தமிழ் அரங்கம்

Saturday, May 12, 2007

கருணா குழு

கருணா குழு பற்றி தமிழரங்கத்தில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு காலத்தேவை கருதி இணைப்புக்கள் தந்துள்ளோம்.


கருணா குழு மேலான எமது அரசியல் எதிர்வு கூறல்கள் பொய்க்கவில்லை என்பதை அம்பலமாகும் அவர்களது அராஐகங்கள் தெளிவுபடுத்துகின்றன



185.புலியல்லாத ஒரு கொலைக்களமும், புலியெதிர்ப்பின் நிலைப்பாடும்


184.மனித அவலங்களை அரசியலாக்குகின்றனர்


178.(கிழக்கு) மக்களின் பிரச்சனைகள் என்ன?


174. மக்கள்தான் புலிகளை தோற்கடித்தவர்களே ஒழிய கருணா என்ற பாசிச கூலிக்கும்பல் அல்ல.


173. யாழ் மேலாதிக்கம் என்றால் என்ன?


172. கொலைகாரர்களும் கொலையைக் கண்டிப்போரின் வக்கிரமும்


171. யாழ் மேலாதிக்கத்தின் கோவணம் தான் கிழக்கு மேலாதிக்கம்


169. பேரினவாத புலனாய்வு பிரிவும், கருணா கும்பலும் இணைந்து நடத்தும் அரசியலும், அரசியல் கொலைகளும்


168. துரோகமா மாற்று அரசியல்?


167.கூலிக்குழுவான கருணா கும்பலுக்கு, ஒளிவட்டம் கட்டும் எடுபிடி ஜனநாயகம்


166. கிழக்கில் இருந்து புலிகள் மட்டுமல்ல, கருணா தரப்பும் ஒழித்துக் கட்டப்படுவார்கள்.


161.வடக்கு கிழக்கு பிரிவினை என்பது பேரினவாத சதியாகும்


147.மக்களைப் பிளக்காது, வடக்கு கிழக்கு இணைப்பும் பிரிப்பும் அரங்கேறாது.


142.புலிகள் தமது சொந்த அழிவை நோக்கி வலிந்து செல்லுகின்றனர்


141.அரசியல் ரீதியாக தோற்ற புலிகள், இராணுவ ரீதியாகவும் தோற்கின்றனரே ஏன்?


136ஒரு மக்கள் யுத்தத்தை புலிகளால் நடத்தவே முடியாது


134 யாழ் மேலாதிக்கம் தான் தமிழ் இனத்தைப் பிளக்கின்றது.


121.எதிர்ப்புரட்சிகர அரசியலுக்கு புரட்சிகர தத்துவ முலாம் பூசமுடியாது.தவறானதுp>

114. சுத்திகரிப்பும், தூய்மையாக்கலும்


109..முடிவாக என்னதான் நடக்கப் போகின்றது

105.சிங்கள பேரினவாதத்துக்குள் சிதைந்து சின்னாபின்னமாகிவரும் தமிழ் தேசியமும், தமிழ் தேசிய உணர்வும்


099.நான் உன்னைக் கொல்லவில்லை, நீ என்னைக் கொல்லாதே
கொல்லும் உரிமையை நீ எனக்கு தா அல்லது நீயே எடு?


087.அரசியல் என்பது கொலைகளை, கற்பழிப்புகளை, வன்முறைகளை, பொய்களை, சதிகளை எல்லாம் கூட்டி அள்ளி எம்முகத்தில் எறிகின்றது. இதைப் பார்த்து, தெரிந்துகொள் என்கின்றது.


082.மக்களின் முதுகில் குத்துவதே அரசியலாகிவிட்டது


058.முஸ்லீம் மக்கள் மேல் தமிழராகிய நாம், அதிகாரத்தைச் செலுத்த முடியுமா?


043.ஒரு பச்சோந்திக்கு, சந்தர்ப்பவாதிக்கு, பிழைப்புவாதிக்கு, பினாமிக்கு, கொலைகாரனுக்கு, இரட்டை வேடதாரிக்கு "மாமனிதர்' என்ற கௌரவம் விதிவிலக்கின்றி சிறப்பாகவே பொருந்துகின்றது


35..வடக்கு-கிழக்கு என்ற பிரதேசவாத பிளவு, ஏன் புலிகளுக்குள் நடந்தது?

Friday, May 11, 2007

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாய் இல்லை!''

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாய் இல்லை!''
மாட்டுத் தோலை உரிப்பவர் சக்கிலி மனிதத் தோலை உரிப்பவன்
சங்கராச்சாரியா?

முதல் வணக்கம்


திசைகளின் கவர்ச்சியை வெறுத்து

தசைகளின் சுகங்களை மறுத்து

வசவுகள் ஆயிரம் பொறுத்து

உழைக்கும் மக்களின் விடுதலை வேருக்கு

பசையென உயிரையே கொடுத்து

மண்ணைக் கிளப்பிய வேர்களே

மார்க்சிய லெனினியப் பூக்களே

மகத்தான தியாகிகளே!

நிலவைக் காட்டிச் சோறூட்டும்

தாயின் அன்பும் மாறிவிடும்

சமூக உறவைக் காட்டி அரசியலூட்டிய

உங்கள் தோழமை இரத்தம்

தலைமுறை தாண்டியும் ஊறி வரும்!


(25.7.2006, 26.7.2006 நாட்களில் தஞ்சாவூர், திருச்சியில்

""நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாய் இல்லை!''

எனும் தலைப்பில் நடைபெற்ற கவியரங்கில் வாசித்த கவிதை)


மொழி வணக்கம்


கவினுறு மலைகள் ஏறிக் களைத்து

எங்கள் கடலொடு நதி பல நீந்தித் திளைத்து

காடுகள் சோலைகள் பூத்து

எங்கள் கைகள் வரைக்கும் காய்த்து

ஆடுகள், மாடுகள் பன்றிகள் மேய்த்து

சமவெளி உழைப்பினில் உயிர்மெய் வியர்த்து

உழைக்கும் மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தில்

ஒன்று கலந்து வளர்ந்த தமிழே! தலைமுறைக் குரலே!

பிழைப்புமொழி பேசாத உழைப்புத் தினவே!

உயிர் உறை கனவே! பரம்பரை உழைப்பே!

பாட்டாளி வர்க்க விடுதலை அழகாய் விளங்கிடு தமிழே!


நாங்கள் சும்மா இருந்தாலும்

நாடு விடுவதாயில்லை...


எழுதுவதால் மட்டுமல்ல

கவிதை வாழ்வதாலும் வந்து சேரும்

எல்லோர்க்கும் ஒருசமயம்

கவிதையாய் வாய்க்கும்.


அடிக்கும் அனலும் தணலும்

நொடிக்குள்மாறி கருத்துருவாக்கும் மேகம்

மண்ணைக் கிளப்பி குளிரும், இலைகள் நடுக்கும்.

அந்த இலைகளில் சிக்கிய காற்று உளறும்

அந்தக் காற்றில், கால் இடறி விழும் தூறல்.

சேர்ந்த சிறகினை

அலகினால் கோதிக் கோதி

நிறம்பிரித்து சிலிர்க்கும் பறவைகள்.

நனையும் குட்டிகளை தன் உடற்சூட்டில்

அணையக் கற்றுத்தரும் ஆடுகள்

பார்க்கும் யார்க்கும்

நனைந்த கவிதை அது!


சக்கரத்தைச் சுற்றி

சூடாக்கி, சூடாக்கி

இரும்புக்குள் மறைந்திருக்கும் நீரை

இறுக வைத்து

விரும்பும் அரிவாள்

வெந்து வரும் நெருப்பழகாய்.

எனக்கு வேலையென்ன?

எனும் கேள்விக்குறியாய்.

சிவந்து நிற்கும் வேளை

தீயின் கவிதை அது! உழைப்பின் செய்யுள் அது!


திமிறும் கடலை இரைக்க வைத்து

உப்புக் காற்றை உலர வைத்து

தப்பும் மீன்களை தசைகளில் வளைத்து

களைத்த சூரியனைப் பின்னுக்குத் தள்ளி

கட்டுமரங்கள் முன்னேறும்.

பரதவர் உழைப்புக்கு

ஈடுகொடுக்க முடியாமல்

நுரை தள்ளும் கடல்புறத்தைக்

காணும் யார்க்கும்

அது வலைகளில் பின்னிய கவிதைகள்!


தசைகளின் உணர்ச்சியை

வாங்கி, வாங்கி

தறிக்கட்டைகளும் தடக் புடக் எனப்

பேசிப் பார்க்கும்.

நெய்திடும் புடவை மட்டுமா?

செய்திடும் கடுமையில்

கைத்தறிச் சூட்டை வாங்கிக் கண்களும் சிவக்கும்.


நுண்ணிய கனவுகள்

நூற்கும் விரல்கள்

கருவினில் இருக்கும் பிள்ளையும்

கால், கை அசைத்து

உயிர் பின்னிடும் கர்ப்ப வெப்பத்தில்

தோற்கும் நூல்கள்

வேலையின்றி சுற்றி வரும் காற்று

வெட்கப்பட்டு

தன் அம்மணம் மறைக்க

நூல்களிடையே நுழையும்

பார்க்கும் யார்க்கும்

நரம்புகள் பின்னிய கவிதை அது!


கருக்கரிவாளின் சுனை பார்த்து

ஓடி ஒளியும் கருக்கல் நிலவு.

உழவனின் காலில் மிதிபட்டு

தூக்கம் கலையும் வாய்க்கால்.

வீசும் கைகளின் வெப்பத்தில்

விலகிக் கொள்ளும் பின்பனி

அடடா! அறுக்கும் அந்நேரம்

உழவன் படைப்பு அது! கவிதை அறுப்பு அது!


தேடித்துளைக்கும் இரசாயனக் குண்டுகள்

தெருவில் சாவின் நகம் பதிக்கும்

இராணுவ வண்டிகள்.

மணல் மூட்டைகளுக்குப் பின்னே

மறைந்திருக்கும்

நவீன ஆயுதங்கள், காலாவதியான இதயங்கள்.

ராடார் வைத்து வேவு பார்க்கும் சாவு.

வாடா! அமெரிக்க நாயே! என்று

வீதியில் செருப்புடன் நிற்கும்

ஈராக் பிஞ்சுகள்.

அந்தச் செருப்புகள்

உணர்ச்சிக் கவிதைகள்!


வறுமையின் கொடுமை எது?

மனிதன் தன் மனித உணர்வுகளை இழப்பது.

மார்க்சோ, மேலும் மேலும் மனிதரானார்

அகதிவாழ்வில் பிள்ளைகள் இரண்டை பறிகொடுத்தும்

தன் ஆடைகளைக் கூட அடகு வைத்தும்

உயரிய சமூகம் படைப்பதிலேயே

அவர் உயிரின் ஆசை திமிறியது.


முடிவிலாத் துயரின், வலிகளை வாங்கி

மூலதன வீக்கத்தை உலகுக்குக் காட்டினார்.

பதுக்கி வைத்திருக்கும்

முதலாளித்துவத்தின் இரக்கமற்ற ஆன்மாவை

விரட்டிப் பிடித்து நிர்வாணமாக்கியது

மார்க்சின் சுருட்டுப் புகை.

அதனால் ஆவிகள் அம்மணமாகவே அலைகின்றன.

மார்க்சும், ஜென்னியும், ஏங்கெல்சும்

லெனினும், ஸ்டாலினும், மாவோவும்

வாழ்ந்த வாழ்வை

உணரும் யார்க்கும்

அது கவிதையாய் இருக்கும்!


தன்னைப் பற்றியே நினைத்து நினைத்து

தன் நிழலும் இடறும் கால்கள் உண்டு

காதல் சுகமே கடைசியில் கடைசி என

சுயநலம் வியர்க்கும் தோல்கள் உண்டு,

என் நரம்பும், தசையும்

எலும்பும், தோலும்

இரத்தமெல்லாம் அலைந்து

நான் விரும்பும் ஒரு சுகம்

நாட்டு விடுதலை தவிர வேறில்லை

என்று எங்கள் பகத்சிங் போல யாருண்டு?

தொண்டைக் குழியை

தூக்குக் கயிறு நெறித்த போதும்

என் விடுதலைத் தாகம் விடமாட்டேன்!

வெள்ளை அசிங்கமே! உனக்கு

என் விழிகளின் ஈரமும் தரமாட்டேன்!

என சிலிர்த்த முகத்துடன் செத்தானே?!

கண்டு கண்டு

மரணம் பயந்து போன கவிதை அது!


இன்றோ

எங்கள் நீர்நிலை நிறைந்த

கவிதைகள் காணோம்.

எங்கள் வயல்வெளி வரைந்த

ஓவியம் காணோம்.

நதிகள் சொன்ன கதைகள் இல்லை!

காற்றில் தூவிய உணர்வுகள் இல்லை!

எங்கள் தருக்கள் தந்த கருக்கள் காணோம்.

பறிபோனது எங்கள் இயற்கையம், நாடும்

எழுதத் தூண்டும் இயற்கை இன்றி

இயங்கத் தூண்டும் இயக்கம் இன்றி

கவிதை செய்வது கடினம்! கடினம்!


பஞ்சபூதங்களின்

பௌதீக வடிவம் நாம்.

பரிணாமத்தின்

உயிரியல் கவிதை நாம்.

நாம் நீராலானவர்கள்

நம் நீரை உயிர்ப்போம்.

நாம் நிலத்தாலானவர்கள்

நம் நிலத்தை விதைப்போம்.

நாம் நெருப்பாலானவர்கள்

நம் தீயை வளர்ப்போம்!

உயிர் அத்தனையும் உசுப்பி விடும்

காற்றின் உணர்வு

நம் கவிதையில் தொடங்கும்

நாம் சும்மாயிருக்க முடியாது

ஏனெனில்

நாம் காற்றால் ஆனவர்கள்!

எதுவும் சும்மாயில்லை இயற்கையில்


கரைகள் சும்மா இருந்தாலும்

அலைகள் விடுவதாயில்லை

போய் விவாதிக்க அழைக்கிறது.


பூக்கள் மூடிக்கொண்டாலும்

காற்று விடுவதாய் இல்லை

போய் பேசச்சொல்லி அவிழ்க்கிறது


நதிகள் ஒதுங்கிப் போனாலும்

வயல்கள் விடுகிறதா?

போய்வாய்க்கால் வழியே இழுக்கிறது.


தண்ணீர் நாக்கால்

உயிரொலி எழுப்பி

மலைகளின் மவுனம்

அருவிகள் கலைக்கும்.

அசைந்து கொடுக்காத

மண்ணின் பிடிவாதம் எங்கும்

மரங்கள்

தன் வேர்களை இறக்கும்.


நிலம் சும்மா இருந்தாலும்

மழை விடுகிறதா?

வீழும் துளிகளின் விமர்சனத்தால்

மேடு, பள்ளங்கள் காட்டி நிற்கும்.

புல்லின் நுனியிலும் போய் எழுதி

புதிய கவிதைகள் பனித்திருக்கும்.


சாரல் காற்றோ

மறைப்பினை விலக்கி

பதுங்கிய முகங்களை

பரிகசிக்கும்.

காரிருளின் கர்வத்தை

மின்னல் உதடுகள் எச்சரிக்கும்.

ஊரைவிட்டு ஒதுங்கி

தான்மட்டும் தனியே

பத்திரமாய் இருப்பதாய்

கற்பனையில் இருக்கும்

ஒற்றைப் பனையின் தலையில்

வந்து விழும் இடி.


அட! தண்ணீரும் தரையும்

தான் பாட்டுக்கு கிடந்தாலும்

அடியில் சும்மா இருக்குதா

இந்தப் பாறைகள்.

தாங்கொணா அழுத்தத்தில்

தான் நகர்ந்து

நீங்கொணா துயரத்தில்

நிலமெல்லாம் அதிர்வுகள்

சும்மா இருக்குதோ! எதுவும்

சுற்றிலும் பார்க்கிறேன்...


சிறகுகள் விரித்து காற்றினை முறித்து

திசைகளை வளைக்கும் பறவைகள்


கிளைகளை உரசி சிறுபொறி எழுப்பி

தீப்பழம் காய்க்கும் காடுகள்.


நீரைக்கிழிக்க நீளும் கூரிய கற்களை

கூழாங்கற்களாய்க் குலைத்துவிடும்

ஓடைகளின் முன்முயற்சி.


ஊமத்தம் இலைகளைப் பேசவைக்க

போராடும் பருவக்காற்று.


வரப்புகளைத் தாண்டிக் குதித்து

வாழத் துடிக்கும் குரவை. (மீன்)


புவியீர்ப்பு விசைக்குப் பொருத்தமாக

சிறகுகள் நீட்டி

காற்றின் மீது கால்களை ஊன்றி

கதிர்களைக் கொத்தும்

குருவியின் விடாப்பிடி


குளத்தில் விழுந்த நிலவை

இரவு முழுக்க எடுக்கப் பாய்ந்து

மேலும், கீழும்

தவித்துப் போகும் தவளைகள்.


இப்படி இயங்கியபடியே

ஒன்றுடன் ஒன்றாய்

நட்பும், முரணுமாய்

சும்மா இல்லாத சுழலின் அழகை

விலங்குகள் கூட விளங்கிக் கொண்டதாய்

இயற்கைக் காட்சிகள்

எடுத்துக் காட்டும்.

மனிதர்கள் நாம் உணர முடியாதா?


சும்மா இருப்பதே சுகம் என்று சொல்லும்

துறவிகளாவது சும்மா இருந்தானா?

மக்களின் மனங்களை கழிப்பறையாக்கி

முக்கியமானது மதமென்று

மூளைக்கு, மூளை முக்கி வைத்தான்.


ஏட்டு முதல் எஸ்.பி. வரை

ஜெயேந்திரன் முதல் அய்யப்பன் வரை

சும்மா இருக்கிறானா?

அப்பாவி பக்தனுக்கு

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை

ஆலயத்தின் தந்திரிக்கோ

விபச்சார விடுதியில் கட்டில், மெத்தை.

அடைக்கலம் தேடிப் போகும் பெண்களின்

உடல் சுகம் பற்றியே

ஒவ்வொருத்தனுக்கும் புலன் ஆய்வு.

சுற்றித் திரியும் ரவுடிகளின்

கும்பலை விடவும் பயங்கரமானது,

பற்றற்றிருப்பதாய்ச் சொல்லும்

துறவிகளின் தனிமை.

வேண்டுமானால்

எட்டிப்பாருங்கள் காஞ்சிபுரத்தை

தோண்டிப் பாருங்கள்

ஆதீனங்களின் மடத்தை.


சும்மா இருந்ததா அகிம்சை?

வெள்ளையனின் ஆயுதங்களை விடவும்

கொடூரமானது

காந்தியின் புன்னகை.

வேண்டுமானால்

உற்றுப் பாருங்கள் அம்பேத்கரின் எழுத்தை

தொட்டுப் பாருங்கள்

பகத்சிங்கின் கழுத்தை.


சும்மா இருக்குதா பார்ப்பன மதம்?

தர்ப்பை புற்கள்தானே

என்று விட்டு வைத்தோம்

அதுவோ! ஆடுகளை மட்டுமல்ல

நிலத்தையும் சேர்த்தே மேய்கிறது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்றால்

பிராமண வாயு

பிராண வாயுவை பழிக்கிறது.


சுரப்பற்றுப் போன காவிரி

கரப்பற்றுப் போன மாடுகள்

கோவில் நந்திக்குப் பால் அபிசேகம்


வரப்பற்றுப் போன வயல்கள் பசியில்

உறுப்பற்றுப் போன உடல்கள்

கண்டுகொள்ள ஆளின்றி

காய்கிறது தேசம்,

கையில் பாலும் அருகம்புல்லும்

இறைப்பற்று காட்ட

தெருவுக்கு தெரு பிரதோசம்


தாளிக்க எண்ணெயில்லை

சாமிக்கு ஆயில் மசாஜ்.

நம் சுயமரியாதையில் புல் முளைக்க,

சும்மா இருக்குதா பார்ப்பனியம்?


சும்மா இருக்குதா முதலாளித்துவம்?

தக்காளியை அழுகவைத்து

தற்கொலைக்கு விலையை வைத்து

தறியின் தக்களியை நிற்க வைத்து

நெசவாளி கிட்னிகளை விற்க வைத்து

வேலைக்கு ஏங்கும் இதயத்தை

கூலிக்குப் பிழிந்தெடுக்கும்.


வயிற்றுக்குள் வளரும் கருவையும்

வாட்டும் வேலைப்பளுவால்

வழித்தெடுக்கும் மூலதனம்.

சூளைக்குள் செங்கல்லாய்

சுடுகின்ற மனசெடுத்து சொல்லுங்கள்

சும்மா இருக்குதா முதலாளித்துவம்?


சிவகாசி சிவனே என்று இருந்தாலும்

ஐ.டி.சி. சும்மா இருக்கிறானா?

இந்திய உற்பத்தியை கருக்கும் வரை

எங்கள் கந்தகவெறி அடங்காதென

பன்னாட்டு தீக்குச்சிகள்

பசியெடுத்து அலைகின்றன.


உள்ளூர் உதடுகளை

விரட்டிப்பிடித்து சுரணை பொசுக்கும்

வெளிநாட்டு சிகரெட்டுகள்.


குடிப்பவன் கோலி சோடா கேட்டாலும்

கொக்கோ கோலா சும்மா இருக்கிறானா?

இந்திய நாக்குகளை நனைக்க

அமெரிக்க மூத்திரத்திற்கே அதிகாரம்.

இந்தியன் தாகத்தைக் குடிக்க

பெப்சிகாரனுக்கே பிரம்மதேயம்.


தறிகெட்ட

அனல்வாதம், புனல்வாதத்தால்

சமணர்களையும், பவுத்தர்களையும்

போட்டுத்தள்ளியது பார்ப்பனியம்.


தாராளமயத்தின் புனல்வாதத்தால்

சகலரையும் போட்டுத் தள்ளுகிறது

உலகமயம்.


சிலிண்டரில் மூச்சுவிட்டு

வெடிக்கும் பாட்டிலில் உதடு கிழிந்து

இரத்தத்தில் எசன்சு கலக்கும்

உழைப்பின் தீவிரத்தை

உங்களால் உணரமுடியுமா?

மிதிவண்டியின் இருக்கை தவிர்த்து

மிச்ச இடமெல்லாம்

திரவ உணர்ச்சிகளால்

கனக்கும் பாட்டில்கள்.

வீசும் எதிர்காற்றில்

விலா எலும்பும் வளையும்,

போக்ஸ் கம்பிகளாவது தப்பிக்கும்

போராடும் கால்களில்

வேரோடு பிடுங்கி வருவதுபோல்

பின் நரம்புகள் வளைந்து நெளியும்

அழுத்தம் தாங்காமல்

அடிவயிற்றிலிருந்து தப்பிக்கும் காற்று

வாயில் அலறும்.

மிதிக்கும் உள்ளூர் சோடா கம்பெனி தொழிலாளியே

கொதிக்கும் உன் குருதி தொட்டுச் சொல்

சும்மா இருக்கிறானா கொக்கோ கோலா?


கடன்காரர்களுக்குப் பயந்து

வழியை மாற்றி நடந்தாலும்

சும்மா இருக்கிறாரா அப்துல்கலாம்?

நிலைமை புரியாமல் வழியை மறித்து

கனவு காணுங்கள்! கனவு காணுங்கள்! என்கிறார்.

பாராளுமன்ற சுள்ளான்கள்

படுத்தும் பாட்டில்

படுத்து தூங்கவே வழியில்லை

கனவுகள் எங்கே காண்பது?

பகலையும் வாங்கலாம்

இரவையும் வாங்கலாம்

வேண்டிய கனவுகளை

விழிகளுக்கு வெளியே காணலாம்.

குஜராத் பிணங்களை கண்களில் புதைக்கலாம்

மண்டை ஓடுகள் கண்டு களிக்கலாம்

அதுக்கெல்லாம் கலாம்.

இரண்டு விழிகளில் இரண்டு கனவு

வர்க்கத்திற்கேற்ப வந்திடும் இரவு.

பிட்சா கார்னரில் நக்கி

மம்மி டாடியில் கக்கி

நைக்கியில் நடந்து கணினியில் விளையாடி

கடைசிவரை

இந்த மண்ணில் கால்படாமலேயே

சாண்ட்ரோவில் ஐ.ஐ.டி நுழைந்து

அப்படியே அமெரிக்க சத்யத்தில் கலந்து

ஏ.சி.யில் உறையும்

காம்ப்ளான் பேபியின் கனவுகள்.


இன்னொன்று:

நீராகõரத்தில் முகம் பார்த்து

நெடுந்தூரப் பள்ளிக்காக

தார்ச்சாலையில் கால் தோல் உரியும்.

வேகவேகமாய்

விறகொடித்துப் பழகிய கைகள்

நிறுத்தி பொறுமையாய்

ஆனா, ஆவன்னா லேசில்

வளைக்க வராமல் அடிவாங்கும்.

வழுக்கும் சிலேட்டை மாற்ற வழியின்றி அது

கறுக்கும் கையாந்தரையாலும், கரித்தூளாலும்.

நடக்கும் களைப்பில் படிக்க விடாமல்

விழிகளை தூக்கம் அரிக்கும்.

குடிக்கலாம் இரத்தமென நம்பி வந்த மூட்டைப்பூச்சி

பையனிடம் கிடைக்காமல் பாயில் கிடந்து துடிக்கும்.

பள்ளிக்குப் போகும் பைபாஸ் சாலையில்

பேருந்து சக்கரத்தில் மாட்டி

பிய்ந்து போன நண்பன்

கழண்டு விழும் காக்கிக் கால்சராயுடன் வந்து

கனவில் வீட்டுப் பாட நோட்டுக் கேட்க

பீதியில் உறைந்து அலறும்

பால்வாடிக் கனவுகள்.


எங்களால் தூங்க முடியவில்லை

கனவிலும் துரத்தும் பிணங்கள்!

எங்களால் விழிக்க முடியவில்லை

நினைவுகள் அறுக்கும் ரணங்கள்!

நாம் ஒதுங்கிப் போனாலும்

நாடு விடுவதாயில்லை

வர்க்கத்தை குறிவைத்து மறுகாலனியாதிக்கம்

வாழ்வை வழி மறிக்கையிலே

வெட்கத்தை விட்டு நாம் விலகி நடக்கலாமா?

இருக்கிறார்கள் சிலர்

சமூகத்தில் இருந்துகொண்டே

இதில் சம்மந்தம் இல்லை என்று.

இவர்கள் தன் வீடு எரிந்தால்

தன்னை மட்டும் அழைக்காமல்

தஞ்சாவூரையே அழைப்பார்கள்.

சாலையில் நகம் பெயர்ந்தால்

தன்னைத் திட்டாமல்

திருச்சியையே திட்டுவார்கள்.

உரைப்பவர்களும் உண்டு!

ஊருக்குப் பிரச்சினை என்றால்

உனக்கேன் வியர்த்து வடிகிறது?

உரைப்பவர்களும் உண்டு.

உண்மைதான்

பிணங்களுக்கு வேர்ப்பதில்லை.

பொதுநலத்திற்காக வாழ்ந்தவர் பிணத்திலும்

புழுக்கள் உணர்ச்சி தேடும்.

சுயநலத்தில் வாழ்ந்தவன் முகத்தை

மலத்தில் மொய்க்கும் ஈக்களும்

வெறுத்து ஓடும்.


சுயநலமா? பொது நலமா?

எந்த முகம்? உங்கள் சொந்த முகம்?

தெரிவு செய்யும் காலமிது!

சொந்த முகம் காண்பதற்கு

உதவி செய்யும் கவிதை இது.


எல்லாத் திசையிலும்

இனப்பெருக்க பாடல்கள்

வழிநெடுக வன்புணர்ச்சிக் கவிஞர்கள்.

படிக்காசுப் புலவர்களை

வழிநடத்தும் காலச்சுவடுகள்.

சீட்டுக்கவிகளுக்கு ரூட்டுக் கொடுக்கும்

உயிர்மைகள்,

குலைக்கும் நாய்களும்

குலை நடுங்கி ஓடும் இப்படி எழுதிப்

பிழைக்கும் நாய்களை

எதிரில் பார்த்தால்.

உணர்ச்சிகளை சுரண்டுவதைவிட

மோசமான சுரண்டல் உண்டா?

இலக்கியத்திலும் இந்த

இழிவான சுரண்டலை எதிர்ப்போம்.

கவிஞர்கள் என்பதால் மட்டுமல்ல

உழைக்கும் மக்களின் உறவுகள் என்பதால்

உங்களுடன் பேச வந்தோம்.


ஏட்டிலடங்காத கருத்துக்கள் நாங்கள்

எழுத்திலடங்காத உணர்ச்சிகள் நாங்கள்

வீட்டுக்கடங்காத சுயநலம் நாங்கள்

சும்மா இருப்போமா?

அம்மாவின் வயிற்றிலும்

சும்மா இல்லாதவர்கள் நாங்கள்,

இரத்தக்கனவினில் மெல்ல வளர்ந்து

இருட்டின் இமைகளை

எட்டி உதைத்து

வெளிச்சம் பார்க்க வெளியே வந்தவர்கள் நாங்கள்

நாடே இருட்டிக் கிடக்கையிலே

நாங்கள் சும்மா இருப்போமா?

பாட வாருங்கள் கவிஞர்களே!

பகலைப் பொழியும் கவிதைகளே


புல்லறுத்துப் பள்ளிக்குப் போய் பின்

நெல்லறுத்துக் கல்லூரிக்குப் போய்

விடுமுறையில்

கல்லறுத்து, மரமறுத்து கல்விப்

பசியறுக்கப் போராடி எங்கள்

பிறப்பறுத்து பின்தள்ளிய சமூகமே

இடம் ஒதுக்கு உயிர் கல்விக்கு

எனக் கேட்டால்?

செருப்புத் தைக்கும் கைகளுக்கு

படிப்பு ஒரு கேடா? என "சூ' துடைத்துக் காட்டி

சொல்லறுக்கும் பார்ப்பனக் கொழுப்பை

கருவறுத்து வீசாமல்

சும்மாயிருக்க முடியுமா?


உங்கள் செருப்பைத் தைத்ததனால்

பிறப்பொதுக்கி வெளியில் வைத்தீர்.

உங்கள் மயிரைச் சிரைத்ததனால்

நாங்கள் மட்டமான சாதியானோம்.

உங்கள் துணிகளை வெளுத்ததனால்

நாங்கள் அழுக்குப்பட்ட வம்சமானோம்

உண்மைதான்

சாதியில் புழுத்த

உங்கள் பிணத்தைத் தொட்டதனால்

தீட்டாய் போனோம்.

எதிர்த்துக் கேட்டவனுக்கு

வாயில் திணிக்கப்பட்டது மலம்

எதிர்க்காதவன் உடம்பிலோ

இரத்தமெல்லாம் மலம்.


மாட்டுத் தோலை உரிப்பவர்

சக்கிலி

மனிதத் தோலை உரிப்பவன்

சங்கராச்சாரியா?

சாதிவெறியன் சங்கமாய் இருக்கையில்

நீதி கேட்பவன் நீ மட்டும் அமைப்பின்றி

சும்மா இருக்க முடியுமா?


சிறீராமன் பெயரால்

எல்லாமும் நடக்கிறது.

இராமன் பிறந்த இடத்துக்காக

இசுலாமியப் பெண்களின்

பிறப்புறுப்புகள் வரை சொந்தம் கொண்டாடின

திரிசூலங்கள்.

அவர்கள் பெண்கள் என்பதற்காக அல்ல

இசுலாமியர்கள் என்பதற்காக

கற்பழிக்கப்பட்டார்கள்.

குழந்தைகளின் சிரிப்பை

உங்களால் கொளுத்த முடியுமா?

மழலைகள் உதடுகளையும்

கிழித்துப்போட்டன இராமஜெயங்கள்.

கருவுக்குள்ளும்

கட்டாரி வீசும் பார்ப்பன மதவெறி

தெருவுக்கு வந்து போராடாமல்

சும்மா இருக்க முடியுமா?


மதம் மாறி காதலித்ததற்காக

ஏழை முசுலீம் பெண்ணை

இழுத்துவைத்து மொட்டையடிக்கும்

முசுலீம் மதவெறி.

எரிக்கிறது பாலஸ்தீனத்தையும், லெபனானையும்.

ஈராக்கியப் பெண்களை இழுத்துவைத்து

சதைவெறியில் கிழிக்கிறது அமெரிக்கா!

அவனுக்கு மதம் மாறி எண்ணெய் விற்று தன்னை விற்று

செழிக்கிறது சேக்குகளின் மணிமுடி.

இனத்துரோக சேக்குகளின்

மயிரைப் புடுங்க மாட்டாமல்

பள்ளிவாசல் கட்ட அவனிடமே

பணம் புடுங்கும் வக்கிரங்கள்.

எல்லாமும் நடக்கிறது

அல்லாவின் திருப்பெயரால்.

ஐந்து வேளை தொழுக

பள்ளிவாசலுக்கு வா!

ஐந்து வட்டிக்கு பணம் வாங்க

பைனான்சுக்கு வா!

ஆயிரமாயிரமாய் சூதாட

பங்குச் சந்தைக்கு வா!

எல்லாமும் நடக்கிறது

அல்லாவின் திருப்பெயரால்

ஏழை வர்க்கத்தை

மதத்தின் பெயரால் ஏறி மிதிப்பதை

எதிர்க்க வர்க்க மார்க்கம் சேராமல்

ஒரு "மார்க்கமாய்' ஒதுங்க முடியுமா?


பல வழிகளிலும் பணம் வருவதால்

பளிங்கு மண்டபத்திலிருக்கும்

அவளுக்கென்ன?

எப்போதும் ஆரோக்ய மாதாதான்.


பருக்கைக்கு வழியின்றி

வாசலில் பிச்சையெடுக்கும்

இவர்கள்தான்

குட்டங்குளி மாதா

டி.பி. மாதா


ஏசுவின் அப்பத்தைத் தவிர

அவர்களுக்கு

எதிலும் பங்கில்லை.


எதிர்த்துக் கேட்டால்

பாவத்தின் சம்பளம்

கட்டாயம் உண்டு.


சிலுவை செய்த செலவையும்

பங்குத் தந்தைகள்

ஏசுவின் கணக்கிலேயே எழுதி விடுவதால்

மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த ஏசு

மூர்ச்சையாகிப் போனார்.

பாருங்கள்! ஆலயத்தில் அவர் கிடக்கும் பாவனையை.

பரிசுத்த ஆவிகளும்

அணி, அணியாய் சேருகையில்

பார்த்துக் கொண்டு தனியுடம்பாய்

நாம் மட்டும் சும்மா இருக்க முடியுமா?


இரண்டாயிரத்தில் ஏசு வரப்போகிறார்

இது கிறிஸ்தவப் பிரச்சாரம்

இரண்டாயிரத்து இருபதில்

இந்தியா வல்லரசாகப் போகிறது

இது கிருத்துருவப் பிரச்சாரம்.

நல்லரிசி கொடுக்கவே வக்கில்லை

இந்தியா வல்லரசாகப் போகுதாம்

சில ஊரில் ரேசன் அரிசியில் வடித்த சோற்றை

நாய்களும் தின்ன மறுக்குது

அதைக் கழனிப் பானையில் போட்டால்

மாடும் மனிதனை வெறுக்குது

எடுத்துக் குப்பையில் போட்டால்

குடும்பத்தையே கோழி முறைக்குது

கோழிகளே கோபித்துக் கொள்ளாதீர்கள்

2020இல் இந்தியா வல்லரசாகிவிடும்.


கிட்டிவைத்து எலிகளைப் பிடிக்கிறான்

கீழத்தஞ்சை விவசாயி

வயல்களைக் காக்க அல்ல

வயிற்றுப் பசியைப் போக்கிக் கொள்ள

எலிகளே எங்கள் அரசியலை நோண்டாமல்

இரைப்பையில் காத்திருங்கள்

இந்தியா வல்லரசாகப் போகிறது!


விளைவித்த வெங்காயம்

விலைபோகாமல்

அழுகிப் போகும் அவலம் தாங்காமல்

நிலைகுலைந்து சாகும் சிறுவிவசாயி

அழுகும் பிணங்களே மிச்சமிருங்கள்

2020இல் இந்தியா வல்லரசாகப் போகிறது!


கம்பி வளைக்க நகரத்துக்கு வந்து

கட்டிட, உச்சியிலிருந்து கீழே விழுந்து

சாக்குமூட்டையில் ஒரு பிணம்.

சாவதற்கு முன் ஏதோ சொல்ல வந்ததாய்

எஞ்சியிருக்கும் அதன் விழிகளில் மட்டும்

ஏதோ ஜாடை தெரியுது

குறிப்பறிந்தவர்களே கொஞ்சம் இருங்கள்!

இந்தியா வல்லரசாகப் போகுது!


பார்க்க முடியாத கொடுமைகளால்

ஏசுவே எட்டி ஓடினாலும்

பாவிகளை இரட்சிக்க

ப.சிதம்பரம் இருக்கிறார்.

நல்லவர்களே உங்களுக்கு

நக்சல்பாரிகளை விட்டால்

வேறு வழியில்லை.


பயங்கரம் எது?

பாட்டி சொன்ன கதைகளில் வரும்

பேய்களின் அலறல்களா?

இல்லை

நாட்டில் நடக்கும் கொடுமைகள் கண்டும்

சும்மா இருப்பவர்களின் மௌனங்களே!


ஆபத்து எது?

அம்மா சொன்ன கதைகளில்

நம் சோற்றைப் புடுங்க வரும்

அஞ்சு கண்ணர்களா?

இல்லை

நம் நாட்டையே புடுங்க வரும்

தனியார்மயம் தாராளமயம் உலகமயம்

எனும்

பன்னாட்டுக் கம்பெனிகளின்

மூன்று கண்ணர்களே!


பார்த்துக் கொண்டு

சும்மாயிருக்க முடியுமா?

மீன்வலையைக் காயப்போட்டால்

கடற்கரைகள் நாறுதாம்

மீனவர்களை விரட்டிவிட்டு

தனது ஆணுறைகளை

அவிழ்த்துப் போடுது தாஜ் ஓட்டல்.

நமது இறையாண்மையின் முகத்தில்

வீசப்படும் ஆணுறைகளை

எதிர்த்துப் போராடாமல்

நாம் கடலின் முகத்தில் முழிக்க முடியுமா?


பல்லுயிர்க்கெல்லாம் தாய்போல

பரிந்து ஓடும் எங்கள் தõமிரவருணி.

பக்கத்தில் தாகம் கொண்டு அலையும்

கங்கைகொண்டான் கழனி.

ஊர்போய்ச் சேர

கரையேரத் துடித்து

தவிக்குது ஆறு

நம் தாய்முகம் தழுவிய ஆறு இது

அதைத் தட்டிப் பறிக்கும் அநியாயம் பாரு!

கூசாமல் குழாயில் உறிஞ்சி

காசுக்கு விற்கும் கொக்கோ கோலா

நம் தாயின் மார்பை உறிஞ்சுபவனை

உதைத்து விரட்ட பதைத்து வராமல்

சும்மாயிருக்க முடியுமா?


எங்களுக்கு கொக்கோ கோலா வேண்டாம்

ஆற்றைக் கொடு!

எங்களுக்கு வலைகள் வேண்டாம்

கடலைக் கொடு!

எங்களுக்கு இலவச அரிசி வேண்டாம்

விவசாயத்தை கொடு!

எங்களுக்கு விபூதி வேண்டாம்

கருவறை கொடு!

எங்களுக்கு தரிசனம் வேண்டாம்

தில்லைக் "கோயில்' கொடு!

சொர்க்க வாசல் வேண்டாம்

சிறீரங்கம் கொடு!

எங்களுக்கு சலுகைகள் வேண்டாம்

அதிகாரம் கொடு!


சும்மாயிருக்க மாட்டோம் நாம்!

சுவாசம் நமக்கு உயிர்ப்பழக்கம்

அதுபோல் சும்மாயின்றி

இயக்கம் இருந்தாலே

யார்க்கும் உயிர் இருக்கும்


கலைஞன், விவசாயி, தொழிலாளி

மாணவன், நெசவாளி, அறிவாளி

அனைவர்க்கும் பொது எதிரி

நாடு நமதல்ல எனப்

பழிக்கும் பன்னாட்டுக் கம்பெனி


போராடும் உழைக்கும் மக்கள்

ஏற்கெனவே வீதியிலே

அவர்கள் தோளோடு தோள் நிற்க

முன்செல்வோம் கவிதைகளே!


எத்தனை பேர் நம்மை நம்பி

ஒப்படைத்த கனவு இது

எத்தனை பேர் நம்மை நம்பி

கொடுத்துச் சென்ற உணர்ச்சி இது.


கண்கள் உறங்கலாம்

இரத்தம் உறங்குமோ!

அளவுக்கதிகமாகவே சிந்திய இரத்தம்

இனி புரட்சிக்கும் குறைவாக

வேறெதை விரும்பும்?

முன்னோர்கள் கனவுகள்

நம் எல்லோர் கவிதையிலும்

முன்னோர்கள் துடிப்புகள்

நம் எல்லோர் இதயத்திலும்

கவிதை

எழுதிக் காட்டுவது மட்டுமல்ல

இயங்கிக் காட்டுவோம்.

Wednesday, May 9, 2007

குஐராத் முஸ்லீம் படுகொலைகள்

குஐராத் முஸ்லீம் படுகொலைகள்




Tuesday, May 8, 2007

எனது முழுக் குடும்பமும் படுகொலை முயற்சியிலிருந்து உயிர் தப்பியுள்ளது

எனது முழுக் குடும்பமும் படுகொலை முயற்சியிலிருந்து உயிர் தப்பியுள்ளது

பி.இரயாகரன்
08.05.2007


7.5.2007 அன்று அதிகாலை இரண்டு மணியளவில் இந்த முயற்சி நடந்தேறியுள்ளது. எனது வீட்டின் அருகில் வீட்டை அண்டி நின்ற ஒரு பெரிய லொறிக்கு தீ வைக்கப்பட்டதன் மூலம், இந்த நிகழ்வு அரங்கேறியது. இந்த தீயில் இருந்து நாம் உயிர் தப்பியது அதிஸ்ட்டம் தான்.



1. இந்த தீயை உரிய நேரத்தில் பொலிஸ் உட்பட தீயணைப்பு படையினர் கண்டறிந்தன் மூலம், தீ மேலும் பரவாது தடுத்து அணைக்க முடிந்தது.


2. காற்று வீசிய திசை வீதியை நோக்கியும், வீட்டின் திசைக்கும் நடுவாக வீசியதால் குறித்த நேரத்தில் முழுமையாக வீடு எரிவது தடுக்கப்பட்டது.


குறித்த தீ எமது வீட்டுக்கு மேலாகவே எழுந்து எரிந்தது. இந்த நேரம் நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தோம். பொலிசார் வந்து எம்மை அவசரமாக நித்திரையில் இருந்து எழுப்பும் வரை, இதை நாம் அறிந்திருக்கவில்லை. இப்படி அங்கு வசித்த மற்றொரு குடும்பமும் வெளியேற்றப்பட்டது. மற்றைய வீடுகளில் ஆட்கள் இருக்கவில்லை.



நாம் வீட்டை விட்டு வெளியேறிய பின், இரண்டு மணித்தியாலங்களாக தீயை அணைக்க கடுமையான போராட்டத்தை தீயணைப்பு பிரிவினர் நடத்தினர். பொலிசார் மற்றும் தீயணைக்கும் படையினர் வீடு எரியலாம் என்று கருதி, பலமுறை பூட்டப்பட்டிருந்த (ஆட்கள் எவரும் அன்று இருந்திராத வீட்டில்) வீட்டில் யாரும் ஆட்கள் அகப்பட்டிருக்கின்றனரா என்பதை பலமுறை சோதிக்க முற்பட்டனர்.


தீ பரவுவதை தீயணைக்கும் பிரிவு கட்டுப்படுத்தியதன் மூலம், எமது வீட்டு யன்னல் ஒன்று மட்டுமே எரியுண்டதோடு நின்று போனது. வேறு சில வீடுகளின் வீட்டு யன்னல்களும் தீயால் எரியுண்டது.


இந்த நிகழ்வின் பின்னணி, ஒரு அரசியல் படுகொலை முயற்சியா என்று எம்மை சந்தேகிக்க வைத்துள்ளது?


பொதுவாக தேர்தலின் பின் எழும் தேர்தல் வன்முறையை சாதகமாக பயன்படுத்தி இந்த தீ வைப்பு அரங்கேற்றப்பட்டதா என்ற சந்தேகம் எம்முன் உள்ளது. இது வெளிப்படையானது. இந்த சந்தேகம் புலிகளை நோக்கி எழும்பியுள்ளது. இந்த வகையில் இதன் அடிப்படையிலேயே சம்பவத்தை பொலிசாரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளோம்.


பொதுவான தேர்தல் வன்முறை எம் பகுதிகளில் நடப்பது இல்லை என்பதும், இது போன்ற சூழல்களை பயன்படுத்தி அராஐகம் செய்வதில் புலிகள் கைதேர்ந்தவர்கள் என்பது, எமது சந்தேகத்தை முன்வைக்க போதுமான காரணமாகும். சாதாரண விபத்து போல் சித்தரித்து கொலைகளை நடத்துவதில், புலிப் பாசிட்டுகள் கைதேர்ந்த திறமைசாலிகள்.


இது போன்ற சம்பவங்களை பாரிசில் அரசியல் ரீதியாக புலிகள் செய்தவர்கள். குறிப்பாக 1990க்கு முன்பு புலியல்லாத அலுவலக வாசல்களில், இரவில் புலிகளால் தீ வைக்கப்பட்டது. பாரிசில் புலிகள் நடத்திய படுகொலைகள் ஈறாய் பல சம்பவங்கள் இப்படி நடந்தேறியுள்ளது.


ஒரு விடையத்தில் தாம் சம்பந்தப்படாத வகையில் அதைச் செய்வதில் புலிகள் கைதேர்ந்தவர்கள். மாபியா குழுவுக்குரிய, இரகசிய சதிக் கொலைகளை செய்வதில், அவர்கள் நன்கு பழக்கப்பட்டவர்கள். இயற்கை மரணமாக காட்டுவது அல்லது தாம் செய்யாத கொலையாக பின்னணிகளைச் சோடிப்பது அல்லது விபத்தாக உருவாக்குவது உட்பட, படுகொலைகளைச் செய்வதில் புலிகள் கைதேர்ந்தவர்கள். இந்த வகையில் புலிகள் இந்த தீ வைப்பில், சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை அவர்களின் படுகொலை அரசியல் எமக்கு உருவாக்கியுள்ளது.



இந்த வகையில் நாம் தீ வைப்புக்கு எதிரான பொது முறைப்பாட்டில், பொலிசாரிடம் எமது சந்தேகத்தைக் குறிப்பிட்டுள்ளோம்.


புலிகளை அரசியல் ரீதியாக விமர்சிப்பது என்பது எமது மரணங்களை தவிர்த்து அல்ல. மரணங்களின் நிழலை சதா முத்தமிட்டபடிதான், புலிகளின் மக்கள் விரோத பாசிச மாபியா நடத்தைகளை விமர்சிக்கின்றோம. அவர்கள் எம்மை பற்றி கொண்டுள்ள அபிப்பிராயம் வெளிப்படையானது. அவர்களைப் பொறுத்தவரையில் நாம் கொல்லப்பட வேண்டியவர் பட்டியலில் உள்ளவர்கள். அது எப்படி எங்கே என்பது தான், அவர்களின் தேர்வுகுட்பட்ட ஒன்றாகவுள்ளது.


பலமான இடைவிடாத இந்த கொலை முயற்சியில் இருந்து தப்ப, நாம் இடைவிடாது உணர்வு ரீதியான எச்சரிக்கையுடன் போராட வேண்டியுள்ளது. பல நெருக்கடிகள் ஊடாக, நாம் மக்களுக்காக அவர்களின் உரிமைக்காக போராடவேண்டியுள்ளது. இது எம் போன்றவர்களின் தவிர்க்க முடியாத வாழ் நிலையும் கூட. புலிகள் விரும்புவது நடந்துவிட்டால், அந்த மக்களுக்காக எமது மரணத்தை முத்தமிடத் தயாராகவே நாம் உள்ளோம். போராட்டம் தான் மகிழ்ச்சியானது. இதை விடுத்து கோழையைப் போல் ஓடுங்கி நசிந்து நாயிலும் கீழாக, ஒரு அடிமையாக வாழ்வது ஒரு வாழ்வா. உயிர் உள்ள வரையும் நிஜத்திலும், மரணத்தின் பின் மக்கள் மனங்களில், அவர்களின் சிந்தனை முறைகளில் இருந்து நாம் போராடுவோம். உண்மையை, மக்களின் உரிமையை கொலைகாரர்களால் தடுத்து நிறுத்தவே முடியாது.


Sunday, May 6, 2007

புலிகளும் ஆயுதத்தைக் கீழே போட்டால்!

புலிகளும் ஆயுதத்தைக் கீழே போட்டால்!


பி.இரயாகரன்
05.05.20007



முகம் தெரியாத தோழர் ஒருவர் எம்மை நோக்கி எழுப்பிய கேள்விகளும் பதில்களும், அரசியல் முக்கியத்துவம் கருதி பிரசுரிக்கின்றோம்.



1. புலிகளும் ஆயுதத்தை கீழே போட்டால் என்னாகும்? புலிகளுக்கு பதிலாக தங்களது தீர்வு என்ன?



2. புலிகள் வழி தவறானது என சொன்னால் எனது நண்பன் கேட்கிறான் சரி வேறு என்ன தீர்வு என்று? இந்த கேள்விக்கு என்ன பதில் நான் அளிக்க?



3. புலிகளின் பாசிசம் என்ற விசயத்தை பேச ஆரம்பித்ததும் இந்த கேள்வி வந்தால் என்ன பதில் சொல்லலாம்?



இவைகள் தான் கேள்விகள். ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய கேள்விகள். புலிகளை விமர்சிக்கும் போது அவர்களை ஆதரிப்போர், தமது அரசியலற்ற சொந்த குருட்டுத்தனத்தை அடிப்படையாகக் கொண்டு திருப்பியடிக்கும் தர்க்கமும் இதுவேயாகும்.



புலிகள் ஆயுதத்தை கீழே போட்டால் என்ன நடக்கும்? இதை நாம் இரண்டு கோணத்தில் பார்க்கமுடியும்.



1. புலிகள் ஆயுதத்தை கீழே போட்டால் தமழ் மக்கள் என்ன செய்வார்கள்? மக்கள் தமது கடந்தகால அவலங்களுக்காக புலிகளை பழிவாங்குவார்கள். இங்கு சாதாரண மக்களைக் குறிப்பிடுகின்றேனே ஒழிய, மக்களுக்கு அரசியல் ரீதியாக துரோகமிழைத்த எந்த துரோக குழுக்களையும் மக்களாக குறிப்பிடவில்லை. புலிகள் தமது வரலாற்றில் மக்களுக்கு இழைத்த கொடூரங்கள், கொடுமைகளை அடிப்படையாக கொண்டே இந்த எதிர்வினைகள் அமையும்.



அதே நேரம் இவற்றைக் கருவாக கொண்ட, உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்ட, எழுச்சி பெற்ற மக்கள் இலக்கியங்கள் உருவாகும். புலிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான முரண்பாடு என்பது, பகை முரண்பாடு தான். மக்களுக்கும் புலிக்கும் இடையிலான உறவுகள், துப்பாக்கி முனையில் தான் நீடிக்கின்றது. துப்பாக்கிகள் இன்றி புலிகள் என்ற அமைப்பு உயிர் வாழவே முடியாத அரசியல் அவலம். அவர்களிடம் எந்த அரசியல் மொழியும் கிடையாது, பாசிசம் ஒன்றேயுள்ளது.



2. புலிகள் ஆயுதத்தை கீழே போட்டால் தமிழ் மக்களின் நிலை என்ன? சிங்கள பேரினவாதம் புலிகளின் கீழ் உள்ள மக்களையும், தனது பேரினவாதப் போக்கில் அடிமைப்படுத்தும். ஆனால் அதை மக்கள் அரசியல் ரீதியாக புரிந்து கொள்ளும் ஆற்றல் அற்றவராக இருப்பர். அதைத்தான் புலிகள் ஏற்படுத்தி வைத்துள்ளனர். யாழ்ப்பாணம் முதல் கொழும்பு வரை வாழும் தமிழ் மக்களின் நிலைமையே, எங்கும் பொதுவில் ஏற்படும். இராணுவ கெடுபிடி படிப்படியாக குறையும்.



தமிழரின் உரிமைகள் எதுவும் வழங்கப்படமாட்டாது. தமிழ் மக்கள் அதைக் கோரப்போவதுமில்லை. தமிழரின் உரிமைகள் என அனைத்தையும் புலிகளே அரசியல் ரீதியாக அழித்துவிட்ட நிலையில், தமிழரின் உரிமை என்னவென்று தெரியாத பாசிச அறிவே தமிழரின் அறிவாகிவிட்டது. தமிழ் மக்கள் தமது சொந்த வாழ்வியல் உரிமைகளையே, புலிகளிடம் இழந்துவிட்டனர். அவையே எதுவென தெரியாத அடிமை நிலையில், பேரினவாதத்திடம் எதைத்தான் புதிதாக கோரமுடியும். ஒருபுறம் தமிழ் மக்களின் உரிமைகள் அனைத்தையும் பறித்துவிட்ட புலிகள், மறுபுறமாக அதை பேரினவாதத்திடமா கோர முடியுமா?



புலிகள் கோரும் உரிமை என்பது அஞ்சி உயிர்வாழ்வது, தமிழன் தமிழனை ஆளுதல் தான். அதாவது புலிகள் தமிழ் மக்களை அடக்கி ஆளுதல். தமிழ் மக்களின் முன்னுள்ள புதிர், ஏன் தமிழன் தன்னை அடக்கி ஆள வேண்டும் என்பதுவே. அரசியல் ரீதியாக தமிழ் மக்களால் புரிந்துகொள்ள முடியாத ஒன்று. மக்களை அரசியல் ரீதியாக புலிகள் தம் பின்னால் அணிதிரட்டவில்லை. அரசியல் இருந்தால் அல்லவா அது நடக்கும். புலிகள் ஆயுத முனையில், பாசிசத்தை அடிப்படையாக கொண்டு மக்களை அடிமைப்படுத்தி வைத்துள்ளனர். மக்கள் புலிகளில் இருந்து அன்னியமாகி, அதுவே இன்று பகை முரண்பாடாகிவிட்டது.



இதனால் புலிகள் ஆயுதத்தை கீழே போடமாட்டார்கள். மக்களைக் கண்டு சதா அஞ்சும் புலிகள், ஆயுதங்களின் மேல் காதல் கொண்ட மனநோயாளராகிவிட்டனர். ஆயுதமே அனைத்துமாகிவிட்டது. அதன் ஆகக் கூடிய உணர்வு சார்ந்த அதன் மொழியோ (பெண்ணைக் குறிக்கும் கெட்ட வார்த்தைகள்) தூசணமாகும். இன்று பணத்தைக் கொண்டு உலகெங்கும் கோலாட்டம் போடுகின்றனர்.



ஆயுதத்தைக் கீழே போடுதல் என்பது புலிகளின் தற்கொலைக்கு ஒப்பானதே ஒழிய, அது மக்களின் அரசியல் தற்கொலையல்ல.



அரசியல் ரீதியாக மக்களை அடக்கியாளுவதை ரசிக்கும் அதிகார வெறிபிடித்தவர்கள், ஆயுதத்தை தானாக ஒருநாளும் கீழே போடுவது கிடையாது. போட்டுவிட்டால் என்று விவாதிப்பது, விமர்சனத்தை குறுக்கு வழியில் தவிர்ப்பதற்காகத் தான்.



ஆயுதத்தை தானாக கீழே போடாத ஒரு கற்பனை விடையத்தைப் பற்றி விவாதிப்பதன் நோக்கம், பாசிசத்தை நியாயப்படுத்தத்தான். ஏன் புலிகளின் பாசிசத்தை நிறுத்தக் கோரி விமர்சிக்காமல், விமர்சிக்கின்றவர்களைப் பார்த்து ஆயுதத்தை கீழே போட்டால் என்று விவாதிக்கின்றனர். இது உண்மையில் மக்களின் மேலான பாசிச புலி நடத்தைகளை தக்கவைப்பதாகும். மாற்றத்தை விரும்பாத, மக்களின் உரிமைகளை அங்கீகரிக்க மறுக்கும் கற்பனையான எடுகோளில் நடத்தும் விதண்டாவாதம்.



மக்களைச் சுரண்டித் தின்னும் அதிகார வர்க்கங்கள், தமது சொந்த வர்க்க நலனுடன் தான் அனைத்தையும் கையாளும். வர்க்க நலன்களை அடிப்படையாக கொண்டு தான், பாசிச சக்திகள் இயங்கும். இதற்கு இசைவாகத்தான் ஆயுதத்தை பற்றிய முடிவை எடுக்கும்.



பதிலாக என்ன தீர்வு? தீர்வு எப்போதும் எங்கும் மக்களின் நலனை அடிப்படையாக கொண்ட மாற்றுப் போராட்டம் தான். மக்களுக்கு வெளியில் விடுதலைப் போராட்டம் என்பது பொய்யானது. மக்கள் தமக்காக, தமது சொந்த விடுதலைக்காக போராடுவது தான் போராட்டம். இதை மறுக்கும் புலிகள் தமது ஆயுதத்தை கீழே போட்டால், மக்கள் தமது விடுதலையின் ஒரு படியை எட்டுவர். புலிகளின் கையில் உள்ள ஆயுதம் தான், மக்களின் உண்மையான விடுதலைப் போராட்டத்தை தடுக்கின்றது என்பது உண்மையல்லவா. புலிகளின் ஆயுதம் சிங்கள பேரினவாதத்தை புலிகளின் சொந்த நலனில் இருந்து எதிர்க்கின்ற அதேநேரம், தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தையும் அது எதிர்க்கின்றது.



புலிகளின் ஆயுதம் ஏந்திய வன்முறையும், அதனை நியாயப்படுத்தலும் மக்களுக்கு எந்த விடுதலையையும் பெற்றுத் தருவதில்லை. தமிழ் மக்களின் எஞ்சிக்கிடக்கும் உரிமைகளையே புலிகளும் பேரினவாதிகளும் சேர்ந்து அழிக்கின்றனர். இந்த வகையில் அதை நாம் ஆதரிக்க முடியாது. மாறாக கீழ் இருந்து மக்களை அரசியல் ரீதியாக அணி திரட்டுவது தான் மாற்று வழி. இதை விட தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கக் கூடிய எந்த மாற்று அரசியல் வழியும் கிடையாது.



இது சாத்தியமா? இதுவும் புலிகளும் புலி அல்லாத புலியெதிர்ப்பாளர்களும் எழுப்பும் கேள்விதான். இந்த இரு பிரிவுகளின் அரசியல் நோக்கமும், தமது வர்க்க நலனில் இருந்து மக்களை கீழே இருந்து தட்டியெழுப்பும் போராட்ட வழியை நிராகரிப்பது தான்.



மக்களுக்கான எந்தப் போராட்டமும், எவ்வளவு தான் நெருக்கடிகள் இருந்தாலும் கீழ் இருந்து தான் கட்டமுடியும். மக்களுக்கு வெளியில் மக்களுக்கான போராட்டங்கள் வீங்கி வெம்பி வெடிப்பதில்லை. மக்கள் தமக்காக தாமே போராடவேண்டும். மக்களின் சொந்த விடுதலைப் போராட்டம் என்றால், அப்படித் தான் அமையும். இந்த அரசியலை எடுத்துச் செல்வது தான் சரியான அரசியல்.



இதை விடுத்து மற்றொரு பிரதானமான எதிரியைக்காட்டி மறுபுறத்தில் பாசிசத்தை ஆதரிக்க முடியுமா? முடியாது. பாசிசம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் மேலான, சுரண்டு வர்க்கத்தின் அதிவுயர்வான ஒடுக்கும் ஒரு சுரண்டல் கருவி. மக்களுக்கு எதிரான, அவர்களை அடிமைப்படுத்துகின்ற எதையும் ஆதரிக்க முடியாது. நாங்கள் மக்களுடன் நிற்கப் போகின்றோமா? அல்லது மக்களை அடக்கும் பாசிட்டுகளுடன் நிற்கப் போகின்றோமா? அடுத்து இரண்டு பாசிச சக்திகள் தமது சொந்த நலனுக்காக மக்களை அடிமைப்படுத்தியபடி, மோதிக் கொள்வதில் நாம் எந்தப் பக்கம் என்று கேட்பது அறிவுள்ள கேள்வியாக அமையுமா? நாங்கள் மக்கள் பக்கத்தில் நின்று, இரண்டு பாசிசத்தையும் எதிர்க்கும் அரசியல் நேர்மை எமக்கு உள்ளதா என்று உரசிப் பார்க்க வேண்டும்.



பாசிசத்தை எதிர்த்துப் போராட வேண்டும். மக்களின் அரசியல் பொருளாதார நலனுக்காக போராட வேண்டும். மக்களுக்கு வெளியில் உள்ளவற்றை எல்லாம், ஏன் நாம் ஆதரிக்க வேண்டும்?



புலிகள் ஏன் மக்களுக்காக போராடக் கூடாது? இதை ஏன் பொதுவில் நாம் கேட்பதில்லை.? அதை செய்யக் கோரிய அரசியல் விமர்சனம் தான், சரியான மக்கள் போராட்டத்தை எடுத்துக் காட்டும், சரியான போராட்டத்தை தெளிவுபடுத்தும். இதை சுயமாக செய்வது தான் நேர்மையான அரசியல். இதன் போது சரியான போராட்டத்தை அடிப்படையாக கொண்ட சுயமான அணிதிரட்டல் நிகழும். மறுபக்கத்தில் புலிகளிலும், துரோகக் குழுக்களிலும் உள்ள மக்களின் விடுதலையை நேசிக்கும் பிரிவை, மக்களின் விடுதலைக்கு எதிரான சக்திகளுக்கு எதிராக அணிதிரட்டும். மக்களுக்கான போராட்டம் உள்ளிருந்தும், வெளியிருந்தும் நடப்பதற்கு ஏதுவாக, மக்களின் விடுதலைப் போராட்டத்தை சரியான அரசியல் பொருளாதார ரீதியில் வெளிப்படுத்துவது இன்றைய வரலாற்றுக் கடமை.