தமிழ் அரங்கம்

Saturday, August 4, 2007

திருட்டு முழி

""ஏ! சரோசா... என்ன, பாக்காத மாதிரி போய்ட்ருக்க?''

""ஓ! ராணி, வா, வா, தப்பா எடுக்காதே, மாப்புள கார்ல வந்து இறங்கிட்டாரு, ஆலம் கரைக்கச் சொன்னாங்க. அதான் ஒன்ன கூடப் பாக்குல.''

""ஆமாம்! வீட்லதான் மாடு கன்ன வச்சிட்டு பொழுதுக்கும் லோல்படுற. இங்கவேற ஆடுறியா, ஆலம் கரைக்குறாளாம், அதுக்குத்தான நம்பள கூப்புடுவாளுவ, வீடியோ எடுக்குறப்ப பாரு நம்மள கண்ணு தெரியாம போய்டும். போறியா, வா கெடக்கு!''

""ஹி... ஹி... தே மெதுவா பேசு.. நீ வேற!'' சிரித்துக் கொண்டே ராணியை அடக்கினாள் சரோசா.

""சரி! மவள கடலூர்ல கட்டிக் கொடுத்தியே... நல்லா இருக்கா?'' பேசிக் கொண்டே திருகாணியை திருகியபடியே தோட்டை பிடித்துப் பார்த்துக் கொண்டாள்.

""ஊக்கூம்... மருமவன் வேல சரியில்ல, அவரு வேல பாத்த சோடா கம்பெனிய இழுத்து மூடிட்டானுங்க. ரெண்டு புள்ளைய வச்சிகிட்டு அங்க இருந்து ஏன் கஷ்டப்படுறீங்கன்னு... சேம்பரத்துக்கே இட்டாந்துட்டேன்.''

""நம்ப விஜி புருஷன் கூட அப்புடி தாங்குறேன், புவனகிரியில ரொட்டிக் கம்பெனி வச்சு என்னமா இருந்தாரு, இப்ப என்னடான்னா? பொழப்பு சரியில்லேன்னு திருப்பூரு போயிருக்காராம் திருப்பூரு...!''

""ஆமாம் இப்ப எந்த புள்ள ரஸ்க்கு திங்குது, வர்க்கி கடிக்குது? நாய் பீயாட்டம் ஏதோ ஜிகினா தாள்ல சுத்தி வச்சி எப்பபோட்டதையோ கொடுக்குறான். அதத் திங்கதானே அலையுதுங்க.''

""என்னமோ போ... சொச்ச காலத்த ஓட்டுறதுக்குள்ளே உயிர் போய் உயிர் வருது... ஏது? புது டிசைனா காதுல கெடக்குது, நல்லா இருக்கு! எங்க எடுத்த?'' பேசிக் கொண்டே காது, மூக்கை நோட்டம் விட்டாள்.

""நீ வேறக்கா? காலுக்கு செருப்பே எடுக்க முடியல. இதுல காதுக்குஎங்க எடுக்குறது? கல்யாண வீட்டுக்கு வெறுங்காதோட வந்தா நல்லா இருக்குமா? அதான் எரவ வாங்கிட்டு வந்தேன். உங்க அண்ணன் கொடுக்குற காசுல மாட்டுக்கே நல்ல மூக்கணாங் கயத்தக் காணோமாம். இதுல நான் எங்க தோட்டுக்கு அலையறது?'' சரோசா அலுத்துக் கொண்டாள்.

அதுவரை ராணிக்குப் பின்னால் நாற்காலியில் உட்கார்ந்திருந்த அஞ்சம்மாளைக் கவனிக்காத சரோசா வடக்கயும், தெக்கயும் அது வாயசைப்பதை திடீரென்று கவனித்தவாறு பக்கமாய் போய் உட்கார்ந்து தோளைப் பிடித்து விசாரித்தாள்.

""என்ன பாட்டி! என்ன அடையாளம் தெரியுதா? என்ன பலமா சாப்பாடா! வாயை தெறக்கல?''

""சிங்கப்பூரு குலுக்கி, இங்க வாடி சிறுக்கின்னானாம்! நீங்க மினுக்குற மினுக்குல என்ன அடையாளம் தெரியுமா? நானே வெத்தல பாக்கு இல்லாம வெறும் வாய மென்னுகிட்டு இருக்கேன்... கல்யாணம் பண்றாளுங்களாம். கல்யாணம்... வந்தவங்களுக்கு ஒரு வெத்தலபாக்கு குடுக்க ஆளக் காணோம். அவ அவ குந்தானியாட்டம் போட்டோ புடிக்க ஆடுறாளுவ! இவுனுவளா, பெரிய முந்தானையா இருந்தா தடுக்கு தூக்கிட்டு அலையுறானுவ!''

""கடைஞ்ச மோர்ல வெண்ணைய எடுத்து, கடக்குட்டிக்கு கல்யாணம் பண்றவள்ல... லேசு பட்ட சிறுக்கியா அவ...''

""தே நீ வேற... வந்த இடத்துல வம்ப வளத்து வுட்றாத சரோசா. அது வாயை புடுங்காத... வண்ட வண்டையா வரும்.''

""என்னாது...'' அஞ்சம்மாள் காதை தூக்கி ஏதோ கேட்க, ""ஒண்ணுமில்ல! தோ வெத்தல வாங்கியாறச் சொல்றேன்!'' என்று சேலைத் தலைப்பில் முடிந்து வைத்திருக்கும் காசை அவிழ்த்தாள் ராணி.

""ஊருபட்ட சனம் வந்துருக்குன்னுதான் பேரு? எது நம்பள வந்து எட்டி விசாரிக்குது. இதே அவுரு இருந்தா இப்புடி பார்க்காத மாதிரி போவானுவளா? சோறா கொளஞ்சி, ஆறால்ல ஓடி வருவானுவ, அஞ்சு பத்து வாங்க. இப்ப நமக்கு ஒரு சோடா வாங்கிக் கொடுக்க ஆளக் காணோம். அறுவடைக் காலத்துல எலிக்கு எட்டுக் கூத்தியாளாம்! இப்ப ஒரு நாயக் காணோம்!'' கிழவியின் வாய் எல்லா பக்கமும் வளைந்தது.

""அய்யய்யோ இது மண்டபத்த ரெண்டாக்காம போவாது போல இருக்கே! சரோசா நல்ல நேரத்துல நான் இத அழச்சுட்டு கௌம்பறேன்.. வரக்குள்ள சீர்காழி வந்துட்டுப் போ! என்ன?''

""எங்கக்கா இப்ப மறுவீடு வர்றப்ப எப்புடி வர்றது? அப்புறம் வாரேன்... நீயுந்தான் வீட்டுக்கு வந்து தங்கிட்டு காலைல போறது... இப்புடி பறக்குறியே...?''

""இல்ல சரோசா, கோவிச்சுக்காத... அடுத்த மொற வாரேன்! அங்க கோழி அடைக்கக் கூட ஆளு இல்ல... வர்றேன்.''

""ஏய் மாரி மவளே.. ரோசா... வர்றட்டா... கண்ணே புரியுல, இவுனுவ வேற சாணி மாடாட்டம் வழிய மறிச்சு மூஞ்சுல லைட்ட அடிக்குறானுவ... ஊக்கூம்'' கிழவி முனகிக் கொண்டே ஊர்ந்தது.

···

""வாங்க, வாங்க என்று விரித்த உதடுகளை மூடாதவாறு கைகூப்பியவாறு மண்டபத்துக்குள் வந்தவர், சந்தேகம் கேட்ட மனைவியிடம் எல்லாம் நம்ப சொந்தக்காரங்கதான் என்று சொல்லிக் கொண்டே வெடுக்கென ஏதோ நினைவுக்கு வந்தது போல ""செருப்பை இடத்த மாத்தி அங்க ஒண்ணு, இங்க ஒண்ணுன்னு விட்டியா?'' என்று மனைவியிடம் கேட்க அவள் விழித்தாள்.

""ஏண்டி! அறிவு கெட்டவளே! ஒவ்வொரு கல்யாணத்துக்கும் ஒவ்வொரு செருப்பா வாங்க முடியும்? உனக்கு எத்தன மொற தொலைச்சாலும் புத்தி வராதா! போய் மொதல்ல மாத்தி போட்டுட்டு வா''

தணிந்த குரலில், அதட்டலாக மனைவியை விரட்ட அவள் பட்டுப்புடவை சரசரக்க வாசல் பக்கம் ஓடினாள்.

""என்ன முகூர்த்தமே முடிஞ்சு, பந்தி போட்டாச்சு! இப்பதான் வர்றீங்க?'' மண்டபத்துக்குள் வந்தவரை வரவேற்றார் ஒருவர்.


""அதுக்குள்ளயா? மெல்ல ஆகும்னு நெனச்சேன்.'' பக்கத்திலிருந்த வயதானவர் ""அதெல்லாம் அப்ப! அந்த காலத்துல அய்யுரு மந்தரம் சொல்லி முடிக்கறதுக்குள்ள உட்கார்ந்துருக்குற நம்ம காலே மரத்துப் போயிடும். காலத்துக்கு ஏத்த மாதிரி அவரும் மொண மொணன்னு முடிச்சுக்குறாரு'' என்றார்.

""எங்க இந்த அய்யரு? பொண்ணு, மாப்பிள்ளைய நெற நாழி வச்சு மணவறைக்கு அழைக்கணும். ஒண்ணத்தக் காணோம். இடுப்புல செல்லு போன சொருவிவிட்டு எடுத்து எடுத்து பேசுறதுல, அந்தாளு மந்திரம் சொல்லுறானா, வூட்டுக்குப் பேசுறானான்னு ஒண்ணுமே புரியல. எல்லாம் புது பழக்கமா இருக்கு!'' அலுத்துக் கொண்டார் இன்னொருவர்.


""என்ன சாப்புட்டாச்சா! சாப்புட்டீங்களா! எல்லாம் சாப்புட்டா ஒரு வேல முடிஞ்சிடும்...'' கூட்டத்தைக் கிளப்பிவிட்டது ஒரு குரல்.

""வாங்க, வாங்க, என்னா! என்ன பாக்குறீங்க... மாப்ள வீடுன்னா இங்க எழுதுங்க! பொண்ணு வீடுன்னா அங்க...!'' வேறு எதற்கோ அங்குமிங்கும் அலைந்தவரை மொய் எழுதும் மேசை பக்கம் கவனிக்க வைத்தது இன்னொரு குரல்.

மாப்பிள்ளையின் அப்பா தங்கசாமி சற்று தள்ளி நின்று மொய் எழுத ஆரம்பித்தவனிடம் ஜாடை காண்பித்து தனியாக அழைத்தார்.

""டேய்... கூப்ட்டா சட்டுன்னு வரமாட்டீயா! தோ பாரு நீயும் கணேசனும் மட்டும் மொய் எழுதுங்க, அந்த ராமலிங்கத்தை ஏன் பக்கத்துல வுட்ட? பாதிய அவன் பாக்கெட்ல வச்சிட்டுப் போயிடுவான். புரியுதா? அவன மெல்ல போவ சொல்லிட்டு, கணேசன வச்சிட்டு எழுது, நீ கீழ குனிஞ்சிகிட்டே இருக்காத. சாப்புட்டுப் போறவங்கள பாத்து விசாரி... அப்பதான் கதைக்கு ஆவும். போ போ சொன்னது ஞாபகம்'' தோளில் கிடந்த துண்டால் முகத்தைத் துடைத்தபடி... உள்ளே குரல் கேட்க வேகமாய்ப் போனார்.


···


""அப்பயே நெனச்சன்யா... மாப்பிள வீட்டு ஆளுன்னு ரோசனை பண்ணாம வுட்டுட்டேன்.'' கூட்டமாய்த் திரண்டபடி பந்தி பரிமாறும் வாசலில் ஒருவரை நடுவில் வைத்து ஆளாளுக்கு பேசிக் கொண்டிருந்தனர்.


தங்கசாமி வேகமாய் கூட்டத்தை விலக்கி நெருங்க ""வாங்க சம்மந்தி. திருட்டுப் பய போல இருக்கு. பந்தியில சாப்புடறப்பவே திருட்டு முழி முழிச்சிகிட்டு இருந்தான். பாத்தா மண்டபத்த நோட்டம் விட்டுகிட்டு கடைசியில இந்த சில்வர் குவளையத் தூக்கிகிட்டு வாச வரைக்கும் போயிட்டான்.. டப்புன்னு மடக்கிட்டேன். திருட்டுப் பய..'' அடிக்க கையை ஓங்கினார், பெண் வீட்டைச் சேர்ந்த ஒருவர்.


""ரெண்டு நாளா கண்ணுல வெளக்கெண்ணை ஊத்திகிட்டு பாத்துகிட்டு இருக்கோம். இங்கயே நொழஞ்சிட்டீயா?'' தங்கசாமி அவன் முதுகில் பலமாய் வைத்தார்.

""அடிக்காதீங்க... சத்தியமா சோறு திங்கதான் வந்தேன். தண்ணி குடிக்கத்தாங்க ஜெக்க எடுத்தேன். திருடல சார்...'' பிடிபட்டவன் கும்பிட்டபடி இறைஞ்சினான்.


""தண்ணி குடிக்குற பய, எதுக்குடா வாசல் வரைக்கும் குவளயத் தூக்கிட்டுப் போன... நாலு போட்டாதான்யா அடங்குவானுங்க.''


""ஊம் ஆள பாத்தியா! மாப்பிள மாதிரி, வெள்ள வேட்டி, வெள்ள சட்டை.''


""வீடு பூந்து, பகல் கொள்ள அடிக்குற காலமா போச்சு. இவனுகள எல்லாம் இப்புடியே விடக்கூடாதுங்க போய் போலீஸ் ஸ்டேசன்ல விடணும்.''


""நீங்கவேற அதவிட பின்னாடி கொண்டு போயி கட்டிவச்சி உரிக்கணும், பட்டப் பகல்ல இத்தன பேரு இருக்கோம். துணிச்சலா வந்து குவளயத் தூக்குறான்னா உயிரோடு விடலாமா இவனை?'' ஆளாளுக்கு ஆவேசத்துடன் அடிக்கப் பாய்ந்தனர்.


""ஐயா... ஐயா... சார்! சார்! அடிக்காதீங்க. இன்னம உள்ளாற வரமாட்டேங்க. சத்தியமா திருடலங்க'' இழுத்த இழுப்பில் சட்டைப் பொத்தான்கள் கழண்டு விழ தழுதழுத்த குரலில் கெஞ்சினான்.


""குவளய திருடிட்டு பெரிய யோக்கியன் மாதிரி பேசுறியா? மூஞ்சப்பாரு, கல்யாண வூட்ல நாம ஏன் இந்த நாயி மேல கை வச்சிகிட்டு! வுடக்கூடாது, வாங்க பத்துபேரு... போய் ஸ்டேசன்ல செமத்தியா கவனிக்க வப்போம்... டேய் புடிடா குவளய கைல!''


""என்ன தைரியம் திருட்டுப் பயலுக்கு, போடு தேங்கா பால்சோறுன்னு உனக்கு மரியாத வேற கேக்குதா?'' சுற்றியிருந்தவர்கள் முணுமுணுக்க அவனைத் தரதரவென்று வாசல் பக்கம் இழுத்துச் சென்றது ஒரு கூட்டம்.


கழுத்தில் மாலையுடன் புது மாப்பிள்ளை குறுக்கே வர, ""அட நீங்க போய் உங்க வேலைய பாருங்க மாப்பிள்ள, இவன நாங்க பாத்துக்குறோம். மத்தவங்கல்லாம் போங்க, போங்க...'', ஒருவர் நிலைமையைச் சமாளிக்கப் பார்த்தார்.


""நீங்க வாங்க! நீங்க வாங்க!'' வேகமாய் மாப்பிள்ளையை அழைத்து வந்து, மணவறைக்கு முன்பு பரப்பி வைக்கப்பட்டிருந்த குடம், குத்துவிளக்கு, பண்டபாத்திரங்கள், மிக்சி, கிரைண்டர் இவைகளோடு பெண்ணையும் மாப்பிள்ளையையும் ஒன்றாய் நிற்க வைத்தார் சம்பந்தி.


""என்ன வீடியோகார்! கிண்டியிலேந்து கிரைண்டர் வரைக்கும் ஒரு பொருளும் விடுபடாம மாப்பிள்ளையோட சேர்த்து புடிங்க, பாத்தா எல்லாரும் திருப்தியா சொல்லணும்.'' தங்கசாமியும் படம் பிடிப்பதற்கு ஏத்தமாதிரி பாத்திரங்களை ஒழுங்குபடுத்தினார்.


""ஸ்மைல் ப்ளீஸ். கொஞ்சம் சிரிங்க,'' மாப்பிள்ளை சிரித்தபடி நிற்க திரும்பவும் வீடியோகிராபர் ""சார் கொஞ்சம் கண்ணை சொருகாம கொஞ்சம் அப்படியே என்ன முழிச்சு பாருங்க'' மாப்பிள்ளை அப்படியே முழிக்க வீடியோவும் புகைப்படக் கருவியும் போட்டி போட்டுக் கொண்டு வெளிச்சத்தைப் பாய்ச்சின.


கையில் ஒரேயொரு குவளையைக் கொடுத்து இழுத்துச் செல்லப்பட்டவன், பரவிக் கிடக்கும் பாத்திரங்களையும், அதனுடன் மாலையும் கழுத்துமாய் கம்பீரமாய் நிற்கும் மாப்பிள்ளையையும் மாறி மாறி இமைக்காமல் பார்த்தபடி நடுங்கியபடியே நடந்தான். மண்டபத்தில் கூடியிருந்தவர்கள் அவனைப் பார்த்தபடி ""மூஞ்சையும், முழியையும் பாரு, இங்க என்னடா பார்வை'' என்று ஆவேசமாய் வசவிக்கொண்டேயிருந்தனர்.


· துரை. சண்முகம்

Thursday, August 2, 2007

தமிழ் மக்களின் சொந்த தீர்வு எது?

பி.இரயாகரன்
03.07.2007



இந்த விடையில் எமது நிலை என்பது தெளிவானதும், வெளிப்படையானதுமாகும். தமிழ் மக்களுக்கு வெளியில், எமக்கு என்று தனியான சொந்த நிலைப்பாடு எதுவும் கிடையாது. ஆனால் இதை புரியாத மாதிரி குழப்புவதில் தான், பிற்போக்கு சக்திகளின் சொந்த வர்க்க அரசியலே அடங்கிக் கிடக்கின்றது.


தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வாக, பொதுவாக இரண்டு வழிகள் தமிழர் தரப்பில் வைக்கப்படுகின்றது. இவ்விரண்டும் மக்களின் சொந்த நிலைப்பாட்டுக்கே எதிரானவை. இப்படி


1.புலிகளால் புலித் தமிழீழம் வைக்கப்படுகின்றது.


2. புலியெதிர்ப்பு அணியால் புலியொழிப்பு வைக்கப்படுகின்றது.


இப்படி ஆதிக்கம் பெற்ற இந்த இரண்டு அரசியல் போக்கும், தத்தம் இந்த வழிகள் மூலமே, தமிழ் மக்களின் பிரச்சனையை தாம் தீர்க்க முடியும் என்கின்றனர்.


சரி தமிழ் மக்களின் பிரச்சனைகள் என்ன என்றால், அதை வரட்டுத்தனமாக ஒருமையில் திணிக்கின்றனர். அதை வெறும் பேரினவாதமாகவும், வெறும் புலியாகவும் காட்டுகின்றனர். இதற்கு அப்பால் சிந்திக்க, செயல்பட யாரையும் அனுமதிப்பதில்லை. குறிப்பாக அதன் அரசியல் சாரத்தை முன்வைக்க மறுப்பவர்கள். முன்வைக்க முனைபவர்களை ஒடுக்குவதே, இவர்களின் வர்க்க அரசியல் நிலையாகும். வலதுசாரிய அரசியலின் கடைந்தெடுத்த கேடுகெட்ட போக்கிரிகளே இந்தக் கோட்பாட்டின் பிரதிநிதிகள்.


இதனால் இதை சாதிப்பதில் பேதம் எதுவுமற்ற மனித விரோதிகள். இதனால் பேய்களுடனும் பிசாசுகளுடனும் கூடி இதை சாதிக்க முனைவதாக பிரகடனம் செய்கின்றனர். கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக இந்த இரண்டு வழியில் பயணிக்கின்றனர். ஆயிரம் ஆயிரம் மக்களை இந்த வழியில் இவர்கள் கொன்று போட்டுள்ளனர்.


இந்த இரண்டு வழியை முன்வைப்பவர்கள், தெளிவாகவே மக்களை அணிதிரட்டுவதை நிராகரிக்கின்றனர். மக்களை அணிதிரட்டுது சாத்தியமற்றதொன்று என்று, தமது சொந்த சுத்துமாத்து வழிகளில் கூறியே, அனைத்து மக்கள் விரோத செயலையும் செய்கின்றனர்.


நாம் இந்த இரண்டு வழியையும் தெளிவாகவும் வெளிப்படையாகவும் நிராகரிக்கின்றோம். நாம் முன்மொழிவது இந்த இரண்டு வழிக்கும் முற்றிலும் நேர்மாறானது. நாம் முன்வைப்பது புலியொழிப்போ, புலித்தமிழீழமோ அல்ல. மாறாக மக்கள் தமது சொந்த விடுதலைக்காக, தாம் போராடுவதே தான். இதை இந்த இரண்டு தரப்பும் தெளிவாக நிராகரிக்கின்றனர். இந்த வழியை, இன்று வரை சாத்தியமற்றதே என்று இருதரப்பும் கூறுகின்றனர். குறுக்கு வழியில் குறுக்காக ஓடி இதைச் சாதிக்க முடியும் என்கின்றனர் அவர்கள். மக்கள் இதை சாதிக்க முடியாது என்பதால், அவர்கள் ஒதுங்கி வாழமுனைகின்றனர்.


இப்படித்தான் அன்று இந்தியா உதவியில்லாத தமிழீழமா என்றனர். இப்படி மக்களை நிராகரித்த படி, அன்னிய சக்திகளின் தயவில் இயங்கத் தொடங்கியவர்கள், படிப்படியாக மக்களையே எட்டி உதைக்கத் தொடங்கினர். மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சனைகள் தமது இந்த இலட்சியத்துக்கு எதிரானதாகவும், துரோகத்தனமானதாகவும் சித்தரித்தனர். அதை முன்வைத்தவர்களை துரோகிகளாக காட்டிக் கொன்றனர். இப்படி உள்ளியக்க வெளியியக்க படுகொலைகள் மூலம், அன்னிய சக்திகளின் தயவில் நின்று தமிழீழம் என்றனர்.


இப்படித் தாம் மக்களுக்காக போராடி, மக்களின் விடுதலையை பெற்றுத் தரப்போவதாக கூறிக்கொண்டு, மக்களை ஒடுக்குவதன் மூலம் அரசியல் செய்தனர். இன்றும் அதைச் செய்கின்றனர். 1970 களிலும், 1980 களிலும் தமிழ்த் தேசியம் என்ற பெயரில் இயங்கிய காலத்தில் கூட, இவர்கள் மக்கள் தாம் தமது சொந்த விடுதலைக்காக போராட வேண்டும் என்பதை தெளிவாக நிராகரித்தவர்கள். இப்படி அன்று முதல் அந்த மக்களுக்கு எதிராக இயங்கத் தொடங்கியவர்கள். மக்கள் தமக்காக தாம் போராட முடியாதவர்கள் என்றனர். மக்கள் போராட்டம் என்பது சாத்தியமற்றது என்றனர். இதை மீறிய போது, யார் சாத்தியமற்றது என்றனரோ, அவர்கள் மக்கள் போராட்டங்களையும் அக்கருத்துக்களையும் ஈவிரக்கமின்றி ஒடுக்கினர். மக்கள் மத்தியில் தமது சொந்த விடுதலை சார்ந்து போராடிய போது அல்லது மக்கள் பிரச்சனை முன்னுக்கு வந்த போதெல்லாம் அதை ஒடுக்கத் தொடங்கினர்.


வெறும் இளைஞர்கள் போராட்டம், மக்களின் வாழும் உரிமையை மறுக்கத் தொடங்கினர். அதாவது மக்கள் உழைத்து வாழ்ந்த வாழ்வு சார்ந்த அன்றாட போராட்டம் ஒருபுறம், மறுபுறம் உழையாது பெற்றோரில் தங்கி வாழ்ந்த இளைஞர்களின் போராட்டம். இப்படி இரண்டு போராட்டம், இரண்டு திசையில் நேர் முரணாக விலகிச்சென்றது. உழைத்து வாழ்பவர்கள் மக்களாக தமது வாழ்வுக்காக போராடி வாழ, உழையாது வாழ்பவன் போராடுவதாக கூறிக்கொண்டு சுரண்டி வாழும் முரண்நிலை உருவானது. இதுவே இன்று வரை தொடருகின்றது. இரண்டு வர்க்க உள்ளடகத்தில் பிரிந்து, ஒட்டமுடியாத சமூக உறவுகளை கொண்டதாகிவிட்டது. இப்படி மக்கள் சார்ந்த கருத்தை, மக்கள் செயல்பாட்டை ஒடுக்கினர்.


இந்த அரசியலைக் கொண்டவர்கள், இன்று வரை அந்த அரசியலை சுயவிமர்சனம் செய்தது கிடையாது. ஏன் புலியொழிப்புவாதிகளான புலியெதிர்ப்பு அணி, புலியின் அரசியலை விமர்சித்து அரசியல் செய்ய விரும்பாத அரசியல் மர்மம், இந்த அரசியல் சூக்குமத்தில் அடங்கிக் கிடக்கின்றது.


மக்கள் பற்றிப் புலி என்ன கருத்து கொண்டு உள்ளதோ, அதே கருத்தைத் தான் புலியொழிப்புவாதிகளும் கொண்டுள்ளனர். மக்கள் போராடுவதற்கு உதவாதவர்கள் என்பதே, இவர்களின் அரசியல் வர்க்க நிலைப்பாடாகும். இவர்களின் பார்வையில் மக்கள் பணத்தைத் தமக்கு தரவும், தமது வர்க்க நோக்கத்துக்கு பின்னால் கைதட்டவும், தம் பின்னால் வால் பிடிக்க வேண்டும் என்பதைத் தாண்டி இவர்கள் சிந்திப்பதுமில்லை. உண்மையில் அதை அனுமதிப்பதுமில்லை. இதன் அடிப்படையில், மக்களை வெறும் மந்தைக் கூட்டமாக வைத்திருக்க முனைகின்றனர். இதைத் தான் புலியும் சரி, புலியொழிப்பும் சரி, தமது சொந்த அரசியலாக முன்வைக்கின்றது.


புலியை ஒழிப்பதன் மூலம் அல்லது தமிழீழம் மூலம் தமிழ் மக்களின் பிரச்சனைகள் தீர்ந்துவிடுமா?


இல்லை. இந்த வகையில் புலியெதிர்ப்பு கும்பல் புலியொழிப்பை முன்வைக்கின்றது. இதற்கு புலியின் பாசிச நடத்தைகளைக் காட்டி, இந்தக் கேடுகெட்ட இழிவான அரசியலை முன்வைக்கின்றனர். புலியை ஒழித்தால், தமிழ் மக்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெற்றுவிடுவார்கள் என்று கூறவும் கூட செய்கின்றனர்.


புலிகள் என்ன சொல்லுகின்றார்கள். புலிக்கு எதிரானவர்களை அழித்தால், தமிழீழத்தை பெற்று தமிழ் மக்கள் சுபீட்சத்தை அடைவார்கள் என்றார்கள்.


இப்படி ஒரு அரசியல் மாயையை விதைப்பதன் மூலம், தமிழ் மக்களை ஏமாற்றுவதில் தான், இவர்களின் நாய்ப் பிழைப்பே நடக்கின்றது. தமிழ் மக்களை இந்த எல்லைக்குள் முடக்கி, தமக்குள் இதன் அடிப்படையில் எதிர்ரெதிர் முகாம்களாக பிரிந்து, வம்பளப்பதையே இரு தரப்பும் விரும்புகின்றனர்.


புலியெதிர்ப்புக் கும்பல் விரும்புவது போல் புலியை ஒழித்தால், தமிழ் மக்கள் வாழ்வில் பாலும் தேனும் ஓடுமா? எப்படி? புலியெதிர்ப்பு முன்வைக்கும் புலியொழிப்புக் கும்பல் இதற்கு பதிலளிக்காது. மக்கள் இதைப் புரிந்துகொள்ள முடியாத வகையில், ஒரு அரசியல் சூனியத்தில் இதை ஏற்க வைக்க முனைகின்றனர்.


ஆனால் மக்கள் இதற்கு எதிராக, தமது சொந்த வாழ்வுரிமைக்காக தனித்தனியாக தன்னளவில் போராடுவது அன்றாடம் நிகழ்கின்றது. இல்லையெனின் அவர்களுக்கு உயிர் வாழ்வில்லை. இதற்கு வெளியில் தான் புலித் தமிழீழமும், புலியொழிப்பும் மக்கள் விரோதமாக இயங்குகின்றது. மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சனைக்கு வெளியில், இவை அன்றாடம் பூதாகரப்படுத்தப்படுகின்றது.


இந்த வகையில் புலியின் அரசியல் சரி, புலியொழிப்பு அரசியல் சரி, வர்க்க உள்ளடகத்தில் ஒன்றே. மக்களின் சமூக பொருளாதார பிரச்சனையை முன்னெடுப்பதற்கு எதிரானவர்கள். இப்படி மக்களின் சொந்த வாழ்வியல் பிரச்சனைகளில் இருந்து, இருதரப்புமே அன்னியமானவர்கள்.


அதாவது மக்கள் தாம் தமக்காக சொந்த சமூக பொருளாதார கோரிக்கையுடன் போராடுவதை எதிர்ப்பவர்கள் இவர்கள். இதை சாத்தியமற்ற ஒன்றாகவே எப்போதும் எங்கும் காட்டுகின்றனர், காட்ட முனைகின்றனர்.


நாம் இதை எதிர்ப்பதால், நாம் அவர்களின முதன்மை எதிரியாக உள்ளோம். மக்கள் தாம் தமக்காக போராடுவதே உண்மையான விடுதலை என்ற நிலைப்பாட்டை நாம் கொண்டவர்கள் என்பதால், அவர்களில் இருந்து தெளிவாக அரசியல் ரீதியாக வேறுபட்டவர்கள். அதாவது இதற்கு வெளியில் எந்த நிலைப்பாட்டையும், அது சார்ந்த நடைமுறையையும் கடுமையாக எதிர்ப்பவர்களாக நாம் உள்ளோம். புலித் தமிழீழம் மற்றும் புலியொழிப்பு பேர் வழிகளின் மக்கள் விரோத செயல்களை எதிர்ப்பதனால், அதனை எதிர்கொண்டு தனித்து போராட வேண்டியுள்ளது.


எப்படி மக்கள் அரசியல் அனாதைகளாக வாழ்கின்றனரோ, அப்படித் தான் எமது கருத்தும். மக்களின் சமூக பொருளாதார பிரச்சனைகள் சமூகத்தில் கேட்பாரின்றி அனாதையாகி ஒடுக்குமுறைக்கு எப்படி உள்ளாகின்றதோ, அது சார்ந்த எமது கருத்தும் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகின்றது. இப்படி மக்களின் சொந்த வாழ்க்கை எப்படி ஊடகவியலால் இருட்டடிப்பு செய்யப்படுகிறதோ, அப்படி மக்கள் கருத்தும் இருட்டடிப்பு செய்யப்படுகின்றது.


புலித்தமிழீழம், புலியொழிப்பு என்ற இரண்டு கருத்தும் முன்மைபெற்ற ஒன்றாக உள்ளது. அதாவது ஆதிக்கம் பெற்ற ஊடகவியல் மூலமும், பண ஆதிக்கம் மூலமும், பேரினவாத துணை கொண்டும், ஏகாதிபத்திய துணை கொண்டும் தமிழ் மக்களை இக்கருத்துக்கள் ஆக்கிரமித்து நிற்கின்றது. இந்த இரண்டு பிரதான மக்கள் விரோத நிலைக்கு எதிராக எமது போராட்டம் தனித்துவமானது. இதற்குள் மட்டும் உலகைப் பார்க்கும் சிலருக்கு, இவை அன்றாட கொசிப்பாக இருக்கின்றது. ஆனால் எமது போராட்டம் கடுமையானது. அநேகமாக தன்னம் தனியாகவே, கடுமையான பல நெருக்கடிகள் ஊடாகவே நகருகின்றது. ஆனால் எமது இந்தப் போராட்டம் மக்கள் உள்ள வரை, அரசியல ரீதியாக யாராலும் வெல்லப்பட முடியாதது.


தமிழீழமா! புலியொழிப்பா! அல்லது இரண்டுமா! என அனைத்தையும் தீர்மானிப்பது யார்? தமிழ் மக்கள் தாம் தம் மீதான சொந்த ஒடுக்குமுறையை இனம் கண்டு, தமது சொந்த விடுதலைக்கான தமது சொந்த போராட்டம் மூலம் தாமே போராட வேண்டும். இதைவிடுத்து புலித் தமிழீழம் என்று புலிகளோ அல்லது புலியொழிப்பு என்று புலியெதிர்ப்பு கும்பலோ, தான் தீர்மானித்த ஒன்றை தமிழ் மக்களுக்கு திணிப்பது மக்கள் போராட்டமல்ல. இது தமிழ் மக்கள் மீதான பாரிய ஒரு அரசியல் வன்முறையாகும்.


மக்கள் தாமே தமக்காக போராட வேண்டும் என்பதை மறுக்கின்றதும், அதை வழிகாட்ட முனையாத அனைத்துமே, மக்கள் விரோதத் தன்மை கொண்டவை. மக்கள் போராட்டம் சாத்தியமற்றது என்று கூறிக்கொண்டு, இப்படி மக்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் கடைந்தெடுத்த மகா அயோக்கியர்கள். மக்களின் பிரச்சனைகளை விடுத்து, அதை பின்போட்டு, புலித்தமிழீழம் அல்லது புலியொழிப்பே இன்று முதன்மையானது என்று கூறுவர்கள் அனைவரும், மக்களின் முதுகில் குத்தும் முதன்மைத் துரோகிகளாவர்.

மக்கள் என்பவர்கள் யார்?

பி.இரயாகரன்
02.08.2007

அரசியல் ஈடுபடுபவர்கள் அனைவருமே, மக்கள் என்ற பதத்தை பொதுவாக பயன்படுத்துகின்றனர். இதே போல் சமூகம் சார்ந்து தன்னார்வமாக செயல்படுபவர்களும் கூட, தாமும் மக்களுக்காக செயல்படுவதாக கூறுகின்றனர். இப்படி மக்களுக்காக தாம் செயல்படுவதாக காட்டிக் கொள்வதன் மூலம், மக்களை ஏமாற்றிப் பிழைப்பதே இன்றைய அரசியலாகிவிட்டது.

இதற்காக சலுகைகள், ஆசைகாட்டுதல், மோதவிடுதல், எதிரிகளை கற்பித்தல், வன்முறைக்கு ஏவுதல் என்று பலவிதமான அற்பமான இழிவான உத்திகளை கையாளுகின்றனர். உள்ளொன்றும் புறமொன்றாகவும் செயல்படுவதே, நாகரிகமான மக்கள் செயல்பாடாகி விடுகின்றது. இதையே ஜனநாயகம் என்கின்றனர்.

இது இலங்கை முதல் உலகம் வரையிலான, பொதுவான ஒன்றாகிவிட்டது. மக்கள் ஏமாறுவதும் ஏமாற்றப்படுவதுமே பொதுத் தொண்டாகவும், என் அதுவே ஜனநாயக அரசியலுமாகிவிட்டது. இது இயல்பான ஒன்றாகவும், இது இன்றி இவையில்லை என்ற நிலைக்குள், மனித உணர்வுகளை சிதைத்துவிட முனைகின்றனர்.

உண்மையில் இவர்கள் உருவாக்கும் சமூக விளைவுகளை பொறுப்பு ஏற்பது கிடையாது. அதற்காக மனம் வருந்துவதும் கிடையாது. மனித சிதைவுகளையும், மனித அவலங்களையும் உருவாக்குகின்ற ஒழுங்கில், மக்கள் பற்றிய பொய்மையான கபடத்தனமான ஈனத்தனமான செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இதன் பின்னணியில் அவர்களுக்கு என்று சொந்த வர்க்க நலன்கள் உண்டு. இதை பாதுகாக்கவே, இதைப் பெறவே மக்கள் என்ற பதத்தை பயன்படுத்திக் கொள்கின்றனர். மக்களின் அடிமை நிலைதான், இவர்களிள் வாழ்வாகின்றது. இது இந்த அரசியல் அரங்கில் வெளிப்படையானது. மக்கள் எந்தளவுக்கு அடிமையாக்கப்படுகின்றனரோ, அந்தளவுக்கு சிலருக்கு மேலானதும் உயர்வானதுமான வாழ்வு கிடைக்கின்றது. இதுவே எதார்த்த உலக உண்மை.
ஆகவே இவர்களுக்கு மக்கள் தேவைப்படுகின்றனர். இதனால் மக்கள் என்ற பதத்தை முறைகேடாகப் பயன்படுத்துவதில், இவர்கள் வெட்கப்படுவது கிடையாது. எந்த சுய கழிவிரக்கம் கூட கொள்வது கிடையாது.

மக்களை இனமாக, மதமாக, சாதியாக, மொழியாக, நிறமாக, பாலாக, பிரதேசமாக பற்பல விதத்தில் பிளப்பதில், மக்கள் என்ற பதத்தை குறுகிய எல்லையில் குறுக்காக பிளக்கின்றனர். இதற்கு அவர்கள் இயற்கை சார்ந்த பிளவுகளை, நீண்ட வாழ்வு சார்ந்த வாழ்வியல் பிளவுகளை, மனித முரண்பாடுகளை முன்னிலைப்படுத்தி, மனித குலத்தை பிளந்து ஒன்றுக்கொன்று எதிராக நிறுத்திவிடுகின்றனர். ஒரு கூட்ட மக்களை மற்றொரு கூட்டத்துக்கு எதிராக நிறுத்திவிடுகின்றனர். இதற்கு அமைவாகவே மக்கள் என்ற சொல்லை, மிக இழிவாக கேடுகெட்ட வகையில் பயன்படுத்துகின்றனர்.

ஒரு பகுதி மக்களுக்கு எதிராக, தன் தரப்பு மக்களை வெறி ஊட்டி விடுகின்றனர். இதன் மூலம் தமது வர்க்க நோக்கில், சுரண்டுவதே அன்றாட நிகழ்ச்சியாகிவிடுகின்றது. இந்த எல்லைக்குள் உணர்வுபூர்வமான தலையீட்டை, அணிதிரட்டலை உருவாக்குவதன் மூலமே, அரசியல் முதல் தன்னார்வ நிறுவனங்கள் வரை மக்களை பிளந்து இயங்குகின்றன.
மக்கள் இப்படி இதற்குள் பந்தாடப்படுகின்றனர். மக்கள் சாதியாக, மதமாக, இனமாக, மொழியாக, நிறமாக மோதவிடப்படுவதன் மூலம், தமக்குள் உள்ள வர்க்க ரீதியான மோதலை மறைக்க முனைகின்றனர். அதாவது மற்றொரு சமூகம் மீதான சமூக மோதலாக மாற்றிவிடுகின்றனர். இப்படி இரண்டு மக்கள் கூட்டத்தை மோதவிட்டு, மக்களின் பின் சுரண்டும் வர்க்கம் குளிர்காய்கின்றனர்.

மக்கள் கூடிவாழ்வதை மறுத்து, மக்களை பிளந்து அவர்கள் தமக்குள் முரண்பாடுகளுடன் வாழவைப்பதை பாதுகாக்கின்ற அரசியலைத் தான், ஜனநாயகம் என்கின்றனர். ஜனநாயகம் என்பது மக்கள் பிளவுக்குள்ளாக்கி வாழ்வதையும், அதைப் போற்றிப் பாதுகாப்பதுமே என்றாகிவிட்டது. மக்கள் என்ற பதத்தை இதற்குள் பயன்படுத்துவதில் உள்ள மோசடித்தனம் தான், பொதுவான வாழ்வியல் சமூக ஒழுங்காகிவிடுகின்றது.

சமூகத்தை தனிமனிதனுக்கு எதிராக நிறுத்தி தனிமனிதன் சமூகத்தை சுரண்டுவது போல், மக்கள் கூட்டத்தை மற்றொரு மக்கள் கூட்டத்துக்கு எதிராக நிறுத்தி சிலர் சுரண்டுகின்றனர். சமூகத்தையும், மக்கள் கூட்டத்தையும் எதிராக நிறுத்துவதில் தான், சுரண்டும் வர்க்கத்தின் வாழ்வும் அதன் ஜனநாயகமும் உள்ளது.

இதற்கு மாறாக மக்கள் என்பவர்கள் தாம் பரஸ்பரம் இணங்கி சமூகமாக வாழ்வதையே அடிப்படையாக கொண்டவர்கள். மக்கள் கூட்டம் என்பது, தமக்கு இடையில் உள்ள மனித முரண்பாடுகளை களைந்து, பிரிவுகளை கடந்து, பிளவுகளை நீக்கி வாழ்வதை அடிப்படையாகக் கொண்டது. இப்படி சக மனிதனை சுரண்டுவது, இழிவுபடுத்துவது, அடக்குவது, ஒடுக்குவது என அனைத்தும் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்பதே மனிதத் தன்மை.
இதற்காக அவற்றை இனம் கண்டு போராடுவது, இந்த வகையில் மக்களை அணிதிரட்டுவதில் தான், மக்கள் என்ற பதம் உண்மையானது, நேர்மையானது. அதாவது மக்கள் தமது சொந்த விடுதலைக்காக, அவர்கள் தாமே போராட வேண்டும். இதை வழிகாட்டும் நடைமுறைகள், கோட்பாடுகளே உண்மையானது நேர்மையானது.

சமூகத்தில் நிலவும் எந்த சமூகப்போக்கிலும், எந்த சூழலிலும் இந்த முழுமையைக் கவனத்தில் கொண்டு போராட மறுக்கின்ற அனைத்தும், பிற்போக்கானது. உண்மையில் மக்களை பிளந்து மோதவிடுகின்ற சூழ்ச்சியை அடிப்படையாக கொண்டது. எந்த முரண்பாட்டையும் முழுமையில் காண மறுக்கின்ற முயற்சிகள் அனைத்தும், நிச்சயமாக அந்த மக்களுக்கே எதிரானது.

இப்படி மக்கள் கூட்டத்தை எதிரியாக பிரிக்கின்ற கோடு, எதிரியை மக்களுக்கு எதிராக பிரிப்பதில்லை. இப்படி எதிரியை மிகப் பாதுகாப்பாக வைக்கின்றது. மக்கள் வேறு, எதிரி வேறு என்று தெரிந்து கொள்ள முடியாத சூக்குமத்தில், மக்களின் எதிரி பாதுகாப்பாக இருக்க முனைகின்றான்.

சக மனிதனை சுரண்டுதை, அடக்குவதை, ஒடுக்குவதை, இழிவுபடுத்துவதை தமக்குள் உள்ளடக்கியபடி வாழ்வதும், அந்த மக்களை மக்கள் என்று விழிப்பது பொய்யானதும், போலியானதுமாகும். தனக்குள், தனது சொந்த மக்களுக்குள் சமூக ஒடுக்குமுறையை களைய மறுத்தபடி, மற்றவன் பற்றியும் மற்றைய மக்கள் கூட்டம் பற்றியும் பேசுவது என்பது, சொந்த மக்களை ஏமாற்றுகின்ற கபடத்தனமாகும்.

தான் செயல்படும் சொந்த அரசியல் தளத்தில், சொந்த நடைமுறை தளத்தில், அனைத்து சமூக ஒடுக்குமுறையையும் களைய மறுக்கின்றவர்கள், அதை முன்வைத்து போராடாதவர்கள் அனைவரும் மாபெரும் அரசியல் போக்கிரிகளாவர்.

சமூக ஒடுக்குமுறைகளை சொந்த அமைப்பில், சொந்த கோட்பாட்டில், சொந்த பிரச்சாரத்தில் முன்வைக்க மறுத்து, அதை பிரச்சாரம் செய்ய மறுப்வர்கள், அதை காலத்தால் பின்போடுபவர்கள் எல்லோரும் கடைந்தெடுத்த மக்கள் விரோதிகளாவர்.

இவர்களே இன்று மக்கள் என்று கூறிக்கொண்டு, மக்களின் முதுகில் குத்துகின்ற அரசியல் அரங்கில் ஆதிக்கம் வகிக்கின்றனர். இவர்களை மனித குலம் இனம் கண்டு போராடாத வரை, உலகில் எந்த சமூகத்திலும் எந்த பிரச்சனைக்கும் தீர்வுகளை அந்த மக்கள் கூட்டம் கண்டறிய முடியாது. மாறாக சமூகம் கையாலாகாத்தனம் கொண்ட, சுரண்டும் வர்க்கத்தின் அடிமைகளாகவே வாழ்வர்.

Tuesday, July 31, 2007

வன்னி மக்களின் துயரங்கள்

வன்னி மக்களின் துயரங்கள்


பி.இரயாகரன்
31.07.2007



புலிகளின் தனிமனித பயங்கரவாதம் உருவாக்கிய இராணுவ வாதங்கள் சொந்த நெருக்கடியில் சிக்கி திணறுகின்றது. இப்படி மக்களின் வாழ்வியலில் இருந்து அன்னியமாகிய புலியிசம், தொடர்ச்சியாகவே தோற்கின்றது. இதன் விளைவு பேரினவாதத்தின் வெற்றியாகின்றது. புலிகளின் அரசியல் தமது சொந்த வர்க்க நலனுக்குள், அதுவும் குறுகிய ஒரு சிறு கும்பலின் நலனாகிவிட்ட நிலையில், அதை தனது சொந்த இராணுவ வழிகளில் தொடர்ச்சியாகவே பாதுகாக்க முனைகின்றனர்.



இதன் விளைவு தமது சொந்த தோல்வியை தவிர்ப்பதற்கான தற்காப்புக்கான இறுதி யுத்தத்தை, தமிழீழத்துக்கான இறுதி யுத்தமாக கூறிக்கொண்டு நடத்துகின்ற வெறியாட்டம் தான், இன்றைய வன்னித் துயரம். இதற்காக எல்லாவிதமான பாசிச கூத்துகளையும் மக்கள் மீது நடத்துகின்றனர்.



இப்படி புலிகள் தமது சொந்த அதிகார வன்முறைக்கு உள்ளாகக் கூடிய அனைத்து மக்களின் மீதும், இந்த புலிப் பயங்கரவாத வன்முறையை ஏவி விட்டுள்ளனர். மக்கள் புலிகளில் இருந்து விலகி தாமும் தம்பாடும் என்று வாழ்ந்தவர்களை, இனி அப்படி வாழமுடியாது என்பதை புலிகள் தமது வன்முறை மூலம் வீட்டுக்கு வீடு தமது அடாவடித்தனத்தால் உணர்த்தி வருகின்றனர்.



முன்பு வீட்டுக்கு ஒருவர் புலியில் இணையவேண்டும் என்று கட்டாயப்படுத்தி இணைத்தவர்கள், இன்று வீட்டில் ஒருவரைத் தவிர அனைவரையும் புலியுடன் பலாத்காரமாக இணைக்கின்றனர். முன்பு குழந்தைகளை பலாத்காரமாக திருடியவர்கள், இன்று சமூகத்தையே சூறையாடுகின்றனர். மக்கள் ஒடி ஒளிய முடியாத வகையில் மக்களையே கண்காணிக்கும் புலியிசமும், மறுபக்கம் மக்கள் பற்றிய முழு விபரத்தையும் திரட்டிவைத்துக் கொண்டு அலையும் சமூக விரோத லும்பன்கள்.



வீடுவீடாக புகுந்து, குழந்தைகளை குற்றவாளிச் சமூகமாக இழுத்துச் செல்லுகின்ற புலிக் காட்டுமிராண்டித்தனம். இதை தடுக்கும் பெற்றோருக்கு அடி உதை, கை கால் முறிப்பு முதல் மரணம் வரை பரிசாக கிடைக்கின்றது. எங்கும் இதை உணர்ந்தும், அனுபவித்தும், தெரிந்து கொண்டும் வாழ்கின்றது வன்னிபெரு நிலப்பரப்பு.



இது சார்ந்த மரணவோலங்கள் கேட்காத வன்னிக் கிராமம் கிடையாது. ஒவ்வொரு நாளும் வன்னிக்காடெங்கும் இது எதிரொலிக்கின்றது. மறுபுறம் புலிகளினால் பலாத்காரமாக இழுத்துச் செல்லப்படுபவர்கள், கட்டாயப் பயிற்சிக்குள்ளாகின்றனர். இதன் போது, அதை மீறுபவர்களுக்கு அடி உதை முதல் மரணம் வரை அன்றாடம் புலியிசத்தின் தீர்ப்பாகின்றது.



இப்படி ஆங்காங்கே உயிரற்ற சடலங்கள் பெற்றோரிடம் கொடுக்கப்படுகின்றது. ஏன் எப்படி இந்த மரணம் நிகழ்ந்தது என்று யாரும், சொந்த சுயவிசாரணையை செய்யமுடியாது. மரணங்களும், மரண ஓலங்களுமே கிராமங்களில் பொது நிகழ்ச்சி நிரலாகிவிட்டது. இதைக் கடந்து வாழ்தல் என்பது, புலி நிர்வாகத்தில் சாத்தியமற்ற ஒன்றாகிவிட்டது. மரணத்தின் வருகை புலியிசத்தின் வழியில் மட்டுமல்ல, பேரினவாதத்தின் குரூரத்தாலும் கூட விதைக்கப்படுகின்றது.



வன்னி நிலப்பரப்பு எங்கும், எதிலும் கண்காணிப்பும், தண்டனைகளும். வன்னியில் நிகழும் மரணங்களில் சுய ஒப்பாரியைக் கூட வைக்கமுடியாது. புலியிசத்தின் ஆட்சி, அதன் நீதி, அதன் ஒழுக்கம், அதன் பண்பாடு என அனைத்துமே இதுவாகிவிட்டது.



புலியிசத்தின் பாசிச கொடுங்கோலே, சமூக செங்கோலாக திணிக்கப்பட்டுவிட்டது. யாரும் ஏன் எதற்கு என்று மூச்சுவிட முடியாது. அனைத்தையும் தலையில் சுமந்த படி, பீதி பொருந்திய ஒரு ஊமையாக வாழுகின்ற சமூக வாழ்க்கையைத் தான், சுபிட்சமாக காட்டுகின்ற புலியிசத்தின் வக்கிரம்.



மக்கள் தாம் ஏன் எதற்கு புலிகளின் நுகத்தடியின் கீழ் இப்படி நடைப்பிணமாக வாழ்கின்றோம், மரணிக்கின்றோம் என்று கூட தெரியாத அளவுக்கு, மனித துயரங்கள்.



எங்கும் எதிலும் புலிகளின் அத்துமீறல்கள். இவை அனைத்தும் புலித் தமிழீழத்தின் பெயரில் தான் அரங்கேற்றுகின்றன. இதன் மூலம் தான், தமிழ் மக்களுக்கு சொர்க்கத்தை பெற்றுத்தரப் போகின்றார்களாம்!



அதற்காக மக்கள் புலிப் பயங்கரவாதத்துக்கு இரையாவதை கண்டுகொள்ளக் கூடாது என்பதே புலிக்கட்டுப்பாடு. இதையே தமிழீழப் போராட்டத்தின் போராட்ட வழி என்று கூறுகின்ற புலிப் பாசிசமும், அரங்கேறுகின்றது.



ஆனால் இந்த புலியிசம் தோற்றுக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு வினாடியும் மக்களிடம் புலிகள் தோற்கின்றனர். இந்த தோல்வி கிழக்கில் மட்டுமல்ல வன்னியிலும் தொடங்கிவிட்டது. இதை ஒரு பாரிய இராணுவ வெற்றி மூலம் வெற்றியாக காட்டி தடுக்கின்ற கடந்த கால புலி உத்திகள், வன்னித் தோல்வியை தவிர்த்துவிடாது.



கிழக்கில் பேரினவாதத்தின் வெற்றி என்பது, கிழக்கு மக்களிடம் புலிகள் தோற்றதன் விளைவாகும். இந்த தோல்வி என்பது, வெல்ல முடியாத அரசியல் நிபந்தனைகளாலானது. இதே நிலைமை வன்னியில் இன்று எதார்த்தமாகிவிட்டது. பேரினவாதத்தின் சொந்த கூலி மனப்பாங்கைத் தாண்டி, அது தனது ஆக்கிரமிப்பு வெறியுடன் வெல்லும் அளவுக்கு, புலிகள் மக்களில் இருந்து நிரந்தரமாகவே அன்னியமாகிவிட்டனர். மக்களை வெறும் மந்தைகளாக்கி, அவர்களை நடைப்பிணமாக்கியவர்கள் புலிகள். இப்படி அடக்கியொடுக்கியதன் விளைவால், மக்கள் தமது சொந்த சுயத்தை இழந்துவிட்டனர். மக்கள் தாம் தப்பிப்பிழைக்கவே, அங்குமிங்குமாக நாயிலும் கீழாக அலைபாய்கின்றனர்.



மக்களுக்கு வெளியில் வன்முறையை நம்பி இயங்கும் லும்பன் கும்பல், அதுவும் மனித பண்பாடற்ற காட்டுமிராண்டிகளால் ஒருநாளும் மக்களை தலைமை தாங்கமுடியாது.



மனிதத்தை நேசிக்கவோ, மனிதத்தை வாழவைக்கவோ இவர்களால் முடியாது. தட்டிச் சுருட்டி தின்பதில் தொடங்குகின்ற புலியிச வக்கிரமே, அனைத்துமாகி மிதக்கின்றது.



இந்த மக்களை காப்பாற்ற, வழிகாட்ட யாரும் கிiடாது. ஒருபுறம் பேரினவாதம் மறுபக்கம் புலியிசம். இதற்குள் புலியெதிர்ப்பு அணி புலியொழிப்பு என்று, மக்களின் முதுகில் குத்தி தனது துரோகத்தை காறி உமிழ்கின்றது. இப்படி இலங்கை வாழ் தமிழ் மக்களின் துயரங்களில் வாழ்கின்ற புல்லுருவிகளின் செயல்பாடுகளே அரசியலாகின்றது.



மக்களுக்காக, அவர்களின் சொந்த விடுதலைக்கான எந்த அரசியல் வழிகாட்டலையும், ஏன் எந்த முயற்சியையும் யாரும் செய்வது கிடையாது. இதுவே மக்களின் துயரத்தை தொடர்ச்சியாக பலமடங்காக்குகின்றது. சுற்றிச் சுற்றி இந்த மக்கள் விரோத அரசியல் சாக்கடைக்குள் மக்களை ஆழ்த்தி, மனித துயரத்தை தக்கவைத்து பிழைப்பதே எதார்த்தமாகி, அதுவே அரசியலாகி விடுகின்றது. இதற்கு வெளியில் சிந்திக்கவும், மக்கள் தமக்காக தமது சொந்த விடுதலைக்காக போராடவும் வேண்டியுள்ளது. இதை மறுத்து நிற்கும் அனைத்தையும், அம்பலப்படுத்தி போராட வேண்டிய காலகட்டத்தில் தான், இந்த வன்னித் துயரம் மக்களின் தலைவிதியாக மக்கள் விரோதிகளால் திணிக்கப்பட்டுள்ளது.


Monday, July 30, 2007

சி.பி.எம்.இன் பயங்கரவாதத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம்

நந்திகிராமப் படுகொலைகள்:
சி.பி.எம்.இன் பயங்கரவாதத்துக்கு
எதிரான ஆர்ப்பாட்டம் - பிரச்சார இயக்கம்


மே.வங்க மாநிலத்தின் நந்திகிராமத்தில் கடந்த மார்ச் 14ஆம் தேதியன்று சி.பி.எம். குண்டர்களும் போலீசும் இணைந்து நடத்திய கொலைவெறியாட்டத்தை மூடி மறைத்து, கூசாமல் அவதூறு பொய் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது சி.பி.எம். கட்சி.


இக்கோயபல்சு புளுகுணிப் பிரச்சாரத்தை அம்பலப்படுத்தியும், சி.பி.எம். கட்சியின் பாசிச கோரமுகத்தைத் தோலுரித்துக் காட்டியும், மே.வங்க போலி கம்யூனிச அரசை மண்டியிட வைத்த நந்திகிராம மக்களின் உறுதிமிக்க போராட்டத்தை விளக்கியும், மறுகாலனியாக்கத்தை வீழ்த்த நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகளில் அணிதிரள அறைகூவியும் ம.க.இ.க., வி.வி.மு., பு.ஜ.தொ.மு., பு.மா.இ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் தாங்கள் செயல்படும் பகுதிகளில் விரிவான பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டன.


இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையில் ம.க.இ.க., பு.ஜ.தொ.மு. ஆகிய அமைப்புகளின் சார்பாக, மே.வங்க சி.பி.எம். அரசின் படுகொலைகளைக் கண்டித்து 26.3.07 அன்று நடந்த ஆர்ப்பாட்டமும், பரமக்குடியில் ம.க.இ.க., வி.வி.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய அமைப்புகளின் சார்பில் 5.4.07 அன்று நடந்த கண்டன ஆர்ப்பாட்டமும், புத்ததேவின் அண்டப்புளுகையும், விவசாயிகளை நரபலி கொடுத்து பன்னாட்டு முதலாளிகளுக்கு விசுவாச சேவை செய்யும் சி.பி.எம். அரசின் கைக்கூலித்தனத்தை அம்பலப்படுத்தி முன்னணித் தோழர்கள் ஆற்றிய கண்டன உரையும் உழைக்கும் மக்களுக்குப் புதிய பார்வையை அளிப்பதாக அமைந்தன. இக்கண்டன ஆர்ப்பாட்டத்தின் வீச்சையும் அது உழைக்கும் மக்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தையும் கண்டு பீதியடைந்து, வாராந்திர நன்கொடை வசூலுக்காக வரும் சி.பி.எம். கட்சியினர், அந்த வாரத்தில் திருவாடனை சந்தை பக்கமே எட்டிப் பார்க்கவில்லை.


சென்னை அருகே, ஆலைத் தொழிலாளர்களும் அமைப்புசாரா தொழிலாளர்களும் நிறைந்த கும்மிடிப்பூண்டியில் மார்ச் 28ஆம் தேதியன்று பு.ஜ.தொ.மு. மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் சிறப்புரையாற்றிய தெருமுனைக் கூட்டமும், நெய்வேலியில் ஏப்ரல் 9,10,11 தேதிகளில் டவுன்ஷிப், அனல் மின்நிலைய வாயில், மந்தார குப்பம் ஆகிய பகுதிகளில் பு.ஜ.தொ.மு. சார்பில் நடந்த தெருமுனைக் கூட்டங்களும், தொழிலாளர்களிடம் சி.பி.எம். மீதான பிரமைகளைத் தகர்த்து புரட்சிகர சங்கத்தில் அணிதிரண்டு போராட அறைகூவின.


கொலைகார முதல்வர் புத்ததேவின் கொடும்பாவியை எரித்து மார்ச் 17ஆம் நாளன்று போராட்டம் நடத்திய தஞ்சை ம.க.இ.க., பு.மா.இ.மு. அமைப்புகள், அதன் தொடர்ச்சியாக பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டு 8.4.07 அன்று தஞ்சை கீழவாசல் ஆட்டு மந்தை தெருவில் பொதுக்கூட்டத்தை நடத்தின. ம.க.இ.க. மாநில இணைச் செயலர் தோழர் காளியப்பன், கர்நாடக மாநில உயர்நீதி மன்ற வழக்குரைஞர் தோழர் பாலன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். சி.பி.எம்.மின் ஏகாதிபத்திய சேவையையும், அதன் பொய்கள் சதிகள் கொலைகளையும் அங்குலம் அங்குலமாகத் திரைகிழித்துக் காட்டிய இப்பொதுக்கூட்டமும், நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகளில் அணிதிரள அறைகூவிய ம.க.இ.க. மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சியும் உழைக்கும் மக்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றன.


புதுச்சேரியில் தேங்காய்திட்டு, முருங்கம்பாக்கம், முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், திருபுவனை, திருவண்டார்கோயில் ஆகிய இடங்களில் பு.ஜ.தொ.மு., பு.மா.இ.மு. சார்பாக ஏப்ரல் மாதத்தில் தொடர்ச்சியாக தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. துறைமுக விரிவாக்கம் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு எதிராக புதுவை மக்கள் போராடி வரும் சூழலில், கொலைகார சி.பி.எம். கட்சியை அம்பலப்படுத்தியும் நந்திகிராம மக்களின் போராடப் படிப்பினைகளை உணர்த்தியும் நடந்த இக்கூட்டங்கள் புதுவை மக்களிடம் விழிப்புணர்வூட்டுவதாக அமைந்து உற்சாகமான வரவேற்பைப் பெற்றது.


உசிலம்பட்டி வட்டாரத்தில், விவசாயிகளைச் சுட்டுக் கொன்ற கொலைகார சி.பி.எம். ஆட்சியாளர்களுக்கு எதிராக சாத்தங்குடி, செல்லம்பட்டி, கருமாத்தூர், முண்டுவேலம்பட்டி, ஆரியபட்டி ஆகிய ஊர்களில் தெருமுனைக் கூட்டங்களையும், உசிலம்பட்டி, செக்கானூரணி, திருமங்கலம் ஆகிய ஊர்களில் பொதுக் கூட்டங்களையும் வி.வி.மு. நடத்தியது. செங்கொடி ஏந்தி விவசாயிகளின் தோழனாக நாடகமாடிய பாசிச சி.பி.எம். கட்சியை அம்பலப்படுத்திக் காட்டிய இப்பிரச்சார இயக்கம், இவ்வட்டாரமெங்கும் உழைக்கும் மக்களிடமும் இடதுவலது போலி கம்யூனிஸ்ட் கட்சியிலுள்ள புரட்சியை நேசிக்கும் அணிகளிடமும் புதிய பார்வையையும் புதிய சிந்தனையையும் விதைத்தது.


நந்திகிராமப் படுகொலைகளுக்கு எதிராக இப்புரட்சிகர அமைப்புகள் ஒட்டிய சுவரொட்டிகளை பல ஊர்களில் அவசர அவசரமாகக் கிழித்தெறிந்த சி.பி.எம். குண்டர்கள், முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதையாக, உழைக்கும் மக்களிடம் உண்மைகளை மூடிமறைக்க முயற்சித்துள்ளனர். ஆனால், மறுகாலனியாக்கத்துக்கு எதிராக புரட்சிகர அமைப்புகள் தொடர்ந்து நடத்திவரும் பிரச்சாரமும் போராட்டங்களும், ஏகாதிபத்திய கைக்கூலிகளான இத்துரோகிகளை அம்பலப்படுத்தி, உழைக்கும் மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி முடமாக்கியே தீரும் என்பது உறுதி.




பு.ஜ. செய்தியாளர்கள்.

Sunday, July 29, 2007

சிவப்புச் சாயம் வெளுக்கிறது!

மிழகத்து "மார்க்சிஸ்டு'கள் ரிலையன்ஸ் ஃபிரெஷ்ஷûக்கு எதிராக அறிக்கைப் போர் நடத்திக் கொண்டிருக்கும் பொழுது, "மார்க்சிஸ்டு' கட்சியின் தலைவர்களுள் ஒருவரான சமர் போரா, ""விவசாயிகளின் விளைபொருள்களுக்கு நல்ல விலை கொடுப்போம் என்றும்; நுகர்வோருக்குத் தரமான பொருட்களை விற்பனை செய்வோம் என்றும் ரிலையன்ஸ் நிறுவனம் கூறியிருக்கிறது. அதன்படி நடந்து கொண்டால், அந்நிறுவனத்தை ஏன் எதிர்க்க வேண்டும்? வேளாண் துறையில் அந்நிய நேரடி முதலீட்டைத்தான் இடதுசாரிக் கட்சிகள் எதிர்க்கின்றன. ரிலையன்ஸோ அல்லது வேறு ஏதாவது இந்திய நிறுவனமோ வர்த்தகம் செய்வதை எதிர்க்கவில்லை'' எனக் கூறியிருக்கிறார்.


இது அவரின் தனிப்பட்ட கருத்து எனக் கூறி, தமிழகத்து "மார்க்சிஸ்டு'கள் தப்பித்து கொண்டுவிட முடியாது. மேற்கு வங்க "மார்க்சிஸ்டு' கட்சி, அம்மாநிலத்தில் ரிலையன்ஸ் சில்லறைக் கடைகளைத் திறக்க எந்த மறுப்பும் தெரிவிக்காதபொழுது, "இடதுசாரி'க் கூட்டணியில் இருக்கும் பார்வார்டு பிளாக் கட்சிதான், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு ரிலையன்ஸ் சில்லறைக் கடைகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என முரண்டு பிடிக்கிறதாம். இந்தக் "கொள்கை' முரண்பாட்டைக் கேள்விப்படும் பொழுது, நமக்குப் புல்லரித்துப் போகிறது.


எப்படிப்பட்ட நிபந்தனைகள் போட்டாலும், அவற்றையெல்லாம் ஏய்த்துக் கல்லா கட்டுவதில் அம்பானி தொழில் குழுமம் கில்லாடிகள் என்பது "இடதுசாரி' களும் அறிந்த உண்மை. இருந்தாலும் என்ன செய்வது, தங்களைச் ""சிவப்பாக''க் காட்டிக் கொள்ள, "இடதுசாரி'க் கூட்டணி ஏதாவது செய்து தொலைக்க வேண்டி இருக்கிறதே!

ரிலையன்ஸ் ஃபிரஷ் முற்றுகை- போராட்ட இயக்கம் தொடங்கியது

னியார்மயம் தாராளமயம் உலகமயம் எனப்படும் மறுகாலனியாக்கத்துக்கு எதிராக தொடர்ந்து உறுதியாகப் போராடிவரும் ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள், சிறு வணிகத்தை விழுங்க வந்துள்ள ரிலையன்ஸ் வால்மார்ட்டுக்கு எதிராக ""சிறு வணிகம், சிறு தொழில்கள் உயர்த்திப் பிடி! சூறையாடும் ரிலையன்ஸை துரத்தியடி!'' என்ற மைய முழக்கத்துடன், மே நாளன்று ரிலையன்ஸ் ஃபிரஷ் கடைகளை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்து, தமிழகமெங்கும் வீச்சாக பிரச்சாரம் செய்து வருகின்றன.



தற்போது சென்னையில் 24 இடங்களில் ரிலையன்ஸ் கடைகள் திறக்கப்பட்டிருக்கின்றன. தமிழகத்தின் எல்லா நகரங்களிலும் கடைகளைத் திறப்பது என்ற வெறியோடு ரிலையன்ஸ் செயல்பட்டு வருகிறது. வால்மார்ட், திரிநேத்ரா போன்ற நிறுவனங்களும் அடுத்தடுத்துக் களத்தில் இறங்க உள்ளன. பன்னாட்டு, ஏகபோக மூலதனத்தின் இந்தத் தாக்குதல் காய்கறி, மளிகை மற்றும் இறைச்சி வியாபாரிகளுடன் நிற்கப் போவதில்லை. எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக் பொருட்கள், ஹார்டுவேர் கடைகள், துணிக்கடைகள், பிற நுகர்பொருட்கள் என அடுக்கடுக்காக அனைத்துத் துறைகளிலும் நுழையவிருப்பதாக பன்னாட்டு நிறுவனங்களும், இந்தியத் தரகு முதலாளிகளும் அறிவித்துள்ளன.



எதிரிகளின் தாக்குதல் இப்படித் தீவிரமடைந்து வரும் நிலையில் ஓட்டுக் கட்சிகள் அனைத்தும் கள்ளத்தனமாக மவுனம் சாதிக்கின்றன. இருப்பினும், தரைக்கடை வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள், காய்கறி அங்காடிகளின் சிறுவணிகர்கள் முதலானோர் மட்டுமின்றி, எல்லா பிரிவு மக்கள் மத்தியிலும் இப்பிரச்சாரம் உற்சாகமான ஆதரவைப் பெற்று வருகிறது. இவ்வமைப்புகள் வெளியிட்டுள்ள ""சிறு வணிகத்தை விழுங்க வரும் ரிலையன்ஸ், வால்மார்ட்டே வெளியேறு!'' என்ற சிறு வெளியீடு வணிகர்கள் மத்தியிலும், பரவலான மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பலர் வெளியீடுகளை விற்பனைக்காகக் கோரிப் பெற்று வருகின்றனர். அச்சிட்டுத் தருவதற்கும் முன் வந்திருக்கிறார்கள். இது புரட்சிகர அரசியலுக்குக் கிடைத்த வெற்றி.



நெல்லையில் இவ்வமைப்புகள் நடத்திய கோக் எதிர்ப்புப் போராட்டம் போலவே ரிலையன்ஸ் எதிர்ப்புப் போராட்டமும் ஒரு முத்திரையைப் பதிக்கும் போராட்டமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. ஓங்கட்டும் போராட்டம்!

பு.ஜ. செய்தியாளர்கள்.