தமிழ் அரங்கம்

Saturday, April 12, 2008

பேநசீர் புட்டோ: ஜனநாயகத் தேவதையா? அமெரிக்க அடிவருடியா?


பேநசீர் புட்டோ : ஜனநாயகத் தேவதையா? அமெரிக்க அடிவருடியா?

மூன்றாம் முறையாக பாகிஸ்தானின் பிரதமராகி விட வேண்டும் என்ற பேநசீர் புட்டோவின் பேராசை, டிச.27, 2007 அன்று மாலை சூரியன் மறையும் நேரத்தில், நடுவீதியில் நிரந்தரமாக முடிந்து போனது. அவர் துப்பாக்கி ரவைக்குப் பலியானாரா அல்லது மனித வெடிகுண்டுக்கு இரையானாரா என்பது இன்றும் "மர்மமாக' இருந்து வருகிறது. எனினும், பேநசீர் புட்டோ அல்காய்தாவோடு தொடர்புடைய இசுலாமிய பயங்கரவாதிகளால்தான் கொல்லப்பட்டார் என பாக். அரசு மட்டுமல்ல, மேற்குலக ஏகாதிபத்திய நாடுகளும், அவரின் இரத்தம் உறைவதற்கு முன்பே உலகுக்கு அறிவித்து விட்டன.

புலன் விசாரணை தொடங்குவதற்கு முன்பே, குற்றவாளிகளை அடையாளம் காட்டும் இந்த "தீர்க்க தரிசனத்தை' என்னவென்பது? ""அமெரிக்காவின் மதிப்பு வாய்ந்த சொத்தை நாங்கள் அழித்து விட்டோம்'' என அல்காய்தா அமைப்பைச் சேர்ந்த முஸ்தபாஅபு அல்யாசித் கூறியதாக ""தி ஏசியன் டைம்ஸ்'' என்ற நாளிதழில் வெளியான செய்தியும்; ""அல்காய்தா தலைவர்களுக்கு இடையே நடந்த உரையாடல்களை ஒட்டுக் கேட்டதில் இருந்து, ""அல்காய்தாவின் தலைவர்களுள் ஒருவரான பைதுல்லா மெஹ்சுத் தான் பேநசீரின் படுகொலைக்குக் காரணம்'' என பாக். அரசு வந்தடைந்துள்ள முடிவும்தான், அல்காய்தாவைக் குற்றஞ்சுமத்துவதற்கு ஆதாரங்களாகக் காட்டப்படுகின்றன.

பாகிஸ்தானின் ஓட்டுக்கட்சித் தலைவர்களிலேயே முற்போக்கானவர், மதச்சார்பற்றவர் என வியந்தோதப்படும் பேநசீர் புட்டோவை அல்காய்தா கொலை செய்திருக்கக் கூடும் என நம்பும் பாகிஸ்தானியர்கள் கூட, அதிகாரத்தில் இருப்பவர்களின் உதவியின்றி இப்படுகொலை நடந்திருக்க முடியாது என்ற சந்தேகத்தை எழுப்புகிறார்கள்.

பேநசீர் துப்பாக்கியால் சுடப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என உலகமே நம்பிக் கொண்டிருந்த நிலையில், பாக். அரசு, ""பேநசீர் பயணம் செய்த வேனின் மேற்கூரை ஜன்னலின் இரும்புக் கம்பியில் அவர் மோதிக் கொண்டதால், தலையில் அடிபட்டு இறந்து போனதாக'' புதுக்கதையைப் பரப்பியது. கொலையாளி பேநசீரை நோக்கித் துப்பாக்கியில் சுடும் வீடியோ பட ஆதாரங்களைப் பத்திரிகைகள் வெளியிட்ட பிறகு, தனது கதையைத் திரும்பப் பெற்றுக் கொண்டது, பாக். அரசு.

சம்பவம் நடந்த இடத்தில் தடயங்களைச் சேகரிப்பதற்கு முன்பாகவே, ராவல்பிண்டியின் தீயணைப்புத் துறை அதிகாரிகள் அந்த இடத்தில் தண்ணீரைப் பீச்சியடித்துச் சுத்தம் செய்துவிட்டனர். இந்தத் தடய அழிப்பை, அதிகாரிகளின் திறமையின்மை எனக் கூறிச் சமாளித்தார், அதிபர் முஷாரப். இதற்கு முன்பாக, பேநசீர் பாகிஸ்தான் திரும்பிய அன்று கராச்சி நகரில் அவரைக் குறிவைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்புத் தாக்குதல் நடந்த இடமும், தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டு, தடயங்கள் அழிக்கப்பட்டன.

பேநசீரின் கணவர் கேட்டுக் கொண்டார் என்ற காரணத்தைக் கூறி, பேநசீரின் சடலத்தை பிரேதப் பரிசோதனை செய்யாமலேயே அடக்கம் செய்ய அனுமதித்திருக்கிறது, பாக். அரசு.

— இவையாவும் பேநசீரின் படுகொலையில் அரசு அதிகாரிகளுக்குத் தொடர்பிருக்குமா என்ற பொதுமக்களின் சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளன.

அரசியல் தலைவர்கள் மர்மமான முறையில் படுகொலை செய்யப்படுவது பாகிஸ்தானின் அரசியல் களத்தில் புதிய விசயமல்ல. ஆப்கானில் நடந்துவந்த போலி கம்யூனிச ஆட்சியை எதிர்த்து அமெரிக்கா நடத்திய ""ஜிகாதி'' போரில், அமெரிக்காவுக்கு அடியாளாக வேலை பார்த்த பாகிஸ்தானின் முன்னாள் இராணுவ சர்வாதிகாரி ஜியாவுல்ஹக், அந்தப் பணி முடிந்தவுடன் ஒரு விமான "விபத்தில்' மர்மமான முறையில் இறந்து போனார். இச்சம்பவம் பற்றிய புலன் விசாரணையை அமெரிக்காவின் உளவு அமைப்பான எஃப்.பி.ஐ.தான் ஏற்று நடத்தியது.

பேநசீர் புட்டோ இரண்டாம் முறை பிரதமராக இருந்தபொழுது, அவரது சகோதரர் மிர் முர்தாஸா, அவரது வீட்டு வாசலிலேயே போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இம் ""மோதல்'' கொலை பற்றிய விசாரணையும் ஸ்காட்லாந்து போலீசாரிடம்தான் ஒப்படைக்கப்பட்டது. இந்த இரண்டு வழக்குகள் பற்றிய உண்மைகள், இதுநாள்வரை வெளியுலகுக்குத் தெரியவில்லை. பேநசீரின் படுகொலை பற்றிய மர்ம முடிச்சுகளும் அவிழ்க்கப்படாமலேயே எதிர்காலத்தில் மறைந்து போகலாம்.

···

நம்மைப் பொறுத்தவரை அவரது மரணம் குறித்த மர்மங்களைவிட, அவரது அரசியல் ஆளுமை குறித்த கருத்துக்கள் தான் பரிசீலனைக்குரியவை. பெரும்பாலான முதலாளித்துவ பத்திரிகைகள், பாகிஸ்தானைச் சேர்ந்த அரசியல் தலைவர்களிலேயே பேநசீர் புட்டோதான் சிறந்த ஜனநாயகவாதி எனப் புகழ்ந்து தள்ளியுள்ளன. அவரைக் கொன்றதன் மூலம், பாகிஸ்தானில் மீண்டும் ஜனநாயகம் தழைப்பதற்கான வாய்ப்பையே தடுத்து விட்டதாக, இசுலாமிய பயங்கரவாதிகள் மீது குற்றஞ் சுமத்தியுள்ளன.

கடந்த அறுபது ஆண்டுகளாக பாகிஸ்தானில் ஜனநாயக உரிமைகள் நசுக்கப்படுவதற்கு, அந்நாட்டை ஆண்ட இராணுவ சர்வாதிகாரிகளையும்; ஓட்டுக் கட்சித் தலைவர்களையும்; எல்லாவற்றுக்கும் மேலாக அமெரிக்காவின் ஜனநாயகத்தையும் தான் குற்றம் சுமத்த முடியுமே தவிர, இசுலாமிய பயங்கரவாதிகள் மீது பழிபோட்டுத் தப்பித்து விட முடியாது. சொந்த நாட்டு மக்களின் மீது பாசிசக் கொடுங்கோன்மையைத் திணிப்பதற்கு, தீவிரவாதத்தைக் காரணமாகக் காட்டுவது இன்று அனைத்துலக அரசியல் விதியாகி விட்டது.

பேநசீர் புட்டோவின் அரசியல் அரங்கேற்றம் கூட ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை. அவரது தந்தை ஜுல்பிகர் அலி புட்டோ தூக்கலிடப்பட்டதையடுத்து, அவரது மகள் என்ற ஒரே தகுதியின் காரணமாக, பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக பேநசீர் முடிசூட்டிக் கொண்டார்; ""பேநசீர் புட்டோவாகிய நான்தான் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் நிரந்தரத் தலைவி'' என கட்சி விதியையும் உருவாக்கிக் கொண்டார். எந்த நேரத்திலும் தான் கொல்லப்படலாம் என்ற பயத்தில் வாழ்ந்து வந்த அவர், தனக்குப் பிறகு தனது கணவர் ஆஸிப் அலி ஜர்தாரிதான் கட்சியின் தலைவராக வேண்டும் என உயில் எழுதி வைக்கும் அளவிற்கு, கட்சியைப் புட்டோ குடும்பச் சொத்தாகக் கருதியிருக்கிறார். பேநசீரின் கணவர் ஜர்தாரி மிகப் பெருந்தன்மையோடு, கட்சித் தலைமையை தனது மகன் பிலால் ஜர்தாரிக்கு விட்டுக் கொடுத்து விட்டார். பாகிஸ்தான் அரை நிலப்பிரபுத்துவ சமூகமாக இருப்பதால், இந்த வாரிசு அரசியல் எதிர்ப்பின்றி இயல்பாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

பேநசீர், இராணுவ சர்வாதிகாரி ஜியாவுல்ஹக்கை எதிர்த்துப் போராடியதில் கூட, பொதுநலனைவிட சுயநலமே அதிகம் இருந்தது. புட்டோ குடும்பத்தை அடியோடு அழிக்க ஜியாவுல்ஹக் முயன்றதால், அவரை எதிர்த்துப் போராடினால்தான், தனது அரசியல் எதிர்காலத்தை மட்டுமல்ல, தனது குடும்பச் சொத்துக்களையும் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்ற நிர்பந்தம் அவருக்கு இருந்தது. ஜியாவுல்ஹக் ஆட்சி நடந்த சமயத்தில் வெளிநாட்டில் தஞ்சம் அடைந்திருந்த பேநசீர் புட்டோ பாகிஸ்தானிய மக்களின் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல், அமெரிக்கா ஜியாவுல்ஹக்கைக் கைகழுவி விட்டுத் தேர்தல் நடத்தவிருந்த சமயத்தில்தான், பாகிஸ்தானுக்குத் திரும்பி வந்து, ஜனநாயகப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கினார்.

பேநசீரின் தந்தை ஜுல்பிகர் அலி புட்டோ, ஜியாவுல்ஹக்கால் தூக்கிலிடப்பட்டதற்கு அமெரிக்கா எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆனாலும், இந்த சொந்த இழப்புகூட பேநசீரை அமெரிக்க எதிர்ப்பாளராக மாற்றவில்லை. மாறாக, அமெரிக்காவிற்கும், இராணுவத்திற்கும் தலையாட்டவில்லையென்றால், தனக்கு அரசியலில் எதிர்காலம் கிடையாது எனப் புரிந்து கொண்டு, அதற்கேற்ப மாறிக் கொண்டார், பேநசீர். இளம் வயதில் அவரிடம் காணப்பட்டதாகக் கூறப்பட்ட இடதுசாரிக் கருத்துக்கள், பாம்புச் சட்டையைப் போல உரித்துப் போடப்பட்டன. இந்த மாற்றத்தின் பயனாக, பாக்.மக்கள் கட்சி 1988ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அமோகமாக வெற்றி பெறவும்; பேநசீர் பிரதமர் நாற்காலியில் அமரவும் பாக். இராணுவமும், அமெரிக்காவும் வழி ஏற்படுத்திக் கொடுத்தன. இதற்குப் பிரதிபலனாக, இராணுவத்தின் கையாள் குலாம் இஷாக் கானை அதிபராக்க பேநசீர் சம்மதித்தார்.

பேநசீர் புட்டோ, இரண்டு முறை பாகிஸ்தானின் பிரதமராக இருந்துள்ளார். இடதுசாரித் தன்மை கொண்டதாகவும்; சோசலிசக் கொள்கை கொண்டதாகவும் கூறப்பட்ட அவரது கட்சி உண்மையில் அ.தி.மு.க.வைப் போன்று பொதுச் சொத்தைக் கொள்ளையடிக்கும் திருட்டுக் கும்பல் என்பது ஆட்சியில் இருந்தபொழுது அம்பலமானது. கமிசன் அடிப்பதற்காகவே, பேநசீரின் கணவர் ஜர்தாரி, பேநசீரின் இரண்டாம் தவணை ஆட்சியின் பொழுது முதலீட்டுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். ""திருவாளர் பத்து சதவீதம்'' என நக்கல் செய்யப்படும் அளவிற்கு, அதிகார முறைகேடுகள் அம்பலப்பட்டு நாறின. இலஞ்சம் ஊழலின் மூலம் மட்டும் பேநசீரின் குடும்பம் 150 கோடி அமெரிக்க டாலர் (இந்திய ரூபாயின் மதிப்பில் ஏறத்தாழ 6,000 கோடி ரூபாய்) பெறுமானம் அளவிற்கு சொத்து சேர்த்துக் கொண்டதாகக் குற்றஞ் சுமத்தப்பட்டது. ஜர்தாரியின் மீது பாகிஸ்தானில் மட்டுமின்றி, இங்கிலாந்து, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகளிலும் ஊழல் கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டன.

மத அடிப்படைவாதத்திற்கு எதிரானவர் எனப் புகழப்படும் பேநசீர் புட்டோதான், தனது இரண்டாவது தவணை ஆட்சியின்பொழுது இசுலாமிய மத அடிப்படைவாத அமைப்பான தாலிபான்கள், ஆப்கானில் ஒரு அதிரடிப் புரட்சியின் இசுலாமிய ஆட்சியை நிறுவுவதற்கு உறுதுணையாக இருந்தார். இதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியமும் ஒத்துழைத்தது தனிக் கதை. காசுமீரின் சுயநிர்ணய உரிமைப் போரை பாக். உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. மூலம், இசுலாமிய மத அடிப்படைவாத ஜிகாதிப் போராகவும் தனிநபர் பயங்கரவாத இயக்கமாகவும் மாற்றியதில் பேநசீர் புட்டோவுக்கு பெரும் பங்குண்டு. பேநசீரின் ""ஜனநாயக'' ஆட்சியில்தான், சட்டவிரோதக் காவல், சித்திரவதை, கொட்டடிக் கொலைகளை நடத்துவதில், பாகிஸ்தான் உலகின் முன்னணி நாடாக மாறியது.

1999ஆம் ஆண்டு இராணுவத் தளபதி பர்வேஷ் முஷாரப் அதிகாரத்தைக் கைப்பற்றி கொண்டவுடன், தன் மீது ஊழல் கிரிமினல் வழக்குகள் பாயும் எனப் பயந்து போன பேநசீர், அதிலிருந்து தப்பிக்கவே துபாய்க்குத் தப்பியோடினார். அவர் அங்கிருந்து கொண்டு, முஷாரபின் இராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக எவ்விதப் போராட்டத்தையும் தூண்டிவிட்டு நடத்தவில்லை. மாறாக, அமெரிக்காவின் மூலமாக முஷாரப்போடு சமரசம் செய்து கொள்ள முயன்று வந்தார். அவரது எட்டு ஆண்டு காலத் தவத்திற்கு 2007ஆம் ஆண்டு இறுதியில் பலன் கிடைத்தது.

""இராணுவத் தளபதி முஷாரப் மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு பேநசீரும், அவரது கட்சியும் ஒத்துழைக்க வேண்டும்; இதற்குக் கைமாறாக, பேநசீர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு பிரதமராகவும்; அவர் மீதான ஊழல் வழக்குகளைச் சட்டப்பூர்வமாகத் திரும்பப் பெறவும் முஷாரப் உதவுவார்'' என்ற சமரச ஒப்பந்தத்தின் கீழ்தான் பேநசீர் பாகிஸ்தான் திரும்புவதற்கு அனுமதிக்கப்பட்டார்.

இராணுவத் தளபதி பதவியைத் ""துறந்து'' விட்ட முஷாரப், தனது அதிபர் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள உச்சநீதி மன்ற நீதிபதிகளைப் பதவி நீக்கம் செய்ததையும்; அவசரகால ஆட்சியை அறிவித்ததையும் பேநசீர் எதிர்த்துப் போராடவில்லை. முஷாரப் நெருக்கடி நிலையை அறிவிப்பதற்கு முன்பாக, மேற்காசியாவில் உள்ள அமெரிக்கப் படைகளின் தளபதி வில்லியம் ஃபாலோன் முஷாரப்பைச் சந்தித்ததையும்; அதனைத் தொடர்ந்து நெருக்கடி நிலை அறிவிப்பதற்கு முதல் நாள் பேநசீர் துபாய்க்குச் சென்றுவிட்டதையும் தற்செயலானதாகப் பார்க்க முடியாது. ஊழல் வழக்குகளில் இருந்து பேநசீரை மன்னித்து விடுவிப்பதற்காக முஷாரப் கொண்டு வந்த சட்டத்தை ""உச்சநீதி மன்றம் ஆராயும்'' என நீதிபதிகள் கூறியிருந்ததால், இந்த நெருக்கடி நிலையைத் தனக்குச் சாதகமானதாகத்தான் பார்த்தார், பேநசீர்.

நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு நான்கு நாட்கள் கழித்து, தேர்தலில் ஓட்டுப் பொறுக்க வேண்டிய நிர்பந்தம் காரணமாக நெருக்கடி நிலையை எதிர்த்துப் பேரணி நடத்த முயன்றபொழுதுதான், பேநசீர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இந்தக் கைதும் கூட, பேநசீரின் அரசியல் கவுரவத்தைக் காப்பாற்றும் நாடகமாகவே பாகிஸ்தானிய மக்களால் பார்க்கப்பட்டது. அமெரிக்க அரசின் துணைச் செயலர் ஜான் நெக்ரோபோண்டே பேநசீரைச் சந்திக்கப் போவதாகத் தகவல் வந்தவுடன், பேநசீர் வீட்டுக் காவலில் இருந்து உடனடியாக விடுதலை செய்யப்பட்டார்.

ஆப்கானை ஒட்டியுள்ள பாகிஸ்தானின் எல்லைப்புற மாகாணத்தில், போட்டி அரசாங்கம் நடத்தும் அளவிற்கு, தாலிபான்அல்காய்தா அமைப்புகளின் செல்வாக்கு வளர்ந்து விட்டது. இந்தப் பகுதியில்தான் அல்காய்தாவின் தலைவன் பின்லேடன் ஒளிந்திருக்கக் கூடும் என அமெரிக்கா சந்தேகிக்கிறது. இந்தப் பகுதியில் இருந்து தீவிரவாதிகளை அப்புறப்படுத்த பாக். இராணுவம் எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் பெரும் தோல்வியில் முடிந்துவிட்டன. எனவே, அமெரிக்கப் படைகளையே பாகிஸ்தானுக்குள் இறக்கிவிட அனுமதிக்க வேண்டும் என அமெரிக்கா நிர்பந்தம் கொடுத்து வருகிறது.

தான் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அமெரிக்கப் படைகளைப் பாகிஸ்தானுக்குள் அனுமதிக்க பேநசீர் ஒத்துக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், பாகிஸ்தானைச் சேர்ந்த அணு விஞ்ஞானி ஏ.க்யூ. கானை, அணுகுண்டு தொழில் நுட்பத்தை ஈரானுக்கு இரகசியமாக விற்றக் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிப்பதற்கு சர்வதேச அணுசக்தி முகமையிடம் ஒப்படைக்க பேநசீர் சம்மதித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் பேநசீர் புட்டோ அழித்தொழிக்கப்பட்டுள்ளார். அவர் உயிருடன் இருந்திருந்தால், அவரின் சுயநல பிழைப்புவாத அரசியலும்; அமெரிக்க அடிவருடித்தனமும் மேலும் மேலும் அம்பலமாகியிருக்கும். எனவே, இந்த அமெரிக்கக் கைக்கூலியின் அகால மரணத்திற்காக உழைக்கும் மக்கள் அனுதாபப்படத் தேவையில்லை.

பாக். அதிபர் பர்வேஸ் முஷாரப் மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்து, செல்லாக்காசாகிவிட்ட போதிலும், அமெரிக்கா அவரைக் கைவிடத் தயாராக இல்லை. தேர்தலை நடத்தி, ஒரு ஜனநாயக முகமூடியை மாட்டிவிட்டு, முஷாரபின் இராணுவ சர்வாதிகார ஆட்சி தொடர வேண்டும் என்றுதான் அமெரிக்கா விரும்புகிறது. பேநசீர் இறந்து போய்விட்ட நிலையில், அந்த முகமூடி யார்? பேநசீரின் கணவர் ஜர்தாரியா? அல்லது, பாக். உளவு நிறுவனத்தால் வளர்க்கப்பட்டவரும், பாக். முசுலீம் லீக் (என்) பிரிவு தலைவருமான நவாஸ் ஷெரீப்பா என்பதுதான் இப்பொழுது அமெரிக்காவின் முன்னுள்ள பிரச்சினை. பேநசீரின் மரணத்தைவிட, இராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான பாகிஸ்தான் மக்களின் வெறுப்பை, போராட்டத்தை ஓட்டுக் கட்சிகள் அறுவடை செய்து வருவதுதான் துயரமானது!

· ரஹீம்

'குஜாரத் : திட்டமிட்ட இனப்படுகொலை"


'குஜாரத் : திட்டமிட்ட இனப்படுகொலை"

ரத்தக் கவிச்சு வீசும் இந்துவெறி கொலைகாரர்களின் வாக்குமூலங்கள் வழியாக, 2002இல் நடந்த குஜராத் இனப்படுகொலையை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது, ""டெகல்கா'' ஆங்கில வார இதழின் நவம்பர் மாத சிறப்பு வெளியீடு. ஒரு கிரிமினல் குற்ற விசாரணைக்குத் தேவைப்படும் துல்லியத்துடன் இந்துவெறி பயங்கரவாதிகளின் வாக்குமூலங்களை உயிரைப் பணயம் வைத்துப் பதிவு செய்திருக்கிறார், ""டெகல்கா''வின் சிறப்புச் செய்தியாளர் அசிஷ்கேதான். எனினும், மைய அரசோ, நீதித்துறையோ இந்து வெறியர்களின் இந்த ஒப்புதல் வாக்குமூலங்களை பொருட்படுத்தவில்லை. செய்தி ஊடகங்கள் கட்டுப்பாடாக இப்புலனாய்வை இருட்டடிப்பு செய்தன; அல்லது இதன் முக்கியத்துவத்தைக் குறைத்துக் காட்டின.

தமிழக மக்களில் பலருக்கு இந்துவெறி பயங்கரவாதிகள் அளித்த வாக்குமூலங்கள் பற்றிய உண்மைச் செய்திகள் இன்னும் போய்ச் சேரவில்லை. பார்ப்பன எதிர்ப்புப் போராட்ட மரபைக் கொண்டுள்ள தமிழக மக்களிடம் இவற்றைக் கொண்டு செல்வதன் மூலம், பார்ப்பன பாசிசத்துக்கு எதிரான போராட்டத்துக்கு வலுசேர்க்க முடியும் என்பதால், சற்றே சுருக்கியும் கட்டமைப்பு மாற்றம் செய்தும் ""டெகல்கா'' சிறப்பிதழை மொழியாக்கம் செய்து மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் (ஏகீகஇ) திருச்சி கிளை வெளியிட்டுள்ளது.

""குஜராத்: திட்டமிட்ட இனப்படுகொலை'' என்ற இந்த மொழியாக்க நூலின் அறிமுகக் கூட்டம் திருச்சிசந்தன மகால் அரங்கில் கடந்த 5.1.08 அன்று மாலையில் நடைபெற்றது. மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் திருச்சி மாவட்ட அமைப்பாளரான வழக்குரைஞர் ஆதிநாராயணமூர்த்தி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், கர்நாடக உயர்நீதி மன்ற வழக்குரைஞர் எஸ்.பாலன், ம.க.இ.க. மாநில இணைச்செயலர் தோழர் காளியப்பன் ஆகியோர், இந்துவெறி பாசிச பயங்கரவாதத்துக்கு எதிராக எந்த நடவடிக்கையுமின்றிச் சரணடைந்துவிட்ட இந்திய அரசியலமைப்பு முறையின் தோல்வியை விளக்கியும், மீண்டும் குஜராத்தில் பயங்கரவாத மோடி ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் இந்துத்துவ பாசிச பரிவாரங்களுக்கு எதிராக மதச்சார்பற்ற சக்திகள் கூடுதல் வேகத்துடன் போராட வேண்டிய அவசியத்தை விளக்கியும் சிறப்புரையாற்றினர். திரளான உழைக்கும் மக்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் ரூ. 20 விலையுள்ள இந்நூல் பரபரப்பாக விற்பனையானதோடு, ஓரிரு வாரங்களில் மறுபதிப்பு செய்யுமளவுக்கு வரவேற்பைப் பெற்றுள்ளது.

Friday, April 11, 2008

வறட்சி மக்களுக்கு! தண்ணீர் தரகு முதலாளிகளுக்கு!


வறட்சி மக்களுக்கு!
தண்ணீர் தரகு முதலாளிகளுக்கு!


மிழ்நாட்டை ஆளும் தி.மு.க. அரசு ஓர் அவசரச் சட்டம் இயற்றி, அதனைக் கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைப்படுத்தத் தொடங்கி விட்டது. அச்சட்டம்தான், ""தமிழ்நாடு குளங்கள் பாதுகாப்பு மற்றும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தடைச் சட்டம்''. இனிமேல் தமிழ்நாட்டில் உள்ள ஏரிக்கரைகளிலோ, குளத்தின் அருகிலோ மானாவரிப் பயிர் செய்தால் இச்சட்டத்தின்படி 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை கிடைக்கும்.

ஏரிகள் குளங்களை ஒட்டி இருக்கும் நீர்ப்பிடிப்புப் பகுதிகள், கரைகளில் எல்லாம் நீர் வற்றி முழுவதுமாய் அந்நீர் நிலைகள் காய்ந்து போகும் வரை, அப்பகுதியில் நிலமற்றவர்கள் குறுகிய காலத்துக்குச் சாகுபடி செய்து வாழ்வதென்பது பாரம்பரியமாய் நடைமுறையில் இருந்து வரும் வழக்கம். ஏழை மக்கள் அனுபவித்து வரும் இந்த உரிமை கூட இனி அவர்களுக்குக் கிடையாது. இதுதவிர, ஊருணிகள், குளங்களில் உள்ளூர் மக்கள் மீன்பிடித்து வந்த பாரம்பரிய உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடெங்கும் உள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பை அகற்றுதல் எனும் பெயரில், பயிரிடப்பட்டிருந்த சாகுபடிகள் எல்லாம் பொக்லைன் எந்திரங்களால் அழிக்கப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் ஏரிக்கரையில் போட்டிருந்த கரும்பை பொதுப்பணித்துறை அழித்ததும், மக்கள் கிளர்ந்தெழுந்து மறியல் செய்ய முற்பட்டபோது போலீசாரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.

எதற்காக இந்தக் கடுமையான சட்டம் அவசர அவசரமாகக் கொண்டு வரப்பட்டுள்ளது?

இதுபற்றித் தெளிவாகப் புரிந்துக் கொள்ள வேண்டுமானால், அண்மைக்காலத்தில் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தண்ணீர் சார்ந்த திட்டங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும்.

அமெரிக்காவின் ஃபோர்டு அறக்கட்டளை, தமிழக அரசின் பொதுப்பணித்துறையுடன் இணைந்து 1994இல் இருந்து 2003 வரை தமிழ்நாட்டின் நிலத்தடி நீர்வளம், கிணறுகளில் ஊறும் நீரின் தன்மை போன்ற அனைத்து புள்ளிவிவரங்களையும் ஆராய்ச்சி செய்து, அவற்றை ஆவணப்படுத்தி உள்ளது. முதலில் மதுரை மாவட்டத்தையும், பின்னர் படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஆற்று நீர்வளம், நிலத்தடி நீர்வளம், நீர் குடிக்கத்தக்கதா இல்லையா ஆகிய ஆய்வுத் தகவல்களை ஆவணப்படுத்தி உள்ளனர்.

அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.வின் நெருங்கிய கூட்டாளியான ஃபோர்டு நிறுவனத்துக்கு தமிழக நீர்வளம் பற்றி அப்படி என்ன அக்கறை?

ஃபோர்டு நிறுவனத்தின் ஆராய்ச்சிக்குப் பின்னர்தான் நெல்லைகங்கை கொண்டானுக்கு கொக்கோகோலாவும், சிவகங்கை படமாத்தூருக்கு பெப்சி கோலாவும் வந்தன என்பதிலிருந்தே அதன் அக்கறையைப் புரிந்து கொள்ளமுடியும்.

ஃபோர்டின் காட்டிக் கொடுப்பு வேலையைத் தவிர, ""நீரியல் திட்டம்1'' எனும் 51.149 கோடி ரூபாய் மதிப்புள்ள உலக வங்கித் திட்டத்தை தமிழக அரசு 1995இல் இருந்து 2003 வரை நடைமுறைப்படுத்தியது. இத்திட்டம் தமிழ்நாட்டில் உள்ள நிலத்தடி நீர்வளத்தையும் நீரோடைகளையும் மேம்படுத்துவது, கிடைக்கும் நீரைச் சுத்திகரிப்பது போன்ற அடிக்கட்டுமான வேலைகளைச் செய்தது.

இத்திட்டம் முடிவடையும்போது மேலும் கூடுதலாக ரூபாய் 52 கோடியை உலக வங்கி வழங்கியது. தமிழக அரசு இந்த நிதியைப் பயன்படுத்தி நீரியல் ஆய்வகங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் தண்ணீர்க் கட்டுப்பாட்டு ஆய்வகங்களை மதுரை, திருச்சி, பொள்ளாச்சி, சென்னை ஆகிய இடங்களில் நிறுவியது.

இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாடெங்கிலும் உள்ள ஆற்று நீரின் வரத்து, கிணறுகளின் நீர்மட்டம் ஆகியன அளவிடப்பட்டன. தொலைதூரக் கிராமங்களின் நிலத்தடி நீர் மட்டத்தை அறிந்திட ""நாட்டு நலப்பணித்திட்டம்'' எனும் பெயரில் சில மிசனரி பள்ளிகளின் மாணவர்கள் கூட இந்த வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

உலக வங்கியும், தமிழக அரசும் இந்தத் தகவல்களைத் தங்களுக்குள் பறிமாறிக் கொள்ள "தகவல் மையங்களை' உருவாக்கிக் கொண்டன.

""நீரியல் திட்டம்1'' இன் ஒரு பகுதியாகத்தான் 200203இல் மழைநீர் சேகரிப்புப் பிரச்சாரம் இங்கே மேற்கொள்ளப்பட்டது. உலகில் எங்கெல்லாம் உலக வங்கியின் மேலாதிக்கம் நிலவுகிறதோ, அங்கெல்லாம் அதே காலகட்டத்தில் மழைநீர் சேகரிப்பு பிரச்சாரம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக, அரசின் எந்த ஒரு திட்டத்திற்கும் ஆய்வுக் கூடங்களை அந்தத் துறையின் பொறியாளர்களும், மேலாளர்களும்தான் நடத்துவது வழக்கம். ஆனால், ""நீரியல்1'' திட்டத்தின் ஆய்வுக் கூடங்களை நமது பொறியாளர்கள் உலக வங்கி அதிகாரிகள் தலைமையில்தான் நடத்தி வந்தனர்.

அத்திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், உலக நிதிமூலதனத்தின் மற்றும் ஓர் அவதாரமான ""சர்வதேச மறுகட்டமைப்பு வளர்ச்சி வங்கி'' 2006இல் இரண்டாம் நீரியல் திட்டத்தை வகுத்துத் தந்து, தமிழக அரசுக்கு 20.65 கோடி ரூபாயைக் கடனாகத் தந்துள்ளது.

முதல் திட்டம் நிலத்தடி நீர் மேம்பாடு, பழைய அணைகளின் நீர்க்கசிவு ஆகியவற்றினைப் பொதுவாக ஆராய்ந்துள்ளது. இரண்டாம் திட்டமோ தாமிரபரணி, வைப்பாறு, அக்னி ஆறு ஆகியவற்றைக் குறிவைத்துத் தீட்டப்பட்டுள்ளது.

இதனைத் தவிர, காவிரியைக் காக்கும் திட்டம் ஒன்றை உலக வங்கி செயல்படுத்தி வருகிறது. பவானி, ஈரோடு, குமாரபாளையம், திருச்சி, பள்ளிபாளையம் ஆகிய நகரங்களின் வழியே செல்லும் காவிரியில் கலக்கும் கழிவுகளைச் சுத்திகரிக்கிறது அத்திட்டம்.

வைகை, தாமிரபரணி, காவிரியைக் காக்க அந்த ஆறுகளின் கரையோர நகரங்களான மதுரை, திருநெல்வேலி, திருச்சி, கும்பகோணம், மயிலாடுதுறை ஆகிய ஊர்களில் பாதாளச் சாக்கடைகளைக் கட்டி வருகிறது, இன்னொரு உலக வங்கித் திட்டம்.

இதனைத் தவிர ஊட்டி ஏரியை ஆக்கிரமித்துள்ள வெங்காயத் தாமøரயை அகற்றி அழகுபடுத்துவதும் உலகவங்கிதான். இதில் கொடுமை என்னவென்றால், நீர் நிலைகளைப் பாழாக்கும் அந்நிய தாவரமான வெங்காயத் தாமரையை இந்தியாவுக்கு 1896இல் வங்காளம் வழியாகக் கொண்டு வந்ததும், அதை அகற்றிடக் கடன் கொடுப்பதும் அந்நிய ஏகாதிபத்தியங்கள்தான்.

இவ்வாறு தமிழகத்தின் நீர்நிலைகள் முழுவதும் உலக நிதிமூலதனத்தின் கைப்பிடிக்குள் சென்று கொண்டிருக்கும்போது, தமிழ்நாடெங்கும் நச்சுக்கொடிகளாகப் படர்ந்திருக்கும் ஏகாதிபத்தியக் கைக்கூலி நிறுவனங்களோ நீர்நிலை பற்றிய திட்டங்களில் பிரச்சாரம், கருத்தரங்கு, பேரணி எனப் பொதுமக்கள் மத்தியில் செயல்பட்டு, ""தண்ணீரைத் தனியார்வசம் ஒப்படைப்பதே நியாயம்'' என ஏற்க வைத்து, அதனைப் பொதுக்கருத்தாக மாற்றும் செயலில் இறங்கியுள்ளன.

""தான் பவுண்டேசன்'' எனும் தன்னார்வ நிறுவனம், மதுரை வட்டாரத்தில் கருத்தரங்குகள் பலவற்றை நடத்தி, ""கிராமக் குளங்க ளில் மீன் பிடித்தல் என்பது பாரம்பரிய உரிமையாக இருக்கலாம். ஆனால் இந்த உரிமைகள் ஒருபோதும் சட்ட உரிமையாகாது. 1994ஆம் ஆண்டு சட்டத்தின்படி இந்த உரிமைகளை மக்கள் இழந்து விட்டனர்'' என மக்களிடம் சட்ட விழிப்புணர்வூட்டி, கடன் வழங்கும் உலக நிதி மூலதன வள்ளல்களிடம், நமது பாரம்பரிய நீர்நி லைகளை மக்களின் எதிர்ப்பேதும் இன்றிக் கைமாற்றி விடுவதற்கு "அகிம்சை' வழியில் வேலை செய்து வருகிறது.

இந்நிறுவனம் தேனி மாவட்டம் ராசிங்கபுரம் கண்மாயில் 3.75 ஏக்கர் ஆக்கிரமிப்பை அகற்ற அரசுடன் இணைந்து செயல்பட்டுள்ளது. ""தான் பவுண்டேசனின்'' உடன்பிறப்பான ""களஞ்சியம்'', ""நீர்நிலைகளை ஆக்கிரமிப்பது கொடுங்குற்றம்'' என்றும், ""வைகை ஆற்றைக் காப்போம்'' என்றும் மக்களிடம் பிரச்சாரம் செய்ய சென்ற ஆண்டு ஜனவரியில் மதுரையில் ""மாரத்தான்'' ஓட்டத்தை நடத்தியது. கண்காட்சி ஒன்றையும் நடத்தியது. இந்தப் பிரச்சாரத்திற்குப் புரவலராக இருப்பதோ ""வாட்டர் ஃபார் லைஃப்'' எனும் தேசம் கடந்த நீர் மேலாண்மை நிறுவனம். தண்ணீர் வியாபாரியிடம் இருந்து பணம் வாங்கிக் கொண்டு, ""தண்ணீரைப் பாதுகாக்கத் தவறியது நாம்தான்'' என்று நம்மை நம்பச் சொல்லி ஒரு பிரச்சாரம்!

""வைகையைப் பாதுகாக்க வேண்டும்'' என்று முழங்கும் இவர்கள், படமாத்தூர் பெப்சியை என்றும் எதிர்க்க மாட்டார்கள். நீரை விரயமாக்கி வக்கிர நீர் விளையாட்டுக்களை நடத்தி வரும் ""அதிசயம்'' போன்ற உல்லாசப் பூங்காக்களை எதிர்க்க மாட்டார்கள். நீரினைப் பாதுகாக்காமல் விட்ட குற்ற உணர்ச்சியில் மக்களைத் தள்ளிவிடும் வேலையை, வாஜ்பாயியை தனது காலில் விழ வைத்த சின்னப்பிள்ளையும், மதுரை மாவட்ட ஆட்சியரும் தலைமை ஏற்றுச் செய்து வருகின்றனர்.

""நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றச் சட்டமியற்று'' என்று அரசை நிர்ப்பந்திக்கும் நோக்கத்தோடு, பொதுமக்கள் கருத்தை உருவாக்கும் வேலையில் ""தான் பவுண்டேசன்'' மதுரைப் பகுதியிலும், ""சிறு துளி'' நிறுவனம் திருப்பூர் கோவைப் பகுதிகளிலும், ""நீர் எக்ஸ்னோரா'' நிறுவனம் சென்னையை ஒட்டிய பகுதியிலும் செயல்பட்டு வந்தன. ஆக்கிரமிப்பை அகற்றி விட்டு முழுவதுமாய் நீர்நிலைகளைப் பன்னாட்டு நீர் வியாபாரிகளிடம் ஒப்படைக்கத்தான் இப்பிரச்சாரங்கள் என்பதில் சந்தேகமே இல்லை. இல்லாவிட்டால் ""சிறு துளி'' நிறுவனம், நொய்யல் ஆற்றைச் சாகடித்த ஏகாதிபத்தியத்தையும், அன்னியச் செலாவணியையும் காரணம் காட்டிப் போராடாமல், ""நொய்யல் கெட்டது ஆக்கிரமிப்பால்'' என்று பிரச்சாரம் செய்திருக்குமா? தன்னார்வ நிறுவனங்கள் இவ்வகைப் பிரச்சாரங்களில் இறங்கிய அதேபோதில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி நீர்த்தேக்கத்தைப் பலப்படுத்திட பிரான்சு நாடு கடன் கொடுத்துள்ளது. இவை அனைத்துமே "தண்ணீரை தனியார்மயமாக்குதல்' எனும் ஒரே நோக்கில் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த செயல்பாடுகள்தான்.

மராட்டியத்தில் ""நீரா'' எனும் ஆற்றுக்கு நிதி உதவி செய்து அதனை தனியாருக்கு விற்றுவிடும்படி சொல்லும் உலக வங்கி, அதே வழிமுறையை தமிழ்நாட்டில் கடைபிடிக்கவில்லை. அதற்கு சில காரணங்கள் உள்ளன.

ஒன்று: தமிழகத்தில் பாயும் பெரிய ஆறுகள் அனைத்தும் மாநிலங்களிடையேயான சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளன. இரண்டு: இங்கு ஏரிகள், ஏந்தல்கள், தாங்கல்கள், தருவைகள், குளங்கள், கண்மாய்கள் என மிகச் சிறப்பான அடிக்கட்டுமானங்கள் கொண்ட நீர்நிலைகளின் எண்ணிக்கை அதிகம்.

அதனால்தான் தமிழகமெங்கும் உள்ள ஏரிகுளங்களை மேம்படுத்துவதற்கென மராட்டியத்தைக் காட்டிலும் அதிகமாய் ஆயிரம் கோடி ரூபாயை உலக வங்கி கடனாகத் தந்துள்ளது. ப.சிதம்பரம் அந்த வங்கியின் ஏஜெண்டாக மாறி, ""இந்நிதியை முறையாகப் பயன்படுத்தி முன்னேறுங்கள்'' எனப் பிரச்சாரம் செய்கிறார்.

இந்தக் கடனுதவியின் பின்னணியில்தான் நீர்நிலைகளைப் பாதுகாக்கும் அவசரச் சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றி, காலங்காலமாகத் தமிழ் மக்கள் அனுபவித்து வந்த ஏரிகுளங்களின் மீதான உரிமையைப் பிடுங்கி, அதனை உலக வங்கியின் கையில் கொடுத்துள்ளது. பல ஆண்டுகளாகக் குளங்களைத் தூர் வாராமல் போட்டு வந்த அரசுக்கு நீர்நிலைகளின் மீது இன்றைக்கு திடீரென கரிசனம் வந்திருப்பதன் பின்னணி இதுதான்.

எனவேதான் குளம், ஏரிகள் பக்கம் மக்களை அண்ட விடாமல் இருக்கும் வகையில் சட்டத்தைத் தீவிரமாக அமல்படுத்திட அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நாட்டின் இயற்கை வளமான தண்ணீரைக்கூட விட்டு வைக்காமல் அந்நிய நிதி மூலதனம் கைப்பற்றுவதற்கு இங்குள்ள பொம்மை அரசுகள் சட்டங்களைப் பிறப்பித்து வருகின்றன. இந்தச் சதியைத்தான் நாம் கடந்த 17 ஆண்டுகளாக ""மறுகாலனியாதிக்கம்'' என்று சொல்லி வருகிறோம்.

கடந்த 20 ஆண்டுகளாகவே சுற்றுச்சூழல் அறிவியலாளர்களும், சமூகவியல் அறிஞர்களும் ""மூன்றாம் உலகப் போர், தண்ணீருக்குத்தான்'' எனச் சொல்லி வந்துள்ளனர். இப்போது போர் தொடங்கி விட்டது.

உலக நிதி மூலதனமும், அதன் எடுபிடிகளான தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், ஏகாதிபத்திய கைக்கூலி அரசும், அது இயற்றுகின்ற சட்டங்களும் ஓரணியில் கைகோர்த்து மக்கள் மீது போரைத் தொடுத்து விட்டன என்பது வெளிப்படையாகத் தெரிந்து விட்டது.

நமது பாரம்பரிய அறிவினால் உருவாக்கப்பட்ட நமது ஏந்தல்களையும் தாங்கல்களையும் எதிரி போர் தொடுத்து கைப்பற்றிக் கொண்டிருக்கும்போது, நாம் என்ன செய்யப் போகின்றோம்?

· இரணியன்

புவிப் பரப்பெங்கிலும் தற்போது ஓடிக் கொண்டிருக்கும் ஆறுகள் எப்போதும் ஒரே தடத்தில் ஓடிக் கொண்டிருப்பதில்லை. நிலத்தடியில் நிகழும் புவித்தட்டு நகர்வு, நில நடுக்கம் போன்ற இயற்கையின் இயக்கப் போக்கால், புவிப்பரப்பின் ஏற்ற இறக்கங்கள் தாறுமாறாவதும் அதனால் ஆறுகள் தங்கள் தடத்தை மாற்றுவதும் புவியின் இயக்கவியல்.

இவ்வாறு ஆறுகள் தங்கள் தடங்களை மாற்றிக் கொண்டாலும் பழைய தடத்தின் அடிப்பரப்பில் அதன் இன்னொரு நகலாக, அதே ஆறு நிலத்தடி நீராக பல கோடி காலன் நீரைச் சேகரித்து வைத்துள்ளன. இதனை செயற்கைக் கோள் படங்கள் மூலம் அறிந்து கொள்வது இன்றைக்கு சாத்தியம்.

செங்கல்பட்டை ஒட்டி இன்றைக்கு ஓடிக் கொண்டிருக்கும் பாலாறு முன்னொரு காலத்தில் சென்னைக்கு வடக்குத் திசையில் எண்ணூர் மீஞ்சூர் பகுதிகளில் ஓடியிருப்பதை 20 ஆண்டுகளுக்கு முன் கண்டறிந்தனர். சென்னையின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்வதற்கென்று அப்பகுதிகளில், பத்துக்கும் மேற்பட்ட மிகப் பெரிய கிணறுகள் தோண்டப்பட்டன. அவற்றின் பயன்பாட்டை 80களின் இறுதியில் நிறுத்திக் கொண்ட அரசு, "அங்கு நிலத்தடி நீர் முழுக்க உறிஞ்சப்பட்டு விட்டதாக' அதற்குக் காரணம் சொன்னது.

ஆனால், அதே பகுதியில் இன்று ""பெப்சி''யின் ""அக்வா பீனா'' தண்ணீர் நிறுவனம் தனக்கென்று ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து நிலத்தடி நீரை வரைமுறையின்றி உறிஞ்சிக் கொண்டிருக்கிறது. இது தற்செயலாக நடந்ததா? அல்லது அரசின் காட்டிக் கொடுத்தலால் நடந்ததா?

அண்மையில், சென்னை மாநகரில் குடிநீருக்கு மீட்டர் பொருத்தும் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளனர். இனிமேல் குடிநீர் இணைப்புகளுக்கெல்லாம் ஒரே மாதிரியான கட்டணம் இல்லை. ஒவ்வொரு இணைப்பிற்கும் ஒரு மீட்டர் பொருத்தப்படும். முதல் பத்தாயிரம் லிட்டர்களுக்கு ரூபாய் 250ம், அதற்கு அதிகமான அளவில் பயன்படுத்தும் நீருக்கு மின்கட்டணத்தைப் போல அடுக்குமுறை (ஸ்லாப்)யினையும் அறிமுகப்படுத்தி உள்ளனர். வள்ளுவர் கோட்டம் பகுதியில் மட்டும் சுமார் 15 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் இவ்வாறு மாற்றப்பட்டு விட்டன.

பத்தாயிரம் லிட்டர்தானே என நமக்கு எண்ணத் தோன்றலாம். ஆனால் 4 பேர்கள் கொண்ட குடும்பம் ஒன்றின் சராசரி மாதப் பயன்பாடென்பது இந்த அளவினை விட அதிகமாகவே உள்ளது. ஆக, சென்னையில், குளிக்க, குடிக்க, சமைக்க வேண்டுமானால் நீருக்கு மட்டும் 250 ரூபாயை மாதா மாதம் செலவழித்தாக வேண்டும் எனும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் ரூ. 250/ என்ற அளவில் வசூலிக்கப்படும் இக்கட்டண விகிதம், படிப்படியாக பின்னர் உயர்த்தப்பட்டு விடும் என்பதற்கு தென்னாப்பிரிக்க அனுபவம் சான்றாக உள்ளது. 1978இலேயே உலக வங்கி, இத்தகைய மீட்டர்கள் பொருத்த வேண்டும் என்று சட்டத்தை இயற்றச் செய்துதான் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு கடன் கொடுத்தது. அச்சட்டத்தை இப்போது நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது. இனி படிப்படியே செல்போன் இணைப்புகளைப் போல ""பிரிபெய்டு'' கார்டுகளையும் குடிநீர் இணைப்புக்குக் கொண்டு வரப் போகின்றனர். தண்ணீர் என்பது இனியும் தாகத்துக்கல்ல. லாபத்துக்குத்தான் என்பது விதியாக்கப்பட்டு விட்டது.

தில்லைக் கோவில் தமிழை அரங்கேற்றுவோம்! தீட்சிதர்களை வெளியேற்றுவோம்!


தில்லைக் கோவில் தமிழை அரங்கேற்றுவோம்!
தீட்சிதர்களை வெளியேற்றுவோம்!

தீட்சிதப் பார்ப்பனக் கும்பலின் திரைமறைவுத் தில்லுமுல்லுகள், நீதிமன்றத் தடையாணைகள் ஆகிய அனைத்தையும் மீறி முன்னேறிக் கொண்டிருக்கிறது சிற்றம்பல மேடையில் தமிழ் முழங்கும் போராட்டம். ""சிற்றம்பல மேடையில் தமிழ் பாடலாம்'' என்ற இந்து அறநிலையத்துறை ஆணையரின் உத்தரவுக்கு எதிராக, தமிழக அரசிடம் மேல்முறையீடு செய்திருக்கிறார்கள் தீட்சிதர்கள். ஆணை கிடைத்த மறுகணமே பாடத் தயாராகக் காத்து நிற்கிறார் முதியவர் ஆறுமுகசாமி. நீதிமன்றத்தில் மீண்டும் தடையாணை வாங்கத் தயாராக இருக்கிறார்கள் தீட்சிதர்கள்.

இந்த நெடிய போராட்டத்தின் இறுதிக் கட்டத்தைக் குறிக்கும் விதமாக ""தில்லைக் கோயிலில் தமிழ் முழங்குவோம்! தீட்சிதர் சொத்தல்ல தில்லைக் கோயில் கோயிலை அரசுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவோம்!'' என்ற முழக்கங்களின் கீழ் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சனவரி 26 அன்று சிதம்பரத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தியது. கூட்டத்தின் அவசியத்தையும், இதுநாள் வரை நடத்தப்பட்ட போராட்டங்களை விளக்கியும் தலைமையுரை ஆற்றினார், மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் இராஜு. ""தீட்சிதர்களின் எடுபிடிகளாகச் செயல்படும் சிதம்பரம் போலீசு இனி ஆறுமுகசாமியைக் கைது செய்தால், அங்கே தமிழ் ஒலிக்கும் வரை மக்கள் கோயிலை விட்டு அகலக் கூடாது'' என்று மக்களுக்கு அறைகூவல் விடுத்தார்.

""பூணூலும் குடுமியும் அறுபடாமல் இருக்க வேண்டுமானால், தமிழ் பாடுவதைத் தடுக்காதே'' என்று தீட்சிதர்களை எச்சரித்தார், முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் வி.வி.சாமிநாதன்.

""ஏமாளி நந்தன் எரிக்கப்பட்ட காலம் மலையேறி விட்டது. அந்த நந்தன் நுழைந்த தெற்கு வாயிலைத் தகர்க்காமல் ஓயமாட்டோம்'' என்றார் விடு தலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட் டச் செயலாளர் காவியச் செல்வன்.

""ஒரு மனித உரிமை அமைப்பு தமிழுக்காகப் போராடிக் கொண்டிருக்கும்போது, தமிழ் அமைப்புகள் என்று கூறிக் கொள்வோர் முகத்துதியில் மூழ் கிக் கிடக்கிறார்கள்'' என்று சாடினார் கடலூர் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் இராச.குழந்தைவேலனார்.

பு.ஜ.தொ.மு.வின் மாவட்டச் செயலர் காதர் பாஷா, ""இந்தப் போராட்டம் இறுதி வெற்றி பெறும் வரை நாங்கள் முன்னணியில் இருப்போம்'' என்று வலியுறுத்தினார்.

""இது வெறும் ஆத்திகர் பிரச்சினை அல்ல, தமிழ் உரிமை குறித்த பிரச்சினை என்பதால்தான் நாத்திகர்களும் களத்தில் முன் நிற்கிறோம்'' என்றார் பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில இணைச்செயலர் பேரா.பு.ச.இளங்கோவன்.

சிறப்புரையாற்றிய ம.க.இ.க. பொதுச் செயலர் மருதையன், ""தில்லைக் கோயிலில் தமிழ் அரங்கேறுவது மட்டுமன்று, தீட்சிதர்கள் வெளியேறவும் வேண்டும். அதுவரை ஓயமாட்டோம்'' என்றார். இந்தக் கோயிலுக்குச் சொந்தம் கொண்டாட அவர்களிடம் துரும்பளவு ஆதாரம் கூட இல்லை என்பதை நிறுவியதுடன், தீட்சிதர்களின் தீண்டாமைக்கு அரசியல் சட்டம் காவல் நிற்பதையும் சுட்டிக் காட்டினார்.

பெரிய புராணத்திலிருந்தும், தேவாரம், திருவாசகத்திலிருந்தும் மேற்கோள் காட்டி தீட்சிதர்களின் பார்ப்பனப் புரட்டுகளை அம்பலப்படுத்தினார் பேராசிரியர் பெரியார்தாசன். ""பூசலார் நாயனார் போல மானசீகமாகத் தமிழ் பாடச் சொல்லும் திமிர் பிடித்த தீட்சிதப் பார்ப்பனர்களே, கண்ணப்ப நாயனார் போல பன்றிக் கறியைப் படையல் வைக்க வருகிறோம், அல்லது சாக்கிய நாயனார் போல இறைவனைக் கல்லெறிந்து பூசிக்க வருகிறோம். நீங்கள் தயாரா?'' என்று எள்ளி நகையாடினார். வழிபாட்டுரிமை என்ற ஜனநாயக உரிமைக்காகக் குரல் கொடுக்கும்போது அந்தக் குரல் பார்ப்பன எதிர்ப்பையும், சுயமரியாதையையும், நாத்திகத்தையும் தவிர்க்கவியலாமல் ஒலித்துத்தான் தீரும் என்பதைப் பக்தர்களுக்கு மிகவும் இயல்பாக உணர்த்தியது பெரியார்தாசனின் உரை. அந்த நாத்திகரின் உரையை மேடையில் அமர்ந்து ரசித்துச் சிரித்தபடியே கேட்டுக் கொண்டிருந்தார் சிவனடியார் ஆறுமுகசாமி.

நூற்றாண்டுகளாகத் தில்லையைக் கவ்வியிருக்கும் சாதிஇருள் கலைந்து, விடியப்போகும் நேரம் நெருங்கிவிட்டது என்ற நம்பிக்கையை பெற்றார்கள் மக்கள்.

Thursday, April 10, 2008

மலேசியா: தமிழர்களின் உரிமைப் போராட்டம்


மலேசியா :

தமிழர்களின் உரிமைப் போராட்டம்


லேசியாவில் கடந்த இரு மாதங்களாக இந்திய வம்சாவளித் தமிழர்கள் தமது உரிமைகளுக்காக நடத்திவரும் போராட்டம், மலேசியாவில் நிலவும் இனப் பாகுபாட்டையும் அடக்குமுறையையும் உலகிற்கு நிரூபித்துக் காட்டி விட்டது.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், தோட்டத் தொழிலில் ஈடுபடுத்துவதற்கென்று தமிழகத்திலிருந்து தமிழர்கள் மலேசியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். காடுகளைத் திருத்தி ரப்பர் தோட்டங்களாக மாற்றி மலேசியாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர்கள் தமிழர்களே. 1957இல் மலேசியா பெயரளவிலான சுதந்திரமடைந்தபோது, அரசியல் சட்ட வரைமுறைகளுக்காக ரீட் என்பவர் தலைமையில் பிரிட்டிஷ் அரசு ஒரு கமிசன் அமைத்தது. அதில் தமிழர்கள் சார்பில் சமத்துவ உரிமைகளுக்காக வைக்கப்பட்ட கோரிக்கைகளைப் பிரிட்டிஷ் அரசு புறக்கணித்து விட்டது.

மலேயரும் தமிழரும் சீனரும் கொண்ட மலேசியாவில் 1970களிலிருந்து மண்ணின் மைந்தர் கொள்கை பின்பற்றப்பட்டு, மலாய்காரர்களுக்குச் சிறப்புச் சலுகைகள் வழங்கும் சட்டமியற்றப்பட்டு, தமிழர்களும் சீனர்களும் இரண்டாம்தர குடிமக்களாக்கப்பட்டனர். காலனியாதிக்கத்திற்கெதிராகச் செம்படைகளைக் கட்டி ஆயுதப் போராட்டம் நடத்திய மலேசியக் கம்யூனிஸ்டுக் கட்சி தடைச் செய்யப்பட்டு, கம்யூனிஸ்டுகள் மிருகத்தனமாக ஒடுக்கப்பட்டனர். தொழிற்சங்க உரிமைகள் பறிக்கப்பட்டன. பாசிச சர்வாதிகார பிரதமர் மகாதிர் முகம்மது, மலேசியாவை இஸ்லாமிய நாடாக அறிவித்தார். மலாய் மொழியே ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது. அதற்கடுத்த நிலையில் ஆங்கிலம்தான் அரசின் செல்வாக்கைப் பெற்றுள்ளது. தமிழ், அலுவல் மொழியாகக்கூட இல்லை. தமிழ் புறக்கணிக்கப்படுவதால் தமிழ்ப் பள்ளிகூடங்கள் மதிப்பிழந்துள்ளதோடு, அரசு போதிய நிதியுதவி செய்யாததால் படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன. "மண்ணின் மைந்தர்' சட்டப்படி, சீனரோ தமிழரோ வெளிநாட்டினரோ மலேசியாவில் தொழில் தொடங்கினால். மலேயாக்காரர்களுக்கு 30% பங்கு மூலதனமும், ஊழியர்களில் 30% மலேயாக்காரர்களாகவும் இருக்க வேண்டும்.

காலனிய ஆட்சிக் காலத்தில் ரப்பர் தோட்டத் தொழிலாளியாக உரிமைகளற்ற அடிமைகளாக உழன்ற தமிழர்கள், பின்னர் மகாதிர் முகம்மது ஆட்சிக் காலத்தில் ஏகாதிபத்திய மறுகாலனியாக்கத்திற்கேற்ப மேற்கொள்ளப்பட்ட பெருந்திட்டங்கள், பாமாயில் பண்ணைகளால் ரப்பர் தோட்டத் தொழிலிலிருந்து பிடுங்கப்பட்டு மாற்று நிலமின்றி நகர்ப்புறங்களுக்கு விரட்டப்பட்டனர். இடம் பெயர்ந்தவர்கள் நகர்ப்புறத்தில் வேலையின்மையாலும், புதிய நிலைமைக்கேற்ப மாறிக் கொள்ள முடியாமலும் ஏமாற்றமும் விரக்தியும் அவர்களைக் கவ்வியுள்ளது. இதன் காரணமாக சம்சு (சாராயம்) மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையாவதும் சிலர் குற்றச் செயல்களில் ஈடுபடுவதும் தொடர்கிறது. இதனால் தமிழர்கள் என்றாலே மோசமானவர்கள், கிரிமினல்கள் என்ற தோற்றம் மலேசிய அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. அரசுத்துறைகள் மட்டுமின்றி, பொது இடங்களில் தமிழர்கள் மீதான அணுகுமுறை மோசமாக உள்ளது. தமிழர்களை ""கெலிங்'' என்று நாக்கூசும் கெட்ட வார்த்தையால் மலேசியர்கள் அழைக்குமளவுக்கு அங்கே இனவெறியூட்டப்பட்டுள்ளது.

குமுறிக் கொண்டிருந்த மலேசியத் தமிழர்கள், ""இன்று அனுபவிக்கும் புறக்கணிப்புக்கும் இன்னல்களுக்கும் பிரிட்டிஷ் அரசின் காலனியக் கொள்கையே காரணம்; அந்தக் குற்றத்துக்காக பிரிட்டிஷ் அரசு மலேசியத் தமிழர் ஒவ்வொருவருக்கும் ஏறத்தாழ எட்டேகால் கோடி ரூபாய் இழப்பீடாகத் தரவேண்டும்'' என்று கோரி பிரிட்டன் உயர்நீதி மன்றத்தில் சிவில் வழக்கொன்றை கடந்த 30.8.07 அன்று பதிவு செய்து, இதையொட்டி ஒரு லட்சம் தமிழர்கள் கையெழுத்திட்ட மனுவை பிரிட்டிஷ் மகாராணியிடம் சமர்ப்பிக்க மலேசிய பிரிட்டிஷ் ஆணையர் அலுவலகத்தை நோக்கி கடந்த நவம்பர் 25ஆம் நாள் ஊர்வலம் நடத்தத் தீர்மானித்தனர்.

மலேசியாவில் எவ்வித ஊர்வலமோ, ஆர்ப்பாட்டமோ, பொதுக்கூட்டமோ நடத்த அனுமதியில்லாத "ஜனநாயகம்' நிலவுவதால், தடையை மீறி பல்லாயிரக்கணக்கில் திரண்ட தமிழர்கள் மீது மிருகத்தனமான அடக்குமுறையை ஏவிய மலேசிய அரசு, தமிழர்களை அமைப்பாக்கிப் போராடி வரும் ""இந்து உரிமைகள் நடவடிக்கைப் படை'' (ஏடிணஞீணூச்ஞூ)யின் முன்னணித் தலைவர்கள் ஐந்துபேரை ""இசா'' எனப்படும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைத்துள்ளது. நூற்றுக்கணக்கான தமிழர்கள் மீது பொய் வழக்குகள் சோடிக்கப்பட்டுள்ளன.

இவ்வளவுக்குப் பின்னரும், மலேசியத் தமிழர்கள் சமத்துவமாக நடத்தப்படுவதாகவும் ""ஹிண்ட்ராப்'' அமைப்பினர் சமய ஒற்றுமையைச் சீர்குலைப்பதாகவும், கூசாமல் புளுகிய மலேசிய இந்திய காங்கிரசின் தலைவரும் தமிழ் அமைச்சருமான டத்தோ சாமிவேலு அம்பலப்பட்டுத் தனிமைப்பட்டு போயுள்ளார். இதே கருத்தோடு, இஸ்லாமிய அரசை முட்டுக் கொடுத்து ஆதரிக்கும் இங்குள்ள சில இஸ்லாமிய அடிப்படைவாத பிற்போக்கு பத்திரிகைகள், இந்தியாவிலிருந்து மலேசியாவுக்கு சுற்றுலாப் பயணிகள் பெயரில் வரும் இந்துத்துவவாதிகள் ""ஹிண்ட்ராப்'' அமைப்பை நிறுவித் தூண்டிவிட்டுள்ளதாகக் கூசாமல் புளுகுகின்றன. இந்து பெயரில் போராடுகிறார்கள் என்பதாலேயே, தமிழர்களின் நியாயமான உரிமைப் போராட்டத்தைப் புறக்கணித்துவிட முடியாது.

மலேசிய அரசின் அடக்குமுறைகளையும் பிழைப்புவாதிகளின் அவதூறுகளையும் துச்சமாக மதித்து தமிழர்கள் தொடர்ந்து அமைதியான முறையில் போராடி வருகின்றனர். தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னணித் தலைவர்களை விடுவிக்கக் கோரி சிறப்புப் பிரார்த்தனைகள், மலேசிய அரசின் ஒடுக்குமுறையை எதிர்த்து கனடா வாழ் தமிழர்களின் ஆர்ப்பாட்டம், ஹிண்ட்ராப்பின் தலைவர் வேதமூர்த்தி வெளிநாடுகளில் ஆதரவு திரட்டும் முயற்சிகள், தமிழக அரசியல் தலைவர்களின் கண்டன அறிக்கைகள் முதலானவற்றால் உலகின் கவனத்தை ஈர்ப்பதில், போராடிவரும் மலேசியத் தமிழர்கள் முதற்கட்ட வெற்றியைச் சாதித்துள்ளனர்.

அதேசமயம் மதச்சார்பின்மை, ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டு அனைத்து இந்திய வம்சாவளியினரையும் மலேய, சீன உழைக்கும் மக்களையும் இந்நியாயமான போராட்டத்துக்கு ஆதரவாக அணிதிரட்டி எதிரிகளையும் துரோகிகளையும் தனிமைப்படுத்துவது மலேசியத் தமிழர்களின் உடனடிக் கடமையாகும். தற்போதைய முதற்கட்ட வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ளவும் அடுத்தகட்ட வெற்றியை அறுவடை செய்யவும் இது மிகவும் அவசியமாகும்.

· தனபால்

தமிழர்களின் பாரம்பரியமா? ஆதிக்கசாதி அடையாளமா?


ஜல்லிக்கட்டு:

தமிழர்களின் பாரம்பரியமா?
ஆதிக்கசாதி அடையாளமா?

ல்லிக்கட்டிற்கு அண்மையில் உச்சநீதி மன்றம் தடை விதித்ததும் தமிழர்கள் பொங்கியெழுந்து வீதிக்கு வந்து போராட்டம் நடத்தியதாகவும் பொது மக்கள் ஆத்திரமடைந்து கருப்புப் பொங்கலாக அறிவித்துப் பொங்கல் விழாக்களைப் புறக்கணித்து விட்டதாகவும் செய்தி ஊடகங்கள் பரபரப்பூட்டின. முரட்டுத்தனமான இந்த விளையாட்டில், மனிதர்கள் மாண்டு போகும் கவலையைவிட, காளை மாடுகள் மீது கரிசனம் கொண்டு, ஜல்லிக்கட்டுக்குத் தடைகோரி சென்ற ஆண்டு ஜூலையில் விலங்கு நல வாரியம் உச்சநீதி மன்றத்தில் முறையிட்டது. இந்த வழக்கில் நீலச்சிலுவை சங்கமும் (புளு கிராஸ்) தன்னை இணைத்துக் கொண்டது.

வழக்கை விசாரித்து வந்த உச்சநீதி மன்றம், பொங்கலுக்கு ஒரு வாரம் முன்பாக ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்துத் தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பில், ""ஜல்லிக்கட்டு போட்டியை அனுமதிக்க வேண்டும் என்று எந்தச் சட்டமும் கூறவில்லை'' என்றும், ""அதேநேரத்தில் ரேக்ளா எனப்படும் மாட்டு வண்டிப் பந்தயத்தை நடத்த எந்தத் தடையுமில்லை'' என்றும் கூறியிருந்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகளிடம் ""ரேக்ளா பந்தயத்தை மட்டும் எந்தச் சட்டம் அனுமதிக்கிறது?'' என்று யாரும் கேட்கவில்லை.

ஜல்லிக்கட்டுக்குத் தடை வந்ததும் ஓட்டுக்கட்சிகள் அனைத்திற்கும் "தமிழன் வீரம்' பற்றிய நினைப்பு வந்து, அறிக்கைகளால் பத்திரிகைகளை நிரப்பி விட்டன.

சி.பி.எம். கட்சியோ ""முழுமையான காவல்பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து ஜல்லிகட்டு நடத்த அனுமதிக்க வேண்டும்'' எனக் கூறி, நிலப்பிரபுத்துவக் கலாச்சாரமான ஏறு தழுவுதலுக்கு ஆதரவாக வரிந்து கட்டியது. ஏகாதிபத்தியத்தைக் கட்டிக் காக்க நந்திகிராமம்! நிலப்பிரபுத்துவத்தைக் கட்டிக் காக்க அலங்காநல்லூர்! ஆனால், பெயர் மட்டுமோ "கம்யூனிஸ்ட்' கட்சி!

பா.ம.க.வின் இராமதாசு, ""தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் அழியாத சில அடையாளங்கள் இருக்கின்றன. அந்த அடையாளங்களை அழித்து விட அனுமதிக்கக் கூடாது'' என்று சீறினார். தமிழனின் நீரும் நிலமும், உழவும் நெசவும் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களால் நாசமாக்கப்பட்டு, அவற்றின் அடையாளங்கள் அழிக்கப்பட்டு வரும் நிலையில், ஜல்லிக்கட்டுத்தான் தமிழனின் அழியாத அடையாளமாக இந்த மருத்துவருக்குத் தெரிகிறது.

ஓட்டுக்கட்சிகளும் ஊடகங்களும் உசுப்பேற்றியதும், ஜல்லிக்கட்டு போட்டியை ஆண்டுதோறும் நடத்திவரும் மதுரை அலங்காநல்லூர், பாலமேடு வட்டார மக்கள், உச்சநீதி மன்றத் தடையைத் துச்சமாக மதித்து இவ்வாண்டும் ஜல்லிக்கட்டை நடத்தப் போவதாக அறிவித்தனர். ""காவிரி ஆற்று நீர் சிக்கலில் கர்நாடகமும், முல்லைப் பெரியாறு தாவாவில் கேரளமும் உச்சநீதி மன்றத் தீர்ப்பை மதிக்காத போது, நாங்கள் மட்டும் ஏன் தீர்ப்பை மதிக்க வேண்டும்?'' என்று நியாயவாதம் பேசினர்.

""அலங்காநல்லூர் வட்டாரத்தில் கருப்புக் கொடி ஏற்றினர். ரேசன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டைகளை அரசிடம் திருப்பிக் கொடுக்கப் போவதாக சுவரொட்டி ஒட்டியுள்ளனர். கருப்புப் பட்டை அணிந்து தொடர் உண்ணாவிரதம் இருந்தனர். மூன்று நாட்களாகக் கடைகள் அடைக்கப்பட்டன'' என்றெல்லாம் "குமுறி எழுந்த தமிழர்களின் கோபாவேசத்தை' ஊடகங்கள் வர்ணித்தன.

ஓட்டுக் கட்சிகளும் ஊடகங்களும் ஊதிப் பெருக்குவது போல, ஜல்லிக்கட்டு என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் அடையாளமல்ல. தென்மாவட்ட ஆதிக்க சாதியினரின் சாதித் திமிரைப் பறைசாற்றும் ஓர் ஆதிக்கப் பண்பாட்டுச் சின்னம்தான். இது ஒட்டுமொத்தத் தமிழர்களின் அடையாளம் என்றால், ஏறு தழுவுதலில் தேவர் சாதிக்காரன் வளர்த்த காளையை அடக்கும் உரிமை தாழ்த்தப்பட்டோருக்கு ஏன் இல்லை? வாடிவாசல் முன் திரண்டு நிற்கும் இளைஞர்கள், சாதி அடையாளத்தைக் குறிக்கும் மஞ்சள் நிறச் சீருடையை அணிவது ஏன்? தாழ்த்தப்பட்டோர் தாங்களாகவே தனியாக ஜல்லிக்கட்டு நடத்தினால் இவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்காமல் தொடர்ந்து நடத்தக்கோரி நீதிமன்றம் சென்றவர்களில் பலரும் தேவர் சாதித் தலைவர்களாகவே உள்ளனரே, அது ஏன்?

""யார் தடுத்தாலும் நாங்கள் ஜல்லிக்கட்டை நடத்தியே தீருவோம்; ஜல்லிக்கட்டு என்பது வீரத்தின் அடையாளம்'' என்று மீசையை முறுக்குபவரோ ஜல்லிக்கட்டு பாதுகாப்புக் கழகம் எனும் லெட்டர்பேடு தேவர்சாதி அமைப்பின் தலைவரான செந்தில் தொண்டைமான். இன்னொருவர், அமைச்சர் சுப.தங்கவேலனின் பேரனும், தேவர் சாதிய அடையாளத்துடன் தனக்குத்தானே கட்அவுட் வைத்துக் கொள்ளும் கருப்புப் பண சினிமா நடிகனும், "தமிழர் வீரவிளையாட்டுப் பாதுகாப்புக் குழு'வின் தலைவருமான ஜே.கே. ரித்தீஸ். ஜல்லிக்கட்டை நடத்தாவிட்டால், "தெய்வக் குற்றம்' ஏற்பட்டுவிடும் என்று கூறி, தடையை மீறி சிவகங்கை மாவட்டம் எம்.சூரக்குடியில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தியதற்காகக் கைது செய்யப்பட்ட நாட்டாமைகளும் தேவர் சாதிக்காரர்களே.

ஜல்லிக்கட்டு என்பதை தேவர் ஜெயந்திக்கு இணையான சாதிய ஆணவச் சின்னமாகத்தான் தேவர் சாதியினர் பார்க்கின்றனர். ஜல்லிக்கட்டினைப் பாரம்பரியமாக நடத்திவரும் இந்த ஆதிக்க சாதியினர், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் எங்களைப் பாதிக்கின்றது என்று கூடப் பேரணி நடத்தியிருக்கின்றனர். காளைகளிடம் மட்டும்தானா இவர்கள் விளையாடியிருக்கின்றனர்? மேலவளவு முருகேசனின் தலையைச் சீவி, சாதிவெறியோடு மீசையை முறுக்கி கோரத் தண்டவமும் ஆடியிருக்கின்றனர். இருப்பினும், தேவர் சாதியினரின் குல தெய்வமான முத்துராமலிங்கத் தேவருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடச் சொன்ன "சேரிப்புயல்' தொல்.திருமா இதுவும் போதாதென்று, ""ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையானது, இந்த விளையாட்டைப் பாரம்பரியமாக நடத்திவரும் மக்களை இழிவுபடுத்துவதாக உள்ளது'' என்று வேதனைப்படுகிறார்.

ஓட்டுக்காக இக்கட்சிகள் இருவிழி சிவந்து கனற்பொறி தெறிக்க பத்திரிக்கைகளில் அறிக்கைகளை வெளியிடுவது ஒருபுறமிருக்க, 400 ஆண்டுகளாக இவ்வீர விளையாட்டு பாரம்பரியமாக நடந்து வருவதாக தமிழக அரசே உச்சநீதி மன்றத்தில் தெரிவித்திருக்கிறது.

ஏறு தழுவுதல் மட்டும்தான் பாரம்பரியமாக வந்ததா? சாதிதீண்டாமை, வலங்கைஇடங்கை வெறியாட்டங்கள் கடப் பாரம்பரியமாக வந்தவைதான். அதற்காக அவற்றையெல்லாம் ஆதரிக்க முடியுமா? பாரம்பரியமாக நீடித்துவந்த பொட்டுக் கட்டுதலைச் சட்டம் போட்டுத் தடுக்க முற்பட்டபோது, பார்ப்பனஆதிக்க சாதியினர் பதறியதைப் போலத்தான் இருக்கிறது, சாதிவெறியை மறைத்துக் கொண்டு "தமிழன் வீரம்', "பாரம்பரியம்' எனப் பூசி மெழுகிடும் வாதமெல்லாம்.

பா.ஜ.க.வின் இல.கணேசன், அகண்ட பாரதத்திலிருந்து இறங்கி வந்து "தமிழரின் பாரம்பரியம்' பற்றி அங்கலாய்க்கிறார். ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து சிவசேனா குண்டர்களோ மதுரையில் ரயில் மறியல் செய்கின்றனர். அதேசமயம், தடை கோரி வழக்கு போட்ட விலங்குநல வாரியத்தை, பா.ஜ.க.வோ, சிவசேனாவோ எதிர்க்கவில்லை. ஏனெனில், இதே விலங்கு நல வாரியம்தான் "கோசாலை'களை (பசு பாதுகாப்பு மையம்) நவீனப்படுத்த நிதியுதவி செய்கிறது. பசுவதை கூடாது என்று சீறும் இந்த இந்துவெறிக் கட்சியினர்தான், காளைகளின் கண்களில் எலுமிச்சை சாறையும் மிளகாய்ப் பொடியையும் தூவி நடத்தப்படும் காளை வதை "பாரம்பரிய' ஜல்லிக்கட்டுக்காக வரிந்து கட்டுகின்றன.

இவை ஒருபுறமிருக்க, உச்சநீதி மன்றத்துக்கு காளைகள் மீது திடீர்க் கரிசனை ஏன்? ""இது காட்டுமிராண்டித்தனமான விளையாட்டு; இதனால் பலருக்குப் படுகாயங்களும் ஒரு சிலர் பலியாவதும் நடக்கிறது'' என்று அது நியாயவாதம் பேசுகிறது. ஜல்லிக்கட்டு காட்டுமிராண்டித்தனமானது என்றால், அதைவிடக் காட்டுமிராண்டித்தனமான சாதியும் தீண்டாமையும் தலைவிரித்தாடுவதைத் தடுக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுக்காதது ஏன்? பாசிச ஜெயா ஆடுகோழி வெட்டத் தடை விதித்து கிராமக் கோயில்களைப் பார்ப்பனமயமாக்க முயற்சித்தார் என்றால், நீதிமன்றமோ ஜல்லிக்கட்டு போட்டியை உலகமயமாக்கலுக்கு ஏற்ப மறுவார்ப்பு செய்ய முயற்சிக்கிறது. அதனால்தான் முதலில் தடை விதித்துவிட்டு பின்னர் எட்டுக் கட்டுப்பாடுகளை விதித்து, ஜல்லிக்கட்டை நடத்த அனுமதித்துள்ளது.

""ஜல்லிக்கட்டை மனிதத்தன்மை கொண்டதாகவும், நாகரீகமான முறையில் நடத்தப்படும் நிகழ்ச்சியாகவும் மாற்றப்பட வேண்டும்'' என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகம், நீதிமன்றத்திற்கு வேறு உள்நோக்கம் இருப்பதை உணர்த்துகிறது. இதற்கேற்ப மதுரை மாவட்ட ஆட்சியரும், ""ஜல்லிக் கட்டை முறைப்படுத்தி நடத்திட அரசு விரைவில் அவசரச் சட்டம் பிறப்பிக்கவுள்ளதாக'' அறிவித்துள்ளார்.

இந்த அவசரச் சட்டம் எவ்வாறு இருக்கும்? உலகமயமாக்கலுக்கு ஏற்ப ஜல்லிக்கட்டு போட்டியை மாற்றியமைக்கும் வகையிலே இருக்கும். ""இந்த நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்குபவர்கள் கோக்'' என தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரம் போல, இனி அலங்காநல்லூர் ஜல்லிக் கட்டை வழங்குவது பெப்சி, டாடா என்று மாற்றப்படலாம். ""சென்னை சங்கமம்'' போல, "நாட்டுப்புறக் கலை மற்றும் விளையாட்டுக்களை'ப் பாதுகாத்து வளர்த்திட ஃபோர்டு பவுண்டேசன், பில்கேட்ஸ் பவுண்டேசன் என அனைத்து ஏகாதிபத்திய நிறுவனங்களும் தரகு முதலாளிகளும் தயாராகவே உள்ளனர். இதனால்தான் நீதிமன்றம் ஜல்லிக்கட்டை ஒழுங்குபடுத்தி "மனிதத்தன்மை நாகரிகம்' கொண்டதாக மாற்றச் சொல்கிறது.

இதன்படி, இனி வாடிவாசல் ""பெப்சி'' வாசலாகலாம். ""நைக்'' பனியன் அணிந்த ஜல்லிக்கட்டு வீரர்கள், ""கோக்''கைப் புரவலராகக் கொண்ட மாட்டையும், ரிலையன்ஸ் பிரஷ் வளர்த்த மாட்டையும் அடக்கும் வீர விளையாட்டை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பலாம்.

இவை மிகைப்படுத்தல்கள் அல்ல. ஏற்கெனவே ""சென்னை சங்கமம்'' நிகழ்ச்சிகள் நடந்த விதத்தைப் பார்த்தாலே இதனைப் புரிந்து கொள்ள முடியும். சென்னை சங்கமம் நிகழ்ச்சிகளை பன்னாட்டு தரகு முதலாளித்துவ நிறுவனங்கள் தத்தெடுத்துக் கொள்ள, இந்நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளில் தமிழர்களின் பாரம்பரிய உணவுகள் விற்கப்பட்டதைப் போல, கடைசியில் தமிழர்களின் "பாரம்பரிய' ஜல்லிக்கட்டும் உலகமயமாக்கலுக்கு ஏற்ப மறுவார்ப்பு செய்யப்பட்டு வருகிறது.

· இரணியன்

தமிழகத்தில் கி.மு. 1500 காலத்தில் (அதாவது, இன்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன்பு) ""மஞ்சு விரட்டு'' அல்லது ""எருது கட்டுதல்'' என்ற வீர விளையாட்டே பாரம்பரியமாக நிலவியது. பொங்கல் விழாக்களின் போது காளைகள் நெடுஞ்சாலைகளில் அவிழ்த்து விடப்பட்டு, கிராமத்து இளைஞர்கள் அவற்றை விரட்டிக் கொண்டு ஓடுவர். சாலையின் இருமருங்கிலும் மக்கள் திரண்டு ஆரவாரிப்பர். அப்பந்தயத்தில் முதலில் வந்து வெற்றிபெறும் வீரருக்குப் பரிசளிக்கப்படும். இதில் மாடுகளுக்கோ மனிதர்களுக்கோ காயமேற்படாது.

நீண்ட நெடுங்காலமாக தமிழர்களின் பாரம்பரியமாக நிலவி வந்த ""மஞ்சு விரட்டு'', ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முன்பு நாயக்க மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் மாட்டை அடக்கும் ஜல்லிக்கட்டாக மாறியது. நாயக்கர் ஆட்சியில் படிப்படியாக ஜமீன்தாரி முறை உருவாகி வந்தது. ஜமீன்தார்கள் தமது ஆதிக்கத்தையும் செல்வாக்கையும் பறைசாற்றும் அடையாளமாக உருவாக்கியதுதான் ஜல்லிக்கட்டு. ஜமீன்தார்களே ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து, அதை யாராலும் அடக்க முடியாது என்று வீரப் பெருமை பேசினர். மாடுகளின் கொம்புகளில் தங்கக் காசுகளைப் பையில் போட்டுக் கட்டி, அதை அடக்குவோருக்கு அப்பரிசுத் தொகை வழங்கப்படுவதாக அறிவித்தனர். ஜமீன்தார்களின் ஆதிக்கம், சாதி ஆதிக்கமாகவும்; காளையை அடக்கும் வீரம், தாழ்த்தப்பட்ட சாதியினரை ஒடுக்கும் வீரமாகவும் வேர் விட்டது.

இந்த உண்மைகளை தொல் ஓவிய வரலாற்றாளரான காந்திராஜனும், சென்னை கவின்கலைக் கல்லூரி முதல்வரான பேராசிரியர் சந்திரசேகரனும் வெளிக் கொணர்ந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகிலுள்ள கருக்கியூர் குன்றில் ஏறத்தாழ 3500 ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியத்தில் காணப்படும் மஞ்சு விரட்டு காட்சியையும், மதுரை திண்டுக்கல்லுக்கிடையே கல்லூத்து மேட்டுப்பட்டியிலுள்ள தொன்மை வாய்ந்த குகை ஓவியத்தையும் ஆதாரமாகக் காட்டி, மஞ்சு விரட்டுதான் தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டாகத் திகழ்ந்ததை வரலாற்று அறிவியல் முறைப்படி நிரூபித்துள்ளனர்.


ஆட்சியாளர்களை முடிவு செய்வது சந்தர்ப்பவாத சேர்க்கைகளே!


ஆட்சியாளர்களை முடிவு செய்வது
சந்தர்ப்பவாத சேர்க்கைகளே!


டுத்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தல்களுக்கு இன்னமும் ஓராண்டுக்கு மேலும், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கு மூன்றாண்டுகளுக்கும் மேலாக அவகாசம் இருக்கிறது. என்றாலும் இப்போதே ஓட்டுக்கட்சி அரசியலில் செயற்கையாகச் சூடேற்றி மக்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது. கூட்டணி அரசியல் குட்டை சகிக்க முடியாதவாறு நாற்றமெடுக்கும் அளவுக்குக் குழப்பி விடப்படுகிறது. அதைக் குழப்பிவிட்டு ஆதாயம் அடைவதற்கான முயற்சியில், கடந்த தேர்தல்களில் ஆட்சி அதிகாரத்தை இழந்த ஓட்டுக் கட்சிகளும், சந்தர்ப்பவாதக் கூட்டணி போட்டுத் தங்கள் நிலையை உயர்த்திக் கொள்ளக் கனவு காணும் ஓட்டுக் கட்சிகளும் மட்டுமல்ல, பிழைப்புவாத மற்றும் பார்ப்பனமயமான செய்தி ஊடகங்களும் தீவிரமாக இறங்கியுள்ளன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த நாடாளுமன்றசட்டப்பேரவைத் தேர்தல்களில் இந்து மதவெறி பார்ப்பன பாசிச ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க.வும் அதன் இயல்பான தோழமைக் கட்சியான ஜெயலலிதாவின் அ.தி.மு.க.வும் ஏறக்குறைய தனிமைப்படுத்தப்பட்டு தோற்கடிக்கப்பட்டன. ஆட்சியை இழந்தவர்கள் ஆத்திரத்தோடு பொங்கி எழுந்தார்கள்; வெற்றி பெற்ற கட்சிகளின் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி, பிளவுபடுத்திக் கட்சிகளைத் தம் பக்கம் இழுக்கும் நோக்கத்தோடு, பிழைப்புவாத மற்றும் பார்ப்பனமயமான செய்தி ஊடகங்களைப் பயன்படுத்தி ஊகங்களையும் வதந்திகளையும் தொடர்ந்து திட்டமிட்டுப் பரப்பினர். இந்த முயற்சியில் கருணாநிதி தலைமையிலான கூட்டணியில் குழப்பமும் சலசலப்பையும் ஏற்படுத்துவதில் அவர்கள் வெற்றி பெற்றாலும், நம்பிக்கையான மாற்றுக் கூட்டணியை ஜெயலலிதா தலைமையில் ஏற்படுத்திவிடும் நோக்கம் இன்னமும் ஈடேறவில்லை என்றுதான் கூறவேண்டும்.

இந்த நிலையில் தமிழ்நாட்டின் பிரபல பார்ப்பன பாசிச அரசியல் தரகனான துக்ளக் ""சோ'' பா.ஜ.க.அ.தி.மு.க. கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார். குஜராத் இந்து மதவெறி பாசிசக் கொலைகாரன் மோடியை முன்னிறுத்தி இதைச் சாதித்துள்ளார். மோடியைச் சிறப்பு விருந்தினராகக் கொண்டு "சோ' நடத்திய துக்ளக் ஆண்டு விழாவில் பேசியபோது, ""தமிழகத்தில், பா.ஜ.க. அ.தி.மு.க. மற்றும் நடிகர் விஜயகாந்தின் தே.மு.தி.க. கூட்டணி உருவானால் நூற்றுக்கு நூறு வெற்றி பெறும் என்று அரசியல் ஆரூடம் கூறியுள்ளார். இந்தக் கூட்டணியை உருவாக்கும் சகுனி வேலையில் மோடியால் ராஜகுரு என்றழைக்கப்பட்ட "சோ' தீவிரமாக ஈடுபட்டுள்ளது தெரிகிறது. பா.ஜ.க.அ.தி.மு.க. ஆகியவை மட்டும் கூட்டணி சேர்ந்து தமிழகத்தில் வெற்றி பெற முடியாது என்ற நிலையில், முன்பு எம்.ஜி.ஆரின் செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டு தமது பார்ப்பன பாசிச நோக்கங்களை நிறைவேற்றிக் கொண்டதைப் போல, நடிகர் விஜயகாந்தைப் பயன்படுத்திக் கொள்ள இப்போது அவர்கள் எத்தணிக்கிறார்கள்.

தேசியக் கட்சிகள் என்றழைக்கப்படும் பா.ஜ.க., காங்கிரசு மற்றும் போலி கம்யூனிஸ்டுகளிடையே கொள்கை, கோட்பாடு என்ற வகையிலான பெரிய வேறுபாடுகள் எதுவும் கிடையாது. காங்கிரசும் போலி கம்யூனிஸ்டுக் கட்சிகளும் இந்துத்துவ மற்றும் இசுலாமிய மதவாத சக்திகளுடன் மாறி மாறி சமரசம் செய்து கொள்பவைகளாக உள்ளன. தனியார்மயம் தாராளமயம் உலகமயமாக்கம் என்ற துரோகக் கொள்கையை எல்லா ஓட்டுக் கட்சிகளும் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரிக்கின்றன. குடும்பவாரிசு நலன்களை முன்னிறுத்தி கருணாநிதி நடத்திய கூட்டணி அரசியல் இரண்டு முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டு விட்டதை உறுதிப்படுத்தின. இலவசகவர்ச்சிவாத முகங்கொண்ட உலகமயமாக்கல் புதிய பொருளாதாரக் கொள்கைதான் ஓட்டுக்கட்சி அரசியலுக்கு இசைவானதாக இருக்க முடியும். எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை பெற்றுத்தரும் கூட்டணி அரசியலுக்கு இடமளிக்காதவாறும் வாக்கு வங்கிகள் சிதறிப் போய்விட்டன. அதாவது, அனைத்திந்திய அளவிலும் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் ஒரு கட்சியின் பெரும்பான்மை ஆட்சி என்பது கூட பழங்கதையாகி விட்டது. இந்த நிலையில் ஓட்டுக் கட்சிகள் தேர்தல்களில் பெறும் சதவீதக் கணக்குகளே கூட்டணியைத் தீர்மானிப்பவையாக உள்ளன. இதனால் தேசியம், இந்துத்துவம் போன்றவற்றை ஆதரிக்கும் மேட்டுக்குடி அறிவுஜீவிகள் கேலி பேசும் நடிகரின் கட்சிகள், சாதிகளின் கட்சிகள், பிழைப்புவாதிகளின் கட்சிகள் கூட அவர்களே மதிக்கத்தக்க வேண்டிய அரசியல் கட்சிகளாகி விட்டன. நாடாளுமன்ற சட்டமன்ற ஜனநாயகத்தின் கீழ் தங்கள் ஆட்சியாளர்களை மக்களே தீர்மானிக்கிறார்கள் என்கிற திரை விலகி, சதவீதக் கணக்கு அடிப்படையில் முடிவாகும் சந்தர்ப்பவாதச் சேர்க்கைகளே தீர்மானிக்கின்றன என்பதாகிவிட்டது.

இதுவன்றோ வீரம்!


இதுவன்றோ வீரம்!

குஜராத் முசுலீம் படுகொலைகள் தொடர்பான வழக்கொன்றில், குற்றவாளிகளைத் தண்டித்து, மும்பய்க் குற்றவியல் நீதிமன்றம் சனவரி மாத இறுதியில் தீர்ப்பளித்திருக்கிறது. இத்தீர்ப்பானது, ரவுடிகள், மாஃபியா கும்பலை விட, ஆர்.எஸ்.எஸ். இந்து மதவெறி பாசிஸ்டுகள் வக்கிரமான கிரிமினல் பேர்வழிகள்; பஞ்சமா பாதகத்தையும் செய்யத் துணியும் பயங்கரவாதிகள் என்பதையும்; மோடி அரசிற்கும், இப்படுகொலைகளுக்கும் நேரடித் தொடர்புண்டு என்பதையும் மீண்டும் நிரூபித்திருக்கிறது. இன்னொருபுறம், இப்பயங்கரவாதிகளை எதிர்த்து மன உறுதியுடனும், துணிச்சலோடும் ஆறாண்டுகளாகப் போராடி வரும் பில்கிஸ் பானு என்ற வீராங்கனையையும் அடையாளம் காட்டியிருக்கிறது.

பில்கிஸ் பானு, குஜராத் மாநிலம் தாஹோட் மாவட்டத்திலுள்ள ரந்திக்புர் கிராமத்தைச் சேர்ந்தவர். தனது கணவர் யாகூப் ரசூல், மூன்றரை வயது பெண் குழந்தை சலேஹாவுடன் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடுவதற்காகத் தனது பிறந்த வீட்டிற்கு பில்கிஸ் பானு வந்திருந்தபொழுதுதான், குஜராத்தில் இந்து மதவெறி பயங்கரவாதத் தாக்குதல் வெடித்தது.

ரந்திக்புர் கிராமத்தில் வசித்து வந்த முசுலீம்களின் 71 வீடுகளும்; அவர்களுக்குச் சொந்தமான 14 மளிகைக் கடைகளும்; வேறு சில பெட்டிக் கடைகளும் இந்து மதவெறிக் கும்பலால் முற்றிலுமாகத் தீக்கிரையாக்கப்பட்டன; அனைத்து முசுலீம் குடும்பங்களும் உயிரையாவது காப்பாற்றிக் கொள்ள, கிராமத்தைவிட்டு வெளியேறின.

பில்கிஸ் பானுவும், தனது கணவர், குழந்தை, தாயார், இரண்டு சகோதரிகள், இரண்டு சகோதரர்கள் உள்ளிட்டு தனது உறவினர்கள் 16 பேரோடு ரந்திக்புரிலிருந்து வெளியேறி, பரியா என்ற ஊரை நோக்கித் தப்பிச் செல்லத் தொடங்கினார். இந்து மதவெறியர்களின் கண்களில் அகப்பட்டுக் கொண்டு விடாமல் பில்கிஸ் பானுவின் குடும்பம் பதுங்கிப் பதுங்கிச் சென்று கொண்டிருந்த நேரத்திலே, அவரின் அத்தை மகளுக்கு குஜாவல் மசூதியில் பெண் குழந்தையும் பிறந்தது. இதற்கு மறுநாள் குத்ரா என்ற ஊருக்கு அவர்கள் வந்தபொழுது, அவ்வூரைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தனர்.

அங்கு இரண்டு நாட்கள் பாதுகாப்பாக இருந்துவிட்டு, மூன்றாவது நாள் ஒவ்வொருவரும் பழங்குடியினர் போல வேடமணிந்து கொண்டு, குத்ராவில் இருந்து வெளியேறி, சாபர்வாட் என்ற கிராமத்திற்கு வந்து, ஊருக்கு ஒதுக்குப்புறமான வயல்வெளியில் பதுங்கியிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக ஆயுதங்களுடன் சென்று கொண்டிருந்த இந்து மதவெறிக் கும்பலிடம் பில்கிஸ் பானு குடும்பம் மாட்டிக் கொண்டது. அக்கும்பலில் இருந்த ரந்திக்புர் கிராமத்தைச் சேர்ந்த இந்து வெறியர்கள் பில்கிஸ் பானுவை அடையாளம் கண்டு கொண்டு, தங்களின் வக்கிரமான தாக்குதலை நடத்தினர்.

ஷைலேஷ் பட் என்ற இந்து மதவெறியன் பில்கிஸ் பானுவின் குழந்தை சலேஹாவை அவரிடமிருந்து பிடுங்கி, அவரின் கண் எதிரிலேயே அக்குழந்தையை தரையில் அடித்துக் கொன்றான். பிறகு அவனும், அக்கும்பலைச் சேர்ந்த லாலா டாக்டர், லாலோ வக்கீல், கோவிந்த் நானா ஆகிய நான்கு பேரும் சேர்ந்து, பில்கிஸ் பானுவைக் கும்பலாகப் பாலியல் பலாத்காரப்படுத்தினர். கர்ப்பமாக இருக்கும் தன்னைவிட்டு விடும்படி பில்கிஸ்பானு கெஞ்சியதை, கதறியதை அக்கும்பல் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. தங்களின் காமவெறியைத் தீர்த்துக் கொண்ட பிறகு, அக்கும்பல் பில்கிஸ் பானுவைத் தீர்த்துக் கட்டும் வெறியோடு தாக்கியதில், அவர் சுயநினைவு இழந்து விழுந்தார்.

பில்கிஸ் பானு மட்டுமின்றி அவரின் தாயார், சகோதரிகள் உள்ளிட்டு எட்டுப் பெண்கள் அக்கும்பலால் பாலியல் பலாத்காரப்படுத்தப் பட்டனர். பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் என அனைவரும் கத்தியாலும், ஈட்டியாலும், குண்டாந்தடிகளாலும் தாக்கப்பட்டனர்.

இரண்டு மூன்று மணி நேரம் கழித்து பில்கிஸ் பானுவிற்கு நினைவு திரும்பிய பொழுது, தனது குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பெண்களும், நான்கு சிறுவர்களும் கொல்லப்பட்டுக் கிடப்பதைக் கண்டார்; மீதிப்பேர் இருந்த சுவடே தெரியவில்லை. பில்கிஸ் பானு, அந்தப் பலவீனமான நிலையிலும் நடந்து சென்று, வழியில் தென்பட்ட ஒரு பழங்குடி இனப் பெண்ணிடம் இரவலாக ஆடை வாங்கி அணிந்து கொண்டு, லிம்கேடா போலீசு நிலையத்திற்குச் சென்று இத்தாக்குதல் பற்றி புகார் கொடுத்தார். அப்பொழுதுதான், இந்து மதவெறிக் கலவரத்தின் சூத்திரதாரியாக மோடி அரசு இருப்பதை பில்கிஸ் பானு புரிந்து கொண்டார்.

அப்போலீசு நிலையத்தில் தலைமைக் காவலராக இருந்த சோமபாய் கோரி, பில்கிஸ் பானு வாக்குமூலம் அளித்தபடி நடந்த சம்பவத்தைப் புகாராகப் பதிவு செய்யாமல், குற்றவாளிகளைக் காக்கும் நோக்கத்தோடு, ஒரு பொய்யான புகாரைப் பதிவு செய்தான். பில்கிஸ் பானுவைப் பரிசோதித்த மருத்துவர்களும், சம்பவம் நடந்த தேதி/நேரம், காயங்கள் பற்றிய குறிப்புகள் இன்றி, மொன்னையான அறிக்கையைத் தயார் செய்தனர். ""குற்றவாளிகளை அடையாளம் காட்ட முயற்சி செய்தால், விஷ ஊசி போட்டுக் கொலை செய்து விடுவோம்'' என போலீசாரால் பில்கிஸ் பானு மிரட்டப்பட்டார்.

இந்து மதவெறி பயங்கரவாதத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்காக நடத்தப்பட்ட கோத்ரா முகாமில், பஞ்ச்மஹால் மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி ரவியைச் சந்தித்த பில்கிஸ் பானு, தனது குடும்பப் பெண்கள் கும்பலாகப் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்டதையும்; தனது குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களும், சிறுவர்களும், தனது பெண் குழந்தையும் கொடூரமாகத் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டதையும்; குற்றவாளிகளை அடையாளம் காட்டக் கூடாது என போலீசாரால் தான் மிரட்டப்பட்டதையும் கூறினார். இந்து மதவெறியர்கள் நடத்திய தாக்குதலில் தப்பிப் பிழைத்த பில்கிஸ் பானுவின் இரண்டு உறவினர்களும் சாட்சியம் அளித்தனர். இதனையடுத்து இச்சம்பவம் பற்றி மீண்டும் போலீசு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

எனினும், அவ்விசாரணை ஏனோதானோவென்றே நடத்தப்பட்டு, ஒப்புக்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குற்றவாளிகள் மிக விரைவாகவே பிணையில் விடப்பட்டனர். இவ்வழக்கின் முக்கிய சாட்சியான பில்கிஸ் பானு பல வழிகளில் மிரட்டப்பட்டதால், அவர் தலைமறைவாகப் போக நேர்ந்தது. குஜராத் படுகொலை தொடர்பான நூற்றுக்கணக்கான வழக்குகளைச் சாட்சியம் இல்லை என்று கூறி மோடி அரசு கைகழுவியபோது, கும்பலோடு கோவிந்தாவாக பில்கிஸ் பானு வழக்கையும் கைவிட்டது.

இதனை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார், பில்கிஸ் பானு. உச்சநீதி மன்றம், இவ்வழக்கை மீண்டும் புலன் விசாரணை செய்யுமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டது. சி.பி.ஐ. நடத்திய புலன் விசாரணையின் அடிப்படையில் அகமதாபாத் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்குத் தொடரப்பட்டது. ""சாட்சிகள் தொடர்ந்து மிரட்டப்படுவதால், இவ்வழக்கு குஜராத்தில் நடந்தால் நீதி கிடைக்காது; எனவே, வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும்'' எனக் கோரி உச்சநீதி மன்றத்தில் மீண்டும் வழக்குத் தொடுத்தார், பில்கிஸ் பானு. இதனையடுத்து, இவ்வழக்கு மும்பய்க்கு மாற்றப்பட்டது.

மும்பய் குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வந்த இவ்வழக்கில், 20 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்களுள் இரண்டு மருத்துவர்கள், ஐந்து போலீசு அதிகாரிகள் உள்ளிட்ட ஏழுபேர் நிரபராதிகளாகத் தற்பொழுது விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தபொழுதே குற்றவாளி ஒருவர் இறந்து போனதால், மீதி 12 பேரில் 11 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும்; பில்கிஸ் பானு அளித்த புகாரைப் பதிவு செய்ய மறுத்த போலீசு கான்ஸ்டபிள் சோமபாய் கோரிக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

···

பில்கிஸ் பானுவின் விடாப்பிடியான போராட்டத்தின் காரணமாகத்தான் இத்தீர்ப்பு கிடைத்திருக்கிறதேயொழிய, நீதிமன்ற முனைப்பின் காரணமாக இந்தச் சிறிய வெற்றிக் கிடைக்கவில்லை. இந்து மதவெறிக் கும்பல் இத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் சடலங்களை, தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தி, பக்கத்தில் இருந்த காட்டுப்பகுதிக்குக் கொண்டு சென்று புதைத்துவிட்டது. பில்கிஸ் பானுவின் மகள் சஹேலாவின் சடலம் எங்கோ மாயமாய் மறைந்து போனது. இதனைக் காட்டி, இப்படிப்பட்ட சம்பவமே நடக்கவில்லை என இந்து மதவெறிக் கும்பல் வாதாடியது.

பில்கிஸ் பானுவின் உறவினர்களின் சடலங்களை இரண்டாம் முறை பிரேதப் பரிசோதனை செய்வதற்காக சி.பி.ஐ., தோண்டியெடுத்த பொழுது, அச்சடலங்கள் தலையற்ற முண்டங்களாக இருந்தன. சடலங்களை அடையாளம் கண்டு கொள்ளக் கூடாது என்பதற்காகவே, அவ்வுடல்களில் இருந்து தலைகள் ""மர்மமான'' முறையில் வெட்டி எடுத்துச் செல்லப்பட்டிருந்தன. சடலங்கள் விரைவாக அழுகிப் போய்த் தடயங்கள் மறைந்து போய்விடவேண்டும் என்பதற்காகவே, சடலங்களின் உடம்பு முழுவதும் உப்பு தடவப்பட்டிருந்தது.

தாக்குதல் தொடர்பான முக்கியமான சாட்சியங்கள் அனைத்தும் திட்டமிட்டு அழிக்கப்பட்டுவிட்ட நிலையில், பில்கிஸ் பானு மற்றும் அச்சம்பவத்தில் தனது தாயைப் பறி கொடுத்த மற்றொரு சிறுவனின் வாக்குமூலங்கள்தான், இவ்வழக்கிற்கே உயிர்நாடியாக இருந்தன. பெஸ்ட் பேக்கரி வழக்கின் முக்கிய சாட்சியான ஷஹீரா ஷேக்கை மிரட்டிப் பணிய வைத்ததைப் போல, பில்கிஸ் பானுவையும் மிரட்டிப் பணிய வைக்க முயன்றது, இந்து மதவெறிக் கும்பல். இதற்கெல்லாம் அஞ்சி விடாத பில்கிஸ் பானு, கடந்த ஆறாண்டுகளாகத் தலைமறைவாக வாழ்ந்து கொண்டே, வழக்கையும் நடத்தி, குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை தர மறுத்துவிட்ட நீதிமன்றம், அதனை நியாயப்படுத்த, ""அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே தூக்கு தண்டனை வழங்க முடியும்; இக்குற்றவாளிகளுள் யார் யார் என்னென்ன குற்றங்களைச் செய்தார்கள் என்பது தெளிவாக நிரூபிக்கப்படவில்லை'' என்று கூறியிருக்கிறது.

குஜராத்தில் இந்து மதவெறி பயங்கரவாதிகள் நடத்திய கலவரத்தில், ஏறத்தாழ 2,000க்கும் மேற்பட்ட அப்பாவி முசுலீம்கள், வக்கிரமான முறையில்தான் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர் என்பது வெட்ட வெளிச்சமான பிறகும், நீதிமன்றம் பில்கிஸ் பானு வழக்கை ஏதோ தனித்ததொரு சம்பவமாகப் பிரித்துப் பார்த்திருப்பதே நாணயக் கேடானது. மேலும், இந்து மதவெறியர்கள் ஒவ்வொரு கலவரத்திலும், ""கும்பலாகச் சென்று முசுலீம்களைத் தாக்குவது; முசுலீம் பெண்களைப் பாலியல் பலாத்காரப்படுத்துவது'' என்பதை ஒரு உத்தியாகவே செயல்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், ""இந்து மதவெறிக் கும்பல் எப்படிப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டாலும் அவர்களின் உயிரை நீதிமன்றம் பறித்து விடாது'' என்று உத்தரவாதமளிப்பதாகவே, இத்தீர்ப்பு அமைந்துள்ளது.

குண்டு வைக்கும் முசுலீம் பயங்கரவாதிகளுக்கு சர்வ சாதாரணமாகத் தூக்கு தண்டனை அளிக்கும் இந்திய நீதித்துறை, கும்பல் வன்முறையில் ஈடுபடும் இந்து மதவெறி பயங்கரவாதிகளுக்குத் தண்டனை அளிக்கும்போதோ, ""நிதானமாக'' நடந்து கொள்கிறது. இந்திய நீதிமன்றங்களிடம் காணப்படும் இந்தக் காவிப் பாசத்தை நிரூபிப்பதற்கு ஏராளமான தீர்ப்புகளை ஆதாரமாகக் காட்ட முடியும்.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு மருத்துவர்களும், ஐந்து போலீசு அதிகாரிகளும், ""தங்களின் கடமையை முறையாகச் செய்யாமல், நடந்த குற்றத்தை மூடி மறைத்து, இந்து மதவெறி பயங்கரவாதிகளுக்கு உதவியிருக்கிறார்கள்'' என நீதிமன்றமே ஒத்துக் கொண்ட பிறகும், ""அவர்களுக்கு இச்சதிச் செயலில் பங்கில்லை'' என்ற காரணத்தைக் ""கண்டுபிடித்து'' அவர்களை விடுதலை செய்திருக்கிறது. காவிமயமாகி வரும் இந்திய அதிகார வர்க்கத்திற்கு, இதைவிட இனிப்பான தீர்ப்பு வேறெதுவும் இருக்க முடியாது.

இவர்களின் விடுதலையை எதிர்த்து மோடி அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் எனக் கோரியிருக்கிறார் பில்கிஸ் பானு. இந்தக் கோரிக்கை மோடிக்கு மட்டுமல்ல, ""மோடியை இந்து மதவெறியன் அல்ல'' எனச் சப்பைக் கட்டு கட்டும் ""சோ'' போன்ற நயவஞ்சகப் பேர்வழிகளுக்கும் விடப்பட்டுள்ள சவால்.

···

தீர்ப்பு வெளிவந்த பிறகும், தான் தொடர்ந்து மிரட்டப்படுவதாகக் கூறியிருக்கும் பில்கிஸ் பானு, ""இத்தீர்ப்பு முசுலீம்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை முடிவுக்குக் கொண்டு வந்துவிடும் என நான் கருதவில்லை'' எனப் பத்திரிகைகளுக்கு பேட்டியளித்துள்ளார். தீர்ப்பு வெளிவந்த நாளன்று, ரந்திக்புர் கிராமத்தைச் சேர்ந்த 60 முசுலீம் குடும்பங்கள் தங்களின் பாதுகாப்பு கருதி, கிராமத்தைவிட்டு வெளியேறி விட்டனர்.

இந்து மதவெறியர்களைத் தெருவில் எதிர்த்து நின்று போராடக் கூடிய வலிமை கொண்ட ஜனநாயக இயக்கங்கள் இல்லையென்றால், நீதிமன்றத் தீர்ப்புகளால் முசுலீம்களைப் பாதுகாத்து விட முடியாது என்பதை அவர்கள் உணர்ந்திருப்பதையே இவ்வெளியேற்றம் எடுத்துக் காட்டுகிறது. உண்மை இப்படியிருக்க, முதலாளித்துவப் பத்திரிகைகளோ, இத்தீர்ப்பைக் காட்டி, ""சட்டத்தின் மூலமே இந்து மதவெறியர்களைத் தண்டித்து விட முடியும்'' என்ற மாயையைப் பரப்பி வருகின்றனர்.

குஜராத் படுகொலை தொடர்பான 1,600 வழக்குகள் கடந்த ஆறாண்டுகளாக விசாரணை நிலையிலேயே உள்ளன. பில்கிஸ் பானுவைப் போல, எத்தனை சாட்சிகளால், தலைமறைவாக வாழ்ந்து கொண்டு, இந்து மதவெறியர்களை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றுவிட முடியும்?

இரண்டாம் உலகப் போரில் யூதர்களுக்கு எதிராக நாஜிகள் நடத்திய இனப்படுகொலையை விசாரிக்க நூரம்பர்க் நீதிமன்றம் அமைக்கப்பட்டதைப் போல, குஜராத் படுகொலையை விசாரிக்கவும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும்; இப்படுகொலையை நடத்திய சங் பரிவார அமைப்புகள் அனைத்தும் தடை செய்யப்பட வேண்டும். இதன் மூலம் மட்டும்தான், பாதிக்கப்பட்ட முசுலீம்கள் அனைவருக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்ய முடியும்.

ஆனால், இந்தியக் "குடியரசோ' இதனைச் செய்ய மறுத்து வருகிறது. எனவே, பில்கிஸ் பானு போராடி பெற்ற இத்தீர்ப்பை, மதச்சார்பின்மைக்குக் கிடைத்த வெற்றியாக இந்திய ஆளும் கும்பல் கொண்டாடத் துடிப்பதை நாம் அனுமதிக்கக் கூடாது.

· அழகு

Wednesday, April 9, 2008

காவிமயமாகும் சி.பி.எம்.


காவிமயமாகும் சி.பி.எம்.

மிழ்நாட்டில் இருக்கும் சி.பி.எம். அணியினர் இனிமேல் இருமுடி கட்டிக் கொண்டு ""சாமியே சரணம் அய்யப்பா'' என கோசமிட்டபடியே சபரிமலை ஏறலாம். செய்வினை, பில்லிசூனியம் வைப்பதற்கென்றும் குறி சொல்வதற்கென்றும் தனிப்பிரிவை கட்சியே இனி அமைக்கலாம். எல்லாவற்றிற்கும் ""கேரளத்தைப் பார்'' என நமக்கு வழிகாட்டும் இவர்களது கேரள சி.பி.எம். கட்சி காட்டும் பாதை அப்படித்தான் உள்ளது.

சென்ற டிசம்பர் மாதம் 30ஆம் தேதியன்று சபரிமலையில் தேவசம் போர்டால் கட்டப்பட்ட மருத்துவமனையைத் திறந்து வைக்கச் சென்ற கேரள முதல்வர் அச்சுதானந்தன் 6 கி.மீ. வரை பாதயாத்திரையாகவே நடந்து மலை ஏறியுள்ளார்.

கால்நடையாக நடக்கும் பக்தர்களின் சிரமத்தை அறிந்து கொள்ளத்தான் "காம்ரேட்' நடந்து சென்றதாக இச்செயலை நியாயப்படுத்துகின்றனர். அவருக்கு அப்படியே தீக்குழி இறங்குவதன் வேதனையையும், வேப்பிலை கட்டி கையில் தீச்சட்டி எடுப்பதன் மகிமையையும் அறிந்து கொள்ளக் கோரி யாராவது ஆலோசனை சொன்னால் பொருத்தமாயிருக்கும். எப்படியும் அடுத்த ""பொலிட் பீரோ'' கூடும் முன்பே செய்து முடித்து விடுவார்.

மருத்துவமனையைத் திறக்கத்தான் சென்றார் என்றால், அதனை ஒரு ரிப்பன் வெட்டியே செய்திருக்க முடியும். ஆனாலும் ""கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை'' எனப் பாடாத குறையாக நடந்த தோழர், கேரள வகைக் குத்துவிளக்கை ஆன்மீக முறைப்படி ஏற்றிவைத்து, அய்யப்பன் கோவிலுக்கு வந்த முதல் "கம்யூனிஸ்ட்' தலைவராகி இருக்கிறார்.

அங்குள்ள அய்யப்பன் கோவிலில் வெடி வெடித்தும் வழிபட்டிருக்கிறார் "தோழர் அச்சு சுவாமி'. இவரை இனி "தோழர்' என்று அழைப்பதா, "குருசாமி தோழர்' என்று அழைப்பதா என்று சி.பி.எம்.காரர்கள் விவாதித்துக் கொண்டுள்ளார்களாம்!

சிறு குழந்தைகளைப் பார்ப்பன முறைப்படி பள்ளிக்கூடங்களில் சரஸ்வதி பூசை அன்று சேர்க்கும்போது, மந்திரங்கள் ஓதி குழந்தையின் நாக்கில் எழுதிடும் "அட்சர' பூசைச் சடங்கையும் ஏற்கெனவே நடத்தியவர்தான் அச்சுதானந்தன்.

இவர் மட்டும் என்றில்லை. இவருக்கு எதிராக செயல்படும் பினாரயி விஜயன் கோஷ்டியும் மூடநம்பிக்கையில் மூழ்கி முத்தெடுப்பவர்கள்தான். சென்ற ஆண்டு விஜயனின் குடும்பத்தினர் அவரது மகன் தலைமையில் இரகசியமாக "சத்ரு சம்கார' பூசை ஒன்றை அச்சுதானந்தனுக்கு எதிராக நடத்தி இருக்கின்றனர். தனக்கு வேண்டாத ஒருவனை இப்பூசை மூலம் சாகடித்து விட முடியும் என்ற பார்ப்பன நம்பிக்கை கேரளத்தில் நிலவுகிறது. அதற்காகத்தான் இந்த "சிவப்புப் பூசை'!

அச்சுதானந்த சுவாமியின் குருசாமியான மறைந்த இ.எம்.எஸ். நம்பூதிரிபாடோ, பழனிக்கு பாதயாத்திரை வந்தவர்தான். சோம்நாத் சாட்டர்ஜி உள்ளிட்ட முன்னணியினர் பலரும் பூணூல் பூசை நடத்தி பார்ப்பனியத்திற்கு பாதபூசை செய்பவர்கள்தான்.

கேரளத்தில் பத்தாண்டுகளுக்கு முன்னர் வரை ஓட்டுக்காக இந்துவெறி ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிராக சி.பி.எம். இளைஞர் அமைப்பினர் களத்தில் இறங்கித் திரும்பித் தாக்கிடும் அளவிற்கு செயல்பட்டிருக்கின்றனர். இன்று நிலைமை மாறி இருக்கின்றது. இன்றோ இந்து மதவெறியுடன் அனுசரித்துப் போகின்றது கட்சியின் தலைமை. அதனால்தான் இன்றைக்கு வெளிப்படையாகவே அச்சுதானந்தன் தனது பக்தியை ஊரறியச் செய்கிறார்.

சபரிமலை தந்திரி கண்டரேரு மோகனருவின் காமவெறிக் களியாட்டங்கள் புழுத்து நாறியபோதும் அவர் சம்பந்தப்பட்ட வழக்குகளை அப்படியே அமுக்கி விட்டது போலி கம்யூனிஸ்ட் அரசு. அவ்வளவு பக்தி! இப்போது பக்தி முற்றிப்போய், பக்தர்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாதென்று, சபரிமலைக் கோவில் அமைந்திருக்கும் பத்தனம்திட்டா மாவட்டத்தில் மண்டல பூசை நடைபெறும் இரண்டு மாதங்களுக்கு எவ்வித ஆர்ப்பாட்டமோ அரசியல் இயக்கங்களோ நடத்தமாட்டோம் என்று பா.ஜ.க.; காங்கிரசுக் கட்சியுடன் சேர்ந்து சி.பி.ஐ., சி.பி.எம். கட்சியினரும் மாவட்ட ஆட்சியரிடம் கையெழுத்துப் போட்டுக் கொடுத்து அதனை நடைமுறைப்படுத்தியும் உள்ளனர்.

மக்கள் போராட்டங்கள் அய்யப்பனுக்குச் சரணம். கட்சியோ தரகு முதலாளிகளுக்குச் சரணம். நல்ல முன்னேற்றம்தான்!

Tuesday, April 8, 2008

மனைவியைக் கொல்லத் துணியும் வரதட்சிணைக் கொடூரம்!

மனைவியைக் கொல்லத் துணியும் வரதட்சிணைக் கொடூரம்!

திருச்சியைச் சேர்ந்த ஜெனிதா என்ற இளம் பெண், அமெரிக்காவில் வரதட்சிணைக் கொடுமையால் வதைபட்டு, குற்றுயிராகத் திரும்பிய நிகழ்ச்சி தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

திருச்சியைச் சேர்ந்த ஜெனிதாவின் பெற்றோர், திருமணத் தகவல் மையம் மூலம் அறிமுகமான கிறிஸ்டி டேனியல் என்ற அமெரிக்காவில் வேலை செய்யும் கணினிப் பொறியாளருக்கு கடந்த 2006ஆம் ஆண்டில் ஜெனிதாவை மணமுடித்துக் கொடுத்தனர். 50 சவரன் நகையும் பல லட்சம் ரொக்கமாக வரதட்சிணையுடன் அனைத்துச் சீர்வரிசைகளும் செய்து கொடுத்தும்கூட இன்னும் கூடுதலாக வரதட்சிணை கேட்டு வந்த டேனியலும் அவரது பெற்றோரும், அமெரிக்காவில் தொடர்ந்து ஜெனிதாவைச் சித்திரவதை செய்துள்ளனர். கர்ப்பிணி என்றும் பாராமல் ஜெனிதாவைக் காரிலிருந்து தள்ளிக் கொல்லவும் இக்கும்பல் துணிந்துள்ளது. கைகால் எலும்பு முறிந்து நினைவு திரும்பாமல் மருத்துவமனையில் கிடந்த ஜெனிதாவை மீட்டு சென்னைக்குக் கொண்டு வந்து, அவரது பெற்றோர் சிகிச்சையளித்து வருகின்றனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த வரதட்சிணைக் கொடூரத்தை அறிந்த தேசிய மகளிர் ஆணையம், ஜெனிதாவையும் அவரது பெற்றோரையும் சந்தித்து வாக்குமூலம் பெற்றுள்ளது.

திருச்சியில் செயல்படும் பெண்கள் விடுதலை முன்னணி, ஜெனிதாவின் குடும்பத்தாரைச் சந்தித்து ஆறுதல் கூறி நம்பிக்கையூட்டியதோடு, வரதட்சிணைக்காக மனைவியையே கொல்லத் துணிந்த டேனியலையும் அவனது பெற்றோரையும் கைது செய்து, தமிழகத்துக்கு இழுத்து வந்து தூக்கிலிடக் கோரி, உடனடியாக சுவரொட்டிப் பிரச்சாரத்தை மேற்கொண்டது. ஏற்கெனவே பெண்களை ஆபாசப் படமெடுத்து குறுந்தகடாக்கி வெளியிட்ட காமவெறியன் லியாகத் அலியைத் தூக்கிலிடக் கோரிப் போராடிய இவ்வமைப்பினர், தற்போது அமெரிக்க மோகம் ஏற்படுத்தியுள்ள பயங்கரத்தை விளக்கி மேற்கொண்டுள்ள இப்பிரச்சாரம், உழைக்கும் மக்களிடம் உற்சாகமான வரவேற்பையும் பேராதரவையும் பெற்றுள்ளது.

பு.ஜ. செய்தியாளர், திருச்சி.

இந்தியக் 'குடியரசின்" இன ஒதுக்கல்


இந்தியக் 'குடியரசின்" இன ஒதுக்கல்

ங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரனுக்குப் பிணை வழங்க, விடுமுறை என்றும் பாராமல் ஞாயிறு அன்று நீதிமன்றம் கூடியது; சேதுக் கால்வாய் திட்டத்தை வலியுறுத்தி தி.மு.க அரசு அறிவித்த ""பந்த்''ஐத் தடை செய்யவும், நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை கூடியது.

இந்திய நீதிமன்றங்களின்/நீதிபதிகளின் இந்த முனைப்பு, எல்லா வழக்குகளுக்கும் கிடைப்பதில்லை; அதிலும் பாதிக்கப்பட்டோர் முசுலீம்களாகவோ, தாழ்த்தப்பட்டோராகவோ இருந்து விட்டால், நீதிமன்றங்களின் இயல்பான வேகம்கூடச் சுணங்கிப் போய்விடும். இப்படிப்பட்ட வழக்குகள் விசாரணை கட்டத்தைத் தாண்டவே பல ஆண்டுகள் ஆகிவிடுவதோடு, குற்றவாளிகளைத் தண்டனையில் இருந்து தப்பவைக்க அரசாங்கமே குழி பறிக்கும். நாடு தழுவிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வழக்குகள் கூட, இப்படிப்பட்ட அபாயத்தில்தான் சிக்கிக் கொண்டுள்ளன. பாபர் மசூதி இடிப்பு, மும்பய்க் கலவரம், குஐராத் இனப்படுகொலை, கோவை இந்துவெறி கலவரம் என நீளும் இந்தப் பட்டியலில், ""துலினா படுகொலை வழக்கும்'' சேர்ந்து விட்டது.

அரியானா மாநிலம், ஜஜ்ஜார் நகருக்கு அருகில் உள்ள துலினா புறக்காவல் நிலையம் முன்பாக, வீரேந்தர், தயாசந்த், டோடாராம், ராஜூ, கைலாஷ் ஆகிய ஐந்து தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் இந்து மதப் பயங்கரவாதிகளாலும், மேல்சாதி வெறியர்களாலும் அக்.15, 2002 அன்று அடித்தே கொல்லப்பட்டனர். ""அந்த ஐந்து இளைஞர்களும் பசு மாட்டைக் கொன்று, அதன் தோலை உரிப்பதாக'' வதந்தியைப் பரப்பி, அதன் மூலம் மேல்சாதி வெறியர்களைத் தூண்டிவிட்டு, ஆர்.எஸ்.எஸ். கும்பல்தான் இப்படுகொலையைச் செய்தது என்பதும் ஜஜ்ஜார் நகர போலீசார் இதற்குப் பக்கபலமாக இருந்துள்ளனர் என்பதும், இப்படுகொலை நடந்த ஓரிரு நாட்களிலேயே அம்பலமானது.

இப்படுகொலை பற்றி விசாரிக்க அரியானா மாநில அரசால் நியமிக்கப்பட்ட ஆர்.ஆர்.பன்ஸ்வால் கமிசனின் விசாரணையில், ""அந்த ஐந்து தாழ்த்தப்பட்ட இளைஞர்களுள், வீரேந்திரும், தயாசந்தும் தோல் வியாபாரம் செய்வதற்கு அரசு உரிமம் பெற்றவர்கள்; சம்பவம் நடந்த நாளன்று, அவர்கள் ஏற்கெனவே பதப்படுத்தி வைத்திருந்த தோல்களை விற்பதற்குச் சென்று கொண்டிருந்த பொழுதுதான் வழிமறித்துத் தாக்கப்பட்டனர். ஜஜ்ஜார் நகர போலீசார், ஆர்.எஸ்.எஸ். கும்பலின் கொலைக் குற்றத்திற்குச் சப்பைக் கட்டும் முகமாகத்தான், "சட்ட விரோதமாக மாட்டுத் தோலை உரித்ததாக' அந்த ஐந்து தாழ்த்தப்பட்டோர் மீதும் பொய் வழக்கு ஜோடித்தனர்'' என்ற உண்மைகள் மீண்டும் சந்தேகத்திடமின்றி நிருபிக்கப்பட்டன.

""தாழ்த்தப்பட்ட இளைஞர்களைத் தாக்கியவர்கள், போலீசாரைவிட அதிக எண்ணிக்கையில் இருந்ததால்தான், தங்களால் அவர்களைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது'' என விசாரணையின் பொழுது கூறி, போலீசார் தங்களைத் தற்காத்துக் கொள்ள முயன்றனர். போலீசாரின் இந்த வடிகட்டிய பொய்யை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்ட விசாரணை கமிஷன், ""துலினா புறக்காவல் நிலையம் முன்பாக ஒரு பெரும் கும்பல் திரண்டதையும்; அக்கும்பல் இந்து மதவெறியையும், மேல்சாதி வெறியையும் தூண்டிவிடும்படி முழக்கம் போட்டதையும் போலீசார் அனுமதித்தனர். இதன் முடிவில், தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் அடித்துக் கொல்லப்பட்டனர்'' எனக் குறிப்பிட்டுள்ளது.

""இப்பிரச்சினை மாலை 6.15க்குத் தொடங்கியிருக்கிறது. தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இரவு 9.45 மணிக்குத் தொடங்கி 10.15 வரை நடந்திருக்கிறது. இடைப்பட்ட நேரத்தில் அந்தக் கும்பலிடமிருந்து தாழ்த்தப்பட்ட இளைஞர்களைக் காப்பாற்ற போதிய அவகாசம் இருந்தும் கூட, போலீசார் அக்கும்பலுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பன்ஸ்வால் விசாரணைக் கமிசன் குறிப்பட்டுள்ளது.

சுருக்கமாகச் சொன்னால், விசுவ இந்து பரிசத், பஜ்ரங்தள் கும்பல் தலைமையில் நடந்த கொலைக்கு, அரியானா போலீசுத்துறை உடந்தையாக இருந்துள்ளது. ஆனாலும், ஜஜ்ஜார் நகரக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்துவரும் இந்த வழக்கில், எந்தவொரு போலீசுக்காரன் மீதும் கிரிமினல் குற்றம் சுமத்தப்படவில்லை. ஜஜ்ஜார் நகரின் துணை போலீசு கண்காணிப்பாளர், துலினா புறக்காவல் நிலையத்தின் துணை ஆய்வாளர் உள்ளிட்ட 13 போலீசு அதிகாரிகள் மீது துறைரீதியான விசாரணை என்ற கண்துடைப்பு நாடகம் நடத்தப்பட்டது. இவ்விசாரணையின் முடிவில், இந்த 13 போலீசு அதிகாரிகளுக்கும் இரண்டு சம்பள உயர்வை நிறுத்தி வைப்பது என்ற "மாபெரும் தண்டனை' அளிக்கப்பட்டது.

இப்படுகொலை, எதிர்பாராதவிதமாக திடீரென நடந்துவிட்ட சம்பவம் அல்ல. இச்சம்பவம் நடைபெறுவதற்கு முன்பாகவே, விசுவ இந்து பரிசத்தும் பஜ்ரங்தளும் ""முசுலீம்கள் பசுக்களைக் கொல்கிறார்கள்'' என்ற வதந்தியைப் பரப்பி, ஜஜ்ஜார் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல மதக்கலவரங்களை நடத்தி வந்தன. இப்படு கொலை நடந்த மறுநாளே, அவ்விரண்டு அமைப்புகளும், தாழ்த்தப்பட்ட இளைஞர்களைக் கொன்ற ""எழுச்சியுற்ற இந்துக்களை''ப் பாராட்டி, ஜஜ்ஜார் நகரில் ஊர்வலம் நடத்தின. ""மனித உயிரைவிட, பசுவின் உயிர் விலைமதிப்பற்றது என இந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன'' என்பதை மேற்கோளாகக் காட்டி, இப்படுகொலையை நியாயப்படுத்தினார், விசுவ இந்து பரிசத்தின் துணைத் தலைவர் ஆசார்யா கிரிராஜ் கிஷோர். ஆனாலும், இப்படுகொலை தொடர்பாக மட்டுமல்ல, தாழ்த்தப்பட்டவர்களின் மீதான வன்கொடுமையை நியாயப்படுத்தும் இந்த நடவடிக்கைகள் (ஊர்வலம், பத்திரிகை பேட்டி) தொடர்பாகக்கூட, எந்தவொரு ஆர்.எஸ்.எஸ்.காரன் மீதும் வழக்கு போடப்படவில்லை.

ஆர்.எஸ்.எஸ்.ஐப் போலவே முசுலீம் எதிர்ப்பு இந்து மதவெறியைப் பரப்புவதில் முனைப்பாகச் செயல்பட்டுவரும் ""ஆரிய சமாஜம்'' என்ற அமைப்பு, ஜஜ்ஜார் நகரில் பசு பராமரிப்பு மையமொன்றை நடத்தி வருகிறது. ""இம்மையத்தின் தலைவர் உள்ளிட்ட மூன்று பேர், தாழ்த்தப்பட்ட இளைஞர்களை அடித்துக் கொல்லும் படித் தூண்டிவிட்டதாக'' சில போலீசார் பன்ஸ்வால் கமிசனிடம் சாட்சியம் அளித்துள்ளனர். எனினும், இப்படுகொலையில் அவர்களின் பங்கு பற்றி எவ்வித விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை.

மாறாக, ஆரிய சமாஜம் இப்பசு மையத்தில் நடத்திய சாதி பஞ்சாயத்தில் கலந்துகொண்ட போலீசாரும் அரசு அதிகாரிகளும் இப்படுகொலை தொடர்பாக ""அப்பாவிகளை''க் கைது செய்ய மாட்டோம் என்ற வாக்குறுதியைக் கொடுத்தனர். இந்த வாக்குறுதிக்கு ஏற்ப, இப்படுகொலையில் நேரடித் தொடர்புடைய, அடையாளம் தெரிந்த 14 ""அப்பாவிகளின்'' பெயர்களை முதல் தகவல் அறிக்கையில்கூட சேர்க்காமல், போலீசார் காப்பாற்றிவிட்டனர்.

இப்படுகொலை நடந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டாலும், நீதிமன்றத்தில் இவ்வழக்கு இன்னும் விசாரணை கட்டத்தையே தாண்டவில்லை. கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கு வழக்கு விசாரணை எந்தக் கட்டத்தில் இருக்கிறது என்பதைத் தெரியப்படுத்துவதற்குக் கூட அரசு தயாராக இல்லை. இந்து மதவெறிக் கும்பலால் கொல்லப்பட்ட வீரேந்தரின் தந்தை ரத்தன் சிங், விசாரணை தொடர்பாக நீதிமன்றத்திற்கு வந்த பொழுது, "" வழக்கு முடிந்து விட்டதாக''க் கூறி, அவரைத் திருப்பி அனுப்பிவிட்டார், ஒரு போலீசு அதிகாரி.

இவ்வழக்கில் ""நீதி'' நிலை நாட்டப்படுகிறதோ இல்லையோ, ஜஜ்ஜார் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் ""அடிமாட்டைக் கூடக் கொல்லக் கூடாது'' என்ற இந்து மதவெறிக் கட்டளையைச் செயல்படுத்துவதில், ஆரிய சமாஜம் இப்படுகொலையைப் பயன்படுத்தி வெற்றி பெற்றிருக்கிறது.

···


துலினா படுகொலை நடப்பதற்கு 15 ஆண்டுகள் முன்பாக, உ.பி. மாநிலம் மீரட் நகருக்கு அருகில் உள்ள ஹாஷிம்புரா பகுதியைச் சேர்ந்த 42 முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்டனர். இது, இந்து மதவெறிக் கும்பலுக்கு ஆதரவாக, அரசு பயங்கரவாதிகள் நடத்திய படுகொலை.

பாபர் மசூதிக்குள் கள்ளத்தனமாக வைக்கப்பட்ட ராமன் சிலையை வழிபட, அக்கோயிலின் கதவை இந்துக்களுக்கு ராஜீவ் காந்தி திறந்துவிட்ட பிறகு, 1987 ஏப்ரல்மே மாதங்களில் உ.பி.யிலும், டெல்லியிலும் இந்துமுசுலீம் மோதல்கள் உச்சகட்டத்தை அடைந்தன. அந்தச் சமயத்தில், உ.பி. மாநில பிரதேச ஆயுதப் படையைச் சேர்ந்த போலீசார், ஹாஷிம்புரா பகுதியைச் சேர்ந்த 50 முசுலீம்களைத் துப்பாக்கி முனையில் கடத்திக் கொண்டு சென்றனர். முராத் நகருக்கு அருகில் உள்ள கங்கை கால்வாய்க்குக் கொண்டு செல்லப்பட்ட இவர்கள், நேருக்கு நேராக நிற்க வைக்கப்பட்டுச் சுடப்பட்டனர்; குண்டு பாய்ந்த 50 முசுலீம்களின் உடல்களும் கங்கை நதியில் தூக்கி வீசப்பட்டன. ஈவிரக்கமின்றி நடத்தப்பட்ட இந்தச் சட்டவிரோதத் துப்பாக்கிச் சூட்டில் 42 முசுலீம்கள் மாண்டு போனார்கள். 20 ஆண்டுகாலமாக நடந்துவரும் இந்தப் படுகொலை பற்றிய வழக்கு, வாய்தாவிசாரணை என்ற ஊறுகாய்ப் பானைக்குள் முடங்கிக் கிடக்கிறது.

இப்படுகொலையின் இருபதாம் ஆண்டு நினைவு தினத்தை யொட்டி, கொல்லப்பட்ட முசுலீம்களின் உறவினர்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், இப்படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 19 காக்கிச் சட்டை கிரிமினல்கள் பற்றி சில தகவல்களை அளிக்குமாறு, உ.பி. மாநில லக்னோ போலீசு அதிகாரிகளிடம் கோரியிருந்தனர். ஹாஷிம்புரா படுகொலையை விட, அப்படுகொலையில் தொடர்புடைய 19 போலீசார் பற்றி உ.பி. மாநில அரசு அளித்திருக்கும் தகவல்கள்தான் மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன.

· இப்படுகொலை அம்பலமானவுடனேயே, அது பற்றி ""சி.பி.சி.ஐ.டி'' விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இவ்விசாரணையில், 19 போலீசார் மீது குற்றம் சுமத்தப்பட்டது. எனினும், அந்தப் போலீசாரின் பணி குறித்த பதிவேட்டில் (Service Register), இக்கொலைக் குற்றம் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. மாறாக, படுகொலை நடந்த 1987ஆம் ஆண்டில், போலீசாரின் பணி குறித்து தயாரிக்கப்பட்ட வருடாந்திர இரகசிய அறிக்கையில், ""அவர்கள் அந்த ஆண்டில் (1987) மிகச் சிறப்பாகப் பணியாற்றியிருப்பதாக''க் குறிப்பிடப்பட்டுள்ளது.

· குற்றம் சுமத்தப்பட்ட இந்த 19 போலீசார் மீது துறைரீதியான விசாரணை நடத்தப்படவில்லை. எந்தவிதமான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

· இப்படுகொலை நடந்து எட்டு ஆண்டுகள் கழித்து 1995இல் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டவுடன், 19 போலீசாரும் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். எனினும், அடுத்த ஒரு ஆண்டுக்குள்ளாகவே குற்றவாளிகள் அனைவரும் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டு விட்டனர்.

""அவர்களின் சேவை உ.பி. அரசிற்குத் தேவைப்படுகிறதென்றும், பணி இடைநீக்கம் செய்யப்பட்டதால், போலீசாரின் குடும்பங்கள் வருமானமின்றி வறுமையில் தள்ளப்பட்டதைத் தடுக்கும் முகமாகத்தான் அவர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டதாகவும்'' காரணம் கூறப்பட்டுள்ளது.

இப்படுகொலையோடு தொடர்புடைய மற்ற போலீசு அதிகாரிகளைப் பாதுகாக்கும் பொருட்டு, இப்படுகொலை பற்றிய சி.பி.சி.ஐ.டி போலீசாரின் விசாரணை அறிக் கையை வெளியிட மறுத்து வருகிறது, உ.பி. அரசு. கொலைக் குற்றவாளிகளுக்கு இதற்கு மேல் ஒரு அரசினால் என்ன பாதுகாப்பு வழங்கிவிட முடியும்? இந்த நயவஞ்சகத்திற்குப் பதிலாக, உ.பி. அரசு வழக்கைத் தள்ளுபடி செய்திருந்தால், பாதிக்கப்பட்ட முசுலீம் குடும்பங்களுக்கு வழக்குச் செலவாவது மிச்சமாயிருக்கும்!

இந்திய நீதிமன்றங்களில் இலட்சக்கணக்கான வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. அவற்றுள், ஒன்றாக இந்த வழக்குகளை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. இந்தியக் "குடியரசில்', தாழ்த்தப்பட்டோரும், முசுலீம்களும் இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தப்பட்டு வருவதற்கான ஆதாரங்களில் ஒன்றுதான், இந்த வழக்குகள்!

· செல்வம்

ஜார்ஜ் புஷ் : 21-ஆம் நூற்றாண்டின் கோயபல்சு

ஜார்ஜ் புஷ் : 21-ஆம் நூற்றாண்டின் கோயபல்சு


"ஈரான் ஒரு ரவுடி நாடு அந்நாடு அணு ஆயுதத் தயாரிப்பில் இரகசியமாக ஈடுபட்டு வருகிறது; மூன்றாம் உலகப் போர் உருவாகுமானால், அதற்கு ஈரான்தான் காரணமாக இருக்க முடியும்'' இவையெல்லாம், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஈரான் மீது சுமத்தி வரும் குற்றச்சாட்டுகள். இதனைக் காரணமாகச் சொல்லியே, ஈரான் மீது ஒரு அதிரடி ஆக்கிரமிப்புத் தாக்குதலை நடத்துவதற்கும் அமெரிக்கா திட்டமிட்டு வந்தது.

மேற்காசியாவில் ஈராக்கையொட்டி அமைந்துள்ள ஈரான், அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளுள் ஒன்று. எனவே, இந்த ஒப்பந்தத்தை மீறி ஈரான் இரகசியமாக அணு ஆயுதத் தரப்பில் ஈடுபடுகிறதா என்பது குறித்து சர்வதேச அணு ஆயுத முகாமை விசாரணை நடத்தி வந்தது. எனினும், இந்த விசாரணை முடிவதற்கு முன்பாகவே, அமெரிக்காவின் நிர்பந்தம் காரணமாக அவ்விசாரணை பற்றிய விவரங்கள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடமும் கொடுக்கப்பட்டன. இதனையடுத்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சில வகை ஆயுதங்களை ஈரானுக்கு விற்கக் கூடாதென்றும்; ஈரானின் நான்காவது பெரிய வங்கியான செபாவின் சொத்துக்களை முடக்கியும் தடை உத்தரவு போட்டது. அமெரிக்க அரசு, தன் பங்குக்கு ஈரானைச் சேர்ந்த மெல்லி வங்கி, மெல்லட் வங்கி, சதேரத் வங்கி ஆகிய மூன்று வங்கிகளோடு வர்த்தகத் தொடர்பு வைத்துக் கொள்வதைத் தடை செய்தது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஈரானின் மீது இன்னும் அதிகமான பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என அமெரிக்கா நிர்பந்தம் கொடுத்துவரும் வேளையில், ஈரானின் அணுசக்தித் துறை குறித்து வெளி வந்துள்ள சர்வதேச அணுசக்தி முகாமையின் அறிக்கையும்; அமெரிக்காவின் பல்வேறு உளவு நிறுவனங்களும் இணைந்து வெளியிட்டுள்ள தேசிய உளவு மதிப்பீடு அறிக்கையும் ஜார்ஜ் புஷ் கும்பலின் அண்டப் புளுகையும், போர் வெறியையும் அம்பலப்படுத்தியுள்ளன.

""ஈரான் 1980களில் இரகசியமாக யுரேனியம் இறக்குமதி செய்தது. அந்த யுரேனியத்தைச் செறிவூட்டி, அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது; இதற்காகவே, நதான்ஸ் எனுமிடத்தில் அணு உலையொன்று இயங்கி வருகிறது; அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும் ஏவுகணைத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறது'' என அமெரிக்கா சுமத்திய ஒவ்வொரு குற்றச்சாட்டையும் ஆராய்ந்த சர்வதேச அணுசக்தி முகாமை, ""அணு சக்தியைப் பயன்படுத்துவது குறித்த ஈரானின் நடவடிக்கைகள் அனைத்தும் சர்வதேச அணுசக்தி முகாமையின் விதிகளுக்கு உட்பட்டு இருப்பதாக''த் தனது இடைக்கால அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

""ஈரான் யுரேனியத்தை 4 சதவீத அளவிற்கே செறிவூட்டும் தொழில்நுட்பத் திறனைப் பெற்றுள்ளது; இதை வைத்துக் கொண்டு, அணுகுண்டெல்லாம் தயாரித்துவிட முடியாது.''

""சர்வதேச அணுசக்தி முகாமைக்குத் தெரியாமல் 1980களில் ஈரான் யுரேனியம் இறக்குமதி செய்திருந்தாலும்; சில பரிசோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாலும், அவை இரகசியமாக அணு ஆயுதம் தயாரிக்கும் நோக்கங் கொண்டவையாகச் சொல்ல முடியாது.''

""நதான்ஸ் பகுதியில் இயங்கி வரும் யுரேனியத்தைச் செறிவூட்டும் அணு உலை, சர்வதேச அணுசக்தி முகாமையின் விதிகளுக்கு உட்பட்டு இயங்குவதாகவும்; பாகிஸ்தானில் இருந்து பெறப்பட்டுள்ள அணுஉலைக் கருவிகளைப் பயன்படுத்தி அணு ஆயுதம் தயாரிப்பது தொடர்பான பரிசோதனைகள் நடத்தப்படவில்லை'' என்றும் தனது இடைக்கால அறிக்கையில் சர்வதேச அணுசக்தி முகாமை குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க அரசின் உளவு நிறுவனங்கள் இணைந்து வெளியிட்டுள்ள தேசிய உளவு மதிப்பீட்டு அறிக்கையில், ""ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பது தொடர்பான முயற்சிகளை 2003ஆம் ஆண்டே நிறுத்தி விட்டது; அம்முயற்சிகளை இன்று வரை திரும்பத் தொடங்கவில்லை; 2015ஆம் ஆண்டுக்குள் ஈரான் அணுஆயுதம் தயாரிக்கும் திறனைப் பெற்றுவிடும் என்று கூற முடியாது; ஈரானின் நோக்கம் அணு ஆயுதம் தயாரிப்பதல்ல; யுரேனியத்தைச் செறிவூட்டும் திறனைப் பெறத்தான் அந்நாடு விரும்புகிறது'' எனக் குறிப்பிட்டுள்ளன.

சர்வதேச அணுசக்தி முகாமையின் இடைக்கால அறிக்கையைத் திட்டித் தீர்த்துள்ள ஜார்ஜ் புஷ் கும்பல், ""ஈரான், யுரேனியத்தைச் செறிவூட்டும் திறன் பெறுவதைத் தடை செய்ய வேண்டும்'' எனப் புது கட்டளை போட்டு வருகிறது. ""ஈரான் யுரேனியத்தைச் செறிவூட்டும் திறன் பெற்றுவிட்டால், பிறகு அணு குண்டுகளைத் தயாரிக்க தொடங்கி விடும்'' என இப்பொழுதே அமெரிக்கா தனது அழுகுணி ஆட்டத்தைத் தொடங்கி விட்டது.

அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நாடுகள், அணு சக்தியை சமூக (சிவில்) நோக்கங்களுக்குப் பயன்படுத்தவும்; அதற்கு ஏற்றாற் போன்று யுரேனியத்தைச் செறிவூட்டும் திறனைப் பெறவும் உரிமை பெற்றுள்ளன. எனவே அணுசக்தியைப் பயன்படுத்துவது தொடர்பான ஈரானின் நடவடிக்கைகளில் எவ்வித தீய உள்நோக்கத்தையும் காண முடியாது.

மேலும், அரபு நாடுகளை அச்சுறுத்தி வரும் யூதவெறி பிடித்த இசுரேலிடம் 200க்கும் மேற்பட்ட அணுஆயுதங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, ஈரான் தனது தற்காப்புக்காக அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டாலும், அதனை அநீதியானதாகவோ, உலக அமைதிக்கு எதிரானதாகவோ குற்றஞ் சுமத்த முடியாது. குறிப்பாக, ஈரானுக்கு எதிராக இக்குற்றச்சாட்டைக் கூறும் தார்மீக உரிமை அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் கிடையாது!

· அழகு


மன்மோகன் சிங் : ஜார்ஜ் புஷ்ஷின் கூஜா!

சர்வதேச அணுசக்தி முகாமையில், ஈரான் பிரச்சினை தொடர்பாக கடந்த பிப்.2006இல் நடந்த தேர்தலில், அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு அடிபணிந்து, ஈரானுக்கு எதிராக வாக்களித்தது இந்தியா; ஈரானிடமிருந்து எரிவாயுவை இறக்குமதி செய்யும் வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சு வார்த்தைகளிலும் இந்தியா கலந்து கொள்ள மறுத்து வருகிறது. இப்பொழுது உண்மை தெரிந்துவிட்ட நிலையிலும் கூட மன்மோகன் சிங், ஈரான் பிரச்சினையில் அமெரிக்காவிற்குச் சாமரம் வீசுவதை நிறுத்திக் கொள்ளவில்லை.

இந்தியப் பொருட்களை இறக்குமதி செய்யும் ஈரானிய நிறுவனங்கள், அப்பொருட்களின் மதிப்புக்கு நிகராகத் தரும் கடன் அனுமதிக் கடிதங்களை (ஃஞுttஞுணூ ணிஞூ ஞிணூஞுஞீடிt) அங்கீகரிக்க இந்திய அரசு வங்கி சமீப காலமாக மறுத்து வருகிறது. அமெரிக்க அரசு, மூன்று ஈரானிய வங்கிகளுடன் வர்த்தகம் செய்வதைத் தடை செய்த பிறகுதான், இந்திய அரசும் அதற்குப் பயந்து கொண்டு கடன் அனுமதிக் கடிதங்களை அங்கீகரிக்க மறுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது, தி ஹிந்து நாளிதழ் (நவம்பர் 30, பக்.12)

இந்தியத் தரகு முதலாளித்துவ நிறுவனமான எஸ்ஸார் குழுமம், ஈரானில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தொடங்கத் திட்டமிட்டிருந்தது. அமெரிக்காவின் மின்னாசொடா மாநிலத்தின் குடியரசு கட்சியைச் சேர்ந்த கவர்னர், ""எஸ்ஸார் நிறுவனம் அம்மாநிலத்தில் தொடங்கத் திட்டமிட்டிருந்த இரும்பு உருக்காலைக்கு அனுமதி மறுத்து விடுவோம்; அந்த ஆலைக்கு அரசு மானியம் தர மாட்டோம்'' என மிரட்டியதைத் தொடர்ந்து, எஸ்ஸார் குழுமம் ஈரானில்தான் தொடங்கத் திட்டமிட்டிருந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையைக் கைகழுவி விட்டது.

தமிழ்நாட்டில், கூடங்குளத்தில் அமைக்கப்படும் அணு மின்நிலையத்திற்காகக் கூடுதல் அணு உலைகளை ரசியாவிடம் இருந்து வாங்குவதற்குத் தயாரான ஒப்பந்தம், கையெழுத்துப் போட வேண்டிய கடைசி நிமிடத்தில் கைகழுவப்பட்டது. ""இந்த ஒப்பந்தத்தை ரசியா முறித்துக் கொள்ளவே முடியாது; கூடாது என்ற நிபந்தனையை இந்த ஒப்பந்தத்தில் சேர்க்கக் கோரியது, இந்தியா; ரசியா விரும்பாத இந்த நிபந்தனையை அமெரிக்கா சொல்லி இந்தியா முன் மொழிந்தது'' என ரசியா பகிரங்கமாகக் குற்றஞ்சுமத்தியுள்ளது.

அமெரிக்காவிற்கு வால் பிடிக்கும் இந்தப் போக்கை, நாம் அடிமைத்தனம் என்கிறோம்; மன்மோகன் சிங் கும்பலோ, நாடு வல்லரசு ஆவதற்கான பாதை என்கிறார்கள். வேட்டியை அவிழ்த்துதான் முண்டாசு கட்டிக் கொள்ள வேண்டுமா?

Monday, April 7, 2008

இந்தியா ஆறுகளுக்கு வந்தது பேராபத்து


இந்தியா ஆறுகளுக்கு வந்தது பேராபத்து

"இந்த ஆறு விற்பனைக்குத் தயார்! 1000 கோடி ரூபாய் வைத்துள்ள யாரும் இதனை விலைக்கு வாங்கிக் கொள்ளலாம்!'' மகாராஷ்டிர மாநிலத்தில் புனே மற்றும் சத்தாரா மாவட்டங்களின் வழியாக ஓடும் ""நீரா'' எனும் ஆறைத்தான் இப்படிக் கூவிக்கூவி விற்கிறது அம்மாநில அரசு. ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, கடைசியில் மனிதனையே கடித்த கதையாக முதலில் ""நீரா'' ஆற்றின் தண்ணீரை விற்க அம்மாநில அரசு கிளம்பியது; பிறகு, ஆற்றுப் படுகைகளோடு நீரை விற்கப் புறப்பட்டது; இப்போது ஆறு மற்றும் அதனால் பயன்பெறும் பாசனப் பகுதிகள் அனைத்தையும் சேர்த்து விற்கத் தயாராகி விட்டது.


மகாராஷ்டிர மாநில நீர்வளத்துறை அமைச்சரான ராம்ராஜி நாயக் நிம்பல்கர், கிருஷ்ணா நதிப் பள்ளத்தாக்கு வளர்ச்சிக் கழகத் திட்டத்தைச் செயல்படுத்த போதிய நிதி இல்லாததால், இந்த ஆறை தனியாருக்கு விற்க முடிவு செய்துள்ளதாகக் கூறுகிறார். இக்கழகம்தான் ""நீரா'' ஆறை தனது பொறுப்பில் வைத்துள்ளது. இந்த ஆற்றின் குறுக்கே தியோகர் எனுமிடத்தில் அணை கட்டப்பட்டு முடிவடையும் தறுவாயில் உள்ளது. இன்னும் 5% கட்டுமான வேலைகளே எஞ்சியுள்ளன. அணை முழுமையாக கட்டப்பட்ட பிறகு, 164 கி.மீ. நீளத்துக்கு கிளைக் கால்வாய் வெட்டி சோலாப்பூர், சங்லி மாவட்டங்களுக்கு ஆற்று நீரைக் கொண்டு செல்ல வேண்டும்.


இத்திட்டம் கடந்த 7 ஆண்டுகளாகியும் நிறைவேறாததற்கு நிதிப் பற்றாக்குறையே காரணம் என்று கூறும் அமைச்சர், வறண்ட இப்பகுதிவாழ் மக்களுக்குத் தண்ணீர் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ""நீரா'' ஆறை தனியாருக்கு விற்க முடிவு செய்துள்ளதாகக் கூறுகிறார். இது மட்டுமின்றி, இந்த ஆறை ரூ. 1000 கோடி கொடுத்து விலைக்கு வாங்கினால் இந்த ஆற்றின் மீது கட்டப்பட்டு முடிவடையும் நிலையிலுள்ள தியோகர் அணையும் ஆயக்கட்டு பகுதிகளும் இலவச இணைப்பாகத் தரப்படும் என்று அறிவித்துள்ளார்.


ஏற்கெனவே கடந்த 2002ஆம் ஆண்டில் சட்டிஸ்கர் மாநிலத்தில், சியோனாத் ஆறு 23 கி.மீ தொலைவுக்கு தனியாருக்கு விற்கப்பட்டது. இப்போது மகாராஷ்டிராவின் ""நீரா'' ஆறு ஒட்டுமொத்தமாக விலை பேசப்படுகிறது. ""ஆற்றை தனியாருக்கு விற்று விட்டால், அவர்கள் அணையின் எஞ்சிய பகுதியைக் கட்டி முடித்து, கால்வாய்களையும் கட்டி வறண்ட பகுதிகளிலுள்ள விவசாயிகளுக்கு குறைந்த விலையில் தண்ணீரை விநியோகிப்பார்கள். விவசாயிகளின் நீண்டகாலக் கனவு நிறைவேறி, மகாராஷ்டிரா மாநிலம் தொழிலிலும் விவசாயத்திலும் மேலும் வளர்ச்சி பெறும்'' என்று நியாயவாதம் பேசுகிறது மகாராஷ்டிரா அரசு.


இந்த ஆறை விலை கொடுத்து வாங்கும் ஒரு தனியார் நிறுவனம், இந்த ஆறு பாய்ந்தோடும் 208 கி.மீ நீள பகுதியையும், இந்த ஆற்றின் கிளைக் கால்வாய்கள் மூலம் பயனடையப் போகும் புனே, சத்தாரா மாவட்டங்களின் 43,000 ஹெக்டேர் விளைநிலங்களையும், அடுத்துள்ள சோனாபூர் சங்லி மாவட்ட குடிநீர் விநியோகத்தையும், இவ்வட்டாரத்திலுள்ள ஆலைகளுக்கான தண்ணீர் விநியோகத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடும். மேலும், ஆற்றை வாங்கும் நிறுவனம் தான்போட்ட முதலைத் திரும்ப எடுக்கவும் இலாபமடையவும் எந்த வகையிலான தொழிலையும் தொடங்கலாம் என்று அரசு தாராள அனுமதியளித்துள்து. இதுதவிர இந்த ஆறு மற்றும் கிளைக் கால்வாய்கள் மூலம் பாசன வசதி பெறும் பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் விளைநிலங்களில் ஒப்பந்த விவசாயத்தைச் செயல்படுத்துவதன் மூலம் இலாபத்தை உறுதி செய்து கொள்ளவும் பச்சைக் கொடி காட்டப்பட்டுள்ளது.


ஏற்கெனவே வறண்ட பிரதேசமான இம்மாவட்டங்களில் விவசாயத்திற்காகவும் குடிநீருக்காகவுமே ""நீரா'' ஆற்றில் தியோகர் அணைகட்டுத் திட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால், இப்போது அணை கட்ட போதிய நிதியில்லை என்பதையே சாக்காக வைத்து ஆற்றையே விற்கிறது மகாராஷ்டிர அரசு. விலை பேசப்படுவது ஆறு அல்ல; அந்த ஆற்றை நம்பியுள்ள பல லட்சக்கணக்கான உழைக்கும் மக்களின் வாழ்வுரிமை!


நீரா ஆறு தனியார் நிறுவனத்தின் சொத்தாகி விட்டால், இப்பகுதிவாழ் விவசாயிகள் பாசன நீருக்காக அந்நிறுவனத்துக்கு மிக அதிக கட்டணத்தைக் கொட்டியழ வேண்டும். அப்படியொரு விவசாயியால் கட்டணத்தைச் செலுத்த முடியவில்லை என்றால், தனது நிலத்தை அந்நிறுவனத்திடம் ஒப்பந்த விவசாயத்துக்குக் கையளித்து விட்டு, தனது சொந்த நிலத்திலேயே அந்நிறுவனத்தின் கூலி விவசாயியாக வேலை செய்ய நேரிடும். நிலத்தை இழந்து வாழ்வை இழந்து குடும்பத்தோடு நாடோடியாக அலைய நேரிடும்.


விவசாயிகள் மட்டுமல்ல, இதர பிரிவு உழைக்கும் மக்களும் குடிநீருக்காக அதிக கட்டணம் செலுத்த நேரிடும். கோக்பெப்சி நிறுவனங்களைப் போல, ஆற்றுநீரைக் குடுவையில் அடைத்து ஒரு லிட்டர் 12 ரூபாய் என்று இப்பகுதிவாழ் மக்களிடம் அந்நிறுவனம் விற்றாலும், அதை யாரும் தட்டிக் கேட்க முடியாது. ஏன், ஆற்று நீர் அனைத்தையும் ஆலைப் பயன்பாட்டுக்குத் திருப்பிவிட்டு, விவசாயத்துக்கோ, குடிநீருக்கோ ஆற்று நீரை அந்நிறுவனம் தர மறுத்தாலும் இக்கொடுஞ்செயலை எதிர்த்து வாய் திறக்கவும் முடியாது. இந்த ஆற்றில் இப்பகுதிவாழ் மக்கள் கைகால்களைக் கழுவவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ, கால்நடைகளுக்குத் தண்ணீர் காட்டவோ கூட முடியாது.


கடந்த நவம்பர் 17ஆம் தேதியன்று மகாராஷ்டிரா அரசு நீரா ஆற்றை விற்கப் போவதாக அறிவித்தவுடன், நாக்கில் எச்சில் ஊற 5 பெரும் நிறுவனங்கள் ஆற்றை விலைக்கு வாங்க ஆர்வம் காட்டியுள்ளன. யார் இந்த முதலாளிகள்? இம்முதலாளிகளுக்கு பாசனத்திலோ, விவசாயத்திலோ முன் அனுபவம் உள்ளதா? ""அப்படியெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது; முன் அனுபவம் தேவை என்பதை நிபந்தனையாக்கினால் அப்புறம் ஆற்றை விற்க முடியாமல் போய்விடும்'' என்கிறது மகாராஷ்டிர அரசு. மராமத்து, அணைக்கட்டு பராமரிப்பு, வெள்ளக் கட்டுப்பாடு, பாசனக் கால்வாய் பராமரிப்பு, தூர்வாருதல், மீன்வளப் பராமரிப்பு, குடிநீர் சுத்திகரிப்பு விநியோகம் முதலான எதிலுமே பயிற்சியோ, அனுபவமோ இல்லாத ஒரு நிறுவனம், பாசனத்தையும் குடிநீர் விநியோகத்தையும் கட்டுப்படுத்தக் கிளம்பினால் அதன் விளைவு என்னவாகும்? அதிலும் 1000 கோடி ரூபாயை மடியில் கட்டிக் கொண்டு சில திடீர் முதலாளிகள் நீரா ஆற்றை விலை பேச கிளம்பியுள்ளார்கள் என்றால், அவர்களுக்கு எப்படி இவ்வளவு பணம் கிடைத்தது?


இவையெல்லாம் ஏதோ சிதம்பர ரகசியம் அல்ல. உண்மையில் உலக வங்கிதான் இத்தனியார்மயத் திட்டத்தை பின்னணியில் இருந்து கொண்டு இயக்குகிறது. ""நீர்வளத்துறையை மேம்படுத்துவது'' என்ற பெயரில் மகாராஷ்டிர அரசுக்கு ஏறத்தாழ 1300 கோடி ரூபாயை உலகவங்கி கடனாக அளித்துள்ளது. அதன் உத்தரவுப்படியே நீரா ஆறு தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறது; ஏகாதிபத்திய நிதிநிறுவனங்களிடம் கடன் உத்திரவாதப் பத்திரம் பெறப் போவதாகக் கூறி, சில திடீர் முதலாளிகள் நீரா ஆறை விலைக்கு வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.


அரசாங்கப் பணிகளில், அதுவும் நீர்வளத் துறை சார்ந்த, தியோகர் அணைக்கட்டுத் திட்டப் பணிகளில் ஈடுபடும் உயரதிகாரிகள் மட்டுமே உலகவங்கியின் இந்தக் கடனுதவித் திட்டத்தின் விவரங்களைப் பார்வையிட முடியும் என்று தடை விதிக்கப்பட்டுள்ளதிலிருந்தே, உலக வங்கியின் ஆதிக்கத்தை எவரும் புரிந்து கொள்ள முடியும். தகவல் அறியும் சட்டப்படி, நாட்டு மக்களோ, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களோ, அமைச்சர்களோ கூட இத்திட்டத்தின் விவரங்களை முழுமையாக அறிய முடியாது.


மகாராஷ்டிராவில் நீரா ஆறு தனியாருக்கு விற்கப்படும் சூழலில், தமிழகத்தில் கடந்த அக்டோபர் 1ந்தேதி முதலாக ""தமிழ்நாடு குளங்கள் பாதுகாப்பு மற்றும் நீர்நிலை ஆக்கிரமிப்புத் தடைச் சட்டம்'' நடைமுறைக்கு வந்துள்ளது. தமிழகமெங்கும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பை அகற்றுதல் என்ற பெயரில் ஏரிகுளங்களின் ஓரங்களில் ஏழை மக்களால் பயிரிடப்பட்டிருந்த காய்கறி, வெள்ளரி, கீரை முதலானவை புல்டோசர் பொக்லைன்கள் மூலம் அழிக்கப்பட்டுள்ளன. ஊருணிகள் குளங்களில் உள்ளூர் மக்கள் மீன் பிடித்து வந்த பாரம்பரிய உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் ஏரிகுளங்களின் நீர்வளத்தை மேம்படுத்த உலக வங்கி ரூ. 2500 கோடிகளைக் கடனாகக் கொடுத்துள்ளது. மகாராஷ்டிரா வழியில் தமிழகத்தின் ஏரிகுளங்களும் தனியாருக்கு விலை பேசப்படுவதற்கான சதி வேகமாக அரங்கேறி வருகிறது.


தண்ணீர் என்பது இயற்கையின் கொடை; மனித இனத்தின் அடிப்படை ஆதாரம்; பூவுலகின் உயிர்நாடியான தண்ணீர் யாருக்கும் சொந்தமல்ல. ஆனால் தண்ணீரை விற்பனைப் பண்டமாக மாற்றி வருகிறது, ஏகாதிபத்தியங்களின் கைக்கருவியான உலக வங்கி. நேற்று வரை கோக்பெப்சிக்காக நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டது. இன்று ஏகாதிபத்தியங்களின் மறுகாலனிய தாகத்திற்காக ஆறுகளும் உறிஞ்சப்படுகின்றன.

· அழகு

Sunday, April 6, 2008

சாதிவெறியர்களைக் காக்கும் போலீசு


சாதிவெறியர்களைக் காக்கும் போலீசு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம் பெரியகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர், மலைச்சாமி. தாழ்த்தப்பட்டவரான இம்முதியவர் கடந்த அக்டோபர் மாதம் 10ஆம் தேதியன்று இரவு 7.30 மணியளவில் சிவகங்கை பேருந்து நிலையத்திலிருந்து திருப்புவனம் செல்லும் பி.எல்.எஸ். எனும் தனியார் பேருந்தில் பெரியகோட்டை செல்வதற்காக ஏறி அமர்ந்துள்ளார். அதே பேருந்தில் எறும்புக்குடியைச் சேர்ந்த தி.மு.க. மாவட்டப் பிரதிநிதியான பாண்டி என்பவரும் அவரது தம்பி ஜெயராமனும் கூட்ட நெரிசல் காரணமாக நின்று கொண்டு பயணித்தனர். இவர்கள் சேர்வை சாதியைச் சேர்ந்தவர்கள். கந்துவட்டி கட்டப் பஞ்சாயத்து நடத்திவரும் சாதி வெறியர்கள்.

தாழ்த்தப்பட்டவரான மலைச்சாமி உட்கார்ந்து கொண்டு பயணம் செய்ய, தாங்கள் நின்று கொண்டு பயணம் செய்வதா என்று சாதித்திமிர் தலைக்கேறிய இவ்விருவரும், ""ஏண்டா... நாயே! நாங்க நிற்கிறோம்; நீ உட்கார்ந்துகிட்டு வர்றே!'' என்று ஆபாசமாகத் திட்டியதோடு, அம்முதியவரை பேருந்திலேயே செருப்பால் அடித்துள்ளனர். அடி தாங்க முடியாமல் அவர்கள் பிடியிலிருந்து தப்பி அடுத்த நிறுத்தத்தில் அம்முதியவர் பேருந்திலிருந்து இறங்கி விட்டார். இறங்கியவரைப் பிடித்து அடித்து, ""ஏறுடா பஸ்சுக்குள்ள'' என்று இழுத்து உள்ளே போட்டு அடித்துள்ளனர். இக்கொடுஞ்செயலைக் கண்டு ஓட்டுநர் பேருந்தை நிறுத்திவிட, ""வண்டியை எடுடா; இல்லைன்னா உன்னையும் கொன்னுடுவேன்'' என்று இச்சாதிவெறியர்கள் மிரட்டியதால், அவரும் பயந்து பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார். இச்சாதிவெறியர்களின் ஊரான எறும்புக்குடி செல்லும் வரை, பேருந்தில் வைத்து அம்முதியவரை அவ்விருவரும் காட்டுத்தனமாகச் செருப்பால் அடித்துள்ளனர்.

காயமடைந்த மலைச்சாமி, அன்றிரவே தனது தம்பியை உடனழைத்துக் கொண்டு மானாமதுரை சிப்காட் போலீசு நிலையத்தில் புகார் மனு கொடுத்தார். மானாமதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சாதிவெறியர்களின் தாக்குதலால் கண்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்ததால் மருத்துவர்களால் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளதை அறிந்த பாண்டி, கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க தனது ஓட்டுக்கட்சி செல்வாக்கைப் பயன்படுத்தி, அரசு மருத்துவரைக் கொண்டு தனக்கு மூல வியாதி உள்ளதாகக் காட்டி, சிவகங்கை அரசு மருத்துவம னையில் படுத்துக் கொண்டார். அவரது தம்பி ஜெயராமனோ போலீசு அனுமதியோடு ஊரிலேயே ஒளிந்து கொண்டு மலைச்சாமி குடும்பத்தை மிரட்டி வந்தார். போலீசோ அவர் தலைமறைவாகி விட்டதாகப் புளுகியது. இச்சாதிவெறியர்கள் ஊருக்குள் தமது சாதியப் பலத்தைக் காட்டி மலைச்சாமியை அச்சுறுத்தி வந்தனர். பீதியடைந்த மலைச்சாமி, தனது உயிருக்கு ஏற்பட்டுள்ள பேராபத்திலிருந்து மீள சிவகங்கை மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தில் தஞ்சமடைந்து புகார் கொடுத்தார்.

மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தினர் சாதிவெறியர்களின் வன்கொடுமைக்கு எதிராகவும், புகார் கொடுத்தும் குற்றவாளிகளைக் கைது செய்யாத போலீசையும், உடந்தையாக செயல்படும் அரசு மருத்துவரையும் கண்டித்துப் பிரசுரம் சுவரொட்டிகள் மூலம் பிரச்சாரம் செய்ததோடு, 18.10.07 அன்று கண்டன ஆர்ப்பாட்டத்துக்கும் ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், சாதிவெறியர்களின் கூட்டாளியாகச் செயல்படும் போலீசோ, மூவேந்தர் முன்னேற்றக் கழகம் எனும் அமைப்பு சாதிவெறியர்களுக்கு ஆதரவாகச் சுவரொட்டி வெளியிட்டு எதிர்ப் பிரச்சாரம் செய்வதைக் காட்டி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்தது.

5.11.07 அன்று மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்த போலீசிடம் மீண்டும் விண்ணப்பித்து, மதுரை உயர்நீதி மன்றத்திலும் மனித உரிமை பாதுகாப்பு மையம் மனு செய்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்காக வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரத்தில் ""ஆதிக்க சாதிவெறி நாய்கள்'' என்ற வாசகம் சாதிக் கலவரத்தைத் தூண்டுவதாக உள்ளதெனக் கூறிப் புதிய விண்ணப்பம் தருமாறு உயர்நீதி மன்றத்தில் போலீசு எதிர் நடவடிக்கையில் இறங்கியது. மீண்டும் புதிய விண்ணப்பம் கொடுத்தபோதிலும், இந்த ஆர்ப்பாட்டம் குறிப்பிட்ட சாதியினரை இழிவுபடுத்துவதாக உள்ளதெனக் கூறி மாவட்ட போலீசு கண்காணிப்பாளர் ஆர்ப்பாட்டத்துக்குத் தடை விதித்தார்.

4.11.07 அன்று இத்தடையுத்தரவு வெளியானதும், சாதிவெறியர்களைப் பாதுகாக்கும் போலீசின் மனித உரிமை மீறல் அடாவடித்தனத்தை எதிர்த்து, சிவகங்கை யூனியன் ஆபீசிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்ட ம.உ.பா. மையத்தின் முன்னணியாளர்களும் ஜனநாயக சக்திகளும் முழக்கமிட்டபடியே பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த முற்பட்டனர். தடையை மீறி ஊர்வலம் நடத்தியதாக மதுரை உயர்நீதி மன்ற வழக்குரைஞர்கள் உள்ளிட்ட 130 பேரைக் கைது செய்த போலீசு, பின்னர் விடுவித்தது.

மனித உரிமைப் போராளிகளைக் கைது செய்த இந்த விவகாரம், சாதிவெறியர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் போலீசின் யோக்கியதையை இப்பகுதியெங்கும் சந்தி சிரிக்க வைத்தது. சாதிவெறியர்களுக்கு எதிராகத் தொடர்ந்து பிரச்சார இயக்கத்தை மேற்கொண்ட ம.உ.பா. மையம், நீதிமன்ற படிக்கட்டுகளில் பலமுறை ஏறி இறங்கி, 28.11.07 அன்று சிவகங்கை அரண்மனை வாயில் முன்பு இதர அமைப்புகள், ஜனநாயக சக்திகளை அணிதிரட்டி எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. விண்ணதிரும் முழக்கங்களுடன் 300க்கும் மேற்பட்ட உழைக்கும் மக்களும் வழக்குரைஞர்களும் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டம் சாதிவெறி கும்பலையும் அதற்கு ஆதரவாக நிற்கும் அதிகார வர்க்க போலீசு கும்பலையும் திரை கிழித்துக் காட்டுவதாக அமைந்தது. சாதிவெறிக்கு எதிரான போராட்டம், சாதிமத வெறியர்களைப் பாதுகாக்கும் சட்டம்நீதிபோலீசுஅதிகாரவர்க்கம் அடங்கிய இன்றைய அரசியலமைப்பு முறைக்கு எதிரான போராட்டமாக அமைய வேண்டிய அவசியத்தை இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் உணர்த்திய மனித உரிமை பாதுகாப்பு மையத்தினர், மலைச்சாமி மீது வன்கொடுமையை ஏவிய சாதிவெறியர்களைக் கைது செய்து தண்டிக்கும் வரை போராட்டம் ஓயாது என்று உறுதியேற்றுள்ளனர்.

பு.ஜ. செய்தியாளர்.

போராட்டப் பாதையில் வாகன ஓட்டுநர்கள்


போராட்டப் பாதையில் வாகன ஓட்டுநர்கள்

மாணவர்களிடம் பல லட்ச ரூபாய்களைக் கறந்து கல்வி வியாபாரம் நடத்தும் ஜேப்பியார், எஸ்.ஆர்.எம். மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகளின் முதலாளி பச்சைமுத்து, ஓம்சக்தி டிராவல்ஸ் முதலாளி சரவணன் ஆகியோரின் சட்டவிரோத நடவடிக்கைகளால் இவர்களது நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களும் வாகன ஓட்டுநர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர்களை அடிமைகளாக நடத்தி வரும் இம்முதலாளிகள், சட்டப்படி தொழிலாளர்களுக்குத் தரவேண்டிய சலுகைகள் உரிமைகள் அனைத்தையும் மறுத்துக் கொக்கரிக்கிறார்கள்.

சேமநல நிதியை தொழிலாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்து அதை அரசுக்குச் செலுத்தாமல் கொள்ளையடிப்பது, தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவ வசதிகளைச் செய்துதர மறுப்பது, சட்டப்படி போனசு தராமல் ஏய்ப்பது, 8 மணி நேரத்திற்குப் பதிலாக 1012 மணி நேரம் கட்டாயமாக வேலை வாங்குவது, கூடுதல் உழைப்பு நேரத்திற்கேற்ப கூடுதல் சம்பளம் தர மறுப்பது என இம்முதலாளிகளின் அட்டூழியங்கள் கேள்விமுறையின்றித் தொடர்கின்றன. குறிப்பாக, இந்நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் தமது உரிமைகளுக்காக ""புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் சங்க''த்தைத் தொடங்கிப் போராடியதும், ஆத்திரமடைந்த இம்முதலாளிகள் பழிவாங்குதலையும் அடக்குமுறைகளையும் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

தொழிற்சங்கம் தொடங்கியதற்காக, வாகன ஓட்டுநர்களுக்குச் சட்டப்படி உணவு தருவதை ஜேப்பியார் கல்லூரி நிர்வாகம் நிறுத்திவிட்டது. ஜேப்பியார் ஸ்டீல் நிறுவனம் 30 தொழிலாளர்களைச் சட்டவிரோதமாக வேலை நீக்கம் செய்துள்ளது. எஸ்.ஆர்.எம். கல்லூரி நிர்வாகமோ சங்க நிர்வாகிகள் அனைவரையும் தனது கல்லூரியே இல்லாத உ.பி. மாநிலத்துக்குத் தூக்கியடித்துள்ளது. தொழிற்சங்கத்தைக் கலைத்து விடுமாறு இந்நிறுவனங்களின் தொழிலாளர்கள் மிரட்டப்படுவதோடு, சித்திரவதை செய்யப்படுகிறார்கள். போலீசோ, இம்முதலாளிகள் விட்டெறியும் எலும்புத் துண்டுகளுக்கு விசுவாசமாக வாலாட்டுகிறது.

இம்முதலாளிகளின் சட்டவிரோத அடக்குமுறைகளுக்கும், பழிவாங்குதலுக்கும் எதிராகக் குமுறிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் கடந்த 25.11.07 அன்று சென்னை சைதை பனகல் மாளிகை அருகே, பொதுச் செயலர் வெற்றிவேல் செழியன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். சட்டவிரோதக் கொள்ளையர்களான இம்முதலாளிகளைக் கைது செய்து தண்டிக்கக் கோரியும், சட்டப்படி தொழிலாளர் உரிமைகளை நிலைநாட்டக்கோரியும் செங்கொடி ஏந்தி 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்தோடு அணிதிரண்டு நடத்திய இந்த எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தில் சங்க முன்னோடிகளும் தோழமை அமைப்பின் பிரதிநிதிகளும் கண்டன உரையாற்றினர். கல்வி வள்ளல்களாகவும் கனதனவான்களாகவும் உலாவரும் இக்கொடிய முதலாளிகளின் முகத்திரையைக் கிழித்து, வர்க்க உணர்வோடு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம், உழைக்கும் மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

— பு.ஜ. செய்தியாளர்கள்