தமிழ் அரங்கம்

Saturday, October 21, 2006

நடைமுறையற்ற புலி அலட்டல்கள் இரண்டு

நடைமுறையற்ற புலி அலட்டல்கள் இரண்டு

ண்மையில் புலிக் காட்டுப்பிரதேசங்கள் மீதான பொருளாதார தடையையடுத்து ரி.ரி.என் தொலைக்காட்சியில் நிலவரம் என்ற பகுதியில் 'பொருளாதார தடைகளும் பொருண்மிய போராட்டமும்" என்ற தலைப்பில் ஒரு உப்புச்சப்பற்ற நடைமுறைக்கு உதவாத பரப்புரை ஒன்றைச் செய்தனர். அதில் புலித் தேசிய பொருளாதாரத்தை மீட்டுவிடுவோம் என்றும், உலக பொருளாதாரம் பற்றியும் கரிகாலனும், பாலகிருஸ்ணனும் அலட்டினர். http://www.pathivu.com/?ucat=nilavaram என்ற இணையத்தில் பார்க்க.


இதைப்பற்றி விமர்சனம் ஒன்றை நான் எழுதி வருகின்றேன். இருந்தபோதும் இவை பற்றி நான் முன்பு எழுதிய கருத்துக்களம் இதை மறுதலிக்கின்றது. அந்த வகையில் அவை கூட பதிலளிக்கின்றது


புலிகளும் தமிழ் மக்களும்


புலிகளின் வரவாற்றில் அவர்களை முதன் முதலாக தமிழ் மக்கள் மிக நெருக்கமாகவே, சொந்த அனுபவவாயிலாக புரிந்து கொண்டுள்ளனர். மக்களை நேரடியாக பாதிக்கின்ற உடனடி நிகழ்ச்சி, பரந்துபட்ட மக்களை விழிப்படைய வைத்து விடுவதுண்டு. இது புரட்சிக்குரிய தயாரிப்பு காலங்களில் புரட்சியின் உந்து விசையாகின்றது. தமிழ் மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி உடனடி நிகழ்வால் அல்ல, ஒரு குறுகிய கால நடவடிக்கையால் நடந்துள்ளது. அமைதி சமாதானம் புலிகளுக்கு எதிரான மனஉணர்வை தமிழ் மக்களின் உணர்வு மட்டத்தில் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 25 வருட போராட்டத்தில் அவர்களின் போலித்தனமான வேடங்கள் மக்கள் முன் அம்பலமானது, இந்த அமைதிக்கு பின்னான காலகட்டத்தில் தான், மக்கள் ஒவ்வொருவரும், சுயமாக புலிகளை சொந்த அனுபவம் வாயிலாக மிக நெருக்கமாக புரிந்து கொண்ட நிகழ்வு, முதன் முறையாக நிகழ்ந்துள்ளது. இந்த அனுபவம் துரதிஸ்டவசமாக தவிர்க்க முடியாது, சொந்த இனத்தின் மொத்த நலனுக்கு எதிரானதாக உள்ளடகத்தில் பிரபலிக்கின்றது. எந்த பிரச்சார சமூக வடிவங்களையும் தாண்டிய மக்களின் சொந்த அனுபவம், புலிகளின் அரசியல் அழிவுக்குரிய சூழலை உருவாக்கியுள்ளது. தமது சொந்த அழிவுக்கே தாமே வித்திடும் அழிவுக்குரிய மக்கள் விரோத நடவடிக்கைகளை, புலிகள் தமது சொந்த அரசியலாக வரிந்து கொண்டுள்ளனர்.


ஆனால் இந்த அழிவு என்பது புலிகளின் கொடுரமான நடைமுறைக்கு மாறாக, இருக்கின்ற மற்றொரு பிற்போக்கு அமைப்பைச் சார்ந்து வெளிப்படுவதை தமிழ் மக்கள் தெரிவுக்குள்ளாக்கி உள்ளது. இந்த இடைவெளிதான், புலிகள் தப்பிப் பிழைக்கும் ஒரு இடைவழிப் பாதையை தக்கவைக்க முனைகின்றது. மக்களின் சமூக நலன் சார்ந்த மாற்றுத் தலைமைகளற்ற எமது சூனிய சுடுகாட்டுப் பிரதேசங்களில், சிங்கள இனவெறி அரசும் அவர்களின் கைக்கூலிகளாக இயங்கும் துரோகக் குழுக்களும் இதை அறுவடை செய்யத் துடிக்கின்றன.


அமைதி, சமாதானம் என்பது மக்களிடம் பணத்தை கொள்ளையிடுவதே புலிகள் அரசியலாகியதில் இருந்து இது தொடங்கியது. அத்துடன் தன்னியல்பாக தமது சமூகத் தேவைகளுடன் அன்றாடம் சமூகத்தில் இயங்கும் சமூக நிறுவனங்களை கட்டுப்படுத்தி, அவற்றை பினாமியாக்கும் நடைமுறைகள் புலிகளை மேலும் தனிமைப்படுத்தியது. இவற்றுடன் கட்டாயப்படுத்தி ஆட்சேர்ப்பு குழந்தைகளையும், இளம் தலைமுறையினரையும் பலாத்காரமாக கடத்திய நிகழ்வு மக்களின் தெரிவுகளை துரிதமாக்கியுள்ளது. மக்களை ஏறிமிதிப்பதே அமைதியாகி, அதுவே சமாதானத்தின் அடிப்படைச் சின்னமாகியது. அச்சம், பீதியுடன் நடமாடும் மக்களின் நடைப் பிண வாழ்க்கை, தனிப்பட்ட ஒவ்வொருவனினதும் மனக் குமுறலைக் கொண்டே அமைதி சமாதானம் உறைந்து கிடக்கின்றது.


அமைதி சமாதானத்தின் பின்பாக புலிகளின் பிரதான நடத்தையாக முதன்மை பெற்றது, பணத்தை எப்படி மக்களிடம் இருந்து சூறையாடுவது என்பதே. இதன் மூலம் புலிகளின் பெரும் மூலதனங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றது. நேரடி மற்றும் மறைமுகமான வழிகளில் வரியாகவும், புலிகளுக்கான கொடுப்பனவாகவும் கூட மாறியுள்ளது. இங்கு புலிகளுக்கான கொடுப்பனவு என்பது, பெரும்பாலும் மிரட்டலை ஆணையில் வைத்து கட்டாயப்படுத்தியே வசூலிக்கப்படுகின்றது. புலிகளின் வரிமுறை ஒரு பண்டத்தின் எல்லா செயல் தளத்திலும் கோரப்படுகின்றது. அதாவது மூலப் பொருளில் இருந்து விற்பனை வரை, இந்த உற்பத்தியின் சங்கிலித் தொடரின் எல்லாக் கண்ணியிலும் வரி கோரப்படுகின்றது, வசூலிக்கப்படுகின்றது. புலிகள் மற்றும் இராணுவத்தின் எல்லையோரங்களில் இராணுவ கெடுபிடி சோதனைக்கு பதில், புலிகளின் கெடுபிடி மக்களை கிலிகொள்ள வைத்துள்ளது. ஆட்கள் மேலான கண்காணிப்புக்கு வெளியில், பொருட்கள் மேலான கண்காணிப்பும், அதன் மீதான வரியும் இழுபறியான போராட்டத்தை எல்லையோரங்களில் அன்றாட நிகழ்வாக்கியுள்ளது. திட்டமிட்ட சீரான வரி முதல் விரும்பிய வகையில் வரி அறவிடல் என்பது அராஜக வழிகளில் அனைத்தும் எழுதப்படாத சட்டவிதியாக, ஆனால் அவர்களின் சொந்த நீதிமன்ற சட்டத்துக்கே உட்படாத வகையில் சூறையாடப்படுகின்றது.


புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் புலிகளின் நடத்தைக்கு அவர்களின் சொந்தச் சட்டம் எப்படி செல்லுபடியாகாதோ, அதே போல் புலியின் வரி அறவீட்டின் சரி பிழைகளை எதிர்த்து யாரும் வழக்காட முடியாது. இந்த அராஜக நிலை, எந்த சட்ட ஒழுங்குக்கும் அப்பாற்பட்ட சூறையாடலாக கொள்ளையாக உள்ளது. தமிழ் மக்கள் சிங்கள இனவாத அரசுக்கு வரிகட்டிய பின்பு, புலிகளுக்கு மீளவும் வரிகட்டுவதன் மூலம் கடுமையான சமூகப் பொருளாதார வாழ்வை எதிர்கொள்கின்றனர். சிங்கள மக்களை விட இரட்டைச் சுமையை பொருட்களை வாங்கி நுகர்வதில் எதிர் கொள்கின்றனர். புலிகளின் வரி பல தளத்தில் பல கட்டத்தில் சூறையாடப்படுவதால், வாங்கும் திறனை மட்டும் இன்றி உற்பத்தித் திறனையும் தமிழ் மக்கள் பாரிய அளவில் இழந்து விட்டனர். வாங்கி விற்கும் தரகு பொருட்களால் தேசிய உற்பத்தி அழிக்கப்படுவதுடன், தரகு பொருட்களுக்கு பலகட்டங்களில் கொடுக்கும் வரியையும் தமிழ் மக்கள் மேல் சுமத்திவிடுகின்றனர். இதனால் வாங்கும் திறனை மக்கள் இழக்க, வாங்குதிறனுள்ள சில கொழுத்த பணக்காரக் கும்பல் ஒன்று உருவாகியுள்ளது. இதனால் தமிழ் மக்களிடையே சமூக ஏற்றத் தாழ்வு அதிகரித்துள்ளது. வரிமுறை தரகுச் சந்தையை அடிப்படையாக கொண்டு இயங்குபவனை அது பாதிக்காது. அவன் எத்தனை வரி என்றாலும், அதை மக்களில் தலையில் சுமத்திவிடுவான். இது தரகு முதலாளித்துவ சந்தைவிதி. தேசிய முதலாளி உற்பத்தி தளத்தில் அழிந்து விடுகின்றான். பரந்துபட்ட மக்கள் வாங்கும் திறனை இதனால் இழக்கின்றனர். வடக்கு கிழக்கில் என்றும் இல்லாத வறுமை தலைவிரித்தாடுகின்றது என்றால், சிங்கள இனவாதிகளின் இனவாத யுத்தம் ஒருபுறம் என்றால், மறுபுறத்தில் தமிழ் குறுந்தேசியவாதிகள் கொண்டுள்ள மக்களுக்கு எதிரான வக்கற்ற அரசியல் பொருளாதார கொள்கையே ஒரு காரணமாகும்.


இந்த வக்கற்ற பொருளாதார அரசியல் கொள்கையை அவர்கள் வெட்கமின்றி மேடை ஏறிப்பேசுகின்றனர். பாலகுமார் யாழ் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்திய உரையொன்றில் ".. எமது இராணுவச் சமநிலையைப் பேணுவதற்கும் போரில் அங்கவீனமான எமது போராளிகளைப் பராமரிப்பதற்கும் உங்களுக்காக தமது உயிரை ஈந்த மாவீரர்களின் குடும்பங்களின் எதிர்கால வாழ்வைக் கட்டியெழுப்புவதற்கும் நிதி முக்கியமானது. அதற்காகவே வரி அறவிடுகின்றோம். மேற்படி எமது தேவைகளை மேற்கொள்ள எமக்கு ஏற்படும் செலவைக் கணக்கிட்டுவிட முடியாது. எண்ணில் அடங்காதது. இதனை எமது மக்கள் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். புலிகள் எதற்காக வரி அறவீடு செய்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்" வேடிக்கையான ஒரு உரை. தங்களைத் தாங்கள் நியாயப்படுத்த இந்த உரை உதவலாம்.


மக்களிடம் வரி அறவிடுவது அவசியம் என்றால், மக்கள் எங்கிருந்து எப்படி வரிக்கான பணத்தை பெற முடியும்? வரி பற்றி விளக்கும் தேசிய தலைவர்களே, ஐயா உங்கள் தீர்க்க தரிசனமிக்க தேசியத் தலைவரிடம் கேட்டுச் சொல்லுங்கள். மக்கள் வரிக்கான பணத்தை எங்கிருந்து எப்படி பெறுவது என்று? சிங்கள இனவாத அரசு தமிழ் மக்களை ஒடுக்குகின்றது என்பது நீங்களும் சொல்வது தான். அந்த ஒடுக்குமுறையில் வாழும் மக்கள் வரி கட்ட பணத்தை எங்கிருந்து எப்படித் திரட்டுவது. சிங்கள இனவாத அரசை விடுவோம், மக்கள் உங்களுக்கு வரி கட்டுவதற்கு, நீங்கள் இந்த மக்களுக்காக என்ன செய்தீர்கள்? "உங்களுக்காக தமது உயிரை ஈந்த மாவீரர்கள்" என்று மக்களிடம் குறிப்பிடும் நீங்கள், மக்களுக்காக என்ன செய்தீர்கள் என்று கூறுங்கள்? சிங்கள இராணுவத்திடம் இருந்து பாதுகாப்பை பெறுவது மட்டும் தான் உங்கள் பொறுப்பு என்றால், பொருளாதார பண்பாட்டு கலாச்சார துறையில் மக்களை நிர்வாணமாக்குவதா தேசியம்? அதைத்தான் இன்று வடக்கு கிழக்கில் வீரமாக செய்து வருகிறீர்கள். இதைத் தான் சிங்கள இனவாதிகளும், ஏகாதிபத்தியமும் கைதட்டி வரவேற்கின்றனர்.


மனிதனிடம் பணம் எப்படி வருகின்றது. வெறும் பேப்பர் பணமாக வரும் ஒரேயொரு வழி உழைப்புதான். உழைப்பு தான் அனைத்தையும் படைக்கின்றது. இதை நீங்கள் எப்போதும் என்றும் ஏற்றுக் கொண்டது கிடையாது. மனித உழைப்பு இன்றி பணம் வராது. உழைப்புத் தான் பணமாகின்றது. மனித உழைப்பை வாங்கி விற்கவும், உழைப்பை விபச்சாரம் செய்யவும், உழைப்பை கற்பழிக்கவும், உழைப்பை தரகு பண்ணும் ஒரு இழிதொழிலை தேசியமாக்கி, புலிகளாகிய நீங்கள், அதை பல ஆயிரம் தியாகங்கள் மேல் வெட்க மானம் இன்றி செய்து வருகிறிர்கள். இதற்குள் தான் தமிழ் தேசிய அரசியலை விபச்சாரம் செய்கிறீர்கள். இப்படி மக்களின் உழைப்பை விபச்சாரம் செய்ய நிர்ப்பந்தித்த பின்பு, கிடைக்கும் அற்ப கூலிப் பணத்தையும் வரியாகத் தா என்று கோரும் உரைகளும், நியாயப்படுத்தலும் தேசிய அரசியலாகிவிடுகின்றது. மக்களின் அற்ப கூலி அவர்கள் வாழப் போதுமா என்று ஒரு கணம் கூட நீங்கள் சிந்தித்தது கிடையாது. மேதகு உங்கள் தேசியத் தலைவர் இதைப் பற்றி எப்போதாவது சிந்தித்து, அந்த மக்களின் விடுதலைக்கு தலைமைதாங்கி வழிகாட்டிச் செல்லுகின்றாரா? இல்லை ஒரு நாளும் இல்லை. ஆனால் அந்த மக்களிடம் பணம் அறவிடுவது மட்டும் நடக்கின்றது. இது நேரடியாக முடியாவிட்டால், மறைமுக வரி மூலம் வரி அறிவிடுவது மட்டும் தொடருகின்றது.


அதாவது உழைக்கும் மக்களிடம் பணத்தைப் பெற முன்பு, அவர்களின் நலனில் அக்கறைப்பட்டது கிடையாது. அவர்களின் மேலான அக்கறைக்கு வெளியில், அந்த மக்களின் உழைப்பு எந்த உற்பத்தி மீது இருந்ததோ, அதைப் பாதுகாத்தார்களா என்றால் அதுவுமில்லை. மக்களின் உற்பத்தி மூலங்களையும், உற்பத்தித் திறனையும் உங்கள் கொள்கையால் அழித்து வந்தீர்கள், அழித்து வருகின்றீர்கள். வரி ஒருபுறம் என்றால், நடைமுறையில் தரகுப் புலிகளாகி மக்களின் கழுத்தில் கையை வைத்துவிட்டீர்கள். தமிழ் மக்களின் அடிப்படை தேவை மீதான மொத்த விநியோகஸ்தராகவே மாறி வருகின்றீர்கள். இதன் மூலம் சிறந்த கொள்ளைக்கார தரகராக இருக்கவும், சந்தை விலை தீர்மானிக்கவும் தொடங்கி விட்டீர்கள். இதை சொந்த உற்பத்தி சார்ந்து செய்வதை விடவும், வாங்கி விற்கும் தரகனாக இருப்பதன் மூலம் இருந்த இடத்திலேயே அதிக இலாபம் பெறும் கொள்கை அமுலுக்கு வந்துள்ளது. சுயமான தேசிய உற்பத்தி, புலிகளின் தரகுச் சந்தை விலையை ஆட வைப்பதை சகித்துக் கொள்ள புலிகள் தயாராக இல்லை. தேசிய உற்பத்தியை முடமாக்க, சிறப்பு வரியை விதித்து அதை முடக்குவது அண்மையில் அதிகரித்துள்ளது. தமது சொந்த சந்தையை ஏகபோகமாக்க, போட்டியாளர் மீது மட்டுமின்றி, உற்பத்தியாளர் மீதும் கடும் வரிமுறை அமுல் செய்யப்படுகின்றது. இதன் மூலம் உற்பத்தி துறையை முடக்கி, உற்பத்திதுறையைக் கூட கேட்பாரற்ற விலையில் அபகரிப்பது, இதன் முடிவில் சாத்தியமாகிவிட்டது. உற்பத்தி நடந்தாலும் நடக்காவிட்டாலும் வரி என்பது மற்றொரு கொள்ளை. இதன் மூலம் உற்பத்திதுறை மலிவாக கொள்ளை இடப்படுகின்றது.


கடும் வரியுடன், மக்களின் உற்பத்தியை கட்டுப்படுத்தி சந்தையை கைப்பற்றும் வடிவிலும் கூட அமைதியும், சமாதானம் ஒரு படி பாய்ச்சல் பெற்றுள்ளது. இயல்பான உற்பத்தியால் உருவாகும் மக்களின் சந்தை விலையை கட்டுப்படுத்த, சந்தையில் பொருட்களை குவிக்கின்றனர். அதேநேரம் சிங்களப் பகுதியில் இருந்து பொருட்களை வாங்கி வருவதுடன், சந்தை விலையைக் கட்டுப்படுத்தி விவசாயத்தை முடமாக்குவதும் தொடங்கியுள்ளது. ஒரு பொருளின் பொதுவான உற்பத்தி விலையை விட குறைவான உற்பத்தி விலையில் உற்பத்தி செய்யும் புலிகள், சந்தையை கட்டுப்படுத்தி மக்களின் உற்பத்தியை முடக்குகின்றனர். அதாவது புலிகளின் உற்பத்தி வரிக்கு அப்பாற்பட்டது மட்டுமின்றி, பல தொடர் சலுகைகளை கொண்டது. மறு தளத்தில் உற்பத்தி விலை வரிகளால் தமிழ் பகுதியை விட சிங்களப் பகுதியில் குறைவாக இருப்பதால், சிங்கள பகுதியில் இருந்த ஏகபோகமாக அவற்றை வாங்கி, அதை தமிழ் விவாசயிகளுடன் போட்டிக்கு புலிகளால் விற்கப்படுகின்றது. தரகு வர்த்தகத்தை மேல் இருந்து பறிப்பதுடன், அதற்கு போட்டியான அனைத்தையும் திட்டமிட்டே வரிமுறை மூலம் கட்டுப்படுத்தி முடக்கப்படுகின்றது. பொருட்களின் தேவையை நிறைவு செய்யும் சந்தைக் கொள்கை உடனடியான இலாபத்தை திரட்டித் தருவதால், தேசிய உற்பத்திகள் முடமாக்கப்பட்டு வருகின்றது. உதாரணமாக வடக்கு கிழக்கில் கொக்கோகோலாவின் ஏகபோக விநியோகத்தை, அதிக வரி மூலம் புலிகள் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். இதன் மூலம் உள்ளுர் சோடா உற்பத்தியை புலிகள் ஊக்குவிப்பர் என்பது யாரும் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியுமா? சிறந்த பழப் பணங்களை ஏற்றுமதி செய்யும் கொள்கை அங்கீகரிக்கப்பட்டு, கழிவான கொக்கொகோலா சந்தையில் ஆதிக்கம் பெறுகின்றது. இப்படி புலிகளின் பொருளாதாரக் கொள்கை, மக்களின் உற்பத்தி மையங்களையும் உழைப்பின் திறனையும் இல்லாததாக்குகின்றது. மக்களை கொள்ளையிடும் மறுதளத்தில் மீண்டும் மக்கள் தமக்கு வரி கட்டவேண்டும் என்பது புலிகளின் நவீன அரசியல் அகாரதி.


சாவகச்சேரியில் கள் உற்பத்தி அமைதி சமாதானத்தின் பின் பெரும் வீழ்ச்சியடைந்துள்ளது. 1999ஆம் ஆண்டில் 1847 அங்கத்தவர்கள் கள் உற்பத்தியில் ஈடுபட்டிருந்தனர். இது 2003 இல் 300கும் குறைவானதாக மாறிவிட்டது. கள் உற்பத்தி குறைந்துடன், 23 கள்ளுத் தவறணைகளில் 17 தவறணைகளே இயங்கும் நிலைக்கு இன்று மாறிவிட்டது. தேசிய உற்பத்தியின் அழிவு, அமைதி சமாதானத்தின் பின் வேகம் கண்டு வருகின்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் 1997ல் யுத்த நெருக்கடிகளைக் கடந்து 3101 சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் இருந்தன. இதில் சுமார் 10,000 பேர் தொழில் வாய்ப்புகள் பெற்று இருந்தனர். ஆனால் தற்போது இந்த தொழில் முயற்சிகளில் பெரும்பாலானவை அமைதி சமாதானத்தின் பின்பு முடக்கி அழிந்து வருகின்றது. அமைதி சமாதானம் சிறு தொழில்துறையைப் பெருக்கவில்லை. அதை முடக்கி அழித்துள்ளது. புலிகளின் வரி அறவீட்டுக் கொள்கை பிரதானமானது என்றால், தரகு வர்த்தகம் அதற்கு இணையாக அழித்து வருகின்றது. 10000 பேரின் வாழ்க்கை நரகமாகி வருகின்றது. இவர்களிடம் வரியை நேரடியாக அறவிடுவது நெருக்கடிக்குள்ளாக, மறைமுக வரி பொருட்கள் மேலானதாக மாறிவருகின்றது. உதாரணமாக யாழ்ப்பாணத்தில் 22-12-2003 முதல் பாணின் விலை ஒரு ரூபாவால் அதிகரிக்கப்பட்டது. இந்த ஒரு ரூபா வரி புதிதாக புலிகளுக்காக மக்களை கொடுக்க நிர்ப்பந்திக்ப்பட்டனர். இதில் மாவுக்கு முன் கூட்டிய வரி, மாவை ஏற்றிவரும் வாகனத்துக்கு வரி, அதை ஏற்றி இறக்கும் தொழிலாளிக்கு வரி, பாணை உற்பத்தி செய்யும் நிறுவனத்துக்கு வரி என எல்லா சங்கிலி இணைப்பிலும் வரி முறை காணப்படுகின்றது. தற்போது ஒவ்வொரு பாணுக்கும் ஒரு ரூபா வரி. முன்னயை மன்னர் சமுதாயங்களில் இருந்து, இன்னும் வரி விதிக்கப்படாமல் எஞ்சி இருப்பது ஆள்வரியும், முலை வரியும் தான்.


புலிகள் இயக்கத்துக்கு மாதாந்தம் 1,5 கோடி ரூபா வரி கிடைப்பதாக கூறுகின்றனர். இது மிகக் குறைவான தொகையாகும். வரி எப்படி அறவிடப்படுகின்றது என்பதற்கு, வெளிவரும் சில உதாரணங்களைப் பார்ப்போம். மீளக்குடியமர்வு ஊக்குவிப்புக்காக ஏகாதிபத்திய துணையுடன் அரசினால் வழங்கப்பட்ட 25000 ரூபா நிதியில், 5000 ரூபாவை புலிகள் பறித்தெடுக்கின்றனர். கடின உழைப்பாக மரமேறி கிடைக்கும் ஒரு போத்தல் கள்ளுக்கு, இரண்டு ரூபா வீதம் வரி அறவிடப்படுகின்றது. இதனால் இந்த உற்பத்தி முடங்கி வருகின்றது. மரத்தில் இருந்து விழுந்தவனை, மாடு ஏறி மிதித்தவன் கதையே இங்கு நடக்கின்றது. யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்படும் ஒவ்வொரு டி.வி.எஸ். மோட்டார் சைக்கிள்களுக்கும் 1000 ரூபா வீதம் விற்பனையகத்தில் புலிகள் வரி அறவிடுகின்றனர். இதைவிட இந்த மோட்டர் சைக்கிள்கள் கொழும்பு முகவரிடமிருந்து, 1000 ரூபா வீதம் வரி அறவிடப்படுகின்றது. மொத்தத்தில் 2000 ரூபா வரி. இதை விட ஏற்றி இறக்கும் லொறிக்கு வரி, கூலிக்கு வரி என்று பல உண்டு. யாழ்ப்பாணம் எடுத்துச் செல்லப்படும் ஹீரோ ஹொண்டா ரக மோட்டார் சைக்கிள்களுக்கு 7.5 சதவீத வரி. 40,000 பக்கற் சீமெந்து கப்பல் மூலம் பருத்தித்துறைக்கு வரும் போது, சுமார் 20 லட்சம் ரூபா வரி வசூலிக்கப்படுகின்றது.. யாழ்ப்பாணத்திற்கு விறகு எடுத்துச் செல்லும் லொறிக்கு 36,000 ரூபா முதல் 40,000 ரூபா வரை வரி. இது கடந்த ஐப்பசிக்கு முன் 33,000 ரூபா முதல் 35,000 ரூபாவாக இருந்தது. கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகாமையில் உள்ள வர்த்தக சந்தையில், வியாபாரம் செய்யும் வர்த்தகர்கள் ஒவ்வொருவரிடம் இருந்தும் தினமும் புலிகள் 60 ரூபா அறவிட்ட புலிகள், தீபாவளி அன்று 250 ரூபா அறவிட்டனர். இதற்கு எதிராக வியாபாரிகள் சங்கம் போராட்டம் ஒன்றை நடத்தியது.


நல்லூரில் இருக்கும் ஆர்.வி.ஜீ. பீடித் தொழிற்சாலைக்கு தேவையான மூலப் பொருட்களை கொழும்பிலிருந்து எடுத்துச் செல்லப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், புலிகளுக்கு சுமார் 50 இலட்சம் ரூபாவை வரியாக கட்டுகின்றனர். 2 பவுசர்களில் தினமும் வடக்குக்கு எண்ணை விநியோகம் செய்யும் ஏ.என்.ரி நிறுவனத்துக்கு கூட புலிகள் வரி அறவிடுகின்றனர். ஒவ்வொன்றும் சுமார் 33,000 லீற்றர் கொள்ளளவுடைய இந்த பவுசர்கள் லீற்றருக்கு ரூபா 9.50 சதப்படி புலிகள் வரி கட்டகின்றனர். ஒரு பவுசரின் மூலமாக மட்டும் தினசரி 3,13லட்சம் ரூபா புலிகளுக்கு வரியாக கிடைக்கின்றது. யாழ்ப்பாணம் கொழும்பு விமானச் சேவையில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு விமான நிறுவனத்திடம் கூட வரி அறவிடப்படுகின்றது. இவ்வகையில் 2002 டிசம்பர் முதல் 2003 மே மாதம் வரை எக்ஸ்போ நிறுவனம் 91 லட்சம் ரூபாவையும், செரண்டிப் நிறுவனம் 29 லட்சம் ரூபாவையும்,, லயன் எயார் நிறுவனம் 3,5 லட்சம் ரூபாவும் புலிகளுக்கு வரியாக செலுத்தினர். இப்படி பற்பல வரி அறவிடப்படுகின்றது.


யாழ் நடை பாதையோரங்களில் உள்ள கடைகளுக்கு புலிகள் பெற்று வந்த வரியான 2500 ரூபாவை அண்மையில் 3500 ரூபாவாக உயர்த்தினர். இதன் மூலம் பொருட்களின் விலை அதிகரிப்பது தவிர்க்க முடியாது. கலாச்சாரத்தைப் பேணும் இளைஞர் குழுக்கள் காதலர்களின் ஒழுக்கம் பற்றி கேட்பதுடன், அவர்களின் நடத்தையில் சந்தேகத்தை தெரிவித்து அதற்கு 1000 ரூபா அபராதம் விதிக்க முனைகின்றனர். புலிகளின் சோதனைச் சாவடிகளில் பொருட்களை பரிசோதனைக்காக இறக்கி ஏற்றும் தொழிலாளர்களின் கூலியில் நாற்பது ரூபா வீதம் புலிகள் வரி அறவிடுகின்றனர். அதே நேரம் சோதனை என்ற பெயரில் ஹன்டருக்கு 300 ரூபாவும், லொறிக்கு 200 ரூபாவும், எல்ப் ரக லொறிக்கு 100 ரூபா வீதம் புலிகள் வாகன உரிமையாளர்களிடமிருந்தும் அறவிடுகின்றனர். வவுனியா மாவட்டத்திலுள்ள வவுனியா கூட்டுறவுச் சங்கம், செட்டிகுளம் பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் என்பவற்றின் ஊடாக சமுர்த்தி நிவாரணமாக வழங்கப்படும் அரிசியை கிலோ 26 ரூபாவிலிருந்து 28 ரூபாவாக உயர்த்தி விற்பனை செய்கின்றனர். இரண்டு ரூபாவை புலிகளின் வரியாக அறவிடுகின்றனர். மட்டக்களப்பு மாநகர சபை மக்களிடமிருந்து அறவிடப்படும் சோலைவரியை புலிகள் உயர்த்தியுள்ளனர். உதாரணமாக 20 பேர்ச்சஸ் நிலப்பரப்பில் அமைந்த வீட்டிற்கு 320ரூபா மட்டும் அறவிட்ட நிலையில், புதிய ஆண்டில் 2250 ரூபாவாக அறிவிக்கப்படவுள்ளது. மிகுதிப் பணம் புலிகளுக்கு வழங்கப்படுகின்றது. சண்டெல் நிறுவனம் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளும் புதிய தொலைபேசி இணைப்புகளுக்கு 24,900 ரூபாவை அறவிடுகின்றது. இதே நிறுவனம் கொழும்பில் புதிய இணைப்புகளுக்கு 15,900 ரூபாவே அறவிடுகின்றது. இதில் ஒரு பகுதி புலிக்கு செல்லுகின்றது. யாழ்குடா நோக்கி பறக்கும் விமானத்தில் பயணம் செய்யும் ஒவ்வொரு பயணியிடமும், முன் கூட்டியே ரிக்கற் மூலம் வரி அறவிடப்படுகின்றது. வரி எல்லாக் கட்டமைப்பிலும், ஏன் கொழும்பில் வைத்துக் கூட முன் கூட்டியே அறவிடப்படுகின்றது. இவைகள் கசிந்து வரும் ஒரு சில உதாரணங்கள். வரியை மறைமுகமாக அறவிடுவதில் புலிகள் நிறுவனப்படுத்தி வருகின்றனர். இதைவிட எல்லா அபிவிருத்தி கட்டுமானங்களிலும், யுத்த நிவாரணங்களிலும் கூட புலிகள் ஒரு தொகையை அறவிடுகின்றனர். இதில் வேடிக்கை என்னவென்றால் நிரந்தமான கட்டுமான பணிகளில் கூட ஒரு பகுதியை அறவிடுவது என்பது, கட்டுமானத்தின் உறுதியை கேள்விக்குள்ளாக்கி உள்ளது. மருத்துவமனை, வீதி, பாலங்கள், குளங்கள் போன்ற கட்டுமானத்தில் ஒரு பகுதி நிதியை புலிகள் அறவிடும் போது, அவற்றின் ஆயுள் எண்ணப்படும் ஒரு நிலைக்குச் சென்று விடுகின்றது. இதைவிட கட்டுமான முதலாளி முதல் தொழிலாளி வரை தனி வரி உண்டு. புலிகளின் கட்டுமானம் மற்றும் நிர்மாணங்கள் பற்றி அரசியல் கொள்கையை கேள்விக்குளாக்கியுள்ளது. அமைதி சமாதானம் வரியாகியதால் கடுமையான எதிர்ப்பு பரந்தளவில் புகையத் தொடங்கியுள்ளது.


எந்த சட்ட திட்டத்துக்கும், அவர்களின் சொந்தச் சட்ட திட்டத்துக்கே வரிபற்றி தீர்ப்புக் கூற முடியாத நிலையில், தாம் விரும்பியபடி நிர்ணயம் செய்யும் வரியே இறுதியானது என்ற நிலையில் ஒரு மோசடியைச் செய்தனர். சில பொருட்களுக்கு சில சலுகைகளை வழங்கவும், வரியைக் கூட்டவும் செய்தனர். இதன் மூலம் வரியை இல்லாததாக்கி விட்டதாக பினாமிகள் மூலம் ஒப்பாரி வைத்தனர். வரிக் குறைப்பு என்ற ஒன்றை சில பொருட்களுக்கு செய்து விட்டு, உலகறிய அதைப் பிரகடனம் செய்தனர். இதனால் தமக்கு கடும் நட்டம் ஏற்படுவதாக வேறு கூறினர். புலிகளின் நிதிப்பொறுப்பாளர் தமிழேந்தி இந்த வரிக் குறைப்பு மூலம் தமக்கு மாதாந்தம் 80 இலட்சம் ரூபா வீதம், வருடாந்தம் சுமார் 10 கோடி ரூபா வருமான இழப்பு ஏற்படுவதாக கூறியதுடன், மக்களுக்காக இந்த இழப்பை நாம் ஏற்றுக்கொள்வதாக கூறி ஒரு மோசடியை அரங்கேற்றினர். ஏதோ புலிகள் தாங்கள் உழைத்து அதை மக்களுக்கு தியாகம் செய்தது போல் ஒரு மோசடியை அரங்கேற்றினர். மக்களின் பணத்தை அவர்களிடம் இழப்பது தமக்கு நட்டமாம். இது தான் தேசியம். நம்புங்கள் தமிழீழ மக்கள் சுபீட்சத்தை புலிகளின் தலைமையில் காண்பார்கள் என்று!


இராணுவ எல்லையைத் தாண்டிய ஒவ்வொரு கிராமப்புறத்திலும் ஒவ்வொரு வீட்டிலும், எங்கு எதை எப்படி புடுங்குவது என்பதில் ஒரு புதிய சமூக கண்ணாணிப்பு முறை வடக்கு கிழக்கில் உருவாகியுள்ளது. யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு உணவு பார்சல் விற்றுப் பிழைக்கும் ஏழைகளிடம் கூட, சோற்றுப் பார்சலுக்கு கூட வரி அறவிட புலிகள் முனைகின்றனர். ஆனால் அந்த அரிசிக்கும், கறிக்கும், ஏன் அதன் உற்பத்திக்கே முன் கூட்டிய பல வரிகள் கட்டப்பட்ட நிலையில், அதை சமைத்து உண்பதற்கும் கூட வரி. இது புலிகளின் சமூக நியதியாகியுள்ளது. எங்கும் எதிலும் வரி. தூணிலும் துரும்பிலும் கடவுள் இருக்கின்றான் என்றது போன்று, எங்கும் எதிலும் வரி அறிவிடுவது என்பது புலிகளின் புதிய போராட்டமாகியுள்ளது. மக்களின் இயல்பு வாழக்கை என்பது, புலிகளுக்கு வரி கட்டுவதைத் தாண்டி இது வரை எதார்த்தத்தில் விளக்கம் பெறவில்லை. சிறிலங்கா இனவெறி இராணுவமும், குறுந்தேசிய தமிழ் இராணுவமும் சண்டை செய்யாது இருக்கவும், மக்களை வேட்டையாடி கொல்லாது இருக்கவும், மக்கள் தமது உழைப்பில் ஒரு பகுதியை இலஞ்சமாக கொடுக்க வேண்டியுள்ளது. அமைதி சமாதானத்தின் இயல்புத் தன்மை இதைத் தாண்டி, எந்த விளக்கமும் அற்றுப் போயுள்ளது. மறுதளத்தில் தேசிய வளங்களை உலகமயமாக்குவதை அனுசரிக்க கோருகின்றது.


உழைக்கும் மக்கள் தமது சொந்தக் கோரிக்கைக்காக போராடிய போது, அதையும் மிரட்டி பணிய வைத்த சம்பவம் ஒன்று அண்மையில் சந்திக்கு வந்தது. இலங்கை சுகாதாரத்துறை ஊழியர்கள் இலங்கை அரசாங்கத்தை எதிர்த்து நடத்திய போராட்டத்தை, கிழக்கில் இருந்து வடக்கு வரை புலிகள் மிரட்டி பணியவைத்தனர். இதுதான் புலிகள். உழைக்கும் மக்கள் பற்றிய வக்கிரமான புத்தி அடக்கியாள்வதும், கொள்ளை அடிப்பதும் தான். மக்களி இயல்பான வாழ்வில் மூச்சு விடுவது என்பது சாத்தியமற்றதாகியுள்ளது. அடிப்படைத் தேவையை பூhத்தி செய்ய முடியாத 80 ஆயிரம் யாழ் குடாநாட்டு குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ்ச் சென்று வறுமையில் சிக்கிவிட்டனர். இது யாழ்குடாநாட்டு குடும்ப எண்ணிக்கையில் 60 சதவீதமாகும். வறுமையை அதிகரிக்க அதிகரிக்க புலிகள் தமிழ் மக்களிடம் கோருவது அதிகரிக்கின்றது. வடக்கு கிழக்கில் 80000 ஆயிரம் குழந்தைகள் பாடசாலை செல்வதற்கு கூட வசதியற்ற ஏழைகளாகிவிட்டனர். 65000 குழந்தைகள் வறுமை காரணமாக கல்வியை இடையில் நிறுத்தி விட்டனர். வறுமை வடக்கு கிழக்கில் பெருக்கெடுக்கின்றது. மக்கள் உழைப்பின் ஆற்றலை இழக்கின்றனர். சிறு தொழில்கள் அன்றாடம் முடங்கிச் செல்லுகின்றது. உலகமயமாதல் ஒரு பக்கம், புலிகளின் வரியும் அவர்களின் பொருளாதாரக் கொள்கையும் மறுபக்கமாக இணைந்து, எல்லாவற்றையும் சூறையாடுகின்றது. தேசிய முதலாளித்துவம் சொத்துகள், அதன் தேசிய வளங்கள் என அனைத்தும் அழிகின்றது. மீன்பிடி, விவசாயம் வரியின் கெடுபிடிகளால் மூச்சு விடமுடியாது அழிகின்றது. வறுமை மேலும் துல்லியமாகின்றது. இந்த வரிமுறைதான் கிழக்கில் தொடர்ச்சியாக முஸ்லிம் மக்களுக்கு எதிரான கலவரங்களை திட்டமிட்டு உருவாக்குகின்றது.


வரிக்கு எதிரான உணர்வும், வரியை எதிர்க்கின்ற போது தொடர்ச்சியாக கடத்தல்கள், வன்முறைகள் வரைமுறையின்றி நடக்கின்றது. நபர்களை கடத்துவது முதல் பொருட்களை கடத்துவது வரை அன்றாடம் முஸ்லிம் பகுதிகளில் நடக்கின்றது. இது முஸ்லிம் மக்களுக்கு எதிரான சமூக வன்முறையாக எழுகின்றது. இதன் மேல் எதிர் வன்முறை முஸ்லிம் தமிழ் இனக்கலவரங்களை உருவாக்குகின்றது. புலிகளின் நடவடிக்கைகள் திட்டமிட்டே இதை விரிவாக்கி, அதில் பேரம் பேசி வரியால் குளிர்காய்கின்றனர். முஸ்லீம் மக்களுக்கு எதிரான தொடர் வன்முறை, பேரம் பேசும் ஆற்றலை ஏற்படுத்தி வரி அறவிட்டை ஏற்க வைக்கப்படுகின்றது.


Thursday, October 19, 2006

நடைமுறையற்ற புலி அலட்டல்கள்

நடைமுறையற்ற புலி அலட்டல்கள்

ண்மையில் புலிக் காட்டுப்பிரதேசங்கள் மீதான பொருளாதார தடையையடுத்து ரி.ரி.என் தொலைக்காட்சியில் நிலவரம் என்ற பகுதியில் 'பொருளாதார தடைகளும் பொருண்மிய போராட்டமும்" என்ற தலைப்பில் ஒரு உப்புச்சப்பற்ற நடைமுறைக்கு உதவாத பரப்புரை ஒன்றைச் செய்தனர். அதில் புலித் தேசிய பொருளாதாரத்தை மீட்டுவிடுவோம் என்றும், உலக பொருளதாரம் பற்றியும் கரிகாலனும், பாலகிருஸ்ணனும் அலட்டினர். பார்க்க http://www.pathivu.com/?ucat=nilavaram என்ற இணையத்தில். இதைப்பற்றி விமர்சனம் ஒன்றை நான் எழுதி வருகின்றேன். இருந்தபோதும் இவை பற்றி நான் முன்பு எழுதிய கருத்துக்களம் இதை மறுதலிக்கின்றது. அந்த வகையில் அவை கூட பதிலளிக்கின்றது.


வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் யுத்த அவலங்களும் சமூகச் சிதைவும்


பொருளாதார ரீதியாக இலங்கை மக்கள் சந்திக்கும் நெருக்கடி ஒருபுறம் என்றால், இனவாத நடைமுறைகள் தமிழ் மக்களுக்கு மீள முடியாத பேரிடியாக உள்ளது. இதைவிட புலிகளின் வரி அறவிடும் முறையும், அவர்களின் தேசிய பொருளாதாரக் கொள்கையும் மறுபக்கம் பேரிடியாகி அவலமாகவே பெருக்கெடுக்கின்றது.


1983 முதல் 2001 வரையிலான காலப்பகுதியில் வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் அழிந்த சொத்துக்களின் மொத்தப் பெறுமதி சுமார் 40300 கோடி ரூபா என்று இலங்கை மத்திய வங்கியே 2003 இல் அறிவித்துள்ளது. அதாவது வருடாந்த இலங்கையின் தேசிய வருமானத்தை விட இது அதிகமாகும். இது அழிந்த சொத்து இழப்பை மட்டும் குறிக்கின்றது. இதைச் சற்று விரிவாகப் பார்ப்போம். 1983-1987 க்கு இடைப்பட்ட காலத்தில் வடக்கு கிழக்கில் 56 ஆயிரம் வீடுகள் முற்றாக அழிக்கப்பட்டன. 34 ஆயிரம் வீடுகள் சேதமாகின. 1987-1994 க்கு இடையில் புனருத்தாரணம், புனர்நிர்மானம், நிவாரணமாக 2265 கோடி ரூபா செலவு செய்யப்பட்டது. போர்ச் செலவீனம் மற்றும் பல்துறை சார்ந்து 1987 முதல் 1998 வரையிலான காலத்தில் (செலவு, சொத்தழிவு, உற்பத்தி இழப்பு) மிக விரிவானது.


1.நேரடிச் செலவு


நேரடியாக போருக்கான அரசின் செலவு 21232 கோடி ரூபா


பொதுஜன பாதுகாப்பு மேலதிக செலவு 4000 கோடி ரூபா


புலிகளின் போர்ச் செலவு 4200 கோடி ரூபா


இடம்பெயர்வு சம்பந்தப்பட்ட செலவு 3800 கோடி ரூபா


மொத்தம் 33392 கோடி ரூபா


2.சொத்திழப்பு, புனர்நிர்மாணச் செலவு


1987 - வடகிழக்கு புனர்நிர்மாணச் செலவு 1040 கோடி ரூபா


1995 - வடகிழக்கு புனர்நிர்மாணச் செலவு 4900 கோடி ரூபா


வீடுகள் புனர்நிர்மாணம் (வடக்குகிழக்கு) 1010 கோடி ரூபா


வடகிழக்கு வெளியே வீடமைப்பு 450 கோடி ரூபா


வடகிழக்கு வெளியே அழிவுகள் (1998 பெறுமதி) 11230 கோடி ரூபா


1995 க்கு பின் 2480 கோடி ரூபா


3.உற்பத்தி இழப்பு


தொழில் நிபுணர்கள் காரணமான இழப்பு 11250 கோடி ரூபா


வடகிழக்கு உற்பத்தி இழப்பு


1.1982 அடிப்படையில்


உற்பத்தி குறைவு மொத்தமாக 27300 கோடி ரூபா


2.தேசிய வளர்ச்சி வீதத்தில்


வடக்குகிழக்கின் உற்பத்தி இழப்பு 39200 கோடி ரூபா


உல்லாச பயணத்துறை 12000 கோடி ரூபா


அந்நியமுதலீடு 7500 கோடி ரூபா


மொத்த போர்ச் செலவு 151752 கோடி ரூபா


அழிவுகளைத் தவிர்த்த மொத்த செலவீனம் 130642 கோடி ரூபா


இந்த சமூக அமைப்பில் இலங்கையின் இன யுத்தம் தொடங்கிய 15 வருடத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 3 லட்சம் கோடி ரூபாவுக்கு மேல் அழிந்துள்ளது. இதில் பொருட்களின் அழிவுகள் உள்ளடக்கப்படவில்லை புலிகள் 2000 ஆண்டு வரை அண்ணளவாக 4260 கோடி ரூபாவை யுத்தத்துக்கு செலவு செய்துள்ளதாக மதிப்பிடப்படுகின்றது. இதே காலத்தில் இராணுவம் 35118 கோடியை செலவு செய்துள்ளது. ஒட்டு மொத்தமாக தேசிய வருமானத்தில் 50 முதல் 60 ஆயிரம் கோடி இராணுவதுறை சார்ந்து அழிக்கப்ட்டுள்ளது. வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அவலம் இப்படி உள்ளது என்றால், மனித உறவுகளில் அவலம் இதை விட அகலமானது. சொந்த வாழ்விடத்தில் இருந்து அன்னியமாகும் உளவியல் இழப்பு பல்துறை சார்ந்தது.


2003ம் ஆண்டு மத்தியவங்கி தனது அறிக்கையில் யுத்தத்தில் இறந்தோரின் எண்ணிக்கை 60 ஆயிரத்துக்கும் 80 ஆயிரத்துக்கும் இடைப்பட்டதாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது. யாழ் மாவட்டத்தில் இறந்த பொதுமக்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 23 ஆயிரம் என அறிவித்த மத்தியவங்கி, அப்பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்த குடும்பங்களின் எண்ணிக்கை 1,05,500 எனக் குறிப்பிட்டுள்ளது. ஒரு சமூகமே குடியெர்ந்த நிகழ்வால் ஏற்பட்ட அதன் துயரம், யாழ் மேட்டுக்குடி போலி மனப்பான்மையின் வெளித்தோற்றத்தை விட அடி ஆழத்தில் ஏற்படுத்திய சேதம் வெளிக்கு தெரியாத வடுக்களாகவே உள்ளது. வடக்கில் இருந்து புலிகளால் துரத்தப்பட்ட முஸ்லீம் மக்களின் நிலையோ இதைவிட சோகமானது. வடக்கு கிழக்கு மக்கள் சந்தித்த துயரங்கள் மலையளவானது. அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.


வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரதான உழைப்பு விவசாயமாக இருந்தது. இதன் அழிவு எல்லையற்றது. இதைப் போல் தமிழ் மக்களின் இரண்டாவது பிரதான உழைப்பாக மீன்பிடி அமைந்து இருந்தது. இந்த உழைப்புக்கு நேர்ந்த அவலமான சேதம் பற்றிய புள்ளிவிபரங்கள் அண்மையில் வெளியாகியுள்ளது. யுத்தத்தின் இடைக்காலமான 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி வடக்குகிழக்கில மொத்த மீனவர் தொகை 269629 யாக இருந்தது. 560 மீன்பிடி கிராமங்கள் இருந்தன. தமிழ் மக்கள் தொகையில் மிகப் பெரிய உழைப்பின் ஆற்றலை வழங்கிய இந்த உற்பத்தித்துறை, முற்றாக இன்று முடங்கிக் காணப்படுகின்றது. 1983 இல் யாழ்குடா மட்டும் 48 ஆயிரம் மெற்றிக் தொன் மீன் உற்பத்தி செய்தது. ஆனால் இது 2002 இல் 5 ஆயிரம் மெற்றிக் தொன்னே உற்பத்தி செய்யும் ஆற்றலைக் கொண்டதாக நலிவுற்றுவிட்டது. குடாநாட்டில் 1989 இல் 101177 மீனவர்கள் காணப்பட்டனர். 2000 ஆண்டில் இது 31159 பேராக குறைந்து போனது. 1995 க்கு முன் 7466 மீனவர்களின் மீன்பிடிப் படகுகள் சேதமாக்கப்பட்டது. மொத்த மீன்பிடி படகு மற்றும் உபகரணங்களின் சேதம் 182.45 கோடி ரூபாவாகும். இதைவிட 12 ஐஸ் தொழிற்சாலைகள், வள்ளம் கட்டும் இடங்கள் என அனைத்தும் அழிக்கப்பட்டன. ஒரு இனத்தின் உற்பத்திதுறை முற்றாகவே ஈவிரக்கமின்றி அழிக்கப்பட்டுவிட்டது. மீன்பிடி அறிவியல் மலடாக்கப்பட்டுள்ளது. பரம்பரையான கல்விமுறை சேதமானதால், தேசிய பொருளாதார அடிப்படை சிதைக்கப்பட்டுள்ளது. அந்த உழைப்பில் இருந்து மக்கள் முற்றாக அன்னியமாகிய நிகழ்வு, அந்த உழைப்பின் மீதான ஆற்றலையே இல்லாததாக்கிவிட்டது. சமாதானம், அமைதி என்ற நாடகத்தில் மீன்பிடி கொஞ்சம் அங்குமிங்குமாக மீள முற்பட்டுள்ள நிலையில், புலிகளின் வரி அதன் கழுத்தில் கைவைத்துள்ளது. பல மீனவக் கிராமங்களில் புலிகளின் வரிக் கொடுமைக்கு எதிராக போராடியதுடன், மீன் பிடிக்க மறுத்த நிகழ்வுகளும் அங்காங்கே கசிந்து வெளிவருகின்றது. இந்த நிலையிலும் இன்று 82 கிலோ மீற்றர் கடல் பாதுகாப்பு வலையமாக காணப்படுகின்றது. புலிகளின் கடல் பாதுகாப்பு வலயம் இதற்குள் உள்ளடகப்படவில்லை. 67 மீன்பிடி கிராமங்கள் இராணுவ சூனிய பிரதேசமாக கைவிடப்பட்டுள்ளது. ஒருபுறம் யுத்த பிரதேசமாகவும், மறுபுறம் அராஜகத்தை அடிப்படையாக கொண்ட சூறையாடலும் அமைதியாகி அதுவே சமாதானமாகியுள்ளது. சொந்த உழைப்பைக் கூட சுதந்திரமாக செய்ய முடியாது மக்கள் செய்வதறியாது கையைப் பிசைகின்றனர். ஒட்டு மொத்த வாழ்வின் அனைத்து துறைகளையும் இழந்து, எதுவுமற்ற தேசத்தின் பிச்சைக்காரர் ஆகின்றனர்.


விவசாயம், மீன்படி என்ற பிரதான உழைப்பு யுத்தவெறியர்களின் சொந்த நலனுக்குள் சிக்கி அழிந்து வரும் நிலையில், வடக்கு கிழக்கில் 80 ஆயிரம் குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் சென்று உள்ளதுடன், வறுமையில் சிக்கியுள்ளனர். இந்த வறுமையின் துயரம் கடுமையானது. கிளிநொச்சி மாவட்டத்தில் 60 சதவீதமான மாணவர்கள் பாடசாலை செல்வதில்லை. ஒரு சமூகமே கல்வியை இழந்து நிற்கின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று வாழ்வோரில் 85 வீதத்திற்கு மேற்பட்டோர் இடம்பெயர்ந்து வாழ்பவர்களே. இந்த நிலைமை யாழ் குடாவைவிட கிழக்கில் அதிகமான அளவில் உள்ளது. புள்ளிவிபரங்கள் பெறமுடியவில்லை.


சமூக அவலம் பன்முகத் தன்மை வாய்ந்தவை. யுத்தம் ஆண்களை குறி வைத்து வேட்டையாடியதால், பெண்களின் விதவைக்கோலம் சமூக கோலமாகியுள்ளது. இவர்களின் வாழ்வை மேம்படுத்த தேசிய வீரர்களிடம் எந்த தேசிய வேலைத் திட்டமும் கிடையாது. ஆனால் ஏகாதிபத்தியம் இவற்றை கொண்டு நாட்டில் ஊடுருவுகின்றது. 2004 மார்ச் மாதம் தேசிய வீரர்களின் தலைமையகம் உள்ள கிளிநொச்சியில், 4000 விதைவைகளுக்கு சுயவேலைவாய்ப்பை வழங்க உலக உணவு திட்டத்தின் கீழ் சுழற்சியான கடனை வழங்கத் தொடங்கியுள்ளது. எந்த சுயவேலைவாய்ப்பும் வாழ்வை கொண்டோட்டக் கூடிய நிலையில் இலங்கை இன்று இல்லை என்ற உண்மை இதற்குள் ஒருபுறம் தொங்கி நிற்கின்றது. மறு தளத்தில் 2004 மார்ச் மாதமே தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் மைய புதிய கட்டிடத்தை கிளிநொச்சிக்குச் சென்றிருந்த ஏகாதிபத்திய பிரதிநிதியான பிரிட்டிஷ் தூதுவர் ஸ்ரீபன் இவன்ஸ் திறந்து வைக்கின்றார். எந்த மாவீரர் குடும்பமும் இதைத் திறக்கவில்லை. சமூக அவலம் இந்தளவும் மலினமாக்கப்பட்ட நிலையில், கொள்ளைக்காரர்களிடம் மறுபடியும் சூறையாட தாரைவார்க்கப்பட்டு இருப்பதை இவை சாட்சிப்படுத்தி நிற்கின்றது. காட்டிக் கொடுப்புகள் அன்றாட நிகழ்வாகி வருகின்றது. மனித அவலங்கள் மறுபக்கத்தில் எல்லையற்றதாக உள்ளது.


மனித அவலங்களின் பல்வேறு புள்ளி விபரங்கள் முழுமையாக கிடைக்காவிட்டாலும், சில புள்ளிவிபரங்கள் கிடைத்துள்ளன. மனிதனுக்கு விடிவைத் தராத யுத்தம் வடக்கு கிழக்கில் 30 ஆயிரம் பேரை அங்கவீனராக்கி உள்ளது. இவர்களுக்கு எந்தவிதமான சமூகப் பாதுகாப்பையும், வழிகாட்டுதலையும் தமிழ் தேசியத் தலைவர்கள் வழங்கியதில்லை. இது போன்று யாழ்மாவட்ட 15 பிரதேச செயலர் பிரிவுகளிலும் மொத்தமாக 25 ஆயிரத்து 773 பெண்கள் கணவனை இழந்துள்ளதாக செயலகப் பதிவுகளில் இருந்து தெரிய வருகிறது. கணவனை இழந்தவர்களில் 16வயதிற்கு உட்பட்ட 9பேரும், 17 வயது முதல் 30வயதிற்குட்பட்ட 937பேரும், 31வயது முதல் 50 வயதுக்கு உட்பட்ட 7 ஆயிரத்து 989 பேரும், 50 வயதுக்கு மேற்பட்ட 16 ஆயிரத்து 838 பேரும் உள்ளனர். இந்த விதவைகளின் உற்பத்தி, கிழக்கிலேயே அதிகமானது. கிழக்கில் படுகொலை அரசியல் அன்றாட அரசியல் நிகழ்வாக காணப்பட்டது. பெண்களின் விதவை கோலத்துக்கு அப்பால், பெண்கள் கணவன் தந்தை மற்றும் மகனை பிரிந்து வாழ்தல் ஒரு விதியாகியுள்ளது. இதனால் பொருளாதார ரீதியான சமூகச் சிதைவும், புதிய தலைமுறையின் நலிவுற்ற வாழ்க்கை வக்கற்ற ஒரு சமூகமாக பரிணமிக்கின்றது.


இலங்கை அரசியலின் உலகமயமாதல் கொள்கை, இன அழிப்பு கொள்கை சாதாரணமாக தமிழ் குடும்பங்களின் காணப்பட்ட அடிப்படையான சில பொருளாதார ஆதாரங்களைக் கூட அழித்துள்ளது. யாழ். குடாநாட்டில் மட்டும் சுமார் 4509 ஹெக்ரேயர் பயிர்ச்செய்கை நிலப்பரப்பு, உவர் நிலமாக மாற்றமடைந்துள்ளது குடாநாட்டில் மட்டும் கடந்த கால யுத்ததினால் 5 இலட்சம் தென்னை மரங்கள் அழிந்துள்ளன. இதன் மூலம் குறைந்தபட்ச பொருளாதார அடிப்படையைக் கூட குடும்பங்கள் இழந்து நிற்கின்றன. ஒரு தென்னை மரத்தை மீள நட்டுப் பராமரிப்பதற்கு சுமார் 5ஆயிரம் ரூபா வரை தேவைப்படுகின்றது. இதை மீள புனரமைக்க முடியாத அரசியல் தலைமைகள், அனைத்துக்கும் அன்னியனிடம் கையேந்தும் தலைவர்களைக் கொண்ட அரசியல் பிச்சைக்காரர்கள், மறு தளத்தில் வக்கற்றுப் போன சமூகமாக தமிழ் இனம் மாறிவிட்டது. அன்றாட சுற்றுச்சூழல் வழங்கிய பொருளாதார வளங்களான பனை, மா, பலா என்று அனைத்தும் அழிந்து விட்ட நிலையில், ஒரு சமூகத்தின் இருத்தல் என்பது பன்முகத் தன்மையில் கேள்விக்குள்ளாகியுள்ளது.


வடக்கு கிழக்கு கல்வியை எடுத்தால் அதன் பாதிப்பு அகலமானது. யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கில் உள்ள 2008 பாடசாலைகளில் 156 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. யுத்த சிதைவால் சுமார் 144 பாடசாலைகள் வேறு இடங்களில் இயங்குகின்றன. மிகப் பின்தங்கிய பிரதேசங்கள் முற்றாக பாதிப்படைந்துள்ளது. தீவக வலயத்திலுள்ள 76 பாடசாலைகளில் 30 பாடசாலைகளும், வலிகாமம் வலயத்திலுள்ள 152 பாடசாலைகளில் 21 பாடசாலைகளும், திருமலை வலயத்திலுள்ள 80 பாடசாலைகளில் 15 பாடசாலைகளும், மன்னார் வலயத்திலுள்ள 75 பாடசாலைகளில் 14 பாடசாலைகளும், யாழ்.வலயத்திலுள்ள 119 பாடசாலைகளில் 11 பாடசாலைகளும், தென்மராட்சி வலயத்திலுள்ள 68 பாடசாலைகளில் 10 பாடசாலைகளும், வவுனியா வலயத்திலுள்ள 83 பாடசாலைகளில் 22 பாடசாலைகளும், மடு வலயத்திலுள்ள 41 பாடசாலைகளில் 5 பாடசாலைகளும், துணுக்காய் வலயத்திலுள்ள 54 பாடசாலைகளில் 5 பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன. இதைவிட வடக்கு - கிழக்கு மாகாணத்தில் ஒருவரே ஆசிரியராகவும், அதிபராகவும் உள்ள 85 பாடசாலைகள் உள்ளன. இரு ஆசிரியர்களைக் கொண்ட 149 பாடசாலைகளும், மூன்று ஆசிரியர்களைக் கொண்ட 138 பாடசாலைகளும் உள்ளன. கல்வி என்பது வடக்கு கிழக்கில் நலிந்து சிதைந்து செல்லுகின்றது. இன்று வடக்கு கிழக்கில் 8000 மேற்பட்ட ஆசிரியர்களும், 500 இற்கு மேற்பட்ட அதிபர்களும், 200இற்கு மேற்பட்ட கல்விப்பணிப்பாளர்கள் இருந்த போதும், கல்விக்கான ஆசிரியர் பற்றாக்குறை மிகப் பெரியதாகி வருகின்றது.


மருத்துவத் துறையை எடுத்தால் என்றும் இல்லாத அவலத்தை யாழ் குடா சந்திக்கின்ற நிலையை ஒப்பிடும் போது, மற்றைய பிரதேசங்ளை நாம் கற்பனை பண்ணமுடியும். யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த 7 ஆண்டுகளில் 6,480 பேர் உயிரிழந்துள்ளனர். மருந்துத் தடை, தமிழ் வைத்தியர்கள் மக்களின் வரிபணத்தில் படித்துவிட்டு மக்களுக்கு துரோகம் செய்துவிட்டு நாட்டை விட்டு ஒடுதல், புலிகளின் அதிகார அடக்குமுறைக்கு உள்ளாகி மருத்துவர்கள் வெளியேறுதல், பொதுவான கல்வி தர வீழ்ச்சி, சமூகப் பலவீனங்கள் என்பன உயிரிழப்புக்களை பல மடங்காக்கியுள்ளது. மலேரியா, புற்றுநோய், நெருப்புக் காய்ச்சல், வயிற்றோட்டம், மற்றும் வீதி விபத்துக்கள் என்பன என்றும் இல்லாத அளவில் மரண விகிதத்தை அதிகரிக்க வைத்துள்ளது. 1997ஆம் ஆண்டு 820 பேரும், 1998ஆம் ஆண்டு 883 பேரும், 1999ஆம் ஆண்டு 875 பேரும், 2000 ஆம் ஆண்டு 770 பேரும், 2001ஆம் ஆண்டு 932 பேரும், 2002ஆம் ஆண்டு 1012 பேரும் 2003ஆம் ஆண்டு 932 பேரும் உயிரிழந்துள்ளனர். உண்மையில் மருத்துவர் பற்றாக்குறையும், வசதி இன்மையும் மிக அவலமானதாக உள்ளது. உதாரணமாக யாழ்.ஆஸ்பத்திரி வெளிநோயாளர் பிரிவில் 2004 பெப்.1 முதல் 10 நாள்களில் 6,605 பேர் சிகிச்சை பெற்றனர். பெருமளவில் சளி மற்றும் காய்ச்சல் ஆகியவற்றுக்கு நாள் ஒன்றுக்கு, யாழ் பிரதான மருத்துவமனைக்கு 1000 பேரளவில் சிகிச்சைபெற வருகின்றனர். இது 2003 ஜனவரி மாதத்தில் மட்டும் யாழ். போதனா மருத்துவமனையில் வெளிநோயாளர் பிரிவில் 24136 பேர் சிகிச்சைக்காக வந்தனர். நாளாந்த சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், நாள் கணக்காக ஏழை நோயாளிகளே வரிசையில் தூங்க வேண்டியுள்ளது.


இது இப்படி இருக்க, வடக்குகிழக்கில் 400 சுகாதார நிலையங்கள் சேதமடைந்துள்ளது. இதில் 49 முற்றாக இயங்க முடியாது போயுள்ளது. 15 ஆயிரம் கல்விக்கூடங்கள் முற்றாக தகர்ந்துள்ளது. 326700 வீடுகள் முற்றாக அழிந்துள்ளது. 60 சதவீதமான வீதிகள், 10 புகையிரதப் பாலங்கள், 29 புகையிரத நிலையங்கள் முற்றாக அழிந்துள்ளது. இப்படி பற்பல. இந்நிலையில் வடக்கு கிழக்கு புனர்நிர்மாணம் செய்ய 4593 கோடி ரூபா தேவை என்ற மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வகையில்


இடம் பெயர்ந்தவர் மீள்குடியேற்றம் 568 கோடி ரூபா


சுகாதாரம் 353 கோடி ரூபா


கல்வி 205 கோடி ரூபா


வீடமைப்பு 1005 கோடி ரூபா


உள்கட்டமைப்பு 1651 கோடி ரூபா


விவசாயம் 509 கோடி ரூபா


வீதி புனர்மைப்பு 191 கோடி ரூபா


நீர் மின்சக்தி 111 கோடி ரூபா


இந்த பணத்துக்காக புலிகளும் அரசும் ஏகாதிபத்திய கால்களில் நக்கிபிழைக்க முனைகின்றனர். தேசம் தேசியம் என்பது வெற்று வேட்டாகவே உள்ளது. இதற்காக வெளியில் தமிழ் மக்கள் தமது சொந்த இருப்பிடத்தை, வாழ்வியல் சார்ந்த சுற்றுச்சூழலைக் கூட இழந்து நிற்கின்றனர். சுமார் 42260 ஏக்கர் விவசாய நிலம் அதிஉயர்பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் முடக்கப்பட்ட காரணத்தால் சுமார் 16 ஆயிரம் விவசாயக் குடும்பங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். 40 தொழிற்சாலைகள் இவ்வலயத்தினுள் முடக்கப்பட்டுள்ளமையினால் சுமார் 1700 தொழிலாளர் குடும்பங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 82 கிலோமீற்றர் நீளமான கடற்கரை பயன்படுத்த முடியாத பாதுகாப்பு வலயமாகியுள்ளது. இதனால் 4436 மீனவக் குடும்பங்கள் நேரடியாக பாதிப்படைந்துள்ளனர். பாதுகாப்பு பிரதேசம் அல்லாத இடங்களில் பொதுமக்களின் 400 வீடுகள் மட்டில் படையினர் இன்னமும் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். மேலும் 290 பாடசாலைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் இருந்தும் படையினர் வெளியேறவில்லை என புள்ளி விபரங்களின் மூலம் அறியவருகிறது. யாழ் மாவட்டத்தில் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் காரணமாக 29525 வீடுகள் பயன்படுத்த முடியாது போயுள்ளது. சுமார் 300 பாடசாலைகள் மற்றும் வழிபாட்டு இடங்களுக்கு பொது மக்கள் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. இருபத்தைந்திற்கும் அதிகமான முக்கிய வீதிகள் பொதுமக்கள் பாவனைக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. பல ஆஸ்பத்திரிகள் முதல் மக்களின் வாழ்வோடு தொடர்புடைய பல கட்டிடங்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் 3700 வீடுகளை இராணுவம் தனது பாவனைக்கு என ஆக்கிரமித்து வைத்துள்ளது. இதை ஆக்கிரமிப்பு இராணுவம் செய்கின்றது. என்றால், புலிகள் தமிழ் மக்களின் பல ஆயிரம் வீடுகளை, சொத்துக்களை ஆக்கிரமித்தள்ளனர். இதைவிட முஸ்லீம் மக்களின் விவசாய நிலங்களை, குடியிருப்புகளை கூட ஆக்கிரமித்துள்ளனர்.


வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்கள் இழந்த சொத்துகளின் பெறுமதி 11 கோடி டொலர் (1100 கோடி ரூபா) என மதிப்படப்படுகின்றது. வடக்கு கிழக்கில் புலிகள் முஸ்லிம் மக்களை தமிழ் மக்கள் என்று கூறியபடி நடத்திய, முஸ்லிம் விரோத நடவடிக்கையால் முஸ்லிம் மக்கள் 45 ஆயிரம் ஏக்கர் நிலத்தை புலிகளிடம் இழந்துள்ளனர். மொத்தம் 21614 குடும்பத்தைச் சேர்ந்த 102867 வடக்கு கிக்கில் இருந்து புலிகள் வெளியேற்றினர். அவர்கள் தமது சொந்த வீடு, நிலம், வியாபார நிலையங்கள் அனைத்தையும் புலிகளிடம் இழந்தனர். யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் மக்கள் சொந்த 3537 வீடுகளை முழுச் சொத்துடன் புலிகளிடம் இழந்தனர். அவர்கள் வசித்த 194 அரசாங்க வீடுகளையும், 6 பாடசாலைகளையும், 16 மத வழிபாட்டு இடங்களையும் கூட புலிகளிடம் இழந்தனர். இதைவிட வர்த்தகம், மீன்பிடி இழப்பும் பாரியது. இன்று 20 சதவீத வரியை புலிகள் முஸ்லிம் பகுதிகளில் தொடர்ந்தும் அறவிடுகின்றனர். இதில் இருந்து முஸ்லிம் பகுதிகளில் அடிக்கடி வன்முறைகள் நிகழ்கின்றன.


மக்களின் நலன்களில் சிறிதும் அக்கறையற்ற யுத்த வெறியர்களும், இராணுவ நலன் சார்ந்து அராஜக வழிகளை தமக்கு சாதகமாக்கி சூறையாடுபவர்களாலும், அப்பாவி மக்கள் தமது பொருளாதார சமூக வாழ்வை இழப்பது அதிகரித்துச் செல்லுகின்றது. ஒரு போராட்டம் மக்களின் வாழ்வின் சுபீட்சத்தைக் கொடுக்கும் போது அடிப்படையில் அது முற்போக்கானது. மற்றயை நாட்டிடம் பிச்சை எடுத்தும், கடன் வாங்கியும் முன்னேற்றுவோம் என்பது ஏமாற்றுபவர்களின் அரசியல் வித்தையாகும். இதைத் தான் அரசாங்கம் செய்கின்றது என்றால், புலிகளும் தாமும் அவ்வழியே என்று கொக்கரிக்கின்றனர். மக்களுக்கு சுபீட்சத்தை கொடுப்பதற்கு பதில் அதுவே மக்களுக்கு எதிரானதாக மாறிவிடும் போது, அந்தப் போராட்டம் கேள்விக்குள்ளாகிவிடுகின்றது. சிங்கள இனவாதிகள் தமிழ் மக்களை ஒடுக்கி அவர்களை நலிவுற்றவராக்கியது என்றால், அதற்கு எதிரான போராட்டம் அதில் இருந்து மீட்சியைக் கொடுக்க வேண்டும். ஆனால் எதார்த்தம் இரண்டும் தமிழ் மக்களை அக்கபக்கமாக ஒடுக்கி வருகின்றது. மக்கள் தமது சொந்த வாழ்வின் அனைத்து சமூக அடித்தளத்தையும் இழந்து விட்டனர்.


மக்களின் வாழ்வுடன் அன்னியமான போராட்டம் மக்களின் வாழ்வை நேரடியாகவே பல்வேறு துறைகளில் சீராழிக்கின்றது. வறுமையை ஒரு போக்காக்கி உள்ளது. யுத்தமும், உலகமயமாதலும் மட்டக்களப்பில் தாய்மையும், குழந்தை பிறப்பும் என்பதை, மரணத்தின் எல்லையில் ஊசலாட வைத்துள்ளது. இதன் அடிப்படையில் வெளியாகியுள்ள சில புள்ளி விபரங்களைப் பார்ப்போம்.


வருடம்

1987

2000

2001

2002

சிசு மரணம்

54

121

117

166

தாயின் இறப்பு

12

07

09

07

இறந்த நிலையில் குழந்தை பிறப்பு

71

138

167

145

மொத்த இறப்பு

137

266

293

318


மட்டக்களப்பில் குழந்தையின் இறப்பு கடந்த 15 வருடத்தில் அண்ணளவாக மூன்று மடங்காகி உள்ளது. குழந்தைகளின் ஊட்டச்சத்தின்மை பெருக்கெடுத்துள்ளது. குழந்தைகள் பாடசாலை செல்வது குறைந்து வருகின்றது. சிறுவர் உழைப்பு பெருகி வருகின்றது. சிறுமிகள் மேலான பாலியல் வன்முறை பெருகி வருகின்றது. குழந்தை உழைப்பு என்பது உயர் அந்தஸ்தில் உள்ளோரின் பாலியல் தேவையை பூhத்தி செய்யும் ஊடகமாகியுள்ளது. பாடசாலைகளில் வன்முறை பெருகியுள்ளது. ஆசிரியர்கள் அதிபர்கள் இணைந்து பெண் குழந்தைகளை பாடசாலையில் பாலியல் ரீதியாக சுரண்டுவது அபலமாகியுள்ளது. வறுமை காரணமாக வேலைக்குச் சென்ற சிறுமியை பாலியல் ரீதியாக கற்பழித்த சொந்த கணவனை மன்னித்த மனைவி, சிறுமியின் பெண் உறுப்பில் சூடுபோட்ட சம்பவங்கள் கூட மட்டக்களப்பில் பதிவாகியுள்ளது. இவர்கள் சமூகத்தின் உயர் அந்தஸ்துடையவர்கள். இவர்கள் தமிழ் தேசிய வாதிகளின் தீவிர ஆதரவாளர்கள். இப்படி பல பாலியல் ரீதியான சம்பவங்கள் வெளியாகியுள்ளது. மேலும் ஆழமாகவே நலிந்து சிதைந்து வரும் ஏழைத் தமிழ் மக்களின் அவலம், கேட்பாரற்ற ஒரு சமூகப் போக்காக மாறிவிட்டது.


வடக்கு கிழக்கு சமூகமே அகதியாகி உள்ள நிலைமை என்பது, தனது சமூக இருத்தலின் மேலான கையேலாத் தன்மையை எதிரொலிக்கின்றது. அகதிகளுக்கான சர்வதேச அறிக்கை ஒன்றில் சொந்த வாழ்விடத்தை விட்டு 8 இலட்சம் பேர் வெளியேறியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த சமூகத்தின் சமூக இருப்பு என்பது, வரைமுறையற்ற வகையில் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இவர்களின் நலன்களில் அரசும் சரி, புலிகளும் சரி அக்கறைப்படுவதில்லை. தத்தம் இராணுவ அரசியல் நலனுக்கு இசைவாக, இவர்களை வெறும் கருவிகளாகவே பயன்படுத்தப்படுகின்றனர். அமைதி சமாதானம் என்ற பெயரில் யுத்த நிறுத்தம் தொடங்கியது முதல் இவர்களின் மீள்குடியேற்றம் என்பது தேசியத் தலைவர்களின் வேண்டாவெறுப்பான ஒரு விடையமாகவே இருந்தது. சர்வதேச நாடுகளின் விடையமாகியது. சர்வதேச அமைப்புகள் மக்களுக்குள் ஆழமாக ஊடுருவும் ஒரு நெம்பு கோலாகியது. சர்வதேச அமைப்புகளின் தயவிலும் மற்றும் தன்னியல்பாகவும் மீள் குடியேற்றம் நடைபெற்றது. முதல் 18 மாதத்தில் 311000 பேர் தமது பழைய இருப்பிடத்துக்கு திரும்பியுள்ளனர். மீள்குடியேற்றம் ஒரு சுடுகாட்டின் மேலானதாகவே தொடங்கியது. இந்த சுடுகாடான வடக்கு கிழக்கில் 327000 வீடுகள் சிதைந்துள்ள நிலையில் மீள் குடியிருப்பு என்பது வேதனையான ஒன்றாகவே தொடங்கியது. எந்த நிவாரணத்தையும், எந்த தேசிய வழிகாட்டுதலையும் தமிழ் தேசியத் தலைமைகள் வழங்கவில்லை. சிதைந்த தேசியச் சுடுகாட்டில் அன்னிய நாட்டுப் பேய்களின் வழிகாட்டுதலுக்கே உட்பட்டுள்ளனர். நேரடியாக அன்னியனும், இனவாத அரசுக்கு ஊடாக அன்னியனும் வழங்கிய சில நிவாரணங்களான உணவு மற்றும் நிதியில் ஒரு பகுதியை கட்டாயமாகவே தமிழ் தேசியவாதிகள் சூறையாடி வருகின்றனர்.


இதைத் தாண்டி மீள் குடியேற்றம் கூட ஆபத்தான ஒன்றாகவே உள்ளது. பலர் தொடர்ச்சியாக கண்ணிவெடி தாக்குதலுக்கு நாளந்தம் உள்ளாகின்றனர். வடக்கு கிழக்கில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடி உத்தியோக பூர்வமாக 10 இலட்சம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது 20 இலட்சத்தைத் தாண்டும் என்று மதிப்பிடப்படுகின்றது. உலகளவில் புதைக்கப்பட்ட கண்ணி வெடியில் இது கணிசமானது. 55 கண்ணிவெடிக்கு ஒன்று இலங்கையில் புதைக்கப்பட்டுள்ளது. உலகளவில் புதைக்கப்பட்ட மொத்த கண்ணிவெடி 11 கோடிக்கு மேலாகும். இதை அகற்ற 3300 கோடி டொலர் (330000 கோடி ரூபா) தேவை. ஒட்டு மொத்தமாகவே புதைக்கப்பட்டவற்றை அகற்ற 1100 வருடங்கள் தேவை. இலங்கையில் 2002 வரையான காலத்தில் 35000 பேர் கண்ணிவெடிக்கு பலியாகியுள்ளனர். 27000 பேர் கால்களை அல்லது வேறு உறுப்புகளை இழந்துள்ளனர். காயம் அடைந்தவர்களில் 15 ஆயிரம் பேர் இராணுவ வீரர்களாவர். வடக்கு கிழக்கில் முழுமையாக கண்ணிவெடியை அகற்ற 20 வருடங்கள் தேவை. மொத்தமாக இவற்றை அகற்ற 6000 கோடி ரூபா தேவை. இந்த நிலையில் கண்ணிவெடியை தொடர்ச்சியாக இரண்டு வருடங்களுக்கு அகற்ற 272 கோடி ரூபாவை பல்வேறு நாடுகள் வழங்கியுள்ளது. இந்த நிலையில் வக்கற்ற மக்கள் வாழ வழியற்ற நிலையில் இந்த கண்ணிவெடிகளின் மேல் குடியேறுகின்றனர். சமாதானம், அமைதி என்பது நாளாந்தம் கண்ணிவெடி வெடிச் சிதறல்கள் மேல் தான் அரங்கேறுகின்றது. கண்ணிவெடியை அகற்ற சர்வதேச அமைப்புகள் கொடுக்கும் கூலியின் பெரும் பகுதியை புலிகள் பறித்து எடுக்கின்றனர். தர மறுத்தவர்களை கூட்டமாகவே வைத்து தாக்கப்பட்ட சம்பவங்களும் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் குறைந்த பட்சம் கண்ணிவெடி அகற்றலைக் கூட சுயமாக தேசியவாதிகளால் செய்ய முடியாது என்ற நிலையில், எப்படித் தான் தமிழ் தேசத்தை நிர்ணயம் செய்யப் போகிறார்கள்.


உண்மையில் இந்த வேதனைக்குரிய தமிழ் சமூகம், மத்தளம் போல் மோதப்படுவதன் ஊடாகவே இலங்கையின் ஒட்டுமொத்த அரசியல் ஜனநாயக தோற்றத்தில் பொம்மி நிற்கின்றது. சமூகமே புலம் பெயர்ந்து அகதியாகி மீள குடியேறத் துடிக்கும் தமிழ் மக்களின் வாழ்வோ என்றுமில்லாத வேதனைகளால் அல்லல் உறுகின்றது. சமாதானம், அமைதி மீண்டுவிடும் என்ற நம்பிக்கையில், அதை பலப்படுத்தும் எல்லாவிதமான மனித விரோதப் போக்கையும் கூட ஆதரிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இந்த மக்களின் தலைவிதி என்பது துயரமானது. யூனிசேவ் அறிக்கை ஒன்று வடக்கில் 69 சதவீதமான குழந்தைகள் அகதி முகாம்களில் வாழ்வதாக தெரிவித்துள்ளது. இந்த இளம் குழந்தைகளின் தலைமுறை வாழ்வு ஒரு சமூகப் போக்கின் வளர்ச்சிக்கே நேர் எதிராகவே தொடங்குகின்றது. அதுவும் யாழ் சமூகத்தின் நிலையே இது என்றால், தமிழ் சமூகத்தின் வீழ்ச்சி என்பது பள்ளத்தில் உருண்டு ஒடுவதைத் தாண்டி எதுவும் இருக்கப்போவதில்லை.


94 ஆயிரம் குழந்தைகள் வறுமை காரணமாக கல்வியை இழந்துள்ள நிலையில், யாழ் மாவட்டப் பாடசாலைகள் சிலவற்றில் பொறுக்கி தின்னும் கும்பல் ஒன்று மாணவர்களை பாடசாலையில் சேர்ப்பதற்கு 15 ஆயிரம் ரூபா தரும்படி நிர்ப்பந்திக்கின்றனர். நிதி கோருவது அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. இதை எதிர்த்து பாடசாலை அதிபர்கள், பெற்றோர்கள் கல்வித் திணைக்களத்துக்கே சென்று முறையிட்ட போது, தம்மையொன்றும் செய்யமுடியாது என்று கூறும் அளவுக்கு அதிகாரத் திமிர் நிறைந்த கும்பல் ஒன்று உருவாகியுள்ளது. ஆகக் குறைந்தது 3 ஆயிரம் ரூபா கட்டவேண்டும் என்று கோருவது அரசாங்கமல்ல. தமிழ் மக்கiளிடையே உருவாகியுள்ள திடீர் பணக்காரக் கும்பலே. இதில் தேசியம் பேசும் புலிகளும் இணங்கிப் போவது மட்டுமல்ல, தமிழ் மக்கள் என்று மூச்சிரைக்க கோசம் போடும் பினாமிப் பல்கலைக்கழகம் கூட இந்த மனித விரோத கொள்ளைக்கு எதிராக மூச்சுவிடுவதில்லை.


தமிழர் தாயகத்தின் பொருளாதாரம் என்ன?


உலகமயமாதல் என்ற கட்டமைப்பில் உள்ள பன்னாட்டு தேசங் கடந்த பொருளாதாரமே தமிழீழத் தேசிய பொருளாதாரம் என்பதை புலிகள் நிறுவிவருகின்றனர். அண்மையில் புலிகளின் விழாக்கள் அனைத்தும், தேசங்கடந்த பன்னாட்டு பொருட்களின் விளம்பரங்களால் அலங்கரிக்கப்பட்டே நடத்தப்படுகின்றது. வன்னியில் அவர்களின் நடத்தும் பேச்சுவார்த்தை மேசைகள் கூட, பன்னாட்டு சந்தை பொருட்களின் விளம்பர பொருளால் அலங்கரிக்கப்படுகின்றது.


உதாரணமாக அண்மையில் மூன்றாவது தமழீழத் தேசிய விளையாடு விழாவை புலிகள் 20.2.2004 கிளிநொச்சியில் நடத்தினர். அந்த தேசிய விழாவில் கொக்கோகோலா விளம்பரங்கள், புலிக் கொடியை விட பெரியளவில், புலிக் கொடியின் பின்னணியில் வடிவமைக்கப்பட்டடிருந்தது. (பார்க்க 21.2.2004 தினக்குரல் பத்திரிகையில்) சாதாரண செய்திப் பத்திரிகையிலேயே இப்படங்கள் வெளியிடப்பட்டு இருந்தன. உத்தியோகபூர்வமற்ற வகையில் புலிகளின் ஆதரவுடன், தமிழீழத் தேசிய குடிபானம் கொக்கோகோலாவாக மாறியுள்ளது. இதன் மூலம் துரோகியான தேசிய குளிர்பானத்துக்கு, துரோக தண்டனையாக மரணதண்டனை வழங்கப்பட்டு விட்டது. இதை யாரும் உரிமை கோரவில்லை. இதற்காக வழமைபோல் யாரும் குரல் கொடுக்கவுமில்லை. புலிகள் பன்னாட்டு பொருட்களின் இடைத்தரகராக மாறிவரும் நிலையில், தேசிய பொருளாதாரத்தின் எஞ்சிய மூச்சுகளும் சேடமிழுக்கத் தொடங்கியுள்ளது. புலிகள் கொழும்புத் தரகர்களுக்கு கீழ் இருப்பதை விட, நேரடி தரகராக இருப்பதை உறுதி செய்யும் வகையில் தான் சிங்கள இனவாதிகளுடன் பேச்சுவார்த்தை என்ற கூத்தை நடத்துகின்றனர்.


உலகத்தில் மிகத் தரமான ருசியான பழங்களை உற்பத்தி செய்யும் எம் மண்ணில் கிடைக்கும் பழங்களை தேசத்தின் மக்கள் உண்ணாது அவற்றை ஏற்றுமதி செய்யவும், அதில் உற்பத்தியாகும் குளிர்பானங்களை ஏற்றுமதி செய்யும் திட்டம் அமுலுக்கு வந்துள்ளது. தமிழ் மக்கள் உலகத்திலேயே மிகக் கழிவான கொக்கோகோலாவை உறிஞ்சும் புலிகளின் கொள்கை தேசிய கொள்கையாகியுள்ளது. இதனடிப்படையில் இயங்கும் பல்வேறு அமைப்புகள் வடக்கில் உற்பத்தியாகின்ற பலா, பப்பாளி, அன்னாசி மற்றும் கொடித்தோடை ஆகிய பழங்களை உற்பத்தியாளர்களிடம் இருந்து வாங்கி பதனிட்டு ஏற்றுமதி செய்யும் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கென பழ உற்பத்தியாளர்கள் பற்றிய விவரங்கள் சேகரிக்க, பழ உற்பத்தியாளர்கள் குறிப்பிட்ட அமைப்புகளில் பதிவு செய்யக் கோரப்பட்டுள்ளது. இந்த மக்கள் விரோத நடவடிக்கையாக ஒருங்கமைக்கப்பட்ட கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பிரதேச ரீதியாக வடமராட்சி - ஊற்று நிறுவனமும், கோப்பாய் - இருபாலைச் சந்தியில் அமைந்துள்ள மக்கள் நலன்காக்கும் பிரிவும், நல்லூர் - சமூக அபிவிருத்தி மன்றமும், சங்கானை - சிறுவர் கல்விக்கும் பால்நிலை அபிவிருத்திக்குமான நிறுவனமும், தென்மராட்சி - அறவழிப் போராட்டக்குழு அலுவலகம் ஊடாக இந்த காட்டிக் கொடுப்பை ஏகாதிபத்தியத்துக்கு ஒழுங்கமைத்துள்ளனர். இப்படி பற்பல தேசிய உற்பத்திகள் சொந்த மக்களின் பாவனையில் இருந்து விலக்கப்பட்டு, வெள்ளையர்களின் நலனை உறுதி செய்கின்றனர். இதை இயற்கையான உணவு என்ற விளம்பரத்துடன் சந்தைப்படுத்திக் கொழுக்க ஏகாதிபத்திய மூலதனங்கள் இடைத் தரகர்கள் மூலம் களமிறங்கியுள்ளன. அதேநேரம் இயற்கை உணவு, குடிபானம் என்று விளம்பரம் செய்ய முடியாத வெள்ளை நாட்டு இரசாயனக் கழிவுகளை பளபளக்கப் பண்ணி, தேச மக்களுக்கு தேசிய உணவாக மாற்றப்படுகின்றது. தேசிய வீரர்கள் இதைக் கண்ணில் ஒற்றிக் கொண்டு, கடை விரிக்கின்றனர்.


மறு பக்கத்தில் எம் மண்ணில் அன்னிய மூலதனம் கேட்பாரின்றி தாராளமாக புகுகின்றது. குடாநாட்டுக்கான மின்விநியோகத்தை ~அக்கிரிக்கோ என்னும் பிரிட்டிஸ் நிறுவனம் அமெரிக்காவிடம் இருந்து அண்மையில் வாங்கியது. இதற்கு முன் ஒரு வருடமாக ~அல்ரெம் என்ற அமெரிக்க நிறுவனமே மின்சாரத்தை வழங்கியது. வடக்கு போக்குவரத்துத் துறையை அன்னியன் வாங்கியுள்ளான். இப்படி பற்பல. தேசிய வீரர்களின் சம்மதத்துடன், தியாகிகளின் பிணங்களின் மேலாக செங்கம்பளம் விரித்து அன்னியர்கள் வரவேற்கப்படுகின்றனர்.



Wednesday, October 18, 2006

அலுக்கோசுகள் சமூகத்தின் ஓட்டூண்ணிகளாகும் போது

அலுக்கோசுகள் சமூகத்தின் ஓட்டூண்ணிகளாகும் போது

பி.இரயாகரன்
18.10.2006


து சமூகத்துக்கு நடக்கக் கூடாதோ, அது நடக்கும். சமூகத்தின் சாரத்தை உறிஞ்சி, அதை தமது அலுக்கோசுத்தனத்துக்கு பயன்படுத்துவது நிகழும். சமூகத்தின் அறிவை நலமடித்து, அதையும் திண்டு செரிக்கின்ற வக்கிரத்தை அரங்கேற்றுகின்றது. இப்படியான ஒரு நிகழ்வு 15.10.2006 வேலணை மத்திய மகாவித்தியாலயம் பழையமாணவர் சங்க வருடாந்த பொதுக் கூட்டத்தில் அரங்கேறியது. சமூக அடிப்படையற்ற சமூக விரோத அலுக்கோசுகளினால், பாசிசத்தின் பெயரில் இவை நாடகமாக நடித்துக்காட்டப்பட்டது. மனித அறிவை, சமூக அறிவை மலடாக்க, அதை நலமடிக்கின்ற குதர்க்கமான நயவஞ்சகமான குறுக்குவழி சூழ்ச்சிகளால் அறிவு குதறப்பட்டது. பாசிசத்தின் பெயரில், அதனை பக்க துணையாகக் கொண்டே, தமது அலுக்கோசுத்தனத்தை நகைச்சுவையாகவே அரங்கேற்றினர். அந்த சங்கம் வெளியிட்ட மலரின் ஒருபகுதி, அலுகோசுத்தனம் மூலம் மிரட்டி, பிளவை முன்னிறுத்தி, தனது கோமாளித்தனம் மூலம் கிழித்தெறியப்பட்டது. ஏன் எதற்காக கிழிக்கப்பட்டது என்பதற்கு, எந்த சுயவிளக்கமும் வழங்கப்படவில்லை. அலுக்கோசுகளுக்கு காரணம் தெரிவதில்லை.


எழுதியற்காக சுடுவதும் சரி, எழுதியதை கிழித்தெறிவதும் சரி இரண்டும் ஒன்று தான். இங்கு சந்தர்ப்பமும் சூழலும் தான் இந்த நிலமையை வேறுபடுத்துகின்றது. நோக்கம் எழுதுபவனை, அவன் எழுத்தையும் இல்லாது ஒழிப்பதுதான். இந்த நிகழ்வு, என் முன்னாலேயே அரங்கேறியது. அதிஸ்டவசமாக பிரான்சில் வாழ்வதால், நான் உயிருடன் உள்ளேன்.


பூனையாட்டம் கண்ணை மூடிக் கொண்டு பால் குடிக்கும் அலுக்கோசுகள், இதை கிழத்தெறிவதால் எதுவும் நடந்துவிடாது. மக்களை முட்டாளாக கருதி, தமது குருட்டுக் கண்ணுக்குள் அவர்களை அடிமைகள் என்று நினைத்துக் கொண்டு கழுவேற்றுபவர்களே இந்த ஐந்துகள். இதைத் தவிர வேறு எதுவும் தெரியாத அற்ப எடுபிடிகள் இவர்கள். அடியாட்களான இவர்கள் தங்களின் மூளையில் சொந்தமாக எதுவுமற்ற மரமண்டைகள். பணத்தை வைத்துக் கொண்டு, பாசிசத்தின் அலுகோசுகளாக சமூகத்தில் முன்னிலையில் குதியம் குத்துபவர்கள். இவர்கள் சமூக சேவை என்று புறப்பட்டால், அவர்கள் செய்வது அனைத்தும் அலுக்கோசுத்தனத்தைத் தவிர, வேறு எதுவுமாக இருப்பதில்லை.


சமூகம் அறிவுபூர்வமாக சிந்திப்பது தமது பாசிச அலுக்கோசுதனத்துக்கும் அதன் இருப்புக்கும் ஆபத்தானதாகவே கருதுகின்றது. இது சமூகம் சுயமாக சிந்திக்க கூடிய அனைத்தையும் நலமடிக்க கோருகின்றது. சமூக நல அமைப்புகளிலும் இதை நடைமுறையில் அமுல்படுத்த முனைகின்றது. பிளவின் பெயரில் அச்சுறுத்தலை விடுத்து, ஒரு சமூக நல அமைப்பையே முறைகேடாக தனது சொந்த இழிசெயலுக்கு உடந்தையாக்குகின்றது. இழிவானதும், சாதிய வக்கிரமும் கொண்ட யாழ் மேலாதிக்க மனப்பாங்கு கொண்ட இந்த சமூகவிரோத ஒட்டுண்ணிகள், சமூகத்தையே பேரம் பேசி விற்கின்ற கோமாளிகள் தான். பாசிட்டுகளுக்கு துணை நின்று அந்த துணிவில் கொக்கரிக்கின்ற இந்த எடுபிடி அலுக்கோசுகள், மனிதத்தை, மனிதநேயத்தை, மனிதத்துவத்தை, அதற்கு உதவுகின்ற அனைத்து சமூக உணர்வுகளையும் செல்லரிக்க வைத்து, அதில் குளிர் காய்வதே இதன் மேதமையாகும்.


இவர்கள் இப்படி சவாரி விடுவது யார் மீது என்றால் மக்கள் மீதுதான். இலங்கை வாழ் தமிழ் சமூகம் எல்லாவிதமான சமூக அடிப்படையையும் பாசிட்டுகளிடம் இழந்து, நாதியற்ற ஒரு சமூகமாக அல்லலுறுகின்றது. இதற்குள் ஓட்டுண்ணிகளும், அலுகோசுகள் பாசிட்டுகளுடன் கோஸ்டி சேரும் போது, எஞ்சிக்கிடக்கும் கொஞ்ச நஞ்ச சமூக அடிப்படைகளையும் இல்லாதொழித்து விடுகின்றது. மனிதம் சிதைவுற்று அல்லலுறுகின்றது. இதுவே எமது சமூகத்தின் இன்றைய அவலமாகும்.


இதையும் மீறி இன்றைய எமது சமூக நிலையில், சமூக அக்கறையுடன் ஆங்காங்கே ஒருசில அமைப்புகள் மட்டுமே சுதந்திரமாக சுயமாக இயங்க முனைகின்றது. அதுவும் ஒரு சிலரின் நேர்மையான கடும் முயற்சிகளுடன் கூடிய, பாசிச சூழலுக்கு ஏற்ற சமரசம் தான் அதை இயங்க வைக்கின்றது. இது அன்றாடம் நாம் காணும் உண்மைகள். அதுவும் பற்பல சிரமங்களுக்கு மத்தியில், அவமானங்களுக்கு மத்தியில் தான், அவை சுயாதீனமாக தமது சொந்த நோக்குடன் தனித்துவமாக இயங்க முனைகின்றது. பல முரண்பட்ட கருத்துகள், சமூக முரண்பாடுகளுக்கு இடையில், தமிழரின் பாசிச அரசியல் வங்குரோத்துக்குள், இந்த மாதிரியான அமைப்புகள் தப்பிப்பிழைப்பதே கேள்விக்குரியதாக உள்ளது. இதற்குள் சொந்த நலனை முதன்மைப்படுத்திய புல்லுருவிகள், ஓட்டுண்ணிகள், அலுகோசுகள் புகுந்து, அந்த நேர்மையான செயலை மிரட்டி தமது இழிவான செயல்கள் மூலம் அவற்றைச் செல்லரிக்க வைக்கின்றனர்.


தமிழ் மக்களின் மேல் உண்மையான அக்கறையுடன், தமது சொந்த உழைப்பில் ஒரு சிறு பகுதியை அந்த மக்களுக்கு வழங்குவது என்பது, இன்று நடைமுறையில் சாத்திமற்ற ஒன்றாகவேவுள்ளது. இந்த நிலையில் பழையமாணவர் சங்கங்கள் தான், சுயாதீனமாக தம்மால் இயன்றளவில் இதை நேர்மையாக பகிரங்கமான கணக்கு வழக்குடன் செய்ய முடிகின்றது. இதற்கு வெளியில் மக்களின் பெயரில் பெறப்படும் பணங்கள் சுருட்டப்பட்டு, அவை சூறையாடப்படுகின்றது. அவை மக்களுக்கு சென்றடைவதில்லை. சுயமான சுயாதீனமாக செயல்படும் அமைப்புகளின் பணத்தைக் கூட, கூட்டி அள்ளிச் செல்லும் பாசிச வெறியாட்டம் நடத்தப்படுகின்றது. இப்படிப்பட்ட நிலையில் பொதுப் பணம் மக்களிடம் சென்றடைவதை உறுதி செய்வதில் பழையமாணவர் சங்கங்கள், அதில் தனிப்பட்ட நபர்களின் நேர்மையான செயல்கள், இன்றைய எமது அவலமான சமூகத்தில் போற்றுதலுக்குரியது. இவை எமக்கு இடையிலான முரண்பாடுகளைக் கடந்தும் ஊக்குவிக்கப்பட வேண்டும்.


இன்று சமூக அக்கறைக்குரிய செயல்பாடுகள் நலமடிக்கப்பட்ட நிலை தான், இன்று பொதுவாக காணப்படுகின்றது. இந்த நிலையில் ஏதோ தம்மால் இயன்ற எல்லைக்குள், மக்களுக்கு நேரடியாக சென்றடையும் வண்ணம் பழையமாணவர் சங்கங்கள் சுயாதீனமாக செயற்பட முற்படும் போது, அதில் பல முரண்பாடுகள் இருப்பது இயல்பு. இதை எல்லாம் அனுசரித்து மக்களுக்கு சென்றடையும் ஒரு துளி உதவியை, அந்த மனப்பக்குவத்தை முரண்பாடு கடந்து ஆதரிக்க வேண்டியநிலையில் நாம் உள்ளோம்.


சமூக செயல்பாட்டில் உள்ள அமைப்புகளில் ஒட்டுண்ணிகளும், ஐந்தறிவில்லாத மந்தைகளும் தமது சொந்த எடுபிடித்தனத்துடன் ஓட்டிக்கொள்ளும் போது, அந்த செயல்பாட்டை முடக்க தமது குறுகிய வக்கிரபுத்தியை காட்டுவது இயல்பு. அது பாசிசத்தின் துணையுடன் அல்லது பாசிசத்தின் பெயரில், அது எந்த சொந்த அமைப்பு முறையையும் அதன் விதியையும் கூட அங்கீகரிக்க மறுக்கின்றது. நாணம் அறுத்த கொம்பேறு மாடுகள் போலே நின்று திமிறும். இதற்குள் தனது அலுகோசுதனத்தை அரங்கேற்றும். சமூக கூறுகள் அனைத்தையும் தூக்கில் ஏற்றுவதை மட்டுமே தனது குலத்தொழிலாக கொண்ட இந்த எடுபிடி அடியாள் அலுகோசுகள், அதைத் தனது சொந்த வாழ்வாக கொண்டு விட்டால், கால் வைக்கும் இடமெங்கும் சமூகத்தின் இருப்புக்கே வேட்டுவைக்கின்றது. கழுவேற்றுவதே இந்த அடியாட்களின் சமூக செயல்பாடாகிவிடுகின்றது.


இந்த வகையில் தான் வேலணை மத்திய மகாவித்தியாலயம் வெளியிட்ட 'வித்தியாலயம் 2006" மலரிலும் அவற்றைக் கழுவேற்றியது. மலர் அச்சேற்றப்பட்டு அது புத்தகமாகிய நிலையில், இடையில் 30 முதல் 37 பக்கம் கொண்டிருந்த கட்டுரை, அலுக்கோசுகளினால் கழுவேற்றப்பட்டது. அந்தப் பக்கங்கள் கொண்டிருந்த கட்டுரை பாரிஸில் தொடரும் இன வன்முறைகளை, நிறவெறி ஆட்சியாளர்களே ஊக்குவிக்கின்றனர்என்பதாகும்.


பிளவை ஆயுதமாக்கி பாசித்தை துணைக்கிழுத்து, இந்தக் கட்டுரையை அந்த மலரில் இருந்து வலுக்கட்டாயமாக ஒரு சிலரால் அகற்றப்பட்டது. இதை விவாதிக்க முடியாத அலுக்கோசுகள் ஐந்தறிவற்ற முட்டாள்கள் என்பதையே, தமது சொந்த செயல் மூலம் இப்படி கோமாளிகளாகவே நிறுவிக்காட்டினர். பாசிச சமூகத்தின் எடுபிடிகளாகி அடியாள் வேலை செய்து, கழுவறுப்பதை மட்டும் தனது சொந்த இருப்பாக்கி, அதைக் கொண்டு சமூகத்துக்கே வர்த்தகம் செய்ய வெளிக்கிட்டால், அதுவே அந்த ஐந்துகளின் ஆறாவதறிவாகி விடுகின்றது. இதைக் கொண்டு அனைத்தையும் நலமடிக்கின்ற அலுக்கோசுகள் தான் தாங்கள் என்பதை, இந்த மலர் மூலம் மீண்டும் நிறுவிக்காட்டியுள்ளனர். இப்படி சமூகத்தின் ஒட்டுண்ணிகளாக வாழ்ந்தபடி செய்ய நினைப்பது, சமூகத்தை ஓட்டவுறுஞ்சி குடிப்பது தான்.


Tuesday, October 17, 2006

காசுமீர் :அரச பயங்கரவாதத்தின் இரத்த சாட்சியங்கள்!

காசுமீர் :

அரச பயங்கரவாதத்தின் இரத்த சாட்சியங்கள்!


காசுமீர் பள்ளத்தாக்கில் உள்ள குப்வாரா நகருக்கு அருகில் இருக்கும் சாஹல்பதி கிராமத்தைச் சேர்ந்த குலாம் மொஹைதீன் என்பவரும், ருபினா என்ற 14 வயது சிறுமியும் கடந்த ஆகஸ்டு 12ஆம் தேதி அதிகாலையில், ""ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ்'' என்ற துணை இராணுவப்படை சிப்பாய்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அன்று அதிகாலையில் விறகு பொறுக்குவதற்காகக் காட்டுக்குள் சென்றதுதான் அவர்கள் செய்த ""குற்றம்''; அதற்குத்தான் இந்த மரண தண்டனை!


சாஹல்பதி கிராமத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டவர்கள் அன்று அதிகாலையில் விறகு பொறுக்குவதற்காகக் காட்டிற்குச் சென்றார்கள். அவர்களுள் ஒருவரான சஜா, ""இராணுவம் எங்களை நோக்கிச் சுடத் தொடங்கிய மறுநிமிடமே, ருபினா இரத்த வெள்ளத்தில் செத்துக் கிடந்ததாக'' அந்தப் பயங்கரத்தைப் பற்றிக் கூறுகிறார்.


""காட்டிற்குப் போவதற்காக என்னை, என் அம்மா அதிகாலை 5.20க்கு எழுப்பி விட்டார். சில நிமிட தாமதத்தினால், நான் மற்றவர்களுடன் சேர்ந்து காட்டிற்குப் போக முடியவில்லை. ஆனால், அதற்குள்ளாகவே என் தங்கை பரிதாபகரமாக இறந்து போன செய்தி எங்கள் வீட்டிற்கு வந்து விட்டது'' என்கிறார், ருபினாவின் சகோதரர் அப்துல் வாஹித்.


ஜம்மு காசுமீர் மாநிலத்தில் இந்திய இராணுவத்தால் நடத்தப்படும் இது போன்ற படுகொலைகளுள் பெரும்பாலானவை எல்லை தாண்டிய பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலாக சோடிக்கப்பட்டு, உண்மைக்கும் சமாதி கட்டப்பட்டு விடும். ஆனால், குலாம் மொஹைதீனும், ருபினாவும் கொல்லப்பட்ட சம்பவத்திலோ இந்திய இராணுவம் தனது ""தவறை'' ஒப்புக் கொள்ள வேண்டிய இக்கட்டில் மாட்டிக் கொண்டுவிட்டது.


இதற்கு இந்திய இராணுவத்தின் ""நேர்மையோ'', நியாய உணர்ச்சியோ காரணம் அல்ல. குலாம் மொஹைதீனையும், ருபினாவையும் இந்திய இராணுவம் சுட்டுக் கொன்றதைக் கண்ணால் கண்ட சாட்சிகள் இருப்பதால், இந்திய இராணுவத்தால், குலாம் மொஹைதீனையும், ருபினாவையும் எல்லை தாண்டிய பயங்கரவாதிகளைப் போல ""செட்அப்'' செய்ய முடியவில்லை. மேலும், சம்பவம் நடந்த உடனேயே, குப்வாரா நகர மக்கள் ஒன்று திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், இப்படுகொலைச் சம்பவம் காசுமீர் மாநிலமெங்குமே அம்பலமாகி விட்டது.


எனினும், இராணுவம் தனது தீவிரவாதப் பீதியூட்டலை விட்டுவிடவில்லை. ""இராணுவத்தினர் பயங்கரவாதிகளைக் காட்டுக்குள் தேடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது சிலர் ஆயுதங்களோடு காட்டுக்குள் ஓடுவது தெரிந்தது. தீவிரவாதிகள் என நினைத்துக் கொண்டு இராணுவம் சுட்டதில் குலாம் மொஹைதீனும், ருபினாவும் இறந்து போய்விட்டார்கள். இது தவறுதலாக நடந்துவிட்ட துயரச் சம்பவமே தவிர, திட்டமிட்ட படுகொலை அல்ல'' என இராணுவ அதிகாரிகள் முதலைக் கண்ணீர் வடித்துள்ளனர்.


முன்னெச்சரிக்கைக் கூடச் செய்யாமல், உடனடியாகச் சுடும்படி இராணுவத்தினரைப் பயமுறுத்திய ஆயுதம் என்ன தெரியுமா? விறகு வெட்டுவதற்காக கிராமத்தினர் எடுத்துச் சென்ற கோடாரிதான் அந்த ஆயுதம். பனிமூட்டத்தில் தொலைவிலிருந்து பார்த்தபோது, தீவிரவாதிகள் ஏ.கே 47 ரக துப்பாக்கியை தோளில் சுமந்து செல்வது போலத் தெரிந்ததாம். எனவேதான் சுட்டுக் கொன்று விட்டார்களாம். செக்குக்கும், சிவலிங்கத்திற்கும் வேறுபாடு தெரியாத தெருநாயைப் போல நடந்து கொண்ட இந்திய இராணுவம் தரும் இந்த நியாயவாதத்தை நாட்டு மக்கள் நம்ப வேண்டுமாம்!


இச்சம்பவம் நடப்பதற்கு மூன்று நாட்கள் முன்னதாக, ஆகஸ்ட் 9 அன்று குலாம் முகம்மது ஷேக் என்ற மாணவர் மத்திய ரிசர்வ் போலீசு படையால், தால்கேட் சந்தைப் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டார். குலாம் முகம்மது ஷேக், பயங்கரவாதியா, இல்லை அப்பாவியா என்பது உறுதியாகத் தெரியாத நிலையிலேயே, அவர் நடுத்தெருவில் நாயைப் போலச் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.


இச்சம்பவம் பற்றி மத்திய ரிசர்வ் போலீசு படை விடுத்துள்ள அறிக்கையில், ""குலாம் முகம்மது ஷேக் கையெறி குண்டை வீச முயலும்பொழுது, அவரைக் கையும் களவுமாகப் பிடித்ததாக''க் கூறியிருக்கிறது. அப்படி பிடிக்கப்பட்டவரை உடனடியாகச் சுட்டுக் கொல்ல வேண்டிய அவசியம் என்ன வந்தது என்ற கேள்விக்கு அத்துணை இராணுவப்படை பதில் அளிக்கவில்லை. மாறாக, குலாம் முகம்மது ஷேக் கையெறி குண்டை வீச முயன்றதைப் பொதுமக்கள் பார்த்ததாகக் குறிப்பிட்டு இந்தக் கொலையை நியாயப்படுத்தியுள்ளது.


ஆனால், பந்திபூர் நகரைச் சேர்ந்த பொதுமக்களும், அமர்சிங் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களும் குலாம் முகம்மது ஷேக், இளைஞர் முசுலீம் லீக் கட்சியின் மாணவர் அமைப்பின் தலைவர் என்ற காரணத்திற்காகத்தான் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் குறிப்பிட்டு, ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.


""இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, இராணுவத்தின் அட்டூழியங்களை எதிர்த்துப் போராடி வரும் பலரையும் இந்திய இராணுவம் கைது செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான், குலாம் முகம்மது ஷேக்கை, இந்திய இராணுவம் சுட்டுக் கொன்றுவிட்டதாக''க் குற்றஞ் சுமத்தியுள்ளார், முசுலீம் லீக் கட்சியின் தலைவர் முஸாரத் ஆலம்.


இப்படி அப்பாவிகளைக் கொன்றுவிட்டு, அவர்களைப் பயங்கரவாதிகளாகச் சித்தரிப்பது இந்திய இராணுவத்துக்குக் கைவந்த கலை. ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு, சட்டிஸ்புரா என்ற கிராமத்தைச் சேர்ந்த ஐந்து அப்பாவி முசுலீம்களைக் கொன்றுவிட்டு, அவர்களைப் பாகிஸ்தான் அனுப்பிய பயங்கரவாதிகளாக முத்திரை குத்தி இந்திய இராணுவம் நடத்திய நாடகம் உலகப் பிரசித்தி பெற்றது.


1U9 தொடங்கி 2003 முடிய ஏறத்தாழ 3,931 காசுமீர் முசுலீம்கள் காணாமல் போய்விட்டதாக, அம்மாநில அரசே அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. இராணுவத்தாலும், துணை இராணுவப் படைகளாலும் இழுத்துச் செல்லப்பட்ட இவர்கள் உயிரோடு இருக்கிறார்களா, இல்லை இறந்து போய்விட்டார்களா என்பதை ""இராணுவ இரகசியம்'' போல இந்திய அரசு மூடி மறைத்து வருகிறது.


76 வயதான அப்துல் அஹத், செப். 2000இல் இந்திய இராணுவத்தால் கைது செய்யப்பட்ட தனது இரு மகன்களை, தனது தள்ளாத வயதையும் பொருட்படுத்தாது இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார்.


குப்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த சாரா முகம்மது, ராஷ்டிரிய ரைபிள் இராணுவ அதிகாரிகளால் பிடித்துச் செல்லப்பட்ட தனது கணவர் குலாம் முகம்மதுவை 2004லிருந்து தேடிக் கொண்டிருக்கிறார். கணவனைத் தேடி அலையும் மனைவியரை, ""அரைக் கைம்பெண்'' என அம்மாநிலத்தில் அழைக்கும் அளவிற்கு புதிய சொல் அகராதிகளை இராணுவத்தின் அட்டூழியங்கள் உருவாக்கி வருகின்றன. இந்தக் காணாமல் போனவர்கள் பற்றிய புள்ளி விவரப் பட்டியலில், போலி மோதல் படுகொலைகளில் கொல்லப்பட்ட காசுமீர் முசுலீம்களின் எண்ணிக்கை அடங்காது.


நீதிமன்றத்தில் போடப்பட்ட ஆட்கொணர்வு மனுக்கள், மனித உரிமை கமிசனின் உத்தரவுகள் இவையெல்லாம், இராணுவத்திற்கும், துணை இராணுவத்திற்கும் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் முன் செல்லாக் காசுகள்.


ராணுவத்தின் அட்டூழியத்தை யாரும் தட்டிக் கேட்கக் கூடாது; இராணுவச் சிப்பாய்கள் அதிகாரிகள் மீது யாரும் மனித உரிமை மீறல் வழக்கு தொடரக் கூடாது என்பதற்காகவே, கலவரப் பகுதி சட்டம், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் ஆகிய பாசிசச் சட்டங்களின் மூலம் இராணுவத்தின் அட்டூழியங்களுக்குச் சட்டபூர்வ பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அம்மாநிலத்தில் நடைபெறும் இராணுவ காலனிய ஆட்சியை மூடிமறைப்பதற்காகவே தேர்தல், சட்டமன்றம் ஆகியவை முகமூடிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.


தேச பக்தி, நாட்டின் ஒருமைப்பாடு என்ற பெயரில் புனிதப்படுத்தப்படும் இந்த அரசு பயங்கரவாதமானது எல்லை தாண்டி வரும் பயங்கரவாதம் முசுலீம் மதவெறி பயங்கரவாதத்தைவிட கொடூரமானது, வக்கிரமானது என்பதற்கு ஜம்முகாசுமீர் இரத்த சாட்சியாக உள்ளது.


செல்வம்


Sunday, October 15, 2006

புலிகள் தமது சொந்த அழிவை நோக்கி வலிந்து செல்லுகின்றனர்

புலிகள் தமது சொந்த அழிவை நோக்கி வலிந்து செல்லுகின்றனர்

பி.இரயாகரன்
15.10.2006

லங்கையில் அன்றாடம் என்னதான் நடைபெறுகின்றது, நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. புலிகள் அன்றாடம் சிறுகச் சிறுக அழிந்து கொண்டிருக்கின்றார்கள். தாமே வலிந்து தேர்ந்த தமது சொந்த அழிவில், அவர்களே அரசியல் அனாதையாக மிதக்கின்றனர். மார்க்சியவாதிகளைத் தவிர இந்த அரசியல் நிலையை யாரும் எதிர்வுகூறவில்லை. இதற்கு வெளியில் யாரும் இப்படி நடக்கும் என்று, கற்பனை பண்ணியது கூட கிடையாது. புலியின் சொந்த அழிவில் பிற்போக்கு புலியெதிர்ப்புக் கும்பல்கள், புலிக்கு நிகராகவே அதே அரசியலுடன் பவனிவருகின்றனர். இந்த புலியெதிர்ப்பு பிற்போக்கு கும்பல்கள், ஏகாதிபத்திய கால் தூசுகளை நக்குவதாலே வயிறுமுட்டி வீங்கிநிற்கின்றன. இந்தக் கும்பலுக்கு துணையான பேரினவாத சக்திகள், ஏதோ தம்மால் தான், தமது அரசியல் போராட்டத்தால் தான் புலியின் அழிவு நடப்பதாக காட்டமுனைகின்றனர். மொத்தத்தில் புலியின் அழிவு, புலியல்லாத தரப்பின் பிற்போக்கு அரசியலால் தான் நிகழ்வதாகவே காட்டுகின்ற போக்கு எங்கும் எதிலும் தலைகாட்டுகின்றது. ஆனால் புலியின் அழிவு புலியின் சொந்த பிற்போக்கு அரசியலால் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. இதுவே உண்மை.


இந்த புலி அழிவு நிகழ்ச்சித் திட்டத்தில், இலங்கை பல மாறுதலுக்கு உள்ளாகுகின்றது. புலியின் அழிவை வேகப்படுத்தக்கூடிய வகையில், திட்டங்கள் தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றது. இந்த வகையில் ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை மறுபுறம் சண்டை. இதில் எந்தக் தேர்வும் புலியின் அழிவை மையப்படுத்தி நிற்கின்றது. இதற்கப்பால் மூச்சுவிடவே முடியாத வகையில் அன்றாடம் தொடர் கொலைகள். புலிகள் ஒன்று இரண்டு என்று தொடங்கியதை, ஏன் அதை நான்கு ஐந்தாகவே புலிகளின் பெயரில் நடத்துவோம் என்று பேரினவாதமும் சேர்ந்து நடத்துகின்றது. கடத்தல்கள் காணாமல் போதல் என்று மனித அவலம் தொடருகின்றது. எல்லாம் இனம் தெரியாத நபர்களின் கொலைகள், கடத்தல்கள் என்றாகி விட்டது. மக்கள்படை முதல் எல்லாளன படை வரை காணாமல் போய்விட்டது. ரயர் எரிப்பு முதல் தடி பொல்லுகளுடன் திரிந்த காடையர்களின் அடாவடித்தனங்கள் எல்லாம் நின்று போய்விட்டது. கலாச்சாரம் பேசி பொல்லுகளுடன் திருத்தித் திரிந்த அராஜகக் கும்பல், எங்கு போனார்கள் என்று தெரியாது போய்விட்டனர். இப்படி மொத்தத்தில் அரசியல் அனாதைகளான புலியின் செயல்பாடு, எங்கும் எதிலும் சாவடிக்கப்படுகின்ற நிலை தொடருகின்றது.


இந்த நிலையில் மனிதவுரிமை என்றால் என்னவென்று எதுவும் தெரியாத பிழைப்புவாத துரோகக் கும்பல்கள், இதை தீர்ப்பதாக கூறிக்கொண்டு பலர் உலகமெங்கும் அடிக்கடி விமானம் ஏறிப் பறக்கின்றனர். ஏகாதிபத்தியம் கூறுவதுதான், இவர்களின் மனிதவுரிமை பற்றிய எல்லைக்கோடு. ஏகாதிபத்திய அகராதியை புரட்டிக்கொண்டும், தலைமாட்டுக்குள் அதை செருகி வைத்தபடி, விமானங்களில் உயரப் பறக்கின்றனர். உலகின் பல பாகத்தில் தமது மக்கள் விரோத நிலையை தக்கவைக்க கூட்டங்கள், சதிகள், இரகசிய சூழ்ச்சித் திட்டங்கள், ஏகாதிபத்திய மக்கள் விரோத நாசகாரர்களுடன் சேர்ந்து சதியாலோசனைகள். இப்படி எங்கும், எல்லாவிதத்திலும் அமர்க்களமான சதிகள், காய் நகர்த்தல்கள், சுத்துமாத்துக்கள். அனைத்துமே புலிகளின் பெயரில் எப்படி மக்களை அடிமைப்படுத்தி கொள்ளையிடுவது, சூறையாடுவது, சுரண்டுவது என்ற அடிப்படைக் கோட்பாட்டில் நின்று விசுவாசமாக குலைக்கின்றனர். இதற்கு வெளியில் புலியெதிர்ப்பு பேசும் எந்த நாய்களும், சுயமாக குலைக்கவில்லை. ஏகாதிபத்திய காலை நக்கியபடி தான், விசுவாசமாகவே வாலையாட்டிக் கொண்டு குலைக்கின்றனர்.


அன்றாடம் நடக்கும் சண்டையின் பின்னணி என்ன?


வழமையான நிலைமைக்கு தலைகீழாகவே இன்று நிலைமை காணப்படுகின்றது. புலிகளுக்கு பதில் பேரினவாத அரசே, கடந்த இரண்டு மாதமாக வலிந்த ஒருதலைப்பட்சமாக முன்னேறிய ஒரு தாக்குதலை நடத்துகின்றனர். இது கடந்தகால நிலைமைகள் எல்லாவற்றையும் விட, புதியதொரு நிலைமையாகும். வழமையாக புலிகள் தான் ஒருதலைபட்சமாக இப்படி செய்பவர்கள்.


ஆனால் புலிகளுக்கு எதிரான கடும் கண்டனங்கள் விமர்சனங்கள் போல் அல்லாது அரசின் இந்த தாக்குதல்கள் அங்கீகாரம் பெற்று நிற்பதும், மறைமுகமாக அவைகளை ஊக்கப்படுத்தி நிற்பதும் பொதுவான போக்காகவுள்ளது. புலிகள் தனிமைப்பட்ட நிலையில், இந்த நிலைமையைச் சொன்னாலே நம்ப மறுக்கின்ற நிலைமைக்குள், அவர்கள் எல்லாத் தளத்திலும் சீரழிந்து நம்பகத்தன்மையற்றவராக காணப்படுகின்றனர். உண்மையையும் பொய்யையும் திரித்து, அதை ஊடகவியல் விபச்சாரம் மூலம் விபச்சாரம் செய்வதன் மூலம், தம்மைத்தாம் அம்மணமாக்கி நிற்கின்றனர்.


பேரினவாத சிங்கள அரசு புலிக்கு எதிராக முன்னேறிய வலிந்த தாக்குதலை இன்று அதிகப்படுத்தியுள்ளது. இது அம்பலமாகாது, எதிர்மறையில் புலிகள் மீதே இது குற்றம் சாட்டுவதாக அமைந்துவிட்டது. இதற்கான முழுப் பொறுப்பும் புலிகளையே சாரும். இது நரி வருது நரி வருது என்ற கதை போல், உண்மையில் நரி வந்த போது அதை யாரும் நம்புவதில்லை. நரி துணிவாக அடித்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த நிலைiயை தான் இன்று புலிகள் சந்திக்கின்றனர்.


கடந்தகாலத்தில் எல்லா அமைதி முயற்சியையும் யுத்த முனைப்பு மூலம் சிதைப்பதிலும், எல்லாவிதமான குழப்பதையும் புலிகளே முன்முயற்சியெடுத்து நடத்தினர். ஆனால் அதை அரசின் மீது, ஒரு தலைப்பட்சமாக குற்றம் சாட்டினர். இதை உலகம் ஏற்றுக்கொண்டது கிடையாது. புலிகளின் வால்களும், அதன் பின் தின்று கொழுக்கும் நக்கித் தின்னும் கும்பலும் மட்டுமே, அதை தமது பிழைப்புக்காக மட்டும் ஓப்புவித்தனர். ஆனால் அவர்களுக்கும் தெரியும் அதுவும் பொய்யென்று. உண்மையான விசுவாசத்துடனோ, உண்மையான கோட்பாட்டு அடிப்படையோ இன்றி வீம்புக்கே ஒருதலைபட்சமாக ஊளையிட்டனர்.


இப்படி புலிகளின் கடந்தகாலம் அம்பலமாகி நிற்கின்ற ஒரு நிலையில், வழமை போல் இம்முறையும் புலிகளே ஒருதலைப்பட்சமாக வலிந்து தாக்கத் தொடங்கினார். அரசியல் பேச்சுவார்த்தையில் தோற்ற புலிகள், அதை ஒருதலைப்பட்சமான வலிந்த இராணுவ அரங்கில் வெல்ல நினைத்தனர். கடந்த புலிகளின் 'மாவீரர்"தின உரையைத் தொடர்ந்து, புலிகள் ஒரு தலைப்பட்சமாக இராணுவத்தை தாக்கத் தொடங்கினர். மக்கள் படை என்ற பெயரிலும், மக்களே அதைச் செய்கின்றனர் என்றும் கூறினர். புலிகள் கூற்றை உலகம் மீண்டும் நம்பியது கிடையாது. ஏன் அவர்களே அதை நம்பியது கிடையாது. உலகில் யார் நம்பினார்கள் என்றால் ஒருவருமில்லை.


இதன் விளைவு என்ன? மாவீரர் தின உரையின் பின்பாக அண்ணளவாக இராணுவத் தரப்பில் 1000 பேர் கொலலப்பட்டனர். இதேயளவு எண்ணிக்கையில் புலிகளும் கொல்லப்பட்டனர். இதே அளவுக்கு மக்களின் அவலமும், காணாமல் போதல் என்று மற்றொரு பக்க அழிவும் நிகழ்ந்த வண்ணமுள்ளது. மாவீரர்தின உரையும், அதைத் தொடர்ந்து அதிகளவில் இராணுவம் இறந்தனர். ஆனால் இன்று அதிகளவில் புலிகள் இறக்கின்ற எதிர்மறை போக்கு, நிலமையை தலைகீழாக்கியது. இரண்டு இராணுவங்கள் என்ற வகையில், ஒன்று மற்றொன்றின் மீதான தாக்குதலை நடத்துவது அல்லது அழிவுகளை ஏற்படுத்து என்பது ஒருதலைப்பட்சமாக ஒரு பகுதியினருக்கு சொந்தமானதாக மட்டும் அமையாது. ஆனால் பொதுவான மொத்த அரசியல் இராணுவ நோக்கில் புலிகளின் தோல்வி என்பது, தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.


புலிகளின் அரசியல் தோல்வியைத் தொடர்ந்து இராணுவ தோல்விகள், இதில் இருந்து மீள மீண்டும் பேச்சுவார்த்தையை நோக்கி ஒடுகின்றனர். எங்கே என்று தெரியாத புள்ளியை நோக்கி அங்குமிங்குமாக அலைபாய்கின்றனர். என்னசெய்வது என்று தெரியாது, நோக்கே அற்ற நோக்கை கனவாக விதைக்கின்றனர். பிரச்சாரத்துக்காக சிலதை செய்து, அதை வெற்றியாக காட்டுகின்றனர். (உதாரணத்துக்கு 11.10.2006 முகமாலை தாக்குதல். இது புலிகளின் இராணுவ ரீதியான தொடாச்சியான தோல்வியையும், அதன் அரசியல் உள்ளடகத்தையும் மறுதலித்துவிடாது.)


மாவீரர் தின உரையைத் தொடர்ந்து ஒரு வலிந்த தாக்குதலைத் தொடுத்தவர்கள், எல்லை மோதலை வலிந்து திணித்தனர். மாவிலாறு அணைக்கட்டை மூடியதும், பின்னால் முதூர் மீதான தாக்குதல் மூலம் வலிந்து ஒருதலைப்பட்சமான தாக்குதலை நடத்தினர். இந்தப் பின்னணியைத் தான் பேரினவாதம் பயன்படுத்திக்கொண்டு, புலிகளை அழிக்கத் தொடங்கினர். புலிகள் வலிந்து தாக்குகின்றார்கள் என்று கூறிக் கொண்டு, தானே தான் விரும்பிய இடத்தில் தாக்குகின்ற நிலைக்கு முன்னேறியது. புலிகளின் வழமையான செயல் வடிவத்தை தனக்கு சார்பாக பயன்படுத்திக் கொண்டு தாக்குகின்றனர். வலிந்து புலிகளின் எல்லைகளை தாக்கி, புலிப் பகுதிகளை பிடிக்கின்றனர் அல்லது பெருமளவில் புலிகளை அழிக்கின்றனர். இதை தடுத்து நிறுத்தக் கூடிய உளவியல் பலத்தை புலிகள் இழந்துவிட்ட நிலையில், திடீர் அதிரடித் தாக்குதல் மூலம் மிதக்க முனைகின்றனர்.


இந்த நிலையில் புலிகளினுள் சல்லரித்துப் போன உணர்வுகள், போராட்டத்தின் நின்று பிடிக்கும் அனைத்து மனவாற்றலையும் இழந்து நிற்கின்றனர். நான் முன்பு குறிப்பிட்டது போல் ('அரசியல் ரீதியாக தோற்ற புலிகள், இராணுவ ரீதியாகவும் தோற்கின்றனரே ஏன்?") உளவியல் ரீதியாக, போராடும் தார்மிக பலத்தை புலி உறுப்பினர்கள் இழந்து இழிந்து விட்டனர்.


இவைகள் புலிகளின் தொடர்ச்சியான இராணுவ தோல்விகளுக்கு வழிகாட்டுகின்றது. பெருமளவில் விட்டில் ப+ச்சியாக பலியாகின்றனர். வடக்குகிழக்கின் இராணுவ எல்லைகளில் புலிகளின் தோல்விகள் தொடர்ச்சியாக ஏற்படுகின்றது. இதிலிருந்து மீள்வதற்கான மாற்று வழி கிடையாது. ஒரு சில வெற்றிகள் எப்போதும் மாற்று அல்ல. தோல்வி என்பது புலி உறுப்பினர்களின் மக்கள் விரோத உளவியலில், அவர்களின் இந்த இருப்பில் இருந்தே தோன்றுகின்றது.


இந்த தோல்வி மனப்பான்மையை பேரினவாதம் பயன்படுத்தி, வலிந்த ஒரு முன்னேறிய ஒருதலைப்பட்சமான தாக்குதலை நடத்துகின்றனர். இன்றைய 90 சதவீதமான தாக்குதல்களை பேரினவாதமே நடத்துகின்றது. மணலாறு சம்பவத்துக்கு முன்னம் 90 சதவீதமான தாக்குதலை புலிகளே நடாத்தினர். ஆனால் இன்று புலிகள் வலிந்து தாக்குவதாக கூறிக்கொண்டு, இதை இராணுவம் செய்கின்றனர். புலிகள் தான் இன்றும் வலிந்து தாக்குவதாகவும், இதை உண்மையானதாகவும் உலகுக்கு காட்டிவிடுகின்றனர். புலிகளின் கடந்த செயல்பாடுகளும், அதை மறுத்துவந்த ஒருதலைப்பட்சமான பொய், இன்று அதுவே அவர்களுக்கு எதிராகவே மாறி நிற்கின்றது.


அரசியல் தோவ்வியும் அதைத் தொடர்ந்த இராணுவ தோல்வியும், புலிகளை மீண்டும் பேச்சவார்த்தைக்கு செல்ல வைக்கின்றது. மீண்டும் பேச்சுவார்த்தைக்கு செல்வதன் மூலம், இதில் இருந்து ஏதோ ஒருவகையில் தப்பிப்பிழைக்க முடியும் என்று நம்புகின்றனர். இதனால் பேச்சுவார்த்தையை நோக்கி வலிந்து ஒடுகின்றனர். பேரினவாதம் இதை மேலும் நுட்பமாகவே கையாள முனைகின்றது. ஒருபுறம் பேச்சுவார்த்தை மறுபுறம் தாக்குதல் என்ற உத்தியை பேரினவாதம் கையாளுகின்றது. இதையே முன்பு புலிகள் கையாண்டனர். இன்று இதை அரசு கையாளுகின்றது.


குறிப்பாக பேரினவாதிகளின் உடனடி நோக்கம் கிழக்கை முழுமையாக புலிகளிடமிருந்து விடுவிப்பதே. இதை தடுக்கத் தான் புலிகள் வடக்கில் வலிந்து மோத முனைகின்றனர். புலிகள் கிழக்கில் நிலைகொள்ள பேச முனைகின்றனர். கிழக்கை மீட்கும் பேரினவாத முயற்சி முழுமையாக உடனடியாக சாத்திமில்லை என்றால், புலிகளை அழித்தொழித்து ஒரு பலவீனமான நிலைக்கு இட்டுச் செல்லும் வகையில் தாக்குதலை நடத்துகின்றனர். இதன் மூலம் கருணா தரப்பை புலிகளின் பிரதேசத்தில் ஆழ ஊடுருவி, புலிகளின் செயல்பாட்டை முடக்கிவிட முனைகின்றது. இதில் படிப்படியாக பேரினவாதம் வெற்றி பெற்று வருகின்றது.


கிழக்கில் புலிகளின் பலத்தை சிதைக்கும் வகையில், புலிகள் மீதான ஒவ்வொரு தாக்குதலையும் பயன்படுத்தியது. தமிழ் மக்களின் வாழ்விடங்களை அழித்தொழித்து, அங்கு வாழ்ந்த மக்களை அகதியாக்கி, அவர்களை தமிழ் மக்கள் வாழும் மற்றொரு செறிந்த பிரதேசத்துக்குள் அனாதைகளாக தள்ளிவிடுவதை செய்கின்றது. இதன் மூலம் மூன்று இனவாத இலாபத்தை பேரினவாதம் அறுவடை செய்கின்றது.


1. குறிப்பாக திருகோணமலை மற்றும் அம்பாறையில் இருந்து நிரந்தரமாகவே தமிழ் மக்களின் குடியிருப்பை அகற்றி, அதை துப்பரவு செய்கின்றது. அதாவது அப் பிரதேசத்தை தமிழ் மக்களின் வாழ்விடம் அற்ற ஒரு சூனிய பிரதேசமாக்கி அதை பேரினவாதம் திட்டமிட்டு அபகரிக்கின்றது.


2. இரண்டாவதாக இதன் மூலம் புலிகளின் இருப்புக்கான சமூக கட்டுமானத்தை இல்லாததாக்கி, அப்பிரதேசத்தை புலியிடமிருந்து விடுவிக்கின்றது.


3. அகதியாகிய மக்கள் நாளை மீளவும் குடியேறாத வண்ணம், அவ் அகதிகளை பராமரிப்பதையே திட்டமிட்டு கைவிட்டுள்ளது. மக்களைப் பஞ்சை பரதேசிகளாக வீதி வீதியாக அலையவிட்டு, ஒரு சமூகமாக கூடி வாழும் சமூக அடிப்படையையே திட்டமிட்டு சிதைத்து வருகின்றது. அகதியாகக் கூட கூடி ஒரு சமூகமாக வாழக் கூடாது என்ற நாசிய உத்தி கையாளப்படுகின்றது. இதன் மூலம் அவ் அகதிகள் எதிர்காலத்தில் சொந்த மண்ணுக்கு மீளத் திரும்புவதை இல்லாததாக்குகின்றது.


அனைத்தும் புலிகளின் வக்கிரமான இராணுவ அரசியல் வக்கிரத்தின் மூலம் பேரினவாதம் வெற்றிகரமாக இலாபம் சாதிக்கின்றது. அகதியாகும் மக்களுக்கு கோடிகோடியாக சேர்த்த பணத்திலிருந்து ஒரு துளிதன்னும் போய் சேர்ந்துவிடுவதில்லை. அதுவும் கிழக்கு என்றால், நாம் அதைச் சொல்லத் தேவையில்லை. தமிழ் மக்கள் தமது சமூக இருப்பையே இழந்து, நாயிலும் கீழாக கேவலமாக அழிந்து கொண்டிருக்கின்றார்கள். இதைத் தடுத்து நிறுத்தும் உணர்வு எம் சமூகத்திடம் கிடையவே கிடையாது. இதுவே கிழக்கின் இன்றைய நிலை.


பேரினவாதத்துடன் கூடிக்குலாவி விபச்சாரம் செய்யும் கருணா என்ற பாசிச புலிக் கும்பல்


இந்த நிலையில் தனிமனித முரண்பாட்டுக்குள், தமது மக்கள் விரோத அரசியலுக்குள் புலிகள், கருணா என இரண்டு தரப்பும், பாய் விரித்து விபச்சாரம் செய்கின்றனர். இரண்டுக்கும் அதன் செயல்பாட்டுக்கும் அடிப்படையில் எந்த வேறுபாடும் கிடையாது. மக்களை இழிவாக கருதும் இரு கும்பலும், மக்களை தமது சொந்த தேவைக்கு பயன்படுத்தும் மக்கள் விரோத ஓட்டுண்ணிகள் தான்.


இவை எல்லாமே வெட்டவெளிச்சமாகவே அம்பலமாகின்றது. திடீர் ஜனநாயகம் பேசிய கருணா, புலிகள் போன்ற மற்றொரு புலிக்கு நிகரான கொலைகாரக் கும்பல்தான். பேரினவாதத்தின் கைக்கூலிக் கும்பலாக, இந்தியாவின் எடுபிடிகளாகி அவர்களால் வளர்க்கப்படுகின்றனர். இதை அவர்களே தமது சொந்த உளறல்கள் மூலம் அம்பலமாக்கிவிடுகின்றனர். அண்மைய வாகரை மீதான தாக்குதலில் இரண்டு தரப்பும், நாம் தான் தாக்கினோம் என்று ஒரே பிணத்தை காட்டி இருவரும் தாக்குதலை உரிமை கோரிய போதும், அவர்கள் மீளவும் ஒருமுறை அம்பலமாகினார்கள். இரண்டு தரப்பும் தாங்களே அனைத்தும் என்ற போது, கடந்தகாலத்தில் நாம் சொன்னவை மீளவும் உறுதியாகியுள்ளது.


கிழக்கு மக்கள் என்று போலியாக நீலிக்கண்ணீர் வடித்து புலம்பும் புலியெதிர்ப்பு பாசிசக் கும்பல்களும் சரி, கொலைகளுக்கு எதிராக தாம் குரல் கொடுப்பதாக கூறும் புலியெதிர்ப்புக் கும்பலும் சரி, கருணாவை தலைக்கு மேல் உயர்த்தி கிழக்கின் விடிவெள்ளியாக காட்டியவர்கள் எல்லோரும், கமுக்கமாகவே பதுங்கிக் கிடக்கின்றனர். நாங்கள் அன்று இந்த பாசிச மக்கள் விரோத கோமாளியை பற்றிச் சொன்னபோது, திமிரெடுத்தவர்கள், இன்று தமது பாசிச கையை பிசைந்தபடியே அதை ஒழிக்கின்றனர்.


புலிகளைப் போல் கிழக்கின் விடிவெள்ளியாக தம்மைத் தாம் மகுடம் சூட்டிய கருணா தரப்பும், அப்பட்டமான பாசிச கொலைக்காரக் கும்பல்தான். புலிகளைப் போல் சிறுவர்களை கடத்துவது முதல், கொலைகைள் செய்வது வரை, ஏன் மக்கள் வாழ்வை சூறையாடுவது வரை கைதேர்ந்த புலி வாரிசுகள் தான். கிழக்கில் நடக்கும் உதிரிக்கொலைகள் முதல் கொழும்பில் நடக்கும் கடத்தல்கள் கொலைகள் என எல்லாமே, கருணாதரப்பின் பங்கு எத்தனை சதவீதம் என்பதில் மட்டும் தான், அவர்கள் புலிகளுடன் முரண்படலாம். ஆனால் தொழில் ரீதியாக, அரசியல் ரீதியாக இருவருமே பாசிச மாபியாக் கும்பல்கள் தான்.


கிழக்கு மக்களுக்கு அவர்கள் காட்டும் விடிவு தான் என்ன? அவர்களின் வாழ்வுக்கு என்ன தீர்வைத்தான் வைக்கின்றனர். புலியைப் போன்று அதே அரசியல் மாபியாக் கும்பல் வாழ்வுக்கும், வழிக்கும் அப்பால் எதுவுமில்லை. இதை அவர்கள் அன்றாடம் நிறுவி வருகின்றனர். புலிகளை விட மேலதிக தகுதியாக, இலங்கை அரசின் கைக்கூலி கொலைகாரக் கும்பல் தான் தாங்கள் என்பதையும் நிறுவிவிட்டனர். இவர்களுக்கு ஓளிவட்டம் காட்டிய ரீ.பீ.சீ நரிக் கும்பல் முதல், புலியெதிர்ப்பு நாய்கள் வரை இதற்கு முழுப்பொறுப்பாகும். புலிக்கு மாற்று கருணா தரப்பு என்று எத்தனை ஆய்வுகள், அறிக்கைகள், கொள்கை விளக்கங்கள். அந்த கொலைகார நபர்களை முன்னிலைப்படுத்தி பேட்டிகளை ஒளிபரப்பியவர்கள், வெளியிட்டவர்கள், இந்த புலியெதிர்ப்பு பாசிச கும்பல்தான். இப்படி கேடுகெட்ட நாய்களாக குலைத்தவர்களின நாய் வேஷம் அம்பலமாகும் போது, வாலை சுருட்டி கமுக்கமாக குண்டிக்குள் செருகியபடி நரியாக ஊளையிடுகின்றனர்.


இப்படி கொலைகளும், கடத்தலும், கொள்ளையுமாக, ஒரு கூலிக் கும்பலாக இழிந்த மட்டக்களப்பு கருணா மைந்தர்கள், கிழக்குக்கு எப்படி எதை விடிவாக காட்டுவார்கள். புலிகளில் இருந்து எந்தவிதத்தில் எப்படி வேறுபடுகின்றனர். தம்மளவில் கூட வேறுபாடு எதையும் கொண்டிருக்கவில்லை. இதை நாங்கள் கடந்த காலத்தில் தெளிவாக கூறியவர்கள். இப்படி பல அரசியல் உண்மைகள் ஜனரஞ்சகமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் மனிதவாழ்வு சார்ந்த உண்மை, அனத்தையும் நிர்வாணமாக்கிவிடுகின்றது. ஊடகவியலை புலிகளும், புலியெதிர்ப்புக் கும்பலும் கைப்பற்றி வைத்துக் கொண்டு நடத்துகின்ற ஊடக வக்கிரத்தில், தமது பாசிச மக்கள் விரோத உண்மையை மூடிமறைக்கலாம். ஆனால் வரலாறு அப்படி அல்ல! உண்மை நடைமுறை சார்ந்த எல்லா பொய்களையும் அம்பலப்படுத்திவிடுகின்றது.


புலிகள் அல்லாத மக்கள் விரோத மாற்றுக் குழுக்கள் மீதான ஏகாதிபத்திய திடீர் கருசனைகள்


இந்த நிலையில் மக்கள் விரோத பாசிச ஜனநாயகவாதிகள் மீதான ஏகாதிபத்திய அக்கறை அதிகரித்துள்ளது. இந்தியா இலங்கை அரசில் கைக்கூலிகளை தமிழ் மக்களின் மாற்றுக் கருத்தாக காட்டுகின்றதும், அவர்களுக்கு மகுடம் சூட்டுகின்றதுமான போக்கு அதிகரிக்கின்றது. தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் புலிகள் என்று புலிகள் கூற, மறுபக்கத்தில் மாற்றுக்கருத்தின் ஏக பிரதிநிதிகள் தாங்களே என்று இந்த கைக்கூலிக் கும்பல் ஓலமிடுகின்றது. புலியெதிர்ப்புக் கும்பல் இதன் பின்னால் கண்மண் தெரியாத வேகத்தில் கண்ணை மூடிக்கொண்டு ஓடுகின்றது.


இந்தியா முதல் ஏகாதிபத்தியம் வரை, புலிகள் அல்லாத புலியெதிர்ப்பு கும்பலை தமது கைக்கூலிக்கு எப்படி பயன்படுத்த முடியும் என்ற அடிப்படையில் சதி ஆலோசனைகளை பேச்சுவார்த்தையின் பெயரில் நடத்துகின்றனர். இந்த வகையில் பல சந்திப்புகள், அழைப்புகளையும், சர்வதேச கைக்கூலி விருதுகளையும் வழங்குகின்றனர். புலிகள் மீதான அழித்தொழிப்பை செய்கின்ற நிலை உருவாகும் பட்சத்தில், மாற்று புலியெதிர்ப்பு எடுபிடிகள் தயாராகவே உள்ளனர். அது டக்கிளஸ் தேவானந்தாவாகவும் இருக்கலாம், ஆனந்தசங்கரியாகவும் இருக்கலாம், கருணாவாகவும் இருக்கலாம், வரதராஜப்பெருமாளாகவும் இருக்கலாம் அல்லது ரீ.பீ.சீ கும்பலாகவும் இருக்கலாம். எல்லோரும் தயாராகவே பையித்தியம் பிடித்த நிலையில் விசர் நாய்கள் போல், நாக்கைத் தொங்கவிட்டபடி அலைகின்றனர். அந்த வகையில் அவர்களுடன் நெருக்கமான உறவுகளை ஏகாதிபத்தியம் முதல் இந்தியா வரை தொடர்ச்சியாக பெரும் தொகை செலவில் கையாளுகின்றனர். அவர்களை தமது தீவிரமான விசுவாசமான கைக்கூலியாக மாற்றுகின்ற அரசியல் தயாரிப்புக்குள் உள்ளகப்படுகின்றனர்.


இதை ஊக்கப்படுத்திய பணமுடிப்புகள் முதல் பலவகையான பொருளாதார இராணுவ உதவிகள் இக் குழுக்களுக்கு வாரி வழங்கப்படுகின்றது. புலிகளை எந்தளவுக்கு சீரழிக்க முடியுமோ அதையும் செய்தபடி, மறுபக்க சீரழிவையும் புகுத்துகின்றனர். அவர் அவர் சொந்த வர்க்க அரசியலைப் பயன்படுத்தி, இந்த சீரழிவுக்கு ஏற்ற வகையில் காய் நகர்த்துவது துல்லியமாக இன்று அரங்கேறுகின்றது. சொந்த மக்களை சார்ந்து நிற்காத அனைவரையும், புலியெதிர்ப்பில் பண்படுத்தி அதை ஊக்கப்படுத்துகின்றனர்.


இப்படி சொந்த மக்களை சார்ந்து நிற்காத அனைத்து அரசியலும் துரோகத்தனமானது. அதை மக்களுக்கு எதிராக முன்னெடுப்பவர்கள் அனைவரும், மக்களின் துரோகிகள் தான். இதற்கு மாற்று வழிகளை இந்த புலியெதிர்ப்பு பாசிச கைக்கூலிக் கும்பல் தரமுடியாது. புலியைச் சொல்லி ஒப்பாரி வைப்பதே, இவர்களின் பாசிச புலியெதிர்ப்பு அரசியலாகும்.


இம்மாதிரியான மக்கள் விரோத துரோகிகளையும், கைக்கூலிகளையும் ஒருங்கிணைத்த ஒரு புலியெதிர்ப்பு செயல்பாட்டை நோக்கி நகர்த்துவதில் ஏகாதிபத்தியம் முனைப்பாக உள்ளது. இதற்கான முன்முயற்சிக்கு இந்தியா தலைமை தாங்குகின்றது. புலியை ஒழிக்க இலங்கையின் பிரதான இரு பேரினவாத கட்சிகளை இணைத்தது போல், புலியெதிர்ப்புக் தமிழ் கும்பல்களை ஏகாதிபத்திய கைக் கூலி அரசியல் வரையறையில் ஒருங்கிணைக்கப்படுகின்றது. இதற்கு நேரெதிராக புலிகள் சாரைப் பாம்பினைப் போல் அடிக்க அடிக்க வலுவிழந்து துடித்தபடி ஊர்ந்து தப்பிவிட முனைகின்றது.


பேரினவாதிகளுக்கு இடையிலான பாசிசக் கூட்டு


புலியழிப்பில் முகிழ்ந்த இந்த பாசிக் கூட்டு, அவர்கள் தாமாக தேர்ந்து செய்து கொள்ளப்பட்டவையல்ல. இதற்கு ஏகாதிபத்தியம் துணை நிற்க, இந்தியா முன்னின்று இதை உருவாக்கியது. இதன் அரசியல் மூலம் புலிஅழிப்பும், புலியெதிர்ப்புமாகும். இந்த அரசியல் போக்கு பலமாகி வருகின்றது. இதற்கு பின்னணியில் ஏகாதிபத்திய அனுசரணையும், ஆலோசனையும், ஊக்கப்படுத்தலும், பலமான வழிகாட்டலும் வழங்கப்படுகின்றது.


புலி அழிப்பு, புலியெதிர்ப்பு பலமான ஸ்தாபன வடிவமும், கோட்பாட்டு அடிப்படையையும் பெற்று வரும் நிலையில், புலிகள் தரப்பு பலவீனமாகி வருகின்றது. புலிகள் என்றுமில்லாத அளவில் அம்பலமாகி வருகின்றனர். தார்மிக ஆதரவுகளை இழந்து வருகின்றனர். தூசணம் மட்டும் பேசக் கூடிய ஒரு லும்பன் கும்பலின் ஆதரவுடன், பிழைப்புவாத பொறுக்கிகளின் அனுசரணையுடன், மக்களின் உழைப்பை தட்டிப்பறித்து வாழ்கின்ற சமூக விரோதிகளின் துணையுடன் தங்கி வாழும் ஒரு மாபியாக் குழுவாகவே புலிகள் மாறிவிட்டனர்.


இந்த நிலையில் பேரினவாத சிறிலங்கா சுதந்திரக்கட்சியும், ய+.என்.பிக்கும் இடையிலான கூட்டு சதி முயற்சிகள் வெற்றி பெற்றுள்ளது. பேரினவாத அரசு இயந்திரமும், அதற்கு துணையான பேரினவாத பிரதான எதிர்கட்சியும் ஒன்றிணைந்து, தமிழ் மக்களை மட்டுமல்ல சிங்கள மக்களின் தலைவிதியை நசுக்கி ஏகாதிபத்தியத்துக்கு மேலும் சேவையாற்ற சங்கற்பம் பூண்டு நிற்கின்றனர்.


புலிகள் மீது என்றுமில்லாத ஒருமித்த தாக்குதலையும், அரசியல் நெருக்கடியையும் இது உருவாக்கியுள்ளது. புலிகளின் பாசிச மாபியாத்தனத்தின் மீது இந்த பாசிச பேரினவாத கூட்டணி செழிக்கவுள்ளது. தமிழ் மக்களுக்கு என்று தாம் விரும்பும் ஒரு தீர்வை முன்வைப்பதன் மூலம், புலியை தனிமைப்படுத்தும் உத்தியை வேகமாக முன்னெடுக்கவுள்ளது. இதன் மூலம் சர்வதேச ஆதரவை முழுமையாக பெற்றுவிடவும், புலியை மேலும் அரசியல் ரீதியாக பிளந்தும், புலியல்லாத மற்றொரு குழு மூலம் தீர்வை அமுல்படுத்தி, புலியை சின்னாபின்னமாக்கி அழிக்கும் உத்தி நடைமுறைக்கு வரவுள்ளது. இதை நோக்கி இந்தக் கூட்டு முயற்சி அமைந்துள்ளது. புலிகளை அழித்தொழித்தலையே தனது வேலைத் திட்டமாக கொண்டு, ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்வதையே உறுதிசெய்துள்ளது. தமிழ் மக்களின் தேசிய கோரிக்கை, அதன் உள்ளார்ந்த சாராம்சத்தை இல்லாதொழிக்கும் புலிகளின் பாசிச மாபியாத்தனத்துக்கு நிகராகவே, இந்தக் கூட்டும் நாட்டை ஏகாதிபத்தியத்திடமும் இந்தியாவிடமும் மறுகாலனியாக்கும் முயற்சியில் முக்கி முனைகின்றது. இந்த வகையில் இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து நடத்தவுள்ள மறுகாலனிய அரசியல், தமிழ்மக்கள் மீது தாம் விரும்பிய ஒரு இனவாத தீர்வை திணிப்பதாகும். இதன் மூலம் ஏகாதிபத்திய ஆதரவுடன், தமிழ் மக்களின் உரிமையை புலிகளின் பாசிச மாபியாத்தனத்தை அடிப்படையாகக் கொண்டு ஒடுக்குவதே, இவர்களின் உள்ளாhந்த வேலைத்திட்டமாகவுள்ளது.


நோர்வேக்கும் புலிக்கும் உள்ள ஊடல்


நோர்வேக்கும் புலிக்கும் உள்ள ஊடலே, அமைதி சமாதானத்தின் மற்றொரு தடைக்கல்லாகியுள்ளது. இது மக்களுக்கு எதிரானதாக, மக்களின் அவலத்தை கோருவதாக அமைந்துள்ளது. சரி நோர்வேக்கு சமாதானத்தில் என்ன தான் அக்கறை?


உண்மையின் உண்மையான அக்கறை வடகிழக்கின் வளங்கள் மீதானதே. ஓப்பந்தம் கையெழுத்தானவுடன் நான் எழுதிய கட்டுரையில், இதை ஆதாரத்துடன் குறிப்பிட்டு இருந்தேன். மன்னார் கடல் படுக்கையில் உள்ள எண்ணெய், புத்தளம் 25000 ஏக்கர் மரமுந்திரிகை செய்கைக்கு நோர்வே 40 கோடி ரூபாவை முதலிட்டது. இப்படி நோர்வே இலங்கை அரசுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் தான், சமாதான நாடகத்தை இலங்கையில் அரங்கேற்றியது. மற்றும் வள்ளம் கட்டுதல், கடல் சார்ந்த நோர்வே கழிவுகளை வடக்கில் கொண்டு வந்து கொட்டுதல், மீன்பிடி, உல்லாசத்துறை என்று மிகப்பெரிய கனவுடன் நோர்வே பாசிச ஆட்டம் போட்டது.


இப்படி வடக்கிழக்கைச் சுரண்ட, வடகிழக்கில் அதிகாரத்தை தக்கவைக்க முனையும் புலிகளுடன் ஊடல் செய்யத் தொடங்கினர். ஏகாதிபத்திய சதி மரபுக்கு இணங்க நோர்வே செயற்பட்டது. பணத்தைக் கொடுத்தும், ஆசைகாட்டியும் புலிகளை சிதைத்த அதே நேரத்தில், இணக்கமான ஒரு ஏகாதிபத்திய பாசிச அக்கறையுடன் ஊடல் செய்து, வடகிழக்கை தனது சுரண்டலுக்கு சாதகமான ஒரு புனித ப+மியாக்க முனைந்தனர். இக்காலத்தில் வடகிழக்கு மட்டுமல்ல முழு இலங்கைக்கும் பெருமளவு நிதியை வாரிவழங்கினர்.


நோர்வேயின் சமாதான முயற்சி இலங்கையையும், வடக்குகிழக்கில் அதிகமாக சுரண்டுவதையும் அடிப்படையாக கொண்டது. இது உண்மையான சமாதானத்துக்கு பதில், நேர்மையற்ற உள்நோக்கம் கொண்ட சமாதான முயற்சியாக மாறியது. இதற்காக நோர்வே பிரதிநிதிகளும், சமாதான நடிகர்களும், அவர்கள் எடுபிடிகளும் அங்குமிங்குமாக பறந்து திரிந்த விமானச் செலவு மட்டும் பல நூறு கோடி பெறுமதியானது. உள்நோக்கம் கொண்ட சமாதான நடிகர்களின் நாடகங்கள், புலிகளுடன் இணக்கமான ஒரு பாசிச சமரசத்தை ஏற்படுத்தவே முனைந்தது. புலிகளின் துணையுடன் வடகிழக்கை சுரண்டுவதை அடிப்படையாகக் கொண்டு, எல்லாவிதமான மனித உரிமை மீறலுக்கும் செங்கம்பளம் விரித்தனர்.


புலிகளுக்கு அதிகளவிலான சலுகைகள், இலஞ்சங்கள் வழங்கியதுடன், மனித உரிமை மீறலுக்கு ஏற்ற ஓளியைப் பாய்ச்சினர். புலிகள் நோர்வேயின் துணையுடன் தொடர்ச்சியாக பெருமளவில் மனித உரிமை மீறலை செய்ததுடன் அதற்கு நோர்வேயின் வழித்துணையையும் பெற்றுக்கொண்டனர். புலிகளின் மனித உரிமை மீறலை திரித்து, அதை மூன்றாவது தரப்பே செய்வதாக வலிந்து கூறினர். இப்படி ஆயிரக்கணக்கான மனித உரிமை மீறலுக்கு, நோர்வே புலிகளுக்கு துணை நின்றனர். அமைதி சமாதான காலத்தில் நாள் ஒன்றுக்கு ஒருவர் கொல்லப்பட்டனர்.


இப்படியான படுகொலைகள் முதல் எத்தனையோ சம்பவங்கள் மீது கருத்து சொல்ல மறுத்தனர். நோர்வேயும் கண்காணிப்புக் குழுவும் சேர்ந்து நடத்திய அப்பட்டான மனித உரிமை மீறல்கள் தான் இவை. அதற்கான முழுப்பொறுப்பும் அவர்களைச் சாரும். தங்கள் கடமையையே செய்ய மறுத்த இவர்கள், எப்போதும் கருத்துக் கூறும் போது இரண்டு பக்கத்தின் இரண்டு சம்பவத்தையும் சமப்படுத்தி, இரண்டையும் ஒன்றாக குற்றம் சாட்டும் (புலி) யுத்தியைக் கையாண்டனர். இப்படி மனித உரிமை மீறலுக்கு துணைபோனார்கள். சம்பவங்கள் மீது காலம் கடந்த நிலையில், அவை நீர்ந்துபோன ஒரு சூழலில், தமது சொந்த இழுபறி ஊடாக மக்களின் காதுகளில் ப+வைப்பதையே நோர்வே திட்டமிட்டு செய்தது, செய்து வருகின்றது. இப்படி மனித உரிமை மீறல்கள் அங்கீகாரம் பெறுகின்றது.


உண்மையில் நோர்வே வடக்கு கிழக்கில் புலிகளுடன் சேர்ந்து, சுரண்டலுக்கு ஒரு சாதகமான சூழலுக்காக மொத்த மக்களின் அவல வாழ்வின் மீது நோர்வே மிதக்கின்றது. இந்த நிலையில் நோர்வேயின் போக்கை அம்பலப்படுத்த முடியாத நிலையில், பேரினவாத அரசும் கூட மனிதவுரிமை மீறல் ஊடாக மிதந்து கிடந்தனர். பேரினவாத ஜே.வி.பியும், சிங்கள உறுமயவும் நோர்வேயின் சுரண்டும் நலனை விமர்சிக்காது, புலிக்கு சாதகமான பக்கத்தை மட்டும் எதிர்த்தனர். இதன் மீது தமது பேரினவாத கூச்சலையிட்டனர், இடுகின்றனர்.


நோர்வே இந்தியாவை பின்தள்ளிவிட்டு ஒரு இணக்கப்பாட்டை நடத்துவதன் மூலம், அதிக சுரண்டலை நடத்தமுடியும் என்று கருதி செயற்பட்டது. இந்த நிலையில் இந்தியாவின் தலையீடு அதிகரித்துள்ள ஒரு நிலையில், நோர்வே சமாதானத்தின் பெயரில் நகர்த்தும் சுரண்டல் நலனை தகர்ப்பதில் இந்தியா குறிப்பாக காய்நகர்த்தி வருகின்றது. இந்த வகையில் மன்னார் எண்ணை வயல்களை சுரண்ட நோர்வே பெற இருந்த உரிமையை, இலங்கை ஊடாக இந்தியா அண்மையில் இரத்து செய்தது. இந்த சுரண்டல் ஒப்பந்தை கிழித்து எறிந்ததன் மூலம், இந்தியா நேரடியாகவே அந்த உரிமத்தைப் பெற்றுக்கொண்டது. அதேபோல் சீனாவும் அதன் மீதான உரிமத்தை பெற்றுக் கொண்டது. இந்த உரிமை மாற்றம் எந்தவிதமான வர்த்தக முறைகளுக்கும் ஊடாக நடைபெறவில்லை.


மாறாக நேரடியாகவே அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மன்னார் எண்ணை படிமங்கள் மீது சீனா மற்றும் இந்தியாவும் பெற்றுக்கொண்ட உரிமை, படிப்படியாக நோர்வேயை அதன் சுரண்டல் நலனில் இருந்து வெளியேற்றி வருகின்றது. அரசியல் மற்றும் இராணுவ ரீதியாக புலிகளை கையாளும் நிலைக்குள், இந்தியா மற்றும் சீனாவினது தலையீடு அதிகரித்து வருகின்றது. நோர்வை இதன் மூலம் ஒரங்கட்டப்பட்டு, வடகிழக்கில் அதிக சுரண்டல் நலன் என்பது மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் தான் மறுபேச்சுவார்த்தை என்ற மீள் கூத்தை நோர்வே முன்னுக்கு கொண்டு வந்துள்ளது.


மீள் பேச்சுவார்த்தையும் சர்வதேசமும்


முதன் முதலாக புலிகள் எதிர்பாராத ஒரு பேச்சுவார்த்iயை மேசையில் சந்திப்பார்கள். நன்கு திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட, புலிகளை அரசியல் ரீதியாக அம்பலப்படுத்தக் கூடிய ஒரு பேச்சுவார்த்தையாகவே இவை அமையும். புலி லூசுக் கூட்டம் பல்லைக்காட்டி, இதை எதிர் கொள்ளமுடியாது திணறும். இதை முன்கூட்டியே எடுத்துக் கூறக் கூடிய அளவுக்கு நிலைமை காணப்படுகின்றது.


இந்த வகையில் பேரினவாதம் இராணுவ ரீதியாக மட்டுமல்ல, அரசியல் ரீதியாகவும் பலமடங்கு முன்னேறித் தாக்கும். அதை நோக்கி அரசு தயாரிப்புடன் கூடிய ஒரு அம்பலப்படுத்தலை செய்யவுள்ளது. புலிகளுக்கு சவால்விடும் வண்ணம் பேரினவாதம் களத்தில் செயற்படுகின்றது. சிங்களப் பேரினவாதம் வைக்கும் ஒரு தீர்வை புலிகள் ஏற்க மறுத்தால், அதை புலிகள் அல்லாதவர்கள் மூலம் அமுல் செய்யும் பிரகடனங்களைக் கூட விடுக்கும் நிலைக்கு பேரினவாத அரசு முதல் முறையாக முன்னேறுகின்றது. இந்த தீர்வை சர்வதேச ரீதியாக அரசு அங்கீகாரம் பெற்று அதை அமுல் செய்வதன் மூலம், புலிகளையே மூச்சுத் திணறடிக்கவுள்ளது. இதன் மூலம் சர்வதேச ரீதியாக தமது நிலையை பேரினவாதம் மேலும் பலப்படுத்திவிடுகின்ற சூழல் நெருங்கிக் காணப்படுகின்றது. பேரினவாத அரசின் முடிவை ஏகாதிபத்தியம் முதல் இந்தியா வரை அங்கீகரிக்க வைப்பதன் மூலம், புலிகளை அரசியல் மற்றும் இராணுவ ரீதியாக தனிமைப்படுத்தி விடுவதே, இந்தப் பேச்சுவார்த்தையில் நடக்கவுள்ள அரசியல் மூலவுபாயமாகும். புலிகளின் இறுதிக்காலம் இப்படி பல வழிகளில் அரங்கில் நுழைகின்றது. புலிகளின் சொந்த அரசியல் இராணுவ வழிகளில், தாமே வலிந்து தமக்குரிய அழிவை நிர்ணயித்து, அதை நோக்கி தாவிச் செல்லுகின்றனர். அதை யாரும் இனியும் தடுத்து நிறுத்த முடியாது. தமிழ் மக்கள் பெறப்போவது புலிகளின் அடிமைத்தனத்துக்கு பதில், மீளவும் பேரினவாத அடிமைத்தனத்தைத் தான்.


Saturday, October 14, 2006

வர்க்க இன பிரதேச சாதிவாதக் கல்வியின் போக்கு-பகுதி ஆறு

வர்க்க ரீதியான இனவாத பிரதேசவாத சாதிவாதக் கல்வியின் போக்கு -பகுதி ஆறு

பகுதி ஒன்று பகுதி இரண்டு

பகுதி மூன்று பகுதி நான்கு

பகுதி ஐந்து பகுதி ஆறு

பகுதி ஏழு

<

ர்க்க ரீதியான இனவாத பிரதேசவாத சாதிவாதக் கல்வியின் போக்குக்கு எதிராக தேசியம் தனது போராட்டத்தை நடத்தவில்லை. மாறாக அதைப் பாதுகாப்பதில் ஒரு ஜனநாயக விரோத சக்தியாக வளர்ச்சி பெற்றது. இன்று இலங்கையில் மொத்தமாக 10 590 பாடசாலைகள் உள்ளன. இதில் அரசு பாடசாலைகள் 10 042 ஆகும். இதில் 20.3 சதவீதம் உயர் தர வகுப்புகளைக் கொண்ட பாடசாலையாகும். மொத்த பாடசாலையில் 40 சதவீதம் 1 முதல் 5 வகுப்புவரையிலானது. இதில் ஏறத்தாழ மூன்றில் ஒரு மாணவர்கள் கற்கின்றனர்.


இலங்கையில் மொத்த ஆசிரியர்கள் எண்ணிக்கை 1 80 000 யாகும். 1996 இல் இலங்கையில் மொத்த மாணவர்கள் 42 லட்சமாகும். இதில் 1 முதல் 5ம் வகுப்புவரை 19 லட்சம். 6 முதல் 11 வரை 21 லட்சம். 12 முதல் 13 வரை 2 லட்சமாகும். ஆரம்பபாடசாலையில் (கல்வி (1-5)) 8 சதவீதமானோர் கல்வி கற்கவில்லை. இடைநிலைக் கல்வியில் (6 முதல்11) 25 சதவீதமானோர் கல்வி கற்கவில்லை. உயர் கல்வி வயது எல்லையில் மூன்று சதவீதமான மாணவர்களே கல்வி கற்கின்றனர். இவை இனம் கடந்த நிலையில் இலங்கையில் கல்வியின் வீழ்ச்சியைக் காட்டுகின்றது. மொத்த ஆசிரியர்களில் ஆரம்ப பாடசாலையில் 80 சதவீதமும், இடைநிலைப் பாடசாலையில் 60 சதவீதமும் மொத்தத்தில் 70 சதவீதம் ஆசிரியர் தொழிலில் பெண்கள் உள்ளனர். உயர் கல்வியை நோக்கிச் செல்லச் செல்ல பெண்களின் எண்ணிக்கையிலும் கூட வீழ்ச்சி ஏற்படுத்துகின்றது. ஆணாதிக்க அமைப்பும் கூட பொதுவாக இலங்கையில் பெண்களின் கல்விக்கு தடையாகவே உள்ளது.


1967ம் ஆண்டு பல்கலைக்கழக பொறியியல் மருத்துவ அனுதியில 73 சதவீதமானவர்கள் தனியார் அல்லது உயர்தர பாடசாலையைச் சேர்ந்தவர்கள். 18 சதவீதமானவர்கள் தனிப்பட்ட பரீட்சார்த்திகள். இவர்களும் உயர்ந்தர பாடசாலைகளின் பழைய மாணவர்களாவர். 1983 இல் பல்கலைக்கழக அனுமதியை ஆராய்ந்த போது, 82.4 சதவீதமான உழைக்கும் மக்களில் இருந்து, பல்கலைக்கழகம் தெரிவானோர் 39.2 சதவீதமட்டுமேயாகும். வர்க்க ரீதியாக, சாதி ரீதியாக கல்வி மறுக்கப்படுவதையும், 17.6 சதவீதமான மேட்டுக் குடியில் இருந்து 60.8 சதவீதமானவர்கள் பல்கலைக்கழகம் செல்வதை காட்டுகின்றது. கல்வி உயர்குடிகளின் பிடியில் இருப்பதையும், தேசிய இனப் போராட்டங்கள் இதற்குள் நிகழ்வதையும் காட்டுகின்றது.


கல்விக்கான செலவு தேசிய வருமானத்தில் 2.9 வீதமே ஒதுக்கப்படுகின்றது. இந்த செலவில் 76 சதவீதம் ஆசிரியர்களின் சம்பளத்துக்கும், 16 சதவீதம் நலனளித்தல் சேவைக்கும், 7 சதவீதம் பயணத்துக்கும், 1 சதவீதம் தராதர மேம்பாட்டுக்கும், ஒரு சதவீதமே கற்பிக்கும் உபகரணத்துக்கும் செலவு செய்யப்படுகின்றது. கல்விக்கு ஒதுக்கும் பணம் முதல் அது செலவு செய்யப்படும் வடிவம் வரை ஒட்டு மொத்த மக்களுக்கு எதிரானதாகவே உள்ளது. உயர்கல்வியில் சிலரை உருவாக்கும் வகையில் கல்விக்கான நிதியொதுக்கீடு காணப்படுகின்றது. ஒரு சிலருக்கு வெளியில் உள்ளவர்களின் கல்வியின் தரத்தை இழிந்த நிலையில் நிலை நிறுத்தி, கூலிகளாக சேவை செய்ய கல்வி கோருகின்றது. சாதாரண பாடசாலையை விட உயர்தரப் பாடசாலைகள் 300 சதவீதம் அதிகரித்த நிதியுதவிகளைப் பெறுகின்றன. உயர் அதிகார வர்க்கத்தையும், சமூக அந்தஸ்துக்குரிய சமூக பிரிவுகளையும் உருவாக்கும் வகையில் கல்வி திட்டமிடப்படுவதையே, இலங்கையின் ஆளும் வர்க்கம் தனது கொள்கையாக கொண்டு இருக்கின்றது. இதை தமிழ் குறுந் தேசியமும் உயர்த்தும் அதே நேரம் தலையில் வைத்து கூத்தாடுவதிலும் பண்பாட்டு தன்மை கொண்ட தமிழ் தேசிய வெறியாக காணப்படுகின்றது.


1984 இல் 146 977 ஆசிரியராக இருந்த நிலை 1994 இல் 1 67 579 ஆகியது. சம்பளச் செலவு 120 கோடியால் அதிகரித்தது. பணவீக்கத்தை ஏற்படுத்திய பின்பு 1995 இல் 45 சதவீத சம்பள உயர்வு வழங்கப்பட்டதன் மூலம் செலவு 280 கோடியால் அதிகரித்தது. ஆனால் தேசிய ஒதுக்கீட்டில் மாற்றம் ஏற்படவில்லை. பணவீக்கத்தை அடிப்படையாகக் கொண்டே, இது பூசிமெழுகப்பட்டது. அதேநேரம் இந்த ஆசிரியர் நியமனம் கூட இனவாத அடிப்படையில் சிங்கள இனத்துக்கே வழங்கப்பட்டது. ஆசிரியர் நியமனம் பற்றாக்குறை சார்ந்த இடங்களுக்கு வழங்கப்படவில்லை. தமிழ் ஆசிரியர்களின் தட்டுப்பாடு 10324யாக இருக்க, சிங்கள ஆசிரியர்கள் 14168 பேர் மிதமிஞ்சியிருக்கின்றனர். அதாவது 22 சிங்கள மாணவருக்கு ஒரு ஆசிரியர் இருக்க, 34 தமிழ் மணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதம் இன்று இனவாத அடிப்படையில், இலங்கையில் மாணவர் ஆசிரியர் எண்ணிக்கை காணப்படுகின்றது. இதுவே 1971க்கும் 1974க்கும் இடையிலும் நிகழ்ந்தது. இக் காலத்தில் 22 374 ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்ட போது, சிங்களவர் 18000 பேரும், தமிழர் 1807 பேரும், முஸ்லீம்கள் 2507 பேரும் நியமிக்கப்பட்டனர். முஸ்லீம்களின் அதிகரித்த நியமனம் கல்வி அமைச்சு முஸ்லீமாக இருந்ததால் நிகழ்ந்தது. முஸ்லீம் மக்களுக்கு வழங்கிய விதிவிலக்கான ஒரு சலுகையாக இருந்த போதும், இன அடிப்படையிலும், தேவையின் அடிப்படையிலும் முஸ்லீம் மக்களின் கல்வி நிலையை மேம்படுத்தவில்லை. சிங்கள சமூகம் அதிக சலுகைகளை தொடர்ச்சியாக பெற்று வந்தன. இதை தமிழ் இன அடிப்படையில் பொதுமைப்படுத்திய போது இனவாதத்தின் அடிப்படை வெளிப்படுகின்றது. ஆனால் இந்த பொதுமைப்படுத்தலின் உள்ளே பிரதேச ரீதியாக, சாதி ரீதியாக, சிறுபான்மை ரீதியாக ஆராயும் போது இந்த இடை வெளி மேலும் அகலமாகின்றது. வெறுமனே இதை இன அடிப்படையில் புரிந்து கொண்டு தீர்க்கமுடியாது. அப்படி இனத் தேசியவாத அடிப்படையில் தீர்க்க எடுக்கும் முயற்சி, யாழ் சமூகத்தின் மிதமிஞ்சிய சலுகைகளை பெறுவதையே அடிப்படையாகக் கோருவதாகும். தமிழ் ஆசிரியர்களின் தட்டுப்பாடு என்பது பின்தங்கிய தமிழ் மாவட்டங்கள், சாதிகள், சிறுபான்மை இனங்கள் என்று அடிப்படையில் தான் காணப்படுகின்றது. யாழ்குடா நாட்டில் அளவுக்கு அதிகமாகவே ஆசிரியர்கள் எண்ணிக்கை காணப்படுகின்றது.


அண்மைக் காலங்களில் ஏற்படும் சில நெருக்கடிகள் கூட, இனவாத எல்லையில் புரிந்து கொண்டு விளக்குவது கூட யாழ் மேலாதிக்க தன்மைக்கு கவசமிடுவதாகும். யாழ் மாவட்டத்தில் 481 பாடசாலைகள் உள்ளன. மொத்த மாணவர்கள் 1 84 350யாகும. 6400 ஆசிரியர்கள் உள்ளனர். இது 29 மாணவருக்கு ஒரு ஆசிரியர் விகிதத்தில் காணப்படுகின்றது. இதிலும் கிளிநொச்சியின் விவசாயத்தை அடிப்படைத் தொழிலாகக் கொண்ட பின்தங்கிய பகுதி என்பதால் அதிகம் பாதிப்படைந்துள்ளது. இன்றைய யாழ்குடாநாட்டில் உள்ள நெருக்கடிகள் யாழ் பூர்சுவா சமூக கண்ணோட்டத்தால் மட்டுமே ஏற்படுகின்றது. அதிக பணம் சேகரிக்கவும் மேற்கு பற்றிய காலனித்துவ அடிமைப்புத்தியும் இணைந்தபோது, மேற்கு நோக்கிய ஆசிரியர்களின் புலம்பெயர்வு செயற்கையான பற்றாக்குறைக்குள் யாழ்குடாவை நகர்த்தியது. அத்துடன் மேற்கு நோக்கி நகரும் திருமணங்களும், பிள்ளைகளை நோக்கி புலம் பெயரும் பெற்றோர்களும் ஆசிரியராக இருக்கும் எல்லா நிலையிலும், செயற்கையான நெருக்கடிக்கு கம்பளம் விரிக்கின்றது. இதை தேசியம் பொதுமைப்படுத்துகின்றது. அதற்கு பின்தங்கிய மாவட்ட நெருக்கடிகளை யாழ் தேசியம் தனக்கு சாதகமாக்குகின்றது. தேசியம் பின் தங்கிய மக்களின் நலனில் இருந்து தேசியத்தை பொதுமைப்படுத்தத் தவறி குறுந்தேசியமாகியது. பின் தங்கிய தமிழ் மாவட்ட மற்றும் சிறுபான்மை தமிழ் இனங்களின் நிலைமையை கிடைத்த புள்ளிவிபரத் தரவுகளில் இருந்து ஆராய்வோம்.


தொடரும்

யாழ் உயர் வர்க்க தமிழர்களின் ஆதிக்கமும் தேசியமும்

1. வேலைவாய்ப்புகளும் தமிழ் தேசியமும்- பகுதி எட்டு
2. யாழ் உயர் வர்க்க தமிழர்களின் ஆதிக்கமும் தேசியமும் -பகுதி ஒன்பது

பகுதி ஒன்று பகுதி இரண்டு

பகுதி மூன்று பகுதி நான்கு

பகுதி ஐந்து பகுதி ஆறு

பகுதி ஏழு

ல்வியைப் போல் வேலை வாய்ப்பு பிரச்சனைகளையும் முன்வைத்தே தமிழ் தேசியம் தன்னை முன்னிலைப்படுத்தியது. அனைவருக்கும் வேலை வழங்கு என்ற அடிப்படையான கோசத்துக்கு பதில், சிலருக்கான வேலையில் அதிகம் எமக்கு வேண்டும் என்ற இன அடிப்படைவாதமே இந்த தேசிய பிரச்சனையில் மையமான கோசமாகியது. தேசியத்தை கட்டமைக்கும் போது தமிழ் மக்கள் என்ற பொதுமைப்படுத்தல் ஊடாகவே, தமிழ் மக்கள் மீதான இன ஒடுக்குமுறையை சுட்டிக்காட்டினார்கள். தமிழ் மக்களிடையே உள்ள பின்தங்கிய பிரதேசங்கள், சிறுபான்மை இனங்கள், தாழ்ந்த சாதிய மக்களின் விகிதத்துக்கு ஏற்ப, அவர்களின் வேலை வாய்ப்பு பற்றி மூச்சுவிடவில்லை. இங்கும் கல்வியைப் போல் யாழ் உயர் வர்க்கங்களின் ஆதிக்கத்தைக் கோரினார்களே ஒழிய, அனைத்து தமிழ் மக்களின் நலனை முன்னிலைப்படுத்தவில்லை. வேலைவாய்ப்பை குறிப்பாக காட்டி முன்னிலைப்படுத்திய எமது தேசிய போராட்டம், பின்வரும் அடிப்படையான வழிகளில் பிற்போக்கான அம்சத்தை தேசியத்தில் வளர்த்தெடுத்தது.

1.தமிழ் மக்களின் தேசிய பிரச்சனையை தவறாக இதன் மூலம் இனம் காட்டி இதை முன்னிலைப்படுத்தியது.

2.தமிழ் மக்களின் வேலை வாய்ப்பில் யாழ் அல்லாத மக்களின் நலனை மூடிமறைத்ததுடன், அவர்களுக்காக போராட தயாரற்று இருந்தது.

3.அனைத்து மக்களுக்கும் வேலைக்கான உத்தரவாதத்தை வழங்கு என்று கோரிப் போராட மறுத்தது.

4.வேலையில் காணப்படும் அதிகார வர்க்கப் போக்கை மாற்ற கோரியிருக்க வேண்டும். (இந்த அதிகார வர்க்கப் போக்கு ஒட்டு மொத்த இலங்கையில்; தமிழர்கள் ஆதிக்கத்தில் இருந்த போது, யாழ் உயர் குடிகள் மற்றும் உயர் வர்க்கங்கள் அல்லாத மற்றைய மக்களின் மேல் முறைகேடாகவே அதிகாரத்தைக் கையாண்டனர். இது சாதி, பிரதேசவாதம், இனவாதம் என்ற அனைத்துத் துறையிலும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இனவாத விரிவாக்கத்தில் இதன் பங்கு கணிசமானது.)

இதை அடிப்படையில் தமிழ் தேசியம் மறுத்து, யாழ் ஆதிக்க பிரிவுகளின் நலன் சார்ந்து குறுந்தேசிய போராட்டமாகியது. தேசியத்துக்கான யுத்தம் தொடங்கியதில் இருந்து, சிங்களம் ஆட்சி மொழியாகியதில் இருந்தும், ஆங்கில அறிவுபெற்ற யாழ் தமிழரின் உத்தியோகங்கள் படிப்படியாக குறைக்கப்பட்டது. இது யுத்த சூழலுக்குள் ஆழமான வேலை இழப்பை தமிழர் தரப்பில் சந்தித்துள்ளது. வேலையில் இருந்தோர் கூட நாட்டை விட்டு வெளியேறிய நிகழ்வு (இது இனவாதப் போக்கு முகம் கொடுக்க முடியமாலும் ஒருபுறம் நிகழ மறுதளத்தில் குட்டி பூர்சுவா வர்க்க நலன் சார்ந்தும் நடந்தது.), தமிழரின் வேலை வாய்ப்புகள் சமகாலத்தில் குறைந்து செல்கின்றது. இவை அனைத்தையும் வரலாற்று ரீதியாக ஆராய்வோம்.

யாழ் உயர் வர்க்க தமிழர்களின் ஆதிக்கமும் தேசியமும்

லங்கையில் மக்கள் தொகையில் சிங்களவர் 72 சதவீதமாகவும், இலங்கைத் தமிழர் 11.2 சதவீதமாகவும், மலையகத் தமிழர் 9.3 சதவீதமாகவும், முஸ்லீம்கள் 7.1 சதவீதமாகவும், ஏனையோர் 0.5 சதவீதமாகவும் இருந்த போதும், உயர் வர்க்க தமிழர்களின் அரசு வேலை வாய்ப்புகள் மொத்த மக்கள் தொகையில் ஆராயும் போது ஒரு சமூகத்தின் அதிகாரத்தை தெளிவாக்குகின்றது. இதைத் தனியாக ஆராய்வோம்.

மருத்துவதுறையையில் இனரீதியாக சதவீகிதத்தில் பார்ப்போம்.

சிங்களவர்

தமிழர்

முஸ்லிம்

பறங்கியர்

1870

8.7

-

-

91.3

1907

24.6

14.7

-

60.7

1910

21

28

-

51

1920

31

36

-

32

1925

42.5

30.8

-

26.7

1930

47

33

-

19

1935

55.1

25.8

-

19.1

1936

59.4

33.3

-

7.3

1956

54.1

38.1

1.5

6.3

1962

53.4

41.1

2.1

3.5

குடியியல் துறையில் இனரீதியாக சதவீகிதத்தில் பார்ப்போம்.

சிங்களவர்

தமிழர்

முஸ்லிம்

பறங்கியர்

1870

7

-

-

-

1907

33.3

16.7

-

50

1925

43.6

20.5

-

35.9

1935

40.0

33.3

-

27.3

1936

59.5

26.7

-

13.8

1956

57.1

29.4

1.7

11.8

1962

73.7

17.9

2.3

6.0

1975

81.3

15.9

2

0.8

பொது துறையில் இனரீதியாக சதவீகிதத்தில் பார்ப்போம்.

சிங்களவர்

தமிழர்

பறங்கியர்

1907

20

10

70

1910

24

16

60

1920

26.8

17

56

1925

32.2

7.1

60.1

1930

28.1

29.6

42

1935

34.3

28.6

37.1

1936

32.2

25.4

22.4

நீதித் துறையில் இனரீதியாக சதவீகிதத்தில் பார்ப்போம்.

சிங்களவர்

தமிழர்

முஸ்லிம்

பறங்கியர்

1935

26.7

33.3

-

40

1936

49.1

26.4

-

26.5

1956

57.6

30.3

6.1

6.1

1962

60.3

26.4

10.2

2.6

1973

77.6

18.8

3.3

0

பொறியியல் துறையில் இனரீதியாக சதவீகிதத்தில் பார்ப்போம்.

சிங்களவர்

தமிழர்

முஸ்லிம்

பறங்கியர்

1956

42.1

47.7

1.9

8.4

1962

49.6

44.2

1.5

4.7

கணக்காளர் துறையில் இனரீதியாக சதவீகிதத்தில் பார்ப்போம்.

சிங்களவர்

தமிழர்

முஸ்லிம்

பறங்கியர்

1956

35.8

60.2

0

3.9

1962

38.6

60.2

0

1.2

அரசு சேவையில் 1921 இல் சிங்களவர் 46 சதவீதமும் தமிழர் 31.6 சதவீதமாக காணப்பட்டனர். 1946 இல் நிர்வாக சேவை அரைப்பகுதியையும் நீதிச் சேவையில் மூன்றில் இரண்டு பங்கினையும் தமிழர்கள் கொண்டிருந்தனர். நடைமுறை ரீதியாகவே 11.2 சதவீதமான தமிழ் மக்களினதும் அதிலும் குறிப்பாக யாழ் பிரதேசத்தைச் சேர்ந்த மேட்டுக் குடிகளின் அதிகாரத்தைக் காட்டுகின்றது. யாழ் குடா நாட்டில் 40 சதவீதமான தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வியை மறுத்த யாழ் மேட்டுக்குடிகள் பெண்களையும் அடக்கியொடுக்கியபடி தான் உயர் சாதிய வரிசைப்படிகளில் நின்றே பிரிட்டிஸ்சாரின் கைக் கூலிகளாகி இலங்கையையே ஆண்டனர். யாழ் மேட்டுக்குடி பண்பாட்டுக் கலாச்சார கூறில் மிக மோசமான ஆதிக்க பிரிவாக திகழ்ந்தமையால் இலங்கையில் அனைத்து மக்களின் எதிர்ப்புக்கும் உள்ளாகினர். சொந்த தாழ்த்தப்பட்ட மக்கள் முதல் சொந்த இன பிரதேச மக்களாலும் சிறுபான்மை இனங்களாலும் பெரும்பான்மை இனங்களாலும் வெறுக்கப்படுமளவுக்கு ஒரு ஆளும் பிற்போக்கு வர்க்கமாக திகழ்ந்தனர். சுதந்திரத்துக்கு முன்பாக நீதிச் சேவையில் மூன்றில் இரண்டு பங்கை வைத்திருந்த இந்த ஆங்கிலம் கற்ற தமிழ் மேட்டுக் குடிகள் எப்படி இலங்கையில் நீதியாக நிர்வாகம் செய்திருப்பார்கள் இன்று எம் மக்கள் முதல் சிறுபான்மை இனங்களையும் அப்பாவி சிங்கள மக்களையும் ஆயுதமுனையில் அடக்கியாளும் போது எமது மூதாதையர்கள் பண்பாட்டு கலாச்சார அதிகார வடிவங்கள் மூலம் இலங்கையையே அடக்கியாண்டனர். இங்கு மனிதத்துவம் நீதி ஜனநாயகம் என்பதெல்லாம் சொந்த வர்க்கத்துக்கானதாகவே இருந்துள்ளது.

ஜி.ஜி.பொன்னம்பலம் 1939 இல் ~~இப்பாழாய்ப்போன டொனமூர் அரசியல் அமைப்பு வருவதற்கு முன்னர் அரைகுறை அறிவு படைத்த சிங்களவர் எமது கோரிக்கைகளுக்கு செவிசாய்த்தார்கள் என்று கூறுமளவுக்கு அதிகாரத்தை இலங்கை முழுவதும் யாழ் மேட்டுக்குடிகள் கொண்டிருந்தனர். சுதந்திரத்துக்கு முன் பின் தமிழரின் அதிகாரத்துவ பங்கு எப்போதும் இலங்கையில் உச்சத்தில் இருந்துள்ளது. இந்த அதிகாரத்தை தக்கவைக்கவே ஐp.ஐp.பொன்னம்பலம் 50 க்கு 50 என்ற கோரிக்கையை மேட்டுக் குடிகள் சார்ந்து தமிழ் தேசிய இனவாதியாகவே முன்வைத்தார். மேட்டுக் குடிகளின் அதிகாரத்தை மற்றைய மக்களுடன் ஜனநாயக பூர்வமாக பகிர்வதை மறுத்த தமிழ் மேட்டுக்குடிகள் அதைத் தக்கவைக்கவே இனவாதத்தை தமிழ் காங்கிரஸ் மூலம் அன்று முன்வைத்தனர். இலங்கையில் இனவிகிதம் கடந்த நிலையில் பல்வேறு துறைகளில் 50 சதவீதத்துக்கு அதிகமாக அல்லது அதற்கு சற்றுக்குறைவான அதிகார பீடங்களில் யாழ் மேட்டுக் குடி தமிழரின் ஆதிக்கத்தில் இருந்தது. இது பிரிட்டிஸ்சாருக்கு குண்டி கழுவி விடுவதன் மூலம் நக்கிப் பெறப்பட்டது. சிங்கள மக்களின் காலனித்துவ எதிர்ப்பை ஒடுக்கவும் தமிழரின் கைக்கூலித்தனமே பிரிட்டிஸ்சாரின் காலனித்துவ நீடிப்புக்கு அத்திவாரமாகியது. அதாவது பிரிட்டிஸ்சார் பிரித்தாளும் தந்திரத்தை கையாண்டனர். சிங்கள மக்களின் நீடித்த காலனித்துவ எதிர்ப்புக்கு அவர்களின் நிலப்பிரபுத்துவ சொத்துரிமை சார்ந்த சுய உற்பத்தி ஒரு காரணமாகும். பிரிட்டிஸ்சாரின் கீழ் கூலி வேலை செய்வதை இழிவாகக் கருதி அதை எதிர்த்து நின்றனர். இதனால் இலங்கையை முழுமையாக ஆங்கிலேய காலனித்துவவாதிகள் பிடித்த பின்பும் இரண்டு எழுச்சிகளை கண்டி சிங்கள மக்களால் நடத்த முடிந்தது. இதற்கு எதிராக செயற்பட்ட யாழ் மேட்டுக்குடிகள் காலனித்துவத்தை தொடரவும் அதன் மூலம் இலங்கையையும் அயல் நாடுகளையும் சுரண்டவும் உலகளவில் செல்வாக்கு மண்டலங்களை பேணவும் யாழ் மேட்டுக்குடியின் கைக் கூலித்தனம் முண்டு கொடுத்தது என்றால் மிகையாகாது. இந்த கைக்கூலிகள் மூலம் காலனித்துவத்தை கட்டி பாதுகாக்க அதற்கு காலனித்துவக் கல்வி அவசியமாகியது. இந்த வகையில் காலனித்துவம் நவீன பாடசாலைகள் யாழ் குடா நாட்டில் உருவாக்கியது.

இதன் தொடர்ச்சியில் இலங்கையில் 1911ம் ஆண்டில் ஆங்கில அறிவு பெற்றவர்களில் தமிழர் 4.9 சதவீதமாகவும் கரையோரச் சிங்களவர் 3.5 சதவீதமாகவும் கண்டிச் சிங்களவர் 0.7 சதவீதமாகவும் இருந்தனர். இது காலனித்துவ நோக்கத்தையும் கல்வியின் பிரிட்டிஸ்சார் மையப்படுத்தி முன்னுரிமை கொடுத்த பிரதேசத்தையும் தெளிவாக காட்டுகின்றன. அதே நேரம் இதற்கு இசைவாக 1911 ம் ஆண்டில் அரசு வேலைகளில் தமிழர் 5.1 சதவீதமும் கரையோர சிங்களவர் 3.6 சதவீதமும் கண்டிச் சிங்களவர் 1.3சதவீதமாக இருந்தனர். காலனித்துவ கல்வி அது சார்ந்த அதிகாரத்துவம் யாழ் மேட்டுக்குடியின் கையில் குவிந்ததை இது காட்டுகின்றது. கல்வியுடன் தொடர்புடைய தமிழ் அதிகார வர்க்கம் ஒரு ஆளும் வர்க்கமாக உருவானது. இந்த வர்க்கம் தனது இழிந்த மனித விரோத நடத்தைகளை ஆதாரமாகக் கொண்டே இலங்கையை அடக்கியாண்டது. இந்த அதிகாரத்துவம் சுதந்திரத்தின் போது உச்சத்தில் இருந்தது. சுதந்திரத்தின் பின்பும் இனவிகிதத்தை விட அதிகமான அதிகாரத்துவ மையங்களில் வீற்றிருந்தனர். 1970 வரையிலும் இனவிகிதத்தை தாண்டியே இலங்கை அதிகார வர்க்கத்தில் தமிழர் இன விகிதத்தை கடந்து இருந்தனர். இதை கீழ் தொடர்ந்து வர உள்ள புள்ளிவிபரமும் தெளிவாக நிறுவுகின்றது. இந்த அதிகார வர்க்கத்தை உருவாக்கிய காலனித்துவ கல்வியே இன்றைய இன தமிழ் தேசிய சிக்கலுக்கு மையமான கூறாகியது. பெரும்பான்மை இனம் அதிகாரமிழந்த ஒரு பிரிவாக இருந்தமையால் சிங்கள இனவாதத்தை முன்வைப்பது சிங்கள தலைவர்களிடம் ஒரு போக்காக மாறியது. இதை தமிழ் தலைமைகளும் சரி சிங்கள தலைமைகளும் சரி எதிர் நிலை இனவாதத்தை ஊற்றி வளர்த்து இன்றைய நிலைக்கு இட்டுச் செல்வதில் பரஸ்பரம் ஒரு முனைப்புடன் போட்டியிட்டனர். தமிழ் தலைமை இலங்கை அதிகார வர்க்கத்தின் தமிழ் இன ஆதிக்க விகிதத்தை பாதுகாக்கவும் சிங்கள தலைமை சிங்கள இன அதிகாரத்தை நிறுவவும் நடத்திய போராட்டம் இனமோதலாக இனவழிப்பாக வளர்ச்சி பெற்றது. காலனித்துவம் இதில் குளிர் காய்ந்தது. பிரித்தாளும் இனக் கண்ணோட்டத்தை பிரிட்டிஸ்சார் முன்வைத்து தமிழ் அதிகார வர்க்கத்தை உருவாக்க கல்வியை ஒரு தலைபட்சமாக யாழ் தமிழருக்கு சலுகையாக வழங்கியது. இதன் போக்கு மிக மோசமான இன ஒடுக்குமுறையை சிங்கள இனவாதம் தமிழ் மக்கள் மேல் இன்று கையாண்ட போதும் இன்று வரை யாழ் மேலாதிக்கத்தை கல்வியில் நிறுவ முடிகின்றது.

காலனித்துவ காலத்தில் பிரிட்டிஸ்சார் திட்டமிட்டு இனப்பிளவை வித்திட்டு பிரித்தாண்ட போக்கில் அதன் கைக்கூலிகளாக இருந்த தமிழ் அதிகார வர்க்கத்தின் அடக்குமுறை மற்றும் சுரண்டலின் தொடர்ச்சியே இலங்கையில் இனப்பிளவுக்கு வித்திட்டது. இந்த தமிழ் பிரிவு அரசியல் அதிகாரத்தில் இருந்து சுருட்டுக் கடை ஈறாக சிங்கள மக்களை படுமோசமாக சுரண்டிக் கொழுத்தது. இதற்கு எதிராக குறுந்தேசிய சிங்கள இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட சிங்கள பிரிவுகள் வளர்ச்சி பெற்றது. காலனித்துவத்தையும் அதன் தொங்கு சதைகளையும் எதிர்ப்பதற்கு பதில் தமிழர்களை எதிர்த்தே தனது தேசியத்தை சிங்கள குறுந்தேசியம் கட்டமைத்தது. அதாவது இன்று தமிழ் குறுந்தேசியம் எப்படி நவகாலனித்துவ மற்றும் மறுகாலனித்துவ முயற்சியை எதிர்க்காது ஏகாதிபத்தியத்துக்கு இசைவாக சிங்கள மக்களை எதிராகக் காட்டி தமிழ் இனவாதிகளாக தம்மை நிலை நிறுத்துகின்றனரோ அதேபோல் அன்று தமிழ் மக்களை எதிரியாகக் காட்டியே சிங்கள இனம் தனது சிங்கள குறுந் தேசியத்தைக் கட்டமைத்தது.

சிங்கள இனவாதிகள் ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து தமிழ் இனத்துக்கு எதிரான திட்டமிட்ட இன அழிப்பை நடைமுறைப்படுத்தினர். இது சுதந்திரத்துக்கு முன் பின்னிருந்தே இது தொடங்கியது. பெரும்பான்மை மக்கள் சிங்கள மொழி பேசுபவர்களாக இருந்ததால் அதிகாரத்தில் கிடைத்த வசதிகள் அனைத்தையும் இன அழிப்புக்கு வசதியாக பயன்படுத்திக் கொண்டனர். இன அழிப்பை தொடங்கிய போது பலவீனமான இனப்பிரிவுகள் மேலும் பலவீனமான மக்கள் கூட்டங்கள் மேலும் இன அழிப்பு தொடங்கப்பட்டது. இதற்கு தமிழ் கைக்கூலிகள் மற்றும் அறிவித்துறையினரின் நடவடிக்கைகள் ஊக்கியாக இருந்தது. ஒன்று நேரடியாக அவர்களின் முயற்சிக்கு ஒத்துழைத்தனர். இரண்டாவதாக சொந்த சுயநலத்திற்காக சிங்கள மக்களை சூறையாடினர். மூன்றாவதாக பலவீனமான தமிழ் மக்களையிட்டு தமிழ் உயர்பிரிவுகள் கொண்டு இருந்த இழிவான கண்ணோட்டம் அழிப்பை ஊக்கியாக்கியது. இந்தப் போக்குகள் சிங்கள இனவாதிகளுக்கு சாதகமாக இருந்தது. இதை தெளிவாகவே பண்டாரநாயக்கா 1939ம் ஆண்டு ஒரு கூட்டத்தில் பேசும் போது ~~நாவலப்பிட்டி சிங்கள மகாசபா பொன்னம்பலத்திற்கு ஒரு சிலை எடுக்க வேண்டும். நாவலப்பிட்டியில் சிங்கள மகாசபாவின் கிளையொன்றை ஸ்தாபிப்பதற்கு நாம் பொன்னம்பலத்திற்கு நன்றிக் கடன்பட்டிருக்கின்றோம். என்றார். தமிழ் மேட்டுக்குடிகளின் இனவாத முயற்சிகளே சிங்கள இனவாதத்துக்கு அன்று தீனியாக அமைந்தது. சிங்கள இனவாதம் தமிழ் மேட்டுக்குடிகளின் இனவாதத்தின் மேலும் தமிழ் அதிகார வர்க்க மக்கள் விரோத நடத்தைகளில் இருந்தும் தன்னை கட்டமைத்தது. பெரும்பான்மை இனம் சார்ந்த சிங்கள இனவாதிகள் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து தமிழர்களை எதிரியாகச் சித்தரிக்க தயங்கவில்லை. சிறுபான்மையினத்தினை ஒடுக்குவதில் தன்னை சிங்களமயமாக்கியது. அரசு நிர்வாகத்தில் தனது அதிகாரத்தை நிறுவுவதில் இனவாத அடிப்படையையே தனது கொள்கையாகக் கொண்டது. இதில் தமிழ் முஸ்லீம் மலையக தேசிய தலைவர்கள் முதல் போலி இடதுசாரிகள் ஈறாக கூட்டு அரசு அமைத்தே நடைமுறைப்படுத்தினர். இலங்கையை ஆட்சி செய்த அதிகார வர்க்கம் எப்படி தமிழரின் இனவாதிகள் கையில் இருந்து சிங்கள இனவாதிகளின் கைக்கு மாறியதை கீழ் உள்ள புள்ளி விபரம் தெளிவாக்குகின்றது. இலங்கையை நிர்வாக ரீதியாக ஆண்டவர்கள் முதல் அரசதுறையில் வேலை வாய்ப்பை பெற்ற தமிழர்களின் பங்கை இனவாத நடவடிக்கையால் படிப்படியாக குறைந்து வந்ததையும் நாம் பார்ப்போம்.

1950 சதவீகிதத்தில்

1965 சதவீகிதத்தில்

1970 சதவீகிதத்தில்

இலஙகை நிர்வாக சேவை

30

20

05

எழுதுவினையர்

50

30

05

நிபுணத்துவ சேவை

60

30

10

ஆயுதப்படை

40

20

01

தொழிலாளிகள்

40

20

05

இது சுதந்திரத்துக்கு பின் திட்டமிட்ட வகையில் இனவாதம் கட்டமைக்கப்பட்ட வடிவத்தைக் காட்டுகின்றது. இந்த வரலாற்று காலகட்டத்தின் தொடர்ச்சியில் தமிழ் தேசியவாதிகள் முதல் எல்லா சிறுபான்மை இனப்பிரதிநிதிகளும் இந்த பச்சை இனவாத அரசுக்கு முண்டு கொடுக்க தயங்கவில்லை. இதில் போலி இடதுசாரிகள் படிப்படியாக இணைந்து கொண்டு, இதை ஊக்குவித்தனர். போலி இடதுசாரிகள் பாராளுமன்ற வழியில் சிங்கள வாக்குகளை பெற்று பாராளுமன்ற கதிரைகளில் சுகம் காண இனவாதத்தை ஆயுதமாக்கி இனவாதிகளாக மாறினர். இலங்கையில் முற்போக்கு நடவடிக்கையாக வருணிக்கப்படும் அனைத்து தேசியமயமாக்கல் நடவடிக்கையின் பின்னும் இனவாதம் அங்கு கொழுவேற்றது. அரசமயமாக்கல் நடத்திய இனவாதிகள் அதை போலி இடதுசாரிகளின் ஆதரவுடன் நடைமுறைப்படுத்திய அதே நேரம், அரசுதுறையை சிங்கள இனவாதமாக்குவதில் வெற்றி கண்டனர். இதற்கு போலி இடதுகள் ஆசி வழங்கினர். இலங்கையில் நிர்வாக மற்றும் ஆளும் அதிகார வர்க்கத்தை சிங்கள இனவாதமாக்குவதின் மூலம் அதை சமூக மயமாக்கியுள்ளது. இது தமிழரின் வேலை வாய்ப்பை முற்றாகவே மறுத்துவிடுகின்றது. ஏதாவது தமிழருக்கு வேலை வாய்ப்பு இருப்பதாக வெளிப்படுவது கல்வித்துறை சார்ந்து மட்டுமேயாகும்.

1956க்கும் 1970க்கும் இடையில் 189000 பேர் அரசு கூட்டுத்தாபனத்தில் வேலை வழங்கப்பட்டது. இதில் 99 சதவீதமானவர்கள் சிங்களவராவர். 1948 இல் அரசாங்க பொதுச் சேவையில் 82 000 பேர் இருந்தனர். இதில் 30 சதவீதமானோர் தமிழராவர். இதில் பெரும்பான்மையானவை யாழ் மேட்டுக்குடியினராவர். 1970 இல் 2 25 000 வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட போது அரசு கூட்டுத் தாபனத்தில் தமிழர் சதவீதம் 6 சதவீதத்தால் குறைவடைந்தது. 1971க்கும் 1974 க்கும் இடையில் 22 374 ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்ட போது அதில் சிங்களவர் 18000 பேரும், தமிழர் 1807 பேரும், முஸ்லீம்கள் 2507 பேரும் நியமிக்கப்பட்டனர். முஸ்லீம்களின் அதிகரித்த நியமனம் கல்வி அமைச்சு முஸ்லீமாக இருந்ததால் நிகழ்ந்தது. அரசுத்துறையில் திட்டமிட்ட இனவாதம் அடிப்படை கொள்கையாக இருந்தது.

1972 இல் அரசதுறையில் வேலை பெற்றோர்

சனத்தொகை

சிங்களவர்

தமிழர்

ஏனையோர்.

1971 இல் சனத் தொகை

72.0

20.5

7.5

நிர்வாகம் நிபுணத்துவம் தொழில்நுட்பம்

67.7

28.5

3.8

இடைத்தரங்கள்;

81.2

15.3

3.5

ஆசிரியர்

81.5

11.6

6.9

சிற்றூழியர்

86.4

10.6

3.0

தொழிலாளர்

85.5

11.6

2.9

ஏனைய பிரிவுகள்

82.6

12.9

4.5

அரசாங்க வேலை வாய்ப்புகள் 1977-1981க்கு இடைப்பட்ட கால கட்டத்தில்

மொத்த வெற்றிடம்

சிங்களவர்

தமிழர்

ஏனையோர்

எழுதுவினைஞர்

9965

9326 (93.6)

492 (4.9)

147 (1.5)

ஆசிரியர்

29 218

25 553 (87.6)

2084 (7.1)

1581 (5.3)

மொத்தம்

39 183

34879 (87.6)

2576 (6.6)

1728 (5.8)

அரசு மற்றும் கூட்டுறவுத்துறையில் 1980 இல் வேலை செய்வோர். இங்கு தமிழர் என்பது மலையக தமிழரை உள்ளடக்கியது. 1981இல் சனத்தொகை கணக்கெடுப்பில் 74 வீதம் சிங்களவரும் 12.7 வீதம் இலங்கைத் தமிழரும் 5.5 மலையகத் தமிழரும் 7 வீதம் முஸ்லீம்களும் 0.8 சதவீதம் ஏனையோருமாவர்.

மொத்தம்;

சிங்களவர்

தமிழர்

முஸ்லீம்;

ஏனையோர்

அரசுதுறை

3 68 849

84.34

11.61

3.33

0.72

கூட்டுறவுத்துறை

2 28 531

85.75

10.67

2.56

1.03

மொத்தம்

5 97 380

84.88

11.25

3.03

0.84

1980 ஆண்டு அரசுதுறை வேலை வாய்ப்பு

தொழில்

சிங்களவர்

தமிழர்

ஏனையோர்

தொழிலடிப்படையிலான சிறப்பு தொழில்

82

12

6

நிர்வாக உத்தியோகம்

16

3

ஏனைய தொழில்கள்

84

12

4

1980ம் ஆண்டு அரசு கூட்டு ஸ்தாபனங்களில் வேலை வாய்ப்பு

தொழில்

சிங்களவர்

தமிழர்

ஏனையோர்

தொழிலடிப்படையிலான சிறப்பு தொழில்

82

13

5

நிர்வாக உத்தியோகம்

83

14

3

ஏனைய தொழில்கள்

85

11

4

அரசு மற்றும் கூட்டுறவுத்துறையில் 1985லான வேலை செய்வோர்.

மொத்தம்;

சிங்களவர்

இலங்கைத் தமிழர்

மலையகத் தமிழர்

முஸ்லீம்;

ஏனையோர்

அரசுதுறை

4 06 359

85.64

9.9

0.25

3.44

0.9

கூட்டுறவுத்துறை

3 22 617

85.54

9.38

1.25

2.35

1.48

மொத்தம்

7 28 976

85.8

9.67

0.64

2.95

1.14

அரசு மற்றும் கூட்டுறவுத்துறையில் 1990லான வேலை செய்வோர்.

மொத்தம்;

சிங்களவர்

இலங்கைத் தமிழர்

மலையகத் தமிழர்

முஸ்லீம்;

ஏனையோர்

அரசுதுறை

1 98 425

91.2

5.9

0.1

2.0

0.3

மாகாணத்துறை

2 22 584

87.7

7.1

0.2

4.6

0.4

கூட்டுறவுத்துறை

2 79 584

88.1

8.2

0.5

2.2

1.0

மொத்தம்

7 00 593

88.8

7.2

0.3

2.9

0.8

வெளிநாடுகளில் இலங்கை தூதரகங்களில் 1994 இல்.

மொத்தம்

சிங்களவர்

தமிழர்

முஸ்லீம்

ஏனையோர்

தூதுவர்கள்

32

65.6

9.4

18.8

6.2

ஏனைய ஊழியர்கள்;

216

88.4

4.2

6.0

1.4

1994 இல் இலங்கையில் அரசு மற்றும் கூட்டுறவுத்துறையில் வேலை வாய்ப்பு பகிரப்பட்ட விதம்.

பிரிவு

ஜனத் தொகை விகிதாசாரம்

அரசு துறையில் வேலைகள்;

மாகாணசபையில் வேலைகள்

அரசு உதவி பெறும் வேலைகள்;

சிங்களவர்

73.9

91.2

87.7

88.1

இலங்கைத் தமிழர்

12.7

5.9

7.1

8.2

மலையகத் தமிழர்

5.5

0.1

0.2

0.5

முஸ்லீங்கள்

7.0

2.0

4.6

2.2

ஏனையவர்கள்;

0.9

0.8

0.4

1.0

இலங்கையில் அரசு மற்றும் கூட்டுறவுத்துறையில் சிறுபான்மை இனங்கள் வேலை இழப்பை ஆராய்வோம்.

1980

1985

1990

சிங்களவர்

84.8

85.8

88.8

தமிழர்

11.25

9.67

7.2

மலையகத் தமிழர்

-

0.64

0.3

முஸ்லீம் மக்கள்

3.03

2.95

2.9

ஏனையோர்

0.84

1.14

0.8

அரசு மற்றும் கூடடுறவுத்துறையில் மொத்த வேலைகள்

597 380

728 976

700 593

1980 குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரத் திணைக்களத்தால் இன அடிப்படையிலாக தொழில்கள் பற்றி வெளியிட்ட அறிக்கையைப் பார்ப்போம். இங்கு தமிழர் என்பது மலையகம் உள்ளிட்டது. மலையர், பறங்கியரும், மற்றவர்களும் உள்ளடக்கப்படவில்லை.

அரசு துறையில் சதவீகிதத்தில்

சிங்களவர்

தமிழர்

முஸ்லீம்

மொத்த வேலை

உயர்தொழில் நுட்பம் ஏனையவை

82.4

12.11

5.09

141387

நிர்வாக முகாமைத்துவம்;

81.3

15.54

1.91

3705

எழுதுவினையர் அது தொடர்பானதும்;

83.7

13.21

2.16

72997

விற்பனையாளர்

83.1

14.81

2.19

2094

சேவைத்துறை

86.9

9.01

2.43

27428

விவசாயம் மிருக வளர்ப்பு காட்டு தொழில் மீன்பிடி வேட்டை

73.2

21.09

4.98

2930

உற்பத்தி போக்குவரத்து எநதிர இயக்குநர்கள்

85.5

11.05

2.32

100841

மற்றவர்கள்

93.8

3.28

1.29

17467

மொத்தம்

84.3

11.43

3.33

368849

மக்கள் தொகை

73.98

18.16

7.12

100

கூட்டுத்தாபன வேலை சதவீகிதத்தில்

சிங்களவர்

தமிழர்

முஸ்லீம்

மொத்தம்

உயர்தொழில் நுட்பம் ஏனையவை

75.5

21.33

1.87

10801

நிர்வாக முகாமைத்துவம்

83.3

12.51

2.33

5448

எழுதுவினையர் அது தொடர்பானதும்

86.5

9.92

2.32

72323

விற்பனையாளர்

87.2

8.31

2.15

1022

சேவைத்துறை

87.6

8.39

2.93

13240

விவசாயம் மிருக வளர்ப்பு காட்டுதொழில் மீன்பிடி வேட்டை

60.8

35.81

1.15

7458

உற்பத்தி போக்குவரத்து எநதிர இயக்குநர்கள்

88.0

8.36

2.83

115735

மற்றவர்கள்

69.7

26.27

2.59

2504

மொத்தம்

85.74

10.66

2.55

228531

இனவாதம் கூர்மையடைந்ததன் விளைவை நாம் மேலே காண்கின்றோம். படிப்படியாக இனவிகிதத்துக்கு கீழாக அனைத்து சிறுபான்மை இனங்களும் அரசு மற்றும் கூட்டுறவுத்துறையில் வேலை இழந்து செல்லுகின்றன. மாறாக பெரும்பான்மை இனம் அதிக சலுகை பெற்று வருகின்றது. அத்துடன் உலகமயமாதல் அரசு மற்றும் கூட்டுறவுத்துறையில் தனியார் மயமாக்கலையும், வேலை நீக்கத்தையும் கோருகின்றது. இதனால் வேலை வாய்ப்பு வேகமாக குறைந்து செல்லுகின்றது. பெரும்பான்மை இனம் சிறுபான்மை இனங்களை விட அதிக சலுகைகளை இனவாத அரசிடம் தொடர்ந்து பெறுகின்றது. உலகமயமாதலின் விளைவை சிறுபான்மை இனங்கள் மேல் இனவாத அரசு சுமத்துவதன் மூலம், ஒட்டுமொத்த சமூக நெருக்கடியில் இருந்து அரசு தப்பிச் செல்லுகின்றன. இந்த நிலையில் தேசிய இனங்களுக்கிடையில் ஐக்கியப்பட்ட நாட்டில் ஒன்றாக வாழ்வதற்காக, குறைந்த பட்சம் இனவிகித அடிப்படையில் வேலை வாய்ப்புகள் பகிரப்பட முடியாத உலகமயமாதல் நிபந்தனை உள்ளது. அரசு துறையில் வேலை வாய்ப்பை குறைக்கக் கோரும் நிபந்தனையும், வேலை நீக்கக் கோரும் நிபந்தனையும், அரசுதுறையில் தமிழருக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பை வழங்குமளவுக்கு, உலகமயமாதல் சகாப்தத்தில் நிலவும் சமூக அமைப்பால் சாத்தியமில்லை. தமிழருக்கு இனவிகித அடிப்படையில் வேலை வழங்க அரசு முன்வந்தால், சிங்கள மக்களை வேலையில் இருந்து நீக்கவேண்டும். உண்மையில் இனப்பிரச்சனையை இந்த உலகமயமாதல் நிபந்தனைக்குள், ஜனநாயக கோரிக்கையின் அடிப்படையில் தீர்க்க முடியாது. மாறாக ஐக்கியப்பட்ட ஒரே நாட்டில் தீர்க்க இரண்டு தரப்பும் உடன்பட்டால், தமிழரும் சிங்களவரும் இணைந்து மலையக மற்றும் முஸ்லீம் மக்களுக்கு, மற்றும் யாழ் அல்லாத பிரதேசத்துக்கும் நியாயமாக கிடைக்க வேண்டியதை சூறையாடியே அமைதியை ஏற்படுத்துவர். இதையே தமிழ் குறுந் தேசியம் தனது அரசியலாக ஆணையில் வைத்துள்ளது. வேறு எந்த வழியிலும் தீர்க்க முடியாது.

இதை நான் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டுமாயின் 1981 ஆண்டு சனத் தொகை அடிப்படையில், 1990ம் ஆண்டில் அரசு மற்றும் கூட்டுறவுத்துறையில் உள்ள வேலை செய்வோரை இனவிகித அடிப்படையில் பகிரப்பட வேண்டுமாயின் என்ன நடக்கும் எனப் பார்த்தாலே போதும். 1981ம் ஆண்டு மக்கள் தொகையடிப்படையில் சிங்களவர் 74 சதவிகிதமும், தமிழர் 12.7 சதவிகிதமும், முஸ்லீம்கள் 7 சதவிகிதமும், மலையகத்தார் 5.5 சதவிகிதமாகவும், ஏனையோர் 0.8 சதவிகிதமாகவும் இருந்தனர். 1990 இல் அரசு மற்றும் கூட்டுறவுத்துறையில் மொத்தமாக வேலை செய்தோர் அண்ணளவாக 700593 பேராவர். இதில் சிங்களவர் 622126 பேரும், தமிழர் 50442 பேரும், முஸ்லீம்கள் 20317 பேரும், மலையகத்தார் 2101 பேரும், ஏனையோர் 7005 பேரும் வேலை செய்தனர். ஆனால் இன விகித அடிப்படையில் வேலை செய்திருக்க வேண்டியவர்கள் சிங்களவர் 518438யும், தமிழர் 88957யும், முஸ்லீம்கள் 49041யும், மலையகத்தார் 38532யும், ஏனையோர் 5604ம் ஆகும். இனவாதத்தால் இதில் உள்ள இடை வெளியை சிங்களவர் 103688 கூடுதலாகவும், தமிழர் 38533 குறைவாகவும், முஸ்லீம்கள் 28724 குறைவாகவும், மலையகத்தார் 36431 குறைவாகவும், ஏனையோர் 1401 அதிகமாகவும் காணப்படுகின்றனர். அதாவது இனவிகிதத்தை அடிப்படையாகக் கொள்ள வேண்டுமாயின் சிங்களவர் 103688 பேரின் வேலையை பறிக்கவேண்டும். இது மொத்தமாக வேலை செய்வோரில் 14.8 சதவிகிதமாகும். இது சாத்தியமில்லை. மற்றொரு வழியில் வேலை செய்யும் சிங்களவர் எண்ணிக்கையை இனவிகிதமாக்கி, சிங்களவர் அல்லாதவருக்கு வேலை வாய்ப்பை கொடுப்பதாயின் மொத்த வேலைசெய்வோரை 840710 யாக அதிகரிக்க வைக்க வேண்டும் இது மேல் அதிகமாக சிறுபான்மை இனங்களுக்கு 140117 வேலை வாய்ப்பை அரசு மற்றும் கூட்டுறவுத்துறையில் வழங்க வேண்டும். இதுவும் இந்த உலகமயமாதல் சமூக அமைப்பில் சாத்தியமில்லை.

தமிழீழம் கிடைக்குமாயின் கூட இது சாத்தியமில்லை. யாழ் அல்லாத பிரதேசத்துக்கு பிரதேச ரீதியில் பெரும் தொகையான வேலை வாய்ப்பை தமிழீழம் வழங்காது மட்டுமின்றி வழங்க முடியாது. தமிழீழம் உலகமயமாதலை ஆதரிப்பதாக பிரகடனம் செய்கின்றது. உண்மை யதார்த்தத்தில் வெட்ட வெளிச்சமாக எம்முன் உள்ளது. சிங்கள, தமிழ் ஆளும் வர்க்கங்கள் செய்து கொள்ளும் ஒப்பந்தங்கள், சாதிய ரீதியாகவும், சிறுபான்மை இனங்களையும், பிரதேசங்களையும் சூறையாடியே இன ஒற்றுமையை அல்லது இனப் பிளவை வித்திடுகின்றன.