தமிழ் அரங்கம்

Saturday, September 22, 2007

அடுத்த தேர்தலில் ஆட்சி: பச்சோந்தி இராமதாசின் பகல் கனவு

ட்டுக்கட்சி அரசியல் தலைவர்களும் மாயத் தோற்றங்களைக் காட்டி மக்களை ஏய்க்கிறார்கள். சினிமாக்காரர்களும் இதே வேலையைத்தான் செய்கிறார்கள். இரண்டு வகையினரும் கள்ளப் பணத்தை கருப்புப் பணத்தைக் குவிப்பதற்குத்தான் இதையே தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள்.

இதில் ஒரு நல்ல வேடிக்கை என்னவென்றால், மற்றவர்களை ஏய்ப்பதற்காக இவர்கள் தங்களைப் பற்றி ஏற்படுத்தி வைத்திருக்கும் மாயத்தோற்றத்தைப் பல சமயம் உண்மையானதென்று இவர்களே நம்பி ஏமாந்து விடுவதுண்டு. இதனால் சினிமாவில் கதாநாயகர்களாகத் தோன்றுபவர்கள் நிஜத்தில் ""காமெடியன்''களாகி விடுகிறார்கள். அரசியலில் தலைவர்களாக பாவணை செய்பவர்கள் நிஜத்தில் பிழைப்புவாத கழிசடைகளாக, மக்களிடம் நகைப்புக்குரிய கோமாளிகளாகி விடுகிறார்கள்.

அதேசமயம், சினிமாக்காரர்களுக்குக் கொஞ்சமாவது சொந்த முதலீடு தேவை; வட்டிக்காவது பணம் வாங்கி கோடிக்கணக்கில் மூலதனம் போட்டுத் தொழில் செய்கிறார்கள். ஆனால், ஓட்டுக் கட்சி அரசியல் தலைவர்களோ வெறும் சவடாலையே மூலதனமாகப் போட்டு தொழில் செய்கிறார்கள், இல்லை, இல்லை ""அரசியல் பண்ணுகிறார்கள்.''

இப்படி வெறும் சவடாலை மட்டுமே மூலதனமாகப் போட்டு குறுகிய காலத்தில் பல கோடி ரூபாய் அள்ளிவிட்ட சமீபகாலத் திடீர் அரசியல்வாதிகளுள் முன்னிலையில் நிற்பவர் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் இராமதாசு. மருத்துவத் தொழிலை விட அரசியல் தொழிலில் குறுகிய காலத்தில் பல மடங்கு சம்பாதித்து விட்ட இராமதாசு, இந்த வளர்ச்சி கண்டு தானே பிரமித்துப் போய்விட்டார் போலும். அரசியலிலும் இதேபோன்ற கிடுகிடு வளர்ச்சி அடைந்துவிடலாம் என்று கனவுக்கோட்டை கட்டுகிறார். பத்தாண்டுகளுக்கு முன்பே புதுச்சேரியில் ஆட்சியைப் பிடித்துவிடப் போவதாக இலக்கு வைத்துக் கூட்டணி பேரங்கள் நடத்திக் குப்புற விழுந்தார். இருந்தாலும், இராமதாசு தனது எதிர்பார்ப்பையும் சவடாலையும் விடுவதாக இல்லை.

தனித்துப் போட்டியிட்டால், ஒன்று அல்லது இரண்டு தொகுதிகளுக்கு மேல் இதுவரை பா.ம.க. வெற்றி பெற்றதில்லை. வன்னியர் பெரும்பான்மையாக வாழும் தொகுதிகளில்கூட அக்கட்சி தோல்வி அடைவதுதான் வழக்கமாக உள்ளது. தேர்தலுக்குத் தேர்தல் பா.ம.க. பெறும் வாக்குகளின் சதவீதம் குறைந்து கொண்டே போகிறது. ஐந்து சதவீதம் என்ற அளவில்தான் அக்கட்சி இதுவரை வாக்குகளைப் பெற முடிந்திருக்கிறது. கடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் பா.ம.கவுக்கு என்று சில நகராட்சி மற்றும் உள்ளூராட்சிகளில் தலைவர் பதவிகளைப் பெறுமளவுக்கு பெரும்பான்மை வட்டங்கள் (வார்டுகள்) கூட்டணிக் கட்சிகளால் ஒதுக்கப்பட்டன. ஆனால், ஒதுக்கிய இடங்களில் பெரும்பான்மை பெற முடியாமல், தலைவர் பதவியைப் பிடிக்க முடியாமற் போனது. பா.ம.க.வைவிடக் கூடுதலான இடங்களில் வெற்றிபெற்ற கூட்டணிக் கட்சிகள் தலைவர் பதவியைப் பிடித்தபோது, துரோகமிழைத்து விட்டதாக ஆத்திரத்தில் வெடித்தார் இராமதாசு.

தற்போது பா.ம.க.வுக்கு மத்தியில் 4 எம்.பி.கள், 2 மந்திரிகள், மாநிலத்தில் 18 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். ""லாட்டரி'' குலுக்கலில் பரிசு விழுந்ததும், அது ஏதோ தனது நல்வினைப் பயனால் விளைந்தது என்று ஒருவன் மிதப்பில் திளைப்பதைப் போல, பா.ம.க. தலைமைக்கு பிரமை தட்டிப் போயிருக்கிறது. தற்போது பா.ம.க.விற்கு வாய்த்திருக்கும் பதவிகள் எல்லாம் அக்கட்சிக்கு மக்கள் மத்தியில் நிலவும் உண்மையான ஆதரவைக் காட்டுவதாக இராமதாசு நம்பச் சொல்கிறார்.

ஓட்டுக்கட்சி அரசியல் ஒட்டுமொத்தமாகத் திவாலாகிப் போன சூழலில் பல அரசியல் அனாம÷தயங்கள் கூட உயர் பதவிக்கு வந்துவிட முடிகிறது. வாழப்பாடி ராமமூர்த்தியும் சுப்பிரமணிய சுவாமியும் மத்திய அமைச்சர்களாகி விட்டார்கள்; சந்திரசேகர், ஐ.கே. குஜ்ரால், தேவ கவுடா போன்றவர்கள் பிரதமர்களாகி விட்டார்கள். அப்துல் கலாம் அரசுத் தலைவராகி விட்டார். கருணாநிதிக்கும் ஜெயலலிதாவிற்கும், அதிகரித்து வரும் தோல்வி பயம்; காங்கிரசுக்கும் பா.ஜ.க.வுக்கும் இருக்கும் எப்படியாவது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றுவிடும் பதவி ஆசை ஆகியவற்றை வைத்து, தக்க சமயங்கள் பார்த்து மாறி மாறி கூட்டுக்களும் பேரங்களும் நடத்திக் கூடுதலான தொகுதிகளைப் பெற்று, கூட்டணிக் கட்சிகளின் தயவில் பா.ம.க. தனது உண்மையான மக்கள் ஆதரவுக்கு மீறிய இடங்களைச் சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் பெற முடிகிறது.

இந்த நிலையை அடையும் வழியில் இராமதாசு ஒரு அரசியல் பச்சோந்தி என்றும் பா.ம.க. ஒரு கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதக் கட்சி என்றும் பெயரெடுத்துள்ளார்கள். பொதுமக்கள் மட்டுமல்ல, சந்தர்ப்பவாத அரசியல் சகதியில் மூழ்கிக் கிடக்கும் கூட்டணி அரசியல் கட்சிகளே கூட, பா.ம.க. இராமதாசு நம்பிக்கைக்கு உகந்தவர் அல்லர் என்றே கருதுகின்றனர். இதை இராமதாசே ஒப்புக் கொண்டு, ""எங்களது ஆதரவை எல்லா விஷயங்களிலும் எதிர்பார்க்கும் கூட்டணிக் கட்சிகள் விஷயம் என்று வந்தால் எட்டி நின்று வேடிக்கை பார்ப்பது வழக்கமாகி விட்டது'' ஆத்திரமாக வெடிக்கிறார்.

கூட்டணிக் கட்சிகளுக்கும் பா.ம.கவுக்கும் உள்ள உறவு இத்தகையதுதான் என்று நன்கு தெரிந்தும், ""வருங்காலத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்றுதான் சொல்ல வேண்டும். 2011இல் அப்படி அமையும் கூட்டணி ஆட்சியில் பா.ம.க. பங்குபெறும்'' என்றும் அடித்துச் சொல்கிறார். அதேசமயம், 2011இல் தமிழகத்தில் தனித்து ஆட்சியைப் பிடிப்பதுதான் இலக்கு; எங்கள் கனவு என்று தனது கட்சி கூட்டத்தில் பேசுகிறார். இனி தேசிய அளவிலும் சரி, மாநில அளவிலும் கூட்டணி ஆட்சிதான் என்று ஒருபுறம் மதிப்பீடு செய்துவிட்டு, பா.ம.க.வே தனித்து ஆட்சியைப் பிடிப்பதுதான் தமது இலக்கு, கனவு என்று பகல் கனவு காண்பதுதான் ஒரு அரசியல் தலைமைக்கு அழகா? அறிவா?

பா.ம.க இராமதாசைப் பொறுத்தவரை சந்தர்ப்பவாதக் கூட்டணி, சந்தர்ப்பவாதக் கூட்டணி அரசில் பங்கேற்பது என்பதுதான் இலக்கு, கனவு. மற்றபடி இலட்சியம், கொள்கை என்பதெல்லாம் கிடையாது. இதிலிருந்தே தெரியவில்லையா? பதவிதான் முக்கியம்; ஜெயலலிதாபா.ஜ.க.ஆர்.எஸ்.எஸ். கூட்டணி அரசானாலும் சரிதான்; கருணாநிதிகாங்கிரசுகம்யூனிஸ்டு கூட்டணி அரசானாலும் சரிதான். எதிலும் பங்கேற்க பா.ம.க. தயார். மக்கள் நலன், பொறுப்புடன் இயங்கும் அரசியல் இயக்கம் என்பதெல்லாம் வெறும் சவடால்தான்! இதை ஏற்கெனவே நிரூபித்து விட்டார்; வெற்றிக் கூட்டணி என்பதுதான் எல்லாவற்றுக்கும் அடிப்படை என்று புதிய அரசியல் இலக்கணத்தை உருவாக்கியவர் அல்லவா இராமதாசு!

காங்கிரசு, பா.ஜ.க. ஆகிய இரு தேசியக் கட்சிகளும் சரி, கருணாநிதி, ஜெயலலிதா ஆகியவர்களின் மாநிலக் கட்சிகளும் சரி தனித்து ஆட்சியைப் பிடிக்கும் சக்தியை இழந்துவிட்டன; இனி பா.ம.க.வுக்குத்தான் மக்கள் செல்வாக்கு அதிகரித்து வருகிறது என்று இராமதாசு நம்பச் சொல்கிறார். ஆனால், இதே அரசியல் தர்க்கவாதம் புரியும் நடிகர் விஜயகாந்த் கட்சியோ கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் அடுத்து மூன்றாவது இடத்தைப் பிடிப்பதில் பா.ம.க.வை முந்திக் கொண்டு முன்னேறுகின்றது. காங்கிரசும், வைகோ கட்சியும் கூட பா.ம.க.வைவிடக் கூடுதலான வாக்கு சதவீதத்தைப் பெற்று வருவதை தேர்தல் முடிவுகள் தெளிவாகக் காட்டி வருகின்றன. இராமதாசின் அரசியல் ஆரூடங்களை அரசியல் முட்டாள்கள் கூட நம்பமாட்டார்கள். ஆனால், பகலோ, இரவோ கனவு காணும் உரிமையை யார் மறுக்க முடியும், தடுக்க முடியும்!

""ஆண்ட, ஆளும் தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் மக்களின் செல்வாக்கை இழந்து வருகின்றன; மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். பா.ம.க.வை ஒரு ஜாதிக் கட்சி என்று மக்கள் நினைக்கவில்லை. ஒரு நல்ல பொறுப்புள்ள அரசியல் கட்சியாகவே மக்கள் நம்புகிறார்கள். தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் பா.ம.க.வுக்கு உறுப்பினர்களும் கிளைகளும் உள்ளன; அதன் வளர்ச்சியை மக்கள் வரவேற்கிறார்கள். எப்போதும் எந்தவொரு மக்கள் பிரச்சினையானாலும் பா.ம.க. மட்டும்தான் போராடுகிறது; எந்தவொரு பிரச்சினையானாலும் அதில் பா.ம.க.வின் கருத்தை மக்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு அதன் செயல்பாடுகள் இருக்கின்றன. இதை அங்கீகரிக்க மறுத்து ஊடகங்கள் தாம் பா.ம.க.வுக்கு ஜாதி முத்திரை குத்தி, அதன் வளர்ச்சியைத் தடுப்பதிலேயே முனைப்பாக உள்ளன'' என்று அடுக்கடுக்காக புளுகித் தள்ளுகிறார், இராமதாசு.

எப்படியாவது தி.மு.க. கூட்டணியை உடைத்துவிட வேண்டும் என்று கங்கணங்கட்டிக் கொண்டுள்ள ஜெயலலிதாபா.ஜ.க. ஆதரவு பார்ப்பனச் செய்தி ஊடகங்களும், பிழைப்புக்காக பரபரப்புச் செய்திகளைத் தேடி அலையும் ஊடகங்களும்தாம் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன; அவை இராமதாசின் அறிக்கை அரசியலுக்கும், வெறும் அடையாளப் போராட்டங்களுக்கும் அளவுக்கு மீறியே முக்கியத்துவம் கொடுத்துப் பரப்பி வருகின்றன என்பதுதான் உண்மை.

சிறப்புப் பொருளாதார மண்டலம், விமான நிலையம் விரிவாக்கம், துணை நகரங்கள் அமைப்பு, முல்லைப் பெரியாறு காவிரி பாலாறு விவகாரங்கள், தனியார் உயர்கல்வி நிறுவனங்களின் கொள்ளை, சில்லறை வணிகத்தில் ஏகபோக பன்னாட்டு நிறுவனங்கள் நுழைவு போன்றவற்றை பல்வேறு ஜனநாயக, புரட்சிகர அமைப்புகளும் கையிலெடுத்துப் போராடி வருகின்றன. இவையெல்லாம் பா.ம.க. பங்கேற்கும் ஆளும் கூட்டணி அரசுகளின் தனியார்மயம், தாராளமயம், உலகமயமாக்கக் கொள்கையின் நேரடி விளைவுதான். இராமதாசின் அன்புமணி மத்திய அமைச்சகத்தில் உட்கார்ந்து கொண்டு பன்னாட்டு மருந்து கம்பெனிகளுக்கும், பெப்சிகோக்குக்கும் பல்லக்குத் தூக்கியதைப் போல, மேற்படி பிரச்சினைகளில் மன்மோகன் சிங் மாண்டேக் சிங் அலுவாலியா சிதம்பரம் கும்பலுக்கு எல்லா வகையிலும் துணை போகிறார். இந்த உண்மைகளையெல்லாம் இருட்டடிப்பு செய்து பா.ம.க. ராமதாசின் அறிக்கைகளையும் அடையாளப் போராட்டங்களையும் செய்தி ஊடகங்கள் ஊதிப் பெருக்குகின்றன. ஊடகங்களுக்கு கவர் கொடுத்தே ""கவர்'' பண்ணும் பா.ம.க. இராமதாசு, மற்ற இயக்கங்களின் கொள்கைகள், முழக்கங்களைத் திருடி முற்போக்கு நாடகமாடி ஏய்ப்பதையே ஆரம்பம் முதல் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அரசியல் கொள்கைகள், முழக்கங்கள், போராட்டங்கள் சந்தர்ப்பவாத கூட்டணி சேர்க்கைகளில் மட்டுமல்ல, சொந்த வாழ்க்கையிலும் பா.ம.க. இராமதாசு நம்பத் தகுந்தவர் அல்ல என்று வன்னிய மக்கள் பலருக்கும் நன்கு தெரியும். ""என் சொந்தக் காசை வைத்துத்தான் இயக்க வேலை செய்வேன்; அமைப்பிடமிருந்து ஒரு சல்லிக்காசு கூட வாங்க மாட்டேன். நானோ எனது குடும்பத்தினரோ எந்தவொரு பதவியையும் ஏற்க மாட்டோம்; அப்படிச் செய்தால் என் கையை வெட்டுங்கள்'' என்றெல்லாம் ஆரம்ப காலத்தில் சவடாலடித்த இராமதாசு, தனது மகன், மனைவி, மருமகள், பேத்தியைக் கூட கட்சி மற்றும் துணை அமைப்புகளின் பொறுப்புகளில் இருத்திக் கொண்டார். இலஞ்ச ஊழல் செய்து கருப்புப் பணம் கள்ளப் பணத்தைக் குவிப்பதில் வாழப்பாடி இராமமூர்த்தியோடு அவர் பங்காளிச் சண்டை போட்டு நாடே நாறியது. கருணாநிதி, ஜெயலலிதா கட்சிகளைப் பல பிரச்சினைகளிலும் விமர்சனம் செய்தபோதும், அவர்களது குடும்ப அரசியலை மட்டும் கண்டு கொள்ளாமல் இருக்கிறாரே, ஏன்? பா.ம.க.வே இராமதாசின் குடும்ப அரசியல் நலனுக்காகத்தான் நடத்தப்படுகிறது; அதற்காகத்தான் அவரது வன்னிய சொந்தகளாகிய தீரன் போன்றவர்கள் கூடத் தூக்கியெறியப்பட்டார்கள் என்பதை இன்னும் பா.ம.க.வில் உள்ள பிழைப்புவாதிகள் தவிர, அனைவரும் அறிவர்!

· ஆர்.கே.

Friday, September 21, 2007

தாழ்த்தப்பட்டோரின் வாழ்வுரிமை பறிப்பு!

போராடிப் பெற்ற உயர்நீதி மன்ற உத்தரவைச் செயல்படுத்து!''

— கண்டன ஆர்ப்பாட்டம்

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்திலுள்ள சிகரல அள்ளி கிராமத்தைச் சேர்ந்த 90 தாழ்த்தப்பட்ட குடும்பத்தினர், வசிக்க வீடின்றி ஓடைகளின் கரையோரங்களில் குடிசை போட்டு வாழ்ந்து வந்த நிலையில், 1980ஆம் ஆண்டு இம்மக்களுக்குத் தொகுப்பு வீடுகள் கட்டித் தரும் திட்டப்படி, சின்னப்பொண்ணு என்பவரது நிலத்தைத் தமிழக அரசு கையகப்படுத்தி, உரிய தொகையையும் அளித்துள்ளது. ஆனால், சின்னப்பொண்ணு வகையறா தனது சாதி மற்றும் கட்சியின் பலத்தைக் காட்டி மிரட்டி, பத்தாண்டுகளாகத் தாழ்த்தப்பட்டோரை நிலத்தின் பக்கமே அண்டவிடாமல் செய்து, தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தது. மறுபுறம் இக்கும்பல் நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற முயன்று தோல்வியடைந்ததால், தாழ்த்தப்பட்ட மக்களை உருட்டி மிரட்டி பட்டாவை அரசிடமே திரும்ப ஒப்படைக்குமாறும், குடியிருக்கும் குடிசை வீடுகளை இடித்துவிட்டு அங்கேயே காலனி வீடு கட்டிக் கொள்ளுமாறும் அச்சுறுத்தி வந்தது.


இப்பகுதியில் இயங்கிவரும் வி.வி.மு. இக்கொடுஞ்செயலுக்கு எதிராகத் தாழ்த்தப்பட்டோரை அணிதிரட்டி '90களின் மத்தியில் போராடியபோது, இக்கும்பல் கொடிய ஆயுதங்களுடன் வெறிகொண்டு தாக்கியது. பெண்கள், முதியோர் உள்ளிட்டு பலர் இத்தாக்குதலில் படுகாயமடைந்து, பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.


இதைத் தொடர்ந்து சாதிக் கலவரமும் சட்டம்ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படும் என்று சாக்குப்போக்கு கூறி அதிகாரிகள் இந்த ஊர்ப் பக்கமே தலைகாட்டவில்லை. கிராம நிர்வாக அலுவலர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை பலமுறை மனு கொடுத்துப் போராடியும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எந்த நியாயமும் கிடைக்கவில்லை. பின்னர் இம்மக்கள் வி.வி.மு.வின் உதவியோடு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கை மனித உரிமைப் பாதுகாப்பு மையம் (ஏகீகஇ) நடத்தி வந்தது.


கடந்த 12 ஆண்டுகளாக இந்த வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம், ""பட்டா வழங்கியும் 24 ஆண்டு காலமாகத் தாழ்த்தப்பட்ட ஏழை மக்கள் அனுபவிக்க முடியாமல் இருப்பது வருந்தத்தக்கது; இது அநீதியானது'' என்று கடந்த ஜூன் 6ஆம் தேதியன்று தீர்ப்பளித்து, எட்டு வாரத்திற்குள் நிலத்தை அளந்து அத்துகாட்ட வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாட்சியருக்கும் உத்தரவிட்டுள்ளது.


இதற்குப் பின்னரும்கூட, ஆதிக்க சக்திகள் இக்கிராம தாழ்த்தப்பட்ட மக்களை மிரட்டி அச்சுறுத்தி வருகின்றன. அதிகார வர்க்கமோ தனது சிகப்பு நாடாத்தனத்துடன் இழுத்தடிக்கிறது. நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்குவதாகப் பீற்றிக் கொள்ளும் தமிழக அரசு, பட்டா கிடைத்தும் அதைத் தாழ்த்தப்பட்டோர் அனுபவிக்க விடாமல் தடுக்கும் ஆதிக்க சக்திகளை அதிரடிப் படையை ஏவி ஒடுக்காமல் கைகட்டி நிற்கிறது.


இக்கொடுமையை அம்பலப்படுத்தியும், உயர்நீதி மன்ற உத்தரவை உடனடியாகச் செயல்படுத்தக் கோரியும் உழைக்கும் மக்களை அணிதிரட்டி 19.7.07 அன்று பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தோழர் அருண் தலைமையில் வி.வி.மு. ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. வி.வி.மு.வின் உறுதியான போராட்டத்தால் நியாயமான தீர்ப்பைப் பெற்றுள்ள சிகரலஅள்ளி தாழ்த்தப்பட்ட மக்கள், பெருந்திரளாக இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதோடு, நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த அடுத்தகட்டப் போராட்டத்துக்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

Thursday, September 20, 2007

சிங்களப் முதலாளித்துவ பேரினவாதக் கட்சி தான், ஜே.வி.பி

பி.இரயாகரன்
20.09.200

ஜே.வி.பி தம்மை பேரினவாதக் கட்சி அல்ல என்கின்றனர். சொல்வதற்கு வெளியில், அதை நடைமுறையில் மக்கள் தாமாகவே உணரும் வண்ணம் நிறுவ முடிவதில்லை. அதேநேரம் இலங்கை வாழ் அனைத்து தொழிலாளர் வர்க்கத்தினரதும், வர்க்க விடுதலைக்காக போராடுவதாக கூறிக்கொள்ள முனைகின்றனர்.


இதன் மூலம் ஜே.வி.பி இரண்டு செய்தியை சொல்ல முனைகின்றது.


1. ஜே.வி.பி தாம் ஒரு இனவாதக் கட்சியல்ல என்கின்றனர்.

2. இலங்கை பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான கட்சி என்கின்றனர்.


இப்படிக் கூறிக்கொண்டு, இந்த இரண்டுக்கும் எதிரான அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டதே ஜே.வி.பி. ஜே.வி.பி ஒரு முதலாளித்துவ கட்சி மட்டுமின்றி, ஒரு இனவாதக் கட்சியும் கூட. சந்தர்ப்பவாத, பிழைப்புவாத நிலைப்பாட்டைக் கொண்ட இக் கட்சி, நேரத்துக்கு நேரம் சோரம் போபவர்கள். சிங்கள மக்களை மட்டுமல்ல, தமிழ் மக்களையும் சதா ஏமாற்றி பிழைக்க முனைகின்றனர். இவர்களுக்கு புலியொழிப்பை முன்வைக்கும் புலியெதிர்ப்புக் கும்பல், புலம்பெயர் நாடுகளில் ஆலவட்டம் பிடிக்கின்றனர்.


ஜே.வி.பி தமிழர் மத்தியில் ஒருவிதமாகவும், சிங்களவர் மத்தியில் வேறு விதமாகவும், இனப்பிரசச்னை பற்றி கருத்துரைக்கின்றனர். இதனால் தேசிய இனப்பிரச்சனை தொடர்பான எந்த ஆவணங்களையும், தமிழில் வெளிப்படையாக முன்வைப்பதில்லை.


ஜே.வி.பி தாம் இனவாதிகள் அல்ல என்று கூறும் காரணமே, நகைப்புக்குரியது


அவர்கள் தாம் இனவன்முறையில் ஈடுபடவில்லை என்பதால், தாம் இனவாதிகள் அல்ல என்கின்றனர். இப்படிக் கூறி அரசியல் ரீதியாக மாயாஜால வித்தை காட்ட முனைகின்றனர்.


இனவாத நடவடிக்கையில் பெரும்பான்மை சிங்கள மக்களும் தான் ஈடுபடவில்லை. ஆனால் சிங்கள பேரினவாதக் கட்சிக்கு பின்னால் அவர்கள் நின்றதன் மூலம், பேரினவாதத்துக்கு உதவினர். அவர்களோ மக்கள். ஆனால் நீங்கள் ஒரு கட்சி. அதுவும் ஒரு பாட்டாளி வர்க்க கட்சியென கூறிக்கொள்பவர்கள். இனவாதத்தில் ஈடுபடவில்லை என்ற வாதம் சரியா பிழையா என்பதற்கு முதல், இந்த இனவாதத்தை எதிர்த்து என்ன செய்தீர்கள். அதைச் சொல்லுங்கள். மானம் கெட்ட வழியில், மக்களை ஏய்த்துப் பிழைக்கும் இவர்களுக்கு அரசியல் ஒரு கேடு.


சரி போலிச் சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும், இலங்கை முதலாளித்துவ ஆட்சியமைப்பு எப்படி இருந்தது. சிங்கள பேரினவாதம் மூலம் தானே, முதலாளித்துவ ஆட்சியமைத்து வந்தனர். இந்த பேரினவாத அரசியலை எதிர்த்து போராடாத அனைவரும், பேரினவாதத்துக்கு துணை போனவர்கள் தான். இந்த பேரினவாதம் தமிழ் மக்களுக்கு எதிரானதாக இருந்தது. சிங்கள அரசின் பேரினவாத நடத்தையால், தமிழ் மக்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாகினர். இதனால் சிங்கள பேரினவாத அரசுக்கு எதிராக தமிழ் மக்கள் இருந்தனர். மக்கள் விரோத அரசுக்கு எதிரான மக்களை, அணிதிரட்டாத பாட்டாளி வர்க்கப் புரட்சி என்பது பொய்யானதும் புரட்டுத்தன்மை கொண்டதுமாகும். இந்த அரசியல் போராட்டத்தை நட்பு சக்தியாக கொள்ளாதவர்கள், வரலாற்றில் இனவாதிகளையே தமது நட்பு சக்தியாக கொண்டனர். இது தான் கடந்த எமது இனவாத வரலாறு. ஜே.வி.பி என்ன விதிவிலக்கா.


சிங்கள பேரினவாத அரசின் அனைத்து செயலுக்கும் உடந்தையாக, செயற்பட்டவர்கள் தான் ஜே.வி.பி. பேரினவாதம் முன்வைத்த பிரதான இனவாத அரசியலை எதிர்த்து, ஜே.வி.பி கிளர்ச்சி எதையும் செய்தது கிடையாது. பேரினவாதிகளின் வழியில் இனவாதத்தை எதிர்த்து மக்களை அணிதிரட்டாது கள்ள மௌனம் சாதித்தபடி, அரசுக்கு எதிராக கிளர்ச்சி என்ற பெயரில் இளைஞர் கும்பல் சதி செய்தனர். இந்த நிலையில், தாம் தமிழ் மக்களுக்கு எதிராக செயல்படவில்லை என்கின்றனர். இப்படி அப்பட்டமான அரசியல் பொய்யை உமிழுகின்றனர். இப்படி தம்மை தூய்மையானவராக புனைந்து கூறுவது, கடைந்தெடுத்த அரசியல் போக்கிரித்தனமாகும்.


இலங்கையில் இனமுரண்பாட்டை கடந்த 60 வருடமாக முன்னுக்கு கொண்டு வந்த பேரினவாதம், அதை யுத்தம் வரை இன்று இட்டுச்சென்றுள்ளனர். இதை தடுத்து நிறுத்தத் தவறிய முழுப்பொறுப்பும், தமிழ் சிங்கள பாட்டாளி வர்க்கத்தைச் சார்ந்தது. இதை மறுப்பது, பாட்டாளி வர்க்க நிலைப்பாடல்ல. இதை தமிழ் மற்றும் சிங்கள பாட்டாளி வர்க்கம் தடுத்து நிறுத்தியதா? இல்லை. எவர் இதற்கு உரிமையுடன் பதில் கூறமுடியும். ஜே.வி.பி யினால் முடியுமா எனின், முடியாது.


இந்த நிலையில் தம்மை பாட்டாளி வர்க்க கட்சிகளாக கூறிக்கொண்டவர்கள், இனவாதத்தை பாதுகாத்தனர். இதை எதிர்த்து போராடாததன் விளைவு, இரண்டு இனங்களும் மோதிக்கொள்ளும் பொதுவான இனவாத அரசியல் நிலைக்கு இட்டுச்சென்றது. இந்த நிலைமை உருவாக தாமும் காரணம் என்பதை, அதற்கான பொறுப்பைக் கூட ஜே.வி.பி ஏற்பது கிடையாது. தமிழ் பாட்டாளி வர்க்கம் இந்த போக்கில் சிதைந்து சின்னாபின்னமாகிய நிலையிலும் கூட அது போராடியது. பலர், தமிழ் இனவாத குறுந்தேசியவாதத்தை எதிர்த்து தமது உயிரையே இழந்தனர். உண்மையில் இனவாதத்துக்கு எதிரான குரல்கள், துணிச்சலுடன் தமிழ் பாட்டாளிகளிடையே உதிரியாகத் தன்னும் தெளிவாக முன்வைக்கப்பட்டது, முன்வைக்கப்படுகின்றது. இந்த நேர்மையான போராட்டம், இன்றுவரை சிங்கள பாட்டாளி வர்க்கத்தினிடையே துளியளவு கூட கிடையாது. சிங்கள் மக்கள் மத்தியில், சிங்கள பாட்டாளி வர்க்கம் என்று கூறிக்கொண்ட யாரும், இந்த இனவாதத்தை எதிர்த்து ஒரு பாட்டாளி வர்க்க போராட்டத்தை வைப்பது கிடையாது. மாறாக சிங்கள இனவாதத்தின் வாலில் தொங்கிக்கொண்டு, இனவாதிகளாக நாலுகால் பாய்ச்சலில் அதை முந்தமுனைகின்றனர்.


இலங்கையில் பேரினவாத நடடிவடிக்கையில் சிங்கள அரசுகள் ஈடுபட்டன என்பதை ஏற்றுக்கொள்வதையே இவர்கள் மறுக்கின்றனர். ஜே.வி.பியோ சிங்கள இனவாத கட்சியான சுதந்திரக்கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து அரசு அமைப்பதும், ஆதரவு கொடுப்பதுமான அரசியல் விபச்சாரத்தைச் செய்கின்றனர். அதை நியாயப்படுத்த யூ.என்.பியை முதலாளித்துவ கட்சி என்கின்றனர். இரண்டு கட்சியும் ஏகாதிபத்திய நலனை பூர்த்திசெய்யும் முதலாளித்துவ கட்சிகள் தான். இதை எதிர்த்து பாட்டாளி வர்க்கத்துக்காக போராடாது, ஒன்றை மிதவாதிகளாக காட்டி செய்யும் அரசியல், உள்ளடகத்தில் பேரினவாதமாகும். இந்த கட்சிகளின் அரசியல் என்பது, பேரினவாதம் ஊடாகவே அரங்கேறுகின்றது. இதை மறுத்தபடி தான், ஜே.வி.பி பேரினவாத்தின் தூண்களாக செயல்படுகின்றனர்.


பேரினவாத அரசு என்பது, ஜே.வி.பி அரசுடன் இணைந்ததனால் தூய்மையாகி நின்றுவிடவில்லை. மாறாக பேரினவாதம் தொடருகின்றது. அதை புலிப் பாசிசத்தின் பின்னால், மறைக்க விரும்புகின்றனர். இப்படி தொடருகின்ற இனவாதத்தை, எதிர்த்துப் போராடாத அனைவரும் இனவாதிகள் தான். தமிழ் மக்களுக்கு எதிரான பேரினவாதிகளின் செயல்களை எதிர்த்து போராட முனையாத ஒரு கட்சி, ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சியா? யாரெல்லாம் இனவாத அரசில் சேர்ந்தும், அதை ஆதரித்தும், கள்ள மௌனம் சாதித்து செயல்படுகின்றனரோ, அவர்கள் அனைவரும் இனவாதிகள் தான். ஜே.வி.பி இதுவாகவே இருப்பது ஊர் உலகம் அறிந்தது. பேரினவாதத்துக்கு துணை போகும் ஜே.வி.பி, பேரினவாத நடவடிக்கையை எதிர்த்தது கிடையாது. மாறாக அதற்கு எண்ணை வார்த்து இனவாதத்தை தூண்டினர், தூண்டுகின்றது. பின் இவர்கள் கூறுகின்றனர், தமிழ் மக்களுக்கு எதிராக தாம் எதுவும் செய்யவில்லை என்கின்றனர். இப்படி அரசியல் வேடிக்கை காட்டுகின்றனர்.


தமிழ் மக்களுக்கு எதிராக இயங்கிய சிங்கள பேரினவாத அரசுக்கு எதிராக, அதை எதிர்த்து தமிழ் மக்களுடன் சேர்ந்து எப்படி போராடினீர்கள். அதைச் சொல்லுங்கள். ஏன் வம்புப் பேச்சு. பேரினவாத நடிவடிக்கையை எதிர்த்து போராடாத இவர்கள், அதில் குளிர் காய்ந்தவர்கள். தமிழ் மக்களுக்கு எதிரான செயல்பாட்டை அடிப்படையாக கொண்ட பேரினவாத போக்கில், அரசியல் செய்கின்ற தீவிர சிங்கள இனவாதிகளாக ஜே.வி.பி இன்று செயல்படுகின்றனர்.


ஜே.வி.பி தமிழ் மக்களுக்கு எதிராக செயல்படவில்லையா?


ஜே.வி.பியின் தோற்றமே இனவாதம் தான். சண்முகதாசனுக்கு எதிராக கட்சியில் இருந்து சதி செய்தபடி ஓடிய ஜே.வி.பியின் பிரச்சாரம், தமிழ் விரோத உணர்வை விதைத்தது. அதில் தான் ஜே.வி.பி பரிணமித்தது. ஜே.வி.பியின் முக்கிய கொள்கை வகுப்புகளில் ஒன்று, மலையாக தமிழ் மக்களுக்கு எதிரானதாகவே இருந்தது. இந்திய வம்சாவழிகளாக இருந்தாலும், தமிழர்களாக இருந்தாலும், ஜே.வி.பி அவர்களை சிங்கள மக்கள் முன் எதிரியாக நிறுத்தியது. தமிழர்களின் விஸ்தரிப்புவாதமாக அதைக் காட்டியது.


ஜே.வி.பியின் இனவாத அரசியல் தளம், மலையக மக்கள் எதிரான சிங்கள இனவாத கட்சி அரசியல் நடிவடிக்கையுடன் பின்னிப்பிணைந்து சென்றது. சிங்கள இனவாதக் கட்சிகள் எதனடிப்படையில் செயல்பட்டனரோ, அதனடிப்படையில் தான் ஜே.வி.யும் செயல்பட்டது. சிங்கள இனவாதிகள் மலையக மக்களை ஒடுக்கி சிதைத்த போது, அதை ஜே.வி.பி எதிர்க்கவில்லை. மாறாக தனது பங்குக்கு அதை ஆதரித்து, எண்ணை ஊற்றி வளர்த்தவர்கள் யார் என்றால், ஜே.வி.பி தான்.


அவர்களை உலக தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு பகுதியாக கூட, அங்கீகரிக்க மறுத்த பேரினவாதத்தையே ஜே.வி.பி கொண்டு இருந்தது. இதில் தம்மை பாட்டாளி வர்க்கம் என்கின்றனர். இவர்கள் பாட்டாளி வர்க்க கட்சியா? (இதை விரிவாக அடுத்த கட்டுரையில் ஆராய்வோம்) தூ, பிழைப்புவாதத்தை அரசியலாகக் கொண்ட ஒரு இனவாதக் கட்சி தான் ஜே.வி.பி. முழமையாகவே, சந்தர்ப்பவாதத்தின் ஏகப்பிரதிகள். இலங்கை தொழிலாளர் வர்க்கமான மலையக மக்களையே, இனவாத உள்ளடக்கத்தில் எதிர்த்தவர்கள் இவர்கள். தமிழ் மக்களின் விரோதிகளாக, இனவாதிகளாக செயல்பட்டவர்கள் இவர்கள். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களும் மொழிகளும் உள்ள ஒரு நாட்டில், அவர்கள் இணங்கி வாழும் வகையில் அதன் தனித்துவத்தை அங்கீகரிக்க மறுப்பவர்கள் தான் ஜே.வி.பி. இதனால் இனங்கள் மற்றும் மொழிகளுக்கான தீர்வு எதையும் அரசியல் ரீதியாக வைத்து, ஒரு அரசியல் கிளர்ச்சி செய்ய முடியாதவர்கள் தான் இந்த இனவாத ஜே.வி.பி. வேறு அடையாளம் இந்த இனவாதிகளுக்கு வரலாற்றில் கிடையாது.


Wednesday, September 19, 2007

நெருப்பைப் பொட்டலம் கட்ட முடியுமா?

புரட்சிகர அமைப்புகளைப் பொய் வழக்கால் ஒடுக்க முடியுமா?

ராண்டுகளுக்கு முன்பு ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து, தாமிரவருணியை உறிஞ்ச வரும் அமெரிக்க கோக்கை எதிர்த்து நெல்லையில் நடத்திய மறியல் போராட்டத்தையொட்டி, தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி சந்தைப் பகுதியில் சுவரெழுத்து விளம்பரம் செய்த வி.வி.மு.வைச் சேர்ந்த 4 தோழர்கள் தருமபுரிஅதியமான் கோட்டை போலீசாரால் 24.6.05 அன்று கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

""சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு டவாலி; அப்துல் கலாம் அரசவைக் கோமாளி; சட்டமன்றம், நாடாளுமன்றம் ஏமாற்று; நக்சல்பாரியே ஒரே மாற்று'' என்று சுவரில் எழுதியதுதான் அவர்கள் செய்த "குற்றம்'. இதற்காக, அரசைக் கவிழ்க்கச் சதி, நாசவேலையில் ஈடுபட சதித் திட்டம் என்றெல்லாம் இட்டுக் கட்டி, கொடிய கிரிமினல் சட்டப் பிரிவுகளின்படி தருமபுரி போலீசு இத்தோழர்கள் மீது பொய்வழக்கு சோடித்தது. கீழமை நீதிமன்றங்களில் பிணை மறுக்கப்பட்டு, 56 நாட்களுக்குப் பிறகு சென்னை உயர்நீதி மன்றம் நிபந்தனையுடன் பிணை வழங்கியது. வி.வி.மு.வின் செயல்பாடுகளை முடக்கி ஒடுக்கத் துடித்த தருமுபுரி நகர போலீசு, இவ்வழக்கினை விரைவு நீதிமன்றத்தில் தொடுத்து வெகு விரைவில் தண்டனை கொடுக்க எத்தணித்தது.

ஈராண்டுகளாக நடந்த வழக்கு விசாரணையில் வி.வி.மு. தோழர்கள் நால்வர் மீதும் குற்றம் புரிந்ததற்கான எந்த ஆதாரத்தையும் போலீசாரால் காட்ட முடியவில்லை. தோழர்கள் சார்பில் வாதாடிய மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் பாலசுப்ரமணியத்தின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் போலீசு கும்பல் திக்குமுக்காடியது. இறுதியில், இது வி.வி.மு.வினர் மீது வேண்டுமென்றே புனையப்பட்ட பொய்வழக்கு என்று தீர்ப்பளித்து விரைவு நீதிமன்றம் 18.6.07 அன்று தோழர்களை விடுதலை செய்துள்ளது. பயங்கரவாதப் பீதியூட்டி, தருமபுரி மாவட்டத்தில் புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரத்தைக் கூட ஒடுக்கத் துடிக்கும் போலீசின் முகத்தில் இத்தீர்ப்பு கரியைப் பூசியுள்ளது.

விவசாயிகள் விடுதலை முன்னணி, பென்னாகரம் வட்டம்.

Tuesday, September 18, 2007

சிங்கூர்: சி.பி.எம் - இன் கிரிமினல் அரசியல்

தேசாபிமானி. கேரள சி.பி.எம். கட்சியின் அதிகாரபூர்வ நாளேடு. இடதுவலது என்று போலி கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டாகப் பிரிவதற்கு முன்பு, அது ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் நாளேடாக வெளிவந்து கொண்டிருந்தது. 1947ஆம் ஆண்டில் தேசாபிமானி நாளேட்டுக்காக கம்யூனிஸ்டுகள் நிதி திரட்டியபோது, கோழிக்கோடு மாவட்டம் சொம்பாலா கிராமத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளரும் எழுதப் படிக்கத் தெரியாத விவசாயப் பெண் தோழருமான பாலோரமாதா, தனது கன்றுக்குட்டியை நன்கொடையாக அளித்தார். கூலிஏழை விவசாயிகளையும் தொழிலாளர்களையும் வர்க்க அடித்தளமாகக் கொண்டு இயங்கிய கம்யூனிஸ்ட் கட்சியும் தேசாபிமானி நாளேடும், இன்று சாராய வியாபாரிகள், லாட்டரி சீட்டு முதலாளிகள், சீட்டுக் கம்பெனி முதலாளிகள் முதலானோரைத் தமது வர்க்க அடித்தளமாகக் கொண்டு சீரழிந்து நிற்கிறது.


சந்தியாகு மார்ட்டின்; தென்னிந்தியாவின் மிகப் பெரிய லாட்டரி சூதாட்ட முதலாளி. சிக்கிம்பூடான் லாட்டரி சீட்டு ஏஜெண்டான இவனது சொத்து மதிப்பு, ஏறத்தாழ ரூ.4000 கோடிக்கு மேலிருக்கும் என்று பத்திரிகைகள் சித்தரிக்கின்றன. ஏழை மக்களின் வயிற்றிலடிக்கும் லாட்டரி சூதாட்டத்தின் மூலம் கோடி கோடியாய்க் குவித்துள்ள சமூக விரோதியான மார்ட்டின், இப்போது சி.பி.எம். கட்சியின் "தோழராகி' விட்டான். கேரள சி.பி.எம். கட்சித் தலைவர்களுடன் கூடிக் குலாவும் அவன், தேசாபிமானி நாளேட்டுக்கு ரூ.2 கோடியை அன்பளிப்பாகக் கொடுத்துள்ளான்.


கேரளத்தை ஆளும் சி.பி.எம். முதல்வரான அச்சுதானந்தன் கோஷ்டிக்கும், கட்சியின் மாநிலச் செயலாளரான பினாரயி விஜயன் கோஷ்டிக்குமிடையே நடக்கும் நாய்ச் சண்டை, கட்சி சொத்துக்களை அனுபவிப்பதற்கான அதிகாரச் சண்டையாக முற்றிவிட்ட நிலையில், இக்கோஷ்டிச் சண்டையின் ஊடாக இந்த விவகாரம் மெதுவாகக் கசிந்து இப்போது கேரள மாநிலமெங்கும் நாறுகிறது.


இதனால் சி.பி.எம். கட்சியின் யோக்கியதை சந்தி சிரிக்கத் தொடங்கியதும், ""தேசாபிமானி நாளேடு வெளியிட்ட கடன் பத்திரங்களைத்தான் மார்ட்டின் ரூ.2 கோடிக்கு வாங்கியுள்ளார்; கடன் பத்திரம் முதிர்ச்சியுறும்போது வட்டியோடு அத்தொகையைச் செலுத்துவோம்'' என்று கேரள சி.பி.எம். தலைவர்கள் பசப்பினர். இப்படி கடன் பத்திரங்களை வெளியிட இந்திய ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும்; அப்படி எதுவும் நடக்கவில்லையே என்று பத்திரிகைகள் அம்பலப்படுத்தியதும், இதனால் சட்டச் சிக்கல் ஏதும் வருமோ என்று சி.பி.எம். தலைவர்கள் பீதியடைந்தனர். ""தேசாபிமானி சார்பில் கடன் பத்திரங்கள் எதுவும் வெளியிடவில்லை; தேசாபிமானி நாளேட்டில் லாட்டரிச் சீட்டு விளம்பரம் வெளியிட மார்ட்டின் அட்வான்சாக ரூ. 2 கோடி கொடுத்துள்ளார்'' என்று புதிய விளக்கமளித்தனர். பின்னர் சி.பி.எம். கட்சியின் பொதுச் செயலாளர் முன்னிலையில் "விசாரணை' நடத்தி, இந்தப் பணத்தை மார்ட்டினிடம் திரும்ப ஒப்படைப்பது என்று முடிவாகியுள்ளது.


இப்படி நன்கொடைகள், பங்குகள் விற்பனை, கடன் பத்திரம் முதலானவை தேசாபிமானியோடு நின்று விடவில்லை. சி.பி.எம். கட்சியின் ""கைரளி டி.வி.''இன் 25 லட்ச ரூபாய் பங்குகளை சென்னையைச் சேர்ந்த கள்ளச் சாராய வியாபாரியான "தோழர்' புருசோத்தமன் வாங்கியுள்ளார். கேரளத்தில் 36 பேரின் சாவுக்குக் காரணமான கள்ளச் சாராயத் "தோழர்' மணியச்சன் பல லட்ச ரூபாய்க்கான பங்குகளை வாங்கியுள்ளார். இப்படி சமூக விரோதிகள் சி.பி.எம். கட்சியின் "தோழர்' களாகி விடும்போது, அவர்கள் தமது சமூக விரோத மக்கள் விரோதச் செயல்களுக்கு சி.பி.எம். கட்சியிடம் ஆதரவும் அங்கீகாரமும் கோர மாட்டார்களா? தேசாபிமானி விவகாரத்தில் நடந்துள்ள இன்னுமொரு பேரம் இதை மெய்ப்பித்துக் காட்டுகிறது.


எல்.ஐ.எஸ். என்ற சீட்டுக் கம்பெனி, கேரளத்தில் தனது முதலீட்டாளர்களை ஏய்த்து கோடி கோடியாய்ச் சுருட்டிய மோசடி நிறுவனமாகும். இம்மோசடி நிறுவனத்தின் மீதான வழக்கை விசாரித்து வந்த ஐ.ஜி.யான சென்குமார், சி.பி.எம். கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் அப்பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டார். விசாரணை ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கும்போதே இம்மோசடி நிறுவனம், ""ஜோதிஸ்'' என்ற பெயரில் புதிய சீட்டுக் கம்பெனியைத் தொடங்கி நடத்தி வருகிறது.


இந்த மோசடி சீட்டுக் கம்பெனி, வழக்குகளிலிருந்து தப்பிப்பதற்காக தேசாபிமானி நாளேட்டின் பொது மேலாளரான வேணுகோபாலிடம் ஒரு கோடி ரூபாயை லஞ்சமாகக் கொடுத்து பேரம் பேசியது. வேணுகோபாலும் காரியத்தைக் கச்சிதமாக முடித்துத் தருவதாக உறுதியளித்து லஞ்சப் பணத்தை வாங்கிக் கொண்டார். ஆனால், அவர் வாக்களித்தபடி வழக்குகளிலிருந்து இம்மோசடி நிறுவனத்தைத் தப்புவிக்க முடியவில்லை. காலம் கடந்து கொண்டிருந்தது. லஞ்சம் கொடுத்தும் கூட இம்மோசடிக் கம்பெனிக்கே ""அல்வா'' கொடுத்துவிட்டார் "தோழர்' வேணுகோபால்.


ஆத்திரமடைந்த இம்மோசடிக் கம்பெனி முதலாளிகள், சி.பி.எம். கட்சியின் இதர பிரமுகர்களிடம் புலம்ப, அவர்கள் தங்களுக்கு உரிய பங்கு தரப்படாமல் ஏய்த்ததால் கோபமடைந்து, இந்த விவகாரத்தை வெளியே கசிய விட்டனர். அதைத் தொடர்ந்து, தேசாபிமானி நாளேட்டின் பொதுமேலாளர் பொறுப்பிலிருந்தும் கட்சியிலிருந்தும் வேணுகோபால் நீக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள சி.பி.எம். தலைவர்கள்அமைச்சர்களின் பெயர்கள் வெளிவராமல் மூடிமறைத்து, கட்சித் தலைமை இந்த லஞ்ச பேர விவகாரத்தை அமுக்கிவிட்டது.


கேரள சி.பி.எம். கட்சியின் யோக்கியதை இப்படியிருக்க, மே.வங்க சி.பி.எம். கட்சியோ இன்னுமொரு படி முன்னேறி, பாசிசப் பயங்கரவாதக் கட்சியாகப் பரிணமித்துள்ளது.


மே.வங்கத்தின் ஹுக்ளி மாவட்டத்திலுள்ள சிங்கூரில் டாடா நிறுவனம் கார் தொழிற்சாலை தொடங்குவதற்காக, இடது முன்னணி அரசு விளைநிலங்களை ஆக்கிரமிப்பதை எதிர்த்து அக்கிராம விவசாயிகள் உறுதியுடன் போராடி வந்த நிலையில், கடந்த டிசம்பர் 18ஆம் நாளன்று தபாசி மாலிக் என்ற 18 வயதான இளம்பெண் மீது பாலியல் வன்முறை ஏவப்பட்டு, டாடா கார் திட்ட நிலத்தில் எரித்துக் கொல்லப்பட்டார். மே.வங்கத்தையே உலுக்கிய இப்படுகொலையைச் செய்தது திரிணாமுல் காங்கிரசு நக்சல்பாரிகள் ஆகிய எதிர்த்தரப்பினர்தான் என்று சி.பி.எம். கட்சியின் அதிகாரபூர்வ வார ஏடான ""பீப்பிள்ஸ் டெமாக்கரசி'' வெளிப்படையாகக் குற்றம் சாட்டியது. சிங்கூர் விவசாயிகள் டாடா கார் ஆலைத் திட்டத்துக்கு ஆதரவாக நிற்பதாகவும், போராட்டத்தைத் தூண்டி அரசியல் ஆதாயம் தேட முயற்சித்த எதிர்க்கட்சிகளின் எத்தணிப்புகள் தோல்வியடைந்ததாலும், இப்படுகொலையைச் செய்து பயங்கரவாத பீதியூட்டி வருவதாக மே.வங்க சி.பி.எம். கட்சியினர் கதை கட்டினர்.


ஆனால், இவையனைத்தும் பொய் என்றும், இக்காமவெறிப் படுகொலைச் செய்தது சி.பி.எம். கட்சிக் குண்டர்கள்தான் என்றும் இப்போது மையப் புலனாய்வுத் துறை (சி.பி.ஐ) நடத்திவரும் விசாரணையில் அம்பமலாகியுள்ளது. தேபு மாலிக் என்ற குண்டர்படைத் தலைவனும், அவனது கூட்டாளிகள் நால்வரும், அவனை வழிநடத்திய சிங்கூர் வட்டாரக் கமிட்டிச் செயலாளர் சுஹ்ரித் தத்தாவும் மையப் புலனாய்வுத் துறையால் கடந்த ஜூன் 23ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டுள்ளனர். அடுத்த கட்டமாக, ஹூக்ளி மாவட்டக் கமிட்டி உறுப்பினரான திபாகர்தாஸ் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


சிங்கூர் வட்டாரக் கமிட்டிச் செயலாளரான சுஹ்ரித் தத்தா, சிங்கூரில் டாடா கார் தொழிற்சாலை நிறுவுவதற்கும், விளை நிலங்களை ஆக்கிரமிப்பதற்கும் முன்னின்றவர். விவசாயிகளின் போராட்டம் வலுக்கத் தொடங்கியதும், டாடா ஆலை அமையவுள்ள நிலத்தைச் சுற்றி வேலியும் தடுப்புச் சுவரும் கட்ட சி.பி.எம். குண்டர்களைத் திரட்டி அந்த வேலையை மேற்பார்வையிட்டவர்.


சி.பி.எம். குண்டர் படைத் தலைவனாகிய தேபு மாலிக், இப்பகுதியில் கட்டப் பஞ்சாயத்து செய்து வந்ததோடு சுஹ்ரித் தத்தா, திபாகர்தாஸ் ஆகியோரின் விசுவாச அடியாளாகவும் செயல்பட்டு வந்தான். இத்தலைவர்களோடு சேர்ந்து அவன் வலம் வருவதைக் கண்டு சி.பி.எம். ஊழியர்களே அவனிடம் பயம் கலந்த மரியாதை காட்டினர். டாடா ஆலை அமையவுள்ள நிலத்தைச் சுற்றி வேலியும் தடுப்புச் சுவரும் அமைத்தவனும் இவன்தான். போராடும் விவசாயிகள் இந்த வேலிக்குச் சேதம் விளைவித்து விடாதபடி இவன் தலைமையிலான குண்டர் படை, சி.பி.எம். கட்சியின் உத்தரவுப்படி இரவு நேர காவல் பணியை மேற்கொண்டு வந்தது.


தபாசி மாலிக், குத்தகை விவசாயியும் மீன் வியாபாரியுமான மனோரஞ்சன் மாலிக்கின் ஒரே மகள். சிங்கூர் விளைநிலப் பாதுகாப்புக் குழுவில் ஊக்கமுடன் செயல்பட்டு வந்த அவர், விரைவிலேயே அப்பகுதியில் பிரபலமானார். சிங்கூர் விவசாயிகளின் போராட்டத்தை மிருகத்தனமாக ஒடுக்கிய போதிலும் மீண்டும் அங்கு போராட்டம் மூண்டெழுவதைக் கண்டு பீதியடைந்த சி.பி.எம். தலைவர்கள், போராட்டத்தில் முன்னணியில் நிற்போரின் பட்டியலை குண்டர் படையிடம் கொடுத்து, அவர்களை உரிய முறையில் கவனிக்குமாறு உசுப்பேற்றி விட்டனர்.


டாடா கார் ஆலை அமையவுள்ள நிலத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள முள்வேலிக்கு அருகில்தான் தபாசி மாலிக்கின் வீடு உள்ளது. கடந்த டிசம்பர் 18ஆம் நாளன்று நள்ளிரவில் சிறுநீர் கழிக்க வெளியே வந்த தபாசி மாலிக்கை இக்குண்டர் படை வாயில் துணியை வைத்து அடைத்து இழுத்துச் சென்று பாலியல் வன்முறையை ஏவி, அந்நிலத்தில் வெட்டப்பட்டிருந்த குழியில் தள்ளிக் கொன்று பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளது. இப்போது, மையப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள தேபு மாலிக், தனது கூட்டாளிகளையும் எஜமானர்களையும் காட்டிக் கொடுத்து விட்டான்.


பீதியடைந்த சி.பி.எம். கட்சித் தலைமை, ""தேபு மாலிக் சி.பி.எம். ஆதரவாளன் அல்ல; சி.பி.எம். தலைவர்களுக்கும் அவனுக்கும் எந்தத் தொடர்புமில்லை'' என்று கூசாமல் புளுகியது. கட்சியோடு தொடர்பில்லாத ஒருவன் எதற்காக டாடா கார் அமையவுள்ள நிலத்தில் இரவுக் காவல் வேலையை செய்ய வேண்டும்? அவனை அப்பணிக்கு அமர்த்தியது யார்? என்ற கேள்விகளுக்கு இன்றுவரை சி.பி.எம். கட்சித் தலைமை பதிலளிக்கவில்லை. இதுவொருபுறமிருக்க, தபாசி மாலிக் கொல்லப்பட்ட நாளிலும் அதன் பின்னரும் குண்டர்படைத் தலைவன் தேபுமாலிக்குடன் சி.பி.எம். தலைவர் சுஹ்ரித் தத்தா தொலைபேசியில் உரையாடியுள்ளதை ஆதாரங்களுடன் மையப் புலனாய்வுத் துறை வெளிக் கொணர்ந்துள்ளது.


கடந்த ஜூன் 29ஆம் தேதியன்று சுந்தர்நகர் வழக்கு மன்றத்துக்கு தேபு மாலிக்கும் சுஹ்ரித் தத்தாவும் கொண்டு வரப்பட்டபோது, எதிர்க்கட்சியினரும் உழைக்கும் மக்களும் திரண்டு இக்கொலைக்காரர்களை துடப்பக்கட்டை செருப்பு மாலையுடன் வரவேற்று, அவர்களைத் தூக்கில் போடக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். சி.பி.எம். கட்சியின் கொலைகார கோரமுகம் மாநிலமெங்கும் அம்பலமானதும், ""இது மைய அரசின் அரசியல் சதி; பொய்க் குற்றம் சாட்டி சி.பி.எம்.மின் கௌரவத்தைக் குலைக்க நடக்கும் சதி'' என்று ஒப்பாரி வைத்த சி.பி.எம். தலைமை, தமது கட்சிக்குள்ளேயே ஒரு விசாரணை நாடகத்தை நடத்தி சுஹ்ரித் தத்தா நிரபராதி என்று தீர்ப்பளித்துள்ளது. சங்கரராமனைக் கொல்ல கூலிப்படையை ஏவிவிட்ட காஞ்சி காமகே(õ)டி ஜெயேந்திரன் கைது செய்யப்பட்ட போது, ""பெரிவாள் இப்படியெல்லாம் செய்திருக்கவே மாட்டார்'' என்று பார்ப்பன கும்பல் தாமே தீர்ப்பளித்துத் திருப்திபட்டுக் கொண்டதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு என்பதை அக்கட்சியினர்தான் விளக்க வேண்டும்.


கொலைகாரர்களையும் பயங்கரவாதிகளையும் பயிற்றுவித்துப் பாதுகாக்கும் பாசறையாக சி.பி.எம். கட்சி மாறிவிட்டது என்று குற்றம் சாட்டிய திரிணாமுல் காங்கிரசு கட்சித் தலைவியான மம்தா பானர்ஜி, கடந்த ஜூன் 2ஆம் நாளன்று படுகொலை செய்யப்பட்ட தபாசியின் தந்தை மற்றும் சிங்கூர் நந்திகிராமத்தில் சி.பி.எம். குண்டர்களாலும் போலீசாலும் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களோடு பிரதமர் மற்றும் அரசுத் தலைவரைச் சந்தித்து மைய அரசின் தலையீட்டைக் கோரி மனு கொடுத்ததோடு, பாதிக்கப்பட்டோரை பத்திரிகையாளர்கள்முன் நிறுத்தி, சி.பி.எம்.மின் பாசிச பயங்கரவாதத்தை நாடெங்கும் அம்பலப்படுத்தியுள்ளார்.


அதேநாளில், சிங்கூரில் விளைநிலங்கள் டாடாவுக்காக ஆக்கிரமிக்கப்பட்டதால், வேலையிழந்து, வாழ்விழந்து பட்டினியில் பரிதவித்த கூலி விவசாயி சங்கர்தாஸ் மாண்டு போனார். தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் 78 மாதங்களாக அவர் பட்டினியால் பரிதவித்ததையும், சங்கர்தாசைப் போல 100க்கும் மேற்பட்ட கூலி விவசாயக் குடும்பங்கள் பட்டினியால் பரிதவித்துக் கொண்டிருப்பதையும், நில ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்டோருக்கு மாற்று வேலை ஏற்பாடு செய்து தருவதாக வாக்களித்துவிட்டு ஏய்க்கும் சி.பி.எம். கூட்டணி அரசின் யோக்கியதையையும் அம்பலப்படுத்தி எதிர்க்கட்சிகள் போராட்டங்களை நடத்தின. சி.பி.எம். கட்சியோ சங்கர்தாஸ் பட்டினியால் சாகவில்லை என்று கோயபல்சு பாணியில் புளுகிக் கொண்டிருக்கிறது.


புரட்சி பேசும் சி.பி.எம். கட்சி தனது வர்க்க அடித்தளத்தை மாற்றிக் கொண்டு முதலாளித்துவ கட்சியாக பாசிச பயங்கரவாதக் கட்சியாகச் சீரழிந்து விட்டது. சி.பி.எம். கட்சியும் ஆட்சியும் உழைக்கும் மக்களின் நலனுக்கானது என்று இன்னமும் யாராவது நம்பிக் கொண்டிருந்தால், கேரளத்திலும் மே.வங்கத்திலும் நடந்துள்ள அண்மைக்கால நிகழ்வுகளே அவர்களது மூட நம்பிக்கைகளைத் தகர்த்துவிடும்.

· மனோகரன்

Monday, September 17, 2007

பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழனா

சாதி வெறியர்களின் குலதெய்வத்துக்கு வக்காலத்து வாங்கும் விடுதலைச் சிறுத்தைகளின் சீரழிவு

ரங்களை எளிதில் வெட்டி வீழ்த்த உதவும் கருவியான கோடரியின் காம்பும் மரத்தால்தான் ஆனது என்பது எத்தனை பெரிய சோகம்! தனது சொந்த இனத்தையே எதிரியிடம் காட்டிக் கொடுக்கும் நபர்களையும் கோடரிக்காம்பு என்றுதான் அழைக்கிறார்கள். அண்மையில் திருநெல்வேலியில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம், நமக்குக் கோடரிக் காம்பைத்தான் நினைவுக்குக் கொண்டு வருகிறது.

""மதுரை மீனாட்சி கோவில் நுழைவுக்கு உறுதுணையாய் நின்ற பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு, தேவர் ஜெயந்தி விழாவை அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும்'' என்பதுதான் சிறுத்தைகளின் தீர்மானம்.

ஆதிக்க சாதிக்கு அடங்க மறுக்கச் சொன்ன இயக்கம், திடீரென ஆதிக்க சாதியின் குல தெய்வத்துக்கு மணியாட்டத் தொடங்கியிருப்பது அனைவரது புருவத்தையும் உயர்த்த வைத்துள்ளது.

முதலில், தாழ்த்தப்பட்டோர் மீனாட்சி கோவிலுக்குள் நுழைந்த வரலாறையும் அதில் தேவர் ஆற்றிய பங்கையும் பார்ப்போம்.

காங்கிரசுக் கட்சியின் ராஜாஜி ஆதரவு கோஷ்டியைச் சேர்ந்த மதுரை வைத்தியநாதய்யர், 1939ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் நாள், தும்பைப்பட்டி கக்கன் (பின்னாளில் காமராஜின் அரசில் உள்துறை அமைச்சராக இருந்தவர்) உள்ளிட்ட தாழ்த்தப்பட்டோர்கள் 5 பேரையும், விருதுநகர் சண்முக நாடாரையும் அழைத்துக்கொண்டு, அதுவரை தாழ்த்தப்பட்டோர்களுக்கும், நாடார் உள்ளிட்ட சாதியினருக்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்த மதுரை மீனாட்சி கோவிலுக்குள் நுழைந்தார். இக்கோவில் நுழைவுக்கு அன்றைய கோவில் அறங்காவல் அதிகாரியான ஆர்.எஸ்.நாயுடு உறுதுணையாக இருந்தார்.

1939இலோ, அதற்கு முன்னரோ மீனாட்சி கோவிலுக்குள் நுழையும் உரிமை கோரி தாழ்த்தப்பட்ட மக்களிடையே ஏதேனும் போராட்டம் நடத்தப்பட்டதா, அக்கோவில் நுழைவில் பெருந்திரளாக தாழ்த்தப்பட்ட மக்கள் பங்கெடுத்தனரா என்றால் இல்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும், 1920களிலும் கோவில் நுழைவு உரிமை கோரி நாடார்களாலும், சுயமரியாதை இயக்கத்தாலும் பல போராட்டங்கள் நடத்தப்பட்டாலும், அந்தக் கோரிக்கையை முன்வைத்து தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டோர் அமைப்பாகத் திரண்டு அப்போது போராடியதில்லை.

1932ஆம் ஆண்டில் சென்னையில் ஜெ.சிவசண்முகம் (பிள்ளை) தலைமையில் கூடிய தாழ்த்தப்பட்டோர் மாநாடு கூட ""கோவில் நுழைவு அவ்வளவு அவசியம் இல்லை என்று கருதி'' தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. (""பண்பாட்டு அசைவுகள்'', தொ.பரமசிவன், காலச்சுவடு பதிப்பகம், பக்.188).

1934ஆம் ஆண்டில் டாக்டர் சுப்பராயனின் தலைமையிலான சென்னை மாகாண அரசு கொண்டுவர இருந்த கோவில்நுழைவு மசோதாவை ஆதரிக்கச் சொல்லி காந்தி கேட்டுக்கொண்டபோது , டாக்டர் அம்பேத்கர் அதனை ஆதரிக்க மறுத்துள்ளார். ""கல்வி, பொருளாதாரம், அரசியல் ஆகிய துறைகளில் தாழ்த்தப்பட்டோர் முன்னேறும்போது ஆலய நுழைவு தானாகவே நிகழும்'' என்று காந்திக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பட்டிருந்தார். (""சமூக உரிமைப் போராளி இம்மானுவேல் தேவேந்திரர்'', தமிழவேள், பண்பாட்டு ஆய்வகம், பக். 89)

ஆக, தாழ்த்தப்பட்ட மக்களே இக்கோரிக்கையை முன்வைத்துப் போராடாத நிலையில், இதற்காகப் பேரளவில் திரளாத நிலையில், மதுரை மீனாட்சி கோவில் நுழைவை காங்கிரசு கட்சியினர் நடத்த வேண்டிய அவசியம் என்ன?

அன்றைக்கு காங்கிரசுக்குள் இருந்த சத்தியமூர்த்திராஜாஜி கோஷ்டிப்பூசலில், சத்தியமூர்த்தி கோஷ்டிக்கு இணையாகத் தமக்கு ஆதரவாளர்களை திரட்டவும், கட்டாய இந்தியைத் திணித்து பொதுமக்களிடம் சம்பாதித்திருந்த வெறுப்பைத் தணிக்கவும் ராஜாஜி கோஷ்டி கண்டுபிடித்த தந்திரமே கோவில் நுழைவு.

கோவில் நுழைவில் முத்துராமலிங்கத் தேவரின் பங்கு என்ன?

ராஜாஜி கோஷ்டியால் கோவில் நுழைவு நடக்க இருப்பதை அறிந்திருந்த மீனாட்சி கோவில் பட்டர்கள், ராஜாஜியின் எதிரணியைச் சேர்ந்த முத்துராமலிங்கத் தேவரை அணுகி, கோவில் நுழைவை அடியாட்கள் வைத்து அடித்து, தடுத்து நிறுத்த வேண்டினார்கள். தேவரால் அதற்கு உதவ முடியவில்லை. காரணம், கோவில் நுழைவு நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்புதான், அவரின் தூண்டுதலால் மதுரை பின்னலாடைத் தொழிற்சாலை, சிந்தாமணி திரையரங்கம் ஆகியவற்றில் சாதி ரீதியான வன்முறை நடைபெற்றிருந்ததால், அவர் எந்நேரமும் கைதாகக் கூடிய சூழ்நிலையில் இருந்தார். எனவே, தேவரால் பட்டர்கள் வேண்டுகோளின்படி அடியாட்களை அனுப்பி வைக்க முடியவில்லை. (மேற்கூறிய நூல், பக். 4748 மற்றும் ""முதுகுளத்தூர் கலவரம்'', தினகரன், யாழ்மை வெளியீடு, பக். 106).

தேவரின் எதிர்ப்பில்லாமல் கோவில் நுழைவு நடந்தது. இதுதான் முத்துராமலிங்கத் தேவரின் கோவில் நுழைவு பங்களிப்பு!

தாழ்த்தப்பட்ட மக்களின் ஆதரவைப் பெறாத, தேவரின் "பங்களிப்பு' ஏதும் இல்லாத கோவில் நுழைவு நாடகத்தைத் திரித்து சிறுத்தைகள் தீர்மானமாய்ப் போடுவது ஏன்?

முத்துராமலிங்கத் தேவர் எங்காவது தாழ்த்தப்பட்டோர் விடுதலைக்காகப் போராடியிருக்கிறாரா?

தனது மாற்றாந்தாயின் விளைநிலங்களில் விளைச்சலைக் கொள்ளையடிக்கவும், அதைத் தடுக்க முயன்ற தாசில்தாரின் காலை வெட்டவும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த சோலைக்குடும்பன் போன்ற அடியாட்களை தயார் செய்து அடிமைகளாக வைத்திருந்தவர்தான், தேவர். (""சமூக உரிமைப் போராளி....'', பக். 9598 மற்றும் ""முதுகுளத்தூர் கலவரம்'', பக். 102)

தேர்தல் பிரச்சாரத்தில் ""ஓட்டு இல்லையானால் வேட்டு'' என மிரட்டியே தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகளைக் கைப்பற்றிய தேவர், தான் பதவியில் இருந்தவரைக்கும் முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சிக்குப் பெரும் தடையாகவே இருந்திருக்கிறார். (""முதுகுளத்தூர் கலவரம்'', பக். 54; ""சமூக உரிமைப் போராளி...'', பக். 205). சாலை வசதிகள் வந்து விட்டால், தேவர்களைக் கைது செய்ய காவல் துறை எளிதில் ஊருக்குள் வந்து விடும் என்றும் பயமுறுத்தி, அடிப்படை வசதிகளை வரவிடாமல் தடுத்து வந்தவர்தான் அவர். (""சமூக உரிமைப் போராளி....'', பக். 205 மற்றும் ஆர்.சிதம்பரபாரதியின் சட்டமன்ற உரை, 30.10.1957; ""சட்டப் பேரவையில் தேவர் பற்றிய சதி வழக்கு'', ஜீவபாரதி, சுவாமிமலை பதிப்பகம், பக். 163).

முதுகுளத்தூரில் தனக்கு வாக்களிக்காத ஒடுக்கப்பட்ட மக்கள் மீது கொலை வெறியைத் தூண்டி விட்டு தேவேந்திரர்கள் 17 பேரின் உயிரைக் குடித்த சாதிவெறித் தலைவரின் பிறந்த நாளுக்கு அரசு விடுமுறை கேட்பதுதான் ஒடுக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் கடமையா?

தேவேந்திரர்கள் உழைத்து சேகரித்து வைத்திருந்த உணவு தானியங்களை எரியும் வைக்கோல் படப்புகளுடன் சேர்த்து எரித்தும், பெண்களைப் பலாத்காரம் செய்தும், தாழ்த்தப்பட்டோரின் குடிநீர் கிணறுகளில் மலத்தையும், மண்ணெண்ணெய்யையும் ஊற்றி கோரத்தாண்டவம் ஆடிய சாதிவெறிக் கும்பலை உசுப்பேற்றிவிட்ட மனிதரை ஆதரிப்பதென்பது, தாழ்த்தப்பட்டோர் விடுதலையின் செயல் திட்டமா?

முதுகுளத்தூர் கலவரத்தைக் கட்டுப்படுத்த நடந்த சமாதானக் கூட்டத்தில், தாழ்த்தப்பட்டோரின் தலைவரான இம்மானுவேல் சேகரன் கையெழுத்திட்ட சமாதான ஒப்பந்தத்தில் சமமாகக் கையெழுத்திட மறுத்தும், ""என்னை எதிர்த்துப் பேசுமளவுக்கு ஒரு பள்ளப்பயலை வளர்த்து விட்டிருக்கிறீர்கள். நீங்களும் மறவர்களா?'' எனக் கேட்டு தன் அடியாட்களைக் கொம்பு சீவி விட்டும், இம்மானுவேலின் படுகொலைக்குக் காரணமாய் இருந்தவர்தானே தேவர்? (""சட்டப் பேரவையில்...'' பக். 1718 மற்றும் உள்துறை அமைச்சர் எம்.பக்தவச்சலம் சட்டசபையில் தாக்கல் செய்த அறிக்கை 26.10.1957; ""சமூக உரிமைப் போராளி...'', பக். 139)

தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்த சுவாமி சகஜானந்தா எனும் தலைவர் பலமுறை காங்கிரசு சார்பில் சட்டசபையில் உறுப்பனராக இருந்துள்ளார். சிதம்பரம் பகுதியில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்காகக் கல்வி நிலையம் நிறுவியவர் இவர். இவரின் தொண்டைப் பாராட்டிப் பல கட்டுரைகள் எழுதினார், விடுதலைச் சிறுத்தைகள் எம்.எல்.ஏ.வான ரவிக்குமார். திருமாவளவனும் சகஜானந்தரின் பள்ளி விழாக்களில் கலந்து கொள்பவர்.

முதுகுளத்தூரில் தாழ்த்தப்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது, சட்டசபையில் சுவாமி சகஜானந்தா ""ஒருவன் கொலை செய்தால் அவனைத் தூக்கிலிடுவது வழக்கம்.

ஸ்ரீ முத்துராமலிங்கத் தேவர் செய்துள்ள பெரும் பிழைக்கு அவரை எந்தத் தூக்கில் போடுவது?... சர்க்கார் கொஞ்சம்கூடப் பார்க்காமல் அவரைத் தூக்கிலிட வேண்டும்'' எனப் பேசியுள்ளார். (""சட்டப் பேரவையில்...'', பக். 225)

விடுதலைச் சிறுத்தைகள் கொண்டாடும் சகஜானந்தாவோ, தேவருக்குத் தூக்குத் தண்டனை தரச்சொல்லியிருக்கிறார். ஆனால் சிறுத்தைகளோ, தேவர் ஜெயந்திக்கு விடுமுறை கேட்கின்றனர். இதற்கு பெயர் விடுதலை அரசியலா? சந்தர்ப்பவாதமா?

தாழ்த்தப்பட்டோர் மீது தீண்டாமையைக் கடைபிடித்து வரும் ஜெயேந்திரனுடன் கூட்டணி சேர்ந்திருக்கும் ""தடா'' பெரியசாமி போன்ற கோடரிக்காம்புகளுக்கும், தாழ்த்தப்பட்டோர்கள் மீது தன் வாழ்நாள் முழுக்க வன்கொடுமையை ஏவிய தேவர் மீது பாசம் பொழியும் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் ஏதாவது வித்தியாசம் உண்டா?

யார் யாரை எல்லாம் செருப்பால் அடிப்போம் என்று சொன்னார்களோ, அவர்களுடன் எல்லாம் கூட்டு சேர்ந்து அம்பேத்கரை பலி கொடுத்து உ.பி.யில் ஆட்சியைப் பிடித்திருப்பது பகுஜன் சமாஜ் கட்சி என்றால், சாதி வெறியை வளர்த்து வந்த தேவருக்கு வெண்சாமரம் வீசக் கிளம்பியிருக்கிறது, "அடங்க மறுப்போம்' என்று சொல்லி இயக்கம் வளர்த்த சிறுத்தைகள் கட்சி.

இனி, மேலவளவு முருகேசனைக் கொன்றவர்களுக்குப் பொது மன்னிப்பு கோரி கையெழுத்து இயக்கம் நடத்தவும், திண்ணியத்தில் தாழ்த்தப்பட்டோரை மலம் திண்ண வைத்த சாதி வெறியினரைப் பாராட்டிப் பொன்னாடை போர்த்தவும் கூடத் தயாராவார்கள்.

ஏற்கெனவே இராமதாசுடன் "தமிழ்ப் பாதுகாப்பு' கூட்டணி அமைத்து வன்னியர்களின் சாதிப்பகையில் இருந்து தாழ்த்தப்பட்டோரைக் "காப்பாற்றி' விட்டார்கள். இப்போது தேவர்களின் சாதிப்பகையில் இருந்து தாழ்த்தப்பட்டோரைக் "காப்பாற்ற' போர்த்தந்திரம் வகுக்கிறார்கள் போலும். நல்ல முன்னேற்றம்தான்!

· இரணியன்

Sunday, September 16, 2007

ஏழையின் உயிரைப் பறித்த கல்விக் கடன்

னது மகன் சுரேஷின் பொறியியல் படிப்பிற்கான கட்டணத்தைக் கட்ட முடியாமல் போனதால், பெரம்பலூர் மாவட்டம் வளவெட்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர் செல்வம் கடந்த மாதம் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டு விட்டார். தனது மகனின் படிப்புச் செலவிற்காக ஏற்கெனவே ஒரு இலட்ச ரூபாய் வரையில் வெளியே கடன் வாங்கிவிட்ட பன்னீர் செல்வம், இந்த ஆண்டிற்கான கட்டணத்தைக் கட்டுவதற்கு அரசு வங்கிகள் தரும் கல்விக் கடனை நம்பியிருந்தார். கார் வாங்கவும், ஆடம்பரப் பொருட்கள் வாங்கவும் ஆளைத் தேடிப் பிடித்து கடன் தரும் வங்கிகள், சிறு காய்கறி வியாபாரியான பன்னீர் செல்வத்தை அலைக்கழித்து, அவமானப்படுத்தி வெறும் கையாகத் திருப்பி அனுப்பி விட்டன.

ஓட்டுக் கட்சிகள், இது அதிகாரிகளின் தவறு எனக் குற்றம் சுமத்துகின்றன. வங்கி அதிகாரிகளோ, கடன் விதிமுறைகளைக் காட்டி நழுவிக் கொள்கிறார்கள். இந்த மழுப்பல்களையெல்லாம் ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், காசில்லாதவன் உயர்கல்வி பெற முடியாது என்ற உண்மை நமது முகத்தில் அறைகிறது. உயர்கல்வி வழங்க வேண்டிய பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட்ட அரசு, அதை மூடி மறைப்பதற்காகக் கல்விக் கடன் என்ற கவர்ச்சி வியாபாரத்தை நடத்துகிறது.

பன்னீர் செல்வத்தின் தற்கொலை, இயலாமையினால் நிகழ்ந்துவிட்ட துயரச் சம்பவம் அல்ல. அது, கல்விக் கொள்ளைக்கு எதிரான ஏழை மக்களின் கலகக் குரல்.

கல்விக் கடன் கேட்டு வங்கி அதிகாரிகள் முன் கைகட்டி நிற்பதைவிட, கல்வி தனியார்மயமாக்கப்பட்டதை எதிர்த்துப் போராடுவதுதான் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரே வழி. போராடினால் படிப்பு பாழாகிவிடும் எனச் சிலர் மாணவர்களை அச்சுறுத்தலாம். ஆனால், கல்வி தனியார்மயமாவதை எதிர்த்து முழுவீச்சோடு போராடாமல் இருப்பதால்தான், கல்வி எட்டாக் கனியாக மாறி வருகிறது என்பதை வாழ்க்கை அனுபவம் உங்களுக்கு உணர்த்தவில்லையா?