தமிழ் அரங்கம்

Saturday, May 5, 2007

அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச் சுரைக்காய்கள்

சட்டங்கள், ஆணையங்கள், நடுவர்மன்றங்கள், திட்டங்கள்...அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச் சுரைக்காய்கள்


1980ஆம் ஆண்டு காடுகள் (பாதுகாப்பு) சட்டம் என்ற பெயரில் மத்திய அரசு ஒரு புதிய சட்டத்தை நிறைவேற்றியது. அதன்படி 1980ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதிக்கு முன்பிருந்து காடுகளில் வாழ்ந்து வருவதாக நிரூபிக்க முடியாதவர்கள் எல்லாம் ""ஆக்கிரமிப்பாளர்கள்'' என்று அறிவிக்கப்பட்டார்கள்.



அதைத் தொடர்ந்து, ""ஆக்கிரமிப்பாளர்களை'' எல்லாம் வெளியேற்றும்படிக் கோரி ""சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்'' எனப்படுவோர் உச்சநீதி மன்றத்தை அணுகினர். அதை ஏற்ற உச்சநீதி மன்றம் 1980க்குப் பிந்தைய எல்லா ஆக்கிரமிப்பாளர்களையும் வெளியேற்றும்படி உத்திரவிட்டது. அத்தீர்ப்பின் அடிப்படையில் 20022003 ஆகிய ஓராண்டில் 1.68 இலட்சம் குடும்பங்களை வாஜ்பாயி தலைமையிலான அரசாங்கம் வெளியேற்றியது.



பட்டியலினப் பழங்குடி மக்களின் வெளியேற்றத்தைத் தடுத்து நிறுத்தப் போவதாக வாக்களித்து ஆட்சிக்கு வந்த காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இடதுசாரிக் கூட்டணி ஆகியவை தமது குறைந்தபட்ச பொதுத் திட்டத்தில் அவ்வாறான ஒரு அம்சத்தைக் குறிப்பிட்டிருந்தன. அதைத் தொடர்ந்து, காடுகளில் இருந்து பழங்குடி மக்கள் மற்றும் காடுகளைச் சார்ந்து வாழும் வனவாசிகளை வெளியேற்றுவதைத் தடுப்பது, அதற்காக அவர்களுக்கு காட்டு நிலங்கள் மற்றும் விளைபொருட்கள் மீதுள்ள 14 உரிமைகளை நிலைநாட்டுவது என்ற பெயரில் ஒரு மசோதாவை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டு வந்தது. ""உண்மையில் அந்த மசோதா பழங்குடி மற்றும் காடுகளைச் சார்ந்து வாழும் மக்களை வெளியேற்றும் நோக்கத்தைக் கொண்டிருந்தது'' என்கிறார்கள் காங்கிரசு தலைமையிலான அரசின் முக்கிய ஆதரவாளர்களான "இடதுசாரி'க் கூட்டணியினர். முக்கியமாக நான்கு குறைபாடுகள் முதலில் கொண்டு வந்த மசோதாவில் இருந்தன. காடுகளில் வாழும் பழங்குடி அல்லாத மக்களின் உரிமைகள் சேர்க்கப்படவில்லை; காடுகளில் வாழும் பழங்குடி அல்லாத மக்கள் உரிமை பெறுவதற்குத் தகுதியானவர்களாகக் கருதப்படும் காலவரையறை; கிராமமக்கள் சபையின் பாத்திரம் குறிப்பிடப்படவில்லை; காடுகளில் வாழும் மக்கள் விவசாயம் செய்வதற்காக 2.5 ஹெக்டேர் என்ற உச்ச வரம்பு.



இந்தக் குறைபாடுகளைக் சுட்டிக் காட்டி ஐ.மு.கூட்டணி அரசு கொண்டு வந்த மசோதாவை நாடாளுமன்றக் கூட்டுக் கமிட்டியின் பரிசீலனைக்கு அனுப்பக் கோரி, இடதுசாரிக் கூட்டணி அதில் வெற்றியும் கண்டது. அதன்படி அமைக்கப்பட்ட கமிட்டி, பழைய மசோதாவின் மீது ஏழு பரிந்துரைகளை முன் வைத்தது. நாடாளுமன்றக் கூட்டுக் கமிட்டியின் பரிந்துரைகளை அப்படியே ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக, அவற்றை அமைச்சர்கள் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பியது, ஐ.மு.கூட்டணி அரசு.



நாடாளுமன்றக் கூட்டுக் கமிட்டியின் பரிந்துரைகளை அடிப்படையிலேயே நிராகரித்து விட்டு, காட்டிலாகா அதிகார வர்க்கம், அந்நிய பன்னாட்டுத் தொழில் கழகங்கள் மற்றும் உள்நாட்டுத் தரகு முதலாளிகள் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் பல திருத்தங்களை அமைச்சர்கள் குழு புகுத்தியது. ""பழங்குடியினர் மற்றும் பாரம்பரியமாக வனத்தைச் சார்ந்து வாழும் மக்களின் (காடுகளின் மீதான உரிமைகளை அங்கீகரிக்கும்) சட்டம் 2006'' என்று பெயரிடப்பட்டிருக்கும் இச்சட்டத்தில் உள்ள பெயரளவிற்கான உரிமைகளையும் நீர்த்துப் போகச் செய்யும் வகையில் அமைச்சர்கள் குழுவின் திருத்தங்கள் அமைந்துள்ளன.



இடதுசாரிக் கூட்டணிக் கட்சிகளின் முயற்சியால் கொண்டு வரப்பட்டுள்ள இச்சட்டம் பழங்குடி மக்களின் வாழ்வில் "ஒரு திருப்பு முனை' என்று பீற்றிக் கொள்ளும் போலி மார்க்சிஸ்டுகள், விதிகள் உருவாக்கப்படும்போது இதிலுள்ள குறைபாடுகள் சரி செய்யப்படுவதற்கான வாய்ப்பிருக்கிறது என்று வாக்குறுதியளிக்கின்றனர். மக்களுக்குச் சாதகமான இச்சட்டத்தை விரைவில் அமல்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு, மலைவாழ் மக்களிடையே இச்சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, பழங்குடி மக்களின் நில உடைமையைப் பாதுகாப்பதற்காகப் பாடுபட வேண்டும்; இந்த வாய்ப்பைப் பயன்படுத்திப் பழங்குடி மக்களின் மத்தியில் இடதுசாரி சக்திகளின் வலுவைக் கூட்டி அமைப்பை விரிவுபடுத்த வேண்டும் என்றும் சவடால் அடிக்கின்றனர்.



ஆனால், ஆளும் வர்க்கங்களும் அவர்களின் அரசியல் பிரதிநிதிகளும் போலி மார்க்சிஸ்டுகளைவிட மிகவும் புத்திசாலிகள் மட்டுமல்ல, தந்திரசாலிகளாகவும் உள்ளனர். ஏகாதிபத்திய சேவை செய்வதையே தேசிய நலன்களுக்கான செயல்கள் என்றும், தமது சொந்த நலன்களையே பொதுமக்கள் நலன்களுக்கானவை என்றும் பசப்பி ஏய்ப்பதில் வல்லவர்கள். அவ்வாறுதான் பழங்குடிகள் மற்றும் பாரம்பரியமாகக் காடுகளைச் சார்ந்து வாழும் மக்களின் காடுகள் மீதான உரிமைகளை அங்கீகரிப்பதாகப் பெயர் கொண்ட இப்புதிய சட்டத்திலும் பல சட்டநுட்பத் தில்லுமுல்லுகளைச் செய்துள்ளனர்.



எடுத்துக்காட்டாக 1980ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட காடுகள் (பராமரிப்புச்) சட்டப்படி அந்த ஆண்டு அக்டோபர் 25ந் தேதிக்கு முன்பிருந்து காடுகளில் வாழ்ந்து வருவதாக நிரூபிக்க முடியாத வனவாசி மக்கள் ஆக்கிரமிப்பாளர்களாகக் கருதப்பட்டு வெளியேற்றப்படுவர். தற்போதைய சட்டம் இந்தக் கால வரையறையை 2005, டிசம்பர் 13 ஆக மாற்றியிருக்கிறது. காடுகளில் வாழும் பட்டியலினப் பழங்குடிகள் அல்லாத மக்களுக்கும் இது பொருந்தும் என்றும், ஆகவே இச்சட்டம் முற்போக்கானதென்றும் நம்பச் சொல்கிறார்கள். ஆனால், ஒரு தலைமுறை என்பது 25 ஆண்டுகள் வீதம் மூன்று தலைமுறைகளாகப் பாரம்பரியமாகக் காடுகளில் தாங்கள் வாழ்ந்து வருவதாக அம்மக்கள் நிரூபித்தாக வேண்டும். அதாவது 1930 முதல் 75 ஆண்டுகள் காடுகளில் வாழ்ந்து வந்திருப்பதாக நிரூபிப்பவர்கள் மட்டுமே இச்சட்டத்தின்படி உரிமைகள் பெற முடியும். வாய்வழிச் சாட்சியங்களோ, நேரடி சோதனை ஆதாரங்களோ போதாதவை; காலனிய கால ஆவணங்களை வைத்து நிரூபித்தாக வேண்டும். இவ்வாறான கறாரான வரையறை மூலம் பெரும்பாலான மக்களின் வன உரிமைகள் நிராகரிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.



அடுத்து, ஐ.மு.கூட்டணி அரசு முதலில் முன் வைத்த நகல் சட்ட மசோதா, பட்டியலினப் பழங்குடி மக்களின் உரிமைகள் பற்றி மட்டுமே பேசியது. பின்னர்தான் அப்பழங்குடி மக்கள் அல்லாத பாரம்பரியமாகக் காடுகளில் வாழும் மக்கள் உரிமைகள் என்று சேர்க்கப்பட்டது. இது இடதுசாரிக் கட்சிகளின் முயற்சியால் மேற்கொள்ளப்பட்ட முற்போக்கான அம்சம் என்று போலி மார்க்சிஸ்டுகள் கொண்டாடுகின்றனர். ஆனால், காடுகளில் தங்கள் கால்நடைகளை மேய்த்து வாழும் குஜ்ஜார் போன்ற பழங்குடிகள் அல்லாத மக்கள், காடுகளின் விளிம்புகளில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் பல தலைமுறைகளாக காடுகளில் விவசாயம் செய்தும், பீடி, இலை, விறகு பொறுக்கி வாழும் ஏழை எளிய மக்கள் என ஏராளமான மக்கள் காடுகளைச் சார்ந்து வாழுகிறார்கள். ""பாரம்பரியமாகக் காடுகளில் வாழும் பட்டியலினப் பழங்குடிகள் அல்லாத மக்கள்'' உரிமைகள் பற்றி இச்சட்டம் பேசுவதால் இது முற்போக்கானதென்று யாரும் நம்பிவிட வேண்டாம். ஏனெனில் ""காடுகளில் வாழும் மக்கள்'' என்ற சொல்லுக்குக் ""காடுகளில் உள்ளே வாழும் மக்கள்'' என்று இறுதியாக நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் ஐ.மு.கூட்டணி அரசு திருத்தம் செய்திருக்கிறது. இதன் மூலம் காடுகளையொட்டி அவற்றின் விளிம்பில் வாழும் மக்களுக்குரிய உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இதனால் அரசு ஆவணங்களில் பதிவு செய்யப்பட்ட 3000 கிராமங்கள் தவிர பதிவு செய்யப்படாத காட்டுப்பகுதி கிராமங்களில் வாழும் மக்களுக்கு வன உரிமைகள் மறுக்கப்படுவதாகிறது.



""அரசினால் காடுகளில் குடியமர்த்தப்பட்ட மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்'' என்று பழங்குடி மக்கள் விவகார அமைச்சர் வெறுமனே வாக்களித்துள்ளார். ஆனால், சட்டத்தில் அப்படி இல்லை. மேலும், ""காடுகளுக்கு வெளியே வாழ்ந்தாலும், காடுகளுக்குள்ளே நில உடைமை வைத்துள்ளவர்கள் அதன் மீது உரிமை கொண்டாட முடியும்'' என்று அமைச்சர் விளக்கமளித்துள்ளார். இதன்மூலம் வெளியூரில் வாழும் நிலப்பிரபுக்கள் கூட "தமது' நிலத்தின் மீது உரிமை பாராட்டமுடியும். அதேசமயம், காடுகளின் விளிம்பில் வாழும் கூலிஏழைநிலமற்ற விவசாயிகளோ, தாழ்த்தப்பட்ட மக்களோ அவ்வாறு செய்ய முடியாது என்றாகிறது.



மேலும், பட்டியலினப் பழங்குடி மக்கள் மற்றும் அவர்கள் அல்லாத, பாரம்பரியமாக காடுகளில் வாழும் மக்களுடைய கிராம சபை பற்றிய வரையறுப்பையும், அவற்றின் அதிகாரங்களையும் இறுதிச் சட்டம் மாற்றித் திருத்தி அமைத்து விட்டது. ""மலைவாழ் மக்களின் குடியிருப்புப் பஞ்சாயத்து'' அடிப்படையிலான கிராம சபை என்பதற்கு பதிலாக, அதிகாரவர்க்கம் மற்றும் மேல்சாதி மக்களின் கட்டுப்பாட்டில் வரும் வருவாய்த் துறை பஞ்சாயத்துக்களே கிராம சபைகள் என்று வரையறுத்து, இந்த வகை கிராமப் பஞ்சாயத்துக்களின் முடிவே கணக்கில் கொள்ளப்படும் என்று மாற்றி அமைத்து விட்டது, நிறைவேற்றப்பட்ட சட்டம். இடம் மாறி விவசாயம் செய்வதற்கான உரிமை, காடுகளின் சிறு விளைபொருட்களைப் பயன்படுத்தும் உரிமை, அவற்றின் விலை நிர்ணயம், காடுகள் அல்லாத தேவைகளுக்குக் காடுகளைப் பயன்படுத்துவது போன்ற முடிவுகளை பாரம்பரிய கிராமப் பஞ்சாயத்துக்கள் தீர்மானிக்க முடியாது. அரசு அதிகாரிகளும், மூன்று வருவாய்த்துறை பஞ்சாயத்துத் தலைவர்களும் கொண்ட துணைக் கோட்டக் கமிட்டிதான் மேற்படி முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கொண்டவை.



காடுகளில் கிடைக்கும் சிறு விளைபொருட்களைப் பட்டியலினப் பழங்குடி மக்களும் பாரம்பரியமாக காடுகளில் வாழும் பழங்குடிகள் அல்லாத மக்களும் பயன்படுத்தும் உரிமை இருப்பதாகக் கூறினாலும், விறகு, மூங்கில், கற்கள் மற்றும் பல்வேறு வகை இலைகள் இவ்வாறு பயன்படுத்தப்படுவதில் இருந்து தடைவிதிக்கப்பட்டுள்ளன. அதேபோல, இடம் பெயர்ந்து விவசாயம் செய்வதற்கான உரிமை வழங்குவதாகக் கூறினாலும் அந்நிலங்களின் பல்வேறு பயன்பாடுகளுக்குக் கடுமையாகத் தடை விதித்துள்ளது. காடுகளில் உள்ள தேசியப் பூங்கா மற்றும் பலவகை விலங்கு பறவை சரணாலயங்களில் இருந்து சிறு விளைபொருட்களை எடுத்துச் செல்வதற்கும் பல தடைகள் விதித்துள்ளது.



காடுகள் மற்றும் அவற்றின் விளிம்புகளில் நிறைவேற்றப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மீதும் பாரம்பரிய கிராம சபைக்கு அதிகாரம் கிடையாது. அரசு அதிகார வர்க்கத்தின் ஆதிக்கத்திலுள்ள வருவாய்த்துறை பஞ்சாயத்துகளுக்கே அதிகாரம் உள்ளது; அதேபோன்று அங்குள்ள தேசிய பூங்கா, பறவைகள் வனவிலங்குகள் சரணாலயம் பற்றிய முடிவுகள் எடுப்பது; அவற்றைச் சாக்கு வைத்து பழங்குடி மக்கள் மற்றும் பழங்குடியினர் அல்லாத பாரம்பரிய கிராம மக்களை இடமாற்றம் செய்வது, மறுகுடியேற்றங்கள் நிறுவுவது போன்றவற்றுக்கான அதிகாரமும் அரசு அதிகார வர்க்கத்திடமே ஒப்படைக்கப்படுகிறது.



காடுகள் அல்லாத தேவைகளுக்கு காடுகளில் உள்ள நிலங்களைப் பயன்படுத்துவது குறித்த முடிவையும் அரசு அதிகார வர்க்கமே செய்யும். இதுதவிர, காடுகளைப் பராமரித்து நிர்வகிக்கும் அதிகாரம் தொடர்ந்து வழமையான காட்டிலாகா அதிகார வர்க்கத்திடமே நீடிக்கும். இந்த நிர்வாகக் கட்டமைப்பைக் கலைக்காமல், பட்டியலின பழங்குடி மக்கள் மற்றும் பழங்குடியினர் அல்லாத பாரம்பரிய காட்டுவாசிகள் உரிமை பற்றிப் பேசுவதெல்லாம் வெறும் கண்துடைப்பு வேலைதான்.



காடுகளையும் மலைகளையும் அவற்றின் வளங்களையும் அந்நியப் பன்னாட்டு முதலாளிகளுக்கும், உள்நாட்டுத் தரகு முதலாளிகளுக்கும் தாரை வார்ப்பதைக் கண்டு பழங்குடி மக்களும் காடுகளைச் சார்ந்து வாழும் மக்களும் கொதித்தெழுந்து போராடுவதைத் தடுப்பதற்கே, மக்களின் காடுகள் உரிமைச் சட்டம் என்ற பெயரில் மோசடியானதொரு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

Wednesday, May 2, 2007

கோவை குண்டு வெடிப்பு : தீர்ப்புக்கு முன்பே தண்டனை

கோவை குண்டு வெடிப்பு :
தீர்ப்புக்கு முன்பே தண்டனை


1993ஆம் ஆண்டு நடந்த மும்பய் குண்டு வெடிப்பு வழக்கில் 123 பேரைக் குற்றவாளிகளாகத் தீர்ப்பளித்திருக்கிறது, ""தடா'' சிறப்பு நீதிமன்றம். இவர்களுக்கான தண்டனை ஏப்ரல் மாதம் அறிவிக்கப்படும் எனத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


""தாமதமாகக் கிடைக்கும் நீதி, நீதி மறுக்கப்படுவதற்குச் சமமானது'' என்பார்கள். மும்பய்க் குண்டு வெடிப்பு வழக்கில் 13 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது; ஆனால், இக்குண்டு வெடிப்புக்கு மூல காரணமான மும்பய் கலவர வழக்கிலோ, இன்னும் முதல் தகவல் அறிக்கைகூடப் பதிவு செய்யப்படவில்லை.


மும்பய் குண்டு வெடிப்பில் 257 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு முன் நடந்த மும்பய் கலவரத்தில் 1,000 முசுலீம்கள் கொல்லப்பட்டதோடு, ஒரு இலட்சம் முசுலீம்கள் அகதிகளாகத் துரத்தப்பட்டனர். மும்பய் குண்டு வெடிப்பில் தொடர்புடைய குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கு 10,000 பக்க அளவில் குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டது. அதேசமயம், மும்பய் கலவரம் சம்பந்தமான 1,370 வழக்குகள் உண்மையானவை என ஒப்புக் கொள்ளப்பட்டாலும், சாட்சியங்கள் சேகரிக்க முடியாது என நொண்டிக் காரணம் கூறப்பட்டு, அவ்வழக்குகள் குப்பைக் கூடைக்குள் வீசப்பட்டன.


மும்பய் கலவரத்தை விசாரித்த சிறீகிருஷ்ணா கமிசன், இக்கலவரத்தைத் திட்டமிட்டு நடத்திய இந்து மதவெறிக் குண்டர்கள் தொடங்கி, அவர்களுக்குத் துணையாக நின்ற போலீசு அதிகாரிகள் உள்ளிட்டு, குற்றவாளிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு அடையாளம் காட்டியிருக்கிறது. இந்த அறிக்கை மீது நடவடிக்கை எடுப்போம் என வாக்குறுதி கொடுத்துதான் காங்கிரசு தேசியவாத காங்கிரசு கூட்டணி மகாராஷ்டிராவில் ஆட்சியைப் பிடித்தது. கடந்த ஒன்பது ஆண்டுகளாக அம்மாநிலத்தில் ஆட்சி நடத்தி வரும் இம்மதச்சார்பற்ற கூட்டணி, இந்து மதவெறி பாசிஸ்ட் பால் தாக்கரேயை மட்டுமல்ல, சிறீ கிருஷ்ணா கமிசனால் குற்றம் சாட்டப்பட்டுள்ள 32 போலீசு அதிகாரிகளைக் கூடத் தண்டிக்காமல் பாதுகாத்து வருகிறது.


மும்பய் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள அனைவருமே மாஃபியா கும்பலைச் சேர்ந்தவர்கள் கிடையாது. ""மும்பய் கலவரத்தின்பொழுது எனது வீடு தீ வைத்துக் கொளுத்தப்பட்டதால்தான், மும்பய் பிளாசா திரைப்பட அரங்கம் அருகே குண்டுகள் நிறைந்த வேனைக் கொண்டு போய் நிறுத்தியாக'' ஷா நவாஸ் குரேஷி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். ""மும்பய் கலவரத்தைத் தொடர்ந்து எனது குடும்பத்தினருக்குத் தொலைபேசி மிரட்டல்கள் வந்ததால்தான், தாவூத் கும்பலிடமிருந்து ஏகே 56 இரக துப்பாக்கிகளை வாங்கி வைத்துக் கொண்டதாக'' ஒப்புக் கொண்டுள்ளார், நடிகர் சஞ்சய் தத்.


எனினும், இவர்கள் இருவரும் ஒரே மாதிரியாகத் தண்டிக்கப்படவில்லை. சாமானிய முசுலீமான குரேஷி காலாவதியாகிவிட்ட ""தடா'' சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டுள்ளார். பணபலமும், அரசியல் செல்வாக்குமிக்க நடிகர் சஞ்சய் தத், ""தடா'' குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டு, ஆயுதச் சட்டத்தின் கீழ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேசமயம், சஞ்சய் தத்திடமிருந்த ஏகே 56 இரகத் துப்பாக்கிகளை அழிக்க உதவியதற்காக, தத்தின் நண்பர்கள் மன்சூர் அகமதுவும், ஜாய்புன்னிஸா காசியும் ""தடா''வின் கீழ் தண்டிக்கப்பட்டுள்ளனர்.


நாடாளுமன்றத் தாக்குதலையடுத்து, பாக். மீது போர் தொடுக்க இந்தியா முண்டா தட்டியபொழுது, மும்பய் குண்டுவெடிப்புக்குத் திட்டமிட்டுக் கொடுத்த தாவூத் இப்ராகிம், ""டைகர்'' மேமன் உள்ளிட்ட 20 பயங்கரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என மைய அரசு கூச்சல் போட்டது. ஆனால், அமெரிக்க நிர்ப்பந்தம் காரணமாக, போர் முஸ்தீபுகளுக்கு முற்றுப்புள்ளி விழுந்து, இரு நாடுகளுக்குமிடையே நல்லுறவு பேச்சுவார்த்தைகள் தொடங்கிய பிறகு, பயங்கரவாதிகளை ஒப்படைக்க கோருவதுகூட சம்பிரதாய நடவடிக்கையாக நீர்த்துப் போய்விட்டது. இதனால், மும்பய் குண்டு வெடிப்பு தீர்ப்பு, எய்தவனை விட்டு விட்டு அம்பை மட்டும் தண்டித்த கதையாக முடிந்துவிட்டது.

···

இந்து மதவெறி பயங்கரவாத நடவடிக்கைகளையும், அதற்கு எதிரான முசுலீம் தீவிரவாத நடவடிக்கைகளையும் பாரபட்சமாக நடத்துவது, ""சமூக நீதி'' மாநிலமாகக் கருதப்படும் தமிழகத்தில் கூட அம்மணமாக நடக்கிறது. 1997ஆம் ஆண்டு இறுதியில் கோவையில் ஆர்.எஸ்.எஸ். குண்டர்களும், தமிழக போலீசாரும் சேர்ந்து நடத்திய கலவரத்தில் 18 முசுலீம்கள் கொல்லப்பட்டனர்; 5 கோடி பெறுமான முசுலீம்களின் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. இக்கலவரம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட்டதற்கு மேல், வேறெந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வழக்கு விசாரணை நடந்து குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்பதற்கு எந்த அறிகுறியும் தென்படவில்லை.


அதேசமயம், இக்கலவரத்தின் எதிர்வினையாக நடந்த கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 180 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டு, 166 முசுலீம்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கு தொடர்பாக 1,300 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர்.


சிறையில் அடைக்கப்பட்டுள்ள 166 பேரில், 3 முசுலீம்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக, 1,300 சாட்சிகளுள் ஒருவர்கூட சாட்சியம் அளிக்கவில்லை. இதன் அடிப்படையில் தங்களை வழக்கில் இருந்து விடுவித்து, சிறையில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என அவர்கள் கோரியதை, கோவை குற்றவியல் நீதிமன்றம் எவ்விதக் காரணமும் கூறாமல் நிராகரித்துவிட்டது.


45 முசுலீம்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக, நான்கே நான்கு பேர்தான் சாட்சியம் அளித்துள்ளனர். இந்த நான்கு சாட்சியங்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இந்து முன்னணியின் உறுப்பினர்கள்.


இக்குண்டு வெடிப்பு தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த அப்துல் மதானி மீது, சதித் திட்டம் தீட்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்டது. ஆனாலும், அதற்கான சாட்சியம் நீதிமன்றத்தில் தெளிவாக நிரூபிக்கப்படவில்லை. இதையடுத்து, தனக்குப் பிணை வழங்காவிட்டாலும் கூட, கேரளத்தில் மருத்துவச் சிகிச்சை எடுத்துக் கொள்ள தன்னை அனுமதிக்க வேண்டும் என உச்சநீதி மன்றத்தில் மனு கொடுத்தார், அவர். மதானியின் மனுவை காது கொடுத்து விசாரிக்கக் கூட மறுத்துவிட்டு, விசாரணையின்றியே தள்ளுபடி செய்தது, உச்சநீதி மன்றம்.


முசுலீம் "தீவிரவாதி' மதானியிடம் இப்படி கறாராக நடந்து கொண்ட உச்ச நீதி மன்றம், பார்ப்பன பயங்கரவாதி ஜெயேந்திரர், சங்கரராமன் கொலை வழக்கில் தனக்குப் பிணை வழங்க வேண்டும் என முறையீடு செய்தபொழுது, அவ்வழக்கு தொடர்பாக போலீசு விசாரணை நடந்து கொண்டிருந்த பொழுதே, அவ்வழக்கில் அவர் மீது சுமத்தப்பட்ட சதிக் குற்றச்சாட்டில் இருந்தே அவரை விடுதலை செய்தது.


""மதானியை வெளியே நடமாட அனுமதித்தால், சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய்விடும். எனவே, அவரைப் பிணையில்கூட வெளியே விடக் கூடாது'' என அ.தி.மு.க. ஆட்சியின் பொழுது தனிஅரசாணை போடப்பட்டது. பார்ப்பன ஜெயா ஆட்சியில் போடப்பட்ட இந்த அரசாணை, சூத்திர தி.மு.க. ஆட்சியிலும் நீக்கப்படவில்லை.


கோவை குண்டு வெடிப்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 26 வயது அப்பாஸுக்கு, சிறைச்சாலையில் அறுவைச் சிகிச்சை நடந்தது. அறுவைச் சிகிச்சைக்கு முன் அவருக்கு நடத்தப்பட்ட இரத்தப் பரிசோதனையில், அவர் எவ்வித நோய்த் தொற்றும் இன்றி உடல் நலத்தோடு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அறுவைச் சிகிச்சை முடிந்த பிறகோ, ""எய்ட்ஸ்'' நோயைத் தோற்றுவிக்கும் வைரஸ் கிருமிகள் அவரது இரத்தத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை அரசின் அலட்சியம் என்பதா, இல்லை பழி தீர்த்துக் கொள்ளும் வெறி என்பதா?


இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இம்முசுலீம்கள் அனைவரின் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால்கூட, அவர்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரைதான் தண்டனை வழங்க முடியும். ஆனால், இவர்கள் இப்பொழுதே பிணை கூட கிடைக்காமல், ஏறத்தாழ ஒன்பது ஆண்டுகள் சிறையில் கழித்து விட்டனர். விசாரணையின்றித் தண்டிக்கப்பட்டுள்ள இந்த அரசு பயங்கரவாதத்தைச் சமூக நீதி என்பதா, இல்லை பார்ப்பன மனுநீதி என்பதா?


சமூக நீதிக் காவலர்கள் ஆட்சி புரியும் தமிழகமே இப்படியென்றால், இந்து ராஷ்டிரத்தின் ஆய்வுக் கூடமான குஜராத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமா?


இந்து மதவெறிக் கும்பல் மட்டுமல்ல, எல்லா வண்ண ஓட்டுக் கட்சிகளும், அரசும், நீதிமன்றமும் கை கோர்த்துக் கொண்டு, முசுலீம்களுக்கு, வாழ்வுரிமையையும், நீதியையும் மறுப்பதன் மூலம், அவர்களைத் தீவிரவாதம் பக்கம் தள்ளி விடுகின்றன. பிறகு, இதையே காரணமாகக் கூறி, இந்து மதவெறி பாசிசத்தையும், அரசு பயங்கரவாதத்தையும் இந்திய நாட்டின் மீதும், மக்களின் மீதும் கட்டவிழ்த்து விடுகின்றன.

· குப்பன்

Tuesday, May 1, 2007

நந்திகிராம் படுகொலை - ஒளிப்படம்

நந்திகிராம் படுகொலை - ஒளிப்படம்


Monday, April 30, 2007

சுரண்டித் தின்னும் ஜனநாயகமும், சுரண்டுவதை எதிர்க்கும் மேதினமும்

சுரண்டித் தின்னும் ஜனநாயகமும், சுரண்டுவதை எதிர்க்கும் மேதினமும்

பி.இரயாகரன்
01.05.2007


ற்றவன் உழைப்பைச் சுரண்டி தின்று கொழுக்கும் வர்க்கம் (கூட்டம்) இருக்கும் வரை, மே தினம் என்பது புரட்சிகர தினமாகவே இருக்கும். இதை யாராலும் வரலாற்றால் திரிக்கவும், கொச்சைப்படுத்தவும் முடியாது.


உழைக்கும் வர்க்கம் தனது உரிமைக்காக குரல்கொடுத்து, அதற்காகவே போராடி மடிந்த தினம். இப்படி உலகத் தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளை அறைகூவி உணர்த்தியதன் மூலம், உலக தொழிலாளி வர்க்கம் அரசியல் ரீதியாகவே, இந்த நாளை தனது போராட்டத்துக்குரிய உரிமைக்கான நாளாக்கியது.


உழைக்கும் மக்கள் தமது உரிமையை வலியுறுத்தவும், அதற்காக அணிதிரண்டு போராடும் ஒரு புரட்சிகர நாளாகவுமே இது மாறியது. மூலதனம் இந்த நாளைக் கண்டு அஞ்சும் நிலைக்கு, உலகெங்கும் உழைப்போர் கூடி போராட்டங்களை நடத்துகின்ற நாளாகியது.


உலகெங்கும் சுரண்டித்தின்னும் மூலதனத்துக்காக உழைப்பதை இந்த நாளில் தொழிலாளி வர்க்கம் மறுத்து, தமது உரிமைக்காக வேலைநிறுத்தமாக மாற்றியது. அறிவிக்கப்படாத இந்த வேலைநிறுத்தத்தின் மூலம் உணர்வுபூர்வமாக தொழிலாளி வர்க்கம் ஒருங்கிணைவதை மூலதனம் விரும்புவதில்லை.


வன்முறை மூலம் இதை தடுக்க முனைந்து தோல்வி பெற்ற நிலையில், தனது வக்கிரமான மூலதனத்துக்கேகுரிய ஆபாசம் மூலம் (சலுகை மூலம்) இதை பொது விடுமுறையாக்கினர். இதன் மூலம் வீரியம் மிக்க, மூலதனத்துக்கு எதிரான உழைப்புப் புறக்கணிப்பு என்ற போராட்ட உணர்வை நலமடிக்க முனைந்தனர்.


இவற்றை எல்லாம் எதிர்கொண்ட புரட்சிகரமான வரலாற்றில், பல தடைகளைக் கடந்து பல இழிவாடல்களைக் கடந்தே ஒரு புரட்சிகரமான போராட்ட நாளாக இன்றுவரை இந்நாள் நீடிக்கின்றது. மற்றவனை ஜனநாயகத்தின் பெயரில் சுரண்டித் தின்பதே சமூக ஒழுங்காக இருக்கும் வரை, இந்த நாள் தொழிலாளிகளின் உரிமைக்கான ஒரு நாளாக இருப்பதை மூலதனத்தால் தடுத்து நிறுத்தி விடமுடியாது.


என்னதான் இந்த நாளில் ஆபாசமான சினிமா கழிசடைகளைக் கொண்டு கவர்ச்சியாக துகிலுரிய வைத்தாலும், இதன் மூலம் வக்கிரம்கொண்ட ஆபாசமான கவர்ச்சியான அற்ப இழிவுணர்வை ஊட்டும் களியாட்ட நாளாக மாற்ற மூலதனம் முயன்றாலும், சுரண்டப்படும் வர்க்கத்தின் போராட்ட உணர்வை நலமடிக்க முடியாது. ஜனநாயகத்தின் பெயரில் சுரண்டப்படுவது தொடரும் வரை, சுரண்டப்படும் தொழிலாளியின் உணர்வை வெற்றுக் களியாட்டமாக்கிவிட முடியாது. சுரண்டப்படும் வர்க்கத்தின் சொந்த வர்க்க உணர்வு, வர்க்கத் தீயாக பற்றிப் படர்வதை மூலதனத்தால் தடுத்து நிறுத்திவிட முடியாது.


இந்த மே தினத்தில் சில எடுத்துக்காட்டான படிப்பினைகள்


பிரான்சில் மூடிமறைக்கப்பட்ட பாசிசம் இன நிற வெறியுடன் அதிகாரத்துக்கு வரமுனைகின்றது. கடுமையான இன நிற விரோத உணர்வுகளை, சுரண்டும் ஜனநாயகம் என்ற மூலதனக் கூத்தில், தேர்தல் பிரச்சாரமாக்குகின்றது. வெளிநாட்டவர்கள் மத்தியில் அச்சமும், பீதியும், விரக்தியும் அலை மோதுகின்றது. பிரஞ்சு சமூகத்தின் ஒரு பகுதியினர் மத்தியில் உள்ள வெளிநாட்டவருக்கு எதிரான குரோதம் கொழுந்துவிட்டு எரிகின்றது. இதுவே தேர்தலின் முடிவை தீர்மானிக்கும் குறிப்பான காரணியாகியுள்ளது. தொழிலாளி வர்க்கம் உணர்வை இழந்து செயலற்று நிற்கின்றது.


இலங்கையில் இனவெறி தனது கோர முகத்துடன், புலிகளின் பெயரில் தமிழ் மக்களை ஆழ் புதைகுழிக்குள் போட்டு மூட முனைகின்றனர். புலிகள் பாசிச இராணுவவாதங்களில் சிக்கி, தமிழ் மக்களின் உரிமைகளை மறுத்து இனவாதிகளின் எடுபிடிகளாக வக்கரிக்கின்றனர்.


கண்டகண்ட தெரு நாய்கள் எல்லாம் அதை கவ்விக் கொண்டு நக்குகின்றது. பேரினவாத இனவெறி அரசு, தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி, அதை கள்ளச் சந்தையில் விற்க முனைகின்றது. அதை வாங்க ஒரு கூட்டம் நாயாக அலைகின்றது. தமிழ் மக்களின் சமூக பொருளாதார வாழ்வியல் அவலங்களை இட்டு, யாருக்கும் அக்கறை கிடையாது.


நேபாளத்தில் பாட்டாளி வர்க்கம் ஒரு குடி அரசு என்ற, மக்களின் உடனடிக் கோரிக்கையை முன்னெடுத்துள்ளது. நேபாள பாட்டாளி வர்க்கம், வர்க்கப் போராட்டத்தின் திசை வழியை மறுபடியும் தனது சொந்த நடைமுறை வழியில் உலகுக்கே கற்றுக்கொடுக்கின்றது. மன்னர் ஆட்சி, அதை தாங்கி நின்ற நிலப்பிரபுத்துவ அமைப்புக்கு எதிராக குடியரசுக் கோரிக்கையின் அடிப்படையில், நேபாள மக்களின் பல்வேறு வர்க்கப் பிரிவுகளை உள்ளடக்கி முழுமையில் அணிதிரண்டு நிற்கின்றது. மக்களால் தன்னை நெருக்கமாக ஆயுதபாணியாக்கி நிற்கின்றது.


உழைக்கும் விவசாயிக்கு நிலங்களை மறுபங்கீடு செய்தல் என்ற ஒரு குடியரசுக்கான ஒரு வேலைத்திட்டத்தின் அடிப்படையில், அதிகாரத்தில் பங்கு பெறமுனையும் சரியான திசைவழியில் செல்லுகின்றனர்.


இப்படி உலகெங்கும் உழைக்கும் வர்க்கம் சந்திக்கும் நேர் எதிரான சொந்தப் படிப்பினைகள், வெற்றி தோல்வி முதல் போராட்டங்கள் அனைத்தும் கற்றுக்கொடுத்து நிற்கின்றது.


மனிதனை மனிதன் பிடுங்கி தின்னுகின்ற இந்த சுரண்டல் சமூக அமைப்பில், மக்கள் மீண்டும் மீண்டும் போராடுவதை தடுக்க முடியாது. அவலம் நிறைந்ததாக இருந்தாலும், உறுதியை உழைப்பின் அடிமைத் தனம் மனிதனுக்கு கற்றுக்கொடுக்கின்றது. உறதி தளராத வர்க்க உணர்வுபெற்ற ஒரு வர்க்கத்தின் தலைமையில், மனித குலம் மீண்டும் மீண்டும் போராடுவதை வரலாற்றில் எதுவும் தடுத்து நிறுத்திவிடாது.


Sunday, April 29, 2007

பிரிக்கால் தொழிலாளர் போராட்டம் : பாதிக் கிணறு தாண்டினால் போதுமா?

பிரிக்கால் தொழிலாளர் போராட்டம் :
பாதிக் கிணறு தாண்டினால் போதுமா?



கோவை நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பிரிக்கால் நிறுவனம், கார், இரு சக்கர வாகனங்களுக்குத் தேவையான மீட்டர்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் 6 தொழிற்கிளைகள், இந்தோனேஷியாவிலும், ஈரானிலும் தலா ஒரு தொழிற்கிளை என வளர்ந்துள்ள பிரிக்கால் நிறுவனம், ஆட்டோ மீட்டர் சந்தையில் 46 சதவீதத்தைக் கைப்பற்றி ஏகபோக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ""பிரிக்காலை ஒரு பன்னாட்டு நிறுவனமாக வளர்க்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்'' என்கிறார் பிரிக்காலின் செயல் இயக்குநர் வனிதா மோகன். எனவே, இந்த நோக்கத்தை ஈடேற்றிக் கொள்ளும் வகையில் பிரிக்காலின் தொழிலாளர்கள், அதீத உற்பத்தி இலக்கு வைத்துக் கசக்கிப் பிழியப்படுவதோடு, எவ்விதத் தொழிற்சங்க உரிமைகளும் அற்றக் கொத்தடிமைகள் போல நடத்தப்பட்டு வருகின்றனர்.



சிறு பொறி பெருங்காட்டுத் தீயை மூட்டும் என்பதற்கு ஏற்ப, குமுறிக் கொண்டிருந்த தொழிலாளர்கள், கடந்த மார்ச் மாதம் ஆறு முன்னணித் தொழிலாளர் கோவையில் இருந்து உத்தராஞ்சல் மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டதையடுத்து, வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், அதிரடி இடமாற்றத்தை ரத்து செய்யக் கோரி, மார்ச் 9 அன்று நடத்திய 18 மணி நேர சாலை மறியல் போராட்டம், பிரிக்கால் நிறுவனத்தை மட்டுமல்ல, கோவையைச் சேர்ந்த பெரும் முதலாளிகள் அனைவரையும் கதிகலங்க வைத்துவிட்டது. இச்சாலை மறியல் போரில் கலந்து கொண்ட 1,000க்கும் மேற்பட்ட பெண் தொழிலளர்கள் உள்ளிட்டு, 2,166 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.



""உற்பத்திச் செலவு குறைவதற்குத் தகுந்தபடிதான் தொழிலாளர்களின் சம்பள உயர்வு நிர்ணயிக்கப்படும்'' என்ற கொடூரமான நிபந்தனையின் அடிப்படையில், பிரிக்கால் பிளாண்ட்1இல், 2004ஆம் ஆண்டு ஊதிய ஒப்பந்தம் போடப்பட்டது. இதே நிபந்தனையுடன் கூடிய ஊதிய ஒப்பந்தம், 2003இல் பிளாண்ட்3 இல் போடப்பட்டது. மூலப்பொருட்களின் விலை உயர்வை ஈடுகட்டவும், இலாபம் சரிந்து விடாமல் இருக்கவும் தொழிலாளர்களின் கூலியில் கை வைக்கும் நரித்தனம்தான் இந்த ஒப்பந்தம். தொழிலாளர்களின் அடிமடியிலேயே கை வைக்கும் இந்த ஒப்பந்தத்தில், ஐ.என்.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., உள்ளிட்டு ஐந்து தொழிற்சங்கங்கள் கையெழுத்துப் போட்டு, பிரிக்கால் தொழிலாளர்களுக்குத் துரோகமிழைத்தன.



இதுவொருபுறமிருக்க, 14 ஆண்டுகளாக வேலை பார்த்து வரும் 1,500 தொழிலாளர்களை நிரந்தரமாக்காமல் தினக்கூலிகளாக வைத்திருப்பது; பெண் தொழிலாளர்களை மிரட்டி ""ஓவர்டைம்'' வேலை செய்ய வைப்பது; தொழிற்சாலைக்குள் நடக்கும் விபத்துக்களுக்கு, அவ்விபத்தில் பாதிக்கப்படும் தொழிலாளிகளையே பொறுப்பாக்குவது என்பது தொடங்கி, உணவகத்தில் நடக்கும் முறைகேடுகளைத் தட்டிக் கேட்கக் கூடாது; சாப்பிட்ட பிறகு, தொழிலாளர்கள் டிஃபன் பாக்சைத் தண்ணீர் ஊற்றிக் கழுவக் கூடாது; ஒதுக்குப்புறமாகப் போய்க்கூட சிகரெட் பிடிக்கக் கூடாது என்பது வரை பல்வேறுவிதமான அடக்குமுறைகளும், கெடுபிடிகளும், ""கட்டுப்பாடு'', ""நாகரீகம்'' என்ற பெயரில் தொழிலாளர்கள் மீது திணிக்கப்பட்டன. நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களுள் (சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி.) ஒன்று கூட, இந்த அடக்குமுறையைத் தட்டிக் கேட்காமல், நிர்வாகத்திற்கு ஒத்து ஊதி வந்தன.



பிரிக்கால் நிறுவனத்தின் இந்த அடக்குமுறைகளைத் தட்டிக் கேட்கவும்; தங்களின் தொழிற்சங்க உரிமைகளை மீட்டெடுக்கவும், இத்துரோகத் தொழிற்சங்கங்களை அடியோடு புறக்கணிக்க வேண்டும் என உணர்ந்து கொண்ட தொழிலாளர்கள், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ""கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர் தொழிற்சங்கம்'' என்ற புதிய சங்கத்தைக் கட்டியமைத்ததோடு, பெருவாரியான தொழிலாளர்கள் அதில் தங்களை இணைத்தும் கொண்டனர். இப்புதிய தொழிற்சங்கத்துக்கு, இ.பொ.க. (மாலெ) விடுதலை குழுவின் கீழ் இயங்கி வரும் அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் வழிகாட்டி வருகிறது.



இப்புதிய தொழிற்சங்கத்தை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் என்ற தீய நோக்கத்தோடுதான், ஆறு முன்னணித் தொழிலாளர்களைத் தடாலடியாக வேறு மாநிலத்திற்குத் தூக்கியடித்தது நிர்வாகம். இதன் மூலம், மற்ற தொழிலாளர்கள் பயந்து போய் ஒதுங்கி விடுவார்கள் என எதிர்பார்த்தது. ஆனால், பிரிக்கால் தொழிலாளர்களோ, ஆறு தொழிலாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்ட மறுநாளே உள்ளிருப்புப் போராட்டத்தில் குதித்து, நிர்வாகத்திற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர். அடாவடித்தனமான இடமாற்றலை ரத்து செய்யக் கோரி, மார்ச் 4ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை நடத்தி வருகின்றனர்.



புதிய தொழிற்சங்கத்தோடு பேச்சு வார்த்தை நடத்த மாட்டோம் என்ற நிர்வாகத்தின் அடாவடித்தனத்தை, தொழிலாளர்களின் உறுதிமிக்க போராட்டம் உடைத்தெறிந்துவிட்டது. புதிய தொழிற்சங்கத்தோடு மூன்று முறை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்து விட்டபோதும், தங்களின் கோரிக்கையை நிர்வாகம் ஏற்காதவரை வேலைக்குத் திரும்புவதில்லை என்ற உறுதியோடு பிரிக்கால் தொழிலாளர்கள் ஒரு மாத காலமாக வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.



தொழிற்சங்க உரிமைகள் பறிக்கப்படுவது பிரிக்கால் நிறுவனத்தில் மட்டுமே நடக்கும் ""அதிசயம்'' கிடையாது. தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்ற கட்டுப்பாடே இருக்கக் கூடாது என்பது தொடங்கி தொழிற்சங்கமே இருக்கக் கூடாது என்பது வரை தொழிற்சங்க உரிமைகள் அனைத்தையும் பறிக்கக் கோருகிறது, உலகமயம். இதற்கு ஏற்றாற்போலத்தான், தொழிலாளர் நலச்சட்டங்கள் திருத்தப்படுகின்றன; தொழிற்சங்கமே அமைக்க முடியாதபடி சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் நிறுவப்பட்டு வருகின்றன.



தொழிலாளி வர்க்கமே ஒன்று திரண்டு போராடினால்தான், தொழிற்சங்க உரிமைகள் சட்ட பூர்வமாகவே பறிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த முடியும். போராடும் பிரிக்கால் தொழிலாளர்கள் இதை உணர்ந்து, இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை, புனே, குர்கான், உத்தராஞ்சல் ஆகிய இடங்களில் உள்ள பிரிக்கால் தொழிற்சாலைகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.



""கட்டுப்பாடு'' என்ற பெயரில் பிரிக்கால் நிர்வாகம் ஏவிவிடும் அடாவடித்தனங்களையும்; சுனாமி நிவாரண நிதி என்ற பெயரில் அந்நிர்வாகம் தொழிலாளர்களிடம் நடத்திய கொள்ளையையும்; வசூலித்த பணத்தைக் கொடுக்காமல் அரசை ஏமாற்றியதையும்; ""சிறு துளி'' என்ற அமைப்பு மூலம் பிரிக்காலின் செயல் இயக்குநர் வனிதா மோகன் அரசு பணத்தைச் சுருட்டுவதையும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி, பிரிக்காலுக்கு எதிரான பொதுக் கருத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.



பிரிக்கால் தொழிலாளர் போராட்டம் நசுக்கப்பட வேண்டும் என மற்ற முதலாளிகள் விரும்புவதால், துணியாலை, பஞ்சாலை, இன்ஜினியரிங் தொழிலாளர்கள் இப்போராட்டத்திற்கு ஆதரவாகக் களத்தில் நிற்கும் வண்ணம் கோவை மாவட்டத் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்கள் மத்தியில் ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.



வேலை நிறுத்தப் போராட்டத்தை உறுதியோடு தொடர்வதோடு, உலகமயச் சூழலில் இப்படிப்பட்ட ஒற்றுமையையும், புதிய போராட்ட முறைகளையும் நடைமுறைப்படுத்துவதன் மூலம்தான் தொழிற்சங்க உரிமைகள் பறிக்கப்படுவதை நிரந்தரமாகத் தடுத்து நிறுத்த முடியும்.

· பு.ஜ.தொ.மு., கோவை.