தமிழ் அரங்கம்

Wednesday, August 2, 2006

'வல்லரசாகும்" இந்தியா கையேந்தியாகும் மக்கள்

'வல்லரசாகும்" இந்தியா கையேந்தியாகும் மக்கள்

""ந்தியா ஒரு பொருளாதார மேல்நிலை வல்லரசாக உருவாகி வருகிறது'' என்ற செய்தி, ஊடகங்களில் நிரம்பி வழிகின்றது. குலுக்கித் திறக்கப்பட்ட ""பீர்'' பாட்டிலைப் போல இந்தியப் பொருளாதாரத்தின் ""வளர்ச்சி'' குறித்த மகிழ்ச்சியில் பத்திரிகைகள் புள்ளி விவரங்களால் பொங்கி வழிகின்றன.


தொடர்ந்து நான்காண்டுகளாக மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7 சதவீதம். அடுத்தடுத்த மூன்றாண்டுகளாக ஏற்றுமதியின் அதிகரிப்பு 20 சதவீதம். கூட்டுப் பங்கு நிறுவனங்களின் கடன்கள் 30 சதவீதத்திற்கும் மேலாகும்.


முதலீடுகளின் அதிகரிப்பு 40 சதவீதம்; புதிய திட்டங்கள் பல்வேறு முக்கிய துறைகளையும் கடந்து பரவுகின்றன. 2006ஆம் ஆண்டுக்கான அடிப்படைக் கட்டுமானச் செலவுகள் 95,000 கோடி ரூபாய்கள் அதாவது இரண்டு மடங்கு.


கடந்த ஐந்தாண்டுகளில் உச்சபட்சமாக 2005இல் மட்டும் சம்பள உயர்வு 14 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. 20052006 ஆம் ஆண்டில் மிகப் பெரும் அளவிலான வேலை வாய்ப்புகள் அதிகரிப்பு, நகர்ப்புறக் குடும்பங்களுக்கான வேலை மற்றும் நிதி உத்திரவாதங்களை அளித்துள்ளன.


வீட்டு வசதிக் கடன்களின் அதிகரிப்பு 56 சதவீதம்; நுகர்வோர் கடன் அதிகரிப்பு 40 சதவீதம்; பங்குச் சந்தையிலும் வீடு வீட்டுமனைத் தொழிலிலும் ஏற்பட்டுள்ள செழிப்பு, விருப்பம் போல செலவிடச் செய்துள்ளது.


உலகிலேயே இரண்டாவது பெரிய சந்தையாக இந்தியாவை மாறச் செய்யுமளவு செல்பேசிகளின் அதிகரிப்பு 53% சதவீதம். விமானச் சேவை மற்றும் மோட்டார் வாகன தொழில்களின் செழிப்பு, உலகிலேயே மிகவும் இளம்பிரிவு உழைப்புச் சக்தியும் இந்த முன்னேற்றத்தை சாதித்துள்ளன.


இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியைப் பத்திரிகையாளர்கள் மேற்கண்டவாறு தொகுத்துள்ளனர்.


உலகின் முன்னணிப் பன்னாட்டுத் தொழில் கழகங்களின் தலைவர்கள் அனைவரும் இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்துப் பிரமித்துப் போயிருக்கிறார்களாம்.


""கடந்த 15 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் இந்தியா காட்டிய வேகம் அசாதாரணமானது'' என்கிறார் உலக வங்கியின் தலைவர் பால் வுல்போ விட்ஜ்.


""உலகமயமாக்கத்தின் குவி மையமாக இந்தியமாறுவதற்குத் தகுந்தவாறு அதன் நட்சத்திர பலன்கள் கூடி வருகின்றன'' என்கிறார் சர்வதேச நிதி நிறுவனத்தின் பொருளாதார ஆலோசகர் ரகுராம் ராஜன்.


""மென்பொருள் தொழில் வித்தகர்களின் பிரமிக்கதக்க மையத்தை இந்தியா கொண்டிருக்கிறது. இதிலிருந்து உலகம் ஆதாயம் பெற வேண்டும்'' என்கிறார், உலக மென்பொருள் ஏகபோக முதலாளி பில்கேட்ஸ்.


""இந்தியா ஒருநாள் உலகிலேயே அதிவேக வளர்ச்சியுடைய நாடாக இருக்கும்'' என்கிறார் வெர்ஜின் அட்லாண்டிக் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் சர் ரிச்சர்டு பிரான்சன்.


""இந்தியா மிக வேகமாகப் பொருளாதார வளர்ச்சியுடைய டுகளில் ஒன்று; ஆசியாவின் வளர்ச்சியை உந்திச் செல்லக் கூடியது'' என்கிறார், ஜெர்மனியின் சீமன்ஸ் நிறுவனத் தலைவர் லாஸ் லெயின்ஃபீல்டு.


""உலகின் முன்னணி தொழில்நுட்ப மையங்களில் ஒன்றாக இந்தியா உருவாகி வருகிறது'' என்கிறார் கணினித் தொழிலில் முன்னணி நிறுவனமான இண்டெல் தலைவர் கிரைக் பேரட்.


""ஏழை தேசங்களின் வளர்ச்சித் தீர்வுகளின் சோதனைச் சாலையாக இந்தியா விளங்க முடியும்'' என்கிறார் பிலிஃப்சு நிறுவனத் தலைவர் ஜிரார்டு லெய்ஸ்டர்லீ.


பன்னாட்டுத் தொழில் கழகங்கள் இந்தியப் பொருளாதாரம் குறித்து இவ்வாறான கருத்துக்கள் வைத்திருப்பதால் அந்நிய நேரடி முதலீடும், அந்நியத் தொழில் முதலீடும் ஏராளமாக வந்து குவிகின்றன. இதனால் பங்குச் சந்தைக் குறியீடு எண் 12,000 அளவைத் தாண்டிவிட்டது.


இதோடு அந்நியச் செலாவணிக் கையிருப்பு பல ஆயிரம் கோடி ரூபாயாகக் குவிந்திருக்கிறது. இதுவரை வெளிநாட்டிலவாழும் இந்தியர் அனுப்பி வைக்கும் தொகையே அந்நியச் செலாவணி கையிருப்பில் முக்கியமாக இருந்தது. இப்போது மொத்தக் கையிருப்பில் இது மிகச் சிறிய அளவாகி விட்டது; ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருவதால் முக்கியமாக அந்நியச் செலாவணி கையிருப்பு மலையளவு உயர்ந்துவிட்டது.


இந்த ஆண்டு மட்டும் மென்பொருள் ஏற்றுமதியால் டாடா கன்சல்டன்சி, இன்போசிஸ், சத்யம், விப்ரோ போன்ற மென்பொருள் ஏற்றுமதி நிறுவனங்கள் ஒரு இலட்சம் கோடி ரூபாய் இலாபமீட்டக் கூடும். தகவல் தொழில் நுட்பம் மற்றும் அது சார்ந்த தொழில்களில் மட்டும் அடுத்த ஐந்தாண்டுகளில் 60 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கக் கூடும்.


இவையெல்லாம் உலகில் மிக வேகமாக வளரும் பத்து பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியப் பொருளாதாரம் வளர்ந்துள்ளதைக் காட்டுகின்றன.


இந்தப் புள்ளிவிவரங்கள் உண்மைதான் என்றாலும், இந்தியா உடனடியாக இல்லாவிட்டாலும், வளரும் நாடுகளில் முதலிடத்தைப் பிடிக்காவிட்டாலும், சீனாவுக்கு அடுத்து இரண்டாம் இடத்துக்கு உயர்ந்துவிடும் என்றாலும்இந்தியப் பொருளாதார வளர்ச்சி எத்தகையது? அதன் பலன்களை எந்தப் பிரிவினர் அறுவடை செய்து கொள்கின்றனர்? யாருடைய நலன்களுக்காக இந்தியப் பொருளாதாரம் திட்டமிடப்படுகிறது? என்பது முக்கியமானதாகும்.


கடந்த 2005ஆம் ஆண்டின் நவம்பருக்குள் 2.341 கோடி பேர் புதிதாக செல்பேசி வாடிக்கையாளர்களாகி இருக்கிறார்கள். இணையத் தளங்களில் மேயும் ஏழு இலட்சம் பேர் அகன்ற அலைவரிசை கணினி இணைப்புகள் பெற்றார்கள். 45 இலட்சம் கணினிகள் விற்கப்பட்டன. 53,982 கோடி ரூபாய் அளவு சேமிப்பு உயர்ந்திருக்கிறது. 9,000 பேர் புதிய கோடீசுவரர்களாகியிருக்கிறார்கள். கார்கள், இரண்டு சக்கர வாகனங்களின் உற்பத்தியும் விற்பனையும் பல்கிப் பெருகியுள்ளது.


தங்க நாற்கரச் சாலைகளால் இந்தியாவின் பெருநகரங்களை இணைப்பதும், விமான நிலையங்கள் நவீனப்படுத்தப்படுவதும், துறைமுகங்கள் விரிவுபடுத்தப்படுவதும் நிறைவுறும் நிலையை எட்டி விட்டன. சுற்றுலா, பொழுதுபோக்கு, ஃபாசன் பொருட்கள், கல்வி, மருத்துவம் எல்லாவற்றிலும் உலகத்தரம் வந்துவிட்டது.


எல்லாம் சரி; ஆனால் இவையாவும் நடுத்தர மேட்டுக்குடி மக்களுக்குச் சாதகமானவை, நாட்டின் மிகப்பெரும் தரகு அதிகார முதலாளிகள், பெரும் பண்ணையார்கள் ஆகியவர்களோடு, அந்நிய பன்னாட்டுத் தொழில், வர்த்தக மற்றும் நிதிக் கழகங்களின் கொள்ளையை விரிவுபடுத்தும் வகையிலானவைதாம்.


சீனா போன்ற நாடுகளில் பொருளாத வளர்ச்சி என்பது முதலீடு அடிப்படையிலானதாக இருக்கும் அதேசமயம், இந்தியப் பொருளாதார வளர்ச்சி நுகர்வோர் சந்தை சார்ந்ததாகவே இருக்கிறது. அதாவது, இந்தியாவின் 10 கோடி குடும்பங்களின் ஆண்டு வருமானம் இரண்டு முதல் 10 இலட்சம் ரூபாய் அளவுக்கு உள்ளது! இது பல ஐரோப்பிய நாடுகளின் சந்தையைவிடப் பெரியதாகும். இந்தக் குடும்பங்களின் நுகர்வுத் தேவைக்கான பொருளாதாரத் திட்டமிடுதல்கள் தாம் இப்போது நடக்கின்றன.


அதேபோல, கடந்த பத்தாண்டுகளில் உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதம்6.5 சதவீதத்திற்கு மேலிருந்தாலும், கிராமப்புற விவசாய வளர்ச்சி 2 சதவீதம் அளவுக்கு மிகக் குறைவாகவே உள்ளது. நாட்டின் 60 சதவீத உழைப்புச் சக்தியைக் கொண்டிருக்கும் கிராமப்புற விவசாய உற்பத்தி நாட்டின் மொத்த வருவாயில் 21 சதவீதம் மட்டுமேயாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவீத அளவுள்ள வங்கி, இன்சூரன்ஸ், தொலைபேசி செல்பேசி, தகவல் தொழில் நுட்பச்சேவை ஆகிய சேவைத்துறையில் 27 சதவீதத்தினரே வேலை வாய்ப்புப் பெற்றுள்ளனர். ஆனால், விவசாயத் துறையில் இருந்து வேலையிழப்பவர்களை ஈர்க்கக் கூடிய ஆலை உற்பத்தியில் 17 சதவீதத்தினரே ஈடுபட்டுள்ளனர்.


இதுமட்டுமல்ல, இந்தியப் பொருளாதார வளர்ச்சி என்பது மக்கள் தொகை அதிகமுள்ள உத்திரபிரதேசம், மத்தியபிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், ஒரிசா போன்ற மாநிலங்களில் அற்ப அளவுகூட கிடையாது. அவை தொடர்ந்து பின்தங்கிய மாநிலங்களாகவே உள்ளன. ஏற்கெனவே அடிப்படைக் கட்டுமான வசதிமிக்க மாநிலங்களில்தான் முதலீடும், உற்பத்தியும், சந்தையும் உருவாகிக் கொண்டே போகின்றன. குஜராத், மராட்டியம், தமிழகம், ஆந்திரம், கர்நாடகா, அரியானா பஞ்சாப் போன்ற மாநிலங்களின் வளர்ச்சியிலேயே ஆளும் வர்க்கங்களும் பன்னாட்டு முதலாளிகளும் குறியாக உள்ளனர். பீகாரின் சராசரி வருமானம் அரியானா, மராட்டியம் போன்ற மாநிலங்களின் சராசரி வருமானத்தோடு ஒப்பிடும்போது கால்பங்கு கூடக் கிடையாது.


தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவைத்துறையில் வேலைவாய்ப்புகள் பல்கிப் பெருகியுள்ளதாகக் கூறப்படும் அதேவேளையில், வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்து வேலைதேடுபவர்களின் எண்ணிக்கை 4 கோடியாக உள்ளது. அரசு உட்பட அமைப்பு ரீதியிலான துறைகளில் வேலையோ கடந்த பதிமூன்று ஆண்டுகளாக 3 கோடி என்ற நிலையிலேயே தேங்கிப் போயிருக்கிறது. உலகிலுள்ள 177 நாடுகளில் மனித வளமேம்பாட்டில் இந்தியா 127வது இடத்தில் இருக்கிறது. 5 வயதுக்கும் குறைவான இந்தியக் குழந்தைகளிலபாதியளவு போதிய உணவின்றிக் கிடக்கின்றன. இந்தியப் பெண்களில் 46 சதவீதமானவர்கள் படிப்பறிவற்றவர்களாக உள்ளனர். அரசுப் புள்ளிவிவரப்படியே 25 கோடி இந்தியர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர். அரசு சாரா நிறுவனங்களின் புள்ளி விவரப்படி இதுவே 40 கோடியாகும்.


ஆக, எப்படிப் பார்த்தாலும் இந்தியப் பொருளாதாரம் வட்டார ரீதியாக, வர்க்க ரீதியாக, பாலியல் ரீதியாக, நகர்ப்புறகிராமப்புற வேறுபாடு ரீதியாக ஒரு சார்பாகக் கோணித்துப் போகிறது. அனைத்துத் தரப்புகளின் வளர்ச்சி, முன்னேற்றத்துக்கானதாகப் பொருளாதாரம் திட்டமிடப்படுவதில்லை கருணாநிதியோ ஜெயலலிதாவோ, வாஜ்பாயோ மன்மோகன் சிங்கோ அவர்களது அக்கறையெல்லாம் ஒரு சார்பாகவே உள்ளது. இதற்கு ஈடுகட்டும் வகையில்தான் ஏழ்மைக் குறைப்பு, இலவசத் திட்டங்கள் வருகின்றவே தவிர, மக்களின் நலன்களுக்காக அல்ல.


மு ஆர்.கே.


Monday, July 31, 2006

அமெரிக்க - இஸ்ரேலிய பயங்கரவாதம்

அமெரிக்க - இஸ்ரேலிய பயங்கரவாதம்: பட்டினியில் பரிதவிக்கும் பாலஸ்தீகனம்

டந்த 58 ஆண்டுகளாக தமது சொந்த மண்ணை இழந்து கொடுந்துயரங்களை அனுபவித்து வரும் பாலஸ்தீன மக்கள் இன்று பேரழிவின் விளிம்பில் நிற்கிறார்கள். உண்ண உணவில்லை; குழந்தைகளுக்குப் பால் இல்லை; மருத்துவமனைகளில் மருந்து இல்லை; ஊழியர்களுக்குச் சம்பளம் இல்லை; தாங்கள் உழுது பயிரிட்டு விளைவித்த காய்கறிகளையும் கனிகளையும் சந்தைக்குக் கொண்டு செல்ல அனுமதியுமில்லை. திறந்தவெளிச் சிறைச்சாலையில் பட்டினியால் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள் பாலஸ்தீன மக்கள்.


இது ஏதோ இயற்கையின் சீற்றத்தால் ஏற்பட்ட கோரமல்ல; ஜனநாயகம் பேசும் நாகரிக உலகின் ஏகாதிபத்தியவாதிகள் பாலஸ்தீன மக்களுக்கு விதித்துள்ள தண்டனைதான் இது!


ஏன் இப்படி ஏகாதிபத்தியவாதிகள் பாலஸ்தீன மக்களைப் பட்டினி போட்டுக் கொல்ல வேண்டும்? பாலஸ்தீன மக்கள் அப்படி என்ன குற்றத்தைச் செய்து விட்டார்கள்?


கடந்த ஜனவரி மாதத்தில் பாலஸ்தீன அதிகார அமைப்புக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாலஸ்தீன மக்கள் ""ஹமாஸ்'' இயக்கத்தின் வேட்பாளர்களுக்குப் பெருவாரியாக வாக்களித்து வெற்றிபெறச் செய்துவிட்டார்கள். ஹமாஸ் இயக்கம் பாலஸ்தீன அதிகார அமைப்புக்கு உட்பட்ட பகுதிகளில் ஆட்சியைக் கைப்பற்றிவிட்டது. இதுதான் பாலஸ்தீன மக்கள் செய்த "குற்றம்'! தாங்கள் விரும்பும் கட்சியைப் பாலஸ்தீன மக்கள் ஆட்சியில் அமர்த்துவது எப்படி குற்றமாகும் என்று உங்களுக்குச் சந்தேகம் எழலாம். ""ஆம்! குற்றம்தான்! ஏனெனில் ஹமாஸ், இசுலாமிய அடிப்படைவாத பயங்கரவாத இயக்கம்'' என்று குற்றம் சாட்டுகின்றனர் ஏகாதிபத்தியவாதிகள்.


பாலஸ்தீனத்தில் நடந்த தேர்தலில் ஹமாஸ் இயக்கம் வெற்றி பெற்ற மறுநிமிடமே இனவெறி பிடித்த பயங்கரவாத இஸ்ரேலிய அரசு பாலஸ்தீன அதிகார அமைப்புடனான அரசியல் பொருளாதாரத் தொடர்புகள் அனைத்தையும் துண்டித்துக் கொண்டது. இஸ்ரேலின் கூட்டாளியும் உலக மேலாதிக்கப் பயங்கரவாதியுமான அமெரிக்கா, ஹமாஸ் தலைமையிலான பாலஸ்தீன ஆட்சியைப் புறக்கணிக்குமாறு உலக நாடுகளுக்குப் பகிரங்கமாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து, அமெரிக்காவை அடியொற்றிச் செல்லும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் ஹமாஸ் ஆட்சியைப் புறக்கணிப்பதாக அறிவித்து பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளன.


பாலஸ்தீன மக்களிடமிருந்து இஸ்ரேலிய அரசு சுங்கவரிகளையும் இதர வரிகளையும் வசூலித்து வருகிறது. பாலஸ்தீன அரசு நிர்வாகத்தை நடத்துவதற்கு இந்த வரிகளால் கிடைக்கும் நிதிதான் முக்கிய ஆதாரமாக உள்ளது. இதோடு வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் நிதியுதவிகளைக் கொண்டுதான் பாலஸ்தீன அரசு தனது பொருளாதாரத் தேவைகளை அரைகுறையாக ஈடு செய்து வந்தது.


இப்போது பாலஸ்தீனத்தில் ஹமாஸ் இயக்கம் ஆட்சியைக் கைப்பற்றியதும், பாலஸ்தீன மக்களின் சொந்த வரிப்பணத்தையே பாலஸ்தீன அரசுக்குத் தர முடியாது என்று அடாவடித்தனம் செய்கிறது இஸ்ரேலிய அரசு. இதுதவிர, பாலஸ்தீன அதிகார அமைப்புக்குச் சேரவேண்டிய வெளிநாட்டு நிதியுதவிகளும் அமெரிக்கஇசுரேலிய அரசுகளால் முடக்கப்பட்டுள்ளன. அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இன்னும் ஒருபடி மேலே சென்று, பாலஸ்தீன அதிகார அமைப்பின் அமெரிக்க வங்கிக் கணக்குகள் அனைத்தையும் முடக்கி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.


இதன் விளைவாக, வறுமையிலும் பட்டினியிலும் பாலஸ்தீனம் பரிதவிக்கிறது. இன்று பாலஸ்தீன மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகள் கூட இல்லை. ஏறத்தாழ 1,60,000 அரசு ஊழியர்களுக்குப் பல மாதங்களாக சம்பளம் கொடுக்க முடியவில்லை. ஏறத்தாழ 12 லட்சம் பாலஸ்தீன மக்கள் பட்டினிச் சாவின் விளிம்பில் நிற்பதாக .நா. மன்றமே ஒப்புக் கொண்டுள்ளது. கடந்த ஜனவரி முதல் பாலஸ்தீன அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு வண்டிகளைத் தடுத்து இஸ்ரேலிய அரசு தொடர்ந்து அடாவடித்தனம் செய்து வருகிறது. இப்போது எரிபொருள், குடிநீர் விநியோகத்தையும் நிறுத்தப் போவதாக அச்சுறுத்துகிறது.


இதுமட்டுமின்றி, கடந்த 4 மாதங்களில் பாலஸ்தீன பகுதிகளின் மீது இஸ்ரேலிய இராணுவம் 38 முறை திடீர் தாக்குதல்களை நடத்தி 9 பேரைக் கொன்று பலரைப் படுகாயப்படுத்தியுள்ளது. 70க்கும் மேற்பட்டோரைப் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாகப் பொய்க்குற்றம் சாட்டி சிறையில் அடைத்துள்ளது. பாலஸ்தீன மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாலஸ்தீன பகுதியில் சுதந்திரமாக நடமாடக் கூட முடியவில்லை. பலமுறை அவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். இஸ்ரேலிய இனவெறி பயங்கரவாத அரசு தனது கொலைப் பட்டியலில் பாலஸ்தீன பிரதமர் இசுமாயில் ஹனியேவையும் சில ஹமாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சேர்த்துள்ளதோடு, அதனைப் பகிரங்கமாகவும் அறிவித்துள்ளது.


ஈராக்கில் ஜனநாயகத்தை நிலைநாட்டப் போவதாகப் பீற்றிக் கொள்ளும் பயங்கரவாத அமெரிக்க வல்லரசு, பாலஸ்தீனத்தில் நேர்மையாக நடந்த ஒரு ஜனநாயகத் தேர்தலையே ஏற்க மறுத்து, ""ஐயோ, பயங்கரவாதிகள் ஆட்சிக்கு வந்து விட்டார்கள்'' என்று ஊளையிடுகிறது. .நா. மன்றத்தின் மேற்பார்வையில் நடந்த பாலஸ்தீன தேர்தலைக் கண்காணித்தவர்களில் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டரும் ஒருவர். ""நேர்மையான முறையில் நியாயமாகவும் அமைதியாகவும் பாலஸ்தீன தேர்தல் நடைபெற்றது'' என்று அவர் நற்சான்றிதழ் கொடுத்துள்ளார். ஆனாலும் இத்தேர்தல் முடிவை ஏற்க மறுக்கின்றனர், அமெரிக்கஇஸ்ரேலிய பயங்கரவாதிகள். ஒரு பயங்கரவாத இயக்கம் ஆட்சிக்கு வந்திருப்பதை ஜனநாயக உலகம் எப்படி அங்கீகரிக்க முடியும் என்று இப்பயங்கரவாதிகள் கேள்வி எழுப்புகின்றனர்.


ஹமாஸ் இயக்கம் இசுலாமிய அடிப்படைவாத சித்தாந்தமும் பயங்கரவாத வழிமுறையும் கொண்ட அமைப்புதான். அதற்காக பாலஸ்தீன மக்களைப் பட்டினி போட்டு தண்டிப்பது எந்த வகையில் நியாயமாகும்? மௌனமாக நடக்கும் இப்படுகொலைக்கு எதிராக வாய்திறக்காமல் இருப்பது எப்படி ஜனநாயகமாகும்? ஏகாதிபத்திய காட்டுமிராண்டி உலகம் கிடக்கட்டும்; இசுலாமிய நாடுகள் கூட தமது பாலஸ்தீன இசுலாமிய சகோதரர்கள் பட்டினி போட்டுக் கொல்லப்படும் போது வாய்மூடிக் கிடக்கின்றன. வளைகுடா கூட்டுறவுக்கு (எஇஇ) நாடுகளான பல அரபு நாடுகள் அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்குப் பணிந்து பாலஸ்தீன ஹமாஸ் அரசாங்கத்தைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. உதவி கோரி வந்த பாலஸ்தீன வெளியுறவு அமைச்சரை எகிப்து நாட்டின் வெளியுறவு அமைச்சர் சந்திக்க மறுத்துள்ளார். பாலஸ்தீன குழந்தைகளைக் காப்பாற்றக் கோரி ஜோர்டான் சென்ற பாலஸ்தீன அமைச்சருடன் ஜோர்டான் மன்னர் பேச மறுத்துவிட்டார்.


நாமெல்லோரும் அல்லாவின் குழந்தைகள்; உலகெங்குமுள்ள இசுலாமியர்கள் அனைவரும் நமது சகோதரர்கள் என்றெல்லாம் மதவெறியர்கள் உபதேசம் செய்யலாம். ஆனால், பாலஸ்தீன இசுலாமிய சகோதரர்கள் பட்டினியால் வதைபட்டுக் கொண்டிருக்கும்போது எந்தவொரு இசுலாமிய அரசும் உதவிக்கரம் நீட்ட முன்வரவில்லை. இந்நாடுகளின் ஆளும் கும்பல்களுக்கு இசுலாமிய சகோதரத்துவ நலன் என்று எதுவும் கிடையாது. வர்க்க நலன் மட்டும்தான் உள்ளது. அமெரிக்காவுக்கு விசுவாசமாக இருப்பதுதான் தமது வர்க்க நலனுக்குப் பாதுகாப்பானது என்பதாலேயே, இந்நாடுகளின் ஆட்சியாளர்கள் பட்டினியால் பரிதவிக்கும் பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் கூட உதவ முன்வரவில்லை. இருப்பினும், தமது மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இத்துரோகிகளை அம்பலப்படுத்தி எதிர்க்கக் கூட முன்வராமல், இசுலாமிய இயக்கங்களும் மக்களும் வாய்மூடிக் கிடக்கின்றனர்.


உண்ண உணவின்றி பட்டினிச் சாவின் விளிம்பில் நிற்கும் பாலஸ்தீன மக்களுக்கு கட்டார், ஈரான், ரஷ்யா ஆகிய நாடுகள் மட்டுமே உதவ முன்வந்துள்ளன. இஸ்ரேலிய இனவெறி பயங்கரவாத அரசுடன் கூடிக் குலாவும் இந்திய அரசு தன்னை முற்போக்கு மனிதாபிமானியாகக் காட்டிக் கொள்ள அற்ப நிவாரணத் தொகை அளிக்க முன்வந்துள்ளது. உலகெங்குமுள்ள இசுலாமிய உழைக்கும் மக்களும் புரட்சிகர ஜனநாயக சக்திகளும் பாலஸ்தீன மக்களுக்கு தம்மால் இயன்ற உணவு மற்றும் மருந்துப் பொருட்களைத் திரட்டிக் கொடுத்து வருகின்றன. இம்மனிதாபிமான உதவியில் பங்கேற்பதும் அமெரிக்க இஸ்ரேலிய பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடுவதும் உழைக்கும் மக்களின் கடமை; நம் அனைவரது சர்வதேசியக் கடமை.


பட்டினிச் சாவின் விளிம்பில் பாலஸ்தீன மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கும்போது, அதிபராக உள்ள முகமது அப்பாஸின் அல்ஃபதா குழுவும் அரசாங்கத்தை அமைத்துள்ள ஹமாஸ் குழுவும் அதிகாரப் போட்டிக்கான நாய்ச் சண்டையில் இறங்கி வெளிப்படையாகவே மோதிக் கொள்கின்றன. கைகலப்புகள், துப்பாக்கிச் சூடுகள், கொலைகள, நாடாளுமன்றத்துக்குத் தீ வைப்பது என்பதாக குழுச் சண்டைகள் முற்றி பாலஸ்தீனத்தில் உள்நாட்டுப் போர் வெடிக்கும் அபாயத்தில் உள்ளது. இந்த மோதலுக்கான காரணத்தை அறிய பாலஸ்தீன வரலாறை சற்றுப் பின்னோக்கிப் பார்ப்பது அவசியம்.


1948 முதல் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்த்து தமது மண்ணை மீட்க பாலஸ்தீன மக்கள் தொடர்ந்து போராடி வந்த நிலையில், பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்குமிடையே இணக்கமாக உறவை ஏற்படுத்துவதாகவும், சுயாட்சிக்கான பாலஸ்தீன அதிகார அமைப்பைத் தோற்றவிப்பதாகவும் கூறிக் கொண்டு அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் ""ஆஸ்லோ ஒப்பந்தம்'' எனப்படும் துரோக ஒப்பந்தத்தைத் திணித்தன. அதை ஏற்றுக் கொண்டு தற்காலிகத் தீர்வைத் தேடியது, அராபத் தலைமையிலான பாலஸ்தீன விடுதலை இயக்கம். ஒப்பந்தப்படி, பாலஸ்தீன அதிகார அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. ஆனால், அது ஒரு பஞ்சாயத்துக்கு உள்ள அதிகாரம் கூட இல்லாமல் வெறும் கொலு பொம்மையாகவே இருந்தது. மறுபுறம், ஆஸ்லோ ஒப்பந்தத்தைக் கழிப்பறைக் காகிதமாக்கி விட்டு எல்லா வகையான பயங்கரவாத அட்டூழியங்களிலும் இஸ்ரேல் இறங்கியது. பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் வீடிழந்து வாழ்விழந்து உற்றார் உறவினர்களை இழந்து பரிதவித்தனர். ஏகாதிபத்திய உலகமோ வாய்மூடிக் கிடந்தது.


இஸ்ரேலிய பயங்கரவாத அடக்குமுறைகளை அதிபர் அராபத் தலைமையிலான பாலஸ்தீன அதிகார அமைப்பினால் தடுத்து நிறுத்த முடியவில்லை. அவரது வீட்டை இஸ்ரேலியப் படைகள் முற்றுகையிட்டு அவரை வீட்டுக் கைதியாக்கிக் கொக்கரித்தன. ஆஸ்லோ ஒப்பந்தம் சவப்பெட்டியில் வைக்கப்பட்டது. பாலஸ்தீன அதிகார அமைப்போ, அவலத்தின் நடுவே ஊழலிலும் உல்லாசத்திலும் மூழ்கிக் கிடந்தது. இவற்றுக்கெதிராக எதுவும் செய்ய முடியாமல் உடல்நலம் குன்றி அராபத் மாண்டு போனார். அவரது மறைவுக்குப் பின், அவரது அல்ஃபதா குழுவைச் சேர்ந்த முகமது அப்பாஸ், அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று பாலஸ்தீன அதிகார அமைப்பின் அதிபராக நீடித்து வருகிறார். மிதவாதியாகச் சித்தரிக்கப்படும் அப்பாஸ், இன்னமும் பயங்கரவாத இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்தி பாலஸ்தீன சுயாட்சி அதிகாரத்தை நிலைநாட்டிவிட முடியும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்.


அல்ஃபதா குழுவின் சமரசங்கள், துரோகங்கள், ஊழல் மோசடிகளால் அதிருப்தியுற்று இருந்த பாலஸ்தீன மக்கள், பயங்கரவாத இயக்கமான ஹமாஸ் முதன்முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டதும் அதற்கு பெருவாரியாக வாக்களித்து வெற்றிபெறச் செய்து அல்ஃபதா குழுவினரைத் தோற்கடித்துள்ளனர். அல்ஃபதா குழுவின் ஊழல் துரோகத்தின் எதிர்விளைவுதான் ஹமாஸ் இயக்கத்தின் வெற்றியே தவிர, ஹமாஸ் இயக்கத்தின் இசுலாமிய அடிப்படைவாத சித்தாந்தத்தையும் பயங்கரவாத வழிமுறையையும் பாலஸ்தீன மக்கள் அங்கீகரித்து ஆதரிப்பதாகக் கருத முடியாது.


யாசின் என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட ஹமாஸ் இயக்கம், பாலஸ்தீன விடுதலை இயக்கத்தில் இணையாமல் அதற்கு வெளியே தனித்து இயங்கி வந்தது. இசுலாமிய அடிப்படைவாத பள்ளிகள் நடத்துவது, மருத்துவமனைகளைக் கட்டுவது, நிவாரண உதவிகள் செய்வது ஆகியவற்றோடு இஸ்ரேல் மீது பலமுறை தற்கொலைப் படைத்தாக்குதல்களையும் நடத்தி வந்தது. ஈராண்டுகளுக்கு முன்பு ஹமாஸ் தலைவர் யாசினை விமானத் தாக்குதல் நடத்தி இஸ்ரேல் கொன்றுவிட்டது. அதன்பிறகு போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்ட ஹமாஸ் குழு, அரசியல் நீரோட்டத்தில் கலந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளது. இருப்பினும், ஹமாஸ் குழுவின் படைகளை பாலஸ்தீன அதிகார அமைப்பினது படைகளுடன் இணைக்க அப்பாஸ் மறுக்கிறார். பயங்கரவாதிகளை பாலஸ்தீன இராணுவத்தில் சேர்க்க முடியாது என்கிறார்.


ஹமாஸ் இயக்கம், இஸ்ரேல் என்ற ஒரு நாடு இருப்பதையே ஏற்க முடியாது என்றும், அவர்களோடு பேச்சு வார்த்தையே கூடாது என்றும், ஆயுதப் போராட்டத்தின் மூலம் இஸ்ரேலை விரட்டியடித்துவிட்டு பாலஸ்தீன விடுதலையைச் சாதிக்க வேண்டும் என்றும் தனது கொள்கையாகக் கொண்டுள்ளது. இதைச் சாதிக்க மக்களைச் சார்ந்து நின்று அரசியல் ஆயுதப் போராட்டங்களை நடத்துவதற்குப் பதிலாக, பயங்கரவாத குழு சாகச நடவடிக்கைகளையே அது தனது வழிமுறையாகக் கொண்டுள்ளது.


ஆனால், அதிபரான அப்பாஸ், இஸ்ரேல் என்ற நாட்டை ஏற்றுக் கொண்டு ஆஸ்லோ ஒப்பந்தத்தை நிறைவேற்ற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்கிறார். இதற்காக, இஸ்ரேல் என்ற நாடு இருப்பதை ஏற்று, இருநாடுகளும் பரஸ்பர தாக்குதலை நிறுத்திவிட்டு, அமைதித் தீர்வு காண்பதற்கு விழைய வேண்டும் என்ற திட்டத்துடன் வரும் ஜூலை 26ஆம் தேதியன்று பாலஸ்தீன மக்களிடம் கருத்துக் கணிப்புத் தேர்தல் நடத்தப் போவதாக அவர் அறிவித்துள்ளார். இஸ்ரேல் என்ற நாடு இருப்பதையே ஏற்றுக் கொள்ளாத ஹமாஸ், இக்கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று மக்களிடம் எதிர்ப் பிரச்சாரம் செய்கிறது. இதுதவிர நிதி, நிர்வாகம், நிவாரணப் பொருட்களை விநியோகித்தல் முதலான பல்வேறு விவகாரங்களில் இருதரப்பும் தீராத மோதலில் இறங்கியுள்ளன. பாலஸ்தீனத்தில் தீவிரமாகிவிட்ட இக்குழுச் சண்டைகளைக் கண்டு இனவெறி பிடித்த பயங்கரவாத இஸ்ரேலும் அதன் பங்காளியான ஏகாதிபத்திய உலகமும் கைகொட்டிச் சிரிக்கிறது.


ஏகாதிபத்தியங்களுடன் சமரசம் செய்து கொண்டு போடப்படும் துரோக ஒப்பந்தத்தாலும் இடைக்காலத் தீர்வினாலும் தேசிய இன விடுதலையை ஒருபோதும் சாதிக்க முடியாது. பாட்டாளி வர்க்க சித்தாந்த தலைமையற்ற குட்டிமுதலாளிய போராளிக் குழுக்களாலோ, மத அடிப்படைவாத பயங்கரவாத இயக்கங்களாலோ தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணவும் முடியாது என்ற உண்மையை உலகிற்கு உணர்த்திவிட்டு பாலஸ்தீனம் பேரழிவில் புதைந்து கொண்டிருக்கிறது.


மு மனோகரன்

Sunday, July 30, 2006

கனடா அரசின் புலிகள் மீதான தடை – சில கேள்விகள்

கனடா அரசின் புலிகள் மீதான தடை – சில கேள்விகள்


சபேசன்
30.07.06

னடா கேன்சவேட்டிவ் அரசு விடுதலைப்புலிகள் உட்பட பல அமைப்புக்களை பயங்கரவாத அமைப்புக்களாகக் கருதி கனடாவில் தடை செய்துள்ளது. இந்த நடவடிக்கை பல திருப்பங்களை இலங்கை அரசியலிலும் சமாதான முயற்சியிலும் ஏற்படுத்தவல்லது. இதைவிடவும் இந்த தடையானது எப்படி எந்த விடயங்களை பாதிக்கும் என்பதை பல கோணங்களிலிருந்தும் ஆராயப்பட வேண்டும்.



சர்வதேசத்தின் பார்வையில் விடுதலைப்புலிகளும் அவர்களின் பாசிசமும்

புலிகளின் தேவையும் அவர்களது அரசியலும்

சமாதானப் பேச்சுவார்த்தையும் இதன் உள்ளார்த்தமும்.

இலங்கை அரசாங்கத்தின் நலனும் இனவாதமும்



மேற்குலக நாடுகளும் வளர்ச்சியடைந்த நாடுகளும் மூன்றாம் உலக நாடுகளையும் அந்த நாடுகளில் நடைபெறும் போராட்டங்களையும் கணிப்பிடும் முறையை சற்று விழிப்புணர்வுடன் பார்க்கவேண்டியுள்ளது. குறிப்பாக அந்த நாடுகளில் உள்ள பிற்போக்குக் கட்சிகள் (கேன்சவேட்டிவ் கட்சி) மூன்றாம் உலகநாடுகளில் உள்ளவர்கள் இன்னமும் காட்டுமிராண்டிகளாகவே வாழ்கின்றார்கள் என்றும் அவர்களுக்கு நாகரீகத்தை நாங்களே புகட்ட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். அந்தந்த நாடுகளில் நடக்கும் போராட்டங்களில் உள்ள நியாய அநியாயத் தன்மைகளை ஆழமாக பார்ப்பதைத் தவிர்த்து மேலோட்டமாகப் பார்த்து வெறும் மொட்டையான தீர்வினை தாங்களே தீர்மானித்து விடுவார்கள். விடுதலைப்புலிகள் பாசிஸ்ட்டுக்களா இல்லையா என்று கேள்வியை பின்னர் பார்ப்போம். சரி விடுதலைப் புலிகள் இல்லாமல் (உதாரணத்திற்கு)மிகச் சிறப்பான முறையிலோ அல்லது முடிந்த அளவிலென்றாலும் ஐனநாயகப் பண்புடன் ஒரு போராட்டமோ ஒரு இயக்கமோ நல்ல சமத்துவக் கொள்கையுடனே போராடுகின்றது என்று வைத்துக் கொள்வோம். இவர்கள் என்ன செய்திருப்பார்கள். விடுதலைக்கு ஒரு மாதம் முதல் வரையிலும் தென்னாபிரிக்காவையும் நெல்சன் மண்டேலாவையும் பயங்கரவாத சாயம் கொண்டு விமர்சித்தவர்கள் விடுதலைக்குப் பின்னர் தவிர்க்க முடியாமல் விடுதலைப்போராட்டமாக பேசினார்கள்.



கேன்சவேட்டிவ் கட்சி புலிகளை தடைசெய்தமை தமிழ் பேசும் மக்களில் கொண்ட அன்பினால் அல்ல. அல்லது தமிழர்களில் மேல் புலிகள் அராஐகம் செய்தார்கள் என்பதற்காகவும் அல்ல. இதுவே தான் இவர்களின் கொள்கை. இவர்களிடம் அமெரிக்கா அளவிற்குப் பலமும் புஸ் அளவிற்கு அதிகாரமும் இருந்தால் தங்கள் படையினை தமிழ்பிரதேசத்திற்கு அனுப்பி அங்கே கூட தடைசெய்யக்கூடியவர்கள்.



எனது வாதம் மேற்கத்திய நாடுகளில் இவர்கள் மட்டும்தான் அரசியலில் உள்ளவர்கள் என்பதல்ல. ஆனால் இந்தக் கொள்கையுடையவர்கள் ஆட்சிக்கு வந்தால் சரியான அரசியல் சக்திகளுக்கும் கூட பாதகமான விளைவுகள்தான்.



ஆகவே புலிகளின் அராஐகத்தை வெறுப்பவர்கள் கூட இந்தத்தடை மூலம் குறுகிய சந்தோசங்களை அடையமுடியாது. ஏனெனில் கொள்ளைக்காரனுக்கூடாக கள்ளனுக்கு தண்டனை வழங்குவது சரியா?



எனவே புலிகளின் அராஐகத்திற்கும் பாசிசத்துக்குமான தண்டனையை வழங்கும் பாத்தியதை உடையவர்கள் இலங்கை தமிழ்பேசும் மக்கள் மட்டுமேதான். ஆகவே இத்தண்டனையினை வழங்க சிங்கள அரசியல்வாதிகளுக்கோ இந்திய அரசிற்கோ அமெரிக்க அரசிற்கோ ஏன் கனடிய அரசிற்கோ கிடையாது.



ஆனால் கனடிய மண்ணில் கூட புலிகளின் அராஐகம் நடந்தது என்பது உண்மை ஆகவே கனடிய மண்ணின் இறைமையை பாதுகாக்கும் பொறுப்புணர்வு என்னும் பார்வையில் இதனை சரியான பக்கத்திலும் பார்க்கமுடியும்.



ஓவ்வொரு மனிதனும் தான் விரும்பும் கொள்கைக்காக போராடும் உரிமையும் ஒவ்வொரு சமூகமும் தான் விரும்பும் விடுதலைக்காக போராடும் உரிமையும் அங்கீகரிக்கப்படுமானால் சமூக இயங்கியல் மிகவும் வேகமாக முன்னோக்கிச்செல்லும்.



புலிகளின் நிலைப்பாடும் அவர்களின் அரசியலும் என்ற வகையில் தாங்கள் மட்டுமே தமிழர் தரப்பு என்ற வாதத்தினூடாக தங்களை தமிழ் தேசியத்தின் பிரதிநிதியாக பிரகடனப்படுத்தும் முறைமையானது எவ்வளவு தூரம் ஏற்றுக்கொள்ளப்படத்தக்கது என்பது ஒரு பாரிய கேள்வி. இந்தக் கேள்வி மாற்று இயக்கங்களையும் தமிழர் பிரதிநிதிகளாக பார்க்கவேண்டும் என்கின்ற வகையிலிருந்து கேட்கவில்லை. மாறாக இலங்கைத் தமிழ் பேசும் மக்களை ஒருமித்த கூட்டாகக் கருதமுடியாது. காரணம் முஸ்லிம்கள் மட்டுமல்ல அம்பாறை மட்டக்களப்பு பிரதேச வேற்றுமை கூட இன்று கூர்மையடைந்துள்ளது என்பது வேதனையான தவிர்க்கமுடியாத உண்மையாகும். இந்தச் சமூகங்கள் எத்தனை விகிதம் புலிகளின் பிரதிநிதித்துவத்தினை மனமார ஏற்றுக்கொள்ளும்?

புலிகள் தங்களின் ஆளுமைக்குள் முற்று முழுதாக தமிழர் தரப்பினை தக்கவைத்துக்கொள்வதற்கு முன்னர் அதனை நிறைவேற்ற மற்றைய எல்லா அரசியல் அமைப்புக்களையும் தடைசெய்தார்கள். தங்களை நிபந்தனையற்று ஏற்றுக்கொள்பவர்களை தவிர மாற்றுக்கட்சி மாற்று அரசியல் என்பன முற்றாக புலிகளால் நிராகரிக்கப்பட்டது.



அரசியல் அதிகாரம் கிடைத்து விட்டால் மாற்று அரசியல் மறுக்கப்படுவதும் ஐனநாயகம் நிராகரிக்கப்படுவதும் தமிழ்ஈழ மண்ணிலும் கனடிய மண்ணிலும் யதார்த்தமாகின்றது.

இது இவ்வாறிருக்க இன்று மாற்றுக்கருத்துக் கொண்டவர்கள். நடுநிலைமை வகித்தவர்கள் என்று சொல்லப்பட்டவர்களிடம் உருவான பிரதான கேள்விகள் எவை?

புலிகளை தமிழ் தேசிய சக்தியாக அங்கீகரிப்பதா இல்லையா என்பது?



அதே நேரம் தேசிய சக்தியாக பார்ப்பதா இல்லையா என்பதை விடுத்து தமிழர் தரப்பில் வேறு யார்?



மேற்சொன்ன கேள்விகளுக்கு பதிலை ஆளுக்காள் அரசியல் விஞ்ஞான விளப்பங்களை செய்வதை விடுத்து தமிழ் பேசும் மக்களிடையே விட்டுவிடுவது பொருத்தமானது என்று நினைக்கிறேன். ஆனால் மக்களின் குரல் இன்றைய சூழலில் எவ்வளவு பலமானது என்பது யாவருக்கும் தெரிந்ததொன்று. இனந்தெரியாதவர்களால் இனந்தெரியாதவர்கள் தொடர்ச்சியாக கொல்லப்படும் இச்சூழலில் இது மிகவும் கடினமானது.



புலிகளின் நடவடிக்கைகள் புலம் பெயர்ந்த நாடுகளில் எப்படிப்பட்ட அரசியல் வரலாற்றை வெளிப்படுத்தியது. பல புத்திஜீவிகள் கொல்லப்பட்டும் பல பத்திரிகைகள் தடைசெய்யப்பட்டும் பல தனிநபர்கள் அச்சுறுத்தப்பட்டும் பல வியாபார தாபனங்கள் பினாமியாக்கப்பட்டும் ஒரு பலவந்தமான ஆளுமை மூலம்தான் பெரும்பான்மை பலத்தினை தங்கள் பக்கமாக்கினார்கள் அல்லது காட்டிக்கொண்டார்கள்.



இதற்கு எதிர்மாறான நிலைப்பாடு கொண்டவர்கள் பலர் தங்களிடையே பல முற்போக்கான அரசியல் சமூக எண்ணங்களை கொண்டிருந்தபோதும் புலிகளை பழிவாங்குவதே முதற்கடமை என்று எப்படிப்பட்ட அதிகார சக்திகளுடன் இணைந்தென்றாலும் (புலிகளை விடவும் மோசமான பாசிச சக்திகள் பல இன்று பாரிய அதிகார இயந்திரங்களை வைத்திருக்கிறார்கள்) அதனை நடைமுறைப்படுத்த நினைக்கின்றனர்.



இவர்கள் இந்த நிலைப்பாட்டை எடுப்பதற்கான பிரதான பங்கு புலிகளின் அதீதமான பாசிசப்போக்குதான் காரணம். இதனை எவரும் மறுக்கமுடியாது. ஆனால் இவர்களின் எதிர் நடவடிக்கைகள் காரணமாக இந்தத்தடையினை கனடிய அரசு கொண்டுவரவில்லை. மற்றும் மனிதஉரிமை கண்காணிப்புக்குழுவின் அறிக்கையும் ஒரு முழுமையான காரணமாக அமையமாட்டாது. ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்னரே இந்த முடிவு கேன்சவேட்டிவ் கட்சிக்கு இருந்தது.



புலம்பெயர்ந்த மக்களில் பெரும்தொகையான எண்ணிக்கையும் ஓரளவுக்கு செறிந்தும் வாழும் சூழல் கனடாவிலும் அதிலும் ரொறொன்ரோவில் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் கொண்டுவரப்பட்ட தடையிலும் பார்க்க இது தாக்கமானதும் தார்ப்பரியமானதுமாகும். காரணம் கனடாவில் பல படித்த இளைஞர்களும் யுவதிகளும் தங்கள் கல்வியறிவு இந்தநாட்டின் புதிய பரிமாணம் ஊடகவியலறிவு இணையத்தளப் பிரச்சாரம் என்பவற்றின் மூலம் புலிகளுக்காக வேலை செய்வது என்பது ஒரு முற்போக்கான தமிழ்த்தேசியத்திற்கு உழைப்பதாகும் என்றும் நம்பிக்கொண்டிருந்தார்கள். கடுமையான அர்ப்பணிப்புடனும் உழைத்தார்கள் என்பதும் உண்மைதான். (பேராசிரியர் சிவத்தம்பிக்கு மட்டும் இது தெரியவில்லை) இவர்களிடம் வரலாற்றுரீதியிலான தமிழ்த்தேசிய அரசியலை கலந்துரையாடமுடியாததற்குக் காரணம் இவர்களில் பெரும்பான்மையினர் 25 வயதிற்குட்பட்டவர்களாவர். பெரும்பாலோர் புலிகளால் உருவாக்கப்பட்ட வரலாற்றைதான் கற்றவர்கள். பதினைந்து வருடங்களிற்கு முன்னர் இயக்கங்களிடையே நடந்த குத்து வெட்டுகள் கழுத்தறுப்புகள் இருட்டடிப்புகள் என்பவற்றின் உண்மை வரலாற்றினை சொல்லப்போனால் நம்பவோ இருந்து கேட்கவோ இவர்கள் தயாராக இல்லை.



இந்தத் தமிழ்த் தேசியத்திற்கான புனைவு வரலாறு என்பது புலிகளால் ஆரம்பிக்கப்படவில்லை. இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து உருவாகிய தமிழ் தேசிய கட்சிகளிலிருந்து ஆரம்பிக்கிறது. இதற்கு உறுதுணையாக பல அனுபவம் மிக்க புத்திஜீவிகள் உண்மை வரலாற்றை கூறாமல் புலிகளின் வாய்ப்பாட்டையே பாடுகிறார்கள் தங்கள் சொந்தப்பிழைப்புக்காக.

இந்தத்தடை என்பது புலிகளின் “அடிப்படை இயந்திர அமைப்பை” ஆட்டுவிக்கப்போவதில்லை என்பது உண்மைதான். ஆனால் பிரச்சாரப் பீரங்கிகளுக்கு ஓரளவுக்கு பிரச்சினை உள்ளது. இதன் காரணத்தால் பொருளாதாரத் தேடல்களுக்கும் ஓரு பிரச்சனைதான்.



ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக உளவியல் தாக்கம் என்பதுதான் பாரிய பிரச்சனை. மனரீதியில் அசைக்கமுடியாத நம்பகமான மலை ஒன்றின்மீது பல கேள்விகள் யதார்த்தமான முறையில் எழுகின்றன.



புலிகளின் போராட்ட வரலாற்றில் இது ஒரு ஆரம்ப வளர்ச்சிப்பருவத்தில் நடக்கவில்லை. புலிகளும ஓர் நிர்வாகத்தை தமிழ்ப்பிரதேசத்தின் ஒரு பகுதியை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்குமளவிற்கு வளர்ந்து கடைசி யுத்தநிறுத்தத்திற்கு என்றாலும் அரசு தங்களுடன்தான் பேசவேவண்டும் என்ற நிலைக்கு வளர்ந்துவிட்ட நிலை என்பதை மறுக்கமுடியாது. சர்வதேச சமூகமும் இதனை ஒத்துக்கொண்டுள்ளது. அரசும் புலிகளும் திறந்த மனதுடன் சமாதானத்தில் ஈடுபடவில்லையென்றாலும் புலிகள் இனியாவது திறந்த மனதுடன் ஐனநாயகத்தை பேணும் நோக்கில் ஆரம்பக்கட்டமாக பழிவாங்கல் அராஐக நடவடிக்கைகளை நிறுத்த ஒத்துக்கொள்ளவேண்டும்.



சமாதானப் பேச்சுவார்த்தையும் அதன் உள்ளர்த்தமும் என்று பார்க்க முதல் யுத்தநிறுத்தத்தை பற்றிப்பார்க்காமல் போகமுடியாது. ஆனால் அது ஓரளவுக்கு பழங்கதையாகிவிட்டது.

சமாதானமும் இனப்பிரச்சனையும் என்று பார்த்தால் அரசின் ஒடுக்குமுறை திட்டமிட்ட குடியேற்றங்கள் ஒன்றும் புதிதல்ல தொடர்கின்றது. அரசாங்கத்தின் அரசியல் முடிவுகளை முடிவெடுப்பவர்கள் பாராளுமன்றத்தில் இருக்கும் சிங்கள அரசியல்வாதிகளல்ல “தீர்மானிக்கும் சக்தியான சிங்கள இனவாத சுற்றுவட்டம்”. இவர்களை ஆயுதப் போராட்டம் ஒன்றினூடாக மட்டுமே செவிசாய்க்கப்பண்ண முடியும்.



ஆனால் பாதிக்கப்படுகின்ற இனங்கள் என்று பார்த்தால் (தமிழர்கள் முஸ்லிம்கள் மலையக மக்கள்) தங்களின் உண்மையான பிரச்சனைக்கு சரியான தீர்வு என்றவகையில் பார்க்கின்றார்களா?

இல்லை தங்களின் பிரச்சனைக்கு தீர்வை பெற்றுத்தருவார்கள் என்று நம்பும் தங்களின் பிரதிநிதி சொல்லுகின்ற தீர்வை பார்க்கின்றார்களா?



இலங்கை வரலாற்றில் தவிர்க்கமுடியாத யதார்த்மாக இரண்டாவது நிலைப்பாட்டைத்தான் காணமுடிகின்றது. யார் எந்தக்கட்சி அரசுடன் பேசப்போகின்றார்கள் என்று பார்க்கின்றார்களே அல்லாமல் என்ன பேசினார்கள் என்று பார்ப்பதில்லை.



சரி தங்களின் பிரதிநிதிகள் சொல்லும் தீர்விலிருந்துதான் அமையவேண்டும் என்று பார்த்தாலும் யாருக்கு யார் பிரதிநிதி என்று பார்க்கவேண்டும். சிங்களத்தரப்பிலிருந்து தமிழர் தரப்பை நோக்கி முட்டாள்தனமாக கூறுகிறார்கள் பிரபாகரன் ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கும் பிரதிநிதியல்ல என்று.

தமிழர்கள் அல்லவா கூறவேண்டும் யார் எங்கள் பிரதிநிதி என்பதை.



இது சுயநிர்ணய உரிமைக்குள் அடங்கவில்லையா?

மறுபடியும் பார்த்தால் மேற்கூறிய அதே கருத்தைதான் தமிழர் தரப்பினர் கூறுகிறார்கள் முஸ்லிம் மக்களைப் பார்த்து.



முஸ்லிம் மக்களல்லவா முடிவெடுக்கவேண்டும் தங்களின் பிரதிநிநி யாரென்று. அதே வெள்ளாள யாழ்ப்பாண மையவாதம். இங்கே! தேசியம் போய் மறைய ஆண்டபரம்பரை மேல்வருகின்றது. மக்களிடம் அரசியல் கல்வி வளராமல் இருப்பதற்கு காரணம் தமிழர்களின் அரசியல் தலமை வெள்ளை வேட்டி அப்புக்காத்துக்களின் கறுப்புக் கோட்டுக்களிலிருந்து சீருடைக்கு மட்டும் மாறியுள்ளதுதான் காரணம்.



இலங்கை அரசின் நலனும் இனவாதமும் இந்தத் தடை மூலம் பெரியநன்மை பெறுவார்கள் என்பது தவிர்க்க முடியாத உண்மை. இந்தத் தடை போன்று ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் தடை செய்ய இதனை உதாரணமாக்கி கோரிக்கை வைப்பதற்கு கனடியத் தடை ஒரு நல்ல சாட்டு.



இலங்கை அரசு எதிர்பார்க்கும் பாரிய விடயம் புலிகளை பலவீனப்படுத்தி விடுவதன் மூலம் நாடு பிளவுபடுவதை தவிர்க்கலாம் என்பதுதான். சிங்கள மக்களிடம் வாக்கு பெறுவதற்கும் அங்கீகாரம் பெற்று ஆட்சியமைப்பதற்கும் தேவையான முக்கியமான அம்சங்கள் இவைதான்.

மறுபக்கம் இடதுசாரித் தத்துவத்தில் போராடுவதாகக் கூறிக்கொள்ளும் JVP யினர் புலிகள் தமிழர் தரப்பின் பிரதிநிதிகளல்ல என்று கூறும் போக்கு ஏற்கமுடியாதவொன்று. இன்று வரையிலும் தேசியஇனப்பிரச்சினகைகு ஓரளவேனும் சர்வதேசிய மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்வாக “பிரிந்து போவதுடன் கூடிய சுயநிர்ணய உரிமை” யைதான் பார்க்க முடியும். இது முக்கியமாக பெரும்பாலும் சர்வதேசிய வாதிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசியத்தீர்வு ஒன்று. மாக்ஸ்சிஸ்ட்டுகளாக தங்களை வலியுறுத்துபவர்கள் (JVP) தங்களின் நாட்டில் மட்டும் இதனை ஏற்கவில்லை.



இதில் தமிழர் தரப்பு ஒன்றுக்கும் குறைந்ததல்ல. முஸ்லிம்களின் நிலைப்பாடு பற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இருந்தாலும் சரி விடுதலைப்புலிகளாக இருந்தாலும் சரி ஒன்றையே தான் கூறுகிறார்கள். தங்களை அதாவது பெரும்பான்மை தமிழர்களை அனுசரித்துத்தான் முஸ்லிம்களின் அரசியல் அமையவேண்டும் என்று வெளிப்படையாக வலியுறுத்துகிறார்கள். சிங்கள இனவாதிகளின் கருத்துக்கு இது ஒன்றும் குறைந்தது இல்லை.



இதைவிட புதிதாக ஆரம்பித்துள்ள மட்டக்களப்பு தேசியவாதத்தை பார்த்தாலும் இதே நிலமைதான். இன்றைய தேசிய இனப்பிரச்சனையில் புதிதாக இதுவும் அவசியமா என்று வேதனையான ஒரு கேள்விதான். ஆனால் எங்கு பிரிவினையும் தனித்துவமும் தேவை என்று ஒரு சமூகக்கூட்டம் அங்கலாய்கின்றதோ அங்கே தான் சார்ந்து நிற்கின்ற பெரும்பான்மையிடமிருந்து தனக்கு பாதுகாப்பின்மையையும் உத்தரவாதத்தையும் கேள்வியாக்குகின்றது என்பது யதார்த்தம். முப்பதிற்கு மேற்பட்ட அங்கத்தவர்கள் கொண்ட இடைக்கால நிர்வாக சபையில் ஒருவர்தானும் மட்டக்களப்பு அம்பாறையை சார்ந்தவர்கள் இல்லையே என்ற கேள்வி கருணாவினால் கேட்கப்பட்டது. இதற்கு இன்றுவரை பதிலில்லை. தேசிய விடுதலைப் போராட்டம் வளர்ந்ததாக சொல்லப்படும் இன்றைய பொழுதிலும் தேசிய விடுதலை போராட்டமானது யாழ்ப்பாண மையவாதத்தை தொடர்ந்தும் நிலைநிறுத்துமானால் மட்டக்களப்பு தேசியவாதம் தவிர்க்க முடியாத ஒன்று. இங்கு கருணா என்ற தனிநபர் பற்றிய கேள்வி இரண்டாம் பட்சமானது.



இந்தக் கேள்வி யாரால் உருவாக்கப்பட்டது என்பது இங்கு அவசியமல்ல. இக்கேள்வியில் உள்ள நியாயத் தன்மைதான் முக்கியம்.



புலிகளின் வரலாறுதான் புலிகளின் எதிர்காலத்திற்கும் வழிவகுக்கும். அரசியலற்ற ஆயுதப்போராட்டம் எங்கே கொண்டுபோய்விடும் என்பது உலகத்தில் மனித வரலாற்றில் கண்கூடுகள் பல.



புலிகள் இனிமேலாவது தமக்குமட்டுமே உரிய புலித்தேசித்திற்கான அங்கீகாரத்தினை தேடுவதை விடுத்து தமிழ்த் தேசியத்திற்காக (முஸ்லிம்களினதும் மட்டக்களப்பு அம்பாறை நலனும் அடங்கிய) நன்மை என்ற வகையில் செயற்படத் தொடங்கவேண்டும். அதிலும் பார்க்க அவசியம் யுத்தம் ஆயுதப்போராட்டம் வன்முறை என்பவை அரசியல் விடுதலைக்கான ஒரு வலியுறுத்தலே அன்றி தீர்வு அல்ல என்பதை புரிந்துகொள்ளல் வேண்டும். போரில வென்றவர்;கள் யாருமில்லை மனித வரலாற்றில். வெற்றி என்று தங்களின் குறுகிய கண்ணோட்டத்துடன் முடிவுசெய்கிறார்களே அன்றி அது முடிவல்ல.

ஆயுதப் போராட்டத்தை தேர்ந்தெடுக்கும் எந்தப்போராட்டமும் ஒரு கொலைகூட நடக்கக்கூடாது என்ற விமர்சனத்தினை எதிர்பார்க்கத்தான் வேண்டும். அது நடைமுறை சாத்தியம் அல்ல. இது யதார்த்தம். ஆனால் அவசியமற்ற தனிநபர் பழிவாங்கல்களை நிறுத்தியே ஆகவேண்டும்.

வரலாறு எப்படி இருந்தாலும் இன்று ஓடுவது அப்பாவிகளின் இரத்தம் வழக்கம் போன்று அரசியல்வாதிகள் தப்பிவிடுவார்கள் அரசியல் ஆய்வாய்வாளர்கள் விமர்சனம் வைப்பார்கள்.

இதன் ஆரம்பமாக இரு தரப்பினரும் ( புலிகள் தரப்பும் அரசும் அரசுசார்பு தமிழ் ஆயுதக்குழுக்களும்) பொது மன்னிப்பாக ஒருவருக்கு ஒருவர் இணக்கப்பாட்டிற்கு வருவது இன்றைய காலகட்டத்தின் மிகவும் அவசியமான ஒன்று.



எதிர்கால இலங்கையின் அரசியலில் தேசிய இனப்பிரச்சனையின் தீர்வு என்பது ஒரு சோசலிச வடிவத்தை நேர்மையாக கடைப்பிடிக்கும் கூட்டு முயற்சிக்கூடாகவே முன்னெடுக்கப்பட வேண்டும். காரணம் பாசிசத் தேசியமும் இனவாதமும் ஒன்றுக்கொன்று விட்டுக்கொடாத சதுரங்கத்தைத்தான் நடத்தும். இது அதிகாரப்போட்டிக்காக நடத்த்தப்படும் அப்பாவிகளை பலியாக்கும் வெறும் அரசியல் நாடகம்



இதைவிடுத்து பாரிய மக்கள் படுகொலைக்கூடாக சர்வதேசிய அல்லது உலக வல்லரசுகளின் நேரடி இராணுவ தலையீட்டினை நாங்கள் அனுமதித்தால் இன்னுமொரு ஈராக் இன்னுமொரு ஆப்கானிஸ்தான் போன்று மோசமான சீர்குலைவை அனுமதித்தவர்களாவோம்



சபேசன் .