தமிழ் அரங்கம்

Saturday, December 1, 2007

தேசம் தேசியம் என்பது புலிகளின் கண்டுபிடிப்பா?

பி.இரயாகரன்
02.12.2007



ப்படிச் சொல்வதற்கு ஏற்ற அரசியலுடன் தான், புலியெதிர்ப்பு அரசியல் உள்ளது. புலியை ஒழிக்க யாருடனும் கூட்டுச் சேரத் தயாராக உள்ள புலியெதிர்ப்பு கூட்டம், எப்படிப்பட்ட கோட்பாட்டையும் தனக்கு ஏற்ப வைக்கத் தயாராகவே உள்ளது.


அந்த வகையில் 'தமிழ் தேசியத்தை விமர்சித்தால் புலி எதிர்ப்பு, சிங்கள தேசியத்தை விமர்சித்தால் அரச எதிர்ப்பு என கருப்பு வெள்ளையாக பார்க்கும் சிந்தனை முறையிலிருந்து எம்மை நாம் விடுவிப்பது எப்போது" என்கின்றது. இப்படி கேட்பது ராகவனுக்கு வேடிக்கையாகி விடுகின்றது.


'..சிந்தனை முறையிலிருந்து எம்மை நாம் விடுவிப்பது எப்போது" என்று கேட்கும் இதில் இருந்து விடுபடும் நீங்கள், எதை அதற்கு பதிலாக எம்முன் வைக்கின்றீர்கள். முதலில் அதைச் சொல்லுங்கள். அப்போது தானே நாமும் விடுபட முடியும். நீங்களே விடுபடுவில்லை என்பதல்லவா உண்மை. நீஙகள் எல்லாவற்றையும் புலிக்கூடாக, புலியொழிப்புக்கு ஊடாக பார்க்கவில்லையா? இது தானே கறுப்பு வெள்ளைக் கோட்பாடு. சொல்லுங்கள்.


ராகவன் எழுப்பும் இந்த தர்க்க வாதமே, அரசியல் உள்ளடகத்தில் தவறானது. விமர்சித்தல் என்பது, மக்கள் அரசியலை கைவிட்டு துறந்தோடுவதல்ல. மக்கள் அரசியலை முன்னிறுத்துவது. 'சிங்கள தேசியத்தை விமர்சித்தால் அரச எதிர்ப்பு" என்று நீங்கள் கேட்பது ஏன்? உங்களை நீங்கள் பாதுகாக்கத் தான். இதில் அரசு எதிர்ப்பு இல்லாமல், அரசு ஆதரவா!


சிங்கள பெருந்தேசியத்தை பிரதிபலிப்பது தான், பேரினவாத அரசு. சிங்கள அரசு என்பது இதற்கு வெளியில் கிடையாது. பேரினவாதமல்லாத அரசு என்பது மாயை. அதுபோல் சிங்கள பேரினவாத தேசியத்தை விமர்சித்தால், அது அரசை எதிர்ப்பது தான். இது இல்லாத விமர்சனம் என்பது மாயை. எதிர்ப்புமில்லை ஆதரவுமில்லை என்ற நிலைக்கு, அரசியல் எதுவும் கிடையாது.


மறுபக்கத்தில் 'தமிழ் தேசியத்தை விமர்சித்தால் புலி எதிர்ப்பு" என்பது சாராம்சத்தில் தவறானது. தமிழ் தேசியத்தை விமர்சித்தால், அது புலியெதிர்ப்பு அல்ல. ஏனென்றால் தமிழ் தேசியத்தை புலி முன்னெடுக்கவில்லை. ஆகவே தமிழ் தேசியம் வேறு. புலித் தேசியம் வேறு.


தமிழ் தேசியம் ஊடாக புலியை விமர்சிப்பது என்பது, தேசியத்தை புலிக்கு ஊடாக பார்க்கின்ற குறுகிய பார்வையாகும். இது கறுப்பு வெள்ளை புலியெதிர்ப்பு வரட்டு வாதமாகின்றது. புலியெதிர்ப்பு என்று குறிப்பிடுவது இதைத் தான்.


தமிழ் தேசியத்தை விமர்சிப்பது ஏன் எதற்கு என்ற அடிப்படையில், அதற்கொன்று ஒரு அரசியல் உண்டு. அது பாட்டாளி வர்க்கப் புரட்சியை அடிப்படையாக கொண்டு இருக்கும் அல்லது ஏகாதிபத்தியமயமாக்கலை அடிப்படையாக கொண்டு இருக்கும். நீங்கள் ஏகாதிபத்திய மயமாக்கலை அடிப்படையாக கொண்டும், புலியெதிர்ப்பை அடிப்படையாக கொண்டு, தமிழ் தேசியத்தை விமர்சிக்கவில்லை கொச்சைப்படுத்துகின்றீர்கள்.


விமர்சனம் என்பது, எதையும் எப்படியும் விமர்சிக்கலாம் என்பதல்ல. அப்படியானால் விமர்சனம் என்பது என்ன? சமூகத்தின் நலனை முன்னிறுத்தி, அதைக் கொண்டு விமர்சிக்க மறுக்கின்ற எந்த விமர்சனமும், வெள்ளயும் கறுப்புமாகத் தான் இருக்கும்;. அது மக்களுக்க எதிரானதாக இருக்கும். அதாவது இது உங்களுக்கு பொருந்துகின்றது. நீங்கள் அனைத்தையும் புலியினூடாக பார்க்கும் போது, இது நிகழ்கின்றது.


சமூகத்துக்கு வெளியிலான தன்னளவிலான விமர்சனம் என்பது, குறுகிய நோக்கம் கொண்டது. அது வெள்ளையாக அல்லது கறுப்பாகத் தான் இருக்கும். மக்கள் நலனுக்கு எதிராக உள்ளதைக் காட்டி, உங்களால் எதையும் விமர்சிக்க முடிவதில்லை. தம்மளவில் கறுப்பும் வெள்ளையுமாக இருந்து கொண்டு, தம்மை விமர்சிக்க கூடாது என்பது, விமர்சன வரட்டுத்தனமாகும்.


பின் குறிப்பு:


தொடாந்து ராகவனின் வாதங்கள் மூலம் மற்றொரு கட்டுரையைக் காண உள்ளோம்.



எதைத் தான், தமிழ் மக்களுக்கு தீர்வாக வைக்கின்றனர்

பி.இரயாகரன்
01.12.2007


'இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை: தீர்வும் வழிமுறையும் " லண்டன் (08.12.2007) கூட்டமாகட்டும், இது போன்றவைகள், எதைத்தான் தமிழ் மக்களுக்கு தீர்வாக வைக்கின்றனர்.


இதை கூர்ந்து பார்த்தால், புலிகளுக்கும் இவர்களுக்கு இடையில் வேறுபாடுகள் கிடையாது. பிரபாகரனின் மாவீர தினச் செய்தி போல் தான், இவர்களின் தீர்வுகளும் கூட்டம் உள்ளடக்கமும் அமைகின்றது. எப்படி பிரபாகரனின் மாவீரர் தினச் செய்திகள் மக்களைப்பற்றி பேசுவதில்லையோ, அப்படித்தான் புலியெதிர்ப்பு தீர்வுகளும் மக்களைப் பற்றி எதுவும் பேசுவதில்லை. புலிகள் சொந்த நலனில் இருந்து புலம்பல். புலியெதிர்ப்பு பேரினவாத நலன் சாhந்த புலம்பல்கள்.


சரி புலியெதிர்ப்பு தீர்வுகளும் வழிமுறைகளும் எந்த எல்லைக்குள் வைக்கப்டுகின்றது என்று பார்த்தால், அவை எதுவும் மக்களின் நடைமுறை போராட்ட எல்லைக்குள் வைக்கப்படுவதில்லை. மாறாக இலங்கையும் இந்தியாவும் ஏகாதிபத்தியமும் எதை தமது தீர்வு வழிமுறையாக கொள்கின்றதோ, அதையே புலியெதிர்ப்பு மீள வைக்கின்றது. இதுவே எதார்த்தமான உண்மை. இதற்கு வெளியில் வேறு எதையும் அவர்கள் தீர்வாக வைப்பதில்லை. அவர்கள் தாமாக மக்களுக்கு எதையும் வைப்பது கிடையாது.


இலங்கையும் இந்தியாவும் ஏகாதிபத்தியமும் முன்மொழிகின்ற எந்தத் தீர்வும், மக்களின் அரசியல் உரிமைகளை அங்கீகரிப்பதில்லை. இந்த அரசுகள் என்பது, மக்களை ஒடுக்கும் மக்கள் விரோத இயந்திரங்கள் தான். இப்படி இருக்க, அவர்களின் தீர்வுகளையே தமிழ் மக்களின் தீர்வு என்று விவாதிக்கவும், வைக்கவும் முற்படுவது நிகழ்கின்றது. தமிழ் மக்களை பண்ணைகளில் அடைத்துவிட்டு, அவர்களை பற்றி சுற்றி நின்று கதைக்கின்றனர். இப்படிக் கதைப்பதையே, இவர்கள் தமது ஜனநாயக உரிமை என்கின்றனர்.


மக்கள் அன்றாட சமூக வாழ்வியல் பிரச்னைகளுடன் சம்மந்தப்படாத வகையில், தீர்வுகளையும் வழிமுறைகளையும் மக்கள் மேல் திணிக்க முனைகின்றனர். உண்மையில் தமிழ் மக்களின் அடிப்படையான அரசியல் உரிமைகளை, இவர்கள் முன்வைப்பதில்லை. தமிழ் மக்களின் தேசிய பிரச்சனையாகட்டும், பிரதேசப் பிரச்சனையாகட்டும், பாலின ஒடுக்குமுறையாகட்டும், சாதிய ஒடுக்குமுறையாகட்டும், இப்படி சமூகத்தின் அனைத்து சமூக ஒடுக்குமுறைகளையும் தீர்க்கும் தீர்வுகளை, இவர்கள் தமது தீர்வில் திட்டவட்டமாக நிராகரிக்கின்றனர்.


இதை முன்வைப்பவர்களை அன்னியமான, விசித்திரமான பிறவிகளாக காட்ட முனைகின்றனர். இதை நடைமுறை சாத்தியமற்றதாக காட்ட முனைகின்றனர். வேடிக்கை என்னவென்றால் மக்களின் பிரச்னைகள் இவையாக இருக்க, இதை நடைமுறை சாத்தியமற்றதாக கூறி வைக்கும் தீர்வுகளோ ஆலோசனைகளோ மக்களுக்கு எதிரானதாகவுள்ளது. இதனால் இனமாக, சாதியாக, பிரதேசவாதமாக, மதமாக, பாலாக சமூகம் மேலும் ஆழமாக பிளந்து கொண்டு போகின்றது. மற்றவனை ஒடுக்காத இணக்கத்தை ஒரு தீர்வாக உருவாக்குவதற்குப் பதில், ஒடுக்கு முறைகளை பரஸ்பரம் அங்கீகரித்த ஒரு தீர்வுகளையே தேடுகின்றனர்.


இவர்கள் அரசியல் செய்யும் தளம் மக்களல்ல என்பதும், ஒடுக்குபவனிடம் கூடிச் செய்யும் அரசியல் என்பதால், பரஸ்பரம் ஓடுக்குவதை அங்கீகரித்த தீர்வையே இவர்கள் தேட முனைகின்றனர்.


இப்படித் தான் தமிழ் மக்களுக்கு தமது தீர்வைத் தேடுகின்றனர். மக்களோ இலகுவாக தமக்குள் தீர்வைக் கொண்டுள்ளனர். அவர்கள் சேர்ந்து இணங்கி வாழ தயாராக உள்ள போது, மக்களுக்கு வெளியில் தீர்வை தேடுபவர்கள் அவர்களை பிரித்து வைக்கவே தீர்வைத் தேடுகின்றனர். இது தான் அரசியல் உண்மை.


மக்கள் வடக்கான் கிழக்கான் என்ற பிரிவினையை விரும்புகின்றனரா? தமிழ் முஸ்லீம் என்ற பிரிவினையை விரும்புகின்றனரா? தமிழன் சிங்களவன் என்ற அடிதடியை விரும்புகின்றனரா? தாழ்ந்தவன் நீ உயர்ந்தவன் நான் என்ற சாதியை மக்கள் விரும்புகின்றனரா? பெண் ஆணின் அடிமை என்பதை மனிதம் விரும்புகின்றதா. இல்லை மக்கள் அப்படி விரும்பவில்லை.


மக்கள் இணங்கி வாழும் தீர்வையே தமக்குள் கொண்டுள்ளனர். இல்லை மக்கள் இப்படி இணங்கி வாழக் கூடாது என்பதைத் தான், ஆதிக்க சக்திகள் விரும்புகின்றனர். அதைத் தான் தீர்வு என்ற பெயரில் மக்கள் மேல் மறுபடியும் திணிக்க முனைகின்றனர். இதற்கே ஆலோசனைகளை, கூட்டங்களை, விவாதங்களை செய்கின்றனர். மக்களின் அடிப்படையான அரசியல் உரிமைகளைப் பேசவும், சமூகப் பிரச்சனைகளை தீர்க்கவும் இவர்கள் கூட்டங்களை நடத்துவதில்லை. இது தான் உண்மை.

Friday, November 30, 2007

எமது போராட்டத்தில் ஏகாதிபத்திய தலையீடு இருக்கவில்லையாம்!

பி.இரயாகரன்
01.12.2007


ப்படி புலியெதிர்ப்பு ராகவன் கூற முற்படுகின்றார். இன்றைய அவர்களின் ஏகாதிபத்திய பின்னணியை மறைக்க இது அவசியமாகின்றது.


இதை மூடிமறைக்க புலியெதிர்ப்பு ராகவன் கூறுவதைப் பாருங்கள். 'தேசிய இனமாக தமிழினம் வளர்வதற்கான போராட்டத்தை மேற்கொண்டிருக்கிறது என்று வைத்துக் கொண்டாலும் அது முற்போக்கானது என்பதற்கு என்ன அர்த்தம். வெறும் அருவமாக சொல்வதில் பயனேதும் கிடையாது. விவசாயி தொழிலாளி தலைமை தாங்க முற்போக்காக வந்து விடுமென்றால் ஏன் அதற்கு முடியவில்லை. இது நடைமுறை சாத்தியமா?" இங்கு ராகவன் இப்படிக் கேட்கின்ற 'இது நடைமுறை சாத்தியமா?" என்பது, ஒரு அற்பவாதியால் மட்டும் தான் கேட்க முடியும். நடைமுறைச் சாத்தியமான அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தான், இந்திய இலங்கை ஏகாதிபத்திய புலியொழிப்பு வேலைத் திட்டத்தை நடைமுறை சாத்தியமானதாக காட்டுகின்றது. மக்கள் தமது சொந்த விடுதலைக்காக போராடுவதை, நடைமுறை சாத்தியமற்றதாக காட்டுகின்றது.


இங்கு சரி பிழை என்பது, புலியெதிர்ப்பு அற்பவாதிக்கு முன் தனது நிலைக்கு ஏற்ப குறுகிவிடுகின்றது. நடைமுறை சாத்தியமானது மட்டும் தான் சரி என்று, யார் தீர்மானிப்பது? அரசியல் அடிவருடிகளா? அல்லது மக்களா? மக்களிடம் அரசியல் ரீதியாக போகாதவர்கள், அதை சாத்தியமற்றது என்று கூறுகின்றனர். அதாவது இலங்கை இந்திய ஏகாதிபத்திய நலன்களுடன் இருக்கின்ற சாத்தியமான அரசியலை பாதுகாப்பதே, புலயெதிர்ப்பின் மூல உபாயம்.


உண்மையில் ஒரு பிரச்சனை மீதான, வெளிப்படையான அரசியல் அணுகுமுறையின்றி 'இது நடைமுறை சாத்தியமா?" என்பது, திட்டவட்டமாக மனித குலத்துக்கு எதிரானது. புலிப் பாசிசத்தில் இருந்து மக்கள் விடுதலை அடைதல் என்பது, அவர்களின் சொந்தப் போராட்டத்தில் மட்டும் தான் சாத்தியமானது. இந்த வகையில் இயங்காத, இதை கொள்கை அளவில் ஏற்றுக் கொள்ளாத அனைவரும், படுபிற்போக்குவாதிகள் தான்.


தமது சொந்தப் பிற்போக்கு அரசியல் நடைமுறையை உயர்த்தவே, 'முற்போக்கானது என்பதற்கு என்ன அர்த்தம். வெறும் அருவமாக சொல்வதில் பயனேதும் கிடையாது" என்கின்றார். இப்படி ராகவன் உளறுகின்றார். அருபமாக சொல்லாத அந்த முற்போக்கு என்று, எதை நீங்கள் கருதுகின்றீர்கள்? உங்கள் அரசியலில் அரிச்சுவடியில், அப்படி ஒன்று கிடையாதா?


எங்கள் மார்க்சிய அரசியலில் அது உண்டு. மக்கள் நம்பி, அவர்களின் விடுதலைக்கு அவர்களே போராடுவது தான், முற்போக்கின் முதலாவது அடிப்படை அம்சம். ஆனால் அதுவே உங்களுக்கு, நடைமுறை சாத்தியமற்ற ஒன்று.


இன்று புலியெதிர்ப்பு மக்களின் அடிப்படையான அரசியல் உரிமைகளைப் பற்றி பேசுவது கிடையாது. இப்படி புலியெதிர்ப்பே அருபமாவது, இது எந்த முற்போக்குத் தன்மையுமற்றது.


புலிகள் மற்றும் அரசின் சமாதான நாடகங்களின் பின்பாக, அதாவது 2001க்கு பின் ஜனநாயகம் ஜனநாயகம் என்று சொல்லுகின்றீர்களே, அது என்ன? யாருக்கு ஜனநாயகம், எதற்கு ஜனநாயகம்? அது எப்படி நடைமுறையில் இயங்கும்? இப்படி ஜனநாயகத்தை அருபமாக்கி, அதைக்கொண்டு அரசியல் செய்பவர்கள் தான் புலியெதிர்ப்பு. ஜனநாயகத்தின் முற்போக்கு கூறை நிராகரித்து, அதில் உள்ள பிற்போக்கை கோருவதல்லவா புலியெதிர்ப்பு ஜனநாயகம். இப்படி புலிகளிடம் கோரும் புலியெதிர்ப்பு ஜனநாயகம் என்பது, மக்களின் ஒரு நேரக் கஞ்சிக்கு கூட உதவாது.


இப்படி புலியெதிர்ப்புக்கு தத்துவம் வழங்க முனையும் ராகவன், வைக்கும் புலியெதிர்ப்பு ஏகாதிபத்திய அரசியலைப் பாருங்கள். 'தமிழ் தேசிய உருவாக்கம் எவ்வாறு ஏகாதிபத்தியங்களால் திட்டமிட்டு சீரழிக்கப்பட்டது என்பதற்கு எந்தவித திண்ணியமான ஆதாரங்களும் கிடையாது." என்று கூறுகின்றார். என்ன அறிவு? என்ன நேர்மை? ஏகாதிபத்தியத்தை பாதுகாப்பதன் மூலம் தான், புலியெதிர்ப்பு ஏகாதிபத்திய தளத்தை பாதுகாக்க முடியும் என்ற எதிர்நிலைத் தர்க்கவாதம் தான் இது. இவை எல்லாம் வேடிக்கை தான்.


இவர் முன்னின்று வழி நடத்திய புலி இயக்கமே ஏகாதிபத்தியத்தால் வளர்க்கப்பட்ட ஒரு இயக்கம். எந்த உளவு அமைப்பும் நேரடியாக களத்தில் வருவதில்லை. அது வௌவெறு வழிகளில், சுற்றுவழிகளில் வருகின்து.


இந்தியா புலிகள் உள்ளிட இயக்கத்துக்கு பயிற்சிகளை வழங்கவில்லையா? வழங்கியது ஏன்? ஆயுதம் பணம் கொடுக்கவில்iயா? ஏன் இப்படி இயக்கங்களை வீங்க வெம்ப வைத்தனர். இந்தியா சில இயக்கத்தை குறிப்பாக்கி வளர்த்த போது, புலிகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் அனுசரிக்கப்படவில்லையா? இஸ்ரேல் இராணுவ முகாமிலேயே புலிக்கு பயிற்சி அளிக்கப்படவில்லையா? எம்.ஜீ.ஆர் பெட்டி பெட்டியாக கொடுத்த பணம் யாருடையது. எம்.ஜீ.ஆர், மோகன்தாஸ் அமெரிக்க நலனைப் பிரதிபலிக்க வில்லையா? இந்தியா கூற, அநுதாரபுர படுகொலையை புலிகள் நடத்தவில்லையா?


இன்று இலங்கை இந்திய உளவாளிகள் செயல்படவில்லையா? அது அருபமானதா? ஆதாரமற்றதா? அவதூறா? ஏன், உங்கள் அரசியல் நலன்கள் அவர்களின் வேலைத்திட்டத்துக்கு உட்பட அதை பிரதிபலிக்கவில்லை? இவை எதுவும் அவதூறுகள் அல்ல. அன்றில் இருந்து இன்று வரையிலான எமது ஆதிக்க அரசியலே இது.


மக்கள் இயக்கம் உருவாகாத வகையில், இந்தியா ரூசியா ஏகாதிபத்திய பின்னணியிலும், மறுபக்கத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியமும் இயங்கியது. இப்படி இரண்டு கூலிக் குழுக்கள் எம் மண்ணில் உருவாகின. உள்ளியக்க களையெடுப்புகள், அதாவது மக்கள் நலன் சார்ந்தவர்களின் படுகொலை என்பது, ஏகாதிபத்திய வழிகாட்டலுடன் தான் நடைபெற்றது. இப்படி உருவான இயக்க நலன்கள் ஏகாதிபத்திய நலன்களாகி, மக்களின் விடுதலைக்கு எதிரானதாக மாறியது.


அன்று முதல் இன்று வரை, இயக்க பின்னணியில் ஏகாதிபத்திய செயற்பாடுகள் இல்லையா? இலங்கை இந்திய உளவு அமைப்புகள் செயற்படவில்லயா? இன்று அவை இல்லையென்று, சொல்ல யாராலும் முடியுமா? புலியெதிர்ப்பு அரசியல், அதன் நடைமுறைகள், அதன் பின்னணிகள் அனைத்தும், ஏகாதிபத்திய மற்றும் இந்திய இலங்கை உளவு அமைப்புகளின் வழிகாட்டலுக்கு உட்பட்டதே. அவர்களின் நலன்களுக்கு இசைவானது. இதை எதிர்க்காத அனைவரும், அதற்கு துணை போபவர்கள் தானே. நீங்கள் யார் இதை எதிர்க்கின்றீர்கள். சொல்லுங்கள். உங்கள் பின்னணி முன்னணி எல்லாம் அவர்கள் தான்.


சரி கருணாவை புலியில் இருந்து பிளந்தது யார்? பிளவுக்கு முன்பே அன்னிய சக்திகளுடன் அவருக்கு தொடர்பு இருக்கவில்iயா? கருணாவின் பிளவின் பின்பான செயற்பாடுகள் முதல் இன்று வரை உளவு அமைப்புகள், அவரின் பின்னணியில் இல்லையா? இதே கருணா இந்தியா சென்றதும், இந்தியக் கூலிக் குழுவான ஈ.என்.டி.எல்.எவ் உடன் சேர்ந்து, கிழக்கு வாழ் தமிழ் மக்களை வேட்டையாடவில்லையா. எல்லாம் தலைமறைவில் நடக்கின்றது. ஏதோ தெரியாத மாதிரி கேட்பது, தமது பின்னணி முன்னணியை மறைப்பதற்காகத்தான்.


ரீ.பீ.சீக்கு பின்னால் ஈ.என்.டி.எல்.எவ்வும் இந்திய உளவு அமைப்பான ரோவும் இல்லையா? டக்கிளஸ் ஐயாவுக்கு பின்னால்! இப்படி இருக்க 'தமிழ் தேசிய உருவாக்கம் எவ்வாறு ஏகாதிபத்தியங்களால் திட்டமிட்டு சீரழிக்கப்பட்டது என்பதற்கு எந்தவித திண்ணியமான ஆதாரங்களும் கிடையாது." என்பது, உங்களின் இன்றைய அதே நிலையை பாதுகாக்க வைக்கும் தர்க்கமல்லவா.


இயக்கங்களின் பின்னணியில் அவர்கள் செயல்படுமளவுக்கு, இயக்க அரசியல் அதை ஆதரித்து நிற்கின்றது. இந்த வகையில் இலங்கை முதல் உலகம் வரை, தமிழ் மக்களுக்கான போராட்டத்தை, அவர்கள் சிதைத்து சீரழித்து வருகின்றனர். இன்றும் தமிழ் மக்கள் ஒரு சுயமான சொந்த அரசியலை வைப்பதற்கு எதிராக, சர்வதேச தலையீடுகள், வழிகாட்டல்கள் உண்டு. இதை எதிர்கொண்ட போராட்டம் எமது போராட்டம்.


பின் குறிப்பு:


தொடாந்து ராகவனின் வாதங்கள் மூலம் மற்றொரு கட்டுரையைக் காண உள்ளோம்.




புலியெதிர்ப்பு கூறும் வரட்டு மார்க்சியம் என்பது என்ன?

பி.இரயாகரன்
30.11.2007

னது மக்கள் விரோத வலது தன்மையை அங்கீகரிக்க மறுக்கும் மார்க்சியத்தைத் தான், அவர்கள் வரட்டு மார்க்சியம் என்கின்றனர். இலங்கை இந்திய ஏகாதிபத்திய வேலைதிட்டத்தின் கீழ் இயங்கும் புலியெதிர்ப்பு அரசியலை, மார்க்சியவாதிகள் ஏற்றுக்கொள்ளக் கோருவதை அடிப்படையாக கொண்டு தான், வரட்டு மார்க்சிய முத்திரை குத்தப்படுகின்றது.

வரட்டு மார்ச்கியம் பற்றி பேச முனைபவன், முதலில் தன்னை மார்க்சியவாதியாக அடையாளப்படுத்த வேண்டும். இல்லாதுவிடில் வரட்டு மார்க்சியம் பற்றி பேச, எந்த அருகதையுமற்றவன். அவன் பாட்டாளி வர்க்கத்துக்கு எதிரான மற்றொரு வார்க்கத்தின் பிரதிநிதி என்பதால், அவன் அதை வெறும் உள்நோக்கத்தடன் தான் பயன்படுத்துவான்.

அடிக்கடி ராகவன் வரட்டு மார்க்சியம் பற்றியும் மார்க்சிய பைபிள் பற்றியும் கூறுகின்றார். இது போல் பலரும் கூறுகின்றனர். மார்க்சியத்தின் ஆரோக்கியமான வளர்ச்சி பற்றியும் இவர்கள் சிலாகிக்கின்றனர். தனக்கு எதிரான வர்க்கத்தின் வளர்ச்சியில் இருக்கின்றதாக காட்டுகின்ற அக்கறையின் பின் இருப்பது நஞ்சு. முதலில் நீங்கள் மார்க்சியவாதிகளாக இல்லாத வரை, இவை எல்லாம் மார்க்சியத்தின சேறடிக்க செய்யும் அற்பத்தமான சூழ்ச்சியான செயல்கள் தான்.

ஒருவன் தன்னை மார்க்சியவாதியாக அடையாளப்படுத்துகின்றான் என்றால், அவன் வர்க்கப் போராட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். சமூகத்தை வர்க்க அடிப்படையில் பகுத்தாராய வேண்டும். ஒரு சமூக அமைப்பில் எதிரி வர்க்கத்தை தெளிவுபடுத்த வேண்டும். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை வர்க்கப் போராட்டத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஜனநாயகம் என்பது வர்க்கத்தின் சர்வாதிகாரம் என்பதை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ள வேண்டும். இப்படி பல விடையங்கள் உண்டு. இப்படி இவற்றை ஏற்றுக் கொண்டு, அதற்காக போராடும் போது தான் வரட்டு மார்க்சியத்தை இனம் காணமுடியும். பைபிள் மார்க்சியத்தை உடைத்துக் காட்ட முடியும்.

இதையா! இந்த புலியெதிர்ப்பு கனவான்கள் செய்கின்றனர். இல்லை. அவர்கள் வரட்டு மார்க்சியம் என்பது, புலியெதிர்ப்பு அரசியலை ஏற்க மறுக்கும் மார்க்சியத்தை தான். அவர்களின் பிற்போக்கு அரசியல் நோக்கத்துக்கு ஏற்ப, மார்க்சியத்தை வரட்டு மார்க்சியம் என்கின்றனர்.

வரட்டு மார்க்சியம் என்கின்ற இந்த புலியெதிர்ப்பு கனவான்களின், எந்த செப்பிடுவித்தையும் மாhக்சியத்தின் முன் அவியாது. புலியை ஒழித்தலுக்கு, ஏற்ப மார்க்சியத்தை வளைத்து சொன்னால் வரட்டு மார்க்சியமல்ல என்று நீங்கள் சொல்ல தயாராக உள்ளீர்கள் என்பது எமக்கு நன்கு தெரியும்.

புலிகளின் பாசிசத்துக்கு அப்பால், மார்க்சியவாதிகள் வர்க்க ரீதியாகவே அவர்களுடன் உடன்பாடு அற்றவர்கள். மார்க்சியவாதிகள் புலியை அரசியல் ரீதியாக அம்பலப்படுத்திய அளவுக்கு, வேறு யாரும் செய்தது கிடையாது. இருந்தபோதும் மாhக்சியவாதிகள் புலிகளை விடவும், பேரினவாத அரசைத்தான் முதலாவது எதிரியாக பார்க்கின்றனர். அரசு தான் புலியை உருவாக்கியதே ஒழிய, புலிகள் பேரினவாத அரசை உருவாக்கவில்லை. பேரினவாத அரசு ஒழிக்கப்பட்டால் புலி ஒழியும். புலி ஒழிக்கப்பட்டால், பேரினவாத அரசு ஒழியாது. இது மார்க்சியவாதிகளுக்கும் புலியெதிர்ப்புக்கும் உள்ள அடிப்படை வேறுபாடுகளில் ஒன்று.

மார்க்சியவாதிகள் அரசையும், அதை இயக்குகின்ற ஏகாதிபத்திய கட்டமைப்பையும், பிராந்திய வல்லரசு அனைத்தையும் எதிரியாக பார்க்கின்றனர். அவர்களுடன் கூடிக் குலாவி புலியை ஒழிக்கும் எந்த வேலை திட்டத்தையும், சதிகளையும் மாhக்சியவாதிகள் கடுமையாக எதிர்க்கின்றனர். இதிலும் கூட புலியை விட, நாம் தான் அரசியல் ரீதியாக கடுமையான எதிரிகளாக உங்கள் முன் உள்ளோம். இதனால் எம்மை வரட்டு மார்க்சியவாதிகளாக கூறுவதால், மார்க்சியம் வரட்டு வாதமாகி விடுவதில்லை.

புலியை ஒழித்தல் மார்க்சியவாதிகளின் அரசியல் வேலைத் திட்டமல்ல. மாறாக மக்களின் அதிகாரத்தை நிறுவுவது தான், மார்க்சியவாதிகளின் வேலைத்திட்டம். இந்த வகையில் தான், நாம் அனைத்தையும் விமர்சனக் கண்கொண்டு அணுகுகின்றோம். இது போன்ற எந்த வேலைத்திட்டமும் புலியெதிர்ப்பிடம் கிடையாது.

அவர்களின் வேலைத் திட்டம் என்பது, இலங்கை இந்திய ஏகாதிபத்தியத்தின் நகர்வுகளுக்கும், நலனுக்கும் உட்பட்டது. இதை இல்லை என்று யாராலும் மறுக்கமுடியாது. இதை நாம் அம்பலப்படுத்துவதால் வரட்டு மார்க்சியம் என்று புலம்புகின்றனர். அவர்கள் வரட்டு மார்க்சியம் என்று கண்டு பிடிப்பது, இலங்கை இந்திய மற்றும் ஏகாதிபத்திய நலனுக்கு இசைவானதாக மார்க்சியம் வளைந்து கொடுக்க மறுப்பதைத் தான்.

ராகவன் போன்ற புலியெதிர்ப்பு பிரிவினரிடம் இதற்கு வெளியில், எந்த மக்கள் நலன் சார்ந்த சொந்த வேலைத்திட்டமும் கிடையாது. தனிமனிதர்களிடம் கூட, இதையொட்டிய ஒரு சமூக கண்ணோட்டம் சமூகப் பார்வை கிடையாது. எல்லாம் கூலிக்கு மாரடிக்கின்ற அரசியல், மார்க்சியத்தை வரட்டுத்தனமாக காட்டுவதும் மாரடிப்புக்கு ஏற்பத்தானே.

பின் குறிப்பு:

நாம் தொடாந்து ராகவனின் வாதங்கள் மூலம் மற்றொரு கட்டுரை மூலம் காண உள்ளோம்.


Thursday, November 29, 2007

தேசியத்தை கற்பிதம் என்பவன் யார்?

பி.இரயாகரன்
29.11.2007



புலியெதிர்ப்பை அரசியலாக கொண்டவர்கள் முதல் ஏகாதிபத்திய உலகமயமாதலுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் தான். அ.மார்க்ஸ் இதை ஒரு தனி நூலாக கொண்டு வந்த போது, அதை நான் அம்பலப்படுத்தினேன். அது ஒரு நூலாகவே வெளிவந்தது. அந்த நூல் இதுதான்.


தேசியம் எப்போதும் எங்கும் முதலாளித்துவக் கோரிக்கையே ஒழிய பாட்டாளிவர்க்க கோரிக்கையல்ல.


இதுவரை அவரால் அதற்கு பதிலளிக்க முடியவில்லை.


இந்த நிலையில் இன்று புலியெதிர்ப்பு அரசியலே, புலிக்கு மாற்று என்று கூறுகின்ற ராகவன் போன்றவர்கள் கூட, தம் பங்குக்கு தேசியம் கற்பிதம் என்ற கோட்பாட்டை முன் வைக்கின்றனர். அறிவு நேர்மை எதுவுமின்றி, கறுப்பு வெள்ளையாக இதைச் சொற்களில் செய்கின்றனர்.


கற்பிதம் என்பது என்ன? இல்லாத ஒன்றை கற்பிப்பது. பொருள் அல்லாத ஒன்றை, இருப்பதாக கற்பிப்பது. தேசம், தேசியம் என்பதை கற்பிதம் என்பது, உள்ளடக்க ரீதியாக அதை கருத்து முதல்வாதத்தை அடிப்படையாக கொண்டதாக்கி விடுகின்றது. தேசம், தேசியம் பற்றி பேசிய மார்க்ஸ் முதல் அனைவரையும், இது கருத்து முதல் வாதமாக்கிவிடுகின்றது. பொருள் வகைப்பட்ட தேசம், தேசியம் என்பதே, இல்லையென்பது எவ்வளவுக்கு இது அறிவுத் தன்மை கொண்டது?


தேசம், தேசியம் என்பது இந்த மனிதனாலான இந்த சமூக அமைப்பில் உருவாகவில்லையா? அது பொருள் வகைப்பட்ட ஒன்று இல்லையா? இன்று தேசங்களாக இருப்பவை எவை. அவை என்ன? அவை பொருள் வகைப்பட்ட ஒரு சமூகப் பொருளாதார ஒழுங்கில் இயங்கவில்லையா? இதை கற்பிதம் என்பது, அபத்தத்திலும் அபத்தம். உண்மையில் இருப்பதை மறுப்பதே, கருத்துமுதல் வாதம் தான்.


இப்படி இருப்பதை இல்லை என்பது, மனித குலத்துக்கு எதிரானது. இல்லாததை இருப்பதாக காட்டுகின்றது, அரசியல் நயவஞ்சகத் தன்மை கொண்டது.


கற்பிதத்தின் மற்றொரு கூற, ஒரு பொருள் நீடித்த எல்லையில் அது அதுவாக இருப்பதில்லை. அதாவது தொடர்ந்தும் அது இருப்பதில்லை என்பது. ஒன்று இன்னொன்றாக மாறுகின்றது. இது இயங்கியல் அம்சம். இங்கும் மாற்றம் நிகழ்கின்றதே ஒழிய, பொருள் இல்லாமல் போய்விடுவதில்லை.


இங்கு தேசம் அழிந்தால் பாட்டாளி வர்க்க சர்வதேசியமும் அல்லது ஏகாதிபத்திய உலகமயமாதலுமாக மாறுகின்றது. இதில் இன்னொன்று பற்றி எந்த அனுமானமும், பொருள் வகைப்பட்ட இன்றைய உலகில் இதுவரை கிடையாது. இங்கு மாற்றம் நிகழ்கின்றது. பொருள் கற்பிதமாகி விடுவதில்லை. அது மற்றொன்றாக மாறுகின்றது.


இயற்கையின் எந்தக் கூறும் மற்றொன்றாக மாறக் கூடியது தான். இதில் மனித முயற்சிகளும், ஏன் அவன் உருவாக்கிய அனைத்தும் மாறக் கூடியதுதான். நிலையானது, அறுதியானது என்ற எதுவும் கிடையாது. ஆனால் எதார்த்த உலகில், பொருள் வகைப்பட்ட ஒன்று எதார்த்தத்தில் நிலவுகின்றது. அதை கற்பிதமாக கற்பிக்க முனைவதே உண்மையில் கற்பிதம்.


தேசங்கள், தேசியங்கள் இந்த உலகில் நிலவுகின்றன. இதனால் தேசியங்கள் எழுகின்றன. இது கற்பிதமல்ல. கற்பிதமாக காட்டுபவன், அதை என்னவென்கின்றான். அதை அவன் சொல்வதில்லை.


ஒரு தேசத்தினுள் அல்லது தேசியத்தினுள்ளான சமூக ஒடுக்குமுறைகள், எதையும் கற்பிதமாக்கி விடுவதில்லை.


1.சமூக ஒடுக்குமுறைகள் அதையே உறையவைத்து பிற்போக்கு தேசமாக நீடிக்கின்றது அல்லது பரிணாமிக்கின்றது.


2. போராட்டத்தின் மூலம் முற்போக்கு தேசமாக இருக்கின்றது அல்லது பரிணமிக்கின்றது.


தேசம் என்ற சமூகபொருளாதார அமைப்பு (அது ஸ்ராலின் வரையறையிலான, குறைந்தபட்சம் ஒரு மக்கள் கூட்டத்தின் பொருளாதாரம், அவர்கள் கொண்டுள்ள நிலத் தொடர், இதன் மேலான ஒரு பண்பாடு, அவர்கள் பேசும் ஒரு மொழி) இருக்கும் வரை, அது கற்பிதமாக கற்பிக்க முனைபவன் தான் கற்பிதவாதியாகி விடுகின்றான்.


இதன் பின்னுள்ள அரசியல் என்பது, தேசத்தை அழிக்க விரும்பும் ஏகாதிபத்திய உலகமயமாதலை ஆதரிப்பது தான். இதற்கு அப்பால் வேறு எந்த அரசியல் முகாந்திரமும் இதற்கு கிடையாது. புலியெதிர்ப்பு அரசியல் இதை தூக்கி முன்நிறுத்துகின்றது என்றால், அதனிடம் இதற்கு மாற்றாக எதுவுமில்லை என்பது தான். புலியை விமர்சிக்க எந்த அரசியல் அடிப்படையும் இல்லை என்பதால், தேசியத்தை கற்பிதம் என்று சொல்வது புலியெதிர்ப்புக்கு அவசியமாகின்றது.


ஆக அரசியலாக காட்ட ஜனநாயகத்தை மட்டும் வைக்கின்றனர். ஜனநாயகத்தை கோருவது என்பது ஒரு அரசியலாகிவிடாது. அது அவர் நோக்கத்துக்கும், வர்க்க எல்லைக்கும் உட்பட்ட எல்லையில் அது திரிபுபட்டு காணப்படுகின்றது. புலிகள் இலங்கை அரசிடம் ஜனநாயகம் கோருவது போல், புலியெதிர்ப்போ புலிகளிடம் ஜனநாயகத்தைக் கோரலாம். இந்த ஜனநாயகம் மக்களுக்கானதல்ல.


தேசத்தை கற்பிதமாக காட்டுவது, தேசத்துக்கு முற்போக்கு தன்மை கிடையாது என்று காட்டுவது, இவர்களின் விருப்பமான சொந்த குறுகிய அரசியல் விளையாட்டாகவுள்ளது.


மக்களின் விடுதலை என்பதும், மக்கள் தேவை என்பது, தேசத்தின் முற்போக்குத் தன்மையில் உள்ளது. அது மட்டும் தான், சமூகத்தில் உள்ள ஒடுக்குமுறைகளை தீர்க்கவல்லது.


பின் குறிப்பு:


இதை நாம் தொடர்ந்து ராகவனின் வாதங்கள் மூலம் மற்றொரு கட்டுரை மூலம் காண உள்ளோம்.



பிரபாகரன் எவ்வளவு உருக்கமாக உரையாற்றினாலும்...

ப.வி.ஸ்ரீரங்கன்


இது மக்களை ஏமாற்றும் காலம்.


து மக்களை ஏமாற்றும் காலம்.மக்களின் உரிமைகளைச் சொல்லியே அரசியல் இலாபம் பெறும் கட்சி அரசியலானது என்றும் மக்கள் நலன் சார்ந்த ஜனநாயக அடிப்படைப் பெறுமானத்தை மதிப்பதுகிடையாது.இன்றைய அரசியல் சமூகத்தின் அதீத அவநம்பிக்கையை உண்டுபண்ணியபடி காலத்துக்குக் காலம் மிதமான பொய்யுரைப்புகளை மக்கள்-சமூக வெளிக்குள் கொட்டி நடைமுறைப் பிரச்சனைகளைப் பின் தள்ளுகிறது.இங்கே நாம் கட்சி-தலைவர் என்றபடி கருத்தாடுவதும், அல்லது அத்தகைய அமைப்புத் தலைமை வாதத்துக்குள் நமது கருத்து நிலையைக் காவு கொடுத்து, மக்கள் நலன்களைப் பலியாக்கும் பொறுப்பைக் கட்சிகளிடம் ஒப்படைக்கின்றோம்.

ஒரு இனத்தின் நலனை முன்வைத்து,அந்த இனத்தின் உயிராதார உரிமைகளை வென்றெடுப்பதற்கான அரசியல் போராட்டமென்பது அந்த மக்களின் நலனைத் தழுவிய நோக்கத்திலிருந்தே முன்னெடுக்கப்பட வேண்டும்.ஆனால் பழைய அரசியல் கட்சிகள்,அதன் தலைவர்கள் தமது கட்சி நலனை முதன்மைப்படுத்தி அதையே மக்களின் அபிலாசையென்னும் சொற் சிலம்பத்தால் ஏமாற்ற முனைதல், இன்றைய இலங்கையரசியலில் மிக இலகுவாக நடைபெறுகிறது.

தமிழ்பேசும் மக்கள் தமது சமூக முரண்பாட்டை பல் வகைப் போராட்ட நெறியாண்மைக்குள் பரிசோதித்துப் பார்த்த பின்பு,மீளவும் பழைய பரிசோதனைப் பாணி அரசியல் சழற்சிக்குள் தள்ளிவிடப்படும் ஒரு இருண்ட அரசியல் வியூகத்தைப் பழைய அரசியல் பெரிச்சாளிகள் அந்நிய அரசியல்-பொருளியல் ஆர்வங்களின் துணையுடன் திட்டமிட்டுச் செயற்படுத்தும்போது,அதை வெறுமனவே பார்வையாளர்களாக நாம் எதிர்கொள்ள முடியாது.நமது வாழ்வையும் நமது அரசியல் அபிலாசைகளையும் இந்தியாவும்,அமெரிக்காவும் தீர்மானிக்க முடியாது.

தமிழ்பேசும் மக்களிடமிருந்து அத்தகைய அரசியல் எதிர்பார்ப்பு எழும் இருண்ட அரசியல் வறுமை என்றைக்கும் நிலைத்திருப்பதற்கானவொரு வியூகத்தை கட்சி அரசியலானது நமக்குக் காலாகாலமாகத் தந்துவிடத் துடிக்கிறது.இதைச் செம்மையாகச் செய்வதற்கான கருத்தியல் மேலாதிகத்தை உருவாக்கும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த இந்திய-அந்நிய ஆர்வங்கள் எமது மக்களின் உரிமைகளைத் திட்டமிட்டு அழித்தும்,தமது விருப்புறுதிகளை-பொருளாதார மற்றும் அரசியல் இலாபங்களை எமக்கான உரிமையாகவும்,எதிர்கால அரசியல் தெரிவாகவும் முன்வைக்கின்றன.இவை முன்னெப்போதையும்விட பன்மடங்கு அரசியல் குழிபறிப்புடைய ஈனத்தனமான செயற்பாடாகும்.

எங்கள் மக்களுக்குள் நிலவும் பாரிய அரசியல் இயலாமையை தமது வெற்றிக்கான அரும்பாகப் பயன் படுத்தும் இந்திய விருப்பு,இலங்கைக்குள் இந்திய நிலைமைகளைத் தோற்றுவிக்கப் படாத பாடு படுகிறது.அதற்காக ஆனந்தசங்கரி, டக்ளஸ் தேவாநந்தா,கருணா-பிள்ளையான் குழு மற்றும் குறுங்குழுக்கள்போன்ற அரசியல் அநாதைகளைப் பயன்படுத்தும் இன்றைய அரசியலானது மிகவும் சூழ்ச்சிமிக்க பரப்புரைகளை நமக்குள் விதைக்கின்றன.இவை இலண்டனையும்,பாரிசையும் மையப்படுத்தித் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பற்பல வெடிப்புக்களைச் செய்து வருகிறார்கள். இதுள் ரீ.பீ.சீ.வானொலியின் பங்கு முதன்மையானது.இந்த வானொலி புலம் பெயர்ந்த மக்களின் தோள்களில் இருந்தபடி இந்திய நிதியில் எம்மை வேட்டையாட இலங்கைச் சிங்கள இராணுவத்துக்கு ஆட்காட்டி வருகிறது.இதைப் புலிகளின் அராஜகத்தைச் சொல்லியே ஒப்பேற்றி வருகிறது.மக்களுக்கும் புலிகளுக்குமான முரண்பாடு ஜனநாயக மறுப்போடும்,அராஜகச் செயற்பாட்டிலும் மையங் கொள்கிறது.இதைக் கடக்காத புலிகள் மக்களின் உரிமையை வென்றுவிட முடியாது.இத்தகைச் செயற்பாடு தொடரும்போது அந்நியர்கள் எம் மக்களின் நலனைத் தமது முகமூடியாக்கி நம் மக்களின் உரிமையைக் குழிதோண்டிப் புதைப்பதற்குப் புலிகளே பாத்திரமாகிறார்கள்.

இந்த இலட்சணத்தில் பிரபாகரன் எவ்வளவு உருக்கமாக உரையாற்றினாலும் மக்கள் உரிமையைப் பெறமுடியாது.புலிகள் தமது அந்நிய நட்பைப் பிரிசீலித்துப் புரட்சிகரமான முறையில் போராட்டச் செல் நெறியை வகுத்தாகவேண்டும்.வெளி நாடுகளிலுள்ள தமிழ்ப் பெரும் முதலாளிகளின் நட்புக்காக நமது மக்களின் நியாயமான உரிமைகளை மறுத்தொதுக்கிப் பாசிச அமைப்பாக இறுகிச் செல்ல முடியாது.இதைப் புலிகளின் தலைவர் சுய விமர்சனஞ் செய்தேயாகவேண்டும்.தமிழ் பேசும் மக்களின் சராசரித்தனமான அறிவு பிரபாகரனின் உரைக்காக மட்டுமல்ல உண்மையான செயற்பாட்டுக்காவும் கிடந்து மாய்கிறது."பிரபாகரன் இல்லையென்றால் நமக்கு விடிவில்லை" எனும் உணர்வே மக்களிடம் இப்போது ஓங்கியிருக்கும்போது,அதை நாசம் செய்து அந்நியர்களுக்கு அடிமையாய் இருப்பதில் புலிகளின் தியாகமும் மக்களின் உயிருமே பாழடிக்கப்படுகிறது.

நமது மக்களின் துயரம் மிக்க போராட்ட வரலாறானது தியாகத்தாலும்,கொலைகளாலும்,பொருளிழப்பாலும் நிறைந்த மிகக் கடினமான போராட்ட வாழ்வாகும்.எம்மை வேரோடு சாய்ப்பதற்கான பல்வகை அரசியல்-போராட்ட வியூகங்களை இலங்கையரசும்,இந்திய மற்றும் அமெரிக்க நலன்களும் திட்டமிட்டுப் பயன்படுத்தி வருகின்றன.இத்தகைய தரணங்களுக்கிசைவாகப் பயன்படுத்தப்படும் தமிழ் அரசியல் வாதிகள் எப்போதுமே தமிழ்பேசும் மக்களை ஒட்டச் சுரண்டித் தமது அற்ப ஆசைகளைத் தீர்த்துக்கொண்டிருப்பவர்கள்.இவர்கள்தாம் நம்மைத் தமிழக ஓட்டுக்கட்சிகளையும்,இந்திய மத்திய அரசையும் நம்பும்படி வற்புறுத்துபவர்கள்.இது நம்மை இந்தியத் துரோகத்தால் ஏமாற்ற முனையும் செயல்.நாம் மூடர்களாகக் கடமையாற்ற முடியாது.ஒவ்வொரு மாவீரர் தினத்திலும் பாரிய உயிர் அழிவுகூடிச் செல்கிறது.எங்கள் குழந்தைகள் தேசத்துக்காய்ச் செத்து மடிகிறார்கள்.இதை எவரெவர் பயன்படுத்தித் தமது வளங்களைப் பெருக்கிறார்களோ அவர்கள் தமிழ் பேசும் மக்களின் உண்மையான பிரச்சனைகளைப் புரிந்து தம்மைச் சுய விமர்சனஞ் செய்து மக்களைப் புரட்சிகரமான முறையில் திரட்டி எமது விடுதலையை வென்றெடுத்தாக வேண்டும்.

இந்த இழி அரசியல்வாதிகளால் ஒரு தலைமுறையைப் பலி கொடுத்த இலங்கைத் தேசத்துத் தமிழ்பேசும் மக்கள், வரலாற்றில் அரசியல் தோல்வியை மடமையான முறையில் சந்திக்க முடியாது.இங்கே தமிழ் பேசும் உழைக்கும் மக்கள் தமிழ்த் தேசியத்தை முன்னெடுக்கும் உணர்வில் கட்டுண்டு கிடப்பினும் நமது எதிரிகளை இனம் கண்டு போராட்டத்தைச் சீரிய முறையில் செய்தாக வேண்டும்.இதற்கான அனைத்து வளங்களையும் கேட்டு நிற்கும் புலிகள் முதலில் தம்மைச் சுயவிமர்சனஞ் செய்து மக்கள் படையணியாகத் தம்மைக் கட்டியாகவேண்டும்.வெறும் இராணுவவாதத்தைத் தவிர்த்து ஓடுக்கப்படும் தமிழ் பேசும் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளின் பிராதான முரண்பாட்டில் கவனஞ் செலுத்தியாக வேண்டும்.இதைச் செய்யாதவரை திரு.பிராபாகரனின் கோரிக்கையில் எந்த அர்த்தமுமில்லை.தமிழ் பேசும் மக்களுக்குள் நிலவும் அராஜகங்கள் அட்டூழியங்கள் நிறறுத்தப்பட்டு அவர்களைப் பார்வையாளரென்று தொடர்ந்திருத்தி வைக்காமல் போராட்டத்தோடு இணைப்பதும், அவசியம்!

எமது மக்களின் உயிரிழப்புகளுக்குக் காரணம் தேடிப் புதுப்புது வியூகங்களை நம் எதிரிகள் எமக்குள் கொட்டி எம்மைத் தமது நலன்களைக்காக்கும் ஜந்திரங்களாக்கி, அரசியல் அநாதையாக்கும் பணிக்கு ஆனந்த சங்கரிபோன்ற அரசியல் வாதிகள் பக்கப்பலமாகச் செயற்படுவது மிகவும் கண்டிக்கத் தக்கது.இது மக்களைப் பழையபடி விலங்கிட்டு அவர்களது உரிமைகளை அந்நிய சக்திகளுக்கு ஏலமிடும் பாரிய சமூகவிரோதச் செயற்பாடாகும்.

இன்று நமக்குள் நிலவும் ஜனநாயகப் பற்றாக் குறையை மிகைப்படுத்தி நமது மக்களுக்கு இந்தத் தேவையே அவசியமென்றும,; அதை இலங்கை அரசுடன் உடன்பாட்டுக்குப்போய் தீர்த்துக்கொள்ள முடியுமென்றும் கூறப்படும் ஆசை வார்த்தைகள் பொய்யானவை.தென்னிலங்கையின் ஜனநாயகச் சூழலானது தமிழ் மக்களின் நிலையிலிருந்து எந்த வகையிலும் முன்னேறியது கிடையாது.இந்த இலங்கை அரசியலைத் தீர்மானிக்கும் உலக அரசுகள் எமது நாட்டில் நிரந்தரமானவொரு அரசியல்-பொருளியல் மற்றும் சமூக முன்னேற்றத்தையும், சுய உறுதிப்பாடுகளையும் எட்டுவதற்கு என்றும் விருப்புடையனவாக இருக்கவில்லை.இவர்கள் எமது வாழ்வை தமது அரசியல் நலனிலிருந்து தீர்மானிக்க முனைகிறார்கள்.

இதனால்-

"இந்தியா தராது","இந்தியாவிடாது",

"அமெரிக்கா விரும்பாது",

"ஐரோப்பா ஏற்காது"

என்று பயனை பாடிக் கொள்ளும் கருத்தியலை எமக்குள் வலுவாகத் திணித்து நம்மை அவர்கள் வழிக்குத் தயார்ப்படுத்தி வருகிறார்கள்.இதற்காகவே பல மில்லியன் டொலர்களைச் செலவு செய்து பாரிய பரப்புரைகளை நமக்குள் கொட்டுகிறார்கள். இங்கே ரீ.பீ.சீ.வானொலியும் கருணாவும்,கே.ரீ.இராஜசிங்கமும் எமது மக்களின் முதுகில் குத்தியே தமது எஜமான விசுவாசத்தைச் செய்கிறார்கள்.இதற்குப் புலம் பெயர்ந்த மக்களின்மீது அவ்வளவு கரிசனையாம்.கேட்கப் புல்லாரிக்குது.மக்களை நரவேட்டையாடியது புலிகள் மட்டுமல்ல மற்றைய இயக்கங்களும்தாம்!இதை மக்களுக்குப் புதிதாகச் சொல்வதற்கில்லை.ஆனால்,புலிகளின் அடிமட்டத் தியாகிகளின் அற்புதாமான உயிர்களை உலை வைத்தபடி நமது அரசியல் அந்நியர்களுக்கு வால் பிடிக்க முடியாது.

எனவே, புலிகள் தமது போராட்டப்பாதையில் மக்களை இணைப்பதற்கான முதற்படி அவர்களுக்கு ஜனநாயகத்தைக் கொடுத்து அவர்களைச் சுயமாகச் செயற்பட அநுமதித்தாகவேண்டும். நாம் இன்னும் விடு பேயர்களாய் இருந்து, இவர்களிடம் மடிப் பிச்சை எடுக்கும் அரசியல்-சமூக உளவியலைத் தீர்மானிக்க எமக்குள் பற்பல வியூகங்கள் மலிந்துருவாக்கப்படுகிறது.இதைத் தடுப்பதற்கான ஒரே வழி மக்களைச் சுயமாகச் செயற்பட அநுமதிப்பதும்,அவர்களது எழிச்சியைக் கூர்மைப்படுத்துவதும் கூடவே மக்களைச் சார்ந்து புரட்சிகரமாக இயங்குவதுமே.புலிகள் இனியும் அந்நியர்களுக்குச் சேவர்களா அல்லது மக்களின் புரட்சிப்படையா என்பதை அடுத்த மாவீரர் தினத்தில் நாம் அறிய முடியும்.


இன்றைய அந்நிய ஆர்வங்கள்,

"ஜனநாயகம்,

யுத்த நிறுத்தம்,

சிறுவர்களைப் படையில் இணைப்பது,

கட்டாய வரி வசூலிப்பு,

கொலைகள்,

மானுடவுரிமை!"

என்ற கோசங்களுக்கூடாய் நம்மை வந்து முற்றுகையிடுகிறது.

உண்மையில் நமக்குள் இந்தமுரண்பாடுகள் நிலவுகிறது.புலிகளின் அதீதமான மக்கள் விரோதப் போக்கானது,மாவீரர்களின் தியாகத்தாலும்,அவர்களின் இழப்புகளாலும் மனத்தில் சகஜமானவொரு செயலாக நியாயம் பெறுகிறது.இது தப்பு.நாம் மக்களின் குழந்தைகளே.எங்கள் பெற்றோர்களை வதைத்து எவரது உரிமைக்காகப் போராடுகிறோம்?

நமது சமுதாயத்துக்குள் இத்தகைய முரண்பாடுகள் மலிந்துவிட்டென.

எனினும், இதைத் தூக்கி நிறுத்தும் அரசியலானது மக்கள் நலனிலிருந்து மக்களே தீர்மானிப்பதாய் இருக்கவேண்டும்.ஆனால், இப்போது நிலவும் இந்தக் கோசங்களுக்குள் மறைந்திருக்கும் அந்நிய ஆர்வங்கள் நம்மை நன்றாக ஏமாற்றிவிடத் தடியாய்த் துடிக்கின்றன.இந்தத் துடிப்பை புளட் ஜெகநாதன் மற்றும் ரீ.பீ.சீ. அதிபர் இராமராஜன் போன்றவரிடம் மிகுதியாகக் காண முடியும்.

யுத்தத்தின் மூலம் நமது ஆன்ம வலுவை உடைத்தெறிந்துவிட்டு,நம்மை நாதியில்லாத அகதிகளாக்கிவிட்டு,நமக்கு அன்றாடம் இயல்பான வாழ்வே அவசியமெனும் மனநிலையைத் தோற்றி, நமது உரிமைகளைக் காயடிக்கும் இலங்கை-இந்திய அரசிலானது மிகவும் கொடிய உள்நோக்கமுடைய அரசியல் குழிப்பறிப்பாகும்.இது பேசும் இத்தகைய "மர்ம மக்கள் நலனானது" நம்மைக் காலாகாலத்துக்கு அடிமைகளாகக் கட்டிப்போடும் தந்திரத்தோடு உறவுடையது.

எனவே இதை உடைத்தெறிவதற்கான ஒரே வழி:

புலிகளுக்கும் மக்களுக்குமுள்ள மேற்காணும் முரண்பாட்டை தீர்ப்பதே.இதைப் புலிகள் செய்யும் போது,மக்கள் சுய எழிச்சி கொள்வதும்,தமது நலன்களைத் தாமே "தமது நோக்கு நிலையிலிருந்து" முன்வைப்பதும்,போராடுவதும் நிகழும்.எந்த அந்நிய சக்தியாவது புலிகளை அழிக்க முனையும்போது மக்கள் புலிகளை நிபந்தனையின்றி ஆதரிப்பதும் தவிர்க்க முடியாது நிகழும்.அதுதாம் நமது நிலைப்பாடும்.மக்களைத் தவிர்த்த எந்த அரணும் போராளிகளைக் காக்க முடியாது.மக்கள் தம்மைத் தாமே முன்னிறுத்தும் பாரிய வரலாற்றுப்பணி இப்போது நம் முன் இருக்கிறது.இதைத் தடுக்கும் அரசியல் சூழ்ச்சியானது புலிகளுக்கும் மக்களுக்குமான ஜனநாயக முரண்பாடாகக் கட்டி வளர்க்கப்படுகிறது.இதைப் புலிகளே பிரித்தறிந்து நிவர்த்திசெய்யாதவரைப் புலிகளின் போராட்டச் செல் நெறி மக்களையும்,அவர்களது உரிமையையும் வென்றெடுக்க முடியாது.

Wednesday, November 28, 2007

தேசியத்தை மறுப்பது என்பது சாராம்சத்தில் உலகமயமாதலை ஆதரிப்பதுதான்

பி.இரயாகரன்
29.11.2007



புலியை தேசியமாக பார்ப்பவர்கள், தேசம் தேசியம் என்ற அடிப்படைக் கோட்பாட்டை காணமுடியாதவர்களாவே உள்ளனர். புலியெதிர்ப்புக்கு தேசிய மறுப்பு தத்துவம் வழங்க முனையும் ராகவனாக இருக்கலாம், ஸ்ராலினை மறுக்கும் திரோஸ்க்கியம் பேசுகின்றவர்களாக இருக்கலாம், சாராம்சத்தில் அவர்களின் அரசியல் ஒத்துப் போகின்றது.


தேசம், தேசியம் என்பது கற்பனையான பொருளற்ற வெறும் சிந்தனையல்ல. அதாவது கருத்துமுதல்வாதக் கற்பனையல்ல. மாறாக பொருள் வகைப்பட்ட ஒன்றின் மீதான சிந்தனை. இதை திரொஸ்கிகள் தேசிய மறுப்பின் ஊடாக மறுக்கின்றனர். ராகவன் கருத்தமுதல்வாதமாகவே பாhக்கின்ற அளவுக்கு, புலியெதிர்ப்புவாதம் அவரின் கண்ணை மூடிநிற்கின்றது.


தேசம் என்பது பொருள் வகைப்பட்டது என்ற எதார்த்ததை மறுக்கவே, ஸ்ராலினை மறுப்பது அவசியமாகின்றது. தேசத்தின் பொருள் வகைப்பட்ட எதார்த்தத்தின் குறைந்தபட்ச வரையறை இருப்பதை, புரட்சிக்கு தலைமை தாங்கி ஸ்ராலின் தான் முதன் முதலில் வரையறுத்துக் காட்டுகின்றார். இதனால் தத்தவமேதையான லெனின் அதை மிகச் சிறந்த மார்க்சிய வரையறையாக, உலகம் முன் அங்கீகரித்தார். வர்க்கப் போராட்டத்தை நடத்துவதில் இருந்து ஒரு சமூகப் பிரச்சனையை, ஸ்ராலின் மார்க்கிச வரையறை நேராக்கிவிடுகின்றது. லெனின் - ஸ்ராலின் தேசம் பற்றி மார்க்சிய அடிப்டையிலான இந்த நிலையை, திரோஸ்கி அன்று ஏற்றுக்கொண்டது கிடையாது. இன்றுவரை அது தான் அவர்களின் நிலை. லெனின் - ஸ்ராலின் தேசம் பற்றி மார்க்சிய அடிப்டையில் தான், அங்கு வர்க்கப் புரட்சியே நடந்தது. திரோக்சிய வரையறையிலல்ல. சோவியத்துகளின் உள் உருவாக்கம் கூட, இதனடிப்படையில் தான் நடந்தது. இது போல் தான் சீனாவிலும் நடந்தது.


இதை வழிகாட்டிய ஸ்ராலின் வரையறை என்பது தெளிவானது. தேசம் என்பது தனக்கான ஒரு தேசிய பொருளாதார கட்டுமானத்தை, தனக்கான ஒரு மொழியையும், இதை கொண்டிருக்க கூடிய ஒரு பிரதேசத்தையும், இதனடிப்படையிலான ஒரு பண்பாட்டையும் கொண்ட மக்கள் கூட்டத்தைக் கொண்டது தான் தேசம் என்றார். இதற்கு வெளியில் தேசம் என்பது பொருள் வகைப்பட்டதல்ல. தேசங்களாக இருக்கும் எந்த நாடும், குறைந்த பட்சம் இதைக் கொண்டிருக்க வேண்டும். இதுவல்லாத தேசம் எதார்த்தத்தில் கிடையாது, உருவாகவும் முடியாதது. பொருள் அல்லாத எதுவும், இருக்கவோ உருவாகவோ முடியாது.


குறைந்தபட்சமான இந்த நிபந்தனை என்பது அடிப்படையானது. இதற்கு மேல் பல பண்பாடுகள், பல மொழி கொண்டவை கூட ஒருங்கிணைந்த தேசமாக ஒன்றி இருக்க முடியும்.


இப்படி பொருள் வகைப்பட்ட ஒன்றை மறுப்பது, அதை தமது கற்பனையில் கற்பிதமாக காட்டுவது சுத்த அபத்தம். இதையே திரோஸ்க்கியம் முதல் புலியெதிர்ப்பு வரை செய்கின்றது. தமிழ்மக்கள் தேசிய இனமா இல்லையா என்ற விவாதத்துக்கு முன், தேசம் தேசியம் பற்றிய இவர்களின் பார்வையே குருட்டுத்தனமானது. இவர்கள் பார்வை உலகளவிலானதாக, பார்க்கவும் காட்டவும் முனைகின்றது. அது உலகத்தில் உள்ள தேசங்களை, தேசியத்தை எல்லாம் மறுக்கின்ற போது, எதார்த்தத்தில் உலகமயமாதலை ஆதரிக்கின்றது. இன்று நிலவும் தேசங்களையும், தேசியத்தையும் அழிப்பதே உலகமயமாதல் தத்துவம். அதாவது தேசங்கள் உள்ளான சுரண்டலுக்கு பதில், உலகளாவிய சுரண்டல்.


தேசம் இல்லாத தளத்தில், பாட்டாளி வர்க்க தலையீடு அல்லாத ஒரு தளத்தில், அதை பிரதி செய்வது உலகமயமாதல் தான். பாட்டாளி வர்க்கம் மட்டும் தேசியத்திலும் பிற்போக்கு நிலப்பிரபுத்துவ கூறுகளை மறுத்து, முற்போக்கு கூறுகளை உள்வாங்கி போராடுகின்றது. நிலபிரபுத்துவ கூறுகளை எதிர்க்கின்ற வர்க்கக் கூறுகளையும் அது ஆதரிக்கின்றது.


பாட்டாளி வர்க்கத்துக்கு தனக்கென்ற சர்வதேச பார்வை உண்டு. தேசத்தை ஆதரிப்பது, அதை முன்னெடுப்பதன் சாரம் என்பது, தேசம் பற்றிய அதன் சொந்த வரையறையில் கொண்டிருக்க கூடிய முற்போக்கு தன்மையைத் தான்.


தேசம் கொணடுள்ள தேசிய பொருளாதாரத்தை அழிப்பதை, அதன் மொழியை அழிப்பதை, அதன் நிலத் தொடரை இல்லாததாக்குவதை, அதன் பண்பாட்டை அழிப்பதை பாட்டாளி வர்க்கம் அனுமதிக்காது எதிர்த்துப் போராடுகின்றது. பிற்போக்கு ஏகாதிபத்தியம் இதை அழிப்பதை அனுமதிப்பதில்லை. இந்த வகையில் பாட்டாளி வர்க்கம் அதை எதிர்க்கின்றது.


உண்மையில் உலகமயமாதல் இவை அனைத்தையும் சுவடு கூடத் தெரியாது அழிக்கின்றது. பாட்டாளி வர்க்கம் செய்வது இது கொண்டுள்ள பிற்போக்கு நிலப்பிரபுத்துவ கூறுகளை மட்டும் தான், பாட்டாளி வர்க்கம் அழிக்க முனைகின்றது. அதன் முற்போக்கான சமூகக் கூறுகளையும் பாதுகாத்து, தேசத்தை தேசியத்தை உயர்த்துகின்றது. பல்வேறு வர்க்கங்கள் கொண்ட இந்த நாடுகளின், ஆக பிற்போக்கான வர்க்கத்தை எதிர்த்த போராட்டத்தை தேசியத்துக்கு ஊடாக பாட்டாளி வர்க்கம் முன்னிறுத்துகின்றது. அதாவது இன்று முதலாளித்துவ புரட்சி நடைபெறாத நாடுகளின் வாக்கப் போராட்டம் என்பது, சாராம்சத்தில் தேசிய போராட்டத்தையும் உள்ளடக்கியது தான்.


தேசமும், தேசிய மக்களும் ஸ்ராலின் வரையறைக்குள் உள்ளாக அதைப் பாதுகாக்க நாளாந்தம் உலமயமாதலுக்கு எதிராகப் போராடுகின்றனர். தேசத்தின் அறிவை, அதன் வளத்தையும் பாதுகாக்க வேண்டியுள்ளது. உதாரணமான பன்மையான விதைகள், பன்மையான உணவு வகைகள், பன்மையான உற்பத்தி முறைகள், தனி ஆற்றல் வாய்ந்த உற்பத்திகள், மரபு சார்ந்த சமூகக் கூறுகள், சமூக ஆற்றல்கள், உடல் சார்ந்த உயிரியில் எதிர்பாற்றல்கள், தான் பேசும் மொழியை, தனது சொத்தை, தனது உழைப்பை, தனது பொருளாதாரத்தை என்ற அனைத்தையும் தேசம் பாதுகாக்க வேண்டியுள்ளது.


இதற்கு மாறாக ஒரு தேசத்தின் அழிவில், தேசத்தின் சிதைவில் வித்திடப்படுவது எது.? இயற்கையான மனிதக் கூறுகள் தங்கியுள்ள இயற்கையின் அழிவு தான். தேசத்தை மறுப்பதும், தேசியத்தை மறுப்பதும், உள்ளடக்க ரீதியாக சந்தை பற்றிய பொருள் வகைப்பட்ட ஒன்று தான்.


தேசத்துக்கு பதிலாக பிரதியிடப்படுவதோ உலகமயமாதல். அது தனிமனித ஒண்டிக் கலாச்சாரத்தை, நுகர்வு கலாச்சாரத்தையும், அதை ஒட்டிய ஒற்றைப் பண்பாட்டையும், தனிமனித நலனில் இருந்து முன்னிறுத்துகின்றது. உதாரணமாக அரிசியை எடுத்தால் பாஸ்மதி மட்டும் தான் சந்தையில் இருக்கவேண்டும், ஒரு உருளைக்கிழங்கு வகை தான் இருக்க வேண்டும். இப்படி ஒற்றைத் தன்மையில் மனித உணவே மாற்றப்படுகின்றது. புண்ணாக்கு உணவை உண்ண மக்டோனால் போகவேண்டும். கழிநீரைக் குடிக்க கொக்கோகோலா மட்டும் சார்ந்து இருக்க வேண்டும். இப்படி வகை தொகை தெரியாத தேசிய பொருளாதார அழித்தொழிப்பில் எஞ்சுவது, மிருகப் பண்ணைக்குரிய உலமயமாதலின் நுகர்வு மரபு தான். தேச மக்களின் வாழ்வுக்கு எதிராக வைக்கப்படும் உலகமயமாதலின் எதார்த்தம் இதுதான்.


தேசத்தை அழித்து உருவாகும் பூமியில் பல லட்சக்கணக்கான நெல் இனங்கள், ஆயிரக்கணக்காக இருந்த உருளைக் கிழங்கு வகைள், கோதுமை வகைகள், மரக்கறி உணவு வகைகள் எல்லாம் இருந்த இடம் தெரியாது அழிக்கப்பட்டு வருகின்றது. இப்படி பற்பல. எங்கு தேசத்தின் உண்மையான குரல்கள் எழுகின்றதோ, அங்கு அவை பாதுகாக்கப்படுகின்றது. மறுபக்கத்தில் எல்லாம் ஒற்றைத்தன்மையாகி, அதுவே இயல்பான ஜனநாயக மறுப்பாகி, சுதந்திரமான மனித உழைப்பு மற்றும் மனித தேர்வுகள் எல்லாம் மறுக்கப்படுகின்றன. முற்போக்கான தேசமும் தேசியமும் தான், குறைந்த பட்சம் இதைப் பாதுகாக்க முனைகின்றது.


பின் குறிப்பு:


இதை நாம் தொடர்ந்து ராகவனின் வாதங்கள் மூலம் மற்றொரு கட்டுரை மூலம் காண உள்ளோம்.


குப்பை அள்ளுவதிலும் மோசடி தனியார்மயத்தின் மகிமை

ழே கால் ஆண்டுகளுக்கு சென்னையின் குப்பையை அள்ளுவதற்காக மு.க. ஸ்டாலினால் அழைத்து வரப்பட்ட சிங்கப்பூர் நிறுவனமான ஓனிக்ஸின் ஒப்பந்த காலம் ஆகஸ்ட் 2007இல் முடிவடைகின்றது. அதன் பின்னர் குப்பை அள்ள, நீல் மெட்டல் புராடக்ட்ஸ் எனும் கொலம்பிய குப்பை அள்ளும் நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மீண்டும் தனக்கே ஒப்பந்தம் கிடைக்கும் என்ற ஓனிக்ஸின் கனவு தகர்ந்து போனதால், தனது ஒப்பந்தம் முடிவதற்கு 3 வாரங்களுக்கு முன்னரே குப்பை அள்ளுவதை ஓனிக்ஸ் நிறுத்திக் கொண்டது. குப்பைத் தொட்டிகளை மீண்டும் பயன்படுத்த முடியாதபடிக்கு உடைத்தும் போட்டது.

இதன் விளைவாக சென்னையின் நவீன அக்ரகாரமான ராஜா அண்ணாமலைபுரமும் அடையாறும் கலாசேத்ரா காலனியும் குப்பைகளால் நாறியது. இது ""தினமணிக்கு'' பொறுக்க முடியவில்லை. தனியார்மய ஆதரவாளர்களை செல்லமாகக் கடிந்து விட்டு, "மாநகராட்சி என்ன செய்துக் கொண்டிருக்கிறது?' எனப் பிரச்சினையை திசை திருப்பிய ""தினமணி'', ஓனிக்சுக்கு பிரித்து விட்டிருந்த இந்த அக்ரகாரக் குப்பைகளை அவசரமாக அள்ள மாநகராட்சி ஊழியர்களைப் பயன்படுத்தக்கோரி தலையங்கமே எழுதியது. ""இந்து''வும் தன் பங்குக்கு யோசனைகளை மாநகராட்சிக்கு அள்ளி வழங்கியது. ஓனிக்ஸின் இந்த சட்டவிரோதச் செயலுக்கு அதன் தலைமை நிர்வாகிகளைப் பிடித்து வந்து நாலு சாத்து சாத்தி, பெருந்தொகையை அபராதமாக வசூலிப்பதுதானே முறை. ஆனால் சிங்காரச் சென்னையின் மேயரோ, ""இந்து'' முதல் ""தினமணி'' வரை ஓலமிட்டவுடன் ஓனிக்ஸ் குப்பை அள்ள வேண்டிய அந்தப் பகுதிகளுக்கு மாநகராட்சி ஊழியர்களை அனுப்பி வைத்தார்.

"மாநகராட்சி ஊழியர்களுக்கு குப்பை கூட சரிவர அள்ள வராது' எனும் பொதுக்கருத்தை நடுத்தர வர்க்க மண்டைக்குள் திணித்து "எல்லாம் தனியார் கிட்ட போனாதான் சார் நல்லா இருக்கும்' என்று அவர்களைப் பேச வைத்தவையும் இதே ஊடகங்கள்தான்.

அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தபோது, அவர்கள் வேலைக்கு வராத நாட்களுக்கு சம்பளம் தரக்கூடாது என்று திமிராகப் பேசியது, நீதித்துறை. அதையே வாந்தி எடுத்தன, ஊடகங்கள். ஆனால், ஓனிக்சு செய்த இந்த அராஜகத்திற்கோ இதே ஊடகங்கள் அவர்களைச் சட்டப்படி தண்டிக்காமல், தனியார் செய்து முடித்திருக்க வேண்டிய வேலையை அரசு ஊழியர்களை வரவழைத்து விரைந்து முடிக்க சொல்கின்றன. எந்தவித தர்க்கத்துக்கும் பொருந்தாத இந்த நியாயத்தை (!) எந்த நாட்டிலாவது காண இயலுமா?

கடந்த 7 ஆண்டுகளிலும் ஓனிக்ஸ், குப்பைகளை டன்னுக்கு ரூ. 650 எனும் கணக்கில் அள்ளியது. அதில் கூட இடிக்கப்பட்ட கட்டடக் கழிவுகளைச் சேர்த்து எடையைக் கூட்டிக் காட்டி நமது வரிப்பணத்தை மாநகராட்சியிடமிருந்து கொள்ளையிட்டுள்ளது.

தனது ஊழியர்களை நின்று ஓய்வு எடுக்கக் கூட இடைவேளை கொடுக்காமல் சக்கையாக உறிஞ்சி மாதம் ஒன்றுக்கு ஒரு கோடி வரை லாபமாக ஈட்டிய நிறுவனம்தான் ஓனிக்ஸ். முன்பு மாநகராட்சி குப்பையை அகற்றியபோது 3 பேர்கள் செய்த வேலையை ஓனிக்ஸ் தொழிலாளி ஒருவரே செய்யும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார். இத்தகைய வேலைப்பளு தாங்க முடியால் வேலையை விட்டு ஓடியவர்கள் மட்டும் 4000 பேர்களாவர். எஞ்சியிருந்த ஊழியர்களும், ஒப்பந்தம் முடிந்து விட்டதாகக் கூறி குப்பையைப்போல வேலையிலிருந்து வீசியெறியப்பட்டுள்ளனர்.

ஆனால், ""ஓனிக்ஸ் சென்னைக்கு வந்தபின்னர்தான் குப்பைகூளங்கள் சிறப்பாக அள்ளப்படுகின்றன. அனைவருக்கும் அழகான சீருடை; கை நிறைய சம்பளம்; அனைத்து சாதியினரும் இந்தத் தொழில் செய்ய வந்தனர். இதனால் சாதி ஒழிந்திருக்கிறது'' என்றெல்லாம் புகழ்கிறது வீரமணியின் "உண்மை' ஏடு.

பூலே, பெரியார், அம்பேத்கர் ஆகியோர் இடையறாத போராட்டங்கள் மூலம் சாதியத்தை ஒழிக்க வழிகாட்டும்போது சாதி ஒழிப்பை "தனியார்மயம்' சாதிக்கிறது என்று கண்டுபிடித்திருக்கிறது "உண்மை'ஏடு.

நாறுவது தனியார்மயம் மட்டுமல்ல; ""பகுத்தறிவு'', ""சமூக நீதி'' வேடமணிந்த பிழைப்புவாதிகளின் யோக்கியதையும்தான்!

· கவி

Tuesday, November 27, 2007

கறுப்பு வெள்ளைக் கோட்பாடே ராகவனின் புலியெதிர்ப்பு

பி.இரயாகரன்
27.11.2007


புலியெதிர்ப்புத் தளத்தில் இருந்த ஓருவர், சிலவற்றையாவது விவாதிக்க முற்படுகின்றார். அது ராகவன் தான். ராகவனின் நோக்கம் தெளிவானது. எப்படியென்றாலும் பரவாயில்லை, புலியை ஒழிக்க வேண்டும். புலியை ஒழிப்பதில் நடைமுறை சாத்தியமானதாக தான் நம்பும் வழிக்கு தடையானதை மறுத்தல் தான், ராகவனின் புலியெதிர்ப்பு கோட்பாடு. புலியை ஒழிக்கும் அந்த நடைமுறை சாத்தியமான தனது வழியை கூறுவதில்லை. ஏனென்றால் அது பேரினவாதம் மற்றும் ஏகாதிபத்தியத்தை சார்ந்து நின்று ஒழித்தலாகும். வேறு எந்த அரசியல் மார்க்கமும் வழியும் இவர்களிடம் கிடையாது.

மாற்றுகள் அனைத்தையும் அதன் உள்ளார்ந்த கோட்பாட்டையும் மறுத்தல் மூலம், மறுக்கின்ற புலியெதிர்ப்பு உத்தி. மக்கள் போராட்டத்தை மறுக்க வேண்டும். வெளிப்படையாக அதை செய்ய முடியாது. அது மார்க்சியம் சார்ந்தது என்பதால், மார்க்சியத்தை வரட்டுவாதமாக, ஸ்ராலினிசமாக சொற்களில் இழிவாடிக் காட்டுவது. ராகவனின் உத்தியே இதுதான்.

வேடிக்கை என்னவென்றால் புலியெதிர்ப்புக்கு சிவலிங்கம் குழையைக் காட்டி அழைத்து செல்லுகின்றார். ராகவன் தான் அந்த குழையை வெட்டும் ஒரு புலியெதிர்ப்பு தத்துவ மரமாக இருக்க முயலுகின்றார்.

தனக்கு எதிரான கோட்பாட்டை வரட்டுத்தனதாக கூறிக்கொண்டு, வரட்டுத்தனமாகவே ஒற்றைப் பரிணாமத்தில் அனைத்தையும் கறுப்பு வெள்ளையாக்குகின்றார். அது அல்லது இது என்று காட்ட முனைகிறார். புலி அல்லது புலியெதிர்ப்பு என்று அனைத்தையும் இதற்குள்ளாக்கி, கறுப்பு வெள்ளையாக்குகின்றார்.

இந்த முயற்சியில் அனைத்தையும் மறுத்தல் என்ற, மறுப்பியல் மூலம் விமர்சன அரங்கில் தலையிடுகின்றார். இதன் மூலம் தனது புலியெதிர்ப்புக்கு ஒரு தத்துவ முலாம் கொடுக்க தீவிரமாக முனைகின்றார். பல்வேறு இணையங்களில் அவர் தெரிவித்த கருத்துகளைக் கொண்ட இந்த புலியெதிர்ப்பு தத்துவசாரமோ, உள்ளடக்க ரீதியாக ஏகாதிபத்திய உலகமயமாதலுக்கு உட்பட்டது தான். இதை தெரிந்து கொள்வது தான், இதன் பின்னணியையும் அதன் அரசியல் புலத்தையும் புரிந்த கொள்ள உதவும்.

மறுப்பியல் மூலம் தன்னை நிலைநிறுத்தும் உத்தி என்பது, புலியெதிர்ப்புக்கு எதிரான மாற்றுக் கருத்தை மறுப்பது தான். தாம் ஒன்று தான், புலிக்கு எதிரான மாற்று என்று காட்டமுனைவதாகும். அதாவது புலி மற்றும் புலியெதிர்ப்புக்கு மாற்றான மூன்றாம்தரப்பு கருத்தை மறுத்தலாகும். இதற்குள் தான் அவரின் மறுப்புக் கோட்பாடு இயங்குகின்றது.

இதனடிப்படையில் மார்க்சிய வாதங்களையும், அதன் அரசியல் அடிப்படைகளையும் மறுத்தலாகும். மார்க்சியத்தை வரட்டுத்தனமானதாக காட்டுவது, ஸ்ராலினிசமாக கற்பிப்பது, பழையவாதமாக காட்டுவது, வர்க்கம் என்று கூற முடியாது, வாதங்கள் நடைமுறை சாத்தியமற்றது, கடந்து காலத்தில் தோற்றப்போனது, என்று அவற்றை மறுப்பது. இப்படி மாற்றுகளை மறுத்து, தாம் மட்டுமே புலிக்கு மாற்று என்று சொல்ல முனைகின்றார். இப்படி மறுத்தல் மூலம், தமக்கு ஒரு புலியெதிர்ப்பு முற்போக்கு தத்துவம் உண்டு என்று காட்டுகின்ற உத்தி. எப்படி என்று மட்டும் வெளிப்படையாக அவர்களால் சொல்ல முடியாது உள்ளது. புலிக்கு மாற்று என்று இவர்கள் கூறும், அதாவது நடைமுறை சாத்தியமான கருத்தும் நடைமுறையும் வெளிப்படையானது. சிங்களப் பேரினவாத புலி ஒழிப்பு தத்துவத்தை, ஏகாதிபத்திய புலியொழிப்புத் தத்துவத்தையும், சாரமாகவும் நடைமுறையாகவும் கொண்டது. இவர்கள் இதை மட்டும் மறுக்க முடியாது என்பது தான், இதன் உட்சாரமாகும்.

இதனால் மக்கள் போராட்டத்தை வலியுறுத்தும் மார்க்சியத்தை எப்படி சிதைப்பது என்பது, இவர்களின் தத்துவமாகின்றது. நீங்கள் கூறுவது போல் வரட்டு மார்க்சியமாக அது இருந்து விட்டு போகட்டும். அது அதை முன்னெடுப்பவனின் பிரச்சனை.

தலித்தியம், தேசியம், ஆணாதிக்கம்.. போன்ற எல்லாப் பிரச்சனைகளும் இந்த சமூகத்தில் உள்ளது. இந்த சமுதாயத்தில் ஊடுருவியுள்ள இந்தப் பிரச்சனைகளை வரட்டுத்தனமானவர்கள் அதை எப்படியும் வைத்திருக்கட்டும். நீங்கள் எப்படி இந்த பிரச்சனை தீர்ப்பீர்கள். அதை முதலில் சொல்லுங்கள். அதைவிட்டு விட்டு அவர்களைச் சொல்லி, அரசியல் செய்ய முனைவது கேவலமல்லவா?

புலி இதைப் பாதுகாக்கின்றது. புலியொழிப்பில், இதை எப்படி நடைமுறைப்படுத்துவது? இது மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சனைகள் அல்லவா? இதை ஒழிக்க, மக்கள் எப்படி நடைமுறையில் பங்கு பற்றுவது? அந்த அரசியல் கொள்கை, மற்றும் வேலைத்திட்டங்கள் என்ன?

மாhக்சிய வாதிகள் வரட்டுத்தனமாக பார்க்கின்றனர் என்று சொல்லுகின்றவர்கள், தான் எப்படி பார்க்கின்றோம் என்று எதையும் சொல்வதில்லை. புதிய ஆய்வுகள் தேவை, புதிய சூழலுக்கு ஏற்ற போராட்டம் தேவை, மார்க்சியத்தை விடுவிக்க வேண்டும் என்று பலதைக் கூறும் இந்த புலியெதிர்ப்பு கனவான்கள், அது என்னவென்று சொல்வது கிடையாது.

ஒவ்வொன்றையும் மறுக்கும் போது, மற்றொன்றை வைக்க தவறுகின்ற மறுப்பியல் வாதம். இது அவதூறையே அரசியலாகிப் போனவர்களின் செய்முறை அரசியல். மறுப்பியல் என்பது ஆதிக்கத்தில் உள்ளதையே மாற்று தீர்வாகின்றது. அதுவே ஏகாதிபத்திய உலகமயமாதல் தான் தீர்வாகின்றது. தேசத்தை, தேசியத்தை மறுத்தால், மாற்று என்பது நவகாலனித்துவமும் உலகமயமாதலும் தான். இதற்கு இடையில் வெற்றிடம் ஒன்றும் இருக்காது.

இதைத் தான் மறுப்புக் கோட்பாட்டில் ராகவன் கூறுகின்றார். மார்க்சியத்துக்கு வெளியில் மாற்று அரசியல் அரங்கு என்பது, எகாதிபத்திய உலகமயமாதல் அரசியல் தான். இதற்கு வெளியில் உந்த சுயதீனமான சிந்தனை முறையும் கிடையாது. ஏன் நடைமுறையும் கூட கிடையாது. இன்று உலகம் ஒற்றைப்பரிணாமத்தில், உலகத்தை எகாதிபத்தியமாகவே மாற்றி வருகின்றது. இது தேசம் மற்றும் தேசிய எதிர்ப்பிற்கான சிந்தனை முறையின் அரசியல் சாரமாகும். இப்படி சிந்தனை முறையும் இது அல்லது அது என்ற கறுப்பு வெள்ளை நிலைக்குள் மாறிவிடுகின்றது.

இதனால் ராகவன் மார்க்சியத்தை மறுப்பதன் மூலம், உலகமயமாதலை ஆதரிக்கின்றார். அவர் நாம் இதை ஒற்றைப் பார்வையில் பாhப்பதாக கற்பிக்க முனைகின்றார். நாம் இதைப் பார்க்கவில்லை, உலகம் அப்படித்தான் பொருள்வகைப்பட்டு இயக்கப்படுகின்றது. சர்வதேசியம் ஊடாக யார் தேசியத்தை உயர்த்துகின்றனரோ, அதாவது நாங்கள் பன்மைத்தன்மை பாதுகாக்க போராடுபவர்கள். இவர்கள் தான் மார்க்சியவாதிகள். சாதாரணமாக இலகுவாக இதை புரிந்து கொள்ள, இன்றைய விவசாயப் பொருட்கள் அதன் விதைகளையும் எடுத்தால், இதில் கூட தேசியம் உண்டு. தேசிய மறுப்பும் உண்டு. ஒற்றை விதையை, ஒற்றை மரபை, ஒரே பொருளை உலகம் திணிக்கின்றது. இதை தேசியம் மறுக்கின்றது. மார்க்சியம் பன்மையான விதைகளை, பன்மையான மரபை, பன்மைப்பொருளை பாதுகாக்கப் போராடுகின்றது. இதுபோல் தான் மொழியை எடுத்தால், உலகம் ஒற்றை மொழியை, ஒற்றைப் பண்பாட்டை, ஒற்றைக் கலாச்சாரத்தை திணிக்கின்றது. நாங்கள் சர்வதேசியவாதிகள் தேசியம் சார்ந்து பன்மை மொழியை, பன்மைக் கலாச்சாரத்தை பாதுகாக்க போராடுகின்றோம்.

சமூகத்தின் அறிவியலை, அதன் சரியான அனைத்து சமூகக் கூறுகளையும், அதன் பன்மைத் தன்மையையும் தேசிய மறுப்பாளர்கள், உலகமயமாதல் ஆதரவாளர்கள் உலகமயமாதலுக்கு இரையாகின்றனர். உண்மையில் ஜனநாயக விரோதிகளாகவே இதிலும் உள்ளனர்.

இப்படி ராகவன் பின்னுள்ள அரசியல் என்பது, வெறும் புலியெதிர்பு மட்டுமல்ல, ஏகாதிபத்திய தன்மை வாய்ந்தவை.

பின் குறிப்பு:

இதை நாம் தொடர்ந்து அவரின் வாதங்கள் மூலம் மற்றொரு கட்டுரை மூலம் காண உள்ளோம்.

Monday, November 26, 2007

மக்களின் எதிர்பார்ப்பும், புலித் தலைவரின் அலட்சியமும்

பி.இரயாகரன்
26.11.2007

ருடாவருடம் மக்களின் வேறான எதிர்பார்ப்புகளின் மத்தியில், புலிகளின் தலைவர் பிரபாகரன் உரையாற்றுவது வழக்கம். வருடம் ஒரு முறை தான், அவரின் கருத்து என்ற ஒன்றை அவர் வாயால் மக்கள் கேட்க முடியும் என்ற நிலை. மக்கள் அவரிடம் இருந்து எதிர்பார்ப்பது ஒன்று. அவர் உரையாற்றுவது வேறொன்று.

அவர் இந்த தமிழீழம், நாம் கொள்கையில் நேர்மையானவர்கள், பொறுமையின் எல்லையில் காத்துக் கொண்டிருக்கின்றோம், எமது பலத்தை காட்டியுள்ளோம், அடிகுத்து, என்றவாறான உரையாற்றுபவர். இதை மக்கள் கேட்க மட்டும் தான் முடியும். அபிப்பிராயம் சொல்லவோ, விமர்சனம் செய்யவோ முடியாது. புலியை வைத்து ஏய்த்துப் பிழைக்கும் கூட்டத்துக்கு இது மட்டும் போதுமானதாக இருப்பது வழக்கம். அவர்களை திருப்தி செய்யும் வகையில் தான் உரை அமையும். ஏன் புலித்தலைவரின் நோக்கமும் அதுவே தான். சென்ற முறையும் அதற்கு முந்திய முறையும் கூட அது அவ்வளவாக எடுபடவில்லை. இம்முறையும் சென்ற முறையை கூட தாண்டாது, அவ்வளவுக்கு அது சேடமிழுக்கின்றது.

தமிழ் மக்கள் புலித் தலைவரிடம் எதை எதிர்பார்க்கின்றனர்

தாம் நிம்மதியாக வாழும் மனித சூழலை எதிர்பார்க்கின்றனர். பேரினவாதம் கொட்டம் அடித்தாலும், புலிகளாவது ஆறுதலளிக்கக் கூடிய வகையில் தம்முடன் நடந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் அதை எதிர்பார்க்கின்றனர். இதைப் புலிகள் தமது மக்களுக்கு ஏற்படுத்த மாட்டார்களா என்ற எதிர்பார்ப்புடன் வாழ்வை கையில் பிடித்துக்கொண்டு வாழ்கின்றனர். தமது துயரத்தை சொல்லி அழக் கூட ஒரு மக்கள் தலைவன் கிடையாது என்ற நிலையில், ஊமையாகி ஊனமாகி நடுங்கிக் கிடக்கின்றனர்.

மக்கள் தம்மை சக மனிதனாக, சகல உரிமைகளும் கொண்ட சக மனித ஜீவியாக, புலித் தலைவரின் உரிமைகளுக்கு நிகராக, தம்மை மதிப்பதையே அவர்கள் கோருகின்றனர். தமது பிரச்சனைகளைக் காது கொடுத்து கேட்க மாட்டார்களா என்ற எதிர்பார்ப்புடன் தான், மக்கள் நடைப்பிணமாக வாழ்கின்றனர்.

புலித் தலைவர் தனது குடும்பம், தனது குழந்தை, தனது ஆட்களை நடத்துகின்றது போன்று, எமக்கு ஒரு தந்தையாக, குடும்ப உறுப்பினராக உறவினராக, ஏன் ஒரு மக்கள் தலைவனாக இருக்க மாட்டாரா என்று அங்கலாய்க்கின்றனர். புலிக்கு மட்டும் தலைவராக இருந்து, மக்களாகிய தம்மை ஒடுக்குவதை கண்டு அஞ்சி நடுங்குகின்றனர். மக்களாகிய தம்மையும் ஒரு மனிதனாகக் கூட நடத்தமாட்டாரா என்று அங்கலாய்க்கின்றனர்.

வன்னியில் அன்றாடம் மக்கள் பலாத்காரமாக யுத்தமுனைக்கு அனுப்பப்படுகின்றனர். மக்கள் முன், புலித் தலைவனால் யுத்தம் வலிந்து திணிக்கப்படுகின்றது. கட்டாயப்படுத்தி அனுப்பப்படும் மனிதம், உணர்ச்சியற்ற பிணமாகவே சண்டைக்குள் இறக்கப்படுகின்றனர். அங்கு மீண்டும் ஒருமுறை யுத்த முனையில் அவர்கள் கொல்லப்படுகின்றனர்.

இதனால் மனித சாவு நிகழாத நாட்கள் கிடையாது. மரண ஓப்பாரிகள் கேட்காத கிராமங்கள் கிடையாது. ஒவ்வொரு வீட்டையும், நிலை குலைய வைத்துள்ள மரணங்கள். யார் யாருக்கு ஆறுதல் சொல்வது என்று தெரியாதளவில் மரணங்கள். தமது குழந்தைகளை பிள்ளை பிடிகார புலிகளிடம் தொலைத்து விட்டு பரிதவிக்கும் மக்கள். குழந்தையின் பிணத்தை எதிர்பார்த்து, வாசலில் காத்துக்கிடக்கும் மக்கள். இதுதான் அந்த மக்களின் வாழ்வியல். இதைத்தான் புலித்தலைவன் மக்களுக்கு கொடுத்துள்ளான். ஏன் இந்த பூமியில் தின்னக் குடிக்க எதையும் தலைவர் விட்டுவைக்கவில்லை.

எதையும் சொந்தக் குடும்பத்தில் கூட வாய்விட்டு பேச முடியாது. எங்கும் எதிலும் அச்சம். வாய் பேசாது ஊமையாகிய மனங்கள். தமது துயரத்தையே தமக்குள் பொத்திக்கொண்டு வாழ்கின்ற, அடிமை வாழ்க்கை.

இப்படி ஆயிரம் ஆயிரம் மனித துன்பங்களை சுமந்து நிற்கின்ற ஒரு பூமியின், தலைவர் தான் புலித் தலைவர். இந்த புலித் தலைவரிடம் இருந்து மக்கள் எதிர்பார்ப்பது, இதில் இருந்து விடுதலை தான். புலிகளிடம் இருந்து அவர்கள் எதிர்பார்ப்பது, தமது வாழ்வின் மீட்சியைத் தான். தமிழ் மக்களாகிய தம் மீதான, புலிகளின் அடக்குமுறையை அல்ல.

வெல்ல முடியாத ஒரு புலி யுத்தத்தைக் கொண்டு, விடுதலை காண்பதாக கூறுவதை மக்கள் நம்பத் தயாராகவில்லை. தமிழ் மக்களாகிய தமக்கு புலிகள் தரமறுக்கும் சொந்த விடுதலையை தான், புலித்தலைவரிடம் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

உழைப்பு இல்லை. நிவாரணமில்லை. குழந்தைகள் இல்லை. குடும்பங்கள் சிதைந்து விட்டன. உற்றார் உறவினர் எல்லாம் அழிந்து சிதைந்து சின்னாபின்னமாகிப் போய்விட்டார்கள். எஞ்சிக்கிடப்பது தனிமை. வாய் விட்டுப் பேச முடியாத சூனியம். புலம்பக் கூட முடியாத கண்காணிப்பு. இப்படி மனித அவலத்தால் நிறைந்த, மகிழ்ச்சியற்ற ஒரு பூமியாகிவிட்டது. இதைத்தான் புலித் தலைவர் மக்களுக்கு பரிசாக்கியுள்ளார்.

மக்கள் தலைவரின் உரையில் எதிர்பார்ப்பது இதில் இருந்து ஒரு மீட்சியைத்தான். களைத்துப் போன சண்டையைப் பற்றிய வீறாப்போ, தோற்றுக்கொண்டு இருக்கும் சண்டை பற்றிய நம்பிக்கையோ அல்ல. சமாதானம் பற்றிய உறுதியையோ, அன்னிய நாடுகள் பற்றிய நம்பிக்கையீனம் பற்றிய தலைவரின் ஒப்பாரியையோ அல்ல. மனித வாழ்வின் மீட்சிக்கு, மனிதனின் மகிழ்ச்சிக்குரிய ஒரு நல்ல தலைவனின் உண்மையான மனித அக்கறையை, அதையொட்டிய நடைமுறையை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Sunday, November 25, 2007

கொடூரத்திலும் கொடூரம்

பி;.இரயாகரன்
26.11.2007



மிழச்சி இணையத்தை முழுமையாகவே, அவருடன் மோதியவர்கள் கைப்பற்றியுள்ளனர். http://thamilachi.blogspot.com/ இது தமிழ்வலைப்பதிவாளர்கள் மத்தியில் பெரும்பாலும் மௌனமாக ஜீரணிக்கப்பட்டுள்ளது. பெரியார் பற்றிய கருத்துக்களை இணையத்தில் கொண்டு வருவதில் தீவிரமாக செயற்பட்ட தமிழச்சிக்கு, நடந்த இந்தக் கொடுமை. கழுத்தை வெட்டிப் போடுவதற் ஒப்பான கருத்துக் கொலை தான்.


பெரியார் பற்றிய கருத்துக்களை கொண்டு செல்வதில் அவர் செயற்பட்ட விதம் பற்றி , பலருக்கு பல விமர்சனங்கள் இருக்கலாம். அதைக் கடந்து தான் இதைப் பார்க்க வேண்டியுள்ளது.


அவரின் துணிவு, அதை வெளிப்படுத்தும் விதம், உலகம் பற்றிய அப்பாவித்தனமான பார்வை, வெகுளித்தனமாக அவரின் அணுகுமுறை, இதைக் கடந்து அவர் ஒரு பெண் என்ற எல்லையில் சந்திக்கின்ற நெருக்கடிகள் தான், அவரின் வெளிப்பாடுகள்.


இந்த எல்லையில், பெரியார் கருத்துக்களை கொண்டு செல்வதன் மூலம் பகுத்தறிவை சமூகத்தில் ஏற்படுத்திவிட முடியும் என்ற தீவிரமான நம்பிக்கை கடும் உழைப்பாகியது. அதனால் இணையத்தில் அச்சேற்றுவதில் காட்டிய ஆர்வம், அது சார்ந்த உழைப்பு அனைத்தையயும் தொழில்நுட்ப கிரிமினல்கள் மூலம் சம்பந்தப்பட்டவர்கள் திட்டமிட்டு திருடியுள்ளனர். இணையத்தை முற்றாக கைப்பற்றி வைத்துள்ளனர்.


தனது கடுமையான உழைப்பு திருடப்பட்டு அழிக்கப்பட்டதை, கடுமையான வேதனையுடன் எனக்கு வெளிப்படுத்தினார். ஒரு பெண்ணாக இந்த சமூக அமைப்பில் எதிர் கொள்ளும் சவால்கள் பலவிதமானது. பொது வாழ்வில், அதுவும் பொது சமூக ஓட்டத்துக்கு முரணான கருத்துகளுடன் இயங்குதல் என்பது, மிகக் கடினமானது.


இந்த நிலையில் எல்லாவற்றையும் வெள்ளையாகப் பார்க்கின்ற வெகுளித்தனம், அனுபவமின்மை, அப்பாவித்தனம், பிறரை நம்பிச் செயற்படும் வேகம் அது ஏற்படுத்துகின்ற பாதிப்புகள் கடுமையானது. திட்டமிட்ட சதி மூலம் கிடைக்கின்ற அவமானம், உளவியல் ரீதியாக பலத்த பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. மனிதர்கள் எவரையும் வெள்ளையாக நல்லவராக பார்க்கின்ற அப்பாவித்தனம், எதிர்பாராத வகையில் அவரின் முகத்தில் அடிக்கின்றது.


இது உணர்ச்சியை, கோபத்தை, ஆவேசத்தை உருவாக்குகின்றது. மற்றவர் பற்றிய நம்பிக்கையீனத்தை விதைக்கின்றது. துருவி விசாரிக்கத் தூண்டுகின்றது. நிதானமற்ற நிலைக்கு அவரை இட்டுச்சென்று விடுகின்றது. இது அவரின் குறைபாடாக எதிர்நிலைக்கு மாறிவிடுகின்றது.


இதை அவர் கவனத்தில் கொள்வது அவசியம். பழையபடி பழைய தளம் மூலம் மீள முடியாது என்ற உண்மையை அவர் துணிவுடன் ஏற்றுக்கொண்டுள்ளார். இதை எதிர்கொண்டு போராடும் துணிச்சலை, ஆற்றலை அவர் கொண்டே காணப்படுகின்றார். சமூகத்தில் இருந்து கற்றுக்கொள்ளவும், அனுபவத்தை உள்வாங்கியும், சமூகத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப தனது உழைப்பையும் ஆற்றலையும் வளர்த்துக் கொள்ள, எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஆருக்காய் அழிந்தீர்?

ப.வி.ஸ்ரீரங்கன்
19.11.2007


தேகம் நோகிறது

திரண்டவென்னுறுதி குலைகிறது

உயிரே, உறவே, என் தெவிட்டாத தமிழே!

இந்தத் தேகம் ஆடுதே, அதிருதே

ஆருக்காய் அழிந்தீர்?


போருடல் யார்த்த புது மொழியே

துன்பப் பெருவெளியில் தோற்காத உயிரே

தோள் முறியா என் தேசமே,

தூணே, துயரறியாத் துணிவே!



நான் தோற்கிறேன்

தொலைவில் சென்றவரே

தோன்றீரோ மீள

என் தேசக் கருப்பையில்?


என்னிருப்பே,

ஏழ்மைதாங்கிய திடமே

தீனுக்காய் உயிர்த்திருக்கும் எனக்குள்

தீயாய் சுடும் தீபங்களே!




விழுப் புண்காவிச் சோர்ந்த உடலுரியச்

சொரியும் பூவில் உடல் மறைத்துங்களை

தோள் கூடிக் காவத் தெருவில் நிற்க

புதைத்தனரோ புத்தர்கள் புதை சேற்றில்?


பொல்லாத பேயரசு

பெயருக்கும் மனிதமற்ற

மடை நிலமாய் மாறிய இலங்கை

கடை நிலையாய்க் கண்ணீரற்ற மண்


புலம்பெயர்ந்த மனங்களின் மகிழ்ச்சி

விலையுயர்ந்த விமானத்தின் அழிவுக்கா?

என் விலை மதிப்பற்ற வீரத் தேச பக்தர்களே

உங்கள் மரிப்பில் மகிழ்வு தொலைய

மார்பெல்லாம் வலியதிகம்

விழிகொட்டும், வாய் புசத்தும்



என் மகனே, மகளே!

எதற்காக இந்த வேள்வி?

மனம் முடங்கிய எமக்காக

மெல்ல நாமிட்ட பிச்சைக்காய்?


வேண்டாம்!

இத்தகைய வேதனையில்

வெற்றியொன்று வேண்டாம்!!

வீரர்களே விலங்ககற்ற

வேளையொன்று கூடும்

வேல்காவித் தோள் சேர

நூல் காவும் உங்களுறவும்!


தேசம் தொலைத்து

நேசம் அழித்து

தொலை தூரம் சென்று

சருகாய்ச் சாகும் என் உயிருள்

அதிர்வாய்,அக்கினியாய்

உதிர்ந்த உங்களுடலம்!




மெய்யே, மேன்மையே

மிகப் பெரும் வலுவே-என்

விருட்சமே, விழுதே-வீரமே!

துயரத்துள் என் மனம் பாரீர்!


கார்த்திகைக் கரும்பே

கண்ணீரின் பெருமிதமே

காலத்தால் அழியாக் காவியங்களே

காதலித்த மண்ணுக்காய்

வீழ்ந்தீரோ வீர முத்தத்துடன்!


தீராத சோகத்தில்

திக்கற்ற இந்த இழி மனிதன்

தானாடாதபோதும்

தன் தசையாடக் கவி பாடித் தமிழ் நோக

உணர்விட்ட பாதையொன்றில் தனி மரமாய் வான் நோக்கி


வாறீரோ என் வசைகளுக்குள்

ஒரு வாழ்த்துக் கேட்க?

வதங்குகிறேன்,

வாயெடுத்து ஓவென்ற ஓலத்தோடு

சளி சிந்தும் நாசித் துடைப்பிலும்

இந்தக் கிழட்டு விரல்கள்

தமிழழுத்தத் தரணம்வைத்த என் வாரீசுகளே

வாருங்கள் தேசத்து விடியலுக்குள்!




வர்க்க நிலைக்குளென்னுணர்வை வைத்து வதைக்காதீர்

தேசியத்தைச் சொல்லியும்

என்னைத் தாழ்த்தாதீர்!

இதுவென் சுயமாக்கப்பட்ட வலி.

சொன்னாலும் புரியாத தொப்புளுறவு.


தேசத்துக் குழந்தைகளின் உதிர்வோடு

அரசியற் சடுகுடுவா,

சாணாக்கியமா?-வேண்டாம்!


விடியலுக்கான வீரப்போரொன்றைப்

பொழுதோடு போற்றிக்

களமாடும் நிலையொன்றில்

புரட்சிக் கீதமொன்று ஓலத்தை மறைக்க

சீலத்தில் தேசமகள் திளைக்கத் தோன்றுக மீள!


உங்கள் புதுவரவுக்காய்

உழைப்பவர் மகிழ்வார்

உயிரினுள் வைத்துத் துதிப்பார்

தோன்றுக எம்தோள் சேர்ந்து

தேசத்தைக் காக்க


அதுவரையும்

சென்று வாருங்கள் என் செல்வங்களே!

சோகச் சுமையாய்

துயிலுரிந்த உங்கள் உருவங்கள்

நெஞ்சில் கீறிய வலி ஆறுவதற்குள்

வாருங்கள் புரட்சிக் கீதம் இசைத்து!



தில்லை விளாகம் முன்னுதாரணமான கிராமம் முன்னுதாரணமான மக்கள்

திருவாரூர் மாவட்டத்திலுள்ள தில்லைவிளாகம் ஏழாண்டுகளுக்கு முன்புவரை பொன் விளையும் பூமியாக இருந்தது. ஆனால் இன்றோ, அது இறால் பண்ணைகளுக்கும் உப்பளங்களுக்கும் இரையாகி, பாரம்பரிய விவசாயமும் மீன்பிடித் தொழிலும் நாசமாக்கப்பட்டு, அப்பகுதிவாழ் மக்கள் வாழ்விழந்து நிற்கிறார்கள். இப்பகுதியை ஒட்டியுள்ள அலையாத்திக் காடுகளின் அரணால், சுனாமியால்கூட இந்தத் தில்லைவிளாகத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. எல்லை காத்தானாகப் பாதுகாத்து வந்த அக்காடுகளும் இன்று இறால்பண்ணை உப்பளங்களால் அழிக்கப்பட்டு வருகிறது.

ஏழாண்டுகளுக்கு முன்புவரை கடல்தாயோ தன் பிள்ளைகளுக்கு உப்பு கரிக்காத மீனைத் தந்தார்; நிலத்தாயோ வளமான நெல்லையும் சுவையான இளநீரையும் தந்தார். இன்று கடல்தாயிடம் மீனுமில்லை; நண்டுமில்லை. நிலத்தாயிடம் உப்பு நீரைத் தவிர எதுவுமில்லை. கடலைக் கீறும் துடுப்பும் மண்ணைக் கீறும் கலப்பையும் இன்று சீந்துவாரின்றி முடங்கிக் கிடக்கின்றன. இன்றோ நாளையோ அந்த மரபுக் கருவிகள் அடுப்புக்குப் போகும்முன், போர்க் கருவிகளாக மாற்றப்படும் என்ற நம்பிக்கை தில்லைவிளாக மக்களின் கண்களில் தெறிக்கிறது.

வேதாரண்யம் முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. மீனாட்சி சுந்தரம், அவரது மகன் அன்பரசு ஆகியோர் தலைமையிலான 9 பேர் கொண்ட கும்பல் ""கேலக்சி கிரிஸ்டல்'' என்ற பெயரில் தில்லைவிளாகம் பகுதியில் உப்பளம் அமைத்துள்ளது. மக்கள் குடியிருப்புகள், விளைநிலங்களின் அருகிலேயே அரசுக்குச் சொந்தமான 300 ஏக்கர் நிலத்தில் இந்த உப்பளம் நிறுவப்பட்டுள்ளது. சாதாரண உப்பு தயாரிப்புக்காக அனுமதி பெறப்பட்டு, சட்ட விரோதமாக இங்கு இரசாயன உப்பு தயாரிக்கப்படுகிறது. இதற்காக அதிக அளவு உப்பு அடர்த்தி கொண்ட நீர் நிலத்தில் தேக்கப்படுவதால், இப்பகுதியில் 10 முதல் 18 அடிக்குள் கிடைக்கும் நல்ல தண்ணீர் அனைத்தும் குடிக்கவோ, விவசாயத்திற்குப் பயன்படுத்தவோ முடியாத அளவிற்கு உப்பு நீராக மாறிவிட்டது.

இதன் விளைவாக, இப்பகுதி முழுவதும் நெற்பயிர்கள் வளராமல் கருகுகின்றன. தென்னை மரங்கள் வளர்ச்சி குன்றி மொட்டையாகி விடுகின்றன. தில்லைவிளாகத் தெற்குக்காடு பகுதியில் ஓடும் கிளைதாங்கி ஆற்றில் நிறுவப்பட்ட நீரேற்று நிலையம் உப்பு நீரால் அரிக்கப்பட்டு கட்டடமே இடிந்து விழுந்து விட்டது. இந்நீரேற்று நிலையம் மூலம் பாசன வசதி பெற்று வந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பொட்டல் காடாகி விட்டன.

இந்த அபாயத்தை முன்கூட்டியே அறிந்த மக்கள், ""கேலக்சி கிரிஸ்டல்'' கும்பல் உப்பளம் அமைக்க 1994இல் அரசிடம் விண்ணப்பித்தபோதே எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தினர். மக்கள் எதிர்ப்பையும் மீறி நாகை மாவட்ட ஆட்சியர் 11.10.1995இல் உப்பளத்திற்கு அனுமதி அளித்தார். ஆனாலும் உப்பளப் பணியினைத் தொடங்க விடாமல் மக்கள் தடுத்து நிறுத்திப் போராடினர்; உயர்நீதி மன்றத்தில் உப்பளம் தொடங்கத் தடையாணையையும் பெற்றனர்.

இருப்பினும், 1998இல் தடையாணையை உடைத்து விட்டு போலீசை அடியாளாக வைத்துக் கொண்டு உப்பளம் அமைத்தது "கேலக்சி' கும்பல். இதற்குப் பிறகும் சளைக்கவில்லை மக்கள். தயாரிக்கப்பட்ட உப்பை எடுக்கவிடாமல் தடுத்துப் போராடினர். மக்களின் போராட்டத்தைக் கண்டு அஞ்சிய ""கேலக்சி'' கும்பல் உயர்நீதி மன்றத்துக்கு ஓடியது. நீதிமன்றமோ உப்பை அள்ளிச் செல்ல உதவும் வகையில் போலீசு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டது.

1995ல் உப்பளத்திற்காகப் பெறப்பட்ட அனுமதி 5 ஆண்டுகளுக்கே செல்லுபடியாகும். எனவே 2000வது ஆண்டுக்குப் பிறகு அனுமதியை நீட்டிக்கக் கூடாது எனப் போராடும் மக்கள் சார்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு மீதான விசாரணையின் போது ""உப்பளத்திற்கு அனுமதியை நீட்டிக்கப் போவதில்லை'' என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் அறிவித்தது.

இந்நிலையில், சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு அதிகாரியிடம் பணத்தை வீசியெறிந்து ""உப்பளத்தினால் பாதிப்பு ஏதுமில்லை'' என்ற "நற்சான்றை' வாங்கியது கேலக்சி. இந்த நற்சான்றானது உப்பளம் தொடங்குவதற்குரிய சான்று அல்ல. ஆனாலும் அதனைக் காட்டி மீண்டும் சட்ட விரோதமாக உப்பு தயாரிப்பதைத் தொடங்கியது கேலக்சி. இதற்கு எதிராக மறுபடியும் போராடி சட்ட விரோதமாகத் தயாரிக்கப்பட்ட உப்பை அள்ளுவதைத் தடுத்து நிறுத்தினர் மக்கள். ஆனால் உயர்நீதி மன்றம் இச்சட்டவிரோத உப்பை அள்ளிக் கொள்ள கேலக்சி கும்பலுக்கு சட்டபூர்வமான அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

உப்பளங்கள் மட்டுமல்ல; கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இறால் பண்ணைகளால் விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வு நாசமாக்கப்பட்டுள்ளது. மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி பகுதிகளில் பெய்யும் மழை நீரானது, தில்லைவிளாகப் பகுதியிலுள்ள கிளைதாங்கி ஆறு, கந்தபறிச்சான் ஆறு, மரைக்கா கோரையாறு, பாமணி ஆறு, வளவனாறு ஆகியவற்றின் வழியே பாய்ந்தோடி கடலில் கலப்பதால், இப்பகுதியில் படியும் வண்டல் மண்ணே வளமான இயற்கை உரமாகி பொன்விளையும் பூமியாகத் திகழ்ந்தது. ஆனால், தில்லை விளாகத்தில் 3500 ஏக்கர் பரப்பளவு கொண்ட கடல்அலம் பகுதி இன்று இறால் பண்ணைகளால் தரிசாகிக் கிடக்கிறது.

இறால் பண்ணைகளில் இதர மீன் குஞ்சுகளை அழிக்கவும், வளர்ச்சியடைந்த இறாலின் மேலோடு (தோல்) உரிவதற்கான ஏராளமான இரசாயனப் பொருட்கள் இப்பண்ணைகளில் கொட்டப்பட்டு, பின்னர் அவற்றை கால்வாய்களின் வழியே கடலுக்குத் திறந்து விடுவதால், ஆறுகளும் கடற்பகுதியும் நஞ்சாகி இப்பகுதியின் மீன்வளமே அழிக்கப்பட்டு வருகிறது. ""பத்து லிட்டர் டீசல் போட்டு படகுகளில் சென்று இரவு முழுவதும் அலைந்தாலும் நூறு ரூபாய்க்குக் கூட மீன்கள் கிடைப்பதில்லை'' என்று மீனவர்கள் குமுறும் அளவுக்கு இறால் பண்ணைகளால் மீனவர் வாழ்வு நாசமாக்கப்பட்டுக் கிடக்கிறது. இதுதவிர, மீனவர்கள் கடலுக்குச் செல்லும் வழிகள் அனைத்தும் இறால் பண்ணைகளால் அடைக்கப்பட்டுள்ளதால், அவர்கள் பிழைக்க வழியின்றி அல்லற்படுகின்றனர்.

உப்பளங்களாலும் இறால் பண்ணைகளாலும் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு, 1994இலிருந்தே போராடி வரும் இப்பகுதிவாழ் விவசாயிகளும் மீனவர்களும், 2004இல் தீவிரமாகப் போராடி இக்கொள்ளைக் கூட்டத்தை அப்பகுதியிலிருந்தே விரட்டியடித்தனர். அரசு நிலத்தை ஆக்கிரமித்து, மக்களின் வாழ்வுரிமையைப் பறித்து, சட்டவிரோதமாக தனி சாம்ராஜ்யம் நடத்திவரும் இக்கொள்ளைக் கூட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்கத் துப்பில்லாத முத்துப்பேட்டை போலீசு, போராடிய மக்களில் முன்னணியாளர்கள் 78 பேரைக் கைது செய்து சிறையிலடைத்தது. நீதிமன்றமோ பிணை வழங்க மறுத்தது. இரு மாதங்களுக்குப் பிறகு, 78 பேரும் திருச்சியில் தங்கி காலை, மாலை என இரண்டு வேளையும் இரண்டு மாதங்களுக்குக் கையெழுத்திட வேண்டும்; ஒவ்வொருவரும் தலா ரூ.5000 பிணைத் தொகையும் இரு நபர் ஜாமீனும் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் பிணை வழங்கியது.

இதன் மூலம், போராடும் மக்களைச் சிறையிலடைத்து மீண்டும் சட்டவிரோதமாக இரசாயன உப்பு தயாரிக்கவும், இறால் பண்ணைகளை நிறுவவும் போலீசும் நீதிமன்றமும் துணை நின்றன. தாசில்தார், கோட்டாட்சியர், உப்புத்துறை ஆணையர், சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு அதிகாரிகள், ஓட்டுப் பொறுக்கிகள், அமைச்சர்கள் என மிகப்பெரிய அரசாங்கக் கூட்டமே, தில்லைவிளாகத்தை அழித்துவரும் ஆக்கிரமிப்புப் கும்பலின் பின்னே அணி வகுத்து நின்றன. கைதுகள், பொய்வழக்குகள், சிறைசித்திரவதை என அடக்குமுறைகள் தொடர்ந்தாலும் சளைக்காமல் இப்பகுதிவாழ் மக்கள் போராடி வருகிறார்கள்.

தற்போது 2004-05, 2005-06 ஆகிய இரு ஆண்டுகளில் உற்பத்தி செய்யப்பட்ட உப்பை அள்ளிச் செல்ல முயற்சிக்கிறது, கேலக்சி கும்பல். உப்பை எடுத்துச் செல்ல அனுமதித்தால் மீண்டும் உப்பளம் அமைக்கும் முயற்சி நடக்கும் என்பதால், ""உயிரைக் கொடுத்தேனும் உப்பு எடுக்க அனுமதிக்க மாட்டோம்'' என்று உறுதியுடன் நிற்கிறார்கள் தில்லைவிளாக மக்கள். ""எத்தனை பேர் செத்தாலும் பரவாயில்லை; உப்பை அள்ளியே தீருவோம்'' என்று எச்சரித்து வெறியோடு அலைகிறது கேலக்சி கும்பல். இதற்காக உப்பளக் கொட்டகை மற்றும் மோட்டாரை தாங்களே சேதப்படுத்திவிட்டு, போராடி வரும் முன்னணியாளர்கள் 20 பேர் மீது பொய்ப் புகார் கொடுத்துச் சிறையிலடைத்துவிட்டு, உப்பை அள்ளிச் செல்ல முயற்சிக்கிறது. போலீசு எடுபிடிகளோ உப்பள வாயிலில் கண்ணும் கருத்துமாக காவல் காக்கின்றனர்.

இதுவொருபுறமிருக்க, மீனவர்களின் வாழ்வோடும், வளத்தோடும் பின்னிப் பிணைந்துள்ள கடலிலிருந்தும் கடற்கரையிலிருந்தும் மீனவர்களை வெளியேற்றும் சட்டத்தை மைய அரசு கொண்டு வரத் தீர்மானித்துள்ளது. ஏற்கெனவே எம்.எஸ்.சுவாமிநாதன் துரோகக் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டுள்ள மைய அரசு மீனவர்களைக் கூண்டோடு அழிக்கும் ""கடற்கரை மேலாண்மை அறிவிப்பாணை 2007'' யைக் கொண்டு வந்து செயல்படுத்தத் தீர்மானித்துள்ளது. சுருக்கமாகச் சொன்னால், விவசாயத்திலிருந்து விவசாயிகளையும், கடல் கடற்கரையிலிருந்து மீனவர்களையும் வெறியேற்றிவிட்டு உள்நாட்டுவெளிநாட்டு முதலாளிகளுக்கு இப்பகுதிகளைத் தாரை வார்க்கும் மிகப் பெரிய சதி வேகமாக அரங்கேறி வருகிறது.

தில்லைவிளாக மக்களின் போராட்டம், நிலத்திற்கும் வாழ்வுரிமைக்குமான போராட்டம் மட்டுமல்ல; இது தாராளமயம் தோற்றுவித்துள்ள பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம்; மறுகாலனியாக்கத்துக்கு எதிரான போராட்டம்; இந்தப் போராட்டம் ஒரு சில நாட்களில் முடிவுக்கு வந்துவிடக் கூடிய போராட்டமல்ல என்பதை அனுபவரீதியாக உணர்ந்துள்ள தில்லைவிளாக மக்கள் கடந்த 13 ஆண்டுகளாகத் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

""என்னுடைய மண்தான் எனக்கு உயிர்மூச்சு'' என்று தனது சொத்துக்களை விற்று, முன்னணியில் நின்று போராடும் பெரியவர் சுப்பிரமணியம்; ""இந்த உப்பளங்களையும் இறால் பண்ணைகளையும் ஒழித்துக் கட்டும் வரை எனக்குத் திருமணம் இல்லை'' என்று 35 வயதை எட்டிய பிறகும் திருமணம் செய்து கொள்ளாமல் போராட்டத்தின் மீது மாளாக்காதல் கொண்டுள்ள இளைஞர் மெய்யப்பன்; பெற்றோருடன் கைக்குழந்தையாகப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைசென்று, இன்று போராட்டத்தோடு வளர்ந்து வரும் புதிய தலைமுறையினரான சிறுவர் சிறுமிகள் என தில்லைவிளாக மக்களின் போராட்டம் முன்னுதாரணமிக்கதாகத் திகழ்கிறது. மே.வங்க நந்திகிராம மக்களின் போராட்ட வழியில், ஒரிசா பழங்குடியின மக்களின் போராட்ட வழியில் ஓட்டுக் கட்சிகளைப் புறக்கணித்து விட்டு தில்லைவிளாக மக்களின் உறுதியான போராட்டம் தொடர்கிறது. மறுகாலனிய ஆக்கிரமிப்புக்கு எதிராக சளையாது போராடிவரும் தில்லைவிளாக மக்களுக்கு ஆதரவாக நிற்பதும், போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு முன்னெடுத்துச் செல்ல உதவுவதும் புரட்சிகர ஜனநாயக சக்திகளின் உடனடிக் கடமை; நம் கடமை.

பு.ஜ. செய்தியாளர்கள்