தமிழ் அரங்கம்

Wednesday, April 5, 2006

உலகளாவிய நிதி மூலதனம் சமூகசாரத்தையே உறுஞ்சுகின்றது.

உலகளாவிய நிதி மூலதனம் சமூகசாரத்தையே உறுஞ்சுகின்றது.

பி.இரயாகரன்
03.04.2006 (பகுதி -1)

டன், எங்கும் கடன், மனித இனத்தின் மீதே கடன். மனித இனம் மீளமுடியாத வகையில் அளுங்குப்பிடியாகவே கடன் உலகெங்கும் மாறிவிட்டது. இந்த கடன் நாடுகளையே திவாலாக்கி வருகின்றது. இந்தக் கடனில் இருந்து மீள முடியாத நிபந்தனைகள். கடனை வாங்குவது கூட, அவசியமான நிபந்தனைகளில் ஒன்றாகிவிட்டது. உதவி என்ற பெயரில் வாரிவழங்கும் இந்த கடன், மனிதனின் சமூக சாரத்தையே உறுஞ்சி அழிக்கின்றது. கடன் மனித உழைப்பை ஒட்ட உறுஞ்சுகின்றது. மனித வாழ்வை அழிக்கும் இந்தக் கடனை யார் வாங்குகின்றான். எங்கிருந்து எப்படி கடனுக்கான நிதி கிடைக்கின்றது. யார் இதனால் எப்படி இலாபம் அடைகின்றனர்? இந்தக் கடனால் யார் எதை இழக்கின்றனர்? இந்த கடன் என்ற சூக்குமத்தையும், அதில் மனித அவலத்தையும் நாம் புரிந்து கொள்ள முனைவோம்.

இன்று நிதி மூலதனம் உலகின் முலைமுடுக்கெங்கும் ஊடுருவியுள்ளது. மனிதவினத்தையே மூலதனத்துக்கு அடிமைப்படுத்த விரும்பும் உலகமயமாதல் என்ற உலகம் தழுவிய போக்கில், நிதி மூலதனமே அதன் முதன்மையான இழிவான சமூக பாத்திரத்தை வகிக்கின்றது. இது எந்த சமூக உற்பத்தியிலும் ஈடுபடாமல், சமூக உற்பத்தியில் இருந்து அதன் சமூக சாரத்தையே உரிந்தெடுத்து விடுகின்றது. மனித குலத்தின் அவலமோ, கழிப்ப+ட்டும் ஒரு நவீனத்துவமாக பூத்துக் குலுங்குகின்றது. செல்வத்தை வைத்திருப்பவனின் சுதந்திரமே, செல்வம் இல்லாதவனின் மேல் பாய்ந்து கடித்துக் குதறும் ஒரு உலகவொழுங்கே ஜனநாயகமாகிவிடுகின்றது.

செல்;வத்தைத் தன்னகத்தே குவித்து வைத்திருப்பவன் சமூகத்தைப் பற்றி ஒரு விதமாகவும், செல்வம் இல்லாதவன் மற்றொரு விதமாகவும் சிந்திக்கின்றான். செல்வம் உள்ளவன் அதைப் பெருக்குவதைப் பற்றியே, சதாகாலமும் சிந்தித்த வண்ணம் நனவுபூர்வமாக ஒரு பேயாக வாழ்கின்றான். தனது வாழ்வை காட்டுமிராண்டித்தனமான உணர்வுடன் கூடிய மிருக வெறியுடன், சமூகத்தைக் கடித்துக் குதறுவதில் தனது காலத்தை ஒய்வின்றி ஓட்டுகின்றான்;. இந்த சமூக இழிபிறவிகளே, நவீன நாகரிக கனவான்களாக பகட்டு உடையணிந்து உலகெங்கும் பவனி வருகின்றனர். இவர்களின் பின் நக்தித் தின்னும் ஒரு கூட்டம் எப்போதும் அலைமோதுகின்றது. இவன் பணத்தை மேலும் மேலும் பல மடங்காக பெருக்கக் கூடிய வழிவகைகளுக்கு தடையாக உள்ள அனைத்து சமூகக் கூறுகளையும், ஈவிரக்கமின்றி அழித்தொழிப்பதில் தனது முழுமையான இழிவான வக்கிரத்தையே பயன்படுத்துகின்றான்;. இதைத் தான் இன்று மனித இனத்தின் சுதந்திரமாக காட்டி புணரப்படுகின்றது. இதைத் தான் ஜனநாயகமாக மூலமிடப்படுகின்றது.

இப்படி சமூகத்தின் அனைத்துச் செல்வத்தையும் கவர்ந்து சூறையாடுபவர்கள், தமது செல்வத்தைப் பாதுகாக்கவே அரசையும், அரசியல் சட்ட அமைப்புகளையும் தனக்கு இசைவாக உருவாக்கினர், உருவாக்கின்றனர். மனிதனை சூறையாடும் சட்டத்தையே மேலும் மேலும் தனக்கு இசைவாக மாற்றும் வகையில், உலகளாவிய சட்டங்களையே மாற்றுகின்றான். இந்த சமூக விரோத வக்கிரம் என்பது தனிமனித நலன் சார்ந்த லும்பன் குணாம்சங்களால் ஆனபோதும், இவையே எப்போதும் முழு மக்களுக்குமான சட்டவாக்கம் பெறுகின்றது.

இப்படி மனித விரோத சட்டங்களையே அன்றாடம் சமூகத்துக்கு எதிராகவே உருவாகி வருகின்றான். இதை கார்ல் மார்க்ஸ் அன்றே அவர் வாழ்ந்த சமூக அமைப்பில் இனம் கண்டு கூறியது என்பது, இந்த மனிதவிரோத்தை புரிந்துகொள்வதையே மேலும் துல்லியமாக்குகின்றது. பிரான்சின் வர்க்கப்போராட்டம் என்ற தனது நூலில் கார்ல்மாhக்ஸ் ~~நிதி ஆதிக்க மேற்குடியினர் சட்டங்களை இயற்றியதால், அரசு நிர்வாகத்திற்கு தலைமை வகிக்கிறது. அரசாங்க அதிகாரங்கள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றது. பத்திரிகை மூலமும் மற்றும் உண்மையான அரச விவகாரங்கள் மூலமும் பொதுக் கருத்தை மாற்றுவதற்கு அதிகாரம் படைத்திருக்கின்றது. அதே விபச்சாரம், அதே வெட்கங்கெட்ட மோசடி, அதே பணக்காரன் ஆக வேண்டும் என்ற அரிப்பு, ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு அரங்கத்திலும் தொடர்ந்து எதிரொலித்து வருகின்றது... உற்பத்தி மூலம் செல்வந்தன் ஆக வேண்டும் என்று நினைக்கவில்லை, மாறாக ஏற்கனவே உற்பத்தி செய்து பிறர் வைத்திருக்கும் சொத்தைக் களவாடி தன் பையில் போட்டுக் கொள்வதன் அடிப்படையில் செல்வந்தனாக எண்ணுகின்றனர். அடிப்படையில் எப்போதுமே முதலாளித்துவ சட்டங்களோடு மோதிக் கொண்டும், ஆரோக்கியமற்ற மிக வெறி உணர்வோடு முதலாளித்துவ சமுதாயத்தின் மேல்தட்டு மக்கள் செயல்படுவர்... நிதி ஆதிக்க சக்திகள் பணம் திரட்டுவதிலும் வாழ்வை அனுபவிப்பதிலும் முதலாளித்துவ சமுதாயத்தின் உச்சத்தில் மீண்டும் லும்பன் சமுதாயம் தோன்றுவதைக் குறிக்கின்றது மிகச் சரியாக இதன் முதிர்ந்து வரும் வடிவத்தை, இந்த உலகமயமாதல் உலகம் தளுவிய வகையில் நிறைவு செய்வதை நாம் இன்று காண்கின்றோம்.

உலகளாவிய அரசு கட்டமைப்புகள் முழுமையாகவே, இன்று நிதிக் கும்பல்களால் ஆட்டிப்படைக்கப் படுகின்றது. சகல பொருளாதார செயல்பாடுகளும் முழுமையாகவே நிதிக்கும்பலின் சூறையாடலுக்கு ஏற்ற வகையில் புணரப்படுகின்றது. உற்பத்தி மீதான சுரண்டலை மிஞ்சி, நிதி மூலமான சூறையாடலே முதன்மையான ஒன்றாகியுள்ளது. கஞ்சிக்கே வழியற்ற ஏழை எளியதுகளின் கோவணத்தையும் உருவும் நிதிக் கொள்கை, உலகெங்கும் மக்களை காலில் போட்டே மிதிக்கின்றது. நிதி மூலதனம் மூலமான சூறையாடல் பல வழிப்பட்டதாக, பல்துறை சார்ந்தாக மாறிவருகின்றது. மக்கள் மூச்சு விட்டாலே, அதற்கும் கூட வரிகட்ட வேண்டிய மனித அவலம். இதுவே உலகமயமாதல் என்ற அமைப்பின், உன்னதமான இலட்சிய இலக்காகவுள்ளது.

எங்கும் எதிலும் சூறையாடல், இதுவே உன்னதமான இலட்சியமாக உலகமயமாதல் வரிந்துள்ளது. இதை தான் (பின்)நவீனத்துவம் என்கின்றனர். ஆனால் மக்களின் சமூக வாழ்வுக்கு என்னதான் நடக்கின்றது. 1987 இல் மிக வறுமையில் சிக்கி இருந்த 95 நாடுகளை எடுத்தால், மருத்துவத்துக்கு அவர்கள் தமது சொந்த தேசிய வருமானத்தில் 1.1 சதவிகிதத்தையே பயன்படுத்தினர். கல்விக்கு 2.5 சதவிகித்தையே பயன்படுத்தினர். ஆனால் கடனுக்கான வட்டி மற்றும் அது சார்ந்த கொடுப்பனவு (அதாவது சேவிஸ்) 4.5 சதவிகிதத்தை கொடுத்தனர். இது 1980 க்கு முன் இல்லாத புதிய ஒரு சூறையாடல். ஒரு நாடு தனது வருமானத்தில் ஒரு பகுதியை அன்னியனுக்கு இழக்கின்ற சமூக(மனித) அவலம். இதன் விளைவு வறுமையின் பெருக்கமே, இதன் உள்ளார்ந்த சமூக விதியாகின்றது. இந்தத் தொகையை விட வட்டி மற்றும் நிதியை மீள் அறவிடுதல் முதல் பற்பல நிதிச் சூறையாடலை நாம் விரிவாக ஆராய்ந்து தெரிந்து கொள்வதன் மூலம், இந்த உலகமயமாதல் எப்படிப்பட்ட இழிந்தது என்பதையும், மனிதனுக்கு எதிரானது என்பதையே நாம் காணவுள்ளோம்.

இந்த உலகமயமாதல் உலகளாவிய நிதி மூலதனமாக, தனித்து ஒரு வடிவம் பெற்று உலகை கட்டுப்படுத்தவில்லை. இப்படி நடப்பதாக ஒரு திரிபு உலகமயமாதலை ஆதரிப்போரால் புகுத்தப்படுகின்து. அதாவது இது ஏகாதிபத்திய முரண்பாட்டை மறுதலிக்கின்ற ஒரு அரசியல் உத்தியாகவே கையாளப்படுகின்றது. உலகளாவிய நிதி மூலதனம் தனித்தனி ஏகாதிபத்தியங்களைச் சார்ந்து இயங்கும் அதேநேரம், ஒன்று குவிந்தும் இயங்குகின்றது. லெனின் அன்று இதை தெளிவாக கூறியது போல் ~~சர்வதேசிய ரீதியில் ஐக்கியப்பட்ட நிதி மூலதனம் மற்றும் ஒட்டமொத்தமான ஏகாதிபத்தியம் ஆகியவை ஒருபுறம்; தேசிய ரீதியில் வடிவமைக்கப்பட்ட நிதி மூலதனம் மற்றும் ஒரு அரசு ரீதியில் வடிவமைக்கப்பட்ட ஏகாதிபத்தியங்கள் ஆகியவை மறுபுறம் - இந்த இரண்டுக்குமிடையே பாகுபடுத்திப் பார்க்கவேண்டும் என்கின்றார். இதுவே இன்றும் எங்கும் எதிலும் விரவிக் காணப்படுகின்றது. இந்தப் பொது உண்மையை இனம் காண்பதன் மூலமே, உலகமயமாதலை புரிந்து கொள்ளமுடியும். இந்த உண்மையை ஒரு தலைப்பட்சமாக மறுத்தால் அல்லது திரித்தால் உலகமயமாதலின் உண்மை முகத்தை நாம் இனம் காணமுடியாது மட்டுமின்றி, மக்களின் எதிரியைப் பற்றிய ஒரு சர்வதேசிய போர்தந்திரத்தைக் கூட வகுக்கமுடியாது போய்விடுகின்றது.

மக்களின் எதிரி எப்போதும் தனது சொந்த முகத்தை சூக்குமமாக்கி மூடிமறைக்கவே விரும்புகின்றான். பற்பல விதமான வேஷங்களைப் போட்டு மனித அறிவை மலடாக்கி, அதில் தன்னைத்தான் வளப்படுத்திக் கொள்கின்றான். இதனால் உலகின் சமூகப் பிளவுகள் பற்பலவாகவே பிளவுறுகின்றது. இப் பிளவுகள் சிலருக்கு லும்பன் தனமான அனைத்து வளத்தையும், பலரை எதுவுமற்ற சமூகப் பரதேசிகளாக மாற்றுகின்றது. இந்த விளைவின் ஒரு சிலவற்றை முதலில் பார்ப்போம்.

குறைந்த வருமானம் உடைய பொருளாதாரத்துக்கும் உயர் வருமானமுடைய பொருளாதாரத்துக்கும் இடையிலான தனிமனித வருமான விகிதம் 1970 இல் 1 க்கு 28யாக இருந்தது. இது 1990 இல் 1 க்கு 50யாக அதிகரித்தது. இது தொடாந்தும் அதிகரித்துச் செல்லுகின்றது. செல்வந்தன் மேலும் மேலும் செல்வந்தனாக மாற, எழை மேலும் மேலும் எழையாகின்றான். இது ஒருபுற நிகழ, மறுபுறத்தில் ஏகாதிபத்தியத்துக்கும் எழை நாடுகளுக்கும் இடையிலும்; இதே விதியே எதார்த்தமானதாக உள்ளது. செல்வம் தனி மனிதனிடம் குவிவது, தனிமனித சமூக அமைப்பின் உள்ளார்ந்த விதி. இந்த விதிக்கமைய இதை மக்கள் இழப்பதையே சுதந்திரமாக்கின்றது. இதை அடைவதைத் தான் ஜனநாயகம் என்கின்றது. சக மனித உழைப்பை சூறையாடம் தனிமனித சமூக அமைப்பு என்பது ஜனநாயகம், சுதந்திரம் என்ற கோட்பாட்டலானது.

இதை மறுக்க முடியாத வகையில் தரவுகள் நிறுவி வருகின்றன. உதாரணமாக உலக மக்களில் 20 சதவிகிதமான பணக்காரர்களைக் கொண்ட நாடுகள், உலக வருமானத்தில் தனது பங்கை 1960 இல் இருந்து 1989 க்கு இடையிலான காலத்தில் 70.2 சதவிகிதத்தில் இருந்து 82.7 சதவிகிதமாக மாற்றி, சூறையாடிக் கொள்ளையிட்டுக் கொண்டது. 20 சதவிகிதமான எழைகளைக் கொண்ட நாடுகள் உலக வருமானத்தை இதே காலப்பகுதியில் 2.3 சதவிகிதத்தில் இருந்து 1.4 சதவிகிதமாக கொள்ளையிடுபவனிடம் இழந்து போனது. சமூக வறுமையின் விதி இப்படித் தான் உருவானது. இதுவே இன்று மறுக்க முடியாத சமூக எதார்த்தம். இதற்கு பிந்திய காலத் தரவுகளை எனது நூலின் தொடர்ச்சியில், இந்த உண்மையை மறுதலிக்காது மேலும் ஆழமாகவே நிறுவியுள்ளது. எப்படி உலகம் தனிமனித சுதந்திரத்தின் பெயரில், ஜனநாயகத்தின் பெயரில் பிரித்தாளப்படுகின்றது என்பதையும், இதன் மூலம் சிலர் உலகத்தின் முழுச் செல்வத்தினதும் அதிபதிகளாக மாறி வருகின்றனர் என்ற உண்மையை இவை மறுதலித்துவிடவில்லை. உலகெங்கும் இதுவே நடந்தது, நடந்து வருகின்றது.

இன்று நிதி மூலதனத்தின் ஆதிக்கத்தில் ஒரு மனிதன், ஒரு சமுதாயம், ஓரு தேசம், உலக மக்கள் என அனைவரும் கடன் பெற்று வாழ்வதே உலகமயமாதல், என்ற (பின்)நவீனத்துவ அடிமைத்தனம் புகுத்தப்பட்டுள்ளது. உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் மேலும் கடன் என்ற ஒரு சிலந்தி வலை போடப்பட்டுள்ளது. இதுவே இன்றைய சமூகத்தின் தலைவிதியாகி, அதுவே சிலுவையில் அறையப்படுகின்றது. இப்படித் தான் வாழவேண்டும் என நிர்பந்திக்கப்படுகின்றார்கள். அடிமைத்தனம் மக்களின் முதுகில் சட்டபூர்வமாக குறியிடப்படுகின்றது. உலகில் மக்கள் கூட்டமே, கடனுக்கு உட்பட்டு வாழ்கின்றனர் என்பதே இன்று சூக்குமாகவே உள்ளது. அதாவது மக்கள் இதை உணர முடியாத வகையில், மந்தைகளாக்கி சமூக அறிவின்மையை உருவாக்கியுள்ளனர். இந்த கடனுக்கு மக்களாகிய நாம் (உழைக்கும் மக்கள்) தான், வட்டி கட்டுகின்றோம் என்பதும் கூட தெரியாது உள்ளது. இதுவே முதலாளித்துவத்தின் சமூக அறிவியலாக உள்ளது. மற்றவர் அறியாவண்ணம் அவனை எப்படி சூறையாடுவது என்பது தான் முதலாளித்துவ சமூக அறிவியலாகும்;. இதுவே இன்றைய (பின்)நவீன தத்துவவியலுமாகும்;.

ஒவ்வொரு மனிதனும் உலகின் கடனுக்காக வட்டியையும், முதலையும் அன்றாடம் தனது உழைப்பில் இருந்து செலுத்திக் கொண்டிருக்கின்றான் என்ற உண்மையை தெரிந்து கொள்ளாத அடிமை அமைப்பில், நாம் எம்மை பற்றி பீற்றிக் கொண்டே வாழ்கின்றோம். நாம் சுதந்திரமானவராகவும், ஜனநாயகத்தின் உச்சத்தில் வாழ்வதாகவும் கூட பீற்றுகின்றோம். யார் இந்த மக்களுக்கு கடனைக் கொடுத்தார்கள்? யார் இந்த கடனையும், கடனுக்கான வட்டியையும் எப்படி எந்த நிபந்தனையுடன் அறவிடுகின்றனர்? எங்கே இவை எப்படி போகின்றது? இதை மக்களாகிய நீ அறிந்த கொள்ளாத வகையில், உன்னையே முட்டளாக்கும் இந்த சூக்குமம் தான் என்ன? எப்போதுதவது நீ இதைப் பற்றி சுயமாக சிந்தித்ததுண்டா? அறிவாளிகள் ஏன் இந்த சுதந்திர ஊடகங்கள் உனக்குச் சொன்னதுண்டா?

பணம் என்பது என்ன? பணம் என்பதும் அதற்கான பெறுமானம் என்பதும் மனித உழைப்பால் தான் எப்போதும் அளவிடப்படுகின்றது. இது உனக்குத் தெரியுமா! இந்த விதிக்கமைய எமது உழைப்பில் இருந்து நாள்தோறும் கடனுக்காக ஒரு பகுதியை, எமக்குத் தெரியாமலேயே நாம் செலுத்திக் கொண்டிருப்பதை உலகம் உறுதி செய்கின்றது. இது மறுதலிக்கப்படுகின்ற போது, உலகம் கொந்தளிப்பான கட்டத்துக்குள் நகாந்துவிடுகின்றது. கடனுக்கான வட்டி என்பது, சுரண்டலுக்குள்;ளேயே ஒரு புதிய சுரண்டலாகிவிட்டது. இது பணக்கார நாடுகள் முதல் ஏழை நாடுகள் வரை, இந்தக் கடன் என்ற சிலந்தி வலைக்குள் சமூகமே (மக்கள்) சிக்கியுள்ளது. இதற்கு வட்டியாகவும், முதலாகவும் உலகில் உழைக்கும் மக்கள் அனைவருமே தமது சொந்த உழைப்பின் ஒரு பெரும் பகுதியை செலுத்துகின்றனர். இது யாரால் எப்படி அறவிடப்படுகின்றது என்பது பொதுவான சமூகத்தின் முன் சூக்குமமாகவே உள்ளது.

இந்த சூறையாடல் சாதிப் படிநிலைக் கோபுரம் போல், கீழ் இருந்து மேலாக படிமுறை கட்டமைப்பைக் கொண்டது. ஏழை நாடுகள் பணக்கார நாடுகள் என்ற வரிசைக் கிரமத்தில் நகர்ந்து, இறுதியில் அவை ஒரு சில தனிப்பட்ட நபர்கள் வரை சென்று தனிமனிதனாக எஞ்சி விடுகின்றது. இங்கு சுரண்டலின் அளவு என்பது கூட, சாதி படிநிலையை அடிப்படையாக கொண்டே உள்ளது. ஏழைகள் கடனை கட்டும்போதும், பணக்காரன் கடனை கொடுக்கும் போது இதன் சமூக விளைவுகள் ஒன்றாக இருப்பதில்லை. ஏழைநாடுகளும் சரி, பணக்கார நாடுகளும் சரி, அந்த நாட்டு மக்கள் கடனுக்காக தமது சொந்த உழைப்பை தியாகம் செய்யும் போது, ஏற்படும் சமூக விளைவுகளின் அளவில் ஒரு பாரிய வேறுபாடு கொண்டவை.

உலகில் உணவின்றி, மருந்தின்றி, வாழவீடின்றி, கல்வி வசதியின்றி, குடிக்க தண்ணீரின்றி வாழும் மக்கள், அவர்களின் வாழ்வுடன் சம்பந்தப்படாத ஒரு கடனுக்காக வட்டியையும் முதலையும் கொடுக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். அவர்களின் உழைப்பில் இருந்து இவை பலாத்காரமாக புடுங்கி எடுக்கும் சூக்குமான அமைப்பு தான் இன்றைய சுதந்திரமான ஜனநாயகமாகும். மக்கள் தமது சொந்த சமூகத் தேவைக்காகவே உழைக்கின்றார்கள். ஆனால் அதை அவர்கள் எப்போதும் சுதந்திரமான மூலதனத்தின் ஜனநாயகத்திடம் பறிகொடுக்கின்றனர். சிலர் அதை முழுமையாக கைப்பற்றி உலகில் உள்ள அனைத்து செல்வத்தினதும் அதிபதியாகின்றனர்.

கடன்கள் ஒரு நாட்டுக்கு வழங்கப்படும் போது, கடன் கொடுப்பவன் எப்போதும் கடுமையான நிபந்தனைக்குட்பட்டே கொடுக்கின்றான். இந்த நிபந்தனை சாராம்சத்தில் சொந்த மனைவியை (கணவனையும்) புணரும் சுதந்திரத்தையும் நிபந்தனையின்றி கோருகின்றது. இந்தக் கடன் மிகப் பெரிய பணக்காரக் கும்பலின் சொகுசுக்கு சேவை செய்யவும், பன்னாட்டு உற்பத்தி நிறுவனங்கள் கொள்ளையிட்டு செல்லும் வசதியைப் பெருக்கவும், மேற்கு நோக்கிய ஏகாதிபத்திய நுகர்வின் ஆடம்பர சமூக வாழ்வை பூர்த்தி செய்யும் வகையில் முழு உற்பத்தியை மாற்றவும் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் இந்த அடைக்க முடியாத கடனை, அடைக்க முயன்று கொண்டிருப்பவர்கள், உற்பத்தியல் ஈடுபடும் எழை எளிய மக்களும், உழைக்கும் மக்களுமே ஆகும். இது ஒரு விசித்திரமான ஆனால் எதார்த்த உண்மை. ஏகாதிபத்திய கடனுக்கும் உழைக்கும் மக்கள் வட்டி கட்டாது, யாரும் இந்த உலகில் உயிருடன் வாழவில்லை. வட்டியைக் கட்ட மறுத்தால், அது மனித இனத்தின் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தை மீறிய செயலாகவே உலக ஒழுங்கும் அதன் சட்டதிட்டங்களும் வரையறுகின்றது. கையேந்தி நிற்கும் பிச்சைக்கார நாடுகள் கூட கடனுக்கு, வட்டியை கட்டவைக்கப்படுகின்றது.

இந்த படிநிலை சமூகக் கட்டமைப்பில் உலகில் உள்ள மக்கள் கூட்டம் அனைவரும், சிலருக்காக உழைத்து கொடுப்பது தான் உலகமயமாதல். இதில் ஏழை மக்களையும், ஏழை நாடுகளையும் கொடுமையாக சூறையாடுவதே நாகரீக நாடுகளின் சுதந்திரமாகவும் ஜனநாயகமாகவும் உள்ளது. ஜனநாயகமும், சுதந்திரமும் உலகமயமாதலின் ஆன்மாவாக இருக்கும் இன்றைய உலகில், ஒவ்வொரு வருடமும் பசியால் மட்டும் 1.6 கோடி பேர் இறக்கின்றனர். இந்த உன்னதமான சுதந்திரமான சமூக அமைப்பில் தான், 1990 இல் ஏகாதிபத்தியம்; 134000 கோடி டொலரை வறிய நாடுகளில் பிணங்களின் மேலாக, தனது நாட்டுக்கு பலவழிகளில் கடத்திச் சென்றது. 1.6 கோடி மக்களின் உணவை ஜனநாயகத்தின் பெயரில் பறித்து பட்டினி போட்டு கொல்லும் ஏகாதிபத்தியம், பறித்த உணவை தனது சொந்த நாட்டுக்கே கடத்திவருகின்றது. இதைவிட 1990 இல் ஏற்றுமதி மூலம் 50000 கோடி டொலரை வறிய நாடுகளிடம் இருத்து கடத்தியது. இப்படி பல வழிகளில் எழைநாடுகளில் இருந்து கொள்ளையிட்டு, அன்றடாம் அவை எகாதிபத்தியத்தினால் கடத்தப்படுகின்றது. வறிய நாடுகளின் ஏழ்மையும், பணக்கார நாடுகளின் செல்வச் செழிப்பு இப்படித் தான் உருவாகியது.

ஏழைநாடுகள் பணக்கார நாடுகளின் செல்வச் செழிப்புக்கு சேவை செய்யும் அமைப்பாக மாற்றப்பட்ட உலக ஒழுங்கே, இன்றைய ஏகாதிபத்திய உலகமயமாதல் சகாப்த்தமாகும். இந்த நாகரிகமான ஜனநாயகமான உலகமயமாதல் சகாப்தத்தில் ஒவ்வொரு நாளும் 19000 குழந்தைகள், மேற்கு நாடுகளுக்கு கடனுக்கான வட்டியை வாங்குவதால் இறக்கின்றனர். ஏழைகள் இறந்துமடிவது தான், உலகமயமாதலுக்கு அத்திவாரமாகிவிட்டது. இதுவே சிலருக்கான சுதந்திரமாகி விடுகின்றது.

மூன்றாம் உலகநாடுகள் தமது சொந்த நாட்டின் தேவை கருதி 1980 இல் கல்வி மற்றும் சிறப்பு பயிற்சிக்காக 1200 கோடி டொலரை செலவு செய்தது. இப்படி செலவு செய்து உருவாக்கியவர்களை ஏகாதிபத்தியம் இலவசமாகவே பணத்தைக் காட்டி (நாய்க்கு எலும்பை வீசி திருடுவது போல்) கவர்ந்தெடுக்கின்றது. இப்படி மூன்றாம் உலக நாடுகள் வருடாந்தம் 1000 கோடி டொலர் இழப்பைச் சந்தித்தன. இதுவே இன்று மிகப்பெரும் பல்துறை சார்ந்து அறிவியல் கொள்ளையாகவும் மாறிவிட்டது. இப்படி கொள்ளைகள் பற்பலவாக மாறிவருகின்றது. கொள்ளை அடிப்பதை சூக்குமமாக்கி, அதை நவீனப்படுத்திய நடைமுறையே உலகமயமாதலாகியது. இன்று மூன்;றாம் உலக நாடுகளின் செல்வம், ஏகாதிபத்தியத்தை நோக்கி அலையலையாக ஒடவைக்கின்றது. இப்படி இயல்பாக எளிமையாக ஒடவைப்பதே மனித சுதந்திரமாகவும், இதுவே ஜனநாயகமாகவும் புரிந்து கொள்வதற்கான சமூக விளக்கமே உலகமயமாதலாகின்றது.

இப்படி ஓடிவரும் செல்வம் உருவாகும் அமைப்பில், மனித இனம் வலுக்கட்டாயமாகவே சூக்குமமாகவே நரபலியிடப்படுகின்றது. இந்த சுதந்திரமான சுபீட்சமான செல்வந்தர்களின் சமூக அமைப்பில், இந்த செல்வந்தர்களின் சமூக இருப்பு சார்ந்து, மக்களுக்கு இல்லாமை புகுத்தப்படுகின்றது. அடிப்படையான சமூகத் தேவையை மனிதன் இழக்கும் போகும், மனிதர்கள் உயிர்வாழ முடியாது அமைதியாக இறந்து போவதை இயற்கையின் இறப்பாக காட்டி நம்ப வைக்கப்படுகின்றது. இப்படி உலகில் வருடாந்தம் குறைந்தபட்சம் 10 கோடி பேர் குடிக்க சுத்தமான நீரின்றி, பசிக்கு உண்ண உணவின்றி, நோய்யைத் தடுக்க மருந்தின்றி, வாழ தங்குமிட வசதியின்றி மற்றும் பற்பல காரணங்களால் உயிருடன் மடிந்து போகின்றனர். எமது அறியாமை என்ற எமது மலட்டுத்தனத்தின் மேல், சுதந்திரம் மற்றும் ஜனநாயக அமைப்பு இயற்கை மரணம் என்கின்றது. இவை அனைத்தும் மூலதனத்தின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் வாழ்வுக்காகவே, மனித இனம் தன்னைத்தான் களப்பழியாக்கின்றது. எங்கும் அடிமைத்தனத்தின் சின்னம் உற்பத்தி முறையிலும், வாழ்வியல் முறையில் பலாக்காரமாகவும், அமைதியாகவும் புணரப்பட்டு புகுத்தப்படுகின்றது.

தொடரும்

No comments: