தமிழ் அரங்கம்

Monday, August 6, 2007

ஒரே புற்று இரண்டு பாம்புகள்!

கொள்கையில் கீரியும் பாம்பும் போலத் தோற்றமளிக்கும் திராவிடர் கழகமும் இந்துவெறி ஆர்.எஸ்.எஸ்.ம் ""புரா'' திட்டம் மூலம் ஏகாதிபத்தியங்களுக்குச் சேவை செய்வதில் புதிய பங்காளிகளாகியுள்ளன. மத்தியப் பிரதேசத்திலுள்ள தீனதயாள் ஆய்வு மையம் எனும் ஆர்.எஸ்.எஸ். நிறுவனம் நடத்தி வரும் ""புரா'' திட்டம்தான் இந்தியாவின் முன்னோடித் திட்டம். இதனையடுத்துதான் வீரமணியின் ""பெரியார் புரா'' திட்டம் தொடங்கப்பட்டது. ""சித்ரகூடம் புரா'' எனப்படும் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் ""புரா'' திட்டம் பழத்தோட்டம், மூலிகைப் பண்ணை, பழங்குடியினர் மேம்பாடு, பசு பாதுகாப்பு என பல அரங்குகளிலும் நுழைந்து 100 மண்டலங்களில் காலூன்றியுள்ளது. பார்ப்பனியத்துடன் ஏகாதிபத்திய சேவையை விசுவாசமாகச் செய்துவரும் ""அம்பி''கள் இப்போது ""பெரியார் புரா''வின் சேவையைப் பாராட்டி ஊடகங்களில் எழுதி வருகின்றனர்.

நகர்ப்புறங்கள் சுண்டி இழுக்கும் கவர்ச்சியால் கிராமப்புற இளைஞர்கள் நகரங்களை நோக்கி இடம் பெயர்கின்றனர் என்றும் இதனால் ஏற்படும் விபரீத விளைவுகளை உணர்த்தி இந்த இடப்பெயர்ச்சியைத் தடுத்து நிறுத்தவே ""புரா'' திட்டத்தை செயல்படுத்தி வருவதாக ஆர்.எஸ்.எஸ்.இன் ""சித்ரகூடம் புரா'' கூறுகிறது. ஏகாதிபத்திய அடியாள் வேலையை மறைத்து இந்து வெறியர்கள் இப்படியொரு காரணத்தை அவிழ்த்து விட்டுள்ளபோது, "தளபதி' வீரமணியின் ""பெரியார் புரா'' வேறொரு காரணத்தைச் சொல்கிறது.
1944ஆம் ஆண்டு கிராம முன்சீப்கள் பயிற்சி மைய விழாவில் பேசிய பெரியார், ""நகரத்தில் கிடைக்கும் அத்தனை வசதிகளும் கிராமத்திலும் கிடைக்கச் செய்யவேண்டும்'' என்று குறிப்பிட்டாராம். எனவேதான், பெரியார் கொள்கை வழியில் ""புரா'' திட்டத்தைத் தொடங்கி கிராம மக்களுக்கு நகர்ப்புற வசதிகள் அனைத்தும் கிடைக்கச் செய்ய வீரமணி கும்பல் பாடுபடுகிறதாம்! இதே பாணியில், பெரியாரின் பேச்சுகள் எழுத்துக்களிலிருந்து இன்னும் பல புதிய காரணங்களை வீரமணி கும்பல் கண்டுபிடித்து, அவிழ்த்துவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

""புரா'' திட்டத்தைச் சாதகமாக்கிக் கொண்டு, ஏகாதிபத்திய சேவையுடன் ""கோமாதா பாதுகாப்பு'' எனும் கொள்கையை செயல்திட்டமாக வைத்து ஆர்.எஸ்.எஸ்.இன் சித்ரகூடம் புரா இயங்கி வருகிறது. ஆனால், பெரியார் பெயரை வைத்து பிழைப்பு நடத்தும் வீரமணி கும்பலின் பெரியார் புரா திட்டத்தில், ஏகாதிபத்திய அடியாள் வேலையைத் தவிர, பெயரளவுக்குக்கூட பெரியாரின் கொள்கையோ வெங்காயமோ இல்லை.

No comments: