தமிழ் அரங்கம்

Monday, December 31, 2007

எது கவிதை?

எது கவிதை?


வார்த்தைகளை மடக்கி நீட்டி, உணர்ச்சிகளை பசப்பிக் காட்டி வித்தகம் செய்வதா கவிதை? விளங்காத சமூகத்தின் புதிர்களுக்கு விடைகாணும் முயற்சியே கவிதை. மனிதகுலம் வெறுங்கையால் இயற்கையை எதிர்த்துப் போராடத் தொடங்கிய காலம் முதல் தாம் வாழ்வதற்கான புதியவகை சாதனங்களை மட்டுமல்ல, புதியவகை உணர்ச்சிகளையும் படைத்தே வந்திருக்கிறது. படைப்புரீதியான இவ்வகை உழைப்புப் போக்கின் மூலம் சமுதாயத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தியதே அறிவியல், கலைக்கான ஆளுமைமிக்க வரலாற்றுப் பாத்திரமாகும்.


அவ்வகை மனித முயற்சி, நாகரிகம் எதுவுமின்றி ""தான் எப்படியாவது பேசப்பட வேண்டும், பார்க்கப்பட வேண்டும்'' என்பதற்காக சமூகத்தின் சரிபாதியான பெண்களின் இடுப்பைக் கிள்ளும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள் சில கோடம்பாக்கத்து போக்கிரிகள். காரணம் கேட்டால் இவர்கள் கவிஞர்களாம்! சுற்றிலும் நம் காற்று மண்டலத்தில் கலந்திருக்கும் சாதி தீண்டாமை அநீதிகள், ஒன்று சேர்ந்து வாழ்வதுபோல் நடிக்கும் இல்லறத்தின் புதிர்கள் இன்னும்பல சமூகக் கொடுமைகள் இவைகளை விண்டு பார்த்து விடைதேட முயன்று பாருங்கள். உங்கள் படைப்புக்கான ஆளுமை அங்கே காத்திருக்கிறது. கூட்டுத்துவ உழைப்பினால் வளர்ந்துவந்த சமூகத்தின் வரலாற்றை உணர்ந்து பாருங்கள், ""தான்'' என்ற அறியாமை வெட்கி விலகும். உயிர்த்துடிப்பான உழைக்கும் மக்களின் ஒருநாள் வாழ்க்கைப் போராட்டத்தை உற்றுப் பாருங்கள், நாம் மனிதர்களாகி விடுவோம். ""லூசுப்பையன்கள்'' திரியும் கோடம்பாக்கத்து ஒட்டுண்ணி இலக்கைவிட்டு வெளியே வாருங்கள். உணர்ச்சியுடனும் சுரணையுடனும் உழைக்கும் மக்கள் திரளினரால் படைக்கப்படும் புதிய சமூகத்திற்கான போராட்ட உணர்ச்சியில் கலந்து பாருங்கள். நாமும் கவிஞர்களாகி விடுவோம்.


அரசியலால் கலைத்தன்மை போய்விடும் என்று பூச்சாண்டி காட்டிக் கொண்டே ஆளும் வர்க்க அரசியலை நத்திப்பிழைக்கும் இலக்கிய வட்டங்களைத் தாண்டி பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கான அரசியலமைப்போடு ஒன்று சேர்ந்து பாருங்கள்! ஒரு புதிய சமூகத்தையே கவிதையாய் வடிக்கும் பேரார்வம் அங்கே உங்களுக்காகக் காத்து நிற்கிறது.


முதல் வணக்கம்- தோழர் துரைசண்முகம்


திசைகளின் கவர்ச்சியை வெறுத்து

தசைகளின் சுகங்களை மறுத்து

வசவுகள் ஆயிரம் பொறுத்து

உழைக்கும் மக்களின் விடுதலை வேருக்கு

பசையென உயிரையே கொடுத்து

மண்ணைக் கிளப்பிய வேர்களே

மார்க்சிய லெனினியப் பூக்களே

மகத்தான தியாகிகளே!

நிலவைக் காட்டிச் சோ×ட்டும்

தாயின் அன்பும் மாறிவிடும்

சமூக உறவைக் காட்டி அரசியலூட்டிய

உங்கள் தோழமை இரத்தம்

தலைமுறை தாண்டியும் ஊறி வரும்!



மொழி வணக்கம்


கவினுறு மலைகள் ஏறிக் களைத்து

எங்கள் கடலொடு நதி பல நீந்தித் திளைத்து

காடுகள் சோலைகள் பூத்து

எங்கள் கைகள் வரைக்கும் காய்த்து

ஆடுகள், மாடுகள் பன்றிகள் மேய்த்து

சமவெளி உழைப்பினில் உயிர்மெய் வியர்த்து

உழைக்கும் மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தில்

ஒன்று கலந்து வளர்ந்த தமிழே! தலைமுறைக் குரலே!

பிழைப்புமொழி பேசாத உழைப்புத் தினவே!

உயிர் உறை கனவே! பரம்பரை உழைப்பே!

பாட்டாளி வர்க்க விடுதலை அழகாய் விளங்கிடு தமிழே!


(25.7.2006, 26.7.2006 நாட்களில் தஞ்சாவூர், திருச்சியில்

""நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாய் இல்லை!''

எனும் தலைப்பில் நடைபெற்ற கவியரங்கில் வாசித்த கவிதை)



நாங்கள் சும்மா இருந்தாலும்

நாடு விடுவதாயில்லை...


எழுதுவதால் மட்டுமல்ல

கவிதை வாழ்வதாலும் வந்து சேரும்

எல்லோர்க்கும் ஒருசமயம்

கவிதையாய் வாய்க்கும்.



அடிக்கும் அனலும் தணலும்

நொடிக்குள்மாறி கருத்துருவாக்கும் மேகம்

மண்ணைக் கிளப்பி குளிரும், இலைகள் நடுக்கும்.

அந்த இலைகளில் சிக்கிய காற்று உளறும்

அந்தக் காற்றில், கால் இடறி விழும் தூறல்.

சேர்ந்த சிறகினை

அலகினால் கோதிக் கோதி

நிறம்பிரித்து சிலிர்க்கும் பறவைகள்.

நனையும் குட்டிகளை தன் உடற்சூட்டில்

அணையக் கற்றுத்தரும் ஆடுகள்

பார்க்கும் யார்க்கும்

நனைந்த கவிதை அது!



சக்கரத்தைச் சுற்றி

சூடாக்கி, சூடாக்கி

இரும்புக்குள் மறைந்திருக்கும் நீரை

இறுக வைத்து

விரும்பும் அரிவாள்

வெந்து வரும் நெருப்பழகாய்.

எனக்கு வேலையென்ன?

எனும் கேள்விக்குறியாய்.

சிவந்து நிற்கும் வேளை

தீயின் கவிதை அது! உழைப்பின் செய்யுள் அது!



திமிறும் கடலை இரைக்க வைத்து

உப்புக் காற்றை உலர வைத்து

தப்பும் மீன்களை தசைகளில் வளைத்து

களைத்த சூரியனைப் பின்னுக்குத் தள்ளி

கட்டுமரங்கள் முன்னேறும்.

பரதவர் உழைப்புக்கு

ஈடுகொடுக்க முடியாமல்

நுரை தள்ளும் கடல்புறத்தைக்

காணும் யார்க்கும்

அது வலைகளில் பின்னிய கவிதைகள்!



தசைகளின் உணர்ச்சியை

வாங்கி, வாங்கி

தறிக்கட்டைகளும் தடக் புடக் எனப்

பேசிப் பார்க்கும்.

நெய்திடும் புடவை மட்டுமா?

செய்திடும் கடுமையில்

கைத்தறிச் சூட்டை வாங்கிக் கண்களும் சிவக்கும்.



நுண்ணிய கனவுகள்

நூற்கும் விரல்கள்

கருவினில் இருக்கும் பிள்ளையும்

கால், கை அசைத்து

உயிர் பின்னிடும் கர்ப்ப வெப்பத்தில்

தோற்கும் நூல்கள்

வேலையின்றி சுற்றி வரும் காற்று

வெட்கப்பட்டு

தன் அம்மணம் மறைக்க

நூல்களிடையே நுழையும்

பார்க்கும் யார்க்கும்

நரம்புகள் பின்னிய கவிதை அது!



கருக்கரிவாளின் சுனை பார்த்து

ஓடி ஒளியும் கருக்கல் நிலவு.

உழவனின் காலில் மிதிபட்டு

தூக்கம் கலையும் வாய்க்கால்.

வீசும் கைகளின் வெப்பத்தில்

விலகிக் கொள்ளும் பின்பனி

அடடா! அறுக்கும் அந்நேரம்

உழவன் படைப்பு அது! கவிதை அறுப்பு அது!



தேடித்துளைக்கும் இரசாயனக் குண்டுகள்

தெருவில் சாவின் நகம் பதிக்கும்

இராணுவ வண்டிகள்.

மணல் மூட்டைகளுக்குப் பின்னே

மறைந்திருக்கும்

நவீன ஆயுதங்கள், காலாவதியான இதயங்கள்.

ராடார் வைத்து வேவு பார்க்கும் சாவு.

வாடா! அமெரிக்க நாயே! என்று

வீதியில் செருப்புடன் நிற்கும்

ஈராக் பிஞ்சுகள்.

அந்தச் செருப்புகள்

உணர்ச்சிக் கவிதைகள்!



வறுமையின் கொடுமை எது?

மனிதன் தன் மனித உணர்வுகளை இழப்பது.

மார்க்சோ, மேலும் மேலும் மனிதரானார்

அகதிவாழ்வில் பிள்ளைகள் இரண்டை பறிகொடுத்தும்

தன் ஆடைகளைக் கூட அடகு வைத்தும்

உயரிய சமூகம் படைப்பதிலேயே

அவர் உயிரின் ஆசை திமிறியது.



முடிவிலாத் துயரின், வலிகளை வாங்கி

மூலதன வீக்கத்தை உலகுக்குக் காட்டினார்.

பதுக்கி வைத்திருக்கும்

முதலாளித்துவத்தின் இரக்கமற்ற ஆன்மாவை

விரட்டிப் பிடித்து நிர்வாணமாக்கியது

மார்க்சின் சுருட்டுப் புகை.

அதனால் ஆவிகள் அம்மணமாகவே அலைகின்றன.

மார்க்சும், ஜென்னியும், ஏங்கெல்சும்

லெனினும், ஸ்டாலினும், மாவோவும்

வாழ்ந்த வாழ்வை

உணரும் யார்க்கும்

அது கவிதையாய் இருக்கும்!



தன்னைப் பற்றியே நினைத்து நினைத்து

தன் நிழலும் இடறும் கால்கள் உண்டு

காதல் சுகமே கடைசியில் கடைசி என

சுயநலம் வியர்க்கும் தோல்கள் உண்டு,

என் நரம்பும், தசையும்

எலும்பும், தோலும்

இரத்தமெல்லாம் அலைந்து

நான் விரும்பும் ஒரு சுகம்

நாட்டு விடுதலை தவிர வேறில்லை

என்று எங்கள் பகத்சிங் போல யாருண்டு?

தொண்டைக் குழியை

தூக்குக் கயிறு நெறித்த போதும்

என் விடுதலைத் தாகம் விடமாட்டேன்!

வெள்ளை அசிங்கமே! உனக்கு

என் விழிகளின் ஈரமும் தரமாட்டேன்!

என சிலிர்த்த முகத்துடன் செத்தானே?!

கண்டு கண்டு

மரணம் பயந்து போன கவிதை அது!



இன்றோ

எங்கள் நீர்நிலை நிறைந்த

கவிதைகள் காணோம்.

எங்கள் வயல்வெளி வரைந்த

ஓவியம் காணோம்.

நதிகள் சொன்ன கதைகள் இல்லை!

காற்றில் தூவிய உணர்வுகள் இல்லை!

எங்கள் தருக்கள் தந்த கருக்கள் காணோம்.

பறிபோனது எங்கள் இயற்கையம், நாடும்

எழுதத் தூண்டும் இயற்கை இன்றி

இயங்கத் தூண்டும் இயக்கம் இன்றி

கவிதை செய்வது கடினம்! கடினம்!



பஞ்சபூதங்களின்

பௌதீக வடிவம் நாம்.

பரிணாமத்தின்

உயிரியல் கவிதை நாம்.

நாம் நீராலானவர்கள்

நம் நீரை உயிர்ப்போம்.

நாம் நிலத்தாலானவர்கள்

நம் நிலத்தை விதைப்போம்.

நாம் நெருப்பாலானவர்கள்

நம் தீயை வளர்ப்போம்!

உயிர் அத்தனையும் உசுப்பி விடும்

காற்றின் உணர்வு

நம் கவிதையில் தொடங்கும்

நாம் சும்மாயிருக்க முடியாது

ஏனெனில்

நாம் காற்றால் ஆனவர்கள்!

எதுவும் சும்மாயில்லை இயற்கையில்



கரைகள் சும்மா இருந்தாலும்

அலைகள் விடுவதாயில்லை

போய் விவாதிக்க அழைக்கிறது.



பூக்கள் மூடிக்கொண்டாலும்

காற்று விடுவதாய் இல்லை

போய் பேசச்சொல்லி அவிழ்க்கிறது



நதிகள் ஒதுங்கிப் போனாலும்

வயல்கள் விடுகிறதா?

போய்வாய்க்கால் வழியே இழுக்கிறது.



தண்ணீர் நாக்கால்

உயிரொலி எழுப்பி

மலைகளின் மவுனம்

அருவிகள் கலைக்கும்.

அசைந்து கொடுக்காத

மண்ணின் பிடிவாதம் எங்கும்

மரங்கள்

தன் வேர்களை இறக்கும்.



நிலம் சும்மா இருந்தாலும்

மழை விடுகிறதா?

வீழும் துளிகளின் விமர்சனத்தால்

மேடு, பள்ளங்கள் காட்டி நிற்கும்.

புல்லின் நுனியிலும் போய் எழுதி

புதிய கவிதைகள் பனித்திருக்கும்.



சாரல் காற்றோ

மறைப்பினை விலக்கி

பதுங்கிய முகங்களை

பரிகசிக்கும்.

காரிருளின் கர்வத்தை

மின்னல் உதடுகள் எச்சரிக்கும்.

ஊரைவிட்டு ஒதுங்கி

தான்மட்டும் தனியே

பத்திரமாய் இருப்பதாய்

கற்பனையில் இருக்கும்

ஒற்றைப் பனையின் தலையில்

வந்து விழும் இடி.



அட! தண்ணீரும் தரையும்

தான் பாட்டுக்கு கிடந்தாலும்

அடியில் சும்மா இருக்குதா

இந்தப் பாறைகள்.

தாங்கொணா அழுத்தத்தில்

தான் நகர்ந்து

நீங்கொணா துயரத்தில்

நிலமெல்லாம் அதிர்வுகள்

சும்மா இருக்குதோ! எதுவும்

சுற்றிலும் பார்க்கிறேன்...



சிறகுகள் விரித்து காற்றினை முறித்து

திசைகளை வளைக்கும் பறவைகள்



கிளைகளை உரசி சிறுபொறி எழுப்பி

தீப்பழம் காய்க்கும் காடுகள்.



நீரைக்கிழிக்க நீளும் கூரிய கற்களை

கூழாங்கற்களாய்க் குலைத்துவிடும்

ஓடைகளின் முன்முயற்சி.



ஊமத்தம் இலைகளைப் பேசவைக்க

போராடும் பருவக்காற்று.



வரப்புகளைத் தாண்டிக் குதித்து

வாழத் துடிக்கும் குரவை. (மீன்)



புவியீர்ப்பு விசைக்குப் பொருத்தமாக

சிறகுகள் நீட்டி

காற்றின் மீது கால்களை ஊன்றி

கதிர்களைக் கொத்தும்

குருவியின் விடாப்பிடி



குளத்தில் விழுந்த நிலவை

இரவு முழுக்க எடுக்கப் பாய்ந்து

மேலும், கீழும்

தவித்துப் போகும் தவளைகள்.



இப்படி இயங்கியபடியே

ஒன்றுடன் ஒன்றாய்

நட்பும், முரணுமாய்

சும்மா இல்லாத சுழலின் அழகை

விலங்குகள் கூட விளங்கிக் கொண்டதாய்

இயற்கைக் காட்சிகள்

எடுத்துக் காட்டும்.

மனிதர்கள் நாம் உணர முடியாதா?



சும்மா இருப்பதே சுகம் என்று சொல்லும்

துறவிகளாவது சும்மா இருந்தானா?

மக்களின் மனங்களை கழிப்பறையாக்கி

முக்கியமானது மதமென்று

மூளைக்கு, மூளை முக்கி வைத்தான்.



ஏட்டு முதல் எஸ்.பி. வரை

ஜெயேந்திரன் முதல் அய்யப்பன் வரை

சும்மா இருக்கிறானா?

அப்பாவி பக்தனுக்கு

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை

ஆலயத்தின் தந்திரிக்கோ

விபச்சார விடுதியில் கட்டில், மெத்தை.

அடைக்கலம் தேடிப் போகும் பெண்களின்

உடல் சுகம் பற்றியே

ஒவ்வொருத்தனுக்கும் புலன் ஆய்வு.

சுற்றித் திரியும் ரவுடிகளின்

கும்பலை விடவும் பயங்கரமானது,

பற்றற்றிருப்பதாய்ச் சொல்லும்

துறவிகளின் தனிமை.

வேண்டுமானால்

எட்டிப்பாருங்கள் காஞ்சிபுரத்தை

தோண்டிப் பாருங்கள்

ஆதீனங்களின் மடத்தை.



சும்மா இருந்ததா அகிம்சை?

வெள்ளையனின் ஆயுதங்களை விடவும்

கொடூரமானது

காந்தியின் புன்னகை.

வேண்டுமானால்

உற்றுப் பாருங்கள் அம்பேத்கரின் எழுத்தை

தொட்டுப் பாருங்கள்

பகத்சிங்கின் கழுத்தை.



சும்மா இருக்குதா பார்ப்பன மதம்?

தர்ப்பை புற்கள்தானே

என்று விட்டு வைத்தோம்

அதுவோ! ஆடுகளை மட்டுமல்ல

நிலத்தையும் சேர்த்தே மேய்கிறது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்றால்

பிராமண வாயு

பிராண வாயுவை பழிக்கிறது.



சுரப்பற்றுப் போன காவிரி

கரப்பற்றுப் போன மாடுகள்

கோவில் நந்திக்குப் பால் அபிசேகம்



வரப்பற்றுப் போன வயல்கள் பசியில்

உறுப்பற்றுப் போன உடல்கள்

கண்டுகொள்ள ஆளின்றி

காய்கிறது தேசம்,

கையில் பாலும் அருகம்புல்லும்

இறைப்பற்று காட்ட

தெருவுக்கு தெரு பிரதோசம்



தாளிக்க எண்ணெயில்லை

சாமிக்கு ஆயில் மசாஜ்.

நம் சுயமரியாதையில் புல் முளைக்க,

சும்மா இருக்குதா பார்ப்பனியம்?



சும்மா இருக்குதா முதலாளித்துவம்?

தக்காளியை அழுகவைத்து

தற்கொலைக்கு விலையை வைத்து

தறியின் தக்களியை நிற்க வைத்து

நெசவாளி கிட்னிகளை விற்க வைத்து

வேலைக்கு ஏங்கும் இதயத்தை

கூலிக்குப் பிழிந்தெடுக்கும்.



வயிற்றுக்குள் வளரும் கருவையும்

வாட்டும் வேலைப்பளுவால்

வழித்தெடுக்கும் மூலதனம்.

சூளைக்குள் செங்கல்லாய்

சுடுகின்ற மனசெடுத்து சொல்லுங்கள்

சும்மா இருக்குதா முதலாளித்துவம்?



சிவகாசி சிவனே என்று இருந்தாலும்

ஐ.டி.சி. சும்மா இருக்கிறானா?

இந்திய உற்பத்தியை கருக்கும் வரை

எங்கள் கந்தகவெறி அடங்காதென

பன்னாட்டு தீக்குச்சிகள்

பசியெடுத்து அலைகின்றன.



உள்ளூர் உதடுகளை

விரட்டிப்பிடித்து சுரணை பொசுக்கும்

வெளிநாட்டு சிகரெட்டுகள்.



குடிப்பவன் கோலி சோடா கேட்டாலும்

கொக்கோ கோலா சும்மா இருக்கிறானா?

இந்திய நாக்குகளை நனைக்க

அமெரிக்க மூத்திரத்திற்கே அதிகாரம்.

இந்தியன் தாகத்தைக் குடிக்க

பெப்சிகாரனுக்கே பிரம்மதேயம்.



தறிகெட்ட

அனல்வாதம், புனல்வாதத்தால்

சமணர்களையும், பவுத்தர்களையும்

போட்டுத்தள்ளியது பார்ப்பனியம்.



தாராளமயத்தின் புனல்வாதத்தால்

சகலரையும் போட்டுத் தள்ளுகிறது

உலகமயம்.



சிலிண்டரில் மூச்சுவிட்டு

வெடிக்கும் பாட்டிலில் உதடு கிழிந்து

இரத்தத்தில் எசன்சு கலக்கும்

உழைப்பின் தீவிரத்தை

உங்களால் உணரமுடியுமா?

மிதிவண்டியின் இருக்கை தவிர்த்து

மிச்ச இடமெல்லாம்

திரவ உணர்ச்சிகளால்

கனக்கும் பாட்டில்கள்.

வீசும் எதிர்காற்றில்

விலா எலும்பும் வளையும்,

போக்ஸ் கம்பிகளாவது தப்பிக்கும்

போராடும் கால்களில்

வேரோடு பிடுங்கி வருவதுபோல்

பின் நரம்புகள் வளைந்து நெளியும்

அழுத்தம் தாங்காமல்

அடிவயிற்றிலிருந்து தப்பிக்கும் காற்று

வாயில் அலறும்.

மிதிக்கும் உள்ளூர் சோடா கம்பெனி தொழிலாளியே

கொதிக்கும் உன் குருதி தொட்டுச் சொல்

சும்மா இருக்கிறானா கொக்கோ கோலா?



கடன்காரர்களுக்குப் பயந்து

வழியை மாற்றி நடந்தாலும்

சும்மா இருக்கிறாரா அப்துல்கலாம்?

நிலைமை புரியாமல் வழியை மறித்து

கனவு காணுங்கள்! கனவு காணுங்கள்! என்கிறார்.

பாராளுமன்ற சுள்ளான்கள்

படுத்தும் பாட்டில்

படுத்து தூங்கவே வழியில்லை

கனவுகள் எங்கே காண்பது?

பகலையும் வாங்கலாம்

இரவையும் வாங்கலாம்

வேண்டிய கனவுகளை

விழிகளுக்கு வெளியே காணலாம்.

குஜராத் பிணங்களை கண்களில் புதைக்கலாம்

மண்டை ஓடுகள் கண்டு களிக்கலாம்

அதுக்கெல்லாம் கலாம்.

இரண்டு விழிகளில் இரண்டு கனவு

வர்க்கத்திற்கேற்ப வந்திடும் இரவு.

பிட்சா கார்னரில் நக்கி

மம்மி டாடியில் கக்கி

நைக்கியில் நடந்து கணினியில் விளையாடி

கடைசிவரை

இந்த மண்ணில் கால்படாமலேயே

சாண்ட்ரோவில் ஐ.ஐ.டி நுழைந்து

அப்படியே அமெரிக்க சத்யத்தில் கலந்து

ஏ.சி.யில் உறையும்

காம்ப்ளான் பேபியின் கனவுகள்.



இன்னொன்று:

நீராகõரத்தில் முகம் பார்த்து

நெடுந்தூரப் பள்ளிக்காக

தார்ச்சாலையில் கால் தோல் உரியும்.

வேகவேகமாய்

விறகொடித்துப் பழகிய கைகள்

நிறுத்தி பொறுமையாய்

ஆனா, ஆவன்னா லேசில்

வளைக்க வராமல் அடிவாங்கும்.

வழுக்கும் சிலேட்டை மாற்ற வழியின்றி அது

கறுக்கும் கையாந்தரையாலும், கரித்தூளாலும்.

நடக்கும் களைப்பில் படிக்க விடாமல்

விழிகளை தூக்கம் அரிக்கும்.

குடிக்கலாம் இரத்தமென நம்பி வந்த மூட்டைப்பூச்சி

பையனிடம் கிடைக்காமல் பாயில் கிடந்து துடிக்கும்.

பள்ளிக்குப் போகும் பைபாஸ் சாலையில்

பேருந்து சக்கரத்தில் மாட்டி

பிய்ந்து போன நண்பன்

கழண்டு விழும் காக்கிக் கால்சராயுடன் வந்து

கனவில் வீட்டுப் பாட நோட்டுக் கேட்க

பீதியில் உறைந்து அலறும்

பால்வாடிக் கனவுகள்.



எங்களால் தூங்க முடியவில்லை

கனவிலும் துரத்தும் பிணங்கள்!

எங்களால் விழிக்க முடியவில்லை

நினைவுகள் அறுக்கும் ரணங்கள்!

நாம் ஒதுங்கிப் போனாலும்

நாடு விடுவதாயில்லை

வர்க்கத்தை குறிவைத்து மறுகாலனியாதிக்கம்

வாழ்வை வழி மறிக்கையிலே

வெட்கத்தை விட்டு நாம் விலகி நடக்கலாமா?

இருக்கிறார்கள் சிலர்

சமூகத்தில் இருந்துகொண்டே

இதில் சம்மந்தம் இல்லை என்று.

இவர்கள் தன் வீடு எரிந்தால்

தன்னை மட்டும் அழைக்காமல்

தஞ்சாவூரையே அழைப்பார்கள்.

சாலையில் நகம் பெயர்ந்தால்

தன்னைத் திட்டாமல்

திருச்சியையே திட்டுவார்கள்.

உரைப்பவர்களும் உண்டு!

ஊருக்குப் பிரச்சினை என்றால்

உனக்கேன் வியர்த்து வடிகிறது?

உரைப்பவர்களும் உண்டு.

உண்மைதான்

பிணங்களுக்கு வேர்ப்பதில்லை.

பொதுநலத்திற்காக வாழ்ந்தவர் பிணத்திலும்

புழுக்கள் உணர்ச்சி தேடும்.

சுயநலத்தில் வாழ்ந்தவன் முகத்தை

மலத்தில் மொய்க்கும் ஈக்களும்

வெறுத்து ஓடும்.



சுயநலமா? பொது நலமா?

எந்த முகம்? உங்கள் சொந்த முகம்?

தெரிவு செய்யும் காலமிது!

சொந்த முகம் காண்பதற்கு

உதவி செய்யும் கவிதை இது.



எல்லாத் திசையிலும்

இனப்பெருக்க பாடல்கள்

வழிநெடுக வன்புணர்ச்சிக் கவிஞர்கள்.

படிக்காசுப் புலவர்களை

வழிநடத்தும் காலச்சுவடுகள்.

சீட்டுக்கவிகளுக்கு ரூட்டுக் கொடுக்கும்

உயிர்மைகள்,

குலைக்கும் நாய்களும்

குலை நடுங்கி ஓடும் இப்படி எழுதிப்

பிழைக்கும் நாய்களை

எதிரில் பார்த்தால்.

உணர்ச்சிகளை சுரண்டுவதைவிட

மோசமான சுரண்டல் உண்டா?

இலக்கியத்திலும் இந்த

இழிவான சுரண்டலை எதிர்ப்போம்.

கவிஞர்கள் என்பதால் மட்டுமல்ல

உழைக்கும் மக்களின் உறவுகள் என்பதால்

உங்களுடன் பேச வந்தோம்.



ஏட்டிலடங்காத கருத்துக்கள் நாங்கள்

எழுத்திலடங்காத உணர்ச்சிகள் நாங்கள்

வீட்டுக்கடங்காத சுயநலம் நாங்கள்

சும்மா இருப்போமா?

அம்மாவின் வயிற்றிலும்

சும்மா இல்லாதவர்கள் நாங்கள்,

இரத்தக்கனவினில் மெல்ல வளர்ந்து

இருட்டின் இமைகளை

எட்டி உதைத்து

வெளிச்சம் பார்க்க வெளியே வந்தவர்கள் நாங்கள்

நாடே இருட்டிக் கிடக்கையிலே

நாங்கள் சும்மா இருப்போமா?

பாட வாருங்கள் கவிஞர்களே!

பகலைப் பொழியும் கவிதைகளே



புல்லறுத்துப் பள்ளிக்குப் போய் பின்

நெல்லறுத்துக் கல்லூரிக்குப் போய்

விடுமுறையில்

கல்லறுத்து, மரமறுத்து கல்விப்

பசியறுக்கப் போராடி எங்கள்

பிறப்பறுத்து பின்தள்ளிய சமூகமே

இடம் ஒதுக்கு உயிர் கல்விக்கு

எனக் கேட்டால்?

செருப்புத் தைக்கும் கைகளுக்கு

படிப்பு ஒரு கேடா? என "சூ' துடைத்துக் காட்டி

சொல்லறுக்கும் பார்ப்பனக் கொழுப்பை

கருவறுத்து வீசாமல்

சும்மாயிருக்க முடியுமா?



உங்கள் செருப்பைத் தைத்ததனால்

பிறப்பொதுக்கி வெளியில் வைத்தீர்.

உங்கள் மயிரைச் சிரைத்ததனால்

நாங்கள் மட்டமான சாதியானோம்.

உங்கள் துணிகளை வெளுத்ததனால்

நாங்கள் அழுக்குப்பட்ட வம்சமானோம்

உண்மைதான்

சாதியில் புழுத்த

உங்கள் பிணத்தைத் தொட்டதனால்

தீட்டாய் போனோம்.

எதிர்த்துக் கேட்டவனுக்கு

வாயில் திணிக்கப்பட்டது மலம்

எதிர்க்காதவன் உடம்பிலோ

இரத்தமெல்லாம் மலம்.



மாட்டுத் தோலை உரிப்பவர்

சக்கிலி

மனிதத் தோலை உரிப்பவன்

சங்கராச்சாரியா?

சாதிவெறியன் சங்கமாய் இருக்கையில்

நீதி கேட்பவன் நீ மட்டும் அமைப்பின்றி

சும்மா இருக்க முடியுமா?



சிறீராமன் பெயரால்

எல்லாமும் நடக்கிறது.

இராமன் பிறந்த இடத்துக்காக

இசுலாமியப் பெண்களின்

பிறப்புறுப்புகள் வரை சொந்தம் கொண்டாடின

திரிசூலங்கள்.

அவர்கள் பெண்கள் என்பதற்காக அல்ல

இசுலாமியர்கள் என்பதற்காக

கற்பழிக்கப்பட்டார்கள்.

குழந்தைகளின் சிரிப்பை

உங்களால் கொளுத்த முடியுமா?

மழலைகள் உதடுகளையும்

கிழித்துப்போட்டன இராமஜெயங்கள்.

கருவுக்குள்ளும்

கட்டாரி வீசும் பார்ப்பன மதவெறி

தெருவுக்கு வந்து போராடாமல்

சும்மா இருக்க முடியுமா?



மதம் மாறி காதலித்ததற்காக

ஏழை முசுலீம் பெண்ணை

இழுத்துவைத்து மொட்டையடிக்கும்

முசுலீம் மதவெறி.

எரிக்கிறது பாலஸ்தீனத்தையும், லெபனானையும்.

ஈராக்கியப் பெண்களை இழுத்துவைத்து

சதைவெறியில் கிழிக்கிறது அமெரிக்கா!

அவனுக்கு மதம் மாறி எண்ணெய் விற்று தன்னை விற்று

செழிக்கிறது சேக்குகளின் மணிமுடி.

இனத்துரோக சேக்குகளின்

மயிரைப் புடுங்க மாட்டாமல்

பள்ளிவாசல் கட்ட அவனிடமே

பணம் புடுங்கும் வக்கிரங்கள்.

எல்லாமும் நடக்கிறது

அல்லாவின் திருப்பெயரால்.

ஐந்து வேளை தொழுக

பள்ளிவாசலுக்கு வா!

ஐந்து வட்டிக்கு பணம் வாங்க

பைனான்சுக்கு வா!

ஆயிரமாயிரமாய் சூதாட

பங்குச் சந்தைக்கு வா!

எல்லாமும் நடக்கிறது

அல்லாவின் திருப்பெயரால்

ஏழை வர்க்கத்தை

மதத்தின் பெயரால் ஏறி மிதிப்பதை

எதிர்க்க வர்க்க மார்க்கம் சேராமல்

ஒரு "மார்க்கமாய்' ஒதுங்க முடியுமா?



பல வழிகளிலும் பணம் வருவதால்

பளிங்கு மண்டபத்திலிருக்கும்

அவளுக்கென்ன?

எப்போதும் ஆரோக்ய மாதாதான்.



பருக்கைக்கு வழியின்றி

வாசலில் பிச்சையெடுக்கும்

இவர்கள்தான்

குட்டங்குளி மாதா

டி.பி. மாதா



ஏசுவின் அப்பத்தைத் தவிர

அவர்களுக்கு

எதிலும் பங்கில்லை.



எதிர்த்துக் கேட்டால்

பாவத்தின் சம்பளம்

கட்டாயம் உண்டு.



சிலுவை செய்த செலவையும்

பங்குத் தந்தைகள்

ஏசுவின் கணக்கிலேயே எழுதி விடுவதால்

மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த ஏசு

மூர்ச்சையாகிப் போனார்.

பாருங்கள்! ஆலயத்தில் அவர் கிடக்கும் பாவனையை.

பரிசுத்த ஆவிகளும்

அணி, அணியாய் சேருகையில்

பார்த்துக் கொண்டு தனியுடம்பாய்

நாம் மட்டும் சும்மா இருக்க முடியுமா?



இரண்டாயிரத்தில் ஏசு வரப்போகிறார்

இது கிறிஸ்தவப் பிரச்சாரம்

இரண்டாயிரத்து இருபதில்

இந்தியா வல்லரசாகப் போகிறது

இது கிருத்துருவப் பிரச்சாரம்.

நல்லரிசி கொடுக்கவே வக்கில்லை

இந்தியா வல்லரசாகப் போகுதாம்

சில ஊரில் ரேசன் அரிசியில் வடித்த சோற்றை

நாய்களும் தின்ன மறுக்குது

அதைக் கழனிப் பானையில் போட்டால்

மாடும் மனிதனை வெறுக்குது

எடுத்துக் குப்பையில் போட்டால்

குடும்பத்தையே கோழி முறைக்குது

கோழிகளே கோபித்துக் கொள்ளாதீர்கள்

2020இல் இந்தியா வல்லரசாகிவிடும்.



கிட்டிவைத்து எலிகளைப் பிடிக்கிறான்

கீழத்தஞ்சை விவசாயி

வயல்களைக் காக்க அல்ல

வயிற்றுப் பசியைப் போக்கிக் கொள்ள

எலிகளே எங்கள் அரசியலை நோண்டாமல்

இரைப்பையில் காத்திருங்கள்

இந்தியா வல்லரசாகப் போகிறது!



விளைவித்த வெங்காயம்

விலைபோகாமல்

அழுகிப் போகும் அவலம் தாங்காமல்

நிலைகுலைந்து சாகும் சிறுவிவசாயி

அழுகும் பிணங்களே மிச்சமிருங்கள்

2020இல் இந்தியா வல்லரசாகப் போகிறது!



கம்பி வளைக்க நகரத்துக்கு வந்து

கட்டிட, உச்சியிலிருந்து கீழே விழுந்து

சாக்குமூட்டையில் ஒரு பிணம்.

சாவதற்கு முன் ஏதோ சொல்ல வந்ததாய்

எஞ்சியிருக்கும் அதன் விழிகளில் மட்டும்

ஏதோ ஜாடை தெரியுது

குறிப்பறிந்தவர்களே கொஞ்சம் இருங்கள்!

இந்தியா வல்லரசாகப் போகுது!



பார்க்க முடியாத கொடுமைகளால்

ஏசுவே எட்டி ஓடினாலும்

பாவிகளை இரட்சிக்க

ப.சிதம்பரம் இருக்கிறார்.

நல்லவர்களே உங்களுக்கு

நக்சல்பாரிகளை விட்டால்

வேறு வழியில்லை.



பயங்கரம் எது?

பாட்டி சொன்ன கதைகளில் வரும்

பேய்களின் அலறல்களா?

இல்லை

நாட்டில் நடக்கும் கொடுமைகள் கண்டும்

சும்மா இருப்பவர்களின் மௌனங்களே!



ஆபத்து எது?

அம்மா சொன்ன கதைகளில்

நம் சோற்றைப் புடுங்க வரும்

அஞ்சு கண்ணர்களா?

இல்லை

நம் நாட்டையே புடுங்க வரும்

தனியார்மயம் தாராளமயம் உலகமயம்

எனும்

பன்னாட்டுக் கம்பெனிகளின்

மூன்று கண்ணர்களே!



பார்த்துக் கொண்டு

சும்மாயிருக்க முடியுமா?

மீன்வலையைக் காயப்போட்டால்

கடற்கரைகள் நாறுதாம்

மீனவர்களை விரட்டிவிட்டு

தனது ஆணுறைகளை

அவிழ்த்துப் போடுது தாஜ் ஓட்டல்.

நமது இறையாண்மையின் முகத்தில்

வீசப்படும் ஆணுறைகளை

எதிர்த்துப் போராடாமல்

நாம் கடலின் முகத்தில் முழிக்க முடியுமா?



பல்லுயிர்க்கெல்லாம் தாய்போல

பரிந்து ஓடும் எங்கள் தõமிரவருணி.

பக்கத்தில் தாகம் கொண்டு அலையும்

கங்கைகொண்டான் கழனி.

ஊர்போய்ச் சேர

கரையேரத் துடித்து

தவிக்குது ஆறு

நம் தாய்முகம் தழுவிய ஆறு இது

அதைத் தட்டிப் பறிக்கும் அநியாயம் பாரு!

கூசாமல் குழாயில் உறிஞ்சி

காசுக்கு விற்கும் கொக்கோ கோலா

நம் தாயின் மார்பை உறிஞ்சுபவனை

உதைத்து விரட்ட பதைத்து வராமல்

சும்மாயிருக்க முடியுமா?



எங்களுக்கு கொக்கோ கோலா வேண்டாம்

ஆற்றைக் கொடு!

எங்களுக்கு வலைகள் வேண்டாம்

கடலைக் கொடு!

எங்களுக்கு இலவச அரிசி வேண்டாம்

விவசாயத்தை கொடு!

எங்களுக்கு விபூதி வேண்டாம்

கருவறை கொடு!

எங்களுக்கு தரிசனம் வேண்டாம்

தில்லைக் "கோயில்' கொடு!

சொர்க்க வாசல் வேண்டாம்

சிறீரங்கம் கொடு!

எங்களுக்கு சலுகைகள் வேண்டாம்

அதிகாரம் கொடு!



சும்மாயிருக்க மாட்டோம் நாம்!

சுவாசம் நமக்கு உயிர்ப்பழக்கம்

அதுபோல் சும்மாயின்றி

இயக்கம் இருந்தாலே

யார்க்கும் உயிர் இருக்கும்



கலைஞன், விவசாயி, தொழிலாளி

மாணவன், நெசவாளி, அறிவாளி

அனைவர்க்கும் பொது எதிரி

நாடு நமதல்ல எனப்

பழிக்கும் பன்னாட்டுக் கம்பெனி



போராடும் உழைக்கும் மக்கள்

ஏற்கெனவே வீதியிலே

அவர்கள் தோளோடு தோள் நிற்க

முன்செல்வோம் கவிதைகளே!



எத்தனை பேர் நம்மை நம்பி

ஒப்படைத்த கனவு இது

எத்தனை பேர் நம்மை நம்பி

கொடுத்துச் சென்ற உணர்ச்சி இது.



கண்கள் உறங்கலாம்

இரத்தம் உறங்குமோ!

அளவுக்கதிகமாகவே சிந்திய இரத்தம்

இனி புரட்சிக்கும் குறைவாக

வேறெதை விரும்பும்?

முன்னோர்கள் கனவுகள்

நம் எல்லோர் கவிதையிலும்

முன்னோர்கள் துடிப்புகள்

நம் எல்லோர் இதயத்திலும்

கவிதை

எழுதிக் காட்டுவது மட்டுமல்ல

இயங்கிக் காட்டுவோம்.





(29.9.2006 அன்று தருமபுரி பெண்ணாகரத்தில் நடைபெற்ற பகத்சிங் 100ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில்,

கவியரங்கத்தில் வாசிக்கப்பட்ட கவிதை)



பகத்சிங் இரத்தத்தில் ஒளியாதே!



எந்தக் கவிதை நாம் பாட?

கண்ணில் தெரியும் பூக்களையா!

காலில் குத்தும் முட்களையா?

எந்த மரபை நாம் தேட?



மாமல்லபுரத்துச் சிற்பங்கள்

தரையில் நிழல்விழா தஞ்சைக் கோவில் அற்புதங்கள்

சூளகிரி இசைத் தூண்கள்.... புடைப்புச் சிற்பங்கள்

இப்படி மூளியாய் கிடக்கும் சிலைகளுக்கும்

முன்கதை ஒன்று இருக்கிறது.

ஆனால் கூலியாய் நிலம் பெயர்ந்து

பெங்களூரிலும், கல் குவாரியிலும்

பிய்த்து எறியப்படும் உழைக்கும் மக்களின்

கல்லாய்ச் சமைந்த வாழ்க்கையை

எழுப்புவதற்கான இலக்கியம் எங்கே?

குண்டு குண்டாய் இருக்கும்

கொழுப்பேறிய இலக்கியமெல்லாம்

சுரண்டுபவனின் நக அழுக்கை அல்லவா

விண்டு வைத்து விருந்து படைக்கிறது

கண்டதுண்டா! நீங்கள் கண்டதுண்டா!

நக்சல்பாரிகளின் துண்டறிக்கைகள் அல்லவா

நமது உழைக்கும் மக்களின் குரலை

உயர்த்திப் பிடிக்கிறது

காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் அல்லவா

மறுக்கப்பட்ட நம் இலக்கியம் இருக்கிறது!



தருமபுரிக்கு

ஆருயிர் நீட்டிக்கும்

அரும்சுவை நெல்லிக்கனியை

அதியமான் அவ்வையாருக்கு கொடுத்ததா பெருமை?

மக்களின் அரசியல் வாழ்வு நீடிக்க

தம் ஆருயிரையே கொடுத்த

எங்கள் அப்பு, பாலன் தந்த

நக்சல்பாரி பாதையல்லவா பெருமை!



தருமபுரி கரும்புக்கு

சருக்கரை விழுக்காடு அதிகமாம்!

இருக்காதா பின்னே,

கணுக்கணுவாய்

இனிய பாட்டாளி வர்க்கக் கனவுகளை

வேர் இறக்கிய

நக்சல்பாரிகள் மண்ணில்

நட்ட பயிராயிற்றே!



அரசாங்கம் அழகாய் கதைவிடுகிறது

ஈரமற்ற மண்...

சாரமற்ற கலிச்சோறு...

வேலையற்ற மக்கள்...

பின்தங்கிய மாவட்டமாதலால்...

பின்தங்கிய மனநிலையினால்

மக்கள் நக்சல்பாரிகள் ஆகிவிடுகிறார்களாம்!



மடையர்களா!

வேலை இல்லாதவனா புரட்சியாளன்

வெட்டி வேலை செய்பவன் போலீஸ்காரன்.

பின்தங்கிய மனநிலையா புரட்சி?

முன்னேறிய உணர்ச்சி அல்லவா புரட்சி!

முன்னேறிய அறிவு அல்லவா புரட்சி!

முன்னேறிய உழைப்பு அல்லவா நக்சல்பாரி!



கதை முடிக்கப் பார்ப்போரே!

அது முடியாது

நாங்கள் பகத்சிங்கின் தொடர்ச்சி.



சில குழந்தைகளுக்கு

பொம்மைகள் போதும்

அழுகையை நிறுத்திக் கொள்ள

சில குழந்தைகளுக்கோ

அம்மா வேண்டும்!

கிலு கிலுப்பைகளோடு அடங்கிவிடும்

சில குழந்தைகள்.

சில குழந்தைகளுக்கோ தாயின் குரல் வேண்டும்!

வயிறு நிறைந்தால்

தூங்கிவிடும் சில பிள்ளைகள்.

சில பிள்ளைகளுக்கோ அது முடியாது

அடுத்து கதை÷வண்டும்.

அவர்களுக்குச் சொல்லுங்கள்

இந்தக் கதையை...

ஆயிரத்து தொள்ளாயிரத்து ஏழõம் ஆண்டு

செப்டம்பர் இருபத்தி எட்டாம் நாள்

ஒரு பஞ்சாப் தாயின் பிரசவ வலி

புதிய இந்தியாவையே ஈன்றெடுத்தது.

கருவறையை விடவும் இருண்டு கிடக்கும்

நாட்டின் நிலைமையை

கர்ப்ப வெப்பத்திலேயே கண்டுணர்ந்து,

தன் மேனியில் வழிவது

தாயின் இரத்தம் மட்டுமல்ல

தாய்நாட்டின் இரத்தம் என்பதை

பார்த்து, பார்த்து

அடிமைத்தனத்தின் பனிக்குடம் உடைத்து

தொப்புள் கொடியின் தாமதம் அறுத்து

பிறப்பின் கலகம்

அங்கே பகத்சிங் என்று பெயரெடுத்தது.

அடிமை இந்தியாவின் தாலாட்டில்

அடங்க மறுத்து, அழுது சிவந்து

அவன் கையும் காலும்

எல்லோர் முகத்திலும் எட்டி உதைத்தது.



வெறும் வயிற்றுப் பசிக்காக

வளர்ந்தவனாய் இருந்திருந்தால்

அம்மா... அப்பா என்று மட்டும்

அழைத்திருப்பான்.

வர்க்கப் பசியோடு வளர்ந்த பகத்சிங்

அ... ம்.... மா, அ... ப்... பா... நாடு என

விரிந்த பொருளில்

பேசத் தொடங்கினான்.



பன்னிரெண்டாம் அகவையில்

பள்ளிக்கூடத்திலிருந்து

யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல்

துள்ளியெழுந்து

ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த இடத்தை

பார்க்கப் போனான்.

அங்கே வெள்ளையன் குதறிய

இந்தியப் பிணங்களை

தன் கண்களில் விதைத்தான்.

கருகிய இரத்தம் இதயத்தில் உறைய

தன் காலத்தை வெறுத்தான்.

சிவந்து கிடக்கும் இந்தியக் கனவையும்

சிதறிக் கிடக்கும் இந்தியப் புரட்சியையும்

ஒன்று சேர்க்கும் உறுதியுடன்

கையில் அள்ளிய களத்தின் மண்ணை

தன் (சட்டைப்) பையில் திணித்தான்!



மண்ணைத் தின்று வளர்ந்தவர்களே!

உங்களில் எத்தனை பேருக்கு

இந்த மண்ணைப் பற்றிய அக்கறை உண்டு?

ணூ வெறும் வீட்டுப் பாடம் போதுமா?

பகத்சிங் போல நாட்டுப்பாடம் படித்தாலே

நல்ல புத்தி வந்து சேரும்.

இல்லையேல்

ஜாலியனாவது... பாக்காவது

அமெரிக்காவின்

கூலி என் பாக்கியம் என்று

சட்டைப் பையில் மட்டுமல்ல

சதைக்குள்ளும் அந்நிய நரகலின்

ஆணவம் ஊரும்.



பகத்சிங்கும் தான் படித்தார்!

""புரட்சி ஒன்றே என் விருப்பப் பாடம்

நாட்டுப்பற்றே உயர்நிலைக் கல்வி

கம்யூனிசமே உயிரியல் படிப்பு''

என்ற விடுதலைக் கல்வியின் வீரியத்தை

விளக்கிச் சொல்லுங்கள் பிள்ளைகளிடம்.

சுயநலம் என்ற தோல் வியாதி

உங்கள் பரம்பரைக்கே தொற்றாது.

""இளமைக்கேற்றவேலை வாய்ப்பு

இந்தியப் புரட்சியில் இருக்குது

அந்நியன் ஆதிக்கம் ஒழிப்பதிலேயே

நம் அனைவர் நலனும் பிறக்குது''

என்று பகத்சிங் சொன்ன கருத்துக்களோடு

பழக விடுங்கள் பிள்ளைகளை.

முதலாளித்துவம் எனும் கெட்ட பழக்கம்

உங்கள் வாரிசுகளுக்கே வராது.

எனக்கு மட்டுமே வாழ்வேன் என்று

இதயத்தை இழுத்து நடக்கும்

"வாதம்' அவர்களுக்கு வராது!

போராடத் தூண்டும் பகத்சிங் வாழ்வு!

பொறாமைப்பட வைக்கும் அவன் சாவு!

கரைக்கப்பட்ட பகத்சிங் சாம்பலால்

உணர்ச்சி பெற்ற சட்லெஜ் நதி இன்றோ...

சகலரையும் சந்தேகத்துடனே பார்க்கிறது.

எதுவுமே செய்ய முன்வராத

இவர்களை நம்பியா செத்தோம்

அச்சத்தில் தியாகிகள் கனவு உறைகிறது!

இவர்களை நம்பியா இருக்கிறோம்

பீதியில் இயற்கை நடுங்கித் தவிக்கிறது!



சும்மா பகத்சிங் பற்றி பேசாதே!

அவன் பேசவிரும்பியதைப் பேசு

சும்மா தியாகிகள் இரத்தத்தில் ஒளியாதே!

அவர்கள் தெரிவு செய்த பாதைக்கு

வேலை செய்ய வெளியே வா!

அழைக்கிறது புரட்சி நதி!





1.2.2007 அன்று தஞ்சாவூர் பாரத் அறிவியல் நிர்வாகவியல் கல்லூரியில் நடைபெற்ற ""கவிதை முற்றம்'' எனும் நிகழ்ச்சியில் ""உறங்காத கனவுகள்'' எனும் தலைப்பில் தலைமை தாங்கி வாசித்த கவிதை)



உறங்காத கனவுகள்



வாயும், வயிறும் வளர்த்து நிதம்

வலியப் புகழ் தேடித் திரியும் சிலர் முற்றத்திலோ

போயும் போயும் பொழிந்தோம், என

காயும் நிலவின் வான்பழி மட்டுமல்ல?

வெறும் வித்தகக் கவிஞன் என்ற வீண்பழியும்

வாரா வண்ணம்,

விளங்கட்டும் கவிமுற்றம்



நாம் வர்ணித்து காட்டுவோம் என்பதற்காக

வந்து போகவில்லை நிலவு,

விண்மீன்கள்சிணுங்கும் இரவோடு சிற்றினம் சேராமல்

சுயநலத்தில் ஒதுங்கும் போக்கோடு

ஓரிடத்தில் உறையாமல்

பொதுவில் உலகுக்கு முகம் காட்டும்

தன்னைப் போல உன்னையும் எதிர்பார்த்தே

ஒவ்வொரு நாளும் வருகிறது நிலவு!

வர்ணித்துக் காட்டாதே! வாழ்ந்து காட்டு!



கண்களால் காணும் கனவுகளை விடவும்

நீங்கள் கவிதைகளால் கண்ட கனவு தகுதியானது

ஏன் தெரியுமா?

கனவுகளில் நாம் சிந்திப்பதில்லை.

அனுபவிக்கிறோம்,

உங்கள் கவிதைகளில் (அனுபவிக்க மட்டுமல்ல)

சிந்திக்கிறோம்!



உறக்கத்தில் அமைதியாகக் கண்ட கனவையே

பலருக்கு, ஒழுங்காகச் சொல்லத் தெரிவதில்லை.

இதில் உறங்காத கனவுகளை

இந்த ஊரே சொல்லும்படி

என்னமாய்ச் சொன்னீர்கள்! நன்றி கவிஞர்களே!



உறக்கம் கிடக்கட்டும்

சிலர் விழித்துக் கொண்டிருக்கும்போதே

எதையும் விளங்கிக் கொள்வதில்லை!

பாக்கி கடன் அடைக்க முடியாமல்

குடும்பத்துடன் விவசாயி

பாலிடால் குடித்து சாவதைப் பார்த்தபிறகும்

நோக்கியா வந்ததனால்

நாடு முன்னேறிவிட்டது, என்று யாராவது சொன்னால்

ஆமாம், ஆமாம் என்று

வேகமாய் தலையாட்டும்

சில விளங்காத ஜென்மங்கள்.

இப்படியொரு சூழ்நிலையில்...

உறங்காத கனவுகளின் உணர்ச்சிகளை

நம் நரம்புகளில் ஊட்டிவிட்ட

மனிதக் கவிதைகளை

மனதாரப் பாராட்டுவோம்!

இது நிலா முற்றம்

குழந்தை தாய்க்கு சோ×ட்டுதல் போல

இங்கே குறைகளும் கூட அழகாகும்.

சிதறிய பருக்கையில் உணர்ச்சியின் பசிகள்

பவுர்ணமி முகத்தில் ஒப்பனை எதற்கு?

பசப்பாத உணர்ச்சிகளுக்கு பஜனை எதற்கு?



பொய்நேர்த்தி காட்டாத

உங்கள் செய்நேர்த்திக் கனவுகளோடு

சேர்ந்து கொள்கிறேன், நானும்...



படுத்தால் கனவு பிடுங்குதென்று

பலர் சொல்லக் கேட்டதுண்டு

படுத்துத் தூங்கினால்

விழுந்து பாம்பு புடுங்குது

விழித்து எழுந்தால்

ப.சிதம்பரம் போட்ட பட்ஜெட் புடுங்குது

பாதை தேடி, பலர் விழிகள் நடுங்குது.



சிலர் விழித்திருந்தாலோ! வில்லங்கம்

கனவு கண்டாலோ விபரீதம்

காந்தி சுதந்திரமாய் விழித்திருந்தபோது

ஆட்டுப் பால் காலியானது

அவர் கனவுகண்ட சுதந்திரத்தால்

சாணிப்பால் நம் வாயில் போனது



அம்பானிகள் கண்ட கனவில்

பி.எஸ்.என்.எல்.லின் விழிகள் பிதுங்குது

களவாடிய அரசுப் பணத்தை

கனவிலேயே கழித்துக் கொள்ளச் சொல்லி

"ரிலையன்சின் ரிங்டோன்'

தேசத்துக்கே பழுப்புக் காட்டுது.



வால்மார்ட்டின் வர்த்தகக் கனவில்

இந்தியச் சில்லறை வணிகம் செத்து மிதக்குது.

கோக்பெப்சியின் கனவு

பல குரல் வளையெங்கும் ஓடுது.

எங்கள் பட்டுப்போன வாய்க்கால் கனவு

எலி செத்து நாறுது!

கனவுகளில் வரும் அபத்தங்களைவிடவும்

சிலர் நினைவுகளில் செய்யும் அபத்தங்கள்

நீடித்த வியப்பளிக்கும்!

இரவு உணவின்றி படுக்கப் போவோர்

இந்தியாவில் இருபது சதவீதம்!

பிறப்பது பெண்பால் என்றால்

கருவினை கருக்கிடும் கள்ளிப்பால்.

மீறிப் பிறந்தாலும் ஊறாது தாய்ப்பால்.

ஊட்டச்சத்தின்றி உயிர்ப்பலிகள்.

உறுப்புகள் விற்று... பொறுப்புகள் சுமக்கும் குடும்பங்கள்.

இவ்வளவு பிணங்களும்... கண்களை மறைக்க

இதோ... இந்தியா வல்லரசாகப் போகிறது என்று

சிலர் பீதியூட்டும் அபத்தங்களை

கனவிலும் யாராவது காண முடியுமா?



கனவான்களே! கலாம்களே!

காலந்தோறும் நீங்கள் கண்ட கனவால்

கடைசியில் எங்கள் கிட்னியும்

கழண்டு போனது.

இதயமும் வறண்டு போனது.



இரவுகள் பொதுவாய் இல்லாத நாட்டில்

கனவுகள் பொதுவாய் எப்படி இருக்கும்?



ஐந்து நட்சத்திர விடுதிகளுக்கும்

பிட்சா கார்னர்களுக்கும்

இரவு சம்பாதித்துக் கொடுக்கிறது.

நடைபாதை இரவுகளோ

சில்லிடும் பனியின் கொலைக்கரத்தால்

சில ஏழைகளின் உயிரையும்

செலவு செய்து விடுகிறது.



இழவு வீட்டுக்குச் சென்று வரும் வழியில்

குளத்தின் பனிக்குள்

உறையும் நிலவைப் பார்த்து, நீரைத் தொட்டு

நடுக்கும் நடுத்தர வர்க்க இரவு

அறுக்கும் வயலின்

கொதிக்கும் சுனையுடன், உடல் சுடச் சுட

உழவன் குளத்தில் இறங்கும் வேகத்தில்

பனிக்கும் குளிர்விட்டுப் போகும்

நீரைப் பழிக்கும் உழைப்பின் வியர்வை இரவு!



தங்க நாற்கரச் சாலையில்

தடம் குலுங்காமல் விரைகின்றன.

பன்னாட்டுக் கம்பெனிகளின் கனவுகள்

கண்ட்டெய்னர், கண்ட்டெய்னராக...

எங்களூர் கப்பிச் சாலையில் கால் இடறி

தயிர் விற்பவள் தடம் புரண்டு

மண்பானைக் கனவுகள்... மண்ணாய் போகுது!

தரையும் தாரை வார்க்கப்படும் நாட்டில்

புவியீர்ப்பு விசை கூட

பொதுவாய் இருக்குமா என்ன?



இனி கனவுகள் கூட

உனக்கு உரிமை இல்லை.

கண்டமெல்லாம் அமெரிக்காவின் வசம்

வெறும் "காண்டம்' மட்டுமே

இந்திய இளமைக்கு கைவசம்.



நீ ஒரு மாணவனா?

உனது கல்விக்கான மானியத்தை

வெட்டச் சொல்லுது

உலகவங்கியின் கவுச்சிக் கனவு.

அறிவார்ந்த நம் தொழில்நுட்பக் கனவுகளை

தனது காலடியில் போடச் சொல்லி

விழிகளை உருட்டுது அமெரிக்கத் தினவு.

நீ ஒரு விவசாயியா?

உனக்கான இலவச மின்சாரம், நீர்

அனைத்தையும் நிறுத்தச் சொல்லி

உனது கண்களை பறிக்கிறது

உலக வர்த்தகக் கழகத்தின் கனவு!

மண்ணை அகழ்ந்து

நாம் புதைத்து வைத்த இரத்தக் கனவுகளை

அன்னிய டப்பா உணவில்

அடைக்கப் பார்க்குது

இனி நம் அன்னையின் கருவிலும்

அன்னிய மூலதனம்!



பழுப்பு நிலக்கரி கனவுகளுக்காக

பாதாளத்தில் மண் சரிந்து

மூடிய விழிகள் எத்தனை? எத்தனை?

வழுக்கும் கிரானைட் வார்த்து எடுக்க

உயிர் வழுக்கிச் சிதைந்த முகங்கள் எத்தனை?

பரந்து கிடக்கும் மின்சாரம், தொலைபேசி இழைகளுக்குள்ளே

இறந்து துடிக்கும் தொழிலாளர் உயிரணுக்கள்

ஒன்றா? இரண்டா?

மயங்கி விழும் உனக்கு ஒரு சோடா கொடுக்க

மைல் கணக்கில் இயங்கிடும் மிதிவண்டியே

இரும்புக் குரலில் என்னைவிட்டுவிடு

போதும் எனக் கதற

உயிர் மூச்சுக் கொடுத்து தொழிலாளி

உருவாக்கிய சந்தைகள் எத்தனை?

சத்தமில்லாமல் அத்தனையையும்

தட்டிப் பறிக்க வரும் மறுகாலனி ஆதிக்கத்தை

உங்கள் உறங்காத கனவுகள்

ஒழிக்காமல் விடுமா என்ன?

நீங்கள் மண்ணைக் கிளப்பிடும் காற்று

எதிரிகளின்

கண்ணை உறுத்தட்டும் உங்கள் கனவுகள்!



மாறாக!

இரண்டு ரூபாய் அரிசியில் கிறங்கி...

இலவச டி.வி.யில் மயங்கி...

இழிவுகளோடு உறங்கி..னால்

என்ன கனவு வரும்?

""கூட்டணி வைத்து பல பாம்புகள் துரத்தும்

நாயும் கூட கேவலம் பேசும்

பன்றிகள் பக்கத்தில் நிற்க அருவருத்து ஓடும்,

எதிர்ப்புணர்வே இல்லாததைப் பார்த்து

எறும்புகள் மண்ணை வாரித் தூற்றும்...''

இனியாவது அடிமைக்கனவைக் கலைப்போம்

விடுதலைக் கனவுகள் விதைப்போம்

கனவு காணும் மனிதர்களாக மட்டுமல்ல

கனவுகள் நம்மை காணத் துடிக்கும்...

மனிதர்களாக இருப்போம்!

தோழர் துரைசண்முகம் உரை

தோழர் துரைசண்முகம் உரை



Sunday, December 30, 2007

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...13_14.

வன்முறை வெறியனுடைய வழக்கறிஞர்



நானாவதி-ஷா ஆணையத்தின் முன்பு குஜராத் மாநில அரசாங்கத்தின் சட்ட ஆலோசகராக ஆஜராகும் அரவிந்த் பாண்ட்யா, "முஸ்லிம்களை முடமாக்குவது தான் அவர்களைக் கொல்வதை விட சிறந்தது" என தான் நம்புவதாகக் கூறினான்.

கோத்ரா சம்பவத்திறகுப் பின் குஜராத்தில் நிகழ்ந்த மனித இன படுகொலைகளில், குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி தான் கொலைகார கும்பலின் காவல் தெய்வமாக இருந்து அவர்கள் தண்டனைகளிலிருந்து தப்பி செல்ல உதவினான் என்பதை நாடு உறுதியாகவே நம்பியது. இந்நம்பிக்கையானது உறுதியான வலுவான உண்மையாக மாறுவதற்குக் காரணம், மோடியும் மற்றும் அவனுடைய கட்சியைச் சார்ந்தவர்களும் வெளிட்ட தெளிவான பேச்சுகள் மற்றும் அல்ல, மீடியாக்கள், மனித உரிமை குழுக்கள் மற்றும் தனியார் உண்மை கண்டறியும் அணிகள் என பல்வேறு தரப்பினர்கள் மோடி ஆட்சியின் மீது வைத்த பல்வேறு குற்றசாட்டுகளும் முக்கிய காரணமாகும்.

இம்மனித இனபடுகொலைகளைப் பற்றி அதிகாரபூர்வமாக விசாரணை நடத்தும் நானாவதி-ஷா ஆணையம், இப்போது சில ஆண்டுகளாக வாக்குமூலங்களை பதிவு செய்து வருகிறது. நானாவதி-ஷா ஆணையம் முன்பாக அரசாங்கத்தின் செயல்பாடுகளை நியாயபடுத்துவதற்காக நியமனம் செய்யப்படடுள்ள விஷேட அரசு தரப்பு வழக்கறிஞரான பாண்ட்யாவும் மற்ற அனைவரும் (சங்பரிவார சண்டாளர்கள்) நம்புவதைப் போன்றே, "மோடி இல்லாது இருந்திருந்தால் கோத்ரா சம்பவத்திற்காக ஹிந்துக்களால் பழிவாங்கி இருக்கமுடியாது" என்று கூறினான். பாண்ட்யா அரசு தகவல்களை இரகசியமாக பகிர்ந்து கொள்ளும் விஷயங்களில் பங்கெடுப்பதில் மட்டுமல்லாது, இந்த விஷயத்தில் (கோத்ரா சம்பவம்) மோடியின் சொந்த அபிப்பிராயத்தையும் அறியக் கூடியவனாக இருந்தான். "மோடியும் அவனது அரசாங்கமும் 2002ல் நடைபெற்ற இனபடுகொலையை ஆதரித்ததோடு அப்பாதகர்களுக்கு பின்னணியில் இருந்து முழுஉதவியும் செய்தது" என்ற குற்றசாட்டுகளிலிருந்து அவர்களை விடுவிப்பதற்காக உருவாக்கப்பட்ட வழக்கறிஞர்களின் படையை வழிநடத்தி செல்லும் பாண்ட்யா தெஹல்காவிடம் கூறியதாவது, "கலவரத்தின் போது மோடி காவல்துறையினர் ஹிந்துக்களுடன் இருக்க வேண்டும் (உதவியாக) என வாய் மொழியாக உத்தரவிட்டான்."

பாண்ட்யா கூறினான், "(கோத்ரா) சம்பவம் நடைபெறும் போது ஹிந்து அடிப்படையிலான அரசு இருந்தது. எனவே மக்களும் (காவி வெறியர்கள்) தயாராக இருந்தனர். இன்னும் மாநில(அரசு)மும் தயாராக இருந்தது... இது ஒரு மகிழச்சியான ஒருமித்த நிகழ்வாக அமைந்தது."

இந்த நிருபர் ஜுன் 6 மற்றும் 8 தேதிகளில் இருமுறை பாண்ட்யாவை சந்தித்தார். "பாஜக அல்லாத அரசாங்கம் 2002ல் இருந்திருக்குமானால், கலவரங்கள் ஒருபோதும் நடந்திருக்கவே முடியாது" என்று இவ்விரு சந்திப்பின் போதும் பாண்ட்யா மிகவும் வலியுறுத்தி கூறினான். கோத்ரா சம்பவத்திறகுப் பின் மோடி மிகவும் மனஉளைச்சல் அடைந்திருந்தான், அவனே அஹ்மதாபாத்தில் உள்ள முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியான ஜேத்புராவில் வெடிகுண்டுகளை வீசியிருக்க வேண்டும் என்னும் அளவுக்கு மனம்பாதித்தது - ஆனால் முதலமைச்சர் என்னும் அவனுடைய பதவியே அவ்வாறு செய்யவிடாமல் கட்டுபடுத்தியதாகவும் அவன் (பாண்ட்யா) கூறினான். குஜராத்தில் முஸ்லிம்கள் மொத்தமாக படுகொலை செய்யப்பட்டது "வெற்றி நாள்" என ஒவ்வொரு வருடமும் கொண்டாடப் படவேண்டும் என அவன் எண்ணியதாக பாண்ட்யா கூறினான். இன்னும் அவன் கூறியது என்னவென்றால், முஸ்லிம்களை முடமாக்குவது அவர்களை கொல்வதை விடவும் சிறந்ததாக இருந்திருக்கும். இன்னும் இது குறைந்த அளவுக்கு தண்டனையை (காவி வெறியர்களுக்கு) கொடுக்கக் கூடியது என்பதோடு மட்டுமல்லாமல், ஹிந்துக்களுக்கு எவ்வளவு வலிமையுள்ளது என்பதனை தெரியபடுத்தும் வாழும் விளம்பரமாக ஒவ்வொரு முடமான முஸ்லிமும் சேவையாற்றுவான். முஸ்லிம்களுக்கு பொருளாதாரத்தில் இழப்புகளை ஏற்படுத்தி கொடுமை செய்வதும் அவர்களை கொலை செய்வது போன்று முக்கியமானதே என்று கூறி முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பேரழிவுகளை பாண்ட்யா நியாயபடுத்தினான்.

இவை எல்லாம் மட்டுமல்ல, ஆணையம் முன்பு அரசாங்கத்தின் செயல்படுகளை நியாயபடுத்த முயற்சிப்பதோடு, வன்முறை குற்றவாளிகளுக்காக வழக்குகளையும் பாண்ட்யா வாதாடி வருகிறான். அநேகமான வழக்குகளில் நீதிபதிகள் அவர்களுடைய முழு ஒத்துழைப்பையும் இன்னும் வழிகாட்டுதல்களையும் தருவதாகவும் அவன் (பாண்ட்யா) தெஹல்காவிடம் கூறினான்.

"எல்லா நீதிபதிகளும் என்னை அவர்களுடைய ஆலோசனை மண்டபத்திற்கு அழைக்கிறார்கள். இன்னும் எனக்காக முழு அனுதாபம் காட்டுகிறார்கள்....... முழு ஒத்துழைப்பை எனக்கு தருகிறார்கள். ஆனால் சிறிது தூரத்தை என்னிடத்தில் கடைபிடிக்கிறார்கள்.... அவ்வப்போது தேவைபடும் வழிகாட்டுதல்களையும் நீதிபதிகள் தருகிறார்கள்..... எப்படி வழக்கை போடுவது; இன்னும் எந்த தேதியில்.... ஏனென்றால் அவர்கள் எல்லாம் அடிப்படையில் ஹிந்துக்கள்...... எனவே எல்லா தரப்பு மக்களிடம் இருந்தும் உதவிகள் முன்வந்து கிடைத்தது. .... மக்கள் (காவி வெறியர்கள்) ஒற்றுமையுடன் இருந்தார்கள். இன்னும் அவர்களின் ஒரே குறிகோள் ஹிந்து மதத்தை வாழ (?) வைக்க வேண்டும் என்பதாக இருந்தது" என வழக்கறிஞர் (பாண்ட்யா) கூறினான்.

குஜராத்தில் முஸ்லிம்களின் பாதிப்புகளுக்கும் தொடச்சியான துன்புறுத்தல்களுக்கும் அங்குள்ள நீதிதுறை மட்டும் தான் குற்றத்தில் கூட்டு வைத்தது என்றல்லாமல், நானாவதி-ஷா ஆணையம் கூட விட்டு கொடுத்தது. ஆணைத்திற்கு தலைமை தாங்கிய KG ஷாவும், நானாவதியுடன் சேர்ந்து பாஜக-விற்கு அனுதாபம் காட்டினார்கள். நானாவதி பணத்தின் மீது மடடுமே ஆர்வம் கொண்டிருந்ததாக கூறி பாண்ட்யா அவரை ஏளனம் செய்தான். ஜுன் 8 2007 அன்று பாண்ட்யா அஹ்மதாபாத்தில் உள்ள அவனது இல்லத்தில் வைத்து தெஹல்காவுடன் நடத்திய உரையாடலின் ஒரு பகுதி இதோ வருகிறது

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...14.

"KG ஷா எங்களுடைய ஆள். நானாவதிக்கு பணத்தின் மீது தான் ஆசை" "(குஜராத் வன்முறை) குற்றவாளிகள் நானாவதி-ஷா ஆணையம் குறித்து பயப்பட வேண்டிய தேவையில்லை" என குஜராத் அரசு சட்ட ஆலோசகரான அரவிந்த் பாண்ட்யா தெரிவித்தான்.

தெஹல்கா: வன்முறை கலவரங்களின் போது யார் முன்னின்று நடத்தினார்?

பாண்ட்யா: சிலர் இருந்தார்கள் இன்னும் சிலர் இல்லை என்று சொல்லுவதே தவறாகும்.... சம்பவ இடங்களுக்குச் சென்ற ஒவ்வொருவர்களும் பஜ்ரங்தளிலிருந்தும் விஹெச்பியிலிருந்தும் போனார்கள்....

தெஹல்கா: ஜெய்தீப்பாய் சம்பவ இடத்திற்குப் போனாரா?

பாண்ட்யா: ஜெய்தீப்பாய் கூட போனார்... எந்தெந்த தலைவர்கள் எங்கெங்கே போனார்கள், யாருக்கு நேரடியான பங்கு (தொடர்பு) இருந்தது, யாருக்கு சந்தேகபடும் படியாக பங்கு (தொடர்பு) இருந்தது - ஆணையத்திறகு முன்பால் இந்த விளக்கங்கள் எல்லாமே இருக்கிறது, எல்லா கைதொலைபேசி எண்களும், யாரெல்லாம் எங்கே சென்றார்கள்..... இடங்கள் கூட எங்களிடம் உள்ளன......

தெஹல்கா: ஆம் சில சர்ச்சைகள் கூட நடந்தனவே.....

பாண்ட்யா: அது இப்போதும் உள்ளது.... இன்னும் யாருடைய கைதொலைபேசி எண்கள் அங்கே இருந்தது என்பதும் எனக்குத் தெரியும்..யார் யார் எவர்களிடம் எங்கிருந்து பேசினார்கள்.... என்னிடம் பேப்பர்கள் உள்ளது....

தெஹல்கா: எனவே இதனால் ஹிந்துக்களுக்கு ஏதேனும் சில பிரச்சனைகள் இருக்குமா?.... ஜெய்தீப்பாய்க்கு இன்னும்.......

பாண்ட்யா: ஐயா, நான் தான் வழக்குகளை எதிர்கொள்கிறவன்..... கவலைபடாதே.... இதுபற்றி கவலைபடாதே!, பிரச்சனைகள் ஏதும் இங்கே ஏற்பட போவதில்லை. ஒருகால் பிரச்சனை ஏதும் ஏற்பட்டாலும் நான் அதை தீர்தது விடுவேன்.......... நான் யாருக்காக இத்தனை ஆண்டுகளையும் செலவழித்துள்ளேன்?... எனது சொந்த இரத்தத்திற்காக.

தெஹல்கா: ஆணையத்தின் தீர்ப்பு ஹிந்துக்களுக்கு எதிராக போக வாய்ப்பு இருக்கிறதா?

பாண்ட்யா: இல்லை, இல்லை.... காவல்துறையினருக்கு சில பிரச்சனைகளை இது உருவாக்கலாம்.... அது அவர்களுக்கு எதிராக போகலாம்... பாருங்கள், நீதிபதிகள் காங்கிரஸால் தேர்வு செய்யபட்டவர்கள்.

தெஹல்கா: ஆம்...நானாவதி... இன்னும் ஷா.

பாண்ட்யா: அது மட்டுமே பிரச்சனை.... அந்த நேரத்தில் நம்முடைய தலைவர்கள் அவசரத்தால் சர்ச்சைக்குள் மாட்டிக் கொண்டனர்....... அவர்கள் என்ன நினைத்தார்கள் என்றால், நானாவதி சீக்கியர் கலவரம் தொடர்பான விசாரணையில் ஈடுபட்டுள்ளதால்..... காங்கிரஸ் நீதிபதியை அவர்கள் பயன்படுத்தினால் சர்ச்சைகள் வராது.....

தெஹல்கா: நானாவதி முழுமையாக உங்களுக்கு எதிராகவே உள்ளாரா?

பாண்ட்யா: நானாவதி சாமர்த்தியமான ஆள்... அவருக்கு பணம் வேண்டும்.... KG ஷா புத்தி கூர்மையுடையவர்... அவர் எங்களுடைய ஆள்... அவர் எங்களிடத்தில் அனுதாபம் உடையவர்....... நானாவதி பணத்திற்கு பின்னால் இருப்பவர்.....

தெஹல்கா: அவர் பணம் பெற விரும்புகிறார் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள்......

பாண்ட்யா: அது உள்விவகாரம்......

தெஹல்கா: நானாவதி-ஷா ஆணையம் ஹிந்துக்களுக்கு எதிராகப் போகலாம்....

பாண்ட்யா: அவர்கள் ஆணையத்தை ஆண்டுகள் கணக்கில் நடத்துகிறார்கள்... அவருக்குப் பணம் வேண்டும், வேறு ஒன்றும் இல்லை... அவர் காங்கிரஸ்காரர்.....

தெஹல்கா: ஷா?

பாண்ட்யா: இல்லை. ஷா, அவர் எங்களுடைய ஆள்...... நானாவதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் இன்னும் ஷா உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்...

• ••

பாண்ட்யா: கலவரம் தொடர்பான வழக்குகளின் அரசு சிறப்பு சட்ட ஆலோசகராக நான் இருக்கிறேன்... நான் இரண்டு விஷயங்களை மட்டுமே குறித்து வைத்துக் கொண்டேன்.... விஹெச்பியில் எவரும் ஆணையத்திடம் ஒருபோதும் வரகூடாது என நான் சொன்னேன்.... நீங்கள் என்னுடன் தொடர்பில் இருந்து கொள்ளுங்கள் அவ்வளவு தான்.... நான பாஜகவிடமும், "நீங்கள் என்னுடன் தொடர்பில் இருந்து கொள்ளுங்கள் அவ்வளவு தான்" என்றே கூறினேன்.... எங்கெல்லாம் நான் முகாம் நடத்துகிறேனோ அங்கு வரும்போது பெரும் பலத்துடன் வரவேண்டாம் இன்னும் மிக அறிந்த முகமுடையவர்களும் வர வேண்டாம் என சங்பரிவாரிடம் கூறினேன். நீங்கள் என்னுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.... எனக்கு ஏதேனும் தேவைபட்டால், உங்களுக்கு தொலைபேசி அழைப்பு வரும் அதற்கு மேல் எதுவும் இல்லை......... முகாம்கள் நடத்தப்பட்ட எல்லா இடங்களுக்கும் நான் சென்றேன். நானும் சொந்தமாக முகாம்கள் நடத்தினேன். உள்ளுர்வாசிகளின் ஆதரவை வென்றெடுப்பதற்காகவே நான் முகாம்களுக்குச் சென்றேன்... இது எப்படி நடக்க வேண்டும், என்ன நடக்க வேண்டும்.....

தெஹல்கா: வேறுவகையான பிரச்சனைகளை அது உருவாக்கியதா.....

பாண்ட்யா: வேலைபார்க்கும் பாணியே வித்தியாசமானது..... ஆணையம் என்னும் மனோநிலையை முழுமையாக உருவாக்கியவனே நான் தான்... அதனால் தான் முஸ்லிம்கள் தங்கள் களப்பணியாளர்களிடம் இந்த விவரத்தைக் கொடுத்தார்கள்.... பல்வேறு பேச்சுகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் சில நுண்ணறிவு குழுவாலும் (Intelligence Bureau) பதிவு செய்யபட்டுள்ளது. அதாவது ஹிந்துவோ அல்லது ஹிந்து தலைவரோ சம்பந்தபட்டிருந்தால் அது ஆபத்தானது, ஆனால் அரவிந்த் பாண்ட்யா சம்பந்தபட்டிருந்தால் 2000 மடங்கு ஆபத்தானது.

தெஹல்கா: உங்களுக்கு எதிராக ஏதேனும் விசாரணை உள்ளதா?

பாண்ட்யா: ஒன்று தெஹல்கா சம்பந்தபட்டது.... நான் காவல்துறை அதிகாரி RB ஸ்ரீகுமாரை மிரட்டினேன்.... அந்தத் தகவல் வெளியே கசிந்து தொலைகாட்சிகளில் நாள் முழுவதும் ஓடி கொண்டிருந்தது.... ஆனால் முந்தைய தெஹல்கா.....

பகுதி 5 நிறைவுற்றது.

நன்றி பதிவர்: இறை நேசன் http://copymannan.blogspot.com/

புரட்சிகர கலைநிகழ்ச்சி ம.க.இ.க

புரட்சிகர கலைநிகழ்ச்சி ம.க.இ.க



Saturday, December 29, 2007

வர்ணாசிரம கிரிமினல் இராமன்!

வர்ணாசிரம கிரிமினல் இராமன்!
ஹவாலா கிரிமினல்
ராம்விலாஸ் வேதாந்தி!

""இராமனை இழிவுபடுத்தி இந்துக்களைப் புண்படுத்திய
கருணாநிதியின் தலையை வெட்ட வேண்டும், நாக்கை
அறுக்க வேண்டும். அப்படிச் செய்பவருக்கு எடைக்கு எடை தங்கம் தரப்படும்'' என்று பார்ப்பனத் தினவெடுத்துப் பேசிய வேதாந்தி என்ற சாமியார் யார்? ""அவர் யாரென்றே எங்களுக்குத் தெரியாது. யாரோ ஒருவர் பேசியதற்காக எங்களைத் தாக்குவது என்ன நியாயம்?'' என்று இராம.கோபாலன், இல.கணேசன், ராஜா என்று ஆர்.எஸ்.எஸ். கும்பல் முழுவதும் ஒரே குரலில் புளுகுகிறது. வேதாந்தி பேசியதை விட இந்தப் பித்தலாட்டம்தான் மிகப்பெரிய அயோக்கியத்தனம். இதற்காக இன்னொருமுறை இந்தக் கும்பல் முழுவதையும் நிற்க வைத்து உரிக்கவேண்டும்.

ராம் விலாஸ் வேதாந்தி. 1984 முதல் விசுவ இந்து பரிசத்தின் தலைமைக்குழுவான மார்க்க தர்ஷக் மண்டலின் (இந்துக்களுக்கு நன்னெறி காட்டும் குழு) உறுப்பினர்; 1990 முதல் ராம ஜன்மபூமி டிரஸ்ட் உறுப்பினர்; 1996, 98இல் உ.பி. மாநிலம் பிரதாப்கர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர். மத்திய அரசின் ரயில்வே குழு, நகர்ப்புற வளர்ச்சிக் குழு, சுற்றுச்சூழல் ஆலோசனைக் குழு ஆகியவற்றின் உறுப்பினர். இவை அனைத்துக்கும் மேலாக, முஸ்லிம்களுக்கு எதிராக நஞ்சைக் கக்கும் உமாபாரதி, ரிதம்பரா வகையைச் சேர்ந்த நட்சத்திரப் பேச்சாளர். சமீபத்திய உ.பி. சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.விற்காகப் பிரச்சாரம் செய்த முன்னணிப் பேச்சாளர். எல்லõவற்றுக்கும் மேலாக, பாபர் மசூதி இடிப்பையும் மதக்கலவரத்தையும் தூண்டிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அத்வானி, ஜோஷி உள்ளிட்ட 11 பேரில் ஒருவர். இந்த வேதாந்தியைத்தான் ""யாரோ, எவரோ; எங்களுக்குத் தெரியவே தெரியாது'' என்கிறார்கள், இந்தப் பார்ப்பன யோக்கிய சிகாமணிகள்.

"இராமன் ஒரு கற்பனைப் பாத்திரம்' என்று கருணாநிதி சொன்னவுடனே குமுறி எழுந்த இந்த சாமியார், "உண்மையிலேயே ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்ட பக்தனாக இருக்கலாமோ, அதன் காரணமாகக் கோபத்தில் வரம்பு மீறிப் பேசியிருக்கக் கூடுமோ' என்று வாசகர்கள் யாரேனும் நினைத்துக் கொண்டிருந்தால், அது மடமை. இந்த வேதாந்தி ஒரு தொழில்முறைக் கிரிமினல்.

""பிள்ளைவரம் தருகிறேன், புதையல் எடுத்துத் தருகிறேன்'' என்று கூறி பாமர மக்களையும் பெண்களையும் நாசமாக்கி, பிறகு மாட்டிக்கொண்டு தரும அடி வாங்கி உள்ளே போகும் "கீழ்சாதி' லோக்கல் சாமியார் அல்ல இந்த வேதாந்தி. மக்களின் மத நம்பிக்கையை மதவெறியாக மாற்றி, அந்த மதவெறியை டாலராக மாற்றிக் குவித்து வைத்திருக்கும் ஒரு சர்வதேசக் கிரிமினல். கையும் மெய்யுமாகப் பிடிபட்ட பிறகும், இன்னமும் கம்பி எண்ணாமல் வெளியில் இருந்து ஆசி வழங்கிக் கொண்டிருக்கும் அரசியல் செல்வாக்குள்ள கிரிமினல்.

மதத்தை வைத்து "பிசினெஸ்' நடத்தும் சாமியார்களை அம்பலப்படுத்துவதற்காக ""கோப்ரா போஸ்ட்'' என்ற இணையதளம் புலனாய்வு நடவடிக்கை ஒன்றில் இறங்கியது. அதில் சிக்கிய மூன்று சிகாமணிகளில் வேதாந்தியும் ஒருவன். முதலாளிகள் போல நடித்து வேதாந்தியை சந்தித்த இந்தச் செய்தியாளர்கள், கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க வேதாந்தியிடம் பேரம் பேசுகிறார்கள். ரகசியக் கேமராவில் பதிவு செய்யப்பட்ட இந்த பேரத்தை கடந்த மே 4ஆம் தேதியன்று ஒளிபரப்பியது, ""ஐ.பி.என்7'' தொலைக்காட்சி. ஒளிபரப்பான அந்த உரையாடலைக் கீழே தருகிறோம்.

வேதாந்தி: எனக்கு எவ்வளவு கமிஷன் கிடைக்கும்?

நிருபர்கள்: நீங்கள் விரும்பியபடி...

வேதாந்தி: இல்லை, எனக்கு எவ்வளவு தருவீர்கள் என்பதைச் சொல்ல வேண்டும்; ஒருவேளை 5 கோடி ரூபாய் கருப்புப் பணத்தை நீங்கள் மாற்றுவதாக இருந்தால் எனக்கு எவ்வளவு கிடைக்கும்?

நிருபர்கள்: உங்களுக்கு 1.5 கோடி...

வேதாந்தி: இல்லை; 3 கோடியை வாங்கிக் கொண்டு எனக்கு
2 கோடியைக் கொடுங்கள்!

நிருபர்கள்: எங்களுக்கும் இலாபம் வேண்டாமா?

வேதாந்தி: சரி,சரி; எனக்கும் கமிஷன் வேண்டாமா? இப்படிக் கருப்புப் பணத்தை மாற்றுவதற்கு எனது ட்ரஸ்ட் பணத்தை பயன்படுத்துவதற்கு நான் யாரிடமும் அனுமதி பெறவேண்டியதில்லை. இருப்பினும் எனது ஆடிட்டரிடம் கலந்தாலோசிக்கிறேன். அயோத்தி வாருங்கள், எல்லாவற்றையும் முடித்து விடலாம்.

நிருபர்கள்: ராமஜன்மபூமி டிரஸ்ட்டுக்கு நீங்கள்தானே தலைவர்?

வேதாந்தி: ஆமாம், ஆனால் உங்கள் பணத்தை அதில் போட்டால் மீள எடுப்பது சிரமம். ஏனெனில் அது ஒரு சர்வதேச ட்ரஸ்ட். சி.பி.ஐ.யும், ஐ.பி.யும் (உளவுத் துறைகள்) அதன் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருக்கிறார்கள்.

நிருபர்கள்: ஆனால் உங்கள் ட்ரஸ்ட்டுக்கு எதுவும் பிரச்சினைகள் இருப்பதாகத் தெரியவில்லையே?

வேதாந்தி: இல்லை, இந்த வேலைக்காகவே "மாத்ரி சேவா ட்ரஸ்ட்' என்று ஒன்றைத் தனியாக உருவாக்கி வைத்திருக்கிறேன்.

(ஆதாரம்:watch the video: http://www.ibnlive.com/videos/39845/money-launderer-leads-ram-temple-trust.html)

இந்த உரையாடலை ஒளிபரப்பிய ஐ.பி.என். தொலைக்காட்சி, அதன் பிறகு இதே வேதாந்தியிடம் நேர்காணல் எடுக்கச் சென்றது. உடனே ""தேசவிரோத முசுலீம் தே..... மகன்கள்தான் எனக்கெதிராக இந்தச் சதியை நடத்தியிருக்கிறார்கள்'' என்று வெறி கொண்டு கத்தினான், இந்தக் களவாணி. அதிர்ச்சியடைந்த அந்தச் செய்தியாளர், ""நீங்கள் இவ்வளவு தரம் தாழ்ந்து பேசுவதால் மேற்கொண்டு நேர்காணல் நடத்த முடியாது'' என்று கூறி பேட்டியை நிறுத்திக் கொண்டார். இந்த விவகாரமும் அம்பலத்துக்கு வந்து சந்தி சிரித்தது. உ.பி சட்டமன்றத் தேர்தல் நடக்க இருந்த தருணத்தில் இந்த விவகாரம் சந்தி சிரித்த போதிலும், இந்தக் காவி உடைக் கிரிமினலைச் சங்கப் பரிவாரங்கள் கைவிடவில்லை என்பதுதான் மிகவும் முக்கியமானது.

இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போது ராமர் சேது விவகாரத்தில் கருணாநிதிக்கு எதிராகக் கொட்டி முழக்கி வருபவருமான ரவிசங்கர் பிரசாத், "" உங்கள் தொலைக்காட்சியில் அடிபடும் பெயர்களுக்குச் சொந்தக்காரர்கள் அனைவரும் மிகவும் மதிப்பிற்குரியவர்கள். எனவே இந்த இரகசிய காமரா ஒளிபரப்பின் நம்பகத்தன்மை குறித்து எனக்கு ஐயமாக இருக்கிறது'' என்றார். விசுவ இந்து பரிஷத்தின் துணைத் தலைவர் கிரிராஜ் கிஷோரோ, ""இந்த இரகசிய கேமரா நிகழ்ச்சியின் நோக்கம் என்ன? இதில் ஏன் இந்துக்கள் மட்டும் குறி வைக்கப்படுகிறார்கள்?'' என்று மடக்கினார். ""கருணாநிதி இராமனை மட்டும் விமரிசிக்கிறாரே, மற்ற மதத்தினரை விமரிசிக்காதது ஏன்?'' என்று இப்போது கேட்கி றார்கள் அல்லவா, அதே கேள்விதான் கிரிராஜ் கிஷோரின் கேள்வியும்.

""கேமரா ஒளிபரப்பு மேல் சந்தேகமாக இருக்கிறது; எங்களை மட்டும் ஏன் குறி வைக்கிறாய்? இந்துக்களின் மனம் புண்பட்டுவிட்டது'' என்று கலர் கலராகக் கூச்சலிட்டது ஆர்.எஸ்.எஸ். பரிவாரம். ""எங்கள் வேதாந்தி சொக்கத் தங்கம். அவர் முற்றும் துறந்த முனிவர். வேண்டுமானால் அவருடைய டிரஸ்டுகளையும் எங்களுடைய டிரஸ்டுகளையும் வருமான வரித்துறை ஆய்வு செய்து பார்க்கட்டும்'' என்று ஒரு யோக்கியன் பேசவேண்டிய பேச்சை மட்டும் ""அவாள்'' பேசவே இல்லை.

""இராமன் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்தான்?'' என்ற கேள்வியைப் போலவே, ""உங்கள் டிரஸ்டில் இத்தனை பணம் எப்படி வந்தது?'' என்ற கேள்வியும் கூட இவர்களுடைய மத உணர்வைப் புண்படுத்துகிறது போலும்! ராம ஜன்ம பூமி, ராமர் பாலம் மட்டுமல்ல; ராம ஜன்ம பூமி டிரஸ்டில் உள்ள கறுப்புப் பணமும் கூட இந்துக்களின் மத நம்பிக்கை சார்ந்த விசயம் போலும்! இந்த நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்கினால், தலையை வெட்டுவார்கள், நாக்கை அறுப்பார்கள், அதை செய்து முடிப்பதற்கு எடைக்கு எடை தங்கமும் கொடுப்பார்கள் இந்தத் "துறவி'கள்!

வருமான வரித் துறையின் முன்னாள் ஆணையர் விஸ்வபந்து குப்தா இந்த உத்தம புத்திரர்களைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறார். ""இந்த வேதாந்தி விவகாரத்தில் உடனே கிரிமினல் குற்ற வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம். ராம ஜன்ம பூமி நிவாஸ், விசுவ இந்து பரிஷத் இரண்டும் மதரீதியான மாஃபியாக் குழுக்களாகும். அவர்கள் ஒரே முகவரியிலிருந்து சுமார் பத்து போலியான ட்ரஸ்ட்டுகளை நடத்துகிறார்கள். இவர்களுக்கு ஐம்பது வெளிநாடுகளிலிருந்து பணம் வருகிறது. இதற்கு வரி விலக்கும் பெறுகிறார்கள். ஆனால், எதற்கும் முறையான கணக்கு வழக்கு கிடையாது. இவர்களுக்கு ஆண்டொன்றுக்கு 10,000 முதல் 15,000 கோடி ரூபாய் வருகிறது என்று நாங்கள் கணக்கிட்டிருக்கிறோம்... மதவெறியைப் பரப்புவதற்கு இந்தப் பணத்தைப் பயன்படுத்துகிறார்கள்.''

வேதாந்தி ஒரு விதிவிலக்கல்ல. வேதத்துக்கு அந்தமில்லை என்று ""அவாள்'' சொல்வதைப்போல, சங்க பரிவாரம் முழுவதும் முடிவில்லாமல் நிறைந்திருக்கிறார்கள் வேதாந்திகள். இந்தக் காவி உடை மாஃபியா கும்பல் தன்னை ஒரு கட்சி என்று சொல்லிக் கொள்கிறது. கடத்தல், கஞ்சா, ஆயுதம் என்ற சரக்குகளைப் போல, இந்த மாஃபியா கும்பல் கையாளும் விற்பனைச் சரக்கு மதம்.

இந்த பேட்டியை வைத்தே வேதாந்தியைக் கைது செய்யலாம் என்கிறார், குப்தா. பொதுத்தொலைபேசியிலிருந்தும், மின்னஞ்சல் மூலமும் கொலை மிரட்டல் விடும் கிறுக்குப் பயல்களையெல்லாம் சிறப்புப் படை அமைத்துத் தேடிப் பிடிக்கிறது போலீசு. ஆனால், ஒரு முதலமைச்சரைக் "கொலை செய்' என்று பகிரங்கமாக அறைகூவல் விடுக்கும் வேதாந்தி மீது வழக்குப் பதிவு செய்யக்கூட அஞ்சுகிறது. குப்தா கூறுவது போல வேதாந்தியை உள்ளே தள்ளுவது இருக்கட்டும், மாத்ரி டிரஸ்ட்டில் ஒரு சோதனை நடத்துவதற்குக் கூட நிதியமைச்சகம் உத்தரவிடவில்லை என்பதே உண்மை.

"தேவதூஷணம் செய்பவனின் நாக்கை அறுக்க வேண்டுமென்று' பகவத் கீதை சொல்கிறதாம். நோட்டு மாற்றுபவனுக்கு கிருஷ்ண பரமாத்மா என்ன தண்டனை தரச் சொல்கிறார்? தெகல்காவின் கேமரா முன் லஞ்சம் வாங்கிப் பிடிபட்ட பங்காரு லட்சுமணனைக் கட்சித் தலைவர் பதவியிலிருந்து இறக்கியது பாரதிய ஜனதா. ஆனால், வேதாந்தி மீது எந்த நடவடிக்கையும் கிடையாது. அவர் விசுவ இந்து பரிசத்திலேயே இல்லையென்று கூசாமல் புளுகுகிறது. "சூத்திரன் திருடினால் சிரச்சேதம், பார்ப்பான் திருடினால் சிகைச் சேதம்' என்பதல்லவோ மனுநீதி!

செப்30 தேதியிட்ட ஜூனியர் விகடனுக்கு அளித்துள்ள பேட்டியில் ""நான் கருணாநிதிக்கெதிராகச் சொன்ன கருத்தில் எந்த மாற்றமும் இல்லை'' என்று திமிராகப் பதிலளித்திருக்கிறான் வேதாந்தி. பா.ஜ.க.வினரோ ""அதான் வாபஸ் வாங்கிவிட்டாரே, அப்புறம் ஏன் அடிக்கிறீர்கள்?'' என்று நியாயம் பேசுகிறார்கள்.
எந்தக் காலத்திலும் நல்ல பாம்பு நஞ்சை வாபஸ் வாங்கியதில்லை; வாங்கவும் முடியாது. அதை அரைகுறையாக அடித்துத் தப்ப விடுவதுதான் ஆபத்து!

· புதிய ஜனநாயகம், அக்டோபர் 2007

Friday, December 28, 2007

தெருக்கூத்து

தெருக்கூத்து



மேர்வின் சில்வா

மேர்வின் சில்வா : மூத்திரத்தாலும் வெறுங்கையாலும் அடித்து தலையை உடைத்து சட்டத்துக்கு நீதி படிப்பித்த கதை


சட்டம் நிபுணர்களதும் நீதவான்களதும்

வழக்கறிஞர்களதும் காவற் துறையினரதும் கைகளில்

பத்திரமாகவே உள்ளதால்

கையும் மெய்யுமாக அகப்பட்ட கள்வனால் சட்ட நுணுக்கங்களின் இடைவெளிகளில் நுழைந்து தப்பி ஓட இயலுமாகிறது

பட்டப் பகலில் நடுத் தெருவிற் கொலை செய்தவன்

சட்ட நூலேணியிலேறி நழுவ முடிகிறது

குடிவெறியில் காரோட்டிய யம தூதனை

அளவோடு குடி என்று செல்லமாய்க் கண்டிக்க

நீதவானுக்கு முடிகிறது.

சட்டம் இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டியவர்களின் வசம் இருக்கிறது.

அதை வைத்திருக்கிறவர்கள் இருக்கிறவர்களின் கையில் இருக்கிறார்கள்.

சட்டம் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தும்

உரிய வேலையைச் செய்ய வில்லை என்றெண்ணி

ஒரு பெண்ணை பஸ் மோதிக் கொன்றதற்காகச்

சட்டந் தெரியாதவர்கள் பஸ்களை நொறுக்கி நீதி வழங்கினார்கள்.

அப்போது சட்டத்தைக் கவனமாக வைத்திருக்கிறவர்கள்

“மக்கள் சட்டத்தைத் தம் கையிலெடுப்பது தவறு”

என்று கண்டித்தார்கள்.

மக்கள் உண்மையிலேயே சட்டத்தைத் தம் கையில் எடுத்துக் கொள்வார்களேயானால், எவ்வளவு நன்றாக இருக்கும்.


-சி.சிவசேகரம் (இன்னொன்றைப்பற்றி)


இன்று கொழும்பில் இலங்கைத் தேசியத்தொலைக்காட்சி நிலையத்தில் சட்டத்துக்கு நீதி வழங்கிய தொலைக்காட்சித் தொழிலாளர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் உரத்த குரலில் தெரிவித்தாகவேண்டியவனாகிறேன்.



"அதுதான் பொலிசிடம் பாரம்குடுத்தாச்சுத்தானே, அவர்கள் பாத்துக்கொள்ளுவாங்க... இனியென்ன..." என்று ஒரு ரவுடி அமைச்சன் தன் ரவுடிப்பரிவாரங்களுடன் கெஞ்சியபோது, அந்த பாதாள உலகப் பரிவாரங்களையும் கொலைகாரர்களையும் இலங்கைக் காவல் துறையும் சிறப்புப் படையினரும் தொலைக்காட்சித் தொழிலாளர்களிடமிருந்து காப்பாற்றிப் பாதுகாத்து வெளியில் கொண்டுவந்தபோது "சட்டத்" தினதும் "சட்ட ஆட்சி" யினதும் போலி முகமூடிகள் "நீதிக்கு" முன்னால் கிழிந்து தொங்கியது.



இலங்கைத் தேசியத் தொலைக்காட்சி என்பது இலங்கை அரசினது தொலைக்காட்சி சேவையாகும். ( சிறீ லங்கா ஜாதிக ரூபவாகினி). அரசாங்கமாகப் பதவியிலிருக்கும் நபர்களின் செயற்பாடுகளுக்கும் திட்டங்களும் ஒத்து ஊதுவதே அதன் வேலை. இலங்கை வரலாறு முழுவதும். இன்றைக்கும். அதிலிருக்கின்ற செய்தியாசிரியர்கள் என்பவர்கள், அரசாங்கம் சொல்வதை சிங்களத்தில் செய்திக்காக எழுதிக்கொடுக்கும் வேலையை செய்து சம்பாதிப்பவர்கள். அதை தமிழில் மொழிபெயர்த்து ஓதுவதற்கு அங்கே தமிழ்ச்சேவை ஒன்றும் உள்ளது.



அண்மையில் ஆழிப்பேரலை நினைவுக்கூட்டமொன்றில் மெர்வின் சில்வா என்கிற, அரசாங்கத்தின் அமைச்சன் பேசிய பேச்சின் பகுதியொன்றை அரசாங்கத்தின் ஊதுகுழலான "ஜாதிக ரூபவாஹினி" ஒளிபரப்பவில்லை என்பதற்காக இந்த ரவுடி அமைச்சன் ரூபவாகினி நிலையத்துக்குள் நுழைந்து தனது பாதாள உலக அடியாளொருவனைக்கொண்டு செய்தியாசிரியர் ஒருவரைத் தாக்கி இழுத்துக்கொண்டு திரிந்திருக்கிறான்.

இதைக்கண்ட தொலைக்காட்சி நிலைய ஊழியர்கள் அந்த செய்தி ஆசிரியரைக் காப்பாற்றியதுடன் அங்குள்ள அறையொனில் இந்த அமைச்சனைச் சிறை வைத்து முற்றுகையிட்டு நின்றிருக்கிறார்கள்.

ஒட்டுமொத்தமாக ஊழியர்கள் அனைவரினதும் முற்றுகையில் சிக்கிய இந்த அதிகார ரவுடிக்கு படிப்படியாக நிலமையின் தீவிரம் புரியவாரம்பித்திருக்கவேண்டும். ஜனாதிபதி தொடக்கம் அனைத்து அதிகார வர்க்கக் கூட்டாளிகளையும் உதவிக்கு அழைத்திருக்கிறது.

அதிகாரமும் ஆயுதங்களும் இல்லாத வெறும் ஊழியர்களின் ஒன்றுபட்ட எதிர்ப்பின் முன்னால் இவையெல்லாம் உதவிக்கு வர முடியவில்லை.

கடைசியில் தனது பாதாள உலக அடியாட்களை அழைத்திருக்கிறது, வந்த "அடியாட்களும்" பயந்து ஓடிவிட்டார்கள்.

அறையொன்றில் குளிரூட்டியும் சேதப்படுத்தப்பட்ட நிலையில் வேர்க்க வேர்க்க நின்று மீசையில் மண்ணொட்டாத கதைகளை உளறிக்கொண்டிருந்த இந்த மெர்வின் சில்வா அமைச்சனுக்கும் அவனது பாதாள உலகக் கொலைகாரனுக்கும் சட்டத்தைக்காக்கும் பொலிஸ் படையும், சிறப்பு இராணுவமும் "பாதுகாப்பினை" நல்ல பொறுப்புணர்வோடும் மிகுந்த அக்கறையோடும் வழங்கிக்கொண்டிருந்த அவலத்தை இலங்கையே நேரடி ஒளிபரப்பில் வெற்றுக்கண்களால் பார்த்துக்கொண்டிருந்தது.



இயலாத கட்டத்தில் மன்னிப்பைக்கூட அதிகார எள்ளலோடு இந்த அமைச்சன் கேட்க முயன்றபோது.

ஊழியர்கள் சிவப்பு மைய்யால் இவனுக்கு அடித்தார்கள். மூத்திரத்தாலும் அடித்ததாக செய்திகள் கிடைக்கின்றன. அத்தோடு காயப்படுமடியும் அடித்தார்கள் பாருங்கள். அத்தோடு அதிகார வர்க்கம் ஆடிப்போனது. தலையில் ஐந்து தையல் போடும்படியான காயம். ரத்தம் ஒழுக ஒழுக காருக்குள் பயந்து பயந்து இந்த அதிகாரக் குறியீடு குனிந்த தலை நிமிராமல் தஞ்சம் கோரியது கண்கொள்ளாக்காட்சி.



---1----

ஜனநாயகம் செத்து நாளாச்சு, ரவுடிகளினதும் துப்பாக்கிகளினது அதிகாரம் ஓங்கியாச்சு. மக்கள் கையில் இனி என்ன இருக்கு, எதுவும் செய்ய முடியாது என்ற சோர்வின் கோட்பாடுகளை மக்கள் தமக்குள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றே அதிகாரத்தின் அராஜகங்களை ஊடகங்கள் காட்டுகின்றன. நிறுவனங்கள் ஓதுகின்றன.

சோர்வின் கோட்பாடுகளுக்கு அறிவுஜீவிகள் மயங்கும் தத்துவப்பின்னணியை வழங்கவென நவீனப்பின்னியப் பின்னல்கள் ஏகாதிபத்தியங்களின் ஆசியுடன் பின்னப்படலாகிற்று.

வெறுங்கை ஊழியர்கள் ஒன்றுபட்டு மூத்திரத்தால் அடித்தபோது சோர்வின் கோட்பாடுகள் சோம்பல் முறித்ததை மக்கள் உணர்ந்திருக்கக்கூடும்.

ஒரு ரவுடி அமைச்சன் ரதம் ஒழுக ஒழுக பயந்தோடியபோது பாராளுமன்ற ஜனனாயகத்தின் பாதாள உலகப் பூச்சாண்டி கலைவதற்கான கால ரேகைகளை மக்கள் கண்டிருக்கக்கூடும்.

இந்தச்சம்பவம் நாளைக்கு மறக்கப்பட்டுவிடலாம். இந்தச்சம்பவத்தின் பெறுபேறுகள் எல்லாவற்றையும் இதே அதிகாரவர்க்கம் நாளைக்குக் கொன்று புதைத்து விடலாம். ஆனால் சோர்வின் கோட்பாடுகளை நாளயண்டைக்கு இவர்கள் ஓதத்தொடங்கும்போது இந்தச்சம்பவம் ஒரு கூரிய நினைவாக, வெறுங்கையின் சக்திக்கு எடுத்துக்காட்டாக நிற்கப்போகிறது. அதுவொன்றே போதுமானது.

சட்டமும் பொலிசும் ராணுவமும் யாரைக்காப்பாற்றும் , பாராளுமன்றம் யாருக்குப் பல்லாக்குத்தூக்கும் என்பதை "பயங்கரவாத" மாயைகளைத் தாண்டி சிங்கள மக்கள் உணர்ந்துகொள்ள ஒரு சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. (தமிழ் மக்களுக்கு உணர்த்தும் தேவை இல்லை என்பதால்). சின்னஞ்சிறிய ஒளிப்பொட்டைப்போன்றதொரு சந்தப்பம்.

இலங்கையின் இந்த சம்பவம் உலகெங்கும் இதனை ஒளிப்படங்களாக, நிகழ்படங்களாகக் காட்டும்.

----2----

இந்தக்காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்தபோதெல்லாம் மனதுக்குள் ஒரே ஒரு கேள்வி ஓடிக்கொண்டே இருந்தது.

ஊழியர்கள் ஒன்றுபட்டு வன்முறை வழியாக நீதி வழங்கிய நேர இடைவெளிகளில் அங்கிருந்த தமிழ் ஊழியர்கள் என்ன செய்திருப்பார்கள்?

மெர்வின் சில்வாவைக் கொலை செய்ய முயன்றதால்தான் இந்த பயங்கரவாதிகள் சுடப்பட்டார்கள் என்று அரசாங்கப்பேச்சாளர் கெகலிய ரம்புக்வெல சொல்லுமளவுக்கு ஏதேனும் நேர்ந்துவிடலாம் என்று பயந்திருப்பார்களா?

பயந்து கமராக்களில் படாமல் ஒளிந்திருப்பார்களா?

இதே சம்பவம் சிரச தொலைக்காட்சி நிலையத்தில் நடந்திருந்தால் எதிர்வினைகள் எவ்வாறு இருந்திருக்கும்?

----3----

ஆனாலும், சிங்கள மக்கள் சிங்கள அதிகாரத்தை எதிர்த்து வன்முறையை தூக்கும்போது, இன்னுமொருமுறை தமிழ்த்தலைமைகள் சிங்கள அதிகார வர்க்கத்தினை காப்பாற்றாமலிருக்கட்டும்.

அப்படியான சிங்கள மக்களின் போரட்டங்கள் தங்களுக்ககவும் தான் ஏதோ ஒரு வழியில் நடக்கிறது என்பதை "சிங்கள வெறியர்களை" கண்மூடித்தனமாக எதிர்முனையில் வைப்பவர்கள் புரிந்துகொள்ளட்டும்.

----4----

இதற்கு முன் இந்த மேர்வின் சில்வாவினால் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களும் மக்களும் அஹிம்சை வழியில், சனனாயக வழியில் எவ்வளவோ போராடிப்பார்த்தனர். இந்த ரவுடியின் கார்களில் ஒன்றின் கண்ணாடியைக்கூட அசைக்க முடியவில்லை.

அடி உதவுற மாதிரி அஹிம்சை உதவப்போவதில்லை.

----5----

இந்த வலைப்பதிவை எழுதி முடித்தபின் எனது ஊடகத்துறை நண்பர்கள் இருவரைத் தொடர்புகொண்டேன். அதில் ஒருவர் ரூபவாஹினியில் பணியாற்றுபவர்.

அவர்கள் சொன்ன தகவல்களின் படி,

தமிழ் ஊழியர்களும் சேர்ந்தே போராட்டத்தில் பங்கெடுத்திருக்கிறார்கள். பின்வாங்கவில்லை.

செய்தி வாசிப்பாளர்களை முன்னால் வந்து பங்குகொள்ள மற்றவர்கள் விடவில்லை. காரணம், அவர்களது முகங்கள் மிகவும் பழக்கப்பட்டவையாதலால் அதனை இவன் பார்த்துவைத்து பிறகு ஏதாவது பழிவாங்கி விடுவான் என்ற அச்சம்.

அத்தோடு பெனாசிர் கொலை விவகாரம் உலக ஊடகங்களின் தலைப்புக்களைப் பிடித்துவிட்டதால் இந்த அருமையான சம்பவம் உலகத்தின் கண்களுக்குப்பட்டுவிடாமல் போய்விடக்கூடும் என்று ஒரு நண்பர் கவலைப்பட்டார்.

---7---

இவளவு பெரிய பாதாள உலகத்தலைவன், அமைச்சன் இப்பிடி பீயாகிட்டானே என்று இரவு உணவுக்குப்போய் வந்த வழியில் சந்தித்த பலரும் சொல்லிக்கொண்டார்கள்.

நன்றி மு.மயூரன்

Thursday, December 27, 2007

பேராசிரியர் சமன்லால் உரை





கிழக்கு வெள்ளமும், யாழ் மேலாதிக்கமும்

பி.இரயாகரன்
27.12.2007


கிழக்கு மக்களோ மீளமீள, யாரும் கைகொடுத்து உதவ முன்வராத துன்பத்தையே அனுபவிக்கின்றனர். கடுமையான மழையும், வெள்ளமும், அந்த மக்களை மீண்டும் ஓருமுறை அகதியாக்கியுள்ளது. இயற்கை தான் இதை உருவாக்கிய போதும், செயற்கையான யாழ் மேலாதிக்கமோ, அந்த மக்களின் முதுகில் குத்தியுள்ளது. ஒரு உதவி, ஒரு நிவாரணம், ஒரு அனுதாபம், மனிதாபிமான உணர்வு என எதுவுமற்ற, வரட்டுத்தமான அற்பத்தனமான மனநிலையில் தமிழினம். செய்திகளில் இந்த மனித சோகம், அவலம் இருட்டடிப்பு செய்யப்படுகின்றது. மனித அவலங்கள் இப்படித்தான் இழிவாடப்படுகின்றது. தாமே தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்று கூறுபவர்களும், தமிழ் தேசிய குத்தகைக்காரர்களும் இருக்கும் வரை, எந்த மக்களும் இப்படி அனாதைகள் போல் ஆதரவற்றுக் கிடக்க வேண்டியது தான்.

இதுதான் தமிழ் மக்களின் மொத்த தலைவிதி. யாழ் மேலாதிக்கம் இதன் மேல் எழுந்து நின்று ஆடும் போது, கிழக்கு மக்களின் தலைவிதி என்பது மேலும் படு பயங்கரமானதாகி விடுகின்றது.

இப்படி அந்த மக்களின் இன்றைய அவலத்தையிட்டு, எந்தவிதத்திலும் யாரும் அலட்டிக்கொள்ளவில்லை. இப்படி யாழ் மேலாதிக்கம் தனது தலைக்கனத்துடன், மக்களின் வாழ்வு மீது வம்பளக்கின்றது.

ஏகப்பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்பவர்கள், தமிழ் தேசியத்தின் மேல் ஏகபோக உரிமை கொண்டாடுபவர்கள், கிழக்கு தமிழ் மக்களை நடத்துகின்ற விதம் சகிக்க முடியாத ஒன்று. தமிழ் இனத்தின் மேலான அவமானம். கிழக்கு பிரதேசவாதம் பற்றி சதா இழிவாடுபவர்கள், எந்த விதத்திலும் அடிப்படையில் நேர்மையற்றவர்கள் என்பதையே, கிழக்கு வெள்ளம் மறுபடியும் நிறுவிவிடுகின்றது.

மக்களை செம்மறித்தனத்தில் மேய்க்க முனைகின்ற யாழ் மேலாதிக்க சக்திகளின் வக்கிரத்தில், கிழக்கு மக்களின் கண்ணீர்க் கதைகள் அதி பயங்கரமானவை. அண்மைக்காலமாக அந்த மக்களின் வாழ்வைச் சுற்றிச்சுற்றி அது வதைத்து வருகின்றது.

முதலில் சுனாமி கிழக்கைச் சூறையாடி, அந்த மக்களை நாதியற்றவராக்கியது. அந்த மக்களுக்கு யாரும் கைகொடுத்து உதவக்கூட முன்வரவில்லை. அவர்களுக்கு உதவுவதற்கென தமிழ்மக்கள் வாரிக் கொடுத்த செல்வம், அந்த கிழக்கு மக்களுக்கு ஒரு துளிதன்னும் கிடைக்கவில்லை. அந்த உதவியை யாழ் மேலாதிக்க அதிகார மையங்கள் கைப்பற்றி, அதை தமது சொந்த இருப்புக்கே பயன்படுத்தியது.

இதன் பின் புலியொழிப்பின் பெயரில், தமிழ் மக்கள் மேல் பேரினவாதம் ஒரு பாரிய தாக்குதலை நடத்தி அவர்களை அகதியாக்கினர். கிழக்கு மக்கள் வீடு வாசல்களை இழந்து, உழைப்பின் மூலவளங்களை எல்லாம் இழந்த, ஒரு சமூகமாகிவிட்டனர். இதன் போது கூட, கிழக்குத் தமிழ் மக்களை யாழ் மேலாதிக்கம் கண்டு கொள்ளவேயில்லை. கைகொடுத்து உதவ முன்வரவில்லை.

இன்று மீண்டும் கிழக்கில் பாரிய வெள்ளம். கிழக்கு மக்கள் அனைத்தையும் இழந்து நிற்கின்றனர். இதைப் பற்றிய தகவல்களைக் கூட, யாழ்மேலாதிக்கம் இருட்டடிப்பு செய்கின்றது. இதுதான் யாழ் மேலாதிக்கத்தின் தேசிய வக்கிரம்.

இப்படி அடுத்தடுத்த மக்களின் துயரங்களைக் கூட கண்டு கொள்ளாத தேசியமும், தேசமும். இதனால் தான் இது தோற்று வருகின்றது. மக்களைப் பற்றிச் சிந்திக்காத அரசியல், கடுகளவு கூட மக்களையிட்டு எண்ணிப் பார்ப்பதில்லை. மக்களின் துன்ப துயரங்களில் அக்கறை கொள்வதில்லை. யாழ் மேலாதிக்க அதிகாரம் என்பது, மக்களின் வாழ்வியல் அடிப்படைகளையே தகர்த்து விடுகின்றது.

மறுபக்கத்தில் கிழக்குப் பிரதேசவாதம் பேசியவர்களின் நிலையும் இதுதான். புலியெதிர்ப்பு புலியொழிப்பு அரசியல் பேசும் கிழக்கு மேலாதிக்கம், கிழக்கு மக்களைப் பற்றி எதுவும் பேசுவது கிடையாது. கிழக்கு மக்களை வெள்ளம் காவு கொண்டுள்ள நிலையிலும், அந்த மக்களுக்காக எதையும் செய்வது கிடையாது. இப்படிப்பட்ட கிழக்கு மேலாதிக்க பிரதேசவாத தலைமைகள் என்ன செய்கின்றனர் ? யாழ் மேலாதிக்கவாதிகள் போல் தமிழ் மக்களைக் கொல்லுகின்றனர், கொள்ளையடிக்கின்றனர், சூறையாடுகின்றனர், கப்பம் அறவிடுகின்றனர். இதில் தான் அவர்கள் சுயாதீனம். மற்றப்படி பேரினவாத எடுபிடிகளாக, கூலிக் கும்பலாக குரைக்கின்றனர். இப்படி நக்குவதில் கூட முரண்பாடுகள். அதில் ஒரு அரசியல். அதையே மாற்று அரசியல் என்று கூறி, சமூகத்தையே இதற்குள் நடுங்க வைக்கின்றனர்.

மக்களோ துன்பத்திலும் துயரத்திலும் சாகின்றனர். விடிவுகளற்ற இருட்டில் மக்கள் அல்லாடுகின்றனர். யாழ் மேலாதிக்கம் போல், கிழக்கு மேலாதிக்கமும் அந்த மக்களின் குரல்வளையை நெரித்துக் கொன்று வருகின்றது. இதற்கு இயற்கையும் துணைபோகின்றது.

இயற்கையை தனக்கு ஏற்ப மாற்ற உழைத்த குரங்கில் இருந்து தான், பரிணாமமடைந்து மனிதன் உருவானான். இன்று இயற்கையுடன் சேர்ந்து மனிதத்தன்மையை அழிக்கின்ற காட்டுமிராண்டிகள் நிலைக்கு, தமிழ்ச் சமூகம் சென்றுவிட்டது. இதையே கிழக்கு வெள்ளம் மறுபடியும் நிறுவுகின்றது.

Wednesday, December 26, 2007

சுனாமிப் பேரழிவு நினைவுகளும் விளைவுகளும்

ஒரு தேசமே அழுகின்றது ஆனால் அதிகார வர்க்கங்களுக்கு அதுவே பொன் முட்டையாகிவிடுகின்றது

தென்கிழக்காசியாவில் உருவாகிய சுனாமி என்ற கடற்கோள், பல பத்தாயிரம் மக்களை உயிருடன் இழுத்துச் சென்றுள்ளது. மனித உழைப்பால் உருவான மனித நாகரீகம் இடிபாடுகளாகிவிட்டது. நிலத்தையும் கடலையும் பிரிக்கும் எல்லைகள் பிணக் குவியலாக மாறிவிட்டது. சேறும் சகதியுமாகிப் போன பூமியின் ஒரு பகுதியில், புதையுண்ட சடலங்கள் பூமியூடாக எட்டிப் பார்க்கின்றன. மனிதக் கண்கள் என்றுமே கண்டறியாத இயற்கை அழிவாக எம்முன் இவை நிற்கின்றன. இந்த நிலையில் சிதைந்து போன இயற்கையை, மனித ஆற்றல் ஈடுகொடுத்து மீட்க முடியாது திணறும் நிலைமையை இந்தச் சமூக அமைப்பு ஏற்படுத்தியுள்ளது.

நவீனத் தொழில் நுட்பங்கள் முதல் பலமான அரசு இயந்திரங்கள் வரை தமது கையாலாகாத்தனத்தையே நிரூபிக்கின்றன. நவீன தொழில் நுட்பங்களும், பலமான அரசு இயந்திரங்களும், மனித உழைப்பைச் சுரண்டும் எல்லைக்குள் செயற்படுவதால், இந்த இயற்கை அனர்த்தங்களை (பேரழிவுகளை) எதிர்கொள்ளும் ஆற்றலையே இழந்துவிடுகின்றன. மீண்டும் மக்கள்தான் இந்த இயற்கையை எதிர்கொண்டு, இடிபாடுகளை அகற்றுவது முதல் இறந்த உடல்களை மீட்பது வரை அனைத்திற்காகவும் களத்தில் இறங்கினர். நிவாரணங்களைக் கூட அந்த மக்கள்தான் வாரிவாரி வழங்கினர். அதிகார இயந்திரங்களின் செயலற்ற தன்மையை எதிர்த்து, மக்கள் தமது சொந்த ஆற்றலையும் உழைப்பையும் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காகச் சமூக உணர்வுடன் வழங்கினர். சமூகப் போக்குக்கு எதிரான தனிமனித நலன்களை அடிப்படையாகக் கொண்ட இந்த அமைப்பில், அரசுகள் சமூகத்துக்கு எதிராகவே உள்ளன. மக்கள் கூட்டம் இயற்கையால் அழிகின்ற போது, அரசுகள் அவற்றை வேடிக்கை பார்க்கவும், அவைபற்றி அறிக்கை விடவுமே முனைகின்றன.

தனிமனிதவாதங்களால் மலடுதட்டிப் போன சமூகத்தில், மக்கள் தமது சொந்த உழைப்பால் மீண்டும் சமூக உணர்வுடன் களத்தில் இறங்கினர். உலகமயமாதல் அமைப்பில் சிதைந்துபோய்க் கொண்டிருக்கும் சொந்த ஆற்றலைக் கொண்டு, தன்னெழுச்சியாகக் கிளர்ந்தெழுந்த மக்களே மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். எந்தத் திட்டமிடலுமின்றி தமது அறிவுக்கெட்டிய எல்லைக்குள், வாழ்வுக்கும் மரணத்துக்குமிடையிலான ஒரு போராட்டத்தையே சமூக உணர்வுடன் நடத்தினர், நடத்துகின்றனர். அதிகாரத்தையும், செல்வத்தையும் மலைபோல் குவித்து வைத்துள்ளவர்கள், இறந்து போன ஏழை மக்களையிட்டோ, உயிர் தப்பிய வக்கற்றவர்களையிட்டோ, பெரும் செல்வத்தைப் பெற்று தராத இந்தப் பிரதேசங்களையிட்டோ அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் மக்கள் சமூக உணர்வுடன் களத்தில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கும்போது, அவர்களுக்கு முன்னால் நின்று இவர்கள் தொலைக்காட்சிக்கு அறிக்கை கொடுக்கின்றனர். அதேநேரம் இந்தச் சமூக அவலத்தின் மேல் கொள்ளையடிக்கவும், ஆக்கிரமிப்புகளை நடத்தவுமே, இதைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றனர். அதனடிப்படையில் களமிறங்குகின்றனர். அதிகாரவர்க்கம் இன மொழி வேறுபாடுகள் இன்றி உலகெங்கும் இந்த ஒரேயொரு நோக்கத்துடன் ஓநாய்களாக அலைகின்றது. இதில் விடுதலைப்புலிகள் முதல் அமெரிக்கா வரை இந்த நோக்கில்தான், இந்த மனித அவலத்தைப் பயன்படுத்துகின்றனர். மக்களைப் பற்றி எந்தவிதமான சமூக அக்கறையும் இவர்களுக்குத் துளியளவும் கிடையாது.

இந்த நிலையில் அமெரிக்க ஏகாதிபத்தியம் முதல் இந்தியா வரையிலான நாடுகள், இலங்கை மேல் விசேட கவனத்தைத் திருப்பியுள்ளனர். அதிக இழப்பைக் கொண்ட இந்தோனேசியாவைக் கூட, இலங்கை அளவுக்கு உலகம் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. இந்தியக் கடற்படைகள், அமெரிக்கக் கடற்படைகள் உள்ளடங்கிய இராணுவங்கள் இலங்கையில் இறங்கியுள்ளன. ஜெர்மனி உளவுத்துறையுடன் கூடிய உதவிப் படையை இறக்கியுள்ளது. இலங்கை மீதான ஆக்கிரமிப்பு, மனிதாபிமான உதவி என்ற பெயரிலும் மீட்பு நடவடிக்கை என்ற பெயரிலும் மறுநிர்மாணம் என்ற பெயரிலும் தொடங்கிவிட்டது. அமெரிக்கா இதைத் தாண்டி குறுகிய மற்றும் நீண்ட கால மீட்பு பணிக்காகவே வந்துள்ளதாக அறிவித்துள்ளது. முன்பு அமைதிப்படை என்ற பெயரில் களமிறங்கிய இந்தியா, இலங்கையில் நடத்திய ஆக்கிரமிப்பு என்ன விளைவை ஏற்படுத்தியது என்பது எம் கண் முன்னால் நிற்கின்றது. இன்று மனிதாபிமான உதவி, மீட்பு, மறுநிர்மாணம் என்று பலவண்ணப் பூச்சுகளுடன் தம்மை மூடிமறைத்தபடி ஆக்கிரமிப்பைத் தொடங்கிவிட்டனர். இந்த மீட்பு மற்றும் புனர் நிர்மாணத்தை இந்த ஆக்கிரமிப்பாளர்கள், தமது சொந்த நலன்கள் இலங்கையில் பூர்த்தியாகும் வரை, பல வருடங்களுக்குத் தொடர்ச்சியாக நீடித்த காலத்துக்கு நீட்டி இலங்கையில் படைகளை வைத்திருப்பார்கள். இந்த ஆக்கிரமிப்புகளையிட்டு இலங்கையில் எந்த ஒரு கண்டனத்தையும், எதிர்ப்பையும் கூட யாரும் இதுவரை தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் ஏகாதிபத்திய நிதியுடன், அவர்களின் கொள்ளை வழிகாட்டுலுக்குட்பட்டு இயங்கும் அரசுசாராத தன்னார்வக் குழுக்கள் பல, மனிதாபிமான உதவி, மீட்பு, புனர்நிர்மாணம் என்ற பல வேஷங்களுடன் முழுமூச்சாகவே இறங்கியுள்ளனர். எங்கும் அன்னியரும், அன்னிய கைக்கூலிகளும், அன்னிய நிதியும் சேர்ந்து, ஒரு தேசத்தின் தலைவிதியை என்றுமில்லாத ஒரு அடிமை நிலைக்கு நகர்த்தியுள்ளனர். இந்த நிலையில் தேசத்தின் "தேசிய' தலைவர்கள் இனம் மொழி மதம் கடந்தபடி அன்னியரின் வருகைக்காகவும், அவர்களிடம் கையேந்தி பிச்சை கேட்கின்றனர். விசுவாசமாகவே ஊளையிட்டு வாலாட்டிக் குலைக்கின்றனர்.

மனிதக் கதறல்கள், மனித ஓலங்கள் எல்லாம் எதிர்காலத் தலைமுறையின் அடிமை விலங்காகவே மாற்றப்படுகின்றது. இயற்கையால் இழந்து போன மனித இழப்பை விடவும், அன்னியரின் தலையீடே மிகப் பெரிய சமூகச் சிதைவையும், மனித இழப்பையும் ஏற்படுத்த உள்ளது. நடந்து முடிந்த இயற்கையான கடற்கோளைவிடவும், இந்த அன்னியத் தலையீடுகள் இலங்கை மக்களை முற்றாக மூழ்கடிக்க உள்ளது. அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்கள் உருவாக்கவுள்ள இந்தச் செயற்கையான அனர்த்தத்தை (பேரழிவை) இலங்கையில் அனைத்து அரசியல் கட்சிகள் முதல் போராடும் இயக்கங்கள் வரை ஒரே விதமாக கம்பளம் விரித்து வரவேற்கின்றனர். இதை முன்கூட்டி அறியும் ஆற்றல் உள்ள நாங்கள், இந்த அபாய எச்சரிக்கையை விடுவது வரலாற்றின் கடமையாகி விடுகின்றது.

மனிதத் துயரங்களைப் பயன்படுத்தி ஏகாதிபத்தியங்கள் ஒருபுறம் இலங்கையை ஆக்கிரமித்துள்ளது என்றால், மறுபுறம் இனங்களைத் தேசியத்தின் பெயரில் ஆழமாகப் பிளந்து பணத்தைத் திரட்டுகின்றனர். பிணங்களைக் காட்சிப்படுத்தி, மனிதனின் அடிப்படையான சமூக உணர்வுகளை உணர்ச்சிமயமாக்கிய மலட்டுத்தனத்தில், பல பத்து கோடி பணத்தைத் திரட்டிக் கொண்டனர். புலிகளின் பினாமி அமைப்பான தமிழர் புனர்வாழ்வுக் கழகம் வெளிநாடுகள் எங்கும், பிணங்களைக் காட்டி கோடி கோடியாகப் பணம் திரட்டியது. தாம் மட்டும்தான் புனர்வாழ்வு செய்ய கடவுளால் படைக்கப்பட்டவர்களாகவும், மற்றவர்கள் யாரும் மக்கள் நலனில் அக்கறை கொள்ளக் கூடாது என்று மறைமுக மற்றும் நேரடி எச்சரிக்கைகள் ஊடாகவே பணத்தைத் திரட்டிக் கொண்டனர். தொலைக்காட்சிகளில் பிணங்களைக் காட்சிப்படுத்தியதன் மூலம் அதையே விளம்பரமாக்கி, பணத்தைத் தரும்படி மீண்டும் மீண்டும் கோரப்பட்டது. அதாவது இந்தியாவில் அனாதைப் பிணங்களைக் காட்டி புதைக்கப் பணம் கேட்கும் பொறுக்கிகள் போல், தொலைக்காட்சியில் பிணத்தைக் காட்டி கோடிகோடியாகவே பணம் திரட்டினர்.

பணத்தைத் தருவதன் மூலம், பணம் கொடுத்தவன் தனது சோகத்தைத் தீர்க்க முடியும் என்ற உளவியல் சிதைவை உருவாக்கினர். பணம் கொடுப்பதற்கு அப்பால் சமூகக் கடமை எதுவும் உனக்கு கிடையாது என்ற மலட்டு உணர்வை உருவாக்கினர். இயற்கை மக்களுக்கு ஏற்படுத்திய துயரத்தில் பங்கு கொண்ட மக்கள், தமது சொந்த உழைப்பில் ஒரு பகுதியைப் பணமாகக் கொடுத்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தாம் கொடுத்த பணம் போய் சேர்ந்ததா என்பதைக் கண்காணிக்கும் உரிமை எதுவும், பணம் கொடுத்த மக்களுக்குக் கிடையாது. தாம் கொடுத்த பணம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்படிப் பகிரப்பட்டது என்று கேட்கும் உரிமையும் கிடையாது. ஏன் தமிழ் மக்கள் எவ்வளவு புனர்வாழ்வு நிதியை வழங்கினர் என்று கேட்கும் உரிமையும் கிடையாது. கடந்த காலத்தில் புலிகளின் வரலாற்றில் மக்கள் கொடுத்த பல பத்து கோடி பணத்துக்கு எது நடந்ததோ, அதுவே இன்றும் நடக்கின்றது.

இவை பற்றி கேள்வி கேட்காது செம்மறி ஆடுகள் போல் பணத்தைத் தா என்பதே, புனர்வாழ்வு நிவாரணத்தின் அடிப்படை கோட்பாடாகவே அரங்கேறியது. அதாவது உனது கடின உழைப்பால் உருவான பணத்தை மட்டும் தந்துவிடு என்பது புலித் தத்துவம். மற்றபடி செம்மறியாடுகளாக எதையும் நிமர்ந்து பார்க்காது, மந்தைகள் போல் மேயுங்கள் என்பதையே, தமது அதிகாரத்தின் மூலம் தமிழ் மக்களின் உணர்வாக்கியுள்ளனர். பணத்தைத் தருவதன் மூலம் துயரத்தைப் போக்கிக் கொள் என்ற எல்லைக்குள், மனித அவலம் மலினப்படுத்தப்பட்டது. பணம் தராதவனும், தம்மிடம் பணம் தராதவனும் ஒரு தமிழ்த் துரோகியாக முத்திரை குத்தப்பட்டான். தம்மிடம் பணத்தைத் தராது சுயமாகப் பணத்தைத் திரட்டி செயல்படுபவர்கள் எல்லாம் அதியுயர்ந்த தேசத்துரோகிகள் ஆவர். அதை நேரடியாக அந்த மக்களுக்கு எடுத்துச் செல்வது அதியுயர்ந்த தேச துரோகமாகும். புனர்வாழ்வு நிதிகள் நேரடியாக அல்ல, அவை ஆயுதங்களாகப் போகவேண்டும் என்பது, புலிப் பினாமிகளான புனர் வாழ்வுக் கழகத்தின் நடைமுறை மற்றும் கோட்பாடாகும். தமக்கு வெளியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக எடுத்துச் செல்பவர்களுக்கு எதிராக, புலிப் பினாமிய இணையத் தளங்கள் எச்சரிக்கைகள் கூட விடுத்து இருந்தன. இதைத் தொலைக்காட்சிகள், ரேடியோக்கள் செய்தியாக்கின.

உண்மையில் 2001இல் 20,000 மக்களைப் பலி கொண்ட குஜராத் நிலநடுக்கத்தின்போது இந்து பாசிஸ்ட்டுகளான சிவசேனை எதைச் செய்ததோ, அதையே புலிகள் செய்கின்றனர். சிவசேனை அந்த மக்களுக்கு கிடைத்த நிவாரணங்கள் அனைத்தையும் பலாத்காரமாகக் கைப்பற்றியது மட்டுமின்றி, சிவசேனைக்கு வெளியில் செய்யப்பட்ட நிவாரணங்களையும் பறிமுதல் செய்து தனதாக்கியது. நிவாரணத்தின் ஒரு பகுதியை இந்துக்களுக்கு மட்டும் வழங்கியதுடன், முஸ்லீம் மக்களுக்குக் கிடைப்பதை, முற்றாகத் தடுத்தனர். பெரும் நிதியை இந்த நிவாரணங்கள் மூலம் சுருட்டிக் கொண்ட சிவசேனை, இந்தப் பெரும் நிதியைக் கொண்டே 2004ஆம் ஆண்டில் முஸ்லீம் மக்கள் மீதான இந்துப் பாசிசத்தைக் கட்டவிழ்த்து 2000க்கும் மேற்பட்ட முஸ்லீம் மக்களைக் கொன்றனர். இவை இன்று அப்பட்டமாக அம்பலமாகி வருகின்றது. இதுவே தமிழ் மக்கள் வழங்கிய நிவாரண நிதிக்கு நிகழும். இதற்கு வெளியில் யாரும் பூதக்கண்ணாடி கொண்டு வெளிச்சம் காட்ட முடியாது. இந்த எல்லைக்குள் தான் புலிகளின் நிதி சேகரிப்பு நடைபெற்றது.

இதற்குச் சகல தகவல் தொடர்பு வழிகளையும் பயன்படுத்தினர். புலிகளின் நேரடி பினாமி தொலைக்காட்சிக்கு வெளியில் இயங்கிய தொலைக்காட்சிகளுக்குக் கூட, மறைமுகமான நிர்ப்பந்தத்தைப் புலிகள் கொடுத்தனர். உதவி அனைத்தையும் தம்மிடம் வழங்கக் கோரும் நிர்ப்பந்தத்தை அறிவித்தல்கள் மூலம் ஏற்படுத்தினர். மனித அவலத்தை, மனித நாகரிகமே வெட்கித் தலைகுனியும் வண்ணம் வக்கிரமாக்கி அதை விளம்பர நிகழ்ச்சியாக்கிக் கொண்டிருந்த போது, உதவிகளைத் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திடம் வழங்குங்கள் என்று வலிந்து கூறுமளவுக்கு நிகழ்ச்சிகள் ஒரு செயற்கை தன்மையுடன் ஒளிபரப்பாகின. புலிகள் என்ற தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதாக வலிந்து கூறப்பட்டது. இந்த உதவும் செய்திகளின் போது, புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் புனர்வாழ்வுக் கழகம் உதவுவதாகச் செய்தியாளர்கள் அங்கு செல்லாத நிலையிலும் கூறிய சம்பவங்கள் ஒரு திணிப்பாகவே அடிக்கடி வந்து கொண்டிருந்தது. அதாவது தமிழர் புனர்வாழ்வுக் கழகம் என்ற புலிகள், தமிழ் மக்களுக்கு உதவுவதாகக் கூறும் வார்த்தைகள் வக்கிரமான காட்சிகள் மீதான ஒரு ஆக்கிரமிப்பாகவே இருந்தது. அதாவது இதைக் கூறுவதற்காகவே காட்சிகள் திரையில் ஓடிக் கொண்டிருந்தன. இதன் மொத்த நோக்கமே தமிழ் மக்களின் மந்தைத்தனத்தை, பணமாக்குவதே குறிக்கோளாகக் கொண்டிருந்தது.

அமெரிக்க ஏகாதிபத்தியப் பாணியில் பொய்ப் பிரச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு புலிகள் பிரச்சாரத்தைக் கட்டமைத்தனர். கட்டமைக்கின்றனர். உலக மக்களை அடிமைப்படுத்த அமெரிக்க ஏகாதிபத்தியம் கேடுகெட்ட வக்கிரத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குவது போல், புலிகள் தமிழ் மக்கள் மேல் தமது சொந்த வக்கிரத்தை உருவாக்கினர். பிணங்களை விளம்பரப்படுத்தி பணத்தைத் திரட்டினர். இந்த வக்கிரமான விளம்பரத்தின் போது, வாழும் உயிர்களின் உளவியல் சிக்கல்களை உருவாக்கக் கூடிய காட்சிகளைத் தேர்ந்தெடுத்து தொடர்ச்சியாகவே ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர். இந்தக் காட்சிப் படிமங்கள் புலம்பெயர் மண்ணில் வாழும் தமிழர்களையும், அவர்களின் சிறு குழந்தைகளையும் எதிர்காலத்தில் பல உளவியல் நோய்க்கு இட்டுச் செல்லும் அபாயத்தை யாரும் சந்தேகிக்கத் தேவையில்லை. பிணக் குவியல்களும், பிணங்களும் ஒரு செய்தி என்ற கட்டமைப்பைத் தாண்டி, அதை அநாகரிகமாக விளம்பரமாக்கி பல மணி நேரம் தொடர்ச்சியாக சில நாட்கள் ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர். நலிந்து பல உளவியல் நோய்க்குள் சிக்கியுள்ள புலம்பெயர் தமிழ்ச் சமூகம், புதிதாகத் தீர்க்க முடியாத பல உளவியல் நோய்கள் உள்ளாகும் அளவுக்கும், அவர்களின் குழந்தைகளுக்குப் பைத்தியத்தை உருவாக்கும் அளவுக்கு ஒரு உளவியல் யுத்தத்தை நடத்தியே பணத்தைத் திரட்டினர். இந்தக் காட்சிகள் எல்லாம் மனிதத் துயரத்தைப் பகிர்ந்து கொள்ள நடத்தப்பட்டவையல்ல. பணம் திரட்டும் ஒரேயொரு நோக்கில் மட்டுமே நடத்தப்பட்டவை.

இப்படி திரட்டப்பட்ட பல பத்துக் கோடிப் பணத்தை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்படி கொடுப்பார்கள் என்ற எந்தத் திட்டத்தையும் யாரும் எதிர்காலத்தில் பெறமுடியாது. அதாவது தாம் கொடுத்த பணத்தைக் கண்காணிக்கும் உரிமை கொடுத்த மக்களுக்குக் கிடையாது. பணம் கொடுத்தவர்கள் பலர், இந்தப் பணம் ஆயுதங்களாகவே செல்லும் என்ற அதிருப்தியுணர்வுடன் தான், தமக்கு வேறு மார்க்கம் இன்றி கொடுத்ததைச் சொல்லி புலம்புவதைக் காண்கின்றோம். புலிகள் ஒன்றும் மக்களுக்காக இயங்கும் மக்கள் இயக்கம் அல்ல. கரையோரங்களில் கஞ்சிக்கே வழியற்று வாழ்கின்ற இந்த மக்களையிட்டு என்றுமே அக்கறைப்பட்டது கிடையாது.

முல்லைக்கரைகளில் வாழ்ந்த இந்த மக்களுக்கு 1995இன் பின்பாக அரசு வழங்கிய 25,000 ரூபா நிவாரணத்தைக் கொண்டே, பஞ்சம் பிழைத்து வாழ்ந்த வாழ்வை சூசையே தனது சொந்தப் பேட்டியில் ஒப்புக் கொள்கின்றார். அரசுதான் அங்கு உதவி செய்து இருந்தது. இந்த மக்களின் அவலத்தை வக்கிரமாகப் படமாக்கி காசு பண்ணியவர்களும் சரி, இதை அரசுக்கு எதிராக முன்னிறுத்தி அரசியல் விபச்சாரம் செய்த சக்திகளும் சரி என்றுமே இந்த ஏழை மக்களையிட்டுக் கவலைப்பட்டது கிடையாது. ஓட்டைகள் விழும் ஓலைக் கீற்றில், மாற்று உடுப்புகளின்றி வாழ்ந்த இந்த ஏழைகளின் வாழ்வை எந்தத் "தேசியவாதிகளும்' கண்ணெடுத்து பார்த்ததில்லை. இந்த ஏழைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு தேசத்தையே தேசியமாகவும், அதையே வாழ்வாகவும் கொள்கையாகவும் கொண்ட ஒரு பொருளாதாரக் கட்டுமானத்தையே புலித் தேசியம் பீற்றுகின்றது. புலிகளின் பொருளாதாரக் கொள்கை மக்களின் பொருளாதார வாழ்வையிட்டு எந்தச் சமூக அக்கறையையும் கொண்டிருந்ததில்லை. புலிகளின் பொருளாதாரக் கொள்கை அவர்களின் வரலாறு முழுக்க, மக்களின் உழைப்பைச் சுரண்டி வாழும் கொள்கையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. மக்களின் ஏழ்மையும், அவர்களின் கூலி வாழ்வும் புலிகளின் முதலீடுகளுக்குச் செல்வத்தை அள்ளிக் கொடுத்தது. இந்த இயற்கை அனர்த்தங்களுக்கு (பேரழிவுகளுக்கு) முன்பு இந்த மக்களையிட்டு, அவர்களின் சமூகப் பொருளாதார வாழ்வையிட்டு அக்கறையற்ற புலிகளின் அரசியல் கொள்கை, பல பத்து கோடி நிதிகளை அந்த மக்களுக்குக் கொடுப்பதை அடிப்படையாகக் கொண்டதல்ல. மாறாக, புலிகளின் முதலீடும், புலிகளின் தனிப்பட்ட முதலீடும் பெருகவே வழிவகுக்கும். உண்மையில் இன்று உயிர் தப்பியவர்கள் புலிகளிடம் கூலிக்கு வேலை செய்ய முடியும். இந்த மக்களின் சுய உற்பத்திகளை அழித்துவந்த புலிகளுக்கு, இயற்கை கொடையாக அதை வேகமாக அழித்துக் கொடுத்துள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்ட மக்கள் ஈடேறவிடாது புலிகளின் முதலீட்டில் கூலிகளை உருவாக்கும் வல்லமை வாய்ந்த நிதியாதாரங்களை, பாதிக்கப்பட்ட மக்களின் பெயரில் அவர்களுக்கு எதிரா கவே திரட்டியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்கு என பரந்துபட்ட மக்கள் வாரி வழங்கிய நிதி, அவர்களுக்கு எதிராகவே உற்பத்தித் துறையில் செயல்படுவதை யாரும் தடுக்க முடியாது. இது உயிர் தப்பியவர்கள் மேல் உருவாகும் மற்றொரு சுனாமிதான்.

இதைவிட சேர்க்கப்பட்ட புனர் வாழ்வு நிதியின் பெரும் பகுதி, மீண்டும் ஏகாதிபத்திய ஆயுதச் சந்தையில் புதைந்து போவதை யாரும் தடுக்க முடியாது. மிகுதி பெரும் சொந்த முதலீடாகவே மாறும். இதை நாம் நடைமுறையில் புலிகளின் பல முதலீடுகளில் என்ன நடக்கின்றது என்பதை வைத்துக் காண முடியும். இதற்கு மாற்று விளக்கம் யாராலும் நடைமுறையில் காட்ட முடியாது. இவற்றைக் கடந்தகாலத்தில் புலிகளின் செயல்பாடுகள் அப்பட்டமாகவே எடுத்துக் காட்டுகின்றன. இந்தக் கடற்கோள் ஏற்படுவதற்கு முன்பு மட்டக்களப்பில் ஏற்பட்ட வெள்ளத்தைக் காட்டி, சேர்க்கப்பட்ட நிதி, அந்த மக்களுக்குச் சென்றதை எந்தக் கொம்பனாலும் காட்ட முடியாது. இதற்கு ஒரு துப்பாக்கி குண்டால்தான் பதில் தரமுடியும். இதுதான் உண்மை. இதற்கு வெளியில் உண்மை கிடையாது.

உண்மைகளைப் புதைகுழியில் புதைத்தபடியே தான், புலிகள் சிறீலங்கா அரசுக்கு எதிராக உடனடியாகவே குற்றச்சாட்டுகளை வாரி இறைக்கின்றனர். இவையெல்லாம் ஒருதலைப் பட்சமானவை. சிறீலங்கா அரசு ஒரு சிங்கள இனவெறி இனவாத அரசாக இருப்பதும், தமிழ் மக்களை விட சிங்கள மக்களுக்கு அதிக சலுகைகளையும், முதன்மையான உதவிகளையும் வழங்குகிறது என்பதும் உண்மைதான். அப்படித்தான் இந்த இனவெறி அரசு இயங்குகின்றது. ஆனால் புலிகள் கூறுவது போல் அல்ல. புலிகள் தாம் தம்மளவில் மக்களுக்கு எதையும் செய்ய முடியாத நிலையில், இதை எதிரி மீது குற்றம் சாட்டுவதன் மூலம் தமது சொந்தக் கையாலாகாத்தனத்தை மூடிமறைக்கின்றனர். சொந்த மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், ஒரு கிழமை கடந்துபோன நிலையிலும் அந்த மக்களைப் புலிகளின் தலைவர் சென்று பார்க்கவில்லை. இது ஒரு இனம் தெரியாத புகைச்சலாக, எரிச்சலாகக் குசுகுசுக்கப்படுகின்றது. இந்த நிலையில் அவரின் பெயரால் வந்த அறிக்கை 30 கோடி ரூபாவை நிவாரணமாக அறிவித்துள்ள நிலையில், அவை மக்களுக்குச் சென்றதை யாரும் உறுதிப்படுத்த முடியாது. தலைவரின் பெயரில் விடப்பட்ட அறிக்கை, இனம் கடந்து, மொழி கடந்து தமிழ் சிங்களம் என பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் அனுதாபத்தைத் தெரிவித்துள்ளது. ஆனால் நடைமுறையில் புலிகள் கட்டமைப்பு புலித் தலைவரின் அறிக்கைக்கு மாறாக, சிங்கள மக்களுக்கு எதிரான பிளவை அகலப்படுத்தும் தீவிர தமிழ் இனவாதப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. தலைவரின் அறிக்கைக்கும் நடைமுறைக்கும் இடையில் உள்ள உண்மை, 30 கோடி நிதிக்கு (இதுவும் மக்களின் நிதிதான். இந்த நிதி இருந்த காலத்தில்தான், வன்னியில் எலும்பும் தோலுமாக மக்கள் வாழ்வைப் படமாக்கி முன்பு காசு சேர்த்தனர்). மட்டும் விதிவிலக்கல்ல. இந்த நிலையில் புலிகளின் நிவாரணம் எங்கே எப்படி மக்களுக்குச் சென்றுள்ளது.

அறிவிழந்த உணர்ச்சிவசப்பட்ட சில முட்டாள்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தின் மருத்துவம் மற்றும் உணவு விநியோகங்களை எடுத்துக்காட்டுகின்றனர். இது அந்தப் பிரதேசத்தை ஆளும் புலிகளின் கடமை. இந்த இடத்தில் புலிகள் அல்லாத யார் இருந்திருந்தாலும் இதைச் செய்திருப்பார்கள். உலகெங்கும் இது நடந்தது. உண்மையில் இந்தக் கட்டமைப்பிலும் அணிதிரட்டப்படாத மக்களின் உதவியைத்தான், புலிகளால் எடுத்து மீளக் கொடுக்கப்பட்டது. புலிகள் அல்லாத தமிழ்ப் பிரதேசத்தில் இராணுவம் இதைச் செய்தது. இராணுவம் மீட்புப் பணிகளில் ஈடுபட்டது. அதற்காக இராணுவத்துக்கு நிதியை வழங்கிவிட முடியுமா? இது போல்தான் புலிகளும்.

2.1 மக்களுக்காக வாழ்பவர்கள் மட்டும்தான், புனர்வாழ்வைக் கூடியளவுக்கு நேர்மையுடன் செயல்படுத்துவார்கள் அல்லவா!

இந்த நிலையில் ஆரம்ப நாட்களில் அரசின் நிவாரணங்கள் தமிழ் மக்களுக்குக் கிடைக்கவில்லை என்பது, உண்மைதான். ஆனால் இதைப் புலிகள் தமிழ் மக்களுக்கு மட்டும் அரசு இப்படி செய்கின்றது என்று ஒருதலைப்பட்சமாகக் குற்றம் சாட்டிய போது, உண்மை வேறொன்றாக இருந்தது. அரசு சிங்கள மக்களுக்கும் கூட உதவி செய்யவில்லை என்பதைப் பூசி மெழுகிவிடுகின்றனர். சிங்களப் பிரதேசங்களில் வாழும் சிங்கள மக்கள் அரசின் உதவி எதுவும் தமக்குக் கிடைக்கவில்லை என்று குற்றம் சாட்டியதை, தொலைக்காட்சிகள் காட்சிப்படுத்துகின்றன. இது இந்தியா முதல் அனைத்து நாடுகளினதும் பாதிக்கப்பட்ட மக்களினதும் குற்றச்சாட்டாக முன் வைத்தபோது அதில் நியாயம் இருந்தது.

ஆனால் புலிகள் தமிழ் மக்களுக்கு மட்டும் உதவி செய்யவில்லை என்று இலங்கை அரசு மீது குற்றச்சாட்டை முன்வைத்தனர். உண்மையில் தமிழ் மக்களை ஏமாற்றி அதிக பணம் கறக்கும் உத்தியை அடிப்படையாகக் கொண்டே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களை விட, பாதிக்கப்படாத மக்களை ஏமாற்றி பணம் கறப்பதே, இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையாகவும் உள்நோக்கம் கொண்டதாகவும் இருந்தது. அதாவது பாதிக்கப் பட்ட மக்களின் பெயரில், தமக்குப் பணம் சேர்க்க இதைப் பயன்படுத்திக் கொண்டனர். இதன்போது தமிழ் இனவாதம் என்றுமில்லாத உச்சத்தை அடைந்தது, மற்றொரு பக்கத்தில் புலிகளின் பணம் சேர்க்கும் உத்தி, சிங்கள மக்களுக்கு அரசு உதவி செய்வதாகக் கூறுவதன் மூலம் பாதிக்கப்பட்ட சிங்கள மக்களின் முதுகில் குத்தினர். அரசுகளின் கையாலாகாத்தனத்தையும், அரசின் செயலற்ற தன்மையையும், அது சார்ந்த உண்மைகளையும் மூடி மறைப்பதன் மூலம், தமிழ் இனவாதத்தையே விரிவாக்கி தமிழ் மக்களை முட்டாளாக்கியுள்ளனர்.

உலகமயமாதலில் நவீன காலனியக் கைக்கூலிகளாகச் செயல்படும் தேசிய அரசுகள் மக்களுக்கு எந்த நிவாரணத்தையும் உடனடியாக நேரடியாக வழங்க முடியாது. எந்த நிவாரணமும் உலகவங்கியின் அனுமதியுடன் தான் வழங்க முடியும். இது இலங்கை இந்தியா என்று உலகின் அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும். உலகமயமாதலில் மனித அழிவுகளின்போது நிவாரணத்தை வழங்க சிறப்பு வடிவங்களை உருவாக்கியுள்ளனர். ஏகாதிபத்திய நிதியாதாரத்தில், அவர்களின் கைக்கூலிகளாகச் செயல்படும் தன்னார்வ அரசு சாராத குழுக்கள் தான் நிவாரணத்தை வழங்க முடியும். இது உலகமயமாதலின் அடிப்படையான விதிகளில் ஒன்று. இன்று உலகளவில் இப்படி இயங்கும் பல தன்னார்வக் குழுக்களின் வரவு செலவுகள், பல தேசங்களின் தேசிய வருவாயைவிடவும் அதிகமாகும். நிவாரணத்தை இடைத் தரகர்கள் இன்றி தமது விசுவாசிகள் மூலம் குறிப்பாக கிடைக்கப் பண்ணுவதன் மூலம், அதிக லாபத்தை மூலதனம் சம்பாதிக்கின்றது. அத்துடன் மக்கள் மேல் ஏகாதிபத்திய அரசியல் பொருளாதாரச் செல்வாக்கையும் செலுத்த முடிகின்றது. இந்த நிலையில் அரசுகள் சுரண்டலைப் பாதுகாக்கும் ஒரு இயந்திரத்தைக் கொண்ட ஒரு நிறுவனம் மட்டும்தான். நீண்டகால நிவாரணத்தை உலக வங்கியின் அனுமதியுடன்தான், அரசுகள் நீண்ட இடைவெளியில் வழங்க முடியும். இது இன்றைய அரசுகள் பற்றியதும், உலகமயமாதலில் பொதுவான ஒரு நடைமுறையாகும். இந்த இடத்தில் அரசுகள் ஏகாதிபத்தியத்தின் கைக்கூலி நிறுவனங்களே.

இந்தக் கட்டுப்பாடுகள் எதுவுமற்ற புலிகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன செய்தார்கள் என்றால் எதுவுமில்லை. அரசு போல் தான், இவர்கள் தலைமையின் உத்தரவுகளுக்குக் காத்திருந்தனர். பரந்தமக்கள் கூட்டமும், பொது நிறுவனங்களும், தன்னார்வக் குழுக்களும் இணைந்தே ஆரம்ப மீட்புகள் முதல் ஆரம்ப நிவாரணங்களைச் செய்தனர். இவர்களுடன் அடிமட்ட புலிகளும் கைகோர்த்து நின்றனர். உண்மையில் இதுபற்றி புலித் தலைவர்களின் முதலாவது அறிக்கை வெளிவந்த காலதாமதத்தைக் கொண்டே, இதைக் கவனத்தில் எடுக்க முடியும். இதேபோல் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் ராணுவம் செயல்பட்டது. பின்னால் புலிகள் செய்ததெல்லாம், பொதுமக்களின் தன்னெழுச்சியான செயல்பாட்டைக் கட்டுப்படுத்தி அவற்றைத் தாம் செய்வதாகக் காட்டிக் கொள்ளத் தொடங்கினர். நிவாரணங்களைக் கைப்பற்றி தாம் கொடுப்பதாகக் காட்டுவதே நிகழ்கின்றது. இந்தக் கைப்பற்றல் என்பது படிப்படியாகச் சொந்த இனத்தைக் கடந்து வளர்ச்சியுற்றதுடன், மற்றைய இனங்கள் மேலாதானதாகவும் மாறியது. இதுவே பிரதான முரண்பாடுகளாகப் புலி சார்பு, புலி எதிர்ப்பு இணையத்தளங்கள் ஒன்றையொன்று குற்றம் சாட்டி செய்தியாக்கின. மக்களுக்கு யார் கொடுப்பது என்பதைத் தீர்மானிப்பதும், அதைக் கைப்பற்றுவதும் வன்முறையாகவே நிகழ்கின்றது. இங்கு புலிகள் தாம் கொடுப்பதைப் பறித்ததாகக் கூறவில்லை. மாறாக மற்றவர்கள் கொடுப்பதைச் சிங்களவர்கள் பறிப்பதாகக் கூறுவது, புலிகள் கொடுக்கவில்லை என்பதை மறைமுகமாக எடுத்துக் காட்டுகின்றது. இந்தளவுக்கும் அதிக நிவாரணங்களை வெளியில் இருந்து பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்குச் சிங்கள மக்கள் கொண்டு சென்றுள்ளனர். இங்கு அரசு அல்ல.

குறிப்பாகத் தமிழர்கள் யாரும் கண்டு கொள்ள மறுக்கும் அதிகம் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்குச் சிங்கள முஸ்லீம் மக்களின் உதவிதான், குறைந்தபட்சமான அடிப்படையான உதவியாக இருந்தது. இதேபோல் திருகோணமலைக்கும், இந்த உதவி தங்குதடையற்ற வகையில் சென்றது. இதேநேரம் ஐரோப்பாவில் கோடிக்கணக்கான பணம் சேர்க்கப்பட்டு இருந்தது. பல கிராமங்களுக்கு யாரும் செல்லாத ஒரு நிலையில் மக்கள் இறந்து கொண்டிருந்தனர். இந்த உண்மைகள் திட்டமிட்டே மூடிமறைக்கப்படுகின்றது. இதேநேரம் தனிப்பட்ட நபர்களினதும், பொது அமைப்புகளினதும் விநியோகங்கள் படிப்படியாக முற்றாகப் பறிமுதல் செய்யப்படுவதுடன் அதை மறுவிநியோகம் செய்யப்படுவதுமாகவே புலிகளின் கையோங்கி வருகின்றது. இவற்றைத் தனிப்பட்ட பல சம்பவங்கள் செய்தியாக்கி வருகின்றன. தமிழ் மீடியாக்கள் இவற்றைச் செய்தியாக்க கடும் தடைகளும், நிர்பந்தங்களும் ஏற்படுத்தப்பட்டு இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. மாறாக இனவாத நோக்கில் மட்டும், மற்ற இனங்கள் மீதான குற்றமாகத் தமிழ் மீடியாக்கள் புனைகின்றன. பல சந்தர்ப்பங்களில் இதற்கு ஆதாரமே இருப்பதில்லை. தமிழ் இனவெறியைக் கக்கும் ஒரு எல்லைக்குள் மட்டும் நிகழ்ச்சிகளைப் பூதக்கண்ணாடி கொண்டு தேடி, அதையே பெரிதாகக் காட்டிவிடுகின்றனர். இதன் மூலம் இனவாதத்தை இந்த இயற்கை அனார்த்தத்தின் பேரழிவின் ஊடாக, மேலும் அகலப்படுத்தியுள்ளனர். அத்துடன் இந்த நிவாரண விநியோகத்தில் நடத்தும் இன ரீதியான இழுபறியான வலிந்த பிரச்சாரம், மூன்றாவது தரப்பின் (அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்) தலையீட்டைத் தன்னிச்சையாக நடத்தும் நிலைக்கு ஏதுவாக மாறிவருகின்றது.

இவையெல்லாம் புலித் தலைவரின் அறிக்கைக்குப் புறம்பாக உள்ளது. இந்த அறிக்கை பாதிக்கப்பட்ட சிங்கள மக்களுக்கு ஏற்பட்ட துயரத்தில் பங்கு கொள்வதாகக் கூறிச் செல்கின்றது.ஆனால், சிங்கள மக்களுக்கு எதிரான பிரச்சாரத்தின் ஊடாகவே சகல தமிழ்ச் செய்தி மீடியாக்களும் விளம்பரப் பிரச்சாரத்தைச் செய்வதுடன், என்றுமில்லாத ஒரு இனப்பிளவை அகலமாக்கியுள்ளனர். அதாவது யுத்தம் நடந்தபோது ஏற்பட்ட இனப் பிளவைவிட இன்று தமிழ் மீடியாக்களின் குறுகிய பிரச்சாரத்தில் ஏற்பட்ட இனப்பிளவு அகலமானது. பாதிக்கப்பட்ட மக்களிடையே இந்தப் இனப் பிளவு குறைந்துள்ள நிலையில், இதற்கு உதவிய தமிழ் மக்களிடையே பிளவுக்கான இனஉணர்வுகள் சார்ந்த அடிப்படைகள் வெட்கம் கெட்ட முறையில் அகலமாகியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய சிங்கள, முஸ்லீம் மக்களிடையே நேச உறவுகள் நெருங்கிக் காணப்படுகின்றது.

பிணத்தை விளம்பரம் செய்து, சிங்கள மக்களைக் கேவலப்படுத்தி பணம் சேர்ப்பதை அடிப்படையாகக் கொண்டு உருவான தமிழ்த் தேசிய வியாபாரம் சர்வதேச புதிய தலையீடுகளால் நடுச்சந்திக்கு வந்துள்ளது. ஏன் புலம்பெயர் நாடுகளில் கோடிக்கணக்கில் சேகரிக்கப்பட்ட பணம் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் செல்வதை ஏகாதிபத்தியம் கண்காணிக்கவும், அப்படி பணம் செல்வது உறுதிபடுத்தப்படாவிட்டால் அவற்றைப் பறிமுதல் செய்யும் நிலைமைக்கு இலங்கையில் சர்வதேசத் தலையீடுகள் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் இனவிரோத குறுந்தேசிய உணர்வுகளைப் பயன்படுத்தி நிதியைத் திரட்டியபோது, இந்தக் குறுந்தேசிய இன உணர்வுக்குப் பயன்படுத்தப்பட்ட பல அடிப்படையான பிரச்சாரங்களுக்கு, கையாண்ட கூற்றுகள் அடிப்படையற்றதும் ஆதாரங்களற்றதுமாகக் காணப்படுகின்றது. மறுபக்கத்தில் புலித்தலைவரின் அறிக்கைகள் தமது சொந்த இழப்பு மீது கூட ஒன்றுக்கொன்று முரணானதாக வெளியிடப்படுகின்றது. முரண்பாட்டின் வடிவமாகவே நிகழ்ச்சிகள் முன்வைக்கப்பட்டது. செய்திகள் அடிப்படையும் ஆதாரமுமற்ற ஒன்றாகவே எப்போதும் முன்வைக்கப்பட்டது. கடற்கோள் நிகழ்ந்த அன்று செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தபோது, தமிழ் மீடியாக்கள் மட்டக்களப்பு மட்டுமே பாதிக்கப்பட்டதாகக் கருதிக் கொண்டிருந்தன. இதன்போது தீபம் தொலைக்காட்சி மட்டக்களப்பு பாதிப்பைக் கூறியதுடன், தமிழர்களின் இழப்பையிட்டு ஜே.வி.பி. சிரித்து கொண்டாடுவதாகப் புலிப் பினாமியாகவே செய்தி தயாரித்து வெளியிட்டது. உண்மையில் அக்கணம் ஜே.வி.பி.யின் கோட்டைகளாக விளங்கிய பிரதேசங்களில், பல ஆயிரம் மக்கள் நீரில் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தனர். செய்திப் புனைவுகள், கற்பனைக்கு எட்டாத இனவாதத்துடன் முன்வைக்கப்பட்டது. மனித இழப்பைவிடவும் புலிப் பினாமியத்துக்கும் புலிக்கும் இசைவாகச் செய்திகளைத் திரித்துத் தருவது உச்சத்தையே எட்டியது.

இந்தப் புனைவு விளம்பரச் செய்திகளில் மற்றொரு உண்மையை நாம் காணமுடியும். இந்தச் செய்திகள் முல்லைத்தீவை நோக்கி திடீரென நகர்ந்தது. முல்லைத்தீவே அதிக இழப்பைச் சந்தித்ததாகக் காட்ட முனைந்த நிகழ்வு முன்னிலைக்கு வந்தது. இதில் பி.பி.சி. தமிழ்ச் செய்தி தொகுப்பாளராகவும், பவ்வியமாகப் புலிப் பினாமியாகவும் புலம்பும் ஆனந்தி அம்மாவும் தாளம் போடத் தொடங்கினர். முல்லைத்தீவு இழப்பைப் பெரிதாகக் காட்டும் விளம்பரம், நிதி சேகரிப்பின் மையமான கோஷமாகியது, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய பகுதிகள், தமிழ் மீடியாக்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டன. புலிகள் அல்லாத உதவிகள் இருட்டடிப்பு செய்து, தமிழ்க் குறுந்தேசிய உணர்வுக்குச் செங்கல் இட்டனர். குறிப்பாக அம்பாறை இழப்பைக் குறைவாகச் சித்தரிக்க முனைந்தனர். அம்பாறையில் அதிக இழப்பு என்று கூறியவர்களைப் பொய்யர்களாகச் சேறு பூசினர். திடீரென யாழ்ப்பாணமும், முல்லைத்தீவும் செய்தியில் முதன்மை நிகழ்ச்சிநிரலாகியது. தமிழ் மக்களின் இழப்பு அதிகம் என்று கூறுவதன் மூலம் பணத்தை உலகளவில் அதிகம் கறக்க முடியும் என்ற புலிகளின் தத்துவத்தைத் தமிழ் மீடியாக்கள் பயன்படுத்திக் கொண்டன. அதுவும் முல்லைத்தீவில் அதிக இழப்பும், அடுத்து யாழ்ப்பாணம் அதிக இழப்பாகவும் சித்தரிக்கும் போக்கு முன்னிலைக்கு வந்தது. இதன்போதே நிதி சேகரிப்பு உச்சத்தை அடைந்தது. ஆனால் இழப்பு அம்பாறையில் மிகப் பெரிதான ஒன்றாக இருந்தது. இலங்கையில் உயிர் இழந்தோரில் அரைவாசி பேர் அம்பாறையைச் சேர்ந்தவர்கள். அதிக அகதிகள் அங்கு உருவாகியுள்ள நிலைமையை முற்றாகத் தமிழ் மக்களின் மத்தியில் திட்டமிட்டு மறைத்தனர். இந்த நிலையில் எந்த நிவாரணமும் அங்கு செல்லவில்லை. பிணங்கள் குவியல் குவியலாக ஏற்றப்பட்டுப் புதைக்கப்பட்ட நிலையில், அம்பாறையில் மீட்புப் பணியில் ஈடுபட்ட அமைப்புகள் பிணங்களைப் புதைக்க வந்து உதவும்படி ஒரு வேண்டுகோளை அனைத்து மக்களிடமும் பகிரங்கமாக விடுத்தனர். இதன்போது கூட தமிழ் மீடியாக்கள் அம்பாறை இழப்பையிட்டு அலட்டிக் கொள்ளவில்லை. மாறாக அதை மூடிமறைத்தன.

மாறாகப் புலிப் பினாமிய இணையத்தளங்கள் முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் மீது சேற்றை வாரி வீசின. முஸ்லீம் மக்களின் இழப்பை மிகைப்படுத்துவதாகவும், தமிழ் மக்களுக்கு எதிராகத் துரோகம் செய்வதாகவும் தூற்றின. இதைத் தமிழ் மீடியாக்கள் செய்தியாக்கின. குறிப்பாக தீபம் தொலைக்காட்சி ஊடாக அனஸ் என்ற செய்தியாளர் அம்பாறை இழப்பைக் கொண்டு வந்தபோது, புலிகளின் இணையத்தளமான நிதர்சனம் அனஸ்சை தவறான தகவல் தருபவராக, விபரித்து ஒரு தேசத்துரோகியாகவே காட்ட முனைந்தது. இதன் மூலம் அம்பாறை மாவட்டத்தின் இழப்பை மறைத்து, தமிழ் மக்களின் முட்டாள்த் தனத்தின் மீது பணத்தைக் குவித்துக் கொண்டனர். அம்பாறையில் இழப்பு பற்றி முழுமையான புள்ளிவிபரங்கள் வெளிவராவிட்டாலும் பெருமளவில் முஸ்லீம் மக்கள் இழப்பு இலங்கை அளவில் கணிசமானது. தமிழ் மக்கள் அளவுக்கு முஸ்லீம் மக்களின் இழப்பு சமமானது. கிடைத்துள்ள புள்ளிவிபர அடிப்படையில் அதிக இழப்பைச் சிங்கள இனம் சந்தித்துள்ளது.

இந்த நிலையில் வெளிநாட்டு உதவிகளைக் கொள்ளையிட, முஸ்லீம் மக்கள் பற்றி புலிகளுக்குத் திடீர் கருசணை ஏற்பட்டது. இரண்டு லட்சம் ரூபா என்ற அற்பத் தொகையைக் கொடுக்கும் அறிவிப்பு வெளியிட்டதுடன், அவர்களைத் தமிழ் மக்களாகக் காட்டுவதும் தொடங்கியுள்ளது. கடந்தகால மனக்கசப்பான சம்பவங்களை மறப்போம் வாருங்கள் என்று புலம்பத் தொடங்கியுள்ளனர். கிடைக்கும் நிவாரணத்தை பங்கு போடுவதற்கு முஸ்லீம்களைத் தமிழ் மக்களாகக் காட்டுவது அதிகரித்துள்ளது. சிங்களவர்களை விட தமிழரின் இழப்பு அதிகம் என்று காட்டுவது உண்மையில் வெளிநாட்டு உதவியைப் பங்கிடுவதில் புலிகளுக்குத் தணியாதத் தாகமாகி விடுகின்றது.

உண்மையில், தமிழ் மக்கள் முஸ்லீம் மற்றும் சிங்கள மக்களைவிட அதிகம் இறந்து இருந்தால் நல்லது என்ற நிலைப்பாட்டைப் புலிகள் தங்களின் வெளிப்படுத்தல் ஊடாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். தமிழருக்கே அதிக இழப்பு என்று இதனடிப்படையில் காட்டமுனைந்தனர். அதிகம் தமிழ் மக்கள் இறந்து இருந்தால், அதில் அதிக லாபத்தை அடைய முடிந்திருக்கும் என்ற புலிகள் நிலைப்பாடு அவர்களின் வெளிப்படுத்தல்களில் பிரதிபலித்தது. இதன் மூலம் தமிழ் மக்களிடம் அதிக பணத்தைத் திரட்டவும், உலக உதவிகளை அதிகம் பெறவும், அதிக இழப்புக்காக ஏங்கியதைத் தொலைக்காட்சிகள் மற்றும் செய்திகள் அப்பட்டமாகப் பிரதிபலித்து நின்றன. உலகளாவிய பல நாடுகளின் இழப்பைக் குறுகிய தமிழின இழப்பாகக் காட்டமுனைந்தனர். மேற்கு நாட்டு அரசியல்வாதிகளையும், பிரமுகர்களையும் ஏமாற்றி பணம் திரட்டினர். திரட்ட முனைப்பு கொண்டனர். மேற்கு மக்களை ஏமாற்றி எல்லா இழப்பும் தமக்காகக் காட்டி வெந்த புண்ணில் வேலை பாய்ச்சி பணம் திரட்டினர். இலங்கையின் மொத்த இழப்பையும் காட்டி, தமது குறுகிய நலன்களுக்கு மேற்கு மக்களின் பணத்தைத் திரட்டினர். பிணங்களை விளம்பரமாக்கி சந்தைப்படுத்திய ஒரேயொரு தேசியம், தமிழ்தேசியம் மட்டும் தான் என்ற வரலாற்றை நவீன காலத்தில் பதிவு செய்துள்ளனர்.

02.01.2005