தமிழ் அரங்கம்

Saturday, February 23, 2008

இலங்கையில் முதன்மைப் பிரச்சனை புலிப் பாசிசமா?

பி.இரயாகரன்
13.11.2006

தை சாரமாக கொண்டு, மற்றொரு புலியெதிர்ப்பு அணியும் குலைக்கின்றது. புலியெதிர்ப்பையே அரசியலாக கொண்டு, அதையும் மார்க்சியத்தின் பெயரில் திரித்து குலைக்கின்றது. இந்த புதிய அணி முதலாளித்துவம் என்ற சொற்களைக் கொண்டே மார்க்சியத்தை சாயம் அடித்தபடி தான், புலியெதிர்ப்பில் தன்னை வேறுபடுத்தி நிற்கின்றது. சொந்தப் பெயரிலும் புனைபெயரிலும் தேனீ மற்றும் ரீ.பீ.சீல் சிவப்பு கம்பளம் விரித்து, புலியெதிர்ப்பு அரசியலை விபச்சாரம் செய்தவர்கள் தான் இவர்கள். திடீரென்று அதில் இருந்து பிரிந்து, புதிய புலியெதிர்ப்பு அணியாகவே மறுபடியும் வந்துள்ளனர்.

துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று விபச்சாரத்தை கைவிட்டு ஓடவெளிக்கிட்டவர்கள், கையில் கிடைத்த சிவப்பு துணியை போர்த்திய படி ஓடி வந்தனர். மறுபடியும் மிக மோசமான அப்பட்டமான பேரினவாதிகள் தான் நாங்கள், என்பதை அடித்துக் கூறுகின்றனர். இதை சோபாசக்தியின் சத்தியக்கடதாசியில் இந்த ஆபாசத்தை அரங்கேற்றியுள்ளனர். வெட்கக்கேடான ஆபாசமாக சிவப்பு சாயம் அடித்த இவர்களின் அரசியல் படி, தமிழ் மக்களுக்கு என்று தனித்துவமான அரசியல் பிரச்சனைகள் எதுவும் கிடையாது என்பதே இவர்களின் அரசியலாகும். பேரினவாதம் என்பது கற்பனையானது. அது தமிழ் பாசிட்டுகளினது, தமிழ் முதலாளிகளின் சொந்தக் கண்டுபிடிப்பு என்பதே, இவர்களின் அரசியல் முடிவு. அதை பேரினவாதத்துக்காக வாலாட்டி குலைக்கும் போது அதை உதிர்த்து விடுகின்றனர். 'இலங்கை அரச இயந்திரம் பௌத்த சிங்கள இனவாதத்தாற் கட்டுப்படுத்தப்படுகிறது, ... என்பது பெரும் பொய்யாகும்." என்கின்றனர். தமிழ் பேசும் மக்களின் மீதான பேரினவாத இனவொடுக்குமுறை பற்றிய திரொக்சிய அரசியல் பார்வை இதுவாகும்.

இதனால் இவர்கள் பேரினவாதிகள் போல், தமிழ் மக்களின் பிரச்சனைக்கு என்று எந்த தீர்வையும் ஏற்றுக்கொள்வது கிடையாது. அதேபோல் இவர்கள் முன் வைப்பதும் கிடையாது. மக்களை அணிதிரட்ட எதுவுமிருப்பதில்லை. இவர்களின் இந்த பேரினவாத நிலையை, அவர்களின் சொந்த மார்க்சிய வார்த்தையில் சொன்னால் 'சுயநிர்ணய உரிமை" அரசியலின் சகாப்தம் இன்று முடிவடைந்து விட்டது." என்று ஒரே வார்த்தையில் அடித்துக் கூறி விடுகின்றனர். தமிழ் மக்களின் எதிரி கூட இப்படி கூறியது கிடையாது. இப்படிக் கூறி தமிழ் மக்களின் எதிரிகளுடன் கைகோர்த்து நிற்கின்றனர். இதே அரசியல் நிலையைத் தான் ஜே.வி.பியும் இனவாதமாக கொப்பளித்து அதை தமிழ் மக்களின் முகத்தில் காறி துப்புகின்றது.

சுயநிர்ணயம் என்பது தமிழ் மக்களுக்கு கிடையாது என்பதால், பேரினவாதத்தை ஆதரிக்க கோருகின்றனர். அதை அவர்களின் சொந்த மார்க்சிய நடைமுறை சார்ந்த பேரினவாத அரசியலாகவே கூறுகின்றனர். 'புலிகள் அரசுக்கிடையே இராணுவ மோதல் மூண்ட போது புலிப்பாசிசம் தோல்வியுறவேண்டும் என்ற தெளிவான அரசியல் நிலைக்கு" செல்வது தான் அவசியம் என்கின்றனர். இதைத்தான் அவர்கள் தமது சொந்த அரசியலாக நடைமுறையாக கொள்கின்றனர். இதைத்தான் இவர்கள் மக்களுக்கு மாற்றுவழியாக காட்டுகின்றனர். பாசிச ஒழிப்பு என்ற பெயரில், தம்மையொத்த ஒரு கைக்கூலிகளாக எப்படி இருத்தல் என்பதையே, சோபாசக்தியின் சத்தியக்கடதாசியில் முதலாளித்துவம் பற்றி பூசைகாட்டியபடி விளக்குகின்றனர். இந்த அரசியல் ஆபாசத்தைத் தான், அவர்கள் திரொஸ்கிய மார்க்சிய நிலை என்கின்றனர். இவர்கள் ஜே.வி.பியின் வலது பேரினவாத 'இடது" நிலையைப் பின்பற்றும், வலது திரோஸ்கிய வாதமே பேரினவாதமாக கொப்பளிக்கின்றது.

தமிழ் மக்களின் ஜனநாயகக் கோரிக்கையை ஏற்க மறுக்கும் இவர்கள், எல்லாவற்றையும் புலியாக, புலிப் பாசிசமாக காட்டியே புலியெதிர்ப்பு அரசியலை பிதற்றுகின்றனர். பேரினவாத பாசிட்டுகளுடன், கூடி நிற்க திரொஸ்கியத்தின் பெயரில் அழைக்கின்றனர். இந்த அழைப்பையே 'இலங்கை அரசு புலிகளை இராணுவரீதியில் சாகடிக்கும் எனிற் கூட நாம் அதையும் நிபந்தனைகளோடு ஆதரிக்கலாம்." என்கின்றனர். நல்ல நகைச் சுவையான வேடிக்கை தான், போங்கள். இதை மார்க்சியம் என்றால் கைகொட்டி சிரிப்பார்கள். ஏதோ நிபந்தனையுடனாம்! சரி அந்த நிபந்தனை தான் என்ன? புலிப் பாசிசத்தை அழித்த பின்பு திரோஸ்கிகளிடம் ஆட்சி தரவேண்டும் என்பதோ அந்த நிபந்தனை? ஐயோ பாவம் பரிதாபத்துக்குரியவர்கள்.

இவர்கள் மனதில் நினைக்கும் நிபந்தனையுடன் ஆதரிக்கும் இலங்கை அரசைப் பற்றிக் கூறும் போது 'இலங்கை நேரடியான ஆசியப் பிராந்தியத்தில் இந்திய, சீன, ஜப்பானிய, பாகிஸ்தான் அரசுகளின் பொருளாதார அரசியல் இராணுவ உதவிகட்கு கட்டுப்படும் சக்தியாகி விட்டது. அவைகளின் சொற்கேட்கும் சார்புநிலைச் சக்தியாகிவிட்டது." என்று கூறுகின்றனர். அப்படி என்றால், சார்புநிலை சக்தியாக முன்னம் என்னவாக இருந்தனர்? அது எப்படி எப்போது இல்லாது போனது? உலகத்தை கொள்ளையடித்த களைப்பில், ஏகாதிபத்தியம் இலங்கை கடற்கரையில் பொழுதுபோக்குக்கு படுத்துக்கிடந்து மீன் பிடிக்கின்றனரோ!

ஏகாதிபத்தியம் புலிகளை தடைசெய்த பின்பும், அவர்களை அழிக்காது, சும்மா விட்டிருக்கு என்ற கடுப்பே இப்படி புலம்ப வைக்கின்றது. புலியை அழிக்காது தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை வைக்க ஏகாதிபத்தியம் கோருகின்றது என்ற கோபம், அரசின் மனித உரிமை மீறல் பற்றியும் ஏகாதிபத்தியம் முன்வைக்கின்றது என்ற ஆத்திரமே உளறவைக்கின்றது. (ஏகாதிபத்தியம் ஏன் இதை செய்கின்றது என்பது மற்றொரு விடையம்.) ஏகாதிபத்தியத்தை விடவும், இலங்கை அரசு உடனடியாக யுத்தம் மூலம் புலியை அழிப்பதால் நிபந்தனை என்று கூறியபடி ஆதரிப்பதே, இவர்களின் அரசியலாகின்றது. இங்கு என்ன நிபந்தனை என்று மட்டும் தயவு செய்து கேட்டுவிடாதீர்கள். நாங்கள் சொல்லுவோம், ஆனால் அது என்னவென்று இனிமேல் தான் கண்டுபிடிக்க வேண்டும்.

இப்படி இலங்கையின் சார்புநிலை பற்றி கூறுபவர்கள் தான், இந்த சார்பு அரசு புலிகளை அழித்தால் ஆதரிக்க வேண்டும் என்கின்றனர். இங்கு அழிப்பது இந்தியா உள்ளிட்ட அன்னிய சக்திகள் அல்லவா? அப்படியாயின் உங்கள் நிபந்தனை இலங்கை அரசுக்கா? அல்லது அதை வழிநடத்தும் அன்னியருக்கா? இப்படி அன்னிய சக்திக்கு பாய்விரிப்பது திரோஸ்கிய விபச்சாரமில்லையோ? இங்கு 'இந்திய, சீன, ஜப்பானிய, பாகிஸ்தான் அரசுகளின் பொருளாதார அரசியல் இராணுவ" உதவிக்கு இலங்கை கட்டுப்பட்டது என்பதே ஒரு திரிபாகும. இது இவர்களின் மற்றொரு அரசியல் திரிபு. உலகமயமாதலை பாதுகாக்க விடையத்தை மேலெழுந்தவாரியாக திரித்து, ஏகாதிபத்தியத்தை உள்ளடக்க ரீதியாக இலங்கையில் பாதுகாப்பதாகும். இப்படி பல. ஆனால் அவற்றை இக்கட்டுரை விவாதிக்க முற்படவில்லை.

இவர்களும் ரீ.பீ.சீ மற்றும் தேனீக்கும் இடையில் என்ன வேறுபாட்டுடன் ஓடிவந்து, சோபாசக்தியின் சத்தியக்கடதாசியில் என்ன கூறுகின்றனர் என்பதை சுருக்கமாக பார்போம். இதன் மூலம் நுட்பமாக புலியெதிர்ப்பின் பன்மைப் போக்கை தெளிவுபடுத்த முடியும்.

பேரினவாதத்துடன் கூட்டுச்சேர்ந்தே புலிகளை அழிக்கவும், அதை பகிரங்கமாக அங்கீகரிக்க மறுக்கும் ரீ.பீ.சீ மற்றும் தேனீ நிலைப்பாடு தான், இவர்களின் அடிப்படையான அரசியல் முரண்பாடு. இதற்கு முதலாளித்துவம் என்ற சொல்லை உச்சரித்து பசப்புகின்றனர். இந்த ரீ.பீ.சீ மற்றும் தேனீயுடான முரண்பாட்டை 'புலிகள் அரசுக்கிடையே இராணுவ மோதல் மூண்ட போது புலிப்பாசிசம் தோல்வியுறவேண்டும் என்ற தெளிவான அரசியல் நிலைக்கு இவர்களால் போகமுடியவில்லை. இலங்கை அரசு புலிகள் இடையே நடுநிலமை உண்டெனக் கருதிக்கொண்டு இரு பகுதிகளையும் தாக்கத் தொடங்கினர். இலங்கை அரசு வெற்றிபெற வேண்டும் எனக் கூறினால் அது சிங்களத் தேசியவாதத்தை ஆதரிப்பதாய் கருதப்பட்டு விடும் என்று கருதியதால் வட துருவத்திற்கும் தென் துருவத்திற்கும் பாய்ந்தனர்." இது தான் இந்த புலியெதிர்ப்பின் பின் பூத்துக் குலுங்கும் புதிய அவதாரம். இதற்கு சோபாசக்தியின் சத்தியக்கடதாசி, தனது முந்திய நிலைக்கு மாறாக துணைபோவது அறியாமையா? அல்லது ரீ.பீ.சீ மற்றும் தேனீ மீதான எதிர்ப்பா? இதை மறுபிரசுரம் செய்த தூண்டில் முன்னும் இக்கேள்வி பொருந்திநிற்கின்றது.

ரீ.பீ.சீ மற்றும் தேனீயில் இருந்து பிரிந்தவர்களின் அரசியல, பேரினவாத அரசை நேரடியாக ஆதரிப்பது தான். அரச பயங்கரவாதத்தை புலிப் பாசிச அழிப்பில் அங்கீகரிக்க வேண்டும். இதைச் செய்ய மறுக்கும் மேற்கத்தைய நாடுகளை, இதன் அடிப்படையில் எதிர்க்க வேண்டும். புலியை ஏகாதிபத்தியம் அழித்தால், சூக்குமமான அந்த நிபந்தனையுடன் நாம் மறுபடியும் அரசியல் முலாம் பூசி ஆதரிக்க கோருவோம்.

இதை விடுத்துவிட்டு தமிழ் மக்களுக்கு தீர்வு என்பதும், இதை அண்மைக்காலமாக ஏகாதிபத்திய வாலில் தொங்கியபடி முன்வைக்கும் ரீ.பீ.சீ மற்றும் தேனீயின் நிலையை பினாற்றல் என்பது இவர்களின் புலியெதிர்ப்பு நிலை. இதனால் தான் இவர்கள் ரீ.பீ.சீ மற்றும் தேனீயுடன் முரண்பட்டனர்.

இந்த ஒட்டுமொத்த அரசியல் விபச்சாரத்தைத் தான் இவர்கள் 'இலங்கை அரசு புலிகளை இராணுவரீதியில் சாகடிக்கும் எனிற்கூட நாம் அதையும் நிபந்தனைகளோடு ஆதரிக்கலாம். புலிப்பயங்கரவாதம் மேல் தாக்குதல் தொடுக்கப்பட்டால் ஐயோ இது சிங்கள அரசை ஆதரிப்பதாகிவிடும் என்று அரசியலில் களங்கப்படாத கற்புடன் இருப்பதாய் கருதும் சிலர் குரலிடுவார்கள்.." என்ற கூறி வாருங்கள் என்று அழைக்கும் திரொஸ்கிகள், தங்களுடன் சேர்ந்து கற்பழிக்க கோருகின்றனர்.

தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு அவசியம் என்பதை ஏகாதிபத்தியத்தின் பின் நின்று வலியுறுத்தும், ரீ.பீ.சீ மற்றும் தேனீ புலியெதிர்ப்புக் கும்பலுடன் முரண்பட்டு நிற்கின்றனர். இதை மூடிமறைக்கவே, முதலாளித்துவம் என்ற அந்தச் சொல் மட்டும் உதவுகின்றது. புலியை அழிப்பதே இவர்களின் அரசியலாகின்றது. தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்க மறுபவர்களுடனும், புலியை அழிக்கும் யாருடனும் கூட்டுச் சேர்ந்து செயல்பட வேண்டும் என்பதே இவர்களின் அரசியலாகும். தேனீ மற்றும் ரீ.பீ.சீயில் இருந்து பிரிந்து வந்த இந்த புதிய கொண்டோடி புலியெதிர்ப்பு அணியில் தமிழரசன், மற்றும் அழகலிங்கமும் கொலுவேற்று இருக்கின்றனர். இதற்கு சோபாசக்தியும் அவரின் சத்தியக்கடதாசியும் எந்தவகையில், எதன் அடிப்படையில் துணைபோகின்றது என்பது மற்றொரு புதியதொரு விடையம்.

மேலே எழுப்பிய கேள்விகளை விடவும், சோபாசக்தியின் முன்னைய திரொக்ஸ்கிய நிலையா இதற்கு மேலும் கூடுதலாக துணைபோகின்றது?. இந்த இருவரும் தமது திரொஸ்கிய அடுக்குமொழியுடன், முதலாளித்துவம் என்ற சொல்லைக்கொண்டு அரசியல் வித்தைகாட்ட முனைகின்றனர். இந்த அரசியல் வித்தை அப்பட்டமான ஆபாசமான பேரினவாதமாகவே வெளிப்படுகின்றது.

நீங்கள் இந்த அரசியல் புலியெதிர்ப்பு ஆபாசத்தை புரிந்துகொள்ள 'சர்வதேச சமூகமும் புகலிட ஜனநாயகச் சக்திகளும் என்ற கட்டுரையை '' என்ற http://www.satiyakadatasi.com/?p=52#respond பகுதியில் காணமுடியும்.

இப்படி புலியெதிர்ப்பின் மற்றொரு கடைகோடிக்குள் நின்று இவர்கள் குலைப்பது எப்படி? அதைத் தெரிந்து கொள்வது அவசியம் இவர்கள் எப்போதும் விடையத்தை எடுத்து விவாதிப்பது கிடையாது. சொற்களைக் கொண்டு வித்தை காட்டுவது, இவர்களின் அரசியல் மரபு. விடையத்தை எடுத்து நேரடியாக பதிலளிப்பதில்லை. மாறாக விடையத்துக்கு வெளியில் அலட்டுவதே நிகழ்கின்றது. மார்க்சிய சொற்கள், மார்க்சிய சொற்கோவைகளை கொண்டு சதா புலம்புவர். இன்று முதலாளித்துவம் பற்றி பேசும் இவர்கள், அந்த தேனீக்கு பின்னால் நின்று குலைத்ததையிட்டு, எந்த சுயவிமர்சனமும் செய்யப் போவதும் கிடையாது. அந்த அரசியல் தான் மறுபடியும் அரங்கேறுகின்றது. ஏன் இன்று ரீ.பீ.சீ மற்றும் தேனீ பற்றிய இன்றைய மதிப்பீட்டை, அன்று வைக்காது எப்படி கூடிக்குலாவி விபச்சாரம் செய்ய முடிந்தது. அதில் இருந்து ஏன் தாங்கள் விலகினோம் என்று கூறுவது கூட வெளிப்படையாக கிடையாது.

தங்கள் பேரினவாத நிலையை நியாயப்படுத்த புலி, புலிப்பாசிசம் பற்றி மட்டும் கதைக்க முற்படுகின்றனர். பாசிசத்தின் பின்னால் உள்ள அரசியல் போக்கைப் பற்றி இவர்கள் அக்கறைப்படுவதில்லை. பாசிசம் என்பது சுரண்டலின் உச்ச வடிவம். மக்களை அமைதியாக சுரண்ட முடியாது என்ற நிலையில், சுரண்டலை பாதுகாக்கவும் தொடரவும் கையாளும் ஒரு வடிவம் தான் பாசிசம். இதை புரிந்து கொள்ளாது இதை மறுதலித்து, இலங்கை அரசின் பின் பாசிச ஒழிப்பின் பெயரில் கூத்தடிப்பது தான் இவர்களின் உயர்ந்தபட்ச அரசியல்.

புலிப்பாசிசத்தைப் பற்றி பேசுவதாக இருந்தால், இதில் இருந்து வேறுபட்ட தமிழ் மக்களையும், அவர்களின் ஜனநாயகக் கோரிக்கையையும் தெளிவுபடுத்த வேண்டும். அதற்காக மக்களைச் சார்ந்து நின்று போராட வேண்டும். அந்தப் போராட்டத்தை மட்டும் கோரவேண்டும். அதை மட்டும் ஆதரிக்க வேண்டும். இல்லாத அனைத்தும் நிச்சயமாக தெளிவாக மற்றொரு பாசிசமே. உள்ளடகத்தில் பேரினவாதத்தின் புலியெதிர்ப்புக் கூச்சலாகத்தான் இருக்கும். இதற்கு புலிப் பாசிசத்தின் பெயரில், திரொஸ்கிய சிவப்பு சாயமடிக்கலாம். ஆனால் மக்களினதும், அவர்களின் வாழ்வியல் பிரச்சனைக்கும் யாரும் சாயமடிக்க முடியாது. முதலில் நாம் சிலவற்றை தெளிவுபடுத்தவேண்டும்.

1.தமிழ் மக்களுக்கு பிரச்னைகள் உண்டு எனபதை நாம் ஏற்றுக்கொள்கின்றோமா?

2.தமிழ் மக்களின் பிரச்சனைக்கு ஒரு அரசியல் தீர்வு அவசியம் என்று ஏற்றுக்கொள்கின்றோமா?

3.தமிழ் மக்களுக்கு பிரச்சனை உண்டு என்றால், அதற்குரிய தீர்வு என்ன?

4.புலி, புலி பாசிசத்தை ஒழிப்பது எப்படி?

5.புலியை ஏதோ ஒரு வகையில் ஒழிக்க முனையும் ஏகாதிபத்தியம், மற்றும் இலங்கை இந்திய அரசை, நாங்கள் எப்படி எந்த அரசியல் வழியில் எதிர்க்கின்றோம்?

6.புலியெதிர்ப்பு அணியை நாங்கள் எதிர்க்கின்றோம் என்றால், எப்படி? எந்த அரசியல் அடிப்படையில்?

இந்தக் கேள்விகளுக்கு திரோக்சிய புலியெதிர்ப்பு அணியும் சரி, மற்றவர்களும் சரி நேரடியாக தெளிவாக பதிலளிப்பது கிடையாது. சுற்றி வளைத்து சீPட்டி அடிப்பார்கள். உண்மையில் ஏன் இவர்கள் பதிலளிப்பதில்லை.

மக்களின் ஜனநாயக (தேசிய பொருளாதார சார்ந்த பண்பாட்டு மொழிக்) கோரிக்கையை இவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. மக்களின் ஜனநாயகக் கோரிக்கையை வெறும் கருத்து சுதந்திரத்துக்கான தமது கோரிக்கையாக மட்டும் திரிக்கின்றனர். பேரினவாதம் பாசிசமாக இருப்பதை மறுத்து, அதை ஒப்பீட்டின் அளவில் சுருக்கி மிதமானதாக காட்டிவிடுகின்றனர். அரசை ஆபத்தில்லாத ஒன்றாக காட்டி விபச்சாரம் செய்யும் இவாகள், புலிப்பாசிசத்தை மட்டும் ஓரு பூதமாக காட்டுகின்றனர். இலங்கையின் முதல் எதிரியாக புலியைக் காட்டி, அரசை இரண்டாம் பட்சமான மிதவாதக் கூறாக காட்டிவிடுகின்றனர். இதன் மூலம் அரசை ஒரு ஆபத்தில்லாத மிதவாத நண்பனாக காட்டி, அதை சார்ந்து நின்று புலியை அழிக்க கோருகின்றனர். ' புலிப் பாசிசம் அழிவதென்பது தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்களின் பொதுவான ஜனநாயக அரசியலுக்கு அவசியமானதாகும்." என்று கூறி, அரசை ஆதரிக்க கோருகின்றனர். அரசை ஜனநாயக அரசாக சித்தரிக்கின்ற அரசியல் விபச்சாரம் அரங்கேறுகின்றது. அதையே 'சர்வதேச நிலமைகளும் தீவிரமாகக் கடந்த வருடங்களில் மாற்றம் அடைந்தமையும், தமிழ் சிங்கள இனவாதம் கடந்த இலங்கை தழுவிய ஜனநாயக அரசியல் தோன்றியிருப்பதையும் அடையாளம் காணவில்லை." என்று, தமது திரோஸ்கிய பேரினவாத நிலைக்கு சுயவிளக்கம் தருகின்றனர். இலங்கையில் ஜனநாயக அரசியல் தோன்றியிருப்பதாக பம்மாத்து விடுகின்றனர். 'தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்களின் பொதுவான ஜனநாயக அரசியலுக்கு" ஏகாதிபத்திய எதிர்ப்பு, பேரினவாத எதிர்ப்பு அவசிமற்றது என்பதே இதன் சாரமாகும். இதைத்தான் 'புலிப் பாசிசத்தை எதிர்த்து நடைபெறும் அரசியல் - இராணுவப் போராட்டங்களில் புலிகளை எதிர்க்கும் தமிழ், சிங்கள ஜனநாயகச் சக்திகள் அனைத்தையும் ஆதரிக்க வேண்டும்." என்கின்றனர். புலிபாசிசத்தை எதிர்க்கும் ஏகாதிபத்தியத்துடன் கூட கூட்டுச் சேரக் கோருகின்றனர்.

புலியெதிர்ப்பு அரசியலே, மக்கள் விரோத அரசியலாக புளுத்து வெளிவருகின்றது. மக்கள் தமது சொந்த எதிரிகளுக்கு எதிராக, தமது சொந்த அதிகாரத்தை நோக்கி போராடுவதையே இது மறுதலிக்கின்றது. இதனால் மக்கள் நலன் சார்ந்த அரசியலை, இந்த புலியெதிர்ப்பு திரொஸ்கியவாதிகளால் முன்வைக்க முடிவதில்லை. உள்ளடகத்தில் இவர்கள் தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் பிரச்சனை உண்டு என்பதை ஏற்றுக்கொள்வதில்லை. அனைத்தையும் புலிப் பாசிச பிரச்சனையாக திரிக்கின்றனர். இதனால் தான் இவர்கள் தமிழ் மக்களின் பிரச்னைக்கு ஒரு தீர்வை முன்வைப்பதில்லை. எதார்த்தம் இதற்கு எதிராக நடைமுறையில் செயல்படுகின்றது. இந்த நிலையில் யாராவது தீர்வை வைத்து இந்த பிரசனையைத் தீர்த்தால், அதில் தொங்கும் ஒரு சாத்தனாகவே இவர்கள் தொடர்வார்கள்.

உண்மையில் இலங்கை பேரினவாத அரசை ஆதரிப்பதற்கு அப்பால், இவர்களிடம் புலி, புலி பாசிசத்தை ஒழிப்பததற்கு மக்கள் நலன் சார்ந்த வேலைத் திட்டம் என எதுவும் கிடையாது. அதாவது நடைமுறைப் பிரச்சனை மீது மாற்று அரசியல் வழி கிடையாது. நடைமுறை பிரச்சனைக்கு அப்பால், பாசிசத்தை ஒழிப்பது பற்றி வீம்புக்கு ஒப்பாரிவைக்கின்றன்றனர். அரசியல் நடைமுறைப் பிரச்சனை மீது, அதன் உள்ளடகத்தில் செயல்படுவதன் மூலம் மட்டும் தான், பாசிசத்தை மக்கள் நலன் சார்ந்து நின்று ஒழிக்கமுடியும். இதுவல்லாத அனைத்தும் மற்றொரு பாசிசம் தான்.

மக்கள் நலனை சார்ந்து நிற்றல் என்பது, மக்களின் தேசிய பிரச்சனைகள் மீது சார்ந்து நிற்றலே ஒழிய இதற்கு அப்பால் வேறு எதுவுமல்ல. இதுபற்றி இவர்களிடம் எந்தத் தீர்வும், மாற்றும் கிடையாது. புலியை ஒழிக்க யாருடனும் எப்படியும் சேரத் தயார். மேலதிகமாக இதற்கு நிபந்தனையுடன் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

புலியை ஒழிக்க பேரினவாதம் முதல் ஏகாதிபத்தியம் வரை ஆதரிப்பது அவசியம் என்கின்றனர். இது தான் புலியெதிர்ப்பின் சாரம். அது தான் 'தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்களின் பொதுவான ஜனநாயக அரசியலுக்கு" அவசியமான நிபந்தனை என்கின்றனர். மார்க்சியம், முதலாளித்துவம் என்ற சொற்கோவைக்கு அப்பால், புலியெதிர்ப்பில் இவர்களிடம் அரசியல் ரீதியாக இருப்பது, மக்களின் எதிரியுடன் நேரடியாக துணைபோவதுதான்.

'தேசிய நலன்கள் பாசிசத்தை அழிப்பதைவிட முக்கியமானவையா?" என்று பிதற்றுகின்றனர். தேசிய நலன்கள் என்ன? பாசிசத்தை எப்படி அழிப்பது? திரோஸ்கிய வாதிகளே! ஸ்ராலினிசம் அது இதுவென்று அலட்டாமல் பதிலை சொல்லுங்கள். தேசிய நலன்கள் என்ன? பாசிசத்தை எப்படி ஒழிப்பது?

தேசியம் பாசிசத்துக்கு எதிராக இருப்பதையும், தேசியம் ஏகாதிபத்தியம் மற்றும் பேரினவாதத்துக்கு எதிராக இருப்பதையும், இவர்களால் ஒரு கணம் கூட ஜீரணிக்க முடிவதில்லை. புலிகளின் பெயரில், புலிப் பாசிசத்தின் பெயரில், தேசிய எதிர்ப்பு இவர்களின் செமியாக் குணமாகி வாந்தியாகின்றது. தேசியம் என்பது சாராம்சத்தில் உலகமயமாதல் எதிர்ப்பையும், அதையொட்டிய ஏகாதிபத்திய எதிர்ப்பையும் அடிப்படையாகக் கொண்டது. இதை மறுதலிக்கும் இவர்கள், அன்னிய சக்திகளையும் அரச இயந்திரத்தையும் நம்பி, மக்களை அவர்கள் பின் செல்லக் கோருகின்றனர். மக்களின் சொந்த அரசியல் வழியில் நம்பிக்கையற்ற, ஓட்டுண்ணிகளின் செயல்பாடாக இது வக்கரிக்கின்றது.

இந்த நிலையில் பாசிசத்தை மக்கள் மட்டும் தான் ஒழிக்க முடியும். இதற்கு வெளியில் எதுவுமல்ல. இலங்கை மக்களும், சர்வதேச சமூகத்துக்குமே இந்தக் கடமையுள்ளது. அரசு, அன்னிய அரசுகள், கூலிக் குழுக்களால் பாசிசத்தை ஒழிக்கமுடியாது. அது மற்றொரு பாசிசத்தையே, மாற்றாக கொண்டு வரும். இதன் பின்னால் திரொஸ்கிகள் அன்னக்காவடி எடுத்து அரோகரா போட்டு ஆடலாம், ஆனால் மக்கள் ஆட முடியாது. அதாவது ஆட மாட்டார்கள்.

தேசியத்தை விட பாசிசத்தை அழிப்பதே முதன்மையானது என்கின்றீர்களே? நல்ல பொருத்தப்பாடான புலியின் அதே அரசியல் புளுத்து வருகின்றது. புலிகள் கூறுகின்றனர் நாங்கள் நிரந்தர தீர்வைப் பற்றி பேசமாட்டோம், மனிதாபிமான பிரச்சனையை மட்டும் பேசுவோம் என்றனர். இரண்டையும் ஒன்றுக்குகொன்று எதிராக நிறுத்தி புலம்பியது போன்றதே, பாசிச ஒழிப்பும். பாசிசத்தை ஒழிப்பது மட்டும் தான் முதல் நிகழ்ச்சி நிரல், தேசிய நலன் நிகழ்ச்சி நிரலில் இருக்க முடியாது என்கின்றார்கள். புலிகளுடன் இணங்கிப் போகும் நல்ல வேடிக்கையான இலங்கை அரசியல்.

தேசிய நலனை மறுக்கும் ஏகாதிபத்தியத்துடனும், அதையே அமுல்செய்யும் இலங்கை பேரினவாத அரசுடனும், கூட்டுச் சேர்ந்த புலியை அழிக்க தேசிய நலன்கள் தடையாக உள்ளது. இதனால் தேசிய நலனா! அதுவென்ன என்பதும்! அல்லது அதை பிறகு பார்ப்போம் என்பதும் இந்த புலியெதிர்பாளர்களின் அரசியலாகின்றது. பாசிசத்தை ஒழிக்க அன்னிய சக்திகளுடன் இணைய தடையாக உள்ள, தேசியத்தை இழிவாடி வம்பளக்கின்றனர். மக்கள் சார்ந்து பாசிச ஒழிப்பு பற்றி இவர்கள் கடுகளவு கூட எண்ணுவதில்லை. நாம் முன்பு சுட்டிகாட்டியது போல், முதலில் தமிழீழம் பின் ஜனநாயகம் என்று கூறும் புலிகளின் நிலைக்கும், இதே போல் முதலில் ஜனநாயகம் பிறகு சமூக முரண்பாடுகளை தீர்த்தல், என்ற ரீ.பீ.சீ மற்றும் தேனீ கும்பலின் புலியெதிர்ப்பு நிலைக்கும், முதலில் பாசிச ஒழிப்பு என்பது சமாந்தரமானது. முதலில் புலிப் பாசிச ஓழிப்பு, அதன் பின்பு தான் அனைத்தும் என்பது இந்த இடது வேடமிட்ட வலது புலியெதிர்பாளர்களின் அரசியல் நிலையாகும். மக்களைச் சார்ந்திருப்பதில் இருந்து எவ்வளவுக்கு எவ்வளவு அரசியல் ரீதியாக விலகுகின்றதோ, அந்தளவுக்கு இந்த மக்கள் விரோதப் போக்கு அரங்கேறுகின்றது. அது சொல்லும் விதம் மட்டும் நாசுக்காகவே மாறுபடுகின்றது.

பாசிசம் தேசிய நலனை மறுதலிக்கின்றது என்ற அரசியல் உள்ளடக்கம், திரோஸ்கிய மலடுகளுக்கு புரிவதில்லை. மக்களின் நலன்கள் தான் தேசியம். மக்களின் நலன்களை ஏகாதிபத்தியம், பேரினவாதம், புலிகள் என யாருமே ஏற்றுக்கொள்வது கிடையாது. தேசியம் சமன் பாசிசம் என்ற திரொஸ்கிய மலட்டுத்தனம் ஆற்றலற்றது. சொந்த மக்களின் நம்பிக்கையற்றது. மக்களின் எதிரிகளுடன் சேர்ந்து நின்று முரண்பாடுகளை தீர்க்க கோருகின்றது.

பாசிசத்தை ஒழிக்க வேண்டும் என்றால், தேசியத்தை மக்களின் தமது சொந்த நலனில் இருந்தே முன்னெடுக்க வேண்டும். அதையே வழிகாட்ட வேண்டும். அதற்கு துப்பில்லை. பாசிசத்தை ஒழிக்க ஏகாதிபத்தியத்தை சார்ந்து நிற்பவர்கள், அதே கோட்பாடுகளை அடிப்படையாக கொண்டவர்களின் செயல்பாடுகளின் கோட்பாடுகள், தேசியம் சார்ந்ததாக இருக்காது. இதனால் தான் தேசியத்தை மறுக்கின்றனர். தேசிய மறுப்பின் அனைத்து தளமும் இப்படி தான் எங்கும் உள்ளது.

சாராம்சத்தில் தேசியம் என்பது என்ன? முதலில் அது பாசிசமல்ல. புலிகளின் போராட்டம் தேசிய போராட்டமல்ல. மக்களின் ஜனநாயகக் கோரிக்கைகளே சாராம்சத்தில் தேசியமாகவுள்ளது. ஓரு தேசத்தில், ஒரு தேசியத்தில் வாழும் மக்கள், தமது சொந்த பொருளாதார தேசிய வாழ்வை பாதுகாப்பது தான் தேசியம். யாரிடமிருந்து பாதுகாப்பது. உலகமயமாதலாக ஒருங்கு திரண்டு வரும் ஏகாதிபத்தியத்திடம் இருந்து, அதையே ஆளும் கோட்பாடாக கொண்ட குறுகிய இனவாத மதவாத சக்திகளிடமிருந்து, மக்கள் தமது உழைப்பை, உழைப்பின் ஆதாரத்தை பாதுகாப்பதற்கான போராட்டத்தையும் எதிரியையும் குறித்து நிற்கின்றது. இதனடிப்படையில் தேசிய பண்பாடு, தேசிய கலாச்சாரம், தேசிய மொழி என அனைத்தையும் சிதைக்கவும், சீரழிக்கவும் முயலும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தேசியம் போராடக் கோருகின்றது. புலிப் பாசிசம் தனித்துவமாக இந்த உலகயமாதலுக்கு வெளியில் அது செயல்படவில்லை என்பதுடன், அது சுயாதீனமாக செயல்படவே முடியாது.

ஏகாதிபத்திய உலகமயமாதல் தேசியத்தின் சகல கூறுகளையும் அழிக்கும் போது, அதை எதிர்த்து நிற்பதன் சாரம்தான் தேசியம். புலிகள் கோருவது தேசியத்தையல்ல. புலிகளின் பாசிசம் தேசியமல்ல. எல்லா மக்கள் விரோதிகளும் விதிவிலக்கின்றி, பாசிசத்தை தேசியம் என்று கூறும் புலியின் நிலையை அங்கீகரித்து, அதற்கு சாதகமாக அல்லது எதிராக தமது மக்கள் விரோத போக்கை அரங்கேற்றுகின்றனர். புலிகளின் பாசிசம் தேசியமல்ல என்று கூறி யாரும் தேசியத்தை முன்வைப்பதில்லை. இதனால் மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். மக்களின் தேசிய நலனில் நம்பிக்கையற்று, பாசிச ஒழிப்பில் அன்னிய சக்திகளின் கூலிப்பட்டாளமாகின்றனர்.

பாசிச ஒழிப்பில் இவர்கள் ஆதரிக்கும் ஏகாதிபத்திய உலகமயமாதல், தேசியத்தையும் தேசிய பொருளாதாரத்தையும் அழிக்கின்றது. ஏகாதிபத்திய உலகமயமாதல் என்பது ஏகாதிபத்தியம் முதல் இலங்கை அரசுவரை உள்ளடங்கியது. இது திரோஸ்கிய மலட்டுத்தன அறிவுக்கும், குருட்டுப் பார்வைக்கும் தெரிவதில்லை. இதனால் புலி அழிப்பு முதல் அனைத்தும் மக்கள் விரோதமாகவே அவதரிக்கின்றது.

இப்படி மக்களின் தேசிய பொருளாதாரத்தை அழிப்பவனுக்கு காவடியெடுப்பவர்கள் தான், 'சுயநிர்ணய உரிமை அரசியலின் சகாப்தம் இன்று முடிவடைந்து விட்டது" என்கின்றனர். நல்ல நகைச்சுவை. ஏதோ புதிதாக சொல்வது போல் சொல்லிக் காட்டுகின்றனர் திரொஸ்கியின் பெயரில் திரொஸ்கிஸ்ட்டுகள். இதையே திரொஸ்கி சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் லெனினுக்கும் ஸ்ராலினுக்கும் எதிராக, அதாவது மக்களுக்கு எதிராகக் திரொஸ்கி கூறியது தான். அதே சரக்கு, இன்று சகாப்தம் முடிந்துவிட்டதாக கூறி தூசுதட்டி, அதே போட்டை புலிப் பாசிசத்தின் துணையுடன் திரும்ப ஊரறிய மாட்ட முனைகின்றனர்.

தேசிய சுயநிர்ணய உரிமையை மறுத்தவர்களில் முதன்மையானவர்களில் ஒருவர் தான் திரொஸ்கி. இது மட்டுமல்ல விவசாயிகளின் புரட்சிகர பாத்திரத்தையே மறுத்தவர் தான் இந்த திரோஸ்கி. இப்படி மக்களின் புரட்சிகர பாத்திரத்தையும், மக்களின் அடிப்படை உரிமையையும் எதிர்த்த திரொஸ்கியின் அரசியல் போக்குகளை எதிர்த்து தான், லெனினால் புரட்சியை நடத்த முடிந்தது. திரோஸ்கி லெனின் ஸ்ராலின் தலைமையில் நடைபெற்ற புரட்சியுடன் ஓட்டுண்ணியாக ஓட்டிக்கொண்ட போது, அவரின் தத்துவ ரீதியான எதிர்ப்புரட்சிகர போக்கும் ஓட்டிக்கொண்டது. நடந்த புரட்சியை குழிபறிக்க லெனினுடன் முரண்படாத காலம் எதுவும் திரோஸ்கிக்கு கிடையாது. புரட்சிக்கு பிந்திய லெனின் தத்துவார்த்த நீண்ட போராட்டங்களை, திரொஸ்கிக்கு எதிராகவே நடத்தவேண்டிய துரதிஸ்டம் லெனினுக்கு ஏற்பட்டது. பல்வேறு விடையங்களில் இந்த நிலை தொடர்ச்சியாக ஏற்பட்டது. புரட்சிக்கு பிந்திய விடையங்களில் லெனின் அவதானம் செலுத்த முடியாத அளவுக்கு, திரொஸ்கியின் எதிர்புரட்சிகர பாத்திரமே லெனின் நேரத்தையே மட்டுப்படுத்தியது. லெனின் மறைவின் பின் இதே நிலை ஸ்ராலினுக்கு ஏற்பட்டது.

இன்று இதை மூடிமறைக்க ஸ்ராலினிசம் என்று கூறி கொச்சைப்படுத்த முனைவது லெனினிசத்தைத் தான். அதாவது மார்க்சியத்தைத் தான். இதனால் தான் சுயநிர்ணயத்தை மிக மோசமானதாக காட்டி, புலிப் பாசிச துணையுடன் இழிவாடுகின்றனர் திரொஸ்கிகள். இவர்கள் இப்படி என்றால் ரீ.பீ.சீ ஆய்வாளர் சிவலிங்கம் சுயநிர்ணயத்துக்கு தனது ஏகாதிபத்திய சார்புக்கு ஏற்ப புது விளக்கம் அளிக்கின்றார். 11.11.2006 ஜெர்மனி ஸ்ருட்கார்ட்டில் நடந்த புலியெதிர்ப்பு கூட்டம் ஓன்றில் 'மாற்று அரசியலை நோக்கிய பார்வை" என்ற தலைப்பில் 'சுயநிர்ணய உரிமை என்பது ஜனநாயக விழுமியங்களை உள்ளடக்கியதாகும். மக்கள் தமது சுயவிருப்பங்களை வெளிப்படுத்தும் வகையில் சுயமாகவும், சுதந்திரமாகவும், தமது வாக்குகளைப் பகிரங்கமாக தேர்தலில் இணைந்து வெளிப்படுத்துவதும் சுயநிர்ணய உரிமையாகும். மக்களின் விருப்பமும், அங்கீகாரமுமே அரசின் ஆட்சி அதிகாரத்திற்கான இருப்பாகும்." என்கின்றார். மக்கள் வாக்கு போடுவது தான் மக்களின் சுயநிர்ணயம் என்கின்றார். அதை அவர் 'மக்களின் இறைமை அதிகாரம் வாக்குச் சீட்டின் மூலம் பிரயோகிக்கப்படுகிறது" என்கின்றார். சுயநிர்ணயத்தை திரிப்பதில் புலிகளின் தம்பி தான் நாங்கள், ஆனால் ஜனநாயகவாதி என்கின்றனர். சுயநிர்ணயத்தை இப்படி தத்தம் நோக்குக்கு ஏற்ப திரிப்பது, மறுப்பது இவர்களின் கைக்கூலித்தனத்துக்கு ஏற்ப கைவந்த கலையாகின்றது. இதையே தான் மற்றொரு கடைக்கோடியில் நின்று திரொஸ்கிய புலியெதிர்ப்பு கும்பலும் செய்கின்றது.

திரொஸ்கிய லெனினிய விரோத கருத்தை இன்று மறுபடியும் ஓப்புவிக்கின்றனர். சுயநிர்ணயம் என்ற லெனினிய சகாப்தம் முடிந்துவிட்டது என்றால், அதற்கு பதிலாக என்ன வந்துள்ளது. தேசங்களை, தேசியங்களை உலகமயமாதல் பொருளாதாரம் சூறையாடவில்iiயா? புலிகள் முதல் இலங்கை அரசாங்கம் வரை தேசத்தை, தேசியத்தை மறுதலிக்கவில்லையா? மக்களுக்கு சுயநிர்ணயம் கிடையாது என்று சொல்வதில், புலிகள் முதல் திரொஸ்கிகள் வரை ஓரே கோட்பாட்டையே கொண்டுள்ளனர். இதையே ரீ.பீ.சீ ஆய்வாளர் சிவலிங்கம் மற்றொன்றாக திரித்து மறுக்கின்றார். இவற்றை எல்லாம் மறுத்தபடி மக்கள் தமது சொந்த வாழ்வு சார்ந்த, தன்னியல்பாகவே தாம் அறியாமால் இதைக் கோருகின்றனர். இதற்காக சூக்குமமாக தமது சொந்த வாழ்வின் ஊடாக போராடுகின்றனர். இது மிக நுட்பமானது ஆனால் உள்ளடக்க ரீதியானது.

இந்த நிலையில் சுயநிர்ணயத்தைக் கோரும் பாட்டாளிவர்க்கம், தனது வர்க்க நிலை காரணமாக இதற்கு எதிரான அனைத்தையும் எதிர்த்து போராடுகின்றது. அதுவும் குறித்த தேசிய எல்லைக்குள் இது எதார்த்தத்தில் காணப்படுகின்றது. பாட்டாளி வர்க்க புரட்சிகள் சாராம்சத்தில் தேசியமாகவே உள்ளது. உலகில் ஓரே நாளில் ஒரே வினாடியில் உலகமயமாதலை எதிர்த்து புரட்சி வந்துவிடாது. இதை வரலாறு காட்டியுள்ளது. எதார்த்தம் இதை நிறுவுகின்றது.

நாடுகளின் ஏற்றத் தாழ்வான பொருளாதாரம், சமூகங்களிடையே வேறுபட்ட முரண்பாடுகள், முரண்பாடுகளின் ஒரு சீரற்ற தன்மை, புரட்சிக்குரிய தயாரிப்பில் ஏற்படும் ஏற்றத்தாழ்வான வளர்ச்சி, புரட்சிக்கு தலைமை தாங்கும் தலைமைகளின் சீரற்ற பார்வை, பாட்டாளி வர்க்க கோட்பாட்டு ரீதியான உள்வாங்கல்களிலும் அதை பிரயோகிப்பதிலும் உள்ள குறைபாடு, தலைமைகள் நாட்டின் எல்லைக்குள் இருப்பதும், நாடுகள் தனித்தனியாக பிரிந்து கிடப்பது போன்ற பல்வேறு காரணங்கள் தேசங்களின், தேசியத்தின் தனித்துவத்தை நிர்ணயம் செய்கின்றது. நாடுகளின் சுயநிர்ணயத்தை பாதுகாப்பதை, தற்பாதுகாப்பதை கோருகின்றது. பாட்டாளி வர்க்கம் சர்வதேசிய உணர்வு பெற்று இருப்பதை, அதை நடைமுறையில் செயல்படுத்துவதை இது மறுதலித்துவிடவில்லை. தேசங்கள், தேசியத்தின் உள்ளடக்கத்தை இதை முரணாக்கிவிடுவதில்லை.

சர்வதேசியத்தை தேசியத்துக்கு எதிராக முன்னிறுத்துவது, தேசியத்தை சர்வதேசியத்துக்கு எதிராக முன்னிறுத்துவது முற்றிலும் தவறானதும் உள்நோக்கம் கொண்டதுமாகும். இதை தமிழ் மக்களின் எதிரிகள் அனைவரும் விதிவிலக்கின்றி செய்கின்றனர். தேசியம் இரு கூறுகளாகவே எதார்த்தத்தில் இருந்தது, இருக்கின்றது.

1.பாட்டாளி வர்க்க சர்வதேசியக் கூறு

2.முதலாளித்துவ தேசியக் கூறு.

இரண்டுக்கும் தனித்தனி நோக்கம் உண்டு. புலிகள் பாட்டளிவர்க்க தேசித்தையோ, முதலாளித்துவ தேசியத்தையோ முன்னெடுக்கவில்லை. அது தேசியத்தை மறுக்கும் ஓரு இராணுவ பாசிச மாபியாக் குழு. அது ஓரு இனத்தின் தேசியக் கூறை தான் கொண்டிருப்பதாக கூறிக் கொண்டு தான், தன்னைத் தான் நிலை நிறுத்த முடிகின்றது. இந்த உண்மையை இனம் கண்டு, தமிழ் மக்களின் தேசியக் கூறை (பாட்டாளி வர்க்க கூறு, முதலாளித்துவக் கூறு) வேறுபடுத்தி, அதைப் புலியில் இருந்து தனிமைப்படுத்தி போராடாத எமது வரலாறும் எமது கோட்பாடுகளும் தான் புலியின் அரசியல் இருப்பாகின்றது. புலியின் இருப்புக்கு யார் காரணம் என்றால், மக்கள் அல்ல. மாறாக தமிழ் மக்களின் தேசியக் கூறை புலியில் இருந்து பிரித்து, அதற்காக போராடாத பாட்டாளி வர்க்கம் மற்றும் தேசிய முதலாளித்துவ பிரிவுகளின் கோட்பாட்டு தெளிவுமின்மையும் நடைமுறையின்மையும் தான் இன்றுவரை காரணமாக உள்ளது. இதை மறுதலிக்கும் திரோஸ்கிய புலியெதிர்ப்பு, இலங்கை அரசின் பின் விசுவாசமாக கோட்பாட்டு ரீதியாகவே வாலாட்ட வைக்கின்றது.

தேசியத்தில் உள்ள பாட்டாளி வர்க்க சர்வதேசிய கூறே இன்னமும், அடிப்படையான புரட்சியின் முக்கியமான உந்துவிசையாகவுள்ளது. முதலாளித்துவத்தின் தேசியக் கூறு, எதார்த்த்ததில் பலவீனமாகியுள்ளது. முதலாளித்துவ தேசியக் கூறை எந்த மூன்றாம் உலக நாட்டு (கியூபா உட்பட, ஆனால் வேறுபாடு உண்டு) அரசுகளும் பின்பற்றவில்லை. மாறாக அவ் அரசுகள் உலகமயமாதல் அமைப்பின் ஓரு அடியாட்படையாக கூலிக்கும்பலாகவே வீழ்ந்து கிடக்கின்றது. உள்ளுர் உற்பத்தி முறையில் உள்ள தேசிய முதலாளித்துவ கூறுகள், தமது உற்பத்தியில் உலகமயமாதல் உற்பத்திக்கு எதிராக தமது தற்காப்பை அடிப்படையாக கொண்டு போராட முனைகின்றது. ஒன்றில் மரணிக்கின்றது அல்லது ஏகாதிபத்திய உலகமயமாதல் பொருளாதாரத்துக்குள் உறுஞ்சப்படுகின்றது. இப்படி ஒவ்வொரு கணமும் தேசிய உற்பத்திகள் கடுமையான போராட்டத்தை சதா நடத்துகின்றது.

இந்த நிலையில் தான் பாட்டாளி வர்க்க தேசியம் மிக முக்கியமான புரட்சிகர பாத்திரத்தை வகிக்கின்றது. தேசிய உற்பத்தியை பாதுகாக்க முனைப்பாக முனைகின்றது. தனது சொந்த வாழ்விற்கான சமூக ஆதாரத்தை அழிப்பதை அது மறுதலிக்கின்றது. தனது உழைப்பை பிடுங்கும், அதை மறுதலிக்கும் உலகமயமாதலை எதிர்த்து நிற்கின்றது. உலகமயமாதல் உற்பத்தி தேசிய உற்பத்தியை சுரண்டுவதை, அதை அழிப்பதை மறுதலிக்கின்றது. தனது வாழ்வு சார்ந்து, தேசிய மொழி பண்பாடு என அனைத்தையும் பாதுகாக்க முனைகின்றது. சுயநிர்ணயம் என்பது உலகமயமாதலை எதிர்ப்பதையே சாரமாக கொண்டது. அதாவது ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதையே சாரமாக கொண்டது. தனி மனிதன் தனது சுயநிர்ணயத்தை கோருவது எவ்வளவு முக்கியமோ, அதுவே தேசத்துக்கும் பொருந்தும். தனிமனித சுயநிர்ணயம் மற்றவர் சுயநிர்ணயத்தை மறுத்தல் அல்ல, மாறாக அங்கீகரித்தலாகும். இதுவே தேசியத்துக்கும் பொருந்துகின்றது. தனிமனிதன் தனது சுயநிர்ணயத்தைக் கோருகின்ற போது, அதை தேசத்துக்கு மறுப்பது அபத்தமாகும்.

அபத்தமாகவே சிந்தித்து அலம்பும் தமிழரசன் 'இன்று இலங்கையில் உள்ள முதன்மையான அபாயம் புலிப்பாசிசமாகும். புகலிட நாடுகளில் தம்மை இடதுசாரிகளென்று கருதிக்கொள்ளும் ஸ்டாலினிச பழந்தேம்பு புரட்டுபவர்கள் தமிழ் தேசிய விடுதலையின் பெயரால் புலிப் பாசிசத்தைக் கூட ஆதரிக்கத் தயாராக உள்ளனர்." என்று எங்களையே குறிப்பிடுகின்றார். பாசிசத்தை எதிர்த்து தொடர்ச்சியாக நாங்கள் போராடி வருகின்ற எமது காலத்தில், இந்த திரொஸ்கிய குசும்புகள் எந்த உலகத்தில் இருந்தனர். எங்கே இந்த பாசிசத்தை எதிர்த்து நின்றனர் என்று தேடினாலும், எங்கும் கிடைக்குதில்லை. அண்மைக்காலமாக அன்னக்காவடியாட்டம் தேனீக்கு பின்னால் பிரதிட்டை செய்தவர்கள், இன்று ஆகாகா யுகப் புரட்சி என்கின்றனர். யாருடன் எப்படி என்றால் இலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்து செய்யப்போவதாக பிதற்றுகின்றனர். ஆகவே 'பழந்தோம்பு" என்று கிண்டல் அடிக்கின்றனர்.

'தமிழ் தேசிய விடுதலையின் பெயரால் புலிப் பாசிசத்தைக் கூட ஆதரிக்கத் தயாராக உள்ளனர்" என்ற எதிர்வு கூறலை எம்மை நோக்கிக் கூறுகின்றனர். எப்படித்தான் இந்த எதிர்வு கூறலை கூற முடிகின்றது என்றால், எங்கள் கருத்துகளை விமர்சிக்க முடியாத மொத்த விளைவே எதிர்வு கூறலாகின்றது. இப்படித் தான் அரசியல் சேறடிக்க முடிகின்றது. பிரச்சனையை நேரடியாக விவாதிக்க துப்பேயில்லை. 'தமிழ் தேசிய விடுதலையின் பெயரில்" என்கின்றனர். இது புலிகள் தமிழ் தேசிய விடுதலை நடத்துவதாக, திரொஸ்கிய மதிப்பீட்டின் முடிவில் இருந்து வெளிப்படுகின்றது. நாங்கள் அப்படி மதிப்பிடவில்லை. இது அவர்களுக்கும் எமக்குமான தெளிவான அரசியல் வேறுபாடு. இப்படித் தான் அனைத்து சர்வதேச நிலைபாட்டிலும் வேறுபாடு உண்டு. 'தமிழ் தேசிய விடுதலையின் பெயரில்" என்று கூறுவதன் மூலம், திரோஸ்கிகள் உள்ளடக்கத்தில் ஆச்சரியப்படதக்க வகையில் புலிகளின் கோட்பாட்டு ரீதியான உடன்பாட்டுக்குள் புலிகளின் தேசிய ஆசான்களாகிவிடுகின்றனர். புலிகள் தேசிய விடுதலைப் போராட்டத்தை நடத்தவில்லை என்ற எமது அரசியல் நிலை மட்டும் தான், புலியை அரசியல் ரீதியாக விமர்சிக்கின்றது. மற்றவை எல்லாம் புலியெதிர்ப்பை அரசியலாக முன்வைக்கின்றது. ஆகவே மாற்று அரசியல் வழியற்று, அரசு மற்றும் ஏகாதிபத்திய நடவடிக்கைக்கு துணைபோவதையே அரசியலாக்கின்றது.

நாங்கள் தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தை உயர்த்துவதால் அதை 'ஸ்டாலினிச பழந்தேம்பு புரட்டுபவர்கள்" என்கின்றனர். திடீரென பாசிசத்தை இலங்கை அரசுடன் சேர்ந்து புரட்ட வந்தவர்கள், இப்படி புலம்பவது நிகழ்வது உண்டு. சுயநிர்ணயத்தை உயர்த்துவதானது, பாசிசத்தை பாதுகாப்பது எனக்கூறி வட்டமடிக்கின்றனர். ஆனால் எதார்த்தம் சார்ந்த எமது போராட்ட வரலாறு, எமது கோட்பாட்டு தெளிவு இலங்கையில் மிகத் தனித்துவமானதும், தெளிவானதுமாகும். யாருக்கும் நாம் சோரம் போனது கிடையாது. கோட்பாட்டு ரீதியாக யாரும் செய்ய முடியாததை 'பழந்தேம்பு"கள் ஆகிய நாம் நடைமுறையில் செய்துள்ளோம். இந்த போராட்டத்தில் நாம் கண்ட நெருக்கடிகள், அவதூறுகள், இழிவாடல்கள் எல்லையற்றது. நாம் அதை துணிச்சலாக எதிர்கொண்டு, மக்களின் விடுதலைக்காக தனிததுவமாகவே கோட்பாட்டு துறையில் நிமிர்ந்து நிற்கின்றோம்.

'பழந்தேம்பு" என்று கூறி சுயநிர்ணயத்தை மறுக்கும் நீங்கள், தமிழ் மக்களின் பிரச்சனைக்கு என்ன தீர்வை வைக்கின்றீர்கள். தமிழ் மக்களுக்கு தேசியப் பிரச்சனை இல்லை என்பதே, நேர்மையாக சொல்லமுடியாத உங்கள் உள்ளார்ந்த நிலை. சுயநிர்ணயத்தை மறுக்கும் நீங்கள், ஜே.வி.பி போல் பதில் சொல்ல முனைகின்றீர்கள். ஆனால் சொல்லும் அரசியல் நேர்மை துணிவு கிடையாது. அலட்டலே எஞ்சிவிடுகின்றது. உங்கள் புலியெதிர்ப்பு தோழமை பூண்டு, ஜே.வி.பியை இனவாதிகள் அல்ல என்கின்றனர். இலங்கையில் இனவாதிகளாக 'சிஹல உருமய போன்ற சிங்கள இனவாதப் போக்கின் அழிவைத் தடுத்து நிறுத்த முயலும் சிறிய இனவாத சக்திகள் தோன்றிய போதும்" என்று கூறி, இனவாத அமைப்பாக எதுவுமில்லை என திரித்து காட்டுகின்றனர்.

இவர்கள் கூறுகின்றார்கள் 'இன்று இலங்கையில் உள்ள முதன்மையான அபாயம் புலிப்பாசிசமாகும்" இதன் சாரம் இலங்கையில் பிரதான எதிரி அரசல்ல, புலி என்பதாகும். நாங்கள் இதைத் தெளிவாக மறுதலிக்கின்றோம். எமது முதன்மையான எதிரி புலியல்ல, பேரினவாத அரசே. இதன் பின்னுள்ள ஏகாதிபத்தியமுமே. ஏகாதிபத்தியம் வேறு இலங்கை அரசு வேறல்ல. 'இலங்கை தழுவிய ஜனநாயக அரசியல் தோன்றியிருப்பதையும் அடையாளம் காணவில்லை." என்று ஊரையே ஏமாற்ற கரடிவிடத் தேவையில்லை. இலங்கை அரசு ஜனநாயக அரசல்ல. மாறாக ஏகாதிபத்தியத்தின் கைப்பாவை ஆட்சியாளராக செயல்படும் பேரினவாத அரசு, பாசிசத்தையே அடிப்படையாக கொண்டது.

புலிப் பாசிசம் மக்களின் முன் நேரடியாக அம்பலமாகின்றது. அரச பாசிசம் மறைமுகமாக, ஆனால் கொடூரமாக செயல்படுகின்றது. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை பேரினவாத பாசிசம் அங்கீகரித்தால் அல்லது ஒரு தீர்வை வழங்கினால் புலிபாசிசத்தின் முடிவு தீர்மானகரமாகவே நிகழ்ச்சிக்கு வந்துவிடும்.

புலிபாசிசத்தை பாதுகாப்பது பேரினவாத பாசிசமே. பேரினவாத அரச பாசிசம் தான், புலிப் பாசிசத்தின் அரசியல் மூலம். இது கூடத் தெரியாத மலட்டு அரசியல் தான் திரொஸ்கியம். மக்கள் பலத்தை சார்ந்து நிற்பதையும், மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையை அங்கீகரிக்க மறுப்பதுவும் திரொஸ்கியத்தின் மையக்கூறாகும். அது 'இலங்கை தழுவிய ஜனநாயக அரசியல் தோன்றியிருப்பதையும் அடையாளம் காணவில்லை." என்று கூறி, மக்களின் ஜனநாயக உரிமையை மறுக்கின்றனர். மக்களின் ஜனநாயக உரிமை என்று நாம் கூறும் போது, திரொஸ்கிகள் அதை தமது திரொஸ்கிய கருத்துக்கு ஏற்ப திரிக்கின்றனர். மக்களின் ஜனநாயக உரிமை என்பது, அந்த மக்கள் தமது சொந்த தேசிய பொருளாதாரத்தைக் கொண்டு வாழ்வை தீர்மானிக்கவும், அது சார்ந்த பண்பாட்டு மொழியை அடிப்படையாக கொண்ட ஒரு தேசமாக இருக்க கோருவதையே உள்ளடக்கியது. இதன் மூலம் மற்றைய சமூகங்களின் பரஸ்பர இருப்பையும், அவாகளின் உரிமையையும் ஏற்றுக்கொள்வதைக் குறிக்கின்றது. எல்லா மக்களைப் போலவும், தேசிய அடிப்படையிலான தேசியத்தைச் சார்ந்து வாழும் ஜனநாயக உரிமையை மறுப்பது என்பதே, திரொஸ்கியத்தின் மைய அரசியலாக உள்ளது.

இந்த திரொக்ஸ்கி முரண்பாட்டில் 'தமிழ் தேசிய விடுதலையா இன்று நடைபெறுகிறது? புலிகளின் ஆயுத நடவடிக்கைகளை ஜனநாயகரீதியில் மாற்ற முடியுமா?" என்கின்றனர். நல்லது நண்பர்களே. நீங்கள் சரியான தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை, மக்களை அதற்காக ஆயுதபாணியாக்கி நடத்த வேண்டியது தானே. இது மட்டும் தான் சரியான வழி. அதைச் செய்ய வேண்டியது தானே. இது மட்டும் தான் புலிப் பாசிசத்தை ஒழிக்கும். ஆனால் இதை கேள்வியாக எழுப்பும் நீங்கள், அதை நடைமுறையில் மறுதலிக்கின்றீர்கள். இந்தக் கேள்வியை எம்மை மடக்க, எமது இன்றைய நிலையைக் கேலிசெய்ய முட்டாள் தனமாக முன்வைக்கின்றீர்கள். இதுவே உங்களுக்கு ஏன் பொருந்தாது?

'தமிழ் தேசிய விடுதலையா இன்று நடைபெறுகிறது? புலிகளின் ஆயுத நடவடிக்கைகளை ஜனநாயகரீதியில் மாற்ற முடியுமா?" இப்படி நாங்கள் சொன்னது கிடையாது. எமது கடந்தகால விமர்சனங்கள் முதல், நாங்கள் நடைமுறையில் போராடிய காலங்களில் கூட, இப்படி நாங்கள் ஒரு அரசியல் வழியை பின்பற்றியது கிடையாது. புலிகளை ஜனநாயக உபதேசங்கள் மூலம் மாற்ற முடியாது. இது எங்கள் அரசியல் வழி கிடையாது. நாங்கள் புலிகளை விமர்சிக்கின்றோம் என்றால், விமர்சனம் மூலம் சிந்திக்கத் தூண்டி ஒரு மாற்றத்தை நோக்கிய மாற்று வழிக்காகத் தான். ஒரு விமர்சனம் என்பது மாற்றத்தைக் கோருவதுதானே ஒழிய திருந்துவதையல்ல.

மாற்றத்தை மக்கள் மட்டும் தான் தமக்காக நடத்தமுடியும். மக்கள் தமது சொந்த விடுதலைக்காக ஆயுதத்தை ஏந்துவதன் மூலம் தான், மாற்றம் உண்மையானதாக அமையும். புலிகளே அழிந்தாலும், இதுவே அனைத்தும் சார்ந்த உண்மையாகும். எம் மீதான விமர்சனம் குற்றச்சாட்டு என்ற வகையில், நாம் செய்வது என்பது நடைமுறை சார்ந்த ஓரு போராட்டத்தைத் தான். கடந்தகால இடதுசாரிகளின் தவறுகளால், (எம்மை உள்ளடக்கியது தான்) துரதிஸ்டவசமாக சூழல் சார்ந்து நடைமுறையில் மக்களுடன் நேரடியாக நாம் இல்லையென்ற போதும், நாம் சமூகத்தின் மத்தியில் நடைமுறை சார்ந்த வகையில் நிற்கின்றோம். இதை யாரும் செய்யவில்லை. மக்களின் பிரச்சனைகள் மீது, அவர்களை கருத்தியல் ரீதியாக சூழல் சார்ந்த எல்லைக்குள் மக்களை அணுகுவதை நாம் தள்ளிப் போடவில்லை.

இந்த இடத்தில் 'தமிழ் தேசிய விடுதலையா இன்று நடைபெறுகிறது?" நல்லதொரு கேள்வி. இதற்கு தெளிவான பதிலும், நடைமுறையையும் கோருகின்றது. தமிழ் தேசிய விடுதலை இன்று நடைபெறவில்லை என்று தெரிகின்ற போதே, உண்மையான தேசிய விடுதலைக்கு போராட வேண்டித் தானே அனைவரையும் கோருகின்றது அல்லவா! அதைத்தான் நாங்கள் நடைமுறையில் முன்வைக்கின்றோம். இதைத்தான் திரோஸ்கிகள் முதல் அனைத்து புலியெதிர்ப்பாளர்களும் எதிர்க்கின்றனர். இதுதான் எமக்கும் மற்றவர்களுக்கும் இடையிலான வேறுபாடுகளில் மையமானது. இதனால் எம்மை புலி என்கின்றனர். நன்றாக உங்கள் எதிர் புரட்சிகர மக்கள் விரோத தன்மைக்கு ஏற்ப உரத்துச் சொல்லுங்கள்.

தமிழ் தேசிய விடுதலையை சரியாக முன்னெடுத்தல் என்பதே, தமிழ் மக்களின் மீதான அனைத்து பிரச்சனைக்குமான சரியான அரசியல் தீர்வாகும். இதற்கு மாறாக கேள்வியிலேயே அதை மறுப்பது தான் 'சுயநிர்ணய உரிமை அரசியலின் சகாப்தம் இன்று முடிவடைந்து விட்டது" என்ற வாதம். இப்படி எதிர்நிலையில் நின்று வள்ளென்று குலைக்க முடிகின்றது.

அடுத்து எம்மை இழிவுபடுத்தவே 'புலிகளின் அடிமட்ட அங்கத்தவர்களை பாசிசத்திலிருந்து விடுவித்து ஜனநாயகப் போதமூட்டி தமிழ்த் தேசியத்தின் பரிசுத்தமான சக்திகளாக்க முடியுமா? இது முடியுமென்று சில ஸ்ராலினிச அரசியல் போதனையாளர்கள் பஞ்சணைக் கனவுகளைக் கொண்டுள்ளனர்." நாங்கள் பஞ்சணை கனவு காண்கின்றோம் என்றால், புலியின் பின் சென்றவர்களை என்ன செய்வது? நீங்கள் வழிகாட்டுவது போல், கொல்வதற்கு துணை செய்யக் கோருகின்றீர்கள்? அதாவது இலங்கை அரசின் வெற்றிக்கு ஆதரவளித்து விபச்சாரம் செய்ய கோருகின்றீர்களா? இது எமது வழியல்ல, இது திரோஸ்கிய விபச்சார வழியாகும். இந்த திரோக்சிய வழி என்ன? 'இலங்கை அரசு வெற்றிபெற வேண்டும்" என்பதே.

புலிகளில் உள்ள பத்தாயிரக்கணக்கான அவர்களின் தியாகமனப்பான்மையை இழிவுபடுத்துவதோ அல்லது அவர்களை அதற்காக கொன்று போட உதவுவதோ எமது அரசியலாக ஒருநாளும் இருக்கமுடியாது. இது உள்ளடக்கத்தில் மக்களுக்கு எதிரான கூலிக் குழுக்களின் படுகொலை அரசியலாகும். புலிகளில் உள்ள ஒவ்வொருவரினதும் தியாக மனப்பான்மையை வென்றெடுக்கும் வகையில், தவறான வழியில் செல்வதை தெளிவுபடுத்தி அவர்களை கொல்வதற்கு பதில், மக்களுக்காக சிந்திக்க தூண்டவேண்டும். சொந்த தாய் தந்தைக்காக, தனது சமூகத்துக்காக போராடுவதன் அவசியத்தை, அந்தக் கடமையை உணரவைத்து வெல்லப்பட வேண்டும். இதை நாங்கள் மட்டும் தான் செய்ய முனைகின்றோம். இது எம்முன்னுள்ள கடுமையான ஆனால் தெளிவான அரசியல் பணியாகும். சமூகத்தில் ஏற்றத்தாழ்வாக அனைத்தும் மாற்றம் அடைகின்றது. இப்படித்தான் மக்கள் புரட்சி நடக்கின்றது. மக்கள் புரட்சிக்கு புலியின் அடிமட்ட உறுப்பினர்கள் வரமாட்டார்கள் என்று, நாங்கள் உங்களைப் போல் கூறும் இயங்கியல் மறுப்பாளர்கள் அல்ல. நீங்கள் கூறுவது போல் 'புலிகள் அறிவுக் குறைபாட்டாலா ஜனநாயகத்தை அறியாததாலா பாசிசவாதிகள் ஆனார்கள்? சாதாரண முதலாளித்துவ ஜனநாயகத்திற்குள் கூட வரமுடியாத பாசிஸ்டுகள்தான் அதில் நிறைந்துள்ளனர்." இது அப்பட்டமான இயங்கியல் மறுப்பாகும். பாசிசம் பற்றிய அறிவுக் குருட்டின் இயலாமை, இயங்கியல் மறுப்பாகின்றது. பாசிசம் என்பது சுரண்டும் முதலாளித்துவ ஜனநாயக வடிவத்தில் ஏற்படும் நெருக்கடியில் ஏற்படும் பண்பு மாற்றம் தான் பாசிசம். இதன் பிரதிநிதிகள் தான் புலிகள். இதற்கு வெளியில் அல்ல. இது கட்டமைக்கப்பட்ட வடிவங்களில் புலிக் குழுவுக்கு என்று சிறப்பு அம்சங்கள் உண்டு. பாசிசத்தின் எல்லா இடங்களிலும் இது காணப்படுகின்றது. இல்லாது 'புலிகள் மக்கள் இயக்கமல்ல. மாறாக இராணுவரீதியிற் கட்டப்பட்ட ஆயுதமேந்திய மக்களுக்குப் புறம்பான குழுவாகும்." என்பதால், அது பாசிசமாக இருப்பதில்லை. மாறாக பாசிசம் சுரண்டல் வடிவத்தின் ஒரு பண்பு மாற்றத்துக்குள்ளான ஒரு வடிவம் தான். அதன் பிரதிநிதிகள் தான் புலிகள். புலிக்கு எதிரான போராட்டம் சாராம்சத்தில் சுரண்டலுக்கு எதிரான வர்க்கப் போராட்டம். இதைப்பற்றி யாரும் பேசுவது கிடையாது. அதனால் தான் பாசிச அரசியல் உள்ளடகத்தையே திரிக்கின்றனர். மக்கள் தமக்காக தாம் போராடுவதைத் தவிர, மாற்று வழிகள் அனைத்தும் அது சார்ந்த கோட்பாடுகளும் அனைத்தும் விதிவிலக்கற்ற வகையில் படுபிற்போக்கானவையாகும். இந்த வகையில் மக்களுக்கான எமது போராட்ட வழி மிகத் தெளிவானது.

Friday, February 22, 2008

அரசியல் ரீதியாக தோற்ற புலிகள், இராணுவ ரீதியாகவும் தோற்கின்றனரே ஏன்?

அரசியல் ரீதியாக தோற்ற புலிகள், இராணுவ ரீதியாகவும் தோற்கின்றனரே ஏன்?

பி.இரயாகரன்
23.09.2006

யுத்தத்தில் புலிகளுக்கு ஏற்படும் தோல்விகளுக்கு காரணம் என்ன? இது அரசியல் ரீதியானதே ஒழிய இராணுவ ரீதியானதல்ல. ஆனால் இதைக் காண மறுப்பதும், இதை இராணுவ ரீதியாக காண்பதும் புலி மற்றும் புலியல்லாத புலியெதிர்ப்பு தரப்பின் இன்றைய கண்ணோட்டமாகவே உள்ளது. ஆயிரம் ஆயிரம் இளைஞர்களை பலிகொண்ட யுத்தம், இன்னமும் ஆயிரமாயிரம் இளைஞர்களை பலியிடத் தயாரான யுத்தம், பல பத்தாயிரம் மக்களை அழித்தொழித்துள்ளது. மக்கள் தமது வாழ்வை இழந்து, சொத்து சுகத்தை இழந்து அனாதையாகின்றனர். இதுவரை மக்களுக்கு புலிகள் எதையும் புதிதாக பெற்றுக்கொடுத்தது கிடையாது. இருந்ததை அழித்ததுக்கு அப்பால், எதையும் புலிகள் சாதிக்கவில்லை, சாதிக்கப்போவதில்லை. ஒவ்வொரு தமிழனும் புலிகள் எதை எமக்கு பெற்றுத் தந்தனர் என்று சுயவிசாரணை செய்தால், அவர்கள் இருந்ததை அழித்ததை தவிர, தம்மிடம் புடுங்கியதை தவிர வேறு எதுவும் இல்லை என்ற உண்மையைக் காண்பான். மக்களின் உழைப்பைச் சூறையாடி, ஒரு சில பத்தாயிரம் பேர் உழைப்பின்றி மக்களின் உழைப்பில் சொகுசாக வாழ்கின்றதை மக்கள் காண்பர்.

இந்த அவலமான துயரமான நிலையில், இந்த யுத்தம் சாதிக்கப் போவது எதுவுமில்லை. இன்று இந்த யுத்தம் தோல்வி கண்டுவரும் நிலையில், ஒரு இனத்தின் மொத்த அழிவும் நிதர்சனமாகியுள்ளது. புலிகள் ஒருபுறமும், மறுபக்கமாக புலியெதிர்ப்பு ஒநாய்க் கூட்டமும், மக்களை தமது எடுபிடிகளாக்கி, தாம் நினைத்த தமது மக்கள் விரோத வக்கிரங்களை தமிழ் மக்களின் தீர்வாக காட்டுகின்றனர்.

இந்த நிலையில் புலிகள் என்றுமேயில்லாத அளவுக்கு இராணுவ ரீதியாக தோற்றுக் கொண்டிருக்கின்றனர். பேச்சவார்த்தை என்ற அரசியல் மேசையில் தோற்றவர்கள், அதைத் தொடர்ந்து இன்று இராணுவ அரங்கில் தோற்பது தொடங்கியுள்ளது. அரசியல் மேசையில் தோற்று வந்த ஒரு நிலையில், வெல்வதற்காக அவசரமாகவே ஒரு தலைப்பட்சமாக வலிந்த ஒரு இராணுவ அரங்கைத் தொடங்கினர்.

இப்படி உத்தியோகப+ர்வமாக அறிவிக்கப்படாத ஒரு யுத்தத்ததை நோக்கி அவசரமாக ஒடிய புலிகள், தொடர்ச்சியாக அதில் தோற்றுப் போகின்றனர். இந்த நிலைமைக்கான காரணம் என்ன? இந்தக் கேள்வி பலருக்கு புதிரானதாக உள்ளது. புலிகளுக்கு இதுவே அதிர்ச்சிகரமானதாக மாறிவிட்டது. எங்கும் விடை தெரியாத, விடை காண முடியாத புதிராகி நிற்கின்றது. புலிகளின் தலைவர் பிரபாகரன் சென்ற மாவீரர் தினச்செய்தியில், மீண்டும் யுத்தம் என்ற பிரகடனத்தை வெளியிட்டார். இதன் தொடர்ச்சியாக மக்களின் பெயரில் தொடங்கிய தாக்குதல்கள், இன்று முட்டுச் சந்திக்கு வந்துள்ளது. இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசங்களின் உள்ளான தாக்குதலை நடத்தமுடியாத நிலை உருவாகியுள்ளது. புலிகளின் மக்கள், மக்கள்படை அழித்தொழிக்கப்பட்டு விட்டனர் அல்லது அவர்கள் அழித்தொழிக்கப்படுகின்றனர். அண்மைக்காலமாக நடக்கும் பெரும் எண்ணிக்கையிலான வகைதொகை தெரியாத கொலைகளில் பெரும்பாலானவை, புலிகளுக்கு எதிராக நடத்தப்படுகின்றது. அமைதி சமாதானம் காலத்தில், புலிகள் இதே போன்று வகைதொகை தெரியாது கொலைகளைச் செய்தனர் என்றால், இன்று அதே உத்தியை யுத்த சூழலுக்குள் பேரினவாதம் செய்து முடிக்கின்றது. நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. இனம் தெரியாதவர் என்ற போர்வையில், மனித உரிமையை மதிக்க மறுக்கின்ற புலிகளின் கடந்தகால கொலைகாரப் போக்கினால், இன்றைய கொலைகள் யாரும் கண்டு கொள்ளாத ஒரு அசமந்தமான போக்கில் இக் கொலைகள் ஊக்குவிக்கப்படுகின்றது. இப்படி புலிகள் அல்லாத இராணுவ பிரதேசங்களில், புலியின் இராணுவ செயல்பாட்டை புலியின் பாணியிலேயே இராணுவம் செயலற்றதாக்கியுள்ளது.

இந்த நிலையில் அமைதி சமாதானம் பேசியபடி புலிகள் கையாண்ட இராணுவ தாக்குதல்கள் செயலற்று முடங்கிப் போன நிலையில், எல்லைகளில் மோதலை வலிந்து தொடுப்பதைத் தவிர, வேறு இராணுவ மார்க்கம் புலிகளுக்கு இருக்கவில்லை. அதையும் அவர்கள் வலிந்து தொடங்கினர். ஆனால் எல்லாம் பாரிய இழப்புடன் கூடிய தோல்விகளுக்கு அது இட்டுச் சென்றுள்ளது. மிகப்பெரிய படையை வைத்திருந்த புலிகள், நினைத்த இடத்தில் நினைத்தவரைக் கொல்லக் கூடிய ஒரு கொலைகார அடியாள் கும்பலைக் கொண்டிருந்தது. அத்துடன் விரும்பிய இடத்தில் விரும்பியவாறு ஏன் எதற்கென்ற கேள்வியின்றி தற்கொலை மூலம் தாக்குதலை நடத்தக் கூடிய விசுவாசிகளைக் கொண்டிருந்த புலிகள், நினைத்த இடத்தில் நினைத்த தாக்குதலை நடத்தும் வல்லமையைக் கொண்டிருந்த புலிகள் தொடர்ச்சியாக மண்ணைக் கவ்வுகின்றனர். மக்களை உருட்டி மிரட்டி ஏமாற்றி பலவழிகளில் மக்களிடம் திருடும் கோடிக்கான பணத்தில், தமது சொந்த சுகபோகத்தின் தேவை தவிர, மீதி முழுவதையும் இந்த இராணுவதுறைக்கே கொட்டுகின்றனர். அள்ளி வழங்கும் இலஞ்சம், தமது நோக்கை அடைய இலட்சக்கணக்கில் செலவு செய்யும் புலிகளின் இராணுவ உத்திகள் எல்லாம் தவிடுபொடியாகின்றன.

கடந்தகாலத்தில் இது போன்ற புலிப்பாணி இராணுவ வெற்றிகள் அனைத்தும் இன்று புஸ்வாணமாகின்றது. இது பலருக்கு அதிர்ச்சியாக உள்ளது. வழமை போல் தாக்குதல் தொடங்கியவுடன், செய்திகளை தகவல்களை புணர்ந்து புனைந்து போட்டவாகள், அதிர்ந்து போய் நிற்கின்றனர். பலதரம் அவை புஸ்வாணமாகி அம்பலமாகியுள்ளது. பலரை மௌனமாகி உறையச்செய்துள்ளது. புலிச் செய்தித்தளங்கள் நம்பிக்கை இழந்து சோர்வடைந்து வருகின்றது. புலிகளின் இராணுவ தோல்விக்கான காரணம் என்ன என்பது, பேரினவாதத்துக்கு புரியாத புதிராகவே உள்ளது. இதன் சூக்குமம் பிடிபடவே மறுக்கின்றது. புலிகளை வெல்லும் நிலைக்கு, இராணுவத்தின் பலம் மற்றும் கட்டமைப்பு மாற்றிவிட்டதாக சிலர் கருத்துரைக்கின்றனர். இதன் விளைவாக யுத்தவெறி கோசத்துடன், பேரினவாதம் கொக்கரிக்கின்றது. புலிகள் பின்வாங்கி பதுங்கி தப்ப முனைகின்றனர். இப்படி நிலைமைகள் தலைகீழாகிப் போனது.

உண்மையில் என்ன நடந்தது, என்ன நடக்கின்றது. இதை புலிகளாலும் புரிந்துகொள்ள முடியவில்லை. இலங்கை அரசியல் மீது கருத்துரைக்கும் யாராலும் இதை புரிந்துகொள்ள முடியாதுள்ளது. அந்தளவுக்கு அரசியலில் போக்கை தலைமை தாங்குவோருக்கும் மக்களுக்கும் இடையிலான உறவை புரிந்துகொள்ளும் அளவுக்கு, யாரும் மக்கள் நலனை அடிப்படையாக கொண்டு யாரும் இதை ஆராய்வதில்லை. இந்த நிலையில் இதை மீள மாற்றி அமைக்கும் வகையில், புலிகளின் இருப்பு அதை அனுமதிக்கவில்லை. புலிகளின் புலித் தேசிய சிதைவு இயல்பாக பல தளத்தில் தொடங்கிவிட்டது. புலிகளின் இராணுவ இருப்பும் அதை தடுக்கமுடியாது. இதற்கான அடிப்படைக் காரணம் என்ன? 1. புலிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவு

2. தலைமைக்கும் அதன் கீழ்மட்ட உறுப்பினருக்குமான உறவு

3. முன்னனி தளபதிமாருக்கும் தலைமைக்குமான உறவு

4. தலைமைக்கும் மொத்த சமூகத்துக்குமான உறவு

இந்த உறவு சமாதானம் அமைதிக் காலத்தில் மெதுவாக, ஆனால் சிறுக்கச் சிறுக்க பலத்த மாறுதலுக்குள்ளாகியுள்ளது. இந்த இடைவெளி பலமானதாகவும, ஆழமானதாகியும் விட்டது. புலிக்குள் போராடும் உளவியல் பலம் முற்றாக சிதைந்து போய்விட்டது. இவைதான் தோல்விக்கான முக்கியமான அடிப்படையான காரணமாகும். இதை புலிகள் மாற்றவோ திருத்தவோ இனி முடியாது.

ஆயிரம் ஆயிரம் படைகளையும், நவீன இராணுவ உபகரணங்களையும் கொண்ட புலிகளின் இராணுவ பலம் மட்டும், யுத்தத்தையோ ஏன் ஒரு வெற்றிகரமான நகர்வையோ தீர்மானிப்பதில்லை. இதை புலிகளும், வலதுசாரிய கும்பல்களும் அங்கீகரிப்பதில்லை. இராணுவ வாதத்திற்குள் மல்லாக்க குப்புறவே வீழ்கின்றனர். புலிகளின் நவீன இராணுவ படைக்கு பின்னால் உள்ள பல ஆயிரம் இளைஞர்களின் போராடும் உணர்வுகளின் மட்டம் முற்றாகவே சிதைந்துவிட்டது. அவர்கள் போராட முடியாத அளவுக்கு உள்ள பாரிய உளவியல் நெருக்கடியே, அவர்களை இயல்பாக யுத்தத்தில் தோற்கடிக்கின்றது. இதை அணைபோட்டு தடுக்கமுடியாது. இதுதான் தோல்விக்கான குறிப்பான பிரதானமான அடிப்படைக் காரணமாகவுள்ளது.

1. புலிகளில் போராடும் இளைஞர்களின் அரசியல் மட்டம் முற்றாக சிதைந்துவிட்டது. அரசியலில் ஞானசூனியமாகி ஒரு கூலி கும்பலுக்குரிய மனோபாவத்தை பெற்றுவிட்டது.

2. புலி அமைப்பு, புலித் தலைமை பற்றி கொண்டிருந்த கண்ணோட்டங்கள் முற்றாக சிதைந்து, அதை வெளியில் சொல்லமுடியாத பாரிய உளவியல் நெருக்கடிகுள்ளாக்கிவிட்டது. எல்லாவிதமான நம்பிக்கைகளும் விசுவாசங்களும் அணிகளிடையே படிப்படியாக இல்லாது போகின்றது. அரசியல் நோக்கற்று இழிந்து செல்லும் சுயநல போக்கு கொண்ட புலிகளின் பொருளாதாரக் கட்டமைப்பு, எல்லாவிதத்திலும் இயல்பான போர்க்குணாம்சத்தை இல்லாதொழிக்கின்றது. புலிகளின் ஒவ்வொரு உறுப்பினரும் அமைதிக் காலத்தில், பலவற்றை சொந்த இயக்க வாழ்வியல் ஊடாக தாமாகவே தெரிந்து கொண்டார்கள். இதன் மூலம் சொந்த சுயநலத் தலைமையை, அதன் கொள்கையற்ற போக்கை, தமது வாழ்வியல் ஊடாகவே எதிர்மறையில் கற்றுக் கொண்டார்கள். தம்மைத் தலைமை தாங்கி நிற்கும் மாற்றவே முடியாத சொந்த தலைமையை, தனது மேலதிகாரியையும் நன்கு ஆழமாக உணாந்துபட்டு தெரிந்து கொண்டார்கள். இதைவிட வெளியில் இருந்து அவர்களின் விருப்பத்துக்கு மாறாக கடத்திவரப்பட்ட, ஆயிரக்கணக்கானவர்களுடனான உறவு, அவர்கள் வெளிப்படையான புலி மீதான அதிருப்திகள் இதை மேலும் ஆழமாக்கியது. இவர்களுடனான தொடர்புகள், அச்சமூட்டும் வகையில் அவர்களையே மேலும் மௌனமாக்கியது. ஒரு பாரிய இடைவெளியை உருவாக்கி வந்துள்ளது. பரஸ்பரம் சந்தேகத்தை மேலும் ஆழமாக்கி அதிகரிக்க வைத்தது. வெளிவேஷத்துடன் கூடிய போலியான ஒரு வாழ்வியல் முறையே, தலைமைக்கும் உறுப்புக்கும் இடையிலான உயிரான உறவாகியது. இது அமைப்பின் எல்லா மட்டத்திலும், எல்லா உறவிலும், இந்த போலித்தனமான நடிப்பே அவசியமான நிபந்தனையாகிவிட்டது. இந்த அதிருப்தி வெளிப்படுத்தும் உணர்வுகள், அவர்களின் சொந்த போர்க்குணாம்சத்தை சிறுகச்சிறுக அரித்து சிதைத்து தின்று வருகின்றது.

இதைவிட ஆடம்பரமாக சென்ற புலம்பெயர் வாழ்வியல் முறை, அதையொத்ததும் அதை விட வக்கிரத்தை அடிப்படையாக கொண்டதுமான யாழ் மேட்டுக்குடிகளின் ஆடம்பர வாழ்க்கை, அனைத்தும் சுயநலத்தை அடிப்படையாக கொண்டது. இது அங்கு போராடும் இளைஞன் முன் தான் ஏன் போராட வேண்டும் என்ற எதிர்மறையான கேள்வியை எழுப்பிவிடுகின்றது. இதை சொர்க்கமாக கருதுகின்ற இயல்பான உணர்வு, புலியினுள் ஆழமாகி ஒரு அரசியல் சிதைவை உருவாக்கிவிடுகின்றது.

இதற்கு ஏற்ற உறுதுணையாக சுயநலத்தை அடிப்படைiயாக கொண்ட புலிகளின் சமூக பொருளாதார கொள்கை, எதிர்மறையில் அவர்களுக்குள்ளும் அது செயல்படுகின்றது. சுயநலமற்ற சிந்தனைப் போக்கை, தியாக மனப்பான்மையை அது இயல்பாக மறுத்தலித்து விடுகின்றது. அமைதி சமாதான காலத்தில் இதுவே சமூக மேனிலைக்கு வந்தது. புலிக்குள் ஆழமான அதிருப்தியாக மாறிவிடுகின்றது. ஒவ்வொருவரும் சுயநலம் கொண்ட பொருளாதார அமைப்பில் உறுப்பினர் என்ற வகையில், தியாக மனப்பான்மை என்பது அவர்கள் முன்பே கேள்விக்குள்ளாகின்றது. அத்துடன் யுத்தமற்ற இக்காலகட்டத்தில், இதற்குள் வாழும் புலித் தலைமையில் சகல பூர்சுவா அற்பத்தனங்களும் அம்பலமாக்கிவிடுகின்றது.

1. தலைமையின் சொந்த ஆடம்பரமான வாழ்க்கைகள்

2. தலைமைகளின் இணக்கமற்ற அதிகாரபோக்கும், அதிகார வெறியும்

3. தான்தோன்றித்தனமான வாழ்க்கையும், செயல்களும்

4. சக மனிதனை மனிதனாகவே மதிக்கத் தவறுகின்ற வக்கிரங்கள்

5. சமூக ஒழுங்குகளை மீறியதும், அற்பத்தனமாக வாழும் இரகசிய பகிரங்க வாழ்க்கை முறைகள்.

இப்படி உள்ள ஒரு இயக்கத்தை, அந்த சூழலை கேள்வி கேட்க முடியாது. இதற்கு கீழ் உள்ளவன் தொடங்கி அனைவரும் அடங்கிப் போகும் வண்ணம், பீதியை அடிப்படையாக கொண்ட நிலமை. சக மனிதனை மனிதனாக மதிக்க தவறுகின்ற நிலையில், அவர்களிடையே உரையாடல்கள் எதுவுமற்ற போக்கில், அரசியல் உரையாடல்கள் கூட எதுவும் இல்லாத நிலையே புலிகளின் எதார்த்தமான பாசிச இருப்பாக நீடிக்கின்றது. தனிமையும், பீதியும் கலந்த உணர்வே, ஒவ்வொரு உறுப்பினரதும் ஆன்மாவுகுள்ளான உணர்வாகியது. அச்சம் கலந்த பீதி சார்ந்த மனவுணர்வு, கண்முன்னால் காணும் கொடூரமான சித்திரவதைகள், இதை செய்யும் லும்பன் வாழ்வை ஆதாரமாக கொண்ட கொலைகார நாசகாரக் கும்பல்கள், எப்போதும் எங்கும் கண்காணிப்படும் அவலம், நாம் எதற்காக ஏன் போராடுகின்றோம் என்று தெரியாத திரிசங்கடமான நிலைமை, அவர்களின் அனைத்துவிதமான தியாக மனப்பான்மையை போர்க்குணாம்சத்தை இல்லாதாக்கிவிட்டது.

இப்படி எந்தப் பிரச்சனையை பற்றியும் யாரும் வாய் திறந்து பேசமுடியாத நிலைமை. பேசினால் சித்திரவதைக் கூடங்கள், மரண தண்டனைகள் சாதாரணமான விடையமாக புலிக்குள்ளும் உள்ளது. இது புலி இயக்கவிதியாகும். அதிருப்திகளும், கேள்விகளும், சந்தேகங்களும் மனதுக்குள் குடைந்து அதை அரித்து, உளவியல் சிக்கலுக்குள் சிக்கிவிட்டது. இது புலிகள் அமைப்பு முழுக்க உருவாகிவிட்ட பொது நிலையாகும். இந்த உளவியல் சிக்கல், போராட்ட உணர்வை மழுங்கடித்து அதை இல்லாதாக்கிவிடுகின்றது.

கடந்தகாலத்தில் போராடும் ஆற்றல் கொண்டு காணப்பட்ட உளவியல் மட்டம், யுத்தத்தின் தேவை சார்ந்த அரசியல் என்பன அவர்களை போராடவைத்தது. அமைதிக்காலம் அதை முற்றாக சிதைத்து, அதை அறவே இல்லாததாக்கிவிட்டது. புலிகளின் அரசியல் நோக்கம் என்ன? தமிழ் மக்களுக்கு அவர்கள் எதை எப்படி பெற்றுத்தரப் போகின்றார்கள் என்ற கேள்வி சார்ந்த அரசியல் எதுவும் புலி உறுப்பினரிடையே விவாதத்துக்குரிய ஒரு அரசியலாக இருப்பதில்லை. சுத்த சூனியம், எல்லாம் தலைவர் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையை அடிப்படையாக கொண்ட அரசியல் உணர்வு, கடந்தகாலம் போல் நிகழ்காலத்தில் நம்பிக்கை எதையும் ஊட்டவில்லை. பிரபாகரனுக்கு அடுத்த மட்டத்தில் இருக்கக் கூடிய தலைவர்களின் தலைவிதி கூட இதுதான். எதையும் சுயமாக சித்திக்கவோ, சொல்லவோ, செயலாற்றவோ முடியாத நிலை, மொத்த அமைப்பையும் நம்பிக்கையீனத்தின் விளிம்புக்கு இட்டுச் சென்றுள்ளது.

வலிந்தே திணித்த கருணாவின் பிளவு, இதை மேலும் இரண்டு தளத்தில் ஆழமாக்கியது.

1. தவிர்த்து இருக்கக் கூடிய கருணாவின் பிளவு, ஆழமானதாக மீள முடியாத ஒரு பிரிவாகியது. இது புலிகளை இரண்டாக்கியது. கருணா வெளிச் சென்றாலும், புலியினுள் இன்னமும் பிளவு உயிருடன் காணப்படுகின்றது. 2. கருணா பிளவைக் கையாண்ட முறையும், கையாண்டு வரும் நடத்தை நெறிகளும், புலியின் கட்டமைப்பையே சிறுக்கச்சிறுக சிதறடித்துக் கொண்டிருக்கின்றது. அதாவது இது சூக்குமமாக, புலியின் சொந்த பாசிசத்தின் வீதியூடாக நடக்கின்றது. இயக்கத்தின் உள்ளார்ந்த இயல்புத் தன்மையையும், அதன் உள்ளார்ந்த விதியையும் நெருக்கடிக்குள்ளாக்கியதன் மூலம், அசாதாரணமான நிலை புலிக்குள் உருவாகியுள்ளது. பாசிசத்தினுள்ளும் காணப்பட்ட சுயாதீனமான சிந்தனைகள், அது சார்ந்த செயல்கள் அனைத்தையும் சந்தேகிக்கின்ற ஒரு போக்கு, புலியில் காணப்பட்ட உயிரோட்டத்தையும் இல்லாதாக்கியுள்ளது. அனைத்தும் தன்னியல்பாக முடமாக்கப்பட்டது. எல்லாவற்றையும் எதிராகவும், எதிரியாக கருதியதன் மூலம், கீழ் இருந்து மேல் வரை போலியான சம்பிரதாயமான விசுவாசமான பிரகடனங்களே உயர்ந்த புலி அரசியலாகியது. கேள்வியின்றிய வழிபாடே விசுவாசமாகியது.

இப்படி எங்கும் எதிலும் புலி தனக்குத்தானே குழிதோண்டியபடி தான், தனது சொந்த புதைக்குழிக்குள் அடிக்கடி புதைந்து மிதக்கின்றனர். கருணா விவகாரம் ஏற்படுத்திய விளைவு, இயக்கம் முழுக்க உள்ளார்ந்த அரசியல் விதியாகிவிட்டது. ஒவ்வொரு தளபதியும் தன்னைச் சுற்றி ஒரு வேலியிட்ட படி, பிரபாகரன் பெயரைச் கூறியபடி போலியாக பொம்மையாக அசைய முனைகின்றனர்.

எங்கும் ஒரு அசமந்தமான, அசாத்தியமான இனம் காணமுடியாத சூழல். மீட்சிக்கான பாதையோ, அதை கண்டறியும் பொதுச் சூழலே கிடையாது. தலைமை தனது தற்காப்பு என்ற எல்லைக்குள் முடங்கி நிற்கின்றது. பேரினவாதம் மட்டுமல்ல, சொந்த இயக்கத்தினுள்ளும் தற்காப்பை கோருகின்ற நிலைமையில் தலைமை உள்ளது. சொந்த அணிகளுக்கும் தலைமைக்கும் இடையில் உள்ள இடைவெளி அகன்று வருகின்றது. இது பல மட்டத்தில் ஒன்றுக்கு ஒன்று எதிரான போக்கில் வளர்ச்சியுறுகின்றது. பரஸ்பரம் நம்பிக்கையின்மை, பரஸ்பரம் விசுவாசமின்மை, மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதம், இது புலிகளின் மொத்த இயக்கத்தின் சொந்த விதியாகிவிட்டது. இது உயிரோட்டமுள்ள தியாக மனப்பான்மை கொண்ட அனைத்துச் செயல்பாட்டை மறுதலித்துவிடுகின்றது. இயல்பாக இது தொடர்ச்சியான தோல்விக்கான முழுமையான சமூக அடிப்படையை உருவாக்கிவிட்டது. புலிகளின் சொந்த அரசியல் இராணுவ ரீதியான கட்டமைப்பு தோற்கடிக்கப்படுவது தவிர்க்க முடியாதாக்கியுள்ளது. முன்பை விடவும் இது வேகமாக அரங்கேறுவதை துரிதமாக்கியுள்ளது.


Thursday, February 21, 2008

பாசிசப் புலி தோற்றுக் கொண்டிருக்கின்றது

பி.இரயாகரன்
09.09.2007


ன்னியை இராணுவம் கைப்பற்றாமலே, புலிகள் தோற்றுக் கொண்டிருக்கின்றனர். புலிப் பாசிட்டுகளின் வரலாறு இப்படித் தான் முடியும். பாசிட்டுகளின் சொந்த வரலாற்று விதி, இப்படித் தான் நடக்கும். பாசிசம் ஏற்படுத்தியுள்ள போலியான பிரமைகளும், பிரமிப்புகளும் சாய்ந்து பொடிப்பொடியாக நொருங்கும் போது, பாசிட்டுகள் வரலாற்றில் நிற்பதற்கே இடமிருக்காது.

ஒரு இனத்தையே காவு கொண்டு உருவான பாசிட்டுகள், வரலாற்றில் நீடித்ததாக வரலாறு கிடையாது. அது போல் அவர்களின் சொந்த பாசிச வரலாறு அவர்கள் மீதே நிச்சயமாக காறி உமிழும். நாம் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் சரி, இது நடந்தேயாகும்.

புலிகளிடம் இன்றும் தக்கவைத்துள்ள பலம், அவர்கள் நினைத்த இடத்தில் நினைத்ததை செய்ய முடியும் என்ற பிரமை, அனைத்தையும் விலைக்கு வாங்கமுடியும் என்ற திமிர், இவைகள் எதுவும் இதை தடுத்து நிறுத்தி விடாது. அந்த சக்தி அவற்றுக்கு கிடையாது.

புலி பாசிட்டுகள் கருதுவது போல், மனித இனம் என்பது வெறும் இயந்திரங்களல்ல. அவர்கள் பாசிசத்துக்கு தலையாட்டும் பொம்மைகளுமல்ல. எப்படி வாழ்ந்தாலும், நீண்ட காலம் அடங்கியொடுங்கி வாழ்வது கிடையாது.

புலிகள் பாசிச கொலை வெறியாட்டங்கள் மூலம், முழுச் சமூகத்தையும் செயலற்றதாக்கினர். இப்படி தான், தனக்கு இசைவாக அனைத்தையும் அடிமைப்படுத்தினர். இதனால் சமூகம் அடங்கியொடுங்கி பாசிசமே மனித வாழ்வென்று நம்பி வாழ்ந்ததும் கிடையாது, வாழ்வதும் கிடையாது. அது தனது சொந்த வழிகளில், இதை எதிர்த்து இயங்குகின்றது.

மக்கள் புலிப் பாசிசத்துக்குள் அடங்கியொடுங்கி கிடந்தாலும், பாசிசத்துடன் என்றும் உடன்பட்டதில்லை. அதன் கோரமான செயல்பாட்டில் பங்குபற்றியதில்லை. தனது பந்த பாசங்கள் கொல்லப்படுவதையும், மிருகத்தனமாக அடக்கியொடுக்கப்படுவதையும், ஒருநாளும் உள்ளார அங்கீகரித்ததில்லை. இதைப் பகிரங்கமாக தெரிவிக்க முடியாவிட்டாலும், அதில் இருந்து விலகி மௌனமாக ஒதுங்கி விடுவதன் மூலம் எதிர்ப்பு ஆரம்பமாகின்றது. இப்படித்தான் புலியை எதிர்த்து, புலியை தம்மில் இருந்து அந்த மக்கள் ஒழிக்கின்றனர், ஒழித்துக்கட்டுகின்றனர். புலிகளை ஒழிப்பதில் மக்கள் வெற்றி பெற்று வருகின்றார்கள்.

இன்றும் மாபெரும் பாசிச கட்டமைப்பைக் கொண்டுள்ள புலிகள், மாபெரும் இராணுவ இயந்திரமாக காணப்பட்ட போதும், அது நொருங்கிக் கொண்டு இருக்கின்றது. இதை இனியும் சரிசெய்ய முடியாது. அதன் செயற்பாட்டுக்குரிய, உணர்வு பூர்வமான பாசிச நலன்கள் மெதுவாக அவர்களின் உள்ளேயே அன்னியமாகி வருகின்றது.

ஏன் இன்றும் புலிகள் வெளிப்படையாக மிகப்பெரிய ஒரு இராணுவம். தமிழ் மக்களின் அனைத்து செல்வவளங்களையும், அவர்களின் மூச்சுக்களையும் கூட ஒருங்கிணைத்த ஒரு பாசிச இராணுவ இயந்திரம் தான். தாம் தமது பாசிச நலன்களுடன் தப்பிப் பிழைக்க, தமது பிரதேசத்தில் வாழ்கின்ற முழு மக்களையும் பலாத்காரமாகவே இராணுவமயமாக்குகின்றது. இன்றும் தாம் இல்லாத இடங்களில் கூட, தமது அதிகாரத்தையும், அடக்குமுறையையும் கொண்டு, அனைத்தையும் தமக்கு அடிபணிய வைக்கின்றது. ஏன் யாரையும் விலைக்கு வாங்கவும், பிழைப்புவாத பினாமிகளைக் கொண்டு அனைத்தையும் தாமாகக் காட்டவும் கூட முடிகின்றது. அவர்களால் இந்தா புலிகள் வெல்லுகின்றனர், இந்தா அரசு தோற்கின்றது என்று அனைத்துப் பினாமி ஊடகவியலிலும் கூட கூறமுடிகின்றது.

அத்துடன் சர்வதேச வலைப்பின்னலை அடிப்படையாகக் கொண்ட உளவுப்பிரிவையும், ஆயுதம் ஏந்திய குண்டர்களையும் கொண்டு இயங்கமுடிகின்றது. சர்வதேச ரீதியாக தமிழ் மக்களுடனான புலிகளின் அரசியல் உறவு என்பது, மாபியாத்தனத்துடன் தொடர்ச்சியாக இன்றும் பாதுகாக்க முடிகின்றது.

உலகின் பல பாகத்தில், புலிப் பாசிச மாபியாத்தனத்தை அடிப்படையாக கொண்ட மக்கள் விரோத நிலையை தக்கவைக்க முடிகின்றது. இதற்குள்ளாக கூட்டங்கள், சதிகள், இரகசிய சூழ்ச்சித் திட்டங்களை இன்றும் தீட்ட முடிகின்றது. ஏகாதிபத்திய மக்கள் விரோத நாசகாரர்களுடன் சேர்ந்து சதியாலோசனைகளையும் செய்ய முடிகின்றது. இப்படி எங்கும், எதிலும், எல்லாவிதத்திலும் அமர்க்களமான சதிகள், காய் நகர்த்தல்கள், சுத்துமாத்துக்கள். அனைத்துமே மக்களின் பெயரில் இன்றும் புலிகளால் செய்ய முடிகின்றது.

இந்தளவு இருந்த போதும், புலிகளின் பாசிச வரலாறு முடிவை நோக்கி நகருகின்றது. இதை நம்ப முடியாதவர்கள், நம்ப மறுப்பவர்கள், புலிகளின் வரலாற்றின் சொந்த விதியை அவர்களின் கண்ணால் காண்பார்கள். அது தவிர்க்க முடியாதது. இது எமது சொந்த விருப்பங்களோ, கற்பனைகளோ அல்ல. மாறாக புலிப் பாசிசம் உருவாக்கிய சொந்த வரலாற்றின், இறுதிக் கால கட்டம் தான் அரங்கேறுகின்றது. அதையே நாங்கள் எடுத்துக் காட்டுகின்றோம்.

இவை எவையும் பேரினவாதத்தின் சொந்த இராணுவ வெற்றிகள் அல்ல. பேரினவாதத்தால் தமிழ் மக்களை ஒருநாளும் வெல்லமுடியாது. அப்படி இருக்க, எப்படி புலிகள் தோற்கின்றனர்?

உண்மையில் தமிழ் மக்கள் தான் புலிகளைத் தோற்கடித்துக் கொண்டு இருக்கின்றனர். புலிப் பாசிசத்தை அவர்கள் தமது சொந்த வழியில் ஒழித்துக் கட்டுகின்றனர்.

புலிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான தொப்புள் கொடியை புலிகளே அறுத்து, பாசிசம் என்னும் இடை மதிலால் அதைப் பிளந்துவிட்டனர். இப்படி தமிழ் மக்களுடன் இருந்த தொப்புள் உறவை மறுத்து, சொந்தத் தாயையே எட்டி உதைத்தனர். இப்படி தாயின் தாலாட்டை உதறியும், தாயின் அரவணைப்பை எட்டியும் உதைத்த புலிகள், பாசிட்டுகளாகி தறிகெட்டு அதிகார வெறியில் திமிரெடுத்துத் திரிந்தனர். அராஜகத்துடன் கூடிய லும்பன் தனம் மூலம், சமூகத்தையே நலமடித்தனர். புலிகளை உருவாக்கிய தமிழ் சமூகமே, இவர்களைக் கண்டு அஞ்சி நடுங்கியது. தமது சொந்த வாயைப் பொத்தி, மௌனமாகி, படிப்படியாக ஓதுங்கிக் கொண்டதன் மூலம், புலிகளின் இருப்புக்கு இப்படியே தான் வேட்டு வைத்தனர், வைத்து வருகின்றனர்.

இதன் விளைவு, பலமான இந்த பாசிச இயந்திரத்தில், வெடிப்புகளையும் சிதைவுகளையும் அன்றாடம் உருவாக்குகின்றது. இதற்கு தலைமை தாங்குவோர் முதல் கீழ் அணிகள் வரை, படிப்படியாக புலிகளின் பாசிச இலட்சியத்தில் நம்பிக்கை இழந்துவிட்டனர். வெற்றுத்தனமான குருட்டு நம்பிக்கைகள், பொய்யான பரப்புரைகளை நம்பி ஊர்ந்தவர்கள், தொடர்ந்து நடக்க கால்கள் இல்லை என்பதை காண்கின்றனர். எல்லா இடத்திலும், எல்லா நேரத்திலும் ஊர முடிவதில்லை. தாம் எதற்காக போராடுகின்றோம் என்பதைக் கூட, அவர்களால் இன்று உணர முடிவதில்லை.

ஏன் தமது பக்க அரசியலை சொல்ல அவர்களிடம் எந்த மக்கள் அரசியலும் கிடையாது. அனைத்தையும் இராணுவ வெற்றிகள் மூலமும், அனைத்தையும் தியாகி துரோகி என்றும் பறைசாற்றி நின்றவர்களின் தகவல் மையம் முற்றாக செயல் இழந்துவிட்டது. 400க்கு மேற்பட்ட புலி இணையங்கள், அவர்களின் ஊதுகுழல் ஊடகங்கள் வம்பளக்க செய்தியின்றி, வீரம் பேச நாதியின்றி படுத்து உறங்குகின்றது. பேரினவாதிகளுக்கு இடையில் நடக்கும் குத்துவெட்டுகளை, புலி முரண்பாட்டைச் சார்ந்து புலிகளின் தகவல்கள் முக்கி முனங்குகின்றது.

புலிகள் தோற்கின்றனர். இதற்கான காரணம் என்ன? இதற்கான உட்கூறுகளை 23.09.2006 எழுதிய எனது கட்டுரை, முன் கூட்டியே இதை விரிவாக ஆராய்கின்றது. 'அரசியல் ரீதியாக தோற்ற புலிகள்இ இராணுவ ரீதியாகவும் தோற்கின்றனரே ஏன்?"

கிழக்கு முதல் வன்னிவரை புலிகள் இராணுவ ரீதியில் தொடர்ச்சியாக யுத்தம் செய்ய முடியாத நிலைக்குள் அவர்கள் சென்றுவிட்டனர். உணர்வு பூர்வமாக யுத்தம் செய்யும் மனநிலையை புலி அணிகள் இழந்துவிட்டன. யுத்தத்ததை வழிநடத்துபவர்கள் தமது பாசிச போராட்டம் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர். மக்களில் இருந்து அன்னியமாகியதன் விளைவு, தனிமைவாதத்தில் சிக்கி நாற்றமடிக்கும் பிணமாய் அழுகிச் சிதைகின்றனர். எங்கெல்லாம் அவர்கள் எதிரியின் யுத்த முனையை எதிர்கொள்கின்றனரோ, அங்கெல்லாம் அவர்கள் இழப்பதற்கு ஆயுதங்களையும் உயிரையுமே வைத்துள்ளனர். இதனால் அன்றாடம் புலிகளின் ஆயுதங்களும், புலிகளின் உடல்களும் எதிரியால் கைப்பற்றப்படுகின்றது. புலிகளின் வரலாற்றில் இப்படி நடந்து கொண்டிருப்பது இதுதான் முதல் தடவை மட்டுமின்றி, இதுவே இறுதியானதுமாகும்.

இராணுவத்தை தாக்க வருபவர்கள் அன்றாடம் தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முடிவதில்லை. புலியல்லாத பிரதேசத்தில் தாக்குதல்கள் நடத்த முனையும் போது, அம்முயற்சிகள் தோல்வி பெறுகின்றன. எதிரி முன்கூட்டியே இவற்றைக் கைப்பற்றுவது, முறியடிப்பது அன்றாட நிகழ்ச்சியாகின்றது. புலியல்லாத பிரதேசத்தில் பேரினவாதம் நடத்துகின்ற படுகொலைகள், கடத்தல்கள் மூலம், புலிகளின் சிறு செயற்பாடுகள் கூட முடக்கப்படுகின்றது. புலிகள் பணத்தைக் கொடுத்து எதிரியை வாங்கி நடத்திய தாக்குதல்கள், அனைத்தும் படிப்படியாக இல்லாது ஒழிக்கப்படுகின்றது. புலிகளின் உளவு சார்ந்த தகவல் மையமே அதிர்ந்து ஒடுங்கி முடங்குகின்றது.

புலிகளின் நிதியாதாரங்கள் முதல் வரி மற்றும் கப்பம் போன்றன ஒரு தேக்கத்தின் எல்லையை எட்டியுள்ளது. புலம்பெயர் சமூகத்தில் நடைபெறும் கைதுகள், முழு செயல்பாட்டை முடக்கி வருகின்றது. சர்வதேச ரீதியான புலிகளின் இரகசியமான ஆயுத செயல்தளம், முழுவீச்சில் இயங்க முடியாது அழிந்து வருகின்றது.

இப்படி எங்கும் எதிலும் பாரிய நெருக்கடிக்குள் புலிகள் சிதைந்து அழிகின்றனர். புலிகளின் உள்ளே பாரிய சந்தேகங்கள், இடைவெளிகள். தலைமைக்குள் பரஸ்பரம் நம்பிக்கையீனம். இப்படி புலிகள் தனக்குள்ளேயே சிக்கி, உள் முரண்பாடுகள் கொதிநிலையை அடைந்து வருகின்றது. கைதுகள் சித்திரவதைகள், குற்றச்சாட்டுகள் பொதுவான உள்ளியக்க விதியாகிவிட்டது. இதுவே அன்றாடம் பெருகிச் செல்லுகின்றது. உயிரோட்டமாக, உணர்வுபூர்வமாக, நம்பிக்கை விசுவாசத்துடன் செயல்பட முடியாத நம்பிக்கையீனம், அமைப்பையே சூனியமாக உருவாக்கிவிட்டது.

சூனியம் வைத்தது போல் ஒவ்வொன்றாக தகர்கின்றது. எங்கும் எதிலும் அதிருப்தி. நம்பிக்கையீனங்கள் மலிந்து போய்விட்டது. இலட்சியப்பற்று என்பது மறந்து, அதை அறவே காணமுடியாத ஒன்றாகிவிட்டது.

தமிழ் மக்கள் எப்படி தமது அழிவுக்கான யுத்தத்தை வெறுக்கின்றனரோ, அப்படி புலிகளின் அணிகள் கூட புலிகளின் யுத்தத்தை விரும்பவில்லை. யுத்தம் வலிந்து திணிக்கப்படும் போது, தோல்வியும் மரணமும் முன் கூட்டியே தீர்மானமாகி விடுகின்றது.

எதற்காக இப்படி போராடுகின்றோம், மரணிக்கின்றோம் என்பது கூட தெரியாத சோகம். விளைவு உள் மோதல்கள், அமைப்பு ஆட்களை இல்லாது ஒழித்தல் என்பது அன்றாட நிகழ்ச்சியாகிவிட்டது. அனைத்தையும் கட்டுப்படுத்த, வன்னி மண்ணில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு கும்பலின் காட்டுத்தனமான அதிகாரம். இதுவொரு அராஜக லும்பன்களாக, மக்கள் மேலான வன்முறையையே தனது போராட்டமாக மாற்றிவிட்டது. ஒவ்வொரு வீட்டுப் பெண்ணையும் இவர்கள் கற்பழித்தால் கூட, கேட்க நாதியற்ற வன்னிச் சமூகமாக இவர்களால் இழிவுக்குள்ளாகி வருகின்றனர். அந்தளவுக்கு வன்முறையின் கோரம், கொடூரம். இப்படி கொடூரமாக இயங்கும் அராஜகத்தையே அடிப்படையாகக் கொண்ட புலிக்கும்பல் ஒருபுறம், மறுபக்கம் ஒழுங்குபடுத்தப்பட்ட இதனுடன் தொடர்பற்ற புலி இராணுவம்.

லும்பன்கள் நடத்துகின்ற மனித விரோத சமூக இழிவாடல்கள், ஒழுங்குபடுத்தப்பட்ட இராணுவத்தின் உட்கட்டமைப்பின் உணர்வையே சிதைக்கும் வண்ணம் அதற்கு நஞ்சிடுகின்றது. கட்டாயப்படுத்தி பலாத்காரமாக கடத்தி வரப்படும் ஒவ்வொருவனும் ஒவ்வொருத்தியும், தனக்கு நேர்ந்த துயரக் கதை முதல் தனது சொந்த சமூகத்துக்கு நேருகின்ற அவலத்தை சொல்லி புலம்புவதன் மூலம், புலிகளின் இராணுவம் கறையான் புற்றெடுக்கின்றது. புலிகளின் இராணுவத்தில் நடக்கும் உணர்வு ரீதியான சிதைவு, முழு இராணுவக் கட்டமைப்பையும் சிதைக்கும் தொற்று நோயாகின்றது. தாம் யாருக்காக இதையெல்லாம் செய்கின்றோம் என்ற விடைதெரியாத சோகம், சொல்லி மாளமுடியாது உணர்வு ரீதியாகவே அதற்குள் மாண்டு போகின்றனர்.

வன்னியை இராணுவம் பிடிக்காமலே, வன்னி தோற்றுக் கொண்டு இருக்கின்றது. பேரினவாதம் ஒரு தீர்வுப்பொதியை வைத்துவிட்டால், அது புலிக்குள்ளான புதிய மோதலாக சிதைவாக மாறிவிடும். தீர்வு புலியைப் பிளக்கும், சிதைக்கும். உட் குழுக்கள், கொடுப்பதை ஏற்றுக்கொள்ளக் கோரும் முரணான மனநிலை, யுத்தம் செய்ய விரும்பாமை மேலும் அதிகரிக்கும். இதை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் மீதான அவநம்பிக்கை உருவாகும். சந்தேகங்கள் புலிகளை மேலும் அம்பலமாக்கும். மக்கள் மத்தியில் இதன் விளைவும், அதன் எதிர்வினையும் புலிக்கு எதிரானதாக மாறும்.

புலிகளை யுத்தமின்றி தோற்கடிக்கக் கோரியே தான், உலகம் தீர்வை முன்வைக்கக் கோரி அரசை நிர்ப்பந்திக்கின்றது. இனவாதிகள் இடையிலான முரண்பாடு தான், புலியை இன்னமும் பாதுகாக்கின்றது. உலகளவில் அதிகார மட்டத்தில் இருந்து எழும் யுத்தத்துக்கு எதிரான குரல்கள், யுத்தம் மூலம் புலிகளை தோற்கடிப்பதை விட ஒரு தீர்வுப் பொதி மூலம் புலியை அழிக்க முடியும் என்பதை தெளிவாக கண்டு கொண்டுள்ளது. இதற்குரிய நிலைமை மிகவும் கனிந்து காணப்படுகின்றது. வன்னியில் இன்றைய நிலைமைகள், புலியை தோற்கடித்துவிடும்.

மறுபக்கத்தில் பேரினவாத வக்கிரம் மேலோங்கி நிற்கின்றது. புலிகள் உணர்வு ரீதியாக யுத்தம் செய்ய முடியாத மனநிலையைப் பயன்படுத்தி, யுத்தம் மூலம் வெற்றி கொள்ள எண்ணுகின்றது. பேரினவாத சிங்கள பாசிட்டுகள், புலிகளின் மக்கள் விரோத நிலையை அடிப்படையாக கொண்டு, இந்த வெற்றிகளைத் தமது வெற்றியாக காண்பிக்கின்றனர். புலிக்கு எதிரான மக்களின் உணர்வை தனக்கு சார்பாக மாற்றி, அவர்களை புலிகளிடம் இருந்து தனிமைப்படுத்தி, தமிழ் இனத்தை யுத்தம் மூலம் வெல்ல முனைகின்றது.

புலிகள் கடந்த காலத்தில் மாற்று இயக்கத்தை, மாற்றுக் கருத்தாளனை நர வேட்டையாடி கொன்று குவித்து, மக்களை இதன் பின் அண்டவிடாது தனிமைப்படுத்தி அழித்தனர். அதையே இன்று பேரினவாதம் அப்படியே புலிகளாக இனம் காணப்பட்டவர்கள் மீது, அதன் ஆதரவாளர்கள் மீது கையாளுகின்றது. புலிகளுடன் தொடர்பு கொள்ளாத வரை உனக்கு ஆபத்தில்லை என்ற புலி விதியையே கையாளுகின்றது. புலியைப் போல், புலியையே வேட்டையாடுகின்றது. அதன் ஆதரவாளர்களை முடக்குகின்றது. புலிகளில் இருந்து மக்களை தனிமைப்படுத்தி வெல்லுகின்றது.

புலி ஆதரவாளர்கள் முதல் புலிகள் வரை அரசு சிறைச்சாலை பாதுகாப்பானது என்று கருதி நூற்றுக்கணக்கில், சுயபாதுகாப்பு கோரி சிறையில் வாழமுனைகின்றனர். அங்கு பாதுகாப்பு உறுதி என்று கருதி, புலியைச் சார்ந்தவர்கள் மக்களிடமிருந்து விலகி வாழும் சூழலை பேரினவாதம் உருவாக்கியுள்ளது. மக்களுடன் புலிகள் வாழமுடியாத நிலை.

இப்படி பல தளத்தில் புலிகள் தமது சொந்த பாசிச வழிகளில் தோற்றுக் கொண்டிருப்பது என்பது, தற்செயலானதல்ல. இது தான் பாசிசத்தின் வரலாற்று விதி. மக்களைக் கடந்து எந்த வரலாறும் நிலைத்தாக ஒரு மனித வரலாறு கிடையாது.

மகிந்த சிந்தனை என்றால் என்ன?

பி.இரயாகரன்
15.09.2007

லங்கையில் அதிகாரத்திலும், பொருளாதாரத்திலும் மகிந்தாவின் குடும்ப ஆதிக்கத்தை நிறுவுவதுதான், மகிந்த சிந்தனை. இதை நிறுவும் ஆட்சி, இன்று என்றுமில்லாத வகையில் நெருக்கடிக்குள்ளாகி நாடு சீரழிகின்றது. மக்கள் தமது அடிப்படை தேவைகளைக் கூட வாங்க முடியாத வகையில், அன்றாடம் விலையேற்றத்தை மகிந்த சிந்தனை திணிக்கின்றது. நாடு சர்வதேசக் கடனை நம்பி, நடுக்கடலில் தத்தளிக்கின்றது. இதையெல்லாம் மூடிமறைக்கவே, புலிப் பயங்கரவாதத்தின் பெயரில் ஒரு யுத்தப் பிரகடனம்.

புலிகள் புலித் தமிழீழம் மூலம், தமிழ் மக்களுக்கு சொர்க்கத்தைப் படைக்கப் போவதாக கூறித் தான், தமிழ் மக்களை ஒடுக்கி ஒரு பாசிச புலிச் சர்வாதிகாரத்தை திணித்துள்ளனர். இதுபோல், அரசு புலிப் பயங்கரவாதிகளை ஒழிப்பதன் மூலம், இலங்கையில் சொர்க்கத்தை உருவாக்கப் போவதாக கூறிக்கொண்டு, இராணுவ சர்வாதிகாரத்தை அனைத்து மக்கள் மீதும் திணிக்கின்றது. இப்படிப்பட்ட மகிந்த சிந்தனை மூலமாக, குடும்ப அதிகாரமும் குடும்பப் பொருளாதாரமும் வீங்கி வெம்புகின்றது.

இதன் விளைவு என்ன. தமிழ் மக்களில் பெரும்பான்மை மக்களை முற்றாகவே அகதி வாழ்வுக்குள் தள்ளிவிட்டது. இதன் விளைவால் அகதி மக்கள், தமது அனைத்து பொருளாதார வளத்தையுமே முற்றாக இழந்துவிட்டனர். வட்டிக்கு விட்டு சம்பாதிக்கும் சர்வதேச நிதி கும்பலிடமும், தன்னார்வ சதி கும்பல்களிடம், மக்கள் தமது உழைப்பு சார்ந்த தன்மானத்தை இழந்து கையேந்தி அலையும் கூட்டமாக மாற்றப்பட்டுவிட்டனர்.

வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள், இலங்கையில் எந்தப் பொருளையும் சுதந்திரமாக வாங்கி நுகர முடியாது. அந்தளவுக்கு புலிப் பயங்கரவாதிகளின் பெயரில், ஒரு பொருளாதாரத் தடை. தமிழ் மக்களோ தெரு நாய்களாகப்பட்டு வேட்டையாடப்படுகின்றனர். அன்றாடம் கைது, கடத்தல், காணாமல் போதல், படுகொலை என்பதே இயல்பான நிலையாகியுள்ளது. தமிழ் மக்களை இரத்தத்தை உறைய வைக்கும் இயல்பான பீதிக்குள், சிறைவைத்துள்ளனர். அனைத்துச் சிந்தனையையும், சுதந்திரத்தையும் இது கண்காணித்து, கருவறுக்கின்றது. ஒட்டுமொத்தமாகவே செயற்படும் சுதந்திரத்தை தமிழ் மக்கள் முற்றாகவே இழந்துவிட்டனர். தமிழ் இனம் தனது தேசிய அடிப்படைகளையும், தேசிய இருப்புக்கான சமூகக் கூறுகளையும் இழக்கும் வண்ணம், அவர்கள் சமூக ரீதியாக இழிந்து போகுமாறு சின்னாபின்னப்படுத்தி சிதைக்கப்படுகின்றனர்.

மகிந்த சிந்தனை இது மட்டுமல்ல. தமிழ் மக்களின் இருப்பு சார்ந்த பொருளாதார அடிப்படைகளையும், ஆதாரங்களையும் திட்டமிட்டு அழிக்கின்றது. ஒவ்வொரு தமிழ் பிரதேசமும், சிங்கள பேரினவாத இராணுவ சூறையாடலுக்குள் சிக்கிச் சிதைகின்றது. தமிழ் இனம் பல கூறுகளாக சின்னாபின்னப் படுத்தப்படுகின்றது.

இப்படி மகிந்த சிந்தனையானது தனது இராணுவ சர்வாதிகாரத்தை, தமிழ் மக்கள் மீது ஒரு தலைப்பட்சமாக திணிக்கின்றது. அதை நடைமுறைப்படுத்த தமிழ் கூலிக் குழுக்களை ஆயுதபாணியாக்கியுள்ளது. அவர்களிடையே முரண்பாட்டை ஊதி, அதைக்கொண்டு தமிழ் இனத்தை கூறு போடுகின்றது. எங்கும் எதிலும், தமிழரிடையே ஒரு காட்டுமிராண்டித்தனத்தை உருவாக்குகின்றது. அராஜகத்தையே தமிழ் பகுதியில் மகிந்த சிந்தனை உருவாக்கியுள்ளது.

இவை அனைத்தும் புலிகளின் பெயரில், ஒரு இராணுவ சர்வாதிகாரம் மூலம் இவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுவே தமிழ் பிரதேசத்தின் எதார்த்தம். தமிழ் மக்கள் மேலான இந்தக் காட்டுமிராண்டித்தனமாக செயலை நியாயப்படுத்த, சிங்கள மக்கள் மேல் என்றுமில்லாத சுமையை சுமத்திவிடுகின்றனர். சிங்கள மக்கள் அன்றாட வாழ்வுக்காகவே மாரடிக்கின்ற அளவுக்கு, வாழ்க்கைச் சுமை சுமத்தப்படுகின்றது. இராணுவ இயந்திரம், மக்களின் மொத்த வளத்தையும் சூறையாடிச் செல்லுகின்றது. இந்த மகிந்த சிந்தனையை அமுல்செய்யும் குடும்பம், இதன் மூலம் இலங்கையில் மிகப்பெரிய கோடீஸ்வரக் கும்பலாகின்றது.

இந்த நிலையில் சர்வதேச விலைக்கு, இலங்கைச் சந்தை தடம் புரண்டு செல்லுகின்றது. மக்களின் தேவையை சர்வதேச விலையில் வாங்க நிர்ப்பந்திக்கின்றது மகிந்த சிந்தனை. ஆனால் மக்களின் கூலியோ, சர்வதேச மட்டத்தை கிட்டக் கூட நெருங்க முடிவதில்லை. அத்துடன் இலங்கை நாணயம், அன்றாடம் தனது பெறுமதியை இழக்கின்றது. இதனால் மக்கள் வாழ்க்கைத் தரம் அன்றாடம் வீழ்ச்சி காண்கின்றது. வாழ்க்கையின் வீழ்ச்சியால், மக்கள் தமது தேவையை பூர்த்தி செய்ய பணம் இருப்பதில்லை. இப்படி மக்களைப் பட்டினியில் தள்ளிவிட்டு, அந்தப் பொருட்களை வாங்கிய கடனுக்காக மகிந்த சிந்தனையை ஏற்றுமதி செய்கின்றது. என்ன ராஜதந்திரம், என்ன வக்கிரம்.

இந்த மகிந்த சிந்தனை தமிழ் மக்களை மட்டுமல்ல, சிங்கள மக்களையும் சொந்த நாட்டில் வாழ முடியாத அளவுக்கு பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. மறுபக்கம் இராணுவ பொருளாதாரமோ, பாரிய ஊழல் மூலம் கோடிகோடியாக மகிந்த சிந்தனை சுருட்டுகின்றது.

இதை விமர்சிப்பவர்கள், புலிகளின் பெயரில் கைது செய்யப்படுகின்றனர். அத்துடன் கடத்தல், படுகொலை என்ற பொது அச்சுறுத்தலை எங்கும் எதிலும் விடுக்கின்றனர். எங்கும் அச்சத்தையும், பீதியையும் வாழ்வாக்கிவிடுகின்றனர். மாபியாத்தனம் சமூகத்தின் போக்கில் வளர்ச்சியுறுகின்றது.

இப்படிப்பட்ட மகிந்த சிந்தனையைப் பற்றி பலரும் சிலாகிக்கின்றனர். சிலர் அதனைப் போற்றுகின்றனர். சிலர் அதைத் திட்டுகின்றனர். இலங்கை ஜனாதிபதியின் மகிந்த சிந்தனையில் இனப்பிரச்சனை முதல் உள்நாட்டு திட்டமிடல் வரை காயடிக்கப்படுகின்றது.

ஜே.வி.பி கூறுகின்றது மகிந்த சிந்தனைப்படி தான், அவருக்கு ஆதரவு வழங்கியதாக! புலியெதிர்ப்பு குள்ளநரி ஆனந்தசங்கரியும், மகிந்த சிந்தனையை ஏற்றிப் போற்றுகின்றது. இப்படி பல விதமானவர்களின், பலவித அரசியல் கிறுக்குத்தனங்கள்.

இப்படிப்பட்ட மகிந்த சிந்தனை எதைத்தான் எதார்த்தத்தில் செய்கின்றது.

1. அது தனது சொந்த குடும்ப அதிகாரத்தை நிறுவியுள்ளது.

2. ஒரு இராணுவ சர்வாதிகாரத்தை, அனைத்து மக்கள் மீதும் திணித்துள்ளது.

3. உலகமயமாதலை தீவிரமாக அமுல்படுத்துகின்றது.

4. தமிழ் இனத்தின் இருப்பையே அழித்து, அதை அடக்கி ஒடுக்குகின்றது.

5. அனைத்து சிந்தனைச் சுதந்திரத்தையும் விமர்சன சுதந்திரத்தையும் ஓடுக்கி, அதன் உணர்ச்சியையே அறுத்தெறிகின்றது

6. நாட்டின் அனைத்து முற்போக்கு கூறுகளையும் ஓடுக்கி, பிற்போக்கு கூறுகளை முன்னிலைக்கு கொண்டு வருகின்றது.

7. காட்டுமிராண்டித்தனமான அதிகாரப் பண்பாடும், பொருளாதார சூறையாடலும், சமூக ஒழுக்கமாகின்றது.

இவற்றின் மூலம் இலங்கையை ஏகாதிபத்திய நலன்களையும், தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் அனைத்தையும் மறு ஒழுங்கமைக்கின்றது. தேசிய கூறுகளை அழித்து விடுகின்றது. மாறாக பிற்போக்கான தேசிய கூறுகள் மூலம், நாட்டை அன்னியனுக்கு தாரைவார்த்து, நாட்டைத் திவாலாக்கி வருகின்றது. தேசிய பொருளாதாரத்தை முற்றாகச் சிதைத்து, பன்னாட்டு முதலாளிகளின் விருப்பமும் தேவையும் ப+ர்த்தி செய்யப்படுகின்றது. இவை அனைத்தும் புலிப்பயங்கரவாதத்தின் பெயரில் நடக்கும், தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தம் மூலம் கவனமாக மூடிப் பாதுகாக்கப்படுகின்றது.

இதற்கு ஏற்ற வகையில் இராணுவ சர்வாதிகாரத்தை நடைமுறையாக்குகின்றது. புலியின் பெயரால், புலிகளை வெற்றி கொள்வதாக பீற்றிக் கொண்டு நடத்துகின்ற ஒரு இராணுவ ஆட்சி தான், மகிந்த சிந்தனை. இப்படி தனது குடும்பத்தவர்கள் மூலம் நிர்வகிக்கின்ற, ஒரு பாசிச சர்வாதிகார கட்டமைப்பாகும்.

இந்த சர்வாதிகார பாசிசம் எப்படி கட்டமைக்கப்படுகின்றது.

1. எதிர்தரப்பை விலைக்கு வாங்குகின்றது. மறுதளத்தில் செயலற்றதாகி முடக்குகின்றது. இல்லாது போனால் போட்டியாளரை உயிருடன் இல்லாது ஒழிக்கின்றது.

2. புலிப்பயங்கரவாதம் என்ற பெயரில் நடக்கும் புலியொழிப்பு என்பது, படுகொலைகள் கடத்தல்கள் காணாமல்போதலாகி விட்டது.

3. தனது கட்டுபாடல்லாத பிரதேசம் முழுவதின் மீதும், ஒரு முழுமையான யுத்த பிரகடனத்தை செய்து, அதையே ஆணையில் வைத்துள்ளது.

4. தமிழ் மக்களின் இருப்பை அழிக்கும் வண்ணம், சகல சமூக பொருளாதாரக் கூறுகளையும் திட்டமிட்டு அழிக்கின்றது. அத்துடன் தமிழர் பகுதிகளை சிங்கள மயமாக்குதல் நடத்துகின்றது.

5. தமிழ் பகுதியிலான பன்னாட்டு நிறுவனங்களின் அன்னிய நிறுவனங்களினதும் தேவைகளை, தனது யுத்த ஆக்கிரமிப்பு மூலமே கைப்பற்றி தாரைவார்க்கின்றது.

இப்படி ஒட்டமொத்த மனிதவிரோத செயல்கள் தான் மகிந்த சிந்தனை. அன்னிய மூலதனத்தின் நலன்கள் தான் மகிந்த சிந்தனை. இதற்கு பின்னால் சிங்கள தேசியம் என எதுவும் கிடையாது. மாறாக குடும்ப அதிகாரம் மூலமான, இராணுவ சர்வாதிகாரம் தான் மகிந்த சிந்தனை. இந்த சிந்தனை நோக்கம் என்பது, பாசிச வழிகளில் நாட்டை முற்றாக உலகமயமாக்குவது தான். இதன் மூலம் இலங்கையில் தனது குடும்ப ஆதிக்கத்தை நிறுவுவதாகும். அதாவது அதிகார அடிப்படையிலும், பொருளாதார அடிப்படையிலும் குடும்ப ஆதிக்கத்தை நிறுவுவதுதான், மகிந்த சிந்தனை. இந்த மகிந்த சிந்தனை மக்களை அடக்கியொடுக்கி செழித்து வாழ்கின்ற ஒரு கும்பலுக்கு, மாமா வேலை பார்க்கின்றது.

இசையும் பிரச்சாரமும் - தோழர்.மருதையன் இசைவிழா- 7ம் ஆண்டு

இசையும் பிரச்சாரமும் - தோழர்.மருதையன் இசைவிழா- 7ம் ஆண்டு

Wednesday, February 20, 2008

கொசோவோ சுதந்திர பிரகடனமும், தமிழீழமும்.....

பி.இரயாகரன்
20.02.2008

கொசோவோவின் பிரகடனத்தை பொதுவாக புலிகள் தரப்பு ஆதரிப்பவர்களாகவும், பேரினவாதிகள் எதிர்ப்பவர்களாகவும் உள்ளனர். நாம் இதை எப்படி பார்ப்பது?, புரிந்து கொள்வது?

கொசோவோ மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான, அவர்களின் சொந்த சுதந்திரப் பிரகடனம் அல்ல இது. ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான சதியும், அவர்களுக்கு இடையிலான சொந்த நரித்தனங்களுமே, இந்த சுதந்திரப் பிரகடனமாகும். இதனால் இதை நாம் எதிர்கின்றோம். இந்த ஏகாதிபத்திய பிரிவினையை எதிர்க்கின்றோம் என்பதால், இதற்கு எதிரானவற்றை ஆதரிக்கின்றோம் என்பதல்ல. இவையனைத்தும் ஏகாதிபத்திய நலன்களுக்கு உட்பட்டதே. இதற்கு வெளியில், மக்களுக்கு இதனால் எதுவும் கிடைக்கப்போவதில்லை என்பது தான் உண்மை.

ஏகாதிபத்தியத்தின் ஒரு பகுதி இந்த பிரிவினையை நடத்துவது ஏன்? மற்றைய பகுதி இதை எதிர்ப்பது ஏன்? இந்த அடிப்படையிலான புரிதல் தான், இதற்கான தெளிவான பதிலுமாகும்.

கொசோவோ மக்கள் சுதந்திரமாகவே தமது சொந்த சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டியிருந்தால், அதை ஆதரிப்பது, மனிதம் மீது அக்கறையுள்ள எல்லோரினதும் கடமை. அதுவல்லாத ஏகாதிபத்திய சதியிலான பிரிவினையை (இது சுயநிர்ணயமல்ல) நாம் ஆதரிப்பது, அந்த மக்களுக்கே எதிரானது.

ஏகாதிபத்தியங்கள் கொசோவொ மக்களின் கடந்தகால துயரங்களை, தமது சொந்த மூலதனமாக்கிக் கொண்டதன் விளைவு தான் இது. இதன் மூலம் மக்களை முட்டாளாக்கி, அவர்களை மகிழ்ச்சிப்படுத்தி பிரிவினையை விதைக்கும் ஏகாதிபத்தியத்தின் உண்மை முகம், அந்த மக்களுக்கு தெரியவர அதிக காலம் செல்லாது.

கொசோவோ மக்கள் தொடர்பான கருசனையா, இதன் பின்னணியில் உள்ளது. நிச்சயமாக இல்லை. அப்படி கருதும் யாரும், அடிமுட்டாள் தான். மக்கள் மேலான கருசனையும், அந்த மக்களின் சுயநிர்ணய உரிமை பற்றிய அக்கறையும் உண்மை என்றால், இது உலகம் தளுவியளவில் பொதுவானதாக இருக்கும், இருக்க வேண்டும். எல்லோருக்கும் நன்கு தெரியும் இதுவல்ல என்று. கொசோவோ பிரிவினை மீதான ஏகாதிபத்திய நிலைப்பாடுகள் என்பது, ஏகாதிபத்திய உள் முரண்பாட்டுக்கு உட்பட்டது. அவர்களின் சொந்த நலன் சார்ந்து தான், சுதந்திர பிரகடனத்தை ஏகாதிபத்திங்கள் ஆதரிப்பது, ஏன் எதிர்ப்பதும் கூட இதற்குள்ளானதே.

மக்களின் ஐக்கியம், மக்கள் நலன், மக்களின் சுயநிர்ணயம் என்ற எதையும் இது கொண்டதல்ல. இது தான் எதார்த்தமான உண்மை. முட்டாள்கள் மட்டும் தான் இந்த உண்மையை பார்க்காமல், வேறுவிதமாக இதை அணுகுகின்றனர்.

எதற்காக ஏகாதிபத்தியத்துக்கு இடையில் இந்த பிரிவினையும், எதிர்ப்புகளும் எழுகின்றது.? அறிவுள்ள ஒவ்வொருவரும், சுயமாக சிந்திக்கக் கூடிய ஒவ்வொரு மனிதனும், இதற்குரிய விடையைக் காணமுடியும். ஏகாதிபத்தியங்கள் தமக்கிடையிலான சதி, சூழ்ச்சிகள், கவிழ்ப்புகள், தமக்கு சார்பான அதிகார மையங்கள் ஊடாக உலகை சதா மறுபங்கீடு செய்கின்றன. இதில் ஒன்று தான் இந்தப் பிரிவினை.

உண்மையில் அந்த மக்கள் மத்தியில் பிளவை விதைத்து, அவர்களை மோதவிட்டவர்களும் இவர்கள் தான். முன்னாள் சோவியத் முதல் கிழக்கு நாடுகளின் கம்யூனிசத்தை குழி தோண்டி புதைக்க, ஏகாதிபத்தியங்கள் அந்நாடுகளினுள் ஆழமாகவே தலையிட்டன. இதில் ஒரு வடிவம் தான், இனங்களுக்கு இடையில் பிளவையும், ஏன் பிரிவினைவாதத்தையும் கூட தூண்டினர். மறுபக்கத்தில் கம்யூனிசத்தை முதலாளித்துவ மீட்சியாக்கினர். இதை மூடிமறைக்கவும், அதன் பலத்தை உடைக்கவும், இனங்கள் மேலான ஒடுக்குமுறையையும் ஏகாதிபத்தியங்கள் தூண்டிவிட்டன.

கம்யூனிசம் மனிதம் தொடர்பாக கொண்டிருந்த இணக்கமான ஜக்கியத்தையே உடைத்தனர். மனித ஜக்கியத்தை வைக்கும் கம்யூனிசத்துக்குப் பதில், மனிதப் பிளவை முன்வைக்கும் முதலாளித்துவமே சிறந்தது என்று ஏகாதிபத்தியம் வலியுறுத்தி, இனங்களை மோதவிட்டனர். இப்படி ஏகாதிபத்திய சதிகளுடன் உருவான முதலாளித்துவ மீட்சி, அந்த நாடுகளை பல துண்டுகளாகப் பிய்ந்து போட்டது. அத்துடன் உள்நாட்டு பொருளாதாரத்தை சிதறடிக்க வைத்து, தமது பிரதான எதிரியின் பொருளாதார பலத்தை தரைமட்டமாக்கினர். தம்மையும், தமது நிலையையும் சார்ந்து இருக்குமாறு, மொத்த சூழலையும் மாற்றினர்.

பிரிவினைகளை ஊக்குவித்து, பிரிந்த நாடுகளில் தமது செல்வாக்கையும், ஏன் தமது இராணுவ தளங்களையும் நிறுவிக்கொண்டனர். தமது சந்தைக்கேற்ற பொருளாதார மண்டலங்களாக, தமது கடன் என்ற சிலந்தி வலையை திணித்து, அந்த நாடுகளை தமக்கு அடிமைப்படுத்தினர்.

கம்யூனிசத்தை கைவிட்டு முதலாளித்துவ மீட்சியைச் செய்த இந்த சமூக ஏகாதிபத்திய நாடுகள், போட்டி ஏகாதிபத்தியமாக தம்மை தகவமைத்துக் கொண்டு மீண்டும் களத்தில் இன்று மோதுகின்றது. இதன் விளைவாலும் உலகில் ஏகாதிபத்திய முரண்பாடுகள் கூர்மையாகி நிற்கின்றது. இதை உடைக்கும் வகையில் தான், ஏகாதிபத்திய செல்வாக்கு மண்டலங்களில் பிரிவினையையும், பிரிவினைவாதத்தையும் விதைத்து வருகின்றனர். இந்த வகையில் நடந்தேறியது தான், கொசோவோவின் தனிநாட்டுப் பிரகடனம்.

கொசோவோவின் தனிநாட்டுப் பிரகடனமும், கொசோவோ மக்களும்

இந்தப் பிரகடனத்தால் கொசோவோ மக்களுக்கு ஏதாவது நன்மை கிடைக்குமா? நிச்சயமாக இல்லை. மாறாக கொசோவோ மக்களின் சுயநிர்ணயம் மறுக்கப்படும். அவர்கள் ஏகாதிபத்திய கைக்கூலிகளாக பயன்படுத்தப்படுகின்றனர். இனிவரும் மோதலுக்குள் வெறும் பகடைக் காய்களாகி மிதிக்கப்படுவர். கொசோவின் சுதந்திரம், சுயநிர்ணயம் என்பது, ஏகாதிபத்தியத்தின் நலன் சார்ந்த விளையாட்டுப் பொம்மை தான்.

உண்மையில் இந்த பிரிவினையின் பின் காணப்படும் மகிழ்ச்சி என்பது தற்காலிகமானது. ஏகாதிபத்திய மோதல்கள் ஏற்படுத்த உள்ள துயரங்களுக்கு ஏற்ற, முன்னோடியான அற்ப மகிழ்ச்சி. இரண்டாம் உலக யுத்தத்தின் முன்பு கிட்லரின் வெற்றிகளைக் கொண்டாடிய அதே மகிழ்ச்சி தான், இதுவும்.

மூன்றாவது உலகமகா யுத்தம் மூலம் தான் உலகை மறுபடியும் ஏகாதிபத்தியம் பங்கிடுகின்ற தயாரிப்புக்கான, ஒரு நிழல் யுத்தம் தான் இது. அதில் பலியாகும், முதல் பலியாகப் போகும் மக்கள், வேறு யாருமல்ல, இந்த கொசோவோ மக்கள் தான். ஏகாதிபத்திய நலன்கள் என்பது மொத்த மக்கள் கூட்டத்துக்கும் எதிரானது. இதில் மோதல்கள் ஏற்படும்போது யாரை முதலில் பயன்படுத்துகின்றரோ, அவர்கள் களப்பலியாவது தான் இயல்பு.

இப்படி கொசோவோ மக்கள் இன்று உண்மையான சுதந்திரத்தைப் பெறவில்லை. ஆளும் வர்க்கமும் ஏகாதிபத்தியமும் கூட்டுச் சேர்ந்து உலகை பங்கிடுகின்ற விளையாட்டில் தான், இந்த சுதந்திர பிரகடனம் நடந்தது.

இதனால் ஏற்படும் சர்வதேச தாக்கங்கள் என்ன?

பொதுவாக உலக ஒழுங்கை பல தளத்தில், பல கூறாக மாற்றிவிடுகின்றது. மோதல் நிறைந்த ஏகாதிபத்திய சர்வதேசக் கொள்கை என்பது வெளிப்படையாகிவிட்டது. மோதல்கள் அதிகரிப்பது என்றுமில்லாத அளவுக்கும், ஒன்றுக்கு மேற்பட்ட ஏகாதிபத்திய முகாம்களில் அரங்கேறும்.

1. பிரிவினைப் போராட்டம் நடக்கின்றதும், கோருகின்றதுமான நாடுகள், இயல்பாக இந்த பிரிவினையை ஆதரிக்கின்ற ஏகாதிபத்திய அணியில் சேர்ந்து விடுவது நிகழும்.

2. இதனால் பிரிவினை வாதம் பெறும் உற்சாகத்தை தடுக்க, உண்மையான சுயநிர்ணயத்துக்கு பதில் அற்ப தீர்வுகளை திணிப்பது அற்ப சதியாகவே அரங்கேறும்.

3. ஏகாதிபத்திய பொருளாதார சூறையாடலால் ஏற்படும் நெருக்கடியை, ஏதாவது ஒரு பிரிவினை மூலம் தீர்க்க முடியும் என்ற அடிப்படையிலான பிரிவினைவாதங்கள் முன்னுக்கு வரும்.

4. ஏகாதிபத்திய நலன் சார்ந்த பிரிவினை வாதங்கள் ஊக்கப்படுத்தப்பட்டு, மூர்க்கமான மோதலாக மாறும்.

5. உலகமெங்கும் ஆயுத மோதல்கள் அதிகரிக்கின்ற சூழல், எங்கும் அதிகரிக்கும்.

உலகில் மோதல்கள் அதிகரிப்பதுடன், ஏகாதிபத்திய முரண்பாட்டால் அவை கூர்மையடைகின்றது. உலகை ஏகாதிபத்தியங்கள் பங்கிடும், ஒரு உலக யுத்ததைத் நோக்கி நகருகின்றது. மிகக் கொந்தளிப்பான ஒருகட்டத்தை தான், ஏகாதிபத்தியத்தின் சுதந்திர பிரகடனம் காட்டுகின்றது.

இலங்கையில் இதன் விளைவு என்ன?

இலங்கையின் தனித்துவமான இறைமை என்பது, மேலும் ஏகாதிபத்திய தன்மைக்குள் செல்வதை துரிதமாக்கும். இலங்கை இந்தியா மயமாவதும், அதன் நிலைப்பாட்டுடன் இறங்கி தனது தனித்துவமான சுயத்தை மேலும் இழந்துவிடும். ஏகாதிபத்திய மோதல் இலங்கை இனப்பிரச்சனையில் ஏற்பட்டால், இலங்கை இந்தியாவின் முழுமையான ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும். அதைத் தடுக்க முடியாது.

ஆனால் ஏகாதிபத்திய மோதல் ஏற்படும் வாய்ப்பு, இலங்கையில் கிடையாது. இது நேரடியாகவே இந்தியாவுடன் தொடர்புடையது. இந்தியா ஒரு ஏகாதிபத்தியம் சார்ந்து நிலை எடுக்கவில்லை. இந்தியாவே ஏகாதிபத்தியங்களின் பொருளாதார சுரண்டலுக்கு உள்ளாகும் புதிய சந்தையாகவுள்ளது. சந்தை பங்கிடப்பட்டு இறுகிவிடவில்லை. ஏகாதிபத்தியங்கள் போட்டியற்று உள்ள நுழைவை கொண்ட, ஒப்பீட்டளவில் அமைதியான திறந்த சந்தைப் பிரதேசமாக உள்ளது.

இந்தியா அமெரிக்காவின் நலன்களுடன் இணங்கிச் செல்வதால், இலங்கை விடையத்தில் இதற்கு முரணாக அமெரிக்க நலன்கள் இருக்காது. இலங்கை தனித்துவமாக இந்தியாவை மீறி செயல்படாது என்பது தெளிவானது. இலங்கையில் பிரிவினைகளை எதிர்க்கின்ற ஏகாதிபத்திய உதவிகளை நாடுவதும், ஆதரவைப் பெறுவதும் இந்தியாவை மீறியவையல்ல.

அந்தளவுக்கு அதுவும் இந்தியாவுக்கு உட்பட்டது தான். கொசோவோவை முன்மாதிரியாக கொண்டு, ஏகாதிபத்திய ஆதரவுடன் ஒரு பேட்டை ரவுடியாக மாறுவதற்கான எந்த சூழலும் கிடையாது. இந்தியாவுக்கு உட்பட்ட இலங்கையில், ஏகாதிபத்திய முரண்பாடு தனித்துவமாக கிடையாது. இப்படி எந்த ஏகாதிபத்தியத்தையும் சார்ந்து புலிகள் நிற்க முடியும் என்று கருதுவது, கற்பனைக்குரியது. அதற்கான குறிப்பான சூழல் எதுவும் கிடையாது.

புலிகள் மிகத் தனிமைப்பட்ட நிலையில் சிக்கி நிற்பது, இதனால் தான். புலிகளின் பாசிச நடத்தைகள் அல்ல, ஏகாதிபத்தியத்திடம் இருந்து அவர்களை தனிமைப்படுத்துவது, சர்வதேச சூழலே ஒழிய, புலிப் பாசிசமல்ல.

மறுபக்கத்தில் கொசோவோ பிரகடனத்தை அடிப்படையாகக் கொண்டு, தமிழீழத்துக்கான மக்களின் சுயநிர்ணயத்தை முன்னிறுத்தும் உரிமையை புலிகள் இழந்துவிட்டனர். மக்கள் மத்தியில் அந்த உணர்வையும், அரசியல் பார்வையையும் கூட புலிகள் அழித்துவிட்டனர்.

அந்தளவுக்கு மக்கள் மேலான புலிகளின் பாசிசம், சுதந்திரமான தனித்துவமான செயல்கள் அனைத்தையும் இல்லாததாக்கிவிட்டது. மக்களைச் சார்ந்து நின்று சுதந்திரப் பிரகடனத்தை செய்யுமளவுக்கு, அதனிடம் எந்த தார்மீக மக்கள் பலமும் கிடையாது.

ஏன் கொசோவோவைக் காட்டி, ஒரு மக்கள் ஆர்ப்பாட்டத்தை புலம்பெயர் நாடுகளிலும் சரி, மண்ணிலும் சரி, புலிகளால் இன்று நடத்த முடியாது என்பதே உண்மை.

இப்படி எல்லாத் தளத்திலும் ஏகாதிபத்திய நலன்களும், மோதல்களும் தான் அரங்கேறி வருகின்றது. இதற்கேற்ப குலைப்பதும், ஊளையிட்டு அழுவதும், அரசியலாக அரங்கில் நிற்கின்றது. இதைக் களையாது, எந்த வெற்றியையும் மனிதர்கள் பெறமுடியாது.

Tuesday, February 19, 2008

அன்னிய தேசங்கள் ஆதரிக்கும் கொசோவோ மற்றும் அன்னிய நலன்காக்கும் தமிழ்த் தலைமைகள்.

அன்னிய தேசங்கள் ஆதரிக்கும்

கொசோவோ மற்றும்

அன்னிய நலன்காக்கும் தமிழ்த் தலைமைகள்.

"Today it might launch a new round of fragmentation in the region because if Kosovo can claim independence, why not western Macedonia, or Republic Srpska, or Herzegovina-Bosnia or Abkhazia, Ossetia? All around the world there are about 3,600 communities that are, all are I'm sure, this afternoon watching what is going to happen because it might set a precedent for similar movements all around," Predrag Simić, Serbia’s Ambassador to France said.

இன்று கொசோவா தனி நாடாகப் பிரகடனஞ் செய்துள்ளது!

இது, அதன் பதினேழு ஆண்டுகளான யுத்தத்தால் நிகழ்ந்த பெறு பேறா?

அதன் மக்களால் நடாத்தப்பட்ட புரட்சிகரமான பணியினால் செர்பிய இனவாத அரசு முறியடிக்கப்பட்டு,வெற்றிகொள்ளப்பட்டதன் பின்பான பிரகடனமா?

தமது மக்களின் அனைத்துரிமைகளையும் உள்ளடக்கியவொரு விடுதலைகொண்ட கொசோவோவா இந்தப் புதிய தேசம்?

இவை நமக்குள் எழும் கேள்விகள்!

இன்றைய(17.02.2008) தினக்குரலில் திரு.கோகர்ணன் என்ற புனை பெயர்கொண்ட (அறியப்பட்ட )பேராதனைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் அன்றைய தமிழ்த்தலைமைகள் தொடக்கம் இன்றைய தமிழ்த்தலைமைகள் வரை விமர்சனத்துக்குள் அடக்கியுள்ளார்கள்.பேராசிரியரின் கருத்துக்கள் மிக யதார்த்தமாக நாம் இனங்கண்ட உண்மைகளாகவே இருக்கிறது.இந்த நிலையில்-

எமது மக்களின் தலைவிதியை எவரும் தீர்மானிக்க முடியாதென்பதற்கு இன்றைய கொசோவோ நல்ல உதாரணமாக இருக்கிறது!

ஆனால்,தமிழர் தலைமைகள் அன்னியத் தேசங்களையும் அவர்களின் ஆசியையும் காத்திருக்கும்போது,அவர்களே கடந்தகாலத்திலிருந்து இன்றைய நிகழ்காலம்வரை நம்மை ஏமாற்றிச் சிங்கள ஒடுக்குமுறையை மிகவும் தந்திரமாக நம்மீது கட்டவிழ்த்துவிட்டதற்கான கடந்தகால அரசியல் நிலைமைகளைச் சொல்கிறார் நமது பேராசிரியர்.

போராட்டம்,கொலை, அழிவு,குருதி,பசி,பட்டுணி-வாழ்விடங்களைவிட்டகலும் அவலம்!இவையெல்லாம் நமது அன்றாட வாழ்வாக மாறிவிட்ட நிலையிலும் நம்மை எவரும் கண்டு கொள்வதே இல்லை!நமது மக்களின் அழிவுக்கும் குருதிதோய்ந்த வாழ்வுக்கும் நாம் நம்பும் இத்தகைய அன்னிய தேசங்களே காரணமாக இருக்கின்றவை என்பதை நாம் நமது கடந்தகால அனுபவத்திலிருந்தும்,இந்த மறுபக்கக் கட்டுரையாளரின் எழுத்திலிருந்தும் அறிய முடியும்!



இன்றைக்கு கொசோவோ எனும் தேசத்தை அங்கீகரிப்பதாகச் சொல்லும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையும்,மேற்குலகத்தின் ஐரோப்பிய ஒன்றியுமும் நேற்று 16.02.2008 அன்றே தமது நீதிபதிகளையும்,சட்ட வல்லுனர்களையும்,சுங்க அதிகாரிகளையும் மற்றும் இராணுவவல்லுநகர்களையும் கொசோவோ நோக்கி அனுப்பிவைத்தன என்கின்றன!ஆனால்,நாமறிய இவர்கள் 90களிலிருந்து அங்கே நிழல் அதிகாரத்தை நிலைப்படுத்திக் கொசோவோவின் வளங்களைத் தமது தேசங்களுக்குக் கொணர்ந்துள்ளனர்.இதற்காகவே அவர்கள் அன்றிலிருந்து கொசோவோவை ஒரு நவகாலனிய அரசாங்கத்தின் கீழ் கொணரும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்கள்.இதன் பொருட்டு இன்றைய தனிநாட்டுப் பிரகடனத்தூடாகச் சட்டபூர்வமானவொரு தமது ஏஜென்டைக் காத்துத் தமது மூலவளத் தேவைகளைப் பூர்த்திசெய்யவும்,அதன் வாயிலாகத் தமது தொழிற்சாலைகளின் அதீத உற்பத்தியையும் தொடர்ந்து நிலைப்படுத்தும் ஒரு உறுதியான பங்காளியைத் தயார்ப்படுத்தும் அவசியத்தை அவர்கள் வெளிப்படுத்தினார்கள்!

அன்னிய தேசங்களின் கொடிகளைத் தமது தேசத்தோடான நட்புறவுக் கொள்கைகொண்ட தேசங்களாக கொசோவோ மக்கள் கொண்டாடும் நிலையை ஊடகங்கள் உருவாக்கின.

இதே ஊடகங்களும்,அமெரிக்க அரசும் கொசோவின் விடுதலைக்காக அன்று போராடிய யு.சி.கே. அமைப்பை 1998 ஆம் ஆண்டு வரைப் பயங்கர வாத அமைப்பாகவே பிரகடனப்படுத்தி ஒதுக்கி வந்தது.இத்தகைய நிலையில் திடீரென யு.சி.கே அமைப்பானது விடுதலைப்படையாக இப்போது முன்னிறுதப்பட்டு அத் தேசம் தனிநாடாகப் பிரகடனப்படுத்தப்பட்டது போன்று, நமது தேசத்தையும்,புலிகள் அமைப்பையும் அமெரிக்கா அங்கீகரிக்குமா?

பலரிடம் இக் கேள்விகள் இருக்கின்றன.இக் கேள்விக்கு முதலில் நாம் தெரிய வேண்டியவை பலவுண்டு!



புதிதாக மலர்ந்துவிட்ட கொசோவோ "மக்களினால் விடுவிக்கப்பட்ட தேசமாகவா" இருக்கிறது? என்ற கேள்விக்கு நியாயமாக விடை காண்பவருக்கு அன்னிய நலன்களின் கொடுமை மிக இலகுவாகப் புரியும்.

அத்தேசமானது அன்னிய இராணுவங்களின் துணையோடு,இன்று முழுக்கமுழுக்க அமெரிக்காவினது இராணுவத் தேவைக்கும்,ஐரோப்பியாவின் மூலவளத் தேவைக்குமாக அவர்களால் சேர்பியாவிலிருந்து வலு கட்டாயமாகப் பிரித்துத் தமது சட்டபூர்வமான கொலனிய நாடாக்கப்பட்டுள்ளதென்பதே உண்மையானதாகும்.

இத்தேச மக்கள் செர்பிய அரசின் இரும்பு விலங்குக்குப் பதிலாகச் சொந்த நாடெனும் பொன் விலங்கால் மாட்டப்பட்டுக் கிடக்கிறார்கள்.அவர்களின் இந்தத் தேசமலர்வுக்கான மகிழ்வானது நிரந்தரமற்றது!

இதைப் புரிவதற்குக் காலமெடுக்கத் தேவையில்லை.

அதை அந்தந்த அன்னியநாடுகளின் அரசியல் மற்றும் வியூகத்தின் போக்குகளிலிருந்தே நாம் அறிய முடியும்.

எங்கள் தேசத்துள் நிகழும் போராட்டமானது சுமார் கால் நூற்றாண்டாக யுத்தக்களத்தைத் தொடர்ந்து நடாத்துகிறது.இருந்தும் நமது தேசத்தை விடுவிப்பதற்கான எந்ததச் சர்வதேச அழுத்தங்களும் இதுவரை எமக்குச் சார்பாக எழவில்லை.இது ஏன்?

எம்மைத் தொடுர்ந்து அரசியல்-யுத்த அழுத்தங்களுக்குள் இருத்திவைத்து ஒடுக்கும் முதற்தர ஒடுக்குமுறைத் தேசமாக இருப்பது இந்தியாவென்ற மிகப்பெரும் பாசிச அரசாகும்.இங்கே,நமது தலைவர்களோ அன்றி சாதாரணப் பொதுமக்களோ-ஊடகங்களோ அன்னியத் தேசங்களால் நாம் விடுவிக்கப்பட்டுவிடுவோமென முழங்குகின்றன.

சிங்கள ஒடுக்குமுறையிலிருந்து நாம் விடுவிக்கப்பட்டு,நமக்கான தேசத்தைச் சுதந்திரமாகப் பிரகடனப்படுத்தும் முறைமைக்கு உலகம் ஒருங்கே ஆதரவு தருமென எவராது சிந்தித்தால் அது மிகப் பெரும் தவறென்பதை கொசோவோவின் மீதான ஐரோப்பிய-அமெரிக்க ஆர்வங்களிலிருந்து நாம் அறிய முடியும்.

இதையே தினக்குரல் கட்டுரையாளரும் நிறைவாகச் சொல்கிறார்.

படித்துப் பாருங்கள்.

உலக நடப்புகளில் "நமது அரசியலும்" எங்கே,எப்படியான தளத்தில் நகர்வதென்பதை நாம் அறிந்து திருத்தி மீள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகலாம்.

அன்புடன்,

ப.வி.ஸ்ரீரங்கன்

17.02.2008

தமிழ்த் தேசியவாதத் தலைமைகள்

எந்தெந்தச் சமூக வர்க்கங்களது நலன்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கினவோ

அவற்றுக்கு நேரெதிரான நிலைப்பாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகட்காகப் போராடியவர்களாக இடதுசாரிகள் இருந்தார்கள்!கோகர்ணன்,தினக்குரலில்...

மறுபக்கம் :

//ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நின்றால் தமிழ் மக்களுக்கு

உரிமைகள் கிடையாமற் போகும் என்று நினைக்கிறவர்கள், தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் வரலாற்றில் இன்று வரை ஏகாதிபத்தியம் யாருடைய தரப்பில் நின்று வந்துள்ளது என்று நினைத்துப் பார்க்க வேண்டும்.

இலங்கையில் போர் தொடருவது தங்களுக்குப் பயனுள்ளது என்றால் அதை வெற்றி தோல்வியின்றித் தொடரச் செய்ய அவர்கள் எதையுஞ் செய்வார்கள்.

இடையிடையே கண்டனங்களும் கனிவான சொற்களுங் கேட்கும். சீனா, பாகிஸ்தான், ஈரான் என்று பூச்சாண்டி காட்டி எதையும் சாதித்து விடுகிறதாக யாரும் நினைத்தால், அவர்கள் படு முட்டாள்களாக இருக்க வேண்டும் அல்லது தமிழர்கள் எல்லாரும் படு முட்டாள்கள் என்று
நினைக்கிறவர்களாக இருக்க வேண்டும். //

தமிழ் மக்களிடையே ஏகாதிபத்திய எதிர்ப்பு வலுவடைவதைத் தமிழ்த் தேசியவாதிகள் விரும்பியதில்லை. எனினும், இலங்கைத் தேசியம் என்ற கண்ணோட்டத்தில் கொலனிய ஆட்சிக்கு எதிரான சிந்தனையின் முன்னோடியாக இருந்தவர் பொன்னம்பலம் அருணாசலம். அவர் தொழிற்சங்கங்களின் உருவாக்கத்திலும் ஊக்கமளித்து உதவிய ஒருவர். சிங்களத் தேசியவாதிகளால் ஏய்க்கப்பட்ட அவர் அன்றைய சிங்களத் தேசியவாதத்தின் வர்க்கத் தன்மையையும் இலங்கை என்ற அடிப்படையில் சிந்திக்க இயலாமையையும் சரியாக மதிப்பிடத் தவறியதாலேயே விரக்திக்குள்ளானார். எனினும், அவரால் தனது `சகோதரர் இராமநாதன் போன்றோரின் பழைமைவாதத் .தமிழ்த் தேசியவாத நிலைப்பாட்டுக்கு நகர இயலவில்லை. சிங்களப் பேரினவாதத்தின் வரவும் அதன் வேகமான வளர்ச்சியும் மட்டுமே தமிழ்த் தேசியவாதத்தின் பிற்போக்குத்தனமான கொலனிய- ஏகாதிபத்தியம் சார்பான சிந்தனைக்கும் காரணங்களல்ல.

அந்தத் தேசியவாதத்தால் தமிழ் பேசுகிற மூன்று வேறுபட்ட சமூகங்களை காலப்போக்கில் தம்மைத் தனித் தேசிய இனங்களாக அடையாளப்படுத்திக் கொண்டவற்றை இணைக்க இயலவில்லை. அதற்குப் பிரதேச வேறுபாடுகளை மீறித் தனது அரசியலை முன்னெடுக்க நீண்டகாலம் எடுத்தது. அதைக்கூட இன்னமும் சரிவர நிறைவேற்ற இயலவில்லை. தனக்குள் இருக்கிற சாதி , வர்க்கம் என்கிற ஒடுக்குமுறை சார்ந்த பிரச்சினைகட்கு நேர்மையாக முகங் கொடுக்க இயலவில்லை.

இதற்கான பல காரணங்களைக் கூறலாம். பிரித்தானிய ஆட்சி போன பின்பே தமிழருக்கு எதிரான பாரபட்சம் வலுத்தது என்பதால், பிரித்தானியரை நம்புவதற்குரிய சூழ்நிலை இருந்தது என்று கூறுகிறார்கள். ஆனாலும், 1957 ஆம் ஆண்டு திருகோணமலை, கட்டுநாயக்க தளங்களை பிரித்தானியர் இலங்கையரிடம் மீளக் கையளிப்பதை நமது தமிழ்த் தலைவர்கள் எதிர்த்த போதும் சிங்கள மொழிச் சட்டத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி மகாராணியாருக்கு அடித்த தந்தி முதலாகக் கோடீஸ்வரன் வழக்கு மேன்முறையீட்டு வரை எதிலுமே பிரித்தானிய அரசு தமிழருக்கு ஆதரவாக எதையுமே செய்யவில்லை.

அமெரிக்கா- பிரித்தானிய - டச்சு எண்ணெய்க் கம்பனிகள் மூன்றும் 1960 இல் தேசியமயமாக்கப்பட்டபோது, அது தர்மமல்ல என்று தமிழரசுத் தலைவர் செல்வநாயகம் சொன்னார் . அந்த நன்றிக்காக அமெரிக்க ஏகாதிபத்தியம் ஏதாவது செய்ததா? இல்லை. ஆனாலும், அத்தனை தமிழ்ப் பாராளுமன்றத் தலைமைகளும் இன்று வரை எந்த ஏகாதிபத்தியத்துக்கும் எதிராக வாய்திறந்ததில்லை.

1959 முதல் சீன- இந்திய எல்லைத் தகராறு மோதல்கட்கு வழி கோரியது. அவற்றைத் தவிர்க்க இந்தியாவும் சீனாவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று சீனப் பிரதமர் கையொப்பமிட்டு எழுதிய கடிதத்தை இந்தியா புறக்கணித்தது, பிரித்தானிய ஏகாதிபத்தியம் பறித்து எடுத்ததற்கெல்லாம் தானே வாரிசு என்றதும் போதாமல் சீன- இந்திய எல்லைப் படங்களை மாற்றி வரையும் இந்திய ஆட்சியாளர்கள் எடுத்த முயற்சிகள் பற்றியெல்லாம் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவிற்குள்ளிருந்தே உண்மைகள் வெளிவந்துள்ளன. சீன - இந்திய மோதலைத் தொடக்குவதில் இந்தியப் படையினரது சீண்டலுக்கு ஒரு முக்கிய பங்கு இருந்தது என்றும், சீனாவின் பதிலடி இந்தியா எதிர்பாராதளவு கடுமையாய் இருந்தது என்பதுமே இன்றைய தகவல்கள் கூறுகின்ற உண்மை. இவை 1959 முதல் 1961 வரை சீனத் தரப்புச் சொல்லி வந்தவற்றுடன், உடன்படுகின்றன. எனினும், எந்தப் பொருளாதாரப் பிரச்சினை பற்றியும் அக்கறையற்றதாகவும் எந்தவிதமான சர்வதேச அலுவல்களிலும் அக்கறையற்றதாகவும் காட்டிக் கொண்டு லுமும்பாவின் படுகொலை பற்றியோ கியூபா மீதான அமெரிக்கப் படையெடுப்புப் பற்றியோ அலட்டிக் கொள்ளாத தமிழரசுக் கட்சி யூ.என்.பி.யையும் மிஞ்சிச் சீனாவை ஆக்கிரமிப்பாளன் என்று கண்டித்து அறிக்கை விட்டது.

தமிழ்த் தேசியவாதத் தலைமைகளில் ஏகாதிபத்திய விசுவாசமே சுதந்திர கொங்கோ, கியூபா, சீனா என்பன பற்றிய பகைமையான பார்வைக்கு உதவியது என்பது சரியல்ல. மேலதிகமான காரணங்களும் இருந்தன. தமிழ்த் தேசியவாதத் தலைமைகள் எந்தெந்தச் சமூக வர்க்கங்களது நலன்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கினவோ அவற்றுக்கு நேரெதிரான நிலைப்பாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகட்காகப் போராடியவர்களாக இடதுசாரிகள் இருந்தார்கள். எனவே தான், சாதி ஒடுக்குமுறையான, ஊதியங்கட்கான போராட்டம் என்று எது வந்தாலும் தமிழ்த் தேசியவாதப் பாராளுமன்ற உறுப்பினர்கட்குக் கடைவீதியிலும் கம்யூனிஸ்ற்காரன் தான் எதிரி. தொழிற்பிணக்கு நீதிமன்றம் என்றாலும் கம்யூனிஸ்ற்காரன் தான் எதிரி.

1947 இல் மலையகத் தமிழரின் வாக்குரிமைப் பறிப்பை ஒரு இடதுசாரியும் ஆதரிக்கவில்லை. மலையக தமிழர் நீங்கலாக பெரும்பாலான தமிழ்த் தேசியத் தலைவர்கள் ஆதரித்தனர். இந்தத் துரோக வரலாறு இன்னமும் தொடருகிறது. இவற்றைப் பற்றி ஆழமாக ஆராய்ந்தால் இன்று வரை தமிழ்த் தேசியவாதத்தை வழிநடத்திய சக்திகள் பற்றிக் கொஞ்சம் விளங்கும்.

ஏகாதிபத்தியவாதிகள் யாருடைய நண்பர்கள் என்பது 1977 க்குப் பிறகு தெளிவாகியிருக்கவேண்டும். ஆனால், 1983 இனப் படுகொலையைக் கண்டித்து மேலை நாடுகளின் கருத்துகள் வெளியிடப்பட்டதும் பெருமளவில் புலம்பெயர்ந்தவர்கள் மலிவான கூலி உழைப்பாளர்களாக அகதிகளாகவும் எந்தவித அந்தஸ்துமற்றுப் புகலிடம் பெறவும் ஏற்கப்பட்டதும் மீண்டும் ஏகாதிபத்தியம் பற்றிய நம்பிக்கைகள் துளிர்விட்டன. எனினும், கடந்த கால் நூற்றாண்டுக்கால ஏமாற்றங்களின் பின்னரும் இன்னமும் சர்வதேச சமூகம், ஐ.நா. குறுக்கீடு, ஐ.நா. அமைதிப் படைகள், ஐ.நா. கண்காணிப்பு என்ற நமது கனவுகள் அடிப்படையின்றி விரிகின்றன.

எங்கள் அனுபவங்களிலிருந்து நாங்கள் கற்றவை அனைத்தையுமே மறுக்கிற விதமாக எங்கள் தலைமைகளது அரசியல் நடத்தை அமைகிறது. அதற்கேற்றபடி ஊடகங்களிலும் `நிபுணர்கள்' எழுதி வருகிறார்கள். தமது பிரச்சினைக்கான தீர்விற்கான சாவி சென்னையில் இருக்கிறது என்று கூட அண்மையில் எழுதப்பட்டது. டில்லியில் தான் அது இருக்கிறது என்றும் நம்பப்படுகிறது. கண்ணாடியை அணிந்து கொண்டே எல்லா இடத்திலும் அதைத் தேடுகிற ஞாபகமறதிக்காரர் போல நம்மிடமே உள்ளதை எங்கெல்லாமோ தேடுகிறோம்.

ஒன்று மட்டும் விளங்க வேண்டும். இன்று தமிழகத்தில் ஈழத் தமிழர் பற்றிய அனுதாப அலையுள்ளது. ஆயினும், தமிழக அரசோ பிரதான கட்சி எதுவுமோ தமிழருக்கு ஆதரவாக எதுவுமே செய்யாது. ஈழத் தமிழர் பற்றி ஆவேசமாகப் பேசிக் கொண்டே விடுதலைப்புலிகளை ஒழிக்க வேண்டுகிற ஜெயலலிதாவின் கூட்டணி வைக்கச் சிலருக்கு முடிகிறது. அதேபோல, டில்லியின் முடிவுகளை மீற மாட்டேன் என்கிற கருணாநிதியுடன் ஒட்டிக் கொண்டு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக மேடைகளில் முழங்கவும் சிலருக்கு முடிகிறது. இது தமிழக தாயக மரபு.

ஈழத்தமிழருக்கு ஆதரவான மக்கள் அமைப்புகள் உள்ளன. அவை விடுதலைப்புலிகளை விமர்சனமின்றி ஏற்பவையல்ல. அதேவேளை, சென்னையும் டில்லியும் ஈழத் தமிழர் பிரச்சினையை வைத்து ஆடுகிற நாடகங்களை அவை அம்பலப்படுத்துகின்றன. மாறாக நாங்கள் கேட்க விரும்புகிற பொய்களைச் சொல்கிறவர்களின் மொழி இனியதாயிருக்கலாம். அவர்களது நட்பு சந்தேகத்துக்குரியது.

ஜே.வி.பி. இடையிடையே ஏகாதிபத்திய எதிர்ப்புப் பேசும். இலங்கையின் உள் அலுவல்களில் அயலார் தலையீட்டை எதிர்த்தும் பேசும். இந்தியாவைக் கண்டித்தும் பேசும். மறுநாள் தூதரகத்தில் அதன் தலைவர்கள் விருந்துபசாரங்களில் சிரித்துப் பேசி மகிழ்வதைக் காணலாம். இந்தியாவும் அமெரிக்காவும் போருக்கு உதவ வேண்டுமென்று அது கோரும். விடுதலைப்புலிகட்கு எதிரான நடவடிக்கைகளை மெச்சியும் பேசும்.

அப்போதெல்லாம் ஜே.வி.பி. ஒரு இடதுசாரிக் கட்சியா என்ற கேள்வி நமது தமிழ்த் தேசியவாதிகட்கு நினைவுக்கு வராது. ஜே.வி.பி. தனது இடதுசாரி வேடம் கலையாதபடி ஏகாதிபத்திய எதிர்ப்புப் பேசுகிற போது மட்டும் ஜே.வி.பி.யின் பச்சையான இனத்துவேஷமும் அது ஒரு `மாக்சியக் கட்சி' என்கிற கருத்தும் ஒன்று சேர்த்துத்தரப்படும். ஜே.வி.பி.யை இடதுசாரிகள் என்று திரும்பத்திரும்பச் சொல்லி வருகிற சிலர் ஜே.வி.பி. இடதுசாரிக் கட்சி என்று சொல்லத் தகுதியற்றது என்று அறியாமற் சொல்லவில்லை. அவர்கள் மனமறிந்தே பொய்யுரைக்கின்றனர்.

ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நின்றால் தமிழ் மக்களுக்கு உரிமைகள் கிடையாமற் போகும் என்று நினைக்கிறவர்கள், தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் வரலாற்றில் இன்று வரை ஏகாதிபத்தியம் யாருடைய தரப்பில் நின்று வந்துள்ளது என்று நினைத்துப் பார்க்க வேண்டும்.

இலங்கையில் போர் தொடருவது தங்களுக்குப் பயனுள்ளது என்றால் அதை வெற்றி தோல்வியின்றித் தொடரச் செய்ய அவர்கள் எதையுஞ் செய்வார்கள். இடையிடையே கண்டனங்களும் கனிவான சொற்களுங் கேட்கும். சீனா, பாகிஸ்தான், ஈரான் என்று பூச்சாண்டி காட்டி எதையும் சாதித்து விடுகிறதாக யாரும் நினைத்தால், அவர்கள் படு முட்டாள்களாக இருக்க வேண்டும் அல்லது தமிழர்கள் எல்லாரும் படு முட்டாள்கள் என்று நினைக்கிறவர்களாக இருக்க வேண்டும்.

Monday, February 18, 2008

ஆனந்தசங்கரிக்கு ஓர் பகிரங்கக் கடிதம்

அகிலன்
18.02.2008

ஜயா,

நான் நலமாயுள்ளேன். நீங்களும் புலிகளின் வெடி குண்டுகளுக்கு இடையில் அகப்படாமல் இருக்க, ஆண்டவனைப் பிராத்திக்கின்றேன்.

இலண்டனுக்கு புலி எதிர்ப்பு சாதி மாநாட்டுற்கு சேர்த்து வந்திருக்கிறியள் போல இருக்கு. சென்றமுறை அதை வாழ்த்தி வாழ்த்துப்பா பாடி அனுப்பினார்கள். எனக்குத் தெரியும் நீங்கள் இப்பிடியான சம்பவங்கள் என்றால் விடமாட்டியள், முன்னுக்கு நிற்பியள். தப்பித் தவறி மாநாட்டுற்கு போய் பேச வெளிக்கிட்டால், கவனமாகப் பேசுங்கோ.

இது இலக்கியச் சந்திப்பில்லை. கண்டபடி பேசுறத்துக்கு. நான் சொல்லுற மாதிரி பேசுங்கோ. இலங்கையின் தற்போதைய பிரதான பிரச்சினை தலித்-வெள்ளாளர் பிரச்சினையே. தலித்துக்களின் பிரதான எதிரி உயர்-இந்து மேட்டுக்குடி வேளாளர் என்ற கருத்தியல் தன்மை கொண்டதாக பேசாமல், யாழ்ப்பாணத்தில் என்ன இலங்கையில் இருக்கின்ற முழு வெள்ளாளச் சாதியள் மட்டும்தான், தலித்துக்களின் பிரதான எதிரி என்று சொல்லுங்கோ. கையோடு பெரியார் சொன்னார் பார்ப்பனனைக் கண்டால் பாம்படிப்பது போல் அடியுங்கள் என்றார். நான் சொல்கின்றேன் வெள்ளாளனைக் கண்டால் முயல் அடிப்பது போல் அடியுங்கள் என்று சொல்லுங்கோ.

இப்படிப் பேசினால், உங்களுக்கு இம்மாநாட்டில் ஏதாவது பட்டம் தந்தாலும் தருவார்கள். டானியலுக்கு ஈழத்தின் தந்தை பெரியார் என பட்டம் கொடுத்துள்ளார்கள். உங்களுக்கு ஈழத்து அம்பேத்கார் என்ற பட்டம் தந்தாலும் தருவார்கள். லண்டனில் தானே உங்கள் தனிப்பெரும் தலைவர் அடங்காத் தமிழன் ஈழத்துக்காந்தி எலலோரும் பட்டம் பெற்றவர்கள். அந்த வகையில் உங்களுக்கும் ஒரு பட்டம் தந்தால், எங்களுக்கும் பெருமைதானே.

உங்களுக்கு ஏதோ எழுத வந்து ஏதோ எழுதி விட்டேன் போல இருக்கு, பரவாயில்லை.

ஐயா இலண்டணுக்கு வந்தவுடனேயே உங்கள் பிரதான வேலையான புலியெதிர்ப்பு அறிக்கையையே வெளியிட்டு விட்டீர்கள். அதில் இந்தியா சென்ற சமயம் உங்கள் இந்திய எசமானர்களுக்கு என்னென்ன சொன்னீர்கள் என்றெல்லாம் வரிசையாக சொல்லியுள்ளீர்கள். புலிகள் விடுதலை இயக்கமல்ல. அது ஒரு பயங்கரவாத இயக்கம். இவர்களை விட்டுவைத்தால் இந்தியாவில் ஒரு யாழ்ப்பாணமே உருவாகிவிடும் என்று, கே.எல்.நாராயணனுக்கும் அடிச்சு சொல்லிப்போட்டியள். இதோடை இன்னொன்றையும் சொல்லிறியள்.

புலிகளை ஒழிக்க இந்திய அரசு இலங்கை அரசுக்கு உதவவேண்டுமென்று. யூனஸ்கோ அகிம்சைக்கும் சகிப்புத் தன்மைக்குமாக பணப் பரிசு உங்களுக்கு கொடுத்தே உறுத்தியது. சரி நீங்கள் பரவாயில்லை. இங்கே புலம்பெயர் நாடுகளில் உங்களைப் போல ஜனநாயகம் பேசும், புலி ஒழிப்பு ஆக்களும் இருக்கினம். அவையளுக்கு என்று இலண்டனிலை ஒரு றேடியோவும் இருக்கு. ஒவ்வொரு வியாழக்கிழமையும் புலிகளை எப்படி ஒழிப்பது என்ற தொனியில், ஒரு தலைப்பெடுத்து ஒரே வாதாட்டம். இதற்கு ஒரு அரசியல் ஆய்வாளராம். அவர் தலைமையில் புடுங்குப்பாடு நடைபெறும். கடைசியில் ஒரு முடிவுக்கு வருவினம். சுடலையிக்கை நிக்கிற பேய் பிசாசுகளுடன் சேர்ந்தாவது புலிகளை ஒழிப்போம் என்று.

மறந்து போச்சு, இப்பதான் ஞபாகம் வருது. நீங்களும் இந்த வானொலியில் இதைபற்றி கதைத்தது.

ஐயா நான் தெரியாமல்தான் கேட்கிறன், உங்கடை ஆட்கள் பேய் பிசாசுகளுடன் சேர்ந்து புலிகளை ஒழித்தால், நாடு சுடுகாடாகி பேயாட்சிதானே நடக்கும். இப்பவே உங்கடை எசமான் மகிந்தா பேயாட்சிதானே செய்கின்றார். அதோட நீங்கள் சொல்லுற இந்தியப் பேய் அல்லது உங்களுடைய ஐரோப்பிய புலியெதிர்ப்புக் கூட்டாளிகள் சொல்லுற அமெரிக்கப் பிசாசு அல்லது வேறு எந்தப் பிசாசு வந்து புலிகளை ஒழித்தாலும், பிறகு எங்கள் நாடு பேய்களின் சுடுகாடாகத்தானே இருக்கும்.

இது எப்படி இருக்கென்றால், ஐயா உங்களுக்கு ஒரு உதாரணம் சொல்லுறன் கேளுங்கோ. ஈராக்கிலை சதாம் குசைன் என்ற ஒருத்தன் இருந்தான். புலிகள் எப்படி யாழ்ப்பாணத்திலை முஸ்லீம் மக்களை அடித்துக் கலைத்தார்களோ, கிழக்குமாகாணத்திலை எப்படி கொலை கொள்ளை போன்ற மக்கள் விரோத சர்வாதிகார நடவடிக்கைகளைச் செய்து துன்புறுத்தினார்களோ, அதே பாணியில் அப்படியே அவனும் குர்திஸ் இன மக்களுக்கும் செய்தான். அங்கேயும் அந்த நேரம் உங்களைப்போல ஆட்கள் இருந்தவை. அவையளும் சதாம் குசைன் பயங்கரவாதி என்று சொல்லி, அமெரிக்கப் பிசாசைக் கொண்டு வந்தார்கள். இப்ப ஈராக்கிலை என்ன நடக்குது, உங்கள் விரும்பம் போல் பேயாட்சிதானே நடக்குது.

இதோட உங்களிட்டை இன்னொன்று கேட்க விரும்புகின்றேன். புலிகள் மக்கள் விரோத ஐனநாயக விரோத பயங்கரவாத இயக்கமாக மாறியதற்கு, உங்களுக்கும் உங்கடை த.வி.கூட்டணிக்கு கொஞ்சமும் பங்கு இல்லையோ! உங்களை புலிசார்பு கூட்டணியை விட்டு வெளியேற்றாது விட்டிருந்தால், உங்களோடை புலியளைப் பற்றி எதிராக கதைச்சு தப்பேலாது. எதிராய் கதைக்கிற ஆக்கள் எல்லாரையும், துரோகிகள் ஆக்கிப்போடுவியள். இப்படி தானே கொஞ்சக் காலத்துக்கு முன்னம் செய்தனியள்.

திடீரென்று இப்ப புலிகள் உங்களுக்கு பயங்கரவாதிகள். புலிகளுக்கு நீங்கள் துரோகி. நீங்களோ புலிகளை அழிக்க சர்வதேச ஏகாதிபத்தியப் பிசாசுகளை தேடித் திரிகின்றீர்கள். அடிப்படையில் நீங்களும் பயங்கரவாதிதான், ஏன் ஏகாதிபத்திய கைக்கூலிதான்.

நீங்கள் ஊட்டி வளர்த்த இளைஞர் இயக்கங்கள் எப்படி பயங்கரவாத இயக்கங்களாகின? நீங்கள் பாராளுமன்ற நாற்காலிகளை பிடிப்பதற்கு தமிழீழக் கோhரிக்கையை முன்வைத்தீர்கள். இளைஞர்களை உசுப்பி உணர்ச்சிவசப்படுத்தினீர்கள். ஏன் அடுத்த தேர்தல் தமிழ் ஈழத்தில் தான் என்றீர்கள். எமக்கு எதிரானவர்கள், தமிழ் ஈழத்திற்கு எதிரானவர்கள் என்றீர்கள். இதனால் அவர்களை துரோகிகள் என்றீர்கள்.

உங்கள் சொல் கேட்டு எதிரி யார் நண்பன் யார் என்று தெரியாமல், தம்பி துரையப்பாவில் துவங்கினார். அவரின் தம்பிமார் நிண்டவன் போனவன் எல்லோரையும் எதிரியாக்கி சுட்டுத்தள்ளினார்கள். இதுதான் தமிழீழத்துக்கான சரியான பாதை என உற்சாகப்படுத்தினீர்கள். ஏன் சந்தோசப்பட்டீர்கள், மட்டில்லா மகிழ்ச்சியில் மூழ்கினீர்கள்.

இதனால் தம்பிமார் மேலும் உற்சாகப்பட்டார்கள். உங்களைப் போல் அடுத்த கட்டத்துக்கு இறங்கினார்கள். இதற்கு ஆள் திரட்டும் புதுக்கோட்பாட்டை கண்டுபிடித்தார்கள். இராணுவத்தை தாக்கினால் இராணுவம் மக்களைத் தாக்கும், மக்கள் ஆத்திரமடைந்து போராட புறப்படுவார்கள் என்றொரு குருட்டு நம்பிக்கையுடன் தாக்கினர். விளைவு இனக் கலவரங்களாக மாறியது. இனக்கலவரங்களால் மக்கள் அல்லல்பட, துன்ப துயரங்களை அனுபவிக்க, மக்களைத் தவிக்கவிட்டு நாட்டைவிட்டே ஓடினீர்கள். தளபதி அமிர்தலிங்கம் மாறுவேடத்தில் நாட்டை விட்டே ஓடினார்.

உங்களில் ஆத்திரமடைந்த விரக்தியுற்ற இளைஞர்கள் தமிழீழம் காண தனிவழி சென்றார்கள். விடுதலைப் பாதை எங்கோ இருக்க, பாதை மாறி எங்கேயோ போனார்கள். பாதை மாறிப் போனால் ஊர் வந்து சேராது என்பார்கள். இதுவே தமிழ்ஈழத்திற்கு நடந்தது.

தொடங்கிய போர் தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகளை கணக்கிலெடுக்காது தேசிய சர்வதேசிய நிலைமைகளைக் கணக்கிலெடுக்காது, மூல உபாயம் தந்திரோபாயம் தெரியாது மக்களை - மக்களின் புரட்சிகரப்போராட்டங்கள் பற்றி தெரியாது, சுத்த இராணுவ போதையில் மூழ்கியது. மொத்தில் கொலை வெறிப்பித்தில் மிதந்ததன் விளைவு - அதன் அதி உச்சக்கட்டமே மக்கள் விரோத பயங்கரவாதமாகியது.

ஜயா, புலிகளுக்கு உள்ளது போல் உங்களுக்கும் புலிகளை பழிவாங்கும் வெறியுணர்வு மேலோங்கியுள்ளது. அதற்கு ஏனய்யா நாடு நாடாய் அலைகின்றீர்கள். ஏகாதிபத்தியங்களை இலங்கைக்கு கொண்டுவர முயற்சிக்கின்றீர்கள். இதன் விளைவு சட்டிக்குள் இருந்து, நெருப்புக்குள் விழுந்த வினையாகிவிடும்.

வரலாற்றையும், தலைவர்களையும் உருவாக்குபவர்கள் மக்களே. தமிழ்மக்கள் தமது சொந்த வரலாற்றில் உங்களைப் போன்ற - புலிகளைப் போன்ற பயங்கரவாதிகளுக்கு பாடம் புகட்டுவர்.