தமிழ் அரங்கம்

Thursday, April 3, 2008

சுயநலத்துடன் நாம் எப்படி வாழ்தல்?

சுயநலத்துடன் நாம் எப்படி வாழ்தல்?


பி.இரயாகரன்
02.04.2008

தை சொல்ல முனையும் ஒரு நூலுக்கூடாக, அவர்களின் சொந்தக் கலந்துரையாடல். பெற்றோர் முதல் நூல் ஆசிரியர் வரை, வாழ்வின் வெற்றி தோல்விகளாக எதைத்தான் கருதுகின்றனர்? இதை நுணுகி உடைத்துப் பார்த்தால், பெற்றோரின் குறுகிய சுயநலத்தைத் தான் பெற்றோரியம் என்கின்றனர். இதை எப்படிச் சாதிப்பது என்பதை கனகசபாபதி எழுத முடிந்தது என்றால், இதற்கு மேல் அவரால் எதையும் சமூக நோக்கில் சிந்திக்க முடியவில்லை. சுயநலத்தை புத்தகம் மூலம் சமூக நலமாக்குகின்றார். சுயநலமே மனித வாழ்க்கையாக எண்ணுகின்ற எம்மவர் இதை புகழ்வதும், தமது வெற்றி தோல்வியை பெற்றோரியமாக கருதுவதுமே சுற்றிச்சுற்றி அரங்கேறுகின்றது. மகாஜனா பழைய மாணவர் சங்க நூல் வெளியீடு, இதைத்தான் பெற்றோரியம் என்றது. இப்படித் தான் அவர்களின் கூட்டமாக அரங்கேற்றியது.

1.கனகசபாபதியின் நூல் மேலான விமர்சனம், திட்டமிட்டு தடுக்கப்பட்டது. அவரையும் நூலையும் புகழ்வதும், அதை ஏற்பதுமாகவே கூட்டமே அரங்கேற்றப்பட்டது.

2.பெற்றோரிய நெருக்கடிகளை, தத்தம் சுயநலத்தின் குறுகிய எல்லைக்குள் வைத்து மீளவும் அரைக்கப்பட்டது.

இவை எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக பெற்றோர்கள் புரிந்தது என்ன? புரிய வைத்தது என்ன? ஏகாதிபத்திய உலகமயமாக்கலின் சமூக சிதைவுகளையும் சீரழிவுகளையும், பெற்றோராகிய நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்வது என்பது. இந்த சூழலில் வாழும் குழந்தைக்கு, எப்படி அந்த நஞ்சை பெற்றோராகிய நாம் எம்பங்குக்கு ஊட்டுவது என்பது தான். பெற்றோர் சமூகப் பொறுப்புள்ளவராக சமூக ஐPவியாக இருக்க, அவரால் எதையும் சொல்ல முடியவில்லை.

சுயநலம் தான் பெற்றோரியம் என்று நூல் ஆசிரியர் புரிந்துள்ளார். அதை மற்றவர்களுக்கு புரிய வைக்க முனைந்தார், முனைகின்றார். ஏகாதிபத்திய உலகமயமாதலின் விளைவுகளை, பெற்றோராகிய நாம் ஏற்க மறுப்பது தவறு என்கின்றார். இதை உலகமயமாதல் ஏற்கும் சமூக பொறுப்பற்ற அறிவியல் துறையில் இருந்து பெற்று, அதை எமக்கு அறிவியல் பூர்வமாக சொல்ல முனைந்தார்.

இந்த அறிவு என்பது, சமூகத்தின் பொதுப் போக்கு சரியானதா என்ற விவாதத்தை மறுத்து எழுகின்றது. ஏகாதிபத்தியமே மறுக்கின்ற எமது நிலப்பிரபுத்துவ பண்பாட்டினை மறுத்து, அதனிடத்தில் ஏகாதிபத்திய பண்பாட்டு கூறை வைப்பதையே அறிவியல் என்கின்றது. இது முற்போக்கு மயக்கத்தை தருகின்றது. எமது நிலபிரபுத்துவ அறிவின் முன், பண்பாட்டின் முன், முற்போக்காக வேஷம் கட்டி வருகின்றது. உலகமயமாதல் ஏகாதிபத்திய வன்முறையால் மட்டும் வெல்வதல்ல, மாறாக மனித அறிவியலை மறுத்து அதை மலடாக்கி அறிவியலை தனதாக்கி வெல்லுகின்றது.

நூல் ஆசிரியர் இதைச் சொல்லும் உத்தி என்பது, தனிமனித சுயநலத்தை சீர்திருத்தம் ஊடாக சொல்வது. ஏகாதிபத்திய உலகமயமாதல் நலன்களால், அதில் சிக்கி திணறும் மக்கள் சந்திக்கின்ற தனிமனித சமூக நெருக்கடிகளை, சமாளிக்கும் விதத்தையே தீர்வென்கின்றனர். அதே தமிழில் கையாளக்கோரி, அதைக் கூற முனைகின்றனர்.

ஏகாதிபத்திய உலகமயமாதல் பற்றி அபிப்பிராயமின்றி, அதற்கு ஆதாரவாளராக இருந்தபடி அதற்குள் சிந்தித்தலே அறிவு என்பது, நூல் ஆசிரியரின் முடிந்த முடிவு. இதுவோ சுத்த சுயநலமானது. எமது யாழ்ப்பாணிய எஞ்சினியர் – டாக்டர் கனவுக்கு உட்பட்டது. அதில் வென்றால் வெற்றி அல்லது தோல்வி என்ற பொது அறிவு மட்டத்தில், எமது குறுகிய அற்பத்தனத்தை அடிப்படையாக கொண்டது.

ஏகாதிபத்திய உலகமயமாதலில் வாழ்ந்தபடி, அது பற்றிய சுயசிந்தனையின்றி யாரால் எதை மாற்றாக சிந்திக்கமுடியும். முரண்பட்ட சிந்தனை, மாற்று அபிப்பிராயமற்றதாக காட்ட, வாழைப்பழத்தில் ஊசியேற்றுகின்ற நவீனபாணியில் கருத்துச் சுதந்திர மறுப்பு. அனைத்தையும் ஒற்றைப் பரிணாமத்தில், தமிழருக்கே உரிய பாணியல், சிலர் இதை செய்யவும், சொல்லவும், தமக்குள் விவாதிக்கவும் கூடவும் முனைகின்றனர்.

இப்படி இவர்கள் பெற்றோரியம் என்ற பெயரில், வெற்றி தோல்வியாக கருதியது எதை? எமது சிந்தனை முறையிலான வாழ்வைத் தான். குறிப்பாக அதன் விருப்பங்களைத் தான். நாம் வெற்றி தோல்வியாக கருதியவை சரியானவையா? சரியானவை என்பது, சமூக நோக்கில் இருந்து பார்த்தால் மட்டும் தான், சரியானது. சுயநல நோக்கில் இருந்து பார்த்தால், அது தவறானது. சமுதாய நோக்கமற்ற எமது சிந்தனை முறையிலான எமது கருதுகோள்கள், சரியானவையல்ல. இதன் அடிப்படையிலான வெற்றி - தோல்வி என்ற எமது முடிவுகளும், ஏன் விவாதங்களும் கூட சரியானவையல்ல.

எமது சமூகப் பார்வை குறுகியதாக இருக்கும் போது, குழந்தையை நாம் வழிகாட்டுவது அதே குறுகிய உணர்வை தாண்டாமலே தான். பெற்றோரின் சமூக பார்வையை நூல் விவாதிக்கின்றது? குழந்தையின் சமூகப் பார்வை என்ன? நாம் அதையும், எம்மைப்போல் எமது குறுகிய எல்லையால் ஆராய மறுக்கின்றோம்.

மாறாக பெற்றோர்கள் தமது குறுகிய விருப்பங்களை, எண்ணங்களை, குழந்தை எந்த வகையில் ஏற்றுக்கொண்டு வாழ்கின்றது என்ற சுயநல எல்லைக்குள் தான், சமூகத்தையே புரிந்து கொள்ளுகின்றோம். அதையே நாம் வெற்றி தோல்வியாக பீற்றுகின்றோம்.

சமூக நலன் என்ற பொது சமூக கண்ணோட்டத்தில், குழந்தைகளின் ஆரோக்கியமான வாழ்வை எண்ணிப் பார்க்க முடிவதில்லை. இலங்கைத் தமிழர்கள், அந்தக் கருத்துத் தளத்தையே அனுமதிப்பதில்லை. நாம் எம்மைச் சுற்றி மட்டும் சிந்திக்கின்றோம். சமூகத்தின் விளைவுகளைத் தான் குழந்தையும் - பெற்றோரும், தமக்குத் தெரிந்த சொந்த சுயநல நோக்கிலேயே அதை எதிh கொண்டு எதிர்வினை ஆற்றுகின்றனர்.

இங்கு அந்த சுயநலத்தை எப்படி பரஸ்பரம் இணங்கி அங்கீகரித்து அதை அடைதல் என்பதை அறிவு என்கின்றனர், வாழ்வின் வெற்றி என்கின்றனர். இதற்கு வெளியில் சமூக பார்வையை வைத்தல், பெற்றோரியமல்ல என்கின்றனர்.

என்ன செய்கின்றனர். பெற்றோர் குழந்தை முரண்பாட்டை, வீட்டுக்குள்ளான முரண்பாடாக முடக்குகின்றனர். ஒவ்வொரு வீட்டுக்குள்ளான, பெற்றோரின் அணுகுமுறை தொடர்பான பிரச்சனையாக திரிக்கின்றனர். அதை சுயநலத்துடன் எப்படி பார்த்தல், அணுகுதல் என்பதை, உலகமயமாக்கல் போக்கில் இணங்கி வாழக் கோருகின்றனர்.

உலகம் சரியாக செல்கின்றது என்பதை நாம் ஏற்று (அதை நூல் ஆசிரியர் ஏற்றுகொள்கின்றார்), எம்மை அதற்கு ஏற்ப வெட்டிச் சுருக்க கோருகின்றனர். இந்த வகையில் வீட்டுக்குள் நடக்கும் ஒவ்வொரு விடையமும், சமுதாயத்தின் விளைவு என்பதை அது தெளிவாக நிராகரிக்கின்து. உலகமயமாதல் என்ற பொது நிகழ்ச்சிப் போக்கை அங்கீகரித்து, அதை சுயநலத்துடன் வாழக் கற்றுக் கொள்ளும் அறிவு (சுயநலம்) தான் பெற்றோரியம் என்ற அளவுக்கு சிந்தனை மட்டம் தாழ்ந்து காணப்படுகின்றது.

உலகமயமாக்கலில் வாழ்கின்ற மக்கள், இதற்கு எதிராக முரண்படவில்லை என்ற ஒற்றைப் பரிமாண சிந்தனை, இதன் மேல் திணிக்கப்படுகின்றது. உலகமயமாதல் அறிவை சுயசிந்தனையின்றி வழிபடக் கோருகின்றது. இது இயற்கைக்கும், மனித குல நலனுக்கும் சாதகமானதா என்ற சுயசிந்தனை இன்றி, ஆதரிக்க கோருகின்றது. இதையே நூல் ஆசிரியர், தனது பாணியில் செய்துள்ளார்.

நுகர்வுப் பண்பாட்டையே சமூகக் குறிக்கோளாக திணிக்கும் உலகமயமாதல் நிகழ்ச்சியை, சுய அறிவின்றி ஏற்று வாழப் பழகிவிட்ட மந்தைத் தன்மையை அங்கீகாரமாகக் கொண்டு, வளவளப்பது அறிவாகிவிடுகின்றது. இதன் மீதான சமூகம்சார் விமர்சனங்களை, தடுத்து நிறுத்துகின்றனர். பெற்றோரியத்தின் பெயரில் சுயநலத்தையே முன்னிறுத்தி, அதை வெற்றிகரமாக கலந்துரையாடுவது விவாதப் பண்பாகின்றது.

சுயநலத்தையே கனகசபாபதியின் நூல்கள் விதிந்துரைக்கின்றது. ஏகாதிபத்திய சூழலில் வாழும் குழந்தைக்கு ஏற்ப, பெற்றோர் தம்மை எகாதிபத்தியமயமாக்குவது தான் அவரின் ஒரேயொரு தீர்வு. சமூக அடிப்படையிலான சமூகப் பார்வையை, பெற்றோர் – குழந்தைகள் பெறுவதன் மூலம் தீர்வு காண்பதல்ல. ஏகாதிபத்திய அமைப்பு வழங்குகின்ற, அதற்கேற்ற தீர்வுகளைத் தான் அவர் வலியுறுத்துகின்றார். பெற்றோர் - குழந்தை முரண்பாட்டில், பெற்றோர் தமது ஏகாதிபத்தியமயமாக்கலை பூர்த்தி செய்வது தான் தீர்வு என்கின்றார். இப்படி தீர்வுகள், வழிகாட்டல்கள், அனைத்தும் இதை எப்படி ஏற்றுக்கொள்வது என்பது தான். தம்மை ஏகாதிபத்திய தன்மைக்கு மாற்றி, தோல்வியை வெற்றியாக கருதியும், வெற்றியை தோல்வியாகக் கருதியும், சுயநலத்துடன் வாழும் சுய வழிபாட்டுதனத்தைப் ப+சிப்பது தான்.

குறித்த அவரின் நூல் இதைத் தான் வலியுறுத்துகின்றது. அந்த வகையில்

1. குழந்தை – பெற்றோருக்கு இடையிலான புறச் சமூகச் சூழலையும், அதன் விளைவுகளையும் விமர்சிக்கவும், ஏன் அதைப் பார்க்கவும் கூட மறுக்கின்றது. அது உட்படுத்தும் பாதிப்பை, பெற்றோர் – குழந்தை உறவில் விவாதிக்க முடியாத ஒரு அன்னிய விடையமாக்கி, விடையத்தை சயநலமாக்கி விடுகின்றது. பரஸ்பரம் சுயநலத்தை அங்கீகரித்து இணங்கிப் போக மறுத்தலே, பெற்றோர் – குழந்தை முரண்பாடு என்று நூல் மூலம் திரிக்கப்படுகின்றது. உலகமயமாதலின் பண்பாட்டுத் தளமோ, சுயநலமாக இருத்தலும் அதற்ளுள் தீர்வு காணுதலும். இதுவோ கல்விசார் முறையில் புகுத்தப்படும், சிறுகச் சிறுக ஏகாதிபத்தியம் கொடுக்கும் நஞ்சு. சுயநலமென்ற உலகமயமாதல் தன்மையை எமது சுயநலப்போக்கில் ஆதரித்து வாழ்தல் எப்படி என்பதை, தனது பக்தகோடிகளுக்கு நூல் மூலம் கூற முனைகின்றார். உலகமயமாதல் சமூகத்தை புரிந்து கொள்வதன் ஊடாக, சமூகமாக சமூக நலனுடன் எதிர்வினையாற்றுவது பெற்றோரின் கடமையல்ல என்கின்றார்.

2.புறச் சூழலை அங்கீகரித்து, அதாவது உலகமயமாக்கலை ஏற்று நாம் எப்படி இணங்கி இசைந்து அதற்கு எதிர்ப்பின்றி வாழப் பழகுவது என்பது தான் பெற்றோரியம் என்கின்ற இக்கருத்தை முன்வைக்கின்றார். அவர் படிக்கும் நூல்கள், அவர் தொடர்பு கொண்டுள்ள ஏகாதிபத்திய கல்வி நிறுவனங்கள், இதை அவருக்கு ஊட்ட அதை அவர் எமக்கு சுயசிந்தனையின்றி ஊட்டுகின்றார்.

3. பெற்றோரியம் என்பது உலகமயமாக்கலை ஏற்றும், இணங்கியும் வாழ்வது தான். இதில் பிள்ளை பெற்றோருடனோ, பெற்றோர் பிள்ளையுடனோ முரண்படக் கூடாது. உலகமயமாதலில் தீர்வை ஏற்றுக்கொள்வதே, பெற்றோரியம். ஏன்! அதையே அறிவு என்கின்றது.

4. பெற்றோரியம் என்பது புறச் சூழல் (உலகமயமாதல்) சார்ந்ததல்ல என்கின்றது. அகச் சூழல் சார்ந்தது என்கின்றது. இது எமது சுயநலனுக்கு உட்பட்டது என்கின்றார்.

உலகமயமாதல் சமூகத்தில் முரண்பாடுகளே இல்லை என்ற எல்லைக்குள், பெற்றோரியம் காயடிக்கப்படுகின்றது. இந்த காயடிப்பை ஏற்றுக்கொள்ளும், தமிழ் அதிகார வர்க்க சூழல். தமிழ் இனத்தையே அழிவுக்கு வழிகாட்டியவர்கள், அழித்துக் கொண்டு இருப்பவர்கள், இதை ஆதரிப்பதும், ஏற்றுக்கொள்வதும், இதைப் போற்றுவதும் ஏன்? அவர்கள் சமூக சிந்தனையிலான, தமிழ் இனத்தின் சுயத்தை மறுப்பவர்கள். உலகமயமாதல் பெற்றோரியம் கூட, சுயசிந்தனையிலான சமூக கண்ணோட்டத்தை மறுக்கின்றது. இதனால் உலகமயமாதல் பெற்றோரியத்தை, அவர்களும் ஏற்றுக்கொள்கின்றனர். இப்படி இயங்கும் ஒருபுள்ளியில் அவர்கள் ஒருங்கிணைய, சுயநலத்தை அடிப்படையாக கொண்ட சிந்தனைமுறை பழைய மாணவர் சங்கத்திலும் மெருகூட்டப்படுகின்றது.

No comments: