தமிழ் அரங்கம்

Friday, July 14, 2006

இடதுசாரி அலையா? கானல் நீரா?

தென்னமெரிக்க நாடுகளில் புதிய ஆட்சிகள்: இடதுசாரி அலையா? கானல் நீரா?

வாக்குறுதி அளித்து விட்டு, ஆட்சிக்கு வந்தபின் வஞ்சிக்கும் ஓட்டுப் பொறுக்கிகள் தொடர்ந்து பதவியில் நீடிக்க முடிவதில்லை. தமது விருப்பத்தையும் விதியையும் நிறைவேற்றாத ஓட்டுக்கட்சிகளையும் ஆட்சியாளர்களையும் அடுத்தடுத்த போராட்டங்களில் மக்கள் தூக்கியெறிகிறார்கள். மக்கள் தீர்ப்பைச் செயல்படுத்தாத பழைய வகைப்பட்ட ஓட்டுக் கட்சிகள் அனைத்தும் மக்களின் நம்பிக்கையை இழந்து செல்லாக் காசாகி விட்டன. மக்கள் கோரிக்கைகளைச் செயல்படுத்த விழையும் ஆட்சியாளர்கள் மட்டுமே பதவியில் நீடிக்க முடிகிறது. துரோகமிழைத்தால், உடனே மக்கள் போராட்டங்களில் இறங்குகிறார்கள். மக்களின் பேரெழுச்சியைக் கண்டு அஞ்சி துரோக ஆட்சியாளர்கள் நாட்டை விட்டே தப்பியோடுகிறார்கள்.


தென்னமெரிக்க கண்டம் முழுவதும் இத்தகைய மக்கள்திரள் போராட்டங்கள் காட்டுத் தீயாக பற்றிப் பரவுகிறது. தென்னமெரிக்க மத்திய அமெரிக்க நாடுகளில் அடுத்தடுத்து நடந்துவரும் மக்கள் பேரெழுச்சிகளைக் கண்டு உலக மேலாதிக்க வல்லரசான அமெரிக்கா, விழிபிதுங்கி நிற்கிறது. ஒருநாட்டில் மக்கள் போராட்டங்களால் தனது விசுவாச ஆட்சிக்கு ஏற்பட்ட நெருக்கடியிலிருந்து அமெரிக்கா தப்பிக்குமுன், அடுத்த நாட்டில் மக்கள் போராட்டங்கள் பற்றி எரியத் தொடங்கி விடுகிறது. அர்ஜெண்டினா, வெனிசுலா, பொலிவியா, ஈக்வடார் முதலான நாடுகளைத் தொடர்ந்து மத்திய அமெரிக்காவிலுள்ள சின்னஞ்சிறு நாடான ஹெய்தியில் அண்மையில் நடந்த மக்கள் பேரெழுச்சியானது, அமெரிக்காவின் முகத்தில் கரி பூசியுள்ளது.


ஹெய்தி உலகின் நான்காவது ஏழை நாடு. அந்நாட்டின் மக்கள் தொகையில் 75 சதவீதத்தினர் நாளொன்றுக்கு ரூ. 50க்கும் குறைவாக ஊதியம் பெறும் சாமானியர்கள். அமெரிக்கக் கைப்பாவைகளின் இராணுவ சர்வாதிகார ஆட்சியில் சிக்கித் தவித்த ஹெய்தி மக்கள், 2000வது ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலில், ""விடுதலை இறையியல்'' கொள்கையைக் கொண்ட கத்தோலிக்கப் பாதிரியாரான பெர்டினாண்டு அரிஸ்டைடு என்பவரை அதிபராகத் தேர்ந்தெடுத்தனர். ஹெய்தியின் 200 ஆண்டு கால வரலாற்றில் முதன்முறையாக ஆகப் பெரும்பான்மையான மக்களின் ஆதரவோடு ஆட்சிக்கு வந்தவர்தான் அரிஸ்டைடு.


அவர் முந்தைய கைக்கூலி ஆட்சியாளர்களைப் போல அமெரிக்காவுக்கு காவடி தூக்காமல், மக்களுக்குத் தொண்டாற்றும் மனிதாபிமான உள்ளத்தோடு நல்வாழ்வுத் திட்டங்களுக்குக் கூடுதலாக நிதி ஒதுக்கினார். அமெரிக்க விசுவாச இராணுவப் படைகளுக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைத்தார். இத்தகைய அற்ப சீர்திருத்த நடவடிக்கைகளைக் கூட சகித்துக் கொள்ளாத அமெரிக்கா, முன்னாள் இராணுவத்தினர் சமூக விரோதிகளைக் கொண்ட இரகசிய கொலைக் குழுக்களை ஹெய்தியில் கட்டியமைத்து சீர்குலைவு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அதிபரை அச்சுறுத்தியது. அண்டை நாடான டொமினிகன் குடியரசிலிருந்து இக்கூலிப் படைகளைக் கொண்டு அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி பேரழிவுகளை விளைவித்தது. 2004ஆம் ஆண்டு பிப்ரவரியில் இக்கூலிப் படைகள் அதிநவீன ஆயுதங்களுடன் நாடெங்கும் பெருந்தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விட்டன. இவற்றை ""ஹெய்தியில் ஜனநாயகத்துக்காக நடக்கும் கலகங்கள்'' என்று ஏகாதிபத்திய உலகம் கொண்டாடியது. இக்கூலிப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்கப் படைகள் ஹெய்தி கடற்கரையில் கப்பலில் தயாராக நின்றன.


ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்ப்பது போல நாடகமாடிய பிரான்சு, ஹெய்தியில் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு ஆதரவாக நின்று படைகளை அனுப்பியது. ஜனநாயக சொர்க்கபுரியாகச் சித்தரிக்கப்படும் கனடா, அமெரிக்காவுக்கு விசுவாசமாக தனது படைகளை அனுப்பி வைத்தது. பிப்ரவரி இறுதியில் ஏகாதிபத்திய உலகின் ஆதரவோடு இக்கூலிப் படைகள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு அச்சுறுத்திய போதிலும், அரிஸ்டைடு பதவி விலக மறுத்து விட்டார். எனவே அவரை வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்று மத்திய ஆப்பிரிக்க குடியரசில் கொண்டு போய் இக்கூலிப் படைகள் தள்ளின. ஹெய்தியில் மக்கள் பேராதரவோடு ஜனநாயகத்துக்கான போராட்டம் வெற்றி பெற்றுள்ளதாக ஏகாதிபத்தியவாதிகள் கோலாகலமாகக் கொண்டாடினர். கிறித்துவ வெறிபிடித்த அமெரிக்க அதிபர் புஷ், ஒரு கிறித்து பாதிரியாரின் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்து ஆக்கிரமித்ததை கிறித்துவ உலகம் வாய்மூடி வேடிக்கை பார்த்தது. ஒருநாட்டின் அதிபரைக் கடத்திச் சென்று "ஜனநாயகத்தை' நிலைநாட்டிய அமெரிக்காவின் "வீரதீர சாகச'த்தைக் கண்டு ஜனநாயக உலகம் கைகட்டி நின்றது.


ஈராண்டுகளுக்குப் பிறகு ஹெய்தியில் கடந்த பிப்ரவரியில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதன் பெயரால் அதிபர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் ஆக்கிரமிப்பால் குமுறிக் கொண்டிருந்த ஹெய்தி மக்கள், நாடு கடத்தப்பட்ட முன்னாள் அதிபர் அரிஸ்டைடின் சீடரான ரெனே ப்ரீவல் என்பவரை தமது வேட்பாளராக நிறுத்தினர். ஆகப் பெரும்பான்மையான மக்கள் ஆதரவுடன் பெருவாரியான வாக்குகளைப் பெற்றிருந்த போதிலும், அமெரிக்க கைக்கூலிகளின் தேர்தல் கவுன்சில், மோசடிகளில் இறங்கி முடிவுகளை வெளியிடாமல் இழுத்தடித்தது. வெகுண்டெழுந்த மக்கள் தெருப் போராட்டங்களில் இறங்கினர். நிலைமை விபரீதமாவதைக் கண்டு அஞ்சி, ரெனே ப்ரீவல் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளதாக அமெரிக்கக் கைக்கூலிகள் அறிவித்தனர். உள்நாட்டு வெளிநாட்டு சீர்குலைவுவாதிகளை முறியடித்து ஹெய்தி மக்கள் தமது போராட்டத்தில் வெற்றியைச் சாதித்துள்ளனர்.


ஹெய்தியில் நடந்த மக்கள் பேரெழுச்சிக்கு முன்னதாக ஈக்வடாரில் மக்கள் பேரெழுச்சிகள் நடந்தன. ஹெய்தி மக்கள் அமெரிக்கக் கைக்கூலிகளுக்கு எதிராகப் போராடியதைப் போலவே, ஈக்வடார் மக்கள் அமெரிக்காவும் உலக வங்கியும் திணிக்கும் மறுகாலனியாதிக்கக் கொள்கைகளைச் செயல்படுத்திய அதிபர் லூசியோ குடியர்ஸுசுக்கு எதிராக பேரெழுச்சியில் இறங்கினார்கள். மக்களின் வெஞ்சினத்தை எதிர்கொள்ள முடியாமல் அதிபர் அமெரிக்காவுக்குத் தப்பியோடினார். அடுத்து வந்த அதிபர் ஆல்பிரடோ பலசியோ, அமெரிக்காவின் உத்தரவுகளை மறுபரிசீலனை செய்த பின்னரே நடைமுறைப்படுத்துவோம் என்று உறுதியளித்துள்ளார். இல்லையேல், அவரும் மக்களின் பேரெழுச்சியில் வீசியெறியப்படுவார் என்பது நிச்சயமாகிவிட்டது.


இதேபோல, அர்ஜெண்டினாவில் அடுத்தடுத்து மூன்று அதிபர்கள் மக்கள் போராட்டங்களை எதிர்கொள்ள முடியாமல் தப்பியோடியுள்ளனர். ஐ.எம்.எப்.இன் உத்தரவுகளை எதிர்ப்பதாகவும், ஏகாதிபத்திய நாடுகள் அர்ஜென்டினாவுக்குக் கொடுத்த கந்துவட்டி கடனில் மூன்றில் இரண்டு பங்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை நிறைவேற்றப் பாடுபடுவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார், புதிய அதிபர் நிஸ்டர் கிர்சனர். இதனாலேயே அவர் பதவியில் நீடிக்க முடிகிறது; இல்லையேல் அவரும் முந்தைய அதிபர்களைப் போல மக்களால் விரட்டியடிக்கப்படுவார்.


பொலிவியாவில், அண்மையில் நடந்த தேர்தலில் அமெரிக்க கைக்கூலிகளின் ஆட்சி வீழ்த்தப்பட்டு புதிய அதிபராக இவா மொரேல்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தண்ணீர் தனியார்மயத்திற்கு எதிரான போராட்டங்களால் பிரபலமான கொச்சபம்பா பகுதியைச் சேர்ந்தவர்தான் இவாமெரேல்ஸ். இப்போராட்டங்களின் மூலம் முன்னணித் தலைவராக உயர்ந்த அவர், ""சோசலிசத்தை நோக்கிய இயக்கம்'' என்ற அமைப்பை நிறுவி தொழிற்சங்க விவசாய சங்கங்களின் சம்மேளனத் தலைவராக உயர்ந்து, மக்களின் பேராதரவோடு அதிபராகியுள்ளார். அமெரிக்கத் தடையால் வாழ்விழந்துள்ள பாரம்பரிய கோகோ விவசாயிகளின் உரிமையை மீட்டெடுக்கப் போவதாகவும், பொலிவியாவின் இயற்கை எரிவாயுதாதுவளங்களை நாட்டுடமையாக்கி ஏகாதிபத்திய ஆதிக்கத்தை வீழ்த்தப் போவதாகவும் இவர் வாக்குறுதி அளித்துள்ளார். அதிபராகப் பொறுப்பேற்ற உடனேயே, அமெரிக்க எதிர்ப்புணர்வு கொண்ட வெனிசுலா அதிபர் சாவெஸ், கியூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ ஆகியோரைச் சந்தித்து ஏகாதிபத்திய சதிகளுக்கு எதிராகவும் சோசலிசத்துக்காகவும் ஒருங்கிணைந்து செயல்பட உறுதியளித்துள்ளார். இவாமொரேல்சும் சாவெசும் தமது வழியை ""21ஆம் நூற்றாண்டுக்கான சோசலிசம்'' என்று குறிப்பிடுகின்றனர்.


பொலிவியாவைத் தொடர்ந்து சிலி நாட்டில் சோசலிஸ்டு கட்சியைச் சேர்ந்த மிசெல் பெச்லெட், அண்மையில் நடந்த தேர்தலில் பெருவாரியான வாக்குகளைப் பெற்று முதல் பெண் அதிபராகியுள்ளார். அமெரிக்கக் கைக்கூலியான பினோசெட்டின் ராணுவ சர்வாதிகார ஆட்சியில் தந்தை கொல்லப்பட்டு, சித்திரவதை முகாமில் அவதிப்பட்டு, பின்னர் அகதியாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்து, இறுதியில் நாடு திரும்பிய அவர், அதிபராக உயர்ந்துள்ளதை பத்திரிகைகள் பாராட்டி எழுதுகின்றன.


ஏற்கெனவே கியூபா, வெனிசுலா ஆகிய நாடுகள் அமெரிக்காவை எதிர்த்து நின்று மக்கள் நல்வாழ்வுக்கான சில சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. சோசலிசத்தைக் கட்டியமைப்பதே தமது லட்சியம் என்றும் அந்நாடுகளின் அதிபர்கள் அறிவித்துள்ளனர். "சோசலிச சிற்பி'யாகச் சித்தரிக்கப்படும் பிரேசில் நாட்டின் அதிபர் லூலா, ""இன்னொரு உலகம் சாத்தியம்தான்!'' என்று உலக சமூக மன்ற (ஙிகுஊ) மாநாடுகளில் முழங்குகிறார். இப்போது, பொலிவியாவில் ஏகாதிபத்திய எதிர்ப்பும் சோசலிச சிந்தனையும் கொண்டவராகக் காட்டிக் கொள்ளும் இவா மொரேல்ஸ் அதிபராகியுள்ளார். சிலி நாட்டில் சோசலிஸ்டு கட்சியைச் சேர்ந்த மிசெல் பெச்லெட் அதிபராகியுள்ளார்.


இந்நாடுகள் மட்டுமின்றி ஈக்வடார், மெக்சிகோ, பெரு ஆகிய நாடுகளில் "இடதுசாரி' களும், நிகரகுவாவில் அமெரிக்க எதிர்ப்பாளர்களான சான்டினிஸ்டாக்களும் அடுத்து வரும் தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக பத்திரிகைகள் குறிப்பிடுகின்றன. இவற்றையெல்லாம் காட்டி தென்னமெரிக்க கண்டம் முழுவதும் ""இடதுசாரி அலை'' வீசுவதாக போலி கம்யூனிஸ்டுகளும் போலி சோசலிஸ்டுகளும் பெருமைப்பட்டுக் கொள்கின்றனர். ""நம்மவர்கள் அதிகாரத்துக்கு வந்துவிட்டார்கள்'' என்று பூரித்துப் போய் தமது பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக எழுதுகின்றனர். இவையும் சோசலிச ஆட்சிகள்தாம் என்று நம்பச் சொல்கின்றனர்.


ஆனால், இந்நாடுகளில் மக்கள் ஆதரவுடன் புதிய ஆட்சிகள் வந்துள்ளனவே தவிர, இவை சோசலிச ஆட்சிகள் அல்ல. வெனிசுலா அதிபர் சாவெசும் கியூபா அதிபர் காஸ்ட்ரோவும் மட்டுமே அமெரிக்காவின் மேலாதிக்கத்தையும் காலனியாதிக்க சதிகளையும் வெளிப்படையாக எதிர்த்து நிற்கின்றனர். ஆனால், இதர தென்னமெரிக்க நாடுகளின் அதிபர்கள் அவ்வாறு வெளிப்படையாக அமெரிக்க எதிர்ப்பில் நிற்பதில்லை. இந்நாடுகளில் ஆட்சிகள் மாறியுள்ளனவே தவிர, கீழிருந்து புரட்சிகரமான முறையில் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படவில்லை. புரட்சிகர சித்தாந்தம் கொண்ட கட்சியின் தலைமையுமில்லை.


""21ஆம் நூற்றாண்டுக்கான சோசலிசம்'' என்று முழங்கும் பொலிவிய அதிபர் இவா மொரேல்ஸ், நாட்டின் தாதுவளத்தை ஏகாதிபத்தியப் பிடியிலிருந்து மீட்டு நாட்டுடமையாக்காகப் போவதாக வாக்குறுதி அளித்துள்ளாரே தவிர, இன்றுவரை அதற்கான எந்த முயற்சியும் அவர் மேற்கொள்ளவில்லை. சோசலிசம் பேசும் அவர், பொலிவிய அரசுத்துறை மின் நிலையங்களில் அந்நிய நிறுவனங்களைப் பங்குதாரர்களாகச் சேருமாறு அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறார். தனது இடதுசாரி கூட்டணிக் கட்சிகளின் அதிருப்தியிலிருந்து தப்பிக்க இவர் காஸ்ட்ரோவுடனும் சாவெசுடனும் கைகுலுக்கி புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். ஆனால், அவர்களது ஆலோசனைகளையோ வழிகாட்டல்களையோ அவர் செயல்படுத்த முயற்சிப்பதில்லை.


வெளிப்படையான ஏகாதிபத்திய கைக்கூலிகளையே விஞ்சும் வகையில், சோசலிசம் பேசும் பிரேசில் நாட்டின் அதிபர் லூலா, ஏகாதிபத்தியங்களுக்கு விசுவாசமாகச் சேவை செய்து கொண்டிருக்கிறார். லூலா அரசாங்கம், முந்தைய ஆட்சிகளை விட மிக வேகமாக உலக வங்கி ஐ.எம்.எப்.பின் கடன்களை வட்டியோடு செலுத்திக் கொண்டிருக்கிறது. 1980களில் உலகவங்கிஐ.எம்.எப். இன் கடன்களைத் திருப்பிச் செலுத்த மாட்டோம் என்று மக்கள் போராட்டங்கள் பீறிட்டு எழுந்த அர்ஜெண்டினாவில், சோசலிசம் பேசும் புதிய அரசாங்கம் இக்கடன்களை விசுவாசமாகத் திருப்பிச் செலுத்திக் கொண்டிருக்கிறது. சிலி நாட்டின் புதிய பெண் அதிபரான மிசெல் பெச்லெட், முந்தைய ஆட்சியாளர்களின் வழியில் உலகமயச் சந்தையுடன் பிணைக்கப்பட்ட பொருளாதாரத் திட்டத்தையே மேற்கொள்ளப் போவதாகக் கூறுகிறார். உருகுவே நாட்டின் புதிய "இடதுசாரி' ஆட்சியாளர்களோ, அமெரிக்க முதலீடுகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று உறுதியளித்து தொழில் தொடங்க அழைப்பு விடுக்கின்றனர். ஹெய்தியின் புதிய அதிபரோ அமெரிக்காவால் ஊட்டி வளர்க்கப்பட்ட இராணுவம் மற்றும் எதிர்ப்புரட்சி குண்டர்படைகளை முறியடிக்கவோ, சுதந்திரமாகச் செயல்படவோ முடியாமல் தத்தளிக்கிறார்.


இருப்பினும், தென்னமெரிக்க நாடுகளின் புதிய ஆட்சியாளர்கள் சோசலிசம் பேசுகின்றனர். அவ்வப்போது ஏகாதிபத்திய எதிர்ப்பு வீரவசனங்களைப் பொழிகின்றனர். விடுதலை இறையியல், அதிகாரத்துவ எதிர்ப்பு, சுற்றுச்சூழல், மண்ணின் மைந்தர்களது பண்பாட்டுப் பாதுகாப்பு, அந்நியக் கடன் எதிர்ப்பு, ஜனநாயகத்துக்கான கோரிக்கைகள் முதலானவற்றைக் கொண்ட கலவையாக இவர்களது சோசலிசம் அமைந்துள்ளது. இதையே இவர்கள் ""21ஆம் நூற்றாண்டுக்கான சோசலிசம்'' என்கின்றனர்.


இந்த இளஞ்சிகப்பு (கடிணடு) சோசலிசமானது பாதி புலம்பலாகவும் பாதி வசைபாடலாகவும், கடந்த காலத்தின் எதிரொலியாகவும் எதிர்காலத்தைப் பற்றிய மிரட்டலாகவும் இருக்கிறது. தற்கால வரலாற்றின் போக்கைப் புரிந்து கொள்ளும் திறனற்றதாக இருக்கிறது. இதனால் கோமாளித்தனமான அவலமான விளைவை உண்டாக்கக்கூடிய அபாயத்தைக் கொண்டிருக்கிறது. ஏகாதிபத்தியத்தை மிரட்டுவதற்கான கிலியூட்டும் பொம்மையாகத்தான் இந்த சோசலிசம் பயன்படுகிறது. காலனியாதிக்கத்தாலும் சர்வாதிகார ஆட்சிகளாலும் வதைபட்ட தென்னமெரிக்க மக்களுக்கு இந்த சோசலிசம் தற்போதைக்கு இனிப்பான நம்பிக்கையாக மாறியுள்ளது.


ஏகாதிபத்தியத்துக்கு எதிராக சுயசார்பான தேசியப் பொருளாதாரத்தைக் கூட கட்டியமைக்காமல், ஏகாதிபத்திய நிறுவனங்களையும் முதலீடுகளையும் நட்டஈடின்றிப் பறிமுதல் செய்யாமல், அந்நிய முதலீடுகளை வரவேற்றுக் கொண்டு ""இன்னொரு உலகம் சாத்தியம்தான்!'' என்று பகற்கனவு காணும் இந்தக் குட்டி முதலாளித்துவ சோசலிசம், பெயரளவில் இடது சாரியாகவும் சாராம்சத்தில் வலதுசாரியாகவும் உள்ள மையவாதக் கலவையாகவே இருக்கிறது. இந்த "இடதுசாரி' கானல்நீரைக் காட்டி இதுவும் சோசலிசம்தான் என்று தென்னமெரிக்க மக்கள் மட்டுமின்றி உலகெங்குமுள்ள உழைக்கும் மக்கள் ஏய்க்கப்பட்டு வருகிறார்கள். நாளை இந்தப் புதிய வகை "இடதுசாரி' ஆட்சியாளர்களின் துரோகங்கள் அம்பலமாகும்போது, உழைக்கும் மக்களுக்கு சோசலிசத்தின் மீதே வெறுப்பைத்தான் விளைவிக்கும். அது, தெனாலிராமன் பூனைக்குப் பால் வைத்த கதையாகவே முடியும்.


கீழிருந்து பீறிட்டு எழும் மக்களின் பேரெழுச்சிகளில் அமெரிக்க கைக்கூலிகளின் ஆட்சிகள் தூக்கியெறியப்பட்டு, தென்னமெரிக்க நாடுகளில் புதிய ஆட்சிகள் வந்துள்ளனவே தவிர, இவை இடதுசாரி ஆட்சிகளோ, சோசலிச ஆட்சிகளோ அல்ல; குறைந்தபட்சம் ஏகாதிபத்திய எதிர்ப்புசுதந்திர தேசிய ஆட்சிகளும் அல்ல. சோசலிசம் பேசும் குட்டி முதலாளித்துவ தலைமையிலான இப்புதிய ஆட்சிகள் தொடர்ந்து நீடிக்குமா, அல்லது வீழ்த்தப்படுமா என்பது தென்னமெரிக்க மக்களின் அரசியல் விழிப்புணர்வையும் போராட்டத்தையும் பொருத்தே உள்ளது. ஆனால், ஏகாதிபத்திய ஆதிக்கத்திலிருந்து நாட்டை விடுவிக்கும் புரட்சிக்குக் குறைவான எந்தவொரு ஆட்சி மாற்றத்தாலும் தென்னமெரிக்க மக்களைச் சாந்தப்படுத்தி விட முடியாது என்பது மட்டும் நிச்சயம்.


இந்நிலையில், அமெரிக்க கைக்கூலிகளின் சர்வாதிகார ஆட்சிகளுக்குப் பதிலாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இப்புதிய ஆட்சிகளைக் கவிழ்க்க அமெரிக்கா மேற்கொண்டுவரும் சூழ்ச்சிகள் சதிகளை அம்பலப்படுத்தி முறியடிக்க வேண்டியது புரட்சிகர ஜனநாயக சக்திகளின் கடமையாகும். அதேசமயம், இத்தகைய புதிய ஆட்சிகளையே சோசலிசம் என்று சித்தரித்துவரும் போலி கம்யூனிஸ்டுகள் போலி சோசலிஸ்டுகளின் பித்தலாட்டங்களை முறியடிக்க வேண்டியது அதைவிட முக்கிய கடமையாகும்.


மு மனோகரன்

Thursday, July 13, 2006

இட ஒதுக்கீடு: தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்

இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் பார்ப்பன மேல்சாதி வெறியை முறியடிப்போம்!'' — தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்


மைய அரசின் உதவி பெறும் இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐ.ஐ.டி.), இந்திய மேலாண்மைக் கழகம் (ஐ.ஐ.எம்), அனைத்திந்திய மருத்துவ அறிவியல் மையம் (எ.ஐ.ஐ.எம்.எஸ்), ஜிப்மர் முதலான உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவிருப்பதாக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் அர்ஜுன் சிங் அண்மையில் அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியான உடனேயே பார்ப்பனமேல்சாதி வெறியர்கள் தலைநகர் டெல்லியில் கலகத்தைத் துவங்கி விட்டனர்.


காலங்காலமாக கல்வி, நிலவுடைமை, அரசு அதிகாரம் அனைத்தையும் ஏகபோகமாக அனுபவித்து வந்த பார்ப்பனமேல்சாதி வெறியர்கள், அவையெல்லாம் சிறிது சிறிதாக பறி போவதால் வெறிகொண்டு அலைகிறார்கள். இந்தச் சாதிவெறிக் கும்பலுக்குப் பன்னாட்டு நிறுவனங்களும், தரகு முதலாளிகளும் வெளிப்படையாகவே ஆதரவு தெரிவிக்கின்றனர். இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி, டாடா, மிட்டல் போன்ற தரகு முதலாளிகள், தகுதிதிறமை பற்றி மிகுந்த கவலையுடன் பேட்டியளிக்கின்றனர். தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள செய்தி ஊடகங்களின் மூலம், "இடஒதுக்கீட்டினால் இந்தியாவே அழிந்துவிடும்' என்ற மாயையை ஓயாமல் பிரச்சாரம் செய்கின்றனர்.


இந்நிலையில் பார்ப்பனத் திமிரை எதிர்த்தும், சமூகநீதி பேசும் ஓட்டுக் கட்சிகளின் சமரசத்தை அம்பலப்படுத்தியும் பல்லாயிரக்கணக்கில் துண்டுப் பிரசுரம் வெளியிட்டு பிரச்சாரம் செய்ததோடு, தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் 22.5.06 என்று ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தின.


சென்னையில், வள்ளுவர் கோட்டம் அருகே, பு.மா.இ.மு. இணைச் செயலர் தோழர் கணேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ""சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க'' பொதுச் செயலர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்தர்நாத் மற்றும் பு.ஜ.தொ.மு. மாநிலப் பொருளாளர் தோழர் விஜயகுமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்திற்கு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உட்பட பல்வேறு கல்லூரிகளின் மாணவர்களும் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.


ஓசூரில், காந்தி சிலை அருகில் பு.ஜ.தொ.மு. தோழர் இரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தோழர் பரசுராமன், சின்னசாமி மற்றும் வி.வி.மு. பென்னாகரம் வட்டச் செயலர் தோழர் அருண் ஆகியோர் கண்டன உரையாற்றினர். பார்ப்பன மேல்சாதி ஆதிக்க வெறியர்கள், மலம் அள்ளும் வேலைக்கும், பிணம் எரிக்கும் வேலைக்கும் இடஒதுக்கீடு கேட்பார்களா? அரசுதான் இடஒதுக்கீட்டைத் தீர்மானிக்குமா? என்று கண்டன உரையில் கேள்வி எழுப்பியது பார்வையாளர்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றது.


நாமக்கலில், அண்ணாசிலை அருகில் வி.வி.மு. தோழர் அசோகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட திரளான உழைக்கும் மக்கள் கலந்து கொண்டனர்.


கோவையில், செஞ்சிலுவை சங்கம் முன்பாக, பு.ஜ.தொ.மு. தோழர் விளவை இராமசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் கார்க்கி மற்றும் ம.க.இ.க. கோவை கிளைச் செயலர் தோழர் மணிவண்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.


திருச்சியில், சிந்தாமணி அண்ணாசிலை அருகில் பு.மா.இ.மு. திருச்சி மாவட்டச் செயலாளர் தோழர் தண்டபாணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ம.க.இ.க. திருச்சி கிளைத் தோழர் இராசா கண்டன உரையாற்றினர். மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்டு திரளான உழைக்கும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


கடலூரில் உழவர் சந்தை அருகே பு.மா.இ.மு. தோழர் பாலு தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகள் விடுதலை முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ஜெயகாந்த்சிங் கண்டன உரையாற்றினார். அரசுப் பணியாளர் சங்கத்தைச் சார்ந்தவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பல பிரிவைச் சார்ந்த உழைக்கும் மக்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் நிதியளித்தும் உதவினர்.


தஞ்சையில், பனகல் கட்டிடம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ம.க.இ.க. தஞ்சைக் கிளைச் செயலர் தோழர் இராவணன் தலைமையில் பு.மா.இ.மு. மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் பரமானந்தம், ம.க.இ.க. மாநில இணைச் செயலர் தோழர் காளியப்பன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.


மதுரையில், மேலமாசி வீதி வடக்கு மாதி வீதி சந்திப்பில், காலை 11 மணியளவில், தோழர் கருணாமூர்த்தி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்டச் செயலர் தோழர் லயோனல் அந்தோணிராசு, உசிலை வி.வி.மு. தோழர்கள் குருசாமி, சிவகாமு, பு.மா.இ.மு தோழர் செந்தில் குமார் மற்றும் சிவகங்கை தோழர்கள் கண்டன உரையாற்றினர்.


சாத்தூரில், வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 26.05.06 அன்று மாலை 5 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சாத்தூர் பகுதித் தோழர் கணேசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்டச் செயலர் லயோனல் அந்தோணி ராசு கண்டன உரையாற்றினார்.


கண்டன அறிக்கை, மனித சங்கிலி என்ற வரம்போடு அடையாள எதிர்ப்பு காட்டிவிட்டு சமூக நீதி பேசும் கட்சிகள் முடங்கிவிட்ட நிலையில், பார்ப்பனிய எதிர்ப்பை தமிழகமெங்கும் வீச்சாகக் கொண்டு சென்ற புரட்சிகர அமைப்புகளின் இந்த ஆர்ப்பாட்டம் உழைக்கும் மக்களிடம் புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது.


– பு.ஜ. செய்தியாளர்கள்

Wednesday, July 12, 2006

நக்சலைட்டு தேடுதல் வேட்டை

நக்சலைட்டு தேடுதல் வேட்டை : அரசே உருவாக்கிய உள்நாட்டுப் போர்!


ளரவமற்ற அடர்ந்த காடு. இருபுறமும் புதர்கள் மண்டிய ஒற்றையடிப் பாதையில் அம்மண்ணின் மைந்தரான மர்விந்தாவும் அவரது குடும்பமும் தமது கிராமத்தை நோக்கி வேகமாக நடந்து கொண்டிருந்தனர். தமது வீட்டையும் தோட்டத்தையும் பார்த்து விட்டு மாலைக்குள் திரும்பிவிட வேண்டுமென்ற அவசரத்தில் அவர்கள் வேகமாக நடந்தனர். இருளிபலாம் கிராமத்தை அடைந்த போது துக்கம் அவர்களது தொண்டையை அடைத்தது. அங்கே எரிந்து சாம்பலாகிக் கிடக்கும் தமது குடிசையைக் கண்டதும் ""ஓ''வெனக் கதறி அழுதனர். பின்னர் ஒருவாறு தேற்றிக் கொண்டு, தமது குடிசையை ஒட்டியுள்ள தோட்டத்தில் முளைவிட்டுள்ள கிழங்குகள் பயிர்களுக்குத் தண்ணீர் ஊற்றி, வேலிகளைச் சரிசெய்து விட்டு கனத்த இதயத்துடன் நிவாரண முகாமுக்குத் திரும்பினார்.


நேற்றுவரை அவர்கள் சட்டிஸ்கர் மாநிலத்தின் பஸ்தார் வட்டாரத்திலுள்ள இருளிபலாம் கிராமத்தில் வாழ்ந்த பழங்குடியின மக்கள். இன்று, அவர்கள் அங்கு வாழ முடியாத அகதிகள். இப்போது அவர்கள் இக்காட்டுப் பகுதி கிராமத்திலிருந்து 10 கி.மீ தொலைவிலுள்ள ஷெல்னார் எனும் சந்தை நகரிலுள்ள அகதி முகாமில் அரசாங்கத்தால் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே அவர்கள் தங்கள் கிராமத்துக்குச் சென்று நிலத்தைப் பார்த்துவிட்டு வர அனுமதியளிக்கப்பட்டுள்ளது.


""கடந்த ஆண்டு அக்டோபரில் அந்த அட்டூழியம் நடந்தது. எங்கள் கிராமத்தை போலீசாரும் குண்டர்களும் முற்றுகையிட்டு துப்பாக்கி முனையில் எங்களைக் கட்டாயமாக வெளியேற்றினர். நான் வெளியேற முடியாது என்று மறுத்து வாதாடினேன். போலீசார் என்னை மிருகத்தனமாக அடித்தனர். என் கைகளைப் பின்புறமாகக் கட்டித் தலைகீழாக மரத்தில் தொங்கவிட்டு அடித்தனர். போலீசாருடன் வந்த ""சல்வாஜுடும்'' என்ற பெயரிலான குண்டர்கள் எங்களது குடிசைகளைத் தீயிட்டுக் கொளுத்தினார்கள். கிராமத்தை விட்டு வெளியேறாவிட்டால், உங்களை நக்சலைட்டுகள் என்று கூறிச் சுட்டுக் கொன்று விடுவோம் என்று எச்சரித்து எங்களைச் சித்திரவதை செய்தார்கள். வேறு வழியின்றி நாங்கள் கிராமத்தைவிட்டு வெளியேறி அகதிமுகாமில் வதைபடுகிறோம்'' என்று விம்முகிறார் மர்விந்தா.


மர்விந்தாவைப் போலவே பல்லாயிரக்கணக்கான சட்டிஸ்கர் மாநில பழங்குடியின மக்கள் தாங்கள் பிறந்து வளர்ந்து வாழ்ந்த காட்டுப் பகுதிகளை விட்டு கட்டாயமாக வெளியேற்றப்பட்டு அரசாங்க அகதி முகாம்களில் அல்லற்படுகின்றனர். இவ்வாறு காடுகளை விட்டு வெளியேற மறுத்த குற்றத்திற்காக சல்வாஜுடும் குண்டர்களால் ஏறத்தாழ 250 பழங்குடியின மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். சல்வாஜுடும் இயக்கத்தில் சேர மறுத்ததற்காக 60க்கும் மேற்பட்ட கிராமங்கள் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.


சல்வாஜுடும் என்பது என்ன? எதற்காக பழங்குடியின மக்களை அவர்கள் வதைக்கிறார்கள்? அரசாங்கம் எதற்காக பழங்குடியின மக்களைக் காடுகளைவிட்டு வெளியேற்றி நிவாரண முகாம்களில் அடைத்து வைக்கிறது? மறுகாலனியாதிக்கம் அரசு பயங்கரவாதம், இவற்றுக்கு எதிரான புரட்சிகர இயக்கங்களின் போராட்டங்கள் ஆகியவற்றுடன் தொடர்புடைய கேள்விகளே இவை.


சட்டிஸ்கர் மாநிலத்தின் தெற்கே ஆந்திராவை ஒட்டியுள்ள பஸ்தார், கோண்டா வட்டாரங்கள் வனவளமும் தாதுவளமும் நிறைந்த பூமியாகும். இங்கு ""டெண்டூ'' எனப்படும் பீடி இலை பெருமளவில் காட்டுப்பகுதியில் விளைவிக்கப்படுகிறது. இம்மண்ணின் மைந்தர்களான பழங்குடியின மக்கள் அற்பக் கூலிக்கு பீடி இலைகளைப் பறித்துக் கொடுத்துவிட்டு வறுமையில் உழல்கின்றனர். வனத்துறை அதிகாரிகளின் ஊழல் ஒடுக்குமுறை, பீடி இலைகளைக் கொள்முதல் செய்யும் வர்த்தக ஒப்பந்தக்காரர்களின் அற்பக் கூலி அடிமைத்தனங்களுக்கு எதிராகவும் இப்பழங்குடியின மக்களின் வாழ்வுரிமைக்காகவும் நீண்ட நெடுங்காலமாக நக்சல்பாரிப் புரட்சியாளர்களான மாவோயிஸ்டுகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.


மேலும், இந்த வட்டாரம் இரும்புத்தாது வளமிக்கதாகும். இப்பகுதியின் இரும்புத்தாதுவில் அதிகபட்சமாக அதாவது 68% அளவுக்கு இரும்புச்சத்து உள்ளது. அருகிலேயே ஷாப்ரி என்னும் வற்றாத நதி பாய்கிறது. எனவே, இப்பகுதியின் மண்ணின் மைந்தர்களை விரட்டியடித்துவிட்டு இங்கு எஃகு ஆலை நிறுவிச் சூறையாட எஸ்ஸார் ஸ்டீல், டாடா, மித்தல் முதலான தரகுப் பெருமுதலாளித்துவ நிறுவனங்கள் இறங்கியுள்ளன. சட்டிஸ்கர் மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் இம்மறுகாலனியாதிக்கச் சூறையாடலுக்கு எதிராக நக்சல்பாரி புரட்சியாளர்கள் விழிப்புணர்வூட்டி பழங்குடியின மக்களை அணிதிரட்டி வருகிறார்கள்.


இதன் காரணமாகவே, தரகுப் பெருமுதலாளிகளும் காடுகளைச் சூறையாடும் நிலப்பிரபுக்களும் பீடி இலை ஒப்பந்தக்காரர்களும் பழங்குடியின மக்களையும் அவர்களது வாழ்வுரிமைக்காகப் போராடிவரும் நக்சல்பாரிகளையும் ஒழித்துக் கட்டுவதில் ஓரணியில் நிற்கிறார்கள். அவர்களது நலன் காக்கும் மைய அரசும் மாநில அரசும் பின்தங்கியுள்ள சட்டிஸ்கர் மாநிலத்தின் தொழில்வளர்ச்சிக்கு நக்சல்பாரிகள் தடையாக இருப்பதாகக் குற்றம் சாட்டி அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடுகின்றன.


இருப்பினும், அடக்குமுறைகளைத் துச்சமாக மதித்து நக்சல்பாரி இயக்கம் விரிவடைந்து முன்னேறுகிறது. புரட்சிகர சித்தாந்தத்தைக் கொண்டிருப்பதால் நக்சல்பாரி இயக்கத்தினரை விலைபேசவோ பிளவுபடுத்தவோ ஆளுங்கும்பலால் முடியவில்லை. எனவேதான், பழங்குடியின மக்களைக் கொண்டே பழங்குடியின மக்களின் விடுதலைக்காகப் போராடிவரும் நக்சல்பாரிகளை வீழ்த்துவதற்கான புதிய பயங்கரவாத உத்தியுடன் ஆட்சியாளர்களும் பெருமுதலாளிகளும் கிளம்பியிருக்கிறார்கள். அவர்களது சதியில் உருவான கள்ளக் குழந்தைதான் ""சல்வாஜுடும்'' என்ற அமைப்பு. கோண்ட் வட்டார மொழியில் இதற்கு ""அமைதி இயக்கம்'' என்று பொருள்.


இந்த இயக்கத்தின் நிறுவனர், முன்னாள் அமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான காங்கிரசு பிரமுகர் மகேந்திர கர்மா ஆவார். சட்டிஸ்கர் மாநில பா.ஜ.க. முதல்வரான ரமண் சிங், உள்துறை அமைச்சரான ராம் விசார் நேதம் ஆகியோர் மகேந்திர கர்மாவுடன் இணைந்து இந்த இயக்கத்தை வழிநடத்துகின்றனர். ""நக்சல்பாரிகளின் வன்முறைக்கு எதிரான அமைதி இயக்கம்'' என்று கூறிக் கொள்ளும் இந்த அமைப்பு, உண்மையில் ஒரு பயங்கரவாத அமைப்பு; மத்தியிலுள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் மாநிலத்தின் பா.ஜ.க. அரசும் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள அரசு பயங்கரவாத அமைப்பு. போலீசுஇராணுவத்தை வைத்து பழங்குடியின மக்கள் மீது அடக்குமுறையை ஏவி காடுகளை விட்டு அவர்களைக் கட்டாயமாக வெளியேற்றினால், அரசாங்கம் எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் எதிர் கொள்ள நேரிடும்; அம்பலப்பட்டு தனிமைப்பட நேரிடும். எனவே, பழங்குடியின மக்களைக் கொண்டே பழங்குடியின மக்கள் மீது அடக்குமுறையை ஏவி, பீதியூட்டி கட்டாயமாக வெளியேற்றி, தமது மறுகாலனியாதிக்கச் சேவையைத் தொடர காங்கிரசும் பா.ஜ.க.வும் கூட்டணி சேர்ந்து உருவாக்கியுள்ள பயங்கரவாத கைக்கூலிப் படைதான் ""சவ்லாஜுடும்''.


பஸ்தார் பிராந்தியத்தில் நக்சல்பாரிகளின் வன்முறையை எதிர்ப்பது என்ற பெயரில் காங்கிரசு தலைவர் மகேந்திரகர்மாவினால் தொடங்கப்பட்ட இந்த அமைப்புக்கு டாடா, மித்தல் முதலான தரகுப் பெருமுதலாளிகளும் பீடி இலை கொள்முதல் ஒப்பந்தக்காரர்களும் கோடிகோடியாய் நிதியளிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் மகளிர்சுய உதவிக் குழுக்களைப் போல சல்வாஜுடும் குழுக்களைத் தத்தெடுத்து ஊட்டி வளர்க்கிறது. போலீசும் துணை இராணுவப் படைகளும் ஆயுதப் பயிற்சியளித்து துப்பாக்கிகளை விநியோகிக்கின்றன. சல்வாஜுடும் குழுவில் சேருவோருக்கு மாதம் ரூ. 1500 உதவித் தொகையும் 10 கிலோ இலவச அரிசியும் அரசு வழங்குகிறது. சமூக விரோதிகளும் வேலையற்ற பழங்குடியின இளைஞர்களும் சல்வாஜுடும் குழுக்களாக அணிதிரட்டப்படுகின்றனர். நக்சல்பாரி ஆதரவு கிராமங்கள் எவையெவை, நக்சல்பாரி புரட்சியாளர்கள் யார் யார் என்று போலீசுக்கு ஆள்காட்டியாகச் செயல்படுவதும், முன்னிருந்து தாக்குதல் நடத்துவதும் இவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வேலை. அப்பாவி பழங்குடியின கிராமங்களில் அடையாளம் தெரியாமல் தாக்குதல் நடத்திவிட்டு நக்சல்பாரிகள் செய்ததாக பழிபோட்டு ஆத்திரமூட்டுவது, அதைத் தொடர்ந்து சல்வாஜுடும் குழுக்களில் அக்கிராமத்தவரை அணிதிரட்டுவது, பின்னர் நக்சல்பாரி ஆதரவு கிராமங்களின் மீது தாக்குதல் நடத்துவது என்பதாக உத்திகளை வகுத்துக் கொடுத்து மாநில போலீசும் நாகா இராணுவப்படையும் இக்குழுக்களை இயக்கி வருகின்றன.


கடந்த ஏப்ரல் 13ஆம் தேதியன்று நக்சல்பாரி புரட்சிகர போராட்டங்கள் தொடரும் மாநிலங்களின் முதலமைச்சர்களது உயர்மட்டக் கூட்டம் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடந்தது. அக்கூட்டத்திலும், அதற்குமுன் மைய அரசின் உள்துறைச் செயலாளர் தலைமையில் நடந்த கூட்டத்திலும் சல்வாஜுடும் இயக்கத்தை அரசு அங்கீகரித்து ஆதரித்துள்ளது. தன்னார்வ சுயஉதவிக் குழுக்களைப் போல இத்தகைய நக்சல்பாரி எதிர்ப்பு உள்ளூர் தற்காப்புக் குழுக்களை அவசியமான மாநிலங்களில் கட்டி வளர்த்து அவற்றுக்கு ஆயுதப் பயிற்சியும் பாதுகாப்பும் வழங்க வேண்டுமென்று இக்கூட்டங்களில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ""நாடு இதுவரை கண்டிராத வகையில், உள்நாட்டுப் பாதுகாப்புக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக நக்சல்பாரி இயக்கம் வளர்ந்துவிட்டது. நாடு முழுவதும் 160க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இது அரசுக்கு மிகப் பெரும் சவாலாக மாறியுள்ளது'' என்று பீதியுடன் எச்சரிக்கும் பிரதமர் மன்மோகன்சிங், இராணுவ துணை இராணுவ போலீசுப் படைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கவும், நக்சல்பாரிகளின் செல்வாக்குள்ள பகுதிகளில் வளர்ச்சித்திட்டப் பணிகளை முடுக்கி விடவும் ஆவன செய்வதாக அறிவித்துள்ளார். பஞ்சாபின் முன்னாள் அரசு பயங்கரவாதியான கே.பி.எஸ்.கில், நக்சல்பாரி ஒழிப்புப் போரில் ஈடுபட்டுள்ள போலீசு அதிகாரிகளுக்கு வழிகாட்ட ஏற்பாடு செய்யப்பட்டு, அவர் சட்டிஸ்கருக்கு ஹெலிகாப்டரில் பறந்து கொண்டிருக்கிறார்.


ஒருபுறம், போலீசுதுணை இராணுவப்படைகள் மூலம் தாக்குதல்; மறுபுறம், சல்வாஜுடும் எனும் பழங்குடியின பயங்கரவாத அமைப்பின் மூலம் தாக்குதல் என நக்சல்பாரிகளுக்கும் பழங்குடியின மக்களுக்கும் எதிராக சட்டிஸ்கரில் ஒரு உள்நாட்டுப் போரை ஆட்சியாளர்கள் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். கடந்த 2005ஆம் ஆண்டில் சல்வாஜுடும் என்ற பயங்கரவாத இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை ஏறத்தாழ 400 பழங்குடியின மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் கோண்டா மாவட்டத்தில் மட்டும் 216 பேர் பலியாகியுள்ளனர். 80க்கும் மேற்பட்ட கிராமங்கள் சூறையாடப்பட்டு தீயிடப்பட்டுள்ளன. பல பகுதிகளில் பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். சிறுவர்களும் முதியவர்களும் கூட கோரமாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளனர். காடுகளிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டு ஏறத்தாழ 30,000 பழங்குடியின மக்கள் அகதி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். கோண்டா மாவட்டம் மட்டுமின்றி, தோர்னபால், தந்தேவாடா, பிஜாப்பூர், ஜெக்தல்பூர், கன்கெர் முதலான மாவட்டங்களில் இத்தகைய முகாம்கள் பெருகியுள்ளன.


சல்வாஜுடும் அமைப்பைக் கொண்டு அரசு நடத்திவரும் இப்பயங்கரவாத அட்டூழியங்களை மூடிமறைத்து விட்டு, ""நக்சலைட்டுகளுக்கு எதிராக பழங்குடியின மக்கள் ஆயுதம் ஏந்திப் போராடுகிறார்கள்; மக்கள் யுத்தம் பரவுகிறது'' என்று ஆளும் கும்பலும் தேசிய பத்திரிகைகளும் வெறித்தனமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றன. சல்வாஜுடும் குண்டர்களின் பயிற்சி முகாம்கள் மீது நக்சல்பாரிகள் தாக்குதல் நடத்தினாலோ, அல்லது போலீசுடனான "மோதலில்' அப்பாவி பழங்குடியின மக்கள் கொல்லப்பட்டாலோ, அதைக் காட்டி பழங்குடியினரை ஆத்திரமூட்டி, அவர்களை சல்வாஜுடும் அமைப்பில் சேர்த்துக் கொண்டு மீண்டும் தாக்குதல் நடத்துவது என்பதாக அரசு பயங்கரவாதிகள் உள்நாட்டுப் போரைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.


இது ஏதோ நக்சல்பாரி புரட்சிகர இயக்கத்துக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கை மட்டுமல்ல; இது மறுகாலனியாதிக்க ஆக்கிரமிப்புப் போர். மண்ணின் மைந்தர்களான பழங்குடியின மக்களை விரட்டியடித்துவிட்டு, காடுகளையும் தாதுவளங்களையும் தரகுப் பெருமுதலாளிகளும் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களும் கைப்பற்றிச் சூறையாடுவதற்காக நடத்தும் போர். அன்று, வியட்நாமில் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்கள் மேற்கொண்ட அதே உத்தியுடன்தான் இந்தப் போர் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. அதாவது, மக்கள் எனும் கடலில் நீந்தும் மீன்களாகிய கம்யூனிசப் புரட்சியாளர்களைப் பிடிக்க, நீரை வெளியேற்றுவது என்ற உத்தியுடன் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்கள் வியட்நாம் கிராமப்புறங்களில் குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தி, மக்களைக் கட்டாயமாக வெளியேற்றி, கம்யூனிஸ்டுகளையும் நாட்டுப் பற்றாளர்களையும் வேட்டையாட முற்பட்டனர். ஆனால், அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களின் சூழ்ச்சிகள் சதிகளை முறியடித்து நாட்டு விடுதலைப் போரில் வியட்நாம் வெற்றி பெற்றது. பெருந்தோல்வியில் முடிந்த அந்த அமெரிக்க உத்தியுடன் கிளம்பியுள்ள இந்திய அரசு பயங்கரவாதிகள், இப்போது நக்சல்பாரிகளைப் பிடிக்க பழங்குடியின மக்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களைக் கட்டாயமாக காடுகளிலிருந்து வெளியேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.


ஆனால், அரசு பயங்கரவாதிகளின் சூழ்ச்சிகளும், சதிகளும் மெதுவாகக் கசியத் தொடங்கி மனித உரிமை ஜனநாயக உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்து, இப்பயங்கரவாத உள்நாட்டுப் போரை உடனடியாக நிறுத்துமாறு எச்சரித்துள்ளன. புலனாய்வு பத்திரிகைகள் பஸ்தார் பிராந்தியத்துக்கு நேரில் சென்று உண்மை நிலைமையை விளக்கி அரசு பயங்கரவாதிகளின் கோரமு கத்தை அம்பலப்படுத்தி வருகின்றன. பஸ்தார் வட்டார வலது கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான மனிஷ் கன்ஜாம் என்பவர், ""பழங்குடியினர் நக்சல்பாரிகளுக்கு எதிராகப் போராடுவதாகக் கூறுவது முழுப் பொய். நக்சல்பாரிகளின் வழிமுறைகளில் எமக்கு உடன்பாடில்லை என்பதற்காக, சல்வாஜுடும் அமைப்பின் அட்டூழியங்களை நாங்கள் ஒருபோதும் ஆதரிக்க முடியாது'' என்கிறார். இதுதவிர, பல்வேறு கல்வியாளர்களும் சமூகவியலாளர்களும் அரசின் பயங்கரவாத உள்நாட்டுப் போரை உடனே நிறுத்தக்கோரி பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.


அன்று, இந்திய உழைக்கும் மக்களை சாதி, மத, இன ரீதியாகப் பிளவுபடுத்தி மோதவிட்டு பிரித்தாளும் சூழ்ச்சியின் மூலம் காலனியாதிக்கத்தை நிறுவியது, வெள்ளை ஏகாதிபத்தியம். இன்று, பழங்குடியின மக்களைக் கொண்டே பழங்குடியின மக்கள் மீது உள்நாட்டுப் போரைக் கட்டவிழ்த்துவிட்டு இயற்கை வளங்களைச் சூறையாடக் கிளம்பியுள்ளது, மறுகாலனியாதிக்கம். இப்பயங்கரவாத சூழ்ச்சிகள் சதிகளை அம்பலப்படுத்தி முறியடிப்பதும், மறுகாலனியாதிக்கத்திற்கு எதிரான விடுதலைப் போரை முன்னெடுத்துச் செல்வதும் புரட்சிகர ஜனநாயக சக்திகளின் அவசர அவசியக் கடமையாகியுள்ளது.


மு மனோகரன்

Tuesday, July 11, 2006

ஆபிரிக்காவின் இழிநிலைமைக்கு அந்த மக்கள் காரணமல்ல.

ஆபிரிக்காவின் இழிநிலைமைக்கு அந்த மக்கள் காரணமல்ல.

பி.இரயாகரன்
11.07.2006


முன்னைய தொடர்


பகுதி 1: உலகளாவிய நிதி மூலதனம் சமூகசாரத்தையே உறுஞ்சுகின்றது.


பகுதி 2: கடனும் வட்டியும் இன்றி, உலகமயமாதல் ஒரு கணம் கூட உயிர் வாழ முடியாது


பகுதி 3: உலகைச் சூறையாடும் நிதி மூலதனம் எப்படி உருவானது?


பகுதி நான்கு


ப்படியாயின் யார் காரணம்? முழுக்க முழுக்க கொள்ளையடிக்கும் ஏகாதிபத்தியங்களே காரணமாகும். ஏகாதிபத்திய சூறையாடல் தான், ஆபிரிக்காவின் இன்றைய நிலைமைக்கு காரணமாகும். இந்த பொருளாதார சூக்குமத்தை நாம் தெரிந்து கொள்வதே எம்முன்னுள்ள மிகப் பெரிய சவாலாக உள்ளது. அமெரிக்க மூலதனமும் ஐரோப்பிய மூலதனமும் ஆபிரிக்க மக்களை, கறுப்பு அடிமைகளாக கடத்தி சந்தைகளில் விற்றபோதே இது தொடங்கப்பட்டது. அவர்களின் உடல் வலுவை, உழைப்பாக தமது சொந்த சுபீட்சமான வாழ்வுக்காக பிழிந்து சுரண்டத் தொடங்கிய போதே, அந்த மக்களின் வாழ்வு திட்டமிட்டே அழிக்கப்படத் தொடங்கியது. அமெரிக்க ஐரோப்பிய மூலதனம் இப்படித் தான் அடிமைகளின் உழைப்பைக் சுரண்டிக் கொழுத்தது. இப்படி அமெரிக்கா கண்டம் சார்ந்த மூலதனம், அண்ணளவாக 10 கோடி கறுப்பின அடிமைகளையே ஆபிரிக்காவில் இருந்து சுரண்டலுக்காகவே கடத்திச் சென்றது. இதையே தான் ஐரோப்பிய மூலதனமும் செய்தது. இதன் மூலம் ஆபிரிக்காவின் அவலம் தொடங்க, மேற்கின் செழுமை வித்திடப்பட்டது. அடிமைகளின் இலவசமான கூலியற்ற அடிமை உழைப்பு, பெரும் செல்வக் குவியலை உருவாக்கியது. இந்த செல்வத்தின் இருப்பே சுதந்திரத்தின் கோட்பாடாகியது.


அன்று கூலியற்ற அடிமை உழைப்பு நவீன வர்த்தகமாக வேகம்பெற்ற போதே, சொந்த நாட்டு உழைக்கும் மக்களின் எதிர்ப்புகளால் தான் அடிமைமுறைமை எதிர்ப்புக்குள்ளானது. இதனால் மூலதனம் கொழுத்த இலாபத்தை தக்கவைக்க ஆபிரிக்க நாடுகளையே சொந்த காலனியாக்கத் தொடங்கியது. காலனிகள் மூலம் அந்த மக்களின் அடிப்படையான சமூகநுகர்வை புடுங்கிச் சுரண்டியதன் மூலம், மேற்கு நாடுகளில் செல்வம் படிப்படியாக மேலும் நவீனமாக குவியத் தொடங்கியது. மேற்கின் மூலதனம் இப்படித் தான் கொழுத்து வீங்கியது. இதைக் கொண்டே உலகமயமாதல் என்ற நவீன அடிமைத்தனம் புகுத்தப்பட்ட ஒரு வரலாற்றுக் காலகட்டத்தில் நாம் இன்று உள்ளோம். இன்று இந்த நாடுகளை தமது அடிமை நாடுகளாக மேற்கு மாற்றிய வரலாற்றுப் போக்கில் தான், அந்த நாட்டு மக்களை கையேந்திய நிலைக்கு இட்டுச் சென்றனர்.


இன்றும் உலகில் அதிகளவிலான வளங்கள் செறிந்த இடம் ஆபிரிக்காவாகவே உள்ளது. ஆனால் அதிக வறுமையுள்ள இடமாக ஆபிரிக்காவே உள்ளது. 30 சதவிகிதமான யூரேனியம் ஆபிரிக்காவிலேயே உள்ளது. வைரத்தில் 96 சதவிகிதத்தையும், குரோமியத்தில் 90 சதவீதத்தையும், பிளாட்டனத்தில் 85 சதவிகிதத்தையும், கோபால்ட்டில் 50 சதவிகிதத்தையும், மாங்கனீசில் 55 சதவீதத்தையும், பாக்சைட்டில் 40 சதவிகிதத்தையும், செம்பில் 13 சதவிகிதத்தையும், பாஸ்பேட்டுகளில் 50 சதவிகிதத்தையும் ஆபிரிக்காவே கொண்டுள்ளது. இதைவிட இரும்பு, நிக்கல், ஈயம் என்று அனைத்து மூலவளங்களும் அங்கு செறிவாக உள்ளது. 10 ஆபிரிக்க நாடுகளே உலகின் எண்ணை வளத்தில் மிகப்பெரும் பகுதியை உற்பத்தி செய்கின்றன. இதைவிட பெரும் நீர் வளங்களையும் கொண்ட ஆபிரிக்காவே, இன்று உலகின் வறுமையின் கோரப்பிடியில் இருப்பதாக காட்டப்படுகின்றது. குடிக்க நீர் இன்றி, உண்ண உணவின்றி, நோய்க்கு மருந்தின்றி அன்றாடம் இலட்சக்கணக்கில் மக்கள் உயிருடன் கொல்லப்படுகின்ற, ஒரு சபிக்கப்பட்ட பூமியாக உள்ளது. யாரால் சபிக்கப்பட்டது என்றால், அது ஏகாதிபத்தியத்தால் தான்.


ஆபிரிக்காவிலேயே இன்றும் பெருமளவில் கனிம வளங்கள் உற்பத்தி செய்யப்படுகின்ற இன்றைய நிலையிலும், இதுதான் அந்த மக்களின் அவலமான நிலை. ஏன் இந்த சமூக அவலம்? இவ் உற்பத்திகள் முழுக்கமுழுக்க தனியார் சொத்தாகி அன்னியனின் கட்டுபாட்டுக்குள் சென்றுள்ள நிலையில், சமூகத்தின் வறுமை அவலமாகவே காட்சியளிப்பதில் வியப்பேதுமில்லை. ஆனால் இன்றைய உலகளாவிய சமூகப் பொதுப்புத்தி மட்டம், இதை ஏற்றுக் கொள்வதில்லை. இதனால் எதார்த்த உண்மைகள் புதைகுழியில் புதைக்கப்பட்டு, மனித பிணங்களை அதன் மேல் போட்டே நிரப்புகின்றனர். இதுவே இன்றைய ஆபிரிக்காவின் சமூக எதார்த்தம்.


இதன் மேல் தான் உதவி என்ற பெயரில், ஏகாதிபத்திய மோசடிகள் அரங்கேறுகின்றது. பொதுவாக சூறையாடும் கடனையே, பொதுஜன அறிவியல் மட்டத்தில் உதவியாக காட்டப்படுகின்றது. இதை நாம் உதவி என்று எடுத்தால், அதன் உண்மையான முகம் தான் என்ன? ஏழைநாடுகளுக்கு உதவி என்ற பெயரில் ஒரு டொலர் கடனாக கொடுக்கும் அதேநேரம், இதற்கு 1.30 டொலர் வட்டியாக செலுத்தும் நிலைமைக்கு நாடுகள் அடிமையாகிவிட்டன. இதைத்தான் கவுரவமாக மறைத்து, உதவியாக காட்டப்படுகின்றது.


இந்த உதவி இந்த நாடுகளையே அழித்துவிட்டது. 2000ம்: ஆண்டில் உலகில் 22 நாடுகளின் தேசிய வருமானத்தை விட கடனின் தொகை அதிகமாகிவிட்டது. உதாரணமாக ஜினே பிசு வின் கடன் அதன் தேசிய வருமானத்துடன் ஒப்பிடும் போது 417 சதவிகிதமாகவும், மாற்றினிகின் கடன் 240 சதவிகிதமாகவும், லோஸ்(டழயள) 205 சதவிகிதமாகவுள்ளது. உதவி என்பது சூறையாடல் தான். உதவி என்ற பெயரில் வட்டியை அறவிடும் கடனே வழங்கப்படுகின்றது. உலகத்தையே திவாலாக்கி சூறையாடும் கொடூரமே நடக்கின்றது.


இந்த திவாலான நாடுகளில் வட்டி அறவிடுவதற்கு அப்பால், அவர்கள் மூதலீடு கூட செய்வதில்லை. 2000 ஆண்டில் உலகளவிலான மொத்த முதலீடான 110000 கோடி டொலரில் 520 கோடி டொலர் மட்டும் தான், அதாவது 0.5 சதவிகிதமே இந்த நாடுகளில் முதலிடப்பட்டது. வறுமையான இந்த 49 நாட்டின் ஏற்றுமதியில் 50 சதவிகிதம் கனடா, அமெரிக்கா மற்றும் யப்பானுக்குச் செல்ல மிகுதி ஐரோப்பாவுக்கு சென்றது. செல்வம் அங்கு செல்ல, அந்த நாடு கடனில் மிதக்கின்றது. வறுமையும், நோயும், சமூக அவலமும் பாரிய அளவில் இதன் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றது.


உண்மையில் மிக வறிய மிகப் பின்தங்கிய பிரதேசமாக மாற்றப்பட்ட ஆபிரிக்காவில் கல்வி மற்றும் சுகாதாரத்துக்காக செலவு செய்வதை விடவும், நான்கு மடங்கு அதிகமாகவே வட்டியை ஏகாதிபத்தியங்கள் அறவிட்டு வருகின்றன. இதனால் தான் 1994 க்கும் 2000க்கும் இடையில் ஆபிரிக்காவின் வறுமை 50 சதவிகிதத்தால் வளர்ச்சியுற்றது. ஆபிரிக்காவில் ஏற்படும் வறுமையின் அதிகரிப்பு, ஏகாதிபத்தியம் வசூலிக்கும் வட்டியில் இருந்தும் உற்பத்தியாகின்றது. வட்டி அறவீடுகளே மேற்கில் மேலும் மேலும் குளிர்ச்சியான செழுமையான வாழ்வை உருவாக்குகின்றது. கடனற்ற ஒரு நிலையில் செல்வத்தின் ஒருபகுதி (வட்டியாக கொடுக்கும் செல்வம்), ஏதோ ஒரு வகையில் மக்களைச் சென்றடைந்தது. ஆனால் இன்று உலகமயமாதல் என்ற வேள்விக் கிடங்கில், விட்டில் பூச்சியாக விழுந்துமடியும் மனித உயிர்கள், என்றுமில்லாதளவில் வளர்ச்சியை அடைகின்றது. கல்வி, அடிப்படை மருந்து, அடிப்படை உணவு மீதான சமூக நலத்திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு, அப்பணமே வட்டியாக மேற்கு நோக்கி செல்வதை கண்காணிக்கும் உலக வடிவத்தின் பெயர் தான் உலகமயமாதல். உலகை வரைமுறையின்றி இலகுவாக சுரண்டுவதை துரிதமாக்கி, அதைக் கண்காணிக்கும் அமைப்புத்தான் உலகமயமாதல். இந்த கொள்ளைக்கார உறுப்புகள் தான் உலக வங்கி முதல் அமெரிக்க இராணுவம் வரையிலான மக்கள் விரோதக் கூலிக் கும்பல்களாகும். இதை சூக்குமமாக பாதுகாப்பது தனிமனித சுதந்திரம், ஜனநாயகம் என்ற மூகமுடிகள்.


ஆபிரிக்காவின் இன்றைய சமூக அடிமைத்தனத்துக்கு, மேற்கு உதவி என்ற பெயரில் வழங்கிய கடன்களே பிரதானமான காரணமாக அமைந்தன. இதன் வரலாற்றுப் போக்கில் சிலவற்றை குறிப்பாக பார்ப்போம். அடிமைத்தனத்தின் (பின்)நவீன சித்தாந்தமாக உலகமயமாதல் உருவாக முன்பு, வறிய ஆபிரிக்க நாடுகளின் கடன்கள் 1980 இல் 6060 கோடி டொலர் மட்டுமேயாகும். இது 1987 இல் 12900 கோடி டொலராகவும், 2000 இல் 20610 கோடி டொலராகவும், 2004 இல் 27850 கோடி டொலராகவும் மாறியது. கடன்களை திணித்த ஏகாதிபத்தியங்கள் தேசிய திவாலை உருவாக்கி, அங்கிருந்து செல்வங்களை தொடர்ச்சியாக இடைவிடாது கடத்துகின்றனர். ஆபிரிக்காவின் மனித உழைப்பு, மேற்கின் நுகர்வு வெறிக்கு இலவசமாகவும் அபரிமிதமாகவும் தீனிபோடுகின்றது.


இப்படி மேற்கின் சுகபோக வாழ்வுக்கு ஏற்ப திணிக்கப்பட்ட கடன், அவர்களின் சொந்த தேசிய வருமானத்தில் மிகப் பெரிய ஒரு பூதமாகவே உருமாறிவிட்டது. வறிய ஆபிரிக்க நாடுகளின் தேசிய வருமானத்தில் கடன் 1980 இல் 23.4 சதவிகிதமாக இருந்தது. இது 2000 இல் 66.1 சதவிகிதமாக அதிகரித்தது. 1980 இல் இக் கடன் ஆபிரிக்காவின் ஏற்றுமதி வருவாயில் 65.2 சதவிகிதத்தில் இருந்தது. இது 2000 இல் 180.2 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இப்படி மொத்த ஏற்றுமதியே கடனை (உதவியை) திருப்பிக் கட்டப் போதுமானதாக இருப்பதில்லை. 1980 இல் இந்த கடனுக்கான மீள் கொடுப்பனவு (வட்டியாகவும் முதலாகவும்) 670 கோடி டொலராக இருந்தது. இது 2000 இல் 1460 கோடியாகியது. இந்த மீள் கொடுப்பனவு ஏற்றுமதியில் 7.2 சதவிகிதத்தில் இருந்து 12.8 சதவிகிதமாகியுள்ளது. எப்படி செல்வவளமுள்ள ஆபிரிக்க வளங்கள் திட்டமிட்டு சூக்குமமாக திருடப்படுகின்றது என்பதையே, இந்த கடனுக்கான வட்டி மற்றும் மீள்கொடுப்பனவு எடுத்துக் காட்டுகின்றது. இந்தக் கொள்ளை பலவகையானது. ஆபிரிக்காவின் பெருமளவில் குவிந்துள்ள இயற்கை வளங்கள் அன்னிய பன்நாட்டு கம்பனிகளின் தனிப்பட்ட சொத்தாக மாறிவிட்டது. இதில் தேசிய அரசுகள் எந்த தலையீட்டையும் நடத்த முடியாத வகையில், கடன் நிபந்தனைகள் தனிமனித சுதந்திரம அதை உலக மயமாக்கியுள்ளது. அத்துடன் இந்த இயற்கை வளங்களின் விலையை, மிகமலிவான விலையில் மேற்கு வரைமுறையின்றி சூறையாடுகின்றது. ஆபிரிக்கா நாட்டு மக்களின் பிரதான உணவாக உள்ள சோளம், மேற்கின் மிருகங்களுக்கான உணவாக மாற்றப்பட்டு அடிமாட்டு விலையில் கட்டாயப்படுத்தி கடனுக்காக வட்டிக்காக மேற்கினால் வாங்கப்படுகின்றது. ஆபிரிக்க மக்கள் தமது உணவை இழந்து பட்டினி கிடக்க, மேற்குநாட்டு பண்ணை மிருகங்கள் அந்த உணவையுண்டு கொழுக்கின்றன. இந்த மிருகங்கள் சார்ந்த உணவை உண்ணும் மேற்கு மனிதனோ மேலும் அதீதமாகவே கொழுக்கின்றான். இப்படி அதீதமான மேற்கு நுகர்வு, ஆபிரிக்க மக்களின் பட்டினி மரணங்களின் மீது கட்டமைக்கப்படுகின்றது.


1983 இல் உலகில் எந்தவொரு ஆபிரிக்க நாடும் பெரும் கடனாளி நாடுகளின் கடன் பட்டியலில் இடம் பெறவேயில்லை. ஆனால் இன்று அப்படியல்ல. வறிய ஆபிரிக்காவின் மனித அவலங்களுக்கான அடிப்படையான சமூகக் காரணமே, ஏகாதிபத்தியங்களின் வரைமுறையற்ற சூறையாடல் தான் என்பதை இது துல்லியமாகவே எடுத்துக் காட்டுகின்றது. ஆபிரிக்காவில் பசியாலும், மருந்து இன்றியும் இறக்கும் கோடிக்கணக்கான மரணங்களுக்கு, இந்த ஏகாதிபத்திய உலகமயமாதல் பொருளாதாரக் கொள்கைதான் காரணம். இதை இனியும் யாராலும் மறுக்கமுடியாது. கடனை அவர்களின் தலையில் சுமத்திவிட்டு, அதற்கு அறவீடுகள் என்ற பெயரில் அந்த நாடுகளை அடிமைப்படுத்தி கொழுக்கும், மேற்கத்திய சமூகக் கூறு தான் இதற்கான முழுப் பொறுப்புமாகும். கடனின் அளவு, ஒருநாளும் இந்த கடனை மீளக் கொடுக்க முடியாது என்ற நிலையை தெளிவாகவே எடுத்துக் காட்டுகின்றது. அவர்களின் சொந்த தேசிய வருமானத்தைவிடவும், அவர்களின் ஏற்றுமதியை விட கடன் அதிக உயரத்தில் நட்சத்திரமாகவே மின்னுகின்றது. ஆபிரிக்க மக்கள் இந்தக் கடனில் இருந்து மீள்வது என்பது இந்த சமூக அமைப்பை மறுக்கும் ஒரு புரட்சியின்றி, இந்தக் கடனுக்கு ஒருநாளும் முடிவு கட்டமுடியாது. தனிப்பட்ட மனிதன் சார்ந்து, தனிப்பட்ட நாடுகள் சார்ந்து, மனித இனத்தையே சூறையாடும் கொள்ளையை அடிப்படையாக கொண்ட கடனை, தரமறுக்கும் ஒரு புரட்சி தான் மக்களின் நலனை பேணுவதற்கான மாற்றுப் பாதையாக எம்முன்னுள்ளது.


கடனை கட்டும் வகையில் தேசிய உற்பத்தியும், கடன் கொடுத்தவனின் தேவைக்கு ஏற்ற ஒற்றைப் பொருளாதார உற்பத்தியுமாக முற்றாக ஆபிரிக்க பொருளாதாரத்தையே மாற்றி அமைத்துள்ளனர். இந்த ஒற்றைப் பொருளாதாரம் நாட்டின் சுயாதீனத்தையே இல்லாததாக்குகின்றது. ஏற்றுமதிக்கான இந்த ஒற்றைப் பொருளாதாரம் ஏகாதிபத்திய தேவைகளை பூர்த்தி செய்வதாக மாறியுளளது. இந்த வகையில் ஒரு சில நாடுகளின் ஏற்றுமதி ஒரு பிரதானமான ஒரு பொருள் சார்ந்ததாக மாறிவிட்டது. உதாரணமாக


சிம்பாவேயின் 71 சதவிகிதமானது செப்பு உற்பத்தியில் தங்கியுள்ளது.


புரண்டி 73 சதவீகிதம் கோப்பி உற்பத்தில் தங்கியுள்ளது.


ஜினே பிசு 74 சதவீகிதம் கறுப்பு காயூ உற்பத்தில் தங்கியுள்ளது.


ஜெமன் 84 சதவீகிதம் பெற்றோல உற்பத்தில் தங்கியுள்ளது.


மேலும் சில நாடுகளின் ஏற்றுமதி எதைச் சார்ந்து உள்ளது என்று பார்த்தால்


நாடுஉற்பத்திப்பொருள்சதவிகிதம்
பெனின்பஞ்சு84
மாலிபஞ்சு47
புக்கினோ பாசோபஞ்சு 39
தாட்ஷ் பஞ்சு38
ரூவண்டாகோப்பி56
உகன்டாகோப்பி43
எத்தியோப்பியாகோப்பி40
நிக்ரகுவாகோப்பி25
கொண்டுராஸ்கோப்பி22

தான்சானியா

கோப்பி20
சாதோமா பிரின்சிப்உயஉயழ78
குயானாசீனி61
டாலாவி

புகையிலை

61
மார்ட்னிக்மீன்54
செகவ் மீன்25
சாம்பியாசெப்பு48
நைஜீர்யூரேனியம்51
பொலிவியாஇயற்கைவாயு18
காமுறுன் பெற்றோல் 27

இப்படி ஒற்றைப் பொருளாதார உற்பத்தி முறைகள் அந்த நாடுகளின் பொருளாதார கட்டமைப்பையே தகர்க்கின்ற வகையில், ஏகாதிபத்தியத்தைச் சார்ந்து வாழும் வகையில் உருவாக்கப்படுகின்றது. இதை உருவாக்கிய நிலையில் சந்தையைக் கட்டுப்படுத்தும் ஏகாதிபத்தியங்கள், செல்வத்தை அந்த மக்களின் பிணங்களின் மேலாக கறக்கின்றனர். சந்தையை முற்றாக தமக்கு சார்பாக தமக்கு இயல்பாக மாற்றிய பின், பொருட்களின் விலையை தாம் விரும்பியவாறு நிர்ணயித்து, அதை அடிமாட்டு விலைக்கு இட்டுச் சென்று சந்தையை திட்டமிட்டு நெருக்கடிக்குள்ளாக்கின்றனர். இதன் மூலம் நாடுகள் மேலும் மேலும் அடிமையாக்கின்றனர்.


மூன்றாம் உலகநாடுகளின் ஒற்றைப் பொருளாதாரத்தை உருவாக்கிய ஏகாதிபத்தியங்கள், அதை எப்படி அடிமாட்டு விலைக்கு இட்டுச் சென்றனர் என்பதற்கு ஒரு சில உதாரணங்களைப் பார்ப்போம். விலைகள் டொலரில்







உற்பத்திஒரு அலகு198019902001
கோப்பி100 கிலோ411.7118.263.3
அதின்கனி100 கிலோ330.5126.7111.4
கடலை எண்ணைதொன்1090.1963.7709.2
பால்ம் எண்ணைதொன்740.9289.9297.8
சோயாதொன்376246.8204.2
அரிசிதொன்521.4270.9180.2
சீனி100 கிலோ80.1727.6719.9
பருத்தி100 கிலோ261.7181.9110.3
செப்புதொன்277026611645
ஈயம்100 கிலோ11581.149.6

மிக மோசமான வகையில் பொருட்களின் விலைகள் சரிந்த போது, அதை உற்பத்தி செய்த மக்களின் வாழ்வு மிக மோசமானதாக மாறியுள்ளது. உண்மையில் உற்பத்தியாளன் என்ற நிலையை அவன் இழந்து வருகின்றான். நாடுகளின் சுயாதீனமோ திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது. நாடுகள் தேசிய தனித்துவத்தை இழந்து அழிவது நல்லது என்று போற்றுவோர், இதை பச்சை நோட்டுக்கு பின்னால் குதூகலத்துடன் கூடிய வக்கிரத்தைக் கொண்டாடுகின்றனர். மறுபக்கத்தில் உற்பத்தியாளனுக்கு கிடைக்கும் விலை குறைந்த போதும், நுகர்வோர் அதே பொருளுக்கு கொடுக்கும் விலைகள் சீராக அதிகரித்தே வந்துள்ளது. இதில் சூழ்ச்சி என்னவென்றால் விவசாய உற்பத்திக்கான ஆதாரப் பொருட்களின் விலை அதிகரித்த போதும், உற்பத்தி விலை அதிகரிக்கவில்லை. மாறாக குறைந்துள்ளதை மேல் உள்ள தரவுகள் காட்டுகின்றது. உதாரணமாக அரிசி உற்பத்தியை எடுத்தால், உரம் கிருமிநாசினி, எண்ணை... போன்ற உற்பத்திக்கான ஆதாரப் பொருட்களின் விலை அதிகரித்த போதும், அரிசியின் ஏற்றுமதி விலை குறைந்தே வந்துள்ளது. நுகர்வோருகான சந்தை விலை அதிகரித்தே வந்துள்ளது. அதேபோல் மேற்கத்தைய நவீன தொழில்நுட்ப உற்பத்திக்கு மூன்றாம் உலக நாடுகள் வழங்கும் ஆதாரப் பொருட்களின் விலை குறைந்து வந்த போதும், மேற்கின் உற்பத்திக்கான விலை அதிகரித்தே வந்துள்ளது.


உள்ளடகத்தில் மூன்றாம் உலகநாடுகளின் உற்பத்திக்கான ஆதாரப் பொருட்களின் விலை அதிகரிக்க, மேற்கின் உற்பத்திக்கான ஆதாரப் பொருட்களின் விலை குறைந்து வந்துள்ளது. உற்பத்தியை எடுத்தால் மூன்றாம் உலக நாடுகளின் உற்பத்தியான பொருட்களின் விலை குறைந்தும், மேற்கின் உற்பத்தியான பொருளின் விலை அதிகரித்து வந்துள்ளது. இங்கு மூன்றாம் உலக நாடுகள் இரண்டு முறைகளின் மொத்தமாக மேற்கினால் சூறையாடப்படுகின்றது. மேற்கில் இரண்டு முறைகளில் இலாபம் பெருக்கெடுக்கின்றது. இவை திட்டமிட்ட பொருளாதார அரசியல் சதிகள் மூலம், உலகமயமாதலால் கண்காணிக்கப்படுகின்றது.


இதன் மூலம் செல்வம் சிலரின் கையில் குவிவதை துரிதமாக்குகின்றது. மக்கள் ஏழ்மையில் சிக்குவது அதிகரிக்கின்றது. இந்த நிலையில் ஆபிரிக்காவில் ஒரு டொலருக்கும் குறைவாக பெறுவோர் 1990 இல் 75.8 சதவிகிதமாக இருந்தது. இது 2015 இல் 76.4 சதவீகிதமாகும் என்ற ஏகாதிபத்தியமே பெருமையாக அறிவிக்கின்றது. ஐரோப்பவிலும், கிழக்கு ஐரோப்பாவிலும் வறுமையில் சிக்கியிருந்தோர் 1990 இல் 4.5 சதவீகிதமாக இருந்தனர். இன்று இது 17.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. இப்படி வறுமையும், மனித இழிவும் பெருக்கெடுக்கின்றது.


ஆபிரிக்காவில் ஒரு டொலருக்கு குறைவாகவே நாள் ஒன்றுக்கு பெறுவோரை எடுத்தால்


1990 24.2 கோடி பேர்


2000 30.0 கோடி பேர்


2015 34.5 கோடி பேர் (2015 இது தான் நிலை என்று சர்வதேச ஆய்வுகள் உறுதி செய்கின்றனர்.)


வறுமை பற்றிய புள்ளிவிபரங்கள் கூட, உண்மையில் இதைவிட அதிகமாகும். தமது சொந்தமான கொடூரமான தன்மையை மறைக்க, உலகத்தை ஏமாற்ற புள்ளிவிபரங்களைக் குறைத்து காட்டுவது அன்றாடம் நிகழ்கின்றது. உதாரணமாக உலகவங்கி தனது அறிக்கையில் எண்ணை வளம் கொண்ட நைஜீரியாவில் 41.7 சதவீதம் பேரே ஒரு டொலருக்கும் குறைவாக பெறுவதாக அறிவித்தது. ஐக்கிய நாட்டு சபையோ இதை 75 சதவீதம் என்கின்றது. இப்படி உண்மைகள் அப்பட்டமாக மக்களுக்கு எதிராக உள்ளதை மூடிமறைக்கின்றனர். நைஜீரியாவின் எண்ணை வளத்தை மேற்கத்திய கம்பனிகள் கொள்ளையடிப்பதை மூடிமறைக்கவே, குறைத்துக் காட்டும் புள்ளிவிபரங்கள் அவசியமாகின்றது. எண்ணைக் கம்பனிகளின் வருமானமோ வருடாந்தம் பெரும் தொகையாக மாறி இலாபமாக பெருக்கெடுக்கின்றது.


இப்படி ஆபிரிக்க மக்களின் சமூக சிதைவு என்பது துல்லியமாக அதிகரித்து வருகின்றது. நேற்றைய வாழ்வை இன்று அவர்கள் இழப்பது, அந்த நாடுகளின் அந்த மக்களின் தலைவிதியாக மேற்கு திணித்துள்ளது. வாழவழியற்ற ஏழைகள் ஒவ்வொரு நாளும் உற்பத்தி செய்யப்படுகின்றனர். பின் அந்நாட்டு மக்கள் கையேந்தி பரிதாபிக்கும் காட்சிகளை உருவாக்கி, உதவியென்ற பெயரில் மேற்கு மக்களின் காதுக்கே பூவைக்கின்றனர். இப்படி ஒரு மனித இனத்தை சூறையாடும் அரசியல் வக்கிரத்தையே (பின்)நவீனத்துவம் அரங்கேற்றுகின்றது.


உதாரணத்துக்கு எத்தியோப்பியாவில் ஏற்பட்ட மனித அவலத்துக்கான காரணத்தைப் பார்ப்போம். எத்தியோப்பிய மனித அவலத்துக்கு (பஞ்சத்துக்கு) மழை மேல் குற்றம் சாட்டும் பன்நாட்டு நிறுவனங்களும், ஏகாதிபத்தியங்களும் உண்மையான தமது சொந்த குற்றத்தையே மூடிமறைக்கின்றனர். 1960 இல் உலகவங்கி ஆவாஸ் பள்ளத்தாக்கில் கட்டிய அணைதான், 10 லட்சம் மக்களை கொன்றதுடன் 80 லட்சம் மக்களை நிரந்தரமான பட்டினிக்கு இட்டுச் சென்றது. உலகவங்கி வலிந்து கட்டிய அணை, மக்களின் அன்றாட நீர் தேவையையும், மேச்சல் நிலங்களின் வளத்தையும், விவசாய நிலத்துக்கு கிடைத்து வந்த நீரையும் தடுத்து நிறுத்தியது. இந்த அணை மூலம் உலகவங்கி, ஆபிரிக்க மக்களுக்கு அவர்களின் நீரை இல்லாததாக்கியது. இந்த நீரை ஜெர்மனி, இஸ்ரேல், இத்தாலி, பிரிட்டன் மற்றும் பல்வேறு பன்நாட்டு நிறுவனங்கள் உருவாக்கிய பெரும் வேளாண்மை நிறுவனத்துக்கு திட்டமிட்டு திருப்பிவிடப்பட்டது. அந்த மக்கள் இன்று குடிக்கக் கூட நீர் இன்றி அலைகின்றனர். நீரோட்ட பகுதியில் வாழ்ந்த 1.7 லட்சம் மக்களைக் கட்டாயப்படுத்தி வெளியேற்றி, வீதிகளிலும் அகதி முகாங்களிலும் தள்ளினர். 1972 இல் இப்படி வெளியேற்றப்பட்ட மக்களில் 30 சதவிகிதமான மேச்சல் இன மக்கள் உயிர் இழந்தனர். தொடர்ந்தும் நீர் இன்றி உற்பத்திகளை இழந்த வரண்ட பிரதேச மக்கள் பட்டினியால் கொல்லப்பட்டனர். நீரை பெற்ற பன்நாட்டு வேளாண்மை நிலங்களில் உருவான உணவுகள், மேற்கு நோக்கி அணியணியாகவே கடத்தப்பட்டது. அந்த பண்ணைகளில் உற்பத்தி செய்த பொருட்களை ஆபிரிக்காவின் ஏழை எளிய மக்கள் வாங்கும் திறனற்றவராக இருந்ததுடன், அது டொலருக்கு விற்கப்படும் சர்வதேச சந்தைக்கு சென்றது. இதைக் கொண்டு மேற்கின் கால்நடைகள் கொழுக்க வைக்கபட்டபோது, மக்கள் எலும்பும் தோலுமாக மடிவதைத்தான், உலக ஜனநாயகத்தின் சுதந்திரமாக நியாயப்படுத்தப்பட்டது.


இதற்கு இயற்கை மேல் குற்றம் சாட்டியதுடன், இதனால் உருவான யுத்தத்தையே காரணம் என்று பூச்சூடினர். ஆபிக்காவின் பொதுவான இன்றைய யுத்தங்கள் யார் சூறையாடுவது என்பதில் ஏகாதிபத்தியத்தின் முரண்பாடுகளால், அவர்களின் கைக்கூலிகளுக்கு இடையிலான ஒரு யுத்தமாகவே உருவாகின்றன.


மறுபக்கத்தில் சமூகத்தில் பற்றாக்குறை ஏற்படும் போது, பற்றாக்குறையை ஏற்படுத்தியவன் அதை சமூகப் பிளவுகள் மூலம் திசைதிருப்பி மோதவிடுகின்றான். இதனால் சமூகங்களுக்கு இடையில் மக்கள் விரோத யுத்தங்கள் ஏற்படுகின்றன. பின் யுத்தம் தான் மனித அவலத்துக்கு காரணம் என்று கூறுவது, ஏகாதிபத்தியத்தின் அரசியல் அகராதியில் வழமையான ஒரு அரசியல் மோசடியாகும். எத்தியோப்பிய பஞ்சத்தை தடுக்க, குறித்த அந்த ஏகாதிபத்திய அணையை தகர்த்தாலே போதுமானது. அந்த மக்களின் நிலங்கள், அந்த நீரில் குளிர்வது போல் அந்த மக்களின் வாழ்வும் குளிரும். ஆனால் உலகத்தில் செல்வத்தினை வைத்திருப்பவர்களின் சூறையாடும் ஜனநாயகத்துக்கு இது எதிரானதாகவே, அவர்கள் கூக்குரலிடுவர். இதையே அவர்கள் பயங்கரவாதம் என்பர். இதில் வேடிக்கை என்னவென்றால் குறித்த அணையைக் கட்ட வாங்கிய பணத்துக்கு கூட, எத்தியோப்பிய ஏழை மக்கள் தான் வட்டி கட்டிக் கொண்டிருக்கின்றனர். அந்த நீரை நுகர்பவன் அல்ல. இது உலகளாவிய பல அணைகளுக்கும் பொருந்தும். மக்களின் எதிர்ப்பை மீறிக் கட்டப்படும் ஏகாதிபத்திய அணைக்கான அவர்களின் பணத்துக்கு கூட, எதிர்க்கும் மக்களே வட்டி கட்டுவதுடன், தமது சொந்த வாழ்வையும் அவர்களுக்காக இழக்கின்றனர். அவர்கள் தமது சொந்த நீர் வளத்தை அன்னியனிடம் இழந்தது மட்டுமின்றி, தமது சொந்த விவசாய நிலத்தையும் கூட அவனிடம் இழந்துவிடுகின்றனர். தமது சொந்த கால்நடைகளைக் கூட இழந்தனர். எந்த அன்னியனிடம் இதையெல்லாம் இழந்தனரோ, அவர்கள் இதை இழக்க வைக்க திட்டமிட்டு திணித்த கடனுக்கு கூட இன்றும் எத்தியோப்பியன் வட்டி கட்டுகின்றான். இது எடுப்பான ஒரு சிறந்த உதாரணம் மட்டும்தான். இதைத் தான் உலககெங்கும் கடன்கள் செய்கின்றன.


ஏழ்மை எப்போதும் எங்கும் வசதியானவனின் வாழ்வை மேலும் வளமாக்கின்றது. ஒரு அமெரிக்கன் ஒரு சோமாலியனை விட 2, 3 மடங்கு அதிகமான கலோரியை பெறமுடிகின்றது. அதாவது ஒரு அமெரிக்கன் ஒரு நாளைக்கு சாராசரி 3600 கலோரியை பெறுகின்ற நிலையில், ஒரு சோமாலியன் சராசரி 1500 கலோரியையே பெற முடிகின்றது. இதற்குள்ளும் பாரிய ஏற்றத் தாழ்வுகள் உண்டு. இது எப்படி சாத்தியமாகின்றது. இதன் சூக்குமம் தான் என்ன? இதை புரிந்து கொள்ளமுடியாத ஒரு நிலையில், மந்தைகளாக நாம் வாழ வைக்கப்படுகின்றோம் என்றால் மிகையல்ல. உலக புரத வளத்தில் பெரும்பகுதி பண்க்கார நாடுகளின் கால்நடைகளுக்கு உணவாகின்றதே, இது எப்படி சாத்தியமாகின்றது? இதற்காகவே மனித உணவை புடுங்கும் உலகமயமாதல் சூறையாடும் கொள்கையை நாம் எப்படி புரிந்துகொள்வது.


ஆபிரிக்காவிலேயே செல்வவளமிக்க தென் ஆபிரிக்காவில் வாமும் இரண்டு கோடி கறுப்பின மக்களுக்கு சொந்த வீடும், விவசாயம் செய்ய நிலமும் இன்றியே வாழ்கின்றனர். பாராளுமன்றத்தில் கறுப்பின தலைவர்கள் ஆட்சிக்கு வந்துவிடுவதன் மூலம், வெள்ளையினத்தவன் இனவெறிக் கொள்கை மூலம் சூறையாடியவை பகிரப்பட்டுவிடுவதில்லை. அங்கு சுரண்டல் அங்கீகரிக்கப்பட்டு தனிமனித சொத்துரிமை காப்பற்றப்பட்ட நிலையில், அந்த மக்கள் பரிதாபகரமான நிலையில் இழிந்தே வாழ்கின்றனர்.


உலகில் வறுமையும், அடிப்படை தேவை மறுக்கப்படுவதும் இந்த சமூக பொருளாதார உறவுகளின் உள்ளடகத்தில் இருந்தே உற்பத்தியாகின்றது. இதை மாற்றாமல் உலக மக்களின் வாழ்வு என்பதே சாத்தியமற்றது. சமூகமாக அதுவே உலகமாக இழிந்து கிடப்பதை சமூக பொருளாதார உறவு உருவாக்கிவிடுகின்றது. கார்ல் மார்க்ஸ் மூலதனத்தில் கூறியது போல் 'பொருளியல் நாடக நடிகர்கள் உணர்வில் இன்றியே அவர்கள் தீட்டாமலேயே, அவர்கள் தம் பிடிக்குள் படாமலேயே, தாமாகவே சமுதாய உறவுப் பிணைப்புகள் உருவாகிவிடுகின்றன." என்றார். இந்த அவலமான இழிநிலையை எமது பொதுவான அறிவியல் மட்டம் பகுத்தாய்ந்து அடையாளம் காணமுடிவதில்லை. அந்தளவுக்கு இந்த சமூக பொருளாதார உறவுகளை நியாயப்படுத்தவும் அல்லது எம்மை அறியாமல் அதன் சமூக பொருளாதார எடுபிடிகளாகி விடுகின்றோம்.


பின் நாமே போலியாக பீற்றிக்கொள்ளும் வகையில், வறுமைக்கான காரணத்தை வாரி சமூகத்தின் மீதே துப்புகின்றோம். ஆபிரிக்காவின் நிலைமை பற்றி, அங்கு அன்றாடம் இயற்கையின் பெயரில் மூலதனத்தின் சூறையாடலால் கொல்லப்படும் வறிய மக்களின் அவலத்தையிட்டு நாம் கண்டு கொள்ள மறுப்பது இப்படித் தான்.


இன்று வறிய நாடுகளாக காட்டப்படும் உலக வரைபடத்தையே உருவாக்கியவர்கள் யார்? பயங்கரவாதம் பற்றி மூச்சுக்கு மூச்சு தம் பிடிப்பவர்களும், ஜனநாயகம் பற்றி பிதற்றுவோர் அல்லாத வேறு யாருமல்ல. காலனீயம் வேர் ஊன்றி வந்த 1800 களில் உலக உற்பத்தியில் 44 சதவீதத்தை வளரும் நாடுகள் உற்பத்தி செய்தன. 1950 இல் 17 சதவீதமாக இது குறைந்து போனது. 1980 இல் 21 சதவீதமாக கூட இது அதிகரித்தது. இந்த இடைக் காலத்தில் 8 சதவீதத்தால் மக்கள் தொகை அதிகரித்திருந்தது. இந்த நிலையில் 21 சதவீதம் உற்பத்தி உலகமக்களின் 75 சதவீதமானோருக்கு பங்கிடப்பட்ட வேண்டிய நிலையும் உருவானது. இங்கு 1950 க்கும் 1980 க்கும் இடையில் ஏற்பட்ட 4 சதவீத அதிகரிப்பு இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் ஏற்பட்ட காலனீய நாடுகளின் விடுதலையுடன் தொடர்புடையதாக இருந்தது. அத்துடன் உலகின் மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட சீனா, தேசிய விடுதலைப் போராட்டத்தில் வென்றதுடன், சோசலிசத்தை நோக்கி முன்னேறியது. இதனடிப்படியில் ஏற்பட்ட வளர்ச்சி, பின்னால் நவகாலனியாகிச் சிதைந்து போனது. இன்று மூன்றாம் உலகம் மேற்கின் உற்பத்தி மையமாக மாறிவருகின்றது. இந்த உற்பத்தியை அந்த மக்கள் நுகர்வதில்லை. ஏற்றுமதிப் பொருளாதாரமாக மாறிவிட்டது. எத்தியோப்பாவின் நீர்வளத்தை சுரண்டி அந்த மக்களை பட்டினியில் சாவடிக்கும் நிலையில், அந்த நாட்டின் உற்பத்தி நாட்டை விட்டே வெளியேறுகின்து.


முன்றாம் உலகமக்கள் 200 வருடங்களுக்கு முன் தாம் தமது தேவை கருதி உற்பத்தி செய்து தாமே நுகர்ந்த சொந்த வாழ்வையே இன்று இழந்து நிற்கின்றனர். மத்திய வட ஆபிரிக்காவில் உள்ள 46 நாடுகளை எடுத்தால், 1995 க்கு முந்திய 20 வருடத்தில் நபர்வாரியான தானிய உற்பத்தி 16.5 சதவிகிதத்தால் வீழ்ச்சி கண்டது. யாரால் இது நடக்கின்றது என்பதையே மேலே காணமுடிந்தது. உலக வர்த்தகத்தில் ஆபிரிக்க கண்டத்தின் பங்கு 4 சதவீதம் மட்டுமாக மாறிப்போனது. இதிலும் பெரும்பாலானவை எண்ணை வயல்கள் ஆகும். இவை கூட ஏகாதிபத்தியங்களுக்குத் தான் சொந்தமானவை. உலகின் அதிக கனிம வளங்களைக் கொண்ட ஆபிரிக்கா, உலக உற்பத்திக்கு மிக மலிவான விலையில் பொருட்களை உற்பத்தி செய்யும் நிலைக்கு தாழ்ந்துள்ளது. மிக மலிவான விலையில் மூல வளங்களை அபகரித்து அதைக் கொண்டு செய்யும் பொருட்கள், அதிவுயர் சந்தை விலைக்கு சந்தைப்படுத்தப்படுகின்றது. மூல பொருளுக்கும் உற்பத்தி செய்த பின்னர் பொருளும் கிடைக்கும் விலையில் உள்ள இடைவெளி பல மடங்காக மாறிவிட்டது. இது உணவு உற்பத்தியிலும் கூட இதுவே நிகழ்கின்றது. வாங்கி விற்பதற்கு இடையில் மிகப் பெரிய இலாபம் சம்பாதிக்கப்படுகின்றது. உன்னதமானதாக கூறும் இந்த அமைப்பிலேயே திட்டமிட்டு ஒரவஞ்சகமாகவே, உற்பத்தி மற்றும் வளங்களுக்கு சந்தை விலை கிடைக்காத நிலை உருவாக்கப்படுகின்றது. அடிமாட்டு விலைக்கு சமூகத்தை இழிநிலைப்படுத்தி விடுவதன் மூலம், அங்கு வறுமை தலைவிரித்தாட வைக்கப்படுகின்றது. கையேந்தி நிற்கும் பரிதாபகரமான நிலையில் உற்பத்திகள் செய்யப்படுகின்றது.


ஏகாதிபத்தியங்களிடம் நேரடியாகவே கையேந்தி வாழும் நிலைக்கு மக்களை தள்ளிவிடுகின்றனர். பின்னர் வீசியெறியும் சோற்றுப் பருக்கையைக் காட்டி தம்மை மனிதாபிமானமுள்ளவராக காட்டிக் கொள்கின்றனர். இந்த நிலையில் உதவி அமைப்புகள் மற்றும் உழைப்பு அல்லாது கையேந்தி வாழும் நிலைக்கு சில நாடுகளில் பெரும்பான்மை மக்களை தள்ளியுள்ளனர். சோமாலியாவில் 75 சதவீகிதமான மக்கள் இந்த நிலையை அடைந்துள்ளனர். இதே போன்று புறூண்டியில் 66 சதவிகிதமானவர்களும், கொங்கோவில் 64 சதவிகிதமானவர்களும், ஆப்பகானிஸ்தானில் 58 சதவிகிதமானவர்களும், எரித்திரியாவில் 57 சதவிகிதமானவர்களும், தாயிட்டியில் 56 சதவிகிதமானவர்களும், மொசாம்பிக்கில் 54 சதவிகிதமானவர்களும் அங்கோலாவில் 51 சதிPகிதமானவர்களும் இயற்கையான உழைப்பின் ஆற்றலை ஏகாதிபத்தியத்திடம் இழந்து கையேந்து நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர். அதாவது 50 ஆபிரிக்கா நாடுகளில் 30 நாடுகள் அல்லது 20 சதவீதமான மக்கள் இந்த நிலைக்கு தரம் தாழ்த்தப்பட்டுள்ளனர். இதைப் போன்று தென் அமெரிக்காவில் வெனிசுலா, கொண்டூராஸ் போன்ற ஏழு நாடுகளில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. ஆசியாவில் 10 நாடுகளில் இந்த நிலை உருவாகியுள்ளது. இதில் ஆப்கான் உள்ளிட மங்கோலியில் 42 சதவீதமானவர்கள் இந்த இழிநிலைக்குச் சென்றுள்ளனர். முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளான தாஷ்கிஸ்தான், அஜர்பெய்சான் போன்ற நாடுகளிலும் இந்த நிலை உருவாகியுள்ளது.


உலகமயமாதல் பொருளாதாரக் கொள்கை கையேந்தி வாழும் நிலைக்கு அதிகளவு மக்களை தரம்தாழ்த்தி வருகின்றது. உழைப்பில் இருந்து மட்டுமல்ல, அவர்களின் சொந்த வாழ்விடங்களை விடNட துரத்தி, சிறப்பு பொது அகதி முகாங்களை உருவாக்குகின்றனர். இந்த அகதி முகாம்கள் சாராம்சத்தில் மேற்கில் உள்ள மிருகப் பண்ணைகளை ஒத்ததே. மேற்கில் மிருக பண்ணைகள் அதிக கொழுப்பேறும் வகையில் இந்த மக்களிடம் சூறையாடி உணவிடப்படுகின்றது. ஆனால் அகதி முகாம்களில உயிருடன் வாழ்வோருக்கு எஞ்சியுள்ள கொழுப்பே கரைந்து செயலிழந்து இறந்து போகும் வகையில் தான் உணவிடப்படுகின்றது. அதுவும் ஏகாதிபத்திய மரபு மாற்றுப் பரிசோதனை மூலம் உற்பத்தியாகும் உணவே தமது சொந்த பரிசோதனைக்காக வழங்கப்படுகின்றது. அதாவது நாசிய யூத வதைமுகாமுக்கு நிகராகவே, அதேயொத்த வகையில் உலகெங்கும் பல கோடி மக்களை ஏகாதிபத்தியம் இப்படி இழிவாடி நரைவேட்டையாடுகின்றது.


இதை வழிநடத்தும் உலக வங்கியோ தனது சொந்த பெருமையை, தனது சொந்த முட்டாள் தனத்தின் மேல் பாராட்டத் தயங்குவதில்லை. உலகவங்கி 2004 ம் ஆண்டுக்கான தனது அறிக்கையில் ஆபிரிக்காவின் ஏழ்மை 8.2 கோடியால் அதிகரித்துள்ளாதாக அறிவித்தது. ஆபிரிக்காவின் உள்நாட்டு உற்பத்தி 5 சதவீகிதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளது என்று அறிவித்தது. கடுமையான வறுமை 1990 இல் 47.4 சதவீகிதமாக இருந்தது. இது 1999 இல் உயர்ந்தது. வளர்ந்துவரும் நாடுகளின் ஆயுள் சராசரி மட்டம் 47 ஆண்டுகளாக குறைந்து போனது. மேற்கில் சராசாரி ஆயுள் அதிகரித்துச் செல்ல, ஏழைநாடுகளில் அது குறைகின்றது. மேற்கின் சூறையாடல் இதைத் தவிர வேறு எதையும் வழிகாட்டுவதில்லை.


கார்ல் மார்க்ஸ் மூலதனத்தில் அமெரிக்கா அடிமைகள் பற்றி கூறும் போது '..நீக்ரோவிடம் மிதமிஞ்சிய உழைப்பு வாங்கும் கட்டாயம் ஏற்பட்டது. சொந்தக்காரர் முதலாளிகள் கணக்கீட்டின்படி நீக்ரோ ஆயுளை 7 ஆண்டுகளாக்கினர். கொடிய வேலை வாங்கி" அவர்களின் உழைப்பின் வளத்தை அழித்தே சூறையாடினர். இதையே இன்றும் (பின்)நவீனமாக செய்கின்றர். இதன் மூலம் அன்று மட்டுமல்ல இன்றும் வெள்ளையினத்தின் செல்வம் பெருகியது. உழைப்பின் சூறையாடல் தான் செல்வத்தின் இருப்பிடமாகின்றன. சூறையாடலுக்கு உள்ளாகுபவன் வறுமையிலும் இல்லாமையிலும் நலிந்து ஒடிந்து போகின்றான்.


மார்க்ஸ்சின் அதே நூலில் இதுபோன்ற மனித அவலத்தையே எடுத்துக்காட்டுகின்றாh. 'ஜியார்ஜியா நெற்பயிர் நிலமும் மிசிசிபி ஆற்றுப்படுகைச் சதுப்பு நிலங்களும் மனித உடலுக்குப் பகையானவை. அங்கு உழைக்கும் அடிமைகள் அகால மரணம் எய்தினர். அடிமை அகால மரணமுற்றால் பேரிழப்பில்லை. அமெரிக்க நில முதலாளிகளுக்கு ஆப்பிரிக்காவில் இருந்து அடிமைச் சந்தையில் இடையறாமல் பிடித்துக் கொண்டு வரப்பட்ட வண்ணம் இருந்தனர். வர்ஜீனியா, கெண்டகி ஆகிய மாநிலங்கள் நீக்ரோ அடிமைகளின் வற்றாத ஊற்றுக்களாக இருந்தன." இந்த மனித அவலத்தை யாரும் கவிபாடவில்லை. அமெரிக்க நாகரிகம் பற்றியே எப்போதும் நக்கிய எலும்புக்காகவே பெருமை பேசுகின்றனர். அந்த மக்கள் கொள்ளையிட்டு, அதில் ஆடம்பரமாக கட்டிய மாடமாளிகையில் இருப்பவர்களின் கவர்ச்சி தான் பேசும் பொருளாகியுள்ளது. ஒண்டி வாழவும், உண்டு வாழவும் வழியற்ற ஏழை அடிமைகளையிட்டு யாரும் புலம்பவதில்லை. மார்க்சியவாதிகள் மட்டும் தான், உலகில் அவர்களுக்காக போராடுகின்றனர். கொள்ளையிட்டவனும், சூறையாடுபவனும் வீசும் எலும்பை சுவைக்க ஒரு கும்பல், அதில் ஒரு பகுதியை மக்களுக்கு கொடுப்பதாக காட்டி நக்கித் தின்பவன் மூலம், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக காட்டுவதே இன்று நிகழ்கின்றது.


ஆனால் தொடர்ந்து கொள்ளையையும், சூறையாடலையும் நடத்துகின்றனர். அதில் ஒரு பகுதியை, நிலப்பிரபு பண்ணையார் போல், அடிமையை உற்பத்தி செய்யும் கோயிலில் வைத்தே ஏழைகளுக்கு அன்னதானம் நடத்துகின்றனர். அந்த மக்களின் வாழ்வு அழிக்கப்பட்டு நரபலியிடப்படுகின்றனர். ஆனால் நாகரிகமாக இதை இயற்கை மரணம் என்கின்றனர்.


இப்படி மனித சமூகமே நலமடிக்கப்பட்டுள்ளது. இந்த இழிநிலைக்கான காரணத்தை திசைதிருப்புவதிலும், அதை அந்த மககள் குற்றமாக காட்டுவதிலும், அந்த சமூகம் பின்தங்கிய ஒரு மனித இனமாக காட்டுவதிலும், ஏகாதிபத்திய கருத்தியல் ஆதிக்கம் உலகமயமாக்கப்பட்டுள்ளது.


உண்மையில் உலக ரீதியான சமூக ரீதியான புறக்கணிப்பும், சூறையாடலும் அந்த இனத்தின் அனைத்து சமூக அடிப்படையையும் தரைமட்டமாக்கி வருகின்றது. ஆபிரிக்காவில் ஏற்படும் மலேரியா காய்ச்சலால் வருடம் 50 கோடி வேலை நாள் இழப்பு ஏற்படுகின்றது. மாபெரும் வேலை நிறுத்தத்துக்கு ஒத்ததாக இது உள்ளது. அறிவியல், மருத்துவம் என்பன சந்தை சார்ந்ததாக மாறிய நிலையில், மலேரியா ஒழிப்பு என்பது பணம் இல்லாதவனுக்கு இல்லை என்ற நிலையாகி விட்டது. இப்படி உழைப்பின் வலு, பலம் அனைத்தும் இல்லாது போகின்றது.


தேசம், தேசிய விடுதலை என்று அந்த நாடுகளின் எழுச்சியும், ஏகாதிபத்திய சர்வதேச நெருக்கடிகளும் 1950களிலும், 1960 களிலும் பல நாடுகளுக்கு போலிச் சுதந்திரத்தை வழங்கின. அதன் விளைவாக சிறிது காலம், அந்த மக்களுக்கு பொருளாதார ரீதியாக அது சாதகமாகவே இருந்தது. நவகாலனீத்துவம் போலிச் சுதந்திரத்தின் பின்பக்கமாக, மல வாயிலூடாகவே புகுந்து இறுகிய போது நிலைமை மீண்டும் தலைகீழாகியது. 1960 - 1980க்கும் இடையில் ஆபிரிக்காவில் தனிநபர் வருமானம் 34 சதவிகிதமாக உயர்ந்தது. இது தென் அமெரிக்காவில் 73 சதவிகிதமாக அதிகரித்தது. ஆனால் 1980க்கு பின் தென் அமெரிக்காவில் அது உயரவே இல்லை. ஆபிரிக்காவில் 23 சதவீதமாக வீழ்ச்சி கண்டது. இதன் விளைவாக ஆபிரிக்காவில் உலகம் தெரிய தெரியும் அவலம், தென் அமெரிக்காவில் தற்போது தான் தொடங்கியுள்ளது. முன்பு தனிநபர்கள் அனுபவித்த வளர்ச்சி சார்ந்த வாழ்வை, இன்று மேற்கு நாடுகள் சூறையாடியதன் நேரடி விளைவு இது.


அடிப்படை அறிவையும், நவீன தொழில் நுட்ப அறிவையும் ஆபிரிக்காவில் பெறமுடியாத அளவுக்கு, அந்த நாடுகள் திவாலாகிவிட்டன. இந்தியாவில் பார்ப்பனர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வியை மறுக்க 2000 வருடங்களாக எதை செய்தனரோ, அதை ஒத்த நடைமுறையை ஏகாதிபத்தியங்கள் ஆபிரிக்காவில் நடைமுறைப்படுத்தியுள்ளன. கல்வி பற்றிய தரவுகள் இதை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. பாடசாலையில் கல்விகற்போரின் சராசரியான வருடங்கள்






ஆண்பெண்
நைஜிரியா2.81.4
பங்களதேசம்5.84.2
மொறக்7.45.1
ரூவுண்டா5.85.5
பிரான்ஸ்14.114.7
நோர்வை14.314.9
அமெரிக்கா15.115.8
கனடா15.516.5

கல்வி பற்றி இந்த அடிப்படையான தரவுகள் மேற்கில் கல்வியின் சராசரி ஆண்டுகள் உச்சத்திலும், அதில் பெண்கள் ஆண்களை விட அதிகமாகவும் கற்கின்றனர். உலகின் பின்தங்கிய பிரதேசத்தில் இது மிக மோசமானதாகவும், பெண்களை விட ஆண்கள் அதிக காலமும் கல்வி கற்கின்றனர். இது கல்வி கற்போர் தொடர்பான தகவல் என்ற வகையில், பாடசாலைக்கு செல்லாதவர்களை எடுத்தால், இதன் அவலம் மேலும் மோசமானதாக எடுப்பாக இருப்பதை யாரும் மறுக்கமுடியாது. அன்று முதல் இன்று வரை இந்த நிலையில் மாற்றம் ஏற்படவில்லை. மக்களைச் சுரண்டவும், சூறையாடவும் உள்ள உரிமை தான் தனிமனித சுதந்திரத்தினதும், ஜனநாயகத்தினதும் உயர்ந்தபட்ச குறிக்கோளாக உள்ளது.


அன்று காலனித்துவம் எப்படி சூறையாடியது. உதாரணமாக பிரிட்டிஸ் காலனித்துவ வரலாற்றின் தரவுகள் சில இதை துல்லியமாகத் தருகின்றது. பிரிட்டிஸ் ஆக்கிரமிப்பாளர்கள் முதலில் பிடித்த வங்காளத்தில், முதல் பத்தாண்டு முடிய அதாவது 1769-70 இல் அண்ணளவாக ஒரு கோடி பேர் பட்டனியால் இறந்தனர். மொத்த சனத்தொகையில் முன்றில் ஒரு பகுதி மக்கள் இறந்தனர். மீண்டும் கீழ் திசையில் 10 லட்சம் பேர் 1866 இறந்தனர். 1869 இல் ராஜஸ்தானில் 15 லட்சம் பேர் இறந்தனர். 1876 - 1878 இல் 50 லட்சம் பேரும், 1899-1900 இல் 10 லட்சம் பேரும் பட்டினியால் இறந்தனர். அண்ணளவாக ஒரு நூற்றாண்டில் முக்கிய சில பகுதிகளில் மட்டும் இரண்டு கோடி இந்தியர்களை காலனியம் நேரடியாக பலியாக்கி கொள்ளையிட்டது. பிரிட்டிஸ் செல்வ இருப்பு இந்தியா சூறையாடப்படவும், இதன் மூலம் 2 கோடிக்கு மேற்பட்ட மக்களை பட்டினியால் நேரடியாக கொல்வதில் சார்ந்திருந்தது. இதைவிட சுற்றிவளைத்து இயற்கையாக கொன்றது பல கோடியாகும். இன்று அப்படி 10 கோடி மக்கள் உலகளவில் வருடாந்தம் கொல்லப்படுகின்றனர் என்ற உண்மை அன்றைய நிலைக்கு எடுப்பான ஆதாரமாகும்.


இதே போல் வடசீனம் பிரிட்டிஸ் காலனியாக திகழ்ந்தபோது 1876-79 இல் 1.3 கோடி பேர் பட்டினியால் இறந்தனர். 1929 இல் ஹீனான் பகுதியில் 20 லட்சம் பேர் இறந்தனர். இதே காலத்தில் ஜரோப்பாவில் ஒரே ஒரு இடம் தவிர வேறு எங்கும் இந்த மரணங்கள் நிகழ்ந்ததில்லை. நிகழ்ந்தது பிரிட்டிஸ் காலனியான அயர்லாந்தில் மட்டும் தான். 1846-47 இல் 20 முதல் 30லட்சம் மக்கள் இறந்தனர். காலனியத்தின் கொள்ளையின் விளைவை மாhக்ஸ் மூலதனத்தில விரிவாகவே கூறியுள்ளார். அன்று பட்டினி மரணங்களும், அதை தொடர்ந்து ஏற்படும் கொள்ளை நோய்களுக்கும் மேற்குத் தான் காரணமாக இருந்தது. இன்று அதே காரணம் தான் எதார்த்தத்தில் சூக்குமமாகவே உள்ளது.


அன்று ஒரு கோடி வங்க மக்களை கொள்ளையிட்டு கொன்ற பிரிட்டிஸ் காலனீய நோக்கம் தெளிவாகவே இருந்தது. 1769-70 காலனீய பலியெடுப்புக்கு பின், வங்காள கவனர் வாரன் ஹேஸ்டிங்ஸ், 1772 இல் நவம்பர் 3ம் திகதி வெளியிட்ட அறிக்கையில் ~~பிரதேச மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் மடிந்து அதனால் விவசாயம் குறைந்த போதிலும் கூட 1771ம் வருட நிகர வசூல் 1768 ஆம் வருட வசூலை விட விஞ்சிவிட்டது. பழைய அளவுகளைக் குறையாமல் கடும் வன்முறை மூலம் பார்த்துக் கொண்டதன் பலனே இது என்றார். எவ்வளவு தத்துரூபமான அப்பட்டமான உண்மை. ஆபிரிக்காவின் இன்றைய அவலத்தின் பின்பு இந்த உண்மை நிர்வாணமாகவே நிசமாகவே உள்ளது. இது தான் காலனித்துவத்தின், நவகாலனித்துவத்தின் நோக்கமும் குறிக்கோளுமாகும். இந்த மோசமான சமூக இழிநிலையை உருவாக்கி, தனிமனித ஜனநாயகம் சுதத்திரத்தின் பெயரில் நலமடித்து பாதுகாக்கின்றனர். ஆனால் கடந்த காலம் இன்றைய அவலத்தைவிட சுபிட்சமானதாகவே இருந்தது.


கி.மு.2250 ஆண்டு முன் பாபிலோன் பேரரசர் உருவாக்கிய ஹம்முராபி சட்ட விதிமுறைகள் இன்றைய நவீன சட்டங்களை விடவும் மிக உயர்ந்த சமூகத் தன்மை கொண்டதாக இருந்தது. ~~ஒரு மனிதனிடம் கொஞ்சம் நிலமிருந்து, புயல் கடவுள் கோபமுற்று அவனது உற்பத்தியை எடுத்துச் சென்று விட்டாலோ, அல்லது நீர் பஞ்சத்தால் சரியான அறுவடை இல்லாது போய்விட்டாலோ, அவன் அந்த வருடம் கடன் வாங்கியவருக்கு தானியம் எதுவும் அளிக்கத் தேவையில்லை. அவ்வருடத்திற்கான வட்டியும் கொடுக்கத் தேவையில்லை. என்று ஒரு முன்னேறிய நவீன சட்டமிருந்தது. இன்று அப்படி எந்த நாட்டில் ஒரு சட்டம் உள்ளது. காலனீய பிரிட்டிஸ் அரசு மூன்றில் ஒரு பகுதி மக்களைக் கொன்று, மிகுதியாக நலிந்து இழிந்து கிடந்த மூன்றில் இரண்டு பங்கு மக்களிடம் அதீதமாக சூறையாடியது. அதற்கு முந்திய வருடத்தை விட கூடுதலாகவே அறவிட்டு அந்த செல்வத்தையே நாடு கடத்திய பெருமை தான் இன்று வரை தொடருகின்றது. இன்று நாடுகள் திவாலாகிய நிலையிலும், பெரும்பான்மை மக்கள் பட்டினியால் வாழ்ந்து மடிகின்ற அவலநிலையிலும், வட்டியை அறவிடுவது மட்டுமின்றி இருப்பதையும் ஏகாதிபத்தியங்கள் சூறையாடிச் செல்லுகின்றன. இதை (பின்)நவீனம் என்கின்றனர். (பின்)நவீனம் என்பது சூறையாடுவதில் உள்ள சூக்குமத்தையே (பின்)நவீனத்துவம் என்கின்றனர். இதை மேல்பூச்சுக்கு மூடிமறைக்கவே சிலர் பின்நவீனத்துவம் என்கின்றனர்.


இந்த (பின்)நவீனத்துவம் என்பது மக்களை சூறையாடுவதும், கொள்ளையிடுவதும், சுரண்டுவதும் தான். இதை நியாயப்படுத்த தனிமனித சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் முன்னிலைப்படுத்தி, சமூகத்தின் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் மறுத்து, முழுமக்களை அடிமைப்படுத்துகின்ற இன்றைய நிலையில் ஆபிரிக்காவின் அவலம் சிதிலமாகி எம்முன் காட்சியளிக்கின்றது.