தமிழ் அரங்கம்

Friday, July 20, 2007

முன்னேறுகிறது இந்தியா

30 ரூபாய் கூலிக்காக
நாளொன்றுக்கு 150 கீ.மீ ரயில் பயணம்: முன்னேறுகிறது இந்தியா




ரேவண்டாபாய் காம்ளே தனது ஆறு வயது மகனோடு பேசிப் பல மாதங்களாகி விட்டது. ஒரே வீட்டில்தான் இருக்கிறார்கள், ஆனால் இப்படியொரு நிலைமை. பூரிபாய் நாக்புரேவுக்கும் அப்படித்தான் சில சமயம் பெரிய மகனோடு பேச நேரம் கிடைக்கும், அதுவும் அவன் விழித்துக் கொண்டிருந்தால்.

மகாராஷ்டிரா மாநிலம், கோண்டியா மாவட்டம், திரோடா என்ற சிற்ரில் ரேவண்டாபாய், பூரிபாய் போலவேதான் நூற்றுக்கணக்கான பெண்களின் அன்றாட வாழ்க்கை இருக்கிறது. ஒவ்வொரு நாளும் அவர்கள் நான்கே மணி நேரம்தான் வீட்டில் ஓய்வெடுக்க முடியும் (அது ஓய்வா உறக்கமா?) இப்படி வயிற்றுப்பாடுக்காக நாள்தோறும் போக, வர சுமார் 150 கி.மீ. பயணப்பட்டு அல்லல்படும் அவர்களுக்குக் கிடைக்கும் சொற்பக்கூலி வெறும் முப்பது ரூபாய்.

விடியற்காலை 6 மணி நாங்கள் அவர்களோடு சேர்ந்து ரயிலுக்குப் புறப்பட்ட நேரம் அது. அவர்கள் அதற்கு இரண்டு மணி நேரம் முன்பு எழுந்திருந்தால்தான் வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டு கிளம்ப முடியும்.



""சாப்பாடு செய்து முடிச்சு, துவைத்து, பெருக்கி, சுத்தம் செய்து, கழுவி எல்லா வேலையும் முடித்து விட்டேன்'' பூரிபாயின் குரலில் ஒரு நிறைவு ""இப்ப நாம எவ்வளவு வேணும்னாலும் பேசலாம்'', என்றார். அந்த நேரத்தில் அவர் வீட்டில் எல்லோரும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். ""பாவம், பொழுதுக்கும் வேல செஞ்சி சோர்ந்து போயிடுதுங்க'' என்றார் பூரிபாய். ""நீங்க சோர்ந்து போவலியா?'' என்ற என் கேள்விக்கு அவர் சொன்ன பதில்: ""இல்லாம? வேறென்ன செய்ய? வேற வழியில்லே.''



ரயில் நிலையம் சென்றபோது பூரிபாய் போலவே வேறு வழியில்லாத ஏராளமான பெண்கள் ரயிலுக்குக் காத்துக் கொண்டிருந்தார்கள். அது எனக்கு விசித்திரமாகத் தோன்றியது. அவர்களில் யாருமே வேலைதேடி கிராமத்திலிருந்து நகரங்களுக்கு ஓடவில்லை; மாறாக, சிறு நகரத்திலிருந்து கிராமம் நோக்கி வேலை தேடிப் போகும் அவர்கள் நாடோடிக் கூலிகள்.



ஒவ்வொரு நாளும் கிராமத்தில் விவசாயக் கூலி வேலை செய்ய வேண்டும். வார விடுமுறை என்ற பேச்சே இல்லை. திரோடாவில் எந்த வேலைகளும் கிடையாது. கோண்டியாவில் உள்ள "கிசான்சபா'வின் (விவசாயச் சங்கம்) செயலர் மகேந்திர வால்டே சொன்னார்: ""இந்த வட்டாரத்தில் பீடித் தொழில் அழிஞ்சபிறகு இங்க ஒரு வேலையும் இல்லே.''



அக்கம் பக்கத்திலிருந்து 5,6 கி.மீ. நடந்துதான் தினமும் அவர்கள் ரயில் நிலையத்துக்கு வரவேண்டும். ""விடியக் காலமே 4 மணிக்கு எழுந்திருச்சி, வேல எல்லாம் முடிச்சு ஸ்டேசனுக்கு நடந்தமுன்னா போய்ச் சேர 7 மணி ஆயிடும்.'' அடிச்சுப் பிடிச்சு வண்டிக்குள் ஏறினா, கூட்டத்தோட கூட்டமா சால்வா கிராமத்துக்குப் பயணம் போக 2 மணி நேரம் பிடிக்கும்.



அந்தப் பெண்களின் கண்களில் சோர்வு, முகங்களில் கனத்த களைப்பு, பசி, அரைத்தூக்கம். அமர்ந்து ஓய்வாகப் பயணம் செய்யலாம் என்றால் இடமும் கிடைக்காது. அப்படி அப்படியே தரையில் உட்கார்ந்தவாறும், ரயில் பெட்டிகளின் உள் சுவரில் சாய்ந்தவாறும் அந்த இரண்டு மணி நேரத்துக்குள் அவரவர் வேலை செய்யும் இடம் வருவதற்குள் முடிந்தவரை குட்டித் தூக்கம் போட்டுக் கொண்டே வந்தார்கள்.



""திரும்ப வீடு போய்ச் சேர ராவுலே 11 மணி ஆயிரும். தலையச் சாச்சுப் படுக்கறதுக்குள்ளாற நடுநிசி ஆயிரும். மறுபடி அடுத்தநாள் காலையில 4 மணிக்கு முழிக்கணும்'' என்று விவரித்த ரேவண்டா பாய் ""என்னோட சின்னப் பையன் முழிச்சிருந்து பாத்துப்பேசி ரொம்ப நாளாயிடுச்சி'' என்று சொல்லிச் சிரித்தார். சிரிப்பு வருத்தத்தில் நனைந்திருந்தது — ""அப்படி என்னைக்காவது ஒரு நா, பசங்க அவுங்கவுங்க பெத்தவங்களப் பாத்தாக்க அவுங்கதான் அம்மாவான்னு தோணிரும்'' என்றார் அவர்.



நிறைய பிள்ளைகள் பள்ளிக்கூடம் போகாம பாதியிலேயே நின்று போகும் படிக்க வைக்க வசதி கிடையாது; அப்படியும் போகிற பிள்ளைகள் நன்றாகப் படிக்காது. ""வீட்டுல இருந்து கவனிக்க, படிச்சியான்னு கேக்க, கொள்ள ஆளு கிடையாது'' என்றார் பூரிபாய். சில பிள்ளைகள் கிடைக்கிற வேலையச் செய்யப் போவதும் உண்டு.



திரோடா பள்ளி ஆசிரியர் லதா பாபங்கர் சொல்வதுபோல, ""அவங்க நல்லா படிக்க மாட்டாங்க. அதுக்கு அவுங்கள குத்தம் சொல்ல முடியாது.'' மகாராஷ்டிர அரசாங்கத்தைத்தான் குறை சொல்ல வேணடும்; இந்தப் பிள்ளைகள் சரியாகப் படிக்கவில்லை என்றால், பள்ளிக்கூடம் சரியாகச் செயல்படவில்லை என்று காட்டி அரசாங்கமே உதவிகளை நிறுத்தி விடுகிறது; மாணவர்களுக்குத் தங்களால் முடிந்த உதவிகளை ஆசிரியர்கள் செய்தாலும், தேர்வுகளில் தேர்வு விகிதம் சரியில்லை என்று அந்த ஆசிரியர்களையே அரசாங்கம் தண்டிக்கிறது. இதனாலும் கூட மாணவர்கள் பள்ளிக்கூடம் போவது மெள்ள மெள்ளக் குறைந்து நின்றும் போகிறது.



ரயில் ஓட்டத்தோடு குலுங்கும் தரையில் உட்கார்ந்திருந்த சகுந்தலா பாய் அகோஷே கடந்த 15 வருடமாக இப்படித்தான் வேலைக்குப் போய் வருவதாகச் சொன்னார். பண்டிகைகள் ஏதாவது வந்தாலோ, மழை வந்தாலோதான் இடையில் அவர்களுக்கு ஓய்வு கிடைக்கும்.



""ரொம்ப அபூர்வமாக ஒருநாளைக்கு 50 ரூபாய் கிடைக்கும். மத்தப்படி எல்லா நாளுலயும் இருபத்தஞ்சுலேர்ந்து முப்பது ரூபாதான் கூலி'' என்றார் சகுந்தலா பாய். வெளி வேலையை விட்டால் உள்ளூரிலேயே செய்வதற்கு எந்த ஒரு வேலையும் இல்லை.



சிறு நகரங்களிலிருந்து இப்போதெல்லாம் பணம் பெரு நகரங்களுக்கு நகர்ந்து விட்டது. இங்கிருந்த மிச்ச மீதி சிறு தொழில் நிறுவனங்களும் முடங்கிப் போய் மூடப்பட்டு விட்டன. சிறு நகரங்கள் கண் எதிரே அழிகின்றன. அனேகமாக, பயணம் செய்து கொண்டிருக்கும் அத்தனைப் பெண்களும் முன்பு பீடி சுற்றிக் கொண்டிருந்தவர்கள். ""பீடித் தொழில் நசிஞ்சவுடனே எல்லாமே அத்துப் போச்சி'' என்றார் பூரிபாய்.



""பீடித் தொழிலே சிறு தொழில்தான். எங்கே மலிவான உழைப்பு கிடைக்கிறதோ அந்த இடத்துக்கு பீடித் தொழில் நகர்ந்துவிடும்'' என்கிறார் கே.நாகராஜ் என்கிற "மிட்ஸ்' (வளர்ச்சி பற்றிய ஆய்வு நிறுவனம், சென்னை) நிறுவன ஆய்வாளர். அவரது ஆய்வின்படி, ""பீடித்தொழில் வெகுவேகமாக இடம் மாறிவிடும். இதனால் கூலிகள் படுகிற பாடு சொல்லிமாளாது. கடந்த 15 வருடங்களில் நிலைமை படுமோசமாகி விட்டது.''



கிசான் சபாவைச் சேர்ந்த பிரதீப் கூற்றுப்படி, ""கோண்டியா பகுதியின் பீடித்தொழில் உத்தரப்பிரதேசத்துக்கும் சட்டீஸ்கருக்கும் இடம் பெயர்ந்து விட்டது.''



ஒரு பெண் ரயிலில் தினமும் நடக்கிற ஒரு வேடிக்கையான அவலத்தை விவரித்தார். அவர்கள் யாருமே பயணச்சீட்டு வாங்குவதில்லை. சீட்டு வாங்குவதானால் வாங்கும் கூலி இதற்கே காணாது. அதனால், அவர்களாகவே ஒரு "சிம்பிள் வழி' கண்டுபிடித்தார்கள்.



டிக்கட் பரிசோதகர் வந்தால் ஆளுக்கு 5 ரூபா லஞ்சம் கொடுத்து விடுவார்கள். ரயில் பயணச்சீட்டு இப்படியும் தனியார்மயமாகி விட்டதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அந்த 5 ரூபா கூட அவர்களின் உழைப்பை, கூலியை வைத்து ஒப்பிட்டால் பெரிய தொகைதான்; ஆனால் பரிசோதகர்கள் சும்மா விட்டுவிடுவதில்லை, மிரட்டிப் பறித்து விடுவார்கள்.



""என்னோட பெரிய பையன் சில சமயம் சைக்கிளில் கொண்டு போய் ரயில்வே ஸ்டேசனுக்கு விடுவான். அன்றைக்கெல்லாம் அங்கேயே இருந்து கொண்டு ஏதோ கொஞ்சம் கூலிக்கு வேல கிடைச்சாலும் தேடிப் பிடிப்பான். என்னோட பொண்ணு வீட்டுல சமைக்கும். அடுத்தவன் அண்ணனுக்குச் சோறு கொண்டு போய்க் கொடுப்பான்'' என்று தன் குடும்பத்தின் பாடுகளைச் சொன்னார் பூரிபாய்.



இதையே வேறு வார்த்தைகளில் சொன்னார் கிசான்சபா செயலர் வால்டே: ""ஒருத்தர் கூலிக்கு மூணு பேர் உழைக்கிறாங்க பாருங்க.'' பூரிபாயின் கணவர் ஏதாவது வேலை கிடைத்துப் போனால், அதையும் சேர்த்து, ஒரு நாளைக்கு அந்தக் குடும்பத்திற்கு 100 ரூபாய் கிடைப்பதே பெரிசு. சில நாட்களில் பெரியவனுக்கும் சரி, தந்தைக்கும் சரி இரண்டு பேருக்கும் வேலை கிடைக்காமல் போய் விடும். ரேசன் கார்டு கூட இல்லாத அந்தக் குடும்பம் அப்படிப்பட்ட நாட்களில் தவித்துப் போகும்.



பயணத்தில் வழியேற ரயில் நிலையங்களில் கான்டிராக்டர்கள் மலிவான கூலிக்கு உழைப்பாளிகளைப் பிடிக்க, கழுகுபோலக் காத்திருந்தார்கள்.



···

பூரிபாய், ரேவண்டா பாயோடு பயணம் செய்த நாங்கள் சால்வா நிலையத்துக்குப் போய்ச் சேர காலை 9 மணி ஆகிவிட்டது. அங்கிருந்து வேலை நடந்த கிராமம் ஒரு கி.மீ. தொலைவு; பிறகு வயல்களை நோக்கிப் போக கூடுதலாக ஒரு 3 கி.மீ. அந்த 3 கி.மீ. தொலைவும் தலையில் தண்ணீர்ப் பானையைச் சுமந்து கொண்டு பூரிபாய் போட்ட நடையோடு எங்களால் போட்டி போட முடியவில்லை.



அற்பக்கூலிக்கு அவர்கள் வேலை செய்த நிலத்தின் சொந்தக்காரர் பிரபாகர் வஞ்சாரேவுக்கும் போதாத காலம்தான். விவசாய நெருக்கடி அவரையும் பதம் பார்த்துவிட்டது. அவருக்குச் சொந்தமாக 3 ஏக்கர் நிலம் இருந்தது; தவிர அவர் 10 ஏக்கரா குத்தகைக்கு எடுத்திருந்தார். ""கட்டுப்படியாகாத விற்பனை விலை எங்களையும் வயிற்றில் அடிக்கிறது'' என்றார் பிரபாகர். ""கிராமப்புற வறுமையைச் சமாளிக்க முடியாத பாரம்பரியக் குடிகளும் எங்கெங்கோ இடம் பெயர்ந்து விட்டதால்தான் திரோடாவிலிருந்து பொம்பிளை ஆட்களைக் கூலிக்கு வைக்கிறோம்'' என்றார் அவர்.



இந்தக் கிராமம் உள்ள இடம் கிழக்கு விதர்பா தற்கொலைகள் பெருகி அழிந்து கொண்டிருக்கும் பிரச்சினைக்குரிய பருத்தி விளையும் பகுதியிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறது இப்பகுதி. வஞ்சாரே நெல் பயிரிடுகிறார். மிளகாய் போல வேறு சில பயிர்களும் போடுகிறார். தற்சமயம் அதற்குத்தான் ஆட்கள் வந்திருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும்வேலை முடிவதற்குள் பொழுது சாய்ந்துவிடும். பிறகு ஆட்கள் ரயிலடியை நோக்கி நடப்பார்கள் அதற்கு ஒரு மணி நேரம் பிடிக்கும்.



அதற்குப் பிறகும் ஊர் திரும்பும் ரயில் வருவதற்காக ஒன்றரை மணி நேரம் காத்திருக்க வேண்டும். இரவு 8 மணிக்குத்தான் ரயில். திரோடா போய்ச்சேர 10 மணியாகும், அதற்குள் உறவுகள் உறங்கிப் போகும். விடியலில் வேலைக்கு அவர்கள் கிளம்பும் போதும் குடும்பம் உறங்கிக் கொண்டுதான் இருக்கும். ""இதுல எங்களுக்கு என்ன குடும்பம், என்ன வாழ்க்க, சொல்லுங்க'' என்று கேட்டார் ரேவண்டா பாய்.



காலையில் வீட்டிலிருந்து கிளம்பி, இரவு திரும்பி வந்து சேருவதற்குள்ளாக அவர்கள் சுமார் 170 கி.மீ. தூரம் பயணம் முடிக்கிறார்கள். ஒவ்வொரு நாளும், வாரம் முழுக்க, ஒரு 30 ரூபாய் கூலிக்காக.



""11 மணிக்கு வீடு திரும்புவோம். சாப்புடுவோம், தூங்குவோம்'' பூரிபாய் விவரித்தார். இதோ, இன்னமும் நான்கே மணிநேரம்தான் மறுபடி அவர்கள் எழுந்திருக்க வேண்டும். மறுபடி ஓடத் தொடங்கி விடவேண்டும்.



கட்டுரையாளர்: பி. சாய்நாத்.

மூலம்: தி இந்து, 24.1.2007.

மொழியாக்கம்: பஷீர்.

"புலியை அழிக்க பிசாசுடன் கூடியுள்ளோம்" புலியெதிர்ப்பு தத்துவஞானியின் பிரகடனம்.

"புலியை அழிக்க பிசாசுடன் கூடியுள்ளோம்" புலியெதிர்ப்பு தத்துவஞானியின் பிரகடனம்.



பி.இரயாகரன்
20.07.2007



க்களின் முதுகில் குத்தி உருவாகும் வரலாற்று துரோகிகள், பிசாசுடன் (ஏகாதிபத்தியத்துடன்) சேர்ந்து மக்களுக்கு ஜனநாயகத்தை பெற்றுத்தரப் போகின்றார்களாம். இந்த கேடுகெட்ட போக்கிரித்தனமான அரசியல் பிரகடனத்தை, நம்புங்கள். புலிகளின் பாசிசத்தில் இருந்து மக்களை மீட்க, புலியெதிர்ப்பு கும்பல் வைக்கும் ஒரேயொரு தீர்வு இதுதான். பிசாசுகளுக்கு உதவும் கூலிப்பட்டாளத்தை உருவாக்கும் வேலைத்திட்டம் தான், புலியெதிர்ப்புக் கும்பலின் அரசியல் நடவடிக்கைகள். இப்படி இந்தப் பிசாசுகள் பெற்றுத் தரும் ஜனநாயகம்? மக்களுக்கானதா? பிசாசுக்கானதா? அறிவு நாணயம் நேர்மை எதுவும் எஞ்சி உங்களிடம் இருந்தால், சொந்தமாக ஒரு மக்கள் அரசியல் உங்களிடம் இருந்தால், இந்த அரசியல் துரோகத்தனத்தை குறைந்தபட்சம் தட்டிக் கேட்பீர்கள். இல்லாது கூடி புலியெதிர்ப்பு கும்பலாக கும்மாளம் அடிக்கும் அனைவரும், இந்த நாற்றம் பிடித்த அரசியல் சாக்கடையில் புரளும் எருமை மாடுகள்தான்.



புலியெதிர்ப்புக் கும்பலின் மதியுரைஞர் சிவலிங்கம், பாரிஸில் நடைபெற்ற கலைச்செல்வனின் இரண்டாம் ஆண்டு நினைவு தினக்கூட்டத்தில் தான், பிசாசுடன் சேர்ந்து புலியை அழிக்கும் தமது 'ஜனநாயகப்" பிரகடனத்தைச் செய்தார். இப்படி மக்களின் எதிரிகள் புலிகளுக்குள் மட்டுமல்ல, புலியெதிர்ப்புக்குள்ளும் தான் உள்ளனர் என்பதையே, இது மறுபடியும் தௌளத்தெளிவாக அம்பலமாக்குகின்றது.



புலிகளுக்கு ஒரு மதியுரைஞர் பாலசிங்கம் எப்படியோ அப்படி புலியெதிர்ப்பு கும்பலுக்கு ஒரு மதியுரைஞர் சிவலிங்கம். இவர்கள் எல்லாம் மக்களின் தாலியை அறுத்து, அதில் அரசியல் செய்பவர்கள். இந்த கடைந்தெடுத்த ஈனத்தனத்தைச் செய்யவே, பிசாசுடன் கூடி நிற்கும் அரசியல் அசிங்கத்தை, ஒரு கொள்கைப் பிரகடனமாக பாரிஸில் எமக்கு எதிராக முன்வைத்ததன் மூலம், தமது சந்தர்ப்பவாத மூகமூடியை கழற்றி எறிந்தனர்.



அரசியல் ரீதியாக புலி எதிர்ப்புக்கு (ஒழிப்புக்கு) வெளியில், இவர்களிடம் வேறு எந்த அரசியலும் கிடையாது. மக்களுக்கு என்று சொல்ல எந்த மக்கள் பிரச்சனையும் இவர்களிடம் கிடையாது.



புலிகள் தமது பாசிசம் மூலம் மக்களுக்கு ஏன் ஜனநாயகத்தை மறுக்கின்றனர்? இதைக் கூட அரசியல் ரீதியாக விளக்க முடியாத கோவேறுக் கழுதைகள். புலிகளுடனான இவர்களின் அரசியல் முரண்பாடு என்பதே, புலிகளின் குறிப்பான கொலைகள் பற்றியது மட்டுமே. புலிகள் மக்களுக்கு முன்வைக்கும் அரசியல் தொடர்பானதல்ல. புலிகளின் மக்கள் விரோத அரசியலின், மிகத் தீவிர ஆதாரவாளர்கள் இவர்கள். கொள்கை ரீதியாக, கோட்பாட்டு ரீதியாக முரண்பாடு என்பது கிடையாது.



இவர்களின் முரண்பாடு என்பது, இவர்களுக்கு இடையிலான அதிகாரம் தொடர்பானதே. யார் தமிழ் மக்களை அடக்கியாள்வது என்பது தொடர்பானது. மக்களின் விடுதலை தொடர்பானதல்ல. இந்த வகையில் முன்னைய இன்றைய கொலைகார குழுக்கள் அனைத்தும் கூடிக்குலைக்கின்றனர். மாற்றுக் கருத்து என்ற பெயரில், தமது அதிகாரத்துக்காக புலிகளுடன் முரண்படுகின்றனர். மக்களை எட்டி உதைத்து, பிசாசுகளுடன் கூடி விபச்சாரம் செய்கின்றனர்.



புலிகள் மக்களுக்கு எந்த உரிமையை மறுக்கின்றனரோ, அதை புலியெதிர்ப்புக் கும்பலும் மக்களுக்கு மறுக்கின்றது. மக்கள் தமது சொந்த விடுதலைக்காக, தமது சொந்த அதிகாரத்துக்காக போராடுவதை புலிகள் போல் இவர்களும் அனுமதிப்பதில்லை. அதை கருவறுப்பதுதான் புலியெதிப்பு சிந்தாந்தக் குருவின் பிசாசுத் தத்துவம்.



கடந்தகால வரலாற்றில் யாரெல்லாம் மக்களின் உரிமையை மறுத்து, அதைக் கோரியவர்களைக் கொன்று ஒரு படுகொலை அரசியலை நடத்தினரோ, அவர்கள் எல்லாம் கூடி 'ஜனநாயகத்தை" மீட்கும் பிசாசுத் தத்துவத்தை ஒப்புப் பாடுகின்றனர். இலங்கையினதும் இந்தியாவினதும் கூலிக் குழுக்களாகவே செயல்படும் கொலைகாரக் கும்பல்கள், புலியை ஒழித்து "ஜனநாயகத்தை" மீட்க பிசாசுடன் சேருவதே முற்போக்கான அரசியல் என்கின்றனர்.



இவர்கள் முன்வைக்கும் அந்த பிசாசு யார்? அந்த பிசாசு வேறு யாருமல்ல, ஏகாதிபத்தியம் தான். புலியை ஒழிக்க, புலியிடமிருந்து தமது ஜனநாயகத்தை மீட்க, பிசாசுகளை விட்டால் வேறு என்னதான் அரசியல் வழி உண்டு என்று எம்மை பார்த்து ஆச்சரியமாக கேட்கின்றனர். இதையே தான் தன்னையும் மார்க்சியவாதியாக கூறிக்கொண்ட, சோலையூரனும் கேட்டார். அவர் தன்னை உள்ளடக்கி பொதுவில் ஏகாதிபத்தியவாதிகள் என்கின்றீர்களா என்றார்? மார்க்சியவாதியாக கூறிக்கொள்ளும் சோலையூரானின் பரிதாபகரமான 'மார்க்சிய" நிலை இது.



நாம் புலியை பாசிட்டுகள் என்று கூறும் போது, இந்த அளவீடு அதன் கீழ்மட்ட உறுப்பினர் வரை பொருந்தும். அந்த அரசியலை சித்தாந்த ரீதியாக ஏற்றுக் கொண்டு இருக்கும் வரை, அதை பிரதிநிதித்துவம் செய்யும் அனைவருக்கும் பொருந்தும். நீங்கள் ஏகாதிபத்திய துணையுடன் அதன் கோட்பாட்டை உள்வாங்கியபடி புலியை அழிக்க புறப்பட்ட பின், இதை ஏற்றுக்கொண்டு செயல்படும் அனைவருக்கும் பொருந்தும். தலைவர் அதன் தொண்டன் என்பதில், ஏகாதிபத்திய தன்மையில் வேறுபாடு கிடையாது. வேறுபாடு அறியாமையில், அப்பாவித்தனத்தில் கூலிக்கு மாரடிக்கும் செயல்தளத்தில் வேறுபாடு உண்டு. தமிழ் மக்களைச் சார்ந்து நிற்கத் தவறுகின்ற அனைத்தும், ஏகாதிபத்திய, மக்களின் சொந்த எதிரியுடன் கூடி நிற்கின்ற அனைத்தும், ஏகாதிபத்திய தன்மை வாய்ந்தவை.



அன்று இயக்கங்கள் தொடங்கியது முதல், மக்களுக்கு எதிரான அரசியலையே இயக்க அரசியலாக வரிந்து கொண்ட காலம் முதலாக, மக்களை எதிரியாக கருதும் கும்பலா, மக்கள் ஜனநாயகத்தை மீட்கப் போகின்றார்கள்? இன்றும் அவையெல்லாம் மக்கள் விரோத இயக்கங்களாக, சந்தர்ப்பத்துக்கு ஏற்ப நடித்துக் கொள்ளும் இவர்கள், அந்த மக்களின் பிரச்சனையில் இருந்து சமூகத்தை பார்க்கத் தவறுவது தான் வேடிக்கை.



அன்று பேரினவாதத்துக்கு எதிராக தொடங்கிய இயக்கங்கள் எப்படி மக்களுக்கு எதிராக சென்றனரோ, அதேநிலையில் தான் புலி பாசிச ஒழிப்பிலும் அரசியல் நிலையெடுக்கின்றனர். அன்று பேரினவாதத்தை எதிர்கொள்ள மக்களை எட்டி உதைத்த படி, இந்தியாவின் கூலிக் குழுவானவர்கள் தான், இன்று மக்களை அதேபோல் எட்டி உதைத்தபடி பிசாசுகளுடன் கூடி நிற்கின்றனர். மனித விரோத வரலாறு இப்படி நிர்வாணமாகவே காட்சி அளிக்கின்றது.



நாம்(ன்) அன்றைய கூட்டத்தில் இதை அம்பலப்படுத்திய போது, இந்த மனித விரோத பிசாசு செயல்பாடுகள் உணர்ச்சிகரமான குமுறலுடன் அம்பலமாகியது. அவர்களின் சந்தர்ப்பத்துக்கு ஏற்ப, சந்தர்ப்பவாதிகளின் அரசியல் முடிச்சுமாற்றித்தனத்தின் உள்ளார்ந்த அரசியல் கூறை உடைத்தெறியும் வகையில், தமிழ் மக்களுக்கான தீர்வு பற்றிய விடையத்தை கருப்பொருளாக கொண்டு இதை அம்பலமாக்கினோம். தமிழ் மக்கள் தமது பிரச்சனைக்காக தாமே மட்டும் போராடுவதைத் தவிர, வேறு எந்த மாற்று வழியும் கிடையாது என்றோம். இதற்கு வெளியில் மாற்றுவழி உண்டென்றால், அதை முன்வைக்குமாறு சவால் விடுத்தோம். இதற்கு பதிலடியாகவே பிசாசுடன் கூடி புலியெதிர்ப்பை (புலிஒழிப்பை) மாற்றாக முன்வைத்தனர். மக்களுக்கு எதிராக பிசாசுகளுடன் கூடி, மக்களுக்கு ஜனநாயகத்தை பெற்றுத்தரப் போகின்றனராம்.



இப்படி கடந்தகாலத்தில் இந்தியாவுடன் கூடி தமிழீழத்தை பெற்றவர்கள், இந்த தமிழீழம் என்று இன்றும் கூறுபவர்கள் போல், பிசாசுடன் கூடி ஜனநாயகத்தை மக்களுக்கு பெற்றுத் தரப்போகின்றனராம். அரசியலில் பொறுக்கிகளின் சூழ்ச்சிகள் இவை. சொந்த மக்களில் நம்பிக்கை இல்லாதவர்கள். அந்த அரசியல் வழிமுறையை எப்படி என்றும், அது சாத்தியமற்றது என்றும் சதா கிண்டல் அடிப்பவர்கள். அந்த மக்களுக்கு இவர்கள் எப்படி உண்மையான இருப்பார்கள். ஒரு உண்மையான மக்கள் ஜனநாயகத்துக்காக எப்படி போராடுவார்கள். சொல்லுங்கள். அன்னியருக்கு ஒரு கூலிக் குழுவாக இருந்து, செயல்படுவதில் மட்டும் நம்பிக்கை கொண்டவர்கள். இது மட்டுமே சாத்தியம் என்பவர்கள். மக்கள் வழி சாத்தியமற்றது என்று கூறுவதன் மூலம், இதை மறைமுகமாக திணிப்பவர்கள்.

மாற்றுவழி என்பது, அவர்களே பிசாசுகள் என்று வருணிப்பவர்களுடன் சேர்ந்து புலியை ஒழிப்பது. இப்படி பிரகடனம் செய்வது மட்டுமல்ல, அதை எமக்கு எதிராக சவால் விடுகின்றனர். எப்படிப்பட்ட சமூக விரோத கும்பல் இவர்கள் என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது.



மக்களை சார்ந்து நின்று, அந்த அரசியல் மூலம் மக்களின் தீர்வாக புலியொழிப்பை நாம் கோரிய போது, பிசாசுகளாக மாறியது மட்டுமின்றி பிசாசுகளாகவே பிரகடனம் செய்தனர். இதுதான் அன்றைய நிகழ்வும் நிகழ்ச்சியுமாகியது. இந்த பிசாசுக் கூட்டத்தில் ஆணாதிக்கத்தை ஒழிக்கப் போராடுவதாக கூறிக்கொள்பவர்களும், சாதி ஒழிப்புக்காக போராடுவதாக கூறிக்கொள்பவர்களும், யாழ் மேலாதிக்கத்துக்கு எதிராக போராடுபவராக கூறிக்கொள்பவர்களும், சுரண்டலை எதிர்ப்பதாக கூறிக்கொள்பவர்களும் பலரும் சேர்ந்து, மக்களின் இந்தப் பிரச்சனை புலி ஒழிப்புக்குள் அடங்காது என்கின்றனர். வேடிக்கையிலும் வேடிக்கை. இந்த மனித ஒடுக்குமுறை செய்பவர்களுடன் சேர்ந்து தான், புலியை ஒழிக்க முடியும் என்கின்றனர். இப்படித்தான் இது தமிழீழப் போராட்டத்திலும் அடங்கவில்லை என்றவர்களும் இவர்கள் தான். ஏன் புலிகளும் அதைத்தான், இன்று வரை கூறுகின்றனர். வரலாற்றைப் புரட்டினால், இது தெரியும். இப்படி கோரியவர்கள் கொன்றவர்கள் எல்லாம், மக்கள் போராட்டம் என்பது தமது அதிகாரத்துக்கு பிந்தைய விடையமாக கருதும் கருத்துடையவர்கள். இதைக் கோரியவர்கள், கோருபவர்களை கொன்றது மட்டுமின்றி, தமது எதிரியாகவும் பார்க்கின்றனர். இப்படி மக்களுக்கு எதிரான ஒரு அரசியல் நீட்சியாகவே, இன்றும் அவர்கள் உள்ளனர்.



மக்கள் ஜனநாயகம் என்பது மக்கள் தமது பிரச்சனையைப் பற்றி பேசுவது, அதற்காக போராடித் தீர்வைக் காண்பதும் தான். ஆனால் இதை மறுத்துத்தான் புலிகள் முதல் புலியல்லாத புலியெதிர்ப்பு வரை கொக்கரிக்கின்றது. மக்கள் தமது உரிமைக்காக போராடும் காலம் இதுவல்ல என்று கூறுபவர்கள், அந்த உரிமைகளுக்காக தாம் உண்மையாக இருப்பதாக காட்டிக்கொண்டு மக்களின் முதுகில் குத்துவதே இவர்களின் பிசாசுத் தத்துவம்.



புலி ஒழிப்பின் பின் தனித்தனியாக போராடப் போவதாக கூறுவது வேடிக்கை. புலி என்ன சொல்லுகின்றது. தமிழீழத்தை பெற்ற பின்னர் தான், தாம் இதற்காக போராடுவினமாம். அதாவது புலிகள் தமிழீழத்தை பெற்றபின் போராடுவினமாம். புலியெதிர்ப்பு கும்பலோ புலியை பிசாசுடன் சேர்ந்து ஒழித்த பின் இதற்காக போராடுவினமாம். கூட்டாகவே கொள்கை ரீதியாக, மக்களின் உரிமைக்காக போராட மறுக்கும் பிரகடனமும், அரசியல் உடன்பாடும் புலிக்கும் புலியெதிர்ப்புக்கும் ஒன்று தான்.



இப்படி மக்களின் பிரச்சனையை கைவிட்டுவிட்டு, மக்களை எப்படி எந்த வழியில் அணி திரட்டமுடியும். மக்கள் போராட்டம் என்பது இதற்கு வெளியில் கிடையாது. மக்களின் பிரச்சனைக்காக, அந்த மக்கள் தாம் தமக்காக போராடுவது தான் மக்கள் போராட்டம். அது சிலரின் வெறும் வரட்டு தமிழீழமோ அல்லது வெறும் வரட்டு புலியொழிப்போ அல்ல.



இவர்கள் பரஸ்பரம் தமக்குள் குற்றம் சாட்டியபடி, இதற்குள் வரட்டுத்தனமாக அனைவரையும் கட்டிப்போடுகின்ற மக்கள் விரோத வேலையைத் தான் இந்தக் கும்பல் செய்கின்றது. மக்களின் அடிப்படையான அனைத்து பிரச்சனைகளையும் அடையாளம் கண்டு, அந்த மக்களின் அடிப்படைப் பிரச்சனையைத் தீர்க்க நாம் கோரியும், இதற்கு வெளியில் மக்களுக்கு சார்பான மாற்று அரசியல் வழி எதுவும் கிடையாது என்று நாம் சவால் விட்டோம். இதன் போது புலியெதிர்ப்புக் கும்பல் தாம் அம்பலமாவது கண்டு அதிர்ந்து போனது. எம் மீது புலியெதிர்ப்பு தத்துவமேதை சிவலிங்கம் உட்பட, சோலையூரன் முதல் கீரன் வரை காழ்ப்புடன் சீறிப் பாய்ந்தனர்.



கீரனோ நாலு சுவருக்குள் இருந்து, 20 பவுனில் இணையத்தில் மக்கள் புரட்சி நடத்துவதாக வெம்பிக் கொட்டினார். இந்த சம்பந்தமில்லாத எம்மீதான அரசியல் காழ்ப்பு, எப்படி தமிழ் மக்களின் அப்படை பிரச்சனைக்கு பதிலளிக்கின்றது என்பது அந்தக் கும்பலுக்குத் தான் வெளிச்சம். புலிகள் என்ன சொல்லினம் என்றால், கதைப்பதை வன்னியில் சென்று கதையுங்கள் என்கின்றனர். அங்கு சென்று போராடுங்கள் என்கின்றனர். இப்படி புலிகள் பேச புலியெதிர்ப்போ நாலு சுவர்களுக்குள் மக்கள் புரட்சியா என்கின்றனர். வன்னி மக்களின் சுதந்திரம் என்றழுகின்றனர்.



வன்னி மக்களின் சுதந்திரமான வாழ்வுக்கு போராட முடியாதவர்கள் என்கின்றனர். அந்த மக்கள் இணையத்தை பார்க்க முடியாது என்கின்றனர். இதனால் பிசாசுக் கூட்டத்துடன் தம்மைப் போல் சேரக் கோருகின்றனர்.



பிசாசுடன் சேர்ந்து புலியெதிர்ப்பு (ஒழிப்பு) பிரச்சாரம் செய்யும் இவர்கள், அந்த மக்களிடம் செல்வதில்லை. ஏன் இணையம் பார்க்கும் மக்களிடம் கூட, மக்களின் பிரச்சனையை கொண்டு செல்வது கிடையாது. பிசாசுகளின் அரிதட்டில் இட்டு வடிகட்டி கிடைப்பதைப் பொறுக்கி, தாமே தமக்குள் வம்பளப்பதே இவர்களின் அரசியல். புலி ஊடகவியல் போல், புலியெதிர்ப்பு ஊடகவியல் மக்களின் பிரச்சனைகள் மீது விபச்சாரம் செய்கின்றனர்.



வன்னி மக்களின் சுதந்திரமான வாழ்வு மற்றும் இடப்பெயர்ச்சி பற்றி மட்டும் பேசும் இவர்கள், இலங்கை அரசு அதை மறுப்பதை இட்டோ, ஏன் ஏகாதிபத்திய நாட்டில் இது மறுக்கப்படுவதை இட்டோ அலட்டிக்கொள்ளாத, புலியெதிர்ப்பு ஜனநாயகத்தை பற்றி மட்டும் பேசும் பந்சோந்திகள்.



பிசாசுகளுடன் சேர்ந்து தாம் புலியை அழிப்போம் என்றவர்கள். இதை யாரும் தடுக்க முடியாது என்றவர்கள், இப்படி தனது நெற்றிக் கண்ணையே திறந்த சிவலிங்கம், தனது ஏகாதிபத்திய விசுபரூபத்தையே உலகுக்கு முழுமையாக காட்டினார். அற்புதத்திலும் அற்புதம். மானம் கெட்ட நாய்கள், ஏகாதிபத்திய கால்களை நக்குவதைத் தவிர வேறு எந்த மக்கள் அரசியலும் கிடையாது.



இந்த பிசாசு யார் என்ற சர்ச்சை பின்னால் வந்த போது, சொந்த சுயவிளக்கம் அளிக்க வெளிக்கிட்ட பரமபிதா சிவலிங்கம், அந்த சிவலிங்கத்துக்கேயுரிய ஆபாச வக்கிரத்துடன் பினாற்றுவதைத் தவிர வேறு எதையும், அற்புதமாக சோடிக்க முடியவில்லை.



தான் பிசாசு என்று குறிப்பிட்டது மனித உரிமை அமைப்புக்களையே என்றார். இப்படி தனது புலியெதிர்ப்பு அரசியல் செயல்பாட்டுக்கு மனித முகம் கொடுக்க முற்பட்டார். இப்படி சூழ்ச்சியான அரசியல் ஆய்வாளராக பாலசிங்கத்தையே மிஞ்சும் இந்த முட்டாள், முன்னால் இருப்பவனெல்லாம் மாங்காய் மடையன் என்ற நினைப்பு. சிவலிங்கம் தன் வீட்டு மாங்காய் என்ற அவரின் சொந்த நினைப்பு.



சரி சொன்னபடி எடுப்போம். மனித உரிமை அமைப்புக்கள் பிசாசுகள் என்றால், அப்படி பிசாசு என்று தெரிந்துகொண்டு செயல்படுபவன் எப்படிப்பட்ட பொறுக்கியாக இருப்பான். நாங்கள் மக்களின் சமூக பொருளாதார பிரச்சனைகளின் அடிப்படையில், மக்களை அணிதிரட்ட முயலமாட்டோம் என்று கூறி, பிசாசுகளுடன் சேர்வோம் என்று கூறிய இந்த பொறுக்கி தான், புலியெதிர்ப்புக் கும்பலின் அரசியல் குரு. இந்த மக்கள் விரோத செயல்பாடு தான் புலியெதிர்ப்பு அரசியல்.



சரி இந்த பிசாசாக மனித உரிமை அமைப்புகளைக் காட்ட முற்பட்டது, உள்ளடகத்தில் ஏகாதிபத்தியத்தில் இருந்து இவ்வமைப்புக்கள் வேறானவை என இட்டுக்கட்டத்தான். தாம் செய்யும் ஏகாதிபத்திய செயல்பாட்டை, இல்லையென மழுப்ப அவ்வமைப்புக்கள் ஏகாதிபத்தியத்துக்கு அப்பாற்பட்டவையென காட்டி, மக்களுக்கு புலுடா விடுகின்ற முடிச்சுமாற்றித் தனம் தான் இந்த சுயவிளக்கம். இந்த மனிதவுரிமை அமைப்புகளை ஏகாதிபத்தியத்திலும் இருந்து சுயாதீனமானதாக காட்டுகின்ற, ஏகாதிபத்திய நரித்தனம், இதற்குள் வெளிப்படுவது மற்றொரு உண்மை. மனித உரிமைக்காக செயல்படுவதாக கூறுகின்ற இந்த ஏகாதிபத்திய அமைப்புகள், ஏகாதிபத்திய அமைப்புகளல்ல என்கின்றீர்களா? அரசியல் மோசடியில் உங்கள் செயல்பாட்டை நியாயப்படுத்துகின்ற வெளிப்படையான பொறுக்கித்தனம் இது.



மனிதவுரிமை அமைப்புக்கு யார் பணம் கொடுக்கின்றனர். ஏகாதிபத்திய பணத்தில், ஏகாதிபத்திய உலக ஒழுங்குக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட அமைப்புகள் தான் இவை. அதற்காகவே அவை செயல்படுகின்றது. இவை ஏகாதிபத்திய நலன் சார்ந்த



1. மனித உரிமை மீறலுக்கான சமூகக் காரணங்களை ஆராய்வதில்லை.



2. மனித உரிமையை சொல்லி நடைபெறுகின்றதும், மனித உரிமை அறிக்கையின் அடிப்படையில் நடக்கும் தலையீட்டுக்கும், ஏன் அது உருவாக்கும் மனிதவுரிமை மீறலுக்கும் தாம் பொறுப்பாளியாக இருப்பதில்லை.



3. சக மனிதனின் உழைப்பைச் சுரண்டுவதை மனிதவுரிமை மீறலாகக் கூட அங்கீகரிப்பதில்லை.



இந்த மனித விரோதத்துக்கு, இப்படி வக்கிரமான பலவடிவங்கள் உண்டு. ஏகாதிபத்திய நலன்களுக்கு இசைவாக மட்டும் மனித உரிமை மீறலைப் பற்றி பேசுகின்ற, அரசு சாராத அரச பணத்தில் இயங்குகின்ற ஏகாதிபத்திய நிறுவனங்கள் இவை.



தமிழ் மக்களுக்கு காலாகாலமாக காதில் பூ வைத்து அரசியல் செய்த கூட்டம், இந்த மனித உரிமை அமைப்பு பற்றியும் பொய்மையை விதைக்க முனைகின்றனர். புலிகள் முதல் புலியெதிர்ப்பு வரை இப்படி இதில் ஒத்த நிலைப்பாடு கொண்டுள்ளனர். மனிதவுரிமை அமைப்புகள் ஏகாதிபத்திய நலன்களுடன் தொடர்புடைய அமைப்புகள். இப்படியாக இயங்குகின்ற அரசு சாராத ஏகாதிபத்திய நன்கொடையில் இயங்குகின்ற இந்த அமைப்புகள், மனித உரிமை முதல் பொருளாதார செயல்பாடுகள் வரை ஒன்றுடன் ஒன்று திட்டமிட்ட வகையில் பின்னிப் பிணைந்தவை. ஏகாதிபத்திய நலன்களுக்கு இசைவாக செயல்படுகின்ற அதேநேரம், அதை மூடிமறைக்க மனிதத்தின் ஒரு பகுதியை கையில் எடுத்துக்கொண்டு, மொத்த மனிதனுக்கு விரோதமாக செயல்படும் அமைப்புகள் தான் இவை.



இல்லை இவை ஏகாதிபத்திய அமைப்புகள் அல்ல என்ற கூறும் தைரியம், நேர்மை இருந்தால், அதையும் விவாதிக்கவும் நாம் சவால் விடுகின்றோம். மக்களின் முதுகில் குத்தி அரசியல் ரீதியாக சோரம் போவதும், ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்வதும், பிறகு அதற்கு மனிதவுரிமை அமைப்பு என்று பச்சையாக சுயவிளக்கம் வழங்குவதும் விபச்சார தரகனுக்குரிய அதே குணம் தான். இப்படி தமது புனிதத் தன்மை பற்றி ஒப்பாரி வைப்பது, தம்மையும் தமது செயல்பாட்டுக்கும் புனித தன்மை பற்றி கூறி மக்களை ஏமாற்ற முயலுகின்ற வக்கிரம் தான், புலியெதிர்ப்பின் பின் அரங்கேறுகின்றது.



இன்றைய மனிதவுரிமை அமைப்புகள், மனித உரிமை மீறலுக்கான காரணத்தை ஏன் விமர்சிப்பதில்லை. மனிதவுரிமை மீறலுக்கு காரணம், ஏகாதிபத்திய உலக ஒழுங்கு தான். இந்த அடிப்படைக் காரணமே இப்படி வெளிப்படையாக இருக்க, அதை பற்றி பேசாது மனித உரிமை பேசுகிற ஏகாதிபத்திய நிறுவனங்கள் தான் இவை. ஏகாதிபத்திய சர்வதேச தலையீட்டுக்கான நிலைமைகளை தயாரிப்பது, இந்த அமைப்புகளின் தலையாய செயல்பாடுகளாகும். இப்படி மனித முகம் வழங்கி, தனது தூய்மை பற்றிய பிரமையை உருவாக்கி, சதி செய்து மக்களை ஒடுக்குவதற்கு துணை செய்கின்ற அமைப்புகள் தான் இவை.



இந்த கேடுகெட்ட வகையில் ஏகாதிபத்திய பணத்தில் இயங்கும் பிசாசுகளுடன், தான் சேர்ந்து செயல்படுவதாக, நெற்றிக் கண்ணைத் திறந்து சிவலிங்கம் தனது சுயவிளக்கத்தில் புலியெதிர்ப்புக் கும்பல் சார்பாக சூளுரைத்தார். இப்படி ஏகாதிபத்தியத்துடன் சேர்ந்து செய்கின்ற மனித விரோதத்தை, மூடிமறைக்கலாம் என்று இந்த புலியெதிர்ப்புக் கும்பல் நம்பியதால், அதை வீரமாகவே பிரகடனம் செய்தனர். நாய் வேஷம் போட்டு விசுவாசமாக நக்கிக் குலைக்க வெளிக்கிட்டாலும் கூட எதையும் யாராலும் மூடிமறைக்கவே முடியாது.



ஏகாதிபத்தியம் என்றால் என்ன? நீங்கள் ஏகாதிபத்தியத்துடன் சேர்ந்து செயல்படவில்லை என்று கருதினால், ஏது ஏகாதிபத்தியத்துடனான செயல்பாடு என்று அதைச் சொல்லுங்கள்? நடத்துவதோ மானம்கெட்ட அரசியல் விபச்சாரம். ஏகாதிபத்திய அரசியல்வாதிகள் முதல் எல்லாவிதமான ஏகாதிபத்திய நிறுவனங்களுடனும் சேர்ந்து கும்மியடிப்பதைத் தவிர, வேறு எதுவும் செய்வதில்லை. அதை புலியெதிர்ப்பு ஊடகவியல் மூலம் வாரியள்ளி கொட்டுவதன் மூலம், அதற்கு அவர்கள் இட்ட பெயர் தான் ஜனநாயகம். மக்கள் தமக்காக, தமது சமூக பொருளாதார உரிமைக்காக போராடுவது ஜனநாயகமல்ல என்பது இவர்கள் தத்துவம். சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவது ஜனநாயகமல்ல, அதுவே ஜனநாயக விரோதம் என்கின்றனர். இதனால் புலி முதல் புலியெதிர்ப்பு வரை போராட மறுத்து, இதை வேட்டையாடுவதையே போராட்டமாக்கியவர்கள்.



இந்த புலியெதிர்ப்பு ஏகாதிபத்திய செயல்பாடுகளை நாம் அம்பலப்படுத்துவதால், நாலு சுவருக்குள் இருந்து 20 பவுன் காசில் மக்கள் புரட்சி செய்வதாக பம்புகின்றனர். சரி இந்த வாதம் எப்படி, நீங்கள் ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்வதில்லை என்பதனையோ அல்லது சேவை செய்வதையோ நியாயப்படுத்திவிடும்?



ஏகாதிபத்திய பிசாசுடன் சேர்ந்து செய்வது சரி என்பதையும், அதை எப்படிச் செய்கின்றோம் என்பதையும் வெளிப்படையாக மூடிமறைக்காது கூற வேண்டியதுதானே. ஏன் சுயவிளக்கம் கொண்ட பிசாசுத் தத்துவம். நாலு சுவருக்குள் 20 பவுன் காசில் இணையம் என்று, ஏன் பேயைக்கண்டது போல் அலறுகின்றீர்கள். மக்களின் முதுகில் குத்தி துரோகம் செய்யும் உங்கள் வண்டவாளங்கள், அந்த 'நாலு சுவருக்குள்" இருந்து அம்பலமாவதைக் கண்டு குமுறுவதன் பின்னனி எமக்கு புரிகின்றது. நாலு சுவர் இணையத்தை நிறுத்தக் கோரும் உங்கள் பிசாசு ஜனநாயகம், தலைகீழாக நின்று அழுவது புரிகின்றது.



ஜனநாயக விரோதிகள் புலிகள் மட்டுமல்ல, இந்த புலியெதிர்ப்புக் கும்பலும் தான். மக்களின் விடுதலையை கோரியோரைக் கொன்று குவித்த முன்னைய கொலைகார கும்பலும், இன்றைய கொலைகாரர்களுமான புளாட், ஈ.பிஆர்.எல்.எவ், ஈரோஸ், ஈ.என்.டி.எல்.எப், ஈ.பி.டி.பி, ரெலோ முதல், கொலைகாரனுக்கு ஆள்காட்டியும் உதவிய கூட்டணி என்று அனைவரும், சேர்ந்து புலியிடமிருந்து ஜனநாயகத்தை மீட்கப் போகின்றார்களாம். புலிகளிடம் அதிகாரத்தில் பங்கு கோரி நடத்தும் அரசியல் சண்டையை மூடிமறைக்க, புலிப் பாசிசம் பற்றி புலியெதிர்ப்பு ஆர்பாட்டங்கள்.



இந்த அதிகாரம் கிடைக்கும் முன்பே, சதியை அடிப்படையாகக் கொண்ட அதிகாரச் சண்டைகள் இவர்களுக்குள். பாரிஸ் கூட்டத்துக்கு முதல் நாள் கூடிய ஜெர்மனிய கூட்டத்தில் இவை அரங்கேறியது. தலித்தியவாதிகள், கிழக்குவாதிகளையும் அழைக்க கூடாது என்ற புலியெதிர்ப்பு ஜனநாயக சதி கூட விவாதிக்கப்பட்டது. யாரை அழைக்கக்கூடாது என்று முன் கூட்டியே திட்டமிட்டு அவர்கள் தடுக்கப்பட்டனர். விமான நிலையத்தில் அழைத்து வருவதில் கூட திட்டமிட்ட புறக்கணிப்புகள், சதிகள். இப்படி இந்த ஜனநாயகம் கொடிகட்டிப் பறக்கின்றது. புலியெதிர்ப்பு சித்தாந்த குரு யாரின் பக்கம் என்று காட்டுவதில் உள்ளேயே ஒரு போட்டி, ஒரு சதி. இதைப் பிரதிநிதித்துவம் செய்யும் குழுக்கள், அனைத்து இலங்கை இந்திய அரசுகளின் கூலிக் குழுக்கள். சிலதுகள் பிசாசுகளின் கூலிகள். இவர்கள் எல்லாம் கூடி நின்று, புலியின் ஜனநாயக மீறலைப் பற்றி தமக்குள் ஊளையிடுகின்றனர்.



இப்படி ஊளையிடுவதில் உள்ள கைக்கூலித்தனம் வெளிப்படையானது. இந்த ஏகாதிபத்திய நிலை என்பது அரசியல் ரீதியானது, கொள்கை ரீதியானது. புலியெதிர்ப்பின் உள்ளார்ந்த சித்தாந்தம், கொள்கை ரீதியாகவே ஏகாதிபத்திய தன்மை கொண்டது. இதை யாரும் மறுத்து நிறுவ முடியாது. ஏகாதிபத்தியத்துடன் அரசியல் ரீதியாகவே சோரம் போய், அதன் பின் வாலாட்டுபவர்கள். இந்த ஏகாதிபத்தியம் என்பதும், அதன் வடிவம் என்பதும் கொள்கை ரீதியானது மட்டுமின்றி வன்முறை வடிவமும் கொண்டது.



புலியெதிர்ப்புக் கும்பலின் செயல்பாடுகள் ஏகாதிபத்திய அதிகார மையங்களுடனும், அதன் மனித முகம் கொண்ட நிறுவனங்களுடன் தொடர்புக்கு உட்பட்டது. இன்று புலிகள் தாம் வேறு, தமது மனித செயல்பாடுகள் வேறு என்று எப்படி காட்ட முனைகின்றனரோ, அப்படிப்பட்ட ஒரு வேறுபாட்டைக் காட்டித் தான் (பலவற்றை மறைத்தபடி), புலியெதிர்ப்புக் கும்பல் தனது துரோகத்தை மனித செயல்பாடாக காட்டமுனைகின்றது.



நாலு சுவருக்குள் 20 பவுன் காசில் இணையம் நடத்துபவர்கள் என்று எம்மைக் கூறி, தாம் மக்கள் மத்தியில் செயல்படுவதாகவும் ஊர்வலங்களை நடத்துவதாகவும், எமக்கு அரசியல் பாடம் நடத்த முனைந்தனர். சரி இவர்களின் ஊர்வலங்கள் மக்களுடன் சம்பந்தப்பட்டதா? பிசாசுகளுடன் கூடித்தான் புலியை அழிப்போம் என்றவர்கள், அதற்கு முற்றாக முரணான வழியான மக்களுடன் கூடி புலியை எப்படி அழிக்கமுடியும். கேட்பவன் கேனயன் என்ற நினைப்பு. இவர்களின் மக்கள் போராட்டம் எப்படிப்பட்டது. சிங்கள உறுமய முதல் கொலைகார கூலிக் குழுக்களின் பிரதிநிதிகள் எல்லாம் கூடி நடத்துவது, மக்கள் போராட்டம் என்கின்றனர். புலியெதிர்ப்புக் கும்பல் தாமே கூடி ஊளையிடுவது மக்கள் போராட்டமல்ல. அதுவும் பிசாசுகளுக்கு மகஜர் கொடுத்துவிட்டு வந்து, பிசாசுக்கு பின்னால் வாலாட்டி திரிவது மக்கள் போராட்டமல்ல. மறுபக்கத்தில் இதை மக்கள் போராட்டம் என்றால், புலியும் தான் உங்களைவிட அதிகளவு உங்கள் போல் 'மக்கள் போராட்டம்" நடத்துகின்றது. உங்கள் போராட்டம் மக்கள் போராட்டம் என்றால், புலிப் போராட்டமும் மக்கள் போராட்டம் தான்.



புலிகள் பேரினவாதிகளின் மனிதவிரோத செயலை சொல்லி ஊர்வலம் நடத்தி மக்களின் முதுகில் எப்படி குத்துகின்றனரோ, அப்படி புலியைச் சொல்லி நீங்கள் மக்களின் முதுகில் குத்துவது மக்கள் போராட்டமோ? உங்களிடையே அரசியல் ரீதியாக என்ன வேறுபாடு உண்டு?



இந்த புல்லுருவிகளின் திடீர் தோற்றமும், அதன் திடீர் வரலாறும், வரவின் சூக்குமத்தை தெளிவுபடுத்த போதுமானது. இது வைத்த, திடீர் ஜனநாயகமும் அப்படிப்பட்டது தான்.



இலங்கையில் சமாதானம் அமைதி என்று கூறிக்கொண்டு ஏகாதிபத்திய தலையீடுகள் அதிகரித்த போதுதான், இந்த புலியெதிர்ப்பு புல்லுருவிகளும் அக்கம்பக்கமாக சமகாலத்தில் முளைத்தவர்கள்.



அதற்கு முன்னம் அரசியல் ரீதியாக இனம் காணப்படாதவர்கள். எந்த செயல்பாடுமற்ற உறங்கு நிலையில் இருந்தவர்கள். எதிர்ப்புரட்சிகர சூழல் இன்றி, அரசியல் போக்கற்று, அரசியல் அனாதைகளாகக் கிடந்தவர்கள். அதிகரித்த ஏகாதிபத்திய தலையீட்டுடன், எதிர்ப்புரட்சிகர திட்டத்துடன், பாசிச புலிகளின் நடத்தையை சாதகமாக கொண்டு திடீர் ஜனநாயகவாதியானவர்கள். இவர்களின் திடீர் ஜனநாயகமோ, கிலோ விலைக்கு விற்கப்படுகின்றது. ஏகாதிபத்தியத்தின் அதிகரித்த தலையீட்டுடன் உருவாகி புல்லுருவிக் கூட்டம் இது. அதற்கு ஏற்ப இதனிடம் மாற்று வேலைத்திட்டம் கிடையாது. மக்களின் சமூக பொருளாதார பிரச்சனைகள் பற்றி, எந்த சமூக அக்கறையும் அற்றவர்கள். இதனிடம் பிசாசுடன் கூடிய, புலி அழிப்புத்திட்டம் தான் உள்ளது.



மக்கள் விரோத பாசிச புலியை அழிக்க வேண்டும் என்றால்



1. அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது சொந்த வழியில் குறுக்கிடும் புலிக்கு எதிராகப் போராடி அழிக்க வேண்டும். அதாவது தமது அதிகாரத்துக்காக, தமது சமூக பொருளாதார விடுதலைக்காக மக்கள் போராட வேண்டும்.



2. இல்லையென்றால் அரசு அல்லது இந்தியா முதலான ஏகாதிபத்தியங்களின் தலையீடு மூலம், அவர்களின் நலன்களுக்காக புலியை அழிக்க வேண்டும்



இதில் இரண்டாவது வழியைத் தான் புலியெதிர்ப்புக் கும்பல் வைக்கின்றது. இதுதான் பிசாசுத் தத்துவம். மக்களின் இன்றைய பிரச்சனைக்கு தீர்வை இரண்டாவது வழியில் தான், புலியெதிர்ப்பு வழி காட்டுகின்றது. இதனால் தான் அடிக்கடி தம்மிடம் மாற்று வழி இல்லை என்று நாசுக்காக கூறிக்கொண்டு, ஏகாதிபத்திய தலையீட்டுக்கு சாதகமான வழிக்குள் அழைத்துச் செல்லுகின்றனர். திட்டமிட்ட சதிகாரர்கள். நேரத்துக்கும் நிலைமைக்கும் ஏற்ற சந்தர்ப்பவாதிகள். தம்மை மூடிமறைத்தபடி சந்தர்ப்பத்துக்கு ஏற்ப குலைக்கின்ற, குதர்க்கப் பேர்வழிகள்.



ஏகாதிபத்திய தலையீட்டுடன் புல்லுருவிகளாக, திடீர் விட்டில் பூச்சிகளாக உலவுகின்றவர்கள். மக்களின் மனிதவுரிமை பற்றிய பிரச்சனை மீது தம்மை மூடிமறைத்துக் கொண்டு, அசல் ஏகாதிபத்தியம் போல் ஊர் உலகத்தையே ஏமாற்றுபவர்கள். உலகளவில் ஏகாதிபத்திய தலையீடுகளும், அதற்கான நியாயங்கள் எப்படி எந்த அரசியல் வழியில் உருவாக்கப்படுகின்றதோ, அதையே இலங்கை பிரதிநிதிகளாக நின்று செய்து முடிக்க முனைபவர்கள் தான், இந்த புலியெதிர்ப்புக் கும்பல். வரலாற்றில் வேறுவிதமாக இந்த கும்பலை வரலாறு பதிவு செய்வதற்குரிய எந்த தர்க்கமும், இதன் பிசாசு கோட்பாட்டில் கிடையாது. வரலாற்றுத் துரோகிகளாக, காலத்தின் போக்கில் உருவாகி நிற்பவர்கள் தான் இவர்கள். மக்களின் விடுதலைக்கே எதிரான புல்லுருவிகள். இதை இனம் காண்பது, வரலாற்றுத் தேவையாக உள்ளது.



Thursday, July 19, 2007

வென்றது வள்ளலார் நெறி! வீழ்ந்தது பார்ப்பனச் சதி!

வென்றது வள்ளலார் நெறி!
வீழ்ந்தது பார்ப்பனச் சதி
!


சிதம்பரம் நடராசர் கோயிலில் அருட்பா பாடச் சென்ற வள்ளலாரை இழிவுபடுத்தி, பார்ப்பனர் அல்லாத யாரும் "அருட்பா' பாட இயலாது என்று விரட்டியடித்தது தீட்சிதர் கும்பல். யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரைத் தமது கையாளாகக் கொண்டு "மருட்பா' எழுதி வெளியிட்டு, வள்ளலார் மீது வழக்கும் தொடர்ந்தது. வடலூரில் உத்தரஞான சிதம்பரம் என்ற சபையை நிறுவி 1872 முதல் ஏழைகளுக்கு உணவளித்து வந்த வள்ளலார், பார்ப்பனச் சடங்குகளையும், சாதிக் கொடுமையையும் மறுத்து புதியதொரு மார்க்கத்தை உருவாக்கினார். தீட்சிதர் கூட்டத்தால் அனுப்பி வைக்கப்பட்ட ஆடூர் சபாபதி குருக்கள், வள்ளலார் கொள்கையை ஏற்பதாக நடித்து, அவர் மறைவுக்குப் பின், சைவ ஆகம நெறியைப் புகுத்தி சபையைப் பார்ப்பனமயமாக்கும் சதியைத் தொடங்கினார்.


சிவலிங்க வழிபாடு, பிரதோஷ பூசை, பூணூல் அணிந்த அர்ச்சகர், வள்ளலாருக்கே நெற்றியில் பட்டை போடுவது, சபைக்கு சொந்தமான நிலத்தை ஏப்பம் விட்டு சொத்து சேர்ப்பது என்று வள்ளலாரின் சன்மார்க்கத்தை ஒழித்து "சைவ மார்க்கத்தை' வளர்த்தார் தற்போதைய பூசகர் சபாநாத ஒளி. ஆர்.எஸ்.எஸ். மற்றும் பொள் ளாச்சி மகாலிங்கத்தின் பின்புலத்தை வைத்துக் கொண்டு, தட்டிக்கேட்ட வள்ளலார் நெறியாளர்களை மிரட்டினார். இதற்கெதிராக வள்ளலார் நெறியாளர்கள் போராட்டம் நடத்தினர்.


இப்போராட்டத்தை ஆதரித்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணித் தோழர்கள் பிரச்சாரம் செய்தனர். இதனையொட்டி பெரியார் தி.க. ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டதுடன் மாவட்டமெங்கும் சுவரொட்டிப் பிரச்சாரமும் செய்தனர். ""பார்ப்பன மதத்தை மறுத்து வாழ்ந்த வள்ளலாரை பார்ப்பனமயமாக்கும் சதியை முறியடிப்போம்!'' என்ற தலைப்பில் பு.மா.இ.மு. வெளியிட்ட துண்டறிக்கை, பெரும் வரவேற்பைப் பெற்றது. தைப்பூசத்திற்குப் பல்லாயிரக்கணக்கில் வடலூருக்கு வரும் மக்களிடமும், மாதந்தோறும் பூசத்தன்று திரளும் வள்ளலார் நெறியாளர்களிடமும் இந்தப் பார்ப்பனமயமாக்கத்தை எதிர்த்துப் போராடுமாறு செஞ்சட்டை அணிந்த எமது தோழர்கள் திரளாக நின்று பிரச்சாரம் செய்தனர். துண்டறிக்கையை வரவேற்ற சன்மார்க்க சங்கத்தினர் தாமே முன்வந்து அதனை ஆயிரக்கணக்கில் அச்சிட்டுப் பரப்பினர்.


பார்ப்பனமயமாக்கத்துக்கு எதிரான வள்ளலார் நெறியாளர்களின் போராட்டம் மே 17ஆம் தேதி வெற்றி பெற்றது. சபாநாத ஒளி சிவாச்சாரியார் அறநிலையத் துறையால் வெளியேற்றப்பட்டார். வள்ளலார் வகுத்த வழியில் வடலூரில் மீண்டும் வழிபாடு தொடங்கியிருக்கிறது.

Wednesday, July 18, 2007

15 வகையான சாதியசமூகக் கொடுமைகளையும் அக்கிரமங்களையும்

சட்டங்கள், ஆணையங்கள், நடுவர்மன்றங்கள், திட்டங்கள்... அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச் சுரைக்காய்கள்

தாழ்த்தப்பட்டபழங்குடி இன மக்களுக்கு இழைக்கப்படும் 15 வகையான சாதியசமூகக் கொடுமைகளையும் அக்கிரமங்களையும் நுட்பமாகவும் அனுபவப்பூர்வமாகவும் உணர்ந்து தொகுத்து, வன்கொடுமைகள் என்று வரையறுத்து அவற்றுக்குரிய தண்டனைகளையும் பட்டியலிட்டிருக்கிறது வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம்.

அதுமட்டுமல்ல, வேறு எந்த குற்றத் தண்டனைச் சட்டத்திலும் இல்லாதவாறு பின்வரும் பிரிவுகளை வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளடக்கியுள்ளது.

1. தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடி இனத்தவர் ஒருவருக்கு மரணதண்டனை கிடைக்குமாறு, அந்த நோக்கத்தோடு பொய்ச்சாட்சியம் சொல்வதும் அல்லது புனைவதும் ஆயுள் சிறைத் தண்டனையோடு அபராதமும் விதிக்கப்படக்கூடிய குற்றமாகும். அப்படிப்பட்ட பொய்ச் சாட்சியத்தாலோ, புனைவாலோ தாழ்த்தப்பட்ட பழங்குடியினத்தவர் ஒருவர் மரண தண்டனைக்குப் பலியாக நேருமானால் அதைச் செய்தவருக்கும் அதே தண்டனை வழங்கப்படும்.

2. தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியைச் சேர்ந்த ஒருவர் ஏழாண்டோ அதற்கு மேலோ தண்டிக்கப்படுமாறு குற்றம் புரிந்ததாய், அவ்வாறான தண்டனை பெற்றுத்தரும் நோக்கத்தோடு பொய்ச் சாட்சியம் சொல்வதும் அல்லது புனைவதும் அதே அளவு தண்டிக்கப்படும் குற்றமாகும்.

3. தீயினாலோ அல்லது ஏதேனும் வெடிபொருளினாளோ தாழ்த்தப்பட்ட சாதி அல்லது பழங்குடியினத்தவர் ஒருவரின் சொத்துடமைக்குச் சேதம் விளைவிப்பது ஆறு மாதத்துக்கும் குறையாத ஏழாண்டு வரையிலான சிறைத்தண்டனையோடு அபராதத்துக்குரியதாகும்.

4. தீயினாலோ அல்லது ஏதேனும் வெடிபொருளினாலோ தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியினத்தவரின் வழிப்பாட்டிடத்தையோ, வசிப்பிடத்தையோ, உடமைக் காப்பிடத்தையோ, அல்லது அவர் வழக்கமாகப் பயன்படுத்துமிடத்தையோ அழிப்பதும் அல்லது அந்த நோக்கத்துடன் செயல்படுவதும் ஆயுள் தண்டனை மற்றும் அத்துடன் அபராதம் விதிக்கக்கூடிய குற்றமாகும்.

5. தாழ்த்தப்பட்ட சாதி அல்லது பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்பதற்காகவே ஒருவருக்கோ அவருக்குச் சொந்தமான உடமைக்கோ எதிராக பத்தாண்டு அல்லது அதற்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கத்தக்க குற்றம் புரிபவருக்கு ஆயுள் சிறைத்தண்டனையும் அத்துடன் அபராதமும் விதிக்கப்படும்.

6. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் புரிந்துள்ளவரைக் காப்பாற்றும் நோக்குடன் அக்குற்றச் செயலுக்கான சான்று ஆதாரத்தை அழிப்பதும் மற்றும் தெரிந்தே பொய்த் தகவல் தருவதும் அந்தக் குற்றத்துக்கு வகை செய்யப்பட்டுள்ள தண்டனைக்குரிய குற்றமாகும்.

7. அரசு ஊழியராய் இருந்து இந்த வன்கொடுமைச் சட்டப்பிரிவின் கீழ் குற்றமாகிய ஒன்றைப் புரிவாரானால், அவருக்கு ஓராண்டுக்குக் குறையாத, அக்குற்றத்துக்கென வகை செய்யப்பட்டுள்ள தண்டனைக் காலம் வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

இவ்வாறு தாழ்த்தப்பட்ட பழங்குடியினத்தவருக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுக் கூறி தண்டிப்பதற்கு காரணமாக இருப்பதும் குற்றமாகிறது; அவருக்கு எதிரான குற்றங்களை மறைப்பதும், அக்குற்றம் புரிந்தவரைக் காப்பதும், அதற்கான சான்றாதாரத்தை அழிப்பதும் கூட தண்டனைக்குரிய குற்றமாகிறது.

மேலும், இச்சட்டத்தின்படி அரசு ஊழியர் ஆற்ற வேண்டிய கடமைகளைப் புறக்கணிப்பதும், ஆறுமாதத்துக்குக் குறையாத, ஓராண்டு வரையிலான சிறைத் தண்டனைக்குரிய குற்றமாகிறது.

அதுமட்டுமல்ல; இச்சட்டத்தின் கீழ்வரும் குற்றத்தை மறுமுறையோ அதன் பிறகோ, மீண்டும் புரிவது மேலும் கூடுதலாக ஓராண்டிற்குக் குறையாத, அக்குற்றத்துக்கென வகை செய்யப்பட்டுள்ள தண்டனை காலம் வரையிலான சிறைத் தண்டனைக்குரியதாகும்.

இதோடு இந்தியத் தண்டனைச் சட்ட விதிகளின் கீழ்வரும் பிரிவு 34, அத்தியாயங்கள் 3,4,5,6 மற்றும் பிரிவு 149 அத்தியாயம் 7இன் கீழ்வரும் விதிகள், இ.த.ச.வின் நோக்கங்களுக்குப் பொருந்துமாறு தண்டிக்கப்படும்.வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைக் கடுமையாகவும், கறாராகவும், சீரிய முறையிலும் அமல்படுத்துவதற்காக மேலும் பல சிறப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி,
இச்சட்டத்தின் கீழான வழக்குகளைத் துரிதமாக விசாரணை நடத்தி முடிக்கும் பொருட்டு மாநில அரசானது உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதியின் ஒப்புதலைப் பெற்று ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஓர் அமர்வு நீதிமன்றத்தைத் தனிச்சிறப்பு நீதிமன்றமாக அமைத்து அதிகாரபூர்வ அரசிதழில் அறிவிப்பு செய்யவேண்டும்.

ஒவ்வொரு தனிநீதி மன்றத்துக்கும், மாநில அரசானது வன்கொடுமைத் தடுப்பு வழக்குகளை நடத்தும் பொருட்டு தனி அரசு வழக்குரைஞராக ஓர் அரசு வழக்குரைஞரைக் குறிப்பிடலாம் அல்லது ஏழாண்டுக்குக் குறையாமல் வழக்கறிஞராக பணிபுரிபவரை நியமிக்கலாம்.

இச்சட்டத்தின்படி கூட்டு அபராதம் விதிக்கவும் வசூலிக்கவும் 1955ஆம் ஆண்டின் குடிமை உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழான வழிவகைகள் பொருந்தும்.

தனிநீதிமன்றம் பிறப்பித்த ஆணையை எவராவது மீறினால் அவருக்கு ஓராண்டு வரையிலான சிறைத்தண்டனையும் அத்துடன் அபராதமும் விதிக்கப்படும்.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படியான தண்டனையை மேலும் கறாராக்கும் பொருட்டு குற்றம் புரிவோரின் உடமைகளைப் பறிமுதல் செய்வதற்கான வழிவகையும் உள்ளது.

இச்சட்டத்தின்படி குற்றம் புரிந்த ஒருவரைத் தண்டிக்கும்போது, அக்குற்றத்தைச் செய்வதற்கு உதவிய அவரது உடைமை, அசையுஞ் சொத்து, அசையாச் சொத்து போன்றவற்றைப் பறிமுதல் செய்யும்படி ஆணையிடலாம்.

இச்சட்டத்தின்படியான குற்ற வழக்கை விசாரிக்கும் போதே குற்றஞ்சாட்டப்பட்டவரின் அசையுஞ்சொத்து மற்றும் அசையாச் சொத்துக்களைக் கைப்பற்றி வைக்கும்படி ஆணையிடலாம். குற்றஞ்சாட்டப்பட்டவர் தண்டிக்கப்படும்போது விதிக்கப்படும் அபராதத்தை வசூலிக்கத் தேவையானவாறு ஏற்கெனவே கைப்பற்றப்பட்ட சொத்து பறிமுதலுக்குரியதாகும்.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி, குற்றம் புரிபவருக்கு நிதியுதவி அளிப்பதும் குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததாகவே கருதப்படும். வன்கொடுமைக் குற்றம், எதன் தொடர்பாகவும், தொடர்ச்சியாகவும் நிகழ்த்தப்படுகிறதோ, அந்த நோக்கத்துக்காகவே, குறிக்கோளுக்காகவே குற்றமிழைத்ததாகக் கருதப்படும்.

வன்கொடுமைக் குற்றம் நிகழாமல் இருப்பதற்கான முன்நடவடிக்கையாக, குற்றம் புரியக் கூடும் என்று கருதப்படும் ஒருவரை, தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியினர் பகுதிகளின் இருந்து வெளியேற்றவும், இரண்டாண்டு காலம்வரை அவர் அப்பகுதிக்குள் நுழைவதைத் தடை செய்யவும் ஆணையிட முடியும். இவ்வாறான வெளியேற்ற உத்தரவை ஏற்று வெளியேறத் தவறினாலோ, வெளியேற்ற உத்தரவில் குறிப்பிடப்படும் காலத்திற்குள் அப்பகுதியில் நுழைந்தாலோ தனிநீதிமன்றம் அவரைக் கைது செய்யும் ஆணை பிறப்பிக்கலாம்.

மேற்கண்ட விதிகளின்படி ஒரு பகுதியை விட்டு வெளியேற்றப்படும் ஒருவரை அளவெடுக்கவும், படமெடுக்கவும் போலீசுக்கு அதிகாரமளிக்கப்படுகிறது; அதற்கு அவர் எதிர்ப்போ, மறுப்போ காட்டினால் எல்லா வழிமுறைகளையும் பயன்படுத்த சட்டபூர்வ அதிகாரம் உள்ளது; மேலும், அவ்வாறு எதிர்ப்பதும் மறுப்பதும் குற்றமாகும்.
வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தனிநீதிமன்றம் பிறப்பிக்கும் ஆணையை எவராவது மீறினால் ஓராண்டு வரையிலான சிறையும் அபராதமும் விதிக்கப்படும். மேலும், இச்சட்டத்தின்படி குற்றமிழைப்பவர்களுக்கு எதிராகக் கூட்டு அபராதம் விதிக்கவும், வசூலிக்கவும் 1955ஆம் ஆண்டின் குடிமை உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உள்ள வழிவகைகள் இதற்கும் பொருந்தும்.

இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவருக்கு வழக்கமான குற்றவியல் விசாரணை முறைச் சட்டத்தின் பிரிவு 438இல் கூறியுள்ள உரிமைகள் பற்றிய எதுவும் பொருந்தாது. அதோடு இச்சட்டத்தின்படி குற்றவாளியெனத் தீர்ப்பளிக்கப் பெறுகிற ஒருவருக்கு, குற்றவியல் விசாரணை முறைச் சட்டம் பிரிவு 360இன் வழிவகைகளும் 1958ஆம் ஆண்டின் குற்றவாளிகள் நன்னடத்தைச் சட்டத்தின் வழிவகைகளும் பொருந்தாது.

இவைதவிர, வன்கொ டுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும் குற்றங்களில் இருந்து தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களைப் பாதுகாப்பதற்கான பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள போலீசு அதிகாரிகளுக்கும், பல சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் செயல்படவேண்டிய முறைகளும் விசாரணை, கண்காணிப்பு மற்றும் அறிக்கை சமர்ப்பித்தல், மேலதிகாரிகள் மேற்பார்வையிடுதல், வன்கொடுமைகள் நிகழாவண்ணம் பாதுகாப்பதில் அரசு மற்றும் அதிகாரிகளின் கடமைகள், பொறுப்புகள் அதற்கான சிறப்பு அதிகாரங்கள் பற்றியும் இச்சட்டம் வரையறுத்துள்ளது.

தொடரும்

Tuesday, July 17, 2007

மீண்டும் படரும் காவி இருள்

மீண்டும் படரும் காவி இருள்

மும்பை மாநகராட்சித் தேர்தல்களில் சிவசேனாவும்; டெல்லி மாநகராட்சித் தேர்தல் மற்றும் பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க.வும் வெற்றி பெற்றதையடுத்து, அரசியல் அரங்கில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்து மதவெறிக் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகப் பத்திரிகைகள் குறிப்பிட்டன. உத்திரப்பிரதேச தேர்தல் தோல்வியை வைத்து இந்துத்துவ அரசியல் பின்னடைவுக்கு ஆளாகிவிட்டதாகவும் சில அறிஞர்கள் ஆய்வுரை எழுதக்கூடும். இந்த வெற்றி தோல்விகள் எனப்படுபவையெல்லாம் தேர்தல் அரசியல் குறித்த மக்களுடைய கண்ணோட்டத்தைத்தான் வெளிப்படுத்துகின்றனவேயன்றி, இவை இந்து பாசிசக் கும்பலின் பலம் அல்லது பலவீனத்தை மதிப்பிடுவதற்கான அளவுகோல்கள் அல்ல.

தேர்தல் அரசியலின் வெற்றிதோல்விகளுக்கு அப்பால், சித்தாந்த ரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் திரட்டப்பட்ட ஒரு பாசிச அமைப்பாக சங்கப் பரிவாரம் இருக்கிறது. தேர்தலில் தோல்வியடைந்து விட்டால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு அறைக்குள் முடங்கிக் கொண்டு, அறிக்கை அரசியல் நடத்தும் பிற முதலாளித்துவக் கட்சிகளைப் போல அது முடங்கிக் கொள்வதில்லை.
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, பதவிச் சண்டையாலும், உட்கட்சிப் பூசல்களாலும், பாரதிய ஜனதாக் கட்சியே முடங்கி விட்டதாக முதலாளித்துவ ஊடகங்கள் கணித்தன. நாடாளுமன்ற அரசியல் சீரழிவுகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட, கட்டுப்பாடான, ஒழுக்கமான கட்சியாகத் தன்னை சித்தரித்துக் கொள்ள முயன்றதில்தான் பா.ஜ.க. தோல்வி அடைந்ததேயன்றி, அத்தகைய சீரழிவுகள் இப்பாசிச கும்பலின் பலத்தை குன்றச் செய்துவிடவில்லை.

மறுகாலனியாக்கக் கொள்கைகளின் விளைவாக, காங்கிரசு கூட்டணி அரசின் மீது மக்களின் அதிருப்தியும் வெறுப்பும் அதிகரித்துவரும் இன்றைய சூழலில், இத்தகைய மக்கள் பிரச்சினைகள் எதற்காகவும் போராடாத அதேநேரத்தில், தன்னுடைய பார்ப்பன பாசிச நடவடிக்கைகளை சங்கப் பரிவாரம் முடுக்கி விட்டிருக்கிறது. சமீபத்திய பல நிகழ்வுகள் இதனை நிரூபிக்கின்றன.
மதம் மாறிக் காதலிக்கும் நபர்களை காவி வெறியர்கள் கடந்த காலங்களில் ஈவிரக்கமின்றிக் கொன்றொழித்ததற்கு பல உதாரணங்கள் உள்ளன. குஜராத்தில் தனது முசுலீம் கணவனின் உயிரைக் காக்க முனைந்த "குற்றத்திற்காக' நடுவீதியில் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட இந்துப் பெண்ணான கீதா பென்னின் கதை நாம் அறிந்ததுதான்.

சமீபத்தில் ம.பி. மாநிலத் தலைநகர் போபாலில் அத்தகைய அபாயத்திலிருந்து மயிரிழையில் ஒரு காதல் ஜோடி தப்பியது. முசுலீம் மதத்தைச் சேர்ந்த உமரும், இந்து மதத்தைச் சேர்ந்த பிரியங்காவும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். கடுமையான எதிர்ப்பு உருவாகக் கூடும் என அஞ்சி மும்பைக்குத் தப்பியோடி, உமர் தன்னைச் "சுத்திகரிப்பு' சடங்கு செய்து கொண்டு, இந்துவாக மதம் மாற்றி கொண்டார். இருவரும் திருமணமும் செய்து கொண்டனர்.

உடனே இந்த "சர்வதேச'ப் பிரச்சினைக்காக பஜ்ரங் தள் களத்தில் (கலவரத்தில்) இறங்கியது. உமரின் வீட்டிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. போபாலில் உமரின் மீது ஆள்கடத்தல் குற்றம் பதிவு செய்யப்பட்டது. உமரின் அண்ணன் போலீசால் கைது செய்யப்பட்டார். மும்பை உயர்நீதி மன்றத்தில் பாதுகாப்பு கோரி, உமரும், பிரியங்காவும் மனுத் தாக்கல் செய்தனர். அவர்களுக்கு மும்பையிலேயே தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யவும், காவல்துறை பாதுகாப்பு வழங்கவும் மும்பை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.

ஆனால், உமரும், பிரியங்காவும் போபாலுக்குள் நுழையக் கூடாதென்றும், மீறி நுழைந்தால் உயிர் மிஞ்சாதெனவும் பஜ்ரங் தள் அவர்களுக்கு மிரட்டல் விடுத்தது. ஏப்ரல் 12 அன்று போபாலில் இப்பிரச்சினைக்காக பந்த் நடத்தவும் அழைப்பு விடுத்தது. மேலும் இவ்வாறு "ஆசை காட்டி மதமாற்றம் செய்யும்' முசுலீம்களிடமிருந்து இந்துப் பெண்களைக் காப்பதற்காக, "இந்துப் பெண்கள் பாதுகாப்புக் கமிட்டி' என்றொரு அமைப்பையும் உருவாக்கியுள்ளது. ""பெண்கள் ஆண்களோடு இரு சக்கர வண்டிகளில் செல்லும் பொழுது ஹெல்மெட் அணியக் கூடாது. நவீன ஆடைகள் அணியக் கூடாது'' என்று தாலிபான்களை விஞ்சும் விதத்தில் பல "கட்டுப்பாடுகளை'யும் அறிவித்திருக்கிறது, இந்த அமைப்பு. இவற்றையெல்லாம் வெளிக் கொணர்ந்து அம்பலப்படுத்திய ஸ்டார் நியூஸ் தொலைக்காட்சி நிறுவனத்தின் மும்பை அலுவலகத்தையும் தாக்கியிருக்கிறது, இந்து பாசிச குண்டர் படை.

1998ஆம் ஆண்டு ஒரிசாவிலுள்ள டாங்ஸ் மாவட்டத்தில் கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் எனும் பாதிரியார் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டதும், குஜராத்தில் பைபிள்கள் எரிக்கப்பட்டதும், தேவாலயங்கள் தாக்கப்பட்டதும், கன்னியாஸ்திரீகள் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டதும் பழைய கதைகள் அல்ல. அன்று பா.ஜ.க. ஆட்சியிலிருந்த காரணத்தினால் மட்டும் அவை நடந்துவிடவுமில்லை.

ஏப்ரல் 29ஆம் தேதியன்று ஜெய்ப்பூரில் வால்ட்டர் மசி எனும் பாதிரியாரின் வீடு புகுந்து நிகழ்த்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல் தொலைக்காட்சிகளில் வெளிவந்து வடமாநிலங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அத்தாக்குதலை சந்தர்ப்பவசமாக படமாக்கிய ஆஜ்தக் செய்தி நிறுவனத்தின் நிரூபர் சரத்குமார், ""அப்பாதிரியாரின் பரிதாபக் கதறல் என் காதுகளில் இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இப்படியொரு குரூரத்தை, உதவிக்கு ஆளில்லாத ஒற்றை மனிதனை இத்தனை பேர் ஈவிரக்கமின்றித் தாக்கியதை இது வரை நான் கண்டதேயில்லை'' என மனமுடைந்து கூறினார்.

ஊடகங்களில் வெளிவந்த இச்சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், மே 6ஆம் தேதியன்று மகாராஷ்டிராவிலுள்ள கோலாப்பூர் மாவட்டத்தின் விசுவ இந்து பரிசத் குண்டர்களால் பட்டப் பகலில் நடுவீதியில் இரு கிறித்தவ நிறுவன ஊழியர்கள் அடித்து நொறுக்கப்பட்டு, தெருத்தெருவாக இழுத்துச் செல்லப்பட்டனர். அடித்தவர்களில் ஒருவரைக் கூடக் கைது செய்யாத போலீசு, மதமாற்றம் செய்ய முயன்ற "குற்றத்திற்காக' குற்றுயிராகக் கிடந்த இருவரையும் கைது செய்தது.

அதேநாளில் கர்நாடகாவில் கோலார் தங்க வயலுக்கு அருகிலுள்ள நரசப்பூரில் வழிபாட்டை முடித்துக் கொண்டு தேவாலயங்களிலிருந்து வெளியில் வந்த கிறித்தவர்கள் தாக்கப்பட்டனர். பத்து நாட்களில் தேவாலயம் மூடப்பட வேண்டுமென ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் எச்சரிக்கை விடுத்தனர். மே 3ஆம் தேதியன்று சத்திஸ்கரில் பிரார்த்தனைக்காக கூடிய கிறித்தவர்களை வீடு புகுந்து தாக்கிய பஜ்ரங் தள் வெறியர்கள், அவர்களது கை, கால்களை முறித்தனர். மே 1ஆம் தேதியன்று ஆக்ராவில் ஒரு கிறித்தவப் பள்ளி தாக்கப்பட்டது.

···

ஆர்.எஸ்.எஸ்.இன் ""கண்காணிப்பு'' இப்பொழுது கல்விக் கூடங்களுக்குள்ளும் நுழைந்துவிட்டது. மே 9ஆம் தேதியன்று குஜராத் மாநிலம் வதோதராவிலுள்ள மகாராஜா சாயாஜி ராவ் பல்கலைக் கழகத்தின் நுண்கலைப் பிரிவில் மாணவர்களின் ஓவியங்கள் ஆண்டுத் தேர்விற்காக ஆசிரியர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. உள்ளூர் பி.ஜே.பி. குண்டன் நீரஜ் ஜெயின் என்பவனுடைய தலைமையில் அங்கு வந்த ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள், மாணவர் சந்திரமோகன் வரைந்த ஓவியங்கள் இந்துக் கடவுள்களையும், இயேசுவையும் அவமதிக்கும் விதமாக இருப்பதாகக் கூறி அவரைத் தாக்கினர்.

இங்கேயும் தாக்கியவர்கள் கைது செய்யப்படவில்லை. மாறாக தாக்கப்பட்ட சந்திரமோகன் "மத விரோதத்தைத் தூண்டினார்' எனக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டார். ஆர்.எஸ்.எஸ். ஆதரவு துணைவேந்தர் இத்தாக்குதல் பற்றி மௌனம் சாதிக்க, மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். போராட்டங்களுக்கு போலீசு அனுமதி மறுக்கவே, மாணவர்கள் இந்துப் பாசிசத்தை அம்பலப்படுத்துமுகமாக காமரசத்தை வெளிப்படுத்தும் பழங்கால இந்திய ஓவியங்களின் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்தனர்.

சந்திரமோகன் தாக்கப்படும்போது அமைதி காத்த துணைவேந்தர், இப்போது சுறுசுறுப்பாகச் செயல்பட்டார். அக்கண்காட்சியை மூட உத்தரவிட்டார். துணைவேந்தரின் நடவடிக்கையை மாணவர்கள் எதிர்த்தனர். மாணவர்களை ஆதரித்த குற்றத்துக்காக கல்லூரி முதல்வர் சிவாஜி ராவ் பணிக்கர் மே 12ஆம் தேதியன்று பணிநீக்கம் செய்யப்பட்டார். இக்கண்காட்சிக்கு வந்த பி.ஜே.பி. உறுப்பினர்கள், ""உங்களுடைய நிர்வாணப் படங்களை நாங்கள் மாட்டுவோம்'' என்று கல்லூரி மாணவிகளை மிரட்டினர். தற்பொழுது பல்கலைக்கழகத்தின் கலை வரலாற்றுத் துறையே இழுத்து மூடப்பட்டு விட்டது. கைது செய்யப்பட்ட மாணவர் சந்திரமோகன், நாடு தழுவிய எதிர்ப்பைத் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்ததைப் போல உத்தரபிரதேச தேர்தல் பிரச்சாரத்திற்காக பாரதிய ஜனதா ஒரு குறுந்தகடை வெளியிட்டது. சங்கப் பரிவாரம் நடத்திவரும் அருவறுக்கத்தக்க முசுலீம் எதிர்ப்பு வெறி பிரச்சாரத்தின் அனைத்து முடை நாற்றமும் "பாரதத்தின் குரல்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கும் இக்குறுந்தகட்டில் நாடக வடிவில் பச்சையாகவே பதிவாகியிருக்கிறது.

""இந்துக்கள் இரண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு சும்மாயிருப்பார்கள். ஆனால், முசுலீம்கள் ஐந்து கல்யாணம் பண்ணிக் கொண்டு 35 நாய்களைப் பெற்றெடுத்து நாட்டையே முசுலீம் நாடாக்கி விடுவார்கள்.'' (முசுலீம்கள் கூறுவது போன்ற காட்சியில்) ""ஹா! ஹா! ஹா! இந்துப் பெண்கள் நம்மிடம் சிக்கிக் கொண்டு திணறும் பொழுது கத்திக் கூச்சலிடுவார்கள். ஆனால் அவர்களைக் காப்பாற்ற யாரும் இல்லை. நாம் மிகுந்த மகிழ்ச்சியடைவோம். ஹா! ஹா! ஹா''""பி.ஜே.பி.க்கு ஓட்டுப் போடவில்லையென்றால் நீங்கள் வருத்தப்பட வேண்டியிருக்கும். இந்த நாடு அடிமையாகி விடும். உங்கள் நெற்றியில் உள்ள திலகங்களை அழித்துவிட்டு நீங்கள் தாடி வளர்க்க வேண்டியிருக்கும்.''

தேர்தலுக்கு முன் இந்தக் குறுந்தகடுப் பிரச்சினையையொட்டி பயங்கரமாகச் சண்டமாருதம் செய்த தேர்தல் ஆணையம், இதற்காக எந்தத் தலைவரையும் கிரிமினல் வழக்கில் கைது செய்யவில்லை என்பதையும் காங்கிரசு உள்ளிட்ட ஓட்டுக் கட்சிகள் அனைத்தும் ஆரம்பகாலக் கூச்சலுக்குப் பின் மூச்சு விடவும் இல்லை என்பதையும் நாம் இங்கே நினைவிற் கொள்ளவேண்டும்.···குஜராத் கலவரத்திற்குப் பிறகு நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற மோடி, அங்கே ஒரு "ராம ராஜ்ஜியத்தை' நிறுவி விட்டான் என்றால் அது மிகையல்ல. குஜராத் கலவரத்தில் தமது உடைமைகளையும், உறவினர்களையும் இழந்து விரட்டியடிக்கப்பட்ட முசுலீம்கள் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு இன்றும் தங்கள் வீடுகளுக்கு திரும்பச் செல்ல முடியவில்லை. இந்துக் குடியிருப்புகளும், முசுலீம் சேரிகளும் குஜராத்தில் தனித்தனித் தீவுகளாக பிரிக்கப்பட்டு விட்டன. படுகொலைகளுக்காக குற்றம் சாட்டப்பட்டவர்கள் அங்கே வெளிப்படையாக உலவுகிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களும் வழக்குத் தொடுத்தவர்களும் பதுங்கி வாழ்கிறார்கள். பாபு பஜ்ரங்கி, நீரஜ் ஜெயின் போன்ற காலிகள் சட்டத்திற்கு அப்பாற்பட்ட சமூக, கலாச்சாரக் காவலர்களாக உருவெடுத்திருக்கிறார்கள். குஜராத் கலவரம் குறித்து பொதுவான மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் எடுக்கப்பட்ட "பர்ஜானியா' என்ற திரைப்படத்தைக்கூட குஜராத்தில் வெளியிட முடியவில்லை.

உத்திரப் பிரதேசத்தில் பா.ஜ.க. வெளியிட்ட குறுந்தகட்டில் ஒரு வசனம் வருகிறது. ""தான் இந்துவென்று அழைத்துக் கொள்ளவே அஞ்சவும், நம்மை ஆத்மராமென்றோ, ராதாகிருஷ்ணன் என்றோ, சோகன்லால் என்றோ, மோகன்லால் என்றோ அழைத்துக் கொள்ளவே அஞ்சும் நாள் வெகு தொலைவில் இல்லை. நாம் எங்கு பார்த்தாலும் அப்பாஸ்களும், நக்விக்களும், ரிஜ்விக்களும், மௌல்விக்களும் மட்டுமே இருப்பார்கள்.''

எதிர்காலத்தில் நடைபெறப் போவதாக ஊதிப் பெருக்கப்படும் இந்த கோயபல்சுகளின் பொய் பிரச்சாரம் நேரெதிரான விதத்தில் குஜராத்தில் கண்கூடாகக் காணக் கிடக்கிறது. இன்று அங்கே ஜீகன்புராவில் வசிக்கும் முசுலீம்கள் நாராயண்புரா எனும் இந்துப் பகுதிக்கு வேலைக்குச் செல்வதில்லை. செல்ல நேர்ந்தாலும், தாங்கள் முசுலீம் என்பதை சொல்லிக் கொள்வதில்லை. நாளை இந்நாடே இவர்களின் குரு கோல்வால்கர் கண்ட ஆரியக் கனவாக, மோடி நிதர்சனமாக்கிய குஜராத்தாக மாறுமேயானால், அங்கே முசுலீம் என்று மட்டுமல்ல, பகுத்தறிவாளன், சாதி மறுப்பாளன், மொழி உணர்வாளன், கம்யூனிஸ்டு என்று யாரும் சொல்லிக் கொள்ள முடியாது. வீதிதோறும் பஜ்ரங்கிகளும், ரிதம்பராக்களும் காந்தி கண்ட ராமராஜ்ஜியத்தின் தருமகர்த்தாக்களாக நம் வாழ்வின் ஒவ்வொரு அங்குலத்தையும் அதிகாரம் செய்வார்கள்.

மறுகாலனியாக்கக் கொள்கைகளின் கோரத் தாக்குதல் மக்கள் மத்தியில் தோற்றுவித்து வரும் அதிருப்தி அலையை விழுங்கிக் கொள்வதற்கு பார்ப்பன பாசிசம் தம் பதுங்கு குழியிலிருந்து மேலெழும்புகிறது. மக்களின் வெறுப்பை பா.ஜ.க. அறுவடை செய்து கொண்டு ஆட்சி அமைக்குமானால், அந்த ஆட்சி இந்துத்துவத்தின் இன்னுமொரு ஆட்சி என்பதைவிட, குஜராத்தைப் போல, நாடே இந்து ராஷ்டிரத்தின் பரிசோதனைச் சாலையாக மாற்றப்படும் ஆட்சியாக அமையும்.

அழகு

Monday, July 16, 2007

குடும்பங்களின் அதிகாரங்கள் வீங்கி வெம்பிய வடிவில், சமூகத்தின் சமூகத் தன்மையை சிதைகின்றது

குடும்பங்களின் அதிகாரங்கள் வீங்கி வெம்பிய வடிவில், சமூகத்தின் சமூகத் தன்மையை சிதைகின்றது

பி.இரயாகரன்
16.07.2007

குடும்ப அதிகாரம் என்பது அவசியமான எல்லைக்குள் மட்டுமானது. இது பரஸ்பரம் இணங்கியதாக, ஜனநாயகப் பண்பு கொண்டதாக அமைய வேண்டும். அதிகாரம்; என்பது சமூகபொருளாதார உறவை குறைந்தபட்சம் உள்ளார்ந்த சமூக அடிப்படையில் புரிந்த எல்லைக்குள் தான், அது வெற்றிகரமாக குடும்ப உறுப்புகளால் இணக்கமாக எற்றுக்கொள்ளப்படும்.

கும்பத்தின் அதிகாரத்தை பெண் பெறுகின்ற போது, அதை அனைவரும் எற்றுக்கொள்ளும் வகையில் கையாளும் அறிவுபூர்மான சமூக நடைமுறை இருக்கவேண்டும். அவசிமான அதிகாரத்தின் எல்லையை பெண் தெரிந்து இருக்கவேண்டும்;. இந்த வகையில் குடும்பத்தை பொறுமையான விட்டுக்கொடுப்புடன், புரிந்துணர்வுடன் அதைக் கையாளவேண்டும்;. எதையும் அறிவியல் ப+ர்வமாக விளக்கி, அதை எற்கவைக்கும் வகையில் அனுகவேண்டும்.

ஆனால் குடும்பங்களில் அப்படி நடப்பதில்லை. சட்டுப்பூட்டான அதிரடித் தீர்ப்புகள், முடிவுகள், உத்தரவுகள், அதிரடியான பதில்கள், குடும்பத்தின் இணக்கமான இசைந்த சமூக வாழ்வியலை எற்படுத்துவதில்லை. ஏன் இதை அப்பெண் உணருவதுமில்லை.

கணவன் என்ற உதாரணத்துக்கு அப்பால், குழந்தையுடனான பெண்ணின் உறவு இதை நன்கு விளக்குகின்றது. பெரும்பாலன குழந்தைகள் தாயின் சொல்லை கேட்காத நிலைக்குள் வாழ்கின்ற சூழலை, பெண் தானாகவே எற்படுத்திவிடுகின்றாள். உண்மையில் பெண் அல்லது தாய் தனது வார்த்தைக்குரிய சமூக (குடும்ப) மதிப்பை தானகவே வலிந்து இழக்கவைக்கின்ற வகையில், பெண்ணின் மொழி வன்முறை காணப்படுகின்றது. வார்த்தைகள் சமூக மதிப்புமிக்கன என்பது, அது மதிக்கப்பட வேண்டும் என்ற சமூக உணர்வின்றி, அவை தாறுமாறாக அள்ளிக் கொட்டப்படுகின்றது. இதுவே எமது பெண்களின் பொதுவானதும், துயரமானதுமான அனுகுமுiறாகும்.

குழந்தையுடனான தாயின் பாசம், பரிவு என தாய்மைக்குரிய சமூக மதிப்பீடுகள் அனைத்தும் தாயிடம் இருந்தும், திட்டுதல் நச்சரித்தல், பிழையை சாத கண்டுபிடித்தல் போன்றவையே பெண்ணின் மறுபக்கதிலான பொதுவான அனுகுமுறையாகும். சமூக ரீதியான வாழ்வியல் அழுத்தங்கள் இதைத் துண்டுகின்ற போதும், இதற்கு தான் பலியாவதையே பெண் அனுமதிக்கின்றாள்.

வெளி உலகுக்கு பகட்டாக காட்டி வாழமுனையும் பெண், வெளி உலகுடன் நளினமாக பண்பாக கதைக்க முனையும் பெண், சொந்த வீட்டில் அதை கையாள்வது கிடையாது. கணவனுடன் மட்டுமல்ல, குழந்தையுடன், ஏன் சொந்த பெற்றோருடனும், மொழி வன்முறையைக் கையாளுகின்றாள்;. அல்லது விடப்பிடியான வகையில் அழுது புலம்பியும், சினந்து கொட்டி சாதிக்கின்றாள்;. இணக்கமான இணங்கிய அறிவியல் தன்மை என்பது அனுகுமுறை ரீதியாகக் கூட அனுகுவது கிடையாது.

குடும்பத்தில் இழிவான வகையில், பண்பற்ற வகையில் பெண்களின் மொழியாடல் மற்றும் நடத்தைகள் உள்ளது. குடும்ப சூழலையே தனக்கு எதிரியாக கருதுகின்ற போக்கு, பெண்ணின் பண்பாகி விடுகின்றது. தனக்கு தவறானது எனக் கருதும் ஒரு விடையத்தை (உதாரணத்துக்கு குழந்தையின் சிறிய நடத்தை) விட்டுக்கொடுத்தல், கண்டு காணமல் போதல் என்பது, அறவே அற்றுப் போய்விடுகின்றது. பொறுமை இழந்து கொந்தளிக்கின்ற குடுகுடு வாழ்க்கை முறையே, பல பெண்களின் பொதுத் தன்மையாகி விடுகின்றது. சதா புறுபுறுத்துக்கொண்டு, திட்டிக்கொண்டும், கடுகடுத்த முகத்துடன், பல பெண்கள் தாமாகவே தம்மைத் தாம் சிதைகின்றனர். இயல்பாக அன்பாக குடும்பத்தின் எந்த உறுப்பினருடனும் கதைக்க கூட அவளால் முடிவதிலலை. அதிகாரமும், வெட்டொன்று துண்டொன்றாக எரிந்து விழ்வதே, குழந்தைகளுடனான பெண்ணின் பொதுவான அனுகுமுறையாகிவிடுகின்றது. குழந்தையுடனான பெண்ணின் அனுகுமுறை, குழந்தைக்கும் பெண்ணுக்கும் இடையிலான இடைவெளியை அதிகரிக்க வைக்கின்றது. குழந்தை தாயின் சொல்லைக் கேட்பதையே மறுக்கின்றது அல்லது அலட்சியப்படுத்துகின்றது. தாயின் மனநிலைக்கு குழந்தை பழக்கப்பட்டு, அந்த பெண்ணின் உணர்ச்சியை செயலற்றதாகின்றது. தாய்யின் உணர்ச்சி என்பது, அhத்தமற்றதாகி விடுகின்றது. இதனால் தாய் மேலும் மூhக்கமாகிவிடுகின்றாள். இப்படி அவளே தனது உணாச்சி, உணர்வுகளை அர்த்தமிழந்து போகச் செய்கின்றாள்.

குழந்தையின் வயதும் அறிவும் அதிகரிக்க, அது பாரிய குடும்ப பிளவாகின்றது. பொதுவாகவே தாயின் சொல் கேட்கப்படுவது, அதன்படி நடப்பது என்பது அரிதாகின்றது. என் அவை பொதுவாகவே அலட்சியப்படுத்தப்படுகின்றது. வாத்ததைகளும் அதிகாரங்களும் அர்த்தமற்று, அவை பழக்கப்பட்ட ஒன்றாகிவிடுகின்றது. சந்தர்ப்பம், சூழல் சார்ந்து பாரிய எதிர்வினை அம்சங்களைக் கூட, குழந்தை தாய்க்கு எதிராக எற்படுத்திவிடுகின்றனர்.

மறுபக்கத்தில் இதே தாய் தனது கணவன் பற்றி சாத திட்டி தீர்ப்பது நிகழ்கின்றது. குழந்தைக்கு முன்னால் கூட தனது கணவன் வக்கற்றவனாக காட்டுகின்ற பெண்ணின் அனுகுமுறை, தந்தைக்குரிய மதிப்பை குழந்தை மறுப்பதை மிக இலகுவாக்கின்றது. தந்தையை மறுப்பதை, தாயைக்கொண்டு சாதிக்கும் எதிர்க் கலையை குழந்தை கற்றுக்கொள்கின்றது. தாய் மறுப்பதை தந்தையைக் கொண்டு சாதிக்கும் நுட்பத்தை தெரிந்து கொள்கின்றது. இதையும், இந்த நடத்தையும் உள்ளடங்கியதையே பெரும்பாலனவர்கள் ஒரு குடும்பம் என்கின்றனர்.

இப்படி பிழையான வடிவத்தில், பிழையான குடும்ப வடிவத்தில் குழந்தை வளர்க்கப்படுகின்றது. குடும்பத்தில் தந்தையை அல்லத தாயை மறுப்பது என்பது இலகுவான ஒன்றாகிவிடுன்றது. தந்தை பற்றி தாயின் மனநிலை, குழந்தை தனது தாய் மூலமே தந்தைக்கு எதிரான உணர்வைப் பெற்றுவிடுகின்றது. உண்மையில் குழந்தைகள் தாய் தந்தை கட்டுப்பாட்டுக்கு அப்பற்பட்ட ஒரு உலகத்தில் வாழ்கின்ற துரதிஸ்ட்டமே, பெரும்பாலன குடும்பங்களில் காணப்படுகின்றது. குழந்தையின் வயது அதிகரிக்க, அறிவு வளரவளர இது வெடிப்பாக்கி வெளிப்படுகின்றது.

இது குழந்தைக்கு மட்டுமல்ல பெரும்பாலன கணவன்மாரின் நிலை கூட இதுதான். பெண் சாத நச்சரிக்கும் முரண்பாடு, அதில் இருந்து தப்ப ஆண்கள் குடும்பதில் இருந்தும் ஒதுங்கிக் கொள்கின்றான் அல்லது போதையில் மயங்கிக் கிடக்கின்றனர். இது ஒருபுறம். மறுபக்கம் ஆண் அதிக நேரம் வேலைக்குச் செல்லல் என்பதும், ஆணை குடும்பத்துக்கு வெளியில் அன்னியமாக்கின்றது. வேலைக்குச் செல்லும் பெண்கள் கூட குழந்தையுடன அன்னியமாதலை இதன் மூலமும் அடைகின்றாள்.

ஆண், பெண் முரண்பாட்டை பரஸ்;பரம் புரிந்துணர்வுடன் அனுகாது, மொழி வன்முறைக்குள் அனுகும் போது, அதுவே உடல் வன்முறையாகவும் மாறிவிடுகின்றது. இப்படி குடும்பத்தில் செயலற்ற உறுப்புகளையும் உருவாக்கிவிடுகின்றது. ஒருவரே எல்லாமாகிவிடுகின்றது. குடும்பத்தில் பொம்மை உறுப்புகள் இருப்பது இப்படித்தான். குடும்பத்தினுள் பாரிய அன்னியமாதலை உருவாக்கிவிடுன்றது. தமக்குள் மட்டுமல்ல, குழந்தை முதல் தனது சொந்த தாய் தந்தை என அனைத்துக் கூறையும் அன்னியமாக்கின்றது.

முதலாளித்துவ அமைப்பு உருவாக்கி வைத்துள்ள சட்டபடியான நிர்வாக ஒழுங்குக்குள் குடும்பங்கள் நிலைப்பதால், குடும்பத்தின் சட்டரீதியான குடும்பக் கடமைகளை பெரும்பாலன பெண்கள் கையாளுகின்றனர். இவைகளை கையாளும் பெண், இயல்பாக வீட்டின் அதிகாரத்தை, வீட்டின் அதிகாரமாகி விடுகின்றாள். ஆணின் ஆணாதிக்க அமைப்பு சார்ந்த அதிகாரம் என்பது, பண்பாடு காலச்சாரம் சார்ந்த சமூக கூறு சார்ந்தாக குறுகிவிடுகின்றது. வீட்டின் நிர்வாகம் முதலாக, ஏன் ஆணின் உழைப்பை கட்டுப்படுத்துவது வரை பெண் தான் தீர்மானிக்கின்றாள். குடும்பம் என்ற எல்லைக்குள், இவை இணக்கமான அவசியமான எலைக்குள் நிர்வாகிப்படுவதில்லை.

பெண் பெறும் அதிகாரம் கணவனை மறுக்க துண்டுதலாகின்றது. பெண் குடும்பத்தின் நிர்வாகியாகின்றாள். ஒருவிதத்தில் சமூகத்துடனான பெண்ணின் செயல்பாடு அதிகரிக்கின்றது. மறுபக்கதில் குடும்பத்தின் மகிழ்ச்சியை இழப்பதும் இங்கு இருந்து தொடங்குகின்றது. அதிகாரம் என்பது சரியாக அவசிமாக கையாள்படுவதில்லை. எமது போராட்ட வரலாறு, ராக்கிங், அரச நிர்வாகங்கள் எங்கும் இதை நாம் காணமுடியும்;. அறிவியல்பூர்வமற்ற அதிகாரம், வன்முறை கொண்ட சிதைவை உருவாக்கின்றது. பெண்கள் பெற்ற அதிகாரம் என்பது, பெரும்பாலும் சரியாக கையாளப்படுவது கிடையாது. சமூகத்தை அல்லது குடும்;பத்தை இணக்கபூர்வமாக இணங்கி தலைமை தாங்கத் தெரியாத எல்லையில், இந்த அதிகாரங்கள் தன்னை மட்டுமல்ல தன்னைச் சுற்றி உள்ளவர்களின் மகிழ்சியையும் கூட சிதைத்து விடுகின்றனர்.

பெரும்பாலன குடும்பங்களின் ஆண்கள் வெறுமையாக தலையாட்டும் பொம்மையாக்கப்பட்டுள்ளனர். மறுபக்கத்தில் சிறியளவில் பெண்கள் இப்படி உள்ளனர். தலையாட்டுவது அல்லது இனங்கிப் போவது என்பது, மகிழ்ச்சியான குடும்பத்தை உருவாhக்குமென்றால் கூட பரவயில்லை. மாறாக வெடித்து சிதறம் புறுபுப்புடன், மகிழ்ச்சியை இழந்த ஒரு அதிகார கொண்ட உத்தரவுக் கும்பங்களாகி விடுகின்றது.

சரி பிழைகளை, பரஸ்பரம் அறிவியல் ப+ர்வமாக கதைத்து தீர்ப்பது கிடையாது. ஒரு விடையம் மீதான அறிவின் அடிப்படையில் விவாதிக்கவோ, அதன் அடிப்படையில ஆலோசனை செய்வதோ கிடையாது. எப்போதும் மோசமான ஒருநிலை அடையும் போதுதான், பெண் ஆணிடம் அதை எடுத்துச் செல்லுகின்றாள்;. உண்மையில் அடுத்து என்ன செய்வது என்ற தெரியாத ஒரு நிலையில் இது நிகழ்கின்றது. அதுவரை மணைவி தான் நினைத்ததை மட்டும் செய்வது தான் நிகழ்கின்றது.

மனைவி தான் எடுத்த முடிவையே எற்றுக்கொள்ள வேண்டும் என்று வி;ப்பிடியான அழுங்கு பிடியான அனுகுமுறை காணப்படுகின்றது. இதை மறுப்பது, விவாதிப்பது, மற்றவரை தனக்கு எதிரானதாக காட்ட போதுமான சண்டைக்கு காரணமாகி விடுகின்றது. பெரும்பான ஆண்கள் சண்டைக்கு பயந்து மௌனமாக இணங்கிவிடுகின்றனர் அல்லது கண்டு காணமல் ஓதுங்கிவிடுகின்றனர்.

இப்படி குடும்பத்தில் சாத சண்டையை உருவாக்குவதில் பெண்களின் பங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகவே மாறியுள்ளது. குறிப்பாக குடும்பங்களின் அதிகாரங்களையும், முடிவுகளையும் தீhமானிக்கும் வகையில், பெண்கள், அதை மொழி வன்முறை மூலமும் சாதிக்கின்றாள். விடப்பிடியாக அழுது சாதிக்கும் குழந்தை போல், பெண் சினந்தும், அழுதும், மொழி வன்முறை மூலமும் சாதிக்கும் சூழலே குடும்பங்களில் பெரும்பாலும் காணப்படுகின்றது. மன அழுத்ததுக்கு உள்ளாகும் ஆண் மற்றும் குழந்தைகள் அதற்கு வி;ட்டுகொடுக்கின்றனர். எதையும் விவாதித்து எற்புடையதை எற்கும் மனப்பங்க்கும் என்பது, எமது வன்முறை சமுதாயத்தில் அறவே கிடையாது. இது குடும்ப மகிழ்ச்சியை சிதைப்பதில், குழப்பதில் ஆழ்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த விவாதம் சர்ச்சைக்குரியது, ஆனால் அவசியமான அடிப்படையான விவாதம்.

உண்மையில் நிர்வாக ரீதியாக, பொருளாதார ரீதியாக குடும்பத்தின் அதிகாரத்தை எடுத்துக்கொண்ட பெண், மரபான ஆணாதிக்க பண்பாட்டு கலச்சார கூறுக்குள் அடிமையாக இருப்பது, முரண்நிலையின் இரு துருவங்களாக்கின்றது. பண்பாடும் கலச்சாரமும் ஆணாதிக்க நிலப்பிரபுத்துவ எல்லைக்குள் ஆதிக்கம் செலுத்துவதால், குடும்பத்தில் வழிநாடத்தும் பண்பை குழப்புகின்றது. பெண் அதிகாரமே குடும்பத்தில் ஆணையாக்கப்படுகின்ற அதேநேரம், ஆணாதிக்க நிலப்பிரபுத்துவ அமைப்பில் பெண் பற்றி ஆணாதிக்க நிலைக்குரிய சலுகையை அவள் கோருகின்றாள். முரண்நிலையில் இரு துருவங்கள், ஒரே நேரத்தில் எதிர்தெதிராகவே பிரதிபலிக்கின்றது.
மறுபக்கத்தில் நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க அதிகாரம் சார்ந்த பண்பாட்டு கலச்சார ஆண் சார்ந்த ஒழுக்கவியலை, பெண்ணல் மீற முடிவதில்லை. இதனால் வெளிப்படையாக சமூகத்தின் முன் நல்ல நடிகையாக நடிக்க முனைகின்றாள்;. நிலப்பிரபுத்துவ பண்பாடு கொண்டவளாக, ஊர் உலகம் அதிராது கணவனுக்கு அடக்க ஒடுக்கமாக வாழ்வதாக காட்டுகின்ற படிமத்தை தக்கவைக்க முனைகின்றாள்;. ஆனால் வீட்டிலோ அது எப்போதும் கலைந்து கிடகின்றது. ஆணுக்கு அடக்க ஒடுக்கமாக வாழ்வதாக காட்டுகின்ற போலியான பெண்ணின் நடிப்புக்கு அப்பால், கணவனுக்கு மதிப்பே கொடுக்கப்படுவதில்லை. விவாவதமற்ற முடிவுகள் தான் பெண்ணால் திணிகப்படுகின்றது.

இது எப்படி எந்தத்தளத்தில் தொடங்குகின்றது என்றால் நுகர்வுக் கலச்சாரமே. இந்த இடத்தில் நுகர்வுக் கலாச்சாரம், ஆணை விட பெண்ணின் பண்பாட்டுத் தளத்தில் அதிகளவில் ஆதிகம் செலுத்தும் கூறாகிவிடுகின்றது. நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க அமைப்பில் பெண் அழகு பதுமையாக, கணவனுக்கு அலங்கரித்து காட்டினாள். இன்று பெண் கணவனுக்கு அல்ல, உலகத்துக்கே அதைக் காட்ட விரும்புகின்றாள். இப்படி முதலாளித்துவ நுகர்வுக் கலாச்சாரத்துக்குள், பெண்ணின் சிந்தனையும் நடைமுறையும் உள்ளது. இப்படி குடும்பத்தை அதற்குள் திணிக்க முனைகின்றாள்;. மறுபக்கத்தில் பெண் நம்பும் ஆணாதிக்க நிலப்பிரபுத்துவ முறைக்கு இது முரணாக உள்ளது. இரண்டு தளத்தில் காலை வைத்தபடி, உருவாட முனைகின்றாள்.

ஒரு பெண் ஒரு மொடலிஸ்ராகவே அவளை அறியாது வாழ விரும்புகின்;றான். நேரத்துக்கு நேரம் நடை உடை முதல் ஒரே நிறத்திலான அணிகலங்கள் என்று, பலதளத்தில் பகட்டாகவே அதையே வாழ்கை முறையாக உருவாக்க முனைகின்றாள். ஒரு சீமாட்டியாக, கணவனை சீமானாக மாற்ற முனைகின்றாள்;. வீட்டுப் பொருட்களை அடிக்கடி மாற்றுவது, வீட்டை அடிக்கடி மாற்றி அமைப்பது, புது வண்ணம் பூசுவது, பொருட்களை மாற்றி புதிய பொருட்களை வங்குவது என்று சாத மண்டை போட்டு உடைகின்றாள். எப்படி சீமாட்டியாக இருப்பது என்று கனவு வாழ்வில், தனது மகிழ்ச்சியாக சொந்த வாழ்கையையே வாழாது சொதப்புகின்றாள்.

எல்லாவற்றையும் மாற்றவும், அழகுபடுத்தவும் முனைகின்ற மனைவி, அதை தனது அதிகாரம் மற்றும் நுகர்வுப் பொருளாதாhம் மூலம் திருத்தியற்ற வகையில் சாதிக்கின்றாள். இந்த நுகர்வு உள்ளடகத்தில் குடும்ப சூழலை மாற்றுகின்ற அல்லது மாற்ற முனைகின்ற பெண்ணின் முரண்பாடு எங்கே உருவாகின்றது என்றால், நுகர்வின் அடிப்படையில் தனது கணவனை மாற்ற முடிவதில்லை என்பதில் தான். அதாவது பாலியல் ரீதியாக அடிக்கடி ஆணை மாறி, பொருட்களைப் டீபால் நுகர முடிவதில்லை. எல்லாவற்றையும் அதிரடியாக காலத்துக்கு காலம் மாற்றி அமைப்பதையே தனது வாழ்வாக கொண்ட பெரும்பான்மையான பெண்கள், தனது கணவனை அப்படி மாற்ற முடிவதில்லை. பாலியல் நுகர்வில் கையாளும் கள்ள உறவு, இதை தீர்ப்பதில்லை.

இது பெண்ணைப் பொறுத்த வரையில், வெளித்தெரியாத பாரிய ஒரு முரண்பாடு. பெண்ணுக்குள்ளான கணவன் பற்றி மதிப்பிட்டில், இந்த நுகர்வுக் கூறே, அதை பற்றிய அபிராயமாகின்றது. கணவனை பொருட்களைப் போல், நிலப்பிரபுத்துவ உள்ளடகத்தில் வெளிவுலக்காக நடித்து வாழும் பெண்களால் மாற்றமுடிவதில்லை. உண்மையில் குழந்தைகளைச் சரி, பெற்றேரைச் சரி, கணவனைச் சரி, வெறும் பொம்மைகளாக, பொருட்களை போல் வைத்தவைத்த இடத்தில் இருக்க வேண்டும் என்றே பெண் விரும்புகின்றாள். வீட்டு அழகியல் பற்றிய பெண்ணின் கோட்பாடே இதுதான். இப்படி பொருள் பற்றி உள்ளார்ந்த மனப்பாங்கு. ஆகவே உயிர்வுள்ள குடும்ப அசைவுகளை வெறுக்கின்றது. உயிர்ருள்ள செயல்பாடுகள் தனக்கு எதிரானதாக, அழகியலற்றதாக கருதுகின்றனார். நுகர்வு சார்ந்து வெளிப்படும் சிந்தனை முறை, அனைத்தை மாற்றவும் நுகர்வும் இழிவாடவும் கோருகின்றது.
இதே சிந்தாந்தம் கணவனை மாற்றவும், பாலியல் நுகர்வை கணவனுக்கு வெளியில் நுகரவும் முடிவதில்லை. கலாச்சாரம், பண்பாடு என்ற நிலப்பிரபுத்துவ ஆணாதிக் சமூக ஒழுங்கில், அவள் வெளிவுலகுக்காக வாழ்வதால் எற்படும் இந்த மனிதச்சிதைவுகள், தடுமாற்றங்கள் குடும்பத்தின் சிதைவை அகலமாக்கின்றது. உண்மையில் இதை அவள் வெளிப்படையாக உணரவோ, கோரவோ வேண்டிய அவசிமின்றி இருந்த போது, எல்லாவற்றையும் மாற்றும் பெண்ணின் இந்த சொந்த முரண்பாட்டை பெண்ணால் விளக்க முடியாது. ஏன் அதை அவளால் உணரவும் கூட முடியாது.

பொருத்தமற்ற கணவன், தனக்கு எற்றவனாக மாற மறுக்கும் கணவன், என்று சாத நினைக்கும் பெண்ணின் அங்கலாய்புக்கு, எந்த வரையறையும் கிடையாது. ஒரு நேரத்தில், ஒரு காலத்தில் எற்புடையதாக இருந்த கணவன், மறுகாலத்தில் மறு நேரத்தில் எற்புடையதகாது போகின்றது. இது பெண் பற்றி கணவன் மதிப்பீட்டிலும்; கூட நிகழ்கின்து என்பது, ஓப்பிட்டளவில் குறைவானது. இந்த வரையறை சார்ந்த விடையம், ஒரு பெண்ணுடன் அல்லது ஒரு ஆணுடன் வாழமுடியாத சந்தாப்பம் மற்றும் சூழலை உள்ளடக்கியதல்ல.

உண்மையில் இப்படியாக பெண்ணின் குடும்ப அதிகாரம், இணக்கத்தின் எல்லைக்குள் கையாளப்படுவதில்லை. குடும்பத்தின் தலைமைத் தன்மையை பொறுப்பான விதத்தில், அப்பண்புக்குரிய அவசியம் கருதி செலுத்துவது கிடையாது. மாறாக அதிகாரத்தை மொழி வன்முறை ஊடாக பெண் திணிக்க முனைகின்றாள். கணவன், குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரையும் எடுதெறிந்து, அவ்யதிகாரம் மூலம் அனுகுகின்றது. இயல்பான ஆணாதிக்க சமூகத்தின் அதிகாரம் கொண்ட ஆண், பண்பாடு கலாச்சாரம் சார்ந்து நிலவுகின்ற அம்சங்கள் ஒருபுறம், மறுபகத்தில் குடும்ப அதிகாரத்தை கொண்டு பெண் சமூகத் தன்மையையே சிதைத்து விடுகின்றாள்.

ஆணாதிக்க அமைப்பில் ஆண் சமூகத் தன்மையை மறுப்பவனாக இருக்க, பெண் சமூகத்தன்மை தக்கவைத்துக் கொண்டவளாக வாழ்ந்தாள். இந்த ஆணாதிக்க நுகர்வு சமூக அமைப்பில், இருவருமே சமூகத் தன்மை மறுப்பவராகி நிற்கினர். சமூக உறுப்புகள் சமூகத்தில் இருந்தும் சிதிலமடைகின்றன. சொந்த குழந்தையைக் கூட வேண்ட வெறுப்பாக அனுகுகின்ற பண்பு, உயிரியல் சார்ந்த இயற்கைக்கே புறம்பானது. இயற்கை சார்ந்த சுற்றுச்சூழலை அளிக்கும் தனிச்சொத்துரிமை கண்ணோட்டம், இன்று உயிரியலின் இயக்கைத் தன்மையை அழிகின்றது. பெண் தனது உயிரியல் தன்மையை இழந்து, பொருட்கள் உலகத்தில் நின்று குடும்ப அதிகாரத்தை வன்முறை மூலம் நிலைநிறுத்த முனைகின்றாள்.

குறிப்பு : இத்துடன் இக் கட்டுரை முற்றப்பெறுகின்றது. இது தனியான நூலாக உருவாக்கு முயற்சியின் பொது, இக்கட்டுரை திருத்தம் மற்றும் சேர்ப்புக்கு உள்ளாகும்;. உங்கள் அபிராயங்கள், கருத்துகள், சேர்க்க வேண்டிய விடையங்கள் வரவேற்க்கப்படுகின்றது.

1.போலியான நடிப்பும் எங்கும் பகட்டு வாழ்வாகின்றது

2.மொழி வன்முறை மூலம், பெண் உருவாக்கும் குடும்ப அதிகாரம

3.பெண் தன்னைச் சுற்றிக் கட்டும் பரிவட்டம்

4.சமூக வழிகாட்டலை இழந்து வெம்பும் குடும்பங்கள்

5.கணவன் மணைவிக்கிடையில் புரிந்துணர்வற்ற மொழி வன்முறை

6. பெற்றோரின் இணக்கமற்ற முரண்பாடே, குழந்தையின் முரண்பாடாகி

7.குழந்தைகளுடனான பெற்றோரின் உரையாடல் எப்படிப்பட்டது?

Sunday, July 15, 2007

சமூகத்தில் இருந்தும் அன்னியமாகும் குழந்தைகள்

சமூகத்தில் இருந்தும் அன்னியமாகும் குழந்தைகள்

மணைவியும் கணவனும் தனித்ததனியான உலகில் தமக்கிடையான முரண்பாட்டுடன் சஞ்சரிக்கும் போது குடும்பத்தில் என்ன நடக்கும். குழந்தையும் அப்படியே தனித்தனியாகவே வாழத் தொடங்குவதை பல பெற்றோர் உணருவதில்லை. இப்படிப்பட்ட குழந்தைகள் தாய் தந்தையுடன் வீட்டில் இருக்கின்றனர் என்றால், அது குழந்தையின் சொந்த விருப்பமல்ல. குழந்தை விரும்பியோ விரும்பமலோ, பெற்றோரின் பொருளாதாரத்தில் தங்கி வாழ்வதால் இந்த நிலை.

கணவன் அல்லது மனைவி சாத நச்சரிப்புக்குள்ளும், சண்டை சச்சாரவுக்குள்ளும் சிக்கி குடும்பமே சிதைகின்ற போது, அதே எல்லைக்குள் இயல்பாக குழந்தையும் சிக்கிவிடுகின்றது. இப்படிப்பட்ட குடும்பங்களில் ஆண்கள் குடும்பத்தில் இருந்தும் அன்னியமாகி விடுகின்ற நிலை ஒருபுறம். மறுபக்கம் குழந்தையை பக்குவமாக கையாள வளர்க்க பெண்களுக்கு தெரிவதில்லை. தாய் குழந்தை உறவு என்பது, அதே நச்சரிப்பும், திட்டுதலும், சண்டையும் இன்றி, குழந்தைகள் தாயின் பராமரிப்பை பெறுவதில்லை.

குழந்தை குடும்பதில் இருந்தும் அன்னியமாகி, விலகி வாழ்த் தொடங்குகின்றது. குழந்தை தன்னளவில் விகாரமாகிவிடுன்றது. சமூக அடிப்படைற்ற சிந்தனை, செயல்களை நோக்கி விலகிச் செல்லுகின்றது. குழந்தைகள் வீட்டில் நிம்பதி இல்லை என்று வெளிபடையாக கூறிய படி, வீதிக்கு வருகின்றனர். இப்படி நிலைமை அத்துமீறுகின்ற வகையில், சொந்த வக்கிரகங்களை தாய் தந்தை சிறுக்கச் சிறுக்க குழந்தை மீது நஞ்சாகத் திணிக்கின்றனர். உண்மையில் குழந்தையை வழிகாட்ட அவசியமான எல்லைக்குள்ளான சமூகக் கட்டுப்பாட்டை, தாய் தந்தை இழந்து விடுகின்றனர்.

படிப்படியாக அதாவது அவசியமான வழிகாட்டலை கூட குழந்தை நிராகரிக்கத் தொடங்குகின்றது. தனது நிம்மதி இழந்த விட்டதாக கூறி வீட்டுக்கு வெளியில் சென்றுவிடுகின்றனர்.

குழந்தை ஒரு இரகசியமான தனியான வாழ்கையை உருவாக்கி கொள்கின்றனார். தனக்குள் தனியுலங்களாகி மூலைக்கு மூலை ஆங்காங்கே கூடு கட்டத் தொடங்குகின்றனர். குழந்தை இரசியமான கள்ளத்தனமாக, பெற்றோருக்கு தெரியாத பலவறை திட்டமிட்டு செய்கின்ற உலகில் புகுந்து விடுகின்றனா. இப்படி வீட்டுக்கு வெளியில் அல்லது தொலைபேசியில், அல்லது இணையம் (இன்ர நெற்) என்று பல வழிகளில், அவசியமான வழகாட்டலின்றி சீராழிவுக்குள் சென்று விடுகின்றனர்.

குழந்தை இதையும் தாய் தந்தையின் முரண்பாட்டுக்குள் தான் புகுத்தி செய்கின்றது. தாய் தந்தையின் முரண்பாட்டை பயன்படுத்தி, மற்றவருக்கு எதிராக ஒருவரைச் சார்ந்து நின்று இதை பயன்படுத்த முனைகின்றது. இந்த நுட்பத்தை குழந்தை தெரிந்து கொள்வதால், அதை பெற்றோருக்கு எதிராகவே பயன்படுத்தி விடுகின்றனர். பெற்றோரின் இணக்கமற்ற நடைமுறைகள், பிள்ளையின் தவறுக்கு வழி காட்டுகின்றது.

தாய்க்கு எதிராக தந்தையையும், தந்தைக்கு எதிராக தாய்யையும் கொண்டு, குழந்தைகள் தமது மறுவுலகை நிர்ணயம் செய்கின்றனர். குழந்தையின் தவறு கண்டறியப்படும் குடும்பத்திலும், இந்த விடைத்தின் உள்ளார்ந்த அம்சம் கண்டறியப்படுவதில்லை. இதனால் இதுவே குடும்பத்தின் புதிய பிரச்சனையாக மாறிவிடுகின்றது. குழந்தையை தவறான வழிக்கு இட்டுச்செல்லும் சூழல் என்பது, குடும்ப சூழலுக்கு உள்ள பங்கு முக்கியமானது. குடும்பத்தினுள் பெற்றோர் தமக்கு இடையிலான ஜனநாயகமற்ற தன்மையும், பெற்றோர் குழந்தையுடன் கொண்டுள்ள ஜனநாயகமற்ற சூழலும் இதை துண்டுகின்றது. எதையும் இணக்கமான வழியில் தேர்ந்தெடுக்கும் அனுகுமுறையும், ஜனநாயக மனப்பாங்கும் குடும்பங்களில் இருப்பதில்லை. ஒரு அதிகார முறைமை ஊடாக, குடும்பத்தை நிர்வாகின்ற அதிகார மனப்பாங்கே குடும்ப உறுப்புக்கிடையே ஆட்சி புரிகின்றது.

மறுபகத்தில் தனது குழந்தை தவறு இழைக்க மாட்டாது என்ற பெற்றோரின் மனப்பாங்கு, குழந்தையை தவறாக வழிநடத்துகின்றது. இப்படி அவசியமான சமூக கண்கணிப்பை கைவிடுகின்ற பெற்றோர், தவறான குழந்தை வளர்ப்பின் ஊடாக பாரிய சுமையை சந்திக்கின்றனர். தந்தை அல்லது தாய் அல்லது இருவரும் தனது குழந்தை தவறு இழைக்கமாட்டாது என்ற கருதினால், குழந்தை அதைப் பயன்படுத்தி சீராழிகின்றது.

குழந்தையின் தவறுக்கு பெற்றோர் இணங்கிக் போக்கும் சூழல்
குழந்தை தவறு விடுகின்றது என்று கருதுகின்ற பெற்றோரின் அனுகுமுறை என்பது சிக்கலுக்குரியது. தவறு இனம் காணப்பட்டால், அதை உணர்ந்தால், கணவன் மனைவிக்கு இடையில் வேறுபட்ட அனுகுமுறை ஒரு நாளும் இந்த விடையத்தில் கையாளப்படக் கூடாது. மாறுபட்ட அனுகுமுறை அதை மேலும் துண்டும் குழந்தையின் குறுக்கு வழிக்கே சாதகமானது.

தவறுக்கு எதிராக பெற்றோர் தமது அறிவுக்கு எற்ப அதை சரியாக கையாண்டலும் சரி, தவறாக கையாண்டலும் சரி, இதில் மாறுபட்ட அபிராயம் ஒருநாளும் இருக்கக் கூடாது. அது மட்டும் தான் குழந்தையை மாற்றும். குழந்தையின் முன் ஒரேவிதமான ஒரே அனுகுமுறை அவசியமானது. ஒரு முடிவையே இருவரும் அமுல்செய்ய வேண்டும். ஒரேயொரு விடையத்தை மட்டும் பிள்ளைக்கு விளக்க வேண்டும். தாய் தந்தை முரண்பட்ட வகையில் எக்காரணம் கொண்டும், வேறுபட ஒருநாளும் அனுகக் கூடாது.

குழந்தையின் தவறு பற்றி பெற்றோருக்கு மாறுபட்ட அபிராயம் இருக்கக் கூடாது. இதில் மாறுபாடு இருப்பில், அதை பற்றி தமக்குள் கூடி பேசி ஒரு முடிவுக்கு வருவது அவசியம். இது தொடர்பாக அந்த குழந்தையின் முன், வாதபிரதிவாதம் இருக்கவே கூடாது. இதில் கூடி தமக்கு இடையில் ஒரு முடிவு எடுக்க முடியவிட்டால், அந்த விடையத்தில் ஒருவரின் முடிவுக்கு மற்றவர் நிச்சயமாக கட்டுப்பட வேண்டும்;. ஆனால் அவருடன் தொடர்ந்து இது பற்றி கதைக்க முடியும். ஆனால் இது பற்றி நிச்சயமாக குழந்தையுடன் அல்லது குநைதையின் முன்னால் அல்ல. பொதுவாக எமது பெற்றோர் இதைச் செய்வது கிடையாது. குழந்தை முன்பே அதைச் செய்கின்றனர். மற்றவர் பற்றி குழந்தை முன்பே குற்றம் காண்கின்றனார். இப்படி குழந்தை தொடர்ந்து தவறு செய்யும் வழியில், அதற்குரிய வழிவகைளை பெற்றோர் தமக்கிடையிலான முரண்பாட்டின் உடாகவே தாமே உருவாக்கிக் கொடுக்கின்றனர்.

இதைக் கையாளும் விடையத்தில் நாங்கள் (நான் அல்ல) செய்தது தவறு என்றால், அதை சொல்லும் உரிமை அந்தக் குழந்தைக்கு உண்டு என்பதை குழந்தை உணர்த்தி, குழந்தையை விவாதிக்க துண்ட வேண்டும். அதை அக்குழந்தை இலகுவாக வெளிப்படுத்தும் வடிவங்களை உருவாக்க வேண்டும். குறித்த விடையம் தொடர்பாக மனந்திறந்த பேசும் மனநிலையை உருவாக்க வேண்டும். குழந்தை சிறு குழந்தையில் இருந்தே திட்டி தீர்த்து மலடாக்கி வளர்த்தால், குழந்தை எதையும் வெளிப்பiடாக பேசுவதற்கான சூழலே மறுதளிகப்பட்டுவிடும். வெளிப்படையாக எதற்கும் அஞ்சி வாழ்கின்ற குழந்தைகள், இரகசியமாக அச்சமின்றி வாழ்வதற்கு பழக்கிக் கொள்கின்றனர். குழந்தையின் தவறுகள் இப்படி இதற்குள்ளாக வளர்ச்சியுறுகின்றது.

(மற்றொரு தலையங்கத்தில் இவ் ஆய்வு

1.போலியான நடிப்பும் எங்கும் பகட்டு வாழ்வாகின்றது

2.மொழி வன்முறை மூலம், பெண் உருவாக்கும் குடும்ப அதிகாரம

3.பெண் தன்னைச் சுற்றிக் கட்டும் பரிவட்டம்

4.சமூக வழிகாட்டலை இழந்து வெம்பும் குடும்பங்கள்

5.கணவன் மணைவிக்கிடையில் புரிந்துணர்வற்ற மொழி வன்முறை

6. பெற்றோரின் இணக்கமற்ற முரண்பாடே, குழந்தையின் முரண்பாடாகி

7.குழந்தைகளுடனான பெற்றோரின் உரையாடல் எப்படிப்பட்டது?

தொடரும்