தமிழ் அரங்கம்

Saturday, November 18, 2006

போலீசு : சட்டத்திற்கும் மேலான கிரிமினல்கள்

போலீசு :
சட்டத்திற்கும் மேலான கிரிமினல்கள்

போலீசு அதிகாரி பிரேம்குமாரின் அட்டூழியங்களை எதிர்த்து, 25 ஆண்டு காலமாகச் சட்டரீதியாக போராடி வரும் நல்லகாமனின் கதை நிரூரித்துக் காட்டும் உண்மை.

ங்கரராமன் கொலை வழக்கின் விசாரணை அதிகாரிகளில் ஒருவரும், முன்னாள் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளருமான பிரேம்குமார் செப்டம்பர் 8ஆம் தேதி முதல் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். பிரேம்குமார் மீது திரு.நல்லகாமன் தொடர்ந்த கிரிமினல் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டிருப்பதாக ஜூலை 2003இல் மதுரை விரைவு நீதிமன்றம் அளித்த தீர்ப்பினடிப்படையில் அவரை நிரந்தரமாகப் பணிநீக்கம் செய்வது தொடர்பாக செப்டம்பர் 1ஆம் தேதி தமிழக அரசு பிரேம்குமாருக்கு விளக்கம் கோரும் நோட்டீசையும் ஏற்கெனவே அனுப்பியிருக்கிறது.


பிரேம்குமார் மீதான இந்த நடவடிக்கை, "ஜெயேந்திரர் மீதான கொலை வழக்கைப் பலவீனப்படுத்தும் நோக்கத்தில் தி.மு.க. அரசால் எடுக்கப்பட்டிருப்பதாக' முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியிருக்கிறார். ""எந்தக் குற்ற வழக்கிலும் தண்டிக்கப்படும் அதிகாரி மீது நிர்வாக நடவடிக்கை எடுப்பது வழக்கமானதுதான் என்றும், இதற்கு உள்நோக்கம் கற்பிப்பது துரதிருஷ்டவசமானது என்றும்'' தமிழக அரசின் உள்துறைச் செயலர் ஜெயலலிதாவிற்கு மறுப்பு அறிக்கை விடுத்திருக்கிறார்.



பிரேம்குமார் மீதான நடவடிக்கைக்கு அடிப்படையாக அமைந்துள்ள நல்லகாமன் என்ற முன்னாள் இராணுவ அதிகாரி (சுபேதார்) நீதிக்காக நடத்திய நீண்ட துயரமிக்க போராட்டம் பற்றியோ, அவருடைய குடும்பத்தைச் சித்திரவதை செய்தது மட்டுமின்றி, கடந்த 25 ஆண்டுகளாக உள்ளூர் நீதிமன்றம் முதல் உச்சநீதி மன்றம் வரை அவரை அலையவைத்த பிரேம்குமாரின் சட்டவிரோத நடவடிக்கைகளைப் பற்றியோ உள்துறைச் செயலர் தனது அறிக்கையில் எதுவும் கூறவில்லை. தி.மு.க.விற்கும் அ.தி.மு.க.விற்குமான மோதலில் நல்லகாமன் என்ற முதியவரின் போராட்டம் பகடைக்காயாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதே உண்மை.



மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்த நல்லகாமனின் மனைவி சீனியம்மாள், அதே ஊரில் சும்மா கிடந்த ஒரு வீட்டை 5,000 ரூபாய்க்கு ஒத்திக்கு வாங்கி, உரிமையாளரின் அனுமதியுடன் ரூ. 4,000 வரை செலவு செய்து பழுது பார்த்து, கழிப்பறை போன்றவற்றைக் கட்டி 1976 முதல் அங்கே வசித்து வந்தார்.



வீட்டைக் காலி செய்யச் சொன்னார் அதன் உரிமையாளர். காலி செய்வதென்றால் ஒத்திப் பணத்தைத் திருப்பித் தரவேண்டும் என்பது ஊருக்கே பொருந்தும் நியாயம். ஆனால் இது போலீசுக்காரனுக்குப் பொருந்துமா? பணம் கொடுக்க முடியாது; காலி செய் என்றார் வீட்டின் உரிமையாளரான பைரவ் சிங் என்ற உதவி சப்இன்ஸ்பெக்டர் (ஆயுதப்படைப் பிரிவு).



இந்தப் பிரச்சினையில் வாடிப்பட்டியில் சார்பு ஆய்வாளராக இருந்த பிரேம்குமார் கட்டைப் பஞ்சாயத்து செய்தார். அந்த அநீதியான கட்டைப் பஞ்சாயத்துக்குக் கட்டுப்பட மறுத்த குற்றத்துக்காக நல்லகாமன், அவரது மனைவி சீனியம்மாள் மற்றும் பிள்ளைகளை ரத்தம் சொட்ட சொட்ட அடித்து, சங்கிலியால் பிணைத்து நகரம் முழுதும் ஊர்வலம் விட்டார். தன்னைக் கொலை செய்ய முயன்றதாகப் பொய் வழக்குப் போட்டு நல்லகாமனையும் அவரது மகனையும் சிறையிலும் தள்ளினார். இதை எதிர்த்து ஊரே திரண்டு போராடியது. பிரேம்குமார் மீது நல்லகாமன் வழக்குத் தொடர்ந்தார். பிரச்சினை அன்று சட்டமன்றத்தில் எழுப்பப்பட்டது. விசாரணை நடத்திய ஆர்.டி.ஓ. ""பிரேம்குமார் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 7 குற்றப்பிரிவுகளில் வழக்கு தொடருமாறு'' அரசுக்கு சிபாரிசு செய்தார். வழக்கும் தொடரப்பட்டது. 1983இல் பிரேம்குமார் சஸ்பெண்டு செய்யப்பட்டார். ஆனால், கிரிமினல் வழக்கு நிலுவையில் இருக்கும்போதே 1985இல் பிரேம்குமாருக்கு டி.எஸ்.பி.யாகப் பதவி உயர்வு வழங்கியது, (அ.தி.மு.க.) அரசு. அதேநேரத்தில், நல்லகாமன் மீது பிரேம்குமார் போட்டிருந்த பொய் வழக்குகள் காரணமாக, முன்னாள் இராணுவ வீரருக்குக் கிடைக்கக்கூடிய அரசு வேலை வாய்ப்புகள் கூட அவருக்கு மறுக்கப்பட்டன.



இதற்கிடையில், ஆர்.டி.ஓ. அறிக்கை அடிப்படையில் தன் மீது அரசு தொடர்ந்த வழக்கையே தள்ளுபடி செய்யவேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் தீர்ப்பும் வாங்கினார் பிரேம்குமார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தை அணுகினார் நல்லகாமன். பிரேம்குமார் மீதான வழக்கைத் தள்ளுபடி செய்யக் கூடாது என்று கூறிய உச்சநீதி மன்றம், அதனை உடனே விசாரித்து முடிக்கவேண்டும் என்றும் 7.11.89இல் உத்தரவிட்டது. ஆனால் 2002ஆம் ஆண்டு வரை (13 ஆண்டுகள்) மதுரை நீதிமன்றத்தில் விசாரணையே தொடங்கவில்லை.



""பிரேம்குமார் பிடி வாரண்டுக்கு சிக்காத தலைமறைவுக் குற்றவாளி'' (Absconding) என 16.9.97 அன்று அறிவித்தது மதுரை நீதிமன்றம். வாரண்டுக்குச் சிக்காத இந்தக் குற்றவாளிக்கு 1998இல் கூடுதல் கண்காணிப்பாளராகவும், 1999இல் கண்காணிப்பாளராகவும் பதவி உயர்வு வழங்கியது அன்றைய (தி.மு.க.) அரசு.



இந்நிலையில் பிரேம்குமார், நல்லகாமனின் வழக்குகள் அனைத்தையுமே தள்ளுபடி செய்யக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்தார். 1989 உச்சநீதி மன்றத் தீர்ப்பையே மறைத்துவிட்டு உயர்நீதி மன்றத்தை ஏமாற்றித் தீர்ப்பு வாங்க முயன்ற பிரேம்குமார் மீது, நீதிபதி திரு.கற்பகவிநாயகம் 6.6.2002 அன்று வழங்கிய தீர்ப்பில் கீழ்க்கண்டவாறு தனது கண்டனத்தைத் தெரிவித்தார்.



""சட்டத்தின் மீதோ, உண்மையின் மீதோ பிரேம்குமாருக்குக் கடுகளவுகூட மரியாதை இல்லை. பொய் சொல்லி இந்த நீதிமன்றத்தை ஏமாற்றி, எப்படியாவது இந்த வழக்கை ஒழித்துவிட வேண்டும் என்பதுதான் இவரது நோக்கம்.... இவர் மீது உள்ள வழக்குகள் முடியும் வரை இவருக்கு அளிக்கப்பட்ட பதவி உயர்வே தற்காலிகமானதுதான் என்று ஏற்கெனவே உயர்நீதி மன்றம் கூறியுள்ளது. அவ்வாறிருக்க இவர் எப்படி பதவி உயர்வு பெற்றார் என்பது தெரியவில்லை..... இவர் மீதான குற்றங்கள் உண்மையானால், இப்படி ஓர் ஆளை போலீசுத் துறையில் இத்தனை நாள் வைத்திருந்ததே மிகப் பெரிய வெட்கக் கேடாக இருக்கும்'' என்று கூறி நீதிமன்றத்தை மோசடி செய்த குற்றத்துக்காக ரூ. 10,000 அபராதமும் விதித்தார்.



இந்தத் தீர்ப்புக்குப் பிறகும் அ.தி.மு.க. அரசு பிரேம்குமாரை பதவி நீக்கம் செய்யவில்லை. மாறாக, 2003ஆம் ஆண்டு மதுரை விரைவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கியவுடன், பிரேம்குமாரை மதுரை நகரிலேயே காவல்துறை அதிகாரியாக நியமித்தது. எடுபிடிகளும் போலீசு பரிவாரங்களும் சூழ நீதிமன்ற வளாகத்தில் சாட்சிகளையும் வழக்குரைஞர்களையும் மிரட்டினார் பிரேம்குமார். ""பிரேம்குமார் மதுரையில் அதிகாரியாக இருந்தால் இந்த வழக்கில் நீதி கிடைக்காது'' என்று மீண்டும் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவிற்குப் பிறகுதான் மதுரையிலிருந்து அவரை மாற்றியது அ.தி.மு.க. அரசு.



கடைசியாக, 1982இல் போடப்பட்ட இந்த வழக்கு 2003ல் விசாரித்து முடிக்கப்பட்டது. பிரேம்குமாருக்கு எதிராக கொலைமுயற்சி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை ஆர்.டி.ஓ.வே பதிவு செய்திருந்த போதும், தற்செயலாகக் காயம் விளைவித்த குற்றத்தை மட்டும்தான் பிரேம்குமார் செய்திருப்பதாகத் தீர்ப்பளித்தது மதுரை விரைவு நீதிமன்றம். அதற்கும் கூடத் தண்டனை ஏதும் வழங்காமல் நன்னடத்தையைக் கடைப்பிடிக்குமாறு பிரேம்குமாருக்கு ""எச்சரிக்கை'' மட்டும் செய்தது.



நியாயமற்ற இந்தத் தீர்ப்பை எதிர்த்து, ""கொலை முயற்சி உள்ளிட்ட குற்றங்களுக்காக பிரேம்குமாரைச் சிறை வைக்கவேண்டும்'' என்று மதுரை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார் நல்லகாமன். ஆனால், பிரேம்குமாருக்கு எதிராக கொலைமுயற்சி வழக்கு தொடுத்த அரசோ, இந்தக் கணம் வரை மேல்முறையீடு செய்யவில்லை. 25 ஆண்டு காலம் இடைவி டாமல் சட்டபூர்வமான வழிகளில் நீதியைப் பெறுவதற்குப் போராடித் தோற்றிருக்கிறார் நல்லகாமன். இன்று அவருக்கு வயது 74. நல்லகாமனைத் தோற்கடித்தது பிரேம்குமார் மட்டுமல்ல; 25 ஆண்டுகளாகத் தமிழகத்தை ஆண்ட அ.தி.மு.க., தி.மு.க. அரசாங்கங்களும், போலீசின் உயரதிகாரிகளும் பிரேம்குமாருக்குப் பக்கபலமாக நின்றிருக்கிறார்கள். எனவே, தற்போது பிரேம்குமாரை வேலைநீக்கம் செய்வதன் மூலம் மட்டும் நீதி நிலைநாட்டப்பட்டு விடும் என்று நாங்கள் நம்பவில்லை.



வாடிப்பட்டியில் பிரேம்குமார் நிகழ்த்திய கொடுமையில் தொடங்கி, 25 ஆண்டு காலம் அவர் நடத்திய தில்லுமுல்லுகள் அனைத்தையும் அம்பலப்படுத்தி அரசு பகிரங்கமாக அறிக்கை வெளியிட வேண்டும்.



25 ஆண்டுகளாக சட்டத்தை வளைப்பதற்கும், மீறுவதற்கும் பிரேம்குமாருக்குத் துணை நின்ற உயரதிகாரிகள் அனைவர் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.



நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் என்று நம்பி தனது சொத்துக்களையெல்லாம் விற்று வழக்காடி, வெம்பித் தனிமரமாக நிற்கும் நல்லகாமனுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும். இந்தத் தொகையை மக்களுடைய வரிப்பணத்திலிருந்து அல்லாமல், பிரேம்குமார் மற்றும் அவருக்குத் துணை நின்ற அதிகாரிகளிடமிருந்து தண்டத்தொகையாக வசூலித்துத் தரவேண்டும்.



ஆர்.டி.ஓ. விசாரணையின் அடிப்படையில் தமிழக அரசு பிரேம்குமார் மீது தொடுத்த வழக்கில் மதுரை விரைவு நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் அரசும் மேல்முறையீடு செய்து கொலை முயற்சி உள்ளிட்ட குற்றங்களுக்கு பிரேம்குமாருக்கு சிறைத்தண்டனை வழங்கக் கோர வேண்டும்.



இன்னொரு பிரேம்குமார் தோன்றாமல் இருப்பதற்கும், இன்னொரு நல்லகாமன் பலிகடா ஆகாமல் இருப்பதற்கும் இந்த நடவடிக்கைகள் அவசியம்.



மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.



(காவல்துறை கண்காணிப்பாளர் பிரேம்குமார் தமிழக அரசால் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டதையடுத்து, மனித உரிமை பாதுகாப்பு மையம் 22.9.06 அன்று சென்னையில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு கூட்டத்தில் வெளியிட்ட பத்திரிகை செய்தியின் சுருக்கமான தொகுப்பு.)

Thursday, November 16, 2006

இலங்கையில் முஸ்லிம் மக்களின் மறுக்கப்பட்ட வாழ்வு

இலங்கையின் வரலாற்றில் முதல் இனக்கலவரம், சிங்கள முஸ்லிம் கலவரம்.

இலங்கையில் முஸ்லிம் மக்களின் மறுக்கப்பட்ட வாழ்வு


சபேசன்.
கனடா


இலங்கையில் வடக்கு தெற்கு எங்கும் அரசினாலும் புலிகளாலும் காட்டுத்தர்பார் நடாத்தப்படுகின்றது. புலிகளால் நடத்தப்படும் கொலைகளையும் காணாமல் போதல்களையும் பெரிதாக கூறும் அரசும, அதே போன்று அரசும் அரசு சார்பு குழுக்களும் செய்யும் கொலைகளையும் காணாமற்போதல்களையும் புலிகளும் பெரிதாக்கும் பிரச்சாரங்களும் ஒன்றை மட்டும் தெளிவாக புரியவைக்கின்றன. அதாவது எத்தனை மனித உரிமை அமைப்புகள் கண்டித்தாலும் நாங்கள் இவற்றை (கொலைகளையும், காணாமல் போதல்களையும்) நிறுத்தப் போவதில்லை என்பதில் உறுதியாக இருப்போம் என்பதையே.


இரண்டு பகுதிகளும் ஒன்றை ஒன்று விட்டுக்கொடாமல் இனவாத அரசின் இருத்தலிற்காக பௌத்த சிங்கள இனவாதமும, தனது சொந்த அதிகாரத்தை வழிசமைப்பதற்காக புலிகளும் தொடர்கின்ற சதுரங்கம். இந்த நிலையில் அரசியல் அதிகாரப் பகிர்வு தொடர்பாக முஸ்லிம் மக்களின் நிலையென்பது மிகவும் சிக்கலான வடிவத்தை அடைந்த பொழுதிலும் தொடரப் போகின்ற(?) சமாதானப் பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம் கட்சிகள் தனித்துவமாக கலந்து கொள்வதாக இருப்பது முன்னேற்றமான ஒரு விடையமாக பார்க்க முடியும்.


இலங்கை பிரித்தானியர்களிடமிருந்து சுதந்திரமடைந்த காலத்திலிருந்தே தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் மேல் இன ஒடுக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. ஆரம்பத்தில் வர்த்தகம், தொழில் முன்னுரிமைக்கான போட்டியாகவும் பின்னர் காலப்போக்கில் சிங்களப் பெரும்பான்மையினரின் வாக்குச்சீட்டிற்காகவும் திட்டமிட்டு இனவாதம் தூபமிடப்பட்டது. இந்தப்பிழைப்பு வாதம் U N P , S L F P , J V P போன்ற கட்சிகளினால் சிங்கள மக்கள் மத்தியில் இனவாத உருவேற்றியது. இலங்கையின் வறுமை, வேலையின்மை, பற்றாக்குறை போன்றவற்றின் பிரதான காரணங்கள் நவகாலனித்துவம், காலனித்துவம், ஒவ்வொரு கட்சிகளினதும் தனிநபர்களினதும் சுயநலம் போன்றவற்றை அம்பலப்படுத்தி போராடவேண்டிய சிங்கள அரசியல் கட்சிகள் இதற்குப் பதிலாக குறுகிய அரசியல் இலாப நோக்குடன் தமிழ், முஸ்லிம், மலையக மக்களை இப்பற்றாக்குறைகளுக்கு காரணகர்த்தாக்களாக்கின. வாக்குச்சீட்டிற்காக இனவாதத்தை பயன்படுத்தியது.


இவற்றின் எதிர் மறையான விளைவுகளை தமிழ் தலமைகளின் வரலாற்றிலும் காணலாம. தமிழ் மக்களின் மேல் அழுத்தப்பட்ட இனவாதத்திற்கு சரியான காரணங்களi கண்டுகொள்ள முடியாத தமிழ்த்தலைமைகள் தமது தோல்விகளிற்கான காரணத்தை முஸலிம் மக்களின் மேல் கொட்டியதை இலங்கையின் இனக்கலவர வரலாற்றினை கூர்ந்து நோக்கினால் புரிந்து கொள்ளமுடியும்.


சிங்கள இனவாத கட்சிகள் திட்டமிட்ட முறையில் இனவாதத்தை தமிழ் மக்களின் மேல் கொட்டியது போலவே முஸ்லிம் மக்களின் மேலும் செலுத்தியது. 78ம் ஆண்டு வரையிலும் சிங்களத்தேர்தல் தொகுதிகளில் அரை அரைவாசியாக U N P யும்S L F P யும் இருக்கும் போது மூன்றாவதாக தேர்தல் வெற்றியை நிர்ணயம் செய்யும் சிறு சிறு சமூகப் பகுதிகளாக முஸ்லிம்கள் பல தொகுதிகளில் அமைந்திருந்தனர். இந்த காரணத்தினால் இரண்டு பெரிய சிங்களக் கட்சிகளாலும் இவர்கள் விலைபேசப்படும் நிலமை உருவாகியது. இவற்றுக்கெல்வாம் காரணம் இலங்கையின் அரசியலை நிர்ணயிக்கக்கூடிய முஸ்லிம்களின் அரசியல் தலமையானது துர்ப்பாக்கிய வசமாக முஸ்லிம் பணக்காரர்களின் கைவசம் இருந்தததே ஆகும். ஆனால் இந்த நிலமை பிற்காலங்களில் மாறிவிட்டது.


1978ல் சிறு தொகுதிகள் மூலம் தேர்தலில் தெரிவு செய்யும் முறை கைவிடப்பட்டு விகிதாசார தெரிவு முறை நாடாளுமன்றத்தில் அமுல்படுத்தப்பட்டது. இது முஸ்லீம்களின் முக்கியத்துவமான தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கும் பலத்தை இழக்கவைத்தது.


இந்தப் புதியநிலமையானது இரத்தினக்கல் வியாபாரம் போன்ற வர்த்தகம்களை முஸ்லீம் பணக்காரர்களிடமிருந்து சிங்கள வர்த்தகர்களின் கைகளிற்கு இனவாதக்கட்சிகளால் இடம்மாற்ற உதவியது. தொடர்ச்சியாக முஸ்லீம் ஏழை மக்களின் வாழ்வில் இனரீதியாகவும், சமூக பொருளாதார ரீதியாகவும் பாதிப்புகள் ஏற்பட்டன. இவை முஸ்லீம் மக்களின் அரசியல் கொழும்புசார் பணக்கார முஸ்லீம் தலமைகளிடமிருந்து விடுபட்டு இவர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிலிலுள்ள முஸ்லீம்களிடமும், நடுத்தர விவசாய முஸ்லீம்களிடமும் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.


தொடர்ந்து பாராளுமன்ற உயர் பதவிகளிலிருந்து கூட முஸ்லீம்கள் தூக்கியெறியப்பட்டனர். இக்காலங்களிற்கு முன்னரே முஸ்லீம் எதிர்ப்புணர்வு, வன்முறை வடிவத்தில் சிங்கள இனவாதக்கட்சிகளால் ஏவிவிடப்பட்டன. எழுபதுகளில் நடைபெற்ற முஸ்லீம் விரோத நடவடிக்கைகளில் சிங்கள அரசுதான் பின்னின்றது.


76ம் ஆண்டு புத்தளம் பள்ளிவாசலும் அதன் அண்டைகிராமங்களும் தாக்கப் பட்டும் எரிக்கப்பட்டும் பல முஸ்லீம்கள் கொலலப்பட்டதிற்கும் S.L. F. P அரசு பின்னின்றது.


82ல் காலி நகரிலும் அரசபயங்கரவாதம் முஸ்லீம் மக்கள் மேல் ஏவப்பட்டது. இதற்கு U.N.P அரசாங்கம் பின்னின்றது.


இந்த நூற்றாண்டின் ஆரம்பப்பகுதியில் கொழும்பில் உருவாகிய யாழ்ப்பாண பணக்காரர்களின் கூட்டம் அங்கே வர்த்தகம், தொழில் முன்னுரிமை போன்றவற்றிற்கு போட்டி போட வேண்டி ஏற்பட்டது. இதற்காக முஸ்லீம்களையும், இந்திய வம்சாவழிகளையும் காட்டிக்கொடுத்தேனும் தமது அபிலாசைகளை நிறைவேற்றியது. ஊதாரணமாக சேர் பொன் இராமநாதன் போன்றோர் முஸ்லிம்களிற்கு எதிரான உரைகளை நிகழ்த்தியிருந்தனர். 48ல் தமிழ்க்காங்கிரஸ் கட்சி தங்கள் சொந்த நலன்களுக்காக, மலையக தமிழர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்ட போது அவர்களுக்கு பச்கைத் துரோகமிழைத்ததும் குறிப்பிடப்பட வேண்டும்.


1915 ம் ஆண்டு கலவரம் சிங்கள தமிழ் கலவரமாக இல்லாமல், சிங்கள முஸ்லீம் கலவரமாக நடந்து முடிந்ததும் இந்த வரலாற்றுத் துரோகப்பின்னணிகளே ஆகும்.


இலங்கையின் வரலாற்றில் முதல் இனக்கலவரம், சிங்கள முஸ்லிம் கலவரம் ஆகும்.


தமிழரசுக் கட்சியின் தோற்றத்தின் போது கிழக்கு மாகாண முஸ்லிம்களுடன் மேலோட்டமான ஒற்றுமைக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் சரிவர வெற்றிபெறவில்லை. அதன் காரணத்தினால் நூற்றுக்கணக்கான சதுரமைல் பரப்புள்ள நிலங்கள் முஸ்லிம் மக்களிடமிருந்து பறிக்கப்பட்டதிற்கு எதிரான போராட்டம் வலுப்பெறவில்லை.


தமிழ்க்கட்சிகளுடன் பாராளுமன்றம் சென்ற பல முஸ்லிம்கள் பின்னர் சிங்கள இனவாதக்கடசிகளுடன் இணைந்து கொண்டனர். (இதனை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் செய்திருந்தார்கள்) ஆனால் அக்காலங்களில் முஸ்லிம்கள் மட்டும்தான் அரசியலில் நம்பத்தகாதவர்கள் என்ற அபிப்பிராயம் தமிழர்களிடம் திட்டமிட்டு வளர்க்கப்பட்டது. அதேசமயம் அறுபதுகளிலிருந்தே முஸ்லிம்கள் பலர் தமிழ் தேசிய விடுதலைப்போராட்டங்களிலும், சத்தியாக்கிரகமங்களிலும் பங்கு கொண்டு சிறை சென்ற வரலாறுகள் பலவுண்டு.


ஆனால் தமிழ் பிரதிநிதிகள் தங்களுடன் சேர்ந்து போராடிய முஸ்லிம் இளைஞர்களையோ ஏழை மக்களையோ முதன்மைப்படுத்தாமல் கொழும்புசார் பணக்கார முஸ்லிம்களின் தலமைத்துவத்தின் அரசியல் சூதாட்டங்களையே பெரிதுபடுத்தினார்கள்.


இதன் காரணத்தினால் முஸ்லிம்களை அரசியலில் நம்பமுடியாது என்று தமிழர்களிடையேயும் தமிழர்களை அரசியலில் நம்பமுடியாது என்று முஸலிம்களிடையேயும் கருத்துப் பரவியது. தமிழர் கூட்டணியின் வழியில் தோன்றிய இயக்கங்களும் இக்கருத்தோட்டத்தை மாற்ற பெரிய அளவில் முயற்சிக்கவில்லை.


கிழக்கு மாகாணத்தில் 33 சதவீதமும் மற்றும் அம்பாறை, யாழ்ப்பாணம், மன்னார் போன்ற மாவட்டங்களில் குறிப்படத்தக்க அளவு கணிசமான தொகையினரும் வாழ்ந்தனர். ஆனால் ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் சிங்களப் பிரதேசங்களில் உள்ள தொகுதிகளிலேயே சிதறி வாழ்ந்தனர்.


எது எப்படியிருந்த போதும் தமிழ்த் தேசிய இயக்கங்கள் கிழக்கு மாகாணம் "தமிழர்கள் மாகாணம்" என்ற நிலைப்பாட்டையே கொண்டிருந்தனர். இது யாழ்ப்பாண நோக்கில் எடுத்த மிகவும் பிழையான மனோபாவமாகும். அன்று புலிகளின் மூத்த உறுப்பினரான யோகியிலிருந்து இன்றைய தமிழ் தேசியகூட்டமைப்பானானாலும் சரி இன்றைய சு.ப தமிழ்ச்செல்வனானாலும் சரி வெளிப்படையாக வெட்கமில்லாமல் "முஸ்லிம்கள் தமிழர்களின் நலன் சார்ந்தே அரசியல் முடிவுகள் எடுக்கவேண்டும்" என்று அவர்களின் ஊடகங்களில் கூறுகிறார்கள்.


இன்று மட்டுமல்ல பழைய தமிழ் கட்சிகளான தமிழரசுக்கட்சி, கூட்டணி போன்றவற்றின் பிரதிநிதிகள் சிங்கள அரசுடன் நடாத்திய பேச்சுவார்த்தைகளில் கூட முஸ்லிம்களின் அபிலாசைகளிற்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. இப்படியாக இலங்கையின் அரசியல் வரலாற்றில் இனங்களிடையே காட்டிக் கொடுப்பிற்காகவும் குறுகிய இலாபத்திற்காக சோரம் போவதும் இனங்களிடையே பரஸ்பர நம்பிக்கையின்மையையே வளர்த்துள்ளது.


தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்காக புறப்பட்ட பிரதான இயக்கங்கள் எல்லாம் முஸ்லிம் மக்களை ஒரே இனத்தவர்களாகவோ அல்லது சகோதர மக்களாகவோ நடத்தவில்லை. இது இவர்களின் கடந்தகால அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் வெளிப்படுத்தப்பபட்டுள்ளது. முக்கியமாக புலிகளின் அராஜகம் நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களை இரத்தப்பலி எடுத்தது. இதன் விளைவாலும், இனவாத சிங்கள அரசினால் தூண்டப்பட்டும் முஸ்லிம்கள் சிலரும், முஸ்லிம் ஊர்காவல் படையினரும் பல அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்தனர். இவற்றால் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் மக்களிடையே குரோத உணர்வு உக்கிர நிலமையடைந்தது.


பழைய தமிழ்த் தலைமைகள் கூட இன ஒடுக்குமுறையை "தமிழ் பேசும் மக்களின் பிரச்சனையாக" பேசினார்கள். ஆனால் இன்று குறிப்பாக புலிகளால் "தமிழர்களின் பிரச்சனையாகவே" பார்க்கப்படுகின்றது.


அன்று தொட்டு பிரச்சனைகளை பேசும் போதும், போராடும் போதும் "தமிழ் பேசும் மக்களின் பொதுப் பிரச்சனையாகவே" பேசப்பட்டும் போராடப்பட்டும் வந்துள்ளது. இப்போராட்டங்களில் முஸ்லிம்களும் இணைந்தே போராடிவந்துள்ளனர். ஆனால் பிரச்சனைகளுக்கான தீர்வினைத் தேடும்போது மாத்திரம் தீர்வானது "தமிழர்களுக்கு மாத்திரம்" என்று பார்க்கப்படுகின்றது.


இன்று ஏற்பட்டுள்ள தமிழ் முஸ்லிம் குரோதத்திற்கு புலிகளின் பங்கு என்பது பிரதான பாத்திரம் வகிக்கின்றது. சிங்கள அரசாங்கமும் இக்குரோத உணர்வினையே பாவிக்கின்றது. அன்றைய இந்திய இலங்கை அரசுகளின் ஒப்பந்தம் கூட உருப்படியான ஒரு தீர்வினை முஸ்லிம்களுக்கென முன்வைக்கவில்லை. இக்குறைபாட்டினை சில முஸ்லிம்கள் தவிர இலங்கை அரசியலில் எப்பகுதியாலும் எதிர்ப்புத் தெரிவிக்கப்படவில்லை. இந்திய அரசின் உதவியுடன் வட கிழக்கு மாகாணசபை உருவாகிய போது முஸ்லிம்களால் தெரிவு செய்யப்படாத, முஸ்லிம்களின் அபிலாசைகளை பிரதிபலிக்காத ஒரு முஸ்லிம், "அபுயூசுவ்" தெரிவுசெய்யப்பட்டார்.


இது முஸ்லிம்களின் உரிமக்கான உத்தரவாதம் உடைக்கப்பட்ட செயலாகும். அதைவிட முஸ்லிகளின் அபிலாசைகளை நிறைவேற்றியதாக போலியாக காட்டமுனைந்த செயலாகும்.


மாகாண சபையில் உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அலியது உகுமானை மாகாணசபையில் அங்கம் வகித்த E.N.D.L.F இனர் சுட்டுக்கொன்றனர்.


கிழக்கிலும் திருகோணமலையிலும் புட்டும், தேங்காய்பூவையும் போன்று அடுத்தடுத்த கிராமங்களில் வாழ்ந்த தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் தமக்கிடையே உருவாகிய சிறு பிரச்சனைகளை தம் ஊர்ப்பெரியவர்கள் மூலம் தீர்த்து முடித்தவர்களே. ஆனால் இவை அரசியலுக்காக தமிழ் சிங்கள கட்சிகளால் உருவேற்றப்பட்ட பின்னர் நிரந்தர நம்பிக்கையின்மையையே பரஸ்பரம் உருவாக்கியது. குறிப்பாக இப்பகுதி முஸ்லிம்களின் பாதுகாப்பு உத்தரவாதம் என்பது சிங்களப் பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்களின் பாதுகாப்பை விடவும் பாதகமான நிலையிலேயே உள்ளது.


சாத்வீக போராட்ட காலங்களிலும் சரி ஆயுதப் போராட்ட காலங்களிலும் சரி முஸ்லிம்கள் இணைந்தே போராடியுள்ளனர். இருந்த போதிலும் முஸ்லிம்களுக்கு எதிராக தமிழர்களது ஆயுதம் திரும்பியது வெட்கக்கேடான விடையமாகும். அதுவும் அரசியல் துரோகிகளாக,


'தொப்பி பிரட்டி" களாக தமிழ் மக்கள் மத்தியில் உருவேற்றப்பட்டு நடாத்தப்படுகின்றது.


பிற்காலங்களில் முஸ்லிம்களுக்கான ஒரு அரசியல் ஸ்திரநிலமையை உருவாக்க உணர்சிமயமாக பேசிவந்த அஸ்ரப, ஒரு தீவிரமான முஸ்லிம் தோற்றப்பாட்டை உருவாக்கினாh. ஆனாலும் தமிழ்த்தேசியத்தின் மிகைப்படுத்தப்பட்ட தீவிரமான பாசிச தோற்றத்தினை "ஜிகாத்" அடைவதற்கு முன்னர் எல்லைப்படுத்தப்பட்டது. இவர்களின் செயற்பாடுகள் அரசசார்பாகவும், தமிழ்மக்கள் விரோத செயற்பாடுகளாகவும் இருந்தன.


தமிழ் ஈழ்ப் பிரிவினை வாதம் என்பது ஒரு கனவுதான் என்பதை தன்னகத்தே கொண்டிருக்கும் "ஒடுக்கமான யாழ்ப்பாண சுயநல நோக்கத்தை" பார்த்தாலே புரிந்து கொள்ளலாம். இது கடைசிவரைக்கும் மத, பிரதேச ஒற்றுமைகளை வென்றெடுக்காது. ஆனால் அஸ்ரப்பினது நோக்கத்தை உற்றுப்பார்த்தால் சிறிலங்காவின் முழு முஸ்லிம்களை இணைக்க எடுத்த முயற்சியானது முற்று முழுதான பிரிவினையை நோக்காது ஒரு ஜனநாயக கோரிக்கையாக அமையவே முற்பட்டது எனலாம்.


முஸ்லிம்களுக்கான தனிமாகாணக் கோரிக்கை, முஸ்லிம்கள் மிக அதிகமாக வாழும் அம்பாறை மாவட்டத்தை அடிப்படையாக கொண்ட தென்கிழக்கு மாகாணக் கோரிக்கை போன்றவை ஒருவகையில் யாழ்ப்பாண முஸ்லிம்களை கருத்தில் கொள்ளவில்லை என்பதால் பரந்த வட கிழக்குக்குள் முஸ்லிம்களுக்கான சுயாட்சி அலகுகள் என்பதாகவும், அதுபோன்று பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வருகின்றன.


2003 தை மாதத்தில் "ஒலுவில பிரகடனம்" தென்கிழக்கு பல்கலைகழகத்தில் நிறைவேற்றப்பட்டது. இதில் பலலாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டு தமது அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தினார்கள்.


தமிழர்களுக்கு 'வட்டுக்கோட்டை தீர்மானம்" எவ்வளவு வரலாற்று முக்கியத்துவம் கொண்டதே அதேயளவிற்கு "ஒலுவில பிரகடனம்" முஸ்லிம்களுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.


"முஸ்லிகள் அரசியல் துரோகிகள்" என்பது வெறும் புனையப்பட்ட மாயை என்பதை தமிழ்மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.


இனறைய நிலையில் இலங்கை முஸ்லிம்கள் ஒரு தேசிய இனமாக அடையாளம் பெற்றுக்கொண்டிருக்கிறார்களா? அல்லது தனித்துவமான இனக்குழுவா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. எது எப்படியிருந்தபோதும் முஸ்லிம்கள் ஒரு தனித்துவமான சமூகக்கூட்டம் என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒரு விடயம். எனவே அவர்களின் அரசியல் ரீதியான உரிமைகளை அவர்களே தீர்மானிக்கும் உரிமை உண்டு. முஸ்லிம் மக்களின் இந்த உரிமையை தமிழ் சிங்கள மக்கள் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். அத்துடன் அவர்கள் பாரம்பரியமான வாழ்ந்த நிலங்களில் அவர்கள் உரிமையுடன் வாழ்வதற்கான சகல நிபந்தனைகளையும் உருவாக்குவது அவசியமாகும். முஸ்லிம் மக்களின் இந்த உரிமைமையை இலங்கைவாழ் அனைவரும் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். இது ஜனநாயக உணர்வுள்ள ஒவ்வொரு தமிழரதும், சிங்களவரதும் கடமையாகும்.


எப்படி சிங்களப் பேரினவாதத்திலிருந்து தேசிய விடுதலை தமிழ்மக்களுக்கு தேவையோ, அதே போல் முஸ்லிம்கள் தமிழ்ப் மேலாதிக்கத்தால் அடக்கப்படாதிருக்க அல்லது எதிர்காலத்தில் மேலும் அடக்குமுறை வளர்ச்சியடையாதிருக்க நாம் விழிப்புடன் செயற்படவேண்டும்.


தேசியரீதியிலான அரசியல் தீர்வில் தமிழ்ப்பகுதிகளால் வலியுறுத்தப்படும் "வடகிழக்கு இணைப்பு" அல்லது இன்று சிங்கள சுப்ரீம் கோட் வலியுறுத்தும் "வடகிழக்கு பிரிப்பு" என்பவை நிபந்தயைற்ற இணைப்பாகவோ அல்லது பிரிப்பாகவோ முன்வைப்பதானால் அது முஸ்லிம்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்திசெய்யாது.


'வடகிழக்கு இணைப்பு அல்லது பிரிப்பு' என்பதை தீர்மானிப்பவர்கள் சிங்கள அரசாங்கமாகவோ அல்லது புலிகளாகவோ, யாழ்ப்பாணத் தலமைகளாகவோ இருக்கமுடியாது. மாறாக இந்த இணைப்பினாலும் அல்லது பிரிப்பினாலும் தமது அரசியல், வாழ்வுரிமைகளில் பாதிப்பு என்பதனை யதார்தத்தில் அடையப்போகின்ற கிழக்கு தமிழர்களோ, அதிலும் முக்கியமாக கிழக்கு முஸ்லிகளோ தான் தீர்மானிக்ககூடியதாக அமைய வேண்டும்.


இந்த கிழக்கு தமிழ், முஸ்லிம்களின் அரசியல் அபிலாசைகளடங்கிய "முன்நிபந்தனைகளை" ஏற்காத "இணைப்போ, பிரிப்போ" நிரந்தரமான தீர்வினை கடைசிமட்டும் வழங்கமுடியாது.


அவர்களது அரசியலை அவர்களே தீர்மானிக்கட்டும்.


இங்கே கூறப்படும் "அவர்கள்" என்ற விளிப்பிற்கு காரணம் "நாங்கள்" என்கின்ற தமிழ்ப்பேசும் தேசிய இனத்திற்குள் இருந்து முஸ்லிம்களை தூக்கியெறிந்து பல வருடங்களாகிவிட்டன.


சபேசன்.


தரவுகள் - "கைநாட்டு" "தேடல்"

Monday, November 13, 2006

இலங்கையில் முதன்மைப் பிரச்சனை புலிப் பாசிசமா?

இலங்கையில் முதன்மைப் பிரச்சனை புலிப் பாசிசமா?


பி.இரயாகரன்
13.11.2006



தை சாரமாக கொண்டு, மற்றொரு புலியெதிர்ப்பு அணியும் குலைக்கின்றது. புலியெதிர்ப்பையே அரசியலாக கொண்டு, அதையும் மார்க்சியத்தின் பெயரில் திரித்து குலைக்கின்றது. இந்த புதிய அணி முதலாளித்துவம் என்ற சொற்களைக் கொண்டே மார்க்சியத்தை சாயம் அடித்தபடி தான், புலியெதிர்ப்பில் தன்னை வேறுபடுத்தி நிற்கின்றது. சொந்தப் பெயரிலும் புனைபெயரிலும் தேனீ மற்றும் ரீ.பீ.சீல் சிவப்பு கம்பளம் விரித்து, புலியெதிர்ப்பு அரசியலை விபச்சாரம் செய்தவர்கள் தான் இவர்கள். திடீரென்று அதில் இருந்து பிரிந்து, புதிய புலியெதிர்ப்பு அணியாகவே மறுபடியும் வந்துள்ளனர்.



துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று விபச்சாரத்தை கைவிட்டு ஓடவெளிக்கிட்டவர்கள், கையில் கிடைத்த சிவப்பு துணியை போர்த்திய படி ஓடி வந்தனர். மறுபடியும் மிக மோசமான அப்பட்டமான பேரினவாதிகள் தான் நாங்கள், என்பதை அடித்துக் கூறுகின்றனர். இதை சோபாசக்தியின் சத்தியக்கடதாசியில் இந்த ஆபாசத்தை அரங்கேற்றியுள்ளனர். வெட்கக்கேடான ஆபாசமாக சிவப்பு சாயம் அடித்த இவர்களின் அரசியல் படி, தமிழ் மக்களுக்கு என்று தனித்துவமான அரசியல் பிரச்சனைகள் எதுவும் கிடையாது என்பதே இவர்களின் அரசியலாகும். பேரினவாதம் என்பது கற்பனையானது. அது தமிழ் பாசிட்டுகளினது, தமிழ் முதலாளிகளின் சொந்தக் கண்டுபிடிப்பு என்பதே, இவர்களின் அரசியல் முடிவு. அதை பேரினவாதத்துக்காக வாலாட்டி குலைக்கும் போது அதை உதிர்த்து விடுகின்றனர். 'இலங்கை அரச இயந்திரம் பௌத்த சிங்கள இனவாதத்தாற் கட்டுப்படுத்தப்படுகிறது, ... என்பது பெரும் பொய்யாகும்." என்கின்றனர். தமிழ் பேசும் மக்களின் மீதான பேரினவாத இனவொடுக்குமுறை பற்றிய திரொக்சிய அரசியல் பார்வை இதுவாகும்.



இதனால் இவர்கள் பேரினவாதிகள் போல், தமிழ் மக்களின் பிரச்சனைக்கு என்று எந்த தீர்வையும் ஏற்றுக்கொள்வது கிடையாது. அதேபோல் இவாகள் முன் வைப்பதும் கிடையாது. மக்களை அணிதிரட்ட எதுவுமிருப்பதில்லை. இவர்களின் இந்த பேரினவாத நிலையை, அவர்களின் சொந்த மார்க்சிய வார்த்தையில் சொன்னால் 'சுயநிர்ணய உரிமை" அரசியலின் சகாப்தம் இன்று முடிவடைந்து விட்டது." என்று ஒரே வார்த்தையில் அடித்துக் கூறி விடுகின்றனர். தமிழ் மக்களின் எதிரி கூட இப்படி கூறியது கிடையாது. இப்படிக் கூறி தமிழ் மக்களின் எதிரிகளுடன் கைகோர்த்து நிற்கின்றனர். இதே அரசியல் நிலையைத் தான் ஜே.வி.பியும் இனவாதமாக கொப்பளித்து அதை தமிழ் மக்களின் முகத்தில் காறி துப்புகின்றது.



சுயநிர்ணயம் என்பது தமிழ் மக்களுக்கு கிடையாது என்பதால், பேரினவாதத்தை ஆதரிக்க கோருகின்றனர். அதை அவர்களின் சொந்த மார்க்சிய நடைமுறை சார்ந்த பேரினவாத அரசியலாகவே கூறுகின்றனர். 'புலிகள் அரசுக்கிடையே இராணுவ மோதல் மூண்ட போது புலிப்பாசிசம் தோல்வியுறவேண்டும் என்ற தெளிவான அரசியல் நிலைக்கு" செல்வது தான் அவசியம் என்கின்றனர். இதைத்தான் அவர்கள் தமது சொந்த அரசியலாக நடைமுறையாக கொள்கின்றனர். இதைத்தான் இவர்கள் மக்களுக்கு மாற்றுவழியாக காட்டுகின்றனர். பாசிச ஒழிப்பு என்ற பெயரில், தம்மையொத்த ஒரு கைக்கூலிகளாக எப்படி இருத்தல் என்பதையே, சோபாசக்தியின் சத்தியக்கடதாசியில் முதலாளித்துவம் பற்றி பூசைகாட்டியபடி விளக்குகின்றனர். இந்த அரசியல் ஆபாசத்தைத் தான், அவர்கள் திரொஸ்கிய மார்க்சிய நிலை என்கின்றனர். இவர்கள் ஜே.வி.பியின் வலது பேரினவாத 'இடது" நிலையைப் பின்பற்றும், வலது திரோஸ்கிய வாதமே பேரினவாதமாக கொப்பளிக்கின்றது.



தமிழ் மக்களின் ஜனநாயகக் கோரிக்கையை ஏற்க மறுக்கும் இவர்கள், எல்லாவற்றையும் புலியாக, புலிப் பாசிசமாக காட்டியே புலியெதிர்ப்பு அரசியலை பிதற்றுகின்றனர். பேரினவாத பாசிட்டுகளுடன், கூடி நிற்க திரொஸ்கியத்தின் பெயரில் அழைக்கின்றனர். இந்த அழைப்பையே 'இலங்கை அரசு புலிகளை இராணுவரீதியில் சாகடிக்கும் எனிற் கூட நாம் அதையும் நிபந்தனைகளோடு ஆதரிக்கலாம்." என்கின்றனர். நல்ல நகைச் சுவையான வேடிக்கை தான், போங்கள். இதை மார்க்சியம் என்றால் கைகொட்டி சிரிப்பார்கள். ஏதோ நிபந்தனையுடனாம்! சரி அந்த நிபந்தனை தான் என்ன? புலிப் பாசிசத்தை அழித்த பின்பு திரோஸ்கிகளிடம் ஆட்சி தரவேண்டும் என்பதோ அந்த நிபந்தனை? ஐயோ பாவம் பரிதாபத்துக்குரியவர்கள்.



இவர்கள் மனதில் நினைக்கும் நிபந்தனையுடன் ஆதரிக்கும் இலங்கை அரசைப் பற்றிக் கூறும் போது 'இலங்கை நேரடியான ஆசியப் பிராந்தியத்தில் இந்திய, சீன, ஜப்பானிய, பாகிஸ்தான் அரசுகளின் பொருளாதார அரசியல் இராணுவ உதவிகட்கு கட்டுப்படும் சக்தியாகி விட்டது. அவைகளின் சொற்கேட்கும் சார்புநிலைச் சக்தியாகிவிட்டது." என்று கூறுகின்றனர். அப்படி என்றால், சார்புநிலை சக்தியாக முன்னம் என்னவாக இருந்தனர்? அது எப்படி எப்போது இல்லாது போனது? உலகத்தை கொள்ளையடித்த களைப்பில், ஏகாதிபத்தியம் இலங்கை கடற்கரையில் பொழுதுபோக்குக்கு படுத்துக்கிடந்து மீன் பிடிக்கின்றனரோ!



ஏகாதிபத்தியம் புலிகளை தடைசெய்த பின்பும், அவர்களை அழிக்காது, சும்மா விட்டிருக்கு என்ற கடுப்பே இப்படி புலம்ப வைக்கின்றது. புலியை அழிக்காது தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை வைக்க ஏகாதிபத்தியம் கோருகின்றது என்ற கோபம், அரசின் மனித உரிமை மீறல் பற்றியும் ஏகாதிபத்தியம் முன்வைக்கின்றது என்ற ஆத்திரமே உளறவைக்கின்றது. (ஏகாதிபத்தியம் ஏன் இதை செய்கின்றது என்பது மற்றொரு விடையம்.) ஏகாதிபத்தியத்தை விடவும், இலங்கை அரசு உடனடியாக யுத்தம் மூலம் புலியை அழிப்பதால் நிபந்தனை என்று கூறியபடி ஆதரிப்பதே, இவர்களின் அரசியலாகின்றது. இங்கு என்ன நிபந்தனை என்று மட்டும் தயவு செய்து கேட்டுவிடாதீர்கள். நாங்கள் சொல்லுவோம், ஆனால் அது என்னவென்று இனிமேல் தான் கண்டுபிடிக்க வேண்டும்.



இப்படி இலங்கையின் சார்புநிலை பற்றி கூறுபவர்கள் தான், இந்த சார்பு அரசு புலிகளை அழித்தால் ஆதரிக்க வேண்டும் என்கின்றனர். இங்கு அழிப்பது இந்தியா உள்ளிட்ட அன்னிய சக்திகள் அல்லவா? அப்படியாயின் உங்கள் நிபந்தனை இலங்கை அரசுக்கா? அல்லது அதை வழிநடத்தும் அன்னியருக்கா? இப்படி அன்னிய சக்திக்கு பாய்விரிப்பது திரோஸ்கிய விபச்சாரமில்லையோ? இங்கு 'இந்திய, சீன, ஜப்பானிய, பாகிஸ்தான் அரசுகளின் பொருளாதார அரசியல் இராணுவ" உதவிக்கு இலங்கை கட்டுப்பட்டது என்பதே ஒரு திரிபாகும. இது இவர்களின் மற்றொரு அரசியல் திரிபு. உலகமயமாதலை பாதுகாக்க விடையத்தை மேலெழுந்தவாரியாக திரித்து, ஏகாதிபத்தியத்தை உள்ளடக்க ரீதியாக இலங்கையில் பாதுகாப்பதாகும். இப்படி பல. ஆனால் அவற்றை இக்கட்டுரை விவாதிக்க முற்படவில்லை.



இவர்களும் ரீ.பீ.சீ மற்றும் தேனீக்கும் இடையில் என்ன வேறுபாட்டுடன் ஓடிவந்து, சோபாசக்தியின் சத்தியக்கடதாசியில் என்ன கூறுகின்றனர் என்பதை சுருக்கமாக பார்போம். இதன் மூலம் நுட்பமாக புலியெதிர்ப்பின் பன்மைப் போக்கை தெளிவுபடுத்த முடியும்.



பேரினவாதத்துடன் கூட்டுச்சேர்ந்தே புலிகளை அழிக்கவும், அதை பகிரங்கமாக அங்கீகரிக்க மறுக்கும் ரீ.பீ.சீ மற்றும் தேனீ நிலைப்பாடு தான், இவர்களின் அடிப்படையான அரசியல் முரண்பாடு. இதற்கு முதலாளித்துவம் என்ற சொல்லை உச்சரித்து பசப்புகின்றனர். இந்த ரீ.பீ.சீ மற்றும் தேனீயுடான முரண்பாட்டை 'புலிகள் அரசுக்கிடையே இராணுவ மோதல் மூண்ட போது புலிப்பாசிசம் தோல்வியுறவேண்டும் என்ற தெளிவான அரசியல் நிலைக்கு இவர்களால் போகமுடியவில்லை. இலங்கை அரசு புலிகள் இடையே நடுநிலமை உண்டெனக் கருதிக்கொண்டு இரு பகுதிகளையும் தாக்கத் தொடங்கினர். இலங்கை அரசு வெற்றிபெற வேண்டும் எனக் கூறினால் அது சிங்களத் தேசியவாதத்தை ஆதரிப்பதாய் கருதப்பட்டு விடும் என்று கருதியதால் வட துருவத்திற்கும் தென் துருவத்திற்கும் பாய்ந்தனர்." இது தான் இந்த புலியெதிர்ப்பின் பின் பூத்துக் குலுங்கும் புதிய அவதாரம். இதற்கு சோபாசக்தியின் சத்தியக்கடதாசி, தனது முந்திய நிலைக்கு மாறாக துணைபோவது அறியாமையா? அல்லது ரீ.பீ.சீ மற்றும் தேனீ மீதான எதிர்ப்பா? இதை மறுபிரசுரம் செய்த தூண்டில் முன்னும் இக்கேள்வி பொருந்திநிற்கின்றது.



ரீ.பீ.சீ மற்றும் தேனீயில் இருந்து பிரிந்தவர்களின் அரசியல, பேரினவாத அரசை நேரடியாக ஆதரிப்பது தான். அரச பயங்கரவாதத்தை புலிப் பாசிச அழிப்பில் அங்கீகரிக்க வேண்டும். இதைச் செய்ய மறுக்கும் மேற்கத்தைய நாடுகளை, இதன் அடிப்படையில் எதிர்க்க வேண்டும். புலியை ஏகாதிபத்தியம் அழித்தால், சூக்குமமான அந்த நிபந்தனையுடன் நாம் மறுபடியும் அரசியல் முலாம் பூசி ஆதரிக்க கோருவோம்.



இதை விடுத்துவிட்டு தமிழ் மக்களுக்கு தீர்வு என்பதும், இதை அண்மைக்காலமாக ஏகாதிபத்திய வாலில் தொங்கியபடி முன்வைக்கும் ரீ.பீ.சீ மற்றும் தேனீயின் நிலையை பினாற்றல் என்பது இவர்களின் புலியெதிர்ப்பு நிலை. இதனால் தான் இவர்கள் ரீ.பீ.சீ மற்றும் தேனீயுடன் முரண்பட்டனர்.



இந்த ஒட்டுமொத்த அரசியல் விபச்சாரத்தைத் தான் இவர்கள் 'இலங்கை அரசு புலிகளை இராணுவரீதியில் சாகடிக்கும் எனிற்கூட நாம் அதையும் நிபந்தனைகளோடு ஆதரிக்கலாம். புலிப்பயங்கரவாதம் மேல் தாக்குதல் தொடுக்கப்பட்டால் ஐயோ இது சிங்கள அரசை ஆதரிப்பதாகிவிடும் என்று அரசியலில் களங்கப்படாத கற்புடன் இருப்பதாய் கருதும் சிலர் குரலிடுவார்கள்.." என்ற கூறி வாருங்கள் என்று அழைக்கும் திரொஸ்கிகள், தங்களுடன் சேர்ந்து கற்பழிக்க கோருகின்றனர்.



தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு அவசியம் என்பதை ஏகாதிபத்தியத்தின் பின் நின்று வலியுறுத்தும், ரீ.பீ.சீ மற்றும் தேனீ புலியெதிர்ப்புக் கும்பலுடன் முரண்பட்டு நிற்கின்றனர். இதை மூடிமறைக்கவே, முதலாளித்துவம் என்ற அந்தச் சொல் மட்டும் உதவுகின்றது. புலியை அழிப்பதே இவர்களின் அரசியலாகின்றது. தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்க மறுபவர்களுடனும், புலியை அழிக்கும் யாருடனும் கூட்டுச் சேர்ந்து செயல்பட வேண்டும் என்பதே இவர்களின் அரசியலாகும். தேனீ மற்றும் ரீ.பீ.சீயில் இருந்து பிரிந்து வந்த இந்த புதிய கொண்டோடி புலியெதிர்ப்பு அணியில் தமிழரசன், மற்றும் அழகலிங்கமும் கொலுவேற்று இருக்கின்றனர். இதற்கு சோபாசக்தியும் அவரின் சத்தியக்கடதாசியும் எந்தவகையில், எதன் அடிப்படையில் துணைபோகின்றது என்பது மற்றொரு புதியதொரு விடையம்.



மேலே எழுப்பிய கேள்விகளை விடவும், சோபாசக்தியின் முன்னைய திரொக்ஸ்கிய நிலையா இதற்கு மேலும் கூடுதலாக துணைபோகின்றது?. இந்த இருவரும் தமது திரொஸ்கிய அடுக்குமொழியுடன், முதலாளித்துவம் என்ற சொல்லைக்கொண்டு அரசியல் வித்தைகாட்ட முனைகின்றனர். இந்த அரசியல் வித்தை அப்பட்டமான ஆபாசமான பேரினவாதமாகவே வெளிப்படுகின்றது.



நீங்கள் இந்த அரசியல் புலியெதிhப்பு ஆபாசத்தை புரிந்துகொள்ள 'சர்வதேச சமூகமும் புகலிட ஜனநாயகச் சக்திகளும் என்ற கட்டுரையை

'தேசிய நலன்கள் பாசிசத்தை அழிப்பதைவிட முக்கியமானவையா?" என்று பிதற்றுகின்றனர். தேசிய நலன்கள் என்ன? பாசிசத்தை எப்படி அழிப்பது? திரோஸ்கிய வாதிகளே! ஸ்ராலினிசம் அது இதுவென்று அலட்டாமல் பதிலை சொல்லுங்கள். தேசிய நலன்கள் என்ன? பாசிசத்தை எப்படி ஒழிப்பது?



தேசியம் பாசிசத்துக்கு எதிராக இருப்பதையும், தேசியம் ஏகாதிபத்தியம் மற்றும் பேரினவாதத்துக்கு எதிராக இருப்பதையும், இவர்களால் ஒரு கணம் கூட ஜீரணிக்க முடிவதில்லை. புலிகளின் பெயரில், புலிப் பாசிசத்தின் பெயரில், தேசிய எதிர்ப்பு இவர்களின் செமியாக் குணமாகி வாந்தியாகின்றது. தேசியம் என்பது சாராம்சத்தில் உலகமயமாதல் எதிர்ப்பையும், அதையொட்டிய ஏகாதிபத்திய எதிர்ப்பையும் அடிப்படையாகக் கொண்டது. இதை மறுதலிக்கும் இவர்கள், அன்னிய சக்திகளையும் அரச இயந்திரத்தையும் நம்பி, மக்களை அவர்கள் பின் செல்லக் கோருகின்றனர். மக்களின் சொந்த அரசியல் வழியில் நம்பிக்கையற்ற, ஓட்டுண்ணிகளின் செயல்பாடாக இது வக்கரிக்கின்றது.



இந்த நிலையில் பாசிசத்தை மக்கள் மட்டும் தான் ஒழிக்க முடியும். இதற்கு வெளியில் எதுவுமல்ல. இலங்கை மக்களும், சர்வதேச சமூகத்துக்குமே இந்தக் கடமையுள்ளது. அரசு, அன்னிய அரசுகள், கூலிக் குழுக்களால் பாசிசத்தை ஒழிக்கமுடியாது. அது மற்றொரு பாசிசத்தையே, மாற்றாக கொண்டு வரும். இதன் பின்னால் திரொஸ்கிகள் அன்னக்காவடி எடுத்து அரோகரா போட்டு ஆடலாம், ஆனால் மக்கள் ஆட முடியாது. அதாவது ஆட மாட்டார்கள்.



தேசியத்தை விட பாசிசத்தை அழிப்பதே முதன்மையானது என்கின்றீர்களே? நல்ல பொருத்தப்பாடான புலியின் அதே அரசியல் புளுத்து வருகின்றது. புலிகள் கூறுகின்றனர் நாங்கள் நிரந்தர தீர்வைப் பற்றி பேசமாட்டோம், மனிதாபிமான பிரச்சனையை மட்டும் பேசுவோம் என்றனர். இரண்டையும் ஒன்றுக்குகொன்று எதிராக நிறுத்தி புலம்பியது போன்றதே, பாசிச ஒழிப்பும். பாசிசத்தை ஒழிப்பது மட்டும் தான் முதல் நிகழ்ச்சி நிரல், தேசிய நலன் நிகழ்ச்சி நிரலில் இருக்க முடியாது என்கின்றார்கள். புலிகளுடன் இணங்கிப் போகும் நல்ல வேடிக்கையான இலங்கை அரசியல்.



தேசிய நலனை மறுக்கும் ஏகாதிபத்தியத்துடனும், அதையே அமுல்செய்யும் இலங்கை பேரினவாத அரசுடனும், கூட்டுச் சேர்ந்த புலியை அழிக்க தேசிய நலன்கள் தடையாக உள்ளது. இதனால் தேசிய நலனா! அதுவென்ன என்பதும்! அல்லது அதை பிறகு பார்ப்போம் என்பதும் இந்த புலியெதிர்பாளர்களின் அரசியலாகின்றது. பாசிசத்தை ஒழிக்க அன்னிய சக்திகளுடன் இணைய தடையாக உள்ள, தேசியத்தை இழிவாடி வம்பளக்கின்றனர். மக்கள் சார்ந்து பாசிச ஒழிப்பு பற்றி இவர்கள் கடுகளவு கூட எண்ணுவதில்லை. நாம் முன்பு சுட்டிகாட்டியது போல், முதலில் தமிழீழம் பின் ஜனநாயகம் என்று கூறும் புலிகளின் நிலைக்கும், இதே போல் முதலில் ஜனநாயகம் பிறகு சமூக முரண்பாடுகளை தீர்த்தல், என்ற ரீ.பீ.சீ மற்றும் தேனீ கும்பலின் புலியெதிர்ப்பு நிலைக்கும், முதலில் பாசிச ஒழிப்பு என்பது சமாந்தரமானது. முதலில் புலிப் பாசிச ஓழிப்பு, அதன் பின்பு தான் அனைத்தும் என்பது இந்த இடது வேடமிட்ட வலது புலியெதிர்பாளர்களின் அரசியல் நிலையாகும். மக்களைச் சார்ந்திருப்பதில் இருந்து எவ்வளவுக்கு எவ்வளவு அரசியல் ரீதியாக விலகுகின்றதோ, அந்தளவுக்கு இந்த மக்கள் விரோதப் போக்கு அரங்கேறுகின்றது. அது சொல்லும் விதம் மட்டும் நாசுக்காகவே மாறுபடுகின்றது.



பாசிசம் தேசிய நலனை மறுதலிக்கின்றது என்ற அரசியல் உள்ளடக்கம், திரோஸ்கிய மலடுகளுக்கு புரிவதில்லை. மக்களின் நலன்கள் தான் தேசியம். மக்களின் நலன்களை ஏகாதிபத்தியம், பேரினவாதம், புலிகள் என யாருமே ஏற்றுக்கொள்வது கிடையாது. தேசியம் சமன் பாசிசம் என்ற திரொஸ்கிய மலட்டுத்தனம் ஆற்றலற்றது. சொந்த மக்களின் நம்பிக்கையற்றது. மக்களின் எதிரிகளுடன் சேர்ந்து நின்று முரண்பாடுகளை தீர்க்க கோருகின்றது.



பாசிசத்தை ஒழிக்க வேண்டும் என்றால், தேசியத்தை மக்களின் தமது சொந்த நலனில் இருந்தே முன்னெடுக்க வேண்டும். அதையே வழிகாட்ட வேண்டும். அதற்கு துப்பில்லை. பாசிசத்தை ஒழிக்க ஏகாதிபத்தியத்தை சார்ந்து நிற்பவர்கள், அதே கோட்பாடுகளை அடிப்படையாக கொண்டவர்களின் செயல்பாடுகளின் கோட்பாடுகள், தேசியம் சார்ந்ததாக இருக்காது. இதனால் தான் தேசியத்தை மறுக்கின்றனர். தேசிய மறுப்பின் அனைத்து தளமும் இப்படி தான் எங்கும் உள்ளது.



சாராம்சத்தில் தேசியம் என்பது என்ன? முதலில் அது பாசிசமல்ல. புலிகளின் போராட்டம் தேசிய போராட்டமல்ல. மக்களின் ஜனநாயகக் கோரிக்கைகளே சாராம்சத்தில் தேசியமாகவுள்ளது. ஓரு தேசத்தில், ஒரு தேசியத்தில் வாழும் மக்கள், தமது சொந்த பொருளாதார தேசிய வாழ்வை பாதுகாப்பது தான் தேசியம். யாரிடமிருந்து பாதுகாப்பது. உலகமயமாதலாக ஒருங்கு திரண்டு வரும் ஏகாதிபத்தியத்திடம் இருந்து, அதையே ஆளும் கோட்பாடாக கொண்ட குறுகிய இனவாத மதவாத சக்திகளிடமிருந்து, மக்கள் தமது உழைப்பை, உழைப்பின் ஆதாரத்தை பாதுகாப்பதற்கான போராட்டத்தையும் எதிரியையும் குறித்து நிற்கின்றது. இதனடிப்படையில் தேசிய பண்பாடு, தேசிய கலாச்சாரம், தேசிய மொழி என அனைத்தையும் சிதைக்கவும், சீரழிக்கவும் முயலும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தேசியம் போராடக் கோருகின்றது. புலிப் பாசிசம் தனித்துவமாக இந்த உலகயமாதலுக்கு வெளியில் அது செயல்படவில்லை என்பதுடன், அது சுயாதீனமாக செயல்படவே முடியாது.



ஏகாதிபத்திய உலகமயமாதல் தேசியத்தின் சகல கூறுகளையும் அழிக்கும் போது, அதை எதிர்த்து நிற்பதன் சாரம்தான் தேசியம். புலிகள் கோருவது தேசியத்தையல்ல. புலிகளின் பாசிசம் தேசியமல்ல. எல்லா மக்கள் விரோதிகளும் விதிவிலக்கின்றி, பாசிசத்தை தேசியம் என்று கூறும் புலியின் நிலையை அங்கீகரித்து, அதற்கு சாதகமாக அல்லது எதிராக தமது மக்கள் விரோத போக்கை அரங்கேற்றுகின்றனர். புலிகளின் பாசிசம் தேசியமல்ல என்று கூறி யாரும் தேசியத்தை முன்வைப்பதில்லை. இதனால் மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். மக்களின் தேசிய நலனில் நம்பிக்கையற்று, பாசிச ஒழிப்பில் அன்னிய சக்திகளின் கூலிப்பட்டாளமாகின்றனர்.



பாசிச ஒழிப்பில் இவர்கள் ஆதரிக்கும் ஏகாதிபத்திய உலகமயமாதல், தேசியத்தையும் தேசிய பொருளாதாரத்தையும் அழிக்கின்றது. ஏகாதிபத்திய உலகமயமாதல் என்பது ஏகாதிபத்தியம் முதல் இலங்கை அரசுவரை உள்ளடங்கியது. இது திரோஸ்கிய மலட்டுத்தன அறிவுக்கும், குருட்டுப் பார்வைக்கும் தெரிவதில்லை. இதனால் புலி அழிப்பு முதல் அனைத்தும் மக்கள் விரோதமாகவே அவதரிக்கின்றது.



இப்படி மக்களின் தேசிய பொருளாதாரத்தை அழிப்பவனுக்கு காவடியெடுப்பவர்கள் தான், 'சுயநிர்ணய உரிமை அரசியலின் சகாப்தம் இன்று முடிவடைந்து விட்டது" என்கின்றனர். நல்ல நகைச்சுவை. ஏதோ புதிதாக சொல்வது போல் சொல்லிக் காட்டுகின்றனர் திரொஸ்கியின் பெயரில் திரொஸ்கிஸ்ட்டுகள். இதையே திரொஸ்கி சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் லெனினுக்கும் ஸ்ராலினுக்கும் எதிராக, அதாவது மக்களுக்கு எதிராகக் திரொஸ்கி கூறியது தான். அதே சரக்கு, இன்று சகாப்தம் முடிந்துவிட்டதாக கூறி தூசுதட்டி, அதே போட்டை புலிப் பாசிசத்தின் துணையுடன் திரும்ப ஊரறிய மாட்ட முனைகின்றனர்.



தேசிய சுயநிர்ணய உரிமையை மறுத்தவர்களில் முதன்மையானவர்களில் ஒருவர் தான் திரொஸ்கி. இது மட்டுமல்ல விவசாயிகளின் புரட்சிகர பாத்திரத்தையே மறுத்தவர் தான் இந்த திரோஸ்கி. இப்படி மக்களின் புரட்சிகர பாத்திரத்தையும், மக்களின் அடிப்படை உரிமையையும் எதிர்த்த திரொஸ்கியின் அரசியல் போக்குகளை எதிர்த்து தான், லெனினால் புரட்சியை நடத்த முடிந்தது. திரோஸ்கி லெனின் ஸ்ராலின் தலைமையில் நடைபெற்ற புரட்சியுடன் ஓட்டுண்ணியாக ஓட்டிக்கொண்ட போது, அவரின் தத்துவ ரீதியான எதிர்ப்புரட்சிகர போக்கும் ஓட்டிக்கொண்டது. நடந்த புரட்சியை குழிபறிக்க லெனினுடன் முரண்படாத காலம் எதுவும் திரோஸ்கிக்கு கிடையாது. புரட்சிக்கு பிந்திய லெனின் தத்துவார்த்த நீண்ட போராட்டங்களை, திரொஸ்கிக்கு எதிராகவே நடத்தவேண்டிய துரதிஸ்டம் லெனினுக்கு ஏற்பட்டது. பல்வேறு விடையங்களில் இந்த நிலை தொடர்ச்சியாக ஏற்பட்டது. புரட்சிக்கு பிந்திய விடையங்களில் லெனின் அவதானம் செலுத்த முடியாத அளவுக்கு, திரொஸ்கியின் எதிர்புரட்சிகர பாத்திரமே லெனின் நேரத்தையே மட்டுப்படுத்தியது. லெனின் மறைவின் பின் இதே நிலை ஸ்ராலினுக்கு ஏற்பட்டது.



இன்று இதை மூடிமறைக்க ஸ்ராலினிசம் என்று கூறி கொச்சைப்படுத்த முனைவது லெனினிசத்தைத் தான். அதாவது மார்க்சியத்தைத் தான். இதனால் தான் சுயநிர்ணயத்தை மிக மோசமானதாக காட்டி, புலிப் பாசிச துணையுடன் இழிவாடுகின்றனர் திரொஸ்கிகள். இவர்கள் இப்படி என்றால் ரீ.பீ.சீ ஆய்வாளர் சிவலிங்கம் சுயநிர்ணயத்துக்கு தனது ஏகாதிபத்திய சார்புக்கு ஏற்ப புது விளக்கம் அளிக்கின்றார். 11.11.2006 ஜெர்மனி ஸ்ருட்கார்ட்டில் நடந்த புலியெதிர்ப்பு கூட்டம் ஓன்றில் 'மாற்று அரசியலை நோக்கிய பார்வை" என்ற தலைப்பில் 'சுயநிர்ணய உரிமை என்பது ஜனநாயக விழுமியங்களை உள்ளடக்கியதாகும். மக்கள் தமது சுயவிருப்பங்களை வெளிப்படுத்தும் வகையில் சுயமாகவும், சுதந்திரமாகவும், தமது வாக்குகளைப் பகிரங்கமாக தேர்தலில் இணைந்து வெளிப்படுத்துவதும் சுயநிர்ணய உரிமையாகும். மக்களின் விருப்பமும், அங்கீகாரமுமே அரசின் ஆட்சி அதிகாரத்திற்கான இருப்பாகும்." என்கின்றார். மக்கள் வாக்கு போடுவது தான் மக்களின் சுயநிர்ணயம் என்கின்றார். அதை அவர் 'மக்களின் இறைமை அதிகாரம் வாக்குச் சீட்டின் மூலம் பிரயோகிக்கப்படுகிறது" என்கின்றார். சுயநிர்ணயத்தை திரிப்பதில் புலிகளின் தம்பி தான் நாங்கள், ஆனால் ஜனநாயகவாதி என்கின்றனர். சுயநிர்ணயத்தை இப்படி தத்தம் நோக்குக்கு ஏற்ப திரிப்பது, மறுப்பது இவர்களின் கைக்கூலித்தனத்துக்கு ஏற்ப கைவந்த கலையாகின்றது. இதையே தான் மற்றொரு கடைக்கோடியில் நின்று திரொஸ்கிய புலியெதிர்ப்பு கும்பலும் செய்கின்றது.



திரொஸ்கிய லெனினிய விரோத கருத்தை இன்று மறுபடியும் ஓப்புவிக்கின்றனர். சுயநிர்ணயம் என்ற லெனினிய சகாப்தம் முடிந்துவிட்டது என்றால், அதற்கு பதிலாக என்ன வந்துள்ளது. தேசங்களை, தேசியங்களை உலகமயமாதல் பொருளாதாரம் சூறையாடவில்லையா? புலிகள் முதல் இலங்கை அரசாங்கம் வரை தேசத்தை, தேசியத்தை மறுதலிக்கவில்லையா? மக்களுக்கு சுயநிர்ணயம் கிடையாது என்று சொல்வதில், புலிகள் முதல் திரொஸ்கிகள் வரை ஓரே கோட்பாட்டையே கொண்டுள்ளனர். இதையே ரீ.பீ.சீ ஆய்வாளர் சிவலிங்கம் மற்றொன்றாக திரித்து மறுக்கின்றார். இவற்றை எல்லாம் மறுத்தபடி மக்கள் தமது சொந்த வாழ்வு சார்ந்த, தன்னியல்பாகவே தாம் அறியாமால் இதைக் கோருகின்றனர். இதற்காக சூக்குமமாக தமது சொந்த வாழ்வின் ஊடாக போராடுகின்றனர். இது மிக நுட்பமானது ஆனால் உள்ளடக்க ரீதியானது.



இந்த நிலையில் சுயநிர்ணயத்தைக் கோரும் பாட்டாளிவர்க்கம், தனது வர்க்க நிலை காரணமாக இதற்கு எதிரான அனைத்தையும் எதிர்த்து போராடுகின்றது. அதுவும் குறித்த தேசிய எல்லைக்குள் இது எதார்த்தத்தில் காணப்படுகின்றது. பாட்டாளி வர்க்க புரட்சிகள் சாராம்சத்தில் தேசியமாகவே உள்ளது. உலகில் ஓரே நாளில் ஒரே வினாடியில் உலகமயமாதலை எதிர்த்து புரட்சி வந்துவிடாது. இதை வரலாறு காட்டியுள்ளது. எதார்த்தம் இதை நிறுவுகின்றது.



நாடுகளின் ஏற்றத் தாழ்வான பொருளாதாரம், சமூகங்களிடையே வேறுபட்ட முரண்பாடுகள், முரண்பாடுகளின் ஒரு சீரற்ற தன்மை, புரட்சிக்குரிய தயாரிப்பில் ஏற்படும் ஏற்றத்தாழ்வான வளர்ச்சி, புரட்சிக்கு தலைமை தாங்கும் தலைமைகளின் சீரற்ற பார்வை, பாட்டாளி வர்க்க கோட்பாட்டு ரீதியான உள்வாங்கல்களிலும் அதை பிரயோகிப்பதிலும் உள்ள குறைபாடு, தலைமைகள் நாட்டின் எல்லைக்குள் இருப்பதும், நாடுகள் தனித்தனியாக பிரிந்து கிடப்பது போன்ற பல்வேறு காரணங்கள் தேசங்களின், தேசியத்தின் தனித்துவத்தை நிர்ணயம் செய்கின்றது. நாடுகளின் சுயநிர்ணயத்தை பாதுகாப்பதை, தற்பாதுகாப்பதை கோருகின்றது. பாட்டாளி வர்க்கம் சர்வதேசிய உணர்வு பெற்று இருப்பதை, அதை நடைமுறையில் செயல்படுத்துவதை இது மறுதலித்துவிடவில்லை. தேசங்கள், தேசியத்தின் உள்ளடக்கத்தை இதை முரணாக்கிவிடுவதில்லை.



சர்வதேசியத்தை தேசியத்துக்கு எதிராக முன்னிறுத்துவது, தேசியத்தை சர்வதேசியத்துக்கு எதிராக முன்னிறுத்துவது முற்றிலும் தவறானதும் உள்நோக்கம் கொண்டதுமாகும். இதை தமிழ் மக்களின் எதிரிகள் அனைவரும் விதிவிலக்கின்றி செய்கின்றனர். தேசியம் இரு கூறுகளாகவே எதார்த்தத்தில் இருந்தது, இருக்கின்றது.



1.பாட்டாளி வர்க்க சர்வதேசியக் கூறு



2.முதலாளித்துவ தேசியக் கூறு.



இரண்டுக்கும் தனித்தனி நோக்கம் உண்டு. புலிகள் பாட்டளிவர்க்க தேசியத்தையோ, முதலாளித்துவ தேசியத்தையோ முன்னெடுக்கவில்லை. அது தேசியத்தை மறுக்கும் ஓரு இராணுவ பாசிச மாபியாக் குழு. அது ஓரு இனத்தின் தேசியக் கூறை தான் கொண்டிருப்பதாக கூறிக் கொண்டு தான், தன்னைத் தான் நிலை நிறுத்த முடிகின்றது. இந்த உண்மையை இனம் கண்டு, தமிழ் மக்களின் தேசியக் கூறை (பாட்டாளி வர்க்க கூறு, முதலாளித்துவக் கூறு) வேறுபடுத்தி, அதைப் புலியில் இருந்து தனிமைப்படுத்தி போராடாத எமது வரலாறும் எமது கோட்பாடுகளும் தான் புலியின் அரசியல் இருப்பாகின்றது. புலியின் இருப்புக்கு யார் காரணம் என்றால், மக்கள் அல்ல. மாறாக தமிழ் மக்களின் தேசியக் கூறை புலியில் இருந்து பிரித்து, அதற்காக போராடாத பாட்டாளி வர்க்கம் மற்றும் தேசிய முதலாளித்துவ பிரிவுகளின் கோட்பாட்டு தெளிவுமின்மையும் நடைமுறையின்மையும் தான் இன்றுவரை காரணமாக உள்ளது. இதை மறுதலிக்கும் திரோஸ்கிய புலியெதிர்ப்பு, இலங்கை அரசின் பின் விசுவாசமாக கோட்பாட்டு ரீதியாகவே வாலாட்ட வைக்கின்றது.



தேசியத்தில் உள்ள பாட்டாளி வர்க்க சர்வதேசிய கூறே இன்னமும், அடிப்படையான புரட்சியின் முக்கியமான உந்துவிசையாகவுள்ளது. முதலாளித்துவத்தின் தேசியக் கூறு, எதார்த்த்ததில் பலவீனமாகியுள்ளது. முதலாளித்துவ தேசியக் கூறை எந்த மூன்றாம் உலக நாட்டு (கியூபா உட்பட, ஆனால் வேறுபாடு உண்டு) அரசுகளும் பின்பற்றவில்லை. மாறாக அவ் அரசுகள் உலகமயமாதல் அமைப்பின் ஓரு அடியாட்படையாக கூலிக்கும்பலாகவே வீழ்ந்து கிடக்கின்றது. உள்ளுர் உற்பத்தி முறையில் உள்ள தேசிய முதலாளித்துவ கூறுகள், தமது உற்பத்தியில் உலகமயமாதல் உற்பத்திக்கு எதிராக தமது தற்காப்பை அடிப்படையாக கொண்டு போராட முனைகின்றது. ஒன்றில் மரணிக்கின்றது அல்லது ஏகாதிபத்திய உலகமயமாதல் பொருளாதாரத்துக்குள் உறுஞ்சப்படுகின்றது. இப்படி ஒவ்வொரு கணமும் தேசிய உற்பத்திகள் கடுமையான போராட்டத்தை சதா நடத்துகின்றது.



இந்த நிலையில் தான் பாட்டாளி வர்க்க தேசியம் மிக முக்கியமான புரட்சிகர பாத்திரத்தை வகிக்கின்றது. தேசிய உற்பத்தியை பாதுகாக்க முனைப்பாக முனைகின்றது. தனது சொந்த வாழ்விற்கான சமூக ஆதாரத்தை அழிப்பதை அது மறுதலிக்கின்றது. தனது உழைப்பை பிடுங்கும், அதை மறுதலிக்கும் உலகமயமாதலை எதிர்த்து நிற்கின்றது. உலகமயமாதல் உற்பத்தி தேசிய உற்பத்தியை சுரண்டுவதை, அதை அழிப்பதை மறுதலிக்கின்றது. தனது வாழ்வு சார்ந்து, தேசிய மொழி பண்பாடு என அனைத்தையும் பாதுகாக்க முனைகின்றது. சுயநிர்ணயம் என்பது உலகமயமாதலை எதிர்ப்பதையே சாரமாக கொண்டது. அதாவது ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதையே சாரமாக கொண்டது. தனி மனிதன் தனது சுயநிர்ணயத்தை கோருவது எவ்வளவு முக்கியமோ, அதுவே தேசத்துக்கும் பொருந்தும். தனிமனித சுயநிர்ணயம் மற்றவர் சுயநிர்ணயத்தை மறுத்தல் அல்ல, மாறாக அங்கீகரித்தலாகும். இதுவே தேசியத்துக்கும் பொருந்துகின்றது. தனிமனிதன் தனது சுயநிர்ணயத்தைக் கோருகின்ற போது, அதை தேசத்துக்கு மறுப்பது அபத்தமாகும்.



அபத்தமாகவே சிந்தித்து அலம்பும் தமிழரசன் 'இன்று இலங்கையில் உள்ள முதன்மையான அபாயம் புலிப்பாசிசமாகும். புகலிட நாடுகளில் தம்மை இடதுசாரிகளென்று கருதிக்கொள்ளும் ஸ்டாலினிச பழந்தேம்பு புரட்டுபவர்கள் தமிழ் தேசிய விடுதலையின் பெயரால் புலிப் பாசிசத்தைக் கூட ஆதரிக்கத் தயாராக உள்ளனர்." என்று எங்களையே குறிப்பிடுகின்றார். பாசிசத்தை எதிர்த்து தொடர்ச்சியாக நாங்கள் போராடி வருகின்ற எமது காலத்தில், இந்த திரொஸ்கிய குசும்புகள் எந்த உலகத்தில் இருந்தனர். எங்கே இந்த பாசிசத்தை எதிர்த்து நின்றனர் என்று தேடினாலும், எங்கும் கிடைக்குதில்லை. அண்மைக்காலமாக அன்னக்காவடியாட்டம் தேனீக்கு பின்னால் பிரதிட்டை செய்தவர்கள், இன்று ஆகாகா யுகப் புரட்சி என்கின்றனர். யாருடன் எப்படி என்றால் இலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்து செய்யப்போவதாக பிதற்றுகின்றனர். ஆகவே 'பழந்தோம்பு" என்று கிண்டல் அடிக்கின்றனர்.



'தமிழ் தேசிய விடுதலையின் பெயரால் புலிப் பாசிசத்தைக் கூட ஆதரிக்கத் தயாராக உள்ளனர்" என்ற எதிர்வு கூறலை எம்மை நோக்கிக் கூறுகின்றனர். எப்படித்தான் இந்த எதிர்வு கூறலை கூற முடிகின்றது என்றால், எங்கள் கருத்துகளை விமர்சிக்க முடியாத மொத்த விளைவே எதிர்வு கூறலாகின்றது. இப்படித் தான் அரசியல் சேறடிக்க முடிகின்றது. பிரச்சனையை நேரடியாக விவாதிக்க துப்பேயில்லை. 'தமிழ் தேசிய விடுதலையின் பெயரில்" என்கின்றனர். இது புலிகள் தமிழ் தேசிய விடுதலை நடத்துவதாக, திரொஸ்கிய மதிப்பீட்டின் முடிவில் இருந்து வெளிப்படுகின்றது. நாங்கள் அப்படி மதிப்பிடவில்லை. இது அவர்களுக்கும் எமக்குமான தெளிவான அரசியல் வேறுபாடு. இப்படித் தான் அனைத்து சர்வதேச நிலைபாட்டிலும் வேறுபாடு உண்டு. 'தமிழ் தேசிய விடுதலையின் பெயரில்" என்று கூறுவதன் மூலம், திரோஸ்கிகள் உள்ளடக்கத்தில் ஆச்சரியப்படதக்க வகையில் புலிகளின் கோட்பாட்டு ரீதியான உடன்பாட்டுக்குள் புலிகளின் தேசிய ஆசான்களாகிவிடுகின்றனர். புலிகள் தேசிய விடுதலைப் போராட்டத்தை நடத்தவில்லை என்ற எமது அரசியல் நிலை மட்டும் தான், புலியை அரசியல் ரீதியாக விமர்சிக்கின்றது. மற்றவை எல்லாம் புலியெதிர்ப்பை அரசியலாக முன்வைக்கின்றது. ஆகவே மாற்று அரசியல் வழியற்று, அரசு மற்றும் ஏகாதிபத்திய நடவடிக்கைக்கு துணைபோவதையே அரசியலாக்கின்றது.



நாங்கள் தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தை உயர்த்துவதால் அதை 'ஸ்டாலினிச பழந்தேம்பு புரட்டுபவர்கள்" என்கின்றனர். திடீரென பாசிசத்தை இலங்கை அரசுடன் சேர்ந்து புரட்ட வந்தவர்கள், இப்படி புலம்பவது நிகழ்வது உண்டு. சுயநிர்ணயத்தை உயர்த்துவதானது, பாசிசத்தை பாதுகாப்பது எனக்கூறி வட்டமடிக்கின்றனர். ஆனால் எதார்த்தம் சார்ந்த எமது போராட்ட வரலாறு, எமது கோட்பாட்டு தெளிவு இலங்கையில் மிகத் தனித்துவமானதும், தெளிவானதுமாகும். யாருக்கும் நாம் சோரம் போனது கிடையாது. கோட்பாட்டு ரீதியாக யாரும் செய்ய முடியாததை 'பழந்தேம்பு"கள் ஆகிய நாம் நடைமுறையில் செய்துள்ளோம். இந்த போராட்டத்தில் நாம் கண்ட நெருக்கடிகள், அவதூறுகள், இழிவாடல்கள் எல்லையற்றது. நாம் அதை துணிச்சலாக எதிர்கொண்டு, மக்களின் விடுதலைக்காக தனிததுவமாகவே கோட்பாட்டு துறையில் நிமிர்ந்து நிற்கின்றோம்.



'பழந்தேம்பு" என்று கூறி சுயநிர்ணயத்தை மறுக்கும் நீங்கள், தமிழ் மக்களின் பிரச்சனைக்கு என்ன தீர்வை வைக்கின்றீர்கள். தமிழ் மக்களுக்கு தேசியப் பிரச்சனை இல்லை என்பதே, நேர்மையாக சொல்லமுடியாத உங்கள் உள்ளாhந்த நிலை. சுயநிர்ணயத்தை மறுக்கும் நீங்கள், ஜே.வி.பி போல் பதில் சொல்ல முனைகின்றீர்கள். ஆனால் சொல்லும் அரசியல் நேர்மை துணிவு கிடையாது. அலட்டலே எஞ்சிவிடுகின்றது. உங்கள் புலியெதிர்ப்பு தோழமை பூண்டு, ஜே.வி.பியை இனவாதிகள் அல்ல என்கின்றனர். இலங்கையில் இனவாதிகளாக 'சிஹல உருமய போன்ற சிங்கள இனவாதப் போக்கின் அழிவைத் தடுத்து நிறுத்த முயலும் சிறிய இனவாத சக்திகள் தோன்றிய போதும்" என்று கூறி, இனவாத அமைப்பாக எதுவுமில்லை என திரித்து காட்டுகின்றனர்.



இவர்கள் கூறுகின்றார்கள் 'இன்று இலங்கையில் உள்ள முதன்மையான அபாயம் புலிப்பாசிசமாகும்" இதன் சாரம் இலங்கையில் பிரதான எதிரி அரசல்ல, புலி என்பதாகும். நாங்கள் இதைத் தெளிவாக மறுதலிக்கின்றோம். எமது முதன்மையான எதிரி புலியல்ல, பேரினவாத அரசே. இதன் பின்னுள்ள ஏகாதிபத்தியமுமே. ஏகாதிபத்தியம் வேறு இலங்கை அரசு வேறல்ல. 'இலங்கை தழுவிய ஜனநாயக அரசியல் தோன்றியிருப்பதையும் அடையாளம் காணவில்லை." என்று ஊரையே ஏமாற்ற கரடிவிடத் தேவையில்லை. இலங்கை அரசு ஜனநாயக அரசல்ல. மாறாக ஏகாதிபத்தியத்தின் கைப்பாவை ஆட்சியாளராக செயல்படும் பேரினவாத அரசு, பாசிசத்தையே அடிப்படையாக கொண்டது.



புலிப் பாசிசம் மக்களின் முன் நேரடியாக அம்பலமாகின்றது. அரச பாசிசம் மறைமுகமாக, ஆனால் கொடூரமாக செயல்படுகின்றது. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை பேரினவாத பாசிசம் அங்கீகரித்தால் அல்லது ஒரு தீர்வை வழங்கினால் புலிபாசிசத்தின் முடிவு தீர்மானகரமாகவே நிகழ்ச்சிக்கு வந்துவிடும்.



புலிபாசிசத்தை பாதுகாப்பது பேரினவாத பாசிசமே. பேரினவாத அரச பாசிசம் தான், புலிப் பாசிசத்தின் அரசியல் மூலம். இது கூடத் தெரியாத மலட்டு அரசியல் தான் திரொஸ்கியம். மக்கள் பலத்தை சார்ந்து நிற்பதையும், மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையை அங்கீகரிக்க மறுப்பதுவும் திரொஸ்கியத்தின் மையக்கூறாகும். அது 'இலங்கை தழுவிய ஜனநாயக அரசியல் தோன்றியிருப்பதையும் அடையாளம் காணவில்லை." என்று கூறி, மக்களின் ஜனநாயக உரிமையை மறுக்கின்றனர். மக்களின் ஜனநாயக உரிமை என்று நாம் கூறும் போது, திரொஸ்கிகள் அதை தமது திரொஸ்கிய கருத்துக்கு ஏற்ப திரிக்கின்றனர். மக்களின் ஜனநாயக உரிமை என்பது, அந்த மக்கள் தமது சொந்த தேசிய பொருளாதாரத்தைக் கொண்டு வாழ்வை தீர்மானிக்கவும், அது சார்ந்த பண்பாட்டு மொழியை அடிப்படையாக கொண்ட ஒரு தேசமாக இருக்க கோருவதையே உள்ளடக்கியது. இதன் மூலம் மற்றைய சமூகங்களின் பரஸ்பர இருப்பையும், அவாகளின் உரிமையையும் ஏற்றுக்கொள்வதைக் குறிக்கின்றது. எல்லா மக்களைப் போலவும், தேசிய அடிப்படையிலான தேசியத்தைச் சார்ந்து வாழும் ஜனநாயக உரிமையை மறுப்பது என்பதே, திரொஸ்கியத்தின் மைய அரசியலாக உள்ளது.



இந்த திரொக்ஸ்கி முரண்பாட்டில் 'தமிழ் தேசிய விடுதலையா இன்று நடைபெறுகிறது? புலிகளின் ஆயுத நடவடிக்கைகளை ஜனநாயகரீதியில் மாற்ற முடியுமா?" என்கின்றனர். நல்லது நண்பர்களே. நீங்கள் சரியான தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை, மக்களை அதற்காக ஆயுதபாணியாக்கி நடத்த வேண்டியது தானே. இது மட்டும் தான் சரியான வழி. அதைச் செய்ய வேண்டியது தானே. இது மட்டும் தான் புலிப் பாசிசத்தை ஒழிக்கும். ஆனால் இதை கேள்வியாக எழுப்பும் நீங்கள், அதை நடைமுறையில் மறுதலிக்கின்றீர்கள். இந்தக் கேள்வியை எம்மை மடக்க, எமது இன்றைய நிலையைக் கேலிசெய்ய முட்டாள் தனமாக முன்வைக்கின்றீர்கள். இதுவே உங்களுக்கு ஏன் பொருந்தாது?



'தமிழ் தேசிய விடுதலையா இன்று நடைபெறுகிறது? புலிகளின் ஆயுத நடவடிக்கைகளை ஜனநாயகரீதியில் மாற்ற முடியுமா?" இப்படி நாங்கள் சொன்னது கிடையாது. எமது கடந்தகால விமர்சனங்கள் முதல், நாங்கள் நடைமுறையில் போராடிய காலங்களில் கூட, இப்படி நாங்கள் ஒரு அரசியல் வழியை பின்பற்றியது கிடையாது. புலிகளை ஜனநாயக உபதேசங்கள் மூலம் மாற்ற முடியாது. இது எங்கள் அரசியல் வழி கிடையாது. நாங்கள் புலிகளை விமர்சிக்கின்றோம் என்றால், விமர்சனம் மூலம் சிந்திக்கத் தூண்டி ஒரு மாற்றத்தை நோக்கிய மாற்று வழிக்காகத் தான். ஒரு விமர்சனம் என்பது மாற்றத்தைக் கோருவதுதானே ஒழிய திருந்துவதையல்ல.



மாற்றத்தை மக்கள் மட்டும் தான் தமக்காக நடத்தமுடியும். மக்கள் தமது சொந்த விடுதலைக்காக ஆயுதத்தை ஏந்துவதன் மூலம் தான், மாற்றம் உண்மையானதாக அமையும். புலிகளே அழிந்தாலும், இதுவே அனைத்தும் சார்ந்த உண்மையாகும். எம் மீதான விமர்சனம் குற்றச்சாட்டு என்ற வகையில், நாம் செய்வது என்பது நடைமுறை சார்ந்த ஓரு போராட்டத்தைத் தான். கடந்தகால இடதுசாரிகளின் தவறுகளால், (எம்மை உள்ளடக்கியது தான்) துரதிஸ்டவசமாக சூழல் சார்ந்து நடைமுறையில் மக்களுடன் நேரடியாக நாம் இல்லையென்ற போதும், நாம் சமூகத்தின் மத்தியில் நடைமுறை சார்ந்த வகையில் நிற்கின்றோம். இதை யாரும் செய்யவில்லை. மக்களின் பிரச்சனைகள் மீது, அவர்களை கருத்தியல் ரீதியாக சூழல் சார்ந்த எல்லைக்குள் மக்களை அணுகுவதை நாம் தள்ளிப் போடவில்லை.



இந்த இடத்தில் 'தமிழ் தேசிய விடுதலையா இன்று நடைபெறுகிறது?" நல்லதொரு கேள்வி. இதற்கு தெளிவான பதிலும், நடைமுறையையும் கோருகின்றது. தமிழ் தேசிய விடுதலை இன்று நடைபெறவில்லை என்று தெரிகின்ற போதே, உண்மையான தேசிய விடுதலைக்கு போராட வேண்டித் தானே அனைவரையும் கோருகின்றது அல்லவா! அதைத்தான் நாங்கள் நடைமுறையில் முன்வைக்கின்றோம். இதைத்தான் திரோஸ்கிகள் முதல் அனைத்து புலியெதிர்ப்பாளர்களும் எதிர்க்கின்றனர். இதுதான் எமக்கும் மற்றவர்களுக்கும் இடையிலான வேறுபாடுகளில் மையமானது. இதனால் எம்மை புலி என்கின்றனர். நன்றாக உங்கள் எதிர் புரட்சிகர மக்கள் விரோத தன்மைக்கு ஏற்ப உரத்துச் சொல்லுங்கள்.



தமிழ் தேசிய விடுதலையை சரியாக முன்னெடுத்தல் என்பதே, தமிழ் மக்களின் மீதான அனைத்து பிரச்சனைக்குமான சரியான அரசியல் தீர்வாகும். இதற்கு மாறாக கேள்வியிலேயே அதை மறுப்பது தான் 'சுயநிர்ணய உரிமை அரசியலின் சகாப்தம் இன்று முடிவடைந்து விட்டது" என்ற வாதம். இப்படி எதிர்நிலையில் நின்று வள்ளென்று குலைக்க முடிகின்றது.



அடுத்து எம்மை இழிவுபடுத்தவே 'புலிகளின் அடிமட்ட அங்கத்தவர்களை பாசிசத்திலிருந்து விடுவித்து ஜனநாயகப் போதமூட்டி தமிழ்த் தேசியத்தின் பரிசுத்தமான சக்திகளாக்க முடியுமா? இது முடியுமென்று சில ஸ்ராலினிச அரசியல் போதனையாளர்கள் பஞ்சணைக் கனவுகளைக் கொண்டுள்ளனர்." நாங்கள் பஞ்சணை கனவு காண்கின்றோம் என்றால், புலியின் பின் சென்றவர்களை என்ன செய்வது? நீங்கள் வழிகாட்டுவது போல், கொல்வதற்கு துணை செய்யக் கோருகின்றீர்கள்? அதாவது இலங்கை அரசின் வெற்றிக்கு ஆதரவளித்து விபச்சாரம் செய்ய கோருகின்றீர்களா? இது எமது வழியல்ல, இது திரோஸ்கிய விபச்சார வழியாகும். இந்த திரோக்சிய வழி என்ன? 'இலங்கை அரசு வெற்றிபெற வேண்டும்" என்பதே.



புலிகளில் உள்ள பத்தாயிரக்கணக்கான அவர்களின் தியாகமனப்பான்மையை இழிவுபடுத்துவதோ அல்லது அவர்களை அதற்காக கொன்று போட உதவுவதோ எமது அரசியலாக ஒருநாளும் இருக்கமுடியாது. இது உள்ளடக்கத்தில் மக்களுக்கு எதிரான கூலிக் குழுக்களின் படுகொலை அரசியலாகும். புலிகளில் உள்ள ஒவ்வொருவரினதும் தியாக மனப்பான்மையை வென்றெடுக்கும் வகையில், தவறான வழியில் செல்வதை தெளிவுபடுத்தி அவர்களை கொல்வதற்கு பதில், மக்களுக்காக சிந்திக்க தூண்டவேண்டும். சொந்த தாய் தந்தைக்காக, தனது சமூகத்துக்காக போராடுவதன் அவசியத்தை, அந்தக் கடமையை உணரவைத்து வெல்லப்பட வேண்டும். இதை நாங்கள் மட்டும் தான் செய்ய முனைகின்றோம். இது எம்முன்னுள்ள கடுமையான ஆனால் தெளிவான அரசியல் பணியாகும். சமூகத்தில் ஏற்றத்தாழ்வாக அனைத்தும் மாற்றம் அடைகின்றது. இப்படித்தான் மக்கள் புரட்சி நடக்கின்றது. மக்கள் புரட்சிக்கு புலியின் அடிமட்ட உறுப்பினர்கள் வரமாட்டார்கள் என்று, நாங்கள் உங்களைப் போல் கூறும் இயங்கியல் மறுப்பாளர்கள் அல்ல. நீங்கள் கூறுவது போல் 'புலிகள் அறிவுக் குறைபாட்டாலா ஜனநாயகத்தை அறியாததாலா பாசிசவாதிகள் ஆனார்கள்? சாதாரண முதலாளித்துவ ஜனநாயகத்திற்குள் கூட வரமுடியாத பாசிஸ்டுகள்தான் அதில் நிறைந்துள்ளனர்." இது அப்பட்டமான இயங்கியல் மறுப்பாகும். பாசிசம் பற்றிய அறிவுக் குருட்டின் இயலாமை, இயங்கியல் மறுப்பாகின்றது. பாசிசம் என்பது சுரண்டும் முதலாளித்துவ ஜனநாயக வடிவத்தில் ஏற்படும் நெருக்கடியில் ஏற்படும் பண்பு மாற்றம் தான் பாசிசம். இதன் பிரதிநிதிகள் தான் புலிகள். இதற்கு வெளியில் அல்ல. இது கட்டமைக்கப்பட்ட வடிவங்களில் புலிக் குழுவுக்கு என்று சிறப்பு அம்சங்கள் உண்டு. பாசிசத்தின் எல்லா இடங்களிலும் இது காணப்படுகின்றது. இல்லாது 'புலிகள் மக்கள் இயக்கமல்ல. மாறாக இராணுவரீதியிற் கட்டப்பட்ட ஆயுதமேந்திய மக்களுக்குப் புறம்பான குழுவாகும்." என்பதால், அது பாசிசமாக இருப்பதில்லை. மாறாக பாசிசம் சுரண்டல் வடிவத்தின் ஒரு பண்பு மாற்றத்துக்குள்ளான ஒரு வடிவம் தான். அதன் பிரதிநிதிகள் தான் புலிகள். புலிக்கு எதிரான போராட்டம் சாராம்சத்தில் சுரண்டலுக்கு எதிரான வர்க்கப் போராட்டம். இதைப்பற்றி யாரும் பேசுவது கிடையாது. அதனால் தான் பாசிச அரசியல் உள்ளடகத்தையே திரிக்கின்றனர். மக்கள் தமக்காக தாம் போராடுவதைத் தவிர, மாற்று வழிகள் அனைத்தும் அது சார்ந்த கோட்பாடுகளும் அனைத்தும் விதிவிலக்கற்ற வகையில் படுபிற்போக்கானவையாகும். இந்த வகையில் மக்களுக்கான எமது போராட்ட வழி மிகத் தெளிவானது.

http://www.tamilcircle.net