தமிழ் அரங்கம்

Saturday, August 19, 2006

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் அடிமைச் சாசனம்!

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்- அம்பலமாகிறது அடிமைச் சாசனம்!

ந்தியாவின் எதிர்கால மின்சாரத் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்யவிருக்கும் கற்பக விருட்சமாகவும் "இந்தியாவும் ஒரு அணுஆயுத வல்லரசுதான்' என்பதற்கு அமெரிக்காவின் வாயிலிருந்து கிடைத்த பிரம்மரிஷிப் பட்டமாகவும் மன்மோகன் சிங் கும்பலால் சித்தரிக்கப்பட்ட இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் உண்மை முகம் நான்கே மாதங்களில் அம்பலமாகியிருக்கிறது. தானாக அம்பலமாகவில்லை. 27 ஜூலை 2006 அன்று அமெரிக்க நாடாளுமன்றம் இந்த ஒப்பந்தத்தைச் சட்டமாக்குவதற்காக நிறைவேற்றியுள்ள திருத்தங்கள் இவற்றை அம்பலமாக்கியிருக்கின்றன. அவை பின்வரும் நிபந்தனைகளை விதிக்கின்றன:

""1. இந்தியா இனி அணுஆயுதங்கள் தயாரிக்கக் கூடாது; கைவசம் இருக்கின்ற அணுஆயுதங்களை மெல்ல மெல்ல அழிப்பதையும் இறுதியில் அணுஆயுதங்களே இல்லாமல் செய்வதையும் உத்திரவாதப்டுத்த வேண்டும். இது எந்த அளவுக்கு நிறைவேறியிருக்கிறது என்பது குறித்து அமெரிக்க அதிபர் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

2. அணுஆயுதம் தயாரிப்பதற்குத் தேவையான மூலக்கூறுகளின் உற்பத்தியை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட வேண்டும். இந்தியா குறிப்பிட்ட கால இலக்கிற்குள் இந்த உற்பத்தியை நிறுத்துவதை அமெரிக்க அதிபர் உத்திரவாதப்படுத்த வேண்டும் என்பதுடன் இது குறித்தும் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு ஆண்டுதோறும் அதிபர் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

3. இந்த ஒப்பந்தம் அமலுக்கு வரவேண்டுமானால் அதற்கு முன் இந்தியாவின் அணு உலைகளை ஆய்வுக்கு உட்படுத்துவது தொடர்பாக சர்வதேச அணுசக்தி ஏஜென்சியுடன் இந்தியா உடன்பாடு செய்து கொள்ள வேண்டும்.

4. இந்தியாவின் அணுசக்தித் திட்டங்கள், அவற்றின் உற்பத்தித் திறன், கையிலுள்ள அணு ஆயுதங்கள், அணுஆயுதம் தயாரிக்க உதவும் மூலக்கூறுகளின் கையிருப்பு, இந்தியாவில் ஆண்டுதோறும் வெட்டியெடுக்கப்படும் யுரேனியத்தின் அளவு ஆகிய எல்லா இரகசியங்கள் குறித்தும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 31ஆம் தேதிக்குள் அமெரிக்க அதிபர் நாடாளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

5. அணு ஆயுதப் பரவல் தடுப்புக்காக அமெரிக்கா உருவாக்கியுள்ள (கட்டைப் பஞ்சாயத்து) அமைப்பில் இந்தியாவும் உறுப்பினராக வேண்டும். 6. இரானின் அணுசக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்காவுக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.''

இவை மட்டுமின்றி, இந்த ஆண்டின் இறுதியில் கூடவிருக்கும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையான செனட்டில் நிறைவேற்றப்படுவதற்காகப் பின்வரும் திருத்தங்களும் தயாராக உள்ளன.

""1. இந்திய அணு உலைகள் அனைத்தையும் முழு கண்காணிப்பின் கீழ் கொண்டு வராதவரை தொழில் நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ள முடியாது.

2. 14 அணுசக்தி நிலையங்களை மட்டும் சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின் கண்காணிப்புக்கு அனுமதிப்பதாக இந்தியா கூறியுள்ளதை ஏற்கவியலாது; மீதமுள்ள 8 அணுசக்தி நிலையங்களையும் கண்காணிப்புக்குள் கொண்டுவர வேண்டும்.

3. இரான் போன்ற அணுஆயுதமில்லாத நாடுகள் எத்தகைய கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகின்றனவோ, அதே விதமான கண்காணிப்புக்கு இந்தியாவும் உட்படவேண்டும்; இந்தியாவுக்கு அணுஆயுத நாடு என்ற சிறப்புத் தகுதியோ, விதிவிலக்கோ தரவியலாது.

4. சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின் சோதனை மட்டுமின்றி அமெரிக்க அதிகாரிகளின் நேரடி சோதனைக்கும் இந்தியா உட்படவேண்டும்.

5. இந்தியாவுக்குச் செறிவூட்டப்பட்ட யுரேனியம் வழங்கலாமென அமெரிக்கா திருப்தியடையாத பட்சத்தில், யுரேனியம் விற்கும் பிற நாடுகளும் இந்தியாவிற்கு அதனை விற்பனை செய்யாமல் தடுக்க அமெரிக்க அரசு முயற்சிக்க வேண்டும்.''

சென்ற ஆண்டு ஜூன் 18ஆம் தேதி புஷ்ஷýம் மன்மோகனும் அமெரிக்காவிலிருந்து வெளியிட்ட கூட்டறிக்கையிலும் இந்த ஆண்டு மார்ச் மாதம் கையெழுத்திடப்பட்ட புஷ் மன்மோகன் சிங் உடன்பாட்டிலும் பூடகமாக மறைக்கப்பட்டிருந்த அமெரிக்க மேலாதிக்க நோக்கங்களை இந்தத் "திருத்தங்கள்' வெளிக் கொண்டு வந்திருக்கின்றன. ""இந்தியாவின் இறையாண்மையையும் அணுசக்தி சுயசார்பையும் பாதிக்கின்ற எந்தவித நிபந்தனைகளுக்கும் உட்படமாட்டோம்'' என கடந்த மார்ச் மாதத்தில் இந்திய நாடாளுமன்றத்திற்கு உறுதிமொழி அளித்த மன்மோகன் சிங், அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த 20 நாட்களாக இந்த திருத்தங்கள் குறித்த விவாதங்கள் நடைபெற்றபோது வாய் திறக்கவில்லை. ரசியாவில் நடைபெற்ற ஜி8 நாடுகளின் மாநாட்டிற்குச் சென்றிருந்த மன்மோகன் சிங்கிடம் தங்களது நிருபர் நிர்ப்பந்தித்துக் கேட்டபிறகுதான், திருத்தங்களின் சில அம்சங்கள் கவலையளிப்பதாக மன்மோகன் சிங் பதிலளித்தாரென்று தனது தலையங்கத்தில் (ஜூலை20) குறிப்பிடுகிறது. ""தி இந்து'' நாளேடு. அதன் பிறகு புஷ்ஷை சந்தித்த மன்மோகன் சிங், ""போட்ட ஒப்பந்தத்தை ஒருதலைப்பட்சமாக ஏன் மீறுகிறீர்கள்?'' என்று கேள்வி எழுப்பவில்லை. ""நாங்கள் ஒரு ஜனநாயக நாடு. நாங்கள் எங்களுடைய நாடாளுமன்றத்துக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. சில விசயங்கள் எங்களுக்கும் எங்கள் நாடாளுமன்றத்துக்கும் கவலை அளிக்கின்றன'' (இந்து, 18.7.06) என்று புஷ்ஷிடம் கவலை தெரிவித்தாராம். ஆவன செய்வதாக புஷ் உறுதியளித்துள்ளாராம்! ""அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெறும் விவாதம் குறித்து நானும் இந்திய வெளியுறவுச் செயலர் சியாம்சரணும் ஜூலை 10ம் தேதியன்று பாரிசில் 5 மணிநேரம் பேசியிருக்கிறோம்'' என்று கூறி மன்மோகன் சிங் கும்பலின் குட்டை உடைத்துவிட்டார் அமெரிக்க வெளியுறவுத்துறை இணைச்செயலர் நிகோலஸ் பர்ன்ஸ். "ஆவன செய்வதாக'க் கூறிய புஷ்ஷின் வெள்ளை மாளிகையோ நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ள திருத்தங்களை வரவேற்றிருக்கிறது. திரைமறைவு பேரங்கள் முடிந்துவிட்ட நிலையில் இந்திய மக்களை ஏமாற்றுவதற்காக நடத்தப்படும் நாடகங்கள்தான் மன்மோகன் வெளியிடும் அறிக்கைகள் என்ற உண்மையை மன்மோகன் சிங்கே நிரூபிக்கிறார்.

அணுசக்திக் கமிசனின் முன்னாள் தலைவர் எம்.ஆர். சீனிவாசன், பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குநரும், சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின் இந்தியப் பிரதிநிதியுமான ஏ.என். பிரசாத், அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவரான ஏ.ஆர். கோபாலகிருஷ்ணன் என விஞ்ஞானிகள் அனைவரும் ஒருமித்த குரலில் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்துள்ளனர். அவர்களுடைய வாதங்கள் எதற்கும் மன்மோகன் கும்பல் பதிலளிக்கவில்லை. ""அனாவசியமாகப் பிரச்சினையை மிகைப்படுத்தாதீர்கள். செனட்டிலும் விவாதம் முடிந்து அமெரிக்க சட்டத்தின் இறுதி வடிவம் வரட்டும். அதில் ஏதாவது பிரச்சினை இருந்தால் நான் நாடாளுமன்றத்துக்குத் தெரிவிக்கிறேன்'' என்பதுதான் மன்மோகன் சிங் கூறியுள்ள பதில்.

""அணு ஆயுதம் தயாரிக்கும் உரிமையைப் பறிப்பதால் அது இந்தியாவின் பாதுகாப்புக்கே ஆபத்து'' என்று கூச்சலிட்டது பாரதிய ஜனதா. ""சுயேச்சையான வெளியுறவுக் கொள்கை வகுக்க முடியாமல் செய்து இந்தியாவை அமெரிக்காவின் உலக யுத்த தந்திரத் திட்டத்தில் பிணைக்கிறது; அணுசக்தி சுயசார்பை அழிக்கிறது'' என்று கூறி இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக "நாடாளுமன்றத்தின் உணர்வை வெளிப்படுத்தும் தீர்மானத்தை'க் கொண்டுவரப் போவதாக "எச்சரித்தது' சி.பி.எம். கட்சி. ""அத்தகையதொரு தீர்மானம் கொண்டுவரப்பட்டால் நான் இந்த அரசில் இருக்க மாட்டேன், இந்த அரசாங்கமும் இருக்காது'' என்று பதிலுக்கு சி.பி.எம்.மை எச்சரித்தார். பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி. உடனே, தாங்கள் சி.பி.எம்.மின் தீர்மானத்தை ஆதரிக்கப் போவதில்லை என்று நழுவியது பா.ஜ.க. ""அரசாங்கத்தை மிரட்டுவது எங்கள் நோக்கமல்ல, இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான ஒரு சட்டகத்தை முன்மொழிவதுதான் எங்கள் நோக்கம்'' என்று விளக்கமளித்திருக்கிறார் "மார்க்சிஸ்டு' கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத்.

புஷ் மன்மோகன் ஒப்பந்தம் என்பது சொக்கத்தங்கம் போலவும், அதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் திருத்தங்கள்தான் பிரச்சினை என்பது போலவும் ஒரு பொய்ச்சித்திரம் ஓட்டுக்கட்சிகளாலும் ஊடகங்களாலும் திட்டமிட்டே உருவாக்கப்படுகிறது. மாறாக, இன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்கள் அனைத்தையும் அமெரிக்க தூதர் முல்ஃபோர்டு, கன்டலிசா ரைஸ், நிகோலஸ் பர்ன்ஸ் போன்ற பல அதிகாரிகளும் மார்ச் ஒப்பந்தத்திற்கு முன்னதாகவே பேசியுள்ளனர். இவை தொடர்பாக மன்மோகன் சிங் கூறிய பொய்களும் அப்போதே அம்பலமாகி இருக்கின்றன. (பு.ஜ. மார்ச், ஏப்ரல் 2006) நாடாளுமன்றத்துக்கு மட்டுமின்றி அமைச்சரவைக்குக் கூடத் தெரியாமல் ஜூன், 18, 2005 அன்று மன்மோகன் சிங் புஷ்ஷடன் இணைந்து அமெரிக்காவிலிருந்து வெளியிட்ட கூட்டறிக்கையும், ஜூன் 28,2005இல் பிரணாப் முகர்ஜி அமெரிக்காவில் கையெழுத்திட்ட இராணுவ ஒப்பந்தமும்தான் மார்ச் மாதம் கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படைகள். அந்த அடிப்படையில்தான் இரானுக்கு எதிராக சர்வதேச அணுசக்தி ஏஜென்சியில் இந்தியா வாக்களித்தது. இரானுடனான எரிவாயுக் குழாய் திட்டம் கிடப்பில் போடப்பட்டதற்கும் இதுதான் அடிப்படை. இந்தியாவின் அரசியல், பொருளாதார, இராணுவக் கொள்கைகள் இந்த அடிப்படையிலிருந்துதான் தீர்மானிக்கப்படுகின்றன.

ஆட்சியே போனாலும் ஒப்பந்தத்தை விடமுடியாது என்ற பிரணாப் முகர்ஜியின் மிரட்டலுக்கும், தேசிய கவுரவத்தின் மொத்தக் குத்தகைதாரர்களான பார்ப்பன பாசிஸ்டுகளின் "பல்டி'க்கும், அமெரிக்க ஒப்பந்தத்துக்கு ஆலோசனை வழங்குவதாக "மார்க்சிஸ்டுகள்' அடக்கி வாசிப்பதற்கும் வேறென்ன விளக்கம் இருக்கிறது? ஆசியாவுக்கான அமெரிக்க அடியாள் என்ற பதவியில் நியமனம் பெறுவதன் மூலம் மறுகாலனியாக்கத்தின் ஆதாயங்களைச் சுவைக்க வெறி பிடித்து அலைகின்றது இந்தியத் தரகு முதலாளிவர்க்கம். அதன் பொருட்டு "இறையாண்மை, சுயசார்பு' போன்ற பழைய உள்ளாடைகளை அவிழ்த்து வீசிவிட்டு அம்மணமாக நடனமாடவும் தயாராக இருக்கிறது. இநத நிர்வாண நிலையை எழுத்துபூர்வமாக உத்திரவாதப்படுத்த விரும்புகிறது அமெரிக்க வல்லரசு. ""நாமும் ஒரு வல்லரசு என்று கூறிக் கொள்வதால் அதைக் கொஞ்சம் இலைமறை காயாக செய்யக்கூடாதா?'' என்பதுதான் இப்போது நாடாளுமன்றத்தைக் கலக்கிக் கொண்டிருக்கும் விவாதம். இந்தக் கேலிக்கூத்தின் முரண்நகையாக பத்தாண்டுகளுக்கு முன் பிரதமர் அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள் அமெரிக்க உளவாளிகள் என்ற பிரச்சினையை எழுப்பியிருக்கிறார் "தேசபக்தர்' ஜஸ்வந்த் சிங். இப்போது பிரதமர் நாற்காலியில் அமர்ந்திருப்பவரே ஒரு அமெரிக்க உளவாளிதானே!

Wednesday, August 16, 2006

இனவாத யுத்தம் மூலம் அமைதியும் சமாதானமும் தோன்றுமா?

இனவாத யுத்தம் மூலம் அமைதியும் சமாதானமும் தோன்றுமா?

பி.இரயாகரன்
16.08.2006


றுதி யுத்தத்துக்கான நாலாவது ஈழப்போர் தொடங்கிவிட்டது என்று, அடிக்கடி புலித்தரப்பாலும் புலிப் பினாமிகளாலும் மகிழ்ச்சியாகவே பரபரப்பூட்டப்படுகின்றது. ஆனால் யுத்த முனைப்புகள் அனைத்தும், அவர்கள் விரும்பும் கோரமான யுத்தமின்றி சப்பென்று பிசுபிசுத்து போகின்றது. இருந்தபோதும் பரந்த தளத்தில் பாரிய தாக்குதல்கள், யுத்தப்பிரகடனமின்றி அடிக்கடி இரு தரப்பாலும் நடத்தப்படுகின்றது. யுத்தத்தை நோக்கி முழுமையாக அவர்கள் சென்றுவிட முடியாத நிலையில், இதில் இருந்து மீளமுடியாத வகையிலும், அன்னிய தலையீடுகள் பலமாக உள்ளதையே நிலைமைகள் தெளிவுபடுத்துகின்றது. யுத்தம் வேண்டும் என்ற புலித்தரப்பின் பொதுவான வெறியூட்டும் கருத்துகளுள், பேரினவாதிகளின் ஒரு பகுதியினரின் யுத்த வெறியூட்டலும், அடிப்படையில் மக்கள் விரோதத் தன்மை கொண்டவை. மக்களையிட்டு ஒரு துளி தன்னும் அக்கறைப்படாத, அவர்களை ஏறிமிதித்து, அவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழ்வோரின் யுத்த கோசமாகவே இவை உள்ளது. யுத்தத்தில் ஈடுபடுவோரின் வெற்றி தோல்விகளையிட்டும், மக்களை நிராகரித்தபடி வெளியிடும் யுத்தக் கூச்சலையிட்டும், அவர்களின் கற்பனை பினாற்றல்களையிட்டும், நாம் அதன் போக்கில் அலட்டிக் கொள்ளமுடியாது. இதை நாம் தெளிவாக புரிந்து கொள்வது அவசியம்.


யுத்தம் ஒன்றைச் செய்யக் கூடிய அளவுக்கு, இருதரப்பும் பல ஆயிரம் பேர் கொண்ட படைகளை தமது நோக்கத்துக்காகவே வைத்துள்ளனர். மக்களின் உழைப்பை ஏமாற்றி அபகரித்ததன் மூலம், நவீன ஆயுதங்களால் தம்மை அலங்கரித்தபடி, கொலைவெறியுடன் கொன்றுக் குவிப்பதற்காக கூச்சலிடுகின்றனர். இந்தக் கொலைவெறி யுத்தம் பல ஆயிரம் ஏழை எளிய பெற்றாரின் குழந்தைகளை பலியெடுக்கும் வகையில், இனவெறியூட்டப்பட்டுள்ளது. சுயசிந்தனையற்ற ஒரு கூலிப்பட்டாளமாக, தமது மரணத்துக்கான தூக்குக்கயிறை தாமே திரித்தபடி, கொலைக்களத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர். இதற்கு தலைமை தாங்குவோரின் பிள்ளைகளோ தமிழ் சிங்கள வேறுபாடின்றி, மக்களிடம் திருடிய பணத்தில் ஆடம்பரமாக வாழ்கின்றனர். இப்படி யுத்தத்தல் ஈடுபடுத்தப்படும் பிள்ளைகளின் தாய்மை கருப்பையுடன் சூறையாடப்பட, சொந்தக் குழந்தைகள் அதன் மேல் சொகுசாக தமக்குத் தாமே மகுடத்தை சூடுகின்றனர். இந்த நிலையில் பரஸ்பரம் கொன்று, குவிக்கும் இரண்டு இராணுவங்கள், மோதிக் கொள்ளும் போது கிடைக்கும் வெற்றிகள் தோல்விகள் அனைத்தும், மக்களுக்கு எதிரானதாகவே இருப்பதை யாரும் தடுக்கமுடியாது. யுத்தத்தை பற்றிய, அதன் வெற்றி தோல்விகள் பற்றிய எமது நிலை இதுதான்.


யுத்தம் ஏற்படுத்தும் வாழ்வியல் இழப்புகள், மனித இழப்புகள் அனைத்தும் மக்களின் வாழ்வை சூறையாடி அழிப்பதில் தான் மையங் கொள்கின்றது. மீட்சியற்ற மனித வாழ்வை உருவாக்கி, சூனியமாக்குகின்ற மனித அவலத்தை கொலைகார யுத்தம் ஏற்படுத்துகின்றது. அப்பாவி ஏழை எளிய குழந்தைகளை பலியிட்டு, மனித நாகரிகத்துக்கு எதிரான வக்கிரத்தைப் புகுத்தி, மக்களுக்கு எந்த விடிவையும் பெற்றுத்தராத யுத்தத்தை மனித இனத்தின் மீது திணிப்பதை நாம் அங்கீகரிக்க முடியாது. தமிழ்பேசும் மக்களின் நலனை அடிப்படையாக கொண்ட ஒரு தீர்வுக்காக நியாயமான யுத்தத்தை புலிகள் ஒருநாளுமே நடத்தவே முடியாது. மாபியாத்தனத்தையும், அராஜகத்தையும் கொண்டு தமிழ்மக்களை அடக்கியொடுக்க, ஒரு யுத்தம் புலிகளுக்கு அவசியமாகி நிற்கின்றது. மனித இழிவைப் புகுத்தி, மனித அடிமைத்தனத்தை ஏற்படுத்தி, தமது சொந்த நலன்களை அடையவே, தமிழ் மக்களைப் பலியிடப்படுவதையே இந்த யுத்த முனைப்பின் மூலம் நாம் காண்கின்றோம்.


பாசிசப் புலிகள் நடத்தமுனையும் யுத்தம், பேரினவாதிகளின் இன வெறியாட்டத்துக்கு தீனி போடுகின்றதே ஒழிய அதை ஒழித்துக்கட்ட முடியாது. புலிகளின் இருப்பு பேரினவாதத்தின் இருப்பில் எப்படி தங்கியுள்ளதோ, அதுவே தலைகீழாகவும் பொருந்துகின்றது. நியாயமான மக்கள் யுத்தத்தை புலிகள் நடத்த முடியாது, அனைத்து சமூக அடிப்படையும் இழந்து மாபியா பாசிட்டுகளாகவே மாறிநிற்கின்றனர். புலிகளின் ஆதரவுத் தளம் மாபியாத்தனத்தால் அலங்கரிக்கப்பட்ட நிலையில், பொறுக்கி வாழும் கும்பல் அதன் பின்னால் யுத்தவெறியுடன் கூச்சலிடுகின்றது.


யுத்தத்தின் மூலம் தீர்வு என்றும், இறுதி யுத்தம் என்றும், தலைவரின் முடிவுக்காக தவம் கிடந்து காத்திருப்பதாக கூறும் இவர்களின் யுத்த வெறிக் கூச்சல் ஒருபுறம், மறுபக்கத்தில் இறுதி யுத்தம் இன்னமும் பிரகடனப்படுத்தப்படவில்லை. இறுதி யுத்தம் மூலமான தீர்வு என்கின்றார்களே! அந்த தீர்வு என்ன? அது எப்படி சாத்தியம்? பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணமுடியாதவர்கள், அதில் பேரினவாத அரசை வெல்ல முடியாதவர்கள், எப்படி யுத்தம் மூலம் தீர்வைப் பெறுவார்கள்? பேச்சுவார்த்தை மேசையைவிட்டு ஒருதலைப்பட்சமாக ஓடிவந்தவர்கள், யுத்தத்தின் பின்னணியில் எப்படி எந்த வழியில் வெல்வார்கள். அரசியல் ரீதியான தோல்வி கண்மூடித்தனமான யுத்தவெறியாகுமே ஒழிய, ஒரு அரசியல் தீர்வைத் தராது. இந்த நிலையில் தான், முட்டாள்தனமாக யுத்தம் மூலம் தீர்வு காணமுடியும் என்கின்றனர். இப்படி யுத்தம் பற்றி கற்பனையில் கனவுலகில் புலித்தேசியத்தை நகர்த்த முனைகின்றனர்.


மீண்டும் யுத்தத்தை நோக்கி செல்வதில் போட்டி போடுகின்றனர். யார் முதலில் யுத்தத்தைத் தொடங்கியது என்பதை சொல்லாத வகையில், யுத்தத்தை தொடங்கி நடத்துவதில் தான் கவனம் கொள்கின்றனர். அங்கு கூட தார்மீக நேர்மை கிடையாது. இரகசியமான முழுமையற்ற ஒரு மட்டுப்படுத்தப்பட்ட யுத்தத்தை முன் கூட்டியே தொடங்கிவிட்டனர். வெளியில் தத்தம் நேர்மையற்ற போலித்தனத்தை மூடிமறைக்க அமைதி சமாதானம் பற்றி புல்லரிக்கும் வகையில், மயிர்பிளக்கும் பினாமி வாதங்கள். யுத்தநிறுத்தம் தொடர்வதாக கூறிக் கொண்டு, யுத்த முனைப்பை தூண்டுகின்றனர். யுத்த நிறுத்தம் தொடர்வதாக கூறிக்கொண்டு, இரண்டுதரப்பு தத்தம் அரசியல் நேர்மையையும் அம்மணமாகவே மானவெட்கமின்றி தூக்கில் தொங்கவிட்டுள்ளனர்.


நோர்வேயும், உலகமும் யுத்தநிறுத்த ஒப்பந்த பேப்பரை கையில் தூக்கி காட்டியபடி தம் பங்குக்கு புலம்பி அழுகின்றனர். அவர்களாகவே வலிந்து கையெழுத்திட்ட ஒப்பந்த விதிகளை நேர்மையாக கடைப்பிடிப்பார்கள் என்று எம்மை நம்புமாறு கூறமுனைகின்றனர். அதைக் காட்டி சிணுங்குகின்றனர். இரண்டு பாசிச அமைப்புகள், தாம் செய்த ஒப்பந்தத்தை நேர்மையாக எப்படித் தான் கடைபிடிக்க முடியும்? ஒரு தரப்பு மக்களின் விடுதலைக்காக நேர்மையாக செயல்படுவதாக இருந்தால், அது வேறுவிதமாக அமையும். நியாயமான யுத்தத்துக்கு கூட பாசிசம் வலிந்துதள்ளும். ஆனால் இரண்டு பாசிட்டுகள் சூழ்ச்சிகளும், சதிகளும், நியாயமற்ற கோரிக்கையினுள்ளும், யுத்த நிறுத்த மீறலையே ஆணையில் வைக்கும். இதுவே நிகழ்ந்தது. மக்களை இடையில் நிறுத்தி பந்தாடுவதன் மூலம் அவர்களை கொன்று குவிப்பதே நிகழ்கின்றது.


தாமாக செய்துகொண்ட ஒப்பந்தத்தை அவர்களே தான் கையெழுத்திட்டனர் என்ற வகையில், அவர்களே சந்தேகிக்க வண்ணம் அதை அவர்களே மறுத்தளித்தனர். பாசிச அமைப்புகள் என்ற வகையில், அதை நடைமுறைப்படுத்துவதில் தமக்கேயுரிய ஜனநாயகவிரோத உணர்வுடன் அதை மறுதளித்தனர். இந்த ஒப்பந்தம் மக்களுக்காக, மக்களின் நலனை அடைப்படையாக கொண்டு உருவானவையல்ல. தத்தம் குறுகிய நலகைன அடிப்படையாகக் கொண்டு, குறுகிய நோக்கத்தை ஈடுசெய்யும் வகையில், மக்களுக்கு எதிராக உருவாக்கப்பட்டது. மக்களை நலனை அடிப்படையாக கொண்டு ஒப்பந்தம் உருவாக்கப்பாடத நிலையில், மக்களுக்கு எதிராகவே அது இருந்தபோதும் கூட, அவர்கள் செய்து கொண்ட அவர்களின் ஒப்பந்தத்தை அவர்களே மீறுவது மன்னிக்க முடியாத மனிதவிரோதக் குற்றமாகும்.


யுத்தநிறுத்த மீறல் என்பது, ஆரம்ப முதலே அதன் அத்திவாரமாக இருந்தது. தமிழ்பேசும் மக்களின் ஜனநாயகத்தை அங்கீகரிக்க மறுத்த அரசும் புலிகளும், இதற்காக ஒருங்கே கடிவாளமிட்டனர். சாதாரண மனிதன் தன் கருத்தை சொல்ல முடியாத பாசிச சூழலில், இந்த ஒப்பந்தம் இலகுவாக மீறப்படுவது ஒரு நிகழ்சியாக உலகம் அங்கிகரித்தது. பேச்சுவார்த்தையின் உள்ளடக்கமும், கோரிக்கைகளும் மக்களுக்கு தெரியாத வகையில் இரகசியமாக்கப்பட்டன. அந்தளவுக்கு அவை மக்கள் விரோதத் தன்மை வாய்ந்தவையாக, அதுவே பேரம் பேசலுக்குள்ளாகியது. மனிதனின் அடிப்படை உரிமைகளை அங்கிகரிக்காத, அதை நடைமுறைப்படுத்தாத ஒப்பந்தம், அதைப்பற்றி பேச மறுப்பவர்கள், இயல்பாகவே ஒப்பந்தத்தை மீறுவதை அடிப்படையாக கொண்டு கொலைவெறியாட்டமாடினர். இதற்கு உலக நாடுகள் ஒத்தூதியது.


பாசிசக் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்ட பேரினவாதம் ஒரு அரசாக இருந்தமையால், இயல்பாகவே ஓப்பந்த மீறல்களை மட்டுப்படுத்தி கட்டுப்படுத்தி மிதமாக நடந்து கொண்டது. அதாவது ஓப்பந்தத்தை கடைப்பிடிப்பதன் மூலம், மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மட்டுப்படுத்தியது. மாறாக மாபியாத்தனத்தை அடிப்படையாக கொண்ட பாசிசப் புலிகள், அரசு அல்லாத ஒரு அராஜகக் கும்பலாக இருந்தால், ஆரம்ப முதலே ஒப்பந்தமீறலையே சதா தமது அரசியலாகக் கொண்டிருந்தனர். அமைதி சமாதானம் நிலவிய ஒவ்வொரு நாளும், சராசரியாக ஒருவரைப் புலிகள் கொன்றனர். இதுபோன்று பலவற்றை பலதளத்தில் மக்களுக்கு எதிராகவே புலிகள் செய்தனர். பணத்தை திரட்டுவதில் மாபியா வழிமுறையை ஆணையில் வைத்து, கோடிகோடியாக மக்களின் உழைப்பைத் திருடினர். மக்கள் மூச்சக்கு கூட வரிவிதித்தனர். இந்தத் திருட்டைத் தான் அவர்கள் அரசியல் வேலையென்றனர்.


சுனாமியை உருவாக்கிய மனித பிணங்களைக் காட்டி, அவர்களுக்கு உதவ என்று கூறி, அந்த மக்களுக்கு என்று மக்கள் கொடுத்த பல நூறு கோடி பணத்தை திருடி ஏப்பமிட்டனர். அதில் ஒருபகுதி யுத்தவெறி கூச்சல் ஊடாகவே, மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றது.


இப்படியான மக்கள் விரோதிகள் தாம் செய்து கொண்ட ஒப்பந்தத்தையே மறுத்தனர். கடத்தல், சித்திரவதை, கொலை, கொள்ளை, கப்பம், வரி என்று எண்ணில் அடங்காத மனித அவலத்தையே, தமிழ் மக்கள் மீது திணித்தனர். இதையே அவர்கள் அரசியல் என்றனர். மாற்றுக் கருத்து, அவர்களுடன் முரண்பாடாக கதைத்தல், பணம் தரமறுத்தல் என அனைத்துக்கும் அவர்கள் கொடுத்த பரிசோ, கைதும் சித்திரவதையும் கொலையுமாகும். இதை அனுபவித்தது எதிரிகள் அல்ல, தமிழ் மக்களே. இப்படி யுத்தநிறுத்த ஒப்பந்த மீறல் நடந்தபோது, மக்கள் வாயே திறக்கமுடியாத மந்தைக் கூட்டமாக அடிபணியும் இழிந்தவராக்கப்பட்டனர். இப்படி ஒப்பந்தம் ஒரு தலைப்பட்சமாக புலிகளால் பந்தாடப்பட்டது. மறுபக்கத்தில் இராணுவம் கொலை, கொள்ளை, கடத்தல், பாலியல் வன்முறை போன்றவற்றில் ஈடுபடுவதை முற்றாக நிறுத்தியிருந்தது. புலிகள் மட்டும் இதை குத்தகைக்கு எடுத்து, அதையே அரசியல் என்றனர்.


பேரினவாதம் புலிகளின் இந்த மக்கள் விரோத வக்கிரத்தை ஊக்குவித்து, தமிழ் மக்களிடம் இராணுவம் நல்ல பிள்ளையாகவே தன்னைக் காட்டிக் கொண்டது. சூழ்ச்சியை அடிப்படையாக கொண்டு, புலிகளின் அரசியலற்ற இராணுவ பேரங்களுக்குள் வெற்றிகரமாகவே புலிகளை தொடர்ச்சியாக தனிமைப்படுத்தினர். தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனையை புலிகள் பேசமறுத்து, புலிப்பிரச்சனைiயை மட்டும் புலிகள் பேச, இதுவே பேரினவாதத்தின் வெற்றிகரமான பேரினவாத அரசியலாகியது. புலிகள் கண்மண் தெரியாத வேகத்தில் தோல்விகளைச் சந்தித்தனர். ஆனால் அதை நியாயமாக மக்கள் முன் முன்வைக்க முடியாத வகையில், புலிப் பேரங்களுக்குள் முடங்கிப் போனார்கள். புலியே தமிழ் மக்கள் என்ற புலிப் பாசிசத்தை, பேரினவாதம் தனக்கு சார்பாக மாற்றிக் கொண்டது. புலியின் பாசிசத்தைக் காட்டி, அதை உலகளாவில் தனிமைப்படுத்தியதன் மூலம், தமிழ் மக்களையே குறிவைத்து தனிமைப்படுத்தினர்.


இதன் மூலம் பேரினவாதம் தமிழ் மக்களின் உரிமையை மறுத்தனர். புலியையும் மக்களையும் ஒன்றாக காட்டி, புலிகளின் பாசிசத்தின் மூலம் தமிழ் மக்களையே இழிவுபடுத்தியது. தமிழ் மக்களின் அடிப்படை வாழ்வுரிமையை மறுத்தனர். அனைத்தையும் புலியாக காட்டி, தமிழ் மக்களுக்கு எதிரான இனவாதத்துக்கு தீனி போட்டனர். இந்த இனவாதத் தீ, தீக்கொழுந்தாக மாறி தமிழ் பிரதேசத்திலும், தமிழர் அல்லாத பிரதேசத்திலும் இனப்பிளவுகளை ஆழமாக்கியது. இருந்தபோதும் மிகக் கவனமாகவே இராணுவ ரீதியாக இதை கையாளாத வகையில் செயற்பட்டது. புலிகள் அளவுக்கு பாரிய யுத்த நிறுத்த மீறலை பேரினவாத அரசு செய்யவில்லை. வழமையான கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், பாலியல் வன்முறைகள் நடைபெறுவதை முற்றாக நிறுத்தியது. இது அறவே இல்லாத பொதுச் சூழலே, பொதுவாக தமிழ் பிரதேசத்தில் நிலவியது. அரசியலற்ற இராணுவ நடத்தைகளை அடிப்படையாக கொண்ட புலித் தேசியம் அரசியலில், தொடர்ந்தும் இந்தநிலை நீடித்தால் என்ன நடக்குமோ என்ற அச்சம் அதுவே கிலியாக மாறியது.


,அரசியல் ரீதியாக இனவாத அரசுடன் பேரம் பேசும் அரசியல் ஆற்றலை இழந்த புலிகள், அதில் இருந்து ஒருதலைப்பட்சமாக தாமாக விலகிக் கொண்டனர். பேசுவதையும், கோருவதையும் பகிரங்கமாக முன்வைத்து தம்பக்க நியாயத்தை பேசமுடியாத அளவுக்கு, குறுகிய நலன் கொண்ட மக்கள் விரோதக் கோரிக்கையாகவே புலிகளின் அரசியல் கோரிக்கைகள் சிதைந்துபோனது. பொல்லைக் கொடுத்து அடிவாங்கிய கதையாகவே இது நடந்தேறியது. பேரினவாதம் தமிழ்மக்களின் அரசியல் கோரிக்கையை பேசுவதற்கு பதில், குறுகிய புலிக்கோரிக்கையை பேசியதன் மூலம் அரசியல் இலாபம் அடைந்தனர். இதன் மூலம் அரசு, அரசியல் மற்றும் இராணுவ ரீதியாகவே பலம் பெற்றது. அமைதி சமாதானத்தை கடைப்பிடிப்பதாக உலகுக்கு காட்டிக் கொள்வதிலும் வெற்றிபெற்றது. புலிகளின் அரசியல் ரீதியான இருப்பே கேள்விக்குள்ளாகியது. இதில் இருந்து தப்பிப்பிழைக்க இராணுவத்தை சீண்டுவது அவசியமாகியது. இராணுவத்தை உசுப்பிவிட்டு, அதன் கோரமுகம் தம்மை விட கோரமானதாக காட்டவிரும்பி இராணுவத்தை சதா கிண்டிக்கிளறினர். தம்மை இராணுவத்தைவிட மேன்மையானவராக காட்டிக் கொள்வது புலிக்கு முன் நிபந்தனையாகியது. இராணுவம் மீதான சீண்டுதலை புலிகள் வலிந்து தொடங்கினர். சதா இராணுவத்துடன் மோதல் நடப்பதாக காட்டுவதும், இராணுவம் மக்களை துன்புறுத்துவதாக காட்டுவது புலியின் இராணுவ அரசியலுக்கு அவசியமாகியது.


மக்களின் அரசியல் உரிமை என்ற அரசியல் எல்லைக்குள் போராடுவதை தவிர்த்து, குறுகிய இராணுவ வாத்துக்குள் இராணுவத்தைச் சீண்டினர். தொடர்ச்சியான சீண்டுதல்கள் மூலம், இராணுவத்துடன் வலிந்து பல மோதல்களை மக்களின் பெயரில் உருவாக்கினார்கள். இராணுவம் செய்தது போன்று சம்பவங்கைள புலிகளே செய்து, அதைத் திரித்து இராணுவத்துக்கு எதிரானதாக மாற்றினர். இப்படி இராணுவத்துடான மோதல்கள், சீண்டல்கள் மூலமான எதிர்வினைகளைக் கொண்டே, தம்மை அரசியல் ரீதியாக தக்கவைக்க முனைந்தனர். ஆனால் இதிலும் அவர்கள் வெற்றி பெறமுடியவில்லை. இராணுவம் அரசு என்ற வடிவில் கொண்டிருந்த கட்டுப்பாட்டை, அரசாக அல்லாத அராஜகவாத குழுவின் செயற்பாட்டால் வெற்றி கொள்ளமுடியவில்லை.


இதனால் இராணுவத்தைக் கொல்லுதல், இராணுவத்தை தாக்குதல் என்ற வடிவிற்கு புலிகள் நிலைமையை மாற்றினர். அனைத்தையும் தமிழ் மக்கள் செய்வதாகவே பசப்பினர். திடீர் தாக்குதலை நடத்தினர். அதையும் மக்களின் மேல் அபாண்டமாகவே போட்டனர். இப்படி இராணுவம் மீதான ஒரு தலைப்பட்சமான தாக்குதல்கள், கொலைகள் ஒரு புதிய நெருக்கடியை உருவாக்கியது. கிளைமோர், கைக்குண்டு வெடிப்பு அன்றாட அரசியல் நிகழ்ச்சியாக மாறியது. இராணுவம் எதிர் வன்முறையின்றி அமைதிகாத்தது. இருந்தபோதும் கூட, இதிலும் இராணுவம் ஒரு நெகிழ்ச்சிப் போக்கைக் கையாண்டது. புலிகள் இதன் மூலம் கூட, தம்மையும் தமது கட்டமைப்பையும் பெரியளவில் தக்கவைக்க முடியவில்லை. புலிப் பினாமிகளுக்கு மட்டும், இது உற்சாகம் தருவதாக இருந்தது. மக்கள் இதில் இருந்து விலகி அமைதியை விரும்பினர். புலியின் தாக்குதலுககு எதிரான அபிப்பிராயத்துடன் மௌனமாகவே வாழவேண்டிய அளவுக்கு அவர்கள் மேல் படுகொலைகளை புலிகள் தீவிரமாக்கினர்.


புலிகள் தாக்குதலை படிப்படியாக இராணுவம் மீது விரிவுபடுத்தினர். இராணுவமும் புலிப்பாணியில் செயற்படத் தொடங்கியது. இனம் தெரியாத படுகொலைகளை, இனம் தெரியாத கடத்தலை புலியின் வழியில் தொடங்கினர். புலிகளைப் போல் ஊடுருவித் தாக்குதல் என்ற வடிவத்தைத் தொடங்கினர். இதில் இராணுவமும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருகின்றது. இதற்கு முன்னை நாள் துரோகக் குழுக்களையும், கருணா குழுவின் ஒருபகுதியையும் கூட பயன்படுத்திக் கொண்டது. இதைவிட கருணா குழு மட்டும் தனது தனித்துவமான புலிகள் மேலான தாக்குதலை மட்டும் உரிமை கோரியது. மற்றவைகளை இனம் தெரியாத தாக்குதலாகவே, புலிகளின் பதிலில் பதிலளித்தனர். புலிகள் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் புலியின் சுதந்திரமான நடமாட்டத்தை இதன் மூலம் சிதைத்து வருகின்றனர். இப்படி ஒரு இரகசியமான யுத்தத்துக்கு புலிகள் பாணியில் இராணுவம் முன்னேறியது.


இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தில் தொடர்ச்சியான கொலைக்கும் தமக்கும் சம்பந்தமில்லை என்று புலிகள் கூறியதன் மூலம், அதன் பாதுகாப்புக்கு இராணுவமே பொறுப்பு என்று கூறியதன் மூலம், புலிகள் அல்லாத பிரதேச கண்காணிப்பை அதிகரிக்கவைத்தனர். கடத்தல், காணாமல் போதல், கொலைகள் அன்றாட நிகழ்ச்சியாக்கினர். யார் ஏன் கொல்லப்பட்டனர், கடத்தப்பட்டனர் என்ற தகவல்கள் அனைத்தையும், குறித்து குற்றம்சாட்ட முடியாத வகையில் அனைத்தையும் புலிகள் மாற்றி அமைத்தனர். அதற்கு தாமும் இரையாகினர். மக்கள் படைகள், பெயர் பலகையற்ற துண்டுப்பிரசுரப் பேர்வழிகளின் அறிக்கைகள் கூட படிப்படியாக காணாமல் போனது.


உண்மையில் புலிகள் பாணியில் இராணுவமும் தன் வழியை தீர்மானித்துக் கொண்டு செயலாற்றியது. யுத்த நிறுத்த மீறல்கள் இனம் தெரியாதவையாகி அதுவே நாற்றமெடுக்கும் வண்ணம் பெருகியது. யுத்த நிறுத்தம், அமைதி, சமாதானம் புலிகள் மற்றும் இராணுவத்துக்கு இடையில் சிக்கிக் கொண்டது.


புலிகளின் தாம் இருந்த நிலையில் இராணுவத்தை சீண்ட எடுத்த முயற்சிகள் பெருமளவில் வெற்றி பெறமுடியவில்லை. எல்லாம் கமுக்கமாக அடங்கிப் போனநிலையில் தான், யுத்தத்தை தூண்டும் வகையில் பாரிய தாக்குதல்கள் இராணுவ முகாங்களை நோக்கி முடுக்கிவிடப்பட்டது. இதையும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இராணுவம் கையாண்டது. மாவீரர் செய்தியில் பிரபாகரன் கூறியது போல், ஒரு இராணுவத் தாக்குதலை தொடங்க புலிகள் எடுத்துவந்த பல முயற்சிகள், மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ எதிர்வினை மூலம் புலிகளை அதற்குள் முடக்கினர்.


யுத்தத்தை நோக்கிய நகர்வுகளைக் கூட, எதிர்வினையாக காட்டி இராணுவம் மட்டுப்படுத்தியது. புலிகளின் தாக்குதல் எல்லைக்குள், இரணுவத்தின் எதிர்வினைகள் விரிவானதாக நடத்தி மட்டுப்படுத்துகின்றனர். இப்படி ஒரு முன்முயற்சி கொண்ட புலிகளின் இராணுவ நடவடிக்கை முன்னேற முடியாது தேங்கி விடுகின்றது. இன்று நடந்து கொண்டிருப்பது இதுதான். தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் இப்படி இராணுவவாதத்துக்குள் காணாமல் போய்விடுகின்றது. எல்லாம் புலி மயமாகி அதற்குள் அஸ்தமாகி வருகின்றது. இதில் மீட்சி என்பது தமிழ்மக்கள் தமது விடுதலைக்காக தாமே போராடுவதில் மட்டுமே அமைதியையும் சமாதானத்தையும் அடையமுடியும். இதற்கு மாற்று வழி கிடையவே கிடையாது.


Tuesday, August 15, 2006

அப்பாவிகளை படுகொலை செய்வதற்கு யார் உரிமை வழங்கியது

நிர்ப்பந்தத்துக்கு உட்பட்ட அப்பாவிகளை படுகொலை செய்வதற்கு யார் உரிமை வழங்கியது


பி.இரயாகரன்
15.08.2006

யோ அப்பாவிகளை கொன்று போட்டாங்கள் என்று புலிகள் ஓலமிடுகின்றனர். அவர்கள் அப்பாவிகள் அல்ல புலிகளே, எனவே கொன்றோம் என்று பேரினவாத அரசு திமிரெடுத்து கூச்சலிடுகின்றது. முல்லைத்தீவில் நடந்த குண்டுவீச்சில் கூட்டம் கூட்டமாக கொல்லபட்டவர்களையிட்டு, யாருக்கும் உண்மையான மனித அக்கறை கிடையாது. மாறாக இக் கொலையை எப்படி அரசியல் வியாபாரம் செய்வது என்பதில் தான் அதிக அக்கறை கொண்டனர்.



தமிழ்மக்கள் மத்தியில் 'சிங்கள"வன் அப்பாவித் தமிழனை கொன்றுவிட்டான் என்று அரசியல் செய்யவும், சிங்கள மக்கள் மத்தியில் புலிகளை நாம் கொன்று விட்டோம் என்று காட்டி அரசியல் செய்யவும், இந்த அப்பாவிகளின் மரணங்கள் உதவுகின்றது. மறுபக்கத்தில் சர்வதேச சமூகத்தின் முன் இதை வைத்து எப்படி அரசியல் விபச்சாரம் செய்ய முடியுமா என்று ஆளுக்காள் முட்டி மோதுகின்றனர். இப்படி மரணமான பிணங்களை வைத்துக் கொண்டு, தாய்மையினை கருப்பையுடனேயே ஏலத்துக்கு விலைபேசி விற்கின்றனர்.



கொல்லப்பட்டவர்களை புலிகள் அல்ல என்று புலிகள் அறிவிக்க, பேரினவாதம் புலிகளின் பயிற்சி முகாம் என்கின்றனர். இப்படி அரசியல் சந்தைக்கு ஏற்ற அரசியல் விளக்கங்களையும், ஆதாரங்களையும் காட்டி அரசியல் விபச்சாரம் செய்கின்றனர்.



மரணமடைந்தவர்கள் ஏதுமறியாத அப்பாவிகள். அவர்கள் புலிகளாக இருந்தாலும் கூட அப்பாவிகளே. புலிகள் தமது சொந்தப் பிரதேசத்தில் வாயே திறக்க முடியாத ஒரு நிலையில், சமூகத்தை தமது பாசிச பிடிக்குள் வைத்துள்ளனர். இந்த நிலையில் அவர்களின் பிடியில் சிக்கியுள்ளவர்கள் அப்பாவிகளே. உண்மையில் அவை இராணுவ பயிற்சி முகாமாக இருந்தாலும் கூட கொல்லப்பட்டவர்கள் அப்பாவிகளே. புலிகளின் நிர்ப்பந்தம் எதுவுமின்றி எந்த பயிற்சியும், ஆட்சேர்ப்பும் இன்று நிகழ்வதில்லை. இப்படி கூட்டமாக படுகொலைக்குள் சிக்கிக் கொள்பவர்கள், தமது சொந்த சுயவிருப்பத்தின் அடிப்படையில் இணைந்தவர்கள் அல்ல. இது போன்ற மையங்களில் கூடிக்கொள்பவர்கள் சுயமாக கூடுபவர்களுமல்ல, அதேபோல் சுய ஆற்றலுமற்ற நடைப்பிணமாக புலிக்குக் கட்டுப்பட்டு வாழும் அப்பாவிகளே.



அப்பாவி மக்கள் மீதான குண்டு எப்படி வீழ்கின்றதோ, அப்படி அப்பாவி மக்களை தமது சொந்த குறுகிய தேவைக்கும் புலிகள் பயன்படுத்துகின்றனர். பேரினவாதம் தனது பாசிச நடத்தையை நியாயப்படுத்துகின்றது. புலிகளின் பயிற்சி பெறுபவர்களை கொல்லும் உரிமை தனக்கு உண்டு என்கின்றது. இங்கு பாசிச கொலைவெறி அரசை நாம் காண்கின்றோம். புலிகள் என்றால் எப்படியும் கொல்லலாம் என்ற வாதமும், எப்படியும் நியாயப்படுத்தலாம் என்ற பாசிச வக்கிரமும் அரங்கேறுகின்றது. இதே பேரினவாத அரசு மக்களை புலிகள் கட்டாயப்படுத்தித் தான் பயற்சிகளை வழங்குவதாக கூறிக் கொள்ளும் அதே தளத்தில், அவர்களை கொன்று போடுவதை மறுபுறத்தில் ஒருங்கே நியாயப்படுத்துகின்றது. கொல்லும் உரிமை பற்றியும், அதை நியாயப்படுத்தி தர்க்கிக்கும் அரசின் வாதங்களின் முன், அரசியல் ரீதியாக எதுவும் செய்யமுடியாத வகையில், புலிப்பாசிச அரசியல் அவலத்தைச் சந்திக்கின்றது. உண்மையில் இதற்கு பதிலடியாக அப்பாவி சிங்கள மக்களைக் கொன்று போடுவதையே மாற்றாக தேர்ந்தெடுக்கின்ற அரசியல் கொக்கரிப்பை புலிப்பினாமிகள் வெளியிடுகின்றனர்.



அரசு காலத்துக்கும் நேரத்துக்கும் ஏற்ப படுகொலைகளை நியாயப்படுத்தும் வக்கிரம் இன்று அரங்கேறுகின்றது. இது புலிப்பாசிசத்தின் விளைவால், உலகளாவிய அங்கீகாரம் பெற்று நிற்பதை நாம் காண்கின்றோம். பேரினவாதம் திமிராக பதிலளிப்பதையும், புலிகளின் எதிர்வினையையும் தமக்கு சாதகமாக பயன்படுத்தி விடுகின்ற தொடர்ச்சியான அரசியல் சூழலையும் நாம் காண்கின்றோம். அந்தளவுக்கு புலித்தேசிய பாசிச அரசியல் அம்பலமாகி தலைவிரிகோலமாகி நிற்கின்றது. பேரினவாதம் தன்னை இதற்குள் மூடிப்பாதுகாக்கின்றது.



மாறாக புலிகள் கொல்லப்பட்டவர்களை புலிகள் அல்ல என்று கூறி அரசியல் செய்ய முனைகின்றனரே ஒழிய, இந்த இளம் சிறுமிகளை இழந்த தாய்மை மீது ஒரு துளி தன்னும் மனித நோக்கில் அக்கறை கொண்டது கிடையாது. மனிதம் பற்றி புலியின் இழிவான சிறுமைத்தனமான அணுகுமுறை, தமிழ் மக்கள் மத்தியில் கூட புலிக்கு உண்மையான நேர்மையான அனுதாபம் எதுவும் கிடையாது. வெறுப்பும், கோபமும் கொண்ட மூடிமறைப்புடன் கூடிய சந்தர்ப்பவாத மக்கள் கூட்டமாகவே, தமிழ் மக்களின் இருப்பே மாறி நிற்கின்றது.



இந்த நிலையில் உலகுக்கு இப்பிணங்களைக் கொண்டு அரசியல் செய்யப் புறப்பட்டவர்கள் படுதோல்வியை அடைந்துள்ளனர். உலகெங்கும் இது புலிகள் மீதான தாக்குதல் செய்தியாகவே செய்தியாகியுள்ளது. இதை மறுத்து தலைகீழாக நின்று புலிகள் சாத்தியம் செய்ய முனைகின்றனர். ஆடு மேய்த்தவன் புலி என்று சும்மா கத்தி ஊரைக் ஏமாற்றி கூட்டியதும், பின் உண்மையில் புலி வரும் போது என்ன நடந்ததோ, அந்த ஆடு புலிக் கதை போல் இந்தப் புலியின் நிலைமை மாறிவிடுகின்றது.



உண்மை என்பதையும், நேர்மை என்பதையும் மறுத்து புலிகள் செய்யும் அரசியல், உண்மையையும் பொய்யாகிவிடுகின்றது. எது உண்மை எது பொய் என்பதே இன்று கேள்விக்குள்ளாகி விடுகின்றது. செய்திகளை திரித்து புரட்டுகின்ற புலிகளின் வக்கிரம், உண்மையைக் கூட நிறுவ முடியாத நிலைக்கு சென்றுவிடுகின்றது. நம்பகத்தன்மையே பலியாகிவிட்ட நிலையில், சந்தேகம் மட்டுமின்றி உண்மையானவை கூட தரம்தாழ்ந்து மழுங்கடிக்கப்பட்டுவிடுகின்ற அவல நிலைமை உருவாகிவிட்டது.



இந்த நிலையில் பேரினவாதப் படுகொலையை வியாபாரம் செய்யவே புலிகள் விரும்பினர். அதிக மரணங்களை விரும்பி, அதையே உண்மையாக விரும்பியவாறு பிரசுரித்தனர். அதிக மரணங்கள் உலகின் முன்னான விளம்பரத்துக்கு உதவும் என்று நம்பினர். புலிகளின் நிதர்சனம் டொட் கொம் கொல்லப்பட்டவர் எண்ணிக்கையைக் கூட, தனது கற்பனை திறனுக்கு ஏற்ப பிரசுரித்தது. மற்றைய புலிப்பினாமிகள் கூட, அதை பிரசுரிப்பதில் தயக்கத்துடன் கூடிய நம்பகத்தன்மையற்ற நிலையால் முழுமையாக பிரசுரிப்பதை தவிர்க்கின்றனர். இதை பல செய்தியில் நாம் அவதானிக்கலாம். புலிப் பினாமிகளே தமது செய்தியை நம்பமுடியாத நிலை உருவாகிவிட்டது. இந்த நிலையில் உலகம் எப்படி புலித் தகவலை நம்பும். முட்டாள் ரசிகர் கூட்டத்தைத் தவிர, யாரும் எதையும் நம்புவதில்லை. அடிக்கடி அனைத்தும் கண்முன்னாலேயே பொய்யாகிவிடுகின்றது. இப்படி அதிக மரணங்கள், அதிக பிரச்சாரத்துக்கு உதவும் என்ற வகையில் செய்திகளை திரித்து விடுகின்றனர். உலகம் பொய்மைக்குள் உண்மையை காணமறுக்கின்ற நிலை, புலிக்கு எதிராக ஒரு தலைப்பட்சமாக மாறுகின்றது.



இன்று பெருமளவில் புலிச்செய்திகள் புனைவுகளையும், கற்பனைகளையும் தாங்கி வெளிவருகின்றது. அத்துடன் சர்வதேச ரீதியான அமைப்புகளின் பெயரிலும் கூட, இவர்களே அறிக்கைகளையும், திரிபுகளையும் உருவாக்கி தாங்களாகவே வெளியிடுகின்றனர். தமிழ் பேசும் மக்களின் அடிமுட்டாள் தனத்தின் மீது சவாரி செய்யும் புலி செய்தி ஊடகங்கள், தமிழ் அல்லாத சர்வதேச ஊடகங்களில் அடக்கி வாசிக்கின்றனர். இளந்திரையன் பி.பி.சி தமிழ்சேவையில் கூட அடக்கி வாசிக்கின்றார். ஏகாதிபத்தியங்கள் கூட புலியின் பொய்யைப் புரிந்து எதிர்வினையாற்றுகின்றனர். ஏகாதிபத்திய செய்தி ஊடகங்கள் ஏகாதிபத்திய உலக ஒழுங்குக்கு உட்பட்ட வகையில், அனைத்தையும் புலிக்கு எதிராக புலியின் பாசிசத்தை பயன்படுத்தி மாற்றுகின்றனர். இதன் மூலம் தமிழ் மக்களின் மீதான ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற வகையில் உலகம் தழுவியதாகச் சென்றுவிட்டது.



இந்த படுகொலையையும் கூட புலிகளாக காட்டி நியாயப்படுத்தப்பட்டது. இதை அரசு மட்டுமல்ல ஏகாதிபத்திய செய்தி ஊடகங்களும் கூட கூட்டாக செய்துள்ளது. இந்தப் படுகொலையை எடுத்தால், அவர்கள் புலிகளாக இருந்தாலும் கூட அவர்கள் அப்பாவிகளே. புலிகளின் 99 சதவீதம் பேர் புலிகளால் ஏமாற்றி அவர்களால் பின்னால் அணிதிரட்டப்பட்டுள்ள அப்பாவிகளே. புலிகளின் உண்மை முகம் அம்பலமாகும் போது, இதற்கு எதிராக மாறக் கூடியவர்கள். அந்த வகையில் சுயமான சிந்தனையற்ற வகையில் மூளைச்சலவை செய்யப்பட்ட அப்பாவிகளை கொல்லமுடியும் என்ற தர்க்கம், மனித இனத்துக்கே எதிரானது. புலிகளின் கட்டாயப் பயிற்சிக்கு ஆளாக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்தக் கதிதான் என்று அரசு கூற முனைகின்றது. மக்கள் புலிகளின் நிர்ப்பந்தம் காரணமாக அதனுடன் நீடிக்கின்றனரே ஒழிய, சொந்த அரசியல் விருப்பத்தின்பால் அல்ல.



சுயமான சுயாதீனமான விருப்பார்ந்தமான நிலையில் அல்லாத, சுயசிந்தனையற்ற நிலையில், மக்களின் தேர்வு என்பது மறுதலிக்கப்பட்ட ஒரு நிலையில், ஒரு பாசிச இயக்கமாக புலிகள் இயக்கமே உள்ளது. இந்த நிலையில் மக்களுக்கு பயிற்சி என்று மக்களை கூட்டம் கூட்டமாக, பயிற்சி கூடங்களின் கட்டாய பயிற்சிக்கு உள்ளாக்கின்றனர். இந்தநிலையில் மொத்த தமிழ் மக்களையும் கொன்று போட்டுவிட்டு, அவர்களை புலிகளென்று சொல்லும் எல்லைக்குள் அரச பாசிசம் தலைவிரித்தாடுகின்றது. ஆயுதமேந்தா அப்பாவி மக்களை புலிகளின் கட்டாய பயிற்சி கூட்டங்களில் கொன்று போடுவதும், அதை நியாயப்படுத்துவதும் அதை அங்கீகரிப்பதும் வக்கிரமானது. மக்களை கட்டாய பயிற்சிக்குள்ளாக்கும் புலி பாசிசத்தை, படமாகக் கூட மலிவு பிரச்சாரத்துக்கு புலிகள் பிரசுரிக்கின்றனர். இந்த நிலையில் அவர்கள் யாராக இருந்தாலும், குறித்த அரங்கில் இருந்தவர்கள் கூட சுயமுடிவெடுக்க முடியாத புலிப் பாசித்துக்கு இரையான அப்பாவிகள் தான். அவர்கள் உண்மையில் அப்பாவிகள் தான். புலிகளின் ஏதோ ஒரு நிர்ப்பந்தத்துக்குள்ளாகிய ஒரு நிலையில், அங்கு கொண்டுவரப்பட்டவர்கள் தான். தமது மரணத்தின் பின்னணியைக் கூட சுயாதீனமாக சொல்லமுடிய மனித அவலத்தைக் நாம் காண்கின்றோம். இந்த நிலையில் பொறுக்கிகளும், இதை காட்டி பிழைப்போரும் தான் படுகொலைக்கு வண்ணம் வண்ணமாக விளக்கம் தருகின்றனர். இந்த நிலையில் பேரினவாதம் தனது பங்குக்கு அவற்றை புதைசேற்றில் ஆழப் புதைக்கின்றது.



தமிழ் மக்களை கூட்டம் கூட்டமாக புலிகளின் பெயரில் கொல்வதற்கு உரிமை உண்டு என்று கொக்கரிக்கின்றனர். தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையை அங்கீகரிக்க மறுத்துவிட்டு பேரினவாதமாக ஆட்டம் போடும் அரசு, புலிகளை கொல்லும் உரிமை தனக்கு உண்டு என்று பினாற்றுவது நிகழ்கின்றது. அதை செய்யும் உரிமையை ஏகாதிபத்திய கொள்ளைக்காரர்கள் அங்கீகரிப்பதாக புலிகளின் கூறுவதையும் நாம் காண்கின்றோம். இவர்கள் தான் உலக ஜனநாயகவாதிகள் என்ற வேறு தம்மைத்தாம் தம்பட்டமடிக்கின்றனர்.



மறுபக்கத்தில் தமது புலிப் பாசிசத்தை மூடிமறைக்க கொல்லப்பட்டவர்களை அப்பாவிகளாக காட்டி, தம்மை அப்பாவிகளாக நிலைநாட்ட முனைகின்றனர். தமது அடாவடித்தனமான பாசிச செயற்பாட்டுடன் கூடிய மக்கள் விரோத நடத்தையை, அப்பாவி மனித பிணங்களால் மூடிமறைத்து நியாயப்படுத்துகின்றனர். இந்தச் சம்பவம் நிகழ்ந்த இடத்தை பற்றி முன்னுக்கு பின் முரணாக திரித்து கருத்துரைக்கின்றனர். குறித்த வயது மாணவர்கள் பாடசாலை நேரத்துக்கு முன்னம் (தாக்குதல் நடந்த காலை 6.30 முதல் 700 மணிவரை) ஏன் அங்கு கூடியிருந்தனர். அதுவும் கிளிநொச்சிக்கு அதிக தூரம் கொண்ட முல்லைத்தீவில் ஏப்படி கூட முடிந்தது. மறைக்க, மறுக்க முடியாத வகையில் பல விடையத்தை அவர்களின் பிரச்சார எல்லைக்குள் கேள்விக்குள்ளாகின்றது. அரசு இது பயிற்சி முகாம் தான், அதற்கு தம்மிடம் படங்கள் உள்ளதாக வேறு ஆதாரத்தை எடுத்துவைக்க முனைகின்றது. புலிகள் பாணிப் பிரச்சாரத்தை அரசு இலகுவாக அவர்கள் பாணியிலேயே முறியடித்துவிடுகின்றது.



பயிற்சி முகாம் என்றால் இராணுவ கட்டமைப்பும், மருத்துவ பயிற்சி என்றால் மருத்துவ கட்டமைப்பு ஆதாரமாக காட்டவேண்டும். இல்லை நிரந்தரமாக தங்கிவாழும் ஒரு அனாதை முகாமென்றால் அதற்கு ஆதாரம் வாழ்விடம் சார்ந்து காட்டவேண்டும். இப்படி அவர்களின் வாத எல்லைக்குள்ளேயே பல கேள்விகள் உண்டு.



மக்களுக்கு பயிற்சி என்ற பெயரில் நடக்கும் கட்டாய பயிற்சியின் போது, இது போன்ற அவலங்கள் ஏன் நடக்க முடியாது.? மருத்துவ முதலுதவி பயிற்சி என்றாலும, அதுவும் பாடசாலை அல்லாத தளத்தில் புலிகளின் இராணுவ எல்லைக்குள் தான் நடக்கின்றது. சிவில் சமூகத்தையும், இராணுவக் கட்டமைப்பையும் தனித்துவமாக இயங்க அனுமதியாத புலியின் இராணுவ அரசியல், பாரதூரமான மனித படுகொலைகளை கூட அம்பலப்படுத்த முடியாத நிலையை உருவாக்கிவிடுகின்றது. மனிதத்துவத்தை ஏறிமிதித்த நிலையில், பேரினவாத அரசை அம்பலப்படுத்த திறனற்று போகின்றனர் புலிகள். தமது அரசியல் நோக்கத்தையும் நடத்தையையும் மூடிமறைத்து, தம்மை அப்பாவிகளாக சித்தரிக்கும் புலி அரசியல் ஐந்து காசுக்கு கூட பெறுமதியற்று அம்பலமாகின்றது. இதன் மூலம் பேரினவாதம் நடத்தும் தமிழ் இனப்படுகொலைகளை கூட உலகமே நியாயப்படுத்தி விடுகின்றது. நாம் மரணங்களைக் கண்டு எவ்வளவுதான் மனம்வருந்தி கோபம் கொண்டாலும், அந்த மனிதவிரோத கோரத்தை அம்பலப்படுத்தி போராட முடியாத அளவுக்கு, புலிகள் பாசிசம் சமூகத்துக்கு முன் தடைக்கல்லாகி அதையும் தடுத்து நிற்கின்றது. இதை மாற்றுவதைத் தவிர தமிழ் மக்களுக்கு வேறு வழிகிடையாது.