தமிழ் அரங்கம்

Thursday, October 11, 2007

பாசிசம் வீங்கி வெம்பும் போது அது தொழுநோயாகின்றது.

பி.இரயாகரன்
11.10.2007

தமிழ்மணத்தில் புலி மற்றும் புலியாதரவு பாசிசம் தானாகவே முற்றி தொழுநோயாகிப் புழுக்கின்றது. புலிப் பாசிசமோ கட்டறுத்த எருமை மாடு போல் ஓடப்புறப்பட்டு, கண்மண் தெரியாது மோதுகின்றது. அது எப்படி எங்கிருந்து வீங்கி வெம்பியது என்பதை திரும்பிப் பார்த்தால், புலித்தேசியத்தின் வங்குரோத்தை மீள உலகமறிய அம்பலமாக்கி நிற்கின்றது
தமிழ்மணத்தில் தமிழச்சி மீதான மிரட்டல் மற்றும் பாலியல் அச்சுறுத்தல் (அதை அவர் அரசியல்ல என்கின்றார். அது எப்படி இருந்த போதும்) தொடர்பான விடையத்தில், பாசிசம் தன்னை அலங்கோலமாக்கியது. கண்மண் தெரியாது தமிழச்சி மீதே மோதுகின்றது. இருண்டதெல்லாம் பேய் என்ற பாசிசக் கருத்தியலும், அதன் சொந்த அச்சமும் கோழைத்தனமாகவே பாய்கின்றது. சமூகம் மீதான தனது பாசிச ஒடுக்குமுறை, கோழைத்தனமான பாசிசப் பண்பாக மாறிவிடுகின்றது.

இதைத் தான் எனது கருத்தின் மீதும் சரி, தமிழச்சி கருத்துக்கள் மீதும் சரி, பாசிச வழிமுறைகளில் எதிர்கொண்டனர். கண்ணைக் கட்டி நடுக் காட்டில் விடப்பட்டால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இவர்கள் கண் மண் தெரியாது அலைகின்றனர். அனைத்தையும் புலிப் பூதக்கண்ணாடியை போட்டுக் கொண்டு, குதறித் தின்ன முனைகின்றனர்.

தமிழச்சி விடையத்தை வெறும் கண்டனமாக விடுகின்ற மரபான சடங்குக்குப் பதில், அந்தப் போக்கை ஒரு ஆய்வாக அதன் பின்புலம் முழுவதையும் ஆராய நான் முற்பட்டேன். உண்மையில் எனது அக்கட்டுரை தமிழச்சியின் விடையத்தை குறிப்பாக்கியதே ஒழிய, கட்டுரையை பொதுத்தளத்துக்குள் நகர்த்தினேன்.

http://tamilarangam.blogspot.com/2007/10/blog-post_05.html

தமிழச்சி போல் அன்றாடம் பாதிக்கப்படும் நூற்றுக்கணக்கான பெண்கள் விடையத்தை நோக்கி கவனத்தைக் குறிப்பாக்க விரும்பினேன். அதன் பின்னணியை, அதன் நோக்கத்தை விவாதமாக்கவே நான் விரும்பினேன். இப்படி பிரான்ஸ், கனடா என்று எங்கும், இந்த பாலியல் வக்கிரம் புரையோடிக் காணப்படுகின்றது. அவர்கள் இதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாது, உளவியல் ரீதியாக மாய்ந்து மடிகின்றனர். மனைவி மீதான கணவனின் சந்தேகம் என்ற எல்லைவரை, இது வக்கிரமாகி குடும்பங்களே அலங்கோலமாகி விடுகின்றது. தமிழச்சி மாதிரி துணிவும் துணிச்சலும், அதற்குரிய ஆற்றலும் இந்த ஆணாதிக்க சமூக அமைப்பில் எம் பெண்களுக்கு கிடையாது. அநேகமாக இவை தனக்கு மட்டும் நடப்பதாக எண்ணி, பெண்கள் பலர் பயந்து ஒடுங்கி தனக்குள்ளேயே இதை இரகசியமாக்கிவிடுகின்றனர். இதைப் பயன்படுத்தி அப் பெண்ணை பாலியல் ரீதியாக நேரடியாக சுரண்டுவதாக கூட மாறிவிடுகின்றது.

இதன் மீதான விவாதம் ஒன்றையே தமிழ் சமூகம் நடத்துவார்கள் என்று எதிர்பார்த்தேன். கம்யூட்டருக்கு முன் அமர்ந்து இருந்து கொசிப்பு அடிக்கின்ற புலிப்பாசிட்டுக்கள், இதைத் தமக்கு எதிராக தாமே மாற்றினர். பின் தமது சொந்த (முட்டையில்) மொட்டையில் மயிர் புடுங்குவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

விடையத்தை திசை திருப்பிய பின், அதை கொசுக்கடியாக்கினர். அதையே கொசிக்க வெளிக்கிட்டு, அதை தமது கருத்துச் சுதந்திரம் என்றனர். விவாதம் என்ற பெயரில் மலிவான குப்பைகள். விடையத்துக்கு வெளியில், தெரு நாய்கள் போன்று ஊளையிட்டனர்.

நான் தமிழச்சி விடையத்தில் அதன் பின்னணியின் முழுப்பக்கத்தையும் ஆராய முற்பட்டேன். அவர் தமிழ்சோலை தொடர்பாக வெளியிட்ட கருத்தையும் அடிப்படையாக கொண்டு, புலியின் பின்னணி பற்றிய சந்தேகத்தை எழுப்பினேன். இதில் புலியை நேரடியாக குற்றம் சாட்டி இருக்கவில்லை. அவரை புலிக்கு எதிரானவர் என்றோ, புலியின் எதிரி என்றோ கூட கூறவில்லை. அவரின் தனிப்பட்ட நேர்மை காரணமாக, அவர் சந்தித்த விடையத்தை வெளிப்படையாக வைக்கின்றார்.

இந்த விடையத்தை நாங்கள் அவர் பார்க்கும் பார்வையில் இருந்து பார்க்கவில்லை. புலிகள் முரண்பட்டால், அதை அவர்கள் எதிர்கொள்ளும் வழிமுறை பாசிசம் தான். இது எமது கடந்த கால வரலாறு தந்த படிப்பினை. எதுவும் இதை மறுத்தலித்து விடவில்லை. இதைத்தான் தமிழச்சி விடையத்தில், கணணிக்கு முன் அமர்ந்து இருந்து புலிப் பாசிட்டுகள் நிறுவினர்.

நாங்கள் புலி முரண்பாடு ஒன்று இருப்பதையும், அந்தக் கோணத்தில் இருந்தும் இதையும் பார்த்தோம். புலிப் பாசிசம் இது போன்ற விடையத்தில், அதன் அணுகுமுறை என்பது எதிரியாக கருதிக் கையாள்வது ஊர் உலகம் அறிந்தது. புலியெதிர்ப்பு ரீ.பீ.சீ க்கு எதிராக புலிப்பாசிட்டுகள் நடத்துகின்ற இது போன்ற பாலியல் வார்த்தைகள், தாராளமாக அந்த வானொலியின் நிறுத்தங்களுக்கு இடையில் தொடர்ச்சியாக அம்பலமாகியது.

நாங்கள் இந்த விடையத்தில் அதையும் ஒரு காரணமாக ஆராய்ந்த போதும், எந்த புலி பாசிட்டுகளுக்கும் இது போன்றவற்றை தாம் செய்வதில்லை என்று கூறும் அந்தத் தார்மீக அடிப்படை இருக்கவில்லை. அதனால் குரைத்து அதை கொசிப்பாக்கினர்.

தாம் இது போன்றவற்றில் ஈடுபடுவதில்லை என்பதை சொல்ல முடியாது. இதனால் இதை தாம் செய்யவில்லை என்று கூறமுற்பட்டனர். அதை அவர்களால் பாசிச கோட்பாடுகளில் சொல்ல முடியவில்லை. சொன்ன வடிவமோ தாங்கள் தான் செய்தோம் என்று முடிபானதாக, அவர்களே வலிந்து கற்பனை செய்த வடிவில் நம்பிக் கொண்டு எதிர்வினையாற்றினர். இறுதியில் தமிழச்சி மீதான தாக்குதலாக மாறி, தமிழச்சியை தமக்கு எதிரானவராக காட்டி முத்திரை குத்தினர்.

தமிழச்சி இன்னமும் கூட, தான் எதிரானவர் இல்லை என்பதையே நிறுவிக் காட்ட முனைகின்றார். இந்த விவாதம் இப்படி தமிழச்சி மீதான ஒரு தாக்குதலாக மாறிய போக்கில், தமிழச்சி குறிப்பிட்டது போல், எனது விவாதம் தொடங்க காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் பாசிசம் அதற்கு வெளியில் இயங்குவதை நாம் பார்க்கின்றோம். சத்தியக்கடதாசி, தலித் மாநாடு என்று தமிழச்சியை புலியெதிர்ப்புவாதியாக சித்தரித்தது என்பது தற்செயலானதல்ல. பெரியார் பெயரில் திடீர் புரட்சிகர பெரியாரிஸ்ட்டுகள் கணணி மூலமான அமைப்பாகி தம்மை அறிவித்தது வரை, இந்த பாசிச அசிங்கம் சிக்கலற்று அரங்கேறி வருகின்றது

சத்தியக்கடதாசி, தலித்மாநாடு என்பன புலியுடனில்லை என்பதால் அதனுடன் ஏதோ ஒரு தொடர்பை உறவைக் கொண்டு, தமிழச்சியை புலியின் எதிரியாக முத்திரை குத்தினர். பின் அவரை அப்படித் தான் நடத்தினர். கடைசியில் கணணி முன் அமர்ந்து, அவருக்கு போட்டியாக பாசிச அமைப்பைப் பெயரளவில் தொடங்கினர். இது பற்றிய பாசிச முரண்பாடுகளுடன், பாசிசத்தின் கோமாளிக் கூத்தும் அரங்கேறியது.

இது பற்றிய பாசிச முரண்பாடு என்பது, பிழையான இடத்தில் பிழையான ஆளைத் தாக்குகின்றீர்கள் என்பதாக மாறி, ஆள்காட்டி வேலையை பாசிசம் தொடங்கியுள்ளது. இரயாகரனை வேண்டுமென்றால் தாக்குங்கள் என்கின்றது. அன்று அமிர்தலிங்கம் மேடையில் ஆள் காட்ட, பிரபாகரன் முதல் கூட்டணி எடுபிடிகள் அவர்களை கொல்லவில்லையா. அதே பாணி, அதே கதை. இவற்றை எல்லாம் சொல்ல முன், தமிழ்ச்செல்வன் ஊர் உலகத்தை ஏமாற்றப் பற்களைக் காட்டுவது போல் குறுக்கீட்டுப் பதிவுகள். என்ன உத்தி, என்ன நுட்பம்.

நாம் பாசிட்டுகள் என்று இவர்களை குறிப்பிடும் போது, அவர்களுக்கு கோபம் வருகின்றது. சிலர் தாங்கள் பாசிட்டுக்கள் இல்லை என்று நம்புகின்றனர். புலி பாசிசமாக இருப்பதால், அதன் பின் நிற்கின்றவர்களை நாம் பாசிட்டுகள் என்கின்றோம். இதை கவனத்தில் கொள்வது மூலம், நீங்கள் யார் என்று தீர்மானியுங்கள். புலிகள் பாசிட்டுக்கள் இல்லை என்று நிறுவப் போகின்றீர்களா, அதைச் செய்யுங்கள். இல்லை புலியைத் திருத்துங்கள் முடியாது என்று கருதினால் வெளியில் வாருங்கள்.

பாசிசம் என்ற வரையறைக்குள் எந்த தனி நபரையும் பொத்தாம் பொதுவில் நாம் அடக்க முற்படவில்லை. மாறாக வைக்கின்ற கோட்பாடு, அதன் உத்தி, அதன் நடைமுறை மீதுதான், பாசிசத்தை அதன் மீது சுட்டிக்காட்டி நிற்கின்றோம். யாரெல்லாம் புலிகளை கோட்பாட்டு ரீதியாக, அவர்களை அதன் நடைமுறையையும் சிந்தாந்த ரீதியாக ஆதரிக்கின்றனரோ, அவர்களை நாம் பாசிட்டுகள் என்கின்றோம். இதை அரசியலுக்கு வெளியில், பாசிச வரையறையை செய்ய முற்படவில்லை. அதில் எமக்கு நம்பிக்கையும் கிடையாது.

நீங்கள் புலியாக இருந்து புலியில் இருந்து சிந்திப்பதற்கு பதில், தமிழ் மக்களில் இருந்து உங்களால் சிந்தித்து செயலாற்ற முடியுமா? இதைச் செய்யுங்கள், நாங்கள் என்ன செய்கின்றோம் என்பதை, உங்களுக்கு உறைக்கவே புரியவைக்கும். தமிழ் மக்களுக்காக, அந்த மக்களில் இருந்து சிந்தித்து செயலாற்ற முனைவதன் ஒன்று தான், நீங்கள் பாசிட்டுகளல்ல என்பதை தனிமனித ரீதியாக நிறுவிக் காட்ட போதுமான அடிப்படையாகும். அதைச் செய்யுங்கள்.

மறுபக்கத்தில் தமிழச்சிக்கு நடந்ததோ, வெட்கக்கேடானதும் இழிவானதுமாகும். தமிழ் சமூகத்தின் உள்ளேயே புரையோடிக் கிடக்கின்ற இந்த அசிங்கத்தை, இந்த சமூக இழிகேட்டை, எம்மால் தட்டிக் கேட்கக்கூட நாதியற்றுப் போன சமூக கட்டுமானங்கள். இதைப் பாதுகாக்கும் அரசியல். இதற்குள் இதை எல்லாம் கண்டும் காணாமல் வாழப்பழகிவிட்ட ஒழுக்கக் கேடுகள், இதை எல்லாம் எதிர்த்துப் போராடாத தமிழ் தேசியம். இப்படி அம்சடக்கமானதும், இதையே ஒழுக்கமாக சமூகமே மாறிவிட்ட நிலையில், அதை நாம் அம்பலப்படுத்துவதை கணணிப் புரட்சி என்றும், உருப்படாத மார்க்சியம் என்றும் கிண்டலடிக்கின்றனர்.

உருப்பட்ட புலித் தேசியம், நடைமுறைப் புரட்சி இவற்றை எல்லாம் எப்படி நடைமுறையில் எதிர் கொள்கின்றனர். எதையும் உயிருடன் காட்ட முடியாது. புலம்ப முடியும். கொசிக்கவும், வம்பளக்கவும் முடியும். மனித சிந்தனையை உசுப்பும் எமது கருத்தையும், அறிவியல் பூர்வமாக இவர்களால் வைக்க முடியாது. கணணி புரட்சி என்று இழிவாடியவர்கள் செய்வது, செயலற்ற சமூகத்தைப் படைத்து பாசிச அமைப்பை பாதுகாப்பது தான்.

அவர்கள் இதனால் கணணி முன் அமர்ந்து இருந்தும், சிந்திக்காதே என்கின்றனர். இதை புலித் தேசியத்துக்கு எதிரான சதி என்கின்றனர். இதனால் தமிழச்சிக்கு நடந்தது சரியானது என்பதே, இவர்களின் முன் முடிவாகியது. இதை நிறுவ அரை அரை என்று அரைத்து, முடிவு கூறுகின்றது. அதாவது அதை சலித்தால், வெறும் கண்டனம் வார்த்தையை மட்டும், அதில் இருந்து இணையப் பொறுக்கியைப் போல் பொறுக்கலாம்.

அந்த பொறுக்கிக்கு துணையாக களமிறங்கிய இந்த இணையப் பொறுக்கிகள், தமிழச்சி மேல் தொடர்ச்சியாக சுற்றி வளைத்து கொரில்லாத் தாக்குதலை நடத்தினர். இதுதான் நடந்து கொண்டு இருந்தது. அதை அவர் தனித்து எதிர்கொண்ட போது, அதில் சொல் பிழை பிடித்து கடைசியில் தமிழச்சியை தூக்கு மேடையில் ஏற்றினர். இப்படி இந்த பாசிட்டுகள் மட்டும் தான், தனது சொந்த வழிகளில் செய்கின்றது. ஒரு பெண் என்ற அடிப்படையில், தன் மீதான வன்முறைக்கு எதிராக போராட வெளிக்கிட்ட தமிழச்சி, இறுதியில் சிலரால் இப்படி குற்றவாளியாக்கப்பட்டார். தமிழச்சி மீதான தமது பாசிச குற்றச்சாட்டுக்கு, சத்தியக்கடதாசியையும், தலித்மாநாட்டையும் ஆதாரமாக்கினர். இப்படித்தான் மண்ணில் பத்தாயிரம் பேரைக் கொன்றனர்.

ஆணாதிக்க சமூக ஓழுக்கம் பாசிசமாகவும் சிதைந்து நிற்கின்ற போது, அதுவே சமூகமாகி உள்ள போது, எது நடக்குமோ அந்த சோகம் தமிழச்சிக்கு நடந்தது. இது எப்படி இருந்ததென்றால், சாதாரணமாக ஒரு கற்பழிப்பு நடந்த பின், சமூகம் ஒரு பெண்ணை எப்படி இழிவாடுமோ அதுபோல் நடந்தது. அந்த பெண்ணின் உடுப்பைபப் பற்றியும், நடையுடை பற்றியும், இறுதியாக ஆட்டம்... பற்றியும் கதைத்து, பெண்ணை கைநீட்டி குற்றம்சாட்டி விடுவது போன்று இது நிகழ்ந்தது. நீதிமன்றத்தில் கற்பழிப்பை விசாரணையின் பெயரால் மறுபடியும் துகிலுரியும் நடத்தைவரை நடத்துகின்ற கூத்தையொத்த பாசிச வக்கிரத்தை, புலித் தேசியத்தின் பெயரில் செய்தனர்.

தமிழச்சி தனக்கு நடந்த அவமானத்தை, அந்தக் கொடுரமான வெட்கக்கேடான ஆணாதிக்க வக்கிரத்தை அம்பலப்படுத்தி போராடிய போது, புலித்தேசியம் அவரை குற்றவாளியாக்கியது. முதல் இணையப் பொறுக்கி தமிழச்சியை எதற்காக இழிவுபடுத்தினானோ, அந்த நோக்கத்தை புலித் தமிழ் பாசிசம் மீண்டும் அரங்கேற்றியது. இதைவிட வேறு எதையும் தமிழ் பாசிசம் இதில் செய்யவில்லை.

மானம் கெட்டு இப்படி இழிவாக இழிவாடினர். தமிழச்சி ஒரு பெண்ணாக, இந்த ஆணாதிக்க அமைப்புக்கு முன் நிமிர்ந்து நின்ற அந்த துணிச்சலை, படுகேவலமான கோழைத்தனத்துடன் தாக்கினர்.

இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழச்சிக்கு எதிராக புதிய புரட்சிகர பெரியார் இயக்கம். பாவம் இந்த புல்லுருவிகளுக்கு தெரியவில்லை, புலித் தலைவர் முன்னமே இது போன்று மேற்கோளை பயன்படுத்தி கூத்து ஆடியுள்ளார் என்பது. அந்த புலித் தலைவரின் மேற்கோள் தான், அவசரத்துக்கு தமிழச்சிக்கு எதிராக இவர்களுக்கு உதவியது. இவ்வளவு காலம் தலைவரின் மேற்கோளைக் கூட கண்டு கொள்ளாத இந்த பெரியாரிய புல்லுருவிகள், திடீர் பெரியார் சங்கம் ஒன்றை கம்யூட்டருக்கு முன்னால் உருவாக்கினர்.

திடீர் பெரியாரிஸ்டு புல்லுருவிகளே! முதுகெலும்பு இருந்தால்

1. முதலில் புலிகள் நடத்துகின்ற கோயில்களுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்யுங்கள்.

2. தமிழர் வழிபடும் கோயில் பயன்படுத்தும் சமஸ்கிருதத்துக்கு எதிராக போராடுங்கள. (இதற்குள் இனவிடுதலை, தேச விடுதலை என்று பூச்சாண்டி) புலி கோயில் எல்லாம் சமஸ்கிருத மயம்.

3. சாதி அடிப்படையில் உள்ள பார்ப்பானை கொண்டு கோயில்களில் பூசை செய்வதற்கு எதிராக போராடுங்கள். முதலில் புலிக் கோயில்களில் அதைச் செய்யுங்கள்.

4. புலியல்லாத கோயில்களை புலியினதாக மாற்ற முனையும் அந்த பாசிச கோமாளிகளை எதிருங்கள்.

5. உங்கள் சொந்த வாழ்வைச் சுற்றி உள்ள தாலி, சடங்குகள் முதல் அனைத்தையும் அறுத்தெறியுங்கள். புலித் தலைவர் பிரபாகரன் ஐயரை வைத்துக் கட்டிய தாலி, அந்த பார்ப்பனச் சடங்குகளை எல்லாவற்றையும் விமர்சியுங்கள்.

6. இன்னும் நீண்ட பட்டியல் எம்மிடம் உண்டு. இதை தொடங்கினால் நாமும் வருகின்றோம்.

6. தமிழச்சி இட்ட பட்டியலையும் கேட்டவைகளையும் மறக்காதீர்கள்
http://thamilachi.blogspot.com/2007/10/blog-post_8951.html

திடீர் பெரியாரிஸ்ட்டுகள் இதை செய்ய முதுகெலும்பு கிடையாது. இந்த புல்லுருவிக் கூட்டம் பாசிச வழியில், புலியல்லாத மாற்றை விழுங்கி தின்னும் வழமையான இழிவான பாசிச உத்தி தான், இந்தத் திடீர் பெரியாரிஸ்ட்டு வேஷம்.

இந்த நாற்றம் பிடித்த பாசிட்டுகள், கம்யூட்டருக்கு முன்னால் திடீர் பெரியாரிஸ்டுகளாக மாறியது போல், பாரிஸ் தலித் மகாநாட்டை பற்றிய அவதூற்றையும் கம்யூட்டரில் கண்டு பிடித்து காறி உமிழ்கின்றனர்.

தலித் மாநாட்டை பற்றியும் எமது விமர்சனங்கள், அதில் கலந்து கொள்ளுவோர் பற்றி, எமக்கு தனித்துவமான தெளிவான அரசியல் பார்வைகள் உண்டு. ஆனால் இப்படி கேவலமாக, பாசிசத்தின் கொடூரமான சொந்த இழிவாடல்களை, நாம் சகித்துக்கொண்டு மௌனிக்க முடியாது. வழக்கம் போல் புலிகள் இதை இழிவாடுவது, முத்திரை குத்துவது, இறுதியாக படுகொலைகளை செய்வது என்ற பாசிசத்தின் வழியை எதிர்கொண்டு போராட வேண்டியது தவிர்க்க முடியாததாகின்றது.

எந்த விடையம் மீதும், அறிவியல் பூர்வமாக விவாதம் நடத்த வக்கு கிடையாது. தமிழ் மக்களுக்காக நியாயமான குரலைக் கூட பதிவு செய்ய முடிவதில்லை. மற்றவனை எதைச் செய்யவும் அனுமதிக்க மாட்டோம் என்று ஒற்றைக் காலில் நிற்கின்றனர்.

கம்யூட்டருக்கு முன்னால் அமர்ந்து இந்த கூத்தை அடிப்பவர்கள், நடைமுறையில் என்னத்தைக் கிழிக்கின்றனர். அவர்கள் ஆதரிக்கும் புலியுடன் நின்று போராடாது இங்கு என்ன செய்கின்றனர். எனது பதிவு ஒன்றில் கேட்கப்படுகின்றது, ஏன் பிராஞ்சு ஏகாதிபத்தியதுக்கு வந்தீர்கள். சோமாலியாவுக்கு ஏன் செல்லவில்லை. இங்கு கொழுத்த சம்பளம் அதுதானே என்று ?

ஐரோப்பிய சம்பளம் தெரியாத கிறுக்கர்களின் கேள்வி. 1980 இல் ஐரோப்பிய சம்பளம் என்ன, இலங்கை சம்பளம் என்ன என்று தேடிப்பாருங்கள். அத்துடன் பணப் பெறுமதி என்ன என்று சென்று பாருங்கள்.

இந்தக் கேள்வியின் நோக்கம் தெளிவானது. நானே புலிக்கு எழுதினால் எந்தக் கேள்வியும் இவர்களிடமிருந்து வரவே வராது. சரி அந்த சோமையற்ற பக்கத்தைத்தான் விடுவோம், நீங்கள் ஏன் இங்கிருக்கின்றீர்கள். புலி ஆதரவோ அல்லது புலியோ எந்த புற்றில் இருந்தாலும், நீங்கள் அங்கேயல்லவா போராடவேண்டும். கொழுத்த சம்பளம் என்கின்றீர்கள், உங்கள் சொந்த அனுபவத்தில் இருந்து சொல்லுகின்றீர்கள் போலும்.

நானோ பிரான்சில் அதி குறைந்த அடிப்படைச் சம்பளத்தில் வேலை செய்கின்றேன். அதை வைத்து வீட்டு வாடகை மட்டும் தான் கட்டமுடியும். இங்கு வந்தது தற்செயலானது. சந்தர்ப்பம் சூழல். எங்கே பாதுகாப்பும், சந்தர்ப்பமும், குறைந்தபட்சம் ஜனநாயகம் கிடைத்ததோ அங்கு வருகின்றோம். பொருளாதார காரணம் தான் (நாட்டை ஏகாதிபத்தியத்திடம் விற்றுவிட்ட அரசியல், முதல் தேசியம் வரை. எம் செல்வத்தை கொள்ளை அடித்த ஏகாதிபத்தியத்தில் வந்து பிழைக்கும் மக்கள் கூட்டம்) என்றால் கூட, அதை பிழையாக நான் கருதவில்லை. 10 லட்சம் தமிழ் மக்கள் இப்படி வெளியேறியது ஒருபுறம். மறுபுறம் பிழையான போராட்டத்தினால், பிழையான தேசியத்தினால், தேசிய பொருளாதாரம் புலிகளால் அழிக்கப்பட்டதாலும் மக்கள் அங்கு வாழவழியின்றி வெளியேற்றப்பட்டனர்.

மறுபக்கத்தில் அறிவியல் பூர்வமான விவாதம், தர்க்க வாதங்கள் எதுவும் செய்யமுடியாதவர்கள், குதர்க்க வாதத்தில் குதிக்கின்றனர். குதர்க்கம், கொசிப்பு, வம்பளப்பு, சொற்களில் தொங்குவதை தமிழ் தேசிய அரசியல் என்கின்றனர். பின் அதை விவாதம் என்பது கருத்துச் சுதந்திரம் என்று அதற்கு பொழிப்புரைகள்.

கருத்தென்றால் என்னவென்று தெரியாதவர்கள். விடையத்தை திசைதிருப்ப பொருத்தமற்ற பதிவுகள். இடைச்செருகல்கள். நக்கல்கள் நையாண்டிகள். இதை எல்லாம் இன விடுதலையின் பெயரில் செய்கின்றனர்.

தமிழ் மக்கள் அன்றாடம், புலிகளின் அதே பாசிச வழிகளில் பேரினவாதிகளால் கொல்லப்படுகின்றனர். இதையிட்டு அக்கறையற்ற அதே பாசிச கொசிப்புகள். இதற்கு எதிராக உலகெங்கும் போராட்டத்தைக் கூட நடத்தி அதை தடுக்கமுடியாத வகையில், அனைத்தையும் பாசிசத்துக்கு உள்ளாக்கி அழித்துவிட்டனர். இவர்கள் இதற்கு எதிராகவும் ஒரு துரும்பைக் கூட எடுத்து போராட முடியாது கிடக்கின்றனர். கம்யூட்டரின் முன் அமர்ந்து நக்கல், நையாண்டி, கொசிப்பை தமிழ் மக்களின் பெயரில் செய்கின்றனர்.

எம்மைச் சீண்டி, தமது கொசிப்பை பிரதான அரசியல் நிகழ்வாக கொதிநிலைக்கு கொண்டு வருகின்றனர். உத்தி ரீதியாகவே புலிகளின் அதே பாசிச வழியை பயன்படுத்தி, தமிழ் மக்களை திட்டமிட்டே பேரினவாதிகளும் தமிழ் கூலிக் குழுக்களுடன் சேர்ந்து படுகொலை செய்கின்றனர். இப்படி நாள் தோறும் கொல்லப்படுகின்ற விடையத்தைக் கூட, இவர்களால் அம்பலப்படுத்த முடிவதில்லை. எம்மையும் அதைச் செய்யவிடாது, அதையும் தடுத்து நிறுத்த முனைகின்றனர். இப்படி இன விடுதலையின் பெயரில், பேரினவாதத்துக்கு துணையாக நின்று இணையத்தில் எம்மை முடக்க முனைகின்றனர்.

No comments: