தமிழ் அரங்கம்

Friday, April 21, 2006

'யாக்கோப் நக'ரும் யாக்கோப்பின் கல்லறையும்

'யாக்கோப் நக'ரும் யாக்கோப்பின் கல்லறையும்...

சுதேகு
21.04.06

கரங்களின் வளர்ச்சியோடு, கிராமப்புற சமூதாய அமைப்பு வீழ்ச்சியடைந்து -அரசு தோன்றியது. தொழிலாளர்கள், விவசாயிகள், பூசாரிகள், கைவினைஞர்கள், அதிகாரிகள் போன்ற பல்வேறு மக்கட் பிரிவினர் இவ் அரசுக்குத் தலைமைதாங்கினர். பின்னர் இதுவே வர்க்கங்களாகவும் சாதிகளாகவும் நிலைபெற்றது. இம்மாற்றமானது பள்ளத்தாக்கு நாகரீகங்களை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்தது.

கி.மு 3200 - 2700 வரையிலான காலத்தில் விவசாயம் ஈட்டிக்கொடுத்த உபரியில் இருந்து நகரத்துக்கான சொத்துகள் சேகரிக்கப்பட்டு, அனுபவிக்கப்பட்டன. இந்த உபரியின் அளவு குறைவடைய சிறிய பகுதியினரே அதை அனுபவிக்கத் தொடங்கினர். அதாவது விவசாயத்தில் இருந்து தம்மை முற்றுமுழுதாக விலக்கிக்கொண்டவர்கள், சுரண்டுபவர்களாக மாறி இவற்றை அனுபவித்தனர். ஏனையவர்கள் கொத்தடிமைகளாக்கப்பட, முரண்பாடுகளும் தவிர்க்கமுடியாத யுத்தங்களும் உருவாகின. உழவர்களும் - அடிமைகளும் நிலச் சொந்தக்காரராக இருந்தபோதும், இவர்களது உழைப்பும் அதனூடான உற்பத்தியும் வாடகை, வரி, குத்தகை ஊடாக நிலப்பிரபுக்களால் சுரண்டப்பட்டது. அரசன் எல்லா அதிகாரங்களைக் கொண்ட நடுநாயகனாக (சூரியனாக) கொண்டிருக்க, நிலப்பிரபுக்கள் ஆளும் வர்க்கத்தின் வழித்தோன்றலாக பல்வேறுபட்ட குலதெய்வ சமய அதிகாரங்களுடாக சூரியனைச் சுற்றுகின்ற பிற கிரகங்களின் கோட்பாட்டுடன் இவ்வரசு நிர்ணயிக்கப்பட்டது. நடுநாயகமான அரசன் தெய்வீகத் தன்மை கொண்டவனாக இருத்தி வைக்கப்பட்டான். பல அரசர்களின் இருப்பு பல மதக்கருத்துக்களைக் கொண்ட இருப்பாக இருந்தது. பல அரசுகள் கைப்பற்றப்பட்டு பேரரசுகள் உருவானபோது, ஆதிக்கத்தில் வரும் அரசன் சார்பான மதம் மெய்யான மதமாக எடுத்துரைக்பப்பட்டது.

சிறிய சிறிய மதக் கலாச்சாரத்துக்குரிய மக்கள் குழுக்களைக் கைப்பற்றி பேரரசு தோன்றிய போதும், இக்குழுக்களுக்கிடையினான முரண்பாட்டுக்கான மதச்சார்பான தீர்வு கடினமானதாவே இருந்தது. ஒர் பேரரசுக்குரிய உத்தியோகபூர்வமான மதம் அதன் வளர்ச்சிப்போக்கில் பேரரசுக்குரிய அரசனது அதிகாரத்துக்கு இணையான அதிகாரப் போட்டியாக மாறியது. அரசன் வீழ்த்தப்படுவதும், புதிய அரசன் தோன்றுவதும் சாதாரண நிகழ்வாக இருந்ததால், நிலையான இறையரசுக்கான நம்பிக்கைக்கு வெளியே மதநிறுவன அரசை தோற்றுவித்தது.

இம்மத அரசு அழியாத ஒரு நிலையான அரசாக, நேரடியாக விண்ணுலகத்துக்கான அதிகார அரசாக தோன்றியது. இவ்வரசு ஒரு காலத்தில் எந்தச்சிரமமுமின்றி தனது மதத்தத்துவத்தினூடாக புதிய நகரங்களை உருவாக்கியது. முஸ்லீம்களுக்கு - 'மெக்கா'வும், இந்துக்களுக்கு - 'கங்கை, யமுனை'யும், புத்தர்களுக்கு - 'Bodh Gaya - Lhasa' வும், எகிப்தியருக்கு 'Karnak - Laxo' கிரெக்கருக்கு 'Delfi' , வடதுருவ மக்களுக்கு 'Nidaro sdomen -vedstena - Odensa, போன்றவைகளும் தோற்றுவிக்கப்பட்டது போல கிறீஸ்தவம் ரோமையும், யாக்கோப் நகரத்தையும் உருவாக்கியது.

உல்லாசப்பயணத்தின் தொடக்கம் பண்டைய காலத்தில் பபிலோனும் ஜெருசலேமுமாக இருந்தது. பின்னர் ரோமும், யாக்கோப் நகரமும் இதன் நோன்புக்கான இணைப்பிலிருந்தது. யாக்கோப் நகரம் நான்கு பிரதேச மக்களை இணைத்து உருவாக்கப்பட்ட போதிலும், இது அராபிய பாரம்பரிய மக்களைக் கொண்ட இணைப்பாகும். கி.பி 40 வருடத்தில் யூதர்களின் முதலாவது மத அரசனாக இருந்த யோசெப்பின் மகனும், இயேசுவின் சகோதரனுமான யாக்கோப்பின் கல்லறையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. இன்று ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட கிறிஸ்தவர்கள் வந்துபோகிற, கிட்டத்தட்ட 150 மைல்களைக் கொண்ட யாத்திரை ஸ்தலமாக இது இருக்கிறது. கடைசி காலத்தில் யாக்கோப் சுகயீனமுற்று இருந்ததாகவும், மருத்துவத்துக்காக ஸ்பானியாவில் வந்து தங்கியிருந்ததாகவும், ஸ்பானியாவிலுள்ள 'கலிசியா' குடாவில் தம் நண்பனுடன் படகில் தங்கியிருந்து மருத்துவம் செய்ததாகவும், இதன்பின் அவர் எங்கே புதைக்கப்பட்டடார் என்பது எவருக்கும் தெரியாமல் இருந்ததாகவும் கிறீஸ்தவம் சொன்னது.

'சவுல்' என்ற யூத இயற்பெயரைக் கொண்ட பவுல், தனது இறுதி அரைவாசி வாழ்க்கைக் காலத்தை ரோமப் பிரசையாகக் கழித்திருந்தார். ரோமப் பிரஜையாக உரிமையைப் பெற்றுக்கொண்ட இவர் சவுல் என்ற தனது பெயரை கிரேக்க மொழியில் பவுலாக மாற்றி வாழ்ந்தார். இயேசு யூதரின் அரசன் என்ற குற்றத்துக்காக சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டதாக கூறப்படும் காலத்துக்கு 7 ஆண்டுகளுக்குப் பின்னர், இதே ரோமர்களின் பேரரசில் - இயேசுவின் சகோதரனும் யூதனுமாகிய யாக்கோப் எப்படி மத அரசனாக அதுவும் ஜெருசலேம் மத அரசனாக சிம்மாசனம் ஏற்றப்பட்டார்? யாக்கோப்புக்கும் - பவுலுக்கும் ஏற்பட்ட முரண்பாட்டுக்குப் பின்னர் , பவுல் ஜெருசலேமுக்குள் நுழைந்தபோது யூதச்சட்டப்படி கைது செய்யப்பட்டார். இருப்பினும் இவர் ரோமப்பிரசையாக இருந்ததால் ரோமிடம் கையளிக்கப்பட்டார். இங்கே யாக்கோப் யூத கிறிஸ்தவ மதத்துக்குரியவராகவும், பவுல் யூதர் அல்லாதவருக்குமான கிறிஸ்தவ பாரம்பரியத்துக்குரியவராக (இயேசு பாரம்பரியம்) முரண்பட்டிருந்தனர். இவை இரண்டும் 700களின் பின்னர் முற்றாக இணைந்துவிட்டன.

கி.பி 813ல் கார்ல் சக்கரவத்திக்கு ஒரு விடிவெள்ளி யாக்கோப்பின் கல்லறைக்கான பாதையைக் காட்டியதாகவும், (இது யேசு பிறந்தபோது அவ்விடத்தை விடிவெள்ளி காட்டியதாக கூறியது போல) , இதன் உதவியுடன் சக்கரவத்தி யாக்கோப்பின் கல்லறையை ஸ்பானியாவில் கணடறிந்ததாகவும், பின்னர் அக் கல்லறையின் மேல் ஒரு கோவிலைக் கட்டியதாகவும் கூறினர். இக்கோவிலே ஸ்பானியாவிலுள்ள 'சென். யாக்கொப் சந்தியோகு தேவாலயம்' ஆகும். இது யாக்கொப்பின் பிறந்தநாளான யூலை 25ல் கொண்டாடப்படுவதாகக் கூறுகின்றனர். யாக்கோப்பின் இக் கல்லறைக் கோவில் உலகில் முக்கிய வணக்கத்துக்குரிய ஒரு தலமாக இருந்துவருகிறது. சக்கரவர்த்திக்கு விடிவெள்ளி காட்டிய பாதை 'யாக்கோப்பின் வழி' என அழைக்கப்படுகிறது. ஆனால் இன்று யாக்கோப்பின் கல்லறை எருசலேமின் அகழ்வில் கண்டுபிடிக்கப்பட்டது.


இயேசு காலத்தில் கலிலேயா...

கலிலேயா, யூதேயா, சமாரியா ஆகிய இடங்கள் இரண்டாவது யூத யுத்தத்தின் (கி.பி-132) பின்னரே இப் பெயர்களைப் பெற்றிருந்தன. இவ் மூன்று பிரதேசங்களும் வேறான தனித்தனி சமூகப் பண்பாட்டு விழுமியங்களைக் கொண்ட பிரதேசங்களாகக் காணப்பட்டன. யூதேயா மிக நெருக்கமான யூதக் குடியேற்றங்களைக் கொண்டதாக இருந்தது. இது ஜெருசலேமையும், தாவீது பெத்தலேகமையும் உள்ளீடாகக் கொண்டிருந்தது. கலிலேயாவுக்கும் யுதேயாவுக்கும் இடையில் சமாரியா இருந்தது. இது வெளியாட்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட, இவ்விரு நகருக்கு வெளியே திருமணம் செய்த சந்ததியினரைக் கொண்டதாக இருந்தது. இருப்பினும் இது ஜெருசலேமுக்குரிய போதனைக்குரிய பிரதேசமாகவே இருந்து வந்தது. இருந்தும் கூட ஜெருசலேம் கோவிலைக் கட்டுவதற்கான உதவிசெய்யும் உரிமை சமாரியருக்கு சட்டபூர்வமாக மறுக்கப்பட்டிருந்தது.

கி.மு 100 முதல் கி.மு 67 ஆண்டுகள் வரையிலான சுமார் 37 வருடங்கள் கலிலேயாவும், யூதேயாவும் ரோம் சாம்ராட்சியத்தின் கீழ் இருந்தபோதிலும், இவை ஓர் ஒருங்கிணைக்கப்பட்ட பிரதேசமாக இருந்திருக்கவில்லை. இக்காலத்தில் கலிலேயாவிலும், யூதேயாவிலும் வசித்த யூத மக்களின் உறவு முறையிலான நெருக்கம் மட்டுமே இவ்விரு பிரதேசங்களுக்குமான ஓர் பிணைப்பாக இருந்தது. ரோமப் பேரரசின் கீழான புதிய பிரதேசங்கள், அவர்களின் சொந்த கலாசார வடிவங்களைக் கொண்ட புதிய நகர அமைப்புக்களை உருவாக்க முற்ப்பட்டபோது - இவ் யூதேயா, கலிலேயாவைப் (100 வருடங்களின் பிற்பட்ட காலமான யேசுவின் காலத்தில் ) தமது புதிய நகரத்தின் மைய அதிகாரத்தின் கீழ் இவைகளைக் கொண்டுவந்தனர். இதற்கான அதிகார மொழியாக கிரேக்கத்தை பிரகடனப்படுத்தினர்.

ரோமப் பேரரசின் அதிகார அரசியல் ஆணைப் பிரதேச ஒழுங்கமைப்புக்குள், இந்நகரங்கள் ஆளப்பட்ட போது, இதற்குள் வளர்ந்து வந்த யூதப் புதிய தலைமுறையினருக்கு இடையே கலாச்சார முரண்பாடுகள் தோன்ற ஆரம்பித்தது. ஜேர்தான் நதிக்கரையில் இயேசுவுக்கு திருமுழுக்கு -ஞானஸ்நானம்- கொடுத்தவராகக் கருதப்படும் யோவான், யூதர்களின் ஒரு மத அரசனாகும். இவர் விவாகரத்துப் பெற்றிருந்த தனது சகோதரனின் மனைவியை திருமணம் செய்திருந்தார். இது ஒரு பெரிய விவகாரமாக அன்றிருந்தது. ஏனெனின் யூதர்களின் சட்டதிட்டங்கள் இதைத் துளியளவும் ஏற்றுக் கொள்ளவில்லை. ரோமர்களின் கலாசார சட்டதிட்டங்கள் இவருக்கு இசைவாகவே இருந்தது. யூத புதிய தலைமுறையினர் யோவானின் செயலுடன் உடன்பட்டு ஒத்துப்போனார்கள். ஆயினும் இச் செய்கையால் இவர் பிரசித்தி பெற்ற ஒரு மத அரசனாக மாறமுடியவில்லை. ரோமருக்கு இவரின் செய்கை தமது தமது கலாச்சார சட்டதிட்டங்களுக்கு இசைவாக இருந்ததால், யூதப்பழங்குடி சம்பிரதாயத்தின் மீது தமது கலாச்சாரம் படர்ந்து பழக்கப்படுவதை, ஒழுங்கமைக்கப்படுவதை விருப்புடன் வரவேற்றனர்.

ரோமப் பேரரசின் கீழிருந்த எல்ல பட்டிணங்களும்- நகரங்களும், அதன் மைய அரசுடன் இணைக்கப்பட்டிருக்கவில்லை. சில நகரங்களை அப்பிராந்திய மக்களின் செல்வாக்குப் பெற்ற மதத்தலைவர்களிடம் கடவுளின் பரிசாகக் கொடுத்து, அவர்களின் மூலமாகவே நிர்வகித்தனர். பொதுகாக பட்டிண - நகர நிர்வாகிகள் உயர் வர்க்கத்தினராகவே இருந்தனர். இவர்கள் நடுத்தர வர்க்கத்திலிருந்து வந்திருந்தனர். சில நகரங்களில் ரோமர்கள் பரம்பரை விவசாயிகளாக வாழ்ந்து வந்ததால், இவர்கள் ஜனநாயக வழிப்பட்ட முதலீடுகளைக் கொண்டு, இந்நகரங்களை தமது பேரரசுடன் இணைக்கும் மாற்று வழிகளில் விருப்பங் கொண்டிருந்தனர். நகருக்குரிய ஆளுமை பேரரசுக்குரியதாகவும், கிராமப்புறங்களிலிருந்து கொள்வனவு செய்யும் ஒழுங்குமுறைக்கு உட்பட்டவையை இவர்களுக்கு அனுமதித்திருந்தனர். இருந்தும் நிர்வாக மற்றும் வாத்தக மொழியாக கிரேக்கமே அங்கீகாரத்தில் இருந்தது. உள்ளுர் பேச்சு மொழியாக அவரவர் சொந்தமொழிக்கு உரிமை வழங்கப்பட்டிருப்பினும், வர்த்தக கலாச்சார நிர்வாக மொழியாக கிரேக்க மொழி பல நூற்றாண்டுகாலமாக வழக்கில் இருந்தது.

ரோமப் பேரரசுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கான வர்த்தகப் போக்குவரத்துப் பாதைகளை, பேரரசின் இராணுவம் திறம்பட செப்பனிட்டது. கட்டுப்பாடற்ற திறந்த வர்த்தகத்துக்கான பாதைகளாக இவைகள் கட்டியமைக்கப்பட்டன. கிரேக்கரும், பொனிக்கரும் கி.மு பல நூற்றாண்டு காலமாக இப்பிரதேசங்களில் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தனர். யூதர்களும் தமது சிறு நகரங்களிலிருந்து கி.மு 500 ஆண்டுகளில் இருந்து சிறு வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர். சாம்ராட்சியமானது மத்திய சமுத்திரத்தையும், கருப்புக் கால்வாயையும் சூழ்ந்திருந்தது. இஸ்பானியாவின் தெற்குப் பகுதியான குரோடாபாவில் யூதக் குடியேற்றமானது கி.மு பல நூற்றாண்டு காலமாக இருந்து வந்திருக்கின்றது. பொனிக்கரின் தலைமை வர்த்தக நகரங்களாக Tyrus மற்றும் Sidon கலிலேயாவுக்கு பக்கமாக இருந்தது. பொருட்களின் வணிகம் கிழக்கிலிருந்து இருந்து மிகவேகமாக ஒட்டக முதுகுகளில் ஏற்றப்பட்டு Sephoris ஐயும் ஊடறுத்து, மத்திய சமுத்திரம் வரை பரந்திருந்தது. கப்பல் வழியான வணிகம் நாம் அறிந்த நகரங்களான அலஸ்சாண்டிரியா, அந்தியோக்கியா, குரிந், கர்த்தாக்கோ, கத்தக்கொணியா நகரங்களுக்கு இடையான வர்த்தகமாக இருந்தது. குறிப்பாக கருவாடு, விதை பயிர்களுடன் மத்திய கிழக்கில் பழரசங்களும்- வைன் - கொள்வனவு செய்யப்பட்டன. இந்த வர்த்தகத்தில் பெரிய பணக்காரர்களாக யூதர்களும், கிரேக்கர்களும், பொனிக்கரும் இலாபமீட்டினர்.

அலெஸ்சாண்டிரியாவில் ஒரு இலட்சம் யூதர்கள் கிறிஸ்து பிறந்ததாக கூறப்படும் காலத்துக்கு முன்பே, பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு இங்கே ஒரு தனியான கல்வி நிலையமும் இருந்தது. ஆனால் தொடர்புகளுக்கான மொழியாக கிரேக்க மொழியே பாவனையில் இருந்தது. இங்கிருந்தவர்களே பழைய யூத விவிலியங்களை கிரேக்க மொழியில் மொழிபெயர்த்தனர். இவர்கள் தமது இளைய தலைமுறையினருக்கு, தமது யூத மதத்தையும், கலாச்சாரத்தையும் இதனூடாவே போதித்தனர்.

(பி.குறிப்பு)கிரேக்கத்தில் அரிஸ்டாட்டில் மற்றும் பிளாட்டொவின் எஜமானர்களுக்குத் துணைபோகும் வரட்டுஅறிவியல் சாதனைகளில் கிரேக்க அறிவியல் அஸ்தமானமாகுவதற்கு முன்பு இந்த அலேஸ்சாண்டியாவில் பொற்காலம் தோன்றியது. அரிஸ்டாடிலின் மாணவரான அலெஸ்சாண்டரின் பரவலான ஆக்கிரமிப்பால் ஏற்பட்ட பதிய சந்தையினூடாக இவ் அறிவியல் புத்துணர்ச்சி பெற்றிருந்தது. அலெஸ்சான்டிரியாவில் பித்தொலமிஸ் காலத்திய அருங்காட்சியகம் பின்னாளில் கண்டுபிடிக்கப்பட்டது. இங்கே மிகப் பெரிய நூல் நிலையமும், ஆய்வுகூடமும் இதில் அடங்கியிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இவ் ஆய்வு கூடத்தில் ரட்டொஸ்தினிஸ் பூமி பூகோள வடிவமானதென்றும், அதன் சுற்றளவும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. கிப்பொச்சரஸ் விண்மீன்களின் பிறப்பு இறப்புக்களைக் கண்டுபிடித்திருந்தார். இங்கு யூக்லீட் கண்டுபிடித்திருந்த வடிவியல் கணித உண்மைகள் அவருக்குப் பின் 23 நூற்றாண்டு காலமாக மாறாமல் இருந்தன. இங்கு பூமி சூரியனைச் சுற்றி வருவது நிரூபிக்கப்பட்டிருந்தது. எல்லாச் செடி கொடிகளும், விலங்குகளும் இனவாரியாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஆயினும் இவைகள் 1500 வருடங்களுக்குப் பின்னர்தான் கண்டுபிடிக்கப்பட்டன. கி.பி 370ல் அலெஸ்சாண்டிரியாவின் ஆர்ச் பிசப்பான சிரிலின் தலைமையில் கிறிஸ்தவ மதபீடம் இந்த நூலகத்தையம், ஆய்வு கூடத்தையும் சூறையாடி, எல்லாப் புத்தகங்களையும் தீயிட்டுக் கொழுத்தியது. நூலகத்தின் தலைவரும், பெண் விஞ்ஞானியுமான கிப்பாட்டியா பயங்கரமான சித்திரவதைக்குப் பின்னர் உயிருடன் கொளுத்தப்பட்டார். சிரில் மதத்தலைவராக உயர்த்தப்பட்டார். இங்கு நிச்சயமாக உண்மையான யூதவரலாற்றும் எரிந்து சாம்பலாகி இருக்கும்.

ரோமப் பேரரசின் கிழக்கு - தெற்குப் பகுதிகள் பெரும் பழத்தோட்டங்களைக் கொண்டதாக இருந்தது. எகிப்தில் இருந்து கோதுமையும், விதைகள், பழங்கள் என்பனவும் ஏற்றுமதி செய்யப்பட்டன. குறிப்பாக அத்திப்பழம், ஒலிவம்பழம் போன்றவை குறிப்பாக கிழக்கிலிருந்து ஏற்றுமதியாகின. அத்திப்பழமும், திராட்சைப்பழமும் பழரசம் செய்யப் பயன்படுத்தப்பட்டன. அத்திப்பழமும் திராட்சைப்பழமுமே பழரசத்துக்கான மூலப்பொருளாக அன்று இருந்தது. இக்காலத்தில் சீனி கண்டுபிடிக்கப் படவில்லை. இக்காலத்தில் இனிப்பான பழரசத்தைத் தயாரிப்பதற்கு, அவர்கள் தேனையே பயன்படுத்தினர். ஆனால் தேன் அன்று ஒரு வரையறுக்கப்பட்ட பண்டமாகவே இருந்தது. கரும்பும், வாழைமரமும் முதன் முதலாக இந்தியாவில் கண்டு பிடிக்கப்பட்டது. கொலம்பஸினதும், வாஸ்கொடகாமாவினதும் பயணங்களின் பின்னரே இது இங்கே அறிமுகமானது. இதனால் இவர்கள் இனிப்பானதும்,போதை கூடியதுமான பழரசங்களை உருவாக்கினர். இவை அன்று ஏற்றுமதியில் தங்கமாக இருந்தது. இவை ரோமுக்கு ஏற்றுமதியாகின. இக்காலத்தில் ரோமப் பேரரசு முழுவதும், ரோம இராணுவத்தினர் முந்திரிகை நடுகையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மத்திய சமுத்திரம் பெரிய மீன் வருவாயைக் கொடுக்கும் இடமாக இருந்தது. இங்கு கருவாடு செய்யப்பட்டு ரோம் இராட்சியம் முழுவதும் அனுப்பப்பட்டது. கலிலேயாவின் வாழ்வின் உயிர்நாடியாக பழத்தோட்டம் இருந்தது. இதற்கு இது நல்ல சூரியப்படுகை இடமாகவும், தகுந்த தகவெப்பம் கொண்ட பிரதேசமாவும் காணப்பட்டதே இதன் சிறப்பம்சமாகும். கலிலேயா சிறிதளவு கோதுமையையும் கொண்டிருந்தது. வடக்குப்பக்க மலைப்பிரதேசம் ஒரு நல்ல மக்கள் வாழ் நிலமாகவும், செல்வமாக நல்ல குடிதண்ணீரையும் கொண்ட வளமான இயற்கையாக இருந்தது. நிலத்துடனான இம் மக்களின் பிணைப்பு, விதைப்பயிர் செய்கையுடனும், மீன்பிடியுடனும் கலந்து நகரின் சந்தை மையத்துடனும் சூழவுள்ள குக்கிராமங்களாக இணைந்திருந்தது.
தொல்பொருள் ஆய்வுகளின் படி, கலிலேயா ஒரு சிறந்த வர்த்தக சந்தை இணையமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது வாங்கும் விற்கும் பெரும் சந்தைப்பிரதேசம் ஆகையால் கட்டிடக்கலைகளும், அபிவிருத்தி கொண்ட இடமாகவும் காணப்பட்டது. கடந்த இருபது வருட தொல்பொருள் ஆய்வுகளின் படி, கலிலேயா தனக்கான சொந்தப் பொருளாதாரத்தைக் கொண்ட நகரமாக, செல்வந்த இடமாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கலிலேயாவின் இச்சிறப்புத் தன்மையால், பல புதிய நகர அமைப்புக்கள் இங்கு இலகுவானது. இதற்கு அடிப்படையாக நல்ல குடிதண்ணீரும், கழிவு நீர் கால்வாய் அமைப்புக்களும் இவற்றைத் துரிதமாகச் சாத்தியமாக்கியது. கிரேக்கத்தில் அமைப்புப்பெற்ற புதிய நகரில் ஒன்றான செப்கொரிஸ் (Sephoris) குறிப்பிடத்தக்கது. இங்கே அப்பலோக் கோவிலும், அக்கடமியும், விளையாட்டு -களியாட்ட இடங்களும், பெரிய கொட்டகைகளும் இவ் நகரத்தில் காணப்பட்டன. இங்கே 20.000 குடிமக்கள் வாழ்ந்தனர். இந்நகரம் இயேசு வாழ்ந்ததாகக் கூறப்படும் நசரேத்திலிருந்து ஏழு மைல் தொலைவில் அமைந்திருந்தது. செப்கொரிஸ் வாங்கும் விற்கும் சந்தைப்பிரதேசமாக இருந்ததால், இங்கே தத்துவவாதிகளும், புத்ததுறவிகளும் நிறைந்து விவாதிக்கும் இடமாவும் இருந்தது. இக்காலத்து சந்தைவடிவமானது ஆண், பெண் வேறுபாடின்றி கூவி விற்கும் நடைமுறையைக் கொண்டதாகவும், புதிய அன்றாட செய்திகள் கூட கூவல் மூலமே மக்களுக்கு பரிமாறப்பட்டது. இம்மக்களுக்கு கிரேக்கமொழி ஒரு பிரச்சினையாக இருந்திருக்கவில்லை. ஏனெனில் கி.மு 340களில் அலெஸ்சாண்டரின் சாம்ராட்சியத்தில் இந்தியா சூழ்ந்த பகுதிகள் கூட இவ்விணைப்பில் இருந்தது. அலெஸ்சாண்டர் உள்ளுர் கலாச்சாரத்தில் கடும் போக்கைக் கொண்டிராமல் கிரேக்கத்தை கொண்டுவருவதில் கவனமாக இருந்தார். இதனால் தான் அலெஸ்சாண்டர் இறந்ததும், செல்வம் சரிந்து மூழ்கியது.

ரோமப் பேரரசின் காலத்தில், கலிலேயாவில் இயேசுவின் காலம் மூன்றாம் தலைமுறையாக இருந்தது. ஜோசேப் கூட அவரது ஆயுட்காலம் முழுவதும் ரோமப்பேரரசின் ஆட்சிக்காலத்தின் கீழேயே கழித்திருந்தார். ஆனால் ஜோசேப்பின் தகப்பனாரான யாக்கோப்பின் இளமைக்காலம் ரோமப் பேரரசின் கீழேயே இருந்தது. (கி.மு 63) . இவர்களின் இடப் பெயர்வுகளால் கிரேக்கம் அறிதல் மொழியாகவும், தொடர்பு மொழியாகவும் இவர்களுக்கு இருந்ததில் ஆச்சரியமில்லை. யூதர்கள் இடம்பெயர்ந்த வெளிநாட்டவர்களாக வாழ்ந்ததால், யூதேயா - கலிலேயா நகரத்து மக்களின் இவ் வெளி உறவுகளுக்கு இடையிலான கலாச்சார இணைவுகள் இவர்களுக்கு மிகவிரைவாக கிரேக்கத்தை உள்வாங்கிக் கொள்வதை விரைவுபடுத்தும் காரணிகளாக அமைந்தது. கலாச்சார வேறுபாட்டின் முரண்பாடுகளும், பலமத இணைவுக்கான (கூட்டுத்தலைமை ) முரண்பாடுகளும் தோற்றுவிக்கும் புதிய சிக்கலுக்கான ஒரு பொதுவான தீர்வாக கிரேக்கமொழி, மக்களிடம் காணப்பட்டதில் ஆச்சரியமில்லை. மதங்களின் கூட்டுத்தலைமை அதிகாரத்தின் கீழ், இத்தலைமுறை முரண்பாட்டுக்கான தீர்வாகவும், எதிர்காலத்தில் தம் மதத்தலைமையை நிலையாகத் தக்கவைக்கும் நிழல் யுத்தத்தில் யூதர்களும் பங்கேற்பது தவிர்க்கமுடியாத யதார்த்தமாவே இருந்தது. கிரேக்க ரோம சிந்தனைகளில் இருந்தும், ஏனைய மதக் கருத்துக்களில் இருந்தும் நடைமுறைப் பிரச்சனைக்கான தீர்வுகளைத் தேடுவதும், புதிய சமுதாயமாக மாறுவதும் யூதசிந்தனைக்கும் அவசியமானதாகவே இருந்தது. இங்கே உடனடிச் சமூகச் சீர்திருத்தம் ஒழுக்கத்தில் முனைப்புப் பெறுவதைக் காணலாம். யோவானின் கருத்துப்படி, சமாரியப் பெண்கள் யூதர்கள் அல்ல என்று உரைப்பதும், இயேசுவின் குரலாக 'பாவம் செய்யாதவன் கல்லெறியட்டும்' என்று ஓங்கி ஒலிப்பதும் நல்ல எடுத்துக்காட்டு.

லாசருவின் சகோதரிகளான (மார்த்தாவும், பெத்தானியா மரியாளும்) பெத்தானியா மரியாள் அவர்களின் கலாச்சாரத்தில் இருந்து வேறுபட்டபோது, அதை ஆதரித்த இயேசு மார்த்தாவிடம் அவளுக்கு உதவும்படியும், அவள் நல்ல பகுதியையே தேர்ந்தெடுத்ததாகக் கூறுவதும் பைபிளில் பார்க்கமுடியும். ரோம கிரேக்க கலாச்சாரத்தை உள்வாங்கும் இச்சமூகம் ஆண் -பெண்களுக்கு இடையிலான குறைந்த பட்ச சமத்துவத்தை -கிரேக்க ரோம அதிகாரங்கள் அங்கீகரிப்பதைப்போல - அங்கீகரிக்கக் கோரி துடித்தெழுந்த நாடியழுத்தமே இயேசு என்ற பாத்திரமாகும்.

அடிமை நிறுவன மூலதனம்

இயேசு பிறந்த காலத்தில் Augustus என்ற மன்னனின் ஆட்சி நடந்தது. (கி.மு 27 இல் இருந்த கி.பி 14 வரை) இம்மன்னரின் ஆட்சிக்காலத்தில் சமாதானம் என்ற முழக்கம் வலுவாக ஓங்கி ஒலித்தது. கிரேக்க - ரோம சாம்ராட்சியம் கிட்டத்தட்ட கி.பி 180ஆண்டு வரை தமது பொருளாதார அரசியலை கட்டியெழுப்ப வேண்டியிருந்தது. குறிப்பாக தமது ஆக்கிரமிப்புப் பிரதேசங்களில் தமது இராணுவத்தினரை பொதுமைப்படுத்தப்பட்ட ஒழுங்கமைப்புக்குள் கொண்டுவருவதும், மையப்படுத்தப்பட்ட நிர்வாக ஒழுங்குக்குள் கட்டியமைப்பதும் அவசியமானதாக இருந்தது. இதனால் அவர்கள் சமாதானம் என்ற கோசத்தை முன்வைக்க வேண்டியிருந்தது. இதனூடாக சட்டம், நல்ல வியாபாரத்துக்கான வசதிகள், கண்டுபிடிப்புக்கள், நல்ல வீதிகள் கொண்ட போக்குவரத்து, நகரத் தொடர்புகள், குறிப்பாக நல்ல குடிதண்ணீர் வசதி, கழிவுநீர் கால்வாய்கள், நீர்ப்பாசனத் திட்டங்கள் போன்றவற்றை செய்வதற்கு அவர்களுக்கு அமைதி தேவைப்பட்டது. இவ் அமைதியின் ஊடாகவே அடிமைகளைக் கொண்டு இவற்றைத் திறம்பட நிறைவேற்றலாம் என நம்பினர். இதற்கு சான்றாக இம்மன்னன் காலத்திலேயே நல்ல குடிநீர் கிடைத்ததை உலகம் அறியும்.

இக்காலத்தில் கலாச்சார, நிர்வாக, வியாபார (நுகர்வு) மொழியாக கிரேக்கமொழி இருந்தது. புதிய பட்டணங்கள் வடிவமைக்கப்பட்டன. 30,000 மக்கள் பார்வையிடக் கூடிய நாடகக் கொட்டகை வடிவமைக்கப்பட்டது. மக்கள் குழுமமும் பிற இடங்களாக களியாட்ட மைதானங்கள், விளையாட்டு மைதானங்கள் போன்ற பலவற்றை வடிவமைத்திருந்தனர். இவற்றுள் சிலவற்றை பின்னர் திருச்சபை - முதலாவது பாப்பாண்டவர் பேதுருவானவரின் இடம் ஆகப் பயன்படுத்தப்பட்டது. இம்மன்னர் ஆட்சியின் போது செல்வம் செழிப்பாகக் குவிந்தது. களியாட்டமையங்கள் அதிக வருவாயைத் தந்தது. மக்கள் பெருவாரியாக குவியப்படும் மையங்கள் அமைக்கப்பட்டதால் இவர்களது அரசியல், நிர்வாகஅமைப்பு முறைக்கான பிரச்சாரங்கள் இலகுவாகின. பிளாட்டோவையும், அரிஸ்டாட்டிலையும் பெரிதாக ஆட்டிய -மரணம் யாரால் நிகழ்தப்படுகின்றது என்ற- கேள்வியும், அதற்கான அவர்களின் விந்தையான தத்துவ முடிபுகளும் - இதிலிருந்து உறுதியாக்கப்பட்ட கடவுளும் பரலோக -பூலோக இராட்சிய அமைப்பு விளக்கங்களும் மரணத்தை அளிக்கும் தகுதி விண்ணுலகத்தில் எப்படி கடவுளுக்கு உண்டோ அவ்வாறு மண்ணுலகத்தில் அவரின் நேரடி வாரிசாக ஒருசிலருக்கே இருந்தது. இருப்பினும் இம்மன்னனின் மரணத்தீர்வைக்கான அதிகாரம் அம்மக்களின் அதிகளவு முரண்பாடுகளுக்கு உள்ளாகாமல் இருந்தது. இதற்கு இம்மன்னனின் ஆட்சிக்காலத்தில் நகர வடிவமைப்பு முன்னேற்றங்கள் மன்னனுக்கும் மக்களுக்கும் முன்பிருந்த இடைவெளியைக் குறைத்திருந்தது. பைபிளில் உள்ள இயேசுவுக்கு பிலாத்து மரணத்தீர்வை அளித்த விதம், இம்மன்னனைப் போலவே பிலாத்துவும் மக்களின் விருப்புக்கு மதிப்பளித்து தீர்ப்பளித்ததாக ஒரு நம்பிக்கையை அவர்களால் ஏற்படுத்த முடிந்தது.

இயேசு காலத்தில் ரோமாபுரியின் நிதியானது - அடிமை நிறுவன மூலதனமாகவே இருந்தது. அப்பொழுது அடிமைகள் மிக மலிவாகவே வாங்கப்பட்டனர். கி.பி 100 வருடங்கள் வரை அடிமைகளை வாங்கும் வழக்கம் இருந்து வந்தது. ரோம் சாம்ராட்சியத்தைப் பொறுத்தவரை வடக்கு நீர்ப்பிரதேசமாகவும் மேற்கு அத்திலான்டிக் கடலாகவும் தெற்கு சகாராப் பாலைவனமாகவும் இருப்பதால் அடிமைகளை பயன்படுத்தாமல் இவர்களால் மூலதனத்தை திரட்டுவது அன்று முடியாத காரியமாக இருந்தது. தொழில் நுட்பத்தில் இவர்களுக்கு அதிகளவு விருப்பு இருந்திருக்கவில்லை. ஏனெனில் அடிமைகள் இவர்களுக்கு அவ்வளவு மலிவாகக் கிடைத்தனர். 200 ஆண்டுகளின் பின்னரே இது சாத்தியமானது. இயேசுவின் காலத்தில் ரோம் சாம்ராட்சியத்தில் சரி அரைவாசிப்பேர் அடிமைகளாக இருந்தனர். அடிமைகள் மிகவும் வறியவர்களாகவும் கைவேலையில் ஒருவர் அல்லது இருவராக இணைந்து வேலை செய்தனர். வீட்டு வேலைகள் சமையல் கழுவுதல் முதற்கொண்டு அடிமைகளே பயன்படுத்தப்பட்டனர். இதில் புதுமை என்னவென்றால் புதியஏற்பாட்டில் அடிமை என்ற வார்த்தையே பயன்படுத்தப்படவில்லை. ஆனால் 'நா காமா'வில் கண்டெடுக்கப்பட்ட மரணச்சுருள்களும், எழுத்துருவச்சுருள்களும் இதை மெய்ப்பிக்கின்றன. இக்காலத்தில் ஒர் அடிமையின் விலை ஆகக்கூடுதலாக 30 வெள்ளிக் காசாக இருந்தது. இது இயேசுவைக் காட்டிக் கொடுத்ததற்காக யூதாஸ் பெற்ற காசுக்குச் சமமாகவும் இருக்கிறது


இக்காலத்தில் அடிமைகள் வீட்டுப்பிராணிகள் போலவே கருதப்பட்டனர். இந்த அடிமைக்கு எந்த உரிமையும் கிடையாது. இவனுக்கு எந்தப்பாதுகாப்பும் கிடையாது. இதைவிடவும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் எவற்றுக்கும் இவனுக்குத் துளியளவும் உரிமைகிடையாது. தமது வளர்ப்பு மிருகங்களையும், தமது உடைமைகள் அனைத்தையும் (மனைவி பிள்ளைகள் ) தமது எஜமானர்களுக்கு எந்தநேரத்திலும் இழக்கவேண்டும். இவர்கள் எப்பொழுதும் எஜமானர்களின் ஆயுதமாகவே இருக்கவேண்டும். இவ் அடிமைகள் மனிதரல்ல: வெறும் சடப்பொருளே. ஒர் அடிமையால் தனிப்பட எதுவும் பேசமுடியாது. அவன் பேசுவதெல்லாம் அவன் உரிமையாளனின் வசனங்களே. இவைகள் மீறப்படும்போது, உரிமையாளனால் இவன் கொல்லப்படவோ அல்லது ஆண்டவனின் தண்டனைக்கு அவனைக் கையளிப்பதோ ஒரு சாதாரண வழக்கமாக இருந்தது.

ஒர் அடிமை தன் எஜமானனை ஏமாற்றவோ , அவனுக்கு பிழைவிடவோ அல்லது பாசாங்காக நடித்து வாழ்ந்தாலோ அதைத்தண்டிக்கும் நேரடி உரிமை எஜமானர்களுக்கு இருந்தது. இவர்களின் உடலின் பகுதிகளைச் சீவவோ, வெட்டி எறியவோ அவர்களுக்கு பூரண உரிமையிருந்தது. இதை யூத அடிமைகள் அறிந்திருந்தனர்.

பேரரசின் மூலதனத்தால் அடிமைகளுக்கும் எஜமானர்களுக்கும் இடையிலான உள்ளடக்கத்தில் மெல்ல மாற்றங்கள் ஏற்படத்தொடங்கியது. அடிமைகள் யதார்த்தமான இயற்கை நடைமுறையின் ஊடாக அனுபவரீதியான உயர்ந்த அறிவைப் பெற்றிருந்தனர். எஜமானர்களின் வீட்டுவேலைகளின் ஊடாகவும் கிரேக்க மொழியை எழுதவும் வாசிக்கவும் கூடிய அறிவைப்பெற்றிருந்தனர். சில மூலிகை, கைவைத்தியத்துறையிலும், வியாபார விடயங்களிலும் அதிக அறிவைப் பெற்றிருந்தனர். இது அவர்களின் தொழில் ரீதியிலான தேடல் அறிவாக இருந்தது. அதிகமான அடிமைகள் அனுபவத்திறன் வாய்ந்த நுணுக்கமான கட்டிடக்கலையில் நிபுணத்துவத்திறனுடன் வளர்ந்திருந்தனர்.

இவ்வாறு இயற்கையுடன் கூடிய அறிவாற்றலுடன் வளர்ந்த தொழிற்துறை அறிவியல் சார்ந்து வளர்ந்த அறிஞர்கள் அடிமையிலிந்து பிறப்பெடுத்ததும் அடிமைகளின் அறிவியல் சார்ந்த மனிதவலு கவனிப்புக்கும், பெறுமதிக்கும் உட்பட்டது. இதனால் சக்கரவர்த்திகள் அடிமைகளைப் பாதுகாக்கும் சட்டங்களை உருவாக்க வேண்டியிருந்தது. இதனால் இயேசு காலத்தில் Lex Petronia அடிமைகளை எஜமானர்கள் தமது வளர்ப்பு மிருகங்களுக்குத் தீனியாக எறிவதையும், தண்டிப்பதையும் தடுக்கும் சட்டத்தை முதன் முதலாகப்பெற்றனர். அடிமைகள் தண்டிக்கப்பட முன் நீதி விசாரணைகளின் முன்னால் நிறுத்தப்படவேண்டும் என்ற கட்டளை சக்கரவர்த்தியால் விடப்பட்டிருந்தது.

நீரோ மன்னன் காலத்தில் அடிமைகளின் மீது சுமத்தப்படும் குற்ற வழக்குகளுக்கு, எதிராக தமது தரப்பு உரிமைகளைச் சுட்டிக்காட்டவும் எஜமானர்களுக்கு எதிராக சக்கரவத்தியிடம் முறையிடவும் முடிந்தது.

கலிலேயாவின் நான்கு வித வகுப்பினர்

கலிலேயா நகரை எடுத்துக் கொண்டால், அங்கே வாழ்ந்த எல்லோரும் அவ் நகர அமைப்புக்கு உரியவராகக் கணிக்கப்படுவதில்லை. அங்கீகரிக்கப்பட் நகரப்பிரசைகளே நகருக்குள் வரமுடியும். கிட்டத்தட்ட இன்றைய இலங்கை ரூபா 15,000 த்தை சொத்தாகக் கொண்டிருந்தவர்களே அன்று நகருக்கு உரியவர்களாகக் கருதப்பட்டனர். இந்த நகர அமைப்பில் பதிவுக்குரிய வகுப்பினராக சிலரே கணிக்கப்பட்டனர்.

தொடரும்...

Wednesday, April 19, 2006

நிகரில்லா பல்கலைக் கிரிமினல் கழகங்கள்

நிகரில்லா பல்கலைக் கிரிமினல் கழகங்கள் -தொடரும் மாணவர் போராட்டம்!

கைக்குட்டையால் முகத்தை மறைத்துக் கொண்டு பத்திரிகைகள் தொலைக்காட்சிகளுக்குப் பேட்டியளிக்கும் "தீவிரவாதி'களைப் பார்த்திருக்கிறோம். அவர்களைப் போல, அடையாளம் தெரியாதபடி தமது முகத்தை கைக்குட்டையால் மறைத்துக் கொண்டு, போராடும் சத்தியபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழக மாணவர்கள் பேட்டியளிப்பதைக் கண்டு தமிழகமே அதிர்ச்சியடைந்தது.

""கல்லூரி நிர்வாகம் "பறக்கும்படை' என்ற பெயரில் ஒரு குண்டர் படையை வைத்திருக்கிறது. அவர்கள் மாணவர்களைக் கண்காணிப்பார்கள். போராட்டத்தில் ஈடுபடுவோரைக் கண்டுபிடித்து "டார்க் ரூம்' எனப்படும் கொட்டடியில் அடைத்து வைத்து ஆபாச வசவுகளுடன் காட்டுமிராண்டித்தனமாக அடிப்பார்கள். போராடிய குற்றத்திற்காக இதுவரை 80 மாணவர்களை நிர்வாகம் "சஸ்பெண்ட்' செய்துள்ளது. இத்தகைய பழிவாங்கலிலிருந்து தப்பிக்கவும் போராட்டத்தைத் தொடரவும் நாங்கள் எங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் இருக்கிறோம்'' என்று பேட்டியளித்தார்கள், போராடும் மாணவர்கள். தனியார் சுயநிதிக் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் மோசடிபகற் கொள்ளையையும் கிரிமினல் கொட்டங்களையும் மீண்டுமொருமுறை நிரூபித்துக் காட்டிவிட்டது, கடந்த இரு மாதங்களாகத் தொடரும் மாணவர் போராட்டம்.
நாடு முழுவதும் பொறியியல் கல்வியை முறைப்படுத்த ஏற்படுத்தப்பட்ட அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ), கடந்த பிப்ரவரியில் தனியார் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. இக்கவுன்சிலின் அனுமதியின்றி பொறியியல் கல்வி வகுப்புகளைத் தொடங்கக் கூடாது; பொறியியல் பாடப் பிரிவுகளுக்கு கட்டாயம் கவுன்சிலின் அங்கீகாரம் பெறவேண்டும் என்பதுதான் அந்த அறிக்கையின் சாரம். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரும் கவுன்சிலின் (ஏஐசிடிஇ) அங்கீகாரம் பெறாமல் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் நடத்தும் படிப்புகள் செல்லாது என்றார். கவுன்சிலின் அறிவிப்பை எதிர்த்து நிகர்நிலைப் பல்கலைக் கழக முதலாளிகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குகளைத் தொடுத்தனர்.

இதற்கிடையே தங்களது எதிர்காலமே கேள்விக்குறியாகிவிட்ட அச்சத்தில், இத்தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழக மாணவர்கள் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டபோது, மழுப்பலான திமிர்த்தனமான பதில்தான் கிடைத்தது. ""நாங்கள் கொடுக்கும் சான்றிதழே போதுமானது. தொழில்நுட்பக் கவுன்சிலிடம் அங்கீகாரம் பெறத் தேவையே இல்லை. வீண் வதந்தியால் உங்கள் எதிர்காலத்தைப் பாழடித்துக் கொள்ளாதீர்கள்'' என்று உபதேசம் செய்து நிர்வாகம் எச்சரித்தது. ஆனால், அண்மையில் சென்னையில் நடந்த வேலைவாய்ப்பு கண்காட்சியில் பங்கேற்ற பன்னாட்டுஉள்நாட்டு தொழில் நிறுவனங்கள், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சிலின் அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்கள் அளிக்கும் சான்றிதழ்கள் தரமற்றவை என்று நிராகரித்துள்ளன. இதனைத் தொடர்ந்து ஹெச்.சி.எல். நிறுவனமும் இத்தகைய தரமற்ற சான்றிதழ்களைக் கொண்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட தனது ஊழியர்களை வெளியேற்றியுள்ளது. அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலும் தன்னிடம் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் எவையெவை என்பதை இணையதளத்தின் மூலம் பகிரங்கமாக வெளியிட்டது.

இவற்றையெல்லாம் சுட்டிக் காட்டி தனியார் நிகர்நிலை பல்கலைக்கழக மாணவர்கள் மீண்டும் நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியும் முறையான விளக்கம் தரப்படாததால், லட்ச லட்சமாகக் கொட்டிக் கொடுத்து படிக்கும் மாணவர்கள் தமது எதிர்காலமே கேள்விக்குறியாகிவிட்ட பீதியில், வேறு வழியின்றி போராட்டத்தில் குதித்தனர். எஸ்.ஆர்.எம். கல்லூரியில் தொடங்கிய போராட்டம், ஜேப்பியாரின் சத்தியபாமா, எம்.ஜி.ஆர். பாரத் முதலான பல்கலைக் கழகங்களிலும், ஏன், காஞ்சி மட சங்கராச்சாரியின் சந்திரசேகரரேந்திர விசுவமகா வித்தியாலயாவிலும் காட்டுத் தீயாகப் பற்றிப் படர்ந்தது. வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள் என போராட்டங்கள் தொடர்ந்தன. பீதியடைந்த இப்பல்கலைக் கழகங்களின் முதலாளிகள், குண்டர்களை வைத்து போராடும் மாணவர்களை அடித்து நொறுக்கினர். மாணவர்களை பகிரங்கமாக மிரட்டுவது, சான்றிதழ் தரமாட்டோம் என்று அச்சுறுத்துவது, போராடும் முன்னணியாளர்களைக் கண்டுபிடித்து இடைநீக்கம் செய்வது, போலீசை ஏவி கைது செய்து பொய் வழக்கு சோடிப்பது, குண்டர்களை வைத்து கல்லூரியைச் சேதப்படுத்திவிட்டு பழியை மாணவர்கள் மீது போடுவது என்பதாக கல்வி வியாபாரிகளின் அட்டகாசம் தலைவிரித்தாடியது. மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து இந்நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் காலவரையற்று மூடப்பட்டன.
ஜேப்பியாரின் சத்தியபாமா பல்கலைக் கழகத்தில் பொறியியல் கல்வி பயின்று வந்த ராபின்வாஸ் என்ற மாணவர் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக, ""உன் தந்தையிடம் சொல்லி சீட்டைக் கிழித்து வீட்டுக்கு அனுப்பி விடுவேன்'' என்று முன்னாள் சாராய வியாபாரியும் இந்நாள் கல்வித் "தந்தை'யுமான ஜேப்பியார் மிரட்டியுள்ளார். அதனால் மனமுடைந்த ராபின்வாஸ் மார்ச் 3ஆம் நாளன்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனாலும் ராபின்வாஸை தற்கொலைக்குத் தள்ளிய கொலைக் குற்றவாளி ஜேப்பியார் இன்றுவரை கைது செய்யப்படவில்லை.

""தனியார் மோசடி நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்! ஜேப்பியாரை கொலைக் குற்றத்தின் கீழ் சிறையி லடை!'' என்ற முழக்கங்களுடன் மாணவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவர்களது பெற்றோர்கள் மார்ச் 2ஆம் நாளன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்து தங்கள் பிள்ளைகளை கல்லூரி நிர்வாகம் அடியாட்களை வைத்து தாக்குவதாகவும் மிரட்டுவதாகவும் கண்ணீர் மல்க பேட்டியளித்தனர். நெல்லை பி.எஸ்.என். கல்லூரி மாணவர்கள், நிர்வாகம் தங்களிடம் பல லட்சம் நன்கொடை பிடுங்கி மோசடி செய்ததையும் குண்டர்களை வைத்து தாக்கியதால் ஏற்பட்ட காயங்களையும் காட்டியும் அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தரிடம் புகார் கொடுத்தனர். இப்பல்கலைக் கழகங்கள், வரும் கல்வியாண்டில் மாணவர்களைச் சேர்க்க தடை விதிக்கக் கோரி பொது நலவழக்குகள் தொடரப்பட்டன. அரசாங்கம் தலையிட்டு இப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. மீண்டும் கல்லூரி திறக்கப்பட்டதும் குண்டர்களின் தாக்குதலை முறியடித்து மாணவர்கள் தொடர்ந்து போராடினர்.

ஆனால், தனியார் கல்விக் கொள்ளையர்களுடன் கைகோர்த்துக் கொண்டுள்ள உச்சநீதி மன்றம், அரசாங்கம் இத்தனியார் கல்லூரி நிர்வாகச் செயல்பாடுகளில் தலையிடக் கூடாது என்று கடந்த ஆகஸ்டில் தீர்ப்பளித்துள்ளது. தமிழகத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையை மேற்பார்வையிட நிறுவப்பட்ட சுப்பிரமணியன் கமிட்டியும், கல்விக் கட்டணங்களைப் பரிசீலிக்க நிறுவப்பட்ட இராமன் கமிட்டியும் உச்சநீதி மன்றத் தீர்ப்புக்குப் பிறகு முடமாகிவிட்டன.

தனியார் தொழில்நுட்பக் கல்லூரிகளில் மாணவர்களை எந்த அடிப்படையில் சேர்ப்பது, எந்தத் தேர்வு முறையைப் பின்பற்றுவது, எவ்வளவு கட்டணம் வசூலிப்பது, எந்த அடிப்படையில் இடஒதுக்கீடு செய்வது என்பதற்கு எந்த வரையறையும் கிடையாது. தனியார் கல்வி முதலாளிகள் இட்டதுதான் சட்டம்; வைத்ததுதான் திட்டம் என்கிற தனிகாட்டு தர்பார்தான் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் நடக்கிறது. தொழில்நுட்ப கவுன்சிலின் அங்கீகாரத்தைப் பெற ஏன் இந்த பல்கலைக் கழகங்கள் தயங்குகின்றன, ஏன் நீதிமன்றங்களுக்குப் படையெடுக்கின்றன என்ற கேள்வியே அவற்றின் மோசடியையும் கொள்ளையும் நிரூபித்துக் காட்டுகின்றன.

எஸ்.ஆர்.எம்; ஜேப்பியாரின் சத்தியபாமா நிகர்நிலைப் பல்கலைக் கழகம் முதலானவை விதிவிலக்கானவை என்று சிலர் கருதலாம். விதிவிலக்காக இருந்தாலும் இதற்கு சட்டப்படி தீர்வு கண்டு நிவாரணம் வழங்கும் இடம் எது? இந்தக் கேள்வி ஜேப்பியார் கல்லூரிக்கு மட்டுமின்றி, பகற்கொள்ளையடிக்கும் அனைத்து தனியார் சுயநிதிக் கல்லூரிகளுக்கும் பொருந்தும்.

அண்மையில் சென்னை ஏற்றுமதித் தொழில் வணிக வளாகத்தில் கொத்தடிமைகளாக உழலும் தொழிலாளர்கள், தனியார் நிறுவனங்கள் இந்தியத் தொழிற்சட்டங்களை மதித்து நடக்கக் கோரி போராட்டம் நடத்தி கைதாகினர். தனியார் நிகர்நிலைப் பல்கலைக் கழக மாணவர்கள் தொழில்நுட்பக் கவுன்சிலின் அங்கீகாரத்தைப் பெறக் கோரி போராட்டம் நடத்தி அடக்குமுறையைச் சந்தித்துள்ளார்கள். அங்கே தனியார்அந்நிய தொழில் முதலாளிகள்; இங்கே தனியார் கல்வி முதலாளிகள். இரு தரப்புமே சட்டங்களை மதிப்பதில்லை. பகற்கொள்ளையையும் கொத்தடிமைத் தனத்தையும் அடக்குமுறையையும் நிறுத்துவதில்லை. நீதிமன்றமோ அரசாங்கமோ தலையிட்டு தடுத்து நிறுத்துவதுமில்லை. இதுதான் தனியார்மயத்தின் மகிமை!

சுயநிதி கல்வி நிறுவனங்கள் வைத்து நடத்துவதென்பது ஓட்டுக் கட்சி அரசியல் போலவே கோடி கோடியாய் பணம் கொழிக்கும் தொழில். எனவேதான் அரசியல் கிரிமினல்கள், சாராய ரௌடிகள், கருப்புப் பண முதலைகள் நடிகர்கள், ஓட்டுக்கட்சி பிர முகர்கள் மட்டுமின்றி சங்கரமடமும் மேல்மருவத்தூர் பீடமும் சுயநிதி கல்வி நிறுவனங்களை நடத்துகின்றன. எனவேதான் எல்லா ஓட்டுக் கட்சிகளும் இவ்வளவு போராட்டங்களுக்குப் பின்னரும் தனியார் கல்வி வியாபாரம் குறித்து வாய் திறக்க மறுக்கின்றன.
இந்நிலையில், மாணவர் ராபின்வாஸ் மரணத்துக்குக் காரணமான ஜேப்பியாரைக் கைது செய்து சிறையிலடைப்பது, தொழில்நுட்பக் கவுன்சிலின் அங்கீகாரம் பெறாத எஸ்.ஆர்.எம் சத்தியபாமா முதலான நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களை அரசே ஏற்று நடத்துவது, அனைத்து தனியார் சுயநிதிக் கல்லூரிகளையும் அரசுடைமையாக்குவது ஆகிய உடனடிக் கோரிக்கைகளுடன் மாணவர்களும் பெற்றோரும் ஆசிரியர்களும் ஜனநாயக இயக்கங்களும் போராட வேண்டும். ஓட்டுக் கட்சிகளைப் புறக்கணித்து, தனியார்மயத்துக்கு எதிரான போராட்டமாக இதை வளர்த்தெடுக்கவும் வேண்டும்.

— பு.மா.இ.மு. உதவியுடன்
பு.ஜ. செய்தியாளர்கள்.

Monday, April 17, 2006

ஆதாயம் தேடும் பன்னாட்டு மருந்துக் கம்பெனிகள்

பறவைக் காய்ச்சல்: சந்தைப் பொருளாதாரத்தின் கோர விளைவு ஆதாயம் தேடும் பன்னாட்டு மருந்துக் கம்பெனிகள்

""ஹெச் 5 என் 1 (ஏ5N1); கொடூரமான பறவைக் காய்ச்சல் நச்சுக் கிருமி இறக்கை கட்டி பரவுகிறது. நீர்ப்பறவைகள் தங்களின் குளிர்காலப் புகலிடமான இந்தியாவின நீர்தேக்கங்களில் வந்திறங்க ஆரம்பித்து விட்டன. அடுத்த 10 வாரங்களில் சீனாவிலிருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பறவைகள் தெற்கு ஆசியாவை நோக்கி இடம் பெயரும். இந்த அழகான பறவை கூட்டத்தின் ஊடாகவே அவற்றின் உடலில் 61 மனித உயிர்களை காவு கொண்ட ஹெச் 5 என் 1 நச்சுக் கிருமிகளும் பயணிக்கும். 1918இல் மேற்குறிப்பிட்ட நச்சுக் கிருமியை ஒத்த ஹெச் 5 என் 1, இலட்சக்கணக்கான மக்களைக் காவு கொண்ட பின்னணியில் இப்போது என்ன விபரீத விளைவுகள் ஏற்படுமோ என்று உயிரியல் வல்லுனர்கள் அச்சத்தில் உள்ளனர்.'' (மைக் டேவிஸ், 2005)

நீர்ப்பறவைகள் மூலமாகவோ அல்லது உலகமயமாக்கலின் விளைவாக நாடு விட்டு நாடு பாயும் கோழி மற்றும் அதன் சார்ந்த பொருட்கள் மூலமாகவோ 2005ஆம் ஆண்டு முதல் நம் நாட்டு கோழிப் பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் நோய் இருப்பதாக செய்தி கசிந்து கொண்டிருந்தது. பண்ணைகளில் கணிசமாக கோழிகள் இறக்க ஆரம்பித்தன. இது பறவைக் காய்ச்சல் என்று தொழிற்துறை வட்டாரத்தில் உறுதிப்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, தரகு முதலாளியான வெங்கடேஷ்வரா நிறுவனம் ""ஆட்டோகிளேவ்'' என்கிற முறையில் பறவைக் காய்ச்சல் தடுப்பூசியை உற்பத்தி செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது. இச்செய்தியை ஒப்பந்த விவசாய நிறுவனங்களில் பணிபுரியும் கால்நடை மருத்துவர்கள் உறுதிப்படுத்துகிறார்கள். ஆனால், கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கும் வெளியுலகத்திற்கும் இது பற்றி தெளிவாகத் தெரியாது.

இந்த விசயத்தை கோழி வளர்ப்பில் (முட்டை மற்றும் இறைச்சி) ஏகபோக கட்டுப்பாட்டை வைத்திருக்கும் தரகு மற்றும் பன்னாட்டு ஒப்பந்த நிறுவனங்களான வெங்கடேஷ்வரா, சுகுணா, பயனீர், சரன்பாக்ஸ்பான்ட் (இந்தியா) போன்றவை திட்டமிட்டே மூடி மறைத்தன. கோழி, கருவறை முதல் கறியாகி உணவு மேசைக்கு வரும் வரை ஒட்டுமொத்த சங்கிலியும் இவர்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இதில் ஒரு விவசாயி ஒப்பந்த தொழிலாளிதான். அதற்கு மேல் எந்த ஒரு உரிமையும் இல்லை. கோழி வளர்ப்பில் கோடிகளைப் பார்க்கும் நிறுவனங்கள் இச்செய்தியை மறைப்பதன் மூலம் வியாபாரத்தை நீட்டித்தார்கள். அதாவது, மனித இனத்திற்கு ஆபத்துகள் ஏற்படும் சூழலைப் பற்றிக் கடுகளவு கூட கரிசனம் காட்டாமல் ""பிணம் விழுந்தாலும் பரவாயில்லை; பணம் (வருமானம்) குறைந்துவிடக் கூடாது'' என்பதில் தெளிவாக இருந்தனர்.

ஒரு வழியாக பறவைக் காய்ச்சல் பற்றிய செய்தி, பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் வந்தபிறகு கூட வெங்கடேஷ்வரா மற்றும் சுகுணா நிறுவனங்கள், தங்களது கூட்டமைப்பின் மூலம் ""வந்தது பறவைக் காய்ச்சல் இல்லை'' என்று அறிக்கை மேல் அறிக்கை விட்டன. இப்படிப்பட்ட சூழலில், ஒப்பந்த அடிப்படையில் கோழிகளை வளர்த்து வரும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து பணம் பட்டுவாடா செய்வதை நிறுத்திவிட்டன. இதன் மூலம் 10 லட்சம் ஒப்பந்த கோழி விவசாயிகள் என்ன செய்வதென்று புரியாமல் தவிக்கின்றனர். இலாபம் என்றால் ஒட்டுமொத்தமாக அள்ளிச் செல்ல நிற்கும் இந்நிறுவனங்கள், நட்டம் என்ற உடனே பண்ணைகள் பக்கம் எட்டிக் கூட பார்க்கவில்லை.

உலகளவில் பறவை காய்ச்சலின் ஊற்று மூலமே மேற்குறிப்பிட்ட வகையிலான ஒப்பந்த விவசாய நிறுவனங்களே ஆகும். இவர்களின் அதீத இலாபத்திற்காக, பரவலாக பல்இனக் கோழிகள் கொண்டு இயற்கை சார்ந்த பாரம்பரிய உற்பத்தியாக இருந்த புறக்கடை கோழி வளர்ப்பை ஒழித்துக் கட்டினர். அதற்கு மாறாக, ஒரு சில இனங்களைக் கொண்டு கோடிக்கணக்கான கோழிகளை குறிப்பிட்ட வட்டாரத்தில் குவித்து தொழிற்மயமாக்கி இயற்கைக்கு முரணாக அராஜக உற்பத்தியில் ஈடுபடுகின்றனர். இதனால் கோழிகளுக்கு இடையே நோய் பரவுவதும், கோழிகளிலிருந்து மனிதர்களுக்கு பரவுவதும் எளிதாக்கப்பட்டன. இப்படி கால்நடை மற்றும் கோழி வளர்ப்பில் தொழிற்மயமாக்கப்பட்டதன் விளைவாகவும், வனம் மற்றும் சுற்றுப்புற சூழலை நாசமாக்கியதாலும் புதிய புதிரான நோய்களான சார்ஸ் எபோலா, பற வைக் காய்ச்சல் போன்றவை மனித இனத்தை உலுக்க ஆரம்பித்துள்ளன என்கிறார்கள், வல்லுனர்கள். (பிப். 23, 2006, தி இந்து)

ஒப்பந்த விவசாய நிறுவனங்களில் ஒன்றான வெங்கடேஷ்வரா அரசுக்குத் தெரியாமல் பறவைக் காய்ச்சலுக்கான தடுப்பூசியை உற்பத்தி செய்து, அதை பற்றி எந்த ஒரு உண்மையையும் தெரிவிக்காமல் (லேபிள் கூட ஒட்டாமல்) சிறு, நடுத்தர மற்றும் இதர ஒப்பந்த நிறுவனங்களுக்கு விற்று கோடிகளை அள்ளிக் கொண்டுள்ளது.

இன்னொரு பக்கம் ஹெச் 5 என் 1 நச்சுக்கிருமி மனிதர்களிடத்தில் நோயை உருவாக்குவதற்கான வீரியமிருந்த போதிலும், அதன் பரவும் ஆற்றல் மிகக் குறைவாக இருக்கிறது. இக்கிருமியின் மரபணுவில் மாற்றம் ஏற்பட்டு, நோய் உருவாகும் வீரியத்துடன் பரவும் ஆற்றலை பெற்றுவிட்டால் 1918, 1957, 1968 ஆகிய ஆண்டுகளில் இதேபோன்ற நோய்க்கிருமியால் பல லட்சக்கணக்கான மக்கள் மாண்டதுபோல இப்போதும் நேரிட வாய்ப்புள்ளது.

தற்சமயம் இந்த நோயை ஓரளவு குணப்படுத்தும் திறன் கொண்ட மருந்துகள் ""தேமி புளு'' மற்றும் ""ரிலின்சா'' ஆகியனவாகும். இப்பொழுது தேமிபுளு மட்டுமே உற்பத்தியில் உள்ளது. அமெரிக்காவை சார்ந்த ""கிளியெட் சயின்ஸ்'' நிறுவனம் காப்புரிமையை தேமிபுளுவுக்கு பெற்றுள்ளது. ""ரோகி'' என்ற நிறுவனம் ""கிளியெட் சயின்ஸ்''க்கு கப்பம் கட்டி உற்பத்திக்கும் விற்பனைக்கும் அனுமதி பெற்றுள்ளது. நோயின் சிக்கலையும் ""ரோகி''யின் உற்பத்தித் திறனையும் கணக்கில் கொண்டு, சில அமெரிக்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்குறிப்பிட்ட இரண்டு கம்பெனிகளிடம் ஏகபோக கட்டுப்பாட்டை நீக்கி கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். ஆனால், இவ்விரு நிறுவனங்களும் இந்த வேண்டுகோளை மறுத்துவிட்டு தங்களுடைய வியாபாரத்தைப் பாதுகாப்பதற்கான சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கின்றன. இப்பொழுது இந்நிறுவனத்தின் (கிளியெட் சயின்ஸ்) பங்குதாரர்களான அமெரிக்க இராணுவ செயலாளர் ரம்ஸ்ஃபீல்ட், புஷ் தேர்தல் நிதி புரவலர் டேவிங்நன், ரீகன் மற்றும் புஷ்ஷின் முன்னாள் செயலாளர் ஜார்ஜ் சூல்ட்ச் மற்றும் புஷ்க்கு நெருக்கமான டீ விங்க் ஆகியோர் கோடிக்கணக்கான டாலர்களை இலாபமாகக் குவிக்கின்றனர்.
இன்னொரு பக்கம் இந்திய அரசு ""ரோக்கி''யிடமிருந்து துணை ஒப்பந்தம் பெற்றிருக்கும் ""ஹெட்ரோ'' என்ற நிறுவனத்திடமிருந்து ஒரு மாத்திரையை ரூ. 540க்கு வாங்கிக் கொண்டிருக்கிறது. இந்தத் தொகையில் பெரும்பான்மையான பங்கு ராயல்டியாகும். இதே மருந்தை இந்திய நிறுவனமான ""சிப்லா'', ""27 ரூபாய்க்கு தயார் செய்கிறோம்; எங்களுக்கு சட்டரீதியான பாதுகாப்பு கொடுங்கள்'' என்று கேட்கிறது. ஆனால் இந்திய அரசு ""சிப்லா''வின் வேண்டுகோளுக்கு பதிலளிக்காமல் தொடர்ந்து மௌனம் காக்கிறது. ஏனென்றால், இது உலக வர்த்தகக் கழகத்தின் காப்புரிமைச் சட்டத்தை மீறுவதாகும். இப்படி உலக வர்த்தகக் கழகத்திற்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் எதிராக, இக்கட்டான சூழ்நிலையில் கூட சுயசார்புடன் மருந்தைத் தயாரிக்கும் அதிகாரத்தை இழந்து நிற்கிறது இந்திய அரசு.
அதீத இலாபத்திற்காக, இயற்கைக்கு முரணாக, அராஜக உற்பத்தியில் ஈடுபடும் ஒப்பந்த விவசாய நிறுவனங்கள் ஒருபுறம்; இந்நிறுவனங்கள் பெற்றெடுத்த பறவைக் காய்ச்சலில் கோடிகோடியாய் கொழுக்கும் பன்னாட்டு மருந்து கம்பெனிகள் இன்னொருபுறம். இவ்விரு கொலைகார கொள்ளைக்கார கூட்டத்தின் நடுவே விவசாயிகளும் நாட்டுமக்களும் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இக்கட்டுரையின் முதல் பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள மைக் டேவிஸ், அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர். அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றி வரும் இவர், அயர்லாந்த நாட்டில் இயங்கிவரும் சோசலிச தொழிலாளர் கட்சியில் உறுப்பினராகவும் இருக்கிறார். பிரிட்டிஷ் காலனி ஆட்சியின் பொழுது இந்தியாவில் நடந்த பட்டினிச் சாவுகளுக்கும், காலனி அரசின் வரி வசூலுக்கும் இருந்த தொடர்புகளை ""லேட் விக்டோரியன் ஹோலாகாஸ்ட்'' என்ற நூலின் மூலம் மைக் டேவிஸ் அம்பலப்படுத்தியுள்ளார். அவர் எழுதிய ""நமது வாசற்படியில் வேதாளம்'' என்ற நூலில் இருந்து இம்மேற்கோள் எடுத்தாளப்பட்டுள்ளது.

மு சுடர்

இந்தியாவில், ""எய்ட்ஸ்''க்கு அடுத்துப் பரவலாக அறியப்பட்ட நோயாக பறவைக் காய்ச்சல் நோய் உள்ளது. எய்ட்ஸைப் போலவே, பறவைக் காய்ச்சல் நோயும் ஏகாதிபத்தியங்கள் உலகுக்கு அளித்திருக்கும் ""கொடை''. கோழி வளர்ப்பை இயற்கைக்கு முரணாகத் தொழில்மயமாக்கியதன் விளைவுதான் இந்த நோய்.

இந்த நோய் தாக்குவதற்கு முன்பாகவே தடுப்பு நடவடிக்கைகள் எடுக்காத இந்திய அரசு, இப்பொழுது கிராமம், கிராமமாகப் போய் கறிக் கோழிகளைக் கழுத்தை நெறித்துக் கொன்று புதைத்து வருகிறது. இதனால் ஒவ்வொரு நாளும் இத்தொழிலில் பல கோடி ரூபாய் நட்டமேற்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்த நட்டத்தைத் தாங்குபவர்கள் யார்? கோழிக் கறிக் கடைகளின் போர்டுகளில் காணப்படும் சுகுணா, வெங்கடேஷ்வரா, பயனீர் போன்ற கறிக்கோழி விற்பனையை ஏகபோகமாக நடத்திவரும் தரகு முதலாளித்துவ நிறுவனங்களுக்கு இந்த நோயால் சல்லிக் காசு கூட நட்டம் கிடையாது. மாறாக, இந்நிறுவனங்களோடு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு கோழி வளர்ப்புத் தொழிலை நடத்திவரும் சிறுவீத உற்பத்தியாளர்கள் விவசாயிகள்தான் இந்த நட்டத்தைத் தாங்கிக் கொண்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் ஈரோடு, நாமக்கல் பகுதிகளில் மட்டும் ஏறத்தாழ 20,000 பேர் கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் தொழிலே போண்டியாகிப் போன பிறகு, இவர்கள் வங்கிகளில் வாங்கிய கடனுக்கான வட்டியில் 4 சதவீதம் தள்ளுபடி செய்வதாக டாம்பீகமாக அறிவித்துள்ளது, இந்திய அரசு.

இது மட்டுமின்றி, உலக வர்த்தகக் கழகத்தின் காப்புரிமை சட்டத்தைக் காட்டி, உள்நாட்டிலேயே குறைந்த செலவில் பறவைக் காய்ச்சலுக்கான மருந்து தயாரிப்பதையும் தடுத்து நிறுத்தி விட்டது, மன்மோகன் சிங் கும்பல். ஒருபுறம், கறிக்கோழி விற்பனையை ஏகபோகமாகக் கொண்டுள்ள தரகு முதலாளித்துவ நிறுவனங்களும், இன்னொருபுறம் பன்னாட்டு மருந்து கம்பெனிகளும் பறவைக் காய்ச்சல் நோயால் ஆதாயம் அடைந்து வருவதை இக்கட்டுரை சுருக்கமாக எடுத்துக் காட்டுகிறது.