தமிழ் அரங்கம்

Monday, April 14, 2008

நேபாளம் : தெற்காசியாவின் கலங்கரை விளக்கம்

நேபாளம் :
தெற்காசியாவின் கலங்கரை விளக்கம்


ரலாற்று சிறப்புமிக்க இந்த பொதுக்கூட்டத்தின் தோழமைக்குரிய தலைவர் அவர்களே, தமிழகத்தின் பல்வேறு அரசியல் இயக்கங்கள் அமைப்புகளின் தலைவர்களே, இங்கே வீரஞ்செறிந்த முறையிலே திரண்டிருக்கிற தமிழக மக்களே, தமிழகத்தின் வரலாற்று புகழ்மிக்க போராடுகிற மக்களுக்கு முதற்கண் என்னுடைய சிவப்பு வணக்கத்தை, வாழ்த்துக்களை உரித்தாக்க விரும்புகிறேன்.

உங்கள் அனைவருக்கும் முதலில் என்னுடைய உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். சென்னை சிறையில் மூன்றாண்டுகளுக்கு மேலாக நான் அடைத்து வைக்கப்பட்டிருந்தபோது, தமிழகத்திலே இருக்கிற அரசியல் இயக்கங்களின் தலைவர்கள், பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், அனைவருக்கும் மேலாக மக்களாகிய நீங்கள், என்னை நேபாளத்திற்கு அனுப்பக் கூடாது; நேபாள அரசிடம் ஒப்படைக்கக் கூடாது என்பதற்காகப் போராடினீர்கள். நான் நேபாளத்திடம் ஒப்படைக்கப்படுவதை நீங்கள் அப்படி தடுத்திராவிட்டால், அங்கு நேபாள இராணுவத்திடம் பிடிபட்ட ஐயாயிரம் பேர் என்ன கதிக்கு ஆளானார்களோ, அதே நிலைமைக்கு நானும் ஆளாகியிருப்பேன். நான் நேபாள அரசிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தால், இப்போது உங்களிடம் பேசுவதற்கு இருந்திருக்க மாட்டேன்.

நேபாளத்தில் அரசியல் போராட்டத்திலே நாங்கள் வெற்றி கண்டு, அரசியல் மாற்றங்கள் ஏற்பட்ட பிறகு, நேபாளச் சிறைகளில் அடைபட்டிருந்த எங்களுடைய தோழர்களெல்லாம் சிறையிலிருந்து விடுதலை செய்யபட்டபோதுகூட, இந்தியாவில் தமிழ்நாடு அரசு என்னை சிறையிலே இருந்து விடுவிக்கவில்லை.

நீங்கள் எடுத்த முயற்சிக்கு நன்றி தெரிவிக்கிற வகையில், சிறையிலே இருந்து விடுதலை செய்யப்பட்டதும் முதலில் உங்களைப் பார்த்து நன்றி சொல்ல வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். ஆனால், சென்னையிலே என்னை விடுதலை செய்தவுடனே, மீண்டும் வேறு ஒரு வழக்கிலே என்னை தளைப்படுத்தி ஜல்பைகுரிக்கு கொண்டு சென்றார்கள்.

மேற்கு வங்கத்திலிருக்கிற ஜல்பைகுரி சிறையிலிருந்துதான் இறுதியாக நான் விடுதலை செய்யப்பட்டேன். அதனால்தான் சிறையிலேயிருந்து வெளியே வந்தவுடனே உங்களுக்கு நன்றி தெரிவிக்கிற கடமையை என்னால் நிறைவேற்ற முடியவில்லை.

என் விடுதலைக்காக நீங்கள் போராடிய அந்த காலம் நெருக்கடிகள் நிறைந்த ஒரு காலம். ஏனென்றால், என்னை ஒரு பயங்கரவாத இயக்கத்தினுடைய தலைவராக சிறைப்படுத்தி வைத்திருந்தார்கள். அரசாங்கத்தால் பயங்கரவாதி என முத்திரை குத்தப்பட்ட ஒருவருக்கு ஆதரவாக, வெளியிலே போராடுவது கடினமானது என்பதை நான் அறிவேன். அப்படியிருந்தும் இடர்ப்பாடுகளைப் பொருட்படுத்தாமல் என்னை நேபாளத்திடம் ஒப்படைக்கவிடாமலும், என்னை விடுவிப்பதற்காகவும், எனக்கு ஆதரவாகவும் நீங்கள் அரும்பாடுபட்டுப் போராடினீர்கள்.

என்னைப் பிடித்து நேபாளத்திலே ஒப்படைக்கவிடாமல் தடுப்பதற்காக நீங்கள் பாடுபட்டீர்கள். எனது விடுதலைக்காக நீங்கள் உறுதியாகப் போராடினீர்கள். உங்களுடைய இந்த போராட்டமும் உழைப்பும் உண்மையான பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தின் அடையாளம் என்று நாம் எடுத்துக் கொள்கிறோம்.

எங்கள் கட்சி மக்கள் திரளின் புரட்சிகரப் போராட்டங்களில் ஒருமைப்பாடு கொண்டிருக்கிறது. நீங்கள் எடுத்துக்கொண்ட அந்த முயற்சிக்காக எங்களது கட்சி உங்களுக்கு செவ்வணக்கம் கூறவும், நன்றி கூறவும் பணித்திருக்கிறது. எனவே, மீண்டும் ஒருமுறை நான் சார்ந்திருக்கிற கட்சியின் சார்பில் உங்களுக்கு செவ்வணக்கமும் உளமார்ந்த நன்றியும் கூறிக் கொள்கிறேன்.

நேபாளத்திலே இருக்கிற அரசியல் சூழலைப் பொறுத்தவரை, பல்வேறு அரசியல் சக்திகள் புரட்சிகர சக்திகள்கூட நேபாளத்தின் நிலைமை எத்தகையது, அங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது குறித்து குழம்பி போய் இருக்கிறார்கள். அமைதி வழி மாற்றத்தை நோக்கி நாங்கள் அடி எடுத்துள்ளோம். எங்களுடைய மக்கள் விடுதலை இராணுவம் 20,000 வீரர்களைக் கொண்டிருக்கிற வலிமையான இராணுவம் — ஐ.நா. படைகளைவிட இருமடங்கு பெரிய இராணுவம். இதைக் கண்டு அமெரிக்க ஏகாதிபத்தியமே அஞ்சக்கூடிய நிலை இங்கிருக்கிறது. அந்த இராணுவம் முகாம்களிலே அடைக்கப்பட்டிருக்கிறது. எங்களுடைய ஆயுதங்கள் பெட்டகங்களிலே வைத்து பூட்டப்பட்டிருக்கின்றன. சில புரட்சியாளர்கள் நாங்கள் எங்களுடைய ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டோம், ஆயுதங்களைக் கையளித்து விட்டோம் என்று கருதிக் கொண்டு குழப்பமடைந் திருக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல.

பத்தாண்டு காலம் நடந்து வந்திருக்கிற மக்கள் போர், அங்கே இன்றைக்கு இருக்கிற அரசியல் சூழலைத் தோற்றுவித்திருக்கிறது. அந்த ஆயுதப் போராட்டம் தோற்றுவித்த அரசியல் சூழல் எத்தகையது என்றால், ஆயுதமேந்தி நாங்கள் அடையக்கூடிய நோக்கத்தை அமைதியான முறையிலே அடைகிற வாய்ப்பை அது ஏற்படுத்தியிருக்கிறது. எனவே தான், நாங்கள் ஆயுதப் போராட்டத்தை நிறுத்தி வைத்திருக்கிறோம். தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறோமே தவிர, ஆயுதப் போராட்டத்தை ஒரேயடியாக கைவிட்டுவிடவில்லை என்பதைத் தெளிவாக்க விரும்புகிறேன்.

எங்களுடைய நண்பர்களும் தோழர்களும் கவலைப்படுகிறார்கள். எங்களுடைய மக்கள் விடுதலைப் படை பாசறைகளுக்குள்ளே அடைபட்டிருக்கின்றனவே, ஆயுதங்கள் பெட்டகங்களிலே பூட்டி வைக்கப்பட்டிருக்கின்றனவே என்று அவர்கள் கவலைப்பட்டு கொண்டிருக்கிறார்கள். நான் அவர்களுக்குச் சொல்கிறேன், கவலைப் பட வேண்டாம். பெட்டகங்களைப் பூட்டி அதனுடைய சாவி எங்களுடைய படைத் தளபதியின் கையிலேதான் இருக்கிறது. எப்போது தேவை என்றாலும் திறந்து எடுத்துக் கொள்ள முடியும் என்று தெரியப்படுத்த விரும்புகிறேன்.

மறுதரப்பிலே வேறு சிலர் இருக்கிறார்கள். உதாரணமாக, அமெரிக்க ஏகாதிபத்தியம் சொல்கிறது, மாவோயிஸ்டுகள் மாறிவிடவில்லை என்று; மாவோயிஸ்டுகள் தங்கள் கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை என்று; பிற்போக்காளர்கள் சொல்கிறார்கள், மாவோயிஸ்டுகள் மாறவில்லை, அவர்களை மாற்ற வேண்டும் என்று. இந்திய அரசும் அப்படித்தான் சொல்கிறது. நேபாளத்திலே இருக்கிற பிற்போக்கு அமைப்புகள் சொல்கின்றன; நேபாள காங்கிரசு, ஐக்கிய நேபாள மார்க்சிஸ்டுலெனினிஸ்டு போன்ற அமைப்புகளெல்லாம் சொல்கிறார்கள், மாவோயிஸ்டுகள் மாறவில்லை என்று. நான் அவர்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நாங்கள் வந்திருப்பது எங்களை மாற்றிக் கொள்வதற்காக அல்ல; உங்கள் மாற்றுவதற்காகவே நாங்கள் வந்திருக்கிறோம்.

நான் முன்பே கூறியது போல, நாங்கள் நடத்தி வந்திருக்கிற போராட்டம் ஒரு புதிய அரசியல் சூழலைத் தோற்றுவித்திருக்கிறது. பத்தாண்டு காலம் நடந்திருக்கிற மக்கள் போரினால் ஏற்பட்டிருக்கிற அந்த அரசியல் சூழல், ஆயுதங்களை கொண்டு நாங்கள் அடையக்கூடிய நோக்கத்தை அரசியல் வழிமுறைகளைக் கொண்டு அடைகிற வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. நாங்கள் எங்கள் நோக்கத்தை அந்த அரசியல் வழிமுறையில் அடையத்தான் போகிறோம்.

வேறு சிலர் இருக்கிறார்கள்; அவர்கள் எங்களுக்கு உபதேசம் செய்ய முற்படுகிறார்கள்; அறிவுரை செய்கிறார்கள். கீதோபதேசம் செய்கிறார்கள். ""நீங்கள் மக்கள் போரை நடத்தியவர்கள், ஆனால், இப்போது நீங்கள் போராட்டம் போதும் என்ற நிலைக்கு வந்திருக்கிறீர்கள். ஆயுதப்போராட்டம் தேவையில்லை, வன்முறை தேவையில்லை; அதன் மூலம் எதையும் சாதிக்க முடியாது. இறுதியாக இப்போது நீங்கள் மக்கள் திரள் போராட்டங்களை நடத்தி வருகிறீர்கள். எனவே ஆயுதப்போராட்டத்தை நீங்கள் நடத்தியிருக்கத் தேவையில்லை'' என்று அவர்கள் எங்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்து அவர்கள், எங்களைப் படிப்பினை பெற்றுக் கொள்ளச் சொல்கிறார்கள். அப்படி இல்லை; நாங்கள் ஆயுதப்போராட்டம் தேவையில்லை என்று ஒரு போதும் கருதவில்லை என்று தெரியப்படுத்த விரும்புகிறேன்.

உண்மை என்னவென்றால், பத்தாண்டுகால மக்கள் போர் நடைபெற்றிருக்கவில்லையென்றால், 19 நாள் பெருந்திரள் எழுச்சி ஏற்பட்டிருக்காது. அந்த 19 நாள் மக்கள் எழுச்சி ஏற்பட்டிருக்காவிட்டால், அரசியல் சூழ்நிலையில் எந்த மாற்றமும் ஏற்பட்டிருக்காது. எனவே, இந்த மக்கள் எழுச்சியை உருவாக்கியதில், அரசியல் சூழலை மாற்றியதில் 10 ஆண்டுகாலம் நடத்தியிருக்கிற மக்கள் போருக்கு மிக முக்கியமான பங்கிருக்கிறது என்பதைத் தெரியப்படுத்த விரும்புகிறோம்.

நேபாள வரலாற்றில் மக்கள் எழுச்சி என்பது புதிய செய்தியல்ல; கடந்த காலத்தில் மக்கள் பலமுறை பெருந்திரளாக எழுந்து போராடியிருக்கிறார்கள். ஆனால், அந்த எழுச்சிகளெல்லாம் கொடிய முறையிலே அடக்கி ஒடுக்கி நசுக்கப்பட்டன.

ஆனால், இந்த முறை, 19 நாள் மக்கள் எழுச்சியை அவர்களால் ஒடுக்க முடியவில்லை; அதற்குக் காரணம், மக்கள் விடுதலை இராணுவம் அருகிலே இருந்தது என்பதுதான். காத்மாண்டு பள்ளத்தாக்கை மக்கள் விடுதலை இராணுவம் சுற்றி வளைத்துக் கொண்டிருந்தது. எனவே, மக்களுக்கு நம்பிக்கை இருந்தது. நம்மை நேபாள இராணுவம் சுடுமானால், பக்கத்திலே இருக்கிற மக்கள் விடுதலை இராணுவம் தலையிட்டுச் செயல்படும் என்ற நம்பிக்கை இருந்தது. அதேபோல் இராணுவத்தினருக்கும் தெரியும், எனவே தாங்கள் எதுவும் செய்ய முடியாது என்பதால், அந்த மக்கள் எழுச்சியை அவர்களால் அடக்கவோ ஒடுக்கவோ முடியவில்லை. எனவேதான், 19 நாட்கள் நடந்த மக்கள் எழுச்சியானது, தனது உடனடி நோக்கத்தில் வெற்றி பெற முடிந்தது.

இப்போது நேபாளம், அரசமைப்புப் பேரவை தேர்தலுக்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. நேபாள மாவோயிஸ்டு கட்சி இதற்கு முன்பே விரிவாக கூறியது, அரசமைப்பு பேரவைக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும்; அரசமைப்புப் பேரவை கூட்டப்பட்டு புதிய அரசமைப்புச் சட்டம் இயற்றப்படவேண்டும்; அந்த புதிய அரசமைப்புச் சட்டத்தின் வழியாக புரட்சிகர மாற்றம் ஏற்பட வேண்டும் என்று. நாங்கள் ஏற்கெனவே தெளிவுபடுத்தியிருக்கிறோம். இது குறித்தும் பலருக்கு சந்தேகம் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. புரட்சிகர அணிகள் இது குறித்து ஐயம் தெரிவித்து வருகிறார்கள்.

ஏன் தேர்தல் நடக்கிறது, அத்தேர்தல் என்ன பங்கு வகிக்கிறது. தேர்தலில் நாங்கள் ஏன் பங்கேற்கப் போகிறோம் என்பன பற்றி அந்த நண்பர்கள் குழப்பமடைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு அரசமைப்புப் பேரவைக்கான தேர்தல் என்பதன் உண்மையான பொருள் விளங்கவில்லை. ஆகவேதான் அவர்கள், மற்றக் கட்சிகளோடு தேர்தல் பங்கேற்பு கட்சிகளோடு எங்களை ஒப்பிட்டு குழப்பிக் கொள்கிறார்கள்.

இந்த நண்பர்கள் ஏப்ரல் 10 அன்று நடைபெற இருக்கிற தேர்தலைச் சரிவர விளங்கிக் கொள்ளவில்லை. ஏப்ரல் 10ஆம் நாள் நடைபெறுவதற்குத் திட்டமிடப்பட்டிருக்கிற அரசமைப்புப் பேரவை தேர்தல் என்பது, ஒரு புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான தேர்தலாகும். இப்பேரவையின் பிரதிநிதிகள் புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவார்கள். அதற்கான தேர்தலாகும். இந்தத் தேர்தலை, சில ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவில் நடைபெறும் தேர்தலோடு இந்த நண்பர்கள் குழப்பிக் கொள்கிறார்கள். அங்கே நடைபெறுகிற தேர்தல், நேபாள சமுதாயத்தில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான தேர்தல். இங்கே ஐந்தாண்டுக்கு ஒருமுறையோ, நான்காண்டுக்கு ஒருமுறையோ நடத்தப்படுகிற தேர்தலால் எந்த மாற்றமும் வருவதில்லை. அந்த தேர்தலும் இந்த தேர்தலும் ஒன்றல்ல என்று நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

நாங்கள் இந்த அரசமைப்புப் பேரவைக்கான தேர்தலில் உயிர்மரணப் போராட்டத்திலே ஈடுபட்டிருக்கிறோம். ஏனென்றால், இந்த தேர்தலிலே புரட்சிகர சக்திகள் வெற்றி பெறுமானால், நாங்கள் புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதாக, ஒரு புதிய ஜனநாயக நேபாளத்தை உருவாக்குவதாக அது இருக்கும். நாங்கள் தோற்று பிற்போக்கு சக்திகள் வெற்றி பெறுவதாக இருந்தால், அவர்கள் ஒரு புதிய வடிவிலான முடியாட்சிக்குத் திரும்பி செல்கிற பிற்போக்கு நிலைக்கு திரும்பிச் செல்கிற ஆபத்து இருக்கிறது. எனவேதான், மிகுந்த அக்கறையோடும் கடுமையான உழைப்போடும் இந்தத் தேர்தலில் வெற்றிபெற நாங்கள் உயிர்மரணப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம்.

இப்போது ஏப்ரல் 10 அன்று நடைபெறுவதாக இருக்கிற அரசமைப்பு பேரவைத் தேர்தல், சென்ற ஆண்டு ஜூன் மாதத்திலேயே நடந்திருக்க வேண்டும். ஆனால் அந்த தேர்தலை அவர்கள் மீண்டும் மீண்டும், திரும்பத் திரும்ப தள்ளிப் போட்டு வந்திருக்கிறார்கள். பிற்போக்குச் சக்திகள் இந்தத் தேர்தலை நடைபெற விடாமல் தள்ளிப் போட்டிருக்கிறார்கள்.

சென்ற ஜூன் மாதத்திலேயே, இந்த தேர்தல் நடைபெற்றிருக்குமேயானால், உறுதியாக தேர்தலிலே எங்கள் கட்சி வெற்றி பெற்றிருக்கும். அதன் விளைவாக, புதிய ஜனநாயக நேபாளம் உருவாகியிருக்கும். இந்த அரசியல் எதார்த்த நிலையை பிற்போக்கு சக்திகள் மிக நன்றாகப் புரிந்து வைத்துக் கொண்டு இருந்ததால்தான், அந்த தேர்தலை நடத்த விடாமல் செய்தார்கள்.

வெளியிலிருந்து பார்க்கும்போது, நேபாளம் அமைதியான முறையில் அரசியல் மாற்றத்தை நோக்கிச் செல்வதாகத் தோன்றக்கூடும். ஆனால் அது உண்மையல்ல. அங்கே, மிகப் பெரிய போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டத்தில் இரு வர்க்கங்கள் மோதிக் கொண்டிருக்கின்றன. ஒரு பக்கத்தில், புரட்சிகர வர்க்கம் புரட்சிகர கட்சிகள். மறுபக்கத்தில், பிற்போக்கு வர்க்கம் பிற்போக்கு கட்சிகளும் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அது ஒரு பெரும்போர் என்று வர்ணிக்கலாம். இந்தப் போராட்டத்தில் அவர்கள் வெற்றி பெற்றால், ஒரு பிற்போக்கான ஆட்சியை நிறுவுவார்கள். புரட்சிகர சக்திகள் வெற்றி பெற்றால், புதிய அரசமைப்பை நிறுவுவார்கள். எனவே அங்கு பெரிய போர் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இப்போது நேபாளத்தில் இருவேறு எதிர் எதிரான சக்திகள் எதிரெதிரான கட்சிகள் மோதிக் கொண்டிருக்கின்றன. தயவு செய்து நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய செய்தி, இந்த தேர்தலில், அந்த எதிரெதிரான சக்திகளுக்கு இடையான போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அங்கு பிற்போக்கு சக்திகளுக்கு மன்னராட்சிக்கு, அமெரிக்கா ஆதரவாக இருக்கிறது. இந்திய ஆளும் வர்க்கத்தின் இந்து அடிப்படைவாத சக்திகள் அவர்களுக்கு ஆதரவாக இருந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் முடி மன்னருக்கும் பிற்போக்கு அமைப்புக்கும் ஆதரவாக இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

மறுபக்கம், முடியாட்சிக்கு புத்துயிர் அளிக்கக் கூடிய பிற்போக்கு சக்திகளுக்கு எதிராக, அங்கே புரட்சிகர கட்சிகள், இடதுசாரி சக்திகள் பொதுவுடமை சக்திகள் மற்றும் நேபாள உழைக்கும் மக்கள் அனைவரும் ஓரணியாகத் திரண்டு போராடிக் கொண்டிருக்கின்றனர். நேபாளத்தின் அந்த முற்போக்கு சக்திகளுக்கு உலகெங்குமிருக்கிற புரட்சிகர மக்களின் ஆதரவு இருந்து வருகிறது. அவர்கள் முடியாட்சியை முடிவு கட்டுவதற்கான போராட்டத்தில் ஒன்றுபட்டு ஈடுபட்டிருக்கிறார்கள். மக்கள் ஜனநாயகக் குடியரசை நிறுவுவதற்கான போராட்டத்தில் ஒன்றுபட்டு நிற்கிறார்கள்.

அமெரிக்க மேல்நிலை வல்லரசு நேபாளத்தின் முடியாட்சியை ஆதரித்து கொண்டிருக்கிறது. அதனுடைய மேலாதிக்க நலன்களுக்கு அதுதான் பொருத்தமென்பதால் முடியாட்சியை ஆதரிக்கிறது. இந்தியாவிலே இருக்கிற இந்துத்துவ சக்திகள், ""நேபாளத்தை பார்! அங்கே இந்து அரசு நடப்பதை பார்! அதேபோன்ற ஒரு இந்து அரசை இந்தியாவில் நிறுவ வேண்டும்'' என்பதற்கு நேபாளத்தை எடுத்துக்காட்டாக காட்டுவதற்காகவே, நேபாளத்திலே முடியாட்சியை ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே, நாங்கள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷûக்கு சவால் விடுகிறோம். உங்களுக்கு முடியாட்சி மீது காதல் இருக்குமானால், அந்த முடியாட்சியை உங்கள் நாட்டுக்கே கொண்டு போய் வைத்துக் கொள்ளுங்கள். தம்பிடி காசும் விலை கொடுக்காமல் முடியாட்சியை உங்கள் கையிலே ஒப்படைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

நாங்கள் பா.ஜ.க. தலைவர்களுக்குச் சொல்ல விரும்புகிறோம். உங்களுக்கு முடியாட்சி மீது அவ்வளவு ஆசையும் காதலும் இருக்குமானால், அந்த முடியாட்சியை தில்லிக்குக் கொண்டு வந்து தில்லியிலே அரியணையில் அமர்த்திக் கொள்ளுங்கள். தில்லி அரியணையிலே முடிமன்னனை அமர்த்த மக்கள் உங்களை அனுமதிக்க மாட்டார்கள் என்றால், உங்கள் கட்சி அலுவலகத்திற்கு உள்ளே கொண்டு போய் வைத்து தினந்தோறும் வழிபாடு செய்யுங்கள்.

நேபாளத்தில் முடியாட்சிக்கு செயலளவிலே நாங்கள் முடிவு கட்டிவிட்டோம். முடியாட்சியின் கதை ஏற்கெனவே அங்கே முடிந்து போய்விட்டது. இப்போது நேபாள மன்னர் நேபாள படையினுடைய தலைவருமில்லை; அங்கே நடைபெறுகிற ஆட்சியின் தலைவரும் இல்லை.

எனவே, ஏறத்தாழ ஒழிந்து போன நிலையிலே அந்த முடியாட்சி இருந்து கொண்டிருக்கிறது. நாங்கள் அங்கே எதை எதிர்த்துப் போராடுகிறோமென்றால், செத்துக் கொண்டிருக்கிற முடியாட்சியை எதிர்த்து அல்ல; எங்களுடைய போராட்டம் ஏகாதிபத்தியத்திற்கெதிரானது, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரானது. அந்தப் போராட்டத்தைத்தான் நாங்கள் நேபாளத்திலே நடத்திக் கொண்டிருக்கிறோம்.

உலக மக்களுக்குப் பகைவனாக இருக்கிற அமெரிக்க வல்லாதிக்கம், வலிமை பொருந்திய ஒரு ஆற்றலாக இருக்கிற காரணத்தினால், அதனை ஒழித்துகட்ட நேபாள மக்கள் மட்டும் போதாது. உலகெங்கும் இருக்கிற மக்கள் ஒன்றுபட்டு தங்கள் பொதுப் பகைவனாகிய அமெரிக்க ஏகாதிபத்தியத்தை வீழ்த்த வேண்டும். ஆகவே, அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வீழ்த்துவதற்கு, நேபாளஇந்திய மக்களின் ஒற்றுமை அவசியம் என்று கருதுகிறோம். நேபாள மக்களும் இந்திய மக்களும் ஒன்றுபட்டு அமெரிக்க ஏகாதிபத்தியத்தை வீழ்த்துவோம் என்று அறைகூவி அழைக்கிறேன்.

நாங்கள் தேர்தலிலே வெற்றி பெறக் கூடிய நிலையிலே இருக்கிறோம். தேர்தலிலே வெற்றி பெற்று புரட்சிகரமான மாற்றத்தை நாங்கள் ஏற்படுத்தப் போகிறோம் என்று கருதித்தான் பிற்போக்கு சக்திகள் ஏகாதிபத்திய சக்திகள், விரிவாக்கப் பேராசை கொண்ட சக்திகள், மாற்றத்தை விரும்பாத சக்திகள் நேபாள பிற்போக்காளர்களை வலியுறுத்தி ""தேர்தலை நடத்தாதே! தேர்தலை நடத்த விடாமல் செய்!'' என்று தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நாங்கள் நேபாளத்திலே நடைபெற இருக்கிற தேர்தலில், அந்த தேர்தல் போராட்டத்தில் மாபெரும் வெற்றி பெறுவோம் என்று உறுதியாக நம்புகிறோம். நேபாளத்தினுடைய 75 மாவட்டங்களிலும் சென்ற ஜனவரி 13ஆம் தேதி நாங்கள் பெருந்திரள் கூட்டங்களை நடத்தினோம். அங்கே திரண்ட இலட்சக்கணக்கான மக்களைப் பார்த்து, பிற்போக்கு சக்திகள் எங்கள் வெற்றி உறுதி என்று தெரிந்து அஞ்சி நடுங்கி, தேர்தலைச் சீர்குலைக்கவும், தேர்தலிலே நாங்கள் வெற்றி பெற விடாமல் தடுக்கவும் மீண்டும் சூழ்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

நாங்கள் இரண்டு வழிகளுக்கும் தயாராக இருக்கிறோம். முதலாவதாக, தேர்தலை நடத்தும்படி அரசை நெருக்கி நிர்பந்திப்போம். அப்படி தேர்தல் நடத்தப்படுமானால், நாங்கள்இடதுசாரி சக்திகள் வெற்றி பெற்று ஒரு புதிய அரசமைப்புச் சட்டத்தை இயற்றி, கூட்டாட்சி குடியரசை, புதிய ஜனநாயகக் குடியரசை நேபாளத்திலே நிறுவுவோம். ஒரு மக்கள் குடியரசை நாங்கள் நிறுவுவோம். அப்படி அவர்கள் தேர்தலை நடத்த மறுப்பார்களேயானால், சீர்குலைப்பார்களேயானால் இரண்டாவது வழி இருக்கிறது. நாங்கள் மக்களைத் திரட்டி இந்த அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்த அணியமாக இருக்கிறோம்.

அவர்கள் தேர்தல் நடைபெறாவிடாமல் சீர்குலைப்பார்களானால், எந்த தேதியிலே தேர்தல் நடைபெற்றிருக்க வேண்டுமோ அதே நாளில், நாங்கள் மீண்டுமொரு மக்கள் எழுச்சிக்கு அறைகூவல் விடுப்போம். மீண்டுமொரு மக்கள் இயக்கத்தை நடத்தி இந்தத் தேர்தலை நடத்த விடாமல் தடுத்த சக்திகளை தூக்கியெறிவோம். அப்போது அந்த மக்கள் எழுச்சி மூலமாக வீழ்த்தப்படுவதும் வெளியேற்றப்படுவதும் முடியாட்சியாக மட்டும் இருக்காது. நேபாளத்தினுடைய பிற்போக்குச் சக்திகள் அனைவரையும் தூக்கியெறிந்து விட்டு, நேபாளத்தை விடுதலை செய்து, எவரெஸ்டின் உச்சியிலே புரட்சி செங்கொடியினைப் பறக்க விடுவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகத்தின் பிற்போக்காளர்கள் ஏகாதிபத்தியவாதிகள் ஒரு வதந்தியைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். 21ஆம் நூற்றாண்டில் இனிமேல் உலகத்தில் எந்த நாட்டிலும் புரட்சி நடைபெற முடியாது என்று அவர்கள் மக்களை ஏய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

சோசலிசம் அழிந்து போய் விட்டது; மார்க்சியம் பொருத்தப்பாட்டை இழந்து விட்டது; கம்யூனிச புரட்சிக்கு இனி வாய்ப்பில்லை என்று அவர்கள் கதைகட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கூறுவதை பொய்யாக்குகிற விதத்திலே, 21ஆம் நூற்றாண்டின் முதலாவது புரட்சி என்ற வகையிலே, நேபாளத்திலே நாங்கள் புரட்சியிலே வெற்றி பெறுவோம். உலகெங்குமுள்ள புரட்சிகர மக்களின் பேரதரவுடன் புரட்சியின் வெற்றியின் வாயிலிலே நாங்கள் நின்று கொண்டிருக்கிறோம். அந்த புரட்சியினுடைய வெற்றி என்பது, உலகத்திற்கு புரட்சி இன்றும் பொருத்தப்பாடுடையது என்பதை இமயத்தின் உச்சியில் ஏறி அறிவிப்பதாக இருக்கும்.

ஆகவே நேபாளத்தில் புரட்சி என்பது, நேபாளத்திற்கு மட்டுமேயான புரட்சியாக இருக்காது. அது இந்திய மக்களுக்கும் உலகெங்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் நம்பிக்கையூட்டுகிற புதிய புரட்சியாக இருக்கும். இந்திய மக்கள் இந்த உண்மையைப் புரிந்து கொள்வார்களேயானால், இந்திய மக்களும் நேபாள மக்களும் இந்த புரட்சிக்காக ஒன்றுபட்டு நிற்பார்களேயானால், நேபாள புரட்சியைத் தடுத்து நிறுத்துகிற சக்தி உலகத்தில் எவருக்குமில்லை என்று நான் உறுதியாகச் சொல்வேன். இந்தியநேபாள மக்களின் ஒற்றுமையின் வாயிலாக, அந்தப் புரட்சியை நாம் வெற்றி பெறச் செய்வோம்.

நான் கர்நாடகம் சென்றிருந்த போது, அங்கே செய்தி ஏடுகளிலேய ஒரு செய்தியைப் படித்தேன். எங்கள் தலைவர் பிரசந்தா அவர்கள், இலங்கையிலே தமிழீழ விடுதலை இயக்கத்தைப் பற்றியும், அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரனைப் பற்றியும் என்ன கூறினார் என்பது பற்றியது அது. அதனால் ஒரு குழப்பம் நிலவுவதாகத் தெரிந்து கொண்டேன்.

உண்மை என்னவென்றால், இலங்கையிலிருந்து ஒரு அமைச்சர் நேபாளத்திற்கு வந்திருந்தார். அவர் எங்களுடைய தலைமையைச் சந்தித்துப் பேசுவதற்காக வந்தார். நான் எங்கள் கட்சியின் பன்னாட்டு பிரிவின் தலைவர் என்ற போதிலும், அந்த கூட்டத்தில் நானும் கலந்து கொண்டிருக்க வேண்டுமென்றாலும் கூட, அந்த நேரத்தில் வேறு பணி காரணமாக நான் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. எங்கள் தலைவரை அந்த அமைச்சர் சந்தித்துப் பேசிவிட்டு வந்து, வெளியே செய்தியை திரித்து தவறாக வெளியிட்டு விட்டார். இலங்கையில் ஆயுதப் போராட்டம் நடத்த தேவையில்லை என்றும் இலங்கைத் தமிழர்கள் அமைதி வழியிலே தங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளலாம் என்றும் எங்கள் தலைவர் கூறியதாக அவர் சொல்லிச் சென்று விட்டார். இது முழுப்பொய். முழுக்க முழுக்க தவறான செய்தி என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

எங்கள் கட்சியின் கொள்கை என்னவென்றால், எந்தவொரு விடுதலை இயக்கத்தையும் நாங்கள் ஆதரிக்கிறோம். எங்கெல்லாம் தேசிய ஒடுக்குமுறை நிலவினாலும் அதை எதிர்த்து விடுதலைக்காகப் போராடுகிற உரிமை மக்களுக்கு உண்டு. இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை அவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள். இலங்கைத் தமிழ் தேசிய இனம் சிங்கள பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகிறது. ஆகவே, இலங்கைத் தமிழர்களுக்கு தங்கள் தேசிய விடுதலைக்காகப் போராட முழு உரிமை உண்டு. அவர்களது போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

நேபாளத்திலேயே சின்னஞ்சிறு தேசிய இனங்கள் சில இருக்கின்றன. அந்த தேசிய இனங்கள் தங்கள் விடுதலைக்காக போராடுகின்றன. ஏனென்றால், அவை தேசிய ஒடுக்குமுறைக்குள்ளாகியிருக்கின்றன. அந்த தேசிய இனங்களின் போராட்டத்தை எங்கள் கட்சிதான் தலைமையேற்று நடத்துகிறது. தேசிய விடுதலைக்காக நாங்கள் போராடுகிறோம். உலகெங்கும் தேசிய விடுதலை இயக்கங்களை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆகவே, எங்களுடைய தலைவர் பிரசந்தா, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தைக் கண்டித்தார் என்று கூறுவதற்கு வாய்ப்பே இல்லை. அது முழுப்பொய்.

இறுதியாக, வீரஞ்செறிந்த தமிழ் மக்களாகிய உங்களை நான் கேட்டுக் கொள்கிறேன். நேபாளத்தினுடைய புரட்சிகர போராட்டத்தை நீங்கள் ஆதரிக்க வேண்டும். முடியாட்சியையும் ஏகாதிபத்தியத்தையும் வீழ்த்தி விட்டு, ஒரு புதிய அரசை, புதிய அரசமைப்பை, புதிய சமூகத்தை உருவாக்குவதற்கான நேபாளத்தினுடைய இந்தப் போராட்டம் வெற்றி பெறுவதற்குத் துணை நிற்குமாறு நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். இந்தப் போராட்டம் வெற்றி பெறுகிறபொழுது, உலகத்தின் மிக உயர்ந்த எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியிலே செங்கொடி பறக்கும். அந்தச் செங்கொடி உலகத்தின் உச்சியிலே பறக்கிறபொழுது, உலகம் முழுவதும் அதை பார்க்கும். இந்தியாவெங்கும், உலகம் முழுவதும் அது புரட்சியை பரவச் செய்யும். உலகப் புரட்சிக்கு அது அடையாளமாக வழிகாட்டுதலாகத் திகழும். ஆகவே, எங்கள் போராட்டத்திற்கு தமிழ் மக்கள் ஆதரவு தாருங்கள், தாருங்கள் என்று வேண்டி முடிக்கிறேன்.

நன்றி, செவ்வணக்கம்!

8 comments:

சந்திப்பு said...

நேபாளத்தில் மாவோயிஸ்ட்டுகள் ஜனநாயக களத்திலிறங்கி பெரும்பான்மையான மக்கள் ஆதரவை பெற்றுள்ளனர். இந்த சாதனையை நிகழ்த்துவதற்கு மன்னராட்சியை ஒழிப்பதற்காக போராடிய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி - மாவோயிஸ்ட் - காங்கிரஸ் மற்றும் இதர ஜனநாயக இயக்கங்களின் பங்களிப்பும் மிக முக்கயிமானது. கூட்டு முயற்சியில் விளைவே மன்னராட்சிக்கு முடிவு கட்ட முடிந்தது. இருப்பினும் தற்போது அமைக்கப்படவுள்ள புதிய நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் மாவோயி்ஸ்ட்டுகள் வெற்றிபெற்றிருப்பது நல்ல அம்சம். தேர்தல் மூலம் ஆட்சியைப் பிடித்துள்ள மாவோயிஸ்ட்டுகள் மற்ற அமைப்புகளின் உதவியுடன் ஜனநாயகத்தையும் - நேபாளத்தையும் பாதுகாத்திடுவார்கள் என்று நம்பிக்கை கொள்வோம். அது சரி! நம்ம ஊர் மாவோயிஸ்ட்டுகள்... ம.க.இ.க. குழுவினர் நல்லாம் எப்போது இந்த திருட்டுப் பாதைக்கு திரும்புவார்களோ?

தமிழரங்கம் said...

'நேபாளத்தில் மாவோயிஸ்ட்டுகள் ஜனநாயக களத்திலிறங்கி பெரும்பான்மையான மக்கள் ஆதரவை பெற்றுள்ளனர். இந்த சாதனையை நிகழ்த்துவதற்கு மன்னராட்சியை ஒழிப்பதற்காக போராடிய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி - மாவோயிஸ்ட் - காங்கிரஸ் மற்றும் இதர ஜனநாயக இயக்கங்களின் பங்களிப்பும் மிக முக்கயிமானது. கூட்டு முயற்சியில் விளைவே மன்னராட்சிக்கு முடிவு கட்ட முடிந்தது. இருப்பினும் தற்போது அமைக்கப்படவுள்ள புதிய நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் மாவோயிஸ்ட்டுகள் வெற்றிபெற்றிருப்பது நல்ல அம்சம். தேர்தல் மூலம் ஆட்சியைப் பிடித்துள்ள மாவோயிஸ்ட்டுகள் மற்ற அமைப்புகளின் உதவியுடன் ஜனநாயகத்தையும் - நேபாளத்தையும் பாதுகாத்திடுவார்கள் என்று நம்பிக்கை கொள்வோம். அது சரி! நம்ம ஊர் மாவோயிஸ்ட்டுகள்... ம.க.இ.க. குழுவினர் நல்லாம் எப்போது இந்த திருட்டுப் பாதைக்கு திரும்புவார்களோ?"

திருடன் தன் பாதைக்கு அழைக்கும் அழகு, தனி அழகு தான். பாவம் தனது திருட்டு ஜனநாயகம் பற்றிய மிதப்பில், மாவோயிஸ்டகளை அனுகுகின்றது.

போலிக் கம்ய+னிட் எஜன்டான சந்திப்பு, இங்கு ஜனநாயகம் என்று கூறுவது எதை? மற்றவன் உழைப்பை சுரண்டம் சுதந்திரத்தைத் தான், ஜனசாயகம் என்கின்றது. இந்த வகையில் பன்னாட்டு எஜன்டுகளாக, போலிக்கம்யூனிஸ்ட்கள் இருப்பதையே ஜனநாயகம் என்ற பீற்றுகின்றது. ஊபு உலகத்தை சூறையாடுவதும், சுரண்டவதும் தான் ஜனநாயகம் என்கின்றது.

நேபாளத்தில் மாவோயிஸ்ட்டுகள் இதற்காக ஆட்சிக்கு வரவில்லை. இதை ஒழித்துக்கட்டத்தான் ஆட்சிக்கு வந்துள்ளனர். அதை அவர்கள் தமது கட்டுப்பாட்ட பிரதெசத்தில் அமுல் ஆக்கியவர்கள். வர்க்கப்போராட்டம் தொடங்க உள்ளது.

' மன்னராட்சியை ஒழிப்பதற்காக போராடிய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி - மாவோயிஸ்ட் - காங்கிரஸ் மற்றும் இதர ஜனநாயக இயக்கங்களின் பங்களிப்பும் மிக முக்கயிமானது" என்பதே தவறானது. மாவோயிஸ்ட்டுகள் புரட்சியை தடுபதற்காக, தமது அணிகளின் சிதைவை காப்பற்ற இந்த திருட்டுக் கும்பல் நடித்து. புரட்சியில் இப்படி நடப்பது, உலகெங்கும் நடந்துள்ளது.

'மன்னராட்சியை ஒழிப்பதற்காக போராடியது" திருடர்களால் போரட முடியாது. ஆயுதமேந்திய மாவோயிஸ்ட்டுகள் தான் போராடினர்.

'ம.க.இ.க. குழுவினர் நல்லாம் எப்போது இந்த திருட்டுப் பாதைக்கு திரும்புவார்களோ?" ஒருகாலும் உங்கள் திருட்டப் பாதைக்கு வர மாட்டார்கள். அவர்கள் மாவோயிஸ்ட்டுகள் போல் புரட்சி பாதையில் எழுவார்கள்.

அசுரன் said...

சந்திப்பு கட்டுரையை படிக்கவில்லை என்பதை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். ஏனேனில் இந்த கட்டுரையின் ஆரம்பத்திலேயே சந்திப்பு போன்ற திரிபுவாத பகவத்கீதை கிருஷ்ணன்களுக்கு பின்வருமாறு கஜுரேல் பதில் சொல்கிறார்:

//வேறு சிலர் இருக்கிறார்கள்; அவர்கள் எங்களுக்கு உபதேசம் செய்ய முற்படுகிறார்கள்; அறிவுரை செய்கிறார்கள். கீதோபதேசம் செய்கிறார்கள். ""நீங்கள் மக்கள் போரை நடத்தியவர்கள், ஆனால், இப்போது நீங்கள் போராட்டம் போதும் என்ற நிலைக்கு வந்திருக்கிறீர்கள். ஆயுதப்போராட்டம் தேவையில்லை, வன்முறை தேவையில்லை; அதன் மூலம் எதையும் சாதிக்க முடியாது. இறுதியாக இப்போது நீங்கள் மக்கள் திரள் போராட்டங்களை நடத்தி வருகிறீர்கள். எனவே ஆயுதப்போராட்டத்தை நீங்கள் நடத்தியிருக்கத் தேவையில்லை'' என்று அவர்கள் எங்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்து அவர்கள், எங்களைப் படிப்பினை பெற்றுக் கொள்ளச் சொல்கிறார்கள். அப்படி இல்லை; நாங்கள் ஆயுதப்போராட்டம் தேவையில்லை என்று ஒரு போதும் கருதவில்லை என்று தெரியப்படுத்த விரும்புகிறேன்.

உண்மை என்னவென்றால், பத்தாண்டுகால மக்கள் போர் நடைபெற்றிருக்கவில்லையென்றால், 19 நாள் பெருந்திரள் எழுச்சி ஏற்பட்டிருக்காது. அந்த 19 நாள் மக்கள் எழுச்சி ஏற்பட்டிருக்காவிட்டால், அரசியல் சூழ்நிலையில் எந்த மாற்றமும் ஏற்பட்டிருக்காது. எனவே, இந்த மக்கள் எழுச்சியை உருவாக்கியதில், அரசியல் சூழலை மாற்றியதில் 10 ஆண்டுகாலம் நடத்தியிருக்கிற மக்கள் போருக்கு மிக முக்கியமான பங்கிருக்கிறது என்பதைத் தெரியப்படுத்த விரும்புகிறோம்.

நேபாள வரலாற்றில் மக்கள் எழுச்சி என்பது புதிய செய்தியல்ல; கடந்த காலத்தில் மக்கள் பலமுறை பெருந்திரளாக எழுந்து போராடியிருக்கிறார்கள். ஆனால், அந்த எழுச்சிகளெல்லாம் கொடிய முறையிலே அடக்கி ஒடுக்கி நசுக்கப்பட்டன.

ஆனால், இந்த முறை, 19 நாள் மக்கள் எழுச்சியை அவர்களால் ஒடுக்க முடியவில்லை; அதற்குக் காரணம், மக்கள் விடுதலை இராணுவம் அருகிலே இருந்தது என்பதுதான். காத்மாண்டு பள்ளத்தாக்கை மக்கள் விடுதலை இராணுவம் சுற்றி வளைத்துக் கொண்டிருந்தது. எனவே, மக்களுக்கு நம்பிக்கை இருந்தது. நம்மை நேபாள இராணுவம் சுடுமானால், பக்கத்திலே இருக்கிற மக்கள் விடுதலை இராணுவம் தலையிட்டுச் செயல்படும் என்ற நம்பிக்கை இருந்தது. அதேபோல் இராணுவத்தினருக்கும் தெரியும், எனவே தாங்கள் எதுவும் செய்ய முடியாது என்பதால், அந்த மக்கள் எழுச்சியை அவர்களால் அடக்கவோ ஒடுக்கவோ முடியவில்லை. எனவேதான், 19 நாட்கள் நடந்த மக்கள் எழுச்சியானது, தனது உடனடி நோக்கத்தில் வெற்றி பெற முடிந்தது.
///////

அது சரி சந்திப்பு CPN மக்களின் ஜனநாயகத்திற்க்காக ஆயுதப் போராட்டம் நடத்தி அதன் முடிவில் அரசியல் மேலாண்மையை வென்றெடுத்துள்ளது. உங்க CPM பாசிஸ்டுகள் ந்ந்திகிராமில் நடத்திய ஆயுதப் போராட்டம் யாருக்கான ஜனநாயகத்தை வென்றெடுக்க?
உங்க CPM பாசிஸ்டுகள் பார்ப்ப்னியத்தை தூக்கி பிடிப்பது யாருக்கான ஜனநாயகத்தை வென்றெடுக்க?

குறிப்பாக வழக்கமான திரிபுவாத, பிற்போக்கு கும்பல்களின் அதே பொய் பித்தலாட்டத்தை இங்கும் கடை விரிக்கிறார் சந்திப்பு(வழக்கம் போல).

நேபாளத்தில் காங்கிரஸும், UMLம் ரொம்ப நாளாகவே இருக்கின்றன. ஆயினும் இவை எதுவும் அரசரை தூக்கி வீசுவது, முழுமையான ஜனநாயகத்தை(குறைந்த பட்ச முதலாளித்துவ ஜனநாயகமாகவாவது) கொண்டு வருவது என்று கோரிக்கை வைத்ததில்லை. 19 நாள் எழுச்சி சமயத்தில் கூட இவர்களின் கோரிக்கை என்பது மீண்டும் பழைய மன்னரின் கட்டுப்பாட்டில் உள்ள நாடாளுமன்றத்திற்க்கு உயிரி கொடுப்பது என்பதுதான். இதனை எதிர்த்து கல்லூரிகளிலும், மருத்துவமனைகளிலும் இன்னபிற பொது இடங்களிலும் இளைஞர்களும் மக்களும் பெருவாரியாக கூடி கையெழுத்து இயக்கங்கள், பெருந்திரள் போராட்டங்கள் நடத்தியுதுடன் கொய்ராலா வீட்டு வாசலிலும் போராடினர். அங்கு மக்களின் கோரிக்கைக்கு அரசியல் வடிவம் கொடுத்தனர் மாவோயிஸ்டுகள், மக்களோ அந்த வடிவத்தை ஒரு பௌதீக சக்தியாக மாற்றி பிற்போக்கு காங்கிரஸ், UML கும்பலையும் இதனை ஏற்க வைத்தனர்.

சந்திப்பு சொல்வது படி பார்த்தால் மாவோயிஸ்டுகள் தேர்தல் வழிமுறைக்கு வந்த பின்புதான் மக்கள் ஆதரவை வென்றெடுத்துள்ளனர் என்பது போல உள்ளது. காமரேடுகளுக்கு எதையுமே தலைகீழாக படித்து புரிந்து கொண்டே பழக்கம்(ஜனநாயகத்தை மேலிருந்து நடைமுறைப்படுத்தும் உத்தி போல). நேபாளத்தில் மன்னராட்சியை தூக்கி வீசி பெரும்பாலான பகுதிகளின் மாவோயிஸ்டுகள் ஆட்சி செய்து மக்களை தமது அரசியலுக்கு வென்றெடுத்த பின்னர்தான் அவர்கள் இனிமேல் ஆயுதம் இன்றி கூட இந்த புரட்சியை நிறைவு செய்ய முடியும் என்று தேர்தல் களத்தில் இறங்கினர். இவர்களின் பித்தலாட்டத்திற்க்கு ஆப்படிக்கும் வகையில் நேபாள காங்கிரசுக்கும், UMLக்கும் பெருத்த தோல்வியை மக்கள் பரிசளித்துளனர். UML, காங்கிரஸ் இரண்டின் முக்கிய முதல் வரிசை தலைவர்கள் முக்கால்வாசிப் பேர் மண்ணைக் கவ்வியுள்ளனர்.


அசுரன்

அசுரன் said...

//
ஏன் தேர்தல் நடக்கிறது, அத்தேர்தல் என்ன பங்கு வகிக்கிறது. தேர்தலில் நாங்கள் ஏன் பங்கேற்கப் போகிறோம் என்பன பற்றி அந்த நண்பர்கள் குழப்பமடைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு அரசமைப்புப் பேரவைக்கான தேர்தல் என்பதன் உண்மையான பொருள் விளங்கவில்லை. ஆகவேதான் அவர்கள், மற்றக் கட்சிகளோடு தேர்தல் பங்கேற்பு கட்சிகளோடு எங்களை ஒப்பிட்டு குழப்பிக் கொள்கிறார்கள்.இந்த நண்பர்கள் ஏப்ரல் 10 அன்று நடைபெற இருக்கிற தேர்தலைச் சரிவர விளங்கிக் கொள்ளவில்லை. ஏப்ரல் 10ஆம் நாள் நடைபெறுவதற்குத் திட்டமிடப்பட்டிருக்கிற அரசமைப்புப் பேரவை தேர்தல் என்பது, ஒரு புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான தேர்தலாகும். இப்பேரவையின் பிரதிநிதிகள் புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவார்கள். அதற்கான தேர்தலாகும். இந்தத் தேர்தலை, சில ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவில் நடைபெறும் தேர்தலோடு இந்த நண்பர்கள் குழப்பிக் கொள்கிறார்கள். அங்கே நடைபெறுகிற தேர்தல், நேபாள சமுதாயத்தில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான தேர்தல். இங்கே ஐந்தாண்டுக்கு ஒருமுறையோ, நான்காண்டுக்கு ஒருமுறையோ நடத்தப்படுகிற தேர்தலால் எந்த மாற்றமும் வருவதில்லை. அந்த தேர்தலும் இந்த தேர்தலும் ஒன்றல்ல என்று நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.//

Dubakor Santhippu did you read the above lines?

சந்திப்பு said...

மாவோயிஸ்ட்டுகள் அங்கே உள்ள மன்னராட்சியை வீழ்த்துவதற்காக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு மக்கள் ஆதரவைப் பெற்றனர். அதனால் துணிந்து தேர்தலிலும் நின்று வெற்றிபெற்றனர். ஆனால் இங்கே உள்ள ம.க.இ.க.வின் அரசியல் தலைமை இ.பொ.க.(மா.லெ) மாநில அமைப்புக்குழு தன்னை நக்சலிசத்தின் வாரிசு என்று சொல்லிக் கொண்டாலும்... அதன் செயல்பாட்டில் வெறும் திண்ணைப் பேச்சும் - வாய்ச்சவடாலும்தான் மின்சுகிறது. ஒரு கோடி மக்களைக் கொண்ட சென்னையில் ஒரு தெருவிலாவது இந்த வாய்ச்சவடால் பேர்வழிகளுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறதா? எனவேதான் இந்த திண்ணை வேதாந்த பார்ப்பனீய தலைமை தேர்தல் என்றாலே திருட்டுத்தனமானது என்று வேசம் போடுகிறது.

Unknown said...

நேபாளத்தில் மாவோயிஸ்ட்கள்
பல கட்சிகள் பங்கு பெறும் தேர்தலைக்
கொண்ட மக்களாட்சி முறையை
ஏற்றே தேர்தலில் பங்கேற்றனர்.
இனி அவர்கள் எப்படி செயல்படுவார்கள் என்பதை
பார்க்க வேண்டும்.ஒரு சோசலிச
அரசை அவர்கள் நிறுவ முயற்சி
செய்யக்கூடும்.நிலச் சீர்த்திருத்தம்,
கட்டாயக் கல்வி போன்றவை
முன்னுரிமை பெறலாம்.
மாவோயிஸ்ட்கள் ஆயுதங்களை
மட்டும் நம்பி செயல்படவில்லை.
சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக
பயன்படுத்திக் கொண்டனர்.
மகஇக காகித புரட்சியாளர்களுக்கு
ஆயுதப் புரட்சியும் செய்யத்
தெரியாது, தேர்தலில் பங்கேற்று மக்கள் ஆதரவை பெறுவதும் தெரியாது.

”அவர்கள் மாவோயிஸ்ட்டுகள் போல் புரட்சி பாதையில் எழுவார்கள்”
அங்கு ஒரு சிரிப்பான் [:)] குறைகிறது.அதைப் போட்டுவிட்டால்
நீங்கள் சொல்வது சரிதான்.

தமிழரங்கம் said...

'அதன் செயல்பாட்டில் வெறும் திண்ணைப் பேச்சும் - வாய்ச்சவடாலும்தான் மின்சுகிறது. ஒரு கோடி மக்களைக் கொண்ட சென்னையில் ஒரு தெருவிலாவது இந்த வாய்ச்சவடால் பேர்வழிகளுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறதா? எனவேதான் இந்த திண்ணை வேதாந்த பார்ப்பனீய தலைமை தேர்தல் என்றாலே திருட்டுத்தனமானது என்று வேசம் போடுகிறது."

அவாகள் வேசம் போட்டடும். உங்களுக்க என்ன கவலை? புரட்சியை செய்ய வேண்டியது தானே!

'சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர்.
மகஇக காகித புரட்சியாளர்களுக்கு ஆயுதப் புரட்சியும் செய்யத்
தெரியாது, தேர்தலில் பங்கேற்று மக்கள் ஆதரவை பெறுவதும் தெரியாது."

இருக்கட்டும். நீங்கள் பயன்படுத்திய சூழல் எது? அதை முதலில் செய்யுங்கள். பின் மகஇக பற்றி கதையுங்கள்.

வெட்டித்தனமான இந்த பேசு, எழுத்து எதற்கு!

அசுரன் said...

மக்கள் ஆதரவுக்கு சந்திப்போட அளவுகோல் எது?

அதிமுக, திமுக வோட மாற்றி மாற்றி கூட்டணி வைத்து மக்களை ஏய்ப்பதா?

இவரோட கணக்குப்படி விஜயகாந்துதான் புரட்சியை செய்ய சரியான நபர். இது தெரிந்துதான் என்னவோ CPM இளைஞர்கள் அணீகள் எல்லாம் புரட்சி கலைஞர் கட்சியில் சேருகின்றன.

இதே சந்திப்பு உள்ளிட்ட கும்பல்கள் நேபாள மாவொயிஸ்டுகளை புரட்சிக்கு முன்பு வரை என்ன சொல்லிக் கொண்டிருந்தார்கள்? அவர்களுக்கு மக்கள் ஆதரவு இல்லையென்றுதான் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

மக இகவுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறதா இல்லையா என்பதை கடந்த ஒரிரு வருடங்களில் மக இக ஏகாபதிபத்திய திட்டங்களை எதிர்த்தும், பார்ப்பனியத்தை எதிர்த்தும் நடத்திய பல்வேறு போராட்டங்களே பதில் சொல்லும்.

சந்திப்பு போன்ற திரிபுவாத மொள்ளமாறிகளின் பேச்சுக்களை கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் CPM பாணி தரகு அரசியலுக்கு அவர்கள் பழகி வருவது கண்கூடாக தெரியும்.

இதே சந்திப்பு கொஞ்ச நாள் முன்ன வரை ம க இக் காட்டுக்குள் தூப்பாக்கி தூக்கி அரசியல் செய்யும் தீ கம்யுனிஸ்டு என்று சொல்லிக் கொண்டிருந்தார். தமிழகத்தில் ஓரளவு ஜனநாயகமான சூழலில் புரட்சிக்கான புற நிலைமைகள் பாதகமாக உள்ள சூழலில் மக்கள் திரளை அரசியல் ரீதியாக வென்றெடுக்காமல் ஆயுதம் தாங்கி போராடுவது தவறு என்பதை முந்தைய அனுபவஙளில் இருந்து கற்றுக் கொண்டு மக்கள் திரள் வழியில் செயல்பட்டு வருகிறது ம க இக போன்ற அமைப்புகள். இந்த விசயத்தை சொல்லி சந்திப்பு போன்றவர்களின் புரளிகளை பலமுறை அம்பலப்படுத்திய பிற்பாடு குறிப்பாக சமீபத்திய மக இகவின் மக்கள் திரள் போராட்டங்களின் வெற்றியையும் அது பரந்துபட்ட மக்களை சென்றடைந்ததையும் தொடர்ந்து சந்திப்பு போன்றவர்களின் புரளி நீர்த்து போனது. இப்போது அதே பிளேட்டை மாற்றி போட்டு பேசுகிறார்கள்.

அதாவது நேபாள் மாவோயிஸ்டுகள் போல நாம் இங்கே ஆயுதம் ஏந்தவில்லையென்று. அய்யா ரெட்ட நாக்கு அம்பிகளா உங்ககிட்ட அங்கீகாரம் கோருகின்ற நிலையில் ம க இக இல்லை. இந்த அரசின் அங்கீகரிக்கப்பட்ட கம்யுனிஸ்டுகளாக இருக்கும் ஒரே தகுதி உங்களுக்கு மட்டுமே உண்டு. மார்க்ஸியத்தின் வரையறையில் அதன் பெயர் போலி கம்யுனிஸ்டுகள். நீங்க ம க இகவை ஒப்பிட்டு பேசும் மாவொயிஸ்டுகள் தமக்கு எதிராக இந்திய அரசு செயல்படுவதை தடுக்க இங்கு பிரச்சாரம் செய்வதற்க்கு வேறு யாரையும் தேர்ந்தெடுக்கவில்லை ம க இகவைத்தான் தேர்ந்தெடுத்தார்கள். சென்னையில் கஜுரேல் கலந்து கொண்ட ம க இக நடத்திய இடதுசாரி-ஜனநாயக அமைப்புகளின் நேபாள் ஆதரவு பொதுக்கூட்டம் அப்படி நடந்துதான்.

சரி விசயத்துக்கு வருவோம்,

இவரோட முதல் கேள்வி இந்தியாவில் ம க இக தேர்தலில் பங்கு பெற வேண்டும் என்பதும் அதற்க்கு மாவொயிஸ்டுகளை உதாரணமாக சொன்னதும்(இதுவும் கூட இவரோட சொந்த சரக்கு இல்லை. CPM போலிட் பீரோ கூமுட்டைகள் கிளப்பும் இது போன்ற புரளிகளை ஆய்வு செய்யாமலேயே வாந்தியெடுத்து பலமுறை வாயில் புண்ணோடு போயுள்ளார் இந்த தொண்டர்). இந்த கருத்து எந்தளவு டூபாக்கூர்த்தனமானது என்பதை மாவொயிஸ்டுகளின் வரிகளிலேயே சுட்டிக் காட்டியவுடன் அதற்க்கு பதில் சொல்லும் நேர்மை கூட இல்லாமல் மக இக வுக்கு மக்கள் ஆதரவு இல்லை என்ற, ஏற்கனவே பலமுறை சுட்டிக்காட்டிய, ஒரு அல்பத்தனமான வாதத்தில் சென்று ஒளிந்து கொள்கிறார் இவர்.

கேள்விக்கு பதில் சொல்லுங்கோ சந்திப்பு....

ம க இக திண்ணை பேச்சாளர்களாகவே இருந்து கொள்ளட்டும்.

திண்ணை பேச்சாளர்களாகிய அவர்கள்தான் சிதம்பரத்தில் தமிழை மேடையேற்றினார்கள்.

திண்ணை பேச்சாளர்களாகிய அவர்கள்தான் களத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள், திண்ணை பேச்சாளர்களாகிய அவர்களைத்தான் மாவொயிஸ்டுகள் இந்தியாவில் தமது தோழமை சக்தியாக அங்கீகரித்துள்ளனர்.

இப்போ கேள்வி,

நீங்க திருட்டு கும்பலா இல்லையா? ஏன்னா நேபாள் மாவொயிஸ்டுகளின் தேர்தல் பங்கெடுப்பை வைத்து இந்திய தேர்தலை நியாயப்படுத்துவதை நேபாள மாவொயிஸ்டுகள் மறுத்துள்ளதை குறிப்பிட்டாகிவிட்டது. எந்த வகையிலும் அதுவும் இதுவும் ஒன்றல்ல. ஆக நேபாள்ததின் ஜனநாயகத்துக்கான தேர்தலும், இந்தியாவின் புரோக்கர் வேலைக்கான தேர்தலும் ஒன்று கிடையாது. இதை சுட்டிக்காட்டியதற்கு இது வரை மறுப்பு சொல்லாததன் மூலம் இந்தியாவில் CPM ஒரு புரோக்கர் திருட்டு கும்பல் என்பதை சந்திப்பு ஏற்றுக் கொள்கிறார் என்றுதான் நாம் கருத வேண்டியுள்ளது.

அசுரன்