தமிழ் அரங்கம்

Showing posts with label அரட்டை. Show all posts
Showing posts with label அரட்டை. Show all posts

Wednesday, June 18, 2008

தேசம் பேசும் கருத்துச் சுதந்திரம் என்பது, மற்றவனை தூற்றுவதற்கான உரிமையைத்தான்

மக்களின் விடுதலைக்கான கருத்து சுதந்திரத்தையல்ல. அதை அது பேசுவதும் கிடையாது. சமூக நோக்கமற்ற கருத்துச் சுதந்திரம் என்பது, அரட்டையும், கொசிப்புமாக, அது காழ்ப்பாக தூற்றுவதுமாக மாறுகின்றது. இப்படித்தான் தேசம் நெற் புழுத்துக் கிடக்கின்றது. இப்படிச் செய்வதையே தேசம் தனது 'தொழில் நேர்மை" என்கின்றது.

இந்த 'தொழில் நேர்மை" க்கு ஏற்ற அரட்டைக் கும்பல், புலிகளை வைத்து ஜனநாயகத்துக்கு நீளம் அகலம் சொல்லுகின்றனர். உலக ஜனநாயகத்துக்கு வரைவிலக்கணம் எழுதும் தமிழ் வல்லூறுகள், அனைத்தையும் புலியில் அமர்ந்தபடி தான் கொத்திக் கிளறுகின்றது. புலியல்லாத அனைத்து மக்கள் விரோதத்தையும், தனக்கு பிடித்ததையும் சீவி சிங்காரிக்க வைக்கின்றது. ஆகா ஆகா இதுவல்லவோ ஜனநாயகம், என்ன அழகு என்கின்றது. மனித குலத்துக்கு எதிரான தனது சொந்த வக்கிரங்களை எல்லாம், கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம் என்று போற்றுகின்றது. புலியின் அரசியலை மறுக்காது, அதே அரசியலை உலையில் போட்டு புலியையே நக்கி உண்ணுகின்றது. தமது பாசிச 'தொழில் நேர்மை"க்கு ஏற்ப, கருத்துச் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் தமக்கேயான பாணியில் புரட்டிப் போடுகின்றனர்.

தேசம்நெற்றின் 'தொழில் நேர்மை" என்பது, இரண்டு பாசிசத்துக்கும் இடையால் ஒட்டுவது. இந்த இரண்டு பாசிசத்தையும் நம்பியே இருப்பது, ஊடகவியல் தர்மமாம். இவர்களை தனது சொந்த வாசகர்களாகக் கொண்டு கும்மியடிப்பது தான் அரசியலில் 'தொழில் நேர்மை" என்கின்றனர். இப்படி பாசிசத்திற்கும் தான் வடிகாலாக இருந்து பிழைக்கும் தொழிலைத் தான், தேசம் நெற் 'தொழில் நேர்மை" ஊடாகச் செய்கின்றது. தேசமும், தேசம்நெற் பொறுக்கிகளும் இதை 'தொழில் நேர்மை" என்று சொல்ல, மற்றப் பொறுக்கிகளோ இதை ஜனநாயகம் கருத்துச் சுதந்திரம் என்கின்றனர்.

வாசகர்களுக்கு பின்னால் இருந்து லூட்டி அடிப்பது, அதை நியாயப்படுத்துவது' தொழில் நேர்மை"யாகின்றது. சினிமா உலகில் ஆபாசத்தை சினிமா ஆக்கிவிட்டு, அதை ரசிகரின் விருப்பமாக கூறி நியாயப்படுத்துவது போன்றது. தேசம்நெற் வாசகர் பகுதி, அசல் நிதர்சனம்டொட்கொம், விழிப்பு போன்ற இணையங்களாக உள்ளன. தமது சமூக விரோதத்துடன், கழிசடைத்தனமான வகையில் காழ்ப்புகளைக் கொட்டியும், காழ்ப்;புகளை விதைத்தும், பொய்யையும் புரட்டையும் அள்ளி தெளித்தே அவை இயங்குகின்றன. தனிமனித முரண்பாடுகளையும், குழு வக்கிரங்களையும் தூவி, அவை அதைத் தூண்டுகின்றன. இது சமுதாயத்துக்கு தேவையா? இதன் சமூக நோக்கம் தான் என்ன? இதில் இருந்து தேசம்நெற் எப்படி வேறுபட்டது? அது இயங்கும் செய்திகளின் அடிப்படை தான் என்ன? நிதர்சனம்டொட்கொம், விழிப்பில் இருந்து தேசம்நெற் எப்படி வேறுபடுகின்றது?
.