தமிழ் அரங்கம்

Tuesday, April 24, 2007

பிரான்சில் பொலிஸ் ஆட்சி நிறுவப்படுமா?

பிரான்சில் பொலிஸ் ஆட்சி நிறுவப்படுமா?

பி.இரயாகரன்
23.04.2007


ரு தீவிரமான வன்முறை கொண்ட பொலிஸ் ஆட்சி தான், பிரான்சின் சமுதாய முரண்களை ஒழிக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் வாக்களிப்படுகின்றது. அந்த வகையில் முதல் சுற்றில் முன்னணியில் வெற்றி பெற்ற வேட்பாளரே, இரண்டாவது சுற்றில் வெற்றிபெறுவார் என்ற கருத்துக் கணிப்புகள் வெளிவருகின்றது.


பொலிசாருக்கு அதிக அதிகாரங்களும், வரைமுறையற்ற கைதுகள் மூலமும், சிறைத்தண்டனைகள் மூலமும், சமுதாயத்தின் பிரச்சனையை தீர்க்க முடியும் என்ற மனித அற்பத்தனங்களே இத் தேர்தலில் மேலோங்கி காணப்படுகின்றது. சமுதாயத்தில் இந்த முரண்பாடு ஆழமாகி, ஒரு வெறியாகி வெளிப்படுகின்றது.


இதன் மூலம் அனைத்து பிரஞ்சு மக்களின் நலனை பூர்த்தி செய்யப் போவதாக, பொய்யாக பீற்றிக்கொள்ளுகின்றனர். மக்களை ஏமாற்றி குறுகிய நிறவாதம் முதல் ஆசை காட்டல் வரையிலான அற்பத்தனங்கள் மூலம் வெற்றி பெற முனைகின்றனர்.


அண்மைய பிரஞ்சு வரலாற்றில் இந்த தேர்தலில் அதிக மக்கள் வாக்களிக்கும் அளவுக்கு, சமுதாயம் இரண்டாக பிளந்து கடுமையான முரண்பாடுகள் வெளிப்பட்டுள்ளது. சமூகத்தைப் பிளந்து, சமூகத்தின் பிளவுக் கோட்பாடுகளுக்குள் தீர்வுகளை முன்னிறுத்தி, தேர்தல் வெற்றி சாதிக்கப்படுகின்றது.


நாசிக்கட்சிகளின் கொள்கைகளை உள்வாங்கியதன் மூலம், அதை தீவிர வலதுசாரிகள் தமது வேலைத்திட்டத்தில் பகிரங்கமாக இணைத்துக் கொண்டதன் மூலம், ஒரு பகுதி நாசிகளை முதல் சுற்றில் அணிதிரட்ட முடிந்தது. இரண்டாவது சுற்றில் நாசிகளின் முழு ஆதரவில் வெற்றி பெறுவது என்ற திட்டத்துக்கு அமைய, வலதுசாரிகள் தமது கொடூரமாக பக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதன் நடைமுறை சார்ந்த விளைவே மனிதத்தை சிதைப்பது தான.


ஒடுக்கப்பட்ட அனைத்து மக்கள் மேலான தீவிரமான தாக்குதலுக்கு தயாராகும் ஒரு பொலிஸ் ஆட்சி நிறுவப்படும் என்ற நம்பிக்கைக்காக வாக்களிப்படுகின்றது. இதன் மூலம் ஒடுக்குபவன் நம்பும் சட்ட ஒழுங்கை பேணமுடியும் என்ற நம்பிக்கை தான், தேர்தல் முடிவுகளாகின்றது. இதன் மூலம் சமுதாயத்தில் நிலவும் வாழ்வுக்கான போராட்டங்களையும், வாழ்வு மறுக்கப்பட்டவர்களின் அராஜக நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்த முடியும் என்று நம்புகின்றனர்.


இந்த வகையில் தான் ஒடுக்குபவர்கள் என்றுமில்லாத பொலிஸ் வன்முறையைக் கையாள்வார்கள். ஆனால் இந்த வழிகள் எதிர்மறைத் தன்மை கொண்டதாக, மனித விரோத செயலாக அமைவதை வரலாறு மறுபடியும் நிறுவும். ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வின் வாழ்வு ஆதாரங்கள் அழிக்கப்பட்ட நிலையில் தான், அதிதமான வன்முறைகளும், சமுதாயத்தில் அராஜகத்தன்மையும் அதிகரிக்கின்றது. இதை பொலிஸ் ஆட்சி மூலம் நிவர்த்தி செய்ய முடியாது.


சமுதாயத்தில் நிலவும் இந்த நிலைமைக்கான காரணம் இடதுசாரிகளின் அரசியல் அற்பத்தனத்தின் விளைவாகும். இடதுசாரிகள் என்றும், கம்ய+னிஸ்டுக்கள் என்றும் கூறிக்கொண்டு சமுதாயத்தில் ஓட்டுண்ணிகளாக வாழ்வோரின் காட்டிக்கொடுப்புத்தான் காரணமாகும். இந்த இடதுசாரி கட்சிகளின் அரசியல் வேலைத்திட்டம் முதல் தொழிற்சங்கங்கள் வரை மூலதனத்துக்காக நக்கித்தின்னுகின்ற ஓட்டுண்ணிகளின் சீரழிவான பாதைதான், சமுதாயத்தை இந்த நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.


தொழிலாளி வர்க்கம் தனது வர்க்க உணர்வை இழந்துள்ள நிலையில், சமுதாயம் போராடும் ஆற்றலை இழந்து, உதிரியான தனிமனித அராஜகத்தன்மைகள் அதிகரிக்கின்றது. சமுதாயத்தின் பிரச்சனைகளை புரிந்து கொள்கின்ற ஆற்றல், ஆளுமையையும் இதன் மூலம் இழந்து விடுகின்றது. இது பொலிஸ் ஆட்சி மூலம், சட்ட ஒழுங்கு மூலம் தீர்க்கப்படும் என்று நம்பி, அதை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கின்றனர். இந்த வகையில் சமுதாயத்தின் அறிவு மட்டமும், ஒவ்வொரு நிகழ்ச்சியையும் கூர்ந்து புரிந்து கொள்கின்ற பகுத்தாய்வுத் தன்மையையும் சமுதாயம் இழந்துவிடுகின்றது.


வர்க்க உணர்வு பெற்ற அரசியல் நிலையை துறந்துவிடுகின்ற போது, இடையில் நிற்கின்ற வர்க்கப் பிரிவுகள் பாசிசத்தை தெரிந்து எடுப்பது தற்செயலாக நிகழ்கின்றது. தனக்கு ஆபத்தற்றதாக நம்புகின்ற சில தேர்வுகள், சமுதாயத்தில் ஒரு பிரிவு மீது தாக்குதலாக மாறுகின்றது இப்படி இழிவான அரசியல் உணர்வை பெற்று, கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பது நிகழ்கின்றது. குருட்டுத்தனமான சில சமுதாய நம்பிக்கைகள், தீர்வென்று நம்புகின்ற எடுகோள்கள், சுய விசாரணைக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாகாத சமுதாய அமைப்பில், அதை ஆதரிக்க தூண்டுகின்றது. இதனுடன் தனிப்பட்ட பாதிப்புக்கள், இயல்பாக மற்றவனுக்கு எதிராக வாக்களிக்கும் அரசியல் சூதாட்டத்தில் இறங்கி விடுகின்றனர்.


இந்த சூதாட்டத்தில் வாக்கு போடுகின்ற உழைக்கும் வர்க்கம் பெறப்போகும் அறுவடையோ, மிக மோசமானதாகவே இருக்கும். மனித துயரங்களும், மனித கொடூரங்களும் எதிர்காலத்தில் பரிசாக கிடைக்கும். சதாரணமான தொழில் உரிமை முதல், அனைத்தையும் பறிகொடுக்கின்ற நிலைக்கு சமூகம் தரம் தாழ்த்தப்படும். கடந்த காலத்தில் போராடிப் பெற்ற அடிப்படையான (தொழில்) உரிமைகள், சட்டங்கள் அனைத்தையும் இழப்பார்கள். வரைமுறையற்ற வேலை நேரம் முதல், வெளிநாட்டவர்கள் மீதான கொடூரமான ஒடுக்குமுறை வரை, எதிர்பார்த்து அதற்காக சிலர் தெளிவாக வாக்களிக்கின்றனர்.


குறிப்பாக வெளிநாட்டவர் மீதான ஒடுக்குமுறையை கோரும் வாக்காளர்கள் தான், இந்த வெற்றியை குறிப்பாக உணர்த்தி நிற்கின்றனர். இயல்பான வழமையான வலதுசாரிய சுரண்டல் கோட்பாட்டை முன்வைத்து, இந்த தேர்தல் வெற்றிகள் தீர்மானிக்கப்படவில்லை. மாறாக பிரஞ்சு அல்லாத வெளிநாட்டவர்கள் மீதான காழ்ப்புணர்வை தீர்த்துக் கொள்ளும், வன்முறை சார்ந்த வெறியுடன் வாக்களிக்கப்பட்டது. நாசிக்கட்சியின் தீர்மானகரமான ஆதரவுடன் தான், இந்த அதிகார மையம் ஜனநாயகத்தின் பெயரில் உருவாக்கப்படுகின்றது.


நாசிச பாசிட்டுகளும், கிட்லரின் வாரிசுகளுமான பிரஞ்சு தீவிர வலதுசாரிகள் கட்டமைக்கும் அவதூறுகளை உள்வாங்கியே, வலதுசாரிகள் ஆட்சிக்கு வரமுனைகின்றனர். இதை மறுத்தல்ல. 1930, 1940 களில் நாசிசம் சார்ந்த வெளிப்பாடுகள் கொண்ட ஒரு வன்முறையை, சமுதாயம் மீது கையாளப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி நிற்கின்றது. ஆளும் வர்க்கங்கள் வலது இடது களைந்த நிலையில், வர்க்க உணர்வு பெற்ற தொழிலாளி வர்க்கம் சிதைந்து போன வரலாற்றில் தான், இந்த தேர்தல் முடிவுகள் அமைகின்றது. அரசியலில் பாசிசம் அரங்கேறுவதை தடுத்து நிறுத்தும் ஆற்றல், இடதுசாரிக் கட்சிகள் என்று கூறிக்கொண்டும், கம்யூனிஸ்ட்டுகள் என்று கூறிக்கொண்டும் பிழைக்கும் கட்சிகளிடமோ கிடையாது.


ஒடுக்கப்பட்ட மக்கள் மேலும் மேலும் அடக்குமுறையையும், ஒடுக்கு முறையையும் அனுபவிப்பதையே, ஜனநாயகமாக்கி விடுவதையே வரலாறாக மீண்டும் நிறுவிக் காட்டும். வரலாறு மீண்டும் வர்க்க உணர்வு பெற்ற ஒரு முன் முயற்சிக்காகவே, காத்து நிற்க வேண்டிய அவலத்தில், பிரஞ்சு சமூகம் தனது புரட்சிகரமான வரலாற்றை இழந்து நிற்கின்றது என்பதே எதார்த்த உண்மையாகும்.


Sunday, April 22, 2007

நக்சல்பாரி… நந்திக்கிராமம் சி.பி.எம்.கட்சியின் கொலைவெறி

நக்சல்பாரி… நந்திக்கிராமம்…
சி.பி.எம்.கட்சியின் கொலைவெறி



ழைக்கும் மக்களின் கட்சி என்று புளுகிக் கொண்டு மே.வங்கத்தை ஆளும் சி.பி.எம். கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி அல்ல; கார்ப்பரேட் கட்சி. அது மார்க்சிஸ்ட் கட்சி அல்ல; பாசிஸ்ட் கட்சி. கடந்த மார்ச் 14ஆம் தேதியன்று மே.வங்கத்தின் நந்திகிராமத்தில் போலீசும்சி.பி.எம்.மும் இணைந்து நடத்திய பாசிசக் கொலைவெறியாட்டம் இந்த உண்மைகளை மீண்டும் நிரூபித்துக் காட்டிவிட்டது.


நந்திகிராமத்தில் நடந்தது என்ன?


மே.வங்கத்தில் ஹால்டியா வட்டாரத்தில் 14,500 ஏக்கர் பரப்பளவில் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை நிறுவப் போவதாக "இடதுசாரி' அரசு அறிவித்துள்ளது. இச்சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்காக விளைநிலங்களை இழக்கப் போகும் கிராமங்களில் ஒன்றுதான் நந்திகிராமம். விளைநிலங்களை ஆக்கிரமித்து விவசாயிகளின் வாழ்வுரிமையைப் பறிக்கும் இச்சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு எதிராக கடந்த 6 மாதங்களாக நக்சல்பாரி புரட்சியாளர்கள் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டு, விவசாயிகளை அணிதிரட்டி வந்தார்கள்.


இதைக் கண்டு ஆத்திரமடைந்த சி.பி.எம். குண்டர்கள், ஜனவரி 6ஆம் நாளன்று அதிகாலையில் 250 பேருக்கும் மேலாகத் திரண்டு வந்து நந்திகிராமம், சோனாசுரா கிராம மக்கள் மீது குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தியதோடு, நாட்டுத் துப்பாக்கியால் கண்டபடி சுட்டனர். இப்பயங்கரவாதத் தாக்குதலில் 6 விவசாயிகள் கோரமாகக் கொல்லப்பட்டு, பலர் படுகாயமடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த நந்திகிராம வட்டார விவசாயிகள், கொலைகார சி.பி.எம். கட்சிக் கிளை அலுவலகங்களைத் தீயிட்டுக் கொளுத்தி, சி.பி.எம். கட்சியைச் சேர்ந்த துரோகிகளையும், ஆள்காட்டிகளையும் கிராமத்தைவிட்டே வெளியேற்றினர். அதன்பிறகு, விவசாயிகளின் ஒப்புதலோடு மட்டுமே நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்றும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் மே.வங்க முதல்வர் அறிவித்தார்.


விவசாயிகளின் ஒப்புதலோடு நிலம் கையகப்படுத்தப்படுமா, ஒப்புதல் இல்லாமல் பறிமுதல் செய்யப்படுமா என்பதல்ல பிரச்சினை. நந்திகி ராம வட்டாரத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை நிறுவும் திட்டம் கைவிடப்படுமா, இல்லையா என்பதுதான் விவசாயிகளின் கேள்வி. இதற்கு எந்த விளக்கமும் தராமல், சிறப்புப் பொருளாதார மண்டலத்தை நிறுவும் வெறியோடு சி.பி.எம். ஆட்சியாளர்கள் முனைப்பாகச் செயல்பட்டதால், விவசாயிகள் நந்திகிராமத்துக்கு வரும் சாலைகள் பாலங்களைத் துண்டித்து போராட்டத்தைத் தொடர்ந்தனர். இப்பகுதியில் அரசு நிர்வாகம் முற்றாகச் செயலிழந்து முடமாகிப் போனது.


சிறப்புப் பொருளாதார மண்டலத்தை நிறுவி தரகுப் பெருமுதலாளிகளுக்கும் பன்னாட்டு ஏகபோக முதலாளிகளுக்கும் சேவை செய்ய முடியாமல் நந்திகிராம மக்கள் தடையாக நிற்பதைக் கண்டு ஆத்திரமடைந்த முதல்வர் புத்ததேவ், ""நந்திகிராமத்தில் சட்டம்ஒழுங்கு சீர்குலைந்து விட்டது'' என்று புலம்பி, விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்தார். மே.வங்க அரசும் மாவட்ட நிர்வாகமும் இடதுசாரிக் கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகளை வைத்து நந்திகிராமத்தில் சிவில் நிர்வாகம் மீட்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றின. ""நந்திகிராம அராஜகத்தை இனிமேலும் சகித்துக் கொண்டிருக்க முடியாது; அவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவோம்'' என்று மார்ச் 11ஆம் நாளன்று சி.பி.எம். கட்சி ஏற்பாடு செய்திருந்த விவசாயிகள் பேரணியில் புத்ததேவ் கொக்கரித்தார்.


பாசிச முதல்வர் புத்ததேவின் கொலைவெறி பிடித்த இந்த வார்த்தைகள், மார்ச் 14ஆம் நாளன்று போலீசு மற்றும் சி.பி.எம். குண்டர்களின் கொலைவெறியாட்டமாக மாறியது. 5000க்கும் மேற்பட்ட போலீசார் துப்பாக்கிகள் வெடிகுண்டுகளுடன் 2000 பேர் கொண்ட நந்திகிராம வட்டாரத்தைச் சுற்றி வளைத்து எவ்வித முன்னெச்சரிக்கையுமின்றி நிராயுதபாணியான விவசாயிகள் மீது கண்மூடித்தனமாக 67 ரவுண்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். போலீசு சீருடை அணிந்து கொண்டு, அவர்களோடு சேர்ந்து வந்த 250க்கும் மேற்பட்ட சி.பி.எம். குண்டர்கள் நாட்டுத் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், கோடாரியோடு நந்திகிராம மக்கள் மீது கொலைவெறியாட்டம் போட்டனர். போலீசார் பூட்ஸ் அணிந்திருக்க, சி.பி.எம். குண்டர்கள் சாதாரண செருப்புடன், சீருடையில் அரசு இலச்சிணை இன்றி தாக்குதல் நடத்தியதை நந்திகிராம மக்கள் அனைத்துப் பத்திரிகைகள்தொலைகாட்சி நிறுவனங்களிடம் சாட்சியமளித்துள்ளனர். நந்திகிராம மக்களைக் கொன்றொழிக்கும் வெறியோடு இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. ஏனெனில், கொல்லப்பட்டவர்கள் அனைவரும் முதுகு, வயிறு, நெஞ்சு, தலைப்பகுதியில் குண்டடிப்பட்டு மாண்டு போயுள்ளார்களே தவிர, முழங்காலுக்குக் கீழாகக் குண்டுக் காயம்பட்டவர்கள் ஒருவர் கூட இல்லை.


நந்திகிராமத்துக்குச் சென்று கொலைவெறியாட்டம் போட்ட போலீசிடம் .303, .672 ரக குண்டுகளே துப்பாக்கியுடன் அளிக்கப்பட்டிருந்தன. ஆனால் மாண்டுபோன விவசாயிகளின் பிரேதப் பரிசோதனையில், பலரது உடலில் .315, .38 ரக குண்டுகள் பாய்ந்துள்ளதைக் கண்டு மருத்துவர்களே அதிர்ச்சியடைந்துள்ளனர். சி.பி.எம். குண்டர்கள் கள்ளத் துப்பாக்கியால் நந்திகிராம மக்களைச் சுட்டுக் கொன்று வெறியாட்டம் போட்டுள்ளதற்கு இதுவொன்றே இரத்த சாட்சியாக உள்ளது.


சி.பி.எம். குண்டர்கள் நந்திகிராமம் அருகேயுள்ள தெஹாலி கிராம பாலத்தை ஒட்டியுள்ள ஜனனி செங்கற்சூளையில் ஆயுதங்கள், துப்பாக்கிகள், வெடிமருந்துகளைப் பதுக்கி வைத்துக் கொண்டு அங்கிருந்து தாக்குதலை நடத்தியுள்ளனர். கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டுவதற்காக கொல்லப்பட்டவர்களை சாக்குத் துணியில் போட்டுத் தரதரவெனப் பிணங்களை அவசரமாக இழுத்துச் சென்று செங்கற்சூளையில் போட்டு சி.பி.எம். குண்டர்கள் எரித்துள்ளனர். கொலைவெறியாட்டம் நடந்த களத்திலிருந்து செங்கற்சூளைவரை தரையெங்கும் தெறித்துக் கிடந்த இரத்தக் கறைகளே இக்கொடூரத்தை நிரூபித்துக் காட்டுகின்றன.


மையப் புலனாய்வுத் துறையின் (இஆஐ) ஆரம்ப விசாரணையிலேயே இவை அனைத்தும் நிரூபிக்கப்பட்டுள்ளதோடு, அச்செங்கற் சூளையிலிருந்து ஆயுதங்கள், வெடிகுண்டுகள், துப்பாக்கிகள், போலீசு சீருடை, இரும்புத் தொப்பி, சி.பி.எம். கட்சிக் கொடிகள், சி.பி.எம். கட்சியின் இளைஞர் அமைப்பான டைஃபி (ஈஙுஊஐ) யின் பிரசுரங்கள் கொடிகள், நந்திகிராம வீடுகள் தெருக்களின் வரைபடம் முதலானவையும் மையப் புலனாய்வுத் துறையால் கைப்பற்றப்பட்டுள்ளன. இது
தவிர, மரங்களிலும், புதர்களிலும் சி.பி.எம். குண்டர்களால் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகளும், இரத்தக்கறை படிந்த சாக்குத் துணிகளும் கைப்பற்றப்பட்டு, 10 சி.பி.எம். குண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


நந்திகிராமத்தில் நடந்த போலீசு சி.பி.எம். குண்டர்களின் கொலைவெறியாட்டத்தில் மாண்டு போனவர்களின் எண்ணிக்கை 14 தான் என்கிறது அரசு. ஆனால் நந்திகிராம வட்டாரத்தில் பலர் "காணாமல்' போயுள்ளனர். இதுதவிர, சி.பி.எம். குண்டர்கள் செங்கற்சூளையில் எரித்துக் கொன்றவர்களின் எண்ணிக்கை இன்னமும் வெளியே வரவில்லை.

இந்தப் பயங்கரவாத வெறியாட்டங்களையெல்லாம் விஞ்சும் வகையில் சி.பி.எம். குண்டர்கள் நந்திகிராமப் பெண்கள் மீது பாலியல் வன்முறையை ஏவியுள்ளதைக் கண்டு நாடே அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது. நந்திகிராம கொலைவெறியாட்டத்தின் போது சாதாரண செருப்பு அணிந்து போலீசு சீருடையில் வந்த சி.பி.எம் குண்டர்கள், பல பெண்களை துப்பாக்கி முனையில் மிரட்டிப் பாலியல் வன்முறையை ஏவியுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இரு பெண்கள் அளித்துள்ள வாக்குமூலங்கள் பத்திரிகைகளில் வெளிவந்து நாடெங்கும் நாறுகிறது. இதுதவிர, பாலியல் வன்முறையை ஏவிய ஒருவனை நந்திகிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் அடையாளம் காட்ட, அவனைப் பிடித்து மக்கள் விசாரித்த போது, அவன், தான் சி.பி.எம். ஆதரவாளன் என்றும் சி.பி.எம். தலைவர்கள் சொன்னதாலேயே இப்படிச் செய்ததாகவும் பி.டி.ஐ. செய்தியாளர் முன்னிலையிலேயே வாக்குமூலம் அளித்துள்ளான்.


இத்தனை பயங்கரவாத வெறியாட்டங்களும் அடுத்தடுத்து அம்பலமாகியுள்ள போதிலும், மே.வங்க பாசிச முதல்வரான புத்ததேவ் இக்கொலை வெறியாட்டங்களுக்குக் கண்டனமோ, வருத்தமோ தெரிவிக்கவில்லை. அவரை முதல்வர் பதவியிலிருந்து விலக்க மாட்டோம் என்று அக்கொலைகார முதல்வரைப் பாதுகாக்கிறார், சி.பி.எம். கட்சியின் பொதுச் செயலாளரான கரத். ஆனால், மே.வங்கத்தின் பல்வேறு மனித உரிமை ஜனநாயக உரிமை அமைப்புகளும், தொழிற்சங்க விவசாயிகள் சங்கத்தினரும் எழுத்தாளர்களும் கலைஞர்களும் சி.பி.எம். கட்சி மீது காறி உமிழ்ந்துள்ளனர். மே.வங்க அரசின் கலாச்சார நிறுவமான பஸ்சிம்பங்கா பங்களா அகாடமியின் துணைத்தலைவரும் பிரபல கவிஞருமான சங்கா கோஷ் ""நந்திகிராமத்தில் நடந்திருப்பது சி.பி.எம். கட்சி மற்றும் அரசின் பயங்கர வெறியாட்டம்; இதற்கு மேலும் நாங்கள் அரசாங்கப் பதவியில் நீடிப்பது அவமானம்'' என்று அறிவித்து இந்த அகாடமியின் நிர்வாகக் குழு உறுப்பினர்களோடு பதவி விலகியுள்ளார். உழைக்கும் மக்களிடமும் அறிவுத்துறையினரிடமும் முற்றாக அம்பலப்பட்டு தனிமைப்பட்டுப் போயுள்ள சி.பி.எம்.இன் கொலைகார ஆட்சியை "துக்ளக்' சோ போன்ற பாசிஸ்டுகள் மட்டுமே ஆதரிக்கின்றனர்.


இவற்றையெல்லாம் மூடி மறைத்துவிட்டு கோயபல்சு வழியில் அண்டப்புளுகை அவிழ்த்து விட்டு, நியாயவாதங்களை அடுக்கித் தமது பாசிச கொலைவெறியாட்டங்களை மூடிமறைக்கக் கிளம்பியுள்ளது சி.பி.எம். கட்சி.


""கடந்த இரண்டரை மாதங்களாக நந்திகிராமத்தில் அரசு எந்திரமே செயல்பட முடியவில்லை. அது வன்முறையாளர்கள் தீவிரவாதிகளின் "சுதந்திர' ராஜ்ஜியமாகவே இருந்தது. இடதுசாரி அரசாங்கம் மட்டுமல்ல; வேறெந்த அரசாங்கமும் இத்தகைய நிலைமையைச் சகித்துக் கொண்டிருக்க முடியாது. எனவேதான் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், வன்முறைச் சக்திகளால் நாசமாக்கப்பட்டுள்ள சாலைகள் பாலங்களைச் சீரமைக்கவும் அங்கு போலீசு அனுப்பப்பட்டது'' என்று நியாயவாதம் பேசுகிறார் மே.வங்க பாசிச முதல்வர்.


எல்லா ஆட்சியாளர்களையும் போலவே, போராட்டம் என்றாலே சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று ஒப்பாரி வைக்கிறார் புத்ததேவ். யாருக்கான சட்டம் ஒழுங்கு என்பதுதான் கேள்வி. இந்தச் சட்டம் ஒழுங்கு உழைக்கும் மக்களுக்கானதா? அல்லது இந்தோனேஷியாவில் கம்யூனிஸ்டுகளை நரவேட்டையாடிய பாசிச சுகர்தோவின் கூட்டாளியான சலீம் குழுமம், நந்திகிராம விளைநிலங்களைக் கைப்பற்றி சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் பெயரில் பகற்கொள்ளை அடிப்பதற்கா? இது ஒருபுறமிருக்கட்டும்.


நந்திகிராம மக்கள் கடந்த இரண்டரை மாதங்களாக சிறப்புப் பொருளாதார மண்டலம் நிறுவப்படுவதற்கு எதிராகப் போராடிவரும் நிலையில், அங்கு சாலைகள் பாலங்களைச் சீரமைக்க பொதுப்பணித்துறை ஊழியர்களை அனுப்பாமல் 5000க்கும் மேற்பட்ட போலீசாரை அனுப்பியது ஏன்? அவர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்த அனுப்பப்பட்டார்களா? அல்லது துப்பாக்கிகளையும் குண்டுகளையும் வைத்து சாலைபோடச் சென்றார்களா?


""நந்திகிராமத்தினுள் போலீசு நுழைய முற்பட்டதும் வன்முறையாளர்கள் கற்களை வீசி போலீசு மீது தாக்குதல் நடத்தினர்; மரங்களின் மீதேறிக் கொண்டு நாட்டுத் துப்பாக்கியால் சுட்டனர்; நாட்டு வெடிகுண்டுகளை வீசினர்'' என்று குற்றம் சாட்டுகிறது, சி.பி.எம். கட்சியின் அதிகாரபூர்வ ஆங்கில வார ஏடான ""பீப்பிள்ஸ் டெமாக்கிரசி''. இது உண்மையென்றால், காயம்பட்ட ஒரு போலீசுக்காரனைக் கூட அக்கட்சியினரோ, "இடதுசாரி' அரசாங்கமோ இதுவரை காட்ட முடியவில்லையே, அது ஏன்? போலியாக மாவுகட்டு போட்டுக் கொண்டு போட்டோவுக்கு ""போஸ்'' கொடுக்கும் போலீசுக்காரனைக் கூட இதுவரை காட்டவில்லையே! அப்புறம் எந்த போலீசுக்காரர்கள் காயமடைந்தார்கள்?


நந்திகிராம மக்களை சமூக விரோதிகள், வன்முறையாளர் என்றெல்லாம் குற்றம் சாட்டுகிறது சி.பி.எம் கட்சி. நந்திகிராமத்தில் போலீசு கொலைவெறியாட்டம் போட்டு, பின்னர் அங்கு முகாம் அமைத்துள்ள போதிலும் இதுவரை நந்திகிராமத்தில் ஒரு வன்முறையாளர் கூட கைது செய்யப்படவில்லையே, அது ஏன்? அந்த வன்முறையாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்களா அல்லது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் குண்டடிப்பட்ட உழைக்கும் மக்கள் வன்முறையாளர்களா?


""நந்திகிராமத்தில் போலீசு நுழைந்ததும் அக்கிராம மக்கள் கல்லெறிந்து தாக்குதல் நடத்தினர். போலீசார் கண்ணீர்புகை வீசியும், ரப்பர் தோட்டாக்களைக் கொண்டு துப்பாக்கியால் சுட்டும் அக்கூட்டத்தைக் கலைத்தனர். மக்கள் கூட்டம் நாற்புறமும் சிதறி ஓடியது; அதன்பிறகு வன்முறையாளர்கள் திரண்டு வந்து நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இத்தாக்குதலுக்குப் பின்னரே போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்'' என்று நந்திகிராமத்தில் நடந்த சம்பவங்களை அங்குலம் அங்குலமாக விவரித்து, ""தவிர்க்கவியலாத நிலையிலேயே போலீசு துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியதாயிற்று'' என்று நியாயவாதம் பேசுகிறது பாசிச சி.பி.எம். கட்சி.


கண்ணீர் புகை குண்டுக்கும் ரப்பர் தோட்டாக்களுக்குமே மக்கள் நாற்புறமும் சிதறி ஓடிவிட்டார்கள் என்றால், 5000க்கும் மேற்பட்ட போலீசார் அதிநவீன துப்பாக்கிகள், வெடிகுண்டுகளுடன் நந்திகிராமத்துக்குச் சென்றது ஏன்? வன்முறையாளர்கள் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டனர் என்பது உண்மையானால், அதிரடியாகத் தாக்குதல் நடத்திய போலீசு, இதுவரை ஒரு நாட்டுத் துப்பாக்கியைக் கூட கைப்பற்றவில்லையே, அது ஏன்? வீடுவீடாகச் சோதனை நடத்தியும் கூட, அந்த நாட்டுத் துப்பாக்கிகளும் நாட்டு வெடிகுண்டுகளும் மறைந்து போனதன் மர்மம் என்ன?


எல்லாவற்றுக்கும் மேலாக, நந்திகிராமத்தைச் சாராத வெளியிலிருந்து வந்த அன்னிய சக்திகள் நந்திகிராம மக்களிடம் பொய்ப் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்துவிட்டு வன்முறையைத் தூண்டியதாகக் குற்றம் சாட்டுகிறார் சி.பி.எம்.மின் பாசிசத் தளபதியான எச்சூரி. நந்திகிராமம் அமைதியாக இருந்ததாம்! வெளியிலிருந்து வந்த அன்னிய சக்திகளான மாவோயிஸ்டுகள்தான் பொய்ப் பிரச்சாரம் செய்து வன்முறையைத் தூண்டிவிட்டார்களாம் இப்படி கதை எழுதுகிறது சி.பி.எம். கட்சியின் வார ஏடான பீப்பிள்ஸ் டெமாக்கரசி.


மறுகாலனியத் தாக்குதலின் ஒரு அங்கமான சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு எதிராக மக்களை அணிதிரட்டிப் போராடும் மாவோயிஸ்டுகள் அன்னிய சக்திகள், வன்முறையாளர்கள் என்கிறது பாசிச சி.பி.எம். கட்சி. அதாவது, வெளியூரைச் சேர்ந்தவர்கள் அரசியல் பிரச்சாரம் செய்யக்கூடாது; அவர்கள் அன்னிய சக்திகள் என்கிறது சி.பி.எம். கட்சி. அப்படியானால், தென்னகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டுவதற்காக, காலனிய ஆட்சிக்காலத்தில் கட்சியால் பணிக்கப்பட்டு சென்னையில் பணியாற்றிய வடநாட்டைச் சேர்ந்த தோழர் அமீதுஹைதர்கான், கம்யூனிஸ்ட் கட்சித் தோழரா அல்லது அன்னிய சக்தியா? கீழத்தஞ்சை மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட கூலிஏழை விவசாயிகளைச் சவுக்கடியும் சாணிப்பாலும் கொடுத்து வதைத்த நிலப்பிரபுக்களின் கொட்டத்தை ஒடுக்கி, வர்க்கப் போராட்டத் தீயை மூட்டிய தோழர் சீனிவாசராவ், கம்யூனிஸ்ட் கட்சித் தோழரா, அல்லது அன்று நிலப்பிரபுக்கள் சித்தரித்ததைப் போல வெளியூரைச் சேர்ந்த வன்முறையாளரா? அவ்வளவு ஏன்? தமிழகத்தில் கட்சி மற்றும் தொழிற்சங்க வேலைகளில் ஈடுபட்ட வி.பி.சிந்தன், பி.ஆர். பரமேஸ்வரன், ரமணி, அரிபட் முதலானோர் சி.பி.எம். கட்சித் தோழர்களா? அல்லது அன்னிய சக்திகளா?


சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு எதிராக விவசாயிகளை அணிதிரட்டிப் போராடி வரும் நக்சல்பாரி புரட்சியாளர்களை அன்னிய சக்திகள் என்று சாடும் சி.பி.எம். கட்சி, இந்தோனேஷிய சலீம் குழுமத்துக்காக 14,500 ஏக்கர் விளைநிலங்களைப் பறித்து தாரை வார்க்கக் கிளம்பியுள்ளதே, அந்த சலீம் குழுமம் அன்னிய பெருமுதலாளித்துவ சக்தியா, அல்லது சி.பி.எம். கட்சியின் தோழரா? அந்த அன்னிய சக்தியின் இலாபவெறிக்காக, அதுவும் இந்தோனேஷியாவில் கம்யூனிஸ்டுகளை நரவேட்டையாடிய பாசிச சுகார்தோ கும்பலின் கூட்டாளி நிறுவனமான சலீம் குழுமத்துக்காக விவசாயிகளையும் விளைநிலங்களையும் பலியிடும் சி.பி.எம். கட்சி இடதுசாரி கட்சியா? அல்லது ஏகபோக முதலாளிகளுக்கு அடியாள் வேலை செய்யும் பாசிசக் கட்சியா?


சி.பி.எம். கட்சியானது, கம்யூனிஸ்ட் கட்சியாக இருந்தால், ஆளும் வர்க்கக் கட்சிகளைப் போல இத்தகைய அபத்தவாதங்களை அடுக்காது. ஆனால் சி.பி.எம். கட்சியானது, கம்யூனிஸ்ட் கட்சி அல்ல; கார்ப்பரேட் கட்சி. அது மார்க்சிஸ்ட் கட்சி அல்ல; பாசிஸ்ட் கட்சி. எனவேதான் ஆளும் வர்க்கக் கட்சிகளை விஞ்சும் வண்ணம் தரகுப் பெருமுதலாளிகளுக்கும் பன்னாட்டு ஏகபோக முதலாளிகளுக்கும் விசுவாச அடியாளாக வேலை செய்து கொண்டு, பாசிச கோயபல்சையே விஞ்சும் வண்ணம் பொய்களையே நியாயவாதங்களாக அடுக்குகிறது.


இன்று நந்திகிராமத்தில் கொலைவெறியாட்டம் போட்ட இதே சி.பி.எம். கட்சியினர்தான், நாற்பதாண்டுகளுக்கு முன்பு இதே மே.வங்கத்தில் கிளர்ந்தெழுந்த நக்சல்பாரி பேரெழுச்சியையும் மிருகத்தனமாக ஒடுக்கி கொலைவெறியாட்டம் போட்டதோடு, நக்சல்பாரி கிராம விவசாயிகளையும் புரட்சியாளர்களையும் தீவிரவாதிகள், வன்முறையாளர்கள் என்று முத்திரை குத்தி அவதூறு செய்தனர். 1967இல் நக்சல்பாரி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், ""ஜோத்திதார்கள்'' எனப்படும் நிலப்பிரபுக்களின் ஆதிக்கச் சுரண்டலுக்கு எதிராகப் போராடி, குத்தகை விவசாயிகளின் உரிமையை நிலைநாட்டியதோடு, நிலப்பிரபுக்களிடம் இருந்த விவசாயிகளின் கடன்பத்திரங்களைத் தீயிட்டுக் கொளுத்தி, தமது சொந்த அதிகாரத்தை நிறுவினர். வில்லும், அம்பும், கோடாரியும், துப்பாக்கியும் ஏந்திய விவசாயிகள், கிராம நிர்வாகத்தை இயக்குவதைக் கண்டஞ்சி நிலப்பிரபுக்களும் கைக்கூலிகளும் நகரங்களுக்குத் தப்பியோடினர். இவ்வட்டாரமெங்கும் அரசு நிர்வாகமும் போலீசு நிர்வாகமும் செயலிழந்து, விவசாயிகளின் புரட்சிகர அதிகாரத்தை விண்ணில் பட்டொளி வீசிப் பறந்த செங்கொடிகள் பறைசாற்றின.


அன்று மே.வங்கத்தில் அஜாய்முகர்ஜி தலைமையிலான கூட்டணி ஆட்சி நீடித்தது. அதில் ஜோதிபாசு போலீசு அமைச்சராகவும், அரிகிருஷ்ணகோனார் வருவாய்துறை அமைச்சராகவும் இருந்தனர். நக்சல்பாரி பேரெழுச்சியை கண்ட அரிகிருஷ்ணகோனார், ""ஐயோ, நிலைமை கட்டுமீறிப் போய்விட்டது'' என்று அலறினார். ""சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது'' என்று எகிறிக் குதித்தார் ஜோதிபாசு. ""ஐயோ! வன்முறை, தீவிரவாதம்'' என்று கூப்பாடு போட்டது சி.பி.எம். கட்சி. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது என்ற பெயரில் போலீசை ஏவி கொலைவெறியாட்டத்தைக் கட்டவிழ்த்து விட்டார் ஜோதிபாசு. ஆறு பெண்கள், இரு குழந்தைகள் உள்ளிட்டு 9 பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்; பலர் படுகாயமடைந்தனர்; விவசாயிகள் இயக்க முன்னணியாளர்கள் பலர் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டனர். நக்சல்பாரி வட்டாரமெங்கும் போலீசு பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டு, விவசாயிகளின் பேரெழுச்சி கொடூரமாக ஒடுக்கப்பட்டது.


அன்று நக்சல்பாரி; இன்று நந்திகிராமம். போராடும் விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு கொலைவெறியாட்டம். ""ஐயோ! பயங்கரவாதம், தீவிரவாதம்'' என்ற அதே கூப்பாடு. ""சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது'' என்ற அதே ஒப்பாரி. ""வன்முறையாளர்கள் தீவிரவாதிகள்'' என்ற அதே கோயபல்சு புளுகு. ஒரேயொரு வேறுபாடு அன்று சி.பி.எம். கட்சியிடம் பாசிச குண்டர்படை இல்லை; இன்று சி.பி.எம். கட்சி ஒரு வலுவான குண்டர் படையைக் கட்டியமைத்துள்ளது. போராடும் மக்கள் மட்டுமல்ல; நந்திகிராமத்தில் உண்மையைக் கண்டறிய முற்பட்ட பத்திரிகையாளர்களும் சி.பி.எம் குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் செய்தி சேகரிக்கும் உரிமையைக் கூட மறுத்து, சாலை மறியல் போராட்டம் நடத்தி பத்திரிகையாளர்களை விரட்டியடித்துள்ளது, சி.பி.எம். குண்டர்படை.


நந்திகிராமத்தில் பாசிச கொலைவெறியாட்டத்தைக் கட்டவிழ்த்து விட்டு, போராடும் விவசாயிகளை ஒடுக்கியபோதிலும், அங்கு சிறப்புப் பொருளாதார மண்டலத்தை நிறுவும் முயற்சியில் சி.பி.எம். பாசிச ஆட்சி தோற்றுப் போயுள்ளது. கொலைவெறியாட்டம் நாடெங்கும் அம்பலப்பட்டுப் போயுள்ளதால், நந்திகிராமத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலம் நிறுவப்பட மாட்டாது என்று அறிவித்துள்ளார் மே.வங்க கொலைகார முதல்வர். அதேசமயம், ஏகாதிபத்தியங்களுக்கும் தரகுப் பெருமுதலாளிகளுக்கும் விசுவாசமாகத் தொண்டூழியம் செய்துவரும் சி.பி.எம். ஆட்சியாளர்கள், மே.வங்கத்தின் வேறு பகுதியில் சிறப்புப் பொருளாதார மண்டலம் நிறுவப் போவதாக அறிவித்துள்ளனர். சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவி மாநிலத்தை தொழில்மயமாக்கும் கொள்கையில் நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் என்று இதர ஓட்டுக் கட்சிகள் அனைத்தையும் விஞ்சும் வண்ணம் சூளுரைக்கிறார், கரத்.


நந்திகிராமத்தில் நடந்த பாசிச கொலைவெறியாட்டங்களை மூடிமறைத்து, போராடும் மக்களையும் நக்சல்பாரி புரட்சியாளர்களையும் குற்றம் சாட்டி சி.பி.எம். கட்சியினர் எதிர்ப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இந்நிலையில், உள்நாட்டுவெளிநாட்டு ஏகபோக முதலாளிகளின் அடியாட்களாகவும், உழைக்கும் மக்களின் எதிரிகளாகவும் சீரழிந்துவிட்ட பாசிச சி.பி.எம். கட்சியை புரட்சிகர ஜனநாயக சக்திகள் அம்பலப்படுத்தி முறியடிக்க வேண்டும். இக்கட்சியிலுள்ள புரட்சியை நேசிக்கும் அணிகள் உடனடியாகக் கலகத்தில் இறங்கி, பாசிஸ்டுகளாகச் சீரழிந்துவிட்ட துரோகத் தலைமையைத் தூக்கியெறிந்து விட்டு, உண்மையான கம்யூனிஸ்டுகளாகிய நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகளில் அணிதிரள வேண்டும். அதன் மூலம் மார்க்சிய லெனினியத்தைப் பற்றிப் பாதுகாத்து, மறுகாலனியாக்கத்தை வீழ்த்தும் மகத்தான புரட்சிக்குத் தோள்கொடுக்க வேண்டும்.

· இரணியன்


நந்திகிராமப் படுகொலை:

கொலைகார புத்ததேவின் கொடும்பாவி எரிப்பு!


டாடா மற்றும் பன்னாட்டு ஏகபோக முதலாளிகளின் இலாப வேட்டைக்காக சொந்த மக்களையே கொன்று குவிக்கும் சிவப்புக் காட்டேரிகளான சி.பி.எம். கட்சியை எதிர்த்தும், அது மார்க்சிஸ்டு கட்சி அல்ல; பாசிஸ்டு கட்சிதான் என்பதை உழைக்கும் மக்களிடம் அம்பலப்படுத்தியும் நந்திகிராமத்தில் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட மறுநாளிலேயே தமிழகமெங்கும் ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் விரிவாகச் சுவரொட்டிகள் தட்டிகள் மூலம் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டன. தஞ்சையில், ம.க.இ.க., பு.மா.இ.மு. அமைப்புகள் இணைந்து மே.வங்க பாசிச முதல்வரான கொலைகார புத்ததேவின் கொடும்பாவி எரிப்புப் போராட்டத்தை மார்ச் 17ஆம் நாளன்று நடத்தின. தஞ்சை பழைய பேருந்து நிலையம் எதிரே, தோழர் அருள் தலைமையில் செங்கொடி ஏந்தி விண்ணதிரும் முழக்கங்களுடன் வந்த தோழர்கள், போலீசு தடைகளையும் மீறி கொலைகார புத்ததேவின் கொடும்பாவியைத் தீயிட்டுக் கொளுத்தினர். பரபரப்பான காலை நேரத்தில் போலி கம்யூனிசக் கொலைகாரர்களை எதிர்த்து, திரளான உழைக்கும் மக்கள் முன்னிலையில் நடந்த இக்கொடும்பாவி எரிப்புப் போராட்டம் நகரெங்கும் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்போராட்டத்தில் ஈடுபட்ட முன்னணியாளர்கள் 8 பேரை போலீசு கைது செய்துள்ளது.


பாசிஸ்டுகளாகச் சீரழிந்துவிட்ட கொலைகார சி.பி.எம். கட்சியை அம்பலப்படுத்தியும், மறுகாலனியத் தாக்குதலுக்கு எதிராகப் புரட்சிகர அமைப்புகளில் உழைக்கும் மக்கள் அணிதிரண்டு போராட அறைகூவியும் இவ்வமைப்புகள் தொடர்ந்து பிரச்சார இயக்கத்தை நடத்தி வருகின்றன.

பு.ஜ. செய்தியாளர்கள்

Saturday, April 21, 2007

கிரிக்கெட்: வெறும் விளையாட்டல்ல, ஒழிக்கப்பட வேண்டிய சூதாட்டம்-சமூகக்கேடு

கிரிக்கெட்: வெறும் விளையாட்டல்ல,
ஒழிக்கப்பட வேண்டிய சூதாட்டம்-சமூகக்கேடு
!

2007 உலகக் கோப்பை கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளில், இந்தியாவும் பாகிஸ்தானும் முதல் சுற்றிலேயே கற்றுக்குட்டி நாடுகளாக மதிப்பிடப்பட்ட வங்கதேசம் மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளிடம் படுதோல்வி அடைந்து வெளியேற்றப்பட்டதும், கூடவே பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பாப் உல்மரின் கொலையும் கிரிக்கெட் விளையாட்டைச் சுற்றிலும் எழுப்பப்பட்டிருந்த பல மாயத் தோற்றங்களைக் கலைத்திருக்கின்றன. கிரிக்கெட்டில் இந்திய அணி வெற்றி பெற்றால் தெருக்களில் பட்டாசுகள் கொளுத்தி இனிப்பு வழங்கிக் கொண்டாடுவதையும், தோல்வியடைந்தால் போதையேற்றிக் கொண்டு கவிழ்ந்து படுத்துவிடுவதையும் வழக்கமாகக் கொண்ட இந்திய ரசிகர்கள், வங்கதேசத்திடமும், இலங்கையிடமும் தோல்வி அடைந்தவுடன் தன்னெழுச்சியாக ஆத்திரங்கொண்டு கிரிக்கெட் வீரர்களின் உருவபொம்மைகளைக் கொளுத்தினார்கள்; உருவப்படங்களைச் செருப்பால் அடித்து, கிழித்துப் போட்டு அவமானப்படுத்தினார்கள்; கழுதைகளுக்கு கிரிக்கெட் வீரர்களின் பெயர்களைச் சூட்டி மாலை போட்டுத் தெருத்தெருவாக இழுத்து வந்தார்கள்; பாடைகள் கட்டியும், மொட்டையடித்தும் கருமாதிச் சடங்குகள் செய்தார்கள்; அவர்களின் வீடுகளைத் தாக்கினார்கள்.


இதே கிரிக்கெட் ரசிகர்கள்தாம் உலகக் கோப்பை போட்டிகள் தொடங்குமுன்பு இந்திய அணியின் வெற்றிக்காக யாகங்கள், சிறப்புப் பூசைகள், பிரார்த்தனைக் கூட்டங்கள், கூட்டு வழிபாடுகள் நடத்தினார்கள். ""கிரிக்கெட் விநாயகர்'' கோவில் கட்டி பஜனைப் பாடல்களும், சுலோகங்களும் இயற்றிக் குறுந்தகடுகளும் வெளியிட்டிருக்கிறார்கள். இந்தக் கேலிக் கூத்துக்களில் பார்ப்பன அர்ச்சகர்களும் இந்து மதவெறி அமைப்புகளின் பிரமுகர்களும் ஆர்வமுடன் பங்கேற்றனர். ""பாப் உல்மரின் கொலைச் சம்பவம் சர்வதேச கிரிக்கெட்டின் இருண்ட, அசிங்கமான பகுதியையும், நவீன கிரிக்கெட்டில் புழங்கும் மிகையான பணத்தையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கின்றன. இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் வர்த்தகச் சூதாடிகளுடன் கூட்டுச் சேர்ந்து கிரிக்கெட் ஊழலில் ஈடுபட்டிருப்பது ஏற்கெனவே அம்பலமாகியுள்ளன. இந்த நாடுகளின் கிரிக்கெட் ரசிகர்களிடையே நிலவும் மனநோய் வெறித்தனம் காரணமாக மற்ற பிற விளையாட்டுகள் போன்ற ஒரு விளையாட்டாக கிரிக்கெட் மதிக்கப்படுவதற்குப் பதில் மிகையான கவர்ச்சியூட்டப்பட்டு விட்டது'' என்று செய்தி ஊடகங்கள் இப்போது நீலிக் கண்ணீர் வடிக்கின்றன.


கிரிக்கெட் மீது பெரும்பாலான ரசிகர்களிடையே மனநோய் வெறித்தனம் கொள்ளுமளவு மிகையான கவர்ச்சி ஏற்படுவதற்கு என்ன காரணம், யார் பொறுப்பு என்பதைப் பற்றி இந்தச் செய்தி ஊடகங்கள் மவுனம் சாதிக்கின்றன. ""விøயாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டும்; விளையாட்டுப் போட்டிகளில் ஏற்படும் வெற்றிதோல்விகளைத் தனிப்பட்ட பகையாக மாற்றி விடக்கூடாது; விளையாட்டுக்களில் வெற்றி முக்கியமில்லை, பங்கேற்பதுதான் முதன்மையானதாக இருக்கவேண்டும்'' என்று ஒருபுறம் உபதேசிக்கப்பட்டாலும் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் கிரிக்கெட் தேசியச் சின்னமாக மாற்றப்பட்டு, தேசிய வெறியூட்டப்பட்டிருக்கிறது. குறிப்பாக, இந்தியாவில் இந்து தேசியவெறியின் அடையாளமாக மாற்றப்பட்டிருக்கிறது. இந்தியாவுடன் பாகிஸ்தான் மோதினால் மட்டுமல்ல, வேறெந்த நாட்டோடு பாகிஸ்தான் மோதினாலும் பாகிஸ்தானின் தோல்வியைக் கொண்டாடும் அளவுக்கு இந்தியாவில் ""தேசிய'' வெறியேற்றப்பட்டு இருக்கிறது; இதே நிலைதான் பாகிஸ்தானிலும் உள்ளது. அதாவது, இந்தியாவின் தோல்வியை அவர்கள் கொண்டாடுவதாக உள்ளது.


சினிமாவுக்கு அடுத்து கவர்ச்சிகரமானதாக கிரிக்கெட் மாற்றப்பட்டிருக்கும் அதேசமயம், சினிமாவைவிட அதிகமாகப் பணம் புரளும், பணம் கொழிக்கும் மையமாக கிரிக்கெட் விளையாட்டு மாறியிருக்கிறது. கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் ஊழல்கள் நிறைந்த வெவ்வேறு நாடுகளின் வாரியங்கள் ஆண்டுக்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதிக்கின்றன. கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் ஒவ்வொரு போட்டியிலும் பல இலட்சம் ரூபாய் சம்பளம் பெறுகிறார்கள், கூடுதலாக விளம்பரங்களில் தோன்றி கோடிக்கணக்கில் ஊதியம் பெறுகிறார்கள். இவை போதாதென்று கிரிக்கெட் சூதாடிகளுடனும், தரகர்களுடனும் கூட்டுச் சேர்ந்து கொள்ளையடிப்பதோடு, உல்லாச சொகுசு வாழ்க்கை, வசதிகளையும் பெறுகிறார்கள். கிரிக்கெட் போட்டி முடிவுகள் மீது பந்தயம் கட்டும் சூதாட்டத்தில் மட்டும் ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் புரளுகிறது. கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளை ஒலிஒளி பரப்புவதும், அவற்றுக்கிடையே விளம்பரங்கள் செய்வதுமாக பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் புரளுகிறது. இவைதவிர, போட்டிகளை நடத்தப் பொறுப்பேற்கும் பெப்சி, கோக், எல்.ஜி., சாம்சங், ஹோண்டா போன்ற பல பன்னாட்டு உள்நாட்டு தொழில் கழகங்கள், அவற்றின் உற்பத்திப் பொருள் விளம்பரங்களுக்காக வாரி இறைக்கும் தொகை பலப்பலகோடி ரூபாய்கள். அதனால்தான் உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் தோல்வியடைந்ததால் பல ஆயிரம் கோடி ரூபாய் நட்டமடைந்த பன்னாட்டு தொழிற்கழகங்களும், செய்தி ஊடகங்களும் கிரிக்கெட் ரசிகர்களைவிடப் பன்மடங்கு ஆத்திரமடைந்துள்ளன.


ஆங்கிலேயப் பிரபுக் குலத்தின், மேட்டுக்குடி சீமான்களின் சோம்பேறித்தனமான பொழுது போக்கு விளையாட்டாகத் தொடங்கிய கிரிக்கெட், பன்னாட்டுத் தொழில்கழகங்களின் விளம்பர வியாபார ஊடகமாகவும், கருப்புப்பண சூதாடிகளின் விளையாட்டாகவும் வளர்ச்சியுற்றிருக்கிறது. மேலும், ஆங்கிலேயக் காலனி நாடுகளாக இருந்த நாடுகளில் மட்டுமே, அந்த அவமான அடிமைச் சின்னமாக இது விளையாடப்பட்டு வருகிறது. விடுதலைப் போராட்ட உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டு மேலைநாகரிக, ஆங்கில மோகம் ஊட்டி வளர்க்கப்படுவதைப் போல கிரிக்கெட் மோகம் வளர்க்கப்படுகிறது.


விளையாட்டு என்பது வெறுமனே உடற்பயிற்சிக்கானதாகவும், கேளிக்கை பொழுதுபோக்கிற்கானதாகவும், வியாபார சூதாட்டக்களமாகவும் இருக்கக் கூடாது. சமூக நலனை முன்னிறுத்தி சமூக மறுஉற்பத்திக்கான மறு ஆக்கம் தருவதாக இருக்கவேண்டும். விளையாட்டையே தனித் தொழிலாகக் கொண்ட வீரர்களும், அதையே பந்தயம், சூதாட்டமாகவும், வியாபாரம் விளம்பரமாகவும் நடத்தும் தொழில்முறை சோம்பேறிக் கும்பலும் சமூகத்திற்கு ஒட்டுண்ணிகளாகவே இருக்க முடியும். அத்தகைய கேடு விளைவிப்பதாக இருக்கும் கிரிக்கெட் விளையாட்டை, குதிரைப் பந்தயம், சூதாட்ட விடுதிகள், இலாட்டரி, ஆபாசக் களிவெறியாட்ட விடுதிகள் போன்றவை எவ்வாறு ஒழிக்கப்பட வேண்டியவையோ, அதைப்போல கருதி ஒழிப்பதற்கு உழைக்கும் மக்கள் போராட வேண்டும்.


Thursday, April 19, 2007

ரிலையன்ஸ், வால்மார்ட்டே வெளியேறு!''

சிறு வணிகத்தை விழுங்க வரும்

ரிலையன்ஸ், வால்மார்ட்டே வெளியேறு!''

— புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம் ஆர்ப்பாட்டம்

ல இலட்சக்கணக்கான சிறு வியாபாரிகள் விவசாயிகள் தொழிலாளர்களின் வாழ்வை நாசமாக்கும் வகையில், சென்னையில் பல்லாயிரம் கோடி முதலீட்டில் 14 இடங்களில் காய்கனி அங்காடிகளைத் தொடங்கியுள்ளதோடு, நகரின் மூலை முடுக்கெல்லாம் விரிவுபடுத்தி வருகிறது, ரிலையன்ஸ் குழுமம். இதன் விளைவாக கோயம்பேடு வணிக வளாகத்தின் விற்பனை இப்போதே 40% அளவுக்கு வீழ்ச்சியடைந்து விட்டது. கோயம்பேட்டை நம்பி வாழும் சுமார் ஒரு லட்சம் குடும்பங்களின் வாழ்க்கைக் கேள்விக்குறியாகி விட்டது.


எதிர்க்கட்சிகள் சித்தரிப்பதைப் போல, இது ஏதோ அரசின் தவறான கொள்கையால் ஏற்பட்டுள்ள பேரழிவு அல்ல. விவசாயம், சிறு தொழில்கள், சிறு வணிகம் முதலான எல்லாத் துறைகளையும் நாட்டின் இயற்கை வளங்களையும் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களின் பிடியில் சிக்க வைத்து, நாட்டையே அடிமைப்படுத்தும் மறுகாலனியாக்கக் கொள்கைகள்.


கடந்த பத்தாண்டுகளாக தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற மறுகாலனியாதிக்கக் கொள்கைகளுக்கெதிராகத் தொடர்ந்து போராடி வரும் ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள், ரிலையன்ஸ் எதிர்ப்புப் போராட்டத்தை ஒட்டி மார்ச் 18 முதல் 23 வரை தொடர் பிரச்சார, ஆர்ப்பாட்டங்களில் இறங்கின. பல ஆயிரம் துண்டறிக்கைகள், நூற்றுக்கணக்கான முழக்க அட்டைகள், ""சிறு வணிகத்தை விழுங்கவரும் ரிலையன்ஸ், வால்மார்ட்டே வெளியேறு!'' என்ற சிறுவெளியீடு ஆகியன களத்தில் குவிந்தன.


செங்கொடிகளோடு தோழர்கள் கோயம்பேடு வணிக வளாகத்தைச் சுற்றி 10 கி.மீ. சுற்றளவில் பரவியிருக்கும் ஏழைக் குடியிருப்புகளில் துடிப்போடு பிரச்சாரம் செய்தபோது, மக்கள் ஆதரித்தும் நன்கொடைகள் தந்தும் வரவேற்றனர். அருகே இருந்த மத்தியதர வர்க்க அடுக்ககங்களில் மட்டும் "ரிலையன்ஸ் ஃபிரெஷ்' விரித்துவரும் பொய்யான விளம்பரங்கள் ஊடுருவி இருப்பதை அறிந்த தோழர்கள், அவர்களிடம் உண்மைகளை எடுத்துச் சொல்லிப் போராடக் கற்றுக் கொடுத்தனர்.


20,21 (மார்ச்) ஆகிய இரு நாட்களிலும் கோயம்பேடு வளாகத்திற்குள் 18 இடங்களில் பிரச்சாரம் செய்தது ம.க.இ.க. மையக் கலைக்குழு "ஓரம் ஓரம் ஓரம்' பாடல் பிறந்த களம் அதுதான். சிறு நாடகங்கள், பாடல் ஆடல் மூலம் பல்லாயிரம் உழைப்பாளர்கள் மற்றும் வியாபாரிகளின் நெஞ்சங்களில் கனன்ற போராட்டத் தீயை வேகமாகப் பரப்பியது அக்கலைக்குழு.


கோயம்பேடு வட்டாரம் தவிர, சென்னை தாம்பரம் முதல் வள்ளலார் நகர் உள்ளிட்ட நகரப் பேருந்து நிலையங்களிலும்; பல பேருந்து நிலையங்களிலும்,மின்சார ரயில்களிலும் ரிலையன்ஸ் எதிர்ப்புப் பிரச்சாரத்தை எடுத்துச் சென்ற இப்புரட்சிகர அமைப்புகள், போராடும் மக்களின் நம்பிக்கைக்கு உரமாய், ரிலையன்ஸின் பொய்ப் பிரச்சாரங்களுக்கு ஆப்பறையும் வகையில் புரட்சிகர கலைநிகழ்ச்சியுடன் பொதுக்கூட்டத்தை மார்ச் 21 அன்று மாலை கோயம்பேடு சந்தை அருகே பிருந்தாவன் நகர்த் திடலில் நடத்தின.


பொதுக்கூட்டத்திற்கு பு.ஜ.தொ.மு. மாநிலத் தலைவர் அ.முகுந்தன் தலைமை வகித்தார். ம.க.இ.க. மாநில இணைச்செயலர் தோழர் காளியப்பன் சிறப்புரை ஆற்றினார். காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜி.டி.இராசசேகரன், சிறுகடை வியாபாரிகள் சங்கத் தலைவர் அண்ணாமலை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணித் தலைவர் செங்கோவலர் அரசன், சுமை தூக்கும் கூலித் தொழிலாளி சிவக்குமார் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.


அரசின் வஞ்சகமான திட்டத்தின்படி, "இடைத்தரகு வியாபாரிகள்' நீக்கப்பட்டு, பகாசுர முதலாளியான ரிலையன்சிடமும், பன்னாட்டு முதலாளியான வால்மார்ட்டிடமும் வியாபாரச் சூத்திரக் கயிறு கொடுக்கப்படுமானால், விவசாயிகள், வியாபாரிகள், கூலிகள் எல்லோருமே ஒட்டு மொத்தமாய்க் குப்பையாக வீசியெறியப்பட்டு விடுவார்கள் என்று விளக்கி எச்சரித்த தோழர் காளியப்பன், நேற்றுவரை நம்மோடு பழகிய சிறு வியாபாரிகளை வீதியில் விட்டுவிட்டு, புதிதாக குஜராத்திலிருந்து வந்த தரகு முதலாளி ரிலையன்ஸ் அம்பானியோடு உறவு வைக்கத் தொடங்குவது என்ன ஒழுக்கம், அது ஆபத்தல்லவா என்று மத்தியதர வர்க்கத்தை நோக்கி நச்சென்று கேள்விகளை வீசினார்.


அடுத்துப் பேசிய கூலித் தொழிலாளி சிவக்குமார் தன் வர்க்கத்துக்கேயுரிய கோபத்தோடு தங்கள் வாழ்க்கையைப் படுகுழியில் தள்ளியிருக்கும் ரிலையன்சை அடித்து விரட்ட வேண்டும் என்று பேசினார்; தொழிலாளர் விடுதலை முன்னணித் தலைவர் செங்கோவலர் அரசன், கோயம்பேடு நிலைமையை மாற்றப் போராட்டம் அவசியம் என்று விளக்கிவிட்டு, ரிலையன்ஸை நுழையவிட்ட கட்சிகளின் பின்னால் தன் கட்சித் தலைவர்களே எப்படிச் சென்றார்கள் என்று கேள்வி எழுப்பினார். சிறு கடை வியாபாரிகள் சங்கத் தலைவரான அண்ணாமலை எளிய வாதங்களை முன்வைத்து ஆளுங்கட்சித் தலைவர்களை நோக்கிக் கேள்விகளை வீசியபோது கைத்தட்டலால் கூட்டம் ஆர்ப்பரித்தது.

கூட்ட இறுதியில் நடந்த ஒரு மணிநேரக் கலைநிகழ்ச்சியில் ஒரு புதிய போராட்டக்கலை அங்கே பிறந்ததைக் கண்ணெதிரே கண்டனர் சுமார் 1500க்கும் மேல் திரண்டிருந்த உழைப்பாளிகள். ""ஓரம் ஓரம் ஓரம் அவன / விரட்ட வேணும் தூரம்/ சொல்லி அடங்கலேன்னா, தயங்காதே, / அழுத்தி ஊக்கில் போடு'' என்ற பாடலை மையக் கலைக்குழு பாடியபோது, அதைப் போராட்ட அச்சாரமாக எடுத்துச் சென்றார்கள் உழைக்கும் கூலிகள்.


மார்ச் 23 பகத்சிங் நினைவு நாளன்று ஜெ.ஜெ. நகர் ரிலையன்ஸ் ஃப்ரெஷ் கடை அருகே இப்புரட்சிகர அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட தோழர்கள் திரண்டு செங்கொடிகள், போராட்ட முழக்கத் தட்டிகளோடு வீதியில் நின்று சுமார் 3 மணி நேரம் ஆர்ப்பாட்டம் செய்தனர். வீதியோடு சென்ற தள்ளுவண்டி வியாபாரிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வந்து கலந்து கொண்டனர்.


சென்னைக்கும் படை எடுத்து வந்து கடை திறந்திருக்கும் ரிலையன்ஸை எதிர்த்து கோயம்பேடு வணிக வளாகத்தின் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் கூலித் தொழிலாளர்கள் அதே நாளில் போர்க்கோலம் பூண்டனர். தமிழகத்தில் பல லட்சம் சிறு வியாபாரிகள், கூலித் தொழிலாளரின் வாழ்வைச் சூறையாட வந்துள்ள ரிலையன்ஸைத் தமிழகத்தைவிட்டே விரட்டியடிக்க வேண்டும் என்று போராட்டம் கூர்மைப்பட்டிருந்தது. அதேநாளின் பிற்பகலில் கோயம்பேடு வணிகவளாகத்தில் சிறு வியாபாரிகளும், கூலித் தொழிலாளர்களும் நடத்திய உண்ணாவிரதக் கூட்டத்தில் தோழர்கள் திரளாகப் பங்கேற்றனர். தோழர் அ.முகுந்தன் அங்கு எழுச்சி உரை ஆற்றினார்.


""ரிலையன்ஸை ஓட ஓட விரட்டியடிப்போம்!'' என்று தொடங்கியுள்ள இவ்வமைப்புகளின் வீச்சான ஒருவாரப் பிரச்சாரமும் சில்லறை வியாபாரிகள் தொழிலாளர்களின் போராட்டமும் முடியவில்லை; இது ஒரு தொடக்கம்; மறுகாலனியாதிக்கத்துக்கு எதிரான போரின் ஒரு சிறு பொறி; இது காட்டுத்தீயாக நிச்சயம் பரவும்!

தகவல்: ம.க.இ.க., சென்னை.



Wednesday, April 18, 2007

இஸ்லாத்தில் மனுவாதிகள்

Monday, April 16, 2007

"அற்புத"மான பாசிச அலட்டல்

"அற்புத"மான பாசிச அலட்டல்


பி.இரயாகரன்
16.04.2007


"ணையப் போலிப் புரட்சியாளரும் ஈழ விடுதலைப் போரும்" என்ற தலைப்பில், தமிழ் மணத்தில் அற்புதன் என்ற, 'அற்புத"மான புலிப் பாசிட் எம்மீது தனது புலிப் பாய்ச்சலை நடத்தியுள்ளது. அந்த புலிப் பாசிச பாய்ச்சலின் உள்ளடகத்தைப் பார்ப்போம்.


'மாக்சியப் பண்டிதர்களாகவும், அறிவுஜீவிகளாகவும் தங்களைத் தாங்களே மகிடம் இட்டுக் கொண்டு இணையத்தில் மாக்சியம், புலிப்பாசிசம், நலமடித்தல், மக்கள் விடுதலை, புதியஜனநாயகப் புரட்சி என்று வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாமல் மனநோயாளரைப் போல் புலம்பிக் கொண்டிருக்கும் பல போலிகளுக்கும், கீழ் இணைத்துள்ள, இதயச் சந்திரன் வீரகேசரியில் எழுதி உள்ள எதிர்வினை பொருந்தும். கொழும்பில் இருந்து வெளிவரும் சிறிலங்கா அரச ஊதுகுழல் ஆன தினகரனில் வந்த ஒரு பந்தி எழுத்துக்கு, எதிர்வினையாக என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது, இவ்வாறான ஒரு கட்டுரை சி.சிவசேகரத்தால் எழுதப்பட்டு இணையத்தில் பல பெயர்களில் பதிவிடும் ஒரு இணையப் போலிப் புரட்சியாளர் ஒருவரால் படி எடுத்துப் போடப் பட்டிருந்தது."


இவர் குறிப்பிடும் சிவசேகரம், இதயச்சந்திரன் பற்றி விவாதத்துக்குள் செல்வது அவசியமற்றது. இதயச்சந்திரன் விவாதம் உப்புச்சப்பற்றது. புலிப் பாசிசத்துக்கு குடைபிடிக்கும் நாயுண்ணிகளின் வெற்று அலட்டல். பத்திரிகைளை மிரட்டி அடிபணிய வைத்து, மாற்று விவாதங்களை அடக்கியொடுக்கியபடி, புலிகளின் எடுபிடிகள் மட்டுமே குலைக்க முடியும் என்ற நிலையில், பாசிசக் அலட்டல் அது. இந்த பாசிச அலட்டலுக்கு பின்னால் இருப்பது, வெற்று வேட்டுத்தனம். இந்த அலட்டலை விடுத்து 'அற்புத"மான இந்த பாசிச அலட்டலைப் பாhப்போம்.


'மாக்சியம், புலிப் பாசிசம், நலமடித்தல், மக்கள் விடுதலை, புதிய ஜனநாயகப் புரட்சி என்று வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாமல் மன நோயாளரைப் போல் புலம்பிக் கொண்டிருக்கும் பல போலிகளுக்கும்" பதிலளிக்கின்றாராம்.


சரி எப்படி? அதை மட்டும் அவர் சொல்ல மாட்டார். தலைவரின் மாவீரர் தின செய்திக்காக, வாயைப் பிளந்து திருவிழாவுக்காக காத்து நிற்கும் கூட்டம் போல், இவர் சொல்லும் வரை நாம் தவம் இருக்கவேண்டியது தான். இதற்கெல்லாம் அர்த்தம் தெரிந்த அற்புதமே, முடிந்தால் உங்கள் புலியின் நுண் மார்க்சிய வழியில் இதை விளக்குங்களேன். இதற்கு பதில் வழமையான புலி நுண் மார்க்சிய அரசியல் வழியில், துப்பாக்கிக் குண்டை பரிசாக தருகின்ற வழியில் பதிலளித்துவிடுவார்களோ என்று அச்சப்படுகின்றோம்.


உங்களுக்கு நன்கு தெரிந்த ஆனால் எமக்கு தெரியாத இவற்றை விளக்கி, சரியான வழியில் எம்மை வழிகாட்டிச் செல்லுங்களேன். ஏன் அதை செய்ய முடிவதில்லை. இப்படி செய்திருந்தால், இலங்கையில் பல பத்தாயிரம் உயிர்களை புலிகள் பலி கொண்டிருக்க வேண்டிய அவசியமிருந்திருக்காது. ஏன் அதை மட்டும் செய்ய முடிவதில்லை. 'மார்க்சியம், புலிப் பாசிசம், நலமடித்தல், மக்கள் விடுதலை, புதிய ஜனநாயகப் புரட்சி என்று வார்த்தைகளுக்கு அர்த்தம்" தெரிந்து போராடியவர்களை வேட்டையாடிய புலிகளின் பாசிச வண்டவாளத்தை தண்டவாளத்தில் நிறுத்தி, இணையத்தில் ஓட்டமுடியாது.


நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள் எமக்கு மனநோய் என்று. நல்லது அப்படியே வைத்துக் கொள்வோம், மனநோயற்ற நீங்களாவது சுயபுத்தியுடன் இதை விளக்குங்களேன். பொத்தாம் பொதுவிலான அலட்டல், வெற்றுத்தனமான காழ்ப்பை அடிப்படையாக கொண்ட அவதூறுதான் இது.


'தமிழ் ஈழமக்கள் இந்தப் போலிப் புரட்ச்சியாளர்களின் போலித் தனங்களை நன்கு அறிவார்கள். மக்களால் நிராகரிக்கப்பட்டு இணையத்தில் இவ்வாறு புரட்சிகரப் படங்காட்டிக் கொண்டிருக்கும் இவர்கள் பற்றிய புரிதலை இடதுசாரிச் சிந்தனை உடைய தமிழ் நாட்டுத் தோழர்களிடம் அம்பலப்படுத்துவதற்காக இந்தப்பதிவு இங்கு இடப்படுகிறது."


நல்லது தமிழ் நாட்டு இடதுசாரிகளுக்கு தெரியப்படுத்த முனையும் நீங்கள், மேலுள்ளவற்றை அவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள். முடிச்சுமாற்றி தொழிலைச் செய்வதை விடுத்து, அது பற்றிய விளங்கங்கள் தான் தேவை. அவர்கள் அதை வெற்றிடத்தில் புரிந்தகொள்ள முடியாது. சரி 'தமிழ் ஈழமக்கள் இந்தப் போலிப் புரட்ச்சியாளர்களின் போலித் தனக்களை நன்கு அறிவார்கள்" ஆகாகா அற்புதம். பெயருக்கு ஏற்ப அற்புதம். புரட்சி பேசும் நீங்கள், உங்களுடைய புரட்சி என்ன என்றாவது சொல்லுங்கள். பிரபாகரன் மாவீரர் தினத்தில் அலட்டும் போது சொன்னால் தான் அதுவும் தெரியும். அதுவும் அவர் கழித்த மலத்துக்குள் புழுக் கிண்டித் தேட வேண்டிய பரிதாபம் தமிழ் இனத்துக்கு. அந்தளவுக்கு வெற்று வேட்டுத்தனமும், மக்கள் விரோதமும் பொங்கிவழியும். சரி எல்லாம் தெரிந்த புண்ணியவானே, உங்கள் புரட்சி என்ன? பாசிச மரமண்டைகளே அதையாவது சொல்லுங்கள். நாங்கள் போலிகள் என்று நீங்கள் கூறுவது போலவே இருக்கட்டும், போலியற்ற நீங்கள் மக்களுக்காக எதை எப்படி செய்கின்றீர்கள். அதையாவது சொல்லுங்களேள். உங்கள் புரட்சிகர தத்துவம் என்ன நடைமுறை என்ன விளம்புங்கள். மக்களை மாபியா பாணியில் சுரண்டும் திருட்டுக் கூட்டத்தை பற்றி நாம் பேசுகின்றோம் என்பதை மறக்க வேண்டாம். மண்டையில் போட்டும், மிரட்டியும், மக்களை அடக்கி ஆள்வதுதான் புரட்சியோ! தெரியாமல் தான் கேட்கின்றோம், தெரிந்தால் சொல்லுங்களேன்.


'புலிகள் மேல் உள்ள தனிப்பட்ட காழ்ப்புணர்வே இவர்களின் இந்த மன வியாதிக்கான அடிப்படை. மக்களின் அரசியல் அபிலாசைகளைப் புரிந்து கொள்ளாமல், சித்தாந்தத்தை நடைமுறையுடன் இணைக்காமல், கிளிப்பிள்ளைகளைப் போல் புரட்சிகரமான சொற்களை உமிழ்வதே இவர்களின் நடைமுறையாக இருந்து வந்துள்ளது. சுத்தியலையும், சிவப்பு அட்டைப் புத்தகங்களையும் காட்சிப்படுத்துவது தான் மாக்சிசம் என்றும், சீனாவில், ரசியாவில் நடந்தது தான் புரட்சி என்றும், மாக்சிசத்தை அறிவியல் அடிப்படையில் அணுகாமல் அதனை ஒரு மதத்தைப் போல் அணுகும் இந்தப் போலிச் சித்தாந்திகள் வரலாற்றின் போக்கைத் தீர்மானிக்கப் போவதில்லை."


நல்லது, தனிப்பட்ட காழ்ப்புணர்வை என்ன என்ன என்று இனங்காட்டுங்களேன். வெற்று சொற்களுக்கு வெளியில் அதை செய்யும் அரசியல் அருகதை கூட பாசிட்டுகளுக்கு கிடையாது. நாங்கள் எழுதிய கட்டுரைகளில், அதை எடுத்துக்காட்டுகளேன். நாங்கள் புலியை மட்டும் எதிர்க்கவில்லை. இலங்கை அரசு முதல் உலகம் வரை எதிர்த்து எழுதுகின்றோம். அங்கும் மனநோய் முற்றி, தனிப்பட்ட காழ்ப்பு தான் என்றால் அதையும் விளக்கமாய் சொல்லிவிடுங்கள். அர்த்தம் தெரிந்த நீங்கள் தான் சொல்ல வேண்டும். அதைவிடுத்து பல்லிளித்து விளம்பர பாணியில் அரசியல் செய்யும் தமிழ்செல்வன் போல், மூடிமறைத்து சித்த விளையாட்டில் ஈடுபடுகின்றீர்கள். இந்த வக்கிரத்தை பார்ப்பனியம் குத்தகைக்கு எடுத்து வைத்திருக்கின்றது என்றால், புலிப் பாசிட்டுக்களான நீங்களுமா!


'மக்களின் அரசியல் அபிலாசைகளைப் புரிந்து கொள்ளாமல், சித்தாந்தத்தை நடைமுறையுடன் இணைக்காமல், கிளிப்பிள்ளைகளைப் போல் புரட்சிகரமான சொற்களை உமிழ்வதே இவர்களின் நடைமுறையாக இருந்து வந்துள்ளது." நல்லது மக்களின் அபிலாசைகள் என்ன? அதையாவது சொல்லுங்கள். சொல்லுக்கு வெளியில், இதையும் தலைவரிடம் கேட்கவேண்டுமோ! மக்களின் அபிலாசைக்காக போராடும் புலிகள் என்கின்றீர்கள், அதை எப்படி எங்கே நடைமுறைப்படுத்துகின்றார்கள்? தெரிந்தால் அதையாவது சொல்லுங்கள்.


'சித்தாந்தத்தை நடைமுறையுடன் இணைக்காமல், கிளிப்பிள்ளைகளைப் போல் புரட்சிகரமான சொற்களை உமிழ்வதே இவர்களின் நடைமுறையாக இருந்து வந்துள்ளது." இது தவறு தான். சித்தாந்தமும் நடைமுறையும் ஒன்றிணையவேண்டும் என்பதை நாம் நிராகரிக்கவில்லை. ஆனால் அதை புலிகள் எப்படி செய்கின்றார்கள்? அதை முதல் உலகறிய சொல்லுங்கள். மக்களின் அபிலாசைகளை அடிப்படையாக கொண்ட சித்தாந்தம், அச்சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்ட நடைமுறையை புலிகளின் பாசிச வழியில் ஒளிவீசிக் காட்டுங்களேன். ஏனிந்த வார்த்தைப் புலம்பல். புரட்சிகரமான சொற்களை நாம் முன்வைக்கின்றோம் என்பதை நீங்கள் ஒத்துக்கொண்டு, வெளிப்படும் அவதூறோடான உங்கள் காழ்ப்பு, எமக்கு மனநோயில்லை என்பதையும், தனிப்பட்ட காழ்ப்புமல்ல என்பதையும் நிறுவுகின்றது. நடைமுறையுடன் இணைத்தல் என்பது, வரலாற்றுக்குரிய ஒன்று தான். படுகொலையும், காட்டுமிராண்டித்தனமும் புலி புரட்சியாக நிலவுகின்ற ஒரு நிலையில், நீங்கள் உங்கள் பாசிச வழியில் எம்மை நோக்கி கேள்வி எழுப்பி விடுவது இலகுவானது. படுகொலையும், காட்டுமிராண்டித்தனமுமற்ற அரசியல் வழியில் நின்று, இதைச் சொன்னால் அது நியாயம். அதை முதலில் செய்யுங்கள். கொலைகார கும்பலின் பக்கப்பாட்டுக்கு ஏற்ப, கும்மியடிக்கும் நீங்கள் எல்லாம் நடைமுறை பற்றி பேச வருகின்றீர்கள். இந்த மனித விரோத மாபியா பாசிசச் செயல்களை அம்பலப்படுத்தி போராடுவது, மரணத்துக்கு ஒப்பானது. அதுவே எமது இன்றைய நடைமுறை.


'அண்மையில் மயூரன் தனது வலைப் பதிவில், சரிநிகரில் இருந்து படி எடுத்து நேபாள மாவோக்களின் தலைவர் பிரச்சண்டாவின் பேட்டியை இணைத்திருந்தார். (Prachanda: Our Revolution Won ஆங்கில மூலம்)
பிரச்சண்டா இந்த வரட்டுச் சித்தாந்த குழுவாதத்தை வெகுவாக விமர்சித்து இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது."


பிரச்சண்டா பேட்டி, அதன் உள்ளடக்கம், அதில் உள்ள அரசியல் நேர்மை, புலியின் பாசிசத்தில் ஒரு சதவீதத்துக்கு கூட பொருந்தது. அவர் வரட்டுச் சித்தாந்தம் என்று கூறுவது சரியானது. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கானது. அவர் கோட்பாட்டை விட்டுச் செல்லவில்லை. அவரின் கருத்து வெளிப்படுத்தும் உள்ளடக்கம், ஒடுக்கப்பட்ட மக்களின் புரட்சிக்கான எதார்த்தம் சார்ந்து வெளிப்படுகின்றது. அவர் மக்களை ஏமாற்ற முனையவில்லை. புரட்சியின் முதல் கட்டத்தில் உள்ள, பல்வேறு வர்க்கத்தின் நலன்களை சரியாகவே உயர்த்துகின்றார். பிரதான எதிரி, அதாவது நிலப்பிரபுத்துவ வர்க்கத்தை தனிமைப்படுத்தி ஒடுக்குவதில் உள்ள, அவரின் பொது அணுகுமுறை மிகச்சரியானது. புலிகளைப் போல் எதிரியல்லாத யாரையும் எதிரியாக்கவில்லை. மக்களை நண்பர்களை, புரட்சிகர சக்தியாக முன்னிலைப்படுத்துகின்றார். இந்த வகையில் ஒரு நேர்மையான ஐக்கிய முன்னணிக்காக உழைக்கின்றார்.


அவர் எம்மை விமர்சிக்கின்றார் என்ற உங்கள் கண்டுபிடிப்பு நகைப்புக்குரியது. அதை எப்படி எந்த வகையில் என்று நிறுவவேண்டும். அவர்கள் உங்களைப் போன்றவர்களின் வங்குரோத்துச் செயலை, பொது உலகில் அம்பலப்படுத்தகின்றனர். உலகுக்கு வழிகாட்ட போவதாக சூளுரைத்துள்ளார். அவர் உலக மக்களை நம்புகின்றார். புலிப் பாசிச மாபியாக்கள் போலல்ல. உங்கள் இந்த குருட்டுத்தனமான வாதத்தின் நோக்கம், புலிகளை ஆதரிக்காவிட்டால் வரட்டுவாதி என்பது, ஆதரித்தால் வரட்டுவாதியல்ல என்பதே உங்கள் புலிக் கண்டுபிடிப்பு. அதை அவர் வரட்டுவாதமாக குறிப்பிடவில்லை.


'21 ஆம் நூற்றாண்டுக்கான நடைமுறை மாக்சிசம் பற்றியும் கலப்புப் பொருளாதாரம் பற்றியும் அவர் பேசி இருந்தார். போன நூற்றாண்டில் நிகழ்த்தப்பட்ட ரசியப் புரட்சியோ அன்றி சீனப் புரட்சியோ இந்த நூற்றாண்டுக்கும், எங்கும், எப்போதும் பொருந்தும் என்று எதிர்பார்ப்பது அறிவிலித்தனம். ஒவ்வொரு போராட்டத்தின் அக மற்றும் புற நிலைகளும் சர்வதேச சூழலும், பூகோள அரசியலும் வேறுபடுகிறது. மாற்றாக மாக்சிசத்தின் அடிப்படைகளைப் புரிந்து, சிங்கள பேரினவாதத்திற்கு முண்டு கொடுத்துக் கொண்டிருக்கும் ஏகாத்திபதிய சக்திகளுக்கு எதிராக நுண்ணிய அரசியற் தளத்தில் நடைமுறை ரீதியாக இயங்கும் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தலைமைச் சக்திகளான புலிகளின் அரசியலை இவர்கள் இன்னும் உள்ளார்ந்தமாக புரிந்து கொள்ளவில்லை, அவ்வாறான புரிதல் ஏற்படாததற்கான அடிப்படைக் காரணம் இவர்களின் சிந்தனையின் வரட்டுத் தனமும், இயற்கையாக புலிகள் மேலெழும் தனிப்பட்ட காழ்ப்புணர்வுமே."


பிரச்சண்டாவுக்கு ஒரு பாசிச பொழிப்புரை. மாவீரர் தின உரைக்கு பொழிப்புரை சொல்லிப் பிழைக்கும் கூட்டம், பிரசண்டாவுக்கு பொழிப்புரை. பிரசண்டா பெயரிலும் மானம் கெட்ட நாய்ப் பிழைப்பு.


'21 ஆம் நூற்றாண்டுக்கான நடைமுறை மாக்சிசம் பற்றியும் கலப்புப் பொருளாதாரம் பற்றியும் அவர் பேசி இருந்தார்."


மார்க்சிசம் நடைமுறை நாட்டுக்கு நாடு மட்டுமன்றி, காலத்துக்கும் ஏற்பவும் அதை கையாளுகின்ற வடிவங்களும் மாறும். புரட்சிகர சூழல், வர்க்கங்களின் நிலை, மாறுபட்டதாக உள்ள நிலைமையில், கம்யூனிசத்தை நோக்கிய பயணம் நேர்கோட்டு வழியில் ஒரு சீராக செல்வது கிடையாது. ஒரே மாதிரியான, ஒரே வடிவிலான புரட்சிகள் சாத்தியமில்லை. புரட்சிகள் இயந்திரமாக, இயந்திரகதியில் உற்பத்தி செய்வதில்லை. வர்க்க போராட்டத்தின் உள்ளடக்க விதிகளும், சுரண்டல் பற்றிய சித்தாந்தமும், சுரண்டல் உள்ளவரை மாறிவிடுவதில்லை. மாக்சியம் புதிய உலக நிலைமைகளையும், மாற்றத்தை உள்வாங்கி வளர்த்தெடுக்கப்படுகின்றது. 'கலப்புப் பொருளாதாரம்" பற்றிய அவரின் கருத்து மிகச் சரியானது. இது இப்போது தான் முதல் முதலில் நடைமுறைப்படுத்தப்பட்டதல்ல. சீனா, சோவியத் எங்கும் இந்த முறை புரட்சியில் கையாளப்பட்டு இருக்கின்றது. நேபாளக் கம்யூனிஸ்ட்டுகள் நிலப்பிரத்துவ வர்க்கங்களை தூக்கியெறியும் போராட்டத்தில், அதற்கு எதிரான அனைத்து வர்க்கங்களையும் உள்ளடக்கிய ஒரு ஐக்கிய முன்னணியை மேலிருந்து கட்டியுள்ளது. இது புதிய ஜனநாயக புரட்சிக்கு முந்தைய, ஜனநாயக புரட்சிக்குரிய கட்டத்தை அடிப்படையாக கொண்டது.


இந்தவகையில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை அவர் தெளிவாக முன்வைக்கின்றார். பாட்டாளி வர்க்க புரட்சி வேறு. இதில் இருந்தும் சோசலிச புரட்சி வேறு. இதில் இருந்தும் புதிய ஜனநாயக புரட்சி வேறானது. புரட்சியின் வௌவேறு காலகட்டமும், வௌவேறு வர்க்கங்களின் அணி சேர்க்கையை இனம் காண்பதில் தான், இந்த வெற்றி அடங்கிக் கிடக்கின்றது. இதில் ஜனநாயக புரட்சிக்குரிய குறிப்பான வர்க்க சூழல் சார்ந்து, அதை தெளிவாக முன்வைக்கின்றார். இதில் எந்தத் தவறுமில்லை. இதை மார்க்சியத்துக்கு எதிரானதாக திரிக்க முடியாது. அவர் இதை முன்னெடுப்பது ஒடுக்கப்பட்ட மக்களின் புரட்சிக்காகத் தான். அதை அவர் கைவிட்டால், அதாவது நிலப்பிரபுத்துவ வர்க்கத்தை ஒழித்து நிலத்தை மறுபங்கிடுவதைக் கைவிடுவாரேயானால், அவர் வரலாற்றில் மார்க்சியத்துக்கு துரோகத்தை இழைத்து மக்களின் முதுகில் குத்துவார்.


'மாக்சிசத்தின் அடிப்படைகளைப் புரிந்து, சிங்கள பேரினவாதத்திற்கு முண்டு கொடுத்துக் கொண்டிருக்கும் ஏகாத்திபதிய சக்திகளுக்கு எதிராக நுண்ணிய அரசியற் தளத்தில் நடைமுறை ரீதியாக இயங்கும் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தலைமைச் சக்திகளான புலிகளின் அரசியலை இவர்கள் இன்னும் உள்ளார்ந்தமாக புரிந்து கொள்ளவில்லை, அவ்வாறான புரிதல் ஏற்படாததற்கான அடிப்படைக் காரணம் இவர்களின் சிந்தனையின் வரட்டுத் தனமும், இயற்கையாக புலிகள் மேலெழும் தனிப்பட்ட காழ்ப் புணர்வுமே."


என்கின்றார்.


அதாவது புலிகளை மார்க்சிய சக்திகள் என்கின்றார். 'ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக நுண்ணிய அரசியற் தளத்தில் நடைமுறை ரீதியாக" செயற்படுகின்றனராம். உலகத்தை முட்டாளாக கருதுகின்ற குதர்க்கம். இப்படிக் கூறுவதற்கு உள்ள துணிச்சல் தான், பாசிசத்தின் திமிர். ஏகாதிபத்தியத்துக்கு எதிராக, மக்களுக்கு தெரியாமல், நுண் என்ற மாய மந்திரத்தின் துணையுடன் போராடுகின்றனராம். அதுவும் இந்த அற்புதத்துக்கு தெரிந்துவிடுகின்றது.


நுண் தளத்தில் மக்களுக்கு தெரியாது, ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தை நடத்துகின்றனராம். முக்கியமாக மக்களுக்கு அவை தெரியக்கூடாது. யார் போராடுவது என்றால், எல்லாம் வல்ல தலைவர் மட்டும். அவர் நுண் தளத்தில் சொன்னால், மக்கள் வேத வாக்காக கருதி, ஏகாதிபத்தியத்தை தூக்கியெறிவார்களாம். புலுடா விடுவதில் மகாகெட்டித்தனம் என்ற நினைப்பு இவர்களுக்கு.


'சிந்தனையின் வரட்டுத் தனமும், இயற்கையாக புலிகள் மேலெழும் தனிப்பட்ட காழ்ப்புணர்வுமே." இந்த நுண் அரசியலை புரிந்து கொள்ளத் தடை என்கின்றார். ஐயா அதை ஊர் அறிய, நீங்கள் புரிந்து கொண்ட, அந்த நுண் தளத்தைச் சொல்லுங்கள். உங்களுக்கு அவை தடையல்லவே. ஏன் சொல்ல முடிவதில்லை. 'பானையில் இருந்தால் தானே அகப்பையில் வரும்"


சுய அறிவற்ற கூட்டம், தலைவரின் மாவீரர் தின செய்தியில் ஏதும் வருமா என்று நம்பி நிற்கும் பிழைப்புவாத கூட்டத்துக்கு, எதைத்தான் சுயமாக மக்கள் சார்பாக காட்டமுடியும். பொறுக்கி நக்குகின்ற கூட்டம், எங்கேயாவது குண்டு வெடித்தால், பத்து இராணுவம் செத்தால் அதை கொண்டு உருவாடுகின்ற கூட்டம், மக்களைப்பற்றி எதைத்தான் கூறமுடியும். அதை அரசியலாக கொண்டு, பேசித் திரியும் கூட்டம், எதைத்தான் இந்த நுண் தளத்தில் கூறமுடியும். தமிழ் மக்களை நலமடித்து விட்டு, இப்படி வள்ளென்று குலைக்க முடிகின்றது.


'இந்த வரட்டுச் சித்தாந்திகளின் அரசியல் மலட்டுத் தனமே, இவர்களால் ஒரு மக்கள் மயப்பட்ட பரந்துபட்ட வெகுசன அமைப்பை கட்டி எழுப்ப முடியாதற்கான அடிப்படைக் காரணம். வெறுமையாக புரட்சிகரச் சொற்களை உமிழும் இவர்கள் உண்மையில் மாக்சிசத்தை ஒரு நடைமுறைச் சித்தாந்தமாக அன்றி, உச்சாடனம் செய்யும் மந்திரமாகவும், மாக்சையும், லெனினையும், மாவோவையும் கடவுளர்களாகவும், அவர்களின் கூற்றுக்களை எதுவித விமர்சனமும் அற்ற வேத வாக்குகளாகவும் கருதிக் கொண்டதன் வெளிப்பாடே அன்றி வேறொன்றும் இல்லை. இவர்களின் அரசியல் என்பது சொன்னதை மீள ஒப்புவித்தல் என்பதுடன் மட்டுமே நின்று விடுகிறது. ஒரு சித்தாந்ததை அதன் நடை முறையுடனும் அது கூறப்பட்ட காலப்பகுதியின் அக, புற நிலைகளுடனும் இவர்கள் விளங்கிக் கொள்ளவில்லை. ஒரு சித்தாந்தத்தின் அடிப்படை அதன் தர்க்கமும், சிந்தனையுமே அன்றி வெறும் சொல்லாடல்கள் அல்ல. பிரச்சண்டா குறிப்பிடுவது போல் மக்கள் அமைப்பொன்றை நிறுவததற்கு ஒரு அடிப்படை வேண்டும். அந்த அடிப்படை மக்கள் மத்தியில் இருக்கும் பிரதானமான ஒடுக்குமுறையின் எதிர் நிலையாகவே அமைய முடியும். அரசியல் யதார்த்தம் என்பதுவும் நுண் அரசியல் என்பதுவும் அதுவே. நேபாளத்தில் நிலவுடமை அடிப்படையிலான மன்னர் புரட்சியே பிரதானமான ஒடுக்குமுறைக் கருத்தியலாக இருக்கிறது. சிறிலங்காவில் அது சிங்களப்பவுத்த பேரினவாதமாக இருக்கிறது. ஒரு மக்கள் மயப்பட்ட அரசியல் இயக்கம் இந்தப் பிரதான முரண்பாட்டை அடிப்படையாக வைத்தே கட்டி எழுப்பப்படமுடியும்."


பாவம் பிரசண்டா. ஒரு வலதுசாரி கொலைகார பாசிட்டுகள், ஒரு இடதுசாரி ஒடுக்கப்பட்ட மக்கள் போராட்டத்தை கூறி நக்கலாமென்று தெரிந்திருக்க நியாயமில்லை தான.


'இவர்களின் அரசியல் என்பது சொன்னதை மீள ஒப்புவித்தல் என்பதுடன் மட்டுமே நின்று விடுகிறது." சொன்னதை மீள ஒப்புவிப்பவர்கள் யார்?. சுயசிந்தனை அற்று, மக்களை சிந்திக்கவே கூடாது என்று நலமடித்தவர்கள் யார்? தலைவர் சொன்னதை தவிர, யாரும் வேறுவிதமாக சிந்திக்க கூடாது. புலிகளை சொன்னதைத் தவிர வேறு எதுவும் பேசக் கூடாது. இது தான் புலிகளின் நுண் புரட்சியாக்கும்.


'இந்த வரட்டுச் சித்தாந்திகளின் அரசியல் மலட்டுத் தனமே, இவர்களால் ஒரு மக்கள் மயப்பட்ட பரந்துபட்ட வெகுசன அமைப்பை கட்டி எழுப்ப முடியாதற்கான அடிப்படைக் காரணம். வெறுமையாக புரட்சிகரச் சொற்களை உமிழும் இவர்கள் உண்மையில் மார்க்சிசத்தை ஒரு நடைமுறைச் சித்தாந்தமாக அன்றி, உச்சாடனம் செய்யும் மந்திரமாகவும்,"


இதுதான் கட்டி எழுப்ப முடியாததற்கு காரணம் என்கின்றார். எதைக் கட்டியெழுப்ப என்பது சூக்குமம். புலிகள் மாற்றுக் கருத்தை அங்கீகரித்து, குறைந்தபட்ச முதலாளித்துவ ஜனநாயகத்தை அங்கீகரித்தா உள்ளனர்! இவர் என்ன தான் கூறுகின்றார்? இப்படியான நிலையில் செயற்படாமல் இருக்கின்றனர் என்று கூற வருகின்றாரா? வெகுஜன அடிப்படையை கட்டியெழுப்பும் தடைக்கு, எமது வரட்டுவாதமே காரணம் என்கின்றார். இதை புலிகள் தடுக்கவில்லை என்கின்றாரா?. ஒரு பாசிட்டின், வடிகட்டிய முட்டாளின் உளறல் இது. இவை எல்லாவற்றையும் செய்யமுயன்றவர்கள் 5000 பேரை கொன்ற திமிர் தான் இப்படி இணையத்தில் குலைக்க வைக்கின்றது.


எத்தனை எத்தனையோ முரண்பட்ட மனிதர்களைக் கொன்று குவித்த கொலைகாரக் கும்பல், எம்மைப் பார்த்து 'இணையப் போலிப் புரட்சியாளரும் ஈழ விடுதலைப் போரும்" எனக் கிண்டல் அடிக்கின்றது. இன்னும் கொல்லும் வெறி அடங்காத இரத்தம் வழியும் பாசிச திமிருடன், வம்பளக்க வருகின்றது. நாம் நாளை இதே காரணத்துக்காக கொல்லப்படலாம். அந்த உணர்வுடன் தான், நாம் உங்களை எதிர்கொள்கின்றோம். உங்கள் வம்புகளை, உங்கள் பாசிச வக்கிரங்களை எதிர்த்து நாம் போராடுகின்றோம் என்றால், அதுவே தான் இன்றைய நடைமுறை. இதில் மரணம் தான் எமக்கு முன்னால் உள்ளது. இது ஒரேயொரு வழிப்பாதையூடாக உள்ளதென்பதை, நாம் புரிந்தே தாம் எழுதுகின்றோம்.


'புலிகள் மேலான காழ்ப்புணர்வே இவர்களை அண்மையில் பிரன்சு அரசின் ஜனநாயக விரோதமான நடவடிக்கைகளை நியாயப்படுத்தி எழுத வைத்துள்ளது. ஒருபுறத்தில் புலிகளை ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதிகளாச் சொல்லிக் கொண்டே இன்னொரு பக்கத்தில் அந்த ஏகாதிபத்தியக் கூட்டின் புலிகள் மீதான, தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் மீதான நடவடிக்கைகளை ஆதரித்தும் இவர்களால் எழுதமுடிவது இவர்களின் அரசியல் வங்குரோத்துத் தனத்தின் உச்சக்கட்டம். ஏகாதிபத்தியங்களின் உண்மையான அடிவருடிகள் யார் என்பதை தோழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மாக்சிய முத்திரை குத்தல்களுக்கு அப்பால் சென்று தோழர்கள் இவர்களின் போலித் தனத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்."


நல்லது நுண் அரசியல் புலிவாதியே. 'இவர்களை அண்மையில் பிரன்சு அரசின் ஜனநாயக விரோதமான நடவடிக்கைகளை நியாயப்படுத்தி எழுத வைத்துள்ளது" என்கின்றீர்கள். பிரஞ்சு அரசின் ஜனநாயக விரோத செயல் என்று எதை குறிப்பிடுகின்றீர்கள்! அவர்கள் கைதைச் செய்தவர்கள், அந்த அமைப்பை தடை செய்யவில்லையே, ஏன்? அதன் செயற்பாட்டை முடக்கவில்லையே ஏன்? எங்கு எப்படி ஜனநாயக விரோதம் உள்ளது? அதை ஒருக்கால் ஊரறிய சொல்லுங்களேன்! அவர்கள், அவர்களது நாட்டின் சட்ட எல்லைக்குள், இதை நுட்பமாக கையாளுகின்றனர்.


புலிகள் பாரிசில் நடத்தியது என்ன? ஜனநாயகம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், அதை சதா மூச்சுக்கு மூச்சு ஒடுக்குபவர்கள் எதை செய்திருப்பார்கள்? அனைத்தும் வெளிப்படையானது. ஒரு சட்ட எல்லைக்குள் இயங்கத் தெரியாதவர்கள். பாசிச வழிகளில், ஜனநாயகத்தை முழுங்குபவர்கள். அவர்களின் மொழிகள், ஆணைகள், அடி உதை மிரட்டல் ஏன் மரணம் வரை அனைவருக்கும் தெளிவானது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக, நாம் நிற்பதை இது தடுத்துவிடாது. நாளை எம் மீது தாக்குதலை அவர்கள் நடத்தினாலும், நாம் இந்த நாட்டின் சட்டப் பாதுகாப்பை கோருவதை, இந்த நாடு ஏகாதிபத்தியம் என்பதால் தடுத்து விடமாட்டது. நாங்கள் ஒரு சட்ட அமைப்புக்குள் நீதியைக் கோருவோம்.


அது ஒரு ஏகாதிபத்தியமாக இருந்தாலும், அந்த நாட்டில் வாழும் மனித உரிமையை மறுப்பதை நாம் ஆதரிக்கமுடியாது. ஒரு நாட்டின் சட்டம் அங்கீகரிக்கும் எல்லைக்குள், அதை மீறுபவனுக்கு எதிராக அந்த சட்ட வடிவங்களில் போராடுவது தவிர்க்க முடியாதது. புலிகளை நாம் ஆதரிக்க வேண்டும் என்றால், மனித உரிமைகளை புலிகள் அங்கீகரிக்கவேண்டும்.


சட்டப்படியாக இயங்க வேண்டும். மாறாக மாபியாத் தளத்தில் இயங்கும் ஒரு குழுவை, விடுதலை இயக்கமாக நாம் அங்கீகரிக்க முடியாது. பாதிக்கப்பட்ட மக்களின் நீதி எவ்வளவு முக்கியம் என்பதே, மிக முக்கியமானது. ஒருவன் பாதிக்கப்பட்டடிருந்தாலும் கூட, அதற்காக குரல் கொடுப்பது மார்க்சியம். இதே பாரிசில் சபாலிங்கம் கொலை, நாதன் கஜன் கொலை, லட்சுமி வீடு புகுந்து சூறையாடல், குகநாதன் மீதான் கொலை மிரட்டல், சோபாசக்தி மீதான மிரட்டல், எத்தனை எத்தனையோ உண்டு.


இதையெல்லாம் கொலைவெறியுடன் ஆதரிக்கும் நீங்கள், நுண் அரசியல் வழியில் இதை புலிகள் செய்வதாக மார்பு தட்டுவது எமக்கு கேட்கின்றது. எமது மரணம் தான் இதற்கு பரிசென்றால், நாம் அந்த மரணத்தை உங்களின் நுண் அரசியலுக்காக முத்தமிடத் தயாராகவே உள்ளோம.

Sunday, April 15, 2007

எங்கள் புரட்சி வெற்றி பெற்றது - மாவோயிஸ்ட் இயக்கத்தலைவர் பிரசண்ட

எங்கள் புரட்சி வெற்றி பெற்றது - மாவோயிஸ்ட் இயக்கத்தலைவர் பிரசண்ட

"நாங்களே பிரதான அரசியல் சக்தி என்ற வகையில் சமூக பொருளாதார கட்டமைப்பை மாற்றியமைத்தல் மக்களுக்கு அதிகாரத்தை அமைத்தல் ஆகிய நடவடிக்கைகளை பாரியளவில் முன்னெடுத்து வருகிறோம். "

Prachanda: Our Revolution Won ஆங்கில மூலம்


பக்கம் 1 பக்கம் 2





பக்கம் 3 பக்கம் 4





பக்கம் 5 பக்கம் 6






நன்றி சரிநிகர்

Saturday, April 14, 2007

உலகமயமாதல் நலன்களும், இந்திய நலன்களும் முரணானவையா?

உலகமயமாதல் நலன்களும், இந்திய நலன்களும் முரணானவையா? புலிகளின் நலன்கள் இந்த முரண்பாட்டிலா நீடிக்கின்றது?

பி.இரயாகரன்
14.04.2007


லகமயமாதல் நலன்களும், இந்திய நலன்களும் ஒன்றோடொன்று முரணானவையா? சரி முரணானவை என்றால் எப்படி? எந்த வகையில்? எந்த வர்க்க நலன்களின் அடிப்படையில்? இந்தியாவில் போராடும் ஒடுக்கப்பட்ட மக்களினதும், தேசிய முதலாளினதும் நலன்கள், இந்திய ஆளும் வர்க்கத்தின் நலன்களாக இருப்பதில்லை. எனவே அதை பற்றிய ஒரு விவாதமல்ல இது.


அண்மைக் காலமாக மேற்குக்கு எதிராக இந்தியா அல்லது தென்னாசிய நாடுகளின் பகை முரண்பாடுகள் பற்றி கற்பனையில் முன்னிலைப்படுத்தப்படுகின்றது. புலி, புலியல்லாத ஆய்வுகள் கூட இதற்குள் கட்டமைக்கப்படுகின்றது. இந்த வகையில் ஒரு அரசியல் தளம், உலகமயமாதல் எதார்த்தத்தை திரித்தே கட்டமைக்கப்படுகின்றது. இந்த வகையில் புலிகள் மட்டுமல்ல, புலிகளின் எதிர்தரப்பின் ஒரு பகுதியும் கூட இந்த வாதத்தை முன்வைக்கின்றனர். வாதங்கள் சகட்டு மேனியில் கண்மூடித்தனமாகவே நடத்தப்படுகின்றது. அரசியலற்ற வெற்றுத்தனங்கள், இப்படி வம்பளக்க வைக்கப்படுகின்றது.


இது போன்றே ஜே.வி.பி அரசியல் செயல்பாடுகள் இருப்பதாக நம்பப்படுகின்றது. தென்னாசிய சமூகத்தை சார்ந்து, குறிப்பாக இந்தியாவைச் சார்ந்து நின்று மேற்கை எதிர்ப்பது போன்ற ஒரு அரசியல் பிரமையை, நாடகத்தை, ஒரு மயக்கத்தை உருவாக்குகின்றனர். சிலர் புலி மேற்கைச் சார்ந்ததாக காட்டி, தென்னாசிய அரசியலை ஆதரிக்கும் வகையில் புலிகளை அழிக்க வேண்டும் என்கின்றனர். இப்படி முரண்நிலைத் தன்மையான வாதங்கள். புலிகளை அரசியல் ரீதியாக விமர்சிக்கவும், தாங்கள் என்ன அரசியலைக் கொண்டுள்ளோம் என்ற அடிப்படையில் செயல்படத் தவறுகின்ற போதும் இது வீங்கி வெம்புகின்றது. கற்பனைப் புனைவுகளும், குதர்க்கமும், குழப்பமும் இதன் அரசியல் சாரமாகும்.


புலிகளின் அரசியல் நெருக்கடிகள் முதல் சமகால நிலமைகளை புரிந்து விளக்குதல் எப்படி என்ற கேள்வி விடையாகவே, இந்த மலிவான அரசியல் திரிபு புகுத்தப்படுகின்றது. இதன் பின்னணியில் புலியை மேற்கின் எடுபிடிகளாக செயல்படுவதாக சித்தரிப்பது முதல், இந்தியாவுக்கும் மேற்குக்கும் முரண்பாடுகள் உள்ளதாக காட்டி புலிகள் நீச்சல் அடிப்பது வரை, இந்த கற்பனை அரசியல் அரங்கம் கட்டமைக்கப்படுகின்றது.


உண்மையில் அரசியல் பொருளாதார அடிப்படையில் வாதிடத் தவறுகின்றனர். மேலோட்டமான நிகழ்ச்சிகள் மீது மேய்கின்ற ஒரு திசைவிலகலாகவே, இவை பொத்தாம் பொதுவில் அணுகப்படுகின்றது.


புலிகளின் விமானத் தாக்குதல் நடந்ததன் பின்பாக இந்த நடவடிக்கை தென்னாசியாவுக்கு ஆபத்து என்றும், இது மேற்கத்தைய சதி என்றும், இதுபோன்ற பல புலியல்லாத கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. சர்வதேச ரீதியாக புலிகள் பற்றிய நிலைப்பாட்டுக்கு மாறானது. உலகமயமாதல் புலிகளை ஒரே வகையில் தான், ஒரு நேர்கோட்டில் தான் புரிந்து கொள்கின்றது. புலிகளைப் பற்றி அபத்தமான வகையில் மதிப்பிடுவது மட்டுமின்றி, தென்னாசிய சூழலையே தலைகீழாக்கி விடுகின்றனர். புலிகளை அனைத்துக்குமான மையப்புள்ளியாக வைத்து, தென்னாசிய மற்றும் மேற்கத்தைய நலன்களைப் பற்றிய ஆய்வுகள், முடிவுகளை அறிவிப்பது அபத்தமாகும்.


மேற்கில் புலிகளை ஒடுக்கும் நடிவடிக்கைகள் நடக்காத நிலையில், அதையிட்டும் புலம்பும் புலியெதிர்ப்பு, மேற்கு புலிக்கு ஆதரவாக இருப்பதாக காட்டுவது நிகழ்கின்றது. மேற்கு நடவடிக்கைகள் சட்டதிட்ட எல்லைக்குள் இருப்பதைக் காண்பதில்லை. புலிகளிடம் மட்டும் ஜனநாயகத்தைக் கோரும் ஜனநாயக விரோதிகளுக்கு, இது சூக்குமமாகி புரிய மறுக்கின்றது. மேற்கின் நிலைப்பாடுகள் இனப்பிரச்சனையை தீர்க்கின்ற எல்லைக்குள் தான், நடவடிக்கைளை மட்டுப்படுத்துகின்றது. இந்த வகையில் இலங்கை அரசின் தீர்வு நடவடிக்கையுடன் ஒருங்கிணைந்ததாகவே அமையும்.


முரண்பாடு பற்றிய கற்பனை ஆய்வுக்கு மையமாக இந்தியாவின் கொள்கை பற்றியும், அதன் மேற்கு விரோத நிலை பற்றியும் பற்பல எடுகோள்கள். உண்மையில் அரசியலை ஒரு இடை நீக்கல் வழியாக கற்பித்து, அதன் ஊடாக தேடுவது இதன் சாரமாகும்.


மேற்குடனான தென்னாசிய முரண்பாடு அதாவது இந்திய முரண்பாட்டின் சாரம் என்ன? அது எங்கிருந்து, எப்படி எந்த வழியில் உருவாகின்றது. இதற்கான அரசியல் அடிப்படை தான் என்ன? பொருளாதார அடிப்படைகள் தான் என்ன?


1. இந்தக் கேள்விகள் பற்றியும், இந்தியாவின் உள்ளார்ந்த புரட்சிகர பிரிவுகளின் மைய விவாதத்தில் இருந்து நாம் புரிந்து கொள்ளவேண்டியுள்ளது.


2. முரண்பாடு, முரண்பாட்டின் தன்மை என்பது அனைத்தும் தழுவியது. முரண்பாடுகள் இல்லாத உலகம் என்பது கற்பனையானது. ஒரு மனிதனுக்குள்ளும், அவனின் சிந்தனைக்குள்ளும் கூட முரண்பாடுகள் உண்டு. ஒரு முரண்பாடு அனைத்தும் தழுவியதாக, காணப்படும் போது, முரண்பாடுகளின் எதிர் நேர் முரண் தன்மையில் ஒன்று மேலோங்கி காணப்படும். சடப்பொருள் முதல் உயிர் உள்ளவற்றின் இயக்கமே அது சார்ந்தது தான்.


இந்த வகையில் மனிதனைச் சூறையாடும் இன்றைய உலகமயமாதல் என்ற சமூக அமைப்பில், இந்தியாவுக்கும் மேற்குக்கும் இடையில் முரண்பாடு உண்டா? இங்கு இவர்களுக்கு இடையில் அரசியல் பொருளாதார முரண்பாடுகள், எதிர்நிலைத் தன்மையிலா காணப்படுகின்றது? இல்லை, மாறாக முரண்பாடுகள் நட்பு முரண்பாடாக காணப்படுவதுடன், மேற்கின் நலன்கள் தான் இந்தியாவின் நலன்களாக உள்ளது. அதாவது மேற்கின் நலன்கள் என்பது, சுரண்டும் வர்க்கத்தின் சுரண்டும் நலன்கள். ஏகாதிபத்திய நலன்கள் என்பதும் இது சார்ந்ததே. இந்த வகையில் தான் இந்திய ஆளும் சுரண்டும் வர்க்கம், உலகமயமாதலை ஒருங்கமைத்துள்ளது. அனைத்து சுரண்டல் வடிவங்களும், அதை பாதுகாக்கும் சட்ட அமைப்புகளும், மேற்கின் (ஏகாதிபத்திய) சுரண்டல் நலன்களுடன் பின்னிப்பிணைந்தாகவே உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள முரண்பாடுகள் படிப்படியாக களையப்படுகின்றது. அதாவது இந்தியாவின் உழைக்கும் மக்களுடன் உள்ள ஆளும் வர்க்கத்தின் முரண்பாடுகள், முத்தி ஒரு மோதலாக மாறாத வண்ணம் மிக அவதானமாக இருக்கும் போதுதான், மேற்குடனான முரண்பாடுகள் இருப்பது போல் காட்சியளிக்கின்றது. கானல் நீராக உள்ள இந்த முரண்பாடு, படிப்படியாகவே அகற்றப்படுகின்றது. உழைக்கும் மக்களுடான முரண்பாட்டை அவர்களுக்கு இடையிலானதாக்கி, மேற்கு முரண்பாடுகள் களையப்படுகின்றது.


இப்படி இந்தியாவின் ஆளும் வர்க்க நலன்கள் என்பது, மேற்கத்தைய சுரண்டல் நலனுக்கு முரணாக இருப்பதில்லை. இந்தியாவின் சர்வதேசக் கொள்கை என்பது, மேற்குக்கு எதிரானதல்ல. அதாவது ஏகாதிபத்திய உலகமயமாதலுக்கு எதிரானதல்ல.


இந்திய தரகுமுதலாளிகளின் நலன்கள் என்பது, இந்தியாவின் பரந்துபட்ட மக்களின் நலன்கள் அல்ல. இது ஆளும் வர்க்கத்தின் நலன்களாகும். இந்தியாவின் நலன்கள் உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலுக்கு முன்பாகவே, ஏகாதிபத்திய சுரண்டலை அடிப்படையாக கொண்டே இருந்தது. இந்தியாவின் அன்றாடம் உருவாகும் தேசிய முதலாளிகளின் நலன்களை, இந்தியாவின் ஆளும் வர்க்கம் பிரதிபலிப்பதல்ல. இந்தியாவின் தேசிய முதலாளிகளின் நலன்கள், இந்தியாவின் போலிச் சுதந்திரத்தின் பின்பாக கூட பாதுகாக்கப்படவில்லை. அவையும் படிப்படியாக அன்றாடம் அழிக்கப்பட்டே வந்தன. இன்றைய உலகமயமாதல் நிகழ்ச்சி நிரல் படி, அவை மேலும் வேகமாக திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது. இப்படி இந்திய மக்கள் நலன் சார்ந்த எந்த வர்க்கக் கூறினதும் நலன்களை, இந்தியாவின் ஆளும் வர்க்கம் கொண்டிருப்பதில்லை. மாறாக அதற்கு எதிராக செயல்படுகின்றது. இதுவே தென்னாசிய நாடுகளின் நிலை கூட.


இந்த நிலையில் இலங்கை விவகாரத்தில் இந்திய நலன்கள் தனித்துவமாக செயல்படுதில்லை. அதாவது மேற்குக்கு எதிரான ஒரு வர்க்கத்தின் நலனுக்காக, இலங்கை விடையத்தில் இந்தியா முரண்படுவது கிடையாது. அப்படி ஒரு வர்க்கத்தை இந்தியா பிரதிபலிப்பதில்லை. இந்நிலையில் முரண்படுவதாக கூறுவது, எந்த வர்க்கத்தின் நலனை அடிப்படையாக கொண்டது?


வர்க்கங்களைக் கடந்தது இந்தியாவின் முரண்பாடு என்பது கற்பனையானது. ஒரு சார்பு நிலை என்பது, எங்கும் எதிலும் வர்க்கம் சார்ந்தது. இந்தியாவின் ஆளும் வர்க்க நலன்கள், ஏகாதிபத்திய வர்க்க நலனுக்கு முரணானதல்ல. முரணானது என்பது எப்படி?


புலிகளின் வர்க்க நலன் இந்திய நலனுடன், அதாவது மேற்கத்தைய நலனுடன் முரண்பட்டதல்ல. அதனால் அந்த எல்லையில், புலிகளுடன் அவர்கள் முரண்படுவதில்லை. புலிகளுடனான முரண்பாடு என்பது, புலிகளின் நலன்சார் நடவடிக்கை அந்த நாடுகளின் சுரண்டல் வர்க்கத்தின் நலனுக்கு இசைவானதாக அதே திசையில் இருப்பதில்லை. குறிப்பாக புலிகளின் தனிமனித நலன்சார் நடவடிக்கைகள், உலகமயமாதல் பொது நடைமுறைக்கு எதிரான வகையில் குத்தும் முள்ளாகி முரண்படுகின்றது. சுரண்டும் வாக்கங்களுக்கு இடையிலான முரண்பாடு, புலிகள் விடையத்தில் அதீதமான குழுவாதத்தால் பகைமுரண்பாடாக மாறிச் செல்லுகின்றது. இது உலகமயமாதல் பொருளாதார அமைப்புக்கு எதிராக அல்ல, மாறாக ஒரு மாபியாக் கும்பலுக்குரிய ஒரு பின்னணியில் இது ஏற்படுகின்றது.


மேற்கத்தைய மற்றும் இந்தியாவின் ஆளும் வர்க்கங்களுக்கு, புலிகள் பற்றிய அதன் வர்க்க உள்ளடக்கத்தில் முரண்பாடு கிடையாது. மாறாக அந்த நாடுகளின் சுரண்டும் வர்க்கம், சுதந்திரமாக சுரண்ட புலிகளின் மாபியா நடவடிக்கைகள் தடையாக இருக்கின்றது. இதனால் அதை அமைதியாக தீர்த்துக்கொள்ள, அந்த வர்க்கங்கள் தமக்குள் முனைப்புக் கொள்கின்றது.


சிலர் புலிகள் அதீதமாக மேற்கை சார்ந்ததாக நம்பவைக்க முனைகின்றனர். இந்தியாவுக்கு எதிரானதாக காட்ட முனைகின்றனர். சுரண்டும் வர்க்கத்தின் தரகுத்தன்மையின் குறிப்பான நிலையை, பொதுவானதுக்கு பொருத்த முனைவதாகும். எந்த சுரண்டும் வர்க்கத்தின் நலனுக்காக செயல்படுவது என்ற முரண்பாடாகும். ஏகாதிபத்திய முரண்பாடுகள், பிராந்திய முரண்பாடுகளின் அடிப்படையில் இது உள்ளது. இது பொதுவான இன்றைய உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலில் நட்பு முரண்பாடாகவே உள்ளது. இதில் ஒன்றை சார்ந்து நிற்க முனைதல், சுரண்டும் தரகு முதலாளிகளின் இருத்தலாகும். இது இந்தியாவின் தரகு முதலாளிகளுக்குள்ளும் காணப்படுகின்றது. இது எங்கும் தழுவிய ஒரு முரண்பாடு. புலிகள் பொதுவான மேற்கத்தைய சார்பும், உள்ளார்ந்த அதனுடன் இந்திய சார்பு நிலையும் கூட காணப்படுகின்றது.


சுரண்டும் வர்க்கத்தின் குறிப்பான நலன்கள் சார்ந்த போக்காகும். இதுவே பகை முரண்பாடாக, ஆளும் வர்க்க மோதலாக மாறுவது உண்டு. இன்று இலங்கை விவகாரத்தில் இது பகை முரண்பாடாக செயல்படவில்லை. இந்தியாவின் ஆளும் வர்க்கம், ஏகாதிபத்திய நலன்களுடன் ஒன்று கலத்தலிலுள்ள சொந்த வர்க்க முரண்பாட்டை களைவதற்கான அதனுள்ள முரண்பாடு, புலிகள் விடையமாக இருப்பதில்லை. இது மிகையான கற்பனை. ஆனால் அப்படி இருப்பதாக புலிகள், புலிகள் அல்லாத பலரும் நம்ப முனைகின்றனர். புலியை மையமாக வைத்து, சர்வதேச நிகழ்ச்சியை குருட்டுக் கண்ணால் புஞ்சிப் பார்ப்பதன் விளைவு இது.


குட்டிபூர்சுவா இயக்கமாக தொடங்கி தரகு முதலாளிய இயக்கமாக மாறிய புலிகள், மேற்கு சார்பு நிலையை மேற்கொள்கின்றது. இது எந்த விதத்திலும் இந்திய ஆளும் வர்க்க சுரண்டல் நலனுக்கு முரணானதல்ல. தரகு முதலாளியப் புலிகள் இந்த வர்க்க சார்புத் தன்மையை அரசியல் நடைமுறையாக்க முடியாது போன நிலையில், ஒரு மாபியாக் குழுவாக மாறிவிட்டது. அது தரகு முதலாளிய வர்க்க நலனையும் இன்று பிரதிபலிப்பதில்லை. தரகு முதலாளிய வர்க்க எல்லையைக் கடந்த அதன் மாபியாத்தனம், உலகமயமாதலுக்குள் எப்படி புகுந்து கொள்ளை அடிப்பது என்ற எல்லைக்குள் அது தானாக சீரழிந்துவிட்டது. அது மாபியாத்தனத்தை பாதுகாக்க, மக்களுக்கு எதிரான ஒரு தேசியத்தை அரசியல் கோரிக்கையாக வைத்து, பாசிசமாக தன்னை அலங்கரிக்கின்றது.


உலகமயமாதலின் சுரண்டும் வர்க்கங்கள் இந்த மாபியா குழுவைப் பயன்படுத்தி நீச்சலடிப்பதில்லை. அதேபோல் உலகமயமாதல் என்ற சுரண்டும் வர்க்கத்தை, புலிகள் தமக்கு தமது மாபியாத் தனத்துக்கும் பயன்படுத்த முடியாது. சுரண்டும் வர்க்கத்தின் உள்ளான முரண்பாடுகள் எங்கும் தழுவியது. இது சிறப்பாக இந்தியா மேற்கு என்று மட்டும் பிரிந்து காணப்படுவதில்லை.


இந்தியா பிராந்திய ஆதிக்க சக்தியாக இருத்தல் என்பது, உலகமயமாதல் நலனுக்கு முரணானதல்ல. உலகமயமாதலில் உள்ளார்ந்த வர்க்கத்தின் நலனை அடிப்படையாக கொண்டே, பிராந்திய ஆதிக்கத்தை செலுத்த முனைகின்றது. மற்றைய ஆதிக்க சக்திகளுடனான முரண்பாடு என்பது, இன்றைய உலகமயமாதலில் போக்கில் பகை முரண்பாடானதல்ல. மாறாக சுரண்டும் வர்க்கங்களிடையேயான நட்பு முரண்பாடுதான். இதில் புலிகள் விடையத்தில், புலிகளை கையாள்வதில் முரண்பாடுகள் உள்ளதாக காண்பதும் காட்டுவதும் சுத்த அபத்தம்.


இலங்கையில் எந்தளவில்? எப்படி? மேற்கத்தைய மற்றும் இந்திய ஆதிக்கம் நீடிப்பது என்பது, உலகமயமாதல் பொருளாதார நலனுக்கு முரணாக செயல்படுவதில்லை. அப்படி ஒரு முரண்பாடு ஏற்படும் போது, அதுவே இரண்டு நாடுகளுக்கு இடையேயான ஒரு யுத்தமாக மாறுகின்றது.


சிலர் இலங்கையை பொருளாதார ரீதியாக சுரண்டுவதற்குரிய நாடல்ல என்கின்றனர். மாறாக இராணுவ தளம் சார்ந்தது என்கின்றனர். இதன் மூலம் ஏகாதிபத்திய இந்திய முரண்பாட்டை காட்ட முனைகின்றனர். இலங்கை இராணுவ ரீதியானதாக மட்டுமல்ல, பொருளாதார ரீதியாகவும் சுரண்டலுக்குரிய ஒரு நாடாகவே உள்ளது. இராணுவ ரீதியானதும், சர்வதேச கடல் போக்குவரத்து சார்ந்தும் இலங்கைக்கு உள்ள முக்கியத்துவம், என அனைத்தும் உலகமயமாதலின் பிரதான சுரண்டும் வர்க்கத்தின் பொது நலனுடன் பின்னிப்பிணைந்தது. இதை பகை முரண்பாடாக, உலகமயமாதலில் செயல்படும் சுரண்டும் வர்க்கங்கள் கையாள்வது கிடையாது.


அனைத்தும் தழுவிய முரண்பாடு எங்கும் எதிலும் உண்டு என்பதும், அதை பகை முரண்பாடாக மட்டும் பூதக்கண்ணாடி கொண்டு தேடிக் காட்டுவது அரசியல் அபத்தமாகும். பிராந்திய ரீதியான முரண்பாடுகளை முன்னிலைப்படுத்தி, பகையாக மட்டும் திரித்துக்காட்டுவது அதை விட அபத்தமாகும். முரண்பாடுகள் என்பது, தனித்து ஒன்றாக மட்டும், அது மட்டும், அதுவே முழித்துக் கொண்டிருப்பதில்லை அது பலவாக இருப்பதுடன், ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்ததாகவும் முன்னிலைக்குரிய இடத்துக்கு மாறிச் செல்லுகின்றது.


புலிகளின் பாத்திரம் என்பது, அதன் எஞ்சிய அரசியல் அடிப்படையை தகர்த்து வருகின்றது. வெறும் லும்பன் மாபியா அராஜக குழுவாக, அரசியல் ரீதியாக பாசிட்டுகளாக மாறிவிட்டனர். இதன் வர்க்க அடிப்படை என்பது குறுகி குட்டி இராணுவத் தளபதிகளின் நலன்களாகி சீரழிந்துவிட்டது. இது தன்னை தற்பாதுகாத்துக் கொள்ளும் இராணுவ மற்றும் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுகின்றது. சினிமா பாணியிலான கதாநாயக நடவடிக்கையின் மூலம், தனது இருப்பை தக்கவைக்க முனைகின்றது. ஒரு வர்க்கத்தின் சுரண்டல் நலன் என்ற, அரசியல் அடிப்படையில் செயல்படுவது கிடையாது. அராஜகவாத லும்பன்தன சாகசத்தில், தனது இருப்பு சார்ந்த போராட்டத்தை நடத்துகின்றது. இந்தக் குழுவின் அராஜகவாத லும்பன் செயலை, மேற்குடன் அல்லது இந்தியாவுடன் இணைத்துக் காட்டுவது, புலிகளைப் போல் அரசியலற்ற வெற்றுத் தனமாகும்.


Friday, April 13, 2007

உங்களை அழைக்கிறது கலந்துரையாடல்

காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பு: பத்தில் ஒன்பது பழுதில்லை

காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பு: பத்தில் ஒன்பது பழுதில்லை


16 ஆண்டு காலச் சட்டப் போராட்டத்திற்குப் பிறகு காவிரி நடுவர் மன்றம், காவிரி நதி நீரைப் பகிர்ந்து கொள்வதில் ஒருமனதான இறுதித் தீர்ப்பை அளித்திருக்கிறது. காவிரியில் ஆண்டுக்கு 74,000 கோடி கன அடி நீர் கிடைக்கும் என்ற மதிப்பீட்டை (நூற்றுக்கு) 50 சதவீதம் நம்பலாம் என்ற அடிப்படையில், கர்நாடகத்திற்கு 27,000 கோடி கன அடி நீரும்; தமிழகத்திற்கு 41,900 கோடி கன அடி நீரும்; கேரளாவிற்கு 3,000 கோடி கன அடி நீரும்; புதுச்சேரிக்கு 700 கோடி கன அடி நீரும் இறுதித் தீர்ப்பில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இப்பகிர்வு போக, எஞ்சியிருக்கும் நீரில் 1,000 கோடி கன அடி நீர் சுற்றுப்புறச் சூழலுக்கும்; தவிர்க்க இயலாமல் கடலில் கலப்பது 400 கோடி கன அடி நீர் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பில், கர்நாடகம், தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 20,500 கோடி கன அடி நீர் தர வேண்டும்; அதிலிருந்து தமிழகம் புதுச்சேரிக்கு 600 கோடி கன அடி நீர் தரவேண்டும். கர்நாடகம் தர வேண்டிய நீரின் அளவு மேட்டூரில் அளவிப்பட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. தற்பொழுது வழங்கப்பட்டுள்ள இறுதித் தீர்ப்பில், கர்நாடகம் தமிழகத்திற்கு, சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புக்குத் தேவைப்படும் 1,000 கோடி கன அடி நீரையும் சேர்த்து, 19,200 கோடி கன அடி நீர் தர வேண்டும்; கர்நாடகம் தர வேண்டிய நீரின் அளவு, மேட்டூருக்கு மேலே, கர்நாடகம் தமிழகம் எல்லையில் உள்ள பில்லிகுண்டலு என்ற இடத்தில் அளவிடப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பங்கில், கர்நாடக மாநிலம் தரும் 18,200 கோடி கன அடி நீர் போக, மீதமுள்ள 23,700 கோடி கன அடி நீர் தமிழகப் பகுதிகளில் காவிரி நதியில் கிடைப்பதாகும்.


கன்னட இனவெறியர்களோ, தமிழகத்தின் பங்கு முழுவதையும் கர்நாடகமே தரவேண்டும் என்பது போல தீர்ப்பு வந்திருப்பதாகவும்; கீழ்மடைக்காரனைவிட, மேல்மடைக்காரனுக்குக் குறைவான நீரே ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அவதூறு பிரச்சாரத்தை நடத்தி வருகின்றனர். தீர்ப்பின் உண்மை விவரத்தை விவசாயிகளுக்கு விளக்க வேண்டிய மாநில அரசும் தீர்ப்பில் கர்நாடகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டு விட்டதாகப் பொய் சொல்வதன் மூலம் தமிழர்களுக்கு எதிரான இனவெறி நடவடிக்கைகளுக்குத் தூபம் போட்டு வருகிறது.


கர்நாடகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற நாடகதிரைப்படக் கலைஞரும், ஞானபீட விருது பெற்ற நாடக ஆசிரியருமான கிரீஷ் கர்னாட், தீர்ப்பை கர்நாடகம் மதிக்க வேண்டும் என வெளிப்படையாகக் கூறியதற்காகவே, அவரின் உருவ பொம்மை கொளுத்தப்பட்டது. கர்நாடக இனவெறியர்களின் இப்பாசிசப் போக்கின் காரணமாகவே, அம்மாநிலத்தில் தீர்ப்பை ஆதரிப்போரின் குரல்கள், பத்திரிகைகளுக்கு எழுதப்படும் வாசகர் கடிதம் பகுதியைத் தாண்டி வெளியே கேட்கவில்லை.


1934 தொடங்கி 1980 வரையிலான காலகட்டத்தில், கர்நாடகம் உபயோகித்திருக்கும் காவிரி நீரின் குறைந்தபட்ச சராசரி அளவு 11,840 கோடி கன அடி; அதிகபட்ச சராசரி அளவு 19,070 கோடி கன அடி. கர்நாடகம், தனது காவிரி பாசனப் பரப்பைத் தன்னிச்சையாக விரிவாக்கிக் கொண்ட பிறகு, 198090 காலகட்டத்தில், அம்மாநிலம் பயன்படுத்தியிருக்கும் காவிரி நீரின் சராசரி அளவு 28,030 கோடி கன அடியாகும். (ஆதாரம்: தமிழகம்: நதிநீர்ப் பிரச்சினைகள் பழ.நெடுமாறன், பக்:107) இப்புள்ளி விவரத்தோடு ஒப்பிட்டால், இறுதித் தீர்ப்பில் கர்நாடகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 27,000 கோடி கன அடி நீர் என்பது முற்றிலும் நியாயமான பங்கீடாகும்.


இது ஒருபுறமிருக்க, இடைக்காலத் தீர்ப்பில், கர்நாடக மாநில அரசு தனது பாசனப்பரப்பை 11.2 இலட்சம் ஏக்கருக்கு மேல் விரிவாக்கக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், கர்நாடக மாநில அரசோ, இத்தடையைக் கண்டு கொள்ளாமல், தனது பாசனப் பரப்பை விரிவாக்கிக் கொண்டே சென்றது. இறுதித் தீர்ப்பில், கர்நாடகா தடையை மீறி விரிவாக்கம் செய்த பாசனப் பரப்பையும் உள்ளடக்கி 18.85 இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பிற்குப் பாசனம் அளிக்க உரிமை வழங்கப்பட்டுள்ளது.


இந்தச் சாதகமான அம்சங்களைக் கருத்தில் கொண்டுதான் காவிரி நடுவர் மன்றத்தில் கர்நாடகா சார்பாக வாதாடிய வழக்குரைஞர் ஃபாலி.எஸ். நாரிமன், கர்நாடக மாநில தலைமை வழக்குரைஞர் இருவரும், ""இத்தீர்ப்பு நியாயமானது'' எனக் கூறியுள்ளனர். எதிர்க்கட்சிகள் அவர்களின் கருத்துக்கு எதிராகச் சட்டசபையில் சாமியாடிய பிறகுதான், கர்நாடக மாநில அரசு அவர்களின் கருத்தை மறுத்துப் பேசியதோடு, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி, தீர்ப்பை முற்றிலும் நிராகரிப்பதாக அறிவித்திருக்கிறது.


···


கர்நாடகாவைப் போலன்றி, தமிழகத்தில் இத்தீர்ப்பிற்கு அரசியல் கட்சிகள் இயக்கங்கள் விவசாய சங்கங்கள் மத்தியில் விமர்சனத்துடன் கூடிய ஆதரவும், எதிர்ப்பும் கிடைத்திருக்கிறது.


நடுவர் மன்றத்தில் நடந்த வழக்கில், கர்நாடகம் தமிழகத்திற்குத் தரவேண்டிய நீரை மேட்டூரில்தான் அளவிட வேண்டும் எனத் தமிழகம் கோரியிருந்தது. கர்நாடகம்தான், பில்லிகுண்டலுவை நீர் அளக்கும் இடமாகக் கோரியது. இறுதித் தீர்ப்பு கர்நாடகாவிற்குச் சாதகமாக வந்திருக்கிறது என்பது தீர்ப்பை எதிர்ப்பவர்களின் வாதங்களுள் ஒன்று.


இறுதித் தீர்ப்பில் பில்லிகுண்டலு தற்காலிகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும், திறந்துவிடப்படும் நீரை அங்கு அளவிட்டு அறிவிக்கப் போவது கர்நாடக அரசு கிடையாது; மைய அரசின் நீர் வள கமிசன்தான் நீரை அளவிட்டு அறிவிக்கப் போகிறது. சர்வதேச அளவுகோலின்படி பில்லிகுண்டலுவில் நீர் அளக்கப்படும் எனக் கூறப்படுவதால், மேட்டூரில் நீரை அளந்தபோது தமிழகம் கர்நாடகாவிற்கு இடையே ஏற்பட்ட முரண்பாடுகளும், குழப்பங்களும் நீக்கப்படுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், முரண்பட்ட இரண்டு கட்சிக்காரர்களிடையே ஏற்படும் மோதலைத் தீர்த்து வைக்க மத்தியஸ்தரை நாடவேண்டும் என்ற நடைமுறைபடி பார்த்தால், பில்லிகுண்டலுவையோ அல்லது இரு மாநிலங்களுக்குமான எல்லைப் பகுதியில் வேறொரு இடத்தையோ தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு இறுதித் தீர்ப்பில் கூறப்பட்டிருப்பதை நியாயமானதாகத்தான் பார்க்க முடியும்.


பில்லிகுண்டலுவுக்கும், மேட்டூருக்கும் இடையே உள்ள தமிழகப் பகுதிகளில் ஆண்டொன்றுக்கு 2,500 கோடி கன அடி நீர் காவிரியில் கிடைப்பதாக தமிழக அரசே நடுவர் மன்றத்திடம் கூறியிருக்கிறது. இந்தப் புள்ளி விவரப்படி பார்த்தால், கர்நாடகம் இடைக்காலத் தீர்ப்பை அமல்படுத்துவதற்கு, தனது மாநில எல்லையான பில்லிகுண்டலுவில் 18,000 கோடி கன அடி நீரைத் திறந்துவிட்டாலே, மேட்டூரில் (18,000 + 2,500 = 20,500 கோடி கன அடி) கணக்கு நேராகி விடும். தற்பொழுது இறுதித் தீர்ப்பின்படி, கர்நாடகம், சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ள 1,000 கோடி கன அடி நீர் போக, 18,200 கோடி கன அடி நீரை தமிழகத்தின் பங்காக பில்லிகுண்டலுவில் திறந்துவிட வேண்டும்.


இடைக்காலத் தீர்ப்பின்படி புதுச்சேரிக்குத் தரவேண்டிய பங்கு போக, தமிழகத்திற்கு மேட்டூரில் 19,900 கோடி கன அடி நீர் ""கிடைத்தது'' என்றால், தற்பொழுது, புதுச்சேரியின் பங்கு போக, 20,000 கோடி கன அடி நீர் கிடைக்கும்.


இது, இடைக்காலத் தீர்ப்பில் ஒதுக்கப்பட்டதை விடக் கொஞ்சம் அதிகமானது என்ற போதிலும், தமிழகப் பகுதியில் 2,500 கோடி கன அடிக்குக் குறைவாகவே நீர் கிடைத்தால் (தீர்ப்பு வெளிவந்த பிறகு தமிழக அரசு மேட்டூருக்கும் பில்லிகுண்டலுவுக்கும் இடையே 1,700 கோடி கன அடி நீர்தான் கிடைக்கும் எனக் கூறத் தொடங்கியிருக்கிறது) இடைக்காலத் தீர்ப்பைவிடக் குறைவான நீரே கிடைக்கும். எனினும், இடைக்காலத் தீர்ப்பை மட்டுமே அளவுகோலாக வைத்துக் கொண்டு, இறுதித் தீர்ப்பைப் பரிசீலிப்பது குருட்டுத்தனமானது.


காவிரியில் கிடைக்கும் மொத்த நீரில் (74,000 கோடி கன அடி) 20 சதவீதப் பங்கு (கிட்டத்தட்ட 14,300 கோடி கன அடி) கேரளாவின் கபினி, பவானி, பம்பாறு நீர் பிடிப்புப் பகுதியில் இருந்துதான் கிடைக்கிறது. இந்த உண்மையைக் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் கேரளாவிற்கு 3,000 கோடி கன அடி நீர் இறுதித் தீர்ப்பில் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, கேரளாவிற்கு அநியாயமாக நீர் ஒதுக்கப்பட்டு விட்டதாக இனவாதிகள் புலம்புவதற்கு அடிப்படையே கிடையாது.


1901இல் தமிழகத்தில் காவிரி பாசனப் பரப்பு 13.45 இலட்சம் ஏக்கராக இருந்தது. இது, 1928இல் 14.44 இலட்சம் ஏக்கராக அதிகரித்தது. இந்தக் காலக் கட்டத்தில் கையெழுத்தான 1924 ஒப்பந்தத்தின்படி, தமிழகம் மேட்டூர் திட்டத்தின் கீழ் மேலும் 3.2 இலட்சம் ஏக்கர் பாசனப் பரப்பை விரிவாக்கிக் கொள்ள அனுமதிக்கப்பட்டது. ஆனால், தமிழகமோ, 19511961 கால கட்டங்களில் நிறைவேற்றப்பட்ட கீழ் பவானி திட்டம், மேட்டூர் கால்வாய் திட்டம், அமராவதி, புள்ளம்பாடி, கட்டளைக் கால்வாய் திட்டம் ஆகியவற்றையும் பயன்படுத்தி, 6.4 இலட்சம் ஏக்கர் அளவிற்கு பாசனப் பரப்பை விரிவாக்கிக் கொண்டது.


""1924 ஒப்பந்தம் இத்திட்டங்களை அனுமதிக்கவில்லை'' என அப்போதைய மைசூர் அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. ""மேட்டூர் கால்வாய் திட்டம் மேட்டூர் ஒப்பந்தத்தின் கீழ்தான் வருகிறது. புதிய கட்டளைக் கால்வாய், புள்ளம்பாடி கால்வாய் திட்டங்கள் மூலம் விரிவாக்கப்படும் பாசனப்பரப்பிற்கு உபரி நீரைத்தான் தமிழகம் பயன்படுத்தும்; கூடுதல் நீர் கேட்க மாட்டோம்'' என மைய அரசின் திட்டக் கமிசனிடம் உறுதியளித்துத்தான், தமிழக அரசு இத்திட்டங்களை நிறைவேற்றியது. இதன் விளைவாக, 1971இல் தமிழகத்தில் காவிரிப் பாசனப் பரப்பு 25.30 இலட்சம் ஏக்கராகவும்; 1990இல் 25.80 இலட்சம் ஏக்கராகவும் அதிகரித்தது;


""மொழி வழி மாநிலங்கள் 1956இல் ஏற்படுத்தப்பட்ட பிறகு, தமிழகத் திட்டங்களுக்கு கர்நாடகமும், கர்நாடகத் திட்டங்களுக்குத் தமிழகமும் எதிர்ப்புகளைத் தெரிவிக்க ஆரம்பித்தன'' எனக் குறிப்பிடுகிறார், காவிரி காப்புக் குழுவின் அமைப்பாளரான, பூ.அர. குப்புசாமி (ஆதாரம்: காவிரி: திராவிட இயக்க அரசியல் தலைமையின் தோல்வி, பக்.15)


காவிரிப் பிரச்சினையின் இந்த அம்சத்தை கணக்கில் எடுத்துக் கொண்டுதான், நடுவர் மன்றம், 1924க்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட பாசனப் பரப்பு 15.20 இலட்சம் ஏக்கர்; 1924 ஒப்பந்தத்தின்படி அனுமதிக்கப்பட்ட பாசனப் பரப்பு 6.20 இலட்சம் ஏக்கர்; ஒப்பந்தத்திற்கு அப்பால் விரிவாக்கம் செய்யப்பட்டாலும், தகுதியின் அடிப்படையில் அனுமதிக்கப்படும் பரப்பு 2.06 இலட்சம் ஏக்கர்; சிறு பாசனத்தின் கீழ் வரும் பரப்பு 1.25 ஏக்கர் பரப்பு என்ற அடிப்படையில் தமிழகத்தின் பாசனப் பரப்பை 24.71 இலட்சம் ஏக்கர் எனத் தீர்மானித்திருக்கிறது.


எதிர்கால விரிவாக்கத்தையும் கணக்கில் கொண்டு, கர்நாடகாவின் காவிரி பாசனப் பரப்பை 27.28 இலட்சம் ஏக்கராக அனுமதிக்கக் கோரிய கர்நாடகத்தின் பாசனப் பரப்பு, இறுதித் தீர்ப்பில் 18.85 இலட்சம் ஏக்கராகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


தமிழக அரசு, நடுவர் மன்றத்தில் தனக்கு 56,200 கோடி கன அடி நீர் வேண்டும் எனக் கோரியது; கர்நாடகம் தனக்கு 46,500 கோடி கன அடி நீர் வேண்டும் எனக் கோரியது. கேரளாவும், புதுச்சேரியும் தத்தமது மாநிலங்களுக்கு முறையே 9,900 / 900 கோடி கன அடி நீரைக் கோரியிருந்தன. இதன்படி தண்ணீரை ஒதுக்க வேண்டும் என்றால் காவிரியில் 1,13,500 கோடி கன அடி நீர் கிடைக்க வேண்டும். ஆனால், காவிரியிலோ, 50 சதவீத நம்பகத்தன்மை அடிப்படையில் (இரண்டு ஆண்டுகளில் ஒரு ஆண்டு எதிர்பார்க்கப்படும் தண்ணீர் கிடைக்கும் என்ற அளவுகோலின்படி) 74,000காடி கன அடி நீர்தான் கிடைக்கிறது. 75 சதவீத நம்பகத்தன்மை அடிப்படையில் (நான்கு ஆண்டுகளில் மூன்று ஆண்டுகள் எதிர்பார்க்கப்படும் தண்ணீர் கிடைக்கும் என்ற அளவுகோலின்படி) 67,100 கோடி கன அடி நீர்தான் கிடைக்கும்.


""ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கின்ற அனுபவத்தைக் கொண்டு, உபரி நீரை (ஒப்பந்தம் எதிர்பார்த்ததை விடக் கூடுதலாக வரும் நீரை) எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்று மறு ஆய்வு செய்ய வேண்டும்'' என 1924 ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், 1970களிலேயே காவிரி நதி நீரில் 92 சதவீத நீர் பயன்பாட்டுக்கு வந்துவிட்டதால், உபரி நீர் என்ற பேச்சுக்கே வழி இல்லாமல் போய்விட்டது. இதனால் 1924 ஒப்பந்தத்தில் கூறியபடி மறுஆய்வு செய்யும் வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது.


காவிரி நதி நீரைப் பயன்படுத்தும் மாநிலங்களின் உரிமையை நிலைநாட்டும் அதேசமயம், மாறியுள்ள புதிய சூழ்நிலையில், பற்றாக்குறையுள்ள நதிநீரை, அதைப் பயன்படுத்தும் மாநிலங்களுக்கு இடையே எப்படி நியாயமாகப் பகிர்ந்து கொள்வது என்பதுதான் காவிரி சிக்கலின் சாரம். இந்த அடிப்படையில் இருந்துதான் நடுவர் மன்றத்தின் இறதித் தீர்ப்பைப் பரிசீலிக்க வேண்டும்.


· ""காவிரி தங்களுக்கு மட்டுமே சொந்தம்'' என்று கூப்பாடு போடுவதன் மூலம், கர்நாடகா காவிரியின் மீதான தமிழகத்தின் உரிமையை அங்கீகரிக்க மறுத்து வந்தது. இறுதித் தீர்ப்பு, ""காவிரியை, அதனைப் பயன்படுத்தும் எந்தவொரு மாநிலமும் தனியுரிமை கொண்டாட முடியாது'' எனக் கூறியிருப்பதன் மூலம், கன்னட இனவெறிக்கு ஆப்பறைந்திருக்கிறது.


· ""1892 மற்றும் 1924 ஒப்பந்தங்கள் இரண்டுமே செல்லுபடியாகாது; அவை எங்களைக் கட்டுப்படுத்தாது'' என்று கர்நாடகமும், கேரளமும் கூறி வந்ததை, இறுதித் தீர்ப்பு நிராகரித்து விட்டது. அதேசமயம், புதிய நிலைமைகளுக்கு ஏற்ப அந்த ஒப்பந்தங்களை மீளாய்வு செய்து, இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், அந்த ஒப்பந்தங்களின் இடத்தை இந்தத் தீர்ப்பு எடுத்துக் கொண்டு விட்டதாகக் கூறப்பட்டுள்ளதை நியாயமான சட்டபூர்வ நடவடிக்கையாகத்தான் பார்க்க வேண்டும்.


· ""தனக்குப் போக எஞ்சியதுதான் தமிழகத்திற்கு'' என்பதுதான் காவிரிநீரைப் பகிர்ந்து கொள்வதில் கர்நாடகாவின் நடைமுறையாக இருந்து வந்திருக்கிறது. கர்நாடகம், தமிழகத்திற்குத் தர வேண்டிய பங்கை, மாதாந்திர தவணை அடிப்படையில் திறந்துவிட வேண்டும் என இறுதித் தீர்ப்பில் கூறியிருப்பதன் மூலம், கர்நாடகத்தின் அடாவடித்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.


· கர்நாடகம், காவிரியில் புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தினாலும், அதனால் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள பங்கு நீர் குறைந்துவிடக் கூடாது என்பது தீர்ப்பில் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.


· குறுவைப் பயிர் சாகுபடிக்கு 10,100 கோடி கன அடி நீர் தேவைப்படும் எனக் கூறப்படுகிறது. இறுதித் தீர்ப்பில், குறுவை சாகுபடி நடக்கும் ஜூன் தொடங்கி செப்டம்பர் மாதத்திற்குள் 13,400 கோடி கன அடி நீர் திறந்துவிட வேண்டும்; இந்த நீரை அந்தந்த மாதங்களில் ஒதுக்கப்பட்ட அளவின்படி, ஒவ்வொரு மாதமும் 10 தவணைகளில் திறந்துவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருப்பதால், குறுவைப் பயிர் சாகுபடி சூதாட்டமாக மாறிவிடாமல், உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளது.


· தமிழக அரசு காவிரிப் பாசன வாய்க்கால்களில் தூர் வாரியதற்கு மேல், எந்தவிதமான நவீன மேம்பட்ட வசதிகளையும் செய்து கொடுத்ததில்லை. காவிரி வழக்கு நடப்பதைக் காட்டியே, காவிரிப் பாசன வாய்க்கால்களையும், ஏரிகளையும் நவீனப்படுத்த மறுத்து வந்தது. வடகிழக்குப் பருவமழை பெய்யும் காலங்களில் வெள்ளத்தால் ஏரிகள் கண்மாய்கள் உடைத்துக் கொண்டு, பயிர்களும், நிலமும் சேதாரமாவதைத் தடுப்பது மட்டுமல்ல; அந்த உபரி நீரைத் தேக்கி வைத்துப் பயன்படுத்தவும் நவீனமயம் அவசியம்.


காவிரியில் தண்ணீர் விடாமல் முரண்டு பிடிப்பதற்கு வேண்டுமானால், கர்நாடகாவைக் குற்றம் சொல்லலாம்; ஆனால், வெள்ளக் காலங்களில் டெல்டா விவசாயிகள் நட்டமடைவதற்கு தமிழக அரசைத் தவிர, வேறு யாரைக் குற்றம் சொல்ல முடியும்? காவிரியில் தண்ணீர் இல்லாமல் தரிசாகப் போடப்படும் நிலங்களின் பரப்பைவிட, வெள்ளத்தால் நாசமாகும் வயல் பரப்பு அதிகம்.


இறுதித் தீர்ப்பின் மூலம் காவிரிப் பாசன வாய்க்கால்களை நவீனப்படுத்துவதற்கு இருந்துவந்த ""தடை'' நீங்கிவிட்டது. இந்த நவீனமயம் காவிரிப் பாசன விவசாயிகளின் நலனுக்காக மேற்கொள்ளப்பட வேண்டுமே தவிர, உலக வங்கியின் உத்தரவுப்படி தண்ணீர் வியாபாரிகளின் இலாபத்திற்காக மேற்கொள்ளப்படக் கூடாது என்பதை தமிழக அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும்.


· தீர்ப்பில், காவிரி டெல்டா பகுதியில் கிடைக்கும் நிலத்தடி நீரையும் சேர்த்துக் கணக்கிட வேண்டும் என்ற கர்நாடகத்தின் வாதம் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டுள்ளது.


· கேரளத்தில் போதிய அடிக்கட்டுமான வசதிகள் இல்லாததால் அம்மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 3,000 கோடி கனஅடி நீரையும் அம்மாநிலம் பயன்படுத்த தற்பொழுது வாய்ப்பு இல்லை. எனவே, கேரளா பயன்படுத்த முடியாத நீரைத் தனக்கு ஒதுக்க வேண்டும் என்று கர்நாடகம் கோரியது. இறுதித் தீர்ப்பில் கர்நாடகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, அந்த நீர் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்திற்குத் தற்காலிகமாக 2,000 முதல் 2,500 கோடி கன அடி நீர் கூடுதலாகக் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


· மேல்மடை மாநிலமான கேரளா, கீழ்மடை மாநிலங்களான கர்நாடகமும், தமிழகமும் பாதிக்கப்படும் வகையில் எந்தத் திட்டத்தையும் நடைமுறைபடுத்தக் கூடாது என்பது சுட்டிக் காட்டப்பட்டு, கேரளா அனுமதிக்குமாறு கோரியிருந்த மூன்று திட்டங்களை நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பில் நிராகரித்து விட்டது.


இவை போன்ற சாதகமான அம்சங்கள் ஒருபுறமிருந்தாலும், இறுதித் தீர்ப்பில் குறைபாடுகளும், குழப்பங்களும் காணப்படுகின்றன.


காவிரியில் கிடைக்கும் நீர் 50 சதவீத நம்பகத் தன்மை அடிப்படையிலேயே தீர்மானிக்கப்பட்டிருப்பதால், இரண்டு வருடங்களில் ஒரு ஆண்டு எதிர்பார்க்கப்படும் தண்ணீர் கிடைக்கும் எனக் கூற முடியாது. எனவே, பற்றாக்குறையையும் எப்படி பகிர்ந்து கொள்வது என்பதை உடனடியாகவே தீர்மானிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. தமிழகத்தில் பெய்யும் வடகிழக்குப் பருவமழை மட்டும் பொய்த்தால் எப்படி பகிர்ந்து கொள்வது? கர்நாடகா மற்றும் கேரளாவில் பெய்யும் தென்மேற்குப் பருவ மழை பொய்த்தால் எப்படி பகிர்ந்து கொள்வது? இரண்டு பருவ மழைகளும் பொய்த்தால் எப்படி பகிர்ந்து கொள்வது என்பது பற்றி தீர்மானிக்காமல், பற்றாக்குறை வரும்பொழுது ஒதுக்கப்பட்ட பங்கின்படி பிரித்துக் கொள்ள வேண்டும் என பொத்தாம் பொதுவான சூத்திரத்தைச் சொல்லிவிட்டு, இறுதித் தீர்ப்பு நழுவிக் கொள்கிறது.


காவிரியில் கிடைக்கும் மொத்த நீரில் இருந்து, சுற்றுப்புறச் சூழலுக்காக ஒதுக்கப்பட்ட 1,000 கோடி கன அடி நீரை கழித்த பிறகுதான், மாநிலங்களுக்கிடையே தண்ணீர் பங்கு பிரிக்கப்பட்டிருப்பதாக இறுதித் தீர்ப்பு கூறுகிறது. எனினும், மொத்த நீரில் இருந்து ஏற்கெனவே கழிக்கப்பட்ட 1,000 கோடி கன அடி நீரை, கர்நாடகம் தமிழகத்திற்குத் தரவேண்டிய நீரில் இருந்து மீண்டும் கழித்திருப்பதன் மூலம், அந்த 1,000 கோடி கன அடி நீரை கர்நாடகாவே சேமித்துக் கொள்ளும் வாய்ப்பை இறுதித் தீர்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.


மேலும், கேரளாவிற்குத் தமிழக அணைகளில் இருந்து கொடுக்க வேண்டிய 9,000 கோடி கன அடி நீரும்; கடலில் கலக்கும் 4,000 கோடி கன அடி நீரும் தமிழகத்தின் பங்கில் இருந்து தான் கழிக்கப்படும் என்றால், 41,900 கோடி கன அடி நீரை விடக் குறைவான பங்கே தமிழகத்திற்குக் கிடைக்கும்.


நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை முற்றிலுமாக நிராகரித்திருக்கும் கர்நாடகம், ""பேச்சு வார்த்தை'' என்ற மோசடித்தனத்தை மீண்டும் அரங்கேற்றத் திட்டம் போடுகிறது. இந்த நச்சுச் சூழலுக்குள் இப்போது மட்டுமல்ல; எதிர்காலத்திலும் தமிழகம் சிக்கிக் கொள்ளக் கூடாது.


இறுதித் தீர்ப்பில் தமிழகத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தும் அம்சங்களை நீக்கக் கோரி, நடுவர் மன்றத்தில் மேல் முறையீடு செய்யப் போவதாகத் தமிழக அரசு முடிவெடுத்திருக்கிறது. இந்த மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பை காலந்தாழ்த்தாமல் வழங்கக் கோர வேண்டும். அதுவரை, நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்றவாறு, அதனை உடனடியாக அரசிதழில் வெளியிட வேண்டும்; இறுதித் தீர்ப்பில் கூறியபடி, இத்தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு சுய அதிகாரம் படைத்த கமிட்டிகள் உடனடியாக உருவாக்கப்பட வேண்டும் எனக் கோரித் தமிழக மக்கள் போராடுவதன் மூலம் மட்டுமே, இறுதித் தீர்ப்பில் தமிழகத்திற்குக் கிடைத்திருக்கும் சாதகமான அம்சங்களைத் தக்க வைக்க முடியும்; பாதகமான அம்சங்களை நீக்கவும் முடியும்.


· ரஹீம்

Thursday, April 12, 2007

அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச் சுரைக்காய்கள்

சட்டங்கள், ஆணையங்கள், நடுவர்மன்றங்கள், திட்டங்கள்...
அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச் சுரைக்காய்கள்

ட்டியலின பழங்குடி மக்கள் என்றாலே அவர்களைப் பற்றி நாட்டின் பெரும்பாலானவர்கள், படித்த நகர்ப்புற அறிவாளிகள் கூட ஒரு தவறான கண்ணோட்டம் வைத்திருக்கிறார்கள். அறிவியல் தொழில்நுட்பம், கல்வி பண்பாடு, சமூகப் பொருளாதாரம், நாகரிகம் ஆகியவற்றால் தாங்கள் முன்னேறியவர்கள் என்றும், ஆனால் பழங்குடியினர் என்பவர்கள், மனித நாகரிகமே அறியாத பூர்வகுடியினர்; ஆதி முதற்கொண்டு காடுகளிலேயே பிறந்து, வளர்ந்தவர்கள்; வெளியுலக வளர்ச்சியையே காணாது பின்தங்கிப் போயுள்ளவர்கள் என்றும் இவர்கள் கருதுகின்றனர்.



ஆனால், பட்டியலின பழங்குடி மக்களின் உண்மையான வரலாறோ வேறுவிதமானது. இன்று அவர்கள் பழங்குடி விவசாயிகளாகவும், காடுகளில் கிடைக்கும் பொருட்களைச் சேகரித்து விற்பவர்களாகவும், வேட்டையாடிகளாகவும் வாழ்ந்தாலும், அநாகரிகமானவர்களாகத் தோன்றினாலும், இந்தப் பழங்குடி மக்களின் மூதாதையர்களும் மற்றபிற மக்களைப் போலவே ஒரு காலத்தில் ஒப்பீட்டு ரீதியில் முன்னேறிய விவசாயமும் பொருளாதாரமும், நாகரிகமும் கொண்டிருந்தவர்கள்தாம். சமவெளிகளில் அவர்களிடமிருந்த பண்படுத்தப்பட்ட விவசாய நிலங்களைப் பறித்துக் கொண்டு காடுகளுக்கும் மலைகளுக்கும் விரட்டப்பட்டவர்கள் தாம்.



காடுகள் மீது அரசு ஏகபோக உரிமையை நிறுவிய பிரித்தானிய காலனியவாதிகளுக்கு முன்பிருந்தே, மத்தியகால மன்னர்கள் காலத்திலேயே செழுமையான விவசாயச் சமவெளிகளை நிலப்பிரபுக்கள் கைப்பற்றிக் கொள்வதை அடுத்தடுத்த ஆட்சியாளர்கள் ஊக்குவித்தார்கள்; துணை நின்றார்கள். இதனால் நிரந்தரமான வாழ்விடங்களையும், விவசாய நிலங்களையும் இழந்த மக்கள் மலைச் சரிவுகளிலும், காடுகளிலும் பருவமழைக்கேற்ப பயிர் செய்தும், காடுகளில் கிடைக்கும் தேன், விறகு, சில விதைகள்பழங்களைச் சேகரித்தும், சிறிய விலங்குகளை வேட்டையாடியும் விற்றுப் பிழைத்தனர். கல்வி வசதியின்றியும், நாகரிக வளர்ச்சி குன்றியும் பின்தங்கியவர்கள் ஆனார்கள்.



வளமான மண்வளமும், மழை வளமுமிக்க மலைச் சரிவுகள் அந்நிய மற்றும் இந்தியத் தரகு முதலாளிகளால் கைப்பற்றப்பட்டு காபி, தேயிலை, ஏலம், இலவங்கம் போன்ற விலை உயர்ந்த பணப்பயிர்களின் பண்ணைகளாக மாற்றப்பட்டன. கட்டுமானப் பொருட்களுக்காகவும், காகித ஆலைகளுக்காகவும் காடுகள் சூறையாடப்பட்டன. நவீன ஆலை உற்பத்திக்கான தாதுப் பொருட்களையும், நிலக்கரிகளையும் வெட்டி எடுப்பதற்காகக் காடுகள் அழிக்கப்பட்டன. இந்தத் தொழில்களுக்கான கூலி அடிமைகளாகப் பழங்குடி மக்கள் மாற்றப்பட்டனர்.



காலனிய காலத்திற்கு முன்பிருந்தே நடந்து வரும் இத்தகைய அநீதிகளுக்கு ""ஈடாக''ப் பழங்குடி மக்கள் பட்டியலினமாக அறிவிக்கப்பட்டு இடஒதுக்கீடு என்ற சலுகை மட்டும் தரப்பட்டது. ஆனால், அதன் பிறகு ""தேசியப் பொருளாதார வளர்ச்சி'' என்ற பெயரில் காடுகளையும் மலைகளையும் பழங்குடியின மக்களிடமிருந்து பறிப்பது பன்மடங்கு அதிகரித்து விட்டது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 8.7 சதவீதமானவர்களாகப் பழங்குடி மக்கள் உள்ளனர். இந்த மக்கள் பலநூறு ஆண்டுகளாக வாழும் மலைகளும் காடுகளும் மின் உற்பத்தியைப் பெருக்குவதற்கானஇராட்சத அணைகள் கட்டுவதற்கான ஆறுகள், மிகப் பெரும் அளவிலான தாதுப் பொருட்கள் மற்றும் பிற மூலாதாரங்கள் நிரம்பியிருப்பவை. இம்மக்களை அங்கிருந்து வெளியேற்றினால்தான் உயர்ந்த பொருளாதார வளர்ச்சி விகிதத்தை எட்ட முடியும் என்ற விதமாக ஆட்சியாளர்கள் திட்டமிடுகின்றனர்.



ஆந்திரப் பிரதேசத்தின் கோதாவரி மாவட்டங்களில் கட்டப்பட்டு வரும் போலாவரம் இந்திரா சாகர் பல்நோக்கு நீர்ப்பாசன மின் திட்டம்; விசாகபட்டினம் மாவட்டத்தின் பாக்சைட் சுரங்கத் திட்டம்; நாகார்ஜுனா அணை அருகே அமையவுள்ள உரேனியம் தாதுப்பொருள் ஆலை; ஒரிசாவின் நியாம்கிரி மலைப் பகுதியில் அமையும் வேதாந்தா அலுமினியம் ஆலைக்காக வெட்டப்படும் உலகிலேயே மிகப் பெரிய பாக்சைட் சுரங்கம் மற்றும் பாஸ்கோ இரும்புத் தாது சுரங்கம் ஆகியவற்றால் ஆந்திரா, சட்டிஸ்கார், மற்றும் ஒரிசா மாநிலங்களில் வாழும் பல இலட்சக்கணக்கான பட்டியலின பழங்குடி மக்கள் தமது வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்படுவர்.



ஏற்கெனவே மத்தியப்பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் பாயும் நர்மதா மற்றும் அதன் துணை ஆறுகள் மீது சர்தார் சரோவர் அணைத் திட்டத்தின் கீழ் பல சிறியபெரிய அணைகள் கட்டி முடிக்கப்படும் நிலையில் உள்ளன. இதனால் பல இலட்சம் பழங்குடியின மக்கள் வெளியேற்றப்பட்டு சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்கின்றனர். இந்த வெளியேற்றத்துக்கும், அணைத்திட்டங்களுக்கும் எதிராகவும், மறுவாழ்வு கோரியும் பல ஆண்டுகளாக அவர்கள் போராடுகின்றனர். பழங்குடியின மக்களின் வெளியேற்றம் மற்றும் அணைத் திட்டங்களை நியாயப்படுத்தித் தீர்ப்புகள் வழங்கியுள்ள உச்சநீதி மன்றம் பிறப்பித்துள்ள மறுவாழ்வு ஏற்பாடுகள் எதையுமே செய்யாது மத்தியமாநில அரசுகள் ஏய்த்து வருகின்றன.



ஆந்திராவில் ""சமா'' என்ற அரசு சாரா தொண்டு நிறுவனம், பழங்குடியின மக்கள் அனுபவித்து வரும் பட்டியலிடப்பட்ட பகுதிகளை, தாதுப் பொருட்கள் வெட்டியெடுப்பதற்காக தனியார்களுக்குக் குத்தகைக்கு விடுவதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் 12 ஆண்டுகளாக வழக்கு நடத்தித் தடுத்திருக்கிறது. அதன் அமைப்பாளர் ரெட்டுபிரகடா என்பவர் சொல்கிறார், ""ஒரு பத்து சதவீத வளர்ச்சியைச் சாதிப்பது என்ற பொருளாதாரத் திட்டத்தின் அங்கமாக அணைக்கட்டுகளும் அலுமினிய ஆலைகளும் நிறுவப்பட உள்ளன. பழங்குடியின மக்களின் மொத்த வெளியேற்று விளைவின் வளர்ச்சியை (எணூணிண்ண் ஞீடிண்ணீடூச்ஞிஞுட்ஞுணt ணீணூணிஞீதஞிt ணிஞூ tடஞு tணூடிஞச்டூ ணீஞுணிணீடூஞு எஈக) உயர்த்துவதன் மூலம் இதைச் சாதிக்கப் போகிறார்கள்.''



நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பத்து சதவீதமாக உயர்த்துவது என்ற மன்மோகன் சிங் மாண்டேக் சிங் அலுவாலியா சிதம்பரம் ஆகிய உலகவங்கி, ஐ.எம்.எஃப், மற்றும் உலக வர்த்தகக் கழக எடுபிடிகளின் இலக்கை அடைய முயல்வது இப்படிப்பட்டதாகத்தான் இருக்கிறது.



இந்த உண்மையை மூடிமறைக்கும் வகையில் கடந்த டிசம்பர் மாதம் மத்தியில் இந்திய அரசு ஒரு புதிய சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது. அதற்குத் தோதாக ""பழங்குடியின மக்கள் மற்றும் பாரம்பரிய வனவாசிகள் (வன உரிமைகள் அங்கீகாரம்) சட்டம் 2006'' என்று அதற்கு நயவஞ்சகமான பெயரும் சூட்டியிருக்கிறது. அதற்கு முன்பாக, இந்திய அரசின் சுற்றுச் சூழல் மற்றும் வனங்களுக்கான அமைச்சகம் சுற்றுச் சூழல் தாக்கம் பற்றிய ஒரு புதிய மதிப்பீட்டு அறிவிக்கையையும் கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியிட்டிருக்கிறது.



அந்தச் சட்டத்தின் பெயரும், அறிவிக்கையின் தோரணையும் தோற்றத்தில் பழங்குடியின மக்களுக்குச் சாதகமானதாகவும் சுற்றுச்சூழலையும் வளங்களையும் பாதுகாப்பதற்கானதாகவும் தெரிகின்றன. ஆனால், உண்மையில் இவை உள்ளடக்கத்தில் பழங்குடி மக்களின் உரிமைகளைப் பறிப்பதாகவும், பன்னாட்டு மற்றும் இந்தியத் தரகுத் தொழில்களின் நலன்களுக்காக சுற்றுச் சூழலை நாசப்படுத்துவதாகவும் வனங்களை அழித்துச் சூறையாடுவதாகவும் உள்ளன. மிகப் பிற்போக்கான, நாட்டை மறுகாலனியாக்கும் ஆளும் அரசியல் கூட்டணிக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்றும், அதோடு மதவெறி பாசிச அரசியல் கூட்டணிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி என்றும் பெயர் வைத்திருப்பதைப் போல பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பறித்து அவர்களை அகதிகளாக விரட்டியடிக்கும் சட்டத்திற்குப் ""பழங்குடி மற்றும் பாரம்பரிய வனவாசிகள் வனஉரிமைகள் அங்கீகாரச் சட்டம்'' என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.



நாடு முழுவதும் மொத்தம் 500க்கும் மேற்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் நிறுவுவதற்கு மத்தியமாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன; அவற்றில் 19 மாநிலங்களில் 237 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் ஒப்புதல் பெற்றுவிட்டன. 23 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் ஏற்கெனவே இயங்கத் தொடங்கி விட்டன. 166 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கான நிலங்களைக் கையகப்படுத்துவதற்கான கொள்கை அறிவிக்கை செய்வதற்காக கொள்கை ரீதியிலான முடிவெடுக்கப்பட்டு விட்டது; 63க்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு விட்டன. 237 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக 34,861 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்படுகிறது. இவற்றில் மிகமிகப் பெரும்பாலானவை நடுத்தர, சிறு, குறு விவசாயிகளிடம் இருந்து கைப்பற்றப்படும் விவசாய நிலங்கள். இதனால் கோடிக்கணக்கான விவசாயிகள் நிலவெளியேற்றத்துக்குப் பலியாகிறார்கள்.



தற்போது மத்தியிலோ, மாநிலங்களிலோ ஏதாவது ஒரு வகையில் (தனித்தோ, கூட்டணிகளின் மூலமாகவோ) அரசில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை முன்னிட்டு விவசாயிகளின் நில வெளியேற்றத்துக்குத் துணை போகும் சக்திகளாகவே உள்ளனர். அதேசமயம் தாங்கள் ஆட்சியில் பங்கேற்காத மாநிலங்களில் உள்ள பா.ஜ.க. போன்ற எதிர்க்கட்சிகள்; மகேந்திரா சிட்டி போன்றவற்றுக்கு துணைநின்ற ஜெயலலிதா; மத்திய அரசில் பங்கேற்று அன்புமணி மூலம் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் நிறுவப்படுவதற்குத் துணை நிற்கும் பா.ம.க இராமதாசு; இப்போதைக்கு எதிர்த்தரப்பில் இருக்கும் மமதா பானர்ஜி போன்றவர்கள் விவசாயிகளின் நில வெளியேற்றத்தை எதிர்ப்பதாக நாடகமாடுகிறார்கள்.



ஆனால், இத்தகைய மோசடி, பித்தலாட்டங்கள் எல்லாவற்றிலும் முன்னோடிகளாகத் திகழ்பவர்கள் போலி இடதுசாரிக் கட்சிகள்தாம், அதிலும் குறிப்பாக, போலி மார்க்சிஸ்டு கட்சிதான்! ஏகாதிபத்திய உலகமயமாக்கம் என்பதே "தேச' விரோத, மக்கள் விரோத, ஏகாதிபத்திய மறுகாலனியாக்க நோக்கம் கொண்டதுதான். ஆனால், ஏகாதிபத்திய உலகமயமாக்கம் மனித முகம் கொண்டதாகவும், ""தேசிய'' சுயசார்பு அடிப்படையிலானதாகவும், தொழில் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கானதாகவும் இருக்க வேண்டும் என்றும் எவ்வித அடிப்படையும் இல்லாத வெற்று நிபந்தனையோடு உலகமயமாக்கத்தை போலி கம்யூனிஸ்டுகள் ஏற்கின்றனர். அதேபோல விவசாயிகளைப் பாதிக்காத வகையில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் சவடாலடிக்கின்றனர்.



ஆனால், தாங்கள் ஆளும் மாநிலங்களில், குறிப்பாக மேற்கு வங்கத்தில் பன்னாட்டு மற்றும் உள்நாட்டுத் தரகு முதலாளிகளுக்கு செங்கொடியை நடைபாவாடையாக விரித்து வரவேற்கின்றனர். மத்திய அரசின் தனியார்மயம் தாராளமயம் உலகமயமாக்கல் நடவடிக்கைகளை வெறும் அறிக்கை தீர்மானம் போட்டு எதிர்ப்பதாக நடித்துக் கொண்டே ""தொழில்வளர்ச்சி வேலை வாய்ப்புப் பெருக்கம் பொருளாதார முன்



மேற்கு வங்கம் சிங்கூர்நந்திகிராமத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்காக போலீசை ஏவி பாசிச வெறியாட்டம் போட்டு விவசாயிகளிடமிருந்து விவசாய விளைநிலங்களைப் பறித்துக் கொண்டு வெளியேற்றுகிறார்கள், இந்தப் போலி கம்யூனிஸ்டுகள். குறிப்பாக போலி மார்க்சிஸ்டுகள்தாம் மத்திய அரசு இப்போது கொண்டு வந்திருக்கும் பழங்குடியின மக்கள் மற்றும் பாரம்பரிய வனவாசிகள் சட்டமானது (வன உரிமைகள் அங்கீகாரச் சட்டம்), பழங்குடியின மக்கள் காடுகளில் இருந்து வெளியேற்றப்படுவதைத் தடுக்கும்; அவர்களுடைய உரிமைகளை நிலைநாட்டும் என்று பம்மாத்துச் செய்கிறார்கள்.



""காட்டிலாகா அதிகாரிகளின் ஆணைகள் மூலம் கோலேச்சும் ஆட்சிக்கு இந்தச் சட்டம் சாவுமணியாக இருக்கும்'' என்றும் ""சமூக நீதி உணர்வின் மிகப் பெரிய முன்னெடுப்பாகும்'' என்றும் பிரகாசுகாரத் சீதாராம் யெச்சூரி கும்பலின் முக்கிய உறுப்பினரான பிருந்தா காரத் கூறுகிறார். 1980க்குப் பிந்தைய எல்லா வன ஆக்கிரமிப்பாளர்களையும் வெளியேற்ற வேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் அதை ஏற்று எல்லா ""ஆக்கிரமிப்பாளர்களையும்'' வெளியேற்றுவதாக முடிவு செய்து ஓராண்டுக்குள் 1,68,000 குடும்பங்களை வாஜ்பாய் அரசாங்கம் வெளியேற்றி விட்ட நிலையில், 2004ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஐக்கிய முற்போக்கு அரசாங்கம், இடதுசாரி கூட்டணியின் நிர்பந்தம் காரணமாக எல்லா பழங்குடியின மக்கள் வெளியேற்றத்தையும் முடிவுக்குக் கொண்டு வருவதாக குறைந்தபட்ச பொதுத் திட்டத்தில் சேர்த்துக் கொண்டது; அதன் விளைவாக வந்ததுதான் இந்த வன உரிமைகள் அங்கீகாரச் சட்டம் என்று பீற்றிக் கொள்கிறார் பிருந்தா காரத்.



""பழங்குடியின மக்களை வெளியேற்றுவதை முடிவுக்குக் கொண்டு வருவது'' என்பதைத் தமது குறைந்தபட்ச பொதுதிட்டத்தில் ஒப்புக் கொண்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒரு நகல் மசோதாவைத் தயாரித்தது. ""உண்மையில் அந்த நகல் மசோதா பழங்குடியின மக்களைச் சட்டப்பூர்வமாக வெளியேற்றுவதற்கானதாக இருந்தது. அப்படி ஒரு சட்ட மசோதாவை கொண்டு வராமல் இருந்திருக்கலாம் என்று இடதுசாரிகள் எதிர்ப்பு தெரிவித்த பின்னர், நாடாளுமன்ற கூட் டுக்கமிட்டி அமைக்கப்பட்டது. அது பழங்குடி மக்களின் நலன்களுக்கான எல்லாக் கூறுகளையும் கொண்டிருந்ததாக''க் கூறும் பிருந்தா காரத், நாடாளுமன்றக் கூட்டுக் கமிட்டி அறிக்கையைப் பரிசீலிப்பதற்கான அமைச்சர்கள் குழுவை அரசாங்கம் அமைத்ததாகக் கூறுகிறார். அந்தப் பரிசீலனையில் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் பரிந்துரைகளை ஏற்பதற்கில்லை என்று நிராகரித்து விட்டதாகச் சொன்ன அரசாங்கம், வேறொரு மசோதா தயாரித்தளிப்பதாகக் கூறியது; அப்படிச் செய்வது இன்னும் மோசமாகிவிடும் என்று இடதுசாரிகள் கருதியதால் அமைச்சர்கள் குழுவின் முடிவுகள் அடிப்படையிலேயே ""வன உரிமைகள் அங்கீகாரம்'' என்ற பழங்குடி மக்கள் மற்றும் பாரம்பரிய வனவாசிகளுக்குச் சாதகமான சட்டம் நிறைவேறியது, என்கிறார்.



இருந்தபோதும், ""நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் பரிந்துரைகள் முற்றாக நிராகரிக்கப்படவில்லை; இறுதியில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தையும், ஐ.மு. கூட்டணி அரசு முதலில் முன்வைத்த வரைவு மசோதாவையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே, மாற்றங்கள் புரியும்; இந்த வகையில் இது ஒரு முக்கிய முன்னெடுப்புத்தான்'' என்று பூரித்துப் போகிறார் பிருந்தா காரத். ஆனால், ""பாரம்பரிய வனவாசிகள்'' யார் என்று வரையறுப்பதற்கான இவர்களின் பரிந்துரையை நிராகரித்ததோடு, நாடாளுமன்றத்தில் அவசர கோலத்தில் மசோதா சட்டமாக்கப்பட்டதையும் அவரே ஒப்புக் கொள்கிறார்.



""நாடாளுமன்றக் கூட்டத் தொடர் டிசம்பர் 19ந் தேதி, செவ்வாய்கிழமை நிறைவுற இருந்தது. ஆனால், டிசம்பர் 15ந் தேதி மதியம்தான் நாடாளுமன்றம் முன்பு மசோதா கொண்டு வரப்பட்டது. விவாதம் துவங்குவதற்கு 15 நிமிடங்கள் முன்புதான் மசோதாவில் புகுத்தப்படும் முக்கிய மாற்றங்களை உள்ளடக்கிய அதிகாரபூர்வத் திருத்தங்கள் மக்களவை உறுப்பினர்களுக்குத் தரப்பட்டன. இது ஜனநாயக விரோதமானதென்று தெளிவாகத் தெரிந்தது; மாற்றங்களைப் படித்தறிவதற்கான போதிய கால அவகாசம் மக்களவை உறுப்பினர்களுக்குத் தரப்படவில்லை'' என்கிறார் போலி மார்க்சியக் கட்சியின் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில் பங்கேற்ற பிருந்தா காரத்.



எல்லா ஓட்டுக் கட்சி ஆட்சியாளர்களும் இதே தந்திரத்தைத்தான் பின்பற்றுகிறார்கள் என்பது இந்த போலி மார்க்சிஸ்ட் தலைவி பிருந்தா காரத்துக்குத் தெரியாதா? உலக வர்த்தகக் கழக ஒப்பந்தம், அமெரிக்காவுடனான இராணுவ மற்றும் அணுசக்தி ஒப்ப்தங்கள் போன்ற நாட்டை அடகு வைக்கும் பலவும் நாடாளுமன்றத்தில் விவாதிக்காமலேயே கையொப்பமிட்டு முடிக்கப்பட்டன. இவற்றை எதிர்ப்பதாக போலி கம்யூனிஸ்டுகள் சவடாலடித்துவிட்டு, எல்லாம் முடிந்தபிறகு நாடாளுமன்றத்தில் பிரதமரின் விளக்கத்தை மட்டுமே கேட்டு விட்டு வாய்மூடிக் கொண்டதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன.



இப்போது, நாடாளுமன்றக் கூட்டுக் குழு என்ற பெயரில் கூடி விருந்து தரப்பட்டதும் தங்கள் முயற்சியால் முற்போக்கான வனஉரிமைகள் அங்கீகாரச் சட்டம் வந்துவிட்டதாக பசப்புகிறார்கள். இதே பிருந்தா காரத் கூறுகிறார், ""சுற்றுச் சூழல் மற்றும் காடுகள் அமைச்சகத்தால் உச்சநீதி மன்றத்துக்கு அளிக்கப்பட்ட புள்ளிவிவரப்படி, கடந்த மூன்றாண்டுகளில் அடர்ந்த காடுகள் நிரம்பிய 5.75 இலட்சம் ஹெக்டேர் காட்டு நிலங்கள் ஆலைத்திட்டங்கள் மற்றும் தாதுப் பொருள் சுரங்கங்கள் போன்ற காடுகள் அல்லாத தேவைகளுக்காக தாரை வார்க்கப்பட்டிருக்கின்றன. மேலும் கம்பெனிகளுடன் நூற்றுக்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.''



இவ்வாறு பழங்குடியின மக்களின் வாழ்விடங்களையும் வளங்களையும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு தரகு முதலாளிகளுக்குத் தாரை வார்க்கும் அரசாங்கம், பழங்குடியின மக்கள் மற்றும் பாரம்பரிய வனவாசிகள் நலன்களுக்காக வன உரிமைகள் அங்கீகாரச் சட்டம் போட்டிருப்பதாகக் கூறுவது எவ்வளவு பெரிய மோசடி!

தொடரும்