தமிழ் அரங்கம்

Saturday, February 2, 2008

எலும்பு கடிப்பதே "நிரந்தரத் தீர்வுக்கான ஓர் ஆரம்பமாம்"

பி.இரயாகரன்
03.02.2008


தையெல்லாம் யார் கூறுகின்றனர். இந்திய இலங்கை கூலிக் குழுக்களாக உள்ளவர்கள் இதைக் கூறுகின்றனர். இதுதானாம் மக்களின் விடுதலைக்கான ஒரு பாதை என்கின்றனர். மக்களுக்கு எதிரான தமது துரோகத்தை பறைசாற்றும் இவர்கள், 'யதார்த்தமாக சிந்திப்பவன் என்ற வகையில் தமிழ் மக்களின் விடியலுக்கு" இந்த 'எலும்புத்துண்டுகளைத்தனிலும் கொடுக்கமுடியு"ம் என்கின்றனர், இந்த எலும்பு சூப்பிகள். செழியன் மீதான தனிமனித தாக்குதலை மையப்படுத்தி நடத்தும் தமது வாதத்தில் தான், இவர்கள் இதைக் கூறுகின்றனர். எலும்பு பறிபோய் விடக் கூடாது என்ற அற்பத்தனம், இதை மக்களின் விடுதலைக்குரியது என்கின்றது.


பேரினவாதம் தமிழரை அழிக்க வைக்கும் இராணுவத் தீவுக்கு ஏற்ப, அரசியல் தீர்வு என்ற எலும்பைத் தான் போட்டனர். இப்படி நாய்களை வேட்டைநாயாக்கி, புலி வேட்டைக்கு தயார்ப்படுத்தும் பேரினவாத சதி இது. தமிழனை தமிழனைக் கொண்டு அழிக்கும் மற்றொரு சின்ன, அனால் சதித்தனமான முயற்சி.


எலும்பைக் கண்டது தான் தாமதம், பாய்ந்த வீழ்ந்து அதற்காகவே குலைக்கிறார்கள். இது நிரந்தர (தமிழீனத்தின் நிரந்திரமான அழிவக்கான பாதை) தீர்வுக்கான பாதை என்கின்றனர். எறியப்பட்ட இந்த எலும்பு தொடர்பாக செழியன் தெரிவித்த கருத்து, எலும்புக்காக குலைப்பவர்கள் மேல் கல்லெறிவதாக அவர்களுக்குப்பட்டது. புலிவேட்டைக்கு புறப்பட்டவர்கள், போகும் வழியில் செழியனை கடித்துக் குதறுவதைத் தவிர வேறு வழியில்லை. செழியனுக்கு எதிராக, புலியெதிர்ப்பு இணையமான தேனீயில், பொ.சந்திரகுமார் என்ற எலும்பு பொறுக்கி, பேரினவாத அரசு தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு தரும் என்கின்றார்.


அவரே கூறுகின்றார் 'அல்லல்படும் எனது மக்களுக்கு எலும்புத்துண்டுகளைத்தனிலும் கொடுக்கமுடியுமானால் அதையிட்டு உண்மையிலேயே மகிழ்ச்சியடைவேன்." என்று. எலும்பு உங்களுக்கானதே ஒழிய, மக்களுக்கல்ல. மக்களின் பெயரில் எலும்பைப் பெறுவது தான், இவர்களின் அரசியல் எல்லை.


சரி மக்கள் எதைத்தான், எலும்பாக பெறுவார்கள் என்பதையாவது சொல்லுங்கள். சிங்கள பேரினவாத அரசான பெரும் தேசியம், எதைத்தான் சிங்கள மக்களுக்கு கொடுத்துள்ளது. அதையாவது சொல்லுங்கள், அதாவது தமிழ் மக்களுக்கு கிடைக்குமா என்று பார்ப்போம். மாறாக பேரினவாத அரசு, ஏகாதிபத்தியத்துக்காகவே உழைக்கின்றது. நீங்கள் கூறுவது போல் மக்களாவது, மண்ணாங்கட்டியாவது. இப்படி இந்த பேரினவாத அரசு, தன்னுடைய மக்களுக்கு எதையும் கொடுத்தது கிடையாது. இப்படி இருக்க, எதைத்தான் புதிதாக தமிழ் மக்களுக்கு கொடுத்துவிடும்.


முதலில் அதைச் சொல்லுங்கள். நீங்கள் எலும்பை நக்கலாம், தமிழ் மக்களுக்கு நக்க எதைத்தான் கொடுப்பார்கள், அதையாவது சொல்லுங்கள். நீங்கள் மகிழ்ச்சி அடைவது உங்களுக்கான எலும்பைக் கண்டுதான். உங்களிடம் எந்த மக்கள் நல அரசியலும் கிடையவே கிடையாது. இலங்கை மற்றும் இந்தியாவுக்கு கூலிக்கு மாரடிக்கும் ஒரு கும்பல். இவர்கள் மக்கள் பற்றி பேசுவதே நகைச்சுவை.


இன்று டக்கிளஸ் ஜயா நக்குவது போல், அவருடன் சேர்ந்து நக்கித் தின்னும் கூட்டத்தில் ஒருவராக நீங்கள் இருக்கலாம். மக்கள் முழுக்க அவ:வாறு இருக்க முடியுமா! இதை நக்குபவன் செய்யலாமே ஒழிய, வேறு எதையும் தமிழ் மக்களுக்கு பெற்றுத் தரமுடியாது. புலிகள் எப்படி தமிழீழத்தில் எதையும் தமிழ் மக்களுக்கு கொடுக்க முடியாதோ, அதைப் போல் தான் இந்த எலும்பு நக்கிகளும், அவர்கள் அரசியலும்.


'எனது மக்களை உண்மையாக நேசிப்பவன் என்ற வகையில், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக யதார்த்தமாக சிந்திப்பவன் என்ற வகையில் தமிழ் மக்களின் விடியலுக்கு ஏதாவது தீர்வு வரும் போது அதை எதிர்ப்பவர்களை, குழப்பியவர்களை நிச்சயமாக விமர்சித்துக் கொண்டேயிருப்பேன்." ஜயோ பாவம். உண்மையாக எதைத்தான் நேசிக்கின்றாய். எலும்பைத் தானே. உண்மையில் மக்களை நேசிப்பவனுக்கு, இந்த பேரினவாத அரசுடன் என்ன கூடி நிற்க, என்ன அதனிடம் கிடைக்கின்றது. அரசை எதிர்க்காது, தமிழ் சிங்கள மக்களுக்கு, ஒரு நாளும் உண்மையாக இருக்கவே முடியாது.


இப்படி இருக்க, யதார்த்தம் பற்றி பேசுவது வேடிக்கை. எது தான் யதார்த்தம்? யதார்த்தம் என்பது புலிகளைப் போல், பேரினவாதமும் தமிழ் மக்களை கொல்வது தான். இதில் புலிகள் தேர்ந்தெடுத்து கொல்வார்கள், பேரினவாதம் தமிழன் என்றாலே கொல்லும் என்பதுதான், அதன் யதார்த்தம். இப்படி யதாhத்தம் என்ற பசப்புக்குள் , தமிழ் மக்களையிட்டு யாருக்கும், எந்த அக்கறையும் கிடையாது. அவனவனுக்கு எலும்புகள் மீதுதான் அக்கறை. இதுதான் யதாhத்தம். இலங்கை இநதிய அரசின் பினனால் கைகட்டி கூலிக்கு மாரடிக்கும் அரசியல், கொலை கொள்ளை முதல் அனைத்தையும் செய்வதே அவர்களின் யதார்த்தமாக உள்ளது.


'மக்களின் விடியலுக்கு ஏதாவது தீர்வுவரும் போது.." என்கின்றீர்கள். 'ஏதாவது" என்று, நீங்களே அதுபற்றி எதுவும் தெரியாது என்ற யதார்த்தத்தில் நின்று அல்லவா உளறுகின்றீர்கள். அந்த 'ஏதாவது" என்ற ஒன்றுக்காக, மக்களுக்கு துரோகத்தை தொடர்ந்து செய்வதே உங்களின் யதார்த்தம். உங்கள் எலும்பு சார்ந்த இந்தக் கோட்பாடு 'ஏதாவது தீர்வுவரும் போது.." என்று உளறும் அதே நேரம் 'நிரந்தரத் தீர்வுக்கான ஓர் ஆரம்பமேயன்றி" என்று மீளவும் உளற வைக்கின்றது. இதுவா யதார்த்தம்.


உங்களுக்கு எப்படித் தெரியும், இது நிரந்தர தீர்வுகான ஆரம்பமென்று. நீங்கள் சொல்ல, உலகம் தலைகீழாக நின்று நம்ப வேண்டுமோ! சரி, எலும்பைப் போடுகின்ற டக்கிளஸ் ஜயாவா சொன்னார். 'நிரந்தரத் தீர்வுக்கான ஓர் ஆரம்பம்" என்று! இதுதான் யதார்த்தம் என்று அவரா சொன்னார்? அவர் தனது எலும்புக்காக குலைக்கிறார். 'மக்களை உண்மையாக நேசிப்பவன்" என்ற கூறும் நீங்களுமா! வெட்கக் கேடு.


தீர்வு, நிரந்தர தீர்வு என்று கதை சொல்லுகின்றீர்கள். 60 வருடமாக இந்தக் கதையைத் தானே, அனைவரும் சொல்லி வந்தனர், வருகின்றனர். இப்படி சொல்லித் தான் எலும்பை நக்கியது, பிழைப்புவாதக் கூட்டம். உண்மையில் தமிழ் மக்களுக்கு இந்த பேரினவாதம், எதையும் கொடுக்கத் தயாராகவே இல்லை. மாறாக பேரினவாதத்தைப் பாதுகாக்க துணை நிற்கும் கும்பலுக்கு, எலும்புகளை போடுவதில் மட்டும் தெளிவான கொள்கை கோட்பாடு உண்டு. ஆனால் இக்கட்சிகள் தமிழ் மக்களுக்கு இதுதான் தான் தமது கட்சியின் தீர்வு என்ற சொல்லி, கட்சி நடத்துவது கிடையாது. இப்படிப்பட்ட நிலையில், எலும்பை போட்டவுடன் அதற்காக குலைக்கின்றனர்.


மலையக கட்சிகளும், முஸ்லீம் கட்சிகளும் அரசை நக்கி வாழ்ந்து, எதைத்தான் அந்த மக்களுக்கு பெற்றுக்கொடுத்தனர். இதைத் தான் தமிழ் தலைவர்கள் இந்தா தீர்வு என்று கூறி, மறுபடியும் மறுபடியும் செய்ய முனைகின்றனர்.


எல்லா சுயத்தையும் இழந்து, நக்கிப் பிழைப்பதையே அரசியலாக கொண்டவர்கள் தமிழ் மக்கள் பற்றி பேசுவது வேடிக்கையானது. இப்படி எல்லாவற்றையும் இழந்து, கோமணத்துடன் நிற்கும் உங்களுக்கு வெட்கமாவது, மண்ணாங்கட்டியாவது. 'எலும்புத் துண்டுகளைத்தனிலும் கொடுக்க முடியுமானால்" என்று கூறுவது, உங்கள் அரசியல் பிழைப்புக்கு பொருத்தமானது. நீங்கள் டக்கிளஸ் மாதிரி என்ன ஒத்த உருவா? சரி யார் கொடுப்பது, யார் பெறுவது. மக்கள் உங்களிடம் பிச்சையா கேட்கின்றனர். சரி நீங்கள் கொடுக்க, நீங்கள் யார்? உங்கள் அரசியல் தான் என்ன? உங்கள் சுயம் தான் என்ன? முதலில் நீ யார்?


மக்கள் கேட்பது பிச்சையல்ல, தமது அடிப்படை உரிமைகளை. இதுதான் யதார்த்தம். இதை விட்டுவிட்டு 'யதார்த்தமாக சிந்திப்பவன் என்ற வகையில் தமிழ் மக்களின் விடியலுக்கு ஏதாவது தீர்வுவரும் போது" என்று உரிமைக்குப் பதில் பிச்சை போடுவதை ஆதரிப்பது தான், யதார்த்தத்தில் வக்கிரமானதும் கடைந்தெடுத்த உரிமை மறுப்புமாகும். மக்களின் அடிப்படை உரிமைகளை கொள்கையளவில் கூட அங்கீகரிக்க மறுக்கின்றவர்கள் தான் நீங்கள். ஒரு அரசு சொந்த மக்களுக்கு, 'நிரந்தரத் தீர்வுக்கான ஓர் ஆரம்பம்" என்று கூறி, பிச்சை போடப்போவதாக கூறுவதை எப்படித்தான் சகித்துக் கொள்ளமுடியும்.


இப்படி எலும்பு போடப் போவதாக கூறுவதை அம்பலப்படுத்தும் போது, அதை பாதுகாக்க குலைப்பது மகிந்த கொடுக்கும் எச்சில் சோற்றுப் பருகைக்களின் விசுவாசமாகும். இதனால் தானாம் 'தீர்வுவரும் போது அதை எதிர்ப்பவர்களை, குழப்பியவர்களை நிச்சயமாக விமர்சித்துக்கொண்டேயிருப்பேன்." என்கின்றனர். மக்களுக்கான உண்மையான தீர்வு வரும் போது, மக்களை நேசிக்கும் யாரும் எதிர்ப்பதில்லை. என்ன வகையான தீர்வு, எப்படி மக்களுக்கு தீர்வாகின்றது என்பது தான் முக்கியம். பேரினவாதிகள் தரப்போவதாக கூறுவது, எப்படி மக்களின் பிரச்சனையை தீர்க்கும்.


உங்கள் விசுவாசம் புலித்தன்மை வாய்ந்தது. மகிந்த சோறுபோடுவதால், உங்கள் விசுவாசம். பிரபாகரன் சோறு போடுவதால், புலிகளின் விசுவாசம். அரசியல் ரீதியாக மக்களை நேசித்து, மக்களுக்கு விசுவாசமாக இருக்கவோ வக்கில்லை.


செழியன் மீது தனிமனித தாக்குதலைச் செய்ய, இதே அளவுகோலைக் கொண்டு செய்வது அம்பலமாகின்றது. 'இயக்கத்தின் பணத்திலேயே... இயக்க வீட்டிலேயே... வாழ்ந்து கொண்டு இயக்கத்தின் சாப்பாட்டையே சாப்பிட்டுக் கொண்டு அந்த உத்தமர் தோழர் பத்மநாபாவுக்கு எதிராக நயவஞ்சகமாக நடந்து கொண்டதைப பற்றியெல்லாம் எழுதியிருப்பேன்." என்கின்றீர்கள். நல்லது, எந்த தோழருக்காகவோ இப்படிக் குலைக்கும் நீங்கள், அதையே மகிந்தவுக்காக செய்கின்றீர்களே ஏன்? தோழமைக்கே அளவுகோல் கிடையாதோ! சரி 'உத்தமர் தோழர்" அரசியல் என்ன? பத்மநாபாவின் சொந்த இயக்கமா அது. புலி உறுமுகிற மாதிரி இருக்கின்றது! அந்த 'உத்தமர் தோழர்" இயக்கம், இன்று பல கூலிக் கும்பலாகியது ஏன்? மக்களை வழிகாட்டும் அரசியல் எதுவுமற்றுப் போனது ஏன்?


சரி 'அந்த உத்தமர் தோழர் பத்மநாபா" இயக்கம் என்ன சொன்னது. தமிழீழம் (ஈழம்) என்றது? நீங்கள் இன்று என்ன சொல்லுகின்றீர்கள்? இதை மறுக்கின்றீர்கள். வேடிக்கை அல்லவா! நீங்களே உத்தமர் என்று கூறி அவரின் ஈழக் கோரிக்கையை மறுத்து, மகிந்தாவின் வாலில் தொங்குகின்றீர்களே ஏன்? அத்துடன் விட்டீர்களா இல்லை 'முழுமையான தீர்வு என்று செழியன் எதைக் கூறுகின்றீர்கள்? புலிகள் கோரும் தமிழீழத்தையா?" என்று கேட்கின்றீர்களே! வெட்கமாகவில்லை. நீங்கள் ஈழத்தை தீர்வாக வைக்கவில்லையா? புலிகள் மட்டுமா தமிழீழத்தை தீர்வென வைத்தனர்! நீங்கள் துரோகியானால், கோரிக்கை பிழையானதாகிவிடுமா! உங்கள் இலங்கை அரசு, தமிழ் மக்களுக்கு தீர்வைக் கொடுத்துள்ளதா? இப்படி இருக்க, மூட்டை மூடிச்சுடன் பேரினவாதிகளை நக்குவது ஏன்?


நீங்கள் மகிழச்சியாக சுவைக்கும் எலும்பை, தமிழ் மக்களின் மகிழ்ச்சியாக காட்டுவது சினிமாத்தனமானது. இது சினிமாவுக்கு மட்டும் பொருந்தும்.


அந்த 'உத்தமர் தோழ"ரின் இயக்கம் மக்களின் விடுதலை என்றனரே! அது இதைத்தானா!, அதையா இன்று இந்திய இலங்கை அரசின் காலுக்கு கீழ் இருந்து செய்கின்றீர்கள். 'உத்தமர் தோழர்" பத்மநாபா மக்களின் விடுதலையையா நடைமுறைப்படுத்தினார்? அதன் அரசியல் தான் என்ன?


ஒடுக்கப்பட்ட மக்களின் வர்க்க விடுதலை என்று சொல்லிய இயக்கம், அதற்கு எதிராகவே பயணித்தது. இந்த நிலையில் செழியன் - தாஸ் போன்றோர், இயக்கத்தின் கொள்கையின் அடிப்படையில், மக்களின் வர்க்க விடுதலையை முன்வைத்தனர். அமைப்பு மக்களுக்கு சொன்னதை, உணர்வுபூர்வமாக கோரினர். 'இயக்கத்தின் பணத்திலேயே... இயக்க வீட்டிலேயே... வாழ்ந்து கொண்டு இயக்கத்தின் சாப்பாட்டையே சாப்பிட்டுக் கொண்டு" அதைத்தானே செய்ய முடியும். அப்படி சொல்லித்தானே இயக்கம் கட்டப்பட்டது. தலைமையின் ஒருபகுதி இந்திய உளவு அமைப்புகளின் செல்லப்பிள்ளையானால், அதை எதிர்த்துப் போராடுவது தான் மக்களுக்கு உண்மையாக இருத்தலாகும்.


இயக்கம் மக்களுக்காக கட்டப்பட்டது. இந்திய உளவு அமைப்புகளின் தேவைக்காக கட்டப்பட்டதல்ல. செழியனின் போராட்டம் மக்களுக்கானதாக, சரியானதாக இருந்தது. உட்கட்சி வழிமுறைக்கு உட்பட்டது. மாறுபட்ட கருத்துச்சுதந்திரத்தை கொண்ட அமைப்பு என்ற வகையில், இதை இன்று மறுப்பது புலிகளின் பாசிச சிந்தனை முறையாகும்.


இதைவிட்டுவிட்டு உங்களைப் போல், இந்திய இலங்கை கூலிக் குழுக்களாக இருப்பதையா செழியன் செய்யவேண்டும். மக்களின் பணம், மக்களின் விடுதலை, இதற்கு உண்மையாக உழைக்க வேண்டும், அதற்காக போராட வேண்டும். இதைவிட்டு விட்டு நயவஞ்சகமாக மக்களுக்கு எதிராக, இந்தியாவின் கால்களை நக்கிக் கொண்டு துரோகம் செய்வதா அரசியல்.


இந்தியக் கூலி அமைப்பாகி, பிரமேச்சந்திரனின் வாலாகி, அந்த அரசியல் துரோகத்துக்கு ஏற்ற தலைவனாக இருந்த, இந்த உத்தமரின் வேஷம் அருவருக்கத்தக்கது. அதுவும் மக்களின் விடுதலையின் பெயரில். தனிப்பட்ட நல்ல பண்புள்ள மனிதர்கள், அரசியல் ரீதியாக துரோகத்தையும் காட்டிக்கொடுப்பையும் செய்யத் தொடங்கிய பின், யார் தான் அவர்களை வெறுக்காமல் உண்மையாக இருக்கமுடியும்.


இன்று செழியனை நோக்கி நீங்கள் சொல்வது என்ன? டக்கிளஸ் பின்னால் வாலாட்டுவேண்டுமென்பதையா? அல்லது வரதராஜா பெருமாளின் பின் குலைக்கவேண்டுமென்பதையா அல்லது பிரமச்சந்திரன் பின் நக்குவதா? அதையாவது சொல்லுங்கள். நீங்கள் 'அந்த உத்தமர் தோழர் பத்மநாபா" சார்பாக எங்கே, எப்படி நிற்கின்றீர்கள்? செழியனை எதைச் செய்ய சொல்லுகின்றீர்கள். எதன் பின் போனால், எப்படி மக்களுக்கு 'எலும்புத் துண்டுகளைத்தனிலும் கொடுக்கமுடியு"ம் என்பதையா. அதையாவது சொல்லுங்கள். வெட்கத்தை, மானத்தைவிட்டு சொல்லுங்கள். வாருங்கள் வெளியே. எந்த கோவணமுமின்றி, நிர்வாணமாகத்தான் நிற்கின்றீர்கள். ஓடி ஒளித்து விளையாட இடமில்லை. சுற்றப்p பாதுகாப்பாக அதிரடிப்படைதான் உள்ளது.


டம்புல்லக் குண்டுவெடிப்பும் அடுத்த நகர்வுகளும்



ப. வி. ஸ்ரீரங்கன்.
02. 02. 2008

ம்புல்ல அரச பண்ணையை ஞாபகப்படுத்திப் பார்க்கிறேன். அது, ஒரு அழகான விவசாயப்பண்ணை! இலங்கையின் அழகானவொரு சிறு நகரம். இங்கே, இன்று மனிதர்கள் குண்டுவெடிப்பால் இறக்கின்றார்கள்! வன்னியில் மனிதர்கள். . . யாழ்ப்பாணத்தில் மனிதர்கள். . . மன்னாரில் மனிதர்கள். . . மொனராக்கலவில் மனிதர்கள். . . டம்புல்லவில் மனிதர்கள். . . இலங்கை பூராகவும் கொலைக் களமாகிவிட்டது!

சிங்கள ஆளும் வர்க்கத்தின் அடிவருடி இராஜபக்ஷவே இலங்கையின் மிகப்பெரும் பண்ணைக்காரன்-கொடுங்கோலனுக்கு நிகரான ஆட்சியை நிலைப்படுத்த அன்னியத் தயவை நாடி நாட்டையே நாசமாக்கி. . . அப்பாவிகளைக் கொல்லும் யுத்த முன்னெடுப்பைச் சிங்கள-தமிழ்த் தரப்புகளிடம் தோற்றிவைத்துத் தனது ஆட்சியை இனவாதத்தூடாகக் கட்டி வளர்த்துவிட்டுள்ளான். பாவி! இதற்குடந்தையாக எதிர்கட்சிகள், இயக்கங்கள் தம்மாலான அனைத்து ஒத்துழைப்பையும் அரசியல் தீர்வின் பெயராலும் இந்தியாவின்-இலங்கையின் நலத்தின் பெயராலும் செய்து மக்களைப் பலியெடுத்து வருகிறார்கள்!



எனது பால்யக் காலத்தில் டம்புல்லையைத் தரிசித்திருக்கிறேன்.

டம்புல்ல மக்கள் மிக அழகான மனதுடையவர்கள்,

தமது கிராமத்தைப் போலவே-நகரத்தைப் போலவே!

எனது குஞ்சியய்யா இராமச்சந்திரன் டம்புல்ல பார்மில் தலைமை அதிகாரியாக இருந்தார். அமெரிக்கக் கல்வி, அவரை அப்பண்ணைக்கு அதிகாரமிக்கத் தலைமைக்குத் தகமையாக்கியது. அரச ஜீப் வண்டியில் தம்புல்லக் கிராமத்தைச் சுற்றிப் பார்த்த எண்பதின் முற்பகுதி மிக அழகானது-அமைதியானது! அப்போதைய மனிதர்களும் அமைதியாகவே வாழ்ந்திருக்கிறார்கள். இன்று, இனவாதம் என்றுமில்லாதவாறு வளர்த்தெடுக்கப்பட்டு மனிதர்கள் கொலைகளை ஆதரிக்கும் மனநிலைக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

என்னவொரு இலங்கை?

அழிவு அரசியலால் அற்புதமாக வாழ்ந்த இனங்கள் பிளவுபட்டுப் போகிறார்கள்!

தென்னாசியவிலேயே அதிக ஜனநாயகப்பண்பைக்கொண்டிருந்த இலங்கை-இன்று, இராணுவச் சர்வதிகாரத்துக்குள் உள்வாங்கப்பட்டு அராஜகத் தேசமாக விரிந்து கிடக்கிறது. இது, தமிழரை, இஸ்லாமியரை, சிங்களவரை மட்டுமல்ல இலங்கையின் அற்புதமான சூழலையே அழித்து வருகிறது! அதீத யுத்த முனைப்புகள் கொட்டும் குண்டுகள் இயற்கை வளங்களை அற்புதமான காடுகளைக்கூட நாசமாக்கிச் சுடுகாடாக மாற்றுகிறது. தமிழருக்குப் பசி தீர்த்த பனைகளையே இந்த யுத்தம் அதிகமாக அழித்துத் தமிழரின் வயிற்றைத் தொடர்ந்து காயப்போடுகிறது! இப்போது, மக்களின் தலைகளை உருட்டிவிடும் குண்டுகளை இடம்வலம் தெரியாதபடி எங்கும் புதைத்தபடி நரவேட்டையாடுகிறது!

மனிதர்கள், தாம் சாவதற்கான ஒவ்வொரு நிமிடத்தையும் கண்ணெதிரே காணவேண்டிய சூழலை இலங்கையெங்கும் தரிசித்தபடி. . .

இலங்கையின் எந்தப் பகுதியும் இனி அமைதியானவொரு வாழ்சூழலை இலங்கை மக்களுக்குத் தரமுடியாது!

இலங்கைத் தேசம் மக்களை வருத்தும் ஆட்சிக்குள் நிலைப்பட்ட சந்தர்ப்பம் தற்செயலானது அல்ல! இது திட்டமிடப்பட்டு வழி நடாத்தப்படுகிறது. இலங்கையின் கட்சிகள் இலங்கையை ஆளத் தகுதியற்றதாக்கப்பட்டு அன்னிய ஐ. நா. படைகள் இலங்கைக்குள் கால் வைக்கும் சூழலுக்கு வித்திடப்படுகிறது! அதற்காகவே அப்பாவி மக்கள் தினமும் கொல்லப்படுகிறார்கள். தமிழ், சிங்கள இனங்களுக்குள் படுகொலையைச் செய்யும் ஒவ்வொரு குண்டுகளும் அன்னியத் துருப்புகள் இலங்கையைத் தளமாக்க முனையும் அரசியலோடு சம்பந்தப்பட்டது.



எந்த அமைப்பு-குழு, மாபியாக்கள்-அரசுகள் இதற்குப் பின்னால் இருக்கிறார்கள்?

இலங்கையின் மக்கள் பசிக்கும், பட்டுணிக்கும் நோய்க்கும் முகங்கொடுத்த காலம்போய், இப்போது யுத்தக் கிரிமனல்களின் கொலைகளுக்கும், குண்டுகளுக்கும் தமது அன்றாட வாழ்வைச் சிதைக்கும் பயங்கர வன்முறைக்குள் உயிரைவிட வேண்டிய அரசியலை எந்த வர்க்கம் உற்பத்தியாக்கியது?

பாகிஸ்தான் அதிபர் முஸ்ராப் இலங்கையின் பயங்காரவாதத்தை அழிக்க உதவுவதாகச் சொல்கிறார். தனது தேசத்தின் அதீத பயங்கரவாதத்தைத் தானே செய்தபடி!

நாம் அரேபியக் குறைவிருத்தி இனமோ அல்லது பாகிஸ்தானின் கல்வியறிவற்ற மதஅடிப்படைவாத மக்கள் தொகையைக் கொண்ட தேசத்தவர்களில்லை! அன்றிச் சினிமாவே-இந்தியத் தேசியமே உலகமெனவெண்ணும் இந்தியப் பெருங்குடிகளோ அல்ல!

எமக்கென்றொரு வரலாறுண்டு.

மிகவுயர்ந்த மனித நடத்தையின்-ஜனநாயக-வாழ்வு விழுமியத்துக்கு இலங்கை மக்கள் சொந்தக்காரர்கள்.

எங்கள் தேசம் அடிப்படைவாதக் கிரிமினல்களை அதிகமாகக்கொண்டிருக்கவில்லை! ஆனால், இன்றைக்கு பாகிஸ்தானுக்கு நிகராக இத்தேசம் பயங்கரவாதிகளால் நிறைந்து சுடுகாடாக மாறுகிறது. சிங்கள இராணுவம் முழுமையான பயங்கரவாதிகளால் வழி நடாத்தப்படுகிறது. தமிழ் விடுதலை இயக்கங்கள் அன்னிய அரசுகளுக்காகக் கண்மண் தெரியாத கொலைக்காரர்களாக மாற்றப்பட்டபின் சிங்கள வன் கொடுமை இராணுவத்தின் இருப்பு பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது! சிங்களப் பயங்கரவாத இராணுவத்தின் நிலைப்பு, இலங்கைத் தேசம் முழுவதையும் அதன் பரவலான அடக்குமுறைக்குள் உட்படுத்தி இலங்கையிலிருந்த அனைத்து மனித விழுமியங்களும் இல்லாதாக்கப்பட்டுள்ளது. இலங்கையின் ஊடகங்கள் சிங்களப் பாசிச இராணுவத்தைத் தேசத்தைக் காக்கும் படையணியாக மக்கள் மத்தியில் பரப்புரை செய்து, அதன் இருப்புக்கும், நிலைப்புக்கும், அன்னியச் சேவைக்கும் மக்களிடம் ஆதரவைத் தேடித் தருகின்றன.

தமிழ் பேசும் மக்கள் மத்தியில் வலுவான அடக்குமுறைகள் நிகழும்போது இயக்கவாதம் மேலோங்கியும், குறிப்பிட்ட அமைப்பைத் தொடர்ந்து ஏகபோகமாக நிலைப்படுத்தவும் இத்தகைய குண்டுதாக்குதல்கள் தமிழ் மக்கள் மத்தியில் நடாத்தப்படுகிறது. இது மக்களைத் தொடர்ந்து இனவாதத் தீயில் சிக்க வைத்துத் தொடர்ந்து இனவாதிகளாகவும், மக்களினங்களுக்குள் பரபஸ்பர இணக்கவுறவைத் திட்டமிட்டு அழிப்பதாகவும் இருக்கிறது. இத்தகையவொரு சூழலே பற்பல இயக்க-கட்சி அரசியலுக்கு விரும்பத் தக்கதாக இருக்கிறது. மக்கள் நலனற்ற அடியாட்படை அரசியலுக்கு இவையே கதியாகவும் இருக்கிறது.

இதை முடிவுக்குக்கொணர்ந்து, மக்களின் பரஸ்பர நட்போடும், உறவோடும் இலங்கையில் நியாயமான தீர்வை எட்டி இலங்கையில் ஜனநாயக விழுமியங்களை மீளத் தகவமைக்கும் அரசியல் நடைமுறைகளை எங்ஙனம் கட்டியொழுப்புவது அவசியமோ, அதேயளவு இனங்களுக்கிடையிலான சுயநிர்ணயவுரிமைசார்ந்த சுயாதிக்கம் அவசியமாக இருக்கிறது. இதை மறுத்தபடி இலங்கையில் ஜனநாயக விழுமியங்கள் குறித்துப் பேசுபவர்கள் மொத்தத்தில் இலங்கையின் அழிவு அரசியலையே நிலைப்படுத்த முனைகிறார்கள்.

இலங்கையின் இன்றைய சூழல் அன்னிய நலன்களின் அதீத ஆர்வங்களுக்கான செயற்கையான சூழலாகும்.

மக்கள் தமது வாழ்வாதாரப் பிரச்சனைகளிலிருந்து திசை திருப்பப்படும் சூழல் மிகத் தற்காலிகமானவை. மக்களை அதிலிருந்து மீண்டுவர இன்றைய கட்சிசார்-அரச, இயக்கசார் ஊடகங்கள் விடுவதாகவில்லை! ஊடகங்களின் தனியுடமையானது இன்றைய இந்த அவலக் கொலைகளுக்குத் தீனிபோடுவதாகவே இருக்கிறது. பணக்கார-அதிகாரக் குடும்பங்கள் ஒவ்வொன்றிடமும் இன்றைக்குத் தொடர்பூடகங்கள் தொலைக்காட்சியாகவும், வானொலியாகவும், பத்திரிகையாகவும் இருக்கும்போது மக்களைக் குரோதவாதிகளாகவும், இனவாதிகளாகம் தமது நலன்களைச் சார்ந்து உருவாக்கி வருகிறார்கள்.

இந்த நிலையில் இணையங்களுடாகவே மக்களை ஒருமைப்படுத்தும் பரப்புரைகளைச் செய்யக்கூடியதாக இருக்கிறது. எனினும், இணையச் சஞ்சிகைகள் பரந்தபட்ட மக்களை இன்னும் அண்மிக்கவில்லை! இது, மக்களைக் கூறுபோட்டுக் கொலை செய்யும் அரசியலை முன்னெடுக்கும் அன்னிய-உள்நாட்டு மாபியாக்களை நம்பி மக்கள் கொலைப்பட்டுப் போகும் விட்டில் பூச்சிகளாக இலங்கை மக்களின் வாழ் சூழல் மாற்றப்பட்டதையே இன்றைய தம்புல, மன்னார், மொனராக்கல, யாழ்ப்பாணக் குண்டுவெடிப்புகள் சொல்கின்றன-மெய்பிக்கின்றன!

இதிலிருந்து இலங்கையை மீட்பதென்பது ஒரு தசாப்பதகாலப் போராட்டமாகவே இருக்கப் போகிறது.

இதற்குத் தகமையுடைய முற்போக்கு சக்திகளின் செயற்பாடுகள் மிக மெலிதானதாகவே இருத்தி வைக்கப்பட்டுள்ளது. இது, மக்களுக்கு விடிவைத் தரும் செயற்பாடுகளைச் செய்வதற்குகந்த முனைப்பைக் கொண்டிருக்கவில்லை!

எனவே, அன்னியப்படைகளின் வருகைக்கு ஜ. நா. ஒப்புதல் வழங்க, இலங்கை இன்னொரு அவ்கானிஸ்தானாக மாறும். அங்கே, காலாகாலத்துக்குமான ஒடுக்குமுறை உழைப்பவர்களின் அரச-இயக்க முன்னெடுப்புகளைத் தடுத்தபடி மாறிவரும் இந்தியத் துணைக்கண்ட ஆளும் வர்க்க நலன்களை மேற்குலகத்தோடு இணைத்தபடி இன்னும் வளத்தெடுக்கும் ஒரு அராஜகச் சர்வதிகார அரச-கட்சி இராணுவத் தன்மையிலான ஆட்சியை நமது தேசங்களுக்குத் தீர்வாக உலகம் செய்து முடிக்கும்.

இதற்குத்தான் ஈழப்போராட்டம் வழிவகுத்து நடாத்தப்பட்டது? தூ. . .

மார்க்சியம் சந்தித்து வரும் சவால்கள்

அகிலன்
01.02.2008

லகில் பல தத்துவங்களும் தத்துவக் கோட்பாடுகளும் தோன்றியுள்ளன. புத்தம் முதல் பின் நவீனத்துவம் வரை என பெரும் பட்டியலே இடலாம். இவை அனைத்தும் மனித சமுகத்தில் புராண இதிகாசங்களாக, பக்தி மார்க்கமாக போதனைகளாக, சமூக சீர்திருத்தக் கருத்துக்களாக, அரசியல் பொருளாதார கலாச்சார கோட்பாடுகளாக பிரதிபலிக்கின்றன.

மனித சமூகத்தில் இத்தத்துவ ஓட்டங்களின் மத்தியில் தான் மார்க்சிச தத்துவமும் பிறந்தது. மார்க்சிசத்திற்கு கிட்டத்தட்ட 160 வயதாகின்றது. கார்ல் மார்க்ஸ் இத்தத்துவத்தைப் படைப்பதற்கு பெரும் கஸ்டங்களின் மத்தியில், தன் வாழ்நாளின் பெரும் பகுதியை செலவிட்டார். பஞ்சம் பசி பட்டினிக்கு மத்தியில் வாழ்ந்தார். பல நாட்கள் உணவின்றி வெறும் உருளைக்கிழங்கோடு அவரது குடும்பம் வாழ்ந்தது. பிறந்த நாட்டில் வாழ முடியாது, அயல் நாடுகளில் நாடோடியாய் திரிந்தார். கஸ்டம் வறுமை நோய் காரணமாக, அவருடைய பிள்னைகளில் சிலர் சிறுவயதிலேயே காலமானார்கள். அவருடைய ஓர் பிள்ளை இறந்த பொழுது அடக்கம் செய்வதற்கு, பிரேதப்பெட்டி கூட வாங்க முடியவில்லை. பலநாட்கள் அப்பிள்ளை ஓர் முலையில் பிணமாகவே இருந்தது. மொத்தத்தில் அவரும் அவருடைய குடும்பமும், வாழ்க்கையின் விழிம்பு நிலைக்கு கீழ் தள்ளப்பட்டனர். இப்படிப்பட்ட அவல வாழ்வின் மத்தியிலேயே, மார்க்ஸ் மார்க்சிச தத்துவத்தைப் படைத்தார்.

1848ல் மார்க்சும் ஏங்கெல்சும் மார்க்சிச தத்துவத்தைப் உலகிற்குப் பிரகடனப்படுத்திய பொழுது, உலகப் பிற்போக்கு வாதிகளும் முதலாளித்துவ சக்திகளும் ஐரோப்பாவில் பூதம் ஒன்று புறப்பட்டுள்ளது என ஓலமிட்டனர். அஞ்சி நடுங்கினர்.

உண்மையில் மார்க்சியத்தின் முக்கிய சாரம் தான் என்ன? மார்க்ஸ் மனிதகுல வரலாற்றை வர்க்கப் போராட்டத்தின் வரலாறு என்றார். மனிதன் தோன்றி சமுதாயமாகி இன்றைய சமகாலம் வரை, பல சமுதாய அமைப்புக்கள் வர்க்கப் போராட்டத்தின் ஊடாக கடந்து வந்திருக்கின்றது என்றார். புராதன சமதர்மம், ஆண்டான் அடிமை, நிலப்பிரபுத்துவ விவசாயிகள், முதலாளி தொழிலாளி என சமூகம் கடந்து வந்திருக்கின்றது. இதுவரை தொடராக இருந்து வந்த இந்த சமுதாய அமைப்புக்களில், முதலாளித்துவ சமுதாயத்தில் தலை கீழான மாபெரும் பாய்ச்சல் ஓன்று நிகழுமென்றார். கடந்து வந்த சமுதாயங்களில் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, அடங்கி ஒடுங்கி ஆளும் வர்க்கங்கள் கொடுத்தவை சலுகையாகவும் கூலியாகவும் இருந்தது. இதற்கு மாறாக முதலாளித்துவ சமுதாயத்தில் தொழிலாளி வர்க்கமும், அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களும், நடைமுறையில் உள்ள அரசு இயந்திரத்தை புரட்சியின் முலம் உடைத்தெறிந்து, அதனிடத்தில தமது சொந்த அரசுகளை நிறுவுவர் என்றார்.

இதுவே பாரிஸ் கம்யூன் புரட்சியாக, ருசியா சீனப் புரட்சியாகியது. மேலும் பல நாடுகளின் புரட்சிகளாக மாறியது. மனித சமூகத்தை சமூக விஞ்ஞானக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் பகுத்தாய்ந்ததன் விளைவாகவே, மார்க்ஸ் இந்த முடிவிற்கு வந்தார். இதனாலேயே இத் தத்துவம் இன்றும் உயிரோட்டமுள்ள, புரட்சிகரத் தத்துவமாக விளங்குகின்றது.

காலத்திற்கு காலம் மார்க்சிச லெனினிச மாவோவாதிகளால் புடம் போடப்பட்டு, உலக நாடுகள் பலவற்றில் அந்நாடுகளின் நிலைமைகளுக்கேற்ப பிரயோகிக்கப்பட்டு, அது நடைமுறையில் வெற்றியும் கண்டு வந்தது.

இருந்தபொழுதிலும் மார்க்சிச தத்துவம் காலத்திற்கு காலம் பல சவால்களையும் சந்தித்து, தத்துவப் போரின் மூலம் முன்னேறி வந்துள்ளது. இப்படி திரொட்சியத்திற்கு எதிரான தத்துவப் போரையே எதிர்கொண்டது.

திரொட்சியத் தத்துவத்தின் சாரம் நிரந்தப் புரட்சியும், தனி ஒரு நாட்டில் சோசலிசத்தை உருவாக்க முடியாது என்பதுமேயாகும். தொழிலாளி வர்க்கம் மட்டுமே உலகின் புரட்சிகரமான வர்க்கம் என்றது. அவ் வர்க்கம் தனது முழு ஆட்சியை நிறுவும்வரை, உலக அளவில் புரட்சி நிரந்தரமாக நடைபெற்றுக் கொண்டேயிருக்கும் என்றார். இதுவே திரொட்சியின் நிரந்தரப் புரட்சி கோட்பாடாகும்.

இதனால் திரொட்சிக்கு தொழிலாளி வர்க்கத்தை தவிர ஏனைய வர்க்கங்களின் புரட்சிகர பாத்திரத்தை மறுத்தார். விவசாயி வர்க்கம் புரட்சிக்கு தகுதியற்ற வர்க்கம் என்றார். ருசியப்புரட்சி நடைபெற்ற போது ருசியாவின் மொத்த சனத்தொகையில் மூன்றில் இரண்டு பகுதியினர் விவசாயிகள் ஆவர். தொழிலாளி வர்க்கம் அதிக எண்ணிக்கையில் இல்லை. இக்காலகட்டத்தில் தொழிலாளர் விவசாயிகளை இணைத்தே ருசியப் புரட்சியை லெனின் நடத்தினார்.

அப்போது இந்நடைமுறையை திரொட்ஸ்கி ஏற்கவேயில்லை. தொழிலாளி வர்க்கம் தற்காலிகமாக விவசாயி வர்க்கத்துடன் இணைந்துள்ளது என்றார். விரைவில் தொழிலாளி வர்க்கம் விவசாயிகளிடமிருந்து பிரிந்து, தனித்து தமது புரட்சியினை நடத்துவர் என்றார். தொழிலாளி வர்க்கம் ருசியாவில் மட்டுமல்ல உலகம் பூராவும் நிரந்தரமாகப் போராடிக் கொண்டே இருப்பர் எனறார்.

இத்தத்துவக் கோட்பாட்டின் அடிப்படையானது சீனப்புரட்சியைக் கூட ஏற்றுக் கொள்ளவில்லை. இரண்டாவது உலக யுத்தத்தில் பாசிசத்திற்கு எதிரான ஸ்டாலின் அவர்களின் ஐக்கிய முன்னணிப் போராட்ட முறையையும் கூட ஏற்றுக்கொள்ளவில்லை. இக்காலகட்டத்தில் ஆசிய நாடுகளில் சுதந்திரத்திற்கான போராட்டங்களில், கம்யூனிஸ்ட் கட்சிகள் தேசிய முதலாளித்துவ சக்திகளோடு ஏற்படுத்திய ஐக்கிய முன்னணியிலான போராட்டங்களையும் ஆதரிக்கவில்லை.

ஒட்டுமொத்தமாக திரொட்ஸ்கியத்தை விமர்சனக் கண்கொண்டு பார்ப்போமாகில், அதன் நடைமுறை சமகால புரட்சிக்கு சாத்தியமற்ற ஒரு கோட்பாடு என்ற முடிவிற்கே வரலாம். இதனாலேயே ஸ்டாலினோடு முரண்பட்ட நிலைக்கு சென்று, நாட்டைவிட்டு வெளியேறும் நிலையும் ஏற்பட்டது.

இதையடுத்து மார்க்சிய லெனினிசவாதிகள் எதிர் கொண்ட தத்துவப் போராட்டம் திரிபுவாதத்திற்கு எதிரானதாகும். சோவியத்யூனியனில் ஸ்டாலினின் மறைவோடு குருஷ்சேவின் தலைமை பதவிக்கு வந்தது. வந்தவுடனேயே ருசியப் புரட்சிக்குப் பின் லெனின் ஸ்டாலின் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்ட, சோசலிச பொருளாதாரம் அரசியல் நடைமுறைகள் அனைத்தும் தலைகீழாக திரித்து புரட்டப்பட்டன. அத்தோடு குருச்சேவின் தலைமை சமுதாய மாற்றம் பற்றிய புதிய கோட்பாடாக, ஏகாதிபத்தியத்துடன் சமாதான சகஜீவனம் எனப் பிரகடனப்படுத்தினர். சர்வதேச பாட்டாளி வர்க்கம் ஆயுதப் போரின் மூலம் வர்க்கப் புரட்சியை நடத்தி அரசியல் அதிகாரத்தை கைப்பற்றத் தேவை இல்லை என்றார். பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை பெறுவதன் மூலம், சோசலிச சமுதாயத்தை உருவாக்க முடியும் என்றார். இதையே வாக்கப் போராட்டமற்ற, சமாதான சகஜீவனக் கோட்பாடு என வரையறுத்தார்.

இக்கோட்பாடு சம்பந்தமாக சர்வதேச கம்யூனிச இயக்கத்தில் மாபெரும் வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றன. இக்காலகட்டத்தில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியும், மாவோவும், இத் தத்துவம் மார்க்சிச லெனினிசத்தையும், தொழிலாளி வர்க்கப் புரட்சியையும் சிதைக்கும் திரிபுவாதத் தத்துவம் என அம்பலப்படுத்தினார். இத்தத்துவப் போரின் ஊடாக சர்வதேச கம்யூனினிஸ்ட் இயக்கம் பிளவுபட்டது. வர்க்கப் போராட்டத்தை மறுத்த திரிபுவாதமும், வர்க்க போராட்டத்தைக் கோரிய மார்க்சிச லெனியவாதியமாகவும் பிளவுபட்டது.

இத் தத்துவம் முதலாளித்துவத்தை மீட்டது. சோவியத் யூனியன் பல துண்டாக உடைந்தது. பல நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள், அந்நாடுகளின் முதலாளித்துவ சட்ட திட்டங்களை ஏற்றுக்கொண்டு சீரழிவான அரசியல் நடத்துகின்றனர். இப்போக்குகளால் உலகளாவிய ரீதியில் உண்மையான மார்க்சிச லெனினிச வாதிகள் மத்தியிலும், புரட்சிகர இயக்கங்கள் மத்தியிலும் ஓர் தேக்க நிலை உருவாகியது.

இந்நிலை ஏற்பட்டதற்கு, புரட்சிக்கு பிந்திய சமுதாயங்களில் ஏற்பட்ட திரிபுவாதமும், அதைத் தொடர்ந்த முதலாளித்துவ மீட்சிகளுமே முக்கிய காரணமாகும். அத்தோடு ஏகாதிபத்திய சக்திகளின் நடவடிக்கைளும் இதற்கு துணையாக இருந்தன.

19ம் நுற்றாண்டின் முற்பகுதியில் இருந்து, சர்வதேச ரீதியாக தொழிலாளி வாக்கப் புரட்சிகளை உணர்வு பெற்ற பாட்டாளி வாக்கம் நடத்துகின்றது. இதன் மூலம் தொழிலாளி வர்க்கமும், அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களும், தத்தமது நாடுகளில் தமது சொந்த அரசுகளை நிறுவமுனைகின்றன. இதைக் கண்ணுற்ற உலக முதலாளித்துவ ஏகாதிபத்திய சக்திகள் பயப்பீதி அடைந்துள்ளதோடு, இதை இல்லாமல் செய்ய தங்களாலான நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றனர். இதனால் முதலில் இவர்கள் மத்தியில் சர்வதேச ஒற்றுமையும், இதன் ஊடே பல மாற்றங்கள் நடந்தேறியதையும் நாம் கண்டாக வேண்டும்.

கடந்த அரை நூற்றாண்டிற்கு மேலாக ஓழுங்கமைக்கப்பட்ட முதலாளித்துவம் என்ற பண்பு மாற்றம் நடந்தேறியுள்ளது. உலகமயமாதல் என்ற பொருளியல் அமைப்பின மூலம், மனித வாழ்வின் சகல கூறுகளும் அதன் தேவைக்கேற்ற விதத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது உலக அளவில் தொழில் நுட்பப் பகிர்வு, உலக சந்தை, ராணுவக் கூட்டு போன்றவற்றின் மூலமும் சாத்தியமாகியுள்ளது. மனிதன் மிக ஆனந்தமாக வாழ்கின்றான் என்ற மாயையும், அதற்கேற்ற வகையில் கருத்தியல் நடவடிக்கைகளையும் விளம்பரங்களையும் மேற்கொண்டுள்ளது. இன்றைய நவீன தொழில் நுட்ப யுகத்தில், எந்த பரம ஏழையும் கடைக்கு சென்றால், வீட்டிற்கு சாப்பாட்டுப பொருட்கள் வாங்குவதை விட கைத் தொலைபேசி வாங்கினால் என்ன என்று எண்ணும் மனநிலைக்கு விளம்பரம் மனித மூளையை ஆக்கிரமித்துள்ளது. இந்த கருத்தியலுக்கு அவனை உலகமயமாதல் கொண்டு செல்லுகின்றது. இக்கருத்தியல், திட்டமிட்ட பலமான மூளைச்சலவை முறைகளையே உற்பத்தியாக்குகின்றது. இது இன்றைய சமூக அமைப்பின் சகல அம்சங்களிலும் ஊடுருவிவிட்டது.

நவீன முதலாளித்துவம் முன்போல் இல்லாது பெரும் கருத்தியல் தன்மை கொண்டதாக வளர்ந்துள்ளது. நடைமுறையில் முன்பு தனி முதலாளிகள் இருந்த இடத்தில், இன்று கம்பனிகள் - கார்ப்பரேசன்கள் இன்னும் பல நவீன கூட்டு நிறுவனங்கள், கூட்டு தொழிற்சாலைகள் உருவெடுத்துள்ளன. நவீன இயந்திர மயமாக்கம் தொழிலாளி வர்க்கத்தை உடல் உழைப்பில் இருந்து அந்நியமாக்கியுள்ளது.

மொத்தத்தில் இன்றைய உற்பத்தி நுகர்வுப் பொருள் கலாச்சாரம். அதன் ஊடாக விளம்பரங்கள், சினிமா முதல் கணனி இயந்திரம் வரை சகல ஊடகங்களிலும் உடுருவியுள்ளது. இது போராடும் இளம் சந்ததியின் கலகக்குரலை, புரட்சிகர போராட்ட உணர்வுகளை மழுங்கடித்து திசைதிருப்புகின்றது. உலகில் புரட்சியும் சமுதாய மாற்றமும் நடைபெறாமல் தடுக்க, முதலாளித்துவம் கண்டுபிடித்துள்ள நவீன மருந்துகள் இதைப்போல் பலவுள்ளன.

சமகால உலகில் முதலாளித்துவ ஏகாதிபத்திய சக்திகள் உலகமயமாதல் ஏன்ற பொருளியல் நடைமுறை மூலம் எவ்வளவு தான் மூளைச்சலவை செய்கின்ற வித்தைகளில் ஈடுபட்டாலும், இவை தற்காலிகமானதே.

இன்று உலகளாவிய ரீதியில் அத்தியாவசியப் பொருட்களின் அதிவிரைவான விலையேற்றம், வேலையை இழத்தல், வேலையில்லாத் திண்டாட்டம் உள்நாட்டு வெளிநாட்டுக் கடன்கள், பணவீக்கம், பங்குச்சந்தை நெருக்கடிகள் போன்றவற்றால், சுரண்டல் அடக்குமுறை வன்முறை பன்மடங்காகியுள்ளது. இவற்றை முதலாளித்துவத்தால் கட்டுப்படுத்தவோ, இதற்கு தீர்வு காணவே முடியாது திணறுகின்றது.

எங்கெங்கு சுரண்டல் அடக்குமுறை உண்டோ, அங்கு வர்க்கப் போராட்டம் உண்டு. வர்க்கப் போராட்டம் உள்ளவரை, மார்க்சியசத்தின் தேவை இருந்தே தீரும்.


Friday, February 1, 2008

நேர்மையை, நியாயங்களை, உண்மைகளை ஒரு போதும் யாராலும் தோற்கடிக்க முடியாது


செழியன்
01.02.2008

லும்புத் துண்டு சூப்புவது என்றால் ஒரு எசமானின் காலை நக்கி, அவர் இட்ட கட்டளைகளை எந்த வித மறுப்பும் இன்றி சிரமேற்கொண்டு ஏற்று பணிபுரிந்து, தனக்கென்று ஒரு கருத்தும் இல்லாமல் எசமான் ஏவுகின்றவர்களின் மீது பாய்ந்து கடித்துக் குதறி, பின்னர் அவர் தருகின்ற எலும்புத்துண்டை சன்மானமாகப்பெற்று திருப்தியடைந்து, வாலை ஆட்டி, அவர் காலை நக்கி எந்த விதமான சுதந்திரம் பற்றிய பிரக்ஞை இல்லாமல் வாழ்வது.

தன்னிடம் வந்தால் அந்த எலும்புத்துண்டை தமிழர்கள் எல்லாருக்கும் தரத் தயாராக இருக்கின்றேன் என்றும், தன்னால் தான் அது முடியும் என்று குறிப்பிட்டு எழுதியுள்ளார் சந்திரகுமார். சந்திரகுமார் அது உண்மையா? இல்லை எனது கட்டுரைக்கு பதில் சொல்வதற்காக உணர்ச்சி வசப்பட்டு நீங்கள் சொல்லிய வார்த்தைகளா? உண்மையில் நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு எழுதிவிட்டீர்கள் என்று இதுவரை நம்புகின்றேன்.

எது எப்படியாயினும் சந்திரகுமார், ஒரு கருத்துக்கு எதிராக கருத்து கூறுவதற்கு சொந்த முகத்தில் வரவேண்டும். போலி முகமூடி அணிவது தவறு. சிலர் போலிமுகமூடிகளை அணிந்து கொண்டு இணையத்தளங்களில் வலம் வருகின்றார்கள் என்றால், அவர்களுடைய உண்மையான முகத்தை அவர்களால் காட்டமுடியாத காரணத்தால் தான். ஊழல்கள் செய்து, உட்கொலைகள் செய்து, பொது மக்களை, பத்திரிகையாளர்களை கொன்று அந்த இரத்தத்தை முகத்தில் பூசிக் கொண்டு இருக்கின்ற முகங்கள் அவை. எப்படி அந்த உண்மையான முகத்தை அவர்களால் காட்ட முடியும்? அப்படியான ஒரு முகமாக உங்கள் முகம் இருக்காது என்று நம்புகின்றேன் சந்திரகுமார். அப்படி இல்லை என்றால் பிறகு என்ன தயக்கம் உங்களுக்கு. வாருங்கள் உங்கள் முகத்தை காட்டுங்கள். நாம் இலங்கை பிரச்சனை பற்றி ஆரோக்கியமாக விவாதிக்கலாம்.

அது மட்டுமல்ல காலம் காலமாக புலிகளினால் வீடு இழந்து, ஊர் இழந்து, நாடு இழந்து, அரசியல் உரிமைகள் இழந்து இன்றும் அவர்களால் மரணதண்டனை பெற்ற மனிதனாக வெளிநாட்டில் வாழ்கின்ற என்னைப் போன்றவர்களை, நாம் எமது கருத்துகளைக் கூறும் போது, புலிகளின் பினாமிகள் என்று பொய்யான முத்திரைகள் குத்தாதீர்கள்.

செழியன் தவறு செய்தால் அதை சுட்டிக்காட்டுங்கள், தெளிவாக எழுதுங்கள் அதில் தவறு கிடையாது. அதே சமயம் உங்கள் முகத்தையும் காட்டுங்கள். அப்போது தான் தெரியும் மற்றவர்களை விமர்சிக்கும் தகுதி உங்களுக்கு உள்ளதா என்று.

என்னுடைய பழைய நண்பர்களில் ஒருவரான பத்மநாபா பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள். பத்மநாபாவின் சில செயல்பாடுகள் தொடர்பாக உடன்பாடும், பல செயல்பாடுகள் தொடர்பாக முரண்பாடும் எனக்கு இருந்தது, இன்னமும் உள்ளது. அவருடன் நிறைய விடயங்களில் நேரடியாக கருத்து முரண்பட்டிருக்கின்றேன். இது இரகசியமான விடயமில்லை. பலரும் அறிந்த விடயம்.

பத்மநாபாவின் தலைமையில் அமைந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் உளவுத்துறை தொடர்பாகவும், உட்கட்சியில் கருத்துகளுக்காக போராடிய ஈழமக்கள் புரட்சிரகர முன்னணி தோழர்களை (டக்ளஸ் தேவானந்தாவையும் கூட) அந்த உளவுத் துறை கண்காணித்து பின் தொடர்ந்து அவர்கள் மீது அபாண்டமான வீண்பழிகளை இட்டதற்கு எதிராக நான் போராடினேன். இது ஒரு உட்கட்சி ஜனநாயகத்தை படுகொலை செய்யும் செயல் என்றும், பாசிசச் செயல்பாடு என்றும் போராடினேன். இந்த உளவுத்துறைக்குப் பின்னால் சுரேஸ் பிரேமச்சந்திரனின் மறைமுகமான கைகளும் இருந்தன. உயிரா? சாவா? என்ற நிலை கூட இருந்தது.

எனினும் நீண்ட காலப் போராட்டத்தின் பின்னர் நண்பர் டக்களஸ் தேவானந்தா தலைமையில் 3 மத்திய கமிட்டி உறுப்பினர்கள் குழு (டக்ளஸ் தேவா, பாஸ்கரன்(சேகர்), ஜயா) அமைக்கப்பட்டு விசாரணைகள் நடாத்தப்பட்டன. அந்த குழுவில் ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் உளவுப்படையைச் சேர்ந்த பலர் சாட்சியம் அளித்தனர். அந்த விசாரணையின் முடிவில் நான் சொன்ன குற்றச்சாட்டுகள் உண்மை என்று நிரூபிக்கப்பட்டது. பின்னர் பத்மநாபா தலைமையிலான மத்திய கமிட்டியும் அதை ஒத்துக் கொண்டது.

பின்னர் ஒரு சமயம் (யாழ்ப்பாணத்தில் இருந்து டக்ளஸ் தேவானந்தா தமிழ்நாடு சென்ற பின்னர்) அவருடைய காரியாலயத்தில் பணிபுரிந்த முக்கிய உறுப்பினர் ஆன ரமேஸ் அவர்களை ( பின்னர் அவருடைய பெயர் தினமுரசு அற்புதராஜா) ஒரு நாள் இரவு பத்மநாபாவின் உத்தரவின் பேரில் அவரது ஆயுதப்படை கடத்திச் சென்றது. ரமேசுடன் சேர்த்து கோப்பாய் தோழர் ஒருவரும் கடத்தப்பட்டார். உண்மையாக அன்று கடத்தப்பட்டிருக்க வேண்டிய இன்னொருவர் தோழர் டேவிற்சன். தற்செயலாக அந்த இரவில் அவர் அங்கு இருக்கவில்லை. அதனால் அவர் அந்தக் கடத்தலில் இருந்து தப்பிக்கக் கூடியதாக இருந்தது.

ரமேசைக் கடத்தியது யார் என்று முதல் நாள் எமக்குத் தெரியாமல் இருந்தது. மறுநாள் ரமேசுடன் கடத்தப்பட்ட கோப்பாய் தோழர் விடுவிக்கப்பட்டார். ரமேசை கடத்திய விசயத்தை வெளியில் சொல்லக் கூடாது. அப்படி சொன்னால் கொலை செய்வோம் என்று மிரட்டிய பின்னர் அவரை விடுதலை செய்திருந்தது மக்கள் விடுதலைப்படை.

இது தான் புலிகளுக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ். க்கும் உள்ள வித்தியாசம். ஒரு கடத்தலை, ஒரு கொலையை, ஒரு உளவு வேலையை எப்படி செய்வது என்பதில் உள்ள வித்தியாசங்கள்.

புலிகள் அன்று ரமேசைக் கடத்தி இருந்தால் இந்தக் கோப்பாய் தோழரை விடுதலை செய்திருக்காது. கொன்று போட்டிருக்கும். ஆனால் கொஞ்சம் மிருகத்தன்மையும், கொஞ்சம் மனிதத்தன்மையும் ஈ.பி.ஆர்.எல்.எவ். இடம் இருந்ததால் கோப்பாய் தோழர் விடுதலை செய்யப்பட்டார். அவர் விடுதலை பெற்றதுமே நான் தங்கியிருந்த ஊருக்கு என்ன நடந்தது என்பது குறித்து தகவல் தெரிவித்து விட்டு அவர் தலைமறைவாகிவிட்டார். உடன்; நான் அந்த மாலையில் அப்போது யாழப்;பாணத்திற்கு பொறுப்பாக இருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ். மத்திய கமிட்டி உறுப்பினரை (பாஸ்கரன்- (சேகர்)) சந்தித்து கேட்டேன் “ஈ.பி.ஆர்.எல்.எவ். தானா ரமேசைக் கடத்தியது” என்று.

“இல்லை நாங்கள் கடத்தவில்லை” என்று அவர் கூறினார். இந்த பதில் எனக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியது. ரமேஸ் அவர்களின் உயிர் ஆபத்தில் உள்ளது என்று நான் உணர்ந்தேன். மறுநாள் காலை நான் இருந்த கிராமத்தில் இருந்து எனது தலைமையில் சுமார் இருநூறு பேர் (நண்பர் கி.பி உட்பட) ‘ரமேசை விடுதலை செய்’ என்ற கோசங்களையும், அட்டைகளையும் தாங்கி பருத்தித்துறை வீதி வழியாக மிக நீண்ட ஊர்வலம் சென்றோம். இதனையடுத்து மானிப்பாயில், பின்னர் சுண்ணாகத்தில், இறுதியாக உரும்பராயில் இருந்து யாழ் பல்கலைக்கழகம் வரை “ரமேசை விடுதலை செய்” என்ற கோரிக்கையுடன் மக்கள் போராட்டம் நடந்தது.

உரும்பராயில் இருந்து நண்பர் ஜெகநாதன் தலைமையில் யாழ் பல்கலைக்கழகத்தை சென்றடைந்த அந்த மக்கள் கூட்டம் ரமேசை விடுதலை செய்யும் வரை தாம் பல்கலைக் கழகத்தை விட்டு அகல மாட்டோம் என்று கூறி அங்கேயே இருந்து விட்டனர். அவர்களுக்கு பல்கலைக்கழக மாணவர்களது ஆதரவு கிடைத்தது. நிலைமை மோசமானதை அறிந்த ஈ.பி.ஆர்.எல்.எவ். யாழ் பொறுப்பாளர் அங்கு சென்று “இன்னமும் 48 மணித்தியாலத்தில் ரமேசை நாங்கள் விடுதலை செய்கின்றோம்” என்று கூறினார். அவர் கூறியதின்படி ரமேஸ் விடுதலை செய்யப்பட்டார். அதே சமயம் மீண்டும் கடத்தப்படலாம் என்ற அச்சம் எமக்கு ஏற்பட்டபடியால் டேவிற்சன் நாட்டை விட்டு தனது விருப்பத்திற்கு மாறாக வெளியேறினார்.

புலிகளின் அராஜகத்தை மட்டுமல்ல எந்த இயக்கத்தின் படுகொலையையும், அராஜக நடவடிக்கைகளையும் எதிர்த்தவர்கள் பலர். அவர்களில் ஒருவன் செழியன்.

புலிகளின் செயலை மட்டும் எதிர்த்துக்கொண்டு மற்ற இயக்கங்களின், தன் சொந்தக் கட்சியின் உட்படுகொலைகளை, பத்திரிகையாளர்களின் கொலைகளை, அரசின் மனித படுகொலைகளை ஆதரிக்கின்றவர்;கள் அல்ல நாங்கள்.

இப்படி எத்தனையோ முரண்பாடுகள். முரண்பாட்டின் ஒரு கட்டத்தில் மிக கவுரவமாக பத்மநாபாவுடன் இருந்த உறவை நான் துண்டித்துக் கொண்டேன். இது நடந்தது இந்திய இராணுவம் இலங்கைக்கு செல்வதற்கு முன்னர். இந்திய- இலங்கை ஒப்பந்தத்திற்கு முன்னர்.

அதன் பின்னரும் அவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது. பத்மநாபாவுக்கு எதிராகவோ, ஏனைய நண்பர்களுக்கு எதிராகவோ இல்லை புலிகளுக்கு எதிராகவோ, இன்னமும் எவருக்கும் எதிராக செழியன் ஒருபோதும் எந்த வித நயவஞ்சக முயற்சிலும் ஈடுபடவில்லை. மக்களை நேசிக்கும் எவரும் மற்றும் ஜனநாயகத்தை உளப்ப+ர்வமாக ஏற்றுக் கொண்ட எவரும் அப்படி எண்ணுவதோ செயற்படுவதோ கிடையாது. இந்த நயவஞ்சக முயற்சிகள், உட்கட்சி தோழர்களைப் படுகொலை செய்வது எல்லாம் பாசிஸ்டுக்களின் முயற்சிகள். ஆனால்; புலிகள் மட்டும் தான் இதை செய்கின்றார்கள், அதை நாங்கள் எதிர்க்கின்றோம் என்று சும்மா ஒரு போலிக்கு ஒப்பாரி வைக்கின்றார்கள் சிலர்.

ஒரு சமயம் தமிழ்நாட்டில் இருந்த எனது சில ஈ.பி.ஆர்.எல்.எவ். நண்பர்கள் ஈ.பி.ஆர்.எல்.எவ். இல் நடந்த சம்பவங்களை எழுதி அதை கட்சிக்குள்ளும், கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியிலும் விநியோகித்தனர். பின்னர் யாழ்ப்பாணத்திற்கும் வந்தும் அதை விநியோகித்தனர். அதன் பிரதிகள் பின்னர் புலிகளின் கைகளுக்குள் சென்றது. அதையே ஈ.பி.ஆர்.எல்.எவ். வுக்கு எதிராக புலிகள் பாவித்தனர். அந்த விடயத்தை தான் நயவஞ்சக முயற்சி என்று சந்திரகுமார் தனது எழுத்தின் மூலம் குறிப்பிட்டிருக்கின்றாரா? அது தற்செயலாக நடந்த விடயம். திட்ட மிட்டு அந்த நண்பர்கள் செய்த விடயம் இல்லை என்பதை இங்கு குறிப்பிடவிரும்புகின்றேன்.

நண்பர் பத்மநாபா, நண்பர் டக்ளஸ் தேவானந்தா, நண்பர் ஸ்ரீதரன்; ஆனந்தசங்கரி, நண்பர் தினமுரசு ஆசிரியர் அற்புதராஜா இன்னும் எவராக இருந்தாலும் (புலித்தலைவர் பிரபாகரன் உட்பட) அவர்களுக்கு மரணதண்டனை யாராலும் விதிப்பதையும் நான் எதிர்க்கின்றேன். ஆனால் அரசியல் முரண்பாட்டுக்கு தீர்வாக கொலையையே தண்டனையாக வழங்குபவர்கள் புலிகள் மட்டுமல்ல நண்பரே, மற்றும் பலர் உள்ளனர் என்பது உங்களுத் தெரியும்.

சந்ததியார், உமா மகேஸ்வரன், ராகவன், பத்மநாபா, சுரேஸ், டேவிற்சன், மித்திரன், அற்புதராஜா, டக்களஸ் தேவானந்தா, பாஸ்கரன் (சேகர்), செழியன். இப்படியே பட்டியல் இடலாம். இவர்கள் எல்லாம் தமது உயிரைப் பணயம் வைத்து, வாழ்க்கையை அர்ப்பணித்து தமிழ் மக்களின் உரிமைக்காக உழைத்தவர்கள். அவர்களுக்கு சாப்பாடும் இடமும் கொடுக்கவேண்டியது அந்தந்த அமைப்பின் கடமை. இதில் என்ன தவறு உள்ளது.

அதே சமயம் சாப்பாடு போட்ட இயக்கத்தின் தவறுகளை இவர்கள் எல்லாம் கண்டிக்க கூடாது, அப்படி கண்டித்தது தவறு, அந்த இயக்கத்தின் உள் இயக்க தவறுகளுக்கு எதிராக போராடுவது தவறு என்ற சாரப்பட சந்திரகுமார் எழுதியுள்ளார். அப்படி என்றால் ஈரோஸ் இயக்கத்தில் இருந்த டக்ளஸ் தேவானந்தா, மற்றும் இவர் குறிப்பிடும் பத்மநாபா ஆகியோர் வெளியேறி புதிய இயக்கம் தொடங்கியது தவறு என்று சொல்லுகின்றாரா சந்திரகுமார்? பாஸ்கரன் (சேகர்), டேவிற்சன், மித்திரன் போன்றவர்கள் பத்மநாபாவை விட்டு, பின்னர் தேவாவை விட்டு வெளியேறி இருக்கக் கூடாது என்று சொல்லவருகின்றாரா?

இதுதான் புலிக்குணம் என்று சொல்வது. புலிகளின் தவறுகளை கண்டிக்கின்றோம் என்று கூறிக்கொண்டு இருக்கும் பலரிடமும் ஒட்டி இருப்பது இந்த புலிக்குணம் தான். அதாவது உட்கட்சிப் போராட்டம் தவறு என்பது இந்த சந்திரகுமாரின் ஒரு கருத்து. இந்த சந்திரகுமாரின் விருப்பம் எல்லாம் தனக்கு எதிராக தனது இயக்கத்தில் எவருமே விமர்சனங்களை, உட்கட்சிப்போராட்டத்தை நடாத்தக் கூடாது என்பதே. சந்திரகுமாருக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் அவருடைய ஆசை புலிகளிடம் இருந்து ஆட்சியை பிடுங்கி அதே புலியாட்சியை தான் தொடர்வதே.

நான் எனது வீட்டில் இருந்தே அரசியல் வேலைகள் செய்தேன். பின்னர் இலங்கை இராணுவம் என்னைத்தேடி எனது வீட்டுக்குள் புகுந்த பின்னர், எனது வாழ்விடமே கிராமிய தொழிலாள மக்களின் வாழ்விடம் ஆன ஒரு கிராமமே. இது தெரிந்தும் தெரியாத மாதிரி சந்திரகுமார் புலம்பியுள்ளார்.

தமிழ் மக்களின் குடிசை வீட்டில் வாழ்ந்தேன், சந்திரகுமார் போல மோசாக் தரைபோட்ட வீட்டில் வாழவில்லை. மக்கள் பணத்தில் உணவை அருந்தினேன். அவர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டு அவர்களுக்காக வாழ்ந்தேன். அந்த தமிழ் மக்களின் மீது அராஜகம் செய்ய முயன்றவர்களையும், அவர்களது உரிமைகளை விற்ற முயன்றவர்களை, உட்கட்சிப் போராட்டத்தை நசுக்க முயற்சித்தவர்களை, சிங்கள, முஸ்லீம் மக்களுக்கு எதிராக நடந்து கொண்ட எல்லாரையும் நான் கண்டித்தேன். அவர்களுக்கு எதிராக என்னால் செய்ய முடிந்ததை செய்தேன்.

புலிகள் தொடர்பாக நான் இதுவரை எந்த விமர்சனமும் வைக்கவில்லை என்றும் அதற்கு எனக்கு திராணியில்லை என்றும் மீண்டும் பொய் கூறியுள்ளார் சந்திரகுமார். புலிகளின் மீதும் சரி மற்ற இயக்கங்களின் எந்தவித அராஜக நடவடிக்கை தொடர்பாகவும் இது வரை என்ன செய்திருக்கின்றார் இந்த சந்திரகுமார் என்று கூறமுடியுமா?

எனது கவிதைத் தொகுப்புகளான “மரணம்”, “இல்லாமல் போன தோழனுக்கு”, “அதிகாலையைத்தேடி”, “குழந்தைகளிடம் பொய் கூறாதீர்கள்”, இன்னும் கடைசியாக கடந்த வருடம் வெளியாகிய “கடலைவிட்டுப் போன மீன் குஞ்சுகள்” கவிதை தொகுப்பு உட்பட எல்லாவற்றிலும் புலிகள், மற்றும் ஏனைய இயக்கங்கள், இலங்கை இனவாத அரசு தொடர்பான எதிர்ப்புக் குரல் மேலோங்கியே உள்ளது.

கனடாவில் மேடை ஏற்றப்பட்ட நாடகங்களிலும், நான் தொகுத்து வழங்கிய கவிதா நிகழ்வுகளிலும் , பேச்சு மேடைகளிலும் புலிகளினதும், இலங்கை அரசாங்கத்தினதும் அராஜகங்களுக்கு எதிரான குரல் ஒலித்துள்ளது. அதற்கு எல்லாம் ஆவணங்கள் உள்ளன. “மனிதனின் நாட்குறிப்புகள்” என்ற எனது புத்தகம் மிக முக்கியமானது. இவற்றை விட எனது கட்டுரைகள், பேட்டிகளில் நேரடியாகவும் நான் புலிகளையும், இலங்கை அரசையும் விமர்சித்துள்ளேன். இதையெல்லாம் சந்திரகுமார் வாசித்தாரா? இல்லை வாசித்து விட்டு வாசிக்காதது போல் நடிக்கின்றாரா? Fighting for Freedom with A Pen என்ற தலைப்பிட்டு கனடாவில் எனது ஒரு பேட்டி ஆங்கிலத்தில் வந்ததும் சந்திரகுமாருக்கு மிக நன்றாகத் தெரியும். அதில் உள்ளதை மீண்டும் ஒரு முறை படித்துப் பார்க்குமாறும் அதில் என்ன உள்ளது என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்துமாறும் இந்த முகமூடியை கேட்டுக் கொள்ளுகின்றேன்.

இவை எல்லாவற்றுக்கும் மேலான தொடர்ச்சியான அரசியல் செயல்பாடு எனக்கு உள்ளது. புலிகளின் ஆதிக்கம் அதி உச்சக் கட்டத்தில் இருந்த சமயம் சில கனடா நண்பர்களால் உருவாக்கப்பட இருந்த ‘தேடகம்’ அமைப்பின் உருவாக்கத்திலும் நானும் பங்கு கொண்டு தொடர்ந்து செயற்பட்டோம். அதே சமயம் மனித உரிமைகளுக்கான இலங்கையர்கள், பின்னர் இலங்கையில் ஜனநாயகத்திற்கான அமைப்பு என்பனவற்றிலும் இருந்து இலங்கையில் நிகழும் சகல அராஜக நடவடிக்கைகளையும் கண்டித்து செயற்பட்டோம். பலவருடங்களின் பின்னர் இவற்றில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக பலர் ஒருவர் பின் ஒருவராக வெளியேறினர். நானும் வெளியேறினேன்.

எனது வாழ்க்கையில் கறைபடிந்த இருண்ட வாழ் நாட்கள் அப்போது தான் ஆரம்பமானது. தேடகத்தில் இருந்து வெளியேறியதன் பின்னர் மிகவும் மனச்சோர்வுக்கு உட்பட்டு எதிலும் கலந்து கொள்ளாமல் சுமார் நான்கு வருடங்கள் கழிந்தன. அந்த சமயத்தில் தான் ‘அம்பே” என்ற கம்பனியுடன் இணைந்து செயலாற்றினேன். அது எனது வாழ்வின் கறைபடிந்த நாட்கள். அந்த விபத்தில் இருந்து என்னை மீட்டு எடுக்க பல இலக்கிய அரசியல் நண்பர்கள் துணையாக இருந்தனர். அவர்களின் உதவியுடன் நான் அதில் இருந்து மீண்டு வந்தேன்.

தற்போது எனது அரசியல் கருத்துகளுக்காக தொடர்ந்து பணியாற்றி வருகின்றேன்.

என்னைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு ஒரு மணிநேரம் என்னுடன் அரசியல் உரையாடல் செய்தால் போதும். அந்த சந்தர்ப்பம் கிடைக்காதவர்கள் தேனீயில் நான் அண்மையில் எழுதிய கட்டுரைகளை படித்தால் தெரிந்து கொள்ளலாம். அப்படியும் யாருக்கும் புரியாவிட்டால் இதோ நானே கூறுகின்றேன்.

“இலங்கையில் உள்ள எல்லா சிறுபான்மை தேசிய இனங்களுக்கும் உள்ள உரிமை கிடைத்தாக வேண்டும். அவர்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்து வழங்கப்படவேண்டும். தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் உட்பட இலங்கையில் உள்ள எல்லா இயக்கங்கள், மற்றும் கட்சிகளின் அராஜக செயல்பாடுகளை, அவர்களது உட்கட்சி ஜனநாய விரோத போக்குகளை, உட்கொலைகளை நான் கண்டிக்கின்றேன். வெறுக்கின்றேன். எனவே அவர்களுடன் சேர்ந்து இயங்க முடியாது என்பதையும் தெரிவிக்கின்றேன். இவற்றோடு அரச பயங்கரவாதத்தையும் எதிர்க்கின்றேன்”.

புலிகளுக்கு எதிராக, அல்லது ஏதாவது இயக்கத்தின் அராஜகத்திற்கு எதிராக, இல்லை இலங்கை அரசின் கொடுமைக்கு எதிராக சந்திரகுமாரால் ஏதாவது சின்னக் காரியமாவது நடந்ததற்கு ஆதாரம் காட்ட முடியுமா?

“மனித உரிமைகளுக்கான இலங்கையர்கள்” அமைப்பினர் நடாத்திய Exhibition of Art & Photographs on Political Violence in Sri Lanka ( March 30, 1991) நிகழ்ச்சியில் இந்த சந்திரகுமாரை காணமுடியவில்லை. இவற்றை விட முஸ்லீம் மக்களை புலிகள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றியதற்கு எதிராக நாம் நடாத்திய போராட்டத்திற்கு இந்த சந்திரகுமார் கலந்து கொள்ளவில்லை அவருக்கு எந்தவித அக்கறையும், பிரக்ஞையும் கூட இருக்கவில்லை. அதே போல அப்பாவித் தமிழ் மக்களிற்கு எதிராக பிரேமதாசா அரசின் குண்டுத்தாக்குதலுக்கு எதிராகவும் நாம் நடாத்திய போராட்டத்திலும் இந்த சந்திரகுமார் கலந்து கொள்ளவில்லை. “தொலைந்து போன நாட்களும், தொடர்வுகளும்” என்ற நிகழ்ச்சி அதில் இரண்டு ஓவியர்களின் ஓவியக் கண்காட்சி- புலிகள், மற்றும் இலங்கை அரசின் அராஜகங்களுக்கு எதிராக நடந்த கருத்தரங்கும், ஓவியக் கண்காட்சியும் அதிலும் இவரை காணக்கிடைக்கவில்லை. ஆனால் நாம் இருந்தோம். இப்படி இன்னமும் பலவிடயங்களைக் கூறிக் கொண்டே போகலாம்.

என்னைக் கொல்லுவதற்காக புலிகள் என்னை 1986 டிசம்பர் மாதம் தேடினார்கள். என்னை கைது செய்ய நான் இருந்த கிராமத்திற்கு வந்தார்கள். அங்கிருந்து தப்பி ஓடினேன். எனது மனைவியை கைது செய்தார்கள் புலிகள். பின்னர் நான் பாதுகாப்பு தேடிச் சென்ற ஒரு வீட்டுக்கு தேடி வந்தார்கள். அந்த இரவு அங்கு நான் இருக்கவில்லை. அதனால் அதில் இருந்;து தப்பினேன். பின்னர் ஒரு இரவு நான் சைக்கிளில் தப்பி செல்லும் போது உரும்பராய்- கோப்பாய் வீதியில் இடைமறித்து துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்றார்கள். எல்லா முயற்சியிலும் இருந்து தப்பி கொழும்பு சென்று அங்கிருந்து நாட்டை விட்டு வெளியேறினேன். என்னுடன் கொழும்புக்கு சுரேஸ் பிரேமச்சந்திரன் வந்தார் என்று பொய்யான தகவலை எழுதியுள்ளார் இந்த முகமுடி சந்திரகுமார். அப்படி வந்தால் கூட அதில் தவறு ஒன்றும் இல்லை புலிகளால் பாதிக்கப்பட்ட இருவர் ஒன்றாக தப்பிப் போவது என்ன பிழையா? ஆனால் அப்படி நடக்கவில்லை. சந்திரகுமாரின் மற்றோர் இட்டுக்கட்டல் இது.

புலிகள் எதிர்த்தபடியால், இலங்கை இந்திய ஒப்பந்தத்தை செழியன் எதிர்த்தார் என்றும், சந்திரிகாவின் தீர்வு திட்டத்தை எதிர்த்தார் என்றும் மற்றுமொரு இட்டுக்கட்டல் செய்து எழுதியுள்ளார் சந்திரகுமார். இந்த தீர்வு திட்டங்களில் என்ன இருந்தது என்பதே மக்களுக்குத் தெரியாது. எங்காவது இந்த தீர்வுத்திட்டம் பற்றிய விளக்கம் பிரசுரிக்கப்பட்டதா? எனவே எனக்கும் அதில் உள்ளது என்ன என்று தெரியாது. அதனால் அவை பற்றி நான் எதிராகவோ, ஆதரவாகவோ கருத்துகள் எதுவும் கூறவில்லை, இதுவே உண்மை. ஆனால் எதிராக நான் கருத்துக் கூறினேன் என்பது சந்திரகுமாரின் இட்டுக்கட்டல். ஆனால் இந்திய இராணுவம் நமது மக்களை கொன்று குவித்து, பலாத்காரங்கள் செய்ததை நான் எதிர்த்தேன். பின்னர் ஈ.பி.ஆர்.எல்.எவ்வும் இந்த தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்டது இன்னோர் செய்தி

என்னைப்பற்றித் தெரிந்தவர்களுக்கு எனது கருத்துகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தாது என்று சந்திரகுமார் எழுதியுள்ளார். அது உண்மைதான் என்னைப்பற்றி நன்கு தெரிந்தவர்களுக்கு எனது கருத்துகளைப் பற்றிய எந்த ஆச்சரியமும் கிடையாது. அவை எப்போதும் வெளிப்படையானவை. போலி முகமூடி போட்டுக் கொண்டு தேனீயில் ஒரு அபிப்பிராயமும் ரொறன்டோ நண்பர்களுடன் ஒரு அபிப்பிராயமும், கொழும்பில் ஒரு அபிப்பிராயமும் பேசுவது செழியனின் பண்பு கிடையாது.

ஜம்பது வருடங்களுக்கு மேலாக புரையோடிக்கிடக்கின்ற பிரச்சனைக்கு ஒரு இரவுக்குள் தீர்வு காணவேண்டும் என்று செழியன் கனவு காண்கின்றார் என்று புலம்பியுள்ளார் சந்திரகுமார். தேனீயில் எழுதிய எனது கடந்த கட்டுரையிலேயே “ ஓரிரவுக்குள் தீர்வு காணப்படவேண்டும் என்று ஒரு காலத்திலும் யாராலும் கனவு காணப்படக்கூடிய விடயங்கள் எதுவுமே உலகத்தில் இல்லை” என்று நான் மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்”. ஆனால் இது ஐஜம்பது வருடப்பிரச்சனை. 18250 இரவுகள் போய்விட்டன. இன்னமும் ஏன் தீர்க்கப்படமுடியவில்லை. அதற்கு காரணம் தீர்வு இலங்கை அரசுக்குத் தெரியாது என்பது அல்ல. சிறுபான்மை இனங்களுடன் அதிகாரங்களை பகிர்ந்து கொள்ள பெரும்பான்மை இன இனவாத அரசும், கட்சிகளும் தயாராக இல்லை என்பது தான்.

“சிங்களப் பேரினவாதத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கொழும்புக்கு சென்று சிங்கள பேரினவாத அரசின் கால்களை சூப்புவரின் காலை, செழியன் சூப்பினார் என்றும் “நல்லாச் செய்யுறீங்கள் சனத்துக்கு” என்று செழியன் அந்த எசமானுக்கு சொன்னதாகவும் இந்த சந்திரகுமார் மறுபடியும் ஒரு பொய்யை எழுதியுள்ளார்.

நான் சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் 1997ல் இந்தியாவில் இருந்து கொழும்பு ஊடாக கனடா வரும் வழியில் கொழும்பு கட்டுநாயாக்காவில் எனது விமானத்தை தவறவிட்டேன். அடுத்த விமானம் எடுப்பதற்கு ஒரு மாதம் செல்லும் என்று அச்சமயம் கூறப்பட்டது. எனக்கு இரண்டு வழி இருந்தது ஒன்று மறுபடியும் சென்னை செல்வது. மற்றது கொழும்பு நகரத்திற்குள் செல்வது. கொழும்பு நகரத்திற்கு நான் சென்றேன்.

ஒரு வாரம் தங்கியிருந்தேன். அச்சமயம் நான்கு நண்பர்களை மட்டுமே சந்தித்தேன். நண்பர் சுகு (இன்றைய ஈ.பி.ஆர். எல்.எவ் பத்மநாபா அணி செயலாளர், டக்ளஸ் தேவானந்தா, தினமுரசு அற்புதராஜா, தினமுரசு நிர்வாகியும் எனது நண்பருமான கமல். இந்த நான்கு பேரில் எவரிடமும் நான் பாதுகாப்பும், கோரவில்லை, வியாபாரமும் பேசவில்லை, அரசியலும் பேசவில்லை. எனது இன்னொரு நண்பரான பாஸ்கரன் (சேகர்) அவர் அப்போது தினகரன் பத்திரிகையில் வேலை செய்து கொண்டிருந்தார். அவரையும் நட்பு ரீதியாக சந்திக்க ஆசைப்பட்டேன்.

டக்ளஸ் தேவானந்தாவின் இடத்திற்கு என்னை சுகுவே அழைத்துச் சென்றார். அங்கு எனது விமான டிக்கட்டை ஒரு வாரத்திற்குள் செல்லக் கூடியதாக மாற்றித் தர தன்னால் ஒழுங்கு செய்து தரமுடியும் என தேவா கூறி அதற்கான ஒழுங்குகளை எயர்லங்கா மூலம் செய்து தந்தார். அதற்கு பிரதி உபகாரமாக தனது அரசியலை ஏற்றுக் கொள்ளுமாறு எந்த நேரத்திலும் தேவா என்னிடம் கேட்கவில்லை. அப்படி ஒரு தன்மை உடையவர் அல்ல அவர் என்று நான் நம்புகின்றேன். அதே போல அவருடைய அரசியல் செயற்பாடுகள் குறித்து எந்த விமர்சனத்தையுமோ, பாராட்டையுமோ நான் வழங்கவில்லை. அதற்கு சாட்சி ஆரம்பம் முதல் இறுதி வரை அங்கு இருந்த நண்பர் சுகு.

இறுதியில் நண்பர் டக்ளஸ் தேவா கேட்டார் “தோழர் செழியன் இன்றைய உங்களுடைய அரசியல் அபிப்பிராயங்கள் என்ன? அது பற்றி நாங்கள் பேசலாமா?” என்று. “இன்று இரவு வந்து பேசலாம்” என்று கூறினேன். ஆனால் அந்த இடத்திற்கு இரவு போய் திரும்புவது பாதுகாப்பில்லை என்று பின்னர் என்னிடம் சுகு கூறியதால் அந்த சந்திப்பு நிகழவில்லை. சந்திப்பு நடந்திருந்தாலும் தேவாவும் சரி நானும் சரி நமது கருத்துகளை மாற்றிக் கொண்டிருக்கமாட்டோம். இரவோடு இரவாக பேசி யாருமே யாரின் கருத்துகளையும் மாற்ற முடியாது என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. புலிகளின் மாற்று இயக்கத்தினரை அழித்தொழிக்கும் செயற்பாடே டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களை கொழும்புக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது. இதற்கான தார்மீக பொறுப்பு புலிகளையே சாரும். இது போலத் தான் மட்டுநகர் கருணாவையும் புலிகள் இலங்கை அரசிடம் ஒப்படைத்தனர். இது பற்றி விவாதிக்க வேண்டுமானால் தனியாக விவாதிக்கலாம்.

இதே போல எனது இன்னோர் நண்பர் தினமுரசு அற்புதராஜாவை அவருடைய அலுவலகத்தில் நட்புக்காக சந்தித்தேன். அப்போதும் ஆரம்பம் முதல் கடைசி வரை கூட இருந்தது நண்பர் கமல். நான் எந்த அரசியலும் பேசவில்லை. ஆனால் அற்புதராஜா கூறினார் “ நாங்கள் இங்கு நிறைய சமூக விரோத செயல்கள் எல்லாம் செய்திட்டம். இப்ப நல்லாத் தெரியுது இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்கு ஒன்றும் தராது எண்டு.” இன்னும் பல விடயங்களை கூறினார். தற்சமயம் அவை தேவையில்லை. நான் ஒன்றும் பதில் கூறவில்லை. இது தான் நடந்தது. இவற்றுக்கு சாட்சி இன்னும் உயிரோடு இருக்கும் சுகுவும், கமலும்.

இதை வைத்துக்கொண்டு யாரோ ஒரு சிங்கள பேரினவாத அரசின் காலை நக்கிய ஒருவரின் காலில் செழியன் விழுந்ததாக எழுதியுள்ளார் சந்திரகுமார். இன்னம் கொஞ்சம் தெளிவாக எழுதுங்களேன் சந்திரகுமார். யார் சிங்கள பேரினவாத அரசின் காலை நக்கியது? அவரின் எந்தக் காலை சூப்பி என்ன எலும்புத் துண்டை செழியன் பெற்றுக் கொண்டார்.?

இறுதியாக மறுபடியும் தமிழ் மக்களுக்கும், முஸ்லீம் மக்களுக்கும், மலையக மக்களுக்கும் இன்னமும் சிங்கள மக்களுக்கும் நான் கூறுவது என்னவென்றால், நீதி அரசியல், கல்வி, நிலம், சுகாதாரம், பொலீஸ் துறை, கடல், நதிகள், காடுகள் இவை தொடர்பாக எந்த வித அதிகாரமும் இல்லாத ஒரு தீர்வு திட்டம் தான் இந்த பதின் மூன்றாவது அரசியல் சாசனம் வழங்கும் தீர்வு திட்டம். சர்வதேசத்தின் நிர்ப்பந்தத்தில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள மகிந்தா தேடிய ஒரு குறுக்குவழி. இது சிறுபான்மை இனங்களின் பிரச்சனைக்கு தீர்வு ஆகாது. மாறாக சிறுபான்மை இனங்களின் உரிமைகளை படுகுழியில் தள்ளுகின்ற முயற்சியாகும். இதை சந்திரகுமாரினால் இனம் காண இப்போது முடியாவிட்டாலும் காலக்கிரமத்தில் அவர் இனம் கண்டு கொள்வார் என்பதில் எனக்கு நிறைய நம்பிக்கை உள்ளது.

இந்த மகிந்த தீர்வு திட்டம் சிறுபான்மை இனங்களின் அபிலாசைகளை தீர்க்கவில்லை என்பதை நான் மறுபடியும் சொல்கின்றேன். எமக்குத் தேவை இதைவிட மிக அதிகமான அரசியல் உரிமைகள். அதற்காக பேச, எழுத, செயற்பட எனக்கு உரிமை இருக்கின்றது. அதற்காக நாம் செயற்;பட்டால் தான் அந்த உரிமைகள் நமக்கு கிடைக்கும். அதை செய்ய வேண்டிய கடமை நம் முன்னால் உள்ளது. அதை தடுக்கவோ, அதற்காக என்மீது சேறு பூசவோ யாருக்கும் உரிமை கிடையாது.

(குறிப்பு: இந்தக் கட்டுரை என் மீதான சந்திரகுமாரின் அவதூறுகளுக்கான பதில் மட்டுமே. தீர்வு திட்டம் தொடர்பாக எனது கட்டுரைகள் தனியாக வரும். அது தொடர்பாக சந்திரகுமார் தனது ஆரோக்கியமான கருத்துகளை முன்வைக்க வேண்டும். அது தான் இன்றைய தேவை.)

Thursday, January 31, 2008

உலக மயத்தின் புத்தாண்டு வக்கிரம்

மெரிக்காவில் பணிபுரியும் இரு இந்தியப் பெண்கள், புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக, பல்லாயிரம் ரூபாய்களைச் செலவழித்து மும்பைக்கு வந்து ஓட்டலில் தங்குகிறார்கள். அருகிலிருக்கும் ஜுகு கடற்கரைக்கு தங்கள் கணவர்களுடன் இரவு சென்றபோது, அங்கு ஏற்கனவே மற்றுமொரு நட்சத்திர விடுதியில் நடிகை பிபாஷா பாசுவின் ஆபாச நடனத்துடனும், போதையுடனும் புத்தாண்டைச் சந்தித்துக் கொண்டிருந்த 80 பேர் கொண்ட இளைஞர் கும்பல் இந்தப் பெண்கள் மீது பாய்ந்து, உள்ளாடைகளைக் கிழித்து, சொல்லக் கூசும் பாலியல் வன்முறைகளையும் அரங்கேற்றியது.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த 'இந்துஸ்தான் டைம்ஸ்' பத்திரிகை நிருபர், புகைப்படம் எடுத்ததோடு, உடனே போலீசுக்கும் தகவல் கொடுத்தார். காட்டு விலங்குகளிடம் சிக்கி காயம்பட்ட மான்கள் உயிருடன் மீட்கப்பட்டன. இத்தகைய புத்தாண்டு செய்திகளுக்கு பஞ்சமே இல்லை. போதையில் பெண்களைக் கேலி செய்ததற்காக மத்திய அமைச்சர் வாலுவின் மகன்கள் செய்திகளில் அடிபட்டனர். கேரளாவில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண், அவளுடைய பெற்றோர் முன்னிலையிலேயே வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டிருந்தார்.

அதிர்ச்சியளிக்க வேண்டிய இந்தச் சம்பவங்கள், புத்தாண்டின் கிளுகிளுப்பைக் கூட்டும் நோக்கத்திலேயே பத்திரிக்கைகளில் வெளியாகின. புகைப்படங்களை ருசிகரமான முறையில் வெளியிட்டு, புத்தாண்டை இப்படியும் வக்கிரமாக கொண்டாடலாம், என்று பாடம் நடத்தின. சென்ற ஆண்டு, சென்னையில் இப்படித்தான் ஸ்டெப்பானி என்ற பெண் கொல்லப்பட்டார். இந்த ஆண்டும், ஒரு நட்சத்திர ஓட்டலில் நடனமேடை சரிந்ததால், நீச்சல் குளத்தில் விழுந்து 3 பேர் வரை இதுவரை கொல்லப்பட்டிருக்கின்றனர். வெளிச்சத்துக்கு வராத சம்பவங்கள் இன்னும் பல.

இன்றைய தாராளமய யுகத்தில் திருவிழாக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. காதலர் தினம், புத்தாண்டு தினம் முதலான நவீனக் கொண்டாட்டங்கள் முதல் விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, நவராத்திரி வரையிலான மரபு ரீதியிலான பார்ப்பனப் பண்டிகைகள் வரை, புதிய மோஸ்தரில் கொண்டாடப்படுகின்றன. இவற்றின் வடிவமைப்பை முதலாளித்துவம் தீர்மானிக்கிறது. நட்சத்திர விடுதிக் கேளிக்கைகள், தொலைக்காட்சி அலைவரிசைகளின் சிறப்புதின நிகழ்ச்சிகள் அனைத்தும் முதலாளிகளால் 'ஸ்பான்சர்' செய்யப்படுகின்றன. ஊடகங்கள் அதை உப்ப வைப்பதோடு, இக்கேளிக்கைகளில் பங்கு பெறாதவர்கள் பத்தாம் பசலிகள் என்ற கருத்தையும் உருவாக்குகின்றன.

தேசம், மதம், மொழி, சாதி முதலான எல்லைகளைக் கடந்து, மனித குலம் முழவதும் கொண்டாடும் திருவிழாவாக புத்தாண்டு சித்தரிக்கப்படுகின்றது. ஆனால் இந்த எல்லைகளைக் கடப்பதன் உண்மையான பயன், முதலாளிகளின் இலாபத்தில் ஒளிந்திருக்கின்றது. புத்தாண்டுக்கான 'தள்ளுபடி விற்பனை' அமோகமாக நடக்கின்றது. அதை நிலைநிறுத்த ஏனைய கொண்டாட்டங்கள் பயன்படுகின்றன. ஆக நுகர்வுக் கலாச்சார வெறியும், களி வெறியும், அதற்குத் தேவையான பணவெறியும் ஒருங்கே மனித சித்தத்தில் கலக்கப்படுகின்றன. இவற்றை எட்டுவதற்காக ஊழல்படுத்தப்படும் மனம், கொண்டாட்டத்தில் மட்டும் எப்படி 'ஒழுக்கமாக' நடந்து கொள்ள முடியும்?

எத்தகைய அபாயங்கள் இருந்தாலும், அவையெல்லாம் விதிவிலக்குகள் எனபதாக ஊடகங்கள் ஆறுதல் தருகின்றன. 'பாலியல் வன்முறைக்கு, செக்ஸ் கல்விதான் தீர்வு' என்று அறிவுஜீவிகள் பாடம் நடத்துகிறார்கள்.

ஆனால், இவை எதுவும் தீயை அணைக்கப் போவதில்லை. சமூக உணர்வை புதுப்பிக்க வேண்டிய திருவிழாக்கள், விலங்குணர்ச்சியின் வக்கிர வடிகாலாக மாற்றப்பட்டு விட்டன. கிரிமினல்கள் எப்போதாவது குற்றங்கள் செய்வார்கள். புத்தாண்டு அன்று, குற்றவுணர்வின்றியே குற்றமிழைக்கும் மனநிலைக்கு, சமூகமே ஆட்படுத்தப்படுகிறது. இதைப் பாடம் நடத்தியோ, போதனை செய்தோ திருத்த முடியாது. நட்சத்திர விடுதிகளுக்கும், ஏனைய கேளிக்கை மையங்களுக்கும், உருட்டுக் கட்டைகளைத்தான் அனுப்ப வேண்டும். விலங்குகளை அடித்துத்தான் திருத்த முடியும்.


நன்றி புதிய கலாச்சாரம்

குஜராத் - மருதையன் உரைகள்

குஜராத் - மருதையன் உரைகள்

Wednesday, January 30, 2008

தமிழ் ஒரு நீச மொழி பூசைக்குகந்ததல்ல

நியூஸ்கேப் என்ற புதியதொரு செய்திதொகுப்பு தளத்தில் வந்துள்ள கட்டுரை கீழே உள்ளது. செய்திவிமர்சனம் என்ற புதிய செய்திவிமர்சனம் தளமும் உருவாக்கப்பட்டுள்ளது. செய்திகளை வெறுமே வறட்டுத்தனமாக படிக்காமல் பல்வெறு பிற செய்திகளுடன் தொடர்பு படுத்தி தொகுப்பான புரிதலுக்கு வருவதற்க்கு இந்த தளங்கள் உதவும்.

கோவில்பட்டியில் பீறிட்டோடும் பார்ப்பன இன வெறி!!

பார்ப்பன இன வெறி தட்டி போர்டு

மிழ்நாட்டின் மொழியாம் தமிழ்மொழியில் வழிபடு என்று சொன்னால் அது மொழி வெறியாம் ஏனெனில் தமிழ் நம்முடைய மொழியாம் ஆனால் சமஸ்கிருதம் எல்லா நாட்டவர்களுக்கும், உலகத்தவர்களுக்கும், இனத்தவர்களுக்கும் உரிய பொதுவான மொழியாம் அந்த வகையில் அது உயர்ந்ததாம்.கடவுளின் மொழி சமஸ்கிருதம் உலகம் முழுவதற்க்கும் புரிந்த மொழி அதுதான் எனவே அந்த மொழியில் கடவுளிடம் பேசு என்று மொழி வெறியில் அல்ல பார்ப்பன பண்பாட்டு வெறியில் ஒரு தட்டி போர்டு எழுதி அதை தைரியமாக பொது மக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர் கோவில்பட்டியில். எனது மொழி என்பது வெறும் எனது மொழி மட்டும்தானாம் அதில் அதற்க்கு மேல் ஒன்றும் கிடையாதாம். மாறாக சம்ஸ்கிருதம்தான் அதி சிறந்ததாம். ஏன் இந்த தட்டி போர்டையே சம்ஸ்கிருதத்தில் எழுதி வைத்திருக்கலாமே?யாருமே பேசாத மொழியாம் சம்ஸ்கிருதத்தில் வழிபடு என்று தைரியமாக சொல்வதோடல்லாமல் தமிழில் வழிபடு என்று சொல்வது இனதுவேசத்தால் என்கிறார்கள்? அதாவது எனது மொழியில் எனது கடவுளை கும்பிடுவேன் என்று விரும்புவது சம்ஸ்கிருத இனத்தின் மீதான துவேசத்தாலாம். அதாவது எனது மொழியை நான் விரும்பக் கூடாதாம். இனத் துவேசம் என்றால் எந்த இனத்தின் மீதான துவேசத்தால்? அப்படியானால் சம்ஸ்கிருதத்திற்க்கு என்று இனம் உள்ளதா? அப்படியானல் அந்த தட்டி போர்டே சொல்வது போல அது எல்லா இனத்திற்க்குமான மொழியில்லையா? யாருமே பேசாத மொழி எந்த இனத்திற்க்குரியாதாக இருக்க முடியும். பித்தலாட்டக்கார பார்ப்பன பண்பாட்டு வெறியர்களுக்கும் இவையெல்லாம் தெரியாமலில்லை. பார்ப்பன பண்பாட்டு அடிமைகளுக்கோ இவற்றை பகுத்தாராயும் மனிதனுக்குரிய அறிவு இல்லை.

எனது கடவுளை எனக்கு தெரிந்த மொழியில் வழிபடுவது எனது உரிமை என்று கோரினால் அவ்வாறு கேட்பவர்கள் கடவுள் பக்தியில்லாத அரசியல் பிழைப்புவாதிகளாம். சிதம்பரத்தில் தமிழில் வழிபடும் உரிமை கோரி போராடும் ஆறுமுகச்சாமி என்னும் சிவனடியாரும் இவர்கள் கணக்கில் கடவுள் பக்தியில்லாதவர். உண்மையில் அவரை அப்படித்தான் நடத்தினார்கள் தில்லைவாழ் தீட்சிதர்களும், அவர்களின் அல்லக்கையான நீதிமன்றமும். அதாவது பார்ப்பனியத்தின் பண்பாட்டு மேன்மையை ஏற்றுக் கொள்ளாத யாரும் இவர்கள் கணக்கில் கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள்தான். அதாவது பார்ப்பான்தான் கடவுள் என்று சொல்லாமல் சொல்கிறார்கள் இந்த வெறியர்கள்.

தமிழ் வழிபடுவதற்க்கான மொழியில்லை என்று வரலாற்றை திரித்துக் கூறும் இந்த பார்ப்பனியர்கள் இதன் மூலம் தமிழ் நீச மொழி என்பதை வேறு வார்த்தைகளில் சொல்கிறார்கள். தமிழ் வழிபாட்டு மொழி என்ற வரலாற்றிற்க்கும் கூட தில்லையே ஆதரமாக இருக்கிறது. சிவாலயங்கள் அங்கு வழிபடும் சைவர்களுக்கு மட்டுமே உரியது என்று கூறும் இவர்கள் சைவர்கள் என்று யாரைச் சொல்வார்கள் எனில் பார்ப்பனியத்தை சுவீகரித்துக் கொண்டவர்களைத்தான். ஏனேனில் பார்ப்பனியத்தை எதிர்த்து நிற்க்கும் ஆறுமுகச்சாமி என்ற சிவனடியாருக்கு இவர்கள் குரல் கொடுப்பதில்லை.

சைவ சமயம் என்பது பாரத தேச மக்கள் அனைவருக்குமான சநாதன தர்மம் என்று வெளிப்படையாக பார்ப்பனியத்தை பேசுகிறது இந்த தட்டி போர்டு.

மானங்கெட்ட இந்த தட்டி போர்டு ஒட்டு மொத்த உழைக்கும் மக்களையும், அவர்களின் மொழியையும், பண்பாட்டையும் அவமானப்படுத்தும் வகையில் பொதுச் சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இதை தட்டிக் கேட்பதுடன் அல்லாமல் பார்ப்பன் பண்பாட்டு வெறியர்களையும், அவர்களின் அல்லக்கை அடிமைகளையும் நடு ரோட்டில் வைத்து நையப் புடைக்க வகையின்றி தமிழ் சமுதாயம் இருப்பது ஆக அவமானகரமானது.


செய்திரசம்.

தட்டி போர்டில் உள்ளது:


சைவப்பெரியோர்களே!

சமீப காலமாக தெய்வ நம்பிக்கை சிறிதும் இல்லாத நாத்திகர்கள் சிலர், தமிழ் வேதம் என்ற போர்வையில், சைவ சமயத்துள்ளும், சிவாலயங்களில் செய்யப்பட்டுவரும் ஆகம வழிபாட்டு முறைகளிலும், பல குழப்பங்களைச் செய்து வருகிறார்கள். நம்முடைய சைவ மடாதிபதிகளை வம்புக்கு இழுத்து அவமானப்படுத்தியும் வருகிறார்கள். இவர்கள் கூற்று, தமிழ் மொழியால் மட்டுமே அர்ச்சனை, மற்றும் நித்திய நைமித்திக பூஜைகள், கும்பாபிஷேகங்கள் செய்யப்பட வேண்டும் என்பது. இவர்கள் கூற்று சைவ சமயப்பற்றினாலோ, தமிழ் மொழிப்பற்றினாலோ எழுந்தது அல்ல. சம்ஸ்கிருத மொழி துவேசத்தாலும், இன துவேசத்தாலும் எழுந்தது. தமிழ் மந்திரங்கள் தமிழ் அர்ச்சனை என்பது ஒரு மாயை.

சிவாலயங்கள் அங்கு வழிபாடு செய்யும் சைவர்களுக்கு மட்டுமே உரிமையுடையது. அதில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று சொல்வதற்கு தெய்வ நம்பிக்கையே இல்லாத இவர்கள் யார்? அவர்கள் நோக்கமெல்லாம் இது போன்ற குழப்பங்களைச் செய்து, மொழி வெறியைத் தூண்டி, சுய விளம்பரமும், அரசியல் ஆதாயமும் தேடுவது தான். இவர்களிடம் சைவ மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவர்களின் சாதுர்யப் பேச்சுக்களை உதாசீனம் செய்யுங்கள்.

சைவ சமயம் என்பது பாரத தேச மக்கள் அனைவருக்கும் உரிய பொதுவான சநாதன தர்மம், அதைத் தோற்றுவித்தவரும், வேத ஆகமங்களை அருளிச் செய்தவரும், அனாதி மூத்த சித்துரு ஆகிய சிவபெருமானாரே.

சைவம் நம்முடைய சமயம், தமிழ் நம்முடைய மொழி, சமஷ்கிருதம் எல்லா நாட்டவர்களுக்கும், எல்லா உலகத்தவர்களுக்கும், எல்லா இனத்தவர்களுக்கும் உரிய பொதுமொழி, மொழி வெறியைத் தூண்டி நம்முடய சமயத்தை அழிக்க முயலும் வேடதாரிகளை ஒதுக்கித் தள்ளுங்கள்.

இது பற்றிய விரிவான உண்மைகளை அடியோங்கள் 14-4-1998ல் வெளியிட்ட "சைவாலயங்களில் சம்ஸ்கிருத மந்திரங்களே வேண்டும்! ஏன்?" என்ற வெளியீட்டில் கண்டு தெளிக.

இப்படிக்கு
திருமறை மன்றம், கோவில்பட்டி

ஸ்ரீ அப்பரடிகள் சிவாலய உழவரப்பணித் திருக்கூட்டம், கோவில்பட்டி
ஸ்ரீ மாணிக்கவாசகர் சைவ சபை, கோவில்பட்டி


___________
நன்றி அசுரன்






தனிமனித தாக்குதலையே அரசியலாக்குகின்றனர்

பி.இரயாகரன்
30.01.2008

ன்னை யார் என்று தெரிந்து கொண்டு, அதன் ஊடாக என் மீது தனிநபர் தாக்குதலை நடத்துகின்றனர். இதை மூடிமறைக்கவே, நான் தனிமனித தாக்குதல் நடத்துவதாக கோயபல்ஸ் பாணியல் கூறுவதே, புலியல்லாதவர்களின் அரசியல் எதிர்வினையாகின்றது.

நான் யார் என்று தெரியாவிட்டால், என்னை எப்படி எதிர் கொள்வர்? அப்படி எதிர்கொள்ள, ஏதாவது மக்கள் அரசியல் அவர்களிடம் உண்டா? கிடையவே கிடையாது. மாறாக இந்திய இலங்கை கூலிக் குழுக்களாக அடிவருடுவதும், புலிப் பாசிசத்துக்கு ஆடுவதுமே இவர்கள் கொண்டுள்ள அரசியல். இதனால் எமது மக்கள் நலன் சார்ந்த அரசியலை எதிர்த்து நிற்க முடிவதில்லை. இதன் விளைவால் தான் இவர்கள் ஒருபுறத்தில் படுகொலை அரசியலை செய்கின்றனர் என்றால், மறுதளத்தில் தனிநபர் தாக்குதலை நடத்துகின்றனர்.

எனது அரசியலைக் கடந்து நின்று, என்னைச் சுற்றித் தேடுகின்றனர். கற்பனைக்குள் என்னைப் புகுத்தி, சமூகம் மீது என்னைப்பற்றி காறி உமிழ்கின்றனர். அண்மையில் தேசம் ஆதாரம் உண்டு என்று கருதி வெளியிட்ட செய்தியில், நான் சேரனை அண்மையில் சந்தித்தேன் என்றது. அதற்கு ஆதாரம் உண்டு என்று கூட எழுதியது. மற்றொரு அவதூறு தகவலில் நான் மகாஜனா கல்லூரி பழைய மாணவர் என்று எழுதியது.

இப்படி எத்தனை, இல்லாத பொல்லாததை எல்லாம், தமது கற்பனையில் வடிக்கின்றனர். இப்படி ஆதாரமற்ற தரம் கெட்ட தனிநபர் தாக்குதலையே அரசியலாக நடத்துகின்றனர். இதில் நான் முந்திய இருந்த அமைப்பு செய்த நடவடிக்கையை வைத்து, தனிநபரான என்னை தாக்குகின்றனர். இதன் பின் புனையும் கற்பனைகள் பற்பல.

தேசம் ஆசிரியர் பக்காக் கிரிமினல்களுக்கு எல்லாம் குரு என்பதால், அவரே அதற்கு பிள்ளையார் சுழி போடுகின்றார். 'என்எல்எப்ரியின் வங்கிக் கொள்ளையைத் தொடர்ந்து என்எல்எப்ரி - பிஎல்எப்ரி என்று பிரிந்தது. எடுத்ததைப் பங்கிட்டு பின் கலைந்துவிட்டது. செயற்படவில்லை." என்கின்றார். ஒரு ஊடகவியலான் என்ற கூறிக்கொள்ளும் இந்த பன்னாடை, இதை 'தேசம்நெற்றினதோ விதிமுறைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும்" உட்பட்டு கூறுகின்றதாம். இதையும் வரலாற்று ஆதாரத்துடன் கூறுகின்றதாம்.

தான் கூறிய எல்லைக்குள் நின்று, அதாவது 'ஒரு ஊடகவியலாளன் ஒரு தகவலை சேகரிக்கும் போது, யார்? யாரால்? ஏன்? எதற்கு? எப்படி? எப்போது? போன்ற கேள்விகளைக் கேட்டு தகவலை உறுதிப்படுத்த வேண்டும்." என்ற அடிப்படையில், இந்த பன்னாடை இதை உறுதி செய்தா கூறுகின்றது? 'தனக்கென ஒரு அரசியல் கருத்துநிலையை எடுக்காது" என்று கூறும் இந்த பன்னாடை, இதன் மூலம் எடுக்கும் அரசியல் என்ன?

'என்எல்எப்ரியின் வங்கிக் கொள்ளையைத் தொடர்ந்து என்எல்எப்ரி - பிஎல்எப்ரி என்று பிரிந்தது. எடுத்ததைப் பங்கிட்டு பின் கலைந்துவிட்டது. செயற்படவில்லை." என்று கூறுகின்றதே, வரலாறு அப்படியா சொல்லுகின்றது. நடந்த வரலாற்றை இருட்டடிப்புக்கும், திரிப்புக்கும் உள்ளாக்கும், இந்த பன்னாடைத் தனம் தான் ஊடகவியலாகின்றது.

என்எல்எப்ரி - பிஎல்எப்ரி பிரிந்தது எப்போது? இப்படி எழுத முனனர் அதையாவது தெரிந்த பின்னர் எழுதினரா? இது நடந்து இரண்டு வருடத்தின் பின்னாலே தான், புலிகள் என்னைக் கடத்தியது. அது தெரியுமா? அதன் பின் தான் நான் விஜிதரன் போராட்டத்துக்கு தலைமை தாங்கினேன். அது தெரியுமா? மூன்று வருடத்தின் பின், இந்தியா புலிகள் யுத்தம் தொடங்கிய பின் இந்தியாவுக்கு எதிரான முதலாவது வெகுஜனப் போராட்டத்துக்கு தலைமை தாங்கினேன். அதாவது தெரியுமா? நாலு வருடத்தின் பின் விமலேஸ்வரனை புலிகள் சுட்டு கொன்ற போது, அந்த உடலை பல்கலைக்கழகம் கொண்டு வர முனைந்தேன். அது தெரியுமா? அதே ஆண்டு ராக்கிங்குக்கு எதிரான போராட்டத்துக்கு, தலைமை தாங்கி போராடியது தெரியுமா? இதெல்லாம் தெரியாது, ஊடகவியல் பெயரில் அவதூறு அரசியலா நடத்துகின்றீர்கள்!

என்னதை தான் விடுங்கள். 'பங்கிட்டு பின் கலைந்துவிட்டது. செயற்படவில்லை." என்று 'ஒரு ஊடகவியலாளன் ஒரு தகவலை சேகரிக்கும் போது, யார்? யாரால்? ஏன்? எதற்கு? எப்படி? எப்போது? போன்ற கேள்விகளைக் கேட்டு தகவலை உறுதிப்படுத்தி" வெளியிடுகின்றீர்கள் இல்லையா. நன்று அந்த அடிப்படையில் கூறுகின்றீர்கள் 'இவர்களில் சிலர் ஐரோப்பியத் தமிழ் அரசியல் வெளியில் தோன்றினர்." என்று கூறுவதன் பின்னுள்ள அரசியல் நோக்கம் தான் என்ன? இந்த ஊடகப் பன்னாடை, மக்களுக்காக போராடியவர்களையும், அந்த அரசியலையும் கூட கேவலமாக்க தனது அரசியல் நிலையில் நின்று கொச்சைப்படுத்துகின்றது.

"இவர்களில் சிலர் ஐரோப்பியத் தமிழ் அரசியல் வெளியில் தோன்றினர்." என்று கூறும் இந்த பொய்களைக் கடந்து, அவர்கள் மக்களுக்காக மண்ணில் போராடினார்கள். இதன் பின் தான் விசு காணாமல் போனவர். இதன் பின் 10 பேரளவில் புலிகளால், வீதிகளில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன் பின் கிட்டத்தட்ட 20 பேர்கள் வரையில் புலிகள் கடத்தி சென்ற பின், அவர்களைக் கொன்றனர். கைது, சித்திரவதைகள் என பலர் அனுபவித்தனர். இதெல்லாம் '.. பங்கிட்டு பின் கலைந்துவிட்டது. செயற்படவில்லை." என்ற கூறியதுக்கு பிந்தைய, 5, 6 வருடத்தில் நடந்தவைகள். இப்படி பல, பல முனைகளில். 'ஒரு ஊடகவியலாளன் ஒரு தகவலை சேகரிக்கும் போது, யார்? யாரால்? ஏன்? எதற்கு? எப்படி? எப்போது? போன்ற கேள்விகளைக் கேட்டு தகவலை உறுதிப்படுத்த வேண்டும்." என்ற அடிப்படையிலானதா இது! இப்படிப்பட்ட ஒரு அரசியலும், அதற்கேற்ற பக்காக் கிரிமினல்களும் சேர்ந்து, கிரிமினல் அரசியல் நடத்துகின்றனர்.

சரி '.. பங்கிட்டு பின் கலைந்துவிட்டது. செயற்படவில்லை." என்று கூறி 'இவர்களில் சிலர் ஐரோப்பியத் தமிழ் அரசியல் வெளியில் தோன்றினர்." என்றால், யார் அவர்கள்? நானா?

பொதுப்படையாக சொல்லிச் சொல்ல முனைவது, என்னைத் தான். நான் என்எல்எப்ரி - பிஎல்எப்ரி பிரிந்த பிற்பாடு, 4 வருடங்கள் மண்ணில் இருந்துள்ளேன். பல போராட்டத்துக்கு தலைமை தாங்கியவன். ஏன் புலிகள் என்னைக் கொல்வதற்காக, இரகசியமாக கடத்தப்பட்டு காணாமல் போனபின், அவர்களிடம் இருந்து தப்பியவன். இவற்றுக்கெல்லாம் ஆதாரங்கள் உண்டு. இப்படியிருக்க இந்த பன்னாடை இப்படி கூறுவது என்பது, தனிநபர் தாக்குதல் அல்லவா. ஆதாரமற்ற வெறும் கற்பனை ஊகங்கள் அல்லவா! இதற்கு ஒரு அரசியல் உண்டு அல்லவா! 'தனக்கென ஒரு அரசியல் கருத்துநிலையை எடுக்காது" என்பது பொய்யல்லவா!

புலிகள் இயங்கங்களை படுகொலை செய்து அவற்றை அழித்தொழித்த பின்பு, அவ் இயக்கங்கள் இந்திய இலங்கை கூலிக் குழுக்களாக மாறிய பின்பும், நாங்கள் மண்ணில் நின்று மக்களுக்காக போராடியவர்கள். அப்படிப் போராடியதால் நாம் பலரை இழந்தோம். இப்படியிருக்க, இந்த பன்னாடை '.. பங்கிட்டு பின் கலைந்துவிட்டது. செயற்படவில்லை." என்று சேறடிக்கும் அரசியல், பக்காக் கிரிமினல் மயமானதே.

'.. பங்கிட்டு பின் கலைந்துவிட்டது. செயற்படவில்லை." என்ற கூறும் வக்கிரம், ஏதோ இதற்காகத்தான் பிரிந்தனர் என்று காட்டுகின்ற வக்கிரம், கிரிமினல்மயமான அரசியலாகின்றது. பங்கிடுதல் என்பது, பிரிவில் ஒரு அம்சமாக இருந்தது கிடையாது. இத் தொகை என்பது, அன்றைய பெறுமதிப்படி அண்ணளவாக 15 இலட்சம் ரூபா தொடர்புடையதே. இதை வைத்து கதையளக்கின்றவர்கள், அறிவும் நேர்மையுமற்ற கூலிக் கிரிமினல் அரசியல் செய்பவர்களாகும்.

கடந்த வரலாற்றை தெரிந்து கொள்ள தயாரற்றவர்கள், ஊடகவியலாளன் என்ற பெயரில் வரலாற்றையே சேறடித்து பினாத்த முடிகின்றது.

நான் இயக்கத்தை விட்டு விலகிய பின்பும் என்எல்எப்ரி இயக்கம் இயங்கியது. 'யார்? யாரால்? ஏன்? எதற்கு? எப்படி? எப்போது?" என்ற உங்கள் வரையறையில் இதைக் கூட அறிய முடியாது, ஆபாசமாக அவதூறுகளை தனிமனிதனை நோக்கி வாரிக்கொட்டுவது அபத்தம்.

இது ஒரு அரசியல் சார்புத் தன்மையுடன், தனக்கென்ற ஒரு நிலையெடுத்து, தனிமனித அவதூறுகள் மூலம் இயங்குவது வெளிப்படையானது. இங்கு அரசியல் காழ்ப்புக் கொண்ட உள்நோக்கமே, அரசியல் அவதூறுக்கான அடிப்படையாகும்.

என்எல்எப்ரி கணக்கு பற்றி அக்கறை எதனால் இந்த பொறுக்கிகளிடம் எழுகின்றது. ஒரு மக்கள் நலன்சார் அரசியல் நோக்கத்தின் பால், சமூக அக்கறையின் பால் எழவில்லை. கடந்தகால இயக்க உட்படுகொலைகளை, இந்திய இலங்கை கூலிக் கும்பலாக கும்மியடித்த வரலாறு எதையும், சமூக அக்கறையுடன் முன்வைப்பவர்கள் அல்ல. மாறாக வரலாற்றில் இதை மூடிமறைக்கின்ற கும்பல். அதை செய்கின்றவர்கள் அல்லது அதை செய்வதை ஆதரிப்பவர்கள்.

இதை எதிர்த்து அம்பலப்படுத்தும் ஒரே காரணத்தினால், என்எல்எப்ரி பணத்தைப்பற்றி மட்டும் கதைக்கின்றனர். எனது அரசியலை எதிர்கொள்ள முடியாதவனின் காழ்ப்பு, அரசியலுக்கு அப்பால் தனிமனித தாக்குதலாகிவிடுகின்றது. தனிமனிதனிடம் கணக்கு கோருவதாகின்றது. இந்த அமைப்பு என்ன செய்தது, யாருக்கு எதிராக எப்படி போராடியது என்ற விடையங்கள் மீது எந்த அக்கறையும் கிடையாது.

என்னை, எனது அரசியல் நிலைப்பாட்டை தடுக்க, கணக்கு என்ற விடையம் உதவும் என்றே மனப்பால் குடிக்கின்றனர். இதனால் தான் சமூக அக்கறையுள்ள பலருக்கும் தெரிந்த என்எல்எப்ரி வரலாற்றை, இந்த தளத்தில் இந்த இடத்தில் நாம் முன்வைக்க வேண்டிய அவசியம் கிடையாது.

காலத்தின் தேவையை ஒட்டி அதை நாம் வைப்போம். நான் எழுதி முடித்துள்ள புலிகளின் வதை முகாமில் நான் என்ற எனது கதையும், நான் எழுதி வரும் என்எல்எப்ரி வரலாறும், யாழ் பல்கலைக்கழக மணவர்களின் ஜனநாயகப் போராட்டம் மற்றும் முழுமையான தமிழ் போராட்ட வரலாறும் வெளிவரும் போது, அது சமூகத்தின் வரலாற்றுத் தேவையுடன் அனைத்து புனைவுகளையும் பொய்களையும் தகர்த்தெறியும்.

அதுவே சமூகத்தின் வளாச்சிக்குத் தேவை. இதைவிட்டுவிட்டு நாலாம்தரமான கிரிமினல்மயமான அரசியல் பொறுக்கிகளுக்கு, வரலாற்றை சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. அவர்கள் இதற்குள் செய்யமுனைவது, பொறுக்கி கொசிக்கவும், இந்திய இலங்கை அடிவருடி அரசியலை நாலுகாலில் நின்று செய்யவும், புலிகளின் பாசிச கொலை வெறியாட்ட அரசியலை செய்யவுமே. இப்படி சமூகத்துக்கு எதிரான இந்தக் குற்றவாளிக் கும்பல்களின் யோக்கியதைக்கும், அதன் இழிவான மலிவான கொசிப்புக்கும் ஏற்ப, என் மீதான அவதூறை வலைவிரித்து தேடுகின்றனர். இவர்கள் மக்கள் நலனை முன்வைக்கும் எந்த அரசியலையும், நடைமுறையையும் கொண்டவர்கள் அல்ல. மாறாக அதை நலமடிக்கின்ற அரசியல் போக்கிரிகள் தான் இவர்கள்.


தொடரும்.

Tuesday, January 29, 2008

வடக்குக் கிழக்கு இடைக்கால நிர்வாக சபை: நமக்கான கொலைக் களம்

ப. வி. ஸ்ரீரங்கன்
27. 01. 2008

"மக்களே!

அந்நிய மிருகங்கள் உங்கள் சுதந்திரத்தில் தலையிட்டு,

உங்களது சுதந்திரமான பரிசுத்த மண்ணில் தீட்டுப்படுத்தி

நீங்கள் வாழ்ந்த இல்லங்களை மண்மேடுகளாக்கின.


உங்கள் குழந்தைகளின் பிரேதங்களை

சிங்களத்துத் தீக் குண்டுகளுக்கும்,

உங்கள் உறவுகளின் மாமிசத்தைத்

தெரு நாய்களுக்கும் இரையாக்கின


நீங்கள் வாழ்ந்த

மண்ணைச் சுற்றிலும்

உங்களுடைய குருதியைத் தண்ணீரைப்போல்

சிந்தின, உங்கள் உற்றோரினது

உடல்களையெல்லாம் மாற்றியக்கமென்றும்,

துரோகிகளென்றும் கதைவிட்டு

மண்ணெண்ணை, இரயர் போட்டெரித்தன ஈழத்தைப்போலவே! ! ! "


அன்பார்ந்த தமிழ்பேசும் மக்களே!

எமது தேசம் அந்நிய இனங்களிடம் அடிமையாகக்கிடக்கிறது. இந்த அடிமைத்தனமானது இன்று நேற்றாக ஆரம்பித்ததல்ல. கடந்த ஈராயிரமாண்டுகளாகத் தமிழ்பேசும் மக்கள் தம் அனைத்து உரிமைகளையும் படையெடுப்பாளர்களிடமும், உள்ளுர் ஆதிக்கச் சமுதாயங்களிடம் பறிகொடுத்துள்ளார்கள். இந்தவுரிமையானது வெறும் பொருளியல் சார்பு வாழ்வியல் உரிமைகளில்லை. மக்களின் பண்பாட்டு வாழ்வியல் மதிப்பீடுகளும் அது சார்ந்த மனித இருத்தலும் எம்மிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது. நமது பொருளாதார வலுவைச் சிதைத்தவர்கள் எம்மை அந்த நிலையிலிருந்து மீளவிடாது இன்னும் பொருளாதார, பண்பாட்டு ஒடுக்குமுறையால் பிரித்தாளுகிறார்கள். நாம் நமக்கென்றொரு அரசையும், பொருளாதாரப்பலத்தையும் பெறுவதற்குத் தடையாக இருப்பது நமக்குள் நிலவும் வர்க்க முரண்பாடுகளே காரணமாகிறது. இந்த முரண்பாட்டைச் சரியான வகையில் பயன்படுத்தி நமது மக்களை ஓரணியில் அணிதிரட்டுவதில் ஈழத்தமிழ் மக்களின் அரசியலானது சமீப காலமாக வலுவிழந்து விவேகமற்று நகர்கிறது. இந்த நகர்வானது நமது மக்களை வலுவானவொரு வெகுஜனப்போராட்டத்துக்குள் உந்தித் தள்ளி எமது மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்கான போரை ஏதேதோ காரணங்கூறி நசுக்கி வருகிறது. நாம் கையாலாகாத இனமாக உலகின் முன் நிற்கிறோம். எங்கள்மீதான உலகத்தின் பார்வை குவிந்தபோது அதை நாசமாக்கிய மொனராகலத் தாக்குதலை எந்த நாய்கள் செய்தார்கள்?, சிங்கள அப்பாவி மக்களைப் பலிகொண்டு நமது உரிமைக்கான போராட்டத்தைப் பயங்கரவாதமாக்கிய சதி எம்மைப் பூண்டோடு அழிக்கும் அந்நிய நலன்களின் பிரதிபலிப்பாகவே இருக்கமுடியும். அந்நியனுக்குக் கூஜாத் தூக்கும் தமிழ் இயக்கக் குழுக்களும் புலிகளும் நம்மைக் கேடான முறையில் அழித்த வரலாறு இன்னும் தொடரும்போது நாம் எங்கே நிற்கிறோம்?

பலம் பெறும் எதிரிகள்:

எதிரிகள் பல ரூபங்களில் நம்மைச் சிதைத்துத் தமது நலனை எமக்குள் திணிப்பதற்கான இன்னொரு வடிவமாக இந்த 13வது திருத்தச்சட்ட நிர்வாக அலகு மிக அண்மைய நாட்டின் விருப்பத்தின்-ஆர்வத்தின் வெளிப்பாடாக விரிகிறது.

நீண்டகாலமாகத் தமிழ்பேசும் மக்கள், கூட்டணிபோன்ற ஏகாதிபத்தியக் கட்சியால் சிங்கள இனத்துக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் காட்டிக் கொடுக்கப்பட்டார்கள். சிங்களத் தரப்புத் தன்னை அணு அணுவாக அரசியலிலும், கலாச்சாரத் தளத்திலும் பின்பு பொருளாதாரத்திலும் வளர்தெடுத்து வரும்போது, இவர்கள் தமிழர்களை வெறும் உணர்ச்சிவழி சிந்திக்கும் கூட்டமாகச் சீரழித்தார்கள். இன்றைய நிலையிலோ ஆயுதக் குழுக்களின் ஈனத்தனமான கொலை அரசியலிலுக்குத் தமிழ் பேசும் மக்களின் அற்ப சொற்ப அரசியலுரிமையும் பலியாக்கப்பட்டு, அது ஆயுத தாரிகளின் குடும்பச் சொத்தாக மாற்றப்பட்டபின் இன்றுவரை ஈழத்துத் தமிழினம் ஏமாற்றப்பட்டுவருகிறது. இத்தகைய ஏமாற்று அரசியலுக்கு இதுவரை எமது மக்களின் இலட்சம் உயிர்கள் இரையாக்கப்பட்டுள்ளது! இதுதாம் இலங்கைத் தேசத்தின் இருபத்தியோராம் நூற்றாண்டின் மிகப்பெரும் வடு!



இந்திய-உலக நலன்கள், பொருளாதாரக் கனவுகள், புவிசார் இராணுவத் தந்திரோபாயங்கள் ஈழத்தில் தோன்றிய இயக்கங்களை வலுவாகச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கியது. இத்தகைய அந்நிய நெருக்கடிகளால் எமதுமக்களின் ஆளுமை சிதறி நாம் அழிவுற்றோம். அன்று ஆயுத இயக்கங்களாகத் தோன்றிய அமைப்புகளில் பல சிதைவுற்றுப் போனபின் போராட்டமானது மக்களின் அதிகாரத்தை முதன்மைப்படுத்தாது இயக்க நலன்களை முதன்மைப்படுத்தியும், இயக்க இருப்புக்காகவும் அந்நிய நலன்களை இலங்கைக்குள் நிலைப்படுத்த முனைந்த சதிமிக்க அரசியலால் நமது மக்கள் தமது வாழ்விடங்களையே பறிகொடுத்து அநாதைகளானார்கள். இத்தகைய மனித அவலத்தையே மீளத் தமது அரசியல் வியூகமாகப் பயன்படுத்தும் நமது கயமைமிகு ஆயுதக் குழுக்கள் தமது பதவிக்காக நம்மை ஏமாற்றச் சமர்பிக்கும் தீர்வு ஆலோசனைகள் அதுசார்ந்த நிர்வாக அலகுகள் யாவும் எம்மை ஏமாற்றும்-கருவறுக்கும் முயற்சியகவே நாம் இனம் காண்போம்.

இன்று இடம்பெற்றுவரும் மிகக் கேவலமான புலி எதிர்ப்பு-புலி ஆதரவுப் பரப்புரைகள் நம்மை முட்டாளாக்கிவிட்டு, தம்மைத் தலைவர்களாக்கும் வியூகத்தைக் கொண்டிருக்கிறது. பி(ப)ணம் தின்னிகளான இந்த ஆயுததாரி மனிதர்கள் இப்போது பற்பல முகாமுக்குள் நின்று, நம்மைக் குழப்பியெடுக்கிறார்கள். டக்ளஸ் தேவாநந்தா என்ற பயங்கரவாதியும், புலிகளும் இப்போது நடாத்தும் அரசியலில் நமது மக்களின் நலன்கள்தாம் பலியாகிவிட்டது! இந்தியவோடுசோந்து இலங்கையும், இந்த மக்களின் (தமிழ்பேசும் மக்கள்) உரிமைகளைச் சிதைத்து எம்மை நிரந்தரமாக அடிமைக்கூட்டமாக்கி விடுவதில் அதன் வெற்றி, இந்தக் கேடுகெட்ட13வது சட்டத்திருத்தத்துக்குள் வரையறுக்க முனையும் நிர்வாகசபை அரசியலால் உறுதியாகிவருகிறது.

எமது தேசிய அபிலாசைகள்:

நமது தேசியத் தன்மைகளைக் குலைக்க முனையும் சக்திகள் எமது மக்களில் ஒருசாரர்களை, அவர்களது வர்க்க-சாதிய-பிரேதேச நலன்களுக்கிணங்கப் பயன்படுத்துகிறது. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை-தேசிய அபிலாசைகளை தமிழ் மக்களின் வாழ்வியல் உரிமைகளைக்காக்கும் ஒரு அரசால் பாதுகாக்கப்படுவதை நமது எதிரிகள் எவரும் விரும்புவதில்லை. இந்த நிலையில் நமக்குள் பற்பல முரண்பாடுகளை அவ்வப்போது செயற்கையாக உருவாக்கி நமது இறைமையைச் சிதைப்பதில் தமிழ் மக்களின் எதிரிகள் விழிப்பாகவே இருக்கிறார்கள். இத்தகைய எதிரிகளை நாம் வலுவாக முறியடித்தாகவேண்டும். அதற்கு நம்மிடமிருக்கும் அனைத்து வளங்களையும் நமது மக்கள் பயன்படுத்தி, அதை அனைத்துச் சிறுபான்மை இன மக்களுக்குமான விடுதலையைத் தோற்றும் அரசியல் நகர்வாக முன்னெடுப்பதும் காலத்தின் அவசியமாகும்.

நம்மை, நமது வாழ்வைக் கேவலமாக்கும் கும்பல்களாக்க முனையுமிந்த அரசியல் பொறுக்கிகள், அற்ப சலுகைகளுக்காக நமது ஜனநாயக உரிமைகளை-வாழ்வாதார அடிப்படையுரிமைகளை, அந்நிய நாடுகளின் அரசியல்-பொருளியல் நலன்களுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கும் பொறிமுறைகளை பன்முகக் கட்சிகள்-அமைப்புகள், ஜனநாயகமெனும்போர்வையில் செய்து முடிக்கத் தயாராகியபடி. இவர்களே தனிநபர் துதிபாடி, கேவலமான பாசிஷ்டுக்களை தமிழரின் பிரமுகர்களாகவும்-தலைவர்களாகவும், மகாமேதைகளாகவும் ஒளிவட்டம் கட்டுகிறார்கள். டக்ளஸ் தேவாநந்தனனோ அல்ல ஆனந்த சங்கரியோ பிரபாகரனுக்கு மாற்றான மக்கள் சார்ந்த அரசியலைத் தரப்போவதில்லை! இவர்களும் பிரபாகரனின் இடத்தைப் பிடித்திடவும், அவரைவிடப் பன்மடங்கு நம்மையொடுக்கவும் அந்நியரோடு சேர்ந்து காரியமாற்றத் தொடங்கிவிட்டார்கள். இவர்கள் எவருமே மக்களின் நலனுக்கான ஜனநாயக விழுமியத்துக்காகக் குரலிடவுமில்லை, போராடவுமில்லை. இவர்களிடம் ஆயுத, ஊடக-பணப்பலமுண்டு. இதன்மூலம் நம்மைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வெறும் கொத்தடிமைகளாக்கும் அரசியலை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளார்கள். இவர்கள் கூறும் ஜனநாயம், சுதந்திரம், இடைக்கால நிர்வாக சபை, 13வது திருத்துச் சட்டப் பரிந்துரைகள் யாவும் வெறும் பூச்சுற்றலாகும்.

எமது சிந்தனைத் தளம் புனரமைக்கப்பட்டு, அது விவேகமாக நிர்மாணிக்கப்படவேண்டும். இந்த நிர்மாணம் எமது தேசிய இன அடையாளத்தின் இருப்பை வலுவாக நிர்மாணிக்க வேண்டும். எமது வரலாற்றுத் தாயகத்தை நாம்(இங்கே பாசிசப் புலித் தலைமையைக் கற்பனை செய்யவேண்டாம். மாறாக, அவர்களோடு இணைந்துள்ள நமது குழந்தைகளைக் கற்பனை செய்யவும்) நிர்மாணித்துவரும் இன்றைய காலத்தில் எங்கள் மனங்களும் புனரமைக்கப்படவேண்டும். இங்கே புலிகளின் தவறுகளைக்கொண்டே நம்மை நெருங்கிவரும் இந்திய வலுக்கரம் முறியடிக்கப்படவேண்டும். இதற்கு நமது மக்களின் பூரணமான பங்களிப்பு அவசியமாகிறது. மக்களைச் சுயவெழிச்சுக்குள் தள்ளி அவர்களால் போராட்டத்தை முன்னெடுக்கத்தக்க சூழலுக்குத் தடையாகவுள்ள ஒவ்வொரு நாளியும் நமக்கு ஆபத்தே! மக்களைச் சுயமாகப் போராடாது தடுத்துவருபவர்கள் மக்களின் விரோதிகள் என்பது நமது நிலைப்பாடாகவே இருக்கிறது. எங்கள் மக்களின் தயவில் சாராத எந்தப் போராட்ட வியூகமும் இலங்கை-இந்தியச் சதியை முறியடித்து நமது மக்களை விடுவிக்க முடியாது. இது நாம் அறிந்த நமது போராட்ட அநுபவமாகவே இப்போதும் விரிகிறது. நமது போராட்ட இயக்கம் நமது மக்களைத் தொடர்ந்து ஆயுதங்களால் மிரட்டிப்பணிய வைத்தபடி நமது மக்களை முட்டாளாக்கி அந்நிய சக்திக்களுக்கு அடியாளாக இருப்பதை எமது இளைய தலைமுறை நிராகரித்துத் தமது வளங்கள் அனைத்தையும் பயன்படுத்திப் புலிகளைப் புரட்சிப்படையாக மறுசீரமைப்பது அவசியமென்பது இன்றைய எமது இழி நிலையிலிருந்து நாம் கற்கும் பாடமாகும். இதைப் பின்தள்ளும் புத்தி ஆபத்தானது.

இரண்டு அரசஜந்திரங்கள், அவைகளின் அமுக்கம்:

இன்றோ இரண்டு அரசஜந்திரங்களுக்குள் மாட்டப்பட்டிருக்கும் தமிழ், முஸ்லீம் மக்களின் அரசியல் எதிர்காலமானது தத் தமது அரசியல்-பொருளியல் அபிலாசைகளோடு தனித்துவமான தேசிய முன்மொழிவுகளைக் கோரிக் கொண்டே இருக்கப் போகிறது. இந்த முன் மொழிவுகள் இனத்துவ அடையாளத்தை மையப்படுத்திய பேரெழிச்சியாக மாறுந் தறுவாயில் இலங்கையில் பிரிவினை அரசியல் நிலவரம் செறிவேற்றப்படுகிறது. இந்தச் செறிவேற்றலைச் செய்து முடிக்கும் இனவொடுக்குமுறையானது அப்பாவி மக்களை அழித்துத் துவசம் செய்யும்போது அங்கே அவர்களின் அத்துமீறிய வன்முறைகளைக் கோரி நிற்கிறது. இது தனக்கேற்படும் அழிவுகளுக்கான அத்துமீறிய எதிர்ப்புப் போராட்டமாக விரியும். இந்த எதிர்ப்பு வன்முறையாக விரிந்து புரட்சிகரமான படையணியாக மேலெழுந்தே தீரும். அதை வழிநடத்தும் புரட்சிகரமான கட்சியாகப் புலிப்படையணி மாறுவது காலத்தின் தேவை. நாம் கால் நூற்றாண்டாகப் போராடியவொரு இனம். தமிழ்சினிமாவுக்குள் தலை புதைத்த விடுபேயர்கள் நாம் இல்லை என்பதை நிருபிக்கும் ஒரு தலைமுறையானது தனது தகமையை உலகெங்குஞ் சென்று வளர்த்துள்ளது. இந்த இளைஞர்கள் அந்நிய வியூகத்துக்குத் தோற்றுப் போனால் நாம் எப்போதுமே விடுதலை அடைவது சாத்தியமே இல்லை.



பண்டுதொட்டு தமிழ் மக்கள் ஏமாற்றப் படுகிறார்கள். ஆயுத முனையிலும், கருத்தியல் முனையிலும் அவர்களின் உரிமைகள் ஏலம் விடப்படுகிறது. இந்த ஈனத்தனத்தை எல்லா இயக்கங்களும் திறம்படச் செய்துமுடிக்கிறார்கள். தமிழர்களை இராணுவத்தோடு சேர்ந்தழித்த ஈ. பி. ஆர். எல:எப், ஈ. பி. டி. பி. புளோட் கும்பல்கள் ஒரு புறமாகவும், மக்களால் அறியப்பட்ட பெரும் இந்தியக்கைக்கூலி ஆனந்தசங்கரி மறுபுறமாகவும் "13வது திருத்தச் சட்டமூலம் வடக்கு கிழக்கின்

மாகாணத்துக்கான இடைக்கால நிர்வாகசபையைத் தமது அரசியல் தந்திரத்தால் கிடைத்த வெற்றியாக" உரிமைகூறி பைத்தியகாரத்தனமாகக் கருத்தாடி நம்மக்களைக் கேவலமாகச் சுரண்டிக்கொள்ள முனைதல், மிகக் கேவலமானதாகும். தமிழரின் குருதியில் கும்மாளமடித்த காலங்களையெல்லாம் மறந்து- அவர்தம் கொஞ்சநஞ்ச பொருளாதாரவலுவையும் தங்கள் தேவைக்கேற்றவாறு காசாக்கிய கயமையை மறைத்து, இப்போது தமிழ்மாகாணங்களுக்கான இடைகால நிர்வாகசபையில் பன்முகத்துவ கட்சிகளின் பங்கை வலியுறுத்தும் இந்தப் பாசிசக் குழுக்கள் மக்களின் உயிர்வாழ்வின் அதிமுக்கியமான வாழ்விடங்களைச் சிங்கள ஆதிக்க ஜந்திரம் அதியுச்சப்பாதுகாப்பு வலையமாக்கி, இராணுவச் சூனியப் பிரதேசமாக்கிவைத்துள்ள அவலத்தைப்பற்றி பேசாது, நிர்வாகத்தில் தத்தம் பங்கை-பாகத்தைப் பற்றியானதான குரல்களைத் தமிழ்பேசும் மற்றும் இலங்கைச் சிறுபான்மை இனங்களின் உரிமையாக இனம்காட்ட முனைதல் எவ்வளவு நரித்தனமான தந்திரம்!

எமது வாழ்வு பலவகைகளிலும் நாசமாக்கப்பட்டு, மனிதவுரிமைகளற்ற காட்டுமிராண்டித்தனமான சூழலிலெமது மக்கள் வாழும்போது, சிங்கள அரசின் அத்துமீறிய யுத்தங்கள் கிழக்கிலும் வடக்கிலும் அவர்களைக் காவுகொண்டு-அவர்தம் சமூகவாழ்வையே சின்னாபின்னாமாக்கியது. இந்த இருள்சூழ்ந்த அவலத்தை மறைத்து, இத்தகைய யுத்தம் புலிகளை-புலிகளின் பயங்கரவாதத்துக்கெதிரானதாகக் காட்டி உலகத்தை ஏய்த்த தமிழ்குழுக்கள்-கட்சிகள் இந்தியாவின் எலும்புத்துண்டுக்காக நமது மக்களின் எதிர்காலத்தோடு (தமது குறுகிய அரசியல் இலாபத்துக்காக) பொறுக்கித்தனமாக அரசியல் செய்யும் இன்றைய சூழலாக எமக்கு முன் விரிகிறது! ஈழப் போராட்டத்துக்குப் பின்பான அரசியல் மக்களின் இருப்பிடங்களை விட்டுத்துரத்தியடித்தபோது, அவர்களின் வாழ்வாதாரத்தச் சொத்தைத் திருடிக் குவித்துள்ள செல்வங்களும் அதிகாரங்களும் அதனூடாகப் பெறப்பட்ட-பெறப்படும் பதவிகளும் புலியெதிர்ப்பு முகாமெனக் கூறப்படும் சிங்கள அரசின் அடிவருடிகளிடம் பாரிய அதிகாரச் சுவையை நாக்கில் வீணியூறும் ஆசையாக்கி விட்டுள்ளது. இதன்வாயிலாகவெழும் அற்ப விருப்புகள் மக்களின் உரிமைகளையே பாசிச அதிகார மையங்களுக்கு அடகு வைத்துத் தமது நலனை அடைவதில் குறியாகவுள்ளது. இத்தகைய சூழலில்தாம் இன்று பற்பல கொலைகள் வீழ்ந்து வருகிறது. அரசியல் கொலைகள் எத்துணை அவசியமாக நமது நாட்டில் முன்னெடுக்கப்படுகிறது. இவற்றினூடாகக் காய் நகர்த்தித் தம் வலுவைத் தக்கவைக்க முற்படும் அதிகார மையங்கள் நம் இனத்தின் விடிவுக்கு வேட்டுவைத்தே இதைச் செய்கிறார்கள். இப்போது, 13வது அரைச் சனியன் நம்மை அண்டி வந்து, நமது மக்களைப் பூண்டோடு அழித்தே தீருவதெனக் கங்கணங்கட்டப் புலிகள் வாழ்விழந்து கிடக்க மக்கள் படும் துன்பமோ அரசியல் பகடையாக மாறுகிறது. என்ன மானங்கெட்ட தலையெழுத்து நமக்கு?

இந்த இழி அரசியல்சூழலுக்குள் சிக்குண்ட மக்கள் தம் உயிரைத் தினம் இராணுவப் பாசிசவொடுக்குமுறைக்கு, ஆயுதக் குழக்களின் அராஜகத்துக்கு இரையாக்கி வருகிறார்கள். மக்களின் உயிருடன் விளையாடும் அதிகாரத்துவத்துக்கான போராட்டங்களால் ஆளும் வர்க்கங்கள் தத்தமது நலனைக்காத்துவரும் இந்த "மக்கள் விரோத அரசியலை" எங்ஙனம் முறியடிப்பது?

மக்களின் பரிதாப நிலையும், புலிகளின் மக்கள்சார-மறுப்பு வியூகமும்:

மக்களை அணிதிரட்டி இத்தகையச் சதி அரசியல் சாணாக்கியத்தை-இந்தியாவின் அத்துமீறிய ஆதிக்க அரசியல் காய் நகர்த்தலை முறியடிக்கும் எந்த முன்னெடுப்பும் இதுவரைப் புலிகளால் செய்து முடிப்பதற்கு அவர்களுக்கும் மக்களுக்குமான மிக நெருங்கிய உறவு பாழ்பட்ட ஒடுக்குமுறையாக இருக்கும்போது நமது மக்களின் எதிபார்ப்பு-அபிலாசைகளைச் சிதைத்த அரசியலின் இன்றைய விடிவு இதுவா? இன்றைய இந்தத் தரணத்திலும் மக்களின் நலனை முதன்மைப் படுத்தும் ஜனநாய விழுமியங்களை வென்றெடுப்பதற்கான எந்த முன்னெடுப்பும் புலி இயக்கத்துள் நிகழவில்லை. இதற்கானவொரு "பொதுச் சூழலை"எந்த அதிகார மையங்களும் எமது மக்களுக்குத் தந்துவிடவில்லைத்தாம், எனினும் இன்றைய சூழலில் இத்தகைவொரு போராட்ம் என்றுமில்லாவாறு அவசியமானது. எமது பரம எதிரியான சிங்கள அரசு இன்றைய பொழுதில் தமிழ் மக்களின் இரட்சகனாகப்படும் ஒரு மாயையான சூழலில் நாம் இருத்தி வைக்கப்பட்டுள்ளோம். எனவே, புலிகளுக்குள் மக்களின் குரல்கள் ஓங்கியொலித்தாகவேண்டும். இயக்கம் தனது கட்டமைப்பை "மக்களோடு மக்களாக நிற்கும்" பாரிய மறுசீரமைப்பைச் செய்தே ஆகவேண்டும். இல்லையேல் தொடரும் சிங்கள-இந்தியக்கூட்டுப் புலிகளை அழித்து நமது குழந்தைகளின் கைகளிலுள்ள ஆயுதத்தைமட்டுமல்ல அவர்களது பொன்னான உயிர்களையும் பறித்துவிடப் போகிறது.

அந்நிய சக்திகளிடம் கண்டுண்டு கிடக்கும் இலங்கைத் தேசத்தின் ஆளும் வர்கத்தால் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணயவுரிமை உதாசீனப்படுத்தப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக அவர்களது வரலாற்று வாழ்விடங்கள் இல்லாதாக்கப்பட்டு, தமிழர்கள் தேசம் தொலைத்த ஜிப்சி இனத்துக்குத்தோதானவொரு இனமாகப்பட்டுச் சிங்கள ஏக இனவாதம் தொடர்ந்து இருத்தி வைக்கப்படுகிறது. இதன் மறுவிளைவாகத் தமிழ்க் குறுந்தேசியவாதம் தமிழ் மக்களை வேட்டையாடும் சூழல் நிரந்தரமாகப்படுகிறது.

இந்த முரண்பாட்டைத் தொடர்ந்து யுத்தங்களால் கூர்மைப்படுத்தும் இலங்கை ஆளும் வர்க்கமானது இலங்கையின் இறைமையை எப்போதோ இந்திய- அந்நிய எஜமானர்களுக்குத் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டது. இதுதாம் இன்றைய அனைத்து முரண்பாட்டையும் சிக்கலுக்குள் மாட்டி தமிழ்த் தலைமைகளை அடிமைக் கூட்டாமாகவும், பிழைப்புவாதிகளாகவும் நிலைப்படுத்திய அரசியல் அவலமாக விரிகிறது. தமிழ் அரசியல் கிரிமனல்கள் 13வது சட்டத் திருத்தத்துக்குள் நமது சுயநிர்ணயவுரிமையை முடக்க எடுக்கும் அனைத்து நடவடிக்கையும் நமது மக்களின் தலைகளை முற்றுமுழுதாக உருட்டும் முயற்சியே. அப்பாவி மக்கள் அழிவுயுத்தால் தமது வாழ்விருப்பிடங்களையிழந்து, உயிரையிழந்து-உடமைகளையிழந்து, அகதிகளாக இடம்பெயர்ந்து வாழும்போது-அவர்களுக்கெந்த உதவிகளையும் செய்யமுடியாத போக்கிரி இயக்கங்கள், இந்திய ஆளும் வர்க்கங்கள், அரசியல்வாதிகள் வடக்குக் கிழக்குக்கான இடைகால நிர்வாக சபையில் முதல்வர்களாக உட்காருவதற்கு யாரு பாத்திரமுடையவர்கள் என்று திமிர்பிடித்து அலைகிறது. இத் திமிரோடான அரசியல், படுகொலைக் களத்தை ஈழமெங்கும் உருவாக்கும். அங்கே, இன்னும் எத்தனை மண்டையன் குழுக்கள் தோன்றுமோ அவ்வளவு மக்களின் அழிவு தொடரும். இது முழுமக்களையும் காயடித்து அவர்களின் சுயவெழிச்சியை முடக்கி மக்களை அடிமைகளாக்கும் அந்நிய சக்திகளுக்காக நம்மை நாம் அழிப்பதாக வரலாறு விரியும்.

இந்தியாவின் அழிவு அரசியலுக்கு முகவர்களாக மாறிய தமிழ் அரசியல் சாக்கடைகள், ஆயுதப் பயங்கரவாதிகள் மீதமுள்ள அப்பாவி மக்களின் சொத்தை சட்டப்படி கொள்ளையிடவும் தமது ஏவல்-கூலிப்படையளுக்கு நிர்வாகப் பலத்தைத் தேடுவது மக்களின் உரிமையல்லவே. இதற்கு எந்த சட்டச் சீர்திருத்தமும் தேவையில்லை. அப்பாவிச் சிறார்களை போரின் கொடுமையால் அநாதைகளாகி, பெற்றோர்களின்றிச் சிறார்கள் காப்பகங்களில் தமது வாழ்வைப் போக்கும்போதே அவர்களைக் குண்டுபோட்டுக் கொல்லும் வன்கொடுமைச் சிங்கள அரசை உலகத்துக்கு நியாயமான அரசாக இனம் காட்டும் அரசியலைத் தமிழ் மக்களின் விரோதிகள் செய்து முடிக்கும் தரணமே வடக்குக் கிழக்கு இடைக்கால நிர்வாக சபையாகும்! இந்தத் துரோகமானது அன்று மலையகத் தமிழ் மக்களை நாடற்றவர்களாக்கியது. இன்று வடக்குக் கிழக்கில் வாழும் தமிழ்பேசும் மக்களையும் அதே நிலைமைக்குள் இட்டுச் செல்லும் அரசியலை இந்தியாவின் ஆலோசனையின்படி செய்து முடிக்கும் புலித்தனமான அரசியலாகப் புலி எதிப்புக் கூட்டம் நடாத்தி முடித்தல் நமது சாபக்கேடா அல்லது நமது மக்களை ஒடுக்கிய புலிகளின் பாதகமான அரசியல் நீட்சியின் விளைவா?

Monday, January 28, 2008

சமூக அவலத்தை மறுத்தலே, கிரிமினல் அரசியலுக்கான மையப்புள்ளி

பி.இரயாகரன்
28.01.2008

கிரிமினல் ஊடகவியல் என்பது, நிலவும் அரசியல் சூழலையும், அதன் எதார்த்தத்தையும் மறுப்பதாகும். தன்னை நியாயப்படுத்திக் கொள்ளவே 'ஒரு ஊடகவியலாளன் ஒரு தகவலை சேகரிக்கும் போது, யார்? யாரால்? ஏன்? எதற்கு? எப்படி? எப்போது? போன்ற கேள்விகளைக் கேட்டு தகவலை உறுதிப்படுத்த வேண்டும்." என்கின்றது. ஆனால் அதை எமக்கும், சமூக அவலங்களுக்கும் விதிவிலக்காக்குகின்றனர். யாரெல்லாம் இதைச் செய்கின்றனரோ, எந்த அரசியல் இதை செய்கின்றதோ, அவர்களின் அரசியல் நடத்தைகள் மீது இதை எழுப்புவதில்லை. மாறாக அவர்களுக்கு ஏற்றவாறாய் ஊடகவியலையே திரிக்கின்றனர். சமூகத்துக்கு எதிராக தாம் இருப்பதை மறைத்து நியாயப்படுத்தவே இப்படி முனைகின்றனர். மற்றும்படி மக்களை இதனூடாக கேனயனாக்குகின்றனர்.

நான் முன்பு எழுதியது போல், தமிழ் மக்கள் தம்மைத் தாம் சுட்டுக் கொன்றனரா? தம்மை தாம் கழுத்தை அறுத்து கொன்றனரா? தம்மைத் தாம் கடத்திச் சென்றனரா? யார் இதை செய்தனர்? செய்கின்றனர்? ஏன், எதற்கு இப்படி செய்தனர்? செய்கின்றனர்? தேசத்தில் கருத்தெழுதும் பெரும்பான்மை, இதற்கு துணையாக இருக்கவில்லையா? விவாதம் என்ற பெயரில், நடப்பது இதுவல்லவா! இதைப் பாதுகாக்கும் தேசம், இதற்கு துணை போகவில்லையா?

உங்கள் கருத்து தளத்தில் யார், எதற்கு, ஏன், எப்படி, எதை எழுதுகின்றனர் என்பதைக் கூட கேட்காத தேசம், எதை ஏன், எதற்கு, அனுமதிக்கின்றனர் என்பது தெளிவானது. இதில் எந்த சமூக அக்கறையும் கிடையாது என்பதும் தெளிவானது. இன்றைய இணையங்கள் ஊடகங்கள் மொத்தத்தில், இப்படி இதற்கு துணை போகின்றவை தான்.

மொத்தத்தில் தமிழ் மக்கள் மேல் எந்த அக்கறையும் இவர்களிடம் இருப்பதில்லை. விளைவு இவர்களால், இவர்களின் அரசியல் துணையுடன் தமிழ் மக்கள் கொல்லப்படுகின்றனர். கடத்தப்பட்டு காணமல் போகின்றனர். மொத்தத்தில் தமிழ் மக்களின் வாழ்வே சிதைக்கப்படுகின்றது.

இதைச் செய்பவர்கள், இதற்கு துணையாக நிற்பவர்கள், இந்த அரசியலை ஆதரிப்பவர்கள் தான், பெரும்பான்மையான இன்றைய கருத்தாளர்கள். தேசமும் அப்படித்தான். இதற்குள் தான் மூழ்கி இயங்குகின்றனர். இதை எதிர்த்து எந்த அரசியலும் செய்யவில்லை.

மொத்தத்தில் தமிழ் மக்களின் தற்கொலைக்கு உரிய அரசியல் சதிகள், சூழ்ச்சிகள், பேரங்கள், காட்டிக் கொடுப்புகள், அன்றாடம் இவர்களின் பின்னால் அரங்கேறுகின்றது. இதையே அவர்கள் அனைவரும், தமது சொந்த அரசியலாக செய்கின்றனர். இதற்கு தேசியம், ஜனநாயகம், புதிதாக ஊடகவியல் என்ற மூகமுடிகளை போட்டுவிடுகின்றனர். இதற்கு வெளியில், வேறு எந்த மக்கள் அரசியலும், சமூக நோக்கமும் இவர்களிடம் கிடையவே கிடையாது.

மொத்தத்தில் இதையும், தன்னையும் மூடி மறைத்து பாதுகாப்பதன் மூலம், தேசம் பிழைக்க முனைகின்றது. இந்தக் கொலைகார நடத்தைகளுக்கு, செயல்களுக்கு ஆதாரம் கேட்கின்றது. மக்களுக்கு எதிராக மூடிமறைக்கப்பட்ட அரசியல் சதிகளுக்கும் சூழச்சிகளுக்கும், ஆதாரம் வழங்கிவிட்டுத் தான், செய்வார்களோ!. இப்படி சமூகத்தை வேடிக்கையாக்கி கேலி செய்கின்றனர். கவுண்டமணி நானும் ரவுடி தான் என்று கூறுவது போல், இந்த கொலைகாரர்கள் நான் தான் கொன்றேன் என்று கூறுவார்கள் என்று, தேசம் ஊர் உலகத்துக்கு சொல்ல முனைகின்றது. தாம் சுயவிசாரணை செய்ய மாட்டோம் என்பதே அற்பத்தனம். எந்த அரசியல் இதை செய்கின்றதோ, அதை ஆதரித்து நிற்பவன் தன் தோலுக்கு ஏற்ப 'தனக்கென ஒரு அரசியல் கருத்துநிலையை எடுக்காது" என்று கூறி, இதற்குள் தப்பித்து பிழைக்க முனைகின்றான்.

இப்படி பிழைப்பை நடத்தவே, தான் ஒரு ஊடகவியலாளன் என்று கூறிக்கொண்டு, மற்றவனிடம் இதைக் கேட்பது அவர்களின் கோட்பாட்டுக்கு முரணாக இருப்பதில்லை. சமூகத்தையே கேனய சமூகமாக கருதி, இழிவாடுவதையே இதன் மூலம் காணமுடிகின்றது. ஏன் நீங்கள் வரையறுத்த ஊடகவியலாளன் என்ற சட்டவாக்கத்துக்குள், நீங்கள் நிற்க வேண்டியது தானே.

ஏன் உன் நலன் சார்ந்து மட்டும், சுயவிசாரணை தேவைப்படுகின்றது. அதைச் செய்தால், பொதுச் சமூகப்போக்கின் மேல் செய். இந்திய அடிவருடிகளான ஈ.என்.டி.எல்.எவ் என்ற கொலைகார சதிக் கும்பலுக்கு ஆதரவாக ஆதாரம் கேட்டு, உன் நலன் சார்ந்த உன் ஊடக வரையறையையே மீறுகின்றாய். எமக்கு எதிராக, ஏன் உன்னால் சுயவிசாரணை செய்யமுடியவிலலை. யாரை ஏமாற்றி, என்ன அரசியலை செய்ய முனைகின்றீர்கள் என்பது வெளிப்படையானது. இதற்குள் தொழில் செய்கின்றவன், சுத்தமான பிழைப்புவாதி தான். மனித அறங்கள் கடந்து, அதை பேச மறுத்து நிற்க 'தனக்கென ஒரு அரசியல் கருத்துநிலையை எடுக்காது" என்று கூறி எதைப் பாதுகாக்க முனைகின்றது என்பது வெளிப்படையானது. இது கிரிமினல் மயமான அரசியலுக்கு, அப்பட்டமாக துணைபோவது தான்.

பொதுவான இன்றைய கிரிமினல் மயமாகிவிட்ட அரசியல் சூழலை எது, எந்த சூழல் எப்படி இதை மதிப்பிடுகின்றது. காலம், இடம், சந்தர்ப்பம், வரலாறு, அரசியல் தொடர்புகள், அரசியல் நிகழ்ச்சிப் போக்குகள், கட்சிகள் அல்லது அமைப்புகளின் அரசியல், அவர்களின் கடந்தகாலம், நிகழ்காலம், மக்கள் பற்றி அவை கொண்டுள்ள நிலைப்பாடுகள், மக்களின் துயரம் தரும் மௌனம், வெளிப்படையற்ற பொதுத் தன்மைகள், அன்னியனுடன் இயங்கும் கூலித்தனம், காட்டிக்கொடுப்பு, படுகொலை அரசியல் என்று இது போன்றவற்றை அடிப்படையாக கொண்டு, நிகழ்ச்சிகளை சம்பவங்களை ஆராயாத ஊடகவியல் செத்த சவம் தான். அதாவது அப்பட்டமாக அரசியல் கிரிமினலுக்கு துணை போவது தான்.

ஒரு சம்பவத்தில் வெளிப்படும் ஊகங்கள், சந்தர்ப்ப சூழல் நிலைகள், சந்தேகங்களைக் கூட ஊடகவியல் எழுதத் தவறுமென்றால், அது பொலிஸ்கார வேiலையை மட்டும் செய்கின்ற பக்காக் கிரிமினல் மயமாகி விடுகின்றது. மொத்த சமூக இயக்கம் மீதான அனைத்தும், கிரிமினல் மயமாகிவிட்ட பின், அந்த அரசியல் செயல்களை அம்பலப்படுத்த எந்த ஆதாரமும் அவசியமில்ல.

நாசிகள் யூத படுகொலையை நடத்திய காலத்தில், அதற்கு ஆதாரம் கேட்டால் அவர்கள் யார்? புலிகளின் பங்கர் படுகொலைகளுக்கும், பொதுப் படுகொலைகளுக்கும் ஆதாரம் கேட்டால் அவர்கள் யார்? இப்படித்தான், இதைத்தான் தேசம் எம்மிடம் கோருகின்றது.

ரஜனி திரணகமவைக் கொன்றது யார்? புளட்டில் உட்படுகொலைகளை செய்தது யார்? காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகளைச் செய்தது யார்? 1985 அனுராதரபுரப் படுகொலைகளை செய்தது யார்? விஜிதரனைக் கடத்தியது யார்? என்னை 1987 இல் கடத்தியது யார்? இப்படியெல்லாம், இதற்கு ஆதாரம் கேட்பவன் யார்? இவர்களின் அரசியல் உள் நோக்கம் தான் என்ன?

இப்படி இவர்களின் உள்நோக்கம் கொண்ட முரண்பாடுகளே, இவர்களின் திடட்மிட்ட அரசியல் செயல்பாடாக உள்ளது. 'ஆதாரமற்ற இரயாகரனின் ஊகத்தை பொதுத் தளத்தில் இருந்து நீக்கியதற்காக இவர்கள்" என்று தேசம் ஆசிரியர் எமக்கு எதிராக மட்டும் அரசியல் செய்கின்றார். மற்றவர்களின் ஆதாரமற்ற அவதூறு ஊகத்தை அனுமதிக்கும் போது 'ஆனால் தேசம்நெற்றில் அதன் வாசகர்களால் பதியப்படும் கருத்துக்கள் தேசம் சஞ்சிகையினதோ அல்லது தேசம்நெற்றினதோ விதிமுறைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டது அல்ல." இதனால் 'தேசம்நெற் நிர்வாகம் இறுக்கமான கட்டுப்பாட்டை கொண்டிருக்கவில்லை." என்கிறார். நாம் வாசகர்களாக எழுதியதை 'ஆதாரமற்ற இரயாகரனின் ஊக"ம் என்கின்றார். வசதி கருதி சொல்வது இவை. எம் மீது எழுதியதை ஆதாரமானது என்கின்றார். அதனால் தான், அதை பொதுத் தளத்தில் இருந்து அவர் நீக்கவில்லை. இப்படித் தான், தேசம் சூழ்ச்சியான பக்காக் கிரிமினல் அரசியல் செய்கின்றனர். 'தேசம்நெற்றினதோ விதிமுறைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டது அல்ல." என்பது ஒரு சாராருக்கு இருக்க, மறுபக்கம் எனது கருத்து 'தேசம்நெற்றினதோ விதிமுறைகளுக்கும் கட்டுப்பாட்டுக்கு " உட்பட்டு விடுகின்றது. அது தேசத்துக்கு ஊகமாகிவிடுகின்றது. எமக்கு எதிரான எதுவும் ஊகமல்ல மாறாக தேசத்திற்கு அவை ஆதாரங்களோடு நிறுவப்பட்டதாகி விடுகின்றது.

எனக்கு எதிராக தேசத்தின் ஆதரவுடன் கருத்திட்டவர்கள் யார். ஏன், எதற்கு, எப்படி, என்ன ஆதாரத்துடன், என்ன நோக்கத்துடன், என்ன அரசியல் நிலையில் இதை செய்கின்றனர். அவர்களின் அரசியல் நிலை தான் என்ன?

இப்படி கருத்திடுபவர்கள் தேசியம், ஜனநாயகம் என்ற பெயரில், ஒன்றை ஒன்றுக்கு எதிராக நிறுத்தி, கொலைகளையே அரசியலாக செய்கின்றவர்கள் தான் இவர்கள். இவர்களிடம் வேறு மாற்று அரசியல் எதுவும் கிடையாது. ஒன்றில் இவர்கள் இலங்கை இந்தியாவின் அடிவருடிகள், அல்லது தேசியத்தின் பெயரில் உள்ள பாசிட்டுக்கள்.

வேறு யார் தான் இவர்கள். வேறு என்ன அரசியல் நோக்கம் தான் உண்டு. இதை செய்கின்ற தேசத்துக்கு, இதைவிட என்ன சமூக நோக்கம் தான் உண்டு?

தொடரும்


Sunday, January 27, 2008

கிரிமினல் மயமாகிவிட்டது ஊடகவியல்

பி.இரயாகரன்
27.01.2008

மூகத்தை முற்றுமுழுதாக அரசியல் கிரிமினல்கள் கட்டுப்படுத்தும் போது, ஊடகவியல் இதற்குள் சரணடைகின்றது. தன்னையும் தனது கருத்தையும் சுதந்திரமானதாக கூறிக்கொண்டு அதுவாகவே மாறுகின்றனர். இந்த அரசியல் கிரிமினல்கள் கீறிய கோட்டைத் தாண்டுவதில்லை. மற்றவர்களை அனுமதிப்பதுமில்லை.

மாறாக தமது இந்த இருப்புக்கு ஏற்ற கோட்பாடுகளையும், விளக்கங்களையும் வழங்கி அதை நியாயப்படுத்துகின்றனர். இன்று எம் மண்ணில் எத்தனை கொலைகள், எத்தனை கடத்தல்கள். வாழ்வியல் சிதைவுகள்.

இதை இந்த ஊடகவியலாளன் தனது ஊடகவியலில் எங்கே அம்பலப்படுத்தியுள்ளான். வசதியாகவே, இனம் தெரியாத கடத்தல்கள் இனம் தெரியாத கொலைகள் இனம் தெரியாத நபர்கள் என்று, தனது அரசியல் புல்லுருவித்தனத்துக்கு ஏற்பத்தான் எழுதுகின்றான். எல்லாக் கொலைகளும், கடத்தல்களும் யார்? ஏன்? எதற்கு? எப்படி செய்யப்பட்டது என்பது, மக்களுக்கு நன்கு தெரிந்தே இருக்கின்றது. ஆனால் ஊடகவியலாளனுக்கு மட்டும் அது இனம் தெரியவருவதில்லை.

உதாரணமாக மேற்கில் புலிக்கு பணம் கொடுப்பவர்களில் பெரும்பான்மை விருப்பமின்றியும், நிர்ப்பந்தம் காரணமாகவும், பயந்துதான் கொடுக்கின்றனர். இதை ஊடகவியல் அம்பலப்படுத்துவது கிடையாது. இதை அவர்கள் 'ஊடக வரைமுறைகளுக்கு" அப்பாற்பட்டது என்று கூறி, தப்பிக் கொள்ளவே இதற்கு ஆதாரமில்லை என்பார்கள். இப்படித் தான் இதற்குள் தான், இந்த ஊடகவியல் பொறுக்கிகள் பொறுக்குகின்றனர். புலியல்லாத புலியெதிர்ப்பு அரசியல், உளவு அமைப்புகளின் எடுபிடிகளாகி அவர்களின் அரசியலை கொண்டுள்ளதை இவர்கள் முன்வைக்கமாட்டார்கள். மாறாக இந்த அரசியல் கிரிமினல்களுடன் சேர்ந்து நிற்பதே ஊடகவியலாகின்றது.

இந்த அரசியல் பொறுக்கித் தனத்தை பாதுகாத்துக்கொள்ளவே, இவர்கள் இதற்கு ஆதாரமில்லை என்று பம்முகின்றனர். இப்படி மொத்த அரசியல் கிரிமினல்களுக்கும் உடந்தையாகவே செயல்படுகின்றனர். சமூகத்தின் சீரழிவுகளுக்கும், சமூக இழிவுகளுக்கும் காரணம் யார் எனபதை ஆராய்வதை, இந்த ஊடகவியல் மறுக்கின்றது.

மாறாக ஊடகவியல் என்ன செய்கின்றது, இந்த அரசியல் கிரிமினல்களுடன் சேர்ந்து பயணிக்கின்றது. உண்மையில் கிரிமினல் அரசியலை பாதுகாக்கின்ற தொழிலையே, தமது ஊடகவியலாக்கி விடுகின்றனர். மக்களுக்கு உண்மையான தகவலை வழங்குவதற்கு பதில், அரசியல் கிரிமினல்களின் மூடிமறைக்கப்பட்ட பொய்களை வாரிக் கொட்டுவதே ஊடகவியலாகி விடுகின்றது. மக்கள் ஏன் புலிகளை கண்டு நடுங்குகின்றனர். புலியெதிர்ப்பு கூலிக் குழுக்களைக் கண்டு அஞ்சுகின்றனர். இந்த நிலைமையை சுயவிசாரணை செய்ய மறுப்பதே ஊடகவியலாகின்து.

இதை நியாயப்படுத்தி பிழைக்கவே 'அது ஊடக வரைமுறைகளுக்கு அப்பால் தனக்கென ஒரு அரசியல் கருத்துநிலையை எடுக்காது" என்கின்றனர். அந்த ஊடக வரைமுறை என்ன? யார் அதைத் தீர்மானித்தனர்? யார் தீர்மானிக்கின்றனர்?

'தனக்கென ஒரு அரசியல் கருத்துநிலையை எடுக்காது" என்றால், அது என்ன நடுநிலையா? இந்த நடு நிலைக்கு அரசியல் கிடையாதா? இப்படி தான், இதற்குள் தான் ஊடகப் பிழைப்புத்தனம் அரங்கேறுகின்றது. மக்கள் சார்பான அரசியல் நிலை எடுக்காவிட்டால், அனைத்து சமூகக்கேடுகளையும் அது ஆதரிக்கின்றது என்பதே வெளிப்படை.

இருக்கின்ற சமூகம் நடுநிலையானதா? அது சார்பற்றதா? இங்கு சமூக முரண்பாடுகள் கிடையாதா? இப்படித் தான், இதற்குள் 'தனக்கென ஒரு அரசியல் கருத்துநிலையை எடுக்காது" என்ற கூறி, அரசியல் கிரிமினல்களுடன் ஒன்றாக வம்பளந்து கொண்டு பயணிக்க முடிகின்றது.

இதை வெளிப்படையாக பார்ப்போம். புலிகளும், புலி அல்லாத குழுக்களும் கொலைகள் முதல் ஆள் கடத்தல்கள் வரை செய்த, அரசியல் கிரிமினல்களா இல்லையா? இதை விமர்சிக்காத, சுயவிமர்சனம் செய்யாத, இன்றும் அதை ஆதரிக்கின்ற, இதில் செயற்படுகின்றவர்களுடன், எப்படி ஊடகவியல் எந்த அடிப்படையில் இணங்கிச் செல்ல முடியும்! இது தான் அந்த ஊடக வரைமுறை? உண்மையில் மக்களுக்கு எதிரான ஒரு நிலை எடுத்துத் தான், அரசியல் கிரிமினல்களுடன் இணங்கிச் செல்லமுடியும்.

அவர்கள் தாம் மக்களுக்கு எதிராக செய்ததை நியாயப்படுத்துகின்றதும், மறுப்பதுமான அரசியலையே, இந்த ஊடகவியலில் வைக்கின்றனர், திணிக்கின்றனர். மக்களை மேலும் அடிமைப்படுத்துகின்ற வகையில், இவையோ உருட்டல் மிரட்டல்களே. அவர்கள் செய்யும் அரசியல் அது தான். இதை மீறுவது என்பது, தண்டனைக்குரிய குற்றம். சமூகம் படிப்படியாக இப்படி முடக்கப்படுகின்றது. சமூகத்தின் செயலற்ற தன்மைக்குள், அனைத்தும் சிதைக்கப்படுகின்றது.

அனைத்தும் இதுவாகி, கருத்தே இதுவாகிவிடுகின்றது. கருத்தாளர்கள் இவர்கள் மட்டுமாகிவிடுகின்றனர். இதற்குள் சோரம் போய் இயங்குவதே, ஊடகவியலாகிவிடுகின்றது. இப்படி தமது சந்தர்ப்பவாத பிழைப்புவாதத்தை நியாயப்படுத்த, 'அது ஊடக வரைமுறைகளுக்கு" அப்பால் செல்லாது என்று கூறி, ஒரு புனிதமான வரைமுறை பற்றி தானே பேசுகின்றது. இதன் புனிதத் தன்மை தான் என்ன? அதன் வரையறை தான் என்ன?

நிலவும் சமூக அமைப்பில் பிழைத்துக் கொள்ளும் வழிக்கு உட்பட்டது தான், இந்த வரையறை. சமூக மாற்றம், புரட்சிக்கு எதிரானதே, இந்த ஊடகவியல் கோட்பாடு. ஒடுக்குகின்ற சிறுபான்மைக்கு சார்பானதே, தான் போட்டுக் கொள்ளும் 'ஊடக வரைமுறை". சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை மக்களின் சார்பாக செயல்படுவது என்பது, 'ஊடக வரைமுறை". தங்களது எதிரானது என்பதைத் தான் இவர்கள் கூறுவருகின்றனர். பெரும்பான்மை மக்களைச் சார்ந்து நிற்பதாக இருந்தால், தனக்கென ஒரு அரசியல் கருத்துநிலையை எடுத்தேயாக வேண்டும். பெரும்பான்மை மக்களுக்கு எதிரான கருத்து நிலைதான், சமூகத்தில் ஆதிக்கம் பெற்ற கருத்துநிலை. இதை மறுத்து பெரும்பான்மை மக்களுக்கு சார்பாக, 'தனக்கென ஒரு அரசியல் கருத்துநிலையை எடுக்காது" என்பதும், ' அது ஊடக வரைமுறைகளுக்கு" உட்பட்டது என்பதும், பெரும்பான்மை மக்களின் மேலான ஒடுக்குமுறையை நியாயப்படுத்துவது தான்.

இதற்காகவே 'தனக்கென ஒரு அரசியல் கருத்துநிலையை எடுக்காது" என்ற கூறி, 'அது ஊடக வரைமுறைகளுக்கு" விரோதமானது என்று சுயவிளக்கத்தைக் கொடுக்கின்றனர். ஆனால் அப்படி ஒரு வரைவிலக்கணம் எதுவும் கிடையாது.

இதில் வேடிக்கை என்ன வென்றால், பெரும்பான்மை சார்பாக போராடும் எமது கருத்து நிலையை மறுக்க, இவர்களுக்கு இந்த வரைமுறை எதுவும் தடையாக இருப்பதில்லை. அதில மட்டும் அரசியல் நிலை எடுக்கின்றனர்.

'தனக்கென ஒரு அரசியல் கருத்துநிலையை எடுக்காது" என்று, சமூகத்தில் இருந்தபடி இப்படிச் சொல்வது என்பது, சமூகத்தை கேனயனாக்கின்ற பிழைப்புத்தனத்தை அடிப்படையாக கொண்டது. அரசியல் என்பது கிரிமினலாகிவிடும் போது, ஊடகவியலும் அதற்குள் தான் சஞ்சரித்துப் பிழைக்கின்றது.

மற்றொரு தலையங்கத்தில் தொடரும்.