தையும் சேமித்து வையுங்கள். அவை அனைத்தும் அந்நிய எதிரிகளின் மீது மட்டும் பாயட்டும்.''



வெறும் சொற்களல்ல. காலனியாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் தன் மக்களைக் கவசமாக மட்டுமின்றி, வாளாகவும் பயன்படுத்தக் கனவு கண்டார் திப்பு. ""விவசாயிகள் அனைவருக்கும் துப்பாக்கி வழங்கப்பட வேண்டும். அன்றாடம் ஊருக்கு வெளியே துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்கப்பட வேண்டும்'' என்று தன் வரி வசூல் அதிகாரிகளுக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பித்திருக்கிறார் திப்பு. இந்த ஆணை செயல் வடிவம் பெற்றிருக்குமா என்ற கேள்வி இருக்கட்டும். தன் குடிமக்கள் மீது எத்தனை நம்பிக்கை வைத்திருந்தால் ஒரு மன்னனே அவர்களுக்கு ஆயுதம் வழங்குமாறு உத்தரவிட்டிருக்க முடியும்?



திப்புவின் நம்பிக்கை வீண் போகவில்லை. சீரங்கப்பட்டினத்தின் கோட்டைக் கதவுகளைத் திறந்துவிட்ட நிதி அமைச்சன் மீர் சதக்கின் தலையை அந்தப் போர்க்களத்திலேயே சீவி எறிந்தான் திப்புவின் ஒரு சிப்பாய். செய்தியறிந்த மக்களோ அங்கேயே அவன் உடலின் மீது காறி உமிழ்ந்தார்கள். புதைக்கப்பட்ட பிறகும் அவன் உடலைத் தோண்டியெடுத்து அதன் மீது ஒரு வார காலம் சேற்றையும் மலத்தையும் வீசினார்கள். "சதக்' என்ற பாரசீகச் சொல் துரோகத்தைக் குறிக்கும் சொல்லாக கன்னட மொழியில் ஏறியது.



காலனியாதிக்கத்துக்கு எதிராக ஒரு மக்கள் படையைக் கட்டக் கனவு கண்டார் திப்பு. அவர் மறைவுக்குப்பின் ஒன்றரை லட்சம் பேரைத் திரட்டி, ஆங்கிலேயருக்கு எதிராகப் போர் நடத்தி, தன் மன்னனுக்கு அஞ்சலி செலுத்தினான் திப்புவின் குதிரைப் படைத் தளபதி தூந்தாஜி வாக்.



ஒருவேளை திப்பு பிழைத்திருந்தால்? "உயிர் பிழைத்தல்' என்ற சொற்றொடரே திப்புவின் அகராதியில் இல்லை. 1792 போரில் வெள்ளையரிடம் தோற்றவுடன் ""ஆங்கிலேயரை ஒழிக்கும் வரை இனி நான் பஞ்சணையில் படுக்கமாட்டேன்'' என்று அரசவையிலேயே சூளுரைத்தார் திப்பு.



இதோ, குண்டுக் காயங்களுடன் கோட்டை வாயிலில் சரிந்து கிடக்கிறார் திப்பு. ""மன்னா, யாரேனும் ஒரு ஆங்கிலேய அதிகாரியை அழைக்கட்டுமா, சரணடைந்து விடலாம்'' என்று பதறுகிறான் அவருடைய பணியாள். ""முட்டாள்... வாயை மூடு'' என்று உறுமுகிறார் திப்பு. ஆம்! ""ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்'' என்று பிரகடனம் செய்த அந்தப் புலி, போர்க் களத்திலேயே தன் கண்ணை மூடியது.



திப்பு போர்க்களத்திற்குச் சென்று விட்டார் என்பதை நம்ப மறுத்து அரண்மனையெங்கும் தேடிய ஆங்கிலேய இராணுவம், நள்ளிரவில் சிப்பாய்களின் பிணக்குவியலுக்குள்ளே திப்புவின் உடலைக் கண்டெடுக்கிறது. அந்தக் காட்சியை அப்படியே பதிவு செய்திருக்கிறான் ஒரு ஆங்கிலேய அதிகாரி:



""நகரமே சூறையாடப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டுப் புகைந்து கொண்டிருக்கிறது. தமது வீடுகள் கொள்ளையடிக்கப்படுவதைப் பற்றிக் கவலைப்படாமல், திப்புவின் உடலை நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குகிறார்கள் மக்கள். அடக்க முடியாமல் நெஞ்சம் வெடிக்கக் கதறுகிறார்கள்.''



""மானமிழந்தினி வாழ்வோமோ அல்லா
எமக்குச் சாவு வராதா
துயரும் இழிவும் கண்ணில் தெரியுதே அல்லா
எமக்குச் சாவு வராதா



இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் திப்புவின் உடலைத் தழுவிச் சென்ற அந்த ஓலம், இதோ நம் இதயத்தை அறுக்கிறது. திப்பு எனும் அந்தக் காப்பியத் துயரம் நம் கண்ணில் நனைகிறது.



· மருதையன்