தமிழ் அரங்கம்

Thursday, June 12, 2008

புலி என்றும் அரச கைக்கூலிகள் என்று, நாம் தூற்றப்படுகின்றோமே! ஏன்?

மத்தளத்தின் இரண்டு பக்கத்தில் இருந்தும் நாம் அடிக்கப்படுகின்றோம். தேசத் துரோகி என்றும், புலிப் பயங்கரவாதி என்று ஒரேதளத்தில் இரு முத்திரை குத்தப்படுகிறது. எமது அரசியல் கருத்துக்களை, இருதரப்பும் எதிர்கொள்ள முடிவதில்லை என்பது உண்மையாகின்றது. இதனால் எம்மை தமது எதிர்தரப்பாக காட்டி தூற்றுகின்றோம். இது தான் அவர்களது எமக்கு எதிரான அரசியல்.


புலியை ஆதரிக்காத அனைவரும் துரோகி என்று கூறி புலி நடத்தும் அரசியல் படுகொலை போல், அரச ஆதரவு அல்லாத அனைத்தையும் புலியாக காட்டி படுகொலை செய்வது போல், இன்று நாம் இருதரப்பாலும் தமக்கு எதிரானவராக அடையாளம் காணப்படுகின்றோம்.

நாங்களோ பெரிதாக ஒன்றும் கூறவில்லை. மக்கள் அனுபவிக்கின்ற துயரங்களுக்கு, அரசும் புலிகளும் எப்படி காரணமாக இருக்கின்றனர் என்பதையே, நாம் அரசியல் ரீதியாக அம்பலப்படுத்தி விமர்சித்து வருகின்றோம்.

எமது இந்த அரசியலை எதிர்கொள்ள, இவ்விரண்டு மக்கள் விரோதப் பிரிவினராலும் முடிவதில்லை. இதனால் நாம் தொடர்ச்சியாக தூற்றப்படுகின்றோம். முன்பு இவர்கள் எமது இந்த விமர்சனத்தை தனிநபர் தாக்குதலாக தூற்றியவர்கள். இன்று எம்மை புலி என்றும், அரச கைக் கூலிகள் என்றும் தூற்றுகின்றனர்.

கடந்த காலத்தில் தனிநபர் முனைப்புகள் முதன்மை பெற்று, தனிநபர் ஊடாக அரசியல் வெளிப்பட்டது. அவர்கள் ஊடாக அவர்களின் அரசியல் இனம் காணப்பட்டு, அவை எம்மால் அமபலப்படுத்தப்பட்டது. இதையே அவர்கள் தனிநபர் தாக்குதல் என்றனர். இன்று அந்த நபர்களில் பெரும்பான்மையானோர் பேரினவாத அரசின் பின்நிற்கின்றனர். அரசு சார்பு குழுக்களின் அடிவருடிகளாகவும், அவர்களுடன் தொடர்புகளைக் கொண்டவர்களாகவும், அவர்களுடன் சேர்ந்தே புலம்பெயர் அரசியல் விபச்சாரம் செய்பவராக அனைவரும் அம்பலமாகி கிடக்கின்றனர். புலி ஒழிப்பை அரசுடன் சேர்ந்து செய்யும் துரோகக் கும்பலாக அம்பலமாகி நிற்கின்றது. புலம்பெயர் புலியல்லாத நிகழ்ச்சி நிரல்கள், அரச வேலைத் திட்டத்துக்கு ஏற்புடையதாகவே அமைக்கின்றது. இதற்கு மாறாக இவர்கள் எதையும் மாற்றாக முன் வைப்பதில்லை. எதைக் கதைத்தாலும், அதை ஆதரிப்பதில் போய் முடிகின்றது.
.

No comments: