தமிழ் அரங்கம்

Monday, December 11, 2006

கருப்பு அங்கிகளுக்குள் ஒளிந்துள்ள காவிப்படை

நாடாளுமன்றத் தாக்குதல்
கருப்பு அங்கிகளுக்குள் ஒளிந்துள்ள காவிப்படை


நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நால்வரில், கீலானி, அஃப்ஸான் குரு ஆகிய இருவரின் விடுதலையை உறுதி செய்தும்; ஷெளகத் ஹூசைன் குருவிற்கு அளிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை 10 ஆண்டு கால கடுங்காவல் தண்டனையாகக் குறைத்தும்; முகம்மது அப்சலுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை உறுதி செய்தும் உச்சநீதி மன்றம் கடந்த ஆண்டு ஆகஸ்டில் தீர்ப்பளித்திருந்தது. இத்தீர்ப்பின் அடிப்படையில் கடந்த அக்டோபர் 20 அன்று அப்சலைத் தூக்கில் போட நாள் குறிக்கப்பட்டது. எனினும், அப்சலின் உறவினர்கள் அரசுத் தலைவர் கலாமிடம் கொடுத்த கருணை மனுவின் அடிப்படையில், இத்தூக்கு தண்டனை மறு தேதி குறிக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


ஐந்தாண்டுகளுக்கு முன்பு, டிச.13, 2001 அன்று நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடந்த இரண்டாவது நாளிலேயே டிச. 15, 2001 அன்றே எஸ்.ஏ.ஆர். கீலானி, முகம்மது அப்சல், ஷெளகத் ஹூசைன் குரு, ஷெளகத்தின் மனைவி அஃப்ஸான் குரு ஆகிய நால்வரும் தில்லி சிறப்புப் போலீசுப் படையால் கைது செய்யப்பட்டனர். போலீசின் குற்றச்சாட்டின்படியே இந்த நால்வரும் இச்சதித் திட்டத்தைத் தீட்டிய மூளைகள் கிடையாது. தாக்குதலை நிறைவேற்ற உதவியவர்கள் தாம்.


தாக்குதலில் நேரடியாக ஈடுபட்ட ஐந்து பேரும் சம்பவம் நடந்த இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டு விட்டனர். தாக்குதலுக்குத் திட்டம் போட்டுக் கொடுத்து இயக்கிய மூவரில், காசி பாபா காசுமீரில் போலீசுடன் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டதாகவும்; மௌலானா மசூத் அஸார், தாரிக் அகமது ஆகிய இருவரும் பாகிஸ்தானில் இருப்பதாகவும் போலீசார் கூறி வருகின்றனர்.


""நாட்டின் மீது தொடுக்கப்பட்ட போர்'' எனக் கூறப்படும் இந்தத் தாக்குதல் பற்றிய புலன் விசாரணையை தில்லி சிறப்புப் போலீசார் 17 நாட்களிலேயே முடித்துவிட்டனர் இதற்குக் காரணம், தில்லி போலீசின் துப்பறியும் திறமை அல்ல. தாக்குதலில் ஈடுபட்ட ஐந்து பேரும், போலீசாரால் "கண்டுபிடிக்கப்பட்ட' சாட்சியங்கள் அனைத்தையும், தங்களின் சட்டைப் பைகளில் வைத்துக் கொண்டுதான் தாக்குதலே நடத்தியிருக்கிறார்கள்!


நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கு அவர்கள் வந்த காரின் கண்ணாடியின் மீது, ""முட்டாள் வாஜ்பாயியையும், அத்வானியையும் நாங்கள் கொல்வோம்'' என ஒட்டப்பட்டிருந்த ""ஸ்டிக்கர்''; தாக்குதலுக்கு முன்பாக, தீவிரவாதிகள் தொடர்பு கொண்ட தொலைபேசி எண்; தீவிரவாதிகள் யார் என்ற விவரங்கள் அடங்கிய அடையாள அட்டை இப்படி இந்த வழக்கின் முக்கிய சாட்சியங்கள் அனைத்தும் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்தே கைப்பற்றப்பட்டுள்ளன. நகைச்சுவை படத்தில் கூட இப்படிப்பட்ட அப்பாவி சதிகாரர்களை நாம் பார்த்திருக்க முடியாது.


···


வழக்கின் முக்கிய கட்டமான சிறப்பு நீதிமன்ற விசாரணையின்பொழுது, அப்சலுக்கு உதவி செய்ய அனுபவம் அற்ற ஒரு இளம் வழக்கறிஞர் சட்ட உதவுனராக (ச்ட்டிஞிதண் ஞிதணூடிச்ஞு) நியமிக்கப்பட்டார். இந்த வழக்கறிஞர், அப்சலுக்கு எதிராகக் கொண்டு வந்து நிறுத்தப்பட்ட போலீசு சாட்சியங்களைக் குறுக்கு விசாரணை செய்யாமல், அரசு தரப்புக்குச் சார்பாக நடந்து கொண்டார். ""சட்ட உதவுனரை எதிர்தரப்பு வழக்குரைஞராகப் பார்க்க முடியாது; அவர், நீதிமன்றத்தின் நண்பனாகத்தான் நடந்து கொள்வார்'' என்கிறார், பிரபல கிரிமினல் வழக்கறிஞரான ராம் ஜேத்மலானி.


""சிறப்பு நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட இளம் வழக்குரைஞர் இந்துமத உணர்வுள்ளவர்; அவர் ஒருமுறைகூடச் சிறைக்குச் சென்று எனது கணவரைச் சந்திக்கவில்லை. சிறப்பு நீதிமன்ற நீதிபதி திங்க்ராவும் கூட நீதிமன்றத்திலேயே வெளிப்படையாக தனது மத உணர்வை வெளிப்படுத்தினார்'' என அப்சலின் மனைவி தபஸ்ஸூம் விசாரணையின் நேர்மையை அம்பலப்படுத்தியிருக்கிறார்.


அப்சல் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருந்த பொழுதே, தனது சட்ட உதவுனரை மாற்ற வேண்டும் எனக் கோரியதோடு, எட்டு வழக்குரைஞர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்களுள் யாரையாவது ஒருவரைத் தனக்கு நியமிக்கும்படிக் கேட்டுக் கொண்டார். இந்து மதவெறியர்களால் தாக்கப்படுவோமோ என அஞ்சிய அந்த வழக்குரைஞர்களுள் (அப்சலுடன் குற்றஞ்சாட்டப்பட்ட கீலானிக்கு வாதாடப் போவதாக ராம் ஜெத்மலானி அறிவித்ததையடுத்து, அவரது அலுவலகம் இந்து மதவெறியர்களால் தாக்கப்பட்டது) ஒருவர் கூட அப்சலுக்காக வாதாட முன் வரவில்லை. நீதிபதி திங்க்ரா, ""இதற்கு மேல் நான் எதுவும் செய்ய முடியாது'' எனக் கூறி, அப்சலை நிர்க்கதியாகத் தவிக்க விட்டார்.


இது மட்டுமன்று; ""நீதி விசாரணையின் போது சிறப்பு நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட கூற்றுகளை எனக்குக் காட்டாமலும்; பல்வேறு சாட்சிகள் மற்றும் எனக்கெதிராக அவர்களின் சாட்சியங்கள் குறித்த எனது மறுப்புகளையும், பதில்களையும் பதிவு செய்யாமலும், சிறப்பு நீதிமன்றம் தனது குரலை மவுனமாக்கி விட்டதாக'' அப்சல், ""விசாரணைக் கைதிகள் மற்றும் சிறைக் கைதிகளின் பாதுகாப்பிற்கான கழகத்திற்கு'' எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உரிமையை அப்சலிடமிருந்து பறித்ததன் மூலம், சிறப்பு நீதிமன்றம் அவரது கழுத்தில் சுருக்கை மாட்டியது.


···


தில்லி உயர்நீதி மன்றத்திலோ இந்த வழக்கு, விநோத முரண்பாடாக நடந்து முடிந்தது. குற்றவாளிகள் நான்கு பேரும் தில்லி சிறப்பு போலீசிடம் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தை, உயர்நீதி மன்றம் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது. குற்றவாளிகளிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலம் பெறுவதில் சட்டபூர்வ வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பதை உயர்நீதி மன்றம் ஏற்றுக் கொண்டது. அதாவது, கொடூரமான சித்திரவதைகள், மிரட்டல்கள், உறவினர்களைப் பிணையக் கைதிகளாகப் பிடித்து வைத்து கொண்டு அச்சுறுத்துவது போன்ற சட்டவிரோதமான வழிமுறைகள் மூலம்தான் ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டது என்பது வழக்கு விசாரணையில் மீண்டும் அம்பலமானது. இதன் அடிப்படையில்தான், சிறப்பு நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட கீலானியும், ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அஃப்ஸான் குருவும் விடுதலை செய்யப்பட்டனர். எனினும், இந்த இருவரின் விடுதலைக்குப் பொருந்திய இந்த நியாயத்தை, முகம்மது அப்சலுக்கும், ஷெளகத் குருவிற்கும் பொருத்த உயர்நீதி மன்றம் மறுத்துவிட்டது.


···


உச்சநீதி மன்றமோ, தீர்ப்பை முன்கூட்டியே எழுதி வைத்துவிட்டு விசாரணை நாடகத்தை நடத்தியிருக்கிறது. ""அப்சல், ஏற்கெனவே சரணடைந்துவிட்ட தீவிரவாதி, அவருக்கும், தீவிரவாத அமைப்புகளுக்கும் தற்பொழுது எந்தவிதமான தொடர்பும் கிøடயாது'' என்பதை உச்சநீதி மன்றம் ஏற்றுக் கொண்டாலும், ""அப்சல் இந்த நாட்டிற்கு எதிரான சதிச் செயல்களை மீண்டும் மீண்டும் நடத்துவதற்குத் துணிந்தவர்'' என்று தானே இட்டுக் கட்டிய பழியை அவர் மீது சுமத்தியிருக்கிறது. ""பொடா சட்டத்தின் கீழ் அப்சல் மீது வழக்குத் தொடர ஆதாரம் இல்லை'' எனக் கூறியுள்ள உச்சநீதி மன்றம், அச்சட்டத்தின் கீழ் அப்சலிடமிருந்து பெற்ற ஒப்புதல் வாக்கு மூலங்களையும்; சந்தர்ப்ப சாட்சியங்களையும் ஆதாரமாகக் காட்டி, அவரின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது.

அப்சல் கைது செய்யப்பட்ட விதம் குறித்து தில்லி சிறப்பு போலீசாரும், காசுமீர் போலீசாரும் அளித்துள்ள சாட்சியங்களில் உள்ள முரண்பாட்டை தில்லி உயர்நீதி மன்றமும், உச்சநீதி மன்றம் தீர விசாரித்திருந்தால், இந்த வழக்கில் அப்சல் பலிகடா ஆக்கப்பட்டிருக்கும் உண்மை அம்பலத்துக்கு வந்திருக்கும்.


தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் உள்ளிட்ட பொருட்களைத் தங்களிடம் அப்சல் வாங்கியதாக தில்லியைச் சேர்ந்த சில கடைக்காரர்கள் அப்சலுக்கு எதிராகச் சாட்சியம் அளித்துள்ளனர். இவர்களிடம் இருந்து சாட்சியம் பெறுவதில் போலீசு, அடையாள அணி வகுப்பு நடத்துவது போன்ற சட்டபூர்வமான வழிகளைப் பின்பற்றவில்லை என உச்சநீதி மன்றத்தில் எடுத்துக் கூறப்பட்டது. ஆனால், உச்சநீதி மன்றமோ, ""சாதாரண பொதுமக்கள் அப்சலை ஏன் குற்றவாளியாக்க வேண்டும்?'' என்ற கேள்வியை இட்டுக் கட்டி கேட்டு, போலீசின் சட்ட விரோத சாட்சியங்களைச் சட்டபூர்வமாக்கி விட்டது.


அப்சல், தில்லி உயர்நீதி மன்றத்திடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், ""போலீசின் நிர்பந்தித்தினால்தான், நான் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளை, போலீசு சொல்லியபடி அடையாளம் காட்டியதாக''க் கூறியிருக்கிறார். அதேசமயம், உயர்நீதி மன்றத்தில் அப்சலுக்காக வாதாட நியமிக்கப்பட்ட காலின் கோன்ஸால்வ்ஸ் என்ற வழக்குரைஞர்தான், தீவிரவாதிகளை அடையாளம் காட்டி போலீசிடம் அப்சல் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தை ஏற்றுக் கொள்வதாகக் கூறி, அரசு தரப்பின் வேலையை எளிதாக்கினார்.

காலின் கோன்ஸால்வ்ஸ் என்ற அந்த வழக்குரைஞர் இதை மட்டுமா சொன்னார். ""தூக்கில் போடப்பட்டுச் சாவதைவிட, விஷ ஊசி போட்டு அப்சல் சாக விரும்புவதாக'' நீதிமன்றத்தில் தெரிவித்தார். தனது வக்கீலே தனக்குக் குழி பறித்ததை அப்சல் அப்பொழுது அறியவில்லை. ஏனென்றால், அப்சலுக்குத் தண்டனை எப்படித் தரவேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குரைஞர் குழி பறித்த பொழுது, அப்சலோ, திகார் சிறையில் தனிமைக் கொட்டடியில் அடைபட்டுக் கிடந்தார்.


ஷெளகத், அப்சல், கீலானி, முகம்மது ஆகியோருக்கு இடையே, தாக்குதலுக்குச் சற்று முன்புவரை செல்போன் தொடர்பு இருந்தது என்பதற்கு போலீசு தரப்பில் முன் வைக்கப்படும் சாட்சியம், சான்றளிக்கப்படாத சில ""பில்'' பதிவுகள்தான். ஒரே நேரத்தில் ஒரே "சிம் கார்டில்' இருந்து இரு அழைப்புகள் செய்யப்பட்டுள்ளது என இப்பதிவு தெரிவிக்கிறது. இரு வெவ்வேறு எண்ணுள்ள செல்போன்களில் இருந்து இவை பேசப்பட்டுள்ளன. ஒரே சிம் கார்ட் இரண்டு வெவ்வேறு செல்போன்களிலிருந்து ஒரே நேரத்தில் எப்படி இயங்க முடியும் என்ற கேள்வியை மெத்தபடித்த நீதிபதிகள் காதில் போட்டுக் கொள்ளவேயில்லை.


அப்சலுக்கு எதிரான சந்தர்ப்ப சாட்சியங்களில் உள்ள இவை போன்ற முரண்பாடுகளை, சட்டவிரோத நடைமுறைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டுத்தான், உச்சநீதி மன்றம் தூக்கு தண்டனையை உறுதிப்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டு தன் முன் நிறுத்தப்பட்டுள்ள நான்கு குற்றவாளிகளுள் ஒருவரையாவது கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்பது நீதிபதிகளின் நோக்கமாகவே இருந்திருக்கிறது. இந்தப் பழிவாங்கும் வெறியை அவர்கள் மறைத்துக் கொள்ளவும் இல்லை. ""குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்குவதன் மூலம் மட்டுமே சமூகத்தின் பொது மன சாட்சியைத் திருப்திபடுத்த முடியும்'' எனப் பச்சையாகவே நீதிபதிகள் கூறியுள்ளனர்.


உச்சநீதி மன்றம் குறிப்பிட்டுள்ள சமூகத்தின் பொது மனசாட்சி என்பவர்கள் யார்? அப்சலைத் தூக்கில் ஏற்றிவிடத் துடிக்கும் வாஜ்பாயி அத்வானி போன்ற இந்து மதவெறியர்கள்; அக்கும்பலைத் தூக்கிப் பிடிக்கும் இந்தியாடுடே, துக்ளக் போன்ற பத்திரிக்கைகள்; முசுலீம் எதிர்ப்பு இந்த மதவெறியாலும், பாக். எதிர்ப்பு இந்திய தேசிய வெறியாலும் மூளைச் சலவை செய்யப்பட்டுள்ள மேல்தட்டு மேல்சாதி நடுத்தர வர்க்கம் இவர்கள்தான் அந்தப் பொது மனசாட்சி. இந்தக் காவி மனச்சாட்சியின் உருவகம்தான் உச்சநீதி மன்றம் என்பதை இத்தீர்ப்பு பச்சையாக எடுத்துக் காட்டிவிட்டது.


···


நாடாளுமன்றத் தாக்குதல் பற்றி தில்லி போலீசு கட்டமைத்த கதைதான் ஊடகங்கள் மூலம் மக்களிடம் கொண்டு செல்லப்பட்டது. அத்தாக்குதலுக்கு மர்மங்கள் நிறைந்த இன்னொரு பக்கம் உண்டு. அப்சல், உச்சநீதி மன்றத்தில் தனக்காக வாதாடிய வழக்குரைஞர் சுசில்குமாருக்கு எழுதிய கடிதத்தில், மர்மங்கள் நிறைந்த அந்தப் பக்கத்தை எடுத்துக் காட்டியிருக்கிறார்.


""சரணடைந்த போராளியான தன்னை மிரட்டிப் பணம் பறிக்கவும்; போலீசின் ஆள்காட்டியாகச் செயல்படக் கூறியும் காசுமீரின் சிறப்பு அதிரடிப் படை தொடர்ந்து தன்னைச் சித்திரவதை செய்து வந்ததையும்; காசுமீரின் சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த துணைக் கண்காணிப்பாளர் திராவிந்தர் சிங்கின் கட்டளைப்படி தான், நாடாளுமன்றத் தாக்குதலின்போது சுட்டுக் கொல்லப்பட்ட முகம்மதுவை தான் தில்லிக்கு அழைத்து வந்ததையும்; திராவிந்தர் சிங் செல்போன் மூலம் தனக்குக் கொடுத்த கட்டளைப்படிதான், கார் உள்ளிட்டு பல பொருட்களை முகம்மதுவுக்குத்தான் வாங்கிக் கொடுத்ததையும்; தனது தம்பி ஹலால் அஹமத் குருவைப் பிணையக் கைதியாக வைத்துக் கொண்டு, தில்லி சிறப்பு போலீசு சொல்வதை ஒத்துக் கொள்ள வேண்டும் எனத் தான் தில்லியில் சித்திரவதை செய்யப்பட்டதையும்; தனது மனைவி தபஸ்ஸும்; தனது தம்பி ஆகியோரின் பாதுகாப்புக்காக, தில்லி சிறப்புப் போலீசைச் சேர்ந்த துணை கமிசனர் ராஜ்பீர் சிங் சொன்னபடி தான் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததையும்,'' அப்சல் அந்தக் கடிதத்தில் விரிவாக எழுதியிருக்கிறார்.


முகம்மதுவுடன் தனக்கு ஏற்பட்ட தொடர்பை சாட்சியமாக ஏற்றுக் கொண்டுள்ள நீதிமன்றம், முகம்மதுவைத் தனக்கு அறிமுகப்படுத்தி வைத்து உதவச் சொன்ன சிறப்பு அதிரடிப் படை அதிகாரிகளை விசாரிக்க மறுப்பது ஏன்? முகம்மதுவுடன் தான் செல்போனில் பேசிய பேச்சுக்களைச் சாட்சியமாக ஏற்றுக் கொண்டுள்ள நீதிமன்றம், அதே செல்போன் மூலம் காசுமீர் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் தன்னைத் தொடர்பு கொண்டு விசாரித்து வந்ததைக் காது கொடுத்து கேட்க மறுப்பது ஏன்? இப்படி அடுத்தடுத்து அப்சல் எழுப்பும் பல கேள்விகள் இன்று திகார் சிறையில் புதையுண்டு கிடக்கின்றன.


···

""அப்சல் என்ற தனிமனிதனின் கதை அல்ல இது; காசுமீரிலுள்ள பல இளம் தம்பதியினரின் கதை இது.... காசுமீரில் நிலவும் சூழலைப் புரிந்து கொள்ள வேண்டும். தாம் ஈடுபடாவிட்டால்கூட, காசுமீரில் உள்ள ஒவ்வொரு ஆணும், பெண்ணும், குழந்தையும் கூட இயக்கங்கள் குறித்த ஏதேனும் தகவலை அறிந்திருப்பார்கள். மக்களை உளவு சொல்பவர்களாக மாற்றுவதன் மூலம், சகோதரரைச் சகோதரருக்கு எதிராகவும்; மனைவியைக் கணவனுக்கு எதிராகவும்; குழந்தைகளைப் பெற்றோர்களுக்கு எதிராகவும் பாதுகாப்புப் படையினர் மாற்றுகின்றனர். அவர்கள் மக்களை நிம்மதியாக, சுதந்திரமாக வாழ அனுமதிக்க மாட்டார்கள்'' என்கிறார், அப்சலின் மனைவி தபஸ்ஸும்.


இந்த பரிதாபகரமான கதைகளைத் தோண்டித் துருவினால், இந்திய ஆளும் கும்பல் அதிகார வர்க்கம் அனைத்தையும், ஏன் தாங்களே கூட குற்றவாளிக் கூண்டில் ஏற வேண்டியிருக்கும் என்பது உச்சநீதி மன்ற நீதிபதிகளுக்குத் தெரியும்; சதாம் ஹுசைனைத் தூக்கில் போடக் கூடாது என ஆர்ப்பாட்டங்கள் நடத்தும் போலி கம்யூனிஸ்டுகள், அப்சல் பிரச்சினையில் வாயை மூடிக் கொள்கிறார்களே, அந்த மௌனத்திற்கும் இந்தக் கதை தெரியும்.


நாஜிகளின் ஆட்சியின் பொழுது, ஜெர்மன் நாடாளுமன்றத்திற்கு அவர்களே தீ வைத்துவிட்டு, பழியை கம்யூனிஸ்டுகள் மீது போட்டார்கள். இந்திய நாடாளுமன்றத் தாக்குதல் பற்றி பாரபட்சமற்ற, நேர்மையான விசாரணை நடக்குமானால், இந்திய பாசிச சக்திகளின் சதிகளும் அம்பலத்துக்கு வரலாம்!


இந்தத் தாக்குதல் நடந்து முடிந்த இரண்டொரு நாட்களிலேயே அப்பொழுது ஆட்சியில் இருந்த பா.ஜ.க. கூட்டணி ஆட்சி பொடா சட்டத்தை நிறைவேற்றியது; அதோடுகூட, பாக். மீது படையெடுக்க எல்லைப்புறத்தில் இராணும் குவிக்கப்பட்டு, 10,000 கோடி ரூபாய் புஸ்வாணமாக்கப்பட்டது. இவை இரண்டையும் நிறைவேற்ற நாடாளுமன்றத் தாக்குதல் காரணமாக அமைந்ததா, இல்லை, இவை இரண்டையும் நிறைவேற்றுவதற்காகவே இத்தாக்குதல் நடத்தப்பட்டதா என்ற உண்மைகூட வெளிச்சத்துக்கு வரலாம்!

· குப்பன்

Sunday, December 10, 2006

சாதிவெறியர்களின் வக்கிரம்-கொடூரம்

கயர்வாஞ்சி தாழ்த்தப்பட்டோர் படுகொலை :
சாதிவெறியர்களின் வக்கிரம்-கொடூரம்!

மது சொந்த நிலத்தைப் பறிக்க முயன்ற ஆதிக்க சாதிவெறியர்களின் அக்கிரமத்தை எதிர்த்துப் போராடிய தாழ்த்தப்பட்ட குடும்பம் ஒன்றுக்கு நேர்ந்த கோர முடிவு இது.


அம்பேத்கர் பிறந்த மகர் சாதியைச் சேர்ந்த பைய்யாலால் போட்மாங்கே சுரேகா தம்பதியினர், கடந்த 1617 ஆண்டுகளாக மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் நகருக்கு அருகில் உள்ள கயர்லாஞ்சி கிராமத்தில் வசித்து வந்தனர். அக்கிராமத்தில் போட்மாங்கே குடும்பத்துக்குச் சொந்தமாக ஐந்து ஏக்கர் நிலம் இருந்தது. இவர்களுக்கு 19 வயதான கல்லூரியில் படித்து வந்த ரோஷன்; 21 வயதான ஓரளவே பார்வைத்திறன் கொண்ட சுதிர் என்ற இரு மகன்களும்; மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்துவிட்ட 17 வயதான பிரியங்கா என்ற மகளும் இருந்தனர். தமது சொந்த நிலத்தில் இருந்தும்; வெளி வேலைகளுக்குச் செல்வதன் மூலமும் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு இந்தக் குடும்பம், ஆதிக்கச் சாதியினரை அண்டியிராமல், ஓரளவு பொருளாதார சுதந்திரத்தோடு, சுயமரியாதைமிக்க வாழ்க்கையை நடத்தி வந்தனர். போட்மாங்கே குடும்பம் இந்து மதத்தின் சாதி ஆதிக்கத்தில் இருந்து விடுபட, அம்பேத்கர் வழியில் புத்த மதத்தைத் தழுவிய பொழுதிலும் ஆதிக்க சாதிவெறியர்கள் இவர்களைச் சாதி ரீதியில் ஒடுக்கி வைக்கவே முனைந்தனர்.


கயர்லாஞ்சி கிராமத்தில் வசித்து வரும் 125 குடும்பங்களில், மூன்றே மூன்று குடும்பங்கள்தான் தாழ்த்தப்பட்ட சாதியினர். பிற குடும்பங்கள் அனைத்தும் குன்பி, தெலி ஆகிய ஆதிக்க சாதியினைச் சேர்ந்தவை. அந்தக் கிராமத்திலேயே, பைய்யாலாலின் மகன் ரோஷனும், மகள் பிரியங்காவும்தான் அதிகம் படித்தவர்கள். பிரியங்கா பள்ளி இறுதியாண்டுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பைய்யாலாலின் மனைவி சுரேகா கடுமையான உழைப்பாளி மட்டுமல்ல, தினந்தோறும் ஆதிக்க சாதியினர் கொடுத்து வந்த தொல்லைகளை எதிர்த்து நிற்கும் மனோதிடமும் உடையவர். பைய்யாலால் குடும்பம் கல்வியறிவோடும், சுயமரியாதையோடும் சொந்தக் காலில் நின்று வாழ்ந்து வருவது ஆதிக்க சாதிவெறியர்களின் கண்களை உறுத்திக் கொண்டே இருந்தது.

பைய்யாலால் குடும்பத்துக்குச் சொந்தமான நிலத்தை அபகரிக்கத் திட்டம் போட்ட ஆதிக்க சாதியினர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கிராமத்துக்குச் சாலை போட வேண்டும் எனக் கூறி எவ்வித நட்டஈடும் இன்றி பைய்யாலால் நிலத்தில் இருந்து கணிசமான பகுதியை எடுத்துக் கொண்டனர். இப்படியாக கிராம பொதுக் காரியம் என்ற பெயரில், ஐந்து ஏக்கரில் ஏறத்தாழ இரண்டு ஏக்கர் நிலம் கொஞ்சம் கொஞ்சமாக பைய்யாலாலிடமிருந்து அபகரிக்கப்பட்டது. கயர்லாஞ்சி கிராம பஞ்சாயத்துத் தலைவனும், சாதிவெறி பிடித்தவனுமான உபாஸ்ராவ் காந்தேட்தான் இந்த அபகரிப்புக்கு மூளையாக இருந்து வந்தான். எனினும், இதற்கு மேலும் நிலத்தை இழந்துவிடக் கூடாது என்பதில் பைய்யாலால் குடும்பம் உறுதியாக நின்றுவிட்டது.


இது ஒருபுறமிருக்க, கயர்லாஞ்சி கிராமத்திற்கு அருகேயுள்ள துஸாலா கிராமத்தைச் சேர்ந்த சித்தார்த் கஜ்பியே, சுரேகாவுக்குச் சகோதரர் முறை கொண்ட நெருங்கிய உறவினர். மகாராஷ்டிரா போலீசுத் துறையில் ""பட்டீல்'' எனும் கௌரவ வேலை பார்த்து வரும் சித்தார்த், சுற்று வட்டார கிராமத்தில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். சித்தார்த் கொடுக்கும் தைரியத்தில்தான் பைய்யலால் குடும்பம் தங்களுக்குப் பயப்படுவதில்லை எனக் கருவிக் கொண்டிருந்த ஆதிக்க சாதி வெறியர்கள், அக்காள் தம்பி உறவு முறை கொண்ட சித்தார்த் சுரேகா இடையே கள்ள உறவு இருப்பதாகக் கதை கட்டி விட்டனர்.

இந்நிலையில், சித்தார்த் கஜ்பியே, செப்.3 அன்று கயர்லாஞ்சியைச் சேர்ந்த ஆதிக்க சாதிவெறியர்களால் தாக்கப்பட்டார். இத்தாக்குதல் பற்றி போலீசில் அவர் புகார் கொடுத்தார். அவரைத் தாக்கியவர்களை சுரேகாவும், பிரியங்காவும் அடையாளம் காட்டினர். எனினும், குற்றவாளிகள் தாக்குதல் நடந்து 26 நாட்கள் கழித்துதான் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்கள் மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடராமல், சாதாரண அடிதடி வழக்கே போடப்பட்டதால், குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்ட அன்று மாலையே (செப். 29) பிணையில் விடப்பட்டனர்.


அன்றே, ஆதிக்கசாதி வெறியர்கள் ஒன்றுகூடி, சித்தார்த், அவரது சகோதரர் ராஜேந்திரா, போட்மாங்கே குடும்பத்தினரைப் பழி வாங்கத் திட்டம் போட்டுக் கொண்டனர். அச்சதியின்படி, அன்று மாலை பைய்யாலால் வீட்டிற்கு வந்த சாதிவெறி கும்பல், "ஒட்டு மொத்த குடும்பத்தையே ஒழித்து விடுவோம்' என எச்சரித்துவிட்டு, சித்தார்த்தையும், அவர் தம்பி ராஜேந்திராவையும் தேடிச் சென்றது. அவர்களைக் கண்டறிய முடியாததால் மேலும் ஆத்திரமாகி மறுபடியும் பைய்யாலாலின் குடிசைக்கு வந்த அந்தக் கும்பல், குடிசையின் கதவைப் பிய்த்து எறிந்தது. பைய்யாலால் அப்போது வீட்டில் இல்லை. இரவு உணவைச் சமைத்துக் கொண்டிருந்த சுரேகாவையும், மகள் பிரியங்காவையும் இரு மகன்களையும் பலவந்தமாக வீட்டிற்கு வெளியே இழுத்துப் போட்டனர். அவர்களின் வீட்டு வாசலிலேயே, சுரேகாவும், பிரியங்காவும் நிர்வாணமாக்கப்பட்டு, கிராமத் திடலுக்கு ஊர்வலமாக, அடித்து இழுத்துச் செல்லப்பட்டனர்.


பைய்யாலால் குடும்பம் தண்டிக்கப்படுவதை வேடிக்கை பார்க்க ஊரில் இருந்த ஆதிக்க சாதியைச் சேர்ந்த அனைவரும் கிராமத் திடலில் கூடி நின்றனர். சைக்கிள் செயின், கோடாரி, மாடு ஓட்டப் பயன்படுத்தப்படும் தார்குச்சி எனக் கையில் கிடைத்தவற்றை எல்லாம் கொண்டு கண்மண் தெரியாமல் தாயும், மகளும் தாக்கப்பட்டனர். அவ்விரு பெண்களையும், ஆதிக்கசாதி பெண்கள் சிறுவர்கள் முன்பாக ஆதிக்கசாதி ஆண்கள் அனைவருமே வன்புணர்ச்சி செய்து கொன்றனர். இருவரும் பிணமான பின்னரும் வன்புணர்ச்சியில் ஈடுபட்டன அம்மிருகங்கள். பிணங்களின் பிறப்புறுப்புக்களில் மூங்கில் குச்சிகளைச் செருகினர். சுதா எனும் ஒரே பெண்ணைத்தவிர எந்தப் பெண்ணும் இதை எதிர்க்க முன்வரவில்லை. எதிர்த்த அந்தப் பெண்ணும் மிரட்டப்பட்டதால், சம்பவத்தின்போதுதான் அந்த இடத்திலேயே இல்லை என்று சாதித்தார்.


கண் எதிரேயே தன் தாயையும், தங்கையையும் ஆதிக்க சாதிவெறியர்கள் சீரழித்துக் கொண்டிருந்தபோது, சுதிர் தனது செல்போனில் போலீசை அழைக்க முயன்றார். உடனே செல்போனைப் பிடுங்கி நொறுக்கிய கும்பல், சுதிரையும் ரோஷனையும் கொடூரமாகத் தாக்கி, அவர்களின் முகங்களை உருத்தெரியாமல் சிதைத்தனர். அவர்களின் பிறப்புறுப்புக்களை அறுத்தெறிந்தனர். பின்னர் அவர்களை வானத்துக்கும், பூமிக்குமாகத் தூக்கிப் போட்டுப் பந்தாடியே கொன்றனர்.


அந்த நால்வரின் மூச்சு அடங்கிய பிறகு, அவர்களின் உடல்களில் இனி தாக்கிக் காயப்படுத்துவதற்கு இடமேஇல்லை என்ற பிறகு, சாதிவெறிக் கும்பலின் காமவெறியும், பழி தீர்த்துக் கொள்ளும் இரத்த வெறியும் அடங்கிய பிறகு, நால்வரின் பிணங்களும் மாட்டு வண்டியில் எடுத்துச் செல்லப்பட்டு அக்கிராமத்திற்கு அப்பாலுள்ள கால்வாயில் வீசியெறியப்பட்டன. ""பைய்யாலாலா, அப்படியொருவர் இக்கிராமத்தில் வசிப்பது எங்களுக்கே தெரியாதே'' என மேல்சாதி பெண்கள் சாதிக்கும் அளவிற்கு, தாக்குதலுக்குப் பிறகு கயர்லாஞ்சியில் சாதிக் கட்டுப்பாடு நிலவுகிறது.


இச்சம்பவம் போலீசுக்குத் தெரியாமல் நடந்துவிட்டதாகக் கூற முடியாது. செப். 29 மாலை தனது வயல் வேலைகளை முடித்துவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்த பைய்யாலால், கிராமச் சதுக்கத்தில் தனது குடும்பமே மேல்சாதி வெறியர்களால் தாக்கப்படுவதைப் பார்த்தவுடன், அந்தக் கொலைகாரர்களின் பார்வையில் பட்டுவிடாமல், அருகில் உள்ள துஸாலா கிராமத்திற்குத் தப்பியோடி, தனது உறவினர் சித்தார்த் வீட்டில் இருந்து போலீசுக்குத் தகவல் கொடுத்திருக்கிறார். இதற்கு முன்பாகவே, பைய்யாலாலின் மனைவி சுரேகா, ஆதிக்க சாதி வெறியர்களால் மிரட்டப்பட்டவுடனேயே வார்தி கிராமத்திலுள்ள தனது உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்ததோடு, சித்தார்த்தின் சகோதரர் ராஜேந்திராவுக்கும் ஆபத்தை உணர்த்தித் தகவல் கொடுத்துள்ளார். பைய்யாலால் போலீசுக்குத் தகவல் கொடுக்கும் முன்பாகவே, ராஜேந்திரா போலீசுக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்.


அநாதரவான நிலையில் இருக்கும் இத்தாழ்த்தப்பட்டோரின் குரல்களை உள்ளூர் போலீசார் வேண்டுமென்றே அலட்சியப்படுத்தினர். சம்பவம் நடந்து முடிந்து ஏறத்தாழ ஒரு மணி நேரம் கழித்து பாபன் மேஷ்ராம் என்ற ஒரேயொரு போலீசுக்காரர், சம்பிரதாயத்துக்காக கயர்லாஞ்சி கிராமத்தை எட்டிப் பார்த்துவிட்டு உடனே திரும்பி விட்டார். பைய்யாலாலும், ராஜேந்திராவும் போலீசுக்குத் தகவல் கொடுத்தது பற்றியும் போலீசின் கோப்புகளில் எந்தப் பதிவும் செய்யாமல் மறைத்து விட்டனர்.

மறுநாள் (செப்.30) கயர்லாஞ்சி கிராமத்தில் இருந்து 12 கி.மீ தொலைவு தள்ளி பிரியங்காவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதனை விபத்தாக போலீசார் பதிவு செய்தனர். இதனிடையே பைய்யாலால் மீண்டும் போலீசாரை அணுகி, தனது குடும்பத்தினரைக் காணவில்லை எனப் புகார் செய்தார். இதன்பிறகுதான், போலீசார் சடலங்களைத் தேடத் தொடங்கினர்.


இத்தாக்குதல் பற்றிய விவரங்கள் மெதுவாக வெளியுலகுக்குத் தெரிந்து, பல்வேறு ஜனநாயக அமைப்புகளும், தாழ்த்தப்பட்டோரும் போராடிய பிறகுதான், மகாராஷ்டிரா காங்கிரசு அரசு அசைந்து கொடுத்தது. இத்தாக்குதல் தொடர்பாக இதுவரை 44 பேர், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்டு பல்வேறு கிரிமினல் குற்றங்களின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தாலும், அவர்கள் மீது ""கற்பழிப்பு'' குற்றச்சாட்டோ, சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டோ சுமத்தப்படவில்லை.


சுரேகா, பிரியங்காவின் உடல்களைப் பிரேதப் பரிசோதனை செய்த அரசு மருத்துவர், ""அவர்கள் கற்பழிக்கப்படவில்லை'' என அறிக்கை கொடுத்திருப்பதோடு, போலீசார் அது பறறிய விவரங்களைத் தங்களிடம் கேட்க வில்லை என்றும் சொல்லியிருக்கிறார். எனினும், ""பாலியல் வன்புணர்ச்சி குற்றச்சாட்டு தொடர்பாக இரண்டாவது பிரேதப் பரிசோதனை அக்.4 அன்று நடந்தது. ஆனால், அதற்குள் அப்பெண்களின் உடல்கள் மிகவும் அழுகி விட்டதாலும்; முதல் பிரேதப் பரிசோதனையின் பொழுது அறுத்து எடுக்கப்பட்ட கர்ப்பப்பை மற்றும் பெண் குறி திரவங்கள் சட்டப்படி பாதுகாக்கப்படாமல் அழிக்கப்பட்டு விட்டதாலும், பாலியல் வன்புணர்ச்சி நடந்ததற்கான அறிவியல்பூர்வமான ஆதாரம் இல்லை'' என அதிகார வர்க்கம் கையை விரித்து விட்டது.


அப்பெண்கள் பாலியல் ரீதியாகத் தாக்கப்பட்டதற்கு அறிவியல் ஆதாரம் திட்டமிட்டே அழிக்கப்பட்டது என்றால், அத்தாக்குதலைக் கண்ணால் பார்த்த பைய்யாலாலின் சாட்சியமோ திட்டமிட்டே புறக்கணிக்கப்படுகிறது. இது மட்டுமின்றி, முக்கிய குற்றவாளிகளுள் ஒருவராக பைய்யாலாலால் அடையாளம் காட்டப்பட்டுள்ள, கயர்லாஞ்சி கிராமத் தலைவர் உபாஸ்ராவ் காந்தேடையும் போலீசார் கைது செய்ய மறுக்கின்றனர்.


வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி, தலித் மக்கள் மீது எவரேனும் கும்பலாய் வன்முறைத் தாக்குதல் நடத்தினால், ஒட்டு மொத்த கிராமத்துக்கே பத்து இலட்சம் ரூபாயிலிருந்து இருபது லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட வேண்டும். அரசு இச்சட்டப் பிரிவையும் அமல்படுத்த மறுக்கிறது.


ஒப்புக்காகக் குற்றவாளிகளுள் சிலரைக் கைது செய்வது; பைய்யாலால் போட்மாங்கேக்கு நட்டஈடும், அரசு வேலையும் கொடுத்து, அரசின் நடுநி லைத் தன்மையைக் காப்பாற்றிக் கொள்வது; இதன் மூலம் இப்பிரச்சினையை நீர்த்துப் போகச் செய்து விடுவது என்பதுதான் அரசின் திட்டம். ஆனால், பைய்யாலாலோ குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் நீதிதான் எனக்கு வேண்டுமே தவிர, அரசின் சன்மானங்கள் தனக்குத் தேவையில்லை எனக் கூறி, மகாராஷ்டிர அரசின் முகத்தில் கரியைப் பூசிவிட்டார்.


இச்சம்பவம் நடந்து முடிந்த ஒரு சில நாட்களிலேயே, அம்பேத்கர் புத்தமதத்துக்கு மாறியதை நினைவு கூறும் பொன்விழா நிகழ்ச்சி நாக்பூரில் நடைபெற்றது. இவ்விழாவுக்குத் திரண்டு வந்த தாழ்த்தப்பட்டோர், கயர்லாஞ்சி சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் இறங்கிவிடக் கூடாது என்பதற்காகவே, பாதுகாப்பு என்ற பெயரில் பெரும் போலீசு பட்டாளம், விழா நடந்த தீக்ஷா பூமியைச் சுற்றி வளைத்துக் கொண்டது.


அன்று அந்த விழா தீண்டாமைக்கு எதிரான பெரும் போராட்டமாக மாற்றப்படாதது தாழ்த்தப்பட்ட அமைப்புகளிடம் அரசியல் முன்முயற்சி இல்லாததைக் காட்டினாலும், அதைத் தொடர்ந்த நாட்களில் நாக்பூர், பந்தாரா, யவட்மால் பகுதிகளில் கயர்லாஞ்சி தாக்குதலைக் கண்டித்து ஊர்வலங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. இந்தப் போராட்டங்களில் சில, போலீசாருடனான மோதலாகவும் மாறின. இப்போராட்டங்களை நடத்துபவர்களை முன்னெச்சரிக்கையாகக் கைது செய்வது; இரண்டு மூன்று நாட்கள் சட்டவிரோதக் காவலில் வைப்பது; நாக்பூரில் இருந்து கயர்லாஞ்சிக்குச் செல்வதாகத் திட்டமிடப்பட்டிருந்த ஊர்வலத்திற்குக் கொடுத்த அனுமதியை மறுப்பது என இப்போராட்டங்களை ஒடுக்குவதில் அரசு மும்முரமாக உள்ளது.


குறிப்பாக, மகாராஷ்டிர மாநில அரசின் உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டில், இப்போராட்டங்களை நக்சல்பாரிகள் தூண்டிவிடுவதாகக் கூறி, தீண்டாமைக்கு எதிராகச் சட்டபூர்வ வழியில் போராடுவதைக் கூட பயங்கரவாதமாகக் காட்ட முயன்றார். எனினும், உள்ளூர் அளவில் செயல்படும் 20க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஒன்றாக இணைந்து இப்படுகொலைக்கு நீதி கேட்டு குரல் கொடுத்து வருகின்றன.


கயர்லாஞ்சி தாக்குதல் ஒன்றும் அரிதாக, அபூர்வமாக நடந்துவிட்ட சம்பவம் அல்ல. தாழ்த்தப்பட்டோர் மீது இப்டிப்பட்ட தாக்குதல்கள் நடக்கும் ஒவ்வொரு முறையும், அதற்கான பழியை அத்தாக்குதலில் ஈடுபட்ட சாதிவெறியர்கள் மீது, அவர்களை ஆதரிக்கும் ஓட்டுக் கட்சிகள் மீது, அதிகார வர்க்கத்தின் மீது போட்டுவிட்டு, பெரும்பான்மையான மக்கள் மாற்று மதத்தினரையும் சேர்த்துதான் அமைதியாகி விடுகின்றனர். சாதிவெறியைப் போன்றே, இந்த அமைதியும், கண்டு கொள்ளாமையும் அபாயகரமானதுதான்.


""இப்பவெல்லாம் யார் சார் சாதி பார்க்குறாங்க?'' எனத் தோளைக் குலுக்கிக் கொள்ளும் நகர்புறத்து படித்த நடுத்தர வர்க்கத்தினரில், எத்தனை பேரின் மனச்சாட்சியை இச்சம்பவம் உலுக்கியிருக்கும்? பிரியங்கா மட்டூ, ஜெஸிகாலால் போன்ற மேல்தட்டு பெண்களின் படுகொலைக்கு நீதி கேட்டு ஊர்வலம் போன கனவான்களில், எத்தனை பேர் சுரேகாவுக்காக, பிரியங்காவுக்காக நீதி கேட்டுப் போராட வந்திருக்கிறார்கள்? இத்தாக்குதலை நடத்திய சாதிவெறியர்கள் ஏன் பயங்கரவாதிகளாக முத்திரை குத்தப்படுவதில்லை? இப்படிப்பட்ட தாக்குதலில் ஈடுபடும் சாதிவெறியர்களை, அச்சாதியைச் சேர்ந்த ""அப்பாவி மக்கள்'' ஏன் ஒதுக்கி வைப்பதில்லை? இவை போன்ற கேள்விகளை உங்களிடமே கேட்டுப் பாருங்கள். அதற்கான பதிலில்தான் நீங்கள் சாதிய சமூகத்தை எதிர்ப்பவரா, இல்லை ஆதரிப்பவரா என்ற உண்மை உங்களுக்கே தெரியக்கூடும்!




·கவி

Saturday, December 9, 2006

நாகரிக பொறுக்கிகளால் விளையும் விபரீதங்கள்

தாராளமயம் பெற்றெடுத்த நாகரிக பொறுக்கிகளால் விளையும் விபரீதங்கள்

வர்கள் அனைவரும் சாலைப் பணியாளர்கள். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவிலிருந்து சொந்த மண்ணையும், வீடுவாசலையும் விட்டு பிழைப்புத் தேடி மராட்டியத்தின் மும்பைப் பெருநகருக்கு விரட்டப்பட்டவர்கள். மும்பை நகரின் செல்வச் சீமான்களின் சொகுசுக் கார்கள் வழுக்கிச் செல்லும் நெடுஞ்சாலைகள் அமைப்பதுதான் அவர்களின் வேலை. ஆனால், அந்தச் சாலையிலேயே, அத்தகை சொகுசுக் கார்களில் ஒன்றாலேயே தாம் நசுக்கிக் கொல்லப்படுவோம் என்று கொஞ்சமும் எண்ணிப் பார்த்திருக்க மாட்டார்கள்!


முன்னிரவில் கொதிக்கும் தாரோடு கலந்த கருங்கல் ""ஜல்லி''களோடு கைகால் வெந்து நெக்குறுகிப் போயிருந்தார்கள். அதன்பிறகு வாட்டி எடுக்கும் கடுங்குளிரில், வெட்டவெளியில் அதே சாலையோரத்தில் அடித்துப் போட்ட மனிதர்களாய் துவண்டு கிடந்தார்கள். அது மும்பை பெருநகரின் பாந்த்ரா பகுதி; கார்ட்டர் சாலை. அதிகாலை 3.45 மணி. பேய்கள்தாம் களிவெறியாட்டம் முடித்து உறங்கப் போகும் நேரம். திடீரென்று பாய்ந்து வந்த ""டொயோட்டோ கோரல்லா'' என்ற சொகுசுக்கார் அவர்கள் மீது ஏறி ஓடியது. ஐந்து வயதுச் சிறுவன், ஏழு வயதுச் சிறுமி, மூன்று பெண்கள், இரண்டு ஆண்களை நசுக்கிக் கொன்றது. மேலும் பதினான்கு பேரை சாவின் விளம்பிற்குத் தள்ளியது.


காரை ஓட்டியவர் உட்பட காரிலிருந்த ஆறு பேரும் 18 முதல் 21 வயதேயாகியவர்கள், எல்லோரும் குடிபோதையில் மிதந்தார்கள். போதை இறங்கிவிட்டால் மேலும் ஏற்றிக் கொள்ள சீமைச் சாராயப் புட்டிகளும் காரில் கிடந்தன. அவர்கள் அனைவரும் மும்பையில் செல்வச் சீமான் வீட்டுக் குலக்கொழுந்துகள். பெற்றோர்களின் தொழில் நிர்வாகிகள் அல்லது மேட்டுக்குடிக் கல்லூரி மாணவர்கள்.


இந்தக் கொலைகாரர்கள் எல்லாம், மும்பையின் முதன்மையான நட்சத்திர விடுதியான தாஜ் ஓட்டலில், வயிறு முட்டக் குடித்தும், தின்றும், ஆட்டம் பாட்டம் என்று கும்மாளமிட்டு விட்டுத் திரும்பியிருக்கிறார்கள். இவர்கள் குடித்துக் கூத்தடித்துக் கொண்டிருந்த அந்த நள்ளிரவிலும், இந்தத் தொழிலாளர்கள் சாலை போட்டுக் கொண்டிருந்தார்கள். அதிகாலை இரண்டு மணிக்குத்தான் பணி முடித்துக் களைப்பாற்றத் தூங்கப் போனார்கள். இந்தக் கோரமான முடிவைச் சந்தித்தார்கள். இந்தக் களிவெறித் தாக்குதலில் இருந்து தப்பிப் பிழைத்த அவர்களின் உறவினர்கள் மொழி அறியாத அந்த இடத்தில் கதறி அழும் காட்சி நெஞ்சை அறுக்கும் துயரம்மிக்கதாகவே இருந்தது.


அந்த ஏழைஎளிய உழைப்பாளிகளின் உயிர்கள் அற்பமாக மதித்துப் பறிக்கப்பட்டதைப் போலவே, கொலைகாரர்களுக்கான தண்டனையும் அற்பமாகவே இருக்கப் போகிறது. மும்பைபாந்த்ரா சாலைத் தொழிலாளர்களுக்கெதிரான இந்தக் கோரமான கொலைக்குற்றம், குடித்துவிட்டு மோட்டார் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்குரிய அலட்சியத்தால் இழைக்கப்படும் குற்றமாகக் கருதித் தண்டிக்கும் குற்றப்பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, இந்தியத் தண்டனைச் சட்டம் 304(அ) அலட்சியம் காரணமாக மரணம் விளைவிக்கும் குற்றம் இதன்படி குற்றவாளி பிணையில் வந்துவிடமுடியும்; அதிகபட்சம் தண்டனை இரண்டு ஆண்டு சிறையும், அபராதமும் விதிக்கப்படும்.


ஆனால், நடந்திருப்பது ஒரு கொலைக்குற்றம். தாழ்த்தப்பட்ட மக்களை சாதிவெறியர்கள் படுகொலை செய்வதற்கு சாதி ஆதிக்கவெறி அடிப்படையாக இருப்பதைப் போல, ஏழை எளிய மக்களைக் கிள்ளுக்கீரையாக எண்ணி மிகவும் அலட்சியமாகப் பலியிடுவதற்கு அடிப்படையாக, செல்வமிகு மேட்டுக்குடித் திமிர்த்தனம் இருக்கிறது. ஆண்டைகள் தமது செல்லப்பிராணிகளுக்கு அடிமைகளை இரையாக்கி, அதைக் கண்டு மகிழ்வதைப் போன்ற வக்கிரம் இந்த மேட்டுக்குடித் திமிர்த்தனத்தில் வெளிப்படுகிறது.


இதுவொன்றும் வழக்கம் போல குடித்துவிட்டு மோட்டார் வாகனங்களை ஓட்டும் அலட்சியம் அல்ல; தனி ஒரு சம்பவமும் அல்ல. மும்பை மட்டுமல்ல, பிற பெருநகரங்களிலும் இத்தகைய கிரிமினல் குற்றங்களில் மேட்டுக்குடிசெல்வச்சீமான்களின் குலக் கொழுந்துகள் ஈடுபடுவது ஒரு பொதுப்போக்காகவே இப்போது வளர்ந்து வருகிறது. இந்த ஆண்டு துவக்கத்தில் ஸ்டாண்டார்டு வங்கியின் உயர் அதிகாரி நீல் சட்டர்ஜி மும்பையின் பிரபாதேவி பகுதியில் ரமாகாந்த் தூரி என்ற காவலாளியை கார் ஏற்றிக் கொன்றார். இதே பாந்த்ரா பகுதியில் இந்தி நடிகர் ராஜ்குமாரின் மகன் புரு ராஜ் குமார் நடைபாதை மக்கள் மீது கார் ஏற்றிப் பலரைப் படுகாயமுறச் செய்துவிட்டு, வெறும் அபராதத்தோடு தப்பித்துக் கொண்டார்.


இந்தியக் கடற்படை தலைமைத் தளபதி எஸ்.எம். நந்தாவின் பேரனும், கடற்படை தளபதி சுரேஷ் நந்தாவின் மகனும் கிரௌன் கார்ப்பரேசன் கம்பெனியின் ஆயுதங்கள் விற்பனைத் தலைமை அதிகாரியுமான சஞ்சீவ் நந்தா, தனது பி.எம்.டபிள்யூ என்ற சொகுசுக்காரை ஏற்றி ஆறு பேரைக் கொன்றுவிட்டு, தண்டனையின்றித் தப்பித்துக் கொண்டார். கடந்த ஆண்டு, பிரபல கட்டாவ் துணி ஆலை முதலாளி மகேந்திரா கட்டாவின் மகன் மணிஷ் கட்டாவ் மும்பையின் பிரதான சாலையான மரைன் டிரைவில் நின்றிருந்த ஜிதேந்திரா ரோகடே என்ற போலீசுக்காரரை காரேற்றிக் கொன்றுவிட்டு, தண்டனையின்றி விடுதலை செய்யப்பட்டார்.


மும்பை சிவசேனாத் தலைவர் பால்தாக்கரேயின் உதவியாளர் ரவீந்திர மகத்ரே காரேற்றி இரண்டு பேரைக் கொன்று இரண்டு பேரைப் படுகாயமுறச் செய்தார். பிரபல இந்தி நடிகர் சல்மான்கான், தனது டயோட்டா சொகுசுக் காரை தலைத்தெறிக்க ஓட்டி சென்று ரொட்டிக் கடையின் முன்பு உறங்கிக் கொண்டிருந்த ஒருவரைக் கொன்றும் நான்கு பேரைப் படுகாயமுறவும் செய்தார்.


இத்தகைய குற்றங்கள் தொடர்வதற்குக் காரணமென்ன? எப்படிப்பட்டவர்கள் இத்தகைய குற்றங்களைச் செய்கின்றனர். தங்குதடையற்ற கொண்டாட்டமும் பரபரப்பான வாழ்க்கையும் இலக்காகக் கொண்டவர்கள்; கத்தை கத்தையாக பணக் கட்டுகளும், கடன் அட்டைகளும், மின்னணுக் கைச் சாதனங்களும், பேய்த்தனமாகப் பாய்ந்து செல்லும் விலையுயர்ந்த மோட்டார் வாகனங்களுமாகப் பெருநகர சாலைகளிலும், நட்சத்திர நடன விடுதிகளிலும் திரிபவர்கள்; தான்தோன்றித்தனமான கேளிக்கைகளிலும் கனவுகளிலும் மிதப்பவர்கள்; சுருக்கமாகச் சொன்னால், தாராளமயம்உலகமயம் பெற்றெடுத்த செல்வச்சீமான்களின் கொழுப்பேறிய செல்லப் பிள்ளைகள்; அதாவது, நவநாகரீகப் பொறுக்கிகள்.


இந்த ""இளைஞர்கள் போதிய பணம் வைத்திருக்கிறார்கள்; அந்தப் பணபலமே தமது அதிகார உரிமை என்று அவர்கள் கருதுகிறார்கள். வெறித்தனம், அதிகாரம், போதை மற்றும் கிறுக்குத்தனமான ஆணவம் திமிர்த்தனம் ஆகியவை ஒரு கொடிய உயிர்க் கொல்லி ஆயுதமாக அமையும் உலகமயமாக்கம் கூட இம்மாதிரியான நடத்தைகளுக்கு ஒரு காரணமாக அமைகிறது'' என்கிறார் மும்பையின் பிரபல மான மனநல மருத்துவர் ஹரீஷ் ஷெட்டி.


இத்தகைய நச்சுப் பண்பாடு, மும்பை மட்டுமல்ல, தில்லி, சென்னை, பெங்களூர், ஐதராபாத் என்று நாட்டின் பெருநகரங்களிலெல்லாம் தொற்று நோயாகப் பரவி வருகிறது. சென்னை மாமல்லபுரம் கிழக்குக் கடற்கரைச் சாலையின் இருபுறமும் புற்றீசல்களாய் புறப்பட்டுள்ள சொகுசு மாளிகைகளில் சனிக்கிழமை பின்னிரவு வரை குடித்துக் கும்மாளமிட்டு, கூத்தடித்துவிட்டு பாய்ந்து செல்லும் கார்களை ஓட்டிவரும் மேட்டுக்குடி புதுநாகரிகப் பொறுக்கிகளால் ஏற்படும் ""விபத்துகள்'' அங்கே வாழும் மக்களைப் பீதியடைச் செய்து வருகின்றன. இந்தச் சாலையில் நடக்கும் சாவுகள் மட்டும், சென்னையின் பிற பகுதிகளில் நடப்பவைகளைவிட அதிகமென்று விவரங்கள் தெரிவிக்கின்றன.


இதற்குக் காரணமானவர்கள் வழக்கமாக நாம் காணும் பரம்பரை பணக்கார வீட்டுச் செல்லப் பிள்ளைகள் அல்ல. கடந்த 15 ஆண்டுகளாக அடுத்தடுத்துவந்த ஆட்சியாளர்கள் பின்பற்றிய தாராளமயம் தனியார்மயம் உலகமயம் என்ற புதிய பொருளாதாரக் கொள்கை காரணமாகப் பெய்த டாலர் மழையில் நனைந்த புதுப்பணக்காரர்கள். குறிப்பாக கணினி தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதைச் சார்ந்த தொழில்களில் அதன் உண்மை மதிப்புக்குமேல் பன்மடங்கு வரும் வருவாயினால் ஊதிப் பெருத்துப்போன செல்வத்தில் மிதிப்பவர்கள்தான் கண்மண் தெரியாமல் தறிகெட்டு ஆட்டம் போடுகிறார்கள்.


சில நாட்களுக்கு முன் குடிவெறியில் காரை ஓட்டிச் சென்ற ஒருவர் சாலைத்தடுப்புக் கம்பிகள் மீது மோதி மாண்டார். அதனால், குடிபோதையில் கார் ஓட்டுபவர்களைப் பிடிப்பதற்காக போலீசார் சோதனைகளில் ஈடுபட்டபோது, நள்ளிரவுக்குப் பின்னரும் குடித்துக் கும்மாளமிட்டுவிட்டு இளம் ஜோடிகள் கார்களில் பறப்பதைக் கண்டனர். இதைத் தொடர்ந்து சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் விதிகளை மீறி நடத்தப்படும் சில ""பார்கள்'' மற்றும் நடன அரங்குகள் மீது திடீர் சோதனைகள் நடத்தப்பட்டன. நட்சத்திர விடுதிகளில் நள்ளிரவுக்குப் பிறகும் சீமைச் சாராயம் பரிமாறப்படுவதும், இளம்ஜோடிகள் குடிவெறியில் விளக்குகள் அணைக்கப்பட்டும், மங்கிய ஒளியிலும், வரைமுறைகள் இல்லாமல் ஆபாசமாக நடனமாடுவதும் நடப்பதைக் கண்டார்கள்.


சோதனையிட வந்த போலீசாரைக் கண்டதும், பலர், ஏற்கெனவே "புக்' செய்திருந்த தமது அறைகளில் பதுங்கிவிட்டனர். மேலும் பலர் பின்புறவழியாகத் தப்பி ஓடினர். போலீசார் வந்ததும் போதையில் ஆடிக் கொண்டிருந்தவர்களைப் பிடித்து விசாரித்த போது அவர்கள் ""நல்ல வேலையில் உள்ளவர்கள்; நல்ல குடும்பப் பின்னணி உள்ளவர்கள்'' என்று தெரிந்ததால் அவர்களின் ""எதிர்கால நலன்களை கருதி எச்சரித்து அனுப்பப்பட்டனர்'' என்கிறார்கள், போலீசார். ஆனால், விதிகளை மீறியும் அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு மேலும் பார்களையும் நடன அரங்குகளையும் நடத்தியதற்காக விடுதி ஊழியர்கள் 17 பேர் மட்டும் கைது செய்யப்பட்டனர்.


""சென்னையில் தெருவுக்குத் தெரு கம்ப்யூட்டர் நிறுவனங்கள் பெருகி வருகின்றன. இவற்றில் நான்கைந்து ஷிப்டுகளில் வேலை நடக்கிறது. நள்ளிரவில் "ஷிப்டு' முடிந்து செல்பவர்களைக் கவர்வதற்காகவே ஒட்டல்களில் பார்கள் நள்ளிரவைத் தாண்டியும் திறந்து வைக்கப்படுகின்றன. கம்ப்யூட்டர் நிறுவனங்களுக்கு தங்கள் மகன், மகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோர், வேலை முடித்து அவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் வீட்டுக்கு வருகிறார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும். நள்ளிரவில் வெகுநேரம் குடித்துவிட்டு அதிகாலையில் வீடு திரும்புபவர்கள் வேகமாக கார் ஓட்டிச் செல்கின்றனர். இதனால், நிறைய விபத்துக்கள் நடக்கின்றன என்பதையும் பெற்றோர் உணரவேண்டும்'' என்கிறார், ஒரு போலீசு அதிகாரி.


என்னவொரு அக்கறை! என்னவொரு பொறுப்பு! எல்லோரும் ""நல்ல வேலையில் இருப்பவர்கள், நல்ல குடும்பப் பின்னணி உள்ளவர்கள்'' அல்லவா, அதுதான்! ஆனால், பிடிபட்ட பெண்களோ, ""நாங்கள் எவன்கூடப் போனால் இவர்களுக்கென்ன?'' என்று கொழுப்புக் கொப்பளிக்கக் கேட்கிறார்கள். தாங்கள் அவ்வளவாகக் குடித்திருக்கவில்லை என்றும் குடிபோதையில் இருந்த 15,16 வயதுப் பெண்களை மட்டும் தப்பிப் போகவிட்டார்கள்; (மைனர் பெண்கள் ஆதலால் வழக்கும் குற்றமும் கடுமையாகக் கருதப்படும் என்பதால் போலீசின் கரிசனம் நிரம்பி வழிந்திருக்கிறது போலும்!) அடையாள அட்டைகளைக் காட்டியபோதும் காக்க வைத்து பெற்றோரை அழைத்து எச்சரித்துவிட்டுத்தான் வெளியே விட்டார்கள்'' என்று குறைபட்டுக் கொண்டார்கள்.


இரவு நேரங்களில் இப்படிக் குடித்துக் கூத்தடிப்பது ஒன்றும் தவறில்லை; ஒளிவுமறைவானதுமில்லை, கூச்சத்துக்குரியதுமில்லை, தகுந்த அடையாளத்தைக் காட்டி பகிரங்கமாகவே இப்படிச் செய்வதில் தயக்கமில்லை என்று அவற்றில் ஈடுபட்டவர்கள் காட்டிக் கொள்கிறார்கள். இப்படிச் செய்வது தங்கள் உரிமை என்றும் வாதிடுகிறார்கள். அதை மறுக்காத போலீசுக்காரர்களும் நடன அரங்கின் புகையும் சூழலும்தான் நல்லதில்லை என்று கூறி அவர்களைச் சமாதானப்படுத்த முயன்றிருக்கிறார்கள்.


போலீசார் மேற்கொண்ட நடவடிக்கை முஷ்டியை மடக்கி மிரட்டுவதாகும் என்று ஐதீகமான ""இந்து'' நாளேடு சித்தரிக்கிறது. பெண்களை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்துக்குக் கொண்டு போய் ஒருமணிநேரம் காத்திருக்கச் செய்தது பயபீதியூட்டுவதாகும் என்று பொருமுகிறது அந்த நாளேடு. கூடவே, இம்மாதிரியான ஆட்டங்களில் பாடுவதைத் தொழிலாகக் கொண்ட ஒருவரைப் பேட்டி கண்டு, ""இப்படிக் கட்டுப்பெட்டித்தனமாக இருக்கக் கூடாது, மின்னணு இசையை இரசிக்கும் புதிய போக்கை வளர்ப்பதற்காக இன்னும் தாராளமாக நடந்து கொள்ள வேண்டும்'' என்று எழுதியது அந்த நாளேடு.


அடுத்தநாளே கூடிய தென்னிந்திய ஓட்டல்கள் உணவகங்களின் உரிமையாளர் சங்கம், ""அந்நிய விமான சேவைகள், அந்நிய நேரடி முதலீட்டாளர்கள், அந்நிய சுற்றுலாப் பயணிகள் ஆகியவர்களுக்காக அரசு தனது கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும். குடிக்கவும், ஆடவுமான நேரத்தை அதிகரிக்க வேண்டும். தகவல் தொழில் நுட்பம், அது சார்ந்த சேவை நிறுவனங்கள், கணினிவெளி வேலைகளுக்கான நிறுவனங்கள், கால்சென்டர்கள் போன்றவை பெருகிவரும் சென்னையில் இரவு வாழ்க்கை பற்றித் தெளிவான கொள்கையை அரசு வகுக்க வேண்டும்'' என்று கோரியுள்ளனர்.


""இரவு வாழ்க்கை'' என்பது மேலே குறிப்பிடப்பட்ட தொழில்களின் நீட்டிப்பாகவும், புதிய பண்பாடாகவும் அந்நிய, உள்நாட்டுக் கூட்டுப்பங்குத் தொழில் கழகங்களால் திட்டமிட்டு வளர்க்கப்படுகின்றது என்பது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது. தமது பணியாளர்களின் இரவு வாழ்க்கைக்காக இந்தக் கூட்டுப்பங்குத் தொழில் கழகங்கள், தாமே கூடுதல் சம்பளம், சுற்றுப் பயணங்கள் வசதிகள் மற்றும் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்கின்றன. ""என்.ஐ.ஐ.டி.'' மற்றும் ""விப்ரோ'' ஆகிய இரண்டு கணினி மென்பொருள் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்கள் சேர்ந்து ""தேதி வைத்து'' உல்லாசமாகக் கழிப்பதற்கு சிறப்புப் படி (டேட்டிங் அலவன்ஸ்) வழங்குகின்றன. இதனால் தனது மணவாழ்க்கை சிதைவதாக ""விப்ரோ'' நிறுவனப் பணியாளர் ஒருவரின் மனைவி வழக்குத் தொடுத்துள்ளார்.


தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற இந்த மறுகாலனியாக்கம் நமது நாட்டுப் பொருளாதாரத்தை மட்டுமல்ல, நமது நாட்டின் பண்பாட்டையும், குடும்பங்களை மட்டுமல்ல, ஏழை எளிய மக்களின் வாழ்வையும், உயிரையும் பறிக்கும் விபரீதங்களாக உருவெடுத்து வருகிறது என்பதையே இவை காட்டுகின்றன.

· ஆர்.கே.


Monday, December 4, 2006

அன்னிய தலையீடு எதார்த்தமாகின்றது

அன்னிய தலையீடு எதார்த்தமாகின்றது

பி.இரயாகரன்
03.12.2006

இலங்கையில் நடைபெறும் நிகழ்ச்சிகள் ஒரு அன்னிய தலையீட்டை நோக்கி வேகமாக முன்னேறுகின்றது. ஒரு தேசத்தின் இறைமை மேலும் இழிந்து போவதை இது துரிதமாக்கும். இனப்பிரச்சனை இருப்பதை மறுப்பவர்களும், இருப்பதை ஏற்றுக்கொண்டு ஒரு அரசியல் தீர்வுக்கு வரமறுப்பவர்கள் என, இரு தரப்பினரினதும் செயற்பாடுகள் தான், அன்னிய தலையீட்டுக்கான உந்துவிசையாக உள்ளது. இலங்கை மக்கள் மேலான புதிய ஒரு ஒடுக்குமுறையுடன் கூடிய அன்னீய தலையீட்டுக்கு, இவை கால் கோளாகின்றது.

இந்த அன்னிய தலையீடு இனப்பிரச்சனை உண்டு என்பதை ஏற்றுக்கொண்டு, அதற்கு ஒரு தீர்வையும் உடனடியாக கோருகின்றது. அதேநேரம் இதன் அடிப்படையில் சமாதானம் அல்ல. இராணுவ வழிகளில் புலியை அழிப்பதையும் அடிப்படையாகக் கொண்ட உள்ளடகத்தில் தான் நடைபெறுகின்றது. இதில் இருந்து புலிகள் தப்பிப் பிழைக்க முடியாது. இந்த நிலைமையே இலங்கை தொடர்பான இன்றைய சர்வதேச நிகழ்ச்சியாக, ஒரு அழுத்தமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

புலிகள் இன்றைய வடிவில் தொடர்ந்தும் இருக்கமுடியாது. புலியின் அழிவு அரசியல் மற்றும் இராணுவ வழிகளில், தீர்க்கமானதாக மாறுகின்றது. மக்களில் இருந்து அன்னியமான மக்கள் விரோத புலிச் செயற்பாடுகளே அவர்களை அழித்துவிடும். அதாவது அன்னிய தலையீட்டுக்கு முன்னால் முற்றாக அவர்களை துடைத்தெறிந்துவிடும்.

பொதுவான இன்றைய இந்த நிலைமையை மாற்றி அமைக்க கூடிய நிலையில் மக்கள் இல்லை. மக்கள் தமது சொந்த தலையீட்டை நடத்தக் கூடிய எந்த ஒரு அரசியல் செயற்பாடும் இன்று கிடையாது. மக்களுக்கு எதிரான மக்கள் விரோத செய்லபாட்டுக் களமே வீங்கி வெம்புகின்றது. இந்த நிலையில் மக்கள் இந்த யுத்த அவலத்தில் இருந்து தப்பிப் பிழைக்க, அன்னீய தலையீட்டை ஆதரிக்கின்ற ஒரு கருத்து நிலையையே, அவர்கள் மாற்றுத் தீர்வாக கருதுகின்றனர். இதை திட்டமிட்டு அன்னிய சக்திகள் தமது எடுபிடிகள் மூலம் உருவாக்கியும் வருகின்றனர்.

புலித் தலைவர் புலம்பிக் காட்டும் பேரினவாதம்

புலித் தலைவர் பிரபாகரன் தனது 'மாவீரர்" செய்தியில், பேரினவாதத்தின் கடந்தகால நிகழ்கால போக்கை பற்றி குறிப்பிடுகின்றார். இலங்கை வரலாற்றில் இதை மீள மீள சொல்லி அரசியல் செய்கின்ற தொடர்ச்சியில், இது மறுபடியம் சொல்லப்படுகின்றது. இதை இன்று மீளச் சொல்வதன் மூலம் நிலைமையை விளக்கிவிட முடியாது.

பேரினவாதத்தின் கடந்தகால நிகழ்கால போக்கை தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் நன்கு அறிவர். ஏன் புலிகள் தமது எதிரியாக கருதும், அரசுடன் உள்ள கூலிக் குழுக்களும் இதை நன்கு அறிவர். சிங்கள பேரினவாதிகளும் கூட இதை கொள்கை அளவில் ஒத்துக்கொள்கின்றனர். புலித் தலைவர் அதை மீளச் சொல்லுகின்றார் என்றால், இது புலிகளின் அரசியல் அனாதையாகிய வங்குரோத்தின் மொத்த விளைவாகும்.
நேர்மையாக மக்களுக்கு சொல்லக் கூடிய எந்தச் செய்தியும் புலிகளிடம் கிடையாது. ஒரு அரசியல் பேச்சு வார்த்தையை வெற்றிகரமாக நடத்தமுடியாத நிலையில், பேரினவாதத்தை பழையபாணியில் மீள ஓப்புவித்து ஒப்பு பாடவேண்டிய நிலை உருவாகின்றது. அமைதி சமாதானம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றிய, கடந்த ஜந்து வருடத்தில் பேரினவாதம் பேரினவாதமாகவே இருக்க, அதை நடைமுறையில் அம்பலப்படுத்த முடியாத நிலை புலிக்கு உருவானது.

பேரினவாதிகள் தமிழ் மக்களுக்கு பிரச்சனை உண்டு, அது தீர்க்கப்பட வேண்டும் என்று கூறிய படி, அதை தீர்க்காமலேயே புலிகளை முழுமையாக தனிமைப்படுத்தி அம்பலப்படுத்தியுள்ளனர். வெற்றிகரமான இந்த பேரினவாதத்தின் வெற்றிக்கு முழுப்பொறுப்பும் புலிகளைச் சாரும். நிரந்தரமான ஒரு சமாதான தீர்வை கோருவதில் இருந்தும் புலிகள் தனிமைப்பட்டுள்ள நிலையில், பேரினவாதம் புலிக்கு வெளியில் தீர்வை வைக்கவுள்ளது. அவர்கள் முன்வைக்கும் இந்த தீர்வு மூலம், புலிகளை தனிமைப்படுத்தும் அடுத்தகட்ட நகர்வை நோக்கி பேரினவாதம் வேகமாக வெற்றிகரமாக நகருகின்றது.

இப்படி புலிகள் குறுகிக் கூனி வருகின்றனர். புலிகளோ பேச்சுவார்த்தை என்ற பெயரில், தனது பாசிச மாபியாத்தனத்தில் கவனத்தை குவித்து, அதற்குள் தான் அனைத்தையும் மையப்படுத்தினர். 1995 இல் சந்திரிகா அரசு நிரந்தர தீர்வு பற்றி பேசக் கோரிய போதும், புலிகள் அன்று முதல் அதை நிராகரித்தே வந்தனர். இப்படி தமது பாசிச மாபியாத்தனத்தை பேச்சுவார்த்தை மேசையில் வைத்து, அதில் இருந்து தனிமைப்பட்ட நிலையில் கடந்தகாலம் பற்றி மீளப் புலம்பவது புலிகளின் வரலாறாகும். ஒரு இனப்பிரச்சனை உண்டு என்பதை சொல்லளவில் வைத்துக்கொண்டு, பாசிச மாபியாத்தனத்தை பேரப் பொருளாக்கிய போது, பேரினவாதத்துக்கு அவை சாதகமான அரசியல் அம்சமாகியது.

மக்கள் இயல்பாக வெறுத்து ஒதுக்கும் பாசிச மாபியாத்தனத்தை ஆதாரமாகக் கொண்டு, புலிகளை தமிழ் மக்கள் மத்தியில் இருந்து பேரினவாதம் அன்னியப்படுத்தினர். தமிழ் மக்களுக்கும் புலிக்கும் உள்ள உறவில், இந்த பாசிச மாபியாத்தனம் தீர்க்கமான ஒரு முரண்பாட்டை நிரந்தரமாகிவிட்டது. தமிழ் மக்களின் முன் புலிகள் நீட்டியுள்ள துப்பாக்கிகள், மக்களை உறைநிலையில் ஜடமாக்கிய போதும், உணர்வு ரீதியாக புலிக்கு எதிரான ஒரு மாற்றை மக்கள் எதிர்பார்த்து காத்து கிடக்கின்றனர். இந்த நிலையை பேரினவாதம் புலியைக் கொண்டே வெற்றிகரமாக தயாரித்துவிட்டது. இவை புகைந்து கொண்டு இருக்கின்றது. இவை புலிகளையே எரிக்கும் ஒரு காட்டுத் தீயாக, மற்றொரு பிற்போக்கின் பின்னால் மக்கள் சென்றுவிடும் உணர்வுள்ள உறை நிலையிலும், நிலைமை கனன்று கொண்டு இருக்கின்றது.
இதை இன்று தடுப்பது இனபிரச்சனைக்கான ஒரு தீர்வு தான்.

இனப்பிரச்சனைக்கு பேரினவாதம் தீர்வு வைப்பதன் மூலம், சர்வதேசம் வரையிலான எதிர்வினை உண்டு. இந்த தயாரிப்பையே பேரினவாதம் செய்கின்றது. இந்த வகையில் அடுத்த கட்டத்தை நோக்கி புலிகள் இன்றி நிரந்தரமான தீர்வை வைக்க முனைகின்றது. நிரந்தரமான அரசியல் தீர்வுக்கு எதிரான புலிகளின், வாலை இதன் மூலம் ஓட்ட நறுக்கவுள்ளது. நிரந்தர தீர்வு தமிழ் மக்களின் பிரச்சனையை தீhப்பதற்காக அல்ல, புலியை இல்லாது ஒழிப்பதற்காகும். அதற்கு தீர்வு தான் நெம்புகோல். இந்த நெம்புகோலை பேரினவாதத்துக்கு எதிராக பயன்படுத்தவும் முடியும். ஆனால் அதை புலிகள் நிரந்தரமாக பேரினவாத அரசிடம் தாரைவார்த்து விட்டு முன்னால்: நின்ற தீர்வை நோக்கி நகர்வதை தடுத்து நிறுத்த தமது முதுகை முன் நிறுத்துகின்றனர்.

புலிக்கும் அரசுக்கும் இடையில் அரசியல் பிரச்சனை என்ற வகையில், இன முரண்பாடு மையமானது. இந்த விடையத்தை பற்றி பேசாத, பேச மறுக்கின்ற பேச்சுவார்த்தையையே வலிந்து புலிகள் இட்டுச்சென்றனர். இதற்குள் தான் அனைவரினதும் எதிர்கால அரசியலும் தீர்மானமாகின்றது. யார் இந்த பிரச்சனையை நேர்மையாக தீர்க்க முனைகின்றனரோ, அவர்கள் வெற்றிகரமான பேச்சுவார்த்தையை நடத்த முடியும். இதை புலிகள் எப்போதும் மறுத்து வந்ததுடன், இதற்கு நேர்ரெதிரான நிலையில் மக்களின் முதுகில் குத்தி பிழைக்க முனைகின்றனர். பேரினவாதம் புலிகளைப் பயன்படுத்தி, புலியின் கோரிக்கைக்குள் தன்னை நிலைப்படுத்தி, இதில் இருந்து சாதாரணமான மக்கள் முன் அம்பலமாகாது விலகி நிற்கின்றது. புலிகளின் பாசிச மாபியாக் கோரிக்கையைக் கொண்டே, அவாகளை தமிழ் மக்கள் மத்தியில் இருந்து அம்பலமாக்குகின்றனர்.

புலிகள் இதில் இருந்து தப்ப யுத்தத்தை நோக்கி ஓடுகின்றனர். இந்த நிலையிலும், இன்றும் இந்த பேரினவாதம் அம்பலப்படாத வகையில் தொடர்ந்து இருப்பது தான் அதன் சூக்குமம். இதற்கான முழுப்பொறுப்பும் புலிகளைச் சாரும். ஒரு யுத்தத்தின் நியாயத்தன்மை என்பது, நாம் நியாயமாக நடப்பதில் தங்கியுள்ளது. நியாயமற்ற வகையில் நாம் நடந்து கொண்ட, ஒரு நியாயமான யுத்தத்தின் அவசியத்தை வலியுறுத்த முடியாது.

ஒரு யுத்தத்தின் நியாயத்தை யுத்த பிரதேசத்தில் வாழும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எதிராக யுத்தம் செய்பவன் பக்கத்தில் உள்ள மக்கள், தம் பக்கத்தில் யுத்தத்தின் நியாயமற்ற தன்மையை இனம் கண்டு அதற்கு எதிராக இருக்க வேண்டும். இதில் எதையும் புலியால் ஏற்படுத்த முடியாது.

தமிழ்மக்கள் அமைதியான ஒரு நிரந்தரமான தீர்வை நோக்கிய சமாதானம் என்பதே அவர்களின் மையமான கோரிக்கை. இதை புலிகள் தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றனர். இதைப் பேசவே மறுக்கின்றனர். பேரினவாதத்தை பேசி அம்பலப்படுத்த முடியாத வரை, அது பேரினவாதத்துக்கு தொடர்ச்சியாகவே சாதகமானது. புலிகள் இன்றி ஒரு நிரந்தர தீர்வை அரசு நிறை செய்ய முனைவதன் மூலம், தமிழ் மக்களின் பிரச்சனையில் தீர்க்கமான ஒரு அரசியல் அதிரடி மாற்றத்தை உருவாக்க முனைகின்றது. இதை அரசு வெற்றிகரமாக வைத்தால், புலியின் அழிவு நிர்ணயமாவது தொடங்கிவிடும்.

எந்தத் தீர்வையும் இணங்க வைக்கும் புலிகள்

இதை பேரினவாதம் செய்கின்றனரா? புலிகள் செய்கின்றனரா? புலிகளைச் சார்ந்து நின்று பேரினவாதம் செய்கின்றது என்பதே உண்மை. பேரினவாதிகள் அனைவரும் தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தோ, அல்லது தீர்வை முன்வைத்தோ அரசியல் செய்தது கிடையாது. கட்சி மற்றும் அரசியல் செயற்பாட்டில் இதை செய்யத் தவறுகின்ற போது, தமது கட்சிக் கொள்கையில் இதை முன்வைக்காத போது, அவர்கள் அனைவரும் பேரினவாதிகள் தான். இது எதார்த்தமான உண்மை.

புலிகள் ஒரு பாசிச மாபியா இயக்கமாக இருக்கின்றார்கள் என்பதால், இது பொய்யாகிவிடாது. புலிகள் சுயநலம் கொண்ட மக்கள் விரோதிகள் என்பதால் பேரினவாதம் அற்றதாகிவிடாது. பேரினவாதம் தனது கட்சி திட்டங்களில், தமிழ் மக்களின் பிரச்சனைக்குரிய ஒரு தீர்வை முன்வைப்பதில்லை. ஆனால் இனவாத திட்டத்தை கட்சியில் வைத்து, அதை அரசியலாகவே செய்து வருகின்றனர். இந்த வகையில் கடந்த 60 வருட வரலாற்றில் அமைதி மற்றும் யுத்தகாலத்திலும் எந்த தீர்வையும் அவர்கள் நேர்மையாக முன்வைத்தது கிடையாது.

இந்த உண்மையை புரிந்துகொண்ட எம் சமூகத்தின் முன், புலித்தலைவர் மீண்டும் அதை ஓப்புக்கு புலம்பி, அ, ஆ அரிவரிப் பாடம் என்று தொடங்குவது வேடிக்கையானது. துப்பாக்கி மேல் சயனித்து கிடந்த அவர், இப்ப தான் அரசியல் படிக்கின்றாரோ தெரியவில்லை. உண்மையில் இதை தலையில் தூக்கி அப்பிக் வைத்து கொண்டாடும் போது, தமிழ்மக்களின் அரசியலற்ற அறிவற்ற மலட்டுத் தன்மையை இது பறைசாற்றுகின்றது. மறுபக்கத்தில் தமிழ் மக்களுக்கு இதை நினைவூட்ட வேண்டிய துப்பாக்கியமான நிலையில், தமிழ் மக்கள் வேறு ஒரு உலகத்திலா வாழ்கின்றனர்!.

இப்படி நாம் சொல்வதால் தமிழ் மக்களுக்கு இந்த உண்மை தெரியாது என்பதல்ல. தெரிந்து என்னதான் செய்வது. அதற்காக புலிகளின் பின்னால் ஒடிவிடவும் மாட்டார்கள். புலிகள் ஒரு மக்கள் இயக்கமாக இருந்தால், புலிக்கு உள்ள அதே ஜனநாயகம் மக்களுக்கும் இருக்க வேண்டும். மக்கள் எதைப்பற்றியும் சுதந்திரமாக விவாதிக்க, பங்கேற்க, தலையிட, மறுக்க உரிமை இருக்கவேண்டும். அது தான் மக்கள் இயக்கம்.

இந்த வகையிலும் புலிகள் ஒரு மக்கள் இயக்கமல்ல என்ற வகையில், புலிகளின் துப்பாக்கி முன்னிலையில் மக்களை மந்தைகளாக வைத்துக் கொண்டு, மந்தைக்கு உபதேசம் செய்வதால் மந்தைகள் புலிகளாகிவிடாது. மந்தை மந்தைக் குணத்துடன், அங்குமிங்கும் மந்தையாகத்தான் மேயும்.
புலிகளின் பாசிச மாபியா நிலை தான், மக்களை இந்த நிலைக்கு தள்ளியது. இந்த மக்கள், யுத்த சூழலில் யுத்தத்தில் இருந்து, தன்னை முற்றாக ஒதுக்கியே வாழ்கின்றனர். எப்படியும் இதில் இருந்து மீளவே முனைகின்றனர். புலிகள் பலவந்தமாக தம் பின்னால் கொண்டு செல்ல முயன்றாலும் சரி, இராணுவம் தன்னை சார்ந்து வாழக் கோரினாலும் சரி, மக்கள் தம் பாட்டில் தம் பிரச்சனையுடன் இருக்கவே முனைகின்றனர். உதாரணமாக வடக்கில் அன்றாடம் நடக்கும் இன்றைய கொலைகளில் 90 சதவீதமானவை இராணுவமே செய்கின்றது. அன்றைய கொலைகளில் 99 சதவீதமானவை புலிகள் செய்தனர்.

மக்களை பொறுத்த வரையில் இதை இட்டு அச்சமோ, பீதியோ கிடையாது. மக்கள் இன்று கொல்லப்படுவர்களை புலிகளாக புலி ஆதரவாளராகவே கருதுகின்றனர். துரதிஸ்டவசமான உண்மை என்ற போதும், மக்களின் நிலை இப்படித்தான் உள்ளது. எனக்கு புலியுடன் தொடர்பு இல்லை என்றால், எனக்கு பிரச்சனையில்லை என்ற வகையில், மக்கள் இதை எதிர் கொள்கின்றனர்.
இதே நிலைதான் புலிகள் புலியல்லாதவரை கொன்ற போதும் நிலவியது. இன்று வரை கொல்லுபவன் மாறுகின்ற போது மக்கள் மனநிலையில் மாற்றமில்லை. இந்த மக்கள் தமது பாட்டில் தமது வேலையாக உள்ளனர். இந்த மக்கள் எந்தத் தீர்வையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு உட்பட்டுள்ளனர்.

தீர்வும் அன்னிய தலையீடும்

சர்வதேச சமூகத்தின் தீவிர தலையீடு, தமிழ் மக்களுக்கான தீர்வுடன் அரங்கேறும். நிரந்தர தீர்வை பேசவோ ஏற்கவோ மறுக்கும் புலிக்கு எதிராகவே, அது அரங்கேறும். புலிகள் நிரந்தர தீர்வை பேச மறுக்கின்ற நிலையில், அரசின் ஒரு தலைப்பட்சமான தீர்வை அன்னிய சக்திகள் உடனடியாக கோருகின்றது.

அரசின் தீர்வு அன்னிய தலையீட்டின் நிர்ப்பந்தத்துடன் தான் உருவாகின்றது. இலங்கை அரசு அதை விரும்பி முன்வைக்கவில்லை. இந்தியா உள்ளிட அனைத்து மேற்கத்தைய நாடுகளும், உடனடியாக அரசின் ஒருதலைப்பட்சமான தீர்வை மையப்படுத்தி கடுமையான முடிவுகளை எடுக்கின்றது. கடந்தகால அன்னியர்களின் முயற்சிகளின் அனைத்துத் தொடர்ச்சியான தோல்வியின் பின்னுள்ள சூக்குமம், தீர்வுடன் தொடர்புடையதாகவே உள்ளது.

புலிகள் பயங்கரவாத இயக்கமாக தடை செய்த நிலையில், அதை அமுல்படுத்தாத ஒரு நெகிழ்ச்சிப் போக்கை கையாள்விலும் இந்த தீர்வு தான் தடையாகவுள்ளது. தமிழ் மக்கள் வேறு, புலிகள் வேறு என்று அன்னிய சக்திகள் பகிரங்கமாக அரசுக்கு கூறத் தொடங்கியுள்ளது. தமிழ் மக்களையும் புலியையும் நிரந்தரமாக பிரிக்கின்ற வகையில், தீர்வு தான் தீர்க்கமாக பங்காற்றும். இதை ஏகாதிபத்தியம் தெளிவாக தெளிவுபடுத்துகின்றது.
இந்த வகையில் தான் தீர்வு நோக்கி பேரினவாத கட்சிகளின் இணைப்பை சர்வதேச சக்திகள் உருவாக்கின. இந்த வகையில் சர்வதேச ரீதியாக தொடர்ச்சியான பல நிர்பந்தத்தை ஏற்படுத்துகின்றது. பேரினவாதத்துக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள், தீர்மானங்கள் அனைத்தும் இதற்குள் உள்ளடங்கியதே.

பேரினவாதம் உலகமயமாதல் அமைப்பில் ஒரு அங்கம் என்ற வகையில், அவர்களால் இந்த தீர்வு அரங்கில் விரைவில் வெளிக் கொண்டு வரவுள்ளது. அது புலிகள் அல்லாத வகையில் முன்வைக்கப்படும் போது, புலிகளின் எதிர்காலம் முடிவுக்கு வரும்.

இந்த வகையில் புலிகள் அல்லாத தரப்பு உற்சாகம் ஊட்டப்படுகின்றது. ஆனந்தசங்கரி போன்ற மக்கள் விரோதப் பொறுக்கிகளை ஊக்குவிக்க அதை விரிவாக்க பணப் பரிசுகள் அள்ளி வழங்கப்படுகின்றது. மக்களுக்கு எதிராக எங்கும் ஒரு வலைப்பின்னல் கட்டமைக்கப்படுகின்றது.

தன்னார்வக் குழுக்கள் மிக வேகமாக பெரும் பணத்துடன் செயற்படுகின்றன. யுத்தத்தை எதிராக நிறுத்தி, மதவாத கிறிஸ்துவ பிரிவுகள் தீவிர பிரச்சாரத்தை செய்கின்றன. எங்கும் எதிலும் ஒரு இறுக்கமான முடிவை நோக்கி நிலைமை நகருகின்றது.

மக்களின் உரிமைகளை மறுத்து, புலிகளின் பாசிச மாபியாத்தனத்தை சாதகமாக கொண்டு அனைத்தும் அரங்கேறுகின்றன. இந்த நிலைமையை நாம் புரிந்து எதிர்வினையாற்ற வேண்டிய காலத்தில் நாம் வாழ்கின்றோம்.

www.tamilcircle.net

Saturday, December 2, 2006

மக்களை தொடர்ந்து பிணமாக்கும் 'மாவீரர்" உரை

தனிப்பட்ட நலனுக்காகவே மக்களை தொடர்ந்து பிணமாக்கும் 'மாவீரர்" உரை

பி.இரயாகரன்
02.12.2006


க்களின் பெயரில் மாவீரர் உரை. அதற்கு பல பொழிப்புரைகள். ஊரையும் உலகத்தையும் புலித் தேசியத்தின் பெயரில் ஏமாற்றி அவர்களையே கொள்ளையிட்டு வாழும் புலிகள், அனைத்து மக்கள் விரோத கேடித்தனத்தையும் மூடிமறைக்க படுகொலையையே தேசியமாக பிரகடனம் செய்து நிற்கின்றனர்.


புலித் தேசியத்தின் பெயரில் கொல்லப்பட்ட ஓரு பகுதியினரின் உற்றார் உறவினரின் கண்ணீரை விளம்பரம் செய்து அதையே ஊரறிய வியாபாரமாக்குகின்றனர். புலிகளின் அரசியலுக்கும் வருமானத்துக்கும் பிணங்களே உதவுகின்றது. மரணித்தவரின் உற்றார் உறவினரின் கண்ணீரும், அதன் மேலான பொதுவான சமூக அனுதாபமும் என்ற அளவுக்குள், புலி தேசியம் குட்டிச்சுவராகிவிட்டது. பாசிசத்தையே அனைத்துமாக, அதையே வாழ்வாக கொண்ட புலிகளும், அதன் தலைவர் பிரபாகரனும் பேரினவாதத்தின் துணையில் ஒரு செய்தியை வெளியிடுகின்றனர்.


புலியெதிர்ப்புக் கும்பல் இதே போன்று புலிகளின் துணையில் எப்படி அவர்களால் கருத்துரைத்து அரசியலில் நீடித்து வாழ முடிகின்றதோ, அதேயொத்த வகையில் புலிகளும் புலித் தலைவரும் பேரினவாதத்தின் துணையில் வாழமுடிகின்றது. இதற்கு வெளியில் இவர்களுக்கு என்ற தனித்துமான மக்கள் அரசியல் எதுவும் கிடையாது.


பாவம் மக்கள். வாய் திறந்து எந்த அபிப்பிராயமும் சொல்ல முடியாது. அவர்களின் பெயரில், ஒரு அரசியல் புளுடா. இன்று அமைதியையும் சமாதானத்தையும் கோருவதே துரோகமாக மாறியுள்ளது. தமிழ் மக்கள் யுத்தத்தை விரும்பவில்லை என்று கூறுவது கூட துரோகமாகிவிட்டது. அமைதியை சமாதானத்தை கோருவது மரண தண்டனைக்குரிய ஒரு தேசிய குற்றமாகிவிட்டது. யாரும் எவரும் அதை உரசிப்பார்க்கலாம்.


இந்த மக்கள் விரோத யுத்தத்துக்கு எதிராக, யாரும் கருத்துரைக்கவே முடியாது, இதை புலிக்கு எதிரானதாகவே கருதி காய் அடிக்கின்ற மலட்டுக் கூட்டம் தான், புலியாகி, தாமே தமிழ் தலைமையாக கூறிக்கொண்டு அனைத்தையும் காயடிக்கின்றனர். இதை மீறி யாரும் வாய் திறக்கவே முடியாது. புலிகளின் தலைவர் பிரபாகரனின் 'மாவீரர்" உரை, என்ன தான் பேரினவாதத்தின் பக்கத்தை ஓப்புக்கு சொல்லி அழுதாலும், தமிழ் மக்களுக்கு எப்படி பாடை கட்டுவது பற்றிய தமது பாசிச நிலைப்பாட்டை மக்களின் பெயரில் சொல்லிப் புலம்பினார்.


புலிகளின் தலைவர் பிரபாகரனின் 'மாவீரர்" உரை தொடர்பாக தமிழ் சமூகமே இரண்டுபட்ட வகையில், பிளவுபட்டு எதிர்கொண்டது. இந்த பிளவு மிக ஆழமானது. யுத்தத்தை மக்களின் பெயரில் செய் என்றும், அமைதியை மக்களுக்கு தாருங்கள் என்றும், இந்த பிளவு ஆழமாகக் காணப்படுகின்றது. இது வாழ்வியலில் வேறுபட்ட பிரதேசங்களைச் சார்ந்து பிரதிபலித்தது. யுத்தத்தையும், அதன் அவலங்களையும், ஏன் புலிகளின் பாசிசத்தையும் சொந்தத்திலும் நேரிலும் அனுபவிப்பவர்கள் பெரும்பான்மையானோர் அமைதியையே எதிர்பார்த்து புலிகளின் முன் வாய்பொத்தி காத்து நிற்கின்றனர். மறுபக்கத்தில் யுத்தத்தை பொழுது போக்காக கருதி, புலம்பெயர் சமூகத்தில் பெரும்பான்மை யுத்தத்தை கோருகின்றது. தமது மேற்கத்தைய இயந்திர வாழ்வில் களைப்பைப் போக்கும் ஒரு 'ரொனிக்காக", வீரமாக உரையாடவும் பேசி வம்பளக்கவும் யுத்தம் அவர்களின் சொந்தக் கோரிக்கையாகின்றது.


மண்ணில் யுத்தம் வெறுப்பாகவும், புலம்பெயர் நாட்டில் யுத்தம் மகிழ்ச்சியாகவும் கொண்ட உணர்வுகளின் அடிப்படையில், இந்த 'மாவீரர்" உரை மீது மக்கள் கவனம் திரும்பியது. ஒரு பகுதி மக்களின் சாவும், மறுபகுதி மக்களின் உற்சாகம் கொண்ட வாழ்வும் இதில் அடங்கிப் பிரதிபலித்தது.


புலம்பெயர் சமூகமும் புலிகளும்


எந்த சமூக ஒழுங்குக்கும் உட்படாத அனைத்து சமூக பிற்போக்கையே ஆதாரமாக கொண்ட புலம்பெயர் லும்பன் சமூகத்தில், புலிகளின் இருப்பு பரஸ்பரம் சொந்த நலன் சார்ந்ததாகவே காணப்படுகின்றது. எந்த மக்கள் நலனும் இதன் பின்னால் இருப்பதில்லை. புலிகள் மக்களுக்கு எப்படி அவர்களின் வாழ்வியலுடன் ஒன்றுபட்ட உதவுகின்றனர் என்று, இவர்கள் அவர்களை கேட்பதில்லை, அதேபோல் அந்த மக்கள் ஊடாக தாமும் அதைக் கேட்டு அறிவதில்லை. இதை மீறாத வகையில், ஊடகத்துறையை கைப்பற்றி அவை மூலம் சொன்னதையே மீளச் சொல்லும் கிளிப்பிள்ளைகளாக மக்களைச் சொல்ல வைக்கின்றனர். இதை ஊடகத்துறை ஊடாக மீறும் போது, அவை தடுக்கப்படுகின்றது. புலியெதிர்ப்பு மீறல் மற்றொரு மந்தை கூட்டத்தை உருவாக்குகின்றது. மக்கள், மக்களின் நலன் என்று யாரும் இந்த எல்லையை மீற, இந்த இரண்டு கும்பலும் அனுமதிப்பதில்லை. இந்த சூழல் பாசிசத்தையே தழைத்தோங்க வைக்கின்றது.


இந்த மலட்டு லும்பன் புலம்பெயர் சமூகம், புலிகளும் அதன் தலைவரும் யுத்தத்தை மீள அறிவிப்பார், சண்டையை தொடங்குவார் என்ற நம்பிக்கையுடன் தொலைக்காட்சியின் முன் வாய்பிளந்து எச்சில் வடிய காத்துக் கிடந்தனர். இதுவே அவர்களின் அன்றாட அரிப்புக்குரிய வாழ்க்கையாகி விடுகின்றது. சொந்தமாக மண்டையில் எதுவும் இருப்பதில்லை.


இவர்களுக்கு புரிவதில்லை தலைவர் பாசிசத்தின் கைதி என்பது. பாவம் புலித் தலைவர். எதை எப்படி பேசுவது என்பதற்கு கூட அவருக்கு சுதந்திரம் கிடையாது. அவர் விரும்பும் சண்டையை கூட சொல்ல முடியாத நிலை. நாங்கள் மீண்டும் சண்டைக்கு போகப் போகின்றோம் என்று சொல்ல முடியாத அவலநிலை. ஆகவே சொதப்ப வேண்டும், சொதப்பியே விடுகின்றார். இரண்டுநாள் கழித்து தமிழ்ச்செல்வன் யுத்தநிறுத்தம் தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக, தலைவர் உரைக்கு புதிய பொழிப்புரை வழங்குகின்றார். இதற்கு அடுத்த நாள், இளம்திரையன் மௌனவிரதம் பூண்டு, மீண்டும் அதை சொதப்புகின்றார்.


இந்த பூச்சாண்டி காட்டும் சொதப்பல்களையே புலம்பெயர் சமூகம் வாய்பிளந்து தொலைக்காட்சி பெட்டிக்குள் மூழ்கி கிடந்த நிலையில், தலைவர் வழமைபோல் இம்முறையும் வாசித்த உரை, புலம்பெயர் சமூகத்துக்கு சப்பென்றாகியது. யுத்தத்தை நாம் செய்யப் போவதாக நேரடியாக பேச முடியாத நிலையில், இந்த மலட்டு புலம்பெயர் அறிவற்ற கூட்டத்துக்கு சப்பென்று போக, பேய் அறைந்த ஒரு நிலையை உருவாக்கியது. உற்சாகமிழந்து "தலைவர் இந்த முறையும் சொதப்பிப் போட்டார்" என்று நம்பிக்கை இழந்து புலம்பினர்.


உடனே இதை மொழிபெயர்க்கவும், புதிய பொழிப்புரையையும் வழங்கத் தொடங்கினர். இதற்கு என்று நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தமிழ்மக்களின் பாராளுமன்ற பொம்மைப் பிரதிநிதிகள் தத்தம் பொழிப்புரையுடன், இறுதி யுத்தத்தை தலைவர் அறிவித்துள்ளார் என்கின்றனர். இந்தா தமிழீழம் என்கின்றனர்.


தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் இந்த புலிப்பினாமிகளுக்கு, இங்கே என்ன வேலை. அந்த மக்களுடன் அவர்களின் துன்ப துயரத்துடன் நின்று போராட வேண்டிய இவர்களுக்கு, இங்கு என்ன வேலை. புலிகளின் அனைத்து மனித உரிமை மீறலுக்கும் பணம் திரட்ட வெளிநாட்டில் நின்றபடி, தொடந்தும் அந்த மக்களைத் துன்புறுத்த உதவும்படி இங்குள்ள மக்களை உற்சாகமூட்டுகின்றனர். தலைவர் சொதப்பியதை மீள மொழி பெயர்த்து மக்களை மந்தையாக்க முனைகின்றனர். மொழிபெயர்த்தும், விரிவுரைசெய்தும், ஆய்வுகள் நடத்தியும் அவர்கள் கண்ட முடிவு, தலைவர் தனிநாட்டை அமைக்க சண்டையை தொடங்கப் போவதாக பெருமையுடன் அறிவிக்கின்றனர். வாயைப் பிளந்து தொலைக்காட்சியின் முன் செபம் செய்தவர்களின் வாய்க்குள், அவல் வீழ்ந்தது மாதிரி ஒவ்வொன்றாக வந்து வீழ்ந்து கொண்டிருந்தது. புலியைச் சொல்லி பிழைக்கும் லும்பன்கள், அவர்களின் தலைவர் வாசித்த ஒவ்வொரு வரியையும் அங்குமிங்குமாக புரட்டி அதை சண்டையாக காட்டிய போது, புலம்பெயர் சமூகம் அதன் பின் உற்சாகத்தை எட்டியது.


இப்படி சண்டை பற்றிய படிமானம் மனத்திரையில் நிழலாட, வாயில் எச்சில் ஒழுக மறுபடியம் உருவெடுத்து ஆடத் தொடங்குகின்றனர். சண்டையையும், அதன் அழிவையும், மரணங்களையும் கண்டு மகிழ்ந்து திளைக்கும் மனநிலையுடன் தான், புலம்பெயர் சமூகம் அன்று உறங்கச் சென்றது. அன்றைய புலிக் கனவுகள் அனைத்தும் மனிதப் பிணங்களாகவே மாறி, அவை டொலராக, ஈரோக்களாக உற்சாகமூட்டியது. மற்றவன் அழிவில், மற்றவன் சிதைவில் நம்பிக்கை கொண்ட இந்தப் புலம்பெயர் சமூகம், இந்த விடையம் தான் இவர்கள் அன்றாட வாழ்வில் பொழுது போக்காகி, இன்று இவையின்றி உணவே செரிப்பதில்லை. சினிமாவில் சண்டைக் காட்சி பார்க்கின்ற ரசிகர் கும்பல் போல் இந்தக் கும்பல், அதற்காகவே அலைகின்றது.


இதற்குள் ஒரு பகுதி புலியின் பெயரில் பிழைத்துக்கொள்கின்றனர். இதில் முன்னுக்கு நிற்பவர்களின் குடும்பங்களை முற்றுமுழுதாக வெளிநாட்டில் இறக்கிவிட்ட பின் தான் குலைக்கின்றனர். இப்படி இதற்கு இந்த தேசியம் உதவுகின்றது. அங்கு எஞ்சியிருக்கும் உறவினரை, இந்த எச்சில் பொறுக்கிகள் இங்கு அழைப்பதையே தமது தேசிய இலட்சியமாக கொண்டு சதா அலைகின்றனர். இப்படி சமூகத்தின் கோடரிக்காம்பாகி பாசிசத்துக்கு காவடி எடுத்து ஆடுகின்றனர்.


போராட்டத்தில் இழப்பு இன்றி இருக்குமா என்று இவர்கள் கேட்கின்றனர். அனால் அதை தான் இழக்க தயாரற்ற நிலையில், தனது குடும்பத்தை பாதுகாப்பாக வைத்துக் கொண்டே, அனைத்துக்கும் ஒளிவட்டம் கட்டுகின்றனர். மற்றவனின் மரணத்தில் வாழும் இவர்கள் தான், சமூகத்தின் கடைநிலையில் உள்ள பொறுக்கிகளாக உள்ளனர். இவர்கள் தான் இன்று, தமிழ் தலைமை என்று தம்மைத் தாம் கூறிக்கொண்டு சமூகத்தை ஆட்டிப்படைக்கின்றனர்.


யுத்த பிரதேசத்தில் வாழும் மக்கள்


இவர்களுக்கு யாரும் விளக்கவுரையோ, பொழிப்புரை செய்வதில்லை. மாறாக துப்பாக்கி முனையில் மரணங்களை விதைத்து இதுதான் தலைவரின் செய்தி என்று இரத்தம் உறைய பறைசாற்றுகின்றனர். மரணம், மரணம், இதுதான் அந்த மக்களுக்கான ஒரேயொரு செய்தி.


யுத்தத்தையும், மரணத்தையும் வாழ்வாக கொண்டு, பீதியை உணர்வாக கொண்ட ஒரு சமூகத்தில், யுத்தம் அவர்களை பாடை கட்டி அழக் கோருகின்றது. இதைத்தான் பிரபாகரனின் மாவீரர் செய்தி அவர்களுக்கு கூறியுள்ளது. இந்த மரணங்களால் அந்த மக்கள் பெறப் போவது எதுவுமில்லை. இது அந்த மக்களுக்கு நன்கு தெரியும். இருப்பதை இழப்பதைத் தவிர, அவர்கள் புலிப்பாசிசத்தில் பெறப் போவது எதுவுமில்லை.


சிங்களப் பேரினவாதத்தின் ஒடுக்குமுறையை ஒருபுறம் உணரும் மக்கள், அதற்காக புலம்பெயர் சுகவாழ்வு தமிழன் போல் புலியின் பின்னால அரோகராப் போடத் தயாராக இல்லை. தமிழ் மக்களின் தேசிய பிரச்சனையை ஒருபுறம் உணர்ந்த போதும் கூட, புலிகளின் யுத்தம் சரி புலிகளின் மலட்டு பேச்சுவார்த்தையும் கூட அதைத் தீர்க்காது என்பதை தமிழ்மக்கள் நன்கு அறிவர். புலிகளின் எந்த அணுகுமுறையும், எந்த நடத்தையும், தமது துன்பத்தை அதிகரிக்க வைக்கின்றவை தான் என்பதை அனுபவரீதியாக அவாகள் நன்கு அறிவர். இதுவே அவர்களின் அன்றாட வாழ்க்கையாகிவிட்டது. சொந்த வாழ்வில் அவர்களின் அனுபவம், சதா அவர்கள் காணும் காட்சிகள், புலிகளின் பாசிசத்தின் கோரத்துக்கு வெளியில் அவர்களின் விடிவை எதிர்கொள்வதில்லை. இதுவே வியாபித்திருக்கின்றது.


மறுபக்கத்தில் இதற்கு இணையாக பேரினவாதத்தின் நயவஞ்சமான கோரமான ஒடுக்குமுறையை அனுபவிக்கின்றனர். சூதும் சூழ்ச்சியும் கொண்ட பேரினவாதம், புலிகளின் பாசிச வண்டியில் ஏறியமர்ந்து தமிழ் மக்களின் மேலாக ஊர்வலம் போகின்றனர். இதையும் தமிழ் மக்கள் உணருகின்றனர். இதற்கு எதிராக தமிழ் மக்கள் செயற்பட புலிகள் அனுமதிப்பதில்லை. இதற்கும் புலிகள் மரண தண்டனையை தான் பரிசாகக் கொடுக்கின்றனர். மக்கள் தமது பிணங்களை தாமே சுமந்தபடி, மௌனமாக தமது பிரேத ஊர்வலத்தையே நடத்துகின்றனர்.


மக்கள் எந்தப் பக்கமும் மூச்சுக் கூட விட முடியாத நிலையில் திணறுகின்றனர். அரசு அல்ல புலிகளே, தமிழ் மக்களின் அழிவுக்குரிய ஒரு யுத்தத்தை தொடங்கிவிடுவார்கள் என்று தமிழ் மக்கள் ஆழமாகவே நம்புகின்றனர். இதுவே உண்மை. பிரபாகரன் போன்று அவநம்பிக்கையான உரை ஒன்றையும், ஏன் மீள யுத்தத்துக்கு செல்வது என்பது பற்றியும் அரசு எதையும் பிரகடனம் செய்யவில்லை.


அரசு தான் தற்பாதுகாப்பில் ஈடுபவதாகவே கூறுகின்றது. புலிகளின் சென்ற மாவீரர் தின உரையைத் தொடர்ந்து, மக்கள் படை என்ற பெயரில் நடத்திய தாக்குதல்களும், அதைத் தொடந்து மாவிலாறு மூதூர் தாக்குதல்களும் பல ஆயிரம் உயிரை பலிவாங்கியது. இதில் தமிழ் சிங்களம் என்ற விதிவிலக்கற்ற வகையில் எந்த நோக்கமுமின்றி மடிந்தனர். முழுமையான யுத்தத்தை புலிகள் இன்று கோருகின்றனர். மிக முக்கியமானது மீண்டும் யுத்தம் என்று அரசு கோரவில்லை. யுத்தத்தை புலிகளே முன்வைக்கின்றனர் என்றால், யுத்தத்தை தொடங்குவதில் உள்ள முனைப்பு அம்பலமாகின்றது.


மக்கள் புலிகள் வலிந்து தொடங்கும் யுத்தத்தையிட்டு வெறுப்பும், ஆத்திரமும் கொண்டுள்ளனர். வாய் திறந்து சமாதானமே எமக்கு வேண்டும் என்று சொல்ல முடியாத நிலையில், மக்களை நோக்கி புலிகளின் துப்பாக்கிகள் குறிவைத்து நிற்கின்றது. மக்களுக்கும் புலிக்கும் இடையிலான உறவு இதைத் தாண்டியதல்ல. இது இயல்பாக அன்னிய தலையீட்டு மூலம், யுத்தத்தை தடுத்து நிறுத்தக் கோரும் உணர்வாக மாறி வருகின்றது. புலிக்கு எதிரான அன்னிய தலையீடு என்பது, பலதரப்பின் அங்கீகாரத்துடன் நடக்கும் ஒரு ஆக்கிரமிப்புக்குரிய சூழலை உருவாக்கி வருகின்றது.


மக்கள் மீது காறி உமிழும் புலியெதிர்ப்பு ஓட்டுண்ணிகளின்


புலியெதிர்ப்பு ஓட்டுண்ணிகளின் புலியெதிர்ப்பு குலைப்பு, பேரினவாதத்துக்கு ஆதரவானதும் அன்னிய சக்திகளுக்கு விசுவாசமானதாகவும் வாலாட்டுகின்றது. மக்கள் விரோத புலிச் சகதிக்குள் நின்று, சுற்றிந் சுற்றி குலைக்கும் இவர்கள், ஆளுக்காள் கவ்வி அதற்குள் இழுக்கின்றனர். பாவம் மக்கள். மக்களை வழிகாட்டக் கூடியதும், மக்களை விடுதலைக்கு போராடும் வழியை வழிகாட்டக் கூடிய, எந்த ஒரு செய்தியையும் இவர்களிடம் இருந்து மக்கள் பெற முடிவதில்லை. வேத சுபீச்சார்த்தம் செய்யும் பாதிரி போல், இவர்கள் புலியெதிர்ப்பு காலாட்சேபம் நடத்துகின்றனர்.


உலகில் அனைத்தும் புலியாகி விட்டது. புலிகளுக்கு அனைத்தும் தலைவர் மயமானது போல், இதன் எதிர்க்கோடியில் நிற்கும் இந்தக் கும்பலுக்கு அனைத்தும் புலியெதிர்ப்பாகிவிட்டது. கீரைக் கடைக்கு ஒரு எதிர்கடை வைத்து நடத்துகின்றனர். பேரினவாத அமைப்பில் கீரைக்கடையில் எதுவும் மக்களுக்கு கிடைப்பதில்லை, அதே நிலைதான் எதிர்க் கடையிலும். இதைத்தான் இவர்கள் ஜனநாயகம் என்கின்றனர். கடை வைத்திருப்பது தான் ஜனநாயகம், கடையில் என்ன இருக்கின்றது எனபதை கேட்பது ஜனநாயகம் இல்லை என்கின்றனர். அப்படி கேட்பதை அனுமதிக்கக் கூடாது என்பதே ஜனநாயகமாகி, இந்த இரு தரப்பினரதும் ஒரே சீரிய கொள்கையாகிவிட்டது. கேள்விக்கும், விமர்சனத்துக்கும் இரு தரப்பும் பதிலளிக்க மாட்டார்கள்.


இந்த புலியெதிர்ப்புக் கும்பலின் உயர்ந்தபட்ச அரசியல், புலியை எதிர்ப்பது தான். இவர்கள் தலித் என்று நீலக்கண்ணீர் வடித்தாலும் சரி, கிழக்கு என்று கருணாவின் பின் நின்று ஊளையிட்டாலும் சரி, மனித உரிமைவாதி என்று ஏகாதிபத்திய மலத்தில் ஒரு புழுவாக புரண்டு நெளிந்தாலும் சரி, மக்களை ஏமாற்றி கோயில் உண்டியலை வைத்து பொறுக்கினாலும் சரி, பொறுக்கித் திரியும் முன்னாள் இயக்க பொறுக்கியானாலும் சரி, தமிழ் மக்களின் எதிரியுடன் கூடியிருந்து பொறுக்கித் தின்னும் இன்னாள் இயக்க உறுப்பினர் என்றாலும் சரி, அனைத்துக் கட்டமைப்பையும் எதிர்ப்பதாக கூறிக்கொண்டு மக்கள் விரோத கட்டமைப்பில் இருக்கும் மாங்காய் மண்டைகளும் சரி, இவர்களின் அரசியல் எல்லை புலியை எதிர்ப்பதுதான். புலியை எதிர்ப்பது தான், இவர்களின் விபச்சாரத்தை தொடங்குவதற்குரிய ஒரே புள்ளி.


இதனடிப்படையில் தான் இவர்கள் ஒன்றுபட்டு நிற்கின்றனர். இந்த புலியெதிர்ப்பைக் கலைத்துப் போட்டால், இந்த நாய்களிடம் எஞ்சுவதற்கு எதுவுமில்லை. புலியெதிர்ப்புக் கருத்துத் தளங்கள், அவர்களின் வானொலிகளில் அலம்பல்களில் உள்ள புலியெதிர்ப்பை அகற்றினால், அதில் எந்த சாரமும் இருப்பதில்லை. புலி ஆதரவு தளங்களில் தலைவர், சண்டை இவைகளை அகற்றினால், அதில் எதுவும் இருப்பதில்லை. அதேநிலைதான் இதற்கும். மக்களுக்கு என்று, இவர்கள் எதையும் சொல்வது செய்வது கிடையாது.


இந்த புலியெதிர்ப்புக் கும்பல் 'மாவீரர்" தின உரைக்கு முன்னமே, அதையொட்டி நையாண்டி உரை எழுதத் தொடங்கினர். பிறகு அதை வைத்து அரசியல் விபச்சாரம் செய்தனர். சரி நீங்கள் என்ன சொல்லுகீறிர்கள் என்றால், அரசுக்கு சலுகை வழங்க வேண்டும் என்கின்றீர்கள்.


புலியெதிர்ப்பு பாசிச குஞ்சுகளே, புலி 'மாவீரர்" தின உரைக்கு பதில் என்ன வைத்திருக்க வேண்டும் என்று உங்களால் சொல்ல முடியுமா? மக்களின் தேவை என்ன என்று உங்களால் சொல்ல முடியுமா? பேரினவாதத்தை எப்படி எந்த வழியில் என்ன கோரிக்கையில் அடிப்படையில் அம்பலப்படுத்திக் காட்டி போராட முடிமா? இந்த அடிப்படையில் புலிக்கு மாற்றான ஒரு மக்கள் நல அரசியல் வேலைத் திட்டத்தை வைக்க முடியுமா? உங்கள் முன் விடப்படும் சவால் தான் இது.


'மாவீரர்" தின உரை எப்படி அமையும் என்று ஊகத்தை முன் கூட்டியே நையாண்டியாக எழுதி, உங்கள் புலியெதிர்ப்பு வக்கிரத்தை கொட்ட முடிந்த உங்களால், முடியுமா பிரபாகரன் என்ன சொல்ல வேண்டும் என்பதை? யாரை ஏமாற்றுகின்றீர்கள். புலித்தலைவரின் அதே நாய்பிழைப்பு, உங்களுக்குத் தேவைதானா? புலித் தலைவர் போல் மக்கள் விரோத வக்கிரத்தை ஊத்திக் குலைத்து வாயில் வைத்து திணிப்பதில் உள்ள கருசனை, மக்கள் பற்றிய அக்கறையில் கிடையாது. ஒரு உருப்படியான மாற்று மக்கள் வேலைத் திட்டத்தை முன்வைக்க முடியாதவர்கள் தான், இந்த லும்பன் ஒட்டுண்ணிகள்.


சரி நீங்கள் குருடனுக்கு வழிகாட்டுவது போல், புலிகள் ஆயுதத்தை கைவிட்டு பல கட்சி ஜனநாயகத்தை ஏற்றுவிட்டால் என்ன நடக்கும்? ஐயா புண்ணியவான்களே கொஞ்சம் சொல்லுங்களேன்!. என்னதான் நடக்கும். சரி இந்த பேரினவாதம் எப்படி ஒழியும்? இதை புலிகள் ஒழிப்பார்கள் என்பதல்ல. இந்த ஒழிப்பு எப்படி நடைமுறைப்படுத்த முடியும் என்றே கேட்கின்றோம்? உண்மையில் புலிகளைப் போல் தான் இந்த புலியெதிர்ப்பும். புலிக்கு மாற்றாக புலியெதிர்ப்பைத் தவிர வேறு எந்த மக்கள் திட்டமும் கிடையாது. உண்மையில் பேரினவாத்துக்கு எதிரான ஒரு திட்டமும் கிடையாது. ஒரு திட்டம் உண்டு என்றால், அது புலியை எதிர்ப்பதும் பேரினவாதத்தை ஆதரித்தல் என்பதே திட்டம்.


கூட்டிக் கழித்து கணக்கு பார்த்தால், புலியெதிர்ப்பின் அரசியல் இதுதான். புலியெதிர்ப்பு குஞ்சுகளே, கூட்டல் கணக்கு கொஞ்சமாக அல்ல, அதிகமாக இப்படித் தான் உதைக்கும். இவர்கள், இந்த மக்கள் விரோத ஜென்மங்கள் 'மாவீரர்" தின செய்தி மீது குலைக்க வெளிக்கிட்டால், அது பிரபாகரனின் மாவீரர் உரை போல் நாறத் தொடங்குகின்றது. 'மாவீரர்" உரை மக்களுக்கு எப்படி எதிராக உள்ளது என்று சொல்ல முடியாது, மக்கள் மேல் காறி உமிழ்வதைத் தவிர இவர்களால் வேறு எதுவும் செய்ய முடிவதில்லை.


புலி ஆதரவு பினாமிகள் முதல் எல்லா மக்கள் விரோத கழிசடைகளும் எப்படி இந்த உரையை வைத்து கொண்டாடுகின்றனரோ, அதேயொத்த வகையில் இந்த உரையை வைத்து புலியெதிர்ப்புக் கும்பலும் அதன் மேல் காறி உமிழ்ந்து கொண்டாடுகின்றனர். இதுதான் இந்த இருதரப்பினரதும் அரசியல். மக்களுக்கு நீங்கள் என்னதான் சொல்ல முனைகின்றீர்கள் என்று கேட்டால், ஆளையாள் பார்த்து முழிக்கின்றனர். தத்தம் வேஷங்கள் மக்கள் முன் நிர்வாணமாவதைக் கண்டு மிரளுகின்றனர்.


கொடிகட்டி பறக்கின்றது பேரினவாதம்


மகிந்த ராஜபக்ச தனது பேரினவாதத்தை மிகச் சிறந்த ஜனநாயக நகைச்சுவையாகவே, அண்மையில் இந்தியாவில் வைத்து வெளிப்படுத்தினார். அதை அவர் வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி, அந்த மக்களின் வாக்கெடுப்பு மூலம் தான் அதை தீர்மானிக்க வேண்டும் என்றார். ஆகாகா என்ன ஜனநாயகவாதி என்று புகழாரம் சூட்டினர். இவரா தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு தருவார்?. புலியெதிர்ப்பு குஞ்சுகள் முதல் அனைவரும் இந்த செய்தியை முதன்மைப்படுத்தினர். சில புலியெதிர்ப்பு நாய்கள் எமது வேலைத்திட்டத்தை அடிப்படையாக கொண்டது இதுவென்று, புல்லரிக்க எச்சில் வடிய விசுவாசமாக வாலாட்டின.


எமது கேள்வி இந்த ஜனநாயகத்தை அடிப்படையாக கொண்டு, தமிழ் மக்கள் பிரிந்து செல்ல விரும்புகின்றனரா என்று ஒரு வாக்கெடுப்பை நடத்துங்களேன்? யாரை ஏமாற்றுகின்றீர்கள்? உங்கள் ஜனநாயகம் கிலோ என்ன விலையாக விற்கின்றீர்கள். கிழக்கு மக்கள் வடக்குடன் இணைவது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட முடியும் என்ற பேரினவாதத் திட்டம், தமிழீழம் பிரிந்து போவதற்கு ஏன் பொருந்தாது? ஐயா ஜனநாயகவாதிகளே, தனித்து கிழக்கு என்று கூக்குரல் இடும் ஜனநாயக வாதிகளே, கொஞ்சம் இரக்கம் காட்டி மக்களுக்கு பதில் சொல்லுங்கள். திருடன் போல் ஒடி ஒளியாதீர்கள்.


ஜனநாயகம் கிலோ என்ன விலை என்று கூவி விற்றுவிடுவதே உங்கள் அரசியல் பிழைப்பாகி விடுகின்றது. இப்படி பேரினவாத பாசிச நோக்கில் கிழக்கைப் பிரிக்கும் ஜனநாயக வக்கிரத்தை அரங்கேற்ற முனையும் ஒரு பேரினவாத ஜனாதிபதி, தமிழ் மக்களுக்கு நியாயமான ஒரு தீர்வை வழங்குவார் என்று நம்பச்சொல்லுகின்றனர். புலிகளின் தலைவர் தனது சொந்த நலன் சார்ந்து இதை சொன்ன போதும், உண்மையில் பேரினவாதம் பேரினவாதமாகவே இருக்கின்றது. அதையே பேரினவாத ஜனாதிபதியின் கூற்று மீண்டும் அம்பலமாக்குகின்றது.


அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தீர்வு. நல்ல அரசியல் நகைச்சுவை. தமிழ் மக்களை மொட்டையாக்கும் தீர்வு இது. இலங்கை இனப்பிரச்சைன தீர்வு பற்றி நாம் முன்பு பல விடையங்களை எழுதிய போதும், சமகால முக்கியத்துவம் கருதி மிக முக்கிய அடிப்படை குறிப்பை எழுத வேண்டியுள்ளது.


இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வாக வடக்கு கிழக்கு தனியான அலகு ஒன்றை வழங்குவது என்பது, பேரினவாதத்தை கழுவி தமிழ் மக்களுக்கு குடிக்க ஊத்துவதாகும். மாறாக இலங்கை வாழும் இனங்களை அடிப்படையாக கொண்ட (இன) தேசிய இன அலகுகளாக பிரித்து, அதன் அடிப்படையில் அவை தம்மைதாம் ஆளும் வகையில் இன அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும். அதை மையப்படுத்தி ஒரு ஐக்கிய அரசியல் அலகை உருவாக்க வேண்டும். இதில் இனம் சம்மந்தமான முடிவுகளை சமமான இன பிரதிநிதிகளைக் கொண்டும், எந்த ஒரு இன பிரதேசமாவது இனம் சம்பந்தமான முடிவை அமுல்படுத்துவதை எதிர்க்கும் பட்சத்தில், அதை நடைமுறைப்படுத்த முடியாத வகையில் அரசியல் அமைப்பு திடப்படுத்த வேண்டும். தேசிய இனப்பிரச்சனையில் நிரந்தரமாக குறைந்தபட்ச தீர்வுக்கும், எதிர்காலத்தில் கிழித்தெறிய முடியாத ஒரு தீர்வாகவும் இது அமையும். தமிழ் மக்களுக்கு மட்டும் என்பது, அவை எப்போது வேண்டுமென்றாலும் கிழித்தெறியப்படலாம். உண்மையில் இலங்கை வரலாற்றில் இந்த இனப்பிரச்னை தீர்வில், சுயநிர்ணயத்தை அருபமாக வைத்தற்கு அப்பால், இது போன்ற நடைமுறை சார்ந்த கோரிக்கையை யாரும் தெளிவாக முன்வைத்து போராடியதில்லை. அரசை ஒரு சிங்கள அரசாக விட்டு வைக்கும் வகையில்தான், கோரிக்கை, பேச்சுவார்த்தை, தீர்வு என்று அனைத்து அரசியல் நாடகத்தையும் தமிழரசுக் கட்சி முதல் அனைவரும் நடத்தினார். இன்று அதையே செய்கின்றனர்.


சிங்கள மக்களுக்கு ஒரு சிங்கள இன அலகு உருவாக்கப்படுவது போல், மற்றய இனத்துக்கும் உருவாக்க வேண்டும். இதுதான் இந்த அரசியல் அமைப்புக்குள் குறைந்தபட்சம் இலகுவாக தீர்வு காண வழிகாட்டும். வடக்கு கிழக்கு இணைப்பு பிரிப்பு முதல் எல்லா பம்மாத்துக்கும் முடிவு காணப்படும். ஜே.வி.பியின் இனவாதம் முதல் சிங்கள உறுமயவின் சிங்கள துவேஷம் அனைத்தும் சந்திக்கும் வரும். மக்கள் மக்களாக வாழ வழிகாட்ட இது முன்நிபந்தனையாகும். இதை வலியுறுத்தி போராட அழைக்கின்றோம்.


http://www.tamilcircle.net/

Wednesday, November 29, 2006

நம்மொழி சஞ்சிகையில் வெளியாகிய பேட்டி

நம்மொழி சஞ்சிகையில் வெளியாகிய பேட்டி

கனடா சென்ற போது பி.இரயாகரனிடம் எடுக்கப்பட்ட பேட்டி, நம்மொழி சஞ்சிகையில் வெளியாகியது.

கேள்வி 1: ((நம்மொழி ஆசிரியர் உமா.பாஸ்கரன்)

(பதில் : பி.இரயாகரன்)

உங்களைப் பற்றி....

என்னைப் பற்றி விபரமான பதில் அவசியமற்றது. குறிப்பாக தமிழ் தேசியம் என்பதே புலிகள் என அனைத்தையும் குறுக்கி அந்த எல்லைக்குள் முடக்கிய போது, புலியெதிர்ப்பே முற்போக்கானது என்ற போக்கும் உருவானது. இந்த நிலையில் நாம் இந்த இரண்டு போக்கையும் எதிர்த்து தனித்துவமாக தனித்து போராடியவர்கள். இந்த அடிப்படையில் சில நூறு கட்டுரைகளை எழுதியுள்ளேன். மற்றும் சர்வதேச நிகழ்ச்சிகள் வரை பல நூறு கட்டுரைகளை எழுதியவன். பல நூல்களையும் வெளியிட்டுள்ளேன். இன்று றறற.வயஅடைஉசைஉடந.நெவ என்ற இணையத்தையும் நடத்துகின்றோம். இது புலியெதிர்ப்பு, புலி ஆதரவு என்ற இரண்டுக்கும் எதிராக, மக்கள் நலன் சார்ந்த அரசியலை முன்னிலைப்படுத்தி இயங்குகின்றது. தமிழ் மக்களுக்கு ஜனநாயகமும் தேவை, தேசியமும் தேவை. இரண்டுக்குமாக நாம் போராடுகின்றோம்.

கேள்வி 2:

இலங்கையின் வடக்கு கிழக்கு வாழ் நிலங்களில் இருந்து புலம் பெயர்ந்து வட அமெரிக்க, அய்ரோப்பிய நிலங்களில் வாழும் தமிழ் மக்களின் மொழி, கலாச்சாரம், அரசியல், தாயகம், பெண் விடுதலை என்ற சொற்பதங்களின் பிரயோகம் பற்றி உங்கள் பார்வை?

இது தொடர்பாக பேசுவோர் பலரும் தத்தம் இருப்பு சார்ந்து, வாழ்வு சார்ந்து பேசுகின்றனர். இது போன்று புலிகள் மற்றும் புலிகள் அல்லாத தளத்தில், இவை பற்றி தமது குறுகிய அரசியல் நோக்கில் இவர்கள் பெருமளவில் பயன்படுத்துகின்றனர். மக்கள் நலன் நோக்கில் இருந்து இவை மிகக் கணிசமாகவே பயன்படுத்தப்படுகின்றது. பொதுவாக இதுபற்றிய புரிதல் இன்றி பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றது. இவை ஒன்றில் இருந்து ஒன்று பிரிக்கப்பட முடியாதவை. மக்களின் மொத்த விடுதலையின்றி, அதற்கான முயற்சியின்றி இந்த சொற்கள் படுபிற்போக்கான மோசமான அரசியல் வடிவில் தான் உயிர் வாழ்கின்றது.

கேள்வி 3:

இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழ் அரசியல் பரப்பில் காணப்படும் அரசியல் தலைமைகளின் போக்கும், அமைப்புகளின் உட்கட்டமைப்புகளும் செயற்பாடுகளும் தான் சகோதர அமைப்புகள் மீதான கொலைகளுக்கும் தடைகளுக்கும் காரணமாக இருக்கிறதென்பது சரியாகுமா? இது பற்றி உங்கள் கருத்து என்ன?

இல்லை. இந்தக் குழுக்களின் அரசியல் தான் காரணமாகும். தலைமை என்பது காரணமல்ல. எந்த அரசியலுக்கு இவர்கள் தலைமை தாங்கினார்கள் என்பதே தலைமை பற்றிய பிரச்சனையாகும். யாரும் கொல்ல வேண்டும் என்று பிறப்பதில்லை, தலைமை தாங்குவதுமில்லை. மாறாக அவர்கள் கொண்டுள்ள அரசியல், அது சார்ந்த வர்க்க நிலையைத் தக்கவைக்க கொலைகள் அவசியமாகின்றது. சர்வாதிகார பாசிச கட்டமைப்புகள் உருவாகின்றது. இதன் மூலம் குறித்த தலைமை அதிகாரத்தை தனதாக்குகின்றது. இன்றைய குறித்த தலைமைக்கு பதில், இதே அரசியல் கொண்ட எந்த மாற்றுத் தலைமையும் இந்தப் பண்பையே கொண்டிருக்கும். மாற்றம் எதுவும் இருக்காது.

கேள்வி 4:

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பும் அதற்கு எதிராக மாற்றுக்கருத்து, மாற்று அமைப்பென இரு வகை போக்கினை இலங்கையின் வடக்கு கிழக்குத் தமிழ் அரசியல் பரப்பிலும், அதன் தொடர்ச்சியான புலம்பெயர் நிலங்களிலும் காணப்படுகிறது. இச்சூழ்நிலையை வைத்து பார்க்கும் போது ஒன்றையொன்று சார்ந்திருப்பதாகவும், ஒன்றின் வாழ்வில் மற்றதின் வாழ்வும் தங்கியிருப்பதாக உணர்கிறேன். இது பற்றி உங்கள் பார்வை?

'விடுதலைப்புலிகள் அமைப்பும் அதற்கு எதிராக மாற்றுக்கருத்து, மாற்று அமைப்பென இரு வகை போக்கினை" என்பது தவறானது. மாற்றுக் கருத்து என்பது என்ன? புலியை எதிர்ப்பது மாற்றுக் கருத்தா? இல்லை. மாற்றுக் கருத்து என்பது, புலியைப் போல் மற்றொரு தலைமை அதாவது அதே அரசியல் என்ற இன்றைய பொது கண்ணோட்டம் அடிப்படையில் தவறானது. மாற்றுக் கருத்து என்பது மக்கள் தமது சொந்த வாழ்வு சார்ந்த சமூக பொருளாதார நலன்களைப் பற்றி பேசுவதாகும். இவைகளை மாற்றுக் கருத்தாக கொண்டு யாரும் இலங்கையில் பேசுவது கிடையாது.

புலிகளின் கொள்கைக்கு மாறாக புலி அல்லாத புலியெதிர்ப்பு கும்பல் மாற்றாக என்ன அரசியல் கொள்கையை வைத்துள்ளனர்?. சரி புலிகளை மறுக்கும் இவர்கள், மக்கள் நலன் கொள்கை என எதைக் கொண்டுள்ளனர்? ஒரே அரசியல் கொள்கை. மக்கள் பற்றி மாற்றமற்ற ஒரே அரசியல் சிந்தனை முறை.

ஆனால் ஒன்றையொன்று சார்ந்து இருப்பதில் இவர்களின் எதிர்நிலைப்பாடு உள்ளது. புலிகளின் மக்கள் விரோத நடத்தையை அரசியலில் இருந்து பிரித்து சம்பவமாக புலியெதிர்ப்பு அணி விபரிப்பதும், அதேபோல் புலி எதிர்ப்பின் அரசு சார்பு மக்கள் விரோத நிலையை சம்பவமாக அரசியல் இருந்து பிரிந்து புலி கூறுவதன் மூலமும், இரண்டு தரப்பும் தம்மை எதிர் நிலையில் ஒரே அரசியலுடன் தம்மை தக்கவைக்கின்றனர்.

கேள்வி 5:

இலங்கையின் வடக்கு கிழக்குத்தமிழ் அரசியல் பரப்பில் பிரதேசவாதம் பேசப்படும் பொருளாக இருந்து வருகிறது. இது ஆயுதப்போராட்ட அமைப்புகளிடம் மட்டுமல்ல மிதவாத அமைப்புகளிடமும் காணப்பட்டிருக்கிறது. பிரதேசவாதத்தின் தாற்பரியமென்ன?

பிரதேசவாதம் என்பது இனவாதத்தை போன்ற ஒன்று. அதாவது எல்லாவிதமான சமூக ஒடுக்குமுறையைப் போன்று, மக்களை பிளந்து அதில் குளிர் காயும் ஒரு கும்பலின் குறுகிய அரசியலாகும். சமூகங்களைப் பிளந்து மக்களை மோதவிட்டு, சிலர் தமது சொந்த வர்க்க பொருளாதார வாழ்வை மேம்படுத்தும் அரசியல் உள்ளடக்கமாகும்.

குறிப்பாக ஆதிக்கம் பெற்ற தமிழரை எடுத்தால் யாழ் மேலாதிக்கம் பலவிதமான பிரதேசவாத உணர்வைக் கொண்டது. இது கிழக்கு மக்களை மட்டும் பிரித்து விடவில்லை. தீவான், வன்னியன் போன்ற பல வடிவத்தில் கூட அது உள்ளடங்கியே உள்ளது. இதுவே குறிப்பாக சாதிய வடிவிலும், குறுகிய இனவாத நோக்கிலும் வௌவேறு வடிவிலும் உள்ளது. உண்மையில் பார்த்தால் இந்த பிரதேசவாதம், யாழ் மேலாதிக்க சாதிகளின் உயர் வர்க்கங்களின் மையமான பொருளாதார நலன்களுடன் பின்னிப்பிணைந்தது. தமிழ் தேசியப் போராட்டம் அப்படித் தான் உருவானது. அது சகலவிதமான பிரதேசவாத உணர்வையும் தக்கவைத்தபடி, யாழ் உயர்சாதிய மேட்டுக்குடிகளின் வாக்க நலன்களுடன் ஒருங்கிணைந்த வகையில் காணப்படுகின்றது.

கேள்வி 6:

இலங்கையின் வடக்கு கிழக்குத் தமிழ் அரசியல் பரப்பில் வடக்கும் கிழக்கும் இணைந்திருக்க வேண்டுமெனக் உரத்துக்குரல் கொடுத்துவரும் நேரத்தில்... இன்று கிழக்கில் இருந்து தனியான நிர்வாகமாக கிழக்கு இருக்க வேண்டுமென கிழக்குத்தமிழ்த்தரப்பிலும் முஸ்லிம் தரப்பிலும் இருந்தும் குரல்கள் எழத்தொடங்கியிருக்கின்றன. இது பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

ஒரு தேசிய இனம் மையப்படுத்தப்பட்ட அரசியல் அதிகாரத்தை கோருவது சரியானது. அது தன்னிடத்தில் உள்ள சகல சமூக ஒடுக்குமுறைகளையும் களையத் தவறுகின்ற போது, பிளவுகளும் பூசல்களும் சதா உருவாகின்றது. இராணுவ ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ இதை ஒரு மூட்டையில் கட்டிவைத்து விடமுடியாது. மாறாக அனைத்து சமூக ஒடுக்குமுறையையும் களைவதன் மூலம், ஒருமித்த ஒரு சமூகமாக மனிதனாக மாறுவது அவசியமானது.

இதை நாம் நிறைவு செய்ய தவறும் போது, ஆதிக்கம் பெற்ற அரசியல் தலைமைகள் அந்த சமூக முரண்பாட்டை பகைமுரண்பாடாக கையாள்வது நிகழ்கின்றது. இதற்கு எதிரான அனைத்து ஒடுக்கப்பட்ட குரல்களும் நியாயமானவை. அதற்காக நாமும் குரல் கொடுக்கின்றோம். ஆனால் இந்த முரண்பாட்டை பயன்படுத்தி இன்னுமொரு பிற்போக்கு கும்பல், அல்லது அரசியல் அந்த மக்களை ஏமாற்றுவதையும் நாம் கடுமையாக எதிர்த்து போராடுகின்றோம்.



கேள்வி 7:

இந்தியாவின் உதவியும் ஒத்துழைப்புமின்றி தனிநாடொன்றினைப் பெற்றிட முடியாதென்பதை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பும், அதன் தலைமையும் உணர்ந்திருப்பதாக அண்மைய அவ்வமைப்பின் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் பேட்டி உணர்த்துவதாக நான் கருதுகிறேன். அது பற்றி உங்கள் கருத்து?

ஒரு தேசிய இனம் மையப்படுத்தப்பட்ட அரசியல் அதிகாரத்தை கோருவது சரியானது. அது தன்னிடத்தில் உள்ள சகல சமூக ஒடுக்குமுறைகளையும் களையத் தவறுகின்ற போது, பிளவுகளும் பூசல்களும் சதா உருவாகின்றது. இராணுவ ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ இதை ஒரு மூட்டையில் கட்டிவைத்து விடமுடியாது. மாறாக அனைத்து சமூக ஒடுக்குமுறையையும் களைவதன் மூலம், ஒருமித்த ஒரு சமூகமாக மனிதனாக மாறுவது அவசியமானது.

இதை நாம் நிறைவு செய்ய தவறும் போது, ஆதிக்கம் பெற்ற அரசியல் தலைமைகள் அந்த சமூக முரண்பாட்டை பகைமுரண்பாடாக கையாள்வது நிகழ்கின்றது. இதற்கு எதிரான அனைத்து ஒடுக்கப்பட்ட குரல்களும் நியாயமானவை. அதற்காக நாமும் குரல் கொடுக்கின்றோம். ஆனால் இந்த முரண்பாட்டை பயன்படுத்தி இன்னுமொரு பிற்போக்கு கும்பல், அல்லது அரசியல் அந்த மக்களை ஏமாற்றுவதையும் நாம் கடுமையாக எதிர்த்து போராடுகின்றோம்.

இதை நிராகரிக்கும் புலிகளும் மற்றக் கும்பல்களும் அடிக்கடி அலட்டுகின்றனர். இந்தியா பற்றி பாலசிங்கத்தின் நிலைப்பாடு, புலிகளின் சுயநல குறுகிய அரசில் நலனை அடிப்படையாக கொண்ட பினாற்றலாகும்

கேள்வி 8:

இலங்கையின் வடக்கு கிழக்கு நிலங்களில் 60களின் தொடக்கத்தில் சமூக மாற்றத்தினை உண்டாக்கிய கம்ய+னிச சித்தாந்தம் பின்னான காலப்பகுதியான ஆயுதப்போராட்டச் சூழலில் தோன்றிய அமைப்புகள் பலவற்றில் இருந்தும் பெரும் எழுச்சியினையைப் பெற முடியாமல் போனதற்கு என்ன காரணம்?

வர்க்கப் போராட்டம் பற்றிய சரியான அரசியலும், அதற்கான சரியான அரசியல் தலைமையும் உருவாகவில்லை. இயக்கங்களுக்குள் இருந்து உருவான சிந்தனையாளர்கள், மக்கள் நலன் விரும்பிகள் அதன் கருவடிவிலேயே முதலில் கொல்லப்பட்டனர். இப்படி குறைந்தபட்சம் 500 பேர் இனம் காணப்பட்டு கொல்லப்பட்டனர். இப்படி உருவானவர்கள் தான் முதலில் உள்ளியக்க, வெளியக்க படுகொலையில் பலியானவர்கள். உருவான ஒரு சில தனித்துவமான இயக்கங்களும் தவறான அரசியல் வழியால் அவர்கள் காணமல் போனதுடன்., பலர் கொல்லப்பட்டனர்.

கேள்வி 9:

இன்றைய இலங்கைப்பிரச்சினைக்கான தீர்வாக எம்மாதிரியான ஒர் தீர்வை நீங்கள் முன்மொழிய விரும்புவீர்கள்?

இக்கேள்வியைக் கேட்டதும் இக்கேள்வி இடம் மாறி கேட்டதாக நினைக்கத் தோன்றுகிறதல்லவா? வேண்டாம்... அப்படி எண்ணாதீர்கள். ஒவ்வொருவரும் தங்கள் மனதில்... தங்களால் சரியெனக் கருதும் தீர்வொன்றினை முன் வைக்க வர வேண்டும். அப்பொழுதுதான் எல்லோருடைய கருத்துக்களையும் நம்முடைய அரசியல்வாதிகள் அறிவார்கள். கட்டாயமாக அறிய வேண்டும். தீர்வென்பது எமக்கானது. ?

தீர்வு என்பது மக்களுக்கானதாக இருக்க வேண்டும். அது எந்தத் தீர்வாகவும் இருக்கலாம். தீர்வின் ஒவ்வொரு கூறும் மக்களின் நலனை முன்னிறுத்த வேண்டும் இதை அடிப்படையாக கொண்டு பேச்சுவார்த்தை தொடங்கிய போது எனது நூல் ஒன்றில் அதை முன்வைத்தேன். அதை பார்வைக்கு தருகின்றேன் அல்லது இந்த குறித்த இணையத்தளத்தில் படிக்கமுடியும்.

http://www.tamilcircle.net/Bamini/books/book_04/book_04_22.htm

'இலங்கையில் மக்கள் சமாதானமாகவும், சந்தோசமாகவும் வாழ

குறைந்த பட்சம் எவை தீர்க்கப்பட வேண்டும்

"ஒரு சமுதாயத்தில் குவிந்துவிட்ட முரண்பாடுகளை அதன் முற்போக்கு சக்திகள் தீர்க்காவிட்டால், அந்த வேலை பிற்போக்கு சக்திகளால் செய்து முடிக்கப்படுகின்றது." என்றார் கார்ல் மார்க்ஸ்

தமிழ் மக்களின் தம்மை ஒரு தேசியமாக இனம் கண்டு போராடுமளவுக்கு, சிங்கள பெரும் தேசிய இனவாதிகளின் இனவொடுக்குமுறை காணப்பட்டது. சுதந்திரத்துக்கு முன் தொடங்கிய இனவாத ஒடுக்குமுறை, சுதந்திரத்தின் பின் வேகம் பெற்றது. இது தமிழ் இனத்துக்கு எதிராக மட்டுமல்ல, மற்றைய சிறுபான்மை இனங்கள் மேலும் கையாளப்பட்டது. இந்த பெருந்தேசிய இன ஒடுக்குமுறைக்கு தமிழ் இனவாதிகளும் காலத்துக்கு காலம் ஒத்துழைத்து, இனவாதத்தை புரையோட வைத்தனர். இந்த இனவாத அரசின் கட்டமைப்புக்கு காலத்துக்கு காலம் சிறுபான்மை இனத்தைச் சார்ந்தவர்கள் பல வழிகளில் தூணாகினர். இது இன்று வரை இது ஒரு அரசியலாகவுள்ளது.

இந்த நிலையில் இலங்கையில் இனவாதம் வர்க்கப் போராட்டத்தை முறியடிக்கும் வகையில் ஒரு அரசியலாக வளர்ச்சி பெற்ற போது, அதை இடதுசாரிகள் எதிர்த்து தொடர்ச்சியான ஒரு அரசியல் போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. பராளுமன்ற எல்லைக்குள் ஏது பயன்பட்டதோ அதற்கு அதை எல்லைப்படுத்தினர். அத்துடன் தேசியத்தை மார்க்சிய போராட்டத்தில் இருந்து அன்னியமான ஒரு விடையமாக கருதி கைவிட்டனர். மார்க்சியத்தை ஒரு வர்க்க போராட்ட கோட்பாடாக உள்வாங்கவில்லை. இந்த நிலையில் பிற்போக்கு வலது பிரிவுகள், இந்த தேசியத்துக்கு தலைமை தாங்கும் அவலம் நிகழ்ந்தது. இலங்கையில் தேசியத்தை அடிப்படையாக கொண்ட இரண்டு வலது பிரிவுகள் தமக்குள் மோதிக் கொள்வதன் மூலம், மக்களை பகடைக் காய்களாக்கினர். இந்த தேசியம் மக்களின் அடிப்படை தேவையை அடிப்படையாக கொண்டு அவர்களின் நலன்களை முன்வைக்கவில்லை. மாறாக ஒரு சில பிரிவுகளின் குறுகிய நலன்களையும், யுத்தத்தின் குறிப்பான பிரச்சனைக்குள் தீர்வுகளை முன்வைத்து, அரசியல் மலட்டுத்தனத்தை மேலும் ஆழமாக்குவது இன்றுவரை தொடருகின்றது. இதை அனைத்து தரப்பும் செய்வதில் பொதுவான பண்பைப் பேணுகின்றனர். அதாவது வலது அரசியலுக்கு வாலாக நீடிப்பதையும், அதற்கு விளக்கம் கொடுப்பவர்களாகவும், கொள்கை வகுப்பாளராகவும் மாறிவிடுகின்றனர். இலங்கையில் எல்லா தேசிய இனங்களும் ஒன்றாக வாழ்ந்தாலும் சரி, பிரிந்து வாழ்ந்தாலும் சரி, எப்போதும் அடிப்படையான அரசியல் கோசம் எப்போதும் ஒன்றே. இதை நாம் துல்லியமாகவும் விரிவாகவும் பார்ப்போம்.

உடனடியாக யுத்தத்தை நிறுத்து! அமைதியை நிரந்தரமாக்கு! தேசிய பொருளாதாரம் ஒங்குக! மறு காலனியாதிக்க முயற்சி ஒழிக! மக்களின் அதிகாரம் ஒங்குக!

● தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும். தேசிய இனங்கள் தாம் வாழும் பிரதேசங்களில் நிர்வாகங்களை கையாளும் ஆட்சியமைப்பை உருவாக்க வேண்டும்.

● சுயநிர்ணயம் என்பது பிரிந்து போவதையும், ஜக்கியப்பட்டு வாழ்வதையும் அடிப்படையாக கொண்டது என்பதை பரஸ்பரம் அங்கீகரிக்க வேண்டும்.

● சுயநிர்ணயம் என்பது தேசிய பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட தேசியமாகும் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

● தேசியத்துக்கு எதிரான சகல அன்னிய பொருளாதாரத்துக்கு தடை விதிக்கப்பட வேண்டும். அதாவது உலகமயமாதலை திட்டவட்டமாக எதிர்த்து சுயநிர்ணயத்தை வரையறுக்கவேண்டும்.

● சகல வெளிநாட்டு மூலதனங்களையும், சொத்துக்களையும் நட்டஈடு இன்றி தேசிய மயமாக்கி தேசிய பொருளாதாரத்தை வளர்க்க வேண்டும்.

● மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்யும் வகையில், தேசிய உற்பத்திகளை இனம் கண்டு அதை வளர்த்தெடுக்கவேண்டும்.

●ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட பணப்பயிர் உற்பத்தி முற்றாக தடை செய்யப்பட வேண்டும்.

● தேசிய வளங்களை சரியாக அடையாளம் காணவும், அவற்றின் சமூகப் பெறுமானத்தை உயர்த்தி வளர்தெடுக்க வேண்டும்.

● தேசியத்தை கூறுபோட்டு ஏலம் போட்டு விற்க கோரும் சகல வெளிநாட்டுக் கடன்களையும், உள்நாட்டு தரகு கடன்களையும் அதற்கான வட்டிகள் கொடுப்பதையும் உடன் நிறுத்தவேண்டும். அதை தேசிய பொருளாதார வளர்ச்சிக்காக திருப்பிவிடவேண்டும்.

● சிறுபான்மை தேசிய இனங்களான மலையக, முஸ்லீம் மக்களின் சுயாட்சி பிரதேசங்களை அங்கீகரிக்கப்பட வேண்டும்.

● சிறுபான்மை இனங்களின் ஜனநாயக பூர்வமான வளர்ச்சியை உறுதி செய்யும் ஆட்சியமைப்பை உருவாக்க வேண்டும்.

● சிறுபான்மை இனங்கள் மேலான கடந்தகால, நிகழ்கால இனவாத ஒடுக்கமுறையை தெளிவாக அடையாளம் கண்டு விமர்சனத்துக்குள்ளாக்க வேண்டும்.

● சிறுபான்மை இனங்களும் பெரும்பான்மை இனங்களும் பரஸ்பரம் ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து தேசியத்தை உயர்த்தி ஐக்கியத்தை வளர்க்க வேண்டும்.

● சகல இனப் பிளவு நடவடிக்கையையும் எதிர்த்து போராடவும், ஐக்கியத்தை வளர்ப்பதும் அடிப்படையான தேசிய கடமையாக ஏற்க வேண்டும்.

● மலையக மக்களின் பிரஜாவுரிமை வழங்கப்படுவதுடன், இது வரலாற்று ரீதியாக மனித விரோத குற்றத்தை இனம் காணவேண்டும்.

● இனவாத ஒடுக்குமுறைக்கு வௌவேறு பிரிவினர் சிறுபான்மை இனத்தில் தொடங்கி பெரும்பான்மை இனம் வரை எந்த வகையில் இணைந்தும் தனித்தும் நடத்தினர் என்பதை, தெளிவாக அரசியல் ரீதியாக விமர்சனத்துக்குள்ளாக்க வேண்டும்.

● பெரும்பான்மை இன மக்கள் மேல் நடத்திய குறுந்தேசிய இனத் தாக்குதலை இனம் கண்டு விமர்சனத்துக்குள்ளாக்க வேண்டும்

● திட்டமிட்ட இன அழிப்பு சார்ந்து உருவான குடியேற்றங்கள் அடையாளம் காணப்பட்டு, அந்த பகுதிகள் சிறுபான்மை இனத்திடம் ஒப்படைத்தல் வேண்டும்.

● இங்கு ஆயுதமேந்தியவர்கள் அந்த இடத்தை விட்ட வெளியேற்றப்பட வேண்டும்.

● அதே நேரம் அந்த பகுதிகளில் வாழும் பெரும்பான்மை இன மக்களின் பாதுகாப்புக்கு வாழ்க்கைக்கு சிறுபான்மை இனங்கள் பொறுப்பு ஏற்க வேண்டும்.

● இனயுத்தத்தை நிறுத்தி மக்களின் வாழ்வை மேம்படுத்துவது அவசியமானது.

● மூன்றாவது நாட்டின் மத்திஸ்தம் என்ற போர்வையில் நடக்கும், ஏகாதிபத்திய தலையீட்டை உடன் நிறுத்த வேண்டும்.

● சகல வெளிநாட்டு கண்காணிப்பு குழுவும், எதிர் காலத்தில் இதை கண்காணிக்க தலையிட முயலும் அமைதிப்படை முயற்சியும், உடன் தடுத்து நிறுத்தி வெளியேற்றப்பட வேண்டும்.

● அமைதியையும் சமாதானத்தையும் ஜனநாயகக் கோரிக்கையின் அடிப்படையில் இனம் கண்டு, பரஸ்பரம் அங்கீகரித்து ஏற்படுத்த வேண்டும். இங்கு ஜனநாயக கோரிக்கை என்பது எந்த இனத்துக்கும் விசேட அதிக சலுகைகளை வழங்குவதை மறுக்கின்றது.

● சகல இனவாத படைகளையும் கலைத்து, மக்களை ஆயுதபாணியாக்க வேண்டும்.

● சகல நிர்வாக அலகுகளும் கீழ் இருந்து மேல் நோக்கி விரிவுபடுத்த வேண்டும்.

● மக்களை தமது சொந்த பிரதேசத்தில் மீள குடியேற்ற வேண்டும்.

● பயங்கரவாதச் சட்டம், அவசரகாலச் சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டம் நீக்கப்பட வேண்டும்.

● உலகளாவில் நாடு திரும்ப விரும்பும் அரசியல் மற்றும் பொருளாதார அகதிகளுக்கான அடிப்படை வசதியை செய்து கொடுக்க வேண்டும். குறிப்பாக இந்திய அகதிகள் விடையத்தில் விசேட கவனம் செலுத்தவேண்டும்.

● கடலிலும் நிலத்திலும் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகளை அகற்றி மக்களின் சமூக பொருளாதார மீட்சிக்கு முதலுரிமை வழங்க வேண்டும்

● திட்டமிட்ட இனவாத அடிப்படையில் கொண்டு வந்த இரட்டை பிரஜாவுரிமை பறிப்பை ரத்து செய்து, இரட்டைப் பிரஜாவுரிமையை அங்கீகரிக்க வேண்டும். அதாவது இலங்கை பிரஜாவுரிமையை வைத்திருக்கும் உரிமையை நாடு கடந்தவர்களுக்கு வழங்கவேண்டும்.

● நாடு கடந்து வாழ்பவர்களை கட்டாயப்படுத்தி நாடு கடத்துவதற்கு எதிராக போராட வேண்டும்

● யுத்தத்தால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு, கல்விச் சீரழிவுகளை மேம்படுத்தும் வகையில் அடிப்படை வசதிகளை வழங்க வேண்டும்.

● குடும்பத்தின் ஒரு உறுப்பினரை இழந்த நிலையில் ஆதரவற்று வாழ்கின்றவர்களின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கு அடிப்படையான வசதிகளை வழங்க வேண்டும்.

● யுத்தத்தில் அங்கவீனமானவர்களுக்கு விசேடமான அடிப்படையான வாழ்க்கை ஆதாரங்களை உறுதி செய்யவேண்டும்.

● அனைத்து அரசியல் கைதிகளையும், சமூக பொருளாதார கைதிகளையும் விடுவிக்க வேண்டும்.

● கடந்த கால அரசியல் படுகொலைகளை வரலாற்று ரீதியாக இனம் காணப்பட்டு அவற்றை சமூக ஆதாரமாக்க வேண்டும்.

● தனிச்சலுகை கொண்ட மக்களை பிளவுபடுத்தும் ஜனநாயக விரோத சமூகப் பொருளாதார கூறுகளை உடன் தடை செய்யவேண்டும்.

● சகல இனவாத, மதவாத, சாதியக் கட்சிகளையும் தடை செய்யவேண்டும்.

● இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல், கல்வி, கலை இலக்கியங்கள், அமைப்பு வடிவங்கள், மற்றும் பண்பாட்டு கலாச்சார கூறுகள் அனைத்தும் நீக்கப்படவும், தடை செய்யப்பட வேண்டும். இவை அனைத்தும் வரலாற்று ரீதியாக அடையாளம் காணவேண்டும்.

● அரசில் இருந்து மத ஆதிக்கத்தை, மதத் தன்மையை நீக்கவேண்டும். மாறாக மக்களின் தனிப்பட்ட வழிபாட்டு உரிமைக்குள், மக்களின் சமூக பொருளாதார தேவை ப+ர்த்தி செய்வதன் ஊடாக, வழிபாட்டின் சமூக அறியாமையை படிப்படியாக நீக்கவேண்டும்.

● சமூகத்தில் இனம் கடந்து புரையோடிப் போயுள்ள சாதிய கொடுமைகளை முற்றாக நீக்கவும், அதற்கெதிரான அனைத்து முயற்சிகளை முற்றாக தடை செய்யவேண்டும்.

● அனைத்து சாதிப்படி நிலைகளும் ஒழித்துக்கட்டப்பட வேண்டும். பிறப்பை முன்னிறுத்திய உழைப்பை வரையறுக்கும் சாதிய கூறுகள் முற்றாக தடை செய்ய வேண்டும்.

● சாதிய ரீதியான ஒடுக்குமுறையை வரலாற்று ரீதியாக அடையாளம் காணவும், இதற்கும் இந்து மதத்துக்கும் உள்ள உறவு தெளிவாக வரலாற்று ரீதியாக அம்பலப்படுத்தப்பட வேண்டும்.

● தீண்டாமையை ஒரு சமூகக் குற்றமாக பிரகடனம் செய்யவேண்டும்.

● சமூக அடிமைப் பிராணியாக வாழும் பெண்களின் மேலான ஆணாதிக்க கொடுரங்களில் இருந்து பெண்களை விடுவிக்கவேண்டும். இதற்கு எதிரான அனைத்து முயற்சிகளையும் தடை செய்ய வேண்டும்.

● பெண்ணின் மீதான ஒடுக்குமுறையை வரலாற்று ரீதியாகவே அடையாளம் காணவேண்டும்.

● மனிதனை மனிதன் சுரண்டும் ஜனநாயக விரோதத்தை ஒழித்துக்கட்டவேண்டும். இதை மீட்டு எடுக்கும் அனைத்து முயற்சிக்கும் தடை விதிக்க வேண்டும்.

● மக்களை பிளவுபடுத்தும் இனம், பால், சாதி.. சார்ந்து நடத்தும் பிளவு நடவடிக்கைகளான அரசியல், அமைப்பு வடிவங்கள், கல்வி முறைகள், பொருளாதார கூறுகள், கலை இலக்கிய முயற்சிகள், பண்பாட்டு கலாச்சார கூறுகள், மரபுகள் அனைத்தும் முற்றாக தடை செய்யப்பட வேண்டும் அத்துடன் இதை எதிர்த்து போராட வேண்டும். மக்கள் இயற்கையான உயிரியல் பிராணியாக வாழ்வதை உறுதி செய்ய வேண்டும்.

● அனைத்து அரசு சாராத ஏகாதிபத்திய நிதியுதவியில் இயங்கும் நிறுவனங்களையும் (தன்னார்வக் குழுக்களையும்) முற்றாக தடை செய்ய வேண்டும். அத்துடன் இது வெளிநாட்டு நிதியாதாரத்தில் இயங்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

● மக்களின் உழைப்பு, அவர்களின் வாழ்வு, அவர்களின் பண்பாட்டை, கலாச்சாரத்தை உயர்வானதாக மதித்து அவற்றை முன்னிலைப்படுத்த வேண்டும்.

● சகல வெளிநாட்டு உள்நாட்டு கலாச்சார பண்பாட்டு சீரழிவு தடை செய்யப்பட வேண்டும். மாறாக தேசிய பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் தேசிய உற்பத்தி மீது வளர்த்தெடுக்க வேண்டும்.

● நிலப்பிரபுத்துவ தரகு பண்பாட்டு கலாச்சாரத்தை தடை செய்யவேண்டும். மக்களின் உயர்ந்த சமூக பண்பாட்டு கலாச்சார வாழ்வை மீட்டெடுக்கவேண்டும்

● மக்களின் உழைப்பும், வாழ்வும் சார்ந்த பண்பாட்டு கலாச்சாரத்தை முன்னிலைப்படுத்தும் அதேநேரம், உலகளாவில் இருந்து இதை வரவேற்க வேண்டும்.

● இனவாத இனப்பிளவை அடிப்படையாக கொண்ட தரப்படுத்தல் முறையை எதிர்த்து, பல்கலைக்கழகத்துக்கு தகுதி பெறும் அனைத்து மாணவர்களுக்கும் அனுமதியை வழங்கவேண்டும்.

● பின்தங்கிய மாவட்டங்களின் (தமிழ், சிங்கள, மலையக, முஸ்லீம் மக்களின்) கல்விக்கான அடிப்படை வசதியை, உயர்த்தவேண்டும்.

● இலங்கை தேசிய வளத்துக்கும் அது சார்ந்த உற்பத்திக்கு ஏற்ப கல்வியை முற்றாக மாற்றவும், அதற்கு இசைவான பல்கலைக்கழக பட்டப்படிப்புகளை வழங்க வேண்டும்.

● உயர் அதிகாரிகளை உருவாக்கவும், உயர் அந்தஸ்துகான கல்விக்கு பதிலாக மக்களின் வாழ்வுடன் இணைந்த, அவர்களின் சமூக வாழ்வை மேம்படுத்தும் கல்வியை வழங்கவேண்டும்.

● முன்னேறிய கல்வி அடிப்படையை பெறும் வகையில், பின் தங்கிய மக்கள் கல்வியை பெறும் வகையில், சமுக பொருளாதார சூழலை உருவாக்க வேண்டும்.

● இலங்கையில் தாய் மொழிக்கு அடுத்ததாக பரஸ்பரம் தமிழ் மற்றும் சிங்களத்தை கட்டாய மொழியாக்க வேண்டும்

● பல்கலைக்கழகம் வரை தாய் மொழி கல்வியை அமுல்படுத்தப்பட வேண்டும். ஆங்கில மொழியிலான அடிப்படைக் கல்வியை தடை செய்யப்படவேண்டும்.

● கல்வியில் இருந்து மதக் கல்வியை முற்றாக தடை செய்யப்படவேண்டும்.

● அனைவருக்கும் பல்கலைகக்கழகம் வரை இலவசக் கல்வியை தாய் மொழியில் வழங்கப்பட வேண்டும்

● இன மத அடிப்படையிலான வேலை வாய்ப்புமுறை தடை செய்யப்பட வேண்டும்.

● சகல மக்களுக்கும் வேலை வாய்ப்பை தேசிய அரசு உறுதி செய்ய வேண்டும்.

● மக்களின் சமூகத் தேவையை முதன்மைப்படுத்தி வேலை வாய்ப்பு உருவாக்கப்படவேண்டும்.

● சமூக இழிவாக கருதும் வேலைகளில் சமூக கடமைகளை ஒழித்துக் கட்டவும், சமூக இழிவாகப் பட்ட வேலைகளின் சமூக அந்தஸ்த்தை உயர்த்தவேண்டும்.

● சிறிலங்கா என்ற இனவாத பெயருக்கு பதில் மக்களின் வாழ்வியலுடன் தொடர்புடையதாக மாற்றப்பட வேண்டும்

● சகல வெளிநாட்டு சார்ந்த இராணுவத்துறை, உளவுத்துறை, சேவைத்துறை, கலை கலாச்சாரத்துறை, பொருளாதாரத் துறை என அனைத்தும் முற்றாக தடை செய்யப்டவேண்டும்.

● தேசியத்துக்கு எதிரான தரகு முதலாளித்துவ வர்க்கம் மற்றும் நிலப்பிரபுத்துவ வர்க்கத்துக்கு எதிராக போராடி அந்த வர்க்கத்ததை ஒழிக்க வேண்டும்.

● உழைக்கும் மக்களின் தலைமையிலான மக்கள் ஆட்சியை அமைக்க வேண்டும்.

● தேசியத்தை அழிக்கும் காட் ஒப்பந்தம் முதல் அனைத்து சர்வதேச ஒப்பந்தங்களையும் கிழித்தெறிய வேண்டும்.

● ஏகாதிபத்தியங்களையும் அதன் பொருளாதார அடிப்படையான உலகமயமயமாதலையும் எதிர்த்து போராடவேண்டும்.

● உலகளவில் ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதரவை எமது தேசியம் சார்ந்து நிற்கவும், அவர்களின் ஆதரவையும் கோரவேண்டும்.

● உலகளவில் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவை தெரிவிக்கவும், அதற்கு ஆதரவாக போராடவும் வேண்டும்.

● மறுகாலனித்துவ முயற்சியை எதிர்த்து ஆயுதபாணியாக வேண்டும்.

● மக்களின் கருத்து எழுத்து பேச்சுச் சுதந்திரம் அங்கீகரிக்கப்பட வேண்டும்

● எட்டுமணி நேர உழைப்பு, எட்டுமணி நேர ஒய்வு, எட்டு மணி நேர உறக்கம் உறுதி செய்யப்பட வேண்டும். உழையாதவனுக்கு உணவில்லை என்ற சட்டம் அமுல்படுத்த வேண்டும்.

● வயோதிபர்கள், அங்கவீனர்கள், குழந்தைகள் சமூக பொறுப்பில் பராமரிக்க வேண்டும்.

● அனைவருக்கும் மருத்துவ வசதிகள் இலவசமாக வழங்கப்பட வேண்டும்.

● அனைவருக்கும் இருப்பிடம், உணவு, நீர், சுத்தமான காற்று கிடைப்பதை இச் சமூகம் உறுதி செய்ய வேண்டும்.

● மக்களின் ஒய்வுகள் சமூக வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் மக்களின் எழுச்சிக்கான அடிப்படைகளை உறுதி செய்யவேண்டும்.

● இயற்கை வளங்களை பாதுகாக்கவும், அது சார்ந்து பொருளாதார கட்டமைப்புகளுடன் கூடிய வாழ்வு முறையும் முற்றாக மாற்றியமைக்க வேண்டும்.

● கற்பு, விதவை, தீண்டாமை போன்ற இழிவுக் கொடுமைக்கான சமூக பண்பாட்டுக் கூறுகளையும், கடமைகளையும் எதிர்த்து அதை முற்றாக மாற்றியமைக்க வேண்டும்.

● வரைமுறையற்ற நேரடி மற்றும் மறைமுக வரிமுறை நீக்கப்பட்டு நியாயமான சமூக பொருளாதார அடிப்படையில் வரிமுறை அமுல்படுத்தப்பட வேண்டும்.

மக்களின் அடிப்படைத் தேவையும், அவர்களின் வாழ்க்கையுமே ஒரு தேசத்தின், தேசியத்தின் அடிப்படையான விடையமாகும். மக்களின் வாழ்வைப் பற்றி, அவர்களின் மகிழ்ச்சியான வாழ்வையிட்டு அக்கறைப்படாத அனைத்தும், மக்களை சூறையாடுவதுதான். இது சிறுபான்மை பிரிவின் நலன்களுடன் தொடர்புடையதாக, உலகமயமாதல் விரிவாக்கத்துக்கு உட்பட்டதே. இதை யாரும் மறுக்க முடியாது.

இடைக்கால தீர்வு, படிப்படியான தீர்வு என்று காட்டும் எல்லா வகையான மோசடியும் மக்களுக்கு எதிரானதே. அதேபோல் ஒரே நாளில் தீர்வும் என்பதும் மோசடியே. உழைக்கும் மக்கள் தமது பிரச்சனையை தாமாகவே தீர்க்கும் ஒரு வரலாற்றுப் பாதையில், பல படிகளைக் கடக்கலாம். ஆனால் அதை நிட்சயமாக உழைக்கும் மக்களின் ஆட்சியாக மட்டுமே இருக்கமுடியும். உழைக்கும் மக்கள் அல்லாத எந்த ஆட்சியும், முன்வைக்கும் படிநிலை தீர்வுகள் எப்போதும் உழைக்கும் மக்கள் மேலான படிமுறை அடக்குமுறைதான். இது எப்போதும் தேசத்தை, தேசியத்தை, தேசிய வளத்தை, இயற்கையை, உழைப்பை, உழைப்பின் வளத்தை, உழைப்புத் திறனை, பண்பாட்டை, கலாச்சாரத்தை அழித்து ஏகாதிபத்திய உலகமயமாதலுக்கு சேவை செய்வதாகவே இருக்கும். இதை நாம் அனுமதிக்க போகின்றோமா! இதை எதிர்த்து நாம் என்ன செய்யப் போகின்றோம்! சரணடைவா! போராட்டமா! நீ நிச்சயமாக இதில் ஒன்றை தெரிவு செய்தாக வேண்டும்.

தேசியத்தை பாதுகாப்போம்

ஏகாதிபத்தியத்தை எதிர்ப்போம்!

சர்வதேசியத்தை பாதுகாப்போம்!

உலகமயமாதலை எதிர்ப்போம்!"


இது ஒருபுறம். மறுபக்கம் சமாதானம் பேசுபவர்கள் அமைதி பற்றி தமிழ் சிங்கள மக்களுக்கு சதா உபதேசம் செய்பவர்கள், தமது சொந்தத் தீர்வை கட்டாயம் முன்வைக்க வேண்டும். குறிப்பாக அனைத்து அரசியல் கட்சியும் தமது கட்சியின் வேலை திட்டத்தில் இவை தெளிவாக முன்வைத்து பிரச்சாரம் செய்ய வேண்டும். இல்லாத அனைவரும் அப்பட்டடான மக்கள் விரோத அரசியல் பொறுக்கியாவர்.

நன்றி, நம்மொழிக்காக, அளவை உமா. பாஸ்கரன்

Sunday, November 26, 2006

யாருக்குத் தேசியம்? யாருக்கு ஜனநாயகம்?

யாருக்குத் தேசியம்? யாருக்கு ஜனநாயகம்?

பி.இரயாகரன்
26.11.2006


தற்கு பதில் தெரிந்தவர்கள், அனைத்தையும் கேள்விக்குள்ளாக்க முடியும். தமக்காக தேசியம், தமக்காக ஜனநாயகம், இது தான் பொறுகளின் உயர்ந்தபட்ச அரசியல் எல்லை. புலம்பெயர் நாட்டில் புலிகள் ரீ.பீ.சீயை தாக்கி அழித்துள்ளனர். அழித்தால் புலித் தேசியம் வாழ்ந்துவிடாது. தேசியத்தின் பெயரில் தாக்கப்பட்டனர் என்பதால், புலியெதிர்ப்பு ஜனநாயகம் வாழ்ந்துவிடாது. ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். ரீ.பீ.சீ மீதான புலியின் வன்முறை, நீண்ட அவர்களின் பாசிச வரலாற்றின் தொடர்ச்சி தான். இது சபாலிங்கம் கொலை, நாதன் கஜன் கொலை முதல் தொடர்ச்சியான பல சம்பவங்கள், எம் மண்ணில் மட்டுமல்ல புலம்பெயர்ந்த நாட்டிலும், பாசிசம் கொடிகட்டி பறக்க முனைவதையே பறைசாற்றுகின்றது.


புலி ஆதரவு ஊடகத்துறையை சேர்ந்த செய்தியாளர்கள் தொடர்ச்சியாக அரசாலும், ஜனநாயக வழிக்கு வந்ததாக பறைசாற்றும் ஜனநாயக கொலைகாரர்களாலும் கொல்லப்படுவதையும, அவை முடக்கப்படுவதையும் எப்படி நாம் அங்கீகரிக்க முடியாதோ, அதேயளவுக்கு புலியெதிர்ப்பு ஊடகத்துறையை புலி அழிப்பதை நாம் அங்கீகரிக்க முடியாது. கண்டனங்கள், விமர்சனங்களை ஒரு தரப்பாக்கி, அது சார்புத்தன்மை பெற்ற போலித்தனமாகி விடுகின்றது. மக்கள் பற்றி எந்தக் கரிசனையுமற்ற நிலையில் தான், தத்தம் சொந்த குறுகிய நலனில் கண்டனங்கள் விலை போகின்றது.


வாய்கிழிய வக்கிரமாகவும், கவர்ச்சியாகவும் ஆடிக் காட்டியும் தான், இவை அனைத்தும் அரங்கேறுகின்றது. கருத்தை கருத்தாகவே எதிர்கொள்ள வக்கற்ற தளத்தில், புலிகள், புலி எதிர்ப்பாளர்களும் ஒரே குறிக்கோளுடன் தான் செயல்படுகின்றார்கள. பரஸ்பரம் தமது எதிரிக்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு, மக்களின் முதுகில் ஏறி நின்றே விபச்சாரம் செய்கின்றனர். புலிகள் தேசியம் என்கின்றனர், புலியெதிர்ப்பு கும்பலோ ஜனநாயகம் என்கின்றனர். சரி யாருக்கு தேசியம்? யாருக்குத் தான் ஜனநாயகம்? இதைபற்றி விவாதிக்க வக்கற்றவர்கள் தான், இதைச் சொல்லி ஊடகத்தில் சொந்த விபச்சாரம் செய்கின்றனர்.


புலியெதிர்ப்பு கருத்துகளை எதிர்கொள்ள முடியாத புலிகள், 26.11.2006 அன்று காலை பிரபாகரனுக்கு பிறந்தநாள் பரிசாகவும், மாவீரருக்கு சமர்ப்பணமாகவும் ரீ.பீ.சீயை அடித்து நொருக்குகின்றனர். இதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக, அதாவது 23.11.2006 அன்று புலியெதிர்ப்புக் கும்பல் ப.வீ.சிறீரங்கனின் கருத்தை எதிர்கொண்டு பதிலளிக்க முடியாது அவருக்கு மனநோய் என்று அறிவித்து, மருத்துவம் செய்ய பணம் தரக்கோருக்கின்றனர். பார்க்க: http://namthesam.blogspot.com/2006/11/blog-post_23.html. என்ன அரசியல் ஒற்றுமை. கருத்தை கருத்தாக எதிர்கொள்ள வக்கற்ற மக்கள் விரோதிகள், இப்படி ஒரேவிதமான அணுகுமுறையை கையாளுகின்றனர். ப.வீ.சிறீரங்கனுக்கு ஜனநாயகம் கிடையாது என்பது, இந்த புலியெதிர்ப்பு கும்பலின் ஜனநாயக அரசியல் அகராதி வரையறுக்கின்றது. புலிகளின் அரசியல் அகராதியும் இதைத் தான் ரீ.பீ.சீக்கு கூறுகின்றது. இதை யாராலும் மொழி பெயர்க்க முடியுமா?


புலிகள் ஆடம்பரமான வகையில் தமிழ் பேசும் மக்களின் பணத்திலும், மற்றவர்களின் ஊடகங்களை கைப்பற்றியும், அடியாட்படைகளைக் கொண்ட ஒரு பாசிச சர்வாதிகாரத்தையே ஊடகத்துறையில் நிறுவியுள்ளனர். யாராலும் மூச்சுவிட முடியாது. மூச்சுவிடுபவர்களின், மூச்சு நிறுத்தப்பட்டு விடும் என்ற நிலைமை. இப்படித்தான் ரீ.பீ.சீ மீதான தாக்குதலும் சொந்த பாசிச வழியையொட்டி நிகழ்த்தப்பட்டது.


இதன் மூலம் புலிகள் ஊடகத்துறையில் கொண்டுள்ள சர்வாதிகாரமே, ஒரே தகவல் மையமாக பவனிவருகின்றது. இப்படி வானொலிகள், தொலைக்காட்சிகள், பத்திரிகைகள், இணையங்கள் எண்ணிலடங்காதவை. தேசியத்தைச் சொல்லிக்கொண்டே, தேசியத்தை பாடைகட்டி சதா ஒப்பாரி வைக்கின்றனர். மீறும் போது ஊளையிடுகின்றனர். அனைத்தும், அனைத்து சிந்தனையும் புலிப் பாசிசமாக இருக்கும் வகையில், அனைத்து ஊடகத்துறையையும் வளைத்து போட்டும், மிரட்டியும் அடிபணிய வைக்கின்றனர். இப்படி ஒரேயொரு ஊளையிடும் ஊடகத் துறையை பரவலாகக் கொண்டு, தமது சொந்த நியாயத்தை சொல்ல முடியாத வகையில் தேசியம் பாசிசமாகி அலங்கோலமாகிக் கிடக்கின்றது. இதன் மூலம் தெரு நாய்கள் எல்லாம், அதை கிண்டி கிளறி ஊளையிட்டபடி தின்கின்றன.


புலிகளின் ஊடகத் துறையின் உள்ள வசதிகள், வாய்ப்புகள் மட்டுமின்றி, எல்லாவிதமான வளத்தையும் கொண்டு தமது நியாயமான போராட்டத்தை சொல்ல முடியாத வகையில் நியாயமற்ற புலிப் போராட்டத்தை நடத்துகின்றனர். இந்த நிலையில் தான் அடியாட்கும்பலைக் கொண்டும், படுகொலைகள் மூலமும் தமது பிரச்சாரத்தை செய்ய முனைகின்றனர். ஊடகத்துறையில் சொந்தப் படையை வைத்து, உப்புச்சப்பற்ற ஒப்பாரியாகிவிடுகின்றனர்.


இதை எல்லாம் வாய்ப்பாக கொண்டு புலிக்கு எதிராக ரீ.பீ.சீ ஊளையிடுகின்றது. தெரு நாய்களாக அலையும் இவர்கள், ஏகாதிபத்திய ரவுடிகளினதும் சமூக விரோதிகளினதும் துணையில் கொழுக்க நினைத்து, புலிகளைக் குதறுகின்றனர். குலைநடுக்கம் பிடித்து புலிகள் உறுமுகின்றனர். இந்த மக்கள் விரோத நாடகத்தையே மக்கள் முன் ஆடிக்காட்டுகின்றனர்.


இன்று, புலியெதிர்ப்பு ஜனநாயகம் பேசும் ரீ.பீ.சீ, ஜனநாயகம் பேச முன்னம் புலிகளின் கால்களை சுதந்திரமாக, ஆனால் நாயைப் போல் தாழ்ந்து நக்க முனைந்தவர்கள் தான். இப்படி நக்கிய ரீ.பீ.சீ, முதன் முதலில் வன்னியில் இருந்து மாவீரர் பாசிச செய்தியை நேரடியாக ஒளிபரப்பிய அந்தப் பாசிச பெருமையை இன்றும் பீற்றிக்கொள்பவர்கள் தான். புலியின் பாசிசத்தின் முன்னால், நாம் தான் புலம்பெயர் ஊடகவியலில் தலை சிறந்த புலி அரசியல் எடுபிடிகள் என்ற பெருமையை இரசித்து கோரியவர்கள். நாயிலும் கீழாய் தாழ்ந்து தாழ்ந்தே தவண்டு புலிக்கு வாலாட்டினார்.


முன்பு ரீ.பீ.சீ யில் சமகால நிகழ்வுகளை செவ்வாய் தோறும் ஆய்வு செய்து வந்த சுவிஸ்சைச் சேர்ந்த அழகுகுணசீலன் - ஜெந்திமால ஆய்வு நிகழ்ச்சியை கூட, புலிப்பாசிசத்தின் வேண்டுகோளுக்கு அமைய நிறுத்தினார். இப்படி ஜனநாயகம் வேஷம்கட்டி ஆடிய ரீ.பீ.சீ, அப்பட்டமான ஜனநாயக விரோதிகளாகவே புலிக்கு விசுவாகமாகவே குலைத்தனர்.


புலிகள் ஐ.பீ.சியை புடுங்கி தனதாக்கிய நிகழ்வும் சமகாலத்தில் தான் அரங்கேறியது. அதைத் தொடர்ந்து இன்றைய ரீ.ரீ.என்னும் புடுங்கப்பட்டது. ஐ.பீ.சி யின் வரவு, ரீ.பீ.சீயை புடுங்க முனைகின்றது. ரீ.பீ.சீ வள்ளென்று குலைக்க, தெரு நாயாக தேசியத்தில் இருந்து விரட்டப்படுகின்றனர். நாயிலும் கீழாக தாழ்ந்து குலைத்த ரீ.பீ.சீயை, புலியெதிர்ப்புக் கும்பலாக மாற, இப்படி புலிகளே காரணமாக இருந்தனர். இந்த நாய் வேஷத்தை கலைத்து தெருநாயாக முன்னம், தமிழ்செல்வனிடம் கடைசி வேண்டுகோளை விடுத்ததும், அவர்கள் இவர்களை முதுகில் தட்டி பின் முதுகில் குத்தியதுமான வரலாறு பலர் அறியாதது.


இப்படி புலி பாசிசத்தின் எடுபிடியாக மாறமுனைந்து தோற்ற நிலையில் தான், புலியின் தொடர்ச்சியான பாசிச முற்றுகைக்குள் இருந்து தப்பிப்பிழைக்க புலியெதிர்ப்பு கும்பலின் எடுபிடியாகியது. சுவிஸில் சிறையில் ஜனநாயக கம்பியை எண்ணும் இதன் நிர்வாகி ராம்ராஜ்சுக்கு, புலிகள் ஒரு அங்கீகாரம் கொடுத்து இருந்தால் நல்ல நாயாக இன்றுவரை குலைத்து இருப்பார். எந்த அரசியல் வேறுபாடும், புலிகளிடம் மாறுபட்ட் வகையில் இன்றுவரை கிடையாது. கொப்புதாவியவர்களிடம், இறுதியான ஒரு கொப்புத்தான் எஞ்சிக்கிடக்கின்றது.


அது இவர்கள் சொல்லும் ஜனநாயகம். புலிகள் கூறும் தேசியம் போல், இந்த ஜனநாயகமும் அதே தோற்றம் கொண்டது அதிக வேறுபாடில்லாதது. புலித் தேசியத்தின் பாசிச முகத்தின் ஒரு பக்கத்தை எதிர்க்க வெளிக்கிட்ட இவர்கள், படிப்படியாக சமாதான காலத்தில் புலியெதிர்ப்பு அணியாக பலம்பெற்றனர். எல்லா அரசியல் தெருப்பொறுக்கிகளும் தெரு நாய்கள் போல் ஊளையிட்டபடி ஒன்று சேர, ஜனநாயக மறுப்பைiயே ஆதாரமாக கொள்கின்றனர். புலிகள் தேசியத்தை சொல்லி தேசியத்தையே மறுப்பது போல், இந்த தெருநாய்களும் அதையே செய்கின்றனர்.


இந்த தெருநாய்கள் புலியை எதிர்ப்பதையே சொந்த அரசியலாக கொண்டு புலிக்கு சவால் விடுகின்றனர். புலிகள் இல்லையென்றால், வேறு எந்த அரசியலும் இவர்களின் சொந்த ஜனநாயகத்தில் இருப்பதில்லை. புலிகளின் இருப்புத்தான் இவர்களின் ஜனநாயகம். புலிகளின் அண்டப் புளுகுமூட்டைகளையும், ஆபாசங்களையும், பாசிச கோமாளித்தனத்தையும் அம்பலப்படுத்தி தமது சொந்த எடுபிடித்தனத்துடன் வாழ்வது ரீ.பீ.சீக்கு மிக இலகுவான விடையமாகியது.


இப்படி புலம்பெயர் சமூகத்தில், ரீ.பீ.சீ பலம்பொருந்திய புலியல்லாத ஒரு மாற்று ஊடகமாகியது. புலிகள் ஒருபுறம் தேசியத்தின் பெயரில் தேசிய விரோத கருத்தை ஊதுகின்றனர் என்றால், புலியெதிர்ப்புக் கும்பல் ஜனநாயகத்தின் பெயரில் ஜனநாயக விரோத கருத்தை ஊதுகின்றனர். நடப்பது நாதஸ்வரக் கச்சேரி தான். பாட்டுத் தான் வேறு. இந்த ரீ.பீ.சீ யை மையமாக வைத்து, பல பத்து புலியெதிர்ப்பு இணையத்தளங்கள் எல்லாம் இதே பல்லவி.


இந்த நிலையில் இதை எதிர்கொள்ள முடியாத புலிகள் ரீ.பீ.சீ மீதான புலித்தாக்குதலை மறுபடியும் நடத்தியுள்ளனர். புலிகள் இதை செய்திருப்பார்களா? 'ரீ.பீ.சீ: வானொலிக்கான தோழமை" என்ற பெயரில் ப.வி.சிறீரங்கன் எழுதிய கட்டுரையில் 'அந்த வானொலி மீதான பாசிசக்குண்டர்களின் தாக்குதலானது மீளவும் தமிழ்பேசும் மக்களை ஒடுக்கத்துடிக்கும் மேலாண்மையுடைய இயக்கங்களின் இழிசெயலாக இருக்கலாம். அல்லது இத்தகைய செயல்களால் அந்த வானொலியைப் பிரபலப்படுத்த முனையும் ஒரு தந்திரமாகவும் இருக்கலாம்." என்று சிறீரங்கன் குறிப்பிட்டுள்ளார். இந்த பொறுக்கிகளுடன் சிறீரங்கன் 'தோழமை" பற்றி என்ன கருத்து கொண்டிருக்கின்றார் என்பது, அரசியல் ரீதியாக விமர்சனத்துக்குரியது.


ஆனால் அவர் குறிப்பிடும் விடையம் தற்செயலானதல்ல. அந்தளவுக்கு ரீ.பீ.சீ யின் பின்னால் திரண்டு இருப்போர் முன்னாள் இன்னாள் கொலைகார இயக்கங்கள், அதில் இருந்தவர்கள் எந்த சுயவிமர்சனமுமின்றி அதே அரசியலையே இன்று செய்பவர்கள், சதிகாரக் கும்பல்கள் எல்லாம் ஒருங்கிணைந்தும் பிரிந்தும் செயல்படுகின்றனர். இதில் முன்னாள் புலிகளும் அங்கம். அவர்கள் கொண்டுள்ள அரசியல், மக்களுக்கு வெளியில் குறுக்குவழியில் மட்டும்தான் அரசியலைச் செய்கின்றது. தற்காலிகமாக உடனடியான புலிபாசிசத்தை ஒழிக்கும் வழி தான் இவர்களின் அரசியல் எல்லைப்பாடு.


மக்களில் நம்பிக்கையற்ற இவர்கள், அன்னிய சக்திகளில் பின்னால் வாயில் உமிழ்நீர் ஓழுக ஓடி நக்குகின்றவர்கள் தான். எப்படியும் எதையும் இதற்காக, எந்த வழியிலும் செய்யக்கூடியவர்களைக் கொண்ட ஒரு அணியாகும். இவர்கள் புலிகளைப் பயன்படுத்தி எப்படியும் வாழக் கூடியவர்கள். சிறீரங்கன் குறிப்பிட்டது போல், செய்யக் கூடியவர்கள் தான். இதில் எந்த சந்தேகமும் யாருக்கும் கிடையாது. தமது சொந்த பிரபல்யம், புலிகள் மீதான ஏகாதிபத்திய அணுகுமுறையை கடுமையாக்கவும், ரீ.பீ.சீ.க்கு பணத்தை திரட்டவும் என பல வழிகளில் ரீ.பீ..சீ இறங்காது என்பதைச் சொல்வதற்கு எந்த அரசியல் ஆதாரமும் அடிப்படையும் கிடையாது. கடைந்தெடுத்த அரசியல் பொறுக்கிகளின் கூடாரம் தான் புலியெதிர்ப்பு கும்பல். இந்த வழி புலிக்கு மட்டும் சொந்தமானதல்ல.


இன்று புலிக்கு போட்டியாக வடக்கு கிழக்கிலும் மற்றைய பகுதிகளிலும் நடக்கும் கொலைகளை இராணுவம் மட்டும் தனித்துச் செய்யவில்லை. ஜனநாயகத்துக்கு வந்த புலியெதிர்ப்பு கும்பலின் ஒரு பகுதியின் துணையுடன் தான் செய்யப்படுகின்றது. இப்படி தான் புலியெதிர்ப்பு ஜனநாயகமும் தனது அரசியல் வரையறையைக் கொண்டு விபச்சாரம் செய்கின்றனர்.


இந்த நிலையில் ரீ.பீ.சீ மீதான தாக்குதலை ஓட்டி, எனது நண்பர் ஒருவர் புலிகள் இவ்வளவு மோட்டுத்தனமாக இதைச் செய்யமுடியுமா என்றார்? நான் ஆம் என்றேன். சுவிஸ் பேச்சுவார்த்தையை மோட்டுத்தனமான தம்மைத் தாம் கேலித்தனமாக்கி சந்தி சிரிக்க வைத்த புலிகள், இதை ஏன் செய்யமாட்டார்கள்! பாசிசமே அனைத்துமாகிவிட்ட நிலையில், இது போன்றவை தான் அவர்களின் அரசியல் இருப்புக்கான அடித்தளமாகிவிட்டது.


ரீ.பீ.சீயின் புலியெதிர்ப்பு கருத்தை எதிர்கொள்ள முடியாதவர்கள். அவர்கள் எவ்வளவு தான் ஆடம்பரமாக அலங்கரித்த ஊடகத்துறைகளை வைத்திருந்தாலும், மக்களை சார்ந்த மக்களின விடுதலையை பேசாத வரை, இதுதான் அவர்களின் முன்னுள்ள மாற்று வழியாக உள்ளது. கொல்லுதல், செயலற்றதாக்குதல், முடக்குதல், மிரட்டுதல் இதை விட புலிக்கு வேறு அரசியல் வழி கிடையாது. அவர்களுக்கு தெரிந்த ஒரே அரசியல் வழி இது தான். ரீ.பீ.சீ மீதான புலித்தாக்குதல் எதிர்பார்க்க வேண்டிய ஒன்று. அதை அவர்கள் செய்ய மாட்டார்கள் என்றால், அது தான் தவறு.


மக்கள் பற்றி உண்மையான அக்கறை, அவர்களின் விடுதலை பற்றி நேர்மையான சிந்தனை இல்லாத நிலையில், பேடித்தனமாக கோழைத்தனமான வகையில் புலிகள் இதை குறுக்குவழியில் எதிர்கொள்கின்றனர். இது புலிக்கு மட்டுமான சொந்த வழியல்ல. தாக்குவது, கொல்வது, அவதூறு பூசுவது, மனநோயாளியாக காட்டுவது மக்கள் விரோத அரசியலில் அரசியலாகிவிடுகின்றது. ஜனநாயக ரீதியில் புலிகள் முதல் புலியெதிர்ப்புக் கும்பல் வரை விவாதிக்க, பேச வக்கற்றுக் கிடக்கின்றனர்.


இன்று தமிழ்பேசும் மக்கள் தேசியத்தின் பெயரில் புலிகளின் பாசிசத்தை மட்டுமல்ல, ஜனநாயகத்தின் பெயரில் புலியெதிர்ப்பு ஜனநாயக விரோதத்தையும் ஒருங்கே எதிர்கொண்டு நிற்கின்றனர் என்பதே உண்மை. மக்களின் அடிப்படை உரிமைகளை மறுத்து, எங்கும் ஒரு அராஜகம் கட்டவிழ்த்து விடப்படுகின்றது. இதை எதிர்கொண்டே, எதிர்வினையற்ற வேண்டியுள்ள வரலாற்றுக் கட்டத்தில் நாம் உள்ளோம் .