தமிழ் அரங்கம்

Showing posts with label அப்பாவி. Show all posts
Showing posts with label அப்பாவி. Show all posts

Thursday, March 19, 2009

சட்டிஸ்கர்: அப்பாவி பழங்குடியினரைச் சுட்டுக் கொன்றுவிட்டு, அவர்களை நக்சல்பாரிகளாகக் காட்டும் மோசடி தொடர்கிறது.

ஆளரவமற்ற காடு; பகலிலும் கூட இருள் சூழ்ந்த சட்டிஸ்கர் மாநிலத்தின் பஸ்தார் பிராந்தியத்திலுள்ள அடர்ந்த காடு; பாறைகளில் தெறித்தோடும் நீரோடை, கிரீச்சிடும் பறவைகள், காற்றில் சருகுகள் எழுப்பும் சலசலப்பு; இவை தவிர வேறெந்த ஒலியுமற்ற அமைதியில் உறைந்த காடு. கடந்த ஜனவரி 8ஆம் நாளன்று பட்டப் பகலில் அக்காட்டில் அப்பாவி பழங்குடியினர் 18 பேர் சல்வாஜூடும் என்ற போலீசு குண்டர் படையால் கொடூரமாகச் சுட்டுக் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டின் பேரொலியால் பறவைகள் வானில் பறந்து கிரீச்சிட, அக்காடே அதிர்ந்து குலுங்கியது.

மறுநாள், சட்டிஸ்கர் மாநில உள்துறை அமைச்சரான நான்கிராம் கன்வர், ""வெற்றி! வெற்றி!!'' என்று எக்காளமிட்டுக் கொண்டு ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார். ""கொல்லப்பட் டவர்கள் அனைவரும் நக்சல்பாரி பயங்கரவாதிகள்.

நக்சல்பாரிகளைப் பூண்டோடு அழிக்கும் போர் தொடங்கி விட்டது. பல ஆண்டுகளாக அத்தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிக்குள் நாங்கள் நுழைந்து தாக்குதல் நடத்தி முன்னேறி வருகிறோம். இன்னும் சில நாட்களில் எங்களது நிலங்களை நாங்கள் கைப்பற்றி விடுவோம்'' என்று கொக்கரித்தார் அவர்.