தமிழ் அரங்கம்

Saturday, September 9, 2006

புதிய வரலாறு படைக்கும் மாவோயிஸ்டுகள்

நேபாளப் புரட்சி

புதிய வரலாறு படைக்கும் மாவோயிஸ்டுகள் கொச்சைப்படுத்தும் போலி கம்யூனிஸ்டுகள்


நிலப்பிரபுத்துவ எதிர்ப்புஏகாதிபத்திய எதிர்ப்பு புதிய ஜனநாயகப் புரட்சியைச் சாதிப்பதுதான் நேபாள மாவோயிசக் கம்யூனிஸ்ட் கட்சியின் இலட்சியம்; என்றாலும், நேபாள மக்கள் ஜனநாயகப் புரட்சி தற்போது ஒரு புதிய இடைக் கட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது. நேபாளத்தில் மன்னராட்சியைத் தூக்கியெறிந்து ஒரு ஜனநாயகக் குடியரசை நிறுவுவது என்பதை இந்த இடைக்கட்டத்தின் உடனடி நோக்கமாகக் கொண்டு, போர்த்தந்திர முக்கியத்துவம் வாய்ந்த செயல் தந்திரத்தை வகுத்து மாவோயிச கம்யூனிஸ்ட் கட்சி செயல்படுகிறது. அடிப்படையில் அதன் அணுகுமுறையும், அரசியல் தீர்வும் சரியானது, அவசியமானது என்று வரவேற்கிறோம். அதேசமயம், இந்தியப் புரட்சிகர இயக்கத்திற்கு நேபாள மாவோயிசக் கட்சித் தலைவர் முன்வைத்துள்ள ஆலோசனைகள் ஏற்கத்தக்கன அல்ல. அது குறித்து நமக்கு விமர்சனங்கள் உள்ளன. இவை குறித்து எமது கருத்துக்களை தனிப் பிரசுரமாக விரிவாக பின்னர் வெளியிடுவோம். நேபாள மாவோயிஸ்டுகள் ஏழு கட்சிகளுடன் அமைத்துள்ள கூட்டணி, ஒப்பந்தங்கள் மற்றும் இந்திய அரசுடனான அவர்களின் பேச்சு வார்த்தைகள் ஆகியவை பற்றிய முழுவிவரமும் இன்னமும் கிடைக்கவில்லை; செய்தி ஊடகங்கள் மூலம் கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையிலேயே இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. புரட்சி அலை ஓங்கி வீசும் நேபாள நாட்டின் தலைநகரான காத்மண்டு, ஜூன் 2ஆம் நாளன்று மக்கள் திரள் பெருவெள்ளத்தால் திணறியது. பஞ்சைப் பராரிகளாக்கப்பட்ட கிராமப்புற விவசாயிகளும் உழைக்கும் மக்களும் தமது குடும்பத்தோடு திரண்டு, செங்கொடிகள் விண்ணில் உயர, பேருற்சாகத்துடன் அணிவகுத்து ஆர்ப்பரித்தனர். ""மன்னராட்சி முறை ஒழிக! அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலை நடத்து! உழுபவனுக்கே நிலம் சொந்தம்!'' என்ற முழக்கங்கள் இமயமலையில் மோதி எங்கும் எதிரொலித்தன.



நேபாள மக்கள் யுத்தத்தின் பத்தாண்டு நிறைவையொட்டி, கம்யூனிசப் புரட்சியாளர்களான மாவோயிஸ்டுகள், மன்னராட்சிக் கொடுங்கோன்மைக்கு எதிரான மாபெரும் மக்கள் பேரெழுச்சிக்குப் பிறகு, முதன்முதலாக நடத்திய அந்தப் பேரணி பொதுக் கூட்டத்தில் திரண்ட உழைக்கும் மக்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்திற்கும் மேல்! இப்பொதுக்கூட்டம் நடந்த டுண்டிகேல் சதுக்கத்திலிருந்து அரை கி.மீ தூரத்தில்தான் கொடுங்கோல் மன்னன் ஞானேந்திராவின் அரண்மனை. நெஞ்சிலே வெஞ்சினம் பொங்கத் திரண்டுள்ள இந்த மக்கள் வெள்ளம், சீறியெழுந்து அரண்மனையைத் தாக்கி அழித்து விடுமோ என்று பீதியில் நடுங்கியது, அதிகாரம் பறிக்கப்பட்ட ஞானேந்திரா கும்பல். என்ன செய்வது என்று புரியாமல் கையைப் பிசைந்து கொண்டிருந்தன, மன்னரால் உயிர்ப்பிக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் கட்சிகள்.



""இந்த அரண்மனை நேபாள ஜனநாயகக் குடியரசின் தலைமைச் செயலகமாக மாறப் போகிறது. அதற்காகத்தான் இதை இன்னும் விட்டு வைத்திருக்கிறோம். அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலை நடத்தி, புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கி, ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை நிறுவுவதே எங்கள் லட்சியம். அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலை தாமதப்படுத்த முயற்சிக்கும் கட்சிகளை நேபாள மக்கள் விரட்டியடிப்பார்கள். நேபாள மக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள்'' என்று இப்பொதுக் கூட்டத்தில் மாவோயிஸ்டு தலைவர்கள் எச்சரிக்கை விடுத்தார்கள்.



மன்னராட்சிக்கு எதிரான போராட்டத்தில் எக்காலத்திலும் திரண்டிராத அளவுக்கு மாவோயிஸ்டுகளின் இப்பேரணி பொதுக்கூட்டத்தில் மக்கள் திரண்டு, மாவோயிஸ்டுகளின் நோக்கத்தை எதிரொலித்ததைக் கண்டு பீதியடைந்த தற்காலிக நாடாளுமன்றத்தின் கட்சிகள், மக்கள் சக்திக்கு அடிபணிந்து, விரைவில் அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலை நடத்துவதாக அறிவித்தன. பயங்கரவாத பொய்க்குற்றம் சாட்டி மன்னராட்சி காலத்தில் சிறையிடப்பட்ட மாவோயிஸ்டு அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்துள்ளன. மாவோயிஸ்டுகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி, கடந்த ஜூன் 16ஆம் நாளன்று இக்கட்சிகள் புதியதொரு ஒப்பந்தத்தை நிறைவேற்றியுள்ளன.



இப்புதிய ஒப்பந்தப்படி, தற்போதைய தற்காலிக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு புதிய இடைக்கால அரசு நிறுவப்படும்; புதியதொரு இடைக்கால சட்டம் இயற்றப்படும்; அதனடிப்படையில் அரசியல் நிர்ணயசபைக்கான தேர்தல் நடத்தப்படும்; அச்சபை, புதிய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றும்; அதைத் தொடர்ந்து நேபாள ஜனநாயகக் குடியரசு பிரகடனப்படுத்தப்பட்டு, புதிய அரசியலமைப்புச் சட்டப்படி பல கட்சி நாடாளுமன்ற ஜனநாயகம் நிறுவப்படும். இதற்கான கால வரையறை தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, 31 பேர் கொண்ட போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவையும் இருதரப்பும் நிறுவியுள்ளன. 8 அம்சங்களைக் கொண்ட இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றவும் இரு தரப்புகளின் பேச்சுவார்த்தைகளை மேற்பார்வையிட்டு வழிநடத்தவும் நீதிபதிகள், மனிதஉரிமை இயக்கத்தினர், முன்னாள் அமைச்சர்களைக் கொண்ட 5 பேர் அடங்கிய குழுவையும் நிறுவியுள்ளனர். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, புதிய இடைக்கால அரசும், இடைக்கால சட்டமும் உருவான பிறகு, தமது கட்டுப்பாட்டிலுள்ள மக்கள் அரசாங்கத்தைக் கலைப்பதாகவும், சுதந்திரமாக எவ்வித அச்சுறுத்தலோ நிர்பந்தமோ இன்றி அரசியல் நிர்ண சபைக்கான தேர்தலை நடத்தவும் புதிய குடியரசை நிறுவவும் தாம் முழுமையாக அர்ப்பணிப்பதாக மாவோயிஸ்டுகள் அறிவித்துள்ளனர்.



மேலாதிக்கவாதிகள் முகத்தில்



கரிபூசிய புதிய ஒப்பந்தம்



நேபாளத்தில் மன்னராட்சிக் கொடுங்கோன்மைக்கு எதிராக கடந்த ஏப்ரல் இறுதியில் நடந்த மக்கள் பேரெழுச்சியின் பயனை அம்மக்கள் அனுபவிக்காமல் தடுப்பதற்கு அமெரிக்காவும் இந்தியாவும் மும்முரமாக இருந்தன. அமெரிக்கா வெளிப்படையாகவே மன்னராட்சியை ஆதரித்து ஆயுத உதவிகளைச் செய்தது. மாவோயிஸ்டுகளை பயங்கரவாதிகளாகச் சித்தரித்தது. மன்னராட்சியுடன் கூடிய நாடாளுமன்ற ஜனநாயகம் எனும் ""இரட்டைத் தூண்கள்'' கொள்கையுடன் இந்தியா மன்னராட்சியை முட்டுக் கொடுத்து ஆதரித்து நின்றது. உலகின் ஒரே இந்து நாட்டைக் காக்க வேண்டும் என்று இந்துவெறி பயங்கரவாத பரிவாரங்கள் மன்னராட்சியை ஆதரித்தன. அண்டை நாடான முதலாளித்துவ சீனா, மாவோயிஸ்டுகளைப் பயங்கரவாதக் கும்பலாகக் காட்டி மன்னராட்சியுடன் கூடிக் குலாவியது. மாவோயிஸ்டுகளின் பத்தாண்டு கால மக்கள் யுத்தமும், மக்களின் பேரெழுச்சியும், கடந்த ஜூன் 16ஆம் நாளன்று நேபாளத்தின் ஏழு கட்சி கூட்டணிக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையில் கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தமும் இந்தப் பிற்போக்குவாதிகள் அனைவரது முகத்திலும் கரியைப் பூசி, மாவோயிஸ்டுகளின் அரசியல் வலிமையை மீண்டும் உலகிற்கு நிரூபித்துக் காட்டியுள்ளது.



இதுமட்டுமல்ல் கொடுங்கோலன் ஞானேந்திராவை எதிர்த்து நின்று முறியடிக்கும் வலிமையும் நேபாள நாடாளுமன்றக் கட்சிகளிடம் இல்லை. கடந்த ஆண்டின் இறுதியில் ஏழு கட்சிகள் கூட்டணி அமைத்து மன்னராட்சிக்கு எதிராகப் போராடிய போதிலும், அவர்களால் போராட்டத்தில் முன்னேற முடியவில்லை. கடந்த நவம்பர் மாதத்தில் மாவோயிஸ்டுகளுடன் இந்தக் கட்சிகள் உடன்படிக்கை செய்து கொண்ட பின்னரே, மன்னராட்சிக்கு எதிராகத் துணிவாகப் போராட முடிந்தது; மாவோயிஸ்டுகளுடன் இணைந்து மக்கள் பேரெழுச்சியில் மன்னனைத் தனிமைப்படுத்தி முடமாக்க முடிந்தது.



கடந்த ஏப்ரலில் நடந்த மக்கள் பேரெழுச்சியைத் தொடர்ந்து ஞானேந்திரா கும்பல் பின்வாங்கிக் கொண்டு, முடக்கப்பட்ட பழைய நாடாளுமன்றத்தை உயிர்பிப்பதாக அறிவித்தவுடன், அதை ஏற்குமாறு இந்தியா ஏழுகட்சி கூட்டணியை வற்புறுத்தியது. ஏழு கட்சி கூட்டணியினர் இதற்கு உடன்பட்டதும், அதையே இறுதித் தீர்வாக்கி மன்னராட்சிக்குக் கீழ்பட்ட நாடாளுமன்ற ஜனநாயகத்தை நிறுவுவதற்கு இந்தியா மேற்கொண்ட முயற்சிகளுக்கு பிரதமர் கொய்ராலா ஒத்தூதினார். இத்தகைய சதிகள் சூழ்ச்சிகள் துரோகங்களை அம்பலப்படுத்தி, மாவோயிஸ்டுகள் இலட்சக்கணக்கான மக்களைத் திரட்டி பேரணி பொதுக்கூட்டம் வாயிலாக எச்சரித்த பின்னர், இந்த ஏழு கட்சி கூட்டணியினர் அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலை நடத்த முன்வந்துள்ளனர். மாவோயிஸ்டுகள் தீர்மானகரமான அரசியல் சக்தியாக உயர்ந்துள்ளதையும், ""அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலை நடத்து!'' என்ற மாவோயிஸ்டுகளின் முழக்கம், நேபாள மக்களின் முழக்கமாக மாறியுள்ளதையும் கண்டு பீதியடைந்துள்ள இந்திய மேலாதிக்கவாதிகள், இவற்றை வெளிப்படையாக எதிர்க்க முடியாமல் புதிய சூழ்ச்சிகளில் இறங்கியுள்ளனர். மாவோயிஸ்டுகளை "ஜனநாயக' நீரோட்டத்தில் சங்கமிக்கச் செய்து, பின்னர் அவர்களை வளைத்துப்போட்டு ஓரங்கட்டி முடக்கிவிடலாம் என்று ஏகாதிபத்தியவாதிகளும் இந்திய மேலாதிக்கவாதிகளும் தப்புக் கணக்கு போட்டு காய்களை நகர்த்தி வருகின்றனர்.



மாவோயிஸ்டுகளின்



அரசியல் மேலாண்மை



என்னதான் சூழ்ச்சிகள் சதிகளில் இறங்கினாலும், மாவோயிஸ்டுகள் முன்வைத்துப் போராடிவரும் அரசியல் திட்டத்துக்கு மாற்றாக வேறு எந்த திட்டத்தையும் முன்வைக்க முடியாமல் ஏகாதிபத்தியவாதிகளும் இந்திய மேலாதிக்கவாதிகளும் நேபாள ஓட்டுக் கட்சிகளும் திணறுகின்றன. மாவோயிஸ்டுகள் முன்வைத்துள்ள அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல், புதிய அரசியலமைப்புச் சட்டம், ஜனநாயகக் குடியரசு முதலானவற்றுக்குக் குறைவான எந்தவொரு அரசியல் திட்டத்தையும் நேபாள மக்கள் ஏற்கத் தயாராகவும் இல்லை. அரசியல் நிர்ணயசபைக்கான தேர்தலை தாமதப்படுத்தி நீர்த்துப் போக வைக்கும் முயற்சிகள் அனைத்தும் அம்பலப்பட்டு பெருந்தோல்வியில் போய் முடிந்துள்ளன. மாவோயிஸ்டுகள் முன்வைத்துள்ள திட்டப்படியே இன்று நேபாளத்தின் அரசியல் செல்கிறது. இவையனைத்தும் மாவோயிஸ்டுகளின் புரட்சிகர அரசியல் தலைமையையும் வலிமையையும் மீண்டும் மீண்டும் நிரூபித்துக் காட்டுகின்றன.



நேபாளத்தில் நடந்து வரும் அரசியல் மாற்றங்களையும் புரட்சியின் நெளிவு சுழிவான போக்குகளையும் புரிந்து கொள்ள முடியாத சில திண்ணைப் பேச்சு புரட்சியாளர்கள், "மாவோயிஸ்டுகள் நாடாளுமன்றப் பாதைக்குப் போய் விட்டார்கள்; முதலாளித்துவ கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்துள்ளார்கள்; புரட்சிக்குத் துரோகமிழைத்து விட்டார்கள்; ஆயுதங்களைக் கையளித்துவிட்டுச் செம்படையைக் கலைக்கப் போகிறார்களாம்' என்றெல்லாம் வதந்திகளையும் ஊகங்களையும் கொண்ட கிசுகிசுக்களைப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால், நேபாளத்தில் நடந்து வரும் மாற்றங்களை பல்வேறு நாடுகளின் புரட்சிகர வரலாற்று அனுபவங்களிலிருந்து பார்க்கும் எவரும், மாவோயிஸ்டுகளின் அரசியல் முன்முயற்சியையும் பருண்மையான நிலைமைக்கேற்ற அவர்களின் வழிமுறைகளையும் புரிந்து கொள்ள முடியும்.



அரசியல் பலம்தான்



ஆயுதபலத்தைத் தரும்!



சீனப் புரட்சியின் படிப்பினை



இரண்டாம் உலகப் போரின் இறுதியில், சீனாவை ஆக்கிரமித்திருந்த ஜப்பானிய ஏகாதிபத்தியவாதிகள் 1945இல் சரணடைந்து வெளியேறியபோது, ""இனி சீனாவை ஆள்வது யார்?'' என்ற மையமான கேள்வி எழுந்தது. செம்படையைக் கட்டியமைத்து விடுதலைப் பிரதேசங்களை நிறுவி மக்கள் பேராதரவுடன் புதிய ஜனநாயகப் புரட்சிப் போரில் முன்னேறிக் கொண்டிருந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியா, அல்லது கோமிண்டாங் பிற்போக்காளர்களா என்பதே நாட்டின் மையமான கேள்வியாக இருந்தது. போரினால் பெரும் துயரங்களை அனுபவித்த மக்கள் சமாதானம், ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் சமுதாய விடுதலைக்கான தமது விருப்பத்தை எதிரொலித்த நிலையில், சீன கம்யூனிஸ்ட் கட்சி போர் நிறுத்தத்தை அறிவித்து, சமாதானம், ஜனநாயகம், நாட்டை மீண்டும் புனரமைப்பது என்ற கொள்கையுடன் தனது தேசியத் திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்தைச் செயல்படுத்த நாட்டின்மீதும் மக்களின் மீதும் அக்கறை கொண்ட அனைவரையும் அறைகூவியழைத்துப் பிரச்சாரம் கிளர்ச்சிகளை மேற்கொண்டது. இச்சரியான திட்டத்தை ஆதரித்து நாடெங்கும் மக்கள் போராட்டங்கள் பெருகத் தொடங்கியதும், கோமிண்டாங் அரசு சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு முன்வந்து, அதன் தேசியத் திட்டத்தை ஏற்பதாக அறிவித்தது.



பேச்சு வார்த்தைகளின்போது, சமாதான ஒப்பந்தத்தை நேர்மையாகச் செயல்படுத்தவும், நாட்டைப் புனரமைக்க எல்லையற்ற அர்ப்பணிப்பை வழங்கவும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி முன்வந்தது. கோமிண்டாங் அரசு நீக்கப்பட்டு, ஒரு ஜனநாயகக் கூட்டு அரசின் கீழ் கோமிண்டாங் படைகளையும் செம்படையையும் மறுஒழுங்கமைப்பு செய்யவும் முன்வந்தது. சமாதானம், ஜனநாயகம், சுதந்திரம், தேசிய ஜனநாயக சட்டப்பேரவை, நகல் அரசியல் சட்டம் ஆகியவற்றை நிறுவுவதற்கான ஒப்பந்தங்களில் கோமிண்டாங்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சியும் கையெழுத்திட்டன. 1946 ஜனவரி 10ஆம் நாளில் நிறைவேற்றப்பட்ட இந்த ஒப்பந்தம் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் முன்முயற்சியையும் அரசியல் வலிமையையும் நிரூபித்துக் காட்டியது.



சீனக் கம்யூனிஸ்ட் கட்சி இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் நேர்மையாகவும் முழுமையான அர்ப்பணிப்புடனும் நடந்து கொண்டதையும், செம்படை வீரர்கள் மராமத்துப் பணிகளிலும் விவசாய உற்பத்தியிலும் ஈடுபட்டதையும் உலகமே வியந்து பார்த்தது. ஐ.நா. மன்றத்தின் புனர்வாழ்வு நிர்வாகத்தின் மூலம் சீனாவுக்கு அனுப்பப்பட்ட டிராக்டர்களை இயக்கப் பயிற்சியளிக்கும் குழுவின் ஊழியராக வந்த வில்லியம் ஹிண்டன் என்ற அமெரிக்கர், கோமிண்டாங் அரசின் துரோகத்தையும் ஊழல் மோசடிகளையும் கண்டு வெறுப்புற்று, கம்யூனிஸ்டுகளின் செல்வாக்குள்ள ஹ_பெய் மாகாணத்துக்குச் சென்று பணியாற்றினார். எதையும் நடைமுறை கொண்டு உரசிப் பார்த்த அவர், கம்யூனிஸ்டுகளின் நேர்மையை உளமார வாழ்த்தினார்.



அதே நேரத்தில் கோமிண்டாங் பிற்போக்கு அரசோ ஒப்பந்தத்தைச் சீர்குலைப்பதிலும் கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான உள்நாட்டுப் போரைத் தொடுப்பதிலும் இறங்கியது. அமெரிக்காவின் கைப்பாவையாகிவிட்ட கோமிண்டாங் பிற்போக்கு அரசின் அதிபர் சியாங்கை ஷேக், சதிகள் சூழ்ச்சிகள் துரோகங்களில் இறங்கி நாட்டு மக்களிடம் அம்பலப்பட்டுத் தனிமைப்பட்டுப் போனான். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சமாதானம், ஜனநாயகம், கூட்டு அரசாங்கத்திற்கான முயற்சிகளை அதன் பயம், பலவீனம், கையாலாகாத்தனத்தின் அறிகுறிகளாகக் கருதிக் கொண்டான். ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்துவிட்டு, அமெரிக்காவின் துணையுடன் கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான உள்நாட்டுப் போரைக் கட்டவிழ்த்து விட்டான். ஆனால், கோமிண்டாங் பிற்போக்கு ஆட்சியாளர்களின் எத்தணிப்புகள் பெருந்தோல்வியில் போய் முடிந்தன. சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக முன்பைவிட பெருமளவில் மக்கள் திரண்டார்கள். செம்படையில் சேர மேலும் பல்லாயிரக்கணக்கில் முன்வந்தனர். சிவப்பு விடுதலைப் பிரதேசங்கள் மேலும் விரிவடைந்தன. கோமிண்டாங் பிற்போக்கு பாசிசக் கும்பலுக்கு எதிராக, புரட்சிகர வர்க்கங்கள் ஜனநாயக சக்திகளுடன் ஐக்கிய முன்னணியைக் கட்டியமைத்து, உக்கிரமான உள்நாட்டுப் போரில் வென்று, சீன கம்யூனிஸ்ட் கட்சி சீன மக்கள் ஜனநாயகக் குடியரசை நிறுவியது.



சீன கம்யூனிஸ்ட் கட்சி வெறும் ஆயுத பலத்தை மட்டுமே நம்பியிருந்ததில்லை. அரசியல் முன்முயற்சியை என்றுமே கைவிட்டதுமில்லை. இத்தகைய அரசியல் முன்முயற்சியும் அரசியல் போராட்டங்களும் அரசியல் வலிமையும்தான் மக்களை எழுச்சி கொள்ளச் செய்து, அமைப்பு பலத்தையும் ஆயுத பலத்தையும் தரும் என்பதில் அது தெளிவாகவே இருந்தது. பல்வேறு வரலாற்றுக் கட்டங்களிலும் முன்முயற்சியோடு தனது புரட்சிகர அரசியலை முன்வைத்து, போராட்டங்களின் மூலம் மக்களை அரசியல்படுத்துவதில் அது முன்னணிப் படையாக விளங்கியதை சீனப் புரட்சியின் வரலாறு நமக்கு உணர்த்துகிறது.



நெளிவு சுழிவான பாதையும்



போராட்ட முறையும்



இதை வெறும் வரலாற்று அனுபவமாகக் குறுக்கி சுருக்கிப் பார்க்கக் கூடாது. தற்காலிக புரட்சி அரசாங்கம் எனும் அமைப்பு முறையையும், மேலிருந்து செயலாற்றுவது என்ற போராட்ட முறையையும் பருண்மையான நிலைமைகளுக்கு ஏற்ப, தேவையான நிபந்தனைகளுடன் செயல்படுத்த வேண்டும் என்று மார்க்சிய லெனினியம் போதிக்கிறது. அதாவது, புரட்சியின் வளர்ச்சிப் போக்கில் புதிய ஜனநாயகப் பொதுத் திட்டத்தைவிடக் குறைவானதொரு குறித்த திட்டத்தை (குணீழூஞிடிழூடிஞி கணூணிஞ்ணூச்ட்) நிறைவேற்றுவதற்காக, நிறுவப்படும் தற்காலிகமானதொரு அரசாங்கத்தில் பங்கேற்று, அதிலிருந்து செயல்படுவது போராடுவதன் மூலம் போர்த்தந்திர (மூலஉத்தி) வெற்றிக்கான தயாரிப்பில் ஈடுபடுவதாகும். கீழிருந்து மட்டும் போராடி, வெற்றியைச் சாதிக்க வேண்டும் என்று எண்ணுவது புரட்சியின் நெளிவுசுழிவுகளையும் திருப்பங்களையும் புரிந்து கொள்ளாமல், ஒரே நேர்கோட்டுப் பாதையில் முன்செல்ல முனையும் இயக்கமறுப்பில் கண்ணோட்டமாகும்.



மேலிருந்து செயல்புரியும் போராட்ட வடிவமும் தற்காலிக புரட்சி அரசாங்கம் எனும் அமைப்பு வடிவமும் ரஷ்ய புரட்சியின் 190506 காலகட்டத்திலும், சீனப் புரட்சியின் 192427 மற்றும் 194547 காலகட்டங்களிலும் கம்யூனிசப் புரட்சியாளர்களால் முன்வைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இது எவ்வாறு சரியானது அவசியமானது என்பதை ""ஜனநாயகப் புரட்சியில் சமூக ஜனநாயகத்தின் இரு போர்த்தந்திரங்கள்'' என்ற நூலில் லெனினும், ""கூட்டரசாங்கம் பற்றி'' என்ற நூலில் மாவோவும் விளக்கிப் பருண்மையாகச் செயல்படுத்தியுள்ளனர். இந்த அடிப்படையிலேதான் நேபாள மாவோயிசப் புரட்சியாளர்களும் தமது நாட்டுப் புதிய ஜனநாயகப் புரட்சியின் பருண்மையான நிலைமைக்கேற்ப, நிலப்பிரபுத்துவ மன்னராட்சியையும் அதன் கொலு பொம்மையான போலி ஜனநாயக நாடாளுமன்ற முறையையும் ஒழிப்பது; அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் நடத்துவது; ஏகாதிபத்திய எதிர்ப்பும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பும் கொண்ட ஜனநாயகக் குடியரசை நிறுவுவது, புதிய அரசமைப்பின் கீழ் நாடாளுமன்றத்தில் பங்கேற்று மேலிருந்து செயல்படுவது, புதிய ஜனநாயகப் புரட்சியின் இறுதி வெற்றிக்கான தயாரிப்பிலும் போராட்டத்திலும் ஈடுபடுவது என்ற குறித்த திட்டத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.



""நேபாள மக்களின் தற்போதைய அரசியல் புரட்சியில் எங்களது பங்கு மிகப் பெரியது; எங்களது அர்ப்பணிப்பு எல்லையற்றது. இதை நாட்டு மக்கள் நன்கறிவர். ஏழு கட்சி கூட்டணியின் தலைவர்கள் புதிய அரசியலைமைப்பை நிறுவுவதில் தவறினால், மக்கள் அவர்களது பலவீனங்களை மதிப்பிட்டு, அவர்களை உரிய இடத்தில் வைப்பார்கள். எங்களைக் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக அவர்கள் முடிவெடுத்துச் செயல்பட்டால், உடன்பாடு முறிந்து, நிலைமைகள் பின்னர் தீராத சிக்கலுக்குள் சென்று விடும். அவர்கள் மட்டுமின்றி, நாடும் மக்களும் அதிலிருந்து மீள்வது கடினமாகிவிடும். அத்தகையதொரு நிலைமை ஏற்பட்டால், நாங்கள் முன் கை எடுத்து, மக்களுக்குத் தலைமை தாங்கி, மக்கள் தீர்ப்பைச் செயல்படுத்துவோம்!'' என்று தமது கட்சியின் நிலையைத் தெளிவாக்கியுள்ளார், மாவோயிஸ்டுகளின் பேச்சு வார்த்தைக் குழு தலைவரான தோழர் கிருஷ்ணபகதூர் மெஹரா.



மார்க்சிய லெனினிய போர்த்தந்திரங்களின் விதிகளையும் வழிகாட்டும் நெறிமுறைகளையும் பற்றிய தெளிவில்லாமல், பருண்மையான நிலைமைக்கேற்ப அரசியல் செயல்திட்டத்தை வகுத்துச் செயல்படுத்த முற்படாமல், வெறும் ஆயுத சாகசங்களைக் கண்டு பரவசமடையும் திண்ணைப் பேச்சு புரட்சியாளர்களால் நேபாள நிலைமைகளைப் புரிந்து கொள்ளவோ, அதிலிருந்து படிப்பனைகளைப் பெற்று இந்தியப் புரட்சியைச் சாதிக்கவோ ஒருக்காலும் முடியாது. இவர்கள் ஒருபுறமிருக்க, நாடாளுமன்ற செக்குமாட்டுப் பாதையில் செல்லும் போலி கம்யூனிசப் புரட்டல்வாதிகளும் இனவாத பித்தலாட்டக்காரர்களும் நேபாளப் புரட்சியின் புதிய நிலைமைகளைப் புரிந்து கொள்ளாமல், ""ஆகா, மாவோயிஸ்டுகள் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்குத் திரும்பிவிட்டார்கள்!'' என்று குதியாட்டம் போடுகிறார்கள். மாவோயிஸ்டுகளின் பத்தாண்டு கால ஆயுதப் போராட்டம் சாதித்துள்ள சமூக விடுதலையைக் கொச்சைப்படுத்தி வருகிறார்கள்.



புரட்சியாளர்களைக்



கொச்சைப்படுத்தும்



வாலறுந்த நரிகள்!



மாவோயிஸ்டுகள் நாடாளுமன்றப் பாதைக்கு வந்துவிட்டதாகவும், அதேபாதையை இந்திய மாவோயிஸ்டுகளும் பின்பற்ற வேண்டும் என்றும் உபதேசிக்கிறார், வலது கம்யூனிஸ்டுக் கட்சி பொதுச் செயலாளரான பரதன். துப்பாக்கிக் குழாயிலிருந்து அதிகாரம் பிறக்கிறது என்ற மாவோவின் கூற்று பொய்த்துப் போய்விட்டது என்று மனநோயாளிபோல் அவர் உளறுகிறார். ""இந்திய கம்யூனிஸ்டுகள் நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இணைந்து செயல்படுவதிலும் தேர்தல்கள் மூலம் அதிகாரத்துக்கு வருவதிலும் நீண்ட அனுபவம் பெற்றுள்ளார்கள். நேபாள மாவோயிஸ்டுகள் எங்கள் அனுபவத்திலிருந்து கற்றுக் கொள்ளவும் அமைதிவழிப் பாதையில் செல்லவும் விரும்புகிறார்கள்'' என்று புளுகுவதோடு, மாவோயிஸ்டுகளைக் கொச்சைப்படுத்துகிறார் சி.பி.எம். கட்சியின் தலைவர்களில் ஒருவரான எச்சூரி. இதோடு, மாவோயிஸ்டுகள் ஆயுதங்களைக் கையளித்துவிட வேண்டும் என்றும் வழிகாட்டுகிறார்.



ஆனால், கடந்த பிப்ரவரி மாதத்தில் ""இந்து'' நாளேட்டிற்கு அளித்த பேட்டியில், நேபாள மாவோயிஸ்டு கம்யூனிஸ்டு கட்சித் தலைவரான தோழர் பிரசந்தா இவற்றுக்கெல்லாம் தெளிவாகவே பதிலளித்துள்ளார். ""நாங்கள் பல கட்சி ஜனநாயகம் பற்றிப் பேசுவது, குறிப்பான அரசியலமைப்புச் சட்டத்திற்குள்ளேதான். அதாவது, ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு அரசியலமைப்புச் சட்டத்திற்குள்ளேதான். எனவேதான், ஆயுதப் போராட்டமும் தேவை; முடியாட்சிக்கு எதிராக பிற அரசியல் கட்சிகளுடன் செயலொற்றுமையும் தேவை. ஏகாதிபத்தியத்துக்கும் நிலப்பிரபுத்துவத்துக்கும் எதிரான சமூகப் பொருளாதார மாற்றத்துக்காகவே நாங்கள் போராடுகிறோம். அந்தப் போராட்டத்தின் பொருளில்தான் நாங்கள் பல கட்சி ஜனநாயகம் பற்றிப் பேசுகிறோம்'' என்று கூறுகிறார் தோழர் பிரசந்தா.



தற்போதைய நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு, இடைக்கால அரசை நிறுவுதல்; புதிய அரசியலமைப்புப் பேரவைக்கான தேர்தலை ஐ.நா. மன்றம் அல்லது அனைத்துலக அமைதிக் குழுவின் மேற்பார்வையில் நடத்துதல்; ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை நிறுவுதல், அப்புதிய குடியரசின் பல கட்சி நாடாளுமன்ற ஜனநாயகத்தில் பங்கேற்றல் பற்றி அந்தப் பேட்டியில் விரிவாகவே விளக்கமளித்துள்ளார் தோழர் பிரசந்தா. ஆனால் போலி கம்யூனிஸ்டுகளோ, எத்தகைய அரசமைப்பின் கீழுள்ள பல கட்சி நாடாளுமன்ற ஜனநாயகம் என்பதை மூடிமறைத்துவிட்டு, நேபாள மாவோயிஸ்டு புரட்சியாளர்களும் தங்களைப் போலவே போலி ஜனநாயக நாடாளுமன்ற செக்குமாட்டுப் பாதைக்குத் திரும்பி விட்டதாகக் காட்டி தமது அணிகளை ஏய்த்து வருகிறார்கள்.



இதேபோல, நேபாள மாவோயிஸ்டுகள் தமது செம்படையைக் கலைத்துவிட்டு, ஆயுதங்களைக் கையளித்துவிட்டு, அமைதி வழிக்குத் திரும்ப தீர்மானித்துள்ளார்கள் என்று இப்போலி கம்யூனிஸ்டுகள் இன்னுமொரு அண்டப் புளுகை அவிழ்த்து விடுகிறார்கள். ஆனால், தோழர் பிரசந்தா தனது பேட்டியில், ""எம்மிடம் ஒரு படை இருப்பதால் இன்னமும் எம்மைப் பற்றி சந்தேகப்படுகிறார்கள். புதிய அரசியலமைப்பு பேரவை நிறுவப்பட்ட பிறகு, நாங்கள் ஆயுதங்களை கைவிடுவோமா என்று கேட்கிறார்கள். நாங்கள் எங்கள் படையைத் திருத்தியமைக்கத் தயாராக உள்ளோம். புதியதொரு நேபாளப் படையைக் கட்டியமைக்கவும் தயாராகவும் உள்ளோம்'' என்று நேபாள ஜனநாயகக் குடியரசு நிறுவப்பட்ட பிறகு செம்படை எவ்வாறு மாற்றியமைக்கப்படும் என்பதைத் தெளிவாகவே விளக்குகிறார். அவர் ஆயுதப் போராட்டத்தைக் கைவிடுவதாகவோ, செம்படையைக் கலைத்து விடுவதாகவோ எங்குமே கூறவில்லை. ""இடைக்கால அரசு நிறுவப்படும் வரை ஆயுதங்களைக் கையளிப்பது பற்றிய பேச்சுக்கே இடமில்லை'' என்று கடந்த ஜூன் மாதத்தில் நடந்த பேச்சு வார்த்தையின் போதுகூட மாவோயிஸ்டுகள் உறுதியாக அறிவித்துள்ளனர். இதனாலேயே தற்போதைய 8 அம்ச ஒப்பந்தத்திலும் ஆயுதங்களைக் கையளிப்பது பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை. வாலறுந்த நரி மற்ற நரிகளைப் பார்த்து நீங்களும் வாலை அறுத்துக் கொண்டால் அழகாக இருக்கும் என்று கூறிய கதையாக, இப்போலி கம்யூனிசப் புளுகர்கள். நேபாள புரட்சியாளர்களும் தங்களைப் போல மாறிவிட்டதாக கயிறு திரிக்கிறார்கள்.



மாவோயிஸ்டுகளின் செல்வாக்கு அவர்களிடமுள்ள துப்பாக்கியால் கிடைப்பதைப் போலச் சித்தரிப்பது இப்போலி கம்யூனிஸ்டுகள் செய்யும் இன்னுமொரு அவதூறு. மாவோயிஸ்டுகளை வன்முறை நோக்கம் கொண்ட பயங்கரவாதக் கும்பலாகக் காட்டி, அந்தப் பாதை தோற்றுப் போனதால் அமைதி வழிக்குத் திரும்பிவிட்டதைப் போன்ற தோற்றத்தை இப்புரட்டல்வாதிகள் உருவாக்க முயற்சிக்கிறார்கள்.



ஆனால், மாவோயிஸ்டுகள் கடந்த பத்தாண்டு காலமாக வெறுமனே ஆயுதப் போராட்டம் மட்டும் நடத்திக் கொண்டிருக்கவில்லை. நிலச்சீர்திருத்தம், சாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, கல்வி, மருத்துவ சுகாதாரம் முதலான பல்வேறு புரட்சிகர சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு, நேபாளத்தின் மேற்கு மாவட்டப் பகுதியில் மக்களின் கூட்டு முயற்சியால் போக்குவரத்துக்கான நெடுஞ்சாலையையும் நிர்மாணித்துள்ளனர். போலி கம்யூனிஸ்டுகள் அறுபதாண்டு காலமாக நாடாளுமன்ற செக்குமாட்டுப் பாதையில் சாதிக்க முடியாத மாபெரும் சமூக விடுதலையை மாவோயிஸ்டுகளின் பத்தாண்டு கால ஆயுதப் போராட்டம் சாதித்துக் காட்டி, ஒடுக்கப்பட்ட மக்களை தலைநிமிரச் செய்துள்ளது. இப்போலி கம்யூனிஸ்டுகள் பெரிதும் அஞ்சுவது, மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்ட பாதையைக் கண்டல்ல. மாவோயிஸ்டுகளின் போராட்ட வெற்றியானது இப்புரட்டல்வாதிகளை மறுதலித்து, இந்திய உழைக்கும் மக்களை ஒரு மாபெரும் போராட்ட சக்தியாக மாற்றிவிடும் என்பதைக் கண்டே அவர்கள் அஞ்சுகிறார்கள். அதனாலேயே பொய்கள், அவதூறுகளை வாரியிறைத்து மாவோயிஸ்டுகளின் போராட்டத்தை இருட்டடிப்பு செய்து வருகிறார்கள்.



இனவாத கோயபல்சுகளின்



வக்கிர வியாக்கியானம்



வாலறுந்த போலி கம்யூனிஸ்டு நரிகளைப் போலவே, இனவாத மணியரசன் கும்பலும் "பார்த்தீர்களா, எங்களைப் போலவே நேபாள மாவோயிஸ்டுகளும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரக் கோட்பாட்டைக் கைவிட்டு விட்டார்கள்' என்று குதியாட்டம் போடுகிறது. ""மன்னராட்சி முறையை ஒழித்த பிறகு நிறுவப்படும் நேபாள ஜனநாயகக் குடியரசின் பல கட்சி நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நாங்கள் பங்கேற்போம்'' என்று தமது கட்சியின் முடிவை நேபாள மாவோயிஸ்டு தலைவர் தோழர் பிரசந்தா விளக்குகிறார். உடனே மணியரசன் கும்பல் துள்ளிக் குதித்து, "பார்த்தீர்களா, பல கட்சி ஜனநாயகம் என்கிறார் பிரசந்தர் அப்படியானால், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரக் கோட்பாட்டை கைவிட்டார்கள் என்று இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்' என்று புது விளக்கவுரை எழுதுகிறது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைக் கைவிட்டு விட்டதாக "இந்து' நாளேட்டிற்கு அளித்த பேட்டியில் தோழர் பிரசந்தா எங்குமே குறிப்பிடவில்லை. அப்படிச் சொல்லாததற்கு, தானே வலிந்து இட்டுக்கட்டி புது வியாக்கியானம் தந்து அவதூறு செய்வதுதான் மணியரசன் கும்பலின் கோயபல்சு வழிமுறை.



ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு தன்மை கொண்ட புதிய நேபாள ஜனநாயக குடியரசு பற்றியும், அப்புதிய அரசமைப்பின் பல கட்சி நாடாளுமன்றத்தில் பங்கேற்பது பற்றியும் தோழர் பிரசந்தா விளக்குகிறார். ஆனால், மணியரசன் கும்பலுக்கு ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு ஜனநாயகப் புரட்சி என்பது பாட்டாளி வர்க்கத்தையும் இதர புரட்சிகர ஜனநாயக வர்க்கங்களையும் கொண்ட ஒரு ஐக்கிய முன்னணி என்று கூடத் தெரியவில்லை. சீனத்தில் ஜனநாயகப் புரட்சிக்குப் பிறகு, ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு புரட்சிகர வர்க்கங்களின் சர்வாதிகாரம்தான் நீடித்ததே தவிர, முதலாளித்துவ சர்வாதிகாரமல்ல. இப்புரட்சிகர வர்க்கங்களின் சர்வாதிகாரம், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் ஓர் அங்கமாகவே நீடித்தது. அங்கு பல கட்சி நாடாளுமன்ற ஜனநாயகம் நிலவிய போதிலும், அது முதலாளித்துவ வகைப்பட்ட நாடாளுமன்ற போலி ஜனநாயகமல்ல் அதிலிருந்து முற்றிலும் வேறுபட்ட, அதற்கு முற்றிலும் எதிரான, சோசலிசத்தை நிறுவுவதை நோக்கமாகக் கொண்ட, பாட்டாளி வர்க்கத் தலைமையிலான மக்கள் ஜனநாயக சர்வாதிகார அரசுதான் அங்கு நிலவியது. இத்தகைய பாட்டாளி வர்க்கத் தலைமையிலான சீன மக்கள் ஜனநாயகக் குடியரசில், தேசிய மக்கள் பேரவை எனும் பல கட்சி நாடாளுமன்றத்தில் சீன தேசிய முதலாளித்துவ கட்சிகளும் பங்கேற்றன என்பது வரலாறு. இத்தகைய கண்ணோட்டத்தில்தான் தோழர் பிரசந்தா, ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு புரட்சிகர வர்க்கங்களின் புதிய நேபாள குடியரசின் நாடாளுமன்ற ஜனநாயகம் பற்றிக் குறிப்பிடுகிறார். மணியரசன் கும்பல் கருதுவது போல, அவர் முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் குறிப்பிடவில்லை; பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைக் கைவிட்டு விட்டதாக அறிவிக்கவுமில்லை.



நேபாள கம்யூனிசப் புரட்சியாளர்கள், மணியரசன் கும்பலைப் பார்த்து, ""15 ஆண்டுகளுக்கு முன்பே இப்படி தொலைநோக்குப் பார்வையுடன் பாட்டாளி வர்க்க சர்வாதிகார கோட்பாட்டைக் கைவிட்டுள்ளீர்களே! நீங்கள்தான் எங்களுக்கு வழிகாட்டி!'' என்று கூறியதைப் போல கற்பனை செய்து கொண்டு, ""மெய் நடப்பில் ஆயுதப் புரட்சி நடத்திக் கொண்டிருக்கும் நேபாள மாவோவியக் கட்சி, பல கட்சி ஜனநாயகத்தை ஏற்பதாக முடிவு செய்து, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைக் கைவிட்டிருப்பது த.தே.பொ.க. 1990களில் எடுத்த நிலைப்பாடு எவ்வளவு சரியானது என்பதற்கு ஓர் உரைகல்லாகும்'' என்று மணியரசன் கும்பல் பிதற்றுகிறது. ""அன்றே நக்கீரன் சொன்னது!'', ""அன்றே ஜூ.வி. சொன்னது!'' என்றெல்லாம் முதலாளித்துவ கிசுகிசு பத்திரிகைகள் அற்பத்தனமாக பெருமைப்பட்டுக் கொண்டு சுயதம்பட்டம் அடித்துக் கொள்வதற்கும், மணியரசன் கும்பலின் பித்தலாட்ட சுயவிளம்பரத்துக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?



நேபாளப் புரட்சியையும் புரட்சியாளர்களையும் கொச்சைப்படுத்தும் இந்தக் கிணற்றுத் தவளைகளையும் வாலறுந்த நரிகளையும் ஏளனப் புன்னகையுடன் பார்க்கும் நேபாள மக்கள், புதிய வரலாற்றைப் படைக்க மாவோயிஸ்டுகளின் தலைமையில் அணிவகுத்து முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். வெற்றியை நோக்கிய நேபாள மக்களின் புரட்சிப் போரை உற்சாகத்துடன் ஆதரித்து நம் நாட்டிலும் அத்தகையதொரு புரட்சியைச் சாதிக்கப் போராடுவதும், போலி கம்யூனிச பித்தலாட்டப் பேர்வழிகளை அம்பலப்படுத்தி முறியடிப்பதும்தான், இமயத்தின் உச்சியில் செங்கொடி உயர்வதற்கு நாம் செலுத்தும் உண்மையான பங்களிப்பாக இருக்க முடியும்.



மு மனோகரன்



Friday, September 8, 2006

சாதி ஆட்சிக்கு உட்பட்ட சட்டத்தின் ஆட்சி

சாதி ஆட்சிக்கு உட்பட்ட சட்டத்தின் ஆட்சி


தூத்துக்குடி மாவட்டம், கே.வேலாயுதபுரம் கிராமத்தின் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த தலித் மக்கள் மீது ஒரு உள்நாட்டுப் போரைப் பிரகடனம் செய்திருக்கிறார்கள் அவ்வூரைச் சேர்ந்த சாதி ஆதிக்க வெறியர்கள். அந்த ஊரில் தலித் மக்களின் எண்ணிக்கை 200. சாதி இந்துக்களின் மக்கள் தொகையோ 2000.


ரெட்டியார் சாதி வெறியர்களின் தலைமையிலான ஊர்ப் பஞ்சாயத்து கடந்த ஜூன் மாதம் அறிவித்துள்ள சமூகப் புறக்கணிப்பு நடவடிக்கையின்படி, ""தலித்துகள் பொதுக் குழாய்களிலோ, கிணறுகளிலோ தண்ணீர் எடுக்கக் கூடாது, கடைக்காரர்கள் பொருள் விற் கக் கூடாது, அவர்களை யாரும் விவசாய வேலைக்கு அழைக்கக் கூடாது, சுற்று வட்டாரத்திலுள்ள தீப்பெட்டிக் கம்பெனிகளில் கூட யாரும் அவர்களை வேலைக்கு வைத்துக் கொள்ளக் கூடாது, பிள்ளைகளைக் கூடப் பள்ளிகளுக்குள் அனுமதிக்கக் கூடாது.'' இந்த உத்தரவை வார்த்தை பிசகாமல் அமல்படுத்தி வருகிறார்கள் ஆதிக்க சாதிக்காரர்கள்.


இராக் மீது அமெரிக்கா விதித்திருந்த பொருளாதாரத் தடைக்கு எந்த விதத்திலும் குறைவில்லாத இந்தக் கொடிய நடவடிக்கைக்குக் காரணம் என்ன? தங்கள் தெருவிலுள்ள பத்ரகாளியம்மன் கோயிலுக்கு அருந்ததியின மக்கள் திருவிழா நடத்தினார்கள்; ஆனால் "மரபுப்படி' அதற்கு சாதி இந்துக்களிடம் முன் அனுமதி வாங்கவில்லை. "தீண்டத்தகாதோரின் சாமிக்கு' குற்றாலத்திலிருந்து "புனிதநீர்' கொண்டு வந்து முழுக்காட்டினார்கள். இது இரண்டாவது குற்றம். இதனால் ஆத்திரமடைந்த சாதி வெறியர்களால் திருவிழா முடிந்த மறுநாளே (ஜூன் 8) அருந்ததியினப் பெரியவர் சுப்பிரமணியன் சுற்றி வளைத்துத் தாக்கப்பட்டார். தன்னைத் தாக்கியவர்கள் மீது போலீசில் புகார் செய்தார் சுப்பிரமணியன். தீண்டாமைக் குற்றத்தின் கீழ் 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்குப் பதிலடி சமூகப் புறக்கணிப்பு.


""இந்தக் காலத்தில் எங்கே சார் இருக்கிறது தீண்டாமை'' என்று பேசும் புத்திசாலிகள், சாமி கும்பிட்டதற்காக சமூகப் புறக்கணிப்பா என்று ஆச்சரியப்படலாம். அந்தக் கிராமத்தில் தங்களுக்கு எதிராக 20க்கும் மேற்பட்ட வடிவங்களில் தீண்டாமை அமல்படுத்தப்படுவதாகக் குற்றம் சாட்டியிருக்கிறார்கள் வேலாயுதபுரம் தலித் மக்கள்.


அவர்கள் பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்க முடியாது. பொதுக் கோயிலில் வழிபட முடியாது, தேநீர்க் கடைகளில் தனிக்குவளை என்பன போன்ற "வழமையான' தீண்டாமைக் கொடுமைகள் மட்டுமல்ல் சாதி இந்துக்களின் தெருக்களில் செருப்பு போட்டு நடக்கக் கூடாது, சைக்கிளில் போகக் கூடாது, அவ்வளவு ஏன், சைக்கிளே வைத்துக் கொள்ளக் கூடாது என்பது அங்கே சட்டம்.


தலித் மாணவர்கள் யாரும் கல்லூரிப் படிப்புக்குப் போகக் கூடாது, வெளியூரிலிருந்து உறவினர்களோ நண்பர்களோ வந்தால் சாதி இந்துக்களிடம் ""விசா'' வாங்கிக் கொண்டு தான் ஊருக்குள் நுழைய வேண்டும். தலித்துகள் யாரும் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கக் கூடாது, வெளியூருக்கு வேலைக்குப் போகக் கூடாது, உள்ளூரில் அவர்களது சாதிக்கு விதிக்கப்பட்ட அடிமைத் தொழில்கள் அனைத்தையும் கூலியில்லாமல் செய்ய வேண்டும்.


இந்தச் சட்டங்கள் எல்லாம் கொடூரமான முறையில் தலித்துகள் மீது திணிக்கப்பட்டு அமல்படுத்தப்படுகின்றன. வேலாயுதபுரத்தில் அஞ்சல் அலுவலகம் திறந்தபோது, பெரியவர் சுப்பிரமணியனின் மகன் முத்துகிருஷ்ணனுக்கு அங்கே சப்போஸ்ட் மாஸ்டர் வேலை கிடைத்தது. ""ஒரு சக்கிலியனிடம் கைநீட்டி நாம் ஸ்டாம்பு வாங்க முடியுமா?'' என்று கூறி அந்த இளைஞனை நேர்முகத் தேர்வுக்கே போகவிடாமல் தடுத்து விட்டார்கள் சாதிவெறியர்கள். கல்யாணி என்ற பெண்ணுக்கு கிடைத்த சத்துணவு அமைப்பாளர் வேலையும் இதேபோலப் பறி போனது. பெயிண்டர் வேலை செய்யும் மாரியப்பன் என்பவர் சுற்று வட்டாரக் கிராமங்களில் வேலை செய்ய உதவுமென்று ஒரு ஸ்கூட்டர் வாங்கினார். அந்தக் குற்றத்துக்காக அவர் ஊரைவிட்டே வெளியேற்றப்பட்டார். உடல் ஊனமுற்றவரான கணேசன் என்பவர் தனக்கு அரசு வழங்கிய மூன்று சக்கர வாகனத்தைப் பயன்படுத்த முடியவில்லை. சாதி இந்துக்களின் "சாலை விதிகள்' அவருக்குக் கூட இரக்கம் காட்டவில்லை. சாதிவெறியர்களிடம் கெஞ்சிக் கூத்தாடித்தான் இந்தச் சலுகையை அவர் பெறவேண்டியிருந்தது. முத்தையா என்பவருடைய வீட்டின் வாசலிலேயே பஞ்சாயத்து குடிநீர்க் குழாய் இருக்கிறது. எனினும் அவர் அதில் தண்ணீர் பிடிக்க முடியாது. தலித்துகளுக்கென்று ஒதுக்கப்பட்ட குழாய்க்கு நடந்து சென்று அங்கிருந்துதான் தண்ணீர் பிடித்து வரவேண்டும். இந்தக் கொடுமைகளின் உச்சம்தான் கோயில் பிரச்சினை.


""2000 பேருக்கெதிராக 200 பேர் என்ன செய்ய முடியும், நிலச் சுவான்தார்களுக்கு எதிராக அவர்களை அண்டி வாழும் கூலி விவசாயிகள் என்ன செய்துவிட முடியும், அதிகார பலம் கொண்ட ஆதிக்க சாதியினர்க்கு எதிராக ஒடுக்கப்பட்ட ஏழை மக்கள் என்ன செய்துவிட முடியும்'' என்று தங்கள் குமுறலை அடக்கிக் கொண்டிருந்த மக்கள், "இனிமேலும் பொறுக்க முடியாது' என்று பொங்கி எழுந்ததற்குச் சான்றுதான் சுப்பிரமணியனின் நடவடிக்கை.


ஆதிக்க சாதியினர்க்கு எதிராக வேலாயுதபுரம் தலித் மக்கள் போலீசில் புகார் கொடுத்திருப்பதென்பது சாதாரண நடவடிக்கை அல்ல, தங்கள் உயிரைப் பணயம் வைக்கும் நடவடிக்கை. தலித் சமூகத்திலேயே ஆகக் கடைநிலையில் வைக்கப்பட்டுள்ளவர்களான அருந்ததியின மக்கள், இந்தப் போராட்டத்தை தாங்கள் தனித்து நின்றுதான் சமாளிக்க வேண்டும் என்பதை அறிந்திருந்தார்கள். அதிகார வர்க்கமும் போலீசும் ஓட்டுக் கட்சிகளும் ஆதிக்க சாதியினர் பக்கம்தான் என்ற உண்மையையும் அறிந்தேயிருந்தார்கள்.


சமூகப் புறக்கணிப்பு என்று அறிவித்தவுடனே ஆதிக்க சாதியினரின் கட்டைப் பஞ்சாயத்தார்களை தீண்டாமைக் குற்றத்தின் கீழ் போலீசு கைது செய்திருக்க முடியும். சமூகப் புறக்கணிப்பை அமல்படுத்தும் ஒவ்வொருவரையும் சிறையில் வைத்து, சாதி பேதமில்லாமல் பட்டை சோத்துக்கு வரிசையில் நிறுத்தியிருக்க முடியும். ஆனால், அவ்வாறு எங்கும் எப்போதும் நடந்ததில்லை. சாதியின் ஆட்சியை சட்டத்தின் ஆட்சி கேள்விக்குள்ளாக்கியதில்லை.


எனவே, குற்றவாளிகள் ஊரில் சொகுசாக அமர்ந்திருக்க, சமூகப் புறக்கணிப்பினால் பாதிக்கப்பட்ட தலித் மக்கள் ஜூன் 12ஆம் தேதியன்று ஊர்வலமாக கோவில்பட்டி ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்குச் சென்று மனு கொடுத்தார்கள். தீண்டாமைக் குற்றத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் ஆர்.டி.ஓ.விற்கு இருந்த போதிலும், மாவட்ட ஆட்சியரைக் கேட்காமல் எதுவும் செய்ய இயலாது என்றும் ஊருக்குத் திரும்பிச் செல்லுமாறும் கூறினார்.


தங்களுடைய உயிருக்கும் வாழ்க்கைக்கும் உத்திரவாதம் இல்லாமல் அலுவலகத்தை விட்டுப் போக முடியாது என்று கூறி அங்கேயே அடுப்பு வைத்து சோறு பொங்கத் தொடங்கினார்கள் மக்கள். அடுப்பிலிருந்து புகை வருவதற்குள் போலீசு வந்தது. போலீசின் மிரட்டலுக்கு அஞ்சி மக்கள் கலைய மாட்டார்கள் என்பது புரிந்த பின்னர் 55 கி.மீ தூரத்திலுள்ள தூத்துக்குடியிலிருந்து மாவட்ட ஆட்சியர் வந்தார்.


பிறகு சமாதானக் கமிட்டி (ணீழூச்ஞிழூ ஞிணிட்ட்டிவவழூழூ) என்ற வழக்கமான அதிகார வர்க்க கட்டைப் பஞ்சாயத்து நடந்திருக்கிறது. ஜூன் 14ம் தேதியன்று வேலாயுதபுரத்திற்கு நேரில் சென்ற மாவட்ட ஆட்சியர், ""தலித் மக்களை சுயசார்புள்ளவர்களாக ஆக்குவதுதான் தனது முதற்கடமை'' என்று அறிவித்திருக்கிறார். முதியோர் பென்சன், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், தையல் பயிற்சி, தலித்துகள் சுயமாகக் கடை நடத்த அரசுக் கடன் உதவி எனக் கேட்காத உதவிகள் உடனே அறிவிக்கப்பட்டிருக்கின்றன.


தலித் மக்களுடைய பொருளாதாரச் சார்பு நிலையைப் பயன்படுத்தி அவர்கள் மீது சாதி வெறியர்கள் தீண்டாமைக் கொடுமையைத் திணிக்காமல் தடுப்பதற்கும் தீண்டாமைக்கெதிராகப் போராடும் வலிமையை தலித் மக்கள் பெறுவதற்கும் பொருளாதாரச் சுயசார்பு அவர்களுக்கு அவசியம். அவற்றில் தலையாயது நிலம். அதைப் பற்றி வாய் திறக்காத அரசு சில்லறைச் சலுகைகளால் தலித் மக்களைக் குளிப்பாட்ட நினைக்கிறது. பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்க முடியவில்லையா காலனிக்கு தனிக்குழாய், ஊரிலுள்ள ரேசன் கடையில் அரிசி வாங்க முடியவில்லையா தனி ரேசன் கடை, தனி மளிகைக் கடை என்று புதிய வகைத் தீண்டாமையை சட்டபூர்வமாகவே அமல்படுத்துகிறது.


தீண்டாமைக் குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கை? அதை "கவனிப்பதாக' வாக்குறுதி தந்திருக்கிறார் ஆட்சியர். ஆட்சியர் வந்து போய் 10 நாட்கள் ஆன பின்னரும் சமூகப் புறக்கணிப்பு தொடர்கிறது. வேலாயுதபுரம் அருந்ததியின மக்களுக்கு சுற்று வட்டாரத்தில் யாரும் வேலை தருவதில்லை. சாதிவெறியர்களோ, அரசின் இந்தக் கண்துடைப்பு நடவடிக்கைகளைக் கூடச் சகித்துக் கொள்ள முடியாமல் கருவிக் கொண்டிருக்கிறார்கள்.


எனினும் 2000 பேர் சேர்ந்து 200 பேரை அடிக்கும் தீண்டாமை எனும் இந்தக் கோழைத்தனத்திற்கு உள்ளூர நடுக்கமும் வந்திருக்கிறது. மலம் அள்ளவும், குப்பை வாரவும், பிணம் எரிக்கவும் விதிக்கப்பட்ட அந்த மக்கள், சக்கிலியென்றும் மாதாரியென்றும் இழிவுபடுத்தப்பட்ட அந்த மக்கள், தலித் மக்களிலேயே ஆகக் கீழ்நிலையில் வைக்கப்பட்டு "அடித்தால் கேட்க நாதியில்லாத அநாதைகள்' என்று மிகவும் அலட்சியமாகக் கருதப்பட்ட அருந்ததியின மக்கள் இதோ, திருப்பி அடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.


ஒண்டிவீரன் அவர்களுடைய குலதெய்வம்; நம்முடைய விடுதலைப் போரின் முன்னோடி. பூலித்தேவனின் தளபதியான வீரன், ஒண்டியாகச் சென்று வெள்ளையர்களின் பாசறையைத் தாக்கி அழித்தவன். அதன் காரணமாகவே ஒண்டிவீரன் என்று மக்களால் புகழப்பட்டவன். அவனுடைய வாரிசுகள் இதோ, தனித்து நின்று போராடுகிறார்கள். நாமும் ஒண்டிவீரனின் வாரிசுகள்தான் என்பது உண்மையானால், அவர்களை ஒண்டியாகப் போராடவிட்டு ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்க்கக் கூடாது.


மு இளநம்பி


Thursday, September 7, 2006

தமிழீழக் கனவு வெற்றுக் கானல் நீர் தான் - 2ம் பதிவு

தமிழீழக் கனவு வெற்றுக் கானல் நீர் தான்

பி.இரயாகரன்
07.09.06

காலப்பொருத்தம் கருதி ஏற்கனவே வெளியிடப்பட்ட கட்டுரை இங்கு மீளவும் வெளியிடப்படுகின்றது.
தமிழரங்கம்

ந்தளவுக்கு தமிழீழக் கனவின் சாத்தியப்பாடு கேள்விக்குள்ளாக்கி சிதைகின்றதோ, அந்தளவுக்கு அது வீங்கி வெம்புகின்றது. எங்கும் எதிலும் தொடர்ச்சியான நெருக்கடிகளும், சோகமான விளைவுகளும் தொடருகின்ற இன்றைய நிலையில், அதை வலிந்து புலி அரசியல் வரவழைத்துக் கொண்டேயுள்ளது. இதைப் பயன்படுத்தி பிழைப்புவாத அரசியல் பொறுக்கிகளும், கண்டகண்ட தெரு நாய்கள் எல்லாம் தமிழீழக் கனவைக் கவ்விக்கொண்டு ஊரைக் கூட்டி ஊளையிடுகின்றன. இந்தக் கும்பல் தமிழ் சமூகத்தையே நடுவாற்றில் இறக்கிவிட்டு, வெள்ளத்தின் போக்கில் அடித்துச் செல்ல வைத்துள்ளனர். எது நடக்கும் எது நடக்காது என்று தெரியாத ஒரு சூனியத்தில் மக்கள் வாழ்வுக்காக தத்தளிக்கின்றனர்.


சொந்த அரசியல் வேலைத் திட்டம் எதையும் அடிப்படையாக கொள்ளாத புலிகளின் தன்னியல்பான இராணுவவாத நடத்தைகள், தமிழீழம் எமது தாகம் என்பதைத் தாண்டி எதையும் கொண்டிருப்பதில்லை. தமிழீழத்தை எப்படி, எந்த வழியில் சாதிக்க முடியும், என்ற நடைமுறை ரீதியான சாத்தியமான வேலைத்திட்டத்தை அவர்களால் முன்வைக்க முடியாது போயுள்ளது. மாறாக தன்னிச்சையான தன்னியல்புக்கு ஏற்ப, நிகழ்ச்சிகள் மீது எதிர்வினையாற்றுகின்றனர். உண்மையில் இதை பற்றி அவர்களுக்கே எதுவும் தெரிந்து இருப்பதில்லை.


இதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு ஒவ்வொருவரும் தத்தம் நோக்கில் கற்பனை உலகை தாமே படைத்து, அதை கைநீட்டி காட்டி அதுதான் விடிவுக்கான பாதை என்கின்றனர். ஒவ்வொருவரும் தாமாக கற்பனை பண்ணும் தமிழீழக் கனவுக்கு என்று, ஒரு கொள்கை கோட்பாடு என எதுவும் கிடையாது. அதிலும் போராடுவதாக காட்டிக் கொள்ளும் புலிக்கும் இதற்கும், எந்த சம்பந்தமும் கிடையாது. புலிகளுக்கு தாம், தமது சொந்த நலன், இதைத் தாண்டிய எதுவும் அவர்களின் நலனாக இருப்பதில்லை. தமிழீழம் என்பது தமது சொந்த நலனை பூர்த்தி செய்யும் ஒரு கருவி மட்டும்தான். அதனால் தான் தமிழீழத்துக்கான அனைத்து சாத்தியமான வழியையும் நாசமாக்கி, அதை அழித்து, அதன் சாத்தியப்பாட்டை இல்லாததாக்கி வருகின்றனர். அவர்களின் அனைத்து செயற்பாடும் இன்று அப்படித்தான் மாறிவிட்டது.


இந்த நிலையில் இது அம்பலமாவதைத் தவிர்க்க, கற்பனை புனைவுகளை கொண்ட நம்பிக்கையையே வாழ்வாக விதைக்கின்றனர். எதார்த்தமான வாழ்வு சார்ந்த நம்பிக்கையை, ஒடுக்கப்பட்ட மனித போராட்டத்தை வாழ்வாக நிறுவிக் காட்டமுடிவதில்லை. வாழ்வுடன் சம்மந்தப்படாத கற்பனையின் விளைவால், இவர்கள் மோசமான மனநோய்க்கு உள்ளாகின்றனர். கனவையே வாழ்க்கையாக கொண்டு சம்பந்தமில்லாத வகையில் புலம்புகின்றனர். கற்பனையான கனவை உண்மையான எதார்த்தமாக காட்டி ஆய்வுரைகளையும், கருத்துரைகளையும் அறிவாளி போல் முன்வைக்கின்றனர். இந்தக் கருத்தின் ஆயுள் மிகக் குறுகியதாக இருப்பதால், அவை உடனுக்குடன் அம்பலமாகின்றது. ஆனால் தமிழீழக் கற்பனை, பலரை அதற்குள் சுயமாக சிந்திக்கவிடாது பேயாக பிசாசாக ஆட்டுவிக்கின்றது.


புலித் தமிழீழம் ஒன்று, வரவே வரமுடியாது. அதற்குரிய அனைத்து சமூக அடிப்படையையும் அது தானாகவே இழந்து, இழிந்து சீரழிந்துவிட்டது. இதை நாம் துல்லியமாகவும், நுணுக்கமாகவும் ஆராய்வோம்.


கற்பனையில் கனவாகவுள்ள எல்லைகளை அடிப்படையாக கொண்ட தமிழீழம் கிடைக்க வேண்டும் என்றால், இரண்டு பிரதான வழிகளில் மட்டும் சாத்தியமானது. இவ் இரண்டு வழிகளையும், புலிகள் எப்போதோ தமது சொந்த பாசிச வழிகளால் இழந்துவிட்டனர். ஒரு தனி அரசை உருவாக்கவும், அதன் நீடித்த இருப்பும் சில நிபந்தனைக்கு உட்பட்டது. குறித்த நிபந்தனையின்றி நாடுகள் அல்லது தனித்த பிரதேசங்கள் உருவாவதில்லை. ஒரு தனி அரசை உருவாக்கவும் பாதுகாக்கவும், நாம் ஏதோ ஒரு வகையில் சர்வதேச அமைப்பில் ஒரு அங்கமாக இருக்கவேண்டும். இதில் இருந்து பிரிந்து யாரும் சுயாதீனமாக தனித்து வாழமுடியாது.


1. புலிகளின் பொருளாதார கொள்கை அடிப்படையிலும், அவர்களின் உடன்பாடான உலகமயமாதல் போக்கில், தனிநாட்டுக்கான அங்கீகாரத்தை இந்த அமைப்பில் புலிகள் பெறவேண்டும். இதுவே முதலாவது வழி. அதாவது ஏகாதிபத்தியம் அங்கீகரிக்க வேண்டும். அமெரிக்காவில் தம் மீதான தடையை நீக்க இலஞ்சம் கொடுக்கலாம், ஆனால் அங்கீகாரத்தை பெறவே முடியாது. அங்கீகாரம் என்பது சர்வதேச பொருளாதார உறவுகளுக்கு உட்பட்டது. புலிகள் போன்ற மாபியாத்தனத்தை அடிப்படையாக கொண்ட பாசிசக் குழுக்கள், அதை நினைத்தே பார்க்க முடியாது. எப்படி அல்கைதா அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியத்தின் செல்லப்பிள்ளையாக வளர்ந்து, இன்று அங்கீகாரம் பெறமுடியாத எதிரிகளாகி அழிப்புக்குள்ளாகின்றனர். இதேபோல் தான் புலிகளின் நிலையும். புலிகள் அமெரிக்காவின் நிதியையும் ஆயுதத்தையும் பல்வேறு அமெரிக்கா எஜண்டுகள் ஊடாக பெற்றது முதல், இஸ்ரவேலில் ஆயுதப் பயிற்சி அவர்கள் நாட்டிலேயே பெற்றநிலை இன்று மாறிவிட்டது. மாறாக அவர்களின் எதிரியாக புலிகள் இருப்பதை, அல்கைதவுடன் ஓப்பிட்டு நாம் புரிந்து கொள்ளவேண்டும்.


இந்த நிலையில் ஒரு அங்கீகாரத்தை உலகமயமாதல் பொருளாதார நிபந்தனைக்குள் கிடைக்குமா என்ற கேள்வியை விடுத்து, அங்கீகரிப்பார்கள் என்று எடுத்தால், புலியை யாரும் அங்கீகரிக்க மாட்டார்கள். உலகமயமாதலை வழிநாடத்தும் ஏகாதிபத்திய நாடுகள், புலியை தடைசெய்து பயங்கரவாத குழுவாகவே கருதுகின்றது. அதாவது இந்த உலகமயமாதல் அமைப்புக்கு பாதகமான குழுவாகவே கருதுகின்றது. இது புலிகளின் பொருளாதார நோக்கில் இருந்தல்ல. இந்தநிலையில் உலகமயமாதல் அமைப்பில், ஏகாதிபத்தியம் புலிகளை அங்கீகரிக்கவே மாட்டாது. இந்த வகையில் உலகமயமாதல் பொருளாதார அமைப்புக்குள் தமிழீழம் சாத்தியமில்லை.


2. இரண்டாவது சாத்தியமான வழி என்பது, ஒடுக்கப்பட்ட மக்களை முற்றாக சார்ந்திருத்தலாகும். சமூக பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்டி, அவர்களின் தலைமையில் ஒரு தேசிய பொருளாதார அமைப்பை கொண்டிருப்பதே அடிப்படையான நிபந்தனையாகும். இந்த வகையில் உலகளவில் ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதரவை பெற்றிருத்தல் நிபந்தனையாகும். குறிப்பாக சிங்கள முஸ்லிம் ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதரவை, அனுதாபத்தை பெற்றிருப்பது முக்கியமான அடிப்படை நிபந்தனையாகும். இந்த வகையிலும் தமிழீழம் சாத்தியமில்லை.


இப்படி இரண்டு வழிகளிலுமான புலித் தமிழீழ சாத்தியப்பாட்டை, அவர்கள் எப்போதோ இழந்துவிட்டனர். தற்போது அவர்கள் தங்களை பாதுகாப்பதே மிக முக்கிய பிரச்சனையாக மாறிவிட்டது. இதை அவர்களும் சரியாக உணரவில்லை, அதன் பின்னால் நக்கித் தின்னும் நாய்க் கூட்டமும் உணரவில்லை. ஆனால் எல்லா இராணுவ கட்டுமானங்களும், பிரமைகளும் ஒவ்வொன்றாக மெதுவாக இடிந்து வீழ்கின்றது. அது ஓரேயடியாக சரிந்து தூள்தூளாகிவிடுமா என்ற நிலைமையே, எதார்த்தத்தில் மிகமுக்கியமான பிரச்சனையாகிவிட்டது. ஆனால் இது பெரும்பான்மையான சமூக அமைப்பில் இதுவரை உணரப்படவேயில்லை.


முன்னைய சோவியத்யூனியன் சரிந்து இடிந்து விழ முன், கே.ஜ.பி உலகளாவில் பலமான சதிகளையும் கட்டுமானங்களையும் உசுப்பியது போல், உலுப்பிக்காட்டவே புலிகள் முனைகின்றனர். அதனூடாக இடிந்து கொண்டிருக்கும் கனவை, நிமிர்த்திக்காட்ட முனைகின்றனர். பிழைப்புவாத இந்திய சுயநல அரசியல் செய்யும் பச்சோந்தி கோபாலசாமி முதல் நெடுமாறன் வரையிலான பிழைப்புவாதிகளுக்கு, பணத்தையும் சலுகைகளையும் கொடுத்து தமிழீழத்தையோ அல்லது புலியின் சீரழிவையோ தடுத்து நிறுத்தவே முடியாது. மேற்கில் அரசியல்வாதிகளுக்கு விருந்துகளையும், விமானத் ரிக்கற்றுகளையும், பணத்தையும் இலஞ்சமாக கொடுத்து தமிழீழத்தைப் பெறமுடியாது. விடையங்களை பண உறவாக, இராணுவ வழியிலும் சிந்திப்பது செயலாற்றுவது, சொந்த அழிவின் விளிம்பில் அது பல்லிளித்து காட்சியளிக்கின்றது. இதன் மூலம் எதையும் சாதிக்க முடியாது போய்விடுகின்றது. அது சோரம் போன போக்கிரிகளின் சொந்த நலனுக்குள் முடங்கி விடுவதைத் தவிர, எதையும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பெற்றுத்தராது. ஒரு காலத்தில் இவை வெற்றிகரமான பலன் அளிப்பது போல் காட்சி அளிப்பது எப்போதும் தற்காலிகமானது. அது அதற்கென்று சொந்த விதியையும், நோக்கத்தையும் கொண்டது. அது உண்மையில் தொடக்கத்திலேயே கருவறுக்கும் தெளிவான அரசியல் நோக்கை அடிப்படையாகக் கொண்டு, பெரும் ஏகாதிபத்தியங்களே இதை மறைமுகமாக ஊக்குவித்து உதவுகின்றன. இந்தியா புலிகளுக்கு விமானத்தை அழிக்கவல்ல விமான எதிர்ப்பு சாம் ஏவுகணையைக் கூட தனது ஏஜண்டுகள் மூலம் புலிக்கு விற்று, அதை செயற்படாமல் முடக்கிய வரலாறு 1987 இல் நடைபெற்றது. இதன் போது புலிகளின் பணம் முடக்கப்பட்டது மட்டுமல்ல, ஏவுகணையும் செயற்படவில்லை. இப்படி பல நிகழ்ச்சிகள் தெரிந்தும் தெரியாமலும் உள்ளது.


பணம், ஆயுதம் என்ற எல்லைக்குள் புலிகள், வெறும் மாபியாக் குழுவாக, பாசிசக் கும்பலாக சீரழிந்துவிட்டது. தனக்காக மட்டும், தன் நோக்கில் வன்முறையைக் கையாண்டு மேலும் ஆழமாக சீரழிகின்றது. இப்படி சீரழிந்து சிதைந்து கொள்கையும் கோட்பாடுமற்ற ஒரு கும்பல் தமிழீழம் அமைப்பார்கள் என்பதும், அதற்கு அலங்கரித்து நம்பிக்கை ஊட்டுவது குருட்டுத்தனமான அபத்தமாகும்.


மேலே குறிப்பிட்ட இரண்டு அடிப்படையையும் கடந்து, ஒரு தமிழீழத்துகான சாத்தியப்பாட்டை யாரும் முன்வைக்கவே முடியாது. இன்று இலங்கை பேரினவாத அரசாங்கம் முழுமையான பொருளாதார தடையைக் கொண்டு வந்தாலே, குறித்த புலிகளின் பிரதேசத்தைக் கூட பாதுகாக்க முடியாது. விசித்திரமான ஆனால் எதார்த்தமான உண்மை இது. இன்று புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் உள்ள அரசு ஊழியருக்கான சம்பளம், அங்கு வாழும் மக்களுக்கான உணவு விநியோகத்தையும் நிறுத்தினால், புலியின் பிரதேசத்தில் அவர்களால் தொடர்ந்தும் நின்றுபிடிக்கவே முடியாது. இன்றும் யுத்த அகதிகளுக்கு, அரசு தான் இலவச உணவை அல்லது மலிவு உணவை வழங்குகின்றது. அதிலும் ஒரு பகுதியை மக்களுக்கு தெரியாது உறுஞ்சியும் அபகரித்தும் புலிகள் வாழ்கின்றனர். இப்படி பலவழிகளில் தான் புலியின் தேசிய பொருளாதாரம் நிறைவு செய்யப்படுகின்றது.


உலகில் கொரில்லா மண்டலங்களுக்கு, இலங்கையில் மட்டும் தான் உணவையும் சம்பளத்தையும் பேரினவாத அரசு கொடுக்கின்றது. வேறு நாடுகளின் கடந்தகால, நிகழ்கால போராட்டங்களின் போது, அரசு அதை முற்றாகமுடக்கி பட்டினிச்சாவில் தள்ளி போராட்டத்தை நசுக்கமுனைந்தன. இதை எதிர்கொள்ளும் வகையில் முன்கூட்டியே சொந்த பொருளாதார கட்டமைப்பை உருவாக்கி, பொருளாதார தடையை எதிர்கொண்டனர். உண்மையான வெற்றிகரமான போராட்டத்தின் வரலாறுகள் இப்படித்தான், இந்த நிபந்தனையூடாகத்தான் நடந்தன.


இதற்கு புறம்பாக இலங்கையில் ஏன் இப்படியான நிலையை பேரினவாத அரசு கையாளுகின்றது. சுயமானதும் சுயாதீனமானதுமான மக்களைச் சார்ந்த போராட்டம் உருவாகிவிடக் கூடாது என்பதால் தான், தன்னைச் சார்ந்த சமூகப் பொருளாதார இருப்பை தக்கவைக்க அரசு, அவற்றை இடைவிடாது மட்டுப்படுத்தி வழங்குகின்றது. புனர் நிர்மாண பணத்தை வழங்குகின்றது. அரசுசாராத நிறுவனங்களின் நிவாரணங்கள் பாரிய அளவில் செயற்பட அனுமதித்துள்ளது. சொந்த தேசியப் பொருளாதார கட்டமைப்பை உருவாக்கி, தனிநாட்டுக்கான சுயாதீனமான தேசிய பொருளாதாரத்தை கட்டிவிடக் கூடாது என்பதால், பேரினவாத சுரண்டல் அரசு மிகக் கவனமாக திட்டமிட்டு புலியை சீரழிக்கும் வகையில் செயற்பட்டது. ஆனால் தேசியத்துக்காக போராடுவதாக கூறியவர்கள், அனைத்து தேசிய பொருளாதாரத்தையும் அழித்தே தீர்வோம் என்று கங்கணம் கட்டி, பாசிச ஆட்டம் போட்டனர். தேசிய பொருளாதாரம் கோரியவர்களை எள்ளி நகையாடி, அவர்களை கொன்றே போட்டனர். தேசிய பண்பில் இருந்து சீரழிந்து, ஏகாதிபத்திய பொருளாதாரத்தின் பாசிச எடுபிடிகளாகி, அதை சமூக உறவாகக் கொண்டு சீரழிந்தனர். இதை பேரினவாதம் தனது கொள்கை மூலம், புலிகளைக் கொண்டு வெற்றிகரமாக சாதித்தனர்.


இந்த நிலையில் முற்று முழுமையான பொருளாதார தடையும், கூலி மறுப்பும் சாத்தியமானதா என்றால், ஆம் சாத்தியமானதே. இதை உலகம் கண்டு கொள்ளாது. ஈராக் ஆக்கிரமிக்க முன்னம் ஏகாதிபத்தியம் எற்படுத்திய பொருளாதாரத் தடையில் 10 லட்சம் முதல் 20 லட்சம் பேர் கொல்லபட்டனர். இவை அனைத்தும் இந்த சமூக அமைப்பில் சாத்தியமானதே. ஏன் அண்மையில் பாலஸ்தீன மீதான பொருளாதாரத் தடையும் அழுல் செய்யப்ட்டது. இப்படியொரு பொருளாதாரத் தடை கொண்டுவரப்படின், புலிகள் தமது கெரிலா பிரதேசத்தில் கூட நின்று பிடிக்கமுடியாது. அதற்கென்று எந்த சுயபொரளாதார சார்ந்த, சுய தேசிய வாழ்க்கை முறை எதையும் புலித் தேசியம் கட்டமைக்கவில்லை. ஏகாதிபத்திய பொருளாதாரதுக்கு இசைவான எலும்புப் பொருளாதாரத்தையே அடிப்படையாக கொண்ட புலிப் பொருளாதாரம், எந்த நிலைமையையும் எதிர்கொள்ளும் ஆற்றலற்றது.


இந்த நிலையில் தமிழீழம் வந்திட்டுது இந்தா பிடி, இந்தா வருது, பிடி பிடி, எட்டிப் பிடி என்று நம்பவைக்கின்ற புலம்பல்கள் மட்டும் ஓயவில்லை. இந்தப் பொய்யையும் கற்பனையும் வாழ்வாக கொண்ட கனவு காட்சிகள் அனைத்தும் தகர்ந்து கொண்டிருக்கின்றது. இந்த எதார்த்தமான சொந்தக் காட்சியை, அவர்கள் கண்ணை மூடிக்கொள்வதால் காண்பதில்லை.


இந்த கற்பனை தமிழீழவாதிகள் வலிந்து செய்யும் யுத்த கோமாளித்தனத்தால், உருவாகும் அகதிகளுக்கு ஒரு நேர உணவைக் கூட போட வக்கில்லாதவராகவே அவர்கள் உள்ளனர். தனி அரசுக்குரிய எந்த அடிப்படையுமற்ற நிலையில், எதைத்தான் சொந்தமாக சுய ஆற்றலுடன் மக்கள் சார்ந்து நின்று நிர்மாணிக்கின்றனர். குண்டுகளை வெடிக்க வைப்பதன் மூலம் மட்டும் தமிழீழம் வந்துவிடாது. கொல்வதால் மட்டும் தமிழீழம் வந்துவிடாது.


சரி, நீங்கள் குண்டுகளை வெடிக்க வைத்து, பலரைக் கொன்று போட்டு தமிழீழ எல்லைவரை பிடித்துவிட்டீர்கள் என்ற வைப்போம். என்ன நடக்கும். முதலில் சர்வதேச நிலையைப் பார்ப்போம்.


1. இந்தியா இதை ஒருநாளும் அனுமதியாது. ஒரு நாளுமே இதை அங்கீகரிக்காது.


2 .சர்வதேச நாடுகள் ஒன்றும் இதை அங்கீகரிக்காது.


3. சர்வதேச நாடு ஒன்று அங்கீகரிக்கின்றது என்று வைத்தாலும், இந்தியா அதை அனுமதிக்காது.


சர்வதேச நிலைமையை சாதகமாக மாற்றக் கூடிய, நிர்ப்பந்தம் கொடுக்கக் கூடிய வகையில், புலியின் சர்வதேச அரசியல் பாதகமாகவே உள்ளது. குறிப்பாக சர்வதேச ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து இருப்பது என்பது மட்டும் தான் குறைந்த பட்சம் ஒரு நிர்ப்பந்தத்தையாவது கொடுக்கமுடியும்.


மறுபக்கத்தில் எல்லைவரை பிடித்த பின், தமிழீழப் பிரகடனத்தை புலிகள் ஒருதலைப்பட்சமாக பிரகடனம் செய்யவேண்டும். இதன் மூலம் பேரினவாதத்தின் அனைத்து தொடர்பையும் இது இயல்பாக தானாகவே மறுதலிக்கும். முழுக்கமுழுக்க சொந்த நிர்வாகத்தை நிறுவவேண்டும. பேரினவாதிகள் கொடுத்த உணவையும், அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தையும் புலிகளே கொடுக்க வேண்டும். இப்படி பிரச்சனைகளை எதிர்கொள்ள, சொந்த தேசிய ஆற்றல் புலிகளிடம் கிடையாது. புலிகளால் சொந்த தேசிய கட்டமைப்பைச் சார்ந்து நிறைவு செய்யமுடியாது. இது தமிழீழத்தை பிரகடனம் செய்யாவிட்டாலும் கூட இதுதான் நிலைமை.


இதைவிட இன்று வடக்குகிழக்குக்கு வெளியில் வாழும் தமிழர்கள், வடக்குகிழக்கு நோக்கி செல்ல வேண்டிய சந்தர்ப்பம் உருவாகும். அவர்களின் அடிப்படைத் தேவைகள், வேலைவாயப்புகள், அவர்களின் உணவுத் தேவைகளை பூர்த்திசெய்ய புலிப்பொருளாதாரத்தால் முடியாது. சர்வதேச ரீதியாக எந்த உதவி, எதுவும் வழங்கப்பட மாட்டாது. இது சர்வதேச விதிக்குட்பட்டது. சர்வதேச ரீதியான புலிகள் மீதான தடை, இதை மேலும் அனுமதியாது. புலம்பெயர் தமிழர்கள் உதவமுடியும் என்று சிலர் வாதத்துக்காக கூறலாம், இது சாத்தியமானதா என்ற கேள்விக்கு அப்பால், இதை அந்த நாடுகள் (ஏகாதிபத்தியங்கள்) அனுமதியாது. அது இன்று தொடர்ச்சியாக கடுமையாகவே தடைக்குள்ளாகி வருகின்றது. அதைவிட புலிகள் பணம் சேர்க்க முடியாத அளவுக்கு, மக்களுக்கும் அவர்களுக்குமான உறவு மேலும் சிதைந்து சின்னாபின்னமாகி வருகின்றது. இப்படி நிலைமை உள்ளது. சரி பணத்தை ஏதோ ஒருவழியில் புலிகள் பெறுகின்றார்கள் என்றால், பணப் பேப்பரை வைத்து உண்ணமுடியாது. அது உணவையும், அடிப்படைத் தேவையையும் உற்பத்தி செய்வதில்லை. அது வெற்றுப் பேப்பர் தான். மக்களின் உழைப்புத்தான் அனைத்தும்.


சிலர் புலி மாமா கதை சொல்வது போல், புலிக் கப்பல் பற்றி பேசுகின்றனர். இன்றைய சர்வதேச நெருக்கடியை தாண்டி (குறிப்பாக புலிகளின் அமெரிக்க ஆயுதக் கொள்வனவு) இது தப்பிப்பிழைக்க வேண்டும். அப்படி எல்லாம் தப்பிப் பிழைத்து உயிர் வாழ்ந்தாலும், இந்தியாவின் தீவிர கண்காணிப்பை தாண்டி இலங்கையில் உட்புகுவது என்பது முயல் கொம்புதான். அப்படி ஒரு இரு கப்பலை கொண்டு போனாலும், அந்த கப்பலில் எத்தனை பேருக்கு எத்தனை நாட்களுக்கு உணவு கொண்டு போகமுடியும்? இப்படி இதற்குள் நிறைய கேள்வி உண்டு. மக்கள் எலியையெல்லாம் பிடித்து தின்று முடிய, புலியைத்தான் பிடித்து தின்னும் நிலைதான் உருவாகும்.


சரி தமிழீழத்தை அங்கீகரித்து ஒரு நாடாக உருவாகிவிட்டது என்று எடுப்போம். பிறகு என்ன நடக்கும். வெற்றுக் காற்றில் ஊதிச் சாப்பிடமுடியாது. சிலர் தேசியப் பொருளாதாரம் பற்றி பீற்றுகின்றனர். ஏற்றுமதி பற்றியெல்லாம் கதைக்கின்றனர். மீPன் பிடி என்கின்றனர். உப்பு உற்பத்தி என்று இப்படி பலவற்றை குறிப்பிடுகின்றனர். மீனை விற்று உணவை பெற முடியுமா? எந்தனை தொன் மீனை விற்று, எத்தனை தொன் உணவை வாங்குவது? இது எத்தனை பேருக்கு போதும். ஏற்றுமதி பொருளாதாரத்தை நம்பி தேசத்தை தேசியத்தை நிர்மாணிக்க முடியாது. புலம்பெயர் தமிழன் முதலீடு பற்றி பீற்றப்படுகின்றது. முதலில் புலியை நம்பி அவர்கள் வரவேண்டும். மறுபக்கதில் புலம்பெயர் முதலீடு என்பது வெறும் டப்பாதான். புலம்பெயர் தமிழரின் இன்றைய வர்த்தக முயற்சிகளில் 90 சதவீதமானவை பாரிய கடன் நெருக்குவாரத்துக்குள் உள்ள வெற்று டப்பாதான். சொந்த தேசத்தை, தேசியத்தை சொந்தமாக நிர்மாணிக்க முடியாதவர்களின், வெற்று கருத்துகளும் புலம்பலும தான் இவை. தமது வெற்றுத்தனத்தை நியாயப்படுத்த இப்படிக் கூறுவதும், புலிகளின் சமூகக்கூறுகளில் இருந்து அன்னியமாகி நிற்கின்ற ஒரு நிலையில், தன்னியல்பாக சுயவிளக்கமளித்து இப்படி தானே தனக்குள் நம்புவதே இதன் சாரமாகும். உண்மையில் இவையெல்லாம் வெற்று வேட்டுத்தனம்.


புலித்தேசியத்தில் வாழும் மக்கள், பொருள் சார்ந்த கனவில் வாழ்பவர்கள் தான். ஆடம்பரமான கனவுகளும் வேட்கைகளையும், பொருள் சார்ந்த உலக பார்வையையும் புலித்தேசியத்தால் ஈடுசெய்ய முடியாது. புலிக் கப்பல் உணவுக்கு பதில் கொக்கோகோலாவைத் தான் கொண்டுவந்து இறக்கவேண்டிய பரிதாபநிலை. இதுதான் தமிழனின் வாழ்வு சார்ந்த கண்ணோட்டமாகும். புலித்தேசியம் பன்னாட்டு ஆடம்பர பொருள் சார்ந்ததே ஒழிய, மக்கள் சார்ந்ததல்ல.


ஒடுக்கப்பட்ட மக்கள், அவர்களின் சொந்தப் பொருளாதார நலன்களை, கீழ் இருந்து கட்டாத வரை தேசியம் என்பது சாத்தியமற்றது. இன்று காணப்படும் பிற்போக்கு பண்பாட்டை கலாச்சாரத்தை மறுதலித்து ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்ததாக முன்னெடுக்காத வரை, ஒரு கெரில்லா பிரதேசத்தைக் கூட பாதுகாக்க முடியாது. பேரினவாதம் தொடர்ந்தும் உணவையும் கூலியையும் வழங்குவதால் மட்டும் தான், புலிகள் இன்னமும் அங்கு புலிகளாக நீடிக்க முடிகின்றது. இந்த உண்மையை புரிந்து கொள்வதும், மக்கள் போராட்டம் என்றால் என்ன என்பதை எதிர்மறையில் புரிந்து கொள்வது, இன்றைய காலத்தின் தேவை மட்டுமின்றி அவசியமான நிபந்தனையுமாக உள்ளது.


Wednesday, September 6, 2006

திருச்சிற்றம்பல மேடையேற தமிழும் தீக்குளிக்க வேண்டுமோ?

திருச்சிற்றம்பல மேடையேற தமிழும் தீக்குளிக்க வேண்டுமோ?



தில்லைவாழ் அந்தணர்களால் எரித்துக் கொல்லப்பட்ட சிவபக்தன் நந்தன் வாழ்ந்த தமிழகத்திற்கும், தற்போதைய தமிழகத்துக்கும் எத்தனையோ வேறுபாடுகள். மாற்றங்கள் இருந்தாலும், தில்லைவாழ் தீட்சிதர் பரம்பரை மட்டும் இந்த 21ஆம் நூற்றாண்டிலும் மாறியதாகத் தெரியவில்லை. ஆறுமுகசாமி என்ற சிவனடியார், சிதம்பரம் நடராசர் கோவிலைத் தங்கள் பூணூலில் சுருட்டி வைத்திருக்கும் தீட்சிதர்களின் சாதிவெறியை எதிர்த்து, வழிபாட்டு உரிமைக்காக நடத்தி வரும் போராட்டம் இந்த உண்மையைத் தமிழகமெங்கும் அம்பலப்படுத்தி விட்டது.



ஆறுமுகசாமி, கஷ்டம் வந்தவுடன் இறைவனைத் தேடி ஓடும் சாதாரண பக்தரைப் போன்றவர் அல்லர். இல்லற வாழ்க்கையைத் துறந்து, துறவறம் பூண்டு, சைவத் திருமறையான தேவாரம் திருவாசகப் பாடல்களைப் பாடுவதைக் கற்றுத் தேர்ந்து, சிதம்பரம்அருகேயுள்ள குமுடிமூலை என்ற சிற்×ரில் அமைந்திருக்கும் பசுபதி ஈஸ்வரன் கோவிலில் ஓதுவாராக இறைப்பணி ஆற்றி வருகிறார். இதற்காகத் தமிழக அரசின் நிதி உதவியையும் பெற்று வருகிறார்.



சிதம்பரம் நடராசர் கோவில் கருவறை முன் உள்ள திருச்சிற்றம்பல மேடையில் ஏறி நின்று, தேவாரம் திருவாசகம் பாடி நடராசரை வழிபட வேண்டும் என்பதனைத் தனது ஆன்மீக வாழ்க்கையின் இலட்சியமாக, குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார், ஆறுமுகசாமி. 73 வயதான, அந்திமக் காலத்தை நெருங்கிவிட்ட, அந்த முதிய சிவனடியாரின் விருப்பம் நிறைவேறத் தடைக்கல்லாக நிற்கிறார்கள், தீட்சிதர்கள்.



ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, 8.5.2000 அன்று ஆறுமுகசாமி திருச்சிற்றம்பல மேடையில் ஏறிப் பாட முயன்ற பொழுது, தீட்சிதர் கும்பல் கோவிலுக்குள்ளேயே, பக்தர்களின் கண் முன்னாலேயே ஆறுமுகசாமியைக் கொடூரமாகத் தாக்கி, கையை முறித்து, கோவிலுக்கு வெளியே வீசியெறிந்தது. ஆறுமுகசாமி தம்மைத் தாக்கிய ரவுடி தீட்சிதர்களை உடனடியாக அடையாளம் காட்டிப் புகார் கொடுத்த பின்னும் கூட, சிதம்பரம் நகர போலீசார் 55 நாட்கள் கழித்துதான் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தனர். அரசு தரப்பில் வேண்டுமென்றே இவ்வழக்கு விசாரணையை ஒழுங்காக நடத்தாததால், ஏழு ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை பெற்றிருக்க வேண்டிய தீட்சிதர்கள், நீதிமன்றத்தால் நிரபராதிகளாக விடுதலை செய்யப்பட்டனர்.



கடலூர் மாவட்ட மனித உரிமை பாதுகாப்பு மையம், ஆறுமுகசாமி திருச்சிற்றம்பல மேடையில் ஏறிப் பாட முடியாமல் தடுக்கப்பட்டதை, மனித உரிமை மீறல் வழக்காக சென்னை உயர்நீதி மன்றத்திற்கு எடுத்துச் சென்றது. ஆறுமுகசாமியும், விடுதலை செய்யப்பட்ட தீட்சிதர்களைத் தண்டிக்கக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார். பார்ப்பன உயர் அதிகாரிகள் மத்தியில் தீட்சிதர்களுக்கு இருக்கும் செல்வாக்கு மற்றும் பணபலம் காரணமாக இவ்விரு வழக்குகளும் உயர்நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன. தற்பொழுது இவ்விரு வழக்குகளில் மனித உரிமை மீறல் வழக்கு மட்டும் உச்சநீதி மன்றத்தின் விசாரணையில் உள்ளது.



சிவனடியார் ஆறுமுகசாமி, மிகவும் பிற்பட்ட சாதியைச் சேர்ந்தவர்; தமிழில் பாடி நடராசனை வழிபட விரும்புகிறார் என்ற காரணத்துக்காகவேதான், தீட்சிதர் கும்பல் அவரை திருச்சிற்றம்பல மேடையில் ஏறிப்பாட விடாமல் தடுத்து வருகிறது.



திருச்சிற்றம்பல மேடையில் ஏறிப் பாட தீட்சிதர்களுக்கு மட்டுமே உரிமையுண்டு; சமஸ்கிருத மொழியில் அமைந்த வேதங்களையும், மந்திரங்களையும் தான் அம்மேடையில் பாட முடியுமேயன்றி, பிற மொழி துதிப்பாடல்களைப் பாடி இறைவனை வழிபட அனுமதிக்க முடியாது எனப் பச்சையாக பார்ப்பன சாதிக் கொழுப்பைக் கக்கி வருகிறது, தீட்சிதர் கும்பல்.



இதனை மரபு, சம்பிரதாயம் என்ற பெயரில் நியாயப்படுத்தி, மயிலாடுதுறையில் உள்ள இந்து அறநிலையத்துறை துணை ஆணையர் மூலம், ஆறுமுகசாமியின் வழிபாட்டு உரிமைக்கு எதிரானத் தடையாணையையும் தீட்சிதர்கள் பெற்றுள்ளனர்.



ஆகம விதிகள், மரபு, சம்பிரதாயங்கள் என்ற பெயரில் புனிதப்படுத்தப்ப டும் இத்தீண்டாமையை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற அடிப்படையில்தான் மனித உரிமை பாதுகாப்பு மையம் ஆறுமுகசாமிக்கு ஆதரவு கொடுத்து வருகிறது. இந்தப் பிரச்சினை நீதிமன்றத்தோடு முடங்கிப் போய்விடக் கூடாது என்பதற்காகவே, செப். 2004இல் பல்வேறு ஜனநாயக அமைப்புகளின் ஆதரவோடு ஆறுமுகசாமிக்கு நீதி கேட்டு, மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பாகப் போராட்டம் நடத்தப்பட்டது. மேலும், நடராசர் கோவிலில் நடைபெறும் ஒவ்வொரு திருவிழாவின் போதும், பொதுமக்கள் மத்தியில் இப்பிரச்சினையின் பின் மறைந்துள்ள தீண்டாமையை விளக்கும் பிரசுரங்கள் விநியோகிக்கப்படுகின்றன. தீட்சிதர்களின் அச்சுறுத்தலையும் மீறி, ஆறுமுகசாமியே பிரசுரங்களைப் பொதுமக்களிடம் கொடுத்து, ஆதரவு தேடி வருகிறார்.



இந்நிலையில், தி.மு.க. அரசு பதவியேற்று, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் அறிவிக்கப்பட்ட பின், ஆறுமுகசாமி, ""15.7.06 முதல் 20.7.06 முடிய திருச்சிற்றம்பல மேடையில் ஏறி சிவபுராணம் பாடப் போவதாக'' அறிவித்தார். இதற்கு ஆதரவு தெரிவித்த கடலூர் மாவட்ட மனித உரிமைப் பாதுகாப்பு மையம், இந்த அறிவிப்பின் பின்னுள்ள நியாயம் உரிமைகளை விளக்கி, 12, 13, 14.7.06 ஆகிய மூன்று நாட்களும் விடுதலைச் சிறுத்தைகள், திராவிடர் கழகம், சி.பி.ஐ., சி.பி.எம்., வி.வி.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய அமைப்புகளின் ஆதரவோடு, தெருமுனை பிரச்சாரக் கூட்டங்களை நடத்தி, பொதுமக்களின் ஆதரவைத் திரட்ட முனைந்தது.



ஆறுமுகசாமி திருச்சிற்றம்பல மேடையில் ஏறிப் பாடப் போவதாக அறிவித்தவுடனேயே, சிதம்பரம் உரிமையியல் நீதிமன்றத்தின் மூலம், ஆறுமுகசாமி பாடுவதை 25.7.06 வரைத் தடை செய்யும் ஆணையைத் தீட்சிதர்கள் பெற்றுக் கொண்டனர். எனினும், இத்தடையுத்தரவை மீறுவது என்ற முடிவோடு, 15.7.06 அன்று சிவனடியார் ஆறுமுகசாமியை வாழ்த்தி வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சியை சிதம்பரம் மேல வீதியில் மனித உரிமை பாதுகாப்பு மையம் ஒருங்கிணைத்து நடத்தியது.



இப்போராட்டத்திற்குத் தலைமையேற்ற மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.ராஜு, வரவேற்புரை நிகழ்த்திய சிதம்பரம் வழக்குரைஞர் கோபாலகிருஷ்ணன், மற்றும் வாழ்த்துரை வழங்கிய முன்னாள் (தமிழக) இந்து அறநிலையத் துறை அமைச்சர் திரு. வி.வி.சாமிநாதன்; பா.ம.க.வின் மாநிலத் துணைத் தலைவர் திரு. வி.எம். சவுந்திரபாண்டியன்; திராவிடர் கழகத்தின் மாநிலத் துணை பொதுச்செயலர் திரு. துரை சந்திரசேகர்; சி.பி.எம்.இன் மாவட்ட விவசாய அணித்தலைவர் தோழர் டி.ஆர். விசுவநாதன்; சி.பி.ஐ.யின் சிதம்பரம் நகரச் செயலாளர் தோழர் நடராஜன் உள்ளிட்ட பலரும் தீட்சிதர்களின் சாதித் திமிரையும், அவர்களின் ஒழுக்கக் கேடுகளையும் அம்பலப்படுத்தி உரையாற்றினர்.



சிதம்பரம் உரிமையியல் நீதிமன்றம் ஆறுமுகசாமி திருச்சிற்றம்பல மேடையில் ஏறிப் பாடுவதற்குத்தான் தடை விதித்திருந்தது. ஆனால், சிதம்பரம் நகர போலீசோ, சட்டம் ஒழுங்கைக் காட்டி, ஆறுமுகசாமியைக் கோவிலை நெருங்கக் கூட விடாமல் தடுத்து, அவரையும், அவருக்குத் துணையாகச் சென்றவர்களையும் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டு 80 பேரை நடுத்தெருவிலேயே கைது செய்து, தீட்சிதர்களுக்கு விசுவாசமாக நடந்து கொண்டது.





""உரிய தகுதி இருந்தால் பார்ப்பனர் அல்லாதவர் கூட அர்ச்சகர் ஆகலாம்; கருவறைக்குள் நுழைந்து, இறைவனுக்கு வழிபாடு நடத்தலாம்'' எனக் கூறுகிறது தமிழக அரசின் சட்டம். இதற்கு ஆதரவாக உச்சநீதி மன்றத்தின் இரண்டு தீர்ப்புகளும் சுட்டிக் காட்டப்படுகின்றன. ஆனால், தீட்சிதர் கும்பலோ, துறவறம் பூண்டு வாழும் ஓதுவார் ஆறுமுகசாமியை, கருவறைக்கு எதிரே இருக்கும் மேடையில் ஏறுவதற்குக் கூடத் தடை போடுகிறது.



""உச்சநீதி மன்ற நீதிபதிகள் மோகன் மற்றும் சி.என்.ரே ஆகிய இருவர் அடங்கிய பெஞ்ச், கர்ப்பகிரகங்களில் தமிழ் மந்திரத்தில் அர்ச்சனை செய்யலாம் என்று 2.4.1992இல் தீர்ப்பளித்திருப்பதாகவும்; சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஏ.ஆர். லெட்சுமணன் தமிழ்நாட்டில் ஆலயங்களில் தமிழில் அர்ச்சனை செய்யலாம் என்று 17.6.1992இல் தீர்ப்பளித்திருப்பதாகவும்'' முன்னாள் இந்து அறநிலையத்துறை அமைச்சர் வி.வி.சுவாமிநாதன் குறிப்பிடுகிறார். ஆனால், கருவறைக்கு எதிரேயுள்ள திருச்சிற்றம்பலத்தில் சமஸ்கிருதம் அல்லாத பிற மொழிகளில் பாடி இறைவனை வழிபடக் கூடாது எனத் தமிழை தீண்டத்தகாத மொழியாக ஒதுக்கித் தள்ளுகிறார்கள் தீட்சிதர்கள்.



சட்டத்தின்படியும், நீதிமன்றத் தீர்ப்புகளின்படியும் பார்த்தால், ஆறுமுகசாமியைத் தடை செய்த தீட்சிதர்கள்; அவர்களுக்குத் துணை நின்ற நீதிபதி, போலீசு அதிகாரிகளைத் தான் கைது செய்திருக்க வேண்டும். ஆனால், நடந்திருப்பதோ நேர் எதிராக இருக்கிறது.



1987ஆம் ஆண்டே, சிதம்பரம் நடராசர் கோவிலை இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர புதிதாக விதிகள் உருவாக்கப்பட்ட போதிலும், கடந்த 19 ஆண்டுகளாக இந்தக் கோயிலில் ஒரு நிர்வாக அதிகாரியைப் போட முடியாமல், தமிழக அரசு கையைக் கட்டிக் கொண்டு நிற்கிறது.



இந்தக் கோயிலின் நிர்வாகத்தைத் தமிழக அரசு எடுத்துக் கொள்வதை எதிர்த்து தீட்சிதர்களால் தொடுக்கப்பட்ட வழக்கில், ""இந்தக் கோயிலுக்குச் சொந்தமாக 1000 ஏக்கர் நிலமுள்ளது; உண்டியல் வைக்காமல், பக்தர்களிடமிருந்து தீட்சிதர்களே நேரடியாகப் பணம் பெறுகிறார்கள்; 50 கிலோ மதிப்புமிக்க நகைகள் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தக் காரணங்களால், இக்கோவிலில் அரசு நிர்வாக அதிகாரியை நியமிப்பது சரி'' என சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி வெங்கடாசலய்யா 1997இல் தீர்ப்பளித்தார். ஆனால், தீட்சிதர்கள் வழக்கிற்கு மேல் வழக்கு போட்டு இத்தீர்ப்பை நீதிமன்றத்திற்குள்ளேயே பந்தாடி வருகிறார்கள்.



நூறு ஆண்டுகளுக்கு முன்பே தீட்சிதர்கள் தொடுத்த ஒரு வழக்கில், ""இந்தக் கோயில் தீட்சிதர்களுக்குச் சொந்தமில்லை என்றும், ஒட்டு மொத்த சைவர்களுக்குச் சொந்தம் என்றும் உயர்நீதி மன்ற நீதிபதி முத்துச்சாமி ஐயரும், இன்னொரு வெள்ளைக்கார நீதிபதியும் தீர்ப்பளித்திருப்பதாக'' முன்னாள் அமைச்சர் வி.வி.சாமிநாதன் குறிப்பிடுகிறார். ஆனால், தீட்சிதர்களோ,""இந்தக் கோயில் எங்களுக்குப் பாத்யப்பட்ட பரம்பரைச் சொத்து'' எனச் சுவரொட்டி அடித்து ஒட்டும் அளவிற்கு, சட்டம் நீதிமன்றம் எதனையும் மதிக்காமல் திமிரோடு நடந்து வருகின்றனர்.



சிதம்பரம் கோயிலின் வருமானம் ஏறத்தாழ 1 கோடி ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால், தீட்சிதர்களோ, ஊர் பெரிய மனிதர்களிடம் 100, 200 நன்கொடை வாங்கித்தான், பூசையே நடத்துவதாக மோசடிக் கணக்கைத் தயார் செய்து, பக்தர்களை ஏமாற்றி வருகிறார்கள். கோயில் நிலத்தில் இருந்து கிடைக்கும் குத்தகை, கடை ஏலம், அபிஷேகம், ஆராதனைக்காக ரசீது கொடுக்காமல் பக்தர்களிடம் பிடுங்கும் பணம், கோவிலுக்குச் சொந்தமான தங்க நகைகள் இவை எல்லாவற்றையும் தாங்களே ஆண்டு அனுபவிக்கும் வண்ணம் ""அருள்மிகு சபாநாயகர் திருக்கோயில் பொது தீட்சிதர்கள், சிதம்பரம்'' என்ற அமைப்பைக் கட்டி வைத்துக் கொண்டு, அலிபாபா கதையில் வரும் கொள்ளைக் கூட்டம் போலக் கொழுத்துத் திரிகிறார்கள்.



இது ஒருபுறமிருக்க, இரவு நேரமானபின், சிதம்பரம் கோயிலையே தண்ணி அடிக்கும் பாராகவும்; பெண்களோடு சல்லாபம் செய்யும் விடுதியாகவும் தீட்சிதர்கள் மாற்றிவிட்டதாக ஆதாரத்தோடு குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. இந்த அசிங்கமான உண்மையை மூடி மறைக்கத்தான் கே.ஆடுரைச் சேர்ந்த செல்வராஜையும்; வீட்டுத் தரகர் ராயரையும் தீட்சிதர்கள் கோயிலுக்குள் வைத்துக் கொன்றுவிட்டதாகவும்; கோவில் வருமானத்தைப் பங்கு போட்டுக் கொள்வதில் ஏற்பட்ட தகராறில் மூர்த்தி தீட்சிதரை கோயில் கல்தூணில் மோதிக் கொன்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.



இப்படிப்பட்ட கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டுள்ள தீட்சிதர்கள், ""திருச்சிற்றம்பல மேடையில் ஏறிப்பாட தமக்கு மட்டுமே உரிமையுண்டு; ஆறுமுகசாமியைப் பாட வைத்தால் சட்டம்ஒழுங்கு கெட்டுவிடும்; பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும்; கோவிலில் உள்ள விலையுயர்ந்த நகைகளின் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படும்'' எனப் புளுகித்தான் நீதிமன்றத்தில் இடைக்காலத்தடை கேட்டுள்ளனர். இதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா என்று கூடப் பார்க்காமல், நீதிமன்றம் தீட்சிதர்களின் கோரிக்கைக்குத் தலையாட்டியுள்ளது. மேலும், ""ஆறுமுகசாமியை நாத்திகர்கள் தூண்டிவிடுவதாகவும்; இதற்குப் பின்னால் பெரிய சதி நடப்பதாகவும்'' தீட்சிதர்கள் பீதியூட்டுகிறார்கள். மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஆறுமுகசாமி திருச்சிற்றம்பலத்தில் ஏறிப் பாடுவதை மறுக்கும் தீண்டாமையை, நாத்திக ஆத்திகப் பிரச்சினையாகத் திசை திருப்ப முயலுகிறார்கள்.



தேவாரம், திருவாசகம் ஆகிய சைவத் திருமறைகளோடு பின்னிப் பிணைந்த சிதம்பரம் நடராசர் கோவிலை; சைவத் திருத்தலங்களிலேயே ஆகாயத் தலமாகக் கருதப்படும் சிதம்பரம் நடராசர் கோவிலை, கிரிமினல் பின்னணி கொண்ட தீட்சிதர்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதைக் கண்டு, நாத்திகர்களைவிட, ஆத்திகர்களுக்குத் தான் இரத்தம் கொதிக்க வேண்டும். ஆனால் ஆறுமுகசாமியைத் தவிர, வேறெந்த சைவ மடாதிபதிக்கும் தமிழுணர்வும், ரோசமும் இருப்பதாகத் தெரியவில்லை.



அதனால்தான், இப்பிரச்சினையில் ஆறுமுகசாமியை ஆதரிக்கும் மனித உரிமை பாதுகாப்பு மையம், சிதம்பரம் நடராசர் ஆலயத்தை இந்து அற நிலையத்துறையின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடு என்ற கோரிக்கையையும் சேர்த்து முன் வைக்கிறது. இதற்கு ஆதரவாகப் பொதுமக்களைத் திரட்டும் நோக்கத்தோடு, சிதம்பரம் மற்றும் அந்நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் மனித உரிமை பாதுகாப்பு மையம், பிற ஜனநாயக அமைப்புகளோடு இணைந்து தெருமுனைப் பிரச்சாரம் நடத்தி வருகிறது. மேலும், சிதம்பரம் உரிமையியல் நீதிமன்றம் கொடுத்துள்ள இடைக்காலத் தடையை நீட்டிக்கக் கூடாது; இவ்வழக்கில் உடனடியாகத் தீர்ப்பளிக்க வேண்டம் எனக் கோரி நீதிமன்றத்தில் மனு செய்து, வழக்கும் நடத்தி வருகிறது.



இப்பிரச்சினையில் இன்னொரு உண்மையையும் சுட்டிக் காட்டத்தான் வேண்டும். கோவில்களில் பார்ப்பனர்கள் சூத்திரர்கள் மீதும், தாழ்த்தப்பட்டோர் மீதும் திணிக்கும் தீண்டாமையையும்; கிராமப்புறங்களில் ஆதிக்க சாதிகளால் காலனிகளின் மீது திணிக்கப்படும் தீண்டாமையையும் பிரித்துப் பார்க்க முடியாது. பார்ப்பனர் அல்லாதவர் அர்ச்சகர் ஆவது, தமிழ் உள்ளிட்டு அவரவர் தாய்மொழிகளில் வழிபட உரிமை கோருவது ஆகிய கோரிக்கைகள், சாதிதீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களோடு இணைக்கப்படாவிடில், அதில் முழுமையான வெற்றியைக் காண முடியாது. இப்படிப்பட்ட ஒருங்கிணைந்த போராட்டம், மக்கள் மத்தியில் எழவில்லையென்றால், வழிபாட்டு உரிமை தொடர்பாகக் கொண்டு வரப்படும் சட்டங்களும், நீதிமன்றத் தீர்ப்புகளும் அரைகுறையானதாக, ஒன்றுக்கொன்று முரணானதாக, நடைமுறைக்கு வராத காகிதக் குப்பைகளாகவே இருக்கும்.



மனித உரிமை பாதுகாப்பு மையம், கடலூர் மாவட்டம்.



Monday, September 4, 2006

வீங்கி வெம்பிப் புழுக்கின்றது

வீங்கி வெம்பிப் புழுக்கின்றது

பி.இரயாகரன்
04.09.06


மிழ்மக்கள் வினையை விதைத்து, விளைவித்த புலிகள் வீங்கி வெம்பிக் கொண்டிருக்கின்றார்கள். இதுதான் தமிழ்பேசும் மக்களின் தலைவிதி. அந்த தமிழ் மக்களுக்கு கூறுவதற்கு அவர்களிடம் பொய்யையும் புரட்டையும் தவிர, வேறு எதுவுமில்லை. தமிழ் மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்கினால் புலிகளை அரசியல் அனாதையாக்கிவிடுவார்கள் என்று எப்படி புலிகளால் உத்தியோகபூர்வமாக கூறமுடிந்ததோ, அதேபோல் தான் உண்மைகளும் அவர்களை அரசியல் அனாதையாக்கிவிடும். இதனால் தமிழ் மக்களுக்கு புலிகள் வழங்கும் தகவல், அறிவு, செய்தி என அனைத்தும், உண்மையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படுபவையல்ல. மாறாக வளர்ப்பு மந்தைகளுக்கு தீனி போடுவதுபோல், புலிகள் அவியல் போடுகின்றனர். தமது பொய் தகவல் தவிர்ந்த அனைத்து அறிவுகளையும், தமிழ் சமூகத்தில் இருந்தே அகற்றுவதற்காகக் கூட படுகொலைகளையே நம்பியிருக்கின்றனர். இதற்கு ஏற்ப ஆறறிவை இழந்து அங்கவீனமாகி, சிந்திக்க செயலாற்ற மறுக்கின்ற, ஒரு முட்டாள் சமூகத்தின் மேல் தான் புலிகளால் இலகுவாக குதிரை ஓடமுடிகின்றது. இது புலிகளின் இன்றைய வரலாற்றுக்கு முந்திய இயக்க வரலாற்றில், ஒரு அங்கமாகவே உயிர்தெழுந்தது.


1983, 1984 களில் தமிழீழம் பற்றிப் பல்வேறு இயக்கங்களால் வீங்கி வெம்பிய பிரமைகள் விதைக்கப்பட்டது. அன்றும் திகதி குறிப்பிட்டு, தமிழீழப் பிரகடனத்துக்கு ஆட்கள் பிடிக்கப்பட்டனர். எல்லாவிதமான சுயஅறிவையும் பகுத்தாய்வையும் இழந்தநிலையில், குறித்த திகதிக்குள்ளான தமிழீழம் என்னும் மண் குதிரையை நம்பி, அதில் ஏறி முட்டாள்கள் ஓடிக்கொண்டிருந்தனர். இந்த அழகான அப்பட்டமான பொய்யை கேள்வி கேட்டவர்களை, இந்த சாத்தியப்பாட்டை அறிவுபூர்வமாக அணுகியவர்களை எல்லாம், வீங்கிவெம்பிய வக்கிரத்தின் உச்சத்தில் நின்ற எள்ளிநகையாடினர். கொள்கை கோட்பாடியின்றி பயிற்சிக்கு யார் கேட்கின்றனரோ, யார் உடனடியாக இந்தியாவுக்கு ஏற்றிச் செல்லுகின்றனரோ, அதன் பின்னால் தெருநாய்களைப் போல் ஓடிக் கொண்டிருந்தனர். குறித்த திகதியில் தமிழீழம் கிடைத்துவிடும் என்று நம்பி, அதன் பின் வந்து படிக்க முடிவெடுத்து சென்ற அறிவாளிகளும் உண்டு. இப்படித்தான் தமிழ் பரப்பில் தேசியத்தின் பெயரில், முட்டாள்தனமான நம்பிக்கைகள் பிரமைகள் விதைக்கப்பட்டன. 'பெடியள்" பற்றி பெரியவர்களால் வீங்கி வெம்பிய வம்புகளே வினையாக தமிழீழத் பாசிச தேசியமாகியது. இந்த வம்பு நிலை இன்றுவரை மாறவில்லை.


தமிழீழம் என்ற பிரமை சார்ந்த தேசியம், இப்படித்தான் மலடாகி வீங்கிவெம்பியது. அன்று யார் அதிகளவில் இந்தியாவின் கைக்கூலிகளாக செயற்பட்டனரோ, அந்தக் கூலிக்கும்பலே அதிக பயிற்சி பெற முடிந்தது. இந்தியக் கைக்கூலித்தனத்தின் எடுபிடித்தனத்துக்கு ஏற்ப அதிக வள்ளங்களை பெற முடிந்தவர்கள், தமிழீழத்தின் பெயரில் அதிகம் பேரை இந்தியக் கூலிப்பட்டாளமாக ஏற்றியிறக்க முடிந்தது. இப்படி இந்தியக் கூலிப்பட்டாளமாக செயற்படுவதில் புலிகள், புளாட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ் வரை விதிவிலக்கின்றி போட்டி போட்டனர். இதில் இந்தியா தனக்கு அதிக விசுவாசமாக எந்த நாய் அதிகம் வாலாட்டும் என்பதை பிரித்தறிந்து, அதிகமாகவும் சிறப்பாகவும் விசேட உணவு போட்டனர். இப்படித்தான் அன்று தமிழீழம் வீங்கி வெம்பிக் கொண்டிருந்தது. இந்தியா கொடுத்த பணம், ஆயுதம் மூலம் மக்களையே எதிரியாக்கி, தறிகெட்ட விசர் நாய்களாக ஊரார் பணத்தில் ஊதாரியாக ஊளையிட்டுத் திரிந்தனர். உதாரணமாக இந்தியா புலிக்கு பணமும் ஆயுதமும் கொடுத்து சிங்கள மக்களை கொல்லக் கோரியபோது, அநுராதபுரத்தில் 150க்கு மேற்பட்டவரை கொலை செய்து, தமது தமிழீழத் தாகமான தமிழீழ வெறியாட்டத்தையே நடத்தினர். இதேபோல் இந்திய கூலிப்பட்டாளமாக செயற்பட்ட ரெலோ, பஞ்சாப் சீக்கிய பொற்கோயிலில் தனது கொலை வெறியாட்டத்தையே, யுத்தப் பயிற்சியின் பெயரில் செய்தனர். இப்படி ஏராளம்.


இப்படி வீங்கி வெம்பிய நிலையிலும், இந்தியாவின் தனது நம்பிக்கைக்குரிய நாயாக புலிகளை கருதவில்லை. மாறாக தனது வீட்டு நாயாக, மற்றைய நாயுடன் சேர்த்துக் கருதியது. இது புலிக்கு பிடிக்கவில்லை. இதனால் புலிகள் வேறு வீடுகளிலும் வாலாட்டி, அவர்களின் வீட்டிலும் நக்கியதன் மூலம், அவர்களின் நம்பிக்கையைப் பெற்றனர். இப்படி அதிக சலுகையை பெற்றதன் மூலம், வீங்கி வெம்பிக் கொழுத்தனர். இந்த வகையில் இஸ்ரேலிடமும் கூட புலிகள் ஆயுதப் பயிற்சி பெற்றனர். அன்று சோவியத் அமெரிக்க முரண்பாட்டின் அடிப்படையில், இந்தியா அல்லாத அன்னிய நாடுகளுக்கு விசுவாசமாக புலிகளால் வாலாட்டி கைக்கூலியாக முடிந்தது. பணமும், ஆயுதமும் தாராளமாக வழங்கப்பட்டது. இந்தியாவிடம் பயிற்சிபெற்ற கூலிக்குழுக்களை அழிக்க, இந்தியாவுக்கு எதிரான நாடுகளின் விருப்பம் புலிகள் என்ற பாசிச குழு மூலம் ப+ர்த்திசெய்யப்பட்டது. சி.ஜ.ஏ உளவாளியாக இருந்த எம்.ஐP.ஆர் மற்றும் மோகனதாஸ் மூலமாக, நிலைமையைப் பயன்படுத்தி பணத்தையும் ஆயுதத்தையும் பெருமளவில் புலிகளுக்கு வாரி வழங்கினர். மற்றைய இயக்க ஆயுதங்களும் பறித்து, அவை சூழ்ச்சிகள் மூலம் புலிகளுக்கு வழங்கப்பட்டது. இப்படி ஏகாதிபதிய சூழச்சிகளின் வழியே வீங்கி வெம்பிக் கொழுத்தனர். இப்படி எங்கும் எதிலும் புலிகள் அதிகளவில் வீங்கி வெம்பினர். போராட்டமே வீங்கி வெம்பியது. மக்களை கால்தூசுக்கு கூட மதிக்க மறுத்தவர்கள், அவர்களையே ஏறிமிதித்தனர்.


இப்படி கூலியாக ஆயுதப் பயிற்சியும் பணமும் பெற்றவர்கள், சமூகத்தின் மேலாண்மையை தமதாக்கி கொண்டனர். இதன் மேல் அறிவுத்தளம் தானாக வெம்பத் தொடங்கியது. இந்த சோரம் போன சமூக இருத்தலையே, சமூக பெருமையாக, வீரமாக, ராஜதந்திரமாக பறைசாற்றினர். பொய்மையும், புரட்டும் தகவலாகி அதுவும் வெம்பத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து இராணுவத் தாக்குதலும், அது சார்ந்த புனைவுகளுமே பலம்பொருந்தி கருத்தாக மாறியது. யார் அதிக தாக்குதலை இராணுவம் மீது நடத்துகின்றனரோ, அவர்களை போற்றும் பக்தர்களின் கற்பனைகளில் அவர்கள் வீங்கி வெம்பத் தொடங்கினர். இப்படி சமூகம் இழிந்து நலிந்து சீரழிந்து வந்தது. இதன் மேல் தான் இன்றும், புலிகள் பொய்யான புரட்டான தகவல்கள் மூலம் சவாரிவிட முடிகின்றது. ஆனால் முன்பைப் போல் அல்லாது, அடிக்கடி கவிண்டு குப்புற மூஞ்சைபட விழ்கின்றனர். வீழ்ச்சியின் தொடக்கம் இப்படி தான் ஆரம்பமாகின்றது.


அன்று அவர்கள் எல்லோரும் கூறியது போல், குறித்த திகதியில் தமிழீழம் கிடைக்கவில்லை. முட்டாள் சமூகத்துக்கு இதைப்பற்றி அவர்கள் விளக்கமளிக்க வேண்டிய கவலையும் அவர்களுக்கு இருக்கவில்லை. சமூகம் மேலும் முட்டாளாகியது. அன்று குறித்த திகதியைக் கடந்து 20 வருடம் சென்றுவிட்டது. இப்போது அதே பிரமைகளுக்கு எந்தக் குறைவுமில்லை. இப்போது பிரபாகரனின் ஆயுளுக்குள் தமிழீழம் என்று முன்வைப்பதன் மூலம், அது கிடையாது என்பதை மறைமுகமாக புலித்தளபதிகள் நாசூக்காக அம்பலமாக்கி விடுகின்றனர். பிரபாகரனின் ஆயுள் நாளை முடிந்தால்! தமிழீழத்தின் கதி என்ன? இவர்கள் கூறுகின்றனர் சண்டை தொடங்கினால் ஒரு வருடத்தில் தமிழீழம் என்கின்றார்கள். இது இறுதிச் சண்டை என்கின்றனர். யாழ் குடாவை மீட்க ஐந்து நாள், போனல் பத்து நாட்கள் போதும் என்கின்றனர். இப்படி எத்தனையோ நம்பிக்கைகள் பிரமைகள் கடந்த 30 வருடமாக விதைக்கப்பட்டன, விதைக்கப்படுகின்றன.


மனிதசெயலை மறுத்த ஒரு எல்லையில் தான் இவை எல்லாம் புனையப்படுகின்றது. பொய்கள் மீண்டும் மீண்டும் வீங்கி வெம்பிக் கொண்டிருக்கின்றது. அன்று ஒரு கூலிக் கும்பலாக பெருமளவு இளைஞர்கள் இணைக்கப்பட்டு, இந்தியாவின் கூலிகளாகவே பயிற்சிக்குள்ளாக்கப்பட்டனர். அன்று இதற்கு எதிராக நாம் போராடினோம். அப்போதும் எள்ளி நகையாடப்பட்டோம். இந்த ஆயுத பயிற்சி அலையில், எம்முடன் நின்ற சிலரும் காணாமல் போனார்கள். சிறிது காலத்தின் பின் அவர்களை இயக்கத் தளபதிகளாக, கொலைவெறியுடன் களத்தில் காணமுடிந்தது. இப்படி அலையலையாக வீங்கி வெம்பிக் கொண்டிருந்த போராட்டம், கண்மூடித்தனமான நம்பிக்கைகளை அடிப்படையாக கொண்டு அனைத்தையும் நியாயப்படுத்தியது. தமிழ்மக்களையே கொத்திக்கிளறி, அவர்களை அவர்களின் பெயரில் பலியிட்டனர். இன்றும் அதே நிலைமை, ஆனால் அதைவிட மோசமான நிலைமை.


புலிகளின் பினாமித் தகவல்கள் வீங்கி வெம்புகின்றது தமிழ் மக்களுக்கு இன்று ஒரேயொரு தகவல் தளம் மட்டும்தான் உள்ளது. இதை கேள்வி கேட்க முடியாது. இதை மீறி தகவலை வழங்கல், பெறுதல் இரண்டும் மரணதண்டனைகுரிய ஒரு தேசிய குற்றம். மரணதண்டனையை வழங்குவதன் மூலம், தமிழ் மக்களின் சிந்தனைத் திறனை மலடாக்கி அதில் புலிகள் கொழுப்பாக வாழ்கின்றனர். இன்று புலிப்பினாமிகளின் தகவல்கள் தான், புலிகளின் உத்தியோகபூர்வமான தகவலாகிப் போனது.


புலிகளின் தளபதிகள் பலர் அடிக்கடி ஒன்றைக் கூறுவதை அவதானிக்க முடியும். அதில் அவர்கள் தலைவர் எல்லாம் செய்வார். அனைத்தும் தலைவருக்கு தெரியும். இப்படி ஏன் புலியின் முக்கிய முன்னணி தளபதிகள் கூறவேண்டிய நிலை உருவாகின்றது. பினாமிகளுக்கு வெளியில், புலித் தளபதிகள் இப்படி மட்டும் தான் பேசமுடியும்.


இது ஒரு அரசியல் உண்மையை, அப்பட்டமாக பளிச்சென்று அம்பலமாக்குகின்றது. அதாவது தளபதிகளிடம் நிகழ்காலம் பற்றியும், எதிர்காலம் பற்றியும் சொல்லக் கூடிய எந்த அடிப்படையான தீர்வும், வழிமுறையும் கிடையாது என்பதைத்தான், அவர்கள் உரத்து உரைத்துச் சொல்லுகின்றனர். ஒரு அரசியல் வேலை திட்டம் எதையும் அடிப்படையாக கொள்ளாத புலிகளின் தன்னியல்பான இராணுவவாத நடத்தைகள், தமிழீழம் எமது தாகம் என்பதைத் தாண்டி எதையும் கொண்டிருப்பதில்லை. தமிழீழத்தை எப்படி, எந்த வழியிலென்ற, எந்த வேலை திட்டமும் அவர்களிடம் கிடையாது. மாறாக தன்னிச்சையான தன்னியல்க்கு ஏற்ப, நிகழ்ச்சிகள் மீது எதிர்வினையாற்றுகின்றனர். இதை பற்றி அவர்களுக்கு எதுவும் தெரிந்து இருப்பதில்லை, தெரிந்து கொள்வதுமில்லை. எல்லாம் தலைவருக்குள் சர்வமயமாகி அடங்கிப் போகின்றது.


உண்மையில் முன்னணி தளபதிகள் கூட ஒன்றையும் தெளிவாக சொல்லமுடியாது. அப்படிச் சொன்னால், அது அவர்களின் தனிப்பட்ட வேலைத்திட்டமாகிவிடும். இது தலைவருக்கு எதிரான சதியாக கருதப்பட்டு, துரோகியாக முத்திரை குத்தப்பட்டு, மண்டையில் போடும் அளவுக்கு நிலைமை மாறிவிடுகின்றது. இந்த நிலையில் எல்லாம்வல்ல இறைவனின் செயல் என்பதை அடிப்படையாக கொண்டு, எல்லாம் தலைவர் மீது கூறிவிடுவது தான் புலிகளின் உயர்ந்தபட்ச அரசியல் வேலைத்திட்டமாகவுள்ளது. புலிகளின் வேலைத்திட்டம் யாருக்கும் தெரியாத ஒன்றாகவும், தலைவரின் பெயரில் அனைத்தையும் கூறிவிடுவதும் தான். அதாவது அனைத்தையும் தலைவரின் பெயரில் கூறிவிடுவதன் மூலம், கேள்விகளை பிரச்சனைகளை தவிர்த்துக் கொண்டு, நல்ல விசுவாசமான நக்கும் தளபதிகளாக இருக்கக் கற்றுக்கொண்டு விட்டனர். இதனால் பல கேள்விகளுக்கு பதில் தெரியாது போய்விடுகின்றது.


இதனால் தலைவர் கண்ணுக்குத் தெரியாதவராக, எல்லாம் வல்லவராக, சூக்குமமான நிலையில் வாழ்கின்றார். வருடத்துக்கு ஒருக்கால், எழுதப்பட்ட அறிக்கையை, யாரும் காணமுடியாத ஒரு இடத்தில் இருந்து, வாசிப்பதைத் தவிர எதையும் பகிரங்கமாக கூறுவது கூட கிடையாது. பின் அதற்கு கை கால் பூட்டி, தேராக்கி ஓட்டுவதே, பினாமிகளின் தொழிலாகவுள்ளது. இதற்காக அவர்கள் படும்பாடு சொல்லிமாளாது. வானவேடிக்கைகள் முதல் எல்லாம் சாமபேதமின்றி உண்டு.


எல்லாம்வல்ல, எல்லாம் தெரிந்த தலைவர், மௌன விரதம் காரணமாக பல கேள்விகளுக்கு, பல தெளிவீனத்துக்கு பதில் அளிப்பதில்லை. சுனாமி ஊரைக் கூட்டி அள்ளிச் சென்றாலும், அதைக் கூட காணாத எல்லாம்வல்ல தனது அற்புதத்தின் விளைவாக கண்ணை மூடி இருப்பவர் தான் புலித் தலைவர். இவரை நம்பிப் பிழைக்கும் பினாமிகளும், கூலி எடுபிடிகளும், தமது தொழில் சார்ந்து நம்பிக்கைகளையும் பிரமைகளையும் கண்மூடிக் கொண்டு, நடுவாற்றில் விதைக்கின்றனர். தாம் விரும்பியவாறு உளறி, தமிழ் சமூகத்தையே நடுவாற்றில் இறக்கி வெள்ளத்தின் போக்கில் ஒட வைத்துள்ளனர்.


இவர்களின் தலைவருக்கு தெரிந்தது என்ன? அவரிடம் ஒன்றுமேயில்லை. அதனால் தான், கண்ட கண்ட நாய்கள் எல்லாம் அவரின் பெயரில் குதறுகின்றனர். தமிழ் மக்களின் தலைவராக பினாமிகளால் மகுடம் சூட்டிய பின் (சூட்ட முன் அவர் தானே புலிக்கு தலைவர் என்று அறிவித்துக் கொண்டவர்), அவர் வழங்கிய ஒரேயொரு நேரடிப் பேட்டியும் அதன் பரிதாபமும், அவர் தனக்கு ஒன்றும் தெரியாது என்பதை அவரே நேரடியாக உறுதிசெய்தவர். இது தான் புலிகளின் பரிதாபகரமான நிலைமை. இதனால் தான் தமிழ்மக்களின் பிரச்சனை பற்றியும், அதற்கான தீர்வு பற்றியும், யாருக்கும் எதுவும் தெரிவதில்லை என்பதே உண்மை. இதை மூடிமறைக்க பொய்களையும், புரட்டுகளையும் அடிப்படையாகக் கொண்டு கற்பனைப் பிம்மங்களையும் விதைக்கின்றனர்.


பொய்களையும், புரட்டுகளையும் அம்பலப்படுத்துபவர்களை கொல்வதன் மூலம், தமது போலித்தனமான விம்பத்தை பாதுகாக்க முடிகின்றது. இனிமேலும் கொலைகளின்றி, புலிகள் இயக்கம் அரசியல் ரீதியாக உயிர்வாழ முடியாத ஒரு அவலமான நிலை. இந்த புலியின் அவலத்தை பயன்படுத்தி, பினாமிகளும் ஓட்டுண்ணிகளும் அதனுடன் ஒட்டிக்கொண்டு நக்கிவாழத் தொடங்கினர்.


மாபியாத்தனத்தை அடிப்படையாக கொண்டு பாசிச இயக்கத்தின் பின்னால் ஓட்டிக் கொண்டு வாழும் அற்ப மனிதர்கள், மக்களின் உழைப்பில் இழித்து வாழ்வதே மேன்மையானதாகவும் அதையே தேசியமாக காட்டத்தொடங்கினர். மற்றவர் உழைப்பில் நக்கி தின்னும் இவர்கள், தமது செழிப்பை பாதுகாக்கவே குலைக்கத் தொடங்கினர். சும்மா குலைக்க முடியாது என்பதால், தன்னைச் சுற்றி எதிரிகளைக் காட்டியும், எதார்த்ததையும் திரித்து குலைப்பதே இன்றைய புலித்தேசியத் தகவலாக மாறுகின்றது.


புலிகளின் தலைமைக்கு எதன் மீதும் ஒரு புலித்திட்டத்தின் அடிப்படையில் சொந்தக் கருத்து எதுவும் இல்லாததால், குலைப்பதை அடிப்படையாகக் கொண்டு இயங்கத் தொடங்குகின்றது. புலிகளுக்காக குலைப்பவர்கள், புலியின் இயல்புக்கு ஏற்ப புனைவதும் திரிப்பதிலும் கைதேர்ந்த மோசடிக்காரராகி விடுகின்றனர். 2002 முன்பான யுத்தகாலத்தில், யுத்தகால செய்தியையே அடிப்படையாக கொண்டு செய்திகள் கூறமுடிந்தது. ஆனால் அமைதிக்காலத்தில் செய்திகளுக்கு வங்குரோத்து உருவானது. செய்திகளை புலி அரசியல் மீது உற்பத்தி செய்யமுடியாத அவமானநிலை.


தமிழ்மக்களை தொடர்ந்தும் கற்பனையான மாயையில் வைத்திருக்க, செய்திகளை தொடர்ந்தும் கற்பனையில் உருவாக்கி அதை பெரிப்பித்து காட்டுவதன் மூலம் செய்திகள் உற்பத்தி செய்யப்பட்டன. கற்பனை எதிரிகளை சதா கண்டுபிடிப்பது, அதை வியாபித்துக் காட்டி விடுவதே செய்தியாகியது. தகவல்கள், செய்திகள் புனையப்பட்டு, அவை கற்பனையான பிரமையில் பேய்களைப் போல் உலாவவிட்டனர். சமகாலத்தில் இணையத்தின் வருகையும் அதன் பயன்பாடும் அதிகரித்த நிலையில், இணையத்தின் ஊடாகவே செய்திகளை கட்டுப்படுத்தும் நிலைமையும், செய்தியின் புனைவை சமூகம் முழுவதும் ஒரேமாதிரி விதைக்கமுடிந்தது. தகவல்களை, செய்திகளை சேகரிப்பவர் சுயவறிவிழந்து மலடாகினர். கிளிப்பிள்ளை போல் பார்த்தும், ஓட்டியும் வாசிக்கும் நிலைமைக்கு தமிழ் தகவல்துறை சீரழிந்தது. இந்த இழிநிலையைப் பயன்படுத்தி, புதிதாக பல ஓட்டூண்ணிகள் ஒட்டிக் கொண்டும், இந்த பொய் செய்திகளை பரப்பியதுடன், அதையும் தமது கற்பனையில் உருவாக்கினார்கள்.


சொந்த இணையம் நடத்த விரும்பியவர்களும், தனது நோக்கத்தை விளம்பரம் செய்ய விரும்பிய எல்லாவிதமான பிழைப்புவாத ஐந்துகளும், இந்த ஊதிப்பெருக்கி செய்திகளை காவும் நச்சுக் காவிகளாகினர். தமது இணைய இணைப்பில் அல்லது அச் செய்திகளை செய்தியாக மறுபிரசுரம் செய்தனர். தமிழ் பரப்பு முழுக்க இந்த ஊதிப் பெருக்கிய வீங்கி செய்திகளே, ஒரேவிதமாக மீள மீள ஒப்புவிக்கப்படுகின்றது.


இதையொட்டி வானொலிகள், தொலைக்காட்சிகள் இந்த இணையச் செய்தியையே ஒப்புவிப்பதாக மாறியது. இதை மீறினால் துரோகி பட்டமும், அவதூறும் சும்மா இலவசமாக காத்துக்கிடந்தது, காத்துக்கிடக்கின்றது. சுயமான, சுயாதீனமான செய்தி சேகரிப்பு முறையே மறுதலிக்கப்பட்டது. சுயசிந்தனையுள்ள எந்த அறிவும், அது சார்ந்த செய்தியும் தமிழ் பரப்பில் முற்றாக நலமடிக்கப்பட்டது. இப்படி செய்திகள் புனையப்பட்ட போது, அது எதார்த்த சூழலுக்கு அன்னியமானதாக, உண்மைக்கு புறம்பானதாகவே அமைந்தது.


இந்த சூழலுக்கு தமிழ் சமூகம் பழக்கப்படுகின்றது. தமிழ்சமூகம் வில்லங்கமில்லாத ஜடங்களாகவும், சோம்Nபறிகளாகவும் மாறிவிடுகின்றனர். அப்படியே கண்ணை மூடிக்கொண்டு இவற்றை கேட்பதும், காவிகளாகி பரப்புவதும் பழக்கப்பட்ட ஒன்றாகிவிடுகின்றது. அதாவது வளர்க்கப்படும் மிருககாட்சிசாலை மிருகத்தின் நிலைக்கு தரம் தாழ்ந்து இழிந்து விடுகின்றனர். மணியடித்தால் துள்ளிக்குதிக்கும் நிலைக்கு, செய்திகளைக் கண்டு குதித்தெழுகின்றனர். சுயஅறிவு, சுயசிந்தனை அனைத்தையும் இழந்து, தம்மளவில் இழிந்து, ஆக்கமற்ற மலட்டுக் கூட்டமாக மாறிவிடுகின்றனர். புலம்பெயர் தமிழர் மத்தியில் இதுவே மிக மோசமாகி, ஆக்கமற்ற மனித ஜடமாகிவிட்டனர். பழக்கப்பட்ட செக்குமாடுகள் ஒரே வட்டத்தை, சவுக்கின் அசைப்புக்கு ஏற்ப எப்படி சுற்றி நடக்கின்றதோ, அதே அவலநிலை தான் புலம்பெயர் தமிழனின் வட்டநிலை. இந்த வட்டத்தை தவறவிடாது இருக்கவும், வேறு சிந்தனையில் திசைதிரும்பாது இருக்கவும், கண்கள் அக்கம் பக்கமாக மறைத்துக்கட்டிய நிலையில், முன்னால் காட்டும் உணவுக்கு ஏற்ப அலைபாய்கின்றனர். இது அவர்களின் சொகுசான வாழ்வியல் முறைக்கும், அதற்கு இசைவான சீரழிவு போக்குக்கும் இணங்கியசைகின்றது.


அனைத்து செய்திகளும், தகவல்களும் இப்படித் தான் அசைகின்றது. ஒரு பொய் எப்படி புனையப்படுகின்றது. இதற்கு ஒரு உதாரணம் தான் மாணவிகளின் மீதான குண்டுவீச்சு. இந்த உதாரணத்தை நாம் பாhப்போம்.


மாணவிகள் கொல்லப்பட்ட செய்தியில் உள்ள உண்மையும் பொய்யும் மாணவிகள் கொல்லப்பட்டது உண்மை. ஆனால் அவர்களை வெறும் மாணவிகளாக காட்டியது பொய். இந்த பொய்யை ஊதிப்பெருக்கிய வடிவங்கள் அனைத்தும் தலைகால் தெரியாது வீங்கி வெம்பின. இப்படி வீங்கி வெம்பிய தகவல் தான், பெரும்பான்மை தமிழ் சமூகத்தின் முன் கொடுக்கப்பட்டுள்ளது.


முல்லை வள்ளிபுனத்தில் கொல்லப்பட்ட மாணவிகள் எதுவுமறியாத அப்பாவிகள். அவர்கள் எவ்வளவுக்கு எவ்வளவு அப்பாவிகளாக இருந்தனரோ, அதேயளவுக்கு அவர்களின் சொந்தப் பிணங்களும் புணரப்பட்டன. பொய்யும் புரட்டுமாக புனையப்பட்டு, பிணத்தை வலிந்து வீங்க வைத்தனர். வீங்கிய அழுகிய இந்த பிணத்தை புலம்பெயர் தமிழரின் ஒருபகுதியினரின் தலையில் கிடத்தி, ஊர்வலம் விட்டனர். பிணத்துக்கு அரோகரா, பிணத்துக்கு அரோகரா என்று கொஞ்ச பிழைப்புவாதிகள் கூறிக் கொண்டு பின்னால் ஓடினர். அன்று சுனாமி பிணத்தை வைத்து நடத்திய வசூல் வேட்டையும், அந்த பணம் அந்த மக்களுக்கு எப்படிக் கிடைக்கவில்லையோ, அதே சோகக் கதை தான் இங்கும்.


வருமானத்தை தருகின்ற இந்த நாய்ப் பிழைப்புக்கு உதவிய மாணவர்கள் விடையத்தை, இணையங்கள் முதல் அனைத்துச் செய்திகளும் குதர்க்கமாக ஒன்றுக்கொன்று முரணாக ஓலமிட்டன. அவர்களே வெளியிட்ட தகவல்கள், செய்திகள் பல குழப்பகரமானவை மட்டுமின்றி நம்பகத்தன்மையற்றவை. ஆனால் இதன் பின்னால் மந்தைக் கூட்டத்தை, செக்குமாடுகளாக ஒரு கும்பலையே சாய்க்க முடிந்தது. இப்படி தமிழ் மக்களின் அவலமான நிலை பரிதாபகரமானது.


இந்த அவலத்தின் பின்னணியில்


1. அவர்கள் செஞ்சோலை குழந்தைகள் என்றார்கள்.


2. எதுவுமறியாத அப்பாவிகள் என்றார்கள்.


3. அநாதைகள் என்றார்கள்.


4. மாணவர்கள் என்றார்கள்.


5. சுனாமியில் தாய் தந்தையை இழந்த அநாதைகள் என்றார்கள்.


6. மருத்துவ முதல் உதவி சிகிச்சை பற்றிய பயிற்சிக்கு வந்தவர்கள் என்றார்கள்.


இப்படிப் பற்பல புனைவுகள். இதில் எது உண்மை? அல்லது வேறு ஒன்றா? இப்படி தமிழ் மக்கள் சார்பாக, நாங்கள் எல்லாமாகவும் நடித்தோம். எல்லாமாகவும் அழுதோம். எல்லாமாகவும் துயரத்தைப் பகிர்ந்தோம். எமது போலித்தனத்தின் மொத்த முகத்தை எல்லாவிதமாகவும் காட்டினோம். நாங்கள் போலிகள் அல்ல, நாங்கள் தான் அசல்கள் என்றும் நடித்தோம். முடிவின்றி நடித்துக் கொண்டு இருக்கின்றோம்.


சரி, அப்படியாயின் உண்மை என்ன? புலித் தலைவர்களே இதில் எது உண்மை என்று சொல்லமுடியாத, அரசியல் அனாதைகளாகிப் போனார்கள். இந்த அனாதையாகிப் போன துயரத்தை, பலரும் தாம் விரும்பியவாறு புணர்ந்து விபச்சாரம் செய்தனர். அவர்கள் விபச்சாரம் செய்தது மட்டுமல்ல, மற்றவர்களை விப்ச்சாரம் செய்யவும் தூண்டினர். முடிவு சுனாமி போல், ஏமாந்த தமிழனை வைத்து இலாபகரமான வியாபாரம் தான்.


நாங்கள் இப்படி இந்த போலித்தனத்தை அம்பலப்படுத்திய பின்பான உண்மை என்ன? இதை ஒட்டி சுய கேள்விகளை, சுய சிந்தனை இன்றி உண்மையைக் காணமுடியாது.


1. இது ஒரு செஞ்சோலை என்றால், யுத்தத்தினால் தாய் தந்தையை இழந்த குழந்தைகளுக்கென புலிகளால் உருவாக்கப்பட்ட இடம். இப்படித்தான் புலிகளால் கடந்தகாலத்தில் கூறப்பட்டது. சரி கொல்லப்பட்ட செஞ்சோலை குழந்தைகள் எங்கே? எங்கே அந்த அனாதைக் குழந்தைப் பிணங்கள்? இங்கு எந்த சிறு குழந்தையும் கொல்வப்படவேயில்லை. ஒரு உண்மை அம்பலமாகின்றது, செஞ்சோலை குழந்தைகள் கொல்லப்பட்டனர் என்பது தவறானதும், பொய்யானதும், திட்டமிட்டு உருவாக்கிய வீங்கி வெம்பிய செய்தியுமாகும்.


சரி இந்த மையம் முன்பு செஞ்சோலை இருந்து அது கைவிடப்பட்ட இடம் என்றால், அது செஞ்சோலையல்ல. அங்கு தலைவர் கூட தங்கியிருக்க முடியும். நாளை சிங்கள இராணுவம் கூட தங்கியிருக்க முடியும். அங்கு 17 முதல் 19 வயதானவர்கள் புலியின் நோக்கத்துக்காக கொண்டு செல்லப்பட்டனர் என்பதும், அங்கு வைத்துக் கொல்லப்பட்டனர் என்பதே உண்மை.


2. சுனாமியால் தாய் தந்தையை இழந்த அநாதைகள் என்றார்கள். அதுபோல் அவர்கள் அநாதைகள் என்றார்கள். அவர்கள் அநாதைகள் அல்ல என்பதும், தாய் தந்தை உள்ளனர் என்ற தகவல் பொய்யர்களை அம்பலமாக்கியுள்ளது. இந்த பொய் உலகம் முழுக்க பரப்பப்பட்டது. இதன் மூலம் இது பொய் என்ற உண்மை, உலகமறிய அம்பலமாகியுள்ளது.


3. அப்பாவி மாணவர்கள் என்றார்கள். இது ஒரு பகுதியே உண்மை. ஆனால் புலிச் செய்திகள் இந்த உண்மையைக் கூறவில்லை. பொய்யையும் புரட்டையும் அடிப்படையாக கொண்டு, இதை பூசி மெழுகினர்.


மாணவர்கள் தாங்களாகவே தாமே தெரிந்துகொண்டு இந்த இடத்தில் கூடவில்லை. அவர்களின் சொந்த விருப்பத்துக்கு புறம்பாக பலாத்காரமாக கொண்டு வரப்பட்டவர்கள். பெற்றோர்கள், பாடசாலை நிர்வாகம் முதல் அனைவரினதும் விருப்பங்களையும் மறுதலித்தே இந்த மாணவர்கள் கொண்டு வரப்பட்டவர்கள். அந்த வகையிலும் அவர்கள் அப்பாவிகள். தாங்களாகவே தோந்தெடுக்காத ஏதோவொரு கட்டாயப் பயிற்சிக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் அல்லது உள்ளாக்கப்படவிருந்தவர்கள். அதுவும் இந்தப் படுகொலை காலையில் நடந்தது என்பதால், அவர்கள் அங்கு முன்கூட்டியே தங்கவைக்கப்பட்டு இருந்தனர். உண்மையில் வடக்கு கிழக்கில் வாழுகின்ற மக்கள், அதிலும் கூடுதலாக புலிக் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் வாழும் மக்கள், தாமாக சுயமாக எந்த முடிவையும் எடுக்கமுடியாத அப்பாவிகள். இந்த நிலையில் அப்பாவிகள் கொல்லப்பட்டனர் என்ற புலியின் வாதம் பொய்யாகின்றது. இந்த பொய் உண்மையை உணர்த்துகின்றது.


ஏதோவொரு பயிற்சிக்கு என அந்த மாணவர்கள் கொண்டு செல்லப்பட்டனர் என்றால், யாரால்? ஏன்? எதற்கு? அதுவும் பாடசாலையல்லாத இங்கு? இதற்கு யாரும் பதில் தரவில்லை. இந்த நிலையில், அரசியல் பிழைப்பு நடத்தப்படுகின்றது. அரசியல் கொள்கைகளை வைத்து அரசியல் செய்யத்தெரியாத பாசிட்டுகள், இப்படி மலிவு விலையில் கோமாளி வேஷம் போட்டு பிணத்தை வைத்து அரசியல் பிரச்சாரம் செய்கின்றனர். சொந்த தாய், தந்தை, உறவினர், பாடசாலைகள் என்று, இந்த மாணவிகளின் பின்னனி உள்ளது என்ற உண்மைகள் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு அரசியல் கோசிப்பு நடத்தப்பட்டது மட்டுமின்றி, இழிவான மலிவான கேடுகெட்ட அரசியல் விபச்சாரம் செய்யப்பட்டது.


4. பொய்யையும் புரட்டையும் நிறுவ, கண்காணிப்புக்குழு அறிக்கையிலும், யுனிசேவ் அறிக்கையிலும் சரணடைந்தனர். ஆனால் அவர்கள் இதை இராணுவ முகாமில்லை என்று எப்படி கூறினரோ, அதேபோல் புலிகள் கூறியது போல் இதை அனாதை முகாம் என்றும் கூறவில்லை. இதில் புனைவும் பொய்யும் அம்பலமாகிவிடுகின்றது.


இந்தளவுக்கு அந்த பெண்கள் இரவு உடையில் இருக்கவில்லை. சிலர் ஒரேவிதமான கறுப்பு உடுப்பில் இருந்துள்ளனர். சில உடல்களை மட்டுமே சர்வதேச அமைப்புகள் காணமுடிந்தது. அதுவும் இறந்த இடத்தில் அல்ல. இந்த நிலையில் முழுமையாக இறந்தவர்களின் படங்கள் வெளிவரவில்லை. இதைவிட பெற்றோர்களின் சொந்த அபிப்பிராயம், பாடசாலைகளின் அபிப்பிராயம் எதுவும் வெளிவரவில்லை. சில பினாமிகள் மட்டும் தான், இதன் மீது முழு அதிகாரம் பெற்று குலைத்துக் கொண்டிருந்தனர். இப்படித் தான் இன்று அனைத்து பொய்களும் தமிழ் மக்கள் சார்பாக புனையப்படுகின்றது.


இந்த விடையம் மீதான சில கேள்விகள், இதை மேலும் உங்களை தெளிவுபடுத்தும் என்பதால்


1. இதையொத்த வயதுடையவர்களை புலிகள் இராணுவ பயிற்சி வழங்கவில்லையா? அப்படியாயின் எது உண்மை?


2. இதையொத்த பலருக்கு மக்கள் என்ற பெயரில் புலிகள் கட்டாய பயிற்சி வழங்கவில்லையா? இப்படி படங்களை அவர்கள் வெளவிடவில்லையா? அப்படியாயின் எது உண்மை?


3. தாக்குதல் நடக்க முன், இந்த பயிற்சி பற்றி வழமைபோல் புதினம் இணையம் போட்ட படங்களுடன் கூடிய செய்தி உண்மை இல்லையா? அப்படியாயின் எது உண்மை?


4. கொல்லபட்டவர்களை முழுமையாக வெளி உலகத்துக்கு காட்டமறுத்தது ஏன்? முழுமையாக கொல்லப்பட்டவர்கள் பெயரை வெளியிடாமை ஏன்? அப்படியாயின் எது உண்மை?


5. தாக்குதல் நடந்த இடம் முழுமையாக காட்சிப்படுத்தாதது ஏன்? அப்படியாயின் எது உண்மை?


6. ஏதோ ஒரு இடம் என்றால், அதற்குரிய அடிப்படையான உள்ளடகம் இருந்தே இருக்கும். அது ஏன் காட்டப்படவில்லை? அப்படியாயின் எது உண்மை?


7. கண்காணிப்பு குழு இது பயன்பாடு அற்ற இடமாக இருந்துள்ளதை குறிப்பிட்டுள்ளனர். புதிதாக ஒரு பயன்பாட்டை அது வெளிப்படுத்தியுள்ளது? அது என்ன? அப்படியாயின் எது உண்மை?


8. கொல்லப்பட்ட சிலர் ஒரேவிதமான ஒரு கறுப்பு சீருடையில் இருந்துள்ளனர்? அப்படியாயின் எது உண்மை?


9. கொல்லப்பட்டவர் எண்ணிக்கை குழப்பகரமானதாக உள்ளது ஏன்? குறிப்பிட்ட எண்ணிக்கை தாண்டி கொல்லப்பட்டவர்கள் யார். இதை வழிநடத்தியவர்கள் கொல்லப்படவில்லையா? அப்படியாயின் எது உண்மை?


10. இதனுள் புலிகள் சம்பந்தப்படவில்லையா? அப்படியாயின் எது உண்மை?


இப்படி பல நூறு கேள்வி எழுப்ப முடியும். சுயஅறிவும் சுயசிந்தனையும் உள்ளவர்களுக்கு, இது போதுமானது. இப்படியான உண்மைகள் தமிழ் மக்களுக்கு உதவாது என்பது, புலிகளின் கொள்கையாகிவிட்டது. தமிழ் மக்களுக்கு எப்படி ஜனநாயகத்தை வழங்கமுடியாது என்று எப்படி புலிகள் கூறுகின்றரோ, அதேபோல் தான் தமிழ் மக்களுக்கு உண்மை செய்திகளை வழங்கக் கூடாது என்பதே புலிதேசியக் கொள்கையாகும்.


உண்மை என்பது மறுக்கப்பட்டு, கற்பனையான செய்திகளை வக்கிரமாக்கி தருகின்றனர். எல்லாம் வெற்றியாக வீங்கி வெம்பிப் போன தகவல், அடிக்கடி அவர்களையும் மீறி பொய்யாக்குகின்றது. மறுபக்கத்தில் புலியெதிர்ப்பு செய்திகளும் தமது பங்குக்கு வீங்கி வெம்புகின்றன. செய்தியின் உண்மைத் தன்மையைத் தேடி, நீந்தித்தான் கண்டு பிடிக்க வேண்டியுள்ளது. இது உண்மையா? என்ற சந்தேகத்தை பலர் இன்று எழுப்புகின்றனர். முன்பைவிட செய்தி மீதான நம்பிக்கையை இழப்போர் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றனர். எந்த நம்பிக்கையும், சந்தேகத்தைக் கடந்து உயிர் வாழவில்லை. அன்று வீங்கி வெம்பி வெடித்த இயக்கங்கள் போல், தகவல்களுக்கும் இந்தக் கதி நடக்கின்றது. ஒரு இனம் மண்ணோடு மண்ணாக சிதைந்து சின்னாபின்னமாகி அழிகின்றது.


அடுத்து வீங்கி வெம்பவைக்கும் தமிழீழக் கனவுபற்றி தனிக்கட்டுரையாக பார்ப்போம்.