தமிழ் அரங்கம்

Saturday, December 31, 2005

வியட்நாம், ஈராக் மீதான

ஆக்கிரமிப்புப் போரில் அமெரிக்கச் சதிகள்

வியட்நாம்! அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடும் போராளிகளின் சிந்தையில் உற்சாகத்தைத் தோற்றுவிக்கும் மாபெரும் ஊற்று. இந்தோசீன தீபகற்பத்தில் இருக்கும் இந்தச் சிறிய நாடு கோலியாத் போன்ற அமெரிக்க வல்லரசை 1975ஆம் ஆண்டு வீழ்த்தி 30 ஆண்டுகள் முடிந்துவிட்டது. கம்யூனிஸ்டு கட்சியின் தலைமையில் வியட்நாமிய மக்கள், குறிப்பாக, விவசாயிகள் போராடிப் பெற்ற இந்த வெற்றி உலக வரலாற்றில் ஒரு சகாப்தம். அமெரிக்க அதிபர்கள் கென்னடி முதல் நிக்சன் வரை 10 ஆண்டுகளாக 50 சதவீத தரைப்படை, விமானப்படைகள், 15 விமானம் தாங்கிக் கப்பல்கள் என 10 லட்சம் துருப்புக்களைக் குவித்துக் கொண்டும், ஒரு கோடி டன் வெடிகுண்டுகள்; என வெறிகொண்டு தாக்கியும் அமெரிக்கா படுதோல்வியடைந்தது.

தங்களைத் தாங்களே ஆள்வதற்கும், போர் புரிவதற்கும் வியட்நாம் லாயக்கற்ற நாலாந்தர நாடு என்று 1970இல் அமெரிக்காவின் 37வது அதிபர் நிக்சன் எகத்தாளம் பேசினார். கடைசியில் முதல் தர நாடான அமெரிக்கா தனது படுதோல்வியை ஒப்புக் கொண்டு 1975இல் சமாதான ஒப்பந்தம் போட பாரீசு நகருக்கு வந்தது. இராணுவ ரீதியாக மட்டுமல்ல் அரசியல், உளவியல் மற்றும் தார்மீக ரீதியாகவும் அமெரிக்கா தோற்கடிக்கப்பட்டது. ஆக்கிரமிப்புப் போர் நடத்திய 10 ஆண்டு காலத்தில் அமெரிக்காவால் ஒரு வியட்நாமிய கம்யூனிசத் தலைவரைக் கூடப் பிடிக்க முடியவில்லை. அவர்களின் மறைவிடத்தையும் தாக்க முடியவில்லை. பதிலாக நூற்றுக்கணக்கான வியட்நாமிய கிராமங்களை சின்னாபின்னமாக்கி அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது அமெரிக்கா.

அமெரிக்க இராணுவத்தின் மனதில் வியட்நாமிய மக்களின் வீரம் ஏற்படுத்திய பீதி நெடுங்காலம் ஆட்சி செய்தது. அதனால்தான் தற்போது ஈராக்கை கற்காலத்திற்கு அனுப்பும் வகையில் குண்டுவீசி அழித்துக் கொண்டிருக்கும் புஷ்ஷின் தகப்பன் 'அப்பா புஷ்' ஒருமுறை சொன்னார்: ''கடவுளே, இறுதியாக வியட்நாமிய பீதியை உதைத்து அனுப்பிவிட்டோம்.'' பாவம், புஷ் பரம்பரையின் வேண்டுதல் பலிக்கவில்லை. இப்போது ஈராக்கியப் போராளிகள் ஈராக்கிய பீதியை அமெரிக்காவின் மனதில் அடித்தல் திருத்தலில்லாமல் அழகாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

கணினியும், செயற்கைக்கோளும், பி52 எனும் பிரம்மாண்டமான குண்டுவீச்சு விமானங்களும் மனிதனின் விடுதலை உணர்வை வெல்ல முடியாது என்பதை உலகிற்கு உணர்த்தியது வியட்நாம். அதற்காக வியட்நாம் மக்கள் அளித்த விலையும் தியாகமும் ஒப்பிட முடியாத ஒன்று. போரில் வியட்நாமை நேரடியாக வெல்ல முடியாத அமெரிக்க இராணுவம் பல்வேறு இரசாயனக் குண்டுகளை வீசி வியட்நாமை மறைமுகமாக சுடுகாடாக்கியது. இந்தப் பேரழிவு ஆயுதங்கள் ஏற்படுத்திய பாதிப்பு குறித்த உண்மைகள் இன்றுவரை அமெரிக்காவால் இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகின்றன. இந்த அநீதிக்காகவே இனிவரும் அமெரிக்க அதிபர்களையும் சேர்த்து சிரச்சேதம் செய்தால்கூட நீதியின் கணக்கு வழக்கு தீராது.

1950களில் மலேயாவிலிருந்து பிரிட்டிஷ் இராணுவம் கம்யூனிசப் போராளிகளை அழிக்க டயாக்சின் கலந்த இரசாயனக் குண்டுகளை முதன்முதலாகப் பயன்படுத்தியது. இதனால் நாட்டுப்புறங்கள் மற்றும் காடுகளில் மரங்கள், பயிர்கள் பட்டுப்போய் விவசாயப் பொருளாதாரம் அழிவுக்குள்ளானது. இதிலிருந்து பரிசோதனை செய்து ஏஜெண்ட் பர்ப்பிள், ஏஜெண்ட் ப்ளூ, ஏஜெண்ட் ஆரஞ்சு போன்ற பேரழிவு இரசாயனக் குண்டுகளை உருவாக்கியது அமெரிக்க இராணுவம். இவற்றை 1965 முதல் 1975 வரை கப்பல் கப்பலாகக் கொண்டு போய் வியட்நாமில் இறக்கியது. இதைப் பற்றி தெற்கு வியட்நாமில் இருந்த அமெரிக்க ஆதரவு பொம்மை ஆட்சியாளர்களுக்குக் கூடத் தெரியாமல் செய்தது அமெரிக்கா.

ஏஜெண்ட் ஆரஞ்சு எனப்படும் டயாக்சின் கலந்த இந்த வெடிகுண்டு 28 வகையான நோய்களை உருவாக்கும். இந்த நோய்கள் உடனடியாகவும் வரும். அல்லது 10,20 ஆண்டுகள் கழித்தும் வரலாம். டயாக்சின் நோய்களுக்கான சிகிச்சை செலவு மிக மிக அதிகம். நோய் இருப்பதைக் கண்டுபிடிக்கும் பரிசோதனைச் செலவு மட்டும் 45 ஆயிரம் ரூபாய் (45,000). வியட்நாமின் அமெரிக்க விமான ஓட்டிகள் பறந்த சென்சஸ் கணக்குப் படி 3,000 கிராமங்களில் 42,00,000 மக்கள் மீது ஏஜெண்ட் ஆரஞ்சு வீசப்பட்டுள்ளது. இதில் 5,00,000 மக்கள் கொல்லப்பட்டார்கள்; 7,00,000 மக்கள் டயாக்சின் பாதிப்பினால் நடைப்பிணமானார்கள். மொத்த வியட்நாமின் பரப்பளவில் 10 சதவீத நிலம் நஞ்சாக்கப்பட்டது. இந்த நச்சுத்தன்மை 7 அடி ஆழம் வரை நிலத்தில் ஊடுருவி முப்பது ஆண்டுகள் வரை அதனை பட்டுப்போன நிலமாக ஆக்கி விடும். ஏஜெண்ட் ஆரஞ்சின் பயங்கரத்தை ஒப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் நியூயார்க் நகரத்தின் குடிநீர்த் தொட்டியில் இந்த வெடிமருந்தின் 80 கிராம் அளவு கலக்கப்பட்டால் அந்த நகரத்தின் 70,00,000 மக்களும் கொல்லப்பட்டு விடுவார்கள்.

வியட்நாமில் எவ்வளவு வீசினார்கள் என்ற கணக்கு எவருக்கும் தெரியாது. தற்போதைய ஆய்வின்படி சுமார் 600 கிலோ ஏஜெண்ட் ஆரஞ்சு வீசப்பட்டுள்ளதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அப்படியென்றால் வியட்நாமின் பாதிப்பை நினைத்துப் பார்க்கவே நடுங்க வைக்கிறது. இரத்தத்தைக் கொதிக்க வைக்கும் இந்த உண்மை குறைந்தபட்சம் மேற்கத்தியச் செய்தி ஊடகங்களில் கூட வெளிவரவில்லை. நிலைமை இப்படி இருக்கும்போது வியட்நாமிய மக்களுக்கு கிடைக்க வேண்டிய நட்ட ஈடு குறித்து எவரும் மறந்தும் கூடக் கேட்டதில்லை. ஆனாலும் உலகில் ஜனநாயகமும், ஐ.நா. சபையும் இன்னபிற இழவுகளும் இருப்பதாய்ச் சொல்கிறார்கள்.

இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் ஏஜெண்ட் ஆரஞ்சின் பயங்கரம் குறித்த உண்மைகள் வியட்நாம் மக்களை முன்னிட்டுப் பேசப்படவில்லை. மாறாக, வியட்நாமில் போரிட்ட 3,00,000 அமெரிக்க வீரர்களுக்கு டயாக்சின் பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்து, அமெரிக்க நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. பாதிக்கப்பட்ட அமெரிக்க வீரர்களுக்கு நட்டஈடாகத் தரப்பட்ட 1,000 கோடி ரூபாய் மேற்குலகின் ஜனநாயகக் கண்களைத் திறந்துவிட்டது. ஏஜெண்ட் ஆரஞ்சு குறித்த பயங்கரம் உலகத்தின் தோலில் உறைத்தது. குண்டு வீசிய விமான ஓட்டுனர்களுக்கே இப்படியொரு பாதிப்பு என்றால் அதற்கு இலக்கான வியட்நாமிய மக்களின் நிலைமை எவ்வளவு பயங்கரமாக இருக்கும்.

அமெரிக்க இராணுவத்திற்கு டயாக்சின் எனும் இந்த இரசாயனப் பொருளைத் தயாரித்து அளிப்பது யார் தெரியுமா? நமக்கு அறிமுகமான மான்சான்டோ எனும் பன்னாட்டு நிறுவனம்தான். தற்போது பருத்தி விதைகளில் டெர்மினேட்டர், பி.டி. காட்டன் எனும் புதுப்புது ரகங்களை அறிமுகப்படுத்தி நமதுநாட்டு பருத்தி விவசாயிகளை தற்கொலைக்குத் தள்ளியதும் இந்நிறுவனம்தான். டயாக்சினைத் தயாரித்து அமெரிக்க இராணுவத்திற்கு சப்ளை செய்வதன் மூலம் கோடி கோடியாகச் சம்பாதிக்கிறது. இந்தக் கொலைகார நிறுவனத்திற்கு இந்தியாவிலும் ஆய்வகங்கள் இருக்கின்றன. மான்சான்டோவிற்கும் அமெரிக்க இராணுவத்திற்கும் உள்ள வர்த்தக உறவு முற்றிலும் இரகசியமானது. டயாக்சின்போல இன்னும் வேறு என்னென்ன இரசாயனக் கொலைப் பொருட்களை அந்த நிறுவனம் தயாரிக்கிறது என்பது யாருக்கும் தெரியாது.

உண்மைகளின் மேல் ஏறி நின்று சளைக்காமல் பொய் சொல்வதில் அமெரிக்கர்களை யாரும் விஞ்ச முடியாது. அமெரிக்காவின் அரசுத்துறைச் செயலராக இருந்த காலின் பாவெல் இப்படிச் சொன்னார். ''முதல் உலகப் போருக்குப் பிறகு இரசாயன உயிரியல் ஆயுதங்களைப் பயன்படுத்தியது ஈராக்கின் சதாம் உசேன்தான்.'' வியட்நாம் போரின்போதே இரசாயன ஆயுதங்களை அமெரிக்கா பயன்படுத்தி விதிகளை மீறியது. இது ஒருபுறம் இருக்க, இரசாயன உயிரியல் ஆயுதங்களை இராணுவ இலக்குகளைத் தாக்குவதற்குக் கூடப் பயன்படுத்தக் கூடாது என்று 1980இல் ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்தத் தடையை ஈராக்கில் அமெரிக்கா வெளிப்படையாகவே மீறி இருப்பது அம்பலமாகியுள்ளது.

இத்தாலியின் அரசுத் தொலைக்காட்சி நிறுவனமான ஆர்.ஏ.ஐ. ''ஃபலூஜா மறைக்கப்பட்ட படுகொலை'' என்ற ஆவணப்படத்தை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது. இதில் அமெரிக்க இராணுவம் எம்.77 எனும் வெள்ளை பாஸ்பரசைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இரசாயனக் குண்டை பலூஜா நகரத்தில் மக்கள் குடியிருப்பில் வீசியிருப்பது படம் பிடிக்கப்பட்டுள்ளது. பாஸ்பரஸ் குண்டு விழுந்த மாத்திரத்திலேயே 150 மீட்டர் சுற்றளவில் உள்ள மக்கள் எரிந்து, உருகி, இறந்து போனார்கள். பெண்கள், குழந்தைகளின் சட்டைகள் அப்படியே இருக்க சதையும், எலும்பும் சாம்பலாகும் கோரக் காட்சிகள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளன. குண்டுவீசிய வீரர்களின் நேர்காணலும் படத்திலுள்ளது. இதை ஆரம்பத்தில் ஒப்புக் கொள்ளாத அமெரிக்க அரசு தற்போது ''ஆமாம், வீசினோம், அதனால் என்ன?'' என்று திமிராகப் பேசி வருகிறது.

அமெரிக்காவின் பிரம்மாண்டமான இராணுவ பலத்தை வெறும் மூங்கில் ஆயுதங்களைக் கொண்டு விரட்டியடித்தார்கள் வியட்நாமிய மக்கள். தங்கள் உடலையே ஆயுதமாக்கி அமெரிக்காவை எதிர்கொண்டு தாக்குகிறார்கள் ஈராக்கியப் போராளிகள். வியட்நாமிலும், ஈராக்கிலும் அமெரிக்கா ஏற்படுத்தியிருக்கும் பேரழிவுகளுக்கு வருங்கால வரலாறு நிச்சயம் கணக்குத் தீர்க்கும். வீரம் செறிந்த வியட்நாமின் 30 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறே அதை நிரூபித்திருக்கிறது.

மு வேல்ராசன்நன்றி புதியகலச்சாரம்

Thursday, December 29, 2005

ஏழை நாடுகளின் அந்நியக் கடன்

ஏழை நாடுகளின் அந்நியக் கடன் தள்ளுபடி:
மறுகாலனியாதிக்கத்தின்
'மனித முகம்'


வறுமை, பஞ்சம், பட்டினிச் சாவுகள் உலகெங்கிலும் பரவலாகக் காணப்பட்டாலும், இந்த மூன்றும் மற்ற நாடுகளைவிட, ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த மிகவும் வறியஏழை நாடுகளை ஒரு சாபக்கெடு போல பிடித்தாட்டி வருவதை யாரும் மறுக்க முடியாது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு எத்தியோப்பியர் பத்தாண்டுகளுக்கு முன்பு சோமாலியர் இப்பொழுது நைஜர், பர்கினோ ஃபாஸோ, மாலி, மொரிதானியா ஆகிய மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் பட்டினிச் சாவின் பிடிக்குள் சிக்கிக் கொண்டுள்ளன.

இந்நாடுகளில் வயதுக்கு வந்த பெரியவர்கள் காட்டுக் கிழங்குகளைத் தின்று உயிரைப் பிடித்து வைத்திருக்கிறார்கள். ஆனால், ஐந்து வயதுக்குக் கீழான குழந்தைகளுக்கு ஒரு சொட்டு பால்கூடக் கிடைக்காததால், பட்டினியால் கொத்துக் கொத்தாக மடிந்து கொண்டிருக்கின்றன. வயல்வெளியெங்கும் செத்துப் போன ஆடு, மாடுகளின் எலும்புகள் சிதறிக் கிடப்பதைப் பார்க்கும் பொழுது, ''திறந்தவெளி இறைச்சி வெட்டும், கூடத்தில்'' நுழைந்துவிட்டதைப் போன்ற பீதி ஏற்படுகிறது.

அதிகார வர்க்கத்தின் கணக்குப்படியே நைஜரில் 36 இலட்சம் பேர்; பர்கினோ ஃபாஸோவில் 5 இலட்சம் பேர்; மாலியில் 11 இலட்சம் பேர்; மொரிதானியாவில் 8 இலட்சம் பேர் பட்டினிச் சாவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறார்கள். ஆப்பிரிக்க கண்டத்தில் நடக்கும் இப்பட்டினிச் சாவுகளைத் தடுத்து நிறுத்தக் கோரி, ஐரோப்பாவில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்த பிறகுதான், ஏகாதிபத்திய நாடுகளின் எடுபிடியான ஐ.நா.மன்றம் ''கஞ்சித் தொட்டி''யைத் திறக்க முன்வந்தது; — அதுவும் நைஜரில் மட்டும்.

இதே சமயத்தில் ஸ்காட்லாந்தின் க்ளென்ஈகிள்ஸ் என்ற நகரில் கூடிய ஜி8 நாடுகளின் (அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி, ரசியா, கனடா, ஜப்பான்) தலைவர்கள், ஆப்பிரிக்காவில் இருந்து மட்டுமல்ல, உலகில் இருந்தே வறுமையை ஒழித்துக் கட்டப் போவதாகச் சபதம் எடுத்துக் கொண்டார்கள். இதற்காக, மிகவும் வறிய 18 ஏழை நாடுகள் தர வேண்டிய கடன்களை ரத்து செய்யப் போவதாக அறிவித்தார்கள். தற்பொழுது பட்டினிச் சாவுகள் நடந்து கொண்டிருக்கும் நான்கு ஆப்பிரிக்க நாடுகள் உள்ளிட்டு, 12 ஆப்பிரிக்க நாடுகள் இக்கடன் தள்ளுபடியால் பயன்பெறும் என்று ஜி8 மாநாட்டில் ஆரவாரமாக அறிவிக்கப்பட்டது.

மேலும், ''2010க்குப் பிறகு ஏகாதிபத்திய நாடுகள், ஏழை நாடுகளுக்குச் செய்யும் உதவி 4,000 கோடி அமெரிக்க டாலர்கள் (ஏறத்தாழ 1,80,000 கோடி ரூபாய்) அதிகரிக்கும். இதில் ஆப்பிரிக்க நாடுகளுக்கு 2,500 கோடி அமெரிக்க டாலர்கள் (1,12,500 கோடி ரூபாய்) கூடுதலாக உதவி கிடைக்கும்'' என்றும் ஜி8 நாடுகளின் தலைவர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர்.

இதைக் கேட்கும்பொழுது, 18 ஏழை நாடுகளின் வெளிநாட்டுக் கடன்கள் அனைத்தும் அடியோடு ரத்து செய்யப்படும்; இக்கடன் தள்ளுபடி போக, நிதியுதவி கிடைக்கும் என்று நாம் கற்பனை செய்து கொண்டால், நம்மைவிட ஏமாளி வேறு யாரும் இருக்க முடியாது.

''உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆப்பிரிக்க வளர்ச்சி வங்கி ஆகிய நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்ற கடன்கள்தான் ரத்து செய்யப்படும். இதிலும் கூட, இந்த நிதி நிறுவனங்களிடமிருந்து வணிக நோக்கத்திற்காகப் பெறப்பட்ட கடன்கள் ரத்து செய்யப்படமாட்டாது. இந்த நிதி நிறுவனங்கள் அல்லாது, வேறு சர்வதேச நிதி நிறுவங்களிடமிருந்து பெறப்பட்ட கடன்களும் தள்ளுபடியாகாது. இதற்கும் மேலாக, இக்கடன் தள்ளுபடியால், இந்த மூன்று நிதி நிறுவனங்களுக்கும் ஏற்படக்கூடிய நட்டத்தை ஈடு செய்வதற்கு ஏற்றவாறு, ஏகாதிபத்திய நாடுகள் நிதி அளித்தால்தான் கடன் தள்ளுபடி நடைமுறைக்கு வரும்'' இவையனைத்தும் கடன் தள்ளுபடி என்ற டாம்பீக அறிவிப்பின் பின் மறைந்துள்ள நிபந்தனைகள்.

இது ஒருபுறமிருக்க, ரசிய ஏகாதிபத்தியம் தனது சார்பாக எவ்வளவு கடன் தள்ளுபடி செய்யப்படுகிறதோ, அதையே தனது கூடுதல் நிதியுதவியாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறிவிட்டது. பிரான்சு ஏகாதிபத்தியம், தான் அளிக்க வேண்டிய கூடுதல் நிதியுதவியில், மூன்றில் ஒரு பங்கு கடன் தள்ளுபடியாக இருக்கும் எனக் கூறிவிட்டது. கூட்டிக் கழித்துப் பார்த்தால், 18 ஏழை நாடுகளின் வறுமையை ஒழிக்க ஏகாதிபத்திய நாடுகள் அறிவித்துள்ள கடன் தள்ளுபடி கூடுதல் நிதியுதவி என்பது வெறும் ஏட்டுச் சுரைக்காயாகத் தான் இருக்கும் என முதலாளித்துவ பொருளாதார நிபுணர்களே நையாண்டி செய்கிறார்கள்.

ஆப்பிரிக்காவைப் பிடித்தாட்டும் வறுமைக்கும், பஞ்சத்திற்கும் அக்கண்டத்து நாடுகளில் நடைபெறும் சர்வாதிகார ஊழல் ஆட்சி, இனக்குழுக்களுக்கு இடையேயான சண்டை இவைதான் காரணம் என ஏகாதிபத்திய நாடுகள் குற்றஞ் சுமத்துகின்றன. எனவே, கடன் தள்ளுபடி பெற விரும்பும் ஆப்பிரிக்க ஏழை நாடுகள், வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் இட்டுச் செல்லும் நல்லாட்சி நடைபெற உத்தரவாதம் அளிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கின்றன.

''எண்ணெய் வயல் நிறைந்த நைஜீரியாவில் நடந்த இராணுவ சர்வாதிகார ஆட்சியை இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த தேசங்கடந்த எண்ணெய் தொழிற்கழகமான ''ஷெல்'' தான் தாங்கிப் பிடித்தது; காங்கோவில் நடந்த மொபுடுவின் சர்வாதிகார ஆட்சிக்கு, பன்னாட்டு சுரங்கத் தொழிற்கழகங்கள்தான் முட்டுக் கொடுத்தன் ருவாண்டாவில் நடந்த ஹூடு டுட்ஸி இன மோதலுக்கு பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் பிரித்தாளும் சூழ்ச்சிதான் காரணமாக அமைந்தது; சியாரா லியோனின் வைரச் சுரங்கங்களைக் கைப்பற்றிக் கொள்ளுவதற்காகவே, அந்நாட்டில் ஏகாதிபத்தியங்களால் உள்நாட்டுக் கலவரம் தூண்டிவிடப்பட்டது'' என நீளமாகப் போகும் இந்தப் பழைய வரலாற்றை மறந்துவிட்டால், நாமும் ஏகாதிபத்தியங்களின் நல்லாட்சி திட்டத்திற்கு ''ஜெ'' போடலாம்.

ஆப்பிரிக்காவை இருண்ட கண்டமாக்கிய ஏகாதிபத்தியங்களின் சதி ஒருபுறம் இருக்கட்டும். ''வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் இட்டுச் செல்லும் நல்லாட்சி'' என்பதன் உண்மையான பொருள் என்ன தெரியுமா?

ஏகாதிபத்தியங்கள் அறிவித்துள்ள கடன் தள்ளுபடி சலுகையைப் பெறப் போகும் 18 நாடுகளுள் ஜாம்பியாவும் ஒன்று. இந்தச் சலுகையைப் பெறுவதற்காக, ஜாம்பியா, ஏகாதிபத்தியங்களின் கட்டளைப்படி, சமூக நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் தொகையை மேலும், மேலும் வெட்டித் தள்ளுகிறது.

இந்தப் பதினெட்டு நாடுகளுள் ஒன்றான கானா, தனது நாட்டின் விவசாயத்தையும் கால்நடை வளர்ப்புத் தொழிலையும் பாதுகாக்க, சிறப்புச் சட்டமொன்றினை இயற்றி வைத்திருந்தது. இச்சட்டத்தை நீக்கினால்தான் கானாவிற்குக் கூடுதல் நிதியுதவி கிடைக்கும் என உலக வங்கியும், சர்வதேச நாணய நிதியமும் நெருக்குதல் கொடுத்ததையடுத்து, இச்சட்டம் நீக்கப்பட்டது. இதையடுத்து, அமெரிக்க ஏகாதிபத்தியம் அந்நாட்டின் அரிசிச் சந்தையில் 40 சதவீதத்தைக் கைப்பற்றிக் கொண்டதால், அந்நாட்டின் உள்நாட்டு அரிசி உற்பத்தியே நிலைகுலைந்து போய்விட்டது.

கடன் தள்ளுபடி பெற விரும்பும் ஏழை நாடுகள் தனியார்மயம் தாராளமயத்தை மேலும் தீவிரப்படுத்தினால்தான், ஏகாதிபத்தியங்களிடமிருந்து நல்லாட்சி சான்றிதழைப் பெற முடியும். இதை, ''ஆப்பிரிக்க வளர்ச்சி மற்றும் வாய்ப்புகள்'' என்ற அமெரிக்கச் சட்டம் மிகவும் பச்சையாகவே கூறுகிறது:

''தனியார் சொத்துரிமையைப் பாதுகாக்கக் கூடிய சந்தைப் பொருளாதாரத்தை ஊக்குவிக்க வேண்டும்; அமெரிக்காவின் வர்த்தகத்திற்கும், மூலதனத்திற்கும் தடையாக இருக்கக் கூடியச் சட்டங்களை நீக்க வேண்டும்; அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கைக்கு நாடு பிடிக்கும் மேலாதிக்கப் போர் வெறிக்கு ஒத்துழைப்பு தரக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும்.''
தனியார்மயம் தாராளமயம் என்ற பெயரில் ஏகாதிபத்தியங்கள் திணிக்கும் இந்த சந்தை பயங்கரவாதம்தான், மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் பஞ்சத்தையும், பட்டினிச் சாவுகளையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த உண்மையை நைஜர் நாட்டு நிலைமை அப்பட்டமாக எடுத்துக் காட்டுகிறது.

நைஜர் நாட்டு மக்கள் அரைக்கவளம் சோறு கிடைக்காமல் பட்டினியால் செத்துக் கொண்டிருக்கும்போது, அந்நாட்டு அரசும், தரகு முதலாளிகளும் அண்டை நாடான நைஜீரியாவுக்கு அரிசியை ஏற்றுமதி செய்கிறார்கள்.

நைஜர் நாட்டு ஏழை விவசாயிகள், தங்களின் குழந்தைகளுக்குப் பால் கூட வாங்க முடியாமல் போண்டியாகி நிற்கும் பொழுது, அந்நாட்டுத் தலைநகரில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் ஒரு காபிக்கு ஏழு வகையான ஜீனி பரிமாறப்படுவதைக் குறிப்பிட்டு, அந்நாட்டில் செல்வம் ஒரு பக்கமும்; ஏழ்மையும் பட்டினியும் ஒரு பக்கமும் குவிந்து கிடப்பதை அம்பலப்படுத்துகிறார், ஒரு பத்திரிகையாளர்.

கடந்த ஏப்ரல் மாதம் பட்டினியால் செத்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு இலவசமாக அரிசி வழங்க வேண்டும் எனக் கோரி, அந்நாட்டு தலைநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற பொழுது, ஐ.நா. மன்றமும், நைஜர் அரசும், ''இலசமாக அரிசி வழங்கினால், சந்தை பாதிக்கப்படும்'' என்ற மனிதத் தன்மையற்ற, இலாபவெறி பிடித்த காரணத்தைக் கூறி, இலவசமாக உணவுப் பொருட்கள் வழங்க மறுத்துவிட்டார்கள். இதற்குப் பரிசாகத்தான் ஏகாதிபத்திய நாடுகள், நைஜருக்குக் கடன் தள்ளுபடி என்று சலுகையைத் தூக்கிக் கொடுத்துள்ளன.

உண்மை இப்படியிருக்க ஏகாதிபத்தியங்களோ மழையின்மை, வெட்டுக் கிளி படையெப்பு போன்ற இயற்கை சீற்றங்களின் மீது பழியைப் போட்டுவிட்டுத் தப்பித்துக் கொள்ள முயலுகின்றன.


1970 தொடங்கி 2002 வரையில், ஆப்பிரிக்க நாடுகள் ஏகாதிபத்திய நாடுகளிடமிருந்து வாங்கிய கடன் 54,000 கோடி அமெரிக்க டாலர்கள்; இந்த 32 ஆண்டுகளில், வாங்கிய கடனுக்கு வட்டியாகவும், அசலாகவும் அந்நாடுகள் திருப்பிச் செலுத்தியிருக்கும் தொகை 55,000 கோடி அமெரிக்க டாலர்கள். வாங்கிய கடனுக்கு மேலே 1,000 கோடி அமெரிக்க டாலர்கள் (45,000 கோடி ரூபாய்) திருப்பிச் செலுத்திய பிறகும், கந்துவட்டிக்காரன் கணக்குப் போல, ஏகாதிபத்திய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் இன்னும் திருப்பி அடைக்க வேண்டிய அசல் 29,500 கோடி அமெரிக்க டாலர்கள் எனக் கணக்கு காட்டுகின்றன.

ஆப்பிரிக்காவில் சகாரா பாலைவனத்தையொட்டி அமைந்துள்ள நாடுகளில் இருந்து மட்டும், தாராள இறக்மதி என்ற பெயரில், கடந்த இருபது ஆண்டுகளில் 27,200 கோடி அமெரிக்க டாலர்களை (12,24,000 கோடி ரூபாய்) ஏகாதிபத்திய நாடுகள் கொள்ளையடித்துச் சென்றுள்ளன. இந்தப் பணம் அந்நாடுகளின் கஜானாவில் இருந்திருந்தால், ஏகாதிபத்திய நாடுகளிடமிருந்து வாங்கிய கடனை மட்டுமல்ல, அந்நாட்டு மக்களுக்குத் தேவையான கல்வி, மருத்துவம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்து, வறுமையையும், பஞ்சத்தையும் ஓட ஓட விரட்டியிருக்க முடியும்.

ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள், தனியார்மயம் தாராளமயத்தின் மூலம் ஒவ்வொரு நாளும் ஆப்பிரிக்க கண்ட நாடுகளில் இருந்து 10,400 கோடி ரூபாயை இலாபமாகக் கொள்ளையடித்துச் செல்கின்றன. இது, ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏகாதிபத்திய நாடுகள் வழங்கும் வருடாந்திர நிதி உதவியை விட 14 மடங்கு அதிகம்.

இந்தப் புள்ளிவிவரங்கள் ஆப்பிரிக்காவின் வறுமைக்கும், பஞ்சத்திற்கும் ஏகாதிபத்தியச் சுரண்டல்தான் காரணம் என்பதை மட்டும் எடுத்துக் காட்டவில்லை. ஏகாதிபத்திய நாடுகள் அறிவித்துள்ள கடன் தள்ளுபடி, கூடுதல் நிதியுதவி என்பதெல்லாம் மிகப் பெரிய மோசடி என்பதையும் அம்பலப்படுத்திக் காட்டுகின்றன.

மாட்டை இரண்டு முறை தோலுரிப்பது என்பார்களே, அதைப்போல, ஏற்கெனவே ''கடன்'' என்ற போர்வையில் ஏழை நாடுகளை அடிமைப்படுத்திவிட்ட ஏகாதிபத்திய நாடுகள், இப்பொழுது தங்களதுச் சுரண்டலையும், மேலாதிக்கத்தையும் தொடரவும், தீவிரப்படுத்தவும் ''கடன் தள்ளுபடி'' என்ற முகமூடியை மாட்டிக் கொண்டு வருகிறார்கள். போலி கம்யூனிஸ்டுகளின் மொழியில் சொன்னால், ''கடன் தள்ளுபடி'' என்பது ஜி8 நாடுகள் மறுகாலனியாதிக்கத்திற்கு மாட்டிவிட்டுள்ள ''மனித முகம்!''

மு ரஹீம்
நன்றி புதியஜனநாயகம்

Tuesday, December 27, 2005

ஜெயதேவனும் ரி.பி.சியும் புலியின் பெயரால் நடத்தும் மக்கள் விரோத அரசியல்

மிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (ரி.பி..சி யின்) அரசியல் என்ன? அதன் அரசியல் நோக்கம் என்ன? அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள்? இந்த வகையில் நேரடியாகவே நாம் இந்தக் கேள்வியை எழுப்பி, இவர்களின் மக்கள்விரோத செயல்பாடுகளைப் புரிந்து கொள்ளமுனைவோம்.

நாம் ஒருவனின் நேர்மையான அரசியல் செயல்பாட்டை, ஏன் அவனின் அரசியலை நாம் எப்படி புரிந்துகொள்வது? இதை நாம் முதலில் தெரிந்து கொள்ளும் முனைப்புவேண்டும். மக்கள் பற்றிய எமது மற்றும் உனது நிலைபாடு என்ன என்பதே, அனைத்துக்குமான அடிப்படையாகும். எமது அரசியல், எமது மற்றும் உனது நடைமுறை என அனைத்தும் மக்களின் நலன்கள் சார்ந்து, மக்களை செயலில் இறங்கக் கோருவதாக இருக்க வேண்டும். அந்த அடிப்படையில் சிந்திக்க, கருத்துரைக்க வேண்டும். அரசியல் ரீதியாக இதை முன்வைக்காத அனைத்தும் மக்கள் விரோதத் தன்மை கொண்டவையே. மக்களுக்கு வெளியில் நாம் பேசும் அரசியல், அந்த மக்களுக்கு எதிரான திட்டமிட்ட சதிகள் தான். அந்த மக்களின் பெயரில் நடத்தும் அரசியல் மோசடிதான். இங்கு மக்கள் நலன் என்பது, எப்போதும் எங்கும் பரந்துபட்ட மக்களின் சமூக பொருளாதார நலன்கள் தான்.

பேரினவாதம் மக்கள் என்ற பெயரில் தான் அனைத்தையும் செய்கின்றது. புலிகள் மக்கள் என்ற பெயரில் தான் அனைத்தையும்; செய்கின்றார்கள். இதில் இருந்து மாறுபட்ட வகையில் ரி.பி.சி கும்பல் செயற்படுகின்றதா? உங்களைப் பார்த்துத்தான் தான், இதை நான் கேட்கின்றேன். ரி.பி.சி கும்பல் மக்கள் நலன் சார்ந்தது என்று நம்பிய நீங்கள், அதன் கருத்துக்களை கிளிப்பிள்ளை போல் உள்வாங்குகின்றீர்கள். நான் உங்களை கேட்கின்றேன், ரி.பி.சி மக்கள் நலன் சார்ந்தது என்று உங்களால் உறுதி செய்யமுடியுமா?

புலிக்கும், ரி.பி.சி க்கும் கொள்கையளவில் என்ன வேறுபாடு உள்ளது. உங்களால் இதை வேறுபடுத்திக் காட்ட முடியுமா? ரி.பி.சி கூறுவது போல் புலிகளை ஒழித்தால், அதில் மாற்றீடாக எந்தவகையான ஒரு மாற்றீட்டை கொண்டுவர முனைகின்றனர். ரி.பி.சி கும்பல் ஆயுதம் ஏந்தினால் என்ன செய்வார்கள்;. பதிலை நீங்களே கேட்டுப் பாருங்கள். அவர்கள் இன்னுமொரு புலியாகவே இருப்பார்கள். ஏன்? இதை நீங்கள் என்றாவது கேட்டுபார்த்தது உண்டா! நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு ரி.பி.சி கும்பலுக்கு ஆதரவு அளிக்கும் போது, என்றாவது புலியின் அரசியலில் இருந்து எந்த வகையில் இவர்கள் வேறுபட்டவர்கள் என்று நீங்கள் கேட்டுப் பார்த்தது உண்டா? புலி ஆதரவாளர்கள் போல் அல்லவா நாங்களும் இருக்கின்றோம் என்பதை, நீங்கள் என்றாவது உணர்ந்ததுண்டா! இதை நீங்களே உங்களைப் பார்த்துக் கேட்டுக் கொள்ளுங்கள்.

புலிகள் என்பது தனிப்பட்ட பிரபாகரனின் கண்டுபிடிப்பல்ல. இதையே அவர்கள் சொல்வதற்கு அப்பால், இதையே ரி.பி.சி கும்பலும் கூறுகின்றது. புலிகள் என்பது அவர்கள் முன் வைக்கும் மக்கள் விரோத அரசியல் (வர்க்க) உருவாக்கியது. இந்த இடத்தில் பிரபாகரன் இருந்தாலும் சரி, ஜெயதேவன் இருந்தாலும் சரி, ஒரே மாதிரியான அரசியல் அணுகுமுறைதான் இருக்கும்;. இந்த இடத்தில் "நான்" இருந்தாலும் அதுதான் நிகழும். தனிப்பட்ட தலைமைக்குரிய ஆளுமை சில செல்வாக்கை செலுத்தினாலும், மக்கள் விரோத அரசியல் (வர்க்க) உள்ளடக்கம் மாறிவிடாது. மக்கள் நலன் சார்ந்த தலைமை என்பது, மக்கள் நலன் சார்ந்த அரசியலுடன் (வர்க்க நலன்) தொடர்புடையது. புலியின் மக்கள் விரோத வர்க்க அரசியலுக்கு பதில், மக்கள் நலன் சார்ந்த வர்க்க அரசியலுக்கு பிரபாகரன் தலைமை தாங்கினால், மிக சிறந்த பண்புள்ள மக்கள் தலைவராக இருப்பார். இங்கு பினாமிகள் யாரும் வந்து "மேதகு" என்று போற்ற வேண்டிய அவசியமில்லை. மக்களே தமது மேதமை கொண்ட தலைவர்களை ஆழமாக நேசிப்பர்.

ரி.பி.சி அரசியல் பேசும் பாதிரிமாரும் அவர்களின் எடுபிடிகளான அலுக்கோசுகளும் சொல்வது என்ன? புலிக்கு மாற்று புலியைப் போன்ற அரசியலுடைய மற்றொரு மக்கள் விரோதக் கும்பலையே முன்வைக்கின்றது. இதற்காக புலியை ஒழிக்க ஏகாதிபத்திய துணையை நாடுகின்றனர். அதாவது ஈராக்கில் என்ன நடந்ததோ, அதையே இங்கு அமுல் செய்ய துடிக்கின்றனர். ஈராக்கில் இறக்குமதி செய்யப்பட்ட புதிய திடீர் கைக்கூலி அரசியல் தலைவர்கள் போல், தாம் இருக்க (குறிப்பாக ஜெயதேவன் போன்றவர்கள்) விரும்புகின்றனர். அந்த அரசியலைத்தான் இன்று ரி.பி.சி கும்பல் செய்கின்றது. இதை யாரும் மறுத்து நிறுவமுடியாது.

இதை புலியின் மனிதவிரோத அரசியல் மீது கொடிகட்டி ஏற்றுகின்றனர். புலிகளின் ஈவிரக்கமற்ற பாசிச நடைமுறைகள், இரத்தமும் சதையும் கொண்ட அவலமான சமூக அராஜகத்தை உருவாக்குகின்றது. மனிதன் நிமிர்ந்து கூட பார்க்க முடியாத மனித அவலங்கள் எங்கும் தலைவிரித்தாடுகின்றது. எங்கும் சுவாசிக்கும் காற்றுக் கூட இரத்த வாடையுடன் வீசுகின்றது. பாக்குமிடமெங்கும் உயிருடன் சிதறிய சதைப்பிண்டங்கள். மனிதன் தான் மட்டுமே, மற்றவர் பாராது ஒழித்து நின்றே கண்ணீர் வடிக்கின்றான். இந்தக் கண்ணீரோ இரத்தமாகி ஒடுகின்றது. இதை ரி.பி.சி தனது ஏகாதிபத்திய ஆதரவு அரசியலுக்கு பயன்படுத்த நினைப்பதன் மூலம், எதை தமிழ் மக்களுக்கு கொடுக்க முனைகின்றனர். இதை நீங்கள் என்றாவது சிந்தித்தது உண்டா?

தமிழ் மக்களின் இன்றைய பிரச்சனைகள் பேரினவாத வழியில் வந்தாலும் சரி, குறுந்தேசிய புலிகள் வடிவில் வந்தாலும் சரி, மக்கள் தாம் தமது சொந்தப் பலத்தில் நின்றே இதை எதிர்கொள்ள வேண்டும். இது புலிக்கும் பொருந்தும். ரி.பி.சிக்கும் பொருந்தும். இந்த அரசியல் உண்மையை யாரும் மறுக்கமுடியாது. ஆனால் புலியெதிர்ப்பு கும்பல் இதை திட்டவட்டமாக நிராகரிக்கின்றது. உண்மையில் இவர்களின் சோரம் போகும் அரசியல் என்பது, தமிழ் மக்களுக்கு புதிய அடிமை விலங்கை அணிவிக்க முனைகின்றது. இது அன்னிய சக்திகளின் தயவில் அரங்கேற்றப்படுகின்றது. சமூக கொந்தளிப்புகளுக்கும், சமூக அவலங்களுக்கும் தீர்வுகள் என்பது, மக்கள் மத்தியில் இருந்து அவர்களே தாமே தீர்;த்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்படவேண்டும். இதில் ஒவ்வொருவரும் ஒரு உறுப்பினராக இருக்க முடிமே ஒழிய, அன்னிய எடுபிடிகளாக இருக்க முடியாது.
இதை மறுத்து இது சாத்தியமில்லை என்று கூறும் அரசியல், மாறாக எதைத்தான் முன்மொழிகின்றது. இந்த கேள்விக்கும் விடைக்கும் இடையில் உள்ள அரசியலை புரிந்து கொள்ளத் தவறுவோமாயின், பாலசிங்கத்தின் கூட்டத்தில் விசிலடித்த ஆதரவாளர்கள் நிலையில் தான் புலியெதிர்ப்பு அணி உள்ளது என்பதே உண்மை. அதாவது புலியெதிர்ப்பு அணியும் கூட, விசிலடிக்கின்ற கூட்டம் தான்.

மக்கள் தமது சொந்த பிரச்சனைகளை தாமே தீர்க்கும் வகையில் முன்னெடுக்காத அரசியல் செயல்பாடுகள் தான் என்ன? இதை சுயஅறிவுள்ளதாக கருதும் நீங்கள் யாராவது சுயமாக கேட்டுப் பாhத்ததுண்டா? மக்கள் சம்பந்தப்படாது எதுவாக இருந்தாலும், அது மக்களுக்கு எதிரானது தான். அது மக்களுடன் தொடர்பற்றது. அவை மக்களின் வாழ்வுடன் எந்தவிதத்திலும் ஒன்றியிருப்பதில்லை.

ரி.பி.சி யின் கும்பல் அரசியல் என்பது தெளிவாக மக்களைச் சார்ந்து நிற்காத ஒரே காரணத்தினாலேயே அவை மக்களுக்கு துரோகம் செய்பவை. இந்த அரசியல் துரோகம் என்பது, புலியை அழித்தல் என்ற பெயரில் புலியல்லாத அனைவருடனும் கூட்டுச் சேருகின்றது. இதை யாரும் இல்லை என்று இன்று மறுக்கமுடியாது. புலியல்லாத அன்னிய சக்திகளுடன், சிங்கள பேரினவாதத்துடன் தமது சொந்த அரசியலை அடையாளப்படுத்தியே, இந்த புலியெதிர்ப்பு கும்பல் வளர்ச்சியுறுகின்றது. ஏகாதிபத்தியங்களின் எடுபிடிகளாக செயல்படுவதையே, இவர்களின் அரசியல் தெளிவாக வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளது. புலியின் நடவடிக்கை ஒவ்வொன்றையும் கடுமையாக எதிர்நிலையில் வைத்து எதிர்க்கும் இவர்கள், பேரினவாதத்தின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்டும் காணாமல் அல்லது அதை ஆதரிக்கும் தர்க்க வாதங்களை முன்வைக்கின்றனர். அதேநேரம் ஏகாதிபத்தியம் முன்வைப்பதை தீர்வாக முன்மொழிகின்றனர். இதுதான் புலியெதிர்ப்பு கும்பலின் அரசியல் எல்லை. ஏகாதிபத்தியங்களுடன் மிக நெருக்கமாக கூட்டாக செயல்படத் தொடங்கியுள்ளனர். அதை அவர்கள் பிரகடனம் கூட செய்து வருகின்றனர்.

புலம்பெயர் நாடுகள் பெருமளவில் ஏகாதிபத்தியங்களாக உள்ள நிலையிலும் கூட, தனிப்பட்ட நபர்களின் மீதான வன்முறைகள் மற்றும் இது போன்றவற்றில் இந்த நாட்டின் சட்டத் திட்டத்துக்கு அமைவாக போராடுவது துரோகத்தனமானவையல்ல. அதாவது அந்த நாட்டு மக்கள் எப்படி ஒரு வன்முறையை எதிர்கொள்கின்றனரோ, அதுவே எமது உயர்ந்தபட்ச எல்லையாகும். இதுவல்லாத அனைத்தும் துரோகத்தனமாகும்;. உதாரணமாக இலங்கை இனப்பிரச்சனையில் ஏகாதிபத்திய தலையீட்டை நடத்தவும், புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கோரியும் ஏகாதிபத்திய அரசுடன் கூடிக்குலாவும் அரசியல் துரோகத்தனமானது. இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கும், இலங்கையின் முழு மக்களுக்கும் கூட இது எதிரானது. தனிமனிதனிடம் புலிகள் நிர்ப்பந்தித்து பணம் வாங்குதல் என்பதை, இங்குள்ள சட்டத்திட்டத்தின் அடிப்படையில் தனிமனிதனாக எதிர்கொள்வது அரசியல் செயல்பாடல்ல. மாறாக இலங்கையின் மொத்த அரசியலை எடுத்து, ஏகாதிபத்திய தலையீட்டைக் கோரும் போதே, அது மக்கள் விரோத அரசியல் பரிணாமத்தைப் பெறுகின்றது. தனிமனிதனின் தனிப்பட்ட செயல்பாடுகள், அந்த நாட்டின் சட்டதிட்டத்துக்கு உட்பட்டது. அரசியல் செயல்பாட்டில் உள்ளவர்களின் செயல்பாடுகள் அந்த நாட்டின் சட்டதிட்டத்தைக் கடந்து, அந்த நாட்டின் உலகளாவிய மக்கள் விரோத அரசியல் சதிக்கு துணையாக அமையக் கூடாது.

இந்த ரி.பி;சி கும்பல் கைக்கூலிகள் அல்ல என்றால், குறிப்பாக ஏகாதிபத்திய நாட்டில் கைக்கூலிகள் எப்படி இருப்பார்கள். அவர்கள் என்ன செய்வார்கள். தமிழ் மக்களின் போராட்டத்தில் கைக்கூலிகள் என்ன மாதிரி தகவலை ஏகாதிபத்தியத்துக்கு வழங்குவர். ஏகாதிபத்திய அமைப்பு என்னமாதிரியான தகவலை பெற முனைவர்?. அவர்கள் எதைச் செய்யக் கோருவர். இதை நீங்கள் உங்களையே கேட்டு பதிலை தெரிந்து கொண்டு, விடையத்தை புரிந்து கொள்ள முயலுங்கள்.

தமிழ் மக்களின் முதுகில் குத்தும் ஜெயதேவனின் அரசியல்

ஜெயதேவன் தமிழ் மக்களுக்கு செய்ய முனைவது, அன்னிய ஆக்கிரமிப்பை இலங்கையில் நடத்துவது தான். இதை எப்படி நடத்துவது என்பதை, அவர் வெளிப்படையாகவே செய்கின்றார். அன்னிய ஏகாதிபத்திய சக்திகளுடன் அன்றாடம் இதற்காகவே கூடிக் கூலாவுகின்றார். ஒரு காலத்தில் அன்னிய சக்திகளை பயன்படுத்தி புலியின் பாசிசத்தை நியாயப்படுத்தவும், பாதுகாக்கவும் இதையே செய்தார். இன்று இதை எதிர்நிலையில் புதிய பாசிச சக்திகளை புலிக்கு மாற்றாக கொண்டுவர முனைகின்றார். இந்தவகையில் அன்னியக் கைக்கூலியாக செயல்படுகின்றார்.

உண்மையில் ஜெயதேவன் ரி.பி.சிக்கு வருகை தந்த பின்பான அரசியல் பரிணாமம், மிகத் துல்லியமாக ஏகாதிபத்திய கைக்கூலித்தனத்தை அப்பட்டமாக செய்யத் தொடங்கியுள்ளது. உதாரணமாக அதை அவர் வெளிப்படுத்தவும் செய்தார். இலங்கையில் எண்ணை எதுவும் இல்லை. அதனால் ஜனநாயகத்தின் பெயரில் ஏகாதிபத்தியம் தலையிடாது. இதனால் நாம் முயன்று தலையிட வைக்க வேண்டும் என்றால், புலியெதிர்ப்பு ஆர்பாட்டங்கைள நடத்த வேண்டும் என்றார். இது பத்து பேரில் இருந்து ஆயிரமாக வேண்டும். அன்னிய தலையீட்டை நியாயப்படுத்த, நாம் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதே இந்தச் செய்தி. இந்த வகையில் தான் முதலாவது ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை ஐரோப்பியயூனியன் முன் ரி.பி.சிக்கு ஊடாக நடத்தினார். இந்த விடையத்தை ஜெயதேவன் மட்டும் தான், புலியெதிர்ப்புக் கும்பலில் தெளிவாக புரிந்துள்ளார். எது நடக்கவேண்டுமோ, அதை நோக்கி அவரின் முன்னெடுப்புகள் தெளிவாக உள்ளது.

ஜெயதேவன் புலிகளினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட நிலையில், பிரிட்டிஸ் ஆளும் வர்க்கத்தால் கருசனையுடன் மீட்கப்பட்டவர். இந்த அடையாளத்துடன் தான் ரி.பி.சிக்கு வருகை தருகின்றார். நான் புலிகளினால் கைது செய்யப்பட்டது எப்படி நியாயமாகும் என்ற வாதங்கள் மூலமும், எந்த நீதி விசாரணையும் கிடையாது என்ற தர்க்கத்துடன் தன்னை நிலைப்படுத்தத் தொடங்கினார். அங்குள்ள மனிதவிரோத நடைமுறைகளுடன் அணுகுகின்றார். பண்பாக பேசுதல், தம்பி போட்டு கதைத்தால் (புலிகள் அண்ணை போட்டு கதைப்பார்கள்) மூலம், தமிழ் மக்களின் அரசியல் அறியாமை மீது ஒரு பிற்போக்கு அரசியலை திட்டமிட்ட வகையில் நகர்த்துகின்றார். அத்துடன் படித்தவர், பண்பாளர், நேர்மையானவர், புலியின் துன்பத்தை நேரில் அனுபவித்தவர், புலிகளுடன் நேர்மையாக கதைக்கச் சென்றவர், புலிக்கு பல வழிகளில் உதவியவர், பிரிட்டிஸ் ஆளும் வர்க்க அரசியல்வாதி, சாதிமான், கோயில் நிர்வாகி என சமூகத்தை ஏமாற்றக் கூடிய, பற்பல பொது அங்கீகாரம் பெறத்தக்க சமூகத் தகுதிகள். இதைக் கொண்டு அவர் சொல்ல வரும் அரசியல் அன்னிய தலையீடுதான். புலிக்கு பதில் தன் தலைமையிலான (தன்னைப் போன்ற) புதிய தலைமை. புலிகளின் அதே வர்க்க அரசியலே, அவரின் அரசியல். இதில் முரண்பாடில்லை. முரண்பாடு தன்னைப் போன்றவர்கள் மீதான நடவடிக்கை அவசியமற்றது என்பதே. அதில் இருந்து முரண்பாடான அரசியல் முன்னெடுப்புகள். புலியை அன்று பிரிட்டிஸ் தடைசெய்த போது, அதை எதிர்த்து நீதிமன்றம் வரை செல்ல முயன்றவர், இன்று ஐரோப்பிய யூனியன் முன் சென்று புலியை தடை செய்யக் கோருகின்றார்.

இப்படி அரசியலின் மற்றொரு கோடிக்குச் சென்று மக்கள் விரோத அரசியலைச் செய்கின்றார். அன்று புலியை ஆதரித்த போது மக்கள் விரோத அரசியலே அவரின் அரசியலாக இருந்தது. இன்று ஏகாதிபத்தியத்தின் பின்நின்று, அதே மக்கள் விரோத அரசியலையே அவர் பண்பாகச் செய்கின்றார். ஐரோப்பிய யூனியன் முன்னான புலியெதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் பின்னனியில் ஜெயதேவனின் திட்டமிட்ட அரசியல் நகர்வுள்ளது. இது ஜெயதேவன் போன்றவர்களின் சொந்தக் கண்டுபிடிப்பல்ல. மாறாக இலங்கையை நேரடியாகவே மறுகாலனியாக்க, விரும்பும் ஏகாதிபத்தியங்களின் தெளிவான ஆலோசனைகள் தான் இவை. இதற்கு மேல் எதுவும் இவர்களின் அரசியலில் கிடையாது. துல்லியமாக யாரையும் விட, ஏகாதிபத்திய தலையீட்டுக்குரிய சூழலை உருவாக்குவது எப்படி என்பதை ஜெயதேவனால் மட்டும் தான் வழிகாட்டமுடிகின்றது. கடந்துவந்த வரலாற்றில் இந்தியா, இலங்கை கைக்கூலிகளாக ஒரு தலைமுறையை சிதைத்த சில தலைமைகள் போல், இன்று புலி அம்பலமாகி வரும் வெற்றிடத்தில் ஏகாதிபத்திய கைக்கூலிகளே அந்த இடத்தை நிரப்ப முனைகின்றனர். இது ஒரு ஆச்சரியமான உண்மை.

ஏகாதிபத்திய கைக்கூலியாக செயல்படும் ஜெயதேவன், இன்று ரி.பி.சி ஊடாக சமூக அரங்கில் வரமுன்னம் என்னசெய்தார். புலிகளின் அனைத்து மக்கள் விரோத செயல்பாட்டையும் ஆதரித்து நின்றவர். சகல மனிதயுரிமை மீறலையும் பூசி மெழுகும் ஒரு மக்கள் விரோத செயலைச் செய்தவர். புலிகள் செய்த ஒவ்வொரு கொலைக்கும், ஒவ்வொரு மனிதயுரிமை மீறலுக்கும் ஜெயதேவன் போன்றவர்களின் ஆதரவு இன்றி, இவர்களின் நிதி வளங்களுமின்றி எதுவும் நடக்கவில்லை. இன்று அதையே எதிரணியில் நின்று செய்கின்றார். பாதிக்கப்பட்டது அன்று மக்கள் தான், இன்றும் அதே மக்கள் தான்.

அவரை கைது செய்த புலிகள், அவருக்கு ஞானப்பாலைக் கொடுத்து ஞானம் கொடுக்க முன்பாக, பல ஆயிரம் இளைஞர்களை புலிகள் கொன்று குவித்திருந்தனர். அப்போதெல்லாம் ஜனநாயகம் பொத்து கொண்டு வரவில்லை. அவர் கூறுவது போல் தேசியத்தை ஆதரிக்க வேண்டியிருந்தது அதனால் ஆதரித்தோம், அதேபோல் தான் தேசியத்துக்காக கொலைகளை நியாயப்படுத்தினோம். இதை மட்டும் அவர் நேரடியாக சொல்லவில்லை, மறைமுகமாக சொல்ல முனைகின்றார். இதில் வேடிக்கை என்னவென்றால் அப்போதும் இன்றைய பிரிட்டிஸ் தொழில் கட்சியின் உறுப்பினர். தற்போதும் அக்கட்சியின் உறுப்பினர். இது எதைச் சொல்லுகின்றது. அவர் அரசியல் ரீதியாக தன்னை மாற்றவில்லை என்பதையே. அரசியல் ரீதியாக ஒரே அரசியல். தனிப்பட்ட முரண்பாடு, எதிர் அரசியலாக வருகின்றது. அதாவது எதிர்கட்சி அரசியல் வகைப்பட்டது. இது தெளிவாக மக்கள் விரோத அரசியல் தான்.

இப்படி சொந்த நலன் சார்ந்து குத்துக்கரணமடித்து, ஜனநாயகம் பற்றிய திடீர் அக்கறை போலியானது. சாதாரண மனிதன் இப்படி உணர்வது வேறு, அரசியல்வாதிகள் இப்படி திடீர் வேஷம் கட்டியாடுவது வேறு. திடீர் ஜனநாயகவாதியாக முன் மற்றவனுக்கு ஜனநாயகம் மறுக்கப்பட்ட போது, அதற்கு தூணாக துணை நின்றவர் தான் இவர். இன்று அதுதான் அவரின் நிலை. இன்று அவர் திடீர் ஜனநாயகத்தை மீட்க பிரிட்டிஸ் ஏகாதிபத்தியம் உள்ளிட்ட ஏகாதிபத்தியங்கள், இலங்கையில் தலையிட வேண்டும் என்ற கொள்கையை அவர் முன்வைக்கின்றா. இந்த வகையில் அவர் ஒரு ஜனநாயக விரோதியாகவே உள்ளார். மக்களின் ஜனநாயகத்தை, அவர்களின் போராடும் ஜனநாயகத்தை மறுப்பவராகவும் உள்ளார். ஈராக்கின் கைக்கூலி பிரதமர் போல், வடக்கு கிழக்கு அதிகாரத்தில் தலைவராக வேண்டும் என்ற கனவுடன் செயல்படுகின்றார். இதனால் தான் அவர் ஒரு விவாதத்தில், தான் நிச்சயமாக வன்னி செல்வேன் என்று ஆணித்தரமாக சொல்லுகின்றார். அன்னிய தலையீட்டு மீதான ஆழ்ந்த நம்பிககையுடன் செயல்படுகின்றார்.

சரி இந்த திடீர் ஜனநாயகக் கனவான், திடீர் ஜனநாயகவாதியாக முன் ஏன் வன்னிக்குச் சென்றார். இங்கு எம்முன் நெருடுவது என்ன. புலியின் நம்பிக்கைக்குரிய ஒரு பினாமிதான் நான் என்பதைச் சொல்லத்தான், வன்னிக்கு சென்றார். இதை யாரும் மறக்கமுடியாது. பிரிட்டிஸ்சில் புலிகளுக்கு இடையில் உள்ள முரண்பாட்டில் தான் புறக்கணிக்கப்படுவதை முறையிடவும், தனக்குரிய தகுதியை அங்கீகரிக்க கோரிய ஒரு நேர்த்தியாகவே வன்னி சென்றார். பக்தன் எடுத்துச் சென்ற பூசைப் பொருட்களை (பெரும் தொகை பணம் கொடுக்கப்பட்டது) காலடியில் வைத்த நிலையிலும், கடவுளோ கண்ணைத் திறந்து முறையிடச் சென்றவரை ஏறெடுத்து பார்க்கவில்லை. மாறாக நெற்றிக் கண்ணை திறந்து எரியூட்டுவதற்காக, பலிபீடத்துக்கு அழைத்துச் சென்றனர். இப்படித் தான் திடீர் ஜனநாயகவாதியாகி ஞானம் பெற்றவர். ஈராக்கில் சகல மனிதயுரிமை மீறலுக்கும், ஏன் ஈரான் மீதான படையெடுப்பை தூண்டி பெருமளவில் இராணுவ பொருளாதார உதவியை வழங்கிய அமெரிக்கா, பின் திடீர் ஜனநாயகவாதியாக ஈராக்கை ஆக்கிரமித்த அதே உத்தி அதே அரசியல் தான் ஜெயதேவனின் நடத்தையிலும் நாம் காணமுடியும். இது தான் பிரிட்டிஸ் தொழில் கட்சியின் நிலையும் கூட.

வழமையாக புலிகள் பல்லைக்காட்டி வாலையாட்ட வைக்க, பெரும் தொகை பணம் கைமாறுவது வழக்கம். இந்த உத்தியைத் தான் ஜெயதேவன் வன்னிக்கு போனபோது செய்ய முனைந்தவர். பெரும் தொகை பணத்துடன், சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் துன்பத்தை துடைக்க என்று சொல்லி எடுத்துச்சென்றார். இப்படித் தான் புலிகளின் கடைக்கண் பார்வைக்காக விமானமேறி தானாக வன்னி சென்றார். ஆனால் புலிகள் இவர் அல்லாத லண்டன் தரப்பை ஆதரிக்கவும், இவர் நடுவீதியில் கைவிடப்பட்டார். அவர்களின் பொறிக்குள் சிக்கிய நிலையில், அவர்கள் வழமையான அணுகுமுறைக்கு ஏற்ப சிறைவைத்தனர்.

இப்படி திடீர் ஜனநாயகத்தை அவர் பேச புலிகளே காரணமாகவே இருந்தார்கள். ஒரு கணம் எதிர்நிலையில் சிந்தித்து பாருங்கள். புலிகள் ஜெயதேவனை வாங்கோ, நீங்கள் தான் எல்லாம் என்று வழமைபோல் தமிழ்ச்செல்வன் பல்லைக்காட்டி இருந்தால் என்ன நடக்கும். ஊரார் வீட்டுப் பணத்தின் நல்ல விருந்துபசாரம் செய்து இவர்களை திருப்பி அனுப்பியிருந்தால் இவர்கள் இன்று ஐரோப்பாவில் என்ன செய்வார்கள். நேர்மையாக நீங்களே கேள்வியை கேட்டு பதிலை சொல்லுங்கள்.
தமிழ்பேசும் மக்களின் ஜனநாயகம் பற்றி பேசுவார்களா!. சொல்லுங்கள். நிச்சயமாக இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். அப்படியெனின் ஏன் தலையில் தூக்கிவைத்து ஆடுகின்றீர்கள். உங்களுக்கு சூடுசுரணை எதுவும் கிடையாதா? இவரை தனிப்பட்ட ரீதியில் புலிகள் அணுகிக் கொண்ட அனுகுமுறையின் பின்பு தான் திடீர் ஜனநாயகவாதியானர். இவர் இன்று தமிழ் மக்களின் அரசியல் ஆய்வாளர். தமிழ் மக்களின் ஜனநாயகத்தை மீட்கும் தலைவர். தமிழ் மக்களை வழிநடத்த, புலி அல்லாத தரப்பு தலைவர்களில் ஒருவர். கொஞ்சம் யோசியுங்கள், ஜெயதேவன் வன்னி செல்லாவிட்டால் அல்லது புலிகள் அவரை நல்லவிதமாக நடத்தியிருந்தால் என்ன நடந்து இருக்கும். உங்களுக்கு எந்த ஆச்சரியமும் இருக்காது. பாலசிங்கம் கூட்டத்தின் முன்வரிசையில் அமர்ந்து இருந்து விசிலடித்து இருப்பார். இல்லை என்கின்றிர்களா!

இவர் சொல்லுகின்றார் தனக்கு இப்பதான் எல்லாம் தெரியுமாம். நம்புங்கள்! இப்படி கூறுபவர் எப்படி தமிழ் மக்களின் தலைவனாக இருக்கமுடியும். இப்படி கூறுவதே, அதே புலி அரசியலாகும். இப்படி சொல்பவன் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதியும், மோசடிக்காரனுமாவான். அவர் சொல்லுகின்றார் மாத்தையா கொலைக்கு முன் நடந்த கொலைகள் எதுவும் தனக்கு தெரியாதாம். மாத்தையாவே பலரைக் கொன்ற கதைகள் பல. ஏன் நான் புலிகளின் வதைமுகாமில் சித்திரவதை செய்யப்பட்ட போது, அதை மாத்தையாவே நேரடியாக செய்தவன். அந்த வதைமுகாமில் இருந்து, சிறையுடைத்து தப்பியவன்தான் நான். நான் பல்கலைக்கழக மாணவர் தலைவராக இருந்ததால், மாணவர் போராட்டத்தை தணிக்க எனக்கு உயிர் உத்தரவாதத்தை மாத்தையா, தீலிபன் போன்றோர் பகிரங்கமாக பல்கலைக்கழக மேடையில் வழங்கியவர்கள் தான். இவை அனைத்தும் பத்திரிகையில் செய்தியாக வெளிவந்தவைதான். எனக்கு வதைமுகாமில் என்ன நடந்தது என்பதை, 300 பக்கங்கள் கொண்ட ஒரு நூலாக "வதை முகாமில் இருந்து தப்பிய தூக்கு மேடைக் கைதியின் நினைவுகள் அழிவதில்லை" என்ற தலைப்பில் எழுதியுள்ளேன். இன்றைய நிலையில் இந்த நூல் எனது மரணத்தின் பின் வெளிவரும் வகையில் பாதுகாத்து வைத்துள்ளேன்.

இப்படி பல நூறு சம்பவங்கள் நடந்த போதும் அவை எதுவும் ஜெயதேவனுக்கு தெரியாதாம். இது ஜெர்மனிய நாசிகள் நடத்திய யூதப் படுகொலைகளைப் பற்றி எதுவும் தெரியாது என்று, தனிப்பட்ட நாசிகள் பின்னால் கூறி பிழைக்க முனைந்தது போன்றது. இதைத் தான் ஜெயதேவன் செய்ய முனைகின்றார்.

புலிகளின் மனிதஉரிமை மீறல்கள், அன்றாடக் கொலைகள், இயக்க அழிப்புகள் 1970 களிலேயே தொடங்கியது. 1980க்கு முன்னமே இயக்க உட்படுகொலைகள் இயக்கத்தில் தொடங்கி இருந்தது. 1980 க்கும் 1986 க்கும் இடையில் இயக்க உட்படகொலைகள், இயக்க மோதல்கள் அன்றாடம் நடந்தது. மக்களின் கதி அதைவிட மோசமானது. மக்கள் இயக்கத்துக்கு எதிராக பல நூறு போராட்டங்களை நடத்தினர். யாழ் பல்கலைக்கழக மாணவர் போராட்டங்கள் முதல் பல நூறு போராட்டங்கள் அன்றாடம் நடந்தவண்ணம் இருந்தது. ஜனநாயகத்துக்கான குரல்கள் அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தது. அப்போது எல்லாம் இதை மழுங்கடிக்கும் வகையில் செயல்பட்டவர்கள் யார். நீங்களும் உங்களைப் போன்றவர்களுமே. பல நூறு இளைஞர்கள் இதன் போது கொல்லப்பட்டனர். அவர்களை எல்லாம் இன்று புலியெதிர்ப்பு அணி, புலியைப் போல் முதலில் புதைகுழிக்கு அனுப்புகின்றனர். அவர்கள் மக்களுடன் நிற்க, முன்வைத்த அரசியலை காலில் போட்டு மிதிக்கின்றனர். இலக்கியச் சந்திப்பு முதல் ரி.பி.சி வரை இதைத் தான் செய்கின்றது. 1985தின் பின் புலிகள் இயக்கங்களையே அழித்து, அவர்களை உயிருடன் வீதியில் இட்டு கொழுத்திய போது, முன்னாள் பின்னாள் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எரித்த களைப்புத் தீர கொக்கோலோ உடைத்து கொடுத்தவர்கள் தான். அதாவது மனிதப் படுகொலைகள் மூலம் மனிதயுரிமை மீறலை புலிகள் செய்த போது, ஜெயதேவன் போன்றோரே அதன் தூணாக இருந்தவர்கள்.

இன்று ஜெயதேவனின் தனிப்பட்ட அதிகாரம் சார்ந்த பாதிப்பு, இன்று திடீர் ஜனநாயகமாகிய போது புலியல்லாத தலைமைபற்றி கூறி அதன் தலைவர்களில் ஒருவராக முனைகின்றார். புலியல்லாத தலைவராக பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்தின் தோளில் அமர்ந்து இருந்தபடி, புலியால் பாதிக்கப்படும் மக்களே தம் பின்னால் வாருங்கள் என்று அழைக்கின்றார்.
இதற்கு கடிவாளம் கொடுக்கும் ரி.பி.சியின் கதையும் இப்படித் தான். முதன் முதலில் ஐரோப்பாவில் மாவீரர் தின உரையை தாமே நேரடியாக வன்னியில் இருந்து ஒளிபரப்பியதாக பெருமைப்படும் ராம்ராஜ்க்கும், புலிக்கும் இடையில் ஒரு தேனிலவு ஒரு காலத்தில் இருந்தது. அதாவது ஒரு பினாமிய உறவு இருந்தது. புலிகளின் அனுமதியுடன், புலியின் தயவுடன் வன்னியில் இருந்து மாவீரர் தின உரையை ஐரோப்பாவுக்கு முதன் முதலில் ஒளிபரப்பிய பெருமையை நினைவு கூரும் இவர்கள், புலிகளின் ஜனநாயக விரோதச் செயலைப் பற்றி அப்போது அவர்கள் பேசியது கிடையாது. அரசியல் ரீதியாக ஒரே அரசியல், ஒரே கொலைக் கலாச்சாரம் என்ற தொழில்முறைக் கூட்டாளிகள் என்பதால், அப்போது இவர்களுக்கு ஜனநாயகம் பிரச்சனையாக இருக்கவில்லை.

அந்த வகையில் தான் மாவீரர் செய்தியை ஒளிபரப்பியவர்கள். புலி அல்லாத போராளிகளின் நினைவை போற்றவில்லை. அன்று புலிக்கு விமர்சனம் வைத்தவர்களை, வானொலியில் இருந்தே வெளியேற்றினர். இன்று பூகோளம் இணையத்தளத்தைச் சேர்ந்த அழகுகுணசீலன் மற்றும் ஜெயந்திமாலா போன்றோர், புலிகளை அரசியல் ரீதியாக விமர்சித்ததால், அவர்கள் வெளியேற்றப்பட்டனர். இன்றைய அரசியல் கலந்துரையாடலை, அவர்கள் தான் தமது பணியில் தொடங்கிவைத்தவர்கள். ஆனால் அவர்கள் இன்று அதில் இல்லை. இதுபோல் தான் இலக்கியச் சந்திப்பும். தொடக்கியவர்கள் அதில் இல்லை. சீரழிவின் வக்கிரம் இப்படித் தான் எங்கும் அரங்கேறியது. தமிழ் மக்களின் மாற்றுத் தலைமையாக திடீர் ஜனநாயகவாதி ஜெயதேவன் வந்தது போல் தான், திடீர் சிவலிங்கமும் அரசியல் ஆய்வாளராக அரங்கில் வந்தார். கடந்த 25 வருடமாக ஜனநாயகத்துக்கான போராட்டம் ஒன்று நடந்து வந்ததை மறுப்பது தான், இவர்களின் முதல் வேலை. மக்கள் இப்பதான் சிந்திக்கின்றனர் என்று கூறுவதே, அரசியல் விபச்சாரம் தான். புலிகள் மக்களானது போல் தான், ஜெயதேவன் மக்களாகின்றார்.

இப்படி கடிவாளம் கொடுக்கும் ரி.பி.சி புலியெதிhப்பு அரசியலைக் கூட புலிகளுடன் விபச்சாரம் செய்தபோது அன்று வைக்கவில்லை. இப்படி புலி சார்பு ஜனநாயக விரோத நிலைப்பாட்டுடன் தான் ரி.பி.சி புலியாகவே இயங்கியது. புலிகளின் கடைக்கண் பார்வைக்காகவும், புலியின் உத்தியோகபூர்வமான பினாமியாக ரி;பி.சி இருக்கமுயன்றது. ராம்ராஜ் இந்தியக் கைக்கூலியாக, இந்திய இராணுவத்தின் எடுபிடியாக தமிழ் மண்ணில் வக்கரித்து திரிந்த போது, இதே ஜனநாயகத்தைச் சொல்லித் தான் தமிழ் மக்களை அடக்கியொடுக்கினர். பின் சந்தர்ப்பவாதியாக புலியின் பினாமியாக இலங்கை இராணுவத்திடம் இருந்து ஜனநாயகத்தை பெறப் போவதாக கூறி புலியின் பினாமியானவன். இன்று ஏகாதிபத்திய துணையுடன், இலங்கை அரசின் துணையுடன் புலியிடமிருந்து ஜனநாயகத்தை மீட்கும் போராட்டத்தை நடத்துகின்றாராம். நீங்கள் முட்டாளாக இருக்கும் வரை, இதை அவர்களால் செய்யமுடியும்.

புலியுடனான ரி.பி.சியின் தேனிலவு எப்படி தகர்ந்து போனது. அதே ஜெயதேவன் வரலாறு படிதான். புலிகள் அணுகும் விதமே அபகரிப்பு வழிமுறைதான். ரி.பி.சி யை புலிகள் தமதாக்க முற்பட்ட போது முரண்பாடு எற்பட்டது. உதாரணமாக இன்றைய ரி.ரி.என் கூட புலிகளால் உருவாக்கப்பட்டதல்ல. அதுவும் மோசடி செய்து ஏமாற்றி அபகரிக்கப்பட்டது. இன்றைய எரிமலை கதையும் அப்படித்தான். புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சபாலிங்கம் தொடங்கியதே எரிமலை. இலங்கையில் இதற்கு வேறு வரலாறு உள்ளது. புலிகள் ஜ.பி.சியை கைப்பற்றிய பின்பாக, ரி;.பி.சிக்கும் புலிக்கும் இடையில் முரண்பாடு உருவானது. இது ஐ.பி.சியைக் கைப்பற்றியதில் அல்ல, புலி ரி.பிசிக்கு எதிரான நிலைப்பாட்டால் உருவானது. ஒரு கட்டத்தில் தமிழ்செல்வனுடன் (ரி.பி.சியின் பத்திரிகை தொடர்பாக) தொடர்பு கொண்டு, புலிப்பினாமியாக இருக்கவும் முரண்பாட்டை தணிக்கவும் முனைந்தனர்.

ஆனால் பல்லைக்காட்டிவிட்டு இரகசியமாக தமிழ்ச்செல்வன் ரி.பி.சிக்கு எதிராக எழுதி கடிதம் தீடிரென ஐ.பி.சியில் வாசிக்கப்பட்ட பின்பே, ரி.பி.சி திடீர் ஜனநாயகவாதியாக மாறியவர்கள். இப்படி இவர்களின் திடீர் ஜனநாயக வேஷங்கள், அவதாரங்கள் பலவாகும். இதுவே பின்னால் புலியெதிர்ப்பு அரசியலாக மாறியது. இன்று புலியை அழிக்கும் யாருடனும் கூட்டுச் சேரும் அரசியலே இவர்களின் மையச் செயல்பாடாகியுள்ளது.

இன்று இந்தியா, இலங்கை, ஏகாதிபத்தியங்களுடன் நெருங்கிய தொடர்புடன் இயங்குகின்றனர். இதை அவர்கள் கூறவும் செய்கின்றனர். இன்று ஜெயதேவன் பின்னும், ரி.பி.சி வானொலியின் பின்னால் செயல்படும் பல ஏகாதிபத்திய நாடுகளில் அரசியல்வாதிகளும், பொலிசும், உளவுத்துறையும் நெருக்கமாக செயல்படுகின்றனர். இதை இவர்கள் சட்டஒழுங்கு பிரச்சனைக்கு உட்பட்டதாகவே காட்டமுனைகின்றனர். இன்று தகவல்களை வழங்குதல், புலம்பெயர் நாட்டு செயல்பாடுகளை காட்டிக் கொடுத்தல் (புலிகள் அல்லாத எல்லைவரை) என்ற விரிந்த தளத்தில் இவர்கள் கைக்கூலிகளாக செயல்படுகின்றனர். பிரான்சின் உள்துறை அமைச்சின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசியல் பொலிஸ், என்னை அழைத்து உலகில் உள்ள எந்த அரசுகளைப்பற்றியும் எழுதுவதை உடன் நிறுத்தக் கோரியது. தமக்கு தகவல்களை தரக் கோரியது. தேசியம் என்பது சாத்தியமில்லை என்றதுடன், பல நாடுகளின் உதாரணத்தைக் கூறி அதை தாம் அனுமதிக்க மாட்டோம் என்றனர். இப்படிப் பல. இதன் பின்னால் புலியெதிர்ப்பு அரசியல் பிரிவுகளின் செயல்பாடுகள் உள்ளன. இந்த வகையில் இன்று புலியெதிர்ப்பு என்பது, ஏகாதிபத்தியம் எமது நாட்டை ஆக்கிரமிக்க எது தேவையோ, அதை நிறைவு செய்யும் செயல்பாட்டில் இவர்கள் உள்ளனர். அதை இவர்களால் மறுக்கவே முடியாது. இவர்கள் நடத்தும் அரசியல் சந்திப்புகள், பொலிஸ்சுடனான தொடர்புகள், பத்திரிகை சந்திப்புகள், கடிதங்கள், மகஜர்கள் எங்கும் இதுவே நிகழ்கின்றது. தமிழ் மக்களுடன் அவர்கள் விடுதலையை அவர்களே போராடிப் பெறவேண்டும் என்று எப்படி பேசுவதில்லையோ, அப்படி ஐரோப்பிய மக்களுடன் இவர்கள் பேசுவது கிடையாது. பேசுவது, கூடி நிற்பது ஆக்கிரமிப்பு சதிகாரர்களுடன் தான்.

ஜெயதேவன் அடிக்கடி கூறுகின்றார் உண்மையைக் கண்டு கொள்ளும்படி. கண்ணதை திறந்து அங்கே என்ன நடக்கின்றது என்பதை பாருங்கள் என்கின்றார். புலிகள் பொய்களையும், அவதூறுகளையும் கூறுவதால், உண்மையை கண்டறியக் கோருகின்றார். சிந்திக்கக் கோருகின்றார். நல்லது.
ஆனால் அவர் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு இதற்கு எதிராகச் செயல்பட்டவர்தான். சரி கடந்த ஒரு வருடத்தின் பின் என்ன செய்கின்றார். அவர் புலிகள் விடையத்தில் மட்டும் இப்படி செய்யக் கோருகின்றார். இது ஒரு அரசியல் மோசடி அல்லவா! ஏன் சமூகத்தின் அனைத்து விடையத்திலும் இதைக் கோரவில்லை. ஏன் அவர் தான் இதைச் செய்யவில்லை. புலிகள் விடையத்தில் மட்டும் அவர் தன்னை மாற்றியவர், மற்றைய விடையங்களில் பழைய அதே நிலைப்பாடு. இது எப்படி சரியானது. இங்கு மாற்றம் எதுவும் நிகழவில்லை. ஒரு மோசடி, சதி அரசியலாகின்றது. இதுவே புலியெதிர்ப்பு அரசியலின் பின்னுள்ளவர்களின் நிலையாகும்.

ஜெயதேவன் மக்களை முட்டாளாக்கும் ஒரு பார்ப்பனிய கோயிலை நடத்துகின்றார். இங்கு உண்மையைக் கண்டறியக் கோரவில்லை. கடவுள் உண்டு என்று கூறி, கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றி உண்டியல் பணத்தை வசூலிக்கும் கயவர்கள் தான் இவர்கள். எப்படி உண்மையானவராக இருக்கமுடியும். இவர்கள் எப்படி நேர்மையானவர்கள். கோயில்களுக்கும், உண்டியல்களுக்கும் கதைகளுண்டு. மக்கள் தமது பிரச்சனைக்கு உண்டியலில் பணம் போடுவதால் எதுவும் நிகழ்வதில்லை என்பது, உண்மையைக் காணும் ஆய்வாளனுக்கு ஏன் இவை தெரிவதில்லையா? இதுவரை தெரியாவிட்டால் இன்றே தெரிந்துகொண்டு, அந்த கயவாளித் தொழிலை ராஜினமா செய்யும். கோயில்கள் என்பன மக்கள் சிந்திக்கவிடாது அடிமைப்படுத்தும் ஒரு மக்கள் விரோத நிறுவனம் தான். இதனால் தான் புலிகள் பிரதேசத்திலும் இது செழிப்புற்று வளருகின்றது.

தனிப்பட்ட மனிதன் வழிபட முனைவது என்பது இதில் முற்றிலும் வேறுபட்டது. சமூகத்தின் அவலமான நிலையைக் கண்டு அஞ்சி, தனிப்பட்ட மனிதன் இன்னுமொரு சக்தியிடம் முறையிடுவதாக இது அமைகின்றது. அதாவது இன்றைய சமூகம் காது கொடுத்து கேட்கமறுக்கும் நிலையில், அதை தீர்க்க முன்வராத போது, அதை இல்லாத ஒன்றிடம் கூறி ஒப்பாரி வைப்பதுதான் வழிபாடு. உண்மையானவன் நேர்மையானவன் மக்களின் பிரச்சனை தீர்க்கும் வகையில் வழிகாட்ட வேண்டுமே ஒழிய, இல்லாத ஒன்றிடம் ஒப்பாரி வைக்க துணை நிற்கமுடியாது. இவர்கள் எப்படி நேர்மையாக புலிகளுக்கு மாற்றாக தமிழ் மக்களை வழிநடத்துவர்.

கோயில் வைத்து மக்களை ஏமாற்றி வாழ்வோர், மதப்பிரச்சாரம் செய்வோரின் நோக்கம் தனிமனித வழிபாட்டில் இருந்து வேறுபட்டது. கோயிலும் அது சார்ந்த தத்துவங்களும். மக்களை மந்தையாக்கி, பணம் கறக்கும் நிறுவனங்;கள் தான். அத்துடன் ஆளும் மக்கள் விரோத அரசின் அடக்கு முறைக்கு, மக்களை வழிபாட்டின் மூலம் அடிபணிய வைப்பவைதான். உண்மையில் கோயில் அது சார்ந்த மதக்கோட்பாடு என்பது புலிகளைப் போல், பணத்தை கறப்பதுடன் மக்களை அடிமையாக வைததிருக்க விரும்பும் ஆளும் வர்க்கத்தின் கருவியாகவேயுள்ளது. இங்கு பணம் வசூலிப்பு என்பது கடவுளின் பெயரால், பக்தியின் பெயரால் நடக்கின்றது. புலிகளின் பணவசூலிப்பு பிரபா என்ற கடவுள் பெயரால், தேசியத்தின் பெயரால் நடக்கின்றது. மக்களின் பெயரில், கடவுளின் பெயரில் மனிதர்கள் ஏமாற்றப்படுகின்றனர். மனிதவுழைப்பு உருவாக்கும் செல்வத்தையே புடுங்குகின்றனர். இதில் ஜெயதேவனி;ன் கோயிலும் இதைத்தான் செய்கின்றது. மனிதன் தான் சிந்தித்து செயலாற்றும் உணர்வை, ஜெயதேவனின் கோயிலும் அதன் நோக்கமும் மறுதலிக்கின்றது. பின்பு வேடிக்கையாக உண்மையைக் கண்டறிய சமூகத்தைக் கோருகின்றார்.
உண்மையானவர் நேர்மையானவர் என்ற போலித்தனத்துடன் திடீர் ஜனநாயகவாதியான ஜெயதேவன், மற்றொரு மக்கள் விரோத சர்வதேச அரசியலில் ஈடுபடுகின்றார். பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்தை ஆளும் தொழில் கட்சியின் ஒரு விசுவாசமிக்க கட்சி உறுப்பினர். பிரிட்டிஸ் தொழில்கட்சி பிரிட்டனிலும், உலகளாவிலும் மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபடுகின்றது. அதாவது புலிகள் தமிழ் மக்களை மட்டும் தான் மொட்டை அடிக்கின்றனர். ஆனால் பிரிட்டிஸ் அரசு உலகெங்கும் உள்ள மக்களையே மொட்டை அடிக்கின்றது. ஆட்சிகவிழ்ப்புகள், அரசியல் சதிகள், ஆக்கிரமிப்புகள், படுகொலைகள் என்று அனைத்தையும் செய்கின்றது. பல சந்தர்ப்பத்தில் இதை நாகரிகமாக செய்கின்றது, புலிகள் இதை காட்டுமிராண்டித்தனமாகச் செய்கின்றது.

பிரிட்டிஸ் தொழில்கட்சி பிரிட்டிஸ் ஏகாதிபத்திய என்ற அதிகாரத் திமிருடன், உலக ஜனநாயகத்துக்கு புறம்பாக ஈராக் ஆக்கிரமிப்பை முன்னின்று நடத்தியது. ஒரு கட்டத்தில் ஒரே நாளில், ஒரு கோடி மக்கள் உலகெங்கும் இதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். அதன் பொது கூட இந்த ஜெயதேவன் மக்கள் பக்கம் இருக்கவில்லை. புலிகளைப் போல் மக்களுக்கு பொய்யையும் புரட்டையும் திணித்து, யுத்தத்தை ஈராக் மக்கள் மீது நடத்த துணை நின்றவர். பிரிட்டிஸ் மக்கள் வீதியில் இறங்கி போராடிய போது, பிரிட்டிஸ் தொழிற் கட்சிகள் மக்கள் விரோத ஆக்கிரமிப்பை நடத்த அன்று உதவினார், இன்று உதவுகின்றார். உலக ஆக்கிரமிப்பாளக் கட்சியின் உறுப்பினர் தான் இவர். அன்றும் சரி, இன்றும் சரி கட்சியை விட்டு வெளியேறி பிரிட்டிஸ் மக்களுடன் இணைந்து தனது கட்சியை எதிர்த்து இந்த ஜெயதேவன் போராடவில்லை. ஆனால் புலியில் இருந்து விலகி தமிழ் மக்களை, புலிக்கு எதிராக போராடக் கோருகின்றார். இதில் ஏன் இரட்டை வேடம். இரண்டும் மக்களுக்கு எதிரானது தான். ஆனால் ஆக்கிரமிப்பாளனுக்கு துணையாகவே இன்று, ஏன் இந்தக் கணம் வரை உள்ளார்.

ஈராக்கின் எண்ணைக்காக எண்ணை முதலாளிகள் ஜனநாயகத்தின் பெயரில் சதாம்குசைனை ஆட்சியில் இருந்து அகற்றி ஈராக்கை ஆக்கிரமித்தவர்கள் எப்படிப்பட்ட ஜனநாயகத்தை அங்கு நிறுவினார்கள். ஏகாதிபத்திய நாடுகளில் வைத்து கைக்கூலிகளாக்கியவர்களையே, ஆட்சியில் அமர்த்தினர். இதுதான் இன்று ரி;பி.சி கும்பல் தமிழ் மக்களுக்கு மாற்றுப்பாதையாக உங்களுக்கு வழிகாட்டு பாதை. ஈராக்கை ~ஜனநாயக ஆக்கிரமிப்பாளன் ஆக்கிரமித்த பின்பாக 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் மக்கள் இவர்களால் கொல்லப்பட்டுள்ளனர். எங்கும் அராஜகத்தை ஏற்படுத்தியுள்ளனர். இவர்களின் சிறைகளில் அரசியல் கைதிகளாக பல ஆயிரம் பேரை அடைத்து வைத்து, சித்திரவதை செய்கின்றனர். பல நூறு பெண்கள் உட்பட ஆண்களைக் கூட பாலியல் ரீதியாக வதைத்துள்ளனர், வதைக்கின்றனர். சதாம்குசைன் காலத்தில் நடக்காத அளவுக்கு மிகப் பெரிய மனித உரிமை மீறலை இவர்கள் செய்கின்றனர். ஆனால் இதை எல்லாம் ஆதரித்து தான், அவர் பிரிட்டிஸ் தொழில் கட்சியின் உறுப்பினராக உள்ளார்.

இன்று இலங்கையில் அன்னிய ஆக்கிரமிப்பு நடக்கவேண்டும் எனக், கூறுவதில் ஜெயதேவன் மிக முக்கியமானவர். எண்ணை வளம் இருந்தால் அதை உடன் செய்துவிடலாம்; என்று கூறும் இவர், அதை எப்படிச் செய்யலாம் என்று கூறுவதே அவரின் இன்றைய அரசியலாகியுள்ளது.. இதன் மூலம் ஈராக்கில் செய்ததை இலங்கையில் செய்வதை, இவர் கொள்கை ரீதியாக ஆதரிக்கின்றார்.

உண்மை, நேர்மை என்ற இவர்கள் கூறுவது எல்லாம், புலிகளைப் போல் தமது சொந்த நலன் சார்ந்தவை தான். மக்கள் நலன் என எதுவும் கிடையாது. மக்கள் என்பது புலிகளைப் போல், தமது சொந்த நலனை அடையும் ஒரு கருவி மட்டும் தான்.

இவர்கள் எப்படி மக்கள் விரோத அரசியலை ரி.;பி.சியில் வைக்கின்றனர். ஒரு சில உதாரணங்கள் மூலம் பார்ப்போம்.

1.அண்மையில் மீண்டும் பேச்சுவார்த்தை என்றும் அதை ஜரோப்பாவில் நடத்த வேண்டும் என்று புலிகளும், ஆசியாவில் நடத்தவேண்டும் என்று அரசும் வாதாடியது. இதில் ரி.பி.சி புலிகளுக்கு எதிராக வழமை போல் தமது குறுகிய புலியெதிர்ப்பு அரசியல் நிலையையெடுத்தது.

ஏன் ஐரோப்பாவில் நடத்த முடியாது? ஏன் ஆசியாவில் நடத்த வேண்டும்;? முதலில் இந்த பேச்சுவார்த்தையை தடுக்கும் அரசியல் குதர்க்கத்துடன் இனவாதிகளான ஜே.வி.பியும், சிங்கள உறுமயவும் தான் ஆசியாவில் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்று முன்மொழிந்தனர். இந்த முன்மொழிவை அல்லவா இவர்கள் கண்டித்து விவாதத்தை நடத்தியிருக்க வேண்டும். அதை அவர்கள் உள்நோக்குடன் செய்யவில்லை. ஜே.வி.பியைப் போல் பதிலளிக்க விரும்பிய புலிகள், பேச்சுவார்த்தை ஐரோப்பாவில் என்றனர்.

இதில் என்ன தவறுள்ளது. அரசியல் நேர்மையீனம் கொண்டதாகவும், சதிகளை அடிப்படையாக கொண்ட பேரினவாத அரசு, அதனுடன் உள்ள அரசியல் கும்பலும் அணுகும் போது, அதையே தொழிலாக கொண்ட புலிகள் சும்மாவிடுவார்களா!

பேச்சு வார்த்தைக்கு உடன்பட்டால், இருதரப்பும் தாமே பேசி எங்கே என்று முடிவு எடுக்க வேண்டும். இல்லாது நிபந்தனையுடன் கூடிய இடத்தெரிவை முதலில் வைத்தது அரசு அல்லவா! இதில் பேச்சுவார்த்தைக்கு தடையாக உள்ளவர்கள் யார். இப்படி பல விடையங்கள் உள்ள போது, ரி.பி.சி கும்பல் விடையத்தையே திரித்து காட்டுகின்றனர். ஏன்? உங்களுக்கு புரிந்தால் சரி.


2.புலிகள் மாற்றுத் தீர்வு என்று எதை வைக்கின்றனர் என்று புலிகளுக்கு எதிராக விவாதத்தை தொடங்குகின்றனர்.

மரமண்டைகளே புலிகள் தானே தமிழ் ஈழத்தை முன்வைக்கின்றனர். அவர்கள் அதற்கு குறைந்த ஒரு தீர்வை முன்வைத்து உடன்பட வைக்கவேண்டும் என்றால், அரசு அல்லவா தீர்வுத்திட்டத்தை முன்வைக்க வேண்டும். இதை புலிகள் ஏற்றுக் கொள்கின்றார்களா அல்லது நிராகரிக்கின்றார்களா என்பது வேறு விடையம். இன்று தீர்வுத் திட்டத்தை பகிரங்கமாக மக்கள் முன் வைக்க வேண்டியது அரசே ஒழிய புலிகள் அல்ல. அதற்கு பின்தான் புலிகள் வைக்கவேண்டும். இலங்கையில் பேரினவாதக் கட்சிகள் எதுவும் தமது அரசியல் வேலைத்திட்டத்தில் தமிழ்மக்களுக்கு என எந்தத் தீர்வையும் முன்வைக்கவில்லை. தமிழ்மக்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கைகளை கடந்த காலத்திலும் நிகழ்காலத்தில் முன் கூட்டியே வைக்கின்றனர். ஆனால் இந்த புலியெதிhப்புக் கும்பல் அரசு சார்பாக நிலையெடுத்து புலிக்கு எதிராகவே விடையத்தை மாற்றுகின்றனர். புலிகளின் மக்கள் விரோத தவறுகளை பயன்படுத்தி, தமிழ் மக்களின் அறிவையே புலிகளைப் போல் மலடாக்குகின்றனர். இந்த வகையில் உள்நோக்கம் கொண்ட சதிகளில் ஈடுபடுகின்றனர்.

இப்படி அனைத்து விவாதமும் புலிகளுக்கு எதிராகவே முன்னெடுக்கின்றனர். உண்மைகளின் மீது அல்ல. புலிக்கு மாற்று அன்னிய தலையீட்டின் மூலமான இலங்கை பேரினவாத அரசின் ஊடாக இவர்கள் முன்மொழிகின்றனர். இதுவே இவர்களின் அரசியல் முன்னெடுப்புகளின் மைய விடையமாக உள்ளது. இந்த வகையில் தான் புலிக்கு மாற்று என்ற பெயரில், ரி.;பி.சி வானொலி தன்னை புலி அல்லாத தரப்புகள் அனைத்தினதும் ஏகபிரதிநிதியாக்க முனைகின்றது. இந்த வகையிலான முயற்சிகள் ஒருபுறம். இதனால் ஈ.பி.டி.பி யுடான முரண்பாடு, இவர்களுக்கு இடையில் நடக்கின்றது. இந்த வகையில் புலியெதிர்ப்பு இணையங்கள் பல ரி.பி.சி.க்கு பக்கபலமாக உள்ளது.
இவை அனைத்துக்கும் புலிகளின் மக்கள் விரோத அரசியலே துணைநிற்கின்றது. புலிகளின் பாசிச போக்கு, மக்கள் விரோத நடத்தைகள் ரத்தமும் சதையுமாகிவிட்டது. இந்தநிலையில் இதை எதிர்ப்பவர்கள் ஒரு அணியில் இணைய வேண்டும் என்ற கோசத்தை, மிக இலகுவாக ரி.பி.சியால் முன்வைக்கப்படுகின்றது. இதில் அவர்கள் கணிசமான வெற்றி பெற்று வருகின்றனர்.

இப்படி தமிழ் மக்களின் சமூக பொருளாதார நலனுக்கு ஆபத்து இரண்டு தளத்தில் ஏற்பட்டுள்ளது. ஒருபுறம் புலிகள். மறுபுறம் புலியெதிர்ப்பு அணி. மக்களின் சமூக அறியாமை மீது, கண்முடித்தமான நம்பிக்கைகள் மீது மக்கள் விரோத அரசியல் புகுத்தப்படுகின்றது. சமூகத்தில் அக்கறை உள்ளவர்கள், இதைப் புரிந்து எதிர்வினையற்ற வேண்டிய வரலாற்று காலத்தில் நாம் வாழ்கின்றோம்.

Sunday, December 25, 2005

அரசியல் என்பது

அரசியல் என்பது கொலைகளை, கற்பழிப்புகளை, வன்முறைகளை, பொய்களை, சதிகளை எல்லாம் கூட்டி அள்ளி எம்முகத்தில் எறிகின்றது. இதைப் பார்த்து, தெரிந்துகொள் என்கின்றது.

தமிழ்மக்களின் தலைவீதி ஒரு சிலரால், தமது சொந்த குறுகிய நோக்கில் கையாளப்படுகின்றது. அரசியல் கொலைகள் தொடருகின்றன. இந்தவகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரறாஜசிங்கம் நேற்று (இன்று) படுகொலை செய்பப்பட்டார். இப்படியான ஒவ்வொரு கொலையும் மக்களுக்கு மீண்டும் மீண்டும் அறைந்து சொல்லும் செய்தியென்ன.

வாயை மூடு என்பது தான். அடிமையாய் இரு என்பதைத் தான் சொல்லுகின்றது. இதைத் தாண்டி எதுவுமல்ல. இது தேசியத்தை பெற்றுத் தரப்போவதுமில்லை. கைக்கூலிகளை ஒழித்துவிடப் போவதுமில்லை. புலியின் அராஜகத்தை ஒழித்துவிடப் போவதுமில்லை.

அடிமை மக்கள் கைகட்டி, வாய் பொத்தி, மௌனமாக இரு என்று ஒவ்வொரு கொலையும் எமக்கு உரைக்கின்றது. உண்பதற்காக வாயை திற, அதற்காக மாடுமாதிரி உழை, கொலைகாரர்களை உருவாக்க புணர்ந்த பிள்ளையைப் பெறு. இது தான் கொலைகாரர்கள் மக்களுக்கு சொல்லும் ஒருயொரு செய்தி. கொலையை கண்டிக்காதே. அதை விமர்சனம் செய்யாதே. நாம் சொன்னால் கர்த்தால் செய், ஊர்வலம் போ. இது கொலைகாரனின் அதிகாரத்துடன் கூடிய செய்தி.

அமைதி சமாதனம் வேஷம் போட்டு மீண்டும் கொலைகளை தொடங்கியவர்கள் புலிகள். அதே பாணியில் அண்மைக்காலத்தில் எதிர்தரப்பும் மீண்டும் கொலைகளை செய்யத் தொடங்கியுள்ளனர். ஜோசப் பரறாஜசிங்கம் இந்த வகையில் கொலப்பட்டுள்ளார். இதற்கு முன் நிகழ்ந்த பல படுகொலைகளை இவர் கண்டித்தவர் அல்ல, ஆதாதரித்தவர் கூட. அந்த அரசிலுக்கு இவர் பலியாகியுள்ளார். கொல்லப்படும் பலரின் சோகம் இப்படி உள்ளது. இதை எப்படி நாம் புரிந்து எதிர்கொள்வது.

கொலை செய்யப்படுவர்கள் சமூகத்தின் மேல் மட்டத்தில் இருந்து சமூகத்தின் கீழ் மட்டம் வரை உள்ளடங்குகின்றனர். மிக மோசமான மக்கள் விரோதிகள் முதல் அன்றாடம் கஞ்சிக்கே வழி இல்லாது எதிர்வினையாற்றுபவர்கள் கூட கொல்லப்படுகின்றனர்.

நடக்கின்ற தொடாச்சியான நிகழ்வுகள், எந்தக் கொலையையும் நாம் மௌனமாக ஏற்றுக் கொண்டு இருக்க முடியாத நிலையை உருவாக்கின்றது. நடப்பவை எல்லாம் தமிழ் மக்களை மேலும் அழிவுக்கு இட்டுச் செல்லுகின்றது. தமிழ் மக்கள் என்ற அடையாளம் சிதைந்து, சிராழிந்து போகும் அளவுக்கு இவை மாறிவிட்டது. கொலைகளை இன்று கண்டிப்போர் பலவிதமாக செயலாற்றுகின்றனர். புலிகள் தாம் செய்யும் கொலைகளை கண்டிப்பதில்லை. புலியெதிர்ப்பு அணியினர் தாம் செய்யும் கொலைகளைக் கண்டிப்பதில்லை. பரஸ்பரம் இதில் ஒரு இனம் காணமடியாத ஒற்றுமை. கொலை செய்தவர்கள், அதை கொலை செய்யப்பட்ட தரப்பே செய்தாக புணாந்து செய்தி வெளியிடுகின்றனர்.

உண்மை, நீதி, மனிதத்துவம் என என எதுவுமற்ற அராஜகத்தில் அரசியல், தேசியம், மனித உரிமை எல்லாம் சிதைந்து சின்னபின்னமாகின்றது. கொலையைக் கண்டிப்பது கூட சிலருக்கு (ரி.பி.சி புலியெதிர்ப்பு அணிக்கு) உள்நோக்கம் கொண்ட அரசியலாகிவிட்டது. கொலைக்கான சமூகக் காரணங்களை கேள்விக்குள்ளாக்காத கண்டிப்பது போலித்தனமானவை.

ஒரு தரப்பு கொலையைக் கண்டிப்பது அதை விடக் கேவலமானது. அரசியல் கொலைகளை, கற்பழிப்புகளை, வன்முறைகளை, பொய்களை, சதிகளை எல்லாம் கூட்டி அள்ளி எம் முதத்தில் எறிகின்றது. இதைப் பார்த்து, தெரிந்துகொள் என்கின்றது. ஒரு பக்கம் பேரினவாதத்தால் ஊட்டிவளர்க்கப்படும் கைக்கூலி கொலைகாரக் கும்பல்கள், மறுபக்கம் குறுந்தேசியத்தின் பெயரில் அலையும் வெறிபிடித்த கொலைகாரர்கள். இதுவே எம் அரசியலாகிவி;ட்டது. அங்கு இங்கும் சமரை வீசுவதும் எமது நக்குத் தனமாகிவிட்டது.

பாவம் மக்கள். மிரண்ட விழியுடன் பரபரக்க தமக்குள் தாமே குசுகுசுக்கின்றனர். இந்த கொலைகள் அனைத்தும் மக்களுக்கு எதிரானவை. கொல்லப்பட்டவர் எந்தளவு பெரிய சமூக விரோதியாக இருந்தாலும், இன்று இதுவே எமது மக்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவாலாக உள்ளது. இந்த கொலைகளின் பின்னால் எந்த தர்மிக பலமும், குறைந்தபட்ச அரசியல் நேர்மையும் கிடையாது. ஒரு தலைப்பட்சமாக கொலைகளை கண்டிப்பதையும் நாம் அனுமதிக்க முடியாது. மக்கள் மட்டும் தான், தமது சொந்த தீர்வுகளை வழங்க முடியுமே ஒழிய, மக்களை அடிமைப்படுத்தும் கொலைகாரக் கும்பல்கள் அல்ல.

அனைத்து கொலைகளையும் நாம் எதிர்ப்போம்!
இதற்கான அரசியல் சமூக வேரை இனம் கண்டு, அதை அம்பலம் செய்வோம்!
மக்கள் மட்டும் தான் வரலாற்றை தீர்மாணிக்க முடியும்;. கொலைகாரர்கள் அல்ல!

Thursday, December 22, 2005

கற்பு, கருத்துச் சுதந்திரம்:மாயையும் உண்மையும்

கற்பு, கருத்துச் சுதந்திரம்:மாயையும் உண்மையும்
நன்றி : புதியகலாச்சாரம்

தீபாவளியோ, சுனாமியோ, சுதந்திர நாளோ, குடியரசு நாளோ, மகிழ்ச்சியோ, எழவோ எதுவாயினும் அவை பற்றிக் கருத்துக் கூறும் உரிமையும், வாய்ப்பும் பெற்றவர்கள் சினிமா உலகினர்தான். தமிழ் மக்களின் நேரம் சினிமா நேரம் என்றாகிவிட்ட நிலையில் கலவி பற்றி குஷ்பு கூறிய கருத்தும், பின்பு அதைக் கொம்பு சீவிவிட்ட சுகாசினியும், இவர்களுக்கு ஏற்பட்ட எதிர்ப்பும் மொத்தத்தில் இந்த நாடகம் இந்தியா டுடே போட்ட பாதையில் பீடு நடை போட்டு வருகிறது.

கற்பின் ஆதரவும், கலவியின் எதிர்ப்பும், கருத்துச் சுதந்திரத்திற்கு வேட்டு வைப்பதாகவும், சகிப்புத் தன்மையற்ற பாசிசச் சமூகமாக மாறுவதன் அடையாளமென்றும் ஓநாய் போல வருத்தப்படும் இந்தியா டுடே, இந்து போன்ற பத்திரிக்கைகள் தமக்கு ஆதரவாக அமீர்கான், நரேன் கார்த்திகேயன், சானியா மிர்சா முதலான அகில இந்திய நட்சத்திரங்களைக் களத்தில் இறக்கி விட்டிருக்கின்றனர்.

இதையே சற்று "அறிவார்ந்த' தளத்தில் ஆதரிக்கும் வேலையினை அ.மார்க்ஸ், ஞாநி, கனிமொழி மற்றும் சிறு பத்திரிக்கைகள் செய்ய, செயல் தளத்தில் சற்று தாமதமாகவும், தயக்கத்துடனும் த.மு.எ.ச. கோமாளிகள் பேசி வருகின்றனர். முன்னெப்போதும் இல்லாதபடி, தங்களது பெயர்கள் ஊடகத்தில் தொடர்ந்து அடிபடுவதைக் கண்ட பா.ம.க.வும், விடுதலைச் சிறுத்தைகளும் உடனடி லாட்டரியில் கிடைத்த திடீர் பரிசின் மகிழ்ச்சியோடு ஆர்ப்பாட்டங்களையும், வழக்குப் போடுதலையும் தொடர்கின்றனர்.

இது போக தமிழில் வெளியாகும் செய்திகளில் இரண்டு உண்மைகள் சன் டி.வி. உண்மை, ஜெயா டி.வி. உண்மை உண்டென நிறுவி வரும் மேற்படி சானல்கள் குஷ்புசுகாசினியை எதிர்ப்பதையும், ஆதரிப்பதையும் பரபரப்புத் தளத்தில் செய்து வருகின்றனர். உறுதியாக "இன உணர்வு அற்றுப்போன தமிழ்ப் பாலைவனத்தின்' கதகதப்பில் சோர்ந்து சுருண்டிருக்கும் இனவாதப் பூனை, தமிழினம் தனது மரபு, கற்பு, பண்பாடு குறித்து சிறுத்தை போல சீறுவதாகக் கற்பித்துக் கொள்கிறது. ஒரு பகற்கனவுக்காரனின் இன்பத்தைத் துரத்தி மகிழ்கிறது தமிழ்தேசப் பொதுவுடைமைக் கட்சி.

எது கருத்துச் சுதந்திரம்யாருக்குக் கருத்துச் சுதந்திரம்?

இந்தப் பிரச்சினை கருத்திலும், காட்சியிலும் பரபரப்பாய் இருக்குமளவுக்கு அதன் உண்மை சூட்சுமமாய் மறைக்கப்பட்டிருக்கின்றது. மேட்டுக்குடியின் நனவுப் பத்திரிகையான இந்தியா டுடேயின் தலைமையில் குஷ்புவின் ஆதரவாளர்கள் கருத்துச் சுதந்திரத்திற்கு ஆபத்து ஏற்பட்டு விட்டதாய் அலறுவது அதிலொன்று.

முதலாளித்துவ ஜனநாயகத்தின் தந்திரமான இருப்பே அது எல்லோருக்குமான நலனுக்காக இருப்பதாகக் காட்டிக் கொள்வதில்தான் அடங்கியிருக்கிறது. இதில் முதலாளிகளின் நலன் பாதிக்கப்படும் போதெல்லாம் எல்லோரின் நலன் பாதிக்கப்படுவதாக கூக்குரல் எழுப்பப்படும். ஜனநாயகத்தின் கதி இதுதானென்றால் கருத்துச் சுதந்திரத்தின் கதியும் அதுதான். சட்டத்தின் ஆசியுடன், தண்டனையின் கண்காணிப்பில் போதிக்கப்படும் ஜனநாயகத்தின் மேன்மை போன்றே அனைவருக்கும் சமமான கருத்துச் சுதந்திரம் என்பதும் ஒரு மூடநம்பிக்கைதான்.

உண்மையில் கருத்துச் சுதந்திரம் என்று ஒன்று இல்லை. அப்படி இருக்கவும் முடியாது. பலரும் பல கருத்துக்களை பேசி, எழுதி, விவாதிக்கலாம். ஆனால் அவை அமலாக்கப்படும்போதோ, முடிவெடுக்கப்படும் போதோ ஆளும் வர்க்க நலனுக்குரியவை மட்டும்தான் தேர்வாகும். மற்றவை மறுக்கப்படும். எனவே எல்லாக் கருத்துக்களும் கருத்தளவில் உலவலாமே ஒழிய, பௌதீக ரீதியான செயலாக ஒருபோதும் மாற முடியாது. ஆக அரசும் ஜனநாயகமும் அதிகாரமும் ஒரு வர்க்கத்தின் நலனுக்காக மட்டுமே இருக்க முடியும் என்ற விதி கருத்துக்களின் உரிமைக்கும் பொருந்தும்.

குஷ்பு கூறிய சுதந்திரப் பாலுறவு பற்றிய பிரச்சினை மேற்கண்ட விதியுடன் நேரிட்டுப் புரிந்து கொள்ள முடியாத ஒரு பண்பாட்டுப் பிரச்சினை என்ற போதிலும் அந்த வேலையை இந்தியா டுடே சிறப்பாகச் செய்து வருகிறது. குஷ்பு, சுகாசினி கொடும்பாவிகள் எரிக்கப்படுவதைக் கண்டிக்கும் சாக்கில் அழகுப் போட்டிக்கு ஆபத்து, பேஷன் ஷோவிற்குத் தடை, ஆங்கிலப் பெயர்ப் பலகைகள் நொறுக்கப்படும் அராஜகம் போன்றவற்றையும் சேர்த்துக் கொண்டு கண்டிக்கிறது.

இதிலெல்லாம் கருத்துச் சுதந்திரத்திற்கு ஆபத்துள்ளது என்று அலறும் இந்தியா டுடே, வைகோ உள்ளிட்ட தமிழின ஆர்வலர்கள் பொடாவில் அநீதியாகச் சிறை வைக்கப்பட்டது குறித்து வாய் திறக்கவில்லை. ஏன்? ஈழப்போராட்டத்தை வெறும் மேடைப் பேச்சில் கூட ஆதரிப்பதற்குச் சுதந்திரமில்லையா? குஷ்பு, சுகாசினியை ஆதரித்து ஞாயிறு மலர் வெளியிடும் இந்துப் பத்திரிக்கை தனது சக பத்திரிக்கையாளரான நக்கீரன் கோபாலை ஜெயா அரசு பொடாவில் வாட்டி எடுத்தது குறித்து மூச்சு விடவில்லை.
எழுத்தாளர் சுந்தரராமசாமி மறைவையொட்டி பக்கம் பக்கமாக அழுது, அரற்றி, புலம்பித் தீர்க்கும் காலச்சுவடு, உயிர்மை முதலான சிறுபத்திரிக்கைகளும், போலிக் கம்யூனிஸ்டுகளின் கலைப்பிரிவான த.மு.எ.ச.வும், தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகளென ஆந்திரத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் வரவரராவும் கல்யாண் ராவும் கைது செய்யப்பட்டதை ஒரு செய்தி என்ற அளவில் கூடக் கண்டு கொள்ளவில்லை. ஆனால் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் 60 ஆண்டுகளுக்கு முந்தைய ஸ்டாலினின் சோவியத் யூனியனில் மக்கள் கூட்டம் கூட்டமாகக் கொலை செய்யப்பட்டதான புனைவை பொய்யை இவர்கள் நினைவு கூறுவதற்கு தவறுவதில்லை.

சாதியின் பெயரால் மக்களைத் தன் பின்னே திரட்டி வைத்துக் கொண்டு பா.ம.க.வும், விடுதலைச் சிறுத்தைகளும் நடத்திவரும் பிழைப்புவாத, காரியவாத, சந்தர்ப்பவாத அரசியலையும், அதன் வழி அச்சாதிகளைச் சேர்ந்த மக்கள், சந்தர்ப்பவாதத்திற்குப் பயிற்றுவிக்கப்படுவதையும் பற்றிக் கவலைப்படாமல் உண்மையில் அவற்றை அங்கீகரித்துக் கொண்டு குஷ்பு எதிர்ப்பில் இவர்களது பாசிச மனோபாவத்தைக் கண்டுபிடித்துக் கவலைப்படுவது நகைப்பிற்குரியது; அருவறுப்பானது.

உலகமயமாக்கத்தின் விளைவால் விரிந்து செல்லும் மேட்டுக்குடியின் அலங்கார வாழ்வை மட்டுமே அங்கீகரிக்க முயலும் இந்தியா டுடே, இந்து பத்திரிக்கைகள் சுதந்திரப் பாலுறவு குறித்த சர்ச்சையில் எடுக்கும் நிலைப்பாடும், கவலைப்படும் விதமும் ஆச்சரியமானதல்ல.
உண்மையில் குஷ்பு, சுகாசினிக்கு ஆதரவாய் பிரபலங்களை நேர்காணல் செய்வதும், ஒத்த கருத்துள்ளவர்களை வைத்து "விவாதம்' நடத்திச் செய்தி வெளியிடும் இப்பத்திரிக்கைகளின் கருத்துச் சுதந்திரத்தில் யார் தலையிட்டார்கள், இல்லை, யார்தான் தலையிட முடியும்? விடுதலைச் சிறுத்தைகளோ, பா.ம.க.வினரோ தமக்கு எதிராக இப்பத்திரிக்கைகள் எப்படிச் செய்தி வெளியிட முடியும் என்று கேட்டதில்லையே. மேலும், அப்படிக் கேட்கத்தான் முடியுமா?

இதனால் இந்தியா டுடேயில் திருமாவளவனின் விருந்தினர் பக்கம் கிழிபடும் என்பதல்ல, இப்பத்திரிக்கைகளை எதிர்க்க நினைப்பது இந்திய அரசையே எதிர்ப்பது போல ஆகுமென்பது அவர்களுக்கு நிச்சயம் தெரியும். எனவே நிச்சயமின்மையில் மாட்டிக் கொள்ளும் அளவுக்கு அவர்கள் பாமரர்கள் அல்ல. கூட்டணியிலும், ஆட்சியிலும் சிறிய பங்கைப் பெற்றிருக்கும் அவர்களுக்கு தங்களது ஆட்டத்தை எந்த எல்லைவரை கொண்டு செல்லலாம் என்பதும் நன்கு தெரியும்.எனவேதான் குஷ்புவுக்கு எதிராக ஆத்திரம் கொள்ளும் இச்சூரப்புலிகள் பார்ப்பனப் பத்திரிக்கைகள் தங்களைத் தவறாகச் சித்தரிப்பதாக வருத்தம் வெளியிடுகிறார்கள். திருமாவளவன் ஒருபடி மேலே போய் "துடைப்பம் தூக்கிய எங்காட்களுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை' என்று விலகிக் கொள்கிறார்.

இவ்வாறு பார்ப்பன ஊடகங்களின் கருத்துச் சுதந்திரத்தை இவர்கள் பணிவுடன் அங்கீகரிக்கிறார்கள். விளக்குமாறு, செருப்பு, மட்டுமல்ல மறியல், ஊர்வலம், ஆர்ப்பாட்டம் ஆகிய அனைத்துமே சமூகத்தின் கருத்துரிமைக்கு எதிரான பாசிச நடவடிக்கைகள் என்று நிலைநாட்டுவதுதான் குஷ்பு விவகாரத்தின் மூலம் பார்ப்பன ஊடகங்கள் செய்ய விரும்பும் சதி.
மக்கள் தமது கோரிக்கைகளை மனுக் கொடுத்தும் பயனில்லை என்பதால் மறியல் செய்து போராடுகிறார்கள். நாக்பூரில் கோவுர் இனப் பழங்குடி மக்கள் மந்திரியைப் பார்த்து மனுக் கொடுக்கச் சென்று போலீசின் தடியடி நெரிசலில் 150 பேரைப் பலி கொடுத்தனர். நெல்லையில் மாவட்ட ஆட்சியரைப் பார்த்து மனுக் கொடுக்கச் சென்ற மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள் 18 பேர் போலீசால் கொல்லப்பட்டனர்.

கேவலம் மனுக் கொடுப்பதற்குக் கூட உரிமையோ, சுதந்திரமோ, அனுதாபமோ இல்லாத இந்த நாட்டில் தான் குஷ்புவுக்குக் கருத்துச் சுதந்திரம் இல்லையென்று கண்ணீர் விடுகிறார்கள். தமது கருத்துக்களை வெளியிடுவதற்கு வழியே இல்லை என்பதால்தான் சுவரொட்டியாய், சுவரெழுத்தாய், ஊர்வலமாய், மறியலாய் மக்கள் தங்களது கோரிக்கைகளை வெளியிடுகிறார்கள். இந்தியாடுடே, இந்து போன்ற பத்திரிக்கைகள் கையில் இருந்தால் போலீசிடம் அடிபட்டு ஏன் சாகவேண்டும்? எனவே, கருத்துக்களை வெளியிடும் சுதந்திரம் கூட மக்களுக்கு இல்லை, முதலாளிகளுக்கு மட்டும்தான்.

அம்பானியின் குடும்பச் சண்டையை தேசியப் பிரச்சினையாக்கிய தேசியப் பத்திரிக்கைகள் அதைத் தீர்த்து வைப்பதற்குக் காட்டிய முனைப்பும், சகாரா முதலாளி சுபத்ரா ராய் தலைமறைவானது குறித்து அவை காட்டிய கவலையும், பாரிசில் உலக இரும்பு இந்திய முதலாளி லட்சுமி மிட்டல் உலகமே வியக்கும்படி நடத்திய திருமணம் குறித்த பெருமிதமும், மக்களுக்கு கருத்துக்களை வெளிப்படுத்தும் சுதந்திரம் இல்லை என்பதும் வேறுவேறல்ல.
தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் அடங்கிய செய்தி ஊடகத்தை கையில் வைத்திருப்பவர்கள் ஊடக முதலாளிகள். செய்தி ஊடகங்களின் முக்கிய வருவாயான விளம்பரத்தை அளிப்பவர்கள் அரசு, தொழில் துறை மற்றும் சேவைத் துறை முதலாளிகள். இந்நிலையில் ஆளும் வர்க்க நலனுக்கு உகந்தவை என்று முடிவு செய்யப்படுபவை மட்டுமே செய்தியாக, கட்டுரையாக, நிகழ்வாக, ஆய்வாக, அறிவாக முன்னிறுத்தப்படும். மற்றவை கிள்ளுக் கீரையாக மறுக்கப்படும்.

"மனம் போல தினம் ஜமாய்' என்று கோக்கை குடிக்குமாறு அமீர்கான், விவேக், விக்ரம் வலியுறுத்துவதற்கு இருக்கும் சுதந்திரம் கோக்கை மறுப்பதற்கு இல்லை. நெல்லையில் "அமெரிக்க கோக்கை அடித்து விரட்டுவோம்' என்ற எமது இயக்கத்தின் சுவரெழுத்துப் பிரச்சாரத்திற்காகவே, பிணையில் வர இயலாத வழக்கு காவல் துறையால் போடப்பட்டது. இன்றும் கிராமப்புறங்களில் பிரச்சாரம் செய்யும் எமது தோழர்களை தொடர்ந்து தடுக்கும் போலீசு மக்களையும் மிரட்டி வருகிறது.

""கங்கை கொண்டான் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த மக்கள் கொக்கோகோலாவுக்கு ஆதரவாக இருப்பதால் நீங்கள் நடத்தும் எதிர்ப்புப் பிரச்சாரம் பொது அமைதியைச் சீர்குலைத்து விடும்'' என்று எழுத்துப்பூர்வமாகவே கருத்துரிமையை மறுக்கிறது நெல்லைப் போலீசு. குஷ்புவின் கருத்துரிமைக்காகக் குமுறி வெடிக்கும் சென்னை உயர்நீதி மன்றம், நெல்லைப் போலீசு அதிகாரிகளை வேலை நீக்கமா செய்யப் போகிறது?

குஷ்பு, சுகாசினி எதிர்ப்பை தமிழ் ஊடகங்கள் செய்தியாக்குவதன் காரணம், அதன் சினிமா பரபரப்பைக் காசாக்குவதுதானேயொழிய வேறு எதுவுமில்லை. அதனால்தான் குஷ்புவை ஆதரித்து ஆங்கில ஊடகங்கள் வெளியிடும் செய்தியின் "தரம்' தமிழில் இல்லை. குஷ்பு பிரச்சினை குறித்த விவாதமொன்றில் சினிமா தயாரிப்பாளர் பழ.கருப்பையா குஷ்புவை அவள் இவள் என்று பேசியதைக் கண்டிக்கிறார்கள். கண்டிப்பாக இது பழ.கருப்பையாவின் ஆணாதிக்கம்தான். ஒத்துக் கொள்வோம். ஆனால் நக்சலைட்டுகளையும், காசுமீர் போராளிகளையும் அவன், இவன் என்று எழுதுவதும், தீ.கம்யூனிஸ்டுகள், தீவிரவாதிகள் என்று அவதூறு செய்வதும் என்ன வகை ஆதிக்கம்?

பழ.கருப்பையாவது அவள், இவளென்று நிறுத்திக் கொண்டார். பெண்கள் விசயத்தில் சங்கராச்சாரி என்ன பேசினார், எப்படி நடந்து கொண்டார் என்பது நிர்வாணமான நிலையில் எந்தப் பத்திரிகையும் சங்கராச்சாரியைப் பொறுக்கி என்று எழுதவில்லை. எழுதவில்லை என்பது மட்டுமல்ல தீபாவளித் திருநாளில் நள்ளிரவில் அவர் கைது செய்யப்பட்டதை வைத்து, அடிப்படை ஜனநாயக உரிமை பறிபோனதாக ஒரு பாட்டம் அழுது தீர்க்கவும் செய்தார்கள். ஆனால் அப்துல் கலாமை அரசவைக் கோமாளி என்று ஒரு உலகறிந்த உண்மையை எழுதியதற்காக தருமபுரியில் எமது தோழர்கள் 55 நாட்கள் சிறையில் இருந்தனர்.

ஆக, இந்தியத் திருநாட்டில் ஒருநபரை எப்படி அழைக்கலாம், அழைக்கக் கூடாது என்பதில் கூட கருத்துச் சுதந்திரம் கடுகளவும் இல்லை. எப்போதெல்லாம் ஆளும் வர்க்க நலன் இலேசாக உரசப்படுகிறதோ உடனே கருத்துச் சுதந்திரமும் பாதிக்கப்படுவதாகக் கூக்குரல் எழுகிறது.

கலாச்சாரப் போலீசைக் கண்டிக்கும் சட்டம் ஒழுங்கு போலீசு!

குஷ்புவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான வன்முறை என்றும், இவர்களைக் கலாச்சாரப் போலீசு என்றும் சித்திரிக்கும் பார்ப்பன ஊடகங்களும், போலி கம்யூனிஸ்டுகளும், அறிஞர் பெருமக்களும் இக்கருத்தை வெளியிடும்போது சட்டம் ஒழுங்கு போலீசின் குரலில் பேசுகிறார்கள். அதுமட்டுமல்ல ஏற்கெனவே ஜனநாயகமும், கருத்துரிமையும் சட்டப்படி நிலவி வருவதைப் போன்ற பிரமையையும் உருவாக்குகிறார்கள். பாசிசத்தை ஜனநாயகம் என்று அங்கீகரிக்கும் இவர்கள் "கற்பை' பிற்போக்குத்தனம் என்று சாடுவது நல்ல நகைச்சுவை.

கற்பை ஆதரிக்கும் கருத்துப் பிரச்சாரம் செய்யலாமாம். ஆனால் அதைக் கண்ணியமான முறையில் செய்ய வேண்டுமாம். துடைப்பம், செருப்பு, கொடும்பாவி ஆகியவை கூடாதாம். செருப்பு, துடைப்பம் வைத்து ஆர்ப்பாட்டம் செய்வதோ, வழக்குப் போடுவதோ உலகெங்கும் உள்ள ஏற்றுக் கொள்ளப்பட்ட ஜனநாயக முறைகள்தானே, இதில் எங்கே வன்முறை உள்ளது? உண்மையில் இத்தகைய ஆர்ப்பாட்ட முறைகளின் மீது நடுத்தர வர்க்கத்திற்கு உள்ள வெறுப்பையே இந்து பத்திரிகை முதல் ஷங்கர் படம்வரை வெளிப்படுத்துகிறார்கள். இந்த வெறுப்பே நீதிமன்றங்கள் மூலம் பல விதங்களில் சட்டமாகியிருக்கின்றது.

அடுத்து குஷ்பு, சுகாசினியை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு போடுவதைப் பாசிசம் என்கிறார்கள். இதை எப்படிப் பாசிசம் என்று சொல்ல முடியும்? லட்சக்கணக்கான மக்கள் ஒன்றுமில்லாத வழக்குகளுக்காகவும், வாய்தாக்களுக்காகவும் அலைந்து கொண்டிருக்கும்போது, குஷ்பு மேட்டூர் நீதிமன்றத்தில் படியேறியது குறித்துக் கண்ணீர் விடுகிறார்கள். உண்மையில் இது "நாங்கள் நீதிமன்றம், வழக்கு, விசாரணைக்கு அப்பாற்பட்டவர்கள்' என்ற மேட்டிமைத்தனமே அன்றி வேறல்ல. சென்னை உயர்நீதி மன்றமும் குஷ்பு மீது வழக்குகள் போடுவதைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறது.
ஆளும் வர்க்க நலன் பாதிக்கப்படும் போது மட்டும் எல்லோருக்குமான சட்டம் ஒழுங்கு "எங்களுக்கில்லை' என்ற மனோபாவம்தான் இவர்கள் பேசும் ஜனநாயகத்தின் உண்மையான இலக்கணம். கோவை குண்டு வெடிப்பில் கைதான அப்பாவி முசுலீம்கள், பல ஆண்டுகளாகச் சிறையில் வாடும் விசாரணைக் கைதிகள் போன்றோர் உயர்நீதி மன்றத்தின் அநீதிக் கண்களுக்குத் தெரிவதில்லை. குஷ்புவின் கருத்தை எதிர்க்கும் கற்பு ஆதரவாளர்கள் தமிழ்ப் பிற்போக்காகவே இருக்கட்டும். அவர்கள் போடும் வழக்கை சட்டபூர்வமாக எதிர்கொண்டு நிரபராதி என்று நிரூபிப்பதில் என்ன பிரச்சினை?

பாசிசத்தின் பாதந்தாங்கியாகக்கருத்துச் சுதந்திரம்!

ஒரு கருத்தை கருத்தால் சந்திக்காமல், துடைப்பத்தை எடுப்பது வன்முறை என்றால் தங்கர்பச்சான் நடிகைகளைப் பற்றி தெரிவித்த கருத்துக்காக அவரை மன்னிப்புக் கேட்க நிர்ப்பந்தித்ததும் வன்முறைதான் என்று ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கும். காசுக்காக தனது கருத்தையும், கலைத் திறமையையும், உடலையும் விற்பனை செய்கின்ற விபச்சாரர்கள் நிரம்பிய திரையுலகத்தில் விபச்சாரிகளை மட்டுமே சாடிய தங்கர்பச்சானின் ஆணாதிக்க மனோபாவத்தைக் கண்டிப்பதற்கு மேல் அதில் என்ன இருக்கிறது?
கருத்துச் சுதந்திரக்காரர்களின் இந்த இரட்டை வேடம் தவிர்க்க இயலாமல் அவர்களைப் படுகுழியில் இறக்குகிறது. ""பாபர் மசூதியை இடித்தது குற்றம்தான், ஆனால் "மசூதி இருந்த இடத்தில் ஏற்கெனவே கோவில் இருந்தது' என்று கூறுவதற்கும், "அங்கே கோவில் கட்டுவோம்' என்று கருத்து தெரிவிப்பதற்கும் இந்துத்துவவாதிகளுக்கு கருத்துரிமை உண்டு'' என்று கூறுகிறார் அ.மார்க்ஸ். அரை அம்மண நடனங்கள், ஏகாதிபத்திய நுகர்வு வெறிக் களியாட்டங்கள் இவற்றின் அடிப்படையில் அமைந்த தனிநபரின் பாலியல் உரிமைகள் ஆகியவற்றை ஆதரிக்கும் பொருட்டு பாசிசத்தின் கருத்துரிமையையும் ஆதரிக்க வேண்டியிருக்கிறது. குஷ்புவின் கருத்துரிமைக்காக முசுலீம்களின் வாழ்வுரிமையையும், வழிபாட்டுரிமையையும் காவு கொடுக்கிறார் அ.மார்க்ஸ்.

முற்போக்குக் கலைஞரான பிரளயனோ தனியாருக்குச் சொந்தமான டிஸ்கோத்தே அரங்கிற்குள் போலீசு எப்படி அத்துமீறி நுழையலாம் என்று நட்சத்திர ஓட்டல் முதலாளியைப் போல இடி முழக்கம் செய்கிறார். இந்த வாதத்தின்படி தனிச்சொத்துடைமையின் பெயரால் சாதி தீண்டாமையையும், கருத்துரிமையையும் அங்கீகரிக்க வேண்டியிருக்கும்.

எல்லா கருத்துக்களுக்கும் சமஉரிமை என்ற கருத்தே ஒரு பித்தலாட்டம். சாதி தீண்டாமையும், இந்து மதவெறிப் பாசிசமும், கற்பும், முல்லாக்களின் பத்வாக்களும், உழைக்கும் மக்களுக்கெதிரான கருத்துக்கள் என்பதை ஏற்றுக் கொள்கின்ற யாரும் அவர்களுடைய கருத்துச் சுதந்திரத்திற்காகக் குரல் கொடுக்க முடியாது. அவற்றை அங்கீகரிக்கவும் முடியாது.

பெண்ணடிமைத்தனத்தைவளர்க்கும் பாலுறவு சர்வேக்கள்

இந்தியா டுடேயின் செக்ஸ் சர்வேயிலோ, குஷ்பு கூறிய கருத்திலோ ஆணாதிக்கம் குறித்து ஒரு வெங்காயம் கூடக் கிடையாது. மாறாக, மாநகர மேட்டுக்குடி இளம் பெண்களிடம் விதவிதமான பாலியல் ருசிகளை அறிமுகப்படுத்துவதற்காகவே அந்த செக்ஸ் சர்வே எடுக்கப்பட்டது. அந்த சர்வேயில் கேட்கப்பட்ட கேள்விகளைப் பார்த்தால் இனிமேல் சரோஜாதேவிப் புத்தகங்களுக்குத் தேவையில்லை என்று தோன்றும். நடுத்தர வர்க்கம் மற்றும் மேட்டுக்குடியை விழுங்கி வரும் நுகர்வுக் கலாச்சாரத்தின் ஓர் அங்கம்தான் இந்த சர்வே.

உலகமயம், தாராளமயம், தனியார்மயம் உருவாக்கி வரும் நுகர்வுப் பண்பாடு, சமூகம் சூழ வாழும் ஒரு தனிநபரை பொருட்கள், ஆசைகள் சூழப்பட்ட நபராக மாற்றுகிறது. இந்த நபர் மேலும் மேலும் தனிமனிதனாக மாறி சகிப்புத் தன்மையற்ற நபராக மாறி, தனது ஆசைகளை நிறைவேற்றுவதற்காக ஏனைய மனித உறவுகளை ரத்து செய்கிறார். பாலுறவிலும் நுழையும் இந்தக் கண்ணோட்டம் எந்த அளவுக்குப் பரவுகிறதோ அந்த அளவுக்கு ஆணாதிக்கத்தை எதிர்த்தோ, பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்தோ, பெண்ணடிமைத்தனத்தை எதிர்த்தோ உள்ள மங்கலான போராட்ட உணர்வைக் கூட பெண்களிடமிருந்து துடைத்தெறிந்துவிடும். இது தனது ஆசை, தேவைகளுக்காக எல்லா விழுமியங்களையும் துறந்து தேர்ந்த காரியவாதியாக மாறுவதைப் பயிற்றுவிக்கிறது.

இந்தியா டுடேயின் சர்வே கேள்விகளில் ஒன்றான "வேலை கிடைப்பதற்காக உடலை விற்பீர்களா?' என்ற கேள்வி அவர்களின் நோக்கத்தைத் தெளிவுபடுத்தி விடுகிறது. அது மாறும் சூழ்நிலைக்கேற்ப "அட்ஜஸ்ட்மெண்ட்' செய்து கொள்ளுமாறு நவீன காலப் பெண்களைப் பச்சையாகக் கேட்கிறது. கற்பு குறித்த பிற்போக்குத்தனத்தை, செத்த பாம்பை அடிக்கும் இவர்கள் தங்கள் சர்வேயில் பாலியல் வன்கொடுமை பற்றியோ, சமூகத்தில் விரவியிருக்கும் ஆணாதிக்கம் குறித்தோ ஒரு கேள்விகூடக் கேட்கவில்லை.
குஷ்புவும் கூட தனது கருத்தில் திருமணத்துக்கு முந்தைய பாலுறவில் "பாதுகாப்பாக விளையாடுமாறு' கவலை கொள்கிறார். இங்கும் சுதந்திரப் பாலுறவின் பெயரால் பெண்ணுடலை நுகர் பொருளாக்கும் ஆணாதிக்கம் குறித்து எந்தக் கேள்வியுமில்லை. அதனால்தான் இவர்கள் கற்பை பிற்போக்கு என்று தெளிவாக வரையறுப்பதுபோல, பெண்களுக்கான முற்போக்கு எது என்பதை தெளிவாக வரையறுக்க முடியவில்லை. அதற்கு மாறாக பெண்ணுடலை வெறும் காமப் பொருளாக உறிஞ்சக் கொடுக்கும் அடிமைத்தனத்தை அட்ஜஸ்ட்மெண்ட் என்ற பெயரில் சிபாரிசு செய்கிறார்கள். இதுவும் கற்பு என்ற பிற்போக்குத்தனத்திற்கு கடுகளவும் குறையாத பிற்போக்கத்தனம்தான்.

சுதந்திரப் பாலுறவு என்ற கோட்பாடு நடைமுறையில் ஆணின் பொறுக்கித்தனத்திற்கும், பெண்ணின் அடிமைத்தனத்திற்கும் உதவுமேயன்றி அதில் வேறு எந்த தத்துவ ஆராய்ச்சிக்கும், மயிர் பிளக்கும் விவாதத்திற்கும் இடமில்லை. அவ்வகையில் விடுதலைச் சிறுத்தைகள் பா.ம.க.வினரின் மலிவான பரபரப்பு அரசியலை விட இந்தியா டுடேயின் பாலுறவு அரசியல் அபாயகரமானது.

ஐ.டி. (ஐ.கூ) எனப்படும் தகவல் தொழில்நுட்பத்துறை குறித்து ஆகா, ஓகோ என்று புகழ்பாடும் இந்தியா டுடே அதில் பெண்கள் படும் துயரம் குறித்து இதுவரை எந்த சர்வேயும் எடுத்ததில்லை. இத்துறைப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு அதிகமாக ஆளாகிறார்கள், பணிநிரந்தரம் பாதுகாப்பு இல்லை, தொழிற்சங்க உரிமை இல்லை, வரையறுக்கப்பட்ட பணி நேரம் இல்லை. மேலும், வார இறுதிக் கேளிக்கைகளுக்கு கட்டாயமாக வரவழைக்கப்படுகிறார்கள். இதற்கு மறுப்பவர்கள் இத்துறையிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள் அல்லது பழமைவாதி என்று கேலி செய்யப்படுகிறார்கள். அந்தப் பழமைவாதிகளை ஜாலியான அடிமைகளாகப் பழக்கப்படுத்துவதுதான் இந்தியா டுடேயின் வேலை. மாறாக, அந்த நவீனப் பெண்ணடிமைகளை விடுதலை செய்வதற்கல்ல.

இந்தியா டுடேயின் "புதிய முற்போக்கு'

கற்பு எனும் நிலவுடைமைப் பிற்போக்கைச் சாடும் சாக்கில் இந்தியா டுடே உலகமயமாக்கத்தின் கேடுகளை நைசாக முற்போக்கு என்று சேர்த்து விடுகிறது. பழைய தொழிற்சங்கச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் இது முற்போக்கு, தொழிற்சங்கம் வேண்டுமெனச் சொல்வது, வேலை நிறுத்தம் செய்வது இவை பிற்போக்கு. பேஷன் ஷோ, அழகிப் போட்டி முற்போக்கு. புகைபிடிக்கும் காட்சிகளைத் தடைசெய்வது, கடைகளின் பெயரைத் தமிழில் எழுதுவது பிற்போக்கு. இறுதியில் இந்த "முற்போக்கை' மறுத்து "பிற்போக்கை' ஆதரிப்பவர்களை தாலிபான்கள் என்று முத்திரையும் குத்தி விடுகிறது இந்தியா டுடே. காலாவதியாகும் கற்பை வைத்து உலகமயமாக்கத்தின் கேடுகளை ஏற்கச் செய்யும் இந்தச் சதித்தனம் எத்தனை பேருக்குப் புரியும்.
முன்னேறிக் கொண்டிருக்கும் சமூகத்தை குஷ்புவை ஆதரிப்பவர்கள் பின்னுக்கு இழுப்பதாக ஒரு சிறப்புக் கூட்டம் போட்டுப் புலம்பிய த.மு.எ.ச. அறிவாளிகளை ஏன் கோமாளிகள் என்று அழைத்தோம் என்பது இப்போது புரிந்திருக்கும். ஆனால் தொழிற்சங்கம் கூடாது என்ற "முற்போக்கை' மே.வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா ஏற்றுக் கொண்டுள்ள படியால் அவர்களை முற்றிலும் ஏமாந்த கோமாளிகள் என்றும் சொல்லிவிட முடியாது.

கருத்துச் சுதந்திரத்திற்காக மார்தட்டும் இந்தியா டுடே தொழிற்சங்கம் வேண்டுமா வேண்டாமா என்பது குறித்தும், தாராளமயத்தால் தற்கொலை செய்யும் விவசாயிகள் குறித்தும், அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள் குறித்தும் ஏன் சர்வே எடுக்க முன் வரவில்லை? ஆனால் பாலியல் குறித்து மூன்று மாதத்திற்கொரு முறை சர்வே எடுக்கும் வேகமென்ன, குஷ்புவுக்கு ஆதரவாக ஒதுக்கப்படும் பக்கங்களென்ன, சமூகம் "முன்னேறி'ப் போவதன் இலட்சணம் இதுதான். குஷ்புவை எதிர்ப்பதில் தீவிரம் காட்டும் பா.ம.க.வும், விடுதலைச் சிறுத்தைகளும் கூட இத்தகைய சமூக முன்னேற்றத்தோடு கருத்து வேறுபாடு கொண்டவர்களல்லர். அவ்வகையில் அவர்களது சண்டை அட்டைக் கத்திகளோடுதான்.

எய்ட்ஸ் நோயின் ஊற்றுக் கண்ணான விபச்சாரத்தையும், மக்களைக் காமவெறி பிடித்த விலங்குகளாக மாற்றும் திரைப்படங்களையும் தடை செய்வது குறித்து மூச்சுவிடாமல், நாடெங்கும் ஆணுறை எந்திரங்களை வழங்குவதன் மூலம் ஆண்களுக்குப் "பாதுகாப்பை' வழங்குகிறார் அமைச்சர் அன்புமணி. பெண்களுக்கு கற்புக் கவசம் அணிவித்து ஆண்களிடமிருந்து "பாதுகாக்கிறார்' அப்பா இராமதாசு. சிகரெட் உற்பத்திக்குத் தடை இல்லை; சினிமா நிழலுக்குத் தடை. சில்லறை விற்பனையில் பன்னாட்டு நிறுவனங்களை நுழைத்து தமிழ் வணிகர்களை ஒழிக்க டெல்லியிலிருந்து திட்டம். அழியவிருக்கும் சிறுவியாபாரிகள் தமிழில் போர்டு வைத்த பின்தான் அழியவேண்டும் என்பதற்குத் தமிழ்நாட்டில் போராட்டம்.

குஷ்பு, சுகாசினிமேட்டுக்குடியின் மனச்சாட்சி!

பா.ம.க.வும், விடுதலைச் சிறுத்தைகளும் எப்படி தமிழினத்தின் பிரதிநிதிகள் இல்லையோ அதேபோல குஷ்புவும் பெண்ணினத்தின் பிரதிநிதியல்ல.
குஷ்பு தின்று தினவெடுத்த வர்க்கத்தின் பிரதிநிதியாக இருந்து, சுதந்திரப் பாலுறவு குறித்துப் பேசுகிறார். அவரை தேர்ந்த சமூகவியலாளரைப் போலப் பேசுவதாகக் குறிப்பிடுவது நகைப்பிற்குரியது. அப்படிப் பேசியிருந்தால் ஒரு நடிகையாக கோடீசுவரியாக தான் நிலைபெறுவதற்குச் செய்த "தியாகங்களை' குறைந்தபட்சம் ஒரு மேலோட்டமான சுயவிமர்சனமாகக் கூடச் சொல்லியிருப்பார். ஆனால் அவரைப் போன்ற பெண்கள் தம்மை இழப்பது குறித்தல்ல, பெறுவது குறித்தே கவலைப்படுகிறார்கள். அதையே ஒரு வாழ்க்கை முறையாக மற்றவர்களுக்கும் பரிந்துரை செய்கிறார்கள்.
குஷ்புவிடம் கேட்கப்பட்ட கேள்வியை ஏழ்மையினால் விபச்சாரியாக்கப்பட்ட பெண்ணிடம் கேட்டால் என்ன பதில் வரும்? நிச்சயமாக "அட்ஜஸ்ட்மெண்ட்' செய்து வாழுவதைச் சரியெனக் கூறமாட்டார். காரணம், இங்கே இழப்பினால் நடிகைகளுக்கு கிடைக்கும் ஆடம்பர வாழ்வு கிடைக்காது. அவலம்தான் கிடைக்கும். நல்ல கணவன், குழந்தைகள், கல்வி, குடும்பம் என்ற சராசரிப் பெண்ணின் ஏக்கம்தான் அந்த விபச்சாரியிடம் வெளிப்படும். குஷ்புவிடம் இல்லாத ஆணாதிக்கக் கொடுமையின் மீதான கோபமும், வெறுப்பும் இந்தப் பெண்களிடம் கண்டிப்பாக இருக்கும்.

சுகாசினி, குஷ்பு போலத்தான் என்றாலும் கூடுதலாக பார்ப்பன மேட்டிமைத்தனம் கலந்த கலவை எனலாம். தமிழின வெறுப்பும், இந்துத்துவ ஆதரவும், மேட்டுக்குடியின் போலியான தேசபக்தியும் கொண்ட, "தேசியப் படங்களை' எடுத்த மணிரத்தினத்தின் மனைவி என்ற தகுதியை அவர் சரியாகக் கொண்டிருக்கிறார்.

மணிரத்தினத்தின் வீட்டில் குண்டு வெடித்ததை வைத்து, ரஜினியிடம் சமூக உணர்வு பொங்கியதைப் போல, குஷ்புவிற்கு ஏற்பட்ட நிலைமை குறித்து சுகாசினியிடம் கோபம் கொம்பு போல சட்டென்று வெளிப்படுகிறது. மற்றபடி சராசரி தமிழ்ப் பெண்களின் வேதனை, அவலம் குறித்து அவரிடம் ஏதும், எப்போதும் வெளிப்பட்டதில்லை. பிரச்சினைகளை மேட்டிமைத்தனமாகப் பேசும் மேட்டுக்குடிப் பெண்கள், பெண்ணினத்தின் போராளியாகச் சித்தரிக்கப்படுவது, பெண்ணினத்தின் சாபக்கேடேயன்றி, பெருமைக்குரியதல்ல.
பிழைப்புவாதத்தைப் பாதுகாக்கும்"தமிழ் ஆணுறை'!

தமிழக அரசியல் பொதுக்கூட்டங்களில் பேசும் பேச்சாளர்கள், அதிலும் தீப்பொறி, வெற்றிகொண்டான், நடராசன் போன்றோர் தலைவர்கள் பெண்டாளுவதைப் பெருமையாகவும், தலைவிகள் சோரம் போனதைத் தரக்குறைவாகவும் பேசுவது ஒரு நீண்ட மரபு. அவ்வகையில் திராவிட இயக்க அரசியலில் ஆணாதிக்கத் திமிரும், பெண்களைக் கேவலமாகப் பேசுவதும் இரத்தத்தோடு கலந்து விட்ட ஒன்று.

பா.ம.க.வும், விடுதலைச் சிறுத்தைகளும் இந்தப் பொது நீரோட்டத்தோடு கூட்டணி வைத்துக் கலந்தவர்கள்தான். இரண்டு பிரபலமான பெண்கள் பேசியதை வைத்து, தமிழ்ப் பண்பாடு, மரபு, பெருமைக்குப் போராடுபவர்களாகக் காட்டிக் கொள்ள நினைக்கும் இவர்கள், தமிழ்க் கற்பு குறித்துக் கதைப்பது வெறும் பம்மாத்தே. தமிழ்ப் பெண்களின் வாழ்வைச் சூறையாடும் தாராளமயக் கொள்கையர்களின் ஆட்சியில் பங்குதாரராக இருந்து கொண்டே தமிழ்க் கற்பு பற்றிக் கதைக்கின்றனர்.

எத்தனை மேன்மைமிக்கதாக இருந்த போதிலும் கற்பு என்பது நடைமுறையில் ஒரு தனிநபரின் பாலியல் ஒழுக்கம் சார்ந்த விசயம் மட்டும்தான். ஆனால் பொது வாழ்வில் ஒழுக்கம் என்ற சொல்லை தமது அகராதியிலிருந்தே நீக்கிய கனவான்கள் தமிழ்ப் பெண்களின் கற்பு நெறி குறித்தும், மக்களின் உணர்வு புண்படுவது குறித்தும் அலட்டிக் கொள்வது அருவெறுக்கத்தக்கது; கேலிக்குரியது.

குஜராத் இனப்படுகொலை நடந்தபோது கண்ணை மூடிக் கொண்டு பா.ஜ.க. வழங்கிய பதவிச் சுகத்தை அனுபவித்து இன்பம் கண்ட கருணாநிதி, இராமதாசின் அரசியல் ஒழுக்கத்திற்கு விளக்கம் தேவையில்லை. "தலித் விடுதலை'க்காக மூப்பனார், பெர்ணாண்டஸ், சங்கராச்சாரி, ஜெயலலிதா, கருணாநிதி, சிதம்பரம் கோவில் தீட்சிதர் உள்ளிட்ட யாருடனும் கூட்டு சேர தயங்காத திருமாவளவனின் அரசியல் ஒழுக்கமோ "அப்பழுக்கற்றது'.
வாழ்க்கையை விருப்பம்போல அனுபவிக்கவும், முன்னேறவும் விரும்பும் பெண்களுக்கு குஷ்பு சிபாரிசு செய்யும் பாதுகாப்புக் கவசம் "ஆணுறை'. பதவி சுகத்திற்காக அரசியல் விபச்சாரத்தில் ஈடுபடும் இவர்களுக்கு "கொள்கை பாதுகாப்பு' வழங்கும் ஆணுறை "தமிழ்'.

தாராளமயக் கொள்கைக்கு இசைவாகச் சுதந்திரப் பாலுறவையும் உள்ளடக்கிய புதிய பார்ப்பனப் பாரதக் கலாச்சாரத்தை உருவாக்க விரும்பும் இந்து, இந்தியா டுடே அடங்கிய பழைய பார்ப்பனக் கும்பல்; தாராளமயக் கொள்கையினூடாகவும் தமிழ் மக்கள் மீது பழைய பார்ப்பனக் கற்பை நிலைநாட்டப் போராடும் கருணாநிதி, இராமதாசு, திருமாவளவன் ஆகியோர் அடங்கிய புதிய பார்ப்பன வேளாளக் கும்பல்!

இந்தத் திருடன் போலீசு விளையாட்டை ஊதிப் பெருக்கி தேசியப் பிரச்சினையாக்கி அதனூடாகத் தமிழ் தொழிற்போட்டியை நடத்திக் கொள்ளும் சன் டி.வி, ஜெயா டி.வி! இதுவரை கற்பு என்ற கருத்தை வைத்து எந்தத் தமிழ்ச் சினிமாவும் சம்பாதிக்க முடியாத பணத்தையும், ஈர்க்க முடியாத கவனத்தையும் இந்த நாடகம் பெற்று விட்டது.

தி.மு.க. கூட்டணியில் இருக்கும் பா.ம.க.வையும், பா.ம.க.வுடன் கூட்டணி வைத்திருக்கும் விடுதலைச் சிறுத்தைகளை அ.தி.மு.க. கவர இருக்கும் நிலையில், அவர்களை தி.மு.க. கூட்டணியில் வைத்திருப்பதற்காகவே, ஜெயா டி.வி. சார்பான குஷ்புவை எதிர்க்கும் இவர்களது நாடகத்தை சன் டி.வி., தமிழ் முரசு ஊதிப் பெருக்குவதாகச் சிலர் சொல்வதில் உண்மை இல்லாமலில்லை. ஆனால் கற்பை விட எம்.எல்.ஏ. சீட்டு பருண்மையானது. நாளையே ஜெயா அதிக சீட்டு கொடுத்து இவர்களைக் கவர்ந்திழுக்கலாம்.

பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகளால் ஆதரிக்கப்பட்ட தமிழ்ப் பெண்களும், ஜெயாவால் ஆதரிக்கப்பட்ட குஷ்புவும் இரு தரப்பினராலும் கைவிடப்பட்டு அரசியல் கற்புக்குப் புது விளக்கங்கள் வழங்கப்படலாம். இந்தியா டுடேயும் மாறிவரும் செக்ஸ் விருப்பங்கள் குறித்து புதியதொரு சர்வேயை வெளியிடலாம்.

மு இளநம்பி

பெண் விடுதலையின் பெயரில் ஆணாதிக்க விபச்சாரம்

பெண் விடுதலையின் பெயரில் ஆணாதிக்க விபச்சாரம்

"சாராம்சத்தில் விமர்சனக் கண்கொண்டு பார்ப்பவை புரட்சிகரமானவை" என்றார் கால்மார்க்ஸ். ஆனால் ஆணாதிக்க சமூக ஒழுக்கக்கேட்டை நியாயப்படுத்தும் வாதங்கள். சுதந்திரத்தின் பெயரில், பால் இச்சையின் பெயரில், பெண்ணின் பெயரில் கூட ஆணின் ஒழுக்கக்கேட்டை மடடுமல்ல, அதன் பாதையில் பின்தொடரும் பெண்ணின் ஒழுக்கக்கேட்டையும் கூட நியாயப்படுத்துவது நிகழ்கின்றது. ஒழுக்கக்கேடு என்பது இவர்களின் வாழ்வியல் கண்ணோட்டத்தில் எதுவும் கிடையாது. அப்படி எதாவது உண்டு என்றால், தாம் அடக்கியாளும் வர்க்கத்தின் போராட்டங்களைத் தான்.

நான் எழுதிய "ஆணாதிக்க ஒழுக்கக் கேட்டை கோருவதா பெண்ணியம்?" என்ற கட்டுரைக்கு தமிழ்மணம் விவாதத்தளத்தில் இரண்டு முரணிலையான ஏகாதிபத்திய ஆணாதிக்க ஆதரவு (டோண்டு, மற்றது உண்மை) கருத்துகள் போடப்பட்டடு இருந்தன. அவை இக் கட்டுரையில் முழுமையாக தரப்படுகின்றன. உலகமயமாதல் விபச்சார பெண்ணியத்தின் வாழ்வியலை போற்றும் இந்த இரண்டு பதிவுகளும், தனது சொந்த முகத்துடன் வெளிவந்துள்ளது. கால்மார்க்ஸ் குறிப்பிட்டது போல் "மனித சமூக சாரம் என்பது, ஒவ்வொரு தனி மனிதனிடமும் இயல்பாக உள்ளர்ந்திருக்கும் சாரம் என்பதல்ல, அதன் எதார்த்தத்தில், அது சமூக உறவுகளின் முழுத் தோற்றம் ஆகும்" அதையே இந்த பதிவுகள் மீண்டும் பதிவு செய்துள்ளன.

இவர்கள் என்னவகையான சமூக உறவுகளை கொண்டு இருக்கின்றனரே, அதை அப்படியே வாந்தியெடுக்கின்றனர். ஏகாதிபத்திய ஆணாதிக்க அமைப்பின் முழுத் தோற்றத்துடன், அதன் விபச்சாரத்தனத்தை நியாயப்படுத்த முன்வைக்கும் வாதமே முதலாளித்துவத்தின் உள்ளடக்கம் தான். தனிப்பட்ட சுதந்திரம், பெண்ணின் தனிப்பட்ட விடையம், பாலியல் ஒரு உடல் சார்ந்த உணர்வு இன்னும் பலவாக கூறி தப்பிக்க நீக்கல் தேடுகின்றனர்.

நான் எழுதிய கட்டுரையில் இருந்து டோண்டு என்பவர் "கேவலமான ஆணாதிக்க சமூக அமைப்பில் ஆண் எதையெல்லாம் செய்ய முடிகின்றதோ, அதையெல்லாம் பெண் செய்யும் உரிமையைத்தான் பெண்ணியமாக கருதுகின்ற வக்கிரம் அரங்கேறுகின்றது." என்று நான் எழுதியதற்கு, அவர் எப்படி பதிலளிக்கின்றார் எனப் பார்ப்போம்.

"ஏன், செய்தால் என்னவாம்? இதில் என்ன வக்கிரம்? உடல் இச்சை என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது. அதை தணித்துக் கொள்ள ஆண்களுக்கு எந்தத் தடையும் இல்லை. பல பெண்களிடமும் அவன் உறவு கொள்வதைக் கண்டிக்கும் மற்ற ஆண்களும் முக்கால்வாசித் தருணங்களில் தங்களுக்கும் அந்த வாய்ப்பு கிட்டவில்லையே எரிச்சலின் காரணமாகத்தான் அந்த நிலையை எடுக்கின்றனர். பல காரணங்களால் பெண்களுக்கு அந்த வாய்ப்பு கிட்டுவதில்லை. அது ஏன் என்பது எல்லோருக்குமே தெரியும். அதற்குள் இப்போது போய் ஒன்றும் ஆகப் போவதில்லை. உடல் இச்சை என்பதும் பசி, தாகம் போன்ற அடிப்படை உணர்வே. அதைத் தணித்துக் கொள்ள சில பெண்கள் முன்படும்போது மட்டும் ஒழுக்கக் கேடு என்றெல்லாம் ஏன் கூற வேண்டும்? அதை சம்பந்தப்பட்டப் பெண்ணே பார்த்துக் கொள்வார்"

இப்படித் தான் அவரால் வாதிட முடிகின்றது. இங்கு ஆணாதிக்கம் பற்றி எந்த அக்கறையும் இவருக்கு இருக்கவில்லை.

மாறாக வெளிப்படுத்துவது நுகர்வு வெறி. சந்தையில் பொருளை வாங்கும் கண்ணோட்டத்தில், அதையே பாலியலுக்குரிய உரிமை என்கின்றனர். இச்சை என்கின்றார். சில ஆண்கள் எரிச்சலால் புகைவதாக கூறகின்றார். இது ஒரு சமூக ஆய்வா? இல்லை தனிப்பட்ட மனிதனின் சொந்த உலகு நோக்கில் இருந்து கூறும் சொந்த சீரழிவு தான். இதைத் தான் குஷ்புவும் செய்தார். இதில் இருந்து சமூகம் வேறானது. தனிமனித சொத்துரிமை சார்ந்து வெளிப்படுத்தும் கருத்து எப்போதும் வேறானது, அதையெல்லாம் இழந்த சமூகம் வெளிப்படுத்தும் கருத்து வேறானது. வாழ்க்கை முறை முற்றிலும் வேறானது. அவை நேர் எதிர் தன்மை கொண்டவை. உதாரணமாக பார்ப்பானின் உலகம் வேறானது. பள்ளர்களினதும் பறையர்களினதும் உலகம் வேறானது. பார்ப்பான் தனிமனித நலன் சார்ந்து உலகை சூறையாடும் மனித விரோதியாக இருக்கின்றான். பள்ளர் பறையர் சமூக உயிரியாக உலகை சூறையாடுவதற்கு எதிராக இருக்கின்றான்;. கருத்தின் தளம் வேறுபடுகின்றன. பெண்ணை இதில் இருந்து ஒவ்வொருவரும் பார்க்கும் பார்வை வேறுபடுகின்றது.

"ஏன், செய்தால் என்னவாம்? இதில் என்ன வக்கிரம்? உடல் இச்சை என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது. அதை தணித்துக் கொள்ள ஆண்களுக்கு எந்தத் தடையும் இல்லை." என்ற வாதமே அடிப்படையில் விபச்சாரத்தைக் குறிக்கின்றது. இங்கு ஆணும் பெண்ணும் உறவு கொள்வதுபற்றி பிரச்சனையல்ல. அது இயற்கையானது. ஆனால் அதை இந்த ஆணாதிக்க சமூக பொருளாதா அமைப்பில் உறவு கொள்ளும் வடிவம், அதை துண்டம் சமூக காரணிகள் தொடர்பானதே இங்கு பிரச்சனையாகும். யாரும் இந்த சமூக பொருளாதார அமைப்புக்கு வெளியில் சுயமாக இயங்குவதில்லை. எந்த முடிவுகளும் இந்த சமூக பொருளாதாரத்துக்கு வெளியில் யாரும் எடுப்பதில்லை. நாம் இந்த சமூக பொருளாதார அமைப்பின் சிறைக் கைதிகள். சிறைக்குள் இருப்பவன், சிறையின் எல்லைக்குள் உட்பட்டே, அவன் தனது சொந்த முடிவுகளை எடுக்கின்றான். இங்கு சொந்தமாக முடிவு எடுப்பது, அவன் சுதந்திரமாக தோந்தவையாக அல்ல.

உலகம் ஆணாதிக்க சமூக அமைப்பிலானது. ஒரு பக்கம் நிலப்பிரபுத்துவ ஆணாதிக்கம். மறுபக்கம் உலகமயாதல் என்ற ஆணாதிக்கம். நிலபிரபுத்துவம் பெண்ணை அடிமையாக இருக்க கோருகின்றது. உலகமயமாதல் பெண்ணை விபச்சாரியாக இருக்க கோருகின்றது. இது தவறு என்றால் இதைப்பற்றி முதலில் விவாதியுங்கள். இதை இரண்டையும் எதிர்த்து நாம் போராடக் கோருகின்றோம். இப்படித் தான் சமூகம் எங்கும் பெண்கள் போராடுகின்றனர்.

ஆணும் பெண்ணும் இயற்கை சார்ந்த பாலியல் தேவையை பூர்த்திசெய்ய, நிலப்பிரபுத்துவ சமுதாயத்திலும் சரி, உலகமயமாதல் அமைப்பிலும் சரி பாலியல் ரீதியாக உறவைக் கொள்ளமல் வாழவில்லை. இதை யாரும் மறுக்கவுமில்லை? இந்த சமூக பொருளாதார ஆணாதிக்க அமைப்பு, இதை எப்படிச் உறவு கொள்ளல் வேண்டும் என்று வழிகாட்டுகின்து. இந்த சீரழிவுக்குள் நின்று பொது விபச்சாரமா அல்லது அடிமைத்தனமா என இரண்டில் ஒன்றை சமூகத்தின் தனி அலகுகள் தேர்ந்தெடுக்கின்றனர். இது அக்கம் பக்க்கமாகவே உள்ள போது, பலமான அமைப்பு வடிவம் சார்ந்து மோதல் வெடிக்கின்றது. இந்த இரண்டையும் எதிர்த்த போராட்டத்தில் சமூகம் உள்ள போது, அதை பலமான சமூக பொருளாதார அமைப்பு, இதை எதிர்நிலைக்கு முத்திரை குத்தி தூற்ற முனைகின்றனர்.

"பல பெண்களிடமும் அவன் உறவு கொள்வதைக் கண்டிக்கும் மற்ற ஆண்களும் முக்கால்வாசித் தருணங்களில் தங்களுக்கும் அந்த வாய்ப்பு கிட்டவில்லையே என்ற எரிச்சலின் காரணமாகத்தான் அந்த நிலையை எடுக்கின்றனர். பல காரணங்களால் பெண்களுக்கு அந்த வாய்ப்பு கிட்டுவதில்லை." என்ற வாதம் முதலாளித்துவ அற்பவாதியின் கண்டுபிடிப்புத்தான். விவாதத்தின் உள்ளடகத்துக்கு பதிலளிக்க முடியாதபோது, இப்படி கூறி தப்பிக்க முன்வைக்கும் குதர்க்கமாகும். உலகின் வறுமைக்கு தங்களுடைய சுரண்டலே காரணம் என்பதை மறைக்க, ஏகாதிபத்தியம் சனத்தொகை பெருக்கம் யுத்தங்கள் என்று தமது சொந்த சூறையாடலை மறைக்க வைக்கும் வாதம் போன்றதே இது. ஒரு முதலாளித்துவவாதி மட்டும்தான், வாய்ப்பு கிட்டவில்லையே எரிச்சலின் விளைவு என்று, தனது தனிச்சொத்துரிமை உலக நோக்கில் நின்று கூறமுடியும். அவனின் சொந்த மனிதவிரோத அர்ப்பத்தனங்கள், சமூக இயக்கத்தின் நோக்கில் எதையும் ஆராய்வதில்லை. இதை சந்தர்ப்பங்கள், சூழல்கள், வாய்ப்புகள் என்று புலம்பத் தொடங்குகின்றான். இதை தனிமனித எரிச்சல் என்று, எந்த ஒரு சமூக ஆய்வாளனும் கூறமாட்டான். தனிமனித சமூக அமைப்பினால் உச்ச நன்மை பெறும் அற்பவாதிகள் மட்டும், இப்படி கூறுதை வரலாறு முழுக்க நாம் காணமுடியும். இந்த கனவான்கள் சமூகத்தில் காணப்படும் சமூக ஒடுக்குமுறைகள் பற்றி வாய்திறப்பதேயில்லை. எப்போதும் தனிமனித விருப்பங்கள் மீதான சமூகத்தின் எதிர்வினையை பற்றி மட்டும் பேசுபவர்கள்.

"உடல் இச்சை என்பதும் பசி, தாகம் போன்ற அடிப்படை உணர்வே. அதைத் தணித்துக் கொள்ள சில பெண்கள் முன்படும்போது மட்டும் ஒழுக்கக் கேடு என்றெல்லாம் ஏன் கூற வேண்டும்? அதை சம்பந்தப்பட்டப் பெண்ணே பார்த்துக் கொள்வார். " என்ற வரிகள், இயற்கையான உடல் சார்ந்த உணர்வை பற்றி பேசவில்லை. மாறாக இந்த இயற்கையான உடல் சார்ந்த உணர்வை தீர்மானிப்பவனின் உலக கண்ணோட்டத்தைப் பாதுகாப்பது பற்றியே பேசமுற்படுகின்றார். இயற்கையான உணர்வு சார்ந்த பசி, தாகம் போன்ற அடிப்படையான தேவையை இந்த உலகமயாதல் சமூகத்தில் கோடானுகோடி மக்களுக்கு கிடைப்பதேயில்லை. அதை கிடைக்கவிடாமல் பண்ணுபவர்கள் யார். இவர்களைப் போன்ற அற்பவாதிகள் தான். இதை சம்பந்தப்பட்டவரின் விடையமாக குறுக்கி காட்டிவிடுவர். மாடிவீட்டில் இருந்து குடிசை பார்த்து ஏப்பமிடுபவர்கள் யார். தாழ்ந்த சாதியை உருவாக்கி அதில் உயர்ந்தவர்கள் பார்ப்பனர்கள். இதையெல்லாம் அவன் அவன் தனிப்பட்ட தெரிவாக கூறுவதும், தனிப்பட்ட உணர்வு சார்ந்தாக கூறுவதும், இதை சுதந்திரமாக இந்த சமூக அமைப்பில் பெற்றுக் கொள்ள எந்த தடையும் இல்லை என்று கூற முற்படுவன் ஒரு அற்ப வாதியாகத்தான் இருக்கமுடியும். ஒரு உடல் இச்சையைக் கூட, ஆணாதிக்க ஒழுக்ககேட்டுக்கு வெளியில் ஆணோ பெண்ணோ யாரும் பெறமுடியாது. இவை அனைத்தையும் சுவீகரித்து வைத்திருக்கின்ற சிலர் சமூக அமைப்பில், இதை துணிச்சலாக உபதேசிப்பதற்கு யாரால் முடியும் என்றால், இதை எல்லாம் சுதந்திரமாக கூறும் அற்பவாதியால் மட்டும்தான் முடியும். மற்றவனுக்கு சுதந்திரத்தை மறுப்பதால் கிடைக்கும் அற்பத்தனத்தில் இருந்து இது வெளிப்படுகின்றது.

பசிக்கு கையேந்த வைத்து, குடிக்கும் தண்ணீரையே பணமாக்கும் உலகில் நாம் வாழ்கின்றோம். இந்த நிலையில் இதை போல் தான் உடல் இச்சை (பாலியலும்) என்று கூறும் போது உடல் இச்சை விபச்சாரத்தை தாண்டி எதுவுமல்ல. தாம் அனுபவிக்கும் ஆணாதிக்க சுகத்தைத் இப்படித்தான் இவரால் கூற முடிகின்றது. உலகில் பசி எப்படி கோடிக்கணக்கில் மக்களை கொல்கின்றதோ, குடிக்க நீர் இன்றி உலகில் கோடிக் கணக்கில் மக்கள் கொல்கின்றதோ அப்படித் தான் உடல் இச்சை சார்ந்த பாலியலும்; உள்ளது. உணவு இன்மையால், சுத்தமான நீh இன்மையால் வருடம் 10 கோடி மக்கள் உலகில் உயிருடன் இறந்து போகின்றனர். அதையே கண்டு கொள்ளது வெறும் உணர்வாக கூறும் இவர்கள், இதை மற்றவனுக்கு மறுத்து தாராளமாக நுகருகின்றான். இதேபோல் தான் உடல் இச்சை சார்ந்த பாலியலுக்கும் நடக்கின்றது. சிலர் கோடானுகோடி மக்களின் உணவை பறித்து உண்டு கொழுப்பதும், மற்றவனின் குடிநீரையே அபகரித்து நீச்சல் தடாகங்களில் வாழ்வது போல், பெண்ணின் உடலை சுதந்திரமாக வரைமுறையின்றி அனுபவிக்க வைக்கும் வாதங்கள்; தான் இவைகள். இதுவே உலகமயமாதல் ஒழுக்கம். ஆண் விரும்பும் வரைமுறையற்ற பாலியல் சுதந்திரம் என்னும் விபச்சாரத்தைத் தான், பெண்ணின் உரிமை என்ற கூற முற்படுகின்றனர்.

இதே போன்ற தான் உண்மை கருத்திடுகின்றார். அவர் மற்றொரு வாலில் தொங்கிக் கொண்டு "பெண்ணடிமை மறுபடியும் மலர அடிக்கல் நாட்ட முயலுகிறீர்கள்." என்கின்றார். இது தான் அவரின் அனைத்து ஆணாதிக்க வாதத்தையும் காட்டிவிடுகின்றது. சமூகம் பெண்விடுதலையை ஏற்கனவே அடைந்து விட்டதாகவும், மீண்டும் பழையபடி பெண்ணடிமைத்தனத்தை கொண்டு வர முயல்வதாகவும் கூற முனைகின்றார். இவர் அடைந்த பெண்விடுதலை என்பது ஆணாதிக்க உலகமயாதல் விபச்சாரத்தைத் தான்;. இதே போன்று தான் ஒடுக்கப்பட்ட சாதிகள் போராடும் போதும், சாதியை மீண்டும் கொண்டு வர முயல்வதாக ஒடுக்கும் சாதிகள் கூறுவது வழமை. அதேவாதம் இங்கும் வெளிப்படுகின்றது. சொந்த ஆணாதிக்க சமுகம் அம்பலமாகும் போது, இப்படி புலம்புவது நிகழ்கின்றது.

இப்படி கட்டுரையை முடிப்பவரின் பதிவைப் முழுக்கப் பார்ப்போம்.
"முதலில், இது போன்ற சமூக ஒழுக்ககேட்டை சார்ந்த பதிவுகளைப் போடுவதில் ஒழுக்கத்தை கடைபிடிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகளிலேயே உங்களைப் பற்றி தெரிந்துவிடும். குஷ்புவை பெண்ணியவாதியாக காட்டியது நீங்கள். அவர் பாட்டுக்கு, தான் உண்டு தன் வேலை உண்டென்று இருக்க அவர் கூறிய கருத்தை ஒரு சமூக ஆர்வலரின் கருத்துக்கு இணையாக முக்கியத்துவம் கொடுத்து அவரை பெரிய ஆளாக்கிவிட்டது நீங்கள். தன் கருத்தைக் கூறினார் என்ற ஒரே காரணத்திற்காக, கேவலமாக நடத்தியது ஆண்களாகிய நீங்கள்.

ஆண்களின் ஒழுங்கீனங்களை பெண்களும் செய்ய அனுமதியுங்கள் என்று கேட்கவில்லை, பெண்ணின் ஒழுக்கம் என்பதை வரையறுக்க நீங்கள் யார் என்றுதான் கேட்கிறோம். ஒழுக்கமாயிரு என்று சொல்வதற்கு ஒரு தகுதி வேண்டும். பாலியல் விவகாரம் என்பது ஒரு எடுத்துக்காட்டு. ஆண்கள் உங்கள் மனப்போக்கிற்கு வாழவேண்டும், ஆனால் நீங்கள் கட்டிக்காக்கும் போலி கலாசாரத்திற்கும் ஒழுக்கத்திற்கும் , பெண் உயிரை விடவேண்டும். எந்த ஊர் நியதி இது. தினம் ஒருவனுடன் படுப்பதற்கும், உடல் இச்சைகளைப் பற்றி பேசுவதையும் உரிமையாகக் கேட்கவில்லை. அது உங்கள் உலகம். ஆனால், யாருடன் படுப்பது, என்ன பேசலாம் என்பதற்கும் தடை விதிக்க நீங்கள் யார்? உங்கள் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் கட்டிக் காப்பதற்காக இத்தனை நாள் நீங்கள் கொடுத்த தியாகச்சுடர் என்ற பட்டம் எங்களுக்கு தேவையில்லை. பெண்கள் தன் விருப்பத்தை, தனக்கென்று ஒரு வாழ்க்கை தன் விருப்பம் போல் அமைத்துக்கொள்ளும் அளவுக்கு முன்னேறியதில், எங்கே நீங்கள் இது நாள் கட்டிக்காத்துவந்த பெயர் போய்விடுமோ என்ற பயம் ஆண் வர்க்கத்தைப் பீடித்துக்கொண்டுள்ளது. இது நாள் வரை உங்கள் இனத்தின் பெருமையைக் காக்க நீங்கள் பயன் படுத்தி வந்த பெண்குலம், தனக்கென்று ஓர் உலகம் அமைத்துக்கொள்வதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதன் வெளிப்பாடாய், இதுபோன்ற விஷயங்களைப் பெரிதாக்கி அதன் மூலம் உங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டுகிறீர்கள். பெண்ணடிமை மறுபடியும் மலர அடிக்கல் நாட்ட முயலுகிறீர்கள்."
என்கின்றார்.

ஆணாதிக்க உலமயமாதல் பெண்ணியம் என்ற பெயரில் வழங்கும் விபச்சார உலகில் அதை பெண்விடுதலையாக காண்பதால் தான் "பெண்ணடிமை மறுபடியும் மலர அடிக்கல் நாட்ட முயலுகிறீர்கள்." என்கின்றார். உலகமயாதல் ஒரு ஆணாதிக்க அமைப்பு அல்ல என்றே, இவர் வாதாட முற்படுகின்றார். பெண்ணடிமைத் தனம் ஒழிந்துவிட்ட அமைப்பில், வாழும் ஒரு கற்பனை பெண்ணின் ஆணாதிக்க புலம்பல் இது.

கொள்கை ரீதியாகவே நாங்களும் நீங்களும் இரண்டு வேறுபட்ட துருவங்கள். நாங்கள் இந்த சமூக அமைப்பபை ஆணாதிக்க அமைப்பு என்கின்றோம்;. நீங்கள் இல்லையில்லை என்று கூறி பெண் விடுதலை அடைந்த அமைப்பு என்கின்றீர்கள். உங்கள் வாதங்கள் அனைத்துமே ஆணாதிக்கம் சார்ந்ததென நாங்கள் கூற முற்படுகின்றோம்.

நிலபிரபுத்துவ அமைப்பு மட்டும் ஆணாதிக்கமானதல்ல. நீங்கள் விசுவாசிக்கும் நம்பும் உலகமயமாதல் கூட ஆணாதிக்க அமைப்புத் தான். ஆணாதிக்க விபச்சார உலகில் கற்பனைகளுடன் வாழும் போது, நாம் அதை ஆணாதிக்க விபச்சார அமைப்பு என்று கூறும் போது துடித்து பதைத்து குமுறிக் கொட்டுவது இயல்பே. இக்கட்டுரையை கண்டு கொதிக்கும் போது "முதலில், இது போன்ற சமூக ஒழுக்ககேட்டை சார்ந்த பதிவுகளைப் போடுவதில் ஒழுக்கத்தை கடைபிடிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகளிலேயே உங்களைப் பற்றி தெரிந்துவிடும். " என்று தான் உங்களால் எழுத முடிகின்றது. உலகமயமாதல் சமூக ஒழுக்கக்கேட்டை நாம் மறுதலிப்பவர்கள். கோடானுகோடி மக்களின் உள்ளக்குமுறலின் குரலாக நாம் இருப்பவர்கள். எங்கெல்லாம் உலகில் நீங்கள் மக்களை அடக்கியபடி கூடி கூத்தடிக்கின்றீர்களோ, அங்கெல்லாம் உங்களின் மக்கள் விரோத கோமளித்தனத்தை அம்பலப்படுத்துபவர்கள் நாங்கள்.

விவாதத்தில் இருந்து தப்பவே, உடனே பெண் என்ற அடையாளத்தை தூக்கிகொண்டு ஒடி வருகின்றீகள். "குஷ்புவை பெண்ணியவாதியாக காட்டியது நீங்கள். அவர் பாட்டுக்கு, தான் உண்டு தன் வேலை உண்டென்று இருக்க அவர் கூறிய கருத்தை ஒரு சமூக ஆர்வலரின் கருத்துக்கு இணையாக முக்கியத்துவம் கொடுத்து அவரை பெரிய ஆளாக்கிவிட்டது நீங்கள். தன் கருத்தைக் கூறினார் என்ற ஒரே காரணத்திற்காக, கேவலமாக நடத்தியது ஆண்களாகிய நீங்கள்." என்று கூறிய பின்பும் கூட, குஷ்புவுக்காக வக்காலத்து வாங்குகின்றீர்கள். இங்கு பெண் என்ற அடையாளத்தைக் கொண்டு, எதிராளிக்கு முத்திரை குத்தி தப்பிவிட முனைகின்றீர்கள். விவாதத்துக்கு பதில் குறித்த அடையாங்களில் தஞ்சமடைந்து தப்பித்துக் கொள்ளுதல் இங்கு அரங்கேறுகின்றது. இதுவே சமூக இயக்கம் எங்கும் காணமுடியும்.

பள்ளன், பறையன் என்று அடையாளம் இட்டு பார்ப்பான் அவர்களை சுரண்டியது உயர் நிலை அடைந்தது போல், கறுப்பன் என்று இழிவுபடுத்தி வெள்ளையன் அடக்கியாண்டு கொள்ளையிட்டது போல், தமிழன் என்று கூறி சிங்களவன் அடக்கியது போல், அடையாளங்களின் மீது நின்று தற்காப்பை பெறுவது அபத்தம். முடிந்தால் கருத்தை கருத்தாக எதிர்கொண்டு விவாதியுங்கள். ஆண்கள் எல்லோரையும் பெண்ணுக்கு எதிராக நிறுத்தும் ஆணாதிக்க உத்தி, பார்ப்பனிய தந்திரம் தான். ஆணாதிக்க அமைப்பில், ஆண் பெண் இருவருமே ஆணாதிக்க வாதிகள் தான். இங்கு ஆண் எதிர் பெண் அல்ல. ஆணும் பெண்ணுமற்ற எந்த சமுதாயமும் கிடையாது. ஆணாதிக்க அமைப்புக்கு மாற்று பெண்ணாதிக்கமல்ல. ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் வாழ்க்கை தான். இதை நிலப்பிரபுத்துவ அமைப்பிலும் பெற முடியாது உலகமயமாதல் அமைப்பிலும் பெறமுடியாது.

ஆண்கள் தான் குஷ்பு விவாகரத்தை முன்னிலைப்படுத்தியதாக கூறுவது, சமூக ஆய்வு முறையல்ல. ஆணாதிக்க அமைப்பு தான் அதை முன்னிலைப்படுத்தியது. இதில் நிலப்பிரபுத்துவ ஆணாதிக்கமும், உலகமயதாதல் ஆணாதிக்கமும் தனது எதிர்நிலை பண்பாட்டின் மீது நின்று குரைத்தனர். இந்த இரண்டடையும் எதிர்த்தே நாம் போராடுகின்றோம். எனது முழுக்கட்டுரையும் இதை தெளிவாக துல்லியமாகவும் எடுத்துக் காட்டுகின்து.

"பெண்ணின் ஒழுக்கம் என்பதை வரையறுக்க நீங்கள் யார் என்றுதான் கேட்கிறோம்." இதைச் சொல்ல உங்களுக்கு யார் அதிகாரம் தந்தது. நீங்கள் பெண்கள் என்றால், அதை ஆணாதிக்கத்தை எதிர்க்கும் ஆண்களும் பெண்களும் அங்கீகரிக்கவில்லை. நாங்கள் ஆண்கள் உள்ளடங்கி ஆண் பெண் சமூகத்தை ஆணாதிக்க சமூகம் என்றே கூறுகின்றோம். அடுத்து நீங்கள் கூறுகிறீர்கள் "ஆனால், யாருடன் படுப்பது, என்ன பேசலாம் என்பதற்கும் தடை விதிக்க நீங்கள் யார்?" நாங்கள் தடுக்கவில்லை. தாராளமாக செய்யுங்கள். நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க அமைப்பில் அடிமையாக இருக்கும் உரிமையையும், உலகமயமாதல் அமைப்பில் விபச்சாரியாக வாழ விரும்பும் உரிமையை நாங்கள் ஒரு நாளுமே மறுக்கவில்லை. தனிமனித சுதந்திரத்தின் பெயரில், இவை இந்த அமைப்பில் அவர்களின் சொந்த தெரிவாகவே உள்ளது. ஆனால் நாங்கள் இந்த இரண்டடையும் எதிர்த்து ஒரு சமூக உயிரியாய், போராடும் ஆண் பெண் சமூகத்தையே கோரி நிற்கின்றோம். அடிமைத்தனத்தையும், விபச்சாரத்தையும் எதிர்த்து நாம் போராடுவதை யாரும் தடுக்கவே முடியாது. அது எங்கள் சமூகத்தின் உரிமை.

மார்க்ஸ் கூறியது போல் "கண்டனத்துக்குரிய சமுதாயத்தின் ஏறுவரிசையில் ஓர் உயர்ந்த இடத்தைப் பிடிக்கிறவன் தான்" உலகத்தின் உண்மைகளையும, சமுதாயத்தை மாற்றி அமைக்கும் ஒரு சிறந்த பணியை செய்ய முடிகின்றது. அதை நாம் செய்ய முனைகிறோம்.

பி.இரயாகரன்
21.12.2005

Sunday, December 18, 2005

ஆணாதிக்க ஒழுக்கக்கேட்டை கோருவதா பெண்ணியம்?

ஆணாதிக்க ஒழுக்கக்கேட்டை கோருவதா பெண்ணியம்?

பகுதி 1

பகுதி 2

பகுதி 3

பகுதி 4

பகுதி 5

மற்றும் இதைப் புரிந்த கொள்ள

1.பொருளாதார மறுசீரமைப்பைக் கோரும் ஆணாதிக்கமும் தலித் ஆணாதிக்கத்தை எதிர்க்காத பெண்ணியமும்

2.பெண்ணின் போராடும் உரிமை பெண்ணின் உயிரைக் காட்டிலும் அடிப்படையானது.

3.பெண்ணின் கட்டற்ற சுதந்திரமும், காதல் சுதந்திரமும் ஒரு விபச்சாரமே!

4.பெண் கோருவது வரைமுறையற்ற புணர்ச்சியை அல்ல! பெண் கோருவது வாழும் உரிமை மீதான சுயநிர்ணயத்தையே!

5.பெண்ணின் கற்புரிமையை பாதுகாக்கும் போராட்டத்தில், உருவகமான ஆணாதிக்க ~~கற்பு என்ற அடித்தளத்தை தகர்ப்பது எப்படி?

6.பொழுது போக்கு ஊடகம் வழியில் ஆணாதிக்கம்

7.பெண்ணின் கற்புரிமையை ஏமாற்றி நுகர்வது

8.பாலியல் தெரிவுகளும் வாழ்க்கையும்

9.இயல்பான புணர்ச்சித் தெரிவுகள்

10.இலக்கியமும் பாலியலும்

1000 பக்கங்கள் கொண்ட 70 தலைப்பிலான பெண் சார்ந்த பல கட்டுரைகள் நூல் பகுதியில் உள்ளது. இதைவிட உலகமயமாதல் பற்றிய கட்டுரைகளும் உள்ளன.

ஆணாதிக்க ஒழுக்கக்கேட்டை கோருவதா பெண்ணியம்? பகுதி 5

குஷ்புவை குதறும் பார்ப்பானிய தலித் ஆண்டைகள்

குஷ்பு கூறிய உலகமயமாதல் ஆணாதிக்க நுகர்வுக் கருத்தை, நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க ஆண்டைகள் கண்ணோட்டத்தில் எதிர்க்கும் பார்ப்பானியமயமாதல் அரங்கேறியது. திருமாவளவனின் தலித் விடுதலைச் சிறுத்தைகளும், பாட்டாளி மக்கள் கட்சியும் பார்ப்பானிய கண்ணோட்டத்தில், இதையே தமது சொந்த அரசியலாக்கினர். படுபிற்போக்கான நிலப்பிரபுத்துவத்தின் ஆணாதிக்க சமூகக் கூறுகளை தோண்டியெடுத்து, உசுப்பிவிட்டதன் மூலம், பார்ப்பானிய மயமாக்கலை தமது அணிக்குள் வேகம் கொள்ளவைத்தனர். இதை கடந்தகாலத்தில் மார்க்சியம் தெளிவாக அம்பலப்படுத்தி வந்தது.

தலித்துகள் என்றும், பிற்படுத்தப்பட்ட சாதிகளாக உள்ள இந்த சமூக பிரிவுகளிடையே நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க பார்ப்பானிய கூறுகள், ஆதிக்கம் பெற்ற ஒன்றாக கடந்த வரலாற்றில் இருந்ததல்ல. அங்கு தாம் சொந்தமாக உழைத்து வாழும் ஆணும் பெண்ணும், சுயமான தெரிவுடன் கூடிய அதிகமான சுதந்திரத்தையே தக்கவைத்திருந்தனர். இதையே தகர்க்கும் போராட்டம் தான், இந்த எதிர்ப்பின் அரசியல் சாராம்சமாகும். இவர்களின் பாலியல் சுதந்திரம் என்பது, குஷ்பு வகையறாக்களின் நுகர்வு உடல் சுதந்திரமல்ல. மாறாக இயல்பாக இணைந்து வாழும் சுதந்திரம்.

இந்த நிலையில் தமது சொந்த குறுகிய தலித் சாதி அரசியல் முட்டுச் சந்தியில் திணறும் போது, குறுகிய வக்கிரங்களை எப்போதும் அரங்கேற்றுகின்றனர். உண்மையில் தலித்துகளின் மீதான சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக போராடப் போவதாக கூறி சாதிய ரீதியில் அணிதிரண்ட போது, சாதிய எதிர்ப்பு முதன்மை பெற்ற ஒரு அம்சமாக இருந்தபோது, போர்க்குணமிக்க சாதியெதிhப்பு போராட்டங்களை நடத்தினர். ஆனால் சாதிய எதிர்ப்பு போராட்டம் காட்டிக் கொடுக்கப்பட்டு, தனக்கு கீழ்பட்ட சாதிகளை ஒடுக்கும் ஒடுக்குமுறை அதிகரித்த போது, குறுகிய அரசியலில் ஒடுங்கி சாதிய அரசியலில் சங்கமித்து விடுகின்றது. பார்ப்பானிய சாதி அரசியல் எதைச் செய்ததோ, அதைத்தான் விடுதலைச் சிறுத்தைகள் செய்கின்றனர்.

பாராளுமன்ற சாக்கடைக்குரிய கதிரைப் போராட்டத்தை நடத்தும் அளவுக்கு சிதைந்தபோது, தலித்தின் பெயரில் சிலர் மக்களை ஏமாற்றி வாழ்தல் என்பது அரங்கேறுகின்றது. குறிப்பாக இதைக் காட்டித் தம்மைப் பாதுகாக்க, பார்ப்பானியமயமாதல் அவசியமாகிவிடுகின்றது. இந்த சமூக அமைப்பில் ஆளுமையுள்ள ஒரு சமூக நிறுவனமாக, பார்ப்பானிய கோட்பாடு உள்ளது. இதையே தலித்துகள் என்று கூறிக் கொள்ளும் இவர்கள் தமதாக்குகின்றனர். தனக்கு கீழ்ப்பட்ட சாதிகளை ஒடுக்குவதன் மூலம், தான் உயர்ந்த நிலையை அடைதல் என்ற பார்ப்பானிய கோட்பாடே தலித்தியமாகி, அதுவே இன்று கொலுவேறுகின்றது. பார்ப்பானிய ஆணாதிக்க நிலப்பிரபுத்துவ சமூகக் கூறுகளை, தமது சொந்த சாதியின் வாழ்க்கை முறையாக ஏற்க வைப்பதன் மூலம் தான், தனது சமூகத்தை குறுகிய தமது சொந்த பிற்போக்கு தளத்தில் தக்கவைக்க முடியும் என்ற பார்ப்பானிய நரித்தந்திரத்தை தலித்துகள் என்று கூறிக் கொள்வோர் தமதாக்கியுள்ளனர். இதை தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உத்திரபிரதேச மாயவாதி வரை நாம் காணமுடியும்.

உலகமயமாதல் அமைப்பில் பார்ப்பனியம், தன்னை அதன் அதிகார பிரிவின் உறுப்பாக்கி வருகின்றது. உலகமயமாதலில் அதிகாரம் தனியார் சொத்துரிமை என்ற அமைப்பு நோக்கி முழுமையாக நகருவதால், அரசு கட்டமைப்புகளில் பார்ப்பான் வகித்த ஆதிக்கம் படிப்படியாக குறைகின்றது. மாற்றம் என்பது அரசு உலகமயமாதலின் எடுபிடிக் கருவியாகின்றது. பார்ப்பான் உலகமயமாதல் தனியார் அமைப்புகளின் உச்சத்தில் அமர்ந்து, நாட்டை ஆளத் தொடங்கியுள்ளான். இந்த நிலையில் அரசு அதிகார மையங்களில் இருந்த இடைநிலைப் பதவிகள் காலியாகின. இதை இடைப்பட்ட சாதிகள் தமக்கு இடையில் நிரப்பும் போட்டியில் தான், தலித் எழுச்சிகள் நடந்தன. அது பூர்த்தியான நிலையில், தலித் அரசியல் முட்டுச் சந்தியில் வந்து தேங்குகின்றது.

இதே போன்று கிராமப்புறங்களில் நிலத்திலும் கூட, புதிய நிலப்பிரபுத்துவம் இடைப்பட்ட சாதிகளின் வடிவில் ஏற்படுகின்றது. அதிகாரத்தை பெற்ற புதிய தனிச்சொத்துரிமை சாதியப் பிரிவுகளின் எழுச்சி, இறுதியாக பார்ப்பனிய மயமாகின்றது. இதனால் பார்ப்பானியம் விட்டுச் சென்ற சில பார்ப்பானிய கடமைளை அதே சாதி ஒழுங்கில் பேண, இடைப்பட்ட சாதிகளின் பிரதிநிதிகள் பொறுப்பேற்கின்றனர். இதனால் அவை சாதிய அரசியல் மூலம் ஆதிக்கம் பெறுகின்றனர். சொந்தச் சாதியை முதலில் பார்ப்பானியமயமாக்கி, அடிமட்ட சாதிகளை பார்ப்பானிய உள்ளடகத்தில் ஒடுக்கத் தொடங்குகின்றனர்.

குஷ்பு விவகாரத்தில் இந்த பார்ப்பானிய சிந்தாந்தம் பிரதிபலிப்பது என்பது ஆச்சரியமானதல்ல. இந்த தலித் அரசியல் பார்ப்பானியமயமாதல் எப்போதோ நடந்துவிட்டது. இதை மார்க்சியவாதிகள் தொடர்ச்சியான விமர்சனம் மூலம், அம்பலப்படுத்தி வந்துள்னனர். இதை ஆதரித்தவர்கள், அதில் பங்கு வகித்தவர்கள் திடீரென இதைக் கண்டு புலம்புவதும், திடீரென கொப்புவிட்டு பாய்ந்து குஷ்புவின் பின்னால் கும்மியடிப்பதும் பார்ப்பானியத்தின் மற்றொரு பக்கம்தான். இது ஆணாதிக்கம் கூட. இந்தியாவில் இருந்து பாரிஸ் வந்த மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ரஜனி பாரிஸ் இலக்கியச் சந்திபில் துல்லியமாக பாய்விரிக்கும் தரகு விபச்சாரத்தை இப்படித் தான் அரங்கேற்றினார்.

பாரிஸ் இலக்கிய சந்திப்பு, உலகமயமாதலின் ஒழுக்கக்கேட்டுக்கு பாய்விரித்தது.

பாரிஸ் இலக்கியச் சந்திப்பு மக்கள் விரோத சந்திப்பு தான் என்பதை, ரஜனியின் உலகமயாதலை ஆதரித்து ஆற்றிய விபச்சார கருத்துரையாடல் மீண்டும் அம்பலமாக்கியது. இதன் போது ஏகாதிபத்திய உலகமயமாதலுக்காக, தரகு கும்பலாக சீரழிந்து தனது கடைகோடியில் நின்றே ரஜனி வக்காலத்து வாங்கினார்.

வழக்கறிஞர் ரஜனி வழக்கறிஞர் என்பதாலோ என்னவோ, பொய்யை உண்மையாகவும் உண்மையை பொய்யாகவும் உருட்டிப் பிரட்டிய ஒரு பொய்யைப் போல், இலக்கியத்தையே அரசியலையே புரட்டிக் காட்டினார். கேட்டுக் கொண்டு இருந்தவர்கள் தமது வழக்கை அவரிடம் ஒப்படைத்த திருப்தியில், வாய்பிளந்து எதிர்பின்றி கேட்டுக் கொண்டிருந்தனர். நாம் அதில் கலந்துகொள்ளாத போதும் கூட, இது எமது கற்பனையல்ல. அதுவே அங்கு நிகழ்ந்தது. இதை யாரும் எந்தக்கொம்பனாலும் மறுக்க முடியாது. அரசியல் ரீதியாக சமூகத்தைப் புரிந்து கொள்ள வக்கற்றுப் போன, புலம்பெயர் இலக்கியவாதிகள், இதற்கும் தரம்தாழ்ந்து சோரம் போவது இயல்பானது தான்;. உலகமயமாதலின் விசுவாசிகளாக அவர்கள் மாறியதில் ஆச்சரியம் எதுவுமில்லை. இது நாம் முன்கூட்டியே இவர்களைப் பற்றி கடந்தகாலத்தில் கூறி வந்ததுதான். புலியெதிர்ப்பு அரசியல் ஏகாதிபத்தியத்தின் எடுபிடிகளாக எப்படி சிதைந்து சீரழிந்து பலம்பெற்று வருகின்றதோ, அப்படித்தான் பெண்ணியம் தலித்தியம், இலக்கியம் என எங்கும் அரங்கேறுகின்றது.

வழக்கறிஞர் என்ற சமூகத் தகுதியுடன், தலித் என்ற கொம்புடன், பெண் என்ற உடல் அடையாளத்துடன் தான், தனது தொழில்முறை உத்தியை இலக்கியச் சந்திப்பில் கையாண்டார். இந்த வழக்கில் ஒரு உண்மையைத் திரித்தபடியே, அரசியல் விபச்சாரத்தை அரற்கேற்றினார். இந்தியாரூடே கருத்துக் கணிப்பைக் கூட திரித்து, அதன் மேல் பொய்யை கூறிய போது அரங்கத்தின் அறிவின்மை எந்த சலசலப்பையும் கூட ஏற்படுத்தவில்லை.

1.இந்த ஆய்வு பணக்கார மேட்டுக்குடி பெண்களிடம் எடுக்கப்பட்டது என்ற உண்மை திரிக்கப்பட்டது. அதில் இருந்து தனது உலகமயமாதல் கருத்துகளை தெளித்தார்.

2.மேட்டுக்குடி பெண்களிடமே எடுக்கப்பட்ட புள்ளிவிபரத் தரவுகள் மீது துணிச்சலாகவே பாரிஸ் இலக்கிய ஜாம்பவான்களின் அறிவின்மை மீது, ஒரு பொய்யை உமிழ்ந்தார். மேட்டுக்குடி நகர்புற பெண்களே, திருமணத்துக்கு முன் உறவு கொள்வது தவறு என்று 71 சதவீகித பெண்களும், கன்னித் தன்மையுடன் வாழவேண்டும் என்று 66 சதவீகிதமான பெண்களும் கருத்துகளை வெளியிட்டு இருந்தனர். இதில் சென்னையில் 82 சதவீகிதமான மேட்டுக்குடி பெண்கள் கன்னித் தன்மையுடன் வாழவேண்டும் என்று கூறி இருந்தனர். (புதிய ஜனநாயகம் நவம்பர் இதழைப் பார்க்க ) இதை வழக்கறிஞர் தனது வழக்காடும் பொய்யுடன், திருப்பி மறுபக்கமாக கூறியே தமது முழு ஆய்வுரையையும் நியாயப்படுத்தினார். இதையே ரி.பி.சி ஆய்வாளர் சிவலிங்கம் 15.12.2005 ரி.பி.சியில், குஷ்புக்கு ஆதரவாக அரசியல் விவாதத்தின் போது புகுத்தினார்.

ரஜனி உலகமயமாதல் அமைப்பை ஆதரிப்பது பெண்களின் கடமை, தலித்துகளின் கொள்கையாக இருக்க வேண்டும் என்றார். தலித்துகள் தமிழ் படிக்க கூடாது, ஆங்கிலம் படிக்க வேண்டும் என்றார். நான் டில்லியில் தமிழிலா வழக்காட முடியும் என்றார். தலித்துகள் உலகமயமாதலை ஆதரிப்பதன் மூலம் தான், சாதியை ஒழிக்க முடியும் என்றார். தமிழ் என்பதும், தேசியம் என்பதும் பாசிசம் என்றார். அது இந்துப் பண்பாடு என்றார். இப்படி உலகமயமாதலுக்காக தரகராக வாலாட்டி குரைத்தார்.

மேலும் அவர் உலகமயமாதல் உடல் சார்ந்த பாலியலே பெண்ணியம் என்றார். பெண் விடுதலைக்குரியதே உலகமயமாதல் என்றார். இதன் சாராம்சத்தில் தான் குஷ்புக்கு ஆதரவாக கும்மியடித்து, தலித் பெண்ணியம் பற்றி அனைத்து வக்கிரமும் அரங்கேறியது.

தலித் மக்களின் சாதிய துயரங்களையும், பெண்களின் மேலான ஆணாதிக்க கொடூரங்களைச் சொல்லி தனது உலகமயமாதல் அரசியலை அரங்கேற்றினார். உதாரணமாக புலிகள் பேரினவாத சிறிலங்கா அரசின் கொடூரத்தை சொல்லி, தமது பாசிச அரசியலைச் செய்வது போல் உலகமயமாதலுக்காக வரிந்து நின்றார். உலகமயமாதல் செய்யும் சமூக விரோதக் கொடூரங்களை பற்றி எதையும் சொல்லவில்லை. அப்படி எதுவும் இல்லை என்பதே அவர் முன்வைக்கும் கருத்தின் சாரமாகும்.

உலகமயமாதலை ஆதரித்த தனது தர்க்க நியாயவாதத்தில் உலகமயமாதல் வந்ததால் தானே 500 ரூபாவுக்கு கைத்தொலைபேசி வந்தது என்கின்றார். 10000 ரூபாவுக்கு கம்யூட்டர் வந்தது என்கின்றார். ஆகவே தாராளமயத்தை நாம் ஆதரிக்க வேண்டுமென்கின்றார். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தனியார் மயமாகமல் தொலைபேசி இருந்து இருந்தால், இது சாத்தியமில்லை என்கின்றார். மக்களின் உழைப்பில் உருவான அரசு சொத்துகளை, தனியார் மயமாக்க முனையும் போது அரசுதுறை நட்டத்தில் இயங்குகின்றது, திறமையின்மை, சேவைக்குறைபாடு, அதிகார வர்க்கத்தின் கெடுபிடி என்று பலவாக கூறும் உலகமயமாதல் சதியாளர்களின் வழியில் இவர், சந்தை மலிவை படம்பிடித்துக் காட்டுகின்றார்.

ஏழை எளிய மத்தியதர வர்க்கம் இதனால் தான் இதைப் பெறமுடிகின்றது என்றார். எதார்த்தத்தின் மீதான திரிபும், முன்னால் இருப்பவர்கள் செம்மறிகள் என்பதால் துணிச்சலுடன் கூடிய வக்கிரம் வெளிப்பட்டது. வழக்காடும் வழக்கறிஞரே மலிவான கம்யூட்டர், மலிவான கைத்தொலைபேசி பற்றி பேசி உலகமயமாதலை ஆதரிக்கும் வக்கிரத்தை நீங்கள் அரங்கேற்றுகின்றீர்கள். வழக்கறிஞரே நீங்கள் ஆதரிக்கும் உலகமயமாதலால் மலிவாக தலித்துக்கு ஒரு நேர உணவைக் கூட வழங்க முடியுமா? இந்த உலகமயமாதலால் சுத்தமான நீரை, தேவையான உணவை, வாழ்வதற்கு ஏற்ற ஒரு குடியிருப்பை வழங்க முடியுமா?. ஒரு நாளுமே முடியாது. இருப்பதையே புடுங்குகின்றது இந்த உலகமயாதல். இதை சுட்டிக்காட்டி தலித்துக்காக, பெண்ணியத்துக்காக போராட வேண்டிய ஒருவர், உலகமயமாதலுக்காக பாய்விரித்து தரகு தொழில் செய்ய நினைத்ததே இலக்கியச் சந்திப்பில் அரங்கேறியது. தலித் வாழ்வுடனும், ஆணாதிக்க பெண்ணுடனும் தொடர்பற்ற தொலைபேசியைப் பற்றியும், கம்யூட்டரைப் பற்றியும் முன்னாள் இருப்பவன் முட்டாள் என்பதால், பாலசிங்கத்தின் மாவீரர் உரையைப் போல் புதிர்விட முடிகின்றது.
தலித் அல்லது பெண் கம்யூட்டரை வாங்கி அதை கரைத்தா குடிகின்றது. தொலைபேசியை வாங்கி பார்ப்பனருடன் தலித்துகள் விவாதம் செய்ய பயன்படுத்துவதா? அல்லது இந்திய பெண்களின் சீதனம் போல், அவற்றை வைத்து புலம்புவதா? பயன்பாடு கடந்த எதுவும், பொருள் என்ற அடிப்படையில் அனைத்தும் குப்பைதான். தலித்துக்கு, இந்திய ஆணாதிக்க பெண்ணுக்கு கம்யூட்டரும், கைதொலைபேசியும் குப்பை தான். ஆனால் தரகுத் தொழில் பார்க்கும் உங்களுக்கு அப்படி அல்ல.

இந்தியத் தலித்துக்கும் இந்தியப் பெண்ணுக்கும் அவர்கள் வாழும் நிலையில், இவை அவசியமற்றவை. பயன்பாடற்ற அனைத்தும், உலகெங்கும் இது பொருந்தும். இதைவிட தேவைகள் வேறானவை. நீங்கள் கூறிய மேட்டுக்குடி பெண்ணியல்வாதிகளின் நுனிநாக்கு ஆங்கிலம் போல், கம்யூட்டரும் தொலைபேசியும் அவர்களுக்கு மட்டும் பயன்படக் கூடியவை.
மறுபக்கத்தில மலிவான கம்யூட்டர், மலிவான தொலைபேசிக்கு பின்னால் மனிதனின் உருத்தெரியாது அழித்து செல்லும், மற்றொரு மனித வரலாறு உண்டு. எப்படி மலிவாக முன்பைவிட அதிக லாபத்துடன் சாத்தியமாகின்றது. இதை உற்பத்தி செய்யும் உழைப்பின் கூலிக் குறைப்புத்தான் இதற்கான காரணம். கடந்த காலத்தில் தொழிலாளி வர்க்கம் பெற்றவற்றை இழக்கின்ற போது, சந்தையில் உங்களைப் போன்றவர்கள் நுகரும் பொருட்கள் மலிகின்றது. மலிவான வரைமுறையற்ற பாலியல் நுகர்வை இதுவே கோரத் தொடங்குகின்றது.

இன்றைய பொருட்களின் மலிவின் பின்னால் சீனத் தொழிலாளி வர்க்கம், தனது வாழ்க்கையை இழந்து இதை உற்பத்தி செய்கின்றது. ஐரோப்பிய தொழிலாளர் வர்க்கம் தனது வேலைகளை இழந்து வீதிக்கு வருவதன் மூலம் இது சாத்தியமாகியுள்ளது. நவீன தொழில் நுட்பம் சார்ந்த இலத்திரனியல் சார்ந்த உற்பத்தியில், 70 சதவீகிதத்துக்கு அதிகமான உற்பத்தியை சீனத் தொழிலாளி வர்க்கம் உற்பத்தி செய்கின்றது. ஆனால் சீனத் தொழிலாளர் வர்க்கத்தின் அடிமைத்தனம், இந்தியத் தொழிலாளி வர்க்கத்தை விட மிக மோசமாகி வருகின்றது. இதனால் உங்களுக்கு சந்தையில் அவை மலிவாக கிடைக்கின்றது. பார்ப்பானியம் தலித்தைக் கொண்டு எப்படி சுகபோகமாக வாழ்ந்தனரோ, அப்படித்தான் உங்களைப் போன்ற உலகமயமாதல் அருவடிகளுக்கு இது உதவுகின்றது.

இந்த மலிவான கதையின் பின்னால் நுகர்வுக் கலாச்சாரத்தை திணித்து, பணம் அறிவிடும் உலகமயாதல் கத்துவட்டி முறை கிராமப்புற கத்துவட்டியை விட விடக்கொடூரமாக அரங்கேறுகின்றது. 500 ரூபா தொலைபேசியின் பின்னால் இதற்குள் ஒரு கதை அடங்கியுள்ளது.
அடுத்து உலகமயமாதல் எப்படி தலித்துக்கு சாதகமானது. உலகில் வறிய ஏழை மக்கள் என்ற பிரிவில் இந்தியாவில் உள்ள 25 கோடிக்கு மேற்பட்ட தலித்துகளும் அடங்குவர். ஆபிரிக்க ஏழைகளின் நிலையில் தலித்துகள் உள்ளனர். உலகமயமாதல் என்பது செல்வத்தைப் பகிர்வதில்லை. மாறாக இருப்பதையும் புடுங்குவதுதான். இது மேட்டுக்குடிகளிடம் மட்டுமின்றி, அடிமட்ட ஏழைகளையும் கூட புடுங்குகின்றது. ஏழை என்பவன் நாட்டில் உள்ளவனிடம் தொழில் செய்து பிழைக்கின்றான். அவனை உலகமயமாதல் அழிக்கும் போது, அவனிடம் தொழில் செய்பவன் கஞ்சிக்கே வழியில்லாது போகின்றான். உலகமயமாதல் கம்யூட்டரைத்தான் உற்பத்தி செய்யும். சந்தையில் வாங்கும் திறனுள்ளவனுக்கே உற்பத்தி செய்யும். வாங்க வழியற்ற ஒருவனுக்கு ஒருநாளுமே உற்பத்தி செய்யாது. ஒரு டொலரைக் கூட ஒருநாள் பெற முடியாதவனுக்கு எதையும் உற்பத்தி செய்வதில்லை. இது சந்தை விதி. இது நுகர்வின் விதி. ஒரு டொலரை பெற முடியாத தலித், பெண்கள் மற்றும் குழந்தைகளின் கதியையிட்டு இந்த தரகு வழக்கறிஞர் ரஜனிக்கு எந்த சமூக அக்கறையும் கிடையவே கிடையாது.

உலகமயமாதல் ஏழையிடம் இருப்பதையும் புடுங்கவே செய்கின்றது. உதாரணமாக 1989-1999 க்கும் இடையில், ஒரு நபருக்கு 1.5 முதல் 1.8 சதவீகிதம் என்ற அளவில் உலகில் உற்பத்தி அதிகரித்தது. ஆனால் இந்த பத்து வருடத்தில் 80 க்கு மேற்பட்ட நாடுகளில் இருந்ததை விட குறைந்து வந்துள்ளது. 50 நாடுகளில் ஒவ்வொரு வருடமும் குறைந்து வருகின்றது. இது யாரைத் தாக்கும். ஏழை எளிய மக்களைத் தான். இதில் தலித் விதிவிலக்கல்ல. பெண்கள் விதிவிலக்கல்ல. வறுமையில் ஏழைகள், தலித்துகள், பெண்கள், குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதுவே உண்மை.

ஏழைகள், தலித், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இன்னுமொரு புள்ளிவிபரத்தைப் பார்ப்போம். ஏகாதிபத்தியங்கள் 1960இல் இருந்து 1989 க்கும் இடையிலான காலத்தில் தனது பங்கை 70.2 சதவீகிதத்தில் இருந்து 82.7 சதவீகிதமாக அதிகரிக்கும் வண்ணம் பெரும் சூறையாடலை மூன்றாம் உலக நாடுகள் மீது நடத்தியது. இதே காலப் பகுதியில் 20 சதவீகிதம் தான் மிக வறிய (ஏழைகளைக் கொண்ட) நாடுகள், உலக வருமானத்தை தாம் பெற்ற 2.3 சதவீகிதத்தை இழந்து 1.4 சதவீகிதமாக குறைந்து போனது. மனித அவலமே ஜனநாயகமாகி, சமூகத் தேவையைக் கூட பூர்த்திசெய்ய முடியாத எல்லைக்குள் கையேந்தி பிழைக்கவே உலகமயமாதல் மனித இனத்தை வழிகாட்டியது. இப்படி பல புள்ளிவிபரம் உள்ளது. பொய்யை உண்மையாக காட்டி, உண்மையை பொய்யாக கூறி வாழ்க்கையை ஒட்டும் தொழில்முறை ரஜனி, சமூகம் பற்றி வழிகாட்டுவது முரணிலையில் தான்.

இதில் இருந்து தான் தேசிய எதிர்ப்பு முன்வைக்கப்பட்டது. தேசியம் என்பது பாசிசம் என்று கூறியபடி, புலியையும் ராதாஸ் வகையறாக்களையும் காட்டி பினாற்றியே இவற்றை அரங்கேற்றினார். தேசியம் என்பது ஜனநாயகம் என்பதே அதன் சரியான அரசியல் உள்ளடக்கம். இதை திரித்து தேசியத்தை நிலப்பிரபுத்துவ மற்றும் உலகமயமாதல் எல்லைவரை எடுத்துச் சென்று, வக்காலத்து வாங்குவது நிகழ்ந்தது. தேசியத்தை பாசிசக் கூறு என்பவர்கள், உலகமயமாதலை பாசிசக் கூறு அல்ல என்கின்றனர். உண்மையில் இதனை நிறுவ தமிழ் பண்பாடு என்பது, இந்து பண்பாடு என்கின்றார். பார்ப்பானியம் எதைச் சொல்லுகின்றதோ, அதை இவர்கள் கிளிப்பிள்ளை போல் சொல்ல முனைகின்றனர். பெரியார் எதை வேறுபடுத்த போராடினாரோ, அதை ஒன்றாக்கிவிட முனைகின்றார். அதாவது பெரியாரை மறுவாசிப்பின் பெயரில், தமது உலகமயமாதல் நோக்கில் திரித்து புரட்டவே முனைகின்றனர். இந்து பண்பாடு வேறு, தமிழ் பண்பாடு வேறு. இதை மறுத்து உலகமயமாதல் பண்பாட்டை மாற்றாக வைக்கின்றனர்.

பெரியாரைச் சொல்லியே தமது உலகமயமாதல் ஆணாதிக்க பாலியல் வக்கிரத்தை அரங்கேற்ற முனைகின்றனர். பெரியார் நிலபிரபுத்துவ ஆணாதிக்க வாதங்களுக்கு பதிலடியாகவே, சமூகத்தை அதிர்ச்சிகுள்ளாக்கும் வகையில் இவற்றை எதிர்மறையில் பயன்படுத்தியவை தான் பாலியல் பற்றிய அவரின் வாதங்கள். அதை அவர் சமூக வாழ்வியல் முறையாக கொள்ளும்படி பெண்களுக்கு கூறவில்லை. ஆணின் ஆணாதிக்க சமூக நடத்தை நெறியை மறுதலித்தே, அதை கிண்டல் செய்தே முன்வைத்தவரே ஒழிய அதை ஆதரித்தல்ல. அதே ஆணாதிக்கத்தை பெண்ணை கைக்கொள்ளும்படி கோரவில்லை. ஆணின் ஆணாதிக்க வாதத்தை எதிர்நிலையில் அதிர்ச்சிக்குள்ளாக்கிய வாதங்கள் தான். கடவுள்களின் ஆண் பெண் பாலியல் வக்கிரங்களையும், அவர்களின பலதார மண முறைகளையும், ஆண் பெண் கடவுள் வேறுபாடின்றி அதை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் அதன் வரலாற்றின் வேரில் இருந்து எள்ளிநகையாடியவர்.

இதை திரித்து உலகமயமாதல் பெண்ணிய வக்கிரத்துக்கு திரித்து காட்டுவதில் முனைப்பு பெறுவதே பொதுவாக நிகழ்கின்றது. பெரியார் உலகமயமாதல் ஆணாதிக்கத்துக்கு பெண் சரிந்து செல்லும் சீரழிவை நியாயப்படுத்தும் எந்த கோட்பாட்டை அவர் முன்வைக்கவில்லை. அத்துடன் பெரியார் மார்க்சியவாதியல்ல. சமூக முரண்நிலையுடன் ஒரு ஜனநாயகவாதி என்ற எல்லைக்குள் தான் கருத்துரைத்தவர்.

அடுத்த ஒரு தர்க்கம் முன்வைக்கப்பட்டது. திருமணத்துக்கு முன்னம் பெண்கள் பாலியல் உறவு கொள்வதில்லையா? அப்படி தன்னிடம் உறவு கொண்ட பெண்கள் வழக்காட வருகின்றனர். இது உலகமயமாதல் பெண் சீரழிவை எப்படி நியாயப்படுத்த, எந்த வகையில் தர்க்க ரீதியாக சரியானது. கணிசமான பெண்களை திருமணத்துக்கு முன் பாலியல் ரீதியாக உறவு கொள்ளும் வகையில், அனைத்தையும் பாலியலாக அல்லவா உலகமயமாதல் புகட்டுகின்றது. வீதியில் செல்லும் பெண்ணை புணரக் கோரும் சினிமா முதல் காட்சி வகைப்பட்ட உளவியலும், எழுத்துவகைப்பட்ட துண்டுதல்கள் என எங்கும் எதிலும் இதுவே உள்ளடகமாக உள்ளது. இப்படி உருவாகிவிட்ட, பெண் திருமணத்தின் முன் பாலியல் உறவு கொள்கின்றாள் என்று அடித்து வைத்து வாதிடுவது அபத்தம். முதலில் இந்த சூழல் ஏன் உருவாக்கப்படுகின்றது. இரண்டாவது உறவு கொள்ளும் பெண்கள் யாருடன், எந்த நிலையில் உறவு கொள்கின்றனர். இதன் பின்னனி என்ன? ஏன் பின்னால் நீதிமன்றம் வருகின்றாள். ஏன் கருவை அழிக்கச் செல்லுகின்றனர். ஏன் தற்கொலை செய்கின்றனர்? ஏன் வாழ்வை இழந்து நடைப் பிணம் ஆகின்றனர்? இப்படி பல கேள்விகள் உண்டு.

பாலியல் ரீதியான அத்துமீறிய நடத்தை நெறிகள் பெண் விடுதலையல்ல. அதாவது திருமணத்தின் முன் உறவு கொள்வது, கன்னித் தன்மை தேவையற்றது என்ற வாதங்கள் எவையும் பெண்விடுதலையல்ல. இது நாகரீகமான கமூக்கமான விபச்சாரத்தை உருவாக்குகின்றது. பல பெண்கள் இதை நம்பி தமது சொந்த வாழ்வை ஆணாதிக்கத்திடம் இழக்கின்றனர்.
அடுத்து தரகு பார்க்கும் வாதத்துக்கு ஏற்ப, பாலியலை விரும்பியவாறு யாருடனும் உறவு கொள்வது சரியென்றார். இதற்கு தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் உள்ள பாலியல் உறவுமுறையையே திரித்துக் காட்டினார். அதன் போது இதை மிகக்; கொச்சையாக கேவலமாக திரித்து வருணித்தார்.

தாழ்த்தப்பட்ட பெண்கள் தன்னுடன் வாழும் ஆணின் நடத்தைகள், வாழ்வியல் முறைகள் பிடிக்கவில்லை என்றால் சுதந்திரமாக அதைக் கைவிட்டு வாழும் சுதந்திர முறையை திரித்தார். வேறு ஒருவனுடன் படுக்கும் சுதந்திரம் கொண்ட, உடல் பாலியல் வாழ்வை நடைமுறையில் வாழ்க்கையில் கொண்டிருப்பதாகவே பினாற்றினர். சமூகத்தில் உள்ள ஜனநாயகக் கூறை, கொச்சைத்தனமாக தமது சொந்த உலகமயமாதல் நோக்குக்கு ஏற்ப திரித்து, அந்த சொந்த வக்கிரத்தையே பெண்ணிய புரட்சியாக காட்டினார். இப்படி பற்பல.

உலகமயமாதல் நோக்கில் மார்க்சியத்தையே சேறடிக்க முனைந்தார். மார்க்சியத்தை கொச்சைப்படுத்த, மார்க்சியத்தை கைவிட்ட முதலாளித்துவமாக சிதைந்த சீரழிந்துள்ளவர்களின் நடத்தை மீது தன்னை வக்கிரப்படுத்தினார். மார்க்சியத்துக்கு சேறு அப்பிய படி வாழ்க உலகமயமாதல் என்றார். கொக்கக்கோலாவை தலித் மக்கள் குடிப்பதன் மூலம் தான், சாதி ஒழியும் என்றார். இப்படி பல.

அவர் இதற்கு எல்லாம் ஆதாரமாக கொண்டது, உலகமயமாதலை திருப்பிப் பெறமுடியாது என்ற எடுகோள்தான். இந்த அடிப்படையான அரசியல் வாதமே பார்ப்பனிய அரசியல் தான். சாதியத்தை இந்திய சமூக அமைப்பில் இருந்து திருப்பிப் பெறமுடியாது என்ற பார்ப்பானிய வாதம் எப்படியோ, அப்படித் தான் இந்த உலகமயமாதல் பற்றிய வாதமும். இது போல்தான் ஆணாதிக்கமும் திருப்பிபெற முடியாதவையல்ல. இங்கு திரும்பிச் சொல்லுதல் என்பதல்ல, அதைத்தையும் தலைகீழாக மாற்றி அமைத்தல் என்பதே புரட்சி. ஏகாதிபத்திய உலகமயமாதல் ஆதரவு தரகு பினாமிக்கு இது தெரியவில்லை. மக்கள் ஒரு புரட்சியை செய்தால், புரட்சி செய்த மக்கள் தமக்கு தேவையான பொருளாதார அமைப்பை அமைத்தே தீருவர். இது தான் புரட்சி. இது தான் பெண்ணியம். இதைத் திருப்பி பெறமுடியாது என்ற வரட்டு வாதங்களால், எவையும் தீர்மானிக்கப்படுவதல்ல.

பின்குறிப்பு : இப்படி பற்பல நீண்ட தரகுப் புலம்பல்கள். கட்டுரையின் விரிவு அஞ்சி இத்துடன் இதை நிறுத்திக் கொள்கின்றேன். நீங்கள் இதைபற்றி எழுதி விவாதித்தால், மேலும் விவாதத்ததை நாம் நடத்தமுடியும்.

மற்றும் இதைப் புரிந்த கொள்ள

1.பொருளாதார மறுசீரமைப்பைக் கோரும் ஆணாதிக்கமும் தலித் ஆணாதிக்கத்தை எதிர்க்காத பெண்ணியமும்

2.பெண்ணின் போராடும் உரிமை பெண்ணின் உயிரைக் காட்டிலும் அடிப்படையானது.

3.பெண்ணின் கட்டற்ற சுதந்திரமும், காதல் சுதந்திரமும் ஒரு விபச்சாரமே!

4.பெண் கோருவது வரைமுறையற்ற புணர்ச்சியை அல்ல! பெண் கோருவது வாழும் உரிமை மீதான சுயநிர்ணயத்தையே!

5.பெண்ணின் கற்புரிமையை பாதுகாக்கும் போராட்டத்தில், உருவகமான ஆணாதிக்க ~~கற்பு என்ற அடித்தளத்தை தகர்ப்பது எப்படி?

6.பொழுது போக்கு ஊடகம் வழியில் ஆணாதிக்கம்

7.பெண்ணின் கற்புரிமையை ஏமாற்றி நுகர்வது

8.பாலியல் தெரிவுகளும் வாழ்க்கையும்

9.இயல்பான புணர்ச்சித் தெரிவுகள்

10.இலக்கியமும் பாலியலும்

1000 பக்கங்கள் கொண்ட 70 தலைப்பிலான பெண் சார்ந்த பல கட்டுரைகள் நூல் பகுதியில் உள்ளது. இதைவிட உலகமயமாதல் பற்றிய கட்டுரைகளும் உள்ளன.