தமிழ் அரங்கம்

Friday, June 6, 2008

மற்றவன் மூளையை கழற்றிவைத்து விட்ட திமிரில், மூளை இருக்க என்று கேட்பதே பார்ப்பனியம் - பகுதி 1

விலைவாசி உயர்வு : தனியார்மயம் பரப்பும் கொள்ளைநோய்! கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக நீறுபூத்த நெருப்பாக இருந்துவந்த விலைவாசி உயர்வு, இப்பொழுது எரிமலையைப் போல வெடித்திருக்கிறது. அரிசி, கோதுமை, சோளம், சமையல் எண்ணெய், பால் போன்ற உணவுப் பொருட்கள் தொடங்கி, இரும்பு, நிலக்கரி, கச்சா எண்ணெய் போன்ற மூலப்பொருட்கள் வரை அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி தாறுமாறாக உயர்ந்து வருகின்றன. இந்தியா மட்டுமின்றி, ஆசியா, ஆப்பிரிக்கா, இலத்தீன் அமெரிக்கக் கண்டங்களைச் சேர்ந்த அனைத்து ஏழை நாடுகளும் இவ்விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளன.

சென்னையைச் சேர்ந்த சுமதி, மூன்றுநான்கு வீடுகளில் வேலை பார்ப்பதன் மூலம் மாதம் ரூ. 3,000 வரை கூலி பெறுகிறார். ""தனது மாதாந்திர வருமானம் உயராதபொழுது, விலைவாசி மட்டும் உயர்ந்து கொண்டே செல்வதாக''க் கவலைப்படும் சுமதி, ""இவ்விலை உயர்வைச் சமாளிக்கத் தனது குடும்பத்தின் உணவுத் தேவைகளைச் சுருங்கிக் கொண்டதாக''க் கூறுகிறார்.

வங்காள தேசத்தில், ஒரு கூலித் தொழிலாளி உணவுக்காக இரண்டு கிலோ அரிசி வாங்க வேண்டும் என்றால், தனது தினக்கூலியில் சரிபாதியை அரிசிக்கு மட்டுமே ஒதுக்க வேண்டிய அளவிற்கு விலைவாசி உயர்ந்துள்ளது.
ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள ஏழைநாடான ஏமனில், ஒரு ""லோஃப்'' ரொட்டியின் விலை, தொழிலாளர்களின் தினக்கூலியில் கால் பாகத்தை முழுங்கி விடுகிறது.

இந்த விலை உயர்வினால், பல்வேறு ஏழை நாடுகளைச் சேர்ந்த 10 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே தள்ளப்படுவார்கள் என உலக வங்கியே எச்சரித்திருக்கிறது.

எனினும் மன்மோகன் சிங்ப.சிதம்பரம் கும்பலைப் பொருத்தவரை விலைவாசி உயர்வு என்பது ஒரு பிரச்சினையே அல்ல. ""பொருளாதார வளர்ச்சி இருக்கும்பொழுது, விலைவாசி உயரத்தான் செய்யும்'' என்ற பொருளாதார சூத்திரத்தைக் கூறி அவர்கள் இக்கொள்ளைநோயை நியாயப்படுத்தியும் வருகிறார்கள். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுத்தால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என அவர்களும், தரகு முதலாளிகளும் பீதியூட்டுகிறார்கள். மேலும், ""மக்களிடம் பணப்புழக்கம் அதிகமாகி, அவர்கள் பொருட்களை வாங்கிக் குவிப்பதால்தான், (அதிக கிராக்கி, குறைந்த வரத்து என்ற அடிப்படையில்) அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்வதாக''க் கூறி, பழியை மக்களின் தலையில் சுமத்துகிறார்கள். விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார், ""தென்னிந்திய மக்கள் அதிகமாக சப்பாத்தி சாப்பிடத் தொடங்கியதையடுத்துதான், கோதுமைக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக''க் கூறியிருக்கிறார்.
.

No comments: