தமிழ் அரங்கம்
Saturday, May 17, 2008
துரோகி! துரோகி தாண்டா!!
'சொல்லுங்கள் மகேஸ்வரி துரோகியென்று!" என்ற தர்க்கம் மிகக் கவனமாக சில விடையத்தை விட்டுவிடுகின்றது. மகேஸ்வரி ஈ.பி.டி.பி யுடன் இருந்ததையும் மிகக் கவனமாக தவிர்க்கின்றது. அதை நியாயப்படுத்த 'ஏதோ தனக்கு தெரிந்த வழியில் எவர் காலில் விழுந்தெனினும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்தார்" என்கின்றது. மக்களின் எதிரி புலிகள் மட்டுமல்ல, ஈ.பி.டி.பியும், அரசும் கூடத்தான். எதிரியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, எதிரியுடன் சேர்ந்து எப்படி உதவமுடியும். அதுவோ துரோகம்.
துரோகம் என்பதால், புலிகள் வழங்கும் மரண தண்டனையை சரியென்று நாம் கூறமுற்படவில்லை. புலிகளே மக்களுக்கு எதிராக இயங்கும் போது, அவர்களே துரோகிகளாகத் தான் உள்ளனர். புலிகளின் படுகொலை அரசியல், அதன் மக்கள் விரோத அரசியலில் இருந்து தான் முகிழ்கின்றது. மகேஸ்வரியும் சரி, புலியும் சரி, மக்களுக்கு எதிராக இயங்குகின்ற, ஒரு புள்ளியில் சந்திக்கின்றனர்.
கணிதத்தில் இரண்டு எதிர்மறைகள் நேராவது போல், இரண்டு மக்கள் விரோதிகள் தம்மைத் தாம் நியாயப்படுத்தி தம்மை நேராக்க முனைகின்றனர்.
மக்களை இட்டு அக்கறையற்ற புலியெதிர்ப்பு 'ஜனநாயக" அரசியலை நியாயப்படுத்த, இங்கும் இவர்களுக்கு பாசிசப் புலிகளின் அரசியல் நடத்தைகள் தான் உதவுகின்றது. வேடிக்கை என்னவென்றால் மகேஸ்வரியின் அரசியலோ, தங்கள் சொந்த அரசியலோ, படுகொலையின் பின்னுள்ள புலியின் மக்கள் விரோத அரசியலை கேள்வி கேட்க உதவவில்லை. அவற்றில் அவர்களுக்கு அக்கறையுமில்லை.
இப்படி தம்மை துரோகியல்ல என்று நியாயப்படுத்த, புலிகளின் பாசிச நடத்தைகள் தான், இங்கு அவர்களுக்கு உதவுகின்றது. எந்தவிதமான மக்கள் அரசியலுமில்லை.
புலிகளின் நடத்தைகளா, தாம் 'துரோகியல்ல" என்று கூறும் ஒரு சமூக அளவுகோல்?
புலிகளின் நடத்தையைக் கொண்டு, தியாகத்தையும் துரோகத்தையும் யாரும் அரசியல் ரீதியாக வரையறுக்க முடியாது. புலிகள் ஒரு பாசிச மாபியா இயக்கம். அது தனது இருப்புக்கேற்ற வகையில், தனது சொந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது. இதன் பின் எந்த மக்கள் நலன் சார்ந்த அரசியலும் கிடையாது.
புலிகள் துரோகம் என்பதும், தியாகம் என்பதும், மக்களின் அடிப்படையான சமூக பொருளாதார நலன்களில் இருந்தல்ல. மாறாக சொந்த நடத்தைக்கு ஏற்ப அதைச் சொல்லுகின்றது. அதை செய்கின்றது. இதை வைத்துக்கொண்டு, புலியெதிர்ப்பு 'ஜனநாயக" வாதிகள் தமது துரோகத்தை 'ஜனநாயகமாக" கூறி, பாசிசத்தில் மிதக்கின்றனர்.
மக்களை சார்ந்திராத, சார்ந்து நிற்காத, மக்களின் சமூக பொருளாதார அரசியல் பிரச்சனையூடாக மக்களை அணுகாத, எந்த நடவடிக்கையும், மக்களுக்கு எதிரான துரோகம் தான். இப்படி மக்களின் எதிரிகளுடன் கூடி செய்வது, மக்கள் விரோத அரசியல் தான். இது துரோகம் தாண்டா.
மக்களின் எதிரிகளுடன் கூடுகின்ற துரோகிகள், மக்களை நோக்கி எலும்புகளை எறிவதால் அது தியாகமாகிவிடாது. எலும்பை கவ்விக்கொண்டு குலைப்பதா, மக்கள் சேவை? இதற்கு வெளியில் மக்களுக்காக போராட முடியாதோ!
மக்களின் எதிரிகள் எப்போதும் துப்பாக்கி முனையில் மக்களை அடக்கியாள்வதில்லை. மாறாக அறிவிலும், அரசியல் கோசங்களாலும், சமூக சேவைகள் ஊடாகவும் கூட, மக்களை நாயிலும் கீழாக ஒடுக்குகின்றனர்.
இன்று உலகளவிலான தன்னார்வ நிறுவனங்கள் கூட, சமூக சேவை பெயரில் தான் மனித இனத்தை சூறையாடும் நோக்குடன் இயக்கப்படுகின்றது. இதற்கு பணம் கொடுப்பவன் வேறு யாருமல்ல, வெளிப்டையான அடக்குமுறையை ஏவும் அதே ஏகாதிபத்தியங்கள் தான். இப்படி தன்னார்வ நிறுவனங்களின் நோக்கம் மிகத் தெளிவாக, மக்களுக்கு எதிராகவே உள்ளது. இதை இலகுவாகப் புரிந்துகொள்ள, ஒரு அமெரிக்கப் பொருளாதார அடியாளின் வாக்குமூலம், சுயசரிதை வடிவில் தமிழிலும் வந்துள்ளது. அது இன்றைய எரியும் உலகப் பிரச்சனைகளில், எப்படி எந்த வகையில் தலையிடப்பட்டது என்பதை, ஆதாரமாக அம்பலமாக்குகின்றது. சமூக சேவைகளின் பின், இப்படி உள்நோக்கம் கொண்ட, மனித முகங்கள் உண்டு.
பல வேஷத்தில் துரோகிகள்
மக்களுக்கு எதிரான துரோகிகள் பலவேஷத்தில் உள்ளனர். புலியெதிர்ப்பு வேஷத்திலோ, இது புளுத்துக் கிடக்கின்றது. புலியெதிர்ப்பில் தன்னை 'முற்போக்குவாதியாக" 'ஜனநாயகவாதியாக" 'பெண்ணியல்வாதியாக", 'தலித்தியவாதியாக" காட்டும், எத்தனை எத்தனை வேஷங்கள்.
இதை பேசிக்கொள்ளும் இவர்களும், இவர்களின் செயல்பாடுகளும் மக்களைச் சார்ந்து நிற்பதில்லை. மக்களின் எதிரிகள் யாரோ, அவர்களைச் சார்ந்து இவர்கள் நிற்கின்றனர். மக்களின் எதிரி போடும் எலும்பைக் கொண்டு, சமூக சேவை செய்யப்போவதாக பசப்புகின்றனர்.
இதைத் தவிர வேறு அரசியல் எதுவும், இவர்களிடம் கிடையாது. மக்களின் எதிரிகளுடன் கூடி நிற்பவர்கள் துரோகிகள் அல்லாமல் தியாகிகளா
எதிரியுடன் கூடி நிற்பவன் தியாகியா?
துரோகிகள் தம்மை தியாகிகள் என்கின்றனர். ஏதோ ஒரு காரணத்தைக் காட்டிக் கொண்டு, மக்களின் எதிரிகளின் பின்னால் (புலி மற்றும் அரசு) நிற்பவன், தன் செயலை தியாகச் செயல் என்கின்றான். அரசியல் வேடிக்கை தான். இப்படி புலியெதிர்ப்பு 'ஜனநாயக" கோஸ்டி மகேஸ்வரியை, தியாகி என்கின்றது. அதற்கு அது கையாண்ட அளவு கோல், புலிகள் அவரைக் கொன்றதால் அவர் தியாகி. விபச்சாரத்தையே மனித ஒழுக்கமாக காட்டக் கூடியவர்கள் தான், இவர்கள்.
மகேஸ்வரி முந்தைய செயல்பாடுகளை காட்டி புகழ்வது, தர்க்கிப்பது அபத்தம். அப்படிப் பார்த்தால், இந்த ராகவன் பாசிசப் புலியின் கொலைகளுக்கு உடந்தையானவர் என்றல்லவா தூற்றி விவாதிக்க வேண்டும். இப்படி தூற்றுவதும், புகழ்வதும் சந்தர்ப்பவாத அரசியலாகின்றது.
புலிகள் ஏன் கொன்றனர். அதன் சரி பிழைக்கு அப்பால், ஈ.பி.டி.பியில் இருந்ததால் தான், அவர் கொல்லப்பட்டார். புலியெதிர்ப்பு சந்தர்ப்பவாதிகள் பட்டியலிட்ட விடையங்களுக்காகவல்ல. ஈ.பி.டி.பி யுடன் செயல்பட்டது சரியென்றால், அதை வைத்து 'சொல்லுங்கள் மகேஸ்வரி துரோகியென்று!" விவாதிக்க வேண்டியது தானே. அதைவிட்டு விட்டு மற்றையவற்றை தூக்கி போடுவதே, அரசியல் சதி தான். இங்கு திட்டமிட்டு மோசடி செய்வது புலியெதிர்ப்பு 'ஜனநாயக' அரசியலாகின்றது.
மகேஸ்வரி மக்கள் சேவையை, மக்களுக்காக செய்ய வேண்டும் என்றால், எதற்காக மக்களின் எதிரிகளுடன் கூடி நிற்க வேண்டும். உண்மையான மக்கள் சேவை எதிரியில்லாத தளத்தில், எதிரிக்கு எதிராக மலை போல் தேங்கி கிடக்கின்றது. இப்படி இருக்க, எதிரியுடன் சேர்ந்து செய்தது எதை?
மக்களின் எதிரிகள் தான், மக்களின் அவலத்துக்கு காரணம். இப்படி இருக்க எதிரியுடன் கூடித் திரிகின்றவர்கள், எதிரியின் கைக்கூலிகள் தானே. இப்படி மனித அவலத்தை வைத்து, எதிரியுடன் அரசியல் விபச்சாரம் செய்கின்றனர். மக்களின் எதிரிகள் ஏற்படுத்தும் மனித அவலத்தை, எதிரிகளுடன் கூடி நின்று போக்குவதாக கூறுவதே அபத்தம். அதை தியாகம் என்பது அதை விட அபத்தம். இதுவோ துரோகம், துரோகம் தான்டா.
துரோகத்துக்கு வழங்கிய தண்டனையா?
இல்லை. மாறாக மக்களை அடக்கியொடுக்கும் பாசிசப் புலிகள், தமது சொந்தத் துரோகத்தை பாதுகாக்க வழங்கும் தண்டனைகள் தான் இவை. மக்களின் முதுகில் குத்திய புலித்துரோகிகள், வாரி வழங்கும் தண்டனைகள் மனித குலத்துக்கே எதிரானது. புலியின் அரசியல் பினனால், மக்களுக்கான எந்த அரசியலும் கிடையாது. புலியெதிர்ப்பு 'ஜனநாயகம்" பேசி அரசுக்கு பின்னால் நிற்பது போல் தான், புலிக்கு பின்னால் நிற்பதும். அரசியல் ரீதியாக இரண்டும் ஒன்று தான். இரண்டும் மக்களுக்கு எதிரானது.
புலிகள் தமது பாசிச மாபியா அரசியலைக் கையாள்வதால், அது மொத்த மக்களுக்கும் எதிராக மாறிவிட்டது. இதுவோ புலித் தேசியமாகிவிட்டது. இதனால் மக்களை அடக்கியொடுக்கி நிற்கின்றனர். தொடர்ச்சியாகவே புலிகளின் அரசியல், தமக்கு எதிராக எதிரிகளை உருவாக்குகின்றது.
மக்களோ தப்பிப் பிழைக்க முனைகின்றனர். புலிப் பிரதேசத்தில் வாழ முடியாது தப்பி ஒடுகின்றனர். பொருளாதார ரீதியாக, புதிய பிரதேசத்தில் தாக்குப் பிடிக்க முடியாது, பலர் சிதைகின்றனர். இங்கு தான் அரசும், அரச கூலிப்படைகளும் ஆள் பிடிக்கின்றனர்.
இப்படிப்பட்டவர்களை நாம் துரோகி என்று கருதுவது கிடையாது. சந்தர்ப்பமும், சூழலும் இதைத் தூண்டுகின்றது. இவர்கள் சரியான வழிக்கு வர, சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டியது அவசியமானது. இது அடிமட்டத்தில் உள்ளவர்களின் நிலை. இது தன்னார்வக் குழுக்களில் உள்ளவர்களுக்கும் பொருந்தும். புலியின் அடிமட்டத்தில் உள்ளவர்களுக்கும் பொருந்தும்.
அப்படியாயின் யாருக்கு பொருந்தாது? புலித் தலைவர்களுக்கு பொருந்தாது. புலியெதிர்ப்புத் தலைவர்களுக்குப் பொருந்தாது. அரசியல் ரீதியாக வழிகாட்டுபவர்களுக்கு பொருந்தாது. இவர்கள் திட்டமிட்டே மக்களுக்கு எதிராக செயல்படுபவர்கள்.
இப்படி புலியிலும் சரி, புலியல்லாத தளத்திலும் சரி, தன்னார்வக் குழுவிலும் சரி, இது பொதுவானதே. அவர்களின் ஒவ்வொரு மக்கள் விரோத செயலும், மக்களுக்கு எதிரானது. மக்களுக்கு எதிரானது என்பதால், அது துரோகத்தை அடிப்படையாகக் கொண்டது.
மக்களுக்கு எதிரான அரசியலைக் கொண்டு, அவர்கள் எங்கு எந்த அணியில் நின்றாலும், அவர்கள் எதைச் செய்தாலும் அது மக்களுக்கு எதிரான நோக்கில் செய்யப்படுகின்றது. அது துரோகத்தன்மை வாய்ந்தது. அது நன்மையாக இருந்தாலும் சரி, தீமையாக இருந்தாலும் சரி,
புலிகள் சில எலும்புத் துண்டுகளைப் போட்டு, சில மக்கள் நல சேவைகளை செய்கின்றனர். அதனால் அது மக்கள் போராட்டமாகிவிடுமா? இல்லை. அதுபோல் தான், பேரினவாத மக்கள் விரோத அரசின் பின் நக்குகின்றவர்களின் சேவையும் கூட.
அரசியல் ரீதியாக மக்கள் நலனை அடிப்படையாக கொண்டு, மக்களைச் சார்ந்து நிற்காத அனைத்தும் மக்களுக்கு எதிரானது. அதுவெல்லாம் மக்களுக்கு எதிரான துரோகம் தாண்டா?
பி.இரயாகரன்
16.05.2008
Friday, May 16, 2008
விலைவாசி உயர்வு : தனியார்மயம் பரப்பும் கொள்ளைநோய்!
கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக நீறுபூத்த நெருப்பாக இருந்துவந்த விலைவாசி உயர்வு, இப்பொழுது எரிமலையைப் போல வெடித்திருக்கிறது. அரிசி, கோதுமை, சோளம், சமையல் எண்ணெய், பால் போன்ற உணவுப் பொருட்கள் தொடங்கி, இரும்பு, நிலக்கரி, கச்சா எண்ணெய் போன்ற மூலப்பொருட்கள் வரை அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி தாறுமாறாக உயர்ந்து வருகின்றன. இந்தியா மட்டுமின்றி, ஆசியா, ஆப்பிரிக்கா, இலத்தீன் அமெரிக்கக் கண்டங்களைச் சேர்ந்த அனைத்து ஏழை நாடுகளும் இவ்விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளன.
கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்
Thursday, May 15, 2008
புலியெதிர்ப்பு பொறுக்கிகள் பேசும் 'ஜனநாயகம்"
பொறுக்கிகளுக்கேயுரிய வகையில் எல்லா புலியெதிர்ப்பு கோஸ்ட்டிகளும் மக்களின் முதுகில் குத்துகின்றனர். மக்களை நம்பி, அவர்களைச் சார்ந்து எந்த அரசியலும் இவர்கள் செய்வது கிடையாது. மாறாக ஆயுதம் ஏந்திய குண்டர்களையும், ரவுடிகளையும், கூலிப்படைகளையும் சார்ந்து நின்று தான், இவர்கள் தமக்கேற்ற ஒரு 'ஜனநாயகத்தைப்" பேசுகின்றனர்.
பாசிசத்தையே 'ஜனநாயகமாக" காட்டி, அதை நியாயப்படுத்துகின்ற இழிநிலையில் நின்று அரசியல் வேஷம் போடுகின்றனர். கிழக்கு மக்கள், தலித், ஜனநாயகம் என்ற போர்வையில் எத்தனை எத்தனை வேஷங்கள்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு சார்பாக நின்று, அவர்களுடன் சேர்ந்து போராடுவது கிடையாது. மாறாக யார் அந்த பாதிப்பை ஏற்படுத்துகின்றனரோ, அவர்களை 'தேசியத்தின்" பெயரில், 'ஜனநாயகத்தின்" பெயரில் நியாயப்படுத்துகின்றனர். புலியெதிர்ப்பு இப்படித்தான் 'ஜனநாயக" அரசியல் செய்கின்றது.
எப்போதும் புலியுடனான ஓப்பீட்டை முன்வைத்து, புலியெதிர்ப்பு கூட்டம் பாசிசத்துக்கு கம்பளம் விரிக்கின்றனர். இவர்கள் ஜனநாயகம் என்று கருதுவதோ, தேர்தலில் வாக்குப் போடுவது தான். இதன் மூலம் தமது புலியெதிர்ப்பு பிழைப்புவாதத்தையே, நியாயப்படுத்தி விட முனைகின்றனர்.
தேர்தலை 'ஜனநாயக"த்துக்கான ஒன்று என்று கூறுவது, மாபெரும் சதி. தேர்தல் மக்களுக்கு ஒரு விடிவையும், மக்களுக்கான தீர்வையும் தருவதாக கூறுவதே, கடைந்தெடுத்த அரசியல் பொறுக்கித்தனமாகும். தேர்தல் மூலம் மக்கள் தம் சொந்த விருப்பை தெரிவிப்பதாக கூறுவது, அரசியல் மோசடியாகும்.
இது இவர்கள் விரும்புவது போல், அனைத்து மக்களையும் செயலற்ற பொம்மைகளாக்குகின்றது. வளர்ப்பு மந்தைகள் எப்படி போடுவதை மட்டும் தின்கின்றதோ, அதேபோல் தான் மக்களை வாக்கு போடக் கோரும் 'ஜனநாயக" அறிவுரைகளும். இவர்கள் மக்களுக்கு வழிகாட்டுவது எனப்படுவது, மக்களின் சொந்த விடுதலை மீதானது அல்ல. மக்களை அடக்கியாண்டு தின்ன விரும்புகின்ற புல்லுருவிகளை, வாழவைக்கும் வழிவகைளைத் தான் இவர்கள் 'ஜனநாயகம்" என்கின்றனர்.
இப்படி தேர்தல் மூலம் மக்களை அடிமைப்படுத்தி கொழுக்க விரும்புகின்றவர்களின் நலன்களை பாதுகாக்கத் தான், புலியெதிர்ப்பு அரசியல் உதவுகின்றது. எந்த மக்கள் நலனும், இதன் பின் ஒரு துளியும் இருப்பதில்லை. இப்படி மக்களுக்கு எதிரான மனித விரோத சிந்தனை முறையே, படுபிற்போக்கானது. இதுவே புலியெதிர்ப்பின் பெயரில் அரங்கேறுகின்றது.
இந்த அரசியல் மோசடியை அரங்கேற்ற நிகழும் வன்முறையை, இவர்கள் நியாயப்படுத்தும் விதமோ பாசிசத்தன்மை கொண்டது. பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக நின்று, அதை செய்தவர்களுக்கு எதிராக இவர்கள் போராடுவது கிடையாது. மாறாக அதைச் செய்தவனை நியாயப்படுத்துகின்ற, அதை ஆதரிக்கின்ற அரசியல் தான் புலியெதிர்ப்பின் மொத்த முதிர்வாகின்றது.
இப்படி புலிக்கு எதிராக கட்டமைக்கும் பாசிசத்தையே 'ஜனநாயகம்" என்கின்றனர். அண்மையில் கிழக்கு மக்களுக்கு எதிராக நடந்த தேர்தலை நியாயப்படுத்த முனைந்தவர்கள், அந்த பாசிசத்தை ஆதரித்த விதம் வெட்கக் கேடானது. அதை அவர்கள்
1. ஒரு நாளில் மாற்றம் ஏற்பட்டு விடாது. 2. ஒரு பாசிச அமைப்பில் இருந்து வந்தவர்கள். 3. வன்முறை இடபெறல் என்பது ஆச்சரியமானதல்ல. 4. வன்முறையற்ற தேர்தலை நாம் எதிர்பார்க்க முடியாது.5. கடந்தகால தேர்தல் வரலாறுகளில் வன்முறை இருந்துள்ளது.6. ஒப்பீட்டளவில் வன்முறை குறைவு.7. ஜனநாயகத்தை அமுல்படுத்த தேர்தல் அவசியம்8. ஜனநாயக நடைமுறையை இது கொண்டு வந்துள்ளது
இப்படி ஆளுக்கொரு காரணத்தைக் கூறிக் கொண்டு, பாசிசத்தை 'ஜனநாயக"மாக காட்டி ஆதரிக்கின்றனர். அன்றும் மக்கள் விரோத தேசியத்தையும் இப்படித் தான் நியாயப்படுத்தி, அதை பாசிசமாக வளர்த்தவர்களும் இவர்கள் தான்.
ஒன்றை மட்டும் இவர்கள் மூடி மறைக்கின்றனர். வன்முறைகளில் ஈடுபடுகின்ற புலியல்லாத கூலிக் குழுக்களின் அரசியல் என்ன? அது மக்களுடன் கொண்டுள்ள அரசியல் உறவு என்ன? இதுவே தான் அந்த குழுக்களின் ஜனநாயக பண்பை, அறிதலுக்கான அடிப்படையாகும். இதையா புலியெதிர்ப்புக் கும்பல் தனது அரசியல் அளவுகோலாக கொண்டு கருத்துரைக்கின்றது.. இல்லை. மாறாக புலியுடனான ஒப்பீட்டையே அரசியல் அளவீடாக கொள்கின்றது. உண்மையில் இப்படி புலியெதிர்ப்பு அரசியல் என்பது, புலி ஒழிப்பை அடிப்படையாக கொள்கின்றதே ஒழிய, மக்கள் நலனை அது முன்னிறுத்துவதில்லை. அது இயல்பாகவே மக்களுக்கு எதிராக இருக்கின்றது.
இப்படி கிழக்கு மக்களுக்கு எதிரான வன்முறையை, புலியை முன்னிறுத்தி நியாயப்படுத்தினர். இந்த பாசிசக் குழுக்கள் கொண்டிருந்த மக்கள் விரோத அரசியலை, கேள்விகளின்றி பாதுகாத்தனர். மக்களுடன் நிற்பதற்கு பதில், மக்களின் முதன்மை எதிரியுடன் நின்றே குலைத்தனர். புலியை முன்னிறுத்தியபடி, அனைத்தையும் ஓப்பீட்டைக் கொண்டு நியாயப்படுத்தினர்.
இதை அம்பலப்படுத்தும் போது, இதைப் பேசுபவர்கள் யாழ்ப்பாணிகள், கம்யூட்டருக்கு முன்னால் அமர்ந்து இருந்து புரட்சி பேசுபவர்கள், புலிக்கு வக்காலத்து வாங்குபவர்கள் என்று பலவிதமாக கூறி, தமது மக்கள் விரோத அரசியலுக்கு நியாயம் கற்பிக்கின்றனர். கிழக்கு மக்களுடன் நிற்காது, என்னடா கூலிக் கும்பலுடன் நின்று இதைக் கூறுகின்றீhகள்? அதை முதலில் சொல்லுங்கள். முதலில் மக்களுடன் நில்லுங்கள். அதை விட்டுவிட்டு அரசின் சொறி நாய்களுடன் சேர்ந்து நின்று, மக்களை அடிமைப்படுத்துவது தானோ 'ஜனநாயகம்'.
புலிகள் 'தேசியம்" பேசுவது போலவே, புலியெதிர்ப்பு கூட்டம் 'ஜனநாயகம்" பேசுகின்றனர். இவர்கள் பேசும் 'தேசிய"மாகட்டும், 'ஜனநாயக"மாகட்டும், அவை மக்களுடன் கொண்டுள்ள சமூக அரசியல் உறவு என்ன? எந்த பொறுக்கிகளும் இதற்கு பதிலளிப்பதில்லை.
மாறாக ஆயுதம் ஏந்திய பாசிச வடிவத்துக்கு பதில், தேர்தல் வடிவிலான பாசிசத்தை ஆதரிக்கின்றனர். எப்போதும் புலிகளை ஒப்பிடுவதன் மூலம், தமது சொந்த பாசிச அரசியல் நிலைப்பாட்டை நியாயப்படுத்திக் கொள்கின்றனர். இந்த புலியெதிர்ப்பு பாசிட்டுகளை, புலியை மிஞ்சிய கடைந்தெடுத்த பொறுக்கிகள் என்று கூறுவது தான் மிகச் சரியானது.
பி.இரயாகரன்
14.05.2008
Wednesday, May 14, 2008
கொசாவோ : தேசிய இன விடுதலையா? ஏகாதிபத்தியங்களின் ஏவலாட்சியா?
ஐரோப்பா கண்டத்தின் பால்கன் பிராந்தியத்திலுள்ள சின்னஞ்சிறு நாடான செர்பியாவிலிருந்து, அதன் தெற்கு மாநிலமான கொசாவோ கடந்த பிப்ரவரி 17ஆம் நாளன்று தன்னைச் சுதந்திர நாடாகப் பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளது. இதனை அமெரிக்காவும் சில ஐரோப்பிய நாடுகளும் வரவேற்று, கொசாவோ நாட்டை அங்கீகரித்துள்ளன. அதேநேரத்தில் ரஷ்யாவும் செர்பியாவும் கொசாவோவின் தனிநாடு பிரகடனத்துக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, அத்தனி நாட்டை அங்கீகரிக்க மறுத்துள்ளன. இதேபோல, சிங்கள இனவெறி பிடித்த இலங்கை பாசிச அரசும் கொசாவோ விடுதலைக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. சீனா, இந்தியா ஆகிய நாடுகள் கொசாவோவை அங்கீகரிக்கத் தயக்கம் காட்டுகின்றன. மறுபுறம், சில தமிழினவாதிகள் கொசாவோவின் விடுதலையையும், தனிநாடு பிரகடனத்தையும் வரவேற்று ஆதரிக்கின்றனர்.
செர்பியாவின் இனவெறி ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடி வந்த கொசாவோவின் விடுதலையைப் பாட்டாளி வர்க்கம் ஆதரிப்பதா, அதன் தனி நாடு பிரகடனத்தை வரவேற்பதா என்ற விவாதத்துக்குள் நுழையும் முன், கொசாவோ பற்றிய எதார்த்த நிலைமைகளை வரலாற்றுப் பின்னணிகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இரண்டாம் உலகப் போரின்போது பாசிச இட்லரின் ஆக்கிரமிப்புப் போருக்கு எதிராக கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் கம்யூனிஸ்டுகளும் நாட்டுப்பற்றாளர்களும் ஒன்றிணைந்து போராடி, அளப்பரிய தியாகத்துடன் நாட்டு விடுதலையைச் சாதித்து, புதிய முற்போக்கான அரசுகளை நிறுவினர். இவற்றில் செக்கோஸ்லாவாக்கியா நாடானது செக், ஸ்லாவாக் எனுமிரு தேசங்களைக் கொண்ட அரசாக இருந்தது. யூகோஸ்லாவிய நாடானது. செர்பியா, குரேஷியா, ஸ்லோவேனியா, மாசிடோனியா, மாண்டி நிக்ரோ, போஸ்னியா ஹெர்சகோவினா, கொசாவோ ஆகிய தேசிய இனங்களைக் கொண்ட நாடாக உருவானது.
1990களில் சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்து, அமெரிக்க வல்லரசின் தலைமையிலான ஏகாதிபத்திய உலகின் சூழ்ச்சிகள் சதிகளால் பல தேசிய அரசுகளாகப் பிளவுபட்டுச் சிதைந்தது. அதன் தொடர்ச்சியாக செக்கோஸ்லாவாக்கியா நாடானது, செக், ஸ்லோவாக் எனுமிரு நாடுகளாக உடைந்தது. பல தேசிய இனங்களின் கூட்டரசாக உருவான யூகோஸ்லாவி யாவில் செர்பிய ஆதிக்கம் படிப்படியாக அதிகரித்ததாலும், பெயரளவிலான சோசலிச நாடுகள் கூட நீடிக்கக் கூடாது என்ற ஏகாதிபத்திய உலகின் சூழ்ச்சிகள் சதிகளுக்கேற்ப தேசிய இனவெறி தூண்டிவிடப்பட்டதாலும், ஐக்கியப்பட்ட அந்நாடு பல கூறுகளாகச் சிதைந்து இன்று உலக வரைபடத்தில் யூகோஸ்லாவியா என்ற நாடே காணாமல் போய்விட்டது.
1991ஆம் ஆண்டில் யூகோஸ்லாவியாவிலிருந்து ஸ்லோவேனியா மற்றும் குரேஷியா ஆகிய இரு தேசிய இனங்கள் பிரிந்து தனி அரசுகளாயின. 1992இல் போஸ்னியா ஹெர்சகோவினா பிரிந்தது. அதைத் தொடர்ந்து, 2007இல் மாண்டிநிக்ரோ தன்னைத் தனிநாடாக அறிவித்துக் கொண்டது. எஞ்சிய பகுதிகள் செர்பியா என்றழைக்கப்பட்டு வந்தது. தற்போது செர்பியாவிலிருந்து பிரிந்து, கொசாவோ தன்னைச் சுதந்திர நாடாகப் பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளது.
பல தேசிய இனங்களின் ஐக்கியப்பட்ட ஒன்றியமாக யூகோஸ்லாவியா விளங்கிய காலத்திலேயே தமது மேலாதிக்கத்தைத் திணித்து வந்த செர்பியர்கள், இதர தேசிய இனங்கள் பிரிந்து செல்லத் தொடங்கியதும் அப்பட்டமான கிறித்துவ மதவெறியையும் செர்பிய பெருந்தேசிய இன வெறியையும் கட்டவிழ்த்து விட்டு சிறுபான்மைத் தேசிய இனங்களின் மீது போர் தொடுத்து ஒடுக்கினர். ""அகண்ட செர்பியா'' எனும் தேசிய இனவெறியோடு செர்பியர்கள் நடத்திய காட்டுமிராண்டிதனத்தால் யூகோஸ்லாவியா இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது. செர்பியாவின் ஒரு மாகாணமாக இருந்த கொசாவோவில், செர்பிய இனவெறி ஒடுக்குமுறையை எதிர்த்து அம்மக்கள் ஆயுதமேந்திப் போராடி வந்தனர்.
கொசாவோவின் எல்லையிலுள்ள அல்பேனிய மக்களே கொசாவோவில் நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் இனத்தால் அல்பேனியர்கள்; மதத்தால் இஸ்லாமியர்கள். எனவே, செர்பிய இனவெறி ஒடுக்குமுறையிலிருந்து மீள, அல்பேனிய நாட்டுடன் கொசாவோ மாகாணத்தை இணைக்கக் கோரி போராடி வந்தனர். பால்கன் பிராந்தியத்தில் காலூன்றி தனது மேலாதிக்கத்தை நிறுவத் துடித்துக் கொண்டிருந்த அமெரிக்க வல்லரசு, கொசாவோ மக்களின் போராட்டத்தை ஆதரித்து ஊக்குவித்தது. ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் பாலஸ்தீனத்திலும் முஸ்லீம் மக்களை அன்றாடம் கொன்று குவித்து வரும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகள், கொசாவோவில் அல்பேனிய இன முஸ்லீம்களுக்காக முதலைக் கண்ணீர் வடித்தனர்.
கொசாவோ மக்களைக் காப்பது என்ற பெயரில் ஏகாதிபத்திய கூட்டமைப்பின் (நேட்டோ) படைகள் குவிக்கப்பட்டன. மனித உரிமைகளை மீறிவிட்டதாகக் குற்றம் சாட்டி செர்பியா மீது குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்திப் போர் தொடுத்தன. கொசாவோவிலிருந்து செர்பியப் படைகள் வெளியேற்றப்பட்டு, ஏகாதிபத்தியங்களின் கைப்பாவையான ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வை திணிக்கப்பட்டது. கொசாவோ விடுதலைப் படை, அமெரிக்க விசுவாசக் கூலிப் படையாகச் சீரழிக்கப்பட்டது. கொசாவோவில் அமெரிக்க இராணுவத் தளம் நிறுவப்பட்டது. அமெரிக்கஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் போர்த் தாக்குதலில் செர்பியா மீண்டெழ முடியாதபடி நிலைகுலைந்து போனது.
இதன் தொடர்ச்சியாகவே கொசாவோ விடுதலைப் படையின் தலைவரான ஆசிம்தாசி, கடந்த பிப்ரவரி 17ஆம் நாளன்று கொசாவோவின் தலைநகர் பிரிஸ்தினாவில் நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில், கொசாவோவைத் தனியொரு நாடாக பிரகடனப்படுத்தியுள்ளார். இதனை அமெரிக்காவும் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி முதலான ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளும் அங்கீகரித்துள்ளன. அவற்றின் நோக்கம், கொசாவோ மக்களின் நியாயமான சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து ஆதரிப்பதல்ல; மாறாக, தமது மேலாதிக்கத்தை நிறுவுவதேயாகும்.
இதற்கேற்ப கொசாவோ நாடாளுமன்றத்துக்குப் பெயரளவுக்கே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. முக்கிய விவகாரங்கள் அனைத்தையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அவைதான் முடிவு செய்யும். ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் 2000 பேர் கொண்ட படையை அனுப்பி கொசாவோவைப் "பாதுகாத்து கண்காணிக்கும்'. இதுதவிர, 16,000க்கும் மேற்பட்ட அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியப் படைகள் (நேட்டோ) கொசாவோவில் நிலைகொண்டு அந்நாட்டைப் "பாதுகாக்கும்!'
கொசாவோ தனிநாடாக அறிவிக்கப்பட்டதும், அம்மாகாணத்தின் வடபகுதியிலுள்ள செர்பிய இனத்தினர் இதனை ஏற்க மறுத்து, தாங்கள் செர்பியாவுடன் இணையப் போவதாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதனை ஆதரிக்கும் செர்பியாவுக்கு ரஷ்ய ஏகாதிபத்தியம் துணையாக நிற்கிறது. செர்பியா, தனது இழந்த மாகாணமாகிய கொசாவோவை மீட்கப் போர் தொடுக்க முனையும். அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களின் துணையோடு கொசாவோ தனது தனிநாடு நிலையைத் தக்கவைத்துக் கொள்ளப் போராடும். ஆக, மீண்டும் பால்கன் பிராந்தியத்தில் இரத்த ஆறு ஓடப் போவது நிச்சயமாகி விட்டது.
அல்பேனியாவுடன் இணைய வேண்டும் என்பதுதான் கொசாவோ மக்களின் விருப்பமாகவும் போராட்டமாகவும் இருந்தது. தனது மேலாதிக்க நோக்கங்களுக்கு இது ஏற்புடையதாக இல்லாததால், கொசாவோவை தனிநாடாக்கியுள்ளது அமெரிக்கா. மேலும் கொசாவோ மக்கள் இதுவரை பயன்படுத்தி வந்த கொடியைக்கூட ஐரோப்பிய ஒன்றியம் மாற்றியமைத்துள்ளது. ஆக, கொசாவோ ஒரு சுதந்திர நாடல்ல; அது ஏகாதிபத்தியங்களின் ஆதிக்கத்துக்கான களம்; அவற்றின் மேலாதிக்க ஆட்டத்துக்கான பகடைக்காய் என்பது தெளிவாகி விட்டது.
இருப்பினும், இது கொசாவோ தேசிய இனத்தின் விடுதலை என்று ""சமூகநீதித் தமிழ்த் தேசம்'' எனும் தமிழினவாத பத்திரிகை குதியாட்டம் போடுகிறது. ""எப்படியோ, செர்பியர்களின் கொடுமைகளிலிருந்து கொசாவோ முஸ்லீம்கள் காப்பாற்றப்பட்டுள்ளார்கள் என்பதே ஆறுதல்'' என்று இங்குள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கொசாவோ தனிநாடாகியுள்ளதை வரவேற்கிறார்கள். இப்படித்தான் அமெரிக்க ஏற்பாட்டின்படி, இந்தோனேஷியாவிலிருந்து கிழக்கு திமோர் தனிநாடாக "விடுதலை' அடைந்ததையும் இனவாதிகள் வரவேற்று ஆதரித்தனர்.
ஆனால், இவையெல்லாம் தேசிய இன விடுதலையோ, சுயநிர்ணய உரிமையோ அல்ல. மாறாக, இத்தகைய "சுதந்திரம்', "விடுதலை'களால் அமெரிக்கஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் சீவி சிங்காரிக்கப்பட்டு, வலுப்படுத்தப்பட்டுள்ளன; அவற்றின் மேலாதிக்கத்துக்கு உதவுபவையாக அமைந்துள்ளன. ஏகாதிபத்தியத்தை வலுப்படுத்தக் கூடிய, அதன் மேலாதிக்கத்துக்கு புறக்காவல் அரண்களாக அமைந்துள்ள இத்தகைய "விடுதலை'களை ஆதரிப்பதானது, தேசிய இன விடுதலைக்கே எதிரான ஏகாதிபத்திய கைக்கூலித்தனமாகும். தேசிய இனங்களின் உரிமையையும் ஜனநாயகத்தையும் மதிக்கும் சைவப்புலியாக ஏகாதிபத்தியம் மாறிவிட்டதாகக் காட்டி ஏய்க்கும் துரோகத்தனமாகும்.
மேலும் தனது பெருந்தேசிய இனவெறி நலன்களுக்கு எதிரானது என்பதாலேயே கொசாவோ விடுதலையை சிறீலங்கா அரசு எதிர்க்கிறது. சிங்கள இனவெறி பாசிச ஒடுக்குமுறையை எதிர்ப்பது என்ற பெயரால், கொசாவோவின் "விடுதலை'யை ஆதரிப்பது முற்போக்கானதாகி விட்டது.
பொன் விலங்கைப் பூட்டிக் கொண்டாலென்ன, எப்படியோ இரும்பு விலங்கு போனால் போதும் என்று நியாயவாதம் பேசி ஏகாதிபத்திய வலையில் சிக்கிக் கொள்வது தேசிய இன விடுதலையாகாது; ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நின்று போராடாமல், எந்தவொரு தேசிய இன விடுதலையையும் சாதிக்கவும் முடியாது. இந்த அரிய படிப்பினைகளை உலகிற்கு உணர்த்திவிட்டு, அமெரிக்கஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் கண்காணிப்புப் பிடியில் சிக்கித் தவிக்கிறது, கொசாவோவின் "தேசிய இன விடுதலை'!
· குமார்
Tuesday, May 13, 2008
திபெத்திய கலகம்: தேசிய இனவிடுதலைப் போரா?
கடந்த மார்ச் மாதத்தில், உலகத்தின் கூரை என்றழைக்கப்படும் திபெத்தில் சீன ஆட்சியாளர்களுக்கு எதிராக வெடித்த கலவரம், இதுவரை கண்டிராத மூர்க்கத்தனத்துடன் நடந்துள்ளது. இக்கலவரத்தை ஒடுக்க சீன இராணுவம், போராடிய திபெத் மக்களையும் புத்த மத குருமார்களையும் மிருகத்தனமாகத் தாக்கியது என்றும் மீண்டும் கலவரம் வெடிக்கும் சூழல் நிலவுவதாகவும் செய்திகள் வருகின்றன. சீன இராணுவம் நடத்திய தாக்குதலிலும் துப்பாக்கிச் சூட்டிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
திபெத்தின் புத்தமத அரசரான தலாய்லாமா, 1959 மார்ச் 10ஆம் நாளன்று சீனாவின் "அடக்குமுறை'யிலிருந்து தப்பித்து இந்தியாவில் தஞ்சம் புகுந்த நாளை, "திபெத்திய விடுதலைக்கான எழுச்சி நாளாக' அவரது விசுவாசிகள் கடைபிடித்து வருகின்றனர். சீனாவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடக்கவிருப்பதால், உலகின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் தலாய்லாமாவின் ஆதரவாளர்கள் மார்ச் 10ஆம் தேதி முதலாக போராட்டங்களைத் தீவிரமாக நடத்தி வந்தனர். இதில் திபெத்திய உழைக்கும் மக்களும் கணிசமாகப் பங்கேற்றுள்ளனர். இப்போராட்டங்கள், அரசு அலுவலகங்களும் வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டு மிகப் பெரிய வன்முறைக் கலவரமாகத் தீவிரமடைந்ததும், சீன அரசு இராணுவத்தை ஏவிக் கொடூரமாக ஒடுக்கியுள்ளது.
இந்தக் கலவரத்துக்கு தலாய்லாமாதான் காரணம் என்று குற்றம் சாட்டுகின்றனர், சீனாவின் முதலாளித்துவ ஆட்சியாளர்கள். திபெத் விவகாரத்தில் பொறுமையைக் கடைபிடிக்குமாறு உபதேசிக்கிறது, அமெரிக்கா. இந்திய அரசோ, நீண்டகாலமாகவே திபெத், சீனாவின் ஓர் அங்கம்தான் என்று ஒருபுறம் கூறிக் கொண்டே, மறுபுறம் தலாய்லாமாவை ஆதரித்து சீனாவுக்கு எதிரான சீர்குலைவு வேலைகளை இரகசியமாகச் செய்து வருகிறது. அகண்ட பாரத லட்சியத்துடன் இந்திய தேசிய இனங்களை துப்பாக்கி முனையில் ஒடுக்குவதையே நோக்கமாகக் கொண்ட இந்துவெறி பாசிஸ்டுகளின் தலைமைத் தளபதியான அத்வானி, திபெத் தேசிய இன மக்களின் மீது சீன அரசு காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறையை ஏவியுள்ளதாகக் கூப்பாடு போடுகிறார். திபெத், சீனாவின் ஓர் அங்கம்தான் என்று கூறும் இடதுவலது போலி கம்யூனிஸ்டுகள், தற்போதைய கலவரம் சீனாவின் ஐக்கியத்தைச் சீர்குலைக்கும் பிரிவினைவாத சதி என்று சாடி, சீன அரசின் அடக்குமுறையை நியாயப்படுத்துகின்றனர். தமிழினப் பிழைப்புவாதிகளோ, திபெத்திய போராட்டத்தைத் தேசிய இன உரிமைப் போராட்டமாகச் சித்தரித்து சீன அரசின் அடக்குமுறையை எதிர்க்கின்றனர்.
எங்கெல்லாம் அடக்குமுறைக்கெதிராக மக்கள் போராடுகிறார்களோ, அங்கெல்லாம் அப்போராட்டத்தை ஆதரிப்பது புரட்சிகர ஜனநாயக சக்திகளின் கடமை என்ற அடிப்படையில், திபெத்தில் நடக்கும் போராட்டத்தை நாம் ஆதரிப்பதா? அல்லது இது பிளவுவாத பிரிவினைவாத சதிச் செயல் என்று சீன அரசின் அடக்குமுறையை நியாயப்படுத்துவதா?
சீனாவில் முதலாவதாக தோழர் மாவோ தலைமையிலான கம்யூனிஸ்டுகளின் ஆட்சி நடந்தது. தற்போது, கம்யூனிச முகமூடி அணிந்த அதிகார வர்க்க முதலாளித்துவ ஆட்சி நடக்கிறது.
சீனாவின் முதலாளித்துவ ஆட்சியாளர்கள் உலகமயமாக்கலுக்கு ஏற்ப உழைப்புச் சுரண்டலைத் தீவிரப்படுத்தி வருவதாலும், ஆட்குறைப்பு தகுதியற்றவர்களை நீக்குவது முதலான நடவடிக்கைகளாலும் அந்நாட்டில் வறுமையும் வேலையின்மையும் பெருகி வருகிறது. தொழிற்கூடங்களில் கொத்தடிமைத்தனம் தலைவிரித்தாடுகிறது. விவசாயம் நாசமாக்கப்பட்டு, ஏற்றுமதி அடிப்படையான விவசாய உற்பத்தி திணிக்கப்பட்டுள்ளதால், வேலையிழந்து வாழ்விழந்த விவசாயிகள் பெருநகரங்களில் குவிகின்றனர். விவசாயிகளும் தொழிலாளர்களும் கேடுகெட்ட சீன முதலாளித்துவக் கொடுங்கோலாட்சிக்கு எதிராக தன்னெழுச்சியான கலகங்கள் கிளர்ச்சிகளில் ஈடுபடுவதும், இவற்றை சீன முதலாளித்துவ ஆட்சியாளர்கள் மிருகத்தனமாக ஒடுக்குவதும் தொடர்கிறது.
சீனாவின் மைய மாநிலங்களிலேயே இந்த நிலைமை என்றால், ஒப்பீட்டு ரீதியில் பின்தங்கிய திபெத் பிராந்தியத்தின் நிலைமை பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. உலகமயமாக்கலுக்கு ஏற்ப திபெத்தில் பெருந்திட்டங்களும், சுற்றுலாபோக்குவரத்துத்துறை வளர்ச்சியும் நடந்துள்ள போதிலும் அவற்றின் பலன்கள் மக்களுக்கானதாக அல்லாமல், சீன முதலாளித்துவ கும்பலும் பன்னாட்டு ஏகபோக கும்பலும் ஆதாயமடைவதாகவே உள்ளன. உலக முதலாளித்துவத்தின் நலன்களுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப திபெத்தின் உற்பத்தியும் பொருளாதாரமும் கலாச்சாரமும் மாற்றப்பட்டு வருவதால், அங்கு வறுமையும் வேலையின்மையும் ஏற்றத்தாழ்வுகளும் சமூக முறைகுலைவுகளும் தீவிரமாகி வருகின்றன.
இந்நிலையில், திபெத்திய மக்களின் அதிருப்தியைச் சாதகமாக்கிக் கொண்டு, எதிர்ப்புரட்சி லாமா கும்பல் இழந்த சொர்க்கத்தை மீட்க, சீன அரசின் ஒடுக்குமுறை எதிர்ப்பு எனும் முகமூடியுடன் கலகத்தில் இறங்கியது. இதற்குமுன் நடந்த கலகங்களைப் போலின்றி, கடந்த மார்ச் இறுதியில் திபெத் தலைநகர் லாசாவில் நடந்த கலகத்தில் கணிசமான அளவுக்கு உழைக்கும் மக்களும் சீன அரசுக்கெதிரான போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இது, உலக முதலாளித்துவத்தின் தேவைகளுக்கேற்ப திபெத்தின் பொருளாதாரமும் கலாச்சாரமும் சிதைக்கப்படுவதால் ஏற்பட்டுள்ள அதிருப்தியும் குமுறலும்தானே தவிர, இது திபெத்தின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் அல்ல. சீன முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராட்டங்களைக் கட்டியமைத்து தலைமையேற்க அங்கு புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சி இல்லாத நிலையில், திபெத்திய மக்களின் அதிருப்தியை பிற்போக்கு சக்திகள் அறுவடை செய்து கொண்டு, தமது நோக்கங்களுக்கு ஏற்பத் திசைதிருப்பி ஆதாயமடைகின்றன.
தேசிய இன விடுதலைக்கான நோக்கத்துடன் செயல்படும் அமைப்பு எதுவும் திபெத்தில் இல்லை. தற்போதைய கலகத்தை ஏகாதிபத்திய கைக்கூலிகளான தன்னார்வக் குழுக்களே கட்டியமைத்து வழிநடத்தியுள்ளன. திபெத்திய இளைஞர் காங்கிரசு, திபெத்திய மகளிர் கழகம், குசுசும் திபெத்திய இயக்கம் (முன்னாள் அரசியல் கைதிகளின் இயக்கம்), திபெத்திய தேசிய ஜனநாயகக் கட்சி, சுதந்திர திபெத்துக்கான (இந்தியாவிலுள்ள) மாணவர் இயக்கம் ஆகிய ஐந்து பெரிய தன்னார்வ நிறுவனங்கள் கூட்டுச் சேர்ந்து நன்கு திட்டமிட்டு இக்கலகத்தை நடத்தியுள்ளன. சீனாவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடக்கும் தருணத்தில் இதைச் செய்ததன் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன.
ஒருபுறம், கம்யூனிச முகமூடி அணிந்த சீன முதலாளித்துவ ஆளும் கும்பல். மறுபுறம் தேசிய இன முகமூடி அணிந்த திபெத்திய பிற்போக்குக் கும்பல். இவற்றிலே எந்தத் தரப்பின் நியாயத்தை ஏற்க முடியும்? அரசு எந்திரத்தைக் கையில் வைத்துள்ள சீன ஆளும் கும்பலின் மிருகத்தனமான ஒடுக்குமுறையை எதிர்க்க வேண்டும்; ஏனென்றால், அதுதான் மிகக் கொடிய அரசு பயங்கரவாத அடக்குமுறை என்று மதிப்பிட்டு, திபெத்திய பிற்போக்குக் கும்பலின் எதிர்ப்புரட்சி கலகத்தை நியாயப்படுத்த முடியுமா? இந்தியாவாலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தாலும் ஆதரித்து ஊட்டி வளர்க்கப்படும் கைக்கூலி லாமா கும்பலை தேசிய இனப் போராளிகளாகக் கருத முடியுமா? முடியாது. இரண்டுமே ஏகாதிபத்தியத்துக்குச் சேவை செய்யக்கூடிய, ஏகாதிபத்தியத்தை வலுப்படுத்தக் கூடிய பிற்போக்குக் கும்பல்கள்தாம். அவற்றிலே இடதுசாரி வலதுசாரி, முற்போக்கு பிற்போக்கு என்று எடைபோட்டு பார்த்து எந்தத் தரப்பையும் ஆதரிக்க முடியாது.
திபெத்திய லாமா கும்பலின் கலகத்தைப் போலவே 1980களில் பஞ்சாபில் பிந்தரன்வாலே தலைமையிலான சீக்கிய மதவெறி பயங்கரவாத கும்பல், தேசிய இன முகமூடியுடன் இந்திய அரசுக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதலில் இறங்கியது. அன்று பிரதமராக இருந்த பாசிச இந்திரா, அரசு பயங்கரவாதத்தை ஏவி அக்கும்பலை மிருகத்தனமாக ஒடுக்கினார். இவற்றிலே எந்தத் தரப்பின் நியாயத்தை ஏற்க முடியும்? இரண்டுமே பாசிச பிற்போக்குக் கும்பல்கள்; இவ்விரு தரப்பையும் நிராகரித்து, இருதரப்புக்கும் எதிராகப் போராடுவதன் மூலமே ஜனநாயகத்தையும் நியாயமான தேசிய இன உரிமையையும் நிலைநாட்ட முடியும் என்ற நிலைப்பாட்டுடன் அன்று கம்யூனிசப் புரட்சியாளர்கள் பிரச்சாரபோராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால் சில போலி புரட்சியாளர்களும் சில இனவாதக் குழுக்களும் காலிஸ்தான் பயங்கரவாத கும்பலின் கலகத்தை தேசிய இன உரிமைக்கான போராட்டமாகச் சித்தரித்து, அதை ஆதரித்து, அரசு பயங்கரத்தை மட்டும் எதிர்த்தன. பிற்காலத்தில், தமது நிலைப்பாட்டை இரகசியமாகக் கை கழுவின.
இதேபோல, சீனாவில் 1989இல் ""ஜனநாயக ஆட்சிமுறை''யைக் கோரி மாணவர்கள் போராடியபோது, அதை சீன முதலாளித்துவ ஆட்சியாளர்கள் மிருகத்தனமாக ஒடுக்கியபோது, சீன மாணவர் போராட்டம் நியாயமானது, ஜனநாயக உரிமைகளுக்கானது என்று பத்திரிகைகளும் குட்டி முதலாளித்துவவாதிகளும் துதிபாடினர். ஆனால் சீன மாணவர் போராட்டம் மக்கள் ஜனநாயகத்துக்கானதல்ல; கேடுகெட்ட முதலாளித்துவ ஜனநாயகத்துக்கானதுதான். ஏகாதிபத்தியங்களின் ஆதரவுடன் அப்பட்டமான முதலாளித்துவத்தை நிறுவத் துடிக்கும் சீன ஆளும் கும்பலின் ஒரு பிரிவும், அதிகார வர்க்க முதலாளித்துவத்தை நிலைநாட்டியுள்ள போலி கம்யூனிச ஆளும் கும்பலும் நடத்திய மோதல்தான் சீன மாணவர் போராட்டமாக வெளிப்பட்டது. இரு தரப்புமே முதலாளித்துவத்தின் இரு வேறுபட்ட கும்பல்களாக உள்ள நிலையில் அவற்றில் எதை பாட்டாளி வர்க்கம் ஆதரிக்க முடியும்? இவ்விரு தரப்பையும் நிராகரித்து, இரு தரப்புக்கும் எதிராகப் போராடுவதன் மூலமே மக்கள் ஜனநாயகத்தையும் சோசலிசத்தையும் சீன மக்கள் சாதிக்க முடியும் என்ற நிலைப்பாட்டையே அன்று கம்யூனிசப் புரட்சியாளர்கள் மேற்கொண்டனர்.
திபெத்தில் தற்போது நடந்துள்ள கலகமும் அதற்கெதிராக சீன அரசின் ஒடுக்குமுறையும் இந்த வகைப்பட்டதுதான். இருப்பினும் இதற்கு தேசிய இனச் சாயம் பூசி இனவாத பிழைப்புவாதிகள் ஆதரிக்கக் கிளம்பியுள்ளனர். அதிலும் தலாய்லாமா கும்பலமானது அப்பட்டமான ஏகாதிபத்தியக் கைக்கூலி கும்பல் என்று உலகெங்கும் அம்பலமான பின்னரும், வலிந்து சென்று அக்கும்பலை ஆதரிக்கின்றனர். இதற்காக, தோழர் மாசேதுங்கை ஆக்கிரமிப்பாளனாகக் கொச்சைப்படுத்தி இழிவுபடுத்தவும் அவர்கள் தயங்கவில்லை. வரலாற்றுப் புரட்டுகளுடன், திபெத் போராட்டத்தை ஆதரிப்பதுதான் மார்க்சியலெனினியம் என்று வேறு ஏய்க்கக் கிளம்பியுள்ளனர்.
1949இல் சீனாவில் தோழர் மாசேதுங் தலைமையில் புதிய ஜனநாயகப் புரட்சி வெற்றி பெற்று, நிலப்பிரபுத்துவமும் ஏகாதிபத்தியமும் தூக்கியெறியப்பட்டு உழைக்கும் மக்கள் விடுதலை அடைந்தனர். உழைக்கும் மக்களின் புதிய அரசியல் அதிகாரத்தைக் கொண்டு, நாட்டின் பல பகுதிகளில் நிலப்பிரபுத்துவக் கொடுங்கோன்மைக்கு எதிரான போராட்டங்களில் இறங்கி, விவசாயிகள் தமது புரட்சிகர அரசியல் அதிகாரத்தை நிறுவினர். சீனாவின் ஒரு பகுதியாக நீடித்து வந்த திபெத்தில், புத்தமத குருமார்களான லாமாக்களின் கொடூர கொத்தடிமைத்தனமான ஆட்சிக்கு எதிராக விவசாயிகள் போராடி வந்த சூழலில், இதர பகுதிகளில் நடந்ததைப் போலவே திபெத் மக்களின் விடுதலைக்கு 1950இல் சீன செஞ்சேனை உதவியது. செஞ்சேனையின் உதவியோடு திபெத்திய மக்கள் லாமாக்களின் கொடுங்கோலாட்சியை வீழ்த்தி, அடிமைத்தளைகளை அறுத்தெறிந்தனர். அரண்டு போன லாமா கும்பல் 1951இல் சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு ஓடிவந்து, சீன அரசுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி திபெத்தில் அமைதியான முறையில் விவசாய சீர்திருத்தங்களைச் செய்து ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
ஆனால், மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற உள்ளிருந்தே சதிகளைச் செய்துவந்த லாமா கும்பல், 1959இல் ஆயுதமேந்திய எதிர்ப்புரட்சி கலகத்தில் இறங்கியது. கம்யூனிஸ்டுகளைக் கொலை செய்தும், அரசு அலுவலகங்கள் பள்ளிகளைத் தீயிட்டுக் கொளுத்தியும் வெறியாட்டம் போட்டது. அக்கும்பலை ஒடுக்க சீன செஞ்சேனை திபெத்தில் நுழைந்ததும், தலைமைக் குருவும் மத அரசருமான தலாய்லாமா தனது விசுவாசிகளுடன் இந்தியாவில் தஞ்சமடைந்தார். இன்னும் சில லாமா கும்பல்கள் மேற்கத்திய நாடுகளுக்குத் தப்பியோடின. திபெத்திய விவசாயிகள், விவசாயப் புரட்சிக் கமிட்டிகளை நிறுவி நிலச்சீர்திருத்தத்தையும் ஜனநாயகத்துக்கான இயக்கத்தையும் தொடர்ந்து நடத்தி மக்கள் அதிகாரத்தை நிறுவினர். 1965இல் திபெத்திய தேசிய இனத்தின் விருப்பப்படி, சீனாவின் சுயாட்சி உரிமை பெற்ற பிரதேசமாக திபெத் மாறியது. 1970களில் சீனாவில் நடந்ததைப் போலவே திபெத்திலும் கலாச்சாரப் புரட்சி நடந்து, திபெத்திய உழைக்கும் மக்கள் பழைய மரபுகள் மூட நம்பிக்கைகளை விட்டொழித்து புத்த மடாலயங்களை பள்ளிக் கூடங்களாக மாற்றியமைத்தனர்.
மறுபுறம், இந்தியாவில் தஞ்சமடைந்த லாமா கும்பலுக்கு கொடைக்கானல், பெங்களூரு மற்றும் இமாசலப் பிரதேசம், உ.பி. மாநிலங்களில் எஸ்டேட்டுகளும் பழத்தோட்டங்களும் அளித்து ஆதரித்த நேரு அரசு, உ.பி.யின் தர்மசாலாவில் லாமா கும்பல் தனது தலைமை நிலையத்தை நிறுவிக் கொள்ளவும் உதவியது. தலாய்லாமா, ""வெளிநாட்டில் வாழும் திபெத்திய அதிபர்'' என்று பட்டம் சூட்டிக் கொண்டார். திபெத் விவகாரத்தை வைத்து கம்யூனிச சீனாவை சீர்குலைக்கத் துடித்த அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள், லாமா கும்பலுக்கு இரகசியமாக ஆயுத உதவிகள் செய்து உசுப்பி விட்டன. "ஆசிய ஜோதி' நேரு அரசு இதற்கு உடந்தையாகச் செயல்பட்டது. லாமா கும்பல் திபெத்தில் நுழைந்து பாலங்கள் சாலைகளைக் குண்டு வீசித் தகர்ப்பது, பயிர்களை அழிப்பது முதலான நாசவேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது. அதன்பிறகு நேருவின் வாரிசு இந்திரா ஆட்சியில், அமெரிக்க கொலைகார உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. உதவியுடன் எஸ்.எஃப்.எஃப் என்ற பெயரில் சிறப்பு எல்லைக் காவல்படை உருவாக்கப்பட்டு, உ.பி. மாநிலம் டேராடூனுக்கு அருகே சக்ரடா மலைப்பகுதியில் லாமா கும்பலுக்கு இந்திய அரசு ஆயுதப் பயிற்சி அளித்து சீனாவுக்கு எதிராக ஏவியது. பாசிச இந்திரா கொலை மீதான விசாரணையின்போது, இந்த உண்மைகள் வெளிவந்து நாடெங்கும் நாறியது.
சீனாவில் கம்யூனிச கட்சியையும், ஆட்சியையும் உள்ளிருந்தே முதலாளித்துவ கும்பல் கைப்பற்றி, அதிகார வர்க்க முதலாளித்துவத்தை நிலைநாட்டிய பிறகு, 1979இல் தலாய்லாமாவின் மூத்த சகோதரரான கியாலோதோண்டுப், சீன ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 1980களிலும் 1990களிலும் பின்னர் 2002இலும் இரு தரப்பும் தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் நடத்தின.
சீன முதலாளித்துவப் பாதையாளரான டெங்சியாவோ பிங் முன்வைத்த ""ஒருநாடு; இரு வேறு பொருளாதார முறைகள்'' என்ற கொள்கைப்படி, பிரிட்டிஷ் காலனியாக இருந்த ஹாங்காங்கும், போர்ச்சுகீசிய காலனியாக இருந்த மாகாவ்வும் முந்தைய தமது அரசியல்பொருளாதார முறைகளுடன் சீனாவுடன் இணைந்துள்ளன. அதேபாணியில் திபெத்தும் நீடிக்க வேண்டும் என்று கோருகிறது, லாமா கும்பல். ஆனால், திபெத் நீண்ட நெடுங்காலமாக சீனாவுடன் ஐக்கியப்பட்டுள்ள நிலையில், அதை மீண்டும் ஐக்கியப்படுத்த வேண்டியதில்லை. மேலும், லாமாக்கள் கோரும் முந்தைய அரசியல்பொருளாதார நிலைமை என்பது நிலப்பிரபுத்துவ கொடுங்கோலாட்சியாகும். அந்தக் காட்டுமிராண்டித்தனத்தை நாகரிக உலகம் ஏற்காது'' என்று சீன அரசு 2004இல் வெளியிட்ட திபெத் பற்றிய வெள்ளை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அதாவது, சீன அதிகார வர்க்க முதலாளித்துவ ஆட்சியாளர்கள், அப்பட்டமான முதலாளித்துவ அரசியல் பொருளாதார முறைகளை ஏற்கின்றனர். லாமாக்கள் கோரும் நிலப்பிரபுத்துவ கொடுங்கோன்மை அரசியல் பொருளாதார முறைகளை ஏற்கத் தயாராக இல்லை.
""தனிநாடு'', ""சுதந்திர திபெத்'' கோரிக்கைகளைக் கை விடுவதாக அறிவித்துள்ள தலாய்லாமா, சீனாவுடன் ஐக்கியப்பட்ட சுயாட்சி உரிமை கோருகிறார். அந்த சுயாட்சி என்பது சீன அரசின் தலையீடற்ற ஆட்சியதிகாரம் என்கிறார். அதாவது, நிதி, இராணுவம் முதலானவற்றில் சீன அரசுடன் ஐக்கியப்படும் அதேசமயம், ஆட்சியதிகாரம் தம்மிடமே இருக்க வேண்டும்; அரசு வடிவம் தம்மாலேயே தீர்மானிக்கப்பட வேண்டும் என்கிறார். இதுதவிர, குயின்ஹைய், கன்சு, சிச்சுவான், யுன்னான் மாநிலங்களில் திபெத்தியர்கள் வாழும் பகுதிகளை திபெத் சுயாட்சிப் பிரதேசத்துடன் இணைக்க வேண்டும் என்பது லாமாக்களின் கோரிக்கை. வரலாற்று ரீதியாக, திபெத் மொழி பேசும் இப்பகுதிகள் திபெத்திய ஆட்சியின் கீழ் இருந்ததில்லை என்றும், சீனாவிலுள்ள 50க்கும் மேற்பட்ட சிறிய தேசிய இனங்கள் மொழி அடிப்படையில் தனித்தனி சுயாட்சிப் பிரதேசங்களைக் கோரினால் சீன சமுதாயத்தில் பிளவையும் மோதலையுமே ஏற்படுத்தும் என்றும் சீன அரசு இதனை ஏற்க மறுக்கிறது.
இவ்விரு தரப்புக்குமிடையே நிலவும் அதிகாரத்துக்கான இந்த தகராறு, அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களுக்கும் சீன முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்குமிடையிலான உறவைப் பொருத்து பேச்சுவார்த்தைகள் மூலம் சுமுகமாகத் தீர்க்கப்படலாம்; அல்லது பகை நிலைக்கும் செல்லலாம். இதிலே எந்தத் தரப்பு வெற்றி பெற்றாலும், அது ஏகாதிபத்திய உலகக் கட்டமைவைப் பலவீனப்படுத்தப் போவதில்லை; மாறாக, பலப்படுத்துவதாகவே உள்ளது.
எதிர்ப்புரட்சி பிற்போக்குக் கும்பலின் தலைவரான தலாய்லாமாவின் கைக்கூலித்தனத்திற்காக, ஏகாதிபத்திய உலகம் அவருக்குச் சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கி கொண்டாடிய பின்னரும், அவரை வலிந்து துதிபாடி ஆதரிக்கிறார், தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சியின் செயலரான திருவாளர் பெ.மணியரசன். ஏகாதிபத்தியங்களின் கைக்கூலியாகச் செயல்பட்டாலும், ""விடுதலை கோருவோருக்கு விடுதலை கூடி வர வேண்டும் என்ற நோக்கமிருக்கும்... அந்த லட்சிய வேட்கையை, நேர்மையைக் கொச்சைப்படுத்தக் கூடாது'' என்று கூச்சமின்றி வக்காலத்து வாங்குகிறார். இதே வழியில் அமெரிக்காவுடன் இணக்கம் கண்டு "ஒருவகை' தன்னாட்சியைப் பெற்றுள்ள குர்திஷ் "எடுபிடி சுயாட்சி'யை வரவேற்கிறார். நாளை, இந்திய மேலாதிக்கவாதிகளுடன் இணக்கம் கண்டு துரோகிகள் தலைமையில் ஈழத்தில் "ஒருவகை' தன்னாட்சி மலர்ந்தாலும், அதையும் மணியரசன் போன்ற பிழைப்புவாதிகள் ஆதரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.எங்கேயாவது, யாராவது தேசிய இன உரிமை என்ற முகமூடியுடன் கிளம்பிவிட்டால் போதும், உடனே அதை ஆதரிக்க வேண்டும் என்பதுதான் இத்தகைய இனவாத பிழைப்புவாதிகளின் கொள்கையாகி விட்டது. போதாக்குறைக்கு, இப்பிழைப்புவாதத்தையே மார்க்சியலெனினியம் என்று கூறி ஏய்க்கவும் இவர்கள் கிளம்பியுள்ளனர். ஆனால், இதற்கும் மார்க்சிய லெனினியத்துக்கும் ஒட்டுமில்லை, உறவுமில்லை.
""... ஒவ்வொரு தேச விடுதலை இயக்கத்தையும், எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் ஒவ்வொரு குறிப்பிட்ட வழக்காற்றிலும், பாட்டாளி வர்க்கம் ஆதரித்தே தீரவேண்டும் என்று இதற்குப் பொருளல்ல. ஏகாதிபத்தியத்தைப் பலவீனப்படுத்துவதாக இருக்கக்கூடிய, தூக்கியெறிவதாக இருக்கக் கூடிய தேசவிடுதலை இயக்கங்களை தவறாமல் ஆதரிக்க வேண்டும் என்பதே இதன் பொருள். குறிப்பிட்ட சில ஒடுக்கப்பட்ட நாடுகளில் நடக்கும் தேசவிடுதலை இயக்கங்கள், பாட்டாளி வர்க்க இயக்க வளர்ச்சியின் நலன்களுடன் மோதுபவையாக உள்ள நிகழ்வுகள் எழக்கூடும். அத்தகைய சந்தர்ப்பங்களில், அவற்றுக்கு ஆதரவு தருவது என்ற பிரச்சினைக்கு அறவே இடமில்லை''என்கிறார் தோழர் ஸ்டாலின். (பார்க்க: ""லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள்'' என்ற நூல்)
இதுதான் தேசிய இன விடுதலை குறித்த மார்க்சியலெனினியக் கோட்பாடு. மணியரசன் முன்வைப்பது மார்க்சியலெனினியம் அல்ல, மார்க்சியத்தைத் திரித்துப் புரட்டி ஏய்க்கும் அயோக்கியத்தனம்!
· பாலன்
Monday, May 12, 2008
'ஜனநாயக" ரவுடிகள் வன்முறை மூலம் வென்ற தேர்தல்
மக்கள் தாமாக தெரிவு செய்த தேர்தலாம்! இதில் வென்ற பிள்னையான் கதை பிள்ளையார் கதை போன்றது. அதிகப்படியான விருப்பு வாக்கால் மக்கள் கிழக்கு 'விடிவெள்ளி"யை தெரிவு செய்துள்ளனராம்! வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிரான, ஏன் வடக்குக்கு எதிரான கிழக்கு மக்களின் வாக்குகளாம்! இதுதானாம் தேர்தல் சொல்லும் செய்தியாம்!
இப்படித் தான் பிள்ளiயான் கதை, எம்முன் வருகின்றது. யார் இந்த பிள்ளையான்? கருணாவின் எடுபிடியாக, கருணாவின் தனிமனித பிளவின் பின் ஓட்டிக்கொண்ட ஒரு லும்பன். கருணா புலியிடமிருந்து தப்பிப்பிழைக்க அரசின் தயவில் தலைமறைவாகிவிட, கருணாவின் முதுகில் குத்தித் தான் அதிகாரத்தைக் கைப்பறியவன். இதற்காக கருணா விசுவாசிகளை கொன்றும், பலரை மிரட்டியும் அடிபணிய வைத்தவன். இவனின் அரசியல் என்ன?
கருணாவின் பின் ஓடி வந்ததற்கு அப்பால், சொந்த அரசியல் கிடையாது. கருணாவை எதிராக நிறுத்திய போதும், எந்த அரசியலும் கிடையாது. கருணாவை தொலைத்துக் கட்ட, பேரினவாதத்தின் காலை நக்கிய தகுதியைத் தவிர, வேறு எதுவும் கிடையாது.
ரவுடியாக, குண்டனாக பேரினவாதத்துக்கு சேவை செய்ததால், கிடைத்த அதிகாரம். பேரினவாதம் வழங்கிய பிச்சையில், முதலமைச்சர் கனவுடன், தேர்தல் களத்தில் 'அண்ணனாக" இறக்கப்பட்டவர். வடக்கில் டக்கிளஸ் ஐயா, பேரினவாதத்தை நக்கி வடக்கு அதிகாரத்தைப் பெற்றது போல் தான், இதுவும். இப்படி பிள்ளையான் திடீர் அரசியல் வாதியாக, மக்கள் தாமாகவே முன்வந்து தெரிவு செய்ததாக கூறுவது நகைச்சுவை தான். பிள்ளையானுக்கு பதில், பேரினவாதம் யாரை நிறுத்திருந்தாலும், அவனும் வென்று தான் இருப்பான். அது தனிக் கதை.
கவனம் பிள்ளையான் வாரான்! ரவுடி பின்ளையான் வாரான்! எல்லோரும் எழுந்து நில்லுங்கள்! கைகூப்பி வணங்குங்கள்! கிழக்கு அரச அவைக் கோமாளியாக 'ஜனநாயக" மகுடம் சூட வாரார்! எல்லோரும் அடிபணியுங்கள். இப்படி குண்டர் படைத் தலைவன், பயங்கரவாதத்தை ஒழிக்கும் ஆயுதங்களை, தலைக்கு மேல் சுத்தியபடி கிழக்கு மக்கள் முன் காட்சியளிக்கின்றான்.
இந்த அண்ணன்மார்கள் தமது 'ஜனநாயக"த்தை நிறுவ, எப்படிப்பட்ட வேஷத்தை கட்டியாடினார்கள்? கிழக்கு 'ஜனநாயகம்" பூத்துக் குலுங்க, கிழக்கின் 'விடிவெள்ளிகள்" பாசிசத்தையே, தமது தேர்தல் கூத்தாக அரங்கேற்றினர்.
அங்கிருந்து கசிந்துவரும் செய்திகள், இந்த அண்ணன்களின் ரவுடிசத்தை உலகறிய அம்லமாக்குகின்றது. புலிகளுக்கு சற்றும் குறையாது, தமது சொந்த நடத்தையால் தேர்தலை அமர்க்களமாக்கினர். மக்களின் வாக்குரிமை என்பது மக்களுக்கு கிடையாது. மாறாக இந்த கடையார் கூட்டத்தின் துப்பாக்கி முனையில் அவை மிதிக்கப்பட்டது.
பேரினவாத பாசிட்டுகளும், பதவி வெறிபிடித்த முஸ்லீம் காடையர்களும் ஒன்றுசேர, 'கிழக்கு விடிவெள்ளிகள்" நடத்திய தேர்தல் நாடகம், புலிப் பாசிசத்தை மிஞ்சியது. புலிகள் இவ்வளவு காலமும் தனித்து நடத்தியதை, கூட்டாக எப்படி செய்வது என்பதை 'கிழக்கு விடிவெள்ளிகள்" நடத்திக் காட்டினர். வேடிக்கை என்னவென்றால், அரசுடன் கூடி வடக்கிலும் கிழக்கிலும் இயங்கும் கூலிக் கும்பல் கிழக்கில் தம்முடனில்லை என்பதற்காக, அவர்களுக்கு எதிராக 'விடிவெள்ளிகள்" நடத்திய காடைத்தனம் அந்த பாசிசத்தின் கோரத்தை தெளிவாக எடுத்துக் காட்டியது.
கிழக்கு மக்களை நடைப்பிணமாக்கி விட்டு, அவர்களை மீட்கப்போவதாக கூறும் காடையர் கூட்டம், மக்கள் மேல் சவாரி விட்டனர். தமக்குத் தாமே மாலைகளை அணிவித்துக் கொண்டு, தம்மைத்தாமே மக்களின் பெயரில் 'ஜனநாயகத்தின்" பெயரில் வெல்ல வைத்தனர்.
ரவுடிசத்தை மறைக்க, மாலையும், ரையும், கோட்டும் போட்டு உலகறிய இரட்டை வேஷம் போட்டனர். காடைத்தனத்தையும் பாசிசத்தையும் மூடிமறைக்க 'ஜனநாயகத்தை" வரிக்குவரி உச்சரித்தனர். தமக்கு எதிராக எழும் குற்றச்சாட்டை மறுக்க தமிழ்செல்வனின் பல்லுப் போல், 'ஜனநாயகம்" பேசும் 'ஜனநாயக" வள்ளல்கள்.
கிழக்கு மக்கள் மேலான 'கிழக்கு விடிவெள்ளிகள்" தமது பாசிச எடுபிடி வன்முறையை மூடிமறைக்க, அதை 'ஜனநாயகமாக" விளக்க, பாரிசில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கிழக்கு அரசியல் ஆலோசகர். பாலசிங்கம் தோற்றுப் போகுமளவுக்கு 'ஜனநாயகம்" பற்றிய, பாசிச வழிகாட்டல்கள்.
புலியிலிருந்து பிரிந்தவர்களோ, தாம் வெறும் ஆயுதம் ஏந்திய குண்டர்கள் தான் என்பதை மக்கள் முன் நிறுவினர். குண்டர்களுக்கு பயந்து மக்கள் அடங்கி ஒடுங்கி நிற்பது இயல்பு. முன்பு புலிகள், இன்று பேரினவாத குண்டர்கள். இந்த கிழக்கு குண்டர்கள் பேரினவாதத்தின் அடியாட்களாக போட்ட ஆட்டம் தான், இந்த 'ஜனநாயக"த்தின் பெயரிலான தேர்தல்.
பி.இரயாகரன்
11.05.2008
Sunday, May 11, 2008
நேபாளம்: வீழ்ந்தது மன்னராட்சி! மலர்கிறது மக்களாட்சி!
நேபாள நாட்டில் முன்னேறி வரும் புதிய ஜனநாயகப் புரட்சியின் முதற்கட்டமாக அந்நாட்டின் மன்னராட்சியை வேறோடு பிடுங்கி எறிவதில் இறுதி வெற்றியை நேபாளக் கம்யூனிச (மாவோயிச)க் கட்சி நெருங்கியிருக்கிறது. இது போர்த் தந்திர முக்கியத்துவம் வாய்ந்த செயல்தந்திர வெற்றியைக் குறிக்கிறது. நேபாளப் புரட்சியின் வெற்றி அந்நாடு மட்டிலான முக்கியத்துவம் கொண்டதாக மட்டும் இருக்காது. உலக அளவிலான வரலாற்று முக்கியத்துவம் கொண்டதாக இருக்கும். அதுமட்டுமல்ல; சித்தாந்த ரீதியிலான முக்கியத்துவம் உடையதாகவும் அமையும்.
சோவியத் ஒன்றியம், சீனா உட்பட முன்னாள் சோசலிச நாடுகளில் பாட்டாளிவர்க்க அரசுகள் வீழ்த்தப்பட்டு மீண்டும் முதலாளித்துவம் மீட்கப்பட்டு விட்டன. சோவியத் சமூக ஏகாதிபத்தியம், அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆகிய இரு மேல்நிலை வல்லரசுகளுக்கிடையிலான உலக மேலாதிக்கப் போட்டியில் சோவியத் சமூக ஏகாதிபத்தியம் முறியடிக்கப்பட்டு, உலகம் முழுவதும் அமெரிக்கத் தலைமையிலான ஒற்றைத் துருவ உலக மேலாதிக்கம் நிறுவப்பட்டுள்ளது. ஏகாதிபத்திய மேலாதிக்க உலகமயமாக்கலின் கீழ் பின்தங்கிய மூன்றாம் உலகநாடுகளில் மறுகாலனியாதிக்கம் நிறுவப்பட்டு வருகிறது. ""கம்யூனிசம் தோற்றுப் போய்விட்டது, (முதலாளிய) ஜனநாயகமே சிறந்த அரசியல் அமைப்புமுறை, சுதந்திரமான சந்தைப் பொருளாதாரமே சிறந்த பொருளாதார அமைப்பு முறை என்று நிரூபிக்கப்பட்டு விட்டது; வேறு விதமாகச் சொன்னால் "சித்தாந்தம் முடிவுக்கு வந்துவிட்டது' அதாவது முதலாளித்துவஏகாதிபத்திய சித்தாந்தம் தவிர வேறு எந்த சித்தாந்தமும் இருக்க முடியாதவாறு எல்லாவற்றுக்கும் சமாதி கட்டி விட்டோம்'' என்று இட்லரின் நாஜி, முசோலியின் பாசிசத்தை விடவும் வக்கிரவெறியோடு ஏகாதிபத்திய மேலாதிக்கவாதிகள் எக்காளமிட்டார்கள்.
உலகெங்கிலும் உள்ள போலி கம்யூனிஸ்டுகள் அனைவரும் ஏகாதிபத்திய மேலாதிக்கவாதிகளின் இந்த ""சித்தாந்தம் முடிவுக்கு வந்துவிட்டது'' என்ற பிரகடனத்தைக் கண்டஞ்சி, பயபீதியில் நடுங்கிப் போய், தமது வாலை பின்னங்கால்களுக்கு இடையே மடித்துக் கொள்ளும் நாய்களைப் போல மார்க்சிய லெனினிய சித்தாந்தப் பசப்புகளையெல்லாம் கைவிட்டனர். ஏகாதிபத்திய எதிர்ப்பு, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் போன்ற வாசகங்களைத் தமது கட்சித் திட்டத்திலிருந்து நீக்கி விட்டனர். ஏகாதிபத்திய தொண்டு நிறுவனங்கள் உலக சமூக மன்றம் என்ற பெயரில் ஒன்றுகூடி முன்வைத்த ""மாற்று உலகம் ஒன்றுண்டு'' எனும் மலட்டுத் தனமான முழக்கத்தை அவர்களின் நிழலின் கீழ் நின்று கொண்டு தாமும் அதையே ஒப்பாரிப் பாடலாக ஒலித்தனர்.
இவ்வாறான பாதகமான சூழலில், உலகப் பாட்டாளி வர்க்க இயக்கத்துக்கு எதிரான தாக்குதல் செயல்தந்திரத்தை ஏகாதிபத்திய மேலாதிக்க சக்திகள் தொடுக்கும் சமயத்தில், கடந்த பத்தாண்டுகளாக ""கம்யூனிசமே வெல்லும்!'' என்ற செம்பதாகையை உயர்த்திப் பிடித்து, நேபாளப் பிற்போக்கு ஆளும் கும்பலுக்கு எதிராக மக்கள் யுத்தப் பாதையில் நேபாள கம்யூனிச (மாவோயிச)க் கட்சியினர் வெற்றிகரமாக முன்னேறிக் காட்டினார்கள். இதன் மூலம் காலனிய, அரைக்காலனிய, அரை நிலப்பிரபுத்துவ நாடுகளில் நீண்டகால மக்கள் யுத்தப் பாதை என்ற மாவோ சிந்தனையின் பொருத்தப்பாட்டையும், ஏற்றத்தாழ்வான வளர்ச்சிப் போக்குக் காரணமாக ஏகாதிபத்திய உலகக் கட்டமைப்பு என்ற சங்கிலியின் பலவீனமான கண்ணியில் புரட்சி வெடிக்கும் என்ற லெனினியக் கோட்பாட்டையும் நிரூபித்துக் காட்டினார்கள்.
பிழைப்புவாதம் மற்றும் திரிபுவாதத்தின் பின்னே ஒளிந்து கொண்டு இனவாதம், மொழிவாதம், மனிதநேயம், சமூகநீதி, முன்பின் நவீனத்துவம் என்று பல வண்ண தொண்டு நிறுவன சீர்திருத்தவாதங்கள் புரிந்தவர்கள் எல்லாம் ""இனி மண்ணுக்கேற்ற கோட்பாடுகள் வகுத்துக் கொண்டு செயல்படவேண்டும்; பாட்டாளி வர்க்கப் புரட்சி மற்றும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ஆகிய மார்க்சியலெனினிய மூலவர்கள் முன்வைத்த மரபுவழி கோட்பாடுகள் எல்லாம் காலாவதியாகி விட்டன'' என்று முடங்கிவிட்ட நிலையில், நேபாள மாவோயிஸ்டுகள் உறுதியுடன் நின்றார்கள்; மார்க்சியலெனினிய மாவோ சிந்தனையின் அனைத்தும் தழுவிய செவ்வியல் கோட்பாடுகள் மற்றும் போதனைகளின் இன்றைய புரட்சிக்கான பொருத்தப்பாட்டை நிரூபித்துக் காட்டினார்கள்.
நேபாள அரசியல் நிர்ணயசபைக்கான நடந்து முடிந்த தேர்தலில் நேபாள மாவோயிஸ்டு கட்சி அடைந்துள்ள வெற்றி, அதற்கு முன்பு அதன் சண்டை நிறுத்தம் மற்றும் இடைக்கால அரசில் பங்கேற்பு ஆகியவற்றை மட்டும் மேலோட்டமாகப் பார்க்கும் சில போலி புரட்சியாளர்கள், போலி முற்போக்குகள், போலி ஜனநாயக அரசியல் அறிஞர்கள் யானையைத் தடவிப் பார்த்த குருடர்களைப் போல பிதற்றுகிறார்கள்.
""நேபாள மாவோயிஸ்டுகள் பத்தாண்டுகளாக மக்கள் யுத்தப் பாதையில் ஆயுதப் போராட்டத்தை நடத்தி, பல மாவட்டங்களில் மக்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தபோதும், சண்டை நிறுத்தத்தை அறிவித்து, ஆயுதங்களைப் பூட்டி வைக்கவும் புரட்சிப் படைகளை முகாம்களில் அடைத்து வைக்கவும் ஒப்புக் கொண்டு, தேர்தல்களில் பங்கேற்பது சமரசசரணடைவுப் பாதைக்குப் போவதையே குறிக்கும்'' என்கிறார்கள், இந்திய மாவோயிஸ்டுகள் உட்பட "இடது' சந்தர்ப்பவாதிகள். ""ஆயுதப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி மக்கள் ஜனநாயக அரசமைப்பை நிறுவுவதற்குப் பதிலாக, ஏகாதிபத்திய ஆதரவு முதலாளித்துவக் கட்சியான நேபாளக் காங்கிரசு மற்றும் திரிபுவாதக் கம்யூனிஸ்டுகளுடன் கூட்டணி அமைத்து இடைக்கால அரசிலும் அரசியல் நிர்ணய சபைத் தேர்தல்களிலும் பங்கேற்பது வலது சந்தர்ப்பவாதச் சரிவாகும்'' என்றும் சாடுகிறார்கள்.
நேபாளத்தின் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு பருண்மையான அரசியல் நிலைமைகள், அரசியல் மற்றும் ஆயுதப் போராட்டங்களுக்கு இடையிலான உறவு, புரட்சியில் பாட்டாளி வர்க்கத் தலைமை கடைப்பிடிக்க வேண்டிய போர்த்தந்திரம் மற்றும் செயல்தந்திரக் கோட்பாடுகளுக்கான மார்க்சியலெனினிய வழிகாட்டும் நெறிமுறைகள் ஆகியவை பற்றிய தமது ஒட்டாண்டித்தனத்தைத் தான் மேற்கண்ட விமர்சனத்தின் மூலம் "இடது' சந்தர்ப்பவாதிகள் வெளிப்படுத்துகிறார்கள். புரட்சியின் முன்னேற்றத்தை ஆயுதபலம், படைபலத்தை மட்டும் கொண்டு எடைபோடுவதும், இராணுவப் பாதையில் மட்டும் வழிநடத்துவதும் எல்லாத் தருணங்களிலும் அரசியல் பலத்தையும், அரசியல் போராட்டங்களையும் புறக்கணிப்பதும் மார்க்சியலெனினிய நடைமுறையாக இருக்க முடியாது. அதுவும் எவ்வித அடிப்படையும் காரணமுமின்றி ஆட்சியாளர்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை மற்றும் சண்டை நிறுத்தம் என்று ஒரு முறையல்ல இரண்டுமுறை போனவர்கள் இவ்வாறு வறட்டுவாதம் புரிவது வேடிக்கையாக உள்ளது.
உலக மேலாதிக்கத்தை நிறுவியுள்ள அமெரிக்க ஏகாதிபத்தியம், இந்திய பிராந்திய துணை வல்லரசு மற்றும் இந்திய இந்துத்துவ பாசிஸ்டுகள் உட்பட உலகப் பிற்போக்கு சக்திகள் அனைத்தும் ஒன்றுதிரண்டு தாங்கிப் பிடித்தும்கூட, நேபாள பாசிச மன்னராட்சி நீடித்திருக்க முடியாமல் வேரறுந்து வீழும் தருணம் வந்துவிட்டது; அதை வேரோடு பிடுங்கி எறிவதற்கான அகநிலை, புறநிலைக் கூறுகள் ஒன்றுதிரண்டு விட்டன; நேபாளப் புரட்சியின் மையம் கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்கு மாறிவிட்டது. மன்னராட்சிக்கு எதிரான மக்கள் விடுதலை படையின் கிராமப்புற ஆயுதந்தாங்கிய போராட்டம் என்பதிலிருந்து, நாடு தழுவிய மக்கள் பேரெழுச்சி என்ற அரசியல் போராட்டம் வெடிப்பதற்கான காலம் கணிந்து விட்டது. தக்க தருணத்தில் பொருத்தமான அரசியல் முழக்கத்தை முன்வைத்து, மக்கள் எழுச்சிக்குத் தலைமை தாங்கத் தவறுவதுதான் புரட்சிக்குத் துரோகமிழைக்கும் "வலது' சந்தர்ப்பவாதச் சமரச சரிவாக இருந்திருக்கும். இதையெல்லாம் மார்க்சியலெனினிய விவேகத்துடன் மிகச் சரியாக மதிப்பீடு செய்து, செயல்பட்டது, நேபாள மாவோயிசக் கட்சி.
""பாட்டாளி வர்க்கம்' எதேச்சதிகார ஆட்சியின் எதிர்ப்பை வன்முறையைப் பயன்படுத்தி ஒடுக்கும் பொருட்டும், முதலாளிய ஊசலாட்டத்தைச் செயலிழக்கச் செய்து முடக்கும் பொருட்டும் விவசாய மக்கள்திரளுடன் கூட்டுச் சேர்ந்து ஜனநாயகப் புரட்சியை முழுமையாகவும் இறுதிவரையும் நிறைவேற்ற வேண்டும். முதலாளிய எதிர்ப்பை வன்முறையைப் பயன்படுத்தியும், விவசாயிகள் மற்றும் குட்டி முதலாளிகளின் ஊசலாட்டத்தை செயலிழக்கச் செய்து முடக்கவும் பாட்டாளி வர்க்கம் மக்கள்திரளின் அரைப்பாட்டாளிப் பிரிவினருடன் கூட்டுச் சேர்ந்து சோசலிசப் பரட்சியை நிறைவேற்ற வேண்டும்'' என்று 1905ஆம் ஆண்டே லெனின் போதித்தார். இந்த மார்க்சியலெனினிய அரசியல் போர்த்தந்திர அணுகுமுறையும் கோட்பாடும்தான் நேபாளத்தில் முன்னேறிவரும் புதிய ஜனநாயகப் புரட்சியில் நேபாள மாவோயிச கட்சியால் ஆக்கப்பூர்வமான முறையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
நேபாள முதலாளிய வர்க்கம், நேபாள முடியாட்சியை வேரோடு பிடுங்கி எறியும் ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்பதில் எப்போதுமே உறுதி காட்டியதில்லை. ஓருடல் இருதலையென்று தன்னோடு ஒட்டியிருக்க வேண்டியதுதான் என்கிற முறையில்தான் முடியாட்சி என்று கருதியே வந்திருக்கிறது. முடியாட்சிக்கு முடிவுகட்டி, ஒரு அரசியல் சட்ட நிர்ணயசபை மூலம் மக்களின் ஜனநாயக குடியாட்சியை நிறுவுவதற்கான மக்கள் எழுச்சி இயக்கம் வெடிக்கும் போதெல்லாம், நேபாள காங்கிரசு தலைமையிலான நேபாள முதலாளிய வர்க்கம் துரோகமிழைத்து முடியாட்சியுடன் சமரசம் செய்து கொண்டு அரசியல் சட்ட அமைப்பின் படியான மன்னராட்சியை நிறுவுவதற்குத்தான் எத்தணித்தது. முதலாளிய ஜனநாயகத்துக்கான கோரிக்கையைக்கூட கைவிட்டு, மன்னராலும் பழைய பிரபுத்துவத்தாலும் திணிக்கப்பட்ட அரசியல் கட்சிகளற்ற பஞ்சாயத்து ஆட்சிமுறை போன்ற அதிகாரமில்லாத அரசியல் சட்ட அமைப்பை ஏற்றுக் கொண்டது. பின்னர், மன்னராலேயே பெயரளவுக்கான அந்த ஆட்சி அமைப்பும் தூக்கியெறிப்பட்டு எதேச்சதிகார ஆட்சியே பல ஆண்டுகள் நீடித்தது. 1990களில் நடந்த மக்கள் எழுச்சி மூலம் பலகட்சி நாடாளுமன்றம் நிறுவப்பட்டு, பின்னர் அதுவும் கலைக்கப்பட்டது. இறுதியாக, 2000ஆம் ஆண்டு அரண்மனை மன்னர் குடும்பப் படுகொலைகளைகளுக்குப் பின், ஞானேந்திராவின் பாசிச மன்னராட்சி நிறுவப்பட்டது.
மன்னராட்சிக்கு எதிராக நீண்டகால மக்கள் யுத்தத்தை நடத்துவது, மாபெரும் மக்கள் எழுச்சியைக் கட்டியமைப்பது என்ற இருவேறு அணுகுமுறைகளைக் கொண்டிருந்த புரட்சிகர மார்க்சியலெனினிய இயக்கம், நேபாள மாவோயிசக் கட்சி மற்றும் நேபாளக் கம்யூனிச கட்சி (ஐக்கிய மையம்) ஆகிய இரண்டு பிரிவுகளாக இயங்கி வந்தது. மன்னராட்சிக்கு எதிராக 2006 ஏப்ரலில் மக்கள் எழுச்சி வெடித்தபோது இவையிரண்டும் கூட்டுச் சேர்ந்து அரசியல் நிர்ணய சபை மற்றும் மக்கள் ஜனநாயக குடியரசு முழக்கத்தை முன்வைத்து தலைமையேற்றன. இவ்விரு பிரிவினரும் முறைப்படி ஐக்கியப்பட்டு 2008 அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலில் வெற்றிப் பெற்றுள்ளனர். எல்லைக்கப்பால் இருந்து சமூக விரோதபாசிசக் கூலிப் படையை ஏவி, இனவெறியைத் தூண்டி நேபாளப் புரட்சியை சீர்குலைக்கும் மன்னராட்சியை உயிர்ப்பிக்கும் ஏகாதிபத்திய, இந்திய விரிவாக்க இந்துத்துவ சக்திகளின் சதிகளை முறியடித்தனர்.
முதலாளித்துவ மன்னராட்சி என்பதிலிருந்து முதலாளித்துவ ஜனநாயக ஆட்சியை ஏற்கும்படி நேபாள காங்கிரசு தலைமையிலான நேபாள முதலாளிகள் நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். இதுவரை நேபாள வரலாறு காணாதவாறு அந்நாட்டு உழைக்கும் மக்கள், தேசிய இனச் சிறுபான்மையினர், பழங்குடியின மக்கள் அனைவரும் வாக்குரிமை பெறுமாறு அரசியல் நிர்ணயசபை மற்றும் மக்கள் ஜனநாயகக் குடியரசு முழக்கங்களை முன்வைத்து மக்கள்திரள் இயக்கங்களை கட்டியமைத்ததோடு, நேபாளப் புரட்சியில் ஊசலாட்ட சமரச சரணடைவு சக்திகளை தனிமைப்படுத்தி முடக்குவதிலும், அரசியல் நிர்ணய சபையில் மிகப் பெரிய அளவில் நிலைநாட்டிக் கொள்வதிலும், நோபள மாவோயிஸ்ட் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
ஆனால், அதேசமயம் உள்ளேயும் வெளியேயும் இருந்துவரும் மேலும் பல சவால்களை எதிர்கொண்டு முறியடித்து நேபாள புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுக்க வேண்டியுள்ளது. இந்தியா, சீனா ஆகிய இரு துணை வல்லரசு நாடுகளுக்கிடையே பூகோள ரீதியில் சிக்கியுள்ள சின்னஞ்சிறு நாடு நேபாளம். உலக நாடுகளை உருட்டி மிரட்டியும் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் தேவைப்படும்போதெல்லாம் பல நாடுகள் மீது படையெடுத்து, ஆக்கிரமித்து உலக மேலாதிக்கம் செலுத்தும் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஏற்கெனவே தனது பயங்கரவாதப் பட்டியலில் முத்திரைக் குத்தி சேர்க்கப்பட்டுள்ள நேபாள மாவோயிஸ்டுகளின் பாட்டாளி வர்க்கத் தலைமையிலான புதிய ஜனநாயக அரசு நேபாளத்தில் அமைவதை சகித்துக் கொள்ளாது. அது, பின்தங்கிய பொருளாதார அமைப்பைக் கொண்டுள்ள நேபாளத்திற்கு எதிராக ஏகாதிபத்திய உலகமயமாக்கம் என்ற பொருளாதாரத் தாக்குதலை தொடுப்பதற்கும், அவசியமானால் ஆக்கிரமிப்புப் படைகளை ஏவி தாக்குதல் தொடுப்பதற்கும் எப்போதும் எத்தணித்துக் கொண்டேயிருக்கும்.
நேபாளத்திலும், வீழ்த்தப்படும் பிற்போக்கு மற்றும் போலி கம்யூனிச சக்திகளும் பன்மடங்கு பலத்துடன் திருப்பித் தாக்கி, நேபாளப் புரட்சியை பின்னிழுப்பதற்குத் தன்னாலான முயற்சிகளையெல்லாம் செய்யும்.
இத்தகைய சவால்களை முறியடிப்பதற்கு தகுந்த செயலுத்திகளை வகுத்து புரட்சியை வழிநடத்துவதற்கான மிகப் பெரிய பொறுப்பில் நேபாள மாவோயிசக் கட்சி உள்ளது. அதன் செயலுத்திகளை கொச்சைப்படுத்தி, உலக நாடுகளிலுள்ள புரட்சிகர இயக்கங்களின் இடதுவலது சந்தர்ப்பவாதிகள்கூட சாடக் கூடும். இதற்கு மாறாக, இன்றைய உலகப் புரட்சியின் ஒளிவிளக்காக திகழும் நேபாளப் புரட்சியில் நேபாள மாவோயிசக் கட்சி மேற்கொள்ளும் புதிய முயற்சிகளை மார்க்சியலெனினிய ஒளியில் பரிசீலித்து, அதன் முன்னெடுப்புகளை ஆக்கப்பூர்வமான முறையில் ஆதரிக்க வேண்டியது உலகப் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் கடமையாகும்.
இலங்கை - இந்திய புலியெதிர்ப்பு கைக்கூலிகள் கூட்டிய 'ஜனநாயக" மாநாடு
பாரிசில் 04.05.2008 'ஜனநாயகத்தின்" பெயரில் தேர்ந்தெடுத்த சில சமூகவிரோதிகள் கூடினர். இந்த கூட்டத்துக்கான அழைப்பு முதல் அவர்கள் பேசிக்கொண்ட விடையங்கள், இந்த 'ஜனநாயகத்தை" தெளிவாக அம்பலப்படுத்துகின்றது. யாரெல்லாம் இலங்கை - இந்திய அரசை 'ஜனநாயகத்தின்" பெயரில் நக்குகின்றனரோ, யாரெல்லாம் 'ஜனநாயகத்தின்" பெயரில் ஏகாதிபத்தியத்துக்கு வாலை ஆட்டுகின்றனரோ, அவர்கள் தான் 'ஜனநாயகத்தின்" பெயரில் கூடினர். இப்படி அப்பட்டமாக இலங்கை - இந்திய கைக்கூலிகள் எல்லாம் ஒன்றாக கூடினர்.
இது முந்தைய புலியெதிர்ப்பு கூட்டத்திலும் இருந்து மாறுபட்டது. புலியெதிர்ப்பு பேசும், இலங்கை - இந்திய கைக்கூலிகளை மட்டும் அடிப்படையாக கொண்டு, இந்த 'ஜனநாயக" கூலிகள் கூட்டப்பட்டனர்.
இவர்கள் அங்கு கூடிய நோக்கம் மிகத் தெளிவானது. புலியை ஒழிப்பதாக கூறிக் கொண்டு, பேரினவாத அரசு தமிழ் மக்கள் மேல் நடத்தும் பாசிச வெறியாட்டத்தை 'ஜனநாயகமாக" காட்டுவது தான். இதை தாம் அம்பலப்படாது எப்படி நியாயப்படுத்துவது என்பதையே, இவர்கள் எல்லாம் கூடி ஆராய்ந்தார்கள். அதையே அவர்கள் தமது 'ஜனநாயகத்தின்' பெயரில் வெட்கமானமின்றி பறைசாற்றினர். இவர்களின் 'ஜனநாயகம்" இதைத் தாண்டி, மக்களுக்காக ஒப்புக்கு கூட ஒப்பாரி வைக்கவில்லை.
இந்த புலியெதிர்ப்பு 'ஜனநாயக" கைக்கூலிகளின் 'ஜனநாயக" கூத்துக்கு சிலரை ஏமாற்றி அழைத்தனர். தாம் யார்?, எந்த நோக்கத்துக்காக கூடுகின்றோம்? என்று தமது சொந்த கைக்கூலி அரசியல் வெளிப்படா வண்ணம், சிலரை அழைத்தனர். இப்படி இடம் வலம் தெரியாது அங்குமிங்கும் திரிகின்றவர்களையும், முகம் பார்த்து சிரிக்கின்ற அப்பாவிகளையும், புலியுடன் ஏதோ ஒரு தனிப்பட்ட காரணத்தினால் முரண்பட்டவர்களையும், அரசியல் விலாங்குகளையும் ஏமாற்றி, தமது மக்கள் விரோத கூட்டத்துக்கு அழைத்தனர்.
சமூகத்தில் மாற்றுக் கருத்துள்ளவர்களை, மக்கள் அரசியலை வைக்கின்றவர்களை, இலங்கை இந்திய அரசை எதிர்க்கின்றவர்களை, மக்களை நேசிப்பவர்களை, இவர்கள் தமது புலியெதிர்ப்பு அரசு ஆதரவு 'ஜனநாயக" கைக்கூலி கூத்துக்கு அழைக்கவில்லை. இப்படி கூட்டத்தின் நோக்கம் தெளிவாகவே மக்கள் விரோத அடிவருடிகளால் கூட்டப்பட்டது.
இவர்கள் தமது இந்த 'ஜனநாயகத்தின்" பெயரில், எந்த வெளி ஆட்சேபனையுமின்றி மிகப் பொருத்தமாக கூறுவதைப் பாருங்கள். 'இரு தசாப்தங்களிற்கு பின் அரசியல்கட்சிகள் இணைந்து பிரான்சில் இவ்வாறான கருத்தரங்கை நிகழ்த்துவது வரலாற்று நிகழ்வு என்றும், இந்த நிலமை உருவாகுவதற்கு அர்ப்பணிப்புடன் உழைத்த தோழர்கள் நண்பர்கள் குறிப்பாக சமகாலத்தில் எம்மோடு அரசியல் இலக்கிய பணியாற்றி மறைந்த தோழர்கள் சபாலிங்கம், உமாகாந்தன், கலைச்செல்வன், புஸ்பராஜா பராமாஸ்ரர் போன்றோரை"க் குறிப்பிடுகின்றனர். புலம்பெயர் அரசியல் களத்தில் பச்சோந்திகள் கூடியிருக்க, 'சபாலிங்கம், உமாகாந்தன், கலைச்செல்வன், புஸ்பராஜா பராமாஸ்ரர்" போன்றோரை இலங்கை இந்திய அரசியல் ஏஜண்டுகளாக, இலங்கை-இந்திய கைக் கூலிகள் கூறுகின்றனர். இது எத்தரப்பாலும் மறுதலிக்கப்படவில்லை.
'சபாலிங்கம், உமாகாந்தன், கலைச்செல்வன், புஸ்பராஜா பராமாஸ்ரர்" அரசியலுக்கு உரிமை கோருபவர்கள் எல்லாம், சந்தர்ப்பவாத பச்சோந்திகள் என்பதையே, இந்நிகழ்வும் மறுபடியும் நிறுவுகின்றது.
இலங்கை - இந்திய கைக்கூலிகள் தமிழ் மக்களின் பெயரில் ஜனநாயகம், என்று எத்தனை வித்தைகள் காட்டினாலும், இவர்களால் மக்களை ஏமாற்றாமல் ஒரு அடியைத்தன்னும் வைக்க முடியாது. இது இந்த சந்திப்புகளிலேயே தொடங்குகின்றது. தெரிவு செய்யப்பட்ட அழைப்பும், தெரிவின் எல்லையும், மக்களின் ஜனநாயகத்துக்கே விரோதமானது. 'சபாலிங்கம், உமாகாந்தன், கலைச்செல்வன், புஸ்பராஜா, பராமாஸ்ரர்" நம்பிய, அவர்களின் 'ஜனநாயக" நடைமுறைக்கும் மாறானது. ஆனால் அவர்களின் பெயரிலும், இலங்கை-இந்திய புலியெதிர்ப்புக் கூலிக்கும்பல் நக்குகின்றது.
இதன் பின்னணியில் இருந்த பலர் தேர்ந்த சமூக விரோதிகள். முன்னாள் புலியல்லாத இயக்கத்தைச் சேர்ந்த கொலைகாரகள். அதை இன்றும் ஆதரித்து நின்றவர்கள். இன்றும் அதை செய்பவர்களை ஆதரிப்பவர்கள். இன்றும் அன்றைய-இன்றைய கொலைகார இயக்கத்தை ஆதரிப்பவர்கள், தமது கடந்த கால கொலைக்காக மனம் வருந்தாத வக்கிரமான உணர்வு கொண்டவர்கள், அதை அரசியல் ரீதியாக சரியென்று கருதி இன்று அதை அரசியல் ரீதியாக ஆதரிப்பவர்கள். இப்படி மொத்தத்தில் அந்த இயக்கங்களின் மக்கள் விரோத அரசியலை ஆதாரிக்கின்ற சமூக விரோதிகள்.
இவர்களின் அரசியல் என்பது, இலங்கை - இந்திய அரசின் ஊடாக நக்கிபிழைப்பது தான். மக்களை புலிகளிடமிருந்து மீட்பதற்கான பாதை, இது மட்டும் தான் என்கின்றனர். தம்மைப் போல், மக்களும் இலங்கை - இந்திய அரசின் கூலிக் கும்பலாக மாற வேண்டும் என்கின்றனர். இவர்கள் கோரும் வக்கிரமான புலியெதிர்ப்பு 'ஜனநாயகம்" இதுதான். இதைத் தாண்டி எதுவுமல்ல.
பி.இரயாகரன்
10.05.2008
Friday, May 9, 2008
புலிப் பிணத்தை உண்ணும், புதியரக அரசியல் உண்ணிகள்
புலித்தேசியமோ தனது சொந்த புதைகுழியை தானே வெட்டிவைத்துக் கொண்டு, தானே வலிந்து தேர்ந்தெடுத்த ஒரு பாதையில் மடிகின்றது. இந்த புலியை உறிஞ்சிக் கொண்டு வாழ்ந்த பிழைப்புவாத உண்ணிக் கூட்டமோ, புலி பிணமாக முன்னமே மெதுவாக களன்று தப்பித்தோடுகின்றது. மறுபக்கத்திலோ புதியரக உண்ணிகள், பழைய உண்ணிகள் விட்டுச்செல்லும் வெற்றிடத்தில் மொய்க்கத் தொடங்கியுள்ளது.
இந்த புதியரக உண்ணிகள் யார்? இவர்கள் எப்படிப்பட்டவர்கள்? என்பதை நாம் தெரிந்து கொள்ள முன்னம், புலிகளோ எப்படிப்பட்ட ஒரு அமைப்பாக இழிந்து கிடந்து என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.
தமிழ் தேசம், தமிழ் தேசியம் என்று பேசிய புலிகள், புலித் தேசியத்தையே தமிழ் தேசியமாக காட்டியது. அது தனிமனிதனை முதன்மைப்படுத்தி, தேசியத்தையே குழுவாதமாகியது. இதன் மூலம் மொத்த தமிழ்மக்களின் தேசியத்தை முழுமையாக நிராகரித்தது. மாறாக புலித்தேசியத்தை தேசியமாக காட்டியது. இந்த புலித் தேசியத்தின் பெயரில், போராட்டம் தியாகம் என்பன கட்டமைக்கப்பட்டது. சுயசிந்தனையும், மனித அறிவும் மழுங்கடிக்கப்பட்ட புலித் தேசியத்தில், இளைஞர் இளைஞிகள் புலித்தேசியத்துக்காக பலியிடப்பட்டனர்.
இருந்த போதும், இதனால் புலிகள் தம்மைத் தாம் நியாயப்படுத்திக் கொள்ள முடியவில்லை. தமிழ் தேசியத்துக்கும், புலித் தேசியத்துக்கும் இடையிலான இடைவெளியையும் பிளவையும் மூடிமறைக்க, தமிழ் மக்கள் மேலான ஒடுக்குமுறையையே அவர்கள் தேர்ந்தெடுத்தனர். அது புலிப் பாசிசமாக, மாபியாத்தனமாக வளர்ச்சியுற்றது.
இப்படித் புலித்தேசியம் வீங்கி வெம்பியதுடன், தானாக புளுத்துப் போகின்றது. இந்த புலித்தேசியத்தில் நேர்மை, அறிவு, உண்மை, தியாகம், மனித நேயம், மனிதப் பண்பு, அறிவு ஒழுக்கம் என்று எதையும், யாரும் காண முடியாது. மாறாக பொய்மையும் புரட்டும், கொடுமையும் கொடூரமும், துரோகமும் காட்டிக்கொடுப்பும், மனித விரோதமும் பண்பற்ற நடத்தைகளும், அறிவு இழந்த ஒழுக்கமும் காட்டுமிராண்டித் தனமும், பிற்போக்கான அடிமைத்தனம் கொண்ட பழமைவாதமுமே, புலித்தேசியத்தின் விழுமியமாகியது.
இதற்கு ஏற்ற பிழைப்புவாதம், சந்தர்ப்பவாதம் தானாக வந்து வலிந்து ஓட்டிக்கொண்டு, தமிழ் இனத்தின் இரத்தத்தையே உறிஞ்சி வாழத் தொடங்கியது. தமிழினமோ மொத்தத்தில் அழிந்து கொண்டிருந்தது. அது தனது சமூக விழுமியங்களை எல்லாம் இழந்து, பட்டுப்போனது.
பிழைப்புவாதம், சந்தர்ப்பவாதம் மூலம் தனது சொந்தப் பிழைப்பை நடத்தவே, தனக்கு ஏற்ப புலி அரசியலை குதர்க்கமாக நியாயப்படுத்தியது. சிங்களப் பேரினவாதத்தின் இராணுவத்தை கொல்லும் எண்ணிக்கைக்கு ஏற்ப, புலி அரசியலை அவர்கள் விளங்கி விளக்கினர். கொன்ற இராணுவத்தின் எண்ணிக்கை புலித்தேசியமாக, அதை குளிர்மைப்படுத்தி கொழுவேற்றியபடி தம் பங்குக்கு குழிபறித்தனர்.
இப்படி வட்டிக்கு பணம் கொடுப்பவன், புலிப் பணத்தைக் கொண்டு தனது பணச் சுற்றை (றோல்) செய்பவன், வர்த்தகர்கள், அதிகாரத்துக்கு ஆசைப்பட்டவர்கள், அடக்கியாள விரும்பியவர்கள், புகழுக்கு ஆசைப்பட்டவர்கள், சட்டவிரோத தொழில் செய்தவர்கள், உழைத்து வாழ விரும்பாதவர்கள், புலிக்கு பணம் கொடுத்தவர்கள், பணம் கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் என்று ஒரு கூட்டம், புலியை வாழ வைத்து தானும் வாழ்ந்தது. இதற்கான தகுதி என்பது புலிக்கு பணத்தை வாரிவழங்கியே, அந்த இடத்தைப் பெறுகின்றனர். இப்படி பணத்தைக் கொடுத்து வாழும் சமூகத் தகுதி தான், புலியின் அரசியல் அறமாக இருந்தது. இதுவே தமிழ் தேசியமாகிப் போனது. யாரெல்லாம் பணத்தைக் கொடுக்க முடியுமோ, அவர்கள் புலியின் முக்கிய பிரமுகரானார்கள்.
யுத்த முனையில் போராடுகின்ற புலிக்கு வெளியில், புலியை அலங்கரித்து ஆதரித்து நின்ற கூட்டம் இது தான். இது தான் புலியின் கால்களாகி, கைகளாகி, புலியின் ஆண்மையையே செயலிழக்கப் பண்ணியது.
புலிகள் தான் எல்லாம் என்ற நிலையில், எல்லா சமூக விரோதிகளும் புலிக்குள் இருந்தபடி பிழைத்துக்கொள்ளத் தொடங்கினர். இந்த சமூக விரோதிகள், தம்மை கொழுக்கவைத்துக் கொண்டனர். புலியின் பெயரில் நடந்த தியாகத்தை, தனக்கு அமைவாக பயன்படுத்திக்கொண்டு அது தானாக வாழத் தொடங்கியது.
இப்படி வாழ்ந்த கும்பல் தான் இன்று புலியில் இருந்து கழரத் தொடங்குகின்றது. புலிகளின் அழிவுக்குரிய இன்றைய காலகட்டத்தில், இந்த சமூகவிரோதக் கும்பல் புலியை அம்போ என்று, கையை விடுகின்றது.
இலங்கை முதல் புலம்பெயர் நாடுகள் வரை, புலிகளுக்கு எதிரான கடுமையான ஒடுக்குமுறை கையாளப்படுகின்றது. ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டு, தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிழைப்புவாத சந்தர்ப்பவாத கூட்டம், உண்ணி கழருவது போல் கழன்று வருகின்றது. பலர் புலியின் பின் திடீரென்று காணாமல் போகின்றனர். பலர் புலிக்கு எதிராக வேஷம் போட்டுக் கொண்டு, திடீரென்று தூற்றுகின்றனர்.
இப்படி ஒருபுறம் நடக்க, புதிய உண்ணிக் கூட்டம் ஒன்று திடீரென்று பினாமிகளாக வலம் வரத் தொடங்குகின்றது. முன்பு எந்த வாய்ப்பும் கிடைக்காத அறிவுசார் பிழைப்புவாதிகள் தான் இவர்கள். முன்பு பொருள் சார் சமூக விரோதிகளால் புறந்தள்ளப்பட்ட அரசியல் பேசும் புலுடாவாதிகள், இன்று புலிக்கு அரசியல் சாயமடிக்கின்றனர்.
இவர்கள் யார்? முன்னாள் மாற்று இயக்கங்களில் அரசியல் பேசியவர்கள். பெருமளவுக்கு புளட்டில் அரசியல் பேசியவர்கள். அன்று கொலைகார புளட்டுக்கு அரசியல் பேசியது போல, இன்று புலிக்காக அரசியல் பேசுகின்றனர். பொருள் சார்ந்த உண்ணிகள் களறுகின்ற வெற்றிடத்தில், இந்த உண்ணிகள் ஓட்டிக்கொள்கின்றது.
கொலைகார கும்பலுக்கு அன்று அரசியல் சாயமடித்து நியாயப்படுத்திய கும்பல்கள், அவர்களின் அழிவில் அரசியல் வாழ்விழந்தவர்கள். மக்கள், மக்கள் விடுதலை என கூறிக் கொணடவர்கள், மக்களுக்காக என்றும் போராடியது கிடையாது.
மக்களுக்காக என்றும் மக்கள் அரசியலை முன்வைத்தது கிடையாது. மக்களின் அடிப்படை உரிமைக்காக போராடியது கிடையாது. அதிகாரத்தில் உள்ளவர்களுடன் ஓட்டிக்கொண்டு, அதற்கு அரசியல் சாயமடிக்கின்றனர். இதையே அவர்கள் மக்கள் அரசியல் என்று, அரசியல் பேச முனைகின்றனர். பச்சைப் பாசிசத்தையே, மக்கள் விடுதலை எனக் காட்டத் தலைகீழாக முனைகின்றனர். இதே கதைதான், இலங்கை இந்திய அரசின் பின்னுள்ள கும்பலுக்கு ஜனநாயக முகமூடி போட்டு அழகு பார்க்கின்றனர்.
ஆனால் புலிகளில் இவர்கள் பேசும் சாய அரசியலுக்கு இடமில்லை. புலிகளின் நடத்தையால் சாயம் வெளுத்துப் போகின்றது.
புலிகளின் அரசியல் பொறுப்பாளர் நடேசன் அண்மையில் கூறியது போல், 'தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைக்கு அமைவாக எமது மாணவர்கள் அறிவியல்துறையில் வளர வேண்டும்" என்பதற்கு, அமைவாக, இங்கு மக்கள் அரசியலுக்கு இடமில்லை. மக்கள் எல்லாம் தலைவரின் இந்த வரட்டு சிந்தனையைப் பெற்றால், தமிழ் மண்ணே பிணக்காடாகிப் போகும்.
இப்படி இருக்க பிண உண்ணிகள், புலிப் பாசித்தை உச்சிமுகர்ந்து தனக்கு ஏற்ப வாரியிழுக்கின்றது. தாம் உண்ணும் பிணத்தை, உயிருள்ளதாக காட்ட முனைகின்றது. கூலிக்கு மாரடிக்கும் இந்த அரசியல் ஒப்பாரி மூலம், பிணத்தைக் கட்டி வைத்துக்கொண்டு அழுகின்றது. அதுவும் தனித்து நின்று, தனது சொந்த வெறுமையில் அழுகின்றது. இப்படியும் புலித்தேசியம், அரசியல் விபச்சாரிகளால் விபச்சாரம் செய்யப்படுகின்றது.
பி.இரயாகரன்
09.05.2008
Thursday, May 8, 2008
மக்கள் போராட்டம் என்றால் என்ன?
இது தனக்குள்ளான ஒடுக்குமுறைகளை அனுமதிக்காது. அதாவது தனக்குள்ளான முரண்பாடுகளை களையும் போராட்டத்தை நடாத்திக் கொண்டு, எதிரியை தனிமைப்படுத்தி தனது சொந்த விடுதலையை அடையப் போராடுவது தான் மக்கள் போராட்டம்.
இப்படி போராடாத, போராட முனையாத அனைத்துமே மக்கள் விரோதப் போராட்டம் தான். இப்படி குறைந்தபட்சம் மக்கள் போராட்டம் இருக்க, மக்களை பிளவுபடுத்தி அதை அரசியலாக பாதுகாக்கும் மக்களின் எதிரிகள் எல்லாம், தாம் மக்கள் போராட்டம் நடத்துவதாக கூறிக்கொள்கின்றனர்.
தாம் மக்களுக்காக போராடுவதாக கூறிக்கொண்டு தான், ஜோஷ் புஸ் முதல் பின்லாடன் வரை மக்களின் தொண்டைக்குழியையே அறுக்கின்றனர். புலிகளாக இருக்கலாம், புலியெதிர்ப்பாளனாக இருக்கலாம், போலிக் கம்ய+னிஸ்ட்டாக இருக்கலாம், அரசியல் கருத்தற்றவராக கூறிக்கொள்பவராக இருக்கலாம், ஏகாதிபத்திய தன்னார்வ நிறுவனமாக இருக்கலாம், இப்படி பற்பலவிதமானவர்கள் எல்லாம் மக்களின் விரோதிகளாகவே உள்ளனர். ஆனால் இவர்கள் தாம் நடத்துவது, மக்கள் போராட்டம் என்கின்றனர்.
பணத்தை, ஆயுதத்தை, அதிகாரத்தை வைத்துக் கொண்டும், சமூக பிளவுகளை விதைத்துக் கொண்டும் தான், இவர்கள் மக்களின் வாழ்வை அழித்தொழிக்கின்றனர். மக்கள் வாழ்வின் உண்மையை அறிந்து விடாது இருக்கும் வண்ணம், தம்மைச் சுற்றி போலியானதும் கவர்ச்சியானதுமான மலிவான முலாம் மூலம் கவசமிட்டு வைத்துக்கொள்கின்றனர். இதன் மூலம் சிறிதொரு பிரிவின் நலன்களுக்காக, அனைத்தையும் வளைத்துப் போடுகின்றனர்.
இவர்களால் தான் உலகெங்குமுள்ள மக்கள் தம் வாழ்வை இழக்கின்றனர். வெறும் நுகர்வு மந்தையர்களாக, அடிமைகளாக மாற்றப்படுகின்றனர். இவர்களின் கோட்பாடோ, மக்கள் தமக்காக தாமே போராட முடியாது. மாறாக தம்மை மீட்பாளராக, மக்கள் தமது மந்தைக் குணத்துடன் ஏற்க வேண்டும். இதை மீறினால், சாமபேதம் பாராது எதையும் எப்படியும் கையாள்கின்றனர்.
விடுதலைப்புலிகளின் பாசிசமாகட்டும், பிள்ளையானின் கிழக்கு ரவுடித் தனமாகட்டும், தாலிபானின் இஸ்லாமிய கொடூரமான ஆட்சியாகட்டும், இந்தியாவின் போலி கம்யூனிஸ்டுக்களின் (உதாரணம் நந்திக்கிராம்) வக்கிரமாகட்டும், ஜே.வி.பியின் பச்சையான இனவாதமாகட்டும், இப்படி மக்களின் பெயரில் இவர்கள் செய்யும் மக்கள் விரோத செயல்களையே மக்களின் விடுதலை என்கின்றனர்.
மக்கள் போராட்டம் என்பது, மக்கள் தமது சொந்த விடுதலையை அடைதல் தான். இதை மறுப்பதோ, மிகமோசமான அயோகியத்தனமாகும். மக்களின் விடுதலை என்பது, தம் மீதான அடக்குமுறைகளை களைதல் தான். அது சமூகத்தில் எந்த விதத்தில் எப்படி வந்தாலும், அது எந்த முரண்பாடாக இருந்தாலும், அதைக் களைந்து மக்கள் தமது விடுதலையை அடைதல் தான் மக்கள் போராட்டம். இதுதான் மக்களின் விடுதலையை அடிப்படையாக கொண்ட, விடுதலைப் போராட்டம். இது சக மனிதனை ஒடுக்காது. சக மனிதன் மீதான ஒடுக்குமுறைகளைக் களைய தானே முன்னின்று போராடும்.
இப்படி மக்கள் போராட்டம் என்பது, மக்கள் தம் மீதான ஒடுக்குமுறைகளில் இருந்து விடுதலையை அடைவதற்காக போராடுவதை அடிப்படையாக கொண்டது. இந்த மக்கள் போராட்டத்தை யாரும் குத்தகைக்கு எடுக்க முடியாது. தாம் விடுதலை பெற்றுத் தருவதாக, ஒரு குழு கூற முடியாது. மாறாக அந்த மக்கள், தமது சொந்த விடுதலைக்காக போராடுவது தான் மக்கள் போராட்டம். இப்படி மக்கள் போராட்டம் என்பது, மக்கள் தாம் தெரிவு செய்கின்ற எந்த வழியிலாவது தமது சொந்த விடுதலையை அடைதல் தான்.
தலைமைகள் என்பது, மக்கள் தமது போராட்டத்தின் தேவைக்கு ஏற்ப, உருவாக்கும் அமைப்பு வடிவங்கள் தான். மக்களின் சொந்த நலனுக்கு வெளியில், மக்கள் தலைமைகள் இருக்க முடியாது. இது மக்கள் போராட்டத்தில் அடிப்படையான அரசியல் உள்ளடக்கமாகும். இப்படித்தான் மக்கள் தலைமைகள் உருவாகின்றது. சமூகம் எதிர் கொள்ளும் முரண்பாடுளை தீர்க்கின்ற போராட்டத்தில் தான், உண்மையான மக்கள் தலைமைகள் உருவாகின்றது.
சமூகத்துக்கு எதிரான முரண்பாடுகள் எவை?
மனித இனம், தனது சொந்த விடுதலையை நாடி நிற்கின்றது. இதை கோட்பாட்டு ரீதியாகவே, இந்த உலக ஒழுங்கு மறுக்கின்றது. மக்கள் தனது சொந்த விடுதலையை நாடுகின்றது என்றால், தனக்கு எதிரான அனைத்து முரண்பாட்டையும் களையக் கோருகின்றது. இதுவல்லாத விடுதலைப் போராட்டம் அல்லது தீர்வுகள் அல்லது மனித வாழ்வு என்பது, அந்த மக்களை ஓடுக்குவது தான்.
வர்க்கப் போராட்டமாக இருக்கலாம், தேசிய போராட்டமாக இருக்கலாம், சாதிப் போராட்டமாக இருக்கலாம், பெண்ணிய போராட்டமாக இருக்கலாம், இவை எதுவாக இருந்தாலும், இதில் ஒன்று சமூகத்துக்கும் சரி தனிமனிதனுக்கும் சரி முதன்மை முரண்பாடாக அமைவது எதார்த்தம். இந்த எதார்த்தம் என்பது இதில் இருந்து விடுவிக்கும் போராட்டமாக மாறும் போது, அது தன்னைச் சுற்றியுள்ள மக்களின் மொத்த விடுதலையை பற்றி கவனத்தில் கொள்ளுகின்றது. தனித்து விடுதலை அடைதல் சாத்தியமில்லை. இதைக் கவனத்தில் கொள்ளாது போராடினால், அது இயல்பாக மக்களையே ஒடுக்குகின்ற போராட்டமாக சீரழிந்து விடுகின்றது. எதை பிரதான முரண்பாடாக கருதியதோ, அது மக்களிள் விடுதலைக்குரிய ஒன்றாக இருப்பதை மறுக்கத் தொடங்குகின்றது. இதை உலகம் முழுக்க நாம் காணமுடியும்.
தமிழ் தேசியம் எப்படி பாசிசமானது?
தமிழ் தேசியம் தன் மீதான இனவொடுக்குமுறைக்கு எதிராக தேசிய முரண்பாட்டை களைய முற்பட்ட போது, தமிழ் மக்களின் உள்ளான சமூக முரண்பாட்டை களைய மறுத்ததன் மூலம் தான், அது தன்னைப் பாசிசமாக்கிக் கொண்டது. இதை நாம் புலிகள் மீது மட்டும் குறிப்பாக குற்றம்சாட்ட முற்படவில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணி முதல் சகல குழுக்களும் (ஒரு சில சிறு குழுக்களைத் தவிர) சமூக முரண்பாடுளை களைந்து, தமிழ் மக்களை ஐக்கியப்படுத்த மறுத்தன. மாறாக சமூக முரண்பாடுகளைப் பாதுகாத்து, சமூக பிளவுகளை விதைத்து, தமிழ் தேசியத்தையே சுடுகாடாக்கினர். மக்களை ஒருவருக்கு ஒருவர் எதிரியாக்கினர். புலிகளோ இதை பல பத்தாயிரம் சகோதாரப் படுகொலைகள் மூலம் அரங்கேற்றினர்.
தமிழ் தேசியத்தில் மக்களை ஜக்கியப்படுத்துவதற்கு பதில், மக்களைப் பிளந்து, மக்களையே ஈவிரக்கமின்றி கொன்றனர். மக்கள் போராட்டம் என்பதற்கான சகல அடிப்படைகளையும் தகர்த்தனர்.
தமிழ் மக்கள் ஒன்றுபட்டு பேரினவாதத்தை எதிர்த்துப் போராட வேண்டிய மக்கள் போராட்டம், ஒரு குழுவின் நலன்சார்ந்த போராட்டமாக குறுகிப்போனது. மக்கள் மத்தியில் உள்ள சமூக முரண்பாட்டைப் பயன்படுத்தி, குழுவின் குழுப் போராட்டமாக்கியது.
மறுபக்கத்தில் பேரினவாதம் தமிழ் மக்களை முழுவீச்சில் ஒடுக்கியது. ஆனால் தமிழ் மக்களின் மக்கள் போராட்டம், சிங்கள பேரினவாதத்தை எதிர்த்து நிற்கும் ஒரு மக்கள் போராட்டமாக உருவாகவில்லை. ஒரு குழு நலன் சார்ந்த போராட்டமாய் சீரழிந்தும், படிப்படியாக மாபியாத்தன்மை பெற்றும் அது பாசிசமாகியது.
தமிழ் சமூகம் ஒன்றுபட்டு எழுந்து நிற்க வேண்டும் என்றால், தமிழ் சமூகத்தின் உள்ளான தனது சொந்த முரண்பாடுகளை களைந்து இருக்க வேண்டும். இதுதான், ஒன்றுபட்ட மக்கள் தேசியத்தையும், மக்கள் போராட்டத்தையும் உருவாக்கியிருக்கும்.
தமிழ் தேசியத்தின் சொந்தக் குரல் கூட இதுதான். மக்கள் அதைத் தான் விரும்பினர். இதனால் தான் அனைத்து இயக்கமும் இதை தமது தேசிய வேலைத்திட்டத்தில் பெயரளவிலாவது குறித்துக் கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டனர். இப்படி மக்களை தாம் முரண்பாடுகளைக் களைந்து ஒன்றுபடுத்துவதாக காட்டிக் கொண்ட இயக்கங்களின் தேசியம், மக்களின் முதுகிலேயே குத்தி ஏமாற்றினர்.
எத்தனை நாளைக்குத் தான் மக்களை ஏமாற்ற முடியும். விளைவு படிப்படியாக மக்களை எதிரியாக கருதி, அவர்களை ஒடுக்கத் தொடங்கினர். பின் அதுவே கொலைக் களமாகியது. இப்படி மக்களை ஒன்றுபடுத்த தடையாக இருந்த முரண்பாடுகளை களைய மறுத்து, அதே முரண்பாடுகளை மேலும் ஆழமான பிளவுகளாக விதைத்தனர். இப்படி மக்களின் ஐக்கியம், தேசியம் என்றவை கருவிலேயே சிதைக்கப்பட்டது. தனிமனித நலன் சாhந்து, குழு நலனாக அவை முதன்மை பெற்றறு. இது மக்களையே எதிரியாக்கியது. அனைத்தும் தனிமனிதர் சார்ந்த குழு நலனுக்கு உட்பட்டதாக பார்த்து, தேசியத்தையே அதற்கு ஏற்ப நலமடித்தனர்.
இப்படி ஒன்றுபட்ட மக்கள் போராட்டத்துக்கான, அரசியல் அடிப்படையே மறுதலிக்கப்பட்டு வந்தது. தமிழ் தேசியம் தமிழர்களை ஒன்றுபடுத்துவதற்கு பதில், அவர்களை பல கூறாக பிளந்தனர். இங்கு மக்கள் போராட்டம் என்ற பேச்சுக்கே இடமில்லாது போனது.
குழுவின் நலன் முதன்மை அம்சமாகி, அதுவே போராட்டமாகியது. குழுநலன் முதன்மையாக, தமிழ் மக்கள் என்ற பொது அடையாளம் மறுப்புக்குள்ளானது. தனக்குள் இருந்த ஒடுக்குமுறைகளைக் களைய மறுத்தது. மாறாக பிளவை பாதுகாத்து, தனது சொந்த குழுநலனை முதன்மைப்படுத்தியது. தமிழ் மக்களை ஒற்றுமைப்படுத்துவதற்கு பதில், அவர்களைப் பிளந்தது. பல ஆயிரம் பேரைக் கொன்று குவித்தது. இப்படி மக்கள் போராட்டம் என்பது குழுப் போராட்டமாகி விட, மக்களை பலாத்காரமாக யுத்த முனையில் ஈடுபடுத்தி அழிக்கின்றது.
புலித் தேசியமோ, மக்கள் விரோதப் போராட்டமாகிவிட்டது
1. தமிழ் என்ற மொழி ஊடான தமிழ் தேசிய அடையாளத்தின் கீழ் வாழ்ந்த முஸ்லீம் மக்களை, தமிழ் தேசியத்தின் பெயரில் இயங்கிய குழுக்கள் என்ன செய்தனர்? முஸ்லீம் மற்றும் தமிழ் மக்கள் இடையேயான முரண்பாடுகளை எப்படிக் களைய முனைந்தனர். தமிழ் மொழி என்ற அடையாளம் மூலம் ஐக்கியத்தை வளர்த்தார்களா? அல்லது பிரித்தார்களா? இங்கு முஸ்லீம் மக்களையே தமிழ் தேசியத்துக்கு எதிரான எதிரியாக நிறுத்தியது. இதையே மக்கள் போராட்டம் என்று சொல்லுகின்றவர்களை, விவாத அரங்கிலும் நாம் காண்கின்றோம்.
2. எமது போராட்டம் பிரதேசவாத பிளவுகளை ஒழித்துக்கட்டியதா ? இல்லை. மாறாக அதை வளர்த்து. பிரதேசவாத பிளவுகளை ஆழமாக்கியது. மக்களை பிளந்து ஐக்கியத்தையே சிதறடித்துள்ளது. இந்த நிலையில் எப்படித் தான் மக்கள் போராட்டம் நடக்கும்.
3. தமிழ் தேசமே எழுந்து நிற்கும் வண்ணம், அது மக்கள் போராட்டமாக மாற வேண்டும் என்றால், ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களின் குரல்களையும் தேசியம் உள்வாங்க வேண்டும். மக்கள் தமது கருத்துச் சுதந்திரத்தை, செயல் சுதந்திரத்தை, வாழ்வியல் சுதந்திரத்தை பேணும் ஐக்கியத்தை, எமது தேசியம் கொண்டிருந்ததா? இல்லை, எமது போராட்டம் அதை மறுத்தது. மாறாக சர்வாதிகார வடிவங்களில், பாசிச உள்ளடகத்தில் இதற்கு பதில் கொடுத்தது. தமிழ் தேசியத்தின் ஆன்மாவோ, குடலுடன் உருவப்பட்டது.
4. மக்கள் போராட்டம் எப்படி சகோதரப் படுகொலைகள் நடத்தும். ஒரு குழுவின் சர்வாதிகாரமே போராட்டமாகியதால், அது பல பத்தாயிரம் தமிழ் மக்களையே கொன்று குவித்தது. இதுவா மக்கள் போராட்டம்!
5. மக்கள் போராட்டம் என்பது, மக்கள் தாமே தீர்மானங்களை எடுக்கவும், வழிகாட்டவும் கூடிய வகையில், தமது சொந்த போராட்டமாக போராட்டத்தை வழிநடத்துவர். மாறாக ஒரு குழு தான் விரும்பியதை, மக்கள் மேல் திணிப்பதா மக்கள் போராட்டம்.
6. தமிழ் மக்கள் மத்தியில் காணப்பட்ட சாதியத்தைப் பாருங்கள். நாங்கள் தமிழ் மக்கள் என்று கூறிக்கொண்டு, தமிழ் மக்கள் மத்தியில் சாதிய பிளவை வைத்துக்கொண்டு, எப்படி ஒரு மக்கள் போராட்டத்தை நடத்த முடியும். நாம் இந்துகள் என்று கூறிக்கொள்ளும் பார்ப்பனியம், தனக்குள் தீண்டத்தகாதவனை உள்ளடக்குவது போல் தான் இதுவும். இப்படி எமது போராட்டம் இதைக் களைய மறுத்து, சாதிய பிளவுகளை வளர்க்கின்ற வகையில் தான், அந்த மக்களுக்கும் எதிராகவும் சீரழிந்தது.
7. தமிழ் மக்களின் போராட்டம் என்பது தேசியத்தை அடிப்படையாக கொண்டது. இந்த தேசியம் என்பது, தேசத்தை நிர்மாணம் செய்யும் தேசிய பொருளாதார கட்டுமானத்தை அடிப்படையாக கொண்டது. இப்படி தேசிய பொருளாதாரம் என்பது, தேசிய முதலாளிகளை ஆதாரமாக கொண்டது. இப்படி தேசிய முதலாளித்துவத்தையா, எமது போராட்டம் உருவாக்கியது? தேசியத்துக்கு எதிரான நிலபிரபுத்துவ, தரகு முதலாளித்துவ கட்டமைப்பை பாதுகாத்துக்கொண்டு, தேசிய முதலாளித்துவ கூறுகளை அழித்தொழித்தது. இப்படி இருக்க, இங்கு உழைக்கும் வர்க்கத்தின் மேலான ஒடுக்குமுறை சொல்லிமாளாது. இப்படி போராட்டம் என்பது மக்களின் வாழ்வை வளப்படுத்துவதற்கு பதில், இதற்கு எதிராகிப் போனது.
8. சக மனிதனின் உழைப்பை சதா சுரண்டித் தின்னும் ஒருவனுக்கும், அதை பறிகொடுத்தவனுக்கும் இடையில் எப்படி ஒன்றுபட்ட போராட்டம் எழும். இதை களைகின்ற போராட்டம் தான், மக்கள் போராட்டம்.
இப்படி பல.
இப்படி மக்களுக்கு எதிரான அரசியலை ஆணையில் வைத்துக் கொண்டு, மக்களைப் பிளந்தன் மூலம் மக்கள் போராட்டத்தை தடுத்தி நிறுத்தினர். ஒரு குழுவின் பாசிச மாபியாத்தன்மையை மக்கள் போராட்டம் என்று சொல்லுகின்றனர். இப்படி எதிர்புரட்சியையே புரட்சி என்கின்ற மாயை நீண்டகாலம் மக்கள் முன் நீடிப்பதில்லை. அதனால் தான் மக்கள், தொடர்ச்சியாக படுகொலை செய்யப்படுகின்றனர்.
பி.இரயாகரன்
07.05.2008
Wednesday, May 7, 2008
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் : நஞ்சாக்கப்படும் உணவு
இது மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய். காய்ப்புழுத் தாக்குதலை எதிர்க்கும் வகையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிச் செடியிலிருந்து காய்க்கும் புதிய வகை கத்தரிக்காய். பூச்சிக்கொல்லி மருந்துகளே இல்லாமல், செடியின் உள்ளே பொதிந்துள்ள மரபணுவை மாற்றி விடுவதன் மூலம் பூச்சிகள் செடிகளைத் தாக்குவதைத் தடுக்கும் மரபணு மாற்றத் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட புதிய கத்தரிச் செடியில் விளைவதுதான் பி.டி.கத்தரிக்காய்.
கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட இப்புதியவகை கத்தரி விதைக்கப்பட்டு, செடிகள் வளர்ந்து காயும் பிஞ்சுமாக செழித்து நின்றன. அமெரிக்க விதைக் கம்பெனியான மான்சாண்டோவின் இந்தியப் பங்குதாரரான மஹிகோ நிறுவனமும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகமும் கூட்டுச் சேர்ந்து இரகசியமாக இப்புதிய ரக கத்தரியைப் பயிரிட்டு கள ஆய்வு செய்து வந்தன. இதையறிந்த தமிழக வேளாண் காப்புக் குழு, ஈரோடு இயற்கை விவசாயிகள் குழு ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த முன்னணியாளர்கள் சிலர் பல்கலைக் கழக வளாகத்தில் கத்தரி தோட்டத்தின் அருகே திரண்டு விவசாயத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெருங்கேடு விளைவிக்கும் இந்த ஆராய்ச்சியை நிறுத்தக் கோரி கடந்த பிப்ரவரி 22ஆம் நாளன்று ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர், பல்கலைக் கழக நுழைவு வாயிலில் உள்ள பெயர்ப் பலகையில்,"" தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் தற்போதைய உரிமையாளர் மான்சாண்டோ'' என்று எழுதி ஒட்டிவிட்டுக் கலைந்து சென்றனர்.
உடனே இப்பல்கலைக் கழக துணைவேந்தரும் பதிவாளரும், ""பட்டினிச் சாவுகளைத் தடுத்து பல லட்சக்கணக்கான மக்களின் உணவுத் தேவையை நிறைவு செய்யும் நோக்கத்தோடு விவசாயமும் சமுதாயமும் பயனடைய வேண்டும் என்பதற்காக இப்பல்கலைக் கழகம் செயல்படுகிறது; அதனடிப்படையிலேயே மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் கள ஆய்வு செய்யப்படுகின்றன'' என்று நியாயவாதங்களை அடுக்கியதோடு, போராடியவர்கள் அறிவியலுக்கும் சமுதாயத்திற்கும் எதிரானவர்கள் என்று சாடி, போராடிய அமைப்புகள் மீது கிரிமினல் வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களும் உயிரி தொழில் நுட்பப் புரட்சியும் விவசாய உற்பத்தியைப் பெருக்குமா? மரபணு மாற்றம் செய்யப்பட்ட விவசாய விளைபொருட்களால் மனித இனத்துக்குப் பாதிப்பு ஏதேனும் ஏற்படுமா? இவை குறித்து ஆராய்ச்சி முடிவுகள் என்ன?
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களாலும் அவற்றின் பூக்கள், காய்கள், கிழங்குகள், விதைகளாலும் மனித இனத்துக்கு ஒவ்வாமையும் இனம் புரியாத பல்வேறு நோய்களும் ஏற்படும் என்று பல்வேறு ஆய்வாளர்களும் எச்சரிக்கின்றனர். நோபல் பரிசு பெற்ற மரபியல் விஞ்ஞானியான ப்ரென்னர் என்பவர், ""மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் முழுமையாகப் பாதுகாப்பானவை என்று கூற பெரும்பாலான விஞ்ஞானிகள் தயங்குகிறார்கள். ஏனென்றால், அவர்களின் ஆயுட்காலத்திலேயே மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் ஆபத்தானவை'' என்று நிரூபிக்கப்பட்டுவிடும் என்கிறார்.
மனித இனம் மட்டுமின்றி, இப்பயிர்கள் சுற்றுச்சூழல் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளை உருவாக்குகின்றன. தாவரங்களுடன் ஒட்டுறவு கொண்டுள்ள பல்வேறு பூச்சிகள், நுண்ணுயிர்கள் மட்டுமின்றி நன்மை செய்யும் மண்புழுக்களும் இப்புதிய வகைப் பயிர்களால் அழிக்கப்படுகின்றன. மறுபுறம், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களின் மகரந்தங்கள் களைகளின் மகரந்தங்களுடன் சேர்ந்து, களைக்கொல்லி எதிர்ப்புத்திறன் கொண்ட புதியவகை "சூப்பர்' களைகளை உருவாக்கி விடுகின்றன. இவற்றை எந்த களைக் கொல்லி மருந்தாலும் கட்டுப்படுத்தவே முடியாது.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட தாவரம், அது பயிரிடப்படும் பகுதிகளில் காலனியாதிக்கம் செய்யக்கூடியது. அதாவது, பிற தாவரங்களின் வளர்ச்சியை அழித்து, தான் மட்டும் செழித்து வளரும் தன்மை கொண்டது. மகரந்த சேர்க்கை மூலம் பாரம்பரிய விவசாயப் பயிர்களை அழித்து விடும் ஆற்றல் கொண்டது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட தாவரங்களின் பூக்களில் தேன் சுரக்குமா, அவற்றைத் தேனீக்கள் உறிஞ்சினால் என்ன பாதிப்பு ஏற்படும், அத்தேனை மனிதர்கள் மருந்தாகவும் உணவாகவும் பயன்படுத்தினால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதெல்லாம் இன்னமும் புரியாத புதிராகவே உள்ளது.
இவை ஒருபுறமிருக்க , மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்திப் பயிர்களில் காய்ப்புழுக்கள் முற்றாக அழிந்து விடுவதில்லை; மாறாக, அப்புழுக்கள் எதிர்ப்புத்திறன் பெற்று புதிய வீரியத்துடன் தாக்குகின்றன. 2003 முதல் 2006 வரை அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக் கழகம், மிசிசிபி மற்றும் அர்கன்சாஸ் மாநிலங்களில் நடத்திய ஆய்வுகள் இதை நிரூபித்துள்ளன. எனவேதான் அனைத்துலக பல்லுயிர் பாதுகாப்புக்குழு, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களைக் களச்சோதனை முறையில் பயிரிடுவதற்குக் கூட தடை விதித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில், இத்தொழில் நுட்பத்திற்கும், இதனைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் விவசாயப் பொருட்களின் இறக்குமதிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஏழை நாடான இந்தியாவில் 2002இல் மரபணு மாற்றப்பட்ட கடுகும், 2003இல் 8 விதமான பருத்தியும் அனுமதிக்கப்பட்டு நாடெங்கும் 30 இலட்சம் ஏக்கரில் களப்பரிசோதனைகள் நடத்தப்பட்டன. தமிழ்நாடு, கர்நாடகம், குஜராத், ம.பி;மராட்டியம் ஆகிய மாநிலங்களில் நடத்தப்பட்ட பருத்தியானது பாரம்பரிய பருத்தியைவிட 5 மடங்கு குறைவான விளைச்சலையே தந்து, பல்லாயிரக்கணக்கான விவசாயிகளுக்கு நட்டமேற்படுத்தியுள்ளது. விரக்தியடைந்த விவசாயிகள் பூச்சிமருந்து குடித்துத் தற்கொலை செய்து கொண்டனர். இந்த உண்மைகளை நாடாளுமன்ற மேலவையில் கேள்வி நேரத்தின் போதே அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
இருப்பினும், எவ்விதக் கட்டுப்பாடோ வரைமுறையோ இன்றி எல்வா வகையான உணவு தானியப் பயிர்களுக்கும் மரபணு மாற்ற ஆராய்ச்சிகளையும் களப்பரிசோதனைகளையும் இந்திய அரசு தாராளமாக அனுமதித்து வருகிறது. ஏழை நாடான இந்தியா இத்தொழில் நுட்பத்தைச் செயல்படுத்திப் பார்க்கும் சோதனைச் சாலை எலியாக மாற்றப்பட்டு விட்டது. பி.டி. பருத்தியிலிருந்து தொடங்கி கடுகு, கத்தரிக்காய், சோளம் என அனைத்து உணவுதானியங்களும் மட்டுமின்றி, இந்திய விவசாயத்தின் உயிர்நாடியான நெல் சாகுபடிக்கும் பேராபத்தாக பி.டி. நெல்லும் வந்துவிட்டது.
அமெரிக்காவின் ராக்பெல்லர் நிறுவனமும் ஐதராபாத் பல்கலைக் கழகமும் கூட்டுச்சேர்ந்து வறட்சியைத் தாங்கும் நெல் ரகத்தை மரபணு மாற்றம் மூலம் உருவாக்க ஆராய்ச்சி செய்கின்றன. வைட்டமின்""ஏ'' சத்து நிறைந்த நெல் ரகத்தை உருவாக்க புதுதில்லி, ஐதராபாத், கோவை ஆகிய இடங்களிலுள்ள அரசின் வேளாண் ஆய்வு மையங்கள் சுவிட்சர்லாந்து ஏகபோகக் கம்பெனியுடன் கூட்டுச் சேர்ந்துள்ளன. ""தங்க அரிசி'' எனும் வைட்டமின் சத்துக்கள் நிறைந்த அரிசியை உருவாக்க பிலிப்பைன்சின் சர்வதேச நெல் ஆராய்ச்சி மையமும் இந்திய வேளாண் ஆராய்ச்சி மையமும் கூட்டுச் சேர்ந்து ஆய்வுகள் நடத்துகின்றன.
கட்டுப்பாடற்ற இத்தகைய களப்பரிசோதனைகள் பயிர்களோடு மட்டும் நின்றுவிடவில்லை. இந்திய மக்களையும் சோதனைக்கூட எலிகளாக்கி பரிசோதிக்கும் கொடுமையும் இந்திய அரசின் துணையோடு நடந்து வருகிறது. ஏறத்தாழ 72 லட்சம் பேர் பயனடைவதாகக் கூறப்படும் ஒருங்கிணைந்த குழந்தைகள் ஊட்டச்சத்து திட்டத்தை இந்திய அரசு உலக வங்கி கடனைக் கொண்டு நடத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிப்பெண்கள், குழந்தைக்குப் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோருக்கு சத்துமாவு உருண்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் ""கேர்'' எனும் மிகப்பெரிய தன்னார்வ நிறுவனம் மூலம் மரபணு மாற்றப்பட்ட சோயாமாவையும் சோயா எண்ணெய்யையும் வழங்கி அத்தாய்மார்கள்குழந்தைகளிடம் அதன் விளைவுகளை 2002ஆம் ஆண்டில் சோதித்துப் பார்த்துள்ளனர். இந்த உணவின் தன்மை, விளைவுகள் பற்றிக் கண்டறிய எவ்வித பகுப்பாய்வு முறையும் இதுவரை இல்லை என்பதுதான் மிகப்பெரிய கொடுமை.
பி.டி.பருத்தி விதைகள் ஆந்திர, மகாராஷ்டிர பருத்தி விவசாயிகளைத் திவாலாக்கி, தற்கொலைக்குத் தள்ளிவிட்ட பின்னரும் இந்தக் கொலைகார தொழில்நுட்பத்தையும் சோதனைகளையும் முற்றாகத் தடைசெய்ய மறுத்து வருகிறது இந்திய அரசு. ஏனென்றால், இது உலக வர்த்தகக் கழகத்தின் உத்தரவு!
இந்த அடிமைத் தனத்தையே இரண்டாவது பசுமைப் புரட்சி என்று ஆளும் காங்கிரசு கும்பல் கொண்டாடுகிறது. ஏற்கெனவே உரம், பூச்சி மருந்துகளுக்காக ஏகாதிபத்தியக் கம்பெனிகளிடம் அண்டி நிற்கும் இந்திய விவசாயிகளை, விதைக்காகவும் கையேந்த வைத்து, இந்திய விவசாயத்தின் சுய சார்புத் தன்மையை முற்றாக அழித்துவிட வேண்டும் என்பதுதான் இரண்டாவது பசுமைப் புரட்சியின் பின்னுள்ள சதித்திட்டம்.
தலைப்பாகைக்கு மட்டுமல்ல; தலைக்கே பேராபத்து வந்துவிட்ட நிலையில், இம்மறுகாலனியத் தாக்குதலுக்கு எதிராக விவசாயிகளும் உழைக்கும் மக்களும் புரட்சிகர அமைப்புகளில் அணிதிரண்டு விடுதலைப் போரைத் தொடுக்காமல் பேரழிவிலிருந்து மீளவும் முடியாது.
· சுடர்
Tuesday, May 6, 2008
பட்டினிக் கொடுஞ்சிறைக்குள் பதறும் உலகம்
பட்டினிக் கொடுமையால் தன்னையும் கடவுளையும் நொந்து கொண்டு, இறைவன் தமக்குக் ""கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா?'' என்று பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய பழம்பாடல் ஒன்றில் தமிழ்ப் புலவர் ஒருவர் கேட்டிருந்தார். அப்புலவரின் வேதனைமிக்க இந்த வரிகள் இன்று ஹெய்தி நாட்டில் யதார்த்த உண்மையாகியுள்ளது.
அந்நாட்டு ஏழை மக்கள் இப்போது மண்ணைத் தின்றால்தான் உயிர் வாழ முடியும் என்று கற்பிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இவ்வாறு கற்றுத் தந்திருப்பது எல்லாம்வல்ல இறைவனல்ல, ஏகாதிபத்தியம்!
வெளிறிய மஞ்சள் நிறக் களிமண்; அதைக் குழைத்து அச்சில் வார்த்து காயவைத்து, சிறிது உப்பு சேர்த்து உண்கின்றனர் ஹெய்தி நாட்டின் ஏழை மக்கள். கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் குமட்டலைத் தணிக்க இக்களிமண்ணைச் சிறிதளவு மருந்து போல உட்கொள்வதென்பது அந்நாட்டு வழக்கம். இப்போது இக்களிமண்ணே ஏழைகளின் முழுமையான உணவாகி விட்டது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தெற்கு வாசலில் கரீபியன் தீவுக் கூட்டத்தில் கியூபாவுக்கு அருகிலுள்ள சின்னஞ்சிறு நாடுதான் ஹெய்தி. ஏறத்தாழ ஒரு கோடி கருப்பின மக்களைக் கொண்டுள்ள இந்நாடு, பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தாலும் பின்னர் அமெரிக்க மேலாதிக்க வல்லரசாலும் சூறையாடப்பட்டு, இன்று உலகின் ஏழ்மை சூழ்ந்த நாடுகளில் ஒன்றாகிப் பரிதவித்து நிற்கிறது. ஏகாதிபத்தியவாதிகளால் திணிக்கப்பட்டு ஹெய்தியின் கைக்கூலி ஆட்சியாளர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மறுகாலனியாதிக்கக் கொள்ளையால், அந்நாட்டின் ஆகப் பெரும்பான்மையான மக்கள் வேலையிழந்து வாழ்விழந்து பட்டினியில் பரிதவிக்கிறார்கள். அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏழைகளால் வாங்க முடியாத அளவுக்கு விலையேற்றம் பலமடங்கு அதிகரித்து விட்டது.
இந்நிலையில் ""ரஸ்க்'' ரொட்டியைப் போல, அச்சில் வார்த்து காய வைக்கப்பட்ட களிமண்ணைத் தின்று பசியைப் போக்கிக் கொள்கின்றனர், அந்நாட்டு ஏழைகள். இக்களிமண் ரொட்டி வாயில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி விடுவதால், வாய்ப்புண், வயிற்றுப்புண் ஏற்பட்டு தீராத நோய்களுக்கு இம்மக்கள் பலியாகி வருகிறார்கள். ஹெய்தியின் அவலம் மெதுவாகக் கசிந்து உலகையே அதிர்ச்சியுறச் செய்ததும், ஐ.நா. மன்றத்தின் உணவு மற்றும் விவசாயக் கழகம் அவசர நிலைப் பிரகடனம் செய்து, அந்நாட்டுக்கு உடனடியாக உணவுப் பொருட்களை அனுப்புமாறு உலக நாடுகளைக் கோரியுள்ளது.
இது ஏதோ ஹெய்தி நாட்டில் மட்டும் ஏற்பட்ட பிரச்சினை அல்ல. ஏகாதிபத்தியவாதிகளால் உலகின் சிவப்பு விளக்குப் பகுதியாகச் சீரழிக்கப்பட்டு விட்ட தாய்லாந்து நாட்டில், ஏழை விவசாயிகள் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றத்தால் பட்டினியில் பரிதவிக்கின்றனர். பசிக் கொடுமையிலிருந்து மீள, அவர்கள் மூங்கில் புழுக்கள், ஈசல்விட்டில் பூச்சிகள், காட்டெறும்புகள் முதலானவற்றைப் பிடித்து வறுத்துத் தின்னும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். வல்லரசு கனவு காணும் இந்தியாவின் உ.பி.மாநிலத்தில் முஷாகர் எனப்படும் தாழ்த்தப்பட்ட சாதியினர், பட்டினியிலிருந்து மீள எலிகளையும் நத்தைகளையுமே உணவாக உட்கொள்கின்றனர். ஆப்பிரிக்க நாடுகளில் உணவுப் பஞ்சத்தால் பல லட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்.
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றத்தால் உலகின் பல ஏழை நாடுகளில் இத்தகைய அவலங்கள் தொடரும் அதேநேரத்தில், மாரிடானியா, செனகல், கினியா, பர்கினா பாசோ, மொராக்கோ முதலான ஆப்பிரிக்க நாடுகளிலும், உஸ்பெகிஸ்தான், யேமன் முதலான ஆசிய நாடுகளிலும், வட அமெரிக்காவிலுள்ள மெக்சிகோ நாட்டிலும் உணவுக் கலகங்கள் வெடித்துப் பரவுகின்றன.
இந்தியா உள்ளிட்டு இந்த ஏழை நாடுகளை மட்டுமின்றி, உலகையே அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றம் என்னும் கொள்ளைநோய் கவ்வியுள்ளது. கடந்த ஓராண்டுக்குள் மக்காசோளத்தின் விலை 50 சதவீதமும், அரிசியின் விலை 25 சதவீதமும், கோதுமையின் விலை இருமடங்காகவும் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடும் ஐ.நா. மன்றம், உலக அளவில் தானியக் கையிருப்பு 57 நாட்களுக்கு மட்டுமே உள்ளதாகவும், கடந்த 25 ஆண்டுகளில் இதுபோன்றதொரு படுமோசமான நிலைமை ஏற்பட்டதில்லை என்றும் சுட்டிக் காட்டியுள்ளது.
கடந்த ஈராண்டுகளாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் கிடுகிடு விலையேற்றத்துக்கு ""உயிரி எரிபொருள்'' எனும் ஏகாதிபத்திய திட்டமே முதன்மையான காரணமாகும். உயிரி எரிபொருள் தயாரிப்புக்காக மக்காச்சோளம், சோயா, கரும்பு, சிலவகையான கிழங்குகள், எண்ணெய் வித்துக்கள் முதலான விவசாய விளைபொருட்கள் திருப்பி விடப்பட்டுள்ளதாலேயே இந்த விலையேற்றமும் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளன.
உலகின் எரிபொருள் தேவையை ஈடுகட்டவும், சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கவும், புவி வெப்பம் உயர்ந்து வருவதைத் தடுக்கவும்தான் உயிரி எரிபொருள் திட்டம் என்று ஏகாதிபத்தியங்கள் வாதிட்டாலும், இது ஏழை மக்களைப் பட்டினி போட்டுக் கொல்லும் வக்கிரத் திட்டமாகவே உள்ளது. மேலும், பெட்ரோல், நிலக்கரி போன்ற மரபு சார்ந்த எரிபொருளுக்கு மாற்றீடாக உயிரி எரிபொருள் அமைந்து விடாது என்றும் இதனால் விபரீத விளைவுகளே ஏற்படும் என்றும் பல்வேறு ஆய்வுகள் நிரூபித்துக் காட்டியுள்ளன.
இதுதவிர, ஏகாதிபத்திய உலகின் மேட்டுக்குடி கும்பல்களது உணவில் இறைச்சியானது முக்கிய இடம் பெறுகிறது. வகைவகையான இறைச்சி உணவின் தேவையை நிறைவு செய்யக் கூடுதலாக இறைச்சி உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்காக கணிசமான அளவுக்கு உணவு தானியங்கள் கால்நடைகளுக்குத் தீனியாகத் திருப்பிவிடப்பட்டுக் கொழுக்க வைக்கப்படுகின்றன. சராசரியாக ஒரு கிலோ இறைச்சிக்காக 8 கிலோ உணவு தானியம் கால்நடைகளுக்குக் கொட்டப்படுகிறது. இதனாலும் உணவு தானியப் பற்றாக்குறையும் விலையேற்றமும் ஏற்படுகிறது.
மேலும், ஏகாதிபத்திய அராஜக உற்பத்தியால் புவி வெப்பம் அதிகரித்து, இயற்கைச் சீற்றங்களால் உணவு உற்பத்தி பாதிக்கப்படுவதாலும், மக்கட்தொகை பெருக்கத்திற்கு ஏற்ப விவசாய உற்பத்தி நவீனப்படுத்தப்படாமல் ஏகாதிபத்தியங்களால் நாசமாக்கப்பட்டு வருவதாலும், ஏகாதிபத்திய உலகின் நிதியாதிக்கக் கும்பல்கள் ஊக வணிகத்தின் மூலம் உணவுப் பொருட்களைக் கட்டுப்படுத்தி மேலாதிக்கம் செய்து வருவதாலும் உலகெங்கும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தட்டுப்பாடும் விலையேற்றமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஏகாதிபத்தியம் உலகம் மிகக் கொடியது. மனித இனம் பட்டினியால் மாண்டு போனாலும் பரவாயில்லை, எமக்கு இலாபம்தான் வேண்டும் என வெறியோடு அலையும் ஏகாதிபத்தியவாதிகள் உலகில் நீடிக்கும்வரை, உலகைக் கவ்வியுள்ள பட்டினிப் பேராயத்திலிருந்து மனித இனம் மீள முடியாது. ஏகாதிபத்தியத்தைத் தூக்கியெறியும் அரசியல் புரட்சிகள் நடக்காமல், சுயசார்பான தேசியப் பொருளாதாரத்தைக் கட்டியமைக்காமல் மனித இனம் இனிச் சுதந்திரமாக உயிர் வாழவும் முடியாது.
இம்மாபெரும் புரட்சிப் போருக்கு நாம் அணிதிரளப் போகிறோமா? அல்லது விதியை நொந்து கொண்டு ஹெய்தி மக்களைப் போல களிமண்ணைத் தின்றுச் சாகப் போகிறோமா?
· குமார்
அவலத்திலும் இலாபவெறி! ஏகாதிபத்தியவாதிகளின் வக்கிரம்!
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றத்தால் பட்டினியால் சிக்கித் தவிக்கும் தாய்லாந்து நாட்டின் ஏழைகள் மூங்கில் புழுக்களைப் பிடித்து வறுத்து உண்கிறார்கள். இப்போது அதையும் பறித்துக் கொண்டு அம்மக்களைப் பட்டினிச் சாவுக்குத் தள்ளிவிட ஏகாதிபத்திய நிறுவனங்கள் கிளம்பியுள்ளன.
தாய்லாந்து உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகளில், ஏழைகள் உண்ணும் புழு, பூச்சிகளைத் தரம் உயர்த்தி அவற்றை டப்பாக்களில் அடைத்து விற்கும் வழிமுறைகளை ஆராய்வதற்காக, தாய்லாந்தில் உள்ள சியாங்மை நகரில் கடந்த பிப்ரவரி 18ஆம் நாளன்று, ஐ.நா. மன்றத்தின் உணவு மற்றும் வேளாண் கழகம் ஒரு ஆய்வரங்கத்தை நடத்தியுள்ளது. உலகெங்கும் 1400 வகை புழுபூச்சிகளை மனிதர்கள் மருந்தாக உண்பதாகவும், அவற்றில் புரதச் சத்து மிகுந்துள்ளதாகவும், இவற்றை சுகாதாரமான முறையில் தயாரிப்பதன் மூலம் புதிய வியாபாரச் சந்தையை உருவாக்க முடியும் என்றும் அந்த ஆய்வரங்கில் விவாதிக்கப்பட்டுள்ளது.
உடனே பல்வேறு ஏகாதிபத்திய நிறுவனங்கள், புழுபூச்சிகளைப் பிடித்து வறுத்து டப்பாக்களில் அடைத்து வியாபாரம் செய்ய களத்தில் இறங்கிவிட்டன. முதலாளித்துவ செய்தி ஊடகங்களோ ""இயற்கையான புரதச் சத்து நிறைந்த புழுபூச்சிகளின்'' அருமை பெருமைகளை அடுக்கத் தொடங்கி விட்டன. ஈசல் வறுவலும், எலிக்கறியும் இனி டப்பாக்களில் விற்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
கிரிக்கெட் போட்டி ஏலம்: சூதாட்டமே விளையாட்டாக…
புதிய ஜனநாயகம் - 2008
ஏகாதிபத்தியத்தின் கீழ் எதுவுமே புனிதமானதல்ல : எல்லாமே பணம் பண்ணும் சரக்குதான் என்பதையே ஏலம் விடப்பட்ட கிரிக்கெட் போட்டி எடுத்துக்காட்டுகிறது.
ஒருமுறை மறைந்த கவர்ச்சி நடிகை ""சில்க்'' சுமிதா கடித்த எச்சில் ஆப்பிளை ரசிகர் ஒருவர் 10,000 ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தார். கிரிக்கெட் விளையாட்டிலும் அண்மையில் இதுபோன்றதொரு ஏலம் நடந்திருக்கிறது. ஏலம் எடுக்கப்பட்டது இந்திய கிரிக்கெட் வீரர்கள் தின்று போட்ட எச்சில் இலைகளையல்ல.
மாறாக, கிரிக்கெட் வீரர்களையே ஏலம் எடுத்திருக்கிறார்கள், இந்தியப் பெருமுதலாளிகள்.
""சில்க்'' சுமிதாவின் எச்சில் ஆப்பிளை ஏலத்துக்கு எடுத்தவரின் செயலை, பைத்தியக்காரத்தனம் என்று எவரும் எளிதில் கூறிவிட முடியும். ஆனால், கிரிக்கெட் வீரர்களை ஏலத்தில் எடுத்திருக்கும் முதலாளிகள் நிச்சயம் பைத்தியக்காரர்கள் அல்ல. ""இது ஒரு இலாபம் தரும் வியாபாரம்'' என்று பேட்டியளிக்கிறார், கொல்கத்தா அணியை ஏலம் எடுத்திருக்கும் இந்தி நடிகர் ஷாருக்கான்.
ஏப்ரல் ஜூன் மாதங்களில் இருபதுக்கு இருபது (20/20) என்ற பெயரில் இந்தியன் பிரீமியர் லீக் என்ற அமைப்பு கிரிக்கெட் போட்டிகளை நடத்தவிருக்கிறது. இந்தப் போட்டிகளில் சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, டெல்லி, மொஹாலி, ஜெய்ப்பூர், மும்பை, பெங்களூரு என இந்தியாவின் எட்டு மாநில நகரங்களின் பெயரில் அணிகள் மோதவிருக்கின்றன. இந்த அணிகளை யார் வேண்டுமானாலும் ஏலத்தில் எடுத்துக் கொள்ளலாம் என 200 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தப் புள்ளி அறிக்கை (டெண்டர்) வெளியிட்டது, இந்திய கிரிக்கெட் வாரியம். இதன்படி, சாராய அதிபர் விஜய் மல்லையா, திரு(ட்டு) பாய் அம்பானி, ஜி.எம்.ஆர். எனும் வீட்டுமனை கொள்ளைக்கார நிறுவனம், டெக்கான் கிரானிக்கல் எனும் ஆங்கில நாளேடு, பெருமுதலாளி நெஸ் வாடியா, இந்தி சினிமா நடிகர் ஷாருக்கான், கவர்ச்சி நடிகை பிரீத்தி ஜிந்தா ஆகியோர் பல நூறு கோடிகளுக்கு ஒவ்வொரு அணியையும் ஏலம் எடுத்துள்ளனர்.
இந்த அணிகள் இந்தியாவின் மாநிலங்களைச் சேர்ந்த நகரங்களின் பெயர்களில் அமைந்திருந்தாலும், அதில் விளையாடுபவர்களெல்லாம் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. இன்னும் சொல்லப் போனால், இதில் பலர் இந்தியாவைச் சேர்ந்தவர்களே அல்ல. ஒவ்வொரு அணியிலும் வெளிநாடுகளைச் சேர்ந்த 4 கிரிக்கெட் வீரர்கள் இடம் பெறுவார்கள். எஞ்சியிருப்பவர்களில், எந்த மாநிலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களும் இடம் பெறுவார்கள். இப்படி உள்நாட்டுவெளிநாட்டு வீரர்களைக் கலந்து வீரிய ஒட்டுரகமாக அணிகள் அமைந்திருக்கும்.
அணிகளை ஏலத்துக்கு எடுத்ததைப் போலவே, அதற்கான ஆட்டக்காரர்களையும் ஏலத்தில் எடுத்திருக்கிறார்கள் இந்திய முதலாளிகள். இதன்படி, சென்னை அணியில் விளையாடவுள்ள மகேந்திரசிங் டோனியை 6 கோடி ரூபாய்க்கு ஏலமெடுத்திருக்கிறார், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முதலாளி. ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஆட்டக்காரர் சைமண்ட்சை 5.4 கோடி ரூபாய்க்கு ஹைதராபாத் அணிக்காக ஏலம் எடுத்திருக்கிறது, டெக்கான் கிரானிக்கல் நாளேடு. இதேபோல பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 80 கிரிக்கெட் விளையாட்டு வீரர்களை இந்த ஏலமுறைக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறது, இந்திய கிரிக்கெட் வாரியம். இவர்களில் தங்களுக்கு விருப்பமானவர்களைத் தெரிவு செய்து, தாங்கள் ஏலம் எடுத்துள்ள அணிகளில் அவர்களை ஆட வைக்க முதலாளிகளால் முடியும்.
கிரிக்கெட் விளையாட்டு வீரர்களை ஏலம் போட்டு முதலாளிகளிடம் விற்றதன் மூலம் 7,000 கோடி ரூபாய்க்கு கல்லா கட்டியிருக்கிறது, இந்திய கிரிக்கெட் வாரியம். செய்தி ஊடகங்களால் இந்த தேசத்தின் நாயகர்களாகச் சித்தரிக்கப்படும் இந்திய கிரிக்கெட் வீரர்கள், தாங்கள் அடிமைகளைப் போல ஏலம் போட்டு விற்கப்பட்டதற்கு அவமானப்படவில்லை. இப்படி தங்களுக்கு ""ரேட்'' பேசப்பட்டிருப்பதைக் கண்டு பூரித்துப் போயுள்ளார்கள். ""இந்த ஏலத்தின் மூலம் கிரிக்கெட் வீரர்கள் குறுகிய காலத்தில் அதிக இலாபமீட்ட முடியும்'' என்று மகிழ்ச்சியுடன் பேட்டியளித்துள்ளார், நட்சத்திர ஆட்டக்காரரான யுவராஜ்சிங். விலை போகாத சில "வீரர்கள்' மட்டும், ""எனக்கு இது தகுந்த ரேட் இல்லை'' என்று விலைமகளிர் போல பேட்டியளித்துள்ளனர்.
கிரிக்கெட் வீரர்கள் ஏலம் விடப்பட்ட கேவலத்தைக் கண்டு வெறுப்பை உமிழாமல், இந்த ஆட்டக்காரருக்கு இவ்வளவு தொகை கொடுத்திருக்கலாம்; இது குறைவானது, கூடுதலானது என்றெல்லாம் செய்தி ஊடகங்கள் பரபரப்பாக பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கின்றன. டோனிக்கு ஆறு கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டதைக் கண்டு தேசியப் பெருமிதம் கொள்கின்றன. இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங்கைக் காட்டிலும் ஆஸ்திரேலிய வீரர் சைமண்ட்ஸ் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டிருப்பதை சந்தைப் பொருளாதாரத்தின் விளைவு என்று அங்கலாய்த்து, இந்தப் பட்டிமன்றத்தில் "தேச பக்தி'யோடு தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறது, "மார்க்சிஸ்டு'களின் புரட்சிகர ""தீக்கதிர்'' நாளேடு.
ஆங்கிலேய பிரபுக்குலத்தின் மேட்டுக்குடி சீமான்களின் பொழுதுபோக்கு விளையாட்டாகத் தொடங்கிய கிரிக்கெட், இன்று பன்னாட்டுத் தொழிற்கழகங்களின் விளம்பர வியாபார ஊடகமாகவும், தரகுப் பெருமுதலாளிகள் கருப்புப் பணச் சூதாடிகளின் விளையாட்டாகவும் வளர்ந்து விட்டது. சினிமாவுக்கு அடுத்த கவர்ச்சிகரமானதாக கிரிக்கெட் மாற்றப்பட்டிருக்கும் அதேசமயம், சினிமாவைவிட அதிகமாகப் பணம் புரளும், பணம் கொழிக்கும் மையமாக கிரிக்கெட் விளையாட்டு மாறியிருக்கிறது. கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் வெவ்வேறு நாடுகளின் ஊழல்மிக்க வாரியங்கள் ஆண்டுக்குப் பல்லாயிரம் கோடி ரூபாய்களைச் சம்பாதிக்கின்றன. கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் ஒவ்வொரு போட்டியிலும் பல லட்ச ரூபாய் சம்பளமாகப் பெறுவதோடு, கூடுதலாக விளம்பரங்களில் தோன்றி கோடிக்கணக்கில் ஊதியம் பெறுகிறார்கள். இவை மட்டுமின்றி, கிரிக்கெட் சூதாடிகளுடனும் தரகர்களுடனும் கூட்டுச் சேர்ந்து கொள்ளையடித்து உல்லாச வாழ்க்கை நடத்துகிறார்கள்.
பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பால் உல்மரின் கொலைச் சம்பவம், சர்வதேச கிரிக்கெட்டின் இருண்டஅசிங்கமான பகுதியை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து காட்டியது. இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கக் கிரிக்கெட் அணிகளின் வீரர்கள், வர்த்தகச் சூதாடிகளுடன் கூட்டுச் சேர்ந்து ஊழலில் ஈடுபட்ட விவகாரம் ஏற்கெனவே அம்பலமாகியுள்ளது. இருப்பினும் உள்நாட்டுவெளிநாட்டு முதலாளிகளால் பல்லாயிரம் கோடிகள் வாரியிறைக்கப்பட்டு இந்த கிரிக்கெட் சூதாட்டம் வெறியோடு நடத்தப்படுகிறது. ஆங்கிலேய காலனிய நாடுகளாக இருந்த நாடுகளில் மட்டுமே, அவமான அடிமைச் சின்னமாக கிரிக்கெட் விளையாட்டு தொடர்கிறது. விடுதலைப் போராட்ட உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டு அமெரிக்கஆங்கில மோகம் ஊட்டி வளர்க்கப்படுவதைப் போலவே கிரிக்கெட் மோகம் "தேசபக்தி'யாக வளர்க்கப்படுகிறது.
கிரிக்கெட்டையே தனித்தொழிலாகக் கொண்ட ஆட்டக்காரர்களும், கிரிக்கெட்டை பந்தயம்சூதாட்டமாகவும் வியாபாரம்விளம்பரமாகவும் நடத்தும் கருப்புப் பண கும்பலும் சமுதாயத்தின் மிகப் பெரிய ஒட்டுண்ணிகளாக வளர்ந்து விட்டதை, தற்போதைய ஏல விவகாரம் மீண்டும் நிரூபித்துக் காட்டிவிட்டது. குதிரைப் பந்தயம், லாட்டரி, ஆபாச களிவெறியாட்ட விடுதிகள் போன்றவை எவ்வாறு ஒழிக்கப்பட வேண்டியவையோ, அதைப் போலவே மிகப்பெரிய சமூகக் கேடான கிரிக்கெட் விளையாட்டும் ஒழிக்கப்பட வேண்டும். உழைக்கும் மக்களின் புரட்சிகரப் போராட்டங்களே, இச்சூதாட்ட வெறியாட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும்.
· பாலன்
