தமிழ் அரங்கம்

Saturday, December 9, 2006

நாகரிக பொறுக்கிகளால் விளையும் விபரீதங்கள்

தாராளமயம் பெற்றெடுத்த நாகரிக பொறுக்கிகளால் விளையும் விபரீதங்கள்

வர்கள் அனைவரும் சாலைப் பணியாளர்கள். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவிலிருந்து சொந்த மண்ணையும், வீடுவாசலையும் விட்டு பிழைப்புத் தேடி மராட்டியத்தின் மும்பைப் பெருநகருக்கு விரட்டப்பட்டவர்கள். மும்பை நகரின் செல்வச் சீமான்களின் சொகுசுக் கார்கள் வழுக்கிச் செல்லும் நெடுஞ்சாலைகள் அமைப்பதுதான் அவர்களின் வேலை. ஆனால், அந்தச் சாலையிலேயே, அத்தகை சொகுசுக் கார்களில் ஒன்றாலேயே தாம் நசுக்கிக் கொல்லப்படுவோம் என்று கொஞ்சமும் எண்ணிப் பார்த்திருக்க மாட்டார்கள்!


முன்னிரவில் கொதிக்கும் தாரோடு கலந்த கருங்கல் ""ஜல்லி''களோடு கைகால் வெந்து நெக்குறுகிப் போயிருந்தார்கள். அதன்பிறகு வாட்டி எடுக்கும் கடுங்குளிரில், வெட்டவெளியில் அதே சாலையோரத்தில் அடித்துப் போட்ட மனிதர்களாய் துவண்டு கிடந்தார்கள். அது மும்பை பெருநகரின் பாந்த்ரா பகுதி; கார்ட்டர் சாலை. அதிகாலை 3.45 மணி. பேய்கள்தாம் களிவெறியாட்டம் முடித்து உறங்கப் போகும் நேரம். திடீரென்று பாய்ந்து வந்த ""டொயோட்டோ கோரல்லா'' என்ற சொகுசுக்கார் அவர்கள் மீது ஏறி ஓடியது. ஐந்து வயதுச் சிறுவன், ஏழு வயதுச் சிறுமி, மூன்று பெண்கள், இரண்டு ஆண்களை நசுக்கிக் கொன்றது. மேலும் பதினான்கு பேரை சாவின் விளம்பிற்குத் தள்ளியது.


காரை ஓட்டியவர் உட்பட காரிலிருந்த ஆறு பேரும் 18 முதல் 21 வயதேயாகியவர்கள், எல்லோரும் குடிபோதையில் மிதந்தார்கள். போதை இறங்கிவிட்டால் மேலும் ஏற்றிக் கொள்ள சீமைச் சாராயப் புட்டிகளும் காரில் கிடந்தன. அவர்கள் அனைவரும் மும்பையில் செல்வச் சீமான் வீட்டுக் குலக்கொழுந்துகள். பெற்றோர்களின் தொழில் நிர்வாகிகள் அல்லது மேட்டுக்குடிக் கல்லூரி மாணவர்கள்.


இந்தக் கொலைகாரர்கள் எல்லாம், மும்பையின் முதன்மையான நட்சத்திர விடுதியான தாஜ் ஓட்டலில், வயிறு முட்டக் குடித்தும், தின்றும், ஆட்டம் பாட்டம் என்று கும்மாளமிட்டு விட்டுத் திரும்பியிருக்கிறார்கள். இவர்கள் குடித்துக் கூத்தடித்துக் கொண்டிருந்த அந்த நள்ளிரவிலும், இந்தத் தொழிலாளர்கள் சாலை போட்டுக் கொண்டிருந்தார்கள். அதிகாலை இரண்டு மணிக்குத்தான் பணி முடித்துக் களைப்பாற்றத் தூங்கப் போனார்கள். இந்தக் கோரமான முடிவைச் சந்தித்தார்கள். இந்தக் களிவெறித் தாக்குதலில் இருந்து தப்பிப் பிழைத்த அவர்களின் உறவினர்கள் மொழி அறியாத அந்த இடத்தில் கதறி அழும் காட்சி நெஞ்சை அறுக்கும் துயரம்மிக்கதாகவே இருந்தது.


அந்த ஏழைஎளிய உழைப்பாளிகளின் உயிர்கள் அற்பமாக மதித்துப் பறிக்கப்பட்டதைப் போலவே, கொலைகாரர்களுக்கான தண்டனையும் அற்பமாகவே இருக்கப் போகிறது. மும்பைபாந்த்ரா சாலைத் தொழிலாளர்களுக்கெதிரான இந்தக் கோரமான கொலைக்குற்றம், குடித்துவிட்டு மோட்டார் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்குரிய அலட்சியத்தால் இழைக்கப்படும் குற்றமாகக் கருதித் தண்டிக்கும் குற்றப்பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, இந்தியத் தண்டனைச் சட்டம் 304(அ) அலட்சியம் காரணமாக மரணம் விளைவிக்கும் குற்றம் இதன்படி குற்றவாளி பிணையில் வந்துவிடமுடியும்; அதிகபட்சம் தண்டனை இரண்டு ஆண்டு சிறையும், அபராதமும் விதிக்கப்படும்.


ஆனால், நடந்திருப்பது ஒரு கொலைக்குற்றம். தாழ்த்தப்பட்ட மக்களை சாதிவெறியர்கள் படுகொலை செய்வதற்கு சாதி ஆதிக்கவெறி அடிப்படையாக இருப்பதைப் போல, ஏழை எளிய மக்களைக் கிள்ளுக்கீரையாக எண்ணி மிகவும் அலட்சியமாகப் பலியிடுவதற்கு அடிப்படையாக, செல்வமிகு மேட்டுக்குடித் திமிர்த்தனம் இருக்கிறது. ஆண்டைகள் தமது செல்லப்பிராணிகளுக்கு அடிமைகளை இரையாக்கி, அதைக் கண்டு மகிழ்வதைப் போன்ற வக்கிரம் இந்த மேட்டுக்குடித் திமிர்த்தனத்தில் வெளிப்படுகிறது.


இதுவொன்றும் வழக்கம் போல குடித்துவிட்டு மோட்டார் வாகனங்களை ஓட்டும் அலட்சியம் அல்ல; தனி ஒரு சம்பவமும் அல்ல. மும்பை மட்டுமல்ல, பிற பெருநகரங்களிலும் இத்தகைய கிரிமினல் குற்றங்களில் மேட்டுக்குடிசெல்வச்சீமான்களின் குலக் கொழுந்துகள் ஈடுபடுவது ஒரு பொதுப்போக்காகவே இப்போது வளர்ந்து வருகிறது. இந்த ஆண்டு துவக்கத்தில் ஸ்டாண்டார்டு வங்கியின் உயர் அதிகாரி நீல் சட்டர்ஜி மும்பையின் பிரபாதேவி பகுதியில் ரமாகாந்த் தூரி என்ற காவலாளியை கார் ஏற்றிக் கொன்றார். இதே பாந்த்ரா பகுதியில் இந்தி நடிகர் ராஜ்குமாரின் மகன் புரு ராஜ் குமார் நடைபாதை மக்கள் மீது கார் ஏற்றிப் பலரைப் படுகாயமுறச் செய்துவிட்டு, வெறும் அபராதத்தோடு தப்பித்துக் கொண்டார்.


இந்தியக் கடற்படை தலைமைத் தளபதி எஸ்.எம். நந்தாவின் பேரனும், கடற்படை தளபதி சுரேஷ் நந்தாவின் மகனும் கிரௌன் கார்ப்பரேசன் கம்பெனியின் ஆயுதங்கள் விற்பனைத் தலைமை அதிகாரியுமான சஞ்சீவ் நந்தா, தனது பி.எம்.டபிள்யூ என்ற சொகுசுக்காரை ஏற்றி ஆறு பேரைக் கொன்றுவிட்டு, தண்டனையின்றித் தப்பித்துக் கொண்டார். கடந்த ஆண்டு, பிரபல கட்டாவ் துணி ஆலை முதலாளி மகேந்திரா கட்டாவின் மகன் மணிஷ் கட்டாவ் மும்பையின் பிரதான சாலையான மரைன் டிரைவில் நின்றிருந்த ஜிதேந்திரா ரோகடே என்ற போலீசுக்காரரை காரேற்றிக் கொன்றுவிட்டு, தண்டனையின்றி விடுதலை செய்யப்பட்டார்.


மும்பை சிவசேனாத் தலைவர் பால்தாக்கரேயின் உதவியாளர் ரவீந்திர மகத்ரே காரேற்றி இரண்டு பேரைக் கொன்று இரண்டு பேரைப் படுகாயமுறச் செய்தார். பிரபல இந்தி நடிகர் சல்மான்கான், தனது டயோட்டா சொகுசுக் காரை தலைத்தெறிக்க ஓட்டி சென்று ரொட்டிக் கடையின் முன்பு உறங்கிக் கொண்டிருந்த ஒருவரைக் கொன்றும் நான்கு பேரைப் படுகாயமுறவும் செய்தார்.


இத்தகைய குற்றங்கள் தொடர்வதற்குக் காரணமென்ன? எப்படிப்பட்டவர்கள் இத்தகைய குற்றங்களைச் செய்கின்றனர். தங்குதடையற்ற கொண்டாட்டமும் பரபரப்பான வாழ்க்கையும் இலக்காகக் கொண்டவர்கள்; கத்தை கத்தையாக பணக் கட்டுகளும், கடன் அட்டைகளும், மின்னணுக் கைச் சாதனங்களும், பேய்த்தனமாகப் பாய்ந்து செல்லும் விலையுயர்ந்த மோட்டார் வாகனங்களுமாகப் பெருநகர சாலைகளிலும், நட்சத்திர நடன விடுதிகளிலும் திரிபவர்கள்; தான்தோன்றித்தனமான கேளிக்கைகளிலும் கனவுகளிலும் மிதப்பவர்கள்; சுருக்கமாகச் சொன்னால், தாராளமயம்உலகமயம் பெற்றெடுத்த செல்வச்சீமான்களின் கொழுப்பேறிய செல்லப் பிள்ளைகள்; அதாவது, நவநாகரீகப் பொறுக்கிகள்.


இந்த ""இளைஞர்கள் போதிய பணம் வைத்திருக்கிறார்கள்; அந்தப் பணபலமே தமது அதிகார உரிமை என்று அவர்கள் கருதுகிறார்கள். வெறித்தனம், அதிகாரம், போதை மற்றும் கிறுக்குத்தனமான ஆணவம் திமிர்த்தனம் ஆகியவை ஒரு கொடிய உயிர்க் கொல்லி ஆயுதமாக அமையும் உலகமயமாக்கம் கூட இம்மாதிரியான நடத்தைகளுக்கு ஒரு காரணமாக அமைகிறது'' என்கிறார் மும்பையின் பிரபல மான மனநல மருத்துவர் ஹரீஷ் ஷெட்டி.


இத்தகைய நச்சுப் பண்பாடு, மும்பை மட்டுமல்ல, தில்லி, சென்னை, பெங்களூர், ஐதராபாத் என்று நாட்டின் பெருநகரங்களிலெல்லாம் தொற்று நோயாகப் பரவி வருகிறது. சென்னை மாமல்லபுரம் கிழக்குக் கடற்கரைச் சாலையின் இருபுறமும் புற்றீசல்களாய் புறப்பட்டுள்ள சொகுசு மாளிகைகளில் சனிக்கிழமை பின்னிரவு வரை குடித்துக் கும்மாளமிட்டு, கூத்தடித்துவிட்டு பாய்ந்து செல்லும் கார்களை ஓட்டிவரும் மேட்டுக்குடி புதுநாகரிகப் பொறுக்கிகளால் ஏற்படும் ""விபத்துகள்'' அங்கே வாழும் மக்களைப் பீதியடைச் செய்து வருகின்றன. இந்தச் சாலையில் நடக்கும் சாவுகள் மட்டும், சென்னையின் பிற பகுதிகளில் நடப்பவைகளைவிட அதிகமென்று விவரங்கள் தெரிவிக்கின்றன.


இதற்குக் காரணமானவர்கள் வழக்கமாக நாம் காணும் பரம்பரை பணக்கார வீட்டுச் செல்லப் பிள்ளைகள் அல்ல. கடந்த 15 ஆண்டுகளாக அடுத்தடுத்துவந்த ஆட்சியாளர்கள் பின்பற்றிய தாராளமயம் தனியார்மயம் உலகமயம் என்ற புதிய பொருளாதாரக் கொள்கை காரணமாகப் பெய்த டாலர் மழையில் நனைந்த புதுப்பணக்காரர்கள். குறிப்பாக கணினி தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதைச் சார்ந்த தொழில்களில் அதன் உண்மை மதிப்புக்குமேல் பன்மடங்கு வரும் வருவாயினால் ஊதிப் பெருத்துப்போன செல்வத்தில் மிதிப்பவர்கள்தான் கண்மண் தெரியாமல் தறிகெட்டு ஆட்டம் போடுகிறார்கள்.


சில நாட்களுக்கு முன் குடிவெறியில் காரை ஓட்டிச் சென்ற ஒருவர் சாலைத்தடுப்புக் கம்பிகள் மீது மோதி மாண்டார். அதனால், குடிபோதையில் கார் ஓட்டுபவர்களைப் பிடிப்பதற்காக போலீசார் சோதனைகளில் ஈடுபட்டபோது, நள்ளிரவுக்குப் பின்னரும் குடித்துக் கும்மாளமிட்டுவிட்டு இளம் ஜோடிகள் கார்களில் பறப்பதைக் கண்டனர். இதைத் தொடர்ந்து சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் விதிகளை மீறி நடத்தப்படும் சில ""பார்கள்'' மற்றும் நடன அரங்குகள் மீது திடீர் சோதனைகள் நடத்தப்பட்டன. நட்சத்திர விடுதிகளில் நள்ளிரவுக்குப் பிறகும் சீமைச் சாராயம் பரிமாறப்படுவதும், இளம்ஜோடிகள் குடிவெறியில் விளக்குகள் அணைக்கப்பட்டும், மங்கிய ஒளியிலும், வரைமுறைகள் இல்லாமல் ஆபாசமாக நடனமாடுவதும் நடப்பதைக் கண்டார்கள்.


சோதனையிட வந்த போலீசாரைக் கண்டதும், பலர், ஏற்கெனவே "புக்' செய்திருந்த தமது அறைகளில் பதுங்கிவிட்டனர். மேலும் பலர் பின்புறவழியாகத் தப்பி ஓடினர். போலீசார் வந்ததும் போதையில் ஆடிக் கொண்டிருந்தவர்களைப் பிடித்து விசாரித்த போது அவர்கள் ""நல்ல வேலையில் உள்ளவர்கள்; நல்ல குடும்பப் பின்னணி உள்ளவர்கள்'' என்று தெரிந்ததால் அவர்களின் ""எதிர்கால நலன்களை கருதி எச்சரித்து அனுப்பப்பட்டனர்'' என்கிறார்கள், போலீசார். ஆனால், விதிகளை மீறியும் அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு மேலும் பார்களையும் நடன அரங்குகளையும் நடத்தியதற்காக விடுதி ஊழியர்கள் 17 பேர் மட்டும் கைது செய்யப்பட்டனர்.


""சென்னையில் தெருவுக்குத் தெரு கம்ப்யூட்டர் நிறுவனங்கள் பெருகி வருகின்றன. இவற்றில் நான்கைந்து ஷிப்டுகளில் வேலை நடக்கிறது. நள்ளிரவில் "ஷிப்டு' முடிந்து செல்பவர்களைக் கவர்வதற்காகவே ஒட்டல்களில் பார்கள் நள்ளிரவைத் தாண்டியும் திறந்து வைக்கப்படுகின்றன. கம்ப்யூட்டர் நிறுவனங்களுக்கு தங்கள் மகன், மகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோர், வேலை முடித்து அவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் வீட்டுக்கு வருகிறார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும். நள்ளிரவில் வெகுநேரம் குடித்துவிட்டு அதிகாலையில் வீடு திரும்புபவர்கள் வேகமாக கார் ஓட்டிச் செல்கின்றனர். இதனால், நிறைய விபத்துக்கள் நடக்கின்றன என்பதையும் பெற்றோர் உணரவேண்டும்'' என்கிறார், ஒரு போலீசு அதிகாரி.


என்னவொரு அக்கறை! என்னவொரு பொறுப்பு! எல்லோரும் ""நல்ல வேலையில் இருப்பவர்கள், நல்ல குடும்பப் பின்னணி உள்ளவர்கள்'' அல்லவா, அதுதான்! ஆனால், பிடிபட்ட பெண்களோ, ""நாங்கள் எவன்கூடப் போனால் இவர்களுக்கென்ன?'' என்று கொழுப்புக் கொப்பளிக்கக் கேட்கிறார்கள். தாங்கள் அவ்வளவாகக் குடித்திருக்கவில்லை என்றும் குடிபோதையில் இருந்த 15,16 வயதுப் பெண்களை மட்டும் தப்பிப் போகவிட்டார்கள்; (மைனர் பெண்கள் ஆதலால் வழக்கும் குற்றமும் கடுமையாகக் கருதப்படும் என்பதால் போலீசின் கரிசனம் நிரம்பி வழிந்திருக்கிறது போலும்!) அடையாள அட்டைகளைக் காட்டியபோதும் காக்க வைத்து பெற்றோரை அழைத்து எச்சரித்துவிட்டுத்தான் வெளியே விட்டார்கள்'' என்று குறைபட்டுக் கொண்டார்கள்.


இரவு நேரங்களில் இப்படிக் குடித்துக் கூத்தடிப்பது ஒன்றும் தவறில்லை; ஒளிவுமறைவானதுமில்லை, கூச்சத்துக்குரியதுமில்லை, தகுந்த அடையாளத்தைக் காட்டி பகிரங்கமாகவே இப்படிச் செய்வதில் தயக்கமில்லை என்று அவற்றில் ஈடுபட்டவர்கள் காட்டிக் கொள்கிறார்கள். இப்படிச் செய்வது தங்கள் உரிமை என்றும் வாதிடுகிறார்கள். அதை மறுக்காத போலீசுக்காரர்களும் நடன அரங்கின் புகையும் சூழலும்தான் நல்லதில்லை என்று கூறி அவர்களைச் சமாதானப்படுத்த முயன்றிருக்கிறார்கள்.


போலீசார் மேற்கொண்ட நடவடிக்கை முஷ்டியை மடக்கி மிரட்டுவதாகும் என்று ஐதீகமான ""இந்து'' நாளேடு சித்தரிக்கிறது. பெண்களை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்துக்குக் கொண்டு போய் ஒருமணிநேரம் காத்திருக்கச் செய்தது பயபீதியூட்டுவதாகும் என்று பொருமுகிறது அந்த நாளேடு. கூடவே, இம்மாதிரியான ஆட்டங்களில் பாடுவதைத் தொழிலாகக் கொண்ட ஒருவரைப் பேட்டி கண்டு, ""இப்படிக் கட்டுப்பெட்டித்தனமாக இருக்கக் கூடாது, மின்னணு இசையை இரசிக்கும் புதிய போக்கை வளர்ப்பதற்காக இன்னும் தாராளமாக நடந்து கொள்ள வேண்டும்'' என்று எழுதியது அந்த நாளேடு.


அடுத்தநாளே கூடிய தென்னிந்திய ஓட்டல்கள் உணவகங்களின் உரிமையாளர் சங்கம், ""அந்நிய விமான சேவைகள், அந்நிய நேரடி முதலீட்டாளர்கள், அந்நிய சுற்றுலாப் பயணிகள் ஆகியவர்களுக்காக அரசு தனது கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும். குடிக்கவும், ஆடவுமான நேரத்தை அதிகரிக்க வேண்டும். தகவல் தொழில் நுட்பம், அது சார்ந்த சேவை நிறுவனங்கள், கணினிவெளி வேலைகளுக்கான நிறுவனங்கள், கால்சென்டர்கள் போன்றவை பெருகிவரும் சென்னையில் இரவு வாழ்க்கை பற்றித் தெளிவான கொள்கையை அரசு வகுக்க வேண்டும்'' என்று கோரியுள்ளனர்.


""இரவு வாழ்க்கை'' என்பது மேலே குறிப்பிடப்பட்ட தொழில்களின் நீட்டிப்பாகவும், புதிய பண்பாடாகவும் அந்நிய, உள்நாட்டுக் கூட்டுப்பங்குத் தொழில் கழகங்களால் திட்டமிட்டு வளர்க்கப்படுகின்றது என்பது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது. தமது பணியாளர்களின் இரவு வாழ்க்கைக்காக இந்தக் கூட்டுப்பங்குத் தொழில் கழகங்கள், தாமே கூடுதல் சம்பளம், சுற்றுப் பயணங்கள் வசதிகள் மற்றும் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்கின்றன. ""என்.ஐ.ஐ.டி.'' மற்றும் ""விப்ரோ'' ஆகிய இரண்டு கணினி மென்பொருள் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்கள் சேர்ந்து ""தேதி வைத்து'' உல்லாசமாகக் கழிப்பதற்கு சிறப்புப் படி (டேட்டிங் அலவன்ஸ்) வழங்குகின்றன. இதனால் தனது மணவாழ்க்கை சிதைவதாக ""விப்ரோ'' நிறுவனப் பணியாளர் ஒருவரின் மனைவி வழக்குத் தொடுத்துள்ளார்.


தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற இந்த மறுகாலனியாக்கம் நமது நாட்டுப் பொருளாதாரத்தை மட்டுமல்ல, நமது நாட்டின் பண்பாட்டையும், குடும்பங்களை மட்டுமல்ல, ஏழை எளிய மக்களின் வாழ்வையும், உயிரையும் பறிக்கும் விபரீதங்களாக உருவெடுத்து வருகிறது என்பதையே இவை காட்டுகின்றன.

· ஆர்.கே.


Monday, December 4, 2006

அன்னிய தலையீடு எதார்த்தமாகின்றது

அன்னிய தலையீடு எதார்த்தமாகின்றது

பி.இரயாகரன்
03.12.2006

இலங்கையில் நடைபெறும் நிகழ்ச்சிகள் ஒரு அன்னிய தலையீட்டை நோக்கி வேகமாக முன்னேறுகின்றது. ஒரு தேசத்தின் இறைமை மேலும் இழிந்து போவதை இது துரிதமாக்கும். இனப்பிரச்சனை இருப்பதை மறுப்பவர்களும், இருப்பதை ஏற்றுக்கொண்டு ஒரு அரசியல் தீர்வுக்கு வரமறுப்பவர்கள் என, இரு தரப்பினரினதும் செயற்பாடுகள் தான், அன்னிய தலையீட்டுக்கான உந்துவிசையாக உள்ளது. இலங்கை மக்கள் மேலான புதிய ஒரு ஒடுக்குமுறையுடன் கூடிய அன்னீய தலையீட்டுக்கு, இவை கால் கோளாகின்றது.

இந்த அன்னிய தலையீடு இனப்பிரச்சனை உண்டு என்பதை ஏற்றுக்கொண்டு, அதற்கு ஒரு தீர்வையும் உடனடியாக கோருகின்றது. அதேநேரம் இதன் அடிப்படையில் சமாதானம் அல்ல. இராணுவ வழிகளில் புலியை அழிப்பதையும் அடிப்படையாகக் கொண்ட உள்ளடகத்தில் தான் நடைபெறுகின்றது. இதில் இருந்து புலிகள் தப்பிப் பிழைக்க முடியாது. இந்த நிலைமையே இலங்கை தொடர்பான இன்றைய சர்வதேச நிகழ்ச்சியாக, ஒரு அழுத்தமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

புலிகள் இன்றைய வடிவில் தொடர்ந்தும் இருக்கமுடியாது. புலியின் அழிவு அரசியல் மற்றும் இராணுவ வழிகளில், தீர்க்கமானதாக மாறுகின்றது. மக்களில் இருந்து அன்னியமான மக்கள் விரோத புலிச் செயற்பாடுகளே அவர்களை அழித்துவிடும். அதாவது அன்னிய தலையீட்டுக்கு முன்னால் முற்றாக அவர்களை துடைத்தெறிந்துவிடும்.

பொதுவான இன்றைய இந்த நிலைமையை மாற்றி அமைக்க கூடிய நிலையில் மக்கள் இல்லை. மக்கள் தமது சொந்த தலையீட்டை நடத்தக் கூடிய எந்த ஒரு அரசியல் செயற்பாடும் இன்று கிடையாது. மக்களுக்கு எதிரான மக்கள் விரோத செய்லபாட்டுக் களமே வீங்கி வெம்புகின்றது. இந்த நிலையில் மக்கள் இந்த யுத்த அவலத்தில் இருந்து தப்பிப் பிழைக்க, அன்னீய தலையீட்டை ஆதரிக்கின்ற ஒரு கருத்து நிலையையே, அவர்கள் மாற்றுத் தீர்வாக கருதுகின்றனர். இதை திட்டமிட்டு அன்னிய சக்திகள் தமது எடுபிடிகள் மூலம் உருவாக்கியும் வருகின்றனர்.

புலித் தலைவர் புலம்பிக் காட்டும் பேரினவாதம்

புலித் தலைவர் பிரபாகரன் தனது 'மாவீரர்" செய்தியில், பேரினவாதத்தின் கடந்தகால நிகழ்கால போக்கை பற்றி குறிப்பிடுகின்றார். இலங்கை வரலாற்றில் இதை மீள மீள சொல்லி அரசியல் செய்கின்ற தொடர்ச்சியில், இது மறுபடியம் சொல்லப்படுகின்றது. இதை இன்று மீளச் சொல்வதன் மூலம் நிலைமையை விளக்கிவிட முடியாது.

பேரினவாதத்தின் கடந்தகால நிகழ்கால போக்கை தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் நன்கு அறிவர். ஏன் புலிகள் தமது எதிரியாக கருதும், அரசுடன் உள்ள கூலிக் குழுக்களும் இதை நன்கு அறிவர். சிங்கள பேரினவாதிகளும் கூட இதை கொள்கை அளவில் ஒத்துக்கொள்கின்றனர். புலித் தலைவர் அதை மீளச் சொல்லுகின்றார் என்றால், இது புலிகளின் அரசியல் அனாதையாகிய வங்குரோத்தின் மொத்த விளைவாகும்.
நேர்மையாக மக்களுக்கு சொல்லக் கூடிய எந்தச் செய்தியும் புலிகளிடம் கிடையாது. ஒரு அரசியல் பேச்சு வார்த்தையை வெற்றிகரமாக நடத்தமுடியாத நிலையில், பேரினவாதத்தை பழையபாணியில் மீள ஓப்புவித்து ஒப்பு பாடவேண்டிய நிலை உருவாகின்றது. அமைதி சமாதானம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றிய, கடந்த ஜந்து வருடத்தில் பேரினவாதம் பேரினவாதமாகவே இருக்க, அதை நடைமுறையில் அம்பலப்படுத்த முடியாத நிலை புலிக்கு உருவானது.

பேரினவாதிகள் தமிழ் மக்களுக்கு பிரச்சனை உண்டு, அது தீர்க்கப்பட வேண்டும் என்று கூறிய படி, அதை தீர்க்காமலேயே புலிகளை முழுமையாக தனிமைப்படுத்தி அம்பலப்படுத்தியுள்ளனர். வெற்றிகரமான இந்த பேரினவாதத்தின் வெற்றிக்கு முழுப்பொறுப்பும் புலிகளைச் சாரும். நிரந்தரமான ஒரு சமாதான தீர்வை கோருவதில் இருந்தும் புலிகள் தனிமைப்பட்டுள்ள நிலையில், பேரினவாதம் புலிக்கு வெளியில் தீர்வை வைக்கவுள்ளது. அவர்கள் முன்வைக்கும் இந்த தீர்வு மூலம், புலிகளை தனிமைப்படுத்தும் அடுத்தகட்ட நகர்வை நோக்கி பேரினவாதம் வேகமாக வெற்றிகரமாக நகருகின்றது.

இப்படி புலிகள் குறுகிக் கூனி வருகின்றனர். புலிகளோ பேச்சுவார்த்தை என்ற பெயரில், தனது பாசிச மாபியாத்தனத்தில் கவனத்தை குவித்து, அதற்குள் தான் அனைத்தையும் மையப்படுத்தினர். 1995 இல் சந்திரிகா அரசு நிரந்தர தீர்வு பற்றி பேசக் கோரிய போதும், புலிகள் அன்று முதல் அதை நிராகரித்தே வந்தனர். இப்படி தமது பாசிச மாபியாத்தனத்தை பேச்சுவார்த்தை மேசையில் வைத்து, அதில் இருந்து தனிமைப்பட்ட நிலையில் கடந்தகாலம் பற்றி மீளப் புலம்பவது புலிகளின் வரலாறாகும். ஒரு இனப்பிரச்சனை உண்டு என்பதை சொல்லளவில் வைத்துக்கொண்டு, பாசிச மாபியாத்தனத்தை பேரப் பொருளாக்கிய போது, பேரினவாதத்துக்கு அவை சாதகமான அரசியல் அம்சமாகியது.

மக்கள் இயல்பாக வெறுத்து ஒதுக்கும் பாசிச மாபியாத்தனத்தை ஆதாரமாகக் கொண்டு, புலிகளை தமிழ் மக்கள் மத்தியில் இருந்து பேரினவாதம் அன்னியப்படுத்தினர். தமிழ் மக்களுக்கும் புலிக்கும் உள்ள உறவில், இந்த பாசிச மாபியாத்தனம் தீர்க்கமான ஒரு முரண்பாட்டை நிரந்தரமாகிவிட்டது. தமிழ் மக்களின் முன் புலிகள் நீட்டியுள்ள துப்பாக்கிகள், மக்களை உறைநிலையில் ஜடமாக்கிய போதும், உணர்வு ரீதியாக புலிக்கு எதிரான ஒரு மாற்றை மக்கள் எதிர்பார்த்து காத்து கிடக்கின்றனர். இந்த நிலையை பேரினவாதம் புலியைக் கொண்டே வெற்றிகரமாக தயாரித்துவிட்டது. இவை புகைந்து கொண்டு இருக்கின்றது. இவை புலிகளையே எரிக்கும் ஒரு காட்டுத் தீயாக, மற்றொரு பிற்போக்கின் பின்னால் மக்கள் சென்றுவிடும் உணர்வுள்ள உறை நிலையிலும், நிலைமை கனன்று கொண்டு இருக்கின்றது.
இதை இன்று தடுப்பது இனபிரச்சனைக்கான ஒரு தீர்வு தான்.

இனப்பிரச்சனைக்கு பேரினவாதம் தீர்வு வைப்பதன் மூலம், சர்வதேசம் வரையிலான எதிர்வினை உண்டு. இந்த தயாரிப்பையே பேரினவாதம் செய்கின்றது. இந்த வகையில் அடுத்த கட்டத்தை நோக்கி புலிகள் இன்றி நிரந்தரமான தீர்வை வைக்க முனைகின்றது. நிரந்தரமான அரசியல் தீர்வுக்கு எதிரான புலிகளின், வாலை இதன் மூலம் ஓட்ட நறுக்கவுள்ளது. நிரந்தர தீர்வு தமிழ் மக்களின் பிரச்சனையை தீhப்பதற்காக அல்ல, புலியை இல்லாது ஒழிப்பதற்காகும். அதற்கு தீர்வு தான் நெம்புகோல். இந்த நெம்புகோலை பேரினவாதத்துக்கு எதிராக பயன்படுத்தவும் முடியும். ஆனால் அதை புலிகள் நிரந்தரமாக பேரினவாத அரசிடம் தாரைவார்த்து விட்டு முன்னால்: நின்ற தீர்வை நோக்கி நகர்வதை தடுத்து நிறுத்த தமது முதுகை முன் நிறுத்துகின்றனர்.

புலிக்கும் அரசுக்கும் இடையில் அரசியல் பிரச்சனை என்ற வகையில், இன முரண்பாடு மையமானது. இந்த விடையத்தை பற்றி பேசாத, பேச மறுக்கின்ற பேச்சுவார்த்தையையே வலிந்து புலிகள் இட்டுச்சென்றனர். இதற்குள் தான் அனைவரினதும் எதிர்கால அரசியலும் தீர்மானமாகின்றது. யார் இந்த பிரச்சனையை நேர்மையாக தீர்க்க முனைகின்றனரோ, அவர்கள் வெற்றிகரமான பேச்சுவார்த்தையை நடத்த முடியும். இதை புலிகள் எப்போதும் மறுத்து வந்ததுடன், இதற்கு நேர்ரெதிரான நிலையில் மக்களின் முதுகில் குத்தி பிழைக்க முனைகின்றனர். பேரினவாதம் புலிகளைப் பயன்படுத்தி, புலியின் கோரிக்கைக்குள் தன்னை நிலைப்படுத்தி, இதில் இருந்து சாதாரணமான மக்கள் முன் அம்பலமாகாது விலகி நிற்கின்றது. புலிகளின் பாசிச மாபியாக் கோரிக்கையைக் கொண்டே, அவாகளை தமிழ் மக்கள் மத்தியில் இருந்து அம்பலமாக்குகின்றனர்.

புலிகள் இதில் இருந்து தப்ப யுத்தத்தை நோக்கி ஓடுகின்றனர். இந்த நிலையிலும், இன்றும் இந்த பேரினவாதம் அம்பலப்படாத வகையில் தொடர்ந்து இருப்பது தான் அதன் சூக்குமம். இதற்கான முழுப்பொறுப்பும் புலிகளைச் சாரும். ஒரு யுத்தத்தின் நியாயத்தன்மை என்பது, நாம் நியாயமாக நடப்பதில் தங்கியுள்ளது. நியாயமற்ற வகையில் நாம் நடந்து கொண்ட, ஒரு நியாயமான யுத்தத்தின் அவசியத்தை வலியுறுத்த முடியாது.

ஒரு யுத்தத்தின் நியாயத்தை யுத்த பிரதேசத்தில் வாழும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எதிராக யுத்தம் செய்பவன் பக்கத்தில் உள்ள மக்கள், தம் பக்கத்தில் யுத்தத்தின் நியாயமற்ற தன்மையை இனம் கண்டு அதற்கு எதிராக இருக்க வேண்டும். இதில் எதையும் புலியால் ஏற்படுத்த முடியாது.

தமிழ்மக்கள் அமைதியான ஒரு நிரந்தரமான தீர்வை நோக்கிய சமாதானம் என்பதே அவர்களின் மையமான கோரிக்கை. இதை புலிகள் தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றனர். இதைப் பேசவே மறுக்கின்றனர். பேரினவாதத்தை பேசி அம்பலப்படுத்த முடியாத வரை, அது பேரினவாதத்துக்கு தொடர்ச்சியாகவே சாதகமானது. புலிகள் இன்றி ஒரு நிரந்தர தீர்வை அரசு நிறை செய்ய முனைவதன் மூலம், தமிழ் மக்களின் பிரச்சனையில் தீர்க்கமான ஒரு அரசியல் அதிரடி மாற்றத்தை உருவாக்க முனைகின்றது. இதை அரசு வெற்றிகரமாக வைத்தால், புலியின் அழிவு நிர்ணயமாவது தொடங்கிவிடும்.

எந்தத் தீர்வையும் இணங்க வைக்கும் புலிகள்

இதை பேரினவாதம் செய்கின்றனரா? புலிகள் செய்கின்றனரா? புலிகளைச் சார்ந்து நின்று பேரினவாதம் செய்கின்றது என்பதே உண்மை. பேரினவாதிகள் அனைவரும் தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தோ, அல்லது தீர்வை முன்வைத்தோ அரசியல் செய்தது கிடையாது. கட்சி மற்றும் அரசியல் செயற்பாட்டில் இதை செய்யத் தவறுகின்ற போது, தமது கட்சிக் கொள்கையில் இதை முன்வைக்காத போது, அவர்கள் அனைவரும் பேரினவாதிகள் தான். இது எதார்த்தமான உண்மை.

புலிகள் ஒரு பாசிச மாபியா இயக்கமாக இருக்கின்றார்கள் என்பதால், இது பொய்யாகிவிடாது. புலிகள் சுயநலம் கொண்ட மக்கள் விரோதிகள் என்பதால் பேரினவாதம் அற்றதாகிவிடாது. பேரினவாதம் தனது கட்சி திட்டங்களில், தமிழ் மக்களின் பிரச்சனைக்குரிய ஒரு தீர்வை முன்வைப்பதில்லை. ஆனால் இனவாத திட்டத்தை கட்சியில் வைத்து, அதை அரசியலாகவே செய்து வருகின்றனர். இந்த வகையில் கடந்த 60 வருட வரலாற்றில் அமைதி மற்றும் யுத்தகாலத்திலும் எந்த தீர்வையும் அவர்கள் நேர்மையாக முன்வைத்தது கிடையாது.

இந்த உண்மையை புரிந்துகொண்ட எம் சமூகத்தின் முன், புலித்தலைவர் மீண்டும் அதை ஓப்புக்கு புலம்பி, அ, ஆ அரிவரிப் பாடம் என்று தொடங்குவது வேடிக்கையானது. துப்பாக்கி மேல் சயனித்து கிடந்த அவர், இப்ப தான் அரசியல் படிக்கின்றாரோ தெரியவில்லை. உண்மையில் இதை தலையில் தூக்கி அப்பிக் வைத்து கொண்டாடும் போது, தமிழ்மக்களின் அரசியலற்ற அறிவற்ற மலட்டுத் தன்மையை இது பறைசாற்றுகின்றது. மறுபக்கத்தில் தமிழ் மக்களுக்கு இதை நினைவூட்ட வேண்டிய துப்பாக்கியமான நிலையில், தமிழ் மக்கள் வேறு ஒரு உலகத்திலா வாழ்கின்றனர்!.

இப்படி நாம் சொல்வதால் தமிழ் மக்களுக்கு இந்த உண்மை தெரியாது என்பதல்ல. தெரிந்து என்னதான் செய்வது. அதற்காக புலிகளின் பின்னால் ஒடிவிடவும் மாட்டார்கள். புலிகள் ஒரு மக்கள் இயக்கமாக இருந்தால், புலிக்கு உள்ள அதே ஜனநாயகம் மக்களுக்கும் இருக்க வேண்டும். மக்கள் எதைப்பற்றியும் சுதந்திரமாக விவாதிக்க, பங்கேற்க, தலையிட, மறுக்க உரிமை இருக்கவேண்டும். அது தான் மக்கள் இயக்கம்.

இந்த வகையிலும் புலிகள் ஒரு மக்கள் இயக்கமல்ல என்ற வகையில், புலிகளின் துப்பாக்கி முன்னிலையில் மக்களை மந்தைகளாக வைத்துக் கொண்டு, மந்தைக்கு உபதேசம் செய்வதால் மந்தைகள் புலிகளாகிவிடாது. மந்தை மந்தைக் குணத்துடன், அங்குமிங்கும் மந்தையாகத்தான் மேயும்.
புலிகளின் பாசிச மாபியா நிலை தான், மக்களை இந்த நிலைக்கு தள்ளியது. இந்த மக்கள், யுத்த சூழலில் யுத்தத்தில் இருந்து, தன்னை முற்றாக ஒதுக்கியே வாழ்கின்றனர். எப்படியும் இதில் இருந்து மீளவே முனைகின்றனர். புலிகள் பலவந்தமாக தம் பின்னால் கொண்டு செல்ல முயன்றாலும் சரி, இராணுவம் தன்னை சார்ந்து வாழக் கோரினாலும் சரி, மக்கள் தம் பாட்டில் தம் பிரச்சனையுடன் இருக்கவே முனைகின்றனர். உதாரணமாக வடக்கில் அன்றாடம் நடக்கும் இன்றைய கொலைகளில் 90 சதவீதமானவை இராணுவமே செய்கின்றது. அன்றைய கொலைகளில் 99 சதவீதமானவை புலிகள் செய்தனர்.

மக்களை பொறுத்த வரையில் இதை இட்டு அச்சமோ, பீதியோ கிடையாது. மக்கள் இன்று கொல்லப்படுவர்களை புலிகளாக புலி ஆதரவாளராகவே கருதுகின்றனர். துரதிஸ்டவசமான உண்மை என்ற போதும், மக்களின் நிலை இப்படித்தான் உள்ளது. எனக்கு புலியுடன் தொடர்பு இல்லை என்றால், எனக்கு பிரச்சனையில்லை என்ற வகையில், மக்கள் இதை எதிர் கொள்கின்றனர்.
இதே நிலைதான் புலிகள் புலியல்லாதவரை கொன்ற போதும் நிலவியது. இன்று வரை கொல்லுபவன் மாறுகின்ற போது மக்கள் மனநிலையில் மாற்றமில்லை. இந்த மக்கள் தமது பாட்டில் தமது வேலையாக உள்ளனர். இந்த மக்கள் எந்தத் தீர்வையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு உட்பட்டுள்ளனர்.

தீர்வும் அன்னிய தலையீடும்

சர்வதேச சமூகத்தின் தீவிர தலையீடு, தமிழ் மக்களுக்கான தீர்வுடன் அரங்கேறும். நிரந்தர தீர்வை பேசவோ ஏற்கவோ மறுக்கும் புலிக்கு எதிராகவே, அது அரங்கேறும். புலிகள் நிரந்தர தீர்வை பேச மறுக்கின்ற நிலையில், அரசின் ஒரு தலைப்பட்சமான தீர்வை அன்னிய சக்திகள் உடனடியாக கோருகின்றது.

அரசின் தீர்வு அன்னிய தலையீட்டின் நிர்ப்பந்தத்துடன் தான் உருவாகின்றது. இலங்கை அரசு அதை விரும்பி முன்வைக்கவில்லை. இந்தியா உள்ளிட அனைத்து மேற்கத்தைய நாடுகளும், உடனடியாக அரசின் ஒருதலைப்பட்சமான தீர்வை மையப்படுத்தி கடுமையான முடிவுகளை எடுக்கின்றது. கடந்தகால அன்னியர்களின் முயற்சிகளின் அனைத்துத் தொடர்ச்சியான தோல்வியின் பின்னுள்ள சூக்குமம், தீர்வுடன் தொடர்புடையதாகவே உள்ளது.

புலிகள் பயங்கரவாத இயக்கமாக தடை செய்த நிலையில், அதை அமுல்படுத்தாத ஒரு நெகிழ்ச்சிப் போக்கை கையாள்விலும் இந்த தீர்வு தான் தடையாகவுள்ளது. தமிழ் மக்கள் வேறு, புலிகள் வேறு என்று அன்னிய சக்திகள் பகிரங்கமாக அரசுக்கு கூறத் தொடங்கியுள்ளது. தமிழ் மக்களையும் புலியையும் நிரந்தரமாக பிரிக்கின்ற வகையில், தீர்வு தான் தீர்க்கமாக பங்காற்றும். இதை ஏகாதிபத்தியம் தெளிவாக தெளிவுபடுத்துகின்றது.
இந்த வகையில் தான் தீர்வு நோக்கி பேரினவாத கட்சிகளின் இணைப்பை சர்வதேச சக்திகள் உருவாக்கின. இந்த வகையில் சர்வதேச ரீதியாக தொடர்ச்சியான பல நிர்பந்தத்தை ஏற்படுத்துகின்றது. பேரினவாதத்துக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள், தீர்மானங்கள் அனைத்தும் இதற்குள் உள்ளடங்கியதே.

பேரினவாதம் உலகமயமாதல் அமைப்பில் ஒரு அங்கம் என்ற வகையில், அவர்களால் இந்த தீர்வு அரங்கில் விரைவில் வெளிக் கொண்டு வரவுள்ளது. அது புலிகள் அல்லாத வகையில் முன்வைக்கப்படும் போது, புலிகளின் எதிர்காலம் முடிவுக்கு வரும்.

இந்த வகையில் புலிகள் அல்லாத தரப்பு உற்சாகம் ஊட்டப்படுகின்றது. ஆனந்தசங்கரி போன்ற மக்கள் விரோதப் பொறுக்கிகளை ஊக்குவிக்க அதை விரிவாக்க பணப் பரிசுகள் அள்ளி வழங்கப்படுகின்றது. மக்களுக்கு எதிராக எங்கும் ஒரு வலைப்பின்னல் கட்டமைக்கப்படுகின்றது.

தன்னார்வக் குழுக்கள் மிக வேகமாக பெரும் பணத்துடன் செயற்படுகின்றன. யுத்தத்தை எதிராக நிறுத்தி, மதவாத கிறிஸ்துவ பிரிவுகள் தீவிர பிரச்சாரத்தை செய்கின்றன. எங்கும் எதிலும் ஒரு இறுக்கமான முடிவை நோக்கி நிலைமை நகருகின்றது.

மக்களின் உரிமைகளை மறுத்து, புலிகளின் பாசிச மாபியாத்தனத்தை சாதகமாக கொண்டு அனைத்தும் அரங்கேறுகின்றன. இந்த நிலைமையை நாம் புரிந்து எதிர்வினையாற்ற வேண்டிய காலத்தில் நாம் வாழ்கின்றோம்.

www.tamilcircle.net