தமிழ் அரங்கம்

Saturday, March 4, 2006

புலிகள் மீதான ஏகாதிபத்திய உத்தரவுகளே

புலிகள் மீதான ஏகாதிபத்திய உத்தரவுகளே,
புலியெதிர்ப்பு கும்பலின்
(ஜனநாயக) கோசமாகின்றது

பி.இரயாகரன்
02.03.2006



எமது விமர்சனத்தின் தன்மையையொட்டி புலியெதிர்ப்பு அணியினர் எம்மீது ஆத்திரம் கொள்கின்றனர். தமது மோசடி அம்பலமாவதால், கண்ணை மூடி ஆதரித்த தமது அணிகள் விழிப்புற்று கேள்வி கேட்பதால் இது ஆத்திரத்தை உண்டாக்குகின்றது. அவர்கள் புலிகள் தான் இன்று பிரச்சனை என்கின்றனர். புலியெதிர்ப்பு அணியை அம்பலப்படுத்துவது, புலியைப் பலப்படுத்துவது என்கின்றனர். அத்துடன் தம்மை புலிக்கு ஒப்பிடுவது தவறுறென்று கூற முனைகின்றனர். நாங்கள் புலிகளைப் போல் கொலை செய்தோமா என்று வினா தொடுக்கின்றனர். புலியைவிட குறைவாகத்தானே நாங்கள் செய்தோம் என்றும் விவாதிக்க முற்படுகின்றனர். அத்துடன் புலிசார்பு, புலியெதிர்ப்பு இரண்டையும் ஒன்று கலந்து எழுத வேண்டாம் என்று, அவர் அவரவர் சார்பு நிலைக்கு ஏற்ப கோருகின்றனர்.

எமது விமர்சனம் புலியெர்ப்பு அணியின் (புலி) அரசியல் தளத்தையும், அதன் மீதான கண்மூடித்தனமான வழிபாட்டையும் தகர்க்கத் தொடங்கியுள்ளது. இதனால் கடும் விமர்சனத்தையும், வன்மமிக்க எதிர்ப்பையும் காட்டுகின்றனர். இதில் இருந்தே தமது அரசியல் நிலையை தக்கவைக்க என் மீது தனிப்பட்ட அவதூறுகளை கூறி தப்பிக்க முனைகின்றனர். ஆனால் நாம் அவர்களின் மக்கள் விரோத அரசியலை அம்பலப்படுத்துவதில் உறுதியாகவே உள்ளோம். இதை நாம் ஏன் செய்யவேண்டியுள்ளது. மக்கள் நலனை முன்னிறுத்தாத எதையும் நாம் கடுமையாக விமர்சிப்பதை கோருகின்றோம். மக்களை நலனை முன்னெடுக்கும் குறைந்தபட்ச எந்த முயற்சியையும், அது எவ்வளவுதான் முரண்பாடுகளைக் கொண்டிருந்தாலும் அதை நாம் நட்பு ரீதியாகவே அணுகுகின்றோம்.

ரி.பி.சியைச் சுற்றியுள்ள புலியெதிர்ப்புக் கும்பல் மக்கள் நலனை முன்னெடுக்கின்றதா? இதை அரசியல் ரீதியாக யாராவது நிறுவும் பட்சத்தில், நாம் அவர்களுடன் அதைப்பற்றி பேசமுடியும். புலிகளை எதிர்ப்பது மட்டும் தான் புலியெதிர்ப்பு அரசியலாக உள்ளதால், நிச்சயமாக இந்த அரசியல் மற்றொரு புலியையே உருவாக்கும். எமக்கு ஒரு புலியே போதும். எமது மக்கள் படும் துன்பம் போதும் போதுமென்றாகிவிட்டது. மற்றொரு புலி உருவாகுவதை நாம் எப்படி அனுமதிக்க முடியும்.

புலிகளின் பாசிசம் மக்களின் வாழ்வை துன்புறுத்துகின்றது என்பது உண்மை. ஆனால் அதை மட்டும் தன்னளவில் எதிர்ப்பதுடன் ஒரு மனிதன் நிறுத்திக் கொள்வானேயானால், அதை நாம் விமர்சிக்க முற்படவில்லை. அது அவனின் சொந்த வாழ்வின் வெளிப்பாடாகவே உள்ளது. ஆனால் புலியெதிர்ப்பு அணி அப்படி அல்ல. புலியெதிர்ப்பின் அரசியல் என்ன? புலியை எதிர்க்கும் அனைவருடனும் ஒன்று சேருகின்றது. புலியை எதிர்க்கும் சிங்களப் பேரினவாதம், பிராந்திய வல்லரசான இந்தியா முதல் ஏகாதிபத்தியம் வரை இவர்களின் அணியில் இணைந்து கொள்கின்றனர். இது இயல்பில் தமிழ் மக்களின் நலனை நிராகரிக்கின்றது. புலியை எதிர்க்கும் ஏகாதிபத்திய நலன்களுக்கு துணை போவதே, புலியெதிர்ப்பு அரசியலாகி விடுகின்றது. தமிழ் மக்களுக்கு எதிரான எல்லாவிதமான முயற்சியையும் நாம் எதிர்ப்போம். இதை அம்பலப்படுத்தும் அதேநேரம், ஏகாதிபத்தியத்துக்கு துணைபோகும் முன்முயற்சிகள் அனைத்தையும் தகர்ப்பது எமது இன்றைய பணியாக எம்முன்னுள்ளது.

இந்த ஏகாதிபத்திய சார்பு புலியெர்ப்பு அரசியல், புலியின் அரசியலைவிட மிக மோசமான ஒன்றாகவே நிச்சயமாக உள்ளது. புலிகள் இனம் காணப்பட்ட தெரிந்தெடுத்த அழித்தொழிப்பையே செய்கின்றார்கள். (தனிப்பட்ட ரீதியில் எம்போன்றவர்களுக்கும் கூட விதிவிலக்கின்றி அது பொருந்துகின்றது.) ஆனால் புலியெதிர்ப்பு அரசியல் இராணுவமயமாகும் போது, ஒட்டு மொத்த மக்களையும் அதன் வாழ்வாதாரங்களையும் அழித்தொழிக்கும். முன்பு இந்திய ஆகிரமிப்பாளனுடன் களமிறங்கிய முன்னாள் புலியெதிர்ப்பு கும்பல்கள் இதைத்தான் செய்தது என்பதை, எமது வரலாறு இரத்த சாட்சியமாக்கியுள்ளது. இதைவிட இன்று புலியெதிர்ப்பு பேசுபவர்கள் எதைத்தான் செய்வார்கள்.

எமது மக்களின் பிரதான எதிரி புலிகள் அல்ல. மாறாக பேரினவாத அரசும், இந்தியாவும், ஏகாதிபத்தியங்களும் தான். இதனுடன் எந்த கூட்டு அரசியல் முயற்சியையும் நாம் அனுமதிக்க முடியாது. அதை நோக்கி அணிதிரளும் அனைத்தையும் அம்பலப்படுத்தி, அரசியல் ரீதியாக மக்களை வழிகாட்டுவது எமது வரலாற்றுக் கடமையாகும்.

இன்று புலியெதிர்ப்பு அணியில் உள்ளவர்கள், நாம் மக்களை அணிதிரட்ட முடியாத நிலை உள்ளது என்கின்றனர். மக்களை அணிதிரட்டும் சூழலை உருவாக்க முதலில் புலிகளை அழிக்கவேண்டும் என்கின்றனர். இதற்கு ஏகாதிபத்தியத்தின் துணையைத் தான் நாட வேண்டியுள்ளதாக, தனிப்பட்ட உரையாடல்களில் கூறுகின்றனர். இதை பகிரங்கமாக முன்வைக்க அவர்கள் முன்வருவதில்லை. மக்கள் முன் இதைப்பற்றி பகிரங்கமாக விவாதிக்கவும் தயாராக இல்லை. புலியைப் போல் மக்களை ஏமாற்றவே விரும்புகின்றனர். புலிப் பாசிசத்தை ஒழிப்பதில் தமிழ் மக்கள் பங்கு பற்ற மாட்டார்கள் என்ற நிலைப்பாடும், மக்களைக் கொண்டு இது சாத்தியமில்லை என்ற நிலைப்பாடும் புலியெதிர்ப்பு அணியின் மைய அரசியல் நிலைப்பாடாகவேவுள்ளது. அப்படியாயின் யாருக்காக எதற்காக நீங்கள் போராடுகின்றீர்கள்.

ஆனால் இதற்கு வெளியில் மக்கள் தமது வாழ்க்கைக்காக போராடவேண்டியுள்ளது. இதனால் உங்களுக்கு எதிராகவும் மக்கள் போராடுவதைத் தவிர வேறு வழியில்லாததாகி விடுகின்றது. நீங்களும் மக்களுடன் இணைந்து நிற்க மறுத்து ஏகாதிபத்திய துணையை நாடுவதால், இயல்பாகவே நீங்களாகவே மக்களின் எதிரியாகி விடுகின்றீர்கள். மக்கள் அன்றாடம் தமது வாழ்வுக்காக போராடுகின்றனர் என்ற உண்மையை இவர்கள் மூடிமறைக்கவே விரும்புகின்றனர்.

உண்மையில் புலியெதிர்ப்பு என்ற பெயரில் நீங்கள் செய்வது, மக்களுக்கு வெளியில் அன்னிய சக்திகள் மூலம் புலிப் பாசிசத்தை ஒழிப்பது என்றதன் பெயரில், மற்றொரு பாசிசத்தையே உங்கள் தலைமையில் ஏற்படுத்த முனைவதுதான். இதற்கு உலகத்தில் மக்கள் தலையீடற்ற அனைத்து வரலாறும், மிகத் தெளிவாகவே விதிவிலக்கின்றி பதிலளிக்கின்றது. மக்கள் தீர்மானிக்காத அனைத்து மாற்றங்களும், அந்த மக்களுக்கு எதிரானது தான். மக்கள் தான் தமக்கு எது தேவை என்பதை தீர்மானிக்க வேண்டும். இல்லாத அனைத்தும் மக்கள் விரோதத் தன்மை கொண்டவையே.

அண்மையில் பிரிட்டின் மற்றும் சுவிஸ்சில் (ஜெனிவாவில்) நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில், வைக்கப்பட்ட கோசங்கள் அனைத்தும் புலி பற்றிய ஏகாதிபத்திய அரசியல் நிலைப்பாட்டுடன் முரண்படாத வகையில் தெரிவு செய்து வைக்கப்பட்டுள்ளது.

அரசும் மக்களை ஏமாற்றுவதை கண்டிக்கின்றோம்.பேச்சுவார்த்தை உண்மையான சமாதானத்திற்காக நடைபெற வேண்டும்.

புரிந்துணர்வு உடன்படிக்கையின் பின்னரும் முன்பும் புலிகளினால் சிறைப்பிடிக்கப்பட்டு புலிகளின் சித்திரவதை முகாம்களில் தடுத்து வைத்திருப்பவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

புலிகள் அமைப்பு கொலை, ஆட்கடத்தல், சிறுவர்களை பலாத்காரமாக படையணியில் இணைத்தல் போன்றவற்றை உடன் நிறுத்த வேண்டும்.

இலங்கை அரசே, வடக்கு கிழக்கு மாகாணங்களில் புலிகளிடம் உள்ள அனைத்து ஆயுதங்களும் களையப்பட்டு அனைத்து ஜனநாயக அரசியல் கட்சிகளையும் சுதந்திரமாக இயங்குவதற்கு வகைசெய்ய வேண்டும்
.



மக்களின் பெயரில் யுத்தம் வேண்டாம்.

வேண்டும் வேண்டும் நிரந்தரத்தீர்வு

இனவாதப் பருப்பு இனி அவியாது

அரசியல் வாதிகளே இனவாதத்தீயில் குளிர்காயாதீர்கள்

சாவது மட்டுமல்ல வாழ்வதும் ஒருமுறை தமிழனும் வாழப்பிறந்தவன்

வேண்டாம் வேண்டாம் யுத்தம் வேண்டாம்

தேவை தேவை அரசியல் தீர்வு

சேர்க்காதே, சேர்க்காதே சிறுவர்களை படையில் சேர்க்காதே


இவை தான் இவர்கள் வைத்த கோசங்கள்.

குறித்த இக் கோசங்களையே மக்கள் நலன் சார்ந்தாக காட்டப்படுகின்றது. அப்படி உள்ளதாகவே பொதுவாக பார்ப்பவர்கள் புரிந்து கொள்வார்கள். ஆனால் ஏகாதிபத்தியம் சார்ந்ததாகவும், இது அவர்களின் கோரிக்கையாக, புலியை நோக்கிய நிபந்தனையாகவும் உள்ளது.

இந்தக் கோசங்கள் அனைத்தையும் இன்று ஏகாதிபத்தியம் புலியிடம் நிபந்தனையாக வைக்கின்றது.இதையே புலியெதிர்ப்பு அணியினர் மீண்டும் தமிழ்மக்களிடம் கோசமாக்கி வைக்கின்றனர்.

இக் கோசங்களை வைத்தவர்கள் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான, தமிழ் மக்கள் நலன் சார்ந்த கோசங்களை முன்வைப்பதில்லை.

இவர்கள் மக்கள் நலன் சார்ந்த கோசங்கள் எதையும் முன்வைக்கவில்லை
.

இப்படி ஒரு அரசியல் மோசடியைச் செய்கின்றனர். தமிழ் மக்களின் பெயரில் ஏகாதிபத்தியத்திடம் தலியீட்டைக் கோருகின்றனர். இதைபோல் தான் புலிகள் பேச்சுவார்த்தை சமாதானம் என்று நடத்தும் அனைத்து அரசியல் திருகுதளங்களின் போது மக்கள் நலன் எதையும் முன்வைப்பதில்லை. புலியெதிர்ப்பு அணியும் மக்கள் நலனை தனது கோசமாக்கி அந்த அரசியலாக முன்னிறுத்தவில்லை. மாறாக ஏகாதிபத்திய நலனை அடிப்படையாக கொண்ட மக்களின், ஜனநாயகம் பற்றி பேசுகின்றனர்.

இதை நாம் நுட்பமாக புரிந்து கொள்வதற்கு, புலிகள் ஏன் ஜனநாயக மீறலைச் செய்கின்றனர் என்பதை தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது. புலிகள் ஏன் கொலைகளையும், சித்திரவதைக் கூடங்களையும் அடிப்படையாக கொண்டு மக்களை அடக்கியாளுகின்றனர். இந்தக் கேள்விக்கு விடையளிக்காத, விடையைத் தெரிந்து கொள்ளாத வரை, உண்மையைக் கண்டு கொள்ள முடியாது. இதை அரசியல் ரீதியாக விளக்காத அனைத்தும், மக்கள் விரோதத் தன்மை கொண்டவையே.

மக்களுக்கு எதிரான அடக்குமுறையை ஏவுவதற்கு, அவர்களுக்கென்று விசேட மனநோய் எதுவும் கிடையாது. மாறாக அவர்கள் ஏன் இப்படிச் செய்கின்றனர். அதிகாரம், தனியாக தாம் மட்டும் என்ற கோரும் பாசிச உள்ளகத்தில் புலிகள் இதை கையாளுகின்றனர் என்றால், ஏன். இதன் பின் என்ன நலன் உள்ளது. பொருளாதார நலன்களை தாம் மட்டும், நெருக்கடி இன்றி அனுபவிக்க வேண்டும் என்ற ஒரேயொரு காரணம் தான் அனைத்துக்குமானது.

இதை நாங்கள் நடைமுறையில் பார்க்கலாம். சமாதானம் அமைதி என்ற போர்வையில் முக்கிய தளபதிகளில் உறவினர்கள் பலர் வெளிநாடுகளில் நிரந்தரமாகவே வந்து தங்கிவிட்டனர். இப்படி நோர்வேயில் பல நூற்றுக்கணக்கானோர். இதுபோன்று பல்கலைக்கழகங்களில் பல நூறு பேர். இது ஒருபக்கம் என்றால் மறுபக்கத்தில் ஒரு கோடி ரூபா பெறுமதியான பைரோ ஜீப்பில் தளபதிகள் திரிகின்றனர். ஒரு கோடி ரூபா பெறுமதியான பைரோவில் திரியும் இவர்களின், தனிப்பட்ட வாழ்க்கை எப்படி இருக்கும். இதை எப்படி அவர்களால் இழக்க முடியும். இதனாலேயே வன்முறை கட்டவிழ்க்கப்படுகின்றது. கருணா தனது பிளவில் இந்த ஆடம்பர வாழ்வைச் சொல்லிதானே புலம்பினான். எங்களுக்கு பங்கில்லையா என்றான்.

ஆடம்பரமான வாழ்விலும் விருந்துகளில் ஈடுபட்டாலும் சரி, உழைப்பில் ஈடுபடாது பல ஆயிரம் பேர் உண்டு கொழுக்கின்ற சொந்த வாழ்க்கையை பாதுகாக்கவே அதிகாரம் அவசியமாகிவிடுகின்றது. வெளிநாட்டில் பல புலிகள் உழைப்பில் ஈடுபடாது, உழைப்பில் ஈடுபடுபவனைவிட மிக உயர்ந்த வாழ்க்கையை வாழ்கின்றனர். இந்த சொகுசு வாழ்க்கையை பாதுகாப்பதற்காக அவர்கள் எதையும் செய்யத் தயாராகவே உள்ளனர். இதுதான் வலதுசாரிய புலிப் பாசிசம்.

மனிதர்களை சுரண்டி வாழ்வதற்கு அடக்குமுறை அவசியமாகிவிடுகின்றது. சொகுசாக உழைப்பில் ஈடுபடாது செல்வத்தை இலகுவாக நுகரும் அமைப்பில், அதை கட்டி பாதுகாக்க வன்முறை அவசியமாகிவிடுகின்றது. மக்கள் தமது உழைப்பின் மூலம் உற்பத்தி செய்யும் வற்றாத செல்வத்தை அபகரிப்பதற்கே தேசியம் அவசியமாகின்றது. இதைப் பாதுகாக்க வன்முறை அவசியமாகின்றது. இந்த எல்லைக்குள் தான் தேசியம் திக்குமுக்காடுகின்றது.

போராட்டத்தை நிறுத்தி சமாதான நாடகமாடி செல்வத்தை அன்னியனிடம் பெற்றாலும் சரி, மக்களை உருட்டி மிரட்டி அபகரித்தாலும் சரி, வரிகள் என்று மனித உழைப்பை அறவிட்டாலும் சரி, போராட்டம் தேசியம் என்று வசூலித்தாலும் சரி, பணம் தான் தேசியத்தின் இலட்சியப+ர்வமான கனவாகிவிட்டது.

இந்தப் பணம் பல ஆயிரம் பேர் உழைப்பில் ஈடுபடாது, சுரண்டி வாழும் நிலையை உருவாக்கியுள்ளது. இதைத் தக்கவைக்க படுகொலைகள், கடத்தல்கள், சித்திரவதைகள், நீதிமன்றங்கள் என்ற அடக்குமுறைச் சாதனங்கள் தேசிய நிர்மாணமாகியுள்ளது. இதை பாதுகாக்க ஊடகங்களை முழுமையாக கட்டுப்படுத்தி, ஒரு பாசிச சர்வாதிகார கட்டமைப்புக்குரிய அனைத்தையும் வன்முறை ஊடாக கட்டமைக்கின்றனர். மக்கள் பற்றி எந்தவிதமான கருசனையும் கிடையாது. மக்களை மந்தைகளாகவே, தமது தேவையைப் பூர்த்தி செய்யும் கறவை மாடாக கருதுகின்றனர். ஆனால் கறவை மாட்டுக்கு உணவு கூட போடாது அவிழ்த்துவிட்டு கறக்கின்றனர்.

இந்த உண்மையை அரசியல் ரீதியாக புரிந்து, அதை மறுத்து புலியெதிர்ப்பு அரசியல் பூத்துக் குலுங்கவில்லை. புலியெதிர்ப்பு அரசியல் இதை மறுத்து போராடவில்லை. மக்களின் உழைப்பைச் சுரண்டும் சமூக அமைப்பையே இவர்களும் முன்வைக்கின்றனர். இவர்கள் கேட்பதெல்லாம் புலிகள் அனுபவிக்கும் இந்த வாழ்க்கையில் தமக்கான பங்கைத்தான் கோருகின்றனர். இதையே அவர்கள் ஜனநாயகம் என்கின்றனர். இது முடியாது போனால், தமக்கு கீழ் அவர்களுக்கு அதை மறுப்பதே இவர்களின் ஜனநாயக இலட்சியம். புலிகளுக்கு மாற்றாக புலியெதிர்ப்பு ஜனநாயகம் இதைத் தாண்டி எதையும் கோரவில்லை. மக்கள் நலன்கள் எதையும், மக்களிள் சமூக பொருளாதார வாழ்வில் இருந்து முன்வைக்கவில்லை.

இவர்களின் ஜனநாயகமும், சுதந்திரமும் மக்களை சுரண்டுவதை மறுதலித்துவிடாது. மற்றவனின் உழைப்பை புடுங்கித் தின்பதை இவர்கள் ஜனநாயகம் என்கின்றனர். இதை இவர்கள் ஜனநாயகம் எதிர்க்காது. மக்களின் உழைப்பை புலிகள் புடுங்கித் தின்பதை மட்டும், தமக்கும் பங்கு கோரி எதிர்க்கின்றது. இதற்கு ஜனநாயகம் என்று கவர்ச்சியான கோசத்தை, மக்களின் பெயரில் வைக்கின்றனர்.

ஜனநாயகம் என்று கோசம் போடும் இந்த புலியெதிர்ப்புக் கும்பல், மக்கள் நலனை முன்னிலைப்படுத்துவதையே மறுதலிக்கின்றது. மாறாக ஏகாதிபத்திய கோசங்களையே ஜனநாயகத்துக்கான கோசமாக முன்னிறுத்துகின்றது. இந்த நெளிவு சுழிவை நாம் இனம் காணமுடியாத வகையில், சூக்குமமாக முன்னிறுத்துகின்றனா. புலிப் பாசிசத்தை முன்னிறுத்தி தமது மூகமுடிக்கு பின்னால் இதை மூடிமறைகின்றனர்.

அறிவுள்ள சுயமாக சிந்திக்க கூடிய எந்த ஒரு மனிதனும், ஏகாதிபத்தியமும் இதைத்தானே கோருகின்றது என்ற ஒரு கேள்வியை எழுப்பினால் இதன் உண்மை கந்தலாகி விடுகின்றது.

மக்களின் அதிகாரத்தை இவர்கள் புலிப் பாசித்துக்கு மாற்றாக கோருவதில்லை.

மக்களின் சமூக பொருளாதார விடுதலையைக் கோருவதில்லை. இதற்குத் தடையான புலிகளை எதிர்த்து கோரிக்கைகளை முன்வைப்பதில்லை.

மக்களைச் சுரண்டும் புலிகளின் அரசியல் கட்டமைப்பை எதிர்த்து போராடுவதில்லை.


புலியின் அரசியல் பொருளாதார நலன்களும், ஏகாதிபத்திய அரசியல் பொருளாதார நலன்களும் இணங்கிப் போவதை இவர்கள் இனம் காட்டி எதிர்த்துப் போராடுவதில்லை.

புலிகளின் பல மனித விரோத நடவடிக்கைகள் ஏகாதிபத்திய தரம் வாய்ந்தது. இவை ஏகாதிபத்தியம் செய்வது போல் இருப்பதையும், ஏகாதிபத்தியத்திடம் இருந்தே பெறப்படுவதை இவர்கள் இனம் காட்டி அம்பலப்படுத்தி போராடுவதில்லை.


இப்படி பற்பல.

மக்கள் நலன்களை இப்படி திட்டமிட்டு சேறடித்தபடிதான், மக்களின் முதுகில் ஏறி நிற்கின்றனர். இதை இனம் கண்டு போராட வேண்டியதே, எமது வரலாற்றுக் கடமையாக எம்முன் உள்ளது.

Friday, March 3, 2006

மீண்டும், மீண்டும் வேதாளம் ------

மீண்டும், மீண்டும் வேதாளம் ------

சுதேகு
03.03.2006


புலிகளுக்கும், ரணில் அரசுக்கும் இடையே எட்டப்பட்டிருந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அரசியல் யாப்புக்கு முரணானது என ஜே.வி.பியும், ஜாதிகவும் வழக்குத் தாக்குதல் செய்திருக்கிறது. இந்த அரசியல் யாப்பே இலங்கையின் சிறுபான்மை இனங்களுக்கு விரோதமான இனவாத யாப்பாகத்தான் எப்பவும் இருந்து வருகிறது. இதுபற்றி ஜேவிபிக்கு ஏதாவது சூடு சுரணை இருந்திருக்கிறதா? இதைவிடுவம், இந்த யாப்பு தனது சொந்த உழைக்கும் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை எல்லாம் காலில் போட்டு மிதித்துத் தள்ளுவதை எல்லாம் அந்த மக்களின் சொந்த அதிகாரத்தில் வழக்காடி புரட்சிகர தீர்ப்பாக மாற்ற வக்கில்லாத இந்த ஞான சூனியங்கள்தான் ஏகாதிபத்திய வாசல்படி கூட்டுகின்ற இனவாத யாப்பு எனும் துடைப்பங்; கட்டைக்கு பட்டுக் குஞ்சம் கட்டுகிறது. புலிப் பாசிசத்தை எதிர்க்கிறோம் என்று இவர்கள் ஆடுகின்ற சதுரங்க ஆட்டத்தில் தமிழ் மக்களையும், ஏனைய சிறுபான்மை மக்களையும் பகடைக்காய்களாக உருட்டுகின்ற "மசாலவடே' அரசியல் இனவாதக் கட்சிதான் ஜே.வி.பி.

இப்படிச் சொல்வதால் பலருக்குப் பொத்திக் கொண்டு வரும்தான். வந்தாலென்ன, வந்திட்டுப் போகட்டுமே. இதுவரை காலமும் தீர்வுக்காக எடுக்கப்பட்ட எல்லாவித முயற்சிகளையும் தாக்கி வந்ததோடு தீர்வுகளை எல்லாம் நிராகரித்த ஜேவிபி, அரசில் இன்று அங்கம் வகிக்கும் போது கூட இனச்சிக்கலுக்கு உருப்படியாகச் சிறு துரும்பைக் கூட செய்ய முன்வராத நிலைமை ஆச்சரியத்துக்கோ அதிர்ச்சிக்கோ உரிய விடயம் ஒன்றல்ல. ஒருகாலத்தில் ஐந்து வகுப்புக் கொள்கை நடத்திய ஜேவிபி அதில் ஒரு வகுப்பாக இந்திய விஸ்தரிப்பு வாதத்தினை நடத்தியது. இலங்கையின் சிறுபான்மை இனங்களில் ஒன்றான மலையக மக்களை இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் இறுதி அங்கமாக அது கருதியது. இதன் பிரதிநிதி இ.தி.மு.க என்ற கருத்தை ஜே.வி.பி முன்வைத்தது.

இலங்கையில் நீண்ட காலமாக இயங்கிவந்து, 1962ல் இராணுவச்சதியை அடுத்துக் கொண்டுவரப்பட்ட அவசரகாலச்சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட இலங்கை திராவிட முன்னேற்றக் கழகம் (இ.தி.மு.க) 68ல் சீர்திருத்த இயக்கமென்ற தனது நிலையினை மாற்றி அரசியல் கட்சியாக பிரவேசித்தது. 1969ல் தனது 4வது மாநில மாநாட்டையும், பொதுக் கூட்டமொன்றையும் யாழ் முற்றவெளியில் நடத்தியது. இக் கூட்டத்தில் பேசிய அதன் தலைவர் ஏ.இளஞ்செழியன் "தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளை சாதவீகப் போராட்டம் மூலம் பெற முடியாவிடின், புரட்சி ஒன்றினை ஏற்படுத்துவதன் மூலம் பெறவிரும்பின் தமிழ் மக்கள் கொரில்லா யுத்தமொன்றிற்கு தம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டுமெனக்" கூறினார்.

"தற்கொலைப்படை அமைத்தல், பொலீஸ் நிலையங்களைத் தகர்த்தல், ஆயுதப் பயிற்சி முகாம் அமைத்தல் வேண்டுமெனவும் ஆயினும் அதற்கான தேவை தற்போது இல்லை" எனவும் அவர் பேசியிருந்தார். (ஆதாரம்- எழுதாத வரலாறு ) இவ்வுரை சிங்கள இனவாதிகளுக்கு எரிச்சலை ஊட்டின. இ.தி.மு.கதை தடைசெய்ய வேண்டுமென வலியுறுத்தின.

தமிழ் காங்கிரசும் ஏனைய தமிழ் தலைவர்களும் இவ்வுரையைக் கண்டித்து அறிக்கைள் விட்டனர். சமத்துவம், சமாதானம், சமதர்மக்குடியரசு போன்றவற்றை இ.தி.மு.க வலியுறுத்தியதுடன், பேராதனைப் பல்கலைக் கழகம் போன்ற ஒர் நிறைவான பல்கலைக்கழகத்தை தமிழ் பிரதேசத்தில் கோரியது. ஆயினும் உடனடிக் கோரிக்கையாக வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு, குறிப்பாகத் தமிழ்ப் பட்டதாரிகளுக்கு உடனடி வேலைவாய்ப்பை அது கோரியிருந்தது.

இவ்வாறான ஒரு சூழலில் இ.தி.மு.க இன்னொரு இடதுசாரி பெயர் கொண்ட இளம் சோசலிச முன்னணி (இ.சோ.மு) எனவும் இயங்கத் தொடங்கியது. இளஞ்செழியன் இ.தி.மு. வின் மறைமுகத் தலைவராகவும், இ.சோ.மு தலைவராகவும் இயங்கினார். இ.சோ.மு 70களில் இடதுசாரி கூட்டரசை ஆதரித்தது. இ.தி.மு.க வடகிழக்கில் தேர்தலில் குதித்தது.

கூட்டரசு ஆட்சிப்பீடம் ஏறிய ஒரு சில மாதத்தில் பதுளை சீனாக்கொல தோட்டத்தில் நோய்வாய்படும் தோட்டத் தொழிலாளர்களுக்கு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வாகன வசதியை தோட்டத் தொழிலாளிகள் நிர்வாகத்திடம் கோரிக்கையாக முன்வைத்து 90 நாட்கள் வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுமிருந்தனர் அத் தோட்டத் தொழிலாளிகள்.

1970.10.01 திகதி தோட்டத்துக்குள் புகுந்த இடதுசாரி கூட்டரசின் பொலீஸ் படை துப்பாக்கிகொண்டு இப் போராட்டத்தை நசுக்கியது. இத்துப்பாக்கி வேட்டுக்கு இலக்காகி அழகர்சாமி, இராமையா என்ற இரண்டு தொழிலாளர்கள் 1970.10.04ம் மரணமடைந்தனர்.

இப்படுகொலைக்கான கண்டன நடவடிக்கையில் இ.சோ.மு யுடன், ஜே.வி.பி கூட்டுக்கு வந்தது. இக்கூட்டின் தொடர்ச்சி வேலைத் திட்டமாக 71ல் தொழிலாளர் தினத்தை மலையகத்தில் இணைந்து நடத்துவதாக இணக்கம் ஏற்பட்டிருந்தது. இம் மேதினத்துக்கு முன்னர் 1971.03.13ல் ஜேவிபியின் தலைவர் ரோகண விஜயவீரா கைது செய்யப்பட்டார். இக் கைதைத் தொடர்ந்து 1971.04.05ல் ஜேவிபி திடீர் ஆயுதக் கிளர்ச்சியில் குதித்தது. இவ் ஆயுதக் கிளர்ச்சியில் தமக்கு ஆதரவாக மலையகத்தில் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபடும்படி ஜேவிபி, இ.சோ.மு யிடம் கோரியது. இதற்கு அவர்கள் தம் முடிவுக்கு 10 நாள் அவகாசத்தை ஜேவிபியிடம் கேட்டனர். இந்த அவகாசத்துக்குள் ஜேவிபியின் ஆயுதக் கிளச்சியை படு மோசமாக அரசு அடக்கத் தொடங்கியதுடன், ஜேவிபி, இ.சோ.முயினர் உட்பட ஏனைய இடதுசாரிகள் பலரும் நாடு அடங்கலாகக் கைது செய்யப்பட்டனர். 3 வாரத்தில் அடக்கப்பட்ட இக்கிளச்சியில் 50,000 க்கு மேற்ப்பட்ட இளைஞர்கள் கொல்லப்பட்டனர், 15,000க்கு மேற்பட்ட இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஜேவிபி யாரை இந்நிய விஸ்தரிப்புவாதத்தின் நேரடிப் பிரதிநிகளாக இனங்காட்டியதோ, அவர்களிடமே தமது கிளச்சிக்காக கூட்டையும் கோரியும் இருந்தது. மலையக மக்கள் தொடர்பான தனது மிகமோசமான இனவெறிக் கருத்தை மாற்றாமல் - சுயவிமர்சனம் செய்யாமல் அவர்களிடம் கோரிய இக்கோரிக்கை ஜேவிபி தனது அதிகாரத்தைப் பெறுவதற்கான கபடம் நிறைந்த கோரிக்கையே ஆகும். 84ல் ஜேவிபியின் அதிருப்திப்பிரிவால் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் "எல்லா அயல்நாட்டுத் தமிழர்களும் புரட்சிக்குப்பின் கொல்லப்படுவர்" என 71க்கு முன்னர் விஜேவீரா சொன்னதாக குறிப்பிட்டிருந்தனர். (ஆதாரம் இலக்கு-4) ஒருவேளை இக்கிளர்சிக்கு ஆதரவாக மலையகத்திலும் கிளர்ச்சி நடத்தப்பட்டு ஜேவிபி அதிகாரத்தை கைப்பற்றியிருந்தால் அதன் பின் நிச்சயமாக இவர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள் என்று யாரும் வாதிடவும் முடியாது. ஜேவிபியின் இக்கிளர்ச்சிக்கு உதவக்கூடிய நிலையில் மலையகமக்களை ஆயுதபாணியாக்கக்கூடிய தயார் நிலையில் இ.சோ.மு அன்று இருந்திருக்கவில்லை என்று யாரும் சப்பைக்கட்டும் கட்டமுடியாது.

70 களில் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் குதிக்கக் கூடிய விளைச்சல் நிலமாகவே இலங்கை முழுவதும் காணப்பட்டது. வேலையில்லாப் பிரச்சனை எரியும் பிரச்சனையாக நாடடலங்கலாகக் காணப்பட்டது. 69-70களில் வேலையில்லாப் பிரச்சனையே ஜேவிபியினதும், இ.தி.மு.கழகத்தினதும் முதன்மைக் கோரிக்கையாகக் காணப்பட்டது.

ஏன் வடக்குக் கிழக்கிலும் 70களில் ஆயுத இளைஞர் இயக்கங்கள் தோன்றுவதற்கான மூல ஊற்றும் இப்பிரச்சனையே ஆகும். தழிழ் இளைஞர் இயக்கங்களின் மூலம் "மாணவர் பேரவை" என புஸ்பராஜா தரவளிகள் சாட்சியப்படுத்துபவை எல்லாம் அன்றைய சமூக நிலவரங்கள் கணக்கில் எடுக்கப்படாத தற்பெருமைகளே ஆகும். இவ் ஆயுத இயக்கங்களின் தோற்றத்துக்கு தரப்படுத்தலை முதன்மையான மையப் பிரச்சனையாகக் காட்டுவதே யாழ்த் தேசியத்தின் முகிழ்வுதான். ~மாணவர் பேரவை" யை உருவாக்கிய உரும்பிராய் சத்தியசீலன் இவ்வமைப்பை உருவாக்கும் போது "வேலையில்லாப் பட்டதாரிகள் ஒன்றியத்தை" உருவாக்கி வழிநடத்தி வந்தவரே. சத்தியசீலனின் கைது கூட மாணவர் பேரவையால் மட்டும் ஏற்பட்டதல்ல. மாணவர் பேரவைக்கு முன்னரே "ஈழ விடுதலை இயக்கம்", "தமிழர் விடுதலை இயக்கம்" என்பன வேலையில்லாப் பிரச்சனையின் சமூகப் பின்புலக் காரணிகளிலிருந்தும் இவை தோன்றியிருந்தது என்பதே யதார்த்தமாகும்.

ஜேவிபி அதிகாரத்தைக் கைப்பற்ற இளைஞர்களையும் இவ் நிலைமைகளையும் பாவித்தது, யாழ்த் தலைமைகள் அதிகாரத்தைத் தக்கவைக்க இளைஞர்களயும் இவ் நிலைமைகளையும் பாவித்தது அவ்வளவே!

84 யூலையில் ஜேவிபி தடை செய்யப்பட்ட போது தொடர்ந்து மூன்று பிரசுரங்களை அது வெளியிட்டிருந்தது. 16 பக்கங்கள் கொண்ட "சிறீலங்காவின் முற்போக்கான மக்களுக்கு" என்றும், 71 கிளர்ச்சியின் 13வது நிறைவுக்காக 18 பக்கங்கள் கொண்ட "காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை" (உட்சுற்றுக்கு மட்டும்) என்றும், மேதினப் பிரசுரமாக இன்னொன்றுமாக அவை இருந்தன. இவை அனைத்துமே தமிழ் அமைப்புகள் பற்றியும், தமிழர்களுக்கான தீர்வுகள் பற்றியுமே கருக்கட்டி வெளிவந்திருந்தன.

இன்று புலிகளையும் அதன் பாசிசத்தையுமே மட்டும் பேசுகின்ற ஜேவிபி அன்று வடக்கிலிருந்த எல்லா "இனவாத" இயக்கங்கள் பற்றியும் கருத்துக் கூறி நிராகரித்திருந்தது. அக்காலகட்டம் வட்டமேசை மாநாட்டுக் காலமாக இருந்தது. வட்டமேசை மாநாட்டை நிராகரித்தது மட்டுமின்றி சமஸ்டி முறையிலான மாவட்ட மாகாண சபைகளைக் கூட இது நிராகரித்திருந்தது. சமஸ்டி முறையால் ஈழ இயக்கங்களை அழிக்க முடியாது என்பதே இதன் திருமந்திரமாகும். சமஸ்டி ஆட்சிமுறை இனவாதத்தை தூண்டி வளர்க்கும் முறையென இது ஓதியது. சமஸ்டியே பிரிவினை என்னும் ஜேவிபி இன்று இனவாத யாப்புக்கு குஞ்சங்கட்டி அதில் தன்னை அழகு படுத்துகிறதென்றால் இதுவே மிக மோசமான இனவாதக் கட்சியாகும்.

Monday, February 27, 2006

கசாப்புக்கு கடைக்கு இட்டுச் செல்ல விழையும் ஜெயதேவன்.

நல்ல "மேய்ப்பன்" வேடமிட்டு கசாப்புக்கு கடைக்கு இட்டுச் செல்ல விழையும் ஜெயதேவன்.


சிறி
27.2.2006

வெட்டிச்சாய்க்கப்பட்ட உயிர்கள் எத்தனை.
வீதிகளில் அனாதைப்பிணங்களாய் சுட்டுச் சரிக்கப்பட்டவர்கள் எத்தனை.
நேசித்த தேசத்தின் மக்களின் விடுதலைக்காய் போராடப் புறப்பட்டோர் புத்தி பேதலித்தவர்களால் புதைகுழிகளில் மண்ணோடு மண்ணாய் புதைக்கப்பட்டவர்கள் எத்தனை எத்தனை.

அந்தோ பெண்கள் ஒழுக்கமிழந்ததாய் விபச்சாரிகளாய் ஒழுக்க சீலர்களால் நாமமிடப்பட்டு சுடலைக்காட்டுக்குள் ஆடைகள் இல்லாமல் அடக்கம் பண்ணப்பட்டார்கள். இன ஒடுக்கு முறையாளனிடமிருந்து விடுதலை பெற்றுத் தருவதாய் முளைத்தெழுந்த இயக்கங்கள். துப்பாக்கிகளால் சொந்த மக்களை அடக்கியாளும் புதிய எஐமானர்களாய் மாறினார்கள். சுழிபுரத்தில் ஆறு போராளிகள் ஆண்குறிகள் அறுக்கப்பட்டு புதைக்கப்பட்டார்கள்.

இதற்கும் தங்களுக்கும் சம்பந்தமேயில்லை என்று ஆரம்பித்த மறுப்பறிக்கைகள் உடல்களை மறைப்பதற்காய் மண்ணுள் புதைத்தது போல் உண்மையை புதைக்க முடியாது போயின. தலைமையை பாதுகாக்கும் பாரிய கடப்பாட்டில் தாம் இதை செய்ததாக தர்க்க நியாயங்கள் சொன்னார்கள் இந்தத் தறுதலைகள்.

இயக்கப் போராளிகள் அகிலன் செல்வன், அன்றைய எஸ்.ஆர் இன்றைய மாமனிதன் (கொலைசெய்யப்பட்டால் மட்டும் கிடைக்கும் பட்டம்) சிவராம் "தாரகி" யின் அநுசரணையுடன் காணாமல் போனவர்கள் ஆனார்கள். அகிலன் செல்வன் எங்கே என்ற கேள்விக்கு அவர்கள் பின்தளத்தில் விசாரணைக்காக சென்றிருக்கின்றனர், கடலில் படகு போக்குவரத்து நிலைமைகள் கடற்படைக் கெடுபிடிகள் தணிந்த பின்னால் திரும்பி வருவார்கள் என்றவாறான புனைகதைகளின் மூலம் அடுக்கடுக்கான பொய்கள் அள்ளி வீசப்பட்டன.

சொந்தப் போராளிகளையே கருவறுக்கத் தொடங்கிய போது கணிசமான மக்களும் போராளிகளும் விழிப்படைந்தனர். மக்களுக்கான ஐனநாயகக் கோரிக்கைகளும் உட்கட்சி அராஐகத்திற்கெதிரான கோசங்களும் முளைவிடத் தொடங்கியது. இந்த திரண்டு வந்த மக்களின் போராட்டம் ஐனநாயக கோரிக்கைகளை முன் வைத்து போராளிக் குழுக்களை நெறிப்படுத்தும் நோக்கில் சாத்வீக பாதையில் எதிர்த்து கிளம்பியது. உண்மையான விடுதலை வேண்டி நின்ற ஐனநாயகம் கோரிநின்ற போராளிகள் தலைமைகளால் மிகக் கொடூரமான முறைகளில் சித்திரவதைகளுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு கேள்வி முறைகளின்றி புதைக்கப்பட்டார்கள்.

போராளிகள் இயக்கங்களுக்குள்ளேயும், மக்கள் எவ் இயக்கமும் சாரா போராட்ட வழிமுறைகளினூடும் ஐனநாயக மீட்சிக்கும் இயக்க அராஐகங்களுக்கும் எதிரானதுமான போராட்டங்களுக்கு திரண்டெழுந்தனர். இயக்கங்களின் இராணுவ அராஐக நடவடிக்கைகளையெல்லாம் நியாயப்படுத்தும் தொங்கு தசையாக மட்டும் மக்கள் அணி அரசியல் அணி இருக்க வேண்டும் என எதிர்பார்த்திருந்த தலைமைகளும் அதனது அராஐக அணிகளும் அவர்களின் பொய்களை மிரட்டல்களை சதிகளை அவதூறுகளை திசைதிருப்பல்களை இயக்க தலைமை விசுவாசத்தை எல்லாம் மூடி மறைக்கும் முயற்சியில் தனது கீழணி போராளிகளை அரசியல் அணிப் போராளிகளை தம் இடையறாத பொய்ப்பரப்புரைகள் மூலமும் அரசியல் சாயமிட்டு நியாயப்படுத்துவதன் மூலமும் திசைதிருப்பி விடலாம் என மனப்பால் குடித்தனர்.

மத்திய குழு தீர்மானங்களும் மக்கள் அவை தீர்மானங்களும் நடைமுறைகளும் இராணுவ நடைமுறைகளினால் மிதித்தொதுக்கப்பட்டன. இராணுவ நடைமுறைகள் எதுவும் மக்கள் நலன் சார்ந்த அரசியலோடு பிணைந்திராத, அரசியலால் வழி நடத்தப்படாத இயக்கங்களின் மத்திய குழுத் தீர்மானங்களோடு மக்கள் அவை தீர்மானங்கள் முரண்படத் தொடங்கின.

மக்களால் முன்வைக்கப்படும் கேள்விகளுக்கு மக்கள் அவை பதிலளிக்கும் போது அது திக்கித் திணறும் நிலைக்காளாக்கப்பட்டது. மக்களோடான அரசியல் தொடர்பாடல்களை மக்கள் அவையானது முன்னெடுக்கப்பட முடியாதபடி மக்கள் அவைக்கு மக்களோடிருந்த நெருக்கம் சீர்குலைந்தது. இயக்கத்தின் திசைவழி கொள்கை வழிகளில் முரண்பட்டு நின்ற மத்திய குழு அங்கத்தினர் தனிநபர் வழிபாட்டு அணியினரால் சித்திரவதைக் கூடங்களுக்குள் சிறை வைக்கப்பட்டனர். இவைகளை எதிர்த்த போராளிகள் விசாரணை என உழன்றியில் ஏற்றப்பட்டு மரணங்களை தழுவிக் கொண்டனர்.

குரூரக் கொலைஞர்களின் குகைக்குள்ளும் துஞ்சுவர் என்றறிந்திருந்தும் அஞ்சா நெஞ்சத்துடன் அவர்கள் தளர்விலாது போராடி தம்முயிரை ஈய்ந்து விடுதலையின் வீரிய நோக்கிற்காய் வீழ்ந்து பட்டனர். விடுதலைக்காய் வீழ்ந்த இவர்கள் தன்னுயிரை ஈய்ந்த வெளிச்சத்தில் தான் நீறாய் போனது அந்த அராஐகக் கும்பல். உள்ளும் வெளியுமாய் விரிந்த போராட்டத்தில் உடைந்து சிதறி துரும்பாய் சீரழிந்தனர். மத்திய குழு தவிர்க்க முடியாதபடி இரண்டாய்ப் பிளந்தது. விடுதலை இலக்கிய நாவல் ஒன்றின் மூலம் உண்மையாக பாத்திரப்புனைவுகளோடும் சம்பவங்களோடும் அரசியல் விமர்சனத்தோடான பாங்கில் "புதியதோர் உலகம்" என்ற இலக்கியம் வெளிவந்தது. பிரிந்த உறுப்பினர்களை வேட்டையாடுமாறு நரபலி வேட்டைக்குழு பணிக்கப்பட்டது.

பின்தளத்தில் தங்கிவிட்ட "வசந்தன்" சந்ததியார் குரூரமாக கண்களிரண்டும் தோண்டப்பட்டு சித்திரவதை மூலம் கொலைசெய்யப்பட்டார். குரூரக்கொலைவெறி தீர்ந்த பின் உடல் சாக்கில் இடப்பட்டு கூவம் ஆற்றுக்குள் வீசப்பட்டது. காந்தீயவாதி டேவிட் அவர்கள் கைது செய்யப்பட்டு நையப்புடைக்கப்பட்டார்கள்.

தளத்துக்கு வந்து சக மத்திய குழுவினருடன் தலைமறைவாய் இருந்த மத்திய குழு உறுப்பினர், அதுவரையும் தளப் பொறுப்பாளராகவிருந்த "டொமினிக்" "கேசவன்" "கோவிந்தன்" எழுதி வரலாறாக்கப்பட்டது தான் "புதியதோர் உலகம்" என்ற நாவல்.

தளத்தில் தங்கியிருந்த இவர்களையும் இன்னும் தளத்திலிருந்த அர்ப்பணிப்பான போராளிகள் மீதும் அருவருப்புக் கொண்டனர், தளத்திலிருந்த தலைமை விசுவாச பதவி மோகங் கொண்ட எடுபிடிகள். இந்த எடுபிடிகள் அவர்களை தேடியழிக்கும் நடவடிக்கைக்காக தெருவெங்கும் அலையும் ஆயுததாரிகளாக்கப்பட்டார்கள். தலைமையின் கடைக்கண் பார்வைக்கும் மத்திய குழு அங்கத்துவத்துக்கும் ஆலாய்ப்பறந்த சிலரில் " மாமனிதர்" சிவராமும் அடக்கம். எஸ்.ஆர் என்ற அன்றைய பெயரோடு துப்பாக்கி தரித்து நரவேட்டைக்காய் "மாமனிதர்" புறப்பட்டார். வாய்மூடி மௌனித்திருந்தனர் இன்னும் சில தள மத்திய குழு உறுப்பினர்கள். அராஐகம் தெருவெங்கும் புறப்பட்டது. துப்பாக்கியின் சன்னக் குழாய்கள் சக போராளிகளின் இரத்தம் குடிக்கவென இவர்களின் கைகளுக்குள்ளும் பைகளுக்குள்ளும் பல ரகங்களில் பதுங்கியிருந்தது. மாமனிதர் எஸ். ஆரின் விரல்கள் வேட்டு வைக்கும் விசையை அழுத்தும் இமைப்பொழுதில் சுதாகரித்து தற்காத்து மரணத்திலிருந்து தப்பி மீண்டனர் "தீப்பொறி" குழுவினர் சிலர். இச்சம்பவம் பின்னர் தாக்க வந்தவர்களையே தாம் தாக்க முனைந்ததாகவும் தங்களது தற்பாதுகாப்புக்கான எதிர் நடவடிக்கையால் அவர்கள் பின்வாங்கிக் கொண்டதாகவும் வீரப்பிரதாப நையாண்டிகள் மூலம் ரசித்துரைக்கப்பட்டன.

இயக்கத்தின் பல்கலைக்கழக மாணவர்களிடையேயான சரிந்து சென்ற ஆதரவை மீண்டும் சரிசெய்து கொள்ளவும், இவர்களை மீண்டும் தமது பிரச்சார நடவடிக்கைக்கு மீளவும் பாவித்து மக்கள் மத்தியில் திரண்டிருந்த எதிர்ப்புக்களை சரிக்கட்டவும் கண்துடைப்பான ஒரு தள மாநாடும் அதைத் தொடர்ந்த பின்தள மாநாடும் ஒழுங்கு செய்யப்பட்டு மிக நல்ல நாடகமாக அரங்கேற்றப்பட்டது. திறமையான நடிப்பெல்லாம் சோரம் போனது தான் மிச்சம். இத் தள மாநாட்டின் விளைவாய் அங்கும் இல்லாமல் இங்கும் இல்லாமல் இருந்த சிலர் வெளியேறி நின்ற "றோ"வின் தயாரிப்பான பரந்தன் ராஐனால் அறுவடை செய்து கொள்ளப்பட்டார்கள். பரந்தன் ராஐனுடன் இரகசியமான ஒப்பந்தத்துடன் சிலர் மீண்டும் தளம் திரும்பினர். எனினும் இது கசியத் தொடங்கி அம்பலத்துக்கு வந்தது.

மாணவர் அமைப்பானது "தமிழீழ மாணவர் பேரவை" தன்னகத்தே முரண்பாடுகளைக் கொண்டிருந்தாலும் தனது மத்திய குழுவில் இயக்கத் தலைமைகளின் குருட்டு விசுவாசிகள் ஓரிருவரை கொண்டிருந்த போதும் ஐனநாயக மறுப்புக்கும் அராஐகவாதப் போக்குக்கும் முற்றாக அடிபணிந்து போகாதிருந்தது. இன்னொரு மாற்று அரசியல் போராட்டப்பாதைக்கான பரிதவிப்பில் ஊசலாடியபடி இருந்தது. தனது கீழணி மாணவ அங்கத்தவர்களுக்கான மாற்றுப் பாதையை தரமுடியாதபடி அதன் அரசியல் வளர்ச்சி மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. தமிழீழ மாணவர் பேரவை ஆகக் குறைந்தது ஐனநாயகத்துக்கான குரலாகக் கூட தனது பாதையைத் தொடர பல முனைப் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது.

அதனது முன்னணி உறுப்பினர்கள் அப்போது தான் மாற்று இயக்கப் போராளிகளின் உறவுகளை வளர்க்கத் தொடங்கியிருந்தார்கள். கருத்தியல் ரீதியல் தம்மை வளர்ப்பதற்காகவும் கருத்தியல் விவாதங்களுடு தம்மை அரசியல் ரீதியில் உயர்த்திக் கொள்வதற்காகவும் சக போராளிக்குழுக்களின் முன்னணி உறுப்பினர்களின் நல்லுறவுகளை தேடத் தலைப்பட்டனர்.

இந்நிலைமை அன்றைய மாற்றுப் போராளிக்குழுக்களால் தங்கள் தொங்கு தசைகளாய் மக்கள் மத்தியில் இவர்களை காட்டும் முயற்சிக்கு வழிவகுத்தது. இது அவர்களின் சுயாதீனத்துக்கு சேறடித்தது. சரியான கருத்தியல் ரீதியான அரசியல் போராட்ட ரீதியிலான உள்வாங்குதலுக்கு பதிலாய் வெறுமனே எண்ணிக்கை அடிப்படையில் கபளீகரம் செய்ய நினைத்தார்கள்.

அதுவரை இயக்க நடவடிக்கைகளின் பிரச்சார எடுபிடிகளாய் மட்டுமே பழக்கப்பட்டிருந்த இவர்கள் விரும்பியோ விரும்பாமலோ தவிர்க்க முடியாதபடி ஒரு சரியான அரசியற் கருத்துப்பலமின்றி தளமின்றி தனித்து விடப்பட்டார்கள்.

உதிரிகளாய் உடையத் தொடங்கிய நிகழ்வானது பலரையும் பல திசைகளில் சிதற வைத்தது. இவர்களில் சிலர் புலிகளினால் கைது செய்து சிறை வைக்கப்பட்டார்கள். சிலர் கடத்தப்பட்டு காணாமல் போனார்கள். தீப்பொறி தர்மா காணாமல் போனார் என்பது இன்றைய "ஒட்டுப்படைகள்" இல்லாத மாற்று இயக்கங்கள் தடைசெய்யப்பட்டு துப்பரவாக்கப்பட்ட, இராணுவம் முகாம்களுக்குள் முடங்கிக்கிடந்த, குடாநாடு புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த காலத்தில் நடந்ததொன்றாகும். சொந்த இயக்க அராஐகத்தை எதிர்த்து போராடிய இவர்கள் சளைக்காது மீண்டும் மக்களுக்கான ஐனநாயகத்துக்கான போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்ட போது புலிகளினால் ஆபத்தானவர்களாய் கருதப்பட்டு அச்சுறுத்தப்பட்டார்கள்.

புதியதோர் உலகம் என்ற நாவலை பல பிரதிகளாக்கி அதை விநியோகித்து மாற்று இயக்க அராஐகத்தை வெளிக்கொணருவதாக நடித்த புலிகள் இதன் மூலம் தங்கள் அராஐகத்தை கீழ்நிலைப்படுத்தி தங்களின் மீதான, தங்களின் பாசிச நடவடிக்கைகள் மீதான எதிர்ப்பு முன்னிலைப்பட்டு வந்த சூழலை இதன் மூலம் பின்தள்ளினார்கள். மக்களின் விழிப்புணர்வையும் திசை திருப்பினார்கள். இங்கே இவர்கள் சொந்தப் பாசிச நடவடிக்கைகளிலிருந்து தங்களை மறைத்துக் கொள்ள மிகவும் திட்டமிட்டுக் கருமம் ஆற்றினார்கள். இதை மறுத்துரைக்க முடியாதபடி இவர்களே பின்னாளில் நாவலாசிரியரின் கைதுக்கும் காணாமற் போனதற்கும் பொறுப்பானவர்கள் ஆனார்கள்.

ரெலோ இயக்கத்தின் உட்பூசல் தாஸ்க்கும் பொபிக்கும் இடையில் வெடித்து யாழ் மருத்துவமனை இரத்தக்களரியாகியது. படுகொலைகளை ஆயுத வெறியாட்டங்களை மக்கள் தம் கண்ணால் தரிசித்து உறைந்து போயினர். பகிரங்கமாகவும் கடத்திவைத்தும் பொதுமக்களை ஆயுதமுனையில் மிரட்டும் கலாச்சாரத்தை பாகுபாடின்றி எல்லா இயக்கங்களும் செய்தன. ஆலாலசுந்தரம் தர்மலிங்கம் போன்றோர் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்கள். அத்துமீறல்கள், உரிமைகோராத படுகொலைகள், கடத்தல்கள் நாளாந்த நிகழ்வாகியது.

கந்தசாமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். ஈ.பி.ஆர்.எல்.எவ் இலிருந்து பிளவுபட்டுச் சென்ற டக்ளஸ் தேவானந்தா தீர்த்த துப்பாக்கி வேட்டு சூளைமேட்டில் இந்தியக் குடிமகன் ஒருவனைப் பலிகொண்டது. ஈ.பி.ஆர்.எல்.எவ் இற்குள் வெடித்த உட்கட்சிப் போராட்டங்கள் கோரிக்கைகள் கைகூடா நிலையில் உதிரிகளாய் வெளியேறிய பலர் வெளியில் மக்களோடு போராட்டங்களில் தம்மை அடையாளப்படுத்த முனைந்தனர்.

ரெலோ இயக்கத்தலைமையை விமர்சித்து அதன் இயக்கப்போராளிகள் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை பிரகடனப்படுத்தி இந்தியாவில் களத்தில் இறங்கினர். நூறுக்கும் மேற்பட்ட பெண் போராளி உறுப்பினர்கள் இங்கு பங்கெடுத்துக் கொண்டனர்.

இயக்கங்களின் மாறான போக்குகளுக்கு வளைந்து கொடுக்க மறுத்த மக்கள் சுயாதீனமான போராட்டங்களில் அணிதிரண்டனர். வாகன வழிமறிப்பு, வீதித்தடைப் போராட்டங்கள், கண்டன ஊர்வலங்கள் என பலவாறான வழிகளில் மக்கள் தமது எதிர்ப்புகளை வெளிப்படுத்த ஆரம்பித்தனர்.

இவையெல்லாவற்றையும் விழுங்கி ஏப்பமிட்டது புலிகள் இயக்கம். புலிகள் இயக்கத்தின் மற்றைய இயக்கப் போராளிகள் மீதான அழித்தொழிப்பு, அரசியல் கொலைகள் ரெலோ இயக்கத்தின் மீதான அழிப்பின் போது கோர வடிவம் கொண்டது. ரெலோ இயக்கப் போராளிகளை தெருதெருவாய் குற்றுயிரும் குறையுயிருமாய் ரயர் தீயில் உயிரோடு கருக்கி சாகடிக்கப்பட்ட அதுவரை காணாப் பயங்கரம் மக்கள் கண்முன் விளைந்தது. மக்களின் இரத்தம் உறைந்தது.

ரெலோ இயக்கம் சாய்க்கப்பட்டபின் ஈ.பி.ஆர்.எல்.எவ; இயக்கம் குறிவைக்கப்பட்டு வேட்டையாடப்பட்டது. சிறைப்பிடிக்கப்பட்டிருந்த அதனது போராளிகள் சிறையிலேயே குண்டு வீசி கூட்டாக கொலை செய்யப்பட்டார்கள்.

புளட் இயக்கத்தின் இராணுவ பொறுப்பாளர் மெண்டிஸ் கிட்டுவினால் சிநேக பூர்வ முறையுடன் "விசாரணைக்கென" அழைத்துச் செல்லப்பட்டு மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டார். இதற்கு முன்பாகவே புளட் இயக்கம் தன்னை தானே கலைத்துக் கொள்வதாக பகிரங்கப்படுத்தியிருந்தது.

என்.எல்.எவ்.ரி போன்ற இயக்கப் போராளிகள் கைது செய்யப்பட்டு காணாமல் போனார்கள். பலர் தேடப்படும் நிலைக்காளானார்கள். இப்படியான கைதுகளின் போது பொய்க்குற்றச்சாட்டுக்கள் சோடிக்கப்பட்டன. அக்குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் வைக்கப்படுவதோ விசாரணைகளோ நடாத்தப்படுவதில்லை.








இவையெல்லாம் பின்னணிகளாகவிருக்க பல்கலைக்கழக மாணவன் விஐpதரன் கடத்தப்பட்டு காணாமல் போன போது சக மாணவனை விடுதலை செய்ய வேண்டியும் அது மட்டுமல்லாது

மக்களுக்கு எழுத்து, பேச்சு, கருத்து, பத்திரிகைச் சுதந்திரம் வேண்டும்", "மக்களுக்கு விரும்பிய அரசியல் ஸ்தாபனங்களில் இருக்கவோ அரசியல் நடத்தவோ சுதந்திரம் வேண்டும்"

என்ற கோசத்தோடு பல்கலைக்கழகத்திலிருந்து மக்களின் நியாயமான இந்தக் கோரிக்கைக்கு சாகும் வரை உண்ணாவிரதப் போராட்ட வடிவத்தில் தம்மையே சமர்ப்பணம் தர வந்தார்கள் போராளிகள். எல்லா இயக்கங்களினதும் ஐனநாயக விரோதப் போக்கு கொலை அராஐகங்களுக்கு முகம் கொடுத்து சகித்துக் கொண்டிருந்த மக்கள் மேலும் சகிக்க முடியாத போக்கின் வளர்ச்சி கண்டு இக் கோரிக்கையின் போர்க்கொடி தூக்கினார்கள். அவ்வவ் வியக்கங்களிலிருந்து வெறுப்படைந்து வெளியேறிய போராளிகள் மக்களுக்கான ஐனநாயகப் போராட்டத்தில் கைகோர்த்தார்கள். ஒரு வித மக்கள் எழுச்சி நாலாபக்கமும் பற்றிப்பரவி தீயாய் எழுந்தது. இந்தக் கோரிக்கைகளின் வேகம் கொடுத்த தாக்கம் உண்ணாவிரதப் போராளிகளை புலிகளின் மரணதண்டனை பட்டியலிலிட்டது.

தன்னுடைய உள்ளியக்க அராஐகத்துக்கு தாழ்பணியாது வெளியேறிய விமலேஸ்வரன் உண்ணாவிரதப் போராளியானான். அதற்காக அவன் அனாதைப்பிணமாய் தெருவில் வீழ்த்தப்பட்டான். அவனது உடலம் கூட "அவர்களால்" அப்புறப்படுத்தப்பட்டது. ஊர்வலம் கிளர்ச்சி கண்டன அறிக்கைகள் அஞ்சலிக் கூட்டம் யாவும் இதன் மூலம் தவிர்க்கப்பட்டது. பத்திரிகைள் எவையும் பத்திச்செய்தியாகக் கூட பிரசுரிக்காத வகையில் எச்சரிக்கப்படடிருந்தன. மக்களுக்கான கோரிக்கையோடு மரணத்தையும் எதிர்கொள்ளும் அர்ப்பணிப்போடு எழுந்த ஐனநாயகத்துக்கான போராட்டக் குரல்கள் கொலைகள் மூலமாக கொடூரமாக நசுக்கப்பட்டது.






















இந்தப் போராட்டத்தின் ஒலி ஒளி ஆவணங்களை நீங்கள் www.tamilcircle.net இல் பார்க்க முடியும்.

இந்தியா பணம் கொடுத்து கட்டளையிட்ட உயிர்ப்பலிக்களமான புலிகள் செய்த பயங்கரம் அநுராதபுரத்தில் அப்பாவி சிங்கள மக்களின் உயிர் குடித்தது.

முஸ்லீம் மக்கள் பள்ளிவாசல்களில் தொழுகையின் போது பலியெடுக்கப்பட்டார்கள்.

யாழ்ப்பாண முஸ்லீம் மக்கள் இரவோடிரவாக வேரோடு பிடுங்கி வீசப்பட்டனர்.

அகதிவாழ்வு தேடி வந்த நாட்டிலும் புலிகளின் கொலைக்கரங்களால் பாரிஸில் சபாலிங்கம் குதறப்பட்டார். நாதன் கஜன் பட்டங்கள் வழங்கி குதறப்பட்டனர்.

கொலைக்கரங்கள் குரல்வளைகளை இறுக்கிய போதும் இந்திய ஆக்கிரப்பு இராணுவத்தின் கொடுமைகளை ஆவணப்படுத்தி "முறிந்தபனை" என்ற ஆவணத்தை தயாரித்து

"... மக்களைப் பொறுத்தவரையில் கொடூரமான - தீர்க்கமான இந்த வன்முறைக்கான தீர்வு சமூகத்திற்குள்ளிலிருந்து தான் வரவேண்டுமே தவிர, வெளியிலிருந்து திணிப்பதால் உருவாக மாட்டாது. இத்தகைய உள்ளக அமைப்புகளை விருத்தியுறச் செய்வதென்பது நீண்ட கடினமான பணியாகும்"

என்ற உடற்கூற்றியல் விரிவுரையாளர் ரஐனி திரணகம தனது பல்கலைக்கழக வாசலிலேயே பரிதாபமாய் கொலை செய்யப்பட்டார்.











பல்கலைக்கழக மாணவி செல்வநிதி தியாகராசா விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு திரும்பாதவர் ஆக்கப்பட்டார். இவருடைய விடுதலைக்காய் பென் என்ற அமைப்பும் வெளிநாட்டு ஸ்தாபனங்களும் குரல் கொடுத்தார்கள். விளைவேதுமில்லை.(http://www.pen.org/freedom/bga.htm). இவர் மரணதண்டனைக்காளாக்கப்பட்டார் என புலிகளினால் உறுதிசெய்யப்பட்டது.


மேற்சொல்லப்பட்டது மேலும் இன்னும் சொல்லப்படாததும் ஐனநாயக மறுப்புக்களும், மக்கள் விரோத பாசிச நடவடிக்கைகளும் ஒரு வழி செல்ல, அதற்கெதிராக முன்னெடுக்கப்பட்ட தியாகத்துடன் கூடிய மக்கள் போராட்டங்கள் நடந்தேறிய வரலாறுமாகும். இவை நிகழ்ந்தது இன்று நேற்றல்ல. இத்தனைப் போராட்டங்களும் ஐனநாயகத்துக்கான போராட்டங்கள் தான். மக்களும் போராளிகளுமாய் தங்கள் உயிர்களை அர்ப்பணித்து நடாத்திய இந்தப் போராட்டங்கள் பற்றி அறியாதிருந்தேன் என்று ஜெயதேவன் குறிப்பிடுவாராயின் பூனை கண்ணை மூடிக்கொண்டு பாலைக்குடித்த கதையாகத் தான் இருக்கும்.

எனவே இன்றைய ஐனநாயகச் சீமான் ஜெயதேவன் அன்றைய இந்நிகழ்வுகள் நடந்தேறிய போது ஐனநாயகம் என்றால் என்ன என்று புரியாத அரிவரி அறிவுடன் இருந்ததாக நாங்கள் எல்லாம் நம்ப வேண்டும் என்றெண்ணி நாடகம் போடுகின்றார். அப்போதெல்லாம் இவர் புலிகளின் நம்மவராக நாலும் கற்றவராக பவனி வந்துகொண்டிருந்தார். "ஐனநாயகம்" என்று திடீரென இப்போது புலிகளுக்கெதிராக வாய் கிழிய கத்தும் சீமானே, நீங்கள் இத்தனை ஐனநாயக மீறல்கள் நடந்தேறிய போதெல்லாம் இத்தனை போராட்டங்கள் நடந்த போதெல்லாம் அவைகளை நசுக்கிய நிகழ்ச்சிகளை நியாயப்படுத்திய அணியின் வெளிநாட்டு தூண்களில் ஒன்றாய் நீங்கள் இருக்கவில்லையா? அப்போதெல்லாம் நீங்கள் என்ன மக்குப் பிண்டமா?

இன்றும் கூட என்ன ஈராக் மக்களின் இரத்தம் குடிக்கும் பிரிட்டிஸ் தொழிற்கட்சியின் பெரிய பிரமுகராமே நீங்கள். ரொனி பிளேயரின் தோழனாமே நீங்கள். இலட்சக்கணக்கில் பிரிட்டிஸ் மக்கள் ஈராக் போருக்கெதிராய் தெருக்களில் இறங்கி போர் எதிர்ப்பு ஊர்வலம் சென்ற போது நீங்கள் ஈராக் மக்களின், அந்நாட்டின் இறையாண்மையை மீறி அவர்களை கொன்று குவித்த இரத்தத்தில் கைகழுவும் போர்வெறியர்களோடு கைகுலுக்கிக் கொண்டிருந்தீர்கள். எங்கே வாழ்கிறது உங்கள் ஐனநாயகம் இங்கே.

போராட்டங்களில் இறந்துபட்டவன், களையெடுப்பதாய் உயிர்ப்பலி கொள்ளப்பட்டவன் எல்லாம் எட்டப்பன், துரோகி, என்று நீங்கள் அவர்களின் நம்மவராக விருந்தபோது திரும்ப திரும்ப சொல்லி மகிழ்ந்திருப்பீர்கள். ஆனால் உங்கள் தோல்களில் நீங்களே வளர்த்தெடுத்த புலியின் நகக் கீறல்கள் பட்ட மாத்திரத்துடன் தான் ஐனநாயகம் மீறப்பட்டு விட்டதாக ஐயோ முறையோ என்று காட்டுக் கூச்சல் போடுகிறீர்கள். புலிகளின் தலைவரைப் போற்றிப் பேணும் உங்களது தமையனார் சிபாரிசு செய்ய முனைவது யாதெனில் புலிகளில் "உயர்சாதி" களுக்குடைத்தான அறிவும் ஆற்றல் திறனும் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றது என்பதாகும். நீங்கள் புலிகளிலுள்ள லும்பன்களே(உங்கள் பாசையில் சொல்வதானால் கஞ்சிக்கு வழியின்றி லும்பன் தனத்தில் கச்சை வரிந்து கட்டிய கட்டுக்கோப்பில்லாத எளிய சாதிப்பன்றி) புலிகளின் பிரச்சனை என்கின்றீர்கள். ஜெயதேவனும் அவருடைய அண்ணனும் இங்கே என்னே ஒற்றுமை.

“Prabhaharan, whom I yet consider a rare individual born to accomplish a historic mission, should immediately set about revamping the political and public affairs divisions in his organization and make them more responsive to the real needs and desires of the Tamil people. Every individual manning these positions should be screened for probity, as there is no legal frame work to govern their conduct at present

“Secondly, by quite blatantly discriminating against the so-called 'Higher Castes ' of old, the LTTE has alienated many Tamils with considerable talent and abilities. At the helm of the new social order being engineered by the LTTE are their cadres and their families. This is a matter of serious concern and has to be challenged by the Tamil people. An old evil can not be permitted to be replaced by a new one.”


உயிர்த்தியாகம் தந்து போராடி மாண்டவர்களின் சமாதிக்கு மேலாக அரண்மனை கட்டும் கனவுகளோடு ஏகாதிபத்திய தயவுடன் நாக்கைத் தொங்கவிட்டபடி நாயாய் அலைகின்ற உங்களுக்கு "ஐனநாயகம்" ஒரு முகமூடி.

அராஐகத்துக்கு எதிராக போராடி சமாதியானார்கள் எத்தனையோ போராளிகள். அப்போதெல்லாம சங்கூதி மணியடித்து உங்கள் சங்கரனாருக்கு பூசை செய்த நீஙகள் இப்போது ரி.பி.சி யில் ஐனநாயக மகுடி வாசிக்கின்றீர்கள்!. எதற்காக!