தமிழ் அரங்கம்

Friday, May 11, 2007

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாய் இல்லை!''

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாய் இல்லை!''
மாட்டுத் தோலை உரிப்பவர் சக்கிலி மனிதத் தோலை உரிப்பவன்
சங்கராச்சாரியா?

முதல் வணக்கம்


திசைகளின் கவர்ச்சியை வெறுத்து

தசைகளின் சுகங்களை மறுத்து

வசவுகள் ஆயிரம் பொறுத்து

உழைக்கும் மக்களின் விடுதலை வேருக்கு

பசையென உயிரையே கொடுத்து

மண்ணைக் கிளப்பிய வேர்களே

மார்க்சிய லெனினியப் பூக்களே

மகத்தான தியாகிகளே!

நிலவைக் காட்டிச் சோறூட்டும்

தாயின் அன்பும் மாறிவிடும்

சமூக உறவைக் காட்டி அரசியலூட்டிய

உங்கள் தோழமை இரத்தம்

தலைமுறை தாண்டியும் ஊறி வரும்!


(25.7.2006, 26.7.2006 நாட்களில் தஞ்சாவூர், திருச்சியில்

""நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாய் இல்லை!''

எனும் தலைப்பில் நடைபெற்ற கவியரங்கில் வாசித்த கவிதை)


மொழி வணக்கம்


கவினுறு மலைகள் ஏறிக் களைத்து

எங்கள் கடலொடு நதி பல நீந்தித் திளைத்து

காடுகள் சோலைகள் பூத்து

எங்கள் கைகள் வரைக்கும் காய்த்து

ஆடுகள், மாடுகள் பன்றிகள் மேய்த்து

சமவெளி உழைப்பினில் உயிர்மெய் வியர்த்து

உழைக்கும் மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தில்

ஒன்று கலந்து வளர்ந்த தமிழே! தலைமுறைக் குரலே!

பிழைப்புமொழி பேசாத உழைப்புத் தினவே!

உயிர் உறை கனவே! பரம்பரை உழைப்பே!

பாட்டாளி வர்க்க விடுதலை அழகாய் விளங்கிடு தமிழே!


நாங்கள் சும்மா இருந்தாலும்

நாடு விடுவதாயில்லை...


எழுதுவதால் மட்டுமல்ல

கவிதை வாழ்வதாலும் வந்து சேரும்

எல்லோர்க்கும் ஒருசமயம்

கவிதையாய் வாய்க்கும்.


அடிக்கும் அனலும் தணலும்

நொடிக்குள்மாறி கருத்துருவாக்கும் மேகம்

மண்ணைக் கிளப்பி குளிரும், இலைகள் நடுக்கும்.

அந்த இலைகளில் சிக்கிய காற்று உளறும்

அந்தக் காற்றில், கால் இடறி விழும் தூறல்.

சேர்ந்த சிறகினை

அலகினால் கோதிக் கோதி

நிறம்பிரித்து சிலிர்க்கும் பறவைகள்.

நனையும் குட்டிகளை தன் உடற்சூட்டில்

அணையக் கற்றுத்தரும் ஆடுகள்

பார்க்கும் யார்க்கும்

நனைந்த கவிதை அது!


சக்கரத்தைச் சுற்றி

சூடாக்கி, சூடாக்கி

இரும்புக்குள் மறைந்திருக்கும் நீரை

இறுக வைத்து

விரும்பும் அரிவாள்

வெந்து வரும் நெருப்பழகாய்.

எனக்கு வேலையென்ன?

எனும் கேள்விக்குறியாய்.

சிவந்து நிற்கும் வேளை

தீயின் கவிதை அது! உழைப்பின் செய்யுள் அது!


திமிறும் கடலை இரைக்க வைத்து

உப்புக் காற்றை உலர வைத்து

தப்பும் மீன்களை தசைகளில் வளைத்து

களைத்த சூரியனைப் பின்னுக்குத் தள்ளி

கட்டுமரங்கள் முன்னேறும்.

பரதவர் உழைப்புக்கு

ஈடுகொடுக்க முடியாமல்

நுரை தள்ளும் கடல்புறத்தைக்

காணும் யார்க்கும்

அது வலைகளில் பின்னிய கவிதைகள்!


தசைகளின் உணர்ச்சியை

வாங்கி, வாங்கி

தறிக்கட்டைகளும் தடக் புடக் எனப்

பேசிப் பார்க்கும்.

நெய்திடும் புடவை மட்டுமா?

செய்திடும் கடுமையில்

கைத்தறிச் சூட்டை வாங்கிக் கண்களும் சிவக்கும்.


நுண்ணிய கனவுகள்

நூற்கும் விரல்கள்

கருவினில் இருக்கும் பிள்ளையும்

கால், கை அசைத்து

உயிர் பின்னிடும் கர்ப்ப வெப்பத்தில்

தோற்கும் நூல்கள்

வேலையின்றி சுற்றி வரும் காற்று

வெட்கப்பட்டு

தன் அம்மணம் மறைக்க

நூல்களிடையே நுழையும்

பார்க்கும் யார்க்கும்

நரம்புகள் பின்னிய கவிதை அது!


கருக்கரிவாளின் சுனை பார்த்து

ஓடி ஒளியும் கருக்கல் நிலவு.

உழவனின் காலில் மிதிபட்டு

தூக்கம் கலையும் வாய்க்கால்.

வீசும் கைகளின் வெப்பத்தில்

விலகிக் கொள்ளும் பின்பனி

அடடா! அறுக்கும் அந்நேரம்

உழவன் படைப்பு அது! கவிதை அறுப்பு அது!


தேடித்துளைக்கும் இரசாயனக் குண்டுகள்

தெருவில் சாவின் நகம் பதிக்கும்

இராணுவ வண்டிகள்.

மணல் மூட்டைகளுக்குப் பின்னே

மறைந்திருக்கும்

நவீன ஆயுதங்கள், காலாவதியான இதயங்கள்.

ராடார் வைத்து வேவு பார்க்கும் சாவு.

வாடா! அமெரிக்க நாயே! என்று

வீதியில் செருப்புடன் நிற்கும்

ஈராக் பிஞ்சுகள்.

அந்தச் செருப்புகள்

உணர்ச்சிக் கவிதைகள்!


வறுமையின் கொடுமை எது?

மனிதன் தன் மனித உணர்வுகளை இழப்பது.

மார்க்சோ, மேலும் மேலும் மனிதரானார்

அகதிவாழ்வில் பிள்ளைகள் இரண்டை பறிகொடுத்தும்

தன் ஆடைகளைக் கூட அடகு வைத்தும்

உயரிய சமூகம் படைப்பதிலேயே

அவர் உயிரின் ஆசை திமிறியது.


முடிவிலாத் துயரின், வலிகளை வாங்கி

மூலதன வீக்கத்தை உலகுக்குக் காட்டினார்.

பதுக்கி வைத்திருக்கும்

முதலாளித்துவத்தின் இரக்கமற்ற ஆன்மாவை

விரட்டிப் பிடித்து நிர்வாணமாக்கியது

மார்க்சின் சுருட்டுப் புகை.

அதனால் ஆவிகள் அம்மணமாகவே அலைகின்றன.

மார்க்சும், ஜென்னியும், ஏங்கெல்சும்

லெனினும், ஸ்டாலினும், மாவோவும்

வாழ்ந்த வாழ்வை

உணரும் யார்க்கும்

அது கவிதையாய் இருக்கும்!


தன்னைப் பற்றியே நினைத்து நினைத்து

தன் நிழலும் இடறும் கால்கள் உண்டு

காதல் சுகமே கடைசியில் கடைசி என

சுயநலம் வியர்க்கும் தோல்கள் உண்டு,

என் நரம்பும், தசையும்

எலும்பும், தோலும்

இரத்தமெல்லாம் அலைந்து

நான் விரும்பும் ஒரு சுகம்

நாட்டு விடுதலை தவிர வேறில்லை

என்று எங்கள் பகத்சிங் போல யாருண்டு?

தொண்டைக் குழியை

தூக்குக் கயிறு நெறித்த போதும்

என் விடுதலைத் தாகம் விடமாட்டேன்!

வெள்ளை அசிங்கமே! உனக்கு

என் விழிகளின் ஈரமும் தரமாட்டேன்!

என சிலிர்த்த முகத்துடன் செத்தானே?!

கண்டு கண்டு

மரணம் பயந்து போன கவிதை அது!


இன்றோ

எங்கள் நீர்நிலை நிறைந்த

கவிதைகள் காணோம்.

எங்கள் வயல்வெளி வரைந்த

ஓவியம் காணோம்.

நதிகள் சொன்ன கதைகள் இல்லை!

காற்றில் தூவிய உணர்வுகள் இல்லை!

எங்கள் தருக்கள் தந்த கருக்கள் காணோம்.

பறிபோனது எங்கள் இயற்கையம், நாடும்

எழுதத் தூண்டும் இயற்கை இன்றி

இயங்கத் தூண்டும் இயக்கம் இன்றி

கவிதை செய்வது கடினம்! கடினம்!


பஞ்சபூதங்களின்

பௌதீக வடிவம் நாம்.

பரிணாமத்தின்

உயிரியல் கவிதை நாம்.

நாம் நீராலானவர்கள்

நம் நீரை உயிர்ப்போம்.

நாம் நிலத்தாலானவர்கள்

நம் நிலத்தை விதைப்போம்.

நாம் நெருப்பாலானவர்கள்

நம் தீயை வளர்ப்போம்!

உயிர் அத்தனையும் உசுப்பி விடும்

காற்றின் உணர்வு

நம் கவிதையில் தொடங்கும்

நாம் சும்மாயிருக்க முடியாது

ஏனெனில்

நாம் காற்றால் ஆனவர்கள்!

எதுவும் சும்மாயில்லை இயற்கையில்


கரைகள் சும்மா இருந்தாலும்

அலைகள் விடுவதாயில்லை

போய் விவாதிக்க அழைக்கிறது.


பூக்கள் மூடிக்கொண்டாலும்

காற்று விடுவதாய் இல்லை

போய் பேசச்சொல்லி அவிழ்க்கிறது


நதிகள் ஒதுங்கிப் போனாலும்

வயல்கள் விடுகிறதா?

போய்வாய்க்கால் வழியே இழுக்கிறது.


தண்ணீர் நாக்கால்

உயிரொலி எழுப்பி

மலைகளின் மவுனம்

அருவிகள் கலைக்கும்.

அசைந்து கொடுக்காத

மண்ணின் பிடிவாதம் எங்கும்

மரங்கள்

தன் வேர்களை இறக்கும்.


நிலம் சும்மா இருந்தாலும்

மழை விடுகிறதா?

வீழும் துளிகளின் விமர்சனத்தால்

மேடு, பள்ளங்கள் காட்டி நிற்கும்.

புல்லின் நுனியிலும் போய் எழுதி

புதிய கவிதைகள் பனித்திருக்கும்.


சாரல் காற்றோ

மறைப்பினை விலக்கி

பதுங்கிய முகங்களை

பரிகசிக்கும்.

காரிருளின் கர்வத்தை

மின்னல் உதடுகள் எச்சரிக்கும்.

ஊரைவிட்டு ஒதுங்கி

தான்மட்டும் தனியே

பத்திரமாய் இருப்பதாய்

கற்பனையில் இருக்கும்

ஒற்றைப் பனையின் தலையில்

வந்து விழும் இடி.


அட! தண்ணீரும் தரையும்

தான் பாட்டுக்கு கிடந்தாலும்

அடியில் சும்மா இருக்குதா

இந்தப் பாறைகள்.

தாங்கொணா அழுத்தத்தில்

தான் நகர்ந்து

நீங்கொணா துயரத்தில்

நிலமெல்லாம் அதிர்வுகள்

சும்மா இருக்குதோ! எதுவும்

சுற்றிலும் பார்க்கிறேன்...


சிறகுகள் விரித்து காற்றினை முறித்து

திசைகளை வளைக்கும் பறவைகள்


கிளைகளை உரசி சிறுபொறி எழுப்பி

தீப்பழம் காய்க்கும் காடுகள்.


நீரைக்கிழிக்க நீளும் கூரிய கற்களை

கூழாங்கற்களாய்க் குலைத்துவிடும்

ஓடைகளின் முன்முயற்சி.


ஊமத்தம் இலைகளைப் பேசவைக்க

போராடும் பருவக்காற்று.


வரப்புகளைத் தாண்டிக் குதித்து

வாழத் துடிக்கும் குரவை. (மீன்)


புவியீர்ப்பு விசைக்குப் பொருத்தமாக

சிறகுகள் நீட்டி

காற்றின் மீது கால்களை ஊன்றி

கதிர்களைக் கொத்தும்

குருவியின் விடாப்பிடி


குளத்தில் விழுந்த நிலவை

இரவு முழுக்க எடுக்கப் பாய்ந்து

மேலும், கீழும்

தவித்துப் போகும் தவளைகள்.


இப்படி இயங்கியபடியே

ஒன்றுடன் ஒன்றாய்

நட்பும், முரணுமாய்

சும்மா இல்லாத சுழலின் அழகை

விலங்குகள் கூட விளங்கிக் கொண்டதாய்

இயற்கைக் காட்சிகள்

எடுத்துக் காட்டும்.

மனிதர்கள் நாம் உணர முடியாதா?


சும்மா இருப்பதே சுகம் என்று சொல்லும்

துறவிகளாவது சும்மா இருந்தானா?

மக்களின் மனங்களை கழிப்பறையாக்கி

முக்கியமானது மதமென்று

மூளைக்கு, மூளை முக்கி வைத்தான்.


ஏட்டு முதல் எஸ்.பி. வரை

ஜெயேந்திரன் முதல் அய்யப்பன் வரை

சும்மா இருக்கிறானா?

அப்பாவி பக்தனுக்கு

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை

ஆலயத்தின் தந்திரிக்கோ

விபச்சார விடுதியில் கட்டில், மெத்தை.

அடைக்கலம் தேடிப் போகும் பெண்களின்

உடல் சுகம் பற்றியே

ஒவ்வொருத்தனுக்கும் புலன் ஆய்வு.

சுற்றித் திரியும் ரவுடிகளின்

கும்பலை விடவும் பயங்கரமானது,

பற்றற்றிருப்பதாய்ச் சொல்லும்

துறவிகளின் தனிமை.

வேண்டுமானால்

எட்டிப்பாருங்கள் காஞ்சிபுரத்தை

தோண்டிப் பாருங்கள்

ஆதீனங்களின் மடத்தை.


சும்மா இருந்ததா அகிம்சை?

வெள்ளையனின் ஆயுதங்களை விடவும்

கொடூரமானது

காந்தியின் புன்னகை.

வேண்டுமானால்

உற்றுப் பாருங்கள் அம்பேத்கரின் எழுத்தை

தொட்டுப் பாருங்கள்

பகத்சிங்கின் கழுத்தை.


சும்மா இருக்குதா பார்ப்பன மதம்?

தர்ப்பை புற்கள்தானே

என்று விட்டு வைத்தோம்

அதுவோ! ஆடுகளை மட்டுமல்ல

நிலத்தையும் சேர்த்தே மேய்கிறது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்றால்

பிராமண வாயு

பிராண வாயுவை பழிக்கிறது.


சுரப்பற்றுப் போன காவிரி

கரப்பற்றுப் போன மாடுகள்

கோவில் நந்திக்குப் பால் அபிசேகம்


வரப்பற்றுப் போன வயல்கள் பசியில்

உறுப்பற்றுப் போன உடல்கள்

கண்டுகொள்ள ஆளின்றி

காய்கிறது தேசம்,

கையில் பாலும் அருகம்புல்லும்

இறைப்பற்று காட்ட

தெருவுக்கு தெரு பிரதோசம்


தாளிக்க எண்ணெயில்லை

சாமிக்கு ஆயில் மசாஜ்.

நம் சுயமரியாதையில் புல் முளைக்க,

சும்மா இருக்குதா பார்ப்பனியம்?


சும்மா இருக்குதா முதலாளித்துவம்?

தக்காளியை அழுகவைத்து

தற்கொலைக்கு விலையை வைத்து

தறியின் தக்களியை நிற்க வைத்து

நெசவாளி கிட்னிகளை விற்க வைத்து

வேலைக்கு ஏங்கும் இதயத்தை

கூலிக்குப் பிழிந்தெடுக்கும்.


வயிற்றுக்குள் வளரும் கருவையும்

வாட்டும் வேலைப்பளுவால்

வழித்தெடுக்கும் மூலதனம்.

சூளைக்குள் செங்கல்லாய்

சுடுகின்ற மனசெடுத்து சொல்லுங்கள்

சும்மா இருக்குதா முதலாளித்துவம்?


சிவகாசி சிவனே என்று இருந்தாலும்

ஐ.டி.சி. சும்மா இருக்கிறானா?

இந்திய உற்பத்தியை கருக்கும் வரை

எங்கள் கந்தகவெறி அடங்காதென

பன்னாட்டு தீக்குச்சிகள்

பசியெடுத்து அலைகின்றன.


உள்ளூர் உதடுகளை

விரட்டிப்பிடித்து சுரணை பொசுக்கும்

வெளிநாட்டு சிகரெட்டுகள்.


குடிப்பவன் கோலி சோடா கேட்டாலும்

கொக்கோ கோலா சும்மா இருக்கிறானா?

இந்திய நாக்குகளை நனைக்க

அமெரிக்க மூத்திரத்திற்கே அதிகாரம்.

இந்தியன் தாகத்தைக் குடிக்க

பெப்சிகாரனுக்கே பிரம்மதேயம்.


தறிகெட்ட

அனல்வாதம், புனல்வாதத்தால்

சமணர்களையும், பவுத்தர்களையும்

போட்டுத்தள்ளியது பார்ப்பனியம்.


தாராளமயத்தின் புனல்வாதத்தால்

சகலரையும் போட்டுத் தள்ளுகிறது

உலகமயம்.


சிலிண்டரில் மூச்சுவிட்டு

வெடிக்கும் பாட்டிலில் உதடு கிழிந்து

இரத்தத்தில் எசன்சு கலக்கும்

உழைப்பின் தீவிரத்தை

உங்களால் உணரமுடியுமா?

மிதிவண்டியின் இருக்கை தவிர்த்து

மிச்ச இடமெல்லாம்

திரவ உணர்ச்சிகளால்

கனக்கும் பாட்டில்கள்.

வீசும் எதிர்காற்றில்

விலா எலும்பும் வளையும்,

போக்ஸ் கம்பிகளாவது தப்பிக்கும்

போராடும் கால்களில்

வேரோடு பிடுங்கி வருவதுபோல்

பின் நரம்புகள் வளைந்து நெளியும்

அழுத்தம் தாங்காமல்

அடிவயிற்றிலிருந்து தப்பிக்கும் காற்று

வாயில் அலறும்.

மிதிக்கும் உள்ளூர் சோடா கம்பெனி தொழிலாளியே

கொதிக்கும் உன் குருதி தொட்டுச் சொல்

சும்மா இருக்கிறானா கொக்கோ கோலா?


கடன்காரர்களுக்குப் பயந்து

வழியை மாற்றி நடந்தாலும்

சும்மா இருக்கிறாரா அப்துல்கலாம்?

நிலைமை புரியாமல் வழியை மறித்து

கனவு காணுங்கள்! கனவு காணுங்கள்! என்கிறார்.

பாராளுமன்ற சுள்ளான்கள்

படுத்தும் பாட்டில்

படுத்து தூங்கவே வழியில்லை

கனவுகள் எங்கே காண்பது?

பகலையும் வாங்கலாம்

இரவையும் வாங்கலாம்

வேண்டிய கனவுகளை

விழிகளுக்கு வெளியே காணலாம்.

குஜராத் பிணங்களை கண்களில் புதைக்கலாம்

மண்டை ஓடுகள் கண்டு களிக்கலாம்

அதுக்கெல்லாம் கலாம்.

இரண்டு விழிகளில் இரண்டு கனவு

வர்க்கத்திற்கேற்ப வந்திடும் இரவு.

பிட்சா கார்னரில் நக்கி

மம்மி டாடியில் கக்கி

நைக்கியில் நடந்து கணினியில் விளையாடி

கடைசிவரை

இந்த மண்ணில் கால்படாமலேயே

சாண்ட்ரோவில் ஐ.ஐ.டி நுழைந்து

அப்படியே அமெரிக்க சத்யத்தில் கலந்து

ஏ.சி.யில் உறையும்

காம்ப்ளான் பேபியின் கனவுகள்.


இன்னொன்று:

நீராகõரத்தில் முகம் பார்த்து

நெடுந்தூரப் பள்ளிக்காக

தார்ச்சாலையில் கால் தோல் உரியும்.

வேகவேகமாய்

விறகொடித்துப் பழகிய கைகள்

நிறுத்தி பொறுமையாய்

ஆனா, ஆவன்னா லேசில்

வளைக்க வராமல் அடிவாங்கும்.

வழுக்கும் சிலேட்டை மாற்ற வழியின்றி அது

கறுக்கும் கையாந்தரையாலும், கரித்தூளாலும்.

நடக்கும் களைப்பில் படிக்க விடாமல்

விழிகளை தூக்கம் அரிக்கும்.

குடிக்கலாம் இரத்தமென நம்பி வந்த மூட்டைப்பூச்சி

பையனிடம் கிடைக்காமல் பாயில் கிடந்து துடிக்கும்.

பள்ளிக்குப் போகும் பைபாஸ் சாலையில்

பேருந்து சக்கரத்தில் மாட்டி

பிய்ந்து போன நண்பன்

கழண்டு விழும் காக்கிக் கால்சராயுடன் வந்து

கனவில் வீட்டுப் பாட நோட்டுக் கேட்க

பீதியில் உறைந்து அலறும்

பால்வாடிக் கனவுகள்.


எங்களால் தூங்க முடியவில்லை

கனவிலும் துரத்தும் பிணங்கள்!

எங்களால் விழிக்க முடியவில்லை

நினைவுகள் அறுக்கும் ரணங்கள்!

நாம் ஒதுங்கிப் போனாலும்

நாடு விடுவதாயில்லை

வர்க்கத்தை குறிவைத்து மறுகாலனியாதிக்கம்

வாழ்வை வழி மறிக்கையிலே

வெட்கத்தை விட்டு நாம் விலகி நடக்கலாமா?

இருக்கிறார்கள் சிலர்

சமூகத்தில் இருந்துகொண்டே

இதில் சம்மந்தம் இல்லை என்று.

இவர்கள் தன் வீடு எரிந்தால்

தன்னை மட்டும் அழைக்காமல்

தஞ்சாவூரையே அழைப்பார்கள்.

சாலையில் நகம் பெயர்ந்தால்

தன்னைத் திட்டாமல்

திருச்சியையே திட்டுவார்கள்.

உரைப்பவர்களும் உண்டு!

ஊருக்குப் பிரச்சினை என்றால்

உனக்கேன் வியர்த்து வடிகிறது?

உரைப்பவர்களும் உண்டு.

உண்மைதான்

பிணங்களுக்கு வேர்ப்பதில்லை.

பொதுநலத்திற்காக வாழ்ந்தவர் பிணத்திலும்

புழுக்கள் உணர்ச்சி தேடும்.

சுயநலத்தில் வாழ்ந்தவன் முகத்தை

மலத்தில் மொய்க்கும் ஈக்களும்

வெறுத்து ஓடும்.


சுயநலமா? பொது நலமா?

எந்த முகம்? உங்கள் சொந்த முகம்?

தெரிவு செய்யும் காலமிது!

சொந்த முகம் காண்பதற்கு

உதவி செய்யும் கவிதை இது.


எல்லாத் திசையிலும்

இனப்பெருக்க பாடல்கள்

வழிநெடுக வன்புணர்ச்சிக் கவிஞர்கள்.

படிக்காசுப் புலவர்களை

வழிநடத்தும் காலச்சுவடுகள்.

சீட்டுக்கவிகளுக்கு ரூட்டுக் கொடுக்கும்

உயிர்மைகள்,

குலைக்கும் நாய்களும்

குலை நடுங்கி ஓடும் இப்படி எழுதிப்

பிழைக்கும் நாய்களை

எதிரில் பார்த்தால்.

உணர்ச்சிகளை சுரண்டுவதைவிட

மோசமான சுரண்டல் உண்டா?

இலக்கியத்திலும் இந்த

இழிவான சுரண்டலை எதிர்ப்போம்.

கவிஞர்கள் என்பதால் மட்டுமல்ல

உழைக்கும் மக்களின் உறவுகள் என்பதால்

உங்களுடன் பேச வந்தோம்.


ஏட்டிலடங்காத கருத்துக்கள் நாங்கள்

எழுத்திலடங்காத உணர்ச்சிகள் நாங்கள்

வீட்டுக்கடங்காத சுயநலம் நாங்கள்

சும்மா இருப்போமா?

அம்மாவின் வயிற்றிலும்

சும்மா இல்லாதவர்கள் நாங்கள்,

இரத்தக்கனவினில் மெல்ல வளர்ந்து

இருட்டின் இமைகளை

எட்டி உதைத்து

வெளிச்சம் பார்க்க வெளியே வந்தவர்கள் நாங்கள்

நாடே இருட்டிக் கிடக்கையிலே

நாங்கள் சும்மா இருப்போமா?

பாட வாருங்கள் கவிஞர்களே!

பகலைப் பொழியும் கவிதைகளே


புல்லறுத்துப் பள்ளிக்குப் போய் பின்

நெல்லறுத்துக் கல்லூரிக்குப் போய்

விடுமுறையில்

கல்லறுத்து, மரமறுத்து கல்விப்

பசியறுக்கப் போராடி எங்கள்

பிறப்பறுத்து பின்தள்ளிய சமூகமே

இடம் ஒதுக்கு உயிர் கல்விக்கு

எனக் கேட்டால்?

செருப்புத் தைக்கும் கைகளுக்கு

படிப்பு ஒரு கேடா? என "சூ' துடைத்துக் காட்டி

சொல்லறுக்கும் பார்ப்பனக் கொழுப்பை

கருவறுத்து வீசாமல்

சும்மாயிருக்க முடியுமா?


உங்கள் செருப்பைத் தைத்ததனால்

பிறப்பொதுக்கி வெளியில் வைத்தீர்.

உங்கள் மயிரைச் சிரைத்ததனால்

நாங்கள் மட்டமான சாதியானோம்.

உங்கள் துணிகளை வெளுத்ததனால்

நாங்கள் அழுக்குப்பட்ட வம்சமானோம்

உண்மைதான்

சாதியில் புழுத்த

உங்கள் பிணத்தைத் தொட்டதனால்

தீட்டாய் போனோம்.

எதிர்த்துக் கேட்டவனுக்கு

வாயில் திணிக்கப்பட்டது மலம்

எதிர்க்காதவன் உடம்பிலோ

இரத்தமெல்லாம் மலம்.


மாட்டுத் தோலை உரிப்பவர்

சக்கிலி

மனிதத் தோலை உரிப்பவன்

சங்கராச்சாரியா?

சாதிவெறியன் சங்கமாய் இருக்கையில்

நீதி கேட்பவன் நீ மட்டும் அமைப்பின்றி

சும்மா இருக்க முடியுமா?


சிறீராமன் பெயரால்

எல்லாமும் நடக்கிறது.

இராமன் பிறந்த இடத்துக்காக

இசுலாமியப் பெண்களின்

பிறப்புறுப்புகள் வரை சொந்தம் கொண்டாடின

திரிசூலங்கள்.

அவர்கள் பெண்கள் என்பதற்காக அல்ல

இசுலாமியர்கள் என்பதற்காக

கற்பழிக்கப்பட்டார்கள்.

குழந்தைகளின் சிரிப்பை

உங்களால் கொளுத்த முடியுமா?

மழலைகள் உதடுகளையும்

கிழித்துப்போட்டன இராமஜெயங்கள்.

கருவுக்குள்ளும்

கட்டாரி வீசும் பார்ப்பன மதவெறி

தெருவுக்கு வந்து போராடாமல்

சும்மா இருக்க முடியுமா?


மதம் மாறி காதலித்ததற்காக

ஏழை முசுலீம் பெண்ணை

இழுத்துவைத்து மொட்டையடிக்கும்

முசுலீம் மதவெறி.

எரிக்கிறது பாலஸ்தீனத்தையும், லெபனானையும்.

ஈராக்கியப் பெண்களை இழுத்துவைத்து

சதைவெறியில் கிழிக்கிறது அமெரிக்கா!

அவனுக்கு மதம் மாறி எண்ணெய் விற்று தன்னை விற்று

செழிக்கிறது சேக்குகளின் மணிமுடி.

இனத்துரோக சேக்குகளின்

மயிரைப் புடுங்க மாட்டாமல்

பள்ளிவாசல் கட்ட அவனிடமே

பணம் புடுங்கும் வக்கிரங்கள்.

எல்லாமும் நடக்கிறது

அல்லாவின் திருப்பெயரால்.

ஐந்து வேளை தொழுக

பள்ளிவாசலுக்கு வா!

ஐந்து வட்டிக்கு பணம் வாங்க

பைனான்சுக்கு வா!

ஆயிரமாயிரமாய் சூதாட

பங்குச் சந்தைக்கு வா!

எல்லாமும் நடக்கிறது

அல்லாவின் திருப்பெயரால்

ஏழை வர்க்கத்தை

மதத்தின் பெயரால் ஏறி மிதிப்பதை

எதிர்க்க வர்க்க மார்க்கம் சேராமல்

ஒரு "மார்க்கமாய்' ஒதுங்க முடியுமா?


பல வழிகளிலும் பணம் வருவதால்

பளிங்கு மண்டபத்திலிருக்கும்

அவளுக்கென்ன?

எப்போதும் ஆரோக்ய மாதாதான்.


பருக்கைக்கு வழியின்றி

வாசலில் பிச்சையெடுக்கும்

இவர்கள்தான்

குட்டங்குளி மாதா

டி.பி. மாதா


ஏசுவின் அப்பத்தைத் தவிர

அவர்களுக்கு

எதிலும் பங்கில்லை.


எதிர்த்துக் கேட்டால்

பாவத்தின் சம்பளம்

கட்டாயம் உண்டு.


சிலுவை செய்த செலவையும்

பங்குத் தந்தைகள்

ஏசுவின் கணக்கிலேயே எழுதி விடுவதால்

மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த ஏசு

மூர்ச்சையாகிப் போனார்.

பாருங்கள்! ஆலயத்தில் அவர் கிடக்கும் பாவனையை.

பரிசுத்த ஆவிகளும்

அணி, அணியாய் சேருகையில்

பார்த்துக் கொண்டு தனியுடம்பாய்

நாம் மட்டும் சும்மா இருக்க முடியுமா?


இரண்டாயிரத்தில் ஏசு வரப்போகிறார்

இது கிறிஸ்தவப் பிரச்சாரம்

இரண்டாயிரத்து இருபதில்

இந்தியா வல்லரசாகப் போகிறது

இது கிருத்துருவப் பிரச்சாரம்.

நல்லரிசி கொடுக்கவே வக்கில்லை

இந்தியா வல்லரசாகப் போகுதாம்

சில ஊரில் ரேசன் அரிசியில் வடித்த சோற்றை

நாய்களும் தின்ன மறுக்குது

அதைக் கழனிப் பானையில் போட்டால்

மாடும் மனிதனை வெறுக்குது

எடுத்துக் குப்பையில் போட்டால்

குடும்பத்தையே கோழி முறைக்குது

கோழிகளே கோபித்துக் கொள்ளாதீர்கள்

2020இல் இந்தியா வல்லரசாகிவிடும்.


கிட்டிவைத்து எலிகளைப் பிடிக்கிறான்

கீழத்தஞ்சை விவசாயி

வயல்களைக் காக்க அல்ல

வயிற்றுப் பசியைப் போக்கிக் கொள்ள

எலிகளே எங்கள் அரசியலை நோண்டாமல்

இரைப்பையில் காத்திருங்கள்

இந்தியா வல்லரசாகப் போகிறது!


விளைவித்த வெங்காயம்

விலைபோகாமல்

அழுகிப் போகும் அவலம் தாங்காமல்

நிலைகுலைந்து சாகும் சிறுவிவசாயி

அழுகும் பிணங்களே மிச்சமிருங்கள்

2020இல் இந்தியா வல்லரசாகப் போகிறது!


கம்பி வளைக்க நகரத்துக்கு வந்து

கட்டிட, உச்சியிலிருந்து கீழே விழுந்து

சாக்குமூட்டையில் ஒரு பிணம்.

சாவதற்கு முன் ஏதோ சொல்ல வந்ததாய்

எஞ்சியிருக்கும் அதன் விழிகளில் மட்டும்

ஏதோ ஜாடை தெரியுது

குறிப்பறிந்தவர்களே கொஞ்சம் இருங்கள்!

இந்தியா வல்லரசாகப் போகுது!


பார்க்க முடியாத கொடுமைகளால்

ஏசுவே எட்டி ஓடினாலும்

பாவிகளை இரட்சிக்க

ப.சிதம்பரம் இருக்கிறார்.

நல்லவர்களே உங்களுக்கு

நக்சல்பாரிகளை விட்டால்

வேறு வழியில்லை.


பயங்கரம் எது?

பாட்டி சொன்ன கதைகளில் வரும்

பேய்களின் அலறல்களா?

இல்லை

நாட்டில் நடக்கும் கொடுமைகள் கண்டும்

சும்மா இருப்பவர்களின் மௌனங்களே!


ஆபத்து எது?

அம்மா சொன்ன கதைகளில்

நம் சோற்றைப் புடுங்க வரும்

அஞ்சு கண்ணர்களா?

இல்லை

நம் நாட்டையே புடுங்க வரும்

தனியார்மயம் தாராளமயம் உலகமயம்

எனும்

பன்னாட்டுக் கம்பெனிகளின்

மூன்று கண்ணர்களே!


பார்த்துக் கொண்டு

சும்மாயிருக்க முடியுமா?

மீன்வலையைக் காயப்போட்டால்

கடற்கரைகள் நாறுதாம்

மீனவர்களை விரட்டிவிட்டு

தனது ஆணுறைகளை

அவிழ்த்துப் போடுது தாஜ் ஓட்டல்.

நமது இறையாண்மையின் முகத்தில்

வீசப்படும் ஆணுறைகளை

எதிர்த்துப் போராடாமல்

நாம் கடலின் முகத்தில் முழிக்க முடியுமா?


பல்லுயிர்க்கெல்லாம் தாய்போல

பரிந்து ஓடும் எங்கள் தõமிரவருணி.

பக்கத்தில் தாகம் கொண்டு அலையும்

கங்கைகொண்டான் கழனி.

ஊர்போய்ச் சேர

கரையேரத் துடித்து

தவிக்குது ஆறு

நம் தாய்முகம் தழுவிய ஆறு இது

அதைத் தட்டிப் பறிக்கும் அநியாயம் பாரு!

கூசாமல் குழாயில் உறிஞ்சி

காசுக்கு விற்கும் கொக்கோ கோலா

நம் தாயின் மார்பை உறிஞ்சுபவனை

உதைத்து விரட்ட பதைத்து வராமல்

சும்மாயிருக்க முடியுமா?


எங்களுக்கு கொக்கோ கோலா வேண்டாம்

ஆற்றைக் கொடு!

எங்களுக்கு வலைகள் வேண்டாம்

கடலைக் கொடு!

எங்களுக்கு இலவச அரிசி வேண்டாம்

விவசாயத்தை கொடு!

எங்களுக்கு விபூதி வேண்டாம்

கருவறை கொடு!

எங்களுக்கு தரிசனம் வேண்டாம்

தில்லைக் "கோயில்' கொடு!

சொர்க்க வாசல் வேண்டாம்

சிறீரங்கம் கொடு!

எங்களுக்கு சலுகைகள் வேண்டாம்

அதிகாரம் கொடு!


சும்மாயிருக்க மாட்டோம் நாம்!

சுவாசம் நமக்கு உயிர்ப்பழக்கம்

அதுபோல் சும்மாயின்றி

இயக்கம் இருந்தாலே

யார்க்கும் உயிர் இருக்கும்


கலைஞன், விவசாயி, தொழிலாளி

மாணவன், நெசவாளி, அறிவாளி

அனைவர்க்கும் பொது எதிரி

நாடு நமதல்ல எனப்

பழிக்கும் பன்னாட்டுக் கம்பெனி


போராடும் உழைக்கும் மக்கள்

ஏற்கெனவே வீதியிலே

அவர்கள் தோளோடு தோள் நிற்க

முன்செல்வோம் கவிதைகளே!


எத்தனை பேர் நம்மை நம்பி

ஒப்படைத்த கனவு இது

எத்தனை பேர் நம்மை நம்பி

கொடுத்துச் சென்ற உணர்ச்சி இது.


கண்கள் உறங்கலாம்

இரத்தம் உறங்குமோ!

அளவுக்கதிகமாகவே சிந்திய இரத்தம்

இனி புரட்சிக்கும் குறைவாக

வேறெதை விரும்பும்?

முன்னோர்கள் கனவுகள்

நம் எல்லோர் கவிதையிலும்

முன்னோர்கள் துடிப்புகள்

நம் எல்லோர் இதயத்திலும்

கவிதை

எழுதிக் காட்டுவது மட்டுமல்ல

இயங்கிக் காட்டுவோம்.

Wednesday, May 9, 2007

குஐராத் முஸ்லீம் படுகொலைகள்

குஐராத் முஸ்லீம் படுகொலைகள்




Tuesday, May 8, 2007

எனது முழுக் குடும்பமும் படுகொலை முயற்சியிலிருந்து உயிர் தப்பியுள்ளது

எனது முழுக் குடும்பமும் படுகொலை முயற்சியிலிருந்து உயிர் தப்பியுள்ளது

பி.இரயாகரன்
08.05.2007


7.5.2007 அன்று அதிகாலை இரண்டு மணியளவில் இந்த முயற்சி நடந்தேறியுள்ளது. எனது வீட்டின் அருகில் வீட்டை அண்டி நின்ற ஒரு பெரிய லொறிக்கு தீ வைக்கப்பட்டதன் மூலம், இந்த நிகழ்வு அரங்கேறியது. இந்த தீயில் இருந்து நாம் உயிர் தப்பியது அதிஸ்ட்டம் தான்.



1. இந்த தீயை உரிய நேரத்தில் பொலிஸ் உட்பட தீயணைப்பு படையினர் கண்டறிந்தன் மூலம், தீ மேலும் பரவாது தடுத்து அணைக்க முடிந்தது.


2. காற்று வீசிய திசை வீதியை நோக்கியும், வீட்டின் திசைக்கும் நடுவாக வீசியதால் குறித்த நேரத்தில் முழுமையாக வீடு எரிவது தடுக்கப்பட்டது.


குறித்த தீ எமது வீட்டுக்கு மேலாகவே எழுந்து எரிந்தது. இந்த நேரம் நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தோம். பொலிசார் வந்து எம்மை அவசரமாக நித்திரையில் இருந்து எழுப்பும் வரை, இதை நாம் அறிந்திருக்கவில்லை. இப்படி அங்கு வசித்த மற்றொரு குடும்பமும் வெளியேற்றப்பட்டது. மற்றைய வீடுகளில் ஆட்கள் இருக்கவில்லை.



நாம் வீட்டை விட்டு வெளியேறிய பின், இரண்டு மணித்தியாலங்களாக தீயை அணைக்க கடுமையான போராட்டத்தை தீயணைப்பு பிரிவினர் நடத்தினர். பொலிசார் மற்றும் தீயணைக்கும் படையினர் வீடு எரியலாம் என்று கருதி, பலமுறை பூட்டப்பட்டிருந்த (ஆட்கள் எவரும் அன்று இருந்திராத வீட்டில்) வீட்டில் யாரும் ஆட்கள் அகப்பட்டிருக்கின்றனரா என்பதை பலமுறை சோதிக்க முற்பட்டனர்.


தீ பரவுவதை தீயணைக்கும் பிரிவு கட்டுப்படுத்தியதன் மூலம், எமது வீட்டு யன்னல் ஒன்று மட்டுமே எரியுண்டதோடு நின்று போனது. வேறு சில வீடுகளின் வீட்டு யன்னல்களும் தீயால் எரியுண்டது.


இந்த நிகழ்வின் பின்னணி, ஒரு அரசியல் படுகொலை முயற்சியா என்று எம்மை சந்தேகிக்க வைத்துள்ளது?


பொதுவாக தேர்தலின் பின் எழும் தேர்தல் வன்முறையை சாதகமாக பயன்படுத்தி இந்த தீ வைப்பு அரங்கேற்றப்பட்டதா என்ற சந்தேகம் எம்முன் உள்ளது. இது வெளிப்படையானது. இந்த சந்தேகம் புலிகளை நோக்கி எழும்பியுள்ளது. இந்த வகையில் இதன் அடிப்படையிலேயே சம்பவத்தை பொலிசாரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளோம்.


பொதுவான தேர்தல் வன்முறை எம் பகுதிகளில் நடப்பது இல்லை என்பதும், இது போன்ற சூழல்களை பயன்படுத்தி அராஐகம் செய்வதில் புலிகள் கைதேர்ந்தவர்கள் என்பது, எமது சந்தேகத்தை முன்வைக்க போதுமான காரணமாகும். சாதாரண விபத்து போல் சித்தரித்து கொலைகளை நடத்துவதில், புலிப் பாசிட்டுகள் கைதேர்ந்த திறமைசாலிகள்.


இது போன்ற சம்பவங்களை பாரிசில் அரசியல் ரீதியாக புலிகள் செய்தவர்கள். குறிப்பாக 1990க்கு முன்பு புலியல்லாத அலுவலக வாசல்களில், இரவில் புலிகளால் தீ வைக்கப்பட்டது. பாரிசில் புலிகள் நடத்திய படுகொலைகள் ஈறாய் பல சம்பவங்கள் இப்படி நடந்தேறியுள்ளது.


ஒரு விடையத்தில் தாம் சம்பந்தப்படாத வகையில் அதைச் செய்வதில் புலிகள் கைதேர்ந்தவர்கள். மாபியா குழுவுக்குரிய, இரகசிய சதிக் கொலைகளை செய்வதில், அவர்கள் நன்கு பழக்கப்பட்டவர்கள். இயற்கை மரணமாக காட்டுவது அல்லது தாம் செய்யாத கொலையாக பின்னணிகளைச் சோடிப்பது அல்லது விபத்தாக உருவாக்குவது உட்பட, படுகொலைகளைச் செய்வதில் புலிகள் கைதேர்ந்தவர்கள். இந்த வகையில் புலிகள் இந்த தீ வைப்பில், சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை அவர்களின் படுகொலை அரசியல் எமக்கு உருவாக்கியுள்ளது.



இந்த வகையில் நாம் தீ வைப்புக்கு எதிரான பொது முறைப்பாட்டில், பொலிசாரிடம் எமது சந்தேகத்தைக் குறிப்பிட்டுள்ளோம்.


புலிகளை அரசியல் ரீதியாக விமர்சிப்பது என்பது எமது மரணங்களை தவிர்த்து அல்ல. மரணங்களின் நிழலை சதா முத்தமிட்டபடிதான், புலிகளின் மக்கள் விரோத பாசிச மாபியா நடத்தைகளை விமர்சிக்கின்றோம. அவர்கள் எம்மை பற்றி கொண்டுள்ள அபிப்பிராயம் வெளிப்படையானது. அவர்களைப் பொறுத்தவரையில் நாம் கொல்லப்பட வேண்டியவர் பட்டியலில் உள்ளவர்கள். அது எப்படி எங்கே என்பது தான், அவர்களின் தேர்வுகுட்பட்ட ஒன்றாகவுள்ளது.


பலமான இடைவிடாத இந்த கொலை முயற்சியில் இருந்து தப்ப, நாம் இடைவிடாது உணர்வு ரீதியான எச்சரிக்கையுடன் போராட வேண்டியுள்ளது. பல நெருக்கடிகள் ஊடாக, நாம் மக்களுக்காக அவர்களின் உரிமைக்காக போராடவேண்டியுள்ளது. இது எம் போன்றவர்களின் தவிர்க்க முடியாத வாழ் நிலையும் கூட. புலிகள் விரும்புவது நடந்துவிட்டால், அந்த மக்களுக்காக எமது மரணத்தை முத்தமிடத் தயாராகவே நாம் உள்ளோம். போராட்டம் தான் மகிழ்ச்சியானது. இதை விடுத்து கோழையைப் போல் ஓடுங்கி நசிந்து நாயிலும் கீழாக, ஒரு அடிமையாக வாழ்வது ஒரு வாழ்வா. உயிர் உள்ள வரையும் நிஜத்திலும், மரணத்தின் பின் மக்கள் மனங்களில், அவர்களின் சிந்தனை முறைகளில் இருந்து நாம் போராடுவோம். உண்மையை, மக்களின் உரிமையை கொலைகாரர்களால் தடுத்து நிறுத்தவே முடியாது.


Sunday, May 6, 2007

புலிகளும் ஆயுதத்தைக் கீழே போட்டால்!

புலிகளும் ஆயுதத்தைக் கீழே போட்டால்!


பி.இரயாகரன்
05.05.20007



முகம் தெரியாத தோழர் ஒருவர் எம்மை நோக்கி எழுப்பிய கேள்விகளும் பதில்களும், அரசியல் முக்கியத்துவம் கருதி பிரசுரிக்கின்றோம்.



1. புலிகளும் ஆயுதத்தை கீழே போட்டால் என்னாகும்? புலிகளுக்கு பதிலாக தங்களது தீர்வு என்ன?



2. புலிகள் வழி தவறானது என சொன்னால் எனது நண்பன் கேட்கிறான் சரி வேறு என்ன தீர்வு என்று? இந்த கேள்விக்கு என்ன பதில் நான் அளிக்க?



3. புலிகளின் பாசிசம் என்ற விசயத்தை பேச ஆரம்பித்ததும் இந்த கேள்வி வந்தால் என்ன பதில் சொல்லலாம்?



இவைகள் தான் கேள்விகள். ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய கேள்விகள். புலிகளை விமர்சிக்கும் போது அவர்களை ஆதரிப்போர், தமது அரசியலற்ற சொந்த குருட்டுத்தனத்தை அடிப்படையாகக் கொண்டு திருப்பியடிக்கும் தர்க்கமும் இதுவேயாகும்.



புலிகள் ஆயுதத்தை கீழே போட்டால் என்ன நடக்கும்? இதை நாம் இரண்டு கோணத்தில் பார்க்கமுடியும்.



1. புலிகள் ஆயுதத்தை கீழே போட்டால் தமழ் மக்கள் என்ன செய்வார்கள்? மக்கள் தமது கடந்தகால அவலங்களுக்காக புலிகளை பழிவாங்குவார்கள். இங்கு சாதாரண மக்களைக் குறிப்பிடுகின்றேனே ஒழிய, மக்களுக்கு அரசியல் ரீதியாக துரோகமிழைத்த எந்த துரோக குழுக்களையும் மக்களாக குறிப்பிடவில்லை. புலிகள் தமது வரலாற்றில் மக்களுக்கு இழைத்த கொடூரங்கள், கொடுமைகளை அடிப்படையாக கொண்டே இந்த எதிர்வினைகள் அமையும்.



அதே நேரம் இவற்றைக் கருவாக கொண்ட, உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்ட, எழுச்சி பெற்ற மக்கள் இலக்கியங்கள் உருவாகும். புலிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான முரண்பாடு என்பது, பகை முரண்பாடு தான். மக்களுக்கும் புலிக்கும் இடையிலான உறவுகள், துப்பாக்கி முனையில் தான் நீடிக்கின்றது. துப்பாக்கிகள் இன்றி புலிகள் என்ற அமைப்பு உயிர் வாழவே முடியாத அரசியல் அவலம். அவர்களிடம் எந்த அரசியல் மொழியும் கிடையாது, பாசிசம் ஒன்றேயுள்ளது.



2. புலிகள் ஆயுதத்தை கீழே போட்டால் தமிழ் மக்களின் நிலை என்ன? சிங்கள பேரினவாதம் புலிகளின் கீழ் உள்ள மக்களையும், தனது பேரினவாதப் போக்கில் அடிமைப்படுத்தும். ஆனால் அதை மக்கள் அரசியல் ரீதியாக புரிந்து கொள்ளும் ஆற்றல் அற்றவராக இருப்பர். அதைத்தான் புலிகள் ஏற்படுத்தி வைத்துள்ளனர். யாழ்ப்பாணம் முதல் கொழும்பு வரை வாழும் தமிழ் மக்களின் நிலைமையே, எங்கும் பொதுவில் ஏற்படும். இராணுவ கெடுபிடி படிப்படியாக குறையும்.



தமிழரின் உரிமைகள் எதுவும் வழங்கப்படமாட்டாது. தமிழ் மக்கள் அதைக் கோரப்போவதுமில்லை. தமிழரின் உரிமைகள் என அனைத்தையும் புலிகளே அரசியல் ரீதியாக அழித்துவிட்ட நிலையில், தமிழரின் உரிமை என்னவென்று தெரியாத பாசிச அறிவே தமிழரின் அறிவாகிவிட்டது. தமிழ் மக்கள் தமது சொந்த வாழ்வியல் உரிமைகளையே, புலிகளிடம் இழந்துவிட்டனர். அவையே எதுவென தெரியாத அடிமை நிலையில், பேரினவாதத்திடம் எதைத்தான் புதிதாக கோரமுடியும். ஒருபுறம் தமிழ் மக்களின் உரிமைகள் அனைத்தையும் பறித்துவிட்ட புலிகள், மறுபுறமாக அதை பேரினவாதத்திடமா கோர முடியுமா?



புலிகள் கோரும் உரிமை என்பது அஞ்சி உயிர்வாழ்வது, தமிழன் தமிழனை ஆளுதல் தான். அதாவது புலிகள் தமிழ் மக்களை அடக்கி ஆளுதல். தமிழ் மக்களின் முன்னுள்ள புதிர், ஏன் தமிழன் தன்னை அடக்கி ஆள வேண்டும் என்பதுவே. அரசியல் ரீதியாக தமிழ் மக்களால் புரிந்துகொள்ள முடியாத ஒன்று. மக்களை அரசியல் ரீதியாக புலிகள் தம் பின்னால் அணிதிரட்டவில்லை. அரசியல் இருந்தால் அல்லவா அது நடக்கும். புலிகள் ஆயுத முனையில், பாசிசத்தை அடிப்படையாக கொண்டு மக்களை அடிமைப்படுத்தி வைத்துள்ளனர். மக்கள் புலிகளில் இருந்து அன்னியமாகி, அதுவே இன்று பகை முரண்பாடாகிவிட்டது.



இதனால் புலிகள் ஆயுதத்தை கீழே போடமாட்டார்கள். மக்களைக் கண்டு சதா அஞ்சும் புலிகள், ஆயுதங்களின் மேல் காதல் கொண்ட மனநோயாளராகிவிட்டனர். ஆயுதமே அனைத்துமாகிவிட்டது. அதன் ஆகக் கூடிய உணர்வு சார்ந்த அதன் மொழியோ (பெண்ணைக் குறிக்கும் கெட்ட வார்த்தைகள்) தூசணமாகும். இன்று பணத்தைக் கொண்டு உலகெங்கும் கோலாட்டம் போடுகின்றனர்.



ஆயுதத்தைக் கீழே போடுதல் என்பது புலிகளின் தற்கொலைக்கு ஒப்பானதே ஒழிய, அது மக்களின் அரசியல் தற்கொலையல்ல.



அரசியல் ரீதியாக மக்களை அடக்கியாளுவதை ரசிக்கும் அதிகார வெறிபிடித்தவர்கள், ஆயுதத்தை தானாக ஒருநாளும் கீழே போடுவது கிடையாது. போட்டுவிட்டால் என்று விவாதிப்பது, விமர்சனத்தை குறுக்கு வழியில் தவிர்ப்பதற்காகத் தான்.



ஆயுதத்தை தானாக கீழே போடாத ஒரு கற்பனை விடையத்தைப் பற்றி விவாதிப்பதன் நோக்கம், பாசிசத்தை நியாயப்படுத்தத்தான். ஏன் புலிகளின் பாசிசத்தை நிறுத்தக் கோரி விமர்சிக்காமல், விமர்சிக்கின்றவர்களைப் பார்த்து ஆயுதத்தை கீழே போட்டால் என்று விவாதிக்கின்றனர். இது உண்மையில் மக்களின் மேலான பாசிச புலி நடத்தைகளை தக்கவைப்பதாகும். மாற்றத்தை விரும்பாத, மக்களின் உரிமைகளை அங்கீகரிக்க மறுக்கும் கற்பனையான எடுகோளில் நடத்தும் விதண்டாவாதம்.



மக்களைச் சுரண்டித் தின்னும் அதிகார வர்க்கங்கள், தமது சொந்த வர்க்க நலனுடன் தான் அனைத்தையும் கையாளும். வர்க்க நலன்களை அடிப்படையாக கொண்டு தான், பாசிச சக்திகள் இயங்கும். இதற்கு இசைவாகத்தான் ஆயுதத்தை பற்றிய முடிவை எடுக்கும்.



பதிலாக என்ன தீர்வு? தீர்வு எப்போதும் எங்கும் மக்களின் நலனை அடிப்படையாக கொண்ட மாற்றுப் போராட்டம் தான். மக்களுக்கு வெளியில் விடுதலைப் போராட்டம் என்பது பொய்யானது. மக்கள் தமக்காக, தமது சொந்த விடுதலைக்காக போராடுவது தான் போராட்டம். இதை மறுக்கும் புலிகள் தமது ஆயுதத்தை கீழே போட்டால், மக்கள் தமது விடுதலையின் ஒரு படியை எட்டுவர். புலிகளின் கையில் உள்ள ஆயுதம் தான், மக்களின் உண்மையான விடுதலைப் போராட்டத்தை தடுக்கின்றது என்பது உண்மையல்லவா. புலிகளின் ஆயுதம் சிங்கள பேரினவாதத்தை புலிகளின் சொந்த நலனில் இருந்து எதிர்க்கின்ற அதேநேரம், தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தையும் அது எதிர்க்கின்றது.



புலிகளின் ஆயுதம் ஏந்திய வன்முறையும், அதனை நியாயப்படுத்தலும் மக்களுக்கு எந்த விடுதலையையும் பெற்றுத் தருவதில்லை. தமிழ் மக்களின் எஞ்சிக்கிடக்கும் உரிமைகளையே புலிகளும் பேரினவாதிகளும் சேர்ந்து அழிக்கின்றனர். இந்த வகையில் அதை நாம் ஆதரிக்க முடியாது. மாறாக கீழ் இருந்து மக்களை அரசியல் ரீதியாக அணி திரட்டுவது தான் மாற்று வழி. இதை விட தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கக் கூடிய எந்த மாற்று அரசியல் வழியும் கிடையாது.



இது சாத்தியமா? இதுவும் புலிகளும் புலி அல்லாத புலியெதிர்ப்பாளர்களும் எழுப்பும் கேள்விதான். இந்த இரு பிரிவுகளின் அரசியல் நோக்கமும், தமது வர்க்க நலனில் இருந்து மக்களை கீழே இருந்து தட்டியெழுப்பும் போராட்ட வழியை நிராகரிப்பது தான்.



மக்களுக்கான எந்தப் போராட்டமும், எவ்வளவு தான் நெருக்கடிகள் இருந்தாலும் கீழ் இருந்து தான் கட்டமுடியும். மக்களுக்கு வெளியில் மக்களுக்கான போராட்டங்கள் வீங்கி வெம்பி வெடிப்பதில்லை. மக்கள் தமக்காக தாமே போராடவேண்டும். மக்களின் சொந்த விடுதலைப் போராட்டம் என்றால், அப்படித் தான் அமையும். இந்த அரசியலை எடுத்துச் செல்வது தான் சரியான அரசியல்.



இதை விடுத்து மற்றொரு பிரதானமான எதிரியைக்காட்டி மறுபுறத்தில் பாசிசத்தை ஆதரிக்க முடியுமா? முடியாது. பாசிசம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் மேலான, சுரண்டு வர்க்கத்தின் அதிவுயர்வான ஒடுக்கும் ஒரு சுரண்டல் கருவி. மக்களுக்கு எதிரான, அவர்களை அடிமைப்படுத்துகின்ற எதையும் ஆதரிக்க முடியாது. நாங்கள் மக்களுடன் நிற்கப் போகின்றோமா? அல்லது மக்களை அடக்கும் பாசிட்டுகளுடன் நிற்கப் போகின்றோமா? அடுத்து இரண்டு பாசிச சக்திகள் தமது சொந்த நலனுக்காக மக்களை அடிமைப்படுத்தியபடி, மோதிக் கொள்வதில் நாம் எந்தப் பக்கம் என்று கேட்பது அறிவுள்ள கேள்வியாக அமையுமா? நாங்கள் மக்கள் பக்கத்தில் நின்று, இரண்டு பாசிசத்தையும் எதிர்க்கும் அரசியல் நேர்மை எமக்கு உள்ளதா என்று உரசிப் பார்க்க வேண்டும்.



பாசிசத்தை எதிர்த்துப் போராட வேண்டும். மக்களின் அரசியல் பொருளாதார நலனுக்காக போராட வேண்டும். மக்களுக்கு வெளியில் உள்ளவற்றை எல்லாம், ஏன் நாம் ஆதரிக்க வேண்டும்?



புலிகள் ஏன் மக்களுக்காக போராடக் கூடாது? இதை ஏன் பொதுவில் நாம் கேட்பதில்லை.? அதை செய்யக் கோரிய அரசியல் விமர்சனம் தான், சரியான மக்கள் போராட்டத்தை எடுத்துக் காட்டும், சரியான போராட்டத்தை தெளிவுபடுத்தும். இதை சுயமாக செய்வது தான் நேர்மையான அரசியல். இதன் போது சரியான போராட்டத்தை அடிப்படையாக கொண்ட சுயமான அணிதிரட்டல் நிகழும். மறுபக்கத்தில் புலிகளிலும், துரோகக் குழுக்களிலும் உள்ள மக்களின் விடுதலையை நேசிக்கும் பிரிவை, மக்களின் விடுதலைக்கு எதிரான சக்திகளுக்கு எதிராக அணிதிரட்டும். மக்களுக்கான போராட்டம் உள்ளிருந்தும், வெளியிருந்தும் நடப்பதற்கு ஏதுவாக, மக்களின் விடுதலைப் போராட்டத்தை சரியான அரசியல் பொருளாதார ரீதியில் வெளிப்படுத்துவது இன்றைய வரலாற்றுக் கடமை.

Saturday, May 5, 2007

அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச் சுரைக்காய்கள்

சட்டங்கள், ஆணையங்கள், நடுவர்மன்றங்கள், திட்டங்கள்...அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச் சுரைக்காய்கள்


1980ஆம் ஆண்டு காடுகள் (பாதுகாப்பு) சட்டம் என்ற பெயரில் மத்திய அரசு ஒரு புதிய சட்டத்தை நிறைவேற்றியது. அதன்படி 1980ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதிக்கு முன்பிருந்து காடுகளில் வாழ்ந்து வருவதாக நிரூபிக்க முடியாதவர்கள் எல்லாம் ""ஆக்கிரமிப்பாளர்கள்'' என்று அறிவிக்கப்பட்டார்கள்.



அதைத் தொடர்ந்து, ""ஆக்கிரமிப்பாளர்களை'' எல்லாம் வெளியேற்றும்படிக் கோரி ""சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்'' எனப்படுவோர் உச்சநீதி மன்றத்தை அணுகினர். அதை ஏற்ற உச்சநீதி மன்றம் 1980க்குப் பிந்தைய எல்லா ஆக்கிரமிப்பாளர்களையும் வெளியேற்றும்படி உத்திரவிட்டது. அத்தீர்ப்பின் அடிப்படையில் 20022003 ஆகிய ஓராண்டில் 1.68 இலட்சம் குடும்பங்களை வாஜ்பாயி தலைமையிலான அரசாங்கம் வெளியேற்றியது.



பட்டியலினப் பழங்குடி மக்களின் வெளியேற்றத்தைத் தடுத்து நிறுத்தப் போவதாக வாக்களித்து ஆட்சிக்கு வந்த காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இடதுசாரிக் கூட்டணி ஆகியவை தமது குறைந்தபட்ச பொதுத் திட்டத்தில் அவ்வாறான ஒரு அம்சத்தைக் குறிப்பிட்டிருந்தன. அதைத் தொடர்ந்து, காடுகளில் இருந்து பழங்குடி மக்கள் மற்றும் காடுகளைச் சார்ந்து வாழும் வனவாசிகளை வெளியேற்றுவதைத் தடுப்பது, அதற்காக அவர்களுக்கு காட்டு நிலங்கள் மற்றும் விளைபொருட்கள் மீதுள்ள 14 உரிமைகளை நிலைநாட்டுவது என்ற பெயரில் ஒரு மசோதாவை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டு வந்தது. ""உண்மையில் அந்த மசோதா பழங்குடி மற்றும் காடுகளைச் சார்ந்து வாழும் மக்களை வெளியேற்றும் நோக்கத்தைக் கொண்டிருந்தது'' என்கிறார்கள் காங்கிரசு தலைமையிலான அரசின் முக்கிய ஆதரவாளர்களான "இடதுசாரி'க் கூட்டணியினர். முக்கியமாக நான்கு குறைபாடுகள் முதலில் கொண்டு வந்த மசோதாவில் இருந்தன. காடுகளில் வாழும் பழங்குடி அல்லாத மக்களின் உரிமைகள் சேர்க்கப்படவில்லை; காடுகளில் வாழும் பழங்குடி அல்லாத மக்கள் உரிமை பெறுவதற்குத் தகுதியானவர்களாகக் கருதப்படும் காலவரையறை; கிராமமக்கள் சபையின் பாத்திரம் குறிப்பிடப்படவில்லை; காடுகளில் வாழும் மக்கள் விவசாயம் செய்வதற்காக 2.5 ஹெக்டேர் என்ற உச்ச வரம்பு.



இந்தக் குறைபாடுகளைக் சுட்டிக் காட்டி ஐ.மு.கூட்டணி அரசு கொண்டு வந்த மசோதாவை நாடாளுமன்றக் கூட்டுக் கமிட்டியின் பரிசீலனைக்கு அனுப்பக் கோரி, இடதுசாரிக் கூட்டணி அதில் வெற்றியும் கண்டது. அதன்படி அமைக்கப்பட்ட கமிட்டி, பழைய மசோதாவின் மீது ஏழு பரிந்துரைகளை முன் வைத்தது. நாடாளுமன்றக் கூட்டுக் கமிட்டியின் பரிந்துரைகளை அப்படியே ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக, அவற்றை அமைச்சர்கள் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பியது, ஐ.மு.கூட்டணி அரசு.



நாடாளுமன்றக் கூட்டுக் கமிட்டியின் பரிந்துரைகளை அடிப்படையிலேயே நிராகரித்து விட்டு, காட்டிலாகா அதிகார வர்க்கம், அந்நிய பன்னாட்டுத் தொழில் கழகங்கள் மற்றும் உள்நாட்டுத் தரகு முதலாளிகள் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் பல திருத்தங்களை அமைச்சர்கள் குழு புகுத்தியது. ""பழங்குடியினர் மற்றும் பாரம்பரியமாக வனத்தைச் சார்ந்து வாழும் மக்களின் (காடுகளின் மீதான உரிமைகளை அங்கீகரிக்கும்) சட்டம் 2006'' என்று பெயரிடப்பட்டிருக்கும் இச்சட்டத்தில் உள்ள பெயரளவிற்கான உரிமைகளையும் நீர்த்துப் போகச் செய்யும் வகையில் அமைச்சர்கள் குழுவின் திருத்தங்கள் அமைந்துள்ளன.



இடதுசாரிக் கூட்டணிக் கட்சிகளின் முயற்சியால் கொண்டு வரப்பட்டுள்ள இச்சட்டம் பழங்குடி மக்களின் வாழ்வில் "ஒரு திருப்பு முனை' என்று பீற்றிக் கொள்ளும் போலி மார்க்சிஸ்டுகள், விதிகள் உருவாக்கப்படும்போது இதிலுள்ள குறைபாடுகள் சரி செய்யப்படுவதற்கான வாய்ப்பிருக்கிறது என்று வாக்குறுதியளிக்கின்றனர். மக்களுக்குச் சாதகமான இச்சட்டத்தை விரைவில் அமல்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு, மலைவாழ் மக்களிடையே இச்சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, பழங்குடி மக்களின் நில உடைமையைப் பாதுகாப்பதற்காகப் பாடுபட வேண்டும்; இந்த வாய்ப்பைப் பயன்படுத்திப் பழங்குடி மக்களின் மத்தியில் இடதுசாரி சக்திகளின் வலுவைக் கூட்டி அமைப்பை விரிவுபடுத்த வேண்டும் என்றும் சவடால் அடிக்கின்றனர்.



ஆனால், ஆளும் வர்க்கங்களும் அவர்களின் அரசியல் பிரதிநிதிகளும் போலி மார்க்சிஸ்டுகளைவிட மிகவும் புத்திசாலிகள் மட்டுமல்ல, தந்திரசாலிகளாகவும் உள்ளனர். ஏகாதிபத்திய சேவை செய்வதையே தேசிய நலன்களுக்கான செயல்கள் என்றும், தமது சொந்த நலன்களையே பொதுமக்கள் நலன்களுக்கானவை என்றும் பசப்பி ஏய்ப்பதில் வல்லவர்கள். அவ்வாறுதான் பழங்குடிகள் மற்றும் பாரம்பரியமாகக் காடுகளைச் சார்ந்து வாழும் மக்களின் காடுகள் மீதான உரிமைகளை அங்கீகரிப்பதாகப் பெயர் கொண்ட இப்புதிய சட்டத்திலும் பல சட்டநுட்பத் தில்லுமுல்லுகளைச் செய்துள்ளனர்.



எடுத்துக்காட்டாக 1980ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட காடுகள் (பராமரிப்புச்) சட்டப்படி அந்த ஆண்டு அக்டோபர் 25ந் தேதிக்கு முன்பிருந்து காடுகளில் வாழ்ந்து வருவதாக நிரூபிக்க முடியாத வனவாசி மக்கள் ஆக்கிரமிப்பாளர்களாகக் கருதப்பட்டு வெளியேற்றப்படுவர். தற்போதைய சட்டம் இந்தக் கால வரையறையை 2005, டிசம்பர் 13 ஆக மாற்றியிருக்கிறது. காடுகளில் வாழும் பட்டியலினப் பழங்குடிகள் அல்லாத மக்களுக்கும் இது பொருந்தும் என்றும், ஆகவே இச்சட்டம் முற்போக்கானதென்றும் நம்பச் சொல்கிறார்கள். ஆனால், ஒரு தலைமுறை என்பது 25 ஆண்டுகள் வீதம் மூன்று தலைமுறைகளாகப் பாரம்பரியமாகக் காடுகளில் தாங்கள் வாழ்ந்து வருவதாக அம்மக்கள் நிரூபித்தாக வேண்டும். அதாவது 1930 முதல் 75 ஆண்டுகள் காடுகளில் வாழ்ந்து வந்திருப்பதாக நிரூபிப்பவர்கள் மட்டுமே இச்சட்டத்தின்படி உரிமைகள் பெற முடியும். வாய்வழிச் சாட்சியங்களோ, நேரடி சோதனை ஆதாரங்களோ போதாதவை; காலனிய கால ஆவணங்களை வைத்து நிரூபித்தாக வேண்டும். இவ்வாறான கறாரான வரையறை மூலம் பெரும்பாலான மக்களின் வன உரிமைகள் நிராகரிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.



அடுத்து, ஐ.மு.கூட்டணி அரசு முதலில் முன் வைத்த நகல் சட்ட மசோதா, பட்டியலினப் பழங்குடி மக்களின் உரிமைகள் பற்றி மட்டுமே பேசியது. பின்னர்தான் அப்பழங்குடி மக்கள் அல்லாத பாரம்பரியமாகக் காடுகளில் வாழும் மக்கள் உரிமைகள் என்று சேர்க்கப்பட்டது. இது இடதுசாரிக் கட்சிகளின் முயற்சியால் மேற்கொள்ளப்பட்ட முற்போக்கான அம்சம் என்று போலி மார்க்சிஸ்டுகள் கொண்டாடுகின்றனர். ஆனால், காடுகளில் தங்கள் கால்நடைகளை மேய்த்து வாழும் குஜ்ஜார் போன்ற பழங்குடிகள் அல்லாத மக்கள், காடுகளின் விளிம்புகளில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் பல தலைமுறைகளாக காடுகளில் விவசாயம் செய்தும், பீடி, இலை, விறகு பொறுக்கி வாழும் ஏழை எளிய மக்கள் என ஏராளமான மக்கள் காடுகளைச் சார்ந்து வாழுகிறார்கள். ""பாரம்பரியமாகக் காடுகளில் வாழும் பட்டியலினப் பழங்குடிகள் அல்லாத மக்கள்'' உரிமைகள் பற்றி இச்சட்டம் பேசுவதால் இது முற்போக்கானதென்று யாரும் நம்பிவிட வேண்டாம். ஏனெனில் ""காடுகளில் வாழும் மக்கள்'' என்ற சொல்லுக்குக் ""காடுகளில் உள்ளே வாழும் மக்கள்'' என்று இறுதியாக நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் ஐ.மு.கூட்டணி அரசு திருத்தம் செய்திருக்கிறது. இதன் மூலம் காடுகளையொட்டி அவற்றின் விளிம்பில் வாழும் மக்களுக்குரிய உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இதனால் அரசு ஆவணங்களில் பதிவு செய்யப்பட்ட 3000 கிராமங்கள் தவிர பதிவு செய்யப்படாத காட்டுப்பகுதி கிராமங்களில் வாழும் மக்களுக்கு வன உரிமைகள் மறுக்கப்படுவதாகிறது.



""அரசினால் காடுகளில் குடியமர்த்தப்பட்ட மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்'' என்று பழங்குடி மக்கள் விவகார அமைச்சர் வெறுமனே வாக்களித்துள்ளார். ஆனால், சட்டத்தில் அப்படி இல்லை. மேலும், ""காடுகளுக்கு வெளியே வாழ்ந்தாலும், காடுகளுக்குள்ளே நில உடைமை வைத்துள்ளவர்கள் அதன் மீது உரிமை கொண்டாட முடியும்'' என்று அமைச்சர் விளக்கமளித்துள்ளார். இதன்மூலம் வெளியூரில் வாழும் நிலப்பிரபுக்கள் கூட "தமது' நிலத்தின் மீது உரிமை பாராட்டமுடியும். அதேசமயம், காடுகளின் விளிம்பில் வாழும் கூலிஏழைநிலமற்ற விவசாயிகளோ, தாழ்த்தப்பட்ட மக்களோ அவ்வாறு செய்ய முடியாது என்றாகிறது.



மேலும், பட்டியலினப் பழங்குடி மக்கள் மற்றும் அவர்கள் அல்லாத, பாரம்பரியமாக காடுகளில் வாழும் மக்களுடைய கிராம சபை பற்றிய வரையறுப்பையும், அவற்றின் அதிகாரங்களையும் இறுதிச் சட்டம் மாற்றித் திருத்தி அமைத்து விட்டது. ""மலைவாழ் மக்களின் குடியிருப்புப் பஞ்சாயத்து'' அடிப்படையிலான கிராம சபை என்பதற்கு பதிலாக, அதிகாரவர்க்கம் மற்றும் மேல்சாதி மக்களின் கட்டுப்பாட்டில் வரும் வருவாய்த் துறை பஞ்சாயத்துக்களே கிராம சபைகள் என்று வரையறுத்து, இந்த வகை கிராமப் பஞ்சாயத்துக்களின் முடிவே கணக்கில் கொள்ளப்படும் என்று மாற்றி அமைத்து விட்டது, நிறைவேற்றப்பட்ட சட்டம். இடம் மாறி விவசாயம் செய்வதற்கான உரிமை, காடுகளின் சிறு விளைபொருட்களைப் பயன்படுத்தும் உரிமை, அவற்றின் விலை நிர்ணயம், காடுகள் அல்லாத தேவைகளுக்குக் காடுகளைப் பயன்படுத்துவது போன்ற முடிவுகளை பாரம்பரிய கிராமப் பஞ்சாயத்துக்கள் தீர்மானிக்க முடியாது. அரசு அதிகாரிகளும், மூன்று வருவாய்த்துறை பஞ்சாயத்துத் தலைவர்களும் கொண்ட துணைக் கோட்டக் கமிட்டிதான் மேற்படி முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கொண்டவை.



காடுகளில் கிடைக்கும் சிறு விளைபொருட்களைப் பட்டியலினப் பழங்குடி மக்களும் பாரம்பரியமாக காடுகளில் வாழும் பழங்குடிகள் அல்லாத மக்களும் பயன்படுத்தும் உரிமை இருப்பதாகக் கூறினாலும், விறகு, மூங்கில், கற்கள் மற்றும் பல்வேறு வகை இலைகள் இவ்வாறு பயன்படுத்தப்படுவதில் இருந்து தடைவிதிக்கப்பட்டுள்ளன. அதேபோல, இடம் பெயர்ந்து விவசாயம் செய்வதற்கான உரிமை வழங்குவதாகக் கூறினாலும் அந்நிலங்களின் பல்வேறு பயன்பாடுகளுக்குக் கடுமையாகத் தடை விதித்துள்ளது. காடுகளில் உள்ள தேசியப் பூங்கா மற்றும் பலவகை விலங்கு பறவை சரணாலயங்களில் இருந்து சிறு விளைபொருட்களை எடுத்துச் செல்வதற்கும் பல தடைகள் விதித்துள்ளது.



காடுகள் மற்றும் அவற்றின் விளிம்புகளில் நிறைவேற்றப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மீதும் பாரம்பரிய கிராம சபைக்கு அதிகாரம் கிடையாது. அரசு அதிகார வர்க்கத்தின் ஆதிக்கத்திலுள்ள வருவாய்த்துறை பஞ்சாயத்துகளுக்கே அதிகாரம் உள்ளது; அதேபோன்று அங்குள்ள தேசிய பூங்கா, பறவைகள் வனவிலங்குகள் சரணாலயம் பற்றிய முடிவுகள் எடுப்பது; அவற்றைச் சாக்கு வைத்து பழங்குடி மக்கள் மற்றும் பழங்குடியினர் அல்லாத பாரம்பரிய கிராம மக்களை இடமாற்றம் செய்வது, மறுகுடியேற்றங்கள் நிறுவுவது போன்றவற்றுக்கான அதிகாரமும் அரசு அதிகார வர்க்கத்திடமே ஒப்படைக்கப்படுகிறது.



காடுகள் அல்லாத தேவைகளுக்கு காடுகளில் உள்ள நிலங்களைப் பயன்படுத்துவது குறித்த முடிவையும் அரசு அதிகார வர்க்கமே செய்யும். இதுதவிர, காடுகளைப் பராமரித்து நிர்வகிக்கும் அதிகாரம் தொடர்ந்து வழமையான காட்டிலாகா அதிகார வர்க்கத்திடமே நீடிக்கும். இந்த நிர்வாகக் கட்டமைப்பைக் கலைக்காமல், பட்டியலின பழங்குடி மக்கள் மற்றும் பழங்குடியினர் அல்லாத பாரம்பரிய காட்டுவாசிகள் உரிமை பற்றிப் பேசுவதெல்லாம் வெறும் கண்துடைப்பு வேலைதான்.



காடுகளையும் மலைகளையும் அவற்றின் வளங்களையும் அந்நியப் பன்னாட்டு முதலாளிகளுக்கும், உள்நாட்டுத் தரகு முதலாளிகளுக்கும் தாரை வார்ப்பதைக் கண்டு பழங்குடி மக்களும் காடுகளைச் சார்ந்து வாழும் மக்களும் கொதித்தெழுந்து போராடுவதைத் தடுப்பதற்கே, மக்களின் காடுகள் உரிமைச் சட்டம் என்ற பெயரில் மோசடியானதொரு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

Wednesday, May 2, 2007

கோவை குண்டு வெடிப்பு : தீர்ப்புக்கு முன்பே தண்டனை

கோவை குண்டு வெடிப்பு :
தீர்ப்புக்கு முன்பே தண்டனை


1993ஆம் ஆண்டு நடந்த மும்பய் குண்டு வெடிப்பு வழக்கில் 123 பேரைக் குற்றவாளிகளாகத் தீர்ப்பளித்திருக்கிறது, ""தடா'' சிறப்பு நீதிமன்றம். இவர்களுக்கான தண்டனை ஏப்ரல் மாதம் அறிவிக்கப்படும் எனத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


""தாமதமாகக் கிடைக்கும் நீதி, நீதி மறுக்கப்படுவதற்குச் சமமானது'' என்பார்கள். மும்பய்க் குண்டு வெடிப்பு வழக்கில் 13 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது; ஆனால், இக்குண்டு வெடிப்புக்கு மூல காரணமான மும்பய் கலவர வழக்கிலோ, இன்னும் முதல் தகவல் அறிக்கைகூடப் பதிவு செய்யப்படவில்லை.


மும்பய் குண்டு வெடிப்பில் 257 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு முன் நடந்த மும்பய் கலவரத்தில் 1,000 முசுலீம்கள் கொல்லப்பட்டதோடு, ஒரு இலட்சம் முசுலீம்கள் அகதிகளாகத் துரத்தப்பட்டனர். மும்பய் குண்டு வெடிப்பில் தொடர்புடைய குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கு 10,000 பக்க அளவில் குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டது. அதேசமயம், மும்பய் கலவரம் சம்பந்தமான 1,370 வழக்குகள் உண்மையானவை என ஒப்புக் கொள்ளப்பட்டாலும், சாட்சியங்கள் சேகரிக்க முடியாது என நொண்டிக் காரணம் கூறப்பட்டு, அவ்வழக்குகள் குப்பைக் கூடைக்குள் வீசப்பட்டன.


மும்பய் கலவரத்தை விசாரித்த சிறீகிருஷ்ணா கமிசன், இக்கலவரத்தைத் திட்டமிட்டு நடத்திய இந்து மதவெறிக் குண்டர்கள் தொடங்கி, அவர்களுக்குத் துணையாக நின்ற போலீசு அதிகாரிகள் உள்ளிட்டு, குற்றவாளிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு அடையாளம் காட்டியிருக்கிறது. இந்த அறிக்கை மீது நடவடிக்கை எடுப்போம் என வாக்குறுதி கொடுத்துதான் காங்கிரசு தேசியவாத காங்கிரசு கூட்டணி மகாராஷ்டிராவில் ஆட்சியைப் பிடித்தது. கடந்த ஒன்பது ஆண்டுகளாக அம்மாநிலத்தில் ஆட்சி நடத்தி வரும் இம்மதச்சார்பற்ற கூட்டணி, இந்து மதவெறி பாசிஸ்ட் பால் தாக்கரேயை மட்டுமல்ல, சிறீ கிருஷ்ணா கமிசனால் குற்றம் சாட்டப்பட்டுள்ள 32 போலீசு அதிகாரிகளைக் கூடத் தண்டிக்காமல் பாதுகாத்து வருகிறது.


மும்பய் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள அனைவருமே மாஃபியா கும்பலைச் சேர்ந்தவர்கள் கிடையாது. ""மும்பய் கலவரத்தின்பொழுது எனது வீடு தீ வைத்துக் கொளுத்தப்பட்டதால்தான், மும்பய் பிளாசா திரைப்பட அரங்கம் அருகே குண்டுகள் நிறைந்த வேனைக் கொண்டு போய் நிறுத்தியாக'' ஷா நவாஸ் குரேஷி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். ""மும்பய் கலவரத்தைத் தொடர்ந்து எனது குடும்பத்தினருக்குத் தொலைபேசி மிரட்டல்கள் வந்ததால்தான், தாவூத் கும்பலிடமிருந்து ஏகே 56 இரக துப்பாக்கிகளை வாங்கி வைத்துக் கொண்டதாக'' ஒப்புக் கொண்டுள்ளார், நடிகர் சஞ்சய் தத்.


எனினும், இவர்கள் இருவரும் ஒரே மாதிரியாகத் தண்டிக்கப்படவில்லை. சாமானிய முசுலீமான குரேஷி காலாவதியாகிவிட்ட ""தடா'' சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டுள்ளார். பணபலமும், அரசியல் செல்வாக்குமிக்க நடிகர் சஞ்சய் தத், ""தடா'' குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டு, ஆயுதச் சட்டத்தின் கீழ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேசமயம், சஞ்சய் தத்திடமிருந்த ஏகே 56 இரகத் துப்பாக்கிகளை அழிக்க உதவியதற்காக, தத்தின் நண்பர்கள் மன்சூர் அகமதுவும், ஜாய்புன்னிஸா காசியும் ""தடா''வின் கீழ் தண்டிக்கப்பட்டுள்ளனர்.


நாடாளுமன்றத் தாக்குதலையடுத்து, பாக். மீது போர் தொடுக்க இந்தியா முண்டா தட்டியபொழுது, மும்பய் குண்டுவெடிப்புக்குத் திட்டமிட்டுக் கொடுத்த தாவூத் இப்ராகிம், ""டைகர்'' மேமன் உள்ளிட்ட 20 பயங்கரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என மைய அரசு கூச்சல் போட்டது. ஆனால், அமெரிக்க நிர்ப்பந்தம் காரணமாக, போர் முஸ்தீபுகளுக்கு முற்றுப்புள்ளி விழுந்து, இரு நாடுகளுக்குமிடையே நல்லுறவு பேச்சுவார்த்தைகள் தொடங்கிய பிறகு, பயங்கரவாதிகளை ஒப்படைக்க கோருவதுகூட சம்பிரதாய நடவடிக்கையாக நீர்த்துப் போய்விட்டது. இதனால், மும்பய் குண்டு வெடிப்பு தீர்ப்பு, எய்தவனை விட்டு விட்டு அம்பை மட்டும் தண்டித்த கதையாக முடிந்துவிட்டது.

···

இந்து மதவெறி பயங்கரவாத நடவடிக்கைகளையும், அதற்கு எதிரான முசுலீம் தீவிரவாத நடவடிக்கைகளையும் பாரபட்சமாக நடத்துவது, ""சமூக நீதி'' மாநிலமாகக் கருதப்படும் தமிழகத்தில் கூட அம்மணமாக நடக்கிறது. 1997ஆம் ஆண்டு இறுதியில் கோவையில் ஆர்.எஸ்.எஸ். குண்டர்களும், தமிழக போலீசாரும் சேர்ந்து நடத்திய கலவரத்தில் 18 முசுலீம்கள் கொல்லப்பட்டனர்; 5 கோடி பெறுமான முசுலீம்களின் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. இக்கலவரம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட்டதற்கு மேல், வேறெந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வழக்கு விசாரணை நடந்து குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்பதற்கு எந்த அறிகுறியும் தென்படவில்லை.


அதேசமயம், இக்கலவரத்தின் எதிர்வினையாக நடந்த கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 180 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டு, 166 முசுலீம்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கு தொடர்பாக 1,300 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர்.


சிறையில் அடைக்கப்பட்டுள்ள 166 பேரில், 3 முசுலீம்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக, 1,300 சாட்சிகளுள் ஒருவர்கூட சாட்சியம் அளிக்கவில்லை. இதன் அடிப்படையில் தங்களை வழக்கில் இருந்து விடுவித்து, சிறையில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என அவர்கள் கோரியதை, கோவை குற்றவியல் நீதிமன்றம் எவ்விதக் காரணமும் கூறாமல் நிராகரித்துவிட்டது.


45 முசுலீம்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக, நான்கே நான்கு பேர்தான் சாட்சியம் அளித்துள்ளனர். இந்த நான்கு சாட்சியங்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இந்து முன்னணியின் உறுப்பினர்கள்.


இக்குண்டு வெடிப்பு தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த அப்துல் மதானி மீது, சதித் திட்டம் தீட்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்டது. ஆனாலும், அதற்கான சாட்சியம் நீதிமன்றத்தில் தெளிவாக நிரூபிக்கப்படவில்லை. இதையடுத்து, தனக்குப் பிணை வழங்காவிட்டாலும் கூட, கேரளத்தில் மருத்துவச் சிகிச்சை எடுத்துக் கொள்ள தன்னை அனுமதிக்க வேண்டும் என உச்சநீதி மன்றத்தில் மனு கொடுத்தார், அவர். மதானியின் மனுவை காது கொடுத்து விசாரிக்கக் கூட மறுத்துவிட்டு, விசாரணையின்றியே தள்ளுபடி செய்தது, உச்சநீதி மன்றம்.


முசுலீம் "தீவிரவாதி' மதானியிடம் இப்படி கறாராக நடந்து கொண்ட உச்ச நீதி மன்றம், பார்ப்பன பயங்கரவாதி ஜெயேந்திரர், சங்கரராமன் கொலை வழக்கில் தனக்குப் பிணை வழங்க வேண்டும் என முறையீடு செய்தபொழுது, அவ்வழக்கு தொடர்பாக போலீசு விசாரணை நடந்து கொண்டிருந்த பொழுதே, அவ்வழக்கில் அவர் மீது சுமத்தப்பட்ட சதிக் குற்றச்சாட்டில் இருந்தே அவரை விடுதலை செய்தது.


""மதானியை வெளியே நடமாட அனுமதித்தால், சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய்விடும். எனவே, அவரைப் பிணையில்கூட வெளியே விடக் கூடாது'' என அ.தி.மு.க. ஆட்சியின் பொழுது தனிஅரசாணை போடப்பட்டது. பார்ப்பன ஜெயா ஆட்சியில் போடப்பட்ட இந்த அரசாணை, சூத்திர தி.மு.க. ஆட்சியிலும் நீக்கப்படவில்லை.


கோவை குண்டு வெடிப்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 26 வயது அப்பாஸுக்கு, சிறைச்சாலையில் அறுவைச் சிகிச்சை நடந்தது. அறுவைச் சிகிச்சைக்கு முன் அவருக்கு நடத்தப்பட்ட இரத்தப் பரிசோதனையில், அவர் எவ்வித நோய்த் தொற்றும் இன்றி உடல் நலத்தோடு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அறுவைச் சிகிச்சை முடிந்த பிறகோ, ""எய்ட்ஸ்'' நோயைத் தோற்றுவிக்கும் வைரஸ் கிருமிகள் அவரது இரத்தத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை அரசின் அலட்சியம் என்பதா, இல்லை பழி தீர்த்துக் கொள்ளும் வெறி என்பதா?


இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இம்முசுலீம்கள் அனைவரின் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால்கூட, அவர்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரைதான் தண்டனை வழங்க முடியும். ஆனால், இவர்கள் இப்பொழுதே பிணை கூட கிடைக்காமல், ஏறத்தாழ ஒன்பது ஆண்டுகள் சிறையில் கழித்து விட்டனர். விசாரணையின்றித் தண்டிக்கப்பட்டுள்ள இந்த அரசு பயங்கரவாதத்தைச் சமூக நீதி என்பதா, இல்லை பார்ப்பன மனுநீதி என்பதா?


சமூக நீதிக் காவலர்கள் ஆட்சி புரியும் தமிழகமே இப்படியென்றால், இந்து ராஷ்டிரத்தின் ஆய்வுக் கூடமான குஜராத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமா?


இந்து மதவெறிக் கும்பல் மட்டுமல்ல, எல்லா வண்ண ஓட்டுக் கட்சிகளும், அரசும், நீதிமன்றமும் கை கோர்த்துக் கொண்டு, முசுலீம்களுக்கு, வாழ்வுரிமையையும், நீதியையும் மறுப்பதன் மூலம், அவர்களைத் தீவிரவாதம் பக்கம் தள்ளி விடுகின்றன. பிறகு, இதையே காரணமாகக் கூறி, இந்து மதவெறி பாசிசத்தையும், அரசு பயங்கரவாதத்தையும் இந்திய நாட்டின் மீதும், மக்களின் மீதும் கட்டவிழ்த்து விடுகின்றன.

· குப்பன்

Tuesday, May 1, 2007

நந்திகிராம் படுகொலை - ஒளிப்படம்

நந்திகிராம் படுகொலை - ஒளிப்படம்


Monday, April 30, 2007

சுரண்டித் தின்னும் ஜனநாயகமும், சுரண்டுவதை எதிர்க்கும் மேதினமும்

சுரண்டித் தின்னும் ஜனநாயகமும், சுரண்டுவதை எதிர்க்கும் மேதினமும்

பி.இரயாகரன்
01.05.2007


ற்றவன் உழைப்பைச் சுரண்டி தின்று கொழுக்கும் வர்க்கம் (கூட்டம்) இருக்கும் வரை, மே தினம் என்பது புரட்சிகர தினமாகவே இருக்கும். இதை யாராலும் வரலாற்றால் திரிக்கவும், கொச்சைப்படுத்தவும் முடியாது.


உழைக்கும் வர்க்கம் தனது உரிமைக்காக குரல்கொடுத்து, அதற்காகவே போராடி மடிந்த தினம். இப்படி உலகத் தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளை அறைகூவி உணர்த்தியதன் மூலம், உலக தொழிலாளி வர்க்கம் அரசியல் ரீதியாகவே, இந்த நாளை தனது போராட்டத்துக்குரிய உரிமைக்கான நாளாக்கியது.


உழைக்கும் மக்கள் தமது உரிமையை வலியுறுத்தவும், அதற்காக அணிதிரண்டு போராடும் ஒரு புரட்சிகர நாளாகவுமே இது மாறியது. மூலதனம் இந்த நாளைக் கண்டு அஞ்சும் நிலைக்கு, உலகெங்கும் உழைப்போர் கூடி போராட்டங்களை நடத்துகின்ற நாளாகியது.


உலகெங்கும் சுரண்டித்தின்னும் மூலதனத்துக்காக உழைப்பதை இந்த நாளில் தொழிலாளி வர்க்கம் மறுத்து, தமது உரிமைக்காக வேலைநிறுத்தமாக மாற்றியது. அறிவிக்கப்படாத இந்த வேலைநிறுத்தத்தின் மூலம் உணர்வுபூர்வமாக தொழிலாளி வர்க்கம் ஒருங்கிணைவதை மூலதனம் விரும்புவதில்லை.


வன்முறை மூலம் இதை தடுக்க முனைந்து தோல்வி பெற்ற நிலையில், தனது வக்கிரமான மூலதனத்துக்கேகுரிய ஆபாசம் மூலம் (சலுகை மூலம்) இதை பொது விடுமுறையாக்கினர். இதன் மூலம் வீரியம் மிக்க, மூலதனத்துக்கு எதிரான உழைப்புப் புறக்கணிப்பு என்ற போராட்ட உணர்வை நலமடிக்க முனைந்தனர்.


இவற்றை எல்லாம் எதிர்கொண்ட புரட்சிகரமான வரலாற்றில், பல தடைகளைக் கடந்து பல இழிவாடல்களைக் கடந்தே ஒரு புரட்சிகரமான போராட்ட நாளாக இன்றுவரை இந்நாள் நீடிக்கின்றது. மற்றவனை ஜனநாயகத்தின் பெயரில் சுரண்டித் தின்பதே சமூக ஒழுங்காக இருக்கும் வரை, இந்த நாள் தொழிலாளிகளின் உரிமைக்கான ஒரு நாளாக இருப்பதை மூலதனத்தால் தடுத்து நிறுத்தி விடமுடியாது.


என்னதான் இந்த நாளில் ஆபாசமான சினிமா கழிசடைகளைக் கொண்டு கவர்ச்சியாக துகிலுரிய வைத்தாலும், இதன் மூலம் வக்கிரம்கொண்ட ஆபாசமான கவர்ச்சியான அற்ப இழிவுணர்வை ஊட்டும் களியாட்ட நாளாக மாற்ற மூலதனம் முயன்றாலும், சுரண்டப்படும் வர்க்கத்தின் போராட்ட உணர்வை நலமடிக்க முடியாது. ஜனநாயகத்தின் பெயரில் சுரண்டப்படுவது தொடரும் வரை, சுரண்டப்படும் தொழிலாளியின் உணர்வை வெற்றுக் களியாட்டமாக்கிவிட முடியாது. சுரண்டப்படும் வர்க்கத்தின் சொந்த வர்க்க உணர்வு, வர்க்கத் தீயாக பற்றிப் படர்வதை மூலதனத்தால் தடுத்து நிறுத்திவிட முடியாது.


இந்த மே தினத்தில் சில எடுத்துக்காட்டான படிப்பினைகள்


பிரான்சில் மூடிமறைக்கப்பட்ட பாசிசம் இன நிற வெறியுடன் அதிகாரத்துக்கு வரமுனைகின்றது. கடுமையான இன நிற விரோத உணர்வுகளை, சுரண்டும் ஜனநாயகம் என்ற மூலதனக் கூத்தில், தேர்தல் பிரச்சாரமாக்குகின்றது. வெளிநாட்டவர்கள் மத்தியில் அச்சமும், பீதியும், விரக்தியும் அலை மோதுகின்றது. பிரஞ்சு சமூகத்தின் ஒரு பகுதியினர் மத்தியில் உள்ள வெளிநாட்டவருக்கு எதிரான குரோதம் கொழுந்துவிட்டு எரிகின்றது. இதுவே தேர்தலின் முடிவை தீர்மானிக்கும் குறிப்பான காரணியாகியுள்ளது. தொழிலாளி வர்க்கம் உணர்வை இழந்து செயலற்று நிற்கின்றது.


இலங்கையில் இனவெறி தனது கோர முகத்துடன், புலிகளின் பெயரில் தமிழ் மக்களை ஆழ் புதைகுழிக்குள் போட்டு மூட முனைகின்றனர். புலிகள் பாசிச இராணுவவாதங்களில் சிக்கி, தமிழ் மக்களின் உரிமைகளை மறுத்து இனவாதிகளின் எடுபிடிகளாக வக்கரிக்கின்றனர்.


கண்டகண்ட தெரு நாய்கள் எல்லாம் அதை கவ்விக் கொண்டு நக்குகின்றது. பேரினவாத இனவெறி அரசு, தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி, அதை கள்ளச் சந்தையில் விற்க முனைகின்றது. அதை வாங்க ஒரு கூட்டம் நாயாக அலைகின்றது. தமிழ் மக்களின் சமூக பொருளாதார வாழ்வியல் அவலங்களை இட்டு, யாருக்கும் அக்கறை கிடையாது.


நேபாளத்தில் பாட்டாளி வர்க்கம் ஒரு குடி அரசு என்ற, மக்களின் உடனடிக் கோரிக்கையை முன்னெடுத்துள்ளது. நேபாள பாட்டாளி வர்க்கம், வர்க்கப் போராட்டத்தின் திசை வழியை மறுபடியும் தனது சொந்த நடைமுறை வழியில் உலகுக்கே கற்றுக்கொடுக்கின்றது. மன்னர் ஆட்சி, அதை தாங்கி நின்ற நிலப்பிரபுத்துவ அமைப்புக்கு எதிராக குடியரசுக் கோரிக்கையின் அடிப்படையில், நேபாள மக்களின் பல்வேறு வர்க்கப் பிரிவுகளை உள்ளடக்கி முழுமையில் அணிதிரண்டு நிற்கின்றது. மக்களால் தன்னை நெருக்கமாக ஆயுதபாணியாக்கி நிற்கின்றது.


உழைக்கும் விவசாயிக்கு நிலங்களை மறுபங்கீடு செய்தல் என்ற ஒரு குடியரசுக்கான ஒரு வேலைத்திட்டத்தின் அடிப்படையில், அதிகாரத்தில் பங்கு பெறமுனையும் சரியான திசைவழியில் செல்லுகின்றனர்.


இப்படி உலகெங்கும் உழைக்கும் வர்க்கம் சந்திக்கும் நேர் எதிரான சொந்தப் படிப்பினைகள், வெற்றி தோல்வி முதல் போராட்டங்கள் அனைத்தும் கற்றுக்கொடுத்து நிற்கின்றது.


மனிதனை மனிதன் பிடுங்கி தின்னுகின்ற இந்த சுரண்டல் சமூக அமைப்பில், மக்கள் மீண்டும் மீண்டும் போராடுவதை தடுக்க முடியாது. அவலம் நிறைந்ததாக இருந்தாலும், உறுதியை உழைப்பின் அடிமைத் தனம் மனிதனுக்கு கற்றுக்கொடுக்கின்றது. உறதி தளராத வர்க்க உணர்வுபெற்ற ஒரு வர்க்கத்தின் தலைமையில், மனித குலம் மீண்டும் மீண்டும் போராடுவதை வரலாற்றில் எதுவும் தடுத்து நிறுத்திவிடாது.


Sunday, April 29, 2007

பிரிக்கால் தொழிலாளர் போராட்டம் : பாதிக் கிணறு தாண்டினால் போதுமா?

பிரிக்கால் தொழிலாளர் போராட்டம் :
பாதிக் கிணறு தாண்டினால் போதுமா?



கோவை நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பிரிக்கால் நிறுவனம், கார், இரு சக்கர வாகனங்களுக்குத் தேவையான மீட்டர்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் 6 தொழிற்கிளைகள், இந்தோனேஷியாவிலும், ஈரானிலும் தலா ஒரு தொழிற்கிளை என வளர்ந்துள்ள பிரிக்கால் நிறுவனம், ஆட்டோ மீட்டர் சந்தையில் 46 சதவீதத்தைக் கைப்பற்றி ஏகபோக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ""பிரிக்காலை ஒரு பன்னாட்டு நிறுவனமாக வளர்க்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்'' என்கிறார் பிரிக்காலின் செயல் இயக்குநர் வனிதா மோகன். எனவே, இந்த நோக்கத்தை ஈடேற்றிக் கொள்ளும் வகையில் பிரிக்காலின் தொழிலாளர்கள், அதீத உற்பத்தி இலக்கு வைத்துக் கசக்கிப் பிழியப்படுவதோடு, எவ்விதத் தொழிற்சங்க உரிமைகளும் அற்றக் கொத்தடிமைகள் போல நடத்தப்பட்டு வருகின்றனர்.



சிறு பொறி பெருங்காட்டுத் தீயை மூட்டும் என்பதற்கு ஏற்ப, குமுறிக் கொண்டிருந்த தொழிலாளர்கள், கடந்த மார்ச் மாதம் ஆறு முன்னணித் தொழிலாளர் கோவையில் இருந்து உத்தராஞ்சல் மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டதையடுத்து, வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், அதிரடி இடமாற்றத்தை ரத்து செய்யக் கோரி, மார்ச் 9 அன்று நடத்திய 18 மணி நேர சாலை மறியல் போராட்டம், பிரிக்கால் நிறுவனத்தை மட்டுமல்ல, கோவையைச் சேர்ந்த பெரும் முதலாளிகள் அனைவரையும் கதிகலங்க வைத்துவிட்டது. இச்சாலை மறியல் போரில் கலந்து கொண்ட 1,000க்கும் மேற்பட்ட பெண் தொழிலளர்கள் உள்ளிட்டு, 2,166 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.



""உற்பத்திச் செலவு குறைவதற்குத் தகுந்தபடிதான் தொழிலாளர்களின் சம்பள உயர்வு நிர்ணயிக்கப்படும்'' என்ற கொடூரமான நிபந்தனையின் அடிப்படையில், பிரிக்கால் பிளாண்ட்1இல், 2004ஆம் ஆண்டு ஊதிய ஒப்பந்தம் போடப்பட்டது. இதே நிபந்தனையுடன் கூடிய ஊதிய ஒப்பந்தம், 2003இல் பிளாண்ட்3 இல் போடப்பட்டது. மூலப்பொருட்களின் விலை உயர்வை ஈடுகட்டவும், இலாபம் சரிந்து விடாமல் இருக்கவும் தொழிலாளர்களின் கூலியில் கை வைக்கும் நரித்தனம்தான் இந்த ஒப்பந்தம். தொழிலாளர்களின் அடிமடியிலேயே கை வைக்கும் இந்த ஒப்பந்தத்தில், ஐ.என்.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., உள்ளிட்டு ஐந்து தொழிற்சங்கங்கள் கையெழுத்துப் போட்டு, பிரிக்கால் தொழிலாளர்களுக்குத் துரோகமிழைத்தன.



இதுவொருபுறமிருக்க, 14 ஆண்டுகளாக வேலை பார்த்து வரும் 1,500 தொழிலாளர்களை நிரந்தரமாக்காமல் தினக்கூலிகளாக வைத்திருப்பது; பெண் தொழிலாளர்களை மிரட்டி ""ஓவர்டைம்'' வேலை செய்ய வைப்பது; தொழிற்சாலைக்குள் நடக்கும் விபத்துக்களுக்கு, அவ்விபத்தில் பாதிக்கப்படும் தொழிலாளிகளையே பொறுப்பாக்குவது என்பது தொடங்கி, உணவகத்தில் நடக்கும் முறைகேடுகளைத் தட்டிக் கேட்கக் கூடாது; சாப்பிட்ட பிறகு, தொழிலாளர்கள் டிஃபன் பாக்சைத் தண்ணீர் ஊற்றிக் கழுவக் கூடாது; ஒதுக்குப்புறமாகப் போய்க்கூட சிகரெட் பிடிக்கக் கூடாது என்பது வரை பல்வேறுவிதமான அடக்குமுறைகளும், கெடுபிடிகளும், ""கட்டுப்பாடு'', ""நாகரீகம்'' என்ற பெயரில் தொழிலாளர்கள் மீது திணிக்கப்பட்டன. நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களுள் (சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி.) ஒன்று கூட, இந்த அடக்குமுறையைத் தட்டிக் கேட்காமல், நிர்வாகத்திற்கு ஒத்து ஊதி வந்தன.



பிரிக்கால் நிறுவனத்தின் இந்த அடக்குமுறைகளைத் தட்டிக் கேட்கவும்; தங்களின் தொழிற்சங்க உரிமைகளை மீட்டெடுக்கவும், இத்துரோகத் தொழிற்சங்கங்களை அடியோடு புறக்கணிக்க வேண்டும் என உணர்ந்து கொண்ட தொழிலாளர்கள், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ""கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர் தொழிற்சங்கம்'' என்ற புதிய சங்கத்தைக் கட்டியமைத்ததோடு, பெருவாரியான தொழிலாளர்கள் அதில் தங்களை இணைத்தும் கொண்டனர். இப்புதிய தொழிற்சங்கத்துக்கு, இ.பொ.க. (மாலெ) விடுதலை குழுவின் கீழ் இயங்கி வரும் அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் வழிகாட்டி வருகிறது.



இப்புதிய தொழிற்சங்கத்தை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் என்ற தீய நோக்கத்தோடுதான், ஆறு முன்னணித் தொழிலாளர்களைத் தடாலடியாக வேறு மாநிலத்திற்குத் தூக்கியடித்தது நிர்வாகம். இதன் மூலம், மற்ற தொழிலாளர்கள் பயந்து போய் ஒதுங்கி விடுவார்கள் என எதிர்பார்த்தது. ஆனால், பிரிக்கால் தொழிலாளர்களோ, ஆறு தொழிலாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்ட மறுநாளே உள்ளிருப்புப் போராட்டத்தில் குதித்து, நிர்வாகத்திற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர். அடாவடித்தனமான இடமாற்றலை ரத்து செய்யக் கோரி, மார்ச் 4ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை நடத்தி வருகின்றனர்.



புதிய தொழிற்சங்கத்தோடு பேச்சு வார்த்தை நடத்த மாட்டோம் என்ற நிர்வாகத்தின் அடாவடித்தனத்தை, தொழிலாளர்களின் உறுதிமிக்க போராட்டம் உடைத்தெறிந்துவிட்டது. புதிய தொழிற்சங்கத்தோடு மூன்று முறை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்து விட்டபோதும், தங்களின் கோரிக்கையை நிர்வாகம் ஏற்காதவரை வேலைக்குத் திரும்புவதில்லை என்ற உறுதியோடு பிரிக்கால் தொழிலாளர்கள் ஒரு மாத காலமாக வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.



தொழிற்சங்க உரிமைகள் பறிக்கப்படுவது பிரிக்கால் நிறுவனத்தில் மட்டுமே நடக்கும் ""அதிசயம்'' கிடையாது. தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்ற கட்டுப்பாடே இருக்கக் கூடாது என்பது தொடங்கி தொழிற்சங்கமே இருக்கக் கூடாது என்பது வரை தொழிற்சங்க உரிமைகள் அனைத்தையும் பறிக்கக் கோருகிறது, உலகமயம். இதற்கு ஏற்றாற்போலத்தான், தொழிலாளர் நலச்சட்டங்கள் திருத்தப்படுகின்றன; தொழிற்சங்கமே அமைக்க முடியாதபடி சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் நிறுவப்பட்டு வருகின்றன.



தொழிலாளி வர்க்கமே ஒன்று திரண்டு போராடினால்தான், தொழிற்சங்க உரிமைகள் சட்ட பூர்வமாகவே பறிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த முடியும். போராடும் பிரிக்கால் தொழிலாளர்கள் இதை உணர்ந்து, இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை, புனே, குர்கான், உத்தராஞ்சல் ஆகிய இடங்களில் உள்ள பிரிக்கால் தொழிற்சாலைகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.



""கட்டுப்பாடு'' என்ற பெயரில் பிரிக்கால் நிர்வாகம் ஏவிவிடும் அடாவடித்தனங்களையும்; சுனாமி நிவாரண நிதி என்ற பெயரில் அந்நிர்வாகம் தொழிலாளர்களிடம் நடத்திய கொள்ளையையும்; வசூலித்த பணத்தைக் கொடுக்காமல் அரசை ஏமாற்றியதையும்; ""சிறு துளி'' என்ற அமைப்பு மூலம் பிரிக்காலின் செயல் இயக்குநர் வனிதா மோகன் அரசு பணத்தைச் சுருட்டுவதையும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி, பிரிக்காலுக்கு எதிரான பொதுக் கருத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.



பிரிக்கால் தொழிலாளர் போராட்டம் நசுக்கப்பட வேண்டும் என மற்ற முதலாளிகள் விரும்புவதால், துணியாலை, பஞ்சாலை, இன்ஜினியரிங் தொழிலாளர்கள் இப்போராட்டத்திற்கு ஆதரவாகக் களத்தில் நிற்கும் வண்ணம் கோவை மாவட்டத் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்கள் மத்தியில் ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.



வேலை நிறுத்தப் போராட்டத்தை உறுதியோடு தொடர்வதோடு, உலகமயச் சூழலில் இப்படிப்பட்ட ஒற்றுமையையும், புதிய போராட்ட முறைகளையும் நடைமுறைப்படுத்துவதன் மூலம்தான் தொழிற்சங்க உரிமைகள் பறிக்கப்படுவதை நிரந்தரமாகத் தடுத்து நிறுத்த முடியும்.

· பு.ஜ.தொ.மு., கோவை.

Saturday, April 28, 2007

பட்ஜெட் :ஆடு நனைகிறதென்று ஓநாய்கள் அழுகின்றன

பட்ஜெட் :
ஆடு நனைகிறதென்று ஓநாய்கள் அழுகின்றன


ஞ்சாப், உத்தர்கண்ட் சட்டசபைத் தேர்தல்களில் வாங்கிய அடி, காங்கிரசு கட்சியை விலைவாசி உயர்வைப் பற்றிப் பேச வைத்திருக்கிறது. அதனால், சாமான்ய மக்களின் நலனை மனதில் கொண்டு, 2007/08 ஆண்டுக்கான மைய அரசின் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி கூறி வருகிறது.


மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.5%ஐத் தாண்டி வளர்ந்து "சாதனை' படைத்து விட்டாலும், விவசாய வளர்ச்சி பின்தங்கி விட்டது. விவசாய உற்பத்தித் தேங்கிப் போனதால், உணவுப் பொருள் விலையெல்லாம் உயர்ந்து விட்டது. எனவே, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும்; விவசாயத்தையும், கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் இந்த பட்ஜெட்டில் பல திட்டங்கள் போடப்பட்டுள்ளதாகக் காங்கிரசுக் கட்சிப் பீற்றிக் கொள்கிறது.


விவசாயிகளுக்கு பொதுத்துறை வங்கிகள் மூலம் வழங்கும் கடன் 2.25 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது; கடந்த ஆண்டைவிட மேலும் 50 இலட்சம் விவசாயிகளுக்குக் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது; நீர்ப்பாசனத் திட்டங்களை மேம்படுத்த சிறப்புத் திட்டம் தயாரிக்கப்பட்டு, அதற்கு 16,979 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்பன உள்ளிட்டு விவசாய வளர்ச்சிக்கு 18 அம்சத் திட்டமொன்றை ப.சிதம்பரம் பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறார். இதன் மூலம் விவசாய உற்பத்திப் பெருகி விலைவாசி குறையும்; விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் நின்றுவிடும் என ஆரூடம் கூறுகிறார்.


கடந்த ஆண்டு பட்ஜெட்டில் கூட, பொதுத்துறை வங்கிகள் மூலம் 1,90,000 கோடி ரூபாய் விவசாயக் கடனாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எனினும், கடந்த பட்ஜெட்டுக்கும், இந்த பட்ஜெட்டுக்கும் இடைபட்ட இந்த ஓராண்டில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போனதை இந்த வங்கிக் கடன் தடுத்து நிறுத்திவிடவில்லை.


விதை, உரம், பூச்சி மருந்து ஆகிய இடுபொருட்களின் விலைகள் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றித் தாறுமாறாக உயர்ந்துகொண்டே போவதால், உற்பத்திச் செலவு அதிகமாகிக் கொண்டே போகிறது. எவ்வளவுதான் நன்றாக விளைந்தாலும், இந்த உற்பத்திச் செலவை ஈடுகட்டும் விலை விவசாயிகளுக்குக் கிடைப்பதில்லை. விவசாயிகள் விவசாயக் கூட்டுறவு வங்கியில் வாங்கும் கடனைக் கூட அடைக்க முடியாமல் முழி பிதுங்கி நிற்பதற்கு, இதுதான் அடிப்படை. எனவே, விவசாய விளைபொருட்களுக்குக் கட்டுப்படியாகக் கூடிய விலை கிடைப்பதை உத்தரவாதப்படுத்தாமல், விவசாயக் கடனை அதிகரிப்பது வங்கிக் கடன் பெறும் விவசாயிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது என்பதெல்லாம் புண்ணுக்குப் புணுகு தடவுவதாகத்தான் முடியும்.


இந்திய விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்வதற்காக, ""விவசாயிகள் தேசிய கமிசன்'' என்ற அதிகாரவர்க்க கமிட்டியை கடந்த ஆண்டே மைய அரசு அமைத்தது. ஆடு நனையுதென்று ஓநாய் அழுத கதையாக, இந்த கமிட்டியின் தலைவராக அமெரிக்கக் கைக்கூலி (வேளாண் விஞ்ஞானி) எம்.எஸ். சுவாமிநாதன் நியமிக்கப்பட்டார். கந்துவட்டிக் கடன் தொல்லை, விளைபொருட்களின் விலை வீழ்ச்சி ஆகிய பிரச்சினைகளை மட்டுமின்றி, அந்நிய நாடுகளில் இருந்து விவசாய விளைபொருட்களைத் தாராளமாக இறக்குமதி செய்து கொள்வதற்குக் கொடுக்கப்பட்டுள்ள அனுமதியை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் விவசாயிகள் இக்கமிசன் முன் வைத்தனர்.


விவசாயிகளின் உயிராதாரமான இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்ட அக்கமிசன், ""விவசாயத்திற்கு வழங்கப்படும் வங்கிக் கடனுக்கான வட்டியைக் குறைக்க வேண்டும்; சந்தை ஏற்ற இறக்கத்தால் விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, தனியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்'' என்பன உள்ளிட்டு சில சில்லறை பரிந்துரைகளை மைய அரசிடம் அளித்தது.


விவசாயிகளின் நலனுக்காக பட்ஜெட் போட்டதாகப் பீற்றிக் கொள்ளும் ப.சிதம்பரம், விவசாயிகள் கோரியபடி வேளாண் விளைபொருட்களின் இறக்குமதிக்கும் தடை போடவில்லை. தேசிய கமிசனின் அற்பமான பரிந்துரைகளையும் ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக, விவசாயிகளின் பிரச்சினையை ஆராய ராதாகிருஷ்ணன் கமிட்டியை அமைப்பதாக பட்ஜெட்டில் அறிவித்து, விவசாயிகளின் பிரச்சினையை மீண்டும் ஊறுகாய் பானைக்குள் போட்டுவிட்டார்.


16,979 கோடி ரூபாய் செலவில் நீராதாரங்களை மேம்படுத்தப் போவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தாலும், இத்திட்டத்திற்காகத் தற்பொழுது ஒதுக்கப்பட்டுள்ள தொகை வெறும் 100 கோடி ரூபாய்தான். இப்புள்ளிவிவர மோசடித்தனம் ஒருபுறமிருக்க, ஒவ்வொரு மாநிலமும், தங்களின் நீர் ஆதாரங்களை மேம்படுத்த, மைய அரசின் முன்அனுமதியின்றியே, உலக வங்கியிடமிருந்து கடன் பெற்றுக் கொள்ளலாம் என்ற சலுகையை வாரி வழங்கியிருக்கிறார், ப.சிதம்பரம். இதன் அடிப்படையில், தமிழகம், காவிரி இறுதித் தீர்ப்பு வந்த சூட்டோடு, உலக வங்கியிடமிருந்து 2,182 கோடி ரூபாய் கடன் பெற ஒப்பந்தம் போட்டுள்ளது. ""குடிநீர், பாசன விநியோகத்தைத் தனியார்மயப்படுத்த வேண்டும். குடிநீர் மற்றும் பாசனக் கட்டணங்களை உயர்த்த வேண்டும்'' என்ற நிபந்தனைகள் இன்றி இந்தக் கடன் ஒப்பந்தம் முடிவாகி இருக்காது. இந்தக் கடன் மூலம் தமிழகத்திலுள்ள ஆறு, ஏரி, குளம் போன்ற நீர் ஆதாரங்கள் மேம்படுகிறதோ இல்லையோ, அவை கூடிய விரைவில் தனியார்மயமாகி விடும் என நிச்சயமாகச் சொல்லலாம்.


பட்ஜெட்டின் பெருமையைப் பற்றிக் குறிப்பிடுவதற்கு, தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாவட்டங்களின் எண்ணிக்கையை 200லிருந்து 330 ஆக உயர்த்தியிருப்பதையும்; அத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை 11,300 கோடி ரூபாயிலிருந்து


ரூ. 12,000 கோடியாக அதிகரிக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக் காட்டுகிறார்கள். ஆனால், இத்திட்டத்தைத் தீவிரமாக கண்காணித்து வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், இத்திட்டத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் முழுமையாகச் செயல்படுத்த வேண்டும் என்றால், ஒரு மாவட்டத்துக்கு தலா 100 கோடி ரூபாய் தேவைப்படும். இதன்படி 33,000 கோடி ரூபாய் இல்லாமல் இத்திட்டத்தை 330 மாவட்டங்களில் முழுமையாகச் செயல்படுத்த முடியாது; விலைவாசி உயர்வோடும், பணவீக்கத்தோடும் ஒப்பிட்டால், பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள தொகை யானைப் பசிக்குச் சோளப் பொரிதான் என விமர்சித்துள்ளன.


இந்தியாவில் பள்ளிக்குச் செல்லும் வயதிலுள்ள குழந்தைகளுள் ஏறத்தாழ 1.3 கோடி குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்படுவதேயில்லை. பெற்றோர்களின் வறுமை மட்டும் இதற்குக் காரணம் இல்லை. இந்தியாவெங்கும் 31,478 கிராமங்களில் பள்ளிக் கூடங்களே கிடையாது. 6,647 பள்ளிக் கூடங்களில் கட்டிடங்கள்தான் இருக்கிறதேயொழிய, பாடம் நடத்த ஒரு ஆசிரியர் கூட நியமிக்கப்படவில்லை. 75,884 பள்ளிகளில் ஒரேயொரு ஆசிரியர் தான் இருக்கிறார்.

இப்படி அவலமான நிலையில் இருக்கும் ஆரம்பக் கல்விக்கும், மதிய உணவுத் திட்டத்திற்கும் சேர்த்து 23,142 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டைவிட 6,000 கோடி ரூபாய் அதிகம் என பட்ஜெட்டின் துதிபாடிகள் மெச்சிக் கொள்வது உண்மைதான். ஆனாலும், இந்தக் கூடுதல் நிதி ஒதுக்கீடின் பின்னே, ஒரு பொறியையும் மறைத்து வைத்துள்ளார், ப.சிதம்பரம். அனைவருக்கும் ஆரம்பக் கல்வி திட்டத்திற்கு மைய அரசு 75 சதவீத நிதியையும், மாநில அரசுகள் 25 சதவீத நிதியையும் ஒதுக்கி வந்தன. இனி, மைய அரசு 50 சதவீத நிதியைத்தான் ஒதுக்கும் எனக் குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார், ப.சிதம்பரம்.


2 இலட்சம் ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்படுவார்கள்; 5 இலட்சம் வகுப்பறைகள் புதிதாகக் கட்டப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தாலும், இத்திட்டங்களுக்காக ஒரு பைசாகூட நிதியாக ஒதுக்கப்படவில்லை.


ஆரம்பப் பள்ளியில் சேரும் மாணவர்களுள், 35 சதவீத மாணவர்கள் ஐந்தாம் வகுப்பு முடித்த பிறகும்; 53 சதவீதமாணவர்கள் எட்டாம் வகுப்பு முடித்த பிறகும்; 63 சதவீத மாணவர்கள் பத்தாம் வகுப்பு முடித்த பிறகும் மேலே படிக்க முடியாமல், இடையிலேயே நின்று விடுவதாக அரசே ஒப்புக் கொண்டுள்ளது. இப்படி இலட்சக்கணக்கான மாணவர்கள் படிப்பைப் பாதியிலேயே கைவிடும்பொழுது, அவர்களுள் ""திறமை'' வாய்ந்த ஒரு இலட்சம் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ஆண்டுக்கு
ரூ. 6,000/ கல்வி உதவித் தொகை அளிக்கப் போவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மீதியுள்ள மாணவர்கள், தங்களுக்குத் ""திறமை''யும் இல்லை, ""அதிருஷ்டமும்'' இல்லை என மனதைத் தேற்றிக் கொண்டு, குழந்தைத் தொழிலாளியாகப் போக வேண்டியதுதான்.


பட்ஜெட்டைக் கூறு போட்டால், சமூக நலத் திட்டங்கள் பற்றிய டாம்பீக அறிவிப்புகளுக்கும், உண்மை நிலைக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு இருப்பதைப் பச்சையாகக் காண முடியும். இந்தியப் பொருளாதாரம் 8.5 சதவீதத்தைத் தாண்டி ""வளர்ந்து'' செல்லும் நிலையிலும் கூட, சமூக நலத் திட்டங்களுக்குக் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய ஏன் மறுக்கிறார்கள்?


பட்ஜெட்டில் பற்றாக்குறை குறிப்பிட்ட வரம்பைத் தாண்டிச் செல்லக் கூடாது என்பது உலக வங்கியின் கட்டளை. இப்பற்றாக்குறையை ஈடுகட்ட வேண்டும் என்றால், தரகு முதலாளிகள் மீது, பன்னாட்டு நிறுவனங்கள் மீது கூடுதலாக வரி விதிக்க வேண்டும்; இல்லையென்றால், மக்களின் குரல்வ ளையை இறுக்க வேண்டும். முதலாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வரிச் சலுகைகளை பறித்தாலோ, அவர்கள் மீது கூடுதல் வரி விதித்தாலோ தாராளமய ஆதாரவாளர்கள் கொதித்துப் போய் விடுவார்கள். அதனால்தான் மக்களின் தேவைகளை இறுக்கிப் பிடித்து, உலகவங்கி நிர்ணயித்துள்ள பற்றாக்குறை வரம்பைத் தாண்டாமல் பட்ஜெட்டைப் போட்டிருக்கிறார், ப.சிதம்பரம்.


""பொருளாதார வளர்ச்சி'' பாதிக்கப்படக்கூடாது எனக் கூறி, இந்த பட்ஜெட்டில் தரகு முதலாளிகள் மீதோ, பன்னாட்டு நிறுவனங்கள் மீதோ அதிக அளவில் வரி விதிக்கப்படவில்லை. அவர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள 1,50,000 கோடி ரூபாய் வரிச் சலுகையிலும் ப.சிதம்பரம் கைவைக்கவில்லை. முதலாளிகளுக்கு வரிச் சலுகை அளித்தால் விலைவாசி குறைந்துவிடும் எனக் கூறி, பல்வேறு பொருட்கள் மீது விதிக்கப்படும் உற்பத்தி வரியைக் குறைத்து, சலுகைகளை மேலும் வாரி வழங்கியிருக்கிறார்.


ஆனால், இந்தச் சலுகை அறிவிப்பானது, கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாகிவிட்டது. சிமெண்ட் ஆலை முதலாளிகள், பட்ஜெட் வெளியான மறுநாளே, பட்ஜெட் அறிவிப்புகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்னரே, சிமெண்ட் விலையை உயர்த்தி, மக்களைக் கொள்ளையடிக்கத் தொடங்கி விட்டனர்.


நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு, கர்நாடகாவைச் சேர்ந்த கடலை விவசாயிகள், கடலையின் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி போராடியபொழுது, அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. ஆனால் ஜேப்படி திருடர்கள் போன்று கொள்ளையடிக்கும் சிமெண்ட் முதலாளிகள் விசயத்திலோ துப்பாக்கிகள் மௌனம் காக்கின்றன. விலையைக் குறைக்கும்படி அவர்களின் காலில் விழுந்து மன்றாடுகிறார், ப.சிதம்பரம். சிமெண்ட் முதலாளிகளோ அடுத்த ஆண்டுவரை விலையை உயர்த்த மாட்டோம் எனத் திமிராகப் பதில் அளிக்கிறார்கள். சாமானிய மக்களுக்காகப் போடப்பட்டதாகக் கூறப்பட்ட பட்ஜெட், மையின் ஈரம் உலரும் முன்பே, சாயம் வெளுத்து நிற்கிறது!

· செல்வம்


Friday, April 27, 2007

சென்னை சங்கமம் : தி.மு.க.கம்பெனியின் புதிய வியாபாரம்

சென்னை சங்கமம் :
தி.மு.க.கம்பெனியின் புதிய வியாபாரம்


மிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் இருந்து நாட்டுப்புறக் கலைஞர்களை சென்னைக்கு வரவழைத்து, பொதுநூலகத் துறை, சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறை உதவியுடன் தமிழ் மையம் எனும் தன்னார்வ நிறுவனம், ""சங்கமம்'' எனும் பெயரில் பிப்.20ஆம் தேதி தொடங்கி பிப்.26 முடிய, 6 நாட்களில் 400 நிகழ்ச்சிகளை, சென்னையின் மூலைமுடுக்கெல்லாம் நடத்தியது.


கரகாட்டம், தப்பாட்டம், செண்டா மேளம், இவற்றுடன் சுதா ரகுநாதனின் கர்நாடக சங்கீதக் கச்சேரி என கதம்பமாக நடந்த இந்நிகழ்ச்சி, அந்நிய சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக நடத்தப்பட்டதாக அரசு அறிவித்தது.


""திருவிழா நம்ம தெருவிழா'' எனும் விளம்பரத்துடன் பல கோடி செலவில் நடந்த இவ்விழாவை ஒருங்கிணைத்தவர், கருணாநிதியின் மகள் கனிமொழி. இதற்கான விளம்பரம், நிகழ்ச்சி ஏற்பாடு ஆகியவற்றுக்கு அரசுப் பணம் தாராளமாய் செலவிடப்பட்டது. வழக்கமான அரசு விழாக்களுக்கு செலவிடப்படும் விளம்பரச் செலவின் வரம்பு, சங்கமத்திற்கென்றே ஓர் அரசாணை மூலம் தளர்த்தப்பட்டது. தங்குதடையின்றி வந்த விளம்பரப் பணம், பெரும் பத்திரிக்கை முதலாளிகளின் பையை மட்டும்தானே நிறைக்கும்! பத்திரிக்கை நிருபர்களுக்கு? கனிமொழி பற்றி "கவர் ஸ்டோரி' எழுத என ரூபாய் 2,000ஐ கவரில் வைத்துத் தந்தார்கள்.


கனிமொழியின் தாயார் ராஜாத்தி இலக்கிய அரங்கு ஒன்றை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். ஸ்பென்சர் பிளாசா, கடற்கரை, பூங்காக்கள் எனப் பல்வேறு இடங்களிலும் நாட்டுப்புற கலைஞர்கள், "கலைஞ'ரின் மகளுக்கு மட்டும் இன்றி, கலைஞரின் 7 வயதுப் பேரனுக்கும் சலாம் வைத்தனர். அன்று பண்ணையார் வீட்டு நாய்க்குட்டிக்கும் பயந்து வாழ்ந்த விவசாயக் கூலிகளின் அவல நிலைதான் நெஞ்சில் நிழலாடியது. கவிஞர் இளையபாரதி, ராசாத்தி அம்மையாரை மேடையிலே "சின்னம்மா' என அழைத்து தன் பெயரை கலைஞரின் இதயத்தில் பொறித்து விட்டார்!


தமிழ் மையத்தின் நிறுவனரான கஸ்பார், ஈழத் தமிழர்களுடன் வெரித்தாஸ் வானொலியில் பணியாற்றியதை மையாக்கி "புலிகளுடன் தொடர்புடையவர்கள் கனிமொழியுடன் இணைந்து நடத்திய விழா' என்றும், சங்கமம் விழா வழியாக புலிகளுக்குப் பணம் சென்றிருக்கின்றது என்றும் அறிக்கை விட்டு, மீண்டும் விடுதலைப் புலிகள், பயங்கரவாதம்' என்று பீதி கிளப்பினார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் இந்த பயங்கரவாதப் பீதிக்கு துக்ளக் சோவும், ஜூனியர் விகடனும் பக்கமேளம் வசித்து, சங்கமம் நிகழ்ச்சியை விமர்சிக்கும் போர்வையில் தங்களது பார்ப்பன அரிப்பைச் சொறிந்து கொண்டனர். சாதாரண பால்ரஸ் குண்டுகள் பிடிபட்டதற்கே "வெடிகுண்டு செய்யப் பயன்படும் இரும்பு குண்டுகள் புலிகளுக்கு கடத்தல்' என்று பேனைப் பெருமாளாக்கும் துக்ளக்கும், ஜூ.வி.யும், ஜெயலலிதாவும் இணைந்து சங்கமத்திற்கும், கஸ்பாருக்கும் உள்ள உறவை, அமெரிக்காவில் கைதாகியுள்ள சாக்ரடீஸ் எனும் ஈழ ஆதரவாளர் வரை இணைத்து கருணாநிதி அரசுக்கு நெருக்கடி தர முயல்கின்றனர்.


சங்கமத்தில் தப்பாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புறக் கலைகள் இடம் பெற்றதாலோ என்னவோ, "சோ' எனும் பார்ப்பன அறிவுஜீவி, ""இக்கலைகளைக் கிராமத்துக் கோவில் திருவிழாக்கள் ஏற்கெனவே காத்து வருகின்றன. எனவே, இதற்கென பொதுமக்கள் பணத்தை வீணாக்கக் கூடாது'' என விமர்சித்துள்ளார். உழைக்கும் மக்களின் இசையையும், நடனத்தையும், காலங்காலமாய் இழிவுபடுத்தும் பார்ப்பனிய அழகியலின் விமர்சனம்தான் அது. இத்தகைய கேடுகெட்ட காமாலைக் கண்ணுக்கு, வானொலியும், தூர்தர்சனும் தொடங்கப்பட்ட நாளில் இருந்து அக்கிரஹாரத்தின் கர்நாடக சங்கீதக் கச்சேரி, பரத நாட்டியம் நிகழ்ச்சிகளை வழங்கி (ண்ணீணிணண்ணிணூ), பொதுமக்கள் பணத்தைச் சூறையாடி வருவதும் தெரியாது. அரசுப் பணத்தில் பத்மா சுப்ரமணியம் போன்ற பார்ப்பன நடனமணிகள் கோனார்க் கோவிலில் ஆட்டம் போட, கோடிகளை "ஸ்வாஹா' செய்ததும் தெரியாது.


ஏற்கெனவே பேரனை மத்தியிலும், மகனை மாநிலத்திலும், கட்சியிலும் பதவிகளால் அலங்கரித்து வைத்துள்ள கருணாநிதி, தனது மகளையும் சங்கமம் மூலம் வாரிசு அரசியலுக்கென்று அரங்கேற்றி அழகு பார்த்துள்ளார். சங்கமம் தொடக்க விழாவில் ""எனது வழித் தோன்றலாக கலை, இலக்கியத்தில் எனக்குப் பிறகு அப்பணியை ஆற்றிட ஒரு வழித்தோன்றல் உருவாகி இருக்கின்றது'' என்று அவர் உள்ளம் பூரித்துச் சொன்னதே இதற்குச் சான்று. ஓட்டுக் கட்சிகள் எவையும் இதனை விமர்சனம் செய்வதற்கு யோக்கியதை கிடையாது. அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. போன்ற மாநிலக் கட்சிகளும் சரி, காங்கிரசு, பா.ஜ.க போன்ற தேசியக் கட்சிகளும் சரி, தனக்குப் பிறகும் அரசுப் பணத்தை ஆண்டு அனுபவிக்க தனது வாரிசுகளை உருவாக்குவதில் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல.


சங்கமத்திற்கு பொருள் ரீதியில் உதவிய தமிழ் மையம் அமைப்பில் யார் யார் உள்ளனர் எனப் பார்த்தால் படித்த பட்டதாரிகளை குறைந்த கூலிக்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் அனுப்பி வைக்கும் "மாஃபோய்'' நிர்வாகவியல் நிறுவன அதிபர் பாண்டியராஜன், நட்சத்திர அந்தஸ்து மருத்துவமனை மூலம் மருத்துவ வணிகம் நடத்தி வரும் மியாட், நெதர்லாந்து நாட்டின் கவுரவத் தூதர் என ஒரு வானவில் கூடடணியே உள்ளது. இவர்களுக்கும், சங்கமத்தில் பங்கெடுத்துக் கொண்ட ஃபோர்டு பவுண்டேசனின் கூத்துப் பட்டறைக்கும், நசிந்து கொண்டு வரும் தமிழர் பாரம்பரியக் கலைகள் மீது அப்படி என்னதான் ஆர்வம்?


கருணாநிதியும் கூட இந்தக் கூட்டணியுடன் சேர்ந்திசைந்து ""தமிழர் கலைகள் அழிந்துவிடாமல் காக்கப்படல் வேண்டும்'' என்று பேசுகிறார். தமிழ் மையத்தின் சார்பில் இனி ஆண்டுதோறும் பொங்கல் விழாவின்போது சென்னை சங்கமம் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்கிறார், கனிமொழி.


இவ்வாறு ஆண்டுக்கு ஒருமுறை அள்ளித் தெளித்தவாறு அவசர கதியில் அரசே ஏற்று நடத்துவதால் மட்டும் தமிழர் கலைகளைக் காப்பாற்றி விட முடியுமா? அதன் உள்ளடக்கமாக இருக்கும் பெண்ணடிமைத்தனம், புராணப் புளுகுகள் போன்றவை, இன்றைக்குத் தேவைப்படும் பார்ப்பன எதிர்ப்புணர்வு, ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகிய முற்போக்கான கருத்துக்களால் மாற்றப்படாவிட்டால், எந்த அடித்தட்டு, நடுத்தர மக்களும் ""வாலிவதம்'' ""வள்ளி திருமணம்'' போன்றவற்றுக்கு ஆதரவு தரப் போவதில்லை. வடிவத்தை மட்டும் நாட்டார் கலைகளில் இருந்து சுவீகரித்துக் கொண்டு முற்போக்கு சிந்தனைகளை கலைவடிவத்தில் தந்தால் மட்டுமே தமிழர் கலைகள் பிழைக்க முடியும். இல்லாவிட்டால் கூத்துப்பட்டறை தயாரிக்கும் 50 பேர் மட்டுமே பார்த்து ரசிக்கும் "செத்த கலை'யாக மாறிவிடும்.


பெரும்பாலான தமிழர் கலைகள் இன்றைக்கு மரணப் படுக்கையில்தான் உள்ளன. சங்கமத்திற்கு எனப் பேருந்துகளில் அழைத்து வரப்பட்ட கலைஞர்கள், ""சாப்பாட்டுக்கு மட்டும் பஞ்சமே இல்லை, கனிமொழி அம்மா புண்ணியத்திலே'' எனச் சொல்லும் நிலையில்தான் உள்ளனர். இது ஏதோ தற்செயலாக நடைபெற்றுவிட்ட செயலல்ல. நாட்டார் கலைகளின் பிறப்பிடமான விவசாயப் பொருளாதாரம் சூறையாடப்படுவதால், தமிழர்கள் நிலத்திலிருந்து துரத்தப்பட்டு, காய்ந்த சருகு காற்றில் பறப்பது மாதிரி வயிற்றைக் கழுவிக் கொள்ள ஏதாவது ஒரு தொழிலைப் பார்ப்போம் என்று பெருநகரங்களுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் ஓடுகின்றனர். பறிக்கப்படும் அவர்களின் நிலங்களில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாகின்றன. ஓர் இனத்தின் அன்றாட வாழ்வோடு பிணைந்திருப்பதுதானே அவ்வினத்தின் கலைகள்? தமிழன் மட்டும் பஞ்சைப் பராரியாய் ஆக்கப்படுகையில், தமிழ்க் கலைகள் மாத்திரம் காக்கப்படுமா என்ன?


உழைக்கும் மக்களின் நலனைக் கொள்ளையிடும் ஒரு கூட்டம், அவர்களின் நலனில் அக்கறை உள்ளவர்களாகக் காட்டிக் கொள்ள முயலும் நரித்தந்திரம் இப்போது அனைத்து மட்டங்களிலும் நடைமுறையில் உள்ளது. நம் நாட்டின் நிலத்தடி நீரை ஒட்ட உறிஞ்சி, நீராதாரத்தை அழித்து வரும் கோக்கோ கோலா, சென்னைப் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளுக்கு இலவசக் குடிநீர் வழங்கும் திட்டத்தையும் அறிமுகம் செய்கிறது. அந்த வரிசையில், சங்கமம் எனும் பெயரில் தன்னார்வக் குழுக்களும், சில தரகு முதலாளிகளும், அரசும் இணைந்து தமிழர் கலைகளைக் காக்கப் புறப்பட்டிருப்பதும், அதன் மூலம் அந்நிய செலாவணியை ஈட்டவும் கண்டுப் பிடித்திருக்கும் சடங்கே "சங்கமம்'.


உலகமய, தாராளமயக் கொள்கையால் கஞ்சித் தொட்டி நோக்கித் தள்ளப்படும் நெசவாளர்களின் பாரம்பரிய தறி நெசவை, "காட்சிப் பொருளாக்கிய' சங்கமத்தின் நிகழ்ச்சி ஒன்றே போதும், சங்கமத்தின் நோக்கம் என்னவென்பதைப் புரிந்து கொள்வதற்கு!

· கவி

Thursday, April 26, 2007

ஆடம்பரத் திருமணங்கள் : பெருக்கெடுத்து ஓடும் பணக்கொழுப்பு

ஆடம்பரத் திருமணங்கள் :
பெருக்கெடுத்து ஓடும் பணக்கொழுப்பு



றுகாலனியாதிக்கம் தோற்றுவித்த பயங்கரத்தால் வாழ்விழந்த விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போவதும், தொழிலாளர்கள் வேலையிழந்து கொத்தடிமைகளாக உழல்வதும், வறுமையும் பட்டினியும் பெருகுவதும் தீவிரமடைந்து வருகிறது. மறுபுறம், இந்தியாவில் பணக்காரர்களும் பெருகிக் கொண்டே போகிறார்கள். உலகின் மிகப் பெரும் கோடீசுவரர்களின் பட்டியலில் இந்தியப் பெருமுதலாளிகளும் இடம் பெற்றுள்ளதாகப் பூரித்துப் போகின்றனர் ஆட்சியாளர்கள். கோடீசுவரர்கள் பெருகப் பெருக அவர்களின் பணக் கொழுப்பு வக்கிரமாக வழிந்தோடுகிறது. நாடே அதிர்ச்சியடையும் அளவுக்கு அந்த வக்கிரம் கேள்விமுறையின்றி பகிரங்கக் கூத்தாக நடக்கத் தொடங்கி விட்டது.


எலிசபத் ஹர்லீ. பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த முன்னாள் "மாடல் அழகி'. 41 வயதைக் கடந்துவிட்ட ஹர்லீ, பெருந்தொழில் அதிபரும் இந்திய வம்சாவளியினருமான அருண் நய்யார் என்ற 42 வயதுக்காரரை கடந்த மார்ச் மாதத்தில் பிரிட்டனிலுள்ள சட்லே கோட்டையில் திருமணம் செய்து கொண்டார். ஏற்கெனவே மணவிலக்கு பெற்று மறுமணம் புரிந்து கொண்டுள்ள இத்தம்பதிகளின் திருமணத்துக்கு எடுத்த பட்டுச்சேலையின் மதிப்பு ரூ. 3.5 லட்சத்துக்கும் மேலானது. இந்தி சினிமாப் பாடல்களுடன் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் நடந்த இத்திருமணத்தையும் விருந்துகளியாட்டங்களையும் இத்தம்பதிகள், தனியொரு சினிமாப் படமாகவும் எடுத்துள்ளனர்.


ஆடம்பரமாக நடந்த இத்திருமணக் கூத்து இத்துடன் முடியவில்லை. மணமகளது நாட்டில் நடந்தது போல், மணமகனது பூர்வீக நாடான இந்தியாவிலும் இத்தம்பதிகள் பார்ப்பன இந்து முறைப்படி இன்னுமொரு திருமணச் சடங்கை நடத்தினர். தமது 4 வயது மகனுடன் வந்த ஹர்லீநய்யார் தம்பதியினர் மும்பையிலிருந்து தனிவிமானத்தில் ராஜஸ்தானிலுள்ள ஜோத்பூர் கோட்டைக்குப் பறந்தனர். யானைகள், ஒட்டகங்களுடன் அலங்கார அணிவகுப்பு ஊர்வலம், விருந்தினர்களை அழைத்துவர ஏழு தனிவிமானங்கள், ஜோத்பூர் அரண்மனையில் விடிய விடிய சீமை சாராயத்துடன் களிவெறியாட்டம், அறுசுவை விருந்து என அமர்க்களப்படுத்தினர் இத்தம்பதிகள். இந்திய நாட்டில் இப்படியொரு ஆடம்பரத் திருமணம் இதுவரை நடந்ததேயில்லை என்று அதிசயித்து பரபரப்புடன் செய்திகளை வெளியிட்டன பத்திரிகைகள்.


பல கோடிகளை விழுங்கிய இந்த ஆடம்பர வக்கிரக் கூத்து நடந்த ஜோத்பூர் அரண்மனையருகே உள்ள நகர்ப்புறச் சேரிப்பகுதியில் வசிக்கும் உழைக்கும் மக்களின் மாத வருவாயோ
ரூ. 2000க்கும் குறைவு. இதர மாநிலங்களைவிட ஒப்பீட்டு ரீதியில் பின்தங்கியுள்ள ராஜஸ்தான் மாநில கூலிஏழை விவசாயிகளின் வருமானமோ அதைவிடக் குறைவு. வறுமையும், பட்டினியும் கவ்வியுள்ள அம்மாநிலத்தில்தான் இந்த வக்கிரமான திருமண விழா நடந்துள்ளது. பணக்கொழுப்பை விகாரமாகக் கொண்டாடும் இந்த நிகழ்ச்சியைத் தடுக்கவோ கட்டுப்பாடு விதிக்கவோ கூட அம்மாநில அரசு முன்வரவில்லை. மாறாக, மாநிலத்தின் பெருமையை உலகறியச் செய்ததாகக் கூறி, இந்த வக்கிர விழாவுக்கு எல்லா உதவிகளையும் அம்மாநில அரசு செய்துள்ளது.


இந்த வக்கிர திருமண விழாவையே விஞ்சும் வகையில் கடந்த 2004ஆம் ஆண்டில் நடந்த பிரிட்டனில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மிகப்பெரும் கோடீசுவர வைர வியாபாரி மிட்டல் குடும்பத்தின் திருமண விழாவும், கடந்த டிசம்பரில் நடந்த பெருந்தொழிலதிபர் லோகியா குடும்பத்தின் திருமண விழாவும் பல்லாயிரம் கோடிகளை விழுங்கியது. ராஜஸ்தான் உதய்பூர் கோட்டையில் விழா, ஐந்து நட்சத்திர ஓட்டலில் வரவேற்பு, ஆட்டம், பாட்டம், வாணவேடிக்கை, வெளிநாட்டிலிருந்து வந்த சிறப்பு உணவுகள் என பணத்திமிரில் கொட்டமடித்தன, கொழுப்பேறிய பன்றிகள்.


1947 போலி சுதந்திரத்துக்கு முன்னர், ஆங்கிலேயனின் காலை நக்கி வாழ்ந்த திவான் பகதூர், ஜமீன்தார், சமஸ்தான மகாராஜா போன்ற சரிகைக் குல்லாப் பேர்வழிகள்தான் இத்தகைய ஆடம்பர வக்கிர திருமண விழாக்களை நடத்தி வந்தனர். வெள்ளைக்காரன் ஆட்சியில் பஞ்சம் தலைவிரித்தாடி மக்கள் கொத்துக் கொத்தாக பட்டினியால் மாண்டபோது, ஜுனாகத் சமஸ்தானத்தின் நவாபு, தான் வளர்த்த செல்லமான நாய்க்கு ஆடம்பரமாகத் திருமணம் நடத்தினான். இத்திருமண விழாவையொட்டி மாபெரும் விருந்தும் கச்சேரியும் நடத்தியதோடு, நாய்த்தம்பதியினர் முதலிரவைக் கொண்டாட தனிமாளிகை அமைத்து, அதற்கென ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்தான்.


இத்தகைய வக்கிமான குரூரமான விழாக்கள் காலனிய காலத்தோடு முடிந்துவிடவில்லை. போலி சுதந்திரத்திற்குப் பின்னரும் தொடர்ந்தது. மத்திய அமைச்சரான சரத்பவார், முன்பு மகாராஷ்டிரா மாநில முதல்வராக இருந்தபோது, கோடிகளை வாரியிறைத்து கோவில் திருவிழா போன்றதொரு ஆடம்பரமான திருமணத்தைத் தனது மகளுக்கு நடத்தினர். ஊரை அடித்து உலையில் போட்ட பாசிச ஜெயா நடத்திய வளர்ப்பு மகன் திருமணம் ரூ. 80 கோடிகளைத் தாண்டி நாடெங்கும் நாறியது. இத்திருமண விழாவில் நகைக்கடையாய் நடந்து வந்த உடன்பிறவா சகோதரிகளின் படத்தைப் போட்டு ஓட்டுப் பொறுக்கியது, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணும் தி.மு.க. அக்கட்சித் தலைமையின் மூத்த வாரிசான மு.க.அழகிரி, தன்னுடைய 56வது பிறந்த நாளுக்கு தனது முகத்தையே மதுரை தமுக்கம் மைதானம் முழுக்க பிரம்மாண்டமான வண்ணக் கோலமாகப் போட்டு வக்கிரமாக ரசித்தார். அந்த வண்ணக் கோலத்தை முழுமையாகப் பார்த்து ரசிக்க தனி ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டன. இளைய வாரிசு மு.க.ஸ்டானினோ தன்னுடைய பிறந்தநாளுக்கு, தனக்கு யானைகள் வந்து மாலைபோடச் சொல்லி ரசித்தார்.


இவை எல்லாவற்றையும் விஞ்சும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் தனது பண்ணை வீட்டில் உல்லாசமாகச் சுற்றி வருவதற்காகவே, ரயில் பெட்டியொன்றை விலைக்கு வாங்கி, தனது வக்கிர கொண்டாட்டத்தைத் தொடங்கவுள்ளார். பொழுதுபோக்கிற்காக பல கோடிகளை வாரியிறைக்கும் மனநோயாளிகளின் கீழ்த்தரமான இச்செயலைக் கூட சிலாகித்து எழுதுகின்றன, கிசுகிசு பத்திரிகைகள்.


500 ரூபாய் நோட்டைச் சுருட்டிப் பற்ற வைத்து ஹெராயின் எனும் போதை மருந்தைப் புகைத்த பா.ஜ.க.வைச் சேர்ந்த மறைந்த பிரமோத் மகஜனின் மகன் ராகுல் மகஜன் பற்றிய செய்தி வெளியானபோது நாட்டு மக்கள் அதிர்ச்சியில் விக்கித்து நின்றார்கள். ஆனால் பணக்கொழுப்பெடுத்த இத்தகைய வக்கிரங்களே இப்போது அன்றாடச் செய்தியாகிவிட்டது. உலகமயத்தின் விளைவாக நுகர்வுவெறி ஆடம்பர மோகம் பணத்திமிரைப் பறைசாற்றும் பிரம்மாண்ட விழாக்கள் என பணக்கொழுப்பேறிய பன்றிகள் நடத்தும் வக்கிரங்கள் சகிக்க முடியாதபடி பெருகிவிட்டன.

"நாகரிக' உலகைச் சேர்ந்த ஏகாதிபத்திய நாடான பிரான்சில், வேலையிழந்து வாழ்விழந்த உழைக்கும் மக்கள் ஆடம்பர உணவு விடுதிகளைச் சூறையாடி, ஆடம்பரக் கார்களை அடித்து நொறுக்கி இப்பணக் கொழுப்பெடுத்த பன்றிகளுக்கு எதிராகத் தமது வெறுப்பை வெளிப்படுத்திப் போராடுகிறார்கள். ஏழை நாடான இந்தியாவின் உழைக்கும் மக்கள் மறுகாலனியத் தாக்குதலால் மரணப் படுகுழியில் வீழ்த்தப்பட்டுள்ள நிலையில், கோடீசுவரக் கும்பலின் கொழுப்பேறிய வக்கிரங்களை இனியும் சகித்துக் கொண்டிருக்கப் போகிறோமா? அல்லது பிரான்சு நாட்டு உழைக்கும் மக்களின் வழியில் போராடப் போகிறோமா?


· கவி

Tuesday, April 24, 2007

சில்லறை வணிகம் : மறுகாலனியாதிக்கத்தின் அடுத்த பலிகடா

சில்லறை வணிகம் :
மறுகாலனியாதிக்கத்தின் அடுத்த பலிகடா


கிரிமினல் போர்ஜரி வேலைகள், திருட்டு, இலஞ்ச ஊழல் ஆகியவற்றின் மூலமாகவே குறுகிய காலத்தில் உலகப் பணக்காரனாகி விட்ட அம்பானி குடும்பத்தின் ரிலையன்ஸ் நிறுவனம், சென்னையில் 14 இடங்களில் காய்கனி அங்காடிகளைத் திறந்திருக்கிறது. சென்னை நகர மூலை முடுக்குகளிலெல்லாம் தனது அங்காடிகளை விரிவுபடுத்தவும் இருக்கிறது.


இதனால், சென்னை மாநகரத்திற்கும் அதன் சுற்றுவட்டாரங்களுக்கும் தேவையான காய்கனிகளை விநியோகித்து வரும் கோயம்பேடு வணிக வளாகத்தின் விற்பனை இப்பொழுதே 40% வீழ்ச்சி அடைந்து விட்டதாகக் குமுறுகிறார்கள் வியாபாரிகள். கோயம்பேட்டுக்கு வரும் சில்லறை வணிகர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. அவர்கள் வாங்கும் சரக்கின் அளவு குறைந்துவிட்டது. வெளியூர் லாரிகளின் வரத்து குறைந்து விட்டது. தொழிலாளிகளுக்கு வேலை குறைந்து வருமானமும் குறைந்து விட்டது. கோயம்பேட்டை நம்பி வாழும் சுமார் ஒரு இலட்சம் குடும்பங்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டது.


ஏற்கெனவே பான்டலூன் நிறுவனம் வடபழனியில் தொடங்கியிருக்கும் பிக் பஜார், ஆர்.பி.ஜி குழுமத்தின் ஸ்பென்சர் டெய்லி, ஜெர்மன் நிறுவனமான ஃபுட் வேர்ல்ட் போன்ற நிறுவனங்கள் சென்னை நகரின் பல இடங்களில் சில்லறை விற்பனைக் கடைகளைத் திறந்திருக்கின்றன. இன்னும் டாடா, பிர்லா போன்ற தரகு முதலாளிகளும் நாடெங்கும் சில்லறை விற்பனைக் கடைகளைத் திறக்க இருக்கிறார்கள். இதுவன்றி, அமெரிக்காவின் வால்மார்ட், ஜெர்மனியின் மெட்ரோ, பிரான்சின் காரஃபோர் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் சென்னை உள்ளிட்ட எல்லா நகரங்களிலும் பிரம்மாண்டமான சில்லறை விற்பனைக் கடைகளைத் திறக்கவிருக்கின்றன.


சென்னை நகரில் நாளொன்றுக்கு நடைபெறும் காய்கனி விற்பனையின் மொத்த மதிப்பு சுமார் 20 கோடி ரூபாய். இதை அப்படியே விழுங்கிவிடத் துடிக்கிறது ரிலையன்ஸ் நிறுவனம். சில்லறை வணிகத்தில் உலகிலேயே நான்காம் இடத்தில் இருக்கிறது இந்தியா. ஆண்டொன்றுக்கு 12 இலட்சம் கோடி ரூபாய் புரளும் இந்தியாவின் சில்லறை விற்பனைத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் 4 கோடிப் பேர். சுமார் 20 கோடிப் பேருக்குச் சோறு போடும் இந்தச் சில்லறை விற்பனைத் தொழில் முழுவதையும் விழுங்கி விடத் துடிக்கின்றன சில பன்னாட்டு நிறுவனங்கள்.


சென்னை நகரில் காய்கனி விநியோகத்துக்கு என்ன குறை? எல்லாப் பகுதிகளிலும் காய்கறி மார்க்கெட்டுகள் இருக்கின்றன. வீதிக்கு வீதி காய்கறிக் கடைகள் இருக்கின்றன. தெருவுக்குத் தெரு மளிகைக் கடைகள் இருக்கின்றன. தெருத் தெருவாகக் கூவி விற்க தள்ளுவண்டி வியாபாரிகளும் வீடுவீடாகக் கூடையில் சுமந்து சென்று விற்க பெண்களும் ஆயிரக்கணக்கான பேர் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரையும் ஒழித்துவிட்டு அம்பானியைக் கொழுக்க வைக்க வேண்டுமென்று யார் கேட்டார்கள்?


""காய்கறி வாங்கினால் சர்க்கரை இலவசம்; 100 ரூபாய்க்கு காய் வாங்கினால் ஒரு டோக்கன்; தொடர்ந்து வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச வீட்டு டெலிவரி, 50,000 ரூபாய்க்கு ரிலையன்ஸ் விபத்துக் காப்பீடு'' என்று சலுகைகளை வாரி வழங்குகிறது, ரிலையன்ஸ். இதில் மயங்கி அங்கே வாடிக்கையாளர் கூட்டம் அலைமோதுகிறது.

சில்லறை வணிகத்தில் பன்னாட்டுக் கம்பெனிகளையும், அம்பானி, டாடா, பிர்லா போன்ற தரகு முதலாளிகளையும் அனுமதிப்பதன் மூலம் ""விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும். இடைத்தரகர்களை ஒழித்து விடுவதால் நுகர்பவர்களுக்கும் மலிவான விலையில் பொருள் கிடைக்கும்'' என்கிறார் நிதியமைச்சர் ப.சிதம்பரம்.


பொள்ளாச்சி சந்தையில் விவசாயியிடமிருந்து காய்கனிகளையும் தானியங்களையும் கொள்முதல் செய்யும் வியாபாரி முதல், அதைத் தள்ளுவண்டியில் போட்டு வேகாத வெயிலில் தெருத்தெருவாகக் கூவி விற்கும் தள்ளுவண்டிக்காரர் வரையில் எல்லோரும் இடைத்தரகர்களாம். இவர்களையெல்லாம் ஒழித்து விட வேண்டுமாம். இப்படி ""கோடிக்கணக்கான உழைக்கும் மக்களை ஒழித்துக் கட்டிவிட்டு வால்மார்ட்டையும் டாடா, பிர்லா, அம்பானியையும் வளர்த்துவிடுவதுதான் நாட்டுக்கு நல்லது'' என்று வெளிப்படையாக கூறும் ஒரு தேசத்துரோகி இந்த நாட்டுக்கு நிதியமைச்சராக இருக்கும்போது மக்கள் எப்படி வாழ முடியும்?


சில்லறை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைந்தால் மற்ற கடைகளில் விற்பனை படுத்துவிடும் என்பது மட்டுமல்ல பிரச்சினை. கொள்முதல் சந்தைகள், மொத்தவிற்பனை, சில்லறை விற்பனை இவையெல்லாம் பொருளாதாரத்தின் ஒரு முனை. விவசாயம், நெசவு, தொழிற்சாலைகள் போன்ற உற்பத்தித் துறைகள் பொருளாதாரத்தின் மறுமுனை. ஒருமுனையைத் தன் பிடிக்குள் கொண்டுவருவதன் மூலம் பொருளாதாரத்தின் மறுமுனையான உற்பத்தித் துறை முழுவதையும் தம் வசப்படுத்திக் கொள்ள முயல்கின்றன பன்னாட்டு நிறுவனங்கள்.

தானிய ஏகபோகத்தின் விளைவுதான்


விலைவாசி உயர்வு!


பொருள் உற்பத்தி, கொள்முதல், சில்லறை விற்பனை ஆகியவற்றில் இன்று கோடிக்கணக்கான விவசாயிகளும், வியாபாரிகளும் ஈடுபட்டிருப்பதனால்தான் விலைவாசி ஓரளவுக்காவது கட்டுப்பாட்டில் இருக்கிறது. இவையனைத்தும் வால்மார்ட், கார்கில், ஐ.டி.சி., அம்பானி, டாடா, பிர்லா என 10, 20 முதலாளிகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டால் என்ன நடக்கும்? பிறகு அவன் வைத்ததுதான் விலை. இன்று சிமெண்ட் முதலாளிகள் தமக்குள் பேசி வைத்துக் கொண்டு விலையை ஏற்றியிருப்பதைப் போலவே, நாளை அரிசி, கோதுமை, வெங்காயம், தக்காளி அனைத்திலும் இவர்கள் பகற்கொள்ளை அடிப்பார்கள்.


""சில்லறை விற்பனையில் வால்மார்ட்டும் ரிலையன்சும் நுழைந்தால் நுகர்வோருக்கு உலகத் தரம் வாய்ந்த பொருட்கள் மலிவான விலையில் கிடைக்கும், விவசாயிகளுக்கு முன் எப்போதும் கண்டிராத அளவுக்கு நியாய விலை கிடைக்கும்'' என்ற பேச்செல்லாம் முழுப்பொய். கத்தரிக்காய்க்கு நியாயவிலை கொடுப்பதற்காகத்தான் 3000 கோடி ரூபாயை மடியில் கட்டிக் கொண்டு குஜராத்திலிருந்து வந்திருக்கிறானா அம்பானி? துணிக்கும் துடைப்பக் கட்டைக்கும் நல்ல விலை கொடுப்பதற்காகத்தான் வால்மார்ட் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வருகிறதா?


நேற்று வரை காய்கனி வாங்கிய மார்க்கெட்டையும், காய்கறிக் கடையையும், மளிகைக் கடையையும் மறந்துவிட்டு, விளம்பரத்தையும், ஏ.சி. ஷோரூமையும் இலவசத் திட்டங்களையும், கண்டு மயங்கி இன்று "ரிலையன்ஸ் ஃபிரஷ்' கடைக்குச் செல்லும் படித்த முட்டாள்களும் இதை நம்புகிறார்கள்.


ஃபிரெஷ்ஷான புற்றுநோய்!


""பாக்கெட்டில் போடாமல் திறந்து வைத்திருக்கும் பொருளை வாங்காதீர்கள்'', ""ஈ மொய்க்கும் பொருளை வாங்காதீர்கள், சுத்தமான பொருளை வாங்குங்கள்'', ""பில் கொடுக்காத கடையில் பொருள் வாங்காதீர்கள்'' என்று சிறு வணிகர்களுக்கு எதிரான பிரச்சாரத்தை நயவஞ்சகமாகக் கட்டவிழ்த்து விடுகிறது அரசு. பில் போட்டு விற்க முடியாத சிறிய மளிகைக் கடைகள், சிறிய ஓட்டல்கள், தள்ளுவண்டி வியாபாரிகள் ஆகிய அனைவரையும் நுகர்வோரை ஏமாற்றும் கிரிமினல்கள் என்பதைப் போல வேண்டுமென்றே சித்தரிக்கிறது அரசு.


சிறுவணிகர்களைக் குற்றவாளிகளாகச் சித்தரிக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் யோக்கியதை என்ன? பளபளப்பான தாளில் பேக்கிங் செய்து விற்கப்படும் காட்பரீஸ் சாக்லெட்டிற்குள் புழு இருக்கிறதென்று பல ஊர்களிலிருந்து புகார் வந்து மகாராட்டிரா மாநிலம் முழுவதும் அதன் விற்பனை தடை செய்யப்படவில்லையா? கோக் பெப்சி பாட்டிலுக்குள் கரப்பான் பூச்சியும், பல்லியும், ஆணியும் கிடக்கவில்லையா? புற்று நோயை உருவாக்கும் பூச்சி மருந்துகள் அதில் கலந்திருப்பது நிரூபிக்கப்பட்ட பின்னரும் கோக்கும் பெப்சியும் விற்பனை செய்ய அனுமதிக்கப்படவில்லையா?


கலர் கலரான ஜிகினாத்தாள் பாக்கெட்டுகளில் சரம் சரமாகக் கடைகளில் தொங்கும் "லேஸ்' நொறுக்குத் தீனிகளில் கலந்திருப்பது என்ன? பல மாதங்கள் விற்காமல் கிடந்தாலும் காரல் வாடை வரக்கூடாது என்பதற்காக அதில் கலக்கப்படும் இரசாயனப் பொருட்கள் புற்று நோயை உண்டாக்கக் கூடியவை என்றும், அந்த நொறுக்குத் தீனிகளை வாங்கித் தின்னும் பள்ளிப் பிள்ளைகளுக்கு மாரடைப்பு வருவது உறுதி என்பதும் மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மையில்லையா?


பில் போடாத அண்ணாச்சி!
பில் போட்டுத் திருடும் அம்பானி!


பில் போட்டுக் கொடுத்துவிட்டால் நுகர்வோரின் நலன் எப்படிப் பாதுகாக்கப்படும்? ரிலையன்ஸ் தொலைபேசியின் வாடிக்கையாளர்கள் அமெரிக்காவுக்கும் லண்டனுக்கும் பேசிய அழைப்புகளுக்கு பல ஆயிரம் கோடி ரூபாயைப் பில் போட்டுத்தான் வசூலித்தார் அம்பானி. அரசு தொலைபேசியின் சேவையைப் பயன்படுத்தி இப்படி வாடிக்கையாளர்களிடம் கோடிக்கணக்கில் வசூலித்துவிட்டு, வெளிநாட்டு அழைப்புகளையெல்லாம் உள்ளூர் அழைப்புகள் என்று கணக்கெழுதி 1300 கோடி ரூபாய் மோசடியும் செய்தார். ஆயுள் தண்டனை வழங்கவேண்டிய இந்தக் கிரிமினல் குற்றம் நிரூபிக்கப்பட்ட பிறகும் முழுத்தொகையைக் கூட வசூலிக்காமல் கொஞ்சம் அபராதம் மட்டும் வாங்கிக் கொண்டு நண்பர் அம்பானியை "மன்னித்து' விட்டுவிட்டார் அமைச்சர் தயாநிதி மாறன்.


சென்ற ஆண்டு ரிலையன்ஸ் மொபைல் நிறுவனம் அறிவித்த "ஃபிலிம் தமாகா' என்ற பரிசுப் போட்டியில் கலந்து கொண்டு 8888 என்ற எண்ணுக்கு 6 ரூபாய் கட்டணம் செலுத்தி 6000 எஸ்.எம்.எஸ்.களை அனுப்பி, 36,000 ரூபாய் பில்லையும் கட்டிவிட்டு, ""இதுவரை போட்டியும் நடத்தவில்லை, யாருக்கும் பரிசும் கொடுக்கவில்லை'' என்று ரிலையன்ஸ் மீது சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குப் போட்டிருக்கிறார் ஒரு வாடிக்கையாளர் (இந்து, மார்ச், 16). எத்தகைய சில்லறைத்தனமான மோசடியிலும் இறங்கத் தயங்காதது அம்பானியின் நிறுவனம் என்பதற்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா?


இனி எங்கே போவது?


எல்லா தொழில்களிலிருந்தும் துரத்தப்படும் பரிதாபத்துக்குரிய மக்கள் அனைவரும் கடைசியாக வந்து சேரும் புகலிடம்தான் சில்லறை வணிகம். இந்த பரிதாபத்துக்குரிய மக்களின் வயிற்றிலடித்து சொத்து சேர்க்கலாம் என்று ஒரு முதலாளி நினைக்கிறான் என்றால் அவனை விடக் கொடூரமான கொலைகாரன் வேறு யாராவது இருக்க முடியுமா?

ஆனால், அரசாங்கம் இவர்களைத்தான் அரவணைக்கிறது. இவர்கள் பேச்சுக்குத்தான் ஆடுகிறது. வால்மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களை நுழைப்பதற்காக டெல்லி சிறுவணிகர்களின் கடைகளுக்குப் பூட்டு போடுகிறது உச்சநீதி மன்றம். சென்னை, மும்பை, டெல்லி, கல்கத்தா போன்ற பெரு நகரங்களில் நடைபாதை வியாபாரிகளை புல்டோசர் வைத்து அப்புறப்படுத்துகிறது அரசு. இதையும் மீறி உயிரோடிருக்கும் சிறு வணிகர்களை ஒழித்துக் கட்டுவதற்காகவே பன்னாட்டு நிறுவனங்களின் உத்தரவின் பேரில் வாட் என்ற வரி விதிப்பு முறை நாடு முழுவதும் திணிக்கப்பட்டிருக்கிறது.


எங்கே போனார்கள்
ஓட்டுக் கட்சிகள்?


உலகத் தமிழர்களுக்காகவெல்லாம் சீறும் புரட்சிப் புயல் வைகோ, அம்பானிக்கு எதிராக சீறாத மர்மம் என்ன? சதாம் உசேனைத் தூக்கிலிட்ட அமெரிக்காவுக்கே கண்டனம் தெரிவித்த புரட்சித் தலைவி அம்பானிக்கு ஒரு கண்டனம் தெரிவிக்காத இரகசியம் என்ன? மகனுக்கு மத்திய மந்திரி பதவி வாங்குவதற்கு மன்மோகன் சிங்கிடம் கறாராகப் பேரம் பேசத் தெரிந்த அய்யா ராமதாசு, அம்பானியை விரட்டாவிட்டால் ஆட்சிக்கு ஆதரவு இல்லை என்று கறாராகப் பேசாத மாயமென்ன? தன்னுடைய திருமண மண்டபம் இடிக்கப்படுவதை உலகப் பிரச்சினையாக்கிய கேப்டன், கோயம்பேடு தொழிலாளர்களின் வாழ்க்கை இடிக்கப்படுவதை எதிர்த்து வீரவசனம் கூடப் பேசவில்லையே ஏன்? மத்திய அரசையே ஆட்டிப்படைப்பதாகப் பெருமை பீற்றிக் கொள்ளும் மார்க்சிஸ்டுகள் அம்பானி விசயத்தில் அடக்கி வாசிப்பது ஏன்?


""ஒரு இலட்சம் குடும்பங்கள் பட்டினியால் சாகப் போகிறோம்'' என்று கருணாநிதியிடம் சென்று கதறி அழுதாலும் அவர் எல்லோருக்கும் 2 ரூபாய் அரிசி வேண்டுமானால் கொடுப்பாரே தவிர, அம்பானியையும் வால்மார்ட்டையும் ""வெளியே போ'' என்று மட்டும் சொல்லமாட்டார். ஒருவேளை, வாய்தவறிச் சொல்லி விட்டால் அடுத்த கணமே அவர்தான் பதவியிலிருந்து வெளியே போக வேண்டியிருக்கும்.


தேர்தல் பாதை தீர்வல்ல!


இது சுதந்திர நாடு அல்ல. உலக வங்கிக்கும் உலக வர்த்தகக் கழகத்துக்கும் அமெரிக்காவுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அடிமைச்சாசனம் எழுதிக் கொடுத்திருக்கும் அடிமை நாடு. திராவிடம், தேசியம், தமிழினம் என்று ஓட்டுக் கட்சிகள் பேசும் பேச்செல்லாம் வெறும் வார்த்தை ஜாலங்கள். வெறும் வாய்ச் சவடால்கள். இவர்களுடைய வாய்ச்சவடால்களால் அம்பானியின் கடையிலிருந்து ஒரேயொரு கத்தரிக்காயைக் கூட வெளியே தூக்கியெறிய முடியாது.


அம்பானி என்பவன் தனியொரு முதலாளி அல்ல. கோயம்பேடு பிரச்சினை தனியான பிரச்சினையும் அல்ல. தனியார்மய, தாராளமயக் கொள்கைகளின் ஒரு விளைவாகத்தான் இன்று சில்லறை வணிகத்தில் பன்னாட்டுக் கம்பெனிகள் நுழைகின்றன. இதனைக் காய்கனி வணிகர்கள் மட்டும் தனியாகப் போராடி வெல்ல முடியாது.


அம்பானியின் பின்னால் இந்தியத் தரகு முதலாளிகள் அனைவரும் இருக்கிறார்கள். பன்னாட்டு நிறுவனங்கள் இருக்கின்றன. அரசு எந்திரமும் போலீசும் கோர்ட்டும் மத்திய மாநில அரசுகளும் எல்லா ஓட்டுக் கட்சிகளும் அம்பானிக்குப் பக்கபலமாக நிற்கின்றனர். இந்த மிகப்பெரிய எதிரியை எதிர்கொள்ள வேண்டுமென்றால் மறுகாலனியாதிக்கக் கொள்கைகளால் பாதிக்கப்பட்ட அனைவரும் ஓரணியில் திரண்டு போராடினால் தான் முடியும்.


மக்களிடம் செல்வோம்!

மறுகாலனியாக்கத்தை வெல்வோம்!


ரிலையன்ஸ் நிறுவனத்தால் வாழ்க்கையை இழந்த வியாபாரிகள் கோயம்பேட்டில் உண்ணாவிரதம் இருப்பதனால் மட்டும் பிரச்சினை தீர்ந்துவிடாது. கூடைக்காரப் பெண்களும், தள்ளுவண்டி வியாபாரிகளும், மளிகைக் கடை அண்ணாச்சிகளும் ரிலையன்சின் கடை வாசலில் மறியல் செய்ய வேண்டும்.


எங்கெல்லாம் ரிலையன்ஸ் கடை இருக்கிறதோ அந்தச் சுற்று வட்டாரம் முழுவதும் உள்ள தள்ளுவண்டி வியாபாரிகளும் மளிகைக் கடைகாய்கறிக் கடைக்காரர்களும் ரிலையன்ஸ் எதிர்ப்பு, பன்னாட்டு நிறுவன எதிர்ப்புப் பிரச்சாரத்தைத் தம் கடைகளில் இருந்தபடியே செய்ய முடியும். காய்கறி விற்கும் பெண்கள் தம் கூடைகளில் ரிலையன்ஸ் எதிர்ப்புப் பிரச்சாரத் துண்டறிக்கைகளைக் கொண்டு சென்று வீடு வீடாக இந்தக் கருத்தைப் பரப்ப முடியும்.


பிழைப்பதற்குரிய எல்லா வழிகளும் அடைபட்டு, கடைசியாகக் கையை ஊன்றிக் கரணம் போட்டு, கந்து வட்டிக்குக் கடன் வாங்கி சரக்கெடுத்து தெருத்தெருவாக அலைந்து திரிந்து வாடிக்கையாளர்களை உருவாக்கி, இரண்டு வேளை கஞ்சி குடிக்க ஒரு வழியை உருவாக்கிக் கொண்டால், கரையான் புற்றெடுக்க கருநாகம் நுழைந்தது போல நுழைந்திருக்கிறான் அம்பானி. இந்தப் பாம்புக்குப் பால் வார்க்கிறது அரசு.


பாம்பைப் பார்த்து நடுங்கி அன்றாடம் செத்துப் பிழைப்பதை விட ஒரே போடாய்ப் போட்டு விடுவதுதான் அறிவுக்கு உகந்த செயல். மானமுள்ள வழியும் அதுதான்!

···

""சிறு வணிகத்தை விழுங்க வரும்

ரிலையன்ஸ், வால்மார்ட்டே

வெளியேறு!''


என்ற பிரசுரத்தில் இருந்து

இக்கட்டுரை சுருக்கி

வெளியிடப்பட்டுள்ளது.

பிரதிகள் கிடைக்குமிடம்:

இரா. சீனிவாசன், புதிய கலாச்சாரம்,

18, முல்லைநகர் வணிக வளாகம்,

2வது நிழற்சாலை, அசோக்நகர், சென்னை 83.

···

பிரான்சில் பொலிஸ் ஆட்சி நிறுவப்படுமா?

பிரான்சில் பொலிஸ் ஆட்சி நிறுவப்படுமா?

பி.இரயாகரன்
23.04.2007


ரு தீவிரமான வன்முறை கொண்ட பொலிஸ் ஆட்சி தான், பிரான்சின் சமுதாய முரண்களை ஒழிக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் வாக்களிப்படுகின்றது. அந்த வகையில் முதல் சுற்றில் முன்னணியில் வெற்றி பெற்ற வேட்பாளரே, இரண்டாவது சுற்றில் வெற்றிபெறுவார் என்ற கருத்துக் கணிப்புகள் வெளிவருகின்றது.


பொலிசாருக்கு அதிக அதிகாரங்களும், வரைமுறையற்ற கைதுகள் மூலமும், சிறைத்தண்டனைகள் மூலமும், சமுதாயத்தின் பிரச்சனையை தீர்க்க முடியும் என்ற மனித அற்பத்தனங்களே இத் தேர்தலில் மேலோங்கி காணப்படுகின்றது. சமுதாயத்தில் இந்த முரண்பாடு ஆழமாகி, ஒரு வெறியாகி வெளிப்படுகின்றது.


இதன் மூலம் அனைத்து பிரஞ்சு மக்களின் நலனை பூர்த்தி செய்யப் போவதாக, பொய்யாக பீற்றிக்கொள்ளுகின்றனர். மக்களை ஏமாற்றி குறுகிய நிறவாதம் முதல் ஆசை காட்டல் வரையிலான அற்பத்தனங்கள் மூலம் வெற்றி பெற முனைகின்றனர்.


அண்மைய பிரஞ்சு வரலாற்றில் இந்த தேர்தலில் அதிக மக்கள் வாக்களிக்கும் அளவுக்கு, சமுதாயம் இரண்டாக பிளந்து கடுமையான முரண்பாடுகள் வெளிப்பட்டுள்ளது. சமூகத்தைப் பிளந்து, சமூகத்தின் பிளவுக் கோட்பாடுகளுக்குள் தீர்வுகளை முன்னிறுத்தி, தேர்தல் வெற்றி சாதிக்கப்படுகின்றது.


நாசிக்கட்சிகளின் கொள்கைகளை உள்வாங்கியதன் மூலம், அதை தீவிர வலதுசாரிகள் தமது வேலைத்திட்டத்தில் பகிரங்கமாக இணைத்துக் கொண்டதன் மூலம், ஒரு பகுதி நாசிகளை முதல் சுற்றில் அணிதிரட்ட முடிந்தது. இரண்டாவது சுற்றில் நாசிகளின் முழு ஆதரவில் வெற்றி பெறுவது என்ற திட்டத்துக்கு அமைய, வலதுசாரிகள் தமது கொடூரமாக பக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதன் நடைமுறை சார்ந்த விளைவே மனிதத்தை சிதைப்பது தான.


ஒடுக்கப்பட்ட அனைத்து மக்கள் மேலான தீவிரமான தாக்குதலுக்கு தயாராகும் ஒரு பொலிஸ் ஆட்சி நிறுவப்படும் என்ற நம்பிக்கைக்காக வாக்களிப்படுகின்றது. இதன் மூலம் ஒடுக்குபவன் நம்பும் சட்ட ஒழுங்கை பேணமுடியும் என்ற நம்பிக்கை தான், தேர்தல் முடிவுகளாகின்றது. இதன் மூலம் சமுதாயத்தில் நிலவும் வாழ்வுக்கான போராட்டங்களையும், வாழ்வு மறுக்கப்பட்டவர்களின் அராஜக நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்த முடியும் என்று நம்புகின்றனர்.


இந்த வகையில் தான் ஒடுக்குபவர்கள் என்றுமில்லாத பொலிஸ் வன்முறையைக் கையாள்வார்கள். ஆனால் இந்த வழிகள் எதிர்மறைத் தன்மை கொண்டதாக, மனித விரோத செயலாக அமைவதை வரலாறு மறுபடியும் நிறுவும். ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வின் வாழ்வு ஆதாரங்கள் அழிக்கப்பட்ட நிலையில் தான், அதிதமான வன்முறைகளும், சமுதாயத்தில் அராஜகத்தன்மையும் அதிகரிக்கின்றது. இதை பொலிஸ் ஆட்சி மூலம் நிவர்த்தி செய்ய முடியாது.


சமுதாயத்தில் நிலவும் இந்த நிலைமைக்கான காரணம் இடதுசாரிகளின் அரசியல் அற்பத்தனத்தின் விளைவாகும். இடதுசாரிகள் என்றும், கம்ய+னிஸ்டுக்கள் என்றும் கூறிக்கொண்டு சமுதாயத்தில் ஓட்டுண்ணிகளாக வாழ்வோரின் காட்டிக்கொடுப்புத்தான் காரணமாகும். இந்த இடதுசாரி கட்சிகளின் அரசியல் வேலைத்திட்டம் முதல் தொழிற்சங்கங்கள் வரை மூலதனத்துக்காக நக்கித்தின்னுகின்ற ஓட்டுண்ணிகளின் சீரழிவான பாதைதான், சமுதாயத்தை இந்த நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.


தொழிலாளி வர்க்கம் தனது வர்க்க உணர்வை இழந்துள்ள நிலையில், சமுதாயம் போராடும் ஆற்றலை இழந்து, உதிரியான தனிமனித அராஜகத்தன்மைகள் அதிகரிக்கின்றது. சமுதாயத்தின் பிரச்சனைகளை புரிந்து கொள்கின்ற ஆற்றல், ஆளுமையையும் இதன் மூலம் இழந்து விடுகின்றது. இது பொலிஸ் ஆட்சி மூலம், சட்ட ஒழுங்கு மூலம் தீர்க்கப்படும் என்று நம்பி, அதை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கின்றனர். இந்த வகையில் சமுதாயத்தின் அறிவு மட்டமும், ஒவ்வொரு நிகழ்ச்சியையும் கூர்ந்து புரிந்து கொள்கின்ற பகுத்தாய்வுத் தன்மையையும் சமுதாயம் இழந்துவிடுகின்றது.


வர்க்க உணர்வு பெற்ற அரசியல் நிலையை துறந்துவிடுகின்ற போது, இடையில் நிற்கின்ற வர்க்கப் பிரிவுகள் பாசிசத்தை தெரிந்து எடுப்பது தற்செயலாக நிகழ்கின்றது. தனக்கு ஆபத்தற்றதாக நம்புகின்ற சில தேர்வுகள், சமுதாயத்தில் ஒரு பிரிவு மீது தாக்குதலாக மாறுகின்றது இப்படி இழிவான அரசியல் உணர்வை பெற்று, கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பது நிகழ்கின்றது. குருட்டுத்தனமான சில சமுதாய நம்பிக்கைகள், தீர்வென்று நம்புகின்ற எடுகோள்கள், சுய விசாரணைக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாகாத சமுதாய அமைப்பில், அதை ஆதரிக்க தூண்டுகின்றது. இதனுடன் தனிப்பட்ட பாதிப்புக்கள், இயல்பாக மற்றவனுக்கு எதிராக வாக்களிக்கும் அரசியல் சூதாட்டத்தில் இறங்கி விடுகின்றனர்.


இந்த சூதாட்டத்தில் வாக்கு போடுகின்ற உழைக்கும் வர்க்கம் பெறப்போகும் அறுவடையோ, மிக மோசமானதாகவே இருக்கும். மனித துயரங்களும், மனித கொடூரங்களும் எதிர்காலத்தில் பரிசாக கிடைக்கும். சதாரணமான தொழில் உரிமை முதல், அனைத்தையும் பறிகொடுக்கின்ற நிலைக்கு சமூகம் தரம் தாழ்த்தப்படும். கடந்த காலத்தில் போராடிப் பெற்ற அடிப்படையான (தொழில்) உரிமைகள், சட்டங்கள் அனைத்தையும் இழப்பார்கள். வரைமுறையற்ற வேலை நேரம் முதல், வெளிநாட்டவர்கள் மீதான கொடூரமான ஒடுக்குமுறை வரை, எதிர்பார்த்து அதற்காக சிலர் தெளிவாக வாக்களிக்கின்றனர்.


குறிப்பாக வெளிநாட்டவர் மீதான ஒடுக்குமுறையை கோரும் வாக்காளர்கள் தான், இந்த வெற்றியை குறிப்பாக உணர்த்தி நிற்கின்றனர். இயல்பான வழமையான வலதுசாரிய சுரண்டல் கோட்பாட்டை முன்வைத்து, இந்த தேர்தல் வெற்றிகள் தீர்மானிக்கப்படவில்லை. மாறாக பிரஞ்சு அல்லாத வெளிநாட்டவர்கள் மீதான காழ்ப்புணர்வை தீர்த்துக் கொள்ளும், வன்முறை சார்ந்த வெறியுடன் வாக்களிக்கப்பட்டது. நாசிக்கட்சியின் தீர்மானகரமான ஆதரவுடன் தான், இந்த அதிகார மையம் ஜனநாயகத்தின் பெயரில் உருவாக்கப்படுகின்றது.


நாசிச பாசிட்டுகளும், கிட்லரின் வாரிசுகளுமான பிரஞ்சு தீவிர வலதுசாரிகள் கட்டமைக்கும் அவதூறுகளை உள்வாங்கியே, வலதுசாரிகள் ஆட்சிக்கு வரமுனைகின்றனர். இதை மறுத்தல்ல. 1930, 1940 களில் நாசிசம் சார்ந்த வெளிப்பாடுகள் கொண்ட ஒரு வன்முறையை, சமுதாயம் மீது கையாளப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி நிற்கின்றது. ஆளும் வர்க்கங்கள் வலது இடது களைந்த நிலையில், வர்க்க உணர்வு பெற்ற தொழிலாளி வர்க்கம் சிதைந்து போன வரலாற்றில் தான், இந்த தேர்தல் முடிவுகள் அமைகின்றது. அரசியலில் பாசிசம் அரங்கேறுவதை தடுத்து நிறுத்தும் ஆற்றல், இடதுசாரிக் கட்சிகள் என்று கூறிக்கொண்டும், கம்யூனிஸ்ட்டுகள் என்று கூறிக்கொண்டும் பிழைக்கும் கட்சிகளிடமோ கிடையாது.


ஒடுக்கப்பட்ட மக்கள் மேலும் மேலும் அடக்குமுறையையும், ஒடுக்கு முறையையும் அனுபவிப்பதையே, ஜனநாயகமாக்கி விடுவதையே வரலாறாக மீண்டும் நிறுவிக் காட்டும். வரலாறு மீண்டும் வர்க்க உணர்வு பெற்ற ஒரு முன் முயற்சிக்காகவே, காத்து நிற்க வேண்டிய அவலத்தில், பிரஞ்சு சமூகம் தனது புரட்சிகரமான வரலாற்றை இழந்து நிற்கின்றது என்பதே எதார்த்த உண்மையாகும்.