தமிழ் அரங்கம்

Sunday, September 14, 2008

பெட்ரோல்-டீசல் விலையேற்றம் : குளிர் காயம் அமெரிக்கா

கச்சா எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக கடந்த ஜூன் மாத இறுதியில் மேற்கு ஆசியாவில் உள்ள ஜெட்டா நகரில், கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள், மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள், இந்தியா உள்ளிட்ட சில ஏழை நாடுகள் பங்கு கொண்ட மாநாடு நடந்தது. இம்மாநாட்டில் கச்சா எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக உருப்படியான யோசனைகள் கூட வைக்கப்படவில்லை என்ற போதும், இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் எண்ணெய் விலைக்குக் காரணமான உண்மையைப் போட்டு உடைத்தார்.

"கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு முன்பேர வர்த்தகச் சூதாடிகள்தான் காரணமே ஒழிய, சந்தைக்கும் விலை உயர்வுக்கும் சம்பந்தமேயில்லை'' என்றார், ப.சிதம்பரம். அவரின் இந்த ஒப்புதல் வாக்குமூலம், திருட்டு வழக்கில் "அப்ரூவர்'' ஆகிவிட்ட குற்றவாளியின் சாட்சியத்திற்கு நிகரானது. பாம்பின் கால் பாம்புக்குத் தானே தெரியும்.

ப.சிதம்பரம் மட்டுமல்ல, கச்சா எண்ணெய் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் சவூதி அரேபியாவும் இந்த உண்மையை ஒத்துக் கொண்டுள்ளது. சவூதி அரேபியாவின் எண்ணெய் வள அமைச்சர் இன்னும் ஒருபடி மேலே போய், "மேற்காசிய எண்ணெய் வளத்தைக் கைப்பற்றிக் கொள்வதில் ஏகாதிபத்திய நாடுகளிடையே நடந்துவரும் போட்டியும் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்குக் காரணம்'' எனக் கூறியிருக்கிறார். (பிசினஸ்லைன், ஜூலை 4).

No comments: