தமிழ் அரங்கம்

Saturday, April 28, 2007

பட்ஜெட் :ஆடு நனைகிறதென்று ஓநாய்கள் அழுகின்றன

பட்ஜெட் :
ஆடு நனைகிறதென்று ஓநாய்கள் அழுகின்றன


ஞ்சாப், உத்தர்கண்ட் சட்டசபைத் தேர்தல்களில் வாங்கிய அடி, காங்கிரசு கட்சியை விலைவாசி உயர்வைப் பற்றிப் பேச வைத்திருக்கிறது. அதனால், சாமான்ய மக்களின் நலனை மனதில் கொண்டு, 2007/08 ஆண்டுக்கான மைய அரசின் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி கூறி வருகிறது.


மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.5%ஐத் தாண்டி வளர்ந்து "சாதனை' படைத்து விட்டாலும், விவசாய வளர்ச்சி பின்தங்கி விட்டது. விவசாய உற்பத்தித் தேங்கிப் போனதால், உணவுப் பொருள் விலையெல்லாம் உயர்ந்து விட்டது. எனவே, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும்; விவசாயத்தையும், கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் இந்த பட்ஜெட்டில் பல திட்டங்கள் போடப்பட்டுள்ளதாகக் காங்கிரசுக் கட்சிப் பீற்றிக் கொள்கிறது.


விவசாயிகளுக்கு பொதுத்துறை வங்கிகள் மூலம் வழங்கும் கடன் 2.25 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது; கடந்த ஆண்டைவிட மேலும் 50 இலட்சம் விவசாயிகளுக்குக் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது; நீர்ப்பாசனத் திட்டங்களை மேம்படுத்த சிறப்புத் திட்டம் தயாரிக்கப்பட்டு, அதற்கு 16,979 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்பன உள்ளிட்டு விவசாய வளர்ச்சிக்கு 18 அம்சத் திட்டமொன்றை ப.சிதம்பரம் பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறார். இதன் மூலம் விவசாய உற்பத்திப் பெருகி விலைவாசி குறையும்; விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் நின்றுவிடும் என ஆரூடம் கூறுகிறார்.


கடந்த ஆண்டு பட்ஜெட்டில் கூட, பொதுத்துறை வங்கிகள் மூலம் 1,90,000 கோடி ரூபாய் விவசாயக் கடனாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எனினும், கடந்த பட்ஜெட்டுக்கும், இந்த பட்ஜெட்டுக்கும் இடைபட்ட இந்த ஓராண்டில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போனதை இந்த வங்கிக் கடன் தடுத்து நிறுத்திவிடவில்லை.


விதை, உரம், பூச்சி மருந்து ஆகிய இடுபொருட்களின் விலைகள் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றித் தாறுமாறாக உயர்ந்துகொண்டே போவதால், உற்பத்திச் செலவு அதிகமாகிக் கொண்டே போகிறது. எவ்வளவுதான் நன்றாக விளைந்தாலும், இந்த உற்பத்திச் செலவை ஈடுகட்டும் விலை விவசாயிகளுக்குக் கிடைப்பதில்லை. விவசாயிகள் விவசாயக் கூட்டுறவு வங்கியில் வாங்கும் கடனைக் கூட அடைக்க முடியாமல் முழி பிதுங்கி நிற்பதற்கு, இதுதான் அடிப்படை. எனவே, விவசாய விளைபொருட்களுக்குக் கட்டுப்படியாகக் கூடிய விலை கிடைப்பதை உத்தரவாதப்படுத்தாமல், விவசாயக் கடனை அதிகரிப்பது வங்கிக் கடன் பெறும் விவசாயிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது என்பதெல்லாம் புண்ணுக்குப் புணுகு தடவுவதாகத்தான் முடியும்.


இந்திய விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்வதற்காக, ""விவசாயிகள் தேசிய கமிசன்'' என்ற அதிகாரவர்க்க கமிட்டியை கடந்த ஆண்டே மைய அரசு அமைத்தது. ஆடு நனையுதென்று ஓநாய் அழுத கதையாக, இந்த கமிட்டியின் தலைவராக அமெரிக்கக் கைக்கூலி (வேளாண் விஞ்ஞானி) எம்.எஸ். சுவாமிநாதன் நியமிக்கப்பட்டார். கந்துவட்டிக் கடன் தொல்லை, விளைபொருட்களின் விலை வீழ்ச்சி ஆகிய பிரச்சினைகளை மட்டுமின்றி, அந்நிய நாடுகளில் இருந்து விவசாய விளைபொருட்களைத் தாராளமாக இறக்குமதி செய்து கொள்வதற்குக் கொடுக்கப்பட்டுள்ள அனுமதியை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் விவசாயிகள் இக்கமிசன் முன் வைத்தனர்.


விவசாயிகளின் உயிராதாரமான இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்ட அக்கமிசன், ""விவசாயத்திற்கு வழங்கப்படும் வங்கிக் கடனுக்கான வட்டியைக் குறைக்க வேண்டும்; சந்தை ஏற்ற இறக்கத்தால் விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, தனியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்'' என்பன உள்ளிட்டு சில சில்லறை பரிந்துரைகளை மைய அரசிடம் அளித்தது.


விவசாயிகளின் நலனுக்காக பட்ஜெட் போட்டதாகப் பீற்றிக் கொள்ளும் ப.சிதம்பரம், விவசாயிகள் கோரியபடி வேளாண் விளைபொருட்களின் இறக்குமதிக்கும் தடை போடவில்லை. தேசிய கமிசனின் அற்பமான பரிந்துரைகளையும் ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக, விவசாயிகளின் பிரச்சினையை ஆராய ராதாகிருஷ்ணன் கமிட்டியை அமைப்பதாக பட்ஜெட்டில் அறிவித்து, விவசாயிகளின் பிரச்சினையை மீண்டும் ஊறுகாய் பானைக்குள் போட்டுவிட்டார்.


16,979 கோடி ரூபாய் செலவில் நீராதாரங்களை மேம்படுத்தப் போவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தாலும், இத்திட்டத்திற்காகத் தற்பொழுது ஒதுக்கப்பட்டுள்ள தொகை வெறும் 100 கோடி ரூபாய்தான். இப்புள்ளிவிவர மோசடித்தனம் ஒருபுறமிருக்க, ஒவ்வொரு மாநிலமும், தங்களின் நீர் ஆதாரங்களை மேம்படுத்த, மைய அரசின் முன்அனுமதியின்றியே, உலக வங்கியிடமிருந்து கடன் பெற்றுக் கொள்ளலாம் என்ற சலுகையை வாரி வழங்கியிருக்கிறார், ப.சிதம்பரம். இதன் அடிப்படையில், தமிழகம், காவிரி இறுதித் தீர்ப்பு வந்த சூட்டோடு, உலக வங்கியிடமிருந்து 2,182 கோடி ரூபாய் கடன் பெற ஒப்பந்தம் போட்டுள்ளது. ""குடிநீர், பாசன விநியோகத்தைத் தனியார்மயப்படுத்த வேண்டும். குடிநீர் மற்றும் பாசனக் கட்டணங்களை உயர்த்த வேண்டும்'' என்ற நிபந்தனைகள் இன்றி இந்தக் கடன் ஒப்பந்தம் முடிவாகி இருக்காது. இந்தக் கடன் மூலம் தமிழகத்திலுள்ள ஆறு, ஏரி, குளம் போன்ற நீர் ஆதாரங்கள் மேம்படுகிறதோ இல்லையோ, அவை கூடிய விரைவில் தனியார்மயமாகி விடும் என நிச்சயமாகச் சொல்லலாம்.


பட்ஜெட்டின் பெருமையைப் பற்றிக் குறிப்பிடுவதற்கு, தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாவட்டங்களின் எண்ணிக்கையை 200லிருந்து 330 ஆக உயர்த்தியிருப்பதையும்; அத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை 11,300 கோடி ரூபாயிலிருந்து


ரூ. 12,000 கோடியாக அதிகரிக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக் காட்டுகிறார்கள். ஆனால், இத்திட்டத்தைத் தீவிரமாக கண்காணித்து வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், இத்திட்டத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் முழுமையாகச் செயல்படுத்த வேண்டும் என்றால், ஒரு மாவட்டத்துக்கு தலா 100 கோடி ரூபாய் தேவைப்படும். இதன்படி 33,000 கோடி ரூபாய் இல்லாமல் இத்திட்டத்தை 330 மாவட்டங்களில் முழுமையாகச் செயல்படுத்த முடியாது; விலைவாசி உயர்வோடும், பணவீக்கத்தோடும் ஒப்பிட்டால், பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள தொகை யானைப் பசிக்குச் சோளப் பொரிதான் என விமர்சித்துள்ளன.


இந்தியாவில் பள்ளிக்குச் செல்லும் வயதிலுள்ள குழந்தைகளுள் ஏறத்தாழ 1.3 கோடி குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்படுவதேயில்லை. பெற்றோர்களின் வறுமை மட்டும் இதற்குக் காரணம் இல்லை. இந்தியாவெங்கும் 31,478 கிராமங்களில் பள்ளிக் கூடங்களே கிடையாது. 6,647 பள்ளிக் கூடங்களில் கட்டிடங்கள்தான் இருக்கிறதேயொழிய, பாடம் நடத்த ஒரு ஆசிரியர் கூட நியமிக்கப்படவில்லை. 75,884 பள்ளிகளில் ஒரேயொரு ஆசிரியர் தான் இருக்கிறார்.

இப்படி அவலமான நிலையில் இருக்கும் ஆரம்பக் கல்விக்கும், மதிய உணவுத் திட்டத்திற்கும் சேர்த்து 23,142 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டைவிட 6,000 கோடி ரூபாய் அதிகம் என பட்ஜெட்டின் துதிபாடிகள் மெச்சிக் கொள்வது உண்மைதான். ஆனாலும், இந்தக் கூடுதல் நிதி ஒதுக்கீடின் பின்னே, ஒரு பொறியையும் மறைத்து வைத்துள்ளார், ப.சிதம்பரம். அனைவருக்கும் ஆரம்பக் கல்வி திட்டத்திற்கு மைய அரசு 75 சதவீத நிதியையும், மாநில அரசுகள் 25 சதவீத நிதியையும் ஒதுக்கி வந்தன. இனி, மைய அரசு 50 சதவீத நிதியைத்தான் ஒதுக்கும் எனக் குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார், ப.சிதம்பரம்.


2 இலட்சம் ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்படுவார்கள்; 5 இலட்சம் வகுப்பறைகள் புதிதாகக் கட்டப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தாலும், இத்திட்டங்களுக்காக ஒரு பைசாகூட நிதியாக ஒதுக்கப்படவில்லை.


ஆரம்பப் பள்ளியில் சேரும் மாணவர்களுள், 35 சதவீத மாணவர்கள் ஐந்தாம் வகுப்பு முடித்த பிறகும்; 53 சதவீதமாணவர்கள் எட்டாம் வகுப்பு முடித்த பிறகும்; 63 சதவீத மாணவர்கள் பத்தாம் வகுப்பு முடித்த பிறகும் மேலே படிக்க முடியாமல், இடையிலேயே நின்று விடுவதாக அரசே ஒப்புக் கொண்டுள்ளது. இப்படி இலட்சக்கணக்கான மாணவர்கள் படிப்பைப் பாதியிலேயே கைவிடும்பொழுது, அவர்களுள் ""திறமை'' வாய்ந்த ஒரு இலட்சம் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ஆண்டுக்கு
ரூ. 6,000/ கல்வி உதவித் தொகை அளிக்கப் போவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மீதியுள்ள மாணவர்கள், தங்களுக்குத் ""திறமை''யும் இல்லை, ""அதிருஷ்டமும்'' இல்லை என மனதைத் தேற்றிக் கொண்டு, குழந்தைத் தொழிலாளியாகப் போக வேண்டியதுதான்.


பட்ஜெட்டைக் கூறு போட்டால், சமூக நலத் திட்டங்கள் பற்றிய டாம்பீக அறிவிப்புகளுக்கும், உண்மை நிலைக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு இருப்பதைப் பச்சையாகக் காண முடியும். இந்தியப் பொருளாதாரம் 8.5 சதவீதத்தைத் தாண்டி ""வளர்ந்து'' செல்லும் நிலையிலும் கூட, சமூக நலத் திட்டங்களுக்குக் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய ஏன் மறுக்கிறார்கள்?


பட்ஜெட்டில் பற்றாக்குறை குறிப்பிட்ட வரம்பைத் தாண்டிச் செல்லக் கூடாது என்பது உலக வங்கியின் கட்டளை. இப்பற்றாக்குறையை ஈடுகட்ட வேண்டும் என்றால், தரகு முதலாளிகள் மீது, பன்னாட்டு நிறுவனங்கள் மீது கூடுதலாக வரி விதிக்க வேண்டும்; இல்லையென்றால், மக்களின் குரல்வ ளையை இறுக்க வேண்டும். முதலாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வரிச் சலுகைகளை பறித்தாலோ, அவர்கள் மீது கூடுதல் வரி விதித்தாலோ தாராளமய ஆதாரவாளர்கள் கொதித்துப் போய் விடுவார்கள். அதனால்தான் மக்களின் தேவைகளை இறுக்கிப் பிடித்து, உலகவங்கி நிர்ணயித்துள்ள பற்றாக்குறை வரம்பைத் தாண்டாமல் பட்ஜெட்டைப் போட்டிருக்கிறார், ப.சிதம்பரம்.


""பொருளாதார வளர்ச்சி'' பாதிக்கப்படக்கூடாது எனக் கூறி, இந்த பட்ஜெட்டில் தரகு முதலாளிகள் மீதோ, பன்னாட்டு நிறுவனங்கள் மீதோ அதிக அளவில் வரி விதிக்கப்படவில்லை. அவர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள 1,50,000 கோடி ரூபாய் வரிச் சலுகையிலும் ப.சிதம்பரம் கைவைக்கவில்லை. முதலாளிகளுக்கு வரிச் சலுகை அளித்தால் விலைவாசி குறைந்துவிடும் எனக் கூறி, பல்வேறு பொருட்கள் மீது விதிக்கப்படும் உற்பத்தி வரியைக் குறைத்து, சலுகைகளை மேலும் வாரி வழங்கியிருக்கிறார்.


ஆனால், இந்தச் சலுகை அறிவிப்பானது, கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாகிவிட்டது. சிமெண்ட் ஆலை முதலாளிகள், பட்ஜெட் வெளியான மறுநாளே, பட்ஜெட் அறிவிப்புகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்னரே, சிமெண்ட் விலையை உயர்த்தி, மக்களைக் கொள்ளையடிக்கத் தொடங்கி விட்டனர்.


நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு, கர்நாடகாவைச் சேர்ந்த கடலை விவசாயிகள், கடலையின் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி போராடியபொழுது, அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. ஆனால் ஜேப்படி திருடர்கள் போன்று கொள்ளையடிக்கும் சிமெண்ட் முதலாளிகள் விசயத்திலோ துப்பாக்கிகள் மௌனம் காக்கின்றன. விலையைக் குறைக்கும்படி அவர்களின் காலில் விழுந்து மன்றாடுகிறார், ப.சிதம்பரம். சிமெண்ட் முதலாளிகளோ அடுத்த ஆண்டுவரை விலையை உயர்த்த மாட்டோம் எனத் திமிராகப் பதில் அளிக்கிறார்கள். சாமானிய மக்களுக்காகப் போடப்பட்டதாகக் கூறப்பட்ட பட்ஜெட், மையின் ஈரம் உலரும் முன்பே, சாயம் வெளுத்து நிற்கிறது!

· செல்வம்


Friday, April 27, 2007

சென்னை சங்கமம் : தி.மு.க.கம்பெனியின் புதிய வியாபாரம்

சென்னை சங்கமம் :
தி.மு.க.கம்பெனியின் புதிய வியாபாரம்


மிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் இருந்து நாட்டுப்புறக் கலைஞர்களை சென்னைக்கு வரவழைத்து, பொதுநூலகத் துறை, சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறை உதவியுடன் தமிழ் மையம் எனும் தன்னார்வ நிறுவனம், ""சங்கமம்'' எனும் பெயரில் பிப்.20ஆம் தேதி தொடங்கி பிப்.26 முடிய, 6 நாட்களில் 400 நிகழ்ச்சிகளை, சென்னையின் மூலைமுடுக்கெல்லாம் நடத்தியது.


கரகாட்டம், தப்பாட்டம், செண்டா மேளம், இவற்றுடன் சுதா ரகுநாதனின் கர்நாடக சங்கீதக் கச்சேரி என கதம்பமாக நடந்த இந்நிகழ்ச்சி, அந்நிய சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக நடத்தப்பட்டதாக அரசு அறிவித்தது.


""திருவிழா நம்ம தெருவிழா'' எனும் விளம்பரத்துடன் பல கோடி செலவில் நடந்த இவ்விழாவை ஒருங்கிணைத்தவர், கருணாநிதியின் மகள் கனிமொழி. இதற்கான விளம்பரம், நிகழ்ச்சி ஏற்பாடு ஆகியவற்றுக்கு அரசுப் பணம் தாராளமாய் செலவிடப்பட்டது. வழக்கமான அரசு விழாக்களுக்கு செலவிடப்படும் விளம்பரச் செலவின் வரம்பு, சங்கமத்திற்கென்றே ஓர் அரசாணை மூலம் தளர்த்தப்பட்டது. தங்குதடையின்றி வந்த விளம்பரப் பணம், பெரும் பத்திரிக்கை முதலாளிகளின் பையை மட்டும்தானே நிறைக்கும்! பத்திரிக்கை நிருபர்களுக்கு? கனிமொழி பற்றி "கவர் ஸ்டோரி' எழுத என ரூபாய் 2,000ஐ கவரில் வைத்துத் தந்தார்கள்.


கனிமொழியின் தாயார் ராஜாத்தி இலக்கிய அரங்கு ஒன்றை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். ஸ்பென்சர் பிளாசா, கடற்கரை, பூங்காக்கள் எனப் பல்வேறு இடங்களிலும் நாட்டுப்புற கலைஞர்கள், "கலைஞ'ரின் மகளுக்கு மட்டும் இன்றி, கலைஞரின் 7 வயதுப் பேரனுக்கும் சலாம் வைத்தனர். அன்று பண்ணையார் வீட்டு நாய்க்குட்டிக்கும் பயந்து வாழ்ந்த விவசாயக் கூலிகளின் அவல நிலைதான் நெஞ்சில் நிழலாடியது. கவிஞர் இளையபாரதி, ராசாத்தி அம்மையாரை மேடையிலே "சின்னம்மா' என அழைத்து தன் பெயரை கலைஞரின் இதயத்தில் பொறித்து விட்டார்!


தமிழ் மையத்தின் நிறுவனரான கஸ்பார், ஈழத் தமிழர்களுடன் வெரித்தாஸ் வானொலியில் பணியாற்றியதை மையாக்கி "புலிகளுடன் தொடர்புடையவர்கள் கனிமொழியுடன் இணைந்து நடத்திய விழா' என்றும், சங்கமம் விழா வழியாக புலிகளுக்குப் பணம் சென்றிருக்கின்றது என்றும் அறிக்கை விட்டு, மீண்டும் விடுதலைப் புலிகள், பயங்கரவாதம்' என்று பீதி கிளப்பினார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் இந்த பயங்கரவாதப் பீதிக்கு துக்ளக் சோவும், ஜூனியர் விகடனும் பக்கமேளம் வசித்து, சங்கமம் நிகழ்ச்சியை விமர்சிக்கும் போர்வையில் தங்களது பார்ப்பன அரிப்பைச் சொறிந்து கொண்டனர். சாதாரண பால்ரஸ் குண்டுகள் பிடிபட்டதற்கே "வெடிகுண்டு செய்யப் பயன்படும் இரும்பு குண்டுகள் புலிகளுக்கு கடத்தல்' என்று பேனைப் பெருமாளாக்கும் துக்ளக்கும், ஜூ.வி.யும், ஜெயலலிதாவும் இணைந்து சங்கமத்திற்கும், கஸ்பாருக்கும் உள்ள உறவை, அமெரிக்காவில் கைதாகியுள்ள சாக்ரடீஸ் எனும் ஈழ ஆதரவாளர் வரை இணைத்து கருணாநிதி அரசுக்கு நெருக்கடி தர முயல்கின்றனர்.


சங்கமத்தில் தப்பாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புறக் கலைகள் இடம் பெற்றதாலோ என்னவோ, "சோ' எனும் பார்ப்பன அறிவுஜீவி, ""இக்கலைகளைக் கிராமத்துக் கோவில் திருவிழாக்கள் ஏற்கெனவே காத்து வருகின்றன. எனவே, இதற்கென பொதுமக்கள் பணத்தை வீணாக்கக் கூடாது'' என விமர்சித்துள்ளார். உழைக்கும் மக்களின் இசையையும், நடனத்தையும், காலங்காலமாய் இழிவுபடுத்தும் பார்ப்பனிய அழகியலின் விமர்சனம்தான் அது. இத்தகைய கேடுகெட்ட காமாலைக் கண்ணுக்கு, வானொலியும், தூர்தர்சனும் தொடங்கப்பட்ட நாளில் இருந்து அக்கிரஹாரத்தின் கர்நாடக சங்கீதக் கச்சேரி, பரத நாட்டியம் நிகழ்ச்சிகளை வழங்கி (ண்ணீணிணண்ணிணூ), பொதுமக்கள் பணத்தைச் சூறையாடி வருவதும் தெரியாது. அரசுப் பணத்தில் பத்மா சுப்ரமணியம் போன்ற பார்ப்பன நடனமணிகள் கோனார்க் கோவிலில் ஆட்டம் போட, கோடிகளை "ஸ்வாஹா' செய்ததும் தெரியாது.


ஏற்கெனவே பேரனை மத்தியிலும், மகனை மாநிலத்திலும், கட்சியிலும் பதவிகளால் அலங்கரித்து வைத்துள்ள கருணாநிதி, தனது மகளையும் சங்கமம் மூலம் வாரிசு அரசியலுக்கென்று அரங்கேற்றி அழகு பார்த்துள்ளார். சங்கமம் தொடக்க விழாவில் ""எனது வழித் தோன்றலாக கலை, இலக்கியத்தில் எனக்குப் பிறகு அப்பணியை ஆற்றிட ஒரு வழித்தோன்றல் உருவாகி இருக்கின்றது'' என்று அவர் உள்ளம் பூரித்துச் சொன்னதே இதற்குச் சான்று. ஓட்டுக் கட்சிகள் எவையும் இதனை விமர்சனம் செய்வதற்கு யோக்கியதை கிடையாது. அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. போன்ற மாநிலக் கட்சிகளும் சரி, காங்கிரசு, பா.ஜ.க போன்ற தேசியக் கட்சிகளும் சரி, தனக்குப் பிறகும் அரசுப் பணத்தை ஆண்டு அனுபவிக்க தனது வாரிசுகளை உருவாக்குவதில் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல.


சங்கமத்திற்கு பொருள் ரீதியில் உதவிய தமிழ் மையம் அமைப்பில் யார் யார் உள்ளனர் எனப் பார்த்தால் படித்த பட்டதாரிகளை குறைந்த கூலிக்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் அனுப்பி வைக்கும் "மாஃபோய்'' நிர்வாகவியல் நிறுவன அதிபர் பாண்டியராஜன், நட்சத்திர அந்தஸ்து மருத்துவமனை மூலம் மருத்துவ வணிகம் நடத்தி வரும் மியாட், நெதர்லாந்து நாட்டின் கவுரவத் தூதர் என ஒரு வானவில் கூடடணியே உள்ளது. இவர்களுக்கும், சங்கமத்தில் பங்கெடுத்துக் கொண்ட ஃபோர்டு பவுண்டேசனின் கூத்துப் பட்டறைக்கும், நசிந்து கொண்டு வரும் தமிழர் பாரம்பரியக் கலைகள் மீது அப்படி என்னதான் ஆர்வம்?


கருணாநிதியும் கூட இந்தக் கூட்டணியுடன் சேர்ந்திசைந்து ""தமிழர் கலைகள் அழிந்துவிடாமல் காக்கப்படல் வேண்டும்'' என்று பேசுகிறார். தமிழ் மையத்தின் சார்பில் இனி ஆண்டுதோறும் பொங்கல் விழாவின்போது சென்னை சங்கமம் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்கிறார், கனிமொழி.


இவ்வாறு ஆண்டுக்கு ஒருமுறை அள்ளித் தெளித்தவாறு அவசர கதியில் அரசே ஏற்று நடத்துவதால் மட்டும் தமிழர் கலைகளைக் காப்பாற்றி விட முடியுமா? அதன் உள்ளடக்கமாக இருக்கும் பெண்ணடிமைத்தனம், புராணப் புளுகுகள் போன்றவை, இன்றைக்குத் தேவைப்படும் பார்ப்பன எதிர்ப்புணர்வு, ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகிய முற்போக்கான கருத்துக்களால் மாற்றப்படாவிட்டால், எந்த அடித்தட்டு, நடுத்தர மக்களும் ""வாலிவதம்'' ""வள்ளி திருமணம்'' போன்றவற்றுக்கு ஆதரவு தரப் போவதில்லை. வடிவத்தை மட்டும் நாட்டார் கலைகளில் இருந்து சுவீகரித்துக் கொண்டு முற்போக்கு சிந்தனைகளை கலைவடிவத்தில் தந்தால் மட்டுமே தமிழர் கலைகள் பிழைக்க முடியும். இல்லாவிட்டால் கூத்துப்பட்டறை தயாரிக்கும் 50 பேர் மட்டுமே பார்த்து ரசிக்கும் "செத்த கலை'யாக மாறிவிடும்.


பெரும்பாலான தமிழர் கலைகள் இன்றைக்கு மரணப் படுக்கையில்தான் உள்ளன. சங்கமத்திற்கு எனப் பேருந்துகளில் அழைத்து வரப்பட்ட கலைஞர்கள், ""சாப்பாட்டுக்கு மட்டும் பஞ்சமே இல்லை, கனிமொழி அம்மா புண்ணியத்திலே'' எனச் சொல்லும் நிலையில்தான் உள்ளனர். இது ஏதோ தற்செயலாக நடைபெற்றுவிட்ட செயலல்ல. நாட்டார் கலைகளின் பிறப்பிடமான விவசாயப் பொருளாதாரம் சூறையாடப்படுவதால், தமிழர்கள் நிலத்திலிருந்து துரத்தப்பட்டு, காய்ந்த சருகு காற்றில் பறப்பது மாதிரி வயிற்றைக் கழுவிக் கொள்ள ஏதாவது ஒரு தொழிலைப் பார்ப்போம் என்று பெருநகரங்களுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் ஓடுகின்றனர். பறிக்கப்படும் அவர்களின் நிலங்களில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாகின்றன. ஓர் இனத்தின் அன்றாட வாழ்வோடு பிணைந்திருப்பதுதானே அவ்வினத்தின் கலைகள்? தமிழன் மட்டும் பஞ்சைப் பராரியாய் ஆக்கப்படுகையில், தமிழ்க் கலைகள் மாத்திரம் காக்கப்படுமா என்ன?


உழைக்கும் மக்களின் நலனைக் கொள்ளையிடும் ஒரு கூட்டம், அவர்களின் நலனில் அக்கறை உள்ளவர்களாகக் காட்டிக் கொள்ள முயலும் நரித்தந்திரம் இப்போது அனைத்து மட்டங்களிலும் நடைமுறையில் உள்ளது. நம் நாட்டின் நிலத்தடி நீரை ஒட்ட உறிஞ்சி, நீராதாரத்தை அழித்து வரும் கோக்கோ கோலா, சென்னைப் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளுக்கு இலவசக் குடிநீர் வழங்கும் திட்டத்தையும் அறிமுகம் செய்கிறது. அந்த வரிசையில், சங்கமம் எனும் பெயரில் தன்னார்வக் குழுக்களும், சில தரகு முதலாளிகளும், அரசும் இணைந்து தமிழர் கலைகளைக் காக்கப் புறப்பட்டிருப்பதும், அதன் மூலம் அந்நிய செலாவணியை ஈட்டவும் கண்டுப் பிடித்திருக்கும் சடங்கே "சங்கமம்'.


உலகமய, தாராளமயக் கொள்கையால் கஞ்சித் தொட்டி நோக்கித் தள்ளப்படும் நெசவாளர்களின் பாரம்பரிய தறி நெசவை, "காட்சிப் பொருளாக்கிய' சங்கமத்தின் நிகழ்ச்சி ஒன்றே போதும், சங்கமத்தின் நோக்கம் என்னவென்பதைப் புரிந்து கொள்வதற்கு!

· கவி

Thursday, April 26, 2007

ஆடம்பரத் திருமணங்கள் : பெருக்கெடுத்து ஓடும் பணக்கொழுப்பு

ஆடம்பரத் திருமணங்கள் :
பெருக்கெடுத்து ஓடும் பணக்கொழுப்பு



றுகாலனியாதிக்கம் தோற்றுவித்த பயங்கரத்தால் வாழ்விழந்த விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போவதும், தொழிலாளர்கள் வேலையிழந்து கொத்தடிமைகளாக உழல்வதும், வறுமையும் பட்டினியும் பெருகுவதும் தீவிரமடைந்து வருகிறது. மறுபுறம், இந்தியாவில் பணக்காரர்களும் பெருகிக் கொண்டே போகிறார்கள். உலகின் மிகப் பெரும் கோடீசுவரர்களின் பட்டியலில் இந்தியப் பெருமுதலாளிகளும் இடம் பெற்றுள்ளதாகப் பூரித்துப் போகின்றனர் ஆட்சியாளர்கள். கோடீசுவரர்கள் பெருகப் பெருக அவர்களின் பணக் கொழுப்பு வக்கிரமாக வழிந்தோடுகிறது. நாடே அதிர்ச்சியடையும் அளவுக்கு அந்த வக்கிரம் கேள்விமுறையின்றி பகிரங்கக் கூத்தாக நடக்கத் தொடங்கி விட்டது.


எலிசபத் ஹர்லீ. பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த முன்னாள் "மாடல் அழகி'. 41 வயதைக் கடந்துவிட்ட ஹர்லீ, பெருந்தொழில் அதிபரும் இந்திய வம்சாவளியினருமான அருண் நய்யார் என்ற 42 வயதுக்காரரை கடந்த மார்ச் மாதத்தில் பிரிட்டனிலுள்ள சட்லே கோட்டையில் திருமணம் செய்து கொண்டார். ஏற்கெனவே மணவிலக்கு பெற்று மறுமணம் புரிந்து கொண்டுள்ள இத்தம்பதிகளின் திருமணத்துக்கு எடுத்த பட்டுச்சேலையின் மதிப்பு ரூ. 3.5 லட்சத்துக்கும் மேலானது. இந்தி சினிமாப் பாடல்களுடன் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் நடந்த இத்திருமணத்தையும் விருந்துகளியாட்டங்களையும் இத்தம்பதிகள், தனியொரு சினிமாப் படமாகவும் எடுத்துள்ளனர்.


ஆடம்பரமாக நடந்த இத்திருமணக் கூத்து இத்துடன் முடியவில்லை. மணமகளது நாட்டில் நடந்தது போல், மணமகனது பூர்வீக நாடான இந்தியாவிலும் இத்தம்பதிகள் பார்ப்பன இந்து முறைப்படி இன்னுமொரு திருமணச் சடங்கை நடத்தினர். தமது 4 வயது மகனுடன் வந்த ஹர்லீநய்யார் தம்பதியினர் மும்பையிலிருந்து தனிவிமானத்தில் ராஜஸ்தானிலுள்ள ஜோத்பூர் கோட்டைக்குப் பறந்தனர். யானைகள், ஒட்டகங்களுடன் அலங்கார அணிவகுப்பு ஊர்வலம், விருந்தினர்களை அழைத்துவர ஏழு தனிவிமானங்கள், ஜோத்பூர் அரண்மனையில் விடிய விடிய சீமை சாராயத்துடன் களிவெறியாட்டம், அறுசுவை விருந்து என அமர்க்களப்படுத்தினர் இத்தம்பதிகள். இந்திய நாட்டில் இப்படியொரு ஆடம்பரத் திருமணம் இதுவரை நடந்ததேயில்லை என்று அதிசயித்து பரபரப்புடன் செய்திகளை வெளியிட்டன பத்திரிகைகள்.


பல கோடிகளை விழுங்கிய இந்த ஆடம்பர வக்கிரக் கூத்து நடந்த ஜோத்பூர் அரண்மனையருகே உள்ள நகர்ப்புறச் சேரிப்பகுதியில் வசிக்கும் உழைக்கும் மக்களின் மாத வருவாயோ
ரூ. 2000க்கும் குறைவு. இதர மாநிலங்களைவிட ஒப்பீட்டு ரீதியில் பின்தங்கியுள்ள ராஜஸ்தான் மாநில கூலிஏழை விவசாயிகளின் வருமானமோ அதைவிடக் குறைவு. வறுமையும், பட்டினியும் கவ்வியுள்ள அம்மாநிலத்தில்தான் இந்த வக்கிரமான திருமண விழா நடந்துள்ளது. பணக்கொழுப்பை விகாரமாகக் கொண்டாடும் இந்த நிகழ்ச்சியைத் தடுக்கவோ கட்டுப்பாடு விதிக்கவோ கூட அம்மாநில அரசு முன்வரவில்லை. மாறாக, மாநிலத்தின் பெருமையை உலகறியச் செய்ததாகக் கூறி, இந்த வக்கிர விழாவுக்கு எல்லா உதவிகளையும் அம்மாநில அரசு செய்துள்ளது.


இந்த வக்கிர திருமண விழாவையே விஞ்சும் வகையில் கடந்த 2004ஆம் ஆண்டில் நடந்த பிரிட்டனில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மிகப்பெரும் கோடீசுவர வைர வியாபாரி மிட்டல் குடும்பத்தின் திருமண விழாவும், கடந்த டிசம்பரில் நடந்த பெருந்தொழிலதிபர் லோகியா குடும்பத்தின் திருமண விழாவும் பல்லாயிரம் கோடிகளை விழுங்கியது. ராஜஸ்தான் உதய்பூர் கோட்டையில் விழா, ஐந்து நட்சத்திர ஓட்டலில் வரவேற்பு, ஆட்டம், பாட்டம், வாணவேடிக்கை, வெளிநாட்டிலிருந்து வந்த சிறப்பு உணவுகள் என பணத்திமிரில் கொட்டமடித்தன, கொழுப்பேறிய பன்றிகள்.


1947 போலி சுதந்திரத்துக்கு முன்னர், ஆங்கிலேயனின் காலை நக்கி வாழ்ந்த திவான் பகதூர், ஜமீன்தார், சமஸ்தான மகாராஜா போன்ற சரிகைக் குல்லாப் பேர்வழிகள்தான் இத்தகைய ஆடம்பர வக்கிர திருமண விழாக்களை நடத்தி வந்தனர். வெள்ளைக்காரன் ஆட்சியில் பஞ்சம் தலைவிரித்தாடி மக்கள் கொத்துக் கொத்தாக பட்டினியால் மாண்டபோது, ஜுனாகத் சமஸ்தானத்தின் நவாபு, தான் வளர்த்த செல்லமான நாய்க்கு ஆடம்பரமாகத் திருமணம் நடத்தினான். இத்திருமண விழாவையொட்டி மாபெரும் விருந்தும் கச்சேரியும் நடத்தியதோடு, நாய்த்தம்பதியினர் முதலிரவைக் கொண்டாட தனிமாளிகை அமைத்து, அதற்கென ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்தான்.


இத்தகைய வக்கிமான குரூரமான விழாக்கள் காலனிய காலத்தோடு முடிந்துவிடவில்லை. போலி சுதந்திரத்திற்குப் பின்னரும் தொடர்ந்தது. மத்திய அமைச்சரான சரத்பவார், முன்பு மகாராஷ்டிரா மாநில முதல்வராக இருந்தபோது, கோடிகளை வாரியிறைத்து கோவில் திருவிழா போன்றதொரு ஆடம்பரமான திருமணத்தைத் தனது மகளுக்கு நடத்தினர். ஊரை அடித்து உலையில் போட்ட பாசிச ஜெயா நடத்திய வளர்ப்பு மகன் திருமணம் ரூ. 80 கோடிகளைத் தாண்டி நாடெங்கும் நாறியது. இத்திருமண விழாவில் நகைக்கடையாய் நடந்து வந்த உடன்பிறவா சகோதரிகளின் படத்தைப் போட்டு ஓட்டுப் பொறுக்கியது, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணும் தி.மு.க. அக்கட்சித் தலைமையின் மூத்த வாரிசான மு.க.அழகிரி, தன்னுடைய 56வது பிறந்த நாளுக்கு தனது முகத்தையே மதுரை தமுக்கம் மைதானம் முழுக்க பிரம்மாண்டமான வண்ணக் கோலமாகப் போட்டு வக்கிரமாக ரசித்தார். அந்த வண்ணக் கோலத்தை முழுமையாகப் பார்த்து ரசிக்க தனி ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டன. இளைய வாரிசு மு.க.ஸ்டானினோ தன்னுடைய பிறந்தநாளுக்கு, தனக்கு யானைகள் வந்து மாலைபோடச் சொல்லி ரசித்தார்.


இவை எல்லாவற்றையும் விஞ்சும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் தனது பண்ணை வீட்டில் உல்லாசமாகச் சுற்றி வருவதற்காகவே, ரயில் பெட்டியொன்றை விலைக்கு வாங்கி, தனது வக்கிர கொண்டாட்டத்தைத் தொடங்கவுள்ளார். பொழுதுபோக்கிற்காக பல கோடிகளை வாரியிறைக்கும் மனநோயாளிகளின் கீழ்த்தரமான இச்செயலைக் கூட சிலாகித்து எழுதுகின்றன, கிசுகிசு பத்திரிகைகள்.


500 ரூபாய் நோட்டைச் சுருட்டிப் பற்ற வைத்து ஹெராயின் எனும் போதை மருந்தைப் புகைத்த பா.ஜ.க.வைச் சேர்ந்த மறைந்த பிரமோத் மகஜனின் மகன் ராகுல் மகஜன் பற்றிய செய்தி வெளியானபோது நாட்டு மக்கள் அதிர்ச்சியில் விக்கித்து நின்றார்கள். ஆனால் பணக்கொழுப்பெடுத்த இத்தகைய வக்கிரங்களே இப்போது அன்றாடச் செய்தியாகிவிட்டது. உலகமயத்தின் விளைவாக நுகர்வுவெறி ஆடம்பர மோகம் பணத்திமிரைப் பறைசாற்றும் பிரம்மாண்ட விழாக்கள் என பணக்கொழுப்பேறிய பன்றிகள் நடத்தும் வக்கிரங்கள் சகிக்க முடியாதபடி பெருகிவிட்டன.

"நாகரிக' உலகைச் சேர்ந்த ஏகாதிபத்திய நாடான பிரான்சில், வேலையிழந்து வாழ்விழந்த உழைக்கும் மக்கள் ஆடம்பர உணவு விடுதிகளைச் சூறையாடி, ஆடம்பரக் கார்களை அடித்து நொறுக்கி இப்பணக் கொழுப்பெடுத்த பன்றிகளுக்கு எதிராகத் தமது வெறுப்பை வெளிப்படுத்திப் போராடுகிறார்கள். ஏழை நாடான இந்தியாவின் உழைக்கும் மக்கள் மறுகாலனியத் தாக்குதலால் மரணப் படுகுழியில் வீழ்த்தப்பட்டுள்ள நிலையில், கோடீசுவரக் கும்பலின் கொழுப்பேறிய வக்கிரங்களை இனியும் சகித்துக் கொண்டிருக்கப் போகிறோமா? அல்லது பிரான்சு நாட்டு உழைக்கும் மக்களின் வழியில் போராடப் போகிறோமா?


· கவி

Tuesday, April 24, 2007

சில்லறை வணிகம் : மறுகாலனியாதிக்கத்தின் அடுத்த பலிகடா

சில்லறை வணிகம் :
மறுகாலனியாதிக்கத்தின் அடுத்த பலிகடா


கிரிமினல் போர்ஜரி வேலைகள், திருட்டு, இலஞ்ச ஊழல் ஆகியவற்றின் மூலமாகவே குறுகிய காலத்தில் உலகப் பணக்காரனாகி விட்ட அம்பானி குடும்பத்தின் ரிலையன்ஸ் நிறுவனம், சென்னையில் 14 இடங்களில் காய்கனி அங்காடிகளைத் திறந்திருக்கிறது. சென்னை நகர மூலை முடுக்குகளிலெல்லாம் தனது அங்காடிகளை விரிவுபடுத்தவும் இருக்கிறது.


இதனால், சென்னை மாநகரத்திற்கும் அதன் சுற்றுவட்டாரங்களுக்கும் தேவையான காய்கனிகளை விநியோகித்து வரும் கோயம்பேடு வணிக வளாகத்தின் விற்பனை இப்பொழுதே 40% வீழ்ச்சி அடைந்து விட்டதாகக் குமுறுகிறார்கள் வியாபாரிகள். கோயம்பேட்டுக்கு வரும் சில்லறை வணிகர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. அவர்கள் வாங்கும் சரக்கின் அளவு குறைந்துவிட்டது. வெளியூர் லாரிகளின் வரத்து குறைந்து விட்டது. தொழிலாளிகளுக்கு வேலை குறைந்து வருமானமும் குறைந்து விட்டது. கோயம்பேட்டை நம்பி வாழும் சுமார் ஒரு இலட்சம் குடும்பங்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டது.


ஏற்கெனவே பான்டலூன் நிறுவனம் வடபழனியில் தொடங்கியிருக்கும் பிக் பஜார், ஆர்.பி.ஜி குழுமத்தின் ஸ்பென்சர் டெய்லி, ஜெர்மன் நிறுவனமான ஃபுட் வேர்ல்ட் போன்ற நிறுவனங்கள் சென்னை நகரின் பல இடங்களில் சில்லறை விற்பனைக் கடைகளைத் திறந்திருக்கின்றன. இன்னும் டாடா, பிர்லா போன்ற தரகு முதலாளிகளும் நாடெங்கும் சில்லறை விற்பனைக் கடைகளைத் திறக்க இருக்கிறார்கள். இதுவன்றி, அமெரிக்காவின் வால்மார்ட், ஜெர்மனியின் மெட்ரோ, பிரான்சின் காரஃபோர் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் சென்னை உள்ளிட்ட எல்லா நகரங்களிலும் பிரம்மாண்டமான சில்லறை விற்பனைக் கடைகளைத் திறக்கவிருக்கின்றன.


சென்னை நகரில் நாளொன்றுக்கு நடைபெறும் காய்கனி விற்பனையின் மொத்த மதிப்பு சுமார் 20 கோடி ரூபாய். இதை அப்படியே விழுங்கிவிடத் துடிக்கிறது ரிலையன்ஸ் நிறுவனம். சில்லறை வணிகத்தில் உலகிலேயே நான்காம் இடத்தில் இருக்கிறது இந்தியா. ஆண்டொன்றுக்கு 12 இலட்சம் கோடி ரூபாய் புரளும் இந்தியாவின் சில்லறை விற்பனைத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் 4 கோடிப் பேர். சுமார் 20 கோடிப் பேருக்குச் சோறு போடும் இந்தச் சில்லறை விற்பனைத் தொழில் முழுவதையும் விழுங்கி விடத் துடிக்கின்றன சில பன்னாட்டு நிறுவனங்கள்.


சென்னை நகரில் காய்கனி விநியோகத்துக்கு என்ன குறை? எல்லாப் பகுதிகளிலும் காய்கறி மார்க்கெட்டுகள் இருக்கின்றன. வீதிக்கு வீதி காய்கறிக் கடைகள் இருக்கின்றன. தெருவுக்குத் தெரு மளிகைக் கடைகள் இருக்கின்றன. தெருத் தெருவாகக் கூவி விற்க தள்ளுவண்டி வியாபாரிகளும் வீடுவீடாகக் கூடையில் சுமந்து சென்று விற்க பெண்களும் ஆயிரக்கணக்கான பேர் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரையும் ஒழித்துவிட்டு அம்பானியைக் கொழுக்க வைக்க வேண்டுமென்று யார் கேட்டார்கள்?


""காய்கறி வாங்கினால் சர்க்கரை இலவசம்; 100 ரூபாய்க்கு காய் வாங்கினால் ஒரு டோக்கன்; தொடர்ந்து வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச வீட்டு டெலிவரி, 50,000 ரூபாய்க்கு ரிலையன்ஸ் விபத்துக் காப்பீடு'' என்று சலுகைகளை வாரி வழங்குகிறது, ரிலையன்ஸ். இதில் மயங்கி அங்கே வாடிக்கையாளர் கூட்டம் அலைமோதுகிறது.

சில்லறை வணிகத்தில் பன்னாட்டுக் கம்பெனிகளையும், அம்பானி, டாடா, பிர்லா போன்ற தரகு முதலாளிகளையும் அனுமதிப்பதன் மூலம் ""விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும். இடைத்தரகர்களை ஒழித்து விடுவதால் நுகர்பவர்களுக்கும் மலிவான விலையில் பொருள் கிடைக்கும்'' என்கிறார் நிதியமைச்சர் ப.சிதம்பரம்.


பொள்ளாச்சி சந்தையில் விவசாயியிடமிருந்து காய்கனிகளையும் தானியங்களையும் கொள்முதல் செய்யும் வியாபாரி முதல், அதைத் தள்ளுவண்டியில் போட்டு வேகாத வெயிலில் தெருத்தெருவாகக் கூவி விற்கும் தள்ளுவண்டிக்காரர் வரையில் எல்லோரும் இடைத்தரகர்களாம். இவர்களையெல்லாம் ஒழித்து விட வேண்டுமாம். இப்படி ""கோடிக்கணக்கான உழைக்கும் மக்களை ஒழித்துக் கட்டிவிட்டு வால்மார்ட்டையும் டாடா, பிர்லா, அம்பானியையும் வளர்த்துவிடுவதுதான் நாட்டுக்கு நல்லது'' என்று வெளிப்படையாக கூறும் ஒரு தேசத்துரோகி இந்த நாட்டுக்கு நிதியமைச்சராக இருக்கும்போது மக்கள் எப்படி வாழ முடியும்?


சில்லறை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைந்தால் மற்ற கடைகளில் விற்பனை படுத்துவிடும் என்பது மட்டுமல்ல பிரச்சினை. கொள்முதல் சந்தைகள், மொத்தவிற்பனை, சில்லறை விற்பனை இவையெல்லாம் பொருளாதாரத்தின் ஒரு முனை. விவசாயம், நெசவு, தொழிற்சாலைகள் போன்ற உற்பத்தித் துறைகள் பொருளாதாரத்தின் மறுமுனை. ஒருமுனையைத் தன் பிடிக்குள் கொண்டுவருவதன் மூலம் பொருளாதாரத்தின் மறுமுனையான உற்பத்தித் துறை முழுவதையும் தம் வசப்படுத்திக் கொள்ள முயல்கின்றன பன்னாட்டு நிறுவனங்கள்.

தானிய ஏகபோகத்தின் விளைவுதான்


விலைவாசி உயர்வு!


பொருள் உற்பத்தி, கொள்முதல், சில்லறை விற்பனை ஆகியவற்றில் இன்று கோடிக்கணக்கான விவசாயிகளும், வியாபாரிகளும் ஈடுபட்டிருப்பதனால்தான் விலைவாசி ஓரளவுக்காவது கட்டுப்பாட்டில் இருக்கிறது. இவையனைத்தும் வால்மார்ட், கார்கில், ஐ.டி.சி., அம்பானி, டாடா, பிர்லா என 10, 20 முதலாளிகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டால் என்ன நடக்கும்? பிறகு அவன் வைத்ததுதான் விலை. இன்று சிமெண்ட் முதலாளிகள் தமக்குள் பேசி வைத்துக் கொண்டு விலையை ஏற்றியிருப்பதைப் போலவே, நாளை அரிசி, கோதுமை, வெங்காயம், தக்காளி அனைத்திலும் இவர்கள் பகற்கொள்ளை அடிப்பார்கள்.


""சில்லறை விற்பனையில் வால்மார்ட்டும் ரிலையன்சும் நுழைந்தால் நுகர்வோருக்கு உலகத் தரம் வாய்ந்த பொருட்கள் மலிவான விலையில் கிடைக்கும், விவசாயிகளுக்கு முன் எப்போதும் கண்டிராத அளவுக்கு நியாய விலை கிடைக்கும்'' என்ற பேச்செல்லாம் முழுப்பொய். கத்தரிக்காய்க்கு நியாயவிலை கொடுப்பதற்காகத்தான் 3000 கோடி ரூபாயை மடியில் கட்டிக் கொண்டு குஜராத்திலிருந்து வந்திருக்கிறானா அம்பானி? துணிக்கும் துடைப்பக் கட்டைக்கும் நல்ல விலை கொடுப்பதற்காகத்தான் வால்மார்ட் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வருகிறதா?


நேற்று வரை காய்கனி வாங்கிய மார்க்கெட்டையும், காய்கறிக் கடையையும், மளிகைக் கடையையும் மறந்துவிட்டு, விளம்பரத்தையும், ஏ.சி. ஷோரூமையும் இலவசத் திட்டங்களையும், கண்டு மயங்கி இன்று "ரிலையன்ஸ் ஃபிரஷ்' கடைக்குச் செல்லும் படித்த முட்டாள்களும் இதை நம்புகிறார்கள்.


ஃபிரெஷ்ஷான புற்றுநோய்!


""பாக்கெட்டில் போடாமல் திறந்து வைத்திருக்கும் பொருளை வாங்காதீர்கள்'', ""ஈ மொய்க்கும் பொருளை வாங்காதீர்கள், சுத்தமான பொருளை வாங்குங்கள்'', ""பில் கொடுக்காத கடையில் பொருள் வாங்காதீர்கள்'' என்று சிறு வணிகர்களுக்கு எதிரான பிரச்சாரத்தை நயவஞ்சகமாகக் கட்டவிழ்த்து விடுகிறது அரசு. பில் போட்டு விற்க முடியாத சிறிய மளிகைக் கடைகள், சிறிய ஓட்டல்கள், தள்ளுவண்டி வியாபாரிகள் ஆகிய அனைவரையும் நுகர்வோரை ஏமாற்றும் கிரிமினல்கள் என்பதைப் போல வேண்டுமென்றே சித்தரிக்கிறது அரசு.


சிறுவணிகர்களைக் குற்றவாளிகளாகச் சித்தரிக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் யோக்கியதை என்ன? பளபளப்பான தாளில் பேக்கிங் செய்து விற்கப்படும் காட்பரீஸ் சாக்லெட்டிற்குள் புழு இருக்கிறதென்று பல ஊர்களிலிருந்து புகார் வந்து மகாராட்டிரா மாநிலம் முழுவதும் அதன் விற்பனை தடை செய்யப்படவில்லையா? கோக் பெப்சி பாட்டிலுக்குள் கரப்பான் பூச்சியும், பல்லியும், ஆணியும் கிடக்கவில்லையா? புற்று நோயை உருவாக்கும் பூச்சி மருந்துகள் அதில் கலந்திருப்பது நிரூபிக்கப்பட்ட பின்னரும் கோக்கும் பெப்சியும் விற்பனை செய்ய அனுமதிக்கப்படவில்லையா?


கலர் கலரான ஜிகினாத்தாள் பாக்கெட்டுகளில் சரம் சரமாகக் கடைகளில் தொங்கும் "லேஸ்' நொறுக்குத் தீனிகளில் கலந்திருப்பது என்ன? பல மாதங்கள் விற்காமல் கிடந்தாலும் காரல் வாடை வரக்கூடாது என்பதற்காக அதில் கலக்கப்படும் இரசாயனப் பொருட்கள் புற்று நோயை உண்டாக்கக் கூடியவை என்றும், அந்த நொறுக்குத் தீனிகளை வாங்கித் தின்னும் பள்ளிப் பிள்ளைகளுக்கு மாரடைப்பு வருவது உறுதி என்பதும் மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மையில்லையா?


பில் போடாத அண்ணாச்சி!
பில் போட்டுத் திருடும் அம்பானி!


பில் போட்டுக் கொடுத்துவிட்டால் நுகர்வோரின் நலன் எப்படிப் பாதுகாக்கப்படும்? ரிலையன்ஸ் தொலைபேசியின் வாடிக்கையாளர்கள் அமெரிக்காவுக்கும் லண்டனுக்கும் பேசிய அழைப்புகளுக்கு பல ஆயிரம் கோடி ரூபாயைப் பில் போட்டுத்தான் வசூலித்தார் அம்பானி. அரசு தொலைபேசியின் சேவையைப் பயன்படுத்தி இப்படி வாடிக்கையாளர்களிடம் கோடிக்கணக்கில் வசூலித்துவிட்டு, வெளிநாட்டு அழைப்புகளையெல்லாம் உள்ளூர் அழைப்புகள் என்று கணக்கெழுதி 1300 கோடி ரூபாய் மோசடியும் செய்தார். ஆயுள் தண்டனை வழங்கவேண்டிய இந்தக் கிரிமினல் குற்றம் நிரூபிக்கப்பட்ட பிறகும் முழுத்தொகையைக் கூட வசூலிக்காமல் கொஞ்சம் அபராதம் மட்டும் வாங்கிக் கொண்டு நண்பர் அம்பானியை "மன்னித்து' விட்டுவிட்டார் அமைச்சர் தயாநிதி மாறன்.


சென்ற ஆண்டு ரிலையன்ஸ் மொபைல் நிறுவனம் அறிவித்த "ஃபிலிம் தமாகா' என்ற பரிசுப் போட்டியில் கலந்து கொண்டு 8888 என்ற எண்ணுக்கு 6 ரூபாய் கட்டணம் செலுத்தி 6000 எஸ்.எம்.எஸ்.களை அனுப்பி, 36,000 ரூபாய் பில்லையும் கட்டிவிட்டு, ""இதுவரை போட்டியும் நடத்தவில்லை, யாருக்கும் பரிசும் கொடுக்கவில்லை'' என்று ரிலையன்ஸ் மீது சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குப் போட்டிருக்கிறார் ஒரு வாடிக்கையாளர் (இந்து, மார்ச், 16). எத்தகைய சில்லறைத்தனமான மோசடியிலும் இறங்கத் தயங்காதது அம்பானியின் நிறுவனம் என்பதற்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா?


இனி எங்கே போவது?


எல்லா தொழில்களிலிருந்தும் துரத்தப்படும் பரிதாபத்துக்குரிய மக்கள் அனைவரும் கடைசியாக வந்து சேரும் புகலிடம்தான் சில்லறை வணிகம். இந்த பரிதாபத்துக்குரிய மக்களின் வயிற்றிலடித்து சொத்து சேர்க்கலாம் என்று ஒரு முதலாளி நினைக்கிறான் என்றால் அவனை விடக் கொடூரமான கொலைகாரன் வேறு யாராவது இருக்க முடியுமா?

ஆனால், அரசாங்கம் இவர்களைத்தான் அரவணைக்கிறது. இவர்கள் பேச்சுக்குத்தான் ஆடுகிறது. வால்மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களை நுழைப்பதற்காக டெல்லி சிறுவணிகர்களின் கடைகளுக்குப் பூட்டு போடுகிறது உச்சநீதி மன்றம். சென்னை, மும்பை, டெல்லி, கல்கத்தா போன்ற பெரு நகரங்களில் நடைபாதை வியாபாரிகளை புல்டோசர் வைத்து அப்புறப்படுத்துகிறது அரசு. இதையும் மீறி உயிரோடிருக்கும் சிறு வணிகர்களை ஒழித்துக் கட்டுவதற்காகவே பன்னாட்டு நிறுவனங்களின் உத்தரவின் பேரில் வாட் என்ற வரி விதிப்பு முறை நாடு முழுவதும் திணிக்கப்பட்டிருக்கிறது.


எங்கே போனார்கள்
ஓட்டுக் கட்சிகள்?


உலகத் தமிழர்களுக்காகவெல்லாம் சீறும் புரட்சிப் புயல் வைகோ, அம்பானிக்கு எதிராக சீறாத மர்மம் என்ன? சதாம் உசேனைத் தூக்கிலிட்ட அமெரிக்காவுக்கே கண்டனம் தெரிவித்த புரட்சித் தலைவி அம்பானிக்கு ஒரு கண்டனம் தெரிவிக்காத இரகசியம் என்ன? மகனுக்கு மத்திய மந்திரி பதவி வாங்குவதற்கு மன்மோகன் சிங்கிடம் கறாராகப் பேரம் பேசத் தெரிந்த அய்யா ராமதாசு, அம்பானியை விரட்டாவிட்டால் ஆட்சிக்கு ஆதரவு இல்லை என்று கறாராகப் பேசாத மாயமென்ன? தன்னுடைய திருமண மண்டபம் இடிக்கப்படுவதை உலகப் பிரச்சினையாக்கிய கேப்டன், கோயம்பேடு தொழிலாளர்களின் வாழ்க்கை இடிக்கப்படுவதை எதிர்த்து வீரவசனம் கூடப் பேசவில்லையே ஏன்? மத்திய அரசையே ஆட்டிப்படைப்பதாகப் பெருமை பீற்றிக் கொள்ளும் மார்க்சிஸ்டுகள் அம்பானி விசயத்தில் அடக்கி வாசிப்பது ஏன்?


""ஒரு இலட்சம் குடும்பங்கள் பட்டினியால் சாகப் போகிறோம்'' என்று கருணாநிதியிடம் சென்று கதறி அழுதாலும் அவர் எல்லோருக்கும் 2 ரூபாய் அரிசி வேண்டுமானால் கொடுப்பாரே தவிர, அம்பானியையும் வால்மார்ட்டையும் ""வெளியே போ'' என்று மட்டும் சொல்லமாட்டார். ஒருவேளை, வாய்தவறிச் சொல்லி விட்டால் அடுத்த கணமே அவர்தான் பதவியிலிருந்து வெளியே போக வேண்டியிருக்கும்.


தேர்தல் பாதை தீர்வல்ல!


இது சுதந்திர நாடு அல்ல. உலக வங்கிக்கும் உலக வர்த்தகக் கழகத்துக்கும் அமெரிக்காவுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அடிமைச்சாசனம் எழுதிக் கொடுத்திருக்கும் அடிமை நாடு. திராவிடம், தேசியம், தமிழினம் என்று ஓட்டுக் கட்சிகள் பேசும் பேச்செல்லாம் வெறும் வார்த்தை ஜாலங்கள். வெறும் வாய்ச் சவடால்கள். இவர்களுடைய வாய்ச்சவடால்களால் அம்பானியின் கடையிலிருந்து ஒரேயொரு கத்தரிக்காயைக் கூட வெளியே தூக்கியெறிய முடியாது.


அம்பானி என்பவன் தனியொரு முதலாளி அல்ல. கோயம்பேடு பிரச்சினை தனியான பிரச்சினையும் அல்ல. தனியார்மய, தாராளமயக் கொள்கைகளின் ஒரு விளைவாகத்தான் இன்று சில்லறை வணிகத்தில் பன்னாட்டுக் கம்பெனிகள் நுழைகின்றன. இதனைக் காய்கனி வணிகர்கள் மட்டும் தனியாகப் போராடி வெல்ல முடியாது.


அம்பானியின் பின்னால் இந்தியத் தரகு முதலாளிகள் அனைவரும் இருக்கிறார்கள். பன்னாட்டு நிறுவனங்கள் இருக்கின்றன. அரசு எந்திரமும் போலீசும் கோர்ட்டும் மத்திய மாநில அரசுகளும் எல்லா ஓட்டுக் கட்சிகளும் அம்பானிக்குப் பக்கபலமாக நிற்கின்றனர். இந்த மிகப்பெரிய எதிரியை எதிர்கொள்ள வேண்டுமென்றால் மறுகாலனியாதிக்கக் கொள்கைகளால் பாதிக்கப்பட்ட அனைவரும் ஓரணியில் திரண்டு போராடினால் தான் முடியும்.


மக்களிடம் செல்வோம்!

மறுகாலனியாக்கத்தை வெல்வோம்!


ரிலையன்ஸ் நிறுவனத்தால் வாழ்க்கையை இழந்த வியாபாரிகள் கோயம்பேட்டில் உண்ணாவிரதம் இருப்பதனால் மட்டும் பிரச்சினை தீர்ந்துவிடாது. கூடைக்காரப் பெண்களும், தள்ளுவண்டி வியாபாரிகளும், மளிகைக் கடை அண்ணாச்சிகளும் ரிலையன்சின் கடை வாசலில் மறியல் செய்ய வேண்டும்.


எங்கெல்லாம் ரிலையன்ஸ் கடை இருக்கிறதோ அந்தச் சுற்று வட்டாரம் முழுவதும் உள்ள தள்ளுவண்டி வியாபாரிகளும் மளிகைக் கடைகாய்கறிக் கடைக்காரர்களும் ரிலையன்ஸ் எதிர்ப்பு, பன்னாட்டு நிறுவன எதிர்ப்புப் பிரச்சாரத்தைத் தம் கடைகளில் இருந்தபடியே செய்ய முடியும். காய்கறி விற்கும் பெண்கள் தம் கூடைகளில் ரிலையன்ஸ் எதிர்ப்புப் பிரச்சாரத் துண்டறிக்கைகளைக் கொண்டு சென்று வீடு வீடாக இந்தக் கருத்தைப் பரப்ப முடியும்.


பிழைப்பதற்குரிய எல்லா வழிகளும் அடைபட்டு, கடைசியாகக் கையை ஊன்றிக் கரணம் போட்டு, கந்து வட்டிக்குக் கடன் வாங்கி சரக்கெடுத்து தெருத்தெருவாக அலைந்து திரிந்து வாடிக்கையாளர்களை உருவாக்கி, இரண்டு வேளை கஞ்சி குடிக்க ஒரு வழியை உருவாக்கிக் கொண்டால், கரையான் புற்றெடுக்க கருநாகம் நுழைந்தது போல நுழைந்திருக்கிறான் அம்பானி. இந்தப் பாம்புக்குப் பால் வார்க்கிறது அரசு.


பாம்பைப் பார்த்து நடுங்கி அன்றாடம் செத்துப் பிழைப்பதை விட ஒரே போடாய்ப் போட்டு விடுவதுதான் அறிவுக்கு உகந்த செயல். மானமுள்ள வழியும் அதுதான்!

···

""சிறு வணிகத்தை விழுங்க வரும்

ரிலையன்ஸ், வால்மார்ட்டே

வெளியேறு!''


என்ற பிரசுரத்தில் இருந்து

இக்கட்டுரை சுருக்கி

வெளியிடப்பட்டுள்ளது.

பிரதிகள் கிடைக்குமிடம்:

இரா. சீனிவாசன், புதிய கலாச்சாரம்,

18, முல்லைநகர் வணிக வளாகம்,

2வது நிழற்சாலை, அசோக்நகர், சென்னை 83.

···

பிரான்சில் பொலிஸ் ஆட்சி நிறுவப்படுமா?

பிரான்சில் பொலிஸ் ஆட்சி நிறுவப்படுமா?

பி.இரயாகரன்
23.04.2007


ரு தீவிரமான வன்முறை கொண்ட பொலிஸ் ஆட்சி தான், பிரான்சின் சமுதாய முரண்களை ஒழிக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் வாக்களிப்படுகின்றது. அந்த வகையில் முதல் சுற்றில் முன்னணியில் வெற்றி பெற்ற வேட்பாளரே, இரண்டாவது சுற்றில் வெற்றிபெறுவார் என்ற கருத்துக் கணிப்புகள் வெளிவருகின்றது.


பொலிசாருக்கு அதிக அதிகாரங்களும், வரைமுறையற்ற கைதுகள் மூலமும், சிறைத்தண்டனைகள் மூலமும், சமுதாயத்தின் பிரச்சனையை தீர்க்க முடியும் என்ற மனித அற்பத்தனங்களே இத் தேர்தலில் மேலோங்கி காணப்படுகின்றது. சமுதாயத்தில் இந்த முரண்பாடு ஆழமாகி, ஒரு வெறியாகி வெளிப்படுகின்றது.


இதன் மூலம் அனைத்து பிரஞ்சு மக்களின் நலனை பூர்த்தி செய்யப் போவதாக, பொய்யாக பீற்றிக்கொள்ளுகின்றனர். மக்களை ஏமாற்றி குறுகிய நிறவாதம் முதல் ஆசை காட்டல் வரையிலான அற்பத்தனங்கள் மூலம் வெற்றி பெற முனைகின்றனர்.


அண்மைய பிரஞ்சு வரலாற்றில் இந்த தேர்தலில் அதிக மக்கள் வாக்களிக்கும் அளவுக்கு, சமுதாயம் இரண்டாக பிளந்து கடுமையான முரண்பாடுகள் வெளிப்பட்டுள்ளது. சமூகத்தைப் பிளந்து, சமூகத்தின் பிளவுக் கோட்பாடுகளுக்குள் தீர்வுகளை முன்னிறுத்தி, தேர்தல் வெற்றி சாதிக்கப்படுகின்றது.


நாசிக்கட்சிகளின் கொள்கைகளை உள்வாங்கியதன் மூலம், அதை தீவிர வலதுசாரிகள் தமது வேலைத்திட்டத்தில் பகிரங்கமாக இணைத்துக் கொண்டதன் மூலம், ஒரு பகுதி நாசிகளை முதல் சுற்றில் அணிதிரட்ட முடிந்தது. இரண்டாவது சுற்றில் நாசிகளின் முழு ஆதரவில் வெற்றி பெறுவது என்ற திட்டத்துக்கு அமைய, வலதுசாரிகள் தமது கொடூரமாக பக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதன் நடைமுறை சார்ந்த விளைவே மனிதத்தை சிதைப்பது தான.


ஒடுக்கப்பட்ட அனைத்து மக்கள் மேலான தீவிரமான தாக்குதலுக்கு தயாராகும் ஒரு பொலிஸ் ஆட்சி நிறுவப்படும் என்ற நம்பிக்கைக்காக வாக்களிப்படுகின்றது. இதன் மூலம் ஒடுக்குபவன் நம்பும் சட்ட ஒழுங்கை பேணமுடியும் என்ற நம்பிக்கை தான், தேர்தல் முடிவுகளாகின்றது. இதன் மூலம் சமுதாயத்தில் நிலவும் வாழ்வுக்கான போராட்டங்களையும், வாழ்வு மறுக்கப்பட்டவர்களின் அராஜக நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்த முடியும் என்று நம்புகின்றனர்.


இந்த வகையில் தான் ஒடுக்குபவர்கள் என்றுமில்லாத பொலிஸ் வன்முறையைக் கையாள்வார்கள். ஆனால் இந்த வழிகள் எதிர்மறைத் தன்மை கொண்டதாக, மனித விரோத செயலாக அமைவதை வரலாறு மறுபடியும் நிறுவும். ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வின் வாழ்வு ஆதாரங்கள் அழிக்கப்பட்ட நிலையில் தான், அதிதமான வன்முறைகளும், சமுதாயத்தில் அராஜகத்தன்மையும் அதிகரிக்கின்றது. இதை பொலிஸ் ஆட்சி மூலம் நிவர்த்தி செய்ய முடியாது.


சமுதாயத்தில் நிலவும் இந்த நிலைமைக்கான காரணம் இடதுசாரிகளின் அரசியல் அற்பத்தனத்தின் விளைவாகும். இடதுசாரிகள் என்றும், கம்ய+னிஸ்டுக்கள் என்றும் கூறிக்கொண்டு சமுதாயத்தில் ஓட்டுண்ணிகளாக வாழ்வோரின் காட்டிக்கொடுப்புத்தான் காரணமாகும். இந்த இடதுசாரி கட்சிகளின் அரசியல் வேலைத்திட்டம் முதல் தொழிற்சங்கங்கள் வரை மூலதனத்துக்காக நக்கித்தின்னுகின்ற ஓட்டுண்ணிகளின் சீரழிவான பாதைதான், சமுதாயத்தை இந்த நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.


தொழிலாளி வர்க்கம் தனது வர்க்க உணர்வை இழந்துள்ள நிலையில், சமுதாயம் போராடும் ஆற்றலை இழந்து, உதிரியான தனிமனித அராஜகத்தன்மைகள் அதிகரிக்கின்றது. சமுதாயத்தின் பிரச்சனைகளை புரிந்து கொள்கின்ற ஆற்றல், ஆளுமையையும் இதன் மூலம் இழந்து விடுகின்றது. இது பொலிஸ் ஆட்சி மூலம், சட்ட ஒழுங்கு மூலம் தீர்க்கப்படும் என்று நம்பி, அதை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கின்றனர். இந்த வகையில் சமுதாயத்தின் அறிவு மட்டமும், ஒவ்வொரு நிகழ்ச்சியையும் கூர்ந்து புரிந்து கொள்கின்ற பகுத்தாய்வுத் தன்மையையும் சமுதாயம் இழந்துவிடுகின்றது.


வர்க்க உணர்வு பெற்ற அரசியல் நிலையை துறந்துவிடுகின்ற போது, இடையில் நிற்கின்ற வர்க்கப் பிரிவுகள் பாசிசத்தை தெரிந்து எடுப்பது தற்செயலாக நிகழ்கின்றது. தனக்கு ஆபத்தற்றதாக நம்புகின்ற சில தேர்வுகள், சமுதாயத்தில் ஒரு பிரிவு மீது தாக்குதலாக மாறுகின்றது இப்படி இழிவான அரசியல் உணர்வை பெற்று, கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பது நிகழ்கின்றது. குருட்டுத்தனமான சில சமுதாய நம்பிக்கைகள், தீர்வென்று நம்புகின்ற எடுகோள்கள், சுய விசாரணைக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாகாத சமுதாய அமைப்பில், அதை ஆதரிக்க தூண்டுகின்றது. இதனுடன் தனிப்பட்ட பாதிப்புக்கள், இயல்பாக மற்றவனுக்கு எதிராக வாக்களிக்கும் அரசியல் சூதாட்டத்தில் இறங்கி விடுகின்றனர்.


இந்த சூதாட்டத்தில் வாக்கு போடுகின்ற உழைக்கும் வர்க்கம் பெறப்போகும் அறுவடையோ, மிக மோசமானதாகவே இருக்கும். மனித துயரங்களும், மனித கொடூரங்களும் எதிர்காலத்தில் பரிசாக கிடைக்கும். சதாரணமான தொழில் உரிமை முதல், அனைத்தையும் பறிகொடுக்கின்ற நிலைக்கு சமூகம் தரம் தாழ்த்தப்படும். கடந்த காலத்தில் போராடிப் பெற்ற அடிப்படையான (தொழில்) உரிமைகள், சட்டங்கள் அனைத்தையும் இழப்பார்கள். வரைமுறையற்ற வேலை நேரம் முதல், வெளிநாட்டவர்கள் மீதான கொடூரமான ஒடுக்குமுறை வரை, எதிர்பார்த்து அதற்காக சிலர் தெளிவாக வாக்களிக்கின்றனர்.


குறிப்பாக வெளிநாட்டவர் மீதான ஒடுக்குமுறையை கோரும் வாக்காளர்கள் தான், இந்த வெற்றியை குறிப்பாக உணர்த்தி நிற்கின்றனர். இயல்பான வழமையான வலதுசாரிய சுரண்டல் கோட்பாட்டை முன்வைத்து, இந்த தேர்தல் வெற்றிகள் தீர்மானிக்கப்படவில்லை. மாறாக பிரஞ்சு அல்லாத வெளிநாட்டவர்கள் மீதான காழ்ப்புணர்வை தீர்த்துக் கொள்ளும், வன்முறை சார்ந்த வெறியுடன் வாக்களிக்கப்பட்டது. நாசிக்கட்சியின் தீர்மானகரமான ஆதரவுடன் தான், இந்த அதிகார மையம் ஜனநாயகத்தின் பெயரில் உருவாக்கப்படுகின்றது.


நாசிச பாசிட்டுகளும், கிட்லரின் வாரிசுகளுமான பிரஞ்சு தீவிர வலதுசாரிகள் கட்டமைக்கும் அவதூறுகளை உள்வாங்கியே, வலதுசாரிகள் ஆட்சிக்கு வரமுனைகின்றனர். இதை மறுத்தல்ல. 1930, 1940 களில் நாசிசம் சார்ந்த வெளிப்பாடுகள் கொண்ட ஒரு வன்முறையை, சமுதாயம் மீது கையாளப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி நிற்கின்றது. ஆளும் வர்க்கங்கள் வலது இடது களைந்த நிலையில், வர்க்க உணர்வு பெற்ற தொழிலாளி வர்க்கம் சிதைந்து போன வரலாற்றில் தான், இந்த தேர்தல் முடிவுகள் அமைகின்றது. அரசியலில் பாசிசம் அரங்கேறுவதை தடுத்து நிறுத்தும் ஆற்றல், இடதுசாரிக் கட்சிகள் என்று கூறிக்கொண்டும், கம்யூனிஸ்ட்டுகள் என்று கூறிக்கொண்டும் பிழைக்கும் கட்சிகளிடமோ கிடையாது.


ஒடுக்கப்பட்ட மக்கள் மேலும் மேலும் அடக்குமுறையையும், ஒடுக்கு முறையையும் அனுபவிப்பதையே, ஜனநாயகமாக்கி விடுவதையே வரலாறாக மீண்டும் நிறுவிக் காட்டும். வரலாறு மீண்டும் வர்க்க உணர்வு பெற்ற ஒரு முன் முயற்சிக்காகவே, காத்து நிற்க வேண்டிய அவலத்தில், பிரஞ்சு சமூகம் தனது புரட்சிகரமான வரலாற்றை இழந்து நிற்கின்றது என்பதே எதார்த்த உண்மையாகும்.


Sunday, April 22, 2007

நக்சல்பாரி… நந்திக்கிராமம் சி.பி.எம்.கட்சியின் கொலைவெறி

நக்சல்பாரி… நந்திக்கிராமம்…
சி.பி.எம்.கட்சியின் கொலைவெறி



ழைக்கும் மக்களின் கட்சி என்று புளுகிக் கொண்டு மே.வங்கத்தை ஆளும் சி.பி.எம். கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி அல்ல; கார்ப்பரேட் கட்சி. அது மார்க்சிஸ்ட் கட்சி அல்ல; பாசிஸ்ட் கட்சி. கடந்த மார்ச் 14ஆம் தேதியன்று மே.வங்கத்தின் நந்திகிராமத்தில் போலீசும்சி.பி.எம்.மும் இணைந்து நடத்திய பாசிசக் கொலைவெறியாட்டம் இந்த உண்மைகளை மீண்டும் நிரூபித்துக் காட்டிவிட்டது.


நந்திகிராமத்தில் நடந்தது என்ன?


மே.வங்கத்தில் ஹால்டியா வட்டாரத்தில் 14,500 ஏக்கர் பரப்பளவில் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை நிறுவப் போவதாக "இடதுசாரி' அரசு அறிவித்துள்ளது. இச்சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்காக விளைநிலங்களை இழக்கப் போகும் கிராமங்களில் ஒன்றுதான் நந்திகிராமம். விளைநிலங்களை ஆக்கிரமித்து விவசாயிகளின் வாழ்வுரிமையைப் பறிக்கும் இச்சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு எதிராக கடந்த 6 மாதங்களாக நக்சல்பாரி புரட்சியாளர்கள் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டு, விவசாயிகளை அணிதிரட்டி வந்தார்கள்.


இதைக் கண்டு ஆத்திரமடைந்த சி.பி.எம். குண்டர்கள், ஜனவரி 6ஆம் நாளன்று அதிகாலையில் 250 பேருக்கும் மேலாகத் திரண்டு வந்து நந்திகிராமம், சோனாசுரா கிராம மக்கள் மீது குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தியதோடு, நாட்டுத் துப்பாக்கியால் கண்டபடி சுட்டனர். இப்பயங்கரவாதத் தாக்குதலில் 6 விவசாயிகள் கோரமாகக் கொல்லப்பட்டு, பலர் படுகாயமடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த நந்திகிராம வட்டார விவசாயிகள், கொலைகார சி.பி.எம். கட்சிக் கிளை அலுவலகங்களைத் தீயிட்டுக் கொளுத்தி, சி.பி.எம். கட்சியைச் சேர்ந்த துரோகிகளையும், ஆள்காட்டிகளையும் கிராமத்தைவிட்டே வெளியேற்றினர். அதன்பிறகு, விவசாயிகளின் ஒப்புதலோடு மட்டுமே நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்றும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் மே.வங்க முதல்வர் அறிவித்தார்.


விவசாயிகளின் ஒப்புதலோடு நிலம் கையகப்படுத்தப்படுமா, ஒப்புதல் இல்லாமல் பறிமுதல் செய்யப்படுமா என்பதல்ல பிரச்சினை. நந்திகி ராம வட்டாரத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை நிறுவும் திட்டம் கைவிடப்படுமா, இல்லையா என்பதுதான் விவசாயிகளின் கேள்வி. இதற்கு எந்த விளக்கமும் தராமல், சிறப்புப் பொருளாதார மண்டலத்தை நிறுவும் வெறியோடு சி.பி.எம். ஆட்சியாளர்கள் முனைப்பாகச் செயல்பட்டதால், விவசாயிகள் நந்திகிராமத்துக்கு வரும் சாலைகள் பாலங்களைத் துண்டித்து போராட்டத்தைத் தொடர்ந்தனர். இப்பகுதியில் அரசு நிர்வாகம் முற்றாகச் செயலிழந்து முடமாகிப் போனது.


சிறப்புப் பொருளாதார மண்டலத்தை நிறுவி தரகுப் பெருமுதலாளிகளுக்கும் பன்னாட்டு ஏகபோக முதலாளிகளுக்கும் சேவை செய்ய முடியாமல் நந்திகிராம மக்கள் தடையாக நிற்பதைக் கண்டு ஆத்திரமடைந்த முதல்வர் புத்ததேவ், ""நந்திகிராமத்தில் சட்டம்ஒழுங்கு சீர்குலைந்து விட்டது'' என்று புலம்பி, விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்தார். மே.வங்க அரசும் மாவட்ட நிர்வாகமும் இடதுசாரிக் கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகளை வைத்து நந்திகிராமத்தில் சிவில் நிர்வாகம் மீட்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றின. ""நந்திகிராம அராஜகத்தை இனிமேலும் சகித்துக் கொண்டிருக்க முடியாது; அவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவோம்'' என்று மார்ச் 11ஆம் நாளன்று சி.பி.எம். கட்சி ஏற்பாடு செய்திருந்த விவசாயிகள் பேரணியில் புத்ததேவ் கொக்கரித்தார்.


பாசிச முதல்வர் புத்ததேவின் கொலைவெறி பிடித்த இந்த வார்த்தைகள், மார்ச் 14ஆம் நாளன்று போலீசு மற்றும் சி.பி.எம். குண்டர்களின் கொலைவெறியாட்டமாக மாறியது. 5000க்கும் மேற்பட்ட போலீசார் துப்பாக்கிகள் வெடிகுண்டுகளுடன் 2000 பேர் கொண்ட நந்திகிராம வட்டாரத்தைச் சுற்றி வளைத்து எவ்வித முன்னெச்சரிக்கையுமின்றி நிராயுதபாணியான விவசாயிகள் மீது கண்மூடித்தனமாக 67 ரவுண்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். போலீசு சீருடை அணிந்து கொண்டு, அவர்களோடு சேர்ந்து வந்த 250க்கும் மேற்பட்ட சி.பி.எம். குண்டர்கள் நாட்டுத் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், கோடாரியோடு நந்திகிராம மக்கள் மீது கொலைவெறியாட்டம் போட்டனர். போலீசார் பூட்ஸ் அணிந்திருக்க, சி.பி.எம். குண்டர்கள் சாதாரண செருப்புடன், சீருடையில் அரசு இலச்சிணை இன்றி தாக்குதல் நடத்தியதை நந்திகிராம மக்கள் அனைத்துப் பத்திரிகைகள்தொலைகாட்சி நிறுவனங்களிடம் சாட்சியமளித்துள்ளனர். நந்திகிராம மக்களைக் கொன்றொழிக்கும் வெறியோடு இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. ஏனெனில், கொல்லப்பட்டவர்கள் அனைவரும் முதுகு, வயிறு, நெஞ்சு, தலைப்பகுதியில் குண்டடிப்பட்டு மாண்டு போயுள்ளார்களே தவிர, முழங்காலுக்குக் கீழாகக் குண்டுக் காயம்பட்டவர்கள் ஒருவர் கூட இல்லை.


நந்திகிராமத்துக்குச் சென்று கொலைவெறியாட்டம் போட்ட போலீசிடம் .303, .672 ரக குண்டுகளே துப்பாக்கியுடன் அளிக்கப்பட்டிருந்தன. ஆனால் மாண்டுபோன விவசாயிகளின் பிரேதப் பரிசோதனையில், பலரது உடலில் .315, .38 ரக குண்டுகள் பாய்ந்துள்ளதைக் கண்டு மருத்துவர்களே அதிர்ச்சியடைந்துள்ளனர். சி.பி.எம். குண்டர்கள் கள்ளத் துப்பாக்கியால் நந்திகிராம மக்களைச் சுட்டுக் கொன்று வெறியாட்டம் போட்டுள்ளதற்கு இதுவொன்றே இரத்த சாட்சியாக உள்ளது.


சி.பி.எம். குண்டர்கள் நந்திகிராமம் அருகேயுள்ள தெஹாலி கிராம பாலத்தை ஒட்டியுள்ள ஜனனி செங்கற்சூளையில் ஆயுதங்கள், துப்பாக்கிகள், வெடிமருந்துகளைப் பதுக்கி வைத்துக் கொண்டு அங்கிருந்து தாக்குதலை நடத்தியுள்ளனர். கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டுவதற்காக கொல்லப்பட்டவர்களை சாக்குத் துணியில் போட்டுத் தரதரவெனப் பிணங்களை அவசரமாக இழுத்துச் சென்று செங்கற்சூளையில் போட்டு சி.பி.எம். குண்டர்கள் எரித்துள்ளனர். கொலைவெறியாட்டம் நடந்த களத்திலிருந்து செங்கற்சூளைவரை தரையெங்கும் தெறித்துக் கிடந்த இரத்தக் கறைகளே இக்கொடூரத்தை நிரூபித்துக் காட்டுகின்றன.


மையப் புலனாய்வுத் துறையின் (இஆஐ) ஆரம்ப விசாரணையிலேயே இவை அனைத்தும் நிரூபிக்கப்பட்டுள்ளதோடு, அச்செங்கற் சூளையிலிருந்து ஆயுதங்கள், வெடிகுண்டுகள், துப்பாக்கிகள், போலீசு சீருடை, இரும்புத் தொப்பி, சி.பி.எம். கட்சிக் கொடிகள், சி.பி.எம். கட்சியின் இளைஞர் அமைப்பான டைஃபி (ஈஙுஊஐ) யின் பிரசுரங்கள் கொடிகள், நந்திகிராம வீடுகள் தெருக்களின் வரைபடம் முதலானவையும் மையப் புலனாய்வுத் துறையால் கைப்பற்றப்பட்டுள்ளன. இது
தவிர, மரங்களிலும், புதர்களிலும் சி.பி.எம். குண்டர்களால் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகளும், இரத்தக்கறை படிந்த சாக்குத் துணிகளும் கைப்பற்றப்பட்டு, 10 சி.பி.எம். குண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


நந்திகிராமத்தில் நடந்த போலீசு சி.பி.எம். குண்டர்களின் கொலைவெறியாட்டத்தில் மாண்டு போனவர்களின் எண்ணிக்கை 14 தான் என்கிறது அரசு. ஆனால் நந்திகிராம வட்டாரத்தில் பலர் "காணாமல்' போயுள்ளனர். இதுதவிர, சி.பி.எம். குண்டர்கள் செங்கற்சூளையில் எரித்துக் கொன்றவர்களின் எண்ணிக்கை இன்னமும் வெளியே வரவில்லை.

இந்தப் பயங்கரவாத வெறியாட்டங்களையெல்லாம் விஞ்சும் வகையில் சி.பி.எம். குண்டர்கள் நந்திகிராமப் பெண்கள் மீது பாலியல் வன்முறையை ஏவியுள்ளதைக் கண்டு நாடே அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது. நந்திகிராம கொலைவெறியாட்டத்தின் போது சாதாரண செருப்பு அணிந்து போலீசு சீருடையில் வந்த சி.பி.எம் குண்டர்கள், பல பெண்களை துப்பாக்கி முனையில் மிரட்டிப் பாலியல் வன்முறையை ஏவியுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இரு பெண்கள் அளித்துள்ள வாக்குமூலங்கள் பத்திரிகைகளில் வெளிவந்து நாடெங்கும் நாறுகிறது. இதுதவிர, பாலியல் வன்முறையை ஏவிய ஒருவனை நந்திகிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் அடையாளம் காட்ட, அவனைப் பிடித்து மக்கள் விசாரித்த போது, அவன், தான் சி.பி.எம். ஆதரவாளன் என்றும் சி.பி.எம். தலைவர்கள் சொன்னதாலேயே இப்படிச் செய்ததாகவும் பி.டி.ஐ. செய்தியாளர் முன்னிலையிலேயே வாக்குமூலம் அளித்துள்ளான்.


இத்தனை பயங்கரவாத வெறியாட்டங்களும் அடுத்தடுத்து அம்பலமாகியுள்ள போதிலும், மே.வங்க பாசிச முதல்வரான புத்ததேவ் இக்கொலை வெறியாட்டங்களுக்குக் கண்டனமோ, வருத்தமோ தெரிவிக்கவில்லை. அவரை முதல்வர் பதவியிலிருந்து விலக்க மாட்டோம் என்று அக்கொலைகார முதல்வரைப் பாதுகாக்கிறார், சி.பி.எம். கட்சியின் பொதுச் செயலாளரான கரத். ஆனால், மே.வங்கத்தின் பல்வேறு மனித உரிமை ஜனநாயக உரிமை அமைப்புகளும், தொழிற்சங்க விவசாயிகள் சங்கத்தினரும் எழுத்தாளர்களும் கலைஞர்களும் சி.பி.எம். கட்சி மீது காறி உமிழ்ந்துள்ளனர். மே.வங்க அரசின் கலாச்சார நிறுவமான பஸ்சிம்பங்கா பங்களா அகாடமியின் துணைத்தலைவரும் பிரபல கவிஞருமான சங்கா கோஷ் ""நந்திகிராமத்தில் நடந்திருப்பது சி.பி.எம். கட்சி மற்றும் அரசின் பயங்கர வெறியாட்டம்; இதற்கு மேலும் நாங்கள் அரசாங்கப் பதவியில் நீடிப்பது அவமானம்'' என்று அறிவித்து இந்த அகாடமியின் நிர்வாகக் குழு உறுப்பினர்களோடு பதவி விலகியுள்ளார். உழைக்கும் மக்களிடமும் அறிவுத்துறையினரிடமும் முற்றாக அம்பலப்பட்டு தனிமைப்பட்டுப் போயுள்ள சி.பி.எம்.இன் கொலைகார ஆட்சியை "துக்ளக்' சோ போன்ற பாசிஸ்டுகள் மட்டுமே ஆதரிக்கின்றனர்.


இவற்றையெல்லாம் மூடி மறைத்துவிட்டு கோயபல்சு வழியில் அண்டப்புளுகை அவிழ்த்து விட்டு, நியாயவாதங்களை அடுக்கித் தமது பாசிச கொலைவெறியாட்டங்களை மூடிமறைக்கக் கிளம்பியுள்ளது சி.பி.எம். கட்சி.


""கடந்த இரண்டரை மாதங்களாக நந்திகிராமத்தில் அரசு எந்திரமே செயல்பட முடியவில்லை. அது வன்முறையாளர்கள் தீவிரவாதிகளின் "சுதந்திர' ராஜ்ஜியமாகவே இருந்தது. இடதுசாரி அரசாங்கம் மட்டுமல்ல; வேறெந்த அரசாங்கமும் இத்தகைய நிலைமையைச் சகித்துக் கொண்டிருக்க முடியாது. எனவேதான் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், வன்முறைச் சக்திகளால் நாசமாக்கப்பட்டுள்ள சாலைகள் பாலங்களைச் சீரமைக்கவும் அங்கு போலீசு அனுப்பப்பட்டது'' என்று நியாயவாதம் பேசுகிறார் மே.வங்க பாசிச முதல்வர்.


எல்லா ஆட்சியாளர்களையும் போலவே, போராட்டம் என்றாலே சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று ஒப்பாரி வைக்கிறார் புத்ததேவ். யாருக்கான சட்டம் ஒழுங்கு என்பதுதான் கேள்வி. இந்தச் சட்டம் ஒழுங்கு உழைக்கும் மக்களுக்கானதா? அல்லது இந்தோனேஷியாவில் கம்யூனிஸ்டுகளை நரவேட்டையாடிய பாசிச சுகர்தோவின் கூட்டாளியான சலீம் குழுமம், நந்திகிராம விளைநிலங்களைக் கைப்பற்றி சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் பெயரில் பகற்கொள்ளை அடிப்பதற்கா? இது ஒருபுறமிருக்கட்டும்.


நந்திகிராம மக்கள் கடந்த இரண்டரை மாதங்களாக சிறப்புப் பொருளாதார மண்டலம் நிறுவப்படுவதற்கு எதிராகப் போராடிவரும் நிலையில், அங்கு சாலைகள் பாலங்களைச் சீரமைக்க பொதுப்பணித்துறை ஊழியர்களை அனுப்பாமல் 5000க்கும் மேற்பட்ட போலீசாரை அனுப்பியது ஏன்? அவர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்த அனுப்பப்பட்டார்களா? அல்லது துப்பாக்கிகளையும் குண்டுகளையும் வைத்து சாலைபோடச் சென்றார்களா?


""நந்திகிராமத்தினுள் போலீசு நுழைய முற்பட்டதும் வன்முறையாளர்கள் கற்களை வீசி போலீசு மீது தாக்குதல் நடத்தினர்; மரங்களின் மீதேறிக் கொண்டு நாட்டுத் துப்பாக்கியால் சுட்டனர்; நாட்டு வெடிகுண்டுகளை வீசினர்'' என்று குற்றம் சாட்டுகிறது, சி.பி.எம். கட்சியின் அதிகாரபூர்வ ஆங்கில வார ஏடான ""பீப்பிள்ஸ் டெமாக்கிரசி''. இது உண்மையென்றால், காயம்பட்ட ஒரு போலீசுக்காரனைக் கூட அக்கட்சியினரோ, "இடதுசாரி' அரசாங்கமோ இதுவரை காட்ட முடியவில்லையே, அது ஏன்? போலியாக மாவுகட்டு போட்டுக் கொண்டு போட்டோவுக்கு ""போஸ்'' கொடுக்கும் போலீசுக்காரனைக் கூட இதுவரை காட்டவில்லையே! அப்புறம் எந்த போலீசுக்காரர்கள் காயமடைந்தார்கள்?


நந்திகிராம மக்களை சமூக விரோதிகள், வன்முறையாளர் என்றெல்லாம் குற்றம் சாட்டுகிறது சி.பி.எம் கட்சி. நந்திகிராமத்தில் போலீசு கொலைவெறியாட்டம் போட்டு, பின்னர் அங்கு முகாம் அமைத்துள்ள போதிலும் இதுவரை நந்திகிராமத்தில் ஒரு வன்முறையாளர் கூட கைது செய்யப்படவில்லையே, அது ஏன்? அந்த வன்முறையாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்களா அல்லது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் குண்டடிப்பட்ட உழைக்கும் மக்கள் வன்முறையாளர்களா?


""நந்திகிராமத்தில் போலீசு நுழைந்ததும் அக்கிராம மக்கள் கல்லெறிந்து தாக்குதல் நடத்தினர். போலீசார் கண்ணீர்புகை வீசியும், ரப்பர் தோட்டாக்களைக் கொண்டு துப்பாக்கியால் சுட்டும் அக்கூட்டத்தைக் கலைத்தனர். மக்கள் கூட்டம் நாற்புறமும் சிதறி ஓடியது; அதன்பிறகு வன்முறையாளர்கள் திரண்டு வந்து நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இத்தாக்குதலுக்குப் பின்னரே போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்'' என்று நந்திகிராமத்தில் நடந்த சம்பவங்களை அங்குலம் அங்குலமாக விவரித்து, ""தவிர்க்கவியலாத நிலையிலேயே போலீசு துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியதாயிற்று'' என்று நியாயவாதம் பேசுகிறது பாசிச சி.பி.எம். கட்சி.


கண்ணீர் புகை குண்டுக்கும் ரப்பர் தோட்டாக்களுக்குமே மக்கள் நாற்புறமும் சிதறி ஓடிவிட்டார்கள் என்றால், 5000க்கும் மேற்பட்ட போலீசார் அதிநவீன துப்பாக்கிகள், வெடிகுண்டுகளுடன் நந்திகிராமத்துக்குச் சென்றது ஏன்? வன்முறையாளர்கள் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டனர் என்பது உண்மையானால், அதிரடியாகத் தாக்குதல் நடத்திய போலீசு, இதுவரை ஒரு நாட்டுத் துப்பாக்கியைக் கூட கைப்பற்றவில்லையே, அது ஏன்? வீடுவீடாகச் சோதனை நடத்தியும் கூட, அந்த நாட்டுத் துப்பாக்கிகளும் நாட்டு வெடிகுண்டுகளும் மறைந்து போனதன் மர்மம் என்ன?


எல்லாவற்றுக்கும் மேலாக, நந்திகிராமத்தைச் சாராத வெளியிலிருந்து வந்த அன்னிய சக்திகள் நந்திகிராம மக்களிடம் பொய்ப் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்துவிட்டு வன்முறையைத் தூண்டியதாகக் குற்றம் சாட்டுகிறார் சி.பி.எம்.மின் பாசிசத் தளபதியான எச்சூரி. நந்திகிராமம் அமைதியாக இருந்ததாம்! வெளியிலிருந்து வந்த அன்னிய சக்திகளான மாவோயிஸ்டுகள்தான் பொய்ப் பிரச்சாரம் செய்து வன்முறையைத் தூண்டிவிட்டார்களாம் இப்படி கதை எழுதுகிறது சி.பி.எம். கட்சியின் வார ஏடான பீப்பிள்ஸ் டெமாக்கரசி.


மறுகாலனியத் தாக்குதலின் ஒரு அங்கமான சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு எதிராக மக்களை அணிதிரட்டிப் போராடும் மாவோயிஸ்டுகள் அன்னிய சக்திகள், வன்முறையாளர்கள் என்கிறது பாசிச சி.பி.எம். கட்சி. அதாவது, வெளியூரைச் சேர்ந்தவர்கள் அரசியல் பிரச்சாரம் செய்யக்கூடாது; அவர்கள் அன்னிய சக்திகள் என்கிறது சி.பி.எம். கட்சி. அப்படியானால், தென்னகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டுவதற்காக, காலனிய ஆட்சிக்காலத்தில் கட்சியால் பணிக்கப்பட்டு சென்னையில் பணியாற்றிய வடநாட்டைச் சேர்ந்த தோழர் அமீதுஹைதர்கான், கம்யூனிஸ்ட் கட்சித் தோழரா அல்லது அன்னிய சக்தியா? கீழத்தஞ்சை மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட கூலிஏழை விவசாயிகளைச் சவுக்கடியும் சாணிப்பாலும் கொடுத்து வதைத்த நிலப்பிரபுக்களின் கொட்டத்தை ஒடுக்கி, வர்க்கப் போராட்டத் தீயை மூட்டிய தோழர் சீனிவாசராவ், கம்யூனிஸ்ட் கட்சித் தோழரா, அல்லது அன்று நிலப்பிரபுக்கள் சித்தரித்ததைப் போல வெளியூரைச் சேர்ந்த வன்முறையாளரா? அவ்வளவு ஏன்? தமிழகத்தில் கட்சி மற்றும் தொழிற்சங்க வேலைகளில் ஈடுபட்ட வி.பி.சிந்தன், பி.ஆர். பரமேஸ்வரன், ரமணி, அரிபட் முதலானோர் சி.பி.எம். கட்சித் தோழர்களா? அல்லது அன்னிய சக்திகளா?


சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு எதிராக விவசாயிகளை அணிதிரட்டிப் போராடி வரும் நக்சல்பாரி புரட்சியாளர்களை அன்னிய சக்திகள் என்று சாடும் சி.பி.எம். கட்சி, இந்தோனேஷிய சலீம் குழுமத்துக்காக 14,500 ஏக்கர் விளைநிலங்களைப் பறித்து தாரை வார்க்கக் கிளம்பியுள்ளதே, அந்த சலீம் குழுமம் அன்னிய பெருமுதலாளித்துவ சக்தியா, அல்லது சி.பி.எம். கட்சியின் தோழரா? அந்த அன்னிய சக்தியின் இலாபவெறிக்காக, அதுவும் இந்தோனேஷியாவில் கம்யூனிஸ்டுகளை நரவேட்டையாடிய பாசிச சுகார்தோ கும்பலின் கூட்டாளி நிறுவனமான சலீம் குழுமத்துக்காக விவசாயிகளையும் விளைநிலங்களையும் பலியிடும் சி.பி.எம். கட்சி இடதுசாரி கட்சியா? அல்லது ஏகபோக முதலாளிகளுக்கு அடியாள் வேலை செய்யும் பாசிசக் கட்சியா?


சி.பி.எம். கட்சியானது, கம்யூனிஸ்ட் கட்சியாக இருந்தால், ஆளும் வர்க்கக் கட்சிகளைப் போல இத்தகைய அபத்தவாதங்களை அடுக்காது. ஆனால் சி.பி.எம். கட்சியானது, கம்யூனிஸ்ட் கட்சி அல்ல; கார்ப்பரேட் கட்சி. அது மார்க்சிஸ்ட் கட்சி அல்ல; பாசிஸ்ட் கட்சி. எனவேதான் ஆளும் வர்க்கக் கட்சிகளை விஞ்சும் வண்ணம் தரகுப் பெருமுதலாளிகளுக்கும் பன்னாட்டு ஏகபோக முதலாளிகளுக்கும் விசுவாச அடியாளாக வேலை செய்து கொண்டு, பாசிச கோயபல்சையே விஞ்சும் வண்ணம் பொய்களையே நியாயவாதங்களாக அடுக்குகிறது.


இன்று நந்திகிராமத்தில் கொலைவெறியாட்டம் போட்ட இதே சி.பி.எம். கட்சியினர்தான், நாற்பதாண்டுகளுக்கு முன்பு இதே மே.வங்கத்தில் கிளர்ந்தெழுந்த நக்சல்பாரி பேரெழுச்சியையும் மிருகத்தனமாக ஒடுக்கி கொலைவெறியாட்டம் போட்டதோடு, நக்சல்பாரி கிராம விவசாயிகளையும் புரட்சியாளர்களையும் தீவிரவாதிகள், வன்முறையாளர்கள் என்று முத்திரை குத்தி அவதூறு செய்தனர். 1967இல் நக்சல்பாரி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், ""ஜோத்திதார்கள்'' எனப்படும் நிலப்பிரபுக்களின் ஆதிக்கச் சுரண்டலுக்கு எதிராகப் போராடி, குத்தகை விவசாயிகளின் உரிமையை நிலைநாட்டியதோடு, நிலப்பிரபுக்களிடம் இருந்த விவசாயிகளின் கடன்பத்திரங்களைத் தீயிட்டுக் கொளுத்தி, தமது சொந்த அதிகாரத்தை நிறுவினர். வில்லும், அம்பும், கோடாரியும், துப்பாக்கியும் ஏந்திய விவசாயிகள், கிராம நிர்வாகத்தை இயக்குவதைக் கண்டஞ்சி நிலப்பிரபுக்களும் கைக்கூலிகளும் நகரங்களுக்குத் தப்பியோடினர். இவ்வட்டாரமெங்கும் அரசு நிர்வாகமும் போலீசு நிர்வாகமும் செயலிழந்து, விவசாயிகளின் புரட்சிகர அதிகாரத்தை விண்ணில் பட்டொளி வீசிப் பறந்த செங்கொடிகள் பறைசாற்றின.


அன்று மே.வங்கத்தில் அஜாய்முகர்ஜி தலைமையிலான கூட்டணி ஆட்சி நீடித்தது. அதில் ஜோதிபாசு போலீசு அமைச்சராகவும், அரிகிருஷ்ணகோனார் வருவாய்துறை அமைச்சராகவும் இருந்தனர். நக்சல்பாரி பேரெழுச்சியை கண்ட அரிகிருஷ்ணகோனார், ""ஐயோ, நிலைமை கட்டுமீறிப் போய்விட்டது'' என்று அலறினார். ""சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது'' என்று எகிறிக் குதித்தார் ஜோதிபாசு. ""ஐயோ! வன்முறை, தீவிரவாதம்'' என்று கூப்பாடு போட்டது சி.பி.எம். கட்சி. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது என்ற பெயரில் போலீசை ஏவி கொலைவெறியாட்டத்தைக் கட்டவிழ்த்து விட்டார் ஜோதிபாசு. ஆறு பெண்கள், இரு குழந்தைகள் உள்ளிட்டு 9 பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்; பலர் படுகாயமடைந்தனர்; விவசாயிகள் இயக்க முன்னணியாளர்கள் பலர் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டனர். நக்சல்பாரி வட்டாரமெங்கும் போலீசு பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டு, விவசாயிகளின் பேரெழுச்சி கொடூரமாக ஒடுக்கப்பட்டது.


அன்று நக்சல்பாரி; இன்று நந்திகிராமம். போராடும் விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு கொலைவெறியாட்டம். ""ஐயோ! பயங்கரவாதம், தீவிரவாதம்'' என்ற அதே கூப்பாடு. ""சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது'' என்ற அதே ஒப்பாரி. ""வன்முறையாளர்கள் தீவிரவாதிகள்'' என்ற அதே கோயபல்சு புளுகு. ஒரேயொரு வேறுபாடு அன்று சி.பி.எம். கட்சியிடம் பாசிச குண்டர்படை இல்லை; இன்று சி.பி.எம். கட்சி ஒரு வலுவான குண்டர் படையைக் கட்டியமைத்துள்ளது. போராடும் மக்கள் மட்டுமல்ல; நந்திகிராமத்தில் உண்மையைக் கண்டறிய முற்பட்ட பத்திரிகையாளர்களும் சி.பி.எம் குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் செய்தி சேகரிக்கும் உரிமையைக் கூட மறுத்து, சாலை மறியல் போராட்டம் நடத்தி பத்திரிகையாளர்களை விரட்டியடித்துள்ளது, சி.பி.எம். குண்டர்படை.


நந்திகிராமத்தில் பாசிச கொலைவெறியாட்டத்தைக் கட்டவிழ்த்து விட்டு, போராடும் விவசாயிகளை ஒடுக்கியபோதிலும், அங்கு சிறப்புப் பொருளாதார மண்டலத்தை நிறுவும் முயற்சியில் சி.பி.எம். பாசிச ஆட்சி தோற்றுப் போயுள்ளது. கொலைவெறியாட்டம் நாடெங்கும் அம்பலப்பட்டுப் போயுள்ளதால், நந்திகிராமத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலம் நிறுவப்பட மாட்டாது என்று அறிவித்துள்ளார் மே.வங்க கொலைகார முதல்வர். அதேசமயம், ஏகாதிபத்தியங்களுக்கும் தரகுப் பெருமுதலாளிகளுக்கும் விசுவாசமாகத் தொண்டூழியம் செய்துவரும் சி.பி.எம். ஆட்சியாளர்கள், மே.வங்கத்தின் வேறு பகுதியில் சிறப்புப் பொருளாதார மண்டலம் நிறுவப் போவதாக அறிவித்துள்ளனர். சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவி மாநிலத்தை தொழில்மயமாக்கும் கொள்கையில் நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் என்று இதர ஓட்டுக் கட்சிகள் அனைத்தையும் விஞ்சும் வண்ணம் சூளுரைக்கிறார், கரத்.


நந்திகிராமத்தில் நடந்த பாசிச கொலைவெறியாட்டங்களை மூடிமறைத்து, போராடும் மக்களையும் நக்சல்பாரி புரட்சியாளர்களையும் குற்றம் சாட்டி சி.பி.எம். கட்சியினர் எதிர்ப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இந்நிலையில், உள்நாட்டுவெளிநாட்டு ஏகபோக முதலாளிகளின் அடியாட்களாகவும், உழைக்கும் மக்களின் எதிரிகளாகவும் சீரழிந்துவிட்ட பாசிச சி.பி.எம். கட்சியை புரட்சிகர ஜனநாயக சக்திகள் அம்பலப்படுத்தி முறியடிக்க வேண்டும். இக்கட்சியிலுள்ள புரட்சியை நேசிக்கும் அணிகள் உடனடியாகக் கலகத்தில் இறங்கி, பாசிஸ்டுகளாகச் சீரழிந்துவிட்ட துரோகத் தலைமையைத் தூக்கியெறிந்து விட்டு, உண்மையான கம்யூனிஸ்டுகளாகிய நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகளில் அணிதிரள வேண்டும். அதன் மூலம் மார்க்சிய லெனினியத்தைப் பற்றிப் பாதுகாத்து, மறுகாலனியாக்கத்தை வீழ்த்தும் மகத்தான புரட்சிக்குத் தோள்கொடுக்க வேண்டும்.

· இரணியன்


நந்திகிராமப் படுகொலை:

கொலைகார புத்ததேவின் கொடும்பாவி எரிப்பு!


டாடா மற்றும் பன்னாட்டு ஏகபோக முதலாளிகளின் இலாப வேட்டைக்காக சொந்த மக்களையே கொன்று குவிக்கும் சிவப்புக் காட்டேரிகளான சி.பி.எம். கட்சியை எதிர்த்தும், அது மார்க்சிஸ்டு கட்சி அல்ல; பாசிஸ்டு கட்சிதான் என்பதை உழைக்கும் மக்களிடம் அம்பலப்படுத்தியும் நந்திகிராமத்தில் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட மறுநாளிலேயே தமிழகமெங்கும் ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் விரிவாகச் சுவரொட்டிகள் தட்டிகள் மூலம் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டன. தஞ்சையில், ம.க.இ.க., பு.மா.இ.மு. அமைப்புகள் இணைந்து மே.வங்க பாசிச முதல்வரான கொலைகார புத்ததேவின் கொடும்பாவி எரிப்புப் போராட்டத்தை மார்ச் 17ஆம் நாளன்று நடத்தின. தஞ்சை பழைய பேருந்து நிலையம் எதிரே, தோழர் அருள் தலைமையில் செங்கொடி ஏந்தி விண்ணதிரும் முழக்கங்களுடன் வந்த தோழர்கள், போலீசு தடைகளையும் மீறி கொலைகார புத்ததேவின் கொடும்பாவியைத் தீயிட்டுக் கொளுத்தினர். பரபரப்பான காலை நேரத்தில் போலி கம்யூனிசக் கொலைகாரர்களை எதிர்த்து, திரளான உழைக்கும் மக்கள் முன்னிலையில் நடந்த இக்கொடும்பாவி எரிப்புப் போராட்டம் நகரெங்கும் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்போராட்டத்தில் ஈடுபட்ட முன்னணியாளர்கள் 8 பேரை போலீசு கைது செய்துள்ளது.


பாசிஸ்டுகளாகச் சீரழிந்துவிட்ட கொலைகார சி.பி.எம். கட்சியை அம்பலப்படுத்தியும், மறுகாலனியத் தாக்குதலுக்கு எதிராகப் புரட்சிகர அமைப்புகளில் உழைக்கும் மக்கள் அணிதிரண்டு போராட அறைகூவியும் இவ்வமைப்புகள் தொடர்ந்து பிரச்சார இயக்கத்தை நடத்தி வருகின்றன.

பு.ஜ. செய்தியாளர்கள்