தமிழ் அரங்கம்

Thursday, June 21, 2007

தாலிதான் பெண்ணுக்கு வேலி: ஒரு ஆணின் கூற்று

தாலிதான் பெண்ணுக்கு வேலி

ஒரு ஆணின் கூற்று. . .

சபேசன் கனடா

'மாங்கல்யம் தந்துதானே மமயேவனு. . ." என்கின்ற மந்திரச்சத்தமும், மணியோசையும், நாதஸ்வர இசையும், சந்தண சாம்பிராணிகளின் வாசனையும் அலங்கார சோடனைகளும் என்று எமது ஜம்புலன்களையும் ஆளுகின்ற ஒரு சூழ்நிலையில் வாழ்நாள் முழுவதும் உனக்கான உற்ற துணையுடன் வாழ்வின் ஆரம்பத்தை எட்டுகின்றோம் என்ற உணர்வலைகளின் எகத்தாழமான எதிர்பார்ப்புக்களுடனும் எனக்கு நீயே, உனக்கு நானே என்ற பரிபூரண ஆத்மதிருப்தியுடன் கழுத்தில் தாலியேறும் போது ஏற்படுகின்ற ஆனந்த உணர்வே எமது ஆண்களுக்கும் பெண்களுக்கும் வாழ்க்கையில் ஒரே ஒரு முறை ஏற்படுகின்றது.


இந்த கருத்தியலுக்கு எதிராக ஏங்கல்ஸ் சொன்ன வாசகம் 'திருமணம்" என்பது ஆண் பெண் இருபாலாருக்கிடையே ஏற்படுத்தப்பட்ட ஒரு (iவெரவைழைளெ) நிர்வாகம். இங்கு இருவரில் ஒருவரின் ஆதிக்கம் இருந்தே ஆகும். இந்தத்திருமணம் என்பது எங்கே நிச்சயப்படுத்தப்படுத்தப் படுகின்றது. . .? ஜயர், திருமணப்பதிவாளர் . . இல்லை ஒரு துண்டுக் கடுதாசி (திருமணப்பதிவுப்பத்திரம்) இந்த கடுதாசியை வைத்து இரண்டு மானுடங்களின் வாழ்வியலை ஒரு துண்டுக் காகிதத்தில் தீர்மானிக்கிறார்கள்.. இவற்றின் பின்னால் இந்த இரண்டு ஆண் பெண் என்ற மனித ஜீவன்களின் உணர்வுகளையும் உணர்சிகளையும் எப்படி கொலை செய்கிறார்கள் . . ?


தமிழர் வாழ்வில் காலம் காலமாக ஆணாதிக்கத்தின் விழுதுகளாக தொடரும் பெண்ணடிமைத்தனம் ரொறன்ரோ வரையும் தொடர்கின்றது. எத்தனை சந்தேகப் படுகொலைகள். . . ? எவ்வளவு குடும்ப வன்முறைகள். . ? இவற்றின் தோற்றுவாய்கள் எவை. . ?


தாலி பெண்ணுக்கு வேலி. .! உண்மைதான் எங்களது தோட்டத்து வேலி போன்றது. பாதுகாப்புக்காக இல்லை! நான் மட்டும்தான் மேயலாம் மற்றவனை மேய விடமாட்டன் . . ? இதே யதார்த்தத்தை எதிர் மறையாக மாத்திப் போட்டுப் பாப்பம். கலியாணம் கட்டினாப்பிறகு இவள் யாருடைய சொத்து என்று நிர்ணயம் செய்யும் சமூக அந்தஸ்தைக் கொடுக்கின்ற ஒரு அடையாளத்தை அந்த தாலியான அடையாளத்தை தாங்கி வருபவள் பெண்ணாக மட்டும் இருக்கின்றாள். இது கொடுமை. .! அப்படி ஒரு அடையாளம் ஆணாகிய எனக்கும் வேண்டும்.


ஆணாகிய நான் எத்தனை பெண்களிடமும் போகலாம் பெண்ணாகிய நீ எங்கும் யாரிடமும் போகமுடியாது. . எனது சொத்து நீ என்ற ஆணாதிக்கத்தை நிலை நிறுத்தும் வகையறாதான். அப்படியும் மீறிப் போனால் உனது கழுத்தில் தொங்கி மனச்சாட்சியான இதயத்துடன் தொட்டு உறவாடிக் கொண்டிருக்கும் 'தாலி" உன்னை மனச்சாட்சியாக நின்று கேள்வி கேட்கும். எவ்வளவு பெரிய பம்மாத்து. . ?


இதனை சமாளிக்க கூறுகின்ற சளாப்பல்தான் முந்தின காலத்தில ஆம்பிளையள் கலியாணம் கட்டினாப்பிறகு மெட்டி போட்டவையாம். உண்மையில் அப்படி ஒரு மெட்டிப்பழக்கம் இருந்ததேயில்லை. சரி இருந்தாலும் அது வந்ததும் தெரியாது போனதும் தெரியாமல் போனதெப்படி? ஏன் தாலியளவிற்கு முக்கியத்துவத்தை பெறவில்லை?


தமிழ் கலாச்சாரத்தில் அதிலும் முக்கியமாக இந்துக்கலாச்சாரத்தில் தாலிதான் ஆணாதிக்கத்தின் ஆணிவேர்.


இன்னமும் மோசமான நடைமுறை யதார்த்தம் என்னவென்றால் இந்த கேவலமான தாலியை மதிக்கவேண்டும் என்று வாதாடுவது ஆண்களிலும் பார்க்க பெண்கள்தான் எண்ணிக்கையில் அதிகம். ஆண் பெண் இருவகையினரின் மனங்களிலும் இது ஆழமாக பதியப்பண்ணுவதற்காக பாவித்த கருவிதான் மதம். திருமணம் என்ற மதச்சடங்கோடு இதனை இணைத்ததன் மூலம் இதனது வேர் ஆணிவேராக பாய்ந்துவிட்டது. இதனை ஆழப்பதித்ததன் காரணி இன்னுமொன்று 'தங்கம்". தங்கம் எமது வாழ்வியலில் ஒரு அழியாச்சொத்து. தாலி மஞ்சள் கிழங்கு, மஞ்சள் கொடியிலிருந்து ஏன் தங்கத்தை தேடிச் சென்றது? மதம், கலாச்சாரம், போன்று பொருளாதார அந்தஸ்து என்ற காத்திரத்தன்மையை ஆணாதிக்கத்துடன் இணைப்பதே அல்லாமல் வேறொன்றுமல்ல.


நடைமுறை யதார்த்தத்தில் தாலியை கட்டிய பல பெண்களிற்கு சில முற்போக்கான சூழ்நிலைகள் கிடைத்தும் அதன் பின்னர் இது ஒரு பிற்போக்கான 'ஆணாதிக்க அடையாளச்சின்னம்" என்று அறிவியல் ரீதியாக புரிந்த பின்னரும் கூட விடாப்பிடியாக தாலியை கைவிடத்தயாரக இல்லை. ஒன்று ஈகோ, தான் விட்ட பிழையை பிழையென்று ஒத்துக்கொள்ள முடியாமை. ஆல்லது அத்தின பேரும் அந்தமாதிரி புதுப்புடவை புதுநகை பெரிய தாலி என்று அடுக்கடுக்காக பெருமை காட்டும் போது நான் மட்டும் என்ன குறைந்தவளா? என்ற பொறாமையாக கூட இருக்கலாம். இதுவும் ஒரு வகையில் ஈகோதான்! அடுத்தது சுற்றம் சூழல் அப்பா அம்மா சமுதாயம் என்றவற்றிற்கான பயம்.


மற்றது முக்கியமானது பெண்களின் மனங்களில் இவர்களையும் அறியாமல் ஒட்டியிருக்கும் ஆணாதிக்கமே. உதாரணம், மாமியும் அம்மாவும் தங்கள் மகளுக்கும் மருமகளுக்கும் போதிக்கும் போதனை 'உன்ரை கணவனுக்காக வாழ்வதே உனது வாழ்க்கை"


எங்களது வாழ்வியலில் ஆணிலும் பார்க்க பெண்கள்தான் தாலியை காப்பாற்ற வேண்டும் என்ற பிற்போக்குத்தனத்pல் வாழ்வதற்கான காரணமே பெண்களின் மனங்களில் கூட ஆழமாக பதியவைக்கப்பட்ட ஆணாதிகம்தான். இது இவர்களையும் அறியாமல் எம்மைச் சுற்றிவர இருக்கும் 'சமூக ஒழுக்கங்கள்" ஏற்படுத்திய பாதிப்புகளே! இப்போது பெண்ணியவாதிகள் ஆத்திரமடையலாம் 'ஆண்கள் சுலபமாகக் கூறிவிடலாம் ஆனால் இங்கே கூறிய ஒழுக்கங்களை உடைப்பதற்கு முற்படும் போது ஆண்கள் சுலபமாக தப்பிவிட முடியும் ஆனால் சமூகத்தின் அழுத்தங்களும் பாதிப்புகளும் பெண்ணுக்குத்தானே அதிகம்" நிச்சயமாக மறுக்கவில்லை. . ! ஆனால் போராட்டத்தை ஏற்படுத்த . . மாற்றத்தை கொண்டுவர . . யாராவது முன்வந்தேயாக வேண்டும். முன்வருபவர்கள் பலவிதமான சவால்களையும் துன்பங்களையும் சந்திக்கவேண்டியும் நேரலாம்.


இது, எனது தோட்டம், . தான் மட்டும் மேயலாம் என்ற உரிமையை கொண்டதே 'தாலி" என்ற வேலியே அல்லாமல் பெண்ணுக்கு பாதுகாப்பிற்காக தோன்றியதல்ல தாலி.


சபேசன்


No comments: