தமிழ் அரங்கம்

Saturday, November 4, 2006

எட்டப்பர்களின் தேச பக்தி பஜனை!

வந்தே மாதரம்:
எட்டப்பர்களின் தேச பக்தி பஜனை!


க மனிதர்களைக் கூட நம்ப மறுக்கும் அளவிற்கு நாட்டு மக்களை நிரந்தர பயத்தில் ஆழ்த்துவதற்காக ""முஸ்லீம் பயங்கரவாதம், குண்டு வெடிப்பு, முக்கிய தலைவர்களைக் கொல்ல தீவிரவாதிகள் சதி'' என்ற வழக்கமான பீதியை மீண்டும் ஒருமுறை அனைத்து ஊடகங்களும் ஆகஸ்ட் 15ஐ முன்னிட்டு உரக்கச் சொல்லி ஓய்வதற்குள், அடுத்து கல்லா கட்ட ஆரம்பித்து விட்டது ""தேசபக்தி'' பஜனையும் அதையொட்டிய லாவணிக் கச்சேரிகளும்.


மைய அமைச்சர் அர்ஜுன் சிங், "வந்தே மாதரம்' பாடலின் நூற்றாண்டு விழாவினை முன்வைத்து, செப்டம்பர் ஏழாம் தேதியன்று நாட்டிலுள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் கட்டாயமாக "வந்தே மாதரம்' பாடவேண்டும் என்று சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். அதைத் தொடர்ந்து, தேசபக்தியை ஒட்டுமொத்தக் குத்தகைக்கு எடுத்துள்ள பா.ஜ.க. கும்பல், பாட மறுப்பதை தேசத் துரோகமாகச் சித்தரித்து, சிறுபான்மையினருக்கு எதிரான தனது வழக்கமான அவதூறுப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டது. தான் ஆளும் மாநிலங்களில் இப்பாடலைப் பாடவேண்டியது கட்டாயம் என உத்தரவிட்டது. குறிப்பாக அம்மாநிலங்களில், அனைத்து மதரஸாக்களும் இந்தப் பாடலைத் தங்களது மாணவர்களைக் கட்டாயமாகப் பாடச் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டது.


இந்த நாட்டை விட்டு வெளியேறி அந்நிய நாட்டில் அடிமை வேலை செய்யும் ""அம்பி''கள் அனுப்பும் அமெரிக்க டாலரை நன்கொடையாக வாங்கிக் குவிக்கும் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் பன்னாட்டுத் தலைவரான அசோக் சிங்கால், ""வந்தே மாதரத்தைப் பாட மறுப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்'' என்று பேட்டி கொடுத்துள்ளார். மறுபுறம், ""சுதந்திரப் போராட்டக் காலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களைப் போராட்டத்தை நோக்கி ஈர்த்த இந்தப் பாடலைப் பாட மறுப்பது தேசத்துரோகச் செயல்'' என ஆட்சியாளர்களால் விரிவாகப் பிரச்சாரம் செய்யப்பட்டது.


"திராவிட நாடு' கேட்டுக் கொண்டிருந்தபோது, இதே பாடலை "வந்தே ஏமாத்துறோம்' என நக்கலடித்த கருணாநிதியோ, இன்று பெருமுதலாளியாகி, தேசிய நீரோட்டத்தில் கலந்து விட்டதால், "பாட வேண்டியது கட்டாயமில்லை' என்று இந்தப் பஜனைக்குச் சுருதி தப்பாமல் பின்பாட்டுப் பாடுகிறார். சென்னை மேயராக இருந்த மு.க.ஸ்டாலின் தலைமையில், சுதந்திரப் பொன்விழாவை ஒட்டி ஒரு மைல் நீளத்துக்கு தேசியக் கொடியைத் தெருவெங்கும் பரத்திப் பரவசப்பட்டவர்கள்தானே இவர்கள்! சமயம் கிட்டும்போதெல்லாம் ""கழக அரசுதான் கார்கில் நிதியை அதிகமாகக் கொடுத்தது'' என்று தம்பட்டம் அடித்து இந்திய தேசிய சாக்கடையில் மூழ்கவும் தயங்காத இவர்கள், இம்முறை பா.ஜ.க.வின் பஜனையில் கரைந்து போனது ஆச்சரியமில்லைதான்.


இவர்கள்தான் இப்படி என்றால், மே.வங்கத்தை ஆளும் போலி கம்யூனிஸ்டும், தரகு முதலாளிகளின் கையாளுமான புத்ததேவ் பட்டாச்சார்யாவும், ""அனைவரும் பாடலாம்; ஆனால் பாடவேண்டியது கட்டாயம் இல்லை'' என்று கூறி ஒதுங்கிவிட்டார். மதச்சார்பின்மைக்காக காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ளதாகக் கூறிக் கொள்ளும் இவர்கள், பா.ஜ.வின் இந்து தேசியவெறியை எதிர்க்கத் துப்பில்லாமல், காங்கிரசும் பா.ஜ.க.வோடு ஓரணியில் நிற்பதைப் பார்த்து அடங்கிப் போய் மவுனம் காக்கின்றனர்.


முதலில் இந்த ஆண்டு, வந்தே மாதரம் பாடலின் நூற்றாண்டே அல்ல. 1870களில் எழுதப்பட்டு 1882இல் ஒரு நாவலில் சேர்க்கப்பட்ட ஒரு பாட்டுக்கு இந்த ஆண்டுதான் நூற்றாண்டு எனத் திடீரென விழா எடுப்பதற்கு அவசியமென்ன வந்தது? அமெரிக்காவின் அடியாளாக மாறிக் கொண்டிருக்கும் இந்த அரசு சமீபத்தில் அமெரிக்காவுடன் கையெழுத்திட்ட அணுசக்தி ஒப்பந்தத்திற்கு, அணுசக்தி விஞ்ஞானிகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு வந்து சேர்ந்து, தனது முகமூடி கிழிந்து தொங்கியதாலும், மறுகாலனியத் தாக்குதலால் உழைக்கும் மக்களிடம் வெறுப்பும் ஆட்சியாளர்களுக்கு எதிரான ஆத்திரமும் பெருகி வருவதாலும், பிரச்சினையைத் திசைதிருப்பி தேசபக்தித் தீயை மூட்டிக் குளிர்காய அரசு நினைத்தது. ஆளும் கட்சியினருக்கு இது ஒன்றும் புதியதல்ல; முந்தைய பா.ஜ.க. ஆட்சியின்போது தேசிய வெறியைக் கிளப்ப போக்ரானில் அணுகுண்டு வெடித்தும், பிரச்சினைகள் முற்றியபோது எல்லைப்புறத்தில் சிப்பாய்களைக் கொண்டு போய் நிறுத்தி தோட்டா ஒன்றைக் கூடச் சுடாமல் "போர் பீதி'யை கிளப்பியதும் யாவரும் அறிந்ததுதான்.

கட்சிக்குள் நிலவும் கோஷ்டி தகராறால் உமாபாரதி வெளியேற்றம், போதைப் பொருள் உபயோகித்துக் கையும் களவுமாய் மாட்டிய ராகுல் மகாஜன் விவகாரம், ஜார்கண்ட் மாநிலத்தில் பறிபோன ஆட்சி, முக்கிய தலைவர்களின் ஒழுக்கக்கேடுகள் ""வீடியோ சிடி''களாக வெளிவந்த விவகாரம் என அழுகி நாறிக் கொண்டிருக்கும் பா.ஜ.க.விற்கு, அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் வரப்போகும் உ.பி., போன்ற மாநிலங்களின் தேர்தலுக்கு உதவிட அருமருந்தாய் இந்த வந்தே மாதரம் விவகாரம் கிடைத்தவுடன் துள்ளிக் குதிக்க ஆரம்பித்தது. "முஸ்லீம்கள் பாட மறுக்கிறார்கள், அதனால் அவர்கள் நாட்டைக் காட்டிக் கொடுப்பவர்கள்' என மக்களிடையே இந்துமுஸ்லீம் பிளவைக் கூர்மைப்படுத்தி, தனது இந்துவெறி ஓட்டு வங்கியைத் தூசு தட்ட ஆரம்பித்தது. ஏற்கெனவே "கிரிக்கெட்டில் பாகிஸ்தான் ஜெயித்தால் வெடி போடுகிறார்கள்' என்று முஸ்லீம்களுக்கு எதிராகச் சொல்லி வந்த அவதூறின் தொடர்ச்சியாக "வந்தே மாதர' விவகாரத்தை அக்கட்சி கையில் எடுத்துக் கொண்டது. செப்டம்பர் 7ஆம் தேதியன்று காங்கிரசு தலைவி சோனியா "வந்தே மாதம்' பஜனையில் கலந்து கொள்ளாததை ஊதிப் பெருக்கி ""சிறுபான்மையினரை தாஜா செய்கிறார்'' என்று தனது மதவெறிப் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டது.


வந்தே மாதம் பாடலுக்கும் நாட்டுப்பற்றுக்கும் அப்படியென்னதான் சம்பந்தம் இருக்கிறது?


1882ஆம் ஆண்டு வெளிவந்த ""ஆனந்த மடம்'' எனும் வங்க நாவலில் இடம் பெற்ற பாடல்தான் "வந்தே மாதரம்'. இந்த நாவலை எழுதியவர் பங்கிம் சந்திர சாட்டர்ஜி என்ற வங்காளப் பார்ப்பனர், அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கத்தில் டெபுடி மாஜிஸ்ரேட்டாக விசுவாசமான காலனிய சேவை செய்த சாட்டர்ஜி, 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் வங்காளத்தில் நவாபுக்கு எதிராக நடந்த வைணவ சந்நியாசிகளின் கலகத்தைப் பின்னணியாகக் கொண்டு இந்நாவலை எழுதினார்.

1773ஆம் ஆண்டில் வங்காளத்தில் வந்த பஞ்ச காலத்திலிருந்து நாவல் தொடங்குகிறது. அன்றைய வங்காள நவாபான மீர் ஜாபரின் கஜானாவை சந்நியாசிகள் கொள்ளையடிக்கின்றனர். இந்த நாவலில் வரும் பவானந்தன் எனும் கதாபாத்தி ரம், நவாபுக்கு எதிராக வைணவத் துறிவிக் கூட்டத்துடன் அரசாங்கக் கஜானாவைக் கொள்ளையிடவும், முஸ்லீம் வழிபாட்டுத் தலங்களை இடிக்கவும் செல்லும்போது "வந்தே மாதரம்' பாடலினைப் பாடியபடியே மக்களைத் திரட்டுவதாய் நாவல் செல்கிறது.


""இந்தப் பாதகர்கள் நிரம்பிய யவனபுரியைத் தகர்த்து ஆற்றில் வீழ்த்தவிட வேண்டும்'' என்றும், ""இந்தத் துன்மார்க்கர்கள் கூட்டத்தை தீ வைத்து எரித்து அன்னையாகிய நமது தாய்நாட்டை மீண்டும் பரிசுத்தமாக்க வேண்டும்'' என்றும் ""நமது தேவாலயங்களை இடித்து அவற்றின் மீது அவர்கள் எழுப்பிய கட்டிடங்களைத் தகர்த்தெறிந்து மறுபடியும் ராதா மாதவர்களுக்கு (கிருஷ்ணனுக்கு) கோயில் கட்டுவோமாக!'' என்றும் முஸ்லீம்களுக்கு எதிராக இந்நாவல் நெருப்பைக் கக்குகிறது.


""இத்தாடிப் பயல்களைத் தேசத்தை விட்டுத் துரத்தினாலன்றி இந்து மார்க்கத்திற்குச் சேமமில்லை'' என்றும் ""இம் மகம்மதியர் ஜாதி எனும் குருவிக் கூட்டைப் பிரித்தெறிய வேண்டுமென்று அடிக்கடி நினைத்தோம். நம் மத எதிரிகள் நகரை அழித்து ஆற்றில் விடக் கருதினோம். இப்பன்றிகளின் கிடையைச் சாம்பலாக்கிப் பூமாதேவியின் துன்பத்தைத் துடைத்தெறிய எண்ணினோம்! நண்பர்களே! அதற்கான காலம் வந்துவிட்டது. வாருங்கள்! நாம் சென்று அந்த இஸ்லாமியப் பாவிகளின் இருப்பிடத்தை அழிப்போம். அப்பன்றிகளை அடைக்கும் பட்டியை எரிப்போம். அக்குருவிக் கூட்டைக் கலைத்துக் குச்சிகளை எல்லாம் காற்றில் பறக்க விடுவோம்'' என்றெல்லாம் நஞ்சைக் கக்கி விட்டு, கூடவே, ""பகவான் நாமம் ஸ்தோத்திரம் செய்வோமாக!'' என்கிறார் பங்கிம் சந்திர சாட்டர்ஜி.


முஸ்லீம்களை தீ வைத்துப் பொசுக்குவதுதான் தேசத்தைப் பரிசுத்தமாக்குவதாம்! இதைத்தானே சங்கப் பரிவார பாசிஸ்டுகள் குஜராத்தில் செய்து முடித்தார்கள்! முஸ்லீம்கள் எழுப்பிய கட்டிடங்களைத் தகர்த் தெறியும் திட்டத்தின் மூல விதையை பார்ப்பனபாசிச கும்பலுக்கு இந்த நாவல்தான் விதைக்கிறது எனும்போது, இந்நாவலில் இடம் பெறும் பாடலும் இந்து பயங்கரவாதிகளுக்கு உவந்து போனதில் வியப்பென்ன?


வந்தே மாதரம் என்றால் "தாய்க்கு வணக்கம்' என்று பொருள். எந்தத் தாய்க்கு வணக்கமாம் அது? பாட்டின் இரண்டாம் பகுதியில் இதற்கு பதில் இருக்கின்றது. பார்வதி, காளி, துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி என்றெல்லாம் சுட்டப்படுபவள்தான் இந்தத் தாய். பாரதியார் மொழிபெயர்த்துள்ள வந்தேமாதம் பாடலில் இது தெளிவாகவே உள்ளது.

இந்தத் தாயைப் ""அகண்ட பாரத மாதா''வாக புரமோஷன் கொடுத்த கைங்கர்யத்தைக் காங்கிரசுக் கட்சி 1906இல் செய்தது. 1930களின் இறுதியில் இப்பாடலை "தேசிய கீதமாக்க' காங்கிரசுக் கட்சி முயன்றது.


இப்பாடலுக்கு இசையமைத்த கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் ""வந்தே மாதரம் பாடல் துர்க்கை அன்னையை வணங்குவது போலப் பாடப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்துக்கள் தவிர முஸ்லீம்கள் மற்றும் பல மதத்தினர் இருக்கின்றனர். எனவே இந்தப் பாடலைத் தேசிய கீதமாக அறிவிக்கக் கூடாது'' என்று 1937இல் எதிர்த்துள்ளார். எம்.என்.ராயும், சுபாஷ் சந்திரபோசும் இப்பாடலுக்கு எதிர்ப்பைத் தெரிவித்தார்கள்.


1937இல் சென்னை மாகாண பிரீமியராக ராஜாஜி இருந்தபோது, சென்னை சட்டசபையில் இப்பாடலைப் பாடச் சொல்லி கட்டாயப்படுத்தினர். பாடல் பாடுகையில் எழுந்திருக்க மறுத்து 2 இஸ்லாமிய உத்யோகஸ்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒரிஸ்ஸா சட்டசபையிலும் இது எதிர்ப்பை சம்பாதித்தது. பெரியாரின் ""குடியரசு'' பத்திரிகை அப்போதே இப்பாடலின் முஸ்லிம் விரோதப் போக்கை அம்பலப்படுத்தியிருக்கின்றது.


நான்கு கைகள் முளைத்த லட்சுமியைக் காட்டி அவள்தான் "பாரதமாதா' என்றும், அவளை அனைவரும் வழிபட வேண்டும் என்று மற்ற மதத்தினரைக் கட்டாயப்படுத்துவதும் பார்ப்பன (இந்து) வெறியன்றி வேறென்ன?

முஸ்லீம்களை வெறுக்கக் கற்றுத்தரும் இதே நாவல், ஆங்கிலேயர்களுக்கு அதிக விசுவாசமாக ""ஆங்கிலேயர்கள் நமக்குப் பகைவர்கள் அல்லர்'' என்றும் ""இந்த சந்தான சந்நியாசிகள் செய்த புரட்சியின் காரணமாகவே அரசுப் பொறுப்பை ஆங்கிலேயர்கள் ஏற்க வேண்டி வரும்'' என்றும் கூறுகிறது. பல இடங்களில் பிரிட்டிஷாரை வெகுவாகப் புகழ்கிறது. இந்து தர்மம் தழைக்கக் கூட ஆங்கிலேயனின் ஆதிக்கம் வேண்டுமென ஆன்மீகக் கயமைத்தனத்தைக் காட்டுகிறது இந்நாவல்.


நமது நாட்டின் சக குடிகளான இசுலாமியர்களை அழிக்கவும் அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு அடிவருடிகளை உருவாக்கவும் முனையும் இந்த நாவலில்தான் இன்றைக்கு தேசபக்தியின் அடையாளமாகக் காட்டப்படும் "வந்தே மாதரம்' பிறந்துள்ளது. இப்பாடலை வைத்து தேசபக்தி பஜனை பாடும் பா.ஜ.க., காங்கிரசு இரண்டுமே நாவல் குறிப்பிடுவது போலவே நாட்டின் சிறுபான்மை மக்களை அழிப்பதிலும், நாட்டை அன்னியனுக்குக் காட்டிக் கொடுப்பதிலும் ஓரணியில் நிற்கின்றன.


வந்தே மாதரத்தைப் பாடுவதன் மூலம் ஒருவன் தேசப் பற்றாளன் என்றோ, அதைப் பாட மறுப்பவன் தேசத்துரோகி என்றோ கருதி விட முடியுமா? அப்படியானால் ""வண்டே... மாட்றம்'' என்று நவீன மெட்டுக்கள் மூலம் ஏ.ஆர்.ரகுமான் போன்ற பிரபலங்களை வைத்து இந்தியா முழுவதும் இப்பாடலை ஒலிக்கச் செய்து, கல்லாவை நிரப்பிக் கொண்ட அந்நிய நிறுவனமான ""சோனி''தான் "இந்திய நாட்டின் சிறந்த தேசபக்தனாக' இருக்க முடியும்.


போலியான தேசபக்தி அரட்டைக் கச்சேரி செய்யும் காங்கிரசு கும்பலோ தாம் ஆண்ட ஐம்பது ஆண்டுகளில் அடுத்தடுத்து நாட்டை அந்நியனுக்குக் காட்டிக் கொடுத்து, இந்திய ராணுவத்திற்கு போர் விமானம், போபர்சு பீரங்கி, நீர் மூழ்கிக் கப்பல் வாங்குவதிலும் ஊழல் செய்து திளைத்தது. அதீத கூச்சல் போடும் பா.ஜ.க.வோ, சீமைச் சாராயம், விபச்சார அழகிகளுக்காக ராணுவ ரகசியங்களை விற்க முன்வந்ததையும், கார்கில் போரில் மாண்ட வீரர்களின் உடலை எடுத்துச் செல்லும் சவப்பெட்டிகளில்கூட கமிஷன் அடித்ததையும் மறைத்துவிட்டு, "வந்தே மாதரம் பாடுவதுதான் தேச பக்தி' எனக் கூச்சல் போடுகிறது. காசுக்காகவும், சாராயத்துக்காகவும், விபச்சாரிகளுக்காகவும் நாட்டின் பாதுகாப்பையே விற்ற இவர்களுக்குத் தேச பக்தி பற்றிப் பேசிட அருகதை உண்டா?


ஒரு நாடு என்பது நாட்டு மக்களையும், அவர்கள் சார்ந்திருக்கும் இயற்கை வளங்களையும் பண்பாட்டையும் குறிப்பதாகும். நாட்டு மக்களின் மீதும், நாட்டின் மீதும் உண்மையான அக்கறையுடன், அந்நிய ஆக்கிரமிப்புக்கும், ஆதிக்கத்துக்கும் எதிராகவும், நாட்டு மக்கள் நலன் மீது மாளாக் காதலுடனும் போராடுவதே உண்மையான நாட்டுப் பற்றாகும். இதைச் செய்யாமல் தேசத்துரோக ஒப்பந்தங்கள் மூலம் நாட்டின் இறையாண்மையை ஏகாதிபத்தியங்களிடம் அடகு வைத்து விட்டு, "வந்தே மாதரம்' பஜனை பாடுவது நாட்டுப் பற்றாகாது.


இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது வந்தே மாதரத்தைவிட வேறு இரண்டு முழக்கங்கள் ஓங்கி ஒலித்தன. அவை: சுபாஷ் சந்திரபோஸின் ""ஜெய்ஹிந்த்'' மற்றும் பகத்சிங்கின் ""இன்குலாப் ஜிந்தாபாத்'' 1929இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவிருந்த தொழிலாளர் நலனுக்கு எதிரான சட்டத்தைக் கண்டித்துப் போராடும் விதமாக வெடிகுண்டு வீசியபோதும், பின்பு ராஜகுரு, சுகதேவுடன் தூக்கிலிடப்பட்டபோதும் பகத்சிங் முழங்கியது இதே "இன்குலாப் ஜிந்தாபாத்'தான். அத்தகைய தேசப்பற்றாளனின், பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியின் பிறந்தநாள் நூற்றாண்டும் இந்த ஆண்டுதான்.


""புரட்சி ஓங்குக!'' (இன்குலாப் ஜிந்தாபாத்!) என பகத்சிங் முழங்கிய முழக்கம்தான் நூற்றாண்டுகளைக் கடந்து இன்னமும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இனிவரும் நூற்றாண்டும் புரட்சியின் நூற்றாண்டாக இருக்கப் போகிறதே அன்றி, இந்துவெறி தேசியவெறிக்கானதாக இருக்கப் போவதில்லை. ஏகாதிபத்திய எதிர்ப்பும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பும் நாட்டுப்பற்றும் மதச்சார்பின்மையும் கொண்ட புரட்சியின் முழக்கம்தான் இனி நாடெங்கும் எதிரொலிக்கப் போகிறதே தவிர, ஏகாதிபத்திய கைக்கூலிகளின் வந்தேமாதரம் பஜனை அல்ல.


அன்பு

Friday, November 3, 2006

புலிகளின் கோமாளித்தனமே மேடையேறியது

பேரம் பேசும் எந்த ஆற்றலுமற்ற புலிகளின் கோமாளித்தனமே மேடையேறியது

பி.இரயாகரன்
03.11.2006


ரசியல் தீர்வையும் உடனடிப் பிரச்னையையும் ஒன்றுக்கொன்று எதிராக நிறுத்தி, பேச்சுவார்த்தைக்கே குழிவெட்டியவர்கள், இதன் மூலம் தமிழ் மக்களின் எதிரிகள் என்பதையே தமது சொந்த அணுகுமுறை மூலம் மறுபடியும் புலிகள் உலகறிய நிறுவிக் காட்டினர்.


இப்படி ஆடிக்காட்டும் கூத்துத்தான் அண்மைய அரசியல் பேச்சுவார்த்தை. குறைந்தபட்சம் பேரம் பேசும் எந்தத் தகுதியுமற்ற, ஒற்றைப் பரிணாமத்தின் மலட்டுத்தனத்தை உலகறிய மறுபடியும் நிறுவிக்காட்டினர். மாபியாத்தனமும் பாசிசமும் வாழ்வியலாக, அதை மேலும் விரிந்த தளத்தில் நடைமுறைப்படுத்த பேச்சுவார்த்தையையே தமது கருவியாக்க முனைந்தனர். முன்கூட்டிய நிபந்தனைகளுடன் நிபந்தனைகளற்ற பேச்சுவார்த்தை என்ற நாடகத்தை நடத்தி, தமது சொந்த மக்கள் விரோதத்துடன் கூடிய கோமாளித்தனத்தை நிறுவிக்காட்டினர். தமிழ் மக்களின் வாழ்வியல் அவலங்கள் மீது, தமது இழிந்த குரங்குப் புத்தியைக் காட்டி நிற்கும் புலிகள், தமிழ் மக்களின் மகிழ்ச்சிக்கு எதையும் தமது சொந்த பாசிச வரலாற்றில் பெற்றுத் தரப்போவதில்லை. அதேபோல் தாங்களும் எதையும் உருவாக்கப்போவதில்லை.


பேரினவாதம் தமிழ் மக்களுக்கு எதையும் தராது என்று எப்படி சொல்லுகின்றோமோ, அதுவே தான் புலிகளுக்கும் பொருந்தும். முதலில் தமிழ் மக்களின் மனிதாபிமான பிரச்சனை மீதான தீர்வு என்பதுதான், புலிகள் எல்லாப் பேச்சு வார்த்தையிலும் முன்வைக்கும் முதல் நிபந்தனையாகும். இப்படி கடந்தகால முழுப் பேச்சு வார்த்தையிலும் தமது சொந்த சுயநலம் மூலம் பேரினவாதத்தையே பாதுகாத்தனர். புலிகள் கடந்காலங்களில் நடத்திய தொடர்ச்சியான எல்லாப் பேச்சுவார்த்தையிலும் புலிகளின் சுயநல நோக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவை அமுல் செய்யப்பட்ட போதும், அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறியது கிடையாது. அதை புலிகளும் விரும்பவில்லை, பேரினவாதமும் விரும்பவில்லை. தீர்வுக்கு முயலுதல் என்ற நோக்கம் புலிகளுக்கு கிடையாது என்பதே உண்மை. உண்மையில் தமது சொந்த நலன்களை அடைகின்றதும், மீளவும் வளங்களைத் திரட்டிக்கொண்டு யுத்தத்துக்கு வலிந்து செல்வதுமே அவர்களின் பேச்சுவார்த்தை அரசியலாகும.


இந்த பேச்சு வார்த்தையில் மக்கள் எதை எதிர்பார்த்தார்கள். இந்தக் கேள்வி புலிகளைத் தவிர அனைவருக்கும் வெளிப்படையானது. அதே போல் பதிலும் வெளிப்படையானது. மக்கள் விரும்பியது யுத்தமற்ற அமைதியையும் சமாதானத்தையும், அதற்கான ஒரு தீர்வையுமே. இதை யாரும் மறுதலிக்க முடியாது. மக்களின் விருப்பம் இது தான். இதைத் தவிர வேறு எதுவுமல்ல. இதை மறுத்துத் தான், புலிகள் தமது கோமாளித்தனத்தை மக்களுக்கு நாடகமாக ஆடிக்காட்டினர். யாருமே மன்னிக்கவே முடியாத ஒரு குற்றம். பேரினவாதம் இதை அரசியல் ரீதியாக முன்னிலைப்படுத்தியுள்ளது. அரசு கூறும் தீர்வுகான முயற்சியை மக்கள் நம்புகின்றனர். தமிழ்செல்வனே பி.பி.சி பேட்டியில் இதையொட்டி தடுமாறுகின்றார். இப்படி மக்களின் விருப்புக்கு எதிராக, யுத்தம் தான் தீர்வு என்று புலிகள் உணர்த்தி நிற்கின்றனர்.


யுத்தம் அவசியமா? இல்லையா? என்பதை புலிகள் தீர்மானிக்க முடியாது?. அந்த உரிமை அவர்களுக்கு கிடையாது. மக்கள் தான் எந்த வழியூடாக, எப்படி நாம் போராடுவது என்பதை தீர்மானிக்க வேண்டும். எதை எப்படி அடையவேண்டும் என்று தீர்மானிக்கின்ற உரிமை மக்களுக்குத்தான் உண்டு. இதை புலிகள் என்றும் அங்கீகரித்தது கிடையாது. மக்களை கேவலமாக நடத்தும் புலிகள், தமிழ்மக்களுக்கு ஜனநாயக உரிமையே கிடையாது என்கின்றனர். மாறாக மக்களின் பெயரில், மக்களின் மனிதாபிமான பிரச்சனை என்று கூத்தாடுகின்றனர், புலம்புகின்றனர். யுத்தம் சமாதானம் என்ற நீடிப்பில், மக்களின் மரணங்களின் மேல் புலிகள் தாம் வாழவே விரும்புகின்றனர். மக்களின் அதிக மரணம் அதிக செல்வத்தைத் தரும் என்ற இழிநிலைக்கு, தமிழ் இனத்தின் ஏகபிரதிநிதிகள் மிகக் கீழ்த்தரமாகவே தரம்தாழ்ந்து கிடக்கின்றனர்.


புலிகள் தாங்கள் வாழவேண்டும், தங்கள் சந்ததிகள் செழிப்பாகவும் சிறப்பாகவும் யுத்தத்தைப் பயன்படுத்தி வளம்கொழிக்க வாழ வேண்டும். இதுவே புலித் தலைவர்களின் எதார்த்தமான இன்றைய நிலை. தமிழ் பேசும் மக்கள் ஒவ்வொருவரும், தம்மளவில் சொந்தமாகவே மூன்று கேள்வியை நீங்களே உங்களவில் கூட கேட்டுபார்க்கலாம்.


1. இந்தப் போராட்டம் மூலம் எனக்கு, எனது குடும்பத்துக்கு எந்த வகையில் என்ன நன்மை கிடைத்தது? அல்லது கிடைக்கும்! இதற்கு பதில் இல்லை என்றால்


2. இந்தப் போராட்டம் எனக்கு வெளியில், எனக்குத் தெரிய எனது சமூகத்தில் யாருக்கு எந்த விதத்தில் நன்மையளித்தது? அல்லது நன்மை அளிக்கும்? இதற்கும் பதில் இல்லையென்றால்


3. சரி நாளைக்கு எந்த வகையில் எப்படி எனக்கு அல்லது எனது சமூகத்துக்கு நன்மையாக அமையும்?


மக்களுக்கு எதுவுமில்லை. மக்களிடம் இருப்பதை அழிப்பதும், புடுங்குவதும் தான் புலிப் போராட்டம். மக்கள் அதிகம் செத்தால் புலிக்கு கொண்டாட்டம். நீலிக் கண்ணீh வடித்துக்கொண்டு பணம் திரட்டவும், மலிவு அரசியல் செய்யவும் அதிக தமிழ் மக்களின் மரணங்கள் புலிகளின் அன்றாட எதிர்பார்ப்பாகிவிட்டது.


இந்த மூன்று கேள்விகளுக்கும் பின்னால் சிலர் நன்மையை அடைந்துள்ளனர். அவர்கள் புலிகளும், யுத்தத்தைப் பயன்படுத்திய சமூக விரோதக் கும்பலுமே. உதாரணமாக ஒரு மாட்டு வண்டில் வைத்து மண்ணெண்ணை வியாபாரம் செய்த மகேஸ்வரன், இன்று இலங்கையிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரன். இப்படி புலிகள் முதல் பலர் மக்களை கொள்ளையிடNட செழித்துள்ளனர். புலித் தலைவர்களின் குழந்தைகளுக்கு ஊரார் பணத்தில் வெளிநாட்டில் சொகுசான வசதியான கல்வி. சொந்த நாட்டில் தேசியக் கல்வியை மேம்படுத்த ஒரு திட்டம் கிடையாது. அதனால் தமது குழந்தைகளுக்கு மேல்நாட்டுக் கல்வி. சரி எந்த தலைவரின் குழந்தை தமிழீழத்துக்காக மண்ணில் போராடுகின்றது, அதற்காக மரணிக்கின்றது. மக்கள் தமது வாழ்வின் அனைத்துக் கூறையும் இழந்து, இழிந்து வாய்பொத்தி அடிமையாகி அனைத்தையும் இழக்கின்றனர். பெண்கள் தமது தாய்மையை இழந்து நிற்கின்ற சமூக அவலம். இவற்றைத் தவிர வேறு எதையும் புலிகள் மக்களுக்கு தரப்போவதில்லை.


இந்த கொடூரத்தில் இருந்து தப்பிப்பிழைக்கவே மக்கள் விரும்புகின்றனர். அந்த வகையில் மக்கள் எதைத்தான் விரும்புகின்றனர். ஒரு அரசியல் தீர்வையும், அமைதியையும், சமாதானத்தையுமே கோருகின்றனர். மக்கள் தெளிவாகவே யுத்தத்தை நிராகரிக்கின்றார்கள். இதுவே வடக்குகிழக்கு மக்களின் இன்றைய நிலையாகும். மக்களின் இந்த விருப்பத்தையே மறுதலிக்கும் பாசிசப் புலிகள், மக்களின் பெயரில் மனிதாபிமான பிரச்சனைக்கு தீர்வு என்கின்றனர். மனிதாபிமானம் என்ற சொல்லையும் அதன் உள்ளடகத்தையுமே, புலிகள் கற்பழித்து கேவலப்படுத்தி அர்த்தமற்றதாக்கினர். மக்கள் விரும்புவது வேறு, புலிகள் மக்கள் பெயரில் கோருவது வேறு. அனைத்தும் மக்களுக்கு எதிரானதே.


ஏ-9 பாதையைத் திற என்ற புலிகளின் நிபந்தனையும், அதையொட்டிய புலிகளின் ஒரு தலைப்பட்சமான பேச்சுவார்த்தை நகர்வும், பேச்சவார்த்தையை ஒரு தலைப்பட்சமாக மறுதலித்ததன் மூலம், தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் அளிக்கப்போவதில்லை. மக்களின் அவலத்தை மேலும் அதிகரிக்க வைப்பதற்கு அப்பால், இது எதையும் சாதிக்கப்போவதில்லை. புலிகளுக்கு பேரம் பேசும் எந்தத் தகுதியும் கிடையாது என்பதையே மீளவும் நிறுவிக்காட்டியுள்ளனர். சொந்த நலன்களை முதன்மைப்படுத்திய புலிகளின் குறுகிய நோக்கங்கள், மக்களை நட்டாற்றில் கைவிட்டு வேடிக்கை பார்ப்பதைத் தவிர இது வேறு எதுவுமல்ல.


பேரினவாதம் இதை திறக்க மறுப்பது அவர்களின் அரசியல் இராணுவ யுத்த தந்திரமாகவே உள்ளது. இதேபோல் புலிகளின் வரி முதல், புலிகளின் அரசியல் யுத்த தந்திரங்களுக்கு அப்பாதை முக்கியத்துவம் வாய்ந்ததாகவே உள்ளது. மாபியாத்தனதும், பாசிசமும் ஒருங்கே கொண்ட கோரிக்கையாக இது குறுகிக் கூனிநிற்கின்றது. இராணுவ ரீதியான நகர்வுக்கும், பண அறவீட்டுக்கும் அப்பால், இந்தப் பாதையை மீளத்திறக்கக் கோருவதில், மக்கள் நலன் சார்ந்து எதையும் கோரவில்லை. மக்களை யுத்தத்தின் விளிம்பில் தள்ளி, இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசங்களில் தொடர் தாக்குதலை நடத்தவும், அரசியல் படுகொலைகளை செய்யவும், மக்களின் வாழ்வை பதற்றத்துக்குள் இட்டுச்செல்வதற்காகவும் பாதை திறப்பு புலிகளுக்கு அவசியமாகின்றது. இதுமட்டும் தான் புலிகளின் அரசியல் வங்குரோத்துக்கு ஏற்ற, புனர் நிவாரணமாக அவர்கள் காண்கின்றனர். இதற்கு மாறாக மக்களின் விரும்பம் நேர்மாறானது. மக்கள் உடனடியான அமைதியையும், ஓரு தீர்வு ஊடாக நிரந்தரமான சமாதானத்தையும் விரும்புகின்றனர். இதன் மூலம் அனைத்து கொலைகார கும்பலிடமும் இருந்து ஆயுதங்களைக் களைவதையும், குறைந்தபட்சம் நாட்டில் இயல்பான சட்டதிட்டத்துக்கு உட்பட்ட ஒரு அமைதியான வாழ்வையும் விரும்புகின்றனர். இது புலிகளால் ஏற்றக்கொள்ள முடியாத ஓன்று. இதனால் தான் அவர்கள் அரசியல் தீர்வைப்பற்றி என்றும் பேசியது கிடையாது. தீர்வை நிபந்தனையாக விதித்தது கிடையாது. அவர்களின் வருமானத்தை பற்றியும், தொடர்ந்தும் யுத்த சூழலுக்கு ஏற்ற நிலையையும் மட்டும் முன்னிலைப்படுத்தி எப்போதும் எங்கும் பேசுகின்றனர்.


இப்படி குறுகிய இராணுவ மற்றும் நலன்களை அடிப்படையாக கொண்ட யுத்த வெறியர்களிடையே, ஒரு முக்கியபாதை சிக்கி திணறுகின்றது. மக்களுக்காக இரண்டு பகுதியும் பேசுவதாக கூறுவதே நகைப்புக்குரியது. மனித அவலத்தின் மீது நின்று இவர்கள் ஊளையிடுவதாகும்.


தமிழ் மக்கள் அமைதியையும், சமாதானத்தையும், ஒரு அரசியல் தீர்வையும் விரும்புகின்றார்கள் என்றால், அதை மையமாக வைத்து பேச்சவார்த்தையை நடத்த வேண்டும். இது கூட தெரியாதவர்கள் தான், தமிழ்மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்று தம்மைத்தாமே கூறிக்கொள்கின்றனர். பேரம் பேசும் ஆற்றலையே இழந்த மலட்டுப் புலிகள், பேரினவாதத்தின் வால்களில் பிடித்து தொங்கியபடியே மக்களை எட்டி உதைக்கின்றனர்.


இந்த பேச்சுவார்த்தையை தமது பாசிசத்துக்குள் மாபியாத்தனத்துக்குள் வெற்றிகரமாக முறியடித்த புலிகள், மாறாக எதை மக்களுக்கு தரப்போகின்றார்கள். இது சுய புத்தியுள்ள ஒவ்வொருவன் முன்னும், ஒரு சிந்தனைக்குரிய அடிப்படைக் கேள்வியாகும். யுத்தம் மட்டுமே தமது மாற்றுவழியாக அவர்கள் காட்டுகின்றனர். சரி யுத்தம் ஏ-9 பாதையை மீளத் திறக்குமா? எப்படி? யுத்தம் பாதையை மீளத் திறக்காது. இதற்கு புலியின் கிறுக்கு வழியில் குறுக்குத் தீர்வு எதுவும் கிடையாது. இன்று இந்த தடைகளுக்குள்ளும், வன்னிக்கு பேரினவாதிகள் அனுப்பும் உணவும் கூட நிறுத்தப்பட்டுவிடும் என்பதும் உண்மை. வன்னிக்கு தாராளமாக உணவு செல்வதால், அது ஒரு கோரிக்கையாகவே முன்வைக்கவில்லை.


புலிகளில் சிலர் ஊளையிடுவது போல், யாழ்குடாவை புலிகள் பிடித்துவிட்டால் என்னதான் நடக்கும். ஏ-9 பாதை நிரந்தரமாகவே மூடிக்கிடக்கும். அப்போது எப்படி வன்னிக்கும் யாழ்குடாவுக்கும் உணவும், அத்தியாவசிய பொருட்களும் வரும். தேசிய பொருளாதாரத்தை இனிமேல் தான் கட்டப் போவதாகவும், அன்னிய தொழில்நுட்பத்தை புலம்பெயர் தமிழன் திருடித்தரும்படியும், அண்மையில் பொருண்மிய மேம்பாட்டு பொறுப்பாளர் கரிகாலன் புலிகளின் தொலைக்காட்சியல் அலம்பி அழுது வடித்தார்.


பார்க்க : புலிப்பொருளாதாரம் என்பது ஊரையே ஏமாற்றும் கானல் நீர் தான்


புலிகளிடம் மக்களின் அடிப்படை வாழ்வியல் தேவையை ப+ர்த்திசெய்யக் கூடிய, தேசிய பொருளாதாரக் கூறும் அதற்கான அரசியல் அடிப்படையும் கூட புலிகளிடம் கிடையாது. வியட்நாம் போராட்டத்தை தலைமை தாங்கிய கோசிமின், அமெரிக்காவை யுத்தத்தில் வென்று நாட்டின் தலைவராக பதவியேற்கச் சென்ற போது, அவர் போட்டிருந்த ஒரேயொரு உடுப்பைத்தவிர வேறு எந்த மாற்று உடுப்பு இருக்கவில்லை. மற்றொருவரிடம் இரவலாக பெற்ற உடுப்பை அணிந்து கொண்டே தமது பதவியை ஏற்றவர். மாவோவின் நிலை கூட இது தான். அவரின் போராட்ட காலத்திய படங்கள் அவரின் எளிமையான வாழ்வைக் காட்டுகின்றது. அவர் அணிந்திருக்கும் உடுப்பு, மாற்று உடுப்பின்றி பினாட்டாகவே காட்சியளிக்கின்றது. அந்தளவுக்கு மனவலிமையுடன் மக்களின் அன்றாட எளிய வாழ்க்கையையும், தேசிய பொருளாதாரத்தையும் முதன்மைப்படுத்தி, மக்களின் வாழ்வுடன் ஓன்று கலந்து நின்ற அரசியல் வலிமையை வரலாறு எடுத்துக்காட்டுகின்றது. மாவோ, ஸ்ராலின் ஆட்சிக்கு வந்த பின்பு, யுத்த முனையில் தமது சொந்த குழந்தைகளை யுத்தத்தில் இழந்தவர்கள். அந்தளவுக்கு சொந்த மகனைக் கூட, ஒரு சாதாரணமான மக்களாக, வாழ்வில் அனைத்து கூறுகளுடனும் தான் வாழ வைத்தவர்கள். எந்த சலுகையையும் மக்களிடம் இருந்து வேறுபடுத்தி தனித்துவமாக தனக்கோ, தமது குடும்பத்துக்கோ ஏற்படுத்தியவர்கள் அல்ல. மக்கள் போராட்டத்தில் இது ஒரு அங்கமாக இருந்தது. ஆனால் புலிகள் ஆடம்பரமும், அவர்களின் குடும்பத்தின் சிறப்பு வாழ்க்கையும், மேற்கத்தைய வாழ்க்கையும் கல்வியும், சலுகைகளும், புலிகளின் எடுபிடிகளின் வாழ்க்கை முறையுயே மக்களின் வாழ்வை அழிப்பதாகவே உள்ளது. இதற்குள் தேசிய வாழ்க்கையை, தேசிய பொருளாதாரத்தை நினைத்தே பார்க்கமுடியாது.


இவர்களால் சொந்த தேசியவளத்தை இனம் காணமுடியாது. அவர்களின் வாழ்க்கை முறை அதற்கு எதிரானது. பரந்த வளம்கொண்ட எமது நிலம், காய்ந்து போன தேசிய மறுப்பாளர்களின் குறுகிய சுயநலன் சார்ந்த போர்வெறிக்குள் வரண்டு கிடக்கின்றது. மக்களை நாயிலும் கீழாக, அடிமைகளாக, தாம் விரும்பியவாறு ஏற்றியிறக்குவதே புலிகளின் மலட்டு அரசியல். அந்த மக்களைக் கொண்ட தேசியத்தை ஒருநாளும் கட்டமுடியாது. இந்த மண் புலிகளின் மலட்டுத்தனத்தில் தேசியத்தையோ, தேசிய பொருளாதாரத்தையோ ஒருநாளும் உருவாக்காது. தேசிய பொருளாதாரம் என்பது, தேசிய அரசியலை அடிப்படையாக கொண்டது. தேசிய பொருளாதாரம் என்பது, தேசிய சுரண்டலை அனுமதிக்காத, தனக்குள் சமூக ஓடுக்குமுறைகளற்ற, உண்மையான மக்களின் ஜனநாயகம் சுதந்திரத்தில் அடிப்படையானது. அந்த அரசியலை மாற்றாது, தமது கடந்தகாலத்தை சுயவிமர்சனத்தை செய்யாது, ஒருநாளும் தேசிய பொருளாதாரத்தைக் தலைகீழாக நின்றாலும் கட்டமுடியாது. மக்கள் அதற்குரிய அரசியல் அடிப்படையை கூட நெருங்க, புலிகள் அனுமதிக்க மாட்டார்கள். அதை புலிகள் தமக்கு எதிரானதாகவே, தமது வாழ்வியல் முறைக்கும் எதிரானதாகவே பார்ப்பார்கள்.


இந்த நிலையில் புலிகள் அரசியல் ரீதியாக, தமது சொந்த சுயநலத்தால் பேரம்பேசும் ஆற்றலையே இழந்து கிடக்கின்றனர். தமிழ் மக்களுக்காக எதையும் பேச முடியாதவர்களாக, தமக்கு மட்டும் பேசுபவர்களாக, அதில் மூக்குடைபட்டவர்களாக சீரழிந்து கிடக்கின்றனர். தமிழ் மக்கள் விரும்பும் அமைதி சமாதானம் பற்றிய ஒரு தீர்வு சார்ந்த தெரிவை முன்னிலைப்படுத்தி, பேச மறுப்பவராக புலிகளின் பாசிசம் இறகுகட்டிப் பறக்கின்றது. மக்களின் முதல்தரமான எதிரியாக, தம்மைத் தாமே மறுபடியும் பிரகடனம் செய்கின்றனர். மக்களுக்கு அமைதியையும், சமாதானத்தையும் புலிகளால் என்றுமே தரமுடியாது.


மறுபக்கத்தில் வடக்குக்கு வெளியில் கிழக்கில் வாழும் மக்களின் குறிப்பான பிரச்சனையை பற்றி யாரும் கவலைப்படவேயில்லை. அமைதியாகவும் சமாதானமாகவும் தமது சொந்த பிரதேசத்தில் வாழ்வதற்காகவும், ஒருநேர உணவுக்காகவும் கையேந்தி நிற்கின்றனர். ஏ-9 பாதை பற்றி தமக்காக மக்களின் பெயரில் சிணுங்கியவர்கள், கிழக்கு மக்களின் அவலத்தையிட்டு சிணுங்கக் கூட அருகதையற்ற இழிபிறவிகளாக கிடக்கின்றனர். கிழக்கு மக்களையிட்டு கதைப்பது தமக்கு எந்தவிதத்திலும் இலாபம் கிடையாது என்பது புலிகளின் சரியான கணக்குத்தான். மக்களுக்காக பேரம் பேசும் ஆற்றலையிழந்த, தமக்காக மட்டும் மூக்குடைபட்டும் பேரம் பேசுகின்றனர்.


கிழக்கு மக்களின் மீள் குடியிருப்பையும், நிவாரணத்தையும் வழங்குவது உடனடியான அவசரமான மனிதாபிமானப் பிரச்சனையாக உள்ளது. கடந்த ஒருசில மாதத்தில் பல பத்தாயிரம் மக்கள் குடியெர்ந்து, ஒரு இடத்தில் அகதியாகக் கூட வாழமுடியாத ஒரு மனித சீரழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள். இதையிட்டு புலிகளுக்கும், தமிழ் தேசியத்தை போலியாகவே வக்கரித்து பிழைப்பவர்களுக்கும், எந்தவிதமான அக்கறையும் கிடையாது. அந்தளவுக்கு யாழ் மையவாதம், தமது குறுகிய நலனுக்குள் குதர்க்கமாகவே குண்டு சட்டிக்குள் தமிழ் மக்களையே குதிரையாக ஓட்டுகின்றனர்.


பேச்சு வார்த்தையில் அரசியல் தீர்வும், உடனடிப் பிரச்சனைகளையும் சமமாக எடுத்து, ஓன்றை ஓன்று சார்ந்து நின்று பேரம் பேசும் ஆற்றல் ஆளுமை எதுவும் புலிகளிடம் கிடையாது. மாறாக இதை ஓன்றுக்கு ஓன்று எதிராக நிறுத்தி, தீர்வை உடனடி பிரச்சனைக்கு எதிரானதாக நிறுத்துவது, தமிழ் மக்களையே அவலாக இடிப்பதுதான். இப்படி இடித்து இடித்து திணிப்பதுதான் புலிப் பாசிசம். தமிழ் மக்களுக்கான தீர்வு, தமது உடனடி நலனுக்கும், தமது அரசியல் எதிர்காலத்துக்கும் எதிரானதாக புலிகள் கருதுவது தெளிவாக இதன் மூலம் மறுபடியும் உறுதிசெய்யப்படுகின்றது. பேரினவாதம் இதை பயன்படுத்தி வெற்றிகரமாகவே தீர்வை முன்வைக்காதது மட்டுமல்ல, புலிகளை இதற்குள்ளேயே சீரழித்து எந்தவிதமான பேரம் பேசும் ஆற்றலையும் இல்லாதாக்கி விடுவதில் வெற்றி பெற்றுவருகின்றது.


தமிழ் மக்களின் நலன்களை குறைந்தபட்சம் இந்த சமூக அமைப்பில் ஓரு தீர்வு மூலம் அடைதல் என்ற குறிக்கோள், படிப்படியாக சிதைகின்றது. இந்த சமூக அமைப்பில் பேரம்பேசும் ஆற்றல், அதை மக்கள் நலன்சார்ந்து நகர்த்துதல் என்ற அனைத்தையும் தமிழ் இனம் இழந்து நிற்கின்றது. நாதியற்ற ஒரு சமூகமாக, அனாதைச் சமூகமாக இழிகின்றது. சுயநலக் கும்பல்களின் மாபியாத்தனத்துடன் கூடிய சொந்த வாழ்வில், இவை அனைத்தும் பாசிசமாகவே அரங்கேறுகின்றது. தேசியம், தேசிய நலன், மக்கள் நலன் என எதுவும் இந்த பாசிசத்தின் முன்பாக முளைப்பதில்லை.


இந்த சமூக அமைப்பில் ஓரு அரசியல் தீர்வு, மக்களுக்கானதாக இருக்கும் என்று நாங்கள் கருதுபவர்கள் அல்ல. இந்த சமூக அமைப்பில் தமிழ் மக்களின் நியாயமான தேசிய அபிலாசைகள் தீர்க்கப்பட முடியாதது என்பது உண்மை. ஆனால் இதில் மாற்றத்தை ஏற்படுத்தும் நிலையில், இன்று நாம் இல்லை. ஆனால் மக்கள் அவலம் எல்லையற்றதாக மாறி நிற்கின்றது. இந்த சமூக அமைப்பில் ஒரு சமரசத்தை வந்தடைவது, உடனடியான அவசரமான தேவையாக உள்ளது. இந்த சமூக அமைப்பின் எல்லைக்குள் புலிகள் உட்பட அரசு வரை செயல்படுவதால், இதற்குள் அவர்கள் ஓரு அமைதியை சமாதானத்தை ஒரு தீர்வை வந்தடைவதை மறுப்பது, மக்களை இழிவுபடுத்தும் மன்னிக்க முடியாத ஒரு மனித விரோதக் குற்றமாகும்.


இந்த அமைப்பில் அவர்கள் வந்தடையும் எந்தத் தீர்வும், மக்களின் அடிப்படை நலன்களை பூர்த்தி செய்யாத போதும், மக்களின் இன்றைய விருப்பு அமைதியை சமாதானத்தை ஒரு தீர்வை காண்பதுதான். இல்லையென்றால் இருப்பதையும் இவர்களிடம் இழந்து விடுவார்கள். இதை மக்கள் அன்றாட வாழ்வில், தமது சொந்த நடைமுறையில் உணருகின்றனார். மக்கள் யுத்தமற்ற ஒரு சூழலில், யுத்தத்துக்கும் தமக்கு எந்த சம்பந்தமும் இல்லாத ஒரு அமைதியான சூழலில் உடனடியாக வாழ விரும்புகின்றனர். இந்த புலி யுத்தம் எதையும் மக்களுக்கு பெற்றுத்தராது என்பதை, அவர்கள் தமது சொந்த அனுபவத்தில் கற்றுள்ளனர். மனித அழிவையும், அவலத்தையும், சமூக சீரழிவையும், சிதைவையும், இழிவையும், அடிமைத்தனத்தையும் தவிர, வேறு எதையும் இந்த யுத்தம் மக்களுக்கு பெற்றுக்கொடுக்காது. யுத்தம் என்று ஊளையிடுபவர்கள், மக்களுக்கு எதையும் தருவதாக ஓரு வரியில் தன்னும் கூற முடியாத பாசிட்டுகளே.


மக்கள் விரும்பும் அமைதி சார்ந்த ஒரு தீர்வை, இந்த சமூக அமைப்பில் பேரம் பேசும் அரசியல் தகுதியை, அந்த ஆளுமையை தமிழ் இனம் புலிகளிடம் இழந்து நிற்கின்றது. புலிகளை நம்பினால், தமிழ் மக்கள் இருப்பதையும் இழக்கின்றதைத் தவிர, வேறு எதையும் அடையப்போவதில்லை. இதுவே இன்றைய எதார்த்தமான நிலைமை. புலிகளின் கிறுக்குப் புத்திக்கு வெளியில், பேரினவாதிகள் இந்த அமைப்பில் ஒரு தீர்வை முன்வைக்கின்ற ஒரு நிலைமைக்குள் அவர்கள் செல்லுகின்றார்கள். புலிகள் இதை பேரம் பேசத்தவறினால், பேரினவாதம் தான் விரும்பிய ஒரு தீர்வை புலியல்லாத புலியெதிர்ப்பு கும்பல் மூலம் அதை முன்வைத்து, தமிழ் மக்களின் பேரம்பேசும் ஆற்றலற்ற எடுபிடிகளின் இழிநிலையில் அதை திணிப்பர். சர்வதேசம் இதை ஆதரிக்கின்ற ஒரு எதார்த்தம், எம்முன்னால் அரங்கேறுவதை தமிழ் மக்கள் தடுக்கமுடியாது. இப்படித்தான் புலிகள் அழிக்கப்படுவார்கள.


இதை மீறிச் செல்லமுடியாத ஒரு சர்வதேச நிகழ்ச்சிக்குள், எமது பிரச்சனை பிணைக்கப்பட்டு விட்டது. பேரினவாதம் செய்யப்போவது தெளிவானது. யாரும் மீற முடியாத இந்த சர்வதேச நிகழ்ச்சியில் புலிகள் ஓத்துழைக்க மறுத்தால், புலிகள் அல்லாத புலியெதிர்ப்பு தரப்பூடாக ஓரு தீர்வு அரங்கில் வரவுள்ளது. அதை சர்வதேச அங்கீகாரத்துடன் தான், பேரினவாதம் முன்வைக்கவுள்ளது. இதன் மூலம் புலிகளை தனிமைப்படுத்துவதும், மக்கள் தமது அவலங்களின் ஊடாகவே இதை தவிர்க்கமுடியாது ஏற்றுக்கொள்ளும் ஒரு தீர்வாகவுமே அது அமையும். புலிகளை மக்கள் மத்தியில் இருந்து தனிமைப்படுத்துகின்ற அரசியல் நகர்வின் மூலம், பேரினவாதம் புலிகளை வெற்றிகொள்கின்ற பரிதாபகரமான காட்சியை காண்கின்ற ஒரு நிலையை நோக்கி புலிகள் வலிந்து செல்லுகின்றனர். இந்த எதார்த்தமே இன்றைய தமிழ் மக்களின் சொந்தத் தலைவிதியாக உள்ளது.

Monday, October 30, 2006

ஏட்டுச் சுரைக்காய்கள்

சட்டங்கள், ஆணையங்கள் நடுவர்மன்றங்கள், திட்டங்கள்
அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச் சுரைக்காய்கள்

* தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஆணையம்.

* மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் ஆணையம்.

* நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் நடுவர் மன்றங்கள்.

* வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் சிறப்பு நீதிமன்றங்கள்.

* குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம்.

* வேலை உத்திரவாத அடிப்படை உரிமைச் சட்டம்.

* குழந்தைகள் உழைப்புத் தடுப்பு மற்றும் ஒழுங்குமுறை 1986 சட்டம் 2006ஆம் ஆண்டு தடை ஆணையம்.

* தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் மற்றும் பிற்பட்டோர் இடஒதுக்கீடு.

* தாழ்த்தப்பட்டோர் பழங்குடி மக்கள், மகளிர், சிறுபான்மையினர் நல ஆணையங்கள்.

* பழங்குடி மக்கள் வன உரிமைச் சட்டம்.


""அடேயப்பா'' — எத்தனை சமூக நீதி உரிமைகள் சட்டங்கள், சமூகநலத் திட்டங்கள்!

இத்தனையும் பார்க்கும்போது, இந்த நாடும் அரசும்தான் உலகிலேயே ஏழைஎளிய, ஒடுக்கப்பட்ட மக்கள் நலன்களில், ஜனநாயகத்தில் எவ்வளவு அக்கறை கொண்டுள்ளன என்று வியந்து போய்விடுவோம்!


ஆனால், சம்பந்தப்பட்ட மக்கள் எந்த அளவு இந்த உரிமைகளை அனுபவித்திருக்கிறார்கள், இந்தச் சட்டங்களால் பயன்பட்டிருக்கிறார்கள், இந்தத் திட்டங்களால் நன்மை பெற்றிருக்கிறார்கள் என்று அவற்றின் நேர்மறையான விளைவுகளை மதிப்பீடு செய்து தொகுத்தறியும் போது ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.


இந்தச் சட்டதிட்டங்கள் ஒவ்வொன்றும் அவற்றின் நோக்கங்கள், அவசியம் குறித்த முகப்புரையோடுதான் நிறைவேற்றப்படுகின்றன. ஆனால் இந்த முகப்புரை வெறும் சொல்லலங்காரம் தானே தவிர, நடைமுறைக்கானதே கிடையாது என்பது அவற்றை வரைபவர்கள் நன்கறிவர்.


***


மனித உரிமைகள்

பாதுகாப்பு என்ற பம்மாத்து!



க்கிய நாடுகள் சபையின் மனித உரிமைச் சாசனத்தில் கையொப்பமிட்டு, அங்கீகாரம் வழங்கியிருப்பதோடு, மனித உரிமையின் இன்றியமையாமையை ஏற்றுக் கொண்டிருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.


ஆனால், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றாகப் பீற்றிக் கொள்ளும் இந்த நாடுதான் மனித உரிமையை அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கும் சட்டமியற்றி, அமலாக்குவதற்குப் பல ஆண்டுகளாக மறுத்து வந்தது.

இந்தியாவில் காலனி ஆட்சிக் காலத்தில் இருந்தே வழக்கமாக இருந்து வரும் போலீசு கொட்டடி (லாக்அப்) சித்திரவதை, போலீசு நிலையக் கற்பழிப்புகள், படுகொலைகள் ஆகியவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற் போன்று, ""போலீசுடன் மோதல்'' என்கிற பெயரில் நக்சல்பாரிப் புரட்சியாளர்கள் நிராயுதபாணிகளாகப் பிடித்துச் சுட்டுக் கொல்லப்படுவது 1960களின் இறுதியில் இருந்து தொடங்கியது.


1970களின் தொடக்கத்தில் மேற்கு வங்கம் மற்றும் பீகாரில் சிறைச்சாலைச் சித்திரவதைகளும் படுகொலைகளும் ஏராளமாக நடந்தன. அதன் விரிவாகவும், தொடர்ச்சியாகவும் 197577ஆம் ஆண்டுகளில் அவசரநிலை பாசிச ஆட்சியில் ஆயிரக்கணக்கான அரசியல் போராளிகள் சிறையிலடைக்கப்பட்டுச் சித்திரவதைக்கு ஆளாகி, நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டனர். கட்டாயக் குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை முதல் நகர்ப்புற குடிசைகள் இடிப்பு வரை அரசியல் செயல்வீரர்கள் போராளிகள் மட்டுமல்ல, சாதாரண ஏழைஎளிய மக்களின் வாழும் உரிமைகள் கூடப் பறிக்கப்பட்டன.


இந்தியாவில் பெருமளவில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் முதன்முறையாக அப்பொழுதுதான் உலக அளவில் வெளிச்சத்துக்கு வந்தன. அதுவரை, உலக மனித உரிமைகளை மதிக்கும் ஆன்மீகநெறி மிக்க ஜனநாயக நாடென்று முதலாளித்துவ ஏகாதிபத்திய நாடுகளின் நன்மதிப்பை பெற்றதாக இந்தியா கருதப்பட்டது. அவசரநிலைப் பிரகடனத்துக்குச் சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே நக்சல்பாரிப் புரட்சியாளர்களை போலீசுடன் மோதல் என்ற பெயரில் படுகொலைகள் செய்ததையும் அந்நாடுகள் கண்டுகொள்ளவில்லை.


பஞ்சாப், அசாம், காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் பிரிவினைவாத தீவிரவாத பயங்கரவாத இயக்கங்களை ஒடுக்குவது என்ற பெயரில் அரசு பயங்கரவாதம் 1980களில் கட்டவிழ்த்து விடப்பட்டது. நாட்டின் பல இடங்களில் இராணுவத்திடமும் துணை இராணுவத்திடமும் நேரடி அதிகாரம் அளிக்கப்பட்டது. சமூக விரோதிகள், தீவிரவாதிகளை ஒழிப்பது என்ற பெயரில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் படுகொலைகள் செய்யப்பட்டனர். அரசு பயங்கரவாதச் சட்டங்கள் அவற்றுக்குச் சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கின. பயங்கரவாத முத்திரைக் குத்தி சுமார் ஒரு இலட்சம் பேர் (7 வயது சிறுவர்கள் முதல், 65 வயதுக்கும் மேலான மூதாட்டிகள் வரை) பல ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டனர்.

""இந்திய அரசியல் நிர்ணயச் சட்டப்படி அவசரநிலை ஆட்சியைப் பிரகடனப்படுத்தி விட்டால் (1975இல் பாசிச இந்திரா அரசு இதைச் செய்தது). மனிதர்கள் உயிர்வாழும் உரிமையைக் கூடப் பறித்து விடும் அதிகாரம் இந்திய அரசுக்கு உண்டு'' என்று இந்த நாட்டின் உச்சநீதி மன்றம் பகிரங்கமாகவே அறிவித்திருக்கிறது. அவசரநிலைப் பிரகடனப்படுத்தப்பட்ட ஆட்சியின் கீழ் ஒரு போலீசு ஆய்வாளர் தன் சொந்தப் பகையின் காரணமாக, ஒரு குடிமகனைச் சுட்டுக் கொன்று விடுவதற்குக் கூட அனுமதி உண்டு என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நாட்டில் மனித உரிமை என்பது வெறும் கேலிக் கூத்தாக இருப்பதில் வியப்பில்லை.


அப்போது அமெரிக்க மேல்நிலை வல்லரசின் நேரடி மேலாதிக்கத்தின் கீழ் இருந்த பல நாடுகளில் பாசிசக் கொடுங்கோன்மை ஆட்சி நடந்தபோதும் அது கண்டு கொள்ளவில்லை. அதேசமயம், அப்போது ரஷ்ய சமூக ஏகாதிபத்தியத்தின் செல்வாக்கில் நீடித்திருந்த நாடுகளையும், அமெரிக்க நேரடி மேலாதிக்கத்துக்கு வெளியிலிருந்த நாடுகளையும், மனித உரிமை மீறல்களைக் காட்டி உருட்டி மிரட்டி நிர்பந்தித்துத் தனது பிடிக்குள் கொண்டு வருவதற்குரிய ஆயுதமாக அது கையிலெடுத்தது. இந்தியா உட்பட உலகின் பல நாடுகளிலும் நடக்கும் மனித உரிமை மீறல்கள் பற்றி சர்வதேசப் பொதுமன்னிப்பு மற்றும் பிற அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் ஆய்வறிக்கைகள் அதற்குப் பயன்படுத்தப்பட்டன.


இந்தியாவில் மனித உரிமை மீறல்களே கிடையாதென்று அடியோடு மறுத்த இந்திய அரசு, இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதாக குற்றஞ்சாட்டி ஐ.நா. குழு உட்பட வேறு எந்த வெளிநாட்டு நிறுவனங்களின் நேரடி ஆய்வுகளுக்கும், அனுமதியும் மறுத்தது. ஆனால், அதிகரித்து வந்த மனித உரிமை மீறல்களைப் பற்றிய செய்திகள் குவிந்த வண்ணமிருந்தன.


இந்த நிலையில்தான் இந்த நாட்டில் நடந்து வரும் மனித உரிமை மீறல்களைத் தானே கண்காணித்துத் தடுக்கவும், நடவடிக்கை எடுக்கவும் தேவையான அமைப்பு முறைகளை ஏற்படுத்திக் கண்துடைப்பு நாடகமாடும் வேலையிலும் இந்திய அரசு இறங்கியது. அதன்படி 1993இல் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்திய அரசின் ஆயுதந்தாங்கிய உறுப்புகளான போலீசு, துணைஇராணுவம், இராணுவம் முதலியவைதாம் மனித உரிமைகளைப் பறிக்கும் குற்றங்களை இழைக்கும் முக்கிய அமைப்புகள். இந்த மனித உரிமை மீறல்களைக் கண்டுபிடித்துத் தானே தண்டிக்கப் போவதாக இந்திய அரசே சட்டமியற்றி அமலாக்குவது என்பது எவ்வளவு பெரிய பித்தலாட்டம்!

காலனிய ஆட்சிக் காலத் திலிருந்தே மனித உரிமைகளைக் கொஞ்சமும் மதிக்காத பல்வேறு கொடுங்கோன்மைச் சட்டங்கள் தொடர்ந்து இருந்து வருகின்றன. அவற்றுள் ஒன்று, பிரிட்டிஷ் அரசாட்சியை தூக்கி எறிவதற்கான சதி செய்ததாகப் புனையப்படும் ராஜ துரோகக் குற்றச் சட்டம் (120ஆ). இது இப்போதும் அரசு துரோகக் குற்றச் சட்டமாக கருதி, அரசியல் இயக்கங்கள் மீது ஏவிவிடப்படுகிறது. மற்றொன்று இந்தியப் பாதுகாப்புச் சட்டம் (ஈஞுஞூஞுணஞிஞு ணிஞூ ஐணஞீடிச் கீதடூஞுண்). காஷ்மீர், வடகிழக்கு இந்தியா போன்ற பகுதிகளில் சந்தேகத்துக்குரிய நபர்களை சுட்டுக் கொல்லவும், அதற்குக் காரணமான அரசு வன்முறை அமைப்பு அதிகாரிகளுக்குச் சட்டப் பாதுகாப்புத் தரவும் பல கொடிய சட்டங்கள் உள்ளன.


இவைதவிர மிசா, மினி மிசா, தடா, பொடா என்று அவ்வப்போது நிறைவேற்றப்படும் அரசு பயங்கரவாதச் சட்டங்கள், மாநில அளவில் ஏவிவிடப்படும் குண்டர்கள் சட்டங்கள் போன்றவை; சுவரெழுத்து, சுவரொட்டி, ஊர்வலம், பொதுக் கூட்டம் ஆகியவற்றுக்குக்கூட தடை விதிக்கும் போலீசு அராஜகம்; பயங்கரவாதி, சமூக விரோதி, தீவிரவாதி, நக்சலைட்டு என்று முத்திரை குத்தி போலீசுடன் மோதல் என்ற பெயரில் கேட்பாரின்றி சுட்டுக் கொல்வது — இப்படி அரசு வன்முறை அமைப்புகளிடம் வரைமுறையற்ற அதிகாரம் குவிக்கப்பட்டிருக்கிறது. மனித உரிமைகளை மீறுவதற்கென்றே தனிப்பயிற்சி பெற்ற இரகசிய உளவு கொலைப் படைகள் (ATS, Q, STF, GREYHOUND) என்று பல பெயர்களில் உள்ளன. அதற்கென்றே இரகசிய சித்திரவதைக் கூடங்களும், நவீன கருவிகளும், ஆயுதங்களும், கணக்கற்ற நிதியும் வழங்கப்படுகின்றன. இத்தனையும் இருக்கும்போது மனித உரிமைப் பாதுகாப்பச் சட்டம் ஆணையங்கள் என்ன செய்துவிட முடியும்!


சமீபத்தில் பேசிய உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி சபர்வால் ""மாநில மனித உரிமை ஆணையங்களை உருவாக்குவதில் மாநில அரசுகள் மெத்தனப் போக்கைக் கடைப்பிடிக்கின்றன. மனித உரிமைப் பாதுகாப்புச் சட்டம் 1993இல் இயற்றப்பட்டு, கடந்த 13 ஆண்டுகளில் 14 மாநிலங்களே மனித உரிமை ஆணையங்கள் அமைத்துள்ள்ளன. இன்னமும் எஞ்சிய 17 மாநிலங்களில் மனித உரிமை ஆணையங்களை அமைப்பதற்கான எந்தவித முயற்சியும் கிடையாது. ஆணையங்கள் அமைக்கப்பட்ட மாநிலங்களிலும் நான்கில் முழுநேரத் தலைவர்கள் இல்லை. காலியாகவே இருக்கின்றன அல்லது பகுதிநேர மற்றும் தற்காலிக தலைவர்கள்தாம் உள்ளனர். மகாராட்டிரத்தில் மாநில மனித உரிமை ஆணையம் செயலிழந்து போய்விட்டது. மனித உரிமைகளைக் காப்பதில் அரசாங்கங்கள் உண்மையில் அக்கறை கொண்டிருக்கின்றனவா? மனித உரிமைகள் பற்றிய வரையறுப்பு கூட இன்னமும் செய்யப்படவில்லை'' என்கிறார்.


""மாநில மனித உரிமைகள் ஆணையங்களுக்கான வழிகாட்டுதல்களை தேசிய மனித உரிமைகள் ஆணையம் வகுக்க வேண்டும். மாவட்ட மற்றும் வட்ட அளவிலான மனித உரிமை அதிகார அமைப்புகளை நிறுவவேண்டும். பல்வேறு நலத்திட்டங்கள் பொதுமக்களைச் சென்றடைகின்றனவாவென்று மாநில ஆணையங்கள் உறுதிப்படுத்த வேண்டும். போலீசு நிலையக் கொட்டடிகளில் நடக்கும் அதிக்கிரமங்களை மட்டும் மனித உரிமை மீறல்களாகக் கருத முடியாது. சுத்தமான குடிநீரும் காற்றும் கிடைக்காததும், சுகாதாரம், குறைந்தபட்ச சத்துணவு கிடைக்காததும் கூட மனித உரிமை மீறல்கள்தான்'' என்று சபர்வால் கூறினார்.


இம்மாதிரி வழக்குகளிலும், கருத்தரங்குகளிலும் உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி, "குடி'அரசுத் தலைவர், பிரதமர் போன்றவர்கள் ஆவேசமாகப் பேசுவதும், ஆலோசனைகள் வழங்குவதும் ஒன்றும் புதிதில்லை. பழங்குடி மக்களின் குழந்தைகள் சத்துணவின்றி மடிவதும், பயங்கரவாத ஒழிப்பு என்ற பெயரில் இசுலாமிய இளைஞர்கள் வேட்டையாடப்படுவதும் பெருமளவு நடக்கும் மகாராட்டிரத்திலேயே மனித உரிமை ஆணையம் காயடிக்கப்பட்டு விட்டது; அந்நிய பன்னாட்டுக் கம்பெனிகள் குளிர்பானங்கள் என்ற பெயரில் பூச்சிக் கொல்லி நஞ்சு கலந்து விற்பனை செய்கின்றன இதெல்லாம் அந்தப் பெரிய மனிதர்கள் அறியாதவை அல்லவே? இருந்தாலும் இந்த மனித உரிமை மீறல்களுக்கு எதிராக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன?


மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு முதலாவதாக அதை அமலாக்குவதற்குரிய ஆணையம் அமைத்த மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு. ஆனால், அதை முடக்கி வைப்பதில்தான் தமிழக அரசு கூடுதலான அக்கறையெடுத்துக் கொண்டது. பெரும்பாலும் ஆட்சியாளர்களின் நம்பகமான விசுவாசிகளே மனித உரிமை ஆணையத்தின் தலைமைக்கு நியமிக்கப்பட்டனர். ஆணையம் செயல்படுவதற்குரிய அதிகாரிகள், அலுவலர்கள், இடம், நிதி போன்ற வசதிகள் செய்து தரப்படவில்லை.


தமிழக மனித உரிமை ஆணையத்தின் தலைவராக இருந்த நைனார் சுந்தரம் 2001ஆம் ஆண்டு செப்டம்பரில் இறந்து போனார். அதன்பிறகு சுமார் ஐந்தாண்டு காலம் பாசிச ஜெயலலிதா ஆட்சியில் மனித உரிமை ஆணையத்துக்குத் தலைவரே நியமிக்கப்படவில்லை; ஐவர் இருக்க வேண்டிய ஆணையத்தில் ஒருவர் மட்டுமே உறுப்பினராக இருந்தார். அவரும் கொடைக்கானல் ஓட்டல் வழக்கில் ஜெயலலிதாவுக்குத் தண்டனை வழங்கிய நீதிபதி சம்பந்தம் என்பதால் அவர் மட்டுமே இயங்கிய ஆணையத்தின் மனித உரிமை மீறல் மீதான தீர்ப்புகளை ஜெயலலிதா அரசு மதிக்கவே இல்லை. அவரையும் நீக்கவிடத்தான் ஜெயலலிதா அரசு எத்தணித்தது. அவரும் ஓய்வு பெற்றபிறகு வேறு யாரையும் நியமிக்கவும் இல்லை. "டான்சி' ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்குச் சாதகமான தீர்ப்பு வழங்கிய, சிங்கப்பூர் சுற்றுலா புகழ் நீதிபதி தங்கராஜ் தற்காலிகத் தலைவராக கடைசி சில மாதங்கள் நியமிக்கப்பட்டிருந்தார்.


மனித உரிமைப் பாதுகாப்புச் சட்டத்தை வெறும் ஏட்டுச் சுரைக்காயாகவும், மனித உரிமை ஆணையத்தை முடக்கி வைப்பதும்தான் அரசின் செயல்பாடாக உள்ளதென்று கருதுவதற்கு வேறென்ன சான்று வேண்டும். ஒரு எலும்புக் கூடுபோல ஆகிவிட்ட மாநில மனித உரிமை ஆணையம் வழங்கும் தீர்ப்புகளும் என்ன கதியாக்கப்படுகின்றனவென்பதற்கு ஒரு எடுத்துக்காட்டுப் பார்ப்போம்.


சென்னை, தாம்பரம் அருகேயுள்ள கடப்பேரியில் தமிழக அரசின் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் திறந்து கிடந்த கழிவுநீர்த் தொட்டியில் ஏழு வயதுச் சிறுவன் விழுந்து இறந்து போனான். அதற்கு ஈட்டுத் தொகையாக ஐம்பதாயிரம் ரூபாய் தரும்படி மாநில மனித உரிமை ஆணையம் ஆணையிட்டது. மூன்றாண்டுகள் ஆகியும் சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்கள் ஈட்டுத் தொகை வழங்கவில்லை. இறந்து போன சிறுவனின் தந்தை ஒரு ஆட்டோ ஓட்டுநர். தற்போது வாதநோய் தாக்கிச் செயலிழந்து கிடக்க, தாய் வீட்டு வேலை செய்து குடும்பம் பிழைக்கிறது. மீண்டும் நியாயம் கேட்டுப் போன அந்த ஏழைக் குடும்பத்தை உயர்நீதி மன்றத்தில் வழக்குப் போடும்படி வழிகாட்டியிருக்கிறது, மனித உரிமை ஆணையம். இவ்வளவுதான் அதற்கு அதிகாரம். இப்படி ஏராளமான சான்றுகள் கூற முடியும்.


மக்களுடைய அடிப்படைத் தேவைகள் கிடைக்கின்றனவா, மக்கள் நலத்திட்டங்கள் அவர்களைச் சென்றடைகின்றனவா என்று கண்காணிப்பது கூட மனித உரிமை ஆணையத்தின் பணிகள்தான் என்கிறார் உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி. ஆனால் இத்தகைய பணிகளை விட்டுவிடுங்கள், மனிதர்கள் உயிர் வாழும் உரிமையைக் கூட கையிலெடுத்து உத்திரவாதப்படுத்த முடியாமல் மனித உரிமை ஆணையங்கள் முடக்கப்படுகின்றன என்பதுதான் உண்மை.

1975ஆம் ஆண்டு, நக்சல்பாரிப் புரட்சியாளர் சீராளன் போலீசால் கைது செய்யப்பட்டு மரத்திலே கட்டி வைத்து நுகத்தடியாலேயே அடித்துக் கொல்லப்பட்டார். முப்பதாண்டுகளுக்கு மேலாகி 2006ஆம் ஆண்டு அதற்குரிய நட்டஈடு வழங்கும்படி உயர்நீதி மன்றம் தீர்ப்புக் கூறியது. 1980களின் தொடக்கத்தில் வடாற்காடு தருமபுரி மாவட்டங்களில் போலீசுக் கொலைகாரன் தேவாரம் கும்பலால் பல இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்; அவற்றுக்கு எதிரான வழக்குகள் விசாரிக்கப்படாமலேயே முடக்கப்பட்டன. அதே தேவாரம் கும்பலால் சந்தன மரக் கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் மலைவாழ் மக்கள் சித்திரவதை கற்பழிப்பு படுகொலை செய்யப்பட்டனர். இந்த மனித உரிமை மீறல்களை விசாரித்த சதாசிவம் கமிசன் அறிக்கை எவ்வித மேல் நடவடிக்கையும் இன்றி கிடப்பில் போடப்பட்டது. ஆனால், வீரப்பனைக் கொன்றதற்காக தேவாரம் விஜயகுமார் கும்பலுக்கு உடனடியாக வீட்டுமனை, பரிசுத் தொகை, பதவி உயர்வு கொடுத்துப் பாராட்டப்பட்டது. சிதம்பரம் பத்மினி, அத்தியூர் விஜயா போன்ற பெண்களுக்கு எதிரான போலீசின் பாலியல் வன்முறைகள், ஏராளமான கொட்டடிக் கொலைகள், வாச்சாத்தி மற்றும் சின்னாம்பதி பெண்கள் மீதான அரசு ஊழியர் போலீசு கும்பல் பாலியல் வன்முறை வெறியாட்டம் போன்றவை மனித உரிமை ஆணையத்தால் கண்டு கொள்ளப்படவே இல்லை. காட்டுமிராண்டி ஆட்சி நடத்தும் குஜராத் நரேந்திரமோடி போன்றவர்கள் மனித உரிமை ஆணையத்தின் தீர்ப்புகளை கழிப்பறைக் காகிதமாகத்தான் மதிக்கிறார்கள்.


பெரும்பாலும் ஆளும் கட்சிகளின் எடுபிடிகள் என்று நிரூபித்துக் கொண்ட ஓய்வு பெற்ற நீதிபதிகள்தாம் மனித உரிமை ஆணையத்தின் தலைவர்களாக நியமிக்கப்படுகிறார்கள். தமது பதவிக் காலத்தில் மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதித்த போலீசு அதிகாரிகளே மனித உரிமை ஆணையத்தின் துணை உறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்படுகிறார்கள். ராஜீவ்காந்தி கொலையை விசாரிப்பது என்ற பெயரில் பாசிச அதிகார வெறியோடு செயல்பட்டவரும், பின்னர் சி.பி.ஐ. இயக்குநராக பதவிப் பரிசு பெற்றவருமான கார்த்திகேயன், ஓய்வு பெற்ற பின்னர், தேசிய மனித உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் போலீசு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.


ஆக, மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் குரலெழுப்புபவர்களையும், அவர்களது நடவடிக்கைகளையும் அரசு அமைப்புகளுக்குள்ளும் அதன் சட்டதிட்டங்கள் செயல்பாடுகளுக்குள்ளும் இழுத்துக் கடிவாளம் போடுவதுதான் இந்த மனித உரிமைப் பாதுகாப்புச் சட்டத்தின் நோக்கம். இதன் மூலம் மனித உரிமைகள் மீறப்படும்போது அதைத் தடுப்பதும் அதற்குரிய நிவாரணத்தையும் இந்த அரசமைப்புக்குள்ளேயே பெற முடியும் என்ற நம்பிக்கை ஏற்படுத்தப்படுகிறது. இந்த அரசுக்கு எதிரான கொந்தளிப்புகளைச் சீர்படுத்தும் அதிர்ச்சித் தடுப்புகளாக இந்தச் சட்டமும் அதன் அமைப்புகளும் செயல்படும். அவை இந்த அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான உணர்வுகளுக்கு வடிகாலாக அமையும். இதற்கு மேலும் துணை புரியும் வகையில் மனித உரிமை மீறல்களைத் ""தட்டி கேட்க''வும், அதற்கு எதிரான மக்கள் உணர்வுகளை நெறிப்படுத்தி சட்ட வரம்புகளை மீறாமல் பார்த்துக் கொள்ளவும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் ஏகாதிபத்திய நிதி உதவியுடன் இயங்குகின்றன.


மனித உரிமைக் கண்காணிப்பகம் Human Rights Watch), மக்கள் சிவில் உரிமைச் சங்கம் (கஞுணிணீடூஞு'ண் க்ணடிணிண ஞூணிணூ இடிதிடிடூ ஃடிஞஞுணூtடிஞுண்) சர்வதேசப் பொதுமன்னிப்பு (ஐணtஞுணூணச்tடிணிணச்டூ அட்ணஞுண்tதூ) போன்ற அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் ஏகாதிபத்திய அமைப்புகளால் நிதி உதவியளிக்கப்படுவதோடு, கிரமமான அறிக்கைகள் பெற்று மேற்பார்வையிடப்படுகின்றன. இந்த நாட்டில் மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கும் போலீசு முதலிய அரசின் வன்முறை அமைப்புகளுக்கு எதிராக வெற்றுக் கூச்சல் போடுவதுதான் இந்த மனித உரிமை அமைப்புகளின் வேலை. ஜனநாயக வரம்புக்குட்பட்ட போராட்டங்கள் என்ற பெயரில் அரசின் வன்முறை அமைப்புகளுக்கு எதிராக நிழல் சண்டை போடுவதன் மூலம், ஒரு சில கண்துடைப்பு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுத்து, அவற்றுக்கு எதிரான மக்கள் உணர்வுகளை மழுங்கடிக்கின்றன.


""மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் இருக்கின்றன, அமைப்புகள் இருக்கின்றன, மக்கள்தாம் இவற்றை அறிந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால், மக்கள் பாமரர்களாக இருக்கிறார்கள்; மனித உரிமை பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்பட வேண்டும், அதற்குரிய கல்வி போதிக்கப்படவேண்டும்'' என்று இந்தத் தொண்டு நிறுவனங்கள் கூறி வருகின்றன. மக்கள் தமது அரசியல், பொருளாதாரத் தேவைகளை அறிவதோடும் அவற்றை அடைவதற்கான போராட்டங்களோடும் நெருங்கிய பிணைப்புக் கொண்டுள்ளதுதான் மனித உரிமை. ஆனால், இந்தத் தொண்டு நிறுவனங்களோ அரசியல், பொருளாதாரக் கோரிக்கைகளுக்கான இயக்கங்கள் நோக்கங்களுக்கும் தமக்கும் எவ்வித உறவும் கிடையாது என்று வேண்டுமென்றே வரம்பிட்டுக் கொள்கின்றன.


அரசின் நிர்வாக இயந்திரத்துடன் ஒரு புரிந்துணர்வு அடிப்படையில்தான் இந்த மனித உரிமைத் தொண்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன. ஆனால், உள்ளூர் அளவில் அதிகாரம் செலுத்தும் போலீசு அதிகாரிகளின் அதிகாரவெறி காரணமாக சில ""மோதல்கள்'' ஏற்படுகின்றன. இவை தங்களின் வீரதீ ரச் செயல்கள் என்று மேற்படி தொண்டு நிறுவனங்கள் பீற்றிக் கொள்கின்றன.


ஆக, மனித உரிமைப் பாதுகாப்புச் சட்டம், அதை அமலாக்குவதற்காக நிறுவப்படும் (பல மாநிலங்களில் அப்படி ஒரு ஏற்பாடே கிடையாது) ஆணையங்கள் மட்டுமல்ல, மனித உரிமைகளுக்காகப் போராடுவதாகக் கூறிக் கொள்ளும் ஏகாதிபத்திய நிதி உதவி பெறும் தொண்டு நிறுவனங்களும் கூட மனித உரிமை மீறல்களுக்கு மறைமுகமாகத் துணை நிற்பவைதாம்.


(தொடரும்)



>

Sunday, October 29, 2006

புலிப்பொருளாதாரம் ஊரையே ஏமாற்றும் கானல் நீர் தான்

புலிப்பொருளாதாரம் என்பது ஊரையே ஏமாற்றும் கானல் நீர் தான்

பி.இரயாகரன்
22.10.2006


புலிகளின் காட்டுப்பிரதேசங்கள் மீதான பேரினவாதிகளின் பொருளாதார தடை, புலிகளையே நித்திரையில் இருந்து உலுப்பி எழுப்ப முனைகின்றது. அவர்களோ கனவு கண்டு எழுந்தவன் போல் புலம்புகின்றனர். உடனே புலிப் பொருளாதாரம் பற்றி பேசுகின்றனர். ஆனால் தமிழீழ மக்களின் தேசிய பொருளாதாரம் பற்றி அவர்களால் பேசமுடிவதில்லை. பேரினவாத பொருளாதார தடையை, தாம் வெற்றிகரமாக வென்றுவிடுவோம் என்று, ஊரையே ஏமாற்றும் ஒரு பரப்புரையை சுடுகாட்டில் நடத்துகின்றனர்.


ரி.ரி.என் தொலைக்காட்சியில் 'நிலவரம்" என்ற நிகழ்ச்சியில் 'பொருளாதார தடைகளும் பொருண்மிய போராட்டமும்" என்ற தலைப்பில் இதைச் செய்தனர். உப்புச்சப்பற்ற, நடைமுறைக்கு உதவாத, சுடுகாட்டில் எரிந்து சிதைந்து கிடக்கும் பிணங்களை நோக்கி ஒரு பரப்புரை நடத்தினர். புலித் தேசிய பொருளாதாரத்தை கட்டி, நாம் மக்களை மீட்டுவிடுவோம் என்கின்றனர். உலக பொருளாதாரம் பற்றி கரிகாலனும், பாலகிருஸ்ணனும் தம்பாட்டுக்கு பைத்தியம் போல், கவர்ச்சியாக அலட்டினர். இந்த அலட்டலை பதிவுகள் இணையத்தில் நீங்கள் பார்க்க முடியும். http://www.pathivu.com/?ucat=nilavaram


'பொருளாதார தடைகளும் பொருண்மிய போராட்டமும்" என்ற தலைப்பில் விவாதித்தவர்கள், விடையத்தை விவாதிக்க முடியாது விடையத்துக்கு வெளியில், விடையத்தை சிதைத்து வீங்க வைத்தனர். சிறிலங்கா பேரினவாத அரசு, உலகம் என்று சன்னி கண்டவன் போல் உளறியவர்கள், தங்களது பொருளாதாரம் பற்றி கூற முடிவதில்லை. இதை புலிகளின் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவன பொறுப்பாளர் கரிகாலனும், புலிகளின் பொருளாதார ஆய்வாளர் பாலகிருஸ்ணணும், தத்தமது வெள்ளை வேட்டி அறிவுப் புலமைக்கு ஏற்ப இதை பரப்புரையாக்கினர்.


புலிகளின் புலிப் போராட்டம் தொடங்கி 30 வருடம் கழிந்த நிலையில், பொருளாதாரம் பற்றி புலம்புவது மூலம், புலிகள் தாமே அதன் எதிரிகளாக இருந்ததை, இருப்பதை நிறுவுகின்றனர். தேசிய பொருளாதாரத்தின் முதல் எதிரியே புலிகள் தான். அதனை சிதைத்து சின்னாபின்னப்படுத்தியவர்களும் புலிகள் தான். தேசிய பொருளாதாரத்தை சிதைத்து, அந்த சாம்பல் மேட்டுச் சுடலையில் நின்று, இன்று ஞான உபதேசம் செய்கின்றனர். அதை தமது குறுகிய பாசிச சித்தாந்தத்துக்குள் நின்று, ஊரையே ஏமாற்ற புலுடா விடுகின்றனர்.


எல்லாம் வல்ல அந்த பிரபாகரனின் கடவுளின் பெயரில், பிள்ளையார் சுழியிட்டு கரிகாலன் தொடங்குகின்றார். பிரபாகரன் தீர்க்கதரிசனமாக எல்லாவற்றையும் முன்கூட்டியே உணர்ந்ததாகவும், அந்த மாபெரும் கடவுளின் பெயரில் இதை ஒப்புக்கு ஓப்புவிக்கின்றார். பாலகிருஸ்ணன் பொருளாதாரம் பற்றி தனது கல்விசார்ந்த அறிவியல் புலமை சார்ந்த, ஏகாதிபத்திய கோட்பாட்டுத் திரிபை உளறிக் கொட்டுகின்றார்.


'தமிழீழ உட்கட்டுமானம்" என்ற நூலை தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் 1997 இல் வெளியிட்டு இருந்தது. அதில் புலிகளின் தலைவர் பிரபாகரன் 'சுயநிறைவான தன்னில் தானே தங்கிநிற்கும் பொருளாதார வாழ்வுடைய சமூகமாக எமது சமூகம் உருவாகவேண்டும் என்பதே, எனது விருப்பம். மக்கள் தம்மைத்தாமே ஆளும் உரிமையுடைய சனநாயக ஆட்சி முறையையே நான் விரும்புகின்றேன். இந்த புதிய சமூகத்தில், உழைக்கும் மக்கள் மத்தியில் பொருளாதார சமத்துவம் நிலவவேண்டும்." என்கின்றார். இப்படி அவர் தனது விருப்பைக் கூறிய போதே தெரிந்தது, அங்கு தேசிய பொருளாதாரம் கிடையாது என்பதை உறுதி செய்தது. தலைவரின் மேற்கோள் விருப்பம் மட்டும் தான் அச்சில் பதிவாகியது, அவ்வளவே! இன்று மீண்டும் இதைப்பற்றி, அவர்களின் எடுபிடிகள் வாயளவில் பரப்புரை நடத்துகின்றனர். கறிக்கு உதவாத சரக்கு. வாழ்க்கைக்கு பொருத்தமற்ற அலம்பல்கள். தலைவரின் மேற்கோள் விருப்பத்தையே ப+ர்த்தி செய்யாத அவரின் போராட்டம். இன்று அவரின் பெயரில் மீண்டும் புலம்பல்.


10 வருடத்துக்கு முன் தீர்க்கதரிசனமிக்க தலைவரின் விரும்பம் நூலில் அச்சாகிய போதும், எதுவுமற்ற ஒன்றாகவேயுள்ளது. இதில் தலைவர் மக்கள் 'தம்மைத்தாமே ஆளும் உரிமை" பற்றியும் 'சனநாயக ஆட்சி முறையையே விரும்புகின்றேன்" என்று சன்னிக்காய்ச்சல் கண்டவன் போல் பலவாக புலம்பியுள்ளார். இதற்கு தடையாக இருப்பவரே, அதைக் கூறும் பிரபாகரன் தான். பிரபாகரனின் சர்வாதிகார பாசிசம் தான், மக்கள் தம்மைத்தாம் ஆள முடியாத நிலைக்கும், சனநாயகமற்று இருக்கவும் காரணமாகவுள்ளது. புலிப் பாசிச சர்வாதிகார சுரண்டல் அமைப்புத் தான் 'சுயநிறைவான தன்னில்தானே தங்கிநிற்கும் பொருளாதார வாழ்வுடைய சமூகமாக எமது சமூகம் உருவாகவேண்டும்" என்பதற்கு பிரதான தடையாக எதிரியாக உள்ளது. இதில் பொருளாதார சமத்துவம் பற்றி வேறு அலட்டல். முதல் மக்களை சமமாக பண்பாக மதிக்க கற்றுக்கொள்ளவே தெரியாத, அடாவடித்தனக் கும்பல் தான் புலிகள். பொருளாதார ரீதியில் சமத்துவம் என்பது இவர்களின் நல்ல நகைச்சுவை தான். இப்படி ஒரு புலித் தொகுப்பே வெளியிடலாம். மக்கள் வாழ்க்கை நிலைக்கு முன் , புலிகளின் வாழ்க்கை நிலையை மாற்றுங்கள் பார்க்கலாம். தலைவராலும் முடியாது, தலைவரை பின்பற்றும் எந்த புலிக் கொம்பனாலும் முடியாது.


இந்த நிலையில் கரிகாலன் தலைவரின் தீர்க்க தரிசனம் பற்றி புலுடா விடுகின்றார். கரிகாலன் ஒரு அசல் பச்சோந்தி என்பதால், இப்படி மக்கள் முன் புலுடா அடிக்க முடிகின்றது. மொத்தத்தில் இவர்களின் கருத்துக்கள் நடைமுறையற்ற வெற்றிடத்தில், நடைமுறையில் மக்களின் வாழ்வை சூறையாடுகின்ற எல்லைக்குள், இவர்கள் நல்ல கிளுகிளுப்புக் கதை சொல்லுகின்றனர்.


இன்று புலிப் பொருளாதாரம் பற்றி அலட்டுகின்றனர். பேரினவாதம் ஒரு பொருளாதார தடையை விதிக்கின்றது என்றால், அதற்கு எதிர்வினையை மட்டும் வார்த்தைகளால் வெளிப்படுத்துகின்றனரே ஒழிய நடைமுறையில் அல்ல. இதன் மூலம் ஒரு உண்மை அம்பலமாகின்றது. தமிழீழ புலிப் பொருளாதாரம் என்ற ஒன்று, இன்றுவரை இருக்கவில்லை என்பதை இது நிறுவுகின்றது, ஓத்துக் கொள்கின்றது. அதாவது தேசிய பொருளாதாரம் புலிநோக்கில் கூட உருவாக்கப்படவில்லை என்பதை எடுத்துரைக்கின்றது. இயல்பான மக்களின் வாழ்வு சார்ந்த, அவர்களின் தன்னியல்பான பொருளாதார உற்பத்தியைத் தாண்டி, தேசிய பொருளாதாரம் என்ற ஒன்று கிடையாது என்பதை இந்த விவாதம் மறுபடியும் உறுதி செய்துவிடுகின்றது.


புலிப்பொருளாதாரம் வரிப் பொருளாதரம் தான். தரகு வர்த்தகர்கள் தான். மக்களை ஏமாற்றியும், மிரட்டியும், சுருட்டியும், திருடும் பணப் பொருளாதாரம் தான். உற்பத்திப் பொருளாதாரத்தை சார்ந்து, புலிகள் மக்களை அணிதிரட்டியது கிடையாது. அந்த அரசியல் கிடையாது. 'சாவிலும் வாழ்வோம்" என்று கூறி புலம் பெயர் நாட்டில் நடத்தும் நிகழ்ச்சிகள், அவர்களின் எதார்த்தமான சரியான முன்மொழிவாகும். மக்கள் செத்தால் புலிகள் வாழ்வார்கள், இதையே அவர்கள் அன்றாடம் நடைமுறையில் நிறுவிக் காட்டுகின்றனர். சாவில் பணம் திரட்டி வாழ்கின்றது. சுனாமி முதல் எல்லா மரணங்களும், புலிக்கு சொகுசான வாழ்வை வழங்குகின்றது. மக்களின் பணம் சாவில் சூறையாடப்படுகின்றது. 'சாவிலும் வாழ்வோம்" என்று அவர்கள் கூறுவது சாலப் பொருந்துகின்றது.


புலியின் பொருளாதாரம் மனித மரணங்களிலும், அமைதிப் பேச்சு வார்த்தையிலும், வரி மூலமும், மக்களை உருட்டி மிரட்டியும், மக்களை ஏய்த்தும் தான் திரட்டப்படுகின்றது. அண்மையில் புனர்வாழ்வுக் கழகம் மூலம் சுனாமி நிவாரணத்துக்கு இலங்கை வங்கி ஊடாக சர்வதேச நிறுவனங்கள் வழங்கயி பணம், மீண்டும் மேற்கு நோக்கி நகர்ந்த வித்தையை மக்கள் விரோத புலியால் மட்டும் தான் செய்யமுடியும் இந்த நிலையில் மேற்கில் சேர்க்கும் பணம் மக்களுக்கு செல்வது என்பது நினைத்தே பார்க்க முடியாத ஒன்று. மக்கள் பற்றி, புலிகள் வரலாற்றில் ஒரு துளிதன்னும் அக்கறை கொண்டது கிடையாது.


இந்த நிலையில் இந்த விவாதத்தில் ஒரு தர்க்கம் வைக்கப்பட்டது. பேரினவாதிகளின் வருடாந்த வரவு செலவின் பற்றாக்குறை உட்பட, பாதுகாப்பு செலவுக்கு ஒதுக்கிய நிதி பற்றி கூறப்பட்டது. ஆனால் ஏகாதிபத்தியத்துக்கு கொடுக்கும் வட்டி பற்றி வாய் திறக்கவில்லை. அது பாதுகாப்பு செலவைவிட அதிகம். ஆனால் பாதுகாப்பு செலவு பற்றி மட்டும் ஒருமுனைப்பாக வாதிட முனைகின்றனர். இதன் மூலம் தமக்கு பணம் திரட்டும் உத்தியாகவே இவை முன்வைக்கப்படுகின்றது.


ஒவ்வொரு மனிதனும் காலை எழுந்தவுடன் அன்றைய நாள் பாதுகாப்புச் செலவுக்கு ஒருவர் 20 ரூபா கொடுக்க வேண்டியுள்ளதாக கூறுகின்றனர். உண்மை தான். இதை தமிழ் தரப்பு கொடுக்கின்றதா, எப்படி கொடுக்கின்றது, அதை யார் பெறுகின்றனர், என்பது மற்றொரு பொருளாதார ஆய்வுக்கு வைத்துவிட்டு, இதை கூறுபவர்கள் இதை எப்படிச் செய்கின்றனர் என்று பார்ப்போம்.


புலியின் வரவு செலவு என்ன? அதில் எத்தனை சதவீகிதம் மக்கள் நலனுக்காக செலவு செய்யப்படுகின்றது. ஒரு சதவீதம் இல்லையென்றால் ஆகக் கூடியது 10 சதவீதம்? பாதுகாப்பு செலவுக்கு 99 சதவீதம் இல்லையென்றால் 90 சதவீதம், பாதுகாப்புக்கே புலிகளால் செலவு செய்யப்படுகின்றது. அப்படியாயின் ஒவ்வொரு தமிழனும் எவ்வளவு பணத்தை நாளொன்றுக்கு செலவு செய்கின்றான். இது மர்மம் தான். அந்த பொருளாதார சூரப்புலி ஆய்வாளருக்கே, இது தர்மசங்கடமான மர்மம் தான்.


சரி விழுந்தடித்து வந்து தேசிய பொருளாதாரம் என்கின்றீர்களே. உங்கள் இந்த தேசிய பொருளாதாரத்துக்கு எத்தனை சதவிகிதத்தை புலிகள் தமது செலவில் ஓதுக்கியுள்ளனர். எவ்வளவு பணம்? இப்படி பல விடையத்தை மக்கள் நலன் சார்ந்து அடுக்கிக் கொண்டு போகலாம். போலியாகவும், புரட்டாகவும், விதண்டாவாதமாகவும் கதைப்பதற்கு அப்பால், இதில் எந்த நேர்மையும் நடைமுறையில் கிடையாது. தேசிய பொருளாதாரத்துக்கு என்று ஏதாவது வரவு செலவு திட்டங்கள் உண்டோ? இராணுவ வெற்றி போல் அவற்றை எல்லாம் பிரசுரியுங்களேன். ஏன் ஓடி ஒளிக்கின்றீர்கள். ஏன் ஊரை ஏமாற்றுகின்றீர்கள்.


பேரினவாதம் பொருளாதார தடை விதித்த பின், எவ்வளவு பணம் கூடுதலாக தேசிய பொருளாதாரத்துக்கு ஓதுக்கினீர்கள்.? அதையெல்லவா வந்து கூற வேண்டும். யாரை ஏமாற்றுகின்றீர்கள். தமிழனை மந்தையாக வைத்துக் கொண்டு, உங்கடை பாட்டுக்கு அர்த்தமில்லாத வகையில் இவற்றையெல்லாம் ஓதலாம் என்பது உண்மை தான். அதைத் தான் செய்கின்றீர்கள். இதற்கென எந்த பெறுமதியும் இருப்பதில்லை.


மக்கள் தாங்களாகவே தமது அன்றாட வாழ்வையொட்டி உற்பத்தி செய்வதை, தேசிய பொருளாதாரம் என்பதும், அதை வைத்து தம்பட்டம் அடிக்க முடிகின்றது. அதற்குள் தலையிடவும், அதை சீர்குலைக்கவும் அல்லது தமக்கு தமது சுரண்டலுக்கு இசைவானதாக மாற்றவுமே, புலிகள் எப்போதும் முனைந்தவர்கள். உண்மையில் தேசியமும், தேசிய பொருளாதாரமும் புலிகளால் அழிந்து சிதைகின்றது.


இந்த வாதத்தில் பாலகிருஸ்ணன் என்ற புலிக்கு ஏற்ற பொருளாதார பிழைப்புவாத சாடி, ஏன் மேற்கு நாடுகள் தலையிடுகின்றது என்பதற்கு ஒரு கருத்தை துப்பிவிடுகின்றார். அவரின் கண்டுபிடிப்பு சனத்தொகைக்கும், உற்பத்திக்கும் இடையில் உள்ள சதவீகித இடைவெளியையே, அமைதிக்கான தலையீடாக காட்டுகின்றார். நல்ல பொருளாதார புலி நகைச்சுவை தான். இதையும் தலைவரின் பொருளாதார மேற்கோளாக்கலாம். உலக பொருளாதார உற்பத்தியில் மேற்கில் சனத்தொகை வீகிதத்துக்கு மிஞ்சிய உற்பத்தி வீகிதம் காணப்படுவதால், அதை சந்தைப்படுத்தவே இலங்கையில் அமைதி சமாதானத்தை இந்த நாடுகள் கோருகின்றதாம். அத்துடன் உலகமயமாதல் என்பது, சந்தையைத் திறந்து விடக் கோருவதாம். இப்படி உலக பொருளாதாரத்தை ஆய்வு செய்து விளக்கமளித்தால் இதற்கு சந்தோசமாக ஏகாதிபத்தியங்கள் பொருளாதார பட்டம் கொடுக்கும். தேசிய பொருளாதாரம் என்பதே தெரியாத ஏகாதிபத்திய சூனியங்கள் தான், புலிக்கு பின்னால் ஒட்டிக்கொண்டு இருப்பதைக் காட்டுகின்றது.


இந்த ஆய்வாளர் கூறிய உற்பத்தி வீகிதமே தவறானது. ஐp-7 நாடுகள் உலக உற்பத்தில் 60 முதல் 70 சதவீகிதத்தைக் கட்டுப்படுத்துகின்றது. இப்படி அரைகுறையான உண்மைகளை, தமது சொந்த தர்க்கத்துக்கு எடுத்து, மக்கள் விரோத புலிக்கு இசைவானதாக திரித்து புகுத்திவிடுகின்றனர். இந்த புள்ளிவிபர தர்க்கவாதத்தினை தகர்க்கும் மற்றொரு உண்மை உண்டு. அதாவது உலக நுகர்வை எடுத்தால், 20 சதவீதமானோர் உலக உற்பத்தில் 84 சதவீகிதத்தை நுகருகின்றனரே. அந்த 20 சதவீகிதம் மேற்கு நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்த புள்ளிவிபரம் புலி பொருளாதார பாலகிருஸ்ணனின் முழுவாதத்தையும், அதன் அரசியல் முடிவுகளையும் முழுமையாக தகர்த்து விடுகின்றது. ஓப்புக்கும், மக்களை ஏமாற்றவும் புள்ளிவிபரத்தை பயன்படுத்தும் போது இது நிகழத்தான் செய்யும்.


மேற்கின் நுகர்வு அவர்களின் சொந்த உற்பத்தி விகிதத்தையும் கடந்து, மற்றைய நாட்டு மக்களிடம் இருந்து அபகரித்தே நுகரப்படுகின்றது. அப்படியாயின் சந்தை என்றால் என்ன? திறந்து விடக் கோரும் சந்தை எது.? மேற்கின் அதிக உற்பத்தி அவர்களுக்கே போதாது. மற்றொரு புள்ளிவிபரம் 20 சதவீதமான மக்கள் உலக உற்பத்தியில் ஒரு சதவீகித்தையே நுகருகின்றனர். மிகுதி 60 சதவீகிதம் பேர் 15 சதவிகிதத்தையே நுகருகின்றனர். உற்பத்தி வீகிதத்தை அல்ல, நுகர்வு வீகிதத்தை அதாவது விளைவை நாம் காணவேண்டியவராக உள்ளோம். புள்ளிவிபரத்தை தமது குறுகிய நோக்கத்துக்கு புலிகள் திரித்துக் காட்டி, மேற்கத்தைய தலையீட்டின் நோக்கத்தை பூசிமெழுகி ஏகாதிபத்தியத்தையே பாதுகாப்பது நிகழ்கின்றது.


மனிதனை மனிதன் சுரண்டுவதற்காகத்தான் அனைத்தும் திரிக்கப்படுகின்றது. மேற்கின் தலையீடு இலங்கையைச் சுரண்டுவது தான். மனித உழைப்பை, தேசத்தின் வளத்தை, மக்களின் அறிவியலை சுரண்டுவது தான் அனைத்தும். அதற்காகவே உலகத்தையே அடிமைப்படுத்துகின்றனர். இந்த எல்லைக்குள் தான், இலங்கையில் தலையிடுகின்றனர். புலிகள் கூறுவது போல் மிஞ்சிப்போன பொருளை விற்பதற்காக அவர்கள் தலையிடுவதில்லை. மேற்கின் நுகர்வுக்கு அவர்களின் உற்பத்தியே போதாது. கடன், அதற்கு வட்டி அவை மூலம் ஏற்றுமதி, இப்படி பலவழிகளில் மேற்கு அதிதமாகவே மக்களிடம் பறித்து நுகருகின்றனர், புலிகளைப் போல். மனித சமூகத்தில் இல்லாமையும் ஏழ்மையும், இப்படி விதைக்கப்படுகின்றது. இதற்கு துணைபோகும் புலிகள், அதை மூடிமறைக்கின்றனர். சந்தைப் பொருளாதாரம், ஏற்றுமதி என்று புலம்புகின்றனர்.


கரிகாலன் புலம்பெயர் தமிழனுக்கு ஏற்றுமதி செய்வது பற்றி அலட்டுகின்றார். இதை உற்பத்தி செய்த மக்களுக்கு தேசிய உற்பத்தி மூலம் உணவிடுவதைப் பற்றி அல்ல, புலம் பெயர் தமிழனுக்கு ஏற்றுமதி செய்து காசு சம்பாதிப்பது பற்றி வக்கிரமாக புலிகளால் நினைக்க முடிகின்றது. அதைத் தான் அவர்கள் செய்கின்றனர். எல்லாவற்றிலும், எல்லாவுறவிலும் பணப் பேய்களாக சிந்திக்க முடிகின்றது.


புலிகள் கூறுவது போல் சந்தை என்பது மேலதிகமான மிஞ்சிய பொருளை விற்பதல்ல. தமிழ் மக்களுக்கு உணவிடுவதல்ல, புலம்பெயர் தமிழனுக்கு விற்பது தான் சந்தை. இதை கரிகாலன் உளறிக் கொட்டுகின்றார். இது தான் சந்தையின் எல்லை. உற்பத்தி என்பது சந்தை பொருளுக்கு மட்டுமாகி, மக்களுக்கு உற்பத்தி என்பது மறுக்கப்படுகின்றது. மக்களின் தேவை மறுக்கப்பட்டு, அவர்கள் பட்டினியில் வாழ்வதே தேசிய பொருளாதாரமாக காட்டப்படுகின்றது. மக்களின் தேசிய பொருளாதாரத்துக்கு பதில், புலிகள் கொண்டுள்ள பொருளாதாரக் கொள்கையும் இதுதான். மேலதிக உற்பத்தியை விற்பதாக கூறுவது, பொருளாதாரம் தெரியாத அரிவரிகளின் பணம் சம்பாதிக்கும் விளக்கமாகும்.


சந்தை என்பது தேவை மறுக்கப்பட்ட நிலையில், உற்பத்தியை தரகு வர்த்தகம் செய்யப்படும் இடமாகும். அங்கும் மனித தேவை புறக்கணிக்கப்படுகின்றது. உற்பத்தியைச் செய்பவனுக்கும், நுகர்பவனுக்கும் இடையில், புல்லுருவிகளாக உழையாது வாழும் ஒரு சமூகவிரோதக் கும்பல்கள் சுரண்டும் இடம் தான் சந்தை. சந்தை என்பது கொள்ளைக்காரர்கள் மனித உழைப்பை வைத்து, அதை சூதாடும் இடம். சந்தை என்பது உற்பத்தியாளன் நேரடியாக நுகர்பவனுக்கு விற்குமிடமில்லை. எஞ்சிக் கிடக்கும் கிராமிய சந்தைகள் கூட இதில் தத்தளிக்கின்றது. இப்படி சந்தை என்பது கொள்ளை அடிப்போரின் கூடாராமாகும். இங்கு உற்பத்தி அடிமாட்டு விலைக்கு வாங்குவதும், அதை நுகர்வோருக்கு மிக உயர்ந்த கொள்ளை விலையில் விற்கும் ஒழுக்கம் தான் வர்த்தகம்.


இரண்டாவதாக உலகமயமாதல் என்பது தரகு கும்பல் இன்றி உழைப்பை உறுஞ்சுவது. தேசிய உற்பத்தியை அழித்து, அதனிடத்தில் நேரடியாகவே உழைப்பை அபகரிப்பது. உலகமயமாதல் என்பது உற்பத்தியை, உழைப்பை உலகமயமாக்குவது. மலிவான கூலியை கொண்ட அதிக இலாபம் சம்பாதிப்பது. அதை சந்தைப்படுத்துவது. இது தனது தேச எல்லையை அடிப்படையாக கொள்வதில்லை. உதாரணமாக அமெரிக்கா தனது மேலதிக உற்பத்தியை விற்றல் என்ற புலிவாதம், உலகமயமாதலில் தவறானது. அமெரிக்கா முதலாளி அமெரிக்காவில் மட்டும் உற்பத்தி செய்வதில்லை, இலங்கையிலும் கூட உற்பத்தி செய்கின்றனர். இதைபற்றி புள்ளிவிபரக் கட்டுரை முன்பு எழுதியுள்ளேன். பார்க்க எமது இணையத்தை. பொருட்கள் அமெரிக்காவில் இருந்து மட்டும் சந்தைக்கு வருவதில்லை. அமெரிக்கா மற்றய நாட்டிலும் உற்பத்தி செய்கின்றது.


ஒரு மனிதனின் அடிப்படை தேவை மறுக்கப்படும் போது தான், சந்தையும் அதையொட்டிய வர்த்தகமும் உருவாகின்றது. உலகமயமாதலின் உயிர் என்பது, ஒரு மனிதனின் அடிப்படை வாழ்வுக்கு தேவையான கூலியையும், ஒரு மனிதன் மனிதனாக இருப்பதற்கான அடிப்படை மனித உரிமையை மறுக்கும் எல்லையில் தான் உள்ளது. இதையே உலகமயமாதல் உலகெங்கும் கோருகின்றது. மனிதன் மனிதனாக வாழ முடியாத வகையில், ஒரு பண்ணை மிருகமாக மக்களை மாற்றுவதையே அடிப்படையாக கொள்கின்றது.


மேற்கின் தலையீடுகள் என்பது மூலதனத்தின் சுரண்டல் நலன்கள் தான். இதை புரிந்து கொள்ளாமல் தேசியம்பேசுவது கடைந்தெடுத்த போக்கிரித்தனமாகும். இதையே புலிகள் செய்கின்றனர். அவர்கள் சனத்தொகை சதவீகிததுக்கு அதிகமான தமது உற்பத்தியை விற்க தலையிடுவதாக அவர்களுடன் சேர்ந்து புலுடா விடுகின்றனர்.


மேற்கின் தலையீடு என்பது ஒரு நாட்டின் தேசிய மூலப்பொருட்களை சொந்தமாக்குவதுடன், முக்கியமாக தேசிய உற்பத்தியை அந்த மக்களிடமிருந்து அழித்தலாகும். தேசிய உற்பத்திகள் மீதான தனது கட்டுப்பாட்டை பெறுதலாகும். தேசிய உற்பத்திக்கு மாறாக, மேற்கத்திய தனது உற்பத்தியை செய்வதும், அதைச் சந்தைப்படுத்துவதாகும். சந்தையை, அதன் உள்ளடகத்தை தனக்கும் தனது பொருளுக்கும் இசைவானதாக்குவதாகும். நுகர்வுக்கு வரும் பொருட்கள் அமெரிக்காவில் தான் உற்பத்தி செய்ய வேண்டும் என்பதல்ல, மாறாக இலங்கையில் அமெரிக்க முதலாளிகள் உற்பத்தி செய்து விற்கமுடியும். உதாரணம் கொக்கோகோல. தேசிய உற்பத்திகள் அழிதலாகும். இருக்கும் அரைக்காலனிய நவகானிய அமைப்பை தேவை ஏற்பட்டால் மறுகாலனியாக்குவதாகும். இப்படி தான் எமது பொருளாதார அழிகின்றது. இதற்கு புலிகள் துணைபோகின்றனர். தேசியம் பேசியபடி, தேசிய பொருளாதாரத்தை புலிகள் அழித்து வருகின்றனர்.


இப்படி துணைபோகும் புலிகள், தமிழர்கள் நாட்டில் இருந்து வெளியேறுவது பற்றி, அதிலும் அறிவித்துறையினரின் வெளியேற்றத்தை பற்றி அலட்டுகின்றனர். நாட்டைவிட்டு வெளியேற்றம் என்பது, அதுவும் அறிவுத்துறையினரின் வெளியேற்றம் என்பது, புலிகளால் தான் நிகழ்கின்றது. புலிப் பிரதேசத்தைவிட புலியல்லாத பிரதேசத்தில் வாழ்வது பாதுகாப்பானது என்ற அடிப்படையில், பத்து இலட்சம் தமிழர்கள் கொழும்பு நோக்கி புலம்பெயர்ந்துள்ளனர். புலிகள் திறந்துவிட்டால் புலிகள் மட்டுமே எஞ்சுவர் என்ற நிலை. சிறிலங்கா இராணுவ கெடுபிடியால் தான், தமிழன் புலம்பெயர்கின்றான் என்று அலட்டக்கூடாது.


புலம்பெயர் தமிழன் அனுப்பும் பணம் பேரினவாத அரசின் வெளிநாட்டு செலாவணியாகி, அவர்கள் ஆயுதம் வாங்க உதவுகின்றது என்கின்றனர். எனவே புலிக்கு அன்னியச் செலாவணி வரும் வகையில் பணத்தை சட்டவிரோதமாக உண்டியல் ஊடாக அனுப்பக் கோருகின்றனர். வடக்குகிழக்கு மக்களிடம் கொள்ளையடிக்கும் பணம் இப்படி அன்னியச் செலவாணியாகி மக்களுக்கு எதிரானதாக வீணாகின்றது. தேசத்தை, தேசியத்தை விட்டு அந்தப் பணம் கரைந்தோடுகின்றது. எம்மக்களிடம் புலிகள் அறவிடும் பணம், இப்படி ஆயுதம் வாங்க புலம்பெயர் தமிழனின் பணம் உதவுகின்றது. இப்படி பேரினவாதத்தின் பெயரில், தமிழனிடம் உண்டியல் மூலம் பணம் அனுப்ப அறை கூறவுகின்றது. மக்கள் பட்டினி கிடக்க, மக்களின் பணம் இப்படி வெள்ளமாக மேற்கு நோக்கி ஓடுகின்றது. நாட்டில் சிலர் சொகுசாக வாழும் எதிர்மறை அம்சம் இதன் மூலம் புகுகின்றது.


இப்படி பல வகையில் தமது பாசிச உள்ளடகத்தை வெளிப்படுத்துபவர்கள், உலகமயமாதல் பற்றி தமது நோக்குக்கு ஏற்ப திரிக்கின்றனர். சந்தையை திறந்துவிடல் என்பதும், உலகமயமாதல் என்பதும் பல அம்சங்களைக் கொண்டது. இதையொட்டி நான் ஐந்து பாகங்கள் கொண்ட நூலை எழுதி முடித்துள்ளேன். முதல் பாகம் விரைவில் அச்சில் வெளிவரவுள்ளது. சில கட்டுரைகள் இணையத்தில் வெளியிட்டுள்ளேன். பார்க்க.


உலகமயமாதல் என்பது புலிகள் கூறுவது போல் சந்தையை திறந்து மேலதிக உற்பத்தியை விற்பதல்ல. மேலதிக உற்பத்தி என்பதே, உற்பத்தியில் அராஜகத்தை அடிப்படையாகக் கொண்டது. மனித தேவையை கவனத்தில் எடுக்காத உற்பத்தி முறை. இதற்கு மனித தேவையை மறுத்து, ஏற்றுமதி உற்பத்தியைக் கொண்டு அராஜகம் புகுத்தப்படுகின்றது. மேற்கின் மிதமிஞ்சிய ஆடம்பரமாக நுகர்வதற்கென (உலக உற்பத்தியில் 80 சதவீகிதம்), ஏற்றுமதி பெருமெடுப்பில் நடத்தப்படுகின்றது. ஆபிரிக்காவின் சோளம் மேற்கின் ஆடுமாடுகளுக்கு உணவாகின்றது. மேற்கில் இறைச்சி உணவு இதன் மூலம் பூர்த்தியாகின்றது. ஆபிரிக்கா மக்கள் திறந்தவெளியில் பட்டினியில் செத்துப் போக, கழுகுகள் பிணங்களை உண்டு பசியாறுகின்றது. இப்படித் தான் இருக்கின்றது உலக பொருளாதாரத்தின் சுழற்சி விதி.


இப்படி பற்பல புலி அலட்டல்கள், புலி பொருளாதாரமாகின்றது. ஏகாதிபத்தியத்துக்கு இது சேவை செய்கின்றது. பேரினவாதம் புலிகளுக்கும், அங்கு வாழ்ந்த மக்களுக்கும் பொருளாதார தேவையை ப+ர்த்தி செய்த கட்டமைப்பில், புலிகள் என்ன செய்தனர். இலாபம் சம்பாதிக்கும் தரகு வர்த்தகராக, அதற்கு வரியறுவிடுபவராக செயல்பட்ட புலிகள், சொந்த உற்பத்தியை இதற்காகவே அழிப்பதில் துணைபோனார்கள். தேசிய பொருளாதாரத்தை அவர்கள் உருவாக்கவில்லை என்பதற்கு அப்பால், இருந்த மக்களின் பொருளாதார கட்டமைப்பையும் கூட அழித்தனர் என்பதே உண்மை. தரகுப்பணமும், வரிப்பணமும் புலிகளின் செல்வத்துக்கான ஆதாரமாகியது. இப்படித் தமிழ்தேசிய பொருளாதாரம் சிதைக்கப்பட்டது. இருந்த சமூக அடிப்படைக் கூறுகளும், சின்னாபின்னமாகி சிதைந்தது.


உண்மையில் தேசிய பொருளாதாரம் என்பது, அந்த மக்களின் பொருளாதார வாழ்வின் மீதான இருத்தல் சார்ந்த, ஓரு தேசிய போராட்டத்துடன் தொடர்புடையது. புலிப் போராட்டம் தேசிய பொருளாதார போராட்டமல்ல. அதாவது தேசிய மக்களின் அன்றாட வாழ்வு சார்ந்த, அவர்களின் பொருளாதார நலன் சார்ந்த போராட்டமல்ல. மாறாக குறுகிய எண்ணம் கொண்ட புலி நலன் சார்ந்த போராட்டத்துக்கு, மக்களையும் அவர்களின் வளங்களையும் பயன்படுத்துவது தான் புலிபோராட்டமாகவுள்ளது. புலிகள் தமது தமிழீழத்தில் மக்களுக்கு என்ன தான் தருவார்கள்?


வன்னியில் புலிகள் தேசிய விளையாட்டுப் போட்டியில் கொக்கோகோலாவின் மிகப் பெரிய விளம்பரத்தை வைத்து தேசிய பணத்தையே கழுவேற்றியவர்கள். தேசிய உற்பத்தியான குடிபானங்கள், கொக்கோகோலாவின் கால்களில் மிதிபட்டது. புலிகள் தமது பினாமிகள் மூலம், வடக்கின் கொக்கோகோலா ஏஜண்டானார்கள். புலிகள் அதற்கு பாதுகாப்பும் மகுடமும் சூட்டினர். இப்படி பல்துறை சார்ந்த வகையில், மக்கள் அன்றாட வாழ்வு சார்ந்த தேசிய பொருளாதாரம் புலிகளால் அழிக்கப்பட்டது.


இந்த நிலையில் இன்றைய பொருளாதார தடை கூட, மட்டுப்படுத்தப்பட்டதாகவே உள்ளது. புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் அரசு ஊழியர்களின் சம்பளக் கொடுப்பனவு வழங்க மறுக்கப்படின், நிலைமை எப்படி இருக்கும்? புலிகள் அவர்களுக்கு சம்பளம் வழங்குவார்களா? அதற்கு என்ன தேசிய பொருளாதாரத்தை வைத்துள்ளனர். இந்த இடத்தில் யாழ்ப்பாண புலம்பெயர்வின் போது, வன்னி உணவு போட்டதாக கரிகாலன் பிதற்றுகின்றார். பலாத்காரமாக புலிகள் அந்த மக்களை குடிபெயர வைத்த நிலையில், அந்த மக்களுக்கு அரசே நிவாரணம் வழங்கியது. இதேபோல் முல்லையை புலிகள் கைப்பற்றிய போது, பாதிக்கப்பட்ட மீன்பிடி கிராமத்துக்கான நிவாரணத்தையும் அரசே வழங்கியது. இதை சூசை சுனாமிக் காலத்தில் வழங்கிய பேட்டியில் ஓத்துக் கொண்டவர். ஓவ்வொரு மீனவ குடும்பத்திடமும் புலிகள் சுருட்டியது 5000 ரூபா. இது மறுபக்கம் மறைந்து கிடக்கும் கதை.


இன்று புலிகள் கூறுவது போல் பேரினவாதம் தனது பொருளாதார தடை மூலம் தமிழ் சமூகத்தை பட்டினிக்குள் தள்ளியது என்றால், சிங்கள மக்கள் தமிழ் மக்களுக்கு தமது உழைப்பில் உணவிட்டதை ஓத்துக் கொள்வதாகின்றது. சிங்கள மக்கள் தமக்கும், மற்றய மக்களுக்கும் உணவிட முடிந்தது என்றால், தமிழ் மக்களால் தமக்கு கூட இதை ஏன் செய்ய முடியவில்லை? யார் தடையாக இருக்கின்றனர் என்றால், புலிகளைத் தவிர வேறு யாருமல்ல அல்லவா!


உண்மை இப்படி இருக்க, கரிகாலன் சொல்லுகின்றார் பொருண்மிய நிறுவனம் பற்றி. இது ஒன்றும் புலிகளின் கண்டுபிடிப்பல்ல. மாறாக புலிகளால் அபகரிக்கப்பட்டது தான். வேண்டுமென்றால் நாங்கள் மக்களை ஏமாற்றி புளுகு விட பிரபாகரன் தீர்க்கதரிசனமாக அபகரித்தார் என்று சொல்லுங்கள். அது பொருந்தும்.


இப்படித் தான் அனைத்தும். தமிழ் விவசாயிகளின் பிரச்சனை என்ன? அவர்களுக்கும் தமிழ் தேசியத்துக்கும் என்ன உறவு. இந்த விடையம் தான் தேசிய உற்பத்தியுடன் நேரடியாக தொடர்புடையது. அன்றாடம் உழைத்து வாழும் ஒரு மனிதனின் வாழ்வியல் சார்ந்த பிரச்சனையை தீர்க்க முனையும் அரசியலை முன்னெடுக்காத வரை, தேசிய பொருளாதாரம் என்பது ஊரை ஏமாற்றும் சொற்பதம் தான்.


புலித் தேசியம் உழைக்கும் மக்களின் பொருளாதார வாழ்வுடன் பின்னிப்பிணைந்ததல்ல. அவர்களுக்கு எதிரானதே அனைத்தும். மக்கள் விரோத உள்ளடகத்தில் அது செயலாற்றுகின்றது. புலிகளுக்கு உள்ள சுதந்திரம், மக்களுக்கு இல்லை. ஒரு விவசாயியின் சுதந்திரத்தை புலிகள் அனுமதிப்பதில்லை. அவனின் சிந்தனையை, அவனின் செயல்பாட்டை, அவனின் துயரத்துக்கான தீர்வை புலிகள் அனுமதிப்பதில்லை. இதுவே தேசிய பொருளாதாரம் என்பதை இல்லாதொழிக்கின்றது.


கரிகாலன் புலம்புகின்றார். அவருக்கு என்ன தெரியும். பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்துக்கு பொறுப்பாளராக திடீரென வந்தவர். அதற்கு முன்னம் அவர் என்ன செய்து கொண்டிருந்தவர். எல்லாம் தலைவர் என்று வரிக்குவரி கூறிக்கொண்டு மட்டக்களப்பில் படுகொலைகளையும், முஸ்லீம் விரோத படுகொலை வக்கிரத்தையும் கொட்டிக் கொண்டிருந்தவர். யாழ் முஸ்லீங்களை வெளியேற்றுவதில் முன்னணிப் பாத்திரம் வகித்தவர். இவர் மக்கள் பொருளாதாரம் பற்றி கதைக்கின்றார் என்றால் நல்ல வேடிக்கை தான். மக்கள் என்றால் என்னவென்று தெரியாத, அசலான ஒரு பாசிட்.


கருணா விவகாரத்தில் தப்பிப்பிழைத்து நசிந்து வாழும் ஓரு முடிச்சுமாற்றி மீண்டும் அரங்கில் வருகின்றார். எதற்கும் இசைந்து வளைந்து நழுவி வாழ்கின்ற ஒரு இழிவான பாசிட். இவர் தலைவரின் பெயரில் பொருண்மிய மேம்பாட்டைப் பற்றி கூறுகின்றார் என்றால், அதுவே போலித்தனமானது. இருப்பு சார்ந்த புலம்பல். அதுவே பதவியாகின்றது.


இவர் கூறுகின்றார், இங்கு சில பொருட்களின் மிகை உற்பத்தி உண்டாம். அதை பதப்படுத்தும் தொழில் நுட்பம் கிடையாதாம். அதை புலம்பெயர் தமிழனிடம் கோருகின்றார். தொழில் நுட்ப அறிவை மேற்கில் இருந்து திருடி வரக்கோருகின்றார். நவீன உற்பத்தி வடிவங்கள் அவசியம் என்கின்றார். இதை தலைவரிடம் அவரின் தீர்க்கதரிசன சிந்தனையிடம் கேட்க வேண்டியது தானே.


ஏன் தொழில் நுட்பம் என்றால், உற்பத்தியை புலம்பெயர் தமிழனுக்கு ஏற்றுமதி செய்து காசு பண்ணமுடியுமாம். அந்த பேப்பரை தமிழ் மக்கள் தின்பார்களாம்! இதில் மேற்கத்தைய தொழில் நுட்பம், எமது மக்களின் வாழ்க்கைக்கு எந்தவகையில் பொருந்தும். புலம்பெயர் தமிழன் வாழும் நாட்டின் உற்பத்தி முறைக்கும், வடக்கு கிழக்கு மக்களின் உற்பத்தி முறைக்கும் இடையில் உள்ள பாரிய ஏற்றத்தாழ்வை பற்றி அறிவற்ற மரமண்டைகள், தமது பொருளாதாரத்தைக் கட்டி தமிழ் மக்களை பாதுகாக்க போகின்றனராம்.


நம்புங்கள் இந்த புலுடா அரசியலை. கிட்டு பாப்பாய் முதல் எத்தனை திருட்டு விதைகள், வீரிய விதைகள் எல்லாம் போட்டு காட்சிப்படுத்திய முன்னாள் உங்கள் ஓளிப்பதிவுகளை (பார்க்க ஒளிவீச்சை) சற்று மீளப்பாருங்கள். அவை எல்லாம் எங்கே? அவைக்கு என்ன நடந்தது. தமிழ் மக்களின் காதுக்கு ப+வைத்து காட்டிய, அந்த விரிய திருட்டு விதைகளின் உற்பத்தியைக் காட்டியே, அன்று தேசிய உற்பத்தி பாருங்கள் என்றனர். அன்றைய புலிப் போலி வரலாறு எங்கே போனது. மேற்கத்தைய வீரிய விதைகள் மறு உற்பத்தி செய்யாது என்பதுடன், அது மலடாக்கப்பட்டது. அத்துடன் இருக்கும் பாரம்பரிய விதை முறையையே, இயல்பாக தனது மகரந்த சேர்க்கையூடாகவே அழிக்கும் ஆற்றல் கொண்டது. இதை எல்லாம் தெரியாத அறிவு சூனியங்கள், அன்று முதல் இன்று வரை தேசிய பொருளாதாரம் பேசுவது வேடிக்கையானது, ஆனால் இந்த கேலிக் கூத்து, மனித வாழ்வு சார்ந்து அது சோகமாக விளைவைக் கொடுக்கின்றது..


கிழக்கில் கொலைத் தொழிலையும், இன விரோதத்தையும் விதைத்து அதை அறுவடை செய்து கொண்டிருந்த கரிகாலன், அதை மீண்டும் பொருளாதாரத்தில் கோருகின்றார். உழைக்கும் மக்களிடம் உள்ள வாழ்வியல் அறிவை, அது சார்ந்த தொழில் நுட்பத் திறனை, அரசியல் ரீதியாக காணமுடியாத இந்த தேசிய பொருளாதார மீட்பாளர்கள், அன்னிய தொழில்நுட்பம் என்ற கானல் கனவை காட்டி மக்களை மலடாக்கி விதைக்கின்றனர். இப்படி கையாளப்படும் வாதங்களும், உற்பத்திகளும், தொழில் நுட்பங்களும் தேசிய பொருளாதாரத்தையே அழித்துவிடும் என்ற எதிர்மறை அம்சத்தை புரிந்து கொள்ள முடியாதவர்கள், மக்களை மந்தைத் தனத்தில் நிலைநிறுத்த பிரமைகளை விதைக்கின்றனர். அறிவற்ற தமிழனின் செக்கு மாட்டுதனத்தை தனக்கு இசைவாக பயன்படுத்தி, பாசிசத்தை பொருளாதாரத்திலும் அறைகின்றனர்.

துரோகிகளைப் புரிந்து கொள்ளுங்கள்!

மேற்கு வங்கத்தைப் பாருங்கள்! துரோகிகளைப் புரிந்து கொள்ளுங்கள்!

ரலாறு படைக்கிறார் மே.வங்க போலி கம்யூனிச முதல்வர் புத்ததேவ் பாட்டாச்சார்யா. மே.வங்கத்தில் 22,500 ஏக்கர் பரப்பளவில் மிகப் பெரிய சிறப்புப் பொருளாதார மண்டலத்தை நிறுவி வரும் வரலாறு, வரலாறு கண்டிராத வகையில் மே.வங்கத்தின் அடிக்கட்டுமானத் துறையை மேம்படுத்த இந்தோனேஷிய சலீம் குழுமத்துடன் ரூ. 40,000 கோடி மதிப்பீட்டுக்கான ஒப்பந்தம் போட்டுள்ள வரலாறு, இந்தியாவிலேயே ஜப்பானிய முதலீட்டை மிக அதிகமாகப் பெற்றுள்ள மாநிலம் என்று மே.வங்கத்தை முன்னணிக்குக் கொண்டு வந்த வரலாறு, அன்னிய நேரடி முதலீட்டில் மகாராஷ்டிரா, தமிழகத்துக்கு அடுத்த மூன்றாவது இடத்துக்கு மே.வங்கத்தை இழுத்து வந்த வரலாறு, எங்கள் கொள்கைகளை 180 டிகிரிக்கு தலைகீழாக மாற்றிவிட்டோம் என்று வாக்குமூலமளித்து செயல்படுத்தி வரும் நேர்மையின் வரலாறு என புத்ததேவின் சாதனைகளைப் பட்டியல் போட்டு மாளாது. ""சிவப்பிலிருந்து செல்வச் செழிப்புமிக்க மாநிலமாக மே.வங்கத்தை புத்ததேவ் மாற்றி வருகிறார்'' என்று ஆளும் வர்க்க ஊதுகுழலான ""இந்தியா டுடே'' வார இதழே சிறப்புக் கட்டுரை வெளியிடுமளவுக்கு அவர் ஏகாதிபத்திய சேவையில் புதிய வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறார்.


இப்படி, மாநிலத்தைத் தொழில்மயமாக்குவது என்ற பெயரால் விவசாய நிலங்களை ஆக்கிரமித்து சிறப்புப் பொருளாதார மண்டலத்தை மே.வங்க அரசு நிறுவிக் கொண்டிருக்கும்போது, சி.பி.எம். கட்சியின் தலைவர்களோ, சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு எதிராக வீரவசனம் பேசுகிறார்கள். மகாராஷ்டிரா மாநிலத்தில் அமையவுள்ள சிறப்புப் பொருளாதார மண்டலத்தை எதிர்த்து நடந்த விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற சி.பி.எம். கட்சித் தலைவர்களுள் ஒருவரான எச்சூரி, விவசாயிகளின் வாழ்வைப் பறிக்கும் இத்தகைய திட்டங்களை ஒருக்காலும் அனுமதிக்க மாட்டோம் என்று சூளுரைக்கிறார்.


சிறப்புப் பொருளாதார மண்டலத்தை சி.பி.எம். கட்சி ஆதரிக்கிறதா அல்லது எதிர்க்கிறதா என்று புரியாமல் அக்கட்சி அணிகளே குழம்பிப் போனார்கள். ஒருவழியாக, சி.பி.எம். கட்சியின் பொதுச்செயலாளரான பிரகாஷ் காரத் தமது கட்சியின் "புரட்சிகர' நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி விட்டார். ""சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை; ஆனால், கண்மூடித்தனமாக விவசாய நிலங்களை ஆக்கிரமித்து இத்தகைய மண்டலங்களை அமைக்கக் கூடாது. இதனால் விவசாயமும் விவசாயிகளும் பாதிக்கப்படுகிறார்கள். மேலும், ஆலை அமைப்பதற்கும், அடிக்கட்டுமான தேவைகளுக்கும் எவ்வளவு நிலம் தேவையோ அதை வரையறுத்து அதற்கேற்ப நிலங்களைக் கையகப்படுத்த வேண்டும். தொழிற்சாலை அல்லாமல் வீட்டு மனைக்காக நிலங்களை ஆக்கிரமிப்பதை எதிர்க்கிறோம்'' என்கிறார் காரத்.


""கையகப்படுத்தப்படும் நிலங்களில் 50% இடத்தை தொழிற்சாலைக்கும் 25% இடத்தை அடிக்கட்டுமானத் தேவைக்கும் 25% இடத்தை இதர தேவைகளுக்கும் என வரையறுத்து உரிய சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும்; முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு வரைமுறையின்றி வரிச்சலுகைகள் அளிப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். நிலத்திலிருந்து வெளியேற்றப்படும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணமும் மறுவாழ்வும் தரப்பட வேண்டும்'' என மனிதமுகம் கொண்ட சிறப்புப் பொருளாதரா மண்டலத்தை நிறுவவேண்டும் என்றும் இல்லையேல் போராடுவோம் என்றும் விளக்குகிறார் காரத். மே.வங்கத்தில் நிறுவப்படும் இத்தகைய மண்டலங்களை முன்மாதிரியாகக் கொண்டு மைய அரசும் பிற மாநில அரசுகளும் செயல்பட வேண்டும் என்றும் உபதேசிக்கிறார்.


முன்மாதிரியாகச் சித்தரிக்கப்படும் மே.வங்க சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் யோக்கியதை என்ன? சலீம் குழுமத்தின் ஆலைகள் மற்றும் அடிக்கட்டுமான தேவைகளுக்காக, விவசாய நிலங்களை மே.வங்க அரசு பறிமுதல் செய்து வருகிறது. ஹூக்ளி மாவட்டத்தில் சங்கூர் அருகே நிறுவப்படவுள்ள டாடா கார் தொழிற்சாலைக்காக இருபோகம் சாகுபடியாகும் நஞ்சை நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதால், அங்கு விவசாயிகள் போராடி வருகிறார்கள். அரசியல் ஆதாயம் கருதி எதிர்க்கட்சியான திரிணாமுல் காங்கிரசு, மே.வங்க அரசின் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியதும், அக்கட்சித் தலைவியான மமதாபானர்ஜியை "இடதுசாரி' அரசு கைது செய்தது. இதைக் கண்டித்து அக்கட்சி சாலைமறியல் தர்ணா போராட்டம் நடத்த, அதற்கு சோனியாவின் காங்கிரசு ஆதரவு தெரிவிக்கிறது.


மே.வங்க "இடதுசாரி' அரசோ, ""கையகப்படுத்தப்படும் நிலங்கள் ஒருபோக சாகுபடி செய்யப்படும் மானாவாரி நிலங்கள்தாம். பெரும்பான்மையான விவசாயிகள் நிலத்தை விற்கச் சம்மதித்த பிறகே கையகப்படுத்தியுள்ளோம். இந்நிலங்களுக்கு உரிய விலையும் நிவாரணமும் அளித்துள்ளோம்'' என்று நியாயவாதம் பேசுகிறது.

இப்படித்தான் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும் மாநிலங்களின் ஆட்சியாளர்கள் அனைவரும் விளக்கமளித்து வருகிறார்கள். அரசியல் ஆதாயத்துக்காக எதிர்க்கட்சிகள் விவசாயிகளைத் தூண்டிவிட்டு தேவையற்ற போராட்டம் நடத்துவதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். கடைசியில், தங்கள் ஆட்சி செய்யும் மாநிலத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலம் உள்ளிட்டு அனைத்து மறுகாலனியாதிக்கக் கொள்கைகளையும் தீவிரமாகச் செயல்படுத்தி நியாயப்படுத்துவது; எதிர்கட்சியாக உள்ள மாநிலங்களில் இத்தகைய மண்டலங்கள் கொள்கைகளுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தி சவடால் அடிப்பது என்பதே அனைத்து ஓட்டுக் கட்சிகளின் எழுதப்படாத கொள்கையாகிவிட்டது. இக்கொள்கையை போலி கம்யூனிஸ்டுகள் செங்கொடி ஏந்தி நடைமுறைப்படுத்துகிறார்கள் என்பதுதான் ஒரே வித்தியாசம்.


பச்சையப்பன்