தமிழ் அரங்கம்

Showing posts with label நக்சலைட்டு. Show all posts
Showing posts with label நக்சலைட்டு. Show all posts

Friday, June 13, 2008

நவீன் பிரசாத் கொலை : தமிழகப் போலீசின் நரபலி

நவீன் கொல்லப்பட்ட பின்பு, அது பற்றி சட்டசபையில் பேசிய கருணாநிதி, ""தி.மு.க.வின் இரண்டு வருட ஆட்சியில் 24 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர்; அவர்களுள் எட்டு பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதேசமயம், கடந்த (ஐந்து வருட) அ.தி.மு.க. ஆட்சியில் 56 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டிருந்தாலும், அவர்களுள் ஒருவர் மீதும் தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாயவில்லை'' என்ற புள்ளி விவரத்தை எடுத்துப் போட்டுள்ளார். எனவே "தீவிரவாதிகளை' ஒடுக்குவதில் தனது "சூத்திர' ஆட்சி எள்ளளவும் பார்ப்பனபாசிஸ்டுகளின் (ஜெயா) ஆட்சிக்குச் சளைத்ததில்லை எனக் காட்டுவதற்கு நவீனின் கொலையும் கருணாநிதிக்கு அமோகமாகப் பயன்படும்.

மாவோயிஸ்ட் கட்சியின் அனுதாபிகள் பலரும், "போலீசார் நவீனை எங்கோ வைத்து அடித்துக் கொன்றுவிட்டு, மோதலில் இறந்து போனதாக நாடகமாடுவதாக''ப் பத்திரிகையாளர்களிடம் குறிப்பிட்டுள்ளனர். அவர் உடலின் பல இடங்களில் சித்திரவதைக்குள்ளான இரத்தக் காயங்கள் இருப்பதையும்; அதேசமயம், அவரது ஆடையில் குண்டு துளைத்துச் சென்றதற்கான அடையாளமோ, ஆடையில் இரத்தக் கறையோ இல்லாதிருப்பதையும் அத்தோழர்கள் பத்திரிகையாளர்களிடம் சுட்டிக் காட்டியுள்ளனர்.

""பாதிக்கப்பட்டவர்கள் வழக்கமாகப் பாடும் பிலாக்கணம்'' என்று இதனை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. மனித உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியத்தைச் சேர்ந்த பேராசிரியர் அ.மார்க்ஸ் மற்றும் மோகன்குமார்; மக்கள் உரிமைக் கூட்டமைப்பைச் சேர்ந்த கோ.சுகுமாரன்; குடியுரிமைகளுக்கான மக்கள் ஒன்றியத்தைச் சேர்ந்த பேரா.கோச்சடை; குடியுரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் தமயந்தி; ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு கமிட்டி, மும்பய்ஐச் சேர்ந்த விஞ்ஞானி எஸ்.கோபால்; தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் மார்க்ஸ் இளவேனில் ஆகிய மனித உரிமை ஆர்வலர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கையும் கூட, நவீன் பிரசாத் போலி மோதல் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற ஐயப்பாட்டை எழுப்பியிருக்கிறது.
.