தமிழ் அரங்கம்

Saturday, June 30, 2007

இது ஒரு முழுநிறை யுத்தம்!

இது ஒரு முழுநிறை யுத்தம்!

"தெகல்கா' ஆங்கில வார இதழுக்கு (31.3.07) எழுத்தாளர் அருந்ததி ராய் அளித்துள்ள பேட்டியை அளவு கருதி சற்றே சுருக்கித் தருகிறோம். அமைதி வழியிலான மக்கள் போராட்டங்கள் அனைத்தும் அலட்சியப் படுத்தப் படும் சூழலில், நக்சல்பாரிகளுடைய ஆயுதப் போராட்டத்தின் நியாயத்தை அங்கீகரிக்கிறார் ராய்.

அதே நேரத்தில், மாவோயிஸ்டு களும் அடக்குமுறையில் ஈடுபடுவ தாகவும், ஸ்டாலின்,மாவோ ஆகி யோரது ஆட்சியில் லட்சக்கணக்கா னோர் படுகொலை செய்யப்பட்ட தாகவும் சாடுகிறார். ஸ்டாலின் மாவோ மீது ஏகாதிபத்தியங்கள் பரப்பியுள்ள அவதூறுகளை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி நாம் ஏற்கெனவே எழுதியிருக்கி றோம். நீளம் கருதியும், மேற்கூறிய விமரிசனங்கள் இந்தப் பேட்டியின் மையக் கருத்துக்கு நேரடியாகத் தொடர்பற்றவை என்பதனாலும் பேட்டியின் அப்பகுதியை வெளியிடவில்லை.

நிலவும் ஏகாதிபத்தியக் கொடுங் கோன்மையையும் ஜனநாயக மோசடியையும் சகித்துக் கொள்ள முடியாமலும்,அதே நேரத்தில் கம்யூ னிச அமைப்புகளுடன் இணங்கிப் போகமுடியாமலும் இருக்கும் ஒரு அறிவுஜீவி, இன்றைய சூழலில் நடுநிலை வகிக்க முடியுமா என்பதே அவருடைய பேட்டி எழுப்பும் கேள்வி.

தற்போதைய சூழலில் நாடு முழுவதும் வன்முறை அதிகரித்து வருகிறது. இந்த அறிகுறிகளைத் தாங்கள் எவ்வாறு காண்கிறீர்கள்? இதனை எப்பொருளில் நாம் காண வேண்டும்?

இந்த அறிகுறிகளைக் காண நீங்களொன்றும் பிறவி மேதையாக இருக்க வேண்டியதில்லை. நம்மிடையே பேராசையும், நுகர்வு வெறியும் கருக்கொண்ட ஒரு நடுத்தர வர்க்கம் வளர்ந்து வருகிறது. தொழில் வளம் மிக்க மேற்கத்திய நாடுகளைப் போல வளங்களைக் கொள்ளையிடவும், அடிமைப்படுத்திக் கொள்ளவும் நம்மிடம் காலனி நாடுகள் இல்லை. எனவே, நாம் நம்மையே அடிமைப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான். நமது உறுப்புக்களையே நாம் தின்னத் தொடங்கி விட்டோம். பலவீனமான மக்களிடமிருந்து நிலம், நீர், வளங்களைப் பறித்துக் கொள்வதன் மூலம் மட்டுமே, அடங்கக் கூடிய இந்தப் பேராசை வெறியே தேசிய உணர்வாகவும் நல்லொழுக்கமாகவும் சித்தரிக்கப்படுகிறது.

சுதந்திர இந்தியாவில் தொடுக்கப்பட்ட பிரிவினைவாதப் போர்களிலேயே பெரு வெற்றியடைந்த ஒரு போரை இதோ நாம் நம் கண் முன்னால் காண்கிறோம். ஆம், நம் நாட்டின் மேட்டுக்குடி வர்க்கங்களும் நடுத்தர வர்க்கங்களும் ஏனைய இந்திய மக்களிடமிருந்து பிரிந்து தனி நாடாகவே ஆகிவிட்டனர் ............. இப்பொழுது இந்தப் புதிய வல்லரசின் மேன்மை தங்கிய பிரஜைகளுக்கு, தங்களது பிரம்மாண்ட விளையாட்டுப் பொருட்களான கார்கள், வெடிகுண்டுகள், கண்ணி வெடிகளை மென்மேலும் உற்பத்தி செய்வதற்கு நிலமும் தேவைப்படுகிறது. எனவே இது ஒரு முழுநிறை யுத்தம். இரண்டு தரப்பினரும் தத்தம் ஆயுதங்களைத் தெரிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.அரசாங்கமும் தொழிற்குழுமங்களும் கண்டுபிடித்திருக்கும் ஆயுதத்தின் பெயர் கட்டுமான மறு சீரமைப்பு. உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, அன்னிய நேரடி மூலதனம், அவர்களுக்கு இணக்கமாக நீதிமன்றம் வழங்கும் உத்தரவுகள், இணக்கமான அரசியல் வல்லுனர்கள், கொள்கை வகுப்பாளர்கள், கார்ப்பரேட் ஊடகங்களின் இணக்கமான உதவி, இறுதியாக போலீஸ் படை ............. இவற்றின் துணையுடன் இந்தச் "சீரமைப்பு' மக்களின் தொண்டைக் குழிக்குள் மூர்க்கமாகக் குத்தித் திணிக்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சிப் போக்கை எதிர்த்துப் போராட விரும்புவோர் இதுநாள் வரை, தர்ணாக்களையும், சத்தியாக்கிரகங்களையும், நீதிமன்றங்களையும், நேச சக்திகள் என்று அவர்கள் கருதிக் கொண்டிருந்த ஊடகங்களையும்தான் தங்கள் ஆயுதங்கள் என்று இதுவரை நம்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால், இன்றோ துப்பாக்கிகளை நாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்த வன்முறை வளருமா? ஆம், வளரத்தான் செய்யும். மக்கள் நலனையும் முன்னேற்றத்தையும் அளவிடுவதற்கு "தேசிய வளர்ச்சி விகிதத்தையும்' பங்குச் சந்தைக் குறியீட்டு எண்களையும் அளவுகோல்களாக அரசு பயன்படுத்தும் வரை இந்த வன்முறையும் அதிகரிக்கத்தான் செய்யும். நான் இந்த அறிகுறிகளை எவ்வாறு காண்கிறேன்? அதுதான் கண் எதிரே கொட்டை எழுத்தில் எழுதப்பட்டிருக்கிறதே.தலைக்கு மேலே சுற்றும் மின்விசிறியில் பட்டுத் தெறித்து நாற்புறமும் வீசிக் கொண்டிருக்கிறது மலம்.
இதைப் புரிந்து கொள்வது அத்தனைக் கடினமா என்ன?""நான் வன்முறையில் இறங்க மாட்டேன், ஆனால் அதேவேளையில் நாட்டின் இன்று நிலவும் சூழலில், வன்முறையைக் கண்டனம் செய்யவும் மாட்டேன். அவ்வாறு கண்டனம் செய்வது நெறியற்றது'' என முன்பொரு முறை நீங்கள் கூறியிருந்தீர்கள். அதனை விளக்க முடியுமா?நான் ஒரு கொரில்லாப் போராளியானால் மற்றவர்களுக்குச் சுமையாகத்தான் இருப்பேன். மற்றப்படி "நெறியற்றது' என்ற சொல்லை நான் பயன்படுத்தினேனா எனச் சந்தேகமாக இருக்கிறது. ஏனெனில், அறம், நெறி என்பவையெல்லாம் மிகவும் நெகிழ்ச்சியான, புதிரான சொற்கள். அவை தட்பவெட்ப நிலைகளைப் போல மாறக்கூடியவை.

நான் உணர்வது இதுதான்; சாத்வீக இயக்கங்கள் நம்முடைய ஜனநாயக அமைப்பின் எல்லாக் கதவுகளையும் ஆண்டுக்கணக்கில் தட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு தட்டித் தட்டி அவர்கள் கண்டதென்ன? அலட்சியமாக நிராகரிக்கப்பட்டதையும், அவமானப்படுத்தப்பட்டதையும் தவிர!
போபால் விஷ வாயுவினால் பாதிக்கப்பட்டோரையும், நர்மதை பாதுகாப்பு இயக்கத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். இந்நாட்டில் வெறெந்த மக்கள் இயக்கத்திற்கும் இல்லாத அளவில் நர்மதை பாதுகாப்பு இயக்கத்திற்கு பிரபலமான தலைமை, போதிய சக்திகள், ஊடகங்களின் ஆதரவு என எல்லாம் இருந்தது. ஆனால் ஏன் அது வெற்றி பெற முடியவில்லை? அந்த மக்கள் தமது போராட்ட வழிமுறைகளை மறுபரிசீலனை செய்ய விரும்புகிறார்கள்.
இத்தகைய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள். டாவோஸில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் போய் (உலக முதலாளிகள் கூட்டத்தில் மொர்) சத்தியாக்கிரகத்தின் மேன்மையைப் பற்றி சோனியா காந்தி பேசுகிறார் என்றால், அப்போதாவது நாம் யோசிக்க வேண்டாமா?

உதாரணமாக, ஒரு ஜனநாயக நாட்டில் பெருந்திரளான மக்களின் சட்ட மறுப்பு அல்லது ஒத்துழையாமை சாத்தியமா? அதுவும் பொய்களையும் புனைச் சுருட்டுக்களையும் பரப்பும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைப்பாவையாகச் செயல்படும் ஊடகங்களின் யுகமான இன்றைய காலகட்டத்தில் அது சாத்தியமா? பிரபலமானவராக இல்லாத ஒருவர் உண்ணாவிரதம் இருந்து என்ன பயன்? ............. நங்லாமச்சி சேரி மக்களோ அல்லது பட்டி சுரங்கத்தின் தொழிலாளர்களோ உண்ணாவிரதமிருந்தால், யாரேனும் கண்டு கொள்வார்களா? ஐரோம் சர்மிளா கடந்து ஆறாண்டுகளாக உண்ணாவிரதமிருந்து வருகிறார். இதிலிருந்தெல்லாம் நம்மில் பலர் பாடம் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது என நினைக்கிறேன். .............

நாம் இப்பொழுது ஒரு முற்றிலும் மாறுபட்ட கால கட்டத்தில், மாறுபட்ட இடத்தில் இருக்கிறோம். ............. மக்கள் போராட்டம் என்பதையே துரோகத்தனமான வியாபாரமாக மாற்றி விட்ட அரசு சாரா நிறுவனங்களின், தன்னார்வக் குழுக்களின் அல்லது வேடதாரிகளின் யுகத்தில் நுழைந்திருக்கிறோம். பேரணிகளும், ஆர்ப்பாட்டங்களும் "ஸ்பான்சர்' செய்யப்படுகின்றன. மாபெரும் போராளிகளைப் போல சண்டப் பிரசண்டம் செய்து விட்டு, பின்னர் தனது பிரச்சாரத்தின் ஒரு சிறு அம்சத்தைக் கூட தொடராமல் கை கழுவும் சமூக மன்றங்களைக் காண்கிறோம். போராட்டங்கள் போலவே தம்மைக் காட்டிக் கொள்ளும் தோற்றப் போலிகள் (திடிணூtதச்டூ) எங்கும் நிறைந்திருக்கின்றன.

சிறப்புப் பொருளாதார மண்டலங்களை எதிர்க்கும் கூட்டங்கள் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை முன்னிறுத்துபவர்களாலேயே ஏற்பாடு செய்யப்படுகின்றன. ............. நேரடியாகவும், மறைமுகமாகவும் டாடாவின் இரு அறக்கட்டளைகள், நாடு முழுவதுமுள்ள செயல்வீரர்களுக்கும், மக்கள் இயக்கங்களுக்கும் நிதியளித்து வருகின்றன. இதன் காரணமாகத்தான் நந்திகிராமை விடவும் சிங்கூரில் எதிர்ப்பு ஆரவாரம் குறைவாக இருந்தது போலும். டாடாக்களும், பிர்லாக்களும் காந்திக்கே படியளந்தவர்கள். நமது முதல் தன்னார்வத் தொண்டு நிறுவனமே காந்திதான் என்றும் சொல்லலாம்.

இப்பொழுதுள்ள அரசு சாரா நிறுவனங்கள் மிகுதியாகக் கூச்சலிடுகின்றன. கற்றை கற்றையாக அறிக்கைகள் தயாரிக்கின்றன. ஆனால் அரசாங்கமோ அவர்களுடன் சந்தோஷமாகச் சகவாழ்வு நடத்துகிறது. இவற்றிலிருந்தெல்லாம் நாம் என்ன விளங்கிக் கொள்வது? எங்கும் புழுத்து நெளியும் தொழில்முறை சீர்குலைப்பாளர்களால் உண்மையான அரசியல் போராட்டங்கள் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன. .............

நீதிமன்றங்களில் மக்கள் இயக்கங்கள் நியாயம் வேண்டி நின்ற காலம் ஒன்று இருந்தது. நீதிமன்றங்கள் அநீதியான தீர்ப்புக்களைப் பொழிகின்றன. வறிய மக்களை இழிவுபடுத்தும் வகையில் நீதிமன்றம் பயன்படுத்தும் மொழியைக் கேட்கும்போது அதிர்ச்சியால் நமது மூச்சே நின்றுவிடும் போலிருக்கிறது. ............. இந்த நாட்டின் மிகவும் சக்தி வாய்ந்த நிறுவனத்தின் சித்தாந்த இதயத்தை இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கார்ப்பரேட் ஊடகங்களோடு சேர்ந்து நீதிமன்றங்களும் நவீன காலனியாதிக்கத்தின் அச்சாணிகளில் ஒன்றாக மாறி விட்டதையே இவை அனைத்தும் உணர்த்துகின்றன.

இதுதான் நாம் காணும் சூழல். தாங்கள் நசுக்கித் தரைமட்டமாக்கப்படுவதை உணரும் மக்கள், முடிவில்லாத "ஜனநாயக' வழிமுறைகளில் போராடி இறுதியில் இழிவுபடுத்தப்படும் மக்கள் வேறென்ன செய்ய வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்?

ஆனால் இதனுடைய பொருள் வன்முறை அல்லது சாத்வீகம் என்ற இரண்டு முரண்பட்ட வழிமுறைகள்தான் உள்ளன என்பதல்ல. ஆயுதந்தாங்கிய போராட்டத்தில் நம்பிக்கையோடும், அதேவேளையில் தங்களது ஒட்டுமொத்த அரசியல் வழிமுறைகளில் அதனை ஒரு பகுதியாகவும் மட்டுமே கருதிச் செயல்படும் அரசியல் கட்சிகள் உள்ளன. இத்தகைய போராட்டங்களில் ஈடுபடும் அரசியல் ஊழியர்கள் சிறை, சித்திரவதை, பொய்வழக்குகள் என மிகக் கொடூரமாக ஒடுக்கப்படுகின்றனர். .............

மற்ற எல்லா வழிகளையும் முயன்று விரக்திதான் மிச்சம் என்ற நிலையில், மக்கள் இந்த வழியைத் தேர்ந்தெடுக்கும் பொழுது, நாம் அவர்களைக் கண்டிக்க முடியுமா? நந்திகிராம் மக்கள் தர்ணா நடத்தி பாட்டு பாடிக் கொண்டு உட்கார்ந்திருப்பார்களேயானால் மேற்கு வங்க அரசு பணிந்திருக்குமா? அப்படி யாராவது நம்புகிறீர்களா?

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த மாறுபட்ட காலத்தில், நிலவும் அமைப்பைப் பாதுகாத்துக் கொள்வதற்கான போராட்டம் என்பது பிரயோசனமற்றது. (சந்தேகமின்றி, நம்மில் பலர் இந்த ரகத்தைச் சேர்ந்தவர்கள்தான்) பிரயோசனமாக ஏதேனும் செய்ய விரும்புகிறவர்கள் அதற்கு மிகக் கடுமையான விலை கொடுக்க வேண்டியிருக்கிறது. அத்தகைய விலையைக் கொடுக்க தயாராயிருப்பவர்களை என்னால் கண்டிக்க இயலாது.
நீங்கள் மிக அதிகமான இடங்களுக்கு பயணித்து வருகிறீர்கள்.

பிரச்சினைக்குரிய பகுதிகள் குறித்தும், அங்கே நிலவும் சூழல், போராடும் தரப்புகள் குறித்தும் சொல்ல இயலுமா?

மிகப் பெரிய கேள்வி எப்படிச் சொல்வது? காஷ்மீரை ஆக்கிரமித்திருக்கும் இராணுவம், குஜராத்தில் நிலவும் நவீன பாசிசம், சத்தீஸ்கரில் நிகழ்ந்து வரும் உள்நாட்டுப் போர், ஒரிசாவைக் கற்பழிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள், மூழ்கிக் கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான நர்மதை பள்ளத்தாக்கு கிராமங்கள், முழுப் பட்டினியின் நுனியில் விளிம்பில் தவித்து நிற்கும் மக்கள், சூறையாடப்படும் காடுகள், டௌ கெமிக்கல்ஸ் என்ற பெயரில் நந்திகிராமில் நுழையும் யூனியன் கார்பைடு நிறுவனத்தை உச்சி மோந்து வரவேற்கும் மேற்கு வங்க அரசு, இதனைக் காண்பதற்கு இன்னும் உயிரோடிருக்கும் போபால் விஷ வாயுவினால் தாக்கப்பட்ட மக்கள். .............
இவை மட்டுமல்ல, மறைந்து கொண்டு நஞ்சைப் பரப்பும், மீண்டும் வெடிக்கக் காத்திருக்கும் இந்துத்துவாவை எப்படிக் குறிப்பிடாமல் இருக்க முடியும்? இவையனைத்தையும் விட மிகக் கேவலமானது என்னவெனில், இன்னமும் தீண்டாமையைப் போற்றிப் பாதுகாத்து வரும் ஒரு பண்பாடாக, சமூகமாக, நாடாக நாம் வாழ்கிறோம். நமது பொருளாதார வல்லுனர்கள் கோடிகளைக் கணக்கிட்டு, வளர்ச்சி விகிதத்தைக் குறித்து பீற்றிக் கொண்டிருக்கும் வேளையில், இலட்சக்கணக்கான மலம் அள்ளும் தொழிலாளர்கள் தம் வயிற்றைக் கழுவுவதற்காக கிலோக்கணக்கில் பிறரது மலத்தைத் தலையில் சுமக்கிறார்கள். அடுத்தவன் மலத்தைத் தலையில் சுமக்க மறுத்தால் அவர்கள் பட்டினி கிடந்து சாகவேண்டும். அடேயப்பா, இது பெரிய்ய புடுங்கி வல்லரசுதான்!சமீபத்தில் வங்கத்தில் நிகழ்ந்த அரசு, போலீசு வன்முறையை நாம் எப்படிப் பார்ப்பது?

மற்ற இடங்களில் நடக்கும் போலீசு, அரச வன்முறையிலிருந்து எந்த வகையிலும் இது வேறுபட்டதல்ல. பொய், பம்மாத்து, இரட்டைவேடம் ஆகியனவற்றில் தேர்ந்த மற்ற அரசியல் கட்சிகளுக்கு பொது நீரோட்ட இடதுசாரிகள் எந்த வகையிலும் குறைந்தவர்கள் அல்ல. ............. எங்கும் விசித்திரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. சவுதி அரேபியாவில் பனி பொழிகிறது. பகலில் ஆந்தைகள் ஓலமிடுகின்றன. சீன அரசு தனிச் சொத்துடைமைக்காக மசோதா நிறைவேற்றுகிறது. ............. சீனத்தின் கம்யூனிஸ்டுகள் 21ஆம் நூற்றாண்டின் மாபெரும் முதலாளிகளாக உருவெடுத்துக் கொண்டிருக்கும்போது நமது நாட்டு பாராளுமன்றக் கம்யூனிஸ்டுகளிடம் நாம் வேறெதை எதிர்பார்க்க முடியும்? நந்திகிராமும், சிங்கூரும் மிகத் தெளிவான அபாயச் சின்னங்கள்.

போயும் போயும் நவீன முதலாளித்துவத்தில்தான் எல்லாப் புரட்சிகளும் முடிவடைய வேண்டுமோ, வியப்பாகத்தான் இருக்கிறது. சிந்தித்துப் பாருங்கள். பிரெஞ்சுப் புரட்சி, ரசியப் புரட்சி, சீனப் புரட்சி, வியத்நாம் யுத்தம், நிறவெறிக்கு எதிரான போராட்டம், சொல்லிக் கொள்ளப்படும் காந்திய சுதந்திரப் போராட்டம் ............. இவையனைத்தும் எங்கு போய் நின்று கொள்கின்றன? முதலாளித்துவம் என்பதுதான் நம் கற்பனையின் முடிவா?

பிஜாப்பூரில் 55 போலீசுக்காரர்களை மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். மாவோயிஸ்டுகளை அரசின் மற்றொரு முகம் எனச் சொல்வது சரியாக இருக்குமா?

போராளிகள் எவ்வாறு அரசின் மறு முகமாக இருக்க முடியும்? நிறவெறிக்கு எதிராகப் போராடியவர்களை, அவர்களுடைய வழிமுறைகள் எவ்வளவுதான் கொடூரமானவையாக இருந்த போதிலும், அவர்களை அரசின் இன்னொரு முகம் என யாரேனும் அழைக்க இயலுமா? அப்படியானால் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய அல்ஜீரியர்கள், அல்லது நாஜிக்களை எதிர்த்துப் போராடியவர்கள், அல்லது காலனிய அரசுகளை எதிர்த்துப் போராடியவர்கள், அல்லது அமெரிக்க ஆக்கிரமிப்புக்கெதிராக ஈராக்கில் போராடிக் கொண்டிருப்பவர்கள், இவர்கள் அனைவரையும் அரசின் இன்னொரு முகம் என்று எப்படிச் சொல்ல முடியும்?

அறிக்கைகளால் உருவாக்கப்படும் மேம்போக்கான இத்தகைய "மனித உரிமை'ச் சொல்லாடல்களும், எல்லா வன்முறைகளையும் கண்டிப்பதாகக் கூறிக் கொள்ளும் இந்தப் பழி போடும் விளையாட்டும் ............. இப்பிரச்சினைகள் அனைத்திலும் உறையும் உண்மையான அரசியலைக் கரைத்து வெளியேற்றி விடுகிறது. நாம் எவ்வளவுதான் தூய்மையாக இருக்க விரும்பினாலும், நமது ஒளிவட்டங்களுக்கு நாமே எவ்வளவுதான் மெருகேற்றிக் கொண்டாலும், வருந்தத்தக்க உண்மை என்னவென்றால் அத்தகைய தூய்மையான வாய்ப்புகளோ மாற்றுகளோ நம்முன் இல்லை.

சத்தீஸ்கரில் அரசினால் நிகழ்த்தப்படும் உள்நாட்டுப் போர், புஷ்ஷினுடைய சித்தாந்தத்தை வெளிப்படையாக நடைமுறைப்படுத்துகிறது. ""நீ எங்களோடு இல்லையென்றால், நீ தீவிரவாதிகளோடு இருக்கிறாய்!'' என்று கூறுகிறது.
அரசின் பாதுகாப்புப் படைகள் ஒருபுறமிருக்க, இப்போரின் அச்சாணியே சல்வாஜுடும் என்ற படைதான். இது அரசின் நிர்ப்பந்தத்தினால் ஆயுதமேந்தியிருக்கின்ற சாதாரண மக்களைக் கொண்ட படை. ............. இந்திய அரசு ஏற்கெனவே காஷ்மீரிலும், மணிப்பூரிலும், நாகாலாந்திலும் இத்தகைய படையை உருவாக்க முயன்றிருக்கிறது. அதன் விளைவாக, பத்தாயிரக்கணக்கானோர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். .............
தோற்றுப்போன இத்தந்திரங்களை இப்பொழுது இந்தியாவின் இதயப் பகுதியிலேயே இறக்குமதி செய்ய அரசு முயன்று வருகிறது. தமது கனிமவளம்மிக்க நிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பழங்குடி மக்கள் போலீசு முகாம்களுக்கு விரட்டியடிக்கப்படுகின்றனர். நூற்றுக்கணக்கான கிராமங்கள் பலவந்தமாகக் காலி செய்யப்பட்டிருக்கின்றன. இரும்புத் தாது வளம் மிக்க அவர்களது நிலங்கள் மீது டாடா, எஸ்ஸார் போன்ற முதலாளிகள் கண் வைத்து விட்டனர். ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.
ஆனால் அவற்றின் ஷரத்துக்கள் யாருக்கும் தெரிவதில்லை. நிலக் கையகப்படுத்தல் தொடங்கி விட்டது. ............. எல்லோருடைய பார்வையும், அரசின் கூலிப் படைகளுக்கும், கொரில்லாக் குழுக்களுக்குமிடையிலான வன்முறையில் பதிந்திருக்க, பன்னாட்டுக் குழுமங்கள் சத்தமின்றிக் கனிம வளங்களைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றன. சத்தீஸ்கரில் அரங்கேற்றப்பட்டு வரும் நாடகத்தின் ஒரு சிறு பகுதி இது.

55 போலீசுக்காரர்கள் கொல்லப்பட்டது பயங்கரமானதே. ஆனால் அவர்களும் மற்றவர்களைப் போல அரசின் கொள்கைகளின் விளைவாகப் பாதிக்கப்பட்டவர்களே. வெறும் பீரங்கித் தீனியாகத்தான் (இச்ணணணிண ஞூணிஞீஞீஞுணூ) அப்போலீசுக்காரர்களை அரசும், பன்னாட்டு நிறுவனங்களும் கருதுகின்றன. அந்தப் போலீசுக்காரர்கள் எங்கிருந்து வந்தவர்கள் என்பதை ஆராயப் புகுந்தால் அதில் சொல்வதற்கு ஏராளம் இருக்கிறது.

செத்துப் போன போலீசுக்காரர்களுக்காகச் சில நாட்களுக்கு முதலைக் கண்ணீர் வடிக்கப்படும். தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் நம் மீது ஏறி சவாரி செய்வார்கள், பின்னர் மேலும் கூடுதலான பீரங்கித் தீனி சப்ளை செய்யப்பட்டு விடும். மாவோயிஸ்ட் கொரில்லாக்களைப் பொருத்தவரை அவர்களால் கொல்லப்படும் போலீசுக்காரர்களும் சல்வா ஜுடும் சிப்பாய்களும் இந்திய அரசின் ஒடுக்குமுறை எந்திரத்தின் கையாட்கள்; சித்திரவதை, காவல் நிலைய சாவுகள், போலி மோதல்களை நடத்தும் ஆயுதப்படையினர்; அவர்கள் அப்பாவிக் குடிமக்கள் அல்லர்.

மாவோயிஸ்டுகளும் பலவந்தத்திலும், பயங்கரத்திலும் ஈடுபடக் கூடியவர்களே என்பதிலும், சொல்ல இயலாத அடக்குமுறைகளைச் செய்திருக்கிறார்கள் என்பதிலும், உள்ளூர் மக்களிடம் தங்களுக்கு விதிவிலக்கற்ற பேராதரவு இருப்பதாக அவர்கள் உரிமை கொண்டாட முடியாதென்பதிலும் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், அவ்வாறு யார்தான் உரிமை கொண்டாட முடியும்? எனினும், உள்ளூர் மக்களின் ஆதரவின்றி எந்தக் கொரில்லாப் படையும் இயங்க முடியாது. அது நடைமுறைச் சாத்தியமற்றது. மேலும், மாவோயிஸ்டுகளுக்கான ஆதரவு பெருகிக் கொண்டுதான் வருகிறதேயொழிய குறையவில்லை. .............

ஆனால், கணக்கிடலங்கா அநீதிகளுக்கு எதிராகப் போராடும் எதிர்ப்பு இயக்கத்தை, அத்தகைய அநீதிகளைத் திணிக்கும் அரசோடு ஒப்பிடுவது அபத்தமானது.வன்முறையற்ற எதிர்ப்பின் ஒவ்வொரு முயற்சியையும் அரசு முகத்திலறைந்தாற்போலக் கதவை மூடியிருக்கிறது. மக்கள் ஆயுதம் ஏந்தும்போது எல்லாவிதமான, வன்முறைகளும் இருக்கத்தான் செய்யும். புரட்சிகரமானது, உதிரித்தனமானது, கடைந்தெடுத்த கிரிமினல்தனமானது என எல்லா வன்முறைகளும் வரத்தான் செய்யும். தானே உருவாக்கிய இத்தகைய பயங்கரமான சூழலுக்கு இந்த அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்."நக்சல்கள்', "மாவோயிஸ்டுகள்', "வெளியாட்கள்': இப்பதங்கள் தற்பொழுது வரையறையற்றுப் பயன்படுத்தப்படுகின்றனவே...

தனது சுயவிளம்பரத்தில் தானே மயங்கிவிட்டதால், தனது சொந்த மக்கள் தனக்கெதிராகக் கிளர்ந்தெழக் கூடும் என்பதை நம்ப இயலாத அரசுகள், அடக்குமுறையின் துவக்க காலகட்டங்களில் பயன்படுத்தும் மிகப் பொதுவான குற்றச்சாட்டுதான் "வெளியாட்கள்' என்பது ............. "வெளியாள்' என்றால் என்ன? யார் எல்லைகளைத் தீர்மானிப்பது? அவை கிராமத்தின் எல்லைக்கோடுகளா? தாலுகாவினதா? மாவட்டமா அல்லது மாநிலமா? குறுகிய பிரதேச வாதமும் இனவாதமும்தான் கம்யூனிசத்தின் புதிய தாரக மந்திரமோ?

நக்சல்கள், மாவோயிஸ்டுகள் ............. யார்? இந்தியா ஒரு போலீசு அரசாக மாறப் போகிறது. தற்போதைய அரசியல் நடப்புகளை ஏற்க மறுப்பவர்கள் யாராக இருந்தாலும் சரி, தாங்கள் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்படும் அபாயத்தை அவர்கள் எதிர்கொண்டாக வேண்டும். ............. நாம் அனைவரும் மாவோயிஸ்டுகள் அல்லது நக்சலைட்டுகள், தீவிரவாதிகள் அல்லது தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் என அழைக்கப்படலாம். மாவோயிஸ்ட் அல்லது நக்சலைட் என்றால் யாரென்றே தெரியாத அல்லது தெரிந்து கொள்ள விரும்பாத நபர்களால் நமது கதை முடித்து வைக்கப்படலாம். அத்தகைய காலம் வெகு தொலைவில் இல்லை.......தமிழாக்கம்: பால்ராஜ்

சூறையாடலுக்குச் சேது சமுத்திரத் திட்டம்! அரசியல் லாவணிக்கு இராமன் பாலம்!

சூறையாடலுக்குச் சேது சமுத்திரத் திட்டம்!அரசியல் லாவணிக்கு இராமன் பாலம்!

மன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையில் ஆதாம் பாலம் என்றும் ராமன் பாலம் என்றும் அழைக்கப்படும், கடலுக்கடியில் கிடக்கும் மணல்திட்டுகளை வெட்டி எடுக்கும் பணி சேது சமுத்திரத் திட்டத்திற்காக ஆரம்பித்திருக்கும் இவ்வேளையில், இந்துவெறி பார்ப்பன கும்பல் ""ராமர் கட்டிய பாலத்தை இடிக்காதே!'' என ஓலமிட ஆரம்பித்துள்ளது.

பா.ஜ.க., விசுவ இந்து பரிசத் போன்ற மதவெறிக் கூட்டத்துடன் சுப்பிரமணிய சாமியும், பார்ப்பன ஜெயலலிதாவும் அறிக்கை மேல் அறிக்கை விடுகின்றனர். பதிலுக்கு தி.மு.க. கூட்டணியில் இருந்தும் பதில் அறிக்கை என இராமன் பாலம் விவகாரம் சூடேறியுள்ளது.


""தொன்மையான வரலாற்றுச் சின்னமாகவும் மக்களின் நம்பிக்கைக்கு ஆதாரமாகவும் விளங்கும் பாலம்'' என்று இல.கணேசன் மணல்திட்டைக் காப்பாற்றத் துடிப்பதைக் கேட்பவர்கள், திட்டப்பணி நடைபெறும் பாதை எண்6 வழியாக (ஆதாம் பாலம்) கால்வாய் வெட்டச் சொன்னதே முந்தைய பா.ஜ.க. அரசின் திருநாவுக்கரசர் தலைமையிலான அமைச்சகம்தான் என்பதை மறந்து விடவேண்டும்.

""ஆங்கிலேயர்கள் வரைந்த படங்கில்கூட ராமர் பாலம் இருந்தது. தற்போது இடிக்கப்படும் பாலத்தின் கற்களை இரகசியமாக கப்பலில் எடுத்துச் செல்கின்றனர். பிரதமரும் ஜனாதிபதியும் உடனே தலையிட வேண்டும்'' என்று ஊளையிடும் ஜெயா மாமியின் அ.தி.மு.க.தான், 2001 தேர்தல் அறிக்கையில் ""ஆதாம் பாலத்து மணலை அகற்றி கால்வாய் அமைக்கப்படும்'' என்று கூறியதை மறந்து விடவேண்டும்.

தயானந்த சரஸ்வதி எனும் இந்துவெறி சாமியார் ""ராமேஸ்வரம் கடல் பகுதியில் உள்ளது இயற்கையான பாலமல்ல. கி.பி. 15ஆம் நூற்றாண்டு வரை அப்பாலத்தில் மக்கள் சென்று வந்தனர்'' என்று சொல்கிறார். அப்படியென்றால் 11ஆம் நூற்றாண்டில் ராஜராஜ சோழன் ஏன் அப்பாலத்தைப் பயன்படுத்தாமல் கடற்படையை ஏவி ஈழம் வென்றான்? என்று அவரை யாரும் கேட்கப் போவதில்லை.

சொல்லி வைத்த மாதிரி எல்லோரும் ""அமெரிக்காவின் நாசாவே வெளியிட்டிருக்கும் செயற்கைக் கோள் படத்தில் ராமர் பாலம் இருக்கிறது'' என்கிறார்கள். நாசாவின் இணையதளமோ, கடலில் நடக்கும் இயற்கை மாற்றத்தால் உண்டான மணல்திட்டுக்களே அவை; அங்கு மனிதனால் உருவாக்கப்பட்ட எவ்விதமான கட்டிடங்களும் இல்லை எனச் சொன்னதையும், நாசா சொன்ன மணல் திட்டுக்களைப் பாலம் எனத் திரித்தவர்கள் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர்தான் என்பதையும் அவர்களிடம் யாரும் இடித்துரைக்கப் போவதில்லை.

இலங்கைக்கு செல்ல, கடலைக் கடக்க பாலம் கட்டிய ராமன், பாம்பனில் இருந்து ராமேஸ்வரம் வரை எப்படிப் போனான்? புஷ்பக விமானத்திலா?
அப்படியென்றால் அதிலேயே இலங்கைக்கும் சென்றிருக்கலாமே?""ராமன் பாலத்துக்கு 15 லட்சம் வருச வரலாறுண்டு'' என்று ஜெயாவும், பா.ஜ.க.வும் சொல்கிறார்கள். ஆனால், மனித இனம் உருவாகியே 5 லட்சம் ஆண்டுகள்தானே ஆகின்றன. ராமநாதபுரம் மாவட்டத்திலே மலைகள் ஏதும் இல்லையே! பாலம் கட்ட பெரும்பாறைகளுக்கு ராமன் என்ன செய்தான்? கரசேவை நடத்திக் கல் வரவழைக்க அன்றைக்கு அத்வானி போன்றவர்கள் இல்லையே!

இவ்வளவு "பழமையான' பாலத்தைக் காக்க, ஏன் இவர்கள் ஆண்ட 6 ஆண்டுகளில் தொல்பொருள் சின்னமாக அதனை அறிவிக்கவில்லை? உமாபாரதி சுரங்கத்துறை அமைச்சராக இருந்தபோது அப்பகுதியில் 21 மீட்டர் வரை தோண்டிப் பார்த்தும் கட்டிடங்கள் ஏதும் தென்படாததாலா?

உண்மையில் பாக் நீரிணைப்பில் பாலம் இருந்ததா? கடலியலாளர்கள் ஜெயகரன், ""நூறாண்டுகளுக்கு 1 மீட்டர் வரை கடல் மட்டம் உயர்ந்து வருவதால் 5000 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்நாட்டுடன் தரையால் இணைக்கப்பட்டிருந்த இலங்கை, தீவாகிப் போனது'' என்பதைப் பல ஆதாரங்களுடன் சொல்கிறார். (ஆதாரம்: குமரி நில நீட்சி, ஜெயகரன்).
இதேபோல ஆஸ்திரேலியாவுக்கும் பாப்புவாநியூகினி தீவுக்கும் இடையிலும் சிங்கப்பூர் மலேசியா இந்தோனேசியாவுக்கும் இடையிலும் நிலப்பகுதிகளை கடல் விழுங்கி வெண்மணற் திட்டுகள் அமைந்துள்ளன. அவற்றை எவரும் ராமன் பாலம் அல்லது இலட்சுமணப் பாலமாகக் கருதுவதில்லை.

இலட்சக்கணக்கான வருடங்கள் என்ன, 5000 வருடத்துக்கு முன்னர் வெறும் தரையில் நடந்தே போய்விடக்கூடிய இடத்துக்கு பாலம் கட்டப்பட்டது என்றால் ஒன்று கட்டியவன் கூமுட்டை. அல்லது இதை நம்புபவன் கேணை.

பா.ஜ.க. உண்மையிலேயே இத்திட்டத்தை எதிர்க்கிறதா என்றால், இல்லவே இல்லை. அவர்கள் 5000 வருடங்களுக்கு முன்னர் ராமன் கட்டியதாகக் கூறப்படும் பாலத்தை இடிப்பதை மட்டுமே எதிர்க்கின்றார்களே தவிர, சேதுக்கால்வாய் திட்டத்தை எதிர்க்கவில்லை. "எண்ணெய் தடவாமல் தலை சீவ முடியுமா?' எனக் கருணாநிதி கேட்டால் "எண்ணெய் தடவாமலே தலை சீவுவதுதான் ஃபேசன்' எனக் கூறும் இல.கணேசன் மாற்று வழியில் தோண்டச் சொல்கிறார்.

கருணாநிதி, தன் கூட்டணியை வைத்தே "சேது சமுத்திரத் திட்டப் பாதுகாப்புக் குழு' ஒன்றை உருவாக்கி, "சேதுக்கால்வாய் போன்றவற்றை நிறைவேற்றவே தி.மு.க. தனிநாடு கேட்டதாகவும், மைய அரசே என்னென்ன வேண்டும் சொல்லுங்கள் எனக் கேட்டதும், தனிநாடு கொள்கையைக் கைவிட்டு இந்தியாவில் இருந்து கொண்டே சேதுக்கால்வாய் வெட்டலாமென்று பிரிவினையைக் கைவிட்டதாகவும்' புத்தம் புது திரைக்கதை ஒன்றைச் சொன்னார்.

ராமதாசோ ""இத்திட்டம் நிறைவேற்றி முடிக்கப்பட்டால் தமிழகத்தில் தொழில்வளம் பெருகும். வணிகம் வளர்ச்சி அடையும். பல துறைமுகங்கள் ஏற்பட்டு வேலை வாய்ப்புகள் பெருகும்'' என்று கற்பனையைத் தூண்டிவிடுகிறார். மார்க்சிஸ்ட் கட்சியின் சீத்தாராம் யெச்சூரியோ சிறந்ததொரு தரகு முதலாளியின் வார்த்தைகளிலேயே ""உலக அளவில் கப்பல் போக்குவரத்தில் மிகப் பெரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இத்துறையில் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு இணையாக இந்தியாவும் முன்னேற வேண்டும் என்றால், இது போன்ற திட்டங்கள் அவசியம்'' என்கிறார்.

துறைமுகங்கள் வளருவதால் வேலை வாய்ப்பு பெருகும் என்பது கடைந்தெடுத்த பொய்யாகும். சேதுக்கால்வாய் திட்டம் வருவதற்கு முன்னரே 80களில் தூத்துக்குடி துறைமுகத்தில் வேலை செய்து வந்த ஆயிரக்கணக்கான டி.எஸ்.ஏ. தொழிலாளர்களை துறைமுக நவீனமயமாக்கம் இன்று வீதிக்கு எறிந்து விட்டது. துறைமுகங்கள் முழுக்க கணினிகளால் இயக்கப்படுகின்றன. 1990களுக்குப் பின்னர் பின்பற்றப்படும் மக்கள் விரோதப் பொருளாதாரக் கொள்கையால் பல லட்சம் சிறுதொழில்கள் அழிந்துவிட்டன.

கிராமங்களின் கைவினைஞர்களும், விவசாயிகளும் பெருநகரங்களை நோக்கி படையெடுக்கின்றனர். ஏற்கெனவே இருந்த வாழ்வை அழித்து விட்டு சேதுக்கால்வாய் மூலம் தொழில் பெருகும், வணிகம் பெருகும் என்று சொல்வதில் கடுகளவும் பொருளில்லை."தமிழனின் கனவுத் திட்டம்' என்று சொல்லப்படும் சேதுசமுத்திரத் திட்ட கால்வாய்க் கனவையே பிரிட்டிஷ்காரன்தான் உருவாக்கினான். 1860களில் பஞ்சங்களை உருவாக்கிய வெள்ளை ஏகாதிபத்தியம் பருத்தி, அவுரி போன்றவற்றையும் தேக்கு போன்ற மரங்களையும் விரைவாய்க் கொண்டு செல்ல வடிவமைத்த திட்டத்தை "தமிழனின் கனவு'த் திட்டம் என்று சொல்வதே அடிமைப் புத்தியாகும். அன்று பிரிட்டனால் நிறைவேற்ற முடியாமல் போன இந்தத் திட்டத்தை, இன்று உலக நிதி மூலதனம் நிறைவேற்றக் கிளம்பியுள்ளது.

இத்திட்டத்தின் ஆதரவாளர்கள் ""சேதுவால் நம்நாடு மட்டுமல்ல. தென் கிழக்காசிய நாடுகளும் கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள நாடுகளும் பயன்பெறும்; வணிகமும் தொழிலும் பெருகும்; அன்னிய முதலீடு அதிகரிக்கும்; அந்நியச் செலாவணி அதிகரிக்கும்; ஏற்றுமதி அதிகரிக்கும்; துறைமுகங்களின் சரக்குக் கையாளும் திறன் அதிகரிக்கும்'' என்று சேதுவின் உண்மை நோக்கத்தை சொல்லி விடுகிறார்கள். சென்னைக்கு அருகில் ஹோண்டாவும், ஹூண்டாயும் பல கோடி அந்நிய முதலீட்டில்தான் வந்தன. எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது? அவர்கள் கார்களை ஒருங்கிணைத்து சென்னை துறைமுகம் மூலமாகத்தான் ஏற்றுமதி செய்கின்றனர். இதன்மூலம் துறைமுகத்தில் வேலை வாய்ப்பு பெருகியுள்ளதா? இல்லவே இல்லை.

உலகில் அருகி வரும் கடல் ஆமைகள் முட்டையிடும் பகுதி என்றும் பவளப் பாறைகள் செறிந்த பகுதி என்றும் உயிரியலாளர்களால் போற்றப்படும் மன்னார் வளைகுடாவை ஏகாதிபத்தியம் சேதுக்கால்வாய் திட்டத்தின் மூலம் தனது கோரப்பசிக்குப் பலியாக்கி வருகின்றது. ஏகாதிபத்தியத்திற்காகப் போடப்படும் சேதுக்கால்வாயின் மைய நோக்கத்தைப் பற்றி யாரும் யோசிக்க விடாமல் இருக்கவே ஓட்டுக் கட்சிகள், ராமன் பாலம் கட்டினானா? இல்லையா? என்ற பட்டிமன்றத்தில் இறங்கியுள்ளன.· கவி

Friday, June 29, 2007

ஓநாய்களின் திடீர் கரிசனை

பெருந்தொழில் நிறுவனங்களின் 'சமூகப் பொறுப்புணர்வு" ஓநாய்களின் திடீர் கரிசனை

தொழில் நகரமான ஓசூரின் அருகிலுள்ள கொத்தகொண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு ஒரே ஆச்சரியம். ஓசூர் தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக்கிக் கசக்கிப் பிழிந்து, தொழிலாளர் போராட்டங்களை ஒடுக்குவதில் முன்னணியில் நிற்கும் டி.வி.எஸ். நிறுவனம், இக்கிராமத்தின் பெண்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் வகையில் சப்பாத்தி உற்பத்தி மற்றும் விற்பனை மையத்தை நடத்தி வருகிறது. 15க்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த ஏறத்தாழ 300 பெண்கள் இம்மையத்தில் சப்பாத்தி தயாரிக்கும் வேலை செய்கின்றனர். டி.வி.எஸ். நிறுவனங்களின் தொழிலாளர் உணவகங்களுக்கு மட்டுமின்றி இங்கு தயாராகும் சப்பாத்திகள் பெங்களூரிலுள்ள பீன்யா தொழிற்பேட்டைக்கும் அனுப்பப்படுகிறது.
சப்பாத்தி உற்பத்தி மையம் மட்டுமல்ல; இக்கிராமத்திலும் சுற்றுப்புற பகுதிகளிலும் சமுதாயக் கூடம், ஆரம்ப சுகாதார மையம், பெண்களுக்குத் தையல் பயிற்சி, கிராமங்களில் சாலை அமைத்தல், குடிநீர் கைப்பம்பு அமைத்தல், கிராமப் பள்ளிகளுக்குச் சுற்றுச்சுவர் எழுப்புதல் என அடுக்கடுக்காக பல "சமூக சேவை' களை டி.வி.எஸ். நிறுவனம் செய்து வருகிறது.

டி.வி.எஸ். நிறுவனம் இப்படி திடீர் சமூக சேவையில் இறங்கியுள்ள அதேநேரத்தில், தாமிர உருக்காலை மூலம் நிலத்தையும், நீரையும் காற்றையும் நஞ்சாக்கி வரும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம், இப்பகுதியிலுள்ள பள்ளி மாணவர்களிடம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இப்பகுதியிலுள்ள சிற்×ர்களில் இலவச கண் சிகிச்சை முகாம், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் சுயவேலைவாய்ப்பு முதலானவற்றையும் ஸ்டெர்லைட் நிறுவனம் செய்து வருகிறது.

நிரந்தர மரண பயத்தை விளைவித்துள்ள கூடங்குளம் அணுமின்திட்ட நிர்வாகம், கூடங்குளத்தைச் சுற்றிலுமுள்ள கிராமங்களில் ஆரம்பப் பள்ளிகளைக் கட்டித் தந்து, சாலைவசதியும் மருத்துவ முகாமும் அமைத்துள்ளது. ஈரோடுக்கு அருகில் இயங்கிவரும் சேஷசாயி காகித நிறுவனம் ஒருபுறம் அந்த வட்டாரத்தையே மாசுபடுத்திக் கொண்டிருக்கும் அதேசமயம், மறுபுறம் சுற்றுப்புற கிராமங்களில் குடிநீர் குழாய் பதித்தும், சாலை கழிப்பறை தெருவிளக்கு வசதிகள் செய்து கொடுத்தும் "அறப்பணி' ஆற்றுகிறது. தொலைக்காட்சி மூலம் தமிழக மக்களை மூளைச்சலவை செய்துவரும் சன் டி.வி. குழுமம், ஆண்டுதோறும் ஏழைகள் சிலரைத் தேர்ந்தெடுத்து இலவசத் திருமணம், சீர்வரிசையாக இரு சக்கர வாகனம், கட்டில், சில்வர் பாத்திரங்களை வழங்கி வருகிறது.

தமிழகத்தின் பெருமுதலாளித்துவ பெருந்தொழில் நிறுவனங்கள் இப்படி "தருமதுரை'யாக அவதாரம் எடுத்துள்ளபோது, இந்தியாவின் மிகப் பெரிய கணினி மென்பொருள் தரகுப் பெருமுதலாளியான விப்ரோ பிரேம்ஜி, 16 மாநிலங்களில் 13 லட்சம் ஆரம்பப் பள்ளிகளுக்குப் பயன்படும் வகையில், பள்ளிக் கல்வி மேம்பாடுக்கென பல கோடி நிதி ஒதுக்கியுள்ளார். உள்நாட்டின் சிறுவணிகத்தை அழிக்க வந்துள்ள அமெரிக்க வால் மார்ட் நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ள பார்தி மிட்டல், தனது பார்தி அறக்கட்டளை மூலம், அடுத்த ஈராண்டுகளில் நாடெங்கும் கிராமப்புற பாலர் பள்ளிகளை நிறுவ ரூ. 200 கோடி ஒதுக்கியுள்ளார். தரகுப் பெருமுதலாளித்துவ மஹிந்திரா நிறுவனம், மஹாராஷ்டிர மாநிலத்தில் புனாவுக்கு அருகே வறட்சி பாதித்த புரந்தர் வட்டத்தில் பழங்குடியினப் பெண்களின் கல்விக்கும் தொழில் பயிற்சிக்கும் பல கோடிகளை ஒதுக்கியுள்ளது. டாக்டர் ரெட்டி லேப்ஸ் நிறுவனம், ஆந்திராவிலுள்ள அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த பல கோடிகளை ஒதுக்கியிருப்பதோடு, விசாகப்பட்டினம், ஐதராபாத் நகரங்களிலுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு மதிய உணவைத் தயாரித்துக் கொடுக்க தானியங்கி சமையற்கூடங்களை நிறுவியுள்ளது. இதுதவிர, ஆந்திராவில் நாற்பதாயிரம் குடும்பங்களுக்கு குடிநீர் வசதித் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

இந்தியத் தரகுப் பெருமுதலாளித்துவ நிறுவனங்கள் நாட்டு மக்கள்மீது இப்படி திடீர் கரிசனத்துடன் "சமூக சேவை' செய்யக் கிளம்பியுள்ளபோது, பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று இச்சமூக சேவையை விரிவாகச் செய்யக் கிளம்பியுள்ளன. கேரளத்தின் பிளாச்சிமடா கிராமத்தைச் சுடுகாடாக்கி, நெல்லை கங்கை கொண்டானில் தாமிரவருணியை உறிஞ்சி மக்களின் வாழ்வாதாரங்களையே அழித்துக் கொண்டிருக்கும் கொலைகார கோக் நிறுவனம், சென்னையைச் சுற்றியுள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு இலவசமாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை ""வாழ்வின் அமுதம்'' எனும் திட்டத்தின் கீழ் வழங்கி வருகிறது. வளரும் குழந்தைகளின் சுவையையே மாற்றியுள்ள காட்பரீஸ் எனும் பன்னாட்டு ஏகபோக நிறுவனம், குவாலியர் நகரைச் சுற்றியுள்ள கிராமங்களில் பாலர் பள்ளிகளையும் ஆரம்பப் பள்ளிகளையும் நடத்துகிறது. பொதுமக்களுக்கு மட்டுமின்றி கால்நடைகளுக்கும் இலவச மருத்துவமுகாம் நடத்துகிறது; பஞ்சாயத்துகளுக்குக் கட்டிடங்களைக் கட்டித் தருகிறது.

இந்துஸ்தான் லீவர் நிறுவனம், மதுரை மாவட்டத்தின் கிராமப்புறங்களில் ""சக்தி திட்டம்'' எனும் பெயரில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் சோப்புக் கட்டி, சலவைத் தூள் விற்பனை செய்து வருவாய் ஈட்ட பெண்களைப் பயிற்றுவிக்கிறது. ஐ.டி.சி. எனும் பன்னாட்டு ஏகபோக சிகரெட் நிறுவனம், ம.பி., ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் குளங்கள், தடுப்பணைகள், குட்டைகளை நிறுவி 15,000 ஏக்கர் நிலத்திற்குப் பாசன வசதி செய்து தருகிறது. உலகின் மிகப் பெரிய கோடீசுவர முதலாளியான பில்கேட்சின் மைக்ரோ சாப்ட் நிறுவனம், ""சிக்ஷா'' எனும் திட்டத்தின் கீழ் அடுத்த ஐந்தாண்டுகளில் 80,000 அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் 35 லட்சம் கிராமப்புற மாணவர்களுக்கும் கணினி மென்பொருள் துறையில் பயிற்சி அளிக்கப் போகிறது.

கணிப்பொறிகள், செல்போன்களின் ஐ.சி.களை வடிவமைக்கும் பிரிட்டனின் ஆர்ம் நிறுவனம், தகவல் தொழில்நுட்ப அறிவியலைப் பயிலும் கல்லூரி மாணவர்களுக்கு நிதியுதவி, பயிலரங்குகள், பள்ளிகளுக்கு இலவச கணிப்பொறி மென்பொருள் வழங்குதல் எனப் பல உதவித் திட்டங்களை இந்தியப் பல்கலைக் கழகங்களுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது. ஹனிவெல் இந்தியா எனும் விமானத் தொழில்நுட்பவியல் நிறுவனம், தனது ஊழியர்கள் மூலம் பெங்களூரைச் சுற்றிலுள்ள கிராமங்களில் மருத்துவ முகாம் நடத்துதல், ஏழை மாணவர்களுக்குச் சீருடைநோட்டுப் புத்தகங்கள் வழங்குதல் என சமூக சேவையில் இறங்கியுள்ளது.

என்ன ஆயிற்று இந்தப் பெருமுதலாளிகளுக்கு? ஏன் திடீரென இவர்கள் சமூக சேவையில் இறங்கியுள்ளார்கள்? ஒருவேளை இவர்கள் அந்தக் காலத்து இங்கிலாந்து முதலாளியான ராபர்ட் ஓவன் போல தொழிலாளர்கள் மீது இரக்கம் கொண்டு கற்பனாவாத சோசலிஸ்டுகளாக மாறிவிட்டார்களா? அல்லது செய்த பாவங்களைப் போக்க புண்ணியம் தேடும் முயற்சியாக இப்படிச் சில தரும காரியங்களைச் செய்கிறார்களா?

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாகவே இப்பெரு முதலாளிகள் இப்போது உழைக்கும் மக்கள் மீது திடீர்க் கரிசனை காட்டுகிறார்கள். இதைத் தமது நிறுவனங்களின் திட்டமாக அறிவித்து செயல்படுத்தவும் தொடங்கியுள்ளார்கள். இதைத்தான் பெருந்தொழில் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு (இணிணூணீணிணூச்tஞு குணிஞிடிச்டூ கீஞுண்ணீணிணண்டிஞடிடூடிtதூ) என்று முதலாளித்துவ மூதறிஞர்களும் ஆட்சியாளர்களும் பெருமையுடன் குறிப்பிடுகின்றனர்.

ஏற்கெனவே நிலப்பிரபுக்கள் கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்துவது, மண்டகப்படி நடத்துவது அல்லது மின்சார விளக்குகள் பொருத்தி ""உபயம்'' என விளம்பரப்படுத்திக் கொள்வது என்று வள்ளல் அவதாரம் போடுகின்றனர். சில பெருமுதலாளிகள் பள்ளிகளுக்கு நன்கொடை தருவது, ரத்ததான முகாம் நடத்துவது, ஆகஸ்ட் 15 அன்று இனிப்பு வழங்குவது என்று தான தருமங்களைச் செய்கின்றனர். ஆனால், அவ்வப்போது கருப்புப் பணத்தை மறைக்க செய்யப்படும் இத்தகைய சமூகசேவைகள் இப்போது பெருமுதலாளித்துவ நிறுவனங்களின் கொள்கைத் திட்டமாகவே செயல்படுத்தப்படுவதற்கு காரணம் என்ன?

தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற பெயரில் தொடரும் மறுகாலனியாக்கச் சூறையாடலால் உலகெங்கும் பேரழிவுகளும் அதற்கெதிராக உழைக்கும் மக்களின் கலகங்களும் பெருகி வருகின்றன. மறுகாலனியாக்கச் சூறையாடலால் தீவிரமாகிவிட்ட வறுமை, வேலையின்மை, பட்டினிச்சாவுகள், சுற்றுச்சூழல் முறைகுலைவுகளால் கொதித்தெழும் மக்கள் போராட்டங்கள் வெள்ளமாகத் திரண்டெழும் முன்னே, அதற்கு வடிகால் வெட்டி சாந்தப்படுத்தி திசைதிருப்ப ஏகாதிபத்தியவாதிகள் கண்டுபிடித்துள்ள புதிய உத்திதான் இத்தகைய சமூக சேவைத் திட்டங்கள்.
பெருந்தொழில் நிறுவனங்களில் தொழிலாளர்கள் தமது உரிமைக்காகப் போராடுகிறார்கள் என்றால், அப்போராட்டத்தைத் தனிமைப்படுத்தி ஒடுக்கவும், தொழிலாளர்களுக்கு எதிராக இதர பிரிவு உழைக்கும் மக்களை ஆத்திரமூட்டவும் இத்தகைய உத்தி உள்நாட்டு வெளிநாட்டு ஏகபோக முதலாளிகளுக்குத் தேவையாக உள்ளது. உதாரணமாக, ஓசூர் டி.வி.எஸ். நிறுவனம், தொழிலளர் போராட்டத்தால் தற்காலிகமாக கதவடைப்பு செய்யப்பட்டால், அங்குள்ள தொழிலாளர் உணவகங்களும் மூடப்படும். இதனால் உணவகங்களுக்கு சப்பாத்தி தயாரித்து அனுப்பும் மகளிர் சுயஉதவிக் குழு மையமும் முடங்கி, அங்கு பணிபுரியும் கிராமப் பெண்களுக்கு வருவாய் இழப்பும் ஏற்பாடும். இதைக்காட்டி, ""உங்கள் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போடுவது தொழிலாளர்கள்தான்!'' என்று எதிர்ப்பிரச்சாரம் செய்து, போராடும் தொழிலாளர்களுக்கு எதிராக சப்பாத்தி உற்பத்தி மையத்தின் ஊழியர்களை டி.வி.எஸ். நிர்வாகம் கொம்பு சீவி விடும். இதுதவிர சுற்றுப்புற கிராமங்களில் செய்துள்ள "சமூகசேவை'யைச் சாதகமாக்கிக் கொண்டு, அப்பகுதியிலுள்ள உழைக்கும் மக்களிடம் தொழிலாளர் போராட்டத்தின் மீதான ஒடுக்குமுறைக்கு தார்மீக ஆதரவையும், அடியாள்படையையும் திரட்டிக் கொள்ளும்.

சுருக்கமாகச் சொன்னால், இப்புதிய உத்தியின் மூலம் பெருந்தொழில் நிறுவனங்கள், தொழிலாளர்களின் வர்க்கப் போராட்டத்தை ஒடுக்க முடிகிறது. இந்த ஒடுக்குமுறைக்கு இதரபிரிவு உழைக்கும் மக்களிடம் தார்மீக ஆதரவையும், எதிர்போராட்டத்தையும் கட்டியமைக்க முடிகிறது; தமது சுரண்டல் கொள்ளையையும், அடக்குமுறையையும் மூடிமறைத்து சமூக அக்கறை கொண்ட தருமதுரையாக நாடகமாட முடிகிறது. ""நம்ம முதலாளி, நல்ல முதலாளி'' என்று ஒடுக்கப்பட்டு சுரண்டப்படும் மக்களையே துதிபாட வைக்க முடிகிறது; மனிதமுகம் கொண்ட தொழில்வளர்ச்சி என்று மாய்மாலம் செய்ய முடிகிறது.

இத்தகைய "சமுதாயப் பொறுப்புணர்வு'த் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு இந்திய அரசின் கொள்கைகள் மாற்றப்பட்டுள்ளன. 11வது ஐந்தாண்டுத் திட்டம், பெருந்தொழில் நிறுவனங்களின் இத்தகைய சமூகசேவையை நாட்டின் பல்வேறு சமூக நலத் திட்டங்களில் பயன்படுத்திக் கொள்ளுமாறு பரிந்துரைக்கிறது. பெருந்தொழில் நிறுவனங்கள் தமது வருவாயில் 2% அளவுக்கான தொகையை இத்தகைய சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்களுக்கு செலவிடவும் முன் வந்துள்ளன.
டைம்ஸ் பவுண்டேசன், பிரிட்டிஷ் கவுன்சில் முதலான அந்நிய ஏகாதிபத்திய நிறுவனங்கள், இந்தியாவில் இத்திட்டத்தை வளர்த்தெடுக்கவும் விரிவுபடுத்தவும் இங்குள்ள வெளிநாட்டு உள்நாட்டு பெருந்தொழில் நிறுவனங்களுக்கு பயிற்சி வகுப்புகளையும் கருத்தரங்குகளையும் நடத்துகின்றன. இத்திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் தொழில்வர்த்தகத்துக்கும் சமூகத்துக்குமிடையிலான உறவு மேம்பட்டு, சமூக அமைதி நிலவும் என்று டைம்ஸ் பவுண்டேசன் போதிக்கிறது. இத்திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் தமது லாபத்தை உயர்த்திக் கொள்ள முடியும் என்பதால், தமது வருவாயில் 5% வரை இத்திட்டங்களுக்குச் செலவிடுமாறு பிரிட்டிஷ் கவுன்சில் உபதேசிக்கிறது.

இத்திட்டங்களை மக்களிடம் விளம்பரப்படுத்தி ஆதரவு திரட்ட ஊடகங்களையும் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் ""ஹிந்து'' பத்திரிகை குழுமத்தின் ""பிசினஸ் லைன்'' நாளேடு அண்மையில் ரிலையன்ஸ், இந்துஸ்தான் லீவர், லீ மெரிடியன் முதலான உள்நாட்டுவெளிநாட்டு ஏகபோக நிறுவனங்களுடன் இணைந்து சென்னையில் பயிற்சிப் பட்டறையை நடத்தியது. இந்தியா மட்டுமின்றி ஆசிய நாடுகள் அனைத்திலும் இத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் ஒருங்கிணைக்கவும் ""சி.எஸ்.ஆர். ஆசியா வீக்லி'' எனும் வாரப் பத்திரிகையும் தொடங்கப்பட்டுள்ளது.

சாலைகள், இருப்புப் பாதைகள், நாடாளுமன்றம், ஆங்கிலேய அடிமைச் சிந்தனைக்கேற்ற மெக்காலே கல்வி முறை என்று பிரிட்டிஷ் காலனியாதிக்கம் புதிய அணுகுமுறையுடன் நமது நாட்டையும் மக்களையும் அடிமைகளாக்கி நீண்ட காலம் அடக்கியாண்டது. காலனியாதிக்கத்தின் கீழ் ஒடுக்கப்பட்ட இந்திய நாட்டு மக்களும் பங்கேற்கும்படி உள்ளாட்சி அமைப்புகளை நிறுவி, இந்திய மக்களாலேயே ""ரிப்பன் எங்கள் அப்பன்'' என்று துதிபாட வைத்தது. அதே உத்தியோடு இப்போது மறுகாலனியாக்கம், பெருந்தொழில் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்களைத் தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது. அன்றைக்கு ஒரு ரிப்பன் என்றால், இன்றைக்கு பில்கேட்ஸ், விப்ரோ பிரேம்ஜி, மிட்டல், டாக்டர் ரெட்டி என பல நூறுபேர்.

மனித முகம் கொண்ட மறுகாலனியாக்கம் என்ற ஒரு புதிய சதி வேகமாக அரங்கேறி வருகிறது. சமூக சேவையின் பெயரால் உழைக்கும் மக்களைப் பிளவுபடுத்தி மோதவிட்டு ஆதிக்கம் செய்யத் துடிக்கும் ஏகாதிபத்திய சதியை, மறுகாலனியாக்கத்திற்கு எதிராகப் போராடி வரும் உழைக்கும் மக்கள் விழிப்புடனிருந்து முறியடிக்க வேண்டும். தொழிலாளி வர்க்கம் இதரபிரிவு உழைக்கும் மக்களுடன் ஐக்கியப்பட்டுப் போராடுவதன் மூலமே இத்தகைய ஏகாதிபத்திய சதிகளைத் தகர்த்தெறிந்து, மறுகாலனியத் தாக்குதலை முறியடிக்கவும் முடியும்.· பாலன்

Thursday, June 28, 2007

மாமா வேலை பார்க்கும் வீரமணியும்

மாமா வேலை பார்க்கும் வீரமணியும், அதற்கு எடுபிடி வேலை பார்க்கும் லும்பன்களும்

பி.இரயாகரன்
28.06.2007
சமுதாய நலன்களையும் அதற்கான போராட்டங்களையும் தம்மால் செய்து காட்ட முடியாவிட்டால், உடனடியாக எடுபிடி லும்பன் அரசியல் வள்ளென்று குலைக்கத் தொடங்குகின்றது. இப்படி மக்களையும், அவர்களின் வாழ்க்கையும், கூட்டிக்கொடுப்பவன் விபசாரத் தரகன் தானே. மக்களின் வாழ்வியலைத் திட்டமிட்டு சிதைத்துக் கொண்டுடிருக்கும் கும்பலுடன், கூடிப்படுப்பவன் மாமா தானே! இன்று கோடானு கோடி மக்களின் வாழ்வு சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

வாழ்விழந்த மக்களுக்காகப் போராடாது, அவர்களை வைத்து விபச்சாரம் செய்யும் தொழில் தரகனாகத்தானே, வீரமணி செயல்படு;கிறார். வாழ்விந்த அந்த மக்களுக்கான போராட்டத்தை மாமா வீரமணி எங்கே நடத்துகின்றார்? இவரை ஒரு மாமா என்று சொல்லாது, ஒரு புரட்சிக்காரன் என்று சொல்லும் தர்க்கத்துக்குரிய யோக்யதை அவரிடம் உண்டா! இவர் மக்களின் தோழனா! எப்படி? சொல்லுங்கள். அந்தத் தகுதி அந்த மாமாக்களுக்கு ஒரு நாளும் கிடையாது. ஒரு தோழன், புரட்சிக்காரன், மக்களின் நண்பன் என்று சொல்லும் எந்த அம்சத்தையும் இன்று வீரமணி செய்யும் மாமா வேலையில் இருந்து எடுத்துக் காட்ட யாராலும் முடியாது.

ஆகவே தான் உண்மையாக மக்களுக்காகப் போராடுபவர்களின் பிறப்பு குறித்து, மொழி குறித்து விவாதம் நடத்துகின்றனர். மக்களுக்காக செயல்பட முடியாதவர்கள் என்ன செய்கின்றனர்? பால், இனம், நிறம், சாதி, மதம்.. என்று பிறப்பு குறித்த குறுகிய மனிதம் பற்றி பேசத் தொடங்குகின்றனர்.

கடைந்தெடுத்த போக்கிரிகள் இவர்கள். இவர்கள் தான் முதல்தரமான மக்கள் எதிரிகள். மக்களுக்காக போராடுவதாக கூறிக்கொண்டு, மக்களைப் பிளந்து, அதற்குள் தமக்கு தாமே முடிசூட்டிக் கொள்வதில்தான் இவர்களின் அரசியல் அற்பத்தனமே உள்ளது. அத்துடன் இந்த அற்பத்தனத்தை அம்பலப்படுத்தும் மொழி குறித்தும், நடைமுறை குறித்தும் விவாதம் நடத்துகின்றனர்.

இந்த மாமாவுக்காக விவாதம் செய்யும் லும்பன் எடுபிடிகள் ஒருபுறம்;. மாமா வீரமணி கும்பலுக்கு பின்னால் கோடி கோடியாக பணம் புரளும் தொழில் தான், அவரின் அரசியல். மக்கள் சேவை என்பதே பணமாக புரளும் அதிசயம்; நடக்கிறது அங்கு தோழன், புரட்சிக்காரன் என்பதெல்லாம், பணம் பண்ணும் வித்தையா! கோடி கோடியாக மக்களை கொள்ளையிட்டு திரட்டிய பணம், அதைக்கொண்டு நக்கி வாழும் கும்பல் தான் இவர்கள். இவர்கள் பார்ப்பது விபசாரத் தரகு வேலையைத் தவிர வேறொன்றுமில்லை.

புரட்சி, சாதி ஒழிப்பு, மக்கள் என்று கூறிக்கொண்டு, கோடி கோடியாக பணத்தைப் பிடுங்கி, அதைக்கொண்டு வாழும் அற்ப மனிதர்கள் இவர்கள். இந்த மாமா வகையறாகளுக்கு அரசியல் என்பது, விபச்சாரம்தான். தி.மு.க மூலம் கருணாநிதி கோடி கோடியாகக் கொள்ளை அடிக்க முடிந்தது என்றால், தி.க மூலம் அதையே மாமா வீரமணி செய்துள்ளார். மாமாமவன் முதலமைச்சர் ஆகியிருந்தால், கருணநிதியை மிஞ்சும் உலக கோடிஸ்வரன ஆகியிருப்பான்.

அப்படிப்பட்ட இழிந்த அரசியல் பொறுக்கிகள் இவர்கள். இந்த அரசியல் வாதிகளின் தொழிலே மாமா வேலைதான். ஏகாதிபத்தியம் முதல் அதன் கைக்கூலி நிறுவனங்களான தன்னார்வக் குழுக்கள் வரையிலான அவர்களின் செயல்பாடுகள், மக்களின் வாழ்வை அழிக்கும் பிழைப்பாக அமைந்துள்ளது. இங்கு தியாகம் என எதுவும் கிடையாது. சொத்து முதற் கொண்டு, உயிர் தியாகம் வரை எதுவும் கிடையாது. மக்களிடம் பிடுங்குவதில் தான், இவர்களின் வாழ்வின் அடித்தளம் அமைகின்றது. பிடுங்குவதில் இருந்து எறிகின்ற சில சில்லறைகளைக் கொண்ட மனிதபிமானம், மனித நல செயற்பாடுகள் என்பதெல்லாம், பிடுங்குவதை மூடிமறைப்பதற்கும், மக்கள் தமக்கு எதிராக போராடாமல் தடுப்பதற்குமே. பணம் என்பதே மனித உழைப்பு தான். அதற்கு வெளியில் அரசியல் பொருளாதார விளக்கம் எதுவும் கிடையாது. மக்கள் உழைப்பை சுரண்டி, அதில் சில எச்சில் பருக்கைகைளை எறியும் சில்லறை செயல்பாடுகள் அவர்களது தொண்டு.

மாமா வீரமணி அந்த வகைப்பட்ட ஒரு வீரியம் மிக்க ஒட்டுண்ணி. தானும் இதைச் செய்வதுடன், எகாதிபத்திய பணத்தைப் பெற்று தனது மாமா வேலையை தொடருகின்றார். மக்கள் போராட்டம் என்பது கூட்டிக்கொடுப்பதல்ல. மக்களின் எதிரியுடன் கூடி மக்கள் தொண்டு செய்தாக காட்டி, விபச்சாரம் செய்வதல்ல. எகாதிபத்தியம் ‘தொண்டு செய்ய’ எறியும் சில்லறைகள, எந்த வழியில், எப்படி அந்த மக்களிடம் சுருட்டுகின்றது என்பதை தோலுரித்துக்காட்டி, அதை எதிர்த்து போராடுவது தான் மக்கள் போராட்டம்.

மக்களுக்காக போராடுவது என்பது எதிரியுடன் கூடி மாமா வேலை பார்ப்பதல்ல. மாமா வீரமணி கும்பலின் எதிரிகள் யார்? எந்த எதிரிக்கு எதிராக, எப்படி, எந்த வகையில் போராடுகின்றாh.

மாமா வீரமணியின் எதிரி யார் என்றால், ஒடுக்கப்பட்ட மக்கள் தான்.
ஒடுக்கப்பட்ட ஒரு பிரிவு மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் கூட, ஒரு இயக்கம் நேர்மையாக போராடமுடியும். முரண்பாட்டின் அடிப்படையில் நேர்மையாக, சமரசமின்றி போராடாத யாரையும் யாhரும் ஆதரிக்க முடியாது. இப்படி தி.க தலைவராக உள்ள மாமா வீரமணியை எந்த வகையில், எப்படி நாம் இனம் காண்பது?

இவர்கள் சந்தர்ப்பவாதிகளாக, எதிரியுடன் கூடியல்லாவா, மக்களின் தாலியை அறுக்கின்றனார். தமிழ் மணத்தில் இடதுசாரி தோழர்கள் நடத்திய விவாதம் மிகச் சரியானது.

சாதி ஒழிப்பை உள்ளடகிய இந்து மதத்தை, இந்த மாமா வீரமணி கும்பல் எப்படி ஒழிக்கப் போராடுகின்றது. தமிழுக்காக எப்படி இவர்கள் போராடுகின்றார்கள்.

மக்களைச் சார்ந்த எந்த போராட்டமும் இவர்களிடம் கிடையாது. மாமா வேலை பார்ப்பதே போராட்டம் என்றால், அதைத்தான் எல்லா களவாணி அரசியல் வாதிகளும் செய்கின்றனரே!

இதை விடுத்து பிறப்பு பற்றியும், மொழி பற்றியுமாக விவாதத்தைக் குறுக்கி திசைதிருப்பிக் காட்டுவது என்பது அவர்களின் அற்பத்தனமாகும். அதே வகை மாமாத்தனமாகும்.

மொழி சொல்லும் செய்தி, அது அரசியல் ஆழம் கொண்டது. இது தவறு என்றால் அதை அரசியல் நடைமுறை ரீதியாக மறுக்க வேண்டும். நேர்மையாக போராடுபவர்களின் பிறப்பு மற்றும் குறித்த சாதியை தேடி புழுக் கிண்டுபவர்கள் தமது சாதீய பிழைப்புவாத அரசியல் ஈனத்தனத்தையே காட்டுகின்றனர்.

எப்படிப்பட்ட அரசியல் பொறுக்கிகள் இவர்கள். அரசியல் ரீதியாக செயல்படும் கூட்டிக் கொடுப்புக்கு எதிராக எழும் நியாயமான குரல்களுக்கு பதிலளிக்க முடியாதவர்களின் புறம்போக்கு களிசடைத் தனம் இது.

சூதாடித் தோற்ற பன்னாட்டு நிறுவனங்கள்!

உலகக் கோப்பைக் கிரிக்கெட் :சூதாடித் தோற்ற பன்னாட்டு நிறுவனங்கள்!

மேற்கிந்தியத் தீவுகள், மார்ச் 23. முதலில் ஆடிய இலங்கை அணி 254 ஓட்டங்களை எடுக்க, நடுத்தரமான இந்த இலக்கை இந்திய அணி சும்மா ஊதித் தள்ளிவிடும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தால் புரட்டிப் போடப்பட்டிருந்தாலும் இந்த எதிர்பார்ப்பு இருக்கவே செய்தது.

அதன் காரணம் கடந்த ஒரு வருடமாக உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பற்றியும் அதில் இந்திய அணி வெல்லப் போவது குறித்தும் நாடு முழுக்க வெறியும் விளம்பரமும் போதையும் வகை தொகை இல்லாமல் ஏற்றப்பட்டிருந்தன. சொல்லப் போனால் இந்திய அணி ஏற்கெனவே கோப்பையை வென்றுவிட்டது போலவும், சும்மா மேற்கிந்தியத் தீவுகளுக்கு ஜாலியாகப் பயணம் செய்து கோப்பையைப் பெட்டியில் எடுத்து வரவேண்டியதுதான் பாக்கி எனுமளவுக்கு பக்தி முற்றியிருந்தது.
இந்தக் களிவெறி பக்தியில் மஞ்சள் தண்ணி தெளித்து விடப்பட்ட பலியாடுகளைப் போன்ற இரசிகர்களின் பங்கு பாதி. மீதி இந்தப் பலியாடுகளைச் சாமியாட வைத்து அவைகளிடம் தொலைக்காட்சிப் பெட்டிகளையும், கோலாக்களையும், பிஸ்கட் சாக்லெட்டுகளையும், செல்பேசிகளையும், இரு சக்கர வாகனங்களையும் விற்று இலாபமள்ள நினைத்த பன்னாட்டு நிறுவனங்கள், இவற்றுக்கான விளம்பரங்களை வெளியிட்டு ஆதாயமடைய முயன்ற ஊடக முதலாளிகள், இந்த விளம்பரங்களில் நடித்து கோடிகளில் ஊதியம் பெற்ற கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர்கள்.

முதலாளிகளின் கனவு இலாபம். இரசிகர்களின் கனவு இந்திய அணியின் வெற்றி. ஆயினும் இந்திய அணி களத்தில் வெற்றிபெற வேண்டுமென்றால் ஆடவேண்டும் என்ற உண்மையை மட்டும் யாரும் சட்டை செய்யவில்லை.
பரஸ்பரக் கனவு புஸ்வாணமானது. இலங்கையின் இலக்கை எட்ட முடியாமல் இந்திய அணி படுதோல்வியடைந்தது. ஒவ்வொரு வீரரும் அவுட்டாகித் திரும்பி வருவதைப் பார்த்துக் கொண்டிருந்த ஏனைய வீரர்கள் தங்களது முகங்களைச் சோகமாக வைத்துக் கொள்ள மிகவும் சிரமப்பட்டார்கள். விளம்பரப் படங்களில் மட்டுமல்ல, இங்கும் நடிப்பதற்கு அவசியம் இருந்தது. இந்தத் தோல்வியின் மூலம் போட்டியிலிருந்தே வெளியேற்றப்படுவதால் வரும் நாட்களில் இந்திய ரசிகர்களிடமிருந்து கிடைக்கப் போகும் அர்ச்சனை குறித்து அவர்களுக்குத் தெரியும். அதை குறைக்கும் முகமாகத்தான் வலிந்து வரவழைத்துக் கொண்ட இந்த சோகம்.
மற்றப்படி உலகக் கோப்பைத் தோல்வியெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. ஆடுவதால் வரும் வருவாயை விட நடிப்பதால் வருவதுதான் அதிகம். டெண்டுல்கரின் ஒருவருட விளம்பர ஊதியம் குறைந்த பட்சமாக 2.5 கோடி, திராவிடுக்கு 1.5 கோடி, யுவராஜ் சிங்குக்கு 1 கோடி, கங்குலி தோனிக்கு தலா 80 இலட்சம், சேவாக்குக்கு 50 இலட்சம், இன்னும் நட்சத்திரமாகாத வீரர்களுக்கு குறைந்தது 30 இலட்சம் என்று போகிறது பட்டியல்.

எனில் பத்து வருடமாக ஆடுபவர்கள் எவ்வளவு சுருட்டியிருப்பார்கள்? இந்திய அணியில் இடம்பிடித்ததை விட விளம்பர உலகில் இடம் பிடிப்பதுதான் இவர்களின் இலட்சியம். ஜட்டியைத் தவிர உடம்பு, உடை முழுக்க நிறுவன முத்திரைகளை பச்சை குத்தியிருக்கும் இந்த "விலைமாந்தர்களிடம்' தேச பக்திக் கற்பை எதிர்பார்ப்பது எங்ஙனம்?இரண்டு இந்திய ஆட்டக்காரர்களோடு முதலாளிகள் செய்து கொண்ட ஒப்பந்தப்படி அவர்கள் களத்தில் மட்டையுடன் எவ்வளவு நேரம் இருக்கிறார்களோ அந்த அளவுக்கு அவர்களின் ஊதியம் அதிகரிக்குமாம். இந்தப் பச்சையான மோசடியை விரித்துப் புரிந்து கொள்ளவேண்டும்.

அடித்து ஆடவேண்டிய கடைசி 10 ஓவர்களின்போது இவர்கள் களத்திலிருந்தால் என்ன ஆகும்? அடித்து ஆடமாட்டார்கள். கட்டை போடுவதிலேயே குறியாயிருப்பார்கள். பந்துவீச்சைக் கவனிப்பதை விட தனது மட்டையிலிருக்கும் நிறுவன முத்திரைகளை கேமராவுக்கு காண்பிப்பதிலேயே கருத்தாயிருப்பார்கள். ஆக, களத்துக்கு வெளியே மட்டுமல்ல, உள்ளேயும் வீரர்கள் விளம்பரத்துக்காக நடித்துக் கொண்டிருக்க, இரசிகர்களோ அவர்கள் கிரிக்கெட் ஆடுவதாக முட்டாள்தனமாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அடுத்த அதிர்ச்சியான செய்தி என்னவென்றால் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் அனைவரும் ஒரு ஆண்டில் விளம்பரப் படப்பிடிப்புக்கு மட்டும் 75 நாட்கள் செலவழிக்கிறார்கள். இதன்படி 365 நாட்களில் பந்தய நாட்களை விட, பந்தயத்திற்காகப் பயிற்சி பெறும் நாட்களை விட நடிக்கும் நாட்களே அதிகம் என்றாகிறது. நடிகர்கள் எப்படி கிரிக்கெட் ஆட முடியும்?

இந்த நடிகர்கள் ஓய்வு பெற்ற பின்னரும் கிரிக்கெட் வைத்துச் சம்பாதிப்பதை நிறுத்துவதில்லை. உலகக் கோப்பைக் கிரிக்கெட் குறித்து இந்திய ஆங்கிலஇந்தி செய்தித் தொலைக்காட்சிகளில் அரட்டையடிப்பதற்காக முன்னாள் ஆட்டக்காரர்களுக்கான ஊதியத்தைப் பாருங்கள், கபில்தேவுக்கு 2 கோடி, சித்துவுக்கு 1.5 கோடி, அமர்நாத்துக்கு 60 இலட்சம். இப்படி ஒவ்வொரு பந்தயத்திற்கும் தனிக்கட்டணம். அப்புறம் பத்திரிக்கைகளுக்கு எழுதுவதில், போட்டிகளில் நடுவராகப் பணியாற்றுவது, வீரர்களுக்குப் பயிற்சி கொடுப்பது என்று கிரிக்கெட் அட்சயபாத்திரம் வற்றாமல் அள்ளிக் கொடுக்கிறது.
எனவே அணிக்குத் தேர்வு செய்யப்படும் வீரர்கள் ஒரு சில போட்டிகளில் நூறு அடித்துவிட்டு 25 வயதிற்குள் நட்சத்திர வீரராகிவிட வேண்டியது. நட்சத்திரமானதும் பன்னாட்டு நிறுவனங்கள் விளம்பர நாயகர்களாக மாற்றிவிடும். அப்புறம் இவர்களின் கிரிக்கெட் வாழ்வின் பாதுகாப்பை முதலாளிகளே பார்த்துக் கொள்வார்கள். ஊடகங்களும்இந்த நாயகத்தனத்தை ஊதிப் பெருக்குவார்கள். பிறகு இவர்களின் ஆதிக்கம் அணியில் தொடரும். அணியிலும் கோடிகோடியாய்ச் சம்பாதிப்பவர்கள், அப்படிச் சம்பாதிக்க வக்கற்றவர்கள் என்று ஏற்றத்தாழ்வு வரும்.

விளையாட்டில் தேர்ச்சி பெறுவதைவிட இந்த நட்சத்திரப் பாதையில் வெற்றி பெறுவது எப்படி என்பதே வீரர்களுக்கு கனவாய் இருக்கும். முன்னணி வீரர்களை விளம்பரத் தூதர்களாக வைத்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியங்களுக்கும் புரவலர்களாக இருக்கின்றன. அதனால் வாரியங்களும் விளையாட்டில் திறமை பெற்றவர்களைக் கண்டுபிடித்துச் சேர்ப்பதற்குப் பதில் நிறுவனங்களின் நட்சத்திர வீரர்களைத் தக்கவைப்பதிலேயே கருத்தாயிருக்கின்றன. இந்திய அணியிலிருக்கும் மூத்த வீரர்கள் மாஃபியாக்கள் போல ஆதிக்கம் செய்வதாக பயிற்சியாளர் கிரேக் சாப்பலே கூறியிருக்கிறார். ஆக வர்த்தகச் சூதாடிகளின் விளையாட்டாக மாறிவிட்ட கிரிக்கெட்டில் "விளையாட்டு' எப்படி இருக்க முடியும்?

இந்திய அணியை வங்கதேசமும், இலங்கையும் தோற்கடிப்பதற்கு முன்னரே விஷ மரமாக வளர்ந்துவிட்ட வணிக ஆதிக்கம் அதனைத் தோற்கடித்து விட்டது. வெறியேற்றப்பட்ட இரசிகர்களோ உலகக் கோப்பையிலிருந்து இந்தியா வெளியேற்றப்பட்டதும், ஆற்றாமை தீர துக்கம் அனுசரித்தார்கள்.
உலகமயத்தின் பெயரால் வாழ்வு சூறையாடப்படும் போதெல்லாம் சுரணையற்றுக் கிடக்கும் தேசத்தின் மனசாட்சி, கிரிக்கெட்டின் தோல்விக்காகச் சிலிர்த்தெழுந்தது. இந்த நொறுக்குத் தீனி தேசபக்தியின் இரசிகர்கள் இந்திய அணியின் வெற்றிக்காக யாகம் வளர்த்தவர்கள், வீர்களின் படங்களை எரித்தார்கள். வீரர்களுக்குப் பூஜை செய்து ஆராதித்தவர்கள், வீரர்களின் உருவபொம்மைகளுக்குப் பாடைகட்டி ஈமச்சடங்கு செய்தார்கள். வீரர்களின் தரிசனத்திற்குத் தவம் கிடந்தவர்கள் வீரர்களின் வீடுகள் முன் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.

ஆயினும் செயற்கையாகத் தூக்கிவிடப்பட்ட இந்த கிரிக்கெட் தேசபக்தி வெறி வேறுவழியின்றி இயற்கையாக ஒரு சில நாட்களில் வடிந்துவிட்டது. இரசிகர்களும் அவரவர்கள் வேலையைப் பார்க்கப் போய்விட்டார்கள்.
இந்த உணர்ச்சி அலையின் சூத்திரதாரிகளான பன்னாட்டு நிறுவனங்களால் அப்படி இயல்பு நிலைக்குத் திரும்ப முடியவில்லை. இந்தியா குறைந்தபட்சம் சூப்பர்8 பிரிவுக்காவது தகுதி பெற்று பின் அரை இறுதிக்குச் சென்றுவிடும், இந்த நாட்களில் விளம்பரங்கள் மூலம் பொருட்களை விற்றுக் கல்லா கட்டலாம் என்று மனக்கோட்டை கட்டியவர்கள் இன்று பொறிகலங்கிக் கிடக்கிறார்கள். கிரிக்கெட்டுக்காகப் போடப்பட்ட கோடிக்கணக்கான முதலீடு அத்தனையும் வீண். இந்த ஒரு விசயத்திற்காகவே நாம் இந்தியாவின் தோல்வியை மனதாரக் கொண்டாடலாம்.

1975ஆம் ஆண்டு கிளைவ் லாயிடு தலைமையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி உலகக் கோப்பையை வென்றபோது அளிக்கப்பட்ட பரிசுத் தொகை ரூ. 4 இலட்சம். 2007இல் பரிசுத்தொகை ரூ. 10 கோடி. இந்த 200 மடங்கு வளர்ச்சி எப்படிச் சாத்தியமானது?

இத்தனைக்கும் கிரிக்கெட் விளையாடும் நாடுகளின் எண்ணிக்கை இந்த 32 ஆண்டுகளில் கூடிவிடவில்லை. இங்கிலாந்தின் காலனிய நாடுகளில் மட்டும்தான் கிரிக்கெட் பிரபலம். அதிலும் இந்தியத் துணைக்கண்டத்தைத் தவிர மற்ற நாடுகளில் கிரிக்கெட் மோகம் குறிப்பிடத்தக்க அளவில் வளரவில்லை. ஆனால் உலகமயத்தின் தயவால் இந்தியாவில் குதித்த பன்னாட்டு நிறுவனங்கள் கிரிக்கெட்டின் உதவியால் தங்களது சந்தையை விரிவுபடுத்த முடியும் என்று கண்டுகொண்டன. அதனால்தான் இந்த வளர்ச்சி.
ஐ.சி.சி. எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வருவாயில் 75% பங்கை இந்தியச் சந்தையில் கடை விரித்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்களும், தரகு முதலாளித்துவ நிறுவனங்களுமே அளிக்கின்றன. உலகில் கிரிக்கெட் உயிர்த்திருப்பதன் பொருளாதாரக் காரணமே இந்தியச் சந்தைதான். இதன் பொருள் இந்திய மக்களைச் சுரண்டுவதற்காக கிரிக்கெட் மோகம் திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது என்பதே. இந்த உலகக்கோப்பைப் போட்டிக்காக பெப்சியும், எல்.ஜி.யும் தலா 315 கோடி ரூபாயையும், ஹீரோ ஹோண்டா 180 கோடியும், ஹட்ச் நிறுவனம் 90 கோடிகளையும் ஐ.சி.சிக்கு ஸ்பான்சர் தொகையாக அளித்திருக்கின்றன. மேற்கிந்தியத் தீவுகளின் மைதானங்களை இந்த நிறுவனங்களின் பெயர்கள்தான் ஆக்கிரமித்திருந்தன.

போட்டியை ஒட்டி இந்திய ஊடகங்களில் விளம்பரங்கள் செய்வதற்கான தயாரிப்பு மற்றும் ஒளிபரப்புச் செலவு மட்டும் 1000 கோடி ரூபாய்களாகும். இது போக போட்டியை வைத்து பல நிறுவனங்களும் தத்தமது பொருட்களை சந்தைப்படுத்துவதற்காக மட்டும் 800 கோடி ரூபாய்களை முதலீடு செய்தன. உலகக் கோப்பையை அதிகாரபூர்வமாக ஒளிபரப்பும் உரிமையை சோனி நிறுவனம் 1100 கோடிகள் செலுத்திப் பெற்றிருந்தது.

ஆக, இத்தனை ஆயிரம் கோடிகளும் ஏதோ முதலாளிகள் தங்கள் சட்டைப் பையிலிருந்து தர்மகாரியம் செய்வதற்காகச் செலவழிக்கிறார்கள் என்பதல்ல. இரசிகர்கள் தொலைக்காட்சியில் பந்தயத்தைப் பார்க்கும்போது அவர்களுக்குத் தெரியாமல் திருடப்படும் பணம்தான் இது. இந்த மோடிமஸ்தான் கொள்ளைக்கு ஒரே ஒரு நிபந்தனை இரசிகர்கள் பந்தயத்தை தொடர்ந்து பார்க்க வேண்டும் என்பதே.

இந்தியாவில் 28 கோடிப் பேர் கிரிக்கெட்டை பார்ப்பார்கள் என்று கணக்கிட்டிருந்தார்கள். ஆனால் இந்திய அணி தோல்வியடைந்ததும் இந்தக் கணக்கு அதோகதியானது. முதலாளிகள் எவ்வளவு வேகத்தில் கிரிக்கெட் பரபரப்பை எழுப்பியிருந்தார்களோ அதைவிட அதிகவேகத்தில் அந்த அலை சரிந்து போனது. வாலறுந்த நரி போல நிறுவனங்கள் ஊளையிடுகின்றன.
பெப்சி ப்ளூ பில்லியன் என்ற பெயரில் இந்திய அணி வீரர்களை வைத்து ஹாலிவுட் திரைப்படம் போல எடுத்த விளம்பரப்படம், இந்திய அணி தோல்விக்குப் பிறகு நிறுத்தப்பட்டது. மேலும் இந்திய அணி தங்கக் கோப்பையை வென்று வருவதாக நம்பி தங்கநிற கோலாவையும் பெப்சி இறக்கியது. தற்போது அவற்றை கூவத்தில் ஊற்றிவிட்டார்களா, தெரியவில்லை.

இந்திய அணியின் சீருடையில் கிரிக்கெட் உபகரணங்களை விற்கத் திட்டமிட்டிருந்த நைக் நிறுவனம் தற்போது அவற்றை என்ன செய்வதென்று தெரியாமல் விழித்து வருகிறது. சாம்சங், எல்.ஜி, வீடியோகான் போன்ற நிறுவனங்கள் பழைய டி.வி.க்களை மாற்றிவிட்டு உலகக் கோப்பையை அகன்ற பிளாஸ்மா, எல்.சி.டி டி.வி.க்களில் பார்க்குமாறு விளம்பரம் செய்து இலட்சக்கணக்கில் விற்கத் திட்டமிட்டிருந்தன. சூடுபட்ட வீடியோகோனின் தலைவர் வேணுகோபால் இனிமேல் கிரிக்கெட்டில் முதலீடு செய்வதில் கவனமாயிருப்போம் என்கிறார்.

போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையைப் பெற்றிருந்த சோனி நிறுவனம் விளம்பரங்களின் மூலம் பிரம்மாண்டமாய் வசூலிக்கத் திட்டமிட்டிருந்தது. ஓவருக்கிடையில் வீரர்கள் குனிந்து நிமிர்ந்தால், அவுட்டானால், போட்டி நடப்பதற்கு முன்னும் பின்னும் என ஆயிரம் வழிகளில் விளம்பரம். 10 விநாடிகளுக்கு 2 இலட்சம், 30 விநாடிகளுக்கு 5 இலட்சம் ரூபாய் என 50% விளம்பர நேரத்தை விற்றுவிட்டு, இந்தியா சூப்பர் 8க்குத் தேர்வானதும் மீதி 50% விளம்பரங்களை 30 விநாடிகளுக்கு 8 இலட்சம் என வசூலிக்க சோனி நிறுவனம் முடிவு செய்திருந்தது.

இந்தியா தோல்வியுற்றதும் போட்ட காசைக்கூட எடுக்க முடியவில்லையே என சோனி முதலாளிகள் புலம்புகின்றனர். விளம்பரம் கொடுத்த மற்ற முதலாளிகளோ கட்டணத்தை மலிவு விலைக்குக் குறைக்குமாறு வற்புறுத்துகின்றனர். சோனி மறுத்து வருகிறது. முதலாளிகளுக்கிடையில் நடக்கும் இந்தச் சண்டையில் ஒரு உண்மை வெளிவந்து விட்டது.
சோனியின் தலைமை நிர்வாகி குனல் தாஸ்குப்தா, ""கேசினோவில் பணம் கட்டிச் சூதாடுபவர்கள் தோற்று விட்டால் பணத்தைத் திரும்பத் தருமாறு கோர முடியுமா? அது போல இந்தியா வெற்றிபெறும் என்று நம்பி விளம்பரக்கட்டணம் செலுத்தியவர்கள் தற்போது இந்தியா தோல்வியுற்றதும் தங்கள் கட்டணத்தைத் திரும்பக் கோருவது முறையல்ல'' என்று பச்சையாக குட்டை உடைத்து விட்டார். தேசபக்தி, விளையாட்டு உணர்வு என்ற பசப்பல்களையெல்லாம் ஒதுக்கி விட்டு இது ஒரு சூதாட்டம்தான் என்பதைப் பன்னாட்டு நிறுவனங்களே ஒப்புக் கொண்டு விட்டன.

இது சட்டபூர்வச் சூதாடிகளின் கதை. இந்த உலகக்கோப்பையை ஒட்டி நடைபெற்ற சட்டவிரோதச் சூதாட்டத்தில் மட்டும் 2000 கோடி ரூபாய் புழங்கியதாம். ஒருவேளை இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிப் போட்டிக்கு வந்திருந்தால் அந்த ஒரு போட்டியில் மட்டும் 1350 கோடி ரூபாய் சூதாடப்பட்டிருக்குமாம். இதில் ஒரு நூறு கோடிரூபாயை வீரர்களுக்கு வீசியெறிந்தால் அவர்கள் ஆட்டத்தைத் தூக்கி எறிந்திருக்க மாட்டார்களா என்ன?

இத்தனைக் கோடிப்பணம் சட்டவிரோதமாகப் புழங்குவதைக் கண்டு கண்ணீர் விடும் இந்தியா டுடே பத்திரிக்கை முதலாளிகள் இந்தச் சூதாட்டத்தை சட்டபூர்வமாகவே அங்கீகரித்து விடலாமே என்று கோருகிறார்கள். அங்கீகரித்தாலும் அங்கீகரிப்பார்கள்! சூதாட்டப் பிரச்சினைக்காக பாகிஸ்தான் பயிற்சியாளர் பாப் உல்மர் கொலை செய்யப்பட்டது உலகக் கோப்பைக் கிரிக்கெட்டின் யோக்கியதைக்கு எடுத்துக்காட்டு! உலகக் கோப்பை ஆட்டங்கள் முடிவதற்கு முன் குற்றவாளியே நேரில் ஆஜராகி நான்தான் கொலை செய்தேன் என்று ஒப்புக் கொண்டாலும் இந்தப் புலன் விசாரணை முடிவுக்கு வராது. உண்மை வெளிவராமலேயே போவதற்கான வாய்ப்புக்களையும் மறுப்பதற்கில்லை.

இந்தியாவைப் பொறுத்தவரை தற்போது கிரிக்கெட் காய்ச்சல் அடங்கிவிட்டது. இருப்பினும் போட்ட காசை எடுப்பதற்காக ஊடகங்கள் இன்னமும் கிரிக்கெட் குறித்த அற்ப விசயங்களை ஊதிப் பெரிதாக்குகின்றன.
தோல்விக்குப் பிறகு காப்டன் மாற்றமா, பயிற்சியாளர் மாற்றமா, அடுத்த காட்பன் டெண்டுல்கரா, வாரியத்தின் அவசரக்கூட்டம், அதில் முக்கிய முடிவுகள், டெண்டுல்கர் மீது சாப்பல் விமரிசனம், அதற்கு டெண்டுல்கர் விளக்கம் என்று தினம் ஒரு செய்தி பரபரப்பாக ஊடகங்களால் உருவாக்கப்பட்டன. எப்படியும் கிரிக்கெட் கிளர்ச்சியைத் தணியவிடக்கூடாது என்பது அவர்களது நோக்கம். தயாரிக்கப்பட்ட விளம்பரங்கள் ஒன்றுமில்லாமல் விரயமாகக்கூடாதல்லவா!

ஆயிரக்கணக்கில் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் பிரச்சினையைப் பார்ப்பதற்கு நேரமற்ற விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் கீழே விழுந்துவிட்ட கிரிக்கெட் மோகத்தை எழுப்புவதற்கு பலநாட்களைச் செலவிட்டார். இவர்தான் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எனப்படும் பி.சி.சி.ஐ.இன் தலைவர். ஊடகங்களும் இவரை எப்போதும் வேளாண்துறை அமைச்சராகக் கருதாமல் கிரிக்கெட் பிரச்சினைகளுக்காக மட்டும் இவரிடம் பேட்டி எடுக்கின்றன.

மறுபுறம் இரசிகர்களின் கோபத்தைத் தணிப்பதற்காக பி.சி.சி.ஐ. சில யோசனைகளைத் தெரிவித்தது. இதன்படி இனி ஒவ்வொரு வீரரும் இரண்டு நிறுவனங்களுக்கு மேல் விளம்பரங்களுக்காக நடிக்கக் கூடாது, பந்தயத்திற்கு முந்தைய 15 நாட்களில் விளம்பரப் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளக்கூடாது, வீரர்களை பிராந்திய முறையில் தெரிவு செய்யப்படும் முறை ரத்து செய்யப்படும். போட்டிகளில் வெல்லுவதற்கேற்ப ஊதியம் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்படும் என்று போகிறது அந்த ஆலோசனைப் பட்டியல். இவையெல்லாம் வெறும் யோசனைகள் என்பதுதான் முக்கியம்.

இந்திய அணியின் நட்சத்திர வீரர்களும், பன்னாட்டு நிறுவனங்களும் இந்த ஆலோசனைகளை உடனே கடுமையாக எதிர்த்தனர். பி.சி.சி.ஐ.யும் இவையெல்லாம் சும்மா ஒரு பேச்சுக்காகச் சொன்னது என்று தனது முன்மொழிதலிலிருந்து பின்வாங்கி விட்டது. ஏனெனில் கிரிக்கெட்டைக் கட்டுப்படுத்துவது வாரியமல்ல, பன்னாட்டு நிறுவனங்கள்தான். வாரியத்திற்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை வருமானமாகக் கொடுப்பது முதலாளிகள்தான். எனவே அவர்களைப் பகைத்துக் கொண்டு எந்த ஆலோசனைகளையும் அமல்படுத்த முடியாது. இரண்டு நிறுவனங்களுக்கு மேல் விளம்பர நடிகராக இருக்க முடியாது எனும்போது, வாரியத்திற்கு ஸ்பான்சர் தொகையை வழங்க முடியாது என்று நிறுவனங்கள் அறிவித்து விட்டால் என்ன ஆகும்?

அதேபோல பிராந்திய முறை தேர்வு ரத்து என்று பி.சி.சி.ஐ. அறிவித்தாலும் வீரர்களின் தேர்வு என்பது சுயேச்சையாக நடக்க முடியாது. விளம்பரங்களில் நடிக்கும் நட்சத்திர வீரர் ஒருவர் சரியாக ஆடவில்லை என்றாலும் அவரை வாரியம் நீக்க முடியாது என்பதே உண்மை. அவரை அணியிலிருந்து எடுப்பதற்கு அவரை விளம்பரத்திற்குப் பயன்படுத்தும் நிறுவனங்கள் சம்மதிக்காது என்பதுதான் யதார்த்தம். எனவே வீரர்களைத் தேர்வு செய்வதும், நீக்குவதும் நிறுவனங்களின் தயவைப் பொறுத்ததுதான். மற்ற நாட்டு அணிகளில் வீரர்கள் திறமையினால் இடம்பெறும் நிலை இந்தியாவில் இல்லை. இனி எப்போதும் இந்திய அணி கிரிக்கெட் விளையாட்டில் முன்னேற முடியாது என்பதற்கு இதைவிட என்ன ஆதாரம் வேண்டும்?

ஆயினும் இந்திய அணி வெற்றி பெறுவது நிறுவனங்களுக்கு அவசியம் என்பதால் அதற்கேற்ற வகையில் கிரிக்கெட் விளையாட்டையே மாற்றியமைக்கவும் அவர்கள் தயங்க மாட்டார்கள். இந்திய அணி வெற்றி பெறுவதற்கேற்ப ஆடுகளங்கள் தயாரிக்கப்படலாம். இந்திய அணி இறுதிப் போட்டிகளுக்குச் செல்லும் வகையில் பந்தய விதிகளையே வடிவமைக்கலாம். இந்திய அணியை வெற்றிபெறச் செய்ய மற்ற அணிகளைப் பணம் கொடுத்து வாங்கும் வேலையைப் பன்னாட்டு நிறுவனங்களே செய்யலாம். திறமையுள்ள ஒரு சில வெளிநாட்டு வீரர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கி அணியை வலுப்படுத்தலாம் என்று கூட இவர்கள் திட்டமிடலாம். எது வேண்டுமானாலும் நடக்கலாம்.
முன்பு போட்டிகளில் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்க சூதாட்டக்காரர்கள் முயன்றார்கள்; தற்போது அதை பன்னாட்டு நிறுவனங்களே செய்யக்கூடும். ஏனெனில், கிரிக்கெட்டினால் சூதாடிகள் பெறும் இலாபத்தை விட பன்னாட்டு நிறுவனங்கள் அடையும் இலாபம் பன்மடங்கு அதிகம்.

பன்னாட்டு நிறுவனங்களுக்கு நட்சத்திரங்கள் வேண்டும். அத்தகைய நட்சத்திர வீரர்களை உலகம் முழுவதிலிருந்தும் பொறுக்கி எடுத்து ஐரோப்பியக் கால்பந்து கிளப்புகளைப் போல கிரிக்கெட் கிளப்புகளை உருவாக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறார் ஜீ டி.வியின் முதலாளி. தேசவெறிக்கே கிரிக்கெட் ரசனை என்ற முகமூடி அணிவித்து அதனைத் தூண்டி வளர்த்த முதலாளிகள் இப்போது குழப்பத்தில் இருக்கிறார்கள்.
மூவர்ணக் கொடியை அணியாத இந்த கிளப் நட்சத்திரங்களை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா? அமெரிக்க முதலாளிகள் இங்கே தொழில் தொடங்குவதை இந்தியாவின் முன்னேற்றம் என்று மக்களை நம்ப வைக்க முடிகிறது; ஆனால், ஆஸ்திரேலிய ஆட்டக்காரரை இந்திய வீரர் என்று கொண்டாடும் மனப்பக்குவத்தை இந்திய ரசிகர்களுக்கு உருவாக்க முடியுமா? தேசிய உணர்வையே சரக்காக்கி விற்றார்கள் பன்னாட்டு முதலாளிகள்; இப்போது அந்தச் சரக்கை விற்கவும் முடியவில்லை, அழிக்கவும் முடியவில்லை.· இளநம்பி

Wednesday, June 27, 2007

சமூக மாற்றுக் கருத்தாக ஏற்றுக் கொள்ளமுடியுமா?

புலியெதிர்ப்பு அரசியலை, புலியல்லாத சமூக மாற்றுக் கருத்தாக ஏற்றுக் கொள்ளமுடியுமா?

ஏற்றுக் கொள்ளமுடியும் என்ற புலி அல்லாதோரின் அரசியல் நிலைப்பாடுகள் தான், மக்களுக்கான உண்மையான மாற்று உருவாக முடியாமைக்கான சமூக அரசியல் காரணமாகும். இந்த உண்மை புரிந்துகொள்ள முடியாதவரை, தமிழ் மக்களின் உண்மையான மாற்று என்பது கிடையவே கிடையாது. மக்களின் சமூக பொருளாதார வாழ்வுடன் தொடர்பற்ற எந்த அரசியல் வழிமுறையும், மக்களின் உண்மையான சமூக விடுதலைக்கு வழிகாட்டுவதில்லை. மாறாக மக்களுக்கான புதைகுழியைத்தான் எப்போதும் தோண்டுகின்றனர். தமிழ் மக்களின் வரலாற்று ரீதியான சமூக பொருளாதார அரசியல் சிதைவுக்கு காரணம், புலிகள் அல்லாத புலியெதிர்பு;பு அரசியல் பேசுவோர் புலிகளால் தான் என்கின்றனர். இது அரசியல் ரீதியாக உண்மையல்ல. இதற்கு எதிரான போராட்டமே அரசியல் ரீதியானது. புலிகள் இல்லையென்றால் எல்லாம் சரியாக இருந்து இருக்கும் என்று, இவர்களில் பலரும் புலம்ப முனைகின்றனர்.

உண்மையில் இந்த அரசியல் பிறழ்;சி எங்கே தொடங்குகின்றது? தனிமனிதனாக உள்ள, புலியல்லாதோரின் கையாலாகாத்தனத்தில் இருந்தே இவை தொடங்குகின்றது. இதை மூடிமறைக்கவே அதற்கு இசைவான கோட்பாடுகளை முன்தள்ளுகின்றனர். மக்களுடன் அரசியல் ரீதியாக தொடர்பறுந்த ஒரு நிலையில், புலிகளின் வன்முறை கொண்ட பாசிச கட்டமைப்பை எதிர்கொள்ள முடியாத தனிமனிதர்கள், புலிக்கு எதிரான அனைத்தையும் கண்மூடி ஆதரிக்கும்; கொள்கையை அரங்கேறுகின்றனர். இது உறைந்து போன இரத்தமும் சதையும் கொண்ட சிதைந்து போன அழுகிய பிணங்களை, அழகுபார்த்து பூச்சூட்டுவதையே செய்கின்றது. போராட முடியாத வங்குரோத்து அரசியலாக வலிந்து சீரழிந்த முடிவுக்கு வந்த நிலையில், மக்கள் தான் தமது சொந்த விடுதலைக்காக போராடவேண்டும் என்று கூறவும் அது சார்ந்த கோட்பாட்டையும் அரசியல் ரீதியாக முன்வைக்கவும் வக்கற்றுப் போய்விட்டனர். இவர்களே புலியெதிர்ப்பு அரசியல் பிரிவினராக சீரழிந்து, அன்னிய சக்திகளில் நம்பிக்கை கொண்ட செயல்பாட்டாளராகிவிட்டனர்.

அரசியல் உள்ளடக்க ரீதியாக இதையே அப்பட்டமாக புலிகள் தரப்பும் செய்கின்றனர். பேரினவாதத்தின் ஒழுக்குமுறையை காட்டி புலிகளை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்போரும், அவர்களின் மனிதவிரோத எல்லா சமூகப் புனைவுகளையும் நியாயப்படுத்துவதும் தொடர்ச்சியாக அரங்கேறுகின்றது. இவர்களுக்கு இடையில் எங்கும் அரசியல் வேறுபாடுகள் கிடையாது. சமூக இயக்கம் மீதான நம்பிக்கைகள் தகர்ந்து, தனிமனித முயற்சிகள் மீதான போற்றுதல் தூற்றுதல் என்ற சீரழிந்த அரசியல் போக்கே, புலி மற்றும் புலியல்லாதோர் தரப்பின் அரசியல் அடிப்படையாகிவிட்டது.
புலிகள் தமிழ் மக்களின் சமூக பொருளாதார சீரழிவிற்கு புலிகள் அல்லாதோரே காரணம் என்கின்றனர். இது ஒரு விசித்திரமான எதிர்நிலைக் குற்றச்சாட்டின் மூலம், தமிழ்பேசும் மக்களின் அடிப்படையான சமூக பொருளாதார உரிமைகளை பரஸ்பரம் மிகவும் திட்டவட்டமான உணர்வுடன் மறுக்கின்றனர். தமிழ் மக்களின் சமூக பொருளாதார அரசியல் கூறுகளை, தாமாகவே தோண்டிய புதைகுழிகளில் அன்றாடம் இட்டு நிரப்புகின்றனர்.
தமிழ் மக்களின் சமூகப் பொருளாதார அரசியல் உணர்வுடன் ஒன்றி நிற்காத எந்தச் செயலையும் ஆதரிக்க மறுப்பது தான், மக்களின் விடுதலைக்கான முதல் நேர்மையான அர்ப்பணிப்பாகும். இதில் புலிசார்பு, புலியெதிர்ப்பு என்ற குறுகிய வட்டத்தை எம்மைச் சுற்றி நாமேயிட்டுவிட்டு, அதற்குள் நின்றபடி பாகுபாடு எதையும் காட்டமுடியாது. மக்களுக்காக குரல் கொடுப்பதையே, எப்போதும் நேர்மையான அரசியல் கோருகின்றது. இது அரசியல் ரீதியாக, சமூக நடைமுறை ரீதியாக, கோட்பாட்டு ரீதியாக நாம் உணர்வுபூர்வமாக கொள்ளாதவரை, எமது நேர்மை மற்றும் எமது நோக்கம் சந்தேகத்துக்குரியதாகவே எப்போதும் அமைந்துவிடும்.

இதை உண்மையில் இனம் காணமுடியாத பல அப்பாவிகள். சமூகப் போக்கை புரிந்துகொள்ள முடியாதவர்களாக, சூழ்ச்சிமிக்க அரசியல் நகர்வுகளை இனம் காணமுடியாதவராகவே பலர் சமூக விழிப்பற்ற நிலையிலேயே உள்ளனர். இவர்கள் இந்த இரண்டு பிரதான அரசியல் போக்கின் பின்னால் இழுபடுகின்ற அரசியல் அனாதைகள். அதாவது சொந்தமாக இவை தான் சரியென்று சமூகத்தைச் சார்ந்து நின்ற கருத்து ரீதியாகவும், கோட்பாட்டு ரீதியாகவும் புரிந்து கொண்டு தத்தம் கருத்துகளை முன்வைக்க முடியாதவர்கள்;. பலமாக இருப்பதில் ஒன்றைப் பற்றிப்பிடித்துக் கொண்டு கருத்துரைப்பவர்களாக மாறுகின்றனர். இது புலிசார்பு, புலியெதிர்ப்பு அணிகளில் பெருமளவில் பெருமெடுப்பில் காணப்படுகின்றனர்.

சமூக ஆதிக்கம் பெற்றுள்ள இரண்டு மக்கள்; விரோத போக்குகளின் எதிர்நிலைகளில் பயணிக்கும் இவர்களை, இனம்கண்டு சரியான வழிக்கு கொண்டுவருவது வேறு. ஆனால் இந்த இரண்டு அணியையும் அரசியல் பொருளாதார ரீதியாக வழிநடத்துபவர்கள் வேறு. இவர்களுக்கு எதிரான போராட்டமின்றி, மக்களுக்கான சமூகமாற்று என எதுவும் கிடையாது. மனிதனுக்கு உண்மையான விடுதலையும் கிடையாது. இந்த பொதுவான விவாதத்தை முழுமையாக புரிந்துகொள்ள, நடந்த ஒரு குறிப்பான விவாதத்தின் முழுமையை புரிந்து கொள்வது அவசியமாகின்றது. நான் தூண்டில் பரமுவேலன் கருணாநந்தனை நோக்கி ஒரு அரசியல் விமர்சனத்தை முதலில் வைத்தேன். அதில் "தேனீ இணையம் புலியெதிர்ப்பு என்ற ஒரேயொரு அரசியல் பாதையில் இருந்து அனைத்தையும் வாந்தியெடுப்பவர்கள். புலிக்கு எதிராக அமெரிக்கா பேய்களுடனும் கூடிக்குலாவத் தயாரானவர்கள். இதை அரசியல் ரீதியாக சுயமாக புரிந்துகொள்ளுங்கள்.

குறித்த கட்டுரையின் தலைப்பு கூட ஒரு மஞ்சள் பத்திரிக்கைக்குரிய வகையில், இடப்பட்டு இருந்தது. அவர்கள் இதன் ஊடாக புலிகளை தூற்றவே விரும்பினார்களே ஒழிய, இந்த ஆணாதிக்க சமூக அமைப்பின் விளைவாக இதைப் பார்த்து அதற்கு எதிராகப் போராட முனையவில்லை. குறித்த சிறுமியின் நலன் அவர்களின் குறிக்கோளாக இருக்கவில்லை. இது அவர்களின் அரசியல் தெரிவு. குறித்த கட்டுரையை நீங்கள் போட்டதில் நாம் உடன்பட முடியாதவராக இருந்தோம். இதைவிட நீங்கள் சுயமாக ஒன்றைப் போட்டு இருக்கலாம். அது ஆரோக்கியமான, ஆணாதிக்கத்துக்கு எதிரான ஒரு அரசியல் போராட்டத்துக்கு சரியாக வழிகாட்டக் கூடியதாக இருந்து இருக்கும்.

கட்டுரைகளை தெரியும் போதும், சமூக நோக்கில் அவை எந்தளவுக்கு மக்களுடன் இணங்கி நிற்கின்றன என்பதைப் கூர்ந்துபாருங்கள். எழுந்தமானமாக எடுத்துக் கையாள்வது என்பது, சமூகத்துக்கு எதிரானவர்களைப் பலப்படுத்துவதற்கே உதவுகின்றது. இதைத்தான் நாம் புலிகளின் போராட்டத்தின் மீது எமது விமர்சனமாக உள்ளது. குறுகிய புலிசார்பு, புலியெதிர்ப்பு அரசியலுக்குள் சிக்கிக் கொள்ளாது, சமூக நோக்கில் விடையங்களை இனம் கண்டு அணுக வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள்." என தூண்டில் பரமுவேலன் கருணாநந்தனுக்கு ஒரு அரசியல் வேண்டுகோளை விடுத்திருந்தேன்.

அவர் இதை பற்றி தனது பதில் கருத்தில் "தேனீயினது அரசியலானது பற்றி நான் பொத்தாம் பொதுவாகவொரு முடிந்த முடிவை வைத்திருக்கவில்லை. அவர்களிடம் கருத்துரீதியாக உடன்பாடு இல்லாதிருப்பினும் "புலிகளின் கருத்துச் சுதந்திர மறுப்புக்" கெதிரான போரைச் செய்யும் ஒரு ஊடகமாகவும், புலிகளின் கருத்துச் சுதந்திர மறுப்புக்கான போரை உடைத்து மாற்றுக் கருத்தாளர்களை, அவர்களின் கருத்துக்களைத் தேனீயே கடந்த பல வருடமாக வெளிக்கொணரச் செய்ததுண்மை. தேனீயின் அரசியலானது ஆனந்தசங்கரியின் இருப்போடும், அவரது அரசியல் வாழ்வோடும் சம்பந்தப்பட்டதை நான் அறிவேன்.
இலண்டனில் இது குறித்தொரு கலந்துரையாடலில் இதை வலியுறுத்தியுமுள்ளேன். உங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள் யாவையும் ஏற்றுக் கொள்வேன். எனது நோக்கமானது சமூகத்தில் ஜனநாயக பூர்வமாக மக்கள் செயற்படக்கூடிய அரசியல் சூழலுருவாகவேண்டும். எதன் பொருட்டும் புலிகளின் அச்சுறுத்தல், ஊடக ஆயுத வன்முறையால் மக்களின் குரல்வளைகள் நெரிக்கப்படுவது தவிர்க்கப்படவேண்டும். இத்தகைய நிலையுருவாகும்போது பாசிசக் கட்டமைவு தகர்வதற்கானவொரு சூழலைத் தமிழ்ச் சமுதாயம் பெற்றுவி;டும். அதன் அடுத்த பாச்சலானது பன்மைத்துவப் போராட்டச் சூழலை அந்தச் சமுதாயம் பெறுவதற்கானவொரு "இடம்" உறுதிப்படும். இதுவே முதற்தேவையானது.
இந்த அடிப்படையுரிமையை மறுக்கும் புலிகள் நம்மையும் அழித்தொழிப்பதில் தமது இருப்பை நிலைநாட்டுதல் சாத்தியமுறலாம். உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?

பாரிசில் நடந்த இரு முக்கியமான கொலைகள். நம்ம சபாலிங்கத்தைச் சொல்லவில்லை. மாறகப் புலிகளின் உயர்மட்டப் பொறுப்பாளர்கள் நாதன், கஜன் கொலைகளையே கூறுகிறேன். இந்தக் கொலைகளைச் செய்த புலிப்பிரமுகர் திலகரைப் புலிகள் தளத்துக்கு வரவழைத்து தமது கண்காணிப்புக்குள் வைத்திருப்பது எதற்காக? கஜன் ஊடகவியலாளராக இருந்தபோது ஈழமுரசுப் பத்திரிகையானது ஓரளவு மாற்றுக் கருத்தாளர்களையும் உள்வாங்கி ஜனநாயக பூர்வமாகச் செயற்பட முனைந்தது. இதில் அவரோடான எனது சந்திப்பு இலண்டனில் ஜமுனா இராஜேந்திரன் மூலம் இடம்பெற்றது. அவர் புலிகளை உட்கட்சி ரீதியாக விமர்சித்த போக்கும், தமிழர்களின் நலனை மையப்படுத்திய புலி இயக்க நலனை மையப்படுத்தாத போக்கே அவரைக் கொல்லப் புலிகளுக்கு இருந்த காரணங்களில் முக்கியமானது.

இங்கே கவனிக்கத்தக்கது என்னவெனில் புலிகளின் அதிகார வர்க்கத்துக்கெதிராக எவரும் சிறுகூச்சல் போட்டாலே அவர் சமாதியாகும் நிலைதான். தமது இருப்பே, தமக்கெதிரான எண்ணமற்ற சூழலேயென்பது புலியின் ஆதிக்கத்துக்கு நன்றாகத் தெரியும்.

இதை உடைப்பதே முதல் தேவை. இதற்காக லெனின் வார்த்தையில் சொன்னால் "பூதத்தின் மாமியாரோடாவது" இணைந்து செயற்படுதுல்... மீளவும் கவனிக்கவும் பூதத்தின் மாமியாரோடுதான். மாறாகப் பூதத்தோடல்ல. இங்கே தேனியானது பூதத்தின் மாமி! பூதம் யாரென்று எல்லோரும் அறிவோம் தானே." என்கின்றார். இதுவே எமக்கு இடையில் நடந்த ஒரு குறிப்பான விவாத உள்ளடக்கம்.

மனிதத்துவம் என்பதே வற்றிப்போன தமிழ் சமூகத்தில் இருந்து, சமூகமே மீள்வது எப்படி என்று கேள்வியில் இருந்தே, இப்படியான கருத்து வருகின்றது. முன்வைக்கபட்ட இந்த அரசியல் உள்ளடக்கமே மனிதர்களை விடுவிக்காது என்பதை, பரந்துபட்ட பலருக்கும் புரிந்துகொள்ள வைப்பதே எனது பதிலாக அமைகின்றது. சமூகத்துக்கு இது எதைக் கூறமுனைகின்றது
மனித வரலாற்றை மக்களுக்கு வெளியில் படைப்பதை பற்றி வரையறையில் நின்று இது பேசுகின்றது. இதை அவரும் பலரும் தெரிந்துகொண்டு சொல்லவில்லை என்றே நம்புகின்றேன்;. ஆனால் இதை முன்வைப்பவர்கள் அப்படியல்ல. தனிப்படட ரீதியில் முதலில் இவர்கள் கூட அப்படி இருந்ததில்லை. இது பிரபாகரனுக்கும் கூட பொருந்தும். உண்மையான மக்கள் விடுதலை என்ற உணர்வுப+ர்வமான உணர்வுடன் அனைவரும் போராட வந்தவர்கள். இதுவே பின்னால் சுயநலம் கொண்ட தனது விடுதலையாக சீரழிந்தது. இதை நாம் தெளிவாக அரசியல் ரீதியாக புரிந்துகொண்டு தான், சமூகத்தின் வேறுபட்ட நபர்களின் சமூக பாத்திரங்களை வௌ;வேறாக கையாள வேண்டியுள்ளது. இனி நாம் ஏன் எதற்காக யாருக்காக போடுகின்றோம். இதை தெளிவாக நாம் புரிந்துகொள்ளாத வரை, அனைத்துமே தவறான அரசியல் விளக்கமும், அரசியல் நடைமுறையையும் இயல்பாக பெற்றுவிடும். நாம் போராடுவது எனக்காகவா அல்லது தமிழ் மக்களுக்காகவா. இரண்டும் வௌ;வேறான போராட்ட வழிகளை பற்றிப் பேசுவனவாக உடன் மாறிவிடுகின்றது.
நாம் போராடுவது மக்களுக்காகவே என்றால், எதற்காக போராடவேண்டும்.
மக்களின் இன்றைய சமூக வாழ்வில் ஏற்படும் துன்பங்களில் இருந்து, அவர்களின் துயரத்தை இல்லாது ஒழிப்பதே எமது இலட்சியமாக இருக்கமுடியும்;. இது அவர்களின் சமூக பொருளாதார அரசியல் வாழ்வுக்கு வெளியில் இருந்து கற்பனையில் இதைப் பற்றி பேசமுடியாது. அவர்களின் அன்றாட வாழ்வுடன் இணைந்த ஒரு போராட்டமாக இருக்கவேண்டும். இதை போராடும் எந்தத் தரப்பும் அடிப்படையாக கொள்ளாத வரை, ஏதோ ஒரு காரணத்தினால் அதை நாம் ஆதரிக்க முடியாது. மாறாக சரியான போராட்டத்தை எடுத்துச் சொல்வதே எமது நேர்மையான பணியாக இருக்கமுடியும்.

பொதுவாக தேனீ போன்ற அனைத்தும் தமக்காக மட்டும், தமது சொந்த நலனில் நினN;ற போராடுகின்றன. அந்த போராட்டம் இயல்பில் மக்களுக்கு எதிராகவே எப்போதும் உள்ளது. புலியெதிர்ப்பது, புலிக்கு மாற்றான கருத்தைக் கொண்டுவருவது மட்டும் மக்களுக்கானதாக மாறிவிடாது. இது எப்படி எந்தவகையில் மக்களுக்கான விடுதலைக்கானதாக அமையும். மாறாக மக்களுக்கு எதிரான மற்றொரு பிற்போக்கு மக்கள் விரோத சக்தியை தான், புலிகளின் இடத்தில் மறுபிரதியீடு செய்யும்.

மக்களுக்கான போராட்டம் என்பது மக்களின் நலனை அடிப்படையாக கொண்டது. மக்களின் சமூக பொருளாதார நலனை முதன்மைப்படுத்தி போராடுவதை முன்னிலைப்படுத்துவதாகவே அமையும். இதை தேனீ போன்றவர்கள் திட்டவட்டமாகவே முன்னெடுக்கவில்லை. இதை முன்னெடுக்காத வரை, பொதுவான மக்கள் ஜனநாயகத்தைக் கூட அவர்கள் கோரவில்லை என்பதே தெளிவான அரசியல் முடிவாகும். இப்படியான கருத்துகளைக் கூட அவர்கள் திட்டவட்டமாக பிரசுரிப்பதில்லை.

உண்மையில் தேனீ போன்றவற்றின் பின்னால் கட்டமைக்கப்பட்டுள்ள அரசியல் அடிப்படையே விசித்திரமானது. ஜனநாயகத்தை உருவாக்கினால் தான், மற்றைய கருத்துகளை விளைச்சலுக்காக விதைக்க முடியும் என்பதே, இதை நியாயப்படுத்த முன்வைக்கும் உயர்ந்தபட்ச அரசியலாக உள்ளது.

இந்தக் கருத்தை அவர்கள் உங்களுக்கும் புகட்டியுள்ளனர். அதைத் தான் நீங்கள் "எனது நோக்கமானது சமூகத்தில் ஜனநாயக பூர்வமாக மக்கள் செயற்படக்கூடிய அரசியல் சூழலுருவாக வேண்டும். எதன் பொருட்டும் புலிகளின் அச்சுறுத்தல், ஊடக ஆயுத வன்முறையால் மக்களின் குரல்வளைகள் நெரிக்கப்படுவது தவிர்கப்படவேண்டும். இத்தகைய நிலையுருவாகும் போது பாசிசக் கட்டமைவு தகர்வதற்கானவொரு சூழலைத் தமிழ்ச் சமுதாயம் பெற்றுவி;டும். அதன் அடுத்த பாச்சலானது பன்மைத்துவப் போராட்டச் சூழலை அந்தச் சமுதாயம் பெறுவதற்கானவொரு "இடம்" உறுதிப்படும். இதுவே முதற்தேவையானது." இதை நீங்கள் எந்தளவுக்கு அரசியல் ரீதியாக புரிந்து கொண்டுள்ளீர்கள் என்பத எனக்குத் தெரியாது.
ஆனால் இந்தக் கோட்பாட்டைத் தான் தேனீயும், தேனீ போன்ற பலரும் கொண்டுள்ளனர். இந்த அரசியலின் பின்னால் திரொஸ்;கிய அரசியல் வழிகாட்டல் உள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட சிலருடன் நான் விவாதித்த சந்தர்ப்பங்களில் கூட, அவர்கள் அமெரிக்கா ஏகாதிபத்தியத்தின் துணையுடன் கூட இதை சாதிக்க தயாராக இருப்பதை நான் நேரடியாக அவர்களுக்கு குற்றம் சாட்டியுள்ளேன்.

இந்தவகையில் தான் அண்மையில் நான் லண்டன் சென்ற போது ஒரு கூட்டத்தில் ரி.பி;.சி சிவலிங்கத்தை சந்தித்தபோது, 15 நிமிடங்கள் கூட அரசியல் பேசமுடியாத அளவுக்கு அவர்களின் மக்கள்விரோத வங்குரோத்து அரசியல் காணப்பட்டது. தமிழில் விவாதித்துக் கொண்டிருந்த அவருக்கு பதிலளிக்க முடியாத நிலையேற்பட்ட போது, கோபத்தின் உச்சத்தில் ஆங்கிலத்தில் திட்டிதீர்த்தார். எனக்கு சரளமாக ஆங்கிலம் தெரியாதது என்பது பற்றி அவருக்கு அக்கறை இருக்கவில்லை. இதைபோல் தான் கலைச்செல்வன் செத்தவீட்டில் நெதர்லாந்தில் இருந்து வந்த பாலசூரியைச் சந்தித்த போது, அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாத நிலையில் உச்சத்தொனியில் கத்தி தொடர்ச்சியாகவே ஆக்ரோசம் செய்தார். இவர்கள் எல்லோரும் தேனீயைப் போல் முதலில் புலியை ஒழிக்கவேண்டும் என்கின்றனர். அதற்காக எந்த அன்னிய சக்தியுடன் கூடத் தயாராக உள்ளனர். மக்கள் தான் அதைச் செய்ய வேண்டும் என்பதை அரசியலாகக் கூட முன்வைக்க முன்வராதவர்கள்.

புலிகளின் அரசியலை இலகுவாக புலிகளின் மக்கள் விரோத நடத்தைகளின் மேல் கேள்விக்கு உட்படுத்தும் இவர்கள், தமது சொந்த மக்கள் விரோத அரசியல் முன்வைக்கப்படும் போது கூத்தாடிக் கத்துகின்றனர். திட்டித் தீர்க்கின்றனர். முதுக்கு பின்னால் நடத்தும் பிரச்சாரங்கள் எனது காதுக்கு எப்போதும் வந்தடைகின்றன. புலிகள் எப்படி தாம் அல்லாத மற்றவர்கள் பற்றி பிரச்சாரம் செய்கின்றனரோ, அதே போன்றே எனக்கு எதிராக இவர்கள் நடத்துகின்றனர். இந்த கட்டுரை வெளிவந்தவுடன் அதைத்தான் அவர்கள் மீண்டும் செய்வார்கள். அண்மையில் தேனீ இலக்கியச் சந்திப்பு தொடர்பாக பிரசுரித்த கட்டுரைக்கு, பதிலளித்த கட்டுரைகளை கூட பிரசுரிக்க முடியாது என்றனர். இவர்கள் கூட முரணற்ற ஜனநாயகத்தை மறுதலிக்கும், புலியெதிர்ப்பு அணியின் கருத்தை மட்டும் குறுகிய உள்ளடகத்தில் பிரசுரிப்பவர்கள் தான். ஆயுதம் இல்லாத நிலையிலேயே இப்படி என்றால், ஆயுதம் இருந்தால் என்ன செய்வார்கள் என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது.

எனது கருத்தை புலியெதிர்ப்பு அணியினர் புலிக்கு சார்பான புலிக்கருத்து என்கின்றனர். புலிகளோ துரோகியின் கருத்து என்கின்றனர். இது நாம் எதிர்கொள்ளும் அன்றாட அரசியல் பிரச்சாரம். இந்த நிலையில் எமது சரியான நிலையை, புலி மற்றும் புலியெதிர்ப்பு அணியில் விமர்சனம் உள்ளது, ஆனால் தவிர்க்கமுடியாது ஆதரிக்கின்றோம் என்று கூறுபவர்கள் கூட சரியாக அடையாளப்படுத்துவதில்லை. எமது இணையத்தை புலியெதிர்ப்பு அணியில் தீவிரமாக இயங்கும் இணையங்கள் இணைப்பே கொடுக்கவில்லை. அது போல் புலிகளும் கொடுக்கவில்லை. இதில் ஒரு அரசியல் வேடிக்கை என்னவென்றால், தேனீ முஸ்லீம் மக்கள் பற்றிய எனது ஒரு கட்டுரையை போட்டவர்கள், அதை வேறு ஒருவரின் பெயரில் இட்டுள்ளனர். அதை நான் ஆட்சேபித்த போதும் மாற்றவுமில்லை, அதற்கு பதில் தரவுமில்லை. இவர்களிடம் ஆயுதம் இருந்தால், இதை ஆட்சேபித்த எனது கதி என்னவாக இருந்து இருக்கும்.

நாங்கள் இரண்டு தரப்பு பலமான அரசியல் போக்குக்கு வெளியில் தனித்துவமாக தனித்து நிற்கின்றோம். மக்களின் அரசியலை உயர்த்தி அதைப் பிரச்சாரம் செய்கின்றோம். மக்கள் தான் போராட வேண்டும் என்ற நடைமுறை சார்ந்த அவர்களின் அரசியலை முன்வைப்பதால், ஒரு நடைமுறை செயல்வாதியாக உள்ளோம். குறித்த மண்ணில் சந்தர்ப்ப சூழல் ஏற்படுத்திய நிலைமைகளால் நாம் வாழாவிட்டாலும், விரும்பியோ விரும்பமாலோ அந்த மக்களின் நடைமுறையுடன் இணங்கி வாழ்கின்றோம். நாம் வெறும் கோட்பாட்டுவாதிகளாக சமூகத்தில் இருந்து அன்னியமாகாமல், அந்த மக்களுடன் இரண்டறக் கலந்து நடைமுறைவாதிகளாகவும் இருக்கின்றோம். அதனால் தான் நாம் மக்களுக்காக உயிருடன் கலந்துரையாட முடிகின்றது. எமது கருத்தை இதனால் தான் எதிர்கொள்ள முடியாதவர்களாக அனைவரும் உள்ளனர். இந்த நிலையில் பொதுவாக புலியெதிர்ப்பு அணியினர் தமக்குள் பரஸ்பரம் தொடர்புடையவராக உள்ளனர். அன்னிய தலையீட்டை நேரடியாக ஆதரிக்கும் ஒரு சிலரின் கருத்தைக் கூட மற்றவர் மறுப்பதில்லை. இவை அனைத்தும் புலிக்கு எதிரான ஜனநாயகத்தை மீட்பதற்கான ஐக்கியமாக தம்மைக் காட்டிக் கொள்கின்றனர். இந்த அரசியல் எல்லைக்குள்னான அன்னிய தலையீட்டால் தான், புலிகளில் இருந்து மீட்சி பெறமுடியும் என்பது இவர்களின் அரசியல் சித்தாந்த முடிபாகும்.

இதைத்தாண்டி யாரும் இவர்களின் அரசியலை சுயமாக காட்டமுடியாது.
இந்த அன்னிய தலையீட்டுக்கான அரசியல் வழி அப்பட்டமாகவே மக்களுக்கு எதிரானது. இது புலிகளின் ஜனநாயக மீறல் என்பதை விடவும், அபத்தமான கேடுகெட்ட அரசியல் வழிமுறையாகும். உண்மையில் ஜனநாயகத்துக்கான போராட்டத்தை முதலில் நடத்த வேண்டும் என்பது கடைந்தெடுத்த அரசியல் சுத்துமாத்தாகும். இது புலிகள் தேசியவிடுதலையின் பின் ஜனநாயகம், பெண்விடுதலை, சாதி ஒழிப்பு .. என்ற கூறும் அதே அரசியலாகும்.

ஜனநாயகத்துக்கான போராட்டத்தையும், பன்மைத்துவ போராட்டத்தையும் பிரித்து பார்க்கின்ற, ஒன்றன் பின் ஒன்றான நிகழ்வாக கருதுவதில் இருந்தே இந்த அரசியல் சூழ்ச்சி முன்வைக்கப்படுகின்றது. இது புலிகளில் இருந்து திரொக்கியத்தின் நவீன கண்டுபிடிப்பு. அதாவது ஜனநாயகத்தை மீட்டால் தான், மற்றைய போராட்டங்கள் தொடங்கமுடியும் என்பது, போராடுவதையே மறுப்பதாகும். இதனால் முதலில் ஜனநாயகத்தை மீட்க, புலிகள் அல்லாத எல்லாவிதமான சக்திகளுடனும் இணங்கிப் போகும் ஐக்கியத்தின் அடிப்படையில், ஒரு அரசியல் விபச்சாரத்தை பரஸ்பரம் உள்ளடக்கமாக கொள்கின்றனர். இதைத் தாண்டி இதற்குள் வேறு அரசியல் கிடையாது. புலியெதிர்ப்பு அரசியலின் முழுமையும் இதில் காணப்படுகின்றது. அதாவது ஈராக் மக்களின் ஜனநாயகத்தை மறுத்த சாதாம்குசைனை வீழ்த்தி, அதற்கு பதிலாக கொலைக்கார அமெரிக்க கைக்கூலிக் கும்பல் ஈராக் மக்களை கொன்று குவிப்பதைத் தான் இன்று புலியெதிர்ப்பு கும்பலின் அரசியல் கோருகின்றது. அன்னிய தலையீட்டில் இந்த கூலிக் கும்பலாக இருக்க தயாரான ஒரு அரசியல் நிலையில் தான், இலங்கையில் அன்னிய தலையீடுக்கான எதார்த்தமான ஒரு சூழலில் அதை ஆதரித்து கொக்கரிக்கின்றனர். நாங்கள் இதை எதிர்த்து நிற்கின்றோம். தமிழ் மக்களின் பிரதான எதிரி சிங்கள பேரினவாத அரசும், ஏகாதிபத்தியமுமே என்கின்றோம். இது அவர்களுக்கும் எமக்கும் இடையிலான அடிப்படையிலான இணக்கம் காணப்படவே முடியாத அரசியல் வேறுபாட்டில் ஒன்று.

நான் புலிகளின் வதைமுகாமில் இருந்து தப்பிவந்த பின்னாக, பல்கலைக்கழக மாணவர்களின் நிர்ப்பந்தம் காரணமாக புலிகள் எனது உயிருக்கு பல்கலைக்கழக மேடையில் வைத்து உத்தரவாதம் வழங்கவேண்டி நிhப்பந்தம் எற்பட்டது. அப்போது நான் தீடிரென மேடையில் ஏறி பேச முற்பட்ட போது, அவர்கள் வெளியேறிச் சென்றனர். அந்த மேடைப் பேச்சே முதலாவது எனது கன்னிப் பேச்சாக இருந்தபோதும், அதில் நான் எதிரியாக புலிகளை குற்றம் சாட்டவில்லை. மாறாக அரசையும், நான் தப்பிய பின்பாக இலங்கையை ஆக்கிரமித்து இருந்த இந்திய இரணுவத்தையுமே எதிரியாக காட்டி உரையாற்றினேன். பார்க்க உரை.

http://tamilcircle.net/general/general-34.htm

இதன் பின்பாக இந்திய புலிகள் மோதல் நிகழ்ந்த பின்பாக இந்திய ஆக்கிரமிப்பாளனுக்கு எதிராக பலர் தயங்கி நிற்க, 6.6.1988 இல் முதலாவது மக்கள் போராட்டத்தை யாழ் நகர் நோக்கி தலைமை தாங்கி பல்கலைக்கழகம் ஊடாக நடத்தியிருந்தேன். இந்த போராட்டம் நடத்தப்படவேண்டும் என, பல்கலைக்கழக மேடையில் துணிச்சலாக பலர் தயங்கி பின்வாங்கிய நிலையில், அறைகூவல் விடுத்து தலைமை தாங்கினேன்;. நாங்கள் மக்களின் நலனுடன் எப்போதும் இணைந்து நிற்கமுடிந்தது. இது மட்டும்தான் மாற்று அரசியல் மட்டுமின்றி மாற்றுப் பாதையுமாகும்.

நாங்கள் போராட்டங்களை தனத்தனியாக பிரிக்கவில்லை. போராட்டங்கள் அப்படி பிரிவதில்லை. ஜனநாயகத்துக்கான போராட்டம் என்பது பன்மைத்துவத்தை உள்ளடக்கிய போராட்டம் என்றே பார்க்கின்றோம். இதை அந்த மக்கள் மட்டும் தான் செய்யமுடியும் என்று பார்க்கின்றோம்;. எந்தப் பெரிய பாசிச கட்டமைப்பாக இருந்தாலும், அந்த மக்கள் தான் தமது பன்மைத்துவ விடுதலையை உள்ளடக்கிய ஜனநாயகத்தை கோரி போராடமுடியும்;. இதுவே எமது இனப்பிரச்சனையில் சம்பந்தப்பட்ட 25க்கு மேற்பட்ட அரசியல் போராட்ட குழுக்களின் மையமான அரசியல் வழிமுறையாக இருந்தது. இதைத் தான் புலிகளும் கொண்டிருந்தனர்.

"தேசிய விடுதலை, சோசலிச சமூகப் புரட்சி ஆகிய இரு ..அடிப்படையான அரசியல் இலட்சியம்" என்கின்றனர். அதில் அவர்கள் தொடர்ந்தும் கூறுகின்றனர் "தேசிய விடுதலை எனும் பொழுது ...ஒடுக்கப்பட்ட எமது மக்களின் அரசியல் விடுதலையையும், சுதந்திர சோசலிச தமிழீழ அரச நிர்மானத்தையுமே" தமது இலட்சியம் என்கின்றனர். அதை அவர்கள் மேலும் விளக்கும் போது "சுதந்திர தமிழீழம் ஒரு மக்கள் அரசாகத் திகழும். மத சார்பற்ற, சனநாயக சோசலிச அரசாக அமையும். மக்களால் தெரிவு செய்யப்பட்டு, மக்களால் நிர்வகிக்கப்படும் ஆட்சியாக இருக்கும். சகல பிரஜைகளும் சமத்துவத்துடன், சனநாயக சுதந்திரங்களுடனும் வாழ வகைசெய்யும்.. " ஆட்சியாக அமையும் என்கின்றனர். மேலும் அவர்கள் விளக்கும் போது "சோசலிசப் புரட்சி எனும்பொழுது எமது சமூகத்தில் நிலவும் சகலவிதமான சமூக அநீதிகளும் ஒழிந்து, ஒடுக்கு முறைகளும் சுரண்டல் முறைகளும் அகன்ற, ஒரு புதிய புரட்சிகர சமதர்ம சமுதாய நிர்மாணத்தையே குறிக்கின்றோம்" என்றனர். அத்துடன் "தமழீழ சமூக வடிவமானது ஒரு முதிhச்சிகண்ட முதலாளித்துவ உற்பத்தி முறையைக் கொண்டிருக்கவில்லை.

முதலாளிவர்க்கம் தொழிலாளி வர்க்கம் என்ற பிரதான வர்க்க முரண்பாட்டின் அடிப்படையில் பொருள் உற்பத்தி முறை இயங்கவில்லை. ..வளரும் முதலாளித்துவ அம்சங்களும், பிரபுத்துவ எச்ச சொச்சங்களும், சாதிய தொழில் பிரிவு உறவுகளும் ஒன்று கலந்த ஒரு.. பொருளாதார அமைப்பானது சமூக அநீதிகள் மலிந்த ஒடுக்கு முறைகளையும் சுரண்டல் முறைகளையும் கொண்டுள்ளது. எமது சமூகத்தில் ஊடுரூவியுள்ள சகலவிதமான சமூக ஒடுக்கமுறைகளையும் ஒழித்தக்கட்டி, வர்க்க வேறுபாடற்ற சமதர்ம சமுதாயத்தை கட்டி எழுப்புவதே தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சியமாகும்" இப்படி புலிகளின் அரசியல் அறிக்கை நீண்டு செல்லுகின்றது. இப்படித் தான் அனைத்து இயக்கமும் சொன்னது. நாங்கள் இதைத் தான் கோருகின்றோம்;. இப்படி சொன்னவர்கள், இதை நடைமுறைப்படுத்தக் கோரியவர்களை தேடித்தேடிக் கொன்றனர். ஆயுதம் ஏந்தியிராத இவர்களை படுகொலை செய்து, தமது சொந்த இலட்சியங்களையே முதலில் புதைகுழிக்கு அனுப்பினர். இப்படித் தான் இந்த இலட்சியங்கள் சமூகத்தில் இருந்தே ஒழித்துக் கட்டப்பட்டது. இதை புலிகள் பெருமளவில் செய்தனர் என்றால், மற்றைய இயக்கங்களும் இதைத் தான் போட்டிபோட்டு செய்தன. இவர்களை இலங்கை இராணுவம் கொல்லவில்லை. இது ஒரு விசித்திரமான அரசியல் உண்மை. இந்த அடிப்படையில் தான் இன்று புலியெதிர்ப்பு அணியினரும் இயங்குகின்றனர். புதைகுழிக்கு மக்கள் சார்பு கோட்பாடுகளை அனுப்பிய பின் இன்று வக்கரிக்கின்றனர். மக்கள் தமக்கான விடுதலையை தாமே பெறமுடியுமே ஒழிய, மற்றவர்களால் ஒரு நாளும் அதைப் பெற்றுத் தரமுடியாது. இதை அவர்கள் மறுதலிக்கின்றனர்.

இன்று புலிகள் ஜனநாயகத்தின் விரோதிகளாக, பாசிசத்தின் கூறுகளை அடிப்படையாக கொண்டு கட்டமைத்துள்ள சர்வாதிகார முறைமை என்பது எதார்த்தத்தில் காணப்படுகின்றது. இதை அவர்கள் உருவாக்கிய முறைமையின் பின்னால் ஒரு அரசியல் உள்ளது. இந்த அரசியல் என்பது மக்களின் சில அடிப்படையான ஜனநாயக போராட்டத்துடன் பின்னிப் பிணைந்ததாக காணப்படுகின்றது. இதை புலியெதிர்ப்பு அணியினர் மறுதலிக்கின்றனர். மக்களின் போராட்டத்தின் அரசியல் உள்ளடகத்தை புலிகள் எப்படி தமது சொந்த நலனுக்கு இசைவாக பயன்படுத்தி, இன்றைய நிலையை தமக்கு சார்பாக கட்டமைத்துள்ளனர். இதை சரியான சக்திகள் அரசியல் ரீதியாக புரிந்து பயன்படுத்த முனையாத வரை, புலிகளுக்கு மாற்றாக மக்களின் அதிகாரம் என்பது சாத்தியமற்றது.

மக்கள் மட்டும் தான் தமக்கு தேவையான மாற்று அரசியல் வழியை தேர்ந்தெடுக்க முடியும். இதை நாம் நிராகரித்தால், மக்களின் அடிப்படையான நியாயமான அரசியல் போராட்டத்தை மறுப்பவர்களாகிவிடுவோம். அப்படி மறுத்த அரசியல் வழிமுறைகள் எப்படி தலைகுத்துகரணமாக நின்று ஆடினாலும், அது மக்களுக்கான ஜனநாயகத்தை பெற்றுத்தராது. புலிகள் பூதம் என்றால், அதைவிட மிகப் பெரிய பூதம் அன்னியன் கைக்கூலி வழிகளில் வந்து புகுந்துகொள்ளும்;. மக்கள் தான் தமது சொந்த ஜனநாயகத்தை தேர்ந்தெடுக்கவும், அதற்கான அரசியல் போராடத்தையும் முன்னெடுக்க முடியும். இதற்கு வெளியில் நாம் தனித்துவமாக செயல்படமுடியாது. இது ஒரு அரசியல் வழிமுறை. இதையே நாங்கள் கோருகின்றோம். எமது கருத்துகள் எப்போதும்; இந்த எல்லையில் நின்று, மக்களின் சரியான போராட்டத்தை உயர்த்தி நிற்கின்றது. இதை எப்படி புலிகள் தவறான தமது சொந்த நலனில் நின்று சிதைக்கின்றனர் என்று அடிப்படையில் புலிகளை விமர்சிக்கின்றோம். இதை அடிப்படையில் புலியெதிர்ப்பு அணியினரையும் விமர்சிக்கின்றோம். இதனால் தான் எமக்கு பதிலளிக்க ஒருவராலும் முடிவதில்லை. மக்களின் நலன் தான், அனைத்து செயலையும் விட முதன்மையானது. மக்களின் உயிருள்ள நலன்களுடன் பின்னிப்பிணைந்து நிற்கும் வரை, எமது சரியான கருத்தை யாராலும் மறுதலிக்கமுடியாது. இது ஒரு அரசியல் உண்மை. இந்த போராட்டத்தில் உறுதியாக நிற்பதன் மூலம், கருத்தியல் ரீதியாக வெற்றி பெற்று வருகின்றோம். கருத்தியல் ரீதியான வெற்றி என்பது, அவர்கள் எமது கருத்தின் பின்னால் அணிதிரண்டுள்ளனர் என்பதல்ல. மாறாக கருத்தின் நியாயத் தன்மையை ஏற்றுக்கொள்ளும் பொது சூழல் உருவாகியுள்ளது.

மறுதளத்தில் நடைமுறை ரீதியாக வெற்றி பெறமுடியாமல் உள்ளோம்;. அதாவது கருத்தியல் ரீதியாக எமது சரியான நிலையை அங்கீகரிக்க நிர்பந்தித்தவர்கள் கூட, அதை அவர்கள் ஒரு சமூகக் கோட்பாடாக தேர்ந்தெடுக்கவில்லை. பல்வேறு கதம்ப கொள்கைகளையே கொண்டுள்ளனர். இது ஒரு சிக்கலான மற்றொரு தனி விவாதம்.

தேனீ பற்றி குறிப்பில் ".. "புலிகளின் கருத்துச் சுதந்திர மறுப்புக" கெதிரான போரைச் செய்யும் ஒரு ஊடகமாகவும், புலிகளின் கருத்துச் சுதந்திர மறுப்புக்கான போரை உடைத்து மாற்றுக் கருத்தாளர்களை, அவர்களின் கருத்துக்களைத் தேனீயே கடந்த பல வருடமாக வெளிக்கொணரச் செய்ததுண்மை." என்ற வாதம் மிகவும் தவறானது.

முந்தைய தேனீ சஞ்சிகையும், இலக்கியச் சந்திப்பும், பின்னால் இணையமும் முன்வைத்த கருத்துகள் தான், இன்றைய மாற்றுக் கருத்து தளத்தை உருவாக்கியது என்ற அரசியல் முடிவே தவறானவை. இலக்கியச் சந்திப்புக்கு எதிரான எனது தொடர்ச்சியான போராட்டம், எப்போதும் அது மறுத்து வந்த கருத்துச் சுதந்திரத்தின் மறுப்புக்கு எதிரானதாகவே இருந்தது. சில பிரமுகர்களைச் சார்ந்தும், சில அதிகார உதிரிகளைச் சார்ந்தும், இலக்கியச் சந்திப்பு சந்தர்ப்பத்துக்கும் நிலைமைக்கும் ஏற்ப துதிபாடியே செயல்பட்டது.
இலக்கியச் சந்திப்பு தமிழ்பேசும் மக்களின் நியாயமான போராட்டக் கோரிக்கைகளை எதையும் அரசியல் ரீதியாக முன்வைக்கவில்லை.

இலக்கியச் சந்திப்பை உருவாக்கியவர்களே, அதன் போக்கில் அதிருப்தியுற்று விலகிச் சென்றனர். அரசியல் ரீதியாக துதிபாடி, சில உதிரி அதிகாரம் வார்க்கத்தின் சதிகள் உள்ளடங்கிய ஆளுமையில், பிரமுகர்களின் தயவில் சீரழிந்த அந்த புதைகுழியில் அது இன்று புதைந்து போனது. இங்கு மாற்று அரசியல் என்ற பெயரில் பெண்கைளைக் கூட பாலியல் ரீதியாக பயன்படுத்தினர். தற்போது யாழ் விரிவரையாளர் எதை தனது அதிகாரம் மற்றும் பணம் போன்றவற்றைக் கொண்டு செய்தாரோ, அதையே தமது குறுகிய அரசியல் மேலாண்மையைக் கொண்டு பெண்களை கூட சித்தாந்த ரீதியாக வசப்படுத்தி தமது ஆணாதிக்க பாலியல் தேவைக்கு கூட பயன்படுத்தினர். ஆனால் இதைப்பற்றி இந்த அரசியல் கனவான்கள் வாய்திறப்பதில்லை. இதில் தேனீ போன்றவர்கள் கூட விதிவிலக்கல்ல.

உண்மையில் புலிகள் தமிழ் மக்களின் வாழ்வின் உயிர்துடிப்புள்ள அனைத்து சமூகக் கூறுகளையும் அழித்தது போன்றே, இவர்களும் அதையே வௌ;வேறு துறையில் செய்தனர். இரண்டு பகுதியும் எதிர்எதிர் அணியில் இருந்து செய்ததெல்லாம் ஒன்றே. தமிழ் மக்களின் அரசியல் பொருளாதார நலனுக்கு எதிராக, கோட்பாட்டு தளத்தில், நடைமுறை தளத்தில் இயங்கியதே.

இதன் பின் தேனீ திடீரென காணமல் போய் இருந்தது. பின்னால் இணையமாக வருகின்றனர். இணைத்தின் வருகையும், அதன் விரிவான வீச்சான பயன்பாடும் மிக குறுகிய காலத்துக்கு உட்பட்டதே. இங்கு கருத்துகளை முன்வைக்கும் இலகுவான தொழில் நுட்பத்தை பயன்படுத்திய ஒரு அறிவியல் தளம், பரந்த தளத்தில் இட்டுச் சென்றது. இதை தேனீ போன்றவர்கள் எடுத்துக் கொண்டது என்பதால், தமிழ்மக்கள் மத்தியில் மாற்றுக் கருத்துத் தளத்தை வெற்றிபெறச் செய்ததாக கூறுவதே அரசியல் அபத்தம். இங்கு இரண்டு கேள்வி இதில் இதற்கு பதிலளிக்கும்.

1.அவர்கள் முன்வைத்த மாற்றுக் கருத்து என்ன?

2.தேனீ போன்றவர்கள் மாற்றுக் கருத்து தளத்தை உருவாக்கியது என்பது. அதாவது இதை மாற்று அரசியலாக பார்ப்பது.

மாற்றுக் கருத்துத் தளத்தை தேனீ போன்றவர்கள் உருவாக்கியது என்றால், அந்த மாற்றுக் கருத்துகள் தான் என்ன? அந்த அரசியல் தான் என்ன? அதன் நோக்கம் தான் என்ன? இதை அடைய முன்வைக்கும் வழிமுறைகள் தான் என்ன?

இவ் இணையம் சிறுசஞ்சிகையில் எழுதிய சிலரின் கட்டுரைகளைப் போட்டது. அதுவே அரசியல் கதம்பமானதாக இருந்தது. அரசியல் கட்டுரைகள் பெரும்பாலனவை மக்களின் சமூக பொருளாதார நலனுடன் தொடர்பற்றதாக, புலிக்கு எதிரானதாக மட்டும் தேர்ந்தெடுத்தாக இருந்தது. உண்மையில் இதன் மூலம் மக்கள் சார்ந்த கருத்துச் சுதந்திரத்தை மறுத்து வந்தனர். அவர்கள் செய்ததெல்லாம்
1.புலிகளுக்கு எதிரான கட்டுரைகளை தேர்ந்தெடுத்து வெளியிட்டது.

2.புலிகளின் உரிமைகோரா செய்திகளை வெளிக் கொண்டு வந்தது.

3.புலிகள் பற்றி ஆதாரமற்ற தூற்றுதல்களை உள்ளடங்கிய செய்தி மற்றும் கட்டுரைகளை முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டது. மஞ்சள் பத்திரிகைகள் போன்று தலைப்பிட்டு செயல்படுகின்றது.

4.புலிக்கு எதிரான சர்வதேச அறிக்கைகளையும், செய்திகளையும் தேடியெடுத்த வெளியிட்டது.

தேனீ போன்றவர்கள் எதைச் செய்யவில்லை என்றால், மக்கள் நலன் சார்ந்த கருத்துகளை தேடி எடுத்து போடுவதை திட்டவட்டமாக மறுத்துவந்தது. இது ஒரு ஆச்சரியமான சூக்குமான அரசியல் உண்மை. இதுவே தேனீ போன்றவர்களின் அரசியல் இலக்காக இருந்தது. இதைத்தான் தேனீ இணையத்தளம் செய்கின்றது. இதையே இன்று பலரும் செய்கின்றனர். இதை நீங்கள் நுட்பமாக பார்த்தால் புளாட் இணையத்தளம், ஈ.பி.டி.பி இணையத்தளம், மற்றும் அவர்களின் பத்திரிகையான தினமுரசு எதைச் செய்கின்றதோ, அதை அப்படியே செய்கின்றனர். சில வேறுபாடு மட்டும் உண்டு.

ஈ.பி.டி.பி அப்பட்டமாகவே அரசு மற்றும் ஏகாதிபத்தியத்துடன் கூடிக்குலாவியபடி இதைச் செய்கின்றது. தேனீ இதை சூக்குமமாக ஒளித்துவைத்தபடி கோட்பாட்டளவிலும்;, நடைமுறையிலும் செய்கின்றனர். அடுத்து ஆதாரமற்ற செய்திகளை வெளியிடும் அளவு தேனீயை விட ஈ.பி.டி.பி இணையத்தில் குறைவு. தேனீ ஆதாரமற்ற செய்திகளை, அவதூற்றையும் கூட அரசியலாக மஞ்சள் பத்திரிகையின் போக்கில் முன்வைக்கின்றனர்.

புலிகள் பற்றி செய்திகளைத் தாண்டி, அதன் உண்மைத் தன்மை மற்றும் பொய் தன்மைகள் என்ற இரு தளத்தில் இயங்குகின்றனர். இது எந்த விதத்திலும் மாற்றுக் கருத்துகள் அல்ல. மாற்று என்பது திட்டவட்டமாக வேறு. மக்களின் சமூக பொருளாதார வாழ்வுடன் தொடர்பற்ற அனைத்தும் மாற்று அல்ல. இவை புலிகளின் கருத்தை ஒத்த மற்றொன்றேயாகும்.
இந்த இணையத் தளங்களின் செயல்பாடுதான் மாற்று அரசியலாக காண்பது. பல புலிகள் அல்லாத தளங்களை இதற்குள் வரையறுப்பது. எப்படி சில பத்து இயக்கங்கள் தோன்றியதோ, அதைப் போல் சில பத்து சிறு சஞ்சிகைகள் கூட எமது சமூகத்தில் காணப்பட்டது. இவை எவையும் புலிகளுடன் உடன்பட்டவையல்ல. இணையத்தளம் உலகளாவிய ஒரு ஊடகமாக மாறிய போது, அதிலும் இது காணப்படுவது இயல்பாகவே எழுந்தது. இதன் ஒரு அங்கம் தான் இன்றைய இணையங்கள்;. இந்த தொழில் நுட்பம் கருத்துகளை பரந்த தளத்துக்கு எடுத்துச்சென்றது. கண்ணுக்கு தெரியாத பார்வையாளனின் எல்லையை விரிவாக்கியது. இனம் தெரியாத நபர்கள் இதை நடத்தும் வாய்ப்பையும் வழங்கியது. இதனால் இது பெருகியது.

ஆனால் தமிழ் சமூகத்தின் மாற்றுக் கருத்துத்தளம், முந்தைய வரலாற்றுடன் ஒப்பிடும் போது வீழ்ச்சி கண்டுள்ளது. சமூக அக்கறையுள்ள வெளிப்படுத்தல், இணையத்தில் மிக மோசமாகவே அரசியல் ரீதியாகவே தரம் தாழ்ந்துபோனது. முன்பு பல விமர்சனங்கள் இருந்தபோது, சஞ்சிகைகள் சமூகத்தைப் பற்றி கொண்டிருந்த கருத்துகள் படிப்படியாக சீரழிந்து வந்தன. இது இணையத்தில் முற்றாக சிதைந்து, சமூகநலன் அல்லாத கருத்துகளை முன்தள்ளி வருகின்றது. இதில் புலி அல்லாதோரின் தளங்கள், புலியெதிர்ப்பு கருத்துகளாக மட்டும் சிராழிந்து, இறுதியாக அதன் கோட்பாடு மிக மோசமானதாக சீராழிந்து, அன்னியனை வரவலைக்கும் அரசியலாக வெளிவருகின்றது.

உலகளாவில் இணையம் ஒரு ஊடாகமாக வளர்ச்சியுற்ற காலத்தில் தான், அமைதி சமாதானம் என்ற ஒரு அரசியல் நாடகம் அரங்கேறுகின்றது. யுத்தமற்ற இந்தச் சூழல் புலியெதிhப்பு இணையத்தின் உள்ளடக்கத்தை மெருகூட்டியது. யுத்தம் நடந்தால் இன்றைய பல செய்திகள் செய்தியாகவே வெளிவரமுடியாத வகையில் அவை யுத்த உள்ளடக்கமாகிவிடும்;.
சூழலும், சந்தர்ப்பங்களும், காலத்தின் போக்கும் புலியெதிர்ப்பு இணையத்தை வளப்படுத்தின. இதில் கண்ணுக்கு தெரியாத இணையமும், எழுத்தாளர்களும் உள்ளவரை, புலிக்கு எதிரான செய்திகள் வலுப்பெற்றன அவ்வளவே. இந்த நிலையில் புலிக்கு எதிரான மாற்றுக் கருத்துத் தளத்தையும், மாற்று செய்தியை புலியெதிர்ப்பு இணையத்தளங்கள் தந்துவிடவில்லை. இது சிறப்பாக செய்திக்கும் பொருந்தும்;. செய்தி என்பது வெறும் செய்தியாக மட்டும் இருந்தால் அது ஒருவகை. இது குறித்த சூழலின் ஒரு எதிர்வினையாக தொகுத்தபோது, வெளிப்படுத்திய அரசியல் கூட மக்களின் மாற்றுச் செய்தியாக அமையவில்லை. புலிகளைப் போன்று மாற்று ஊதுகுழலாக, மக்களை முட்டாளாக்கும் மலட்டுச் செய்திகளை திடட்மிட்டே உற்பத்தி செய்தனர்.

தேனீ போன்ற இணையங்கள் முதல் புலியெதிர்ப்பு தளங்களிடம் ஒரு அடிப்படையான கேள்வி ஒன்றை எழுப்பின் அவர்கள் சொந்தமாகவே நிர்வாணமாகிவிடுவர். புலியின் இன்றைய நிலைக்கு மாற்றாக, எப்படி ஒரு மாற்று சக்தியை உருவாக்கப் போகின்றீhகள் என்று கேட்டால், அனைத்தும் சந்திக்கு வந்துவிடுகின்றது. மக்கள் மட்டும்தான் மாற்று சக்தியை உருவாக்கும் வரலாற்றைக் கொண்டவர்கள். மக்களின் நியாயமான ஜனநாயகக் கோரிக்கையை ஏற்க இவர்கள் மறுக்கின்றனர். அவர்கள் தமது குருட்டுக் கண்ணால் இதை புலிக் கோரிக்கை என்கின்றனர். மக்களின் ஜனநாயகக் கோரிக்கையை, புலிக் கோரிக்கையாக முத்திரை குத்தி தூற்றுகின்றனர். அல்லது இதை புலிகளை அழித்த பின் தாம் பெற்றுத்தரும் ஜனநாயகத்தில் பெற வேண்டியவை என்கின்றனர். புலிக்கு மாற்றை அவர்கள் மக்கள் அல்லாத அன்னிய சக்திகளிடம் கோருகின்றனர். இதை நேரடியாகவும், மறைமுகமாவும் சூக்குமாகவும் முன்வைக்கின்றனர். இதை முன்வைக்கும் பலரிடையே ஒரு விமர்சனமற்ற ஒரு வழிப்பாதை கொண்டே நகர்கின்றனர். அன்னிய சக்திகளை நம்பும் புலியெதிர்ப்பு அரசியல், எப்படி மக்களுக்கான மாற்றாக இருக்கமுடியும்.

புலிகளின் அடாவடித்தனங்கள், மற்றும் மக்களுக்கு எதிரான கணிசமான சம்பவங்களை புலியெதிர்ப்பு இணையத் தளங்கள் கொண்டு வருகின்றன என்பதால் நாம் அவற்றைப் போற்ற முடியாது. இவை உள்நோக்குடன் மட்டும் வெளியிடுகின்றன. இதில் மக்கள் நலன் எப்படி வெளிப்படும். இதைக் கொண்டு இதை மக்கள் நலன் சார்ந்தாக கூறுவது மக்களை மந்தைகளாக, மற்றறொரு மக்கள் விரோத சக்தியின் பின் வழிகாட்டுவதே நிகழும். புலிகள் பற்றி பலவேறு சம்பவங்களை செஞ்சிலுவைச் சங்கம் முதல் சில பத்து சர்வதேச அமைப்புகள் வரை வெளியிடுகின்றன. இதைப் போன்று இலங்கை அரசு கூடத் தான் கொண்டு வருகின்றன. புலிகளைப் பற்றிய செய்திகளை கொண்டுவருவதால், இவற்றை நாம் அரசியல் ரீதியாக ஆதரிக்க முடியாது. இவர்களின்; தகவல்களை நாம் உண்மை மற்றும் பொய்மைக்குள் பகுத்தாராய்ந்து எடுப்பது வேறு. அரசியல் ரீதியாக போற்றுவது வேறு.
அமெரிக்கா சி.ஐ.ஏ கூட புலிக்கு எதிரான வகையில் அம்பலப்படுத்துகின்றது.
ஐரோப்பியய+னியன் கூட இதைச் செய்கின்றது. இந்திய பிராந்திய விஸ்தரிப்புவாதிகள் கூட இதைச் செய்கின்றது. இதைத் தான் தேனீ போன்ற புலியெதிர்ப்பு இணையங்களும் செய்கின்றன. ஏகாதிபத்தியம் முதல் இலங்கை அரசுவரை புலி பற்றி வெளியீடும் அறிக்கைளை, செய்திகளை முதன்மை கொடுத்து புலியெதிர்ப்பு இணையங்கள் பிரசுரிக்கின்றன. அவர்கள் புதிய பூதமாக மாறுகின்றனர் என்பதை மூடிமறைக்கின்றனர்.

இந்த உள்ளடக்கத்துக்குள் இவர்களுக்கு இடையில் வேறுபாடு இல்லை. அதை அவர்களும் மறுப்பதில்லை. அதையே அவர்கள் மாற்று சக்தியாக நம்புகின்றனர். இதைத் தான் மக்களுக்கு மாற்றுப் பாதையாக காட்டமுனைகின்றனர். மக்களுக்காக நேர்மையாக குரல் கொடுக்கும் யாரும் இதை அங்கீகரிக்கமுடியாது.

பூதத்தின் மாமி உடன் உறவு கொள்வதை லெனின் கூறியதாக கூறினீர்கள். இது எந்தச் சந்தர்ப்பத்தில், யாரைப் ப+தமாகவும், யாரை மாமியாகவும் கொண்டார் என்பது வரலாற்று சம்பவத்துடன் தான் சரியாக பார்க்கமுடியும்;. இதுபற்றி எனக்கு குறிப்பாக தெரியாது என்பதால், துல்லியமாக இதைப்பற்றி எடுத்து பேசமுடியாதுள்ளளேன்.

ஆனால் அவர் நீங்கள் ஒப்பிட்டதுடன் நிச்சயமாக ஒப்பீட்டு இருக்கவே மாட்டார். ஏகாதிபத்தியங்கள் சோவியத்தை முதலாம் உலக யுத்தமுடிவில் கூட்டாக சில பத்து நாடுகள் ஆக்கிரமித்த போது, ஜெர்மனியுடன் அவர் கூடவில்லை. பல இழப்புடன் ஒரு வெற்றிகரமான சமாதானம் தான் செய்தார். நாங்கள் முதலில் மக்களுடன் கூடி நிற்காதவரை, எமது மாமியாருடன் கூட்டு என்பது அர்த்தமற்றது. லெனின் மக்களுடன் நின்று பேசினார். நாங்கள் அப்படியா இல்லையே. நீங்கள் கூறும் மாமியார் ஏகாதிபத்திய தலையீட்டு கோட்பாட்டில் தாலாட்டு பெற்றுவரும் மற்றொரு மாபெரும் பூதமாகும். இது வரலாற்றால் சரியாகவே உறுதி செய்யப்படும்.
11.09.2005

கிரிமினல்மயமானது தி.மு.க. வாரிசு அரசியல்

கிரிமினல்மயமானது தி.மு.க. வாரிசு அரசியல்

கருணாநிதியின் சாணக்கிய அரசியல், பரமபத விளையாட்டில் நடப்பதைப் போல வெற்றியின் இறுதிப் படிக்கட்டில் தடுக்கி விழுந்து, சரிந்துவிட்டது. கூட்டணிக் கட்சிகளைச் சரிக்கட்டி, தனது அரசியல் எதிரியான ஜெயலலிதாவை வீழ்த்தி, இரத்தத்தின் இரத்தமான தனது மகன் மு.க.ஸ்டாலினைத் தமிழக முதல்வராக முடிசூட்டுவதற்கான எல்லாத் தடைகளையும் நீக்கிவிட்டதாகப் பெருமூச்சுவிட்டு, தன் சட்டமன்ற வாழ்வுக்குப் பொன்விழாக் கொண்டாடும் வேளையில் அரசியலில் அவர் வளர்த்தகடாவே மார்பில் முட்டிவிட்டது. கருணாநிதி தனது எழுபதாண்டு அரசியல் வாழ்வில் நடிக்காத ஒரு சில தருணங்களில் ஒன்று அவரது மருமகனும் அரசியல் சகுனியுமான முரசொலி மாறன் இறந்தபோது இடிந்து போய் கதறி அழுததாகும். முரசொலி மாறனின் இழப்புக்கு ஈடுகட்டுவதற்காக தனக்கு நெருக்கமான, விசுவாசமான, ஆங்கிலம்இந்திப் புலமையுள்ள, உலகமயமாக்கச் சூழலுக்கேற்ற கல்வியும் பயிற்சியும் பெற்ற அரசியல்தொழில் தரகனாக தயாநிதி மாறனைத் தெரிவு செய்தார் கருணாநிதி.

கருணாநிதியின் பிரதிநிதி என்ற முறையில் பிரதமர் மன்மோகன், காங்கிரசுத் தலைவர் சோனியா முதல் பில்கேட்சு போன்ற பன்னாட்டுத் தொழில் கழகத் தலைவர் வரை பேரங்கள் நடத்தும் அதிகாரத்தைப் பெற்றார், தயாநிதி மாறன். செய்தி ஊடகத்தில் மாறன் சகோதரர்களுக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி வெற்றிகரமான, திறமையான மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் என்ற கருத்தை உருவாக்கினார். உலக வங்கி, ஐ.எம்.எஃப் மற்றும் பன்னாட்டுத் தொழில் கழகங்களின் வரைவுத் திட்டப்படி நீட்டிய கோப்பில் கையொப்பமிடுவதோடு, தனது குடும்பத் தொழில் குழுமத்துக்குச் சாதகமாக ஒப்பந்தங்கள் போடுவதும் சாதனையாகச் சித்தரிக்கப்பட்டன. இருபது தொலைகாட்சி அலைவரிசைகள், ஏழு பண்பலை வானொலி அலைவரிசைகள், மூன்று நாளிதழ்கள், மூன்று பருவ இதழ்கள் ஆகியவற்றோடு தென்னக செய்தி ஊடகத் துறையில் ஏகபோக நிலையை அடைந்த மாறன் சகோதரர்கள், தகவல் தொழில் நுட்ப சாதன உற்பத்தி மற்றும் விமான சேவை என்று தமது தொழிலை விரிவுபடுத்தி, மிகக் குறுகிய காலத்திலேயே நாட்டிலேயே 13வது பணக்கார நிறுவனமாக சன் குழுமம் வளர்ச்சியுற்றது. மேலிருந்து கட்சிக்குள்ளும் அரசியலிலும் திணிக்கப்பட்டதால் தயார் நிலையில் கிடைத்த ஆதிக்கத்தை உண்மையான செல்வாக்கென்று அவர்கள் நம்பிவிட்டனர். தயாநிதி மாறனின் அரசியல் ரீதியிலான திடீர் வளர்ச்சியும், கலாநிதி மாறனின் தொழில் ரீதியிலான அசுர வளர்ச்சியும் மாறன் சகோதரர்களிடையே அதிகார ஆசைகளைக் கிளப்பி விட்டன.முரசொலி மாறனைப் போல கருணாநிதியின் நிழலிலேயே, அவரது குடும்பத்துக்கு விசுவாசமாகவே எப்போதும் இருப்பதற்கு அவரது பிள்ளைகளான மாறன் சகோதரர்கள் விரும்பவில்லை. தி.மு.க.வின் தலைமையையும், மாநில அதிகார மையத்தையும் இலக்கு வைத்து மாறன் சகோதரர்கள் காய்களை நகர்த்தினர். இதுதான் தி.மு.கழகத்துக்குள்ளேயும், கருணாநிதிமாறன் குடும்பத்திற்கிடையேயும் புகைச்சல், மோதல், வாரிசுச் சண்டை என்று பல மாதங்கள் நீறுபூத்த நெருப்பாக நீடித்திருந்ததற்குக் காரணம். உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தபோதும் மு.க. ஸ்டாலினைத் துணை முதல்வராக்கியும், அரசு செலவில் சென்னை சங்கமம் நடத்தியதைச் சாதனையாகக் காட்டிக் கனிமொழிக்கு எம்.பி. பதவியளித்து அரசியலில் நுழைப்பதையும் கருணாநிதி திட்டமிடுவதை அறிந்த மாறன் சகோதரர்கள், அம்முயற்சிகளைச் சீர்குலைக்கும் வேலையில் விரைந்தனர். உள்ளாட்சித் துறை அமைச்சராக உள்ள ஸ்டாலினின் நிர்வாகத் திறமையை மறைமுகமாக விமர்சனம் செய்து வருவதோடு, தாத்தாவான பிறகு கூட, இளைஞரணித் தலைவராக ஸ்டாலின் நீடிப்பதைக் குறிக்கும் வகையில் கிண்டலடித்தது மாறன் சகோதரர்களின் தினகரன். கனிமொழி தலைமையேற்று நடத்தும் ""கருத்து'' அமைப்பு மற்றும் சென்னை சங்கமம் நிகழ்ச்சிகளை இருட்டடிப்புச் செய்தது, சன்தினகரன் செய்தி ஊடகம். ஆனால், கடந்த மாத ஆரம்பத்தில், கருணாநிதி கேட்டுக் கொண்டதையும் மீறி இரண்டு கருத்துக் கணிப்புகளை சன்தினகரன் குழுமம் வெளியிட்டது. இந்தக் கணிப்புகள் தயாநிதி மாறனைத் தமிழக அரசியலில் வளரும் மாற்றுத் தலைமையாக முன்னிறுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தன.

இந்தக் கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்ட ஓரிரு நாட்களிலேயே மதுரை மேயர், அவரது கணவன், மற்றும் முன்னாள் மேயர் தலைமையில் திரண்ட மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள் என்று கூறப்படும் தி.மு.க. ரௌடிகளால் தினகரன் நாளிதழ் எரிப்பு, நகரம் முழுவதும் பேருந்துகள் உடைப்பு, கல்லெறிதல், தினகரன்சன் குழும அலுவலகங்கள் சூறையாடப்படுதல், தீ வைப்பு, பெட்ரோல் குண்டு வீச்சுத் தாக்குதலுக்குள்ளாகி மூன்று ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தக் காலித்தனங்கள் அனைத்தும் புகைப்படங்களாகவும் ""வீடியோ'' காட்சிகளாகவும் ஆதாரம்சாட்சியமாகப் பதிவு செய்யப்படுவதைப் பற்றிக் கடுகளவும் கவலைப்படாமல் போலீசுப் பாதுகாப்பு உதவியுடன் உடந்தையுடன் மிகவும் நிதானமாகவும், அலட்சியமாகவும் இது ""நம்ம ஆட்சி, நம்ம போலீசு'' என்ற திமிரோடும் நடத்தப்பட்டுள்ளன.

தான் சொல்லியும் கேளாமல், தினகரன் தனது கருத்துக் கணிப்பை வெளியிட்டதுதான் வன்முறைக்கு காரணம் என்றும், ஆத்திரமுற்ற கழகத் தொண்டர்கள் தான்தோன்றித்தனமாக நடந்து கொண்டனர் என்று அழகிரியின் ரௌடித்தனத்துக்கு நியாயம் கற்பித்துள்ளார், கருணாநிதி. அவரது பொறுப்பிலுள்ள போலீசு அழகிரிக்கு உடந்தையாகவும், அவரது ஆணையின் கீழ் செயலிழந்தும் போயுள்ளது அம்பலப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி தனது மகன் மு.க. அழகிரியைக் குற்றங்களில் இருந்து தப்புவிக்கும் நோக்கத்தோடு சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைத்திருக்கிறார். தர்மபுரி மாணவிகள் எரிப்புக்கு இணையான மூன்று அப்பாவி ஊழியர்கள் படுகொலையின் சூத்திரதாரி மு.க.அழகிரிதான் என்று ஊரே, நாடே அறிந்திருந்தபோதும் அவர் கைது செய்யப்படவுமில்லை; அவர் பெயர் முதல் தகவல் அறிக்கையில் கூட சேர்க்கப்படவில்லை; அழகிரியின் அல்லக்கைகள் சிலர் மட்டுமே பெயருக்குக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மு.க.அழகிரியின் செல்வாக்கை "இருட்டடிப்பு' செய்து பொய்யான கருத்துக் கணிப்புகள் வெளியிட்டதனால் அவரது ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்து தாக்குதலில் ஈடுபட்டது இயல்பானதுதான்; அதனால் 3 ஊழியர்கள் இறக்க நேர்ந்தது ஒரு பிரச்சினையே இல்லை என்பது போலவும் கருணாநிதியின் தலைமை நடந்து கொள்கிறது. ""தி.மு.க.வின் கட்டமைப்பையே குலைத்துவிடும் முயற்சியில் மாறன் சகோதரர்கள் கடந்த சில மாதங்களாகவே இறங்கி வந்தார்கள்; ஆனாலும் கலைஞர் பொறுமை காத்தார். இப்போது தலைவருக்கே நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டார், கட்சிக் கட்டுப்பாட்டைச் சீர்குலைத்து விட்டார், கட்சிக்குக் களங்கம் விளைவித்து விட்டார்'' என்று குற்றஞ்சாட்டி மத்திய அமைச்சர் பதவியைப் பறித்ததோடு, கழகத்தில் இருந்தும் தயாநிதி மாறன் தூக்கி வீசப்பட்டிருக்கிறார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் முத்தமிழ் வித்தகர் கருணாநிதியின் அகராதியில் ஒரே பொருள் தான் இருக்கிறது. கருணாநிதியின் பிள்ளைகளிடையே ""குழப்பத்தை விதைத்து, மோதலை உருவாக்கி, கழகத் தலைமையைக் கைப்பற்ற சதி செய்தார்'' என்பதுதான் அது. ஆனால், கருணாநிதியோ, கட்சியைக் குடும்பத்தின் சொத்தாகவும், அரசு அதிகாரத்தை குடும்பத்துக்கான சொத்துச் சேர்க்கும் கருவியாகவும் கருதி, அதன் கட்டுக்கோப்புக் கலையாமல் மகன்களுக்கும், மகளுக்கும், பேரப் பிள்ளைகளுக்கும் பதவி வழங்குபவர்; தனது குடும்ப வாரிசுகளுக்கிடையே சுமுகமான பஞ்சாயத்து செய்து சொத்துக்களையும், பதவிகளையும், அதிகாரத்தையும் பகிர்ந்தளிப்பதற்குத் திட்டமிட்டு வாரிசு அரசியலின் ஆபாசங்கள் அனைத்தையும் உருவாக்கி வளர்ப்பவர்.

குடும்பச் சொத்தும் அதிகாரமும்தான் குறிக்கோள் என்றான பிறகு குடும்பத்துக்குள் குத்து வெட்டு நடப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. குடும்பத்துக்குள் குடுமிப்பிடிச் சண்டை வந்துவிட்ட காரணத்தினாலேயே பாதிக்கப்பட்ட பரிதாபத்துக்குரிய மனிதராகக் கருணாநிதியைக் கருதுவது முட்டாள்தனம். பரந்து விரிந்து கிடக்கும் தமிழகத்தையும் அரசு அதிகாரம் அளிக்கும் ஆதாயங்களையும் சுமுகமாகப் பகிர்ந்து கொண்டு வாழாமல், தனது அரசியல்வாரிசுகள் இப்படி அடித்துக் கொள்கிறார்களே என்பதும், சட்ட விரோத மாற்று அதிகார மையமாகிவிட்ட அழகிரி கும்பலால் தனது வாரிசு அரசியலுக்குக் களங்கம் ஏற்படுகிறதே என்பதும்தான் கருணாநிதியின் ""துயரம்''.

""அண்ணன் அழகிரியின் ரவுடித்தனங்களையும், கட்டைப் பஞ்சாயத்துக்களையும் எதிர்த்துக் கொண்டு மதுரையிலும், தென்மாவட்டங்களிலும் யாரும் உயிரோடு இருக்க முடியாது. அப்படிப்பட்ட கொலைகளுக்கு போலீசும் துணை நிற்கும்'' என்பதுதான் இந்தச் சம்பவத்திலிருந்து வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. மாறன் சகோதரர்களுக்கும் கருணாநிதியின் பிள்ளைகளுக்கும் இடையிலான அதிகார அரசியல் சண்டை எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால், அதற்காக பொதுச் சொத்துக்களைச் சூறையாடுவதும், பொதுமக்களுக்கு எதிராக வன்முறை ரௌடித்தனங்களை நடத்துவதும் அப்பாவி ஊழியர்களைப் படுகொலை செய்வதையும் யார்தான் சகித்துக் கொள்ள முடியும்?

தி.மு.க.வின் மாவட்ட செயலர் த.கிருட்டிணன் கொலை விவகாரத்தில் அழகிரிக்கு கருணாநிதி வக்காலத்து வாங்கினார்; தானே அழகிரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தபோது, இதே வகையான ரவுடித்தனங்களை அவரது கும்பல் அரங்கேற்றியபோதும் பிள்ளை பாசம் கருணாநிதியின் கண்களை மறைத்தது. தென் மாவட்டங்களில் மதுரை முத்துவுக்குப் பிறகு தேர்தலில் ஜெயிப்பதற்கு தேவையான கிரிமினல் நடவடிக்கைகளுக்காகவே கருணாநிதியால் அனுப்பி வைக்கப்பட்டு ஊட்டி வளர்க்கப்படுபவர்தான் மு.க.அழகிரி. ஆனால், கருணாநிதியின் வாரிசு குடும்ப அரசியலையும் கிரிமினல் அரசியலையும் மறைத்துவிட்டு, ஒரு மூத்த அரசியல் தலைவருக்கு மன உளைச்சலைக் கொடுக்கும் வகையில் துரதிருஷ்டவசமான சம்பவங்கள் நடந்து விட்டதாக வருத்தம் தெரிவிக்கும் "தோழமை'க் கட்சிகளோ, பெயர் குறிப்பிடாமல், பொத்தாம் பொதுவாக சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், நீதிநியாயம் நிலைநாட்டப்பட வேண்டும் என்று கோருகின்றன. தாமே குடும்பவாரிசு அரசியலை ஊட்டி வளர்க்கும் வைகோவும், சசிகலா கும்பல் வடிவில் சட்டத்துக்குப் புறம்பாக ஒரு அதிகார மையத்தை உருவாக்கிப் பராமரிக்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியின் வாரிசுகுடும்ப அரசியல் பற்றிக் கூச்சல் போடுவதற்கு எவ்வித யோக்கியதையும் கிடையாது.

தங்களுடைய வாழ்க்கையை நாசமாக்கும் மறுகாலனியாக்க அரசியல் குறித்து கவனம் செலுத்தாமல், யாருக்கு இளவரசுப் பட்டம் என்ற அரண்மனைக் குத்து வெட்டை அரசியலாகக் கருதிப் பேசிக் கொள்வதற்கும், பதவிக்காக அடித்துக் கொள்பவர்களில் யார் பக்கம் அதிக நியாயம் இருக்கிறது என்று வாதிட்டுக் கொள்வதற்கும் ஊடகங்கள் மக்களைப் பயிற்றுவிக்கின்றன. இது ஒரு புதிய சுவாரசியமான தொலைக்காட்சி சீரியல் போல மக்களை ஆக்கிரமிக்க நாம் அனுமதிக்கக் கூடாது. பிழைப்புவாத அரசியல், வாரிசு அரசியல், கிரிமினல் அரசியல், கோஷ்டி அரசியல் போன்ற நாடாளுமன்ற அரசியல் சீரழிவுகளின் வெளிப்பாடுதான் கருணாநிதி குடும்பம் மற்றும் மாறன் சகோதரர்களுக்கிடையிலான மோதலாக வெடித்திருக்கிறது.