தமிழ் அரங்கம்

Tuesday, October 25, 2005

மறுகாலனியாதிக்கத்தின் அங்கம்

அதை எதிர்த்துப் போராடாமல் இருப்பது அவமானம்!'

- தோழர் மருதையன், பொதுச் செயலர், ம.க.இ.க.

'தாமிரவருணியை உறிஞ்ச வரும் அமெரிக்க கோக்கை அடித்து விரட்டுவோம்!' என்ற முழக்கத்தின் அடிப்படையில், கடந்த மூன்று மாதங்களாக தமிழகமெங்கும் ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் நடத்திவரும் இயக்கத்தை, கோக்கிற்கு எதிரான இயக்கமாக மட்டும் சுருக்கிப் பார்க்கக் கூடாது; தண்ணீரை இலாபம் தரும் பண்டமாக மாற்றும், நீர் ஆதாரங்களைத் தனியார் ஃ பன்னாட்டு முதலாளிகளின் தனிச்சொத்தாக ஒப்படைக்கும் மறுகாலனியாதிக்கத்துக்கு எதிரான போராட்டங்களின் ஓர் அங்கமாக இதனைக் காண வேண்டும்'' எனத் தனது தலைமை உரையின் தொடக்கத்திலேயே குறிப்பிட்ட தோழர் மருதையன், 'போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்டு, தாமிரவருணி கோக்கிற்கு விற்கப்படுவதை எதிர்த்துப் போராடும் பல்வேறு அமைப்புகளுக்கும், நமக்கும் உள்ள வேறுபாடு இதில்தான் அடங்கியிருக்கிறது. அவர்கள் இதனைத் தவறான பொருளாதாரக் கொள்கையாகப் பார்க்கிறார்கள். நாம் இதனை மறுகாலனியாதிக்கத்தின் அங்கம் எனக் குறிப்பிட்டு எதிர்த்துப் போராடுகிறோம்' என விளக்கினார்.

'இந்தியாவிலேயே இராசஸ்தானுக்கு அடுத்து வறட்சி, தண்ணீர் பற்றாக்குறை உள்ள மாநிலம் தமிழ்நாடு; தமிழ்நாட்டின் 72 சதவீத நிலத்தடி நீர் குடிப்பதற்கு இலாயக்கற்றது; தமிழ்நாட்டின் 20 மாவட்டங்கள் நிலத்தடி நீரே அற்றுப் போன கருப்பு மாவட்டங்கள் இவையெல்லாம் அரசே தரும் புள்ளி விவரங்கள்''தாமிரவருணி ஆற்றுப் படுகையில் உள்ள சீவலப்பேரி குடிநீர் திட்டத்தை இராமநாதபுரம் வரை கொண்டு வரவேண்டும் என அம்மாவட்ட மக்கள் நெடுங்காலமாகக் கோரி வருகிறார்கள். கங்கை கொண்டான் பகுதி மக்கள் கோடகன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றக் கோருகிறார்கள். இப்படி குடிதண்ணீருக்காக அலைபாயும் மக்களிடம் கழிவுநீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்தலாம் என உபதேசிக்கும் தமிழக அரசு, தாமிரவருணியைக் கோக்கிற்குத் தூக்கிக் கொடுக்கிறது' எனத் தமிழகத்தின் எதிரும் புதிருமான நிலைமையைச் சுட்டிக் காட்டினார்.

'கோக் ஆலை வந்தால் வேலைவாய்ப்பு பெருகும் என்கிறார்கள். இதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. ஆனால், நிலத்தடி நீர் கெட்டுப் போகும் என்பதற்கு உத்தரவாதம் உண்டு'

'ஒரு லிட்டர் கோக் தயாரிக்க ஏழு லிட்டர் நல்ல தண்ணீர் போதும் எனக் கூறுகிறது கோக். அதாவது கோக்கின் கணக்குப்படி, ஒரு லிட்டர் கோக் தயாரித்தது போக, மீதி ஆறு லிட்டர் தண்ணீர் கழிவு நீராக வெளியேற்றப்படும். பூமிக்குள் இறங்கும் 1 லிட்டர் கழிவுநீர் 8 லிட்டர் நல்ல நீரை மாசுபடுத்தும் என்ற அறிவியல் உண்மையின்படி பார்த்தால், 1 லிட்டர் கோக் தயாரிக்கும்பொழுது 48 லிட்டர் (நிலத்தடியில் உள்ள) நல்ல நீர் கழிவு நீராக மாறும்' என்ற அபாயத்தை எடுத்துச் சொன்னதோடு, இதனால்தான் கேரளாவில் கோக் ஆலை அமைந்துள்ள பிளாச்சிமடா கிராமம் சுடுகாடாகிவிட்டது'' எனச் சுட்டிக் காட்டினார்.

'நிலத்தடி நீர் உள்ளூர் மக்களுக்குச் சொந்தமா? இல்லை 'கோக்' போன்ற பன்னாட்டு முதலாளிகளுக்குச் சொந்தமா? என்ற வழக்கு உச்சநீதி மன்றத்தின் விசாரணையில் இருக்கிறது. ஆனால், நெல்லை மாவட்ட போலீசோ கோக்கிற்கு எதிராகப் பேசக் கூடாது எனத் தடை விதிக்கிறது. நெல்லை, குமரி, விருதுநகர் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் கோக்கிற்கு எதிராக பொதுக்கூட்டம் தெருமுனைப் பிரச்சாரம் நடத்த போலீசு அனுமதிக்கவில்லை. இந்த மூன்று மாவட்டங்களிலும் ஒரு சோடா கலர் கம்பெனியின் ஆட்சிதான் நடக்கிறது என்பதற்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்? 'கோக்'கிற்கு எதிராக திருநெல்வேலியில் சுவரெழுத்து எழுதியதற்காக ராஜதுரோக குற்றச்சாட்டின் கீழ் தோழர்கள் கைது செய்யப்பட்டார்கள். இது மறுகாலனியாதிக்க ஆட்சிதான் என்பதற்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்?' எனக் கேள்வி எழுப்பிய தோழர் மருதையன், இதன் மூலம் நாடு மீண்டும் அடிமையாக்கப்படுவதை அம்பலப்படுத்தினார்.

1 comment:

Unknown said...

இதில் சோகம் என்னவென்றால் முக்கியமான கட்சிகள் இதை கண்டித்து போராட்டங்கள் நடத்தவே இல்லை.
இது பற்றி பத்ரியின் பதிவில் ஏற்கனவே விவாதம் உள்ளது.
http://thoughtsintamil.blogspot.com/2005/09/blog-post_29.html