தமிழ் அரங்கம்

Saturday, August 25, 2007

குஜ்ஜார் போராட்டமும்'சமூக நீதி"யின் வரம்பும்

ழங்குடியினப் பட்டியலில் தங்களைச் சேர்க்கக் கோரி, ராசஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜார் சாதியினர் நடத்திய போராட்டம், நயவஞ்சகமாக ஒடுக்கப்பட்டுவிட்டதோடு, ஓட்டுக்கட்சிகளின் சமூகநீதிக் கொள்கையின் ஓட்டாண்டிதனத்தையும் அப்போராட்டம் அம்பலப்படுத்திக் காட்டிவிட்டது. மனுநீதியின்படி, ஆடுமாடு மேய்ப்பதுதான் குஜ்ஜார்களின் குலத்தொழில். ஆங்கிலேய காலனியாதிக்கத்தின்பொழுது, இச்சாதியினர் குற்றப்பரம்பரையினராக வகைப்படுத்தப்பட்டு ஒடுக்கப்பட்டனர். போலி சுதந்திரத்திற்குப் பிறகு, அரியானா, உ.பி. பஞ்சாப், தில்லி ஆகிய மாநிலங்களில் குஜ்ஜார்கள் மிகப் பிற்படுத்தப்பட்டவர்களாகவும்; காசுமீரிலும் இமாச்சலப் பிரசேதத்திலும் பழங்குடியினச் சாதியினராகவும் வகைப்படுத்தப்பட்டனர்.

ராசஸ்தான் மாநிலத்தில் 1980க்கு முன்புவரை பிற்படுத்தப்பட்ட சாதியினராகப் பிரிக்கப்பட்டிருந்த குஜ்ஜார்கள், அதன் பின்பு மிகப் பிற்படுத்தப்பட்ட சாதிப் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். இன்றும்கூட, ஆடுமாடு மேய்ப்பதும், விவசாயமும்தான் பெரும்பாலான குஜ்ஜார் சாதி மக்களின் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இதைவிட்டால் இராணுவத்தில் சாதாரண சிப்பாயாகச் சேர்ந்து பணியாற்றுவதுதான் இவர்களுக்குத் தெரிந்த இன்னொரு தொழில். ஏறத்தாழ 60 ஆண்டுகள் இடஒதுக்கீடு சலுகையை அனுபவித்து வந்தாலும் கூட, ராசஸ்தானில் குஜ்ஜார் சாதியைச் சேர்ந்த ஒரேயொருவர்தான் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இப்பின்தங்கிய, தேங்கிப் போன சமூகப் பொருளாதார நிலையின் காரணமாக, தங்களைப் பழங்குடியினப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என இராசஸ்தானைச் சேர்ந்த குஜ்ஜார்கள் நீண்ட நாட்களாகக் கோரி வருகின்றனர். 2003ஆம் ஆண்டு நடந்த ராசஸ்தான் மாநிலச் சட்டமன்றத் தேர்தலின்பொழுது, காங்கிரசிடமிருந்து ஆட்சி அதிகாரத்தைத் தட்டிப் பறிக்க, ராஜ்புதனர்கள் ஜாட் குஜ்ஜார் என்ற சாதிக் கூட்டணியை பா.ஜ.க. உருவாக்கியது. மேலும், பா.ஜ.க. தனது தேர்தல் பிரச்சாரத்தின்பொழுது, தாங்கள் ஆட்சிக்கு வந்தால், குஜ்ஜார் சாதியைப் பழங்குடியினப் பட்டியலில் சேர்ப்போம் என்றும் வாக்குறுதி அளித்தது.

இந்திய அரசியல் சாசனத்தின்படி, ஒரு பிற்படுத்தப்பட்ட சாதியைப் பழங்குடியினராக அறிவிக்கும் அதிகாரம் மாநில அரசிற்குக் கிடையாது. அதற்கான பரிந்துரையை மைய அரசிற்கு அனுப்பி வைக்கும் அதிகாரம் மட்டுமே மாநில அரசிற்கு உண்டு. ராசஸ்தான் மாநில பா.ஜ.க. அரசு, குஜ்ஜார்களுக்குச் சாதகமாக இப்பரிந்துரையைக் கூடச் செய்யாமல், குஜ்ஜார்களின் கோரிக்கையை இழுத்தடித்து வந்தது.குஜ்ஜார்களுக்குச் சாதகமாகப் பரிந்துரை செய்தால், அரசியல் அதிகார செல்வாக்குமிக்க ""மீனா'' என்ற பழங்குடியின சாதியினரைப் பகைத்துக் கொள்ள நேரிடும் என்பதுதான் பா.ஜ.க.வின் இழுத்தடிப்புக்குக் காரணம். பா.ஜ.க.வின் 120 சட்டமன்ற உறுப்பினர்களுள், 20 பேர் ""மீனா'' சாதியைச் சேர்ந்தவர்கள். ஏறத்தாழ 500க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீனா சாதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க, வாஜ்பாயி தலைமையில் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, ஆதிக்க சாதியினரான ""ஜாட்'' சமூகத்தை, மிகப் பிற்படுத்தப்பட்ட சாதிப் பட்டியலில் சேர்த்தது. இது, கல்விவேலைவாய்ப்புக்கான இடஒதுக்கீட்டைப் பெறுவதில் ஜாட் சாதியினருடன் போட்டி போட முடியாத நிலையை குஜ்ஜார்களுக்கு ஏற்படுத்தியது. இன்னொருபுறம், தாராளமயத்தால் விவசாயம் போண்டியானதன் காரணமாக, பொருளாதார நெருக்கடியையும் குஜ்ஜார்கள் சந்தித்தனர்.இந்த நெருக்கடியில் இருந்து தப்பிக்க, குஜ்ஜாரிகளைப் பழங்குடியினராக அறிவிப்பதுதான் ஒரே தீர்வு என குஜ்ஜார் சாதித் தலைவர்கள் அனைவரும் பிரச்சாரம் செய்து வந்தனர். இந்நிலையில்தான், முன்னாள் இராணுவ அதிகாரி கிரோரி சிங் என்பவர் தலைமையில் செயல்படும் குஜ்ஜார் இடஒதுக்கீடு போராட்டக் கமிட்டி, குஜ்ஜார்களைப் பழங்குடியினராக உடனே அறிவிக்கக்கோரி, மே 29ஆம் தேதி சாலை மறியல் போராட்டத்தை நடத்தியது.

மே 29 தொடங்கி ஜூன் 4ஆம் தேதி முடிய நடந்த இப்போராட்டத்தில் 21 குஜ்ஜார்கள் போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். ராசஸ்தானைப் பொறுத்தவரை பொதுமக்களின் போராட்டங்களைத் துப்பாக்கிச் சூட்டில் ஒடுக்குவது அபூர்வமானதல்ல. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த மூன்று ஆண்டுகளில், இப்போராட்டத்தையும் சேர்த்து, 16 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த அரசு பயங்கரவாத அடக்குமுறை ஒருபுறமிருக்க, குஜ்ஜார்களுக்கு எதிராக மீனா சாதியினரைத் தூண்டிவிட்டது, பா.ஜ.க. அரசு. குஜ்ஜார்மீனா சாதியினருக்கு இடையே நடந்த மோதலில் 5 பேர் இறந்து போனார்கள்.

சட்டபூர்வமான வழியில், அமைதியான முறையில் தொடங்கிய குஜ்ஜார்களின் போராட்டம், போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகுதான், ரயில் தண்டவாளங்களைச் சேதப்படுத்துவது, அரசு பேருந்துகளுக்குத் தீ வைப்பது போன்ற வன்முறைக் கலகமாக மாறியது. போலீசு துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து அரியானாவிலும், தில்லியிலும் குஜ்ஜார்கள் நடத்திய போராட்டம், அடுத்த தேர்தலில் தங்களின் சாதிக் கூட்டணிக் கணக்கைப் பாதித்துவிடும் என்ற பயத்தை பா.ஜ.க. தலைமைக்கு ஏற்படுத்தியது. இதன்பிறகுதான், ராசஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே, குஜ்ஜார் இடஒதுக்கீடு போராட்டக் கமிட்டி தலைவர் கிரோரி சிங்குடன் நேரடியாகப் பேச்சு வார்த்தை நடத்த ஒப்புக் கொண்டார்.""ஓய்வு பெற்ற உயர்நீதி மன்ற நீதிபதியின் தலைமையில் மூன்று பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்படும்; அக்கமிட்டி குஜ்ஜார்களின் கோரிக்கையை ஆராய்ந்து, மூன்று மாதங்களுக்குள் அரசுக்கு அறிக்கை கொடுக்கும்'' என இப்பேச்சு வார்த்தையில் முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், இம்முடிவை ஒப்பந்தமாகக் கூட எழுதிக் கொடுக்க மறுத்ததன் மூலம், பா.ஜ.க. அரசு குஜ்ஜார்களை மீண்டும் ஏமாற்றி விட்டது.

குஜ்ஜார்களின் கோரிக்கையை ஒடுக்கப்பட்ட சாதிகளுள் ஒன்றான மீனா சாதியினர் எதிர்த்தது ஒருபுறமிருக்க, அவர்களைவிடத் தீவிரமாக பார்ப்பனமேல்சாதி கும்பல் எதிர்த்துப் பிரச்சாரம் செய்தது. ""குஜ்ஜார்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால், அதன் பின்விளைவுகள் மோசமாக இருக்கும். பல்வேறு பிற்படுத்தப்பட்ட சாதியினரும் குஜ்ஜார்களைப் போலவே தங்களுக்கும் சலுகை வழங்க வேண்டும் எனப் போராடத் தொடங்கி விடுவார்கள்'' எனத் "தேசிய' பத்திரிகைகள் பீதியூட்டின.மேலும், ""இடஒதுக்கீடு கொள்கை சாதி மோதலைத்தான் தூண்டி விடுகிறது. குஜ்ஜார்களின் நிலையை வைத்துப் பார்க்கும்பொழுது, சாதி ரீதியான இடஒதுக்கீட்டால் ஏழைகள் எந்தப் பயனும் பெற முடியாது என்பது தெளிவாகி விட்டது. எனவே, அனைத்துச் சாதியிலும் உள்ள ஏழைகள் பயன்பெறும்படி, பொருளாதார அளவுகோலைக் கொண்டு இடஒதுக்கீடு வழங்கு வேண்டும்'' எனப் பார்ப்பனமேல்சாதி கும்பல் தனது நயவஞ்ச ஆசையை வெளியிடுவதற்கு இப்போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டது.இடஒதுக்கீடு கொள்கை இப்படிப்பட்ட நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டிருப்பது உண்மைதான். ஆனால், இதற்கு இடஒதுக்கீடு என்ற சமூக சீர்திருத்தக் கொள்கை காரணம் இல்லை. மாறாக, தாராளமயம் காரணமாக அரசு வேலை வாய்ப்பு சுருங்கிக் கொண்டே போனதும்; தரகு முதலாளிகள் தங்களின் நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த மறுப்பதும்; வேலைவாய்ப்பை அள்ளி வழங்குவதாகக் கூறப்படும் தகவல்தொழில்நுட்பத் துறை, ஆங்கிலம் படித்த பார்ப்பனமேல்சாதி கும்பலின் தனித்தீவாக இருப்பதும்; விவசாயம், சிறு தொழில்கள் நசிந்து வருவதன் காரணமாக அரசு தரும் கல்விவேலை வாய்ப்பைப் பெற போட்டி அதிகரித்து வருவதும் தான் இந்த நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளன.இந்த நெருக்கடிக்கு ஊற்றுக் கண்ணாக இருக்கும் தனியார்மய தாராளமயப் பொருளாதாரக் கொள்கையை மாற்றக் கோர மறுக்கும் பார்ப்பனமேல்சாதி கும்பல், இடஒதுக்கீடு கொள்கையை மாற்றத் துடிக்கிறது. இதன் மூலம், அரசுத் துறையை மீண்டும் தனது முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர மனப்பால் குடிக்கிறது.

இப்பார்ப்பன மேல்சாதிக் கும்பலின் பேராசைக்கு, உச்சநீதி மன்றம் பக்கத் தூணாக நிற்கிறது. குஜ்ஜார்கள் நடத்திய போராட்டத்தின் பொழுது போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் பலியானதைக் கண்டு கொள்ளாத உச்சநீதி மன்றம், சில அரசு பேருந்துகளும், பொதுச் சொத்துகளும் சேதப்படுத்தப்பட்டதை தேசிய அவமானம் என ஊதிப் பெருக்கியது. கலவரத்தில் ஈடுபட்டவர்களின் மீது வழக்குப் போட வேண்டும் என மிரட்டியிருக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்ட குஜ்ஜார்களின் மீது வழக்குப் போடமாட்டோம் எனப் பேச்சு வார்த்தையின் பொழுது ஒத்துக் கொண்ட ராசஸ்தான் மாநில பா.ஜ.க. அரசு, உச்சநீதி மன்ற உத்தரவைச் சாக்காகக் காட்டி, குஜ்ஜார் சாதி சங்கத் தலைவர் கிரோரி சிங் உள்ளிட்டு பலர் மீது வழக்குப் பதிவு செய்துவிட்டது.

அதேசமயம், சமூகநீதிக் கட்சிகளோ இப்போராட்டத்தின் பொழுது காந்தி குரங்குகளைப் போல நடந்து கொண்டன. குறைந்தபட்சம், குஜ்ஜார்மீனா சாதிகளுக்கு இடையே நடந்த மோதலை நிறுத்துவதற்குக் கூட அக்கட்சிகள் முயலவில்லை. பார்ப்பனமேல்சாதி ஆதிக்கத்திற்கு எதிராக ஒடுக்கப்பட்ட சாதிகளின் ஒற்றுமையைக் கட்டுவது என்ற ""சமூக நீதி''க் கொள்கை, நடைமுறையில் அதற்கு எதிரான திசையில் பயணம் செய்கிறது.
""ஏற்றத்தாழ்வு மிக்க சமூக அமைப்பில் இடஒதுக்கீடு போன்ற சீர்திருத்தக் கொள்கைகள் சமத்துவத்தைக் கொண்டு வந்து விடாது; தொழிற்சங்கக் கோரிக்கைகளுக்கான போராட்டம் போலவே, இடஒதுக்கீடு கொள்கையைச் செயல்படுத்துவதற்கும் ஒரு வரம்பிருக்கிறது. இந்த வரம்பை மீறி, ஒடுக்கப்பட்டோர் உரிமை பெறுவதற்கான ஒரே உத்தியாக இடஒதுக்கீட்டைச் செயற்படுத்தும் பொழுது, சாதியக் கண்ணோட்டம்தான் வலுப்படும்'' என பு.ஜ. பலமுறைச் சுட்டிக் காட்டியதை இப்போராட்டம் மெய்ப்பித்து விட்டது.

· செல்வம்

Friday, August 24, 2007

கோதுமை இறக்குமதி மறுகாலனியாதிக்கப் பொறி

ணவுப் பொருள் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்த நாடு எனக் கூறப்படும் இந்தியாவை, உணவுப் பொருளுக்குக் கையேந்தும் நாடாக மாற்றும் சதி மெல்ல மெல்ல அரங்கேறி வருகிறது. உணவுப் பொருள் இறக்குமதி; அரசாங்கம் நேரடியாக உணவுப் பொருளைக் கொள்முதல் செய்வதைப் படிப்படியாகக் குறைத்துக் கொண்டு, அந்தப் பொறுப்பைத் தனியாரிடம் ஒப்படைப்பது; பன்னாட்டு நிறுவனங்களின் விருப்பப்படி இந்திய உணவுக் கழகத்தை மறுசீரமைப்பது; ரேசன் அட்டைகளுக்குப் பதிலாக அமெரிக்காவில் இருப்பதைப் போல உணவு வில்லைகளை வழங்குவது என இந்தச் சதிக்குப் பல முகங்கள் உள்ளன.

கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும், மக்களின் தேவையைக் கருதி கோதுமையை இறக்குமதி செய்யப் போவதாக மைய அரசு அறிவித்திருக்கிறது. கோதுமை உற்பத்தி வீழ்ச்சியடைந்ததைக் காரணமாகக் காட்டி, கடந்த ஆண்டு 55 இலட்சம் டன் கோதுமை இறக்குமதி செய்யப்பட்டது. இந்த ஆண்டோ கோதுமை விளைச்சல் அமோகமாக இருந்தும், ""எதிர்பார்த்த அளவிற்கு அரசால் கோதுமையைக் கொள்முதல் செய்ய முடியவில்லை'' என்ற பச்சைப் பொய்யைச் சொல்லி, 50 இலட்சம் டன் கோதுமையை இறக்குமதி செய்து கொள்ள மைய அரசு திட்டம் போட்டுள்ளது.

இந்த ஆண்டு கோதுமை விளச்சல் 7.35 கோடி டன்னை எட்டிப் பிடித்திருக்கிறது. இது, கடந்த ஆண்டு விளைச்சலை ஒப்பிடும் பொழுது 40 இலட்சம் டன் அதிகமாகும். ""இப்படி விளைச்சல் அமோகமாக இருக்கும் நேரத்தில், அரசு அதிகபட்சமாக 2.2 கோடி டன் அளவிற்குக் கொள்முதல் செய்து, அடுத்த ஆண்டு கோதுமை விளைச்சல் வீழ்ந்தால் கூட, உணவுப் பொருள் விநியோகத்துக்குத் தட்டுப்பாடு ஏற்படாது என்ற நிலையை உருவாக்கி இருக்கலாம். மாறாக, மைய அரசோ, தானே நிர்ணயித்துக் கொண்ட குறைந்தபட்ச அளவை (1.51 கோடி டன்) ஈடு செய்யும் வகையில் கூட கொள்முதலை நடத்தவில்லை'' என முதலாளித்துவப் பத்திரிகைகளே குற்றம் சுமத்துகின்றன. இப்படி நிர்ணயித்துக் கொண்ட அளவை விடக் குறைவாகக் கொள்முதல் செய்வதற்குத் தகுந்த வஞ்சகமான சூழலை, அரசாங்கமே உருவாக்கியது என்பதுதான் இங்கே கவனிக்கத்தக்கது.
கோதுமைக்குக் கொடுக்கும் கொள்முதல் விலையை உயர்த்தித் தரவேண்டும் என விவசாயிகள் கோரிக் கொண்டிருக்கும் பொழுது, மைய அரசோ, ஒரு குவிண்டாலுக்கு ரூ.850/க்கு மேல் ஒரு நயாபைசா கூட உயர்த்தித் தர முடியாது என அறிவித்தது. அதேசமயம், உணவுப் பொருள் கொள்முதலில் இறங்கியுள்ள ரிலையன்ஸ், ஐ.டி.சி. போன்ற தனியார் நிறுவனங்கள் அரசு தரும் ஆதார விலைக்குக் கூடுதலாகக் கொடுத்து, கோதுமையை விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்தது.

இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொண்ட தனியார் நிறுவனங்கள், ஒரு குவிண்டால் கோதுமைக்கு ரூ. 900/ முதல் ரூ. 1,000/ வரை தரத் தயாராக இருப்பதாக விளம்பரம் செய்தன. மேலும், விவசாயிகள் அரசிடம் கோதுமையை விற்பனை செய்வதைத் தாமதப்படுத்துவதற்காக, ""இன்னும் ஒரு சில வாரங்கள் கழித்து, அரசு கோதுமை கொள்முதல் விலையைக் கூட்டித் தர உத்தேசித்துள்ளது'' என்ற வதந்தியையும் முதலாளித்துவப் பத்திரிகைகள் மூலம் பரப்பின. கொள்முதல் விலை உயரும் என விவசாயிகள் காத்திருந்தபொழுது மைய அரசு வதந்தியை மறுத்து, கொள்முதல் விலையைக் கூட்டித் தரும் திட்டம் இல்லை என அறிவித்தது.
அரசாங்கமும், தனியாரும் சேர்ந்து நடத்திய இந்த நாடகத்திற்கு அவர்கள் எதிர்பார்த்த பலன் கிடைத்தது. கோதுமையைச் சேமித்து வைக்க முடியாத விவசாயிகள் அனைவரும், அரசைவிட அதிக விலைதரும் தனியார் நிறுவனங்களிடம் விற்றனர். இதனால், அரசாங்கத்தின் கொள்முதல் குறைந்து போனது. இப்பொழுது, இந்தக் குறைவைக் காரணமாகக் காட்டி, ஏகாதிபத்திய நிறுவனங்களிடமிருந்து 50 இலட்சம் டன் கோதுமையை இறக்குமதி செய்யப் போவதாக அறிவித்திருக்கிறது, மைய அரசு. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதைப் போல, இந்தியத் தரகு முதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஒரு சேர தனது விசுவாசத்தைக் காட்டிக் கொண்டுள்ளது, காங்கிரசு கூட்டணி ஆட்சி.

கடந்த ஆண்டு ஒரு குவிண்டால் கோதுமை ரூ. 1,000/க்கு இறக்குமதி செய்யப்பட்டது. சர்வதேச அளவில் கோதுமை விளைச்சல் வீழ்ச்சி அடைந்திருப்பதால், இந்த ஆண்டு இறக்குமதி செய்யப்படும் ஒரு குவிண்டால் கோதுமையின் விலை ரூ. 1,000/ஐ விடக் கூடுதலாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. கோதுமை கொள்முதல் விலையை உள்நாட்டு விவசாயிகளுக்குக் கூட்டிக் கொடுத்தால், உணவு மானியம் எகிறி விடும்; பட்ஜெட்டில் துண்டு விழும் என சாக்கு போக்கு சொல்லும் மைய அரசு, கார்கில், ஆஸ்திரேலிய கோதுமைக் கழகம் போன்ற "பகாசூர விவசாயிகளுக்காக'' அரசு கஜானாவையே திறந்து வைக்கத் தயக்கம் காட்டவில்லை.
···
கடந்த ஆண்டும் சரி, இந்த ஆண்டும் சரி, இந்த கோதுமை இறக்குமதியை ஏதோ சந்தர்ப்பவசத்தால் நேர்ந்துவிட்ட விபத்து போலக் காட்டிவிட முயன்று வருகிறது, மைய அரசு. ஆனால், இந்திய விவசாயத்தை மறுகாலனியாதிக்கத்திற்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்கும் சதியின் ஓர் அங்கம்தான் கோதுமை இறக்குமதி என்பதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன.
கடந்த ஆண்டு கோதுமை விளைச்சல் ""குறைவாக'' இருந்தாலும் கூட, மைய அரசு தேவையான அளவிற்கு (1.9 கோடி டன்) கோதுமையை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்திருக்க முடியும். ஆனால், கொள்முதல் குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, உ.பி. மாநிலத்தில் கோதுமை கொள்முதல் ஏனோதானோவென்று நடத்தப்பட்டது. வழக்கமாக, குறைந்தபட்சம் 25 இலட்சம் டன் கோதுமை கொள்முதல் செய்யப்படும் அம்மாநிலத்தில், கடந்த ஆண்டு வெறும் 40,000 டன் கோதுமைதான் கொள்முதல் செய்யப்பட்டது. பஞ்சாபிலும், அரியானாவிலும் கொள்முதலைக் குறைத்தால் விவசாயிகளின் போராட்டத்தைச் சந்திக்க நேரிடும் என்பதால், விவசாயிகள் அமைப்பு ரீதியாகத் திரட்டப்படாத உ.பி. மாநிலம் குறி வைக்கப்பட்டது.

இந்திய உணவுக் கழகத்திடம் விற்பனைக்கு வந்த கோதுமையில், 60 சதவீதத்தை மட்டுமே கொள்முதல் செய்த மைய அரசு, 1 கோடி டன் கோதுமை பற்றாக்குறையாக இருப்பதாக அறிவித்தது. பிறகு, இந்தப் பற்றாக்குறையை ஈடு செய்ய ஒரு குவிண்டாலுக்கு ரூ. 1,000/ கொடுத்து 5,500 கோடி ரூபாய் செலவில், 55 இலட்சம் டன் கோதுமையை கடந்த ஆண்டு இறக்குமதி செய்தது. அந்த ஆண்டு, (2006) இந்திய விவசாயிகளிடமிருந்து ஒரு குவிண்டால் கோதுமையை ரூ. 750க்குத்தான் மைய அரசு வாங்கியது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

5 இலட்சம் டன் கோதுமை மட்டும் இறக்குமதி செய்யப் போவதாக பிப்.2006இல் மைய அரசு அறிவித்தவுடனேயே, ""இதைவிட அதிகமாகக் கொள்முதல் செய்ய வேண்டும்'' என நிர்ப்பந்தம் கொடுத்தது, அமெரிக்கா. எங்கள் நாட்டின் கொள்கைகளை அமெரிக்காவின் உணவுக் கழகங்கள் தீர்மானிக்க முடியாது'' என வீராப்பு பேசிய மைய அரசு, அடுத்த நான்காவது மாதங்களுக்குள்ளாகவே, 47 இலட்சம் டன் கோதுமையை அமெரிக்காவில் இருந்தும், ஆஸ்திரேலியாவில் இருந்தும் இறக்குமதி செய்து கொள்ள சம்மதித்தது. இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர், மைய அரசின் அமைச்சரவைச் செயலரை ஏப்.2006இல் சந்தித்த பிறகு, இறக்குமதி செய்யப்படும் கோதுமைக்கான தரம் குறித்த விதிகள் தளர்த்தப்பட்டு, பூச்சிகளும், காளான்களும் நிறைந்த கோதுமை இறக்குமதி செய்யப்பட்டது.
இந்த ஆண்டு இந்தியாவில் கோதுமை விளைச்சல் அமோகமாக இருக்கிறது என்று தெரிந்த நிலையிலும், அமெரிக்க கோதுமைக் கழகம், ""இந்தியா 30 இலட்சம் டன் கோதுமையை இறக்குமதி செய்யும்'' என அறிவித்தது. இந்த அன்புக் கட்டளையை ஈடு செய்யும் வண்ணம், மைய அரசு 50 இலட்சம் டன் கோதுமையை இறக்குமதி செய்யப் போவதாக அறிவித்திருக்கிறது.
···
இந்தியத் தரகு முதலாளிகளும், பன்னாட்டு நிறுவனங்களும் உணவுப் பொருள் கொள்முதலில் நேரடியாக ஈடுபடுவதற்கும், அவற்றைச் சேமித்து வைப்பதற்கும் ஏற்ப அத்தியாவசிய உணவுப் பொருள் சட்டத்தில் ஏற்கெனவே பல திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. எனினும், இந்திய உணவுக் கழகத்தையும், ரேசன் கடைகளையும் இழுத்து மூடி விடவேண்டும் என்று அவர்கள் கோரி வருகின்றனர். உலக வங்கியோ, ""இந்தியா, உணவுப் பொருள் உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதைவிட அந்நியச் செலாவணி கையிருப்பைப் பயன்படுத்தி, உணவுப் பொருட்களை இறக்குமதி செய்து, மக்களின் தேவைகளை ஈடுகட்டலாம்; உணவுப் பற்றாக்குறையைச் சமாளிக்கலாம்'' என அறிவுரை வழங்கியிருக்கிறது.
இந்திய உணவுக் கழகத்தைச் சீரமைப்பது தொடர்பாக, ""அடுத்த இரண்டு ஆண்டுகளில், அந்நிறுவனத்தின் நிதி ஒதுக்கீட்டில் 2,300/ கோடி ரூபாயைக் குறைக்க வேண்டும்; கொள்முதல், விநியோகம் போன்ற முக்கியப் பணிகளைத் தனியாரிடம் ஒப்பந்த அடிப்படையில் விட்டுவிட வேண்டும்; 8,000 முதல் 10,000 தொழிலாளர்களை, விருப்ப ஓய்வூதியத் திட்டத்தின் அடிப்படையில் வீட்டிற்கு அனுப்பி விடவேண்டும்'' என மெக்கன்ஸி என்ற அமெரிக்க நிறுவனம் மைய அரசிற்கு ஆலோசனைகளை வழங்கியிருக்கிறது.
இதன்படி, இந்திய உணவுக் கழகத்தைச் சேர்ந்த 9,000 தொழிலாளர்கள் வேலையில் இருந்து துரத்தப்பட்டு விட்டனர். விவசாயிகள் தங்களின் சுய தேவைக்கு எடுத்து வைத்துக் கொண்டது போக, சந்தைக்குக் கொண்டு வரும் கோதுமையில், 29.6 சதவீதத்தைக் கொள்முதல் செய்துவந்த மைய அரசு, 200506இல் 13.3 சதவீதம்தான் கொள்முதல் செய்திருக்கிறது.

200405இல் 2.47 கோடி டன் அரிசியைக் கொள்முதல் செய்த மைய அரசு, 200506இல் 2.3 கோடி டன்னாக அரிசி கொள்முதலைக் குறைத்துவிட்டது. தமிழகத்தில், மாநில அரசு அரிசி கொள்முதல் செய்வதை நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்திவிட்டது. மத்தியப் பிரதேசத்தில் பாலாகாட் பகுதியிலும், ஒரிசாவின் அரிசி விளையும் ஐந்து மாவட்டங்களிலும் அரிசி கொள்முதல் செய்வது தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. அரசால் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் 2 ரூபாய் அரிசித் திட்டத்தைக் கூட, இத்தனியார்மயத்திற்கு எதிரானதாகப் பார்க்க முடியாது. இக்கவர்ச்சித் திட்டம், ஏகாதிபத்தியங்கள் புகுத்தும் மறுகாலனியாதிக்க கொள்கைக்கு ஒரு மனித முகமூடி மாட்டிவிடும் தந்திரமே தவிர வேறல்ல. இதுபோன்ற கவர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதற்காகவே உலகவங்கி 7,211 கோடி ரூபாயைத் தமிழகத்திற்கு ஒதுக்கியிருக்கிறது. (பார்க்க: பு.ஜ. அக். 2006)

உணவுப் பொருட்களைக் கொள்முதல் செய்வதில் இருந்தும்; அதனைச் சேமித்து ரேசன் கடைகளின் மூலம் விநியோகிப்பதில் இருந்தும் அரசு இன்னும் முற்றிலும் விலகிக் கொள்ளாமல் இருப்பதால்தான், தனியார் முதலாளிகள், அரசின் கொள்முதல் விலையைவிடக் கூடுதலாகக் கொடுத்துக் கொள்முதல் செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள். இதிலிருந்து அரசு ஒதுங்கிக் கொள்ளுமானால், உணவுப் பொருட்களின் கொள்முதல் விலையை மட்டுமல்ல, அதன் விற்பனை விலையையும் தனியார் முதலாளிகள்தான் தீர்மானிப்பார்கள். இந்தத் தனியார்மயம் விவசாயிகளுக்கு மட்டும் எதிரானதல்ல; பெரும்பாலான இந்திய மக்களின் வயிற்றில் அடிப்பதாகவும் அமையும்!·

ரஹீம்

Thursday, August 23, 2007

கரும்பு கசக்கிறது

அரசாலும், தனியார் ஆலைகளாலும் பந்தாடப்படும்
கரும்பு விவசாயிகளின் அவலக் கதை

திருவண்ணாமலை மாவட்டம் நடுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர், இரண்டு மாதங்களுக்கு முன்பாக, தனது ஒரு ஏக்கர் நிலத்தில் விளைந்து நின்ற கரும்புகளைத் தன் கையாலேயே தீ வைத்துக் கொளுத்தி விட்டார். ""இன்னும் சில ஏக்கர்ல கரும்பு மிச்சமிருக்கு; அதையும் கொளுத்திட்டு, எல்லாம் வீணாப் போயிடுச்சுன்னு மனதைத் தேத்திக்க வேண்டியதுதான்'' என விரக்தியோடு சொல்கிறார், அவர்.


ஜெய்சங்ரைப் போல, இந்தப் பகுதியைச் சேர்ந்த பல விவசாயிகள் கரும்புப் பயிரைத் தீ வைத்துக் கொளுத்தியிருக்கின்றனர். இந்த விவசாயிகள் கிறுக்குப் பிடித்துப் போய் இந்தச் செயலைச் செய்யவில்லை. தங்களுக்குக் கிறுக்குப் பிடித்துவிடக் கூடாது என்பதற்காக, கரும்பைத் தீ வைத்துக் கொளுத்திவிட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கரும்பு விவசாயிகளுக்காகத் தொடங்கப்பட்ட அருணாச்சலா சர்க்கரை ஆலை, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, திடீரென சமீபத்தில் மூடப்பட்டது. நட்டக்கணக்குக் காட்டி, கரும்பு விவசாயிகளுக்குத் தர வேண்டிய பாக்கியையும் தராமல் ஓடிவிட்டது ஆலை நிர்வாகம். மேலும் ஆலை திடீரென மூடப்பட்டதால், இம்மாவட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த 3 இலட்சம் டன் கரும்பை என்ன செய்வது என திகைத்துப் போன கரும்பு விவசாயிகள், இப்பிரச்சினையைத் தீர்க்கக் கோரி போராடத் தொடங்கினர். விளைந்து நிற்கும் கரும்பு முழுவதும், அண்டை மாவட்டங்களில் உள்ள கரும்பு ஆலைகளுக்குப் பிரித்துக் கொடுக்கப்படும் என்ற சமரசத் தீர்வை முன் வைத்தது, தமிழக அரசு.

திருவண்ணாமலை மாவட்ட கரும்பை வாங்கிக் கொள்ளும்படி மூன்று முறை உத்தரவு போட்டதாகக் கூறுகிறது, தமிழக அரசு. ஆனால், அண்டை மாவட்ட சர்க்கரை ஆலைகள் இந்தக் காகித உத்தரவுக்கு எந்தவிதமான மதிப்பும் தரவில்லை. கரும்பை வெட்டுவதற்கான உத்தரவை வழங்காமல் இழுத்தடித்து, விவசாயிகளைப் பந்தாடின. பத்துபன்னிரெண்டு மாதங்களில் வெட்ட வேண்டிய கரும்பை 18 மாதங்களாகியும் வெட்டவில்லை என்றால், விளைந்த கரும்பு விறகுக் கட்டையாகத்தான் நிற்கும். இந்தக் கொடுமையைக் காணச் சகிக்க முடியாமல்தான், விவசாயிகள் நட்ட கையாலேயே தங்களின் கரும்பைக் கொளுத்தி விட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டுமல்ல, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கரும்பு விவசாயிகளும் இதேபோன்ற நெருக்கடிக்குள் — பருவம் தாண்டியும் கரும்பை வெட்டுவதற்காக உத்தரவு கிடைக்காத அவல நிலைக்குள் — சிக்கிக் கொண்டுள்ளனர். மகாராஷ்டிராவின் பருத்தி விவசாயிகளைப் போல, தமிழகத்தின் கரும்பு விவசாயிகள் தற்கொலைக்குத் தள்ளப்படுவதாக முதலாளித்துவ பத்திரிகைகளே எச்சரிக்கும் வண்ணம் கரும்பு விவசாயம் நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டுள்ளது.

உரிய பருவத்திற்குள் கரும்பை வெட்டவில்லையென்றால், அதன் நீர்ச்சத்து வற்றிப் போய் பிழிதிறன் குறைந்து போகும். பிறகு, பிழிதிறன் குறைவையே காரணமாகக் காட்டி, கரும்பை அடிமாட்டு விலைக்குக் கேட்கும் நாணயமற்ற வர்த்தக நடைமுறையைத் தனியார் ஆலைகள் நடைமுறைப்படுத்தி வருகின்றன.

""கரும்பின் பிழிதிறன் குறையும் பொழுது, ஒரு ஏக்கரில் 50 டன் கிடைக்க வேண்டிய மகசூல், 30 டன்னாகக் குறைந்து விடும். இந்தக் கரும்பை, லாரி வாடகை, ஆள் கூலி, புரோக்கர் கமிசன் எல்லாம் கொடுத்து ஆலையில் இறக்கிப் போட்ட பிறகு கிடைக்கும் வருமானம், கரும்புக்கு உரம்போட்ட விலையைக் கூடச் சரிகட்டாது'' என்கிறார்கள் விவசாயிகள்.

மைய அரசு இந்த ஆண்டு 1 டன் கரும்புக்கு ரூ.802.50ஐ ஆதார விலையாக நிர்ணயித்தது. தமிழக அரசு, தனது பங்கையும் சேர்ந்து ஆதார விலையை ரூ.1,025/ என நிர்ணயித்தது. ஆனால், தனியாருக்குச் சொந்தமான தரணி சர்க்கரை ஆலை, ""1 டன் கரும்பை ரூ. 600/க்குத் தருகிறோம் என எழுதிக் கொடுங்கள்; இல்லையென்றால் கரும்பை வெட்ட அனுமதி கொடுக்க மாட்டோம்'' என விவசாயிகளை மிரட்டி வருகிறது.

கரும்பு விவசாயிகள் இந்த மிரட்டல் பற்றி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தபொழுது, அவர் விவசாயிகள் தரணி ஆலையைப் பற்றித் தவறாகச் சொல்வதாகக் கூறி, ஆலை நிர்வாகத்துக்காகப் பரிந்து பேசியிருக்கிறார். மற்றொரு தனியார் ஆலையான எஸ்.வி.மில்ஸ் பற்றி விவசாயிகள் பேசத் தொடங்கியவுடனேயே, ""அவர்கள் அரசாங்கம் சொல்வதைக் கேட்க மாட்டார்கள்; என்ன செய்ய முடியும்?'' எனக் கையை விரித்து விட்டார்.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ராஜஸ்ரீ சர்க்கரை ஆலை, 1,400 ஏக்கரில் விளைந்து நிற்கும் பதிவு செய்யப்பட்ட கரும்பை வாங்கிக் கொள்ள மறுப்பதாகவும்; ஆரூரான் குழுமத்தைச் சேர்ந்த அம்பிகா சுகர் மில்ஸ், தனது நிர்வாகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட கரும்பை வாங்காமல், வெளியில் இருந்து விலை குறைவாகக் கரும்பை வாங்குவதாகவும் விவசாயிகள் குற்றஞ் சுமத்துகின்றனர்.

சர்வதேசச் சந்தையில் சர்க்கரையின் விலை இறங்கிவிட்டதால்தான், 1 டன் கரும்பை ரூ.400/க்கும், ரூ.600க்கும் கேட்பதாகத் தனியார் ஆலைகள், இந்த அடிமாட்டு விலையை நியாயப்படுத்துகின்றன. சர்வதேசச் சந்தையில் சர்க்கரை விலை உச்சத்தில் இருந்தபொழுது இலாபத்தினை அள்ளிக் கொண்ட தனியார் முதலாளிகள், சர்க்கரை விலை குறைவால் ஏற்படும் நட்டத்தை ஏற்றுக் கொள்ளாமல் விவசாயிகளின் தலையில் சுமத்தி வருகிறார்கள்.

தனியார் முதலாளிகள் மட்டுமின்றி அரசும் தன் பங்குக்கு கரும்பு விவசாயிகளைக் கசக்கிப் பிழிந்து வருகிறது. கரும்பின் சர்க்கரை கட்டுமானம் 8.5 சதவீதம் என இருந்து வந்ததை, விவசாயிகளைக் கலந்து ஆலோசிக்காமலேயே 9 சதவீதமாக மைய அரசு உயர்த்தி விட்டது. இந்தக் கட்டுமானம் இல்லையென்றால், அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காது. ""கரும்பு பருவம் தவறி வெட்டப்படுவதாலும், கட்டுமானம் உயர்த்தப்பட்டிருப்பதாலும், தமிழக கரும்பு விவசாயிகளுக்கு 200506 மற்றும் 200607 ஆண்டுகளில் 92 கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்படும்'' என இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தமிழகப் பொதுச்செயலர் ஆர்.விருத்தகிரி குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்திலுள்ள தனியார் சர்க்கரை ஆலைகள் 200203, 200304 ஆண்டுகளில் தொடர்ந்த வழக்குகள் காரணமாக, விவசாயிகளுக்குச் சேர வேண்டிய 34.20 கோடி ரூபாய் தனியார் முதலாளிகளிடம் சிக்கிக் கொண்டுள்ளது. வருவாய் மீட்பு சட்டப்படி இந்நிலுவைத் தொகையை அவர்களிடமிருந்து பெற்றுத்தர தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கரும்பை வெட்டி அனுப்பிய 14 நாட்களுக்குள் ஆலைகள் பணம் பட்டுவாடா செய்யாமல் இழுத்தடிப்பதையும்; பதிவு செய்யாத கரும்பு விளைச்சலைக் காட்டி, ஆலைகளில் பதிவு செய்யப்பட்ட கரும்பின் விலையைக் குறைத்துக் கேட்கும் தனியார் முதலாளிகளின் வர்த்தக பேர அடாவடித்தனத்தையும் தமிழக அரசு கண்டு கொள்வதேயில்லை.

தனியார் ஆலைகளிடம் பதிவு செய்து கொண்டுள்ள கரும்பு 18 மாதங்களுக்கு மேலாகியும் வெட்டப்படாத நிலையில், ""இக் கரும்பினை நாட்டுச் சர்க்கரைத் தயாரிக்கப் பயன்படுத்திக் கொண்டு, அரசே நாட்டுச் சர்க்கரையை கிலோ ரூ. 15/ என்ற விலையில் ரேசன் கடைகளின் மூலம் விநியோகிக்க வேண்டும்'' என விவசாயிகள் கோருகிறார்கள். தமிழக அரசு இக்கோரிக்கையைக் கண்டு கொள்ளவில்லை என்பது ஒருபுறமிருக்க, வெட்டாத கரும்பை நாட்டுச் சர்க்கரைத் தயாரிப்பதற்கு விற்றால், ""கள்ளச் சாராயம் காய்ச்சவா நாட்டுச் சர்க்கரை தயாரிக்கிறாய்?'' என போலீசு மிரட்டி மாமூல் பறிப்பதாகக் குமுறுகிறார்கள் விவசாயிகள்.


""உணவுப் பயிர் விவசாயத்துக்குப் பதிலாக, பணப்பயிர் விவசாயத்தில் ஈடுபட்டால், விவசாயிகள் குபேரனாகி விடலாம்'' என்பது போல வேளாண் நிபுணர்களும், அதிகாரிகளும் விவசாயிகள் மத்தியில் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால், தமிழகக் கரும்பு விவசாயிகளின் பரிதாபகரமான நிலையைப் பார்த்தால் இப்படி மாறுவதென்பது, எரிகிற கொள்ளியில் இருந்து தப்பித்து, கொதிக்கிற எண்ணெய் சட்டிக்குள் விழுந்த கதையாகி விடும் என்றுதான் தெரிகிறது.

தனியார் முதலாளிகளிடமும், கூட்டுறவு ஆலைகளிடமும் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு கரும்பு விவசாயம் நடப்பதைப் போல, எல்லா விவசாய விளைபொருட்களையும் ஒப்பந்த அடிப்படையில் சாகுபடி செய்யும் ஒப்பந்த விவசாய முறையை அமல்படுத்துவதற்கும்; ரிலையன்ஸின் அம்பானி தொடங்கி அமெரிக்காவின் வால்மார்ட் வரை, பெரும் முதலாளித்துவ நிறுவனங்கள் இந்த ஒப்பந்த விவசாயத்தில் குதிப்பதற்கும் தயாராகி வருகிறார்கள். 2010க்குள் 10 சதவீத விவசாயிகளை ஒப்பந்த விவசாயிகளாக மாற்றுவது என மைய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஒப்பந்த விவசாயத்தால் விவசாயி தொடங்கி நுகர்வோர் வரை அனைவருக்கும் இலாபம் கிடைக்கும் எனப் பொருளாதார நிபுணர்கள் தேனொழுகக் கூறுகிறார்கள். ஆனால், தற்பொழுதுள்ள முறைக்கு மாற்றாக ஒப்பந்த விவசாயம் வந்தால், ""யார் கொழுப்பார்கள்? யார் இளைப்பார்கள்?'' என்பதற்கு கரும்பு விவசாயமே சாட்சியமாக உள்ளது.


· சுப்பு

Wednesday, August 22, 2007

நகரத்தின் 'அழகு' ஏழைகளுக்குப் பேரழிவு!

தில்லி நகரத்தின் அழகையும், சுற்றுப்புறச் சூழலையும் மெருகூட்டும் பொருட்டு, இயற்கை எரிவாயுவில் ஓடும் வாகனங்களை மட்டுமே அனுமதிப்பது என்ற திட்டத்தின்படி, அந்நகரின் வர்த்தக மையமான சாந்தினி சௌக் பகுதியில் ரிக்ஷா மற்றும் தள்ளுவண்டிகள் இயக்கப்படுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்நகரின் தெருவோரச் சிற்றுண்டி விடுதிகள் சுகாதார கேட்டினைப் பரப்புவதாகக் ""கண்டுபிடித்து'' அவற்றையும் மூடிவிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தில்லியில் தரகு முதலாளிகளும், பன்னாட்டு நிறுவனங்களும் ""சூப்பர் ஸ்டோர்''களைத் திறந்து நடத்துவதற்காக, ஆயிரக்கணக்கான சிறுநடுத்தர கடைகளை இழுத்து மூடிய பிறகு தொடுக்கப்பட்டுள்ள அடுத்த தாக்குதல் இது.

மும்பையில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் நகர்ப்புறச் சேரியான தாராவியை 9,300 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப் போவதாக அறிவித்திருக்கிறது, மகாராஷ்டிர அரசு. இதனால் தாராவியில் வசித்துவரும் 6 இலட்சத்துக்கும் அதிகமான ஏழைநடுத்தர மக்கள்; அங்கு இயங்கிவரும் 5,000 சிறு தொழில்கள்; அத்தொழில்களை நம்பியிருக்கும் 50,000 தொழிலாளர்கள் வேரோடு பிடுங்கியெறியப்படும் அபாயம் எழுந்துள்ளது.

இலட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையும், அற்ப உடைமைகளும் நிர்மூலமாக்கப்படுவதை, அழகு என ரசிப்பது வக்கிரமானதில்லையா? பூச்சிக் கொல்லி மருந்து அதிக அளவில் இருக்கிறது என்பது நிரூபணமான பிறகும் ""கோக்''கைத் தடை செய்ய மறுக்கும் நீதிமன்றம், மக்களின் தெருவோர உணவகங்களைத் தடை செய்வது கேலிக் கூத்தானதில்லையா?

சேவைத் தொழிலின் வளர்ச்சி கூலித் தொழிலாளர்களைத் தேவையற்றவர்களாக்கி, நகரங்களில் இருந்து துரத்தியடிக்கிறது. மனுதர்மம் கிராமப்புறங்களை ஊர் என்றும், சேரி என்றும் பிரித்தது என்றால், தனியார்மயம் நகர்ப்புறங்களைப் பணக்காரர்களின் அக்ரஹாரமாக்கி வருகிறது. இந்த ""அழகை'' ஆளும் கும்பல் வளர்ச்சி என்கிறது; நாம், உழைக்கும் மக்களின் மீது தொடுக்கப்படும் போர் என்கிறோம்.

Tuesday, August 21, 2007

மாற்றுப் பயிர் -மாற்று எரிபொருள்:ஏழை நாடுகளைச் சுடுகாடாக்கும் ஏகாதிபத்திய சதி!

காட்டாமணக்கு சாலையோரங்களில் கேட்பாரின்றி வளரும் புதர்செடி. கிராமங்களில் இதனை வேலியாக நட்டு வைப்பதுண்டு. அதன் நச்சுத் தன்மையை ஆடுமாடுகள் கூட அறிந்திருப்பதால், இச்செடியை முகர்ந்து கூட பார்க்காமல் விலகிச் சென்று விடும். அப்பேர்ப்பட்ட நச்சுச் செடியான காட்டாமணக்கைப் பயிரிட்டு பணம் சம்பாதியுங்கள் என்ற ஆட்சியாளர்கள் விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

மயிலாடுதுறையை சவூதி அரேபியாவாக மாற்றிக் காட்டப் போவதாக தேர்தல் வாக்குறுதி அளித்த மைய அமைச்சர் மணிசங்கர் அய்யர், நெல் பயிரிடுவதை விட்டு மாற்றுப் பயிர் முறைக்கு மாறச் சொல்லி விவசாயிகளுக்கு உபதேசிக்கிறார். 2004ஆம் ஆண்டிலேயே தஞ்சை மாவட்டத்தில் மக்காச்சோளமும், காட்டாமணக்கும் பயிரிட்டு விவசாயத்தை முன்னேற்றத் திட்டம் தீட்டினார், அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா. வேளாண் விஞ்ஞானியான எம்.எஸ்.சுவாமிநாதன், காட்டாமணக்கும் மக்கா சோளமும் பயிரிட்டு ஏற்றுமதி செய்ய சிறப்பு விவசாய மண்டலங்களை நிறுவ வேண்டும் என்று ஆலோசனை கூறுகிறார்.

விவசாயத்தையும் விவசாயிகளையும் முன்னேற்றி விடுவதில் ஆட்சியாளர்களும் அறிவாளிகளும் இவ்வளவு அக்கறை காட்டுகிறார்களே; ஒருவேளை, நாட்டு மக்களாகிய நாம்தான் இன்னமும் பத்தாம்பசலித்தனமாக இருக்கிறோமோ என்று எண்ணிக் கொண்டோம். அது ஒருபுறமிருக்கட்டும். ஆட்சியாளர்களும் வேளாண் விஞ்ஞானிகளும் எதற்காக காட்டாமணக்கைப் பயிரிடச் சொல்கிறார்கள்? காட்டாமணக்கு பயிரிட்டால் ஏழை விவசாயி எப்படி குபேரனாக முடியும்?

நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் பாம் ஆயிலையும், காட்டாமணக்கு விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், சோயா எண்ணெய், புங்கை எண்ணெய் முதலானவற்றை டீசலில் 5% வரை கலந்து எரிபொருளாகப் பயன்புடுத்தலாம். இதனை ""பயோடீசல்'' என்கின்றனர். இதுதவிர பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களில் எத்தனால் எனப்படும் எரிசாராயத்தைக் கலந்து பயன்படுத்துகின்றனர். எரிசாராயத்தை உருவாக்க கரும்பு, மக்காச்சோளம், சர்க்கரை வள்ளிக் கிழங்கு ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. இந்த மாற்று வகை எரிபொருட்கள் தாவரங்களிலிருந்து உருவாக்கப்படுவதால் இவற்றை ""உயிர்ம எரிபொருட்கள்'' (ஆடிணிஞூஞுதடூ) என்கின்றனர்.

இத்தகைய உயிர்ம எரிபொருட்களுக்கும் பயோ டீசலுக்குமான தேவை உலகெங்கும் அதிகரித்துள்ளது. திடீரென இதற்கான தேவை அதிகரிக்கக் காரணம் என்ன?

ஆண்டுதோறும் பூமியின் வெப்பம் அதிகரித்துக் கொண்டே போகிறது. வரைமுறையின்றி நிலக்கரி, பெட்ரோலியப் பொருட்களை எரித்து வருவதால்; அவை வெளியேற்றும் கரிம வாயுக்களின் விளைவாக உலகம் மேலும் மேலும் வெப்பமடைந்து கொண்டே போகிறது. இதன் விளைவாக, வட துருவத்திலும் தென் துருவத்திலும் உள்ள நிரந்தரப் பனிப் பாளங்கள் உருகத் தொடங்கி கடலை நோக்கி வேகமாக ஓடுகின்றன. இதனால் கடல் மட்டம் வேகமாக உயர்ந்து பல சிறிய தீவுகள் கடலில் மூழ்கி அழிந்து போகும்; வளிமண்டல வெப்பநிலை உயர்வால் வறட்சியும் வெள்ளமும் அடுத்தடுத்து நிகழும்; காடுகள் பற்றியெரியும்; வளிமண்டலம் எங்கும் புகைமயமாகும்; பல கோடி உயிரிச் சிற்றினங்கள் முதல் மனிதன் வரை அழிய நேரிடும்.

இப்பேரழிவைத் தடுக்க, பெட்ரோல்டீசல் ஆகியவற்றின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும்; அல்லது அவை வெளியேற்றும் கரிம வாயுக்களின் அளவையாவது மட்டுப்படுத்த வேண்டும் என்ற சுற்றுச்சூழல்வாதிகள் எச்சரித்து வருகின்றனர். புவி வெப்பநிலை அதிகரிப்புக்கும் சுற்றுச்சூழல் நஞ்சாகி பேரழிவின் விளம்பில் உலகம் தத்தளித்துக் கொண்டிருப்பதற்கும் ஏகாதிபத்தியங்களின் இலாபவெறி கொண்ட உற்பத்தி முறையும் போர்வெறியுமே முதன்மையான காரணம். சுற்றுச்சூழலால் நஞ்சாகிப் பேரழிவுக்குள் தள்ளப்பட்டுள்ள உலகைச் சீரமைக்க, ஏகாதிபத்திய நலனுக்கேற்ப ஏழை நாடுகளில் காடு வளர்ப்புத் திட்டங்களைச் செயல்படுத்திய ஏகாதிபத்தியங்கள், நச்சுச் சூழலிலிருந்து உலகைக் காப்பதில் தாங்கள் அக்கறை கொண்டிருப்பது போல் நாடகமாடின. இப்போது, பயோ டீசல் மற்றும் உயிர்ம எரிபொருட்களைக் கொண்டு, கரிம வாயுக்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தப் போவதாகக் கிளம்பியுள்ளன.

அமெரிக்க அதிபர் புஷ் தனது 2007ஆம் ஆண்டின் அரசுக் கொள்கை உரையில், எரிபொருளுக்காக பிற நாடுகளை அமெரிக்கா சார்ந்திருக்கும் நிலையை மாற்ற ""பத்துக்கு 20'' என்ற திட்டத்தைக் குறிப்பிட்டார். அதாவது, 2010ஆம் ஆண்டுக்குள் அமெரிக்கா 20% வரை தனது பெட்ரோலியப் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றார். இதற்காக, உயிர்ம எரிபொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். ஐரோப்பிய ஒன்றியமும் 2007 மார்ச்சில் நடந்த மாநாட்டில், போக்குவரத்துத் துறையில் உயிர்ம எரிபொருள் பயன்பாட்டை 2020க்குள் 10% அளவுக்கு உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது. இந்தப் பின்னணியில்தான், ""சுற்றுச் சூழலைப் பாதுகாப்போம்; புவி வெம்பலைத் தணிப்போம்; உயிர்ம எரிபொருளைப் பயன்படுத்துவேம்; காட்டாமணக்கைப் பயிரிடுவோம்'' என்ற கூச்சல் ஆரவாரமாக எழுப்பப்படுகிறது.

புவி வெம்பலைத் தணித்து சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதற்கான நல்ல திட்டம் போலத் தோற்றமளித்தாலும், இதன் பின்னணியில் ஏழை நாடுகளைச் சுடுகாடாக்கும் மிகப் பெரிய ஏகாதிபத்திய சதி அரங்கேறி வருகிறது. இத்தகைய மாற்றுப் பயிர் மாற்று எரிபொருள் திட்டம் ஏகாதிபத்தியங்களின் அன்புக் கட்டளைப்படி உலகின் பல ஏழை நாடுகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவற்றின் அனுபவம் என்ன?

மெக்சிகோ நாட்டில், அமெரிக்காவின் எரிசாராயத் தேவைக்காக இனிப்புச் சோளப் பயிரின் சாகுபடி பரப்பு அதிகரித்ததால், வெள்ளைச் சோளம் உற்பத்தி குறைந்தது. வெள்ளைச் சோளத்திலிருந்துதான் மெக்சிக மக்களின் அன்றாட உணவாகிய ""டார்ட்டில்லாஸ்'' தயாரிக்கப்படுகின்றது. எரிசாராயத்துக்கான இனிப்புச் சோள சாகுபடியானது இன்று ""டார்ட்டில்லாஸ்''இன் விலையை 37%க்கு உயர்த்தி விட்டது. அடிப்படை உணவின் தட்டுப்பாடு விலையேற்றத்தால் மெக்சிகோ உழைக்கும் மக்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தென்னமெரிக்காவிலுள்ள பிரேசில் நாட்டில் அமெரிக்கத் தேவைக்காக விளைநிலங்களில் கரும்பும் இனிப்புச் சோளமும் பெருமளவில் பயிர் செய்யப்படுகிறது. அவற்றின் விளைபரப்பை அதிகரிக்க, ஏறத்தாழ 9 கோடி ஏக்கர் அளவுக்கு மழைக்காடுகளான அமேசான் காடுகள் அழிக்கப்பட்டு விட்டன. இன்னும் 15 கோடி ஏக்கர் காடுகளை அழிக்க அந்நாட்டின் "முற்போக்கு' அரசு தீர்மானித்துள்ளது. அமெரிக்காவுக்கான ஏற்றுமதி அதிகரித்ததும், தட்டுப்பாடு காரணமாக 2006இல் பிரேசில் நாட்டில் சர்க்கரை விலை இரண்டு மடங்கு அதிகரித்தது.

பாமாயில் எனப்படும் பனை எண்ணெயை ஐரோப்பிய நாடுகள் டீசலுடன் கலந்து எரிப்பதால் மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் எண்ணெய்ப் பனை சாகுபடிக்காக காடுகள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன. உற்பத்தியாகும் பாமாயில் 40%க்கு மேல் எரிபொருளுக்காக ஏற்றுமதி செய்யப்படுவதால், சமையலுக்கான பாமாயில் தட்டுப்பாடு காரணமாக விலையேறி விட்டது.

பிரேசிலில் இறைச்சித் தொழிலுக்கு உறுதுணையாகப் பயிரிடப்பட்டு வந்த சோயாபீன்ஸ், இன்று மாற்று எரிபொருளாக (எண்ணெயாக) மாற்றப்படுவதால், அந்நாட்டின் ஒட்டுமொத்த சோயா சாகுபடியே அமெரிக்காவுக்காக ஒதுக்கப்பட்டு விட்டது. இதன் விளைவாக பிரேசிலில் பன்றி மற்றும் கோழி வளர்ப்புத் தொழில் பெரும் நெருக்கடியில் சிக்கி வீழ்ச்சியடைந்து வருகிறது. ஆடுமாடுகளின் மேய்ச்சலுக்கான நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு சோயா பண்ணைகளாக மாற்றப்பட்டு விட்டதால் ஏழைநடுத்தர விவசாயிகள் ஆடுமாடுகளைக் கூட வளர்க்க முடியாமல் தத்தளிக்கின்றனர். ""நேற்று வரை சோயா எங்களுக்கு வாழ்வளித்த பயிர்; இன்று அது எங்கள் வாழ்வைப் பறிக்க வந்துள்ள கொலைகாரப் பயிர்'' என்று குமுறுகிறார்கள் பிரேசில் விவசாயிகள்.

இந்த உண்மைகள் ஒருபுறமிருக்க, உலகின் பல ஏழை நாடுகளின் உணவுத் தட்டுப்பாடும் பட்டினிச் சாவுகளுக்கான பேரபாயம் இந்த மாற்றப் பயிர் மாற்று எரிபொருள் திட்டத்தால் உருவாகியுள்ளது. உலகெங்கிலுமுள்ள நிலங்களில் ஏறத்தாழ 40% பரப்பளவுக்கு பாரம்பரிய விவசாயம் நடந்து வருகிறது. இந்த விளைநிலங்களிலிருந்துதான் மாற்று எரிபொருள் மாற்றுப் பயிருக்கான நிலத்தை ஒதுக்க முடியும். அமெரிக்காவின் கனவுத் திட்டமான ""பத்துக்கு 20'' திட்டத்தில் பாதியளவுக்கு நிறைவேற்ற, அதாவது, அந்நாடு 10% அளவுக்கு மாற்று எரிபொருளைப் பயன்படுத்த வேண்டுமானால், உலகெங்கிலுமுள்ள விவசாய நிலங்களில் மூன்றில் ஒரு பங்கு நிலங்கள், உணவு தானிய உற்பத்தியைக் கைவிட்டாக வேண்டும். வேறு வார்த்தைகளில் சொன்னால், உலக மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் பட்டினி கிடக்க வேண்டும்!

ஒரு கார் டாங்கில் ஊற்றப்படும் எரிசாராயத்தை உருவாக்கத் தேவையான உணவு தானியத்தைக் (சோளம்) கொண்டு ஒரு வருடத்துக்கு ஒரு மனிதனின் பசியைப் போக்க முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. பல கோடி டன் உணவு தானியங்கள் கார்களில் ஊற்றப்படும் எரிசாராயமாக மாறும் என்றால், எஞ்சியிருக்கும் உணவு தானியங்களுக்காக உலகெங்குமுள்ள ஏழை மக்கள் அடித்துக் கொள்ளும் அபாய நிலை உருவாகும். எனவேதான், மார்ச் 2007இல் அமெரிக்க அதிபர் புஷ் மாற்று எரிபொருள் குறித்த ""பத்துக்கு 20'' திட்டத்தை அறிவித்தவுடனேயே, அமெரிக்க எதிர்ப்பாளரான கியூபா நாட்டின் அதிபர் பிடல் காஸ்ட்ரோ, ""இத்திட்டத்தின் மூலம் மனித இனப் படுகொலைகளை அமெரிக்கா உலகமயமாக்கியுள்ளது'' என்று சாடினார்.

உயிர்ம எரிபொருளுக்குத் தரப்படும் முக்கியத்துவத்தின் பின்னணியில் இன்று ஏழை நாடுகளின் உணவுப் பாதுகாப்பு ஊசலாடிக் கொண்டிருக்கிறது. வசதி படைத்தவர்களின் சொகுசுக் கார்கள் சாலைகளில் சறுக்கிக் கொண்டு ஓடுவதற்காகவும், ஏகாதிபத்திய நாடுகளின் எரிபொருள் தாகம் தீர்வதற்காகவும், ஏழை நாடுகள் பட்டினிச் சாவை நோக்கித் தள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பெயரளவிலான சுயசார்பையும் ஒழித்துக் கட்டும் இந்த ஏகாதிபத்திய சதிக்கு மைய மாநில அரசுகள் விசுவாசமாகச் சேவை செய்து வருகின்றன.

தமிழக அரசு 2004ஆம் ஆண்டிலேயே கரும்பாலைகளில் வடிக்கப்படும் சாராயத்தின் அளவைக் கூட்டிக் கொள்ளவும், புதிதாக வடிப்பாலைகள் நிறுவி எத்தனால் உற்பத்தியைப் பெருக்கிக் கொள்ளவும் அனுமதி அளித்துள்ளது. பயோ டீசல் உற்பத்திக்கு 5% வரிவிலக்கு அளித்துள்ளது. ஆந்திர அரசு, அம்மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் காட்டாமணக்கு மற்றும் காட்டாமணக்கு வகையைச் சேர்ந்த ""ஜெட்ரோபா'' முதலானவற்றைப் பயிரிட பல சலுகைகளை அறிவித்துள்ளது. பல வங்கிகள் இம்மாற்று எரிபொருள் உற்பத்திக்குக் கடன் வழங்குகின்றன. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் பெரியார்புரா, ஆர்.எஸ்.எஸ்.புரா முதலான பெருந்தொண்டு நிறுவனங்களும் உயிர்ம எரிபொருள் திட்டங்களை விவசாயப் பகுதிகளில் செயல்படுத்தி வருகின்றன.

சுற்றுச் சூழலைக் காப்பது என்ற பெயரில் கொண்டு வரப்பட்டுள்ள உயிர்ம எரிபொருட்களால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படுமா? இது குறித்து இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகள் அனைத்தும் இதற்கு நேரெதிரான முடிவுகளையே வெளியிட்டுள்ளன.

எரிசாராயம் கலந்த பெட்ரோல் வெளியிடும் கரிம வாயுக்களின் பருமம் ஒப்பீட்டளவில் குறைவு என்பது உண்மைதான். ஆனால், எரிசாராயத்துக்காக வளர்க்கப்படும் கரும்பு, இனிப்புச் சோளம் ஆகியவற்றுக்கு இடப்படும் பூச்சி மருந்துகள் உரங்கள்; கரும்பை ஆலையில் அரைத்து சாராயம் வடிக்கும் வரை எரிபொருள்கள் வெளியேற்றும் கரிம வாயுக்கள்; எரிசாராயத்தை விற்பனை நிலையம் வரை கொண்டு செல்லும் வாகனங்கள் வெளியேற்றும் புகை என ஒட்டு மொத்த கரிமவாயுக்களின் பருமத்தைக் கணக்கிட்டால் எல்லா கழுதையும் ஒன்றுதான்.

மேலும், மாற்றுப் பயிர் சாகுபடியானது சுற்றுச் சூழலைக் காப்பதற்கு மாறாக, பல நாடுகளில் சுற்றுச்சூழலையே நஞ்சாக்கி விட்டுள்ளதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. தென்னமெரிக்காவில், அமெரிக்காவின் எரிபொருள் பசிக்காக தொடர்ந்து காடுகள் அழிக்கப்படுவதால், பூமி வெம்பல் மேலும் தீவிரமாகி விட்டது. அங்குள்ள ஆண்டேஸ் மலைத் தொடரின் பனி சூழ்ந்த சிகரங்கள் உருகத் தொடங்கி விட்டன. இந்தோனேஷியா முழுவதும் ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளின் தேவைக்காக எண்ணெய்ப் பனையும் காட்டாமணக்கும் காடுகளை அழித்து பயிரிடப்பட்டுள்ளதால், சுற்றுச்சூழல் சீர்கேட்டில் அந்நாடு உலகின் மூன்றாவது இடத்தை எட்டி விட்டது.

மாற்று எரிபொருளுக்காக காடுகள் அழிக்கப்படாமலிருந்தால், அந்தக் காடுகளே சுற்றுச்சூழலைக் காப்பதில் மாற்று எரிபொருளை விட முன்னணியில் இருந்திருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். உயிர்ம எரிபொருளை உற்பத்தி செய்யப் பயிரிடப்படும் மாற்றுப் பயிர்களின் அமோக விளைச்சலுக்காகக் கொட்டப்படும் உரமும் பூச்சிக் கொல்லிகளும் பெட்ரோலியப் பொருட்கள்தான். பெட்ரோலியப் பயன்பாட்டைக் குறைப்பதாகக் கூறிக் கொண்டு நிலத்தையும் நீரையும் அதே பெட்ரோலியப் பொருட்களால் நஞ்சாக்குவது எப்பேர்பட்ட புத்திசாலித்தனம்! மேலும், ஏகாதிபத்தியங்களின் எரிபொருள் தாகத்திற்காக காட்டாமணக்கு, ஜெட்ரோபா, சோயா, சோளம் என ஒற்றைப் பயிர் முறைக்கு நிலம் மாற்றப்பட்டால் நிலம் மலடாகிப் போகாதா?

பாரம்பரிய விவசாயத்தை நாசமாக்கி, மராமத்துப் பணிகளை அறவே புறக்கணித்து, தனது வணிகத் தேவைக்காக பருத்தி, அவுரி முதலானவற்றைக் கட்டாயமாகப் பயிரிட வைத்து பெரும் உணவுப் பஞ்சத்தை விளைவித்து, நமது முன்னோர்களைக் காவு கொண்டது அன்றைய காலனியாதிக்கம். இன்று, தனியார்மய தாராளமயத் தாக்குதலால் விவசாயத்தைத் திவாலாக்கி, ஏகாதிபத்திய தேவைக்காக காட்டாமணக்கையும் இனிப்புச் சோளத்தையும் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியாவை மாற்றி, உணவுக்காக நிரந்தரமாகக் கையேந்தும் நிலைக்கு நாட்டை தள்ளிவிட்டுள்ளது மறுகாலனியாதிக்கம். அன்று, கட்டபொம்மன் கோட்டையை இடித்த வெள்ளைக்காரன் அந்த இடத்தில் எள்ளையும் ஆமணக்கையும் விதைத்தான். இன்று, உணவுக்கான விவசாயத்தை ஒழித்து கள்ளியையும் காட்டாமணக்கையும் விதைக்கின்றன அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள். மாற்று எரிபொருள் எனும் வஞ்சக வலை விரித்து ஆதிக்கம் செய்யக் கிளம்பியுள்ள ஏகாதிபத்திய சதியை அம்பலப்படுத்தி முறியடிப்பதும், விவசாயிகளை ஓரணியில் திரட்டிப் போராடுவதுமே புரட்சிகர ஜனநாயக சக்திகளின் இன்றைய அவசரக் கடமையாகியுள்ளது.

Monday, August 20, 2007

மே.வங்கத்தில் பட்டினிச் சாவுகள் ஈயத்தைப் பார்த்து இளிக்கும் மார்க்சிஸ்டு ஆட்சி

போலி கம்யூனிஸ்டுகள் ஆளும் மே.வங்கத்தின் டார்ஜலிங் தேயிலை, அலாதியான மணத்தாலும் சுவையாலும் உலகப்புகழ் பெற்றது. மே.வங்கத்தின் வடக்கே டார்ஜிலிங், ஜல்பைகுரி, கூச்பிகார் மாவட்டங்களில் உள்ள இச்சிறப்பு மிக்க தேயிலைத் தோட்டங்களிலிருந்து வீசும் காற்றில் இப்போது தேயிலை மணம் வீசுவதில்லை. பிணவாடை வீசிக்கொண்டிருக்கிறது.

ஒருவரல்ல; இருவரல்ல. கடந்த ஐந்தாண்டுகளாக ஒரு நாளைக்கு ஒரு தொழிலாளி என்ற விகிதத்தில் கொத்துக்கொத்தாக தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பட்டினியால் மாண்டு போயுள்ளனர். கடந்த 2002ஆம் ஆண்டிலிருந்து தொழிலாளர்களும் அவர்களது குடும்பத்தினருமாக சேர்த்து ஏறத்தாழ 3000 பேருக்கு மேல் மாண்டு போயிருக்கலாம் என்று பத்திரிகைகள் மதிப்பிடுகின்றன. குறிப்பாக, கடந்த ஓராண்டில் மட்டும் 496 பேர் இவ்வட்டாரத்தில் பட்டினியாலும் சத்துணவின்றி நோய்கள் தாக்கியும் மாண்டு போயுள்ளனர். இவர்கள் மூப்படைந்த முதியவர்கள் அல்ல; அனைவருமே 50 வயதுக்கும் குறைவானவர்கள். இவர்களில் குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் எண்ணிக்கை மட்டும் 112 பேராகும்.
தாராளமயமாக்கலின் பின்னே தேயிலை இறக்குமதியால் ஏற்பட்ட விலை வீழ்ச்சியின் காரணமாக, 1998இலிருந்தே அடுத்தடுத்து பல தேயிலைத் தோட்டங்கள் மூடப்பட் டன. 2002 ஆம் ஆண்டில் இது இன்னும் தீவிரமாகி, இவ்வட்டாரத்தில் 18 தேயிலை எஸ்டேட்டுகள் மூடப்பட்டு கிடக்கின்றன. இதன் விளைவாக, தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாரையும் சேர்த்து ஏறத்தாழ 17000 பேர் வேலையிழந்து வாழ்விழந்து பட்டினியால் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர்.

""30 ஆண்டுகளாக பாட்டாளிகளின் பொற்கால ஆட்சி நடக்கும் மாநிலம்; தொழிலாளர்கள் உழைக்கும் மக்களின் நலனில் அக்கறை கொண்ட மாநிலம்; பொது விநியோகமுறை (ரேஷன்) எவ்விதக் குறையுமின்றி செயல்படுத்தப்படும் மாநிலம். பட்டினியோ, பட்டினிச் சாவுகளோ இல்லாத மாநிலம்'' என்றெல்லாம் பீற்றிக் கொள்ளப்படும் போலி கம்யூனிஸ்டுகள் ஆளும் மே.வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 26 தொழிலாளர்கள் பட்டினியால் மாண்டு போயுள்ளனர். ""இவை பட்டினிச் சாவுகள் அல்ல; காசநோய், மாரடைப்பு, மஞ்சள் காமாலை, புற்றுநோய் முதலான தீராத கொடிய நோய்களாலேயே இச்சாவுகள் நிகழ்ந்துள்ளன'' என்கிறார், ஜல்பைகுரி மாவட்டத் தலைமை மருத்துவ அதிகாரி.

ஆனால்,""பட்டினியும் சத்துணவின்மையும்தான் இந்நோய்களுக்குக் காரணம். பட்டினியால் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து, அதுவே பல நோய்கள் தாக்குவதற்குக் காரணமாகி விடுகிறது. பட்டினி தீவிரமாகியதும் நோய்களும் தீவிரமாகி மரணத்தை விரைவுபடுத்துகிறது'' என்கிறார்கள் இப்பகுதியிலுள்ள மருத்துவர்களும் சுகாதார ஆய்வாளர்களும்.

""எனது தந்தை பல நாட்கள் உண்ண உணவின்றி பட்டினியால் பரிதவித்தார். காசநோய் தாக்கி படுக்கையில் வீழ்ந்தார். சுட்ட பலாக்கொட்டையும் செவ்வெறும்பு சூப்பும் பச்சைத் தேநீரும் அவருக்கு ஒத்துக் கொள்ளவில்லை. நோய் வாய்ப்பட்ட அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சையளிக்கவும் எங்களுக்கு வசதியில்லை. மரணத்தோடு போராடிய அவரை மருத்துவமனை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதியும் கிடைக்காததால், கட்டிலில் வைத்துத் தூக்கிச் சென்றோம். வழியிலேயே அவர் இறந்து விட்டார்'' என்று விம்முகிறார்,சுபாஷ் மகடோ. ஆனாலும் இது பட்டினிச்சாவு அல்ல என்கின்றனர், போலி கம்யூனிஸ்டு ஆட்சியாளர்கள்.

தனியார் தேயிலைத் தோட்டங்கள் மூடப்பட்டு, வேலையிழந்து வாழ்விழந்த தொழிலாளர்கள் இத்தேயிலைத் தோட்டங்களை அரசே ஏற்று நடத்துமாறு கோரி போராடினார்கள். ஆனால், தாராளமயத்தை எதிர்ப்பதாகச் சவடால் அடிக்கும் போலி கம்யூனிச ஆட்சியாளர்கள் அசைந்து கொடுக்கவில்லை. தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்குத் தர வேண்டிய சம்பள பாக்கி, சேமநல நிதி, போனசு, காப்பீடு நிதி மற்றும் பிறவற்றைக் கொடுக்கச் சொல்லி அரசிடம் முறையிட்டார்கள். தொழிலாளர்களின் தோழனாகப் பீற்றிக் கொள்ளும் இடது முன்னணி அரசோ, ""விலை வீழ்ச்சியால் நட்டப்பட்டு முதலாளிகளே தேயிலைத் தோட்டங்களை மூடிவிட்ட நிலையில், அவர்களிடமிருந்து எப்படி பாக்கியை வசூலிக்க முடியும்?'' என்று எதிர்வாதம் செய்து தொழிலாளர்களை எவ்வித நிவாரணமுமின்றி வீதியில் வீசியெறிந்தது.

""மூடப்பட்டுள்ள ஒவ்வொரு தேயிலைத்தோட்ட முதலாளியும் தொழிலாளிகளுக்குத் தரவேண்டிய சம்பள பாக்கியும் இதர பாக்கியும் சேர்த்து ஏறத்தாழ 56 கோடி ரூபாய்க்கும் மேலிருக்கும். ஜல்பைகுரி, டார்ஜிலிங் மாவட்டங்களில் 30க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டங்கள் மூடப்பட்டு அவற்றின் முதலாளிகள் பல நூறு கோடிகளைச் சுருட்டி விட்டனர். இத்தேயிலைத் தோட்டங்கள் அனைத்தும் அரசாங்க நிலத்தில் குத்தகைக்கு நடத்தப்படுகின்றன. இடதுசாரி அரசாங்கமோ இம்முதலாளிகளிடமிருந்து குத்தகை பாக்கியைக் கூட வசூலிக்காமல், அவர்களைத் தப்பவிட்டு தனது வர்க்கப் பாசத்தை நிரூபித்துக் காட்டியுள்ளது'' என்கின்றனர், இப்பகுதியிலுள்ள வேலையிழந்த தொழிலாளர்கள்.

வேலையிழந்து வாழ்விழந்த தொழிலாளிகள் தற்கொலை செய்து கொண்டதால், கைக்குழந்தைகளுடன் பரிதவிக்கும் குடும்பப் பெண்கள்; காசநோய் தாக்கி எலும்பும் தோலுமாக படுக்கையில் வீழ்த்தப்பட்ட தொழிலாளர்கள்; சத்துணவின்றி நோஞ்சான்களாக உழலும் குழந்தைகள்; அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் அவல நிலையில் தொழிலாளர் குடியிருப்புகள் — என ஜல்பைகுரி, டார்ஜிலிங், கூச்பிகார் மாவட்டங்களை வறுமையும் நோயும் பட்டினியும் பிடித்தாட்டிக் கொண்டிருக்கிறது.

வாழ்விழந்த தோட்டத் தொழிலாளர்களில் சிலர், குடும்பத்தோடு சிக்கிம்பூடõனுக்குச் சென்று கல்குவாரிகளில் கொத்தடிமைகளாக உழல்கின்றனர். ""கல்குவாரிகளில் நிகழும் விபத்துகளில் படுகாயமடைந்தால் அங்கு சிகிச்சை பெறக்கூட முதலாளிகள் உதவுவதில்லை'' என்கிறார் ஒரு தொழிலாளி. வறுமை காரணமாக சிக்கிம்பூடானில் வீட்டு வேலைக்காகச் செல்லும் இளஞ்சிறுமிகள் கொடும் சித்திரவதைக்குள்ளாகின்றனர். வீட்டு வேலைக்காக இளஞ்சிறுமிகள் புரோக்கர்களால் கடத்தப்படுவதும், பாலியல் வன்முறைக்கு ஆளாவதும் இவ்வட்டாரமெங்கும் அதிகரித்து வருகிறது. சிலிகுரியைச் சேர்ந்த மீனா தேவி என்ற இளம்பெண், தனக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளை வறுமை காரணமாக தலா ரூ. 3000க்கு விற்க முயன்று, அப்பகுதியிலுள்ள மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டு, அவருக்கு அடைக்கலம் அளித்த செய்தி வங்க நாளேடுகளில் வெளிவந்து போலி கம்யூனிச ஆட்சியின் யோக்கியதை நாடெங்கும் நாறியது. தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த வட மாவட்டங்கள் மட்டுமின்றி,தெற்கே ஜார்கண்ட், ஒரிசா மாநிலங்களை ஒட்டியுள்ள புருலியா, மித்னாபூர் மாவட்டங்களின் பழங்குடி மக்களும் பட்டினியால் மாண்டு போயுள்ளதாகச் செய்திகள் வருகின்றன.
தேசிய குற்றவியல் பதிவுத்துறையானது.""கடந்த 200506 ஆண்டில் மகாராஷ்டிர மாநில பருத்தி விவசாயிகளின் தற்கொலைச் சாவுகளை விஞ்சும் வண்ணம், மே. வங்கத்தில் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் தற்கொலைகள் அதிகரித்துள்ளன'' என்ற அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது. ஒட்டு மொத்த தற்கொலைச் சாவுகளில் 98.4% சாவுகள் கிராமப்புறங்களில் நடந்துள்ளன என்றும், இவர்களில் பெரும்பாலோர் விவசாயக் கூலிகள் என்றும், கிராமப்புற பெண்களே அதிகமாக தற்கொலை செய்து கொண்டு மாண்டு போயுள்ளனர் என்றும் இத்துறை குறிப்பிடுகிறது. ""அனைத்திந்திய அளவில் தற்கொலைச் சாவுகளில் முதலிடம் வகிக்குமளவுக்கு இடதுசாரிகள் ஆளும் மே.வங்க மாநிலம் முன்னேறிக் கொண்டிருக்கிறது; காலனிய ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த பஞ்சத்தின்போது நடந்த பட்டினிச் சாவுகளை விஞ்சிவிடும் அளவுக்கு, இப்போது அடுத்தடுத்து தற்கொலைகளும் பட்டினிச் சாவுகளும் பெருகிவிட்டன'' என்று வங்க நாளேடுகளே குற்றம் சாட்டுகின்றன.

போலி கம்யூனிச ஆட்சியின் மெத்தனத்தைக் கண்டித்து சில பத்திரிகையாளர்களும் மனித உரிமை அமைப்பினரும் ஆளுநரிடம் முறையிட்ட பிறகு, கடந்த மார்ச் மாதத்தில் மே.வங்க ஆளுநரான கோபால கிருஷ்ண காந்தி டார்ஜிலிங், ஜல்பைகுரி மாவட்டங்களில் பட்டினியால் மக்கள் பரிதவிக்கும் பகுதிகளைப் பார்வையிட்டு, உடனடியாக உணவுப் பொருட்களை நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளனர். 10 கிலோ அரிசியும் 10 கிலோ கோதுமையும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் நிவாரணமாக வழங்கப்பட்ட போதிலும், ரேஷன் கடையிலிருந்து வெளியே வரும் எந்தப் பையிலும் 10 கிலோ எடைக்கு அரிசியோ கோதுமையோ இருப்பதில்லை. பெரும்பாலான மக்களால் இந்த நிவாரணத்தைக் கூட வாங்க முடியவில்லை. ஏனெனில், அவர்கள் ஏற்கெனவே தமது ரேஷன் அட்டைகளை அடகு வைத்துவிட்டனர். இப்படி ரேஷன் அட்டைகளை அடகு பிடித்துள்ளவர்கள் இப்பகுதியின் சி.பி.எம். பிரமுகர்களான கந்து வட்டிக்காரர்கள்தான் என்பதை பத்திரிகைகள் ஆதாரத்தோடு அம்பலப்படுத்துகின்றன.

இவ்வளவுக்குப் பிறகும் மே.வங்க இடது,வலது போலி கம்யூனிச அமைச்சர்களோ, கட்சித்தலைவர்களோ பட்டினியால் பரிதவிக்கும் இப்பகுதி மக்களை இன்றுவரை ஏறிட்டும் பார்க்கவில்லை. மே.வங்க பாசிச முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, மகிந்திரா நிறுவனம் மே.வங்கத்தில் ஆலையை தொடங்குவதற்காக பொருத்தமான இடத்தைத் தேர்வு செய்ய பம்பரமாகச் சுழல்கிறார். டி.எல்.எப். எனும் வீட்டுமனைக் கட்டுமானக் கழகத்துக்கு 5000 ஏக்கர் நிலம் ஒதுக்கி ஒப்பந்தம் போடுவதற்காக நில அமைச்சர் அப்துர்ரஜாக் மொல்லா இரவு பகலாக அலைந்து கொண்டிருக்கிறார். அன்னிய முதலீடுகளைக் கவர்ந்திழுக்க தொழிலமைச்சர் வெளிநாடுகளுக்குப் பறக்கிறார். மற்ற அமைச்சர்களோ நந்திகிராமத்தில் தொடரும் மக்கள் போராட்டத்தை எப்படி ஒடுக்குவது என்பதற்காக ஆலோசனைக் கூட்டங்கள் நடத்துவதற்கே நேரம் போதவில்லை. இப்படி மாநிலத்தைத் தொழில்மயமாக்கி "வளர்ச்சி'யை சாதிக்க உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகளுக்கு விசுவாசமாக சேவை செய்யவே அவர்களுக்கு நேரமில்லாத போது, பட்டினியால் தவிக்கும் உழைக்கும் மக்களைப் பார்க்க அவர்களுக்கு நேரமேது?

கடவுள் நம்பிக்கை மட்டுமல்ல; போலி கம்யூனிஸ்டுகளின் ஆட்சியானது, உழைக்கும் மக்களின் நலனுக்கான ஆட்சி என்று இன்னமும் யாராவது நம்பிக் கொண்டிருந்தால் அதுவும் மூட நம்பிக்கைதான்!

Sunday, August 19, 2007

'நீ எங்களோடு இல்லையென்றால் நீ தீவிரவாதியோடு இருக்கிறாய்!"

அரசு பயங்கரவாதம் விடுக்கும் எச்சரிக்கை

"நக்சல்பாரிகள், மாவோயிஸ்டுகள்... இந்தியா ஒரு போலீசு அரசாக மாறப் போகிறது. நிலவுவதை யார் ஏற்க மறுக்கிறார்களோ, அவர்கள் தீவிரவாதிகளாக அழைக்கப்படுவார்கள். இசுலாமிய தீவிரவாதிகள் இசுலாமியராக இருந்தாக வேண்டும். எனவே, நம் அனைவரையும் குறிக்க அது போதாது. அவர்களுக்கு பெரிய வலை தேவைப்படுகிறது. எனவே, தெளிவின்றி வரையறுப்பதும், வரையறுக்காமலே விடுவதும் ஒரு சரியான உத்திதான். ஏனெனில், நாம் அனைவரும் மாவோயிஸ்டுகள் அல்லது நக்சலைட்டுகள், தீவிரவாதிகள், தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் என அழைக்கப்படவும், மாவோயிஸ்ட் அல்லது நக்சலைட் என்றால் யாரென்று தெரியாத அல்லது கவலைப்படாத நபர்களால் நமது கதை முடித்து வைக்கப்படுவதுமான காலம் வெகு தொலைவில் இல்லை.''

கடந்த பிப்ரவரி மாதம் "தெஹல்கா' வார ஏட்டுக்கு அளித்த பேட்டியொன்றில், நந்திகிராம மக்கள் போராட்டத்தை நக்சல்பாரிகள்தான் தூண்டிவிட்டதாக மேற்கு வங்க அரசு பிலாக்கணம் பாடி வந்ததை அம்பலப்படுத்திப் பேசும் பொழுது, மேற்குறிப்பிட்ட கருத்தை எழுத்தாளர் அருந்ததிராய் குறிப்பிட்டார். மே மாதம் 14ஆம் தேதி சத்தீஸ்கரில் மனித உரிமைப் போராளி, மருத்துவர் பினாயக் சென்னை கைது செய்து சிறையிலடைத்தன் மூலமாக அம்மாநில அரசு இக்கருத்து மிகையல்ல என்பதை நிரூபித்திருக்கிறது.

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்2004 மற்றும் தடா, பொடாவையெல்லாம் விஞ்சக் கூடிய கருப்புச் சட்டமான ""சத்தீஸ்கர் சிறப்புப் பொதுப் பாதுகாப்புச் சட்டம் 2005'' ஆகியவற்றின் கீழ் பினாயக் சென் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் செய்த குற்றம் என்ன? அவர் மாவோயிஸ்டுகளோடு தொடர்பு உடையவர் என்பது சத்தீஸ்கர் போலீசு வைக்கும் குற்றச்சாட்டு.

அந்தப் போலி குற்றச்சாட்டின் யோக்கியதையைப் பார்க்கும் முன்னால், பினாயக் சென் யாரென்பதை முழுமையாகப் புரிந்து கொள்வது அவசியம். பினாயக் சென் சத்தீஸ்கரில் மக்களின் மதிப்பைப் பெற்ற ஒரு குழந்தை நல மருத்துவராவார். ஒரு மருத்துவர் என்ற முறையில் அவர் அம்மாநிலத்தின் ஏழை, எளிய மக்களுக்கு கணக்கற்ற சேவைகள் புரிந்துள்ளார். சத்தீஸ்கர் முக்தி மோர்ச்சா எனும் முற்போக்கு ஜனநாயக அமைப்பினால் வறிய மக்களுக்காக நடத்தப்படும் சங்கர் குகா நியோகி மருத்துவமனையை உருவாக்குவதிலிருந்து, அதனை தொடர்ந்து நடத்துவதிலும் உறுதுணையாக இருந்தார். சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள பின்தங்கிய, பழங்குடியினர் பகுதிகளில் ஜன ஸ்வஸ்த்யா சஹ்யோக் (மக்கள் ஆரோக்கிய உதவி) எனும் குறைந்த செலவிலான, சமூக மருத்துவ திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் முன்னணியாகப் பணிபுரிந்தார். தம்தாரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியினருக்கான வாராந்திர மருத்துவமனையிலும் அவர் பணிபுரிந்து வந்தார். மேலும் அவர், மக்கள் மருத்துவம் குறித்து ஆய்வு அறிக்கைகளும், நூல்களும், பத்திரிகைகளுக்குக் கட்டுரைகளும் எழுதியும் வந்தார். வேலூர் கிருத்துவ மருத்துவக் கல்லூரியின் வாழ்நாள் மருத்துவ சேவைக்கான பால் ஹாரிசன் விருதையும் பெற்றுள்ளார்.

பினாயக் சென், குடிமை உரிமைகளுக்கான மக்கள் சங்கம் (பி.யூ.சி.எல்) எனும் மனித உரிமை அமைப்பின் சத்தீஸ்கர் மாநில செயலாளராகவும் அவ்வமைப்பின் தேசிய துணைத் தலைவராகவும் பணியாற்றி வந்தார். போலீசு கொட்டடிச் சாவுகள், போலி மோதல்கள், பட்டினிச் சாவுகள் முதலான எண்ணற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த உண்மை அறியும் குழுக்களில் முன்னணியாக நின்று செயல்பட்டார். குறிப்பாக, கடந்த ஜூன் 2005 முதல் சத்தீஸ்கர் மாநில அரசும், ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகளும், போலீசு மற்றும் மத்திய ரிசர்வ் படையும் இணைந்து நக்சல்பாரிகளை ஒடுக்குவது என்ற முகாந்திரத்தில் "சல்வா ஜூடும்' (அமைதி இயக்கம்) என்ற பெயரில் தனது மாநில மக்களின் மீது நடத்தி வரும் உள்நாட்டுப் போரின் வரலாறு காணாத அரசு பயங்கரவாதத்தை, பித்தலாட்டங்களை உறுதியோடு அம்பலப்படுத்தி வந்தார். அனைத்துலக மற்றும் உள்நாட்டு ஊடகங்களில் இது பற்றி தொடர்ச்சியாக எழுதியும், பேசியும் வந்தார்.

கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் சத்தீஸ்கரில் ஆதாரபூர்வமாக 155 போலி மோதல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அதிகாரபூர்வ தகவல்களின்படியே 400க்கும் மேற்பட்டோர் சல்வா ஜூடுமால் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் 31ஆம் தேதியன்று சந்தோஷ்பூரில் மாவோயிஸ்டுகள் என்ற பெயரில், 12 பழங்குடியினர் "சல்வா ஜூடும்', மற்றும் நாகா பட்டாலியனால் கொன்று புதைக்கப்பட்டுள்ளனர். பினாயக் சென் முதலான தலைவர்கள் இதனை அம்பலப்படுத்தி போராடத் துவங்கிய பின்னர், புதைக்கப்பட்ட பிணங்கள் தோண்டியெடுக்கப்பட்டன. கொல்லப்பட்டவர்கள் மாவோயிஸ்டுகள் அல்ல என்பதும் அம்பலமாகியது. ஒரு சல்வா ஜூடும் உறுப்பினரது ஒப்புதல் வீடியோ ஆதாரம் கிடைத்த பின்னரும், சல்வா ஜூடும் சீருடையணிந்து கொண்டு மாவோயிஸ்டுகளே இக்கொலையை செய்திருக்கலாம் என வெட்கமின்றிச் சொன்னது போலீசு. இப்படித் தொடர்ச்சியாக தனது பயங்கரவாதம் அம்பலப்படுத்தப்படுவதை அரசு பொறுக்க முடியாததன் விளைவாகவே தற்பொழுது சென் கைது செய்யப்பட்டுள்ளார்.

பினாயக் சென் கைது செய்யப்பட்டதற்காக அரசு சொல்லும் காரணமும், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ள "ஆதாரங்களுக்கும்' சத்தீஸ்கர் மாநில அரசு மற்றும் போலீசின் திமிருக்கு சிறந்த அடையாளங்களாகும். மாவோயிஸ்ட் தலைவரான நாராயண் சன்யாலை 30 முறை சிறையில் பினாயக் சென் சென்று சந்தித்தாராம். பத்திரிகையாளர் பிரஃபுல் பித்வாய் சொல்வது போல, ""இது அடிமுட்டாள்தனமான வாதம். அதிகாரிகளுடைய அனுமதி பெற்று, அவர்களது முன்னிலையில்தான், சென் சன்யாலை சந்தித்துள்ளார். ஒரு மனித உரிமை செயல்வீரர் என்ற முறையில் கைதிகளைச் சந்தித்து, அவர்களுடைய அடிப்படை உரிமைகளுக்காகப் போராடுவது என்பது சட்டத்திற்குட்பட்ட அவரது நியாயமான கடமையே. அவர் 30 முறை சந்தித்தாரா, 100 முறை சந்தித்தாரா என்பதெல்லாம் அர்த்தமற்றவை.''

சில அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு துண்டுப் பிரசுரங்கள், போலி மோதல்கள் குறித்த தகவல் அறிக்கைகள், செய்தித் துணுக்குகள், மனித உரிமை சித்திரவதைக்கு ஆட்பட்டோரின் கடிதங்கள் முதலான "அபாயமான' ஆதாரங்கள் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. இவை எந்தவொரு மனித உரிமை செயல்வீரரது வீட்டிலும் இருக்கக் கூடிய "ஆதாரங்கள்' தான். இணையத்திலும், பத்திரிகைகளிலும் வெளிப்படையாக கிடைக்கக் கூடிய ஆதாரங்கள்தான். இதற்கெல்லாம் ஒருவரை கைது செய்ய வேண்டுமென்றால், ஒட்டுமொத்த உளவுத்துறை போலீசுதான் முதலில் உள்ளே போக வேண்டும். அவர்கள்தான் ஒன்று விடாமல் இத்தகைய "ஆதாரங்களை' சேர்த்து வைத்திருக்கிறார்கள்.

மேலும், மதன் என்ற மாவோயிஸ்ட் தலைவர், சென்னிற்கு எழுதியுள்ள கடிதத்தைத்தான் முக்கிய ஆதாரமாக போலீசு குறிப்பிடுகிறது. அக்கடிதத்தில் ராய்ப்பூர் சிறையில் கைதிகளின் மோசமான நிலை குறித்து எழுதியுள்ள மதன், அவர்களுடைய நிலையை மேம்படுத்த உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அக்கடிதத்தின் துவக்கத்தில் "அன்பிற்குரிய பினாயக் சென் அவர்களுக்கு' என அவர் விளித்துள்ளார். இவ்வாறு விளிப்பது மாவோயிஸ்டுகளுக்கும், பினாயக் சென்னிற்குமான தொடர்பைக் காட்டுகிறதாம்! சிறைக் கைதிகளின் நிலை குறித்து மனித உரிமை அமைப்புத் தலைவருக்கு எழுதாமல், ஜெயில் சூப்பிரெண்டெண்டுக்கா எழுத முடியும்? இது மடத்தனமல்ல; வெளிப்படையான திமிர்! ஒன்று, நீ இந்த கொடுங்கோன்மை அரசை ஆதரிக்க வேண்டும்; அப்படி இல்லையென்றால், நீ தீவிரவாதிகளைத்தான் ஆதரிக்கிறாய் என்ற புஷ்ஷின் சித்தாந்தம்தான் சத்தீஸ்கர் அரசு நமக்கு புரிய வைக்க விரும்பும் செய்தி.

சென் கைதுக்கு எதிராக வட மாநிலங்களிலும், சத்தீஸ்கர் மாநிலம் முழுவதும் மனித உரிமை அமைப்புகளும், ஜனநாயக அமைப்புகளும் கடந்த மே மாதம் முதல் தீவிரமாகப் போராடி வருகின்றன. இப்போராட்டத்தை முன்னின்று நடத்திய பி.யூ.சி.எல்.இன் சத்தீஸ்கர் மாநில தலைவர் ராஜேந்திர சைல்ஐ வேறு ஒரு மொன்னை வழக்கை முன்வைத்து கைது செய்து சிறையிலடைத்தது போலீசு. பினாயக் சென் குடியிருந்த வீட்டின் உரிமையாளர் என்ற காரணத்திற்காக மருத்துவர் இலினாவையும் கைது செய்யப் போவதாக அச்சுறுத்தியது. இந்த அடக்குமுறைகளை மீறியும் மனித உரிமை அமைப்புகள் தலைமையில் பெருந்திரளான மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தில்லியில் முன்னாள் நீதிபதி ராஜேந்திர சச்சார், வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், அருந்ததி ராய் முதலானோர் அணிதிரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தி, பத்திரிக்கைகளின் மூலம் பரவலாக இச்செய்தியை வெளிக் கொணர்ந்தனர்.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய அருந்ததி ராய், ""மருத்துவர் சென்னிற்கு என்ன நேர்ந்ததோ, அதுதான் சத்தீஸ்கர் மக்களுக்கு நேர்ந்து கொண்டிருக்கிறது. சத்தீஸ்கர் மக்கள் எவராலும் செவிமடுக்கப்படாதவர்கள்; குரல்களற்றவர்கள்; இவையனைத்தும், சல்வா ஜூடுமின் உருவாக்கத்திலிருந்தே துவங்குகின்றன. காங்கிரசும், பா.ஜ.க.வும் ஓரணியாக நின்று வேலைவாய்ப்பற்றவர்களை சிறப்பு போலீசு அதிகாரிகளாக்கி, ஒரு கூலிப் படையை ஏற்படுத்தியுள்ளன. இது ஒரு அபாயகரமான போக்கு. இது சமூகம் முழுவதும் ஆயுதபாணியா வதில் போய் முடியும்'' என்றார்.

ஆம், சல்வா ஜூடுமின் உருவாக்கத்திலிருந்து தான் இப்போர் துவங்குகிறது. 1990இல் பழங்குடியினரின் மேம்பாட்டுக்காக என தனி மாநிலமாக, சத்தீஸ்கர் மாநிலம் இந்தியாவின் மத்தியப் பகுதியில் உருவாக்கப்பட்டது. 1947இலிருந்தே எவ்வித வளர்ச்சிப் பணிகளும் நடைபெறாத, ஓட்டுக் கட்சிகளுக்கு "பிரயோசனமில்லாத' பழங்குடியினர் வாழும், அரசின் கரம் தீண்டாத தண்டகாரண்யாவில் பஸ்தார், காத்சிரோலி முதலான பகுதிகளில் மாவோயிஸ்டுகள் 1993 முதலே கொரில்லாக் குழுக்களை கட்டி வருகின்றனர். 1995இல் பெரும்பான்மைப் பகுதிகளில் தமது சங்கங்களைக் கட்டி, கிராமப் பஞ்சாயத்துகளுக்கு முடிவு கொண்டு வந்தனர். 2000இல் மக்கள் விடுதலைப் படையையும் கட்டி, தண்டகாரண்யா பகுதியை கொரில்லா மண்டலமாகவும், எதிர்கால விடுதலைப் பிரதேசமாகவும் அறிவித்தனர்.

ஜூன் 2005இல் மாவோயிஸ்டுகளுக்கெதிராக பழங்குடியினர் தன்னெழுச்சியாக அணிதிரண்டு "சல்வா ஜூடும்' படையை உருவாக்கியதாக அரசு இன்று வரை கதையளக்கிறது. மகேந்திர கர்மா எனும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த, எதிர்கட்சி காங்கிரசு எம்.எல்.ஏவின் தலைமையில் பா.ஜ.க. அரசும், போலீசு துறையும் இணைந்து மக்கள் இயக்கம் என்ற பெயரில் இச்சதித் திட்டத்தை தீட்டி அரங்கேற்றின. மகேந்திர கர்மா எனும் இந்த அயோக்கியன் மீது 1998லேயே பழங்குடியினரை ஏமாற்றி நில மோசடி செய்ததாக சி.பி.ஐ. முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால், இன்று வரை அவ்வழக்கில் வேறு எவ்வித முன்னேற்றமுமில்லை.

கடந்த ஓராண்டிற்கும் மேலாக பலவந்தமாக பழங்குடியினரை மிரட்டி உருவாக்கப்பட்டது சல்வா ஜூடும். ஒன்று, சல்வா ஜூடுமில் சேர வேண்டும்; இல்லையென்றால் சுட்டுக் கொல்லப்படுவார்கள்; ஊரே தீ வைத்துக் கொளுத்தப்படும்; பெண்கள் வன்புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்படுவார்கள். ஒவ்வொரு பழங்குடியினர் கிராமத்திற்கும் செல்வது, சல்வா ஜூடும் கூட்டங்களை நாகா பட்டாலியன் சூழ நடத்துவது, எவரெல்லாம் கலந்து கொள்ளவில்லையோ, எவரெல்லாம் ஏற்க மறுக்கிறார்களோ அவர்கள் மீது தாக்குதல் தொடுப்பது, வேறு வழியின்றி ஏற்றுக் கொண்டு வருபவர்களை கிராமங்களை விட்டு விரட்டி, தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் கொண்டு அடைப்பது என ஒரு நடைமுறையாகவே நிகழ்த்தப்பட்டிருப்பதை சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் மாநில மனித உரிமை அமைப்புகளின் உண்மை அறியும் குழுக்கள் அம்பலப்படுத்தியிருக்கின்றன.

இதன் மூலம் காடுகளில் உள்ள மாவோயிஸ்டுகள் சார்ந்திருக்க மக்களே இல்லாத நிலையில், வேறு வழியின்றி சரணடைய வேண்டும் அல்லது சாக வேண்டும் என்பதுதான் தனது திட்டமாக சல்வா ஜூடும் அறிவித்திருக்கிறது. இதன் விளைவாக இன்று 50,000க்கும் மேற்பட்ட மக்கள் தமது கிராமங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். இம்முறையில் 600க்கும் மேற்பட்ட கிராமங்கள் காலி செய்யப்பட்டிருக்கின்றன. 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் 2000க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டிருக்கின்றன. வயல்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கில் மக்கள் ஆந்திராவிற்கு தப்பியோடியுள்ளனர். முகாம்களில் தார்பாய் விரிப்புகளில் உணவின்றி, வாழ வழியின்றி கிடக்கின்றனர். 500க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 30க்கும் மேற்பட்ட பெண்கள் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். பலர் கொல்லப்பட்டுள்ளனர். ஹிட்லரின் நாஜி படைகள் ருஷ்ய கிராமங்களில் இரண்டாம் உலகப் போரின் பொழுது நிகழ்த்திய போர்க்குற்றங்களை விட மிகப் பயங்கரமான முறையில் இவை நிகழ்த்தப்பட்டு வந்திருக்கின்றன.

அயான் வெல்ஷ் முதல் ஆந்திர மனித உரிமை செயல்வீரர் பாலகோபால் வரையிலான மனித உரிமை ஆர்வலர்களும், அனைத்துலக மற்றும் உள்நாட்டுப் பத்திரிக்கைகளும் குறிப்பிடுவது போல, மாவோயிஸ்டுகள் கொன்ற நபர்களின் எண்ணிக்கைதான் இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சல்வா ஜூடுமின் கொலைப் பட்டியல் இதுவரை யாருக்கும் தெளிவாகத் தெரியாது.

தற்பொழுது நந்தினி சுந்தர் முதலான ஜனநாயக சக்திகள் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையொட்டி, உச்சநீதி மன்றம் சத்தீஸ்கர் அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பியுள்ளது. பினாயக் சென்னை கைது செய்தது குறித்து உள்துறை அமைச்சகம் விளக்கம் கோரியுள்ளது. திட்டக் கமிசன், பஞ்சாயத் அமைச்சகம் முதலானவை சல்வா ஜூடுமுக்கான நிதி ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டுமெனக் கோரியுள்ளன. ஆனால், மேற்புறத்தில் இது போன்ற சில நாடகங்களை அரசு நிகழ்த்தினாலும், அதனுடைய திட்டத்தில் உறுதியாக செயல்பட்டு வருகிறது. ஏனெனில், பழங்குடியினரை கிராமங்களிலிருந்து அப்புறப்படுத்தி விரட்டியடிப்பது என்ற திட்டத்தின் பிரதான நோக்கம் மாவோயிஸ்டுகளை ஒடுக்குவது மாத்திரமல்ல; மாறாக முதலாளித்துவப் பத்திரிக்கையான பிசினஸ் வேர்ல்டு (ஆகஸ்ட் 2006) சொல்வது போல, தாது வளம்மிக்க சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒரிசா மாநிலங்களை டாடா, எஸ்ஸார், மித்தல், வேதாந்தா (ஸ்டெர்லைட்), ஜிந்தால், பாஸ்கோ, அம்பானி முதலான முதலாளிகளுக்கு வேட்டைக் காடாக திறந்து விடுவதே பிரதான நோக்கமாகும். அமெரிக்க ""நியூயார்க் டைம்ஸ்'' நாளேடு சொல்கிறபடி, தாது அகழ்வில் 1.8 பில்லியன் டாலர் முதலீட்டிற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருக்கின்றன. அதன் விதிகள் விவரங்கள் யாருக்கும் தெரியாது. கிராமப் பஞ்சாயத்துக்கள் கூட்டப்பட்டு துப்பாக்கி முனையில் பன்னாட்டுதரகு முதலாளித்துவ நிறுவனங்களுக்கு நிலக் கையகப்படுத்தல்களுக்கான, பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி உரிமம் பெறுவதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்து வாங்கப்படுகிறது. இதற்கான ஆதாரங்கள் "டவுன் டு எர்த்' போன்ற பத்திரிக்கைகளில் வெளிவந்திருக்கின்றன.

சல்வா ஜூடுமின் கிராமப்புற சூறையாடல்களையும், கிராமங்களை காலி செய்வதையும், நியாயப்படுத்த, ""நோயின் மூலத்தை வெட்டியெறியாத வரை, நோய் இருக்கவே செய்யும். அம்மூலம் கிராம மக்கள்தான்'' என மகேந்திர கர்மா கூறுவதாக ""நியூயார்க் டைம்ஸ்'' குறிப்பிட்டுள்ளது.

மாவோயிஸ்டுகளை மட்டும் நோய் என கர்மா குறிப்பிடவில்லை. பழங்குடியினரின் வாழ்வுரிமைக்கான போராட்டத்தை, தமது காடுகளையும், நிலங்களையும், வாழ்க்கையையும் காப்பாற்ற அவர்களை உந்தித் தள்ளும் இயல்பான நாட்டுப் பற்றையும், மக்கள் சமூகப் பற்றையும் சேர்த்துதான், பன்னாட்டு நிறுவனக் கழுகுகள் சத்தீஸ்கரை சூறையாடுவதைத் தடுக்கும் நோய் எனக் குறிப்பிடுகிறான்.

கிழக்கிந்தியக் கம்பெனியை விட ஒரு கொடூர கொள்ளைக் கூட்டத்தின் வெறியில் ஒரு மாநிலமே பந்தாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதன் சத்தீஸ்கர் மாநில ""துரை''தான் மகேந்திர கர்மா. போர் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. கலிங்கா நகர், சந்தோஷ்பூர், சிங்கூர், நந்திகிராம் என பிணங்களின் மீதேறி நாடெங்கும் பரவுகிறது. ரத்தம் ஆறாக ஓடுகிறது. இனி ஒளிந்து கொள்ள இடமில்லை. நடுநிலைமை வகிக்க வாய்ப்பில்லை. மூலதனத்தின் தீராத, ஈவிரக்கமற்ற நோயின் மூலமான இந்த அரசியல் அமைப்பின் வேரை நாம் வெட்டியெறியாத வரை, இந்த இரத்த ஆறு நிற்கப் போவதில்லை.



· இருட்டு