தமிழ் அரங்கம்

Saturday, March 31, 2007

பறிபோகும் விளைநிலங்கள்

பஞ்சாப்:

பறிபோகும் விளைநிலங்கள்
பரிதவிக்கும் விவசாயிகள்



""நேற்று வரை நாங்கள் விவசாயிகள்; இன்று எங்கள் நிலம் பறிக்கப்பட்டுச் சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்டு விட்டோம். நிலம்தான் எங்கள் தாய்! எங்கள் தாயைப் பறித்து, எங்களை அனாதைகளாக்கிப் பட்டினியில் தள்ளி விட்டுள்ளார்கள்'' என்று குமுறுகிறார், பல்தேவ் சிங் என்ற விவசாயி. இவர் பஞ்சாப் மாநிலத்தின் பர்னாலா மாவட்டத்தைச் சேர்ந்த நடுத்தர விவசாயி.



பர்னாலா மாவட்டம் படேகர் சன்னா கிராமத்தில் விளைநிலங்களை ஆக்கிரமித்து, பஞ்சாப் மாநில அரசு 300 ஏக்கர் பரப்பளவில் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை நிறுவியுள்ளது. இங்கு டிரிடெண்ட் என்ற நிறுவனம் தகவல்தொழில்நுட்பப் பூங்காவை நிறுவி வருகிறது. தங்கள் வாழ்வுரிமையைப் பறிக்க வந்துள்ள இச்சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு எதிராகக் கடந்த இரு மாதங்களாக இவ்வட்டார விவசாயிகள் போராடி வருகின்றனர். அரசாங்கம் தரும் நிவாரணத் தொகையை ஏற்க மறுத்து, ""எங்களுக்கு நிவாரணம் வேண்டாம்; நிலம்தான் வேண்டும்'' என்று போராடி வரும் விவசாயிகள் கடந்த ஜனவரி 31ஆம் தேதியன்று டிரிடெண்ட் நிறுவனத்தின் கட்டுமானப் பணிகளைத் தடுத்து நிறுத்தி, அதன் சுற்றுச் சுவரை உடைத்தெறிந்தனர்.



இதைக் கண்டு ஆத்திரமடைந்த பஞ்சாப் ஆட்சியாளர்கள், விவசாயிகளின் போராட்டத்தை மாநிலத்தின் தொழில் வளர்ச்சியைத் தடுக்கும் வன்முறைச் செயல் என்று குற்றம் சாட்டியதோடு, டிரிடெண்ட் நிறுவனத்தின் கட்டுமானப் பணிகளைப் பாதுகாக்க அச்சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் போலீசைக் குவித்து அச்சுறுத்தினர். அதைத் துச்சமாக மதித்து கடந்த பிப்ரவரி 2ஆம் நாளன்று மீண்டும் விவசாயிகள் போராடத் தொடங்கியதும், தடியடித் தாக்குதல் நடத்திய போலீசு, துப்பாக்கிச் சூடு நடத்திப் பலரைப் படுகாயப்படுத்தியது. ""அங்கு சிதறிக் கிடக்கும் காலணிகளும், இரத்தம் தோய்ந்த டர்பன் (தலைப்பாகை)களும் ஜாலியன்வாலாபாக்கை நினைவுபடுத்துகிறது'' என்று முதலாளித்துவப் பத்திரிகைகளே குறிப்பிடுமளவுக்கு போலீசு வெறியாட்டம் போட்டுள்ளது.



பர்னாலா மாவட்டம் மட்டுமல்ல; பொற்கோயில் அமைந்துள்ள அமிர்தசரஸ் அருகே முப்போகம் விளையும் பூமியும் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்காகப் பறிக்கப்படவுள்ளது. தரகுப் பெருமுதலாளித்துவ நிறுவனமான சஹாரா குழுமம் தொழில் தொடங்க, ஏறத்தாழ 1200 ஏக்கர் நிலத்தைப் பறிக்கப் போவதாக பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. நிலத்தைக் கையகப்படுத்த அரசு அதிகாரிகள் வந்தபோது, ஜீத்தாகலன் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தி கைதாகியுள்ளனர். பரம்பரை பரம்பரையாக இங்கு விவசாயம் செய்துவந்த விவசாயிகள் தங்கள் கண்ணெதிரே விளைநிலங்கள் பறிக்கப்படுவதைக் கண்டு விக்கித்து நிற்கின்றனர்.



பஞ்சாப், ஐந்து நதிகள் பாயும் வளமான பூமி; பசுமையான வயல்வெளிகள்; அறுவடைக் காலத்தில் தங்க நிறத்தில் தகதகக்கும் கோதுமைக் களஞ்சியம். இருப்பினும், தாராளமயமாக்கலைத் தொடர்ந்து வளம் கொழிக்கும் இம்மாநிலம் படிப்படியாக நசியத் தொடங்கியது. உணவு தானியக் கொள்முதலை அரசு கைகழுவியதாலும், உரம்பூச்சி மருந்து முதலான இடுபொருட்களின் விலை உயர்வாலும், தாராளமயத்தால் அன்னிய கோதுமை இறக்குமதி காரணமாக விலை வீழ்ச்சியாலும் பஞ்சாப் விவசாயிகள் போண்டியாகி நிற்கிறார்கள். வேறுவழியின்றி பன்னாட்டு ஏகபோக விவசாய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, ஒப்பந்த முறையில் விவசாயம் செய்தவர்களும் அந்நிறுவனங்களால் வஞ்சிக்கப்பட்டு திவாலாகிக் கிடக்கிறார்கள்.



ஆந்திரா, கர்நாடகாவைத் தொடர்ந்து இப்போது வளம் கொழிக்கும் பஞ்சாபிலும் விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் அதிகரித்து வருகிறது. மான்சாண்டோவின் ""பி.டி.'' எனப்படும் மலட்டு பருத்தி விதைகளால் நட்டப்பட்டும், உற்பத்திச் செலவுக்கேற்ற விலை கிடைக்காமல் கடன்பட்டும் சங்ரூர், மான்சா, படிண்டா மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பருத்தி விவசாயிகள் நொடித்துப் போயுள்ளனர். ""ஆர்த்தியா'' எனப்படும் கந்துவட்டிக்காரர்களிடம் சிக்கிக் கொண்டு கடன் சுமையிலிருந்து மீள வழி தெரியாமல் பல பருத்தி விவசாயிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டு மாண்டு போகின்றனர். சங்ரூர் மாவட்டத்திலுள்ள கல்பஞ்சரா கிராமத்தில் மட்டும் கடந்த நான்கு மாதங்களில் எட்டு விவசாயிகள் கடன்சுமை தாளாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அரசே ஒப்புக் கொள்கிறது. இருப்பினும், இதர மாநிலங்களைப் போலவே, மாண்டுபோன விவசாயிகளுக்கு பஞ்சாப் அரசு இன்று வரை நிவாரணம் கூட அளிக்க மறுக்கிறது.



""ஒரு காலத்தில் பருத்தி எடுக்க இராஜஸ்தானிலிருந்து கூலி விவசாயிகள் திரள் திரளாக இங்கு வருவார்கள்.பருத்தியை ஏற்றிச் செல்ல எங்கள் வட்டாரத்தில் லாரிகள் வந்து குவியும். இன்று எல்லாமே தலைகீழாகி விட்டது. பருத்திக்காக லாரியோ டிராக்டரோ இங்கு வருவதில்லை. பிழைப்பைத் தேடி நாங்கள் இராஜஸ்தான் மாநிலத்திற்கு கூலி வேலை தேடி ஓடிக் கொண்டிருக்கிறோம்'' என்று பருத்தி விவசாயிகளின் அவலத்தை விளக்குகிறார் கல்பஞ்சரா கிராமத்தைச் சேர்ந்த அமர்சிங்.



தாராளமயம் தோற்றுவித்த பயங்கரம் பஞ்சாப் மாநிலமெங்கும் தலைவிரித்தாடும் சூழலில், இப்போது விவசாயிகளின் தலையில் இடியென இறங்கியுள்ளன, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள். பஞ்சாபில் தற்போது 12 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கான அறிவிப்பு செய்யப்பட்டு, விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாண்டு இறுதிக்குள் 20க்கும் மேற்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவ முயற்சித்து வருவதாக அம்மாநில முதல்வர் அம்ரிந்தர் சிங் அறிவித்துள்ளார். ""எதிர்க்கட்சிகள் விவசாயிகளைத் தூண்டிவிட்டு கலகம் செய்ய முயற்சிக்கின்றனர். நான் முதல்வராக உள்ளவரை கறாராகச் சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்து மாநிலத்தைத் தொழில்மயமாக்கியே தீருவேன்'' என்று திமிராகக் கொக்கரிக்கிறார் அவர். அடுத்தடுத்து சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், சண்டிகரிலிருந்து அமிர்தசரஸ் வரையிலான வீதியெங்கும் விவசாயிகள் திரண்டு அடுத்து என்ன செய்வது என்று கவலையோடு விவாதிக்கின்றனர்.



சண்டிகரைச் சுற்றியுள்ள கிராமங்களின் வீடுகளில் இப்போது புதிய எண்கள் குறியிடப்பட்டுள்ளன. ""1.6, 1.4, 0.7'' என்றெல்லாம் குறியிடப்பட்டுள்ள இந்த எண்கள், புதிய கதவிலக்க எண்கள் அல்ல. சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்காக அரசாங்கம் கையகப்படுத்தும் விவசாய நிலங்களுக்கான நிவாரணத் தொகையை (இலட்ச ரூபாய் கணக்கில்) அந்தந்த விவசாயிகளின் வீட்டுக் கதவுகளில் உள்ளாட்சி நிர்வாகம் எழுதி வைத்துள்ளது. லாட்டரி சீட்டில் பரிசு கிடைத்தவனைப் பார்த்து மற்றவர்களும் போட்டி போட்டுக் கொண்டு லாட்டரி சீட்டை வாங்கி ஏமாறுவதைப் போல, அரசாங்கம் செய்யும் இந்த மோசடியைப் புரிந்து கொள்ளாமல், பல விவசாயிகள் தாங்களும் நிலத்தை விற்கக் கிளம்புகின்றனர். அரசாங்கமோ, சுயவிருப்பத்துடன் விவசாயிகள் தங்கள் நிலங்களை விற்பதாக மாய்மாலம் செய்கிறது.



சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக விவசாய நிலங்களை ஆக்கிரமிக்கக் கூடாது என்கிறது மத்திய வர்த்தக அமைச்சகம். பஞ்சாபிலோ முப்போகம் விளையும் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. இது சட்டவிரோதமாயிற்றே என்று கேட்டால், ""நாங்கள் நிலங்களை ஆக்கிரமிக்கவில்லை; விவசாயிகள் சுயவிருப்பத்துடன் நிலங்களை விற்கிறார்கள்; நாங்கள் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவி வருகிறோம்'' என்கிறார் பஞ்சாப் முதல்வர்.



தரிசு நிலங்களில்தான் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் நிறுவப்படும் என்ற வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டு, ஒரு போகம் சாகுபடியாகும் நிலங்களிலும் நிறுவலாம் என்று மாறி, பின்னர் இரு போகம் சாகுபடியாகும் நிலங்களில் 10% வரை கையகப்படுத்தலாம் என்று தீர்மானிக்கப்பட்டு, இப்போது முப்போகம் விளையும் பூமியையும் கொல்லைப்புற வழியாக ஆக்கிரமிக்க எல்லா ஏற்பாடுகளையும் கைக்கூலி ஆட்சியாளர்கள் செய்து வருகின்றனர். இதற்காகவே காலனிய ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட, 1894ஆம் ஆண்டின் நிலக் கையகப்படுத்தும் சட்டம் புதிய பெயரில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இச்சட்டப்படி, ""பொதுப் பயன்பாட்டுக்கு'' என்ற பெயரில் நில உரிமையாளரின் ஒப்புதலின்றி எந்த நிலத்தையும் மாநில அரசு கையகப்படுத்தலாம். இதை எதிர்த்து வழக்கு தொடரக்கூட முடியாது. மே.வங்க போலி கம்யூனிஸ்டு ஆட்சியிலிருந்து காங்கிரசு, பா.ஜ.க. ஆட்சி வரை எல்லா மாநில அரசுகளும் இச்சட்டத்தைக் கையிலேந்தி விவசாயிகளை நாடோடிகளாக்கி விட்டு விளைநிலங்களை ஆக்கிரமித்து வருகின்றன.



இவையெல்லாம் தரகுப் பெருமுதலாளிகள் பன்னாட்டு முதலாளிகளின் பகற்கொள்ளைக்கான ஏற்பாடுகள் என்பது மட்டுமல்ல; ஏழை நாடுகளின் பெயரளவிலான சுயசார்பையும் ஒழித்து, உணவுச் சந்தையைக் கைப்பற்றிக் கொண்டு ஆதிக்கம் செய்யத் துடிக்கும் ஏகாதிபத்திய மறுகாலனியாதிக்கச் சதியின் ஓர் அங்கம்தான் இவை. ""உணவு உற்பத்தியைக் குறை; மானியங்களை நிறுத்து; ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து "மலிவான' விலையில் உணவு தானியங்களை இறக்குமதி செய்!'' என்று உத்தரவிடுகிறது, உலக வர்த்தகக் கழகம். இதனடிப்படையில் மானியக் குறைப்பு, ரேசன் உணவுப் பொருட்களின் விலையேற்றம், அரசு கொள்முதல் நிறுத்தம், ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து உணவு தானிய இறக்குமதி என அடுத்தடுத்து தாக்குதல்களை ஆட்சியாளர்கள் கட்டவிழ்த்து விட்டனர். இப்போது அதைத் தீவிரப்படுத்தும் வகையில், விளைநிலங்களை ஆக்கிரமித்து சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவி வருகின்றனர்.



ஒரிசாவின் கலிங்கா நகர். மே.வங்கத்தின் சிங்கூர் நந்திகிராமம், மகாராஷ்டிராவின் ராய்காட், உ.பி.யின் தாத்ரி, தமிழகத்தின் ஓசூர், பஞ்சாபின் பர்னாலா எனத் தொடரும் விவசாயிகளின் போராட்டங்கள் வெறும் நிலத்திற்காகவும் கூடுதல் நிவாரணத்திற்காகவும் நடக்கும் போராட்டங்கள் அல்ல; இவை மறுகாலனியாதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தின் ஓர் அங்கம்.



இவற்றை ஒருங்கிணைத்து மறுகாலனிய ஆக்கிரமிப்புக்கு எதிரான விடுதலைப் போரை நடத்த வேண்டியுள்ளது. நாடும் மக்களும் இன்னுமொரு பகத்சிங்கையும், கட்டபொம்மனையும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

· குமார்



Friday, March 30, 2007

அத்துமீறி நுழைந்து ஆவணங்கள் திருட்டு

உயிர்நிழல் ஆசிரியரின் இருப்பிடத்தினுள் அத்துமீறி நுழைந்து ஆவணங்கள் திருட்டு

க்ஸில் வெளியீட்டகத்தின் வெளியீடாக காலாண்டிதழாக வெளிவந்து கொண்டிருக்கும் 'உயிர்நிழல்' சஞ்சிகையின் ஆசிரியர்களில் ஒருவரான லக்ஷ்மியின் வீட்டில் 'விடுதலை'ப் புலிகள் திருடர்களாகப் புகுந்து வீட்டைச் சூறையாடி அங்குள்ள ஆவணங்களைக் கொண்டு சென்றிருக்கிறார்கள். இந்த முக்கியமான ஆவணங்களில் ஐரோப்பா தழுவி நடைபெறும் இலக்கியச் சந்திப்புத் தொடர்களின் பதிவுகளும் அடங்கும்.


மாற்றுக் கருத்து அல்லது 'ஒற்றை'க் கருத்தற்று வேறு கருத்துகள் சொல்வதைக் கேட்பதிலோ அல்லது அவை பரவலாகிச் செல்வதிலோ தாங்கள் உடன்பாடற்றவர்கள் என்பதில் இவர்கள் என்பதில் இவர்களிற்கு என்றைக்குமே மாற்றுக் கருத்து இருந்ததில்லை.


1990ம் ஆண்டின் இறுதிப் பகுதியில், மறைந்த மலையக எழுத்தாளர் என். எஸ். எம். இராமையா அவர்களுக்கு அஞ்சலிக் கூட்டம் ஒன்று பாரிஸில் மாற்றுக் கருத்தாளர்கள் அல்லது மறுத்தோடிகளால் நடத்தப்பட்டபோது அங்கு உளவு பார்ப்பதற்காக 'விடுதலை'ப் புலிகளின் பிரதிநிதிகள் வந்திருந்தார்கள். ஏனெனில் இந்த மறுத்தோடிகள் அஞ்சலி செலுத்துகிறார்கள் என்பதால் இது தங்களால் 'போடப்பட்ட' ஒரு துரோகிக்கான அஞ்சலிக் கூட்டமாயிருக்கலாமோவென்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகத்தான்.


இப்படித்தான் ரஜனி திரணகம விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டு ஓராண்டின் பின்னர் ஒரு கூட்டத்தை அவர் நினைவாக இந்த மறுத்தோடிகள் ஒழுங்குபடுத்தியிருந்த பொழுது, கூட்டம் ஆரம்பித்து சில மணிகளிலேயே அங்கிருந்த பேச்சாளரையும், கூட்டத்தில் இருந்தவர்களையும் நீங்கள் என்ன பேச வேண்டும் என்பதை நாங்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்ற பாணியிலும் மக்கள் 'வேறு' கருத்துக்களைக் கேட்டால் குழம்பி விடுவார்கள் என்னும் தோரணையிலும் நடந்து கொண்டார்கள். 'நீங்கள் மக்களைக் குழப்புகின்றீர்கள். இதை நாங்கள் அனுமதிக்க முடியாது' என்னும் ரீதியில் அவர்களின் வெளிப்பாடுகள் இருந்தன. அவர்கள் ஆவேசப்பட்டுக் கருத்துத் தெரிவிக்கும்போது புகைப்படம் பிடித்ததனால் அவ்விடத்திலேயே புகைப்படக்கருவி பறிக்கப்பட்டு அதனுள்ளிருந்த பிலிம் சுருள் அவர்களால் அவ்விடத்திலேயே அபகரிக்கப்பட்டது. புகைப்படம் என்றால் என்ன, ஆவணம் என்றால் என்ன என்பதை அவர்கள் தெளிவாகவே அறிந்திருந்தார்கள்.


இந்தரீதியில், இந்த மறுத்தோடிகள் நடத்தும் சந்திப்புகளிலும் கலந்துரையாடலிலும் இவர்கள் வந்து கலவரம் செய்ததனால், ஏற்கனவே ஏற்பட்ட அனுபவங்களில் இருந்து இந்த மறுத்தோடிகளின் ஒரு பகுதியினரால் 1992ம் ஆண்டு பாரிஸில் முதல்முதலாக நடத்தப்பட்ட இலக்கியச் சந்திப்புக்கு இவர்களின் வருகைக்கு அனுமதியளிக்கப் பின்நின்றது. மாற்றுக் கருத்துக்களை அனுமதிப்பதென்பதும் அடாவடித்தனங்களை அனுமதிப்பதென்பதும் வௌ;வேறானவை என்பதை இவ்விடத்தில் அழுத்தமாகக் கவனிக்க வேண்டும். பின்பு சில இடைத் தரகர்களினால் இலக்கியச் சந்திப்பு அமைப்பாளர்களிடம் அனுமதி கேட்டும், தாங்கள் சந்திப்பில் வந்து எந்தக் குழப்பங்களும் செய்யமாட்டோம் என்ற உறுதிமொழியின் பின்னரும் அவர்களிற்கு அனுமதி வழங்கப்பட்டது. அவர்கள் இந்த இலக்கியச் சந்திப்பில் தந்த உறுதிமொழியைக் காப்பாற்றினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


'பள்ளம்' சஞ்சிகையை வெளியிட்டுக் கொண்டிருந்த ஆசிரியர்களில் ஒருவரான கலைச்செல்வனை 1990ம் ஆண்டு மே மாதம் 20ம் திகதி என் கண்முன்னாலேயே என் இருப்பிடத்தில் இருந்து சில குண்டாந் தடியர்கள் கடத்திச் சென்று ஏறத்தாழ 10 மணித்தியாலங்கள் தொடர்ச்சியான சித்திரவதைக்குப் பின், பொலிஸ் முறைப்பாடு தீவிரமாகி இருக்கின்றதென்ற செய்தியை அறிந்து கொண்டு, அந்தி மயங்கும் மாலை வேளையில் ஒரு சாலையோரத்தில் கொண்டு வந்து வீசி எறிந்து விட்டுப் போனார்கள். அதன் பின்னர் பள்ளம் சஞ்சிகை நிற்பாட்டப்பட்டது. புகலிடத்திலும் அச்சத்தில் உயிர் வாழ்தல் என்பது என்னவென்று புரிய வைத்தல் முடியாதது. சித்திரவதையின் பின்னிருந்த மரண ஓலம் என்னுள் ஊடுருவி அதிர்ந்தொலித்ததை இன்றும் என்னால் உணர முடிகின்றது.


ஒரு உயிரைக் கொய்தலின் கொடுமை அல்லது மரணம் துரத்தும் அவலத்தைத் தெரிந்தபடி வாழ்தல் என்பதன் கொடூரத்தை கையில் ஆயுதங்களை மட்டுமே வைத்துக் கொண்டு அதுவே கோட்பாடாகக் கொண்டவர்களால் என்றைக்குமே புரிந்து கொள்ளப்பட முடியாதது.


1994ம் ஆண்டு மே மாதம் 1ம் திகதி அன்று தோழர் சபாலிங்கம் அவருடைய வீட்டில் வைத்துப் பட்டப் பகலில் வேட்டு வைத்துத் தீர்க்கப்பட்டதென்பது ஒவ்வொரு மறுத்தோடியினதும் ஈரல்குலையையும் நடுங்க வைக்க வேண்டும் என்று இவர்கள் எதிர்பார்த்தார்கள். எங்களிடம் துப்பாக்கிகள் இல்லை. குரல்கள் மட்டும்தானுள்ளன என்று இந்த மறுத்தோடிகள் தொடர்ந்தார்கள். மரணம் எல்லோருக்கும் பொதுவானதுதான்;. ஆனால் அதை நிரணயிக்கும் உரிமை யாருக்கும் இல்லை. எமன் காரியாலயத்தில் தூதுவர்களாக தொழில் புரிவதற்கான விசா பெற்றுக் கொண்டு இருப்பதுபோல்தான் இவர்களின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. எம தூதுவர்களாகத் தங்களை இந்த மறுத்தோடிகள் அடையாளம் காண வேண்டும் என்பதைச் சந்தர்ப்பம் கிடைத்த பொழுதுகளிலெல்லாம் நிரூபிக்க முயற்சி செய்திருக்கிறார்கள்;. இவர்களிற்கு யானைக்கும் ப+னைக்கும் வித்தியாசம் தெரிவதில்லைப் போலும்; சூடு கண்ட ப+னை அடுப்பங்கரையை நாடாதுதான். ஆனால் யானை பற்றிச் சொல்லிப் புரிய வைக்க வேண்டியதில்லை. துப்பாக்கியை விடப் பேனா வலிமை வாய்ந்ததென்று இவர்கள் நம்புகிறார்கள் என்பது வெட்ட வெளிச்சம்.


பேனாமுனைகளுக்கெதிரான தொடர்ந்த துப்பாக்கி தூக்கல்களும், ஒரு நபரை அழிப்பதன் மூலம் ஒரு கருத்தை அழித்துவிட முடியும் என்னும் இவர்களின் கொச்சைத்தனமான விளக்கங்கள் எவ்வளவு நுண்ணறிவுடன் மறுத்தோடிகளால் பரிசீலிக்கப்பட வேண்டும் என்னும் ஒரு மாயத் தோற்றத்தை கிளப்பி விட்டிருக்கிறார்கள்.


விமர்சனம் என்பது யாராலும் எப்போதும் எங்கும் எந்தச் சந்தர்ப்பத்திலும் வைக்கப்படலாம் என்பதும் அதை எதிர்கொள்ள குண்டாந்தடிகளும் துப்பாக்கிகளும் தேவையில்லை என்பதை இப்படியான அடாவடித்தனங்களில் ஈடுபடுபவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.


சபாலிங்கத்தில் கொலைக்குப் பின் புகலிடத்தில் இருந்து வெளிவந்த எண்ணற்ற பத்திரிகைகள் அடக்கி வாசித்தன. பல படிப்படியே நின்று போயின.


'புகலிடத்தில் உங்களுக்குப் பாதுகாப்புத் தருவதற்கு எதுவும் இல்லை. யாரும் இல்லை. நாங்கள் இருக்கும்வரை உலகின் எந்த மூலைக்கு நீங்கள் ஓடினாலும், எங்களுக்கு ஒத்தூதினால் உங்களது உயிர் உங்களுக்கு. அன்றேல் அது எங்களுக்கு.» என்ற சுலோகத்தை கோட்பாடாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.


'அன்பான' மிரட்டல்கள், 'செல்லமான' தட்டிக் கொடுப்புகள் 'இரகசியமான' பொட்டு வைப்புகள் என்று இவர்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.


ஒருவரின் இருப்பிடத்திற்குச் சென்று அவர் இல்லாதபொழுது ப+ட்டை உடைத்துக் கொண்டு உட்பிரவேசித்து அந்தரங்க ஆவணங்களைத் திருடிச் சென்றிருப்பதற்கு இவர்களுடைய வழக்காடு மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடியாது. இவர்கள் இவ்வாறு அத்துமீறி நுழைந்ததுபோல் இவர்களின் கோட்டைக்குள் உத்தரவின்றிப் புகாது, அங்கு கொன்று புதைத்தவர்களின் தகவல்களில் ஓரிரண்டையாவது எங்களுக்குச் சொல்வார்களா?


நாங்கள் உங்களிடம் எங்கள் தோழன்கள், தோழிகளுக்கு என்ன நடந்தது, அவர்களை என்ன செய்தீர்கள் சொல்லுங்கள் என்று துரத்தித் துரத்திக் கேட்டோம். அந்த ஓல விழிப்புகள் தேய்ந்து தேய்ந்து, இப்போது அந்தத் தோழன்களும் தோழிகளும் பிறந்தார்களா? வாழ்ந்தார்களா? என்னும் நிலைக்கு ஆக்கிவிட்டிருக்கிறீர்கள்.


உங்களுடைய இந்தக் கோழைத் திருட்டானது எந்த அசைவையாவது ஒரு கணம் நிறுத்தி வைத்து விடக் கூடும் என்று நீங்கள் ஏதாவது கனவு கண்டால் அதற்கு இந்த மறுத்தோடிகள் என்றும் தலை சாய்க்க மாட்டார்கள் என்பதைப் பகிரங்கமாக உங்களிடம் சொல்வதற்கு மீளவும் ஒரு சந்தர்ப்பத்தை நீங்களாக உருவாக்கித் தந்திருக்கின்றீர்கள்.


கலந்துரையாடல்களின், சந்திப்புகளின் ஆவணங்களை நீங்கள் ஒன்றும் அதிலுள்ள விடயதானங்களுக்காகத் திருடிச் சென்றிருக்கமாட்டீர்கள் என்பதில் ஐயத்துக்கிடமில்லை.


மனிதநேயம், மனிதாபிமானம் என்பது என்ன என்பதைப் புரிந்து கொள்ள நீங்கள் உங்கள் கோட்டைக்குள் இருந்து சிறிதாவது வெளியே வரவேண்டும்.


ரஜனி திரணகமவின் ஓராண்டு நினைவாக பாரிஸில் நடாத்தப்பட்ட கூட்டத்தில் 'விடுதலை'ப் புலிகளின் பிரதிநிதி ஒருவர் எழுந்து «ரஜனியைப் புலிகள்தான் கொலை செய்தார்கள் என்று நீங்கள் நேரில் பார்த்தீர்களா?» என்று ஆவேசமாகக் கேட்டார். கேட்டவரைப் பார்த்து அனுதாபப் படலாமேயன்றி ஆத்திரப்படமுடியாது. பாவம் அவர்கள். எய்தவரிருக்க அம்பை ஏன் நோவான் எனபதுபோல்தான்.


இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாகவும் (இன்று 16 வருடங்களின் பின்னும்) அவர்கள் இதே கேள்வியைக் கேட்கக் கூடும். இப்படிக் கேட்பவர்களிற்கு விடை தெரிய வேண்டுமானால்,


1. பாரிஸில் சபாலிங்கத்தின் செயற்பாடுகள் யாருக்கு வேண்டப்படாததாக இருந்தன?


2. 'பள்ளம்' சஞ்சிகை எவருக்கு இடைஞ்சலாக இருந்தது?


3. ரஜனியின் எழுத்தும் செயற்பாடும் யாருக்கு உவப்பானதாக இருக்கவில்லை?


4. இன்னும் இலக்கியச் சந்திப்பு மற்றும் இங்கு மறுத்தோடிகள் நடாத்தும் கருத்தரங்குகள், நினைவுகூரல்கள் யாருக்கு விசனத்தைக் கொண்டு வருகின்றன?


என்பது போன்ற கேள்விகளுக்கு நாங்கள் பதிலைத் தேடினால், அதை நாங்கள் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை.



It is a simple log


உயிர்நிழல் சஞ்சிகையானது வெறும் தனிநபர் அரசியலையோ அல்லது இயக்க அரசியலையோ கொண்டிராது பாசிசத்துக்கெதிரான, ஒடுக்குமுறைகளுக்கு ஆதரவு கொடுக்காத ஒரு அரசியலைக் கொண்டிருக்கின்றது என்பதை இவ்விடத்தில் தெளிவுபடுத்தி, இந்த ஆவணக் கொள்ளையானது வெறுமே தனிநபருக்கெதிரானதாகக் கொள்ளாது, இது மறுத்தோடிச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் அனைவர்மீதும் இந்த 'விடுதலை'ப் புலிகளின் கோரக்கரங்கள் நீண்டிருப்பது குறித்த எச்சரிக்கை என்பதை அனைவரும் புரிந்துகொண்டு இதற்கான நடவடிக்கைகளில் ஒன்றிணைந்து ஈடுபடவேண்டும் என்று உயிர்நிழல் மறுத்தோடிகளையும் மாற்றுக் கருத்தாளர்களையும் விழிக்கின்றது.



உயிர்நிழல் சார்பாக


லக்ஷ்மி


Thursday, March 29, 2007

புரட்சிகர வன்முறையும் மனிதாபிமானமும்

புரட்சிகர வன்முறையும் மனிதாபிமானமும்

பி.இரயாகரன்
28.03.2007


ன்றைய சமுதாய அமைப்புமுறை வன்முறைக்குரிய ஒன்றாகவே உள்ளது. இன்று காணப்படும் ஜனநாயகம் கூட, வன்முறையை நியாயப்படுத்தும் ஒரு வர்க்கத்தின் கருவியாகும். வன்முறைக்குரிய ஜனநாயக அமைப்பில், சமூகங்களை ஒழுங்குபடுத்தி அடக்கிவைத்துள்ள சமூக அமைப்புமுறையும் கூட வர்க்கத்தின் சர்வாதிகாரமாகவேவுள்ளது. உண்மையில் சர்வாதிகாரம் என்பது ஒரு வர்க்கத்தின் ஜனநாயகமாக உள்ளது. இங்கு எழும் மனிதாபிமானம் என்பது வர்க்கத்தின் எதிர்வினைகளை அடிப்படையாக கொண்டது. இதற்கு வெளியில் எதுவும் இருப்பதில்லை.


இந்த சமுதாய எதார்த்த இருப்பை உள்வாங்கி, அதை தத்துவார்த்த ரீதியாக விளக்குவதே மார்க்சியம். சமூக எதார்த்தத்தை பிரதிபலிக்கும் மார்க்சியம், தெளிவாகவும் துல்லியமாகவும் அனைத்து துறையிலும் வர்க்க அடிப்படையில் பகுத்தாய்வு செய்கின்றது. வர்க்கப் போராட்டம் என்பது இடைவிடாத தொடர்ச்சியான நீடித்த ஒரு இயக்கமாக காண்கின்றது. வர்க்கங்கள் நீடிக்கும் வரை, வர்க்கப் போராட்டம் என்பது புரட்சிக்கு முன்பும் பின்புமாக தொடரும் ஒரு வர்க்க அடிப்படையாக காண்கின்றது. இந்த வர்க்கப் போராட்டம், அமைதியாகவும் வன்முறை சார்ந்தும் நீடித்த ஒரு தொடர் நிகழ்ச்சியாகும். இந்த வர்க்க அமைப்பில் ஜனநாயகம் அனைத்து வர்க்கத்துக்கும் இருப்பதில்லை. இதுவே எதார்த்தம். சுரண்டுபவனுக்கும் சுரண்டப்படுவனுக்கும் ஒரேநேரத்தில் ஜனநாயகம் நிலவமுடியாது. இப்படி இருக்க முடியும் என்பது, மக்களை ஏமாற்றுகின்ற மோசடி. இந்த மாதிரி மக்களை ஏமாற்றுகின்ற அரசியல் மோசடியில், மார்க்சியம் ஈடுபடுவது கிடையாது.


பாட்டாளி வர்க்கம் அதிகாரத்துக்கு வரும் போது, பாட்டாளி வர்க்கத்துக்கு மட்டும் தான் ஜனநாயகம் உண்டு என்பதை தெளிவுபடுத்துகின்றது. சுரண்டுபவனுக்கும், சமூக ஒடுக்குமுறை செய்வதற்கும் சுதந்திரம் கிடையாது. இதில் எந்த தனிமனிதனுக்கும், விதிவிலக்குகளை அனுமதிப்பதில்லை. சமூக எல்லைக்கு வெளியில் தனிமனிதனுக்கு ஜனநாயகம் கிடையாது. சமூகத்தினுள் தான் ஜனநாயகம். இதற்கு வெளியில் இருப்பதாக கூறுவது, சமூகத்தை விட அதிகமாக கோருவதைக் கடந்து எந்த விளக்கமும் பெறாது. சமூகத்தை ஒடுக்கித் தான் பெறமுடியும்.


புரட்சியின் ஏற்ற இறக்கத்துக்கு இணங்க, இடைப்பட்ட வர்க்க பிரிவுகளுக்கு ஜனநாயகம் வழங்கப்படுவது உண்டு. அது பாட்டாளி வர்க்க நலனுக்கு இசைவாக மட்டும் தான். இது பாட்டாளி வர்க்கப் போராட்டத்தை பலப்படுத்தவும், பாதுகாக்கவும் தான் வழங்கப்படுகின்றது. ஜனநாயகம் எல்லா வர்க்கத்துக்கும் இல்லை என்கின்ற போதே, அது மற்றைய வர்க்கங்கள் மேலான சர்வாதிகார அமைப்பாக கட்டமைக்கப்படுகின்றது. இன்றைய சுரண்டல் வர்க்க அமைப்பிலும், உள்ளார்ந்த ஒரு விதியாகவே இது நடைமுறை ரீதியாக உள்ளது. இங்கு சுரண்டுவது மாற்ற முடியாத ஒரு சர்வாதிகார வர்க்க நிபந்தனைக்கு உட்பட்டது. இங்கு ஜனநாயகம் எதுவும் செல்லுபடியாவதில்லை. பெரும்பான்மையான மக்கள் சிறுபான்மைக்கு எதிராக போராடுவது, இந்த சுரண்டல் வர்க்க சர்வாதிகார அமைப்பின் பொதுவான நடைமுறை ரீதியான எதார்த்தமாகவே உள்ளது. இந்த வகையில் ஜனநாயகம் வெளிப்படையாக மக்களுக்கு எதிராகவே இருக்கின்றது. சுரண்டுவதற்குத் தான் ஜனநாயகம் சேவை செய்கின்றது.


வர்க்க சர்வாதிகாரம் பற்றிய தெளிவு, மார்க்சியத்தின் அடிப்படையான அரசியல் உள்ளடக்கமாகும். இதை ஏகாதிபத்தியமும், மக்களை ஏமாற்ற ஜனநாயகம் பேசுகின்றவர்களும் ஏற்றுக் கொள்வதில்லை. இதேபோல் டிரொட்ஸ்கிய வலதுசாரிகளும் சரி, அனைத்து வர்க்க பினாமிகளும் கூட ஏற்றுக் கொள்வதில்லை. கோட்பாட்டு ரீதியில், இவர்களுக்கு இடையில் ஒன்றுபட்ட நிலைப்பாட்டை இதில் கையாளுகின்றனர். அனைத்து வர்க்கத்துக்கும் ஜனநாயகம் என்ற உள்ளடகத்தில் இருந்தே குலைக்கின்றனர். மக்களை பொதுத்தளத்தில் நிறுத்தி, அவர்களை ஏமாற்றி மோசடி செய்கின்றனர். பின் அவதூறுகளை வர்க்க நோக்கிற்காக கட்டமைக்கின்றனர். அவதூறுகள் புனையப்பட்டு முன்வைக்கப்படுகின்றது.


ஜனநாயகம் என்றால் என்ன? ஜனநாயகம் எப்போதும் எங்கும் ஒரு வர்க்க சர்வாதிகாரம் தான். இதற்கு வெளியில் ஜனநாயகம் இருப்பதில்லை. மற்றைய வர்க்கம் ஜனநாயத்தின் ஒரு கூறைப் பயன்படுத்துகின்றது எனின், அது வெறுமனே ஒரு சலுகை மட்டும் தான். நிலவும் வர்க்க சர்வாதிகாரத்தை மூடிமறைக்கவும், சர்வாதிகாரத்தை நீடித்து பாதுகாக்கவும் வழங்கும் ஒரு இடைநிலை வடிவம் தான். இது பாட்டாளி வர்க்க ஜனநாயகத்துக்கும், முதலாளித்துவ வர்க்க ஜனநாயகத்துக்கும் பொருந்தும். ஜனநாயகம் என்பது நிச்சயமாக ஒரு வர்க்கத்துக்கு மறுக்கப்படுகின்ற வரைதான், அது உயிர் வாழ்கின்றது. இது அடிப்படையான மார்க்சிய விதியும் கூட. அனைவருக்கும் ஜனநாயகம் உள்ள போது, ஜனநாயகம் என்ற உள்ளடக்கம் சமுதாயத்தில் இருந்தே இல்லாமல் போய்விடுகின்றது. அது உயிர் வாழ்தற்கான ஜனநாயக மறுப்புக்குரிய சமூக அடிப்படையே அதற்கு இருப்பதில்லை.


இது வர்க்கங்களற்ற சமுதாயத்தில் மட்டும் தான் சாத்தியம். மறுக்கப்படும் ஜனநாயகம் உள்ளவரை, ஜனநாயகம் எப்போதும் எங்கும் விதிவிலக்கின்றி ஒரு வர்க்கத்துக்கு மட்டுமே சேவை செய்கின்றது. இந்த அடிப்படை உள்ளடகத்ததை சுரண்டல் சமூக அமைப்பு மூடிமறைக்கின்றது. இந்த எதார்த்தத்தை எடுத்துக்காட்டி, அனைத்து வர்க்கத்துக்கும் (மக்களுக்கும்) ஜனநாயகம் என்ற பொய்மையையும், அதன் சர்வாதிகாரத் தன்மையை மார்க்சியம் அம்பலப்படுத்தி அதற்கு எதிராக போராடுகின்றது. இதை யாரும், எந்த சமூக முரண்பாட்டு பிரிவுகளும் செய்வதில்லை.


ஜனநாயகத்தின் உட்கூறுகளையும், அதன் பண்புகளையும் தெளிவாகவே இனம்காட்டி மார்க்சியம் மட்டும்தான், சமுதாயத்தை மாற்றி மக்களின் அதிகாரத்தை உருவாக்கப் போராடுகின்றது. அதாவது எதிர் எதிரான இரண்டு சமுதாயப் போக்கையும் துல்லியமாக வேறுபடுத்தி, அதை வெளிப்படுத்திப் போராடுகின்றது. இந்த வகையில் பாட்டாளி வர்க்க சமுதாயத்தில், சுரண்டலைக் கோரும் ஜனநாயகத்தை சுரண்டும் வர்க்கத்துக்கு மறுக்கின்றது. மாறாக இதன் எதிர்நிலையில் உள்ள முதலாளித்துவமும், வர்க்கங்களை அடக்கியாள உருவாகும் பாசிசமும், சுரண்டப்படும் வர்க்கத்துக்கு ஜனநாயகத்தை மறுக்கின்றது. இந்த இரண்டு போக்கிலும், அதன் பண்பியல் உருவாக்கும் சமூக எதார்த்தத்தை மார்க்சியமே இலகுவாக புரிந்து கொள்ளவைத்து போராடுகின்றது.


வர்க்கப் போராட்டம் கூர்மையடைந்துள்ள நிலையில், சுரண்டும் வர்க்க பாசிசம் மூலம் மட்டுமே பாட்டாளி வர்க்கத்தை ஒடுக்கி சுரண்ட முடியும் என்கின்ற ஒரு நிலை உருவாகின்றது. இதுவல்லாத எல்லா நிலையிலும் சுரண்டும் சர்வாதிகார ஜனநாயகம், எப்போதும் நிர்வாணமாக வெளிப்படையாக இருப்பதில்லை. மாறாக தன்னை, தனது சுரண்டும் வர்க்க சர்வாதிகாரத் தன்மையை மூடிமறைத்து கொள்கின்றது. அது சுரண்டலை தொடர்ந்தும் அமைதியாக நடத்துவதற்காக, மற்றைய வர்க்கத்துக்கு சலுகை வழங்குவதன் மூலம், ஜனநாயகத்தை கவர்ச்சிப்படுத்திக் காட்டமுனைகின்றது. மூடிமறைக்கப்பட்ட இந்த ஜனநாயகம், ஒரு முதலாளித்துவ சுரண்டல் சர்வாதிகாரமாக இருப்பதை இலகுவாக கண்டு கொள்ளமுடியாது. அது சூக்குமமாகவே காட்சியளிக்கின்றது. சமுதாயத்தில் நிலவும் இந்த போலித்தனத்தை யார் யாரெல்லாம் அடையாளம் காணவில்லையோ, அவர்கள் தான் தனிமனித உரிமை பற்றியும், தனிமனித சுதந்திரம் பற்றியும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கு எதிராக கூச்சல் எழுப்புகின்றனர். தன்னை மூடிமறைத்து அழகுபடுத்தி நிற்கும், சுரண்டும் முதலாளித்துவ சர்வாதிகாரத்தில் நிலவும் வர்க்கப் போராட்டம் கூர்மையாகின்ற போதே, சுரண்டலை பாசிசத்தை அடிப்படையாக கொண்ட சர்வாதிகாரமாக தன்னை வெளிப்படையாக நிர்வாணப்படுத்திக் கொள்கின்றது. இன்று ஜனநாயகத்தை பிரதிநிதித்துவம் செய்வதாக கூறிக்கொள்ளும் எல்லா அரசுகளும், உள்ளடகத்தில் சுரண்டலை நடத்துவதற்கான சர்வாதிகார பாசிசக்கூறை உள்ளடக்கியபடி தான், தன்னை மூடிமறைத்துக் கொண்டு கவர்ச்சியாக்கிக் கொள்ள முனைகின்றது. பாட்டாளி வர்க்கம் ஒட்டு மொத்தமாகவே இந்தக் கபடத்தை அம்பலம் செய்தே, வர்க்கப் போராட்டத்துக்கு தயார் செய்கின்றது.


மனிதனைச் சுரண்டுவது சுதந்திரமான ஜனநாயக உரிமையாகிய போது, ஜனநாயகத்துடன் ஒட்டிப் பிறந்த தனிமனித உரிமையும், தனிமனித சுதந்திரமும் கூட, இந்த வர்க்க அடிப்படையில் தான் நிர்ணயம் செய்யப்படுகின்றது. இதற்கு வெளியில் அல்ல. எல்லோருக்கும் தனிமனித சுதந்திரம், தனிமனித உரிமை இருக்குமாயின், இது விவாதத்துக்குரிய பொருளாகவே இருப்பதில்லை. இந்தப் பிரச்சனை சமுதாயத்தில் இருந்தே மறைந்து விடுகின்றது. தனிமனித உரிமை என்பதும், தனிமனித சுதந்திரம் என்பதும் வர்க்க சமுதாயத்தில் மறுக்கப்படும் போதே, அது அதுவாகவே நீடிக்கின்றது. இது எப்போதும் வர்க்க சமுதாயத்தில் ஒருவருக்கு இல்லாத போது மட்டும் தான், மற்றொருவருக்கு இருக்கின்றது. இதை புரிந்து கொள்ளாத வரை புரிந்து கொள்ள மறுக்கும் வரை, பாட்டாளி வர்க்கத்துக்கு எதிராக வைக்கும் கூச்சல்கள், பாட்டாளி வர்க்கத்துக்கு இந்த உரிமைகள் இருக்க கூடாது என்பதைத் தாண்டி விளக்கம் பெறாது. தனிமனித உரிமை, தனிமனித ஜனநாயகம், தனிமனித சுதந்திரம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திலும், முதலாளித்துவ (ஜனநாயக) சர்வாதிகார அமைப்பிலும் ஒரேவிதமாகவே எதிர் வர்க்கத்துக்கு மறுப்பதாகவே உள்ளது. ஆனால் வௌவேறு வர்க்கங்கள் இந்த உரிமையை பெறுகின்றது. இதனால் இது சர்வாதிகார அமைப்பாக உள்ளது.


ஜனநாயகம், சுதந்திரம், தனிமனித உரிமைகள் என அனைத்து வர்க்கத்துக்குமானதாக இருக்க முடியாது. அது ஒரு சர்வாதிகாரமாக இருக்கின்றது. இதை ஏற்க மறுப்பவர்கள் தனிமனித நிகழ்வுகளை காட்டி அதை அரசியலாக்கும் போது, முதலாளித்துவ ஜனநாயகத்தின் கடைக் கோடியில் நின்று கோசம் போட்டு சோரம் போடுவதைத் தாண்டிவிடுவதில்லை. சுரண்டும் ஜனநாயகத்தின் மூலதனத்தின் அதிகாரத்தை தகர்க்க போராடும் போது, பாட்டாளி வர்க்கத்தின் ஜனநாயகம் அதன் தனிமனித உரிமை பற்றிய பேச்சு என்பதை முதலாளித்துவ ஜனநாயகம் அனுமதிப்பதில்லை. இது போல் பாட்டாளி வர்க்க ஆட்சியில் சுரண்டலைக் கோரும் ஜனநாயகம் மற்றும் மக்களை பிளவு படுத்தும் ஜனநாயகம் உள்ளிட்ட தனிமனித உரிமைகள் எதையும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அனுமதிப்பதில்லை. இந்த மார்க்சிய அடிப்படைக்குள் தவறுகள் நிகழும் போது, விமர்சனம் சுயவிமர்சனத்துக்கு உள்ளாக்கி அதை திருத்துவதுக்கு அப்பால், சர்வாதிகாரம் ஜனநாயகமாகிவிடாது.


மனித அவலமாகவே புரையோடிப் போயுள்ள வர்க்க சமூக அமைப்பில் செழிப்பும் காணப்படுகின்றது. பெரும்பான்மையான மக்களின் அவலம் தான் சிலரின் செழிப்புக்கான ஒன்றாகவும், வாழ்வுக்கான அடிப்படையாகவும் உள்ளது. இதைத்தான் பொதுவாக அனைவரும் ஜனநாயகம், சுதந்திரம் என்கின்றனர். இந்த சுரண்டல் அமைப்பில் இதற்கு வெளியில், இதற்கென வேறு கருத்து கிடையாது.


பொதுவாக ஜனநாயகம் என்பதை கருத்துச்சொல்லும் உரிமை, வாக்களிக்கும் உரிமை என்ற குறுகிய எல்லைக்குள் தான் விளங்கி, அதுவாக மட்டும் பார்க்கப்படுகின்றது. ஜனநாயகம் எப்படி மனித வாழ்வியல் கூறுகளில் செயல்படுகின்றது என்று பார்க்கப்படுவதில்லை, பார்க்க அனுமதிப்பதில்லை. சாதாரணமான ஊடகங்கள் இதைத்தான் அடிப்படையாக கொண்டு இயங்குகின்றது.


மனிதர்களின் சமூக வாழ்வியல் கூறு வன்முறையான சுரண்டல் வழிகளில், சமூக முரண்பாட்டு போக்கில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதையே ஜனநாயகம் என்கின்றனர். மற்றைய சக மனிதனின் உழைப்பை சுரண்டி வாழ்வதைத்தான் ஜனநாயகம் என்கின்றது. அதைத்தான் சுதந்திரம் என்கின்றனர். மற்றைய மனிதனின் உழைப்பை திருடி வாழ்வதை எப்படி ஜனநாயகம் என்று, பகுத்தறிவுடன் நாம் கூறமுடியும். ஆனால் அப்படி கூறப்படுவதுதான் இன்றைய உலக கட்டமைப்பாகும். இதை மறுப்பது, மீறப்படுவதை ஜனநாயக விரோதம் என்று கூறுமளவுக்குத்தான், மனித சிந்தனைத் தளமும் மலடாக்கப்பட்டுள்ளது. இப்படி இந்த அமைப்பை இந்த எல்லைக்குள் வன்முறை மூலம் தான் பாதுக்கப்படுகின்றது. இந்த ஜனநாயக விரோத அமைப்பை பாதுகாப்பது ஏது? பாராளுமன்றங்களும், நீதித் துறையும், ஆயுதம் ஏந்திய காவல்துறையும், அதிகார வர்க்கமும் இந்த சுரண்டும் ஜனநாயகத்தை பாதுகாக்கும் சர்வாதிகார நிறுவனங்களாகும்.


இது பெரும்பான்மை மக்களின் விருப்பை வாக்கில் மட்டும் தான், ஏமாற்றுகின்ற அரசியல் மோசடிகளுடன் அங்கீகரிக்கின்றது. சமூக வாழ்வியல் நடைமுறைகளில் அல்ல. நடைமுறை வாழ்வில் பெரும்பான்மை மக்கள் எதிர்க்கும் ஒரு விடையத்தை, இந்த சர்வாதிகார நிறுவனங்கள் ஜனநாயக உள்ளடகத்தில் ஏற்றுக்கொள்வது கிடையாது.


வர்க்க அமைப்பில் ஜனநாயகம் வர்க்கங்களுடையதே. வர்க்க அமைப்பு உருவாக்கும் சமூக முரண்பாட்டிலும் கூட இது பொருந்தும். ஆணாதிக்க அமைப்பின் ஜனநாயகம் பெண்ணுக்கு எதிரானது. பார்ப்பனிய சாதிய இந்துத்துவ அமைப்பின் உயர்சாதிய ஜனநாயகம் தாழ்ந்த சாதிகளுக்கு எதிரானது. இனவாத அமைப்பில் அதிகாரத்தைக் கொண்ட இனத்தின் ஜனநாயகம் ஒடுக்கப்பட்ட இனத்துக்கு எதிரானது. இப்படி சமூக முரண்பாட்டின் அனைத்துக் கூறிலும், ஜனநாயகம் ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை மக்களுக்கு எதிராகவே இயங்குகின்றது. சிறுபான்மையினரின் நலனில் இருந்து இயங்குகின்ற ஜனநாயகம், பெரும்பான்மையான ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக, சர்வாதிகார சமூக அமைப்பு வழியாகத்தான் பேணப்படுகின்றது. இந்த வகையில் தான் கல்வி முதல் சமூகத்தின் அனைத்துத் துறையும் திட்டமிட்டு கட்டமைக்கப்படுகின்றது. மக்கள் தாமாக சுயமாக சிந்திக்க, செயலாற்ற அனுமதிப்பதை மறுப்பதின் சாரம் தான், ஜனநாயகமாகவுள்ளது. இதை மக்கள் எதிர்க்கின்ற போது, சர்வாதிகார பயங்கரவாத வன்முறை மூலம் பதிலளிக்கப்படுகின்றது. சுரண்டப்படும் சக மனிதர்கள் எந்தக் கேள்விகளுமின்றி அடங்கிவாழும் வாழ்க்கை முறை தான், ஜனநாயமாக காட்டப்படுகின்றது. இதுவே இன்றைய உலக எதார்த்தமாக உள்ளது.


இந்த எதார்த்தம் மனித அவலத்தின் பிறப்பிடமாக உள்ளது. மக்கள் ஒரு கஞ்சிக்கே வாழமுடியாத அவலம். ஒருபுறம் சுரண்டல் அவலங்கள், மறுபுறம் சமூக அவலங்கள். இந்த தனிச்சொத்துரிமை அமைப்பு கட்டமைத்துள்ள தனிச் சொத்துரிமைச் சட்டங்களையே, உலகமயமாதல் மறுக்கத் தொடங்கியுள்ளது. பெரிய சொத்துடைய சிறுபான்மையினர், சிறிய சொத்துடைய பெரும்பான்மையினரின் சொத்துக்களை பலவழிகளில் அபகரிப்பது ஜனநாயகமாகியுள்ளது. பெரிய சொத்துடைய சிறுபான்மை சட்டங்களை வளைத்து, தனக்கு இசைவாக உருவாக்கியும், இதற்கு அப்பால் சிறுபான்மை சொத்துரிமையை வன்முறை மூலமும் அபகரிக்கின்றது. சொத்துடமையை இழத்தல், சுரண்டல் வழிமுறைகளால் மட்டும் நடக்கவில்லை. சமூக முரண்பாடுகளால் மட்டும் நடக்கவில்லை. சொத்துடமையை அபகரிக்கும் பொதுச் சட்டங்களாலும் அபகரிக்கப்படுகின்றது. மக்கள் காலகாலமாக வாழ்ந்த வாழ்விடங்கள், வாழ்வை அளித்த நிலங்கள், அவர்களின் வாழ்வியல் அறிவு என அனைத்தையும், மக்களிடம் இருந்து பலாத்காரமாக புடுங்கி கொடுப்பதே ஜனநாயமாக பீற்றப்படுகின்றது. உலகமயமாதலில் உலகளாவிய சொத்தை சிலரின் தனிப்பட் சொத்தாக்கி வரும் சட்ட நடைமுறைகளைத் தான், இன்று ஜனநாயகம் என்கின்றனர்.


இதை எதிர்த்து மக்கள் தமது கருத்தை வெளியிடுகின்றனர், போராடுகின்றனர். இதை இந்த ஜனநாயகத்துக்கு எதிரானதாக காட்டுவது முதல் ஒடுக்குவது வரை, சாதாரணமான நிகழ்ச்சிப் போக்காகவே உள்ளது. இதைத்தான் ஜனநாயகம் என்கின்றனர். மக்களின் அடிப்படை உரிமையை மறுத்து, மக்கள் மேல் வன்முறையை ஏவுவதையே மனிதவுரிமை என்கின்றனர். இந்த நிலையில் அரச பயங்கரவாதமே, ஜனநாயகத்தின் அச்சாக மாறி நிற்கின்றது. இது உலகம் தளுவியது. மக்கள் இந்த ஜனநாயக அரச பயங்கரவாதத்துக்கு எதிராக, தமது சொந்தவழிகளில் சொந்த கோரிக்கைகளுடன் போராடுகின்றனர். அரச பயங்கரவாதம் வன்முறையாகும் போது, இது தனிமனித பயங்கரவாதம் முதல் அணிதிரட்டப்பட்ட புரட்சிகர வன்முறையாக வளர்ச்சியுறுகின்றது.


மக்களின் அடிப்படை உரிமைகளை மறுக்கம் இந்த ஜனநாயகம், மக்களை வேட்டையாடுவதையே அன்றாட நிகழ்ச்சி போக்காகவும் அதுவே உலகம் தளுவியதாகியும் விட்டது. இதனால் இதன் எதிர்வினைகள் பலவாக மாறுகின்றது. ஜனநாயகபூர்வமான போராட்டம் முதல் புரட்சிகரமான வன்முறை போராட்டங்கள் உலகெங்கும் அன்றாடம் நடக்கின்றது. இந்த போராட்டத்தை வன்முறையாக, பயங்கரவாதமாக சித்தரிப்பதே அரச பயங்கரவாதத்தின் சுரண்டல் சர்வாதிகர அரசியலாகவுள்ளது.


இந்த புரட்சிகரமான வன்முறைக்குள் தனிமனித பயங்கரவாதத்தை, அதாவது மக்களை அவர்களின் பிரச்சனையூடாக அணிதிரட்டாத பயங்கரவாதத்தை நாம் உள்ளடக்கி விடவில்லை. இருந்தபோதும் கூட தனிமனித வன்முறைக்கு பின்னால் உள்ள காரணம், அரச பயங்கரவாதத்தின் விளைவுகளே என்பதை அடித்துக் கூறுகின்றோம்.


பொதுவாக ஜனநாயகம் பேசும் அரச பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம், மக்கள் திரள் அமைப்புக்களால் நிகழ்த்தப்படுகின்றது. மற்றது உதிரி வர்க்க நபர்களால் அல்லது உதிரி குட்டிபூர்சுவா குழுக்கால் மக்களின் பிரச்சனைகளில் இருந்து விலகி நடத்தப்படுகின்றது. இந்த வகையில் அரச பயங்கரவாதத்துக்கு எதிரான வன்முறைகளே இவைகள். மக்களுக்கு எதிரான சுரண்டும் அரசபயங்கரவாதமே, எதிரான வன்முறைக்கு அரசியல் அடிப்படையாகும். இதில் அந்த மக்கள் சார்ந்து நிற்கத் தவறுகின்ற போக்கின் மீது, மக்கள் சார்ந்து நிற்ககோரும் எல்லைக்குள் தான், மக்களைச் சாராத வன்முறை மீதான எதிர்வினையையும் போராட்டத்தையும் கோருகின்றது.


புரட்சிகரமான மக்கள் வன்முறை, மக்களுக்கு எதிரான அனைத்துக் கூறுகளின் மீதும் சரியானதும் நியாயமானதுமாகும். இதை மக்கள் தமது சொந்த போராட்ட வழிமுறைகள் மூலம் தெரிவு செய்கின்றனர். புரட்சிகர வன்முறை ஒடுக்கப்பட்ட மக்களின் அனைத்து சமூகக் கோரிக்கையையும் உள்வாங்கி செயல்படுவது மட்டும் தான் முரணற்றது. அந்த வகையிலான போராட்டம், மக்களின் ஜனநாயகத்தை மீட்பதை அடிப்படையாக கொண்டது. பெரும்பான்மை உழைக்கும் மக்கள், இதை சிறுபான்மை சுரண்டும் வர்க்கம் மீதான போராட்டத்தில் எதிர்ப்பதில் வன்முறை வடிவமும் ஒன்று.


இங்கு நிகழும் வன்முறை மீது மனிதாபிமானப் பிரச்சனையை, எப்படி புரட்சிகரமான வன்முறையாக கையாள்வது என்பதை அவர்கள் தமது சொந்த நடைமுறையில் புரிந்து கொள்கின்றனர். அரச பயங்கரவாதத்தை நடத்துகின்ற அதன் உறுப்பினர்கள், அதை வழி நடத்துகின்றவர்கள் மீதான புரட்சிகர வன்முறைகள், மனிதாபிமான பிரச்சனைகளை எழுப்புவதில்லை. அங்கு ஒரு வர்க்கத்தின் வாழ்வுக்கும் சாவுக்குமான போராட்டத்தையே நடத்துகின்றனர்.


மனித அவலத்தை உருவாக்கும் மனிதாபிமானத்துக்கு எதிரான மனிதவிரோதிகள், மனிதாபிமானிகளாகவே இருக்கமுடியாது. இங்கு இருக்கலாம் என்பது, மனிதாபிமானத்துக்கே எதிரானதாகவே இருக்கும். குடும்ப உறுப்புகள் சந்திக்கும் மனிதாபிமான பிரச்சனைகளை, புரட்சிகர வன்முறை நிராகரிப்பதில்லை. அதை புரட்சிகரமான மக்கள் திரள் வழிகளில் அணுகுகின்றது, சக மனிதன் என்ற எல்லைக்குள், அவனின் உணர்வுகளையும் உரிமைகளையும் பரஸ்பரம் அங்கீகரித்து அணுகி தீர்வு காண்கின்றது. மாறாக அவர்களை எதிரியாக காண்பதில்லை. புரட்சிகரமான மக்கள் திரளின் ஜனநாயகத்தை அங்கீகரிக்கும் எந்த எதிர்புரட்சிகர நபர் சார்ந்த சமூக உறுப்பினரை உள்வாங்கி, அவர்களையும் புரட்சிகர உறுப்பாகவே கண்டு போராடுகின்றது.


புரட்சிகர மக்களின் அதிகாரத்தை பொறுத்து, அந்த சமூக உறுப்பினரின் வாழ்வுக்கு வழிவகைகளை செய்து கொடுக்கின்றது. புரட்சிகரமான வன்முறை மனிதனை மனிதன் மதிக்கும் எந்த சக மனிதனையும் அழிப்பதுமில்லை, தண்டிப்பதுமில்லை. மாறாக புரட்சிக்கு எதிராக பயன்படுத்தப்படும் எதிரியை கூட, வென்று எடுக்க முனைகின்றது.


இந்த வகையில் தான் புரட்சிகரமான போராட்டங்கள், வன்முறைகள் கையாளப்படுகின்றது. பரந்துபட்ட மக்களின் தேவைகள், குறிக்கோள்களை அடைத்தல் என்பது, அதன் மையமான நோக்கமாக உள்ளது. சமூக ரீதியாக ஒடுக்கவோ, சுரண்டவோ அனுமதிக்காத போராட்டங்கள், வன்முறைகள், இதற்கு எதிரானவர்கள் மீது கையாளுகின்றது.


இதை மறுக்கின்ற, சக மனிதனை ஒடுக்குகின்ற, மற்றவன் உழைப்பை சுரண்ட விரும்புகின்ற உதிரியாக கொண்ட சமூக விரோத உறுப்புக்கள், தம்மை பாதுகாக்க சித்தாந்த ரீதியாக மனிதாபிமானப் பிரச்சனை பற்றி கூச்சல் போடுகின்றனர். ஆனால் அவர்கள் சாதாரணமாக இயல்பில் நிலவுகின்ற மனிதாபிமான சமூகப் பிரச்சனைகள் பற்றி அக்கறை கொள்வதில்லை என்பதே, அந்த ஒட்டுண்ணி வர்க்கத்தின் மிகச் சிறந்த அடையாளமாகும். சமூக ரீதியாகவே அவலங்களை உருவாக்கி, மனிதாபிமான பிரச்சனைகள் உற்பத்தி செய்யும் இழிவான வர்க்கமும் இவாகள் தான். இவர்கள் புரட்சிகர வன்முறை நிகழும் போது, அதை ஓட்டி எழுப்பும் ஆபாசமான மனிதாபிமானக் கூச்சல்கள் அனைத்தும், சக மனிதனை சுரண்டும் உரிமைக்காகவும், சமூக ஒடுக்குமுறை செய்து வாழும் அற்பத்தனத்தை காப்பதற்காகவும் தான். இழிந்து போன இந்த வர்க்கம், தான் கொண்டுள்ள மனித முகத்தின் பின் இதைத் தவிர வேறு எதையும் காட்சிப்படுத்துவது கிடையாது.


Tuesday, March 27, 2007

புதிய காப்புரிமைச் சட்டம்: நோயாளிகளின் கழுத்துக்குச் சுருக்கு!

புதிய காப்புரிமைச் சட்டம்:
நோயாளிகளின் கழுத்துக்குச் சுருக்கு!


சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த நோவார்டிஸ் என்ற பன்னாட்டு மருந்து நிறுவனம், தான் தயாரித்து விற்பனை செய்துவரும் ""க்ளீவெக்'' என்ற இரத்தப் புற்று நோய்க்கான மருந்திற்கு, இந்தியாவில், தனக்குக் காப்புரிமை வழங்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் நோவார்டிஸுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டால், மாதம் 8,000 ரூபாய் செலவில் கிடைக்கும் (இரத்தப் புற்று நோய்க்கான) உள்நாட்டு மருந்துகள் தடை செய்யப்படும். இதற்குப் பதிலாக, இரத்தப் புற்று நோயாளிகள், நோவார்டிஸின் க்ளீவெக் மருந்தை வாங்க மாதமொன்றுக்கு ரூ. 1,20,000/ செலவு செய்ய வேண்டிய அதிபயங்கரமான எதிர்காலத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும்.



இந்த வழக்கு ஒரேயொரு மருந்து மட்டும் சம்மந்தப்பட்ட பிரச்சினையல்ல; இந்த வழக்கில் நோவார்டிஸுக்குச் சாதகமாகத் தீர்ப்புக் கிடைத்தால், பிறகு, உயிர் காக்கும் மருந்துகளைத் தயாரிக்கும் பல்வேறு பன்னாட்டு மருந்து நிறுவனங்களும் தங்களின் தயாரிப்புகளுக்கும் காப்புரிமை கோருவார்கள். எய்ட்ஸ், சர்க்கரை நோய், ஆஸ்துமா, இருதய நோய்கள் தாக்கியுள்ள பல தரப்பட்ட நோயாளிகள், மாதமொன்றுக்கு பத்தாயிரக்கணக்கில் செலவு செய்து மருந்து வாங்க வேண்டும்; அது முடியாதென்றால், நோயினால் அவதிப்பட்டுச் சாகவேண்டும் என்ற நிலைமையும் உருவாகி விடும்.



இந்திய அரசு, உலக வர்த்தகக் கழகத்தின் கட்டளைக்கு அடிபணிந்து, வடிவுரிமை சட்டத்தில் செய்துள்ள மாற்றங்கள்தான், உயிர் காக்கும் மருந்தின் விலைகளை இந்நிறுவனங்கள் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்த்திக் கொள்வதற்கு அடிப்படையாக அமைந்திருக்கிறது. வடிவுரிமைச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு எதிராக இந்திய மக்கள் போராடியபொழுது, அப்போராட்டங்களைத் தணிப்பதற்காக, ""ஏற்கெனவே சந்தையில் புழங்கும் மருந்துகளில், சிறிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் வடிவுரிமை கோர முடியாது'' என்ற பிரிவை புதிய வடிவுரிமைச் சட்டத்தில் இந்திய அரசு சேர்த்தது. இந்தப் பிரிவு, உலகமயம் தந்துள்ள வர்த்தகச் சுதந்திரத்திற்கு எதிரானது என்றும், அதனால் இந்தப் பிரிவை அடியோடு நீக்குவதன் மூலம் தனக்குக் காப்புரிமை வழங்க வேண்டும் என்றும் கோருகிறது, நோவார்டிஸ். ஏனென்றால், அந்நிறுவனம் காப்புரிமை கோரும் க்ளீவெக் மருந்து, ""புதிய மொந்தை பழைய கள்ளு'' போன்றது தான்.



இந்திய மக்கள் போராடிப் பெற்ற இந்த அற்பமான சலுகை நீதிமன்றத்தால் நீக்கப்பட்டால், இந்திய நோயாளிகள் மட்டுமல்ல, விலை மலிவான இந்திய மருந்துகளை இறக்குமதி செய்து வரும் பல்வேறு ஏழை நாடுகளும் பாதிக்கப்படும். அதனால்தான், 150 ஏழை நாடுகளைச் சேர்ந்த நோயாளிகள் நோவார்டிஸின் வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரி தத்தமது நாடுகளில் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறார்கள். இந்தியாவில் நோவார்டிஸுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.



ஏகாதிபத்திய நிறுவனங்களின் இலாப வெறிக்கும், மக்களின் வாழ்வுரிமைக்கும் இடையே நடக்கும் போராட்டமாகத்தான் இந்த வழக்கைப் பார்க்க வேண்டும். இந்தப் பிரச்சினையில் இந்திய நீதிமன்றங்கள் மக்களுக்குச் சாதகமாக நடந்து கொள்ளும் என நம்பிக் கொண்டு மௌனமாய் இருந்துவிட முடியாது. ஏனென்றால், தாராளமயத்தின் பின், பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சாதகமாகத்தான் பல்வேறு தீர்ப்புகளை இந்திய நீதிமன்றங்கள் சொல்லியுள்ளன. எனவே, நோய் நொடியற்ற ஆரோக்கியமான வாழ்க்கைக்கான மக்களின் போராட்டமே, நோவார்டிஸின் பேராசையை மட்டுமல்ல, புதிய வடிவுரிமைச் சட்டத்தையும் ஒழித்துக் கட்டும்!