தமிழ் அரங்கம்

Saturday, May 26, 2007

அரசின் நிலப்பறி புதுவை மக்களின் போர்க்கோலம்

தேங்காய் திட்டு:அரசின் நிலப்பறி
புதுவை மக்களின் போர்க்கோலம்


விளை நிலங்களைப் பறித்து, பன்னாட்டு ஏகபோக கம்பெனிகளுக்குத் தாரை வார்த்துக் கொடுக்கத் துடித்த மே.வங்க போலி கம்யூனிச அரசுக்கு எதிராக, நந்திகிராம மக்கள் நடத்திய போராட்டத்தின் இடியோசை ஓயும் முன்பே, அதன் எதிரொலி போல புதுச்சேரி மாநிலத்தில் துறைமுக விரிவாக்கத்திற்காக விளைநிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை எதிர்த்து நிற்கும் தேங்காய்திட்டு கிராம மக்களின் போராட்டம் தொடர்கிறது.


புதுவையில் தி.மு.க., பா.ம.க. ஆதரவுடன் காங்கிரசு ஆட்சி நடத்தி வருகின்றது. நாடு முழுவதும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவி, நாட்டைப் பன்னாட்டுக் கம்பெனிகளின் வேட்டைக்காடாக மாற்றிவரும் காங்கிரசு கும்பல், தாங்கள் ஆளும் புதுச்சேரியில் மட்டும் அதனைச் செயல்படுத்தாமல் விட்டுவிடுமா என்ன? பன்னாட்டு ஏகபோக முதலாளிகளே வியக்கும் வண்ணம் நான்கு பகாசுரத் திட்டங்கள் மூலம் புதுவை மாநிலத்தையே கூறுபோட்டு விற்கும் முயற்சியில் அம்மாநில அரசு இறங்கியுள்ளது. இதன்படி மிகச்சிறிய புதுவை மாநிலத்தில் இரண்டு சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், இரண்டு துணை நகரங்கள், துறைமுக விரிவாக்கம், விமான நிலைய விரிவாக்கம் என ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களை விழுங்கக்கூடிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, இவற்றுக்கென நிலங்களை ஆக்கிரமிக்கும் வேலைகளும் தொடங்கிவிட்டன.


இப்பகாசுரத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால் புதுவை மாநில மக்களில் பெரும்பாலோர் வீடிழந்து, நிலமிழந்து, வாழ்விழந்து சொந்த மண்ணிலேயே அகதிகளாகும் பேரபாயம் நேரிடும். விவசாயமும்விவசாயிகளும், மீனவர்களும்மீன்பிடித் தொழிலும், கடற்கரையும் நீராதாரங்களும் நாசமாகும். சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்.


புதுச்சேரி கடற்கரைப் பகுதி அதிக ஆழமில்லாததால், இதுவரை புயல் கரையைக் கடக்காத மாநிலமாக புதுச்சேரி இருந்து வருகிறது. துறைமுக விரிவாக்கம் என்ற பெயரால் 400 மீட்டர் அகலம் 20 மீட்டர் ஆழத்துக்கு மணல் அகற்றப்பட்டால் இனிவரும் காலங்களில் புயல் மிக எளிதில் இப்பகுதியைத் தாக்கும். மேலும், கடற்கரை ஆழப்படுத்தப்பட்டால் கடல்நீரின் அழுத்தம் அதிகரித்து, நிலத்தடி நீரானது முற்றிலும் உப்புநீராகிப் போகும். இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, உப்பு நீரால் விவசாயமும் செய்ய முடியாத நிலை ஏற்படும். சரக்குக் கப்பல்களுக்குத் தேவைப்படும் இலட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் புதுச்சேரியில் உறிஞ்சி எடுக்கப்பட்டால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து நிலம் பாலைவனமாகி, அப்பகுதியெங்கும் வெப்பம் அதிகரிக்கும். துறைமுக விரிவாக்கத் திட்டத்தின்படி, இலட்சக்கணக்கான டன்கள் அளவுக்கு மலைபோல நிலக்கரி மற்றும் இரும்புக் கழிவுகள் இறக்குமதியாகி குவிக்கப்பட்டால், அதன் துகள்கள் காற்றில் பறந்து மக்களுக்கு சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும்.


இத்திட்டங்களால் விளைநிலங்கள் பறிக்கப்பட்டு, விவசாயிகள் நாடோடிகளாக அலைய வேண்டிய அவலநிலை ஏற்படும். சுருக்கமாகச் சொன்னால் தரகுப் பெருமுதலாளிகளும் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களும் சூறையாடுவதற்கென்றே உருவாகியுள்ள இத்திட்டங்களால் புதுச்சேரி மாநிலமே சுடுகாடாகிப் போகும். இவற்றைப் படிப்படியாக உணரத் தொடங்கியுள்ள புதுச்சேரி மாநில உழைக்கும் மக்கள், தமது போர்க்குணமிக்க போராட்டங்களால் அம்மாநிலத்தையே அதிர வைத்து வருகின்றனர்.


உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகளின் பகற்கொள்ளை சூறையாடலுக்கென்றே "வளர்ச்சி'யின் பெயரால் உருவாக்கப்பட்டுள்ள திட்டங்களுள் ஒன்றுதான் துறைமுக விரிவாக்கத்திட்டம். ரூ. 2,600 கோடி மதிப்பிலான இத்திட்டம் ""பாண்டிச்சேரி போர்ட் லிமிடெட்'' என்ற தனியார் கம்பெனியிடம் கடந்த பிப்ரவரியில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இத்துறைமுக விரிவாக்கத் திட்டத்தால், ஏறத்தாழ 300 ஏக்கர் விளைநிலங்கள் பறிக்கப்படவுள்ள கிராமம்தான் தேங்காய்திட்டு.

தங்களது வீடும் நிலமும் வாழ்வுரிமையும் பறிக்கப்படுவதைக் கண்டு பீதியடைந்த இக்கிராம மக்கள், இத்திட்டத்தைக் கைவிடக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கி பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து போராடினார்கள். வீடுகளில் கருப்புக் கொடியேற்றியும், உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தும், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் சுற்றுச்சூழல் துறை நடத்திய கூட்டத்தில் இத்திட்டத்திற்கு எதிர்த்து தெரிவித்தும் கூட ஆட்சியாளர்கள் அசைந்து கொடுக்கவில்லை.


இந்நிலையில், கடந்த மார்ச் 18ஆம் தேதியன்று துறைமுகப் பகுதியிலும் அரசு புறம்போக்கு பகுதியிலும் ஆரம்பகட்ட வேலைகளை ""பாண்டிச்சேரி போர்ட் லிமிடெட்'' நிறுவனம் தொடங்கியது. துறைமுகப் பகுதியிலுள்ள நீண்ட சுற்றுச் சுவர் இடிக்கப்பட்டு பணிகள் தொடங்கிவிட்டதை அறிந்த தேங்காய் திட்டு கிராம மக்கள் ஆவேசமடைந்து, அத்தனியார் நிறுவனத்தின் பெயர் பலகையை உடைத்தெறிந்து, அந்நிறுவனத்தின் அலுவலகத்தைச் சூறையாடினர். பின்னர், துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கு எதிர்த்து தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் இறங்கினர். சுற்றுச்சூழல் துறையின் அனுமதியின்றி பணிகளைத் தொடங்கிய தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததைத் தொடர்ந்து, தேங்காய்திட்டு கிராம மக்கள் போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக் கொண்டனர்.


இத்தனைக்கும் பின்னரும் இத்துறைமுக விரிவாக்கத் திட்டத்தை காங்கிரசு அரசு கைவிடாத நிலையில், தேங்காய் திட்டு கிராம மக்கள் ""நில ஆர்ஜித எதிர்ப்புக் குழு''வைக் கட்டியமைத்து அதன் தலைமையில் போராட்டத்தைத் தொடர்ந்தனர். அனைத்து எதிர்க்கட்சிகளிடமும் ஆதரவு கோரியதோடு, அரசைக் கண்டித்து தெருமுனைக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் மூலம் பிரச்சாரம் செய்து ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். அதைத் தொடர்ந்து மார்ச் 27ஆம் தேதியன்று துறைமுக விரிவாக்கத்தை கைவிடமறுக்கும் அரசை எதிர்த்து, சட்டமன்றத்தை முற்றுகையிட்டு தமது ரேஷன் கார்டு நகல்களை ஒப்படைக்கும் போராட்டத்தை அறிவித்தனர். இப்போராட்டத்தை ஆதரித்து முதலியார்பேட்டை வியாபாரிகள் நலச் சங்கத்தினர் அந்நாளில் அப்பகுதியெங்கும் கடைகளில் கருப்புக் கொடி ஏற்றினர். மார்ச் 27ஆம் நாளன்று தேங்காய்திட்டு கிராம மக்கள் மட்டுமின்றி, வியாபாரிகள், அறிவுத்துறையினர், மாணவர்கள், மீனவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் திரள ஏறத்தாழ 5000 பேர் பங்கேற்ற மாபெரும் பேரணி சட்டமன்றத்தை நோக்கி விண்ணதிரும் முழக்கங்களுடன் முன்னேறியது. வழியிலேயே அவர்கள் போலீசாரால் மறிக்கப்பட்டு ஏறத்தாழ 1500 பேர் கைது செய்யப்பட்டனர். இதைக் கண்டித்தும், துறைமுக விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்தும் உழைக்கும் மக்கள் தமது ரேசன் கார்டு நகல்களை தீயிட்டுக் கொளுத்தி முழக்கமிட்டனர்.


மக்களின் உறுதிமிக்க இப்போராட்டங்களைக் கண்டு ஆத்திரமடைந்த துறைமுகத்துறை அமைச்சரான வல்சராஜ், ""எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் இத்திட்டத்தை கண்டிப்பாக நிறைவேற்றியே தீருவோம்; மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு இது மிகவும் அவசியம்'' என்று மே.வங்க பாசிச முதல்வர் புத்ததேவ் வழியில் சட்டமன்றத்திலேயே கொக்கரித்தார். மேலும் போராடிய மக்களைத் தரக் குறைவான வார்த்தைகளால் ஏசி, போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி திமிராகச் சாடினார். இதைக் கண்டு வெகுண்டெழுந்த தேங்காய்திட்டு கிராம மக்கள், அமைச்சர் வல்சராஜ் வீட்டை முற்றுகையிட்டு போராடத் தீர்மானித்தனர். இரகசியமாக வைக்கப்பட்டிருந்த இத்திட்டம் கசிந்துவிட, அரண்டுபோன புதுவை அரசு, அமைச்சர் வல்சராஜ் வீட்டுக்கு மூன்று அடுக்கு போலீசு பாதுகாப்பு போட்டது. இதனால் கிராம மக்கள் இம்முற்றுகைப் போராட்டத்தைக் கைவிட்டு அமைச்சரின் கொடும்பாவி எரிப்புப் போராட்டத்தை நடத்த முடிவு செய்தனர்.


திட்டமிட்டபடியே ஏப்ரல் 13ஆம் நாளன்று தாரை தப்பட்டைகள் முழங்க, அமைச்சரின் கொடும்பாவியை அலங்கார சவப்பாடையில் ஏற்றி கிராம மக்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். பெண்கள் ஒப்பாரி வைக்க, இளைஞர்கள் பட்டாசு வெடித்து ஆட்டம் பாட்டத்துடன் இக்கொடும்பாவி பாடையை தூக்கி வந்தனர். தகவலறிந்து முதலியார்பேட்டை போலீசு நிலைய ஆய்வாளர் ரவிக்குமார், பெரும்படையுடன் போலீசை திரட்டி வந்து ஊர்வலத்தைத் தடுத்ததோடு பெண்களை ஆபாசமாகத் திட்டினார். ஆவேசமடைந்த பெண்கள் சவத்திற்குத் தெளிக்க வைத்திருந்த மஞ்சள்குங்குமக் கரைசலை ஆய்வாளர் மீது ஊற்றி அவருக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்தினர். இதற்கிடையே அமைச்சர் வல்சராஜின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. அதைத் தடுத்து கூட்டத்தைக் கலைக்க போலீசார் காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தினர். இத்தாக்குதலில் 14 பெண்கள் உள்ளிட்டு 20 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசார் தமது கடமையைச் செய்ய விடாமல் தடுத்து கலவரத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி 257 பேர் மீது போலீசு பொய் வழக்கு போட்டுள்ளது.


இக்கொடுஞ்செயலைக் கண்டு வெகுண்டெழுந்த மக்கள், போலீசு மிருகங்களை எதிர்த்து முதலியார்பேட்டை போலீசு நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட ஊர்வலமாகச் சென்றனர். போராடும் மக்களின் கோபாவேசத்தைக் கண்டு பீதியடைந்த போலீசார், முதலியார்பேட்டை போலீசு நிலையத்தை உடனடியாக காலி செய்து, துப்பாக்கிகள் மேசை நாற்காலிகள், ஆவணங்கள் அனைத்தையும் ஒரு லாரியில் அள்ளிப் போட்டுக் கொண்டு தப்பியோடினர். அப்போலீசு நிலையம் பூட்டு போடப்பட்டு, மத்திய ரிசர்வ் போலீசாரின் பாதுகாப்பில் விடப்பட்டது. மக்களின் எழுச்சியைக் கண்டு அரசு எந்திரம் அரண்டுபோய் விக்கித்து நின்றது.


அடுத்த கட்டமாக, மீண்டும் சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தை நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். புதுவை முதல்வர் ரங்கசாமி, மக்களின் வாழ்வுரிமையைப் பாதிக்கும் எந்தத் திட்டமும் நடைமுறைப்படுத்தப்படாது என்று உறுதியளித்து சமரசம் பேசியதால், தற்காலிகமாக இப்போராட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


தேங்காய் திட்டு கிராம மக்களின் போராட்டம் மட்டுமல்ல; சிறப்புப் பொருளாதார மண்டலம், துணை நகரம், விமான நிலைய விரிவாக்கம் ஆகிய திட்டங்களால் விளைநிலங்களைப் பறிகொடுத்த மக்கள் ஆர்ப்பாட்டம், கருப்புக் கொடியேற்றுதல், சாலை மறியல் என அடுத்தடுத்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த இரு மாதங்களாக புதுவை மாநிலமே இத்திட்டங்களுக்கு எதிராகப் போர்க்கோலம் பூண்டு நிற்கிறது.


தமது வாழ்வுரிமை பறிக்கப்படுவதை எதிர்த்து மக்கள் போராடத் தொடங்கியதும், அரசியல் ஆதாயம் கருதி எதிர்த்தரப்பு ஓட்டுக் கட்சிகள் இப்போராட்டங்களை ஆதரித்து அறிக்கைகள் வெளியிடுகின்றன. ""உங்களோடு சேர்ந்து தெருவில் இறங்கிப் போராடுவேன்; பிரதமரை நேரில் சந்தித்து முறையிடுவேன்'' என்றெல்லாம் சீறி வெடிக்கிறார், பா.ம.க. தலைவர் இராமதாசு. புதுவை துறைமுக விரிவாக்கத் திட்டம் முதல் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் வரை அனைத்து முடிவுகளையும் மைய அரசுதான் எடுத்திருக்கிறது. அமைச்சரவையின் முடிவுகளில் மகன் அன்புமணி கையெழுத்திடுகிறார். தந்தையோ இங்கே தாவிக் குதிக்கிறார்.


பா.ம.க. மட்டுமல்ல, எல்லா வண்ண ஓட்டுக் கட்சிகளும் ஆட்சியில் இருக்கும்போது தனியார்மய தாராளமய உலகமயக் கொள்கைகளைத் தீவிரமாக அமல்படுத்துவது, எதிர்க்கட்சியாக உள்ளபோது மக்கள் போராட்டங்களை ஆதரிப்பதாக வாய்ச்சவடால் அடிப்பது என்ற நாடகத்தை நடத்தி வருகின்றன. கடந்த 15 ஆண்டுகளில் மத்தியிலும் மாநிலத்திலும் பல ஆட்சிகள் மாறிவிட்டன. ஆனால் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற ஒரே கொள்கைதான் அமல்படுத்தப்படுகிறது. உலக நாடுகள் அனைத்தையும் கொள்ளையடித்து சூறையாடுவதற்காக பன்னாட்டு நிறுவனங்களால் உருவாக்கப்பட்டுள்ள உலக வங்கியும் உலக வர்த்தகக் கழகமும் போடும் உத்தரவுகளைத்தான் எல்லா கட்சி அரசாங்கங்களும் நிறைவேற்றி வருகின்றன. இவையனைத்தும் வெறும் பொருளாதாரக் கொள்கைகள் அல்ல; இவை நாட்டையும் மக்களையும் அடிமைப்படுத்தும் மறுகாலனியாக்கக் கொள்கைகள்.


சுருக்கமாகச் சொன்னால், விளைநிலங்களையும் வாழ்வுரிமையையும் பறித்து மறுகாலனிய ஆக்கிரமிப்பு எனும் உள்நாட்டுப் போரைப் பிரகடனம் செய்திருக்கிறார்கள், எதிரிகள். இப்போரை, மக்கள் போரினால் மட்டுமே முறியடிக்க முடியும். எனவே, தமது வாழ்வுரிமை பறிக்கப்படுவதை எதிர்த்துப் போராடி வரும் புதுவை மக்கள், இப்போராட்டங்களை மறுகாலனிய எதிர்ப்புப் போராட்டமாக விரிவுபடுத்தி முன்னெடுத்துச் செல்ல வேண்டும். மே.வங்கத்தின் நந்திகிராம மக்கள், அப்பகுதியில் அரசு எந்திரம் செயல்பட முடியாமல் முடக்கி வைத்துப் போராடி, அங்கு சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கத் துடித்த போலி கம்யூனிஸ்ட் அரசைப் பணிய வைத்ததைப் போல, புதுவை மக்கள் தமது போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும்.


ஓட்டுக் கட்சிகளைப் புறக்கணித்து, நாட்டுப்பற்றும், ஜனநாயக உணர்வும் புரட்சிகர சித்தாந்தமும் கொண்ட புதிய போராட்டத் தலைமையின்கீழ் புதுவை மக்கள் போராடும்போது மட்டுமே, இம்மறுகாலனிய ஆக்கிரமிப்புப் போரை முறியடிக்க முடியும்; நந்திகிராம மக்களைப் போல எப்பேர்ப்பட்ட எதிரியையும் மண்டியிடச் செய்ய முடியும். அத்தகையதொரு புரட்சிகரத் தலைமையையும், போராட்டங்களையும் கட்டியமைப்பதே, இன்று போராடி வரும் புதுவை மக்களின் உடனடிக் கடமையாக உள்ளது.


பு.ஜ. செய்தியாளர்கள்,

புதுச்சேரி.

மனிதர், வாழ்வுமுறை, அழிவின் விளிம்பில் பூமியின் சுற்றாடல்

மனிதர், வாழ்வுமுறை, அழிவின் விளிம்பில் பூமியின் சுற்றாடல்

சபேசன் - கனடா


பூமிப்பந்தின் மேலோட்டினை மற்றைய உயிரினங்களுடனான போட்டியில் மனிதன் என்னும் இனம் ஆளுகைக்குட்படுத்தி விட்டது. மனித இனங்கள் தங்களிடையே ஏற்படுத்திய போட்டியில் பல வகையான அரசியல் பொருளாதார சித்தாந்தங்களை உருவாக்கின. இவற்றில் வெற்றிபெற்றிருப்பது இப்போதைக்கு முதலாளித்துவ ஜனநாயகப் பொருளாதாரமாகவே தோற்றம் பெறுகின்றது.


இன்று உலகம் எதிர் கொள்ளும் அதி மிக முக்கிய பிரச்சனையான இந்த சுற்றுப்புறச் சூழல் மாசடைதல் என்பது அபாயகரமான எல்லை புள்ளியில் நின்று எதிர்கால சந்ததியை பயமுறுத்திக் கொண்டிருக்கின்றது.


இதனது அபாயம் ஆண், பெண், வயோதிபர், குழந்தைகள், மேல்சாதி, கீழ்சாதி, கறுப்பு, வெள்ளை, தொழிலாளிகள், முதலாளிகள் என்று எல்லாத் தரப்பினரையும் பாதிக்கின்றது. இந்த ஆபத்திலிருந்து எவரும் தப்ப முடியாது.


இது தெளிவாகத் தெரிந்திருந்தும் இன்று ஆதிக்கத்திலிருக்கும் நவீன முதலாளித்துவ ஜனநாயகத்தினால் இதனை கட்டுப்படுத்த முடியுமா?


இந்த சூழல் மாசடைதல் என்ற பாரிய அபாயத்தினை தற்போதைய மேற்கத்தைய நாடுகளில் பலகட்சி ஆட்சிமுறையின் கீழ் நான்கு வருடத்திற்கோ அல்லது ஜந்து வருடங்களிற்கோ ஒருமுறை ஆட்சி பீடமேறும் முதலாளித்துவ ஜனநாயகக் கட்டமைப்பினால் சூழல் மாசடைதல் பிரச்சனைக்கு சரியான அல்லது நிரந்தரமான தீர்வு தேடமுடியுமா என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.


நிலம், நீர், காற்று என்ற பூமியின் மூன்று முக்கிய அடிப்படைகளை மீண்டும் புனரமைப்பு செய்யமுடியுமா? என்ற அளவிற்கு இந்த மாசடைதல் பாதிக்கப் பண்ணிவிட்டது.


இதன் இரண்டு பிரதான காரணிகளாக பெருந்தொழிற்சாலைகளும் போக்குவரத்து சாதனங்களும் தான் இந்த சூழல் மாசடைதலின் 75 வீதத்திற்கு மேல் காரணமாகின்றது. பெரும் தொழிற்சாலைகள் வெளியேற்றும் புகைமண்டலம், இரசாயன திரவக் கழிவுகள், பக்கவிளைபொருட்கள், போன்றனவும், நீண்டநேரம் பயணிக்கும் அவசியமற்ற ஆடம்பர வாகனங்கள், பாரிய கனரக வாகனங்கள் வெளியேற்றும் வாயுக்கள் புகைமண்டலத்தை மட்டுமல்லாமல் அவை நிலத்திற்கடியில் இருக்கும் மசகுப் பொருளை குறைத்துக்கொண்டே செல்கின்றன.


இப்படியான இன்னோரன்ன ஆபத்துக்களின் தர்மகர்த்தாக்கள் யாரென்று பார்ப்போமாகில் எமது வாழ்வியலின் ஆனந்தப் பரவசத்தை எட்டப்பண்ணுகின்ற "நுகர்வுப் பொருளியல்" (Materialism) மனோபாவமும். இதனை திட்டமிட்டு மக்களிடையே உருவாக்கிய முதலாளித்துவக் கலாச்சாரமும்தான்.


சிறிய உதாரணம், எமது உடலின் ஆரோக்கியத்தினை வலுப்படுத்த வேண்டுமானால் ஒரே ஒரு சரியான வழியும் அதேநேரம் கடினமான வழியுமான ஒன்று உடற்பயிற்சி மட்டும்தான். இதற்கு மாற்று வழியோ இல்லை குறுக்கு வழியோ கிடையாது.


இதே போன்று அன்மையில் BBC யில் வெளிவந்த விஞ்ஞானிகளின் குழுவொன்றின் அறிக்கையின் படி எங்கள் "வாழ்க்கை முறையை" மாற்றாவிட்டால் சூழல் மாசடைதலை நிறுத்தவே முடியாது. நாம் எமது எதிர்கால சந்ததிக்கு பழுதடைந்த பூமியைத்தான் விட்டுச்செல்கின்றோம். இதனை தீர்ப்பதற்கு எந்த குறுக்கு வழியோ சுகமான முறைகளோ கிடையாது. இந்த "வாழ்க்கை முறை" என்பதன் அர்த்தம் மக்களிடையே நுகர்வு கலாச்சாரம் ஏற்படுத்திய ஆடம்பர வாழ்க்கை முறைதான்.


சூழல் மாசடைதல் பற்றிய கருத்தியல் தாற்பரியம் சாதாரண மக்களிடையே தேவையான அளவு ஊக்கப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு நல்ல உதாரணம் ரொறன்ரோவில் பச்சை, நீல நிறங்களிலான "கழிவுப் பொருட்களிற்கான" பிளாஸ்ரிக் கென்டைனர்களின் உபயோகத்தின் ஆரம்பம்.


பெரும்பாலோரின் அபிப்பிராயம், ரொறொன்ரோவின் அவசர வாழ்க்கையோட்டத்தில் சனங்கள் இதுகளை சரிவர கவனிக்கப் போவதில்லை. இந்தத்திட்டம் வெற்றியடையாது என்றே எண்ணினார்கள். ஆனால் எவருமே எதிர்பாராத அளவிற்கு இது 150 வீதம் வெற்றியடைந்தது. எனவே சராசரி மக்கள் எப்பொழுதும் மாசடைதல் பற்றி விழிப்பாகவே இருக்கின்றனர் என்பது உண்மை. பாலர் பாடசாலைகளில் ஆரம்பித்து பல்கலைக்கழகங்கள் வரையில் மாசடைதல் பற்றிய விழிப்புணர்வு ஊட்டப்படுகின்றது. அதே நேரம் பாரிய தொழிற்சாலைகளாலும், கனரக வாகனங்களினாலும் சூழல் மாசடைகின்றது என்றும் கற்பிப்பார்கள. ஆனால் இவற்றுக்கெல்லாம் அடிப்படை நியதியாக இந்த பொருளாதார, வர்க்க அமைப்புமுறை என்பதை மட்டும் இலகுவாக மறந்து விடுகிறார்கள்.


ஆனால் கனடாவிலோ அல்லது ரொறன்டோவிலோ ஆட்சி மாறும் அரசியல்வாதிகளால் "பெருந்தொழிற்சாலைகளின் கழிவு சுத்திகரித்தல்" பற்றிய திட்டத்தில் மிகச்சிறிய அளவிலான மாற்றங்களை கூட கொண்டுவர முடியவில்லை. காரணம் பெருந் தொழிற்சாலைகளின் தலைவர்களை பகைத்து இலகுவாக வெற்றிகொள்ள முடியாது.


இன்னுமோர் உதாரணம், இந்தியாவில் ஒரு பாரிய நெசவாலையின் கழிவுகள் தமக்கு அண்மையிலுள்ள நன்னீர் விவசாய பிரதேசங்களை நிரந்தரமாக மாசடையப்பண்ணிவிட்டது. இந்திய காங்கிரஸ் அரசு நீதிமன்றங்களின் ஊடாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்குமாறு நெசவாலையின் முதலாளிகளுக்கு உத்தரவிட்டது. ஆனால் இறுதியாக இந்த உத்தரவினை வாபஸ் வாங்கிவிட்டது. காரணம் "ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்க நேரிடும்" என்று நெசவாலை நிர்வாகம் இந்திய அரசையே மிரட்டியதுதான் காரணம்.


நிதர்சனமான ஒன்று "தொழிலதிபர்களின் கைகளில்தான் அரசநிர்வாகம்"


இங்குள்ள இன்னுமொரு உண்மைப் பக்கத்தை புரிந்து கொள்ள வேண்டுமானால் "கவர்ச்சிகரமான நுகர்வுப் பொருளாதார" முறையை மாற்றாவிட்டால் வேறு வழியில்லை என்பதே இதன் அர்த்தம். இந்த நுகர்வுப் பொருளாதார முறை என்பது தங்கியிருப்பதே இன்றைய முதலாளித்துவ ஜனநாயகக் கட்டமைப்பில்தான். காரணம் மேற்கத்திய நுகர்வுப் பொருளாதாரத்தின் அடிப்படையே போட்டி வியாபாரம்தான். இந்தப் போட்டி வியாபாரத்தில் ஒரு வியாபாரி சிறிது தயங்கினாலும் அடுத்த ஆறுமாதகாலத்திற்குள் அவர் இல்லாமல் போய்விடுவார்.


ஒரு தயாரிப்பு புதிதாக உருவாகலாம், என்பது வேறு விடயம். ஏற்கனவே புழக்கத்திலிருக்கும் ஒரு பாவனைப் பொருளுக்கு புதிய வர்ணம், புதிய labels புதிய அளவு (30 வீதம்) போனஸ், கவர்ச்சிகரமான புதிய வடிவம் என்று ஒரு போலியான புதிய வடிவத்தை ஏற்படுத்தி செயற்கையான போட்டியை உருவாக்குகின்றது இன்றைய நவீன முதலாளித்துவம். இதற்காக பாரிய தொகை பணத்தை வாரியிறைப்பதுடன் இந்த செயற்கையான முதலாளித்துவப் போட்டிக்காக பெருமளவிலான மூலப்பொருட்களை பூமியின் மேலோட்டிலிருந்து பெற்று அழித்துக்கொண்டிருக்கிறது.


இந்த செயற்கைப் போட்டிக்காக பெருந்தொழிற்சாலைகள் சூழலை மாசடையச் செய்வதில் 70 வீதத்திற்கும் அதிகமான மாசடைதலை செய்கின்றன.


இத்தகைய போட்டி வியாபாரம் இல்லாவிட்டால் யாரும் முதலாளிகளாக வளரமுடியாது.


ஒரு நாட்டின் ஏன் இந்த உலகத்தின் அரசும், அரசியலும் தங்கியிருப்பது இந்த முதலாளிகளின் பொருளாதாரத்தில்தான்.


ஆகவே இந்த முதலாளிகளின் செயற்கை போட்டிக்காக, அதாவது நடைபெறும் மூலதனப் பெருக்கத்திற்காக நடைபெறும் அனாவசியமான (Raw matirials) மூலப்பொருட்களை அழிக்கும் விடயத்தை இன்றைய முதலாளித்துவ அரசியல் கட்டுமானத்தால் தடுக்கமுடியாது.


இதற்கு நல்ல உதாரணம், நான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் Skin Lotion தயாரிக்கப்படுகிறது. மூன்றே மூன்று அடிப்படை தயாரிப்புக்கள்தான் உள்ளன. எந்தவிதமான வித்தியாசமும் இல்லை. ஆனால் இவை 48 வித்தியாசமன Tubes களில் அடைக்கப்படுகின்றன. இந்த Skin Lotion களின் தயாரிப்புக்கான செலவுகளைப் போன்று 4 மடங்கு செலவு இந்த 48 வித்தியாசமான Tubes களிற்கு வேவைப்படுகிறது. அளவுகள் வேறு, வடிவங்கள் வேறு, வண்ணங்கள் வேறு, போனஸ் வேறு.


இந்த Skin Lotion மனிதர்களுக்கு தேவைதான். ஆனால் 48 விதமான Tubes களுக்கு செலவாகும் மூலப்பொருட்கள்தான் இந்த ஜனரஞ்சக பொருளாதார கலாச்சாரத்திற்கு தேவைப்படுகின்றது. அதுவும் 6 மாதங்களிற்கு ஒரு முறை இவை எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். இன்றைய நவீன முதலாளிகளுக்கு இவற்றை செய்யாவிட்டால் வேறு வழியில்லை. இவற்றை தவற விட்டால் இன்னுமொரு முதலாளித்துவ முதலை இவர்களையும் விழுங்கி ஏப்பம் விட்டுவிடும்.


இவற்றை விடவும் முக்கியமான விடயம் வளர்ச்சியடைந்த நாடுகளில் இருக்கின்ற "குவியப்படுத்தப்பட்ட நகரஅமைப்பு முறை."


வேலைக்காக, ஒரு அரசாங்க கிராமிய நகர அலுவலக நிர்வாம் தொடர்பாக மக்களுக்கு தேவையான விடயங்களுக்கு தூர கிராமங்களிலிருந்து நகரங்களை நோக்கி வரவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. காரணம் பெருந் தொழிற்சாலைகளும் அலுவலகங்களும் ரொறொன்ரோ போன்ற நகரங்களிலிருப்பதால் தூர இடங்களிலிருந்தும் நகரத்தை நோக்கியே மக்கள் வரவேண்டி உள்ளது.


இதற்கு மாற்றாக, சூழல் மாசடைதலை தடுக்கக்கூடிய முறையானது, "பரவலாக்கப்பட்ட நகர அமைப்பு முறை".


கல்வி, அரச, நகர, நிர்வாக அலுவலகங்கள், போன்றனவற்றை இந்த "பரவலாக்கப்பட்ட நகர அமைப்பு முறை" க்குள் உள்ளுர் அரசினாலும் தேசிய அளவிலான அரசியல்வாதிகளாலும் உருவாக்கமுடியும்.


ஆனால் வேலைவாய்ப்பு என்பது தங்கியுள்ள பெரும்தொழிற்சாலைகளை இந்த "பரவலாக்கப்பட்ட நகர அமைப்பு முறை" க்குள் கொண்டுவரமுடியாது. காரணம் பெரும் தொழிற்சாலைகள் இந்த "குவியப்படுத்தப்பட்ட நகரஅமைப்பு முறை" க்குள் மட்டும்தான் பெரும் லாபத்தினையும் மூலதனத் திரட்சியினையும் பெறமுடியும்.


இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் பெரும்பாலான நகரங்களை முற்றாக இழந்த ஜேர்மனியில் பரவலாக்கப்பட்ட நகர அமைப்புமுறை சில மாநிலங்களில் காணமுடியும். காரணம் மற்றைய நாடுகளுடன் பார்த்தால் ஒப்பீட்டளவில் பிற்பட்ட காலங்களில் நகரங்களை அமைத்ததினால் அவ்வாறு ஏற்பட்டன. அங்கே நாங்கள் அரச நிர்வாக, கல்வி, போன்ற விடயங்களிற்காக நீண்ட தூரப்பயணங்களை மேற்கொள்ள வேண்டிய கட்டாயமில்லாத போதிலும் பெரும்தொழிற்துறைசார் விடயங்களில் "குவியப்படுதத்தப்பட்ட நகர" முறைதான் கைக்கொள்ளப்படுகின்றது.


சிலரது வாதம், நவீன தொழில் நுட்பம் இவற்றுக்கெல்லாம் தீர்வு வைத்துவிடும் என்று. ஒரு போதும் இல்லை,


இதற்கு நல்ல உதாரணம் இந்தியா, பிறேசில் போன்று வளர்ந்து வரும் நாடுகளில் நவீன தொழில் நுட்பம், தகவல் தொழில்நுட்பம, இயந்திரவியல் தொழில்நுட்பம் போன்றவை பாரிய வளர்ச்சியை எட்டி, நாட்டின் பொருளாதாரத்தினை பெருகச்செய்த போதிலும் எதிர் வினையாக பட்டினியால் இறக்கும் மக்களின் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரிக்கிறதே? ஏன்?


ஏனெனில் குறிப்பிட்ட வர்க்கத்தினருக்குத்தான் இந்த "நவீன தொழில் நுட்பம்" சேவை செய்யும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.


இதனை சாத்தியமாக்குவது எப்படி என்று பார்த்தால் "நுகர்வுப் பொருளாதாரம், முதலாளித்துவ கட்டமைப்பு" என்பவற்றை இல்லாதொழிப்பதுதான்.


இவை பிரம்மாண்டமான ஒரு சாத்தியமல்லாத விடயத்தை கதைப்பதாக தோன்றினாலும் வேறு எந்தவிதமான குறுக்கு வழிகளோ அல்லது மந்திர தந்திரமோ எதும் கிடையாது.

Thursday, May 24, 2007

செத்தது யார் ? ஏழை பாழைகள்தான்

செத்தது யார் ? ஏழை பாழைகள்தான்

கனடா சபேசன்


ஒரு சிறுவர்களின் கதையொன்று.


ரு அழகான பூனைக்குட்டியும் ஒரு பொம்மமேரியன் நாய்க் குட்டியும் பின்வளவில் விளையாடிக்கொண்டிருந்தன. அந்த வழியால வந்த கோழி க்குஞ்சு ஒன்றுக்கும் இவர்களோடு சேர்ந்து விளையாட விருப்பம். ஆனால் பூனைக்குட்டி சொன்னது "உன்னுடைய மூக்கு பெரிதாக இருக்குது எங்களுக்கு உன்னோடு சேர்ந்து விளையாட விருப்பமில்லை" என்றது. கவலையுடன் சென்ற கோழி குஞ்சு தனியாக காத்திருந்தது. அந்த வழியாக வந்த பன்றி குட்டி ஒன்றுக்கும் இவர்களுடன் சேர்ந்து விளையாட விருப்பம். "நீ குண்டாக இருக்கிறாய் எங்களுக்கு உன்னோடு சேர்ந்து விளையாட விருப்பமில்லை" என்றது பூனைக் குட்டி. அடுத்ததாக விளையாட விரும்பி வந்தது ஆட்டுக்குட்டி. "நீ கறுப்பாக இருக்கிறாய் எங்களுக்கு உன்னோடு சேர்ந்து விளையாட விருப்பமில்லை" என்றது பூனைக்குட்டி. தொடர்சியாக மான் குட்டி, அணில் பிள்ளை, வாத்து எல்லோரும் பூனைக்குட்டியால் நிராகரிக்கப்பட்னர்.


நாய் குட்டியும் பூனைக் குட்டியும் சிறிது விளையாடிக் களைத்தபின்னர் தமக்குள் பேசிக்கொண்டனர்


"இரண்டு பேரும் மட்டும் விளையாடி ஒரே அலுப்பாக இருக்கு" என்று பேசி முடியுமுன்னர் பெரிய ஆரவாரச்சத்தம் பக்கத்து வளவில் கேட்டது. இரண்டு குட்டிகளும் எட்டிப்பார்த்தார்கள். பூனைக்குட்டியால் நிராகரிக்கப்பட்ட மற்றைய குட்டிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து மிக்கதொரு மகிழ்ச்சியான விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தார்கள்.


தாங்கமுடியாமல் பூனைக்குட்டியும் நாய்க்குட்டியும் மற்றைய குட்டிகளிடம் சென்று தங்களையும் சேர்த்து விளையாடும்படி கெஞ்சிக் கேட்டினம்.


தங்களுக்குள் முரண்பட்டாலும் இறுதியாக எல்லோரும் சேர்ந்து ஆனந்தமாக விளையாடினார்கள்.


இது கனடிய சிறுவர் தொலைக்காட்சியினால்"இனப்பாகுபாட்டுக்கு எதிராக" என்ற தலைப்பில் எடுக்கப்பட்ட ஒரு குட்டி விவரணப்படம்.


தோட்டக்காட்டான் வேண்டாம். . !

தொப்பி பிரட்டி சோனி வேண்டாம் . . !

மட்டக்களப்பான் துரோகி. வேண்டாம் . . !

தமிழ்நாட்டு சனம் முட்டாளுகள் இதுகளால என்ன வரப் போகுது. . !

கீழ் சாதிகளும் கம்யூனிசம் கதைக்கும் . . .!


மலையகமும், மட்டக்களப்பும், முஸ்லிம்களும், இன்ன இன்ன பிறகூறுகளும் இணைந்து நிற்கும்போது யாழ் மையவாதம் சிறுபான்மையாகிவிடும்.


இது சிங்கள இனவாதத்திற்கு சாதகமான வடிவம் என்பது வருத்தத்திற்குரியதுதான் என்றாலும், இந்த வரலாற்று தேவையை வற்புறுத்தியது யாழ் மையவாதம் தான். இதே சமாந்தரமான நிகழ்வுகள் பல தேசங்களிலும், உலகவரலாற்றிலும் கண்கூடாக அறிந்தவொன்று. காரணம் எந்த மையவாத அரசியலும் சமூக ஒற்றுமையை தேடாது. இறுதியில் பிளவுகளாக வேரறுந்து தேங்கும் என்பதே நியதி.


தாங்களே பிரதானம் என்று பேசிய யாழ் மையவாதம் இன்று பல்லு பல்லாக உதிர்ந்து கொட்டிக்கொண்டிருக்கும் கிழட்டுப்புலியாகிக் கொண்டிருக்கிறது. இந்த விடயத்தை சற்று உன்னிப்பாக பார்க்க வேண்டும். அரசு, புலி, டக்ளஸ், ஜே.வி.பி என்ற கோதாவில் நிற்காமல் எல்லோருமே மக்கள் என்ற கோதாவில் நின்று பேசுவோம். இந்த விடயத்தை பழிவாங்கும் உணர்வுடன் பார்க்கக்கூடாது. மாறாக பரிதாபப் படவேணடிய விடயமாக அணுக வேண்டும். ஏன் . . ? குண்டு கட்டி பாஞ்சதும், வழியில்லாமல் சிங்கள இராணுவத்தில் சேர்ந்து செத்ததெல்லாம் யார். . ? திமிர் பிடித்த கண்டி மையவாதமா. . ? யாழ்மைய வாதமா. .?; ஏன் மட்டக்களப்பு மையவாதமா. . ? இல்லை. ஏழை பாழைகள்தான்.


தமிழ் தேசியத்துக்கான உரிமையான உன்னத ஆரிய வடிவத்தோடு எங்களை அமெரிக்கா உட்பட பெரிய சாம்ராச்சியங்கள் அங்கீகரித்து எங்கட வளங்களை அவையின்ர மூலதனத்தோட வளப்படுத்தினால் நாங்களும் சிங்கப்பூராகி சுகபோகங்களில் வாழமுடியாதா? என்ற கவலை ஏன் எங்கட மேட்டுக்குடிக்கு ஏன் வரப்படாது. . . ? அப்பிடி ஒன்று நிறைவேறுகிற தறுவாயில ஏன் எல்லாரும் குழப்புகிறான்கள்.. . ?


தங்களுக்கு தேவை எண்டால், அதாவது மேற்குறிப்பிட்ட (மையவாதத்திற்கு) "தேசியத்திற்கு" தேவையான வகையில வடிவம் கிடைக்கும். லெனின், மாக்ஸ், ஸ்ராலின், ரொக்ஸி. . . மாவோ


ஒரே ஒரு கேள்வி. . மனச்சாட்சிய தொட்டு சொல்லுவதானால் யாழ்ப்பாண ரோட்டில பீ அள்ளுற பறையன்ர பிரச்சனை முதன்மையானதா. . ? பல்கலைக்கழக தரப்படுத்தல் முதன்மையானதா. . ?


எல்லாம் எங்களில் திணிக்கப்பட்ட தேசியங்கள், விடுதலைகள்;, சாமான்யமற்றவைகள். கருத்தியல்கள்,


"என்னதான் நீங்கள் நியாயங்கள் சொன்னாலும், எவ்வளவு தத்துவங்களை எடுத்துச் சொன்னாலும் பொரும்பான்மை தமிழ் மக்கள் யாரை ஆதரிக்கிறார்கள். . ? புலிகளைத்தானே. ! இவ்வவளவு சனத்துக்கும் ஒண்டுமே விளங்காமலோ ஆதரிக்குதுகள். .? நீங்கள் ஒரு கொஞ்சப்பேர் மாத்திரம் ஏன் விதண்டாவாதம் கதைகிறீங்கள்.:"


கிட்லரின் ஆட்சிக்காலத்தில் ஜேர்மனியில் 75 வீதத்திற்கும் அதிகமான ஜேர்மனியர்கள் கிட்லரின் நாசிக்கட்சிக்குத்தான் ஆதரவளித்தார்கள் என்று சொல்வதிலும் பார்க்க வெறித்தனமாக ஆதரித்தார்கள். என்பதே உண்மை. அப்போதைய ஜேர்மன் மக்களின் பெரும்பான்மை வாக்குகளா? இன்றைய ஜேர்மன் மக்களின் உணர்வானது கிட்லரின் மேல் காறி உமிழ்தலா . . பெரும்பான்மையானது. ?


வரலாற்று இயங்கியல் வளர்ச்சி மாற்றம் அடையும் போது முந்தைய பெரும்பான்மையை இன்றைய பெரும்பான்மை காறி உமிழும் . . !


யாழ்ப்பாண மையவாதம் தான் பிரச்சனை என்பது உண்மைதான் தவிர்க்க முடியாது சரி. ஏன் கண்டி மையவாதம் சரியோ. ? மட்டக்களப்பு மையவாதம் தான் சரியோ. ? இல்லை முஸ்லிம் மையவாதம் சரியோ. .?


எல்லா மையவாதங்களும் சரி ! எதுவரைக்கும் . ! இன்னுமொரு ஆதிக்க மையவாதத்திற்கு எதிராக இருக்கும் வரையில்தான். ஒன்று இன்னுமொன்றுக்கு அடக்குமுறை செய்ய முற்படும் போது குப்பையில் போட வேண்டியதுதான். பல்லுக்கொட்டுண்டும் கிழட்டுப் புலி போல. .


எனவே வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்வோம் . . ஒன்று பரிணாமம் மற்றது புரட்சி (Revolution or Evolution) ஒன்று மெதுவாக வளர்ச்சி மாற்றத்தை அடையும் மற்றது சடுதியான வளர்ச்சி மாற்றத்தினை அடையும்.


எது என்றும் எப்படியென்றும் தீர்மானிப்பவர்கள் மக்கள் தான். இலங்iயில் இப்போதைக்கு புரட்சிகர மாற்றங்கள் தோன்றுவதற்கு சாத்தியங்கள் இல்லாவிட்டாலும் முன்னோக்கிய பரிணாம மாற்றங்கள் ஏற்படுதலே கேள்விக்குரியதாகிறது.


இப்போது பெரிய பாவம் இலங்கையின் ஒட்டுமொத்த தமிழ்பேசும் மக்கள்தான்.


வீதி வந்த

சின்னக் கரிக்குருவியொன்று

கூடு கட்டி குஞ்கள் பொரிக்கக் காத்திருந்தது

நாளை வெடிக்கத் தயாராகும்

பீரங்கிக்குழாய் வாசலில். . !


எமக்கெல்லாம் விடியலும் விடுதலையும்

வந்துவிடும் என்று காத்திருக்கும்

இலங்கை தமிழ்பேசும் மக்களைப் போன்று. . !


Wednesday, May 23, 2007

அன்னிய மோகத்திற்கு தரப்படும் விலை!

அன்னிய மோகத்திற்கு தரப்படும் விலை!

மெரிக்காவின் வெர்ஜீனியா பல்தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தமிழகப் பேராசிரியர் ஜி.வி.லோகநாதன் கொல்லப்பட்ட செய்தி கேட்டு இங்குள்ள அமெரிக்க அடிமைகளும் அமெரிக்க மோகிகளும் அப்படியே துடிதுடித்துப் போய்விட்டார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் ""நாசா''வின் விண்ஓடம் கொலம்பியா வெடித்துச் சிதறிய விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த கல்பனா சாவ்லா மாண்டபோது ஜான்சிராணியோடு அவரை ஒப்பிட்டுப் போற்றி நாட்டையே துக்கத்திலும் துயரத்திலும் மூழ்கடித்தனர். இவர்கள் ஏதோ தாய்நாட்டின் சுதந்திரத்தையும் இறையாண்மையையும் காப்பதற்கான போராட்டத்தில் தமது உயிரையே தியாகம் செய்தவர்களைப் போல இந்த நாட்டின் பிஞ்சு நெஞ்சங்களிலும் நஞ்சை விதைக்கின்றனர்.


கோவையில் பொறியியற் பட்டப்படிப்பும், கான்பூரில் மேற்படிப்பும் முடித்து ஆராய்ச்சிப் படிப்புக்காக அமெரிக்கா போய், கால் நூற்றாண்டுக்கும் மேலாக அங்கேயே பேராசிரியர் வேலை செய்து, குடும்பம் நடத்தி, செத்தால் அங்கேயே அடக்கம் செய்ய வேண்டும் என்று விரும்பியவர் லோகநாதன்; உலக மேல்நிலை மேலாதிக்கப் போர்வெறி நோக்கத்துக்காக விண்வெளி ஆராய்ச்சி நடத்தும் ""நாசா''வில் வேலைக்குச் சேர்ந்து விபத்தில் மாண்டு போனவர் கல்பனா சாவ்லா. இப்படி அந்நியச் சேவைக்குத் தங்களால் அனுப்பி வைக்கப்படுபவர்கள், ஏதாவது துப்பாக்கிச் சூடு, விபத்து என்று பலியாகிப் போவதால் மற்றவர்கள் சோர்ந்து போகக்கூடாது அல்லவா! அதனால்தான் அரசியல்தொழில் தரகர்கள் ஒவ்வொரு நிகழ்வின்போதும் துக்கத்தில் வெடிக்கிறார்கள். அரேபியப் பாலைவனத்தில் செத்து பிணமாகி சவப்பெட்டியிலேயே அழுகி நாறும் தமிழகத் தொழிலாளிகளை தாயகம் கொண்டு வரவும், சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் கசையடி சித்திரவதைப்பட்டு சிறைகளில் துடிக்கும் தமிழகத் தொழிலாளிகளை மீட்பதற்கும் துப்பில்லை; தமிழக மீனவர்கள் கடலிலே சுட்டுக் கொல்லப்படுவதைத் தடுக்கும் முயற்சி இல்லை. கடவுச் சீட்டு வாங்க சென்னை வரை வந்துவிட்ட பேராசிரியர் லோகநாதனின் உறவினர்கள் விமானக் கட்டணத்துக்குப் பணமில்லாமல் மீனம்பாக்கத்தில் தவித்ததை போல, கருணாநிதி தலைமையில் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து, துக்கம் தெரிவிக்கிறார்கள்; பேராசிரியரின் உறவினர்களை இலவசமாக அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கிறார்கள்.


இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் ஏதாவது சேவை செய்வார்கள் என்ற ""நம்பிக்கை''யில்தான் மனிதவள மேம்பாடு என்ற பெயரில் ஒரு பொறியியலாளர், ஒரு மருத்துவர், ஒரு விஞ்ஞானி, ஒரு கல்வியாளரை உருவாக்க பொதுப்பணம் கோடிக்கணக்கில் செலவிடப்படுகிறது. ஆனால் இவர்களிடம் முழுக்க முழுக்க சுயநல பிழைப்புவாதம்தான் நிரம்பி வழிகிறது; அவர்களால் இந்த நாடும் மக்களும் அடைந்த பெருமை, நன்மை ஏதும் கிடையாது. தானும், முடிந்தவரை தம் உறவினர்களும் அமெரிக்காவிற்குப் போய் பச்சை அட்டை வாங்கிக் கொண்டு சொகுசாக எப்படி வாழ்வது என்பது பற்றியே அவர்கள் எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ""என்னிடம் அறிவிருக்கிறது, அதற்கு நல்ல விலை கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும் விற்கத் தயாராக இருக்கிறேன். அதிலென்ன தப்பு?'' என்று கேட்கிறார்கள். ஆபாசச் சினிமாக்காரிகள்கூட தன்னிடம் கவர்ச்சி இருக்கிறது, பணத்திற்கு அதைக் காட்டுவதில் என்ன தப்பு இருக்கிறது என்று கேட்கிறார்கள்.


அந்நிய மோகமும் அடிமைத்தனமும் தலைக்கேறியதால்தான் கள்ளக் கடவுச் சீட்டு வைத்துக் கொண்டும் ஆள்மாறாட்டம் செய்தும் மேலைநாடுகளுக்கு ஓடுகிறார்கள். இதற்கான கிரிமினல்தொழில் தரகர்களாக சில சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களே உள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள உலக வர்த்தகக் கழகத்தின் இரட்டைக் கோபுரத்தின் மீது அல்கொய்தா தீவிரவாதிகள் நடத்திய விமானத் தாக்குதல்; கனடாவில் சீக்கியத் தீவிரவாதிகள் நடத்திய விமானத் தகர்ப்பு; வெர்ஜினியா பல்தொழில் நுட்பப் பல்கலைக் கழகத் துப்பாக்கிச் சூடு; கொலம்பியா விண் ஓட விபத்து போன்ற சம்பவங்களால் அந்த ஓடுகாலிகள் பலியாகிப் போகும்போது நாம் இவ்வளவு தூரம் அக்கறைப்பட வேண்டிய அவசியமில்லை. இவையெல்லாம் இந்த ஓடுகாலிகளின் அமெரிக்கப் புரவலர்களான ஏகாதிபத்தியவாதிகள் பெற்றெடுத்த செல்லப் பிள்ளைகளின் கைவரிசைகள் தாம். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்க வெறிதான் பயங்கரவாதமாகவும் எதிர்பயங்கரவாதமாகவும் உருவெடுத்திருக்கிறது; தன்னல வெறி, தனிமைவாதம் ஆகிய வக்கிரம் கொண்ட அமெரிக்க சமூககல்விபண்பாடுதான், வெர்ஜினியா பல்கலைக்கழகத் துப்பாக்கிச் சூடு நடத்திய தென்கொரியப் பிறப்பு இளைஞனை கொலைவெறியனாக்கியது. அமெரிக்க அரசியலில் ஆதிக்கம் வகிக்கும் ஆயுதமுதலாளிகள் ஊட்டி வளர்க்கும் துப்பாக்கிக் கலாச்சாரம்தான் அந்த இளைஞனை ஆயுதபாணியாக்கியது; பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை இத்தகைய தொடர் படுகொலைகளுக்கு இதுவே காரணம்.

Tuesday, May 22, 2007

பிராஞ்சு தேர்தல் முடிவும் ஏற்படுத்தவுள்ள சமூக அதிர்வுகளும்

பிராஞ்சு தேர்தல் முடிவும் ஏற்படுத்தவுள்ள சமூக அதிர்வுகளும்

பி.இரயாகரன்
22.05.2007


ற்றவனை ஒடுக்கவேண்டும், துன்புறுத்த வேண்டும் என்று விரும்பியோரின் வெற்றி தான், பிரான்சின் புதிய ஜனாதிபதியாகியுள்ள நிக்கோல சார்க்கோசியின் வெற்றியாகும். பிரான்சின் இந்த தேர்தல் முடிவுகள், இன்றைய உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலில் பல சமூக அதிர்வுகளை உருவாக்கக் கூடியவை. பிரஞ்சு மக்களை மட்டுமல்ல, உலக மக்கள் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு, படு பிற்போக்காக செல்வாக்கு வகிக்கும்.


தேர்தல் முடிவு தீவிர வலதுசாரிகளின் சமூக ஒடுக்குமுறைகளுக்கு வழிகாட்டியுள்ளது. இனி என்றுமில்லாத அளவுக்கு சுரண்டல் தீவிரமாகும். பெரும் பணக்கார வர்க்கம் மேலும் கொழுக்கவும், ஏழைகள் மேலும் ஏழைகளாகி பெருகவும் வழிகாட்டும். இதை செய்வதற்கு ஏற்ற பொலிஸ் ஆட்சி நிறுவப்படும். இந்த வகையில் தொழிலாளிகளுக்கு எதிரான சட்டங்கள், மக்களுக்கு எதிரான சட்டங்கள் மூலம், மக்கள் மீதான சுமை அதிகரிக்கும். சுரண்டலின் தீவிரம் முன்பு இருந்த காலத்தை விட அதிகரிக்கும். உலகளாவிய சந்தையை கைப்பற்றுவதில் மற்றைய ஏகாதிபத்தியத்துடன் போட்டியை உருவாக்கும். ஏகாதிபத்திய முரண்பாட்டை தீவிரமாக்கும் அதேநேரம், இதனடிப்படையில் உலகளாவிய ஆக்கிரமிப்புகளில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்தும்.


இதை சாதிக்க, மக்களை திசைதிருப்ப கையாளும் வழி என்பது மிகமிக ஆபத்தானது. உள்ளடக்க ரீதியாக நாசிசத்தின் ஒரு கூறை முன் தள்ளுவதன் மூலம் இது அரங்கேறவுள்ளது. வெளிப்படையாகவே வெளிநாட்டவர்கள் மீதான சட்டங்கள், ஓடுக்குமுறைகள் மற்றும் தண்டனைகள் மூலம், நாட்டில் அமைதியையும் சுபீட்சத்தையும் கொண்டு வர முடியும் என்று காட்டுகின்ற, இனவாத நிறவாதக் கூறே முன்னிலைக்கு வரவுள்ளது. பிரஞ்சு சமூகத்தை ஏமாற்றுவது, ஆசைகாட்டுவது, மோசடி செய்வதன் மூலம், மூலதனத்தின் செழிப்பை உருவாக்க முனைகின்றனர். செல்வம் உள்ளவன் மேலும் மேலும் கொழுக்க வேண்டும் என்பதே இந்த அரசின் இலட்சியமாகும். இதற்காக சொந்த மக்களை அதிகமாக சுரண்டவும், உலக மக்களை சூறையாடும் வேலைத்திட்டத்துடன் தான் ஆட்சிக்கு வந்துள்ளனர்.


இதன் பின்னணியில் மக்களை ஒடுக்கி சுரண்டுகின்ற வேலைத் திட்டம் என்பது சூக்குமமாக உள்ளது.


1. தொழிலாளி வர்க்கம் கடந்த காலத்தில் போராடிப் பெற்ற உரிமைகளை, படிப்படியாக ஆனால் தீவிரமாக பறித்தல்.


2. தொழிலாளி வர்க்கத்தை வெறும் உழைப்பு பொருளாக, சந்தையில் வாங்கி விற்கும் ஒரு நுகர் பொருளாக, எப்படியும் எந்த வகையிலும் பயன்படுத்தும் 'சுதந்திர" உரிமையை மூலதனத்துக்கு கொடுத்தல்.


3. அரசு சேவையாக உள்ள அனைத்து துறையையும் இல்லாதாக்குதல். அந்த வகையில் மருத்துவம், கல்வி, போக்குவரத்து முதல் கொண்டு அனைத்து சமூக உதவித் திட்டங்களையும் ஒழித்தல். அனைத்தையும் பணம் கொடுத்து வாங்கக் கோரும் சமூக உறவை உருவாக்குதல். மனித உறவை பண உறவாக்குவது. குறிப்பாக அரசு சேவையை ஒழித்து, அரசு என்பது பொலிஸ் பிரிவாகவும், வரி மற்றும் தண்டம் அறவிடும் பிரிவாகவும் மட்டும் மாற்றுதல். அரசு என்பது மூலதனத்தின் கருவி என்பதால், இவற்றை மட்டும் செய்தல் தான், அரசு பற்றிய உலகமயமாதல் கொள்கை. இதையே தீவிரமாக அமுல் செய்யும் பொலிஸ் ஆட்சிக்குள், பிரஞ்சு சமூகம் காலடி எடுத்து வைத்துள்ளது.


முன்பு இவை மெதுவாக நடந்து வந்தது. மக்களைக் கண்டு அஞ்சி, சூக்குமமாக இரகசியமாக பின்பக்க வழிகளில் மூடிமறைக்கப்பட்டு புகுத்தப்பட்டது. நிக்கோல சார்க்கோசி புதிய அரசு பற்றிய பிரமையும், அதன் தாக்கத்தின் உட்சாரமும் என்ன? அதுதான் என்னவென விளக்க முடியாத சூக்குமம். யாராலும் இதுதான் என்று அடையாளப்படுத்த முடியாத, அதை சொல்ல முடியாத ஒரு நிகழ்வை எதிர்பார்க்கின்றனர். இந்த மாற்றத்தை நோக்கிய எதிர்பார்ப்பு. அதை சொந்தமாக தெரிந்துகொள்ள முடியாத பிரமை. அது தனக்கு எதிராக இருக்கப் போவதை அறிந்துகொள்ளாத மயக்கம். அது விரைவில், ஆனால் சொந்த அனுபவத்தின் வாயிலாக தெளிவுபடுவது தடுக்கமுடியாது.


மிகவும் தீவிரமாக மக்களை ஒடுக்கும் நிலையை உருவாக்க, பலியீடுகள் அவசியம். இந்தவகையில் பலியிடப்படுபவர்கள் முதலில் வெளிநாட்டவர்கள் தான். வெளிநாட்டவர்கள் மீதான தாக்குதல், அவர்களை பிரஞ்சு சமூகத்துக்கு கீழானவராக இழிவுபடுத்தல், பண்பாடற்றவராக காட்டுதல், அவர்களை குற்றவாளிச் சமூகமாக காட்டுதல், அவர்களை ஒதுக்கி ஒடுங்க வைத்தல் மூலம் தான், பிரஞ்சு சமூகம் மீதான மூலதனத் தாக்குதலை தொடங்கவுள்ளனர். வெளிநாட்டு சமூகங்களை இழிவானதாக காட்டவும், அவர்கள் ஈவிரக்கமின்றி ஒடுக்க வேண்டிய சமூகம் என்பதை நிறுவும் முதல்படியான முயற்சியில், பொலிஸ் ஆட்சியும் புதிய சட்டங்களும் அலையலையாக வரவுள்ளது. இவைகள் மூலம் பிரஞ்சு இனவெறி நிறவெறியை வளர்த்து, மூலதனத்துக்காக பிரஞ்சு சமூகம் மீதான தாக்குதல் நடத்தப்படவுள்ளது. பிரஞ்சு சமூகம் மீதான முதல் கண்ணிவெடி, வெளிநாட்டவர் மீதானதே. எல்லா வலதுசாரிகளும், தமது சுரண்டலை தீவிரமாக்க பாசிசத்தை நாடும் போது உள்ள இடைவெளி என்பது, பிரஞ்சு சமூகத்தில் குறைந்து வருகின்றது.


அனைத்து மக்களின் நலன் என்பது வெற்றுப் புரளி


அனைத்து மக்களின் நலனுக்காக உழைக்கப் போவதாக நிக்கோல சார்க்கோசி விடுக்கும் அறிவிப்பு, பொய்யானதும் போலித்தனமானதுமாகும். ஏமாற்றும், மோசடியும், வாய்ச்சவடாலும், இதன் அரசியல் உள்ளடக்கமாகும். (ஜனநாயக) அரசு என்பது பெரும்பான்மை மக்களால் தெரிவு செய்யப்பட்ட போதும், பெரும்பான்மை மக்களின் விருப்பை அது ஒருநாளும் பூர்த்தி செய்வதில்லை. இங்கு பெரும்பான்மை மக்களின் தெரிவு என்பது, ஊடகங்கள் மூலமான விளம்பர பிரச்சார சூதாட்டம் தான். விளம்பர சூதாட்டத்துக்கு தேவையான மோசடிகள், ஏமாற்று வித்தைகள் தான் ஜனநாயக அரசியல். இதுவே தேர்தல் ஜனநாயகமாகும். இந்த ஜனநாயகம் தாம் ஆட்சிக்கு வந்தால், மூலதனத்துக்கு ஆதரவாக மக்களுக்கு எதிராக என்ன சட்டங்களை கொண்டு வரப்போகின்றோம் என்று எதையும் வெளிப்படையாக கூறுவது கிடையாது. அவை இந்த ஜனநாயக அரசியலில், எப்போதும் அரசியலில் சூக்குமாகவே சதியாகவே உள்ளது.


அரசு என்பது பெரும்பான்மை மக்களின் தேவையை, விருப்பை அறிந்து, அதை அமுல்படுத்தும் ஒரு மக்கள் நிறுவனமல்ல. மாறாக சிறுபான்மையினராக உள்ள, சுரண்டல் வர்க்கத்தின் நலனை பூர்த்தி செய்வதே இந்த ஜனநாயக அரசாகும். சட்டகங்கள் முதல் ஜனநாயகம் வரை இதற்குள்தான் வரையறுக்கப்படுகின்றது. இதை மறுத்து, இந்த அரசுகள் ஒரு சட்டத்தைக் கொண்டுவராது. சட்டங்கள் தொழிலாளி வர்க்கத்தை சுரண்டவும், சூறையாடவும் வழிகாட்டும் சட்ட ஒழுங்கு முறையாகும். இதைத் தான் அரசு செய்கின்றது. முதலாளித்துவ அரசு பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்காக ஒரு நாளும் இயங்குவது கிடையாது. இதனால் தான் இந்த அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் நடத்துகின்றனர். புதிய சட்டங்களை மக்கள் தமக்காக உருவாக்க நிர்ப்பந்திக்கின்றனர். அரசின் பெரும்பான்மை, தானாக மக்களுக்காக சட்டங்களை உருவாக்குவதில்லை, மாறாக மக்கள் அதற்காக போராடுகின்றனர்.


இந்த நிலையில் தான் நிக்கோல சார்க்கோசி அனைத்து மக்களின் நலனுக்காக உழைக்கப் போவதாக கூறுகின்றார். இது வெறும் பித்தலாட்டம். சுரண்டுவதை அடிப்படையாக கொண்ட பொருளாதார எல்லைக்குள், முதலாளிக்கும் தொழிலாளிக்கும் எப்படி ஒரு சுபீட்சத்தை தரமுடியும். இரண்டு பேருக்கும் நன்மைகளை உருவாக்க முடியும் என்பது, அரசியல் நகைச்சுவைதான். தொழிலாளியாகிய நீ, வெறும் முட்டாள் என்பதையே சொல்லாமல் சொல்லிவிடுகின்றனர். சுபீட்சம் இரண்டில் ஒன்றுக்குத்தான். முதலாளி தொழிலாளியை சுரண்டும் போது, தொழலாளி சுபீட்சத்தைப் பெறமுடியாது.


தொழிலாளி வர்க்கத்தின் வாழ்வை இருட்டாக்கி, முதலாளிக்கு வெளிச்சம் காட்டுவதைத்தான் இப்படி அறிவிக்க முடிகின்றது. முதலாளியும் தொழிலாளியும் பரஸ்பரம் அதிக நன்மையை அடைவது என்ற நிக்கோல சார்க்கோசியின் அறிவிப்பு, பொய்யும் புரட்டுமாகும். முதலாளிக்கு அதிக நன்மையை அடைய உதவும் போது, தொழிலாளி நிச்சயமாக அதிகமாக இழக்க வேண்டும். இதை தவிர அரசியல் பொருளாதாரத்தில் வேறு குறுக்கு வழி கிடையாது. இது முதலாளித்துவ பொருளாதார விதியுமாகும். அவர் வழங்கிய சில வாக்குறுதிகளில் இருந்து இதை துல்லியமாக பார்ப்போம்.


அதிக வேலை அதிக கூலி


நீ அதிகமாக உழைத்தால், நீ அதிகமாக சம்பாதிப்பாய். நீ அதிகமாக உழைக்க, உனது வேலை நேரத்தை அதிகரி. இதை அடிப்படையாக கொண்ட சட்டம் மிக விரைவில் வரவுள்ளது. கடைந்தெடுத்த முதலாளித்துவத்தின் மோசடி. தொழிலாளி வர்க்கத்தின் ஓய்வை திருடுகின்ற மூலதனத்தின் அற்பத்தனம். இது இந்த ஜனநாயகத்தின் வக்கிரமாகும். எட்டு மணி நேர வேலை என்று அரசியல் கோரிக்கையின் அடிப்படையில், தொழிலாளி வர்க்கம் காலாகாலமாக போராடிப் பெற்ற உரிமையை பறிக்கும் உள்ளார்ந்த சதிதான் இது. அந்தளவுக்கு இன்றைய சமூகத்தின் அறிவின்மையை, இந்த ஜனநாயக பாராளுமன்றங்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்துகின்றது. அன்று தொழிலாளி வர்க்கம் பெற்று இருந்த அறிவு, இன்று உழைக்கும் வர்க்கத்திடம் அறவே கிடையாது என்பதை இது வெளிப்படுத்துகின்றது. மக்களின் ஓய்வை விழுங்கும் ஊடகங்களின் ஆக்கிரமிப்பு, மனித அறிவை நுகர்வு அறிவாக்கி அதில் ஆபாசமாக தித்திக்கவைத்துள்ளது.


அதிக வேலை அதிக கூலி, முதலாளித்துவ சமூக அமைப்பில் காலாகாலமாக அம்பலப்பட்டுப் போன ஒன்றுதான். ஆனால் இதை முன்வைக்கும் விதம் சூக்குமானதும், அற்பத்தனமானதும். அதாவது உனது சொந்த சட்டப்படியான வேலை நேரத்துக்கு அதிகமாக வேலை செய்தால், அந்த பணத்துக்கு வரி கிடையாது என்ற சூழ்ச்சியால் திட்டமிடப்பட்ட சிலந்தி வலை. அதேநேரம் முதலாளிக்கு மூலதனத்தைக் குவிக்க, இதன் மூலம் கட்டற்ற வரியற்ற சுதந்திரம். அந்த மேலதிக நேரத்திலான தொழிலாளியின் உழைப்புக்கும், அந்த உழைப்பு உருவாக்கும் உற்பத்திக்கும் முதலாளி வரி கட்டத் தேவையில்லை.


இந்த உத்தி மூலம் இரண்டு பகுதியையும் திருத்திசெய்வதாக காட்டும் முதலாளித்துவ அற்பத்தனங்கள். இதையே ஊடகங்கள் தமது பங்குக்கு ஊதிப்பெருக்கின. இதன் விளைவு என்ன? அதைபற்றி மட்டும் யாரும் பேசுவது கிடையாது. ஆம் நாம் அதைப்பற்றி பேசியே ஆக வேண்டும்


1. 200 பேர் தொழில் செய்கின்ற ஒரு வேலைத்தளத்தை நாம் எடுப்போம். ஒரு தொழிலாளி அல்லது ஊழியர் இரண்டு மணி நேரம் மேலதிகமாக வேலை செய்தால், 400 மணி மேலதிக நேரம் உழைப்பு உருவாகின்றது. இதுவே நாலு மணி நேரம் என்றால், 800 மணி நேரம் உருவாகின்றது.


இதற்கு இரண்டு பகுதிக்கும் வரி இல்லை என்பதன் மூலம், தொழிலாளிக்கு கிடைப்பது சில சில்லறைகள். முதலாளிக்கு கிடைப்பது 50 பேரின் அல்லது 100 பேரின் ஒரு நாள் உழைப்பிலான லாபம். 250 பேரை அல்லது 300 பேரை வேலையில் அமர்த்த வேண்டிய முதலாளி, லாபம் கருதி அதை 200 பேரைக் கொண்டு செய்யம் சூழ்ச்சி தான், வரவுள்ள சட்டத்தின் உள்ளடக்கம். அதாவது 2 மணி மேலதிக நேரம் மூலம், 50 தொழிலாளிகளின் வேலை மறுக்கப்படும். 4 மணி மேலதிக நேரம் மூலம் 100 தொழிலாளிகளின் வேலை மறுக்கப்படும். அந்த தொழிலாளிகளுக்கு முதலாளி கட்டவேண்டிய சமூக உதவிகளை கூட, முதலாளி கட்ட வேண்டிய அவசியம் கிடையாது.


இது இயல்பில் புதிய வேலை வாய்ப்பை சமூகத்துக்கு மறுக்கும். புதிய தலைமுறை அதிகளவுக்கு பாதிக்கப்படும். முதல் தலைமுறை இதற்கு இணங்கி செல்லும் குறுகிய அற்பத்தனம், அடுத்த தலைமுறையின் வாழ்வுக்கே வேட்டு வைக்கின்றது. சமூக பொது நிதிக்கு இந்த மேலதிக நேரம் மூலம் வழங்கப்பட வேண்டிய பணத்தை, முதலாளி கட்ட வேண்டிய அவசியம் இல்லை என்பது, அரசு அதைக் கைவிட்டு செல்வதற்கு ஏற்ற கோட்பாடாகின்றது. 18ம் நூற்றாண்டு காலகட்டத்துக்கு மீண்டும் திரும்புவதை இது குறிக்கின்றது.


உண்மையில் முதலாளிக்கு வழங்கும் உள்ளார்ந்த லாப விதி, ஆட் குறைப்பைக் கோரும். 200 பேர் 400 மணி நேரத்தை மேலதிகமாக உழைக்கும் போது அல்லது 800 மணி நேரத்தை மேலதிகமாக உழைக்கும் போது, ஆள் உருப்படியின்றி 200 பேருக்குள் 50 தொழிலாளி அல்லது 100 தொழிலாளியின் மேலதிகமாக சொந்தத் தொழில்துறையில் இருப்பதைக் காண்பான். மேலதிக உழைப்பு முதலாளிக்கு அதிக லாபம் என்பதால், தனது 200 தொழிலாளிகள் உள்ள இடத்தில் 40 அல்லது 67 தொழிலாளிகள் அவசியமற்றதாகின்றது.


அதாவது 200 பேர் வேலை செய்யும் இடத்தில் சட்டப்படியான 1600 மணி வேலை நேரத்தை, லாபம் கருதி மேலதிக நேரத்தைக் கொண்டு பூர்த்திசெய்யவே மூலதனம் கருதும். இது முதலாளித்துவ பொருளாதார விதி. இது இயல்பில் ஆட் குறைப்பை உருவாக்குகின்றது. இது 40 பேரை அல்லது 67 பேரை வேலையில் இருந்து துரத்தி அடிக்கும். அந்த தொழிற் துறைக்கு தேவையான வேலை நேரம் 1600 மணிகள் என்பதால், 10 மணி நேரப்படி 160 தொழிலாளியும் அல்லது 12 மணி நேரப்படி 133 தொழிலாளியும் போதுமானது. இது 40 பேரை அல்லது 67 பேரை வீட்டுக்கு அனுப்பும். அல்லது 50 முதல் 100 பேரின் வேலையை மறுக்கும். தொழிலாளிகளின் எண்ணிக்கையை குறைத்தலும், வேலைக்கு எடுத்தலை தவிர்த்தலும் முதலாளியின் லாப விதிக்கு அமைய, இந்த சமூகத்தின் துன்பக் கடலில் இறக்கும். நிக்கோல சார்க்கோசியின் பொற்காலம் இப்படித்தான், மனிதர்களுக்கு எதிராக அலைஅலையாக உருவாகும்.


அற்ப இழிவான நுகர்வுச் சலுகையைக் கொண்டு, பெருமளவிலான உழைக்கும் மக்களின் வாழ்வையே சிதைக்கும் கீழ்த்தரமான முதலாளித்துவதற்கே உரிய உத்தி. இதை அற்ப அரசியல் பிரச்சாரத்தின் மூலம், மனித மனங்களை மயங்குகின்ற நிக்கோல சார்க்கோசி பொற்கால வாதங்கள்.


2. அடுத்து இந்த மேலதிக வேலை நேரம் படிப்படியாக, அடிப்படையான வேலை நேரமாக, கட்டாய வேலை நேரமாக மாறிவிடும். மேலதிக வேலை நேரம், இயல்பாகவே தொழிலாளியின் அல்லது ஊழியரின் சுய தன்மையையே அழித்துவிடும. தொழிலாளியின் ஒய்வு திருடப்பட்டுவிடும். உழைப்பிலும், உறக்கத்திலும் முழு வாழ்வையும் ஆழ்த்திவிடும். வாழ்வின் இயந்திரத் தன்மை மேலும் நுட்பமாக அதிகரிக்கும்.


3. தொழிலாளியின் மேலதிக வேலை நேரம், கூலியின் பெறுமதியை இல்லாதாக்கிவிடும். மேலதிகக் கூலி இன்றி வாழ்வை நடத்த முடியாத வகையில், வாழ்க்கைச் செலவின் மட்டம் உயர்ந்துவிடும். முன்பு மேலதிக நேரமின்றி உழைத்து வாழ்ந்த போது வாழ்ந்த வாழ்க்கை, மேலதிக நேரத்தில் உழைத்தும் வாழமுடியாத நிலைக்கு வாழ்க்கைச் செலவு மாறிவிடும். அதாவது பணத்தின் பெறுமதி குறைக்கப்பட்டு விடும். உதாரணமாக அடிப்படைச் சம்பளத்தை 1500 ஈரோக்காக கோருகின்ற இன்றைய நிலையில், அதுவே வாழ்க்கைச் செலவாக கருதப்படுகின்றது. அதை உயர்த்த மறுக்கும் முதலாளியும் அரசும், அதை மேலதிக நேரம் மூலம் ஈடுசெய்யக் கோருகின்றான். இப்படி மேலதிக நேரம் மூலம் இது ஈடுசெய்யப்படும் போது, அந்த 1500 ஈரோக்களைக் கொண்டு வாழமுடியாத நிலை உருவாகிவிடும். தொழிலாளிக்கு வேறு மாற்று வழி இல்லாமல் போய்விடும். 12 மணி கட்டாயம் உழைத்தேயாக வேண்டும். இப்படி தொழிலாளி வர்க்கம் மாற்றப்பட்டுவிடும்.


4 .மேலதிக வேலை நேரம் மூலம் அதிகம் சம்பாதிக்கலாம் என்று சமூகத்தின் ஒரு பகுதியின் அற்ப சுயநலத்தை எழுப்பி, மற்றைய சமூக உறுப்புக்கு எதிராக முன்தள்ளுகின்றது. இதன் மூலம் சமூகத்தின் உள்ளார்ந்த முரண்பாட்டை உருவாக்கி, இலவசமாக மனித உழைப்பை திருடி மூலதனம் கொழுக்க முனைகின்றது.


உழைப்பை சந்தையில் விற்பவன் மேலதிக நேரத்துக்கு வரிச் சலுகையை அனுபவிக்க வேண்டும் என்றால், குழந்தை இல்லாமல் இருத்தல் அவசியமானது. குழந்தைகள் இருந்தால் இயல்பில் வரி கட்ட வாய்ப்பு இருப்பதில்லை. இந்த வகையில் கூட மேலதிக வேலை நேரத்துக்கான சலுகை என்பது முதலாளிக்கானதே.


அத்துடன் குறித்த வயதுடைய உழைக்கும் ஆற்றலுள்ள இளம் பிரிவை அதிதமாக சுரண்டுதல் மூலம், உழைப்பின் ஆற்றலை உறிஞ்சி பின் தூக்கியெறியும் மூலதனத் தத்துவமாகும்.


குடும்ப அலகில் ஓய்வாகவும் சமூகமாகவும் இருத்தல் என்பது மறுக்கப்படுவதன் மூலம், சமூக உறுப்புகள் மேலும் ஆழமாக சிதைவுறும். மேலதிக உழைப்பு, உழைப்புச் சமூகத்தின் உள் நுழைய முனையும் புதிய தலைமுறைக்கு அதை மறுப்பதன் மூலம் செயலாற்றும். அதேபோல் உழைப்பில் ஆற்றலை உடல் ரீதியாக இழந்து போன சமூகப் பிரிவுக்கு எதிராக இது அமையும். மேலதிக உழைப்பில் ஈடுபட முடியாத நிலையில், அவர்கள் மேல் கடுமையான உழைப்பின் சுமையை அழுத்தும். பழைய தலைமுறையை உழைப்பில் அதிமாக ஈடுபடும்படி, இளைய தலைமுறையின் உழைப்பின் ஆற்றல் நிர்ப்பந்திக்கும். பழைய தலைமுறையின் வேலையை இழக்க வைக்கும் அபாயத்தை, நிரந்தரமாக மேலதிக வேலையின் ஆற்றல் உருவாக்கிவிடும்.


5. மேலதிக வேலை செய்ய மறுக்கும் ஒருவன் முதலாளிக்கு அவசியமற்ற உழைப்பாக கருதி, உழைப்பில் இருந்து கழித்துக்கட்டும் தெரிவை இயல்பாக வழங்கும். அதுதானே மூலதனத்தின் ஜனநாயகம் மட்டுமின்றி சுதந்திரமும் கூட.


6. கூலி போதாமையால் ஏற்படும் சமூக நெருக்கடிகளை, மேலதிக வேலை நேரம் மூலம் தற்காலிகமாக பின் போடுவதன் மூலம், சமூகத்தின் புரட்சிகரமான ஆற்றலை, விழிப்புணர்வை ஒரு பகுதியினரிடம் இது தற்காலிகமாக முடக்கமுனையும்.


இப்படி இந்த மேலதிக வேலைக்கு பல பக்கங்கள் உண்டு. இதை மூடிமறைத்து கவர்ச்சியாக, அரசியல் வித்தை காட்டி, மோசடிகள் செய்து, ஊடகவியல் மூலம் வீங்கவைத்து சமூகத்தை நலமடித்தே, மூலதனத்துக்காக தேர்தல் வெற்றிகளைப் பெறுகின்றனர். சமூத்தின் உள்ளார்ந்த உறுப்பையே அழித்து அதை தின்னுவது தான், இந்த மேலாதிக்க நேரக் கனவுகள் பின்னுள்ள மயக்கம்.


பழைய வாகனத்துக்கு அதிக வரி, புதிய வாகனத்துக்கு குறைந்த வரி


சுற்றுச் சூழலுக்கு ஊடாக ஏழைகளுக்கு வலதுசாரிகள் வைக்கும் நஞ்சு தான் இது. சாராம்சத்தில் பணக்காரனுக்கு வரி குறைப்பு, ஏழைக்கு வரி அதிகரிப்பு. ஏழைகள் நுகர்வதை குறை, பணக்காரன் நுகர்வதை அதிகரி என்ற மூலதனத் தத்துவம். இதை சுற்றுச் சுழலுக்குள் நுழைத்த நுட்பம் தான், பலருக்கும் புரியாத புதிர்.


பணக்கார நாடுகள் தான், அதன் நுகர்வு தான், அதன் லாப வெறி தான், சுற்றுச் சூழல் மாசடைதல் அழிப்புக்கான காரணமாகும். ஆனால் கஞ்சிக்கே வழியற்ற ஏழைநாடுகளின் மீது இதை போட முனைகின்ற அமெரிக்காவின் முயற்சியை, ஒரு நாட்டில் உள்ள ஏழைகள் மீது கொண்டு வருவது தான் நிக்கோல சார்க்கோசியின் உத்தி. இது பலருக்கு புரியாத புதிராக இருப்பது தான் வேடிக்கை. மூலதனத்தின் கால்களில் படுத்து கிடந்து குலைக்கும் வலதுசாரிகள், இப்படித்தான் இதைக் கொண்டு வருவார்கள்.


அதிக நுகர்வு தான் சுற்றுச் சூழலுக்கான பிரச்சனைக்கு காரணம். அதிக நுகர்வுக்கு, அதிக வரி என்ற சட்டத்தை வலதுசாரிகள் ஒருநாளும் கொண்டு வரமாட்டார்கள். ஏழைக்கும், அவனின் நுகர்வுக்கும் அதிக வரியை எப்படி அதிகரிப்பது பற்றி சதா அவர்கள் சிந்திப்பவர்கள்.


இன்று புகைத்தால் கிடைக்கும் வருமானத்தை விட, புகைத்ததால் வரும் நோய்க்கு அதிகம் செலவழிக்கப் படுகின்றது. இது உலகளாவிய நிலை. ஆனால் புகைத்தலை ஒழிக்கமாட்டார்கள். அதாவது சிகரட்டை உற்பத்தி செய்பவனும், அது உருவாக்கும் நோய்க்கு மருந்தை உற்பத்தி செய்பவனும் புகைத்தலை தடைசெய்ய அனுமதிக்க மாட்டான். அவன்தான் அரசை நிர்வகிப்பவனான உள்ளான். அவன் இதில் உள்ள வேலை வாய்ப்பு முதல் பலவற்றையும் கூறி இதைப் பாதுகாப்பான்.


இது போல் தான் தனியார் வாகனங்களை வைத்திருப்பதும். இது சுற்றுச் சூழலுக்கு நஞ்சிடுகின்றது. தனியார் வாகனம் வைத்திருப்பால் கிடைக்கும் வருமானத்தைவிட, அது ஏற்படுத்தும் சுற்றுச் சூழலால் ஏற்படும் வருமான இழப்பு அதிகமானது. ஆனால் மூலதனம் தனியார் வாகனத்தை வைத்திருத்தல் தான், சில முதலாளிகளின் இருப்புக்கான அத்திவாரம். அவன்தான் அரசு என்றால், அதன் எடுபிடிகள் தான் தேர்வு செய்யப்படும் உறுப்புகள்.


சுற்றுச்சூழல் பிரச்சனையின் ஒரு அம்சமாக உள்ள வாகனப் பயன்பாடு நிறுத்தப்பட வேண்டும். இதை செய்வது என்பது, பொதுப்போக்குவரத்தை அதிகரிப்பதாகும். அத்துடன் அதை இலவசமாக விடுவதன் மூலம் இந்த பிரச்சனையை தீர்க்க முடியும். இதை மீறி தனியார் வாகனத்தை வைத்திருக்க விரும்பினால், அதன் மீதான அதிக வரி என்ற சட்டம் அவசியமானது.


பொதுவாக சுற்றுச்சூழல் ஏற்படுத்தும் செலவைவிட, பொதுப்போக்குவரத்தை இலவசமாக்குவது செலவு குறைவானது. இதவே எதார்த்தம். அதிக லாபம், முதலாளி சுரண்டிக் கொழுக்கும் சுதந்திரம் என்பன இதை அனுமதிக்க மாட்டாது. அரசு முதலாளியின் நலனுக்காகவே இயங்குவதால், இதை கவனத்தில் எடுக்காது. மக்கள் மட்டும் தான், தனக்கு தேவையான உண்மையான ஒன்றை எதார்த்தத்தின் மீது கொண்டு வரமுடியும்.


பிரஞ்சு மக்களை அடையாளப்படுத்தல்


இதுவும் நிக்கோல சார்க்கோசியால் முன்வைக்கப்பட்டதும், அவரின் வெற்றியை தீர்மானித்த காரணிகளில் ஒன்று. தீவிர இனவாத வலதுசாரிய கண்ணோட்டாத்தை, வெளிநாட்டவருக்கு எதிராக இப்படி கிளப்பி விடப்பட்டது.


இதுவே நிக்கோல சார்க்கோசியின் வெற்றியில் முக்கியமான அம்சமாக செயல்பட்டது. ஒரு பிரஞ்சு நாட்டில், அந்த மக்களின் முன், உங்களை அடையாளப்படுத்துவேன் என்றால், அதன் அர்த்தம் என்ன?


பிரஞ்சு மக்கள் யாரிடமோ தமது சொந்த அடையாளத்தை இழந்துள்ளனர் என்பதல்லவா அதன் அர்த்தம். சரி யாரிடமிருந்து இதை மீட்க கோருகின்றனர்.?


இந்த விடையத்தில் உள்ள இனவாதத்தை புரிந்த கொள்ளாத பலர் அவருக்கு வாக்களித்தனர். இதற்காகவே மட்டுமே சிலர் வாக்களித்தனர்.


பிரஞ்சு மக்களை அடையாளப்படுத்தல் என்பது, உண்மையில் வெளிநாட்டவர்கள் மீதான வன்முறை ஏவப்படுவதையும், அவர்கள் ஓடுக்கப்படுவதையும், அவர்கள் சிறைக் கொட்டகைகளில் அடைக்கப்படுவதையும், அவர்கள் நாடு கடத்தப்படுவதையும் தாண்டி இதற்கு வேறு விளக்கம் கிடையாது. இதற்கு ஏற்ற சட்டங்கள், புதிய சட்டங்கள் மூலம் குற்றவாளி சமூகமாக வெளிநாட்டவர் உருவாக்கப்படுவார்கள்.


இதற்கு வெளியில் இந்தக் கோசம் வெற்றி பெறவேண்டும் என்றால், தீவிரமான நாசிய பாசிச கட்சியாக, ஒரு உலக யுத்தத்தை நோக்கி நகரவேண்டும். ஆக்கிரமிப்புக்கள் மூலம் உலகை மறுபங்கீடு செய்தல் என்று தீவிர உலக நெருக்கடிக்குள் புகுந்து, பிரஞ்சு சமூகத்தை அடையாளம் காட்டவேண்டும். இதுவே இதில் இரண்டாவது அம்சமாகும்.


இரண்டாவது அம்சம் ஒருபுறம் இயங்கு தளத்தை பெறுவதற்குரிய சூழல், இனித்தான் அரசியல் ரீதியாக தீவிரமாக தயாரிக்கப்பட வேண்டும். முதலாவதாக பிரஞ்சு மக்களை அடையாளப்படுத்துவதற்கு, வெளிநாட்டவர் மீதான தாக்குதலுக்குரிய உணர்வு மட்டம் தயாராகவே உள்ளது. அதை நாம் சந்திக்கும் காலம் விரைவில் முழுவடிவில் வெளிப்படும். இன்று உள்ளது போல், இனங்களுக்கு ஏற்ற தனிக் குடியிருப்புகள் போல், தீவிரமான வேறுபாட்டை சமூகங்களுக்கு இடையில் உற்பத்தி செய்வதும், தனிமைப்படுத்துவதும் தொடங்கும். மற்றய சமூகங்களை இழிவுபடுத்துவது வரையிலான மனித விரோதக் கூறுகள் பல, நிக்கோல சார்க்கோசியின் வேலைத் திட்டத்தின் உள்ளார்ந்த அம்சமாகும்.


அதிக வாக்களிப்பு எதை உணர்த்துகின்றது.


என்றுமில்லாத அதிக வாக்களிப்பு இம்முறை நடந்துள்ளது. ஆம் சமூகத்தின் அரசியல் மட்டம் விழிப்புற்றதன் விளைவே அதிக வாக்களிப்புக்குள்ளாகியது. நிக்கோல சார்க்கோசியை தோற்கடிக்க வேண்டும் என்ற உணர்வு, சமூகங்களின் கீழ் மட்டங்களில் ஏற்பட்டதன் விளைவு அதிக வாக்களிப்பாகியது.


உண்மையில் நிக்கோல சார்க்கோசி வருகையின் அபாயத்தை உணர்ந்து கொண்டவர்கள் சமூகத்தின் அடிமட்டத்தில் வாழ்பவர்கள் தான். இது அதிகரித்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது. அராஜக வழிகளுக்கு பதில், அரசியல் ரீதியாக தோற்கடிக்கப்பட்ட வேண்டும் என்ற உந்துதலை இது முதன் முதலாக வழங்கியது. தேர்தலில் நிக்கோல சார்க்கோசிக்கு எதிராக, கீழ் மட்டங்களில் தன்னிச்சையாக தீவிர பிரச்சாரம் நடத்தப்பட்டது. ஆனால் அது அரசியல் ரீதியாக முழுமை பெறாததுடன், அத்துடன் அது மேல் நோக்கி செல்லவில்லை.


உண்மையில கீழ் ஏற்பட்ட விழிப்புணர்ச்சி அரசியல் ரீதியாக முழுமை பெற்று இருக்கவில்லை. முதலாளித்துவ எல்லைக்குள்ளாக அது சுருங்கிக் காணப்பட்டது. சமூகங்களை அரசியல் மயமாக்கும் வகையில், அரசியல் மயமாக்கல் நடக்கவில்லை. சுற்றுச் சூழல் அமைப்புகள் முதல், கம்யூனிஸ்ட் கட்சி ரொட்சிய கட்சிகள் வரை புரட்சிகரமான வழிகாட்டலைச் செய்யவில்லை. தமது துரோகத்துக்கு ஏற்ற விபச்சாரத்தை அரசியலாகச் செய்தனர். இவர்கள் சமூகங்களிடையே எந்த நம்பிக்கையுமற்ற பிழைப்புவாத குழுக்களாகிவிட்டன. ஒரு விடையத்தின் சாரத்தை உள்ளார்ந்த அறிவியல் பூர்வமாக எடுத்துச்செல்லக் கூட தகுதியற்ற குழுக்களாகிவிட்டன. வெற்றுக் கோசங்கள் அரசியல் விழிப்புணர்ச்சியை உருவாக்குவதில்லை. அதுவே நிக்கோல சார்க்கோசி வெற்றியை தீர்மானிக்கும் மாற்று காரணியாக கீழ் இருந்து உருவாக்கியது.


மாறாக புரட்சிகரமான வழியில் கற்பதும் கற்றுக் கொடுப்பதுமான புரட்சிகரமான அரசியல் அவசியமானது. சம்பவங்கள் முதல் நிகழ்ச்சி நிரலின் சாதக பாதக அம்சங்களை அரசியல் ரீதியாக புரிந்து, அதை மாற்ற அணிதிரள வேண்டும். நிக்கோல சார்க்கோசியின் வெற்றியும், அவரின் எதிர்காலச் செயல்பாடும், பிரஞ்ச தேசத்தில் புதிய புரட்சிகரமான வழியை நிச்சயமாக வழிகாட்டும். எல்லாவிதமான மக்களுக்கு வெளியில் இயங்கும் புரட்சிகர வெற்றுக் கோசங்களையும் ஓரம் கட்டி, உண்மையான புரட்சிகரமான அறிவியல் ப+ர்வமான விழிப்புணர்வுடன் சமூகம் கொந்தளிப்பதை, நிக்கோல சார்க்கோசி தடுக்க முடியாது. நடக்கப் போவது இரண்டு வர்க்கங்களுக்கு இடையிலான வர்க்கப் போராட்டம் தான்.


பின் இணைப்பு.


தமிழர்கள் நிக்கோல சார்க்கோசிக்கு வாக்களித்தனரே ஏன்?


பெரும்பாலான தமிழர்கள் நிக்கோல சார்க்கோசிக்கே வாக்களித்தனர். புலிகள் தமது குறுகிய நலனை சார்ந்து, தம் மீதான கைதைத் தொடர்ந்து நிக்கோல சார்க்கோசிக்கு எதிராக வாக்களிக்க கோரியதுக்கு அப்பால் இவை இயல்பாக நிகழ்ந்துள்ளது.


தமிழர்கள் இயல்பாகவே வலதுசாரிகள் என்பதால் அதற்கு வாக்களித்தனர். இந்த வகையில் புலிகள் கூட நிக்கோல சார்க்கோசிக்கே வாக்களித்திருப்பார்கள். ஆனால் கைது முந்திக் கொண்டதால், அதை மறுத்து நின்றனர். இங்கு அரசியல் ரீதியாக அல்ல.


தமிழர்கள் இயல்பாகவே வலதுசாரி சிந்தைனையில் வாழ்வு பற்றி கனவு காண்பவர்கள். சமூக இழி நிலையில் வாழ்ந்தபடி தற்பெருமை பேசுகின்ற வாயாடிகள். இப்படி வலதுசாரிய சிந்தனையைக் கொண்டவர்கள் என்பதால், இயல்பாக வலதுசாரி சிந்தனைகளுக்கு துதிபாடுபவர்கள். அந்த கவர்ச்சியின் பின்னால் தலைகால் தெரியாது ஓடி நக்குபவர்கள். அனைத்தையும் சுயசிந்தனை இழந்து, கிளிப்பிள்ளைகள் போல் உளறுபவர்கள்.


புலிகளின் பாசிச அதிகாரத்துக்கு உட்பட்ட பின், இது மேலும் மூர்க்கமாகி உள்ளது. மற்றவன் கண்ணைக் குத்தி மகிழ்ச்சி அடைவதில் வீரம் பேசுபவர்கள். இந்த வகையில் தம்மை புனிதர்களாக, சட்ட ஒழுங்கை மதிப்பவர்களாக காட்டிக்கொண்டு அதற்கு போலியாக நடிப்பவர்கள். ஆனால் வலதுசாரி ஒழுக்ககேட்டுக்கு ஏற்ப, பல சட்டவிரோத செயல்களை செய்வதில் கைதேர்ந்தவர்கள். இதன் பின் வலதுசாரி சிந்தனை கொண்ட ஒரு மாபியா உலகமே உள்ளது.


இந்த வகையில் தமது போலித்தனமான பகட்டை பிரகடனம் செய்தபடி, வலதுசாரிகளுக்கு வாக்களிப்பதின் மூலம் பெருமை கொண்டனர். அப்படித் தான் வாக்களித்தனர்.



Monday, May 21, 2007

லாலுவின் நிர்வாகத்திறமை:கொல்லைப்புற வழியில்

லாலுவின் நிர்வாகத்திறமை:
கொல்லைப்புற வழியில்
தனியார்மயம் கட்டணக் கொள்ளை


""ட்டத்தில் விழுந்து கிடந்த இரயில்வே துறையை இலாபமீட்டும் துறையாக மாற்றிச் சாதனை படைத்துள்ளார் லாலு'', ""தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாகப் பயணிகள் கட்டணத்தை உயர்த்தாமல் பட்ஜெட் போட்டுள்ளார் ஏழைப்பங்காளர் லாலு'' என்றெல்லாம் பார்ப்பன இந்தியா டுடே முதல் சமூகநீதி பேசும் பத்திரிகைகள் வரை இரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றன. இந்திய நிர்வாகவியல் நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்.) பயிலும் மாணவர்களிடம், இலாபமீட்டும் இரகசியத்தைப் பாடம் நடத்தும் அளவுக்கு அவரது பெருமையும், புகழும் பெருகியுள்ளதாக முதலாளித்துவ மூதறிஞர்கள் பாராட்டுகின்றனர்.


1980களில் 7.6 சதவீதமாக இருந்த இரயில்வே துறையின் வளர்ச்சி விகிதம் 1990களில் 6.56 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. அடுத்த பத்தாண்டுகளில் குறிப்பிடும் அளவுக்கு வளர்ச்சி இல்லை. இந்நிலையில், இரயில்வே துறையை இலாபமீட்டும் துறையாக லாலுபிரசாத் யாதவ் மாற்றியுள்ளார் என்றால், அவர் கையில் அலாவுதீனின் அற்புத விளக்கு கிடைத்துள்ளதா, என்ன! அதுவும் பயணிகள் கட்டணத்தை உயர்த்தாமலேயே அவரால் எப்படி இந்த அதிசயத்தைச் செய்ய முடிந்தது?


1990களில் இரயில்வே துறையின் பல முக்கியமான மீட்டர்கேஜ் பாதைகள், அகலப் பாதைகளாக மாற்றப்பட்டன; டீசல் என்ஜின் மூலம் இயக்கப்பட்ட தடங்கள் பெருமளவில் மின்சாரமயமாக்கப்பட்டன; பல தடங்களில் இருவழிப் பாதைகள் போடப்பட்டன; பெரும்பாலான ரயில் நிலையங்களின் ""சிக்னல்கள்'' தானியங்கியாக மாற்றப்பட்டன. இவ்வாறு மிகப் பெரிய இரயில்வே துறையின் அடிக்கட்டுமானங்களை நவீனமயப்படுத்த பல்லாயிரங் கோடிகள் செலவிடப்பட்டதால், அந்த பத்தாண்டுகளில் இரயில்வே துறையின் இலாப விகிதம் குறைந்து போனது.


இம்முதலீடுகள் எல்லாம் 2001ஆம் ஆண்டுக்குப் பிறகு படிப்படியாக பலன் தரத் தொடங்கியுள்ளன. நாட்டின் இரயில்வே தடங்களில் 70 சதவீதமாக உள்ள அகலப்பாதைகள்தான், இப்போது 95 சதவீத சரக்குப் போக்குவரத்துக்கும், 89 சதவீத பயணிகள் போக்குவரத்துக்கும் பயன்படுகின்றன என்பதிலிருந்தே 1990களில் போடப்பட்ட அகலப்பாதைகளின் பங்களிப்பு புலனாகிறது. கடந்த மூன்றாண்டுகளாக சாலைப் போக்குவரத்துடன் போட்டியிடும் அளவுக்கு சரக்குகளை ஏற்றிச் செல்வதில் இரயில்வே துறை வளர்ந்துள்ளது. அகலப் பாதைகள் அமைக்கப்பட்டு நவீனமயமாக்கப்பட்டுள்ளதன் விளைவாக, மூலதன அழுத்தம் கொண்ட இரயில்வே துறை இப்போது மெதுவாக வளர்ச்சியடைந்து பலன்தரத் தொடங்கியதும், இதையே லாலுவின் நிர்வாகத் திறன் என்று முதலாளித்துவவாதிகள் உச்சிமுகர்ந்து பாராட்டுகின்றனர்.


நவீனமயப்படுத்தலால் ஏற்பட்ட செலவுகள் குறைந்து, பலன்கள் கிடைப்பது ஒருபுறமிருக்க, இலாபமீட்டும் துறையாக இரயில்வே துறையை மாற்றிய லாலுவின் "திறமை'தான் என்ன? பேருந்துகளிலோ சந்தையிலோ ஒருவன் பிக்பாக்கெட் அடித்தால் அது தண்டனைக்குரிய குற்றம். அதையே அரசாங்கம் செய்தால் அது நிர்வாகத் திறமை என்பதுதான் லாலு கண்டுபிடித்துள்ள உத்தி.


சாதாரண தொடர் வண்டிகள் (பாசஞ்சர்) அனைத்தும் எவ்வித வசதிகளுமின்றி விரைவு வண்டிகள் (எக்ஸ்பிரஸ்) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, விரைவு வண்டிக்கான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. அதேபோல விரைவு வண்டிகள் அதிவிரைவு வண்டிகள் (சூப்பர் ஃபாஸ்ட்) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு சட்டபூர்வமாகவே கட்டணக் கொள்ளை தொடர்கிறது.


புறப்படும் இடத்திலிருந்து அல்லாமல், அருகிலுள்ள ரயில் நிலையத்திலிருந்து முன்பதிவு செய்தால், அதற்குக் கூடுதல் கட்டணம்; முன்பதிவு செய்யப்படும் படுக்கையில், கீழ்தளப் படுக்கைக்குக் கூடுதல் கட்டணம் என்று அங்கேயும் வழிப்பறி; அவசர அவசியம் கருதி உடனடியாக படுக்கை வசதியுடன் பயணம் செய்வதற்காக சற்று கூடுதல் கட்டணமுறையுடன் இருந்த ""தட்கல்'' திட்டத்தை வரைமுறையின்றி விரிவுபடுத்தி பலமடங்குக் கூடுதல் கட்டணக் கொள்ளை; 90 நாட்களுக்கு முன்னரே இணையதளம் மூலம் எத்தனை பயணச் சீட்டுகளையும் வாங்கிக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், இணையதள வசதியில்லாதவர்கள் அவசரப் பயணத்திற்காக வேறுவழியின்றி ""தட்கல்'' திட்டத்துக்கு துரத்தப்பட்டு அங்கே கூடுதல் கட்டணத்தைக் கொட்டியழ வேண்டிய நிலை; முன்பதிவு செய்ததை ரத்து செய்தால் இழப்பீடு தொகை இரு மடங்கு உயர்வு என பல வழிகளிலும் நூதனமான வழிப்பறி செய்கிறது இரயில்வே துறை.


தொடர்ந்து ஈராண்டுகளாக பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவே இல்லை என்று கூசாமல் புளுகிக் கொண்டு புதிய உத்திகளுடன் வழிப்பறி செய்து வரும் லாலு, ஆட்குறைப்பு நடவடிக்கை மூலம் இலட்சக்கணக்கான தொழிலாளர்களை வீதியில் வீசியெறிந்துவிட்டு, செலவுகள் குறைந்து ஆதாயம் பெருகியுள்ளதாகக் கணக்கு காட்டுகிறார். இரயில்வே துறையால் நியமிக்கப்பட்ட பிரகாஷ் டாண்டன் கமிட்டி, ராகேஷ்மோகன் கமிட்டி ஆகியவை பரிந்துரைத்த தொழிலாளர் விரோத, தனியார்மய நடவடிக்கைகளே இப்போது தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.


கடைநிலை ஊழியர்களான ""கலாசி'' தொழிலாளர்களில் ஏறத்தாழ இரண்டு லட்சம் பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டு வேலையிலிருந்து பிடுங்கி எறியப்பட்டுள்ளனர். தண்டவாளங்களில் விரிசலைக் கண்டறிந்து பழுது நீக்குதல், தண்டவாளத்தின் கீழுள்ள ஜல்லி இறுகி விடாமல் சீரமைத்தல் பராமரித்தல், ரயில் பெட்டிகளைத் துப்புரவு செய்தல், ரயில் நிலையங்களைப் பராமரித்தல், ரயில்வே குடியிருப்புகள், உணவகம், முன்பதிவு சேவை, ஆளற்ற லெவல் கிராசிங்குகள், பாலங்களைக் கண்காணித்தல் முதலான இரயில்வே துறையே முன்னர் செய்துவந்த பணிகள் அனைத்தும் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் தாரை வார்க்கப்பட்டுள்ளன. பணிமனைகளில் 15 சதவீதமும் தற்காலிக ஊழியர்களில் 100 சதவீதமும் ஏற்கெனவே ஆட்குறைப்பு செய்யப்பட்டு விட்டனர். அதிவேக ரயில்கள் சிறிய ஊர்களில் நிற்காது என்று காரணம் காட்டி, பல ரயில் நிலையங்களில் பார்சல் அனுப்பும் பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. பெரிய ரயில் நிலையங்களில் ஆட்குறைப்பு காரணமாக ஊழியர்கள் மீது கூடுதல் வேலைப்பளு சுமத்தப்பட்டுள்ளது. இத்தகைய ஆட்குறைப்பு நடவடிக்கைகளே இரயில்வே துறையின் இலாபத்துக்கு முக்கிய காரணமாகும்.


இதுதவிர, ""ஈ டிக்கெட்டிங்'' முறை மூலம் பெட்ரோல் பங்குகள், வங்கிகள் வாயிலாக பயணச் சீட்டு விற்பனையைக் கொண்டுவந்து, ஆட்குறைப்புக்கும் அதன்மூலம் அதிகலாபத்துக்கும் திட்டம் தீட்டி வருகிறார் லாலு. ஏற்கெனவே தனியாருடன் சேர்ந்து 225 ரயில் நிலையங்கள் நவீனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்தப் போவதாக அறிவித்துள்ளார் லாலு. இந்திய ரயில்வேக்குச் சொந்தமாக நாடெங்குமுள்ள 10,000 ஏக்கர் உபரி நிலங்களைத் தனியாருக்கு விற்று ஏறத்தாழ ஒரு லட்சம் கோடி ரூபாய் திரட்டவும், ரயில்வே கட்டிடங்களில் தனியாருடன் இணைந்து தங்கும் விடுதிகள், பேரங்காடிகள், திரையரங்குகளை நிறுவவும் திட்டங்கள் தயாராக உள்ளன. வருவாய் அதிகம் கிடைத்துவரும் முக்கியமான சரக்கு ரயில் நிலையங்களையும் பயணிகள் ரயில் நிலையங்களையும் தனியாருக்குக் குத்தகைக்கு விடும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களான பம்பார்டியர், ஜெனரல் எலக்டிரிகல்ஸ் ஆகியன இதற்குப் பேரங்களை நடத்தி வருகின்றன. ஏற்கெனவே பயணிகள் பெட்டிகளையும் சரக்கு ரயில் பெட்டிகளையும் 15 தனியார் நிறுவனங்களுக்குக் குத்தகைக்கு விட்டு அதன் மூலம் ரூ. 500 கோடி அளவுக்கு இரயில்வே துறை ஆதாயம் ஈட்டியுள்ளதால், இதை மேலும் விரிவுபடுத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இத்தகைய தொழிலாளர் விரோததனியார்மய நடவடிக்கைகளால் விரைவில் 3 லட்சம் ஊழியர்கள் தேவைக்கு அதிகமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு, வேலையிலிருந்து விரட்டப்படும் அபாயத்தில் உள்ளனர்.


விளம்பரங்கள் மூலம் கணிசமான வருவாய் கிடைக்கும் என்பதால், ரயில் நிலையங்களிலும் ரயில் பெட்டிகளிலும் விளம்பரங்களை அனுமதித்து வந்தது போய், இப்போது ஒரு ரயிலையே விளம்பரத்துக்காக பெயரிட்டு இயக்குமளவுக்கு தனியார்மயத்தில் மூழ்கி முத்தெடுக்கிறார், லாலு. கொலைகார கோக்கின் பங்காளி நிறுவனமான பெப்சி குளிர்பான கம்பெனியின் ""குர்குரே'' எனும் நொறுக்குத் தீனியை விளம்பரப்படுத்துவதற்காகவே ""குர்குரே எக்ஸ்பிரஸ்'' இயக்கப்படுகிறது. உணவு மற்றும் பிற சேவைகளைத் தனியாரிடம் குத்தகைக்கு விட்டதன் மூலம், உபரியாக உள்ள ஊழியர்கள் குறைக்கப்பட்டு ஏறத்தாழ ரூ. 1000 கோடி அளவுக்குச் செலவுகள் குறைந்துள்ளதாகப் பெருமைப்படும் லாலு, இத்திட்டத்தை நாடெங்கும் விரிவுபடுத்தப் போவதாக அறிவித்துள்ளார்.


சமூகநீதி, இடஒதுக்கீடு பேசும் பிற்பட்டோர் நலச் சங்கங்களில் பூஜிக்கப்படும் லாலுவால், ஆட்குறைப்பு செய்யப்பட்டவர்கள் அனைவருமே பிற்பட்டதாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த ஊழியர்களாவர். கடைநிலை ஊழியர்களான இவர்களின் வயிற்றிலடித்துதான், இலாபக் கணக்கு காட்டுகிறார் லாலு. பால்கோ போன்ற அரசுத்துறை நிறுவனங்களை நேரடியாகத் தனியாருக்குத் தாரை வார்த்தது போல் அல்லாமல், படிப்படியாக இரயில்வே துறையைத் தனியார்மயமாக்கும் புதிய உத்தி; ஒட்டு மொத்தமாக அல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாகத் தொழிலாளர்களை ஆட்குறைப்பு செய்து வீதியில் வீசியெறியும் நரித்தனம்; விரைவுப் பேருந்து, சொகுசுப் பேருந்து, தாழ்தளப் பேருந்து, உள்வட்டப் பேருந்து என்றெல்லாம் பெயரிட்டு கட்டணக் கொள்ளையை நடத்தும் தி.மு.க. அரசை விஞ்சும் சட்டபூர்வ வழிப்பறி இவைதான் இரயில்வே அமைச்சர் லாலுவின் நிர்வாகத் திறன்!


இதனால் தான் மூன்றாண்டுகளுக்கு முன்பு வரை ""கோமாளி, ஊழல் பெருச்சாளி, கிரிமினல் அரசியல்வாதி, மாட்டுக்கார வேலன்'' என்றெல்லாம் நக்கலடித்து சாடி வந்த பார்ப்பனபனியா பத்திரிகைகளும் எதிர்த்தரப்பு அரசியல்வாதிகளும் இன்று அவரை ""டாப் டென்'' அமைச்சர்கள் பட்டியலில் வைத்துக் கொண்டாடுகின்றனர்.


· கவி

Sunday, May 20, 2007

இனம் காணமுடியாத ஜனநாயகவாதிகள்

இனம் காணமுடியாத ஜனநாயகவாதிகள்

பி.இரயாகரன்

18.05.2007


ரசியலில் வித்தை காட்டுவதும், சமூக அறியாமையை உட்செரிப்பதன் மூலமும், ஒரு சமூகத்தின் புதைகுழிகள் தொடர்ச்சியாக தோண்டப்படுகின்றது. வெளிப்படையானதும், நேர்மையற்றதுமான, அணுகுமுறையுடனான அரசியல் பித்தலாட்டங்கள் அரங்கேற்றப்படும் விதம் சூழ்ச்சிகரமானது.


இப்படி ஒரு பக்கம். மறுபக்கத்தில் இவர்களே புலி அல்லாதவர்களிடையே ஒற்றுமை, விட்டுக்கொடுப்பு, ஜக்கியம் என்கின்றனர். எப்படி? எதனடிப்படையில்? புலி அல்லாதவர்pடையேயான ஜக்கியம் என்பது, இவர்களைப் பொறுத்த வரையில் புலியெதிர்ப்பின் அடிப்படையில் மட்டும் தான். புலிகளும் இப்படித் தான் ஜக்கியம் ஒற்றுமை என்கின்றனர். வேடிக்கையான ஒரே அரசியல்.


இப்படி ஈ.பி.டி.பி, ஈ.என்.டி.எல்.எப், கருணா அணி, ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ் என்று அனைவரையும் உள்ளடக்கிய வகையில் விட்டுக்கொடுப்புடன் கூடிய ஜக்கியம். இப்படி புலியெதிர்ப்பு அரசியல் கூத்தை ஆடிக்காட்ட முனைகின்றனர். இப்படி உள்ளவர்கள், மக்கள் பற்றி என்ன நினைக்கின்றார்கள் என்று கேட்பதோ கேட்க கூடாத கேள்வி.


இப்படி அவர்களோடு கூடி மக்களின் முதுகில் குத்தவரும்படி புலியெதிர்ப்பு அணி கூவுகின்றது. இவையெல்லாம் அண்மையில் சபாலிங்கத்தின் பெயரில் நடத்திய கூத்தில் அரங்கேறியது. எதையும் அரசியல் ரீதியாக செய்வதை மறுக்கும் இந்த புலியெதிர்ப்பு, ரீ.பீ.சீ பின்னால் அனைவரையும் குலைக்க கோருகின்றது. இதன் பின்னால் சுயவிமர்சனம், விமர்சனம், ஜனநாயகம் என்ற பெயரில், எடுப்பார் கைப்பிள்ளை போல் எடுபடுவோரை அப்பாவிகள் என்பதா? அல்லது சந்தர்ப்பவாத பிழைப்புவாதிகள் என்பதா?


சபாலிங்கம் கூட்டம் ரீ.பீ.சீ கூட்டமாகிய கதை


இவை எல்லாம் எங்கே அரங்கேறியது என்றால், 13 ஆண்டுகளுக்கு முன் பாரிசில் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சபாலிங்கத்தின் நினைவுக் கூட்டத்தில் அரங்கேறியது. ஒரு மரணத்தைக் கூட, தனது மக்கள் விரோத புலியெதிர்ப்பு அரசியலுக்காக ரீ.பீ.சீ பயன்படுத்தியது. இதை விட வேறு எந்த அரசியலும் ரீ.பீ.சீ க்கு கிடையாது.


இந்தியாவின் கூலிக் குழுவாக பிறப்பெடுத்து, அவர்களை அண்டி வாழ்ந்து கொண்டிருக்கும் ஈ.என்.டி.எல்.எப் வின் வானொலி தான் ரீ.பீ.சீ. அதன் ஒரு உறுப்பினரால் இவ் வானொலி நடத்தப்படுகின்றது. இது அனைவருக்கும் நன்கு தெரிந்த உண்மை தான். ஆனால் அப்படி இல்லை என்ற நினைப்பில் கண்ணை மூடிக்கொண்டு பால் குடிக்கும் பூனையாட்டம் விவாதம் சிலர் செய்ய முனைகின்றனர். இதற்கு எப்போது சுயவிமர்சனம் செய்வார்களோ! தெரியாது.


ரீ.பீ.சீ நடுநிலையாக, எல்லாக் கருத்துக்களையும் உள்வாங்கியே ரீ.பீ.சீ. செயல்படுவதாக கூற முற்படுகின்றனர். அப்படி அவர்கள் எமக்கு சினிமா காட்ட முனைகின்றனர். அந்த வகையில் எம்மையும் அழைக்கின்றனர். தீவிர ஜனநாயகவாதிகளாக பாசாங்கு செய்யும் இவர்கள் அனைவரும், எமது எதிரான கருத்தை மாற்றுக் கருத்தாகவே அங்கீகரித்து கிடையாது. அரசியலற்ற புலியெதிர்ப்பு கருத்து மட்டும் தான், அதுவும் தம்மை அங்கீகரித்த கருத்தை மட்டும் தான், இவர்கள் மாற்றுக் கருத்தாக கருதுகின்றவர்கள்.


ரீ.பீ.சீ பின் (புலியெதிர்ப்பின் பின்) உள்ள எந்த நபரும் எப்படியும், எந்த இயக்கத்திலும் இருக்கலாம். ஆனால் வானொலி (புலியெதிர்ப்பு தளங்கள்) அப்படி இருக்காது என்று காட்ட முனைகின்றனர். இன்றைய அரசுகளை வர்க்கமற்ற அனைவருக்குமான அரசாக காட்ட முனைகின்ற புல்லுருவிகள் போல், இதுவும் முன்வைக்கப்படுகின்றது.


கருணா என்ற புலிக் கொலைகாரனுக்கு பின்னால் நிற்பவர்கள் முதல் எல்லா மக்கள் விரோத குழுக்களும் இணைந்து அல்லது அதன் எடுபிடிகள் சேர்ந்து வானொலியை நடத்துகின்றனராம். நல்ல அரசியல் வேடிக்கை. காலகாலமாக மக்கள் காதில் பூச் செருகியபடி, அவர்களின் தாலியையே அறுத்த கதை தான் இங்கும். மக்களின் அவலங்களின் மேல், அதைப்பற்றி பேசாது குதிரை ஓட்டுகின்றனர்.


இது ஒருபுறம். மறுபக்கம் யார் எப்படி என்பதற்கு அப்பால், வானொலியின் நோக்கம் என்ன என்பதே அடிப்படையான கேள்வி. புலிகளை அரசியல் ரீதியாக விமர்சிப்பதை மறுப்பதே, தமது அரசியல் கொள்கை என்கின்றனர். அரசியல் ரீதியாக மக்களை அணுகுவதல்ல அரசியல் என்கின்றனர். மாறாக புலியைப் போல் கொசிப்பு அரசியலை செய்வதே சரி என்கின்றனர். இவர்கள் வானொலியில் செய்வது அரசியல், ஆனால் அரசியல் நாங்கள் பேச மாட்டோம் என்கின்றனர். இது ஒரு மக்கள் வானொலியாம்! வானொலியில் அரசியல் கொசிப்பு அடிப்பது தான் சரியாம். புலிகள் புலியாதரவு வானொலி நடத்துகின்றனர் என்றால், இவர்கள் புலியெதிர்ப்பு வானொலி நடத்துகின்றனர். மக்களை பற்றி கதைக்கும் அரசியல், வானொலிக்கே தீட்டு என்கின்றனர். இப்படி அவர்கள் நல்ல திருட்டு பார்ப்பனிய பூசாரிகள் தான்.


புலிகளை அரசியல் ரீதியாக விமர்சிக்க மறுப்பதும், மக்களை அரசியல் ரீதியாக விழிப்புற வைப்பதை மறுப்பதுமே, ரீ.பீ.சீ வானொலியின் அடிப்படையான அரசியல் நோக்கமாகும். இந்த வகையில் சிந்திப்பவர்கள், செயல்படுபவர்கள் கூடி கூச்சலிடுகின்றனர். மக்களின் வாழ்வியல் அரசியலை மறுத்து, புலியெதிர்ப்பு கொசிப்பை முன்னிலைப்படுத்துகின்றனர். இப்படியாக மக்கள் விரோத அரசியலை நிலை நிறுத்துவதே, அதன் மைய அரசியல் நோக்கமாகும்.


உண்மையை மூடிமறைக்கும் சூழ்ச்சியும், மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாத நரித்தனங்கள் மூலம், தம்மை நடுநிலை வானொலியாக அரங்கேற்ற முனைகின்றனர். சபாலிங்கத்தின் கூட்ட பின்னணியில் மூடிமறைக்கப்பட்ட உள்நோக்கம், கூட்டத்தின் இறுதிவரை மூடிமறைக்கப்பட்டு இருந்தது. இவை இடையிடையே அங்கும் இங்குமாக வெளிப்பட்டது. ஒற்றுமை, விட்டுக்கொடுப்பு, ஜக்கியம் என்ற பெயரால் இது வெளிப்படபோதும், அது கூட்டத்தின் முடிவில் சொந்த முகத்துடன், தமது குறுகிய நோக்கத்துடன் எழுந்து நின்றது.


சபாலிங்கத்தை இதில் இருந்து புனிதப்படுத்தி, தமது நேர்மையை அப்பழுக்கற்றதாக காட்ட, கூட்டத்தை இரண்டாக பிரித்து நாடகமாடினர். இரண்டாவது கூட்டத்தில் விரும்பியவர்கள் பங்கு பற்றலாம் என்ற நாடகம் அரங்கேறியது. உண்மையில் நேர்மையற்ற அரசியல் வேடிக்கை தான்.


இந்தக் கூட்டத்தை ஒழுங்கு செய்த நண்பர்கள் வட்டம், இரண்டாவது சுற்றில் ரீ.பீ.சீ யின் ஏஜண்டுகளாக (பிரான்சின் பிரதிநிதிகளாக) வெளிப்பட்டனர். சதிகளும், சூதும் அரசியலாகிவிட்ட எமது அரசியல் சூழலில், அதுவே வாழ்வு முறையாக இருப்பதை இது அம்பலமாக்கியது. புலிகள் அதில் மூழ்கிவிட்டனர் என்றால், புலியெதிர்ப்பும் அப்படித்தான் என்பதை தனிநபர் வேறுபாடுகளின்றி தொடர்ச்சியாக நிறுவிக் காட்டுகின்றனர்.


புலியெதிர்ப்பு அரசியலாகக் கொண்ட ரீ.பீ.சீ அரசியல் சூழ்ச்சி தான், சபாலிங்கம் நினைவாகிப் போனது. எதையும் வெளிப்படையாக நேர்மையாக வெளிப்படுத்த முடியாத அரசியல் சூதாட்டங்களே, புலியெதிர்ப்பு அரசியலின் உள்ளடக்கமாகும். ரீ.பீ.சீ பின்னால் நடப்பதும் அது தான். மக்களின் அடிப்படையான பிரச்சனைகளை, தமது சொந்த அரசியலாக கொண்டிராதவர்களின் அரசியல் வாழ்வு என்பது, மக்களுக்கு எதிரான சூதும் சதியும்தான். இது தன்னைத்தான் மூடி மறைத்துக் கொண்டே சதா இயங்குகின்றது. இப்படித்தான் அந்தக் கூட்டமும் அன்று அரங்கேறியது. மக்களுக்கு எதைத்தான், இவர்கள் பெற்றுத் தரப் போகின்றார்கள்?


இனம் காணமுடியாத ஜனநாயகவாதிகள்


இந்த கூட்டத்தில் புலி உளவாளிகள் முதல் அனைத்து உளவாளிகளும் கலந்த கொண்ட ஒரு கூட்டம். ஈ.பி.டி.பி, ஈ.என்.டி.எல்.எப், கருணாஅணி, ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ் என்று அனைத்து தரப்புமாக, மொத்தம் 50, 60 பேர் கொண்ட கூட்டம்.


இவர்கள் எல்லாரும் சேர்ந்தே கொலைகளை கண்டித்தல், புலியிடமிருந்து ஜனநாயகத்தை மீட்டல் பற்றி புலம்பல்கள். வேடிக்கையான அரசியல் தளம். நாங்களும் அதில் கலந்து கருத்துரைப்பது சரியா பிழையா என்ற முரண்நிலையான சொந்த நிலைப்பாடுகள். நாங்கள் மக்களின் வாழ்வு சார்ந்த கருத்தியலை முன்வைப்பதன் மூலம், உதிரியான சிலருக்கு அதை உணர்த்த முடியுமா என்ற முனைப்பின் அடிப்படையில், இதில் பங்கு பற்றி கருத்துக்களை முன்வைக்கின்றோம். உண்மையில் மக்களைப் பற்றி சிந்திப்பவர்களின் போராட்ட வழி என்ன என்பதை, இங்கும் சுட்டிக்காட்ட முனைகின்றோம்.


இந்த வகையில் இந்த கூட்டத்தில் நாம் முன்வைத்த கருத்துகளைக் கூட, நடுநிலை வானொலியாளர்களால் சகித்துக் கொள்ளமுடியவில்லை. எனக்கு நேரம் முடிந்துவிட்டதாக கூறிய அற்பத்தனங்கள். மீண்டும் இதே பாரிஸ் மண்ணில் திடீர் திடீரென அரங்கேறியது. மற்றவர்களை விட அதிக நேரத்தை நான் எடுத்திருக்கவில்லை. மக்களின் நலன், அவர்களின் வாழ்வியல் சார்ந்த அரசியல், மற்றவர்களை விட அழுத்தம் திருத்தமாக முன்வைப்பதை சகிக்க முடியாததன் விளைவு, நேரத்தை வழங்க அவர்களால் முடியவில்லை. மறுபக்கத்தில் எந்த ஜனநாயகவாதியும் இதை கண்டிக்கவில்லை.



எனது உரை










எமது கருத்துக்கள் ஏற்படுத்தும் உண்மை, உண்மையில் மக்களுக்காக சிந்திப்பவர்களை தடுமாற வைக்கின்றது. மக்கள் விரோத குழுக்கள், நபர்கள் இதனால் அதிர்ந்து போகின்றனர். இதனால் இதை தாம் ஏற்றுக்கொள்வதாக கூறுவது நடக்கின்றது. அதாவது தாம் அதற்கு விரோதிகள் அல்ல என்று காட்டி, சிந்திப்பவனின் குறைந்தபட்ச அரசியல் உணர்வை நலமடித்து சிதைப்பது இவர்களின் கைவந்த மோசடியாகின்றது. உண்மையில் சமூகத்தின் உள்ளார்ந்த பிரச்சனைகளைச் செரித்து, அதன் சுவடே தெரியாது பூசி மொழுகிவிடுவதே கடந்த 30 வருட தமிழ் அரசியலாகும். இதை ஒரு தந்திரமாக, பல தளங்களில் அரங்கேறுகின்றனர். இவை கடந்தகாலத்தில் சொந்த அமைப்பில் ஒரு அரசியல் முரண்பாடாக எழுந்தபோது, உட்படுகொலைகள் மூலம் மூடிக்கட்டியவர்கள், இன்றும் அதை பச்சையாகவே விபச்சாரம் செய்கின்றனர். ஒவ்வொரு கூட்டத்திலும் இவை எழுப்பப்படுவதும், அதை தாம் ஏற்றுக்கொள்வதாக கூறியே அனைவரையும் ஏமாற்றி கூட்டங்களை நடத்துகின்றனர். கடைந்தெடுத்த கயவாளிகள். அரசியல் உள்ளடகத்தை ஏமாற்றி மோசடி செய்து மக்களின் முதுகில் காலகாலமாக குத்தி வருபவர்கள். இந்த நிலையில் நாங்கள் மட்டும், நாங்கள் மட்டும் தான், சமூகப் பிரச்சனைகளின் அடிப்படையில் தொடர்ச்சியாக எழுதி வருகின்றோம். இதுவே அனைவருக்கும் எமக்குமான அரசியல் முரண்பாடு.


விட்டுக்கொடுப்பு, ஜக்கியம், ஒற்றுமை என்பதன் பெயரில், மக்களின் அடிப்படையான அரசியல் உரிமைகளை, அரசியல் ரீதியாக நீத்துப்போகச் செய்கின்ற கூத்துகளே உண்மையில் அரங்கேறுகின்றது. இதை எதிர்த்து நாம் குரல்கொடுக்கும் போது, மார்க்சியம் என்ற முத்திரை குத்தியே மக்களின் முதுகில் குத்துகின்றனர். நாம் மார்க்சியத்தைப் பற்றி விவாதிக்க வேண்டுமென்றால், அதை செவிமடுப்பதற்கும் செயல்படுவதற்கும் குறைந்தபட்ச சமூக அறிவு வேண்டும். மக்கள் பற்றியே சிந்திக்காத, அதை வெறுக்கின்ற மக்கள் விரோத ஓட்டுண்ணிக் கூட்டத்தினர்க்கு, எப்படி மார்க்சியத்தை முன்வைக்கமுடியும். மற்றவர்களின் எடுபிடிகளாக, கூலிக் கும்பலாக, முன்னைய குழுக்களின் செல்லப்பிள்ளைகளாக, பழைய குழுவாத அடையாளங்களையே நக்குகின்றவர்கள், குறைந்தபட்ச முதலாளித்துவ ஜனநாயகத்தை கூட அங்கு உள்வாங்குகின்றதும், பேசுகின்றதுமான அரசியல் தகுதி கிடையாது. எப்படி புலிகளுடன் நாம் மார்க்சியத்தை, முதலாளித்துவ ஜனநாயகத்தைப்பற்றி பேச முடியாதோ, அதே நிலைதான் புலியெதிர்ப்பு அணியின் முன்பும் உள்ளது. புலிக்கும், புலியெதிர்ப்பு அணிக்கும் அரசியல் ரீதியாக நாம் வேறுபாட்டை காணமுடியாது. அதனால் தான் இருதரப்பும் தத்தம் தரப்பு அரசியலை முன்வைப்பதுமில்லை, மாற்றுத் தரப்பை அரசியல் ரீதியாக விமர்சிப்பதுமில்லை.


இந்த நிலையில் நாங்கள் சாதாரண தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள், அவர்களின் பிரச்சனைகள் மீது மீண்டும் மீண்டும் விவாதத்தை நடத்த முனைகின்றோம். அதைக் கோரிய எமது விவாதத்தையே மார்க்சியம் என்கின்றனர். சரி நீங்கள் மக்கள் நலன் என எதைத்தான், எப்படி, எந்த அரசியல் வழியில் முன்வைக்கின்றீர்கள்? முன்வைக்காத உங்களிடம் எமது இந்தக் கேள்வி அபத்தம் தான். உண்மையில் அரசியல் ரீதியாக சீரழிந்தவர்கள், மக்களின் பிரச்சனையை முன்னெடுப்பது மார்க்சியத்தின் கடமை என்பதையே, இந்த முத்திரை குத்தலின் ஊடாக ஒத்துக்கொள்கின்ற தர்க்கம் உருவாகின்றது.


புலியெதிர்ப்பு அணியின் பின்னுள்ள ஈ.பி.டி.பி, ஈ.என்.டி.எல்.எப், கருணாஅணி, ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ்சின் அரசியல் என்ன? இவர்கள் எப்படி மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பார்கள்? புலியை விட அரசியல் ரீதியாக எப்படி, எந்த வகையில் மாறுபட்டவர்கள்! வாயைத் திறந்து கூறுங்கள். மௌன விரதமோ. சூழ்ச்சியும், சதியும் ஒருங்கே கொண்ட செயல்பாடுகள் தான் இவர்களின் அரசியல். மக்கள் விரோத சக்திகளின் பின்னால் கூலிக் குழுவாக நிற்கின்றவாகள். இவர்கள் எப்படி மக்களின் பிரச்சனையை தீர்ப்பார்கள். கடந்த காலத்தில் உட் படுகொலைகள் மூலம் அல்லது அவர்களை ஒரங்கட்டுவதன் மூலம் சொந்த அமைப்புகளின் இந்தக் கேள்விகளுக்கு பதிலளித்தவர்கள். இன்று அவற்றை எல்லாம் கழுவேற்றிய கூலிக்குழுக்கள் தான். சரி அவர்களின் எடுப்பார் கைப்பிள்ளைகளாக புலியெதிர்ப்பின் பின் செல்பவர்களான நீங்களாவது பதிலளியுங்கள்.


இப்படிப்பட்ட நிலையில் சாதியம், பெண்ணியம் போன்ற சமூக ஒடுக்குமுறைகளை ஒழிப்பதில் நாம் உடன்பாடு தான் என்று கூறிக்கொள்கின்றனரே, எப்படி? அதன் அரசியல் வழி தான் என்ன? நீங்கள் செயல்படுகின்ற இயக்கங்கள் அல்லது உங்கள் செயல்பாடுகள் அதை எப்படி எந்த வகையில் ஒழிக்கும்? உண்மையில் இந்த சமூகப் பிரச்சனைகளை ஏற்றுக்கொள்வதாக கூறி செரிக்கின்ற அரசியல் சதி தான், புலியெதிர்ப்புக் கும்பலின் அரசியல் உத்தியாகும். இதையே புலியும் செய்கின்றது.


உண்மையில் இந்த சமூக ஒடுக்குமுறைகளை பாதுகாக்கின்ற நுட்பமான அரசியல் சதியாகும். இதைத் தான் புலிகளும் செய்கின்றனர். அவர்களும் கூட சமூக ஒடுக்குமுறையை ஏற்றுக்கொள்வதன் மூலம், அதை செரிப்பது அவர்களின் உத்தியும் கூட.


எப்படி கடந்தகால இயக்கங்கள் சோசலிசம் வரை பேசி மக்களின் முதுகில் ஆழமாக குத்தினரோ, அதே உத்தி, அதே தந்திரம் இங்கும். சொற்களில் அதை அலங்கரிப்பது, நடைமுறையில் இருப்பதைப் பாதுகாப்பது. உண்மையில் இவை அரசியல் சதிகள். சமூக முரண்பாடுகளை ஏற்றுக்கொள்வதாக காட்டி அதைச் உட்செரிப்பது, நடைமுறையில் அதை மறுப்பதுமாக அரங்கேறுகின்றது. இதுவே எம்முடன் நிலவும் அடிப்படையான முரண்பாடு. அன்றைய கூட்டம் இதை எல்லாம் செரித்து, ரீ.பீ.சீ யின் குறுகிய நலன்களுடன் தான் நிறைவேறியது.


கடந்து வந்த வரலாற்றில் இருந்தே நாம் தெரிந்து கொள்ளமுடியும் இந்தக் குழுக்கள் சமூக முரண்பாடுகளை களையப் போவதில்லை என்பதை நிறுவியே உள்ளனர். அதைவிட கேடுகெட்ட கூலிக் குழுக்களாக இன்று அவை உள்ளள. ஈ.பி.டி.பி, ஈ.என்.டி.எல்.எப், கருணாஅணி, ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலொ, பிளாட், ஈரொஸ்சின் கடந்தகால இயக்க நடைமுறைகள், அதன் அரசியல் எந்த வகையிலும் புலிகளில் இருந்து மாறுப்பட்டது அல்ல. குறிப்பாக ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரொஸ் பேசிய இடது அரசியல் கூட, அடிப்படையில் புலி அரசியலுக்கு உட்பட்டது தான். ஈ.பி.ஆர்.எல்.எப் அடிமட்டத்தில் வாழ்ந்த தாழ்த்தப்பட்ட மக்களை அதிகம் அணிதிரட்டிய போதும் கூட, அது வர்க்க ரீதியாக புலி அரசியலையே கொண்டிருந்தது. அதாவது இந்திய எடுபிடிகளாகவே, கூலி கும்பலாகவே உருவானது. அடிமட்ட சமூகத்தில் எழும் சாதி மோதல்களை மட்டும், தனது சொந்த அணி திரட்டலுக்காக பயன்படுத்தியது. உதாரணத்துக்கு இந்தியாவின் வன்னியர், தலித் இயக்கங்கள் போன்றதே.


இந்த இயக்கங்களின் இன்றைய பிரதிநிதிகள் எப்படி தமிழ் மக்களின் உரிமைக்காக போராடுவார்கள்? குறிப்பாக இவர்கள் யாரும் புலிகளின் வர்க்க அரசியலை விமர்சிப்பது கிடையாது. புலிகளின் அரசியலை விமர்சித்தால், யாருக்காக? எப்படி? எந்த மக்களுக்காக என்ற விடையம் வெளிப்படுவதை அவர்கள் திட்டமிட்டு தவிர்க்கின்றனர். இதற்கு பதிலாக விமர்சனமற்ற வெற்றுக் கோசங்களைக் கொண்டு, அரசியல் கொசிப்பை செய்வதன் மூலம் தம்மை மூடிமறைக்க விரும்புகின்றனர். இதுவே இயக்கங்களுடன் இல்லாத, தனிநபர்களின் நிலையும் கூட. அரசியல் ரீதியான விமர்சனம் அற்ற கொசிப்பே, இவர்களின் அரசியலாகி அவர்களின் இருப்பின் மையமாகின்றது.


ரீ.பீ.சீ பின்னால் வாலாட்டும் ஜனநாயகவாதிகளே!


நீங்கள் எதைச் சாதிக்க கோமணத்தை கட்டிக்கொண்டு அவசர குடுக்கையாக ஒடுகின்றீர்கள். கடந்த பல வருடமாக நீங்கள் செய்த அரசியல், எதைச் சாதித்தது. எந்த அரசியலை நீங்கள் மக்களுக்காக முன்வைத்தீர்கள். சொல்லுங்கள். இவ்வளவு காலமும் சரியான ஒன்றை உங்களால் ஆதரிக்கமுடிந்தா? பின்பற்ற முடிந்ததா? இல்லை ஏன்? சரி நீங்கள் இன்று செய்வது சரி என்று உங்களால் சொல்லமுடியுமா? நாளை இதை மறுத்து சுயவிமர்சனம் செய்வீர்களோ?


சரி புலியெதிர்ப்புக்கு (ரீ.பீ.சீ க்கு) பின்னால் எதைச் சாதிக்கப் போகின்றீர்கள்? எப்படி எந்த வழியில்? மக்களுக்காக எதை செய்யப் போகின்றீர்கள்? உங்களால் மக்களுக்காக ரீ.பீ.சீயில் எதையும் செய்யவும் முடியாது. சாதிக்கவும் முடியாது. இதை நீங்கள் இன்று உணர மறுத்தால், வரலாறு உங்களுக்கு திருப்பிக் காட்டும்.


புலியெதிர்ப்புக்கு (ரீ.பீ.சீ) க்கு குடைபிடித்துக் கொண்டு செல்வதற்கு முன், அதன் பின்னால் அணி திரண்டுள்ளவர்கள் பற்றி என்ன நினைக்கின்றிர்கள்? ஈ.பி.டி.பி, ஈ.என்.டி.எல்.எப், கருணாஅணி, ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலொ, பிளாட், ஈரொஸ்சுடன் சேர்ந்து புலியை திட்டி தீர்க்கப் போகின்றீர்களா அல்லது அன்னிய சக்திகளுக்கு பாய்விரிக்க போகின்றீhகளா? சொல்லுங்கள். எப்படி தமழ் மக்களின் பிரச்சனையை புலியெதிர்ப்பு மூலம் தீர்க்கப் போகின்றீர்கள். சம்மந்தப்பட்டவர்கள் இவற்றுக்கு பதில் சொல்வது கிடையாது, நீங்களுமா? இலங்கை பேரினவாத இராணுவப் பிரிவு நடத்துகின்ற இணையச் செய்தியை, புலியெதிர்ப்பு இணையங்கள் தமிழில் மொழிபெயர்த்து விடுவதும், புலிக்கெதிராக வெளிவரும் செய்திகளை வெளியிடுவதன் மூலம், தமிழ் மக்களிடம் எதைச் சாதிக்க முனைகின்றீர்கள். புலிச் செய்தியைப் போல் தான் புலியெதிர்ப்புச் செய்தியும். இதற்குள் அரசியல் ஆய்வு என்ற பெயரில் புலிக் கொசிப்பு. சமூகம், மக்கள் என்று எதுவுமற்ற மலட்டுக் கூட்டத்தின் வக்கிரங்கள் கொசிப்பாகின்றது. இவர்கள் பின்னணியில் ஈ.பி.டி.பி, ஈ.என்.டி.எல்.எப், கருணாஅணி, ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலொ, பிளாட், ஈரொஸ் என்று அனைத்து மக்கள் விரோதக் குழுக்களும் உள்ளனர். இவர்களை புலியெதிர்ப்பு அணியினர் ஜனநாயகத்துக்கு திரும்பியவர்கள் அல்லது ஜனநாயகவாதிகள் என்கின்றனர்.


இலங்கை அரசுடன், இந்தியா அரசுடன், ஏகாதிபத்தியத்துடன் கூடி கூலிக் குழுவாக நிற்கும் இந்தக் குழுக்களின், கும்பலின் அரசியல், தமிழ் மக்களுக்கு எதிரானதா இல்லையா என்று விவாதிக்க மறுக்கின்ற ஜனநாயகம் தான், இவர்களின் புலியெதிர்ப்புக்கான வேலி.


இந்தக் குழுக்களின் அரசியல் இருப்பு கூலிக் குழுக்கள் தான். யார், எந்த அரசு, இவர்களின் உண்மையான எஜமானர்களோ, அவர்களின் விருப்பப்படி அனைத்தையும் செய்யத் தயாரான காட்டுமிராண்டிகள் தான். ஜனநாயகம் என்பது தங்களைத் தாங்களே புனிதப்படுத்தி காட்டிக் கொள்ள பயன்படுத்தும் பார்ப்பான் கொடுக்கும் தீர்த்தம் தான்.


1. இலங்கை அரசின் கீழ் இயங்கும் ஈ.பி.டி.பியின் ஆயுதப் பிரிவு இயங்கும் தளத்தில் அல்லது அவர்கள் ஆதிக்கம் உள்ள இடத்தில், நீங்கள் யாராவது ஜனநாயக பூர்வமாக அவர்களை விமர்சித்து செயல்பட அவர்கள் அனுமதிப்பார்களா? சொல்லுங்கள் நிச்சயமாக முடியாது.


2. இந்தியாவில் கூலிக்கும்பலாக இயங்கி, அங்கேயே அவர்கள் தயவில் காத்திருக்கும் ஈ.என்.டி.எல்.எப் கும்பல் உள்ள இடத்தில், உங்களால் சுயாதீனமாக செயல்பட முடியுமா? அவர்களை விமர்சனம் செய்ய முடியமா? முடியாது. உங்கள் எல்லோருக்கும் இவை நன்கு தெரியும்.


3. இதேபோல் புலிக் கருணா அணியும். அவர்கள் பிரதேசத்தில் நீங்கள் வாய் திறக்க முடியாது. இதை எல்லாம் மறுக்கும் அரசியல் உங்களிடம் உண்டா?


இதேபோல் தான் மற்றைய குழுக்களும். இப்படிபட்டவர்கள் எல்லாம் கூடித்தான் புலியெதிர்ப்பு கும்பலலாக உள்ளனர். இதற்குள் எத்தனையோ வெட்டுக் குத்துகள். இவர்கள் எல்லாம் ஜனநாயகவாதிகள். வேடிக்கை தான்.


அன்று ரீ.பீ.சீ சார்பாக இயங்கும் முன்னாள் புலி ராகவன் கூட்டத்தை தலைமை தாங்கிய போது, அவரின் புலி ஜனநாயகம் பல்லிளித்தது. நான் பேசும் நேரத்தை மட்டுப்படுத்தியதன் பின்னணியில் இருக்கும் அரசியல் என்ன? அது புலி அரசியல் தான். அன்று கூட்டம் முடிக்க அவசரப்பட்ட இதே ராகவன், கூறிய காரணம் என்ன? மேலதிக நேரம், கூட்ட மண்டபத்துக்கு அதிக பணத்தை செலுத்த வேண்டும் என்றாரே. கூட்ட ஒழுங்கமைப்பாளர்கள் அதே இடத்தில் இம் மண்டபம் இலவசமானது என்று போட்டு உடைத்தனர். சூதும் சதியும், ஒருங்கே கூட, பொய்யும் புரட்டும் காரணங்களாகின்றது. இவர்கள் தான் புலியெதிர்ப்பு அணி. உண்மையில் இந்த கூட்டத்தின் முடிவில், ரீ.பீ.சீ யின் இரண்டாம் கட்ட கூட்டம் ஆரம்பமாக இருந்த சதி பின்னால் தெரியவந்தது.


இப்படிப்பட்டவர்கள் எல்லோரும் சேர்ந்து புலியெதிர்பாக (ரீ.பீ.சீயாக) குழுமுகின்றனர். எம்மையும் இந்தக் கூத்துக்கு அழைக்கின்றனர். மக்களின் பிரச்சனைகளை கைவிட்டு, உங்கள் கருத்தை முன்வைக்க வாருங்கள் என்ற வாதங்கள். இதில் சிலர் அப்பாவிகள். பலர் அரசியலை வாழ்வாக கொண்டு, வாழமுடியாத நேர்மையற்ற சந்தர்ப்பவாதிகள்.


ஈ.பி.டி.பி, ஈ.என்.டி.எல்.எப், கருணாஅணி போன்ற கூலிக் குழுக்கள், ஜனநாயகத்தின் அரிச்சுவடியைக் கூட அனுமதிக்க மறுப்பவர்கள். மக்களின் சமூகப் பிரச்சனைகளை அடிப்படையாக கொண்டு செயல்படாத வலதுசாரிகள் யாரும், ஜனநாயகத்தை நினைத்துக் கூட பார்க்கமுடியாது. தமது கூலித்தனத்தையும், வலதுசாரி பாசிசத்தையும் நிறைவேற்ற ஜனநாயகத்தை தொட்டுக் கொள்ளவே பயன்படுத்துபவர்கள். இவர்கள் தமிழ் மக்களின் ஜனநாயகத்தை மீட்டுத் தரப்போகின்றார்கள். நல்ல அரசியல் வேடிக்கை தான். இவர்கள் மக்களின் சமூக முரண்பாடுகளை களைந்து, மக்கள் விடுதலையை வென்று தரப் போகின்றார்களாம். முட்டாள்களே நம்புங்கள்.


ஜனநாயக விரோதிகள், மக்கள் உரிமைக்கு எதிரானவர்கள், சமூக ஒடுக்குமுறையை செரித்து அதை மூடிமறைப்பவர்கள், கூடி நடத்தும் வானொலி (புலியெதிர்ப்பு) அல்லது பயன்படுத்தும் வானொலியின் அரசியல் என்ன? அது மட்டும் சூக்குமம். அது தான் புலியெதிர்ப்பு அரசியல். புலியை அரசியல் ரீதியாக விமர்சிக்காத அரசியல் தான் புலியெதிர்ப்பு. இதன் மூலம் தமது புலி அரசியலை பாதுகாக்கின்றனர். புலியின் அதே அரசியலைக் கொண்டு, புலியை கவிழ்க்கும் அரசியல் சதிதான், புலியெதிர்ப்பு அரசியல்.


மக்களுக்கு வெளியில் விடுதலை உண்டோ?


உண்டு என்று புலியெதிர்ப்பு சொல்லுகின்றது. அதைச் செய்வதாக (புலியெதிர்ப்பும்) ரீ.பீ.சீயும், அதன் பின் உள்ளவர்களும் சொல்லுகின்றனர். எப்படி ஜயா? தெரிந்தவர்கள் யாராவது சொல்லுங்கள். மாயமா! மந்திரமா! அல்லது எப்படி அந்த விடுதலை? மக்களின் பிரச்சனையை பேசாது எப்படி மக்கள் விடுதலையைப் பெறமுடியும்? இதை சாதிக்கும் மந்திரக்கோல் வைத்துள்ளனரா? அண்ணைமாரே கோவியாதையுங்கோ, அதை ஒருக்கா விளாவாரியா சொல்லுங்கோ.


உண்மையில் யாருக்கும் அதைச் சொல்லும் தைரியம் கிடையாது. எந்த அரசியல் நேர்மையும் கிடையாது. நாங்கள் சொல்வது தவறு என்று சொல்லும் நேர்மையும் கூட கிடையாது. உண்மையில் இந்த விடையம் மீது விமர்சனம், விவாதம் நடத்தும் அரசியல் அருகதை கூட கிடையாது. சூதும், சதியும் புலியெதிர்பு அரசியலாக இருப்பதால், இந்த நிலை.


மக்களின் பிரச்சனைகளை இனம் காணல், அதை மக்களின் விடுதலைக்காக எழுப்புதல் என்பதை மறுப்பதே இவர்களின் அரசியலாகும். இதையொட்டி விவாதிப்பதை மறுப்பது தான், இவர்களின் ஜனநாயக மறுப்பாகும். அண்மையில் பாரிஸ் வந்த ரீ.பீ.சீ ஆய்வாளர் சிவலிங்கம் அரசின் தீர்வுத்திட்டம் தொடர்பாக பேசிய கூட்டத்தில், மக்கiளின் பிரச்சனைகளை இனம் காணுதல் என்ற எனது தர்க்கமே பெரும்பான்மையினரின் கருத்தாக மாறியது. இதுவே கூடியிருந்தவர்களின் ஏற்புடைய கொள்கையாக இருந்தது. இதை உருவாக்க சிவலிங்கம் உட்பட்டவர்கள் பொறுப்பாக இருக்க, அக் கூட்டம் கோரியது. ஆனால் அதை உண்மையிலே செய்ய மறுத்தல், செய்யாமல் இருத்தல் புலியெதிர்ப்பின் மையமான அரசியலாகும். மாறாக அரசு அல்லது யாராவது வைக்கின்ற ஒன்றை கவ்விக்கொண்டு வள்வள்ளென்று குலைப்பதே, மக்கள் நலன் என்கின்றனர். புலியெதிர்ப்பின் பின் இருப்பது வேதாளக் கதை தான்.


மக்களின் பிரச்சனைகளை இனம் காணமல் இருத்தல், அதை மூடி மறைப்பது, அதை இனம் காணமல் விட்டுவிடுவதும் என்பதே, இவர்களின் அடிப்படை நோக்கமாக உள்ளது. மக்களின் பிரச்சனையில் இருந்து புலிகளை அம்பலப்படுத்துவதை மறுப்பதே, இவர்களின் தலையாய அரசியல் உத்தியாகும். உண்மையில் புலியின் அரசியலை விமர்சிக்க மறுப்பதே, இவர்களின் அரசியல் நலன்களாகும். இதைப் புரிந்து கொள்ளாமல் விட்டில் பூச்சியாக அதில் வீழ்ந்து மடிபவர்களை, நாம் பரிதாபத்துடன் பார்க்கவே முடியும்.


கடந்து வந்த காலத்தில், எது எந்த அரசியல் புலியை உருவாக்கியது? உங்களில் யாராவது அதை விவாதிக்க முடியமா? அதை சொல்ல, அதை மாற்ற உங்களால் முடியுமா? முடியாது. அதையே நீங்கள் புலியெதிர்ப்பு அரசியலாக கொண்டுள்ளீர்கள். அதையும் மறுக்க உங்களால் முடியாது. இவை எல்லாம் பற்றி பேசாதா அரசியல் தான், புலியெதிர்ப்பு கொசிப்பு. அதை பற்றி நீங்கள் பேசினால், உங்கள் அரசியல் தெளிவாகும். புலியைப் போல் உங்களுக்கும் புரட்சிகரமான மக்கள் நலன்கொண்ட அரசியல் எதுவும் கிடையாது.


புலியின் ஊடகமும், புலியெதிர்ப்பு (ரீ.பீ.சீ) ஊடகமும்


அரசியல் ரீதியாக என்ன வேறுபாடு? காட்ட முடியுமா? அரசியல் ரீதியாக காட்ட முடியாது. புலிகள் எப்படி மக்களின் வாழ்வு சார்ந்த அரசியலை நிராகரிக்கின்றனரோ, அதையே புலியெதிர்ப்பும் செய்கின்றது. இந்த எல்லைக்குள் தான், இந்த இரண்டு எதிரெதிரான ஊடகவியலும் இயங்குகின்றது. இரண்டு தரப்புக்கும் மக்கள் பற்றிய எந்த அக்கறையும் கிடையாது. இதனால் அவர்களிடம், மக்களுக்கான அரசியல் அடிப்படையே இல்லாமல் போய்விட்டது. மக்களின் பிரச்சனைகளைப் பற்றி பேசாது விசில் அடிப்பதும், கொசிப்படிப்பதுமே அரசியலாகிவிட்டது.


மற்றவர்கள் சொல்வதை தூக்கிவைத்து விபச்சாரம் செய்வதே இதன் பொது அரசியல் கொள்கையாகிவிட்டது. உதாரணத்துக்கு இந்தியாவின் அரசியல் பொறுக்கிகளாகவே வாழும் குரங்கு ஒன்று சொன்னால் அதை வைத்தும், மறுபக்கத்தில் புலியெதிர்ப்பு அந்த குரங்குகளை ஆளும் அனுமான் சொன்னால் அதை வைத்து ஆடுவதுமாகவே, இவர்களின் கொசிப்பு அரசியல் அரங்கேறுகின்றது. மக்களின் பிரச்சனையை வைத்து பேச வக்கற்றுக் கிடக்கின்றனார் புலியைப் போல் சம்பவங்கள், நிகழ்ச்சிகள் மேல் மிதக்கின்றனர். புலியைப் போல் வெற்று வேட்டுத்தனம்.


மக்களின் அடிப்படை பிரச்சனையைப் பற்றி பேசாது இருத்தல், விளைவுகளைப்பற்றி மட்டும் பேசுவதே இருதரப்பினரதும் உத்தி. உண்மையில் இவை திட்டமிட்ட மக்கள் விரோத செயல்பாடாகும் மக்களின் ஜனநாயகம் பற்றி யார் பேச வேண்டும் என்றாலும், மக்களின் அன்றாட அரசியல் பிரச்சனைக்கு வெளியில் அது பற்றி பேச எதுவும் கிடையாது. அதனால் தான் புலிகள் முதல் புலியெதிர்ப்பு வரை, மக்களைக் கண்டு அஞ்சும் ஜனநாயக விரோதிகளாக இருக்கின்றனர். உள்ளடகத்தில் பாசிசத்தை சாரமாக கொண்டு, மக்களை அடக்கி ஒடுக்குகின்றனார். புலிகள் முதல் ஈ.என்.டி.எல்.எவ் வரை மக்களை ஒடுக்கும் பாசிசம் தான், அவர்கள் அரசியல் இருப்பின் அடிப்படையாகும். இந்த ஊடகங்கள் மக்களின் பிரச்சனையை ஒரு நாளும் முன்னெடுக்கப் போவதில்லை. அதை தனித்துவமாக நாங்கள் செய்ய முனைகின்றோம் என்பதே மறக்க முடியாத உண்மை. ஆம் தனித்து பலவீனமாக இருந்தாலும், பலமாக நாம் அனைத்து தளத்திலும் முட்டி மோதுகின்றோம். இதை விட வேறு அரசியல் வழி எம்முன் இன்று கிடையாது.