தமிழ் அரங்கம்

Saturday, April 26, 2008

அமைதியான அழித்தொழிப்பு யுத்தம்

அமைதியான அழித்தொழிப்பு யுத்தம்


பி.இரயாகரன்
25.04.2008

மயான அமைதி. யுத்தம் நடப்பதே தெரியாத ஒரு அரசியல் சூனியம். ஆனால் இலங்கையில் என்றுமில்லாத அளவில், மிகக் கடுமையான, கோரமான அழித்தொழிப்பு யுத்தம் ஒன்று நாள் தோறும் நடைபெறுகின்றது. ஆனால் அவை அமைதியாக, சலசலப்பின்றி அரங்கேறுகின்றது. மனித உயிhகள் அன்றாடம் பலியிடப்படுகின்றது.

உண்மையில் அங்கு என்ன நடக்கின்றது என்று கூட தெரியாத வகையில், அமைதியாக புலிகள் தோற்றுக்கொண்டு இருக்கின்றனர். தோல்வியே புலிகளின் இன்றைய அரசியலாகிவிட்டது. புலித் தளபதிகளும், புலி ஊடகவியலும் எதிர்காலத்தில் தாங்கள் நடத்தவுள்ளதாக கருதுகின்ற எதிர்த்தாக்குதலை, ஊகமாக முன்வைக்கின்றனர். இப்படி அவர்களே சோர்ந்து போய், மற்றவனை நம்பவைக்கின்ற கனவுத் திட்டங்களை பறைசாற்றுகின்றனர். இப்படி தமது தோல்வியை மறைக்க, கனவை மூட்டை கட்டி பிரச்சாரம் செய்கின்றனர். இடைக்கிடை நடக்கும் எதிரியின் இழப்பை வைத்து, புள்ளிவிபர கணக்கு மூலம் அரசியல் நடத்த முனைகின்றனர்.

தவிக்கிற முயலை அடிக்க கூடாது என்பதால், அவலமான புலிகளின் இன்றைய நிலைமைகள் மீது மௌனத்தை கடைப்பிடித்து வருகின்றோம். நாம் பேரினவாதத்தை எதிர்ப்பதால் மட்டும், நிலைமையில் மாற்றம் வந்துவிடாது. புலிகள் மீதான விமர்சனமும், அவர்களின் சுயவிமர்சனமும் தான் இந்த நிலைமையைக் குறைந்தபட்சம் மாற்றும். ஆனால் இதில் புலிகள் அசைந்து கொடுக்கும், சமிக்கையே கிடையாது. புலிக்குள்ளும் புலிக்கு வெளியிலும் தொடர்ந்தும் ஒரு மாற்றத்தை அடிப்படையாக கொண்டு சிந்திக்கத் தூண்டும் வகையில், மக்களின் இன்றைய அவலநிலை பற்றி எழுத வேண்டியுள்ளது. இதன் மூலம் தனியான அரசியல் வழிபற்றி சிந்திக்க தூண்டும் வகையில், நாம் விமர்சனத்தை தொடர்ச்சியாக முன்வைக்க வேண்டியுள்ளது.

இலங்கையில் புலிக்கு எதிரான அழித்தொழிப்பு யுத்தம் ஒருபுறமாயும், மறுபக்கத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தமாகவும் அவை நடத்தப்படுகின்றது. தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளையே பேரினவாத அரசு, தமிழ் மக்களுக்கு மறுத்து நிற்கின்றது. தமிழ் மக்களுக்கு இலங்கையில் தனியான பிரச்சனைகள் உண்டு என்பதையே, அது மறுக்கின்றது. அதை வெறும் புலிப்பிரச்சனையாக பார்த்து, தமிழ் இனத்தையே பல்வேறு வழிகளில் அழிக்கின்றது. அனைத்தும் புலி அழிப்பின் பெயரில், நிறைவு செய்யப்படுகின்றது. புலிகளின் தவறான பாசிச கொள்கைகளை, அதன் நடைமுறைகளைப் பயன்படுத்தி, அவர்களை தனிமைப்படுத்தி அழித்தொழிக்கும் யுத்தமும், தமிழின அழத்தொழிப்பும் நடத்தப்படுகின்றது.

புலியின் அரசியல் கொள்கை என்பது, வெறும் வன்முறை கொண்ட பாசிச நடை முறைகளாகிவிட்டது. இதை முன்வைத்தே பேரினவாதம் உலகம் தளுவிய ஆதரவுடன், புலியொழிப்பு யுத்தத்தையும், இனவொழிப்பு யுத்தத்தையும் நடத்துகின்றது. இதை பிரித்துப்பார்க்க முடியாத வகையில், இதை ஒருங்கிணைந்த வகையில் நடத்துகின்றது.

புலிகளின் அரசியலோ, தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் உரிமைகளைச் சிதைத்து விட்டது. தமிழ் இனத்தில் இருக்கக் கூடிய சமூக விழுமியங்களைக் கூட, தமிழ் இனத்திடம் விட்டுவைக்காது, புலிகளால் அவை காயடிக்கப்பட்டது. இதன் மேல் தான் இன்று பேரினவாதம், தனது கொடிகளைப் பறக்கவிட்டுள்ளது. யுத்தமும், யுத்த கோரமும் வெறும் புலி அழிப்புக்கு அப்பால், அழிந்து சிதைந்து போன தமிழ் இனத்தின் எஞ்சிய இருப்பையே முற்றாக அழித்து விடுவதில் தான் தன்முனைப்பு காட்டுகின்றது.

புலியெதிர்ப்பு எடுபிடிகளோ தமிழ் இனத்தை அழித்தொழிக்கும், பேரினவாதத்தின் பங்காளிகளாக, கைக்கூலிகளாக பவனிவருகின்றனர். இவர்கள் தமக்கிட்ட கவுரவப் பெயர் 'ஜனநாயக"வாதிகள். இப்படி உலகெங்கும் பல்வேறு வேஷம் போட்டவர்கள், இன்றோ அம்மணமாகி நிற்கின்றனர். நாய் வேஷம் போட்டவர்களோ, ஒநாய் கோலத்தில் அம்பலமாகின்றனர்.

இலங்கை வரலாற்றில் இன்றைய அரசு தான், மிக மோசமான பேரினவாதிகள் ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் மிகப் பாரிய பிளவு. இதன் பின்னணியில் இணக்கம் காணமுடியாத, மக்கள் விரோத அரசியலே அனைத்துத் தளத்திலும் பூத்துக் குலுங்குகின்றது. தமிழ்பேசும் மக்களின் அரசியல் நலன்களை அரசியலாக கொள்ளாமையால், இவர்கள் மத்தியல் அரசியல் இணக்கம் காண முடிவதில்லை. சுயநலம் முதன்மையாகி, அவை வக்கிரம் கொண்ட அரசியல் பிளவுகளாகி நிற்கின்றது. பேரினவாதத்துடன் சேர்ந்து இயங்கவும், பேரினவாதத்துக்கு உதவும் எதிர்ப்பு அரசியலுமாக, மக்களுக்கு எதிராக உள்ளது. தமிழ் இனமோ, இவர்களால் பல தளத்தில் பல வடிவில் காயடிக்கப்படுகின்றனர்.

இப்படிப்பட்ட ஒருநிலையில் தான் பலம்பொருந்திய பேரினவாதம், தன்னை மிதப்பாக்கி ஆட்டம் போடுகின்றது. தோற்றுப் போன புலிகளின் உப்புச்சப்பற்ற அதன் சொந்த அரசியல் தான், பேரினவாதத்தின் இன்றைய அரசியல் அடித்தளமாகும். அரசியலில் தோற்றுப் போன புலிகள், யுத்தத்தை விரும்பினர். இப்படி அவர்களே யுத்தத்தை விரும்பி வலிந்து தீர்மானித்து, அதற்கு ஏற்ப இந்த இனவாத அரசைத் தெரிந்தெடுத்தனர். இந்தப் பேரினவாத அரசின் வெற்றிக்காக, புலிகள் அரசியல் ரீதியாக காய் நகர்த்தி உழைத்தனர். இன்று அதுவே, அவர்களின் சொந்தத் தூக்கு கயிறாகி நிற்கின்றது.

இப்படி இலங்கை வரலாற்றில் மிக மோசமான, மிக இழிவான, நயவஞ்கம் கொண்ட பேரினவாதிகளை புலிகளும் சேர்ந்தே உருவாக்கினர். இந்தப் பேரினவாதமோ, தன்னை மிக நேர்த்தியாகவும், நுட்பமாகவும் பாசிச வழிகளில் ஒருங்கமைத்துள்ளது. நெகிழ்ச்சியற்றதும், பல முனைப்புக் கொண்டதும், பாசிட்டுகளுக்கே உரிய மிக நேர்த்தியுடனான, ஒரு தலைமை உருவாகியுள்ளது. இதுவே இருந்த சர்வாதிகார வடிவத்தையே தனக்கு சாதகமாக கொண்டு, இனவாத இராணுவக் கட்டமைப்பை பலமடங்கு உறுதி வாய்ந்த ஒரு பாசிச யுத்த இயந்திரமாக கட்டமைத்துள்ளது. புலிகளின் சொந்த அழித்தொழிப்புப் பாணியை, புலிக்கு எதிராகவே அது சுவீகரித்து நடைமுறைப்படுத்துகின்றது. புலிகள் தாம் அல்லாதவர்களை எப்படி வேட்டையாடி அழித்தொழித்ததோ, அதை அப்படியே அரசு இன்று புலிக்கு எதிராகக் கையாளுகின்றது. புலிகளின் பாசிச மாபியாத் தன்மையையே திணற வைக்கும் அளவுக்கு, கொடூரமான சர்வாதிகாரக் கும்பல்தான் இன்றைய இலங்கை அரசு.

அரசு வடிவங்களிலும், சிவில் சமூக கட்டமைப்புகளிலும், பொருளாதார உறவுகளிலும், சர்வதேச உறவுகளிலும் கூட, தன்னை மிகநுட்பமாக பாசிச வடிவில் ஒருங்கினைத்து நிற்கின்றது. பிரச்சார உத்திகள், நெருகடிகளை கையாளும் விதம், விமர்சங்களை எதிர்கொள்ளும் திறன் என, மிகவும் திட்டமிட்ட வடிவத்தில் நுட்பமாக கையாளுகின்றது. எதிர்க் கட்சிகளை சிதைப்பதற்கு, அக்கட்சிகளின் கோசங்களையே உள்வாங்கி அதை செயலற்ற வெற்று உடம்பாக்கின்றது. அத்துடன் மிரட்டல், விலைபேசுதல் என்று, எல்லாவிதமான பாசிச உத்திகளையும் கூட சமந்தரமாக கையாளுகின்றது. இப்படி மிகவும் கூர்மையானதும், புத்தியுள்ளதுமான, சூழ்ச்சியை சதியையும் அடிப்படையாக கொண்ட ஒரு இனவாத பாசிச ஆட்சியின் கீழ்தான், புலிகள் ஒழித்துக்கட்டப்படுகின்றனர்.

புலிகளின் எந்த எதிர்தாக்குதலையும், ஏன் அதன் வழமையான அதிர வைக்கும் வீரவிளையாட்டை எதிர் கொள்ளவும், அதை புறங்கையால் துடைத் தெறியும் அனவுக்கு, பலம்பொருந்திய சலசலபற்ற வக்கிரமான ஆட்சி இன்று நிறுவப்பட்டுள்ளது. இது தனக்குள் அடுத்த தலைமை கொண்டதும், வெற்றிடமற்ற வகையில் இந்த ஆட்சி நீடிக்கும் வண்ணம், மிக திட்டமிட்ட வகையில் குறிக்கோளுடன் இயங்குகின்றது.

தொடர்ச்சியாக தனது ஆட்சியை அமைக்கும் பலத்தையும், அது ஒருங்கெ கொண்டுள்ளது. தன்னுடன் அக்கம்பக்கமாக நிற்கின்ற கட்சிகளின் கோசங்களையும் முற்றாகத் தனதாக்கி, அக்கட்சிகளையும் செயலற்றதாகிவிடுகின்றது. குறிப்பாக ஜே.வி.பியின் இனவாத அரசியல் கோரிக்கைகளை எல்லாம் தனதாக்கியதன் மூலம், ஜே.வி.பியின் அரசியல் கோசத்தையே இல்லாததாக்கி அதை அரசியல் அனாதரவாக்கிவிட்டது. இதன் மூலம் உட்கட்சி மோதலையும், பிளவுகளையும் உருவாக்கிவிட்டது.

அமைதி சமாதானம் மூலம் தீர்வு என்ற யூ.என்.பி யின் அரசியல் கூறுகளையே செயலற்றதாக்குகின்றது. யாருடன் சமாதானம் என்ற வகையில், புலிகளைத் தோற்கடித்து விட முனைகின்றது. இப்படி யூ.என்.பியை அரசியல் அனாதையாக்குகின்றது. இப்படி எந்தக்கட்சியும் தப்பிப்பிழைக்கவில்லை. அமைதியான வழிகளிலும், சொந்த பாசிச நடத்தைகள் மூலமும், கட்சிகளின் பிளவுகளையும் சிதைவுகளையும் உருவாக்கி வருகின்றது. கூட்டமைப்பு மட்டுமே, தனது யுத்த எதிரியின் பினாமி ஏஜண்டுகள் என்ற எல்லையில் நீடித்து நிற்க அனுமதிக்கின்றது. இதுவும் நீண்ட காலத்துக்கு தப்பிப்பிழைத்து வாழமுடியாது, அது ஏற்கனவே பினாமி என்பதால், அரசின் பினாமியாவதையும் துரிதப்படுத்தும்.

இப்படிப் இந்த பேரினவாதப் பாசிச அரசு இயந்திரத்தை இராணுவ சர்வாதிகாரமாக, பாராளுமன்ற வழிகளில் உறுதியாக நிறுவிவருகின்றது. எதிர்க்கட்சிகளின் அரசியல் கோசங்கள் சிதைக்கப்படுகின்றது. தனது ஒரே எதிரி புலிகள் தான், என்ற விம்பம் மூலம், இவை அனைத்தையும் நடத்தி வருகின்றது.

புலிகள் சுற்றி வளைக்கப்பட்டு அடிக்கப்படுகின்றனர். இப்படி தவிக்கின்ற முயலை, நாமும் அடிக்க விரும்பவில்லை. ஆனால் தமிழ் மக்களின் நன்மை கருத்தி, விமர்சிப்பது அவசியமாகின்றது. புலிகளின் தோல்வி என்பது, அரசாங்கத்தின் சொந்த திறமையினால் உருவானதல்ல. புலிகளின் தோல்வி, புலிகளின் சொந்த அரசியல் நடத்தையால் நிகழ்கின்றது. புலிகள் தம்மைத் தாமே தான் தோற்கடிக்கின்றனர். அரசு அதன் மேல் பேரினவாத கொடியைப் பறக்கவிடுகின்றது.

இன்றைய பேரிவாத பாசிச இயந்திரத்தை எதிர்கொள்ளும் ஆற்றலை, புலிகளின் சொந்த அரசியல் இழந்து தவிக்கின்றது. புலிகளின் இராணுவக் கட்டமைப்பு திக்குமுக்காடுகின்றது. மீட்சி பற்றி கனவையும், நம்பிக்கையையும் ஆதாரமாக கொள்கின்றது.

மறுபக்கத்தில் எந்த மாற்றமுமின்றி, புலிகள் தமது பாசிச மாபியா வழிகளையே தனது தொடர்ச்சியான அணுகுமுறையாக கொள்கின்றது. அரச பாசிசத்தின் முன்னால், கையேறற்ற நிலையை அடைந்து, அதிலும் தோற்றுப்போகின்றனர். ஒரு வெற்றிகரமான தாக்குதல் மூலம், நிலைமையை மாற்றலாம் என்ற பழைய வழிகளில் தீவிரமாக இடைவிடாது முனைகின்றது. புலித் தலைவரே அனுராதபுர விமானப்படைத் தாக்குதலை, தனது தளபதிபகளுக்கு காட்ட வேண்டிய அரசியல் அவலம் நிகழ்ந்துள்ளது. ஆனால் இவையும், இவை போன்ற எதுவும் மாற்றத்தை ஏற்படுத்தாது என்பதை, அவர்களால் இன்னமும் உணர முடியவில்லை.

உளவியல் ரீதியாக செத்துப் போன மக்களும் சரி, புலி ஆதரவாளர்களும் சரி, புலிப் படைகளும் சரி, எதைப் போராட்டம் என்று கருதினரோ, அது தானாகவே சேடமிழுப்பதையே காண்கின்றனர்.

அரசியல் ரீதியாக செத்துப் போனவர்கள், உணர்வியல் ரீதியாக யுத்தம் செய்ய முடியாது. அரசின் தொடர்ச்சியான சுற்றி வளைக்கப்பட்ட தாக்குதலை எதிர் கொண்டு போராடும் அணிகள், உளவியல் ரீதியாக தமது சொந்த யுத்தம் என்று அதை எதிர்கொள்ள முடிவதில்லை. ஏன் எதற்கு யாருக்காக போராடுகின்றோம், எதை எப்படி அடையப் போராடுகின்றோம் என்ற உளவியல் பிரச்சனை, புலிக்கு எதிரானதாகவே அது மாறுகின்றது.

தொடர்ச்சியான யுத்த தோல்விகளும் அது சார்ந்த நெருக்கடிகளும், கண்மூடித்தனமான யுத்த திணிப்பாக மாறுகின்றது. புலித் தலைமை மீதான அவை அவநம்பிக்கையாக பரிணாமிக்கின்றது. யுத்தமுனையில் பரந்துபட்ட மக்களையே யுத்தம் செய்யும்படி, புலிகள் அவர்களை வலுக்கட்டாயமாக யுத்த முனைகளில் திணிக்கின்றனர். இதில் பலர் மாண்டு போகின்றனர். யுத்த முனையில் இருந்து எதிரி பிரதேசத்துக்கு தப்பியோடுதல், எதிரியிடம் சரணடைதல் பரவலாக தொடங்கியுள்ளது. யுத்தம் செய்யாது மாண்டு போகின்ற அவலம், அன்றாடம் நிகழ்கின்றது. மக்களோ அங்கிருத்து தப்பி, அரசு பகுதிகளுக்கு செல்ல முனைகின்றனர். புலிகளின் ஆயுதங்கள் அன்றாடம் எதிரியினால் கைப்பற்றப்படுகின்றது.

புலிகளைச் சுற்றி எங்கும் எதிலும், ஒரு துயரமான சோகமான நிகழ்வுகளாகிவிட்டது. புலித்தலைமை இதில் இருந்து மீள முடியாது அறிக்கைகள், பழைய கதை சொல்வதும், மாற்றத்தைப் பற்றி அறிக்கை விடுவதன் மூலம், அணிகளை திருப்திப்படுத்தி வழிகாட்ட முனைகின்றனர். இப்படி தமது முன்னைய வழமையான பாணியில், போராட்டத்தை தலைமை தாங்கும் பண்பை அவர்கள் இழந்துவிட்டனர். மீட்சி எப்படி என்ற கேள்விக்கு, அவர்களிடமே பதிலில்லை.

மக்களுக்கும் புலித் தலைமைக்கும் உள்ள உறவுக்கும், புலி அணிக்கும் புலித்தலைமைக்கும் உள்ள உறவுக்கும், ஒட்ட முடியாத பாரிய முரண்பாடாகி பிளவாகி கிடக்கின்றது. பேரினவாதம் இதையெல்லாம் அடிப்படையாக கொண்டுதான், புலிகளை முற்றாக துடைத்தெறிய முனைகின்றது. தமிழ் மக்களின் உரிமைகளை, சிறுமைப்படுத்தி இழிவாடுகின்றது.

புலிகளின் உளவு கூறுகளில் மட்டும் தான், உயிர்த் துடிப்பான செயல் காணப்படுகின்றது. இது அதன் மாபியா குணாம்சத்தால், பாசிச அதிகார கூறுகளால் தன்னை அன்னியமாக்கி தானாக இயக்கப்படுகின்றது. இதன் பின்னணியில் இயங்கும் தாராளமான பணம், அதிகாரம் போன்ற காரணங்களால், உயிர் துடிப்புடன் தனது மாபியாத்தனத்தை தனது செயலாக்குகின்றது.

பேரினவாதம் புலிகளின் இந்த உளவுக் கூறை விட்டுவைப்பதில்லை. கடத்தல், காணாமல் போதல், இனம்தெரியாத படுகொலை மூலம், எந்த சந்தேகத்தையும் விட்டுவைக்காது அழித்தொழிக்கின்றது. இப்படி எந்தவொரு விடையமும் முற்றாக முடக்கப்படுகின்றது. இப்படி புலியல்லாத பிரதேசத்தில், புலிகளின் அசைவுகள் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டு சிதைக்கப்பட்டு அழிக்கப்படுகின்றது. வன்னியைத் தவிர, புலியல்லாத பிரதேசத்தில் புலிகள் இல்லை என்ற ஒரு நிலையை, அரசு படிப்படியாக உறுதி செய்யமுனைகின்றது. உண்மையில் இதில் அவர்கள் வெற்றி பெறுகின்றனர் என்பதே உண்மை.

புலிகள் வழமையான பாணியில் எதையும் செய்ய முடிவதில்லை. அவையெல்லாம் தோற்றுப் போகின்றது. இதே நிலைதான், இந்தியாவுடன் கொண்டுள்ள அவர்களின் தொடர்புகளிலும் நிகழ்கின்றது. இந்தியாவில் பிழைப்புக்காக ஊளையிடும் புலிப் பினாமிக் கூட்டம், ஊரைக் கூட்டி சும்மா ஊளையிடுகின்றது. மறுபக்கத்தில் இதுவே புலிகளின் இரகசிய ஆயுத நடமாட்டம் மீதான, பாரிய கண்காணிப்பு அரசியலாக பொலிஸ் கெடுபிடியாக மாறிவிடுகின்றது. இங்கும் புலிகள் நெருக்கடியையும், சொந்த அசைவையும் கூட இழந்துவிடுகின்றனர்.

புலிகளிடம் சிக்கியுள்ள வன்னிமக்களின் வாழ்வியல் பரிதாபம். தாம் தேர்ந்தெடுக்காத ஒரு வாழ்க்கையில், அவர்கள் மடிந்து போகின்றனர். ஒருபுறம் பேரினவாதம் கொடுக்கும் அவலம், மறுபக்கம் புலிகள் திணிக்கும் யுத்த நெருக்கடி. இதற்குள் வன்னி மக்கள், தமது வாழ்வை இழந்துவிட்டனர். பேரினவாத யுத்தம், மக்கள் மேலானதாக, பல முனையில் பல முனைப்பு கொண்ட ஒன்றாக மாறிநிற்கின்றது. மறுபக்கத்தில் புலிகள் ஈவிரக்கமற்ற கொடுங்கோலராக மாறி யுத்தத்தை வன்னிமக்கள் மேல் திணிக்கின்றனர்.

வகை தொகையின்றி யுத்தம் செய்யவென கடத்தப்பட்ட பலர், யுத்த முனையில் ஏன் எதற்கு என்று தெரியாது இறக்கின்றனர். புலித் தலைமை தம்மை பாதுகாத்துக்கொள்ள, கடைசி ஆயுதமாக சொந்த மக்களையே யுத்தத்தில் பலியிடுகின்றனர். மக்கள் யாரும் இந்த யுத்ததத்தைச் செய்யவோ, தம் குழந்தைகளை பலியிடவோ விரும்பவில்லை. ஆனால் அவர்களை பலாத்காரமாக எடுத்துச் சென்று, யுத்த முனையில் பலியிடப்படுகின்றனர். எங்கும் மரண ஓலங்களின்றி, வன்னிமக்கள் நிம்மதியாக உறங்கவில்லை. நாள் தோறும் அவர்கள் விரும்பாத மரணமும், மரணச்செய்திகளும், ஒப்பாரிகளுமே வாழ்வாகின்றது.

இவை யுத்தத்தில் விரும்பி ஈடுபட்டவனின் வீர ஓப்பாரிகளல்ல. புலிகளைத் தீடடித் தீர்க்கும், ஒப்பாரிகள். கட்டாயப்படுத்தி யுத்த முனையில் மரணித்தவனின் உள்ளவுணர்வை அடிப்படையாக கொண்ட, மக்களின் இரத்தத் கண்ணீர் தான் இவை.

இப்படி ஒரு யுத்தத்தையும், யுத்த சூழலை மிக மோசமான தமது இறுதி அழிவு வரை புலிகள் வித்திட்டுள்ளது புலிகளின் இந்த அரசியல். தமிழ் மக்களின் மொத்த அழிவிற்கும் வித்திட்டுள்ளது. இந்த அரசியலை உண்மையை எப்படி தான், எம்மால் ஜிரணிக்க முடியும். ஆயிரம் ஆயிரம் மக்களின் உயிரை விடுதலையின் பெயரில் பலியிட்ட போராட்டம், இதுதான் விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் ஆயிரம் ஆயிரம் இளைஞர்களின் உயிரை துரோகிகள் என்ற பெயரில் கொன்று குவித்த புலிகள், எதையும் மக்களுக்காக பெற்றுக்கொடுக்கப் போவதில்லை என்ற உண்மை, எம் உள்ள உணர்வுகளையே அதிரவைக்கின்றது.

இப்படி புலித்தலைமை மக்களுக்கு தலைமை தாங்கும் தலைமைப் பண்பை இழந்து, தானே சீரழிந்து நிற்கின்றது. மக்களை நேசிப்பதில் தந்தைக்குரிய பரிவை, தாய்க்குரிய கருணையை நிராகரித்து நிற்கும் புலிகள், அடக்குமுறைகள் மூலம் மக்களை கட்டுப்படுத்துகின்றனர். தமிழ் இனம் தனது சொந்த தற்கொலைக்குரிய ஒரு வாழ்க்கை முறையைத் தான், புலிகள் அவர்களுக்கு வழங்கும் ஒரே தீர்வாகின்றது. இதன் இறுதி வரை புலிகள் தாமும் அழிந்துகொண்டு, தமிழ் இனத்தையும் அழித்துக் கொண்டு இருக்கின்றனர்.

மக்களின் அடிப்படை உரிமைகளை எள்ளி நகையாடியபடி, வன்முறை மூலம் தமிழ் மக்களின் உரிமைகளை அடக்கியொடுக்கியபடி, இதைத் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் என்கின்றனர். இப்படி புலிகள் நடத்திய மனிதப் படுகொலைகள் முதல் அதன் பாசிச நடத்தைகள் எல்லையற்றது. இதன் பின்னணியில் மனித அவலங்களும், இரத்தக் கண்ணீர்களும், மிருகத்தனமான புலிகளின் நடத்தைகளால் உருவானது. இதையே விடுதலைப் போராட்டம் என்றனர். இன்று அதன் விளைவை அவர்களே சந்திக்கின்றனர்.

இப்படி பாசிசம் கட்டமைத்த பிரமைகள், மனக் கோட்டைகள், பண பலம், வன்முறைப் பலம், வெம்பிய அதிகாரம் எல்லாம் தவிடு பொடியாகின்றது. எங்கும், அவநம்பிக்கைகளும், அதிருப்த்தியும் குழிபறிப்புகளும், காட்டிக்கொடுப்புகளும், ஒருங்கே அரங்கேறுகின்றது. போலித்தனம், பிழைப்புத்தனமும், சந்தர்ப்பவாதமும், கூலிப்பண்பும் தான் புலியை வழிநடத்துகின்றது.

மக்கள் நேயமும், இலட்சியமும், அர்ப்பணிப்பும், தியாக உணர்வும், வீரமும், இந்த போராட்டத்தின் பின்னால் அறவே கிடையாது. இப்படி வீங்கி வெம்பி வெடித்துச் சிதறிய போராட்டம், இன்று அழுகி நாறுகின்றது. இதை இனி கூட்டி அள்ளமுடியாது. மாறாக அதுவே சமூகத்திற்கு நஞ்சிடுகின்றது.

போராட்டம் மீதான, மனித உரிமைகள் மீதான, மனிதப்பண்புகள் மீதான, அனைத்துப் போராட்டத்தையும் மறுதலிக்கும் இழிநிலைக்கு நஞ்சிட்டுள்ளது. சமூகத்தின் ஒட்டுமொத்த சமூக உணர்வுக் கூறையுமே, இது மறுதலித்து நிற்கின்றது. தமிழ் மக்களின் அடிப்படையான உரிமைப் போராட்டத்தை, புலிகள் மட்டுமல்ல அனைத்துத் தரப்பும் இன்று மறுதலிக்கின்றது.

தமிழ் மக்கள் உரிமைகளற்ற அடிமை சமூகமாகவும், நக்கிபிழைத்து வாழும் பிழைப்புவாத சந்தர்ப்பவாத லும்பன்களின் வாழ்வுக்கே, இன்றைய போராட்டம் பலவழிகளிலும் பலமுனைகளிலும் வழிகாட்டியது, வழிகாட்டி நிற்கின்றது. இந்த உண்மையை நாம் எப்படி எந்த வழியில் எதிர்கொள்ளப் போகின்றோம்! இதுவே நேர்மையான ஒவ்வொரு மனிதன் முன்னுள்ள, அடிப்படையான கேள்வியாகும்.

பி.இரயாகரன்
25.04.2008

Friday, April 25, 2008

இது 'சூத்திர ஆட்சியா? பார்ப்பன ஆட்சியா?

தாழ்த்தப்பட்ட இளைஞர் வாயில் மலம் திணிப்பு!
·தேவர் சாதிவெறியர்களைப் பாதுகாக்கும் போலீசு!
இது 'சூத்திர ஆட்சியா? பார்ப்பன ஆட்சியா?


"சமூக நீதி'யின் தாயகம் எனச் சித்தரிக்கப்படும் தமிழகத்தில், சமூக அநீதிகளும் தாழ்த்தப்பட்டோர் மீது மிகக் குரூரமான வன்கொடுமைத் தாக்குதல்களும் கேள்விமுறையின்றித் தொடர்ந்து நடந்து வருகின்றன. கடந்த 2002ஆம் ஆண்டு திண்ணியத்தில் இராமசாமி, முருகேசன் எனும் இரண்டு தாழ்த்தப்பட்டோர் வாயில் ஆதிக்க சாதி வெறியர்கள் மலத்தைத் திணித்தனர். அதே ஆண்டில், திண்டுக்கல் அருகே பள்ளப்பட்டியில் சங்கன் என்ற தாழ்த்தப்பட்டவரை நடுவீதியில் அடித்து உதைத்த ஆதிக்க சாதிவெறியர்கள், அவர் வாயில் சிறுநீரைக் கழித்தனர். 2003ஆம் ஆண்டில், மதுரை மாவட்டம் கீழஉரப்பனூரில் முத்துமாரி என்ற தலித் பெண், மலத்தைக் கரைத்துக் குடிக்கக் கட்டாயப்படுத்தப்பட்டார். இந்த வரிசையில் இப்போது புதிதாக இன்னுமொரு வன்கொடுமைத் தாக்குதல் நடந்துள்ளது.

மதுரை மாவட்டம், சமயநல்லூர் வைகை நகரைச் சேர்ந்த, சட்டப்படிப்பு முடித்துள்ள தாழ்த்தப்பட்ட இளைஞரான சுரேஷ்குமார் என்பவரை கடந்த 26.9.07 அன்று இரவு சுற்றி வளைத்துத் தாக்கிய 9 பேரைக் கொண்ட தேவர் சாதிவெறியர்கள், அவரது ஆடைகளைக் கிழித்தெறிந்து உள்ளாடையுடன் தெருவில் ஓடவிட்டு அடித்து நொறுக்கி, தெரு ஓரத்தில் கிடந்த மலத்தை அள்ளி அவர் வாயில் திணித்ததோடு, சாக்கடையை அள்ளி அவர் மேல் ஊற்றி இழிவுபடுத்தியுள்ளனர். உடலெங்கும் பலத்த காயங்களோடு மதுரை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள தலித் இளைஞர் சுரேஷ்குமார், இப்படி வெறித்தனமாகத் தாக்கப்பட்டு அவமானப்படுத்தப்படும் அளவுக்கு அப்படி என்ன குற்றத்தைச் செய்து விட்டார்?

தேவர்சாதி வெறியரான கிள்ளிவளவன், சமயநல்லூர் ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர். தற்கால நிழல் தலைவரும் இவர்தான். (பெண் தொகுதியாக அறிவிக்கப்பட்டதால், தனது தம்பி மனைவியைத் தலைவராக்கி விட்டு, இவர் நிழல் தலைவராக செயல்பட்டு வருகிறார்.)

சமயநல்லூர் சட்டமன்றத் தொகுதி தனித் தொகுதியாகும். இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசிதான், தமிழக அரசில் ஆதி திராவிட நலத்துறை அமைச்சராக உள்ளார். எனினும், சமயநல்லூரில் செல்வாக்கு செலுத்துவது தேவர் சாதியினர் தான். அதிகாரப் போட்டியில் ஈடுபட்டு வருவதும் தேவர் மற்றும் சேர்வார் சாதியினரே. இப்போட்டியில் கடந்த 15 ஆண்டுகளில் வெற்றி பெற்று வருவதும் தேவர் சாதியைச் சேர்ந்த கிள்ளிவளவன் கும்பலே. இவ்வதிகாரப் போட்டியின் விளைவாக அடிக்கடி அடிதடிகளும், வெட்டுக் குத்துக்களும் நிகழ்வது வாடிக்கை. ஆனால், அத்தகைய அடிதடிகளிலெல்லாம் யாரும் சுரேஷ் அளவிற்கு மோசமாக இழிவுப்படுத்தப்பட்டதில்லை.

சுரேஷ், சமயநல்லூர் தி.மு.க. இளைஞரணிச் செயலாளராக செயல்பட்டு வந்துள்ளார். கிள்ளிவளவனும் தி.மு.க.வைச் சேர்ந்தவர்தான். கடந்த கூட்டுறவு சங்கத் தேர்தலில் சேர்வார் சாதியைச் சேர்ந்த தனது நண்பர்களுக்காக வேலை செய்தார் சுரேஷ். எதிர்த்துப் போட்டியிட்ட கிள்ளிவளவன், சுரேஷ் மற்றும் அவரது நண்பர்களை ஆள் வைத்து அடிக்க ஏவினார். இதில் அவர்கள் தப்பி விட்டனர்.

பின்னர், அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் மலையாளம் மூலம், தான் குடியிருந்த வைகை நகர் பகுதியில் சிமெண்ட் ரோடு போடச் செய்தார் சுரேஷ். ""அந்தப் பகுதிக்கு சிமெண்ட் ரோடு போடக் கூடாது'' எனத் தடையாக நின்ற கிள்ளி வளவனைப் பொதுமக்கள் ஆதரவோடு முறியடித்துள்ளார் சுரேஷ்.

இவைதான் கிள்ளிவளவனுக்கும் சுரேஷ்க்கும் இடையிலான பகை வளரக் காரணமான சம்பவங்கள். ஆனால், சுரேஷ் ஆதரிக்கும் சேர்வார் சாதியினரையோ பிற சாதி இந்துக்களையோ தாக்கி, வாயில் மலத்தை திணிக்கும் கொடூரத்தைச் செய்ய கிள்ளி வளவன் முற்படவில்லை. ""ஒரு பள்ளப் பயல், தனக்கு எதிராக செயல்படுவதா'' என்ற சாதிவெறியே சுரேஷ் மீதான தாக்குதலுக்குக் காரணம்.

சமமான அந்தஸ்துள்ள சாதியினரைத் தாக்குவதற்கும், ஒரு தாழ்த்தப்பட்டவர் என்பதனாலேயே வாயில் மலத்தைத் திணித்து தாக்குவதற்குமான சாதிவெறியின் கொடூர முகத்தை எளிதில் உணர முடியும். ஆனால், கொலைவெறியோடு தாக்கிய அந்த சாதிவெறி கும்பலின் மீது கொலை முயற்சி வழக்குக் கூடப் பதிவு செய்யாமல், கொலை மிரட்டல் விடுத்ததாக மட்டும் வழக்குப் பதிவு செய்துவிட்டு, சுரேஷ் மீது மாடு திருடியதாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசு துறையை இயக்குவது எது?

இரவு 11.30 மணிக்கு தாக்கப்பட்டு, 1 மணிக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுரேஷை, மறுநாள் மதியம் 3 மணி வரை நேரில் சந்தித்து வாக்குமூலத்தைப் பெற போலீசு துறை முயற்சிக்கவில்லை. குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேரில் கணேஷ், செந்தில் அரசு ஆகிய இரண்டு பேரை மட்டும் பெயரளவிற்குக் கைது செய்து விட்டு, பிற குற்றவாளிகள் சுதந்திரமாகத் திரிய போலீசு உதவியது. குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி தாழ்த்தப்பட்ட மக்கள், பகுஜன் சமாஜ் கட்சி தலைமையில் சமயநல்லூரில் ஆர்ப்பாட்டம் நடத்திய பொழுது அவர்களைப் பேசவிடாமல் தடுத்தும், ஒலிபெருக்கியை முடக்கச் செய்தும் அடாவடித்தனம் செய்தது போலீசு. கிள்ளிவளவனோ ஆர்ப்பாட்டத்திற்கு எதிரில் திமிராக நின்று புகைப் பிடித்துக் கொண்டிருந்தான். பின்னர் ஆர்.டி.ஓ. விசாரணை, தாசில்தார் விசாரணை எல்லாம் முடிந்த பிறகு, மற்ற குற்றவாளிகள் நீதிமன்றத்தில் சரணடைந்து, உடனடியாகப் பிணையில் வெளிவரவும் உதவியுள்ளது போலீசு. நீதித்துறையும் இதற்குத் துணை போயுள்ளது.

கிள்ளிவளவன் உட்பட குற்றவாளிகள் 9 பேரும் சுதந்திரமாக வெளியே திரிகின்றனர். அவர்கள் மீது சுரேஷûக்குக் கொலைமிரட்டல் விடுத்ததாக வழக்கு நடந்து வருகிறது. சுரேஷ் மீது மாடு திருடிய வழக்கும் நடந்து வருகிறது. குற்றவாளிகள் ஊருக்குள் சுதந்திரமாக நடமாடுகின்றனர். ஊருக்குள் போனால் மீண்டும் தாக்கப்படலாம் என்பதால், சுரேஷ் ஊருக்குச் செல்ல முடியாமல் தவிக்கிறார். தி.மு.க. தலைமையோ, தனது கட்சி ஊழியர் இப்படி வன்கொடுமைக்கு ஆளான பின்னரும் சாதிவெறியர்களுக்கு எதிராக வாய் திறக்க மறுக்கிறது.

திண்ணியத்தில் தாழ்த்தப்பட்டோர் வாயில் மலத்தைத் திணித்து வன்கொடுமையை ஏவிய சாதிவெறியர்கள் மீதான வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு இரண்டு மாதச் சிறைத் தண்டனை மட்டுமே அளித்து நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில், சுரேஷ்குமார் மீது வன்கொடுமையை ஏவிய தேவர் சாதிவெறியர்களுக்குக் கடுமையான தண்டனை அளிக்கப்படும் என்று நம்ப முடியுமா?

சட்டம், நீதிமன்றம், போலீசு, அதிகார வர்க்கம், ஓட்டுப் பொறுக்கிகள் அனைத்துமே தாழ்த்தப்பட்டோரை வஞ்சித்து ஏய்க்கும்போது, இனி தாழ்த்தப்பட்டோர் தமது சமூக உரிமைகளுக்காக அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்களுடன் இணைந்து ஆதிக்க சாதிவெறிக் கும்பலைத் தனிமைப்படுத்தி, அக்கும்பலின் வாக்குரிமை உள்ளிட்ட அனைத்து சிவில் உரிமைகளையும் ரத்து செய்யுமாறு, சட்ட வரம்புகளை மீறித் தெருப் போராட்டங்களில் இறங்குவதைத் தவிர, வேறென்ன வழி இருக்கிறது?


பு.ஜ. செய்தியாளர், மதுரை.

Thursday, April 24, 2008

மே.வங்கம்: போலி கம்யூனிச ஆட்சிக்கு எதிராக உழைக்கும் மக்களின் உணவுக் கலகம்

மே.வங்கம்:
போலி கம்யூனிச ஆட்சிக்கு எதிராக உழைக்கும் மக்களின் உணவுக் கலகம்

ழல் ரேசன் கடை முகவர்களுக்குச் சரமாரியாக அடி, உதை; அவர்களின் வீடுகள்கடைகளுக்குத் தீ வைப்பு என உழைக்கும் மக்களின் உணவுக் கலகம் மே.வங்கத்தின் பல மாவட்டங்களில் பற்றிப் படர்வதைக் கண்டு, அம்மாநிலத்தை ஆளும் போலி கம்யூனிச அரசு விழிபிதுங்கி நிற்கிறது.

தமிழ்நாட்டைப் போல் அல்லாமல், மே.வங்கத்தில் அவ்வப் பகுதிகளில் இருக்கும் தனியார் முகவர்களே உரிமம் பெற்றுக் கொண்டு ரேசன் கடைகளை நடத்தி வருகின்றனர். நியாய விலையில் வழங்க வேண்டிய அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்ணெண்ணெய் முதலானவற்றை இம்முகவர்கள் பல ஆண்டுகளாகக் கள்ளச் சந்தையில் விற்று ஏப்பம் விட்டுக் கொண்டிருந்தனர். தங்கள் வயிற்றிலடித்து வரும் இக்கொள்ளையர்களுக்கு எதிராகக் குமுறிக் கொண்டிருந்த உழைக்கும் மக்கள், கடந்த அக்டோபர் முதல் வாரத்தில் தன்னெழுச்சியாகத் திரண்டு போராடத் தொடங்கியதும், அது காட்டுத் தீயாகப் பல மாவட்டங்களிலும் பற்றிப் படர்ந்து, அம்மாநிலமே போர்க்களமாகக் காட்சியளிக்கிறது.

பங்குரா, பர்துவான், பிர்பும் மாவட்டங்களில் ரேசன் கடைகளைக் கைப்பற்றிய கிராமப்புற மக்கள், அடுத்த சில நிமிடங்களிலேயே பலநூறு பேரல்கள் மண்ணெண்ணையையும், பல நூறு அரிசி, கோதுமை, சர்க்கரை மூட்டைகளையும் தங்களுக்குள் விநியோகித்துக் கொண்டனர். உணவு தானியங்களைக் கள்ளச் சந்தையில் விற்றுவிட்டு, பல ஆண்டுகளாக அரசிடமிருந்து இவை வந்து சேரவில்லை என்ற ஒரே பொய்யைச் சொல்லி ஏய்த்து வந்த ரேசன் கடை கொள்ளையர்களைப் பிடித்து இழுத்தது வந்து நடுத்தெருவில் வைத்து பின்னி எடுத்தனர். அவர்களது கடைகள்கிடங்குகளைத் தீ வைத்துக் கொளுத்தினர். ஒரு கிராமத்திலிருந்து இன்னொரு கிராமம்; ஒரு வட்டத்திலிருந்து இன்னொரு வட்டம்; ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டம் என இக்கலகம் மாநிலமெங்கும் பரவியது.

பல கிராமங்களில் உள்ளூர் மக்கள் தாங்களே ஒரு பஞ்சாயத்து கூட்டத்தை நடத்தி, ரேசன் கடைக் கொள்ளையர்களுக்குத் தண்டனையாக அபராதங்களை விதித்துள்ளனர். கடந்த ஓராண்டு காலமாக அரிசியோ, கோதுமையோ வழங்காமல் ஏய்த்து, கள்ளச் சந்தையில் விற்று ஏப்பம் விட்ட இக்கொள்ளையர்கள், ஒவ்வொரு ரேசன் அட்டைக்கும் ரூ. 1000 வீதம் அபராதம் செலுத்த வேண்டும் எனப் பல கிராமப் பஞ்சாயத்துகள் தீர்ப்பளித்துள்ளன. இதைக் கண்டு பீதியடைந்த பல ரேசன் கடை கொள்ளையர்கள், தமது ரேசன் கடை உரிமத்தை அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டு ஊரைவிட்டே குடும்பத்தோடு தப்பியோடி விட்டனர்.

கிராமப்புற ஏழைகளுக்கு முறையாக ரேசன் பொருட்களை வழங்கக் கூட வக்கற்ற போலி கம்யூனிச அரசு, பஞ்சைப் பராரிகள் நடத்திவரும் உணவுக் கலகத்தையும் தண்டனைகள் தீர்ப்புகளையும் கண்டு அரண்டு போய், ""ஐயோ வன்முறை! அராஜகம்!'' என்று பெருங்கூச்சல் போட்டு, போலீசை ஏவி இத்தகைய போராட்டங்களை மிருகத்தனமாக ஒடுக்கி வருகிறது. லஃப்பூர் கிராமத்தில் ரேசன் கடைக் கொள்ளையர்களுக்கு எதிராக 2000 பேருக்கு மேல் அணிதிரண்டு போராடிய மக்கள் மீது மே.வங்க போலீசு கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தி இருவரைக் கொன்றது; பலரைப் படுகாயப்படுத்தியுள்ளது.

மே.வங்கத்தில் 30 ஆண்டுகளாகப் "பொற்கால ஆட்சி' நடப்பதாகப் பீற்றிக் கொள்ளும் சி.பி.எம். கட்சியினர், ஏழைகளுக்கு ரேசன் பொருட்களை முறையாக வழங்கக்கூட முடியாமல் போனது ஏன்? ரேசன் கடை ஊழல்கள் பல ஆண்டுகளாக நடந்து வந்த போதிலும் அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கக் கூட முடியாமல் போனது ஏன்? ஏனெனில், ரேசன் கடை கொள்ளையர்களில் பெரும்பான்மையினர் சி.பி.எம். கட்சியினர்தாம்! அதனாலேயே கடந்த பல ஆண்டுகளாக நடந்து வந்த இந்த ஊழல் கொள்ளைக்கு எதிராக மே.வங்க இடதுசாரி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, இக்கொள்ளையர்களைப் பாதுகாக்க சி.பி.எம். கட்சிக் குண்டர்கள் போராடும் மக்கள் மீது குண்டு வீச்சு துப்பாக்கிச் சூடு நடத்தி வெறியாட்டம் போட்டுள்ளனர்.

ஜமாலுதீன் ஷேக் என்ற ரேசன் கடைக் கொள்ளையனுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரசு கட்சித் தலைமையில் கிராமப்புற ஏழை மக்கள் ஆவேசமாகக் கிளம்பியபோது, சி.பி.எம். கட்சிக் குண்டர்கள் மக்கள் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி தமது கட்சிக்காரரைக் காப்பாற்றிச் சென்றுள்ளனர். நாராயண் தத்தா என்ற சி.பி.எம். கட்சிக்காரர் நடத்தி வந்த ரேசன் கடைக்கு எதிரே அரிசியும் கோதுமையும் வழங்கக் கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய போது, ஆத்திரமடைந்த இக்கொள்ளையன் அம்மக்கள் மீது நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு பலரைப் படுகாயப்படுத்தியுள்ளான். இக்கொலை வெறியாட்டத்துக்கு எதிராகப் பத்திரிகைகளும் மனித உரிமை அமைப்புகளும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியதும் வேறு வழியின்றி அவன் சி.பி.எம். கட்சியிலிருந்து நீக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளான்.

இச்சம்பவங்களையடுத்து பங்குரா மாவட்டத்தில் சி.பி.எம்.இன் கோட்டையாகச் சித்தரிக்கப்படும் நபாபட்டில் நடந்த பொதுக் கூட்டத்தில் சிறப்புரையாற்ற வந்த அத்தொகுதி எம்.எல்.ஏ.வான பிரதீபை சுற்றி வளைத்த உழைக்கும் மக்கள் தரும அடி கொடுத்து விரட்டியுள்ளனர். பல கிராமங்களில் சி.பி.எம். கட்சி அலுவலகங்கள் சூறையாடப்பட்டுள்ளன. இவற்றைக் கண்டு ""ஐயோ! வன்முறை வெறியாட்டம்!'' என்று அலறும் சி.பி.எம். கட்சி, தனது குண்டர் படையை வைத்து இரும்புத் தடி அரிவாள்களுடன் கண்டன ஊர்வலங்களை நடத்தி போராடும் மக்களை அச்சுறுத்தி வருகிறது. வன்முறையில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு பல கிராமங்களில் போராடிய மக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த பங்குரா மாவட்டத்தில்தான் 1960களில் சி.பி.எம். கட்சி ""கத்யா அந்தோலன்'' எனும் உணவு இயக்கத்தைத் தொடங்கி, உழைக்கும் மக்களின் ஆதரவைப் பெற்ற அரசியல் கட்சியாக வளர்ந்தது. இன்று இந்த பங்குரா மாவட்டத்தில் ரேசன் கடை கொள்ளையில் சிக்கியுள்ள 13 எம்.எல்.ஏ.க்களில் 10 பேர் சி.பி.எம். கட்சியினர். மற்றவர்கள் இடதுசாரி கூட்டணிக் கட்சியினர். இன்று அதே பங்குரா மாவட்டத்தில், ""உழைக்கும் மக்களே, பட்டினியால் துவளாதீர்கள்; ரேசன் கடை கிடங்குகள் மக்களுடையது; அதைக் கைப்பற்றுவோம், வாரீர்!'' என்று மாவோயிஸ்டு கட்சியினர் தமது ""கொரில்லா பார்ட்டா'' பத்திரிகையில் அறைகூவல் விடுத்து, உழைக்கும் மக்களை அணிதிரட்டி வருகின்றனர். சி.பி.எம். ஆட்சிக்கு எதிரான உழைக்கும் மக்களின் உணவுக் கலகத்தை அறுவடை செய்து அரசியல் ஆதாயமடையும் நோக்கத்துடன், திரிணாமுல் காங்கிரசு தலைவியான மம்தா பானர்ஜி இதே பங்குரா மாவட்டத்தில் ""கத்யா அந்தோலன்'' இயக்கத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார்.

சிங்கூர் நந்திகிராமத்தில் நடந்த பாசிச கொலை வெறியாட்டங்களை மூடிமறைத்து, போராடும் மக்களையும் எதிர்க்கட்சியினரையும் வன்முறைக் கும்பலாகச் சித்தரித்து எதிர்ப்பிரச்சாரம் செய்து வந்த சி.பி.எம். கட்சி, இப்போது மே.வங்கத்தில் பற்றிப் படரும் உணவுக் கலகத்தை மூடி மறைக்கவோ, ரேசன் கடை ஊழல் கொள்ளையை நியாயப்படுத்தவோ முடியாமல் தடுமாறி நிற்கிறது.வறுமைக் கோட்டுக்கு மேலுள்ள குடும்பங்களுக்கான அத்தியாவசிய உணவுப் பொருட்களின் ஒதுக்கீடுகளை மைய அரசு பெருமளவு குறைத்து விட்டதாலேயே, மே.வங்கத்தில் ரேசன் பொருட்களை முறைப்படி விநியோகிக்க முடியவில்லை என்று மைய அரசு மீது குற்றம் சாட்டுகிறார், சி.பி.எம். கட்சி எம்.பி.யான பிருந்தா கரத். மே.வங்கம் மட்டுமல்ல; உலக வங்கியின் உத்தரவுப்படி, நாடெங்கும் வறுமைக் கோட்டுக்கு மேலுள்ள குடும்பங்களுக்கு ரேசன் ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டுள்ளன என்பது உண்மைதான். இந்த உண்மைகளை மக்களிடம் விளக்கி, மைய அரசுக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடுவதை விடுத்து, போராடும் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, உழைக்கும் மக்களின் உணவுக் கலகங்களை பாசிச முறையில் ஒடுக்கி வருகிறது, மே.வங்க "இடதுசாரி' அரசு.

இந்நிலையில் 30 ஆண்டு காலமாகப் பொற்கால ஆட்சி நடப்பதாகப் புளுகிக் கொண்டு, அடித்தட்டு மக்களுக்கு நியாயமாக வழங்கவேண்டிய அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் கூட பதுக்கி விற்று, ஏழைகளின் வயிற்றிலடிக்கும் கொள்ளைக் கூட்டமாகச் சீரழிந்துவிட்ட சி.பி.எம். கட்சியை, உழைக்கும் மக்களுக்கான கட்சி என்று கருதுவதற்கு அடிப்படை ஏதாவது இருக்கிறதா?
· குமார்

Wednesday, April 23, 2008

"மார்க்சிஸ்டு'களின்" பார்ப்பன சேவை


"மார்க்சிஸ்டு'களின்" பார்ப்பன சேவை


டுத்து வரும் தேர்தல்களில் ""இந்துக்களின் ஆசியும் ஆதரவும் பெற்ற சின்னம் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்'' என்று இந்துவெறி பா.ஜ.க.வுக்குப் போட்டியாக இடதுவலது போலி கம்யூனிஸ்டுகள் விளம்பரம் செய்து ஓட்டுப் பொறுக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கொலைகார காஞ்சி மட சங்கராச்சாரி ஜெயேந்திரனுக்கு ""அரசு விருந்தினர்'' என்ற சிறப்புத் தகுதியளித்து கடந்த டிசம்பரில் வரவேற்று உபசரித்து, பார்ப்பன கும்பலுக்கு விசுவாசமாகச் செயல்பட்ட கேரள "மார்க்சிஸ்டு' முதல்வர் அச்சுதானந்தன், இப்போது பார்ப்பன முறைப்படி விஜயதசமி சடங்குகளைச் செய்து அசத்தியுள்ளார்.

நவராத்திரியும் விஜயதசமியும் பார்ப்பனர்களாலும் பார்ப்பனமயமாகிவிட்ட "மேல்' சாதியினராலும் கொண்டாடப்படும் பண்டிகை. விஜயதசமி எனும் "நல்ல' நாளில் குழந்தைகளுக்கு கல்வி கற்பித்தலைத் தொடங்கும் சடங்கு பார்ப்பன "மேல்' சாதியினரால் நீண்டகாலமாகப் பின்பற்றப்படுகிறது. குடும்பத்தில் மூத்தவர்கள் அல்லது ஆசிரியர்களைக் குருவாக வைத்து அவர்களது ஆசியுடன் குழந்தைக்குக் கல்வி கற்பிக்கும் சடங்கை அவர்கள் நடத்துவர்.

கேரள முதல்வர் "தோழர்' அச்சுதானந்தனும் தனது தனிச்செயலரின் மகளான சநிக்தாவுக்கு, விஜயதசமி நாளன்று தங்க மோதிரத்தைத் தேனில் தொட்டு, குழந்தையின் நாக்கில் ""ஹரி ஸ்ரீ கணபதியாயே நமஹ'' என எழுதி, ""குரு ஸ்தானத்தில்'' இருந்து அக்குழந்தைக்கு கல்வியைத் தொடங்கினார். பின்னர், அகன்ற தட்டில் நிரப்பப்பட்டிருந்த மஞ்சள் கலந்த அரிசியில் அக்குழந்தையின் பிஞ்சு விரல்களைப் பிடித்து ""ஹரி ஸ்ரீ'' என்று அட்சரம் எழுதி ""வித்யாரம்பம்'' எனும் இச்சடங்கை பார்ப்பன முறைப்படி நடத்தியுள்ளார்.

"மார்க்சிஸ்டு' கட்சியின் மூத்த தலைவரும் மத்திய கமிட்டி உறுப்பினருமான கேரள முதல்வர் அச்சுதானந்தனே இப்படிச் செய்யும்போது, மற்ற "மார்க்சிஸ்டு' அமைச்சர்கள் சும்மாயிருப்பார்களா? மாநில கல்வியமைச்சரும் மாநிலக் கமிட்டி உறுப்பினருமான எம்.ஏ.பேபி, இத்தகைய ""வித்யாரம்பம்'' விழாக்களில் பங்கேற்று, ""குரு ஸ்தானத்தில்'' இருந்து பல குழந்தைகளுக்கு கல்வி புகட்டும் சடங்கை நடத்தியுள்ளார். நிதியமைச்சரான தாமஸ்ஐசக், தனது மதச்சம்பிரதாயப்படி, குழந்தைகளின் நாக்கில் தங்கமோதிரத்தை தேனில் தொட்டு சிலுவைக் குறியை வரைந்துள்ளார். உள்ளூர் "மார்க்சிஸ்டு' பிரமுகர்களோ, தமது பங்கிற்கு கோயில்களில் இச்சடங்கை கோலாகல விழாவாக நடத்தியுள்ளனர்.

""நான் முதலில் பார்ப்பான்; அப்புறம் இந்து; அதன்பிறகுதான் கம்யூனிஸ்ட்'' என்று பகிரங்கமாக அறிவித்து "புரட்சி' செய்தார், மே.வங்க "மார்க்சிஸ்டு' அமைச்சரான சுபாஷ் சக்ரவர்த்தி. கேரள "மார்க்சிஸ்டு'களோ பார்ப்பன சேவையில் அவரையே விஞ்சுகின்றனர். இப்படி பார்ப்பனியத்துடன் சமரசம் செய்து கொண்டு சேவை செய்வதைத்தான், மத நல்லிணக்கம் என்று இப்போலி கம்யூனிஸ்டுகள் சித்தரிக்கிறார்கள். இந்த லட்சணத்தில் இந்துவெறி பாசிச பயங்கரவாதத்தை சி.பி.எம். கட்சி வீழ்த்திவிடும் என்று யாராவது சொன்னால், ஆர்.எஸ்.எஸ். காரன்கூட வாயால் சிரிக்க மாட்டான்.

Tuesday, April 22, 2008

லெனின் : உலகைக் குலுக்கிய ரசியப் புரட்சி

1917 நவம்பர். பிரம்மாண்டமான ரசியா கரைந்து உருமாறிக் கொண்டிருந்தது. 1917 பிப்ரவரி முதலாளித்துவ புரட்சி பழைய ஆட்சியின் செல்லரித்துப் போன அமைப்பை நீடிக்க வைத்ததற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாமல் முடிவுற்றது. ஆனால் இப்போது போல்ஷ்விக்கு புரட்சியாளர்கள் இந்த அமைப்பைச் சிதறச் செய்துவிட்டனர்.

பழைய ரசியா இல்லாதொழிந்தது. ஊழிக்காலத் தீயிலே மானுட சமுதாயம் உருகித் திரவமாய் ஓடிற்று. இந்தத் தத்தளிக்கும் தீக்கடலிலிருந்து இரக்கமற்ற அப்பட்டமான வர்க்கப் போராட்டமும், புதிய கிரகங்களது மெல்லக் குளிர்ந்து கெட்டியாகும் மொறுமொறுப்பான மேலோடும் உருவாகி வெளிப்பட்டன.

ரசியப் புரட்சி இரண்டு அங்கங்களைக் கொண்டது. முதலாவது, பழைய ஆட்சியினை ஒழித்திடுதல், இரண்டாவது புதிய ஆட்சியினை உருவாக்குதல்.

ரசிய உழைப்பாளி மக்கள் கடந்து கொண்டிருந்த இன்னல்மிக்க இத்தருணத்தில் ஸ்மோல்னி மாளிகை லெனின் தலைமையிலான புரட்சி போல்ஷ்விக் கட்சியின் செயல்தளமாகச் செயல்பட்டது. சிறுபான்மை மென்ஷ்விக்கு சமரசவாதிகளும், "சோசலிசப் புரட்சியாளர்கள்' என்று தங்களை அழைத்துக் கொண்ட வலதுசாரிகளும் தொழிலாளி வர்க்கத்துக்குத் துரோகமிழைத்து, கெரன்ஸ்கி அரசாங்கம் கூடிய விரைவில் அரசியல் நிர்ணய சபையைக் கூட்டுவதாகச் சொல்லி கண்ணா மூச்சி ஆட்டம் ஆடித்தள்ளிப் போட்டு வந்ததையே நியாயப்படுத்தி, மக்களை அமைதியாக இருக்கும்படி கோரிக்கை விட்டனர். இதனால் தொழிலாளி வர்க்கத்துக்குத் துரோகமிழைத்து அரசியல் சாகசக்காரன் கெரன்ஸ்கி, பழைய ரசிய இராணுவ ஜெனரல் கர்னீலவ் ஆகியோருடன் கூட்டுச் சேர்ந்து கொண்டார்கள்.

இத்தகைய கடுமையான சூழ்நிலையில் லெனினது போல்ஷ்விக் கட்சி தொழிலாளர்கள், விவசாயிகள், படையாட்களை ஒருங்கிணைத்து புரட்சியை வழிநடத்தியது.

ரசியப் புரட்சி முதலாளித்துவப் புரட்சிகளைப் போல புதிய உற்பத்திக் கருவிகளை அல்ல, புதிய வகை மனிதர்களையும் மனித உணர்ச்சிகளையும் உருவாக்கியது. பிறருக்காக அனைவருக்காகவும் அனைவரும் சிந்திக்கும் மனித அறிவு மற்றும் உணர்வு நிலையை உலகுக்கு வழங்கியது. கோடானுகோடி மக்களை ஏகாதிபத்திய மறுகாலனியாதிக்கச் சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராக ஒரு புள்ளியில் இணைக்கும்போது இந்தச் சித்திரம் நமக்கும் முழுமை பெறும்.

(மூலநூலான ஜான் ரீடின் "உலகைக் குலுக்கிய பத்து நாட்களி'லிருந்து சிறு பகுதியை கீழே வெளியிடுகிறோம்.)

நவம்பர் 8, 1917: ஸ்மோல்னியில் சூழ்நிலை முன்பு இருந்ததையும்விட கடுமையாகி ஒரே அமர்க்களமாயிருந்தது. இருண்ட நடைவழிகளில் முன்பு போலவே ஆட்கள் சிட்டாய்ப் பறந்தனர்; தொழிலாளர் குழுவினர் துப்பாக்கி ஏந்தி நின்றனர்; தடித்த கைப்பைகள் வைத்திருந்த தலைவர்கள், நண்பர்களும் துணைவர்களும் புடை சூழ்ந்து வர, வாதாடிக் கொண்டும் விளக்கிச் சொல்லிக் கொண்டும் கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டும் பரபரக்க விரைந்து சென்றனர். மெய்யாகவே இவர்கள் மெய்மறந்தோராய் இயங்கினார்கள். இராப் பகலாய்க் கண் துஞ்சாமல் ஓயாது உழைக்கும் அருந்திறல் படைத்தோராய் இருந்தார்கள் — முகம் மழிக்கப்படவில்லை. மேலெல்லாம் அழுக்கு, கண்கள் சிவந்து ஜிவுஜி வுத்தன. அடங்காத ஆர்வத்தை விசையாய்க் கொண்டு தமது நிலையான குறிக்கோளை நோக்கி இவர்கள் முழு வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தவர்கள். இவர்கள் செய்ய வேண்டியிருந்தவை நிறைய இருந்தன, அளவின்றி நிறைய இருந்தன! அரசாங்கத்தை உருவாக்கியாக வேண்டும், நகரில் ஒழுங்கை நிலைபெறச் செய்தாக வேண்டும், நகரக் காவல் படையைத் தம் பக்கத்தை விட்டுச் செல்லாதிருக்கும்படி பார்த்துக் கொண்டாக வேண்டும், டூமாவையும் இரட்சணியக் கமிட்டியையும் எதிர்த்துப் போராடியாக வேண்டும், ஜெர்மானியரை உள்ளே விடாதிருக்க வேண்டும், கேரென்ஸ்கியுடன் போர் புரியத் தயார் செய்தாக வேண்டும், என்ன நடந்திருக்கிறதென்று மாநிலங்களுக்குத் தெரிவித்தாக வேண்டும், அர்ஹான்கேல்ஸ்கிலிருந்து விளதிவஸ்தோக் வரையில் பிரச்சாரம் செய்தாக வேண்டும்.

சரியாய் எட்டு நாற்பதுக்கு, இடியென அதிர்ந்த வாழ்த்துக்க ளுக்கும் கையொலி முழக்கத்துக்கும் இடையே தலைமைக் குழுவினர் உள்ளே வந்தார்கள், அவர்களிடையே லெனினும் மேதை லெனினும் இருந்தார். லெனின் விசித்திரமான மக்கள் தலைவர் முற்றிலும் அறிவாற்றல் என்னும் ஒரேதகுதியின் காரணமாய்த் தலைவராகியவர். வண்ணக் கவர்ச்சியில்லை, மிடுக்கில்லை, மனம் தளர்ந்து விட்டுக் கொடுக்கும் இயல்பில்லை, தன்வயப்பட்ட விருப்பு வெறுப்பில்லை, படாடோபமான தனிப் பாணிகள் இல்லை ஆனால் ஆழ்ந்த கருத்துக்களை எளிய முறையில் விளக்கும் ஆற்றலும் ஸ்தூல நிலைமையைப் பகுத்தாராயும் திறனும் நிரம்பப் பெற்றவர். இவற்றுடன் கூட மதிநுட்பமும் அசாதாரணமான தொலை நோக்குப் பார்வையும் சேர்ந்திருந்தன.

இப்போது லெனின் உரைமேடையின் ஓரத்தைப் பிடித்துக் கொண்டு நின்றார். சிமிட்டிக் கொண்ட அவரது சிறு கண்கள் பிரதிநிதிகளது கூட்டத்தின் மீது ஒரு தரம் வட்டமிட்டு விட்டு வந்தன. கையொலி முழக்கம் நிற்பதற்காக அவர் காத்திருந்தார். ஓயாமல் சில நிமிடங்களுக்கு நீடித்த இந்த முழக்கம் அவரைப் பாதித்ததாய்த் தெரியவில்லை. அது நின்றதும் மிகவும் எளிய முறையில் அவர் சுருக்கமாய்க் கூறினார்: ""இப்போது நாம் சோசலிச அமைப்பைக் கட்டியெழுப்ப ஆரம்பிக்கலாம்!'' திரும்பவும் கட்டுக்கடங்காத ஆர்வ முழக்கம்.
""சமாதானத்தைக் கைகூடச் செய்வதற்கு நடைமுறை நடவடிக்கைகளை மேற்கொள்வதுதான் நம் முன்னுள்ள முதலாவது பணி... போரிடும் எல்லா நாடுகளின் மக்களுக்கும் நாம் சோவியத்து வரையறைகளின் அடிப்படையில் பிரதேசம் பிடித்தல் இல்லை, இழப்பீடுகள் இல்லை, தேசங்களது சுயநிர்ணய உரிமை ஆகியவற்றின் அடிப்படையில் சமாதானத்தை முன்மொழிவோம். அதேபோது ஏற்கெனவே நாம் வாக்களித்தது போல், இரகசிய உடன்படிக்கைகளை வெளியிட்டு, பழையனவற்றை நிராகரிப்போம்... யுத்தத்தையும் சமாதானத்தையும் பற்றிய பிரச்சினை தெட்டத் தெளிவானது. ஆகவே, போரிடும் எல்லா நாடுகளின் மக்களுக்கும் பிரகடனம் என்பதான இந்தத் திட்டத்தை இங்கு நான் முன்னுரை எதுவும் இல்லாமலே படித்துக் காட்டலாமென நினைக்கிறேன்...''

""போரிடும் எல்லா நாடுகளின் மக்களுக்கும் அரசாங்கங்களுக்கும் பிரகடனம்: நவம்பர் 6,7ஆம் நாள் புரட்சியால் தோற்றுவிக்கப்பட்டு, தொழிலாளர்கள், படையாட்களை, விவசாயிகள் பிரதிநிதிகளது சோவியத்துகளை அடிப்படையாய்க் கொண்டு அமைந்த தொழிலாளர்கள், விவசாயிகளது அரசாங்கம் நேர்மையான, ஜனநாயகத் தன்மையதான சமாதானத்திற்காக உடனே பேச்சவார்த்தைகள் தொடங்கும்படி, போரிடும் எல்லா நாடுகளின் மக்களுக்கும் அவர்களது அரசாங்கங்களுக்கும் முன்மொழிகிறது....''

இடியென அதிர்ந்த கையொலி முழக்கம் பிரகடனத்தை வரவேற்றது. லெனின் தொடர்ந்து விளக்கிப் பேசினார்.

மணி சரியாய் 10.35 ஆயிற்று, பிரகடனத்துக்கு ஆதரவாய் இருப்போர் எல்லோரும் அவர்களது பிரதிநிதிச் சீட்டுகளை உயர்த்திக் காட்ட வேண்டுமென்று கூறினார் காமெனெவ். பிரகடனம் ஒருமனதாய் ஏற்கப்பட்டது.
சொல்லி வைத்தாற் போல் எல்லோரும் ஒரு திடீர் உணர்ச்சியால் உந்தப்பட்டு எழுந்து நின்று, ஒரே குரலாய் ஒருங்கிணையும் வண்ணம் சர்வதேசியக் கீதம் பாட முற்பட்டோம். தலை நரைத்த முதுபெரும் படையாள் ஒருவர் சிறு குழந்தை போல் விம்மியழுதார். அலெக்சாந்திரா கொலன்தாய்ழூ சட்டெனக் கண்ணீர்த் துளியைத் துடைத்து அகற்றிக் கொண்டார். அந்த ஆழ்ந்த பண்ணொலி மண்டபத்தில் பெருக்கெடுத்து, சன்னல்களையும், கதவுகளையும் அதிரச் செய்து, வெளியே நிசப்த வானத்துள் உயர்ந்து எழுந்தது. ""யுத்தம் முடிவுற்றது! யுத்தம் முடிவுற்றது!'' என் அருகே நின்ற இளந்தொழிலாளி ஒருவர் முகம் பளிச்சிட்டு ஒளிரக் கூறினார்.

கீதம் முடிவுற்ற நிசப்தத்தால் சங்கடப்படுவோராய் நாங்கள் நின்று கொண்டிருந்த அக்கணத்தில் மண்டபத்தின் பின் வரிசையிலிருந்து பலத்த குரலில் கூறினார் ஒருவர்: ""தோழர்களே! சுதந்திரத்துக்காக உயிர் நீத்தோரை நினைவு கூர்வோம்!'' உடனே எல்லோருமாய்ச் சேர்ந்து சவ அடக்கப் பண்ணை இசைக்க ஆரம்பித்தோம். அடிமேல் அடி வைத்துச் செல்லும் துயரார்ந்த பண். ஆயினும் வெற்றியை முழங்குவது, முழுக்க முழுக்க ரசியப் பண்ணாய் அமைந்தது. நெஞ்சை நெக்குருகச் செய்வது. சவ அடக்கப் பண் இருளில் வதைந்த ரசியப் பெருந்திரளினரது இதயத்தின் பண்ணாய் ஒலிப்பது இந்தப் பெருந்திரளினரின் பிரதிநிதிகள்தான் இம்மண்டபத்தில் அமர்ந்து, தெளிவின்றி மங்கலாய்த் தமக்குத் தெரிந்தவற்றைக் கொண்டு ஒரு புதிய ரசியாவை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள்.

வெஞ்சமரில் உயிர் நீத்தீர்
வீரத் தியாகிகளாய், மக்கள்தம்
விடுதலைக்காக,
மக்கள்தம் மானம் காக்க...
இன்னுயிர் ஈந்தீர், உயிரனையவை யாவும் ஈந்தீர்;
கொடுஞ் சிறையில் வதைபட்டீர்,
கொடுமைக்கோர் அளவில்லை,
கடுங்காவல் கைதிகளாய்ச்
சங்கிலிகளில் தொலைவிடங்கள்
சென்றீர்...
சங்கிலி சுமந்து உடல் வருந்தினீர்,
உள்ளம் வருந்தவில்லை,
பட்டினியில் வதைந்த உம்
சோதரரையே
உள்ளத்தில் நினைத்திருந்தீர்;
ஒடுக்குவோரின் வாள் வீழ்ந்துபடும்,
நீதி வெல்லுமென அஞ்சாது நின்றீர்....
நீவீர் ஈந்த இன்னுயிரின் வெற்றிநாள்
இதோ வருகிறது;
கொடுங்கோன்மை தகர்ந்துவிழும், தளையறுந்து
பேருருவினராய் எழுவர் மக்கள்!
சென்று வருக சோதரர்காள்!
அழியாப் புகழ்கொண்ட
பாதை உமது பாதை!
புதுப்படை வருகிறது
உமைத் தொடர்ந்து,
சாவுக்கு அஞ்சாத படை...
சென்றுவருக சோதரர்காள்!
அழியாப் புகழ் கொண்ட
பாதை உமது பாதை!
சூளுரைக்கிறோம் உமது சமாதியில், விடுதலைக்காக,
மக்கள் தம் இன்ப வாழ்வுக்காக,
போராட, பாடுபட சபதம் ஏற்கிறோம்...

இதற்காகத்தான் அங்கே துஞ்சுகிறார்கள், மார்ச் மாதத்தியாகிகள் குளிரில் அமைந்த அவர்தம் சோதரத்துவச் சமாதியிலே. இதற்காகத்தான் ஆயிரமாயிரமாய் மடிந்தார்கள் சிறைக்கூடங்களில், தொலைவிடங்களில், சைபீரியச் சுரங்கங்களில்... இது வந்த விதம் இவர்கள் எதிர்பார்த்தது போன்றதாயில்லை, அறிவுத்துறையினர் விரும்பியது போன்றதாகவும் இல்லை. ஆனால் வந்து சேர்ந்தது இது கரடுமுரடானது, பெரும் பலம் படைத்தது, சூத்திரங்களுக்கு அடங்காதது, உணர்ச்சிப் பசப்புகளை மதியாதது; மெய்யானது...

மு பஷீர்

அலெக்சாந்திரா கொலன்தாய் (1872 1952): 1915லிருந்து போல்ஷ்விக் கட்சியின் உறுப்பினர், நவம்பர் புரட்சிக்குப் பிறகு பொதுநலத்துறை மக்கள் கமிசார்.

நேபாளம்: சதிகளுக்கு எதிராக மாவோயிஸ்டுகளின அரசியல் உத்தி

நேபாளம்:
சதிகளுக்கு எதிராக மாவோயிஸ்டுகளின அரசியல் உத்தி

நேபாளத்தில் மன்னராட்சியை நீக்கிவிட்டு, ஐந்து மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா தலைமையிலான இடைக்கால அரசாங்கத்திலிருந்து கடந்த மாதம் மத்தியில் நேபாள கம்யூனிஸ்டு (மாவோயிஸ்டு) கட்சி விலகி விட்டது. இதன்மூலம் நேபாளத்தில் ஜனநாயக முறையில் ஒரு குடியரசை நிறுவுவதற்காக அமைதிவழி முன்னெடுப்புகளை அக்கட்சி சீர்குலைத்துவிட்டதாக நேபாளத்திலும் இந்தியாவிலும் உள்ள பிற்போக்காளர்கள், போலி கம்யூனிஸ்டுகளோடு சேர்ந்து கூச்சல் போடுகிறார்கள்.

""அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல்களுக்கு முன்பாகவே நேபாளத்தை ஒரு குடியரசு நாடாக உடனடியாக அறிவிக்கவேண்டும்; மக்கள் தொகையின் விகிதாச்சார அடிப்படையிலான பேரவையைக் கொண்ட கூட்டாட்சி அமைப்பு ஏற்படுத்த வேண்டும்'' என்ற இரண்டு கோரிக்கைகளை முன்வைத்த நேபாள மாவோயிசக் கட்சி, அவற்றை இடைக்கால அரசாங்கம் ஏற்காத நிலையில்தான் தனது நான்கு அமைச்சர்களை அதிலிருந்து விலக்கிக் கொண்டுள்ளது. இடைக்கால அரசாங்கம் அமைந்தபோது போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறி, உள்நோக்கத்தோடு மாவோயிஸ்டுகள் நடப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

உலகிலேயே ஒரே இந்து நாடு என்று பெருமையடித்துக் கொள்ளப்பட்ட நேபாளத்தில் பிரேந்திரா, மகேந்திரா என்று நூற்றாண்டுக்கணக்கில் மன்னர்களின் ஆட்சி நடந்து வந்தது. நேபாளத்தைத் தனது தொங்குசதை நாடாக நடத்தி வந்த இந்தியா, மன்னராட்சி முறைக்குத் தொடர்ந்து முட்டுக் கொடுத்து வந்தது. மன்னராட்சியை எதிர்த்து அவ்வப்பொழுது நடந்த மக்கள் எழுச்சிகளைக் காட்டிக் கொடுத்து, சமரசம் செய்து கொண்ட ஓட்டுக்கட்சிகள், மன்னராட்சியின் கீழ் அதிகாரமற்ற பஞ்சாயத்து அமைப்பு முறையையே ஜனநாயகம் என்று ஏற்றுக் கொண்டிருந்தன. ஆனால், அந்தப் பஞ்சாயத்துக்களையே கூட கலைத்து, அரசியலையே கேலிக் கூத்தாக்கி வந்தார்கள் நேபாள மன்னர்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அரண்மனைக் கொலைகள் ஆட்சிக் கவிழ்ப்புகள் மூலம் மன்னர் மகேந்திராவின் பங்காளியான ஞானேந்திரா ஆட்சியைக் கைப்பற்றினார். ஞானேந்திராவின் கொடுங்கோலாட்சியை எதிர்த்து நேபாள மக்கள் பேரெழுச்சிகளை நடத்தினர். மன்னர் மகேந்திராவின் ஆட்சிக் காலத்திலிருந்தே நேபாளத்தில் புதிய ஜனநாயகத்தை நிறுவும் இலட்சியத்தோடு ஆயுதப் போராட்டம் நடத்தி, நேபாளத்தின் பல மாவட்டங்களில் (பத்தாண்டுகளுக்கு மேலாக) மக்கள் அதிகாரத்தை நிறுவியிருந்த நேபாள மாவோயிசக் கட்சி மக்கள் எழுச்சிக்குத் தலைமையேற்ற பிறகு, மன்னராட்சி தூக்கியெறியப்பட்டது.

மன்னராட்சியை எதிர்ப்பதாகவும், ஜனநாயகத்துக்காகப் போராடுவதாகவும் நாடகமாடிக் கொண்டிருந்த ஓட்டுக் கட்சிகள், மக்கள் எழுச்சிக்குத் தலைமையேற்கவோ, மாற்று அரசியல் தீர்வு காணவோ திராணியற்ற நிலையில், நேபாள மாவோயிசக் கட்சியின் நிபந்தனைகளை ஏற்று, ஒப்பந்தம் போட்டுக் கொண்டன. நேபாளக் காங்கிரசின் முன்னாள் பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா தலைமையிலான இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது.

இமயமலைத் தொடரின் அடிவாரத்தில் உள்ள சமவெளிப் பகுதி தெராய் மண்டலம் என்றழைக்கப்படுகிறது. இந்தத் தெராய் மண்டலத்தின் ஒருபகுதி இந்தியாவை அடுத்துள்ள நேபாளத் தெற்குப் பகுதியாகவும் அமைந்துள்ளது. நேபாளத்தின் மக்கள் தொகையில் 33 சதவீதமான மாதேசிகள் இந்தப் பகுதியில் வாழுகின்றனர். இவர்கள், மலைவாசிகள் என்றழைக்கப்படும் நேபாளத்தின் பிறபகுதி மக்களிடம் இருந்து மாறுபட்டு இந்தியாவின் உ.பி., பீகார் மாநில மக்களோடு பண்பாடு, மொழி மற்றும் சமூக ரீதியில் நெருக்கமாக உள்ளவர்கள். இதனால் மாதேசிகள் வெளியாட்கள் என்று பெரும்பான்மை நேபாளிகளால் ஒதுக்கப்பட்டிருந்தார்கள்.

நேபாள மாவோயிசக் கட்சி தாழ்த்தப்பட்டவர்கள், மாதேசிகள் மற்றும் சிறுபான்மையினர் ஆகிய ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களுக்காகப் பாடுபட்டு அம்மக்களின் ஆதரவைப் பெற்றிருப்பதோடு, இடைக்கால நாடாளுமன்றத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் அம்மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவமும் வழங்கியிருக்கிறது. மாதேசி தேசிய விடுதலை முன்னணி என்ற அமைப்பையும் அக்கட்சி ஆதரிக்கிறது. ஆனால், மாவோயிசக் கட்சிக்கும் அதன் சமாதான முன்னெடுப்புகளுக்கும் எதிராகக் கலகமூட்டும் செயல்களில் அந்நிய சக்திகளும் (இந்தியா மற்றும் அமெரிக்கா) முன்னாள் மன்னராட்சிக்கு விசுவாசமான சக்திகளும் தெராய் மண்டலத்திலுள்ள சில சுயநல குழுக்களை ஏவிவிட்டன.

கடந்த ஆண்டு நேபாள அரசியலில் ஏற்பட்ட நெருக்கடியை ஒட்டி மாதேசியின் மக்கள் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக் கொண்டு குறைந்தது 22 ஆயுதந்தாங்கிய குழுக்கள் தோன்றின. அவற்றில் பலவும் பல்வேறு சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டிருந்த அதேசமயம், ஜனதாந்திரிக் தெராய் விடுதலை முன்னணி என்ற பெயரில் இரண்டு குழுக்கள் இயங்கின. தெராய் பகுதிக்குத் தனிநாடு, முதல் நாடாளுமன்றத்தில் இடஒதுக்கீடு மற்றும் மாதேசி மக்களுக்கான சுயாட்சி வரை பல கோரிக்கைகளை அக்குழுக்கள் எழுப்பின. தெராய் பகுதியில் உள்ள குழுக்களைப் பயன்படுத்தி மாதேசி மக்களிடையே ""பிளவுபடுத்தி ஆளும்'' தந்திரத்தை நேபாள இடைக்கால அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள ஓட்டுக் கட்சிகளின் தலைமைகள் மேற்கொண்டன. இவற்றின் பின்ணனியில் இந்தியாவும் அமெரிக்காவும் செயல்பட்டன.

இந்த நிலையில், நேபாள மலைவாழ் பகாடி பிரிவை சேர்ந்த சிலரால் அப்துல் மொய்துகான் என்ற மாதேசி இசுலாமியத் தலைவர் கொல்லப்பட்டார். இவர் மாவோயிசக் கட்சியின் எதிர்ப்பாளர் என்பதால், அவரது ஆதரவாளர்களால் மாவோயிசக் கட்சியினர் பலர் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து இந்தியாவின் உத்திரப்பிரதேச எல்லையில் உள்ள கபிலவஸ்து எனற தெராய் பகுதியின் மைய மாவட்டத்தில் பல மாதேசிகளின் வீடுகளும் தொழிலகங்களும் ஒரு மசூதியும் கூட பகாடிகளால் தாக்கிக் கொளுத்தப்பட்டன. 30க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டும் 5,000 பேர் அகதிகளாக்கப்பட்டபோதும், அந்நிய, உள்நாட்டுச் சக்திகள் எதிர்பார்த்தபடி இந்துமுசுலீம் கலவரம் வெடித்து விடவில்லை. ஆனால், இந்தியாவின் பீகார், உத்திரப்பிரதேசத்திலுள்ள தெராய் பகுதியுடனான சமூக உறவுகளைப் பயன்படுத்தி மாதேசிக் குழுக்கள் ஆயுதங்களும் பிற உதவிகளும் பெற்று இயங்கி வருகின்றன.

நேபாள மாவோயிசக் கட்சியின் நீண்டகால இலக்கு மக்கள் ஜனநாயக அரசமைப்பை நிறுவுவதுதான் என்றபோதும், மன்னராட்சிக்கு எதிரான மக்கள் எழுச்சிக்குத் தலைமையேற்று, ஓட்டுக்கட்சிகளுடன் ஒரு உடனடி திட்டம் ஒப்பந்தம் அடிப்படையில் இடைக்கால அரசில் பங்கேற்பது என்ற முடிவெடுத்தது. அதன்படி ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பின் கீழ், 3000 ஆயுதங்களை வைத்துக் கொண்டு 30,000 படைவீரர்களை முகாம்களில் முடக்கி வைக்கவும் ஒப்புக் கொண்டது. இடைக்கால நாடாளுமன்றத்திலும், இடைக்கால அரசாங்கத்திலும் பங்கேற்றது.

ஆனால், இடைக்கால அரசாங்கத்துக்குத் தலைமையேற்ற நேபாள காங்கிரசும், பிற ஓட்டுக் கட்சிகளும் மன்னராட்சியின் கீழிருந்த இராணுவமும் இரகசியக் கூட்டுச் சேர்ந்து, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய அன்னிய சக்திகளின் துணையோடு மாவோயிசக் கட்சியைப் பலவீனப்படுத்தும் சதிவேலைகளில் இறங்கின. இவை மாவோயிச எதிர்ப்பு ஜனநாயகக் கூட்டணியை இரகசியமாக நிறுவி இயக்கி வருகின்றன. மாவோயிசக் கட்சியைப் பலவீனப்படுத்தி, அரசியல் நிர்ணய சபையில் பெரும்பான்மை பெரும் வகையில் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் மற்றும் விகிதாச்சார அடிப்படையில் நியமிக்கப்படும் உறுப்பினர்கள் அடங்கிய கலவையான சபையை நிறுவுவது உட்பட தேர்தல் முறைகள் ஏற்படுத்தப்பட்டன. இதுவரை பிளவுபட்டுக் கிடந்த முன்னாள், இன்னாள் பிரதமர்கள் தலைமையிலிருந்த நேபாளக் காங்கிரசின் இரு பிரிவுகளும் ஐக்கியப்பட்டுக் கொண்டன. ஏதோ ஒரு வகையில் மன்னராட்சியைப் புதுப்பிப்பது என்று இரகசிய ஒப்பந்தமும் போட்டுக் கொண்டன.

எல்லாவற்றுக்கும் மேலாக, நேபாள காங்கிரசின் பிரதமரும் மன்னரின் இராணுவமும் ஒரு இரகசிய ஒப்பந்தம் போட்டுக் கொண்டுள்ளன. எதிர்கால அரசின் கீழ் அமையும் இராணுவத்தில் மாவோயிசக் கட்சியின் மக்கள் படையினர் எந்த வடிவிலும் எந்த வகையிலும் இடம் பெறக்கூடாது; மன்னரின் இராணுவக் கட்டமைப்பும் அதன் தலைமையும் எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் பழைய அதிகாரம் மற்றும் இராணுவ ஒப்பந்தங்களுடன் அப்படியே புதிய அரசின் கீழ் தொடர்ந்து நீடிக்கவேண்டும் என்பதுதான் அந்த ஒப்பந்தம். அவ்வாறு செய்தால்தான் புதிய சிவிலியன் அரசாங்கம் அமைவதை இராணுவம் ஒப்புக் கொள்ளும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. அதோடு நேபாள மாவோயிசக் கட்சியும் மார்க்சியலெனினியமாவோயிசக் கட்சியும் இணைந்து புரட்சிகர இயக்கத்தை புதுநம்பிக்கையையும் ஊட்டியுள்ளன.

எதிரிகளின் சதிவேலைகள் மற்றும் ஒப்பந்தங்கள் காரணமாகவே நேபாள மாவோயிசக் கட்சி இரண்டு நிபந்தனைகளை விதித்து, தற்போதைய இடைக்கால அரசாங்கத்திலிருந்து விலகி நேபாளத் தெருக்களில் மக்கள் போராட்டங்களைத் துவக்கியிருக்கிறது. என்ன நேர்ந்தாலும் சமரசசமாதான, நாடாளுமன்றப் பாதையிலிருந்து நேபாள மாவோயிசக் கட்சி விலகியிருக்கக் கூடாது என்று போலி கம்யூனிஸ்டுகள் இப்போது கூறுகிறார்கள். அதற்கு நேரெதிராக, இன்னொரு கடைக்கோடி நிலையிலிருந்து இந்திய மாவோயிசக் கட்சியினர் வாதிடுகிறார்கள். அதாவது, நேபாள மாவோயிசக் கட்சி ஆயுதப் போராட்டத்தை நிறுத்தி வைத்துவிட்டு ஏழு கட்சி கூட்டணி ஒப்பந்தத்தை போட்டு, இடைக்கால அரசாங்கத்தில் பங்கேற்றதே தவறு என்பதுதான் இவர்களின் நிலை.

ஆனால் நாட்டையும் மக்களையும் பாதிக்கும் அரசியல் சூழலுக்குத் தகுந்தாற்போன்று, அரசியல் பிரச்சினைக்கு முகங்கொடுத்து சரியான அரசியல் வழியையும் செயல்தந்திரத்தையும் வகுத்து செயல்படுவதுதான் மார்க்சியலெனினியமாவோயிச புரட்சியாளர்களின் கடமை. நாட்டையும் மக்களையும் பாதிக்கும் மையமான அரசியல் பிரச்சினையில் இருந்து ஒதுங்கிக் கொண்டு, ஆயுதப் போராட்டத்தை மட்டும் தொடர்வது என்பது அரசியல்சித்தாந்த ஓட்டாண்டித்தனமேயாகும்.

· ஆர்.கே.

'ராமன் பாலம் என்பது புராணப் புரட்டு! பார்ப்பன மதவெறிக் கும்பலை விரட்டு!


'ராமன் பாலம் என்பது புராணப் புரட்டு!
பார்ப்பன மதவெறிக் கும்பலை விரட்டு!
தமிழகத்தை குஜராத்தாக்க அனுமதியோம்!"

"எங்களால் நம்பவே முடியவில்லை. பார்ப்பனக் கும்பலுக்கு எதிரான உங்கள் கூட்டத்துக்கு, எந்தக் கட்சிக்கும் திரளாத அளவுக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டுள்ளார்களே! இது பொதுக்கூட்டம் அல்ல; மிகப் பெரிய மாநாடு. நீங்கள்தான் பெரியாரின் உண்மையான வாரிசுகள்!'' கூட்டம் முடிந்து விடைபெற்றுக் கொள்ளும்போது நா தழுதழுக்க இப்படிப் பலர் கூறிய கருத்துகள் மிகைப்படுத்தப்பட்டவை அல்ல. தமிழகத்தைக் குஜராத்தாக்கும் நோக்கத்துடன் ராமன் பாலம் எனும் புராணப் புரட்டை வைத்துப் பார்ப்பனபாசிசக் கும்பல் களத்தில் இறங்கியதும், அதற்கெதிராக ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமக்கே உரித்தான போர்க்குணத்துடன் நடத்திய பிரச்சார இயக்கம், கடந்த அக்டோபர் மாதத்தில் தமிழகமெங்கும் சூறாவளியாய்ச் சுழன்றடித்தது.

பணபலமும் அதிகார பலமும் கொண்டுள்ள பார்ப்பனக் கும்பலின் வேகத்தை விஞ்சும் வகையில், அக்கும்பலின் பொய்கள்சதிகளை அம்பலப்படுத்தி பல்லாயிரக்கணக்கில் துண்டுப் பிரசுரங்கள், வருணாசிரமக் கொலைகார ராமனை குற்றவாளிக் கூண்டிலேற்றிய ""இராமன்: தேசிய நாயகனா, தேசிய வில்லனா?'' எனும் வெளியீடு, பொதுவேலை நிறுத்தத்திற்குத் தடை விதித்துப் பார்ப்பனத் திமிரோடு உத்தரவுகளைப் பிறப்பித்த உச்சநீதி மன்றத்தின் உச்சிக் குடுமியைப் பிடித்து உலுக்கிய ""உச்சநீதி மன்றம் அல்ல, வேதாந்தி மன்றம்!'' எனும் பிரசுரம், சுவரொட்டிகள், ஆர்ப்பாட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள், அரங்கக் கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் எனத் தமிழகமெங்கும் இவ்வமைப்புகள் வீச்சாகப் பிரச்சாரத்தை மேற்கொண்டன.

சென்னை எம்.ஜி.ஆர். நகரில் 3.10.07 அன்று ""ராமன் பாலம் என்பது புராணப் புரட்டு! பார்ப்பன மதவெறிக் கும்பலை விரட்டு!'' என்ற முழக்கத்துடன் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் பேராசிரியர் பெரியார்தாசனும், ம.க.இ.க. மாநிலச் செயலர் தோழர் மருதையனும் சிறப்புரையாற்றினர். ராமனின் யோக்கியதையையும் சாதிவெறிக் கொலையையும் தனக்கே உரித்தான நையாண்டி பாணியில் பேராசிரியர் பெரியார்தாசன் தோலுரித்துக் காட்டியதை உழைக்கும் மக்கள் பெருத்த ஆரவாரத்துடன் வரவேற்றனர். "இந்து'க்களாக இருந்தாலும், இந்து மதத்தையும் இராமனையும் தோலுரித்து, நகைச்சுவையோடு அவர் குறிப்பிட்டதைக் கேட்டு, கூட்டத்தில் திரண்டிருந்த மக்கள் கைதட்டிக் களங்கமின்றிச் சிரித்தனர்.

ராமாயணம் எழுதப்பட்டதன் நோக்கத்திலிருந்து ராமன் பாலம் எனும் கட்டுக்கதை வரை பார்ப்பனக் கும்பலின் அரசியல் சதிகள் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்திய தோழர் மருதையன், ""ராமனுக்கு அயோத்தி ஜென்ம பூமி என்றால், தமிழகம் அவனுக்கு மரண பூமி'' என்று சூளுரைத்த போது, கூட்டத்தில் திரண்டிருந்த மக்கள் உணர்ச்சியோடு ஆரவாரம் செய்து ஆதரித்தனர். ம.க.இ.க. மையக் கலைக்குழு நடத்திய ""ராமன் பாலம்'' என்ற கதாகாலட்சேபமும், புரட்சிகர கலைநிகழ்ச்சியும் பார்வையாளர்களின் உணர்வைத் தட்டியெழுப்பி, பார்ப்பன எதிர்ப்பு அரசியலை அவர்களின் நெஞ்சிலே பதிய வைத்தது.

அதைத் தொடர்ந்து 14.10.07 அன்று திருச்சிசத்திரம் பேருந்து நிலையம் அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் பேராசிரியர் பெரியார்தாசனும், தோழர் மருதையனும் சிறப்புரையாற்றினர். 15.10.07 அன்று தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் சாலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் தோழர் மருதையனும், மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்டத் துணைச் செயலரான வழக்குரைஞர் வாஞ்சிநாதனும் சிறப்புரையாற்றினர். பின்னர் சென்னையில் 16.10.07 முதல் 20.10.07 வரை தொடர்ந்து ஐந்து நாட்களில் தாம்பரம், அசோக்நகர், செங்குன்றம், சேத்துப்பட்டு, வியாசர்பாடி கன்னிகாபுரம் ஆகிய இடங்களில் நடந்த பொதுக்கூட்டங்களில் பேராசிரியர் பெரியார்தாசன், ம.க.இ.க. தோழர் கவிஞர் துரை.சண்முகம், பு.ஜ.தொ.மு. பொதுச் செயலாளர் தோழர் சுப.தங்கராசு, ம.க.இ.க. மாநிலப் பொருளாளர் தோழர் சீனிவாசன், வி.வி.மு. தோழர் ஜெயகாந்த் சிங் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அதைத் தொடர்ந்து 21.10.07 அன்று திருச்சிகாட்டூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ம.க.இ.க. மாநில இணைச் செயலர் தோழர் காளியப்பன் சிறப்புரையாற்றினார்.

""ராமன் குடிகாரன்'' என்று சாடிய வாயால், ""வேண்டுமானால் சேதுராமன் பாலம் என்ற பெயர் கூட இருக்கட்டும்,'' ""ராமன் எங்களுக்கு எதிரி அல்ல'' என்று பேசிக்கொண்டு பார்ப்பனச் சாக்கடையில் சங்கமமாகிவிட்ட தி.மு.க.வின் சந்தர்ப்பவாதத்தையும், ""இந்துக்களின் மனம் புண்படுகிறது'' என்று இந்துவெறி கும்பலுக்கு பக்கமேளம் வாசித்த வைகோ, சரத்குமார், விஜயகாந்த் முதலான விபீசணர்களையும் அம்பலப்படுத்தி, பார்ப்பன பாசிசத்தை வீழ்த்த அறைகூவுவதாக இக்கூட்டங்கள் அமைந்தன.

அக்டோபர் 22ஆம் தேதி முதல் அம்மாத இறுதிவரை மதுரை, உசிலம்பட்டி, விருதுநகர், திருவாரூர், சீர்காழி, கரூர், கோவை, சென்னிமலை எனப் பல இடங்களிலும் பொதுக்கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, பருவ மழை காரணமாக சில கூட்டங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், பார்ப்பன பாசிசக் கும்பலுக்கு எதிராக இவ்வ மைப்புகளின் பிரச்சாரம் தொடர்ந்து நடந்து வருகிறது.

இப்பிரச்சார இயக்கத்தின் பொழுது, உழைக்கும் மக்கள் உற்சாகத்துடன் நிதியை மட்டுமா வழங்கினார்கள்? பார்ப்பன நஞ்சைக் கக்கி இப்பிரச்சாரத்தைத் தடுக்க முயற்சித்தவர்களுக்குத் தாங்களே பதிலடி கொடுத்த சம்பவங்கள் ஏராளம். இடையூறு செய்த பார்ப்பன நரிகளை அடக்கி, இப்பிரச்சாரத்தை உற்சாகத்துடன் ஆதரித்துத் தாங்கள் பார்ப்பன பாசிச எதிர்ப்பாளர்கள்தாம் என்பதைத் தமது செயலால் நிரூபித்துக் காட்டிய சம்பவங்கள் ஏராளம்.

பிரச்சாரத்தில் ஈடுபட்ட தோழர்களுக்கு பழங்களைக் கொடுத்து ஊக்கப்படுத்திய பழ வியாபாரியான ஒரு தாய், தேநீர் வாங்கிக் கொடுத்து உற்சாகப்படுத்திய இளைஞர்கள், திருச்சி பொதுக்கூட்டத்தில் மேடைக்கு வந்து தமது பெயரை பகிரங்கமாக அறிவித்து தொடர்ச்சியாக நன்கொடை அளித்த உழைக்கும் மக்கள், சென்னைசெங்குன்றம் பொதுக்கூட்டத்தில் மேடையேறி ரூ.4000 நன்கொடை கொடுத்து, ம.க.இ.க.வின் ""புரட்சி சிங்கம் பகத்சிங்'' பற்றிய பாடலைப் பாடச் சொல்லி பதிவு செய்து, தனது மகனுக்குப் பயிற்சி கொடுத்து, அப்பாடலை பள்ளியில் பாட வைத்து பெருமிதம் கொண்ட ஒரு ஆதரவாளர்... இவையனைத்தும் இது பெரியார் பிறந்த மண் என்பதையும் பார்ப்பன எதிர்ப்புணர்வு தமிழகத்தில் பட்டுப்போய்விடவில்லை என்பதையும் நிரூபித்துக் காட்டின.
— பு.ஜ. செய்தியாளர்கள்

Monday, April 21, 2008

முன்பேர வர்த்தகம்: இன்னுமொரு சூதாட்டம்

முன்பேர வர்த்தகம்:
இன்னுமொரு சூதாட்டம்


டந்த இருபது ஆண்டுகளாக உலக வர்த்தகக் கழகம் மற்றும் உலக வங்கியின் கட்டளைக்கு இணங்கி, பன்னாட்டு நிறுவனங்களின் தேவைக்கேற்ப நம் நாட்டு விவசாய கொள்கையை ஆளும் வர்க்கங்கள் திருத்தி அமைத்துள்ளன. இதனால் நாடு முழுவதும் கோடிக்கணக்கான விவசாயிகள் விவசாயத்தை விட்டு நகர்ப்புறத்திற்கு விரட்டியடிக்கப்பட்டனர்; பல லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலைக்குத் தள்ளப்பட்டனர். மறுபுறம், என்றுமில்லாத அளவுக்கு உணவுப் பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டு ஏழை மக்கள் பட்டினிச் சாவுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், ""விவசாய பொருட்களின் சந்தையில் எந்த ஒரு மதிப்பூட்டலும் இல்லாமல் 38 முதல் 69 சதம் வரை இடைத்தரகர்கள் இலாபமாக ஈட்டுகிறார்கள். இதனால் உற்பத்தியாளர்களோ அல்லது நுகர்வோர்களோ எந்த ஒரு பயனும் அடைவதில்லை. மறுபுறம் விவசாயிகள், விவசாய உற்பத்திப் பொருட்களின் விலையில் நிலவும் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்ள முடியாமல் இருக்கின்றனர். மேலும், விவசாயிகள் பயிரிடப் போகும் பயிர்களுக்கு வருங்காலத்தில் என்ன விலை கிடைக்கும் என்றும் தெரியாமல் இருக்கிறார்கள். கூடுதலாக, இடைத்தரகர்களால் உணவுப் பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. எனவே, இப்பிரச்சினைகளைக் களைய விவசாயிகளை குழுக்களாக்கி நேரடியாக முன்பேர வர்த்தகத்தில்((Future trading) ) இணைக்கப் போவதாக'' அரசு அறிவித்துள்ளது. அதற்கான ஒத்திகையும், அண்மைக் காலமாக நடந்தேறிக் கொண்டிருக்கிறது.

தற்போது விவசாய உற்பத்தியை உள்ளூர் வட்டாரங்களிலுள்ள சந்தைகளுக்கோ அல்லது மண்டிகளுக்கு கொண்டு வந்து விவசாயிகள் வியாபாரிகளிடம் விற்கிறார்கள். இதுவே இன்றுவரை பிரதான முறையாகும். இது, நேரடி விற்பனை (Spot trading) என்றழைக்கப்படுகிறது. இந்த நேரடி விற்பனை அண்மைக் காலமாக இணைய தளத்துடன் இணைக்கப்பட்டு நடத்தப்படுகிறது. இது, இணைய தளம் ஊடாக நேரடி விற்பனை (on line spot trading) என்றழைக்கப்படுகிறது. உதாரணமாக, பெங்களூரில் உள்ள சப்பல் சந்தையைக் கூறலாம்.

இதைத் தவிர, சமீப ஆண்டுகளாக விவசாயப் பொருட்களை விற்க இணையதள முன்பேர வர்த்தகம் முன்னுக்கு வந்துக் கொண்டிருக்கிறது. இம்முறையே வளர்ச்சியடைந்த நாடுகளின் பிரதான முறையாகும். இந்த முன்பேரச் சந்தையில் பெரும் வியாபாரிகள், உணவு பதனீட்டு நிறுவனங்கள் மற்றும் சங்கிலித் தொடர் கடைகள் பங்கேற்கின்றனர். இது, விற்பனையாளர் வாங்குவோர் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குப் பின், ஒரு குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட விலையில் தானியங்களை வாங்கவிற்க, இணையதளத்தின் மூலம் ஒப்புக் கொள்வதாகும். இப்படி வியாபாரிக்கும் நிறுவனங்களுக்கும் நடைபெறும் ஒப்பந்தம் ஃப்யூட்சர்ஸ் என்றழைக்கப்படுகிறது. இந்த ஃப்யூட்சர்ஸ்களைக் கொண்டுள்ள நிறுவனம், தனக்குத் தேவையில்லை அல்லது மற்றவர்களிடம் விற்றால் கூடுதல் லாபம் கிடைக்கும் என்று கருதினால் விற்கலாம். இறுதி தேதியன்று ஒப்பந்தம் யார் கைகளில் இருக்கிறதோ, அவர்கள் வியாபாரியிடம் பணத்தைக் கட்டி விட்டு பொருட்களை கொள்முதல் செய்து கொள்ளலாம். இவை அனைத்தும் NCDEX, NBOT, MCX, மற்றும் NMCE என்றழைக்கப்படும் பரிமாற்ற மையங்கள் மூலம் நடந்தேறுகிறது. (இவை மும்பை பங்கு சந்தை, நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ் போன்றவை). மேற்குறிப்பிட்ட எக்ஸ்சேஞ்சுகளை பார்வாடு மார்க்கெட் கமிசன் (""செபி''க்கு இணையானது) கட்டுப்படுத்துகிறது.

இன்று வரை முன்பேரச் சந்தையில் விற்பனை / விற்பனை ஒப்பந்தமானது, வியாபாரி வியாபாரி அல்லது வியாபாரி உணவு பதனீட்டு நிறுவனம் அல்லது சங்கிலி தொடர் கடைகளுக்கிடையில் நடந்தேறிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது அமல்படுத்தப்படப் போகும் புதிய திட்டத்தின் கீழ், தொண்டு நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் உதவியுடன் விவசாயிகளை அவர்களின் உற்பத்தி பொருள் வாரியாக குழுக்களாக்கி, நேரடியாக உணவு பதனீட்டு நிறுவனம் மற்றும் சங்கிலித் தொடர் கடைகளுடன் முன்பேர வர்த்தகத்தின் மூலமாக இணைக்கப் போகிறது. விவசாயிகளைத் தொய்வின்றி முன்பேர வர்த்தகத்தில் இணைக்க பாரதிய கிஸான் யூனியன், கர்நாடக தட்டைப்பயிர் உற்பத்தியாளர்கள் சங்கம், கிஸாண் கோஆர்டினேசன் கமிட்டி, செத்காரி சங்கேதான், விவசாய அமைப்புகளின் கூட்டமைப்பு போன்ற விவசாய சங்கங்களை களத்தில் இறக்கியுள்ளது.

மேலும், ""முன்பேர வர்த்தகத்தில் விவசாயிகள் இணைவதன் மூலம் உத்தரவாதப்படுத்தப்பட்ட விலை கிடைக்கும்; எந்தப்பொருளை எப்பொழுது, எவ்வளவு உற்பத்தி செய்ய வேண்டும்; சேமிக்க வேண்டும் போன்ற தகவல்களை அறிந்து கொள்ளலாம்; இதன்மூலம் வெளிப்படையான சந்தையை உருவாக்க முடியும். உணவு விநியோகத்தைச் சீர்படுத்தி உணவுப் பாதுகாப்பை பலப்படுத்த முடியும்'' என ஆளும் வர்க்கங்கள் மற்றும் செய்தி ஊடகங்கள் பிரச்சாரம் செய்து வருகின்றன.

ஆனால், கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக முன்பேர வர்த்தகமானது அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றத்தில் கணிசமான பங்காற்றியுள்ளது; பதுக்கலுக்கும் வழிவகுத்துள்ளது என்றும்; இது தடை செய்யப்பட வேண்டும் என்று பொதுமக்களும் பல்வேறு அமைப்புகளும் சில்லறை வியாபாரிகளும் போராட்டத்தை நடத்தினர்; நடத்தி கொண்டிருக்கின்றனர். இந்தப் பின்னணியில், முன்பேர வர்த்தகத்தில் நேரடியாக விவசாயிகளை இணைத்து பிரச்சினைகளை தீர்த்து, உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்த போவதாக அரசு கூறுகிறது. இது உண்மையா என்று கேள்வி நம்முன் எழுகிறது.

உள்ளூரளவில் உற்பத்தியாகும் பொருட்களின் விலை அந்த மாவட்டத்தின் அல்லது மாநிலத்தின் உற்பத்திச் செலவு மற்றும் தேவைக்கு ஏற்ப தீர்மானிக்கப்படும். இதையும் மீறினால் நாட்டின் உற்பத்திச் செலவுக்கு ஏற்ப தீர்மானிக்கப்படும். சில நேரங்களில் சந்தையில் பங்கேற்கும் பெரும் வியாபாரிகள், பதுக்கி வைத்து விலையை ஏற்றுவதும் நடந்தேறும். இவைகளெல்லாம் நம் நாட்டின் எல்லைக்குள்ளே நடந்தேறும். இப்பொழுது முன்னுக்கு வந்துக் கொண்டிருக்கும் முன்பேர வர்த்தகத்தில், உலகம் முழுவதும் உள்ள முன்பேர சந்தைகளுடன் இந்தியச் சந்தை இணைக்கப்பட்டுள்ளது. அதாவது, அமெரிக்காவில் உள்ள முன்பேர வர்த்தக சந்தையில் மாற்றம் ஏற்பட்டால் அது இந்திய சந்தையையும் பாதிக்கும். மறுபுறம் முன்னரே ஒப்பந்தங்களை வாங்குவோர்களாக இந்தியத் தரகு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்று வருகின்றன. இதை தவிர பன்னாட்டு ஊக வணிக நிதி முதலீட்டாளர்கள் பங்கேற்க ஒத்திசைவாக சட்டங்களை மாற்றுவதற்கான வேலையையும் இந்திய அரசு செய்து வருகின்றது.

முன்பேர வர்த்தகத்தில் பங்கேற்கும் நிறுவனங்கள் பல்வேறு சந்தை ஆய்வு நிறுவனங்களைக் களத்தில் இறக்கி உலகளாவிய மற்றும் நாடு வாரியான விவசாய உற்பத்தி, பற்றாக்குறை, சேமிப்பு, பயிரிடப்பட்டுள்ள பயிர்கள், அதன் பரப்பளவு, சந்தைக்குள் வரவு போன்ற பல்வேறு தகவல்களைத் திரட்டி கொள்கின்றன. மேலும் இந்நிறுவனங்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சரவையுடன் நெருக்கமான உறவை வைத்துக் கொண்டு அரசுகளின் கொள்கை முடிவுகள், உணவு சேமிப்புக் கிடங்குகளில் உள்ள பற்றாக்குறை, உபரி, ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் தேவைகளை சார்ந்த விசயங்களை அரசு வெளியிடுவதற்கு முன்பே அறிந்து கொள்கின்றன. (உதாரணத்திற்கு இந்திய அரசு கோதுமையை இறக்குமதி செய்யப் போகிறது என்பதை அறிவிப்பதற்கு முன்பே, அரசிடமிருந்து கறந்து உலக சந்தையில் கோதுமை விலையை ஏற்றிவிட்டார்கள்.)

இப்படி சந்தையின் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் அனைத்தும் கைகளிலில் வைத்துக் கொண்டு, முன்பேர வர்த்தகத்தில் பங்கேற்கும் நிறுவனங்கள் தங்களுக்குள் கூட்டமைத்து கொண்டு கொள்முதல் செய்யப்போகும் பொருட்களின் விலையையும் தீர்மானிக்கின்றன. மேலும், பதுக்கல் மற்றும் கடத்தலுக்கான அனைத்து கட்டுமானம் மற்றும் இதர வசதிகளையும் கொண்டுள்ளன. இப்படி மிருக பலம் பொருந்திய பன்னாட்டு நிறுவனங்கள்ஒருபுறம்; தங்கள் மாவட்டத்தில் என்னென்ன எவ்வளவு உற்பத்தி நடந்தேறியிருக்கிறது என்று கூட அறிய முடியாமல், உற்பத்தியை மட்டுமே கையில் வைத்திருக்கும் கோடிக்கணக்கான சிறு மற்றும் குறு விவசாயிகள்.

ஆகவே, முன்பேர வர்த்தகத்தில் சந்தையின் தேவையோ அல்லது விவசாயிகளோ விலையைத் தீர்மானிக்க முடியாது. மாறாக, பன்னாட்டு நிறுவனங்கள் விலையைத் தீர்மானிப்பார்கள். ஆகையால், முன்பேர வர்த்தகத்தில் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்று கூறுவது வடிகட்டிய பொய்யாகும். இதே கருத்தை நவம்பர் 16, 2007 தேதியிட்ட ""பிசினஸ் லைன்'' என்கிற ஆங்கில நாளேடு தன் தலையங்கத்தில் கூறியுள்ளது. மேலும், வளர்ச்சியடைந்த நாடுகளில் கூட விவசாயிகள் நேரடியாக முன்பேர வர்த்தகத்தில் பங்கேற்பது கிடையாது என்கிறது. இதைத்தவிர, காலப்போக்கில் முன்பேர வர்த்தகத்தினால் நேரடி விற்பனை வாய்ப்புகள் குறைந்து, வட்டாரளவில் செயல்படும் சில வியாபாரிகள், மண்டிகள், மண்டித் தொழிலாளிகள் வாழ்விழக்க நேரிடும்.

இவைகளெல்லாம் ஒருபுறமிருக்க, முன்பேர வர்த்தகத்தினால், நம் நாட்டின் அரைகுறையான உணவுப் பாதுகாப்பு மேலும் கேள்விக்குள்ளாக்கப்படும். ""சமீப காலமாக பன்னாட்டு ஊக வணிக நிதி நிறுவனங்கள் வெளிநாடுகளின் முன்பேர வர்த்தகத்தில் கணிசமான முதலீடு செய்து வருகின்றனர். இவர்களின் ஆர்வம் மேலும் அதிகரித்து கொண்டு வருகிறது'' என்கிறது உணவு மற்றும் விவசாய கழகத்தின் ஆய்வு (டிச.11, 2007; பிசினஸ் லைன்) இவர்கள் விவசாயப் பொருட்களைக் கொள்முதல் செய்யமாட்டார்கள். விவசாயி மற்றும் நிறுவனத்திற்குமிடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தை (ஃப்யூட்சர்ஸ்) வைத்திருக்கும் நிறுவனங்களிடமிருந்து வாங்கி, கைமாற்றி கொண்டே இருப்பார்கள். அதாவது, வேறு ஏதாவது நிறுவனத்திடம் விற்பார்கள். இந்த வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பார்கள். இதன் மூலம் கணிசமான இலாபத்தை சம்பாதிப்பார்கள். இதுதான் ஊக வணிக சூதாட்டமாகும்.

இவர்கள், உற்பத்திக்கும் வியாபாரத்திற்கும் எந்தவித நேரடி தொடர்பில்லாமல் இருக்கும் சூதாட்ட கொள்ளைகாரர்கள். இவர்களின் சூதாட்டமானது, உணவுப் பொருட்கள் உற்பத்தியாகும் இடங்களில் விலை குறைப்புக்கும், நுகர்வு இடத்தில் விலையேற்றத்திற்கும் இட்டு செல்லும். இதனால், உற்பத்தியாளனுக்கும் நட்டம், நுகர்வோனுக்கும் நட்டம். குறிப்பாகக் கூறினால், விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் விரட்டியடிக்கப்படுவார்கள்; அரைகுறையாய் இருக்கும் உணவுப் பாதுகாப்பும் சிதைக்கப்பட்டு விடும்.

முன்பேர வர்த்தகம் என்பது நாட்டுக்கும் மக்களுக்கும் எதிரானது. அப்படிப்பட்ட முன்பேர வர்த்தகத்தில் விவசாயிகளை இணைப்பது என்பது பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒட்டு மொத்த இந்திய விவசாயத்தையும், விவசாயிகளையும் காவு கொடுப்பதாகும். குப்புறத் தள்ளிய குதிரை, குழியையும் பறித்த கதையாக, ஏற்கெனவே விவசாயத்தையும் விவசாயிகளையும் நாசமாக்கிய தாராளமயமும் உலகமயமும், இப்போது முன்பேர வர்த்தகத்தின் மூலம் விவசாயிகளை மரணப்படுகுழியில் தள்ளக் கிளம்பி விட்டது. நெருங்கிவிட்ட இப்பேரபாயத்துக்கு எதிராக விவசாயிகளும் சிறுவியாபாரிகளும் உழைக்கும் மக்களுடன் ஒன்றிணைந்து போராடுவதைத் தவிர, இனி வேறென்ன வழி இருக்கிறது?

· சுடர்

Sunday, April 20, 2008

மீண்டும் உலகைக் குலுக்கும், பாட்டாளி வர்க்கப் புரட்சி

மீண்டும் உலகைக் குலுக்கும், பாட்டாளி வர்க்கப் புரட்சி

பி.இரயாகரன்
20.04.2008

மைதி சமாதான வழிகளில், எதிரியின் சொந்தக் கோட்டைக்குள்ளேயே ஒரு புரட்சி நடந்துள்ளது. எதிரி வர்க்கமோ, தனது அதிகாரம் சொத்துடமை பண்பாட்டு மூலம் புரட்சியைச் சுற்றி வளைத்து நிற்கின்றது. ஏகாதிபத்தியமும், இந்திய விஸ்தரிப்பு வாதிகளும், பார்ப்பனிய சாதிய இந்துத்துவமும் இந்தப் புரட்சிக்கு எதிராக, தமது சதிகளையும், எதிர்த்தாக்குதலையும் தொடங்கியுள்ளது

இந்த நிலையில் பாட்டாளி வர்க்கம் தனது வர்க்க அதிகாரத்தை, உலகின் உச்சியில் நிறுவியுள்ளது. இமயத்தின் உச்சியில் செங்கொடி பறக்க, வர்க்கப் போராட்டம் என்ற பதாகை உலகப் புரட்சிக்கு அழைக்கின்றது. ஆம், மீண்டும் உலகைக் குலுக்க உள்ள பாட்டாளி வர்க்கப் போராட்டமும், புரட்சியும் தொடங்கியுள்ளது. மார்க்கசியத்தையும் பாட்டாளி வர்க்கத்தையும் கல்லறைக்கு அனுப்பிவிட்டதாக கூறி கெக்கலித்த முதலாளித்துவம் முன், மீண்டும் மக்கள் அதை தமது சொந்த புரட்சிகர வழிகளில் உயர்த்தி நிற்கின்றனர்.

இந்தப் புரட்சி முதலாளித்துவ ஜனநாயக சட்ட வழிகளில், அதன் சமாதான வேஷங்களின் ஊடாக தொடங்கியுள்ளது. இதற்கு தலைமை தாங்கிய பாட்டாளி வர்க்கம் தனது அயுதத்தை முடக்கி எதிரியின் கண்காணிப்பில் அதை வைத்தவர்கள், இன்று எதிரியின் படைக்கும் சேர்த்து தலைமை தாங்கும் புரட்சிகர அற்புதத்தை நடத்தியுள்ளனர்.

அன்று மாவோ சீனாவில் யப்பானுக்கு எதிரான யுத்தத்தின் போது, தனது படைத் தலைமையை கலைத்ததுடன், படையையும் படை நகர்வையும் கூட எதிரியின் தலைமைக்கு கீழ் இட்டுச் சென்றதன் மூலம், எதிரியையே எதிரியின் படையுடன் வீழ்த்தி புரட்சியை வழி நடத்தியது வரலாறு. அதையே மீண்டும் நேபாளத்தில், மாவோயிஸ்ட்டுகள் செய்து காட்டியுள்ளனர். எஞ்சியிருப்பது தொடரவுள்ள வர்க்கப் போராட்டம். எதிரியாக அறியப்பட்டவர்கள், ஒழிக்கப்படவேயில்லை. எதிரியால் சூழப்பட்டுள்ள, புதிய நிலை உருவாகியுள்ளது.

வர்க்கப் போராட்டத்துக்கான ஆயுதப் போராட்டம் வெற்றிபெறுவதை தடுக்க, ஏகாதிபத்தியங்கள் நடத்திய நாடகம் அமைதி சமாதானம். பாட்டாளி வர்க்கம் இந்த சதியை தனக்கு சார்பாக பயன்படுத்தியதன் மூலம், எதிரியின் அணிகளை புரட்சிக்கு சார்பாக மாற்றியதன் மூலம், அவர்களின் வர்க்க நலனைப் பூர்த்திசெய்யும் தேர்தலில் வென்று, எதிரியை தனிமைப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் பாட்டாளி வர்க்க அதிகாரத்தை, முதலாளித்துவ சட்ட வரையறை மூலம் கொண்டு வந்துள்ளனர்.

இது தனக்கென்று ஒரு பாட்டாளி வர்க்கப் படையை கொண்டுள்ளது. உறுதியான வர்க்கத் தலைமையும், கட்சி ஊழியர்களையும், பரந்து விரிந்த உணர்வுப+ர்வமான மக்களையும் ஆதாரமாக கொண்டுள்ளது. சர்வதேச ரீதியாக, புரட்சிகர பிரிவுகளின் ஆதாரத்தையும் கொண்டுள்ளது.

உலகில் தேவையுடன் இணைந்துள்ள புரட்சி

இது நேபாள மக்களுக்கு மட்டுமல்ல, உலக மக்களுக்கு தேவையான, ஓரு புரட்சிகரமான காலகட்டத்தில் நடந்துள்ளது. உலக நெருக்கடிகள் அதிகரித்துள்ள, மிகப் பொருத்தமான புரட்சிகரமான சூழலில் பாட்டாளி வர்க்கம் அதிகாரத்துக்கு வருகின்றது.

ஏகாதிபத்தியம் இன்று உடனடியாக, மீள முடியாததுமான, இரு பிரதான நெருக்கடிகளை எதிர் கொள்ளவுள்ளது. இந்த வகையில்

1. உணவு நெருக்கடி

2. நிதி நெருக்கடி

இது உலகை உலுக்கவும், ஏகாதிபத்திய அமைப்பையும் ஆட்டங்காண வைக்கவுள்ளது. இந்த நிலையில் அதை வழிகாட்டக் கூடிய நேபாளத்தின் புரட்சி, மூன்றாவதாக அதிபயங்கரமான நெருக்கடியாக மாறவுள்ளது.

உலகம் தளுவிய உணவு நெருக்கடி

மூன்றாம் உலகம் முதல் ஏகாதிபத்தியம் வரை இது பிரதிபலிக்கத் தொடங்கிவிட்டது. உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு, விலையேற்றம், ஏற்றுமதித் தடைகள், உணவுக் கலகங்கள் என, ஒன்றுபட்ட உலகச் சந்தை என்ற உலகமயமாதல் கட்டுக்கோப்பையே அதிரவைக்கின்றது.

ஏகாதிபத்தியங்களால் வழிநடத்தப்பட்ட, உலகமயமாதல் விவசாயத்தின் விளைவு இது. நாட்டினதும் மக்களினதும் சுயசார்பை அழித்து, சுய உற்பத்தியை அழித்து, அனைத்தையும் தனதாக்கி, விவசாயத்தை சந்தை பொருளாதாரமயமாக்கியதன் மொத்த விளைவு இது.

இப்படி விவசாயம் அழிக்கப்பட்டுவிட்டது. பஞ்சமும் பட்டினியும் உலகம் தளுவிய ஒன்றாக, ஏகாதிபத்தியத்தின் சொந்த விளையாட்டாக மாற்றிவிட்டது. விவசாய உற்பத்திகள் போதுமான அளவுக்கு உற்பத்திசெய்ய முடியாத அளவுக்கு, சந்தையில் அவை அருகிவிட்டது. இந்த நிலமை

1. உற்பத்தியைக் கட்டுப்படுத்தி மனித இனத்தை அடிமைப்படுத்தும் ஏகாதிபத்திய நவீன கொள்கையால் உருவாகியுள்ளது.

2. நுகர்வை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தியால் ஏற்பட்ட, சுற்றுச்சூழல் சிதைவால் நிகழ்ந்துள்ளது.

3. மாற்று எரிபொருளாக விவசாயத்தை பலியிடுவதன் மூலம் தொடங்கியுள்ளது.

4. கடன் கொள்கைக்கு ஏற்ற ஏற்றுமதி விவசாயம் என்று, நஞ்சிடப்பட்டு அழிக்கப்பட்டது.

5. எண்ணையை ஆயுதமாகக் கொண்டு, உலகை அடிமைப்படுத்தும் ஆக்கிரமிப்பால் நடந்துள்ளது.

உலகம் தளுவிய நிதி நெருக்கடி

இனியும் இதை பொத்தி வைக்க முடியாது உலகமே திவாலாகிவிட்டது. இந்த அபாயம் எப்போது, எங்கு எப்படி வெடிக்கும் என, உலக பொருளாதாரம் எதிர் கொள்கின்றது. இப்படி உலகமயமாதலின் கழுத்தின் மேலேயே சொந்தத் தூக்குக் கயிறு தொங்குகின்றது.

மக்களின் சேமிப்பு நிதியங்கள், காப்புறுதி நிதியங்கள், ஒய்வ+திய நிதியங்கள் எல்லாவற்றையும் வரைமுறையின்றி கையாண்ட வங்கிகள், அதை எல்லாம் பல வழிகளில் சிலரிடம் இழந்துள்ளனர். இந்தப் பணத்தை திருப்பிக்கொடுக்கும் நிலையில் உலக வங்கிகளிடம் நிதியில்லை. சுழற்சி முறையிலான பண ஒட்டத்தைக் கொண்டு, தனது போலித்தனத்தை இனியும் காப்பற்ற முடியாது, வங்கிகளின் திவால் அறிவிக்கப்படுகின்றது.

இந்தப் பணம் எங்கே போனது? உலகில் ஆயிரக்கணக்கில் 100 கோடி டொலருக்கு மேல் சொத்துச் சேர்த்துள்ள திடீர் பணக்காரக் கும்பல்களின் வரிசையில் உள்ளோரின் கைகளில் அவை குவிந்துவிட்டது.

இதற்காக ஏகாதிபத்தியம் செய்த சதி, நுகர்வு வேட்கையை அதிகப்படுத்தியது தான். கடனைக் கொடுத்து நுகரப்பண்ணியதன் மூலம், பணத்தை சிலர் அபகரித்துக் கொள்ள உதவினர். வீட்டுக் கடன் முதல் சாதாரண நுகர்வு வரை கொடுத்து, வங்கியில் இருந்த பணத்தைச் சிலர் சுருட்டிக்கொண்டனர். இதன் மூலம் அவர்கள் உலகையே அடிமாட்டு விலைக்கு அடிமை கொள்கின்றனர்.

வீட்டுக்கடனை வலிந்து கொடுத்து, வீட்டுக்கு இரண்டு மடங்குக்கு மேலாக விலை அதிகரிப்பை உருவாக்கினர். இப்படி வங்கிப் பணத்தை, மக்களைக் கொண்டு வீட்டுமனை வர்த்தகம் மூலம் சிலர் திருடினர். இன்று வீட்டுச்சொந்தக்காரன் வீட்டுக் கடனை கட்ட முடியாது திணறுகின்றான். வங்கி வீட்டை மீளப்பெறுவதும் அவை விற்க முடியாது சந்தையில் தேங்குவதும் உலகெங்கும் தொடங்கிவிட்டது. வீட்டு விலை சரிந்து வருகின்றது. வீடு மறுபடியும, வீட்டை விற்றவனின் மறு கொள்ளைக்கான சொத்தாகின்றது.

மறுபக்கத்தில் கடன் பெற்று நுகர்ந்தவன் நுகர முடியாத நிலைக்கு கடன் சுமை, வட்டிச் சுமை, வேலையின்மை, குறைந்த சம்பளம் என்ற முதலாளித்துவ நரகலை மிதித்து, தனது வங்கியில் அதை அப்புகின்றான். விளைவு வங்கிக் கடனை கொடுக்க முடியாது, வட்டியை கொடுக்க முடியாது அவன் திவாலாக, வங்கிகள் திவலாகின்றது. வங்கியில் பணம் போட்டவன் திவாலாகின்றான். இப்படி உலக வங்கிகள், பாரிய உலக நெருக்கடிக்குள் மீளமுடியாது சிக்கிவிட்டது.

இதை எதிர்கொள்வது எப்படி?

இதை வழிகாட்டும் ஆற்றல், கம்யூனிஸ்ட்டுகளுக்கு மட்டும்தான் உள்ளது. உலக மக்கள் எதிர் கொள்ளவுள்ள நெருக்கடியை, தலைமை தாங்கி மக்களை வழிகாட்ட வேண்டிய சர்வதேச காலகட்டத்தில் நேபாள மாவோயிஸ்ட்டுகள் உள்ளனர். சிரமமான இரண்டு வேறுவேறான, ஆனால் ஒன்றான பணிகள் அவர்கள் முன் உள்ளது.

கம்யூனிஸ்டுகளின் இந்த புரட்சிகரமான சர்வதேச பணிதான், ஏகாதிபத்தியம் எதிர் கொள்ளவுள்ள புதிய சர்வதேச நெருக்கடி. மீண்டும் கம்யூனிசம் என்ற அச்சத்தையும், பீதியையும் அது எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளது.

மக்கள் அடிமையாக, மூலதனத்துக்கு அடிமைப்பட்டு, மனித சுயத்தை இழந்து வாழமுடியாது. வெறும் நுகர்வு என்ற வக்கிர உணர்வால், மனித இனத்தை யாரும் வழிகாட்ட முடியாது. மனிதனாக வாழ, கம்யூனிஸ்ட்டுகள் மட்டும் வழிகாட்டுகின்றனர். இது தான் மாற்று வழி.

வர்க்கப் போராட்டமும், சர்வதேச புரட்சிப் பணியும்

இந்த வகையில் மாவோயிஸ்ட்டுகள் தொடங்கவுள்ள வர்க்கப் போராட்டம் மிகக் கடுமையானது. சொந்த நாட்டில் எதிரியுடன் சேர்ந்தே பயணிக்க வேண்டிய தேவையும், அதேநேரம் ஒழித்துக்கட்ட வேண்டிய பணியும் அவர்கள் முன்னுள்ளது. ஜனநாயக கோரிக்கையை நிறைவு செய்யும் வகையில், தரகு முதலாளித்துவத்தையும் நிலபிரபுத்துவத்தையும் ஒழிக்க வேண்டியுள்ளது. பாட்டாளி வர்க்கம், தேசிய முதலாளித்துவ சக்திகளுடன் சேர்ந்து நின்று, இந்த வர்க்கப் போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது. இந்த வகையில் ஆணாதிக்கத்தை ஒழித்தல், பார்ப்பனிய சாதிய அடிப்படையைத் தகர்த்தல், சமூக வேறுபாடுகளை ஒழித்தல் என்று, நீண்ட வாக்கப் பணி அவர்கள் முன் காத்து இருக்கின்றது.

இந்தப் போராட்டத்தை எதிரியுடன் பயணித்தபடி, முள்ளை முள்ளால் எடுக்க வேண்டியுள்ளது. இப்படி ஜனநாயக கடமைகளை நிறைவு செய்யும் புரட்சி, அவர்கள் முன்னுள்ளது.

பலர் கருதுவது போல், வெறும் மன்னர் ஆட்சியை ஒழிப்பதல்ல இது. மன்னரைப் பிரநிதித்துவம் செய்த நிலப்பிரபுத்துவ வர்க்கத்தை ஒழிப்பதாகும். இந்த நிலப்பிரபுத்துவ பார்ப்பனிய சாதிய சமூக கட்டுமானத்தை ஒழிப்பது உள்ளிட்ட, ஒரு முதலாளித்துவப் புரட்சியை பாட்டாளி வர்க்கம் தலைமை தாங்கி நடத்த வேண்டியுள்ளது.

பரந்துபட்ட உழைக்கும் மக்களின் வர்க்க நலனை உயர்த்துவதும், பிற்போக்கு சக்திகளை தனிமைப்படுத்துவதன் மூலமும், மக்களை அரசியல் மயப்படுத்த வேண்டியுள்ளது.

ஒரு பண்பாட்டு கலாச்சார புரட்சியை வீச்சாக நடத்துவதும், அதே நேரத்தில் பிற்போக்கை பிரதிநித்ததுவப்படுத்தும் சக்திகளை தனிமைப்படுத்தி அழிக்கவும் வேண்டியுள்ளது. முதலாளித்துவம் கோருகின்ற பாராளுமன்ற சட்டத்தின் ஆட்சியை, முரணற்ற ஜனநாயக சட்டங்கள் மூலம் நிறுவ வேண்டியுள்ளது. அதைக் கொண்டே எதிரியை ஒடுக்க வேண்டும். இந்த சட்டத்தின் உரிமைகளை மக்கள் தம் கைளில் எடுக்கும் வண்ணம், மக்கள் நீதி மன்றங்களை நிறுவ வேண்டும். முதலாளித்துவ பாராளுமன்ற சட்ட அதிகாரத்தை, மக்களிடம் கொடுக்க வேண்டும்.

இந்த முரணற்ற ஜனநாயக ஆட்சிக்கு எதிராக ஏகாதிபத்தியமும், இந்திய விஸ்தரிப்புவாதிகளும், பார்ப்பனியமும் திரைமறைவில் சதிகளையும், அவதூறுகளையும் அடிப்படையாக கொண்டு புரட்சிக்கு எதிராக செயல்படுகின்றனர். பாட்டாளி வர்க்கம் அதிகாரத்துக்கு வருவதை தடுப்பதே, அவர்களின் அரசியலாகும்.

அவர்கள் ஆட்பலம், பணப்பலம், பண்பாட்டுப் பலம் என அனைத்தையும் கொண்டு, நேபாள மக்களின் வர்க்கப் புரட்சிக்கு எதிரான நஞ்சிட பல வழிகளில் முனைகின்றனர். இதை எதிர்கொண்வாறே, வர்க்கப் புரட்சியை நடத்தும் பணி அவர்கள் முன்னுள்ளது.

முன்பு எதிரி யார் என்று, தெளிவாக கட்சிக்கும் மக்களுக்கும் தெரிந்தே இருந்தது. இன்று அந்த எதிரியுடன் சேர்ந்து பயணிக்க வேண்டியுள்ளது. அவர்களை அழிக்க, மக்களுக்கு எதிரி யார் என்பதையும், எங்கே எந்த வடிவில் உள்ளான் என்பதையும், நடைமுறை மூலம் கற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது. புரட்சிகர வன்முறையை, முதலாளித்துவ சட்ட வழிகளை கையாண்டு செய்யவேண்டியுள்ளது. மக்கள் திரளைக் கொண்டு, சட்டத்தின் ஆட்சியை புரட்சியாக சாதிக்க வேண்டியுள்ளது.

சட்டம் என்பது வெறும் அதிகார வாக்க நிர்வாகிகளைக் கொண்ட, முதலாளித்துவ சட்ட உரிமையாக எதார்த்தத்தில் இருக்கின்து. மாறாக சட்டத்தை பரந்துபட்ட மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையாக்கி, சட்டத்தின் ஆட்சியை நடைமுறைப்படுத்தும் புரட்சி அவசியமானதாக உள்ளது. இதன் மூலம் மக்கள் அதிகாரத்தைப் பெறுவதை, இதன் மூலம் உறுதிசெய்ய வேண்டும்.

ஏகாதிபத்திய அவதூறுகளையும், முற்றுகைகளையும், தகர்த்தெறியும் வகையில், சர்வதேசம் எங்கும் எழுகின்ற புரட்சிகர உணர்வை உணர்ச்சியை சரியாக அரசியல் மயப்படுத்த வேண்டியுள்ளது. தேசம் அடைந்துள்ள புரட்சிகர எழுச்சிகளையும் உணர்வுகளையும் சரியாக வழிநடத்தவும், ஏன் சர்வதேச புரட்சிக்கு வழிகாட்ட வேண்டிய பணி மாவோயிஸ்டுகளின் முன்னால் நிற்கின்றது.

ஏகாதிபத்திய முரண்பாட்டைக் கையாளவும், ஏகாதிபத்தியத்துக்கு எதிரான புரட்சியை நடத்தவும் வேண்டியுள்ளது. இது அவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளாகும்.

பாட்டாளி வர்க்கத்தின் கடமை என்பது, அந்த வர்க்கத்தின் நலனை பாதுகாப்பது தான். நேபாள மாவோயிஸ்ட்டுகளின் அந்த புரட்சிகர பணி வெற்றிபெற, எமது கரங்களையும் அவர்களின் கரங்களுடன் இணைப்போம்.


சாலரப்பட்டி : சமூக நீதியா? சாதி வெறியர்களின் நீதியா?

சாலரப்பட்டி :
சமூக நீதியா?
சாதி வெறியர்களின் நீதியா?

""ரெட்டை டம்ளர் முறைங்கிறது, காலங்காலமாக இருக்குறதுதான். அதையெல்லாம் மாத்த முடியாது. சம்பிரதாயங்களை மாத்த விடமாட்டோம்''

— இப்படியொரு சாதி ஆதிக்கத் திமிர் பிடித்த பேச்சு, சமூக நீதியின் தாயகமாகச் சித்தரிக்கப்படும் தமிழகத்தின் கோவை மாவட்டத்திலிருந்து தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

கோவை மாவட்டம், உடுமலைப் பேட்டையிலிருந்து 6 கி.மீ. தொலைவிலுள்ள சாலரப்பட்டி கிராமத்தில், கூலி விவசாயிகளாக எண்பதுக்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட அருந்ததியர் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இக்கிராமத்தில் படையாச்சி கவுண்டர்கள் என்றழைக்கப்படும் வன்னிய ஆதிக்க சாதியினர் நீண்டகாலமாக இத்தாழ்த்தப்பட்டோர் மீது தீண்டாமையைக் கடைபிடித்து வருகின்றனர். இக்கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட இளைஞர்கள், ""ஆதித் தமிழர் பேரவை'' எனும் அமைப்பின் கிளையைத் தொடங்கி, சாதிவெறியர்களால் திணிக்கப்பட்ட இரட்டைக் குவளை முறை, தேநீர்க் கடைகளில் தாழ்த்தப்பட்டோர் மற்றவர்களுடன் சரிசமமாக உட்கார அனுமதி மறுப்பு, நாடாளுமன்ற உறுப்பினரின் நிதி ஒதுக்கீட்டில் கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு அனுமதி மறுப்பு முதலான தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகக் கையெழுத்து இயக்கம் நடத்தி, அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்துள்ளனர். இம்மனுக்களை குப்பைத் தொட்டியில் வீசியெறிந்து விட்டு வழக்கம்போலவே ஆதிக்க சாதிவெறியர்களுடன் அதிகார வர்க்கம் கூடிக் குலாவியது. குமுறிக் கொண்டிருந்த ஆதித்தமிழர் பேரவையைச் சேர்ந்த இளைஞர்கள், மக்களைத் திரட்டி கடந்த ஜனவரி 7ஆம் நாளன்று உடுமலை நகரில் தொடரும் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகவும், அதிகாரிகளின் அலட்சியப் போக்கைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

அதைத் தொடர்ந்து வட்டாட்சியர் சந்திரபோஸ் இரு தரப்பினரையும் அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தை நாடகமாடினார். இரட்டைக் குவளை முறைக்குப் பதிலாகப் பயன்படுத்திவிட்டுத் தூக்கியெறியும் ""யூஸ் அண்டு த்ரோ'' பிளாஸ்டிக் டம்ளர்களைப் பயன்படுத்துமாறும், இதர விவகாரங்களைப் பின்னர் பேசித் தீர்க்கலாம் என்றும் சாதிவெறியர்களுக்கு இசைவாகக் கட்டப் பஞ்சாயத்து செய்தார். இத்தனை காலமும் இரட்டைக் குவளை முறையைத் திணித்து வந்த சாதிவெறியர்கள் மீது தீண்டாமை வன்கொடுமைச் சட்டப்படி வழக்குப் பதிவு செய்வதைத் திட்டமிட்டே தடுத்து விட்டார்.

வட்டாட்சியரின் "பஞ்சாயத்துக்கு'க் கட்டுப்படுவதாகப் பாசாங்கு செய்து, அவரை வழியனுப்பி வைத்த சாதிவெறியர்கள், மறுநிமிடமே ஊரிலுள்ள அனைத்து டீக்கடைகளையும் நிரந்தரமாக மூடிவிடுமாறு உத்தரவிட்டனர். தாழ்த்தப்பட்டோரை சாலரப்பட்டியிலும் சுற்றுப்புறக் கிராமங்களிலும் எவரும் வேலைக்கு வைத்துக் கொள்ளக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்து, சமூகப் புறக்கணிப்பு செய்தனர். இதனால் தாழ்த்தப்பட்டோர் வேலையின்றிக் குடும்பத்தோடு பட்டினி கிடக்க வேண்டிய கொடுமைக்குத் தள்ளப்பட்டனர். தாழ்த்தப்பட்டோரை நாக்கூசும் வசவு வார்த்தைகளால் சாதிவெறியர்கள் இழிவுபடுத்திய போதிலும், ஜனவரி 7ஆம் தேதியிலிருந்து சாலரப்பட்டியில் குவிக்கப்பட்டிருந்த போலீசுப்படை கைகட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது.

இச்சாதிய தீண்டாமைக் கொடுமைகளை இனியும் சகித்துக் கொண்டிருக்க முடியாது என்று குமுறிக் கொண்டிருந்த தாழ்த்தப்பட்ட மக்கள், ஆதித்தமிழர் பேரவையின் தலைமையில் திரண்டு 18.2.08 அன்று உடுமலை பேருந்து நிலையம் அருகில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே ஓடோடி வந்த வட்டாட்சியர், அன்று மாலையே சமரசப் பேச்சு வார்த்தை நடத்துவதாக அறிவித்து, போராட்டத்தைக் கைவிடுமாறு கோரினார். அவரது வாக்குறுதியை ஏற்றுத் தாழ்த்தப்பட்டோர் சாலரப்பட்டிக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, வரும் வழியிலே அவர்களை மறித்து வன்னிய சாதிவெறியர்கள் கொலைவெறித் தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டனர்.

தாழ்த்தப்பட்ட மக்களை அணிதிரட்டிப் போராடிய ஆதித்தமிழர் பேரவையின் முன்னணியாளர்களை அரிவாளால் வெட்டியும், பலரை உருட்டுக் கட்டையால் அடித்து மண்டையை உடைத்தும் பெண்கள் சிறுவர்களைக் கூடக் கல்லெறிந்து தாக்கிப் படுகாயப்படுத்தியும், பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த போலீசிடமிருந்தே தடிகளைப் பிடுங்கித் தாழ்த்தப்பட்டோரை அடித்து நொறுக்கியும் அருந்ததியர் குடியிருப்புப் பகுதியைச் சுற்றி வளைத்துக் கொண்டு வன்னிய சாதிவெறிக் கும்பல் இத்தாக்குதலை நடத்தியது.

இச்சாதிவெறிக் கும்பல் தாழ்த்தப்பட்டோரின் வீடுகளில் புகுந்து உடமைகளைச் சூறையாடி, கதவு சன்னல்களைப் பெயர்த்தெடுத்து, இரு சக்கர வாகனங்களை அடித்து உடைத்து அனைத்தையும் தீயிட்டுக் கொளுத்தி வெறியாட்டம் போட்டது. சாலரப்பட்டியிலுள்ள பள்ளிக்குள் புகுந்து அருந்ததியர் குழந்தைகளையும் தாக்க இக்கும்பல் கிளம்பிவிட்டதை அறிந்து, பள்ளி ஆசிரியர்கள் இக்குழந்தைகளை பின்புற வழியாகத் தப்பியோட வைத்துள்ளனர்.

வீடு வாசலையும் அற்ப உடைமைகளையும் இழந்து, சொந்த மண்ணிலே அகதிகளாகி நிற்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இதுவரை எந்த நிவாரண உதவியையும் அரசு செய்யவில்லை. கலவரத்தில் ஈடுபட்டதாக வன்னிய சாதிவெறியர்கள் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ள அதேசமயம், ஆதித்தமிழர் பேரவையின் முன்னணியாளர்கள் பலர் மீதும் பொய் வழக்குகள் சோடிக்கப்பட்டுச் சிறையிடப்பட்டுள்ளனர். இச்சாதிவெறி வன்கொடுமைத் தாக்குதலுக்கு எதிராக தாழ்த்தப்பட்டோர் அணிதிரண்டு அடுத்த கட்டப் போராட்டத்தை நடத்தவிடாமல் தடுக்க 144வது பிரிவின் கீழ் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. "சமூக நீதி' பேசும் "தமிழ்க் குடிதாங்கி' "அய்யா' மருத்துவர் இராமதாசு வன்கொடுமைத் தாக்குதல் நடத்திய வன்னிய சாதிவெறியர்களுக்கு எதிராக வாய்திறக்க மறுக்கிறார்.

சட்டம்நீதி, போலீசு, அதிகார வர்க்கம், ஓட்டுப் பொறுக்கிகள் அனைத்துமே சாதிவெறியர்களுடன் கைகோர்த்து நிற்கும்போது, தாழ்த்தப்பட்டோர் தமது சமூக உரிமைகளுக்காக அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்களுடன் இணைந்து ஆதிக்க சாதிவெறிக் கும்பலைத் தனிமைப்படுத்தி அக்கும்பலின் வாக்குரிமை உள்ளிட்ட அனைத்து சிவில் உரிமைகளையும் ரத்து செய்யுமாறு, சட்டவரம்புகளை மீறி தெருப் போராட்டங்களில் இறங்குவதைத் தவிர, இனி வேறென்ன வழி இருக்கிறது?

பு.ஜ. செய்தியாளர், கோவை