தமிழ் அரங்கம்

Saturday, May 17, 2008

துரோகி! துரோகி தாண்டா!!

பாசிசப் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட மகேஸ்வரியை வைத்து, தமது துரோகத்தையும் நியாயப்படுத்த முனைகின்றது புலியெதிர்ப்பு "ஜனநாயகம்". புலியெதிர்ப்பையே தனது அரசியலாக செய்பவர்களில் ஒருவரான ராகவன், 'சொல்லுங்கள் மகேஸ்வரி துரோகியென்று!" என்று கேட்டு, எழுதுகின்றார். இதன் மூலம் தமது துரோகத்துக்கு, நியாயம் கற்பிக்க முனைகின்றனர்.

'சொல்லுங்கள் மகேஸ்வரி துரோகியென்று!" என்ற தர்க்கம் மிகக் கவனமாக சில விடையத்தை விட்டுவிடுகின்றது. மகேஸ்வரி ஈ.பி.டி.பி யுடன் இருந்ததையும் மிகக் கவனமாக தவிர்க்கின்றது. அதை நியாயப்படுத்த 'ஏதோ தனக்கு தெரிந்த வழியில் எவர் காலில் விழுந்தெனினும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்தார்" என்கின்றது. மக்களின் எதிரி புலிகள் மட்டுமல்ல, ஈ.பி.டி.பியும், அரசும் கூடத்தான். எதிரியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, எதிரியுடன் சேர்ந்து எப்படி உதவமுடியும். அதுவோ துரோகம்.

துரோகம் என்பதால், புலிகள் வழங்கும் மரண தண்டனையை சரியென்று நாம் கூறமுற்படவில்லை. புலிகளே மக்களுக்கு எதிராக இயங்கும் போது, அவர்களே துரோகிகளாகத் தான் உள்ளனர். புலிகளின் படுகொலை அரசியல், அதன் மக்கள் விரோத அரசியலில் இருந்து தான் முகிழ்கின்றது. மகேஸ்வரியும் சரி, புலியும் சரி, மக்களுக்கு எதிராக இயங்குகின்ற, ஒரு புள்ளியில் சந்திக்கின்றனர்.

கணிதத்தில் இரண்டு எதிர்மறைகள் நேராவது போல், இரண்டு மக்கள் விரோதிகள் தம்மைத் தாம் நியாயப்படுத்தி தம்மை நேராக்க முனைகின்றனர்.

மக்களை இட்டு அக்கறையற்ற புலியெதிர்ப்பு 'ஜனநாயக" அரசியலை நியாயப்படுத்த, இங்கும் இவர்களுக்கு பாசிசப் புலிகளின் அரசியல் நடத்தைகள் தான் உதவுகின்றது. வேடிக்கை என்னவென்றால் மகேஸ்வரியின் அரசியலோ, தங்கள் சொந்த அரசியலோ, படுகொலையின் பின்னுள்ள புலியின் மக்கள் விரோத அரசியலை கேள்வி கேட்க உதவவில்லை. அவற்றில் அவர்களுக்கு அக்கறையுமில்லை.

இப்படி தம்மை துரோகியல்ல என்று நியாயப்படுத்த, புலிகளின் பாசிச நடத்தைகள் தான், இங்கு அவர்களுக்கு உதவுகின்றது. எந்தவிதமான மக்கள் அரசியலுமில்லை.

புலிகளின் நடத்தைகளா, தாம் 'துரோகியல்ல" என்று கூறும் ஒரு சமூக அளவுகோல்?

புலிகளின் நடத்தையைக் கொண்டு, தியாகத்தையும் துரோகத்தையும் யாரும் அரசியல் ரீதியாக வரையறுக்க முடியாது. புலிகள் ஒரு பாசிச மாபியா இயக்கம். அது தனது இருப்புக்கேற்ற வகையில், தனது சொந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது. இதன் பின் எந்த மக்கள் நலன் சார்ந்த அரசியலும் கிடையாது.

புலிகள் துரோகம் என்பதும், தியாகம் என்பதும், மக்களின் அடிப்படையான சமூக பொருளாதார நலன்களில் இருந்தல்ல. மாறாக சொந்த நடத்தைக்கு ஏற்ப அதைச் சொல்லுகின்றது. அதை செய்கின்றது. இதை வைத்துக்கொண்டு, புலியெதிர்ப்பு 'ஜனநாயக" வாதிகள் தமது துரோகத்தை 'ஜனநாயகமாக" கூறி, பாசிசத்தில் மிதக்கின்றனர்.

மக்களை சார்ந்திராத, சார்ந்து நிற்காத, மக்களின் சமூக பொருளாதார அரசியல் பிரச்சனையூடாக மக்களை அணுகாத, எந்த நடவடிக்கையும், மக்களுக்கு எதிரான துரோகம் தான். இப்படி மக்களின் எதிரிகளுடன் கூடி செய்வது, மக்கள் விரோத அரசியல் தான். இது துரோகம் தாண்டா.

மக்களின் எதிரிகளுடன் கூடுகின்ற துரோகிகள், மக்களை நோக்கி எலும்புகளை எறிவதால் அது தியாகமாகிவிடாது. எலும்பை கவ்விக்கொண்டு குலைப்பதா, மக்கள் சேவை? இதற்கு வெளியில் மக்களுக்காக போராட முடியாதோ!

மக்களின் எதிரிகள் எப்போதும் துப்பாக்கி முனையில் மக்களை அடக்கியாள்வதில்லை. மாறாக அறிவிலும், அரசியல் கோசங்களாலும், சமூக சேவைகள் ஊடாகவும் கூட, மக்களை நாயிலும் கீழாக ஒடுக்குகின்றனர்.

இன்று உலகளவிலான தன்னார்வ நிறுவனங்கள் கூட, சமூக சேவை பெயரில் தான் மனித இனத்தை சூறையாடும் நோக்குடன் இயக்கப்படுகின்றது. இதற்கு பணம் கொடுப்பவன் வேறு யாருமல்ல, வெளிப்டையான அடக்குமுறையை ஏவும் அதே ஏகாதிபத்தியங்கள் தான். இப்படி தன்னார்வ நிறுவனங்களின் நோக்கம் மிகத் தெளிவாக, மக்களுக்கு எதிராகவே உள்ளது. இதை இலகுவாகப் புரிந்துகொள்ள, ஒரு அமெரிக்கப் பொருளாதார அடியாளின் வாக்குமூலம், சுயசரிதை வடிவில் தமிழிலும் வந்துள்ளது. அது இன்றைய எரியும் உலகப் பிரச்சனைகளில், எப்படி எந்த வகையில் தலையிடப்பட்டது என்பதை, ஆதாரமாக அம்பலமாக்குகின்றது. சமூக சேவைகளின் பின், இப்படி உள்நோக்கம் கொண்ட, மனித முகங்கள் உண்டு.

பல வேஷத்தில் துரோகிகள்

மக்களுக்கு எதிரான துரோகிகள் பலவேஷத்தில் உள்ளனர். புலியெதிர்ப்பு வேஷத்திலோ, இது புளுத்துக் கிடக்கின்றது. புலியெதிர்ப்பில் தன்னை 'முற்போக்குவாதியாக" 'ஜனநாயகவாதியாக" 'பெண்ணியல்வாதியாக", 'தலித்தியவாதியாக" காட்டும், எத்தனை எத்தனை வேஷங்கள்.

இதை பேசிக்கொள்ளும் இவர்களும், இவர்களின் செயல்பாடுகளும் மக்களைச் சார்ந்து நிற்பதில்லை. மக்களின் எதிரிகள் யாரோ, அவர்களைச் சார்ந்து இவர்கள் நிற்கின்றனர். மக்களின் எதிரி போடும் எலும்பைக் கொண்டு, சமூக சேவை செய்யப்போவதாக பசப்புகின்றனர்.

இதைத் தவிர வேறு அரசியல் எதுவும், இவர்களிடம் கிடையாது. மக்களின் எதிரிகளுடன் கூடி நிற்பவர்கள் துரோகிகள் அல்லாமல் தியாகிகளா

எதிரியுடன் கூடி நிற்பவன் தியாகியா?

துரோகிகள் தம்மை தியாகிகள் என்கின்றனர். ஏதோ ஒரு காரணத்தைக் காட்டிக் கொண்டு, மக்களின் எதிரிகளின் பின்னால் (புலி மற்றும் அரசு) நிற்பவன், தன் செயலை தியாகச் செயல் என்கின்றான். அரசியல் வேடிக்கை தான். இப்படி புலியெதிர்ப்பு 'ஜனநாயக" கோஸ்டி மகேஸ்வரியை, தியாகி என்கின்றது. அதற்கு அது கையாண்ட அளவு கோல், புலிகள் அவரைக் கொன்றதால் அவர் தியாகி. விபச்சாரத்தையே மனித ஒழுக்கமாக காட்டக் கூடியவர்கள் தான், இவர்கள்.

மகேஸ்வரி முந்தைய செயல்பாடுகளை காட்டி புகழ்வது, தர்க்கிப்பது அபத்தம். அப்படிப் பார்த்தால், இந்த ராகவன் பாசிசப் புலியின் கொலைகளுக்கு உடந்தையானவர் என்றல்லவா தூற்றி விவாதிக்க வேண்டும். இப்படி தூற்றுவதும், புகழ்வதும் சந்தர்ப்பவாத அரசியலாகின்றது.

புலிகள் ஏன் கொன்றனர். அதன் சரி பிழைக்கு அப்பால், ஈ.பி.டி.பியில் இருந்ததால் தான், அவர் கொல்லப்பட்டார். புலியெதிர்ப்பு சந்தர்ப்பவாதிகள் பட்டியலிட்ட விடையங்களுக்காகவல்ல. ஈ.பி.டி.பி யுடன் செயல்பட்டது சரியென்றால், அதை வைத்து 'சொல்லுங்கள் மகேஸ்வரி துரோகியென்று!" விவாதிக்க வேண்டியது தானே. அதைவிட்டு விட்டு மற்றையவற்றை தூக்கி போடுவதே, அரசியல் சதி தான். இங்கு திட்டமிட்டு மோசடி செய்வது புலியெதிர்ப்பு 'ஜனநாயக' அரசியலாகின்றது.

மகேஸ்வரி மக்கள் சேவையை, மக்களுக்காக செய்ய வேண்டும் என்றால், எதற்காக மக்களின் எதிரிகளுடன் கூடி நிற்க வேண்டும். உண்மையான மக்கள் சேவை எதிரியில்லாத தளத்தில், எதிரிக்கு எதிராக மலை போல் தேங்கி கிடக்கின்றது. இப்படி இருக்க, எதிரியுடன் சேர்ந்து செய்தது எதை?

மக்களின் எதிரிகள் தான், மக்களின் அவலத்துக்கு காரணம். இப்படி இருக்க எதிரியுடன் கூடித் திரிகின்றவர்கள், எதிரியின் கைக்கூலிகள் தானே. இப்படி மனித அவலத்தை வைத்து, எதிரியுடன் அரசியல் விபச்சாரம் செய்கின்றனர். மக்களின் எதிரிகள் ஏற்படுத்தும் மனித அவலத்தை, எதிரிகளுடன் கூடி நின்று போக்குவதாக கூறுவதே அபத்தம். அதை தியாகம் என்பது அதை விட அபத்தம். இதுவோ துரோகம், துரோகம் தான்டா.

துரோகத்துக்கு வழங்கிய தண்டனையா?

இல்லை. மாறாக மக்களை அடக்கியொடுக்கும் பாசிசப் புலிகள், தமது சொந்தத் துரோகத்தை பாதுகாக்க வழங்கும் தண்டனைகள் தான் இவை. மக்களின் முதுகில் குத்திய புலித்துரோகிகள், வாரி வழங்கும் தண்டனைகள் மனித குலத்துக்கே எதிரானது. புலியின் அரசியல் பினனால், மக்களுக்கான எந்த அரசியலும் கிடையாது. புலியெதிர்ப்பு 'ஜனநாயகம்" பேசி அரசுக்கு பின்னால் நிற்பது போல் தான், புலிக்கு பின்னால் நிற்பதும். அரசியல் ரீதியாக இரண்டும் ஒன்று தான். இரண்டும் மக்களுக்கு எதிரானது.

புலிகள் தமது பாசிச மாபியா அரசியலைக் கையாள்வதால், அது மொத்த மக்களுக்கும் எதிராக மாறிவிட்டது. இதுவோ புலித் தேசியமாகிவிட்டது. இதனால் மக்களை அடக்கியொடுக்கி நிற்கின்றனர். தொடர்ச்சியாகவே புலிகளின் அரசியல், தமக்கு எதிராக எதிரிகளை உருவாக்குகின்றது.

மக்களோ தப்பிப் பிழைக்க முனைகின்றனர். புலிப் பிரதேசத்தில் வாழ முடியாது தப்பி ஒடுகின்றனர். பொருளாதார ரீதியாக, புதிய பிரதேசத்தில் தாக்குப் பிடிக்க முடியாது, பலர் சிதைகின்றனர். இங்கு தான் அரசும், அரச கூலிப்படைகளும் ஆள் பிடிக்கின்றனர்.

இப்படிப்பட்டவர்களை நாம் துரோகி என்று கருதுவது கிடையாது. சந்தர்ப்பமும், சூழலும் இதைத் தூண்டுகின்றது. இவர்கள் சரியான வழிக்கு வர, சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டியது அவசியமானது. இது அடிமட்டத்தில் உள்ளவர்களின் நிலை. இது தன்னார்வக் குழுக்களில் உள்ளவர்களுக்கும் பொருந்தும். புலியின் அடிமட்டத்தில் உள்ளவர்களுக்கும் பொருந்தும்.

அப்படியாயின் யாருக்கு பொருந்தாது? புலித் தலைவர்களுக்கு பொருந்தாது. புலியெதிர்ப்புத் தலைவர்களுக்குப் பொருந்தாது. அரசியல் ரீதியாக வழிகாட்டுபவர்களுக்கு பொருந்தாது. இவர்கள் திட்டமிட்டே மக்களுக்கு எதிராக செயல்படுபவர்கள்.

இப்படி புலியிலும் சரி, புலியல்லாத தளத்திலும் சரி, தன்னார்வக் குழுவிலும் சரி, இது பொதுவானதே. அவர்களின் ஒவ்வொரு மக்கள் விரோத செயலும், மக்களுக்கு எதிரானது. மக்களுக்கு எதிரானது என்பதால், அது துரோகத்தை அடிப்படையாகக் கொண்டது.

மக்களுக்கு எதிரான அரசியலைக் கொண்டு, அவர்கள் எங்கு எந்த அணியில் நின்றாலும், அவர்கள் எதைச் செய்தாலும் அது மக்களுக்கு எதிரான நோக்கில் செய்யப்படுகின்றது. அது துரோகத்தன்மை வாய்ந்தது. அது நன்மையாக இருந்தாலும் சரி, தீமையாக இருந்தாலும் சரி,

புலிகள் சில எலும்புத் துண்டுகளைப் போட்டு, சில மக்கள் நல சேவைகளை செய்கின்றனர். அதனால் அது மக்கள் போராட்டமாகிவிடுமா? இல்லை. அதுபோல் தான், பேரினவாத மக்கள் விரோத அரசின் பின் நக்குகின்றவர்களின் சேவையும் கூட.

அரசியல் ரீதியாக மக்கள் நலனை அடிப்படையாக கொண்டு, மக்களைச் சார்ந்து நிற்காத அனைத்தும் மக்களுக்கு எதிரானது. அதுவெல்லாம் மக்களுக்கு எதிரான துரோகம் தாண்டா?

பி.இரயாகரன்
16.05.2008

Friday, May 16, 2008

விலைவாசி உயர்வு : தனியார்மயம் பரப்பும் கொள்ளைநோய்!


கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக நீறுபூத்த நெருப்பாக இருந்துவந்த விலைவாசி உயர்வு, இப்பொழுது எரிமலையைப் போல வெடித்திருக்கிறது. அரிசி, கோதுமை, சோளம், சமையல் எண்ணெய், பால் போன்ற உணவுப் பொருட்கள் தொடங்கி, இரும்பு, நிலக்கரி, கச்சா எண்ணெய் போன்ற மூலப்பொருட்கள் வரை அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி தாறுமாறாக உயர்ந்து வருகின்றன. இந்தியா மட்டுமின்றி, ஆசியா, ஆப்பிரிக்கா, இலத்தீன் அமெரிக்கக் கண்டங்களைச் சேர்ந்த அனைத்து ஏழை நாடுகளும் இவ்விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளன.

கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Thursday, May 15, 2008

புலியெதிர்ப்பு பொறுக்கிகள் பேசும் 'ஜனநாயகம்"


பொறுக்கிகளுக்கேயுரிய வகையில் எல்லா புலியெதிர்ப்பு கோஸ்ட்டிகளும் மக்களின் முதுகில் குத்துகின்றனர். மக்களை நம்பி, அவர்களைச் சார்ந்து எந்த அரசியலும் இவர்கள் செய்வது கிடையாது. மாறாக ஆயுதம் ஏந்திய குண்டர்களையும், ரவுடிகளையும், கூலிப்படைகளையும் சார்ந்து நின்று தான், இவர்கள் தமக்கேற்ற ஒரு 'ஜனநாயகத்தைப்" பேசுகின்றனர்.

பாசிசத்தையே 'ஜனநாயகமாக" காட்டி, அதை நியாயப்படுத்துகின்ற இழிநிலையில் நின்று அரசியல் வேஷம் போடுகின்றனர். கிழக்கு மக்கள், தலித், ஜனநாயகம் என்ற போர்வையில் எத்தனை எத்தனை வேஷங்கள்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு சார்பாக நின்று, அவர்களுடன் சேர்ந்து போராடுவது கிடையாது. மாறாக யார் அந்த பாதிப்பை ஏற்படுத்துகின்றனரோ, அவர்களை 'தேசியத்தின்" பெயரில், 'ஜனநாயகத்தின்" பெயரில் நியாயப்படுத்துகின்றனர். புலியெதிர்ப்பு இப்படித்தான் 'ஜனநாயக" அரசியல் செய்கின்றது.

எப்போதும் புலியுடனான ஓப்பீட்டை முன்வைத்து, புலியெதிர்ப்பு கூட்டம் பாசிசத்துக்கு கம்பளம் விரிக்கின்றனர். இவர்கள் ஜனநாயகம் என்று கருதுவதோ, தேர்தலில் வாக்குப் போடுவது தான். இதன் மூலம் தமது புலியெதிர்ப்பு பிழைப்புவாதத்தையே, நியாயப்படுத்தி விட முனைகின்றனர்.

தேர்தலை 'ஜனநாயக"த்துக்கான ஒன்று என்று கூறுவது, மாபெரும் சதி. தேர்தல் மக்களுக்கு ஒரு விடிவையும், மக்களுக்கான தீர்வையும் தருவதாக கூறுவதே, கடைந்தெடுத்த அரசியல் பொறுக்கித்தனமாகும். தேர்தல் மூலம் மக்கள் தம் சொந்த விருப்பை தெரிவிப்பதாக கூறுவது, அரசியல் மோசடியாகும்.

இது இவர்கள் விரும்புவது போல், அனைத்து மக்களையும் செயலற்ற பொம்மைகளாக்குகின்றது. வளர்ப்பு மந்தைகள் எப்படி போடுவதை மட்டும் தின்கின்றதோ, அதேபோல் தான் மக்களை வாக்கு போடக் கோரும் 'ஜனநாயக" அறிவுரைகளும். இவர்கள் மக்களுக்கு வழிகாட்டுவது எனப்படுவது, மக்களின் சொந்த விடுதலை மீதானது அல்ல. மக்களை அடக்கியாண்டு தின்ன விரும்புகின்ற புல்லுருவிகளை, வாழவைக்கும் வழிவகைளைத் தான் இவர்கள் 'ஜனநாயகம்" என்கின்றனர்.

இப்படி தேர்தல் மூலம் மக்களை அடிமைப்படுத்தி கொழுக்க விரும்புகின்றவர்களின் நலன்களை பாதுகாக்கத் தான், புலியெதிர்ப்பு அரசியல் உதவுகின்றது. எந்த மக்கள் நலனும், இதன் பின் ஒரு துளியும் இருப்பதில்லை. இப்படி மக்களுக்கு எதிரான மனித விரோத சிந்தனை முறையே, படுபிற்போக்கானது. இதுவே புலியெதிர்ப்பின் பெயரில் அரங்கேறுகின்றது.

இந்த அரசியல் மோசடியை அரங்கேற்ற நிகழும் வன்முறையை, இவர்கள் நியாயப்படுத்தும் விதமோ பாசிசத்தன்மை கொண்டது. பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக நின்று, அதை செய்தவர்களுக்கு எதிராக இவர்கள் போராடுவது கிடையாது. மாறாக அதைச் செய்தவனை நியாயப்படுத்துகின்ற, அதை ஆதரிக்கின்ற அரசியல் தான் புலியெதிர்ப்பின் மொத்த முதிர்வாகின்றது.

இப்படி புலிக்கு எதிராக கட்டமைக்கும் பாசிசத்தையே 'ஜனநாயகம்" என்கின்றனர். அண்மையில் கிழக்கு மக்களுக்கு எதிராக நடந்த தேர்தலை நியாயப்படுத்த முனைந்தவர்கள், அந்த பாசிசத்தை ஆதரித்த விதம் வெட்கக் கேடானது. அதை அவர்கள்

1. ஒரு நாளில் மாற்றம் ஏற்பட்டு விடாது. 2. ஒரு பாசிச அமைப்பில் இருந்து வந்தவர்கள். 3. வன்முறை இடபெறல் என்பது ஆச்சரியமானதல்ல. 4. வன்முறையற்ற தேர்தலை நாம் எதிர்பார்க்க முடியாது.5. கடந்தகால தேர்தல் வரலாறுகளில் வன்முறை இருந்துள்ளது.6. ஒப்பீட்டளவில் வன்முறை குறைவு.7. ஜனநாயகத்தை அமுல்படுத்த தேர்தல் அவசியம்8. ஜனநாயக நடைமுறையை இது கொண்டு வந்துள்ளது

இப்படி ஆளுக்கொரு காரணத்தைக் கூறிக் கொண்டு, பாசிசத்தை 'ஜனநாயக"மாக காட்டி ஆதரிக்கின்றனர். அன்றும் மக்கள் விரோத தேசியத்தையும் இப்படித் தான் நியாயப்படுத்தி, அதை பாசிசமாக வளர்த்தவர்களும் இவர்கள் தான்.

ஒன்றை மட்டும் இவர்கள் மூடி மறைக்கின்றனர். வன்முறைகளில் ஈடுபடுகின்ற புலியல்லாத கூலிக் குழுக்களின் அரசியல் என்ன? அது மக்களுடன் கொண்டுள்ள அரசியல் உறவு என்ன? இதுவே தான் அந்த குழுக்களின் ஜனநாயக பண்பை, அறிதலுக்கான அடிப்படையாகும். இதையா புலியெதிர்ப்புக் கும்பல் தனது அரசியல் அளவுகோலாக கொண்டு கருத்துரைக்கின்றது.. இல்லை. மாறாக புலியுடனான ஒப்பீட்டையே அரசியல் அளவீடாக கொள்கின்றது. உண்மையில் இப்படி புலியெதிர்ப்பு அரசியல் என்பது, புலி ஒழிப்பை அடிப்படையாக கொள்கின்றதே ஒழிய, மக்கள் நலனை அது முன்னிறுத்துவதில்லை. அது இயல்பாகவே மக்களுக்கு எதிராக இருக்கின்றது.

இப்படி கிழக்கு மக்களுக்கு எதிரான வன்முறையை, புலியை முன்னிறுத்தி நியாயப்படுத்தினர். இந்த பாசிசக் குழுக்கள் கொண்டிருந்த மக்கள் விரோத அரசியலை, கேள்விகளின்றி பாதுகாத்தனர். மக்களுடன் நிற்பதற்கு பதில், மக்களின் முதன்மை எதிரியுடன் நின்றே குலைத்தனர். புலியை முன்னிறுத்தியபடி, அனைத்தையும் ஓப்பீட்டைக் கொண்டு நியாயப்படுத்தினர்.

இதை அம்பலப்படுத்தும் போது, இதைப் பேசுபவர்கள் யாழ்ப்பாணிகள், கம்யூட்டருக்கு முன்னால் அமர்ந்து இருந்து புரட்சி பேசுபவர்கள், புலிக்கு வக்காலத்து வாங்குபவர்கள் என்று பலவிதமாக கூறி, தமது மக்கள் விரோத அரசியலுக்கு நியாயம் கற்பிக்கின்றனர். கிழக்கு மக்களுடன் நிற்காது, என்னடா கூலிக் கும்பலுடன் நின்று இதைக் கூறுகின்றீhகள்? அதை முதலில் சொல்லுங்கள். முதலில் மக்களுடன் நில்லுங்கள். அதை விட்டுவிட்டு அரசின் சொறி நாய்களுடன் சேர்ந்து நின்று, மக்களை அடிமைப்படுத்துவது தானோ 'ஜனநாயகம்'.

புலிகள் 'தேசியம்" பேசுவது போலவே, புலியெதிர்ப்பு கூட்டம் 'ஜனநாயகம்" பேசுகின்றனர். இவர்கள் பேசும் 'தேசிய"மாகட்டும், 'ஜனநாயக"மாகட்டும், அவை மக்களுடன் கொண்டுள்ள சமூக அரசியல் உறவு என்ன? எந்த பொறுக்கிகளும் இதற்கு பதிலளிப்பதில்லை.

மாறாக ஆயுதம் ஏந்திய பாசிச வடிவத்துக்கு பதில், தேர்தல் வடிவிலான பாசிசத்தை ஆதரிக்கின்றனர். எப்போதும் புலிகளை ஒப்பிடுவதன் மூலம், தமது சொந்த பாசிச அரசியல் நிலைப்பாட்டை நியாயப்படுத்திக் கொள்கின்றனர். இந்த புலியெதிர்ப்பு பாசிட்டுகளை, புலியை மிஞ்சிய கடைந்தெடுத்த பொறுக்கிகள் என்று கூறுவது தான் மிகச் சரியானது.

பி.இரயாகரன்
14.05.2008

Wednesday, May 14, 2008

கொசாவோ : தேசிய இன விடுதலையா? ஏகாதிபத்தியங்களின் ஏவலாட்சியா?


ஐரோப்பா கண்டத்தின் பால்கன் பிராந்தியத்திலுள்ள சின்னஞ்சிறு நாடான செர்பியாவிலிருந்து, அதன் தெற்கு மாநிலமான கொசாவோ கடந்த பிப்ரவரி 17ஆம் நாளன்று தன்னைச் சுதந்திர நாடாகப் பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளது. இதனை அமெரிக்காவும் சில ஐரோப்பிய நாடுகளும் வரவேற்று, கொசாவோ நாட்டை அங்கீகரித்துள்ளன. அதேநேரத்தில் ரஷ்யாவும் செர்பியாவும் கொசாவோவின் தனிநாடு பிரகடனத்துக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, அத்தனி நாட்டை அங்கீகரிக்க மறுத்துள்ளன. இதேபோல, சிங்கள இனவெறி பிடித்த இலங்கை பாசிச அரசும் கொசாவோ விடுதலைக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. சீனா, இந்தியா ஆகிய நாடுகள் கொசாவோவை அங்கீகரிக்கத் தயக்கம் காட்டுகின்றன. மறுபுறம், சில தமிழினவாதிகள் கொசாவோவின் விடுதலையையும், தனிநாடு பிரகடனத்தையும் வரவேற்று ஆதரிக்கின்றனர்.

செர்பியாவின் இனவெறி ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடி வந்த கொசாவோவின் விடுதலையைப் பாட்டாளி வர்க்கம் ஆதரிப்பதா, அதன் தனி நாடு பிரகடனத்தை வரவேற்பதா என்ற விவாதத்துக்குள் நுழையும் முன், கொசாவோ பற்றிய எதார்த்த நிலைமைகளை வரலாற்றுப் பின்னணிகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இரண்டாம் உலகப் போரின்போது பாசிச இட்லரின் ஆக்கிரமிப்புப் போருக்கு எதிராக கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் கம்யூனிஸ்டுகளும் நாட்டுப்பற்றாளர்களும் ஒன்றிணைந்து போராடி, அளப்பரிய தியாகத்துடன் நாட்டு விடுதலையைச் சாதித்து, புதிய முற்போக்கான அரசுகளை நிறுவினர். இவற்றில் செக்கோஸ்லாவாக்கியா நாடானது செக், ஸ்லாவாக் எனுமிரு தேசங்களைக் கொண்ட அரசாக இருந்தது. யூகோஸ்லாவிய நாடானது. செர்பியா, குரேஷியா, ஸ்லோவேனியா, மாசிடோனியா, மாண்டி நிக்ரோ, போஸ்னியா ஹெர்சகோவினா, கொசாவோ ஆகிய தேசிய இனங்களைக் கொண்ட நாடாக உருவானது.

1990களில் சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்து, அமெரிக்க வல்லரசின் தலைமையிலான ஏகாதிபத்திய உலகின் சூழ்ச்சிகள் சதிகளால் பல தேசிய அரசுகளாகப் பிளவுபட்டுச் சிதைந்தது. அதன் தொடர்ச்சியாக செக்கோஸ்லாவாக்கியா நாடானது, செக், ஸ்லோவாக் எனுமிரு நாடுகளாக உடைந்தது. பல தேசிய இனங்களின் கூட்டரசாக உருவான யூகோஸ்லாவி யாவில் செர்பிய ஆதிக்கம் படிப்படியாக அதிகரித்ததாலும், பெயரளவிலான சோசலிச நாடுகள் கூட நீடிக்கக் கூடாது என்ற ஏகாதிபத்திய உலகின் சூழ்ச்சிகள் சதிகளுக்கேற்ப தேசிய இனவெறி தூண்டிவிடப்பட்டதாலும், ஐக்கியப்பட்ட அந்நாடு பல கூறுகளாகச் சிதைந்து இன்று உலக வரைபடத்தில் யூகோஸ்லாவியா என்ற நாடே காணாமல் போய்விட்டது.
1991ஆம் ஆண்டில் யூகோஸ்லாவியாவிலிருந்து ஸ்லோவேனியா மற்றும் குரேஷியா ஆகிய இரு தேசிய இனங்கள் பிரிந்து தனி அரசுகளாயின. 1992இல் போஸ்னியா ஹெர்சகோவினா பிரிந்தது. அதைத் தொடர்ந்து, 2007இல் மாண்டிநிக்ரோ தன்னைத் தனிநாடாக அறிவித்துக் கொண்டது. எஞ்சிய பகுதிகள் செர்பியா என்றழைக்கப்பட்டு வந்தது. தற்போது செர்பியாவிலிருந்து பிரிந்து, கொசாவோ தன்னைச் சுதந்திர நாடாகப் பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளது.

பல தேசிய இனங்களின் ஐக்கியப்பட்ட ஒன்றியமாக யூகோஸ்லாவியா விளங்கிய காலத்திலேயே தமது மேலாதிக்கத்தைத் திணித்து வந்த செர்பியர்கள், இதர தேசிய இனங்கள் பிரிந்து செல்லத் தொடங்கியதும் அப்பட்டமான கிறித்துவ மதவெறியையும் செர்பிய பெருந்தேசிய இன வெறியையும் கட்டவிழ்த்து விட்டு சிறுபான்மைத் தேசிய இனங்களின் மீது போர் தொடுத்து ஒடுக்கினர். ""அகண்ட செர்பியா'' எனும் தேசிய இனவெறியோடு செர்பியர்கள் நடத்திய காட்டுமிராண்டிதனத்தால் யூகோஸ்லாவியா இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது. செர்பியாவின் ஒரு மாகாணமாக இருந்த கொசாவோவில், செர்பிய இனவெறி ஒடுக்குமுறையை எதிர்த்து அம்மக்கள் ஆயுதமேந்திப் போராடி வந்தனர்.
கொசாவோவின் எல்லையிலுள்ள அல்பேனிய மக்களே கொசாவோவில் நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் இனத்தால் அல்பேனியர்கள்; மதத்தால் இஸ்லாமியர்கள். எனவே, செர்பிய இனவெறி ஒடுக்குமுறையிலிருந்து மீள, அல்பேனிய நாட்டுடன் கொசாவோ மாகாணத்தை இணைக்கக் கோரி போராடி வந்தனர். பால்கன் பிராந்தியத்தில் காலூன்றி தனது மேலாதிக்கத்தை நிறுவத் துடித்துக் கொண்டிருந்த அமெரிக்க வல்லரசு, கொசாவோ மக்களின் போராட்டத்தை ஆதரித்து ஊக்குவித்தது. ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் பாலஸ்தீனத்திலும் முஸ்லீம் மக்களை அன்றாடம் கொன்று குவித்து வரும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகள், கொசாவோவில் அல்பேனிய இன முஸ்லீம்களுக்காக முதலைக் கண்ணீர் வடித்தனர்.

கொசாவோ மக்களைக் காப்பது என்ற பெயரில் ஏகாதிபத்திய கூட்டமைப்பின் (நேட்டோ) படைகள் குவிக்கப்பட்டன. மனித உரிமைகளை மீறிவிட்டதாகக் குற்றம் சாட்டி செர்பியா மீது குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்திப் போர் தொடுத்தன. கொசாவோவிலிருந்து செர்பியப் படைகள் வெளியேற்றப்பட்டு, ஏகாதிபத்தியங்களின் கைப்பாவையான ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வை திணிக்கப்பட்டது. கொசாவோ விடுதலைப் படை, அமெரிக்க விசுவாசக் கூலிப் படையாகச் சீரழிக்கப்பட்டது. கொசாவோவில் அமெரிக்க இராணுவத் தளம் நிறுவப்பட்டது. அமெரிக்கஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் போர்த் தாக்குதலில் செர்பியா மீண்டெழ முடியாதபடி நிலைகுலைந்து போனது.

இதன் தொடர்ச்சியாகவே கொசாவோ விடுதலைப் படையின் தலைவரான ஆசிம்தாசி, கடந்த பிப்ரவரி 17ஆம் நாளன்று கொசாவோவின் தலைநகர் பிரிஸ்தினாவில் நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில், கொசாவோவைத் தனியொரு நாடாக பிரகடனப்படுத்தியுள்ளார். இதனை அமெரிக்காவும் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி முதலான ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளும் அங்கீகரித்துள்ளன. அவற்றின் நோக்கம், கொசாவோ மக்களின் நியாயமான சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து ஆதரிப்பதல்ல; மாறாக, தமது மேலாதிக்கத்தை நிறுவுவதேயாகும்.
இதற்கேற்ப கொசாவோ நாடாளுமன்றத்துக்குப் பெயரளவுக்கே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. முக்கிய விவகாரங்கள் அனைத்தையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அவைதான் முடிவு செய்யும். ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் 2000 பேர் கொண்ட படையை அனுப்பி கொசாவோவைப் "பாதுகாத்து கண்காணிக்கும்'. இதுதவிர, 16,000க்கும் மேற்பட்ட அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியப் படைகள் (நேட்டோ) கொசாவோவில் நிலைகொண்டு அந்நாட்டைப் "பாதுகாக்கும்!'

கொசாவோ தனிநாடாக அறிவிக்கப்பட்டதும், அம்மாகாணத்தின் வடபகுதியிலுள்ள செர்பிய இனத்தினர் இதனை ஏற்க மறுத்து, தாங்கள் செர்பியாவுடன் இணையப் போவதாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதனை ஆதரிக்கும் செர்பியாவுக்கு ரஷ்ய ஏகாதிபத்தியம் துணையாக நிற்கிறது. செர்பியா, தனது இழந்த மாகாணமாகிய கொசாவோவை மீட்கப் போர் தொடுக்க முனையும். அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களின் துணையோடு கொசாவோ தனது தனிநாடு நிலையைத் தக்கவைத்துக் கொள்ளப் போராடும். ஆக, மீண்டும் பால்கன் பிராந்தியத்தில் இரத்த ஆறு ஓடப் போவது நிச்சயமாகி விட்டது.

அல்பேனியாவுடன் இணைய வேண்டும் என்பதுதான் கொசாவோ மக்களின் விருப்பமாகவும் போராட்டமாகவும் இருந்தது. தனது மேலாதிக்க நோக்கங்களுக்கு இது ஏற்புடையதாக இல்லாததால், கொசாவோவை தனிநாடாக்கியுள்ளது அமெரிக்கா. மேலும் கொசாவோ மக்கள் இதுவரை பயன்படுத்தி வந்த கொடியைக்கூட ஐரோப்பிய ஒன்றியம் மாற்றியமைத்துள்ளது. ஆக, கொசாவோ ஒரு சுதந்திர நாடல்ல; அது ஏகாதிபத்தியங்களின் ஆதிக்கத்துக்கான களம்; அவற்றின் மேலாதிக்க ஆட்டத்துக்கான பகடைக்காய் என்பது தெளிவாகி விட்டது.
இருப்பினும், இது கொசாவோ தேசிய இனத்தின் விடுதலை என்று ""சமூகநீதித் தமிழ்த் தேசம்'' எனும் தமிழினவாத பத்திரிகை குதியாட்டம் போடுகிறது. ""எப்படியோ, செர்பியர்களின் கொடுமைகளிலிருந்து கொசாவோ முஸ்லீம்கள் காப்பாற்றப்பட்டுள்ளார்கள் என்பதே ஆறுதல்'' என்று இங்குள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கொசாவோ தனிநாடாகியுள்ளதை வரவேற்கிறார்கள். இப்படித்தான் அமெரிக்க ஏற்பாட்டின்படி, இந்தோனேஷியாவிலிருந்து கிழக்கு திமோர் தனிநாடாக "விடுதலை' அடைந்ததையும் இனவாதிகள் வரவேற்று ஆதரித்தனர்.

ஆனால், இவையெல்லாம் தேசிய இன விடுதலையோ, சுயநிர்ணய உரிமையோ அல்ல. மாறாக, இத்தகைய "சுதந்திரம்', "விடுதலை'களால் அமெரிக்கஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் சீவி சிங்காரிக்கப்பட்டு, வலுப்படுத்தப்பட்டுள்ளன; அவற்றின் மேலாதிக்கத்துக்கு உதவுபவையாக அமைந்துள்ளன. ஏகாதிபத்தியத்தை வலுப்படுத்தக் கூடிய, அதன் மேலாதிக்கத்துக்கு புறக்காவல் அரண்களாக அமைந்துள்ள இத்தகைய "விடுதலை'களை ஆதரிப்பதானது, தேசிய இன விடுதலைக்கே எதிரான ஏகாதிபத்திய கைக்கூலித்தனமாகும். தேசிய இனங்களின் உரிமையையும் ஜனநாயகத்தையும் மதிக்கும் சைவப்புலியாக ஏகாதிபத்தியம் மாறிவிட்டதாகக் காட்டி ஏய்க்கும் துரோகத்தனமாகும்.

மேலும் தனது பெருந்தேசிய இனவெறி நலன்களுக்கு எதிரானது என்பதாலேயே கொசாவோ விடுதலையை சிறீலங்கா அரசு எதிர்க்கிறது. சிங்கள இனவெறி பாசிச ஒடுக்குமுறையை எதிர்ப்பது என்ற பெயரால், கொசாவோவின் "விடுதலை'யை ஆதரிப்பது முற்போக்கானதாகி விட்டது.

பொன் விலங்கைப் பூட்டிக் கொண்டாலென்ன, எப்படியோ இரும்பு விலங்கு போனால் போதும் என்று நியாயவாதம் பேசி ஏகாதிபத்திய வலையில் சிக்கிக் கொள்வது தேசிய இன விடுதலையாகாது; ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நின்று போராடாமல், எந்தவொரு தேசிய இன விடுதலையையும் சாதிக்கவும் முடியாது. இந்த அரிய படிப்பினைகளை உலகிற்கு உணர்த்திவிட்டு, அமெரிக்கஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் கண்காணிப்புப் பிடியில் சிக்கித் தவிக்கிறது, கொசாவோவின் "தேசிய இன விடுதலை'!

· குமார்

Tuesday, May 13, 2008

திபெத்திய கலகம்: தேசிய இனவிடுதலைப் போரா?



கடந்த மார்ச் மாதத்தில், உலகத்தின் கூரை என்றழைக்கப்படும் திபெத்தில் சீன ஆட்சியாளர்களுக்கு எதிராக வெடித்த கலவரம், இதுவரை கண்டிராத மூர்க்கத்தனத்துடன் நடந்துள்ளது. இக்கலவரத்தை ஒடுக்க சீன இராணுவம், போராடிய திபெத் மக்களையும் புத்த மத குருமார்களையும் மிருகத்தனமாகத் தாக்கியது என்றும் மீண்டும் கலவரம் வெடிக்கும் சூழல் நிலவுவதாகவும் செய்திகள் வருகின்றன. சீன இராணுவம் நடத்திய தாக்குதலிலும் துப்பாக்கிச் சூட்டிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

திபெத்தின் புத்தமத அரசரான தலாய்லாமா, 1959 மார்ச் 10ஆம் நாளன்று சீனாவின் "அடக்குமுறை'யிலிருந்து தப்பித்து இந்தியாவில் தஞ்சம் புகுந்த நாளை, "திபெத்திய விடுதலைக்கான எழுச்சி நாளாக' அவரது விசுவாசிகள் கடைபிடித்து வருகின்றனர். சீனாவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடக்கவிருப்பதால், உலகின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் தலாய்லாமாவின் ஆதரவாளர்கள் மார்ச் 10ஆம் தேதி முதலாக போராட்டங்களைத் தீவிரமாக நடத்தி வந்தனர். இதில் திபெத்திய உழைக்கும் மக்களும் கணிசமாகப் பங்கேற்றுள்ளனர். இப்போராட்டங்கள், அரசு அலுவலகங்களும் வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டு மிகப் பெரிய வன்முறைக் கலவரமாகத் தீவிரமடைந்ததும், சீன அரசு இராணுவத்தை ஏவிக் கொடூரமாக ஒடுக்கியுள்ளது.

இந்தக் கலவரத்துக்கு தலாய்லாமாதான் காரணம் என்று குற்றம் சாட்டுகின்றனர், சீனாவின் முதலாளித்துவ ஆட்சியாளர்கள். திபெத் விவகாரத்தில் பொறுமையைக் கடைபிடிக்குமாறு உபதேசிக்கிறது, அமெரிக்கா. இந்திய அரசோ, நீண்டகாலமாகவே திபெத், சீனாவின் ஓர் அங்கம்தான் என்று ஒருபுறம் கூறிக் கொண்டே, மறுபுறம் தலாய்லாமாவை ஆதரித்து சீனாவுக்கு எதிரான சீர்குலைவு வேலைகளை இரகசியமாகச் செய்து வருகிறது. அகண்ட பாரத லட்சியத்துடன் இந்திய தேசிய இனங்களை துப்பாக்கி முனையில் ஒடுக்குவதையே நோக்கமாகக் கொண்ட இந்துவெறி பாசிஸ்டுகளின் தலைமைத் தளபதியான அத்வானி, திபெத் தேசிய இன மக்களின் மீது சீன அரசு காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறையை ஏவியுள்ளதாகக் கூப்பாடு போடுகிறார். திபெத், சீனாவின் ஓர் அங்கம்தான் என்று கூறும் இடதுவலது போலி கம்யூனிஸ்டுகள், தற்போதைய கலவரம் சீனாவின் ஐக்கியத்தைச் சீர்குலைக்கும் பிரிவினைவாத சதி என்று சாடி, சீன அரசின் அடக்குமுறையை நியாயப்படுத்துகின்றனர். தமிழினப் பிழைப்புவாதிகளோ, திபெத்திய போராட்டத்தைத் தேசிய இன உரிமைப் போராட்டமாகச் சித்தரித்து சீன அரசின் அடக்குமுறையை எதிர்க்கின்றனர்.

எங்கெல்லாம் அடக்குமுறைக்கெதிராக மக்கள் போராடுகிறார்களோ, அங்கெல்லாம் அப்போராட்டத்தை ஆதரிப்பது புரட்சிகர ஜனநாயக சக்திகளின் கடமை என்ற அடிப்படையில், திபெத்தில் நடக்கும் போராட்டத்தை நாம் ஆதரிப்பதா? அல்லது இது பிளவுவாத பிரிவினைவாத சதிச் செயல் என்று சீன அரசின் அடக்குமுறையை நியாயப்படுத்துவதா?

சீனாவில் முதலாவதாக தோழர் மாவோ தலைமையிலான கம்யூனிஸ்டுகளின் ஆட்சி நடந்தது. தற்போது, கம்யூனிச முகமூடி அணிந்த அதிகார வர்க்க முதலாளித்துவ ஆட்சி நடக்கிறது.

சீனாவின் முதலாளித்துவ ஆட்சியாளர்கள் உலகமயமாக்கலுக்கு ஏற்ப உழைப்புச் சுரண்டலைத் தீவிரப்படுத்தி வருவதாலும், ஆட்குறைப்பு தகுதியற்றவர்களை நீக்குவது முதலான நடவடிக்கைகளாலும் அந்நாட்டில் வறுமையும் வேலையின்மையும் பெருகி வருகிறது. தொழிற்கூடங்களில் கொத்தடிமைத்தனம் தலைவிரித்தாடுகிறது. விவசாயம் நாசமாக்கப்பட்டு, ஏற்றுமதி அடிப்படையான விவசாய உற்பத்தி திணிக்கப்பட்டுள்ளதால், வேலையிழந்து வாழ்விழந்த விவசாயிகள் பெருநகரங்களில் குவிகின்றனர். விவசாயிகளும் தொழிலாளர்களும் கேடுகெட்ட சீன முதலாளித்துவக் கொடுங்கோலாட்சிக்கு எதிராக தன்னெழுச்சியான கலகங்கள் கிளர்ச்சிகளில் ஈடுபடுவதும், இவற்றை சீன முதலாளித்துவ ஆட்சியாளர்கள் மிருகத்தனமாக ஒடுக்குவதும் தொடர்கிறது.

சீனாவின் மைய மாநிலங்களிலேயே இந்த நிலைமை என்றால், ஒப்பீட்டு ரீதியில் பின்தங்கிய திபெத் பிராந்தியத்தின் நிலைமை பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. உலகமயமாக்கலுக்கு ஏற்ப திபெத்தில் பெருந்திட்டங்களும், சுற்றுலாபோக்குவரத்துத்துறை வளர்ச்சியும் நடந்துள்ள போதிலும் அவற்றின் பலன்கள் மக்களுக்கானதாக அல்லாமல், சீன முதலாளித்துவ கும்பலும் பன்னாட்டு ஏகபோக கும்பலும் ஆதாயமடைவதாகவே உள்ளன. உலக முதலாளித்துவத்தின் நலன்களுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப திபெத்தின் உற்பத்தியும் பொருளாதாரமும் கலாச்சாரமும் மாற்றப்பட்டு வருவதால், அங்கு வறுமையும் வேலையின்மையும் ஏற்றத்தாழ்வுகளும் சமூக முறைகுலைவுகளும் தீவிரமாகி வருகின்றன.

இந்நிலையில், திபெத்திய மக்களின் அதிருப்தியைச் சாதகமாக்கிக் கொண்டு, எதிர்ப்புரட்சி லாமா கும்பல் இழந்த சொர்க்கத்தை மீட்க, சீன அரசின் ஒடுக்குமுறை எதிர்ப்பு எனும் முகமூடியுடன் கலகத்தில் இறங்கியது. இதற்குமுன் நடந்த கலகங்களைப் போலின்றி, கடந்த மார்ச் இறுதியில் திபெத் தலைநகர் லாசாவில் நடந்த கலகத்தில் கணிசமான அளவுக்கு உழைக்கும் மக்களும் சீன அரசுக்கெதிரான போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இது, உலக முதலாளித்துவத்தின் தேவைகளுக்கேற்ப திபெத்தின் பொருளாதாரமும் கலாச்சாரமும் சிதைக்கப்படுவதால் ஏற்பட்டுள்ள அதிருப்தியும் குமுறலும்தானே தவிர, இது திபெத்தின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் அல்ல. சீன முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராட்டங்களைக் கட்டியமைத்து தலைமையேற்க அங்கு புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சி இல்லாத நிலையில், திபெத்திய மக்களின் அதிருப்தியை பிற்போக்கு சக்திகள் அறுவடை செய்து கொண்டு, தமது நோக்கங்களுக்கு ஏற்பத் திசைதிருப்பி ஆதாயமடைகின்றன.

தேசிய இன விடுதலைக்கான நோக்கத்துடன் செயல்படும் அமைப்பு எதுவும் திபெத்தில் இல்லை. தற்போதைய கலகத்தை ஏகாதிபத்திய கைக்கூலிகளான தன்னார்வக் குழுக்களே கட்டியமைத்து வழிநடத்தியுள்ளன. திபெத்திய இளைஞர் காங்கிரசு, திபெத்திய மகளிர் கழகம், குசுசும் திபெத்திய இயக்கம் (முன்னாள் அரசியல் கைதிகளின் இயக்கம்), திபெத்திய தேசிய ஜனநாயகக் கட்சி, சுதந்திர திபெத்துக்கான (இந்தியாவிலுள்ள) மாணவர் இயக்கம் ஆகிய ஐந்து பெரிய தன்னார்வ நிறுவனங்கள் கூட்டுச் சேர்ந்து நன்கு திட்டமிட்டு இக்கலகத்தை நடத்தியுள்ளன. சீனாவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடக்கும் தருணத்தில் இதைச் செய்ததன் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன.

ஒருபுறம், கம்யூனிச முகமூடி அணிந்த சீன முதலாளித்துவ ஆளும் கும்பல். மறுபுறம் தேசிய இன முகமூடி அணிந்த திபெத்திய பிற்போக்குக் கும்பல். இவற்றிலே எந்தத் தரப்பின் நியாயத்தை ஏற்க முடியும்? அரசு எந்திரத்தைக் கையில் வைத்துள்ள சீன ஆளும் கும்பலின் மிருகத்தனமான ஒடுக்குமுறையை எதிர்க்க வேண்டும்; ஏனென்றால், அதுதான் மிகக் கொடிய அரசு பயங்கரவாத அடக்குமுறை என்று மதிப்பிட்டு, திபெத்திய பிற்போக்குக் கும்பலின் எதிர்ப்புரட்சி கலகத்தை நியாயப்படுத்த முடியுமா? இந்தியாவாலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தாலும் ஆதரித்து ஊட்டி வளர்க்கப்படும் கைக்கூலி லாமா கும்பலை தேசிய இனப் போராளிகளாகக் கருத முடியுமா? முடியாது. இரண்டுமே ஏகாதிபத்தியத்துக்குச் சேவை செய்யக்கூடிய, ஏகாதிபத்தியத்தை வலுப்படுத்தக் கூடிய பிற்போக்குக் கும்பல்கள்தாம். அவற்றிலே இடதுசாரி வலதுசாரி, முற்போக்கு பிற்போக்கு என்று எடைபோட்டு பார்த்து எந்தத் தரப்பையும் ஆதரிக்க முடியாது.

திபெத்திய லாமா கும்பலின் கலகத்தைப் போலவே 1980களில் பஞ்சாபில் பிந்தரன்வாலே தலைமையிலான சீக்கிய மதவெறி பயங்கரவாத கும்பல், தேசிய இன முகமூடியுடன் இந்திய அரசுக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதலில் இறங்கியது. அன்று பிரதமராக இருந்த பாசிச இந்திரா, அரசு பயங்கரவாதத்தை ஏவி அக்கும்பலை மிருகத்தனமாக ஒடுக்கினார். இவற்றிலே எந்தத் தரப்பின் நியாயத்தை ஏற்க முடியும்? இரண்டுமே பாசிச பிற்போக்குக் கும்பல்கள்; இவ்விரு தரப்பையும் நிராகரித்து, இருதரப்புக்கும் எதிராகப் போராடுவதன் மூலமே ஜனநாயகத்தையும் நியாயமான தேசிய இன உரிமையையும் நிலைநாட்ட முடியும் என்ற நிலைப்பாட்டுடன் அன்று கம்யூனிசப் புரட்சியாளர்கள் பிரச்சாரபோராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால் சில போலி புரட்சியாளர்களும் சில இனவாதக் குழுக்களும் காலிஸ்தான் பயங்கரவாத கும்பலின் கலகத்தை தேசிய இன உரிமைக்கான போராட்டமாகச் சித்தரித்து, அதை ஆதரித்து, அரசு பயங்கரத்தை மட்டும் எதிர்த்தன. பிற்காலத்தில், தமது நிலைப்பாட்டை இரகசியமாகக் கை கழுவின.

இதேபோல, சீனாவில் 1989இல் ""ஜனநாயக ஆட்சிமுறை''யைக் கோரி மாணவர்கள் போராடியபோது, அதை சீன முதலாளித்துவ ஆட்சியாளர்கள் மிருகத்தனமாக ஒடுக்கியபோது, சீன மாணவர் போராட்டம் நியாயமானது, ஜனநாயக உரிமைகளுக்கானது என்று பத்திரிகைகளும் குட்டி முதலாளித்துவவாதிகளும் துதிபாடினர். ஆனால் சீன மாணவர் போராட்டம் மக்கள் ஜனநாயகத்துக்கானதல்ல; கேடுகெட்ட முதலாளித்துவ ஜனநாயகத்துக்கானதுதான். ஏகாதிபத்தியங்களின் ஆதரவுடன் அப்பட்டமான முதலாளித்துவத்தை நிறுவத் துடிக்கும் சீன ஆளும் கும்பலின் ஒரு பிரிவும், அதிகார வர்க்க முதலாளித்துவத்தை நிலைநாட்டியுள்ள போலி கம்யூனிச ஆளும் கும்பலும் நடத்திய மோதல்தான் சீன மாணவர் போராட்டமாக வெளிப்பட்டது. இரு தரப்புமே முதலாளித்துவத்தின் இரு வேறுபட்ட கும்பல்களாக உள்ள நிலையில் அவற்றில் எதை பாட்டாளி வர்க்கம் ஆதரிக்க முடியும்? இவ்விரு தரப்பையும் நிராகரித்து, இரு தரப்புக்கும் எதிராகப் போராடுவதன் மூலமே மக்கள் ஜனநாயகத்தையும் சோசலிசத்தையும் சீன மக்கள் சாதிக்க முடியும் என்ற நிலைப்பாட்டையே அன்று கம்யூனிசப் புரட்சியாளர்கள் மேற்கொண்டனர்.

திபெத்தில் தற்போது நடந்துள்ள கலகமும் அதற்கெதிராக சீன அரசின் ஒடுக்குமுறையும் இந்த வகைப்பட்டதுதான். இருப்பினும் இதற்கு தேசிய இனச் சாயம் பூசி இனவாத பிழைப்புவாதிகள் ஆதரிக்கக் கிளம்பியுள்ளனர். அதிலும் தலாய்லாமா கும்பலமானது அப்பட்டமான ஏகாதிபத்தியக் கைக்கூலி கும்பல் என்று உலகெங்கும் அம்பலமான பின்னரும், வலிந்து சென்று அக்கும்பலை ஆதரிக்கின்றனர். இதற்காக, தோழர் மாசேதுங்கை ஆக்கிரமிப்பாளனாகக் கொச்சைப்படுத்தி இழிவுபடுத்தவும் அவர்கள் தயங்கவில்லை. வரலாற்றுப் புரட்டுகளுடன், திபெத் போராட்டத்தை ஆதரிப்பதுதான் மார்க்சியலெனினியம் என்று வேறு ஏய்க்கக் கிளம்பியுள்ளனர்.

1949இல் சீனாவில் தோழர் மாசேதுங் தலைமையில் புதிய ஜனநாயகப் புரட்சி வெற்றி பெற்று, நிலப்பிரபுத்துவமும் ஏகாதிபத்தியமும் தூக்கியெறியப்பட்டு உழைக்கும் மக்கள் விடுதலை அடைந்தனர். உழைக்கும் மக்களின் புதிய அரசியல் அதிகாரத்தைக் கொண்டு, நாட்டின் பல பகுதிகளில் நிலப்பிரபுத்துவக் கொடுங்கோன்மைக்கு எதிரான போராட்டங்களில் இறங்கி, விவசாயிகள் தமது புரட்சிகர அரசியல் அதிகாரத்தை நிறுவினர். சீனாவின் ஒரு பகுதியாக நீடித்து வந்த திபெத்தில், புத்தமத குருமார்களான லாமாக்களின் கொடூர கொத்தடிமைத்தனமான ஆட்சிக்கு எதிராக விவசாயிகள் போராடி வந்த சூழலில், இதர பகுதிகளில் நடந்ததைப் போலவே திபெத் மக்களின் விடுதலைக்கு 1950இல் சீன செஞ்சேனை உதவியது. செஞ்சேனையின் உதவியோடு திபெத்திய மக்கள் லாமாக்களின் கொடுங்கோலாட்சியை வீழ்த்தி, அடிமைத்தளைகளை அறுத்தெறிந்தனர். அரண்டு போன லாமா கும்பல் 1951இல் சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு ஓடிவந்து, சீன அரசுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி திபெத்தில் அமைதியான முறையில் விவசாய சீர்திருத்தங்களைச் செய்து ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

ஆனால், மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற உள்ளிருந்தே சதிகளைச் செய்துவந்த லாமா கும்பல், 1959இல் ஆயுதமேந்திய எதிர்ப்புரட்சி கலகத்தில் இறங்கியது. கம்யூனிஸ்டுகளைக் கொலை செய்தும், அரசு அலுவலகங்கள் பள்ளிகளைத் தீயிட்டுக் கொளுத்தியும் வெறியாட்டம் போட்டது. அக்கும்பலை ஒடுக்க சீன செஞ்சேனை திபெத்தில் நுழைந்ததும், தலைமைக் குருவும் மத அரசருமான தலாய்லாமா தனது விசுவாசிகளுடன் இந்தியாவில் தஞ்சமடைந்தார். இன்னும் சில லாமா கும்பல்கள் மேற்கத்திய நாடுகளுக்குத் தப்பியோடின. திபெத்திய விவசாயிகள், விவசாயப் புரட்சிக் கமிட்டிகளை நிறுவி நிலச்சீர்திருத்தத்தையும் ஜனநாயகத்துக்கான இயக்கத்தையும் தொடர்ந்து நடத்தி மக்கள் அதிகாரத்தை நிறுவினர். 1965இல் திபெத்திய தேசிய இனத்தின் விருப்பப்படி, சீனாவின் சுயாட்சி உரிமை பெற்ற பிரதேசமாக திபெத் மாறியது. 1970களில் சீனாவில் நடந்ததைப் போலவே திபெத்திலும் கலாச்சாரப் புரட்சி நடந்து, திபெத்திய உழைக்கும் மக்கள் பழைய மரபுகள் மூட நம்பிக்கைகளை விட்டொழித்து புத்த மடாலயங்களை பள்ளிக் கூடங்களாக மாற்றியமைத்தனர்.

மறுபுறம், இந்தியாவில் தஞ்சமடைந்த லாமா கும்பலுக்கு கொடைக்கானல், பெங்களூரு மற்றும் இமாசலப் பிரதேசம், உ.பி. மாநிலங்களில் எஸ்டேட்டுகளும் பழத்தோட்டங்களும் அளித்து ஆதரித்த நேரு அரசு, உ.பி.யின் தர்மசாலாவில் லாமா கும்பல் தனது தலைமை நிலையத்தை நிறுவிக் கொள்ளவும் உதவியது. தலாய்லாமா, ""வெளிநாட்டில் வாழும் திபெத்திய அதிபர்'' என்று பட்டம் சூட்டிக் கொண்டார். திபெத் விவகாரத்தை வைத்து கம்யூனிச சீனாவை சீர்குலைக்கத் துடித்த அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள், லாமா கும்பலுக்கு இரகசியமாக ஆயுத உதவிகள் செய்து உசுப்பி விட்டன. "ஆசிய ஜோதி' நேரு அரசு இதற்கு உடந்தையாகச் செயல்பட்டது. லாமா கும்பல் திபெத்தில் நுழைந்து பாலங்கள் சாலைகளைக் குண்டு வீசித் தகர்ப்பது, பயிர்களை அழிப்பது முதலான நாசவேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது. அதன்பிறகு நேருவின் வாரிசு இந்திரா ஆட்சியில், அமெரிக்க கொலைகார உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. உதவியுடன் எஸ்.எஃப்.எஃப் என்ற பெயரில் சிறப்பு எல்லைக் காவல்படை உருவாக்கப்பட்டு, உ.பி. மாநிலம் டேராடூனுக்கு அருகே சக்ரடா மலைப்பகுதியில் லாமா கும்பலுக்கு இந்திய அரசு ஆயுதப் பயிற்சி அளித்து சீனாவுக்கு எதிராக ஏவியது. பாசிச இந்திரா கொலை மீதான விசாரணையின்போது, இந்த உண்மைகள் வெளிவந்து நாடெங்கும் நாறியது.

சீனாவில் கம்யூனிச கட்சியையும், ஆட்சியையும் உள்ளிருந்தே முதலாளித்துவ கும்பல் கைப்பற்றி, அதிகார வர்க்க முதலாளித்துவத்தை நிலைநாட்டிய பிறகு, 1979இல் தலாய்லாமாவின் மூத்த சகோதரரான கியாலோதோண்டுப், சீன ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 1980களிலும் 1990களிலும் பின்னர் 2002இலும் இரு தரப்பும் தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் நடத்தின.

சீன முதலாளித்துவப் பாதையாளரான டெங்சியாவோ பிங் முன்வைத்த ""ஒருநாடு; இரு வேறு பொருளாதார முறைகள்'' என்ற கொள்கைப்படி, பிரிட்டிஷ் காலனியாக இருந்த ஹாங்காங்கும், போர்ச்சுகீசிய காலனியாக இருந்த மாகாவ்வும் முந்தைய தமது அரசியல்பொருளாதார முறைகளுடன் சீனாவுடன் இணைந்துள்ளன. அதேபாணியில் திபெத்தும் நீடிக்க வேண்டும் என்று கோருகிறது, லாமா கும்பல். ஆனால், திபெத் நீண்ட நெடுங்காலமாக சீனாவுடன் ஐக்கியப்பட்டுள்ள நிலையில், அதை மீண்டும் ஐக்கியப்படுத்த வேண்டியதில்லை. மேலும், லாமாக்கள் கோரும் முந்தைய அரசியல்பொருளாதார நிலைமை என்பது நிலப்பிரபுத்துவ கொடுங்கோலாட்சியாகும். அந்தக் காட்டுமிராண்டித்தனத்தை நாகரிக உலகம் ஏற்காது'' என்று சீன அரசு 2004இல் வெளியிட்ட திபெத் பற்றிய வெள்ளை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அதாவது, சீன அதிகார வர்க்க முதலாளித்துவ ஆட்சியாளர்கள், அப்பட்டமான முதலாளித்துவ அரசியல் பொருளாதார முறைகளை ஏற்கின்றனர். லாமாக்கள் கோரும் நிலப்பிரபுத்துவ கொடுங்கோன்மை அரசியல் பொருளாதார முறைகளை ஏற்கத் தயாராக இல்லை.

""தனிநாடு'', ""சுதந்திர திபெத்'' கோரிக்கைகளைக் கை விடுவதாக அறிவித்துள்ள தலாய்லாமா, சீனாவுடன் ஐக்கியப்பட்ட சுயாட்சி உரிமை கோருகிறார். அந்த சுயாட்சி என்பது சீன அரசின் தலையீடற்ற ஆட்சியதிகாரம் என்கிறார். அதாவது, நிதி, இராணுவம் முதலானவற்றில் சீன அரசுடன் ஐக்கியப்படும் அதேசமயம், ஆட்சியதிகாரம் தம்மிடமே இருக்க வேண்டும்; அரசு வடிவம் தம்மாலேயே தீர்மானிக்கப்பட வேண்டும் என்கிறார். இதுதவிர, குயின்ஹைய், கன்சு, சிச்சுவான், யுன்னான் மாநிலங்களில் திபெத்தியர்கள் வாழும் பகுதிகளை திபெத் சுயாட்சிப் பிரதேசத்துடன் இணைக்க வேண்டும் என்பது லாமாக்களின் கோரிக்கை. வரலாற்று ரீதியாக, திபெத் மொழி பேசும் இப்பகுதிகள் திபெத்திய ஆட்சியின் கீழ் இருந்ததில்லை என்றும், சீனாவிலுள்ள 50க்கும் மேற்பட்ட சிறிய தேசிய இனங்கள் மொழி அடிப்படையில் தனித்தனி சுயாட்சிப் பிரதேசங்களைக் கோரினால் சீன சமுதாயத்தில் பிளவையும் மோதலையுமே ஏற்படுத்தும் என்றும் சீன அரசு இதனை ஏற்க மறுக்கிறது.

இவ்விரு தரப்புக்குமிடையே நிலவும் அதிகாரத்துக்கான இந்த தகராறு, அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களுக்கும் சீன முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்குமிடையிலான உறவைப் பொருத்து பேச்சுவார்த்தைகள் மூலம் சுமுகமாகத் தீர்க்கப்படலாம்; அல்லது பகை நிலைக்கும் செல்லலாம். இதிலே எந்தத் தரப்பு வெற்றி பெற்றாலும், அது ஏகாதிபத்திய உலகக் கட்டமைவைப் பலவீனப்படுத்தப் போவதில்லை; மாறாக, பலப்படுத்துவதாகவே உள்ளது.

எதிர்ப்புரட்சி பிற்போக்குக் கும்பலின் தலைவரான தலாய்லாமாவின் கைக்கூலித்தனத்திற்காக, ஏகாதிபத்திய உலகம் அவருக்குச் சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கி கொண்டாடிய பின்னரும், அவரை வலிந்து துதிபாடி ஆதரிக்கிறார், தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சியின் செயலரான திருவாளர் பெ.மணியரசன். ஏகாதிபத்தியங்களின் கைக்கூலியாகச் செயல்பட்டாலும், ""விடுதலை கோருவோருக்கு விடுதலை கூடி வர வேண்டும் என்ற நோக்கமிருக்கும்... அந்த லட்சிய வேட்கையை, நேர்மையைக் கொச்சைப்படுத்தக் கூடாது'' என்று கூச்சமின்றி வக்காலத்து வாங்குகிறார். இதே வழியில் அமெரிக்காவுடன் இணக்கம் கண்டு "ஒருவகை' தன்னாட்சியைப் பெற்றுள்ள குர்திஷ் "எடுபிடி சுயாட்சி'யை வரவேற்கிறார். நாளை, இந்திய மேலாதிக்கவாதிகளுடன் இணக்கம் கண்டு துரோகிகள் தலைமையில் ஈழத்தில் "ஒருவகை' தன்னாட்சி மலர்ந்தாலும், அதையும் மணியரசன் போன்ற பிழைப்புவாதிகள் ஆதரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.எங்கேயாவது, யாராவது தேசிய இன உரிமை என்ற முகமூடியுடன் கிளம்பிவிட்டால் போதும், உடனே அதை ஆதரிக்க வேண்டும் என்பதுதான் இத்தகைய இனவாத பிழைப்புவாதிகளின் கொள்கையாகி விட்டது. போதாக்குறைக்கு, இப்பிழைப்புவாதத்தையே மார்க்சியலெனினியம் என்று கூறி ஏய்க்கவும் இவர்கள் கிளம்பியுள்ளனர். ஆனால், இதற்கும் மார்க்சிய லெனினியத்துக்கும் ஒட்டுமில்லை, உறவுமில்லை.

""... ஒவ்வொரு தேச விடுதலை இயக்கத்தையும், எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் ஒவ்வொரு குறிப்பிட்ட வழக்காற்றிலும், பாட்டாளி வர்க்கம் ஆதரித்தே தீரவேண்டும் என்று இதற்குப் பொருளல்ல. ஏகாதிபத்தியத்தைப் பலவீனப்படுத்துவதாக இருக்கக்கூடிய, தூக்கியெறிவதாக இருக்கக் கூடிய தேசவிடுதலை இயக்கங்களை தவறாமல் ஆதரிக்க வேண்டும் என்பதே இதன் பொருள். குறிப்பிட்ட சில ஒடுக்கப்பட்ட நாடுகளில் நடக்கும் தேசவிடுதலை இயக்கங்கள், பாட்டாளி வர்க்க இயக்க வளர்ச்சியின் நலன்களுடன் மோதுபவையாக உள்ள நிகழ்வுகள் எழக்கூடும். அத்தகைய சந்தர்ப்பங்களில், அவற்றுக்கு ஆதரவு தருவது என்ற பிரச்சினைக்கு அறவே இடமில்லை''என்கிறார் தோழர் ஸ்டாலின். (பார்க்க: ""லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள்'' என்ற நூல்)


இதுதான் தேசிய இன விடுதலை குறித்த மார்க்சியலெனினியக் கோட்பாடு. மணியரசன் முன்வைப்பது மார்க்சியலெனினியம் அல்ல, மார்க்சியத்தைத் திரித்துப் புரட்டி ஏய்க்கும் அயோக்கியத்தனம்!

· பாலன்

Monday, May 12, 2008

'ஜனநாயக" ரவுடிகள் வன்முறை மூலம் வென்ற தேர்தல்

பிள்ளையான் வாரான்! ரவுடி பின்ளையான் வாரான்! எல்லோரும் எழுந்து நில்லுங்கள்!

மக்கள் தாமாக தெரிவு செய்த தேர்தலாம்! இதில் வென்ற பிள்னையான் கதை பிள்ளையார் கதை போன்றது. அதிகப்படியான விருப்பு வாக்கால் மக்கள் கிழக்கு 'விடிவெள்ளி"யை தெரிவு செய்துள்ளனராம்! வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிரான, ஏன் வடக்குக்கு எதிரான கிழக்கு மக்களின் வாக்குகளாம்! இதுதானாம் தேர்தல் சொல்லும் செய்தியாம்!


இப்படித் தான் பிள்ளiயான் கதை, எம்முன் வருகின்றது. யார் இந்த பிள்ளையான்? கருணாவின் எடுபிடியாக, கருணாவின் தனிமனித பிளவின் பின் ஓட்டிக்கொண்ட ஒரு லும்பன். கருணா புலியிடமிருந்து தப்பிப்பிழைக்க அரசின் தயவில் தலைமறைவாகிவிட, கருணாவின் முதுகில் குத்தித் தான் அதிகாரத்தைக் கைப்பறியவன். இதற்காக கருணா விசுவாசிகளை கொன்றும், பலரை மிரட்டியும் அடிபணிய வைத்தவன். இவனின் அரசியல் என்ன?

கருணாவின் பின் ஓடி வந்ததற்கு அப்பால், சொந்த அரசியல் கிடையாது. கருணாவை எதிராக நிறுத்திய போதும், எந்த அரசியலும் கிடையாது. கருணாவை தொலைத்துக் கட்ட, பேரினவாதத்தின் காலை நக்கிய தகுதியைத் தவிர, வேறு எதுவும் கிடையாது.

ரவுடியாக, குண்டனாக பேரினவாதத்துக்கு சேவை செய்ததால், கிடைத்த அதிகாரம். பேரினவாதம் வழங்கிய பிச்சையில், முதலமைச்சர் கனவுடன், தேர்தல் களத்தில் 'அண்ணனாக" இறக்கப்பட்டவர். வடக்கில் டக்கிளஸ் ஐயா, பேரினவாதத்தை நக்கி வடக்கு அதிகாரத்தைப் பெற்றது போல் தான், இதுவும். இப்படி பிள்ளையான் திடீர் அரசியல் வாதியாக, மக்கள் தாமாகவே முன்வந்து தெரிவு செய்ததாக கூறுவது நகைச்சுவை தான். பிள்ளையானுக்கு பதில், பேரினவாதம் யாரை நிறுத்திருந்தாலும், அவனும் வென்று தான் இருப்பான். அது தனிக் கதை.

கவனம் பிள்ளையான் வாரான்! ரவுடி பின்ளையான் வாரான்! எல்லோரும் எழுந்து நில்லுங்கள்! கைகூப்பி வணங்குங்கள்! கிழக்கு அரச அவைக் கோமாளியாக 'ஜனநாயக" மகுடம் சூட வாரார்! எல்லோரும் அடிபணியுங்கள். இப்படி குண்டர் படைத் தலைவன், பயங்கரவாதத்தை ஒழிக்கும் ஆயுதங்களை, தலைக்கு மேல் சுத்தியபடி கிழக்கு மக்கள் முன் காட்சியளிக்கின்றான்.

இந்த அண்ணன்மார்கள் தமது 'ஜனநாயக"த்தை நிறுவ, எப்படிப்பட்ட வேஷத்தை கட்டியாடினார்கள்? கிழக்கு 'ஜனநாயகம்" பூத்துக் குலுங்க, கிழக்கின் 'விடிவெள்ளிகள்" பாசிசத்தையே, தமது தேர்தல் கூத்தாக அரங்கேற்றினர்.

அங்கிருந்து கசிந்துவரும் செய்திகள், இந்த அண்ணன்களின் ரவுடிசத்தை உலகறிய அம்லமாக்குகின்றது. புலிகளுக்கு சற்றும் குறையாது, தமது சொந்த நடத்தையால் தேர்தலை அமர்க்களமாக்கினர். மக்களின் வாக்குரிமை என்பது மக்களுக்கு கிடையாது. மாறாக இந்த கடையார் கூட்டத்தின் துப்பாக்கி முனையில் அவை மிதிக்கப்பட்டது.

பேரினவாத பாசிட்டுகளும், பதவி வெறிபிடித்த முஸ்லீம் காடையர்களும் ஒன்றுசேர, 'கிழக்கு விடிவெள்ளிகள்" நடத்திய தேர்தல் நாடகம், புலிப் பாசிசத்தை மிஞ்சியது. புலிகள் இவ்வளவு காலமும் தனித்து நடத்தியதை, கூட்டாக எப்படி செய்வது என்பதை 'கிழக்கு விடிவெள்ளிகள்" நடத்திக் காட்டினர். வேடிக்கை என்னவென்றால், அரசுடன் கூடி வடக்கிலும் கிழக்கிலும் இயங்கும் கூலிக் கும்பல் கிழக்கில் தம்முடனில்லை என்பதற்காக, அவர்களுக்கு எதிராக 'விடிவெள்ளிகள்" நடத்திய காடைத்தனம் அந்த பாசிசத்தின் கோரத்தை தெளிவாக எடுத்துக் காட்டியது.

கிழக்கு மக்களை நடைப்பிணமாக்கி விட்டு, அவர்களை மீட்கப்போவதாக கூறும் காடையர் கூட்டம், மக்கள் மேல் சவாரி விட்டனர். தமக்குத் தாமே மாலைகளை அணிவித்துக் கொண்டு, தம்மைத்தாமே மக்களின் பெயரில் 'ஜனநாயகத்தின்" பெயரில் வெல்ல வைத்தனர்.

ரவுடிசத்தை மறைக்க, மாலையும், ரையும், கோட்டும் போட்டு உலகறிய இரட்டை வேஷம் போட்டனர். காடைத்தனத்தையும் பாசிசத்தையும் மூடிமறைக்க 'ஜனநாயகத்தை" வரிக்குவரி உச்சரித்தனர். தமக்கு எதிராக எழும் குற்றச்சாட்டை மறுக்க தமிழ்செல்வனின் பல்லுப் போல், 'ஜனநாயகம்" பேசும் 'ஜனநாயக" வள்ளல்கள்.

கிழக்கு மக்கள் மேலான 'கிழக்கு விடிவெள்ளிகள்" தமது பாசிச எடுபிடி வன்முறையை மூடிமறைக்க, அதை 'ஜனநாயகமாக" விளக்க, பாரிசில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கிழக்கு அரசியல் ஆலோசகர். பாலசிங்கம் தோற்றுப் போகுமளவுக்கு 'ஜனநாயகம்" பற்றிய, பாசிச வழிகாட்டல்கள்.

புலியிலிருந்து பிரிந்தவர்களோ, தாம் வெறும் ஆயுதம் ஏந்திய குண்டர்கள் தான் என்பதை மக்கள் முன் நிறுவினர். குண்டர்களுக்கு பயந்து மக்கள் அடங்கி ஒடுங்கி நிற்பது இயல்பு. முன்பு புலிகள், இன்று பேரினவாத குண்டர்கள். இந்த கிழக்கு குண்டர்கள் பேரினவாதத்தின் அடியாட்களாக போட்ட ஆட்டம் தான், இந்த 'ஜனநாயக"த்தின் பெயரிலான தேர்தல்.

பி.இரயாகரன்
11.05.2008

Sunday, May 11, 2008

நேபாளம்: வீழ்ந்தது மன்னராட்சி! மலர்கிறது மக்களாட்சி!


நேபாள நாட்டில் முன்னேறி வரும் புதிய ஜனநாயகப் புரட்சியின் முதற்கட்டமாக அந்நாட்டின் மன்னராட்சியை வேறோடு பிடுங்கி எறிவதில் இறுதி வெற்றியை நேபாளக் கம்யூனிச (மாவோயிச)க் கட்சி நெருங்கியிருக்கிறது. இது போர்த் தந்திர முக்கியத்துவம் வாய்ந்த செயல்தந்திர வெற்றியைக் குறிக்கிறது. நேபாளப் புரட்சியின் வெற்றி அந்நாடு மட்டிலான முக்கியத்துவம் கொண்டதாக மட்டும் இருக்காது. உலக அளவிலான வரலாற்று முக்கியத்துவம் கொண்டதாக இருக்கும். அதுமட்டுமல்ல; சித்தாந்த ரீதியிலான முக்கியத்துவம் உடையதாகவும் அமையும்.

சோவியத் ஒன்றியம், சீனா உட்பட முன்னாள் சோசலிச நாடுகளில் பாட்டாளிவர்க்க அரசுகள் வீழ்த்தப்பட்டு மீண்டும் முதலாளித்துவம் மீட்கப்பட்டு விட்டன. சோவியத் சமூக ஏகாதிபத்தியம், அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆகிய இரு மேல்நிலை வல்லரசுகளுக்கிடையிலான உலக மேலாதிக்கப் போட்டியில் சோவியத் சமூக ஏகாதிபத்தியம் முறியடிக்கப்பட்டு, உலகம் முழுவதும் அமெரிக்கத் தலைமையிலான ஒற்றைத் துருவ உலக மேலாதிக்கம் நிறுவப்பட்டுள்ளது. ஏகாதிபத்திய மேலாதிக்க உலகமயமாக்கலின் கீழ் பின்தங்கிய மூன்றாம் உலகநாடுகளில் மறுகாலனியாதிக்கம் நிறுவப்பட்டு வருகிறது. ""கம்யூனிசம் தோற்றுப் போய்விட்டது, (முதலாளிய) ஜனநாயகமே சிறந்த அரசியல் அமைப்புமுறை, சுதந்திரமான சந்தைப் பொருளாதாரமே சிறந்த பொருளாதார அமைப்பு முறை என்று நிரூபிக்கப்பட்டு விட்டது; வேறு விதமாகச் சொன்னால் "சித்தாந்தம் முடிவுக்கு வந்துவிட்டது' அதாவது முதலாளித்துவஏகாதிபத்திய சித்தாந்தம் தவிர வேறு எந்த சித்தாந்தமும் இருக்க முடியாதவாறு எல்லாவற்றுக்கும் சமாதி கட்டி விட்டோம்'' என்று இட்லரின் நாஜி, முசோலியின் பாசிசத்தை விடவும் வக்கிரவெறியோடு ஏகாதிபத்திய மேலாதிக்கவாதிகள் எக்காளமிட்டார்கள்.

உலகெங்கிலும் உள்ள போலி கம்யூனிஸ்டுகள் அனைவரும் ஏகாதிபத்திய மேலாதிக்கவாதிகளின் இந்த ""சித்தாந்தம் முடிவுக்கு வந்துவிட்டது'' என்ற பிரகடனத்தைக் கண்டஞ்சி, பயபீதியில் நடுங்கிப் போய், தமது வாலை பின்னங்கால்களுக்கு இடையே மடித்துக் கொள்ளும் நாய்களைப் போல மார்க்சிய லெனினிய சித்தாந்தப் பசப்புகளையெல்லாம் கைவிட்டனர். ஏகாதிபத்திய எதிர்ப்பு, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் போன்ற வாசகங்களைத் தமது கட்சித் திட்டத்திலிருந்து நீக்கி விட்டனர். ஏகாதிபத்திய தொண்டு நிறுவனங்கள் உலக சமூக மன்றம் என்ற பெயரில் ஒன்றுகூடி முன்வைத்த ""மாற்று உலகம் ஒன்றுண்டு'' எனும் மலட்டுத் தனமான முழக்கத்தை அவர்களின் நிழலின் கீழ் நின்று கொண்டு தாமும் அதையே ஒப்பாரிப் பாடலாக ஒலித்தனர்.

இவ்வாறான பாதகமான சூழலில், உலகப் பாட்டாளி வர்க்க இயக்கத்துக்கு எதிரான தாக்குதல் செயல்தந்திரத்தை ஏகாதிபத்திய மேலாதிக்க சக்திகள் தொடுக்கும் சமயத்தில், கடந்த பத்தாண்டுகளாக ""கம்யூனிசமே வெல்லும்!'' என்ற செம்பதாகையை உயர்த்திப் பிடித்து, நேபாளப் பிற்போக்கு ஆளும் கும்பலுக்கு எதிராக மக்கள் யுத்தப் பாதையில் நேபாள கம்யூனிச (மாவோயிச)க் கட்சியினர் வெற்றிகரமாக முன்னேறிக் காட்டினார்கள். இதன் மூலம் காலனிய, அரைக்காலனிய, அரை நிலப்பிரபுத்துவ நாடுகளில் நீண்டகால மக்கள் யுத்தப் பாதை என்ற மாவோ சிந்தனையின் பொருத்தப்பாட்டையும், ஏற்றத்தாழ்வான வளர்ச்சிப் போக்குக் காரணமாக ஏகாதிபத்திய உலகக் கட்டமைப்பு என்ற சங்கிலியின் பலவீனமான கண்ணியில் புரட்சி வெடிக்கும் என்ற லெனினியக் கோட்பாட்டையும் நிரூபித்துக் காட்டினார்கள்.

பிழைப்புவாதம் மற்றும் திரிபுவாதத்தின் பின்னே ஒளிந்து கொண்டு இனவாதம், மொழிவாதம், மனிதநேயம், சமூகநீதி, முன்பின் நவீனத்துவம் என்று பல வண்ண தொண்டு நிறுவன சீர்திருத்தவாதங்கள் புரிந்தவர்கள் எல்லாம் ""இனி மண்ணுக்கேற்ற கோட்பாடுகள் வகுத்துக் கொண்டு செயல்படவேண்டும்; பாட்டாளி வர்க்கப் புரட்சி மற்றும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ஆகிய மார்க்சியலெனினிய மூலவர்கள் முன்வைத்த மரபுவழி கோட்பாடுகள் எல்லாம் காலாவதியாகி விட்டன'' என்று முடங்கிவிட்ட நிலையில், நேபாள மாவோயிஸ்டுகள் உறுதியுடன் நின்றார்கள்; மார்க்சியலெனினிய மாவோ சிந்தனையின் அனைத்தும் தழுவிய செவ்வியல் கோட்பாடுகள் மற்றும் போதனைகளின் இன்றைய புரட்சிக்கான பொருத்தப்பாட்டை நிரூபித்துக் காட்டினார்கள்.

நேபாள அரசியல் நிர்ணயசபைக்கான நடந்து முடிந்த தேர்தலில் நேபாள மாவோயிஸ்டு கட்சி அடைந்துள்ள வெற்றி, அதற்கு முன்பு அதன் சண்டை நிறுத்தம் மற்றும் இடைக்கால அரசில் பங்கேற்பு ஆகியவற்றை மட்டும் மேலோட்டமாகப் பார்க்கும் சில போலி புரட்சியாளர்கள், போலி முற்போக்குகள், போலி ஜனநாயக அரசியல் அறிஞர்கள் யானையைத் தடவிப் பார்த்த குருடர்களைப் போல பிதற்றுகிறார்கள்.

""நேபாள மாவோயிஸ்டுகள் பத்தாண்டுகளாக மக்கள் யுத்தப் பாதையில் ஆயுதப் போராட்டத்தை நடத்தி, பல மாவட்டங்களில் மக்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தபோதும், சண்டை நிறுத்தத்தை அறிவித்து, ஆயுதங்களைப் பூட்டி வைக்கவும் புரட்சிப் படைகளை முகாம்களில் அடைத்து வைக்கவும் ஒப்புக் கொண்டு, தேர்தல்களில் பங்கேற்பது சமரசசரணடைவுப் பாதைக்குப் போவதையே குறிக்கும்'' என்கிறார்கள், இந்திய மாவோயிஸ்டுகள் உட்பட "இடது' சந்தர்ப்பவாதிகள். ""ஆயுதப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி மக்கள் ஜனநாயக அரசமைப்பை நிறுவுவதற்குப் பதிலாக, ஏகாதிபத்திய ஆதரவு முதலாளித்துவக் கட்சியான நேபாளக் காங்கிரசு மற்றும் திரிபுவாதக் கம்யூனிஸ்டுகளுடன் கூட்டணி அமைத்து இடைக்கால அரசிலும் அரசியல் நிர்ணய சபைத் தேர்தல்களிலும் பங்கேற்பது வலது சந்தர்ப்பவாதச் சரிவாகும்'' என்றும் சாடுகிறார்கள்.

நேபாளத்தின் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு பருண்மையான அரசியல் நிலைமைகள், அரசியல் மற்றும் ஆயுதப் போராட்டங்களுக்கு இடையிலான உறவு, புரட்சியில் பாட்டாளி வர்க்கத் தலைமை கடைப்பிடிக்க வேண்டிய போர்த்தந்திரம் மற்றும் செயல்தந்திரக் கோட்பாடுகளுக்கான மார்க்சியலெனினிய வழிகாட்டும் நெறிமுறைகள் ஆகியவை பற்றிய தமது ஒட்டாண்டித்தனத்தைத் தான் மேற்கண்ட விமர்சனத்தின் மூலம் "இடது' சந்தர்ப்பவாதிகள் வெளிப்படுத்துகிறார்கள். புரட்சியின் முன்னேற்றத்தை ஆயுதபலம், படைபலத்தை மட்டும் கொண்டு எடைபோடுவதும், இராணுவப் பாதையில் மட்டும் வழிநடத்துவதும் எல்லாத் தருணங்களிலும் அரசியல் பலத்தையும், அரசியல் போராட்டங்களையும் புறக்கணிப்பதும் மார்க்சியலெனினிய நடைமுறையாக இருக்க முடியாது. அதுவும் எவ்வித அடிப்படையும் காரணமுமின்றி ஆட்சியாளர்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை மற்றும் சண்டை நிறுத்தம் என்று ஒரு முறையல்ல இரண்டுமுறை போனவர்கள் இவ்வாறு வறட்டுவாதம் புரிவது வேடிக்கையாக உள்ளது.

உலக மேலாதிக்கத்தை நிறுவியுள்ள அமெரிக்க ஏகாதிபத்தியம், இந்திய பிராந்திய துணை வல்லரசு மற்றும் இந்திய இந்துத்துவ பாசிஸ்டுகள் உட்பட உலகப் பிற்போக்கு சக்திகள் அனைத்தும் ஒன்றுதிரண்டு தாங்கிப் பிடித்தும்கூட, நேபாள பாசிச மன்னராட்சி நீடித்திருக்க முடியாமல் வேரறுந்து வீழும் தருணம் வந்துவிட்டது; அதை வேரோடு பிடுங்கி எறிவதற்கான அகநிலை, புறநிலைக் கூறுகள் ஒன்றுதிரண்டு விட்டன; நேபாளப் புரட்சியின் மையம் கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்கு மாறிவிட்டது. மன்னராட்சிக்கு எதிரான மக்கள் விடுதலை படையின் கிராமப்புற ஆயுதந்தாங்கிய போராட்டம் என்பதிலிருந்து, நாடு தழுவிய மக்கள் பேரெழுச்சி என்ற அரசியல் போராட்டம் வெடிப்பதற்கான காலம் கணிந்து விட்டது. தக்க தருணத்தில் பொருத்தமான அரசியல் முழக்கத்தை முன்வைத்து, மக்கள் எழுச்சிக்குத் தலைமை தாங்கத் தவறுவதுதான் புரட்சிக்குத் துரோகமிழைக்கும் "வலது' சந்தர்ப்பவாதச் சமரச சரிவாக இருந்திருக்கும். இதையெல்லாம் மார்க்சியலெனினிய விவேகத்துடன் மிகச் சரியாக மதிப்பீடு செய்து, செயல்பட்டது, நேபாள மாவோயிசக் கட்சி.

""பாட்டாளி வர்க்கம்' எதேச்சதிகார ஆட்சியின் எதிர்ப்பை வன்முறையைப் பயன்படுத்தி ஒடுக்கும் பொருட்டும், முதலாளிய ஊசலாட்டத்தைச் செயலிழக்கச் செய்து முடக்கும் பொருட்டும் விவசாய மக்கள்திரளுடன் கூட்டுச் சேர்ந்து ஜனநாயகப் புரட்சியை முழுமையாகவும் இறுதிவரையும் நிறைவேற்ற வேண்டும். முதலாளிய எதிர்ப்பை வன்முறையைப் பயன்படுத்தியும், விவசாயிகள் மற்றும் குட்டி முதலாளிகளின் ஊசலாட்டத்தை செயலிழக்கச் செய்து முடக்கவும் பாட்டாளி வர்க்கம் மக்கள்திரளின் அரைப்பாட்டாளிப் பிரிவினருடன் கூட்டுச் சேர்ந்து சோசலிசப் பரட்சியை நிறைவேற்ற வேண்டும்'' என்று 1905ஆம் ஆண்டே லெனின் போதித்தார். இந்த மார்க்சியலெனினிய அரசியல் போர்த்தந்திர அணுகுமுறையும் கோட்பாடும்தான் நேபாளத்தில் முன்னேறிவரும் புதிய ஜனநாயகப் புரட்சியில் நேபாள மாவோயிச கட்சியால் ஆக்கப்பூர்வமான முறையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

நேபாள முதலாளிய வர்க்கம், நேபாள முடியாட்சியை வேரோடு பிடுங்கி எறியும் ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்பதில் எப்போதுமே உறுதி காட்டியதில்லை. ஓருடல் இருதலையென்று தன்னோடு ஒட்டியிருக்க வேண்டியதுதான் என்கிற முறையில்தான் முடியாட்சி என்று கருதியே வந்திருக்கிறது. முடியாட்சிக்கு முடிவுகட்டி, ஒரு அரசியல் சட்ட நிர்ணயசபை மூலம் மக்களின் ஜனநாயக குடியாட்சியை நிறுவுவதற்கான மக்கள் எழுச்சி இயக்கம் வெடிக்கும் போதெல்லாம், நேபாள காங்கிரசு தலைமையிலான நேபாள முதலாளிய வர்க்கம் துரோகமிழைத்து முடியாட்சியுடன் சமரசம் செய்து கொண்டு அரசியல் சட்ட அமைப்பின் படியான மன்னராட்சியை நிறுவுவதற்குத்தான் எத்தணித்தது. முதலாளிய ஜனநாயகத்துக்கான கோரிக்கையைக்கூட கைவிட்டு, மன்னராலும் பழைய பிரபுத்துவத்தாலும் திணிக்கப்பட்ட அரசியல் கட்சிகளற்ற பஞ்சாயத்து ஆட்சிமுறை போன்ற அதிகாரமில்லாத அரசியல் சட்ட அமைப்பை ஏற்றுக் கொண்டது. பின்னர், மன்னராலேயே பெயரளவுக்கான அந்த ஆட்சி அமைப்பும் தூக்கியெறிப்பட்டு எதேச்சதிகார ஆட்சியே பல ஆண்டுகள் நீடித்தது. 1990களில் நடந்த மக்கள் எழுச்சி மூலம் பலகட்சி நாடாளுமன்றம் நிறுவப்பட்டு, பின்னர் அதுவும் கலைக்கப்பட்டது. இறுதியாக, 2000ஆம் ஆண்டு அரண்மனை மன்னர் குடும்பப் படுகொலைகளைகளுக்குப் பின், ஞானேந்திராவின் பாசிச மன்னராட்சி நிறுவப்பட்டது.

மன்னராட்சிக்கு எதிராக நீண்டகால மக்கள் யுத்தத்தை நடத்துவது, மாபெரும் மக்கள் எழுச்சியைக் கட்டியமைப்பது என்ற இருவேறு அணுகுமுறைகளைக் கொண்டிருந்த புரட்சிகர மார்க்சியலெனினிய இயக்கம், நேபாள மாவோயிசக் கட்சி மற்றும் நேபாளக் கம்யூனிச கட்சி (ஐக்கிய மையம்) ஆகிய இரண்டு பிரிவுகளாக இயங்கி வந்தது. மன்னராட்சிக்கு எதிராக 2006 ஏப்ரலில் மக்கள் எழுச்சி வெடித்தபோது இவையிரண்டும் கூட்டுச் சேர்ந்து அரசியல் நிர்ணய சபை மற்றும் மக்கள் ஜனநாயக குடியரசு முழக்கத்தை முன்வைத்து தலைமையேற்றன. இவ்விரு பிரிவினரும் முறைப்படி ஐக்கியப்பட்டு 2008 அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலில் வெற்றிப் பெற்றுள்ளனர். எல்லைக்கப்பால் இருந்து சமூக விரோதபாசிசக் கூலிப் படையை ஏவி, இனவெறியைத் தூண்டி நேபாளப் புரட்சியை சீர்குலைக்கும் மன்னராட்சியை உயிர்ப்பிக்கும் ஏகாதிபத்திய, இந்திய விரிவாக்க இந்துத்துவ சக்திகளின் சதிகளை முறியடித்தனர்.

முதலாளித்துவ மன்னராட்சி என்பதிலிருந்து முதலாளித்துவ ஜனநாயக ஆட்சியை ஏற்கும்படி நேபாள காங்கிரசு தலைமையிலான நேபாள முதலாளிகள் நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். இதுவரை நேபாள வரலாறு காணாதவாறு அந்நாட்டு உழைக்கும் மக்கள், தேசிய இனச் சிறுபான்மையினர், பழங்குடியின மக்கள் அனைவரும் வாக்குரிமை பெறுமாறு அரசியல் நிர்ணயசபை மற்றும் மக்கள் ஜனநாயகக் குடியரசு முழக்கங்களை முன்வைத்து மக்கள்திரள் இயக்கங்களை கட்டியமைத்ததோடு, நேபாளப் புரட்சியில் ஊசலாட்ட சமரச சரணடைவு சக்திகளை தனிமைப்படுத்தி முடக்குவதிலும், அரசியல் நிர்ணய சபையில் மிகப் பெரிய அளவில் நிலைநாட்டிக் கொள்வதிலும், நோபள மாவோயிஸ்ட் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

ஆனால், அதேசமயம் உள்ளேயும் வெளியேயும் இருந்துவரும் மேலும் பல சவால்களை எதிர்கொண்டு முறியடித்து நேபாள புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுக்க வேண்டியுள்ளது. இந்தியா, சீனா ஆகிய இரு துணை வல்லரசு நாடுகளுக்கிடையே பூகோள ரீதியில் சிக்கியுள்ள சின்னஞ்சிறு நாடு நேபாளம். உலக நாடுகளை உருட்டி மிரட்டியும் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் தேவைப்படும்போதெல்லாம் பல நாடுகள் மீது படையெடுத்து, ஆக்கிரமித்து உலக மேலாதிக்கம் செலுத்தும் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஏற்கெனவே தனது பயங்கரவாதப் பட்டியலில் முத்திரைக் குத்தி சேர்க்கப்பட்டுள்ள நேபாள மாவோயிஸ்டுகளின் பாட்டாளி வர்க்கத் தலைமையிலான புதிய ஜனநாயக அரசு நேபாளத்தில் அமைவதை சகித்துக் கொள்ளாது. அது, பின்தங்கிய பொருளாதார அமைப்பைக் கொண்டுள்ள நேபாளத்திற்கு எதிராக ஏகாதிபத்திய உலகமயமாக்கம் என்ற பொருளாதாரத் தாக்குதலை தொடுப்பதற்கும், அவசியமானால் ஆக்கிரமிப்புப் படைகளை ஏவி தாக்குதல் தொடுப்பதற்கும் எப்போதும் எத்தணித்துக் கொண்டேயிருக்கும்.

நேபாளத்திலும், வீழ்த்தப்படும் பிற்போக்கு மற்றும் போலி கம்யூனிச சக்திகளும் பன்மடங்கு பலத்துடன் திருப்பித் தாக்கி, நேபாளப் புரட்சியை பின்னிழுப்பதற்குத் தன்னாலான முயற்சிகளையெல்லாம் செய்யும்.
இத்தகைய சவால்களை முறியடிப்பதற்கு தகுந்த செயலுத்திகளை வகுத்து புரட்சியை வழிநடத்துவதற்கான மிகப் பெரிய பொறுப்பில் நேபாள மாவோயிசக் கட்சி உள்ளது. அதன் செயலுத்திகளை கொச்சைப்படுத்தி, உலக நாடுகளிலுள்ள புரட்சிகர இயக்கங்களின் இடதுவலது சந்தர்ப்பவாதிகள்கூட சாடக் கூடும். இதற்கு மாறாக, இன்றைய உலகப் புரட்சியின் ஒளிவிளக்காக திகழும் நேபாளப் புரட்சியில் நேபாள மாவோயிசக் கட்சி மேற்கொள்ளும் புதிய முயற்சிகளை மார்க்சியலெனினிய ஒளியில் பரிசீலித்து, அதன் முன்னெடுப்புகளை ஆக்கப்பூர்வமான முறையில் ஆதரிக்க வேண்டியது உலகப் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் கடமையாகும்.

இலங்கை - இந்திய புலியெதிர்ப்பு கைக்கூலிகள் கூட்டிய 'ஜனநாயக" மாநாடு


பாரிசில் 04.05.2008 'ஜனநாயகத்தின்" பெயரில் தேர்ந்தெடுத்த சில சமூகவிரோதிகள் கூடினர். இந்த கூட்டத்துக்கான அழைப்பு முதல் அவர்கள் பேசிக்கொண்ட விடையங்கள், இந்த 'ஜனநாயகத்தை" தெளிவாக அம்பலப்படுத்துகின்றது. யாரெல்லாம் இலங்கை - இந்திய அரசை 'ஜனநாயகத்தின்" பெயரில் நக்குகின்றனரோ, யாரெல்லாம் 'ஜனநாயகத்தின்" பெயரில் ஏகாதிபத்தியத்துக்கு வாலை ஆட்டுகின்றனரோ, அவர்கள் தான் 'ஜனநாயகத்தின்" பெயரில் கூடினர். இப்படி அப்பட்டமாக இலங்கை - இந்திய கைக்கூலிகள் எல்லாம் ஒன்றாக கூடினர்.

இது முந்தைய புலியெதிர்ப்பு கூட்டத்திலும் இருந்து மாறுபட்டது. புலியெதிர்ப்பு பேசும், இலங்கை - இந்திய கைக்கூலிகளை மட்டும் அடிப்படையாக கொண்டு, இந்த 'ஜனநாயக" கூலிகள் கூட்டப்பட்டனர்.

இவர்கள் அங்கு கூடிய நோக்கம் மிகத் தெளிவானது. புலியை ஒழிப்பதாக கூறிக் கொண்டு, பேரினவாத அரசு தமிழ் மக்கள் மேல் நடத்தும் பாசிச வெறியாட்டத்தை 'ஜனநாயகமாக" காட்டுவது தான். இதை தாம் அம்பலப்படாது எப்படி நியாயப்படுத்துவது என்பதையே, இவர்கள் எல்லாம் கூடி ஆராய்ந்தார்கள். அதையே அவர்கள் தமது 'ஜனநாயகத்தின்' பெயரில் வெட்கமானமின்றி பறைசாற்றினர். இவர்களின் 'ஜனநாயகம்" இதைத் தாண்டி, மக்களுக்காக ஒப்புக்கு கூட ஒப்பாரி வைக்கவில்லை.

இந்த புலியெதிர்ப்பு 'ஜனநாயக" கைக்கூலிகளின் 'ஜனநாயக" கூத்துக்கு சிலரை ஏமாற்றி அழைத்தனர். தாம் யார்?, எந்த நோக்கத்துக்காக கூடுகின்றோம்? என்று தமது சொந்த கைக்கூலி அரசியல் வெளிப்படா வண்ணம், சிலரை அழைத்தனர். இப்படி இடம் வலம் தெரியாது அங்குமிங்கும் திரிகின்றவர்களையும், முகம் பார்த்து சிரிக்கின்ற அப்பாவிகளையும், புலியுடன் ஏதோ ஒரு தனிப்பட்ட காரணத்தினால் முரண்பட்டவர்களையும், அரசியல் விலாங்குகளையும் ஏமாற்றி, தமது மக்கள் விரோத கூட்டத்துக்கு அழைத்தனர்.

சமூகத்தில் மாற்றுக் கருத்துள்ளவர்களை, மக்கள் அரசியலை வைக்கின்றவர்களை, இலங்கை இந்திய அரசை எதிர்க்கின்றவர்களை, மக்களை நேசிப்பவர்களை, இவர்கள் தமது புலியெதிர்ப்பு அரசு ஆதரவு 'ஜனநாயக" கைக்கூலி கூத்துக்கு அழைக்கவில்லை. இப்படி கூட்டத்தின் நோக்கம் தெளிவாகவே மக்கள் விரோத அடிவருடிகளால் கூட்டப்பட்டது.

இவர்கள் தமது இந்த 'ஜனநாயகத்தின்" பெயரில், எந்த வெளி ஆட்சேபனையுமின்றி மிகப் பொருத்தமாக கூறுவதைப் பாருங்கள். 'இரு தசாப்தங்களிற்கு பின் அரசியல்கட்சிகள் இணைந்து பிரான்சில் இவ்வாறான கருத்தரங்கை நிகழ்த்துவது வரலாற்று நிகழ்வு என்றும், இந்த நிலமை உருவாகுவதற்கு அர்ப்பணிப்புடன் உழைத்த தோழர்கள் நண்பர்கள் குறிப்பாக சமகாலத்தில் எம்மோடு அரசியல் இலக்கிய பணியாற்றி மறைந்த தோழர்கள் சபாலிங்கம், உமாகாந்தன், கலைச்செல்வன், புஸ்பராஜா பராமாஸ்ரர் போன்றோரை"க் குறிப்பிடுகின்றனர். புலம்பெயர் அரசியல் களத்தில் பச்சோந்திகள் கூடியிருக்க, 'சபாலிங்கம், உமாகாந்தன், கலைச்செல்வன், புஸ்பராஜா பராமாஸ்ரர்" போன்றோரை இலங்கை இந்திய அரசியல் ஏஜண்டுகளாக, இலங்கை-இந்திய கைக் கூலிகள் கூறுகின்றனர். இது எத்தரப்பாலும் மறுதலிக்கப்படவில்லை.

'சபாலிங்கம், உமாகாந்தன், கலைச்செல்வன், புஸ்பராஜா பராமாஸ்ரர்" அரசியலுக்கு உரிமை கோருபவர்கள் எல்லாம், சந்தர்ப்பவாத பச்சோந்திகள் என்பதையே, இந்நிகழ்வும் மறுபடியும் நிறுவுகின்றது.

இலங்கை - இந்திய கைக்கூலிகள் தமிழ் மக்களின் பெயரில் ஜனநாயகம், என்று எத்தனை வித்தைகள் காட்டினாலும், இவர்களால் மக்களை ஏமாற்றாமல் ஒரு அடியைத்தன்னும் வைக்க முடியாது. இது இந்த சந்திப்புகளிலேயே தொடங்குகின்றது. தெரிவு செய்யப்பட்ட அழைப்பும், தெரிவின் எல்லையும், மக்களின் ஜனநாயகத்துக்கே விரோதமானது. 'சபாலிங்கம், உமாகாந்தன், கலைச்செல்வன், புஸ்பராஜா, பராமாஸ்ரர்" நம்பிய, அவர்களின் 'ஜனநாயக" நடைமுறைக்கும் மாறானது. ஆனால் அவர்களின் பெயரிலும், இலங்கை-இந்திய புலியெதிர்ப்புக் கூலிக்கும்பல் நக்குகின்றது.

இதன் பின்னணியில் இருந்த பலர் தேர்ந்த சமூக விரோதிகள். முன்னாள் புலியல்லாத இயக்கத்தைச் சேர்ந்த கொலைகாரகள். அதை இன்றும் ஆதரித்து நின்றவர்கள். இன்றும் அதை செய்பவர்களை ஆதரிப்பவர்கள். இன்றும் அன்றைய-இன்றைய கொலைகார இயக்கத்தை ஆதரிப்பவர்கள், தமது கடந்த கால கொலைக்காக மனம் வருந்தாத வக்கிரமான உணர்வு கொண்டவர்கள், அதை அரசியல் ரீதியாக சரியென்று கருதி இன்று அதை அரசியல் ரீதியாக ஆதரிப்பவர்கள். இப்படி மொத்தத்தில் அந்த இயக்கங்களின் மக்கள் விரோத அரசியலை ஆதாரிக்கின்ற சமூக விரோதிகள்.

இவர்களின் அரசியல் என்பது, இலங்கை - இந்திய அரசின் ஊடாக நக்கிபிழைப்பது தான். மக்களை புலிகளிடமிருந்து மீட்பதற்கான பாதை, இது மட்டும் தான் என்கின்றனர். தம்மைப் போல், மக்களும் இலங்கை - இந்திய அரசின் கூலிக் கும்பலாக மாற வேண்டும் என்கின்றனர். இவர்கள் கோரும் வக்கிரமான புலியெதிர்ப்பு 'ஜனநாயகம்" இதுதான். இதைத் தாண்டி எதுவுமல்ல.

பி.இரயாகரன்
10.05.2008