தமிழ் அரங்கம்

Thursday, June 7, 2007

குரு திரைப்பட விமரிசனம்

குரு திரைப்பட விமரிசனம்

அம்பானி:
முதலாளிகளின் குரு மோசடிகளின்
கரு


90களில் பயங்கரவாதத்தினால் பரிதாபமாக்கப்பட்ட காதலர்களைப் படமாக்கிய மணிரத்தினம் 2000ஆம் ஆண்டுகளில் பொருளாதாரத்தை முன்னேற்றிய முதலாளித்துவ நாயகர்களை நாடிச் சென்றிருக்கிறார். காலத்திற்கேற்ற மாற்றம்தான். 2020இல் இந்தியா வல்லரசாகுமெனப் பிதற்றித்திரியும் அரசவைக் கோமாளி அப்துல் கலாம் இளைஞர்களிடம் விற்கப்படும் காலத்தில், இன்போசிஸ் நாராயணமூர்த்தியும், விப்ரோவின் பிரேம்ஜியும் பொன்முட்டையிடும் வாத்துக்கள் எனப் போற்றப்படும் நேரத்தில் இவர்களுக்கு முன்னோடியான அம்பானியை வெள்ளித்திரையில் நினைவு கூர்கிறார் மணிரத்தினம்.




எனினும் குரு திரைப்படத்தில் அவரது வழக்கமான காதல் சங்கதிகள் இல்லை. பணம் சம்பாதித்து முன்னேறவேண்டும் என்று போதிப்பதற்கு காதல் முதலான சென்டிமென்ட் பீடிகைகள் தேவையில்லையே?


இலட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நாட்டில் நீங்கள் மட்டும் முன்னேறலாம் என்று தூண்டில் போடும் சுயமுன்னேற்ற வெறியைக் கலைக்கு கைமாற்றித் தந்திருக்கிறார் மணிரத்தினம். ஆனாலும் சமூகத்தில் கோலோச்சும் இந்த உணர்ச்சி கலையில் வெற்றி பெறவில்லை.


ஒரு வண்டிச்சக்கரத்தில் காலம் சுழன்று விஜயகாந்தோ, ரஜினிகாந்தோ மாபெரும் முதலாளிகளாவதை இரசித்துச் சலித்திருக்கும் இரசிகர்கள் அதையே இராஜீவ் மேனனின் லிரில் சோப் ஒளிப்பதிவிலும், ரஹ்மானின் கீ போர்டு அலறல் இசையிலும், மென்று முழுங்கும் மணிரத்தினத்தின் வசனத்திலும் லயிப்பதற்குத் தயாரில்லை. படத்தைப் பலரும் பார்த்திருக்க மாட்டீர்கள் என்பதாலும், பார்க்க வேண்டாம் என்பதாலும் கதையைச் சுருக்கமாகத் தருகிறோம்.

···

குஜராத்தின் கிராமமொன்றில் பள்ளிக்கூட ஆசிரியரின் மகன் குரு (நிஜத்தில் அம்பானி), தந்தையின் விருப்பத்தை மீறி துருக்கி (ஏடன்) நாட்டிற்குச் செல்கிறான். பன்னாட்டு எண்ணெய் நிறுவனத்தில் சாதாரணப் பணியாளாய் வேலை செய்கிறான். ஓய்வு நேரத்தில் மல்லிகா ஷெராவத்தின் முக்கால் நிர்வாண நடனத்தை இரசிக்கிறான். கூடவே மூன்று சீட்டு விளையாட்டில் விடாமல் வெல்கிறான். காரணத்தைக் கேட்டால் கவனம் என்கிறான். அடுத்து சூபர்வைசர் பதவிக்கு உயருகிறான். அவனுக்கு டை கூடக் கட்டத் தெரியவில்லை என்று சுட்டிக் காட்டும் வெள்ளையனது பதவி உயர்வுக் கடிதத்தைக் கடாசிவிட்டு இனிமேல் வெள்ளைக்காரனுக்கு உழைப்பதில்லை எனவும் சொந்தமாகத் தொழில் தொடங்கி வெற்றி பெறுவேன் எனவும் கூறி நாடு திரும்புகிறான்.


வியாபாரத்தில் தோற்றுப் போவாய் என்று எச்சரிக்கும் தந்தையின் சாபத்தைப் புன்னகையால் மறுக்கிறான். வியாபாரத்துக்குத் தேவையான 15000 ரூபாயை வரதட்சிணையாக வாங்குவதற்காக, தன்னைவிட ஒரு வயது அதிகமென்ற போதிலும் நண்பனின் அக்காவை (கோகிலா பென்) திருமணம் செய்து கொள்கிறான். மச்சான் மற்றும் மனைவியுடன் வியாபாரம் செய்ய நெரிசல் மிகுந்த பம்பாய்க்கு இடம் பெயர்கிறான்.


நூல் மார்க்கெட் தரகனாக வணிகம் செய்யத் தொடங்கி மின்னல் வேகத்தில் வளருகிறான். ஜவுளி வியாபாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் கான்ட்ராக்டர் (பாம்பே டையிங்கின் நுஸ்லி வாடியா) எனும் முதலாளியின் தடைகளை மீறி தனது சக்தி (ரிலையன்ஸ்) நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்துகிறான். இலட்சிய வேட்கை கொண்ட இந்த கிராமத்து இளைஞன் மீது காந்தியவாதியான ஒரு பத்திரிகை அதிபருக்கு (இந்தியன் எக்ஸ்பிரஸ் இராம்நாத் கோயங்கா) அனுதாபம் ஏற்படுகிறது. அதன் பிறகு அவனது தொழில் பிரம்மாண்டமாக வளருகிறது. ஜவுளி தொழிற்சாலை, பாலியஸ்டர் ஆலை, பங்குகள் வெளியீடு, மைதானத்தில் பங்குதாரர் கூட்டம் என்று உச்சத்திற்குப் போகிறான். இடையிடையே மணிரத்தினத்தின் திருப்திக்காக மனைவியைக் கொஞ்சி நடனம் ஆடுகிறான். இரட்டைக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறான்.


இவனது அசுர வளர்ச்சி குறித்து பத்திரிகை அதிபருக்குச் சந்தேகம் வருகிறது. அவனது முறைகேடுகளை அம்பலப்படுத்தி நிர்வாணப்படுத்தப் போவதாக அவர் எச்சரிக்கிறார். ""என்னை நிர்வாணப்படுத்துவதற்கு எல்லோரையும் நிர்வாணப்படுத்த வேண்டும்'' என்று பதிலளிக்கிறான் குரு. பத்திரிக்கை அதிபரின் நிருபர் (அருண்ஷோரி) குருவின் வணிக மோசடிகளை அம்பலப்படுத்துகிறார். குருவோ எல்லா பத்திரிக்கைகளுக்கும் விளம்பரத்தைக் கொடுத்து வாயடைக்க முயல்கிறான். இருப்பினும் இதனால் அவனுக்கு தொழிலில் நெருக்கடி ஏற்படுகிறது. அத்துடன் பக்கவாதத்தில் வேறு விழுகிறான். பத்திரிக்கை அதிபர் வருத்தப்படுகிறார். இறுதியில் அரசாங்கம் சக்தி நிறுவனத்தின் மோசடிகளை ஆராய விசாரணைக் கமிஷன் அமைக்கிறது.


""எதுவும் தெரியாத கிராமத்து இளைஞன் தொழில் துவங்க நினைத்தது தவறா, தன்னை முடக்க நினைத்த பரம்பரை முதலாளிகளை வென்று காட்டியது குற்றமா, பல இலட்சம் பங்குதாரர்களின் வாழ்வில் ஒளியேற்றும் வண்ணம் தனது தொழில் சாம்ராச்சியத்தைக் கட்டியமைத்தது முறைகேடா'' என்று நீதி விசாரணையில் இறுதிக் காட்சியில் விஜயகாந்த் ஸ்டைலில் பொரிந்து தள்ளுகிறான். இவன் தொழிற்துறையின் தாதாவா அல்லது அறிவுஜீவியா என்று வியக்கும் நீதிபதிகள் அவன் மீதான குற்றச்சாட்டுகளில் பெரும்பாலானவற்றைத் தள்ளுபடி செய்து அபராதம் மட்டும் விதிக்கின்றனர். கடைசிக் காட்சியில் பல்லாயிரம் பங்குதாரர்கள் ஆரவாரம் செய்ய, சக்தி நிறுவனத்தை உலகின் நம்பர் ஒன் நிறுவனமாக மாற்றுவேன் என்று மைதானத்தில் நின்று சூளுரைக்கி றான் நடுத்தர வயதைக் கடந்துவிட்ட குரு. இத்துடன் படம் முடிகிறது.



அம்பானியின் வாழ்க்கையை அட்சரம் பிசகாமல் எடுத்திருக்கும் மணிரத்தினம் இந்தப் படத்தின் மூலம் கூறுவது என்ன? வணிகம் செய்து முன்னேற வேண்டும் என்பதை இரத்தத்தில் வரித்திருக்கும் ஒரு கிராமத்து இளைஞன் ஒரு இலட்சியவாதியைப் போலப் போராடுகிறான். அந்த இலட்சியமே வாழ்க்கை குறித்த அவனது அணுகுமுறை அனைத்தையும் நியாயப்படுத்துகிறது. தடையரண்களாய் வரும் அரசு, சட்டம், ஏனைய முதலாளிகள், அதிகாரவர்க்கம் முதலானவற்றை அவன் தகர்த்துச் செல்கிறான். தொழிற்துறையில் அவன் செய்யும் முறைகேடுகளைக் கூட இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் மணிரத்தினம்.


குருவை அம்பலப்படுத்தும் பத்திரிக்கை அதிபரும், நிருபரும் ஏதோ பகவத்கீதையின் கர்மவீரர்களைப் போலத்தான் செயல்படுகிறார்கள். குருவுக்கு எதிரான அவர்களது அறப்போராட்டம் மக்கள் நலன் குறித்த அக்கறையிலிருந்து எழவில்லை. பக்கவாதம் வந்து விழுந்தவுடனே குருவின் மீது அவர்கள் பரிதாபம் கொள்கிறார்கள். ""நீ மட்டும் எப்படி ஒரு பெரிய முதலாளியானாய்'' என்பது மட்டுமே அவர்களது கேள்வி. இந்தக் கேள்விக்கான விடைதான் இந்தியத் தொழிற்துறையின் முன்னோடி எனப் போற்றப்படும் அம்பானியின் கதை.


1980களில் இந்தியன் எக்ஸ்பிரஸின் ஆசிரியராக இருந்து அம்பானியை அம்பலப்படுத்திய அருண்ஷோரி, 2002இல் அம்பானி மரணமடைந்த போது பின்வருமாறு கூறினார்: ""அம்பானி தகர்க்க வேண்டிய சட்டங்களைத்தான் தகர்த்தெறிந்தார். இன்று அந்த சட்டங்களெல்லாம் காலாவதியாகி தாராளமயம் அமலில் உள்ளது. இதற்காக இந்தியத் தொழிற்துறையே அம்பானிக்கு பெரிதும் நன்றிக் கடன் பட்டுள்ளது.'' அருண்ஷோரி சுயவிமர்சனம் மட்டும் செய்து கொள்ளவில்லை. பா.ஜ.க. அமைச்சராக இருந்தபோது ஐ.பி.சி.எல். எனப்படும் அரசின் எண்ணெய்க் கம்பெனியை அம்பானியின் ரிலையன்சு நிறுவனத்துக்குச் சொந்தமாக்கி பிராயச்சித்தமும் செய்து கொண்டார்.


அருண்ஷோரி, மணிரத்தினம் மட்டுமல்ல ஆளும் வர்க்கங்களும், ஊடகங்களும் கூட இப்படித்தான் அம்பானியைக் கொண்டாடுகின்றன. சுமார் 35 இலட்சம் பங்குதாரர்கள் அம்பானியால் வசதியுடன் வாழ்கிறார்கள், ""அம்பானியைப் போல ஒரு பத்து தொழிலதிபர்கள் இருந்தால் இந்தியா ஒரு பணக்கார நாடாகிவிடும்'' என்று சுயமுன்னேற்ற மதத்தின் குருவாகவே அம்பானி சித்தரிக்கப்படுகிறார். இந்த குருவின் உண்மையான கதை என்ன?

···

தொழில் முனைவோர்களை வளரவிடாமல் நசுக்கிக் கொண்டிருந்த அரசாங்கத்தின் லைசன்ஸ் பெர்மிட் கோட்டா ராச்சியத்தைத் தகர்த்தார், பழம்பெருச்சாளிகளின் கோட்டையாக மோன நிலையில் தேங்கி இருந்த இந்தியத் தொழில்துறையை உடைத்து உள்ளே புகுந்து அதை விறுவிறுப்பானதாக்கினார் என்பதுதான் அம்பானிக்கு மணிரத்தினம் சூட்டும் புகழாரம்.


அன்று நேருவின் சோசலிசம் என்று புகழப்பட்டதும், தற்போது லைசன்ஸ், பெர்மிட், கோட்டா ராச்சியம் என்று இகழப்படுவதுமான அந்த கொள்கை, உண்மையில் தேசிய முதலாளிகளைத் தான் நசுக்கியதேயன்றி, டாடா பிர்லா போன்ற தரகு முதலாளிகளையல்ல. அதிகார வர்க்க முதலாளிகள் மற்றும் தரகு முதலாளிகளின் நலன்களை ஒரே நேரத்தில் பாதுகாக்கும்படி உருவாக்கப்பட்டிருந்த அந்தக் கொள்கையின் ஆதாயங்களை சட்டபூர்வமாகவும் சந்து பொந்துகளில் புகுந்து லஞ்ச ஊழல்களின் மூலமும் அனுபவித்துக் கொண்டே, அவ்வப்போது தம் அதிருப்தியையும் வெளியிட்டுக் கொண்டிருந்தனர் அன்றைய தரகு முதலாளிகள்.


பாரம்பரியத் தரகு முதலாளிகளைவிடத் திறமையாகவும், துணிச்சலாகவும் லஞ்ச ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டு அரசு எந்திரத்தையும் சட்டங்களையும் தனக்கு ஏற்றபடியெல்லாம் வளைத்து, ஊடகங்களை விலைக்கு வாங்கி குறுகிய காலத்தில் கொள்ளை லாபம் ஈட்டினார் என்பதுதான் அம்பானியின் சாதனை. ரிலையன்சின் வளர்ச்சிக்கேற்ப சட்டங்கள் மாற்றப்பட்டன. ஏற்றுமதி செய்யும் மதிப்புக்கேற்ப இறக்குமதி செய்யலாம் என்ற விதிமுறையின் கீழ் மண்ணையும், மசாலாப் பொருட்களையும், படத்தில் வருவது போல் காலி அட்டைப் பெட்டிகளையும் ஏற்றுமதி செய்து உள்நாட்டில் கிராக்கியாக இருந்த ரேயான், நைலான், பாலியஸ்டர் செயற்கை இழைகளை இறக்குமதி செய்து பல மடங்கு இலாபம் ஈட்டினார். அம்பானியின் சாரத்துக்கு இந்த ஒரு சோறு முழுப்பதமாகும்.


அம்பானியின் ஆலைகளுக்கான இயந்திரங்கள் இறக்குமதி வரி செலுத்தாமல் மோசடி முறையில் கொண்டு வரப்பட்டதை கோயங்கா அம்பலப்படுத்தியதற்குக் காரணம் மணிரத்தினம் சித்தரிப்பது போல சில தனிமனிதர்களுக்கிடையே நடந்த ஈகோ பிரச்சினையோ, கோயங்காவின் அறவுணர்வோ அல்ல. புதிய தரகு முதலாளிகளின் பிரதிநிதியாக வந்த அம்பானியை பழையவர்களின் பிரதிநிதியான நுஸ்லிவாடியா எதிர்த்தார். தரகு முதலாளிகளுக்கிடையான இந்த முரண்பாட்டில் நாட்டு நலனும் இல்லை, ஒரு வெங்காயமும் இல்லை.


அவர்களின் இந்த முரண்பாடு அரசியலிலும் பிரதிபலித்தது. அம்பானியை இந்திராவும் ராஜீவும் காங்கிரசும் ஆதரித்தன; வாடியாவை ஜனதா ஆதரித்தது. 1980 தேர்தலை இவ்விரண்டு முதலாளித்துவப் பிரிவினரும்தான் ஸ்பான்சர் செய்தனர். அந்தத் தேர்தலில் இந்திரா வென்றதற்காக அம்பானி விருந்து வைத்துக் கொண்டாடினார். அதன் பிறகு ரிலையன்சின் மோசடிகள் கொடிகட்டிப் பறந்தன. ராஜீவும், பிரணாப் முகர்ஜியும், முரளி தியோராவும் அம்பானியின் தூதர்களாக அரசாங்கத்தில் செயல்பட்டனர். பல சட்டங்கள் ரிலையன்சின் வளர்ச்சிக்காக இயற்றப்பட்டன, மாற்றப்பட்டன, ஒத்தி வைக்கப்பட்டன. ""நாட்டின் ஆண்டு வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறுவதற்கு முன்னர் ரிலையன்சின் அனுமதியைப் பெறும்'' என்று ஒரு பழமொழியே டெல்லிப் பத்திரிக்கையாளர்களிடம் உருவாகியிருந்தது. மேல்மட்டத்து அதிகாரவர்க்கத்தின் பணிநியமன உத்தரவுகள் அரசாங்கத்திடமிருந்து வருவதற்குள் ரிலையன்ஸ் அலுவலகத்திலிருந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குச் சென்றன.


வி.பி.சிங் பிரதமரானதும் அம்பானியின் மீது விசாரணைக் கமிஷன் நடந்து பல மோசடிகள் வெளிச்சத்திற்கு வந்தன. அதிலொன்று அமெரிக்காவிற்கு அருகிலிருக்கும் ஒரு தீவிலிருந்து அம்பானியின் பினாமி ஒருவர் முதலீடு செய்து வரிஏய்ப்பு செய்தது. ஃபேர்பாக்ஸ் எனும் அமெரிக்கத் துப்பறியும் நிறுவனம் ரிலையன்சின் அந்நியச் செலாவணி மோசடி குறித்து புலனாய்வு செய்ய நியமிக்கப்பட்டது. ஆயினும் இவற்றினாலெல்லாம் அம்பானியைத் தண்டிக்க முடியவில்லை. ஏனென்றால் இத்தகைய மோசடிகளை எல்லா தரகு முதலாளிகளும்தான் செய்து வந்தனர். அம்பானியோ அதில் பழம் தின்று கொட்டை போட்டார்.


எனவே, ஒரு கட்டத்துக்கு மேல் அம்பானி குறித்த விசாரணை செல்ல முடியவில்லை. கிணறு வெட்ட பூதம் கிளம்பும் என்பதால் மேலோட்டமாகத் தோண்டப்பட்ட கிணறு அவசர அவசரமாக மூடப்பட்டது. அம்பானியின் மீதான விசாரணைகள் நியாயமானவைதான் என்று விசாரிப்பதற்கு உச்சநீதி மன்ற நீதிபதிகள் இருவர் அடங்கிய விசாரணைக் கமிஷனொன்று நியமிக்கப்பட்டது. இந்த நீதிபதிகளும் அம்பானியின் மீதான புலனாய்வு, நாட்டு நலனுக்கும், பாதுகாப்புக்கும் குந்தகம் விளைவிப்பவை என்று தீர்ப்பளித்தனர்.


இரண்டு தரகு முதலாளித்துவக் கும்பல்களிடையேயான மோதல், தரகு முதலாளித்துவ வர்க்கத்தின் ஒட்டு மொத்த நலன் கருதி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அதுவே நாட்டுநலன் என்றும் அறிவிக்கப்பட்டு விட்டது. பிறகென்ன, நாட்டுப் பற்றுக்கு புதிய இலக்கணம் கண்ட அம்பானி இதன்பிறகு மாபெரும் ஏகபோக முதலாளியாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டார். அம்பானியின் பிரதிநிதிகள் எல்லா ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளிலும் இருந்தனர். முலாயம் சிங் யாதவ், அமர்சிங், பிரமோத் மகாஜன், அருண்ஷோரி, பிரணாப் முகர்ஜி, முரளிதியோரா, முரளி மனோகர் ஜோஷி, அருண்ஜெட்லி, சந்திரபாபு நாயுடு, மோடி, கடைசியாக தயாநிதி மாறன் வரை இந்தப் பட்டியலில் பலர் உள்ளனர்.


நூல், ஜவுளி விற்பனையிலிருந்து ஜவுளி ஆலை, பாலியஸ்டரில் ஏகபோக ஆலை, அதன் மூலப்பொருள் ஆலை. அதன் மூலப்பொருளான கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, தற்போது செல்பேசி சேவை, தகவல் தொழில்நுட்பத் துறை, நிதிக் காப்பீடு நிறுவனங்கள் என ஆக்டோபஸ் போல நாட்டையே கவ்வியிருக்கிறது அம்பானியின் சாம்ராச்சியம். எல்லாவற்றிலும் கால் பதித்திருக்கும் அம்பானி தான் முதலாளியாக உருவெடுத்த பின்னராவது தனது மோசடி முறைகளை மாற்றிக் கொண்டாரா? இல்லை முன்பை விட அதிகமாகவே செய்தார். முன்னர் பல தடையரண்களுடன் செய்ததை இப்போது சுதந்திரமாகச் செய்தார்.


தொழில் வளர்ச்சியைத் தடுக்கும் பத்தாம்பசலிச் சட்டங்கள் என்ற கூட்டை உடைத்துப் பிறந்த இலட்சிய வேட்கை கொண்ட சுதந்திரப் பறவையாக அம்பானியை மணிரத்தினம் சித்தரித்திருப்பது அப்பட்டமான பித்தலாட்டமாகும். முதலாளித்துவத்துக்கு உரிய சுதந்திரம் வழங்கப்பட்டால், அது சட்டபூர்வமான வழிகளிலும், நீதி நியாயத்துக்குக் கட்டுப்பட்டும் தனது சுரண்டலை நடத்தும் என்ற கருத்தே மோசடியானது. அத்தகைய சுதந்திரம் வழங்கப்படாததால்தான் அம்பானி சட்டத்தை மீற நேர்ந்தது என்று இந்தக் கிரிமினலுக்கு வக்காலத்து வாங்கியிருக்கிறார் மணிரத்தினம்.


90களில் தாராளமயக் கொள்கைகள் இந்தியத் தரகு முதலாளிகளுக்கு பூரண சுதந்திரத்தை வழங்கிய பின்னரும் என்ன நடந்தது? வில்போன் சேவைக்கு மட்டும் லைசன்சு பெற்ற ரிலையன்சு செல்போன் சேவையை முறைகேடாக அளித்து பல கோடி ரூபாய் கட்டண மோசடி செய்தது. இது அம்பலமானதும் அம்பானிக்குத் தகுந்தபடி சட்டத்தை மாற்றியது பா.ஜ.க. அரசு. அடுத்து வெளிநாடு அழைப்புக்களை உள்ளூர் அழைப்புக்களாக மாற்றி சுமார் 1300 கோடி ரூபாய் பகற்கொள்ளை அடித்தது ரிலையன்ஸ். தேசத்துரோகம், மோசடி போன்ற கிரிமினல் குற்றங்கள் சாட்டப்பட்டன. சில கோடி ரூபாய் அபராதம் மட்டும் விதித்து வழக்கை முடித்துக் கொண்டது காங்கிரஸ் அரசாங்கம். ரிலையன்சின் நிறுவனங்கள் அனைத்தும் கொள்ளையில் பழுத்த புழுக்கள். இந்தக் கொள்ளையனைத்தான் இந்தியத் தொழில்துறையின் குரு என்கிறார் மணிரத்தினம்.


திரைப்படத்தில் ரிலையன்சின் பங்குதாரர்கள் ஏதோ ஒரு மக்கள் திரள் இயக்கம் போல சித்தரிக்கப்படுகிறார்கள். நட்சத்திர விடுதிகளில் நடந்து கொண்டிருந்த பங்குதாரர்கள் கூட்டத்தை திறந்தவெளி மைதானத்தில் நடத்தியவர், இலட்சக்கணக்கான நடுத்தர வர்க்கத்தினரைப் பங்குச்சந்தையை நோக்கிக் கவர்ந்திழுத்தவர் என்பவை நிஜத்திலும் அம்பானிக்குச் செலுத்தப்படும் புகழாரங்கள்.


இலட்சக்கணக்கான நடுத்தர வர்க்கத்தினரை நாட்டின் தொழில் வளர்ச்சியில் பங்கேற்கச் செய்தவர் அம்பானி என்பது போன்ற தோற்றம் இதன்மூலம் உருவாக்கப்படுகிறது. இலட்சக்கணக்கான சூதாடிகளை அம்பானி உருவாக்கினார் என்பதே உண்மை. பங்குச் சந்தையைப் பற்றிப் புரிந்து கொள்ளாதவரை இந்த உண்மையையும் புரிந்து கொள்ள இயலாது.



பங்குச் சந்தை வர்த்தகம் என்பதற்கும் நாட்டின் உண்மையான பொருளாதாரத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. அதன் இலக்கணமே சூதாட்டம்தான். புளூ சிப் கம்பெனிகள் என்று அழைக்கப்படும் 10, 15 பெரிய நிறுவனங்களின் பங்குகள் வாங்கி விற்கப்படும் மதிப்பை வைத்துத்தான் பங்குச் சந்தையின் குறியீட்டு எண் தீர்மானிக்கப்படுகிறது. நூற்றுக்கணக்கான பிற நிறுவனங்களின் பங்கு வர்த்தகத்தில் பலர் ஏமாறுவார்கள், சிலர் இலாபம் சம்பாதிப்பார்கள். பங்குகளின் முகமதிப்பு 10 ரூபாய் என்றால், அதன் சந்தை மதிப்பு 500 அல்லது 1000 ரூபாயாகக் கூட இருக்கும். இந்த விலை உயர்வை பன்னாட்டு நிதி நிறுவனங்களும், பங்குச் சந்தைத் தரகர்களும் செயற்கையான முறையில் உருவாக்குகின்றனர். பங்குகளுக்கான டிவிடெண்ட் எனப்படும் லாப ஈவுத் தொகை பங்கின் முகமதிப்பை வைத்தே வழங்கப்படுமேயன்றி அதன் சந்தை மதிப்பை வைத்து அல்ல.


இந்நிலையில், சிறுமுதலீட்டாளர் எனப்படும் நடுத்தர வர்க்கத்தினர் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கி அதில் கிடைக்கும் வருடாந்திர ஈவுத் தொகையால் ஒரு போதும் இலாபம் சம்பாதிக்க முடியாது. மாறாக, அந்த பங்கின் சந்தை மதிப்பு பலமடங்கு உயரும் போது அவற்றை விற்று இலாபம் சம்பாதிக்க முடியும் என்பதுதான் பங்குச் சந்தையின் கவர்ச்சி. நடுத்தர வர்க்கத்தின் ஒரு பிரிவினருக்குக் கிடைக்கக்கூடிய இந்த இலாபம் என்பது இன்னொரு பிரிவினரின் நட்டம். திரைப்படத்தில் மூன்று மகள்களின் திருமணத்தை ரிலையன்சின் பங்குகளை விற்றுத்தான் நடத்தினேன் என்று கூறி ஒருவர் அம்பானிக்காக உருகுகிறார். தோற்றுப்போன வேறொரு சூதாடியின் 3 மகள்கள் முதிர்கன்னிகளாக மறுகிக் கொண்டிருப்பார்கள் என்பதே இதன் பொருள்.


பங்குகளின் மதிப்பு ஏன் உயர்கிறது, ஏன் சரிகிறது என்று தெரியாமல் நடுத்தர வர்க்கம் தத்தளித்துக் கொண்டிருக்க, இந்த உயர்வையும் சரிவையும் திரைமறைவில் இருந்து ஆட்டிவைக்கும் அம்பானிகளும், பன்னாட்டு நிதி நிறுவனங்களும் ஒவ்வொரு உயர்விலும் ஒவ்வொரு சரிவிலும் கோடிக்கணக்கில் சுருட்டிக் கொள்வார்கள். இந்த நரவேட்டையில் இவர்களோடு சேர்ந்து சில எலும்புகளைக் கடிக்கும் வாய்ப்புப் பெற்ற நபர்கள்தான் ""ஐயா உங்கள் அருளால்தான் 3 பெண்களுக்குக் கல்யாணம் செய்தேன்'' என்று அம்பானியிடம் உருகுவார்கள்.


70, 80களில் ரிலையன்ஸ் நிறுவனம் பங்குகளை வெளியிட்டபோது அது அவரது மாநிலமான குஜராத்தில் பெரு வெற்றி பெற்றது. இன்றைக்கும் ரிலையன்சின் பங்குதாரர்களில் பெரும்பான்மையினர் குஜராத்தைச் சார்ந்த பனியாக்களே. இந்தச் சூதாடி வர்க்கம்தான் இந்துத்துவ வெறி எனும் அரசியல் ஒழுக்கக் கேட்டிலும் முன்னணியிலிருக்கிறது என்பதையும் வாசகர்கள் இங்கே ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும்.


நாடா குத்துபவன் போல தனது பினாமி கம்பெனிகள் மூலம் ரிலையன்ஸ் பங்குகளைத் தானே வாங்கினார் அம்பானி. பங்குகளின் விலையை செயற்கையாக உயரச் செய்தார். விலை குறையும்போது தானே தனது பங்குகளை வாங்கி விலை சரியாமல் இருத்தவும் செய்தார். பணம் தேவைப்பட்ட போது, கடன் பத்திரங்களை வெளியிட்டார். கடன் பத்திரங்களுக்கு சட்டப்படி வட்டி கொடுத்தே ஆகவேண்டும். ஆனால் பங்குகளுக்கு ஈவுத்தொகை கொடுக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை. ஒரு கட்டத்தில் அவருக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டபோது, அரசியல் செல்வாக்கால் கடன் பத்திரங்களையே பங்குகளாக மாற்றிக் கொண்டார். ஆண்டுதோறும் வட்டி கிடைக்கும் என்று நம்பி கடன் பத்திரங்களை வாங்கிய நடுத்தரவர்க்கத்திற்குப் பட்டை நாமம் போட்டார்.


இத்தனையும் செய்து விட்டு, சாவதற்கு முன்பு ஒரு தத்துவத்தையும் சொன்னார் அம்பானி: ""ரிலையன்சை நான் உருவாக்கினேன் என்பது உண்மைதான். அம்பானிகள் வரலாம், போகலாம். ஆனால் ரிலையன்சின் பங்குதாரர்கள் அதை உயிர்ப்புடன் வைத்திருப்பார்கள்'' என்றார். ஆனால் அம்பானி செத்த இரண்டே வருடங்களுக்குள் அவரது மகன்கள் அம்பானியின் இந்த மரண வாக்குமூலமும் பொய்யே என்பதை நிரூபித்து விட்டார்கள்.


ரிலையன்சின் 52% பங்குகள் பொதுமக்கள் வசம் இருப்பதாகவும், 43% பங்குகளை பன்னாட்டு, உள்நாட்டு நிதி நிறுவனங்கள் வைத்திருப்பதாகவும், எஞ்சியுள்ள 5 சதவீத பங்குகள்தான் தங்கள் வசம் இருப்பதாகவும் அம்பானி குடும்பத்தினர் புளுகி வந்தனர். புத்திரர்களின் சொத்துச் சண்டையில் இந்தப் புளுகுணியாட்டமும் வெட்டவெளிச்சமானது. பொதுமக்களது கையில் இருக்கும் பங்குகள் உண்மையில் 13 சதவீதம் மட்டுமே. மீத 39 சதவீதம் அம்பானியின் பினாமி நிறுவனங்களிடம் இருக்கின்றன. இந்த நிறுவனங்களின் எண்ணிக்கை மட்டும் 500ஐத் தாண்டும்.


மேட்ரிக்ஸ் எனும் ஆங்கிலப் படத்தில் பிரம்மாண்டமான கணினியொன்று செயற்கையான காட்சி உலகை உருவாக்கி எது மெய் எது பொய் என்று அறிய முடியாத குழப்பத்தை உருவாக்குவது போல, அடியையும் நுனியையும் கண்டுபிடிக்க முடியாத வண்ணம் இந்த பினாமி கம்பெனிகளை உருவாக்கியிருக்கிறார் அம்பானி. முதலீட்டாளர்களையும் அரசாங்கத்தையும் ஒரே நேரத்தில் ஏமாற்றும் இந்த கிரிமினல் குற்றம், வாரிசுச் சண்டையில் அம்பலமாகி நாறியது.


எனினும், ரிலையன்ஸ் குடும்ப பிரச்சினையில் அரசு தலையிடாது என ப.சிதம்பரமும், ஏனைய மத்திய அமைச்சர்களும் அறிவித்தனர். இந்தியா டுடே உள்ளிட்ட ஊடகங்கள், அம்பானி வளர்த்த சாம்ராஜ்ஜியம் இப்படி அழியலாமா என்று சோக கீதம் இசைத்தனரேயொழிய யாரும் அம்பானி குடும்பத்தினர் தண்டிக்கப்பட வேண்டும் என்று எழுதவில்லை, அவர்களால் சூறையாடப்பட்ட சிறுமுதலீட்டாளர்களுக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்தக் கூட இல்லை.


""நாம் இந்தியாவிலேயே முதல் கம்பெனியானால் போதுமா, உலகத்திலேயே முதல் கம்பெனி ஆகவேண்டாமா'' என்று பங்குதாரர்கள் கூட்டத்தில் குரு முழங்கும் காட்சியுடன் படம் முடிகிறது. அன்று குருவின் மோசடிகள் என்று கூறப்பட்டவை அனைத்தும் இன்று சட்டபூர்வமாக்கப்பட்டு விட்டன. நடுத்தரவர்க்கத்துக்குப் பேராசை காட்டி பங்குச் சந்தைச் சூதாட்டத்தை நோக்கி அன்று அம்பானி கவர்ந்திழுத்தார் என்றால் இன்று ப.சிதம்பரம், நடுத்தர வர்க்கத்தின் சேமிப்புகளைப் பங்குச் சந்தையை நோக்கி நெட்டித் தள்ளுகிறார்.


வங்கிகளின் வைப்புநிதி, தபால் சேமிப்பு, அரசின் கடன் பத்திரங்கள் ஆகிய அனைத்துக்கும் வட்டி விகிதத்தைக் குறைத்து, நடுத்தரவர்க்கம் தனது சேமிப்பை பங்குச் சந்தையில்தான் போடவேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறார் சிதம்பரம். இதுவும் போதாதென்று தற்போது தொழிலாளர்களின் சேமநல நிதி மூன்று இலட்சம் கோடி ரூபாயையும், பென்சன் நிதியையும் பங்குச் சந்தையில் வைத்துச் சூதாடவிருப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இப்படி போதும் போதுமென்னும் அளவுக்கு முதலீட்டுக்கான பணம் தளும்பி வழிந்தும் பங்குதாரர்களைக் கொள்ளையடிக்கும் அம்பானியிசம் முடிவுக்கு வந்துவிடவில்லை. அதனைப் புதிய எல்லைக்கு வளர்த்திருக்கிறார்கள் அவரது புத்திரர்கள்.



""ஒரு தபால் கார்டு விலையில் ஃபோன் பேசலாம் — திருபாய் அம்பானி கனவுத் திட்டம்'' என்ற பெயரில் பங்குச் சந்தையில் குதித்த ரிலையன்ஸ் இன்போகாம், ஒரு பங்கின் முகமதிப்பு ரூபாய் ஒன்று எனவும் பிரீமியம் மதிப்பு 49 ரூபாய் என 50 ரூபாயில் பங்குகளை வெளியிட்டது. இதற்கு 10 வருடங்களுக்கு ஈவுத் தொகையோ வட்டியோ கிடையாது என்ற நிபந்தனையும் உண்டு. பிரீமியம் எனப்படுவது அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பை வைத்துக் கணக்கிடப்படும் போலி மதிப்பு ஆகும். இந்தப் பங்குகள் வெளியீட்டில் முகேஷ் அம்பானியும், ரிலையன்சின் மேல்மட்ட அதிகார வர்க்கக் கும்பலும் தொழில் முனைவோர் என்ற பெயரில் பெருமளவு பங்குகளை தம் வசம் வைத்துக் கொண்டு 1 ரூபாய் விலையில் வாங்கிய பங்குகளை 50 ரூபாய்க்கு விற்று கோடிக்கணக்கில் சுருட்டினர். வாரிசுரிமைச் சண்டையின்போது அனில் அம்பானி கும்பல் இதை அம்பலப்படுத்தியது. அவலையும் உமியையும் கலந்து விற்கும் இந்தக் கலவையைத் திறமை என்று போற்றுவதா, மோசடி என்று குற்றம் சாட்டுவதா?


"அம்பானி ஒரு வெற்றிக் கதை' என்ற புத்தகத்தை எழுதிய என்.சொக்கனது கண்ணோட்டப்படி ""இது நடுத்தர வர்க்கப் பங்குதாரர்க ளின் அசட்டுத்தனத்துக்குக் கிடைத்த தண்டனை.'' கிழக்குப் பதிப்பகம் பெருமையுடன் வழங்கியுள்ள இந்தப் புத்தகம் பல்லாயிரக்கணக்கில் விற்றுத் தீர்ந்திருக்கிறதாம்.


அதில் அம்பானி வளைகுடா நாடான ஏமனில் இருக்கும்போது நடந்த சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுகிறார் சொக்கன். அங்கே ஷெல் பெட்ரோல் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தபோது அம்பானி சைடு பிசினஸ் ஒன்றைச் செய்கிறார். அது என்ன? ஏமனின் செலாவணியான ரியால் வெள்ளியில் தயாரிக்கப்பட்டதாம். அதன் நாணய மதிப்பைவிட அதில் கலந்துள்ள வெள்ளியின் மதிப்பு மிக அதிகமாம். இதைக் கண்டுபிடித்த அம்பானி ரியால் நாணயங்களைச் சேகரித்து வெள்ளியை உருக்கிப் பாளம் பாளமாகத் தயாரித்து இங்கிலாந்து நாட்டிற்கு ஏற்றுமதி செய்தாராம். அதில் அவருக்கு மிகப் பெரிய இலாபமாம்.


இந்தச் சம்பவம் குறித்து உங்கள் மனதில் தோன்றுவது என்ன? அட கயவாளி, ஒரு நாட்டின் நாணயத்தையே உருக்கி மோசடி செய்திருக்கிறானே என்று நினைக்கிறீர்களா? அம்பானியின் பக்தர் சொக்கன் அப்படிக் கருதவில்லை. அவர் சொல்கிறார், ""ஏமன் அரசாங்கத்தின் அசட்டுத்தனத்தை தனக்குச் சாதகமாக்கிப் பயன்படுத்தியதன் மூலம் அந்த அரசாங்கத்திற்குச் சரியான தண்டனை கொடுத்திருக்கிறார்'' என்று மெச்சுகிறார். மணிரத்தினத்தின் கருத்தும் இதுதான்.



குரு திரைப்படம் தமிழகத்தில் வெற்றி பெறவில்லையென்றாலும் அது கூறவரும் செய்தி சமூகத்தில் செல்வாக்கு பெற்று வருகிறது. சுயநலன் என்பது ஒரு இழிந்த குணமாக கருத்தளவிலாவது பார்க்கப்படுவது, பொதுநலன் என்பது உயர்ந்த பண்பாக வாயளவிலாவது போற்றப்படுவது என்ற நிலை மாறி, பொதுநலன் பேசுவோர் ஏமாளிகளாகவும், சுயநலவெறி முன்னுதாரணமாகவும் சித்தரிக்கப்படும் காலத்தில் அத்தகையதொரு கயவனை நாயகனாகச் சித்தரிக்கிறது குரு. ரவுடிகள் நாயகர்களாக்கப்படுவதைக் காட்டிலும் இது அபாயகரமானது.


ஏமாற்றுவதையும், சக மனிதர்களை மோசடி செய்வதையும், சமூகத்தை ஊழல்படுத்துவதையும் எவ்விதக் கூச்சமும் இன்றிச் செய்த ஒரு மனிதனை இலட்சியவாதியாகக் காட்டுகிறார் மணிரத்தினம். அம்பானியின் குற்றங்களை திரையில் அடக்கி வாசித்துக் காட்டுவதன் மூலம் அவன் கூறும் விழுமியங்களுக்கு வலுச்சேர்க்கிறார். அம்பானியின் கிரிமினல் குற்றங்கள் கூட தெரிந்து செய்தவையோ, வேண்டுமென்றே செய்தவையோ அல்ல என்பது போலவும், ஒரு இலட்சியத்தைத் துரத்திச் செல்லும் மனிதனை ஒரு கட்டத்துக்கு மேல் அந்த இலட்சியமே இழுத்துச் செல்வது போலவும், அதற்கு அந்த மனிதனைக் குற்றம் சாட்ட முடியாது என்பதாகவும் சித்தரிக்கிறார் மணிரத்தினம்.


சினிமாவில் மணிரத்தினம் சித்தரிக்கும் சென்டிமென்டுகள் உள்ளிட்ட குணாதிசயங்கள் அம்பானியைப் போன்ற முதலாளிகளிடம் அறவே இருப்பதில்லை. ஊனமுற்ற பெண்ணிடம் பாசம் வைக்கும் அம்பானி, கோயங்காவின் காரை உடைத்ததற்காக தன் மானேஜரைக் கண்டிக்கும் அம்பானி போன்ற காட்சிகள் ஒரு கிரிமினலுக்கு மனித முகம் தருவதற்காகவே உருவாக்கப்பட்ட காட்சிகள். சினிமா ரவுடிகளைப் பார்த்து ஸ்டைல்களைக் கற்றுக் கொண்ட நிஜ ரவுடிகள் போல சினிமா அம்பானிகளைப் பார்த்து நிஜ அம்பானிகளும் இனி வேடம் போடக்கூடும்.



குரு திரைப்படத்தைப் பார்த்துவிட்டு அம்பானியின் மனைவியும், மகன்களும் பாராட்டு தெரிவித்தார்களாம். பின்னே, இறுதிக் காட்சியில் பல்லாயிரம் பங்குதாரர்களின் மத்தியில் குரு ""நமது சக்தி நிறுவனத்தை உலகின் நம்பர் ஒன் நிறுவனமாக மாற்றுவோம்'' என்று சூளுரைப்பானே, அம்பானிகளை அந்தக் காட்சி வானத்தில் பறப்பது போலப் பரவசமடைய வைத்திருக்கும். பால்தாக்கரே பாராட்டிய பம்பாய்! அம்பானிகள் பாராட்டிய குரு! த.மு.எ.ச. விருதுதான் பாக்கி. அவர்களை முந்திக் கொண்டு சுஜாதா மிகப் பெரிய விருது கொடுத்துவிட்டார். குரு திரைப்படம் இந்தியத் திரையுலகை ஹாலிவுட் தரத்திற்குக் கொண்டு சென்று விட்டதாம். அப்புறம் என்ன? புஷ், என்ரான் போன்ற அமெரிக்க வில்லன்களை நாயகர்களாகச் சித்தரிக்கும் திரைக்கதைகளை சுஜாதா எழுதிக் கொடுக்க மணி இயக்கலாமே!


ஒரு கொசுறுச் செய்தி: குரு திரைப்படத்தின் தயாரிப்பில் அனில் அம்பானியின் அட்லாப் என்ற நிறுவனமும் இருக்கிறது. அதாவது இது (குரு) அம்பானி கம்பெனியின் விளம்பரப்படம். விளம்பரப் படத்தைப் போட்டுக் காட்டுவதற்கு இரசிகர்களிடம் காசு வசூலிக்கப்பட்டதாக எங்கேயாவது நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதுதான் அம்பானி. செத்தபின்னும் திருடுவார், திருட்டுபாய் அம்பானி!


· வேல்ராசன்

Wednesday, June 6, 2007

1857 பிரிட்டிஷ் நாகரிகக் கோமான்களின் காட்டுமிராண்டித்தனம்!

1857 பிரிட்டிஷ் நாகரிகக் கோமான்களின் காட்டுமிராண்டித்தனம்!

ந்தியாவில் எழுச்சி கொண்ட சிப்பாய்கள் செய்த அட்டூழியங்கள் உண்மையிலேயே திகைக்க வைக்கின்றன; பயங்கரமாக இருக்கின்றன; சொற்களால் வருணிக்க முடியாத அளவு கொடூரமாக இருக்கின்றன. இப்படிப்பட்ட சம்பவங்களை ஆயுதந்தாங்கிய எழுச்சிப் போர்களில், தேசிய எழுச்சிப் போர்களில், இனமோதல்களில், எல்லாவற்றையும் விட மதம் சார்ந்த போர்களில்தான் பார்க்க முடியும்.


சுருக்கமாக விவரிப்பதானால், இப்போது இந்தியச் சிப்பாய்களின் நடவடிக்கைகளால் அதிர்ச்சியுற்றிருக்கிற கவுரவமிக்க இங்கிலாந்துதான் மேன்மை தங்கிய பிரிட்டிஷ் மன்னரின் குதிரைப்படை வீரர்களை பிரெஞ்சு மன்னரின் படை தாக்கியதையும், ஃபிரான்சின் வேற்று மதத்தவர்களை ஸ்பானிய கொரில்லாக்கள் தாக்கியதையும், எல்லாவற்றையும் விட பிரெஞ்சுப் பாட்டாளிகளின் அருமைப் புதல்விகளும், புதல்வர்களும் தாக்கப்பட்டதையும் கைகொட்டி ரசித்துக் கொண்டாடியது.


இந்தியச் சிப்பாய்களின் செயல்கள் எவ்வளவு வெறுக்கத்தக்கதாக இருந்தாலும், அவை அத்தனையுமே இங்கிலாந்து இந்தியா மீது நடத்திய அட்டூழியங்களின் செறிவான, ஒட்டு மொத்தமான எதிர்வினைதான் கீழைச் சாம்ராச்சியத்தை நிறுவிய கட்டத்தில் மட்டுமல்ல, நிலையான ஆட்சி நிலை நிறுத்தப்பட்ட கடந்த பத்தாண்டுகளில் நடந்ததும் அப்படிப்பட்டதே.


அந்த ஆட்சியை விவரிப்பதானால், சித்திரவதையே அதன் நிதிக் கொள்கையின் திரண்ட நிறுவனமாக இருந்தது. மனிதகுல வரலாற்றில் பழி வாங்குதல் என்ற ஒன்றுண்டு; வரலாற்று வெஞ்சினத்தின் விதி ஒன்றுண்டு அதன் கருவியை, அடக்கப்பட்டவர்கள் அல்ல, அடக்குபவரேதான் உருவாக்குகிறார்கள்.


பிரெஞ்சுப் பேரரசுக்கு முதலடி விழுந்தது விவசாயிகளின் கரங்களிலிருந்தல்ல; பிரபுக்குலத்திலிருந்துதான். பிரிட்டிஷாரின் சித்திரவதைக்கும் அவமானத்துக்கும் ஆளாகி அம்மணமாக நிறுத்தப்பட்ட விவசாயிகளிலிருந்து இந்திய எழுச்சி தொடங்கவில்லை; அதே பிரிட்டிஷாரால் உடை, உணவு, சலுகைகள் ஊட்டப்பட்ட சிப்பாய்களிடமிருந்துதான் எழுச்சி தொடங்கியது.


சிப்பாய்களின் அட்டூழியங்களுக்கு ஒப்பீடுதேட சில லண்டன் ஏடுகள் பாசாங்கு செய்து எழுதுவதுபோல நாம் மத்திய கால காட்டுமிராண்டித்தனத்துக்கோ, ஏன், சமகால இங்கிலாந்து வரலாற்றுக்கோ போய்த் தேடவேண்டாம்; நேற்று நடந்ததுபோல் தோன்றும் அந்த முதல் சீனப்போரின் சம்பவங்களை ஆராய்ந்தால் போதும்1.


ஆங்கிலேயச் சிப்பாய்கள் வேடிக்கைக்காகச் செய்த அருவெறுக்கத்தக்க செயல்களைப் பாருங்கள் போதும்: எந்த ஒரு மதவெறி இயக்கமும் அதற்குப் புனிதப்பட்டம் கொடுக்கவில்லை; ஒரு இனம் அடக்கியதால் மற்றொரு இனம் கசப்போடும் வெறுப்போடும் அதற்கெதிராக எழுந்து செய்த பதில் வெறியாட்டமும் அல்ல அது; எதிரி வீரதீரமான கடும் எதிர்ப்பைக் காட்டியதால் தூண்டப்பட்டதுமல்ல.


அங்கு நடந்ததென்ன? பெண்களின் கற்பு சூறையாடப்பட்டது; பச்சிளங் குழந்தைகள் துடிக்கத் துடிக்க வெட்டி வீசப்பட்டன; இண்டு இடுக்கு விடாமல் கிராமம் கிராமமாகக் கொளுத்திச் சாம்பலாக்கப்பட்டன. இவை அத்தனையும் அவர்களுக்குச் சிறுபிள்ளை விளையாட்டு. கொடுமைகள் பற்றிய இந்தப் பதிவுகள் சீனர்களுடையதல்ல, அத்தனையும் பிரிட்டிஷ் அதிகாரிகளின் ஆவணங்களே!


இத்தனைப் பெரிய அழிவுக்கும் எல்லா வன்முறைகளுக்கும் காரணம் இந்தியச் சிப்பாய்கள்தான் என்றும், ஆங்கிலேயத் தரப்பில் அமுதமாய்ச் சுரந்தது பேரன்பென்றும் சொன்னால் அது பெரிய தவறாகி விடும்; அப்புறம் அப்பதிவை எப்போதுமே சரி செய்ய முடியாது போய்விடும். பிரிட்டிஷ் அதிகாரிகள் தான் கடிதங்கள் மூலம் வெறுப்பைக் கக்குகிறார்கள்.


ஓர் அதிகாரி பெஷாவரிலிருந்து விரிவாக எழுதுகிறான் — 55வது காலாப்படைமீது தாக்குதல் நடத்தச் சொல்லி 10வது குதிரைப் படைக்கு உத்தரவு போட்டபோது, 10ஆம் படை மறுத்துவிட்டதால் அப்படையிடமிருந்து ஆயுதங்களைப் பறிமுதல் செய்தானாம் அவன். அதுமட்டுமல்ல, ""அவர்களின் கோட்டுக்களையும் கழற்றினோம், பூட்களையும் பிடுங்கினோம், ஒவ்வொருவருக்கும் அபராதம் போட்டோம், பிறகு அவர்களை வெறுங்கால்களோடு ஆற்றங்கரை வரை இழுத்துச் சென்று படகுகளில் இறக்கி சிந்து நதியின் காட்டாற்று வேகத்தில் தள்ளிவிட்டோம்'' என்றும் பொங்கி வழியும் சந்தோசத்தோடு விவரிக்கிறான். ஒவ்வொருத்தனும் வெள்ளத்தில் மூழ்கிச் செத்திருப்பான் என்ற மகிழ்ச்சி அவன் எழுத்துக்களில் தெரிகிறது.


இன்னொருத்தன் எழுதுகிறான் — பெஷாவர் மக்களில் சிலர் தங்கள் குடும்பத் திருமண விழாவை பட்டாசு வெடித்துச் சந்தோசமாகக் கொண்டாடினார்களாம். இரவு நேரத்தில் அது அவர்களைப் பயமுறுத்திவிட்டதாம். அடுத்தநாள் காலை அவர்களை இழுத்துச் சென்று மரத்தில் கட்டி வைத்தார்கள்; அவர்கள் செயலுக்குத் தண்டனையாக ""அவர்கள் என்றுமே மறக்க முடியாதபடி சவுக்கடிகள் கொடுக்கப்பட்டன'' என்று எழுதுகிறான்.


ராவல்பிண்டியிலிருந்து உள்ளூர்த் தலைவர்கள் மூன்று பேர் சேர்ந்து சதி செய்வதாகத் தகவல் வர அந்தக் கூட்டத்துக்கு அரசு உளவாளியை அனுப்பி செய்தியை அறிந்து கொண்டான் சர் ஜான் லாரன்ஸ். உளவாளியின் அறிக்கைக்கு சர் ஜான் பதில் அனுப்பினான்: ""அவர்களை உடனே தூக்கில் போடுங்கள்'' அந்தத் தலைவர்கள் (விசாரணையே இல்லாமல்) தூக்கில் போடப்பட்டார்கள்.


அலகாபாத் அரசு அதிகாரி எழுதுகிறான்: ""எவர் ஒருவருடைய வாழ்வும் சாவும் எங்கள் கையில்தான். ஒரு பயலைக் கூட நான் விட்டுவைக்கவில்லை'' அதே இடத்திலிருந்து இன்னொரு அதிகாரி எழுதுகிறான்: ""சிப்பாய்கள் அல்லாத பொதுமக்களில் ஒவ்வொருநாளும் பத்துப் பதினைந்து பேரையாவது தூக்கில் போட்டு விடுகிறோம். போடாமல் ஒரே ஒருநாள் கூடக் கழிந்ததில்லை.'' இன்னொரு அதிகாரி மகிழ்ச்சி பொங்க எழுதுகிறான்: ""ஹோல்ம்ஸ் அவர்களை எல்லாம் "செங்கல்' கட்டித் தொங்கவிடுவது போல எண்ணி எண்ணித் தூக்கில் போடுகிறான்.''


இன்னொருவன், கிராமத்து மக்களை ஒரே நேரத்தில் தூக்கில் போட்டதை இப்படி உருவகப்படுத்தி எழுதினான்: ""பிறகுதான் எங்கள் கொண்டாட்டம் ஆரம்பித்தது.'' மூன்றாவது ஆள் எழுதினான்: ""விசாரணையை நாங்கள் குதிரைமேல் இருந்தவாறே முடித்துவிட்டோம். வழியில் எங்கள் எதிர்ப்பட்ட ஒவ்வொரு கருப்பனையும் தூக்கில் போட்டோம், அல்லது சுட்டுத் தள்ளினோம்.''


பனாரசிலிருந்து எங்களுக்குக் கிடைத்த தகவல்படி, உள்ளூர் மக்களுக்கு ஆதரவாக இருந்த காரணத்துக்காகவே முப்பது ஜமீந்தார்கள் தூக்கில் போடப்பட்டார்கள்; அதே காரணத்துக்காக, பல கிராமங்கள் முழுக்க எரித்து அழிக்கப்பட்டன.2 லண்டன் டைம்ஸில் பனாரசிலிருந்து ஓர் அதிகாரி எழுதிய கடிதம் வெளியிடப்பட்டது. அவர் சொல்கிறார்: ""உள்ளூர் மக்களோடு மோதிய ஐரோப்பியப் படைகள் கொலைகாரப் படைகளாகவே மாறிவிட்டன.'' 3


ஒன்றை நீங்கள் மறந்துவிடக் கூடாது — ஆங்கிலேயரின் வன்முறைகளையெல்லாம் போர்க்கால வீரச் செயல்களாக, எளிமையாகவும் வேகமாகவும் எழுதிச் செல்லும் அவர்கள் அருவெறுப்பு மிகுந்த உள்விவகாரங்களை மறந்தும் கூட எழுதவில்லை; அதேசமயம், உள்ளூர் மக்களின் கோபத்தை விவரித்தபோது, அவை அதிர்ச்சி ஊட்டுபவைதான் என்றாலும் கூட, அவற்றை வேண்டுமென்றே அளவுக்கதிகமாகப் பெரிசுபடுத்தி எழுதினார்கள்.


எடுத்துக்காட்டாக, ""தி டைம்ஸ்'' நாளேட்டில் நுணுக்கமான விவரங்களாக முதலில் வெளியாகி, பிறகு லண்டன் செய்தியாளரிடையே வலம் வந்த "டெல்லி மீரட் அட்டூழியங்கள்' பற்றித்தான் சொல்கிறேன்,அந்தக் கட்டுக் கதைகள் முதலில் யாரால் தொடங்கப்பட்டன? சம்பவ இடத்திலிருந்து ஒரு ஆயிரம் மைல் தொலைவுக்கப்பால் மைசூர் அருகே பெங்களூரில் உள்ள ஒரு கோழைக் கிறித்தவப் பாதிரியிடமிருந்துதான் முதலில் அது செய்தியாக வந்தது.


டெல்லியில் நடந்த உண்மை நடப்புகளை வைத்துப் பார்க்கும்போது, ஓர் இந்துச் சிப்பாயின் கட்டற்ற கற்பனையைவிட, ஒரு ஆங்கிலேயப் பாதிரியின் மூளை மிகப் பயங்கரமான கொடூரங்களை உற்பத்தி செய்திருப்பது தெரிகிறது. மான்செஸ்டர் அமைதி நிறுவனச் செயலர் சீனாவின் கேன்டன் குடியிருப்புகள் மீது வீசிய பழுக்கச் சிவந்த குண்டுகளைவிட, ஒரு குகையில் அடைக்கப்பட்ட அராபியரை ஒரு பிரெஞ்சுத் தளபதி தீயிட்டு வறுத்ததைவிட, போர்க்களத்திலேயே ஒப்புக்கு விசாரணை நடத்தி வார்க்கச்சையில் தொங்கவிட்டு பிரிட்டிஷ் படைவீரரை அவர் நாட்டு அதிகாரிகளே உயிரோடு தோலுரிப்பதைவிட, பிரிட்டன் சீர்திருத்தச் சிறைகளில் இரக்கப்பட்டுக் கொடுக்கிற கருவித் தண்டனைகளைவிட மூக்கையும் முலைகளையும் அறுத்த சிப்பாய்களின் கோரச் செயல்கள் அவர்களுக்கு அருவெறுப்பு மிக்கதாக இருக்கிறது.


மற்ற எல்லா விசயங்களைப்போலவே காலம், இடத்துக்குத் தகுந்தாற்போல கொடூரத்தின் பாணிகள் மாறிக் கொண்டுதான் இருக்கின்றன. பல திறப்பட்ட பண்புகள் நிறைந்த சீசர் ஆயிரக்கணக்கான காலிக் போர்வீரர்களின் வலது கரங்களை வெட்டி வீசி எறியத் தான் உத்தரவிட்டதை விலாவாரியாக விளக்குகிறான்; ஆனால், நெப்போலியன் இப்படிச் செய்ய மனம் கூசியிருப்பான் குடியரசுவாதிகள் என தன்படையில்தான் சந்தேகித்தவர்களை கண் காணாத புனித டொமிங்கோவுக்குக் கப்பலேற்றி அனுப்பினான் அவன்; அங்கே பிளேக் போன்ற கொடிய நோய்கள் பீடித்து அப்படியே அவர்கள் செத்துப் போவதைத்தான் அவன் விரும்பினான்.


சிப்பாய்கள் செய்த மோசமான மூக்கறுப்பும் பிறவும் கிறித்தவ சமயஞ்சார்ந்த பண்டைய கீழை ரோம சாம்ராச்சியப் பழக்கங்களையோ, அல்லது, ஐந்தாம் சார்லஸ் மன்னனின் குற்றவியல் சட்டங்களில் விதிக்கப்பட்ட தண்டனைகளையோ, அல்லது, ராஜத்துரோகத்துக்கு ஆங்கிலேயர் வழங்கிய தண்டனைகளையோதான் நினைவூட்டுகின்றன; அவை இன்றளவும் ஆங்கிலேய நீதிமான் பிளாக்ஸ்டோனால் பதிவு செய்யப்பட்டுள்ளன.


தம்மைத்தாமே வருத்திக் கொள்ளும் கலையையே ஒரு மதக் கோட்பாடாகக் கொண்டிருக்கும் இந்துக்கள் தங்கள் எதிரிகளை இவ்வாறு சித்திரவதை செய்வதை மிகவும் இயல்பாகவே கருதியிருக்கக் கூடும். ஆங்கிலேயர்களுக்கும் கூட இது இயல்பாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஏனென்றால், ""தேர்ச்சக்கரத்தில் தலைகொடுத்துச் செத்தால் நேரே சொர்க்கம் போகலாம்'' என்ற இந்து மதத்தின் கொடூரமான ரத்தப்பலிச் சடங்குக்குத் துணைநின்று பாதுகாப்பு கொடுத்து, அந்தத் திருவிழாவிலிருந்து வரியும் வசூலித்தவர்கள் அல்லவா இவர்கள்!


"லண்டன் டைம்ஸ்' நாளேடு ரொம்பவும் அலட்டிக் கொள்கிறது... அதற்கு என்ன வேண்டுமாம்? கணக்குகளை விரிவாக எழுதி, அரசாங்கத்தை எப்படியாவது மூடி மறைத்துக் காப்பாற்ற வேண்டும், அவ்வளவுதானே? படை எடுத்து வென்றவர் எக்காளம் எடுத்து ஊதிய உடனே "ஜெரிச்சோ' சுவர்கள் பொடிப் பொடியாக நொறுங்கி விழுகிறதே பைபிளில், அதுபோல டெல்லி வீழ்ந்துவிடவில்லை; அதனால்தான் ஆங்கிலேய அதிகாரி ஜான்புல் "பழிதீர்ப்பேன்' என்று வாய்கிழியக் கத்தினான். அவனது அரசாங்கம்தானே முன் செய்த அத்தனைக் கொடுஞ்செயலுக்கெல்லாம் காரணம்? அதுதானே இப்போது பிரம்மாண்டமாக வளர்ந்து பேரழிவாய் வெடித்திருக்கிறது? அவனும் அவனைச் சுற்றியிருப்பவரும் கத்தித் தீர்த்துவிட்டால் காரணம் மறந்துவிடுமா? இல்லாமல் போய்விடுமா?


தமிழில்: புதூர் இராசவேல்


அடிக்குறிப்புகள்:

1 கார்ல் மார்க்ஸ் இங்கே குறிப்பிடுவது சீனாமீது பிரிட்டன் நடத்திய வெறிகொண்ட போர்; இந்தப்போர் (1839 1842) முதல் அபினிப்போர் என்று அறியப்படும். அந்த ஆண்டுகளில்தான் சீனா அரைக்காலனிய நிலைக்கு கீழே இறக்கித் தள்ளப்பட்டது.


2 பிரிட்டிஷ் கம்பெனியின் ஊழியர் போலாநாத் சந்திரா என்பவர் பிரிட்டிஷ் படைகள் வாரணாசியில் செய்த அக்கிரமங்களை விவரிக்கும்போது, பனாரசில் மட்டும் 6000 பேர் தூக்கில் போடப்பட்டதாகச் சொல்கிறார். ஆதாரம்: ""ஓர் இந்துவின் பயணங்கள்'', தொகுப்பு, டால்பாய் வீலர். இப்பகுதி கேயே என்ற பிரிட்டிஷ் வரலாற்றறிஞரின் "சிப்பாய்ப் போரின் வரலாறு' பகுதி 2 (லண்டன், 1881), பக். 66869ல் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.


3 ஆர்.எச். பார்ட்ரம், 13.7.1857, தி டைம்ஸ், எண் 22775, 2.9.1857, மார்க்ஸ், ஏங்கெல்ஸ், திரட்டப்பட்ட படைப்புகள், தொகுதி 15, பக். 355, அடிக்குறிப்பு.


Tuesday, June 5, 2007

பகுத்தறிவின் லீலைகள் வியந்தோதாய் உடன்பிறப்பே…

பகுத்தறிவின் லீலைகள் வியந்தோதாய் உடன்பிறப்பே…

ய்! சாயிபாபா

வெறுங்கையிலிருந்து விபூதியும் பூச்செண்டும்

வரவழைத்தாயே! அதுவா அற்புதம்?

வெயிலறியா உன் தலைமுடியிலிருந்து

விதவிதமாய் கடிகாரங்களை வரவழைத்தாயே!

அதுவா அற்புதம்?


பசியறியா உன் வயிற்றியிலிருந்து

பலப்பல லிங்கங்களை வரவழைத்தாயே!

அதுவா அற்புதம்?

அடே! சாயிபாபா

வழியறியா உன் காவிக் கஜானாவிலிருந்து

கடைசியில் கருணாநிதியை

வெளியே வரவழைத்தாயே!

அதுவன்றோ அற்புதம்!!

வீழ்ந்திற்றோ கொள்கைக் குன்று என்று

விளங்காத உடன்பிறப்பே...

இருநூறு கோடி எதிரே வருகையில்

பெரியார் பார்வையா பார்க்க முடியும்?


கொஞ்சம் பகுத்தறிவோடு பார்!

யாருக்கும் தலைவணங்காத சுருள்முடியையே

கோபாலபுரம் தன் காலடிக்கு வரவழைத்தது

ஆன்மீகத்திற்கே பேரடி அல்லவா?

அதிசயம் அல்லவா?


அற்புதத்தில் விஞ்சி நிற்பது

பாபாவா? கலைஞரா? பார்!

வெறுங்கையிலிருந்து நோக்கியாவை

வரவழைத்தார்!


இதோ... ஊமைகள் பேசுகிறார்கள்!

காலிக் கஜானாவிலிருந்து

கலர் டி.வி.யை வரவழைத்தார்!

அதோ... குருடர்கள் பார்க்கிறார்கள்;

வாயிலிருந்தே இரண்டு ஏக்கர் நிலத்தை

வரவழைத்தார்!

அதோ முடவர்கள் நடக்கிறார்கள்.

அது மட்டுமா...?


அணுவைத் துளைத்து, மலைகள் விழுங்கி,

ஆழ்கடல் குடித்து ஆயிரமாய் விளைநிலங்கள் செரித்து

குறுகத் தறிக்கும் உலகமயப் பொதுமறையை

ஓவியமாய்த் தீட்டும் அற்புதம்

அந்த பாபாவுக்கு வருமா?

அவரா, இவரா?


அற்புதத்தைத் தெரிவு செய்ய முடியாமல்

திக்குமுக்காடி நெளிகிறது தெலுங்கு கங்கை.

ஆசீர்வாதத்திற்குப் பயந்து

ஓடி ஒளிகிறது கூவம்!


துரை. சண்முகம்

Monday, June 4, 2007

சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டத் திருத்தம் : சர்வகட்சி பித்ததலாட்டம்

சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டத் திருத்தம் :
சர்வகட்சி பித்ததலாட்டம்



சிறப்புப் பொருளாதார மண்டலங்களை எதிர்த்து நாட்டின் பல பகுதிகளில் நடந்து வரும் போராட்டங்களையடுத்து, 2005ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டத்தில் சில மாற்றங்களைச் செய்திருக்கிறது, மைய அரசு. இதன் மூலம், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மக்களுக்கு எதிரானவையல்ல எனக் காட்டிக் கொள்வதோடு, அதற்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களை நீர்த்துப் போக வைக்கவும் முயலுகிறது.


""குறைந்தபட்சம் 1,000 ஹெக்டேர் (2,500 ஏக்கர்) நிலப்பரப்பில் தான் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உருவாக்க வேண்டும்; அதிகபட்ச நில உச்ச வரம்பு எதுவும் கிடையாது'' என்ற 2005ஆம் ஆண்டு சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டத்தில், தற்பொழுது, ""சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு 5,000 ஹெக்டேருக்கு மேல் நிலம் ஒதுக்கக் கூடாது'' என உச்சவரம்பு விதிக்கப்பட்டுள்ளது.


""மாநில அரசு நிலங்களைக் கையகப்படுத்திக் கொடுப்பதற்குப் பதிலாக, சிறப்புப் பொருளாதார மண்டலங்களைத் தொடங்க அனுமதி பெற்றுள்ள நிறுவனங்களே நேரடியாக விவசாயிகளிடம் பேரம் பேசி, நிலங்களை வாங்கிக் கொள்ளலாம்.''


""சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்காக விவசாய நிலங்களை விற்கும் விவசாயிகளுக்கு, சம்மந்தப்பட்ட மாநில அரசு நிர்ணயிக்கும் வரையறைபடி, மறுவாழ்வுக்கான நிவாரண உதவிகளைச் செய்ய வேண்டிய பொறுப்பு, சிறப்புப் பொருளாதார மண்டலங்களைத் தொடங்கும் நிறுவனங்களைச் சார்ந்தது. மேலும், நிலத்தை விற்கும் ஒவ்வொரு விவசாயக் குடும்பத்திலிருந்தும் ஒருவருக்கு சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்'' என மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.


சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் தொழில் தொடங்கும் முதலாளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள பல்வேறு விதமான வரிச் சலுகைகள் மீது கை வைக்க விரும்பாத மைய அரசு, சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் கட்டிடங்களைக் கட்டுவது, அவற்றைப் பராமரிப்பது போன்ற பணிகளைக் குத்தகைக்கு எடுக்கும் நிறுவனங்களுக்கும் இந்த வரிச் சலுகைகளை அளிக்கும் மாற்றத்தை தற்பொழுது கொண்டு வந்துள்ளது.


சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்கான விண்ணப்பங்களைப் பரிசீலித்து அனுமதி அளிக்கும் காலக் கெடுவை மூன்று ஆண்டுகளில் இருந்து ஓராண்டாகக் குறைப்பதனைக் கொள்கை அளவில் ஏற்றுக் கொள்வதென்றும் மைய அரசினால் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த மாற்றங்களையும், சலுகைகளையும் அறிவித்த கையோடு, மேலும் 83 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் தொடங்குவதற்கான அறிவிக்கையினை வெளியிடும் அனுமதியையும் வழங்கி விட்டது. இந்த 83ஐயும், சேர்த்து இதுவரை 162 சிறப்புப் பொருளாதார மண்டலங்களைத் தொடங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது; 325 விண்ணப்பங்கள் அனுமதி வழங்கப்படுவதற்கான பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.


···


பிள்ளையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டும் கதையாக, காங்கிரசு கூட்டணி ஆட்சியை ஆதரிக்கும் இடதுசாரிக் கட்சிகள், இம்மாற்றங்களை ஏற்றுக் கொள்ள முடியாதென அறிவித்துள்ளன.


""சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைப்பதற்குக் குறைந்தபட்சம் 400 ஹெக்டேர் (1,000 ஏக்கர்) நிலமும், அதிகபட்சமாக 2,000 ஹெக்டேர் (5,000 ஏக்கர்) நிலமும் போதுமானது; மாநில அரசுகளை ஒதுக்கிவிட்டு, முதலாளிகளே விவசாயிகளிடம் பேரம் பேசி நிலத்தை வாங்குவதை அனுமதிக்கக் கூடாது; நிலங்களைக் குத்தகைக்குத்தான் விட வேண்டுமெயொழிய, நிலத்தை முதலாளிகளுக்குச் சொந்தமாகக் கிரையம் செய்து கொடுக்கக் கூடாது; வரிச் சலுகைகளைக் குறைக்க வேண்டும்; எல்லாவிதமான தொழில்களையும் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் அமைக்க அனுமதிக்கக் கூடாது; நிலத்தை விற்கும் விவசாயிகளைச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் பங்குதாரர்களாக ஆக்க வேண்டும்; சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் அதிகபட்ச வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் ஏற்படுத்துவதோடு, தொழிலாளர்களுக்குச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்குள்ளேயே குடியிருப்புகளை ஏற்படுத்தித் தரவேண்டும்'' என இடதுசாரிகள் மாற்று ஆலோசனைகளை மாற்றங்களை முன் வைத்துள்ளனர்.


இடதுசாரிக் கூட்டணியால் முன் வைக்கப்படும் இந்த ஆலோசனைகளை நடைமுறைப்படுத்தினால்கூட, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் சொக்கத் தங்கமாகி விடாது என்பது ஒருபுறமிருக்க, இந்த ஆலோசனைகளைப் போலி கம்யூனிஸ்டுகளே கடைப்பிடிப்பதில்லை என்பதே உண்மை.


சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க அதிகபட்ச நில உச்சவரம்பு (2,000 ஹெக்டேர்) 5,000 ஏக்கர் என நிர்ணயிக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கும் போலி கம்யூனிஸ்டுகள், மேற்கு வங்கம் நந்திகிராமத்தில் 14,500 ஏக்கர் நிலத்தை சலீம் குழுமத்திற்குத் தூக்கிக் கொடுக்கத் திட்டம் போட்டனர்.


சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் தொழில் தொடங்கும் முதலாளிகளுக்கு அளிக்கப்படும் வரிச் சலுகைகளைக் குறைக்க வேண்டும் என ஆலோசனை கூறும் இடதுசாரிக் கூட்டணி, சிங்குரில் 140 கோடி ரூபாய் பெறுமான 1,000 ஏக்கர் நிலத்தை வெறும் 20 கோடி ரூபாய்க்கு டாடாவிடம் விற்றுள்ளனர். இந்த 20 கோடி ரூபாயையும் டாடா 20 ஆண்டுகளில் செலுத்தலாம் எனச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.


பிரிட்டிஷ் காலனி ஆட்சியின்பொழுது கொண்டு வரப்பட்ட 1894ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை மாற்ற வேண்டும் எனக் கோரும் இவர்கள், சிங்குரில் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தித்தான் விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி டாடாவிற்காக நிலங்களைப் பிடுங்கினார்கள்.


சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்காகப் பறிக்கப்படும் நிலங்களை முதலாளிகளுக்குக் கிரையம் செய்து கொடுக்கலாம் என்கிறது, மைய அரசு; கூடாது, நிலங்களைக் குத்தகைக்குத் தான்விட வேண்டும் என அடித்துப் பேசுகிறது சி.பி.எம். நிலத்தைப் பறி கொடுத்து விட்டு நிற்கும் விவசாயியைப் பொருத்தவரை, இந்த இரண்டுமே ஒன்றுதான்.


நிலத்தைப் பறி கொடுத்த பிறகு, விவசாயி கூலித் தொழிலாளியாகி விடுகிறான். ஆனால், சி.பி.எம்.மோ, அவனைச் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் பங்குதாரராக மாற்றப் போவதாகப் பொறி வைக்கிறது. எத்தனை சிங்குர் விவசாயிகளை டாடா கார் தொழிற்சாலையின் பங்குதாரர்களாக மாற்றியிருக்கிறது சி.பி.எம்.?


நர்மதா அணை போன்ற பெரிய திட்டங்களுக்காக விரட்டியடிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மறுவாழ்வு கொடுக்காமல் அரசே ஏய்க்கும்பொழுது, சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கும் தனியார் முதலாளிகள் மறுவாழ்வு கொடுப்பதில் சட்டப்படியும், நியாயப்படியும் நடந்து கொள்வார்கள் என எதிர்பார்க்க முடியுமா?


பொதுத்துறை நிறுவனங்களுக்காக நிலத்தைக் கொடுத்த விவசாயக் குடும்பங்களில், ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் ஒருவருக்கு வேலை கொடுக்காமல் அந்த நிறுவனங்களே ஏய்த்து வரும்பொழுது, நிலத்தை இழக்கும் விவசாயிகளுக்குச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் வேலை கிடைக்கும் என்பதற்கு என்ன உத்திரவாதம் இருக்கிறது?


···


நிலச் சீர்திருத்தம் ஓரளவிற்கு வெற்றிகரமான முறையில் அமல்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் மேற்கு வங்க மாநிலத்திலேயே, மொத்த விளைநிலத்தில் 15 சதவீத விளைநிலங்கள்தான் பிரித்துக் கொடுக்கப்பட்டிருப்பதாகவும்; நிலச் சீர்திருத்தம் மூலம் நிலம் பெற்றவர்களில் 13 சதவீதம் பேர் தங்களது நிலத்தைப் பல்வேறு காரணங்களால் இழந்து விட்டதாகவும்; மேற்கு வங்க மாநிலத்தில் நிலமற்ற கிராம மக்கள் எண்ணிக்கை 39.6 சதவீதத்தில் இருந்து (198788) 49.8 சதவீதமாக அதிகரித்து விட்டதாகவும் (200001) அம்மாநில அரசு வெளியிட்டுள்ள மனிதவள மேம்பாட்டு அறிக்கை குறிப்பிடுகிறது.


இப்புள்ளி விவரம், நாடெங்கும் நிலச்சீர்திருத்தம் தீவிரமாக, புரட்சிகரமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் நேரத்தில், போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எல்லா வண்ண ஓட்டுக் கட்சிகளும் சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயரில், அரசே நிலப்பறி இயக்கம் நடத்துவதைப் பகிரங்கமாக ஆதரிக்கின்றன.


இந்த நிலப்பறி இயக்கம் நடுத்தர ஏழை கூலி விவசாயிகளைப் போண்டியாக்கி, உயிர் வாழ்வதற்கு உழைப்புச் சக்தியை விற்பதைத் தவிர வேறெதுவும் இல்லாத கூலித் தொழிலாளிகளாக உழைப்புச் சந்தைக்குள் தள்ளி விடுகிறது. வேலைக்குப் போட்டி போடும் பெரும் கூலிப் பட்டாளத்தைக் காட்டி, குறைந்தபட்ச கூலியை மேலும் மேலும் குறைப்பதற்கான வாய்ப்பை முதலாளிகளுக்குத் தருகிறது. விவசாயம் ஏற்கெனவே நெருக்கடியில் சிக்க வைக்கப்பட்டு, உணவுப் பொருள் தட்டுப்பாடு நிலவும் நேரத்தில், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதாக அமைகின்றன.


மேலும், சிறப்புப் பொருளாதார மண்டலம் என்பது மறுகாலனி ஆதிக்கத்தின் துலக்கமான வடிவம். அம்மண்டலங்களில் இந்தியச் சட்டங்கள் செல்லுபடியாகாது என்பதும்; இந்திய நாட்டவர் அம்மண்டலங்களுக்குள் நுழையத் தனி அடையாள அட்டைகள் வேண்டும் என்பதும்; அம்மண்டலங்கள் பன்னாட்டு நிறுவனங்களின் / தரகு முதலாளிகளின் தனி சமஸ்தானங்களாக விளங்கும் என்பதும், கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி புதிய வடிவத்தில் மக்கள் மீது திணிக்கப்படுவதை நிரூபிக்கின்றன.


எனவே, சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு எதிரான போராட்டம் என்பது சாராம்சத்தில் மறுகாலனி ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டம். ஆனால், போலி கம்யூனிஸ்டுகளோ இப்போராட்டத்தை தொழில் வளர்ச்சிக்கு எதிரான போராட்டமாகச் சித்தரிக்கிறார்கள். இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அவசியமானவை என்ற ஓட்டுக் கட்சிகளின் வாதத்தை, அவைகளின் குருபீடமான உலக வங்கியும், ஆசிய வளர்ச்சி வங்கியும் கூட ஒப்புக் கொள்ளவில்லை. ஆனாலும், போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட ஓட்டுக் கட்சிகளோ இந்த விசயத்தில் அரசனை விஞ்சிய விசுவாசிகளாக நடந்து கொள்கின்றன.


சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற இந்த நிலப்பறி இயக்கத்தை, மறுகாலனி ஆதிக்கத் தாக்குதலை சில சில்லறை சீர்திருத்தங்களால் தடுத்து விட முடியாது. அப்படிச் சொல்வது, கத்தியின்றி, ரத்தமின்றி இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்து விட்டதாகக் கூறப்படும் மோசடிக்கு ஈடானது.

·குப்பன்

Sunday, June 3, 2007

ஆட்கொல்லி புலி வைரஸ் தான், புலிக் காச்சலை உருவாக்குகின்றது.

ஆட்கொல்லி புலி வைரஸ் தான், புலிக் காச்சலை உருவாக்குகின்றது.

பி.இரயாகரன்
03.06.2007


ஒரு பேப்பருக்காக எழுதியதாக குறிப்பிட்டு ஒரு செய்தியை, புலி வைரஸ் புலம்பியுள்ளது. http://sathirir.blogspot.com/2007/05/blog-post_31.html பிளக்கரிலும் இது வெளிவந்ததுள்ளது.


அதில் எனக்கு 'புலிக்காச்ச"லாம் அத்துடன் வேறு சிலருக்கும் உண்டு என்று கூறி சிலரின் பெயரையும் அந்த ஆட்கொல்லி வைரஸ் இணைத்துள்ளது. ஆட்கொல்லி புலி வைரஸ்சால் கடந்த காலத்தில் கொல்ல முடியாமல் போனவர்கள் மீது, நிகழ்காலத்தில் கொல்ல முயன்று கொண்டிருப்பவர்களின் வைரஸ் புலம்பல் தான் இது.


புலிக்காச்சல் என்ற அரசியல் பதத்தை, புலியெதிர்ப்பு அணிக்கு எதிராக நான் தான் முதலில் பயன்படுத்தியவன். மாற்று அரசியலற்று புலி அரசியலையே முன்வைப்பவர்களின் நிலையை குறித்து, இந்த சொல் பயன்படுத்தப்பட்டது. அதை அதன் அரசியல் சாரத்தில் இருந்து பிரித்து, எனக்கு எதிராக ஒரு பேப்பருக்காக புலி வைரஸ் புலம்பலாகவே புலம்பியுள்ளது. பெயர் ஊர் தெரியாது வைரஸ்சுடன் அலையும் ஒருவர், புலிப் பினாமிய ஊதுகுழலாக வெளிவரும் விளம்பரப் பத்திரிகை ஒன்றுக்காகத் தான் இதை அலட்டியுள்ளது.


ஒரு பேப்பர் என்பது சமூகக்கேட்டினை சமூகளவில் நடத்துபவர்களால் நடத்தப்படுவது. சமூகக்கேட்டினை வம்பளக்கவைக்கும் சமூக விரோதிகளாக உள்ள ஊடகத்துறையினராக உள்ள பிழைப்புவாதிகளின், தங்குமிடங்களில் ஒன்று தான் ஒரு பேப்பர்.


இதில் 'அண்மையில் பிரான்சின் பொதுத்தேர்தல் நடந்து அதில் வலதுசாரி கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தபொழுது சோசலிச கட்சியின் தோல்வியை தாங்க முடியாத பலர் பிரான்சின் முக்கிய நகரங்களிலும் பாரீசிலும் ஆர்ப்பாட்டங்களை நடாத்தினர் அது கலவரமாக மாறி ஆயிரக்கணக்கான வாகனங்களும் ஆர்ப்பாட்டக்காரர்களால் கொழுத்தப்பட்டது. அப்பொழுது பாரிஸ் பகுதியில் வாழும் புலிக்காச்சலில் திரியும் இரயாகரனின் வீட்டிற்கு அருகாமையிலும் ஒரு வாகனம் கொழுத்தப்பட்டு அந்த நெருப்பு அவர் இருந்த கட்டிடத்தின் ஒரு பகுதியையும் பாதித்திருந்தது. ஆனால் உடனடியாக தீயணைப்பு படையினரால் அந்த தீ அணைக்கப்பட்டாலும். பிறகென்ன வழமை போல காவல் நிலையத்திற்கு ஓடிய அவர் அய்யோ புலிகள் என்னை கொல்ல சதி வீட்டை கொழுத்தி விட்டனர் என்று போட்டார் ஒரு போடு. அது மட்டுமல்ல இந்த காச்சல்காரர்களினால் நடாத்தப்படும் இணையதளங்களிலும் செய்தியாக வந்தது."


இப்படி இந்த சமூக விரோத வைரஸ் புலம்பியுள்ளது.


ஆட்கொல்லி வைரஸ் அண்ணே நீங்கள் கூறும் 'புலிக்காய்சல்" பிடித்த எமக்கு, உங்கள் தண்டனை முறைகள் என்ன? அண்ணே. உயர்ந்தபட்ச மரண தண்டனை அல்லவா எமக்கான உங்களின் தண்டனை. வைரஸ் அண்ணே இல்லையென்று உங்களால் மறுக்கமுடியுமா? உங்கள் மரண தண்டனைக்காக இரகசியமாக கடத்தி வதை முகாமில் வைத்து சித்திரவதை செய்த போது, சிறையுடைத்து தப்பியவன் அல்லவா! சரி வைரஸ் அண்ணே, நீங்கள் சொன்ன விடையத்துக்கு வருவோம்.


இதில் பொலிஸ்சுக்கு நாம் ஓடோடிச் செல்லவில்லை. 25க்கு மேற்பட்ட பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் தான் எம்மை நித்திரையில் இருந்து எழுப்பியவர்கள். சம்பவம் பற்றிய முறையீட்டை நாம் சட்டப்படி செய்தாக வேண்டும். அந்த வகையில் பொலிஸ் சென்றதும், எமது சந்தேகத்தை தெரிவித்துள்ளோம். இதைக் கூட புலியிஸ்ட் பாணியில் திரிக்கின்றனர்.


அடுத்து ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தையே சரியாக சொல்லத் தெரியாத புலி வலதுசாரியம் அதையும் கண்மூடித்தனமாக திரித்து புலம்புகின்றது. மறுபக்கம் ஆர்ப்பாட்டம் நடந்த இடத்தை, எனது வீட்டிக்கு அருகிலானதாக முடிச்சு போட்டு திரிப்பதும், அதுவாக காட்டுவதும் புலிக்கேயுரிய புலியிஸ்டு பாசிசக் குணம் தான்.


ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட போது அதை தங்கள் வேலையில்லை என மறுத்த புலிகள், அதை புதியஜனநாயக (ம.க.இ.க) அமைப்பே செய்ததாக, கிட்டு லண்டனில் இருந்து விட்ட அறிக்கை போன்றது தான் இவைகள் யாவும். ஆட்கொல்லி வைரஸ் கிட்டுவின் படத்துடன் கூடிய அந்த இணையம், இந்தச் செய்தியை திரிப்பது பொருத்தமானதே. .


ஆர்ப்பாட்டம் நடந்த பகுதிக்கும், நாம் வாழும் பகுதிக்கும் இடையில் உள்ள தூரம் 25 கிலோ மீற்றராகும். அங்கு வைத்த தீ இங்கு பரவிவிட்டதோ. ஆர்ப்பாட்டம் செய்தவர்களின் அரசியல் நோக்கம் வேறுபட்டது. இது போன்ற உதிரி வன்முறையில் ஈடுபடாதவர்கள். அவர்கள் பொலிஸ்சுடனான தற்காப்பு நேரடி மோதலில் தான் வன்முறையில் ஈடுபடுபவர்கள். ஆட்கொல்லி வைரஸ் புலிகள் எப்போதும் தம்மைப் போல் மற்றவனையும் குறுக்கி பார்ப்பதால், பொருத்தமற்ற வகையில் தங்களுக்கேற்ற வகையில் திரித்து பொய்களைப் பொருத்திவிடுகின்றனர்.


அன்று ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் குறித்த இடத்தில் மட்டும், அதுவும் பொலிசுடனான நேரடி மோதலில் வன்முறையில் ஈடுபட்டவர்கள். அவர்கள் எல்லா இடத்திலும் உங்களைப் போல் உதிரியாக கொழுத்துவதுமில்லை, கொல்வதுமில்லை. தனிமனித பயங்கரவாதத்தில் நம்பிக்கையற்றவர்கள்.


நாம் வாழும் பாரிசுக்கு வெளியிலான எமது புறநகரப்பகுதியில், இது போன்ற உதிரிச் சம்வங்கள் கூட நடப்பதில்லை. ஆகவே நடக்காத ஒரு பிரதேசத்தில் இது நடந்தது. மற்றொன்று அங்கே ஆர்ப்பாட்டம் செய்தவர்கள், அதேநேரத்தில் இங்கும் எப்படி எரிக்கமுடியும். ஆடகொல்லி வைரசுகளின் புலனாய்வு எப்படிப்பட்டது என்றால், இப்படிப்பட்டது தான். இந்த வைரஸ் ஆட்கொல்லிகளினால் கொல்லப்பட்ட பலரின் கதைகளும் இப்படித்தான் அடங்கும்.


இந்திய மீனவர்களை கடத்தி பின், அவர்களை வைத்து அரசியல் வித்தை காட்ட முடிந்த புலி வைரஸ்சுகளினதும் அதன் எடுபிடிகளினதும் வித்தைகளை, மாலைதீவு சம்பவம் அம்பலமாக்கியது. அதன் பின் இதுவரை புலிகள் உத்தியோகபூர்வமாக எதையும் தெரிவிக்காது கள்ள மௌனம் சாதிக்கின்றனர். அந்த துன்பவியல் சம்பவம் எப்படி நிகழ்ந்தது என்று இதுவரை தெரிவிக்கவில்லை. ஆனால் இந்த நிலையிலும் பினாமிகள் இந்த நாடகத்தை, அப்படியும் இப்படியும் புனைந்து காட்டுகின்ற வித்தையோ வித்தை தான். இதில் றோவின் நாடகம் என்ற செய்தி போட்டு வித்தை காட்ட முனைந்தனர். றோ செய்ததாக கூறியவர்கள், அப்படி கருத்திட்டவர்கள், அந்தக் கருத்தை அவசரமாக இரகசியமாக நீக்கியதை பலரும் கவனிக்காது விட்ட விசித்திரமும் நிகழ்ந்தது.


வருடத்துக்கு ஒருமுறை காட்சி தந்து வாய்திறக்கும் புலிகளின் தலைவரின் பங்கரில் இருந்துவரும் குசுவை மணந்து, குறுக்குவாட்டில் எழுதும் பினாமிகளின் ஊடகவியல் சார்ந்த பாசிச அறிவு அடிக்கடி சறுக்கிவிடுகின்றது. யார் விட்ட குசு என்று தெரியாது அலம்பிவிடுகின்றனர்.


தமிழக மீனவர் கடத்தலில் இன்னமும் ஒருவர் விடுவிக்கப்படவில்லை என்பதும், அவர் மாலைதீவில் புலிகளுடன் பிடிபட்டு சிறையில் இருக்கும் கதைபோல் தான் , 'புலிக்காச்சல்" என்று கூறும் ஆடகொல்லி வைரஸ்சுகளின் புலம்பல்கள்.


அனைத்தையும் விட இது போன்றவற்றை புலிகளாகிய நாங்கள் செய்வதில்லை என்று மறுக்கும் தார்மீக நேர்மை இந்த வாதங்களில் இருப்பதில்லை. நாங்கள் செய்யவில்லை என்று தான் மறுக்கின்றனர். ஏன் இது போன்ற சம்பவங்களை தாம் செய்வதில்லை என்று கூறவும் முடிவதில்லை. இப்படி செய்து விட்டு அதை பெருமையாக பீற்றுபவர்கள் நீங்கள். பேசுசுவார்த்தைக்கு என்று கூப்பிட்டு கொல்பவர்கள் தான் புலிகள். தேர்தலைப் பயன்படுத்தி தீ வைக்கமாட்டோம் என்று சொல்லும் அரசியல் நேர்மை, அரசியல் அடிப்படை புலிகளிடம் கிடையாது. மாறாக இப்படிச் செய்வதை ராஜதந்திரமாக, திறமையாக, இதை புலியிசமாக பீற்றுபவர்கள் புலிகள்.


புலம்பெயர் நாடுகளின் சட்ட ஒழுங்கை ஏற்றுக்கொள்வதாக கூறும் புலிகள், புலிகளின் பாரிசில் அதை மீறிய சம்பவங்கள் எத்தனை. ஒரு சிலவற்றைப் பாhப்போம்.


1. பாரிசில் எம் வீட்டுக்கு மிக அண்மையில் வாழும் லட்சுமியின் வீடு புகுந்து டாக்குமென்ரிகளை எடுத்துச் சென்றது யார்?


2. பாரிசில் 1990 களில் மாற்று கட்சி அலுவலகத்துக்கு தீ வைத்தவர்கள் யார்?


3. பாரிசில் ஈழநாட்டுக்கு தீ வைத்தவர்கள் யார்?


5. பாரிசில் ஈழநாடு ஆசிரியர் ஒருவரை அடித்தவர்கள் யார்?


6. சபாலிங்கத்தை கொன்றவர்கள் யார்?


7. நாதன் மற்றும் கஜனைக் படுகொலைகள் செய்தவர்கள் யார்?


8. பாரிசில் முன்னைய காலங்களில் கூட்டங்களை குழப்ப முனைந்தவர்கள் யார்?


9. புலம்பெயர் நாடுகளின் உள்ள பொது அமைப்புகளில் ஒரு சில பினாமிகளைக் கொண்டு அந்த அமைப்புகளின் பெயரில் விளம்பரத்தை அடிப்பவர்கள் யார்?


10. அடி தடி வெட்டுக் குத்துகளின் பின்னனியில் பினாமியாக இருப்பவர்கள் யார்?.


11. உருட்டல், மிரட்டல், கட்டாய பண வசூலிப்பு இப்படி எத்தனை எத்தனை சம்பவங்கள்

இப்படி பாரிசில் மட்டுமல்ல உலகெங்கும். செய்துவிட்டு தாம் இல்லை என்பதும், பெரிய இடத்தில் மாட்டிவிட்டால் துன்பவியல் என்பதுமே புலியிசம். இப்படி எத்தனையோ அப்பாவிகளின் கதைக்கு வரலாறு கிடையாது.


இதை செய்வது யார் என்றால், புலி வைரசுகள் தான். இப்படி எத்தனையோ சம்பவங்கள். நாம் வாழும் புலம்பெயர் மண்ணில் கூட நடந்துள்ளது. ஆட்கொல்லி வைரசுகளாகவே உலவும் இந்த பாசிட்டுகள், என் வீட்டுக்கு அருகுடன் நடந்த தீ வைப்பை பாரிசில் நடந்த ஆர்ப்பாட்டக்காரர்களே வைத்ததாக கூறுவது தான் புலியிசம். ஆர்ப்பாட்டக்காரர்கள் இது போன்றவற்றை உதிரியாக செய்வதில்லை. பொலிஸ்சாருடனான மோதல் போதுமட்டும் தான், அதுவும் தற்காப்பின் போது தான் எதிர் வன்முறையில் ஈடுபடுகின்றனர்.


இது புலி வைரஸ்களுக்கு தெரிவதில்லை. அது தன்னைப் போல் குறுக்கு வழியில் யோசிப்பதால் அனைத்து துன்பவியலையும் திரித்து புலியிசமாக காட்ட முனைகின்றது. நாம் சந்தேகத்தை எழுப்பியது என்பது, மற்றொரு வன்முறைப் பிரிவு மீது தான். அத்துடன் புலிகள் இது போன்றவற்றை செய்வதில் தொழில்முறையாகவே கைதேர்ந்தவர்கள் என்பதால், எமது சந்தேகம் நியாயமானது. எனக்குத் தெரிந்த சிலரும், எனது நெருங்கிய உறவினரும் இணைந்து, இதை நான் விளம்பரத்துகாக கூறியதென புரட்டுவதை அறிந்தேன். அவர்களும் புலியிஸ்ட்டுகளாக இருப்பதால், எப்படியும் இதை புரட்டிக் காட்டவே புலிக்குரிய வடிவில் விரும்புகின்றனர்.


ஆனால் எமது அனுபவம் புலிப் பாசிஸ்ட்டுகளின் துன்பவியல் சம்பவங்களை எடுப்பாகவே எடுத்துக் காட்டுகின்றது. 1987ம் ஆண்டு இனம் தெரியாத நபர்களாக என்னைக் கடத்தியவர்கள் புலிகள் என்பது, நான் அவர்களின் வதைமுகாமில் இருந்து தப்பும் வரை ஊர் உலகத்துக்குத் தெரியாது. அது வரை எத்தனை பிரச்சாரம். எனது உறவினர், என்னை அறிந்தவர்கள் மத்தியில், பல்கலைக்கழகத்தில் எங்கும், இந்த வைரஸ் கிருமிகள் இதையொட்டி பரப்பிய வதந்திகள் அவதூறுகள் எத்தனை எத்தனை. நான் 85 நாட்கள் இருண்ட அறையில் நிர்வாணமான நிலையில், கட்டித் தூக்கிய நிலையில், மலசலத்தை அப்படியே கழித்த நிலையில், நித்திரை கொள்ளவிடாது குளிர் நீரை அடிக்கடி என்மீது ஊற்றிய படி, பல நாட்கள் உணவும் நீருமின்றி வதைத்துக் கொண்டிருந்தவர்கள் வேறு யாருமல்ல புலிகள் தான். அப்போது ஊர் உலகத்துக்கு அவர்கள் கூறியது தாம் என்னைப் பிடிக்கவில்லை, தமக்கு தெரியாது என்ற பொய்யையே.. (இது பற்றி நான் எழுதிய நூல், இன்றளவில் எனது முடிவுப்படி எனது மரணத்தின் பின் வெளிவரும்) நான் தப்பிய பின் வெளிவந்து உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தபின் , பல்கலைக்கழகத்தின் போராட்டத்தை தடுக்க, தாம் தான் கடத்தியதாக ஓத்துக்கொண்டு நடத்திய உரையைப் பார்க்கவும்.


http://www.tamilcircle.net/CASTE/cast.61.70/caste.066.mp3


இப்படிப்பட்ட ஆட்கொல்லி புலி வைரஸ்சுகள் கட்டமைக்கின்ற துன்பவியல் அரசியல் நாடகங்கள் பற்பல. அப்போதும் நான் தலைமை தாங்கி பல போராட்டத்தை நடத்திய யாழ் பல்கலைக் கழகத்துக்கு கூட, தாங்கள் பிடிக்கவில்லை என்றனர். எனது குடும்பத்துக்கு தாம் பிடிக்கவில்லை என்றனர்.


இக்கட்டுரை வந்துள்ள இணையத்தில் ஒரு படம் போடப்பட்டுள்ளது. அது யாழ்மாவட்ட தளபதியாக இருந்த ராதா தான். என்னை தேடிச் சென்ற எனது அம்மா, அவனின் காலில் வீழ்ந்து அவனின் காலை கட்டிப்பிடித்து கதறிய போது, அந்த நாய் எனது அம்மாவின் மூஞ்சையில் உதைந்து விட்டுச்சென்றவன் தான். அன்று காலால் மூஞ்சையில் உதைத்து விட்டுச் சென்ற இடத்தில் தான் கொல்லப்பட்டான். அண்மைக் காலத்தில் எனது வீட்டுக்கு அம்மா வந்த போது, பத்திரிகையில் புலிகளின் முக்கிய தளபதியான சங்கரின் படத்தை பார்த்த பின், அந்த நாசமறுப்பான் பற்றிய தனது நினைவுகளை எனது அம்மா கூறினார். புலிக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் ஊடுருவி நடத்திய கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட சங்கர், எனனைத் தேடிச் சென்ற அம்மாவை நாயே பேயே சனியனே என்று தூசித்து அங்கிருந்து விரட்டியவன் தான் அவன். மக்களுடனான புலியிசத்தின் உறவுகள், இப்படி மயிர்கூச்செறிபவை தான். இப்படி எத்தனை தாய்மார்களின் சொந்தக் கதைகள், அவர்களின் கண்ணீர்க் கதைகள் உள்ளது. இதை வரலாறு பதிவு செய்யும். இப்படி சமூகத்தையே அவலப்படுத்திய ஆட்கொல்லி வைரஸ்சுகளால் நடத்திய அவலமான கதைகள் பல உண்டு. அதை புலிக்காய்ச்சல் என்று இழிவுபடுத்துவதால், அவை பொய்யாகிவிடுவதில்லை. ஆட்கொல்லி புலி வைரஸ்சுகள் இருக்கும் வரை, புலிக் காச்சலும் சமூகத்தில் இருப்பது இயல்பு.


' இந்த காச்சலை தாங்களாகவே முன்வந்து ஏற்று கொள்கிறார்கள். எனவே இது உடல் சம்பந்தப்படாத மனம் சம்பந்தப்பட்ட காச்சல் என்பதனால் இதை அவர்களாகவே குணப்படுத்தாமல் விட்டால் அது அவர்கள் இறக்கும் வரை இருந்து கொண்டேதான் இருக்கும்" என்கின்றனர். புலிகாச்சலுக்கு காரணமாக உள்ள வைரஸ் இருக்கும் வரை, இது நீடிப்பது தானே உண்மை. புலி லூசுகள் என்ன சொல்ல முனைகின்றனர் என்றால், தாங்கள் அப்பாவிகள். கொலை, கொள்ளை, அடிதடி கலாச்சாரம் எதுவும் தெரியாத பச்சைக் குழந்தைகளாம்.


புலி வைரஸ்சுகளுக்கே உரிய புலியிசம். இதுபோன்றவற்றை தாங்களாகவே புலிக்கு எதிராக கற்பிக்கின்றனராம். கொலை, கொள்ளை, அடிதடியே அரசியலாக கொண்டு அலைந்து திரியும் ஆட்கொல்லிகள், சதா மனித மரணத்தில், அதன் அவலத்தில் தான் மகிழ்ச்சியை கொண்டாடுகின்றவர்கள். இது தான் புலி அரசியல்.


இதே கட்டுரையில் குறிப்பிட்ட குகநாதன் விவகாரம் கூட, இந்த புலி வைரஸ்சுகளினால் வலிந்து எதிரியாக்கப்பட்டவர் கதை தான். அவரின் மீதான குற்றச்சாட்டுக்கள், அவரின் நடத்தைகள், அவரின் செயல்பாடுகள் பற்றிய அபிப்பிராயத்துக்கு அப்பால், அவர் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையா பொய்யா என்பதற்கு அப்பால், உங்களை விட அவர் மேலானவர். நீங்கள் கேடுகெட்டவர்கள். உங்களை விட அவர் மேலானவர். நீங்கள் ஊர் உலகத்தின் உலையில் போடும் அரிசியையே அபகரித்து தின்பவர்கள். அவரின் தொலைக்காட்சியை அபகரித்து ரீ.ரீ.என் ஆக்கிய கதையே தனிக்கதை.


அதற்கு முதலிட்ட குமார் சொப் சந்திரகுமார், தனது முதலீட்டை மீட்க வன்னிவரை சென்று தலைவரின் படியேறி நின்ற போதே கைவிரித்து விட்டவர்கள் யார்? ஊரான் வீட்டுச் சொத்தை அபகரித்து, அரசியல் விபச்சாரம் செய்து தின்றவர்கள் யார். உங்களவுக்கு குகநாதன் இதைச் செய்யவில்லை. நீங்கள் தான் இப்படி. அதை மற்றவனுக்கு கூறுவது, சொந்த அனுபவத்தில் அடிப்படையில் இருந்து தான். இப்படி பற்பல கதைகள் உண்டு. எத்தனை பேரின் வாழக்கையை, இப்படி அவலமாக்கி இன்பமுற்ற உங்கள் யோக்கியதை ஊர் உலகம் அறிந்ததே.


சொந்த மாற்று அரசியலற்று புலி அரசியலையே கொண்டு, புலியெதிர்ப்பு அரசியல் செய்யும் புலிக்காச்சலை நாம் தெளிவாக வரையறுத்துள்ளோம். எமக்கு எதிராக எமது வரையறையை திரித்து வெற்றிகொள்ள முடியாது. அரசியல் ரீதியாக விவாதிக்க வக்கற்று நிற்பதே எதார்த்தம். ஆட்கொல்லி வைரஸ் தான் காய்ச்சலுக்கு காரணமாக இருப்பதே உண்மை. வைரஸ் இருக்கும் வரை புலிக் காய்ச்சலும் நீடிக்கும் என்பதே உண்மை.



சிறுவணிகம் சிறு தொழில்கள் உயர்த்திப்புடி ! சூறையாடும் ரிலையன்சை துரத்தியடி

சிறுவணிகம் சிறு தொழில்கள் உயர்த்திப்புடி ! சூறையாடும் ரிலையன்சை துரத்தியடி !



21-04- 2007 புரசைவாக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தோழர் மருதையன் உரை




மயூரனுடன் இது தொடர்பாய் நடந்த விவாதத்தின் பகுதி கீழிணைக்கப்பட்டுள்ளது





உங்கள் கட்டுரை சொல்லவரும் அரசியல் நிலைப்பாடு முற்றிலும் தவறானது.



பன்னாட்டு நிறுவனங்களுக்கு பதில், கூட்டுறவு நிறுவனைங்களை அமைப்பதா ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டம்? இல்லையே!



ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம் என்பது கூட்டுறவு நிறுவனங்களை அமைப்பதல்ல.



அரசு அதிகாரம் அல்லாத காலத்தில் கீழ் இருந்து கட்டிய கூட்டுறவு நிறுவனங்கள், கம்யூன் கூட்டு வாழ்க்கை முறை அனைத்தும் கடந்த காலத்தில் தோல்வி பெற்றவையே. இது வரலாறு. அது அராஜகத்தன்மை கொண்டதாக கோட்பாட்டளவில் நடைமுறையில் அமையும்;.



மற்றும் தரம், மலிவு, போன்ற இதர காரணங்களை முன் வைக்கின்ற வாதம், சந்தை பொருளாதாரத்தின் உள்ளார்ந்த ஏமாற்று வித்தை. தரம், மனம், குணம் … எப்படி யாரால் ஏன் தீர்மானிக்கப்படுகின்றது.



மனிதன் கடந்த 30 வருடங்களுக்கு முன், இந்த தரம் எல்லாம் எங்கே இருந்தது. தரம் என்பது என்ன?



மலிவு என்பதன் சந்தை விதி என்ன? மலிவு எதனுடன் ஒப்பிடுவது. வர்த்தகருக்கும், விவசாயிக்கும் இடையில் அந்த மலிவை எப்படி உருவாக்க முடியும்? முடியாது. விவசாயி பிச்சைக்காரனாகிக் கொண்டு இருக்கிறான்.



இன்றைய பன்னாட்டு நிறுவனங்களின் மலிவு பற்றிய மாயை, சந்தை கைப்பற்றும் வரை தான். இந்தியாவின் குளிர்பானத்துக்கு இப்படித் தான் நடந்தது.



அடிப்படையில் இன்றைய மலிவும் சலுகையும், நாளை சிறுகடைகள் மூடப்படும் வரைதான். பின் வாழ்வுக்கு எட்டாத விலைக்கு சென்றுவிடும். விவசாயிக்கு கொடுப்பதோ மிகக் குறைந்த விலை தான்.



பிரான்சில் விவசாயிகளின் பொருட்களின் விலையை தீர்மானிப்பது சந்தை விலையல்ல. மிகப்பெரிய நிறுவனங்களின் லாபவிதிதான். மலிவாக வாங்குவதும், அதற்கு எதிராக போராட்டமும் கூட நடக்கின்றது. கடைக்குள் புகுந்து பொருட்களை அழிப்பது, வீதியில் வாகனத்தை தடுத்து நிறுத்தி பொருளுக்கு தீ வைப்பது போன்ற பல போராட்டங்கள். குறிப்பாக தொழிற்சாலை உற்பத்திகளைக் கூட இப்படி கட்டுப்படுத்த தொடங்கியுள்ளது.



குறிப்பாக பாரிசுக்குள் இப்படியான கடைகள் போட முடியாதபடி சட்டங்கள் உள்ளது. கடை வந்தால் பல பத்தாயிரம் கடைகள் மூடப்படவும், பல லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.





'இதில் ஏகாதிபத்தியவாதிகள், பெருமுதலாளிகளோடு சில்லறை வணிகத்தில் புரையோடிப்போயிருக்கும் இடைத்தரகுச்சுரண்டலாளர்களும் எதிர்நிலையில் தள்ளப்பட்டுத் தனிமைப்படுத்தப்படுவதுதான்" இங்கு இடை தரகர்களை இல்லாத ஒழித்தல் என்பது, ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கையல்ல. மாறாக பன்னநாட்டு நிறுவனங்களின் இன்றைய அடிப்படையான வேலைத் திட்டமே அது தான்.



குறிப்பாக கடந்த 20, 30 வருடங்களுக்கு முந்தைய தரகு முதலாளித்துவம் என்ற இடைதரகு வர்க்க அமைப்பை இன்று இல்லாது ஒழித்தல் என்பது நடைமுறையில் உள்ள ஒன்று. லாப வீகித்தில் முக்கியமான கூறுகளில் ஒன்று.



ரிலையன்ஸ் விவாசயிகளிடம் பொருளை நேரடியாக வாங்குவது கூட இதில் ஒன்று தான். குறிப்பாக பாருங்கள் விவசாயி சந்தையில் நேரடியாக விற்றல் என்பது கூட இன்று மறுக்கப்படுகின்றது. இந்த வகையில் நவீனமயமாக்கல் என்ற பெயரில், சந்தையில் விவசாயிகள் விற்பதையும் படிப்படியாக ஒழிக்கின்றனர்.



சந்தையில் சிறியளவிலான ஏழைகள் கூட பொருட்களை வாங்கி விற்கின்றனர். சிறு வணிக உள்ளடகத்தில் இருப்பது வாழ்வதற்கான பொருளாதாரமே ஒழிய, சுரண்டலுக்கான பொருளாதாரமல்ல. உலகளவில் இடைத்தரகு செய்கின்ற பன்னாட்டு நிறுவனங்களை உங்கள் வழயில் ஒழிக்க முடியாது. மாறாக ஏழை எளியதுகள், வாழ்வுகாக நடத்துகின்ற உழைப்பை ஒழிப்பது, யாருக்கு லாபம். நிச்சயமாக ஏகாதிபத்தியத்துக்குத் தான்.



இடைக்கால மாற்று என்பது ஏழை எளியவர் வாழ்வை அழிப்பதும், பெரும் இடை தரகர்களை பாதுகாப்பதும் தான். அரசு துறையை தனியார் மயமாக்கும் போது, தொழிலாளியை ஏமாற்ற பங்குகளை அவனுக்கு விற்பது போல்தான் இதுவும்;





'அல்லது ரிலையன்சுக்கு வெற்றியளிக்கக்கூடியதாயிருக்கும் பலமான பக்கங்களை உள்வாங்கி, விவசாயிகளுக்கும் சிறுவணிகர்களுக்கும் ஒரு இடைக்காலத்திட்டத்தினை, நவீனத்துவத்தை உள்ளடக்கிய இடைக்கால மாற்றினை பரிந்துரைப்பது அவசியமற்றதா?"



இது இடையான மாறறு அல்ல. மாறாக ஏகாதிபத்தியத்துக்கு உதவுவதற்கான, செல்வதற்கான பாதை. சந்தை விதியை தீhமானிப்பது எது? சந்தையின் சட்டம், ஒழுங்கு அதைச் சுற்றி ஒரு அரசு உள்ளது.



இன்று தன்னார்வுக் குழுக்களின் வேலைத்திட்டம் என்ன? இந்த இடைக்கால மாற்றை முன்வைப்பது தான். இது போன்ற கூட்டறவு அமைப்புகளை நிறுவுகின்றது. இடைக்கால தீர்வை இப்படித்தான் அது வைக்கின்றது. இவை எல்லாம் நடைமுறையில் ஏகாதிபத்திய அமைப்பைப் பாதுகாக்கின்ற இடையிடான வடிவங்கள், அல்லது இடையீடுகள் தான்;



"இப்போதிருக்கும் படிநிலைத்தரகர்கள் நிறைந்த, பழசாகிப்போன சில்லறை வணிகப் பொறிமுறையை எமது அசைவியக்கம் ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பதுதான்."
இது அதியத்தக்க ஒன்று. இந்த எடுகோள், ஏகாதிபத்தியம் இதைக் கோரும் வரை எந்த அசைவியக்கமும் இதை அசைக்க முனையவில்லை.



ஒரு உற்பத்தி முறை முதல் விற்பனை முறை வரை மாற்றத்துக்குள்ளவது அவசியமானது தான்;. ஆனால் அவை சமூகத்தின் பொது நலன்களுடன் தொடர்புடையவை. இடைத்தரகரை ஒழிக்க வேண்டும் என்றால் பன்னாட்டு இடைததரகை ஒழித்தல் பற்றி பேசுங்கள். சில்லறை வணிகத்தை ஒழித்தல் என்றால், அதனால் பாதிக்கப்படும் மக்களின் மாற்று வாழ்வை பற்றிய விடையத்தக்கு வருங்கள்.



இடைக்கால மாற்று என்பது, ஏகாதிபத்திய அமைப்புமுறை தூக்கியெறியும் போராட்டம் தான்.

மக்களின் அதிகாரம் மூலமான மாற்றுத்தான், அதற்கான போராட்டத்தில் தான் பொருத்தமான மாற்று தேர்வுகள சாத்தியமானது. அது பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களையும் உள்ளடக்கியது.




பி.இரயாகரன்
01.05.2007

Saturday, June 2, 2007

மறையாது மடியாது நக்சல்பாரி! மரணத்தை வென்று எழும் நக்சல்பாரி!

நக்சல்பாரி பேரெழுச்சியின் 40-ஆம் ஆண்டு :

மறையாது மடியாது நக்சல்பாரி!
மரணத்தை வென்று எழும் நக்சல்பாரி!



க்சல்பாரி — அது இமயமலையின் அடிவாரத்திலுள்ள ஒரு சிறு கிராமத்தின் பெயர். மேற்கு வங்க மாநிலம், டார்ஜிலிங் மாவட்டம், சிலிகுரி வட்டத்திலுள்ளது அந்தக் கிராமம். பண்ணை நிலப்பிரபுக்கள், கந்துவட்டிக்காரர்கள், அரசு அதிகார வர்க்கத்தினர், போலீசு ஆகியோரின் சுரண்டல் ஒடுக்குமுறைக் கொடுமைகளை மௌனமாக அனுபவித்துக் கொண்டிருக்கும் இலட்சக்கணக்கான இந்தியக் கிராமங்களில் ஒன்றாகத்தான் நாற்பதாண்டுகளுக்கு முன்பு அந்தக் கிராமம் இருந்தது.

1967ஆம் ஆண்டு மே 23ஆம் தேதிக்குப் பின்னரோ, அது கோடானுகோடி உழைக்கும் மக்களின் இலட்சியக் கனவு. நிலச் சீர்திருத்தச் சட்டத்தின் மூலம் நிலம் கிடைக்குமென்று அரசு அதிகார வர்க்கத்தை அண்டிக் காத்துக் கிடப்பதா, அல்லது ஆயுதம் ஏந்திப் போராடி நிலப்பிரபுக்களின் நிலங்களைப் பறிமுதல் செய்வதா என்ற கேள்விக்கு விவசாயிகள் அங்கே விடை கண்டனர்.


அதுதான் நக்சல்பாரி உழவர்களின் ஆயுதம் தாங்கிய பேரெழுச்சி. சி.பி.எம். கட்சிக்குள்ளிருந்த கம்யூனிசப் புரட்சியாளர்களால் வழிநடத்தப்பட்ட எழுச்சி. மார்க்சிய லெனினிய மாசேதுங் சிந்தனையை உயர்த்திப் பிடித்த மாபெரும் எழுச்சி. ""துப்பாக்கிக் குழாயிலிருந்து அரசியலதிகாரம் பிறக்கிறது'' என்று முழங்கிய எழுச்சி.


சிலிகுரி வட்டத்தின் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கிராமக் கமிட்டிகளை நிறுவி ஆயுதம் ஏந்திப் போராடினார்கள். தங்கள் கூலிக்காக மட்டும் போராடும் தொழிற்சங்கவாதத்தைக் கைவிட்டு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களும் அவர்களோடு இணைந்து ஆயுதம் ஏந்திப் போராடினார்கள்.


நிலப்பிரபுக்களின் பட்டாக்களும் கடன் பத்திரங்களும் தீயிட்டு எரிக்கப்பட்டன. வில்லும் அம்பும் துப்பாக்கியும் ஏந்திய விவசாயிகள் அதிகாரத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டனர். மக்கள் நீதிமன்றம் அமைத்து, எதிரிகளைக் கூண்டிலேற்றி விசாரித்துத் தண்டனை வழங்கினர். சாட்டைகள் முதன்முறையாகக் கொழுத்த சதைகளைச் சுவைத்தன. கொடிய நிலப்பிரபுக்களுக்கு அங்கே மரணதண்டனை விதிக்கப்பட்டது.


அறுவடை செய்யப்பட்ட தானியங்கள் போகவேண்டிய இடத்திற்கு கூலி, ஏழை உழவர்களின் குடிசைக்கு முதன்முறையாகப் போய்ச் சேர்ந்தன. குத்தகை விவசாயிகளின் அனுபோக உரிமை நிலைநாட்டப்பட்டது. வயல்களெங்கும் படபடத்துக் கொண்டிருந்த செங்கொடிகள் நிலப்பிரபுக்களை எள்ளி நகையாடின.


1967 மார்ச் மாதத்திலிருந்து படிப்படியாக முன்னேறிய நக்சல்பாரி எழுச்சியைக் கண்டு ""ஐயோ, பயங்கரவாதம்!'' என்று ஆளும் வர்க்கங்கள் அலறின. மே 23ஆம் நாளன்று தங்களது தலைவர்களைக் கைது செய்ய வந்த போலீசு படையை நக்சல்பாரி விவசாயிகள் திருப்பித் தாக்கி விரட்டினர். பின்னர் பெரும்படையுடன் வந்து நரவேட்டையாடியது போலீசு. இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்ட போதும் நக்சல்பாரி தன் நிறத்தை மாற்றிக் கொள்ளவில்லை.


நக்சல்பாரி வெறுமனே நிலத்திற்கான போராட்டமல்ல; அரசியல் அதிகாரத்திற்கான போராட்டம். ""உழுபவனுக்கே நிலம்; உழைப்பவருக்கே அதிகாரம்!'' நக்சல்பாரி எழுப்பிய இந்த மந்திரச் சொற்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எதிரொலித்தன. முஷாகரி, கோபிவல்லபூர், லக்கிம்பூர்கேரி, சிறீகாகுளம், தெலிங்கானா, கேரளா, தமிழ்நாடு... என நாடெங்கிலும் வர்க்கப் போராட்டம் காட்டுத் தீயாகப் பற்றிப் படர்ந்தது.


""வேலை நிறுத்தம் செய்தால் ஆலையை மூடிக் கதவடைப்பு செய்வோம்'' என்று மிரட்டிய ஆலை முதலாளிகளை அவர்களது அறைக்குள்ளேயே கதவடைப்பு செய்து முற்றுகையிட்டார்கள் தொழிலாளர்கள். நக்சல்பாரி தொழிற்சங்கங்களின் போர்க்குணமிக்க போராட்ட வடிவமாக ""கெரோ'' எனும் முற்றுகைப் போராட்டம் நாடெங்கும் பரவியது. நாடெங்கும் மாணவர்கள் கல்வியை கல்லூரியைத் துறந்து நக்சல்பாரி இயக்கத்துடன் தம்மை இணைத்துக் கொண்டனர். விவசாயிகளை அரசியல் உணர்வூட்டி அணிதிரட்ட கிராமங்களை நோக்கிச் சென்றனர்.


போராட்டங்களைக் கட்டியமைத்து வழிநடத்திய "குற்றத்திற்காக' கைது செய்யப்பட்ட புரட்சியாளர்கள் குற்றுயிரும் கொலையுயிருமாக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்கள். ""ஆம்! நாங்கள்தான் பண்ணையாளர்களைக் கொன்றோம். மக்கள் எதிரிகளை அழித்தொழித்தோம். தூக்கு தண்டனையா, அதற்கு நாங்கள் அஞ்சவில்லை. தீர்ப்பை எழுதிவிட்டு ஏன் விசாரணை நாடகமாடுகிறாய்?'' என்று கலகக் குரல் எழுப்பினார்கள். நீதிமன்றங்களின் புனிதம், நாடாளுமன்ற சட்டமன்றங்களின் மீதான மாயை, போலீசின் மீதான அச்சம் அனைத்தையும் ஒரே அடியில் தகர்த்தெறிந்தது நக்சல்பாரி.


தகர்ந்தவை ஆளும் வர்க்க நிறுவனங்கள் மட்டுமல்ல; நாற்காலி புரட்சி செய்யும் இடது, வலது போலி கம்யூனிஸ்டுக் கட்சிகளும்தான். நக்சல்பாரி பேரெழுச்சியை ஆதரித்தும், அதை ஒடுக்கி அவதூறு செய்த சி.பி.எம். கட்சியின் துரோகத்தையும் புரட்டல்வாதத்தையும் நிராகரித்தும் நாடெங்கும் கம்யூனிசப் புரட்சியாளர்கள் ஒருங்கிணைந்தனர். மார்க்சிய லெனினிய மாசேதுங் சிந்தனையே எங்களின் சித்தாந்தம்; தரகு அதிகார முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம், அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியம் ஆகியவற்றைத் தகர்த்தெறிந்து புதிய ஜனநாயகப் புரட்சியைச் சாதிப்பதே எங்களது உடனடி இலட்சியம்; போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிப்போம்; ஆயுதப் போராட்டப் பாதையில் மக்கள் யுத்தத்திற்கு அணிதிரள்வோம் எனத் தமது கொள்கைகளைப் பிரகடனம் செய்த புரட்சியாளர்கள், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) என்ற புரட்சிகரக் கட்சியை லெனினது நூற்றாண்டு தினத்தில் 1969 ஏப்ரல் 22ஆம் நாளில் தோற்றுவித்தனர். அது, நக்சல்பாரி பேரெழுச்சி ஈன்றெடுத்த போராளி.


2007 நக்சல்பாரி எழுச்சியின் நாற்பதாம் ஆண்டு. கடந்த 40 ஆண்டுகளில் நக்சல்பாரி இயக்கம் கற்றுக் கொண்டதும் சாதித்திருப்பதும் ஏராளம். அளவில் மட்டுமல்ல, அதன் முதிர்ச்சியும் அரசியல் செல்வாக்கும் பெருகியிருக்கிறது. நக்சல்பாரி என்ற சொல் இனி மே.வங்கத்திலுள்ள சிறு கிராமத்தை மட்டும் குறிக்கவில்லை. அது, உலகப்புரட்சி வரலாற்றில் அழிக்க முடியாத இடத்தைப் பெற்றிருக்கிறது. அது, ஒரு மாபெரும் அரசியல் இயக்கத்தைக் குறிக்கிறது; ஒரு ஆயுதந்தாங்கிய பேரெழுச்சியைக் குறிக்கிறது; நாடாளுமன்ற போலி ஜனநாயகத்துக்கு வெளியே உழைக்கும் மக்கள் அணிதிரளும் அரசியல் மையமாகத் திகழ்கிறது; அதிகாரவர்க்க இராணுவ அரசியலமைப்பைத் தாக்கித் தகர்ப்பதற்கான போராயுதமாக எழுகிறது; உழைக்கும் மக்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஒரே பாதையாக விளங்குகிறது.


1970களில் கல்கத்தா வீதிகளில் ஆயிரக்கணக்கான புரட்சிகர இளைஞர்களைச் சுட்டுக் கொன்ற சித்தார்த்த சங்கர் ரே; அதன் பிறகு, கிராமங்கள் நகரங்கள்சிறைச்சாலைகளிலும் புரட்சியாளர்களின் ரத்தம் குடித்த பாசிசக்காளி இந்திரா, 80களில் தருமபுரி வடஆற்காடு மாவட்டங்களில் புரட்சியாளர்களை நரவேட்டையாடிய பாசிச எம்.ஜி.ஆர். தேவாரம் கும்பல், ஆந்திராவில் வெங்கல்ராவ், சென்னாரெட்டி, என்.டி.ஆர்., சந்திராபாபு நாயுடு என கொலைவெறியாட்டம் போட்ட ஆட்சியாளர்கள்... ""ஒழித்து விட்டோம்'' என எதிரிகள் ஒவ்வொருமுறை மார்தட்டும் போதும், ""எழுந்து விட்டோம்'' என அவர்களது நெற்றிப் பொட்டில் தன் துப்பாக்கியை அழுத்துகிறது நக்சல்பாரி.


இன்று தனியார்மயம், தாராளமயம், உலகமயம் எனத் தொடரும் மறுகாலனியாக்கத்துக்கு எல்லா ஓட்டுக் கட்சிகளும் ஓரணியில் நின்று தமது எசமானர்களான ஏகாதிபத்தியங்களுக்கு விசுவாசமாகச் சேவை செய்கின்றன. 70களில் நிலவிய கொள்கை வேறுபாடுகளோ அரசியல் குழப்பங்களோ இப்போது இல்லை. இடது, வலது போலி கம்யூனிஸ்டுகளும் தங்களது ஆடைகளைக் களைந்துவிட்டு அம்மணமாக நிற்கிறார்கள். இருப்பது இரண்டே முகாம்கள்தான். ஒன்று, ஆளும் வர்க்கங்கள்ஓட்டுக் கட்சிகளின் விரிந்த ஐக்கிய முன்னணி; மற்றொன்று, நக்சல்பாரி புரட்சியாளர்களின் தலைமையிலான உழைக்கும் மக்களின் புரட்சிப் போரணி.


அளப்பரிய தியாகத்தால் சிவந்து ஒளிரும் நக்சல்பாரி புரட்சிகர இயக்கத்தைத் தோற்கடிக்கவோ மக்களிடமிருந்து தனிமைப்படுத்தவோ ஒருக்காலும் முடியாது. நாடாளுமன்றப் பாதைக்கு வெளியே, ஆக்கப்பூர்வமான அரசியல்பொருளாதாரத் தீர்வை முன்வைத்து, நாட்டையும் மக்களையும் விடுதலை செய்யும் மாபெரும் புரட்சிக்குத் தலைமை தாங்கி வழிநடத்தும் தெளிவும் துணிவும் வேறெந்த அரசியல் இயக்கத்திற்கும் கிடையாது.

மறையாது மடியாது நக்சல்பாரி!


மரணத்தை வென்று எழும் நக்சல்பாரி!


— ஆசிரியர் குழு

Friday, June 1, 2007

கார்ப்பரெட் சிபிஐ(எம்) பார்ட்டி ஆஃப் இந்தியா (டாட்டாயிஸ்ட்)

கார்ப்பரெட் சிபிஐ(எம்) பார்ட்டி ஆஃப் இந்தியா (டாட்டாயிஸ்ட்)


சொல்லில் கம்யூனிசம், செயலில் முதலாளித்துவம் என்ற நடைமுறையைக் கொண்டிருப்போரை போலி கம்யூனிஸ்டுகள் என்று அழைப்பதில் நமக்கு தயக்கமிருந்ததில்லை. ஆனால், சொல்லிலும் செயலிலும் முரண்பாடு ஏதுமின்றி ""சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்'' என்று கொள்கைக் குன்றுகளாக வலம் வரும் "மார்க்சிஸ்டு'களை இனிமேலும் போலி கம்யூனிஸ்டுகள் என்றே அழைத்துக் கொண்டிருப்பது பொருத்தம் தானா என்ற ஐயம் ஏற்படுகிறது.



""முதலாளித்துவத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனால் அதற்கு கம்யூனிசச் சொற்களால் விளக்கமளிக்க வேண்டும்; அத்தகைய விளக்கம் முதலாளி வர்க்கத்தின் கோபத்தைத் தூண்டிவிடும்படி இருக்கக் கூடாது; அதே நேரத்தில் தொழிலாளி வர்க்கத்திடம் அதிருப்தியையும் தோற்றுவித்து விடக்கூடாது.'' — இப்படியாக, கம்பி மேல் நடப்பதையும், கடுகைத் துளைத்து ஏழ்கடல் புகுத்துவதையும் விடக் கடினமானதும் அபாரமான மொழி வல்லமையையும், ராஜதந்திரத்தையும், கலைத்திறனையும் கோருவதுமான இந்தச் சாகசத்தைத் தொடர்ந்து நிகழ்த்த வேண்டியிருக்கும் நிர்ப்பந்தத்திலிருந்து சிங்குர் பிரச்சினை "மார்க்சிஸ்டு'களை விடுவித்திருக்கிறது. தங்களுடைய உண்மையான சிந்தனையை இயல்பாகப் பேசுவதற்கான சுதந்திரத்தையே ஒரு நிர்ப்பந்தமாக "மார்க்சிஸ்டு'களின் மீது திணித்திருக்கிறது சிங்குர்.



எனவே, ""விவசாயிகளிடமிருந்து நிலத்தைப் பிடுங்கி, டாடாவுக்கும் ஜின்டாலுக்கும் ரூயாவுக்கும் மலேசியாவின் சலீம் குழுமத்திற்கும் வழங்குவது நியாயம்தானா'' என்று மார்க்சிஸ்டுகளிடம் இனிமேலும் கேட்டுக் கொண்டிருப்பது அசட்டுத்தனம். "மார்க்சிஸ்டு'களின் இந்தப் புதிய நிலச் சீர்திருத்தக் கொள்கையைப் புரிந்து கொள்ளவேண்டுமானால், இந்தக் கொள்கை பிறப்பெடுக்கும் மூளைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுடைய கூற்றுகள் வழியாகவே அதனைப் புரிந்து கொள்வோம்.



···



"மார்க்சிஸ்டு' கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான பீப்பிள்ஸ் டெமாக்ரசி, வார இதழில் (செப்.11, 2006) அவர்களது கட்சியைச் சார்ந்த பொருளாதார வல்லுநர் பிரபாத் பட்நாயக் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். "வக்கிரப் பொருளாதாரத்தின் தாக்குதல்' (கூடஞு அண்ண்ச்தடூt ணிஞூ ஙதடூஞ்ச்ணூ உஞிணிணணிட்தூ) என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள கட்டுரை, ""தேசிய உற்பத்தி வளர்ந்தால் வறுமை ஒழிந்து விடும், செல்வம் பெருகினால் வறுமை ஒழிந்து விடும்'' என்று கூறும் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் பொய்களை அம்பலப்படுத்துகிறது.



எந்த அறிவியல்பூர்வமான அடிப்படையோ, ஆதாரமோ இல்லாத இந்தப் பொருளாதாரக் கொள்கையை வக்கிரப் பொருளாதாரம் என்று மார்க்ஸ் அழைத்ததை அக்கட்டுரையில் விளக்கும் பட்நாயக், இது ஒரு முதலாளித்துவப் பித்தலாட்டம் என்று ஆணியடித்தாற் போலக் கூறி முடிக்கிறார்.

பட்நாயக் அடித்த ஆணியை இரண்டே வரிகளில் கிடுக்கிப்பிடி போட்டுப் பிடுங்கி எறிகிறார் யெச்சூரி. ""கார்ப்பரேட் முதலாளிகளின் வளர்ச்சியைக் கம்யூனிஸ்டுகள் ஆதரிப்பதில்லை என்பது ஒரு தவறான அபிப்ராயம், உண்மை அதுவல்ல. ஏனென்றால் செல்வம் உருவாவதுதான் மக்கள் நலனுக்கு முன்நிபந்தனை என்பதை நாங்கள் அறிவோம்'' என்று கல்கத்தா முதலாளிகள் சங்கக் கூட்டத்தில் பேசியிருக்கிறார் "மார்க்சிஸ்டு' கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி. (இந்து, ஜன. 5, 2007)



செல்வம் உருவாவதுதான் மக்கள் நலனுக்கு முன்நிபந்தனையாம்!



இதையே கொஞ்சம் எளிமையாக ரஜினிகாந்த் படத்தின் வசன மொழியில் சொல்வதென்றால், முதலாளி நல்லா இருந்தாத்தானே தொழிலாளி நல்லா இருக்க முடியும் என்று சொல்லலாம். அதாவது, பணக்காரர்கள் எந்த அளவுக்கு அதிகரிக்கிறார்களோ, அந்த அளவுக்கு ஏழ்மை ஒழியும் என்கிறார் யெச்சூரி.



···



மார்க்ஸ் இதைப் பற்றி என்ன சொல்கிறார்? ""ஒரு முனையில் செல்வம் குவிவது என்பதன் பொருள், அதே நேரத்தில், அவ்வாறு செல்வம் குவிவதன் விளைவாக வறுமையும் உழைப்பின் துயரமும் அடிமைத்தனமும் அறியாமையும் கொடூரமும் சிந்தனைச் சீரழிவும் இன்னொரு முனையில் அதிகரிப்பது என்பதுதான்'' என்று கூறும் மார்க்ஸ், வறுமை என்பதே ஒரு குறிப்பிட்ட சமூக உறவின் வெளிப்பாடுதான் என்பதை நிலைநாட்டுகிறார். தொழிலாளிகள் எந்த அளவுக்கு செல்வத்தை உற்பத்தி செய்கிறார்களோ, அந்த அளவுக்கு வறியவர்கள் ஆக்கப்படுவார்கள். உற்பத்திச் சாதனங்களைத் தம் உடைமையாக வைத்திருக்கக் கூடிய முதலாளிகள் ஒருபுறம், உழைப்பை விற்று வயிற்றைக் கழுவும் தொழிலாளிகள் மறுபுறம் என்று இருக்கும் முதலாளித்துவச் சமூக அமைப்பில் செல்வம் உருவாவது என்பதன் உடனடி விளைவு வறுமைதான் என்பதே மார்க்சியப் பொருளாதாரத்தின் அரிச்சுவடி.



உலகத்தைக் கண்திறந்து பார்ப்பவன் எவனும் இந்த உண்மையைப் புரிந்து கொள்ளலாம். அல்லது, தங்கள் கட்சியின் மத்தியக் குழு சமீபத்தில் வெளியிட்டுள்ள தீர்மானத்தைப் படித்துப் பார்த்தும்கூட மார்க்சிஸ்டு கட்சித் தொண்டர்கள் இந்த உண்மையைப் புரிந்து கொள்ளலாம்.



""தேசிய நிகர உற்பத்தி கடந்த 3 ஆண்டுகளாக ஆண்டுக்கு 8 சதவீதம் வளர்ந்து வருவதாக மைய அரசு பெருமை கொள்கிறது. ஆனால் இது உண்மை நிலையைப் பிரதிபலிக்கவில்லை... இந்த வளர்ச்சியின் விளைவாக பணக்காரர்கள்தான் பெரும் பணக்காரர்கள் ஆகியிருக்கிறார்கள். ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் கூற்றுப்படி, 40 பணக்கார இந்தியர்களின் சொத்து மதிப்பு கடந்த ஒரே ஆண்டில் 61 பில்லியன் டாலரிலிருந்து 106 பில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது. அரசாங்கப் புள்ளிவிவரப்படியே கூட 30 கோடி மக்கள் நாளொன்றுக்கு 45 ரூபாய் கூட வருமானமின்றி வறுமையில் உழல்கிறார்கள்'' என்று கூறுகிறது மத்தியக் குழு தீர்மானம்.



மக்கள் மென்மேலும் வறுமையில் தள்ளப்படுவதுதான் முதலாளித்துவச் சமூகத்தில் செல்வம் உருவாவதற்குரிய முன்நிபந்தனை. ஆனால் யெச்சூரியோ, செல்வம் உருவாவதுதான் மக்களை வறுமையிலிருந்து மீட்பதற்கான முன்நிபந்தனை என்று ப.சிதம்பரத்தின் சித்தாந்தத்தை அப்படியே வழிமொழிகிறார்.



""வக்கிரப் பொருளாதாரத்தை முன்மொழிபவர் நம்முடைய ஆதரவு பெற்ற பிரதமர் என்பதால் நாம் சும்மா இருந்து விட முடியாது'' என்று கொதிக்கிறார் பட்நாயக். அவரே நம்முடைய தோழர் புத்ததேவ் பட்டாசார்யாவாக இருக்கும்போது என்ன செய்வதாம்?



சிங்குர், நந்திக்கிராமம் பிரச்சினைகளில் மார்க்சிஸ்டு அரசின் அணுகுமுறையைக் கண்டித்து இடதுசாரி வரலாற்றாசிரியர் சுமித் சர்க்கார், அருந்ததி ராய், ராஜேந்திர சச்சார் உள்ளிட்ட அறிவுத்துறையினர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கைக்குப் பதிலளிக்கு முகமாக பகிரங்கக் கடிதமொன்றை அவர்களுக்கு எழுதியிருக்கிறார் முதல்வர் புத்ததேவ். (பைனா. எக்ஸ். ஜன.19, 2007.) விவசாயிகளிடமிருந்து ஆயிரம் ஏக்கர் நிலத்தைப் பிடுங்கி டாடாவுக்கு வழங்க நேர்ந்ததற்கான பொருளாதார நியாயத்தை அக்கடிதத்தில் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்:



""சிங்குரில் இருக்கும் அந்தச் சில துண்டு நிலங்களில் விவசாயம் செய்து கிடைக்கக்கூடிய வருவாயைக் காட்டிலும் மிகப் பன்மடங்கு அதிகமான பொருளாதார ஆதாயத்தை இந்தத் தொழிற்சாலை வழங்கும்'' என்கிறார் புத்ததேவ்.



உண்மைதான். 250 ஏக்கர் நிலத்தில் ஆண்டொன்றுக்கு 10 லட்சம் கார்களை டாடா அறுவடை செய்வார்; பல கோடி ரூபாய்களை மூட்டை கட்டுவார். விவசாயிகள் மிஞ்சிப் போனால் எத்தனை கலம் நெல்லை அறுத்துவிடுவார்கள்? எத்தனை ரூபாயை மூட்டை கட்டிவிடுவார்கள்?



புத்ததேவின் இந்தக் கூற்றைத்தான் ""வக்கிரப் பொருளாதாரத்தின் உச்சகட்டம்'' என்று சாடுகிறார் பட்நாயக். ""கேக் எந்த அளவுக்குப் பெரிதாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அது எல்லாருக்கும் நல்லது என்று கூறுவது, வறுமையென்பது குறிப்பிட்ட சமூக உறவின் விளைவுதான் என்ற உண்மையையே இருட்டடிப்பு செய்வதாகும்'' என்கிறார்.



""தொழிலாளர்கள் எந்தப் பாத்திரத்திலிருந்து எடுத்து உண்கிறார்களோ அது தேசிய உழைப்பின் முழு உற்பத்தியாலும் நிரம்பியிருக்கையில், அதிலிருந்து அவர்கள் அதிகமாக எடுத்துக் கொள்வதைத் தடுப்பது பாத்திரத்தின் அளவுக் குறைவோ அல்லது அதிலுள்ள பண்டங்களின் போதாமையோ அல்ல; தொழிலாளர்களுடைய கரண்டிகள் சிறிதாக இருப்பதுதான்'' என்றார் மார்க்ஸ்.



டாடா தொழிற்சாலை வழங்கவிருக்கும் பன்மடங்கு ஆதாயத்தை அறுவடை செய்யப் போவது யார்?



சிங்குரின் நேற்றைய விவசாயிகளா, அல்லது நாளை அங்கே வேலைக்குச் சேரவிருக்கும் தொழிலாளிகளா?



சிங்குரின் 1000 ஏக்கர் நிலப்பரப்பிலிருந்து வெளியேற்றப்பட்டிருப்பவர்கள் 1320 குத்தகை விவசாயிகள், சுமார் 3000 நிலமற்ற கூலி விவசாயிகள், காய்கனி வியாபாரம், கால்நடை வளர்ப்பு போன்ற துணைத் தொழில்களில் ஈடுபட்டுள்ள சுமார் 4475 பேர், வெளியூர்களிலிருந்து இங்கு வந்து வேலை செய்யும் சுமார் 5000 தொழிலாளர்கள். இந்த 12,000 பேருக்கு டாடா ஆலை வழங்கப் போவது என்ன?



ஆலையைச் சுற்றி அமையவிருக்கும் அபார்ட்மென்டுகளில் விவசாயிகள் செக்யூரிட்டி வேலை பார்க்கலாம். சிறு வியாபாரிகள் அயர்ன் வண்டி தள்ளலாம், நாற்று நட்ட பெண்கள் அபார்ட்மென்டு அம்மணிகளுக்குத் துணி துவைத்துப் போடலாம். இவ்வாறாக மேட்டுக்குடி வர்க்கத்துக்குப் பலவிதமாகச் சேவை செய்து அவர்கள் வழங்கும் மிச்சம் மீதியை வாங்கித் தின்னலாம். இதுதான் டாடா ஆலை உருவாக்கவிருக்கும் பன்மடங்கு ஆதாயத்தில் அப்பகுதி மக்களுக்குக் கிடைக்கப் போகும் பங்கு.



···



""ஆயிரக்கணக்கானோர் வேலை தேடி அலைகிறார்கள், அவர்களை நாம் கைவிட்டு விட முடியுமா?'' என்று தன் கடிதத்தில் உணர்ச்சி பொங்கக் கேள்வி எழுப்புகிறார் புத்ததேவ். தன்னுடைய சுரண்டலுக்காகவும் லாப நோக்கத்துக்காகவும் அன்றி வேறு எந்தச் சமூக நோக்கத்துக்காகவும் ஒரு முதலாளி தொழிற்சாலையைத் தொடங்குவதில்லை. மார்க்சியம் தெரியாத பாமரத் தொழிலாளிக்குக் கூடத் தெரிந்திருக்கும் இந்த உண்மை புத்ததேவுக்கு மறந்துவிட்டது போலும்! முதலாளி வர்க்கத்தின் ஆவி புத்ததேவுக்குள் புகுந்து கொண்டு அவரைச் சாமியாட வைக்கிறது.



12,000 பேரை வேலையைவிட்டு விரட்டிய இந்த ஆலை எத்தனை ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும்? கிட்டத்தட்ட இதே அளவு மூலதனத்துடன் சென்னையில் இயங்கிவரும் ஃபோர்டு, ஹூண்டாய் ஆலைகள் ஆயிரத்துக்கும் குறைவான தொழிலாளர்களுக்குத்தான் வேலை வாய்ப்பை வழங்கியிருக்கின்றன. தினக்கூலிகளையும் துணைத்தொழில்களில் ஈடுபட்டிருப்போரையும் சேர்த்தால் கூட வேலை வாய்ப்பு ஓரிரு ஆயிரங்களைத் தாண்டாது.



பல்லாயிரம் பேருக்கு வேலை வழங்குவதற்கு சிங்குரில் அமையவிருப்பது சைக்கிள் தொழிற்சாலை அல்ல. கார் உற்பத்தி என்பதே உயர் தொழில்நுட்பம் சார்ந்தது. டாடாவோ குறைந்த விலையில் (ஒரு லட்சம் ரூபாயில்) கார் தயாரிக்கவிருக்கிறார். அதி உயர் தொழில் நுட்பம் இல்லாமல் இந்த விலைக் குறைப்பு சாத்தியமில்லை. உயர் தொழில் நுட்பம் இருந்தாலோ வேலை வாய்ப்பு சாத்தியமில்லை. உற்பத்திச் செலவைக் குறைப்பது என்ற பெயரில் தொழிலாளிகள் கசக்கிப் பிழியப்படாமல் குறைந்த விலையிலான கார் சாத்தியமே இல்லை. இவையனைத்தும் மிக எளிய பொருளாதார உண்மைகள்.



ஆனால் உண்மைகள் யாருக்கு வேண்டும்? ""ஒரு கருத்தாக்கம் அறிவியல் பூர்வமாகச் சரியாக இருக்கிறதா என்ற கேள்விக்கே இங்கு இடமில்லை. சர்வதேச நிதிமூலதனத்துக்கும், அதன் கூட்டாளிகளான இந்தியப் பெருமுதலாளிகளுக்கும் அந்தக் கருத்தாக்கம் உகந்ததாக இருக்கிறதா இல்லையா என்பதுதான் வக்கிரப் பொருளாதாரம் நிர்ணயிக்கும் அளவுகோல்'' என்று தனது கட்டுரையில் சாடுகிறார் பட்நாயக்.



சிங்குர் பிரச்சினை குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு நியாயமாகவோ, அறிவியல் பூர்வமாகவோ பதிலளிக்க முடியாத புத்ததேவ், சென்டிமென்டுக்குத் தாவுகிறார். ""ரத்தன் டாடாவை நான் அரும்பாடு பட்டு அழைத்து வந்தேன். சிங்குர் நிலம் இல்லை என்று நான் டாடாவிடம் எப்படிச் சொல்ல முடியும்? இந்தத் திட்டம் மட்டும் நிறைவேறாவிட்டால் நான் தலைநிமிர்ந்து நடக்கவே முடியாது,'' (இந்து, டிச.27, 2006) என்று கூறி டாடா என்ற முதலாளியின் வியாபாரப் பிரச்சினையை, தன்னுடைய மானப் பிரச்சினையாக மாற்றுகிறார்.



""இத்தனைப் பிரச்சினைகள் இருக்கும்போது ஆலையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டியதுதானே'' என்று கேள்வி எழுப்பியபோது, ""டாடா நிறுவனத்துக்கும் மேற்கு வங்க அரசுக்கும் இடையே ஒரு உணர்ச்சிபூர்வமான உறவு இருக்கிறது'' (இந்து, நவ. 26, 2006) என்று பதிலளித்திருக்கிறார் டாடா நிறுவனத்தின் தலைமை இயக்குநர் ரவி காந்த்.



இலாப உணர்ச்சி தவிர வேறெந்த உணர்ச்சியையும் அறியாத முதலாளி வர்க்கம் இந்த அளவுக்கு உணர்ச்சி வயப்படுவதிலிருந்தே, காப்பியச் சிறப்பு மிக்க இந்த உணர்ச்சிப் போராட்டத்தில் பல நூறு கோடி ரூபாய்கள் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும் என்ற உண்மையை நாம் விளங்கிக் கொள்ள முடியும்.



""நாங்கள் 6 இடங்களைக் காட்டினோம். சிங்குர் தான் வேண்டும் என்று டாடா நிறுவனம் கூறிவிட்டது'' என்று உண்மையைப் போட்டு உடைத்துவிட்டார் "மார்க்சிஸ்டு' எம்.பி.நீலோத்பல் பாசு. அவர்கள் விரும்பிய சிங்குர் நிலம் 120 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தைக் கொடுத்து வாங்கப்பட்டு 20 கோடி ரூபாய்க்கு டாடாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கார் தொழிற்சாலைக்கு 250 ஏக்கருக்கு மேல் தேவையில்லை எனும்போது 1000 ஏக்கர் எதற்கு என்ற கேள்விக்கும் பதில் இல்லை. தண்ணீர், மின்சாரம், சாலைகள் முதலானவற்றில் இன்னும் என்னென்ன சலுகைகள் டாடாவுக்கு வழங்கப்பட்டுள்ளன என்ற கேள்விகளுக்கும் பதில் இல்லை. இந்த விவரங்களைப் பகிரங்கப்படுத்துவது நட்புக்கு இலக்கணமாகாது என்று புத்ததேவ் கருதுகிறார் போலும்!



தகவல் அறியும் உரிமையின் கீழ் விவரம் கேட்டவர்களுக்கு ""வணிக இரகசியம்'' என்று கூறி பதிலளிக்க மறுத்துவிட்டது "மார்க்சிஸ்டு' அரசு. அனில் அம்பானியுடனான பாசப்பிணைப்புக்காக 10,000 ஏக்கர் விளைநிலத்தை வழங்கியிருக்கும் முலாயம் சிங்கும் கூட ""வணிக இரகசியம்'' என்று கூறித்தான் விவரம் தர மறுக்கிறார்.



எல்லா உறவுகளும் அவற்றுக்குரிய உணர்ச்சிகளை இழந்து, விற்கவும் வாங்கவுமான பண்டங்களாக மாறிவரும் இந்தக் காலத்தில் உணர்ச்சிமயமான உறவுகளை உருவாக்கும் வல்லமை வணிகத்துக்கு மட்டும்தான் இருக்கிறது போலும்! புத்ததேவுக்கும் டாடாவுக்கும் இடையிலான இந்த கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் உறவைத் தாங்கி நிற்பவை எத்தனை சைபர்கள் என்ற உண்மை வெளிவராமலேயே போய்விடுமா என்ன?



···



சிங்குர் நிலத்தை டாடாவுக்கு வழங்க முடியாமல் போய்விடுமா என்ற கேள்வி எழுந்தாலே உணர்ச்சி வயப்படுகிறார் புத்ததேவ். ஆனால் அவர் கண்களிலிருந்து நிலத்தை இழந்த விவசாயிகளுக்காக ஒரு துளி கண்ணீர் கூடக் கசியவில்லை. ""பொருளாதார வளர்ச்சியின் நிகழ்ச்சிப் போக்கு என்பது விவசாயத்திலிருந்து தொழில்துறையை நோக்கித்தான் சென்றாக வேண்டும். இது மார்க்சிஸ்டுகளுக்கு மட்டும் பொருந்தாதா என்ன?'' என்று சுமித் சர்க்காருக்கு எழுதிய கடிதத்தில் கேள்வி எழுப்புகிறார் புத்ததேவ். ""தொழில்மயமாகும் போது விவசாய நிலங்களை இழப்பதென்பது ஒரு இயற்கையான நிகழ்ச்சிப் போக்குதான்'' என்று நமக்கு அறிவொளி ஊட்டுகிறார் யெச்சூரி.



எப்பேர்ப்பட்ட இயற்கையான நிகழ்ச்சிப் போக்கு! "இயற்கையான' சந்தை விதிகளுக்கு மாறாக அரசாங்கம் தலையிட்டு நிலத்துக்கு விலை நிர்ணயம் செய்து சட்டமியற்றி, அதைத் தரகுமுதலாளிக்குச் சொந்தமாக்கும் இயற்கையான நிகழ்ச்சிப் போக்கு! அந்த ஊருக்குள்ளேயே யாரும் நுழையக்கூடாது என்று 144 போட்டும் அடியாள் படையை ஏவியும் குண்டுவீசியும் விவசாயத்தைத் தொழில்மயமாக்கும் இயற்கையான நிகழ்ச்சிப் போக்கு!



""சிங்குரின் 997 ஏக்கர் நிலத்திற்கு 17,000 சிறு உடைமையாளர்கள் இருக்கிறார்கள். அவர்களிடமெல்லாம் ஒப்புதல் கேட்டு ஒரு தனியார் முதலாளி (டாடா) நிலத்தை வாங்கவேண்டுமென்றால் அதற்கு இன்னொரு யுகமே ஆகிவிடும்'' என்று இந்த நிலப்பறிமுதலை நியாயப்படுத்துகிறார் மேற்கு வங்க அரசின் வணிகத்துறைச் செயலர். (பைனா. எக்ஸ், ஜன.18, 2007.)



எனவேதான், 1894இல் வெள்ளைக்காரனால் போடப்பட்ட நிலப்பறிமுதல் சட்டத்தை வைத்து சிங்குர் நிலங்களைக் கைப்பற்றியிருக்கிறது "மார்க்சிஸ்டு' அரசு. இது இயற்கையான நிகழ்ச்சிப் போக்கென்றால்,ஈராக் ஆக்கிரமிப்பும் கூட இயற்கையான நிகழ்ச்சிப் போக்குதான். இதன்படி, கலிங்க நகர் துப்பாக்கிச் சூட்டில் இறந்த பழங்குடி மக்களும், நர்மதா அணையின் அகதிகளும்கூட இயற்கைக் கொடுமைகளுக்குப் பலியானவர்கள்தான் போலும்!



சின்னமீனைப் பெரியமீன் விழுங்கும் இந்த இயற்கையான நிகழ்ச்சிப் போக்கை அனுமதிக்கும்படிதான் வால் மார்ட்டும் கூடக் கோருகிறது. வளர்ந்துவிட்ட உற்பத்திச் சக்திகளுக்குத் தீனி போட உலகச் சந்தையைத் திறந்துவிடச் சொல்லும் பன்னாட்டு நிறுவனங்களின் கோரிக்கையும் அதை நிறைவேற்றுவதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கும் காட் ஒப்பந்தமும் கூட இயற்கையான நிகழ்ச்சிப் போக்குகள்தாம்.



இந்த இயற்கையான நிகழ்ச்சிப் போக்கின் அடிப்படையில், சிங்குர், நந்திக்கிராமம் விவசாயிகளுக்கு மட்டுமல்ல, விவசாயத்திற்கே ஒரு இரங்கற்பா பாடி முடித்துக் கொள்ளலாம் என்கிறார் புத்ததேவ்.



""நிலைமையை நாம் எதார்த்தமாக மதிப்பீடு செய்ய வேண்டும். வாரிசுகளிடையே சொத்து பிரிக்கப்படுவதால் நிலம் துண்டுதுண்டாக ஆகிவருகிறது. விவசாய உள்ளீடு பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. அமோக விளைச்சல் காரணமாக விவசாயிகளுக்குக் கட்டுப்படியாகும் விலை கிடைப்பதில்லை. தற்போதைய சூழ்நிலையில் நாம் பழைய திட்டத்தையே பின்பற்றினால் விவசாயத்துறையில் நாம் பெற்றிருக்கும் வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ள முடியாது'' என்று சுமித் சர்க்காருக்கு எழுதுகிறார்.



விவசாய உற்பத்தி விழுந்துவிட்டது என்பதை அலுவாலியாவே ஒப்புக் கொள்கிறார்; சிதம்பரமும் மறுக்க முடியாமல் மண்டையை ஆட்டுகிறார். விவசாய உற்பத்தி 2 சதவீதம் கூட வளரவில்லை என்று மன்மோகன் சிங் அரசைச் சாடுகிறது "மார்க்சிஸ்டு'களின் மத்தியக் குழுத் தீர்மானம். புத்ததேவோ, அபரிமிதமான விளைச்சல்தான் விவசாயப் பொருட்களின் விலைவீழ்ச்சிக்குக் காரணம் என்று கண்டுபிடித்திருக்கிறார்.



விதை உரம் பூச்சிமருந்து போன்ற உள்ளீடு பொருட்களின் விலையேற்றத்துக்குக் காரணமான பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தரகு முதலாளிகளைப் பற்றி புத்ததேவ் மூச்சு விடவில்லை. விவசாயிகளுக்கு விலை நிர்ணய உரிமை வழங்கப்படாதது குறித்து வாய்திறக்கவில்லை. கூட்டுறவுக் கடன் விநியோகத்தில் இந்தியாவிலேயே மே.வங்கம் கடைசி இடத்தில் இருப்பது ஏன் என்ற கேள்விக்கு விடை இல்லை. தரகு முதலாளிகளுக்கு மானியங்கள் வாரி இறைக்கப்படுவதையும், விவசாயிகளின் மானியம் வெட்டப்படுவதையும், பாசனப்பராமரிப்பிலிருந்து அரசு விலகிக் கொண்டதையும் பற்றிப் பேச்சில்லை. தானியக் கொள்முதலிலிருந்து அரசு விலகிக் கொண்டுவிட்டதைப் பற்றியோ, அவை பன்னாட்டு நிறுவனங்களுக்குத் திறந்துவிடப்பட்டிருப்பதைப் பற்றியோ, தானியச் சந்தையில் தலைவிரித்தாடும் ஊகவணிகச் சூதாட்டம் பற்றியோ ஒரு வார்த்தை இல்லை.



அதாவது, விவசாயத்தை தற்போதைய சூழ்நிலைக்குச் சீரழித்த ஏகாதிபத்திய, தரகு முதலாளித்துவக் கொள்ளைகள் பற்றியும், கொள்ளைகள் பற்றியும் ஒரு வார்த்தை கூட இல்லை. ""இந்தச் சூழ்நிலையில் விவசாயத்தைக் கட்டி அழ முடியாது. அதன் மரணமும் தவிர்க்க இயலாதது. எனவே கருணைக் கொலை செய்து விடலாம்'' என்பதுதான் புத்ததேவ் தரும் விளக்கத்தின் பொருள். கடந்த 10 ஆண்டுகளில் ஒரு லட்சம் விவசாயிகள் ஏன் தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற கேள்விக்கு விடைதேடி அலைபவர்கள் புத்ததேவின் இந்த விளக்கத்தைக் கேட்டு ஞானம் பெறலாம்.



""மூலதனத்தின் தாக்குதல் காரணமாக சிறுவீத விவசாய உற்பத்திக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை அதற்கு நேரெதிரான முறையில் சித்தரித்து, விவசாய நெருக்கடிக்குத் தீர்வு சிறு விவசாயிகளை ஒழிப்பதே'' என்று பேசுபவர்களையும் வக்கிரப் பொருளாதாரவாதிகள் பட்டியலில் சேர்க்கிறார், பட்நாயக்.



···



உண்மையிலேயே சமூகத்துக்கு எந்த வகையிலும் தேவையில்லாததாகவும் உடனே ஒழித்துக் கட்டப்பட வேண்டியதாகவும் இருக்கும் வர்க்கம் ஏகாதிபத்திய முதலாளித்துவ வர்க்கமும் அதன் கூட்டாளியான தரகு முதலாளி வர்க்கமும்தான்.



""உற்பத்தி சார்ந்த தொழில்களில் மூலதனமிடுவது என்ற ஒரேயொரு நடவடிக்கைக்காகத்தான் தனது இருத்தலுக்கான சமூக நியாயத்தை முதலாளி வர்க்கம் பெறுகிறது. மூலதனமிட்டுத் தொழில் தொடங்குவதென்பது முதலாளிகளின் கருணைச் செயல் அல்ல. வளரவேண்டும் அல்லது அழிய வேண்டும் என்ற விதியின் காரணமாக, தான் உயிரோடு இருப்பதற்கே மூலதனம் விரிடைய வேண்டியிருக்கிறது'' என்று முதலாளித்துவத்தின் சமூகப் பாத்திரத்தை விளக்கி னார் மார்க்ஸ்.



இன்றைய புதிய தாராளவாத சகாப்தத்தில் மூலதனமிடுதல் என்ற தனக்குரிய சமூகப் பாத்திரத்தை ஆற்றுவதோடு சமூகத்திடமிருந்து லஞ்சம் கேட்கிறார்கள் பன்னாட்டு முதலாளிகள். முதலாளித்துவத்தின் இந்தத் திமிரைச் சாடுகிறார் பட்நாயக். இலவச நிலம், கடன், முழு வரிவிலக்கு, ரியல் எஸ்டேட் சூதாட்டம் நடத்தும் வாய்ப்பு, தொழிலாளர் சட்டங்களிலிருந்து விலக்கு, வருமான வரி விலக்கு, லாப உத்திரவாதம் ஆகிய அனைத்தையும் வழங்கி பன்னாட்டு முதலாளிகளையும் அவர்களுடைய இந்நாட்டுக் கூட்டாளிகளையும் கவர்ந்திழுப்பதற்கு மாநில அரசுகள் ஒன்றோடொன்று போட்டி போடும் வெட்கக்கேட்டையும் விவரிக்கிறார்.



""இம்முதலாளிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளின் காரணமாக, அரசின் மீது நிதிச்சுமை கூடுகிறது... உலக வங்கியிடம் கையேந்தும் நிலை ஏற்பட்டு அதன் நிபந்தனைகளுக்குப் பணிந்து கல்வி, மருத்துவம் போன்ற அனைத்துக்கும் மக்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கும் நிலை உருவாகிறது. மொத்தத்தில் சமூகத்திடமிருந்து முதலாளிகள் கறந்தெடுக்கும் இந்த லஞ்சத்தின் சுமை, ஏழை உழைக்கும் மக்களின் தலைமீது தான் இறங்குகிறது'' என்ற உண்மையை அம்பலமாக்குகிறார். (புதிய தாராளவாதத்தின் பரிமாணம், பீப்பிள்ஸ் டெமாக்ரசி, டிச. 24, 2006.)



இந்தக் கட்டுரை வெளிவந்த நாட்களில்தான் சிங்குர் பற்றியெரிந்து கொண்டிருந்தது. இந்தக் கட்டுரையின் விமரிசனத்தை மே.வங்க அரசின் நடைமுறையுடன் தம் கட்சி அணிகள் ஒப்பிட்டுப் பார்க்க மாட்டார்கள் என்று தலைமைக்கு அவ்வளவு நம்பிக்கை!



""சிங்குர் ஆலையை எதிர்ப்பவர்கள் விவசாயிகளே அல்ல, பதிவு செய்துகொள்ளாத சில குத்தகை விவசாயிகளும் நிலமில்லாத கூலி விவசாயிகளும்தான் இத்திட்டத்தை எதிர்க்கிறார்கள்.'' (இந்து, டிச.1, 2006.) என்கிறார் புத்ததேவ். அதாவது, நிலவுடைமை இல்லாதவன் விவசாயியே அல்ல என்று பிரகடனம் செய்கிறார் புத்ததேவ். "நான் கம்யூனிஸ்டு அல்ல' என்பதை ஒரு மனிதன் இதைவிடத் தெளிவாக வேறு எப்படித்தான் கூற முடியும்?



···



ஏக்கருக்கு 8.6 இலட்சம் முதல் 12.76 இலட்சம் வரை விலை நிர்ணயம் செய்து 120 கோடி ரூபாயை 17,000 பேருக்குப் பிய்த்துப் போட்டிருக்கிறது "மார்க்சிஸ்டு' அரசு. நிலத்திற்கு அரசு வழங்கும் தொகையில், முக்கால் பங்கு நிலச் சொந்தக்காரருக்கு, கால் பங்குதான் குத்தகை விவசாயிக்காம்! கூலி விவசாயிகளுக்கு எதுவும் கிடையாதாம். அவர்கள் மாற்று வேலைவாய்ப்புக்குப் பயிற்றுவிக்கப்படுவார்களாம்.



"சிங்குரில் நாங்கள் வழங்கியிருக்கும் நிவாரணம்தான் தலைசிறந்தது. இதன் மூலம் நிவாரணத்தொகை குறித்த பிரச்சினையை நாங்கள் தேசிய விவாதத்துக்குக் கொண்டு வந்துவிட்டோம்'' என்று மார்தட்டுகிறார் யெச்சூரி. (இந்து, ஜன.1, 2007) அப்படியானால் வாச்சாத்தி பிரச்சினை மூலம் கற்பழிப்புக்கான நிவாரணத் தொகை எவ்வளவு என்பதை தேசிய விவாதத்துக்குக் கொண்டு வந்ததற்காக திருவாளர் தேவாரமும் மார்தட்டிக் கொள்ளலாம்.



சிங்குர் நந்திக் கிராமம் விவசாயிகளை ஆதரிப்பவர்கள் பழமைவாதிகள் என்று கேலி செய்கிறார் புத்ததேவ். நரோத்னிக்குகளின் புதிய அவதாரங்கள் என்று சாடுகிறார் பிரகாஷ் காரத். சரி, இந்த போல்ஷ்விக்குகள் என்ன சொல்கிறார்கள்?



""மக்கள் ஜனநாயகப் புரட்சியைச் சாதிப்பதற்கான தொழிலாளர் விவசாயிகள் கூட்டணியை உருவாக்கப் பாடுபட்டு வருகிறோம். இந்த போர்த்தந்திர நோக்கத்துக்குக் கேடு விளைவிக்கும் எதையும் "மார்க்சிஸ்டு கட்சி' அரசு செய்யாது'' என்கிறார் காரத். அடேயப்பா! சிங்குர், நந்திக் கிராமத்தில் இந்தப் பக்கம் விவசாயிகள் நிற்கிறார்கள்; எதிர்ப்பக்கம் நிற்கும் தொழிலாளி வர்க்கம் யார்? டாடாவா, சலீமா, ஜின்டாலா? அங்கே தொழிலாளி விவசாயி கூட்டணிக்கு என்ன ஆபத்து வந்தது? விவசாயிகளின் நிலத்தை எந்தத் தொழிலாளி அபகரித்துக் கொண்டான்? மக்கள் ஜனநாயகப் புரட்சியை "டாடாவின் மக்கள் காரில்' ஏற்றி விரைவுபடுத்தக் கோரிய தொழிலாளி வர்க்கம் எது?



விவசாயிகள் இருக்கட்டும். குறைந்தபட்சக் கூலி, வேலை நேரம், பணிப் பாதுகாப்பு, ஓய்வூதியம் போன்ற எல்லா உரிமைகளையும் பறிகொடுத்து வரும் தொழிலாளி வர்க்கத்துக்கு டாடா ஆலையும், "மார்க்சிஸ்டு'கள் அமைக்கவிருக்கும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களும் வழங்க இருப்பது என்ன?



அந்த இரகசியத்தை கொல்கத்தா முதலாளிகளிடம் தெரிவித்திருக்கிறார் யெச்சூரி: ""தொழிலாளிகளுக்குத் தற்போதுள்ள உரிமைகளைக் கரைப்பது (ஞீடிடூதtடிணிண) என்ற பேச்சுக்கே இடமில்லை. வேண்டுமானால் அவற்றை (ஞூடிணஞு tதணடிணஞ்) ராவுவது பற்றி நாம் விவாதிக்கலாம். அதேநேரத்தில் (வெளியேற்றப்படும்) தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு வலைகள் (ண்ச்ஞூஞுtதூ ணஞுt) பற்றி முதலாளிகளும் யோசிக்க வேண்டும்.''



வேலைநிறுத்த உரிமையைக் கரைப்பதற்கும் ராவுவதற்கும் இடையில் நடைமுறையில் என்ன வேறுபாடு? தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு வலைகளுக்கும் விவசாயிகளுக்கான நிவாரணத்துக்கும் என்ன வேறுபாடு? டாடாவுக்கும் புத்ததேவுக்கும் என்ன வேறுபாடோ, அதே வேறுபாடுதான்.



மேற்கு வங்க அரசு என்பது ஒரு தொழிற்கழகம்; அதன் தலைமை நிர்வாக அதிகாரியான (இஉO) புத்ததேவ் தன்னை முதல்வர் என்று அழைத்துக் கொள்கிறார். இந்தத் தொழிற்கழகத்தின் நிர்வாகிகள் குழுவோ (ஆணிச்ணூஞீ ணிஞூ ஈடிணூஞுஞிtணிணூண்) தன்னை மத்தியக் குழு என்று கூறிக் கொள்கிறது.



கார்ப்பரேட் பார்ட்டியாகிய அந்தக் கட்சி தன்னை கம்யூனிஸ்டு பார்ட்டி என்று விளம்பரப்படுத்திக் கொள்கிறது. ""விளம்பரத்தில் என்ன இருக்கிறது? ஹமாம் சோப்பில் "நேர்மை' எவ்வளவு இருக்கிறது என்று யாராவது சுரண்டிப் பார்க்கிறார்களா என்ன? சிவப்பு என்றால் கம்யூனிசம் என்று ஒரு ஃபீலிங். அவ்வளவுதான்'' என்று நீங்கள் எண்ணலாம்.



நந்திக்கிராமம் பற்றி எரிந்து கொண்டிருந்த அதே நாளில் ஐ.ஐ.எம். மாணவர்களிடையே புத்ததேவ் ஆற்றிய உரையைக் கீழ்கண்டவாறு பாராட்டினாராம் ஒரு மாணவர்: ""அவர் அப்படியே எங்களுடைய மொழியைப் பேசினார். ஒரு கம்யூனிஸ்டு பேசுகிறார் என்ற உணர்வு எந்தத் தருணத்திலும் எங்களுக்கு ஏற்படவில்லை.'' (டெலிகிராப், ஜன.7, 2007)



போலச் செய்தல் என்பதுதான் போலிகள் என்று அழைக்கப்படுவதற்கான முன் நிபந்தனை. அவ்வாறாயின், கம்யூனிஸ்டுகள் போல பேசக்கூடத் தெரியாத இவர்களை இனிமேலும் "போலி கம்யூனிஸ்டுகள்' என்று அழைப்பது எப்படி நியாயமாக இருக்கும்?



· மருதையன்

Wednesday, May 30, 2007

யாழ்குடாவை புலிகள் கைப்பற்றினால்!

யாழ்குடாவை புலிகள் கைப்பற்றினால்!

பி.இரயாகரன்
30.05.2007


ரசியல் ரீதியான தோல்வியை இராணுவ வெற்றியாக்கிவிட முடியாது. புலிகள் மீள யாழ்ப்பாணத்தை கைப்பற்றப் போவதாக வெளிவரும் செய்திகள் முதல் ஊதிப்பெருக்கும் செய்திகளுமே அண்மைய செய்திகளாகின்றன. அதற்கான தயாரிப்புகள் பற்றிய செய்திகளும், மிக பெரிய மனித அழிவுகள் ஏற்பட்டாலும் பரவாயில்லை என்ற புலியிஸ்சமும் சார்ந்த செய்திகளும் வெளிவருகின்றது.


பல பத்தாயிரம் மக்கள் எக்கேடு கெட்டு மடிந்தாலும் பரவாயில்லை, சண்டையை பிடியுங்கள் என்கின்றனர் புலம்பெயர் லூசுகள். நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டு அலையும் இந்த லூசுகள், ஆகா இந்த அற்புதம் நிகழாதா என்று விசர் பிடித்து அலைகிறார்கள். யாருக்காக என்றால் தமிழ் மக்களுக்காக என்று கூறிக்கொள்கின்றனர். தமது அரிப்புக்காக தமிழ் மக்களை கொன்று குவித்தபடி நடத்த முனையும் இந்த இராணுவ நடவடிக்கையை ஆதரித்து நிற்கும் இவர்கள், மக்களை வாயை மூடிக்கொண்டு ஓரம்போ என்கின்றனர்.


நடக்கும், நடக்கவுள்ள இந்த மனித அவலத்தின் அரசியல் பின்புலம் என்ன? ஆம் புலிகள் அரசியல் ரீதியாக தோற்றவர்கள், இராணுவ ரீதியாகவும் தொடர் தோல்விகளை எதிர்கொண்டு வருகின்றனார். அரசியல் ரீதியாக பேச்சுவார்த்தை, சமாதானம் என்ற அரசியல் அரங்கில் அதை சரியாக வெற்றிகரமாக கையாளத் தெரியாது, தமது சொந்த பாசிச வழியில் தோற்றவர்கள். அதிலிருந்து மீள்வதற்காக மறுபடியும் இராணுவ நடவடிக்கையை தொடங்கினர். மக்கள் படை என்ற பெயரில் தொடங்கிய இந்த தவறான போராட்ட வழி, அது தொடங்கிய இடத்திலேயே முடிந்து காணாமல் போய்விட்டது. இதன் பின்பாக அண்ணளவாக 5000 பேர் கொல்லப்பட்டதைத் தவிர, வேறு எதையும் இந்த உத்தி சாதிக்கவில்லை.


மக்கள் படையின் தோல்வியும், அதன் அழிவும் இராணுவ ரீதியான முதல் தோல்வியாகியது. இதில் இருந்து மீள புதிய வழிகளில், இராணுவ ரீதியான பல தாக்குதல் உத்திகளை கையாள முனைந்தனர். இப்படி பல. ஆனால் அவை அவ்வவ் இடங்களிலேயே அழிக்கப்பட்டது. தொடர்ந்து கிழக்கை முற்றாக பறிகொடுத்த நிலையில் சேடம் இழுக்கின்றது. இப்படி இராணுவ வழியும் தோற்கடிக்கப்பட்டே வந்தது.


இந்த நிலையில் திடீர் விமானத் தாக்குதலை புலிகள் நடத்தினர். மட்டுப்படுத்திய, எதிர்பாராத விமானத்தாக்குதல் மட்டுமே இன்னமும் தோற்கடிக்கப்படாத இராணுவ உத்தியாக எஞ்சியுள்ளது. இராணுவத்தின் எதிர்தயாரிப்பு அற்ற எல்லைக்குள் மட்டுமே, இவை தாக்குப்பிடிக்கக் கூடிய வெற்றியாக உள்ளது. வெற்றிகரமான தொடர்ச்சியான வலிந்த தாக்குதலை நடத்த முடியாதநிலை. அதே நேரம் இராணுவ ரீதியாக எல்லையோர சிறு தாக்குதல்கள், திடீர் தாக்குதல்கள் கூட வெற்றி அளிக்கவில்லை. ஒரு சில சிறியளவிலான வெற்றி தவிர, பலத்த சேதங்களையும் தோல்வியையும் புலிக்கு ஏற்படுத்தியது. அரசியல் ரீதியாக தோற்ற புலிகள், இராணுவ ரீதியான வழியிலும் கூட தோல்வி மேல் தோல்விகள் கண்டனர். புலிகள் வரலாற்றில் இப்படி நிகழ்ந்தது கிடையாது. இதில் இருந்து மீள்வதற்கு அவர்களுக்கு தெரிந்ததும், எஞ்சியுள்ள அவர்களின் வழி என்பதும், மிகப்பெரிய படை நகர்வு ஒன்றை நடத்துவது மட்டும் தான். புலிகளின் இராணுவ ரீதியான உத்தியில் எஞ்சி இருப்பது இதுமட்டும் தான். தற்கொலைக்கு ஒப்பான ஒன்றை நடத்துவதைத் தவிர, அவர்களுக்குத் தெரிந்த வேறுவழி கிடையாது. அதைச் சொல்லித்தான் புலி அரசியலே இன்று நடக்கின்றது.


அரசியல் ரீதியாக எதிரியிடம் தோற்ற புலிகள், கிழக்கை இழந்துள்ளனர். சிறிய தாக்குதல்கள் மூலம் அரசைத் திணறவைக்கும் ஆற்றலை தொடர்ச்சியாக இழந்த புலிகள், இராணுவ ரீதியாக பலமற்றவராக மாறிவிடவில்லை. ஒரு விசித்திரமான உண்மை தான். புலிகள் இன்னமும் பலமான இராணுவக் கட்டமைப்பைக் கொண்டு இருப்பதால், கண்மூடித்தனமான ஒரு பாரிய தாக்குதலை அவர்கள் நடத்தும் அளவுக்கு பலம் கொண்டவராகவே உள்ளனர்.


இந்த பலமான இராணுவத்தை தக்கவைக்க, வன்னியின் முழு மக்களையும் பலாத்காரப்படுத்தி ஆயுதமுனையில் பணிய வைக்கின்ற செயல்களே, வன்னிப் பெரும் நிலத்தில் பாரிய எதிர்ப்புக்கு மத்தியில் நிகழ்கின்றது. அங்கு வாழும் மக்கள் அன்றாடம் புலிகளால் இதற்காக கடத்தப்படுகின்றனர்.


வன்னி மக்களின் வீடுகளில் புகுந்து அவர்களின் குழந்தைகளை புலிகள் இதற்காக களவாடிச் செல்லுகின்றனர். மொத்த சமூகத்தையும் ஆயுத முனையில் நிறுத்தி, சமூகத்தை ஆயுதபாணியாக்குகின்றனர். எதற்காக என்றால், அந்த மக்களின் சொந்த விடுதலைக்காக அவர்களையே கடத்தி சென்று, அவர்களை சண்டையிட வைக்கின்றனர். இப்படி பிரபாகரனின் தலைமையில் நல்லதொரு விடுதலை, நல்லதொரு புரட்சி.


இப்படி கடத்தப்பட்டு ஆயுத பாணியாக்கும் மக்களைக்கொண்டு, யாழ்குடாவை மீட்கும் பாரிய நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இந்த சமூக விளைவுக்கு முன் போராடும் மனநிலை எப்படிப்பட்டதாக இருக்கும்.


1. வெறும் கூலி இராணுவ மனப்பாங்கு கொண்டதும், பின்னால் திரும்பிப் போகமுடியாத வகையில் துப்பாக்கி முனையில் சண்டையிட வைக்கமுடியும்.


2. விரும்பி இணைந்த படைகள் கூட புலித்தலைமையின் செயலால் அவநம்பிக்கை கொண்ட உறவே பொதுவாக காணப்படுகின்றது. கட்டாய பயிற்சிக்குள்ளாகும் பிரிவின் அவலங்களையும் அது தமக்குள் தாமே சுமந்தபடி போராடும் மன வலிமை இழந்தே நிற்கின்றது.


3. தலைமைக்கும் கீழ் அணிக்கும் இடையிலான இடைவெளியும், வெடிப்பும் என்றுமில்லாத ஒரு முரணிலை கொண்ட ஒரு பலவீனமான இராணுவமாக புலிகள் உள்ளனர்.


4. சமூகத்துடனான உறவு என்றுமில்லாத அளவுக்கு துப்பாக்கி முனையில் தான் பாதுகாக்கப்படுகின்றது.


ஒரு பாரிய யுத்தமுனையில் இவையும், இவை போன்ற பல காரணங்களும் புலிக்கு எதிரானதாகவே உள்ளது. இவை யுத்த முனையில் தீர்மானகரமானதும், அதன் வெற்றி தோல்வியை தீர்மானிக்க கூடியவையுமாகும்.


தோல்விக்கான காரணம் இராணுவத்தின் தோற்கடிக்கும் பலம் என்ற எல்லைக்குள் இருந்து மட்டும் பார்க்கமுடியாது. உள்ளார்ந்த புலியின் பின்னணியிலும், மக்களின் உணர்வு அம்சமே முதன்மையான காரணமாக உள்ளது. இதுதான் பேச்சுவார்த்தைக்கு பிந்தைய புலிகளின் இராணுவ உத்தியை தோற்கடித்தது. இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் யுத்தத்தைத் விரும்பவில்லை என்ற உண்மை, புலி தோற்கவும் அதனைத் தோற்கடிக்கவும் போதுமான காரணமாகவுள்ளது. இந்த மக்களின் ஒரு பகுதியை பலாத்காரமாக ஆயுதபாணியாக்கி, சில தலைவர்களினதும் புலம்பெயர் லூசுகளினதும் சண்டைக்கான விருப்பத்தை பூர்த்தி செய்து வென்று விட முடியுமா?


புலிகளின் ஒரு வெற்றி நிகழுமாயின், இராணுவத்தின் பலவீனத்தில் மட்டும் அல்லது தற்செயலான சம்பவங்களினால் மட்டுமே தான் சாத்தியம். இப்படி நடந்து புலிகள் யாழ் குடாவை கைப்பற்றினால் அல்லது அதில் தோற்றால் விளைவுகள் என்ன?


1. இத்தாக்குதல் தோல்வி பெற்றால், முழுமையாக இராணுவ ரீதியான புலியின் அழிவுக்குரிய பாதை செப்பனிடப்படும்.


1. பெருமளவிலான புலிகளின் படைப்பிரிவுகள் தானாகவே சரணடையும். தாக்குதலின் போதே கட்டாய இராணுவத்துக்கு சேர்க்கப்பட்டவர்கள் பெருமளவில் இராணுவத்தின் முன்னரங்கின் ஊடாகவே தப்பியோடுவர்.


2. புலிகளின் எதிர்காலம் முற்றாக சூனியமாகும்.


3. புலியில் உள் மோதல்களும், உட் குழுக்களும் உருவாகும்.


2. இராணுவ ரீதியாக இத்தாக்குதலில் வெற்றி பெற்றால்


1. பாரிய மனித இழப்பையும், புலிப்படையில் பாரிய இழப்பையும் உருவாக்கும்.


2. யாழ்குடா மக்களின் மேலாக என்றுமில்லாத புலியின் இராணுவ ரீதியான ஒடுக்குமுறை அதிகரிக்கும். பல ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு கொல்லப்படுவர்.


3. யாழ்குடாவை கைப்பற்றிய பின், மீண்டும் அரசியல் நெருக்கடி தான் உருவாகும். பொருளாதார தடையை எதிர்கொள்ளும் ஆற்றலை புலிகள் இழப்பர். சமூகத்தை வழிநடத்த அரசியல் அடிப்படை, பொருளாதார அடிப்படை எதுவும் புலிகளிடம் இல்லாது போகும்.


3. மீண்டும் பேச்சுவார்த்தை, பேரம் என்று தொடங்கும். புதிய அரசியல் நெருக்கடி மறுபடி தொடங்கும்.


4. யாழ்குடா மீதான கைப்பற்றல் நிகழுமாயின், இந்திய தலையீடு நடக்காது என்பதை உறுதி செய்யும் எந்த உத்தரவாதமும் புலிகளின் அரசியல் நடத்தையில் கிடையாது. இந்திய தலையீட்டுக்குரிய வகையிலான தயார்நிலை, சந்தர்ப்பங்கள், சூழல்கள் பொதுவில் காணப்படுகின்றது. இதற்குரிய கற்பனை சம்பவங்கள் கூட, நம்பத்தக்க வகையில் உண்மையில் நிகழ்த்தப்படலாம். இந்தியா செய்யாததை இந்தியா செய்ததாக கூறுகின்ற நிலையில், அதன் நம்பகத்தன்மை அம்பலமாகி நிற்கின்ற சூழல், மேலும் இதற்கு வாய்ப்பானது.


4. யாழ்குடாவை கைப்பற்றினால் சர்வதேச தலையீட்டுக்கான வாய்ப்பு மேலும் அதிகரிக்கும். இன்று அதை தடுப்பது சிங்கள மக்கள் தான். சிங்கள மக்களின் எதிர்ப்பை இல்லாததாக்கும். சர்வதேச தலையீடு புலிக்கு எதிரானது தான்.


இப்படி பல, யாழ்குடா தாக்குதலின் பின் விளைவாக இருக்கும். மனித அவலங்களும், அதன் விளைவுகளும் பாரியதாக அமையும். அதேநேரம், அரசியல் ரீதியாக மக்களிடமிருந்து புலிகள் மேலும் அன்னியமாவர். புலம்பெயர் சமூகத்தின் லூசுகளின் அரிப்புக்கு ஏற்ப, அதனிடமிருந்து மட்டும் ஆதரவைப் பெறுவர். உண்மையில் இந்த தாக்குதலுக்கு அவர்கள் மட்டும் தான் ஆதரவளிப்பர். இந்த லூசுளுக்கு ஏற்பட்டு இருக்கும் சுயநலம் சார்ந்த மனநோய், தன்னையும் தனது குடும்பத்தையும் இங்கு பாதுகாப்பாக வைத்துக்கொண்டு தான் கொக்கரிக்கின்றது. இது தான் எதார்த்தம். இந்த யுத்தத்தை ஆதரிப்போர் அங்கு வாழும் மக்கள் அல்ல.


இந்த எதார்த்தம் ஒருபுறம். இதை எப்படி எதிர்கொள்வது என்பது மறுபுறம். பேரினவாதம் தமிழ் மக்களை ஏமாற்றி, இராணுவ ரீதியாக தமிழ் மக்களை அடக்கியொடுக்கவே விரும்புகின்றது. அதைத்தான் அது செய்கின்றது. இதில் இருந்து சமூகத்தை மீட்டெடுக்க இராணுவ வெற்றிகள் அல்ல. அரசியல் வெற்றிகளே அவசியமானது.


இராணுவ வெற்றி என்பது அரசியல் வெற்றி மீது தான் சாத்தியம். அரசியல் ரீதியான வெற்றி அல்லாத இராணுவ வெற்றி, உள்ளடக்க ரீதியாக மீண்டும் அரசியல் தோல்விதான். தோல்வி சுழற்சி வடிவில் நிகழ்கின்றது.


அரசியல் வெற்றி என்பது


1. பேரினவாதத்தை அரசியல் ரீதியாக தோற்கடித்தல்

2. மக்களை அரசியல் ரீதியாக வென்றல்

3. சர்வதேச ரீதியாக அரசியல் வெற்றியை நிலைப்படுத்தல்


இந்த மூன்றையும் புலிகளால் செய்யமுடியவில்லை. முற்றிலும் தோற்றுள்ளார்கள். இந்த நிலையில் ஒரு இராணுவ வெற்றி அரசியல் வெற்றியாவதில்லை. அதுவே வெற்றியாகிவிடாது. சிலர் மட்டும் தமக்குள் தாமே, வெற்றி பெற்று விட்டதாக நம்பி பீற்றிக்கொள்வதுக்கு அப்பால், அவை வெற்று வேட்டுத்தனம் தான்.


பேரினவாதத்தின் சூழ்ச்சி, அதன் குதர்க்கம், ஏமாற்றுகின்ற வக்கிரம், இதை வெற்றிகரமாக அரசியல் ரீதியாக இன்றும் வெல்லமுடியும். இதை நாம் அறுதியிட்டு கூறமுடியும். இதன் மீது மட்டும் தான், இராணுவ வெற்றிகள் அரசியல் வெற்றியாகும். அரசியல் வெற்றிகள் மீதுதான் இராணுவ வெற்றிகளை சாதிக்க வேண்டும் என்று அடித்துக் கூறுகின்றோம்.


அரசியல் ரீதியாக எதிரியிடமும், சொந்த மக்களிடமும் சதா தோற்றுக் கொண்டு பெற முனைகின்ற இராணுவ ரீதியான வெற்றி, மீண்டும் அரசியல் ரீதியான தோல்வியையே தரும். மீண்டும் மீண்டும் வரலாறு இதையே கற்றுக் கொடுக்கின்றது.


எதிரியின் பலவீனம் என்பது இராணுவ மூலோபாயத்தில் அல்ல, எதிரியின் அரசியல் தளத்தில் உள்ளது. எதிரியின் அரசியல் தளத்தின் மீதே போராட்டமே தொடங்கியது என்பதை மறப்பது, மறந்து இராணுவ கூச்சல் இடுவது அரசியலை துறந்து நிற்பதாகும். எதிரியின் பலவீனம் மீதான தாக்குதல் தான், இராணுவ ரீதியான வெற்றியை தீர்மானிக்கின்றது. அரசியல் ரீதியாக எதிரியை தனிமைப்படுத்தி தோற்கடிப்பது அவசியமானது. மாறாக எதிரியை தொடர்ச்சியாக பலப்படுத்துகின்ற செயல்கள், எதிரியின் பலவீனமான அரசியலைக் கூட வெற்றிக்கே இட்டுச்செல்லும்.


எதிரியின் அரசியல் அடிப்படை மனிதவுரிமையையே மறுப்பதாகும். ஆனால் அதை வெற்றியாக நகர்த்துவதே புலிகளின் அரசியல் இராணுவ மூலோபாயமாக இருப்பதே வேடிக்கையான துயரம்தான்.


தமிழ் மக்களின் அடிப்படை உரிமையை எதிரி வழங்க மறுக்கின்றான். அதை சிதைக்கின்ற அனைத்து நடவடிக்கையையும் அரசியல் ரீதியாக அம்பலப்படுத்தி தனிமைப்படுத்த வேண்டிய பணியை, எம்மைத் தவிர வேறு எவராலும் சுட்டிக் கூட காட்டப்படுவதில்லை. எதிரி அரசியல் ரீதியாக தமிழ் மக்களின் அடிப்படை உரிமையை மறுத்த நிற்கின்ற நிலையும், அதை மறுபுறத்தில் அம்பலப்படுத்த முடியாத நிலையும் காணப்படுகின்து. எதிரியை சுற்றி குலைக்கின்ற கும்பல்கள் கூட, அதைப்பற்றி தமக்குள் முரண்பாடு உள்ளதாக காட்டிக்கொண்டு எதிரியை விசுவாசமாக நக்குகின்றது. உண்மையில் எதிரியின் பின்னால், இவர்கள் நிபந்தனையின்றி தமிழ் மக்களுக்கு துரோகம் இழைக்கின்றனர்.


வெளியில் இருந்து இதை அம்பலப்படுத்தி தமிழ் மக்களின் உரிமையை உயர்த்துவதன் மூலம், சுற்றி நின்று குலைக்கும் நாய்களுக்குள் பிளவுகளை ஏற்படுத்தி, எதிரியை மேலும் தனிமைப்படுத்தமுடியம். அரசியல் ரீதியாக செய்யவேண்டிய பணி பல. மக்களின் உரிமையை வழங்கி அதை உயர்த்துவதன் மூலம், இராணுவ ரீதியான வழியை நகர்த்தவேண்டும். இது மட்டும் தான், மக்களின் அரசியல் உரிமைகளுடன் கூடியது.


எதிரி தமிழ் மக்களுக்கு வழங்க மறுக்கின்ற அடிப்படை உரிமையை, ஒரு அமைப்பு முன்னெடுக்கத் தவறுவது என்பது, அந்த மக்களின் அரசியல் ரீதியான அடிப்படை உரிமையை மறுப்பதன் விளைவாகும். இதை பாதுகாத்துக் கொள்ள, இராணுவ ரீதியான மக்களுக்கு வெளியிலான நடத்தைகள், மற்றொரு அரசியல் தோல்விக்கான சொந்த பாதையை வலிந்து தேர்ந்தெடுப்பது தான்.


பல பத்தாயிரம் மக்களின் இழப்பின் ஊடாக சாதிக்கப் போவது எதை?

யாழ்குடாவை மீட்டால், சாதிக்கப் போவது எதை?

இதன் பின் என்ன நடக்கும்?


புலிகளால், அதன் பின்னுள்ள லூசுக் கூட்டத்தால் பதிலளிக்க முடியாத சூனியமும், தன்னியல்பான போக்கில் அதற்கு விடைகாணும் தலைமைகளாலும், தமிழ் சமூகத்தின் மொத்த அழிவைத் தவிர வேறு எதையும் வழிகாட்டமுடியாது.

திருமாவளவன் - ரவிக்குமார் ரிலையன்ஸின் புதிய பாதந்தாங்கிகள்

திருமாவளவன் - ரவிக்குமார் ரிலையன்ஸின் புதிய பாதந்தாங்கிகள்

ண்பனைப் போல அரிதாரம் பூசிக் கொண்டு திரியும் துரோகிகளின் உண்மை முகம் நெருக்கடிகள் முற்றும்பொழுதுதான் அம்பலத்துக்கு வரும். மளிகை மற்றும் காய்கறி வியாபாரத்தில் இறங்கியுள்ள ரிலையன்ஸ் ஃபிரெஷ், பிக் பஜார் போன்ற தரகு முதலாளித்துவ நிறுவனங்களை எதிர்த்து தமிழகத்தைச் சேர்ந்த சிறு வியாபாரிகளும், கடைச் சிப்பந்திகளும் போராடத் தொடங்கியிருக்கும் நேரத்தில், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பாளர் திருமாவளவனும்; அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமாரும் ரிலையன்ஸ் என்ற பகற்கொள்ளைக்காரனுக்கு ஆதரவாகப் போர்க்களத்தில் குதித்துள்ளனர்.


""ரிலையன்ஸ் காய்கறி கடைகளால் சிறு வியாபாரிகளுக்கு எந்தப் பாதிப்பும் வராது; பாதிப்பு வரும் என்பது மிகைப்படுத்தப்பட்ட பிரச்சாரம்'' என ரவிக்குமார் சட்டமன்றத்திலேயே பேசி, ரிலையன்ஸுக்கு வக்காலத்து வாங்கினார். சென்னைகோயம்பேட்டில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த சிறு வியாபாரிகளும், கூலித் தொழிலாளர்களும், ""இது, ரவிக்குமாரின் சொந்தக் கருத்தா இல்லை, கட்சியின் முடிவா?'' எனக் குழம்பிப் போன நேரத்தில், திருமாவளவன், ""ரிலையன்ஸ் நிறுவனத்தின் சில்லறை வியாபாரம் என்ற கொள்கைக்கு நாங்கள் எதிராகத்தான் உள்ளோம்; ஆனாலும், ரிலையன்ஸின் காய்கறிக் கடையால், சில்லறை வியாபாரிகளுக்குப் பாதிப்பு வராது; ரிலையன்ஸ் பெரிய நகரங்களில் மட்டும் கடைகளைத் திறந்தால் எதிர்க்க மாட்டோம்; தமிழகம் தழுவிய அளவில் திறந்தால் எதிர்ப்போம்'' என ""விளக்கமளித்து'', குழம்பிப் போன தோழர்களை மண்டையைப் பிய்த்துக் கொள்ள வைத்துவிட்டார். திருமாவளவனின் இந்த விளக்கம், ஆர்.எஸ்.எஸ். இன் சுதேசி மோசடிக்கு நிகரானது.


""தமிழகத்தில் 3,000 கோடி ரூபாய் முதலீட்டில், 75 நகரங்களில் 380 பேரங்காடிகளையும் (சூப்பர் மார்க்கெட்) 85 மீ அங்காடிகளையும் (ஹைபர் மார்க்கெட்) திறக்கப் போவதாக'' ரிலையன்ஸ் அறிவித்திருக்கிறது. இந்த 75 நகரங்களில் சென்னை, மதுரை போன்ற பெரிய நகரங்கள் மட்டுமின்றி, ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி போன்ற கிராமப்புறம் சார்ந்த சிறு நகரங்களும் அடங்கும். உண்மை இவ்வாறு இருக்கும் பொழுது, ""ரிலையன்ஸை இப்பொழுது எதிர்க்க மாட்டோம்; அந்நிறுவனம் தமிழகம் தழுவிய அளவில் கடை திறந்தால் எதிர்ப்போம்'' என திருமாவளவன் ""உதார்'' விடுவது, கடைந்தெடுத்த பித்தலாட்டம் ஆகும்.


ரிலையன்ஸ் நிறுவனத்தின் மீது பிற்பாடு பாய்வதற்காக, திருமாவளவன் இப்பொழுது ""பதுங்கவில்லை''; மாறாக, ரிலையன்ஸின் காலடிகளில் பம்பி படுத்துவிட்டார் என்பதே உண்மை. ""ரிலையன்ஸ் நிறுவனம் டெலிகாம் துறைக்குள் வந்த பிறகுதான் அதில் பெரிய புரட்சியே ஏற்பட்டது; கோயம்பேட்டில் சாதாரண மூட்டைத் தூக்கும் தொழிலாளியான தமிழ்மாறனின் கையிலும் செல்போன் உள்ளது'' என அவர் ரிலையன்ஸ் நிறுவனம் பற்றித் துதி பாடியிருப்பதையே அவரின் சரணாகதிக்கு ஆதாரமாகக் காட்டலாம்.


ரிலையன்ஸ் நிறுவனம் தொலைபேசித் துறையில் ""புரட்சி''யைச் செய்வதற்காக அரசுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். மொட்டையடிக்கப்பட்டது ஊரறிந்த உண்மை. அதேபோன்ற புரட்சியை சில்லறை வணிகத்திலும் நடத்த விரும்புகிறது ரிலையன்ஸ். ஆனால், அவர்கள் மொட்டையடிப்பதற்கு இங்கே அரசுத்துறை நிறுவனம் எதுவும் இல்லை. திருமாவளவன் குறிப்பிடும் கோயம்பேட்டை நம்பி வாழும் தமிழ்மாறன் போன்ற தலித் தொழிலாளர்களையும்; ஆயிரக்கணக்கான சில்லறை வியாபாரிகளையும், தள்ளுவண்டி வியாபாரிகளையும் தான் ரிலையன்ஸ் மொட்டையடிக்கப் போகிறது.


இந்த ஏழைத் தமிழர்களுக்காக இப்பொழுது போராட முன் வராத திருமாவளவன்ரவிக்குமார் இணை, ""விலை குறைவாக இருக்கிறது; அதனால்தான் மக்கள் செல்கிறார்கள்'' எனக் கூறி, ரிலையன்ஸ் பிரெஷ்ஷில் காய்கறி வாங்கப் போகும் மேட்டுக்குடி தமிழர்களுக்கு வக்காலத்து வாங்குகிறார்கள்.


பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, கோக்கும், பெப்சியும் ""விலை மலிவு'' என்ற ஆயுதத்தோடுதான் இந்தியச் சந்தைக்குள் இறங்கின. அதன் விளைவு காளிமார்க், வின்சென்ட் போன்ற பெரிய குளிர்பான நிறுவனங்கள் மட்டுமின்றி, குடிசைத் தொழிலாக நடந்துவந்த ஆயிரக்கணக்கான சோடா தயாரிப்பு கம்பெனிகளும் இருந்த சுவடே தெரியாமல் அழிந்துவிட்டன. உள்ளூர் போட்டியாளர்கள் ஒழிக்கப்பட்ட பிறகு, கோக்பெப்சியின் விலை கிடுகிடுவென உயர்ந்தது.

இந்தக் கழுத்தறுப்பு பாணி போட்டியைத்தான், ரிலையன்ஸ் சில்லறை வியாபாரத்தில் நடத்தி வருகிறது. தமிழகத்தைச் சேர்ந்த பிளாஸ்டிக் பொருள் உற்பத்தியாளர்கள் 21.07.2006 தேதியிட்ட தினமணி நாளிதழில் ""பிளாஸ்டிக் சாமான்கள் உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருள் தயாரிப்பதில் ரிலையன்ஸ் ஏகபோகம் வகிப்பதால், மூலப் பொருளின் விலையைத் தன்னிச்சையாக பல மடங்கு உயர்த்தி வருவதாக'' பகிரங்கமாக குற்றஞ் சுமத்தி இருந்தனர். இன்று, ரிலையன்ஸ் பிரெஷ் ஆயிரக்கணக்கான சிறு வியாபாரிகளோடு போட்டி போட வேண்டியிருப்பதால்தான், தனது கடைகளில் காய்கறிகளையும், பழங்களையும் ""விலை மலிவாக''க் கொடுக்கிறது. நாளை, ரிலையன்ஸும் மற்ற தரகு முதலாளித்துவ நிறுவனங்களும் காய்கறிமளிகை விற்பனையில் ஏகபோக ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் பொழுது, பிளாஸ்டிக் சாமான் உற்பத்தியாளர்களைப் போலவே, நடுத்தர வர்க்க நுகர்வோரும் ரிலையன்ஸுக்கு எதிராகப் புலம்ப வேண்டிய நிலை ஏற்படும்.


""விலை மலிவு'' என்பதன் பின்னே உள்ள, ரிலையன்ஸின் இந்தச் சதியை அம்பலப்படுத்தத் துணியாத ""தலித்'' "அறிஞர்' ரவிக்குமார், ரிலையன்ஸை எதிர்ப்பவர்களை, விவசாயிகளின் எதிரிகளாகவும்; காய்கறி வியாபாரிகளின் ஏஜெண்டாகவும் அவதூறு செய்கிறார். கோயம்பேடு இடைத்தரகர், விவசாயிகளிடமிருந்து வாங்கும் கத்தரிக்காய்க்கும், தக்காளிக்கும் தரும் விலையைவிட, ரிலையன்ஸ் பத்து காசு அதிகம் கொடுத்துவிட்டால், அம்பானி விவசாயிகளின் நண்பன் ஆகி விடுவாரா?


""விதை தருகிறேன்; உரம் தருகிறேன்; காய்கறிகளைப் பயிர் செய்து கொடுத்தால், அதற்கு நல்ல விலையும் தருகின்றேன்'' என்று விவசாயிகளுக்கு வலை விரித்து அவர்களைத் தன்னுடைய குத்தகை விவசாயிகளாக மாற்றும் வேலையைத்தான் ரிலையன்ஸ் தொடங்கியிருக்கிறது. இதற்காகவே, ""ஒப்பந்த விவசாயம்'' (ஞிணிணtணூச்ஞிt ஞூச்ணூட்டிணஞ்), என்ற புதிய பாணி பண்ணையடிமை முறையை விவசாயத்தில் புகுத்தும் திட்டம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.


ரிலையன்ஸ் விரிக்கும் இந்த வலையில் சிக்கிக் கொள்ளும் தமிழகத்து விவசாயிகள் அதிலிருந்து மீள முடியாத கொத்தடிமைகளாக மாட்டிக் கொள்வார்கள். அமெரிக்காவின் பெப்சி நிறுவனத்துக்கு உருளைக்கிழங்கு பயிரிட்டுக் கொடுத்த பஞ்சாப் விவசாயிகள் போண்டியானதைப் போன்ற நிலையை, தமிழகத்தின் விவசாயிகளும் எதிர் கொள்ள நேரிடும்.


திருமாவளவன்ரவிக்குமார் இணை, சில்லறை வியாபாரத்தில் ரிலையன்ஸ் போன்ற தரகு முதலாளித்துவ நிறுவனங்கள் இறங்குவதை மட்டுமல்ல, சிறப்புப் பொருளாதார மண்டலங்களையும் ஆதரிக்கிறார்கள். ""நிலத்தைச் சார்ந்துள்ள மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கப்படுமேயானால், அது வேளாண் துறையில் உள்ள சிக்கலையும் தீர்ப்பதாக இருக்கும்'' என ரவிக்குமார் சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார்.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்காக நிலங்கள் வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்துப் போராடுவதில் விவசாயிகளும், விவசாயக் கூலிகளும், பழங்குடி இன மக்களும்தான் முன்னணியில் உள்ளனர் என்பது தெரிந்திருந்தும்; சிறப்புப் பொருளாதார மண்டலம் என்பது பொருள் உற்பத்தியைவிட ரியல் எஸ்டேட் வியாபாரத்திற்காகத்தான் அமைக்கப்படுகிறது என்று நிரூபணமான போதிலும்; சிறப்புப் பொருளாதார மண்டலம் நாட்டின் அரைகுறை இறையாண்மைக்கும் ஆபத்தானது என்பது அம்பலமான பின்னும், அதற்குப் பட்டுக் குஞ்சம் கட்டிவிட முயலுகிறார், "அறிஞர்' ரவிக்குமார். பட்டுக் குஞ்சம் கட்டிவிட்டால் வெளக்குமாறு சாமரம் ஆகிவிடுமா?


ஓட்டுப் பொறுக்குவதற்காக பார்ப்பனபாசிச ஜெயாவிடம் கூட்டணிக் கட்டிக் கொண்டு சட்டமன்ற உறுப்பினர் ஆன ரவிக்குமாரிடமிருந்து, இந்தப் பொருளாதார சிந்தனையைத் தவிர, வேறு எதனையும் எதிர்பார்க்க முடியாது. நாட்டை மறுகாலனியாக்கி வரும் இப்பொருளாதாரத் திட்டங்களுக்குத் துணை நிற்கும் இவர்கள், எந்தத் தாழ்த்தப்பட்டவனை, எந்தத் தமிழனை விடுதலை செய்யப் போகிறார்கள்? இந்த மறுகாலனியாதிக்க ஆதரவினை ரவிக்குமார்திருமாவளவனின் தனிப்பட்ட சறுக்கலாகப் பார்த்துவிட முடியாது; பின் நவீனத்துவ அறிஞர்களால் போற்றப்படும் தலித் அரசியலின் உண்மை முகமே இதுதான்.


· செல்வம்