தமிழ் அரங்கம்

Tuesday, August 8, 2006

உலகக் கோப்பை கால்பந்து 2006

உலகக் கோப்பை கால்பந்து 2006
விளையாட்டுக்கு கால் பந்து
வியாபாரத்துக்கு முழுப்பந்து

""2006ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஜெர்மனியில் நடந்த முக்கியமான நிகழ்வு என்ன?'' என்று ஒரு விநாடி வினா நிகழ்ச்சியில் கேள்வி கேட்பதாக வைத்துக் கொண்டால் உங்கள் பதில் என்ன? உலகக் கோப்பைக் கால்பந்து என பளிச்சென்று பதிலளித்து விடலாம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது நடைமுறையில் சாத்தியமில்லை.

காரணம் அந்த சொற்றொடர் கூட பிபா என்றழைக்கப்படும் சர்வதேச கால்பந்து சங்கங்களின் சம்மேளனத்தால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதை அந்த சங்கத்தின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சர்கள் தவிர வேறு எவரும் பயன்படுத்த முடியாது. அப்படி பயன்படுத்திய 420 நிறுவனங்கள் மீது பிபா உலகெங்கும் வழக்கு தொடுத்திருக்கிறது. ஜெர்மனியில் மட்டும் கால்பந்து தொடர்பான தங்களது காப்புரிமைகளை காப்பாற்றுவதற்கு சட்டவல்லுநர்கள் அடங்கிய 250 பேர் கொண்ட சந்தைப் படை நிர்வாகிகளை பிபா சுற்றவிட்டிருக்கிறது.

இரசிகர்கள் கால்பந்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது பிபாவும், பன்னாட்டு நிறுவனங்களும் போட்டியை வைத்து காசாக்குவதை நடைமுறைப்படுத்தி வருகின்றன. கால்பந்து என்ற நாணயத்தின் இரு பக்கங்களும் இப்படித்தான் இருக்கின்றன.

முக்கனிகளில் சுவையான முதல்கனி மா போல விளையாட்டுகளில் அழகானது கால்பந்து. பதினொரு பேர் கொண்ட அணியினர் பந்தைக் காத்து, கடத்தி, உதைத்து, கட்டுப்படுத்தி, சீறவைத்து, கால்களால் கோலமிட்டு கணநேர வித்தையில் கோல் போடும் அந்த விளையாட்டு நிச்சயம் அழகானதுதான். இந்த அழகின் வலிமையை நிகழ்த்திக் காட்டிய பல்வேறு அணிகளையும், பீலே முதல் மரடோனா, மெஸ்ஸி வரையிலான வீரர்களையும் மறக்க முடியாதுதான்.

இது ஒலிம்பிக்கிற்கு இணையாக உலகமக்கள் பார்க்க விரும்பும் தனித்துவமிக்க விளையாட்டு. கால்பந்தின் மொழியில் இணையும் சர்வதேச உணர்வு. பல்வண்ண ஆடைகளை அணிந்திருக்கும் வீரர்களைக் குழந்தைகள் அழைத்து வருகிறார்கள். விதவிதமான இராகங்களில் தேசிய கீதம். அந்த நேரத்தில் குறும்புக்கார வீரர்கள் சிலர் கண்ணடிக்கிறார்கள். சவுதி அணிவீரர்கள் கோல் போட்டதும் அல்லாவைத் தொழுகிறார்கள். கானா வீரர்கள் சிலுவை போடுகிறார்கள். ஐவரிகோஸ்ட் வீரர்கள் ஆப்பிரிக்கப் பழங்குடி நடனம் ஆடுகிறார்கள். பிரேசில் இரசிகர்கள் சம்பா நடனம் ஆடுகிறார்கள்.

பல்தேசியக் கொடிகளின் வர்ணங்கள் பூசப்பட்ட அழகான முகங்கள், தத்தமது நாட்டு அணிகளின் சட்டைகளை அணிந்தவாறு நடனமாடும் இரசிகர்கள், பீலே பாணி உதை, மரடோனா கையால் போட்ட கடவுளின் கோல், மெக்சிகோவில் நடந்த உலகக் கோப்பையின் போது இரசிகர்கள் முதன்முதலாக உருவாக்கிய கடல் அலையின் ஆர்ப்பரிப்பு, முந்தையப் போட்டியொன்றில் முதல் நுழைவிலேயே காலிறுதி வரை சென்ற காமரூன் அணியின் சாதனை, சென்ற உலகக் கோப்பையில் அரையிறுதி வரை சென்ற தென் கொரிய அணி, இவ்வாண்டு போட்டியின் காலிறுதியில் பெனால்டி உதையில் தோற்ற அர்ஜென்டினா அணி வீரர்களின் கதறல், வெற்றி பெற்ற ஜெர்மன் அணி பயிற்சியாளர் கிளிம்ஸ்மென்னின் உற்சாகம், கால்பந்தை நேசிக்கும் கேரளத்தில் அர்ஜென்டினா அணியின் வண்ணத்தை தனது படகில் பூசி அழகு பார்க்கும் மீனவர்கள், இந்தியாவில் கால்பந்து உயிர்த்திருக்கும் மேற்கு வங்கத்தில் உலகக்கோப்பை போட்டிகளை கூட்டமாக அமர்ந்து பார்க்கும் தொழிலாளிகள்...

கால்பந்தின் நினைவுகளில் தோய்ந்து எழும் படிமங்கள் கவித்துவமானவை. இந்தக் கவித்துவம் போட்டியை நேரடி ஒளிபரப்பில் அதிக மக்கள் பார்க்கிறார்கள் என்பதிலிருந்து எழவில்லை. உலகமக்களில் பெரும்பான்மையினர் இன்னமும் கால்பந்தைக் காதலிக்கிறார்கள் என்பதே அதன் தோற்றுவாய்.

1954ஆம் ஆண்டு உலகக் கோப்பையை ஜெர்மனி வெல்லும் போது தொலைக்காட்சி இல்லை. இன்று வரையிலும் உலகின் தலைசிறந்த மாஜிக் அணி என்று போற்றப்படும் 1958ஆம் ஆண்டின் பிரேசில் அணியில் பீலே, தீதி, கார்ரின்ச்சா முதலான வீரர்களின் ஆட்டத்தை வானொலியில் மட்டுமே கேட்க முடிந்தது. அந்தப் புகழ்மிக்க ஆட்டத்தின் துடிப்பை ஸ்பானிய வருணணையாளர்கள் உரையில் கொண்டு வந்தார்கள்.

1970இல் மெக்சிகோவில் நடந்த உலகக் கோப்பையின் போதுதான் தொலைக்காட்சி வந்தது. பொருளாதாரத்தில் பிரிந்திருந்த முதல் உலகமும் மூன்றாம் உலகமும் கால்பந்தில் சேருவதற்கான வாய்ப்பை 80களில் உலகமயமும் செய்தி விளையாட்டு ஊடகங்களும் உருவாக்கின. ஆனால் இந்த வாய்ப்பு கால்பந்து என்ற விளையாட்டை வளர்ப்பதற்கு அல்ல, அதைச் சந்தையில் விலைபேசும் பண்டமாக மாற்றுவதற்கே பயன்பட்டது.
இன்று உலகக் கோப்பை என்பது திறமையும் துடிப்பும் கொண்ட தென் அமெரிக்க ஆப்பிரிக்க இளம் வீரர்களை ஐரோப்பாவின் தனியார் கிளப்பைச் சேர்ந்த தரகர்கள் அடையாளம் காணும் மாட்டுச் சந்தையாக மாறிவிட்டது. இரசிகர்கள் தேசப்பற்றுடன் கூச்சலிடும்போது வீரர்கள் தங்கள் திறனை அடையாளப்படுத்துவதில்தான் அக்கறை காட்டுகிறார்கள்.

கால்பந்தில் ஒரு அணியின் வலிமையான துடிப்பான ஒற்றுமையில்தான் ஒருவர் கோல் போட முடியும். அதனால் கோல் போட்டதன் பெருமை பல வீரர்களின் ஒருங்கிணைந்த ஆட்டத்தின்பால் சேரும். இன்றோ கோல் போடுபவர் மட்டுமே நட்சத்திர வீரர் என்று தொலைக்காட்சியும் ஸ்பான்சர் நிறுவனங்களும் இலக்கணத்தை மாற்றிவிட்டன. அதனால் பல வீரர்கள் தாங்கள் மட்டுமே கோல் போடவேண்டும் என்று நினைப்பதால் பலவாய்ப்புகள் வீணடிக்கப்பட்டு அந்த அணிகள் சுயநலத்தின் விளைவைச் சந்திக்கின்றன. இப்படி ஒவ்வொரு வீரரும் நட்சத்திர வீரராக மாறுவதில்தான் கவனம் செலுத்துகிறார்.

தன் நாட்டுக்காக ஆடுவதில் அவர்பெருமைப்படுவதில்லை. மாறாக தன் நாட்டுக்காக ஆடுவதற்கான வாய்ப்பை வைத்து ஐரோப்பாவின் புகழ் பெற்ற மான்செஸ்ட்ர் யுனைடெட், செல்சியா, லிவர்போல், ரியல் மாட்ரிட், பார்சிலோனா, ஏ.சி.மிலன் முதலான பணக்கார கால்பந்து கிளப்புகளில் விளையாடி கோடிசுவரனாக மாறவேண்டும். அப்படி நட்சத்திர வீரராக நிலைபெற்ற பிறகு பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பர தூதராக கோடிகளை சம்பாதிக்க வேண்டும் என்பதே இந்த வீரர்களின் லட்சியம்.
விளையாட்டில் கால்பந்து மட்டுமே சர்வதேசப் பிரபலத்தைக் கொண்டிருப்பதால் பன்னாட்டு நிறுவனங்களும் இந்த நட்சத்திரங்களை உருவாக்கி விற்பதில் முனைப்பாக இருக்கின்றன. இன்று கால்பந்தைக் கட்டுப்படுத்துவது இந்த தனியார் கிளப்புகளும், பன்னாட்டு நிறுவனங்களும்தான்.

இங்கிலாந்து அணியின் தலைவர் டேவிட் பெக்காமின் சொத்து மதிப்பு மட்டும் 600 கோடி. ரியல் மாட்ரிட் கிளப்புக்காக ஆடும் பிரான்சின் ஜிடேனின் வார ஊதியம் 75,000 பவுண்டுகள், பிரேசிலின் ரொனால்டோவின் வாரஊதியம் 60,000 பவுண்டுகள். நல்ல மாடுகளைப் புகழ்பெற்ற மாட்டுச் சந்தைகளில் தேடிப் பிடித்து வாங்குவதைப் போல பல ஐரோப்பிய கிளப்புகள் தென்னமெரிக்காவிலும், ஆப்பிரிக்காவிலும் பல "மாட்டுத் தரகர்களை' வைத்திருக்கின்றன.

இந்த இரு கண்டங்களைச் சேர்ந்த 5000 வீரர்கள் தற்போது ஐரோப்பிய கிளப்புகளுக்காக விளையாடி வருகிறார்கள். மூன்றாம் உலகம் மாடுகளை ஏற்றுமதி செய்கிறது. முதல் உலகம் மஞ்சுவிரட்டு நடத்தி சம்பாதிக்கிறது. ஐரோப்பாவில் தேசிய உணர்வைவிட கிளப் உணர்வு அதிகம். அதனாலேயே பிபா உலகக் கிளப் கோப்பைக் கால்பந்துப் போட்டியையும் நடத்துகிறது.

ஆரம்பத்தில் இந்தக் கிளப்புகள் விளையாட்டு ஆர்வத்திற்காக துவங்கப்பட்டு தற்போது ஆண்டுக்கு பல நூறு கோடிகள் சம்பாதிக்கும் பன்னாட்டு நிறுவனங்களாக மாறிவிட்டன. இவற்றின் பங்குகள் பங்குச் சந்தையில் விற்கப்படுகின்றன. நட்சத்திர வீரர்களின் விற்பனைக்கேற்ப பங்கு விலை உயரும். பலதொழிற்துறை, ஊடக முதலாளிகளும் அரசியல்வாதிகளும் இந்தக் கிளப்புகளை நடத்தி வருகின்றனர்.

தற்போது பல உலகநாடுகளில் உள்ள கால்பந்தை நேசிக்கும் ஏழ்மையான கிளப்புகள் அனைத்தும் ஒழிக்கப்பட்டு விட்டன. லத்தீன் அமெரிக்க ஏழைமக்கள் வாழும் சேரிகளிலிருந்து மட்டும்தான் வீரர்கள் கிடைக்கிறார்கள் என்ற அளவில் அவர்களுக்கு ஏழ்மை தேவைப்படுகிறது.

நட்சத்திர வீரர்கள், கிளப்புகள், பன்னாட்டு நிறுவனங்கள் இவர்களுக்கிடையே கால்பந்தின் ஆதாயத்தை பங்கிட்டுத் தரும் வேலையினை பிபா ஒரு அரசு போல செய்து வருகிறது. பழைய மிட்டாமிராசுகள் காளைகளையும், குதிரைகளையும் வளர்த்து பெருமை காண்பிப்பார்கள். நவீன முதலாளிகளோ கால்பந்து அணியினை பெருமைக்காகவும் வருவாய்க்காகவும் வளர்க்கிறார்கள்.

கால்பந்தில் வர்த்தகம் விளையாட ஆரம்பித்த சில வருடங்களிலேயே ஊழலும் விளைய ஆரம்பித்து விட்டது. நட்சத்திர வீரர்களை வாங்கி விற்பதில் ஊழல், போட்டியின் முடிவுகளை முன்கூட்டியே தீர்மானித்து மோசடி செய்தல் என்று ஐரோப்பிய கால்பந்து கிளப்புகளின் ஊழல் புராணம் மேற்குலகின் ஊடகமே தாங்க முடியாத அளவில் நாறி வருகிறது. இதில் விளையாட்டு எங்கே இருக்கிறது? கால்பந்தில் வணிகமயமாக்கம் நடந்தேறிய பிறகு விளையாட்டு தொலைந்து போனது குறித்து மேற்குலகின் அறிவுஜீவிகள் வருத்தப்படுகிறார்கள். கடிவாளம் கை மாறிய பிறகு குதிரை குறித்து நொந்து என்ன பயன்?

ஒரு கிளப்புக்கு ஒரு நட்சத்திர வீரர் எப்போது வருவார், எவ்வளவு காலம் இருப்பார் என்பது அந்த கிளப்பின் பயிற்சியாளருக்குக்கூடத் தெரியாது. இப்படி ""பல நாடுகளைச் சேர்ந்த, பல மொழி, பண்பாட்டு பின்புலமுள்ள வீரர்களை ஒரு அணியாக்கிப் பயிற்சியளித்து விளையாட வைப்பது ஒரு சர்க்கஸ் கம்பெனி நடத்துவது போல இருக்கிறது என்று சலித்துக் கொள்கிறார் ஒரு பயிற்சியாளர்.

ஆனால் பன்னாட்டு நிறுவனங்களுக்கு கால்பந்து ஒரு சர்க்கஸ் போல இருப்பதே போதுமானது. இரசிகர்கள் முன்னால் நட்சத்திர வீரர்கள் தோன்ற வேண்டும். ஏதோ ஒன்றிரண்டு கோல்கள் போட வேண்டும். இப்படி விளையாட்டில் மட்டுமல்ல இரசனையிலும் தரம் மிகவும் கீழே இறங்கிவிட்டது.

தற்போதைய உலகக் கோப்பைக்காக ஜெர்மனி வந்துள்ள இரசிகர்கள் விளையாட்டு பார்க்க மட்டுமல்ல மாபெரும் கேளிக்கைக்காகவும் வந்துள்ளனர். இவர்களுக்காக கிழக்கு ஐரோப்பாவிலிருந்து 40,000 விலைமாதர்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளனர். முன்னர் சோவியத் யூனியனிலிருந்தும் ஏனைய கிழக்கு ஐரோப்பிய சோசலிச நாடுகளிலிருந்தும் தரமான விளையாட்டு அணிகள் வந்தன. தற்போதைய உலகக் கோப்பைக்காக ரசியாவிடமிருந்து கூட அணி வரவில்லை. ஆனால் விலைமாதர்கள் தடையின்றி வருகின்றனர். சோசலிசத்தை வென்ற முதலாளித்துவம் உலகிற்கு அளித்திருக்கும் கொடை இதுதான்! இப்படி ரசிகர்கள் பீரைக் குடித்து, செக்சில் மூழ்கி, கால்பந்தையும் இரசிக்கிறார்கள்.

இப்படிக் கால்பந்தை சீரழித்த பன்னாட்டு நிறவனங்களின் தெரியாத முகம் ஒன்றும் உள்ளது. உலகக் கால்பந்தின் 60% பாகிஸ்தான் நாட்டில் சியால்கோட் எனும் நகரில் தயாராகிறது. சுமார் 2000 பட்டறைகளில் சுமார் 40,000 கொத்தடிமைத் தொழிலாளிகள் அற்பக் கூலிக்காக கால்பந்துகளை தைத்து வருகின்றனர். அடிடாஸ், நைக், பூமா போன்ற பிரபலமான விளை யாட்டு கம்பெனிகள் அனைத்தும் இங்கேதான் கால்பந்துகளைத் தயாரிக்கின்றன. நாளொன்றுக்கு சுமார் 50 ரூபாய் மட்டும் கூலி கொடுத்து கொடூரமாகச் சுரண்டிதான் இந்த நிறுவனங்கள் கோடிகோடியாய்க் கொள்ளையடிக்கின்றன.

கால்பந்து குறித்த சோகக்கதையில் இந்திய சோகத்தை மட்டும் சுருக்கமாகப் பார்ப்போம். இந்தியா உலகக் கால்பந்து நாடுகளின் தரவரிசையில் 117 ஆவது இடத்தில் சோம்பேறித்தனமாக அமர்ந்திருக்கிறது. "வாழைப்பழக் குடியரசு' என்று கேலி செய்யப்படும் மத்திய அமெரிக்க நாடுகளிலிருந்து டிரினிடாட் மற்றும் டுபாக்கோ என்ற பத்து இலட்சம் மக்கள் தொகை கொண்ட நாடு கூட உலகக் கோப்பைக்காக தனது அணியை அனுப்பியிருக்கிறது. ஆனால் 100 கோடி மக்கள் தொகையில் ஒரு 11 பேரைக் கூட தயார் செய்ய முடியவில்லை.

இதுவும் விளையாட்டு குறித்த பிரச்சினையல்ல, இந்தியாவில் ஜனநாயகம் என்ன தரத்தில் இருக்கிறதோ விளையாட்டும் அந்த தரத்தில்தான் இருக்கும். ஆனால் வர்த்தகத் தரம் அந்த அளவுக்கு மோசமில்லை. இ.எஸ்.பி.என் விளையாட்டு தொலைக்காட்சி நிறுவனம் உலகக் கோப்பைப் போட்டிகளை இந்தியாவில் ஒளிபரப்ப சுமார் 55 கோடி ரூபாய் அளவுக்கு விளம்பரங்களைப் பிடித்திருக்கிறதாம். சென்றமுறை டென் ஸ்போர்ட்ஸ் பத்து கோடிக்குத்தான் வர்த்தகம் செய்தது எனும் போது இது ஐந்து மடங்கு வளர்ச்சி!

இப்போது சொல்லுங்கள், கால்பந்து குறித்த கவித்துவமான நினைவுகளில் எது எஞ்சி நிற்கிறது? இன்றைய உலகமயச் சூழலில் கால்பந்து என்ற விளையாட்டு பன்னாட்டு நிறுவனங்களால் தோற்கடிக்கப்பட்டு விட்டது. இதில் ஒரு உண்மையான இரசிகர் என்ற முறையில் நாம் என்ன செய்வது?
நாமும் விளையாட வேண்டும். விளையாட்டு மைதானத்தில் அல்ல, அரசியல் களத்தில். சர்வதேச பாட்டாளி வர்க்க அணியில் சேர்ந்து உலக முதலாளித்துவத்தை எதிர்த்து ஆடும் ஆட்டத்தின் இறுதியில் நாம் கால்பந்தை மட்டுமல்ல, ஏனைய விளையாட்டுக்களையும் மீட்க முடியும். மனித குலம் தன்னை நெறிப்படுத்திக் கொள்ள கண்டெடுத்து வளர்த்த விளையாட்டுணர்வுக்குப் பொருத்தமான பொற்காலம் அப்போது, அப்போது மட்டுமே நிலவ முடியும்.

மு இளநம்பி

கால்பந்து சங்கமா, காசு புரட்டும் பன்னாட்டு நிறுவனமா?
சர்வதேச கால்பந்து சங்கங்களின் சம்மேளனம் ஸ்விட்சர்லாந்தில் இலாப நோக்கமற்ற அமைப்பாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எந்த சுவிட்சர்லாந்து? அதிகார வர்க்கமும் முதலாளிகளும் லஞ்சப்பணம், கள்ளப்பணம், கறுப்புப்பணம் இன்னபிற ஊழல் பணத்தை இரகசியமாக சேமிப்பதற்கு நம்பிக்கையான வங்கிகளைக் கொண்ட அந்த சுவிட்சர்லாந்து.

உலகக்கோப்பை மற்றும் இன்னபிற சர்வதேச போட்டிகளை நடத்தும் பிபா ஒரு வெறும் விளையாட்டுச் சங்கம் மட்டுமல்ல, பல்லாயிரம் கோடி ரூபாய் புரளும் பெரும் வர்த்தக நிறுவனமும் ஆகும். அதில் மோசடி செய்த பணத்தை காப்பாற்றுவதற்கென்றே சுவிட்சர்லாந்தில் பதிவு செய்திருக்கிறார்கள். மேலும் இந்தப் பதிவினால் ஃபிபா வெறும் 4.5% வர்த்தக வரி செலுத்தினாலே போதும். ஃபிபாவின் தலைவராக இருக்கும் ஸ்லெப் பிளெட்டர் இவரும் அந்த நாட்டைச் சேர்ந்தவர்தான். கடந்த எட்டாண்டுகளாக தலைமைப் பதவியில் இருக்கும் இவர் பிபாவை மாபெரும் பணம் சுரக்கும் ஊற்றாக மாற்றியிருக்கிறார். 1930ஆம் ஆண்டு முதல் பிபா உலகக்கோப்பை போட்டிகளை நடத்தி வருகிறது.

1906ஆம் ஆண்டு பிபாவின் வருமானம் வெறும் 20,550 ரூபாய் மட்டுமே. ஒவ்வொரு உலகக் கோப்பையின் போதும் அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் மைதானம் முதலான கட்டுமானச் செலவுகளைப் பார்த்துக் கொள்ளுகின்றன. பன்னாட்டு உள்நாட்டு நிறுவனங்கள் ஸ்பான்சர் தொகையாக பல்லாயிரம் கோடிகளைத் தருகின்றன. இது போக போட்டிகளை நேரடியாக ஒளிபரப்புவதற்கான உரிமத் தொகையாக பல்லாயிரம் கோடி ரூபாய் வருகின்றது.

இப்படி ஒவ்வொரு ஆண்டும் எவ்வித முதலீடோ, செலவோ இன்றி பிபா கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகின்றது. 2002ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் போது பிபாவின் நிகர இலபாம் 1300 கோடி ரூபாயாகும். 2006இல் செலவு போக 4,290 கோடி ரூபாய் வருவாய் வருமென மதிப்பிடப்பட்டிருக்கின்றது. இத்தொகையில் ஏழை நாடுகளின் சிறு நகரங்களில் பத்து இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் கால்பந்து மைதானம் உருவாக்குவதாக இருந்தால் 42,900 நகரங்களில் எளிய முறையில் மைதானத்தைக் கட்டமுடியும்.

ஆனால், பிபாவோ கால்பந்தை வளர்ப்பதற்குப் பதில் காசை அள்ளுவதிலும் மோசடி செய்வதிலும் குறியாக இருக்கிறது. அப்படி சமீபத்தில் ஒரு ஊழல் விவகாரம் அம்பலமாயிருக்கிறது. ஐ.சி.எல் எனப்படும் பிபாவின் பினாமி நிறுவனம் ஸ்விட்சர்லாந்தில் இருக்கிறது. இதற்கு பிபாவின் கால்பந்துப் போட்டிகளினால் வரும் வர்த்தக நடவடிக்கைகளைக் கவனிப்பதற்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது. கட்டணச் செலவாக 1,500 கோடி ரூபாயும் தரப்பட்டது. இறுதியில் ஐ.சி.எ.ல் திவால் என அறிவிக்கப்பட அத்தனை ரூபாயும் சுருட்டப்பட்டது. இதில் பிபாவின் அதிகார வர்க்கம் மோசடி செய்துள்ளதை பி.பி.சி. தொலைக்காட்சியின் பனோரமா நிகழ்ச்சி சமீபத்தில் அம்பலப்படுத்தியுள்ளது. பிபாவின் தலைவரோ இதை ஒரு அறிக்கையில் பொய்யென மறுத்து விட்டு தன் வேலையைச் செவ்வனே செய்து வருகிறார்.
கால்பந்து:

நவீன கிளேடியட்டருக்கு பல்லாயிரம் கோடி கேளிக்கைச் செலவு
பண்டைய ரோமபுரி ஆட்சியில் மக்களைக் கேளிக்கையில் மூழ்க வைக்க கிளேடியட்டர் எனப்படும் அடிமைகளை சாகும் வரை சண்டையிட வைப்பார்கள். வருடம் முழுவதும் நடக்கும் இந்தப் போட்டிகளுக்காக நகரின் மத்தியில் பிரம்மாண்டமான மைதானத்தை பெருஞ்செலவு செய்து கட்டுவார்கள். தற்போது கால்பந்து போட்டிகளும் ஏறக்குறைய அப்படி மாற்றப்பட்டு விட்டன.

2002இல் ஜப்பானும் கொரியாவும் சேர்ந்து நடத்திய உலகக் கோப்பை மொத்த ஆட்டங்களையும் பார்த்த மக்களின் கூட்டுக் கணக்கு 3,000 கோடியாகும். இந்தப் போட்டிக்காக இரு நாடுகளும் மைதானங்கள் கட்டுவதற்காக மட்டும் 35,000 கோடி ரூபாயைச் செலவழித்தன. இதே தொகையை ஒரு இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் குடிசைமாற்று வாரிய வீட்டைக் கட்டுவதாக இருந்தால் 35 இலட்சம் வீடுகளைக் கட்டலாம். அதாவது ஒன்றரைக் கோடி மக்களுக்கு வீடு கிடைக்கும். அல்லது சென்னை மாநகரைப் போன்று மூன்று மாநகரங்களைக் கட்டலாம்.

இவ்வாண்டு உலகக் கோப்பையை நடத்தும் ஜெர்மனி இதற்காக செலவழித்த தொகை 10,000 கோடி ரூபாயாகும். இதே தொகையில் ஐந்து வகுப்பறை கொண்ட ஒரு ஆரம்பப் பள்ளியை ஐந்து இலட்சம் மதிப்பீட்டில் கட்டுவதாக இருந்தால் சுமார் இரண்டு இலட்சம் பள்ளிகளைக் கட்டலாம்.
இப்படி மைதானம் கட்டுவதற்காக பல்லாயிரம் கோடி செலவழிப்பதால் இந்தப் போட்டிகளை நடத்தும் நாடுகளுக்கு என்ன பயன் என்று கேட்கலாம். கட்டுமானத் தொழில், ஓட்டல், உணவக விடுதிகள், சுற்றுலா, விபச்சாரம், சிறுவர்த்தகம் என்று பலவழிகளில் இந்நாடுகளுக்கு வருமானம் வருகிறது.
ஜெர்மனியில் நடக்கும் போட்டியைக் காண மட்டும் சுமார் 30 இலட்சம் இரசிகர்கள் வந்து போவார்கள் என மதிப்பிடப்படுகிறது. இவர்கள் போட்டி நடக்கும் ஒரு மாதத்திற்கு தினசரி 3,000 ரூபாய் செலவழித்தால் ஜெர்மனியின் இலாபம் என்னவென்று தெரியவரும்.

No comments: